ஆறாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

பொழிப்புரை :

மெய்யாயபொருளிடத்து அன்பை உண்டாக்கி யாவராலும் துதிக்கப்படுகின்ற திருவடியைப் பற்றிக்கொள்ளக் கொடுத்து, தூயசொல்லாலே ஐயமும், திரிபும் ஆய குற்றம் முழுதும் போக நீக்கி, `சத்து, அசத்து, சதசத்து` என்னும் மூவகைப் பொருளின் இயல்பையும் நன்கு உணர உணர்த்தலால், அப்பயனைச் சிவநெறி ஆசிரியர்பால் பெற்ற மாணாக்கர் அனைவரது உள்ளமும் அவரை, `சிவன்` எனவே தெளிவன ஆகின்றன.

குறிப்புரை :

சுத்தம் - வாய்மை, சோதித்தல் - துடைத்தல். சத்து - நிலையுடையது, அசத்து - நிலையில்லாதது, சதசத்து - மேற்கூறிய அவற்றோடு கூடி அது அதுவாய் நிற்பது. இவை முறையே, `பதி, பசு, பாசம்` என்பனவே யாதலும், இவையொழிய அறிதற்கு வேறுபொருள் இன்மையும் அறிக. `இங்குக் கூறியவற்றைச் செய்வது சிவமன்றி வேறின்மையால், சிவகுருவைச் சிவம் என உணர்தலே மெய்யுணர்வாம்` என்றவாறு. எனவே, `மேற்கூறிய செயலைச் செய்யச் சிவமாம் தன்மை எய்தி நின்ற அருளாளரே சிவகுரு ஆவர்` என்பதும் போந்தது. சிவகுரு - சிவத்தை உணர்த்தும் குரு. சித்தம், மாணாக்க ருடையதாதல் ஆற்றலால் விளங்கிற்று. `சிவ குரு இறையே ஆம்` என மொழி மாற்றியுரைக்க. `சிவகுரு இறையே` என்றது. அவ்வாறு உணரும் உணர்வை.

பண் :

பாடல் எண் : 2

பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.

பொழிப்புரை :

நாட்டவருள் உள்ள ஒருவன்போலத் தோன்றுகின்ற, குற்றமற்ற ஞானாசிரியன், உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய தளை களின் இயல்பைத் தெளிவித்து, அதனானே அவற்றால் உளதாய கட்டினை அறுத்து, உடம்பின் மேல் உள்ள ஆசையாகிய தொடக்கி னின்றும் ஆன்மாவை விடுவித்து, உலகவரது போலியாகிய இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை இவ்விடத்தே பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அந்தப் பரமசிவனே யாவான்.

குறிப்புரை :

மெய்யுணர்வு வந்தவிடத்து நீங்குவன உலக பாசமே யாகலான், ``பாசம்`` என்றது இங்கு அதனையேயாயிற்று. அதன் இயல் பாவது அழிவுடைமையும், உள்ளபொழுதும் திரிபுடைமையு மாம். ``நேர் நேர்`` என்னும் அடுக்கு வலியுறுத்தற் பொருளது. `நேரே கூட்டலால்` என இயையும். `உலகவர் இகழ்ச்சி இகழ்ச்சியன்றாம்` என்பதை,
``சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத லின்றி``1
எனவும்,
``நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப``2
எனவும் மணிவாசகரும் அருளிச்செய்தார். இம்மந்திரம் பலவிடத்துப் பாடம் திரிய ஓதப்படுகின்றது.
இவ்இரண்டு மந்திரங்களாலும் சிவகுருவினது பெருமை ஏதுவுடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

பொழிப்புரை :

இறை அன்பும், அதன்வழி ஓதப்படும் பலவகை மந்திரங்களின் சித்திகளும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அந்த யோகத்தால் அடையப்படும் அட்டமா சித்திகளும், வாமை முதல் எட்டாய் விரிந்து நிற்கின்ற திரோதான சத்தி அங்ஙனம் நில்லாது, அருட் சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத் தின்வழி விளங்கிய சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைப்பனவாம்.

குறிப்புரை :

``சித்திகள் எட்டு`` முதலியவற்றைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். திண்மை - நிலைபேறு. இதனால், சிவமாகி விட்ட உயிர் மீளப் பிறிதாகாமை குறிக்கப்பட்டது. சுத்தம் - சுத்தநிலை. `ஒடுக்கமுறையில் இறுதிக்கண் நிற்கும் மனோன்மணியே அருட் சத்தியாய் மாறியருளுவது` என்னும் கருத்தால், ஏனை எட்டையுமே திரோதாயிகளாகக் கூறினார். தூய்மை - பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாதல், அங்ஙனம் ஆகின்ற அதுவே சிவஞானம் ஆதலை அறிக. சாதக போதம் - சாதித்தவனது அறிவு நிலை. குருவை `நாதன்` என்றலை இந்நூற் பாயிரம் முதலியவற்றினும் காண்க.
இதனால், சிவகுருவால் சிவஞானமேயன்றிப் பிறபயன் களும் கைகூடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால்
சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே.

பொழிப்புரை :

உலகங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சுத்த சிவன், தனது அருள் காரணமாக, மலம் நீங்கியோரது சுத்தான்ம சைதன் னியத்தில் தயிரில் நெய்போல இனிது விளங்கிநின்று, பக்குவி களுக்கு உண்மை ஞானத்தை அருளுதலாலும், ஏனைய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் அருள்புரிந்து ஆட்கொண்டு இவ் விடத்தே நலம் செய் தலாலும் சொல்லுதல் நிறைந்த ஞானகுரு அந்தச் சுத்த சிவனேயாவன்.

குறிப்புரை :

சுத்தசிவன் தற்போதம் அற்று அருள்வழியே நிற்கும் அருளாளரது உள்ளத்திலே இனிது விளங்கி நிற்றலை
``அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்``1
என்னும் திருவாசகத்தாலும், `இத்தகையோரே` `சாக்கிரத்தே அதீதத்தைப் புரிபவர்` என்பதையும், `இவரிடத்தே சிவன் அவராய் நின்று உலகிற்குச் செயத் தக்கனவற்றைச் செய்வன்` என்பதையும்,
``துரியங் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியிடும் அன்பர்க் கவன்``2
என விளக்கி, இதற்கு எடுத்துக் காட்டாக ஆளுடை நால்வரது அருட் செயல்களைக் குறித்தருளிய திருக்களிற்றுப்படி முதலியவற்றாலும் அறிக. மிக்கு - மிக விளங்கி ``நல்கலால், அளித்தலால்`` என்பவற்றில் எண்ணும்மை தொகுத்தலாயின. சொல் - சொல்லுதல்; முதனிலைத் தொழிற் பெயர். ஐயம் திரிபு அற அனைத்தையும் இனிது விளங்கச் சொல்லுதல் என்க.
இதனால், ஞானகுரு எல்லாம் வல்ல சிவனேயாதல் அனுபவத்தின் வைத்து உணர்த்தப்பட்டது. இஃது இனிது விளங்கு தற்கே முன்னை மந்திரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

பொழிப்புரை :

சிவன் தான் நேரே அருளுதல், குருமூர்த்தியிடமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் குருவாய் அருளுமிடத்து அக்குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அவ்வுணர்வினால், அநாதியே பசுத்துவப்படுத்தி நின்ற பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் உளவாகின்ற எல்லா நலங்களையும் அருளுவார்.

குறிப்புரை :

அஞ்ஞானம் அசுத்தமாதலின், சுத்தம் - ஞானம். `சுத்த சைதன்னியம்` எனினும் ஆம். ``குருவும்`` என்பதன் பின், `ஆம்` என்பது வருவிக்க. சிவன் உயிர்களுக்கு ஞானத்தை உணர்த்தும் வகை `நிராதாரம், சாதாரம்` என இரண்டாம். முன்னையது தான் நேரே அருளுதல். அது விஞ்ஞானகலர் பிரளயாகலர்கட்கு. குருமூர்த்தி யிடமாக நின்று அருளுதலே சாதாரம் அது சகலர்க்கு அவற்றுள் குருவிடமாக நின்று `அருளும் முறை இஃது ஒன்றே அன்று` என்றற்கு ஏனையதையும் குறித்தார். காணுதல் - இங்குச் செய்தல். முத்திக் காலத்தில் உளவாகின்ற நலங்கள், ``நாமார்க்கும் குடியல்லோம்``1 என்பது முதலாகவும், ``எங்கெழில் என் ஞாயிறு`` 2 என்பது போலவும் அருளிச்செய்யப்பட்டன.
இதனால், சிவகுருவினது ஆற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணி வாரே.

பொழிப்புரை :

சுத்த சிவனே குருவாய் எழுந்தருளி வந்து மலங்களைப் போக்கித் தூய்மைப் படுத்தி, அங்ஙனம் தூய்மைப் படுத்தப்பட்ட உயிர் ஐம்புலன்களாகிய வேடர் கூட்டத்தினின்றும் நீங்கி3 அரசனாகிய தன் தந்தையை அடையச் செய்கின்ற அருட் சிறப்பைக் கூறும் ஞானக்கண் இல்லாத பெரும் பேதையர் தமது ஊனக் கண்ணால் மட்டும் கண்டு அக்குருவையும் நம்மில் ஒருவனாக எண்ணுவர். ஆயினும் ஞானக்கண்ணை அடைந்த புண்ணியர் அக்குருவை, `இவன் சிவனே` என்று அறிந்து அவனது பாதங்களை வணங்கி நிற்பர்.

குறிப்புரை :

``அத்தன்`` என்றது முறை உணர்த்தி நிற்றலின், வேறொருவன்போலக் கூறினார். அடையப்படுபவனைக் கூறிய தனாலே, நீக்கப்படுபவர் பெறப்பட்டனர். பொய்த் தகு - பொய்ம்மையாம் இயல்பைக் கொண்ட பொய்த்தகு கண்ணாரை இகழ்ந் தமையால் ``புண்ணியர்`` என்னும் புகழுரை, மெய்த் தகு கண்ணை உடைமை பற்றியதாயிற்று.
``பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வைஎனக் காணா புவி``1
என்றார் திருவருட்பயனிலும்.
இதனால், சிவ குருவின் பெருமை உணரமாட்டாதவரது இழிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பால்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்த மயக்கமும்
அண்ணல் அருளன்றி ஆரறி வாரே.

பொழிப்புரை :

மெய்ப்பொருள் இன்னது என்பதையும், அதனை உணர ஒட்டாது பொய்ப்பொருள்கள் மறைத்து நிற்கும் தன்மையை யும், அப் பொய்ப் பொருள்களினின்றும் நீங்கி, மெய்ப்பொருள் களில் நிலைத்து நிற்கும் முறையையும் அறிவுப் பொருளாம் சிவமாகிய நல்ல மேன்மையை உடைய இறைவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி என்னும் இருநிலையிலும் உடனாய் நின்று செய்து உதவி வருதலையும், பெத்த காலத்தில் புத்தியின் அலைவுகளாகிய அறுபத்து நான்கினையும் குருவருளால் அன்றி யார் அறிந்து கொள்ள இயலும்!.

குறிப்புரை :

புத்தி மயக்கம் அறுபத்து நான்காவன, புத்திகுண பாவகங்களாகிய தன்மம் முதலிய எட்டனுள் அஞ்ஞானத்தின் விரியாகிய அவையாம். அவற்றைச் சிவஞான மாபாடியம் முதலிய விரிவுகளிற் கண்டுகொள்க. பாவகங்களுள் ஏனையவற்றைக் கூறாது அஞ்ஞானம் ஒன்றையே கூறியது. அதன் கொடுமை மிகுதி பற்றி `குருவருளால் அன்றி இவற்றை ஒருவராலும் அறிய இயலாது` என்பதை,
``நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானும்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்``1
எனவும்
``நானார்என் உள்ளம்ஆர் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல்``2
எனவும்,
``ஆகமங்கள் எங்கே! அறுசமயந் தானெங்கே!
யோகங்கள் எங்கே! உணர்வெங்கே! - பாகத்
தருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யாரறிவார் பேசு``3
எனவும்,
``ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும்
பேரறிவான் வாராத பின்`` 3
எனவும் வருவனவற்றாலும், பிறவற்றாலும் அறிக.
இதனால், குருவருளாலன்றி ஒருவராலும் உண்மை உணரலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நலமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சிவஞானி சிவனே ஆதலால்` என மாற்றி அதன்பின் `அவனை` என்பது வருவித்துக் கொள்க. சிவஞானியே சிவகுரு வாவன் என்றற்குச்சிவகுருவை அவ்வாறு கூறினார், நவமான தத்துவம் - புதிய பொருள் அது கருவிகளைக் கடந்த `இன்பம் அதனை யுடைய முத்தி` என்க. நண்ணும் - கிடைக்கும் ``ஆம்`` என்றதும் அது, பவம் - பிறப்பு. ``லோகம்`` என்றது. ஆகாயம் என்றவாறு. ``நன் முத்தி`` என்றது முத்தியின்` பயனையும், ``பரலோகம்`` என்றது அதன் மேன்மையையும் கூறியவாறு.
இதனால், சிவகுருவின் உண்மையை உணர்ந்து அடை வார்க்கு உளதாம் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

``நந்தி கூறினன்`` என்றது தாம் அறிந்தவாற்றைக் கூறியது. என்பது - என்று வேதாகமங்களிற் சொல்லப்படும் பொருள். குறித்தல் - உளங் கொள்ளுதல். ``சிவனுமாய் நிற்கும்`` என்றது, சிவனை வேறு வழிபட வேண்டாமைக் கூறியதாம். ``கோனுமாய் நிற்கும்`` என்றதும் இவனது ஆணையே சிவனது ஆணையாக. அதன் வழி நிற்றலே அறமாதலை உணர்த்திற்று. ஈற்றடி, குரு உருவுடைய னாயினும், உருவிலனாகிய சிவனே எனச் சிவனோடு இவனிடை வேற்றுமை இன்மையை வலியுறுத்தவாறு.
இதனால், சிவகுருவை அணுகி நிற்கும் முறை பலவும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்த மியாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.

பொழிப்புரை :

உயிரின் அறிவு அறிவன அனைத்தும் சிவன் தனது அருளால் அறிவிப்பனவேயாகும். அந்நிலையில் உயிரின் அறிவு அறிவன யாவையும் உறுதியான சிவனேயாய் முடிந்துவிட்டால், சிவனும் அவ்வறிவில் பிறவற்றைத் தோற்றுவியாது தன்னைமட்டுமே தோற்றுவித்து நிற்பான்.

குறிப்புரை :

``சித்தம்`` என்றது அறிவை. `சித்தம் சிந்தித் திருந்திடும் யாவையும் அத்தன் அருளால் உணர்த்துபவதாகும்` என மாற்றுக. முதலடியை மாற்றாது ஆற்றொழுக்காகவே உரைப்பின், அது சித்தத்தின் இயல்பு கூறியதாக்கி அதன் இறுதியில் `அவை` என்பது வருவித்துக்கொள்க. `உணர்த்துவது` என்னும் ஒருமை அத்தொழில் மேல் நின்றது. `உயிரின் அறிவு பக்குவம் எய்தாத பொழுது சிவன் அதன்கண் வினைக்கீடானவற்றை உணர்த்துவன். பக்குவம் எய்திய வழி அவற்றை ஒழித்துத் தன்னையே உணர்த்தி நிற்பான்` என்பது இதன் திரண்டபொருள். `ஞானாசிரியர் சிவன் தன்னையே உணர்த்தி நின்ற அறிவையுடையராதலின், அவர் அச்சிவனேயாவார்` என்பது இதனால், உணர்த்தப்படும் பொருள். எனவே, ``குருவே சிவம்`` என்பது முதலியன அமையுமாறு காட்டியதாயிற்று.
இதனால், சிவகுரு சிவமேயாதல் அதன் உண்மையுணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி என்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி அங்கித் தனிச்சுட ராகுமே.

பொழிப்புரை :

`ஞானத்தைப் பெற்றவன் சிவனது இயல்பைத் தனது அறிவில் காணும்படி வைத்த ஆசிரியன் அந்தச் சிவனே என்க` என்னும் சிவனது திருவுள்ளத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறிய வல்ல ஒருவனுக்கு அச்சிவன் மாலைக் காலத்தில் ஏற்றப்பட்ட புறவிளக்குப் போன்று ஒப்பற்ற அக விளக்காய் நிற்பன்.

குறிப்புரை :

`நந்தியது சீர்மையை உள்ளே சந்தித்த சீர்` என்க. இச் சீரினைப் பெற்றவன் ஞானியாகையால் ``தான்`` என்றது அவனையே யாயிற்று. `கோன் நந்தி என்னும் குறிப்பு` என்க. மகிழ்தற்கு `அக் கோனை` என்னும் செய்யப்படுபொருள் வருவிக்க. ``அந்தி அங்கி`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது.
இதனால், சிவகுருவைச் `சிவன்` என உணர்தலே சிவனது திருவுளத்திற்கு உவப்பாவது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.

பொழிப்புரை :

ஞானமாகிய பேறும், முத்திப்பயனும், மெய்ம் மையை மறவாத அருள்நிலையும், மயக்கம் நீங்குதற்கு ஏதுவாகிய உண்மைப் பொருளையுடைய வேதத்தின் விளக்கமும் சிவனே குருவாய் வாராவிடில் ஒருவற்கும் அறிய இயலாது.

குறிப்புரை :

``சீர்மை`` என்றது மெய்மையை. `மருளாதருளும்` என்பது பாடமாயின் மருளாத என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது என்க. ``பொருளாய வேதாந்தம்`` எனக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார். `வாராவிடில்` என்பது முதல் குறுகி நின்றது.
இதனால், சிவன் உருவாய் வரவேண்டுதலின் இன்றியமை யாமை கூறப்பட்டது. ``உண்மையும் பொய்ம்மை`` என்னும் மந்திரம் (1560) குருவருளின் இன்றியமையாமை கூறியது.

பண் :

பாடல் எண் : 13

பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள்தரின் தான்எளி தாமே.

பொழிப்புரை :

சிவபுண்ணியமும், அதன் பயனாகிய மல பரிபாக இருவினை ஒப்புக்களும் ஆகிய இவற்றால் பரமுத்திக்கு ஏதுவாகிய சிவோகம் பாவனையைத் தலைப்படும் நிலையே உண்டாதலாலும், அந்தப் பாவனையாலே அஞ்ஞானம் வாசனையும் இன்றிப்போக, முத்திக்கு நேரே வாயிலாகிய சிவஞானம் தோன்றி நிற்றலாலும் அத் தோற்றம் சிவனது அருள் அவ்விடத்து முன்னின்று அருளியவழியே உண்டாவதாம்.

குறிப்புரை :

``பத்தி`` என்பது அதனாற் செய்யப்படும் சரியை, கிரியா யோகங்களைக் குறித்தது. ``ஞான வைராக்கியம்`` என ஒருங்கு தொகுத்து ஓதினமையால், அவ்விடத்து ``ஞானம்`` என்றது, ஞானத்தை யுணரும் பக்குவத்தையாம். இருவினை ஒப்பினையே ``வைராக்கியம்`` என்றார். ``சிவோகம்`` என்றதும் அதற்குரிய தகுதியையே. `பத்தியாலும், வைராக்கியத்தாலும்` என அவ்விடங் களில் மூன்றாவது விரிக்க. அவ்வாறன்றி எழுவாயாகவே வைத்து `சேர்த்தலால்` எனப்பாடம் ஓதுதலுமாம் ``சேர்தலால்`` என்பது, ``முளைத்தலால்`` என்பதனோடே முடிந்தது. ``முத்தியின் ஞானம்`` என்புழித் தொக்கு நின்ற ஆறாவது` `வனைகலத்து திகிரி` என்றாற் போலக் கருவிக் காரகத்தின்கண் வந்தது. அதனால், அது முத்திக்கு நேரே வாயிலாய் ஒருதலையாகத் தருதல் பெறப்பட்டது. ``அருள் தரின்`` என்பதில் தருதல் துணைவினையாய் நின்றது. `முன் இரண்டு அடிகளால் சரியை முதலிய மூன்றையும் `ஏனைக் குருமார்கள் வழி யாகவும் பெறுதல் கூடும்` என்பதும் பின்னிரண்டடிகளால் `ஞானம் ஞான குரு வழியாலன்றி ஏனையோர் வழியால் பெறுதல் இயலாது` என்பதும் கூறியவாறு. சத்தி அருள்செய்தல், இங்குக் குருவாய் நின்று அருளுதல் என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.
இதனால், ஞானகுரு ஏனைக் குருமார்களினும் மேம்பட்ட வராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.

பொழிப்புரை :

இவ்வுடம்பு நீங்கிய பின்பு அடையுமாறு வைத்துள்ள இன்பத் தோற்றத்தை அதற்கு முன்பே அடையும்படிச் செய்த ஞானகுரு எங்கள் சிவபெருமானே. அவன் தன்னை நிலை பேறாக அடைதற்கு வைத்த மனம் அங்ஙனம் அடையும் காலத்துத் தானே குருவாய் வெளிவந்து அருள் செய்வான்.

குறிப்புரை :

``பிறப்பு`` என்றது தோற்றத்தை. ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டி, `முதல்வன் எம் இறையே` என மாற்றி யுரைக்க. மனம் தன் எய்தும் காலம், பக்குவ காலம். `அம்மன்னை` எனச் சுட்டு வருவித்தும், தொகுக்கப்பட்ட இரண்டாவதை விரித்தும் உரைக்க.
இதனால், இறைவன் குருவாய் வந்தருளும் காலம் இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சிவமான ஞானந் தெளியஒண் சித்தி
சிவமான ஞானந் தெளியஒண் முத்தி
சிவமான ஞானம் சிவபர தேகம்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

பொழிப்புரை :

சிவஞானத்தைத் தெளிய உணர்தலாலே (மூன்றாம் தந்திரத்திற் சொல்லப்பட்ட) பரசித்திகளும், பின் பரமுத்தியும் உளவாகும். அவை முறையே அருளேதனுவாய் நிற்றலும், ஆனந்தத்து அழுந்தலுமாம்.

குறிப்புரை :

சிவஞானம் சிவகுருவால் அன்றி எய்தாமை மேற் பல்லாற்றானும் கூறிவந்தமையால், அந்தச் சிவஞானத்தால் விளைவன இவை என்பதனை இதன்கண் கூறினார். `சிவபரதேகம், சிவானந்தம் இரண்டும் நல்கும்` எனச் செவ்வெண் தொகை வருவிக்க.
இதனால், குருவருளின் நேர் பயனும், அதன் வழிநிலைப் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அறிந்துணர்ந தேன்இவ் வகலிடம் முற்றும்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

16 தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

குருவின் அருளால் நான் இப்பெரிய பூமி முழுவதன் இயல்பையும் முன்னர்ப் பொதுவாகவும், பின்னர் உண்மை யாகவும் உணர்ந்தேன். அவ்வாறே அவரது அருளையடைந்து சிவனது இயல்பையும் முன்னர்க் கேள்வியளவில் உணர்ந்து, பின்பு நூல்களை ஓதி உணர்ந்து, அவனது திருவருள் கிடைக்கப்பெற்றேன். அதனால், அறிவையிழந்துள்ள உலகவரது வாழ்க்கையில் பற்றுச் சிறிதும் இல்லாதவனானேன். அதனால், இவ்வுடம்பில் இருந்தும் அதனில் நீங்கி நிற்கும் நிலையை உடையவனாயினேன்.

குறிப்புரை :

முதல் அடியால் தத்துவ சுத்தியும், இரண்டாம் அடியால் கேட்டல் சிந்தித்தல்களும், ஏனைய அடிகளால் முறையே தெளிதலும், நிட்டை கூடலும் கூறியவாறு. `குருவருளால்` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனானே, ``செறிந்து`` என்பது, அவரது அருளையடைத லாயிற்று.
இதனால், சிவகுருவால் அடையும் பயன்கள் பலவும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டன.
[பதிப்புக்களில் இதன்பின் ``தரிக்கின்ற பல்லுயிர்`` என வரும் மந்திரம் அடுத்த தந்திரத்தில் வருவதாகும்].

பண் :

பாடல் எண் : 1

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.

பொழிப்புரை :

வினையின்வழி மனம் சென்றவாறே செல்லுதலால், உலகவர்மேற் செல்கின்ற அன்பின்வழியே மனம் நெகிழ்ந்து செல்லுகின்ற கீழோரைப் பாசத்தினின்றும் விடுபடச் செய்தற்கு ஞானகுரு வந்து அவர்களது தலையின்மேல் தனது கையை வைத்த வுடன் அவர்களது உள்ளமாகிய பொய்கையில் அவனது திருவடிகளா கிய தாமரை மலர்கள் மலர்ந்து பொருந்தி மலர்வனவாம்.

குறிப்புரை :

`ஈசரை` என்பது பாடம் ஆகாமைக்குப் பன்மை யாயதே சான்றாகும். `பாசத்தின்` என்பதும் பாடமன்று. ``ஏக`` என் பதன்பின், `செய்ய` என ஒருசொல் வருவிக்க. சிவத்தல் - தழல் போலும் ஒளியையுடையனாதல். சென்னியில் கையை வைத்தலே `பரிச தீக்கை` எனப்படுவது. அதன் இயல்பைக் கிரியை நூல்களிற் காண்க. ``உவந்த`` என்னும் அஃறிணைப் பன்மை முற்றினை இறுதி யிற் கூட்டியுரைக்க. உவத்தல் மகிழ்தல். இங்கே மலர்தலின் மேற்று. இது குறிப்புருவகம். மாணவன் ஆசிரியனது திருவடியைப் பற்றாகப் பற்றி இன்புறுதல் மெய்ஞ்ஞானத்தின் விளைவாதலும், மெய்ஞ்ஞானம் தீக்கையான் உளவாதலும் கூறியவாறு.
இதனால், சிவகுரு சிவஞானத்தையும், அதுவழியாகச் சிவானந்தத்தையும் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாடந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

பொழிப்புரை :

தனது சத்தியை உலகுக்கு உதவ வைத்தபொழுதே, அவ்வுதவியைப்பெறும் உயிரை அந்நிலையில் வைத்த எங்கள் சிவ பிரான், பின்பு இப்பூமியில் குருவாகி வந்து பலருக்கு அருள் புரிந்தது, அஞ்ஞானமாகிய மரத்தை வெட்டி வீழ்த்தும் வாள்போல்வதாகிய ஞானத்தின் உறுதிப்பாட்டைத் தந்து, `வீட்டுலகத்தை எல்லையில் காலம் ஆள்க` என அளித்தற் பொருட்டு, மும்மலக் கட்டினின்றும் வெளிப்படுத்தி அருள் தோற்றமாகிய தனது திருவடிகளை அவரது இனிய தலையிற் சூட்டியேயாம்.

குறிப்புரை :

சத்தியை, `தாள்` எனவும், உயிரை, `தலை` எனவும் உருவகித்துக் கூறுதல் மரபு. `சத்தி, திரோதான சத்தி` என்பதும், `உயிர்கள், சகல நிலையில் உள்ள உயிர்கள்` என்பதும், ``தந்த`` என்ப தனால் பெறப்பட்டன. ``வாள் தந்த`` என்பதில், ``தந்த`` என உவம உருபு. ``தந்திட்டு`` என்னும் செய்தென் எச்சம், எதிர்காலத்ததாய் நின்ற ``என`` என்னும் செயவெனச்சத்தோடு முடிந்து, எதிர்காலத்தில் இறந்த காலமாய் நின்றது, என்னை?
``செய்தெ னெச்சத் திறந்த கால ம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்``1
என்பது கட்டளை யாகலின். விடுதல் - கட்டறுத்து இனிதியங்கச் செய்தல். பாடு - தோற்றம். அஃது அதற்கு இடமாகிய திருவடியைக் குறித்தது. ``தந்தது`` எனத் தொழிற்பெயர் எழுவாய் நின்றமையின், ``வைத்து`` என்னும் வினையெச்சம் பயனிலையாதல் பொருந்திற்று. `எம் இறை பார் வந்து தந்தது, விட்டு, வைத்து` என வினை முடிபு கொள்க. அவ்விடத்து, `தந்திட்டு ஆள்கெனற்கு` என்னும் தொடர் பயனிலையைச் சிறப்பித்து நின்றது.
இதனால், சிவகுருவினது திருவடியே பிறவிக்கு ஏதுவாகிய பாசத்தை அறுத்து, வீட்டிற்கு ஏதுவாகிய ஞானத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

பொழிப்புரை :

ஆன்மா சிவனாகி, அச்சிவனது உண்மை இயல்பில் தனது உண்மை இயல்பு பொருந்துதலால் இன்புற்று, முன்னே செயற்கையாய் வந்து பற்றிய `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்` என்னும் நான்கின் இயல்புகளையும் நீக்கிநின்ற சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்ட சிவன், ஆங்ஙனம் ஆட்கொள்வதற்கு முன் தான் குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்டவனது உள்ளத்திலே நிலைபெறச் செய்தது உண்மை.

குறிப்புரை :

எனவே, ``திருவடியை அங்ஙனம் சூட்டித் தாபியாத வழி, முன்னர்க் கூறிய பயன்களை ஆன்மா எய்த மாட்டாது` என்பது போந்தது. ஆக்கம் கூறினமையால், செயற்கையாதல் அறியப்பட்டது. ஐம்மலங்களில் உண்மையில் மலங்களாவன திரோதாயி ஒழிந்தவை யேயாகலின், அவற்றையே கூறினார். `மலங்களது சொரூபமே அகற்றப்பட்டது` என்றதனால், அவைபற்றறக் கழிந்தமை தெளிவா யிற்று. ``ஏனைய முத்திரை`` என வேறு வைத்துக் கூறினமையின், அது தலையாய சின்முத்திரையையே குறித்தது. ``முத்திரை`` என்பது காரிய ஆகுபெயராய் அதனால் உணர்த்தப்படும் நிலையை உணர்த்திற்று. சின்முத்திரையின் இயல்பும், அஃது இங்குக் குறிக்கப் பட்ட நிலையை உணர்த்துமாறும் அறிந்துகொள்க. உயிர்வரக் குற்றியலுகர ஈறு உகரம்பெறுதல் செய்யுள்முடிபு.
இதனால், குருவின் திருவடியைப் பெறுதல் ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

பொழிப்புரை :

`இஃது இவ்வாறிருந்தது` எனச் சொல்லும் சொல்லும், `இவ்வாறிருக்கின்றது` என உணரும் உணர்வும் அற்றமை யால் உயிர் தன் பசுத்துவம் முற்றும் நீங்கி, அலையில்லாத நிலைநீர் போல அசைவற நிற்கும் சிவமாம் தன்மையை எம் குருநாதன் எமக்கு முற்றத்தந்து, நாத காரியமாகிய நால்வகை வாக்குக்களையும் கடந்த இயற்கை நிலையில் எம்மை இருக்கச் செய்தான்; அதனால் யாம் பேச்சற்று நிற்கின்றோம்.

குறிப்புரை :

`இஃது அவனது திருவடியை யாம் பெற்ற பேற்றின் பயன்` என்பது குறிப்பெச்சம். உரை அறுதல் முதலிய மூன்றும் ஒன்றற்கு ஒன்று காரண நிலையாம் முறையில் வைத்துக் கூறப்பட்டன. படவே மலவாசனை படிமுறையான் நீங்கினமை பெறப்பட்டது. பரம் - முதன்மை. உயிரது முதன்மை `யான்` என முனைந்து நிற்றல். `நீரின்கண் எழுகின்ற அலை காற்றின் செய்கை யாதல்போல, உயிரினது தன் முனைப்பு ஆணவமலத்தின் செய்கையாய் உயிர்க்கு அல்லலை விளைவிக்கும்` என்பது, ``திரையற்ற நீர் போல்`` என்னும் உவமையாற் பெறப்படும் குறிப்புப் பொருள். உவமை, இல்பொருள் உவமை. தீர்த்தல் - முடித்தல், முற்றச்செய்தல், சத்தாதி - சத்தத்தை ஆதியாக உடையன. நாதத்தை, ``சத்தம்`` என்றார். நாதமே சூக்குமை வாக்காயினும் அதுவும் கடக்கப் பட்டமைதோன்ற ``நான்கும்`` என்றார். ``கரையற்ற`` என்றது, `கடத்தற்கு அரிய` என்றவாறு.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``1
என இவ்வாக்குகள் கடத்தற்கு அரிய பரம பந்தமாதல் கூறப்பட்டமை காண்க. உரை உணர்வு, ஆறுதலை,
``உரையுணர் வுணர்ந்துநின் றுணர்வதோர் உணர்வே``2
``உணர்ந்தார்க் குணர்வரியோன்``3
எனவும்,
``இங்ங னிருந்தென் றெவ்வண்ணம் சொல்லுகேன்
அங்ங னிருந்தென் றுந்தீ பற;
அறியும் அறிவதன் றுந்தீ பற``4
எனவும், மற்றும் இவ்வாறும் போதவற்றால் அறிக.
சொரூபம் - இயற்கைநிலை, இந்நிலை ஆணவ மலமாகிய செயற்கையால் மாறுவதாயிற்று என்க.
இதனால், திருவடிப்பேறு பரமுத்தியாகிய முடிந்த பயனைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற்
றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.

பொழிப்புரை :

சிவகுரவன் உயிர்களுக்கு உள்ள மூன்று இயல்பு களையும் தான் கைக்கொண்டு, அவன் காட்டிய சின்முத்திரையையே அறியத் தகும் அரிய பொருளாக யான் கொண்டு, `நந்தி` என்னும் பெயருடைய பெரிய பெருமானாகிய சிவனது திருவடிக்கண் உள்ளம் உருகும்படி என்னை அப்போழுதே உய்யக்கொண்டருளினான்.

குறிப்புரை :

`என் உள்ளம் பெரிய பிரானடிக்கண் உருகிடத் தனது திருவடி சூட்டலால் செய்து உய்யக்கொண்டான்` என்றவாறு. உயிரின் மூன்றியல்பாவன, `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் நிலைகளில் காணும் இயல்புகள் முதலிய மூன்றும் முறையே இருள்நிலை, மருள் நிலை, அருள்நிலை என்க. எனவே, சுத்தம் என்றது அதன்கண் துரி யம் ஈறாயவற்றையே யாயிற்று. `முத்திரை பொருளாகக் கொண்டு` என மாற்றிக்கொள்க. ``பேர்`` என்பது அதனை உடையவனைக் குறித்தது. வாளா `நந்தி` என ஓதல் பாடம் அன்று. ``அங்கு`` என்றது, திருவடி சூட்டிய அப்பொழுது என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய பயன் நிகழும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற அறிவுருவனாகிய சிவகுரவன் மல பரிபாகம் வாய்க்கப் பெற்ற என்னைத் தன் திருவடியைச் சூட்டி, மலம் காரணமாக எனக்கு நியதியாக வந்து பொருந்திய `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இனி நிகழாவாறு தான் கைக் கொண்டு சிவமாகச் செய்து, பேச்சற்றதும், எல்லையில்லாததுமாகிய இன்பத்திலே என்னையே யான் அறியாதபடி மூழ்குவித்து, அதனால் எனக்கு வருகின்ற புகழையும் யான் எண்ணாதபடி என்னோடு உடன் இருந்து அருளுகின்றான்.

குறிப்புரை :

`சோதி, என்னை, தந்து, கொண்டு, ஆக்கி, ஆனந்தத் திலே மாள்வித்து, புகழ்மாள மன்னும்` என வைக்கற்பாலன, செய்யுள் நோக்கி முறைபிறழ வைக்கப்பட்டன. `மாசு காசு` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. ``மாசு அற்ற`` என்பதில் அறுதல், அறும் நிலையைப் பெற்றமையைக் குறித்தது. `துணிவு பற்றி எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று` என்றலுமாம். மாள்வித்தல் - வெளிப்படா திருக்கச் செய்தல். ``மாள`` என்றதும் எண்ணப்படாமை பற்றியாம்.
``எனைநான் என்ப தறியேன் பக லிரவாவது மறியேன்
மனவாசகம் கடந்தான் எனை மத்தோன்மத்த னாக்கி``1
என ஓதுதல் காண்க. ``தாள்தந்து`` என எடுத்தோதினமையால். `இவை தாள் தந்தமையான் விளைந்தன` என்றவாறாம், ``இன்பம், ஆனந்தம்`` என்பன அடையொடு வந்து ஒருபொருட் பல பெயர் ஆயின.
இதனால், தான் திருவடி சூட்டப் பெற்றவர்க்குச் சிவகுரு பின்னும் நீங்காது உடன் இருந்து பயன்விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

பொழிப்புரை :

சிவன் குருவாகி வந்து, தனது திருவடிகளை எனது இதயத்திலும், கண்ணிலும், மனத்திலும் நீங்காது பொருந்தியிருக்கச் செய்து, அதனானே ஞானத்தை உணர்த்திய வகையும், அந்த ஞானத் தினால் மெய்ப்பொருளைத் தலைப்படுவித்த வகையையும், பின் அம் மெய்ப்பொருளை நீங்காதிருத்தற்குரிய முறைகளை உணர்த்திய வகையும் யான் சொல்லும் தரத்தன அல்ல.

குறிப்புரை :

``பதி வித்த பாத நந்தி`` என உடம்போடு புணர்த்தமை பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது முதலடியோடு,
``மனத்தான் கண்ணி னகத்தான் மறு மாற்றத்திடையானே``1
``சிந்தையி னுள்ளுமென் சென்னியி னும்சேர
வந்தவர் வாழ்கஎன் றுந்தீ பற``2
என்பன முதலியவற்றை வைத்துக் காண்க. ``கதி என்பது ஞானத்தை உணர்தல் வடமொழி மதம்``3 என்பர் சிவஞான யோகிகள். `ஒண்ணாது` என்பது பன்மை யொருமை மயக்கம். `ஒண்ணாவே` எனப் பாடம் ஓதினுமாம்.
இதனால், திருவடி சூட்டி அருள் செய்யும் முறைமையது பெருமை அளவிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

எனது சென்னிமேல் தனது திருவடிகளைச்சூட்டி, அருளே எனக்கு வடிவாம்படிப்பார்த்து, அதனால், பின்பு பரம் பொருளை யான் பெறும்படி தந்தவரும், குருவடிவில் பலராலும் காணப் பட்ட ஞானத்தலைவரும், எங்கள் தலைவரும் ஆகிய நந்தி பெருமானை நான் எனது பிறவியின் வேர் அற்றொழியுமாறு அடைந்தேன்.

குறிப்புரை :

`அருள் ஆக நோக்கி` என ஆக்கம் வருவிக்க. ``பெரு வடிவு`` என்பதில் வடிவு - பொருள்;
``அந்தப் - பெருவடிவை யாரறிவார் பேசு``4
என்றதும் காண்க. ``பேர் நந்தி`` என்னும் இரு பெயரொட்டு அதனை உடையானைக் குறித்தது. ``கண்ட`` என்றது ``காணப்பட்ட`` என்றவாறு. ``எம்`` என்றது, ``நந்திகள் நால்வர்`` முதலியோரை உளப்படுத்து. ``அற்றிட`` என்பது காரியப் பொருளில் வந்தது கண்டுகொள்ளுதல், உணர்ந்துகொள்ளல் அஃது அடைக்கலமாக அடைதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. நான்காம் அடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், தம் ஆசிரியர் தமக்குத் திருவடி சூட்டி அருள் செய்த முறையும், அதனால் விளைந்த பயனும் கூறுமுகத்தால் தம் அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

``திருவடி ஞானம்`` நான்கையும் இரட்டுற மொழிந் து, `திருவடியால் விளைந்த ஞானம், திருவடியால் விளங்கிய ஞானம்` என உரைத்துக் கொள்க. முதற் பொருளில் திருவடியும், இரண்டாவது பொருளில் திருவடி திருவருளும் ஆம். மூன்றாம் அடியில், `மீட்கும்` என்பது பாடமாயின், `மலமாகிய சிறையினின்றும் மீட்கும்` என உரைக்க. இப்பொருட்டு, `மலச் சிறை` என்பது பின் முன்னாய் நின்றது என்க. திண் சித்தி - அழியாப் பேறு. முத்தி தருவதனை ``முத்தி`` எனப் பாற்பகுத்து ஓதினார்.
இதனால், திருவடி ஞானத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

பொழிப்புரை :

எம் குரவர் எம் தலைமேல் தம் திருவடியைச் சூட்டிய அந்த முறைமையைச் செய்யாவிடில் அவர் அருள்செய்த பின்பும் வினைகள் தோன்றி, முன்பு மயங்கியிருந்த உள்ளத்தை மீளவும் அப்பழக்கம் பற்றி மயக்கம் உறச்செய்யும். அதனால், பிறை முடித்த, பேரொளி வடிவினனாகிய சிவபெருமான், குருவாகி வந்து தனது திருவடியைச் சென்னி மேல் வைத்துததுபோலச் சிந்தையிலும் நீங்காது தங்குவித்தான்.

குறிப்புரை :

`சஞ்சிதம் தீக்கையாலும், பிராரத்தம் நுகர்ச்சியாலும் கெட, ஆகாமியம் ஞானத்தாலே கெட வேண்டுதலின், இவ்வாறு செய்தான்` என அருளிச்செய்தவாறு.

``என்ற வினைஉடலோ டேகும்; இடை ஏறுவினை தோன்றில் அருளே சுடும்`` 1
என்றது காண்க. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், திருவடி சூட்டல் தரிப்பித்தல்களின் இன்றியமை யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கழலார் கமலத் திருவடி யென்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.

பொழிப்புரை :

வெற்றியை யுடையனவும், தாமரை மலர்போல் வனவும் ஆகிய குருவின் திருவடி என்னும் நிழலை யான் அடையப் பெற்றேன். அதனால், நெடியோனாகிய மாயோனாலும் அறியப்படா தவனும், ஓங்கி வளர்கின்ற வேள்வித் தீயில் விளங்குபவனுமாகிய சிவபிரான், எனது உயிர்க் கூடாகிய உடம்பின் தன்மையையும் மாற்றி, எனது இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்குகின்றான்.

குறிப்புரை :

அஞ்ஞானத்தைப் போக்கும் வெற்றியைக் குறிக்க, ``கழல் ஆர்`` என்றும், ``அனைத்தெலும்புள் நெக ஆனந்தத் தேன் சொரிதலைக்3 குறிக்க, ``கமலம்`` என்றும், பிறவி வெப்பம் நீங்க அடையும் இடமாதல் தோன்ற ``நிழல்`` என்றும் கூறினார். `அறியாப் பிரான், அங்கியுட் பிரான்` எனத் தனித்தனி முடிக்க. அழல், `அழலுதல்` என முதனிலைத் தொழிற்பெயர். `அழலுதல்` என்பது முறைப்படி வளர்க்கப்பட்டு வளர்தலைக் குறித்தது. ``குழல்`` என்பது `நாளம்` என்னும் பொருட்டாய், அதன்மேல் உள்ள மலரைக்குறித்தது. `சேரும்` என்பது முற்று உடம்பின் தன்மையாவது மாயையின் காரியமாய் மயக்குதல்.
இதனால், திருவடிப் பேற்றால் சீவன் முத்தநிலை வருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

பொழிப்புரை :

ஆராயுமிடத்து, சிவனது திருவடியில் அறிவால் நிலைத்திருப்பவர் இந்நிலவுலகத்தில் மூவுலகையும் ஆளும் மன் னராய் இருந்து யாவர்க்கும் பெருந்தலைவராய் உள்ள மூம்மூர்த்திகள் தாமும் சிவனது ஏவலைச் செய்யும் சிற்றரசராய் நின்றே குற்றம் அற்று விளங்குகின்றனர். அதனால், சிவனடியைச் சேர்ந்தவர் அடையும் இன்பத்திற்கு அளவில்லை.

குறிப்புரை :

``அடிமன்னர்`` என்பதை முதலிலும் ``இன்பத்து அள வில்லை`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. ``அடிமன்னர்`` என்பதில் ``மன்னர்`` என்பது, `மன்னுதல் உடையவர்` எனப் பொருள் தந்து. மூன்றாம் அடியில் உள்ள ``முடிமன்னர்`` என்பது வினைத் தொகையாய், `மிகமேலே உள்ள தலைவர்` என்னும் பொருட் டாயிற்று. `தேவர்கள்` என்பது பாடம் அன்று. ``குற்றம்`` என்பது அதனால் விளையும் துன்பத்தின் மேல் நின்றது. இறுதியில் ஆதலால், என்பது எஞ்சிநின்றது. `இன்பத்துக்கு` என்பதில் குகரம் தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 13

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.

பொழிப்புரை :

என்னை, மயக்குவனவாயும் கொடியனவாயும் உள்ள ஐம்பொறி களின் வழிப்போகாமல், என் மனத்துள்ளே சிவனது திருவடிகளை வைத்தேன். அதனால், இணைத்து உழலுதற்கு ஏதுவாகிய இரு வினைகள் என்னும் புதரை அழித்து வேதமாகிய மரத்தின் உச்சிக் கொம்பில் உள்ள மெய்ப் பொருளாகிய தேனை அறிவினால் அடைந்து இன்புறுகின்றேன்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``புலன்`` என்றது பொறிகளை ``எய்த்தேன்`` என்பது முற்றெச்சம். ``மாற்றிட்டு`` என்பதில் இடு, துணைவினை. ``மெய்த்தேன்`` என்பது ஏகதேச உருவகம், ஈற்றடி இறுதியில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.

பண் :

பாடல் எண் : 14

அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

பொழிப்புரை :

முற்காலத்து ஞானிகள் பலரும் இறைவன் திரு வடியை அடையவேண்டியே குருவின் திருவடியைத் தம் தலையில் வைத்து அங்ஙனம் நலம் பெற்றனர். அதனால், உலக இன்பத்தையே தருவதாகிய இந்தப் பழைய பௌதிக உடம்பை இகழ்ந்து ஒதுக்கும் அந்த உயர்ந்தோர் கூட்டத்தை யடைதற்குரிய நெறியைப் பற்றினவர்களது கொள்கையும் இதுவே.

குறிப்புரை :

``அடி சாரலாம்`` என்பதின் ஈற்றில் `என` என்பது எஞ்சி நின்றது. அண்ணல் - தலைவன்; ஞானத்தலைவன் ஞானாசிரியன். படி - உலகம். `பழ வடிவை எள்ளும் அக்குடியைச் சாரும் நெறி` என்க. அந்நெறி, மெய்ந்நெறியே. குடி, `குலம்` எனப்படும் அச் சொற்பற்றி, கூட்டத்தை, ``குடி`` என்றார். ``கொள்கை`` என்னும் எழுவாய்க்குரிய `இது` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றது, ஏகாரம், தேற்றம்.

பண் :

பாடல் எண் : 15

மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

தந்திரம் - நூல். ``தானம்`` என்றது அறத்தை. சுந்தரம் - அழகு. உடல் அழகும் ஒருபேறே என்பதை அது பேறுகள் பதினாறனுள் ஒன்றாகக் கூறப்படுதலோடு, ``திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும்``1 என்பதனுள், ``உருவாக்கும்`` என்பதும் கூறப்பட் டமையான் அறிக. ``ஆவது`` என்பன பலவும் ஒற்றுமை பற்றி வந்த ஒருமை.
இறுதி நான்கு மந்திரங்களாலும், இவ்வதிகாரத்தில் `திருவடி எனப்பட்ட பொதுமையால் சிவனது திருவடிப் பேற்றினது சிறப்புக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே.

பொழிப்புரை :

ஞானம் கைவரப் பெற்றவன் அந்த ஞானத்தால் அறியும் பொருள் சிவமே யாகையால், அஃது ஒன்றே அவனுக்கு ஞேயப் பொருளாம். அந்தப் பொருள் ஆனந்தமே வடிவினது ஆகையால், என்றும் நீங்குதல் இல்லாத சிவானந்தத்தையுடைய அந்த ஞேயப்பொருளிலே ஞானி ஒரு பொழுதும் நீங்காதே நிற்பானாயின், அநாதி தொட்டு அவனைவிடாது சூழ்ந்து நிற்கமாட்டாவாய் அகன் றொழியும். அவை முற்ற அகன்றொழியாது ஒரோவொருகால் சிறிய வாய் வந்து சூழுமாயினும் அச்சூழல், அவனை முன்போல அஞ் ஞேயப் பொருளை மறந்தொழியும் நிலையை எய்துவிக்கமாட்டா. (ஏனெனில், சிவகுருவின் அருளைப் பெற்ற சிவஞானியின் ஞானத்தை அப்பாசங்கள் முன்போலத் திரிவு படுத்தி, `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கு விக்கமாட்டா ஆகலான்.) அவ்வாற்றால் பழக்கம்பற்றிச்சிறிதே தலைப்படுகின்ற அந்தச் செருக்கு ஞானத்தால் முற்றாது கழிய, ஞேயத்தில் நிலைத்து நிற்றல் உண்டாகும். அதனால் அத்தகைய சிவஞானிக்கு, அளவிற்பட்டு நீங்குதல் இல்லாது என்றும் உளதாகிய சிவானந்தம் நிலை பெற்றிருத்தல் கூடுவதாம்.

குறிப்புரை :

``நீங்காச் சிவானந்த ஞேயம்`` என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலான், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``நிற்க`` என்னும் எச்சம், விதித்தற் கருத்தன்று இயல்பு கூறியதே. `ஆங்காரம் நீக்கி` எனப் பிறவினையாகக் கூறாது. ``நீங்கி`` எனத் தன்வினையாகக் கூறியது அது பற்றியே. `நீங்கி`` என்பதை `நீங்க` எனத் திரிக்க. `அதன்கண் நிலை நிற்க` என உருபு விரித்துக் கொள்க. ``நீங்கா அமுதம்`` வெளிப்படை.
``சிவானந்த ஞேயம்`` என்றதனால், ``ஞேயமாவது சிவம்` என்பது போந்தது. போதரவே, ``நின்றிட, நிற்க`` என்பவற்றால், `நிற்றல் சிவஞானத்தால்` என ஞானமும், `நிற்பவன் அந்த ஞானத்தை யுடையவன்` என ஞாதுருவும் பெறப்பட்டு, `ஞாதுருதன்னையும், தனது ஞானத்தையும் சிறிதும் எண்ணாது` ஞேயம் ஒன்றையே அறிந்து அதனால் `அதனை அறிகின்றோம் என்ற அறிவும் நீங்கிய நிலையே ஆனந்த நிலையாம் என்பது விளங்கிற்று. இதனையே, `அதீத நிலை` என்றும், `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். இந்நிலையில் ஞாதுரு ஞானஞேயங்கள் இருந்தும் அவை அவற்றை அறிபவனுக்குப் புலனாகாமையால், இந்நிலையை, `திரிபுடி நீங்கிய நிலை` என்பர். அஃது அறியாது, `ஞாதுரு ஞானங்களை ஞேயத்தின் வேறுபட்ட பொருளாக உணர்தலே மயக்க உணர்வாகிய அஞ்ஞானம்` என்றும், `அங்ஙனம் உணராது அவை அவிச்சையால் ஞேயத்தின் வேறுபட்ட பொருள்போலத் தோன்றுகின்றன அவை உண்மையில் ஞேயமாகிய அதுவேயாம் என்று உணரப்பெறுதலே மெய்ஞ்ஞானம்` என்றும் கூறித் தமது அறிவின் நிலையைப் புலப்படுத்திக்கொள்வர் மாயாவாதிகள், அவர் தமது கூற்றால், பெறுவானையும், பேற்றையும் இழத்தல்தெளிவு. இனி, `ஞாதுரு ஞானங்களைப் பெத்தத்திற்போலவே முத்தியிலும் உணர்ந்து நிற்றலே ஆனந்தானுபவம்` என்போரும் இடையீடில்லாத முத்தி யின்பத்தினராகாது, இடையிடையே பெத்தத் துன்பத்தை உடையவராவர். இவற்றையே உமாபதி தேவர் தமது வினா வெண்பாவில், 1.
``காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``
என அருளிச்செய்தார். இதனுள் காட்டுவது, ஞானம். காண்பது - காணப்படுவது.
இதனால், அதீத நிலையாகிய முடிந்தநிலையில் உளவாகும் ஞாதுரு முதலிய மூன்றன் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.

பொழிப்புரை :

சிவஞானத்தால் சிவமாகிய ஞேயப் பொருளிலே அன்பையும், பின் அந்த ஞேயப்பொருளையும் அடைந்தோர் தம்மையும், தமது அறிவையும் ஆராய்கின்ற அச்செயலில் நிற்கும் அறிவை உடையவராகார். அதனால், அவர் ஞேயத்தை அடைந்து நிற்கும் நிலையில் ஞானம், ஞாதுரு, ஞேயம் என்னும் முப்பகுப்பு அவர்க்கு நீங்குவதாம். அது நீங்கவே, ஞேயம் ஒன்றிலேநிற்கும் ஞாதுருவுக்கு அந்த ஞேயப் பொருளிலே வீட்டின்பம் எய்துவதாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் இறுதியில், `அதனால், என்பது, `பறம்பிற் பாரி` என்பது போல நின்றது. `ஞாதுருவுக்கு` என்னும் நான்கனுருபும், அதன் பின், `அஞ் ஞேயத்திலே` என்னும் சுட்டும், தேற்றேகாரமும் தொகுத்தல் பெற்றன. மூன்றாம் அடியில் இடைநின்ற ஞேயம், `நேயம்` என்பதன் போலி அதுவும், பின்வந்த ஞேயஞம் இரண்டாவதன் செல்வெண்ணாய் நின்றன.
சிவஞானமாவது, சிவம் ஒன்றே மெய்ப்பொருள்` என உணரும் ஞானம், அதனானே சிவம் அறியப்பட. அவ் அறிவின் வழி அச்சிவத்தின் மாட்டு அவ்வறிவனுக்கு அன்பு மீதூரும். அது மீதூர்ந்தவழி அச் சிவத்தை யன்றி அவன் வேறொன்றையும் அறியானாவன். அங்ஙனம் ஆய வழி அச் சிவத்தினது ஆனந்தம் இடையீடின்றி எல்லையில்லாமல் பெருகிநிற்கும்` என்பதனை இம்மந்திரத்தில் வகுத்துக்கூறியவாறு,
``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``1 என்றார் மெய் கண்டதேவரும். `ஆய் அதனில்` என்பதில் `அதனில்` என்பது ``அத்தில்`` என மருவிநின்று. `அறிவறிவாரே` என்பது பாடமன்று.
இதனால், மேற்கூறிய, ``நீங்கா அமுதம் நிலைபெறும்`` நிலை கைவரும் முறைவகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்
தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடிச் சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

பொழிப்புரை :

`ஆன்மாவும், சிவமும்` எனப்பொருள் இரண்டாம். அவ்விரண்டையும் ஆன்மாவாகிய ஞாதா தனது ஞானத்தின்கண் வைத்து நன்கு காணுதல் வேண்டும். பின் அங்ஙனம் கண்டதன் பயனாக ஞாதா தானாகிய மலரைச் சிவனுக்கு அவனது அருபளாகிய திருவடியிலே சாத்திவிடுவானாயின், முதலில், `ஆன்மா, சிவம் எனப் பொருள் இரண்டுள்ளன` என உணர்ந்த உணர்வு நல்லதோர் உணர்வாய்ப் பயன் தரும்.

குறிப்புரை :

`பரமான்மாவை யன்றிச் சீவான்மா என்பதொன்று வேறில்லை` என்பாரை மறுத்தற்கும், `முத்தி நிலையில் பாசம் செயலற்று இருந்தும் இல்லாதனவாம்` என்பது உணர்த்தற்கும், ``தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்`` என்றாராகலின், இது, மேல், (... ... ...)
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்றதனோடு மாறுகொள்ளாமை அறிக. ஞாதா தன்னையும், சிவத்தையும் தன் அறிவில் வைத்துக் காணுதலாவது, சிவம் தானே விளங்கும் அறிவினதாய் அறிந்தும், தனது அறிவினுள் நின்று அறி வித்தும் நிற்றலையும், தான் அச்சிவம் அறிவித்தாலன்றி அறிய மாட்டாமையையும் உணர்ந்து, அதனானே, தான் அடிமையும், சிவம் தன்னை உடைப்பொருளாதலையும் தெளிதல். அத் தெளிவு உள தாகவே, ஞாதா தனக்கெனச் செயல் இன்மையை உணர்ந்து, தான் சிவனது உடைமையாயே நிற்பனாகலின், அதனை உருவக வகையால், ``தானென்ற பூவை அவனடி சாத்துதல்`` என்றார். இதனை, ``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்``1 என வேறோர் உருவகத்தால் உணர்த்தினார் திருவுந்தியார் ஆசிரியர். ``என்று, என்கை`` என்பன எண்ணிச் சொல்லுதலைக் குறித்தன. ``அன்றே`` என்பது தேற்றத்தின் கண் வந்தது. இங்ஙனமன்றி, ஏகாரத்தை ஈற்றசை யாக்கி, `திரிபுடி ஞானம் நில்லாது போவதாம்` எனவும் உரைப்பர்.
இதனால், ஞாதாவும் ஞேயம்போல என்றும் உள்பொருளே யாயினும், அவன் ஞேயத்தில் அடங்கியவழியே இன்பம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை :

எம் குரவராகிய நந்திபெருமான் என் மேல் வைத்த தமது அருளினால், முன்னே என்னைக் கட்டுட் படுத்து வைத்த முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி என்னை அவற்றினின்று வேறாக்கி வைத்து, என்னை யாவரும் `பெரியோன்` என்று புகழும் படிச் சிவ வியாபகத்தை என்பால் மேலிடுவித்துப் பின் உறுதியாக என்னைச் சிவமேயாகச் செய்து பிறவிக்கு அஞ்சும் எனது அச்சத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளினார்.

குறிப்புரை :

`அதனால், யான் இதுபொழுது ஞேயமேயாய் நிற்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். ஞேயமேயானபின் சொல்நிகழ வழியில்லையாதலின், இங்ஙனம் சொல் நிகழ்ந்தவாறு என்னை யெனின், அதுவும் அந்த ஞேயத்தது இயல்பாகிய அருளால், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``1 என்று எழுந்த உணர்வினா லேயாம் என்க. `வியாபகத்துவம்` என்பது ``வியாத்துவம்`` என மருவிற்று. `மேலிடுவித்து` என்பது தொகுத்தல் பெற்றது.
இதனால், ஞாதா ஞானத்தைப் பெற்று ஞேயத்து அழுந்தும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

பொழிப்புரை :

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

குறிப்புரை :

`போல` என்னும் செயவெனெச்சத்தது ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. அவ் எச்சத்திற்கு, `யான்` என்னும் எழுவாய் வருவிக்க. ``அறிவறியாமை`` என்பது முன்னர்ப் போந்ததனைச் சுட்டும் அளவாய் நின்றது. பேதித்தல் - வேறுபடுத்தல், நீக்குதல். தன்னை - சிவத்தை. ``சிவம்`` என்பது, சிவமாய் நின்ற நிலையைக் குறித்தது. அறிவித்தல், இங்கு அறியாமை புகாதவாறு காத்தல். `அங்ஙனம் காத்தலாலே யான் ஞேயத்தின் நீங்காதவனாயினேன்` என்பது கருத்து.
இதனால், `குருவருளில் உறைத்து நிற்றலாலே ஞேயத்தழுந்து தல் உண்டாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே.

பொழிப்புரை :

`எங்கள் குரவராகிய நந்தி பெருமான், கண் இன்றியே காண்கின்ற காட்சியையும், காது இன்றியே கேட்கின்ற கேள் வியையும், சித்தம் திரியாதே நுகர்கின்ற நுகர்ச்சியையும், கூடாமலே கூடி நிற்கின்ற கூட்டத்தையும், நாணாமலே நாணுகின்ற நாணத்தையும், நாதம் இன்றியே உணரும் உணர்வையும் காண்பாயாக`` என அணுகி வந்து காட்டி யருளினார்.

குறிப்புரை :

கண் முதலிய கருவிகளின் துணையின்றியே காட்சி முதலிய புணலுணர்வுகளையும் நாதத்தின் துணையின்றியே சவிகற்ப உணர்வையும், முன்பு வேறாய் நின்று பின்பு கூடாது இயல்பிலே இரண்டற நிற்கும் நிலை விளங்கப் பெறுதலாகிய புணர்ச்சியையும், முக்குணங்களும் மாறி மாறி வருதலால் சித்தம் திரிபெய்துதல் இன்றி என்றும் ஒருபடித்தாய் நின்று நுகரும் சிவானுபவத்தையும், பிறர்முன் இளிவந்து நின்று நாணுதலாகிய நாணமின்றி, முன்னை அறியா மையை நினைந்து வெள்கி விலாஇறச் சிரித்தலாகிய 1 நாணத்தையும் பெறுதல் சிவஞானம் பற்றுக்கோடாயவழிக் கிடைப்ப தாகலின், `அதனை அவ்வாற்றால் தந்தருளினார்` என்றவாறு. ``கேளாதே எல்லாம் கேட்டான்``2 என்னும் சிவனது இயல்பு அவனைச் சார்ந்தார்க்கும் உளதாதல் அறிக.
இதனால், சிவகுருவால் சிவஞானத்தைப் பெற்ற ஞாதுரு அந்த ஞானத்தால் ஞேயத்தை உணரும் முறை கூறப்பட்டது. இது துரிய நிலை.

பண் :

பாடல் எண் : 7

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.

பொழிப்புரை :

மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதிய தாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப் பட்டு முடியும்.,

குறிப்புரை :

மௌன நிலையாவது தற்போதம் சிறிதும் எழாத அதீத நிலையாம். திரிபுடி அற்ற நிலையும் இதுவேயாதல் அறிக.
``மோனம் என்பது ஞான வரம்பு``3 என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. பரசித்திகள் மூன்றாம் தந்திரத்திற் கூறப் பட்டன. ஊமை மொழி, பிரணவம். காரண நிலையது ஆதல் தோன்ற அஃது, `ஊமை மொழி` எனப்படுகின்றது. அதுவே நாதமாதல் அறிக. முற்றுதல் - முடிவுற்று நீங்குதல். இதுவும் பாச ஞானமாய்ப் பந்தமாத லின் நீங்குதற்குரியதாயிற்று. முன்னுதல் - நினைத்தல் சங்கற்பித்தல். தன்காரியம் தோன்ற நின்ற இதற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வரு விக்க. இவ்வாறன்றி, `முன்னப் படும்` எனச் செயப்பாட்டு வினை யாக்கி உரைத்தலுமாம். பின்னிரண்டடிகளில் ``வந்து`` என்பவற்றை `வர` எனத் திரிக்க.
இதனால், திரிபுடி நீங்கிய நிலையினது இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

பொழிப்புரை :

சிவ குருவின் திருவடிப் பேற்றால் எல்லாப் பொருள் களும் அற்றுச் `சிவஞாதா, சிவஞானம், சிவஞேயம்` என்னும் மூன்று பொருளிலே வந்து முடிந்த தன்மையை, `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` என்னும் மூன்று வகையில் இயங்கும் பிரணவாயுவை முறைப்படி அடக்குமாற்றால் ஞேயமாகிய ஒன்றில் அடங்கச் செய்தலால் விளைந்த ஆனந்தத்தால் திரிபுடியாகிய கட்டினை அறுத்தோர் அதன்பின் பிறந்தும், இறந்தும் வருதலைச் செய்யார் முத்தி பெறுவர் என்றதாம்.

குறிப்புரை :

`ஒண்குரு பாதத்தால்` என உருபு விரித்து. அத் தொடரை முதலிற் கூட்டி, `முடிந்ததை உய்த்த வத்து ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் பிறந்திறவார்`` என வினை முடிவு செய்க. முத்திரை - குறி பொருள். ``மூன்று`` இரண்டில் முன்னது ஞாதுரு முதலிய மூன்றையும், பின்னது இடைகலை முதலிய மூன்றையும் குறித்தன. நான்மடங்கா - ஒன்று நான்காக. அஃதாவது, பதினாறு மாத்திரையளவாகப் பூரித்ததை அறுபத்து நான்கு மாத்திரை யளவாகக் கும்பித்தல். இம்முறையில் ஞாதுரு முதலிய மூன்றையும் வத்துவின் கண் உய்த்தலாவது, இப்பிராணாயாமத்தால் ஞேயப் பொருளாகிய சிவத்தையே தியானித்து அதனில் ஒன்றி யிருத்தலாகிய சமாதி நிலையைப் பெறுதல். ``உய்த்த`` என்னும் பெயரெச்சம், ``வத்து`` என்னும் இடப்பெயர் கொண்டது. வத்து, பரவத்து பரம்பொருள். வத்துவினது ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் - பரம்பொருளாகிய சிவனது ஆனந்த மேலீட்டார் திரிபுடி ஞானத்தை அறுத்தோர். திரிபுடி ஞானமும் ஆனந்தானுபவத்திற்குத் தடையாகலின், ``பெத்தம்`` எனப்பட்டது. ``பிறந்திறவார்`` என்றது, `ஏனையோர் போலப் பிறப்பில் மீளாது, எவ்வாற்றானும் முத்தியைப் பெறுவர்` என்றதாம்.
இதனால், ஞாதுரு ஞான ஞேய வேறுபாடு நீங்குதற்கு யோகமும் தக்கதொரு சாதனமாதல் கூறப்பட்டது. `இவ்யோகம் உபாய நிட்டை` என்க.

பண் :

பாடல் எண் : 9

மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானம்
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

பொழிப்புரை :

மேலே கூறிவந்த ஞாதுரு முதலிய மூன்றன் இயல் புகளையும் சிவசத்தி இனிது விளங்கக் காட்ட அங்ஙனம் கண்ட உணர்வே ஞேயத்தைப் பற்றுதற்குரிய மேலானஞானம். அந்த ஞானத்தில் ஆரவாரித்து திருநடனத்தையுடைய சிவனே ஞேயம். அந்த ஞேயத்தில் அழுந்தித்தானும், தனது ஞானமும் தோன்றாது. முதற்பொருளின் இயல்பு முற்றும் தனது இயல்பாக விளங்கப் பெற்ற ஆன்மாவே ஞாதுரு.

குறிப்புரை :

`இங்ஙனம் முத்தி நிலையிலும் இம்மூன்றும் உண்மை யால், முத்தி என்பது பெறுவானும், பேறும் இல்லாத ஒன்றாகப் பிறர் கூறும் நிலைகள் அல்ல` என்றவாறு. எனவே திரிபுடி அற்ற நிலை என்பது, `அவை அறியப்படாதநிலை` எனப் பொருள்படுதலன்றி, `அவை இல்லாதொழியும் நிலை` என்றதாயிற்று. இஃது இவ்வதிகாரத்து முதற்கண் காட்டிய வினா வெண்பாவாலும் நன் கறியப்படும். சொரூபம் - இயல்பு. சிவசத்தியை, ``மிகு சத்தி`` என்றார். `மூன்றையும் மிகுசத்தி பாலித்த` என்க. ``பாலித்த`` என்னும் பெயரெச்சம், ``முத்திரை`` என்னும் செயப்படு பொருட் பெயர் கொண்டது. முத்திரை - குறி உணர்வு. `முத்திரையே பரஞானம்` என ஏகாரம் விரித்துமுடிக்க. `நட்டம்` என்றது அதனை உடைய பொருளை. `சொரூபனே ஞாதுருவன்` என ஏகாரத்தை மாற்றிக் கூட்டியுரைக்க. `ஞாதுரு` என்னும் வடசொல்லை. `ஞாதுரு வாம் தன்மை யுடையவன்` எனத் தமிழ் முறைப்பட ஓதினார்.
இதனால், ஞாதுரு ஞான ஞேயங்களது இயல்புகளும், அம் மூன்றும் என்றும் உள்ள பொருள்களாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

இறப்பும் பிறப்பும் இருமையும நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.

பொழிப்புரை :

இறப்பும், பிறப்பும் ஆகிய இரண்டினின்றும் இயல் பாகவே நீங்கி, உயிர்களும் அவற்றினின்றும் நீங்குதற்குத் துறத்த லாகிய தவநெறியின் முறைமையைச் சொல்லியருளிய சுயஞ்சோதி யாகிய சிவனை ஒரு ஞான்றும் மறத்தல் இல்லாதவராய், வாயாலும் வாழ்த்தி நிற்பவர்கட்கு அவன் இன்ப உலகமாகிய தனது உலகத்தை வாழும் இடமாகக் காட்டியருளுவான்.

குறிப்புரை :

சிவன் பிறவாமை உரையாலும் கருதலாலும் அறியப் படுதலின் அதனையே முன்னர்க் கூறினார். செவ்வெண்ணே யன்றி உம்மை யெண்ணும் தொகை பெறுமாதலின், இனிது விளங்க, ``இருமையும் நீங்கி`` எனத் தொகைகொடுத்து ஓதினார். எனவே, ``இருமை`` என்பது எண்ணின்கண் வந்தது. `இருமையினும்` என ஐந்தாவது விரிக்க. சிவன் இருமையினும் நீங்கினமையை எடுத்தோதி யதனால், `உயிர்களும் அவற்றின் நீங்குதற்கு` என்பது பெறப்பட்டது. தவம் - தவமாகிய நெறி. உயிர்கள் வினைவழியே இயங்குவது அவ நெறியும், வினை நீங்குதற்குரிய வகையில் இயங்குவது தவநெறியு மாதலின், அவற்றுள் துறவு தவநெறியாதல் உணர்த்துவார், `துறக்கும் தவம்` என்றார். எனவே, துறத்தலையே `தவம்` என்றமையால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``கண்ட`` என்றது `தானே கண்ட` என்னும் பொருட்டாய், `பிறர்க்குச் சொன்ன` எனத்தன் காரியம் தோன்ற நின்றது. சொல்லியது வேதாகமங்கள் வாயிலாக என்க. `சோதிப் பிரான்` என்றதும் அவ்விரண்டும் பற்றி. எனவே, அவனல் லது பிறர் அதனை அறிவாரும், அறிவிப்பாரும் இல்லை என்க. மறப் பின்மை பிற பொருளை நினையாமே யாதலின், அது பற்றறுத்தலைக் குறித்தல் அறிக. வாய்மொழிதல் நினைவின் வழித்தாதல் வெளிப் படை. அறப் பதிபுண்ணியலோகம்; என்றது, சிவபுண்ணிய லோகத்தை என்னை?
``யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்`` 1
என்றமையால், துறந்தார் அடைவது பசு புண்ணியம் செய்வார். அடைதற்குரிய துறக்க லோகம் ஆகாமையின். ``அமரர் பிரான்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இதன்கண் ``பிரான்`` என்பது, ``அமரர்`` என்பார் முகமகனாக அங்ஙனம் கூறப்பட, உண்மை அமரன் சிவனேயாதல் விளக்கிநின்றது.
``அச்சுதன் அயன் அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமகனே. 2
என்ற கந்தபுராணத்தை நோக்குக.
இதனால், பிறவி நீங்கும் நெறி துறவேயாதலும், அதுவும் சிவநெறியின் பொதுவும், சிறப்பும் ஆகிய நூல்களிற் சொல்லப்பட்ட தேயாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்த மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

பொழிப்புரை :

ஆணவ மலம் பரிபாகம் எய்தாத பொழுது சத்தி நிபாதமும் வாராமையால் அம்மலம் பலமாயப் பொருள்களின்வழிப் பலவகை மயக்கத்தைச் செய்தலால் பிறந்தும், இறந்தும் உயிர்கள் தன்னை மறந்து நின்ற பொழுது அவற்றது அறிவினுள்ளே மறைந்து நின்றும், பின் அம் மலம் பரிபாகம் எய்தியபொழுது சத்திநிபாதம் வரு தலால் உயிர்கள் தன்னை நினைந்தவழி அச்சத்திநிபாத நிலை கட்கு ஏற்ப வெளி யிடத்தும், உள்ளே இதயத்தும் உருவம், அருவுருவம், அருவம் என்னும் தடத்தநிலைகளிலும், அறிவின்கண் சொரூப நிலை யிலும் முறையானே விளங்கிநிற்கின்ற சிவன் அச்சத்தி நிபாத நிலை கட்கு ஏற்பத்தோன்றும் துறவுணர்வின் அளவாக, முன்னர்ச் சிறிதாய்த் தோன்றிப் பின் பெரிதாய்ச் சுடர்விட்டு ஒளிர்கின்ற பேரொளி போல விளங்கிநிற்பன்.

குறிப்புரை :

பேதைமை, இங்கு மயக்க உணர்வு. இதனைத்தரும் ஆணவ சத்தி, `அதோநியாமிகாசத்தி` எனப்படும். இஃது உயிர் தோறும் ஒவ்வொன்றேயாயினும் அதற்கு வாயிலாய் உள்ள பொருள் களது பன்மை பற்றிப் பலவாயிற்று. ``பல்பேதைமையாலே`` என்பதை முதற்கண்வைத்து உரைக்க. ``மறந்த`` என்னும் பெயரெச்சம், ``இருள்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. `நீங்கச் சிறந்த` என்க. ``மறைந்து சிறந்த`` என்பதற்கு, `முன்னர் மறைந்து பின்னர்ச் சிறந்த` என உரைக்க, முன்னைநிலை மறத்தலாகவே, பின்னைநிலை நினைத்தலாயிற்று. ``சிறந்த`` என்றது, `படிமுறையான் ஓங்கி நின்ற` என்றவாறு. அருள் - அருட்சத்தி. ``அருள்சேர் பருவத்து`` என்பதை ``மறைந்து`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இதனானே, `முன்னைநிலை அருள்சேராப்பருவம்` என்பது போந்தது. `பருவத்து ஆம்` என இயையும். `ஆதல் துறந்த உயிர்க்கு` என்றதனால், அவ்விடத்துத் துறவுதானே உண்டாதல் பெறப் பட்டது. சிவன் மறைந்து நின்ற காலத்துப் பிறப்பிறப்பாய பெருந் துன்பம் உளதாதல் கூறவே, அவன் விளங்கிநின்ற காலத்துப் பேரின்பம் உளதாதல் விளங்கிற்று. `அது துறவால் வருவது` என்பதே இங்குக் கருதப்பட்டபொருள்.
``ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்;
ஆசை விடவிட ஆனந்த மாமே`` 1
என நாயனார் முதற்கண் அருளிச்செய்தமை காண்க.
இதனால் பற்றுள்ளம் - மலத்தாலும், சத்திநிபாதம் இன்மை யாலும் உளதாதலும், துறவுள்ளம் - மலபரிபாக சத்திநிபாதங்களால் உளதாதலும், அவ்விரண்டானும் முறையே பிறவித்துன்பமும், வீட்டின்பமும் உளவாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

பொழிப்புரை :

``அறவாழி யந்தணன்``1 என்றற் றொடக்கத் தனவாக நூல்களில், `பல வகை அறங்களையும் தனக்கு வடிவாக உடையன்` எனக் கூறப்படுகின்ற கடவுள், பிறப்பு இல்லாதவனும், அதனால், பற்றுச் செய்தற்குக் கிளைஞர் ஒருவரும் இல்லாதவனும், வாழும் இடம் காடாகவும், உண்ணும் உண் பிச்சையாகவும் உடைய வனுமாதலால் சிறந்த துறவியாய் உள்ள சிவனேயாவன். அதனால், அவன் துறவு பூண்டவர்களையே பிறவியைக் கடப்பித்து உய்விக் கின்ற பேரருளாளனுமாய் உள்ளான். இவற்றை அறிமின்கள்.

குறிப்புரை :

`அறவடிவானவன்` என்னும் பொருட்டாய்க் கடவுட்கு யாவரும் உடன்பட்டுக்கூறும் பொதுக் காரணப்பெயராய் ``அறவன்`` என்பது எழுவாயாய் நின்று சிவனைக் குறித்த ``துறவன்`` என்னும் சிறப்புக் காரணப் பெயராய பயனிலையைக் கொண்டது. பிறப்பிலி முதலிய நான்கும் சிவன் சிவன் சிறந்த துறவியாமாற்றை விளக்கி நின்றன. `சிவன் சிறந்ததுறவி யாதலின், சிறந்த துறவியரிடத்தே அருள் மிக உடையனாய் அவர்களை உய்விக்கின்றான்` என்றவாறு. இல்லறத் தவரும் அன்பு, பொறை, ஒப்புரவு, ஈகை முதலியவற்றை உடையரா யினும் பற்றறாமையின், எல்லா உயிர்கள்மேலும் அருளுடையராய்த் `தன்னுயிர் நீப்பினும் தான் பிறிது இன்னுயுர் நீக்காது`2 ஒழுகுதல் முதலியவற்றை உடையராக மாட்டாமையின், `அறவோர்` எனப் பெயர் பெறமாட்டார்கள். துறவியரே அந்நிலைக் கண் நிற்கவல்லராய் ``அற வோர்`` எனப் பெயர் பெற்று நிற்றலின், அவரே அறவாழியந்தணனாகிய இறைவனது அருட்குப் பெரிதும் உரியராகின்றனர் என்பது தோன்ற, இறைவனை, ``அறவன்`` எனப் பொதுவகையானும், ``துறவன்`` எனச் சிறப்பு வகையானும் கூறினார். ``உறைவது காட்டகம், உண்பது பிச்ை\\\\u2970?`` என்றவை, `உடுப்பது தோல், முடிப்பது சடை, பூசுவது சாம்பல்` முதலிய வற்றிற்குத் தோற்றுவாயாய் நின்றன. நிற்கவே, இவை பற்றிச் சிவனை இகழ்வோர் துறவாது பெருமையை அறியும் அறிவிலார் என்பது அறியப்படும். அறிவுடையார் இன்னோரன்னவற்றைப் புகழ்ந்து போற்றுதல் அறியத் தக்கது. ``துறவனும்`` என்னும் உம்மையை, ``பித்தன்`` என்பதனோடு கூட்டுக. ``பிறவி யறுத்திடும்`` என்னும் தொகைச்சொல் `உய்விக்கும்` என்னும் ஒருசொற் பொருட்டாய் , ``துறந் தவர்தம்மை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. பித்துப் போறலின் பேரருள். ``பித்து`` எனப்பட்டது. உய்வித்தற்குக் காரணத்தைக் குறித்து நிற்றலின், இது துறந்தார் மேலதாதல் அறியப்படும்.
இதனால், துறந்தோரே சிவனருட்கு உரியராதல் கூறப்பட்டது. இத்துறவு, ``தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணரும்``1 உணர்வால் வரும் அகத்துறவாதல் அன்றி, வாளா, மனை துறந்து. 2
``நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் 3
வருந்துதலாகிய புறத்துறவாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் பிறிது மொழிதல். இதன் நேர்பொருள் வெளிப்படை.)
இதன் குறிப்புப்பொருள்:- அறநெறியை வகுத்துணர்த்திய இறைவனே மறநெறியையும் வகுத்துணர்த்தினான். அதனால், அறநெறியின் வழுவியவழி மறநெறி உளதாய்த் துன்பம் விளைக்கும். ஆகவே, அறநெறியின் வழுவாது ஒழுக வல்லவர்கட்கு அந்நிலையில் மறநெறி தோன்றித் துன்பம் விளைக்க மாட்டாது.

குறிப்புரை :

`அந்நிலை துறவோர்க்கே முற்ற முடியும்; அதனால், துறவைப் பெறுக` என்பது கருத்து ``படைத்தான்`` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்று. முன்னதில் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது.
இதனால், துறவே துன்பம் துடைப்பாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.

பொழிப்புரை :

`தீயன ஆவனவும், நல்லன ஆவனவும் இவை இவை` எனக் குருவினிடத்துக் கேட்டுணர்ந்து` தீயவற்றினின்றும் விலகி வந்து சிவனது திருவடியைச் சேர்தற்குரிய தவத்தைச் செய்த நல்ல கோட் பாட்டை யுடையேன். அதனால் நான் ஐம்புல வேடர்கள் நினைத்து வந்து என்னைச் சூழ்ந்து நின்ற செயலுக்கு யாதும் கடவேனல்லேன்.

குறிப்புரை :

முதலடியை ``ஐவரும்`` என்பதொழித்து மூன்றாமடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. `குருவின்பால்` என்பது ஆற்றலால் வந்தது. ஐவர், குறிப்புருவகம், ``வளைந்தது`` என்பது, அச்செயற்கு நிமித்த மாயதன்மேல் நின்றது. அதுதான் துறவு வாராது பற்றினை மிகுவித்தல். ``அதற்கு யாதும் கடவேனலேன்`` என்றதனால், `அவரை வென் றொழிப்பேன்` என்றதாயிற்று. ``யானேதும் பிறப்பஞ்சேன் இறப்ப தனுக் கென்கடவேன்``1 என்றார் ஆளுடைய அடிகளும், கூடும் தவம் - கூடுதற்கு ஏதுவாகிய தவம். ஈற்றடியின் இறுதியில், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. `குருவின்பால் கேட்டு வந்து தவம் செய்த கொள்கையேன் ஆகலான் நான் கடவேனலேன்` என்றதனால், நிரம்பிய துறவுக்குத் தவமும், அத்தவத்திற்குக் குருவருளும் காரண மாதல் பெறப்பட்டது. இக்குரு கிரியாகுரு என்க.
இதனால் துறவு வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே.

பொழிப்புரை :

உழவன் உழவைச் செயதற் பொருட்டு மழை பெய்ய, அதன்பின் அவன் செய்த உழவினால் தோன்றி வளர்ந்து பூத்த குவளை மலரை அது களையாதலின் களைய வேண்டுவதாய் இருக்க, உழவன் தன் மனைவி முதலிய பெண்டிரது கண் போல உள்ளது என்று அதன்மேல் அன்புகொண்டு களையாமலே விடுகின்றான்.

குறிப்புரை :

`உலகப் பற்று அத்துணை வலிதாகின்றது` என்பது கருத்து. இங்ஙனங் கூறுதல் இலக்கிய வழக்காதலால், `உலகப் பற்றின் வலிமையை இலக்கியங்களும் இன்னோரன்னவாற்றால் விளக்கி, அதனை விடுமாறு உணர்த்துகின்றன. என்பதும் குறிப்பாயின. ``உழவு உழ`` என்பது `உழுதலைச் செய்ய` என்றவாறு. `உழவன் உழவு` என்பது காரகப்பொருட்டாய ஆறாவதன் தொகை. ``உழவினில்`` என ஐந்தனுருபாகிய இன் இல்லெனத் திரிந்தமை பிற்கால வழக்கு. ``உழவொழிந்தான்`` என்பதில், உழவு - களைதல்.
இதனால், `கற்றோராயின் உலகப் பற்றினை விடுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இம்மந்திரத்தினையும் பிறிது மொழிதலாகக் கொண்டு இடர்ப்பட்டுரைப்பர்.

பண் :

பாடல் எண் : 7

மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

பொழிப்புரை :

அநாதியே துறவனாய் நிற்கும் இறைவன் அத் தன்மையாலே ஒருவர் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளான். உலகருள் கூற்றுவன் வரும் நாளை யிலராயினா ர்க்கு அவன் தோழனாய் விளங்குகின்றான். ஒரு பொருளிலும் பற்று இல்லாதவனாகிய அவன் `அஞ்ஞானம்` என்னும் இருளின் நீங்கி னவர்க்கு அவன் சிவனாய் வெளிநிற்கின்றான். அதனால், உலகப் பற்றின் நீங்கினவர்க்கே தம்மை அவனது நிலையைப் பெறுதற்குத் தக்கவராகச் செய்து கொள்ளுதல் கூடும்.

குறிப்புரை :

``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``1 என்பதிற்போல, ``மேல்`` என்பது, `முற்காலத்தில் என்னும் பொருட்டாய், அநாதி நிலையை உணர்த்திற்று. `துறந்த அண்ணல்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது. `மேல் துறந்த` என உடம்பொடு புணர்த்ததனால், அதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `கூற்றுவன் வரும் நாள்` என்றது. `இறப்பு` என்ற வாறு, `தவத்தால் கூற்றங் குதித்தலும் கைகூடும்`2 ஆதலின், கூற்றுவன் நாள் துறந்தார். தவத்தவராயினர். இத்தவம் யோகம். இது ``கூற்றை யுதைக்கும் குறிப்பாதலும்``, இதனை யுடையார்க்குச் சிவன் தோழனா தலும் நினைக. `கருமை` என்பதன் திரிபாகிய `கார்` என்பது இருளைக் குறித்தது. யோகிகட்குத் தோழனாகின்ற சிவன் ஞானிகட்கு உண்மைச் சிவனாதல் அறிக. பார் - பூமி; உலகம் இஃது இதன்மேற் செய்யப்படும் பற்றின்மேல் நின்றது. கார்த்துறந்தார், பார்த்துறந்தார் என்பன ஐந்தா வதன் தொகை. பதம் - பக்குவம். இது, கூற்றுவன் நாள் துறத்தற்கும், சிவனை நண்பனாகவும், சிவனாகவும் பெறுதற்கும் ஏற்கு மாற்றால் பல திறத்ததாம். `இவை அனைத்திற்கும் துறவே காரணம்` என்றவாறு. இதனுள் இன எதுகை, மூன்றாமெழுத் தெதுகைவந்தன.
இதனால், துறவே வீட்டு நெறியின் பல நிலைகட்கும் முதலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது
போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.

பொழிப்புரை :

(இது பிசிச்செய்யுள்) நாகம், உயிர் ஐந்துபடம், ஐம் பொறிகள். போகம் - உணவு. நான்கு உணவு. அந்தக் கரணம் நான் கினும் நால்வகையாய்ப் புலப்படும் பொருள், முட்புற்று, துன்பம் நிறைந்த உடல். நிறைந்தது, மனநிறைவுபெற்றிருந்தது. ஆகம் - உடம்பு. பாம்பு தோலுரிப்பது ஆதலால், இரண்டுடம்பு உடையதாம். அவை இங்குத் தூலமும், சூக்குமமுமாகிய இரண்டுடம்புகளைக் குறித்தன. அவை படம்விரித்து ஆடல், ஐம்பொறிகளின்வழி ஐம்புலன் களையும் பொதுப்படக் கவர்தலும், பின் சிறப்பு வகையில் உணர்ந்து திரிபு எய்தலுமாம். அவ் ஆடலை ஒழிதல் ஐம்புல அவாவை அறுத் தலாம். ஐந்து படங்கள் இன்றி ஒருபடத்தையே எடுத்தலாவது, மெய்ப் பொருள் ஒன்றையே நோக்குதல். உடம்பே இடமாதல் - புற்றைவிட்டு நீங்கி அருள் தாரமாக நிற்றல்.

குறிப்புரை :

`நாகம் ஒன்று; அதற்குப் படம் ஐந்து; உணவு நான்காய் உள்ளது; முட்புற்றிலே பொருந்தி நிறைவு பெற்றிருந்தது. ஆயினும், பின்பு அது தனக்கு இயல்பாய் உள்ள இரண்டு உடம்புகளோடும் முன் சொன்ன ஐந்து படங்களையும் விரித்து ஆடுதலை ஒழிந்து ஒரு படத்தை எடுத்து வேறோர் உடம்பிடமாக நின்றது` எனப் பிசி வகைக்கு வினைமுடிவு காண்க.
`பசுத்துவம் உடைய உயிர் ஐம்பொறிகளின்வழி அலமந்து துன்பம் நிறைந்த உடம்பினுள் தங்கி வினைப்பயன்களை நுகர்ந்து களித்திருந்தது; ஆயினும், அஃது ஐம்புல அவாவை நீத்த பொழுது திருவருள் நாட்டம் ஒன்றே உடையதாய் அத் திருவருளே தாரமாகநின்று இன்புற்று` என்பது இதனுட் கூறப்பட்ட பொருள்.
``நாகமும்``என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``நாலது`` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. `இரண்டோடும்` என உருபு விரிக்க. `உடம்பே இடமாம்` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றி உரைக்க. அங்ஙனம் உரைக்கவே, `உடம்பு, அருளுடம்பு` என்பது பெறப்படும்.
இதனால், ஐம்புலப் பற்று அற்றவழியே துன்பம் நீங்கி, இன்பம் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றான் எனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

பொழிப்புரை :

துறந்தவரது குடிக்குத் தானே முதல் என நிற்கின்ற சிவபெருமான், `இன்ன வகையினன்` என ஒருவராலும் இனங்கண்டு கூறற்கு எளியனாய் நிற்பானல்லன். அதனால், அவன் அளவற்ற உயிர்களில் நிறைந்து அவையேயாயும் நிற்பன்; அவனது அருள் எவ்வாற்றால்வரும் என்பதையும் நாம் அறியமாட்டோம்.

குறிப்புரை :

குடிக்கு முதலாதலாவது, ``குடிமுழுதாண்டு, வாழ்வற வாழ்வித்து``1 அதனை `சிவக்குடி` என யாவரும் கூற வைத்தல் `சிவன் யாதொரு கூற்றினும் படாதவன்` என்பதை, ``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ``3 என்பது முதலியவற்றான் அறிக. ``சிவன்தான்`` என்பதில் ``தான்`` என்பது தேற்றப்பொருட்டாய், அனுவதித்தலை உணர்த்திற்று. `உயிர்கள் அளவற்றன ஆதலின், அவற்றிற்கு அவன் அருளும் முறைமைகளும் அளவில்லனவாய். நம்மால் அறியவாரா` என்பார் அவன் அளவற்ற உயிர்களில் அவை யேயாய்க் கலந்துநிற்றலை எடுத்தோதினார். இவ்விடத்து, `சிவன் தாள்` எனச் சத்திமேல் வைத்து ஓதுதற்கு இயைபின்மையின், அது பாட மாகாமை அறிக. நயம், `நயன்` எனப் போலியாற்று. `அருள்` என்பது இதன் பொருள். `சிவனது அருள் உயிர்கட்கு வருமாறு இவையே` என வரையறுக்க ஒண்ணாமையை,
``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா`` 1
எனத் திருஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். இங்ஙனம் கூறவே, `இல்லம் துறந்து, வேடம்பூண்டு ஓரிடத்தில் நில்லாது செல்வோரே துறந்தாராவர்` எனக்கொண்டு, `அவ்வாறில்லாத சிலரும் சிவனது அருள்பெற்றமை கேட்கப்படுதல் என்னை` என ஐயுற்றவர்க்கு, `புறத் துறவு இல்லாது அகத்துறவே உணராய்ப் பல்வேறு நிலையில் நிற்பார்க்கும் சிவன் பல்வேறு வகையாய் அருள்புரிதல் உண்டு; ஆயினும் அதுபற்றுதல் இன்றியாகாது` என ஐயம் அறுத்தவாறாயிற்று. `பற்றறாதவழிச் சிவனருள் கூடாது` என்றற்கே முதற்கண், ``அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரான்`` என அருளிச்செய்தார்.
``... ... ... ... அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்று விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றி``2
என்றது, நிறைவான துறவு நிலையை உணர்த்தியருளியவாறு. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், திருவருளுக்குரிய துறவு நிலை தோற்றத்தால் பல வகையினதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும்
ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஓர் ஆம்பற் குழலினுள்ளே, அங்கணத்தை (சலதாரையைத்) திறந்தாற்போலக் காணப்படும், ஒன்பது புழைகளும் அடங்கி அடைபட்டன. அதனால், மாலுமி வெளியே பார்ப்பதற்கு வேறு வழியில்லாமல், வேம்பினால் ஆகிய தன் மரக்கலத்தின்மேலே ஏறியபொழுது பாய்மரத்தைச் சுற்றிய தாமரைக்கொடி ஒன்று அம்மரக் கலத்தின் கூரையில் பூத்தலைக் கண்டான்.

குறிப்புரை :

``ஆம்பற் குழல்`` என்பதும், ``கூம்பு`` என்பதும் முதுகந் தண்டினையும், `ஒன்பது புழைகள்` என்பது உடம்பின் நவத் துவாரங் களையும், ``மீகாமன்`` என்பது உடம்மை நடத்தும் உயிரையும், `தாமரைக் கொடி` என்பது முதுகந்தண்டைச் சூழ்ந்துசெல்லும் சுழு முனா நாடியையும், `அதன்மலர்` என்பது ஆயிரஇதழ் மலரையும் கொள்ள நிற்றலின், இதுவும் பிசிச்செய்யுளாம். `பிராணாயாமத்தால் பிராணன் சுழுமுனையடியில் கும்பிக்கப்பட்ட பின் உடம்பின் நவத் துவாரங்களாலும் காற்றும், அதன்வழி மன உணர்வும் புறப்படா தொழிய அவ்வுணர்வு ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று, ஆயிர இதழில் சத்தியைக் கண்டது` என்பது இம்மந் திரத்தாற் குறிக்கப்பட்ட பொருள். இந்நிலை துறவர்க்கல்லது ஆகாது` என்பது உணர்த்தற் பொருட்டு இஃது இவ்வதிகாரத்துட் கூறப்பட்டது.
``பட்டது`` என்பது பன்மை ஒருமை மயக்கம். ``வேம்பு`` என்பது கருவியாகுபெயராய், `அம்மரத்தாற் செய்யப்பட்ட மரக்கலம்` எனப் பொருள்தந்தது. `உடல் வெறுக்கத்தக்கது` என்பதை உணர்த்த, சந்தனத்தாலாகிய மரக்கலம்` என்னாமல், `வேம்பினால் ஆகிய மரக்கலம்` என்றார்.
இதனால், துறவறம் யோகத்தைப் பயந்து, அது வழியாக ஞானத்தையும், பின் வீட்டையும், தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

பொழிப்புரை :

உலகப் பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழிந்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஒடுங்கி நிலைப்பெற்ற உயர்ந்தோரதுஉள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை ; அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை; எல்லாப் பற்றுக்களை யும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு துன்பமும் இல்லை; இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவ தொரு பயனும் இல்லை.

குறிப்புரை :

`உலகப் பற்றினின்றும் மீட்ட உள்ளத்தைப் பின் இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிலைநிற்கச் செய்யும் முயற்சியே தவம்` என்பதனை, ``பற்றுவிட்டார்க்கு`` எனவும், ``ஒடுங்கி நிலை பெற்றஉள்ளம்`` எனவும் உடம்பொடு புணர்த்து, உணர்த்தினார். இதனானே மேலையதிகாரத்தோடு இதற்கு உளதாய இயைபு இனிது விளங்கும். உள்ளத்தைப் பற்றுக்களினின்றும் மீட்டு இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிற்கச்செய்யும் முயற்சி, தோன்றி நிகழும் காலத்தே `தவம்` எனவும், இனிது முற்றிய காலத்தே `ஞானம்` எனவும் நிற்கும். தவநிலையையே சிவநூல்கள், `சரியை, கிரியை, யோகம்` என மூன்றாகவும், `சிவ தன்மம், சிவ யோகம்` என ஓராற்றல் இரண்டாக வும் பகுத்துக்கூறுதல் வெளிப்படை. அவற்றின் இயல்பையெல்லாம் நாயனார் முன்னைத்தந்திரத்தில் இனிது விளங்க அருளிச் செய்தார். இங்கு அவை சிவகுருவைத் தலைப்பட வேண்டினார்க்கு இன்றி யமையாச் சிறப்பின் ஆதலையே குறிக்கின்றார்.
``நடுங்குவது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. ``இராப் பகல்`` என்றது உபலக்கணம். `நடுக்கமும், நமனும் இல்லாமை ஒடுங்கி நிலைபெற்றமையால்` என்பதும், `இடும்பை முதலியன இல்லாமை பற்று விட்டமையால்` என்பதும் குறிப்பால் தோன்ற வைத்தவாறு உணர்க.
இவற்றை, ``சுண்ணவெண் சந்தனச் சாந்தும் ... ...
... ... உடையார் ஒருவர் தமர்நாம்;
அஞ்சுவ தியாதொன்று மில்லை;
அஞ்ச வருவதும் இல்லை`` 3
``வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென்
மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென்
தண்கடலும்
மீனம் படிலென் இருசுடர் வீழிலென்
வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட
உத்தமர்க்கே`` l
``நாமர்க்குங் குடியல்லோம்; நமனை யஞ்சோம்``8 என்றாற் போலும் அனுபவமொழிகளான் அறிக. இம்மந்திரத்தின் ஈற்றடி.
`படும்பழி பாவம் பயமில்லை தானே` எனவும், `கடும்பசி யில்லை கற்றுணர்ந்தார்க்கே` எனவும் பாடம் வேறு வேறாகவும் ஓதப் படுகின்றது.
இதனால், `தவமாவது இது` என்பதும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

பொழிப்புரை :

நமது அரிய உயிருணர்வும், அவ்வுணர்விற்கு இன்றியமையாததாய் உள்ள உலகம் உண்டாகி நிற்பதும், அங்ஙனம் நிற்குங்கால் அதன்கண் நிகழற்பாலதாய செவ்விய பெரிய தவச் செய லின் சிறப்பும் ஆகிய யாவும் இறைவன் திருவருளை அடிநிலையாகக் கொண்டனவேயாம். அதனால், `இத்தவத்தன் இயல்பு இது` என்பதை யும் அவ்வருளைப் பெற்றவரல்லது பிறர் அறிய மாட்டார்.

குறிப்புரை :

``உயிர்`` என்றது அதன் உணர்வையேயாதல் அறிக. ``தோற்றம்`` என்றது, அதனபின்னதாகிய நிலையையும் உணர நின்றது. செவ்விய பெரிய தவமாவது வீடுபயக்கும் தவம். அஃது இறைவனை வழிபடுதலேயாம். `உண்மைத் தவமாவது இறை வழி பாடே என்பதை உணர்தலும் திருவருளின்றியாகாது` என்பது உணர்த்துகின்றவர், அதற்கு ஏதுவாக அனைத்தும் திருவருளை திருவருளை முதலாகக் கொண்டமையை முன்னர் உணர்த்தினார். திருவருளை முதலாகக் கொண்டவற்றை ஒற்றுமை பற்றி, ``திருவருள்`` என்றே கூறினார். `அது பெற்றவரே யல்லால்` என வேறு தொடராக்கி யுரைக்க. திருவருள் பெறாதவர் பிறவற்றையே `தவம்` என மயங்கி அல்லலுறுதலை நினைக.
இதனால், உண்மைத் தவம் உணர்தற்கரிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகியே மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

பொழிப்புரை :

உலகப் பித்துப் பலவற்றையும் கொண்டு உழலு கின்ற மக்கள் பிறவித் துன்பத்தைச் சிறிதும் எண்ணுதல் இல்லை; (அதனால் அவர் அதனை நீககிக் கொள்ள முயல்வதும் இல்லை) வீடு பேற்றோடு தாம் விரும்பும் இம்மை மறுமைச் செல்வங்களையும் பெறுவார். இறைவனை ஒருஞான்றும் மறவாது பெரிய தவச்செயலைச் செய்பவரே யாதலின், அவரே பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் பெருமையைப் பெற்றாருமாவர்.

குறிப்புரை :

இரண்டிடத்தும், ``பிறப்பு`` என்பது அதனால், விளையும் துன்பத்தைக் குறித்தது. `பித்து` என்பது `பிச்சு` எனப் போலி யாயிற்று. சிறப்பு - வீடு. மறத்தற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `மாதவமாவது இது` என்பது மேலே சொல்லப்பட்டது.
இதனால், `தவம் எல்லாப் பயனையும் தரும்` என்பதும், அதனை யொழிதல் மயக்கத்தினால் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

பொழிப்புரை :

பொறி புலன்களை அடக்கியிருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரி யோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத்தேவரேயாக எதிர் வரினும் அப் பெரி யோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.

குறிப்புரை :

`அத்தகையோர்க்கே தவம் முற்றுவது` என்றவாறு.
``தவமும் தவமுடையார்க் காகும்; அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது``*
எனத் திருவள்ளுவரும் கூறினாராகலின், இப் பெருந்தன்மை யாளர், முற்பிறப்பில் தவம்செய்து பயின்றவர் என்க. தவத்தில் நின்றோர் பலரை இந்திரன், மாயோன் முதலியோர் மயக்கத்துட்படுத்து அவரது தவங்களை நிலைகுலையச் செய்தமை புராண இதிகாசங்களுட் கேட்கப் படுதலை உட்கொண்டு இவ்வாறு கூறினாராயினும், `தவத்தை இடையறு விப்பது உண்மையில் அவரது முன்னை வினையே` என்பதும், `அத் தன்மையாவனவினை, பல பிறப்புக்களில் முதிர்ந்து வரும் தவத்தின்முன் தன் வலிமைகெட்டொழியும்` என்பதுமே கருத்தென்க.
இதனால், தவம் பல பிறவிகளில் தொடர்ந்து நிகழ்ந்தே முற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

பொழிப்புரை :

அறிவரால் சிறிதும் தாழ்த்தலின்றி மிகவிரைந்து சார்ந்து தொழப்படுவோனாகியசிவன், கண்ணுக்கும் புலனாகாது மறைந்திருப்போனாயினும் சிலருக்கு வெளிநிற் பவனாகின்றான். அச்சிலராவார் அரிய தவத்தவரே யாகலான், அவருக்கல்லது அவன் அணுகலாகாதவனாம்.

குறிப்புரை :

`ஆகவே, அத்தவத்தையே ஒருதலையாகச் செய்க` என்பது குறிப்பெச்சம் இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, அதன் பின் ஈற்றடியைக் கூட்டி, அதன்பின் முதலடியை, ``கண்ணுக்கும்`` என்னும் உம்மை சிறப்பு பலனைச் சென்று பற்றுதல் கண்ணுக்குள்ள சிறப்பாம்.
இதனால், தவமே இறைவனைக் காட்டுவதாதல் கூறப் பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் உள்ள, ``பின்னெய்த வைத்தோர்`` என்னும் மந்திரம் மேல், சிவ குரு தரிசன அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 6

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

பொழிப்புரை :

உலகில் நுண்ணறிவுமிக்க அமைச்சராய் விளங்கி னோரும், போரில் வலிமிக்கு விளங்கிய யானைகளது கூட்டமும், ஆணையால் உயர்ந்து அரசராய்ப் பொலிந்தோரும் பிறர்மேல் பகைத்துச் சென்ற போரில் இறந்தாராய் ஒழிய, அவர்கள் நடுவிலே, தவத்தவராயினார், சிவன் உயிர்கட்குப் பொருந்த வைத்துச் சொல்லிய ஒப்பற்ற உண்மை ஞானத்தையும், அதனால் அடையப்படும் வீடு பேறாகிய உறுதிப்பொருளையுமே பொருளாக நோக்கி, கண் இமைத்தலும், அழிதலும், இல்லாத அமரராய் விளங்கினார்.

குறிப்புரை :

திணை விராய் எண்ணிய வழி, ``பட்டார்``, என உயர் திணையான் முடிந்தது. `பட்டாராக அவர் நடுவே என ஒரு தொடர் படுத்துக. `தவம் ஒழிந்த பிற யாவும் அழிதலுடையனவே` என்பது முன்னிரண்டடிகளில் விளக்கப்பட்டது. இரண்டாமடி உயிரெதுகை.
இதனால், தவம் நிலைபேற்றைத் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.

பொழிப்புரை :

`நூல்களை ஓதுவதே பெருமை` எனக் கருதும் கருத்தை விடுத்து, நீவிர் ஒரு மாத்திரை காலமாயினும் அறிவை அக முகப்படுத்தி அறிவினுள் நிற்கும் அறிவை நோக்குங்கள்; அந்நோக்கம் பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணி அதனுள் நன்கு பதிந்தாற்போல நும் அறிவுனுள்ளே நன்கு பதிய தொன்று தொட்டு உடம்பைப் பிணித்து வருகின்ற பிறப்புச் சேயதாக உம்மை விட்டு ஓடிவிடும்.

குறிப்புரை :

``சதுர்`` என்றது, ஓதுவாரது கருத்தினைக் கொண்டு கூறியது. கல்விக்குப் பயன் ஒழுக்கமேயாதலின், அஃது இல்லாத கல்வியை விடுக என்றார். மறித்தல் - வெளிச்செல்லுதலைத் தடுத்தல். உள் - அறிவினுள். நோக்குதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது `போல்வதாக` எனப்பொருள்தரும் `போல` என்னும் செய வெனெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது இவ்வாறு உரையாது, `அகலவிட்டோட்டுமே` எனப்பாடம் ஓதிக்கொள்ளலுமாம். `தொன்று தொட்டு விடாது வரும் பிறவிக்குக் காரணம் அறிவைப் பண்டே பற்றியுள்ள இருள்மலமாகலின், அஃது அப்பார்வையால் அகலப் பிறவியும் அகலும்` என்றவாறு.
இதனால், தவம் மலத்தை நீக்குதல் வாயிலாகப் பிறவியை அறுத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெறுதற்பொருட்டே தவம் வேண்டப் படுகின்றதாதலின், அந்த ஞானப்பேறு கிடைத்துவிடின், அதன்பின் தவம் வேண்டாததாகும். ஆகவே, சிவயோக சிவபோக நிலையை எய்தினார்க்குத் தவம் கடப்பாடன்றாம். அதனால் சிலவிடத்து, `தவம் வேண்டா` எனச் சொல்லப்படும் சொல்லினது பொருளைப் பலர் அறியமாட்டார்.

குறிப்புரை :

``சமாதி`` என்றது பேற்றை. ``அச் சகமார்க்கம்`` எனச் சிறப்பித்துக் கூறினமையின், அது ஞானகுருவின் அருள்பெற்றபின் நிற்கும் சிவயோகமேயாயிற்று. இதற்குமுன் ``வேண்டா`` என்றது, ``நியதமன்று`` என்றவாறு. அஃதாவது சிவயோக சிவபோக நிலையிற் சென்றார்க்கு உலகியல் உணர்வு தோன்றாது மறைதலின், அவரது தவச் செயல்களும் ``உறங்கினோன்கை வெறும்பாக்கெனத் * தாமே தவிரு மாயின், அஃது அவர்க்குக் குற்றமாகாது என்பதாம். அங்ஙன மாகவே, `அத்தகை யோர் அந்நிலைகளில் நீங்காது நிற்கவே முயலல் வேண்டு மன்றி, மீளத் தவநிலையில் நிற்க முயலுதல் கூடாது` என்பதும், `மீட்சி தானே உள தாயபொழுதே மீள முன்போல உலகியல் வந்து சூழாத வாறு தவ நிலையில் நிற்றல் வேண்டும்` என்பதும் பெறப்பட்டன. இவையெல்லாம் குருவருள் பெற்றார்க்கன்றி அறியலாகாமையின், ``தவம் வேண்டா மாற்றந் தனையறியாரே`` எனக்கூறி, `அதனைக் குரு முகமாக அறிந்துகொள்க` எனக் குறிப்பால் முடித்தார். இறுதியிலுள்ள ``தவம் வேண்டா`` என்னும் தொடர் தன்னையே குறித்துநின்றது.
இதனால், தவம் ஞானத்திற்குச் சாதனமாவதன்றிச் சாத்திய மாகாமை கூறி, அதனது நிலை இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால்
காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால்
சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்
போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.

பொழிப்புரை :

அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாகிய சிவத்தைத் தன் அறிவினுள்ளே ஒருவன் தலைப்பட்டு விடுவானாயின் அதன்பின் அவன் ஞானநூல்களை ஓதவேண்டுவதில்லை. `பர காயம்` எனப்படும் திருவருளையே ஒருவன் தனக்கு நிலைக்களமாகக் கண்டுவிட்டால், பின்பு அவன் தான் அதனின், வேறாய் நின்று அதனைப் பெற அவாவ வேண்டுவதில்லை திருவருள் கண்ணாகச் சிவத்தை அறிந்து அதிலே அழுந்தி நிற்கும் நிலை ஒருவனுக்கு இப்பொழுது கூடுமாயின், அவன் இவ்வுடல் வீழ்ந்தொழிய வேண்டும் என இதனை வெறுக்க வேண்டுவதில்லை. சிவயோக நிலையினின்று மீளுதல் இல்லாதார்க்குப் புலன்கள் வந்து பற்றும் வழிகளாகிய பொறிகள் செயற்படாது கெட வேண்டுவதில்லை.

குறிப்புரை :

`சாத்தியம் கைவந்தபின் சாதனம்வேண்டா என்பதனைப் பல்லாற்றானும் வகுத்துக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 3

கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டா துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டா செயலற் றிருக்கிலே.

பொழிப்புரை :

உண்மை நூல்களின் கருத்தையறிந்து அதன்வழியே அடங்கி விட்டால் பின்பு அந்நூல்களைக் குரல் கம்ம ஓதவேண்டுவ தில்லை. சமாதி நிலை கைகூடிவிட்டால், துதித்தல் வேண்டுவதில்லை. அகத்தூய்மையாகிய பற்றறுதி உண்டாகி விட்டால், நீர் பலகால் மூழ்கல்l முதலிய புறத்தூய்மைக்குப் பெரிதும் முயலவேண்டுவ தில்லை. தன் முனைப்பு அற்று, எல்லாம் சிவச்செயலாக இருந்து விட்டால், ஒரு குறியைத் தியானிக்கும் தியானம் வேண்டுவதில்லை.

குறிப்புரை :

சத்தம் - இசை; பாட்டு; துதி.
இவ் இரு மந்திரங்களாலும் சாதனம் வேண்டாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார்
விளைவறி வார்விண் ணின்மிக் காரே.

பொழிப்புரை :

தொன்று தொட்டு அடிபட்டு வரும் தவம் வாய்மை, அறம் என்பவற்றைச் செய்வார் யாவரும், `அவற்றால் விளையும் பயன் இவை` என உணர்ந்தே செய்வர். அங்ஙனம் அறிந்து அவற்றைக் கடை போகச் செய்து அப்பயனைப் பெற்றவர்கள் விண், மண் என்னும் இரண்டுலகத்து உள்ளாரினும் மேம்பட்டவராவர்.

குறிப்புரை :

மெய்த்தவம் - நிட்காமியத்தவம் எனவும், மெய்யறம் - புகழ், கைம்மாறு முதலியவற்றை நோக்காது அன்பும், அருளும் பற்றியே செய்யப்படுவது எனவும் அறிக. `விளைவறிந்தே செய்வார், விளைவுபெற்று உய்வார்` என்றதனால்` அவ்விளைவை அறிந்து செய்து பெறமாட்டாதாரது சாதனங்கள் தவம் முதலியன ஆகாவாயின.
இதனால், சாத்தியத்தைத் தருவனவே சாதனங்களாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே.

பொழிப்புரை :

சிவனடியார்களோடுகூடி, அவர்கள் செய்யும் தவத்தையே நானும் செய்து, அதன் பயனாகச் சிவனது திருவடியைத் தரிசித்தேன்; பின் அத்திருவடியின்கீழ் இருத்தலாகிய வீடுபேற்றை அடைய விரும்பியே பின்னும் தவத்தைச் செய்து அதனை அடைந்தேன். இவ் இருதன்மைகளையும் நீக்கி வாளா மெய்வருந்தச் செய்யும் தவம் தவமாகாது, அவமாம். ஆகவே, உலகோர் பலர் இவ்இரண்டையும் விரும்பாது பிணங்குவாராயின், அவரை எத்தவத்தோர் என்பது!.

குறிப்புரை :

``சிவகதி கண்டேன்`` என்றதனால் குரை கழலும் அவனுடையதாயிற்று. அவ்விரண்டாலும் கூடுதற்கும், தேடுதற்கும் செயப்படுபொருள் இவையென்பது விளங்கிற்று. `இவை களைந்து செய்வது ஏதம்` என மாற்றுக. பிணங்குதல், இந்நெறியொடு மாறுபட்டுப் பிறவாறு செய்தல். ``எத் தவத்தோர்`` என்பது, `யாதொரு தவத்தையும் உடையரல்லர்` என்பது குறித்து நின்றது.
இதனால், `சிவநெறி வழிபடாது செய்வன தவமாகா` என அவைகளது இகழ்ச்சி கூறப்பட்டது. ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு``3 என்றார் ஔவையாரும்.

பண் :

பாடல் எண் : 6

மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

பொழிப்புரை :

மனத்தின்கண் நிறைந்து நிற்கின்ற ஆசையாகிய பெரிய எழுகடல்களைக் கையாலே நீந்திக் கடந்து தவத்தில் நிற்பவரே தமக்கு என்றும் சார்பாகும் மெய்ப்பொருளை அடைவர். அது மாட்டாதே தவம்செய்து பிறவியில் அழுந்துவோர் மேற்குறிய அத் தவத்தோரை வழிபடுவாராயின், அவர் சிவனைத் தம் கண்முன் னாகவே காணுதலும் கூடும்.

குறிப்புரை :

``மனத்துறை மாகடல் ஏழ்`` என்பது அற்புத உருவகமாய் ஆசையைக் குறித்தது. அதனை முற்றும் விடுத்த அருமை தோன்ற, ``கை நீந்தி`` என்றார். தவம் இன்னதென்பது மேற்கூறப்பட்ட மையின், வாளா, ``தவத்திடையாளர்`` எனவும் அஃதல்லாத பிற செயலாளரை ``பவத்திடையாளர்`` எனவும் கூறினார். ``அவர் பணி கேட்கின் முந்தலும் ஆம்`` என்றது, `கேளாதவழி முந்துதல் கூடாது` என வலியுறுத்தவாறு. இதனானும், முன்னை மந்திரத்தில் ``கூடி`` என்றது, `சிவனடியாரோடு கூடி` என்றதே எனல் விளங்கும். இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `மேற்கூறியதவமும் ஆசையறாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து
புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.

பொழிப்புரை :

உள்ளமாகிய உறையிலே உள்ள ஞானமாகிய வாளை உருவி ஐம்பொறிகளாகிய பசுக்களைப் பிணித்துள்ள ஆசை யாகிய கயிற்றை இரண்டு துண்டாய் அறும்படி அறுத்து அவைகளை ஏனைப் பசுக் கூட்டத்தினின்றும் நீக்கி, அப்பசுக்களோடு தாமும் கொல்லையிற் சென்று மேயாதபடி அவற்றை மடக்கி வைத்தல் ஒருவனுக்கு கூடுமாயின், தவத்தில் தோன்றுவனவாகிய ஆறு ஒளிகளும் அவனுக்கு உரிய ஒளிகளாகிப் பயன் தரும்.

குறிப்புரை :

`அது கூடாதபொழுது அவனது தவம் ஒளியில்லாது, இருளேயாம்` என்றபடி, ``மதிவாள்``, ஏகதேச உருவகம். ``புனத் திடைப் போகாமல்`` என்றதனால், ``அஞ்சு`` எனப்பட்டவை `பசு` என்பது விளங்கிற்று.
`பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐத்துண்டு``l என ஐம்பொறிகளைப் பசுக் களாகப் பின்னும் கூறுதல் காண்க. ஆறு ஒளி - ஆறு ஆதாரங்களில் தோன்று இறையொளி. `ஐம்புல ஆசையை அறுத்தவர்க்கே யோகமும் தவமாய்ப் பயன்படும்` என்பது உணர்த்தி, `அது செய்யாதாரது யோகம் தவமன்றாம்` என இகழ்ந்தவாறு.
இதனால், `மேற்கூறிய எழுகடல் போலும் ஆசை ஐம்பொறி களின்வழிப் பெருகித் துன்புறுத்துமாகலின், அவற்றை அடக்காதாரது தவம் தவமன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது. இதன் பின்னிரண்டடிகள்,
``நினைத்த இடத்தே நிலைபெறுமாகில்
அனைத்துயிர்க் கெல்லாம் அதிபதி யாமே``
என்பது பாடமாகவும் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 8

ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

பொழிப்புரை :

அவரவரது பரிபாகநிலைக்கு ஏற்ப அவரோடு இயைந்து நீங்காது நின்று அருளுபவனாகிய இறைவனை அவனுக்கு அடியராய் நின்று வாயார வாழ்த்துதல் அவன்பால் பக்தியை மிகுவிக்கும். ஐம்பொறி யடக்கல் முதலிய நோன்புச் செயல்கள் அவர் முனிவராம் நிலையை நிலைபெறுவிக்கும். இறைவனை அடிபணிந்து தொண்டுகள் பலவும் செய்து நிற்றல் முத்தியைத் தரும்.

குறிப்புரை :

அவை முத்திதரும் `என்றால், அவற்றுள் ஒன்றும் அன் றாகிய தவம் என்னதவம்` என்பது குறிப்பு. `அடியாராய்` என ஆக்கம் வருவிக்க. அடியாராதலாவது, ``பாரம் ஈசன் பணியலது ஒன்றிலர்`` 8 ஆதல், இறுதிக்கண் வைக்கற்பாலதாகிய இது செய்யுள் நோக்கி இடையில் வைக்கப்பட்டது. சத்து - நிலைபேறு ``தான்`` இரண்டும் அசை நிலைகள் `சத்தானவையாகவேச் செய்வது` என ஆக்கம் விரித்து உரைக்க. முனிவர் நிலை பலவாதல் பற்றி, ``சத்தானவையாக`` என்றார். தவம், இங்கு நோன்பு. அதுதான் செயல் வகையாற் பலவாயினும், `நோன்பு` என ஒன்றாய் அடங்கல் பற்றி ஒருமையாற் கூறினார்.
இதனால், `ஒத்து நின்றானை ஒருவாற்றானும் அணுகாத தவம் தவம் அன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

பொழிப்புரை :

தலையாய நூல்களை அறியும் முன் நான் சிவனுக் கென்று கருதியே பச்சிலையைக் கிள்ளியும், பூவைப் பறித்தும், சில மலர்களைத் தொடுத்தும் பணிபுரிந்தேன். ஆயினும் அவற்றால் யாதொரு பயனும் விளையக் காணவில்லை. அந்நூல்களை அறிந்த பின் சிவனிடத்தே என் உள்ளம் குழைந்து நின்றது அதனால், சிவத்தைத் தலைப்பட்ட அனுபவத்தை அடைந்தேன். ஆகவே, நான் தவத்தை உணர்ந்தவாறு அதுவேயாயிற்று.

குறிப்புரை :

`பச்சிலையும், பூவும் முதலியன கொண்டு வழி படுதலும் அறிவின்வழிப் பட்டபொழுதே உண்மைத் தவமாம்` என்பது இதனுட் கூறப்பட்டது.
``கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடையார்`` l
எனவும்
``பன்னும் பனுவற் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே`` 8
எனவும் வந்தனபோல்வன காண்க. இரண்டாம் அடியில், `தொடுத்து` என்பது, ``தொட்டு`` என மருவிநின்றது. `வளைத்துக்கட்டி` எனினுமாம். கொள்ளுதல் மேற்கொள்ளுதல். அதற்கு, `பணி` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. பலன், உலகியலின் வேறானதோர் அனுபவம். அஃது அறிவில்வழி உளதாகாது என்பதாம். தலைதொட்ட - தலை யாய இடத்தில் பொருந்திய. ஈற்றில் நின்ற தலை, சிவம். `அதுவே தவங்கண்டவாறு` என எழுவாய் வருவித்து முடிக்க.
இதனால், `மேற்குறித்த தவந்தானும் அறிவோடு கூடாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.

பொழிப்புரை :

விரிந்த சடைமுடியோடு பெரிய தவத்தை மேற் கொண்ட அடியவர்க்கு யாதொரு துன்பமும் வாராதவாறு இறைவன் தனது அருளை வழங்குவன். அவ்வருளைத் தெளியாது தமக்குத் துன்பம் வராமல் மணி மந்திர ஔடதங்களால் காப்புச் செய்து கொள்வ தில் காலம் போக்குவாரது தவ நிலையை நோக்கின் அது, துன்பம் வந்து அடையும் வழியைத் தாமே ஆக்கிக்கொள்வதோர் பித்தச் செயலாகவே முடியும்.

குறிப்புரை :

தவ ஒழுக்கத்தோடு தவவேடமும்பூண்டாரது நிலை சிறப்புடையதாகலின், அநநிலையுடையாரை, ``மாதவம் பற்றிய பத்தர்`` என்றார். இதனானே, ``சடை` என்பதில் தொக்குநின்ற உருபு, `அன்போடு வரவேற்றான்` என்பதுபோலத் தவம் மேற்கொள்ளு தலைச் சிறப்பித்து நின்றமை விளங்கும். மாதவம் பற்றிய பத்தர்க்கு இடர் அடையா வண்ணம் ஈசன் அருளுதலை, அருச்சுனற்குப் பன்றி யால் இடர் வாராவண்ணம் காக்கச் சென்றமை முதலிய வரலாறுகளும், நாவுக்கரசருக்குச் சமணர்கள் விளைத்த இடர்கள் அவரை யாதும் செய்யாதொழிந்தமைமுதலிய அனுபவங்களும் இனிது விளங்கும். விடர் - பிறப்பு; அது தவத்தின் வேறாய செயல்களை குறித்தது. ``அடை`` இரண்டும், `குடல் - குடர்` என்பதுபோல லகரத்திற்கு ரகரம் போலியாய் வந்தன. ``உடர்`` என்பதும் முதனிலைத் தொழிற் பெயர்கள், ``உடம்போடுயிரிடை நட்பு`` l என்பதில், நட்பு அல்லாத கூட்டத்திளை `நட்பு` என்றதுபோல, மெய்த்தவம் அல்லாத தவத் தினை ``மெய்த்தவம்`` என நகை உள்ளுறுத்துக் கூறினார். உன்மத்தம் போல்வதனை ``உன்மத்தம்`` என்றார்.
இதனால், `திருவருளைத் தெளியாது மணிமந்திர ஔடதங்களால் நலனடைய முயல்வாரது தவம் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :

நூல்முறைமையை அறியாதவர் பசி, வெயில், மழை முதலியவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு தவத்தைச் செய்யமாட்டாராய், இல்லறத்தார் இடும் சோறு முதலிய வற்றைப் பெற்றுப் பிழைத்தற்பொருட்டுத் துறவு நிலையிற்புகுந்து தவத்தவர்போல வேடம்பூண்டு திரிதல், யாற்றில் ஒருதுறைக்கண் முதலை இருத்தலைக் கண்டு அஞ்சி அதனைவிட்டு நீங்கி, மற்றொரு துறைக்கண் குட்டிகளை ஈன்ற கரடி அக்குட்டிகளோடு குளித்துக் கொண்டிருத்தலை யறியாது அதன்கண் இறங்கி அக்கரடியினிடத்து அகப்பட்டாற்போல்வதாம்.

குறிப்புரை :

யாறு வாழ்க்கைக்கும், முதலை உள்ள துறை தொழில் முயற்சியோடு கூடிய இல்லறத்திக்கும், ஈற்றுக் கரடியுள்ள துறை நோன்றலோடு கூடிய துறவு நிலைக்கும் உவமையாயினவாறு அறிக. நோற்றல் - நோன்றல்; பொறுத்தல்.
இதனால், `உள்ளத்தால் தவத்தவராகாது, புறத்தே வேட மாத்திரையால் தவத்தவர்போல நிற்பாரது போலித்தவம் முடிவில் துன்பமே பயத்தலல்லது, சிறிதும் இன்பம் பயலாது\\\' என அதனது இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும்
குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

பொழிப்புரை :

தவ உணர்வாகிய பழம் பழுத்தற்பொருட்டும், பின் அத்தவத்தால் அனுபவம் பெறுதலாம் அப்பழத்தை உண்ணுதலைச் செய்தற் பொருட்டும், பிராணவாயுவாகிய இளங்கன்று துள்ளிச் சென்று அப்பழம் வைக்கப்பட்டுள்ள மனமாகிய அந்தக்கோணியில் புகுந்து அப்பழத்தைத் தின்றுவிடாதபடி - அஃதாவது தவ உணர்வைப் போக்கிவிடாதபடி - அதனைப் புருவ நடுவாகிய கொட்டிலில் கட்டி வைக்க வல்லவர்க்கு யாதொரு மனக் குற்றமும் உண்டாகாது; உள்ள மாகிய வயலில் ஊன்றுதற்கு ஞானமாகிய ஒப்பற்ற வித்தும் கிடைக்கும்.

குறிப்புரை :

`பழம் பழுக்கின்றவாறும்\\\' என மாற்றி உரைக்க. \\\"ஆறு\\\" இரண்டிலும், `ஆற்றுக்கும்\\\' என நான்காவது விரிக்க. `புல்காது\\\' என்னும் எதிர்மறைவினையெச்சம் ஈறுகெட்டு நின்றது. \\\"இட\\\" என்றதனால், \\\"நெஞ்சம்\\\" என்பது நெஞ்சமாகிய வயல்\\\' எனக் குறிப் புருவகம் ஆயிற்று. ஆகவே, \\\"ஒன்று\\\" என்றது விதை யாயிற்று. `விதை யாவது ஞானமே\\\' என்பது ஆற்றலால் பெறப்பட்டது. \\\"ஒன்றும்\\\" என்னும் உம்மை சிறப்பும்மை. வீடுபெற உணரும் உணர்வு ஒன்றே சாதனநிலையில் `தவம்\\\' எனவும், சாத்திய நிலையில் `ஞானம்\\\' எனவும் நிற்கும் என்பது மேலும் குறிக்கப்பட்டது அதனால் தவம்பழமாகவும், ஞானம் அதனாற் கிடைக்கும் வித்தாகவும் உருவகிக்கப்பட்டன.
இதனால், பிராண வாயுவை அடக்கிப் புருவ நடுவில் நிறுத்தி மனோலயம் பெறமாட்டாது அவ்வாயுவும், மனமும் சென்றவாறே செலவிடுவாரது தவம் நிலையாது\\\' என அதனது இகழ்ச்சி அதன் எதிர்மறைக்கண் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

பொழிப்புரை :

ஒருவர்க்கு அவரது உள்ளம் சிவமேயானபொழுது அவருக்குச் செய்யக் கடவ தவம் யாதும் இல்லையாம். அவரைப் போல உள்ளம் சிவமாய்ச் சிவானந்தத்திலே திளைத்திருக்கப் பெற்றோரது உறவே அவருக்கு உண்டாகும்; பிறரது உறவுகள் யாவும் அற்றொழியும். சித்தியும், வீடுபேறும் அவர்க்கு எளிதின் உளவாம். ஆகையால், உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகும்.

குறிப்புரை :

\\\"ஆக\\\" என்னும் செயவெனெச்சம், `உண்ணப் பசி தீரும்\\\' என்பதுபோலக் காரணப் பொருளில் வந்தது. எனவே, அஃது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவர்க்கு உண்டாம்\\\' எனக் கோடற் பொருள் வருவிக்க. \\\"உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்\\\' 3 என்று அருளிச் செய்ததும் காண்க. \\\"சித்தி முத்தி\\\", உம்மைத் தொகை. மூன்றாம் அடியின் இறுதியில், `ஆகலான்\\\' என்பது எஞ்சி நின்றது. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை \\\"சிவமாதல்\\\" என்பதனோடு கூட்டியுரைக்க. அங்ஙனம் உரைக்கவே `அப்பயனைத் தாராத பிற தவங்கள் தவமல்ல\\\' என்பது போந்து, அதிகாரப் பொருளை உணர்த்துவதாம்.
இதனால், `சித்தத்தைச் சிவமாகச் செய்யம் பெருந் தவம் அல்லாத சிறு தவங்கள் தவமாகா\\\' என அவற்றது இகழ்ச்சி கூறப்பட்டது. இதனானே சித்தத்தைச் சிவமாகச் செய்வனயாவும் தவமாம் என்பதும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 1

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

பிரான் - சிவபிரான். நற்செல்வம் - அறத்தாற்றின் வரும் செல்வம். நன்ஞானம் - ஐயமும், திரிபும் இல்லாத மெய்ஞ் ஞானம். பெருந்தன்மை - வியாபக நிலை `தெய்வம்` என்றது, தெய்வ நிலையை. பெருந்தெய்வ நிலைகளாவன அயன் மால் உருத்திரரது நிலைகள். இதனானே, `மந்திகேசுரர், அணுசதாசிவர்` என்போரது நிலைகளும் உளவாதலை இனம் பற்றிக்கொள்க. ``அருளின்`` இரண்டும், `அருள் பண்ணினால்` என்றவாறு. ``அருள் உண்டெனின் உண்டு`` எனவும், ``அருள் பண்ணினால் உண்டு`` எனவும் கூறியதனால், `அவை இல்லையாயின் யாதும் இல்லையாம்` என்பது போந்தது,
``அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு``
-அற்புதத் திருவந்தாதி - 9
அம்மை திருமொழியும் காண்க.
இதனால், சிவன் அருள் செய்தவழியல்லது யாதும் உளதாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகர் திரிவார்
அவிழும் மனமும் ஆதி யருளும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.

பொழிப்புரை :

`சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் தமிழ்வழங்கும் மண்டலம் ஐந்திலும், மிகப் பரந்த ஞானத்தை உணர்த்துவார்போலப் பிற நாட்டவர் புகுந்து திரிவார்கள். ஆயினும், அம்மண்டலம் ஐந்திலும், `உயிர்களின் அன்பு, இறைவனது அருள்` என்னும் அவ்இரண்டுமே பொருளாக விளங்குகின்றன.

குறிப்புரை :

`ஆதலின், அவற்றை அறியாத பிறர் தமிழ் மண்டலத் தின் உள்ளார்க்கு உணர்த்தும் சீரிய ஞானம் யாது மில்லை` என்றபடி, பிறநாட்டில் காசுமீரம் போன்ற சிறிதிடத்தில் சைவ சித்தாந்தம் ஓரளவு வழங்கப்படுகின்றதாயினும், அது தொன்று தொட்டு இன்றும் இனிதே விளக்கமுற்று நிற்பது தமிழ்நாட்டிலேயாகலானும், சைவ சித்தாந்தம், உயிர்கள் தம் பரிபாகத்திற்கு ஏற்பச் செய்யும் அன்பிற்குத் தகச் சிவன் அவைகள் மாட்டு அருளுடையனாய் ஞானத்தை வழங் குவன்` என்பதை முடிநிலைப் பொருளாகக் கூறுத லானும், `அதனை யறியாத பிறநாட்டவர் தமிழ் நாட்டவர்க்கு உணர்த்த இருக்கும் தத்துவம் யாதுளது? என்றார். ``வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு`` l என்பது முதலிய பண்டை நிலைக்குப் பின் நாயனார் காலத்தில் தமிழ் மண்டலம் ஐந்தாயிற்று என்க.
இரண்டிடத்தும் ``ஐந்தும்`` என்பதில் ஐந்தன்கண்ணும் என உருபு விரித்து, ``திரிவார்`` என்பதனோடும் ``ஆம்`` என்பதனோடும் முடிக்க. அறிவு - ஞானம்; அஃது அருளேயாதல் அறிக. `ஆதி அருளும்` என்றே பாடம் ஓதுதலுமாம் ஈற்றடியையும், `தமிழ்மண் டலம் ஐந்தின் தத்துவ மாமே` ஓதுதல் சிறக்கும்.
இதனால், `இவ் அதிகாரப் பொருள் தமிழ் நாட்டிலே உள்ள இணையிலா உயர்பொருள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.

பொழிப்புரை :

உலக வாழ்க்கையில் `நல்வினை, தீவினை` என்று இருவினைகளின் தோற்றமும், பயனுமே உள்ளன. அத்தோற்றம், பயன் என்பவற்றை அவை நிகழுங்காலத்தே தெளிய அறிபவர் சில ஞானியரே, அதனால், நீவிர் அந்த ஞானியர் வழிநின்று அவற்றைக் கருதியுணர்ந்து, அவ்வினைகளையும் அடியோடு போக்கி, அவற் றிற்கு அப்பால் இறைவன் இருக்கின்ற இடத்தை ஆராய்ந்தறியுங்கள்.

குறிப்புரை :

`அப்பொழுது ஞானம் வரும்` என்பது குறிப்பெச்சம். [``புண்ணிய பாவம்`` எனத் தொகையாக ஓதுதல் பாடமாகாமை அறிக.] `வினை உளதாய்ப் பயன் தருதலை உலகர் உணரார்; ஆதலின், நீவிர் உலகர் வழியிற் செல்லாது, அறிவர் வழியிற் செல்க` என்பார், ``நண்ணும் பொழுதறிவார் சில ஞானிகள்`` என்றார். ``பொழு தறிவார்`` என்றது, `பொழுதிடத்தே நேர்பட அறிவார்` என்றவாறு.
``நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்`` 3
என்றவாறு, உலகியல் வினைவழிப்பட்டதேயாக, மெய்ந்நெறி அவ் வினை வழிக்கு அப்பாற்பட்டதாகலின் அதனை, ``அப்புறத்து அண்ணல் இருந்திடம்`` எனவும் ``அவ்விடமாவது அருளேயாகலின், அதனை ஆய்ந்துணர்ந்து அடைய ஞானம் வரும் என்பார், ஆய்ந்து கொளீரே`` எனவும் கூறினார். `இருந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. `இருப்பிடம்` என்பதும் பாடம். வினையை அடி யோடு அறுத்தலாவது. அதற்கு முதலாகிய விருப்பு வெறுப்புக்களை விடுதல். விருப்பு நல்வினைக்கண்ணும், வெறுப்பு, தீவினைக்கண்ணும் நிகழ்வன. அவ்விரண்டையும் விடுத்து இரண்டன் கண்ணும் ஒப்ப நிற்றலையே `இருவினை ஒப்பு` என்பர், இதனை,
``ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்``l என்றாற் போலும் இயல்புகளால் விளக்குவர். இருவினையொப்பின்றி இறைவனது அருளைப் பெறுதல் கூடாமை யின், ``இரண்டையும் வேரறுத்து - அண்ணல் இருந்திடம் ஆய்ந்து கொளீரே`` என்றார்.
இதனால், அருளுடைமை வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

பொழிப்புரை :

அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன், இருவினை நீங்கிய காலத்து அங்ஙனம் நீங்கப் பெற்றார்க்கு யாதானுமோராற்றல் கண்முன் நின்றே அருளை வழங் குவன். வினையில்லாத நன்மை பொருந்திய குழாத்தினர்க்கு உயிர்க் குயிராய் இருந்தே அருளை வழங்குவன். யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்அருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பன்; அப்பாதுகாப்பின் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.

குறிப்புரை :

நாற்றோள் முதலிய தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவை களைச் செய்தல் இரண்டையும், `முன்னின்று அருளுதல்` என ஒன்றாக அடக்கினார். இவை இரண்டும் முறையே `பிரளயாகலர், சகலர்` என்பவர்க்கு அருளும் முறையாக ஆகமங்கள் வரையறுக்கும். முடி தலுக்கு, `இருவினை` என்னும் எழுவாய் முன்னை மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `நன்மை` என்னும் பண்புப் பெயர் ஈறு குறைந்து நின்றது. மேல்வினை முடிகின்ற காலத்து என, அருளுக்கு வினை தடையாய் நிற்றலைக் கூறினமையின், நன்மை, அத்தடையில்லாமை யாயிற்று. `நன்னின்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. உலகு - உயிர்தொகுதி. `வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்` என்பது வெளிப்படை. நடுவுயிர் - உள்ளுயிர். `மூவகை உயிர்கட்கும் மூவகையாக அருளுதலை நியதமாக ஆகமங்கள் கூறுதல் பெரும்பான்மை பற்றி` என்பதையும் `சிறு பான்மை` கீழுள்ளார்க்கும் மேலுள்ளார்க்கு அருளுதல்போலவே அருளுதல் பரிபாக முதிர்ச்சியான் உண்டு` என்பதையும்,
``பண்டைநல் தவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன்`` *
என்னும் சிவஞான சித்தியாலும், அதற்குச் சிவாக்கிர யோகிகள், சிவஞான யோகிகள் இருவரும் உரைத்த உரைகளாலும் உணர்க.
``ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே``l எனச் சிறப்புப் பற்றிக் கூறப்பட்டதாயினும், உடலைப்புறந்தந்து காத்தல், உறுதி கூறி நிற்றல் என்னும் இரண்டும் முறையே தாயர்க்கும், தந்தையர்க்கும் எஞ்ஞான்றும் கடனாயிருத்தல் கண்கூடு. ஆயினும், `உடல் தாய் தந்தையர்க்கு அவற்றைக் கடைபோகச் செய்தல் கூடாதாயினும், உயிர்த்தாய் தந்தையாகிய இறைவன் தான் ஆட்கொண்ட உயிரைக் காத்தலை எஞ்ஞான்றும் கடனாகக் கொண்டிருக்கின்றான்` என்பார், ``பின்னின்று அருளும்`` என்றார். `பின்னும், என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
``அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதிஎனப் பெற்ற அணுவை - அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ டெவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்``
எனவும்,
``உடனா யிருக்கும் உருவுடைமை என்றும்
கடனாயிருக்கின்றான் காண்``3
எனவும் அருளிச்செய்தன காண்க. `முடிவில் பிறவியை நீக்கும்` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் உயிர்கட்கு அருள் செய்யுமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடிற் சிவலோக மாமே.

பொழிப்புரை :

சிவனது அருளாலே சிலர், தேவர் பதவியை வேண்டின் அவற்றையும் பெறுவர். சிலர் அதனால் மக்களுடம்பில் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர். எனினும், சிவனது அருளால் சிறப்பாக வினை நீக்கம் உண்டாதலால், சிவனது அருள் ஒருவர்க்கு உண்மையாகக் கூடிற்றுஎன்றால், அதன் பயனாக அவர்க்குச் சிவலோகமே கிடைக்கும்.

குறிப்புரை :

உம்மை சிறப்பும்மை. `சேரகிலாமையால்` என உருபு விரிக்க. `சிவனருள் கூரின்` என்பதும்பாடமாகலாம். ``கூறின்`` என்பது பாடமன்று.
இதனால், சிவனருளின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

பொழிப்புரை :

அற வடிவினனும், எம் தந்தையுமாகிய சிவபிரானது இரு திருவடிகளை அடைந்ததனாலே, இருளை நீக்கி ஒளிரும் விளக்குப்போல்வதாகிய ஞானம்எனக்கு உண்டாயிற்று. இல்லையேல் உண்டாக மாட்டாது. யாவராயினும் மக்களாய்ப் பிறப்பதோ அல்லது தேவராய்ப் பிறப்பதோ சிவனருள் வாய்க்கப் பெற்றபோதேயாம்.

குறிப்புரை :

`அவ்வாறான பொழுது ஞானியாதல் அவனது அருளின்றி எங்ஙனம் ஆகும்` என்பது கருத்து. `சிவன்` என்னும் சொல்தரும் பொருள்களுள், `தூயதன்மையன்* என்பதும் ஒன்றாக லால், ``புனிதன்`` என்றது `சிவன்` என்றவாறு. ``நண்ணி`` என்னும் செய்தெனெச்சத்தை, `நண்ண` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. விளக்கு, பயன் பற்றிவந்த உவமை. பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பொழிப்புரை :

`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.

குறிப்புரை :

காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

பொழிப்புரை :

`சரியை, கிரியை, யோகம்` என்னும் இவற்றின் பயனாகச் சிவலோகவாசிகளாய் அங்குத்தோன்றினும் அங்ஙனம் தோன்றினோர் ஞானத்தைப் பெறுதற்கு அவ்வுடம்பொடு நின்று அங்கே அரிய தவத்தைச் செய்ய விரும்புவர். அத்தவத்தின் பயனாக ஞானத்தைப் பெற்றுச் சிவனடியையும் சேர்வர், அதற்குச் சிவனது அருளை அவர் முன்னர்ப் பெறுதலுடையவரேயாவர்.

குறிப்புரை :

``ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
ஒடுங்குமபோ தான்முனிவா தொழியினுற்பவித்து
ஞானநெறியடைந்தவர் சிவனை``
எனவும்,
``அங்கு நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற்றாளே`` 8
எனவும் உணர்த்தினமை காண்க.
இதனால், `எத்தகையோரும் தவத்தால் சிவனருளைப் பெற்றே ஞானத்தைப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.

பொழிப்புரை :

சூரியனைக் கண்ட சூரியகாத்தக்கல் நெருப்பு வடிவாய் நெருப்பை உமிழும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போலும் நீர் வடிவாய் நீரை உமிழும். பெருமைபொருந்திய கண் ஆடி எதிர்ப்பட்ட வழியின் வடிவாம். சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவேயாம்.

குறிப்புரை :

`கண்ணோடு கூடியது` என்னும் பொருட்டாகிய `சாக்ஷி` என்னும் வடசொல், இங்கு `சாக்கி` எனத்தற்பவமாயிற்று. கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடியை `உபநேத்திரம்` என்பர், அது வழியை நன்கு தெரிவிப்பதாய் அவ்வழிவடிவாய் நிற்கும், சரி - வழி, `எரியின் வடிவாம்` என்பது பாடமன்று. ``எதிர் கொண்ட`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பலவறி சொல், அஃது உயிர்களைக் குறித்து நின்றது. ``ஈசன்`` எனப் பின்னர் வருகின்றமை யின், வாளா, `எதிர்கொண்டன` என்றார். இங்கும், `எரிகொண்ட` என்பது பாடமன்று. ஈசன் வடிவு அவன் அருளேயாதல் அறிக. இறைவனை உணரும் உயிர் அவனது அருள்வடிவாதல் இனிது விளங்குதற்குக் கதிரவனை எதிரேற்ற சூரிய காந்தக்கல் முதலியவற்றை ஒப்புமைக் கூட்டமாக உடன் வைத்து விளக்கினார்.
இதனால், இறைவனை அருளைப் பெற்ற உயிர் அடையும் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
வீடு மளவும் விடுகின் றிலேனே.

பொழிப்புரை :

நாட்டில் உள்ளார் பலரோடும், மற்றும் எனக்கு உற்றாராய அவரோடும் அளவளாவி, `எங்கள் சிவபெருமான் யாண்டுளன்` என்று தேடுவேன்; அத்தேடுதலுக்கு அவன் அகப்படா தொழியான் ஆதலின், அவன் அகப்பட்ட இடத்தில் `சிவபெருமான் கிடைத்தான்` என்று மகிழ்ந்து அவனோடு சேர்வன். சேர்ந்தபின் என் உயிர் பிறவிடத்தன்றி அவனது திருவடியிலே சென்று சேர்தற் பொருட்டு இந்த உடம்பு அழியும் வரையில் அவனை விடாதே பற்றிக்கிடப்பேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு செய்ம்மின்` என்பது குறிப்பெச்சம். ``நாடு`` என்றது அதில் உள்ளாரையும், ``உறவு`` என்றது அதனை உடையாரையும் குறித்தன. `நாட்டோடும், உறவோடும்` என உருபு விரிக்க. அளவளாவுதல் சிவன் இருக்குமிடத்தை அறிதற்கு.
``தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை`` **திருவாசகம் - திருச்சதகம் 31
எனவும்,
``வியந்தாங்கலறித் - தேடிற்றிலேன்
சிவன் எவ்விடத்தான் எவர்கண்டனர் என்று`` 3
எனவும் ஆளுடைய அடிகள் அருளிச்செய்தமையும் காண்க. ``சிவபெருமான்`` என்பதற்கு முன்னும், பின்னும் `கிடைப்பின், கிடைத்தான்` என்னும் சொற்கள் எஞ்சிநின்றன வீடுதற்கு வினைமுதல் உடலாதல் வெளிப்படை. உடம்பு உள்ள காலத்து அதன்வழிப்பட்டு வேறொன்றைப் பற்றியிருப்பின் அதுநீங்குங்காலத்து உயிர்முன் பற்றியிருந்த பொருளையே அடையுமாகலானும், அவ்வாறன்றி அக்காலத்தில் இறைவனையே பற்றியிருப்பின் அது நீங்கியபொழுது உயிர் அவனையே அடைந்து விடும் ஆகலானும், ``வீடு மளவும் விடுகின்ற லேனே`` என்றார். நாயனார் சிவனை விடாது பற்றி நின்றவரேயாதலின், ``தேடுவன்`` என்றும், ``தேடிக்கூடுவன்`` என்றும் கூறியது, `விட்டொழிவேமோ` என்னும் அச்சத்தால், `ஒருகால் விடநேரினும் மீளவும் விரையப் பற்றுவேன்` என்றதாக உரைக்க. என்னை?
``பெறாஅமை அஞ்சும்; பெறிற்பிரி வஞ்சும்;
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு``*
என்பது காதலர் இயல்பாதலின்.
இதனால், `சிவபிரானது திருவருளை வேண்டுவார் அஃது ஒன்றையே நாடி முயலுதலும், முயன்று பெறின் பின்னர் விடாமையும் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

பொழிப்புரை :

முயலாது வைத்து வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதித் தவத்தவரது பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகாள், உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீவிர் அதற்கியைய உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நிற்குமாற்றால் சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடைத்தாம்.

குறிப்புரை :

``ஆடம்பரங் கொண்டு`` என்பதை, ``வேடங்கள் கொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. `உண்பான்` என்பது தொழிற் பெயராய் நின்றது, `உண்பான் ஏன்` என்பது முதலிய வற்றிற்போல. `பயனாக` என்னும் ஆக்கச் சொல் எஞ்சி நின்றது. `பாடியும்` என உம்மையைத் தொகாது. ஓதுதல் கூடாமை அறிக.
இதனால், அகத்துணர்வோடு கூடாத வேடத்திற்குப் பயன் புறத்தாரை வெருட்டுதலல்லது பிறிதில்லை என்பதும், அதனால், அத்தன்மையான வேடத்தைக் கொள்ளுதல் அறியாமையாம் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``ஞானமில்லார் பூண்டு`` என்றதனால், வேடம் ஞான முடையர்க்குரிய வேடமாயிற்று. ``இந்த நாட்டிடை ஈனம் செய்து`` என்றது, `இழிசெயலுக்கு நாணுதலுடைய ஞானியர் மிக்கு வாழும் இந்தநாட்டின்கண் நாணுதல் சிறிதும் இன்றி இழிசெயல்கின்றவர்` எனப் பொருள் தந்தது. ``இந்தநாடு`` என்றது நமது பரத கண்டத்தை. `எப்புவியிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்` என ஒருசொல் வருவித்தே உரைக்க. புவி - நாடு. இஃது, ``இந்த நாட்டை`` எனச் சுட்டியதன் உட்பகுதியைக் குறித்தது. ஆன நலம் - உண்டான. நன்மை `ஈனர்` என்பதில், ஓர் அகரம் விரித்தல் பெற்றது. ``எப்புவி யிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்`` என்றதனால், `ஈனரது வேடத்தை அகற்றுவிக்கற்பாலார் அந்நாட்டில் வாழ்பவர்` என்பது போந்தது. இன்பம் தருவதனை, ``இன்பம்`` என்றார்.
``எவரேனும் தாமாக இலாடத் திட்ட`` என்னும் திருத் தாண்டகம் இதனோடு முரணாமை மேல் ``வேட நெறியில்லார்`` என்னும் மந்திரத்து உரையில் விளக்கப்பட்டது. இதன் மூன்றாம் அடியில், `மான நலங்கெடும்; வையகம் பஞ்சமாம்` என்பதும் பாடம்,
இதனால், போலி வேடத்தாரை அறிந்து அகற்றுதல் அறிவுடையார்க்குக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

பொழிப்புரை :

`ஒருநாட்டில் வாழும் மக்களிடத்துள்ள நற்செயல் தீச்செயல்களாற்றானே அந்த நாட்டிற்கு இன்பமும், துன்பமும் உளவாவன` என்று அறிந்தோர் கூறவர். ஆதலால், அரசனாவான் தனது நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல்களை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து தீச்செயல் செய்யாதவாறு மக்களைத் திருத்து வானாயின், அவனது நாடு துன்பமின்றி, இன்புற்று வாழும்.

குறிப்புரை :

`ஆதலால் அரசன் அதனை ஒருதலையாகக் செய்க` என்பது குறிப்பெச்சம். போலி வேடத்தாரை அகற்றுதல் சிறப்பாக அரசற்குக் கடமை என வலியுறுத்துவார். அரசு முறைமையைப் பொதுப்பட எடுத்தோதினார். முதல் தந்திரத்துள் இதனையே அரசு முறை பற்றிக் கூறுதற்கண் பல மந்திரங்களால் நாயனார் விரித் துரைத்தமை காண்க.
`நாடு நன்றாவதும், தீதாவதும் அதன்கண் வாழும் மக்களது இயல்பானே` என்பதை,
``நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே`` *
எனச் சங்கத்துச் சான்றோராய ஔவையாரும் கூறினார்.
இதனால், `போலி வேடம் தலைகாட்டாதபடி செய்தல் சிறப்பாக அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த
அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

பொழிப்புரை :

தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலர், ஒழுக்கத்தால் உயர்வெய்த நினையாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடை யராய் நிற்கமாட்டாமையின் அக்குலத்தன்மை அழியப்பெற்று அந்நிலை நீங்கிக் கடவுளராக வைத்துப் போற்றப்படும் மிக உயரந்த நிலையைப் பெறுதற் பொருட்டுத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். இவ் இரு சாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களையுச் செயது பாழ்பட்டுவரும் கொடியராயினார் நாட்டுவாழ் குலத்தோரி னின்றும் நீக்கப்பட்ட குலத்தராயினாற் போலவே அரசு முறைமையுள் நாட்டு வாழ்க்கையினின்றும் நீக்கப்பட்டனர்.

குறிப்புரை :

`வழிகுலத்தோர்` எனின் மோனை சிதைதலானும், பொருள் படாமையானும் அது பாடமாகாமை அறிக. ``தேவாக`` என்ற தனால், இது `பூசுரர்` எனப்படுவாரை உட்கொண்டு கூறிய தாயிற்று. பழிகுலம் - பழிக்கப்பட்டு வரும் குலம். இப்பழி, அருள் வடிவின வாகிய ஆக்களை அஞ்சாது கொல்லும் தொழிலுடைமை பற்றிப் பழிக்கப்படும் பழியாம். இக்குலத்தவரை, `சண்டாளர்` என்றலும் இது பற்றி `இவர் நாட்டில் ஏனையோரோடு கூடிவாழ்தற்கு உரியரல்லர்` என்பது பண்டை அரசுமுறை. அதனால், `அம்முறையே போலி வேடத்தார்க்கும் உரித்தாகற்பாலது` எனக் கூறுமுத்தால், போலி வேடம் பூண்பாரது கொடுமையை விளக்கினார்.
``நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்`` 3
என்றார் திருவள்ளுவ நாயனாரும், `கழிகுலத்தோர்கள் போல` என உவமஉருபு விரிக்க போலி வேடத்தால் உளவாகும்
தீமைகள் பல. அவற்றுள் உண்மை வேடத்தாரையும் உலகம் ஐயுறச் செய்தலும் அது காரணமாக உண்மை வேடம் தோன்றாது போதலும் தலையாய தீமைகள், `அதனால் அது குறிக்கொண்டு களையற்பாலது` என நாயனார் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றார்.
``இவ்வேடர் - கொத்துக் கெலாமோர்
கொடும்பழியைச் செய்தீரே``*
என்னும் கந்தபுராணச் செய்யுளில், ``இவ்வேடர் கொத்து`` என்றதற்கு, `இத் தவவேடம் உடையராது கூட்டம்` என்பதே உட்பொருளாக உரைப்பர். அதனானும் போலி வேடத்தது கொடுமையை உணர்ந்து கொள்க.
மூன்றாம் அடியை, `பாசண்டாரனார்` எனப்பாடம் ஓதி, `சமயத் தலைவர்போல வேடம் பூண்டும் அத்தலைமைக் குணம் இல ராய்ப் பழிக்கப்படும் கூட்டத்தினர் மக்களால் விலக்கப்பட்ட கூட்டத் தினராய், அரசனாலும் களையப்பட்டார்` என்று உரைத்தலும் ஆம்.
இதனால், `அரசன் தன் குடிகளில் உள்ளாரை இங்ஙனம் கழித்தல் கூடுமோ` என்னும் ஐயத்தையகற்றி, அது முறையாமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

பொழிப்புரை :

அகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. மூன்றாம் அடியை, `போகத்துட் போக்கியம்` என ஓதுதல் பாடமன்று. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை, ``ஞானத்தால்`` என்பதனோடு கூட்டுக. ``ஞானம்`` என்று இங்குத் தவ உணர்வை,
இதனால், போலி வேடம் மறுமையில் நரகம் பயத்தல் கூறப்பட்டது.
``தவம்மறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று`` l
என்றதனால், `போலி வேடம் புனைதல் உயிர்க்கொலை செய்த லோடொத்த தீவினைச் செயல்` எனத் திருவள்ளுவரும் குறிப்பால் உணர்த்தினார். அதனால், `அவர் நரகம் புகுதல் அவர்க்கும் உடன் பாடு` என்பது பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 6

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே.

பொழிப்புரை :

சிலர் தொழில் செய்யாது மடிந்திருந்து வயிறு வளர்க்கக் கருதியே பொய்யாகத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். (`அவர் இல்வாழ்வாரை மருட்டியும், வெருட்டியும், ழிந்த பிச்சையை, நீக்காது ஏற்று உண்டு வாழ்வர்.) மெய்யாகவே தவ வேடத்தைப் பூண்பவர் இல்வாழ்வார் அன்போடு அழைத்து இடும் உயரிய பிச்சையையே ஏற்பர். (இவையும் அவ்இருசாராரையும் அறிதற்குக் குறியாம்.) தோற்றத்தில் பொய்வேடமும் மெய்வேடம் போலவே பூணப்பட்டாலும், உணர்வோடு கூடாத பொய் வேடம் அவர்க்கு உய்தற்கு ஏதுவாய வேடமாகாது கெடுதற்கு ஏதுவாய வேடமாக,) தவத்தினது பெருமையை உணர்ந்து அதனைப் பூண்டு நிற்போர்க்கே அஃது அவர் உய்தற்கு ஏதுவான வேடமாகும்.

குறிப்புரை :

மிகு பிச்சை - உயர்வுடையதாய பிச்சை உயர்வு அன்பொடு கூடிநிற்றல். `மெய்வேடம் பூண்பார் கொள்ளும் பிசை உயர் பிச்ை\\\\u2970?` எனவே, `பொய் வேடம் பூண்பார் கொள்ளும் பிச்சை இழி பிச்ை\\\\u2970?` என்பது போந்தது. `மெய் வேடம் பூண்டார் இல்வாழ்வார் வருந்தாது மகிழ்ந்து இடக் கொள்ளும் பிச்சை. வண்டு, மலர் வருந்தாது அதனிடத்துள்ள தேனை உண்டல் போல்வது` என்றற்கு அதனை, `மாதூகரி பிச்ை\\\\u2970?` என்பர் வடநூலார். ``பூணினும்`` என்பது `பூணப்பட்டாலும்` எனச்செயப்பாட்டு வினைப்பொருள் தந்தது. இனி, `பொய்வேடத்தை` என இரண்டாவது விரிப்பினுமாம். `அறிந்தோர்க்கே உய்வேடமாம்` என்றதனால், `அறியாத பொய் வேடத்தார்க்கு அஃது உய்வேடமாகாது, கெடுவேடமாம்` என்பது விளங்கிற்று. ``உய்வேடம்`` என்பதற்கு, `அப்பொய்வேடம் ஒழிதற் குரிய வேடமாம்` என்றுரைப்பினுமாம். ``உணர்ந்தறிந்தோர்`` என்ற ஒருபொருட் பன்மொழிகள் அவற்றதுகாரியமாகிய மெய் வேடத்தினையும், அதற்கேற்ற ஒழுக்கத்தையும் குறித்தன.
இதனால், `போலிவேடமும் உண்மை வேடத்தோடு ஒத்துத் தோன்றினும், செயலாலும், பயனாலும் அவை தம்மில் பெரிதும் வேறுபட்டனவாம்` என்பது கூறுமுகத்தால், போலிவேடம் தவ வேடமாகாது அவவேடமாதல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தவமிக் கவரே தலையாய வேடர்
அவமிக் கவரே அதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகலர் அவ் வேடம்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கஒண ணாதே.

பொழிப்புரை :

அகத்துத் தவ உணர்வு மிகுந்தவரே புற வேடத்தால் உயர்த்துக் கூறப்படுவர். அகத்து அவ்வுணர்வில்லாது உலகியல் உணர்வு மிகுந்தோர் தவவேடம் புனையின் `உயிர் கொலையை மிகச் செய்யும் வேடர்` எனப் பொருள் படுமாறு இருபொருட் சொல்லாக `வேடர்` எனச் சொல்லப்படுவர். அவர் வேட மாத்திரையால் தவத்தோர் ஆகார் ஆதலின், தவ உணர்வுமிகுந்தவர்க்கல்லது, தவ வேடத்தைத் தாங்கிநிற்றல் பொருந்தாது,

குறிப்புரை :

``தலையான வேடர்`` என்றாராயினும், `வேடத்தால் தலையானவர்` என்றலே கருத்தாதல் அறிக.`தவ உணர்வு இல்லாதார் தவ வேடம் புனையின் இகழப்படுவர்` என்பது இரண்டாம் அடியில் கூறப்பட்டது, மூன்றாம் அடியில், `வேடத்தால்` என உருபு விரிக்க. ``ஆகார்`` என்பதற்குமுன் `தவத்தோர்` என்பதும், பின் `ஆகலான்` என்பதும் எஞ்சிநின்றன.
இதனால், `தவவேடம் தவ உணர்வு உடையோர்க்கே உரியது` என்பது, `அதனைத் தாங்குதல் அவர்க்கு மிக்க சிறப்பைத்தரும்` என்பதும் கூறப்பட்டன. இதனுள் ஈரிடத்தும் `தவத்தோர்` என்னாது, ``தவம்மிக்கவர்`` என்றே அருளிச் செய்த குறிப்பு நோக்கற்பாலது.

பண் :

பாடல் எண் : 2

பூதி அணிவது சாதனம் ஆதியில்
காதணி தாம்பிர குண்டலம் கண்டிகை
ஓதி யவர்க்காம் உருத்திர சாதனம்
தீதில் சிவயோகி சாதனம் தேரிலே.

பொழிப்புரை :

தவவேட்கையோர் யாவர்க்கும் முதற்சாதனமாவது திருநீறணிதல். சிவநூல் கற்பிக்கும் ஆசிரியர்க்கு அதனோடு காதில் அணியப்படுகின்ற செப்புக் குழையும், செம்பை இடையிட்டுக் கோத்த உருத்திராக்க மாலையும் வேடங்களாம். சிவயோகிக்குரிய வேடத்தை ஆராயுமிடத்துச் சிவனிடத்துக் காணப்படும்` கோலங்கள் பலவுமாம்.

குறிப்புரை :

அவை வருகின்ற மந்திரத்தில் கூறப்படும். `ஆதியில் சாதனம் பூதி அணிவது` என மாற்றி யுரைக்க. `ஓதியவர்`` என்பது, `பிறரை ஓதுவிக்கும் ஆற்றலுடையார்` என்பது உணர்த்திநின்றது, ``சிவயோகி சாதனம் தேரில் உருத்திர சாதனம்` என்க.
இதனால், `பொதுத் தவ வேடமும், ஒருசார்ச் சிறப்புத் தவ வேடமும் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

யோகிக் கிடுமது உட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாகற்றுச் சுற்றம் சடையதொன்
றாகத்து நீறணி அங்கம் கபாலம்
சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.

பொழிப்புரை :

சிவயோகிக்கு அணியப்படும் பொருள்களாவன, அரையிற் கட்டும் கீளோடு கூடிய கோவணம் உமைக்குப் பாகம் இல்லாமல் ஒரு சடையால் சுற்றிக் கட்டப்படும் சடைமுடி, உடம்பு முழுவதும் முற்றுப் பூசிய திருநீறு, வேண்டும் பொழுது எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொள்ளுதற்கும், தன்னை வனங்கினார்க்குக் கொடுத்தற்கும் திருநீறு வைக்கப்பட்ட பொக்கணம் அல்லது பை, பிரம கபாலத்தை நினைப்பிக்கும் பிச்சைப் பாத்திரம், திருக்கையில் பிடிக்கும் மாத்திரைக் கோல் அல்லது பிரம்பு என்னும் இவைகளாம்.

குறிப்புரை :

அது - அவ்வேடம். பின்வரும் பொருள்கள் பலவும் `வேடம்` என ஒன்றாக வைத்துச் சுட்டப்பட்டன. `பாகம் அற்று` என்பது, `பாகற்று` எனக் குறைந்து நின்றது, மேல், ``உருத்திர சாதனம்`` என்றது பற்றிச் சிவன், ``மதுவிரிக் கொன்றை துன்று சடைபாகம், மாதர் குழல் பாகம்`` ஆதல்3 கொள்ளப்படாது, சடை ஒன்றுமே கொள்ளப் படும் என்றற்கு, `தோகைக்குப் பாகமற்றுச் சுற்றும் சடை ஒன்று` என்றார். இதனானே, சிவயோகி ஏனை உலக யோகிபோலத் துணைவி யோடிருத்தல் கூடாமை குறிக்கப்பட்டது. ``ஆகத்து நீறு`` என முன்னர்ப் போந்ததனைப் பெயர்த்தும் கூறினமையின் உடம்பு முழுதும் பூசிய நீறு என்பது போந்தது.``அணி`` என்பது, `அணிகின்ற, அணி விக்கின்ற` என, ``இருவயினிலையும் பொருட்டாய்`` 8 நின்றது, `அதனை அணி அங்கம்` என்க. சாங்கமாகிய பொக்கணம், திருநீற்றுப் பை இவற்றை ``அங்கம்`` என்றது பான்மை வழக்கு. `ஷ்ரீஹஸ்தம்` என்னும் ஆரியச்சொல், `சீகத்தம்` எனத் தற்பவமாயிற்று.
இதனால், `சிவயோகிக்குரிய தவ வேடம் இவை` என்பது கூறப்பட்டது. இதனை,
``சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம்சூழ் சடைவெண் பொத்திய கோலத்தினீர்`` l
என்பதனோடு வைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 4

காதணி குண்டலம் கண்டிகை நாதமுன்
ஊதுநற் சங்கம் உயர்கட்டி கப்பரை
ஓதுமில் பாதுகம் யோகாந்த ஆதனம்
ஏதுமில் யோகபட் டம்தண்டம் ஈரைந்தே.

பொழிப்புரை :

காதில் அணியப்படும் குண்டலம், உருத்திராக்க மாலை, நல்ல ஒலி உண்டாக வாய்வைத்து ஊதுகின்ற திருச்சங்கு, குண்டலத்தினும் உயர்ந்ததாகிய ஆறு கட்டி, திருவோடு, சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தவச் சாலை, பாதுகை, யோகம் முடிதற்குரிய இருக்கை, குற்றமற்ற யோக பட்டம், யோக தண்டம் என்னும் பத்தும் தவத்தோர்க்குரிய வேடங்களாம்.

குறிப்புரை :

பொதுப்படக் கூறியதனால், `இவைகளை அவரவர் ஏற்ற பெற்றியாற் கொள்வர்` என்பது கருத்து. தவச்சாலையும் உபாங்கமாய்த் தவவேடமாதல் குறிக்கப்பட்டது.
இதனால், தவ வேடமாவன பலவும் தொகுத்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 1

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

பொழிப்புரை :

யாவரேனும் எலும்புக் கூட்டைத் தோளிலே கொள்ளும் சிவபெருமான் பூசுவதும், அணிந்தோர் யாவர்க்கும் கவசமாய் நிற்பதும் ஆகிய திருநீற்றை அதன் வெள்ளொளி மிக விளங் குமாறு பூசி மகிழ்ச்சியுறுவராயின், அவரிடத்து வினைகள் தங்கியிரா. சிவகதி கூடும். சிவனது அழகிய திருவடியையும் அவர் அடைவர்.

குறிப்புரை :

``கங்காளன் பூசும்`` என்றது, `எல்லாவற்றையும் ஒடுக்கியபின் அவை ஒடுங்கிய சாம்பலைப் பூசுகின்ற என்னும் குறிப்பினது. சிவநெறியாளர்க்குத் திருநீறே கவசமும், திருவைந் தெழுத்தே அதிதிரமுமாதலை,
``வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே`` *
என ஞானசம்பந்தரும் குறிப்பால் அருளிச் செய்தமை காண்க. இக் கவசமும், அத்திரமும் வினையாகிய பகை வந்து தாக்காமற் காப்பதும், அப்பகையை அழிப்பதும் ஆதலை இம்மந்திரத்தாலும் இங்குக் காட்டிய தேவாரத்தாலும் அறிக. அவை பிற கவசங்களாலும், அத் திரங்களாலும் இயலாமையும் உணர்க. ``சிவகதி`` என்றது பத முத்தி அபர முத்திகளையும், `திருவடி சேர்தல்` என்பது பர முத்தியையும் குறித்தனவாம். `மகிழ்விரேயாமாகில் சேர்விரே` என்பதும் பாடம்.
இதனால், திருநீற்றது சிறப்பு வகுத்துணர்த்தப் பட்டது. இம்மந்திரம் சிவ பிரதிகளில் இவ்வதிகாரத்த்து இரண்டாம் மந்திர மாகக் காணப்படுதல் பொருந்தவில்லை.

பண் :

பாடல் எண் : 2

நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.

பொழிப்புரை :

அந்தண வேடத்துள் முதன்மை பெற்று விளங்கும் முப்புரிநூல், சிகை என்பவற்றது உண்மை இன்ன என்பதை முழு மூடராயுள்ளோர் சிறிதும் அறியமாட்டார். அவற்றின் உண்மையாவன யாவை எனின், `முப்புரிநூல்` என்பது வேதத்தின் முடிநிலைப் பகுதியாகிய உபநிடதங்களும், `சிகை` என்பது அவற்றின் பொரு ளுணர்வுமாம், நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந் தணர்கள், `பரமான்மா, சீவான்மா` என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதேயாம். வாளாநூலையும், சிகையையும் பொருந்த வைத்துக் கொள்வதனால் மட்டுமன்று.

குறிப்புரை :

இதனை இங்குக் கூறவே, `வேத வேதாந்தங்களை நன்கு ஓதி உணர்ந்தவர் திருநீற்றின் பெருமையை உணர்வாராகலான், அதனை அணிதலை ஒழியார்` என்பது குறிப்பாயிற்று. ``வேதத்தில் உள்ளது நீறு``l என ஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் முன் பலரும் அறிய அருளிச் செய்தமை இங்கு ஒரு தலையாக உணரற் பாற்று. `சபாலம்` என்னும் உபநிடதம் சிறப்பாகத் திருநீற்றின் பெருமை உணர்த்துவதாயுள்ளது. இவற்றால் `திருநீறு அல்லது விபூதி` என நீவிர் புகழ்ந்துரைக்கும் பொருள் நறுமணம் முதலிய நலம் யாதுமில்லாத வெறும் சாம்பல்தானே என இகழ்தல் பேதமைப் பலது என்பது போந்தது. அதனால், ``நூலும், சிகையும் அறியார் நின்மூடர்கள்`` என்றது போலவே, `நீற்றது உண்மையும் அறியார் நின்மூடர்கள்` என ஓதுதலும் கருத்தால் பெறப்படும். நீற்றது உண்மையை இவர். மேல் ``கவசத் திருநீறு`` என்பனால் குறித்தார். திருஞானசம்பந்தர் ``பராவண மாவது நீறு``l என இனிது விளங்க அருளிச் செய்தார். இருவரும் முறையே, ``பூசி மகிழ்வரே யாமாயின் தங்கா வினைகளும்`` எனவும்``பாவம் அறுப்பது நீறு``l எனவும் ஓதியருளினார். இவ்விடங்களில், `திருநீறாவது இறைவனது திருவருளே` என்பது தெற்றென விளங்கி நிற்கின்றது` இங்ஙனம்.
``தலைகல னாகஉண்டு தனியே திரிந்து
தவவாண ராகி முயல்வர்;
விலையிலி சாந்த மென்று வெறிநீறு பூசி
விளையாடும் வேட விகிர்தர்`` 3
என்றாற்போலவரும் சுருதிகளை யுணராமையால்,
``பூசுவதும் வெண்ணீறு; பூண்பதுவும் பொங்கரவம்`` l
``கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை`` 8
என்று புறச்சமயத்தார் இகழ்தலேயன்றி, `வேதத்தை ஓதுதலால் வேதியர் எனப்படுகின்றேம்` எனக் கூறிக் கொள்வாருள்ளும் சிலர் திருநீற்றை `சாம்பல்` என்று இகழ்ந்தொக்குதல் அவருக்குண்டான சாபக்கேடே என்பது,
``பேசரிய மறைகளெலாம் பராபரன்நீ எனவணங்கிப்
பெரிது போற்றும்
ஈசனையும் அன்பரையும் நீற்றொடுகண் டிகையினையும்
இகழ்ந்து நீவிர்
காசினியின் மறையவராய் எந்நாளும் பிறந்திறந்து
கதியு றாது
பாசமதி னிடைப்பட்டு மறையுரையா நெறியதனிற்
படுதி ரென்றான்``*
என்னும் கந்தபுராணத்தால் அறியப்படும். படவே, `அந்தணர்` என்பாருள்ளும் சிலர் இத்தன்மையராய் இருத்தலைத் திருவுளத்துட் கொண்டு அவரது இயல்பினை விளக்குதற்கே இம்மந்திரத்தை இவ்வதிகாரத்தில் நாயனார் அருளிச் செய்தார் என்பது விளங்கும். சிவபிரானது விகிர்த வேடத்தின் பெருமைகள் பலவும் அறிதற்கு மிக அரியன என்பதை உணர்த்தவே,
``சடையும் பிறையும சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்தொலோ``*
என்றார் போலப் பலவிடத்தும் அருளிச் செய்தார். இன்னோரன்ன திரு வருண்மொழிகட்குப் பின்னும் திருநீற்றிற்கு வேறாகச் சிலர் சில சமயக் குறிகளைப் படைத்துக் கொண்டது, மேற்காட்டிய சாபத்தின் வலி யெனவே வேண்டும் என்க.
அந்தணர் பரம், உயிர் இரண்டும் ஓர் ஒன்றாகப் பார்ப்பார் எனில், அஃது ஓங்காரம் ஓதிலேயாம்` என உம்மையும் ஆக்கமும் விரித்து மாற்றிமுடிக்க. பார்த்தல் - ஆராய்ந்துணர்தல். ``ஓர் ஒன்றாக`` என்றது `நுனித்து` என்றவாறு ``ஓங்காரம்`` என்றது, வேதத்தில் அது முதலாகத் தொடங்கிச் செல்லும் மந்திரங்கள் அமைந்த பாகத்தைக் குறித்தது. மந்திர பாகத்தின் உண்மையை உணர்த்துவனவே உப நிடதங்களாதலின், அம்மந்திர பாகத்தை முன்னர் நன்கு ஓதிப் பின்னர் அவற்றின் உண்மைகளை உபநிடதங்களில் உணர்தல் வேண்டும் என்றற்கு, ``ஓங்காரம் ஓதிலே`` என்றார். எனவே, ``ஓதி அவற்றை உப நிடதங்களில் உணரிலே` என்க. கூறுதலும் கருத்தாயிற்று. ``நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்`` என மேல் அந்தணர் ஒழுக்கத்தில் (229) கூறிய நாயனார் அதனை இங்கும் மறித்தும் கூறியது பெரிதும் வலியுறுத்தற் பொருட்டாயிற்று. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், `பிறப்பால் உயர்ந்தோர்` எனப்படுகின்ற அந்தண ராயினும் அவர் உயர்வெய்துதல் திருநீற்றாலே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியன்உரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம உயர்குல மாமே.

பொழிப்புரை :

பசுவின் சாணம் அரசு முதலிய சமித்துக்கள் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முன்னைப் பருவுரு மாறி அமைந்த அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாம்.

குறிப்புரை :

ஆலத்தி - ஆப்பி.
``மறைக்குங் காலை மரீஇய தொரால்` *
என்பதனான் இஃது அவையல்கிளவி யாகாதாயிற்று. அன்றியும் ஒலி வகையால் `ஆல் அத்தி` என்பது போலத் தோன்ற வைத்தமையானும் அன்னதாகாதாயிற்று. `ஆல் அத்தி` என்றே பொருள் உரைப்பினும் திருநீற்றுக்கு முதலாகிய பசுச்சாணம் பெறப்படாமை அறிக. ``அரசு`` என்றது பிற சமித்துக்களுக்கு உபலக்கணம். `ஆலத்தி அரசுடன் விரிவு கனலில் வியன் உருமாறி ஆகும் அக் காரம்` எனக் கூட்டுக. திருநீற்றின் வேறு பெயர்களும் ஒன்றாகிய `க்ஷாரம்` என்னும் ஆரியச் சொல், ``காரம்`` எனத் தற்பவமாய் அகரச் சுட்டேற்று. ``அக்காரம்` என வந்தது. ``அக்காரம் நிரவிய`` எனச் சுட்டிக், கூறவே, திருநீற்றை, `சாம்பல், சுடலைப் பொடி` முதலாகப் பொதுவில் பலவகையாகக் கூறினும் `தக்க பசுவின் சாணத்தைத் தக்க வகையில் பெற்று மந்திரத்தால் கோசலங்கொண்டு பிசைந்து உலர்த்திச் சிவவேள்வியில் இட்டுப் பெற்றதே உண்மைத் திருநீறாம்` என்பதனை முதல் இரண்டடி களாற்கூறினார். நிரவுதல் - நிரம்பப்பூசுதல். `பிறப்பால் அந்தண ராதலே பிரமகுலமாகாது; திருநீற்றை நிரம்ப அணிந்தவழியே ஆகும்`` என்றற்கு `சிவனுருவாம்` என்னாது ``பிரம உயர்குலமாம்`` என்றார்.
இதனால், `திருநீற்றை இல்லாதவர் கடவுளை உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.

பொழிப்புரை :

ஞானம் இல்லாதவர் ஞானிகட்குரிய வேடத்தைப் பூண்டிருப்பினும் நரகத்திற்கு உரியவரேயாவர். ஞானம் உள்ளவர்கள் தம்மிடத்தில் ஞானிகட்குரிய வேடம் இல்லாதொழியினும் பரமுத்திக்கு உரியவரே. அதனால், ஞானம் உண்டான பின்னர் அதற்குரிய வேடத்தை விரும்புவோர் சிவபிரானைப் போலவே அந்த வேடத்தைப் பூண்டிருப்பர்.

குறிப்புரை :

`இன்றெனிலும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. ``உளதாக`` என்னும் செயவெனெச்சம், ``கைப்பொருள் ஒன்றுண்டாகச் செய்வான் வினை``* என்பதிற் போல இறந்த காலத் தின்கண் வந்தது. இவ்வாறன்றி, எதிர் காலத்ததாகக் கொண்டுரைப் பின், அது முன்னை யதிகாரத்துத் தவ வேடமாயே முடிதல் அறிக. ``வேடம் நண்ணி நிற்பார்`` எனப் பின்னர்க் கூறுதலின், வேண்டுதல் வேடத்தையே ஆயிற்று. `ஞானிகட்குரிய வேடவாவது இது` என்பது உணர்த்துதற்கு ``நக்கன்போல்`` எனவும், `அவ்வேடம் காண்பார்க்கும் ஞானத்தை உண்டாக்கும்` என்றற்கு ``ஞானம் உள வேடம்`` எனவும் கூறினார். `நக்கன்பால்` என்பது பாடமன்று. நக்கன் - உடையில் லாதவன். ``அணியெல்லாம் ஆடையின்பின் என்பதை விடுத்தலின், `நகப்படுவன்` என்பது இதன் பொருளாம். சிவபிரானை இப் பெயராற் கூறுதல் பட்டும், துகிலும் உடாது, தோலையே ஆடையாக உடுத்தல் பற்றியாம். இனிக் `கீள், கோவணம்` என்னும் இவற்றளவே கொண்டு நிற்றலும் உடையின்மையாகவே கூறப்படும். இவ்வாறன்றி, `திகம்பரன்` என்பதே வெற்றரையாய் நிற்றலைக் குறிக்கும், எனவே, `நக்கன்` என்பதை `நக்நன்` என்னும் ஆரியச் சொல்லின் திரிபாகக் கொள்ளின் அது `திகம்பரன்` எனவே பொருள்படும். சிவபிரானை, `திகம்பரன்` என்றல் அவனது வியாபக நிலையைக் குறிக்குமல்லது வேடத்தைக் குறியாது. `சிவபிரான் பிச்சைக் கோலம் கொண்டு சென்ற பொழுது வெற்றரையாகச் சென்றனன்` என்பது உளதாயினும், கீள் கோவணத்தோடு சென்றனன் என்ற கருத்தும் உண்டு.
``உறைவது காடுபோலும்; உரிதோல் உடுப்பர்;
விடைஊர்வது ஓடு கலனா`` l
என்றொடக்கத்தனவாய் வரும் திருமொழிகள் சிவபிரானது வேடங்கள் உலகரால் நகப்படுவனவாயிருத்தலையே உணர்த்தும். அவ்வாறிருப்பினும்,
``இறைஇவர் வாழும் வண்ணம் இதுவேலும்
... ... ... ... ... ,..
அறைகழல் வண்டுபாடும் அடிநீழல் ஆணை
கடவா தமர ருலகே`` 3
என்றற்றொடக்கத்தனவாய் வரும், திருமொழிகள் அவ்வேடங்கள் சிறிதும் பற்றுடபடாத தூய உணர்வைத் தெரிவிப்பனவாய்ப் பற்றுட் பட்டு மயங்கும் மயக்க உணர்வையுடைய தேவர் முதலிய பலரையும் ஆளும் தலைமைக் கோலங்களாய் இருத்தலை விளக்குமாகலின், அவை ஞானவேடங்களாதல் நன்கறியப்படும். அவ்வேடங்கள் காண்பார்க்கும் ஞானத்தைத் தோற்றுவித்தலை,
``ஓதிஓர்க் கப்படாப் பொருளை ஓர்விப்பன
... ... ... ... ... ...
ஆதிஅந் தம் இலா அடிகள் வேடங்களே`` 8
என்றற்றொடக்கத்தனவற்றால் அறிக. `நக்கன்பால்` என்பது பாடம் அன்று.
இதனால், `ஞானிகட்குரிய வேடத்தை ஞானம் இல்லாதார் புனைந்து வஞ்சிப்பின் நரகம் புகுவர்` என்பதும், `ஞானிகட்குரிய வேடம் இது; இதனை ஞானியர் விரும்பிற் பூண்பார்; பூணாது விடினும் அவர்க்குத் தாழ்வில்லை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.

பொழிப்புரை :

இழிந்த ஞானத்தை உடையவர்கள் உயர்ந்த ஞானத்தை உடையவரது வேடத்தைப் பூண்பாராயினும், அதனால் அவர்க்கு வருவதொரு நன்மை இல்லை. உயர்ந்த ஞானத்தை உடை யவர் இறைவனது அருளாகிய பயனைப் பெற்றுவிட்டமையால், `குறித்ததொரு வேடத்தைப் பூணவேண்டும்` என்னும் விருப்பமும் இலராவர். தமது ஞானத்தையே பெரிதாக மதிக்கும் குற்றத்தை உடையவர் ``தத்தம் மதங்களே அமைவதாக அரற்றிமலையும்`` 3 சமயப் பூசலை உடையராவர். மற்று, உண்மை ஞானம் உடையோர் அதற்குத் தகுதியில்லாதாரைக்காணின் ஒன்றும் பேசாது வாளாதே போவர்.

குறிப்புரை :

இழிவு, உலகியலுள் அழுந்தலும், உயர்வு அதனின் நீங்கி மேற்போதலுமாம். ``பூணார்`` என்பது `பூணுதலில் கருந் தூன்றார்`` என்றதாம். ``வேண்டுமாறு விருப்புறு வேடத்தர்`` l எனச் சேக்கிழாரும் கூறினார். ``சமயம்`` சமயவாதத்தைக் குறித்தலின் ஆகு பெயர். ``பின்`` என்பது, வினைமாற்றாய `மற்று` என்னும் பொருளில் வந்தது. ``ஒன்றும் பேசகில்லார்`` என்பது, `தமது நிலையைப் பிறர்க்கு வெளிப்படுத்திப் புகழ்பெற விரும்புதல் இலர்` என்பது உணர்த்தி, `அத்தகையோர் ஞானவேடத்தைப் புனைந்து கொள்ளுதலையும் ஒருதலையாக விரும்புதல் இல்லை` என்பதை வலியுறுத்தி நின்று. இதனுள் `` பூணார்`` என்பதை, `பூண்பர்` எனவும், முன்னை மந்திரத்தில், ``இன்றெனில்`` என்பதை `உண்டெனில்` எனவும் ஓதுவன திரிக்கப்பட்ட பாடங்களாதல் விளங்கும்.
இதனால், உண்மை ஞானியர் சாத்தியமாகிய திருவருளை யன்றிச் சாதனமாகிய வேடத்தைப் பெரிதாகக் கொள்ளாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

பொழிப்புரை :

பயனில்லாத வேடம் சிவஞானிகட்கும், சிவ யோகிகட்கும், ஆகாது. ஆராயுமிடத்து அது வேதாகமங்களாகிய தொன்னெறியல்லாத புதுநெறியில் நிற்போர்க்கு ஆவதாம். அது நிற்க, சரியை முதலிய நான்கு நெறிகட்குரிய வேடங்களே ஒருதனிச் செம்பொருளாகிய சிவம் உள்நிற்கும் வேடங்களாம்.

குறிப்புரை :

ஆகவே, `அவையே சிவஞானிகட்கும், சிவயோ கட்கும் உரியன` என்பதாம். பயனில்லாத வேடங்கள் பாயுடுத்தல், தலைமுடியயைப் பறித்துக்கொள்ளல், மயிற்பீலி பிடித்தல், துவராடை அணிதல், வெற்றரையாய் இருத்தல் முதலியனவாம். இவை பரம் பொருள் வடிவாகாது, வாளா உடம்பை வருத்துதலாய் முடிதலின், பயனிலவாயின. இவை முதனூல்களாகிய வேதாகமங்களை இகழ்ந்து, புதியனவாய்ப் படைக்கப்பட்ட எதிர்நூல்களின் வழிநிற்பர் கொள்வன வாதல் வெளிப்படையாதலின், ``நவமாம் அவர்க்கு`` என்றார். வேடம் வகையானும், விரியானும் பலவாயினும், தொகையால் ஒன்றே யாகலின், ``ஆகாது`` எனவும், ``அது`` எனவும் ஒருமையாற் கூறினார். ``நான்கு`` என்றது ஆகமங்களின் வழி யவாதலின், `சரியை முதலிய நான்கு` என்பது விளங்கிற்று. சரியை முதலிய நான்கில் நிற்போர் தாம் தாம் செய்யும் பணிகட்கு ஏற்ற வேடங்களை யுடையராய் இருத்தல் பற்றி, அவைகளை வகுத்தோ தினார். இங்கு எடுத்துக் கொண்டது ஞானவேடமேயாயினும், சரியை முதலிய மூன்றும் ``அரும்பு, மலர், காய்`` l என்பனபோல ஞானத்தின் படிகிளைகளேயாதல் பற்றி, அவற்றது வேடங்களையும் உடன் ஓதினார். `சாதனமாவது இங்குவேடமே` என்பது அதிகாரத்தால் விளங்கும். உவமானம் இப்பொருள், இரண்டாவதில்லாத தனிப் பொருள். இதனை ``ஏகம்`` என்றல் உபநிடத வழக்கு ``ஒன்ற வன்றானே`` என நாயனாரும் தொடக்கத்தே உணர்த்திப் போந்தார்.
இதனால், பிறவேடங்கள் கடுந்துறவை விளக்குவனபோல உலகரை மருட்டுவவாயினும், அவை சிவநெறியாளர்க்கு ஆகாமை கூறப்பட்டது. ஆகாதவற்றை. `ஆகா` எனக் கண்ணோட்டமின்றி அறுதி யாக விலக்கி ஒழித்தலும் உண்மை நூல்கட்கு இயல்பு என்பதை ஊன்றி யுணர்க.

பண் :

பாடல் எண் : 4

கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல்
கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும்
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

பொழிப்புரை :

அனுபவத்தால் இன்பம் உறாது, பேச்சினாலே இன்ப மடையும் நூலறிவுடைய சிலர், கழுமரத்தடியில் நின்று அதன் உச்சியில் உள்ள உடல் எட்டாதபொழுது குரைத்தலையும், சிறிது எட்டிய பொழுது அதனைக் கடித்தலையும் செய்கின்ற நாய்களைப் போலத் தாம் அறிந்தவற்றைக் காலம், இடம், தகுதி முதலியவற்றை நோக் காமலே உரக்க எடுத்துப் பேசுதலும், காலம் முதலியன சிறிது வாய்த்த வழிக் கேட்பாரது உள்ளத்தை அலைத்தலும் செய்து திரிவார்கள். சிவஞானத்தை அனுபவமாக அடைந்தோர் வாக்கும், காயமும் வன்மைபெற்றிருப்பினும் செத்தவரைப்போலயாதும் உரையாதே, எவ்விடமும் இடமாக உலாவிவருவர்.

குறிப்புரை :

``கழுவடி நாய்கள்போல்`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்து. குரல் களி - குரலால் களிக்கின்ற இதுவே பாடம்; `குரக்களி` என்பது பாடமன்று என்பது உவமையால் இனி துணரப்படும். `பொறியும், உடலும் ஒத்து இருக்க` என மாற்றுக. `மூப்பொறி` என்னும் வழக்குப் பற்றி, `வாக்கு` என்னும் தொழிற் கருவியை, `பொறி` என்றார். வாக்கு வன்மைபெற்றிருத்தலாவது சொல்வன்மை வாய்த்திருத்தல். உடல்வன்மை உரத்தும், நீட்டித்தும் பேசுற்குத் துணையாகும். குரற்களி ஞானிகள் உரத்துப் பேசுதல் பயனில் செயலாம் என்பதை விளக்கவே, ``கத்தித் திரிவர்`` என்றார். வைதுரை `சொல்லம்பு` எனப்படுக் கேட்போர் உள்ளதைப் புண் படுத்தல் போல, இவரது பேச்சும் அலைவால் புண்படச் செய்யும் என்பதனை, ``கொத்தி`` என்பதனாற் குறித்தார். மனம் இன்னல் உறுதலை, `நெஞ்சு புண்ணாதல்` என்னும் வழக்குண்மையறிக. செத்து - செத்தாற் போன்று. ``திரிவர்`` மூன்றில் இறுதியது பற்றின்றி இருத் தலையும், ஏனையவை பயனின்றி வாழ்தலையும் குறித்தன. இவர்களை நாயனார் முன்பு ``சோம்பர்`` எனவும், ``தூங்குபவர்`` எனவும் குறித்தமை காண்க.
இதனால், `வாய்வாளாமையும் சிறந்ததொரு ஞானவேடப் பகுதியாம்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அடியா ரவரே அடியா ரலாதார்?
அடியாரு மாகாதவ் வேடமு மாகா
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.

பொழிப்புரை :

குணத்தால் அடியவரல்லாதவர் பிறவாற்றால் அடியவராவரோ? ஆகார். அடியார் ஆகாதபொழது அவர்கட்கு அந் நிலைக்குரிய வேடங்களும் கூடா. அடியராவார் சிவஞானத்தை அடைந் தோர். ஆதலால், அத்தன்மையில்லாதவர் ஒருவாற்றானும் அடியரல்லர்.

குறிப்புரை :

``அடியாரவரே`` என்னும் ஏகாரம் வினாப் பொருட்டாய், அடியவாரகாமையைக் குறித்தது. `ஆகாதவழி` என்பது ``ஆகாது`` எனத் திரிந்து நின்றது. மூன்றாம் அடி, அடியாராகும் முறைமையைக் குறித்தது.
இதனால், ஞானவேடம் மட்டுமே ஞானியராகச் செய்யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற்றவனுக்கு உலகர் கொள்ளும் அழகிய வேடமும், ஞானவேடமேயாய்ச் சிறந்து நிற்கும். அதனால், அவன் எந்த வேடத்தோடு இருப்பினும் அது பரம சிவனோடு ஒன்றி யிருத்தற்குரிய வேடமாயே அமையும். இனி, ஞானவேடமாகச் சொல்லப்பட்ட அவ்வேடம் ஞானம் சிறிதும் இல்லாதவனுக்கு ஏற்புடையதாதலும் உலகியலாய் உள்ளது.

குறிப்புரை :

சுந்தர வேடமாவது உலகத்தார் விரும்பி யணியும் வேடமாதலை,
``சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை`` - திருமுறை - 7.100.3.
என அருளிச் செய்தவாற்றால் அறிக. நன்மை - ஞானம். நல்ல - ஞானத்தையுடையன. சரியை முதலிய மூன்றில் நிற்போர் தடத்த சிவத்தையே சாரந்து நிற்க, ஞானி சொரூப சிவத்தைச் சார்ந்திருப்பன் ஆதலின், ``தற்சிவ யோகம்`` என்றார். யோகம் - ஒன்றுதல். ஒன்று தலைத் தருவதனை `ஒன்றுதல் என்றே கூறினார். `அருள்ஞான சாதனம் அவ்வேடம்` என மாற்றிக்கொள்க. ஒன்றும் - சிறிதும். ஆகாதவன் இதற்கு `ஞானம்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `உலகியல் அவ்வாறிருப்பினும், அதனால் பயன் என்னை` என்பது கருத்து.
இதனால், ஞானம் இல்லதார் ஞான வேடம் புனையினும் பயன்பெறுதல் இல்லை; ஞானம் உடையவர் ஞானவேடம் புனையா தொழியினும் பயன் இழத்தல் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே

பொழிப்புரை :

சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தால் முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத் தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப் பிடத்தை உடையனாய் இருப்பன். சொல்லேயன்றி மனமும் அடங்கி விட்ட நிலையை உடையனாதலின் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனே யாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முற்றப் பெற்றவனாம். சிவஞானத்தைப் பெறாது சிவான வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.

குறிப்புரை :

`ஏனைத் தவசி சிவஞானியாகான்` எனவே, இத்தவசி (சிவஞானம் பெற்றவன்) வேடம் இன்றியும் சிவ ஞானியே என்பது பெறப்பட்டது. `அதனில்` என்பது `அத்தில்` எனமருவிற்று. ``அது`` என்றது சிவன் பாதத்தை. `இருப்பிடம்` சிவனுக்கு என்க. அஃது உயிரேயாம். மோனம் - மௌனம். அஃது இங்கு வாய் வாளாமை யோடு மனம் அடங்கியதையும் குறித்தது. `தவசியை` என்னும் இரண்டாவது தொகுத்தல் பெற்றது.
இதனால், அகத்தில் ஞானம் உடையவன் புறத்தில் வேடம் இலனாயினும் சீவன்முத்தனாய் விளங்குவன்; ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் அத்தன்மையன் ஆகான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தானற்ற தன்மையும் தான் அவ னாதலும்
ஏனைய அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே.

பொழிப்புரை :

தற்போதம் அற்றிருத்தல், தான் சிவமேயாய் நிற்றல், சிவனல்லாத ஏனை எல்லாப் பொருள்களிலும் சிவம் நிறைந்து நிற்றலை உணர்ந்து, அவற்றைச் சிவமாகவே காணுதல், ஞானத்தை நழுவாது நிலை நிறுத்தற்குத் துணையாய் உள்ள வேடங்களைப் பூணுதல் வாய்வாளாமை ஆகிய இவை யாவும் சிவனது திருவடிப்பேறாகிய முத்தியைப் பெற்ற நிலையின் இயல்புகளாம்.

குறிப்புரை :

ஏனைய - மற்றையவை. எல்லாவற்றையும் சிவமாகக் காணுதலை.
``மரத்தை மறைத்தது மாமத யானை``1
என்னும் மந்திரத்துள் நாயனார் பின்னர் இனிது விளங்க அருளிச் செய்வார்.
``காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்`` 2
என்பது முதலாக நாவுக்கரசரும் பலபட அருளிச் செய்தமை காண்க.
``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்`` 3
என்பதும் காண்க. பெற்றதன்கண் உள்ளவற்றைப் `பெற்றது` வேடத்தின் கால ஆகுபெயர்.
இதனால், ஞானம் பெற்றவழி நிகழ்வன பலவும் ஞான வேடத்தின் பாற் பகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :

சிவனது சத்திபதிவால் தாம் அவனுக்கு அடிமை யாதலை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகும் ஒழுக்கம் உடையவராய்த் தமது உடம்பும் ஏனைய பொருள்கள்போலச் சிவனது உடைமயாம் சிறப்பை உணர்ந்து, அவ் இரண்டுணர்வையும் தடுத்து நிற்கும் இருள் நீங்கப்பெற்றுத் தம்செயல் அற்றிருப்போர் வேடமே, `சிவவேடம்` எனக் கொள்ளப்படும் சிறப்புடைய வேடமாம்.

குறிப்புரை :

`சிவவேடம் யாரிடத்துக் காணப்படினும் சிவவேடமே யாயினும், இத்தன்மை யாரிடத்துக் காணப்படும் சிவவேடமே உண்மைச் சிவவேடமாம் சிறப்புடையது` என்றவாறு. இதனானே இவர் சிவவேடத்தை மிகப்பூணாது சிறிதே பூண்டிருப்பினும் அது சிறந்த வேடமேயாதலும் பெறப்படும். `அடிமையாதல் செயலா னன்றித் தெருட்சியாலே` என்றற்கு, ``தெருளாம் அடிமை`` என்றார். `அடிமை வேடத்தார்` என இயையும். அடிமை சிவனுக்கு ஆதல் ``சிவ வேடம்`` என்றதனாற் பெறப்பட்டது. ``அன்றோர் வேடத்தார்`` என்றா ராயினும் இவ்வாறு உரைத்தலே கருத்து என்க. `பொற்பதி` என்பது பாடமன்று.
இதனால், `உண்மைச்சிவவேடம் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.

பொழிப்புரை :

உடம்பில் பொருத்தப்பட்ட வேடங்கள் உயிர்க்கு உரியன ஆகமாட்டா. அதனால், உடம்பு நீங்கினால் வேடமும் அத னோடே நீங்கிப் போதலன்றி உயிரோடு உடன் செல்லுதல் இல்லை. `உடம்பு, உயிர் சிறிது காலம் தங்கியிருக்கும் ஓர் இடமே` என்னும் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர் கடலில் அகப்பட்ட மரத்துண்டு அதன் அலைகள் பலவற்றாலும் அலைக்கப்படுதல் போலப் பிறவியிற் பட்டு பல்வேறு உடம்புகளால் அலைக்கப்படுவர்.

குறிப்புரை :

``உண்மை``, `உளதாதல்` எனத் தொழிலாய் நின்று அதற்குரிய இடத்தைக் குறித்தது.l ``உடம்பில் - துச்சில் இருந்த உயிர்க்கு`` என்ற வாறு, சிறிது காலம் இருத்தலையே இங்கு, ``உண்மை`` என்றார். ``கடலில் அகப்பட்ட கட்டை`` என்பது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அஃது இங்ஙனம் விரிக்கப்பட்டது. இது, `வேடம் மாத்திரமே உயிர் உய்தற்கு வழியாம்` என மயங்கி, ஞானத்தைப் பெறும் வேட்கை இன்றி இருப்போரை நோக்கிக் கூறியது. எனவே, மேற்கூறியவாறு அரசனுக்கு அடிமையாதல் முதலியன உளவாய வழியே வேடம் சிவவேடமாதலைத் தெளிவித்தவாறாயிற்று.
இதனால், உடல் உயிர்த் தன்மைகளை இனிதுணர்த்து மாற்றால், மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மயலற் றிருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்
தயலற் றவரோடுந் தாமேதா மாகிச்
செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :

யாதும் அறியாமையும், மயங்கி யறிதலும் ஆகிய இரண்டும் நீங்கி, அதனானே புலன்மேற் செல்லும் மனம் அடங்கி, அவ் அடக்கத்தானே மகளிர் ஆசை முதலிய ஆசைகளும் அற்று, தமக்கு முன்னே அங்ஙனம் அற்று நின்றாரை அடைந்து `அவர், தாம்` என்னும் வேற்றுமை யின்றி அவரே தாமாய் ஒன்றியியங்கித் தம் செயல் அற்றிருப்பர் உண்மைச் சிவவேடத்தார்.

குறிப்புரை :

முன்னிற்கற்பாலதாகிய ``இருள்``, செய்யுள் நோக்கிப் பின்னின்றது. `கண்ணியரோடு` என உருபு விரிக்க. கை, இடைச் சொல். இணக்கு - இணங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். தையல், `தயல்` எனப் போலியாயிற்று. `தையலற்றவர்` என்றது, `மேற்கூறிய நிலையை யெல்லாம் அடைந்தவர்` என்றவாறு. ``தாம்`` இரண்டில் முன்னது, `அவர்` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், அரனுக் கடிமையாதல் முதலியவற்றால் உண்மைச் சிவவேடத்தராயினாரது இயல்பு கூறும் முகத்தால், அவ்வேடத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.

பொழிப்புரை :

மனிதர்காள், வேடமாத்திரத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்! அந்த நிலை வேண்டுவதில்லை. ஓடுகின்ற குதிரை போல உள்ள பிராணவாயுவை அதன் கடிவாளத்தை இறுகப் பிடித்து ஓட்டுதல் போல இரேசக பூரக கும்பக முறைகளை ஒழுங்காகக் கடைப் பிடித்தலால் அடக்குங்குள் அதனால், மனம் உம் வசப்பட, அது கொண்டு நம் பெருமானாகிய சிவபெருமானை அடைய விரும் புங்கள். அவ்விருப்பம் நிறைவுறுதற்குரிய வழியில் செல்லுங்கள். பின்பு பேரின்பப் பொருளாகிய முதற்பொருளைச் சென்று அடையலாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``குதிரை, குசை`` என்பன யோகநூற் குறிச்சொற்கள். `திண்ணமாக` என ஆக்கம் வருவிக்க.
இதனால், யோக நெறியில் நிற்பின் மனம் அடங்கச் சிவபத்தியும், சிவப்பணியும் வாய்க்க, வேடமும் உண்மைச் சிவ வேடமாய் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.

பொழிப்புரை :

குருடாய இரண்டு குழந்தைகள் தம்மிற் கூடிக் கண்ணைமூடி ஆடும் ஒருவகை விளையாட்டை விளையாடி, அதனால் இரண்டும் பாழுங் குழியில் விழுந்து அழுந்தினாற்போலப் பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ் ஆற்றல் இல்லாத போலிக் குருவைக் குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்க பெறுதலைச் செய்யின், இருவரும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. முதற் கண் நின்ற `குருடு` இரண்டும் சிறப்புருவகமாய். மல மறைப்பால் உண்டான அறியாமையைக் குறித்தன. இதனானே, நல்லாசிரியர் குருட்டினை நீக்கும் மருத்துவம் வல்ல மருத்துவராலும், போலி ஆசிரியர் அம் மருத்துவம் உணராத போலி மருத்துவராலும் பெறப் பட்டன. கண்ணுள்ள குழந்தைகள் கண்ணை மூடி ஆடினாலும் முன்னைப் பழக்கத்தால் தீங்கின்றி ஆடி மகிழ்வடையும். கண்ணில் லாத குழந்தைகள் பிற விளையாட்டு விளையாடினாலும் தீங்கடையா. குருட்டாட்டம் ஆடின் வழியறியாது குழியில் வீழ்ந்தொழியும். அதுபோல நல்லாசிரியர் மாணவரது பக்குவத்திற்கு ஏற்ப எவ்வாறு அருளினும் பயன் உண்டாம். ஆசிரியரல்லாதார் கிரியா மார்க்கத்தை உணர்த்தினும், அவர்பால் அதனைச் சிலர் பெறினும் பயன் ஓரளவேனும் உளதாகும். அவர் ஞானத்தை உணர்த்தினும், அதனைச் சிலர் பெறினும், `பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது` என்னும் பழமொழியோடொப்ப இருவரும் முன்னையினும் பார்க்கப் பெரிய தோர் அறியாமையில் வீழ்ந்து அழுந்துபவர் என்பது உவமையால் பெறப்பட்டது. `கண் குருடுபோல அறியாமையும் அகக்கண் இன்மை யாகிய ஒருவகைக் குருடே` என்பது தோன்ற, மல மறைப்பினையும் இங்குக் குருடாகவே உருவகித்து ஓதினார்.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உண்டாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதற்றொட்டு அவற்றின் அறிவாகிய கண்ணிற்கு அமைந்த மாயையாகிய கண்ணாடி ஆணவமாகிய குற்றங் காரணமாகப் பொருளியல்பைத் திரித்துக் காட்டும் வாஞ்சனைக் கண்ணாடியாய் உள்ளது. கல்வி கேள்விகளால் பெற்ற அறிவுகொண்டு இதன் இயல்பை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர் நல்லாசிரியர் அவர்களது வினை நீங்கும் வழியை விளக்கிக் கூறினாலும் விளங்கிக்கொள்ள மாட்டார். அவர் இயல்பு தலைவாயில் வழியைக் காட்டினாலும் புறக்கடை வாயிலை விரும்பி அதன்வழி நுழையும் இயல்பு போல்வதாம்.

குறிப்புரை :

அறிவை `மனம்` என்றலும் வழக்கு. ``எழுந்தது`` என்னும் வினைப்பெயர். `தோன்றியதாகிய கண்ணாடி` என்பதைக் குறித்து எழுவாயாய் நின்று, ``மாயக்கண்ணாடி`` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டது. மாயம் - பொய்; திரிபு. இங்ஙனம் கூறவே, `அக்கண்ணாடியாவது மாயையே` என்பது விளங்கிற்று. ``நினைப்பு`` என்று சிந்தனை அறிவை. `அதனில் அதன் நிழலையும் காணார்` என்க. ``நிழலையும் காணார்`` என்று, `அதன் இயல்பைச் சிறிதும் அறியார்` என்றவாறு. ``காணார்`` என்பதும் எதிர்மறை வினைப்பெயர். காணாமை பக்குவம் இன்மையினாலாம். `விளக்கவும்` என்பது திரிந்து நின்றது `விளக்கினும்` எனப் பாடம் ஓதலுமாம். `விளக்குவார் நல்லாசிரியர்` என்பது ஆற்றலால் பெறப்பட்டது. ஓர் இல்லத்தில் தலை வாயிலால் நுழையாது புறக்கடை வாயிலால் நுழைவார் இன்னல் பலவும் உறுதல் வெளிப்படை. இதனுள் ஒருவாற்றான் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு ஞானத்தைப் பெறும் வாயில் உளதாயினும் அது பயன்படாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே.

பொழிப்புரை :

உலக மக்கள், அறிவுடையரோ `ஏ` என அழைத்தால் அவர்க்கு, `ஏன்` என மறுகுரல் கொடுக்கும் அத்துணைப் பக்குவமும் இலர். அவர் தாயின் முலை அவர் பெற்ற குழவி தன்வாயில் வைத்த பொழுதே பால் சுரத்தலல்லது, எப்பொழுதும் பால் சுரவாத தன்மையை உணர்தல் இயலாததே. அவ்வியல்புடைய இனத்தவரது உள்ளத்திலும் உருவமற்றவனாகிய சிவபெருமான் அங்ஙனம் உருவமற்றவனாகவே நிலை பெற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஏ` என்பது வடமொழியில் திரிபு. வரையறை யின்மை யின் இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. இதன்கண் யகர உடம்படுமெய் தோன்றிற்று. முதற்கண் நின்ற ``முலை`` என்பது பின்னர் வரும் அதனைச் சுட்டும் சுட்டளவாய் நின்றது. பெய்தலுக்கு வினைமுதலாகிய `குழவி` என்பது வருவிக்க. மதுரம் - இனிமை. அஃது ஆகு பெயராய்ப் பாலை யுணர்த்திற்று. `குழவி வாய்வைத்த பொழுதே தாயின் முலை பால்சுரக்கும் இயல்பினை அறியார்` என்றது, `இறைவனது அருள் அவனை உணர்ந்து போற்றுவார்க்கே விளங்கி நின்று நலம் செய்யும் என்பதனை அறிந்து அவனை உணர முயலார்` என்றதாம். `அதற்குக் காரணம் பக்குவம் இன்மையே` என்பது கருத்து. `அன்னோர்க்குத் தமராய் உள்ளோரது ஊனின்கண்ணும் உருவிலி நிலை செய்யும்` என்க. தமர் - சுற்றத்தார். இஃது இங்குப் பிறப்புப் பற்றியதாகாது, இயல்பு பற்றியதாய் நின்று. இதன் ஈற்றடி இரண்டாம் அசை எதுகையாய் நின்றது.
இதனால், பக்குவம் இல்லாதார் இறைவனை உணர்ந்து அவனது அருளால் நலம்பெறுந் தன்மை இலராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.

பொழிப்புரை :

பெருந் தகுதியாகிய பக்குவத்தை எய்திய மாணவனே, நீ யாதொரு செயலிலும் `மனம், மொழி மெய்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது. அங்ஙனம் அவை ஒருவழிப்பட நிற்றலே உனக்கு நன்மையைப் பயப்பதாகும். அவை வேறு வேறு வழிப்படல் இழந்தோரது இயல்பாதலின், நீ அவை அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதி யாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாராய உலகர் அது பற்றி என்னைப் பின் வெகுளி மிகுதியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.

குறிப்புரை :

`அதுபற்றி எனக்கு வருவதோர் இழுக்கில்லை` என்பதாம். `அங்ஙனம் செய்யாமையாகிய அதுவே உறுதி` என்க. அங்ஙனம் செய்யாமை, அவை ஒருவழிப்பட்டு நிற்கச் செய்தலை உணர்திற்று. `தீயை` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. தீமை, இங்கு இழிவு. தன் ஈற்றடிக்கு இவ்வாறன்றி ``என்று`` என்பது ``தெளியார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தாக வைத்து, `அது பற்றி என்னைப் பிறர் பழியார்` என்று உணர்த்தலுமாம். இங்கும் `உன்னை` என்றே பாடம் ஓதி அதற்கு இயைய உரைப்பாரும் உளர்.
இதனால், பக்குவம் எய்திய மாணாக்கற்கு அபக்குவ நெறியிற் செல்லாதவாறு விழிப்பூட்டு முகத்தால் அபக்குவிகளது போலி ஒழுக்கத்தின் இயல்பும், அவர்க்கு நல்லாசிரியரது அருள் கூடாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும்
அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின்
பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.

பொழிப்புரை :

பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப் பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச் செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.

குறிப்புரை :

பாதகத்தை இங்கு, `துரோகம்` என்றார். `மாபாதம் ஐந்து இவை` என்பது மேற் கூறப்பட்டது. l ``துரோகத்து`` என்னும் உவமம் ``பாதகர்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. `துரோகத்திப் பாதகர் தம்மை` என்றாராயினும், `துரோகத்துப் பாதகர் இவர்தம்மை` என்றலே கருத்தென்க. உம்மை, மேல் முதல் தந்திரத்தில் `அரசாட்சி முறை` அதிகாரத்தில் அரசனால் தண்டிக்கப்படத் தக்கவராகக் கூறப் பட்டவரைத் தழுவி நின்று. ``விஞ்சை`` என்றது, செயலால் நல்லராய்த் தோன்றுதல் பற்றிக் கண்ணோடி அளவிற் குறையச் செய்யாது என்றதாம். வேறுசெய்தல் - திருத்துதல்.
இதனால், அபக்குவராயுள்ளார் பக்குவர்போல ஓழுகுதல் பல தீமைக்கு ஏதுவாதல் நோக்கிக் கடியப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

பொழிப்புரை :

தவத்தில் நிற்கும் பக்குவிகளுக்கு நுகர்ச்சியாய் நிற்கின்ற கன்மங்கள் அனைத்தும் அவற்றை ஊட்டுவிக்கின்ற முதல்வ னுடையனவேயாய், அவர்க்கு நுகர்ச்சி யாகாயையைத் தேவரும் அறியாமாட்டார். அதனால், கன்மங்கள், எடுத்த பிறப்பில் நுகர்ச்சி யாதல், பக்குவம் இன்மையால் தவத்தில் நிற்குமாற்றை உணராதவர் கட்கேயாம்.

குறிப்புரை :

``தவம்`` என்றது இங்கு ``அவன் அருளாலல்லது ஒன்றும் செய்யாமை``3 ஆகிய இறை பணியை. இதன் கண் நின்றார்க்குப் பிராரத்தம் நுகர்ச்சி யாகாமையை,
``நாமல்ல இந்திரியம்; நம்வழியின் அல்ல; வழி
நாமல்ல; நாமும் அரனுடைமை - யாம்என்னில்
எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்`` 3
என்பதனானும் அறிக. `தேவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. பவம் - பிறப்புய பாடு - நிகழ்ச்சி. நுகர்வு. கன்மங்கள் வகை யானும், விரியானும் பவவாயினும் தொகையான் ஒன்றே யாதல் பற்றி `அது` என ஒருமையாற் கூறினார். `அறியாதவர் எல்லாம்` என்பது பாடமன்று.
இதனால், பக்குவம் இல்லாதார்க்கு வினை நீங்காமை கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் `கன்றலும் கருதலும்`` என்னும் பாடல் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், நாயனார் திருமொழி யன்றாம்.

பண் :

பாடல் எண் : 7

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.

பொழிப்புரை :

ஒளியைக் காணும் கண் இல்லாதவர் இருள் புலர்ந்தாலும் புலர்ந்ததனை அறியமாட்டார். அதனால், விடிந்தபின் ஒளியில் பொருள்களை நன்கு கண்டு பயன் கொள்ளவும் மாட்டார். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர் தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டார். அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரமாட்டார். அதனால் நீவிர் அவ்வாறின்றிப் பரியதாகிய ஊனக் கண்ணை மூடி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காணுங்கள்; அத்திருவருளே அறியாமை யாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகும்.

குறிப்புரை :

முதலிரண்டடிகள் ஒட்டணி `விடியிலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. கடுமை பருமையை உணர்த்திற்று. ``இமை`` என்றது ஆகுபெயர். கட்டுதல் - தடுத்தல். காணுதற்குச் செயப்படுபொருள். முதற்கட் கூறியவாற்றால் `திருவருள்` என்பது பெறப்பட்டது. ``விடியாமை`` என்பது `இரவு` என்னும் பொருட்டாய் இருளைக் குறித்தது. ``காக்கும்`` என்பது, ``குற்றமே காக்க பொருளாக`` l என்பதிற் போல நின்றது. `திருவருளே விளக்கு` என்றதனால் `நீவிர் அவ்விளக்கையே நுமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` என்பதும் கூறினாராயிற்று.
இதனால், `இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப்
பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

பொழிப்புரை :

`உயிர்களையே பற்றுதற்கு உரியன` என நூல்களில் சொல்லிவைக்கப்பட்ட, பசுத்துவத்தைத் தரும் பாசத்தை அகற்றுவ தாகிய தவநெறியில்நின்று, அதனால் அப்பாசங்களின் கட்டு நெகிழ, வீடு பெறும் பக்குவத்தை எய்தி, முன் சென்ற உலகியலினின் றும் மாறி மெய்ந்நெறியைப் பற்றி, மெய்ப் பொருளையே அடைய விரும்பி அதற்கேற்ற முயற்சியால் அதனை அடையாது, மேற்கூறியவாறு விடிவதறியாப் பேதைமை மிக்கார்க்கு மேற்கூறிய விளக்கு நல்லாசிரியரால் ஈயப்படா.

குறிப்புரை :

``வைகி`` என்பது முதலாகப் போந்த எச்சங்கள் பக்குவம் படிமுறையான் முதிர்ந்து வருமாற்றை உணர்த்தி நின்றன. முன்னை மந்திரத்தில் ஒட்டணி வகையாற் கூறியதனையே இங்கு, ``அவ்வாறு`` எனச் சுட்டினார். பித்துப் போலுதல் பற்றிப் பேதைமையை, ``பித்து`` என்றார். பெறுவாரது பன்மையால் விளக்கும் பலவாம் ஆதலின் ``ஈயப்பெறா`` எனப் பன்மையாக ஓதினார். `தானே` என்பது பாடமன்று.
இதனால், அபக்குவர்க்கு ஞானமும், ஞானத்தின் பயனும் கிடையாமை கூறப்பட்டது. ``ஈயப் பெறா`` என்பது ஆசிரிய ராயினார்க்கும் அறிவித்தாம்.

பண் :

பாடல் எண் : 9

மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவான் அதற்சீட னாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``ஓரான்`` என்றது, `ஓரும் முயற்சியிலன்` என்றவாறு, காமாதி `காமம், வெகுளி மயக்கம்` என்பன. `இவற்றில் தோயும் தொழில்` என்க. தோய்தல் - மூழ்குதல். பின்னுதல் - கட்டிச் சொல்லுதல். அன்னியன் - ஞானத்திற்கு அயலானவன் என்க. ``ஓரான்`` முதலிய நான்கும் முற்றெச்சங்களாய் நின்று ``அன்னிய னாவன்`` என்னும் வினைப்பெயர் பயனிலை கொள்ள, அஃது எழுவா யாயிற்று. `ஓராமை முதலிய நான்கனுள் ஒன்றேயே உடையோனும், பலவற்றையுடையோனும் அன்னியனாவன்` என்க.
இதனால், அபக்குவிகளது இயல்புகள் கூறப்பட்டன. இறுதிக் கண் ``அசற்சீடனாம்`` என்றதனால் இஃது ஆசிரியராயினாரை நோக் கிற்றாய், `பக்குவம் எய்தாதாரையும், எய்தினாரையும் அறியுமாறு கூறிப்பக்குவம் எய்தாதார்க்கு ஞானத்தை உணர்த்துதலும், எய்தினார்க்கு அதனை உணர்த்தாது ஒழிதலும் செய்யற்க` என உணர்த்தியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தாரே.

பொழிப்புரை :

குற்றத்தைப் பொருந்துதல் சிறிதும் அறியாத மேலான் ஆசிரியரை நூல்முறை வழியே வழிபட்டு அவர்பால் உய்யும் வழியை அறிபவரே நல்வழியை அறிபவராவர். அல்லாதா ரெல்லாம் ஏனைக்கெடும் வழியை அறிபவரேயாவர்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொண்டும், முதலடியை மொழி மாற்றியும் உரைக்க. ஈற்றடியிலும், `அல்லாதவர் மற்றை அழிவறிவார்` எனக் கூட்டுக. குற்றம், காம வெகுளி மயக்கங்கள் அவற்றைச் சிறிதும் பொருந்தாமை சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகுதலால் அமைவதாகலின், அவரே மேலான ஆசிரியாரதல் அறிய `அத்தகையோரை அறிந்து அடைந்து வழிபடப்பெறுதல் பக்குவிகட்கேகூடும்` என்பது, `அறிவாளர்` எனவும், ``அறிவார்`` எனவும் மறித்து மறுத்து வலியுறுத்தவாற்றால் பெறப்பட்டது.
இதனால், `அதிபக்குவரே பரம ஆசிரியரை அடைந்து வழிபட்டு உய்வர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பதைத்தொழிந் தேன்பர மாஉனை நாடி
அகைத்தொழிந் தேன் இனி ஆரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தின தீர
உதைத்துடை யாய்உகந் தாண்டரு ளாயே.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலானவரே, உம்மை அடைய விரும் பியே அடியேன் துடித்தேன்; அவ்விருப்பதின் படி உம்மை அடைந்து இனி ஒருவரோடும் சேரமாட்டேன்; அவரது சேர்க்கையை எல்லாம் அறுத்து விட்டேன். ஆகையால் அடியேனது வினைகள் அழிந்தொழி யும் படி போக்கி என்னை ஏற்று, என் தலையிலும், உள்ளத்திலும் உமது திருவடிகளைச் சூட்டி என்னை ஆட்கொண்டருள்வீர்.

குறிப்புரை :

`என்று பக்குவிகள் பரம குருவைக் கண்டவுடன் பணிந்து இரப்பர்` என்றவாறு. எனவே, இம்மந்திரம் அவர்களது கூற்றாம். ``ஒழிந்தேன்`` என்பவற்றில் ஒழிதல் துணிவுப் பொருள்மைக் கண் வந்தன. அகைதல் - அறுத்தல். இங்கு உயிரெதுகையும், மூன்றாம் எழுத்தெதுகையும் வந்தன. ``சிந்தின`` என்பது முற்றெச்சம் `அதைத்து`, `சிந்தனை` என்பன பாடமல்ல. அறக் கருணைசெய்து ஆளாவிடினும், மறக் கருணை செய்தேனும் ஆளுதல் வேண்டும் என்றற்கு, `திருவடி சூட்டி` என உயர் சொற்கூறாது, `உதைத்து` எனத் தாழ்சொற் கூறப்பட்டது.
இதனால், அதிபக்குவர்கள் அருட்பேராசிரியரைக் கண்டவழி அவரை அடையும் வகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செய்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.

பொழிப்புரை :

உள்ளமாகிய நிலத்தில் ஆசிரியராகிய உழவர் விதைக்கின்ற விதையை முளைத்து வளர ஒட்டாது தின்றொழிக்கின்ற ஐம்புல ஆசையாகிய கிருமியை உடைய மனமாகிய மேல்மண்ணை யோக முயர்ச்சியால் ஆஞ்ஞையும், அதனைக்கடந்த ஏழந்தானமும் ஆகிய வானத்தில் நின்று நோக்கும் மெய்யுணர்வாகிய வெயிலால் அக் கிருமிகளை அழித்துச்செம்மை படுத்தி அம்மனத்தைத் தம்மோடு ஓத்துவரச் செய்கின்ற அடியவருக்குச் `சிவஞானம்` என்னும் விதையை உள்ளத்தில் ஊன்றக் கொடுத்தல் தக்கது.

குறிப்புரை :

இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கி, ``மேல் நின்று நோக்கி`` என்பதனை ``சிந்தையை`` என்பதன் பின்னும் ஈயலும் `ஆம்` என்பதனை முதலடியின் இறுதியிலும் கூட்டி அவ்வித்தினை எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``பதைக்கின்ற போதே`` என்னும் ஏகார இடைச்சொல் இரட்டுற மொழிதலாய் `பதையாமுன் ஈயற்க` எனப் பிரிநிலைப் பொருளும், பதைத்த பொழுது சிறிதும் தாழாதே ஈக` எனத் தேற்றப் பொருளும் தந்தது. பரம் - சிவம். இஃது ஆகுபெயராய் அதனை உணரும் ஞானத்தைக் குறித்தது. ஞானத்தை `வித்து` என ஏகதேச உருவகமாகக் கூறியதனால், ஏனையவும் ஏற்றபெற்றியால் ஆகும் உருவகமாதல் பெறப்பட்டது.
``மெய்ய்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் திருநேரிசையும் இங்கு அறியத் தக்கது. ``ஈயலும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், பக்குவிகள் ஆசிரியன் அருளைப் பெற்றபின், அதனைப் போற்றிக் கொள்ளுமாறு கூறப்பட்டது. இதனைப் பயன் நோக்கி, `ஆசிரியராவார் போற்றுந்தன்மை யில்லார்க்கு விரைந்து அருளுதலும், கூடா` என்னும் முகத்தாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருள்உடல் ஆவி யுடன் ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி அறியச் சிவபதந் தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

``கொள்ளின்`` என்பது, நல்லாசிரியரை அடையும் பக்குவத்தினது அருமையுணர நின்றது. உம்மை உயர்வு சிறப்பு. உள்ள பொருள் - தம்மிடம் உள்ள அனைத்துப் பொருளும். உடலையும், உயிரையும் நோக்க இப்பொருள் மிகச் சிறிதாகலின், ``உடல் ஆவி யுடன்`` என உயர்பின்வழித்தாய* மூன்றாவதன் ஒருவினை ஒடுஉருபுசொல் கொடுத்துக் கூறினார். `இப்போது நுகர்வனவும், நுகருங்காற் செய்வனவுமாய வினைகளும் பொருளேயாம்` என்பது சித்தாந்தமாதலை இவ்விடத்து நினைக. இடைவிடாமை ஆசிரியரை. தெள்ளுதல் - சிந்தித்தல். அறிதல் - தெளிதல். இவை உபதேச மொழியினை இடைவிடாமை, இவர்றின் பொருட்டேயாம். ``சிவபதம்`` என்பதன் `உளதாம்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. ``தான்`` என்பது தேற்றப்பொருள் தந்தது.
இதனால், ஆசிரியரை அடையும் பக்குவர் அவரை அடையுமாறும், அடைந்து பயன் கொள்ளுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

சோதி விசாகம் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தான் என்று
நீதியுள் நீர்மை நினைந்தவர்க் கல்லது.
ஆதியும் ஏதும் அறியகில் லானே.

பொழிப்புரை :

`விரிச்சிகமும், கற்கடகமும் என்னும் இரண்டு ஓரைகளையுடைய `சுவாதி, விசாகம்` என்னும் இரு நட்சத்திங்கள் பொருந்திய, முன்னோர் சொல்லிய இருநாட்களே குருமொழியை உணர்தற்கு உரிய நாள்கள்` என்று மரபு நெறியின் சிறப்பை எண்ணுவாருள் அங்ஙனம் உணர்ந்து ஒழுகுவார்க்குக் கூறியதல்லது, இறைவனும் அதற்குரிய காரணம் எதனையும் எங்கும் சொல்லி வைக்கவில்லை.

குறிப்புரை :

`அதனால், இன்றியமையாத பொழுது ஆசிரியர் எந்த நாளையும் நாளாக, எந்த ஓரையையும் ஓரையாகக் கொள்ளலாம்` என்பதாம். `தேள், நண்டு தொடர்ந்த சோதி விசாகம் ஓதிய இருநாளே உணர்வது` எனக் கூட்டுக. `தொடர்ந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. உபதேசித்தற்கு ஆசிரியர் தாம் கொள்ளும் ஓரைதேளும், நண்டும் ஆதல் வேண்டும்` என்றமையால் அவற்றிற்கு ஏற்ற மாதம் தாமே அமையுமாதலின், அது கூற வேண்டாதாயிற்று. நீர்மை, ஆசிரியர் ஆணைவழியே நிற்றல் ``நினைந்தவர்க்கு`` என்பதனஅபின், `உணர்த்தியது` என ஒருசொல் வருவிக்க. ஆதி - முதல்வன், இறைவன். உயிர்வர மூன்றாமடியிறுதியில் குற்றுகரம் கெடாது நின்றது. `அவ்வாதியும், என ஓதலுமாம். `அறிவிக்கிலான்` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
இதனால், பக்குவிகட்குப் பயன்படுவன சிலகால மரபுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே.

பொழிப்புரை :

சரியை முதலிய பணிகள் நிரம்பிவர, அதனால், சிறந்த முத்துப்பேலும் தூயதான மனத்தில் உண்டாகும் எழுச்சி காரணமாக இறைவன் அதனைத் தனக்கு இடமாகக் கொண் டருளுவான். அப்பொழுது வீணரது வெற்றிப்பாடாம் வினை நீங்கிப் போக, அப்பணிகளில் நின்றோன் சிவனது வீரக்கழலை அணிந்த திருவடியை நேரே கண்டு, அவனது அருளேயாய் நிற்பன்.

குறிப்புரை :

தொழில், இங்கு இறைவன் பணி, மணி, இங்கு முத்து. வெண்மை தூய்மையைக் குறிக்குமாதலின், தூய்மை பெற்ற மனத்திற்கு முத்து உவமையாயிற்று. `சிந்தை தூய்தாதல் பணி நிரம்புதலாம்` என்றதனால், சரியை முதலிய பணிகளால் பக்குவம் முதிர்தல் கூறப்பட்டதாம். `பக்குவ முதிர்ந்தவழித் திருவடிப்பேறு கிடைக்கும்` என்றதனால், `பக்குவ முதிர்ச்சி வேண்டுவோர் மேற்கூறிய இறைவன் பணியை மேற்கொண்டு செய்க, என்றதாயிற்று.
இதனால், பக்குவம் வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி

சாத்தவல் லானவன் சற்சீட னாமே.

பொழிப்புரை :

சத்துவ குணம் மிக்கவனாய், பரம்பொருளை அடைய எண்ணி, அப்பரம் பொருள் முதலிய நுண்பொருள்களின் உண்மையை அடியாகக்கொண்ட சமயங்களே `சமயங்கள்` என்னும் உணர்வு உள்ளத்தில் தோன்றப்பெற்று, தொன்று தொட்டு விடாது கட்டியுள்ள பிறவிக்கட்டிற்கு அஞ்சி அறநெறியைத் தளராது மேற்கொள்ள வல்லவனே சற்சீடன் - நன்மாணாக்கன் ஆவான்.

குறிப்புரை :

`சாத்துவிகன்` என்பது மருவி நின்றது. ஆத்திகம் - உண்மைப்பொருள்களை உண்டென்று உடம்படும் நெறி அவற்றை உண்டென உடம்படாது `இல்லை` எனப்பிணங்குவது `நாத்திகம்` எனப்படும். முன்னையது பொது வகையில் ஒன்றாயினும், சிறப்பு வகையில் பலவாதலை, ``பேதநெறி`` என்றார். தோற்றம் - உள்ளத்தில் தோன்றுதல் இதனையே,
``தெய்வ என்பதோர் சித்தம் உண்டாகி``
என அருளிச்செய்தார் ஆளுடைய அடிகள். இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேலாகிய ``தோற்றமாகி`` என்னும் சினை வினை, ``அஞ்சி`` என்னும் முதல் வினையோடு முடிந்தது. இவ்வாறன்றி, ``ஆகி`` என்பதனை `ஆக` எனகத் திரித்துக்கொள்லுமாம். சாத்தல் - தரித்தல்; தாங்கல்; மேற்கொள்ளுதல். ஆத்திக புத்தி உடையவனே அறநெறியை உள்ளவாறு மேற்கொள்வானாகலானும், அவனே மாணாக்கன் ஆதற்கு உரியவன் ஆகலானும், ``ஆத்திக பேத நெறி தோற்ற மாகியே ... ... ... அறநெறி சாத்த வல்லானவன் சற்சீடனாமே`` என்றார். `நூல்கேட்கும் மாணாக்கர்க்கும் இந்நிலை வேண்டும்` எனக் கல்வியாசிரியர் வேண்டுதலை இங்கு நினைக.3 `ஆத்திகம் அடியாக வரும் அறஉள்ளமே பக்குவத்தை வருவிக்கும்` என்பது கருத்து.
இதனால், நன்மாணாக்கராம் பக்குவத்தை எய்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சத்தும் அசத்தும்எவ் வாறெனத் தான்உன்னிச்
சித்தம் உருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்த
சத்தியின் இச்சை தகுவோன் சற் சீடனே.

பொழிப்புரை :

சிவனது திருவருள் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி நன்னெறியை அடைவித்தமையால், `நிலை யுடைய பொருள் நிலை யாமையுடைய பொருள்களின் இயல்புகள் யாவை` என்னும் ஆராய்ச் சியைத் தலைப்பட்டு அவற்றை உள்ளவா றுணரும் உணர்வைப் பெறுதல்பொருட்டு ஆசாரியரை அன்போடு வழிபட்டு, சிவனது ஆனந்தசத்தியில் மூழ்குதற்கண் வேட்கை மிக்கவனே சற்சீடனாவன்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து அதனுள், ``சிவனருள்`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. ``ஆறு`` என்பது அதன்கண் நிற்கும் பொருளைக் குறித்தன, `ஞானம் பெறப் பத்தியின் பணிந்து` என இயைக்க. சிவனது சக்தி ஆன்மாக்களுக்கு முதற்கண் அறிவாயும், முடிவில் ஆனந்தமாயும் நின்று பயன் தருமாதலின், அவற்றை முறையே ``ஞானம்பெற`` எனவும், ``ஆனந்தசத்தியில் இச்சைதகுவோன்`` எனவும் கூறினார்.
இதனால் பக்குவர்க்கு ஞான வேட்கை முதிரும் - படிநிலைவகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடிவைத் தருளுதி ஆசான் இன்றென்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற் றுளோனே.

பொழிப்புரை :

என்றும் சிவனது திருவடியைத் தாங்கி நிற்கின்ற தனது சீரியதலை, நிலையாமை யுடைய பிறவித் தொடர்ச்சியின் மூலங்களைக் காய்ந்தபின் அருட் சத்தியால் ஆசாரியரை அடைந்து, `ஆசாரியரே, இன்றே அடியேனுக்கு உமது திருவடியைச் சூட்டி அருள்செய்ய வேண்டும்` என வேண்டி நின்று, அவ்வாறே திருவடி சூட்டி அருளப்பட்ட ஞானத்தால் அசைவற நிற்பவனே மலம் நீங்கிய முத்தனாவான்.

குறிப்புரை :

முதலடியை மூன்றாம் அடியின்பின் கூட்டி யுரைக்க முடிவில் வைத்த அடியினது தொழிலை அம்முடியின் மேல் ஏற்றி கூறினார். அவ்வடியாவது திரோதான சத்தி. அதுவே பிறவியின் மூலமாகிய ஆணவாதி பாசங்களைக் காய்ந்தொழிப்பது. திரோதான சத்தி அருட்சத்தியாவதன்றிப் பிறிதில்லையாயினும் மாறுதலைப்பட்டு நிற்றல் பற்றி வேறுபோல ஓதினார். இந்நிலையே `சத்திநிபாதம்` எனப்படுவது, ``ஆசான்`` அண்மை விளி. பின்னின்ற ``வைத்த`` என்பது அஃறிணைப் பன்மை வினைப் பெயர். அஃது இரண்டாவதன் தொகை பட வந்தது.
இதனால், சிவனது அருள் ஆன்மாவிற்கு இருநிலையிலும் உபகரிக்குமாற்றால் ஆன்மாப் பக்குவம் எய்திப்பயன் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல
ஆராத காதல் குருபரன் பால் ஆகச்
சாராத சாதகம் நான்கும்தன் பால்உற்றோன்
ஆராயும் ஞானத்த னாம்அடி வைக்கவே.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய ஞானத்தின் கண் விருப்பம் மிக மிக, அது காரணமாகர ஞானாசிரியன்பால் அடங்காத அன்பு உளதாக, அதனால், அவ்வாசிரியன் அவன் மேல் தனது திருவடியைச் சூட்டி அருள்செய்ய, அவ்வாற்றானே, `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்கு சாதனங்களையும் முற்றி உலகியலில் நீங்கினவனே அறிவுடையோரால் `ஞானி` என ஆராய்ந்து கூறப்படும் முதிர்ந்த ஞானியாவான்.

குறிப்புரை :

சீராரும் ஞானம், சிவஞானம். இதில் இச்சை மிகுதல் தீவிரதர சத்திநிபாதத்தினாலாம். `சாராத சாதகம் நான்கும் உற்றேன்` என்றாராயினும், `சாதகம் நான்கினாலும் சாராமை உற்றேன்` எனறலே கருத்தென்க. சார்தற்குச் செயப்படுபொருளாகிய `உலகியல்` என்பது வருவிக்கப்பட்டது ஈற்றடியில் உள்ள ``அடிவைக்கவே`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டி உரைக்க.
இதனால், முதிர்ந்த பக்குவத்தில் உளதாம் தீவிரதர சத்திநிபாதத்தில் நிகழும் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.

பொழிப்புரை :

உண்மை ஞானாசிரியனாயுள்ளவன் சிவ ஞானத்தை உணரத்தத்தக்க அதிபர்குவர்கட்கே அதனை முன்பு கேள்வியளவான் உணர்த்தி, அதன்பின் அவர்கள் அதனைச் சிந்தித்துத் தெளிந்த தெளிவு நிலையில் சிவனது வியாபகத்துள் அவர்களை வியாப்பியமாகச் செய்தலாகிய நிட்டையை எய்துவித்து, அந்நிட்டை நிலைபெற்ற வழி கிழக்கு முதலிய திசைப் பாகுபாடுகளுள் யாதும் இல்லாதவாறு சிவனது வியாபகத்தை முற்றுமாகத் தலைப் படுவிப்பன். அங்ஙனம் அச்செயல் அனைத்தையும் அவன் செய்வது, அனைத் துயிர்களையும் உடைய அருட் சத்தியைத் தியானித்தே.

குறிப்புரை :

மின் - மின்போலும் பெண். `மின்னாகிய ஆவுடையாள்` என்க. அவளை உன்னுதலாவது. தனது ஞானேச் சாக்கிரியைகள் யாவும் அவளாகவே நிற்றல். `ஆவுடையான்` எனப் பாடம் ஓதுவோர், `மின்னையுடைய ஆவுடையான்` என உரைப்பர். `ஆவுடையாள்` என்பதே வழக்கின்கண் மரபுப்பெயராய் வழங்கும். எவ்வாறு ஓதினும், அத்தொடர் சிவோகம் பாவனையைக் குறிப்பதே. துரியமாகிய அருள் நிலையுள் நிறுத்தலை, ``எல்லையுள் இட்டு`` எனவும் அதீதமாகிய ஆனந்தநிலையுள் நிறுத்தலை, `திசைப் பாகு பாடு நீக்கி` எனவும் கூறினார். குணக்கு - கிழக்கு. உத்தரம் - வடக்கு. பச்சிமம் - மேற்கு. கொண்டு - தான் கைக்கொண்டு. என்றது `அவனுக்குத் தோன்றாவகை செய்து` என்றதாம்.
இதனால், அதிபக்குவம் உடையார் குருவருளால் முத்தி நிலையை விரையப் பெறுதல் கூறப்பட்டது. இதனானே, ஞானாசிரியராவார். அதிபக்குவர்க்கு விரைய அருளல் வேண்டும் என்பதும் குறிப்பாற் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

பொழிப்புரை :

குருவருளை விரும்பும் மாணவனே, உன்முன் குருவாய் வந்து நிற்கும் சிவனை அங்ஙனமான சிவனாகவே கண்டு அவனது திருவடிகளில் வீழ்ந்து, ஏகாங்க திரியங்க பஞ்சாங்க சடங்க அட்டாங்கங்களாகிய ஐந்து வணக்கங்களையும் செய்து, பிறவித் துயரால் வருந்தும் உனது குறையை விண்ணப்பித்து, அச்சிவனது அருட்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் புகழ்ந்தபொழுது, நீயிருக்கும் சிறைக்கூடமாகிய உடம்பையே நீ என மயங்கியிருக்கும் உனது மயக்கத்தைப் போக்கி உனது உண்மையை உனக்குத் தெரிவித்து, நீ சிவத்தோடு ஒன்றாகும் நிலையை உன் அறிவு அறியும்படிச் செய்பவனே உண்மை ஞானாசிரியனாவான்.

குறிப்புரை :

``இறை``, குருவாய் வந்து நிற்கும் இறை என்பது அதிகாரத்தால் விளங்கிற்று. ஏகாங்க வணக்கமாவது கைகட்டித் தலையால் மட்டும் வணங்குவது. திரியங்க வணக்கமாவது, இரு கைகளையும் தலைமேற் குவித்துக் கும்பிட்டுத் தலை தாழ்த்து வணங்குதல். பஞ்சாங்க வணக்கமாவது மோவாய் இரு தோள் இரு முழந்தாள் இவ் ஐந்துறுப்பும் நிலத்தில் தோய வணங்குதல். சடங்க வணக்கமாவது, மோவாய் இரு கைகள், மார்பு, இரு கால்கள் இவ் ஆறுறுப்பும் நிலத்தில தோய வணங்குதல், அட்டாங்க வணக்கமாவது, மேற்கூறிய ஆறுறுப்புக்களுடன், இருகாதுகளும் நிலத்தில் தோய வணங்குதல். வணக்கம் நமஸ்காரம் எனப்படும். எட்டுறுப்போடு கூடிய வணக்கத்தை `சாட்டாங்க நமற்காரம்` என்பர். பல `வகையாலும் வணங்கி` என்றவாறு, ``நீ`` என்பதன்பின் `ஒன்றாக` என்பதும், ``அறிவுக்கு`` என்பதன்முன் `உனது` என்பதும், எஞ்சி நின்றன. அறிவித்தல் அறியும் தன்மையை உளதாக்கல்.
இதனால், பக்குவி நல்லாசிரியனை அனுபவத்தில் தெளியுமாறு கூறப்பட்டது. பக்குவம் இன்மையால் நல்லாசிரியனைத் தலைப்படாது, ஆசிரியன் அல்லாதானைத் தலைப்பட்டவழி அதனை அனுபவத்தால் உணர்ந்து நீங்குமாறும் இதுவேயாதல் அறிக. ஆசிரியன் அல்லாதானை அடைந்து பயன் பெறாது எய்த்த மாணவன் அவனை வருத்தத்தோடு விட்டு நீங்கி நல்லாசிரியனை நாடிச் செல்லு தற்கு. தேன் இல்லாத மலரை அடைந்த தேனீ பின்னர் அதனைவிட்டுத் தேன் உள்ள மலரை நாடிச்செல்லுதலை உவமையாகக் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 13

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச் சித் தாந்தத்து
வேட்கை விடும்மிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற்சீட னாமே.

பொழிப்புரை :

காமியத்தை நிரப்பும் நெறி வேத நெறியாக, அதனை விடுத்து நிட்காமியமாவது சிவனிடத்துச் செய்யும் பத்தியே யாதலாலும், ஒழுக்கமாகிய நீரை உலகியலாகிய மடையினின்றும் மாற்றிச் சித்தாந்த நெறியாகிய மடையிற் பாய்ச்சி ஆசையை ஒழிக்கும் உண்மை வேதாந்தியே குருவாகத்தெளிந்து அவன் திருவடிகளில் தாழ்ந்து வணங்கி, அவன் வழி நிற்பவனே சற்சீடனாவன்.

குறிப்புரை :

`வேதத்தை வேட்கைவிடும் நெறி` என்றமை யால், `வேத நெறி அதனையுடையது` என்பது பெறப்பட்டது. அஃதாவது, பலவகை வேள்விகளால் இம்மை மறுமை உலகங்களில் உள்ள இன்பத்தை அடையும் நெறியாம். ``வாழ்க்கை`` என்றது ஒழுக லாற்றை. `புனலைச் சித்தாந்தத்து ஆக வழிமாற்றி என்க. வழி, இயல் பாய் அமைந்த உலகியல் `ஆக` என்பது தொகுத்தப்பட்டது. முதல் மூன்று அடிகளால், `உண்மை வேதாந்தியாவன் சித்தாந்தியே` என்பது உணர்த்தப்பட்டதாம். இதன்கண் மூன்றாமெழுத் தெதுகை வந்தது.
இதனால், சற்குரு (நல்லாசிரியன்) கிடைக்கப் பெற்றோனே பக்குவியான சற்சீடன் (நன்மாணாக்கன்) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சற்குணம் வாய்மை தாயவிவே கம்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானம் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்றல் ஆகும்சற் சீடனே.

பொழிப்புரை :

சற்குணம் முதல் அற்புதம் ஈறாக உள்ள ஏழியல்பும் உடையவனே சற்சீடனாவான்.

குறிப்புரை :

சற்குணம் - நற்பண்பு. அது மனம், மொழி, மெய் என்னும் மூன்றனுள் யாதொன்றானும் பிறவுயிர்க்குத் தீங்கு தேடாது இயன்ற அளவு நன்மை தேடுதல். விவேகம் - நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து, தீமையை விலக்கி, நன்மையைக் கொள்ளல். தண்மை - யாவர் மாட்டும். எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடைமை. சிற்பர ஞானம் - பேறறிவாகிய பரம்பொருளை அறியும் அறிவு. அதனைத் தெளிதற் பொருட்டு அதற்குரிய வாற்றால் ஓர்தலாவது. நூல்களாலும், பொருந்துமாற்றானும் ஆராய்ந்து ஒருமைபெற உணர்தல். அற்புதம் தோன்றலாவது! உலகியலில் நின்றபொழுது தோன்றாத புதுமைகள் தோன்றப் பெறுதல். அஃதாவது, ``பேரா, ஒழியாப், பிரிவில்லா, மறவா, நினையா, அளவிலா, மாளா இன்ப மாக்கடல்`` l போலப் புதிது புதிதாக எல்லையின்றி விளையக் காண்டல். `சற்சீடன்கண் ஆகும்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `சற்சீடன்கண் ஆகும்` எனவே, `அது` பக்குவத்தின் பயன்` என்றதாயிற்று. `சற்சீடற்கே` எனப் பாடம் ஓதலுமாம்.b
இதனால், பக்குவ மிகுதியது பெரும்பயன் கூறி முடிக்கப்பட்டது.