ஏழாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏழாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் - ஏழாம் தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்களுள் மூலாதாரம் முதலிய ஐந்தனையும் முதலில் நன்கு தரிசித்து, அதன்பின் ஆறாவதாய் உள்ள ஆஞ்ஞையைத் தரிசிக்கும் பொழுது சிவனது திருவடியைத் தரிசித்தல் கூடும்.

குறிப்புரை :

``நாலு`` முதலாகக் கூறப்பட்டவை ஆதார தாமரைகளை அவற்றின் இதழ் எண்ணாற் கூறியனவாம். ``முதல்`` என்பது `தலைமை` என்னும் பொருட்டாய் ஆஞ்ஞை ஆதாரத்தை உணர்த்திற்று. `முதல் இரண்டும்`` - என்பதன்பின் `காண` என ஒரு சொல் வருவித்து, அதனை ``மூலம் கண்டாங்கே`` என்பதற்கு முடிவாக் குக. `மூலம் கண்டவாறே காண்க` என்பதனால் மூலாதாரத்தை முதலில் கண்டமை அநுவாத முகத்தாற் கூறப்பட்டது. கோல், முதுகந் தண்டு. அதன்மேல் உள்ளது விசுத்தி.
இதனால் ஆதார யோகத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தின்
போதா லயத்து அவிகாரந் தனில்போதம்
மேதாதி ஆதார மீதான உண்மையே.

பொழிப்புரை :

பிரணவ கலைகளில் பன்னிரண்டளவும் ஏறிக் காணின், நாதத்தளவும் செல்லலாம். பதினாறளவும் ஏறிக் காணின், நாதத்தைக் கடக்கலாம். மேதை முதலாக நாதாந்தம் ஈறாக உள்ள கலை களுக்கு மேல் உள்ளது பராசத்தியே. அந்த சத்தி ஞானமயமானது; விகாரம் அற்றது. அதுவே ஞானத்தைப் பெறும் இடமாகும். மேதை முதலாகச் சொல்லப்படுகின்ற பிராசாதகலா யோகத்தின் உண்மை இதுவாகும்.

குறிப்புரை :

இதன் விளக்கங்களை மூன்றாம் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத்திற் காண்க. `போத ஆலயத்து அவிகாரந்தனில் போதம் உளது` என்க. பிராசாத யோகத்தின் பயன் ஆதார நிராதாரங்களைக் கடக்கும் முறையால் பராசத்தியே வடிவமாகப் பரசிவன் நிற்கும் இடமாகிய மீதானத்தை அடைதலும், அங்ஙனம் அடைதலாலே பரமபந்தமாகிய நாதத்தையும் கடந்து ``சேவுயர் கொடியினான்றன் சேவடி சேர்தலும்`` (சிவஞான சித்தியார், சூ.1) ஆகும் என்றபடி. இதன் முதல் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால் பிராசாத யோகத்தின் முடிநிலை இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேலென்றும் கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்றும் நானென்றும் தன்மைகள் ஓராறும்
பாரெங்கு மாகிப் பரந்த பராபரன்
காரொன்று கற்பக மாகிநின் றானே.

பொழிப்புரை :

நிராதாரத்தையும் கடந்து மீதானத்தில் பாரசத்தியைத் தலைப்பட்ட வழி ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வு எய்தப் பெறும். அவ்வுணர்விலே சருவ வியாபகனாகி சிவன் இனிது விளங்கித் தனது எல்லையில் இன்பத்தை இனிது வழங்கி நிற்பன்.

குறிப்புரை :

``கீழென்று`` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. ``இரண்டறக் காணுங்கால்`` - என்பதை ``நானென்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ``தன்மைகள்`` - என்றது, ஆதார நிராதாரங்களில் நிகழ்ந்த அனுபவங்களை, ``கார் ஒன்று`` - என்பதில் `ஒன்று` உவம உருபு. கார் - மேகம். கற்பகத் தருவை, `கார் போலும் கற்பகம்` எனச் சிறப்பிக்கும் முகத்தால் `கார்போலவும், கற்பகம் போலவும் நிற்பான்` - எனக் குறித்தார். ``கார் ஒன்றோ` - எனப் பாடம் ஓதி, `ஒன்றோ` - என்பதை `எண்ணிடைச் சொல்` என உரைப்பினும் பொருந்தும், ``ஆகி நின்றான்`` - என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆள்வாரிலி மா டாவேனோ``(தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 7) - என்பதிற் போல `நின்றான்`` - என எதிர்காலம் தெளிவு பற்றி இறந்தகாலமாகக் கூறப்பட்டது. இம்மந்திரமும் மேல் உள்ள மந்திரம் போல உயிரெதுகை பெற்று வந்தது.
இதனால் பிராசாத யோக முடிநிலைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கரணம் புந்தி
சாதா ரணம்கெட்டாற் றான்சக மார்க்கமே.

பொழிப்புரை :

ஆதார யோகத்தால் எய்தும் பயன் நாடிகள் சுத்தியாகி, அமுதம் நிரம்பப் பெறுதலே, (அதனால் மனம் ஒருங்கிய தியான சமாதிகளே உண்டாகும்,) ஆகவே, பிராசாத யோகத்தில் பதினாறாவது கலைக்கு அப்பால் உள்ள மீதானத்திற்றான் மேல் உள்ள மந்திரத்தில் கூறியவாறு `சிதாகாசம்` எனப்படுகின்ற பராசத்தியின் விளக்கம் உள்ளது. ``போதாலயம்`` என மேற் கூறப்பட்ட அதனை அடைந்து ஐம்புலன்களும், நாற்கரணங்களும், சீவ போதமும் என்னும் இவற்றின் குறும்புகளாகிய பெத்தம் நீங்கினால் தான் `சகமார்க்கம்` - என்னும் யோகம் முற்றியதாகும்.

குறிப்புரை :

எனவே, `பிறவாறாக வரும் யோகங்கள் எல்லாம் நிறைவு பெறாத யோகங்களே` என்றபடி. ``சுத்திகள்`` - என்பதன் பின், `எய்தும்` என்னும் பயனிலையும் ``விண்ணொளி`` என்பதன்பின் `உளது` - பயனிலையும் அவாய் நிலையாய் நின்றன. `அப் போதா லயத்து` எனச் சுட்டு வருவித்துக் கொள்க. `ஆலயத்துக் கெட்டால்` என இயையும், அஃது ஏழாம் வேற்றுமைத் தொகை. சாதாரணம் - பொதுவியல்பு. உயிர்கட்குப் பெத்த நிலை பொதுவியல்பும், முத்திநிலை உண்மை யியல்பும் ஆதலை நினைவு கூர்க.
இதனால் பிராசாத யோக முடிநிலைப் பயனது சிறப்பு ஏனை யோகப் பயன்களின் சிறப்பின்மையோடு ஒருங்கு வைத்து உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதார மாகவே தான்எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போக மாவது காயமே.

பொழிப்புரை :

மோதாதி கலைகளின் வழியே பிரணவ நினைவை இடைவிடாது வளர்த்து, அதனாலே ஆதார சோதனை அத்துவ சோதனைகளைச் செய்தால், உணர்வு மிகுதலே யன்றி, உடம்பும் விரைவில் வீழ்ந்தொழியாது சீவபோகத்தைத் தலைப்படுதற்குத் துணையாய் நெடிது நிற்கும்.

குறிப்புரை :

`சோதனை` எனினும், `சுத்தி` எனினும் ஒக்கும். பிராசாத யோகத் தானங்களில் ஆறத்துவாக்களும் அடங்கி நிற்கும் முறையைப் பிராசாத நூல்களிற் காண்க. தாதாரம் ஆக - அதுவே பற்றுக் கோடாக, தான் - ஆன்மா. அஃது எழுச்சி பெறுதல் உணர்வினாலேயாகலின் அவ்வுணர்வினது எழுச்சியை ஆன்மாவின் எழுச்சியாகக் கூறினார். `காயம் போகம் செய் ஆதாரம் ஆவது` - என மாற்றிக் கொள்க. போகம் - சிவபோகம்.
இதனால், `பிராசாத யோகம் ஏனை யோகப் பயன்களையும் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆறந் தமும்கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத் தோரெழுத் தாமே.

பொழிப்புரை :

`உடம்பு ஆறாதாரங்களோடே அமைந்தது` - எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் மேற் கூறிய ஏழாந் தானமும், அதற்குமேல் உள்ள நிராதாரமும் ஆகிய அவைகளையும் தரிசிக்கக் கடவீர். ஏனெனில், ஆறாதாரங்களில் அடங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் காரிய எழுத்துக்களேயாக, காரண எழுத்தாகிய பிரணவம் அந்தக் காரண நிலையிலே நிற்கும் இடம் அவைகளே யாகலின்.

குறிப்புரை :

எனவே அதனை உணராதவழி உயிருணர்வு பாச ஞானம் ஆகாது பதிஞானமாய் நிற்றல் கூடாது` என்றபடி. ``ஆதாரம்` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க, ஆறுதல், அடங்குதல். ஊறுதல் - அடிநிலையாய் நிற்றல். ``ஆதாரத்து`` என்பதனை ``மேல்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
இதனால் பிராசாத யோகத்தின் மேல்நிலையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆகும் உடம்பும் அகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :

தூலதேகம் தோன்றுதற்கு முதலாயுள்ள சூக்கும தேகமும் இறுதியில் அழிவதேயாம். இனிக் காரியமாதல் பற்றி அநித்திய மாதல் தெளிவுற நிற்கின்ற தூல தேகம் சூக்கும தேகத்தோடு இயைந்து நின்று அறிவும் செயலும் உடையதாதல் காரிய எழுத்துக்களாகிய ஐம்பதனாலேயாகும். ஆகவே சூக்குமதேகத்திற்கும் ஆறாதாரங்களின் இயைபு உள்ளதே.

குறிப்புரை :

`அதனால், ஆதார யோகத்தை இகழற்க` - என்பது குறிப்பெச்சம். `காரணமாதல் பற்றியே - நித்தியம் - என மலையற்க` என்றற்கு அழிகின்ற அவ்வுடல்` என்பதனைக் கூறினார். `உடலே` என்னும் தேற்றேகாரம் தொகுக்கப்பட்டது. தத்துவம்` - என்பது இங்கு எழுத்தின்மேல் நின்றது. இதன்பின் `ஆதலின்` என்பது வருவிக்க. ``ஆம்`` என்றது, `உரியன` என்றவாறு.
இதனால், ஆதார யோகத்தின் இன்றியமையாமை வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆய மலர்இன் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

பொழிப்புரை :

ஆராய்ச்சிக் கருவியாகிய மனத்திற்கு இடமாய் உள்ள இருதய தாமரையாகிய இனிய அழகிய மலரின் மேல் உள்ள தாகிய ஓர் ஆதாரமாய் நிற்கும் இதழ்கள் பதினாறும் அவ்விடத்திலே உள்ளன. அதனை அடைந்த அறிவே மாசு நீங்கிச் சிவத்தோடு கூடி அதன் ஆனந்தத்தைப் பெற்று பின் அந்தச் சிவத்தின் வேறாய் நில்லாது ஒன்றாய் நிற்கும் முடிநிலையை எய்தும்.

குறிப்புரை :

இருதயத்திற்குமேல் உள்ள ஆதாரம் விசுத்தி. அதனை அடையும் யோகமே ஆதார யோகத்தின் முடிநிலைக்கு அணித்தாவது ஆதலின், அதற்குக் கீழ் நிற்கும் யோகமெல்லாம் `யோகம்` எனப் படாது என்றற்கு இவ்வாறு கூறினார். விசுத்தி பற்றிய விளக்கத்தைத் தந்து, அதன் பின்னர், ``தூய அறிவு`` என்றமையால், அதனை அடைந்த அறிவு` என்பது பெறப்பட்டது. முடிநிலையை அடைதலை `விளைதல்` - எனக் கூறினார். ``மேலது`` என்பதன் ஈற்றுக் குற்றிய லுகரம் கெடாது நின்று உடம்படு மெய்பெற்றது. உம்மை இரண்டனுள் முன்னது இறந்தது தழுவிய எச்சம். பின்னது முற்று.
இதனால், `யோகத்தைக் கடைபோகச் செய்யாவிடின் அஃது யோகமாய்ப் பயன் தராது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.

பொழிப்புரை :

[ஏதோ ஒன்றை மட்டுமே `இலிங்கம்` என உலகவர் நினைத்தால்,] இலிங்கம் - என்பதன் உண்மையை உணர்ந்தவர் அரியர். எட்டுத் திசைகளாய் விரிந்து காணப்படும் உலகம் முழுதுமே இலிங்கம். அறுபத்து நான்காகச் சொல்லப்படுகின்ற கலைகளும் இலிங்கம். இறைவன் உலகத்தைத் தனது அருட்குறியாகவே உண்டாக்கினான்.

குறிப்புரை :

``ஆவது`` என்பன இரண்டும் தொழிற் பெயராய் நின்றன. ``எண்டிசை`` என்றதனால் பொருளுலகமும் ``எண்ணெண் கலை`` என்றதனால் சொல்லுலகமும் குறிக்கப்பட்டன.
இதனால் எல்லாம் இலிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே.

பொழிப்புரை :

உலகத்தைத் தோற்றுவித்த இறைவன் உலகில் அனைத்துப் பொருள்களையும் ஆக்கியது தனது சத்தியே பொருளாக வும், பொருளின் வடிவமைப்பாகவும், குணமாகவும் அமைத்தேயாம்.

குறிப்புரை :

`அதனால் உலகமே இலிங்கம் ஆதலில் ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம். `எல்லாம் சிவமயம்` என்றல், சிவன் சத்தியாய் நிற்கும் நிலைபற்றியே என்பது தெளிவாகலின், இவ்வாறு கூறினார். கூறவே, `சிவனது திருமேனி சத்தியாதல் பற்றி உலகமே இலிங்கமாதல் தெளிவாகும்` என்பதாம். ``பொருள்`` என்றது செயலாற்றலும், பயன் தருதலுமாகிய இவைபற்றி. `முதல்` எனினும் `பொருள்` எனினும் ஒக்கும். ஈற்றடியை முதலிற் கொள்க.
இதனால், உலகமே இலிங்கமாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.

பொழிப்புரை :

ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களினின்றும் நீங்கித் தான் தனித்து நிற்கும் நிலையையும், அதன்பின் அது தன்னைப் பெற்று நிற்கும் நிலையையும், அந்நிலைக்கண் விளைகின்ற தனது பரபோகத்தையும் தருதலேயன்றி, உடம்பும், அதனால் உண்டாகின்ற புலன் உணர்வும் அதனால் வரும் புலன் இன்பமும் என்னும் இவற்றையும் தந்து நிற்பான் சிவன் ஆதலின் அவன், சிவாகமங்களில் பாசக் கூட்டமாகச் சொல்லப்படுகின்ற ஆறத்துவாக்களாயும் விளங்குவான்.

குறிப்புரை :

`ஏகமும், முத்தியும், போகமும் - ஆகமும், புத்தியும், சித்தியும், என ஓதற்பாலதனைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். சிவன் தன்னையடையச் செய்தலே முத்தியாதலை நினைக. யோகம், ஏற்புழிக் கோடலால் பரபோகமாயிற்று. எண்ணிய எண்ணியாங் கெய்தும் உலகபோகத்தை, ``சித்தி`` என்றார். உயர்ந்தவற்றையும், தாழ்ந்தவற்றையும் உடன் வைத்துக் கூறிய குறிப்பால், `உயர்ந்தவற்றையேயன்றித் தாழ்ந்தவற்றைத் தருபவனும் சிவனே` என்பது போந்தது. தாழ்ந்தவற்றைத் தருதல் அவற்றின்கண் உவர்ப்புத் தோன்றுதற் பொருட்டு,
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப்பகுதி, 52
என்றாற்போலும் திருமொழிகளை நினைக.
`பாசமாகிய அண்டங்கள் அனைத்தையும் கடந்து நிற்பவ னாகிய சிவன் பாசங்களாகிய அண்டமாய் நிற்றல் எவ்வாறு என்னும் ஐயத்தை நீக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
``அண்டமாய், ஆதியாய், அருமறையோ டைம்பூதப் பிண்டமாய் உலகுக்கோர் மெய்ப்பொருளாம் பிஞ்ஞகனை``
-தி.4 ப.7 பா,4
என நாவுக்கரசரும் அருளிச்செய்தார். இதனானே பிண்டமும் இலிங்க மாதற்கு ஐயமின்று என்பது பெறப்படும்.
இதனால் அண்டம் இலிங்கமாதல் பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.

பொழிப்புரை :

தேவர் பலரும் தாம்செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவன் உருவத்திருமேனி கொண்டு வெளிப்படக் கண்டு புகழ்ந்தும், வாழ்த்தியும், இன்பப் பொருளாக உணர்ந்தும், வேண் டுவார் வேண்டுவதை அருளப்பெற்று, `வரையாது வழங்கும் வள்ளல்` என ஆரவாரித்தும் நின்றாராயினும், `அவன் உண்மையில் உலகங் கடந்தவனே` என்னும் உண்மையை உணர்கின்றிலர்.

குறிப்புரை :

`அஃது அவர்கள் அவனைத் தம்மில் ஒருவனாக எண்ணும் அதனால் விளங்கும்` என்பது கருத்து. எனவே, `அவன் அண்டலிங்கமாய் நின்று வழிபடுவார் செய்யும் வழிபாட்டினை ஏற்றுப் பயன் தருவானாயினும் உண்மையில் அவன் உலகங்கடந்தவன் என்பதை அறியாமை குற்றமாம்` என்றபடி. அவனது உண்மை நிலையை அறிந்த பொழுதே, `அவன் நமக்காக இறங்கி வந்து அருள் செய்கின்றான்` என்பது விளங்க, அதனால் அவன்மாட்டு அன்பு நிகழ் தலும், அதனை அறியாத பொழுது அங்ஙனம் அன்பு நிகழாமையும். அன்பு நிகழாது செய்யும் வழிபாடு, வழிபாடு ஆகாமையும் உளவாதல் பற்றி, `அவனது உண்மையை உணராமை குற்றம்` எனக் கூறினார்.
இதனால் `அண்டலிங்கம் முதலிய இலிங்கங்களாய்ச் சிவன் நிற்றல் உயிர்கள் மாட்டுவைத்த அருள் காரணமாக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.

பொழிப்புரை :

அந்தப் பரம்பொருளாகிய சிவம் தீக் கடவுள், அயன், மால், உபப்பிரமா, சூரியன், சந்திரன் ஆகியோரது கண்களுக்கு அவரவர் வழிபடும் இலிங்கமாகியும், அவ்விலிங்கங்களை வழிபடும் பொழுது அவர்கள் விரும்பியவற்றை வழங்க எங்கும் வெளிப்படும் அழகிய மூர்த்திகளாயும் விளங்கினும் எங்கும் கலந்து நிற்கும் பெரும்பொருளேயாகும்.

குறிப்புரை :

``தற்பரம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. பிரமனால் அவனது படைத்தற்றொழிலை இயற்றப் படைக்கப் படுபவர், `உபப்பிரமாக்கள்` எனப்பட்டு, `பிரசாபதிகள்` எனவும் கூறப் படுவர். `தட்சப் பிரசாபதி` என்பது காண்க. தேவருள் சிறப்புடைய சிலரை எடுத்துக் கூறியவாறு. செவ்வேள் ஈற்றில் `இவர்தம்` என்பது தொகுத்தலாயிற்று. `கட்சுடர்` என்னும் நான்காவதன் தொகை எதுகை நோக்கி மெலிந்து நின்றது. அதன்கண் ``சுடர்`` என்றது இலிங்க வடிவினை. தேவர் யாவரும் லிங்க வடிவில் சிவனை வழிபடுதல் வெளிப்படை. ``கலந்தெங்கும்`` என்பதை இறுதியில் ``ஆம்`` என்பதனோடு இயைத்து முடிக்க. `அத்தேவர்கள்` எனச் சுட்டுவருவித்துக் கொள்க. சிவனது மூர்த்தம் நிறத்தால் பொங்கழலோடு ஒப்பதாயினும், வெப்பம் இன்றித் தட்பக் குணமேயுடைத்தாய் இருத்தல் பற்றி, `தண்சுடராய்` என்றும், வழிபடுவார் வழிபடும் இடங்கள்தோறும் அவர்க்கு அருள்புரியத் தோன்றுதலால், ``எங்கும் தண்சுடராய்`` என்றும் கூறினார். ``எங்கும் கலந்து ஆம்`` என்பதில் ஆதல் உளதாதல்.
இதனால், `அவன் இலிங்கம் முதலிய கண்டப் பொருளாய்த் தோன்றினும் அகண்டப் பொருளேயாதலை நினைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. ``எங்கும் தண்சுடராய்`` என்றதனால் இலிங்க வடிவில் வழிபடுவார்க்கு அவன் வெளிப்பட்டு அருள் புரிதல் குறிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.

பொழிப்புரை :

சிவனது மிக மேலான உண்மை நிலையை உணர்ந்து அவனை வழிபடுவோர் மிக அரியர். அதனை உணர்ந்து வழிபடுகின்ற அவர்கட்கும் பூவைத் தன்னுள்ளே அடக்கியுள்ள அழகிய கொடி அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போலத் தனது உண்மை நிலையை வெளிப்படுத்துவான். ஆகவே அவனது பொது நிலையாகிய இலிங்க வடிவிலும் அவன் நின்று படிமுறையால் மேல் நிலையை அருளுவான்.

குறிப்புரை :

`ஆகவே இலிங்க வடிவம் அவனது அகண்ட நிலையோ, உண்மை நிலையோ அன்று என இகழாது கொள்க` என்பது குறிப்பெச்சம். ``தாபரத் துள்நின்று அருளவல்லான்`` என்பதை இறுதியிற் கூட்டியுரைக்க. தாபரம் - பெயர்ப்பொருளாகிய திருவுருப் படிமங்கள். ``வழிபடுவாளர்க்கும்`` - என்பது பாடம் அன்று. ``ஆகும்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. சுட்டிக் கூறா உவமம் ஆகலின் பொதுத் தன்மை வருவிக்கப்பட்டது.
இதனால், இலிங்க வழிபாட்டின் சிறப்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :

கருவறையின்மேல் உயர்ந்து விளங்கும் விமானங்கள், `தூல லிங்கம்` என்பதும், கருவறையில் மூலமாய் விளங்கும் இலிங்கம் `சூக்கும லிங்கம்` என்பதும், திருவாயிலின் முன் விரிந்து காணப்படும் பலிபீடம், `பத்திரலிங்கம்` என்பதும் சிவா லயங்களின் உண்மையைச் சிவாகம நெறியால் ஆராய்ந்துணர்வார்க்கு விளங்குவனவாகும்.

குறிப்புரை :

``விமானமும்`` என்னும் உம்மை, `சதாசிவ மூர்த்தியே யன்றி` என இறந்தது தழுவி நின்றது. அண்டத்தின் உள்ளாய் விளங்கும் பொருள்களும் இலிங்கங்களாதல் இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.

பொழிப்புரை :

முத்து முதலிய இவை பலவும் இலிங்கமாகச் செய்து கொள்ளுதற்குரிய பொருள்களாகும்.

குறிப்புரை :

மொய்த்த - ஒளிமிகுந்த. கொம்பு - மரக்கழி. ``கொத்தும்`` என்றதனால், அது செதுக்கி உருவாக்கப்படுதல்` விளங்கிற்று. கோமளம் - அழகு. அஃது ஆகுபெயராய் இரத்தினத்தை உணர்த்திற்று. இதனால், படிகம், மரகதம் முதலாக எஞ்சிய இரத்தினங்களைக் கொள்க. சிலை - கருங்கல் வகைகள். `மாக்கல் கூடாது` - என்பர். ஆகமம் - சிவாகமம் எழுதப்பட்ட சுவடி. திருமுறைச் சுவடி களும் இதனானே பெறப்படும். அன்னம் - சோற்றுருண்டை. அரிசி - அரிசித்திரள். பூ - தனி மலரும், கோத்த மலரும். இனி இதனை இரட்டுற மொழிந்து, `மண்` எனவும் கொண்டு, `பிசைந்து பச்சையாக வைக்கும் மண்ணும், சுட்டுக் கொள்ளும் மண்ணும்` என உரைக்க. `இலிங்கம் உய்த்து அதன் சாதனம் ஆம்` என மொழிமாற்றி, `இலிங்க மாகச் செயப்பட்டு அதற்கு மூலப்பொருளாம்` என உரைக்க. சாதனம் ஆதல் முக்காலத்தினும் ஒக்கும் ஆதலின். அதனை இங்கு இறந்த காலத்தில் வைத்துக் கூறினார். ஏகாரம் ஈற்றசை.
சிவவழிபாடு `ஆன்மார்த்தம், பரார்ரத்தம்` என இரு வகைப் படும். ஆன்மார்த்தம் - தன்பொருட்டு. பரார்த்தம் - பிறர் பொருட்டு. அவரவரும் தம் தம் இல்லத்திலாயினும், பூசைப் பெட்டகத்திலாயினும், இலிங்கத்தை எழுந்தருள்வித்துக் கொண்டு வழிபடுவது ஆன்மார்த்த வழிபாடு. வீரசைவர், `இலிங்கம் அங்கத்திலே (உடம்பிலே) ஒன்றாய் நீங்காதிருக்கத் தக்கது` எனக் கொண்டு வழிபாட்டுக் காலத்தில் இலிங்கத்தை இடக்கையிலே வைத்து, வலக்கையால் வழிபடுவர்.
உலகம் முழுவதற்குமாகத் திருக்கோயில்களில் இலிங்கம் எழுந்தருள்வித்துச் சிவாசாரியர்களால் செய்யப்படுவது பரார்த்த வழிபாடு.
இவ்விரண்டனுன் மேலை மந்திரம் பரார்த்த லிங்கம் ஆவன வற்றைக் கூற இம்மந்திரம் ஆன்மார்த்த லிங்கம் ஆவனவற்றைக் கூறிற்று.
பரார்த்த லிங்கம் இடம் விட்டுப் பெயராதிருத்தலால், `அசல லிங்கம்` என்றும், ஆன்மார்த்த லிங்கம் வேண்டும் இடங்களில் கொண்டு செல்லப் படுதலாலும், வழிபாட்டின் பொழுதும், அதற்குப் பின்னும் இடம் மாற்றி வைக்கப்படுதலாலும் `சல லிங்கம்` என்றும் சொல்லப்படும். சலம் - அசைவுடையது, அசலம் - அசைவில்லது. இவற்றுள் மேலைமந்திரம் அசல லிங்கமாவனவற்றைக் கூற, இம் மந்திரம் சவலிங்கமாவனவற்றைக் கூறிற்று. இவற்றுள் அசலல லிங்கம் ஆதற்கு உரியனவும் உள; அவற்றை அறிந்து கொள்க.
இனி சல லிங்கமும், `கணிகம், திரம்` - என இரண்டு வகைப்படும். கணிகம் - நிலையில்லாதது; அவ்வப்பொழுது ஆக்கி அமைத்து, வழிபட்டவுடன் விட்டு விடப்படுவது.
திரம் - நிலையுள்ளது, அஃது ஒருமுறை எழுந்தருள்வித்துக் கொண்டு, வாழ்நாளளவும் விடாமல் வழிபடப்படுவது.
`இவற்றுள் இங்குக் கூறப்பட்டவை இன்ன இன்ன இலிங்கமாதற்கு உரியன` என்பது அந்த அந்தப் பொருள் இயல்பு பற்றியும் அவரவரது கருத்துப் பற்றியும் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம்
வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முத்து முதலியனவேயன்றித் தயிர் முதலியனவும் இலிங்கம் ஆதற்குரிய மூலப்பொருள்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிந்தெடுத்துக்கொள்க.

குறிப்புரை :

``துய்ய`` என்றது, `பசுவினின்றும் தோன்றுவது` என்ற தாம். இதனை தயிர் முதலிய நான்கிற்கும் கொள்க. மெழுகு - மெழு குதல்; முதனிலைத் தொழிற்பெயர். இஃது ஆகுபெயராய், அதற்குக் கருவி யாகிய சாணத்தைக் குறித்தது. ஆனைந்தில் (பஞ்ச கௌவியத்துள்) கோ நீர் தவிர ஏனை நான்கும் இங்குக் கூறப்பட்டன. தயிர் பால் நெய்கள் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளப்பட்டும், சாணம் பிடித்து வைக்கப் பட்டும் ஆவில் ஐந்தும் கலந்து நிறைகுட வடிவில் இலிங்கமாகும். நெய், சிறப்பாக வெண்ணெயே ஆகும். கன்றிய செம்பு - உருக்கி வார்க்கப் பட்ட தாமிரம். கனல் - எரியும் நெருப்பு; இது வேள்வித் தீ. பெரிதாய் எரியும் விளக்கும் ஆகும். வேள்வித் தீயில் குண்டமும், விளக்கில் தகழியும் பீடமாய் இருக்கும். ஒரு தகழியில் பல சுடர்கள் ஏற்றப்பட்டால் அவை முகங்களாகும். இரதம் - சித்த மருத்துவ முறையில் பண்ணப் படும் இரசக் கல். சந்தம் - சந்தனம். வில்வம் - வில்வக் காயும், பழமும். பொன் செம்பொன்னும், வெண் பொன்னும். இவை உருக்கி வார்க்கப் பட்டு இலிங்கமாம். `தேன்` என்பது எதுகை நோக்கிக் குறுகி நின்றது. தேனும் பாத்திரத்தில் கொள்ளப்படும். `தென்`, அழகுமாம். திருக் கொட்டை - உருத்திராக்கம்.
இதனால் கணிக லிங்கம் ஆம் ஆவனவே கூறப்பட்டன. `சலம் தென்தியங்கொன்றை` என்பனவும் பாடம்.
இரத்தினத்தால் ஆயவை `இரத்தினசம்` என்றும், பொன்னால் ஆயவை `உலோகசம்` என்றும் கல்லால் ஆயவை `சைலசம்` என்றும் பொதுப் பெயர் பெறும். ஏனைய ஒவ்வொன்றேயாம்.
இவ்விலிங்க வகையால் பயன் வகைகள் ஆகமங்களில் சொல்லப்படுகின்றன. எனினும் நாயனார் பொதுவாகவே கொள்ளவைத்தார்.

பண் :

பாடல் எண் : 10

மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

அந்தணர் முதலிய வருணங்களை ஒழுக்கம் பற்றிக் கொள்ளுதலே தமிழ்நெறி, வாணம் - பாணம். இதுகல்லால் ஆகியது; கோமளம் - இரத்தினம்` என்பதும் ``முத்துடன் மாணிக்கம்`` என்னும் மந்திரத்தில் (பா.1696) கூறப்பட்டது.
[பதிப்புகளில் இதன்பின் காணப்படுகின்ற இரண்டு மந்திரங்களும் இவ்வதிகார இறுதியில் நிற்றற்கு உரியன.]

பண் :

பாடல் எண் : 11

போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.

பொழிப்புரை :

அண்டமாகிய இலிங்கத்தில் பூமி சிவனது திருவடி களாயும், அண்ட முகடு திருமுடியாயும், வானம் திருமேனியாயும் அமையும், ஆகவே, அண்டமாகிய இலிங்கத்துடன் சிவன் நிற்றல் மேற்கூறியவாறாகும்.

குறிப்புரை :

மாது - கங்கை, ``உள், ஈசன்``, `உளனாகிய ஈசன்` எனப் பண்புத் தொகை, இது மேல் நின்ற `கழல், முடி` என்பவற் றோடும் இயைந்தது.
இதனால் அண்டலிங்கம் சிவனது திருவடி முதலிய உண்மை உறுப்புக்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.

பொழிப்புரை :

இன்னும் அண்டலிங்கத்தில் பூமி பீடமாயும், வானம் பீடத்தின் மேல் உள்ள இலிங்கமாயும், கடல் நீர் திருமஞ்சனக் குட நீராயும், மேகம் அந்த நீரை முகக்கின்ற கலமாயும், திசைகள் எல்லையற்ற சிவனது உந்தியின்மேல் உடுக்கப்படும் உடையாயும் நிற்கும்.

குறிப்புரை :

`தரை, சத்தி` என இயையும். உள்ள - இலிங்கம் பொருந்தி நிற்கின்ற - பீடம் சத்தி வடிவாதல் பற்றி, ``சத்தி`` என்றார். நீர் - சால், குடம். `ஐ` `அழகிய நீர்` என்க. ``மஞ்சு நீர்`` என்பதில் உள்ள ``நீர்``, தானியாகு பெயர். கரை - எல்லை; என்றது திசையை. ``கரை`` என முன் வந்தமையின் ``அற்ற`` என்றே போயினார். `அற்ற நந்தி உந்திக்குக் கலை ஆம்` என மாற்றிக்கொள்க. உந்திக்கு - உந்திக்கண், வேற்றுமை மயக்கம்.
இதனாலும் அண்டலிங்கம் சிவனது உபசார அங்க உபாங்கங்களாய் நிற்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.

பொழிப்புரை :

உபநிடதங்களின் வழி தன்னை `அது` என்னும் அளவில் தன்னைப் பொதுவாக உணர்ந்தவன் பின்பு தனது ஒப்பற்ற இயல்புகளைச் சிறப்பாக உணர வேண்டி ஆராயும்பொழுது அவன் அவ்வியல்புகளுள் ஒன்றையேனும் உணராதபடி மறைந்து நிற்கின்ற சிவன், வேதாந்திகட்கு மிகவும் புதுமையாய்த் தோன்றுகின்ற அண்டலிங்கமாகிய இந்தத் தன்மையை உணர்ந்த என் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குகின்றான்.

குறிப்புரை :

``அது`` என்றது வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள - தற்பதத்தினை. அப்பதத்தின் பொருளை அப்பதமாகக் காரியத்தைக் காரணமாக உபசரித்துக் கூறினார். ``நாடி`` என்னும் எச்சம் ``உணரா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தது. `தேடி யறிந்திலர்` என்பது போல `எதுவும்` என்னும் இழிவுசிறப்பும்மை தொகுக்கப்பட்டது; `அண்டமே இலிங்கம்` என்னும் சைவாகமப் பொருள் வேதாந்திகட்குப் புதுமையாய்த் தோன்றுதல் பற்றி அதனை, ``புது உணர்வு`` என்றார். அசுத்த மாயா புவனங்கள் பூதபுவனம், தன் மாத்திரைப் புவனம், மனோ புவனம், அகங்கார புவனம், புத்தி புவனம், பிரகிருதி புவனம், புருட புவனம், மாயா புவனம் என ஓராற்றால் எட்டு வகைப்படுதல் பற்றி அவற்றை, ``புவனங்கள் எட்டும்`` என்றார். ``எட்டும்`` என்றது அதிகார இயைபால், எட்டும் இலிங்கம் ஆதலைக் குறித்தது. `இது உணர்ந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அண்டலிங்கத்தின் உண்மையை உணர்ந்ததனால் தாம் எய்திய பயனைக் கூறவே, `பிறரும் அதனை உணர்வாராயின் அப்பயனைப் பெறுவர்` என்பது தானே அமைந்தது.
ஈசன் உடலைக் கோயிலாகக் கொள்ளுதல் உள்ளத்தில் வீற்றிருத்த லாலேயாம். இஃது இவ்வாறு கூறப்படும் பிற இடங்கட்கும் ஒக்கும். இதனை இட்டலிங்கமாக உடம்பில் பொருந்தியிருத்தலாக உரைப்பாரும் உளர்; முன்னைத் தந்திரத்தில் நாயனார் `தவ வேடம்` கூறிய இடத்திலாதல், பிறிதோர் இடத்திலாதல் தூல உடலில் சிவன் வேறோர் இலிங்கமாய்ப் பொருந்தியிருத்தலைக் கூறிற்றிலர். ஆதலால், அது பொருளாகாமை அறிக.
இதனால், அண்டலிங்கத்தினை உணராதாரது தாழ்வும், அதனை உணர்ந்தாரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

பொழிப்புரை :

அடியவரது பாவத்தை ஒழிப்பவனாகிய சிவன் அண்டமே இலிங்கமாகக் கொண்டு அமர்ந்திருத்தல் அன்றியும் உண்மையை உணராமையால் வீணாய் ஒழிகின்ற ஒரு நிலையில் பொருளாகிய உடம்பினுள்ளே அதன் நடுவிடமாகிய இருதய தாமரையைத் தான் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்டு விளங்குகின்ற புண்ணிய மூர்த்தியாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அகலிடமாயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அறியாமையாவது, ஊனுடம்பே சிவனுக்கு ஆலய மாயும் இருத்தலை அறியாமை. ``அறியாமல்`` என்பதன் பின், `இருத் தலால்` என்பது எஞ்சி நின்றது. `அறியாமை` எனப் பாடம் ஓதி, `அறியா மையால்` என உருபு விரித்தலும் ஆம். ``அறியாமல் அடங்கும்`` என்ற தனால், ``பயனின்றி`` என்பது பெறப்பட்டது. உகல் - உகுதல்; அழிதல். பகல் - நடுவிடம். `நுகத்திற் பகல் ஆணிபோல நடுவு நிலைமையை உடையர்` என்றல் வழக்காதல் அறிக. (``நெடு நுகத்துப் பகல்போல - நடுவு நின்ற நன்நெஞ்சினர்`` - பட்டினப் பாலை - 106, 27. ``பகலன்ன வாய்மொழி`` - புறப்பொருள் வெண்பா மாலை - வாகைப்படலம் - அரச வாகைக்கொளு) `முனம்` என்பது பாடம் அன்று. புண்ணியம், சிவபுண்ணியம், `அப்புண்ணியத்திற்கு ஏற்புடைய மூர்த்தி` என்றபடி. உள்ளக் கோயிலில் வழிபடுதல், `கிரியை, யோகம்` என்னும் சிவ புண்ணியங்களாதலை நினைக. சிவனை, ``பாவ வினாசன்`` என்றதனால் `இவ்வழிபாட்டில் நின்றாரது வினையைப் போக்குபவன் அவன்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது. சிவபுண்ணியத்தை நோக்க உலக வினைகளுள் நல்வினையும் பாவமேயாகும்.
இதனால், முன்னை மந்திரத்தில் ``உடல் கோயில் கொண்டான்`` எனப் பொது வகையாற் கூறியது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.
இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் ஆயின.

பண் :

பாடல் எண் : 1

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

பொழிப்புரை :

மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.

குறிப்புரை :

``வடிவு`` என்பவற்றை எல்லா அடிகளிலும் ஈற்றில் வைத்து உரைக்க. ``வடிவு`` என்றது, `அதன் மயம்` என்றபடி. இலிங்க மாதல் கூறுவார் பிறவாதலையும் உடன் கூறினார். அங்ஙனம் கூறவே, `ஊன் மயமாய்ச் சிறிதாய் நிற்கும் மானுட யாக்கை அருள் மயமான இலிங்கமாதல் எவ்வாறு` என்னும் ஐயத்திற்கு இடமில்லையாயிற்று. `இறைவன் எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாய் நிற்றலால், மானுட யாக்கை அவனது பொருள்கள் எல்லாமாய் விளங்கும்` என்பது கருத்து.
வந்தி - வந்தித்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
இதனால், அண்டம்போலப் பிண்டமும் இலிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உலந்திலிர் பின்னும் `உளர் என நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி ஊன்நவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

பொழிப்புரை :

உடம்பில் பொருந்தியுள்ள அழுக்கினை மண் குழைத்த நீர் போக்கித் தூய்மை செய்து, சிவனை அந்த உடம்பாகிய இலிங்கத்திலே வழிபடுங்கள்; இறந்த பின்னும் இறந்தவராக மாட்டீர்; என்றும் ஒரு பெற்றியை உடையிராய் வாழ்வீர்.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டி, `பின்னும் உலந்திலிர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உலந்திலிர்`` எனப் பின் வருவதனால், ``உலந்த பின்னும்`` என்பது பெறப்பட்டது. `என்றும்` என்பது, ஆற்றலால் வந்தியைந்தது.
`உடம்பையே இலிங்கமாக வைத்து வழிபடப் புகும்பொழுது உடம்பை மாசு போக மண்ணாற் கழுவிக் குளித்தல் தவறாமற் செய்யத் தக்கது` என்பது உணர்த்துதற்கு அதனை எடுத்தோதினார், `ஊன்நவை நிலந்தரு நீர் தெளி செய்ய` என்க. பூதங்கள் ஐந்திலும் தனித் தனியே இறைவனை எண்ணி வழிபடுதல் உண்டு ஆகலின், ``அவை ஐந்தும் ஒன்றாக வந்தி செய்யீர்`` என்றது, `அவை ஒருங்கு கூடி ஒன்றாய்ப் பரிணமித்த உடம்பிலே அவனை எண்ணி வழிபடுக` என்றதாயிற்று, வலம் - வெற்றி. சிவன் தன்னை வழிபடுபவர்க்கு வெற்றியைத் தருதலாவது, அவர் நினைத்தவற்றை நினைத்தவாறே கைகூடச் செய்தல். இதனால், இவ்வழிபாட்டின் இடைநிலைப் பயனாகச் சிலவற்றைப் பெறுதல் குறிக்கப்பட்டது. `பிற பயன்கள் இடைநிலையாகக் கிடைப்பினும் முடிநிலைப் பயனாகிய வீடுபேறு உளதாம்` என்பது முதலடியில் கூறப்பட்டது. இறந்த பின்னும் இறந்தவர் ஆகாமையாவது, மீளப் பிறவாமை. என்னை? இறந்தவர் பிறத்தல் ஒருதலையாகலின்.
இதனால் பிண்டலிங்க வழிபாடு எல்லாப் பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக
ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.

பொழிப்புரை :

உடம்பை இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டு அதன்கண் எழுந்தருளியவுடன், அதனைத் தங்கள் இல்லமாகக் கொண்டு வாழ்ந்து அதில் உள்ள உயிரை அலைக்கழித்து வந்த ஐம்புல வேடர், தம் நிலைமாறி, அந்த உடம்பு தானே அதில் உள்ள உயிர்க்கு உய்யும் வழியாக உடன்பட்டு, அவ்வுயிரின் வழிநின்று அதற்குத் துணைபுரிவர். அந்த முறையில்தான் அந்த ஐம்புல வேடரை அவர் குறும்பை அடக்கி ஆளுதற்குரிய தலைவனாகிய மனம் அவர் வழிப்படுதலை விட்டு என்வழிப்பட்டது. அதனால், `அந்த உடம்பாகிய இல்லத்தைச் சிவன் தன் இல்லமாக ஏற்றுக்கொண்டு என்னை ஆட்கொள்ளுதற்கு அதன்கண் வந்து வீற்றிருக்கின்றான்` என்று உணர்கின்றேன்.

குறிப்புரை :

முன் இரண்டடிகளில் பொது முறைமையைக் கூறி, அஃதே பற்றித் தாம் எய்திய பயனைப் பின் இரண்டடிகளில் விளக்கினார்.
`கோயில் கொண்ட` - என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. இதில் உள்ள இறந்த காலம் எதிர்காலத்தது, `நாளைக் கூற்றுவன் வந்தான், என் செய்வை` என்பது போல ``வாயில்`` என்பதன் பின் ஆக்கச் சொல் வருவிக்க. இதன் பின் உள்ள கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல்; உடன்படுதல்.
``தாய் இல் கொண்டாற்போல்`` என்றது, `அயலார் மனைகளில் மாறி மாறிச் சென்று ஒதுக்கிருந்தவன், தன் முன்னோர் கட்டி வைத்துத் தனக்கு உரித்தாகிய இல்லத்தை அடைந்து நிலைத்தாற் போல` என்றபடி. அகரச் சுட்டுச் செய்யுளில் நீண்டு நின்றது; `அவ்வில்` என்றது, உடம்பாகிய இல்லத்தை.
இதனால், பிண்டலிங்க வழிபாட்டினால் புலன் அடக்கம் உண்டாக, இறையருள் கைகூடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.

பொழிப்புரை :

எங்கள் பெரும்பெருமான் மக்கள் உடம்பைக் கோயிலாக் கொண்ட நிலையில் புழைக்கடையாகிய மூலாதாரத்தை யும், அதற்குமேல் குய்யத்திற்கு அணித்தாயுள்ள சுவாதிட்டானத்தை யும் தன்னை அக்கோயிலிலே காண்பதற்குரிய வழிகளாகக் கொண்டும், உடம்பின் உள்ளே உள்ள நாடிகளில் தலையானவையாம் பத்து நாடிகளின் செயற்பாடுகளை அக்கோயிலில் நிகழும் வழி பாட்டுச் செயல்களாக ஏற்றும் விளங்குதல் செய்து, அதனால் புலன்கள் ஐந்தனையும் அடங்கப் பண்ணி, அவ்வுடம்பையே தான் மக்கள் உயிர்க்கு அருள் பண்ணும் வாயிலாகக் கொண்டிருக்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் மக்கள் உடம்பு அவன் விளங்கி நிற்கின்ற இலிங்கமும் ஆகின்றது` என்பது குறிப்பெச்சம். ``அடி`` இரண்டும் `மூலம்` என்னும் பொருளைத் தந்தன.
பிறகிடுதல் - புறங்காட்டுதல்; தோல்வியுறுதல். `பிறகிடு வித்து` என்பதில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது.
யோக முறையில் சிவனை உடம்பினுள்ளே காணுதல் அநுபவமாதல் பற்றி, மக்கள் உடம்பு அவனது இலிங்கமாதற்குத் தடையின்மை இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

பொழிப்புரை :

சதாசிவ வடிவம் இரண்டு திருவடி, பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றற்கு மூன்று கண்களாகப் பதினைந்துகண் இவற்றை உடையதாகும்.

குறிப்புரை :

கூடிய பாதம் - இணைந்து காணப்படும் பாதம். படி மிசை பாடிய - உலகத்தில் புகழ்ந்து போற்றப்படுகின்ற. கண் அருளைப் பொழிதலால் சத்தியாதல் பற்றி ``கயல்`` என்றார். `சதாசிவமாகிய நல்ல ஒளியும், முத்துமாய தன் வடிவம்` என்க. ஒளியும், முத்தும் ஆகு பெயர்கள். நல் ஒளி` என்றதனால் இம்மூர்த்தம் ஒளியுருவே யாதல் விளங்கும். முத்து, மாணிக்கம், வயிரம் என்பன உயர்த்துக் கூறும் சொற்களாதல் வழக்கு, நோக்கியறிக.
இதனால் சதாசிவ லிங்கத்தின் வடிவு கூறப்பட்டது.
``நாலுகொ லாம்அவர் தம்முக மாவன`` -தி.4 ப.18 பா.4
எனவும்,
``அஞ்சினாற் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னீரே``
-தி.4 ப.26 பா.5
எனவும் அப்பர் அருளிச் செய்தன இச் சதாசிவ மூர்த்தத்தை நோக்கியேயாம்.
``சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி`` -தி.6 ப.32 பா.6
``மனோன்மனியைப் பெற்ற - தாயிலான்`` -தி.5 ப.91 பா.1
என்ற அவரது திருமொழிகளையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 2

வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.

குறிப்புரை :

ஆகவே, சதாசிவ மூர்த்தத்தை வழிபடவே சிவபேதம் அனைத்தையும் வழிபட்டதாம் என்பது பெறப்பட்டது.
சிவபேதம் ஒன்பது. அவை `நவந்தரு பேதம்` எனப்படும். அவை அனைத்தும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
விந்துவும், நாதமும், `விந்து, பரவிந்து - நாதம், பரநாதம்` எனத் தனித்தனி இரண்டாகும். அவற்றுள் சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை, `சத்தி, சிவம்` என்றும், சில இடங்களில் விந்து நாதங்களை, `சத்தி, சிவம்` என்றும் கூறும் வழக்கம் சிவாகமங்களில் உள்ளது. இங்குப் பரவிந்து பரநாதங்களே அவ்வாறு கூறப்பட்டன.
சதாசிவத்திற்கு மேல் உள்ள நான்கும் அருவம். கீழ் உள்ள நான்கும் உருவம். நடுவில் உள்ள சதாசிவம் அருவுருவம், அருவம், உருவம் என்னும் இருதன்மையையும் உடைமையால் சதாசிவ மூர்த்தம் அனைத்து மூர்த்தமாயும் உள்ளது. இஃதே பற்றிச் சேக்கிழார் நாயனார்,
``காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்``
-தி.12 சாக்கிய நாயனார் 8
என அருளிச் செய்தார். சாதாரணம் - பொது.
இதனால், சதாசிவ லிங்கமே அனைத்து லிங்கமும் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

பொழிப்புரை :

அறிவு மாத்திரமாய் நிற்கின்ற சிவத்தினின்றும் செயல் வடிவாய்த் தோன்றுகின்ற சத்தியின் ஒருகூறு தோற்றமுறையில் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளாகின்ற ஆதார சத்திகளாய் நிற்கும். அந்தச் சத்திகளினின்றும் `இலயம், போகம், அதிகாரம்`, என்னும் ஆதேய சத்திகள் ஏற்ற பெற்றியால் தோன்ற, அந்தச் சத்திகளிலே சிவம் அதுவதற்கு ஏற்றவாற்றால் பொருந்தி நிற்க, அதன்பின் அந்த இலயம் முதலிய சத்திகளாலே அனைத்துலகங்களும் தோன்றும்.

குறிப்புரை :

முதலடிக்கண் வருவித்துரைத்தன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.
சாந்தியதீதை முதலிய ஐந்து சத்திகளாவன, `சாந்தியதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்பன. இவற்றுள் முதல் இரண்டு கலைகளில் இலயசத்தி தோன்றும். நடுவில் உள்ள ஒன்றின் முற்கூற்றில் போகசத்தி தோன்றும். அதன் பிற்கூற்றிலும், ஏனை இரு கலைகளிலும் அதிகார சத்தி தோன்றும். சத்தியை, ``கதிர்`` என்றார். அவற்றுள் சிவன் இலய சத்தியில் `சத்தன்` எனவும், போக சத்தியில் `உத்தியுத்தன்` எனவும், அதிகார சத்தியில், `பிரவிருத்தன்` எனவும் பொருந்தி நிற்பான். அங்ஙனம் பொருந்தி நின்று அச்சத்திகளை அவன் தூண்டுதலினாலே உலகங்கள் தோன்றி நின்று விளங்கும். அனைத்துத் திசைகளையும் எண்ணியவழி அவை பத்தாம் ஆதலின் ``அத்திசை பத்து`` என்றார் `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அதன்பின் `ஆகும்` என்பது அவாய்நிலையாய் நின்றது, அமர்தலுக்கு, `சிவம்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.
இதனால், சதாசிவமே உலகிற்கு முதலாதல் கூறப்பட்டது. அஃதே சிவபேதம் அனைத்தும் ஆதலை முன்னை மந்திரத்துட் கூறியதனைக் கருதுக.

பண் :

பாடல் எண் : 4

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

பொழிப்புரை :

பத்துத் திசைகளாய் அமைந்த அந்த உலகத்துள்ளே தான் வேதங்களின் ஆறு அங்கங்களும், அந்த அங்கங்கட்கு முதலாகிய நான்கு வேதங்களும், அந்த வேதங்களின் பொருளைச் சரியை முதலிய நான்கு பாதங்களாய் நின்று தெளிய உணர்த்துகின்ற சிவாகமங்களும் பொருந்தி நிற்கின்றன.

குறிப்புரை :

``திசை`` என்றதனால் அவற்றை உடைய உலகம் பொருளுலகமாதல் விளங்கும். ஆறங்கம் முதலியன சொல்லுலகம் ஆதல் வெளிப்படை. எனவே உலகம் இங்ஙனம் இருவகைத்தாதல் விளங்கும். இவை முறையே `அத்தப் பிரபஞ்சம், சத்தப் பிரபஞ்சம்` என வடமொழியில் சொல்லப்படும். `முன்னர்க் கூறிய உலகத்துள் பின்னர்க் கூறிய உலகம் விளங்குகின்றது` என்றதனால் அதனையும் சிவனே சத்தி வாயிலாகத் தோற்றுவித்தல் பெறப்பட்டது.
கீழ் நின்றும் கூறும் முறையால் ஆறங்கம் முதற்கண் கூறப் பட்டன. அவையாவை `சிட்சை, வியாகரணம், கற்பம், நிருத்தம், சோதிடம், சந்தோ விசிதி` - என்பன.
அவற்றுள் சிட்சை வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறையை விளக்கும். வியாகரணம் - வேத மொழிகளின் இலக்கணத்தைக் கூறும். நிருத்தம் - வேத மொழிபற்றிய பல விளக்கங்களைத் தரும். சோதிடம் - வேதத்திற் சொல்லப்பட்ட கருமங்களை இயற்றுதற்குரிய கால வகைகளைக் கூறும். கற்பம் - சூத்திர வடிவில் அமைந்து வேதத்தில் சொல்லப்பட்ட கருமங்களைச் செய்யும் முறைகளை விவரிக்கும். அவை ஆசுவலாயனர், போதாயனர், ஆபத்தம்பர் முதலிய முனி வர்களால் செய்யப்பட்டன. சந்தோவிசிதி - வேத மந்திரங்களுக்கு எழுத்துக் கணக்கில் சொல்லப்படுகின்ற சந்த வகைகளை விளக்கும். இவை வேதங்களை நன்கு உணர்தற்குக் கருவி நூல்கள் ஆகையால் இவற்றை உணராவிடில் வேதங்களால் பயனடைய இயலாது.
`சரியையாதியோடு கூடிய சமயம் அத்திசைக்குள்ளே அமர்ந்தன` என்க. இடை நின்ற சில பதங்கள் தொகுத்தலாயின, ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவத்தின் மேல் நின்று. ஆகு பெயராய் அதனை உணர்த்தும் ஆகமங்களைக் குறித்தன. `அவ் ஆகமங்களில் சொல்லப்பட்ட சரியை முதலிய நான்கும் மேற்கூறிய உலகத்திலே நிகழ்வன` என்பதை ``அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார்.
இதனால், சதாசிவமே மேற்கூறிய பொருளுலகம் போலச் சொல்லுலகங்களையும் தோற்றுவித்து உயிர்கட்குப் பயன்பட வைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்தில் தலைமை பற்றி, `சமயம்` என்றே சொல்லப்பட்ட சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. (அவத்தை - நிலை, அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கொழிய ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டாவனவாம்.)
உலகத்தில் சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன. (அவை பிராசாத கலைகள் இருக்கும் இடங்களாம்.)
சைவத்தில், `இறைவனுக்குத் திருமேனிகள் ஆறு` என்றும், `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. (அவை முறையே ஆறு அத்துவாக்களும், அட்ட மூர்த்தங்களுமாகும்.)
இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.

குறிப்புரை :

சைவ சமயத்தில் சொல்லப்படுவன சைவாகமங் களில் சொல்லப்பட்டனவே யாதலின், `இவ்வாறெல்லாம் சைவா கமத்துள் சொல்லப்பட்டன` என்றபடி `இலிங்க மூர்த்தத்தில் இதனுட் கூறிய வாறெல்லாம் சிவன் நிற்றல் கருதி வழிபாடு செய்யப்படும்` என்பது உணர்த்தியவாறு.
இதனால் சைவ சமயத்தில், எல்லாம் சதாசிவ லிங்கமாகக் கொள்ளப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துள், `சதாசிவ லிங்கத்திற்கு ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறிய முகங்கள் ஒரு வரிசையில் இல்லாமல், நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்தியுள்ளன.
அவற்றுள் நடுவண் உள்ள முகம் படிகம் போன்ற நிறத்தையும், கிழக்கில் உள்ள முகம் குங்குமம் போன்ற நிறத்தையும், வடக்கில் உள்ள முகம் செவ்வரத்தம் பூப்போன்ற நிறத்தையும் மேற்கில் உள்ள முகம் பால்போன்ற நிறத்தையும் உடையன.
(கிழக்கில் உள்ள முகம் பொன் போன்ற நிறத்தை யுடையதாகச் சொல்லப்படுதலால், இங்கு, ``குங்குமம்`` என்பதற்கு, `கலவைச்சாந்து` எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.)
இந்த ஐந்து முகங்களுடன் தோன்றியே சிவன் அடியேனுக்கு அருள்புரிந்தான்.

குறிப்புரை :

சைவாகமங்களில் சொல்லப்பட்டதனை நாயனார் தாம் அனுபவமாக உணர்ந்தமையை இங்கும் எடுத்துக் கூறினார். இதனானே பிறவும் உண்மையாதல் தெளிவித்ததாம், முதற்கண் கூறியவாறே ``நடுவு`` எனத் தொடங்கினமையால். ஏனை முகங்களும் மேற்கூறிய அம்முறையவாயின.
இதனால் சதாசிவ லிங்கத்து முகங்களின் இடமும், நிறமும் கூறப்பட்டன. ``நிறங்கள் ஓர் ஐந்துடையாய்`` எனத் திருவாசகத்துள் கூறப்பட்டது இங்குக் கூறிய முகங்களின் நிறம் நோக்கியேயாம். (தி.8 சிவபுராணம் - 49)

பண் :

பாடல் எண் : 7

அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துட் கூறிய வற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக்கலங்களையுடைய சதாசிவ லிங்கமாய்ச் சிவன் என் இருதயத்துள் வந்து புகுந்து நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

சதாசிவ லிங்கமே தமது தியானப் பொருளாதலைக் கூறுவார் மேற்கூறிய அவற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக் கலங்கள் இருத்தலை இங்குக் குறித்தருளினார். ``உள`` என்னும் பெய ரெச்சக் குறிப்புக்கள், `உடைய என்னும் பொருளவாய் அடுக்கி, `நம்பி` என்னும் ஒருபெயர்கொண்டன. அப்படைகள் பத்தாவன வலக் கைகள் ஐந்திலும், `சூலம், வச்சிரம், வாள், மழு, அபயம்` என்பனவும், இடக்கைகள் ஐந்திலும் பாம்பு, பாசம், அங்குசம், நெருப்பு, வரதம்` - என்பனவுமாம். அபய வரதங்கள் ஆயுதம் அல்லவாயினும் பெரும் பான்மை பற்றி ``ஆயுதம்`` என்றார். புதிதாய்ப் புகுந்தது போலக் கூறினாராயினும், `முன்பு விளங்கா திருந்தது விளங்கிற்று` என்பதே கருத்தென்க. மக்களுட் சிறப்புடையாரைக் குறிக்கும் `நம்பி` என்பது, தேவர்கட்குத் தலைவனாகிய சிவபிரானுக்கும் சொல்லப் படுதல் நம்பி என்னும் திருப்பதிகத்தாலும் அறிக. (தி.7 ப.63)
இதனால் தமது தியானப்பொருள் சதாசிவ லிங்கமாதல் கூறப்பட்டது. அதனால், `பிறரும் அதுகொள்க` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 8

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.

பொழிப்புரை :

அண்டலிங்கத்துள் பூமி பீடமாயும், வானம் பீடத்தின்மேல் உள்ள இலிங்கமாயும் அமையும். (எனவே, சதாசிவ லிங்கத்துள் பீடத்தில் பூமியும், இலிங்கத்துள் வானமும் அடங்கு வனவாம்.)
இனி இறைவன் உயிர்கள் பொருட்டுக் கொள்கின்ற `தாபரம், சங்கமம்` என்னும் இருவகை வடிவங்களுள் தாபரம் சிவக்கூறும், சங்கமம் சத்திக்கூறும் ஆகும். (தாபரம் - பெயர்ந்து நிற்பன; திருவுருப் படிமங்கள். சங்கமம் - உலாவுவன; அடியார்கள்.)
இறைவன் கொள்கின்ற திருமேனிகளில் உருவத் திரு மேனிகள் சத்திக் கூறும், அருவத் திருமேனிகள் சிவக்கூறும் ஆகும்.

குறிப்புரை :

`சிவக்கூறும், சத்திக் கூறும் சமமாக விரவியதே, சதாசிவம் ஆகையால், அது மேற்கூறிய அனைத்துமாய் நிற்கும்` என்றவாறு, `தத்துவம் முப்பத்தாறு` எனப் பொதுவகையால் சதாசிவ தத்துவமும் அடங்கக் கூறினாராயினும் அதனைச் சிறப்பு வகையால் வேறு வைத்து உணர்த்துதலே கருத்தென்க. ``சதாசிவம்`` - இரண்டில் முன்னது இலிங்கத்தைக் குறித்தது. பின்னது, சிவம்` என்னும் அளவாய் நின்றது.
`பருமை, நுண்மை என்னும் இருவகைப் பொருள்களில் பருமை யெல்லாம் சத்திக் கூறும், நுண்மை எல்லாம் சிவக்கூறும் ஆகும்` என்பது இதனால் உய்த்துணரக் கூறினமை காண்க.
``தாபர சங்கமம்`` - என்றது எதிர்நிரல் நிறை. `சங்கம தாபரம்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால் சதாசிவ லிங்கத்தினது சிறப்புக் காரண வகையால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

`தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.

குறிப்புரை :

``அருவம், உருவம்`` என்பன இங்கு, `காரணம், காரியம்` என்னும் பொருளவாய் நின்றன. ``ஆவது`` இரண்டும் எழுவாய் உருபாய் வந்தன. அவை இனம் பற்றி வந்த ஒருமை. ``சராசரம், சுகோதயம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.
``தத்துவ ரூப மாகும் தரும்அரு உருவ மெல்லாம்;
... ... ... சகலமும் தத்துவங்காண்``
எனவும்,
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக்கென்னில், தொல்லாய கன்ம மெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின் நில்லாமை முற்று வித்து நீக்கவும், கூடி நின்ற
பொல்லாத ஆண வத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. -சிவஞான சித்தி சூ. 2. 71, 79
எனவும் போந்த சிவஞான சித்தி இங்கு நினைக்கத் தக்கது. ``ஆகும்`` என்பது முற்று.
இதனால், `சதாசிவ லிங்கம் சிறப்புடைத் தாதற்குக் காரணம் அஃது அனைத்துத் தத்துவமுமாய் நிற்றலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :

சதாசிவனாய் நிற்பவனைத் துதியாது வேறு சொற்களைச் சொல்லிக் காலம் போக்குபவரும், அந்தச் சதாசிவமூர்த்தி அவரவர்க்கு ஏற்புடைத்தாக அளித்து ஏவுகின்ற தொழில்களைச் செய் பவரும் ஆகிய வானவரது நெறியோடு எனது நெறிமாறுகொளச் செய்தற் பொருட்டு அவன் எனது நெஞ்சத்தில் புகுந்தான். ஆதலின் அவனே நாம் வழிபடும் கடவுளாயினான். (என்வழி நிற்பீராயின்) நீங்களும் அவனது திருப்பெயர்கள் பலவற்றையும் கூறி அவனை வழிபடுங்கள்.

குறிப்புரை :

`சதாசிவன் எம் இறை; கூறுமின் நூறு எனமாற்றி இறுதிக்கண் வைத்துரைக்க, ``கூறுமின்`` என்றதனால், ``நூறு`` என்பது பெயர்களாயிற்று, `அவற்றைக் கூறுமின்` என வருதலால், ``வேறு`` அவையல்லாத பிறவாயிற்று. ``உரை செய்தல்`` இரண்டினுள் முன்னது `சொல்லுதல்` எனவும், பின்னது `ஏவுதல்` எனவும் பொருள் தந்தன. ``மிகைப் பொருள்`` என்றது, `பயனில் பொருள்` என்றவாறு. சிவனது திருநாமங்களைச் சொல்லாது பிறவற்றையே சொல்லுதலால் ஆன்ம லாபத்தையிழத்தல் பற்றி வானவரை, ``மிகைப்பொருள்`` என்றார். `நிற்கும் வானவர், தொழில் வானவர்` எனத் தனித்தனி இயையும், ஏறு - ஏறுதற்குரியன; பொருந்துவன. `உரை செய்த தொழிலைச் செய்யும் வானவர்` என்க. அவரது நெறியெல்லாம் பிறவி நெறியாகலின் வீட்டு நெறி அதனின் மாறும் நெறியாயிற்று. அதனைச் செய்தலாவது, தருதல். ``செய்வான்``, வானீற்று வினையெச்சம். மனம் புகுதலால் அந்நெறி எய்தினமை பற்றி, செய்வான் புகுந்தான் என்றார். பிறரெல்லாம் வந்த நெறியையே தருவாராக, சிவன் ஒருவனே வீட்டு நெறியைத் தருவோனாதல் பற்றி, ``சதாசிவன் எம் இறை`` என்றார்.
இதனால், `சதாசிவ வழிபாடொழிந்த செயல்களைச் செய்தலால் தேவரும் பந்தத்தின் நீங்காமையால், அதனின் நீங்க விரும்புவோர் சதாசிவ வழிபாடே செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.

பொழிப்புரை :

அருளே நிறைந்த உள்ளத்தை உடையவனாகிய கடவுளை யான் எனது உள்ளத்திலே, கறுத்த கண்டத்தையும், மழு ஏந்திய கையையும், சுருண்ட சடையாகிய முடியையும், ஒளியை யுடைய பிறையாகிய கண்ணியையும் உடையவனாக நன்கு காண்கின்றேன்.

குறிப்புரை :

`அருவுருவனாகிய சதாசிவன் உருவனாய் விளங்கும் பொழுது இத்தன்மையனாய் விளங்குதலை யான் அநுபவத்தில் காண்கின்றேன்` என்பதாம். அதனால், `கடவுளை இவ்வுருவத்தில் கண்டு வழிபடுதலும் சதாசிவ வழிபாடேயாகும்` என்பது உணர்த்தியவாறு. `கடவுள் உருவத்திருமேனியனாய் விளங்கும் பொழுது இவ்வாறே நிற்பன்` என்பதை,
அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என்னும் அப்பர் திருமொழியாலும் அறிக.
சந்திரசேகரர், பிட்சாடனர் முதலிய திருமேனிகள் அவ்வப் பொழுது கொண்டு விடப்பட்ட வடிவங்களாக அவற்றை `மாகேசுர பேதங்கள்` எனவும், இங்குக் கூறிய இவ்வடிவமே `மகேசுர இயற்கை வடிவம்` எனவும் எங்கும் கூறப்படுதலையும், `பிரளயாகலருக்கு ஞானத்தை முன்னின்று உணர்த்தும் பொழுது இவ் வடிவத்தில் நின்றே சிவன் உணர்த்துவன்` எனவும் எங்கும் கூறப் படுதல் காண்க.
கறைக் கண்டம், மழுப்படை, சடைமுடி, பிறைக் கண்ணி இவற்றைக் கூறியதனானே நாற்றோள், முக்கண் முதலிய பிறவும் கொள்ளப்படும். ``பிறையும்`` என்பதன் பின் `உடையவனாக` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், அருவுருவமாகிய சதாசிவ லிங்கம் உருவமாய் விளங்குமாறு கூறப்பட்டது. `அனைத்தும் சதாசிவ லிங்கமே` என மேற் கூறியதனை நினைக.

பண் :

பாடல் எண் : 12

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.

பொழிப்புரை :

சிவனது சத்தி ஒன்றே ஐந்தாகி அவனுக்கு மேற் கூறிய பக்கங்கள் ஐந்திலும் உள்ள ஐந்து முகங்களாய் நிற்கும். அதனால் அம்முகங்களின் பெயரானே அச்சத்திகளும் குறிக்கப்படும்.

குறிப்புரை :

முகங்களின் பெயர்களை ஈண்டே கூறுகின்றார் ஆதலின், அவற்றது திசையை மறித்து ஈண்டும் கூறினார். இதனால், `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம், என்பன முறையே மேலே, ``நடுவு கிழக்குத் தாம்மேற்கு`` என்னும் திசைகளில் உள்ளனவாகக் கூறப்பட்ட முகங்களின் பெயராதல் விளங்கிற்று.
சத்தி ஐந்தாதல், படைத்தல் முதலிய தொழில் ஐந்தனையும் செய்தற் பொருட்டு. படைத்தல் முதலிய தொழில்களைக் கீழே சத்தியோசாதம் முதலாக வைத்து, `சத்தியோசாதம், வாம தேவம், அகோரம், தற்புருடம், ஈசானம்` என எண்ணிப் பொருத்திக் கொள்க. சத்தி, `திருவடி` எனப்படுமாதலின். ``போற்றி யெல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்`` என்பன முதலிய ஐந்தும் இவ்வைந்து சத்திகளையே குறித்தல் அறிக.
இதனால், சதாசிவ லிங்கத்தின் ஐந்து முகங்களின் பெயர்களும் அவற்றது உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.

பொழிப்புரை :

கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவேயுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்க ளாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.

குறிப்புரை :

சத்தி சிவனுக்கு ஐந்து முகங்களாயும் `உச்சி, முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் உறுப்புக்களாயும் நிற்றல் மந்திர ரூபமாயும் என்க. அதனால் ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும், இன்னும் அடுத்த மந்திரத்துக் கூறப்படுகின்ற சிகை முதலிய உறுப்புக்களும் கருதுகோள் (பாவனை) வகையால் அமைதல் விளங்கும்.
சதாசிவலிங்க வழிபாட்டில் வாய் மந்திரத்தைச் சொல்ல, மனம் அவற்றிற்கு ஏற்ற பாவனையைக் கொள்ள, கை கிரியையினைச் செய்ய, இவ்வாறு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றானும் அது நிகழ்வதாகும்.
இதனுள் உயிரெதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 14

நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.

பொழிப்புரை :

பச்சை நிறத்தை உடையவளாய்ச் சிவனாகிய கதிரவனுக்கு அவனது மிகச் செப்பமாகப் பொருந்திய கதிராய் விளங்குகின்ற பராசத்தியாகிய பெண்டு சதாசிவனுக்கு மந்திர வகையால் (மேற்கூறிய ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களுமாய் நிற்றலேயன்றி,) இருதயம், சிகை, சிரம், கவசம், நேத்திரம், அத்திரம் என்னும் உறுப்புக்களாயும், அம்மூர்த்தியின் பத்துக் கைகளிலும் உள்ளனவாக மேற்கூறப்பட்ட பகலவன் போலும் ஒளியினையுடைய பத்துப் படைக்கலங்களாயும் நிற்பள்.

குறிப்புரை :

``பச்சையாம் ... ... மின்`` என்பதனை முதலிற் கொண்டு, ``ஆகும்`` என்பதனை ``தெசாயுதத்திற்``கும் கூட்டி, `மின், விந்து ஆகும்: தெசாயுதம் ஆகும்` என உரைக்க.
விந்து - சுத்த மாயை, அஃது ஆகுபெயராய் அதன் காரியமாகிய மந்திரத்தைக் குறித்தது. இவற்றை ``மந்திரம்`` எனக் கூறிய இதனானே மேற்போந்த ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும் மந்திரங்களே ஆயின. அவற்றைக் குறிக்கும் மந்திரங்கள் `பஞ்சப் பிரம மந்திரம்` என்றும், இங்குக்கூறிய மந்திரங்கள் `சடங்க மந்திரம்` என்றும் சொல்லப்படும். இப் பதினொன்றும் கூடிய தொகுதி. `சங்கிதா மந்திரம்` எனப்படும். சைவத்தில் சிவ மூல மந்திரம் தலையானதாய் நிற்க இப்பதினொரு மந்திரங்களும் இன்றியமையாத் துணை மந்திரங்களாய் நிற்கும். இவற்றுள் பிரம மந்திரங்கள் ஐந்தும் `நம` என்னும் முடிவினதாக, சடங்க மந்திரங்கள் `நம` என்பதனோடு வேறு முடிவுகளையும் ஏற்ற பெற்றியால் உடையனவாகும்.
பஞ்சப் பிரம மந்திரங்கள் ஐந்தொழிற் சத்திகளேயாதல் போலச் சடங்க மந்திரங்கள் சிவனது எண்குணங்களில் தூய உடம்பின னாதல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதலிலும், இயற்கையுணர்வு முற்றுணர்விலும் அடங்க ஆறாய் நிற்கும் குணங்களேயாகும். எண் குணங்களில் ஆறினைச் சிறப்பாக எடுத்து இறைவனை, `சுத்த சாட் குண்ணியன்` என்று கூறுவர்.
`செஞ்செவ்வுறு` என்பது குறைந்து நின்றது. செஞ்செவ் - மிக்க செப்பம். சேகரி மின் - தலைவியாய பெண்டு.
இவை இரண்டு மந்திரங்களாலும் முகமாய் நிற்கின்ற சத்திகள் பிறவாயும் நிற்றல் கூறப்பட்டது. இவற்றானே பிரம மந்திரம், அங்க மந்திரங்களது உண்மையும் கூறப்பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 15

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.

பொழிப்புரை :

இருதயம் முதலாகக் கூறிய சடங்க மந்திரங்கள் ஆறனுள் அத்திரம் ஒழிந்த ஏனைய ஐந்தில் சிவனது ஞான சத்தியே இருதய மந்திரமாயும், பராசத்தியே சிர மந்திரமாயும், ஆதி சத்தியே சிகா மந்திரமாயும், இச்சா சத்தியே கவச மந்திரமாயும், கிரியா சத்தியே நேத்திர மந்திரமாயும் நிற்கும்.

குறிப்புரை :

அத்திர மந்திரம் மேற்கூறிய குணங்களுள் ஒன்றேயாம். எண்ணில் - ஆராய்ந்து உணரின்.
இதனால் அங்க மந்திரங்களாய் நிற்கும் சத்தியின் வகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

சத்தி நாற்கோணம் சலம்உற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்திநல் வட்டம் சலம்அற் றிருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் றானே.

பொழிப்புரை :

இலிங்கத்தின் பீடம் நாற்கோணமாயிருப்பின் அது சிவனது இயக்கச் சத்தியாகும். அறுகோணமாய் இருப்பின் அது கிடத்தற் சத்தியாகும். வட்டமாய் இருப்பின் அது இருத்தற் சத்தியாகும். இதனால் சதாசிவன் சத்தி வடிவாய் நின்றே அருள்புரிவான் ஆகலின், சதாசிவ லிங்கமும் அத்தன்மையதேயாம்.

குறிப்புரை :

இலிங்கத்தில் சத்தியே பீடமாதல் பற்றி அதனை வேறு கூறாது ``சத்தி`` என்றே போயினார். கிடத்தல், இருத்தல், இயங்கல் என்னும் மூன்றும் இலயம், போகம், அதிகாரம் என்க. சலம் - அசைவு.
இதனால், சதாசிவலிங்கத்து வேறுபாடுகளும், அவற்றது உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

மானந்தி எத்தனை காலம் அழைப்பினும்
தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும்
கானந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

பொழிப்புரை :

பெரியோனாகிய சிவனைக் கிரியையாளர்கள் எத்தனை முறை தம்பால் வருமாறு அழைப்பினும் அத்தனை முறையும் அவன் ஐந்து முகங்களையுடைய சதாசிவ லிங்கத்திடத்தே வந்து, ஒப்பற்ற ஒளிவடிவாய் நிற்பான். யோகிகள் சுவாதிட்டானத்தினின்றும் பிராண வாயுவை மேல் எழத்தூண்டி, மேலும் உள்ள ஆதாரங்களைக் கடந்தவழி, ஏழாந்தானமாகிய ஆயிர இதழ்த் தாமரையிடத்தும், அதற்குமேல் எட்டாந் தானமாகிய நிராதாரத்திடத்தும், அதனையும் கடந்த ஒன்பதாவதாகிய மீதானத்திடத்தும் விளங்குவான்.

குறிப்புரை :

`யோகிகட்கே சிவன் அகத்தில் விளங்கி, ஏனைக் கிரியையாளர்க்குச் சதாசிவலிங்கத்திலே விளங்குவான்` என்பதாம். எனவே, `கிரியையாளர்கள் சதாசிவ லிங்கத்திலே வழிபடுமாற்றால் அவனைக் காண்க` என்றதாயிற்று. ``நந்தி`` நான்கில் முன்னது பெயராயும், ஏனைய வினையெச்சமாயும் நின்றன. நந்துதல், இங்கு ஆக்கத்தின் மேற்று. கால் - காற்று, `கடந்தவழி` என்பது, ``கடந்து`` எனத் திரிந்து நின்றது. ``மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றான்`` என்றதனால், கமலம், ஆயிர இதழ்க் கமலமே ஆயிற்று.
இதனால், சதாசிவ லிங்கம் கிரியை யாளர்க்கு இன்றி யமையாததால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்றலைக் கேறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான் தக்க முறையில் உங்களுடைய உடலின் உள்ளே பொருந்தி என்றும் விளங்குகின்ற முறை முன்னை மந்திரத்தின் பிற்பகுதியிற் கூறியவாறாகும். அதனால் நான் சிவனது திருத்தமான பாதங்கள் எனது அழகிய தலையிலே பொருந்துதற் பொருட்டு உள்ளத்துள் நின்றே வணங்கினேன்.

குறிப்புரை :

நீவிர் அது மாட்டீர் ஆகலின், மேற்கூறியவாறு சதாசிவ லிங்கத்தில் சிவனைக் கண்டு வழிபடுங்கள்` என்பதும், `அவ்வாறு வழிபட்டுவரின் என்னைப் போல நெஞ்சத்தினுள்ளே நின்று தொழும் நிலையை எய்துவீர்` என்பது குறிப்பெச்சம். ஒன்றியவாறு - தக்கவாறு. `அந்த அந்த ஆதாரங்கட்கு ஏற்ப` என்றபடி. யோகத்தால் `தூய்மை பெற்ற தலை` என்பர், ``தென்தலை`` என்றார். தென் - அழகு. `சிவனது திருவடி தலைமேல் ஏற` என்றது, `ஞானம் உண்டாக` என்றபடி.
இதனால், `சதாசிவலிங்க வழிபாடு பின்னர் உளதாகும் ஆன்மலிங்க வழிபாட்டைத் தரும்` என்பது கூறப்பட்டது. இனி இங்கு நின்றும் ஆன்மலிங்க வழிபாட்டின் சிறப்பையே கூறுகின்றார். `அதனைப் பெறுதற்குச் சதாசிவலிங்க வழிபாட்டைக் கடைப்பிடிக்க` என வலியுறுத்தற் பொருட்டு. இவ்வாற்றால் இனிவரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் அமைகின்றது.

பண் :

பாடல் எண் : 19

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம்
புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே
பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.

பொழிப்புரை :

ஒளிப் பொருளாகிய சிவனை நான் அத் தன்மையனாக இவ்வுலகிற்றானே உணர்ந்தேன். பின்பு அவனை இவ்வுலகத்திற்கே வருமாறு கொணர்ந்தேன். பின் என் மனமே கோயிலாக அவனைக் கூடினேன். அதனால் அவன் இல்லாதவன் அல்லன்; உண்மையாக உள்ளவனே. நாளெல்லாம் நான் பாட்டும், ஒலியுமாக அவனைப் பணிதலையே செய்கின்றேன்.

குறிப்புரை :

உணர்ந்தது, ஆசிரியர் மொழியாற் கேள்வியினால் ஆகும். பின்பு முன் உணர்ந்தவாறு உள்ளத்தே வைத்து நினைக்க, அவன் நினைவிலே விளங்கிநிற்றலால், ``குவலயம் கொணர்ந்தேன்`` எனவும், ``என் நெஞ்சம் கோயிலாகப் புணர்ந்தேன்`` எனவும், `இங்ஙனம் அவன் எனக்கு அனுபவப் பொருளாகவே இருத்தலால் ``பொய்யல்லன் மெய்யே`` எனவும் கூறினார். ``பொய்யல்லன்; மெய்யே`` என்றது, `இறைவன் என்று ஒருவன் உளனோ` என ஐயுறுவாரை நோக்கிக் கூறியது. ``நெஞ்சம்`` என்பதன் பின் `ஆக` என்பதும், ``ஒலி`` என்பதன்பின் உம்மையும், `ஆக` என்பதும் விரிக்க. ``பகல்`` என்பதன்பின் `எல்லாம்` என்பது எஞ்சி நின்கின்றது.

பண் :

பாடல் எண் : 20

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

பொழிப்புரை :

உடம்பின்கண் ஒன்றின்மேல் ஒன்றாய் உள்ள அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றிலும் நெருப்புப் போன்ற ஒளி வீச, `சிவனது பேதம் ஒன்பதுள் நடுவணதாகிய சதாசிவ மூர்த்தத்தில் உலகத் தோற்றமும், ஒடுக்கமும் நிகழ்வன` என்று உணர்ந்து நின்றால், அந்தச் சதாசிவ மூர்த்தமும், உலகத்தோற்றமும், ஒடுக்கமுமாய் நிற்கின்ற சத்தி, அவ்வுணர்ச்சியை உடையவனது உடலில் சந்திரன் போல ஒளிவிட்டு நிற்கும்.

குறிப்புரை :

``உடல்`` எனப் பின்னர் வருதலின் ``ஆங்கு`` என்னும் சுட்டுச் செய்யுளின் முதற்கண் நின்றது தாங்குதலுக்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``வீசிட`` என்னும் எதிர்கால வினை யெச்சம். ``என`` என்பதின் சொல்லெச்சமாய் நிற்கும் `உணர` என் பதனோடு முடிந்தது. உணர்தல், இங்கு, தியானித்தல். இவற்றை உடைய சத்தியை ``இவை`` என்றது பான்மை வழக்கு. `இவற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. ``இந்துவும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 21

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன்மேனி தானாகும் தற்பரன் றானே.

பொழிப்புரை :

அகவழிபாடு செய்பவனுக்கு அவனது உடம்பே சதா சிவமூர்த்தியாயும், அம்மூர்த்தி மானாயும் நிற்கும். இன்னும் அது சுத்த சிவனாயும், அச்சிவனது ஆனந்தமாயும் நிற்கும். அஃது இவ் வாறெல்லாம் ஆகும்படி சிவன் அவனது உடம்பே தானாய் விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

`அகவழிபாடு செய்வான்` என்பது அதிகாரத்தால் கொள்ளப்பட்டது. சதாசிவனையும், சுத்த சிவனையும் உணர்ந்து, அவ் வுணர்வானே சுத்த சிவனது ஆனந்தத்தைப் பெறுதற்கு வாயிலாதல் பற்றி உடம்பை அவையெல்லாமாகப் பாற்படுத்து அருளிச் செய்தார். மானுடராக்கை வடிவு சிவலிங்கம்`` என்னும் மந்திரத்துட் கூறியன பிண்டம் இலிங்கமாதலைக் குறித்தற்கும் இங்குக் கூறியன அகவழி பாட்டின் சிறப்பினை உணர்த்துதற்கு கூறப்பட்டன ஆகலின், இவை கூறியது கூறல் ஆகாமை அறிக. தற்பரன் - தனக்கு மேலே உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 22

ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.

பொழிப்புரை :

சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம் உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.

குறிப்புரை :

`அதனால் அந்த ஒகாரத்தை உன்னலே சிறப்புடைய வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். `பீசாக்கரங்கள் அனைத்திலும் மகாரம் சேர்ந்து வருதல் இயல்பாகலின், அனைத்து மந்திரங்கட்கும் பொதுப் பீசமாகிய ஓகாரத்தோடு அது சேர்ந்து நிற்றல் சொல்ல வேண்டா` என்று போயினார். பாரும் - அறிமின். இதனை ``நாயகி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `தாரகம்` என்பது இடைக் குறைந்து நின்றது. தாங்குவது, என்னும் பொருட்டாய்ப் பிறமந்திரங்கள் அனைத்திற்கும் அடிநிலையாவது` என்னும் கருத்தினைத் தருவது `இரண்டும் தாரகம்` என மாற்றியுரைக்க. `எழுத்து` என்பது, `எழுது` என்பது அடியாகப் பிறக்குமாயினும் உள்நின்று, `எழு` என்பது அடியாகப் பிறப்பது - என்றலும் பொருந்தும் ஆகலின், ``எழுந்திடும்`` என்றது எழுத்துக்களின் பிறப்பைக் குறித்து நின்றதாம். ``மாறி எழுந்திடும்`` என்பது பாடம் அன்று. இதனுள் ரகரத்திற்கு றகரம் ஓராற்றால் இன எதுகையாயிற்று.

பண் :

பாடல் எண் : 23

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

பொழிப்புரை :

(முன்னை மந்திரத்தில், `ஓங்காரத்துள் சிவமும், சத்தியும் முறையே அகாரமும், உகாரமுமாய் நிற்பர், என்றதனால், அவ்விருவரது வடிவமுமாகிய இலிங்கம் ஓங்காரமாய் நிற்றல் எவ்வாறு` எனின்,) பீடம் சமட்டியான ஓங்கார வடிவேயாய் இருக்கும் இலிங்கம். ஒவ்வொரு கூற்றில் ஒவ்வோர் எழுத்தாய் வியட்டியாய் இருக்கும். அவற்றுள் பீடத்தின் உள்ளே மறைந்து நிற்கும் பகுதி மகாரமாயும், பீடத்தோடு இணைந்து வெளியே புலனாகி நிற்கின்ற பொருத்துவாயாகின்ற வட்டம் உகாரமாயும், இலிங்கம் கீழ் நின்று முக்கூறுபட்டு முறையே அகாரமும், விந்துவும், நாதமுமாய் இருக்கும்.

குறிப்புரை :

`இலிங்க நற் கண்டம் மகாரமாய் நிறையும்; இலிங்கத்து உள்வட்டம் உகாரமாய் நிறையும்` என ஆக்கச் சொல்லை ஏனையிரண்டிற்கும் கூட்டி, மொழிமாற்றி உரைக்க. பின்பு, `இலிங்கம் அகாரம், நிறைந்து விந்து, நாதம் ஆம்` என்க. கண்டம் - கூறு, பீடத்துள் மறைந்து நிற்பது தனி ஒருபகுதியாய்ப் புலனாகாது நிற்றல் பற்றி அதனை, ``கண்டம்`` என்றும், பீடத்தின் விளிம்பு வெளிவட்டம் ஆதலின், அதன் நடுவில் இலிங்கம் பொருந்தி நிற்கின்ற பொருத்து வாயை ``உள்வட்டம்`` என்றும் கூறினார்.
இறைவனது உபசார வடிவங்களில் மந்திர வடிவம் சிறந்த தாதல் பற்றி அதனை முன்னை மந்திரத்துட் கூறி, அவ்வாற்றானே இலிங்கமும் மந்திர வடிவாதலை இம்மந்திரத்துட் கூறினார். புறத்து உள்ள இலிங்கம் இவ்வாறு மந்திர வடிவாதலைக் கூறியதனானே அகத்திலும் இலிங்கம் அவ்வாறே கொள்ளப்படுதல் பெறப்பட்டது. படவே, இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குச் சிறந்த தோற்றுவாய் ஆயினமை காண்க.

பண் :

பாடல் எண் : 1

அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.

பொழிப்புரை :

சிவன் அகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அனைத்துப் பொருளுமாய் நிற்பான். உகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அப்பொருள்களைச் செயற்படுத்தி நிற்பான். அதனால் அந்த இருகலைகளை உணரின் அந்த உணர்வுதானே சிவனது வடிவமாகும்.

குறிப்புரை :

பிரணவ கலைகளில் பருநிலையை உடையன அகார கலை, உகார கலைகளேயாதலின், அவற்றை உணரும் உணர்வே முதற்கண் இலிங்கமாய் நிற்கும்` எனக் கூறினார், ``நிற்கும்`` என்பவற்றிற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க. உயிர்ப்பு - செயற்பாடு. எய்தல் - நிகழ்த்தல். சொல்லோடு பொருட்கு உள்ள ஒற்றுமை கருதி, மந்திர கலையையே பொருளாக ஓதினார்.
இதனால் மந்திர உணர்வே இலிங்கமாமாமறு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதாரம் ஆதேயம் ஆகின்ற தெய்வமும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதிபீடம் நாதமே
போதா இலிங்கப் புணர்ச்சிய தாமே.

பொழிப்புரை :

தனக்குக் கீழ் உள்ள அகாரம் முதலிய எழுத்துக்களை நோக்க அவற்றைத் தாங்கிநிற்கின்ற ஆதாரமாயும், தனக்கு மேல் உள்ள நாதத்தை நோக்க அதன்கண் பொருந்தியுள்ள ஆதேயமாயும் உள்ள விந்துவும், மேதை முதலிய அனைத்துக் கலைகட்கும் முதலாய் உள்ள நாதமும் முறையே ஒன்றின்மேல் ஒன்றாய் விளங்கி நிற்கும். அதனால், அவற்றுள் விந்துவே ஆதாரமாகின்ற பீடமாயும் நாதமே அந்தப் பீடத்தின்பால், வந்து இலிங்கத்தின் சேர்க்கையாயும் இயைந்து நிற்கும்.

குறிப்புரை :

மேதாதி நாதம், `மேதை முதலியவற்றிற்கு முதலாகிய நாதம்` என நான்காவதன் தொகையாய் நின்றது. `விந்து அதி ஆதார பீடம்` என மொழிமாற்றிக் கொள்க. ``விந்து, நாதம்`` - என்றது, அவற்றால் உளவாகும் உணர்வுகளையே என்க.
இதனால், மந்திர உணர்வே இலிங்கமாமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரந் தானே.

பொழிப்புரை :

(மேற்கூறிய விந்து நாதங்கள் முறையே சத்தி சிவவடிவாகும் ஆதலால்,) அவ்விரண்டும் ஒன்றாய் இயைந்த நிலையே புறத்தில் உள்ள தாபர சங்கமங்களும், சாதாக்கிய தத்துவத்தில் விளங்கும் சதாசிவ மூர்த்தியும் ஆகும். இனி சிவ வடிவம் யாதாயினும் அது சத்தி, சிவம் இரண்டும் இயைந்த வடிவமேயாகும்.

குறிப்புரை :

தாபரம் - திருக்கோயிலில் உள்ள திருவுருவங்கள். சங்கமம், அடியார்கள். ஈற்றில் நின்ற ``தாபரம்`` என்பது இலிங்கத்தின் பரியாயப் பெயராய்ச் சிவவடிவை உணர்த்திற்று. எவ்வடிவமும் `சத்தி சிவக்கூட்டே` என்றதனால், உணர்வாகிய வடிவமும் அன்னதேயாதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம்
பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தான்நேர் எழுந்த அகாரம தாமே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்ற, பூவொடு கூடிய கொடிபோலும் சத்தியுடன் சிவன் ஆன்ம சிற்சத்தியை நேரே பற்றி அதற்குப் பொருள் தருகின்ற நாதமே தன் வடிவாகக் கொண்டு ஆன் மாவின் உணர்வில் விளங்குவான். அதனால் அந்த நாதத்தின் காரிய மாய் ஆகாயத்தின் ஒலியால் விளங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் பொருந்தியுள்ள இடத்தில் அடியவன் அடியார்களுக்கு நேரே விளங்கி நிற்கும் சிவசோதியைக் காண இயலும்.

குறிப்புரை :

`ஆதலால் அந்த ஐம்பது எழுத்துக்களையும் இலிங்கமாக வைத்துத் தியானிக்க` என்பது குறிப்பெச்சம். அத்து வாக்களுள் ஏனை ஐந்து கலைகளில் அடக்கம் ஆதல் வெளிப்படை ஆதலின், அவற்றுள் மந்திராத்துவா அக்கலைகளில் அடங்கி நிற்கும் முறையும் வெளிப்படை. ஆகவே நிவிர்த்தி பிரதிட்டா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் ஆதார பீடமாகவும், வித்தியா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் நடுக்கண்டமாகவும் சாந்தி கலையில் உள்ள எழுத்துக்கள் பீடமாகவும், சாந்திய தீத கலையில் உள்ள எழுத்துக்கள் இலிங்கமாகவும் நிற்றல் போதரும்.
இம்மந்திரத்தை மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``அமர்ந்திடம்`` - என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. ``தான்`` இரண்டில் முன்னது வழிபடுபவனையும், பின்னது வழிபடப்பட்டு சிவனையும் குறித்தன. நாதத்தை, `அகாரம்` என்றலும், விந்துவை உகாரம் என்றலும் வழக்கு. அதனால், `சத்தி உகாரமாய் நிற்க` என்பது இங்கு ஆற்றலால் பெறப்படும்.
நிவிர்த்தி கலையுட்பட்ட நம்மனோர்க்கு எழுத்தோசைகள் ஆகாயத்தின் குணமாகிய இசையோசையாம் உபாதியோடு கூடியன்றிப் புலனாகாமையின் அவற்றை, ``வான் நேர் எழுகின்ற ஐம்பது`` என்றார்.
இதனால் அக்கர உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.

பொழிப்புரை :

சத்தி சிவங்கட்கு வடிவமாய் நிற்கின்ற விந்து நாதங்களின் வடிவமே இலிங்க வடிவம். அவற்றுள் விந்துவே பீடமாயும், நாதமே இலிங்கமாயும் நிற்கும். அந்த விந்து நாதங்களை முதலாகக் கொண்டு தோன்றிய `சிவன் சத்தி, சதாசிவன், மகேசுரன், வித்தியேசுர` என்னும் முதல்வர் ஐவரும் முறையே, சிவம், சத்தி, சதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் சுத்த தத்துவம் ஐந்தையும் தோற்றுவிப்பார்கள்.

குறிப்புரை :

சிவன் முதலிய ஐவரே உண்மைக் கருத்தாக்களாக ஏனை, `அனந்த தேவர், சீகண்டர், மால், அயன்` முதலியோர் உபசார கருத்தாக்களேயாதலின், `அவரும், அவர்தம் செயல்களும் இவ் வுண்மைக் கருத்தாக்களாலே உள ஆவன` என்பது பெறப்படும். படவே, `அக்கருத்தாக்கள் ஐவரும் விந்து நாதங்களை முதலாகக் கொண்டவர் ஆதலின், அவ்விந்து நாதங்கள் இன்றி உலகம் இல்லை` என்றதனால், அவ்விந்து நாதங்களின் வடிவாகிய இலிங்கம் உலக முதலாகும்` என்றதாயிற்று `இவ்வாறு இலிங்க வடிவின் உண்மையை உணரும் உணர்வே ஆத்தும லிங்கம்` என்பது கூறப்பட்டது.
`விந்து; நாதம்` என்பன பரவிந்து பரநாதங்களையும் அபர விந்து அபர நாதங்களையும் ஏற்ற பெற்றியான் உணர்த்தி நிற்கும் ஆதலின், இங்கு அவை பரவிந்து பரநாதங்களை உணர்த்தின. அவை முடிநிலை முதலாய் நிற்றலின் அவற்றை ஒழித்து, அபர நாதம் முதலாகவே தத்துவங்கள் எண்ணப்படுகின்றன. அபர நாத மூர்த்தியே, `சிவன்` என்றும், அபர விந்து மூர்த்தியே `சத்தி` என்றும் சொல்லப் படுகின்றனர். அம்மூர்த்திகட்கு இடமாய் நிற்கும் தத்துவங்களே, `சிவதத்துவம், சத்தி தத்துவம்` - எனப்படுகின்றன. ``இலிங்கம்`` இரண்டினில் முன்னது பொதுவாக இலிங்க வடிவினையும், பின்னது சிறப்பாகப் பிழம்பினையும் குறித்தன.
முதல்வர் ஐவரையும் ``கரு ஐந்து`` என அஃறிணை வாய்பாட்டாற் கூறினார். கடவுளரை எத்திணை வாய்பாட்டிலும் கூறுதல் வழக்காதலின் ``தெய்வமாய்`` என்பதன்பின், `கொண்டு` என ஒருசொல் எஞ்சிநின்றது.
இதனால், `இலிங்க வடிவம் உலக முதலின் வடிவம் என உணரும் உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

அருளே திருமேனியாகக் கொள்ளும் சிவனது திருவடியாகிய இலிங்கத்தில் பீடம் ஆன்மதத்துவமும், நடுக் கண்டம் வித்தியா தத்துவமும், கண்டத்திற்குமேல் உள்ள பகுதி சிவதத்துவமும் ஆகும். அந்த வகையினதாகிய இலிங்க மூர்த்திமான் சதாசிவராவர்.

குறிப்புரை :

இதனுள் ``சத்தி`` என்றது, `அருள்` என்றபடி. முன்னர் ``ஆன்மா`` என்றது ஆன்ம தத்துவத்தையும், பின்னர் ``ஆன்மா`` என்றது மூர்த்திமானையுமாகும். முப்பத்தாறு `தத்துவங்களும் கூடிய கூட்டம் இலிங்க வடிவாம்` என்றதனால் அத்தத்துவங்களால் விளங்குகின்ற ஆன்ம உணர்வும் சிவனுக்கு இலிங்கத் திருமேனியாய் நிற்றல் கூறப்பட்டது. படவே, அவ்வுண்மையை உணராதவர்க்கு அவரது உணர்வு பாசமாயும், உணர்வார்க்கு அவரது உணர்வு சிவமாயும் நிற்கும் என்க.

பண் :

பாடல் எண் : 7

மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந் தின்பம் பொகின்ற போது
நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும்
இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.

பொழிப்புரை :

மனத்தின் தொழிற்பாடு நிகழ்தலால் நடை பெறுகின்ற என்னுடைய உயிர் வாழ்க்கையில் அந்த மனம் உலக இன்பத்தையே மிகுவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையின் இடையே சிவனது திருவருள் புகுந்து செயலாற்றத் தொடங்கின மையால், அந்த மனமும் முன்னை நிலையை விடுத்து, என்னையும், என் தலைவனையும் நினைவதாயிற்று. சிவன் எனது உடம்பையே தனது இல்லமாகக் கொண்டு என்னை ஆட்கொண்டது இம் முறைமையினாலாம்.

குறிப்புரை :

எனவே, `எனது உயிர் ஆத்தும லிங்கமானது இவ் வாற்றால்` என்றபடி. ``புகுந்து`` நான்கில் முதலாவதும், மூன்றாவதும் `புகுதலால்` என்பதன் திரிபு. ``நலம்`` என்றது. திருவருளை, ``நாடும்`` என்னும் பயனிலைக்கு எழுவாய், `அம்மனம்` என வருவிக்க. இல்லம், ``இலம்`` என இடைக் குறைந்து நின்றது. `இல்லமாகப் புகுந்து` என ஆக்கம் வருவிக்க.
இதன் பின்னிரண்டு அடிகள் உயிர் எதுகை பெற்றன.

பண் :

பாடல் எண் : 8

பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்அடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்துறைந் தானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு என்னை ஆட்கொண்டபின் இறை யியல்பு அனைத்தையும் உடைய சிவன் எனது உயிரையேதான் இருக்கும் இடமாகக் கொண்டான்.

குறிப்புரை :

`அதனால் எனது உயிர் ஆத்தும லிங்கமாயிற்று` என்பது குறிப்பெச்சம். பரன் + அபரன் = பராபரன். `மேலும், கீழுமாய் நிற்பவன்` என்பது பொருள். ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க`` - எனத் திருவாசகத்துள்ளும் வந்தது. (தி.8 திருவண்டப்பகுதி, 50) `இவ்வாற்றால் என் உயிரையும் இடமாகக் கொள்ளுதல் அவனுக்கு இயல்பாயிற்று` என்றபடி. எந்தை - அடைந்தவர் மேல் தந்தை போலும் அருள் உடையவன். மதி சூடுதல் சார்ந்தாரைக் காப்பவன் ஆதலைக் குறிப்பது. ``தராபரன்`` என்றது மக்களை ஆட்கொள்ளுதலையும், ``தேவர்கள் மன்னும்`` என்றது தேவர்களை ஆட்கொள்ளுதலையும் குறித்தவாறு. `அடியார்களது மனத்திலும், சிரத்திலும் வீற்றிருப்பவன் எனது மனத்திலும் நீங்காது இருப்பவன் ஆயினான்` என்பது அவனது பேரருளை வியந்தவாறு. `சிரபரன்` என்பது எதுகை நோக்கி நீண்டது. இங்கு உள்ள ``பரன்`` என்பதை, ``கோயில்`` என்பதனோடும் கூட்டுக. ``மன்னும்`` என்பது முற்று. `மராமரன் போல மன்னி உறைந்தான்` என்க. மரன் - மரம். மரங்களில் மிக்க வயிரம் உடையது மராமரம் ஆதலின், அஃது அகலாது இருத்தற்கு உவமையாயிற்று.

பண் :

பாடல் எண் : 9

பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம்
குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.

பொழிப்புரை :

`பசு` எனப்படுகின்ற எனது மனத்தைப் பசுமனமாய் இல்லாது திருந்தப்பண்ணி அதனைத் தனக்குக் கோயிலாகக் கொண்ட தலைவன் சிவனேயாகும். அவனை, அங்ஙனம் பசுக்களைத் திருத்தி ஆட்கொள்கின்ற தலைவன் அல்லன்` என்றும், `ஆம்` என்றும் இங்ஙனம் ஐயுற்று உலகம் பிணங்குமாயின் அது பேதையுலகமேயாகும்.

குறிப்புரை :

பின்னிரண்டடிடகள், சிவனைச் சிறப்பு வகையால் விளக்குகின்றன. அதனால், முன்னர் ``ஈசன்`` என்று பொதுமையிற் குறித்ததாம். `செஞ்சடைப் புண்ணியன்` என இயையும். `புண்ணியன் - புண்ணியத்தை வடிவாக உடையவனும், அதன் பயனாகின்றவனும்` என்க. தவம் செய்வார் கோடைக் காலத்தில் ஐந்தீ நாப்பண் நிற்றலும், மாரிக்காலத்தில் நீர்நிலையுள் நிற்றலும் செய்வர் ஆதலின் ``அங்கியும் நீரும் பொரா நின்றவர்`` - என்றார். பொருதல், தாக்கப்படுதலும், பொறுத்து நிற்றலும் என்னும் இரண்டனையும் குறித்தது. ``செய் அப் புண்ணியம்`` என விதத்து ஓதினமையால் இங்கு, ``புண்ணியம்`` என்றது இறைவனை நோக்கிச் செய்யும் தவத்தையாயிற்று. பேதைமை உடையவனைப் `பேதை` என்றல் பான்மை வழக்கு. அஃது இங்கு அஃறிணைக்கண் வந்தது. குரால் - பசு.
இதனால், உயிர் சிவனுக்கு வடிவாய் நிற்றலன்றிப் பிற தேவர்க்கு வடிவாய் நில்லாமை கூறும் முகத்தால், ஆத்தும லிங்கத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று
சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை
ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே.

பொழிப்புரை :

உலகர் ஏனைத் தேவர்களை முதல்வராக நினைந்து தாம்கொண்ட கடவுளை `அவன் ஓரிடத்தில் நின்றான், இருந்தான்` என இவ்வாறான வடிவங்களைப் பல இடங்களில் சென்று கண்டு துதிப்பார்கள். நான் சிவபெருமானை, `என் உயிராகிய வடிவத்தில் என்றும் இருக்கின்றான்` என்று நிலையாக நின்று துதிப்பேன்.

குறிப்புரை :

`தேவர்களை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. சிவபெருமானுக்குக் கிடந்த கோலம் ஓரிடத்தும் கூறப் படாமையால், ``தேவர்கள்`` என்பதனை எழுவாய் வேற்றுமையாகக் கொள்ளுதல் பொருந்துவதன்று. சிவபெருமானைச் சுட்டி நின்ற அவன் என்பது `முதற்கடவுள்` எனப் பொருள் தந்து நின்றது. முதற்கண் நின்ற ``என்று என்று`` என்றது, `இங்ஙனம் பலவாறாக` என்றபடி. `என்று` என ஒரு சொல்லாகப் பாடம் ஓதின் வெண்டளை பிழைத்தலை அறிக.
ஏனைத் தேவர்கள் உருவ மேனியைத் தவிர, `அருவுருவம், அருவம்` என்னும் மேனிகளை உடையர் ஆகாமையால், இலிங்க வடிவினராகக் கூறப்பட்டிலர். அதனால் அவர் ஆத்தும லிங்கத்தில் நிற்றலும் இல்லை` என இவ்வழிபாடு சிவநெறி நிற்பார்க்கே உரித்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உருவும் அருவும் உருவோ டருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

பொழிப்புரை :

யாதோர் உருவும் இலனாகிய பரமசிவன், தன்னைப் போலவே நிலைபெற்ற பொருளாய் உள்ள பல உயிர்களின் பொருட்டு, `உருவம், அருவம், உருஅருவம்` என்னும் திரு மேனிகளைப் பொருந்தி நிற்பான். அஃதேயன்றிப் பக்குவான்மாக்கள் பொருட்டுக் குருவாகி வந்து அவர்களோடு உடன் உறையும் கொள்கையையுடைய, கற்பகத் தருவைப்போல அவர்கள் வேண்டியவற்றை வழங்குகினஅற சதாசிவ மூர்த்தியும் ஆவான்.

குறிப்புரை :

`பதிப்பொருளாகிய சிவனை இவ்வியல்பினனாக உணர்தலே சிவஞானம்` என அதன் இயல்பு உணர்த்தும் முகத்தால் ஞானலிங்கத்தின் இயல்பைத் தொகுத்துக் கூறியவாறு.
``குருவும்`` - என்னும் உம்மை இறந்தது தழுவியதனோடு உயர்வு சிறப்பு. இதனை, ``சதாசிவன்`` என்பதனோடு கூட்டுக. ``ஆகும், நல்கும்`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``சதாசிவன்`` என்னும் ஒருபெயரைக் கொண்டமையால், ``ஆகும்`` என்பதை வினையெச்சமாக்கி உரைக்கப்பட்டது. ஐந்தொழில்களில் அருளலைச் செய்தல் சதாசிவ மூர்த்தியாகியேயாதலால், ``குருவென நிற்கும் கொள்கையனாகும் சதாசிவன்`` என்றார். இதன்பின் `ஆம்` என்பது எஞ்சி நின்றது. தான், ஏ அசைகள்.

பண் :

பாடல் எண் : 2

நாலான கீழ உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகநாப்பண்
நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தனே.

பொழிப்புரை :

கீழும், மேலும் நான்கு நான்கு திருமேனிகளாய் உள்ள அவற்றிற்கு மிக நடுவிலே உள்ள ஒரு திருமேனி மட்டும் அருவுருவமும், அஃதொழிய அதற்குக் கீழ் உள்ள திருமேனிகள் நான்கும் உருவமும், மேல் உள்ள திருமேனிகள் நான்கு அருவமும் ஆக இவ்வாறு பொருந்துதலால், இவையாய் நிற்கின்ற பரமசிவன் ஒருவனேயாயினும் ஒன்பது பேதங்களாய் நிற்பன்.

குறிப்புரை :

இவற்றை `நவந்தரு பேதம்` - என்பர். மூன்றாம் அடியில் ``நாலான`` என்றது, முன்னர், கீழே. மேல் - எனக் குறித்த இடம் ஒவ்வொன்றிலும் நாலான` - என்றதாம். அதனை முதற்கண் எடுத்து, நாலானவற்றின் மிகநாப்பண் ஒன்றும் அருவுரு, என இயைத்துரைத்து வைத்து, அதன்பின் ``நடுநிற்க`` என்பதனை வைத்து, அதன்பின் முதற்றொட்டு உரை்க. நடுண் நிற்கும் திருமேனி, ``நடு`` எனப்பட்டது. ``நிற்க`` என்றது, `ஒழிய` என்றபடி ``நண்ணலால்`` என்பதற்குமுன், `இவ்வாறு` என்பது எஞ்சி நின்றது, ``நாலான கீழ், மேலான நான்கும், மிகநாப்பண் ஒன்றும்`` என்றதனானே `ஒன்பது` என்னும் தொகை பெறப்படுதலால் வாளா, ``பாலாம்`` என்றார். `இவையாம் பரசிவன்தான் ஒருவனே` பாலாம்` என இயைத்துக் கொள்க.
மேல் நான்கு, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்பன. நாப்பண் ஒன்று சதாசிவ மூர்த்தம். கீழ்நான்கு, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` - எனப்படும் மூர்த்தங்கள். இவற்றின் இயல்பு சிவஞான சித்தியார் இரண்டாம் சூத்திரத்தில் கூறுமாற்றாண் அறிக.
உருவத் திருமேனிகளை இவ்வாற்றால் உணரும் ஞானமே சரியை` என்றும், அருவுருவத் திருமேனியை இவ்வாறு உணரும், ஞானமே `கிரியை` என்றும், அருவத் திருமேனிகளை இவ்வாறு உணரும் ஞானமே `யோகம்` என்றும், `இம்மூவகைத் திருமேனிகளுள் யாதொன்றும் இன்றி அறிவுத் திருமேனியே பரசிவம்` - என உணரும் ஞானமே `ஞானம்` என்றும் சொல்லப்படுகின்றன. `இந்த நான்கும் ஞானத்தின் அரும்பு, மலர், காய், கனிபோலும் நிலையவாம்` என்பதை,
``விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே``
என்னும் தாயுமானவர் பாடலால் அறியலாம்.
இதனால், ஞான லிங்கங்கள் நால்வகையின ஆதலும், அவற்றின் படிநிலை உயர்வுகளும் ஞானத்தால் உணரப்படுகின்ற ஞேயங்களைக் கூறும்முகத்தால் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 3

தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய நவந்தரு பேதங்களில் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் பேதங்களை ஏனைத் தேவர்போல எண்ணுதல் கூடாது` என்றற்கு அவற்றது சிறப்புணர்த்துவார், `அருவுருவத் திருமேனியும் தனியொரு நிலையது ஆனமை பற்றி இகழ்தல் கூடாது` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.

குறிப்புரை :

``தேவர்பிரான்`` என்றது உருத்திரனை. என்னை? அவனோடு ஒத்த உருவும், பெயரும், தொழிலும் உடையவன் தேவர்கட்குப் பிரானாய் நிற்றல் வெளிப்படையாதலின், திசைமுகம் - திக்கின் பகுதி. அவை எட்டாதலின் அவை போல எண்மராய் நிற்கும் வித்தியேசுரரை, ``திசைமுகர்`` என்றார். இவருக்குத் தலைவன் மகேசுரன். சதாசிவ மூர்த்தி தனக்குக் கீழ் உள்ள நால்வர்க்கும் மேலானவன் ஆதல் பற்றி ``நால்வர் பிரான்`` என்றும், அவன் காணாத அருவினர்க்கும், காணப்பட்டே நிற்கும் உருவினர்க்கும் நடுநிற்கும் சிறப்புப் பற்றி ``நடுஉற்ற நந்தி`` என்றும் கூறினார்.
`அவ்வழியால்` என `ஆல்` உருபும், `அடிக்கண்` எனக் `கண்` உருபும் விரிக்க. `அண்ணலும் அவர் ஆம்` என ஒரு சொல் வருவிக்க. `பிரான் என்று யாவர் இறைஞ்சுவார்` என்பதனை முன் இரண்டோடும் தனித் தனிக் கூட்டிப் பின்பு, நேரே உரைக்க.
இதனால் `ஆன்மாவினது ஞானம் உண்மைப் பதிஞானம் ஆமாறு கூறும் முகத்தால், அஃதே உண்மை ஞான லிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கண்ணி யுணரினும்
ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.

பொழிப்புரை :

யாண்டும், திங்களும், நாளும் என்று இன்ன வகையாகக் காலத்தை வரையறை செய்கின்ற, ஒவ்வொரு வரும் காலை, நண்பகல், மாலை என்னும் காலங்களில் தவறாது கண்டு வணங்கத் தக்க பகலவனிடத்துக் கருதியுணரினும், உணவு முதலிய உலகியல் ஒழுக்கத்தின் நீங்கி யோகத்தின் நின்று உணரினும் அவ்விடங்களில் உணரப்படும் பொருள் ஒப்பற்றதாகிய அந்தத் தனிமுதற் பொருளே யாகும். அதனால் நான் எனது வினைக்கட்டு நீங்கி அழியுமாறு எவ் விடத்தும் அந்தத் தனிமுதற் பொருளையே விரும்பித் தொழுகின்றேன்.

குறிப்புரை :

`கன்னி யுணரினும்` - என்பது பாடமன்று. முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. கண்ணல் - கருதல். பாவித்தல். ``மாறினும்`` என்றது, `மாறி யோக ஒழுக்கத்தில் நிற்பினும்` என்றவாறு. ``காண் தகையானொடும்`` - என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத் திரிக்க. ஒன்று - ஒப்பற்றது. முதற் பொருளை `அது` என்றல் உபநிடத வழக்கு.
`யார் எவ்விடத்து எவ்வாறு வணங்கினும் அவ்வணக்கம் தனி முதலாகிய பரசிவத்தையே சாரும் - என உணரும் உணர்வே ஞான லிங்கமாய்ப் பயன்தரும்` என்பது இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

பொழிப்புரை :

மெய்யுணர்வினை உடைய அடியவர்களால், `யாவர்க்கும் முன்னே மேலே உள்ளவன்` எனவும், அனைத்து உலகங்கட்கும் முதல்வனாகிய முழுமுதற் றன்மை உடையவன்` எனவும், `நீதியின் உள்ளே விளங்குகின்ற பெரியோன்` எனவும், `இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன்` எனவும் கொண்டு வழிநின்று போற்றுகின்ற பெருமையை உடையவன் எங்கள் கடவுள். அவனை அறிதற்கு உரிய அடையாளம் மாதொரு பாகனாய் இருத்தல்.

குறிப்புரை :

`இவ்வாறு உணரும் உணர்வே ஞான லிங்கமாம்` என்றவாறு. ``சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்`` என்பதை அதற்குரிய காரணங்களுடன் விளக்கி, `அத்தெய்வமாவான் சிவபெருமானே` எனக் கூறுதலே கருத்தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
``அண்டம்`` என்றது, `அகிலாண்டம்` என்றவாறு ``அண்டத்துக்கு`` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. ஓரிடத்தும், `தெய்வம்` என வாளா கூறாது, ``பரதெய்வம், நற்றெய்வம், பெருந்தெய்வம், மாத்தெய்வம்`` - எனச்சிறப்பித்தே ஓதியது `தெய்வம்` என்பது முதற் கடவுளையே உணர்த்தி நிற்றற் பொருட்டு. ஈற்றடியில் உள்ள சொற்களை, `தன்பாதியுள் பராசத்தி மன்னும் ஆம்` என இயைத்து `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. ஆம், அசை.

பண் :

பாடல் எண் : 6

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபேதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.

பொழிப்புரை :

ஆதிசத்திக்குமேல் உள்ளதாகிய பராசத்தியில் விளங்குவதே வாக்கும், மனமும் எட்டாது நிற்கும் தூய ஒளியாகிய சுத்தசிவ நிலை. அதனால், சிவன் பிறிதொன்றோடும் படாது தானேயாய் நிற்கின்ற அவனது உண்மைநிலை, ஞானசத்தி கிரியா சத்திகட்கு முதலாய் உள்ள ஆதி சத்திக்கு அப்பால் உள்ள பராசத்தியின்கண் நிற்பதே யாகும். எனினும் அவனது நிலைகள் ஆதிசத்தி. ஞானசத்தி, கிரியா சத்திகள் ஆகிய அவைகளோடும் இயைந்து நிற்பனவேயாம்.

குறிப்புரை :

`அஃது அவனது பொதுநிலை` என்றபடி. `அந்தப் பொதுநிலையை அவன் அடைதற்குக் காரணம் உயிர்களிடத்து வைத்த கைம்மாறு கருதாத கருணையே` என்பது கருத்து. ``ஈசன்`` எனப் பின் வருதலால், ``அத்தன்`` என்றது, `தன்` என்னும் அளவாய் நின்றது.
``தோயாத தூவொளி`` என்பதை, ``சுத்த சிவபதம்`` என்பதற்கு முன்னேயும், ``ஒத்தவும் ஆம்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. `தடத்த நிலைகள் பல` என்பது உணர்த்துதற்கு அதனைப் பன்மையாக ஓதினார்.
இதனால், முதற்பொருளை இவ்வியல்பினதாக உணரும் உணர்வே ஞானலிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும்
எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும்
பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.

பொழிப்புரை :

`எல்லாப் பொருள்களின் முடிவுக்கும் முடிவாய் உள்ள` ``போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``3 பரமசிவனது உண்மையை உணரின் `அவனே உலகம் அனைத்திற்கும் முதல்` என உலகத்தின் முடிநிலைக் காரணம் விளங்கும். பின் அந்தப் பரமசிவன் முதற்பொருளாய் எழுதற்கு காரணமான அவனது குணமாம் பராசத்தியை உணரின் அஃதே எல்லையில் இன்ப வெள்ள மாய் விலைதலால், அப்பால் அலைவுயாதும் இன்றி, அந்த இன்ப வெள்ளத்திலே அமைதியுடன் இருத்தல்கூடும். எப்பொருள் எத் தன்மைத்தாயினும் அப்பொருளில் மெய்ப்பொருளாகிய பரம சிவனைl அலைவின்றிக் காணும் மெய்யுணர்வைப் பெற்றால் அவ் வுணர்விலே முன்னே அருள்நிலை தோன்ற, அதன்பின் அதற்கு மேலாகப் பொருள் நிலையாகச் சிவன் விளங்குவான். அங்ஙனம் விளங்கக் கண்டவனது உள்ளத்தில்தான் அந்தச் சிவன் என்றும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, அங்ஙனம் காணுதலாகிய உணர்வே ஞான லிங்கமாம்` என்பது கருத்து. முடிவில் உள்ளதை, `கொழுந்து` என்றல் வழக்கு. குவலயம் - குவலயத்தின் உண்மை, `எழுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ``இருக்கலும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. பரம் - மேல். மேல் உள்ளவனை `மேல் என்றது ஆகுபெயர்; திடமாக என ஆக்கம் விரித்துரைக்க. ``பார்ப்பதி`` - என்றது `சிவ சத்தி` என்னும் பொருளதாய்த் திருவருளைக் குறித்தது. ``திரண்டு எழ`` என்றதனாலே, திரண்டு எழுதலும் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. உளனாதற்கு `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், சொரூப ஞானமாகிய ஞானலிங்கம் உளதாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.

பொழிப்புரை :

தன்னையே அடைக்கலமாக அடைந்த எனக்குத் தந்தையாய் நிற்கும் பரமசிவனையும் அவன் எனக்குத் தாயாய் நிற்கும் சத்தியோடு கூடிய கூட்டு நிலையையும், ஞானாசிரியர் தம் மாணாக் கர்க்கு முதற்கண் சுட்டளவாக உணர்த்திப் பின்பு அவ்விருவரது முறைமையை எல்லாம் விளங்க உணர்த்துவாராயின், மாணாக்கர்க்கு உண்மை ஞானம் பிறக்கும். எனவே, (`அதுவே அவர்க்கு ஞானலிங்கமாய்ப் பயன் தரும்` என்றபடி) இனி என் அப்பன் என் அம்மையை மக்களது இருதய கமலத்தில் இருக்க வைத்துத் தானும் அந்த இடத்தையே விரும்பி அவளோடு கூடி யிருக்கின்றான். ஆகவே, அவ்விருவரும் வீற்றிருக்கின்ற இடம் அதுவே.

குறிப்புரை :

`ஆதலின் மக்கள் அவ்விடத்து அவனை ஞான லிங்கத்தில் காண்க` என்பது குறிப்பெச்சம். `பரமனையும், கூட்டத்தையும்` என இரண்டாவது விரித்துரைக்க. ``என் அம்மை கூட்டம்`` எனப்பின்னர் வருதலால், முன்னர் ``பரமன்`` என்றது அவன் தனித்து நிற்கும் நிலையையாயிற்று. அஃது அவனது சொரூப நிலையும், அம்மையோடு கூடிய கூட்டம் அவனது தடத்த நிலையும் ஆகும் சொரூப சிவனே `பரசிவன்` என்றும் சொல்லப்படுவான். தடத்த சிவன் `சிவன்` என்றும், `ஆதிசிவன்` என்றும் சொல்லப்படுவான். சத்தியை விட்டுச் சிவன் ஒருபோதும் தனித்து நிற்றல் இல்லை யாயினும், செயல்யாதும் நிகழாதபோது சத்தி இருந்து இல்லாதது போல நிற்றலின் அந்நிலை `சிவனது தனிநிலை` என்றும், செயல் நிகழும் போது சிவன் செய்பவனும், சத்தி அவன் செயலுக்குத் துணையுமாய்ப் பிரிப்பின்றி நிற்றலின் அந்நிலை, `சிவனும், சத்தியும் கூடிய கூட்டு நிலை` என்றும் சொல்லப்படுகின்றன.
``ஓருரு வாயினை; மானாங் காரத்(து) ஈரியல் பாய்`` *
என்று அருளிச் செய்தது இவை பற்றியே.
சிவன் பரசிவனாய் நிற்கும் பொழுது சத்தி பராசத்தியாய் நிற்பாள். அவளே அருட்சத்தி. சிவன் ஆதிசிவனாய் நிற்கும்பொழுது சத்தி ஆதிசத்தியாய் நிற்பாள். அவளே திரோதான சத்தி. அவள் வழியாகவே இறைவனது ஐந்தொழில்கள் நிகழும். இதுபற்றி அருணந்தி தேவர்,
``அவளால் வந்த ஆக்கம் இல்வாழ்க்கை யெல்லாம்`` l
என அருளிச் செய்தார். இவற்றையெல்லாம் இனிதுணர்த்தலே ஞானோபதேசமும், அங்ஙனம் உணர்த்தியவாறே உணர்தலுமே ஞானம் ஆகலின், ``முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்`` என்றார். உரைத்தற்கும் சொல்லுதற்கும் உரியவராகிய `ஞானாசிரியர்` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. ``சந்தித்திருந்த இடம்`` என்பதற்கு, எஞ்சிநின்ற `அது` என்னும் பயனிலையை வருவித்து இறுதியில் கூட்டியுரைக்க. ``உந்திக்கு மேல் என்றது இருதயத்தை. இதனை மூன்றாம் தந்திரத்துள்,
``நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்`` 3
என்றார். `உந்தியின் மேல்` என்பது பாடம் அன்று.
இதனால் ஞான லிங்கத்தின் இயல்பும், அந்த இலிங்கத்தைப் பெறும் முறையும், பெற்றுப் பயன் அடையும் முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில்
ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

பொழிப்புரை :

`உயிரின் இருப்பு, சத்தயோடு கூடிய சிவனது விளையாட்டே` என்றால், அச்சிவன் அவ்வுயிரை யாதாக்குவான் எனில், ஆணவத்தைப் போகக்தற்கண் தம்மில் ஒரு தன்மைப்பட்ட, `சுத்தம், அசுத்தம்` என்னும் இருமாயையால் ஆகிய கருவிக் கூட்டத்துள் அவ்வுயிரை முதற்கண் புகுவித்து அந்நிலையில் அவற்றின் வினைகளை அவை நுகரச் செய்து, அக்கருவிகள் கூடுதல் குறைதல்களால் உளவாகின்ற கேவல ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை கட்குப் பின் திருவருளால் உளவாகின்ற சுத்த ஐந்தவத்தையை அடை வித்து இறுதியாகத் துரியத்தையும் நீக்கித் துரியாதீதத்தில் சேர்த்து, அங்ஙனம் சேர்க்கப்பட்ட அந்நிலையில் அதன் அறிவினிடமாகத் தான் விளங்கி, அதனாலே, தனது இன்ப வெள்ளமே அவ்வுயிர்க்கு என்றும் உறைவிடமாகச் செய்வான்.

குறிப்புரை :

`சத்தியோடு கூடிய சிவன்` என்றதனால், ஆதிசிவன்` என்பது பெறப்பட்டது. உயிரினது நிலைபேற்றை `உயிர்` என்றது ஆகு பெயர். விளையாட்டால் ஆவதனை, ``விளையாட்டு`` எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. ``ஆகில்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின்கண் வந்தது. `சுத்தம், அசுத்தம்` என்பவற்றால் தம்மில் வேறுபாடு உடையவேனும், ஆணவத்தை நீக்குதற்கண் ஒரு தன்மைய ஆதல் பற்றி இரு மாயைகளையும் ``ஒத்த இரு மாயை`` என்றார். மாயை, ஆகுபெயராய் அதன் காரியத்தை உணர்த்திற்று. ``இடை`` என்பதன்பின், `புகுவித்து` என்பது எஞ்சிநின்றது. இறுதி யாதல் பற்றி, சுத்த துரியத்தினின்றும் பிரிவித்தலை மட்டுமே கூறினாராயினும், அதற்கு முன் நிகழ்வனவாகிய அனைத்து அவத்தைகளினின்றும் பிரிவித்தல் ஆற்றலால் விளங்கிற்று. அறிவை, `சித்தம்` என்றல் வழக்கு. `சிவம்` என்பது, இங்கு, `இன்பம்` என்னும் பொருளதாய் நின்றது. `சிவத்தை` என இரண்டாவது விரிக்க.
இதனால், மேலை மந்திரத்தில் ``முறைசொல்லின்`` எனக் குறிக்கப்பட்ட `முறை` இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும்
சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.

பொழிப்புரை :

உலகமே ஆதி சிவனது விளையாட்டாம். அவன் ஆதி சத்தியைக் கொண்டே அனைத்தையும் செய்வனாயினும் அச் சத்தியும், அவனும் உலகத்துத் தலைவியரும், தலைவரும் போல வேறு வேறானவர் அல்லர். சத்தியே `சிவனும்` சிவனே சத்தியும் ஆவர். எனினும் சில வேறுபாடு பற்றி, சத்தி எனவும், `சிவன்` எனவும் பிரத்து வழங்கப்படுகின்றார்கள். அதனாலே இலிங்கத்திலும் அவ்வேறுபாடு காணப்படுகின்றது. அஃதே பற்றி, அதனை, `உலகத்தாரது உருவம் போல இருவேறு பொருள்களின் கலப்பு` என மயங்கற்க. இனி உண்யைாக உணர்ந்தால், சத்தியே அனைத்துத் திருமேனிகளுமாய் நிற்கும்.

குறிப்புரை :

`தாரணி` என்பது `தாங்குவது` என்னும் பொருட்டாய் நிலத்திற்கு, பெயராகும். அத்தகைய நிலமாவது மண்ணிலம் மட்டு மின்றிப் பொன்நிலம் முதலியனவும் நிலமேயாதலின், ``தாரணி`` என்றது எல்லா உலகங்களையும் குறித்தது. அவற்றைச் சிவனது விளையாட்டு என்று, மேலைமந்திரத்திற் கூறியவாறே உபசாரமாம், ``விளையாட்டாம்`` என மேற்கூறியதனையே இங்கு மீட்டுங் கூறியது, மேற்கூறிய உயிரேயன்றி, `ஏனைப் பொருள்கள் பலவும் அத்தகை யனவே` என்பது உணர்த்துதற்கு. மேல், சிவனை, ``எந்தை`` எனவும், சத்தியை, ``என்னம்மை`` எனவும் கூறியதனால், அவ்விருவரும் `உலகத்துத் தந்தை தாயரைப் போல வேறுவேறானவர் போலும்` என மலையாமைப் பொருட்டு, சத்தியே சிவனும் ஆவாள்; சிவனே சத்தியும் ஆவான்` என விளக்கிக் கூறினார். `விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்`` என ஆத்துமலிங்க அதிகாரத்தில் கூறிய குறிப்பின்படி இலிங்கமும் ஒருபெற்றித்தாய் இராமல் இருவேறு வகையாய்க் காணப் படுதலால் அதுபற்றியும் மேற்கூறியவாறு மலையாமைப்` பொருட்டு, ``தாபரம் வேறில்லை`` என்றார். `இச்சத்தி சிவனன்றி` எனச்சுட்டு வரு வித்து, `தாபராம் இத்தன்மையராகிய சத்தியும் சிவனுமேயன்றி வேறில்லை` என உரைக்க. `தாபரமும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `திருமேனிகள் எல்லாவற்றிலும் சத்தி மூர்த்தியாய் நிற்கச் சிவன் மூர்த்திமானாய் நிற்பன்` என்றற்கு, `திரு மேனிகளில் சில சிவனது வடிவமே` என்றும், சில இருவரும் ஒன்றாய் இயைந்த வடிவம் என்றும் எண்ணுமாறு நிற்றல், கடவுட் பொருள் ஒன்றேயாயினும், அஃது இருதன்மையை உடையது` என்பதைக் குறித்து நிற்கும் அடையாளம் ஆதலேயனஅறிப் பிறிதில்லை` என்றதாயிற்று.
``வேர்த்து வெகுளார்`` * என்பதனை, `வெகுண்டு வேரார்` என முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்ளுதல் போல, ``சமைந்துருவாகும்`` என்றதை, `உருவாகிச் சமையும்` என மாற்றிக் கொள்க. இதற்குப் பகலவன் ஒருவனே `கதிரவனும், கதிரும்` என இருதன்மையை உடையனாய் இருத்தலை உவமையாகக் கூறுவர்.
சத்தி சிவனது இயல்பினை இங்குக் கூறியவாறே,
``அருளுண்டாம் ஈசற்(கு) அதுசத்தி, அன்றே;
அருளும் அவனன்றி யில்லை - அருளின்(று)
அவன்அன்றே யில்லை; அருட்கண்ணார் கண்ணுக்(கு)
இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து`` *
எனவும்
``அருளது சத்தியாகும் அரன்றனக்(கு) அருளையின்றித்
தெருள்சிவம் இல்லை; சிவம்இன்றிச் சத்தி யில்லை``
``சத்திதான் நாதமாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதா னாதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமுமாகும்`` l
எனவும் கூறப்பட்டன.
இதனால், மெய்ப்பொருளது தன்மையினை இங்ஙனம் உள்ளவாறுணர்தலே ஞானலிங்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

குரைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வானிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செயு மாறறி யேனே.

பொழிப்புரை :

ஒலிக்கினஅற கடலை ஆடையாக உடைய நிலவட்டம், நீர், பல செயல்கட்கும் பயன்பட்டு நிற்கின்ற நெருப்பு, எங்கும் பரந்து செல்கின்ற காற்று, அனைத்தையும் தன்னுள் முறைப்பட அடக்கி நிற்கின்ற வானம் இவை அனைத்துமாய் அவற்றில் நிறைந்து நிற்கும் வகையில் உயர்ந்து சென்று, முடிவில் வானத்தையும் கடந்து உயர்ந்தோனாகிய சிவனை யான் உய்தி பெறுதற்கு, `ஒரு சிறு வடிவினனாகக் கண்டு வலம் வருதல் முதலிய வகையால் வழிபடுதல் எவ்வாறு` என அறிகின்றிலேன்.

குறிப்புரை :

வருகின்ற திருமந்திரத்துள் அங்ஙனம் வழிபடுமாற்றை அருளுகின்றார் ஆகலின், இங்கு, ``ஆறு அறியேன்`` என யாதுமத் அறியார்போலக் கூறினாராயினும், கீழ் உரைக்கப் படுகின்ற அதுவன்றிப் பிறிதோர் ஆறு அறியேன்` என்பதே கருத்தாகும். செய்யுள் நோக்கித் தீயைக் காற்றுக்குப் பின்னர் வைத்தார். `குவலயமும், வானும்` என்னும் எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. `வாறிவை` என்பது பாடமன்று. பூதங்களைக் கீழத் தொடங்கிக் கூறினா ராதலின், `நீண்டு`` என்றார். `வரைந்து` எதுகை நோக்கி வலித்தல் பெற்றது. வரைதல், எல்லை வகுத்தல். `அகண்ட மானவனைக் கண்டனாக்குதல் இயலாது` என்பதாம். இதனை, ``அசிந்தினாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு`` (சிவஞான போதம் - சூ. 12. கருத்துரை.)என்றார் மெய்கண்ட தேவர்.
இதனால் இலிங்கத்தாலன்றி இறைவனை அணுகலாகாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வரைத்து வலஞ்செயு மாறிங்கொன் றுண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்தெங்கும் போகான் புரிசடை யானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நீண்டகன்று வரம்பிலனாகிய சிவனை வரம்புட்படுத்து வழிபடும் வழி ஒன்று இந்நிலவுலகில் உண்டு. அஃது யாதெனின், அலைகளை வரிசையாக்கி அதனாலே கரையை அடைகின்ற கங்கையாற்றின் நீரையும், பூக்களையும் கையிலே கொண்டு, அவனது பெயர்கள் பலவற்றையும் சொல்லி ஆட்டியும், சாத்தியும் வழிபட்டு அவனை அங்ஙனம் வழிபடப்பட்ட அவ்வடிவத்தில் வைத்து உணர்தலேயாகும். அங்ஙனம் உணரவல்லார் உளராயின் அவ்வடிவைப் பொள்ளல் செய்து அதனை விட்டு அவன் வேறு எங்கும் போய்விட மாட்டான்.

குறிப்புரை :

`அதனுள் தானே இருந்து அருள் செய்வான்` என்பதாம். `இவ்வாறு அவன் தான் அருளிச் செய்த ஆகமங்களில் உரைத்துள்ளான்` என்பது கருத்து.
``தாபர சங்க மங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொன்டு மன்னுயிர்க் கருளை வைப்பான்`` *
என்றதும் இக்கருத்தினாலேயாகும்.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத் தருள`` *
என்று அருளிச் செய்தமை காண்க. `இஃதொழிய உயிர்கள் அவனை வழிபட்டு உய்யுமாறு வேறில்லையாதலின். அவற்றை இவ்வாற்றால் உய்வித்தல் வேண்டும் - என்னும் கருணை மிகுதியாலே அகண்டித னாகிய சிவன் இவ்வாறு கண்டிதனாய் நின்று அருள் புரிகின்றான்` என்னும் உண்மையைத் தெளிந்து கடைப்பிடிக்க - என்பதாம்.
``இங்கு`` என்றதனால், `இம்முறையைச் சிவன் நிலவுலகிலே தான் வைத்துள்ளான்` என்பது போந்தது.
இதனால், `அசிந்திதனாகிய இறைவனைச் சிந்தித்தனாகக் கண்டு வழிபடும் ஒரே முறையாவது இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றெனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
நன்றென் றடியிணை நான்அவ னைத்தொழ
வென்றைம் புலனும் மிகக்கிடந் தின்புற
அன்றென் றருள்செயும் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

`சிவபிரான் ஒருவனே ஒப்பற்ற தனிமுதற் பொருள்` என நான் உணர்ந்தேன். அதனால் `அவனை மேற்கூறியவாற்றால் `வழிபடுதல் ஒன்றே நன்னெறி` என உணர்ந்து வழிபடுந்தோறும் வழி படுந்தோறும் அவன் தனது பேரின்ப வெள்ளம் எனது ஐம்புலன்களில் அடங்காததாய் மிக்கெழுந்து என்பால் விளையப் பண்ணுதலை அப்பொழுது அப்பொழுதே செய்கின்றான்.

குறிப்புரை :

``எம் ஈசன்`` என்றது `சிவபிரான்` என்றவாறு. `ஒருவனையே` என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அடியிணை தொழுதல்` என்பது `வழிபடுதல்` என்னும் பொருளதாய் ஒரு சொல் நீர்மைப்பட்டு ``அவனை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. ஆதலின், `அவனை நான் அடியிணை தொழ` என மொழி மாற்றி யுரைக்க. வெல்லுதல், கிடத்தல், உறுதல் என்னும் தொழில்கட்கு இன்பமே வினைமுதல் என்க. `என்பால் உற அருள் செய்யும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `சிவனைப் பொது நீக்கி உணர்ந்து இலிங்கத்தில் கண்டு வழிபடல் வேண்டும்` என்பதும், அங்ஙனம் வழிபடுதலால் விளையும் பயன் இது என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

மலர்ந்த அயன்மால் உருத்திரன் ஈசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரும் லிங்கம் பராநந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன் தனது தடத்த நிலையில் `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், சத்தி, சிவன், விந்து, நாதம் - என்னும் ஒன்பது நிலைகளில் நின்று உயிர்கட்கு அவன் நிலைகேற்ற பயனைத் தருவன் ஆகலின் அவை அனைத்துக்கும் பொதுக் குறி யாவது இலிங்கத் திருமேனியே. அதனால் அதனைப் பராசத்தியோடே நிற்கும் பரசிவனாகிய சொரூப சிவனது குறியாகவும் உணர்ந்து வழிபடல் வேண்டும்.

குறிப்புரை :

``மலர்ந்த`` என்றதனை இசை யெச்சத்தால் மாயோனது உந்திக் கமலம் மலர்ந்த` என விரித்துக் கொள்க. `மலர்ந்த` என்னும் பெயரெச்சம் `மலர்ந்ததனால் வெளிப்பட்ட` எனப் பொருள் தந்தது.
அயன், மால் முதலிய ஒன்பது நிலைகளும் ``நவந்தரு பேதம்`` எனப்படும். அதனை
``சிவம்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்
உவந்தருள் உருத்தி ரன்றான் மால் அயன் ஒன்றின் ஒன்றாய்
பவ்தரும்; அருவம்நால்; இங்(கு) உருவம்நால்; உபயம்ஒன்றா
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்`` l
என்னும் சிவஞானசித்திச் செய்யுளால் உணரலாம். இவற்றை ``இங்ஙனம் ஒன்றின் ஒன்றாய்ப் பவம்தரும்`` - என்றமையால், `இம்முறை தோற்றமுறை` என்பது விளங்கிற்று. எனவே, இம்மந்திரத்தில் நாயனார் அயன் முதலாகக் கூறியது ஒடுக்க முறையாதல் வெளிப்படை.
``பரநாதம்`` - என்பதில் உள்ள ``பரம்`` என்பதை விந்துவிற்கும் கூட்டுக. பரநாத பரவிந்துக்களையே `சிவம், சத்தி` எனவும், சிவம் சத்திகளையே `நாதம், விந்து` எனவும் வழங்கும் வழக்கம் ஆகமங்களில் உண்மையால் மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அவ்வாறு கூறப்பட்டது.
நவந்தரு பேதங்களாய் நிற்கின்ற சிவன் தனது ஞானத்தால் தன்னை அவ்வந் நிலைகளில் உணர்ந்து வழிபடுவோரையும் அந் நிலையினராகச் செய்வன். அங்ஙனம் செய்யப்பட்ட அவர் அணுபக்க அயன், மால் முதலியோராவர். சிவன் அவ்வாறு நிற்கின்ற நிலைகள் சம்பு பக்கமாகும். `இம்மந்திரத்திற் கூறப்பட்டவை சம்பு பக்கம்` என்பது உணர்க.
மேற்கூறிய நவந்தரு பேதங்களில் மகேசுரனது பேதங்களாக இருபத்தைந்து வடிவங்களும், மற்றும் பல வடிவங்களும் உள. அவை யெல்லாம் `மாகேசுவர மூர்த்தங்கள்` எனப்பட்டு `மகேசுரன்` என்னும் ஒன்றிலே அடங்குவனவாம். ஆகவே, `மாகேசுர வடிவங்கள் ஒவ் வொன்றும் அவ்வவ் வடிவத்திற்கு மட்டுமே உரிய சிறப்புக் குறிகளாய் அவ்வளவில் மட்டுமே பயன் தருவனவாய் நிற்க, இலிங்க மூர்த்தம் ஒன்றே நவந்தரு பேதங்கட்கும் பொதுக் குறியாய் நின்று எல்லாப் பயன்களையும் தருவது` என்பது இம்மந்திரத்தால் உணர்த்தப் பட்டதாம். எப்பயன் கருதிச் சிவனை வழிபட்டோரும் அவனை இவ்விலிங்கத் திருமேனியிற்றானே வழிபட்டு அவ்வப் பயன்களைப் பெற்றமையைப் புராணங்கள் பலவாக விரித்து கூறும்.
இங்குக் கூறிய அயன், மால் முதலிய பலரும் சம்பு பக்கம் ஆதலால் சிவலிங்கத்தில் `இது பிரம பாகம், இது விட்டுணு பாகம்` என்றாற் போலச் சில இடங்களில் கூறப்படுவதும் சம்பு பக்கத்தை நோக்கியே என்பது உளங்கொளத் தக்கது.
இதனால் சிவலிங்கம் அனைத்து மூர்த்திகளாயும் நிற்கும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்(று)
ஆவி யெழுமள வன்றே உடல்உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகதி தானே.

பொழிப்புரை :

உயிரை உடம்பில் நிறுத்திச் செயற்பட்ச் செய்ய எழுந்த விருப்பத்தால் கீழ்நோக்கிக் கிடந்தும் மேல் நோக்கி எழுந்தும் விளங்குகின்ற குண்டலினி சத்தியோடு உயிர் பொருந்தி செயற்படும் வரையிலுமே உடல் நிலைபெற்றிருக்கும். அச்செயற்பாடு நின்றவுடன் உடல் நீங்கிவிடும். ஆகவே, உடல் உள்ளவரையும் உள்ளே விரும்பி ஈர்க்கப்படுவதும், வெளியே விடப்படுவதால் நீங்கிச் செல்வதும் ஆகிய மூச்சுக் காற்றினை அவ்வாற்றின் அடக்கி நடுநாடி வழியே செலுத்துமாற்றால் இதுகாறும் கூறிவந்த அண்ட லிங்கம் முதலிய அனைத்து இலிங்கங்களிலும் சிவனைப் பாவனை செய்து வழிபட்டால் மேலான கதி கிடைப்பதாகும்.

குறிப்புரை :

குண்டலினி சத்தி ஒடுங்கிக் கீழ்நோக்கிக் கிடத்தலால் உயிருக்குக் கீழான உணர்வுகளும், அஃது எழுச்சியுற்று மேல்நோக்கி இயங்குதலால் உயிருக்கு மேலான உணர்வுகளும் உடல் வழியாக நிகழும். அவற்றுள் சிறந்தது மேலான உணர்வேயாதலால் அஃதொன்றையே நாயனார் குறித்தருளினஆர். குண்டலினி சத்தி பொதுவாக எல்லோரிடத்திலும் உடம்பினுள் கீழ்நோக்கிக் கிடந்து துயில்வதாகச் சொல்லப்படுதல், அதனால் உண்டாக்கப்படும் உலகியல் உணர்வு உணர்வாகாமை பற்றியேயாம். துயிலுதல், இறத்தல் அன்று ஆதலின் அந்நிலையிலும் அஃது உயிருக்கு ஓர் உணர்வைத் தந்துகொணஅடுதான் இருக்கும். அங்ஙனம் தருகின்ற அதனையும் அந்தச் சத்தி கைவிடும்பொழுது உயிர் உடம்பைச் செயற் படுத்த மாட்டாது. அதனால் உடல் விழுந்துவிடும். அதுவே, `இறப்பு` எனப்படுகின்றது. `அத்தகைய இறப்பு நேர்வதற்குள் உயிர் சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்றற்கு, ``பாவித்து அடக்கிற் பரகதிதானே`` என்றார்.
``அன்றே`` என்பது, `அந்நாள் வரையிலுமே` எனப்பொருள் தந்தது. ``உடல் உற`` என அனுவாதமாகக் கூறிய அதனால், `உடல் உறும்` என்பதை முதலில் உரைத்துக்கொள்க.
``பாவித்து அடக்கின்`` என்பதை, `அடக்கிப் பாவிக்கின்` என முன்பின்னாக மாற்றி உரைக்க. பாவித்தற்குச் செயப்படுபொருள் அதிகார முறைமையால் வந்தியைந்தது.
`இலிங்க வழிபாட்டினையும் பிராணாயாமம் செய்து செய்தல் சிறப்புடையது` என்றற்கு, ``மேவப்படுவதும், விட்டு நிகழ்வதும் அடக்கிப் பாவிக்கின்`` என்றார். ``விட்டு`` என்பது, `விடுதலால்` எனப் பொருள் தந்தது.
இதனால், `சிவனை இதுகாறும் கூறிவந்த அனைத்து இலிங்கங்களிலும் வைத்து யோக முயற்சியுடன் வழிபடுதலே வீடடைதற்கு வழியாகும்` என முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்
கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.

பொழிப்புரை :

எம் அருட்குரவராகிய நந்திபெருமான் எம் உடல், பொருள், ஆவி என்பவற்றை யாம் நீர் வார்த்து ஒப்புக் கொடுக்கச் செய்து அவை முழுவதையும் தம்முடையனவாக ஏற்றுக்கொண்டு, அதனால் விரிந்து கிடந்த எமது வினைப்பரப்பு முழுவதையும் ஒரு நொடியில் பற்றற்றொழியப்பண்ணி, அதன்பின் தமது திருக்கையை எம் தலைமேல் வைத்துத் தீண்டிப் பின்னும் தமது திருவடிகளை எம் தலைமேற் சூட்டி, இவ்வாற்றால் யாராலும் உரைப்படாதவற்றை யெல்லாம் உணரும் பேரறிவை எமக்குத் தந்து, வலிமை வாய்ந்த பிறவித் தொடக்கு அற்றொழியும்படி அருள்புரிந்தார்.

குறிப்புரை :

இதனால், `மக்கட்கு ஞானம் கிடைக்குமாறு இவ்வாறு` என்பது உணர்த்தப்பட்டது. நூல் சகலருக்கேயாதலால், இங்குக் கூறிய முறையும் சகலர்க்கேயாதல் தெளிவு.
ஞானம் இறைவனாலல்லது தரப்படாது. `அதனை அவன் சகலர்க்கு ஆசான் மூர்த்தியாய் நின்றே அருளுவான்` என்க. பிரளயா கலர்க்கு ஒருகால் தனது இயற்கை வடிவில் முன்தோன்றியும், விஞ்ஞான கலர்க்கு உயிர்க்குயிராய் உள்நின்றேயும் உணர்த்துவான்.
ஞான நெறியில் நிற்பவர் தமது உடல், பொருள், ஆவி மூன்றனையும் சிவனுடையனவாகவே உணர்ந்து அவற்றைக் குருவினிடத்தில் நீர் வார்த்து ஒப்புவிக்குமிடத்து, `பொருள்` எனப்படுவன பொன், மணிமுதல் பல்வேறு வகையான செல்வங்கள் மட்டும் அல்ல; `யான் இதனைச் செய்தேன்; என் செயல்கள் இவை` எனப் பற்றி நிற்கும் வினைகளும் `பொருள்` எனப்பட்டு, அவைகளும் நீர்வார்த்து ஒப்புவிக்கப்படும். முதல் நாள் ஒப்புவித்த அந்த உணர்வு எந்நாளும் நீங்காது நிலைத்திருத்தற்குச் சிவனை நாடோறும் வழிபடும் போதெல்லாம் வழிபாட்டின் முடிவில் அந்த வழிபாட்டின் பயனையும் ``சிவோதாதா, சிவோபோக்தா`` என்னும் மந்திரத்தை ஓதி நீர்வார்த்து அவனிடமே ஒப்புவிப்பர். அதுவும் இங்குச் `சம்பிரதாயம்` என்றதனால் பெறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியலார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே
உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

பொழிப்புரை :

சிவனை அடைய வேண்டினார்க்கு உடல் பொருள், ஆவிகளை அவனுடையனவாக ஒப்புவித்த பின்பும் மூச்சுக் காற்றினை இயக்கம் இடைவிடாது இயங்கியே நிற்கும் ஆதலின் அதுவும் அவர்கட்குச் சுமையாகும். அதனால், அதனையும் `ஆசிவன், ஆதிசத்தி` என்பவர்க்கு உரியன ஆகும்படி சிவகுரு நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்வார்.

குறிப்புரை :

``பரமும்`` என்னும் உம்மையை, ``பிராணன்`` என்பதன்பின் கூட்டி, ``பரம்`` என்பதை அதற்கும் கூட்டுக. வியல் - பரப்பு. அஃது இங்குப் பெரிதாதலைக் குறித்தது. பரம் - பாரம்; சுமை.
பிராரத்த வினை உள்ள வரையில் உடம்பு நீங்காது ஆகையால் உடம்பு நிற்றற்பொருட்டுப் பிராணவாயு இயங்கியே நிற்கும். அஃது இயங்கி உடம்பும் நிற்கவே, உடலோம்புதற் பொருட்டுச் சிறிதளவாயினும் உணவு தேடுதல், வெயில் பனி மழை முதலியவற்றால் வாட்டமும், மகிழ்ச்சியும் கொள்ளுதல் முதலியன நிகழும் ஆதலின் அவை ஆகாமியமாகி விடுதல் பற்றி, ``பின் பிராணனும் பரம்`` என்றார். `ஆயினும் மேற்கூறியன நிகழுங்கால் அவற்றைத் தம் செயலாகக் கொள்ளாது சிவன், சத்தி இவர்களது செயலாக உணரின் அவை ஆகாமியமாய் முடியா ஆதலின் அவற்றை அங்ஙனம் உணர்தற்பொருட்டு, குருமூர்த்திகள் நாள்தோறும் வழி பாட்டில் அவற்றையும் நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்ளுதல் மரபு` என்றற்கு, ``உய்ய, உயல் ஆர் குருபரன் சிவன் சிற்சத்தி ஆதிக்கே கொண்டான்`` என்றார். ஆர் குருபரன் = ஆர்க்கின்ற - நிறைக்கின்ற குருபரன். `சிவகுரு` என்றற்கு, `குரு` என்று ஒழியாது, ``குருபரன்`` என்றார். சிவனும், சத்தியும் தொழில் செய்யாது வாளா இருக்குங்கால் `அனாதி` என்று சொல்லப்பட, ஐந்தொழில் செய்யுங் கால் `ஆதி` என்று சொல்லப்படுதல் பற்றி ``ஆதி`` என்பதன் பின், `ஆக` எந்பது வருவிக்க.
முன்னை மந்திரத்தில் சஞ்சிதத்தை ஒப்புவித்தல் கூறி, இம்மந்திரத்தில் ஆகாமியத்தை ஒப்புவித்தல் கூறினார்.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே`` *
எனவும்,
``இடை ஏறும்வினை - தோன்றில் அருளே சுடும்`` l
எனவும் கூறுதல் காண்க.
ஞானம் பெறுமாற்றினைத் தாம் பெற்றவாற்றில் வைத்து விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 3

பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன்
`நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதம்இது வாய்திற வாதே.

பொழிப்புரை :

தான் வடக்கு நோக்கி அமர்ந்திருந்து, என்னைக் கிழக்கு நோக்கிச் சிவனை தியானித்து இருக்கும்படி பணித்த என் ஞானாசிரியர், பின்பு, `சிவன் உன் சிந்தனைக்கு அகப்படவில்லை யாகையால் நீ என்னையே சிவனாகத் தியானம்செய்` என்று அருளிச்செய்தார். அவர் அங்ஙனம் அருளிச்செய்த அந்தத் தியானம் எனது உச்சிக்குக் கீழும், உள்நாக்கிற்கும் மேலும் ஆகிய புருவ நடுவில் நிகழ்வது. அவ்விடத்து நிகழ்வதாகிய அந்தத் தியானமானது சொல் நிகழ்ச்சியோடு கூடாது, மனத்தொழில் மாத்திரையாய் நிற்பதாகும்.

குறிப்புரை :

``பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியான்`` என்ற ஞானத்தை உணர்த்தும் முறை மரபினை எடுத்துக் கூறியவாறு, `வைச்ச இது பதம்` என மொழி மாற்றி யுரைக்க. இது பதம் - இந்த இடம். இஃது ஆகுபெயராய், இதன்கண் நிகழும் தியானத்தைக் குறித்தது. ``திறவாது`` என்பது, `திறக்கப் படாது` எனச் செயப்பாட்டு வினையாய் நின்றது. சொல் நிகழ்த்துதலை, `வாய் திறத்தல்` என்றது பான்மை வழக்கு.
மனத்தின் தொழில் சொல் நிகழ்ச்சியோடு கூடியும் நிகழும் ஆகலின் அவ்வாறு நிகழ்வது `தியானம்` எனப்படாது, - சொல் நிகழ்ச்சியின்றி நிகழ்வதே தியானமாம் - என்றற்கு ``வாய்திறாது`` என்றார். அசிந்திதனாகிய சிவனைச் சிந்திதனாகக் காண்பதற்கு உரிய குரு, லிங்கம், சங்கமம் என்னும் மூன்றனுள் குரு சிறந்து நிற்றல் இங்குப் பெறப்பட்டது.
இதனால், ஞானத்தைப் பெறு முறையும், பின் அதனை நிலை பெறுத்திக் கொள்ளும் முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

பொழிப்புரை :

`இவ்விடம், அவ்விடம்` என்பதில்லாமல் எங்கும் சென்று, எனது பிடிவாதக் கொள்கையையே வலிந்து கூறி வாயில் வந்தவற்றைப் பிதற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருந்த என்னைச் சிவகுரு எதிர்ப்பட்டு, எனது அகக்குற்றங்கள் எல்லாவற்றையும் ஒட்டடையை அடித்து நீக்குவது போல நீக்கி, அவைகளைத் தன் பக்கமாக எடுத்துக்கொண்டு, தன்னையும், என்னையும் ஒரு நிகராக வைத்துக் கொடுத்தும், கொண்டும் மாற்றிக்கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை முற்ற நீக்கினமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளாயினோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.

குறிப்புரை :

பெள்+டு=பெட்டு. `விரும்பப் பட்டது என்பது பொருள். அது விரும்பப்பட்ட கொள்கையைக் குறித்தது வலியுறுத்திப் பேசுதலை `அடித்தல்` என்பர். `அடித்து` என்றது `அடித்தது போன்று` எனப் பொருள்தந்தது. `ஒட்டு` என்னும் முதனிலைத் தொழிற்பெயர், அதனையுடைய பொருளைக் குறித்தது. வாங்குதல் - தனது ஆற்றலால் தன்னைக் கடந்து செல்லாது தன்பக்கமே நிறுத்துதல். மல மாயா கன்மங்கள் நீக்கப்படுமேயன்றி, அழிக்கப்படா ஆதலால், `வாங்கி` என்றார். தட்டு - துலைத்தட்டு. ஒதத்ல், நிறையால் ஒத்து நேர் நிற்றல். `மாறினன்` என்றொழியாது ``ஒக்க மாறினன்`` என்றது, ஒவ்வாததனை ஒக்கப்பண் மாறினன்` என்பது தோற்றுதற் பொருட்டு. மாறுதல் - விற்றல். ``தன்னை மாறி யிறுக்க உள்ள கடனஅகள்``l என்றாற் போல்வன காண்க. விற்றமை கூறவே, வாங்கினமை தானே பெறப்பட்டது. தன்னை விற்றமை, தன் தன்மையை சீவனிடத்துப் பதிவித்தமை. என்னை வாங்கினமை, சீவபோதத்தைத் தன்னிடத்து ஒடுக்கினமை - ``வாணிபம் வாய்த்து`` என்றதனால், `அது பொருந்தா வாணிபம்` என்பதும், `வட்டமதொத்தது`` என்றதனால், `அஃது அங்ஙனமாயினும் அதன்கண் உள்ள பொருந்தாமை நீங்கினமையால் அது தக்கதாயிற்று` என்பதும் போந்தன.
``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்`` 3
என்பதிலும், `சிவன் மேற்கொண்ட வாணிபம் பொருந்தா வாணிபம்` என்பது குறிக்கப்பட்டது. `வட்டம், வாசி` என்பன, தரக்குறைவை உணர்த்தும் ஒருபொருட் சொற்கள். `வட்டம தொத்தது`` என்றது `தரம் குறைவு நீங்கி நேரியதாயிற்று` என்றபடி. ``ஒத்தது`` என்பதன்பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், இறைவன் தானே குருவாய் நின்று உயிரைச் சீவத்தன்மை நீக்கித் தன்மையை எய்துவித்துத் தானாக்கிக் கொள்ளுதலாகிய ஞானச் செய்தி இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.

பொழிப்புரை :

உலகத்தார் உலக உணர்வைத் தருகின்ற நாதத்தின் புறப்போக்கினை நீக்கமாட்டாமையால் தன்னால் தாங்கப்படுகின்ற அனைத்துயிர்கட்கும் தலைவனாய் அவற்றின் உள்ளும் புறம்புமாய் உள்ள இறைவனது இருப்பையும், அவனது பெருந்தன்மையையும் சிறிதும் உணராது அல்லற்படுவர். யான் அவன் வந்து உண்மையை உணர்ந்தமையால் அந்த நாதத்தின் மாறுபாடாகிய புறநோக்கைப் போக்கி அவனது அருளையே கண்ணாகக் கொண்டு காணும் அக நோக்கினை எய்தினமையால் அவனது இருப்பையும், இயல்பையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.

குறிப்புரை :

`இஃதே ஞானமாவது` என்பதாம். ஞானத்தினது இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு அஞ்ஞானத்தினது இயல்பை யும் உடன் எடுத்து ஓதினார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள்.
விந்து - சுத்த மாயை. அதுவே நாதமாய் நின்று புறப்பொருள் உணர்வைத் தருதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்துப் பிணக்கு`` என்றார். அகநோக்கால் சிவனைச் சார்தலும், புறநோக்கால் அவனின் நீங்கி உலகைச் சார்தலும் உயிர்க்கு உளவாதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்து`` என்றார். `விந்துவால் விளையும் ஞானம் பாசஞானம் என்பதையும், `அந்த ஞானம் பதிஞானத்திற்குத் தடையாய் நிற்கும்` என்பதையும்,
``வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்தறங்கள் மேலாம்
நாதமுடி வானவெலாம் பாசஞானம்`` *
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியினான்றன் சேவடி சேர லாமே`` *
எனவும் ஓதியவாற்றான் அறிக. `கருக்கொள்ளுதல்` என்பது, உயிர்களைத் தனது வியாபகத்துள் அடக்கி நிற்றல், உயிர்களுக்கு உயிராய் அவற்றின் உள்நிற்றல் ஆகிய இரண்டினையும் குறித்து. `தலைவன்` என்பதன்பின் `தலைவனாய்` என ஆக்கச் சொல் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வாளா, `தலைவனாய் இருக்கின்ற தன்மையை` என்றார். `கண்டேன்`, என்னாது, ``கண்டு கொண்டேன்`` என்றது நன்குணர்ந்தமை பற்றி.
இதனால், `ஞானம் ஒன்றே அஞ்ஞானத்தை நீக்குவது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு
நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.

பொழிப்புரை :

சிவன் தன்னை அடையும் செவ்வி வாய்ந்த உயிரையும், அதனது உடல் பொருள்களையும் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளுதலையே குறிக்கோளாகக் கொண்டு, அவ்வுயிர் வாழும் இடத்தை நாடி அடைந்து, தனது திருவடிகளை அதனது திரு வடிகளை அதனது முடிமேற் சூட்டி, அதன்பின் வழங்கிய ஞானத்தின் துணையால் அவ்வுயிர் இழிவுடைய உடலில் முன்பு கொண்டிருந்த பற்றை அறவே விடுத்து, அச்சிவன் ஒருவனையே குறிக்களோகக் கொண்டு அவனை அடைந்து, தான் அவனேயாகிவிடும்.

குறிப்புரை :

``ஆவி`` என்பதை, ``கூடும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அருள் ஞானம்`` இறந்தகால வினைத்தொகை. `தனது ஞானம்` என்பது உணர்த்தற்கு. `ஞானம்` என்று ஒழியாது, ``ஞான சத்தி`` என்றார். பாடு - மேன்மை. அதனை, `பாடு பெறுதியோ நெஞ்ே\\\\u2970?`` l என்பத னானும் உணர்க. மேன்மையன்மை கீழ்மையை உணர்த்திற்று. `கூடிய` என்பதும், `குளிக்கொண்டு` என்பது பாடம் அல்ல.
இதனால், `ஞானம் பெற்றவரே வீடுபெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை
கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.

பொழிப்புரை :

சிவன், யான் அவனுக்கு அடிமையாதலை உண்மையாக உணரும்படி அவன் நேர் வந்து என்னை ஆட் கொண்டான். அதனால் என் ஆவி, உடல், பொருள் அனைத்தையும் தன்னுடையனவாக ஏன்று கொண்டான். அவையேயன்றி, யான் செய்யும் செயலால் விளையும் பயனையும் தன்னுடையனவாகக் கொண்டான். இங்ஙனம் அவைகளை அவன் கொண்டது புதிதாகாது முன்பே அவன் என்பால் கொடுத்து வைத்தவறஅறைத் திரும்பப் பெற்றுக்கொண்டதே யாகலின், `என்னுடையவைகளை அவன் கொண்டு போய்விட்டான்` என்று யான் எங்ஙனம் முறையிட முடியும்? முடியாது ஆகையால் யான் பேசாதிருந்துவிட்டேன்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளிலும் இரண்டாம் வேற்றுமை, தொடர்களின் இறுதிகளில் இறுதிகளில் தொக்கும். விரிந்தும் நின்றது. `அடியேன் குறிக்கொள்ள` என மாற்றி வைத்து உரைக்க.
இதனால், `ஞானமாவது, உள்ளதாய், முன்பு உணரப்படாது இருந்ததனை உணர்தலேயன்றிப் புதுவதாய் விளைகின்ற ஒன்றை உணர்தல் அன்றஉ` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில்
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

பொழிப்புரை :

வினைக்கீடாகக் குறிக்கப்பட்ட உடம்பும், அவ் வுடம்பைத் தன்னுடையதாகக் கொள்ளும் உயிரும் ஒன்று சேர்ந்தவுடன், பிராணவாயுவும் நெறிப்பட்டு இயங்கத் தொடங்கும். (அங்ஙனம் இயங்குதல் உயிர் அவ்வுடம்பில் நிலைத்திருத்தற்குத் துணையாகவேயாம்) ஆகவே, அந்தப் பிராணவாயுவின் இயக்கத்தால் அந்த உடம்பில் நிலைபெற்றிருக்கின்ற அந்த உயிரிட மிருந்து அந்த உடம்பு ஒருகாலத்தில் பறிக்கவேபடும். அதனால், உயிர் உடம்பின் வேறாயினும், அஃது அதனைப்பற்றி நிற்றற்குரிய காரணத்தை உணர்ந்து அவ்வுணர்வால், தம்மை உடம்பின் வேறாக உணராது, உடம்பாகவே மயங்கி உலக வாழ்வில் இச்சை கொண்டு அலைபவர் பேயோடு ஒப்பர்.

குறிப்புரை :

`இவாவுயிருக்கு இஞ்ஞான்று இவ்வுடம்பு உரியது` எனக்குறிப்பதும், இவ்வுடம்பில் பிராணவாயுவை இயங்கச் செய்த அதனால் அவ்வுயிரை அவ்வுடம்பில் சிலகாலம் நிலைப்பிப்பதும், பின்பு அவ்வுடம்பை அவ்வுயிரிடமிருந்து பறித்துவிடுவதும் எல்லாம் இறைவனது ஆணையேயாதலும், அந்த ஆணை அவ்வாறெல்லாம் செய்தற்குக் காரணம் உயிர்களின் வினையே ஆதலும் ஆகிய வற்றையே இங்கு ``நேர்மை`` என்றார். `நீர்மை` எனப்பாடம் கொள்ளுதலும் பொருந்தும்.
`பிராணன், நேர்மை` - என்பவற்றில், `ஆல்` உருபு விரித்துக் கொள்க. ``நேர்மையால்`` என்றது, `நேர்மையை உணருமாற்றால்` என்றபடி, பேய்க்கு வயிற்றுக்குத் தேடுதல் ஒன்றன்றிப் பிறிது குறிகோள் இல்லாமை பற்றி அத்தன்மையரைப் போயோடு ஒப்பிட்டார்.
இதனால், `ஞானம் பெறாதார் தம்மையும், தமக்கு உறுதியானவற்றையும் உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.

பொழிப்புரை :

குருவருளால் ஞானத்தை உணர்வாட்கு உலகத்தின் இயல்பும் தோன்றும். (உம்மையால், உலகத்தைச் செயற்படுத்தி நிற்கின்ற முதல்வனது இயல்பும் தோன்றும்) ஆகவே, உலகத்தைப் பற்றாது விடுத்து முதல்வனையே பற்றி நிற்பர் ஆகையால் அவர்கட்கு உலகத்தால் ழிளக்கப்படும் துன்பம் இல்லையாகும். (முதல்வனால் தரப்படும் இன்பமே விளயும்.) குருவருளால் ஞானம் பெற்றவர்கள் அதனை முதற்கண் கேள்வியளவாகவே உணர்ந்தாராயினும், பின்பு சிந்தித்துத் தெளிந்து கொள்வார்கள்.

குறிப்புரை :

எனவே, `கேட்டல் அடிப்படை` என்பதாம். உயிர்கள் ஞானத்தைப் பெறும் முறைமையை இவ்வதிகாரத்து முன் மந்திரத்திற்கு முன்மந்திரங்காறும் விரித்தருளிச் செய்தமையால் மீட்டும் அதனை எடுத்துக் கூறாராயினார்.
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், ஞானம் படிநிலையான் முற்றுமாறும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

காயப் பரத்தின் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத்
தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

பொழிப்புரை :

உடம்பாகிய சுமையைச் சுமந்து கொண்டே உலகெங்கும் திரிந்து, அவ்வுடம்பால் துரிய நிலையில் உணர்வு ஒடுங்கியும், சகல நிலையில் உணர்வு மிகவிரிந்தும் கருவிகள் முப்பத்தாறின் சேர்க்கையால் இவ்வாறெல்லாம் அலமந்து கிடந்த அடியேனுக்கு அக்கருவிகளில் ஒன்றோடும் படாது தூய்தாய் உள்ள திருவருளை வழங்கி அமைதியைக் கொடுத்தருளிய நந்தி பெருமானது கருணைக்கு நான் நன்று சொல்வது எவ்வாறு!

குறிப்புரை :

பரம் - சுமை. `இன்` ஒடுவின் பொருளில் வந்த `ஆள்` உருபின் மயக்கம். இனி இதனைச் சாரியையாக்கி `ஒடு` உருபு விரிக்கினும் ஆம். `துரியத்துக் குவிந்து` எனக் கூட்டுக. `சாக்கிரம்` என்னின் கேவல சாக்கிரமும் ஆம் ஆதலின் அதனை விலக்கிச் சகல சாக்கிரத்தைக் குறித்தற்கு, ``சகலத்தில்`` என்றார் துரியத்தை அங்ஙனம் கூறாது வாளா ``துரியம்`` என்றமையால் அது கேவல துரியமே யாயிற்று. மக்களுடம்பையே பெற்றபோதிலும் உணர்வு இவ்வா றெல்லாம் கணந்தோறும் மாறி மாறஇ நிகழ்தலால் உயிர்க்கு உளதாகும் அலமரலைக் குறித்தவாறு. இவ்வலமரலையே நாயனார் முதல் தந்திரத்தில் ``உயிர் நிலையாமை`` - என அருளிச் செய்தார்.
இதனால், அஞ்ஞானம் காரணமாக அலமரும் உயிர்கட்குக் குருவாகி வந்து ஞானத்தை அருளி அமைதியைத் தரும் சிவபெரு மானது பேரருட்கு அவ்வுயிர்கள் செய்யும் கைம்மாறு யாதும் இன்மை கூறப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 11

நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

குருவருளால் ஞானத்தைப் பெற்ற சகல வருக்கத் தினர் பின்பு சிவன் ஆகாயம் போல வியாபகனாய் விளங்குதலை உணர்ந்து அதனால் சுட்டறிவை விட்டு எங்கும் வியாபகமாய் அவனை உணருமாற்றால் தேன் சுவையை நுகர்தல் போல அவனது தூய இன்பத்தை நுகருங்கால் அந்தச் சிவன் இவர்கட்குக் காட்சிப் படுதல், `நான் இன்பத்தைத் தருகின்றாய்` என இவ்வாறு வேறு நின்று நுகருமாறு அவன் இவரின் வேறாய் நிற்றல் அன்று. மற்று, இவர் உடம்பு போலவும், அவன் அவ்வுடம்பினுள் உள்ள உயிர் போலவும் உடனாய் நிற்கவேயாம்.

குறிப்புரை :

``மனிதர்கள்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் சுட்டி, அது முதலாகத் தொடங்கி ``நண்ணுதல்`` என்பதன் முதற்கண் வைத்து உரைக்க. ``வானவர்`` என்றது சிவனை உயர்வுப் பன்மையாற் குறித்தவாறு. ``நின்று`` இரண்டில் பின்னது `நிற்றலால்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. முன்னது அப்பொருளில் வந்த செயவென் எச்சத் திரிபு. `நண்ணுதல், நின்று` இவற்றிற்கும் வினைமுதல் பின்னர் வந்த ``வானவர்`` என்பதே. `திளைக்கின்ற வாற்றில்` என ஏழாவது விரிக்க.
``ஊன்`` என்றது. `உடம்பு` எனப் பொதுப்படவே அருளிச் செய்தாராயினும் அஃது அறிவுக்கருவிகளாகிய, உடம்பின் புறத்தில் உள்ள ஞானேந்திரியங்களையும், அகத்தில் உள்ள அந்தக் கரணங்களையுமே சுட்டி நின்றது. இவ் அறிவுக் கருவிகள் அறியுந் தன்மை யுடையனவாயினும் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தாலன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவுடையன வாயினும் சிவன் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தா லன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவடையனவாயினும் சிவன் அவற்றோடு உடனாய் நின்று அறிந்தாலன்றி அவை அறியமாட்டா. இந்நிலை பெத்தத்தில் மட்டுமின்றி முத்தியிலும் ஆதலை, ``ஊன் என, (வானவர்) ஊன் உயிர் என்ன உடன் நின்று`` என்றார். குருவருளை நினைப்பித்தற்கு மனித உயிரையே குறித்தார்.
இதனால், ஞானத்தின் முடிநிலைப் பயனாகிய பரமுத்தியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை :

உயிர்க்கு உறுதியறியாமை பற்றி மெய்ந்நெறி யாளனால் `அவன்` என அயலவனாகக் குறிக்கப்படுபவனும், தன்போன்றாரால் அடையலாகாத மேல் நிலையை அடைந்தமை பற்றி உலகியலாளனால் `அவன்` என உயர்த்துக் கூறப்படும் மெய்ந்நெறி யாளனும் ஆகிய இருவருமே சிவனை அறிந்திலர், அஃது எவ்வா றெனில், சிவனை ஆன்மா உண்மையாகவே அறிவுமாயின் அதன் அறிவில், அறிபவனும், (உம்மையால் அறியும் அறிவும்) இல்லை யாகும். (மேற்கூறிய இருவர் அறிவிலும் அறிபவராகிய தம்மை அறியும் `யான்` என்னும், தமது அறிவை அறிகின்ற `எனது` என்னும் அறிவும் இருத்தலால் அவர் சிவனை அறிந்தாராதல் எங்ஙனம்?) அவ் விருவரும் `யான், எனது` என்பன முற்றும் அறும்படி சிவனை அறிந்தா ராயின் அவருள் ஒவ்வொருவனும் ஒவ்வொருகாரணம் பற்றி மற்ற வனை, `அவன்` என வேற்று நிலையில் வைத்து எண்ணும் நிலைநீங்கி, `இவன்` என ஒருநிலையில் வைத்து எண்ணும் நிலை உண்டாய்விடும்.

குறிப்புரை :

``அவனை`` என இரண்டன் உருபேற்று நின்றவை மூன்றும் பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்து நின்றன. ஏனையவை, `அவன்` என்று சுட்டப்படுபவன் எனப்பொருள் தந்தன. ``அவனும், அவனும்`` என இருவரைக் கூறி, `அவர் இருவரும் சிவனை அறியார்` என்றமையால் `அவர் இருவரும் வேறு வேறு நிலையினர்` என்பதும், `ஆயினும் அவர் அறியாராயினமைக்குக் காரணம் ஒன்றே என்பதும் போந்தன ஆதலின், `அவ்இருநிலை` இவை என்பதும், `ஒன்றாகிய காரணம் இது` என்பதும் ஆற்றலால் கொள்ளப்பட்டன.
`உலகியலான் சிவனை அறியான் - என்பது வெளிப்படை; ஆயினும் மெய்ந்நெறியாளன் சிவனை அறியானாதல் எவ்வாறு என வியக்கத் தோன்றும், அங்ஙனம் வியப்புத் தோன்றக் கூறியது சொல் நயமாகும். முத்தி நிலையிலும் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகள் உள; அவற்றுள் துரியம், துரியாதீதம் என்பவையே சிறந்தவை. அவற்றுள் துரியாதீதமே முடிநிலை. அதன்கண் அறிவானும், அவனது அறிவும் உணரப்படாமல் அறியப்படும். பொருள் ஒன்றே உணரப் படும். அவ்வாறன்றி, மூன்று பொருள்களும் உணரப்படுதல் துரிய நிலையேயாதல் பற்றி, அந்நிலையில் நின்றானையும் சிவனை யறியாதவனாகக் கூறினார். துரிய நிலை அருள் விளக்க நிலையும், துரியாதீதநிலை ஆனந்த விளக்கமும் ஆதல் அறிக. இம்மந்திரத்திலும் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால் ஞானத்தின் பயனாகிய முத்தியின் முடிநிலை இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நான்இது தான்என நின்றவன் நாடொறும்
ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன்
வான்இரு மாமழை போற்பொழி வான்உளன்
நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.

பொழிப்புரை :

உயிர் என்றும் உடம்பு போல இருக்க அதன்கண் உயிர்போல நின்று அறிகின்ற ஒருவன் இருக்கின்றான். அவன், `இவ்வுயிர் நானே` எனத் திருவுளம் செய்து, அவ்வுயிரின் உள்ளத்தில் தனது கருணையை வானத்தில் உள்ள கரிய, பெரிய மேகம் மழையைப் பொழிவது போலப் பொழிவான். `இவ்வுயிர் யான்` எனத் திருவுளம் செய்கின்ற அவன் குருவுமாய் வந்து அருள்பவனாவான்.

குறிப்புரை :

``தான்`` இரண்டில் முன்னுத தேற்றப் பொருளிலும், பின்னது எழுவாய்ப் பொருளிலும் வந்தன. ``இதுதான்`` என்றது, `இந்த உயிர்தான்` என்றபடி. ``ஊன்`` என்பதன்பன் `ஆக` என்பது தொகுத்தலாயிற்று.
`இதுதான் ஊன் ஆக, உயிர்போல் உணர்வான் உளன்; அவன், - இது நான்தான் - என நின்று, உளன், வான் இருமாமழை போல் பொழிவான்` - எனக் கூட்டியுரைக்க.
உளன் - உளம்; போலி. `உளனில் பொழிவான்` என்க. ஈற்றடியில், ``நான் இதுவாம்`` என்றது, முதல் அடியில் கூறியதனை மீட்டும் அனுவதித்ததாம். ``நாதன்`` என்பது குருவை உணர்த்துவதொரு பெயர்.
``இது நானே`` - என்றது ``சிவோதயம் அஸ்தி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருளைக் கூறியவாறு, ஆசிரியன் மாணவனது உயிரை இவ்வாறு பாவிக்கும் பாவனையால் அவனைச் சிவமாகச் செய்வன் என்க. `குரு சிவனே` என்றற்கு, ``நான் இது வாம் பரன் நாதனும் ஆமே`` என்றார்.
இதனால் ஆசாரியனால் சீவன் சிவன் ஆதலாகிய ஞானச் செய்தி மரபு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய்
இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

பொழிப்புரை :

உண்மையை உண்மையாக உணர்ந்து உயிர்கள் செம்மை எய்தும் வண்ணம் செய்கின்ற சிவன், `தீர உயர்ந்த பெருந் தன்மையை உடைய தான் அங்கே` எனவும், `தீர இழிந்த சிறு தன்மையை உடையயான் இங்கே` எனவும் இவ்வாறு வேறு வேறாய் முன்பு இருந்ததும் இல்லை. (உம்மையால், இனி இருக்கப் போவதும் இல்லை) மற்று, உடலில் உயிர் வேறறக் கலந்திருப்பது போல அவன் என்றும் என்னுள் ஒன்றாய்க் கலந்தேயிருக்கின்றான்; ஆயினும் அவன் அறிவான்; யான் அறிந்திலேன்.

குறிப்புரை :

`இது பொழுது அவன் அருளால் யானும் அதனை அறிந்தேன்` என்பது குறிப்பெச்சம். `இவ்வாறு அறிந்த இதுவே ஞானம்` என்றபடி.
இதனால், படலத்தால் மறைக்கப்பட்டிருந்த கண்ணை யுடையவன் அப்படலம் நீங்கியவுடன் முன் தான் காணாதிருந்த பொருள்களைக் காண்பது போன்றதே ஞானத்தைப் பெறுதல்` என்பதும், அங்ஙனம் கண்பெற்றவன் தன்முன் உள்ள பொருள்களைக் கண்டு மகிழ்தல் போன்றதே முத்திநிலையை எய்துதல்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

இருபத மாவ திரவும் பகலும்
உருவது வாவ துயிரும் உடலும்
அருளது வாவ தறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

பொழிப்புரை :

`நாள்` என்பது, `இரவு, பகல்` என்னும் இரு நிலைகளை உடையது. `பிறப்பு` என்பது, `உயிர், உடல்` என்னும் இரண்டின் கூட்டம். அவைபோலச் சிவனது திருவருட்பேறாவது, துறவும், நோன்பும் ஆகிய இரண்டின் நிகழ்ச்சியாகும். இனி அந் நிகழ்ச்சிக்குப் பயனாவது உயிர்க்குயிராய் உள்ள அந்த இன்பத்தை அறிந்து நுகர்தலேயாம்.

குறிப்புரை :

``இருபதமாவது`` என்னும் பயனிலைக்கு `நள், என்னும் எழுவாய் தோன்றாது நின்றது. ``இரவும் பகலும்`` என்பதனைப் பயனிலையாக்கின் `இருபதமாவன` என்பது பாடமாதல் வேண்டும். ``ஆவது`` என்பது முன், பின் இரண்டிடத்தும் இயையாது.
``அது`` நான்கும் பகுதிப் பொருள் விகுதிகள். காட்சிப் பொருளாதல் பற்றிப் பிறப்பை ``உரு`` என்றார். முதல் இரண்டு அடிகளும் எடுத்துக் காட்டுவமையாய் நின்றன.
அருட்கு அடையாளமாவதனை, `அருள்` என்று உபசரித்தார். துறவறமே சிறப்புடை அறமாதல் பற்றி ``அந்தணர் என்போர் அறவோர்``l எனத் துறவறத்தோரே ``அறவோர்`` எனப்பட்டாற் போலத் துறவறத்தையே நாயனார் இங்கு `அறம்` என்றார். அஃதாவது, `உயிர்ச் சார்பு, பொருட் சார்பு` என்பவற்றுள் யாதொன்றின் மேலும் பற்றுச் செய்யாமை. தவமாவன சரியை கிரியா யோகம் இவை பலவும் நிகழ் தலை `நிகழ்ச்சி` என ஒன்றாய் அடக்கி, ``அருளதுவாவது`` என்றார். பயன் ``பொருள்`` எனப்பட்டது. `சத்திநிபாதம் வரப்பெற்றோரது நிலை இவ்வாறாம்` என்பது கூறமுகத்தானே அது பெற்றோரும், பெறாதோரும் தம் தம் நிலையை உணர்ந்து மகிழ்ச்சியும் வருத்தமும் கொண்டு. மேல் செய்யத்தக்கதின் முயலுமாறு கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 2

காண்டற் கரியன் கருத்திலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாய்த் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தங் கிருளறு மாமே.

பொழிப்புரை :

(சிவனை உயிர்கள் அனாதியில் ஒராற்றானும் உணர்தல் இல்லை.) பின்பு உலகியல் உணர்வானே ஏனைப் பொருள்களைக் காண்டல், கருதல், தீண்டல், பற்றுதல் இவற்றைச் செய்தல் செய்து பெறுதல் போல அவனை அவ்வுயிர் பெற முயன்றால், அவனும் அவ்வகையினால் எல்லாம் அவற்றால் எய்துதற்கு அறி யனாய், அவற்றிற்கு மிகத் தொலைவில் உள்ளவனாகியே நிற்பான். பின்பு ஒரு காலத்தில் அவனே விருப்பத்தை உடையவனாகிப் புறத்தே விளங்கும் இல்லக விளக்குப்போலும் 3 தன்மையுடன் அகத்தில் தானே நல்லக விளக்காய் நீங்காது நிற்றலால், அவ்விடத்துள்ள அறியாமையாகிய இருள் அற்றொழியா நின்றது.

குறிப்புரை :

என இதனையும், இனி வருகின்ற மந்திரங்களையும் திருவருள் வாய்க்கப் பெற்றார் அதனை உணர்ந்து மகிழ்ந்தெடுத்துக் கூறுவனவாக வைத்துரைக்க.
``நந்தியும்`` என்னும் உம்மை இறந்தது தழுவி நிற்றலால், அதனால் தழுவப்பட்ட பொருள் வருவிக்கப்பட்டது. `விளக்கொளி` என்றது அதுபோலும் தன்மையை. ஆன் உருபு `கைப்பொருளொடு வந்தான்` என்பதில் உள்ளது போலும் ஒடு உருபின் பொருளில் வந்தது. `நெஞ்சத்துக்கண்` என ஏழாவது விரிக்க. ஈண்டுதல் - செறிதல். அது நீங்காது நிற்றலைக் குறித்தது. ``கிடந்து`` இரண்டில் பின்னது, `கிடத்தலால்` எனப்பொருள் தந்து நின்றது. ஆம். ஏ அசைகள்,
இதனால், சிவன் அனாதியில் உயிர்கள் பக்குவமின்றி நிற்றலால் அரியனாயினும் பக்குவம் எய்தி காலத்தில் எளியனாய் விளங்கும் அவனது அருள் நிலை போற்றியுரைக்கப்பட்டது. `அவ்வருட் பதிவானே முன்னை மந்திரத்துக் கூறிய அறமும், தவமும் தாமே நிகழும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு நிற்கும் நல்லக விளக்கை நோக்கும் நோக்கத்தால் முதற்கண் `யான்` என்றும், `எனது` என்றும் உயிர்மயங்குமாறு அதனோடு ஒற்றுமைப் பட்டு நின்ற உலகம், உண்மையில் அன்னவாகாது அதனின் வேறாய் அதன் அறிவினுள்ளே தோன்றும் அதன்பின் எல்லாவற்றிற்கும் தன்னையும், பிறரையுமே முதல்வராகக் கருதும் சீவபோதத்திற்குக் காரணமான மல இருள் நீங்க, `எல்லாம் அவனே` என்னும் சிவபோதம் நிலைத்து நிற்கும். அச்சிவபோதத்தின் வழிச் சிவனையே நாடுதல் ஒழிந்து மீட்டும் தனது அறிவாற்றலைப் பற்றாக நாடின், பெத்தான்மாக்களை அவர்களது அறிவிச்சை செயல்களைச் செயற்படுத்தி ஆள்கின்ற காரணக் கடவுளராம் நிலை எய்துவதாகும்.

குறிப்புரை :

`அந்நிலை எய்தும்படி சிந்தையை நாடச் செய்வது மலத்தின் வாசனை` என்பது கருத்து, எனவே, அவ்வாசனையும் நீங்கின் சிவானந்தானுபூதி உண்டாதல் பெறப்படும். `சிவானந்தானு பூதி நிலையே பரமுத்தி` எனவும், காரணக் கடவுளராய் நிற்றல் இலய போக அதிகார முத்திகள் எனவும் உணர்க.
குறிப்பு: நோக்கு, அஃது அதிகார இயைபால் அகவிளக்கை நோக்கும் நோக்கின்மேல் நின்றது, ``குறிப்பினின்`` எனச் சிறுபான்மை `இன்` என் உருபு இன் சாரியை பெற்றது. வெறுப்பு இருளாவது உண்மைத் தலைவனை விரும்பாது விடுத்துத் தம் கள்ளத் தலைமையையே விரும்புதற்குக் காரணமாகிய அறியாமை. விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன்; இறைவன். விகிர்தனது போதத்தை ``விகிர்தன்`` என உபசரித்தார். உம்மை, உயர்வு சிறப்பு. செறிப்புறு சிந்தை - சார்ந்த பொருள்தோறும் அது அதுவாய் அழுந்தி நிற்கின்ற ஆன்ம அறிவு. சிக்கென - உறுதியாக. `அறிவிப்பு` என்பது இடைக் குறைந்து ``அறிப்பு`` என நின்றது. அறிவித்தலையே கூறினாராயினும் இனம் பற்றி இச் சிறப்பித்தலும், செய்வித்தலும் கொள்ளப்படும். காரணக் கடவுள ராவார்க்கு அவர் செய்த புண்ணியத்தானே ஆன்மாக்களது அறி விச்சை செயல்ளைச் செயற்படுத்தும் ஆற்றலைச் சிவன் அளித் தருள்வன் என்க. பரமுத்தியை விரும்புவோர் இதனை விரும்பாமையை,
``ஐந்தொழிலும் காரணர்க ளாத்தொழிலும் போகம்நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக`` *
என்பதனான் அறிக.
இதனால் திருவருட் பேற்றினை முற்றப் பெறவே மேலோருள் மேலோர் விரும்புதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி யான்எங்கள் பிஞ்ஞகன் எம்மிறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாம்எனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவன் எம்மை விட்டு ஒரு போதும் நீங்கியதில்லை. அதனை அனுபவமாக உணர்ந்த அனுபூதி மான்களது அறிவுரையை `இதுவே மநக்குத்துணையாவது` என்று பற்றி உணரவல்லவன் எவனோ அவனே பொரும்பொருள் தன்மையைத் தான் பெற வல்லவனாவன். அதனை முன்பே உணர்ந்து ஒழுகாமையால் பல காலங்கள் வீணாகவே கழிந்தன.

குறிப்புரை :

`என்றாலும் இப்பொழுதாயினும் அவ்வாறு உணர்ந்து ஒழுகத் திருவருள் கிடைத்தது தவப் பயன்` என்பது குறிப்பெச்சம்.
பிஞ்ஞகம் - தலைக்கோலம். பிறை, பாம்பு, கங்கை, கொன்றை மாலை முதலிய பலவகைப்பட்ட தலைக்கோலமும், சடை முடியும் சிவபிரானுக் கல்லது பிறர்க்கு இன்மையால் சிவபிரான் `பிஞ்ஞகன்` எனப்படுகின்றான். அவனே இறைவனாதலைக் குறித்தற்கு, ``பிஞ்ஞகன் எம்மிறை`` என்றார். முதல் அடியை ஈற்றில் வைத்துரைக்க.
இதனால், `சிவனை அவனது அருளைத் துணையாகப் பற்றியே அறிய இயலும்` என்பதும், `அதனை அவ்வாறு அவனை அடைந்தோரது அருளுரையே உணர்த்தும்` என்பதும், `அவ்வருளுரையைத் தெளிதற்கும் சிவனது அருள் வேண்டும்` என்பதும் கூறப்பட்டன. அடைந்தோரது அருளுரைகள் அங்ஙனம் உண்ர்த்துதலை,
``அவன் அருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வணத்தன்
இவன் இறைவன் என்றெழுத்திக் காட்டொணாதே`` *
என்பது முதலியவற்றான் உணர்க.

பண் :

பாடல் எண் : 5

தானே அழியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல்
ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே அனையன்நம் தேவர் பிரானே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியபடி ஆர்ந்தறிந்தார் அறிவை துணையாகச் சார்ந்தறிந்தமையால் உள்ளமேயன்றி உடம்பும் உருகுமாறு ஞானமே வடிவாய் நிற்கும். சிவமுதற்பொருளை உணர்ந்த பின் அம் முதல்வன் தேன்போல இனியனாய்த் தெவிட்டாது நின்றான். இந் நிலையில் சஞ்சித வினைகள் கெட்டொழிதலன்றி அவற்றிற்கு வேறு வழியில்லை. அங்ஙனம் அவை கெட்ட பின்பு யான் அவற்றை நுகர் வோனாதலும், சிவன் அவற்றை எனக்குக் கூட்டி நுகர்விப்போ னாதலும் ஆகிய நிலைமைகள் எங்ஙனம் உளவாகும்! உளவதால் இல்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி யுரைக்க. தம்மியல் பால் தாம் அழியற்பாலனவாதல் பற்றி, ``தானே அழியும்`` என்றார். எனினும், `அவை பயனிலவாயினமை பற்றி முதல்வன் அழித் தொழிப்பன்` என்பதே கருத்து. `பக்குவம் எய்திய உயிரை அவைகளால் முன்னர்ச் செய்யப்பட்டுக் குவிந்து கிடந்த சஞ்சித வினைகள் சென்று பற்றமாட்டா` என்பதைத் திருவள்ளுவரும்,
``சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்`` *
என அருளிச் செய்தார். உணர்வுடையதனை, உணர்வு என்றே உபசரித்தார். அது தேவர் பிரானேயாயினும், `மெய்ப்பொருளது `இயல்பு அது` என்றற்கு வேறு போலக் கூறினார்.
``தானே`` என்றது பன்மை யொருமை மயக்கம். பக்குவம் வந்த உயிர்களது சஞ்சித வினைகள் வாளா அழிக்கப்படுதல், துறவு பூண்டோர் சந்ததியும் இலராயின் அவர், முன்பு எழுதித் தந்த கடன் பத்திரம் அழிக்கப்படுதல் போல்வது என்க.
``யானேதும் பிறப்பஞ்சேன்; இறப்பதனுக் கென்கடவேன்!`` *
என்றதும் இந்நிலையில் நின்றேயாம்.
``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை, எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்``l
என்றது காண்க.
``நானே`` என்னும் ஏகாரம், `இன்றியமையாது அறியற் பாலன் யானே; பிறரல்லர்` என்பது உணர்த்தி நின்றது. `அங்ஙனமாக, நந்தி அரியுங்கொல்` என்க. ``கொல்``, இங்கு எதிர் மறைப் பொருட்டாய் நின்றது. ஊட்டுவித்தலும், உண்டலும் அறிந்தன்றி யாகாமையின் அவற்றை அறிதலின் மேல்வைத்துக் கூறினார்.
இதனால், திருவருட் பேற்றால் இன்பமாகிய பயன் விளைந்தபின் மீட்டும் துன்பம் இன்றாதல் கூறப்பட்டது. அதனால், இவ்வின்பம் நிலையான இன்பமாதல் விளங்கிற்று.

பண் :

பாடல் எண் : 6

நானறிந் தன்றே யிருக்கின்ற தீசனை
வானறிந் தார்அறி யாது மயங்கினர்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறி யான்பின்னை யார்அறி வாரே

பொழிப்புரை :

என்னுள் இருக்கின்ற இறைவனை அறிய வேண்டி யவன் யானே யன்றோ! (அந்நிலை இன்று யான் கைவரப் பெற்றேன்.) வானுலகம் ஒன்றையே அறிந்து நிற்கும் வானவர் அந்த அறிவால் தம்முள் இருக்கும் இறைவனை அறியாது மயங்குவாராயினர். ஒவ்வொருவனும் தனது உடம்பின் இயல்பையும், அந்த உடம்பினுள் உள்ள உயிரையும், அந்த உயிருக்குள் உயிராய் நின்று அதற்கு அறிவைத் தருகின்ற உள்ளொளியாகிய இறைவனையும் அறிந்து அவ்வாற்றால் பயன்பெற வேண்டியவன் அவனேயாய் இருக்க அவனவனும் அதனைச் செய்யாது கிடப்பானாயின் அவனுக்காக மேற்கூறியவைகளை யார் அறிவார்!

குறிப்புரை :

`திருவருட் பேறில்லாமையால் அவரெல்லாம் அங்ஙனம் மயங்கிக் கிடப்பர்` என்பது கருத்து.
`ஈசனை அறிந்து இருக்கின்ற நானன்றே` என மாற்றியுரைக்க. இருக்கின்றது - `இருக்க வேண்டுவது` இது தொழிற்பெயராய், அத்தொழிலுடையதனை உணர்த்திற்று. ஊன் - உடம்பு; ஆகுபெயர். அதனைக் கூறவே, அதனுள் நின்ற உயிரும் கொள்ளப்பட்டது.
இதனால், திருவருட் பெறில்லாதாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

அருள்எங்கு மான அளவை அறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருள்ஐங் கருமத் ததிசூக்க முன்னார்
அருள்எங்கும் கண்ணான தார்அறி வாரே.

பொழிப்புரை :

திருவருளின் பெருவியாபகம், அஃது அதனைப் பெற்றார்க்குப் பேரின்பம் விளைத்தல், காரணக் கடவுளது தொழில்கள் எல்லாவற்றிற்கும் அதுவே முதலாதல், அனைத்தையும் அது முற்றுற அறிதல் ஆகியவற்றை எல்லாம் அதனைப் பெற்றோர் அறிதலன்றிப் பெறாதார் சிறிதும் அறியமாட்டார்.

குறிப்புரை :

`பெற்றார், பெறாதார்` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தின. `இவ்வுண்மையை யாமும் இப்பொழுதுதான் அறிந்தோம்` என்பது குறிப்பு. `நுகர` என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. அமுதானத்திற்கு, `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. அடிநிலையை, ``அதிசூக்கம்`` என்றார்.
இதனால், திருருட் பேற்றின் பின் அதனது இயல்பு விளங்குமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

அறிவில் அணுக அறிவது நல்கிப்
பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்(டு)
அறிவது வாக்கி அடியருள் நல்கும்
செறிவோடு நின்றார் சிவமாயி னாரே.

பொழிப்புரை :

உயிர் அறிவுடையதாயினும் அவ்வறிவு ஆணவத்தால் தடுக்கப்பட்டமையின் அத்தடையை நீக்கி அஃது அறிவை அடையும்படி தொடுத்துப் பின்பு அவ்வறிவு பொறிகளின் வழிச் சென்று புலன்களை விரும்பிப் பாச அறிவாகும்படி செய்து, அவ்விடத்து அவ்வறிவு தான் விரும்பும் புலன்களை நுகர்தற்கு உடனாய் நின்று, பின்பு பாச அறிவாய் நின்ற அதனைப் பதியறிவாகச் செய்து, அவ்வாற்றால் பதிநிலையை எய்திய அடியார் குழாத்துள் இருக்க அருளுவதாகிய திருவருளை எய்தி அதுவே பற்றாக நின்றவரே சிவமாம் தன்மைப் பெருவாழ்வை எய்தினார்.

குறிப்புரை :

`பிறரெல்லாம் யாதும் இல்லா ஏழையராய் அலமரு கின்றார்` என்றபடி. `திருவருளே கேவல நிலையிற் கிடந்த ஆன் மாக் களைச் சகல நிலையிற் கொணர்ந்து, பின்பு சுத்த நிலையில் சேர்ப்பது` என அதனது உதவியை வகுத்தருளிச் செய்துமுகந்தான் அதனை உணரும் உணர்விலார் பயன் பெறாராதலை வலியுறுத்தியவாறு.
`அறிவில் அறிவு நணுக நல்கி` என்க. இரண்டிடத்திலும், ``அறிவது`` என்னும் அது, பகுதிப் பொருள் விகுதி. செறிவு - எப்பொருளிலும் நிறைதல். அஃது ஆகுபெயராய் அதனையுடைய திருவருளைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 9

அருளின் பிறந்திட்(டு) அருளின் வளர்ந்திட்(டு)
அருளின் அழிந்(து)இளைப் பாறி மறைந்திட்(டு)
அருளான அவ்வந்தத்(து) ஆரமு தூட்டி
அருளால் என்நந்தி அகம்புகுந் தானே.

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்
டருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளால்என் நந்தி அகம்புகுந் தானே

பொழிப்புரை :

யான் எம்பெருமானது திருவருளாற்றான் பிறந்தேன்; வளர்ந்தேன்; இறந்தேன். உலகம் ஒடுங்கிக் கிடந்த பொழுது யான் ஓய்வாக இருந்தேன்; மீட்டும் உலகம் தோன்றிய பொழுதும் பிறந்து வாழவே விரும்பினேன். இவ்வாறு முடிவின்றிச் சுழன்று வந்த யான் அவனது அருளே வடிவாகி நின்ற அந்த இறுதிக்காலத்தில் அப்பெருமான் எனக்கு எல்லையில் இன்பத்தை வழங்கி என் உள்ளத்தில் நீங்காது நின்றான் எல்லாம் அவனது அருளாலேதான் நிகழ்ந்தன.

குறிப்புரை :

`எல்லா உயிர்கட்கும் இவ்வாறுதான்; ஆயினும் அவ்வுயிர்கள் இவற்றை `என்னைப்போல முடிவில்தான் உணரும்` என்பது கருத்து. ``அருள்`` என யாண்டும் பொதுப்படவே ஓதினா ராயினும், `முதற்றொட்டு` ``மறைந்திட்டு`` என்பது காறும் கூறிய அருள் திருகுநிலை அருள் எனவும், `ஏனைய நேர்நிலை அருள் அறக் கருணை. முன்னது `திரோதான சத்தி` எனப்பட, பின்னதே `அருட் சத்தி` எனப்படும். `அருளின்` என்பதைப் பிறவற்றிற்கும் கூட்டுக.
`அருளான ஆனந்தத்து` என்பது பாடம் அன்று.
இதன் பின்னர்ப் பதிப்புக்களில் காணப்படும். ``அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி`` என்னும் பாடல் இடைச்செருகல்.

பண் :

பாடல் எண் : 10

பாசத்தில் இட்ட(து) அருள் அந்தப் பாசத்தில்
நேசத்தை விட்ட(து) அருள் அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே.

பொழிப்புரை :

என்னை எனது இயற்கைப் பாசம் தனது சத்தி கெடுதற்பொருட்டுச் செயற்கைப் பாகத்தில் இட்டுத் துன்புறுத்தியதும் திருவருளே (இது திரோதனகரியாய் நின்ற நிலை) இயற்பாசம் சத்தி கெட்ட பின்னர் யான் அச்செயற் கைப்பாசங்களையே மேலும், மேலும் விரும்பிய விருப்பத்தை விடச்செய்ததும் திருவருளே. பாசத் தொடர்பினால் மெய்ப்பொருளை அணுகக் கூசிய கூச்சம் நீங்கி அம் மெய்ப்பொருளை அடைந்து, அதனானே துன்பக் கடலினின்றும் கரை யேற்றுவித்ததும் திருவருளே, துன்பக் கடலினின்றும் கரையேறிய பொழுது விளைந்த எல்லையில்லாத இன்பத்தில் அவ்வின்பம் ஒன்றுமே தோன்றத்தான் தோன்றாது மறைந்ததும் திருவருளே.

குறிப்புரை :

`அதற்கு யான் செய்யும் கைம்மாறு யாதுளது` என்பது குறிப்பெச்சம். அதனைப் புலப்படுத்தற்கே மேற்போந்தவற்றை மீள அனுவதித்தார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். `விடுவித்தது` என்பதில் விவ்விகுதி தொகுத்தலாயிற்று. கூச, முதனிலைத் தொழிற் பெயர். ``முத்தி`` என்பதன்பின், `கூட்டுவித்தது` என்பது சொல் லெச்சமாய் எஞ்சிநின்றது. நேசம் - அன்பு. அன்பினால் விளை வதாகிய இன்பத்தை `அன்பு` என உபசரித்துக் கூறினார். `நேசத்துக் கண்` என ஏழாவது விரிக்க. இன்பத்திற் சேர்த்தது அருளேயாயினும் அது புலப்படினும் அனுபவம் நிகழாமைபற்றி அது தோன்றாது மறைந்து நின்றது என்க. அருள்நிலை துரியமேயாக, ஆனந்த நிலை துரியாதீதம் ஆதல் அறிக.
இதனால், திருவருள் பெற்றார் அத்திருவருளின் நன்றியை உணருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் l அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்.

குறிப்புரை :

`எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. ``நந்தி``, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.
``மாதவன்`` என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.
``இறைவனாவான் அறவாழி அந்தணன்`` 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் - மேலே உள்ளவன்; அபரன் - கீழே உள்ளவன்.
இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயஹ்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.

பண் :

பாடல் எண் : 12

அகம்புகுந் தான்அடி யேற்கரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அரு ளில்லோர்க்(கு)
அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தால்நந்தி ஆனந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன் உயிர்களது அறிவினுள்ளே அருளை நிறைவித்து, அதனால் இன்பத்தைப் பெருக்கி விளக்கமுற்று நின்றால் இன்பப் பொருளாய் அனுபவப்படுவான். அதனால் அடியேனுக்கு அவன் அங்ஙனம் அருளை வழங்கினமையால் கருவிகளின் வழியாக அன்றி, நேரே தலைப்பட்டுணரும் பொருளாயினான். ஆகவே, அருள் வழங்கப் பெறாதாரது அறிவினுள்ளும் இருப்பினும் அவர்கட்கு அவன் அங்ஙனம் உணரும் பொருளாதல் இல்லை.

குறிப்புரை :

`அருளில்லார்க்குத் தெரியான்` என்றமையால், `அருள் பெற்ற எனக்குத் தெரிந்தான்` என்பது பெறப்பட்டது. அதனால் முதற்கண் ``புகுந்தான்`` என்றதற்கு, `புகுந்து தெரிந்தான்` என்பது பொருளாயிற்று.
`நந்தி அகம்புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாய் அகம்புகுந்தால் ஆனந்தியாம்; அதனால் அடியேற்கு அருளால் அகம்புகுந்து அருளில்லோர்க்கு அகம்புகுந்தும் தெரியான்` எனக் கொண்டு கூட்டி யுரைக்க.
`சிவம்` என்பதற்குப் பல பொருள் உண்டு, இங்கு அது `தூய தன்மை` என்னும் பொருட்டாய், `மறையாது விளங்கி நிற்பது` எனப் பொருள் தந்தது. எல்லா உயிர்களிலும் சிவன் கலந்திருப்பினும் உலகரது அறிவில் அவரவர் துணியும் பொருளாயும், சரியை முதலிய மூன்றில் நின்றார்க்கு உருவம், அருவுருவம், அருவம் என்னும் திரு மேனியனாயும், ஞானத்தில் கேள்வி முதலிய மூன்றில் நின்றார்க்கு ஆசிரியர் அறிவுறுத்த சொற்பொருள் அளவாயும் விளங்கி, நிட்டையில் நின்றார்க்கே தான் உண்மையாய் விளங்குவன். உண்மையாய் விளங்கும்பொழுதே இன்பமாய் விளைவான். அதனையே, ``நந்தி, அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கிச் சிவமாய் அகம் புந்தால் ஆனந்தியாம்`` என்றார். ஆகவே முன்னர் அகம்புகுதல் தொடக்கமும், பின்னர் அகம் புகுதல் முடிவும் ஆயின. புகுதல் புது வதன்றாயினும் விளங்குதல் புதிதாதல் பற்றி. ``புகுந்து`` எனவும், ``புகுந்தால்`` எனவும் கூறினார், ஆனந்தி - இன்ப வடிவினன். `முன்னை நிலை பெத்தம்` எனவும் `பின்னை நிலை முத்தி` எனவும் உணர்க.
இதனால், திருவருட் பேற்றின் முடிநிலை இயல்பு விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆயும் அறிவோ டறியாத மாமாயை
ஆய கரணம் அடைக்கும்ஐம் பூதங்கள்
ஆய பலஇந் திரிய மவற்றுடன்
ஆய அனைத்துமாம் அவ்வரும் செய்கையே.

பொழிப்புரை :

`பெத்த நிலையில் உள்ள உயிர்களிடத்தும் திரு வருள் உளதாயினும் அது நேர்நிலை யன்று` என மேற்கூறிய இயை பானே, அஃது அத்திருகல் நிலையில் நின்று செய்வனவற்றை இங்கு நின்றும் விரிக்கின்றார்.
மாயா காரியங்களைக் கருவியாகக் கொண்டு ஆராய்ந்து அறிந்து வரும் அறிவும், அக்கருவிகளும், அக்கருவிகளின் வழிப் புலன்களை ஆன்ம அறிவை அடையச் செய்கின்ற ஐந்து பூதங்களும் அப்புலன்களை நேராகவும், பிறவற்றின் வழியாகவும் கவர்கின்ற புற, அகப் பொறிகளும் ஆகிய அனைத்தும் திருவருளின் செயலால் ஆவனவேயாம்.

குறிப்புரை :

``ஆயும் அறிவு`` என்றே ஓதினாராயினும் `அறிவு ஆராயும் ஆராய்ச்சியும்` என்பதே கருத்து. `கருவிகள் தலைக்கூடிய வழியும் திருவருள் இன்றி ஆன்ம அறிவு தனித்து நின்று ஒன்றையும் அறியமாட்டாது` என்பதனைச் சிவஞானபோத ஐந்தாம் சூத்திரத்தால் அறிக. `கருவிகள் சடம்` என்றற்கு அதனை அவற்றது முதல்மேல் வைத்து ``அறியாத மாமாயை`` என்றார். இதனுள் `மா` என்னும் அடை பிறிதின் இயைபு நீங்காது பொதுவில் இயைபின்மை மாத்திரை நீக்கி, மாயையின் வியாபகத்தை உணர்த்தி நின்றது. ஞானேந்திரிய விடயங்கள் பூதங்களின் குணமும், கன்மேந்திரிய விடயங்கள் அவற்றின் செயலும் ஆதல் பற்றி ``அடைக்குகம் ஐம்பூதங்கள்`` என்றும் கூறினார். `அனைத்தும் அவ்வருட் செய்கையே ஆம்` என மாற்றியுரைக்க. அவ்வருள் - மேற்கூறிய திருவருள்.
இதனால், திருவருள் திரோதனகரியாய் நின்றே அனைத்துலகையும் ஆக்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அருளே சகலமும் ஆய பௌதிகம்
அருளே சராசரம் ஆய மலமே
இருளே வெளியே எனும்எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றிஇன் றாமே.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் சகல நிலையை எய்துதற்குக் காரண மான பூதகாரியமாகிய சடப்பொருள்களும், சரமும் அசரமுமாய் உள்ள உயிர் வகைகளும் ஆகிய எல்லாம் திருவருளாலே ஆவனதாம். சிவனும் உயிர்களின் பொருட்டுத் திருமேனி கொள்ளுங்கால் திருவருளால் தான் அவற்றை உடையவன் ஆவான். இன்னும் அவன் ஆன்மாக்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்குதலும், பின்பு அதனை நீக்கி மெய்யுணர்வைத் தருதலும் திருவருளாலேதான். ஆகவே, திருவருள் இல்லையேல் ஒன்றும் இல்லையாம்.

குறிப்புரை :

`அங்ஙனம் ஆனபொழுது சிவனை வழிபட்டுப் பயன் பெறுதல் என்பது திருவருள் இன்றி எங்ஙனம் இயலும்` என்பது குறிப்பெச்சம். இக்குறிப்புப் பொருளை உணர்த்துதற் பொருட்டே இம்மந்திரத்திற் போந்த அனைத்தையும் அனுவதித்துக் கூறினார்.
இருள் - அஞ்ஞானம்; அதன் காரணம் மலம். வெளி - ஒளி; மெய்ஞ் ஞானம். `ஈசன், எங்கும் மலமே, இருளே, வெளியே எனும்` என மாற்றி, ``சகளத்தன்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. இத் தொடரில் உள்ள ஏகாரங்கள் எண்ணிடைச் சொல். எனும் - என நிற்கும். சகளம் - உருவத்திருமேனி. ``இன்று`` என்னும் பயனிலைக்கு `ஒன்றும்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
முதல் அடியிலும், `பவுதிகமாய சகலமும் அருளே` என மாற்றிக்கொள்க. சகலத்திற்குக் காரணமாவனவற்றை, ``சகலம்`` என்றார். சகல நிலையில் வலுப்பெற்று நிற்பன பூதகாரியங்களே யாதலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். `சகளத்தன்` என்றது அந்நிலைமையை. நிட்களம், நிட்கள சகளம் ஆகியவையும் இங்கும் பொதுப்பட, ``சகளம்`` எனப்பட்டன.
இதனால் திருவருள் இன்றி ஒன்றும் இயலாமை வலியுறுத்தப்பட்டது,

பண் :

பாடல் எண் : 15

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவமசை யாகி நடிப்பவன் தானே.

பொழிப்புரை :

சிவம் முதலாக உள்ள நவந்தரு பேதங்களாய் நிற்கும் சிவன் அங்ஙனம் நிற்றலும் திருவருளாலேதான்.

குறிப்புரை :

நவந்தரு பேதங்களாவன இவை என்பது மேல் `சிவலிங்கம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டது. அவ்விடத்தில் சிவலிங்கம் அனைத்துத் திருமேனிகளாயும் நிற்றலை விளக்குதற்கும், இங்குத் திருமேனி நிலைகள் அவை என்பதை விளக்குதற்கும் இவை கூறப்பட்டன. பின்னரும் ஓரோர்காரணம் பற்றி இவற்றை எடுத்துக் கூறுவார்.
இவை `சொரூபமன்றித் தடத்தமே` என்றற்கு `நடிப்பவன்` என்றார். சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், சிவன் அருளாற் கொள்ளும் திருமேனிகளின் வகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண்ணி னோர்க்கிங் கிரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே.

பொழிப்புரை :

திருவருளாகிய கண் வாய்க்கப்பெறாதார்க்கு சிவமாகிய நுண்பொருளின் இருப்புத் தோன்றாது. உலகமாகிய பருப் பொருள்களின் விசித்திரங்களே தோன்றும். திருவருளாகிய கண் வாய்க்கப் பெற்றோர்க்கு, சிவனது இருப்பு மட்டுமன்றி அவனேயும் புலப்பட்டுத் தோன்றுவான். இவை எவைபோலும் எனின், ஒளி யில்லாத கண்ணை உடையவர்க்குப் பகலவனது ஒளிதானும் தோன்றாது இருள் மட்டுமே தோன்றுதலும், ஒளியுடைய கண் ணுடையார்க்கு அவனது ஒளிப்பரப்பேயன்றி அவனேயும் தோன்றுதல் போல்வனவாம்.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை. `இருப்புத் தானும் அறிய வாராது` என்றற்கு, ``அரும் பொருள்`` என்றார். சிவனது இருப்பும், இரவியினது ஒளியும் அவை பற்றி நிற்கும் பொருள்களின் பன்மை பற்றிப் பன்மையாக ஓதப்பட்டன. அதனானே எண்பொருள், இருள் இவை மட்டுமே தோன்றுதல் பெறப்பட்டது. இருட்கண் - இருளை மட்டுமே உணரும் கண். ``இரவியும்`` என்னும் உம்மை இழிவு சிறப் பாகலின், ``இரவி`` என்றது ஆகுபெயராய் அதன் ஒளியைக் குறித்தது. தெருள் - ஒளி. எங்கும் உள்ள ஒளி முழுதும் தோன்றுதலால் அதனானே அவ்வொளிக்கு முதலாகிய இரவியும் தோன்றுதல் பெறப்பட்டது.
இதனால், அருளில்லார்க்கு சிவம் தோன்றாது உலகமே தோன்றுதல் உவமையில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைந்திடும்
தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமானே எங்கணும் வியாபகனாய், ஐந் தொழிலையும் செய்யும் முதல்வனாயினும் அவன் அவன் அத்தன்மையனாய் நிற்றற்குக் காரணமாயிருப்பது அருளாயும், எல்லையின்றி விரிவதாயும், அனைத்தும் வல்லதாயும் அவனிடத்து உள்ள ஆற்றலேயாம்.

குறிப்புரை :

இங்கு, ``தான்`` எனப் பன்முறையானும் கூறியது இங்கு அதிகாரப்பட்டுள்ள அருளையேயாம். வியாபித்தலைவன் - வியாபி யாய தலைவன். படைத்தல் முதல் வியாபித்தல், தலைவனாதல் ஈறாக உள்ள அவை அனைத்திற்கும் ஏதுவாய் நிற்பதனை அவையாகவே உபசரித்துக் கூறினார். இதுவும் சொற்பொருட் பின் வருநிலையணி.
இதனால் `திருவருளாவது` இங்குக் கூறிய அனைத்துத் தன்மைகளையும் உடைய சத்தியே, என்பது கூறப்பட்டது. ``அருள் உண்டாம் ஈசற்கு; அது சத்தி; அன்றே`` என்பது சிவஞான போதமும்,* ``அருளது சத்தியாகும் அரன்றனக்கு`` என்பது சிவஞான சித்தியும் சூ. 5. 9. ஆகும்.

பண் :

பாடல் எண் : 18

தலையான நான்கும் தனதரு வாகும்
அலையா அருவுரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ்நான்கும் நீடுரு வாகும்
தொலையா இவைமுற்று மாய்அல்ல தொன்றே.

பொழிப்புரை :

(மேல், `ஞான லிங்க` அதிகாரத்தில் ``நாலன கீழ`` என்னும் மந்திரத்தில் சிவன்மேல் வைத்துக் கூறிய மூவகைத் தடத்தத் திருமேனிகளையும், அவற்றைக் கடந்த சொரூப நிலையையும் இம்மந்திரத்தில் திருவருளாகிய சத்திமேல் வைத்துக் கூறினார் என்க.)

குறிப்புரை :

`திருவருளாகிய சத்திதானே சிவன்` என்பதை உணர்த்துதல் இதற்குப் பயன் என்க. அங்கு, ``பரசிவன்`` என உயர்திணை வாய்பாட்டானும், இங்கு, `அல்லது ஒன்றே` என அஃறிணை வாய்பாட்டானும் வாய்பாடு வேறு படுத்து ஓதிய நுட்பம் ஓர்ந்துணரற்பாற்று.

பண் :

பாடல் எண் : 19

ஒன்றது பாலே உலப்பிலி தான்ஆகி
நின்றது தன்போல் உயிர்க்குயி ராய்நிலை
துன்றி அவைஅல்ல தாகும் துணையென்ன
நின்றது தான்விளையாட்(டு) என்னுள் நேயமே.

பொழிப்புரை :

எனது உள்ளத்தில் என் அன்பேயாய் நிற்கின்ற சிவம் தன்போல்வது பிறிதுபொருள் இல்லாது தனி ஓர் அறிவுப் பொருளாய் இருத்தலால் அழிவற்று, என்றும் உள்ளதாகின்றது. அஃது அங்ஙனம் ஒன்றேயாயினும் தன்னைப்போல் அறிவுடையனவாயும், அழிவில்லன வாயும் உள்ள எண்ணற்ற உயிர்க்கும் உள்ளுயிராய் நிற்றலால் பலவாகவும் ஆகின்றது, அங்ஙனம் ஆயினும் அவ்வுயிரின் தன்மயைத் தான் அடையாமல் தான் வேறு பொருளாகவே உள்ளது. இனி, ``அதன் விளையாட்டு`` எனப்படுவது, அஃது உயிர்களோடு பெத்தம், முத்தி இருநிலையிலும் உடனாய் நின்று, எஞ்ஞான்றும் அவற்றிற்கு அவ்வப்பொழுது ஆவனவற்றைச் செய்து உதுவுவதே யாகும்.

குறிப்புரை :

``தானே படைத்திடும்`` என மேல் வந்த மந்திரத்தில் ``வியாபி`` என்ற நிலையில் சுத்தி, ``சத்தி`` என்றே பொதுவாகச் சொல்லப் படும் அது படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் பொழுது ஆரணி, செனனி, இரோதயத்திரி - முதலியனவாகச் சொல்லப்படும். அவற்றுள் ``உயிர்க்குயிராய் நிலைதுன்றி`` என்றதனால், `சத்தி` என்னும் பொதுநிலையையும் ``துணை என்ன நின்றது`` என்றதனால் ஆரணி முதலாக நிற்கும், சிறப்பு நிலையையும் கூறினார். முதல்வன் செய்யும் தொழில்களை `விளையாட்டு` எனக் கூறுதற்குப் பொருள் `ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு விளை யாட்டு` என்பது போல, `வருத்த மின்றி எளிதில் செய்தல்` என்பதே யன்றி, `சிறியார் விளையாடும் விளையாட்டுப் போலக் குறிக்கோள் யாதும் இல்லது` என்பதன்று.
``முதற்பொருள், முதலில் ஒன்றாய் இருந்தது; பின்பு அஃது யான் பலவாக ஆவேனாக எனக் கருதியது`` எனவரும் உபநிடதப் பொருளும் திருவருளைப் பற்றியதேயாதலை இங்கு இவற்றால் உணர்த்தியவாறு. இனி முதல்வன் செயலை `விளையாட்டு` எனச் சில இடங்களில் கூறப்படுதலையும் இங்குக் குறித்தார் என்க.
அன்பே சிவமாதல் பற்றி அதனை, ``என்னுள் நேயம்`` என்றார். `என்னுள் நேயம்தான் உலப்பிலியாகி நின்றது; உயிர்க் குயிராய் நிலைதுன்றி, அவை யல்லதாகும்` எனவும், `விளையாட்டுத் துணை என்ன நின்றதுதான்` எனவும் இருதொடராக இயைத்து முடிக்க. சடமாயும், பலவாயும் உள்ள பொருள்கள் யாவும் அழிவன ஆதலின் அத்தன்மைக்கு முழுதும் வேறுபட்டதென்றற்கு, `ஒன்று அதுவாலே` என்றார் ஆகலின், அஃது அறிவாய் நிற்றலும், உடன் கொள்ளப் பட்டது. `அதனாலே` என ஓதற்பாலதனை, ``அதுவாலே`` என ஓதினார்; `ஒன்றாய் நிற்கும் அத்தன்மையினாலே` என்க.
`முதற்பொருள் இவ்வாறெல்லாம் சிறந்து நிற்றற்குக் காரணம் திருவருளாகிய அத்தன்மையினாலே` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 20

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ(டு)
ஆய்அக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போய்அக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.

பொழிப்புரை :

முழுதும் திருவருளிலே பொருந்தி நிற்கின்ற சுத்த சிவன் அந்தத் திருவருள் காரணமாகச் சத்தியோடு கூடிச் சத்தனாய் நின்று, பின்பு சுத்தமாயையுள் பொருந்தி முதற்கண் நாத தத்துவத்தைத் தோற்றுவித்து, அத்தத்துவம் பற்றுக்கோடாக சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும், அந்த வாக்கு முதலிய அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்கும் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளையும் தோற்றுவித்துப் பின்பு விந்து தத்துவத்தைத் தோற்றுவித்த பின்னரே உலகம் முழுதும் முறைப்படி தோன்றும்.

குறிப்புரை :

`இங்ஙனமான அனைத்திற்கும் திருவருளே காரணம்` என்பது குறிப்பெச்சம். ``நேயம்`` என்றது திருவருளை. `சுத்த சிவன்` என்பார் ``நின்மலன்`` என்றார். அவன் சொரூப சிவன். அவனே உலகத்தை நோக்க விரும்பும்பொழுது சத்தியாலே நோக்குவன் ஆதலின், ``சத்தியோடு ஆய்`` என்றார். ``அடைந்திட்டு`` எனவும் ``புணர்ந்திட்டு`` எனவும் கூறினார். `விந்து தத்துவம் காரியமே யாயினும் பிற எல்லாவற்றிற்கும் அது காரணம்` என்பார். ``வீயத்தகா விந்து`` என்றார். வீதல் - அழிதல். விளைதலுக்கு `உலகம்` என்னும் வினைமுதல் வருவித்துக்கொள்க. `பல்வேறு வகைப்பட்ட உலகங் களின் பல்வேறு வகையான தோற்றமும், ஒடுக்கமும் திருவருள் காரணமாகவே நிகழும். என்றற்கு, உலகத் தோற்ற முறையைச் சிறிது வகுத்துக் கூறினார்.
இதனால், திருவருளின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே.

பொழிப்புரை :

எல்லாக் காரியங்களின் தோற்றத்திற்கும் முதலாய் நிற்கின்ற பரவிந்துவே, பிற எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி வியாபகமாய் நிற்கும். அது மல கன்மங்களோடு விரவுதல் இன்றித் தூயதாயும் உள்ளது. அதனால் அது `மகாமாயை` எனவும் படுகின்றது. அஃது அபர முத்தர்களாகிய மந்திர மகேசுரர், அணுசதா சிவர் முதலியோருடைய தனு கரணங்களாகவும், சத்த கோடி மகா மந்திரங்களாகவும், வேத சிவாகமங்களாகவும் மேற்கூறியோருடன் மற்றும் விஞ்ஞான கலர்களும் வாழும் அளவற்ற அண்டங்களாயும் விளைந்து பயன்படும்.

குறிப்புரை :

``பரவிந்து என்பது, `காரிய விந்துக்களுக்கு மேலாய் நிற்கும் விந்து`` எனப் பொருள் தந்து காரணப் பெயராய்ச் சுத்த மாயையைக் குறித்தது. அதனையே சிவன் தான் நேரே தொழிற் படுத்துதலின் அதன் இயல்பை விரித்தார். `அதனால் சத்தியது பெருமை விளங்கும்` என்பது பற்றி, சுத்த மாயைக்குக் கீழ் உள்ள அசுத்த மாயையைச் சிவன் தனது ஏவல் வழி நிற்கும் அனந்தேசுரரைக் கொண்டும், பிரகிருதி மாயையை அவரது ஏவல்வழிச் சீகண்ட ருத்திரரைக் கொண்டும் செயர்படுத்துவன்.
``தேவர்`` என்றது ஏற்புழிக் கோடலால் மேற்கூயோரைக் குறித்து, ஆகுபெயராய் அவரது தனு கரணங்களை உணர்த்திற்று. சிவாகமமும் வேதம் எனப்படும்.
இதனால் சுத்த மாயையினது சிறப்புக் கூறும் முகத்தால் திருவருளது ஆற்றற் பெருமை கூறப்பட்டது.
முன் அதிகாரத்தில் திருவருளின் இயல்பினை அதனைப் பெற்றார் உணருமாறெல்லாம் கூறிய நாயனார், அதனுள் திருவருள் மறைத்தலைச் செய்து இருளாயும் நிற்றல் கூறப்பட்டமையால் அஃது அதற்குச் செயற்கையேயாக, அதன் இயல்பு ஒளியேயாதலை அச்சிறப்புப் பற்றி இவ்வதிகாரத்தில் வேறெடுத்து ஒன்பது மந்திரங்களால் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 1

அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.

பொழிப்புரை :

திருவருளைப் பெற்று அதனானே அதன் இயல்பை உணர்ந்து அதிலே அழுந்தாதவர்கள் அத்திரு வருளோடு இயைந்து ஒழுகும் ஒழுக்கத்தில் நில்லார், அங்ஙனம் நில்லாமையால் அவர் ஐம் பாசங்களினின்றும் நீங்கதலும் இல்லை. பாசங்களின் நீங்காமையால் அவர் திருவருளின் பெருமையை அறிந்து அதனை அடைய முயல மாட்டார். திருவருளைப் பெற்றோர் தமது வினைப்பிறப்பே அருட் பிறப்பாகப் பெற்று, திருவருளின் பெருமை அறிந்து அதில் அழுந்துதலும் செய்வர்.

குறிப்புரை :

எனவே, திருவருள் ஒளியேயாதல் உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் விளங்கும் என்பதாம்.
`அருளின் வேறு பிறப்பாகப் பிறந்திட்டு` என்க. இறைவன் குருவாய் நின்று திருவருளை வழங்கப் பெற்றோர் முன்னைப் பிறப்பை மாற்றி வேறு பிறப்பாய்ப் பிறந்தவர் எனச் சொல்லப் படுதல் பலரும் அறிந்தது. முன்னர் ``அறிந்து, என்றமையால் பின்னர் ``அறிவார்`` என்றது அழுந்தியறிதலைக் குறித்தது.
இதனால், திருவருள் ஒளியேயாதல் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.

பொழிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடைய சிவன், இனிப் பிறந்து உலகின்கண் வாராது என்றும் ஒருபடித்தாய் இருத்தற்குரிய வழியை எனக்குத் தந்தமையால் பெரியரிற் பெரியன் ஆகின்றான்; அந்நிலையில் அதுவெறும் வறுநிலையாய் இல்லாது உண்ண உண்ணத் தெவிட்டாத இனிக்கின்ற இன்பத்தை வழங்கினமையால் அவன் ஆனந்தமயன் ஆகின்றன். அவன் தனது அளவில்லாத பெருமை காரணமாக அளவற்ற பெயர்களை உடையன். அவற்றுள் எந்தப் பெயரையேனும் சொல்லி அதன் பொருளை உணரும் முகத்தால் அவனது திருவருளால் விளைகின் மேற்கூறிய இன்பக்கடலில் எஞ்ஞான்றும் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள்செய்தான்.

குறிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடையவனை `நந்தி` என்னும் பெயராகக் கூறியது ஆகுபெயர். அதனைப் பின்னும் கூறியது சொற் பொருட் பின்வருநிலை. `தந்தான்; அதனால் மாநந்தி` எனக் கூறற்பால வற்றை இவ்வாறு கூறியது உடம்பொடு புணர்த்தல். ``பேர் நந்தி`` என்னும் எழுவாய்கட்கு, ``மாநந்தி ஆனந்தி`` என்பன பயனிலையாயின.
``ஆயிரம்`` என்பது அளவின்மை குறித்தது. எல்லாப் பெயரும் அவனது திருவருளின் பெருமையையே உணர்த்தலின் `எந்தப் பெயரினாலும் அருட்கடலில் ஆடலாம்` என்றார். அப் பெயர்கள் சிவன், சங்கரன், சம்பு, மயற்கரன், மயோபு, உருத்திரன் முதலியன. அவற்றது பொருள்களை அறிந்துகொள்க. ``பேர் ஒன்று`` என்பது, தலைமை பற்றி, சிவன் - என்பதையே குறித்தது எனவும் உரைப்பர்.
இதனால், `திருவருள் இருளாய்த் துன்பத்தைத் தருவதாகாது ஒளியாய், இருளை நீக்கி எல்லையில் இன்பத்தை வழங்குவதே` என்பது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.

பொழிப்புரை :

திருவருளை நிரம்பப் பெறாத நிலையில் யான் அவனது உண்மை நிலையை எனக்கு இயன்றவகையில் ஆடுதல், பாடுதல் முதலியன செய்து அறிய முயன்றேன். அதன் பயனாக அவனது அருளை நிரம்பப் பெற்றமையால், அவன் என் அறிவால் நோக்காது அவன் அருளால் நோக்கும் முறையை உணர்த்தி, அவ்வாறு நோக்கிய பொழுது அவன் என்னின் வேறாகாது என்னுள்ளே விளங்கினான்.

குறிப்புரை :

எனவே, `உயிர் இறைவனைத் தன்னின் வேறாகப் புறத்தே காண முயலும் நிலையெல்லாம் திருவருளை முற்றப் பெறாத நிலை` என்பதும், `முற்றப் பெற்ற நிலையில் அஃது இறைவனைத் தன்னுள்ளே கண்டு களிக்கும்` என்பதும் விளக்கியவாறு. காண முயன்ற முயற்சியைக் கண்டதாகக் கூறியது, `அம்மி துணையாக ஆற்றைக் கடந்தான் மூழ்கினான்` என்பது போலக் காரணத்தைக் காரியமாக்கிக் கூறிய, உபசார வழக்கு. முதல் தொடரில் செயப்படு பொருளும் கருவியும் பயனிலைக்குப் பின்னே நின்றன. `கூடிய வாற்றால்` என உருபு விரிக்க. உற்று - உற்றதனால். `தன் அருளை உற்றதனால் அவன் வந்து நின்றான்` எனக் கூட்டி முடிக்க.
இதனால், திருவருள் முதற்கண் சிற்றொளியாய்த் தோன்றிப் பின் பேரொளியைத் திகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயா படலம் எனப்பண்ணி
`அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.

பொழிப்புரை :

`நந்தி` என்னும் பெயரை உடையவனாகிய சிவன், யான் தொன்று தொட்டு என்னைப் பொருந்தி வந்தனு கரண புவன போகங்களும், அவற்றிற்கு நிமித்தமாய் அநாதியே என்னைப் பற்றி நின்ற ஆணவமும் என்னோடு என்றும் இயற்கையாய் நீங்காது நிற்கும் குணங்களாகாது, ஒரு காலத்தில் விட்டு நீங்கும் குற்றத் தொகுதியே ஆதலை உணரச் செய்து, `அக்குற்றங்கள் அனைத்தினின்றும் நீங்கி இது பொழுது நீ தூயையாய் நிற்றலையும் பார்` என்று காட்டினான். அதனால் நான் மாயா காரியங்களால் பெற்ற பாச அறிவை நீக்கினேன்; அவனது அருள் வழியிலே நின்றேன்.

குறிப்புரை :

`இங்ஙனம் ஆதலின், திருவருள் இருளாய்க் குற்றங்களின் வீழ்த்துவதாவது, ஒளியாய் அவற்றினின்றும் மீட்பதே என்பது தெளிவாகின்றதன்றோ` என்பது கருத்து. ``மாயை`` என்பது இங்கு, நீடு நில்லாது விரைய மறைதலைக் குறித்தது. ஒரு பொருட்கு அதனை விட்டு என்றும் நீங்காததே `அதன் குணம்` என்றும், ஒரு காலத்தில் அதனை விட்டு நீங்குவது `அதற்குக் குற்றம்` என்றும் சொல்லப்படும். ``என`` என்பது `என்று உணர` என்றவாறு.
``என்று அடி வைத்தான், என்பதை, `அடி வைத்து என்றான்`` எனப் பின் முன்னாக மாற்றி வைத்து உரைக்க. அடியைச் சென்னி மேல் வைத்தல் அருளை வழங்குதற்கு அடையாளம். திருவடி அருளே யாதலின், அதனைப் பணிதலாவது அதன்வழி நிற்றலேயாம்.
இதனால், திருவருள் ஒளியேயாதல் வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.

பொழிப்புரை :

பாசஞான பசுஞானங்களாய்த் திரிபு கொள்கின்ற மருளில் பொருந்திய உயிரின் உணர்வாகிய திரியில் பதிஞானமாகிய திருவருள் என்னும் சுடரைக் கொளுத்தி அஃது எரிந்து வீசுகின்ற ஒளியினால் எல்லாப் பொருட்கும் இடம் தந்து வியாபகமாய் நிற்கின்ற ஆகாயம் போன்று எல்லையற்று நிற்கும் சிவத்தைத் தரிசியுங்கள். அப்பொழுது அந்தத் திருவருளின் ஒளியில் பாசம் காரணமாக முன்பு உளவாகிய துன்பங்கள் யாவும் முழுதுமாக அற்றொழியும். இவ்வாறு பசுஞானமாகிய அறிவைப் பதிஞானமாய் விளங்கச் செய்கின்ற திருவருளாகிய விளக்கைப் பெற்றவர்களே அந்த விளக்கினுள்ளே விளங்கும் மற்றொரு விளக்காய் விளங்குவார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரத்தின் பொருள்,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் அட்டி உயிர்எனும் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பர் காளை தாதை கழலடி காண லாமே``
- திருமுறை - 4-75-4.
என்னும் அப்பர் திருமொழியில் அமைந்து விளங்குதல் காண்க. இதனுள், \\\"விளக்கு`` என்பனவும், \\\"வெளி`` என்பதும் உருவகங்கள். விளக்கில் விளங்கும் விளக்காவது, பெருவிளக்கின் ஒளியினுள் தனது ஒளிவேறு தோன்றாது அடங்கி விளங்க இருக்கும் சிறுவிளக்கு. இதனை, `பகலில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு` எனவும் கூறலாம். தாம், ஏ அசைகள்.
இதனால், `திருவருள் ஒளியாய் நின்று பயன் தருமாறெல்லாம் உணர்ந்து அதனாற் பயன்கொள்க` என்பது விதிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள்
ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.

பொழிப்புரை :

`ஒளி, இருள்` என்றும் இரண்டில் எதுவும் எக் காலத்திலும் அழிந்தொழிவதில்லை. (ஒளி வரும் பொழுது இருள் அடங்கியிருக்குமேயன்றி அழிந்து போவதில்லை. அஃது ஒளி நீங்கியபொழுது மீட்டும் இருள் வருதலைக் கொண்டு அறிந்துக் கொள்ளப்படும். இந்நிலையில்,) நீங்காது நிற்கும் ஒளியோடு கூடிய கண்ணிற்கே ஒருஞான்றும் இருளோடு கூடும் நிலை வாராது ஒளி யாகவே விளங்கும் நிலை உளதாகும். ஆகவே, ஒளியோடு கூடும் பொழுது ஒளியாயும், இருளோடு கூடும்பொழுது இருளாயும் நிற்கின்ற கண்போல்வது ஆன்மா. அஃதாவது கண் ஒளிப் பொருளுமன்று; இருட்பொருளுமன்று; அவ்விரண்டினும் வேறு. ஆயினும் ஒளியோடு கூடியபொழுது ஒளியாயும், இருளோடு கூடி யிருளாயும் நிற்கும். அது போல ஆன்மாப் பதியும் அன்று; பாசமும் அன்று. அவ்விரண்டினும் வேறு. ஆயினும் பதியோடு கூடிய பொழுது பதியாயும், பாசத்தோடு கூடியபொழுது பாசமாயும் நிற்கும். ஒளிவந்தபொழுதும் இருள் அழிவ தில்லை. ஆயினும் ஒளியின்முன் இருள்தோன்றாது அடங்கியிருக்கும். ஒளிவருவதும், போவதுமாய் இருப்பின்கண் ஒளியாயும், இருளாயும் வேறு வேறு நிலைகளை அடையும். வந்த ஒளி பின் நீங்காது நிற்பின் கண் அவ்வொளியேயாய்ப் பின் இருளாக மாறாது. அதுபோல, மாயா கருவிகள் வந்து கூடுவனவும், பிரிவனவுமாகிய புற ஒளிகளாகும். அதனால் அவற்றோடு கூடிய உயர் அறிவாயும், அறியாமையாயும் மாறி மாறி நிற்கும். திருவருளாகிய ஒளிவந்த பின் நீங்காதே நிற்கும் அகவொளியாகும். அதனால் அதனோடு கூடிய உயிர் பின்பு ஒரு ஞான்றும் இருளாகாது ஒளியேயாய்ச் சிவமாய் விளங்கும்.

குறிப்புரை :

இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகள் ஒட்டணியாய் நிற்றலின், இதன் பொருள் இவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. ``ஒளியும் ஒழியாது`` என இறந்து தழுவிய எச்ச உம்மை கொடுத்துக் கூறியதனால், இரண்டாம் அடியின் முதலில் உள்ள ஒளி, `ஒழியா ஒளி` என்பது பெறப்பட்டது. ஒழியா ஒளியாவது இயற்கைப் பேரொளி யாகிய ஞாயிற்றின் ஒளி. திருவருளின் இயல்பிற்கு அதனினும் சிறந்த உவமையின்மையால் அஃது அழியா ஒளியாக உபசரிக்கப் படுகின்றது. ஒழியும் ஒளி பல இல்லங்களிற் பலரால் ஏற்றியும், அணைத்தும் வைக்கும் விளக்கொளி. திருவருள் ஞாயிறு போன்றதும், மாயா கருவிகள் விளக்குப் போல்வனவுமாகும். மாயா கருவிகளால் பெறும் அறிவு பாச அறிவே ஆகையால், அது நீக்கத்தக்கதாயிற்று. ``அறியாமை அறிவகற்றி``l என்னும் சித்தியாரிலும், ``செறி வற்றுலகோ டுரைசிந் தையுமற்று - அறிவற்று அறியா மையும் அற்றதுவே``3 என்னும் கந்தர் அனுபூதியிலும் ``அறிவு`` என்றது, நீக்கத் தக்கதாகிய பாச அறிவையேயாகும்.
ஒளியில் நின்றோரது கண்ணின் இயல்பை அதனையுடையார் மேல் ஏற்றிக் கூறினார். ``உயிர்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டி, ``உள்`` என்பதை ஒளியோடு இயைத்து, உயிர் ஒளி இருள் கண்ட கண்போல வேறாய், உள் ஒளியால் உள் இருள் நீங்கிச் சிவமாம்` என முடிக்க. திருவருளை ``உள் ஒளி`` என்றதனால் கருவிகளாகி ஒளிவெளி ஒளியாயிற்று. வெளியாவது உயிருக்கு வேறாய் நிற்பது.
இதனால், திருவருள் பாச ஒளிபோலப் புறமாய் நிலையாத தாகாது, அகமாய் நிலைபெற்று நிற்கும் சிறப்புடைய ஒளியாதல் கூறப்பட்டது. இம்மந்திரத்தின் முதலடிப் பொருள், ``ஒளிக்கும், இருளுக்கும் ஒன்றேயிடம்; ஒன்று மேலிடின் ஒன்று ஒளிக்கும்; எனினும் இருள் அடராது`` * எனக் கொடிக்கவியிலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த
திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.

பொழிப்புரை :

சிவன் தனது திருவுளப் பாங்கிற்கு மாறான வழியில் சென்று உழன்று கொண்டிருந்த என்னை அதற்குக் காரணமான அறியாமையைத் தனது திருவடிகளை என் சென்னி மேல் சூட்டு மாற்றால் போக்கி ஆட்கொண்டு, அதனால் தூய்மை பெற்ற எனது உள்ளத்திலே அவன் நீங்காது புகுந்து நிற்குமாற்றால் யான் அவனது அருளேயாய் நிற்கச் செய்து, அதனால், எனது இயற்கையை எய்திய எனக்கு அவனது அரிய இன்பத்தை அவன் தந்தவாறு எவ்வாறு என எண்ணி யான் ஒன்றும் தோன்றாது நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஏகாரங்கள் மூன்றும் அவற்றுக்கு எதிரானவற்றி னின்றும் பிரித்து நிற்றலால் பிரிநிலைகள். ``சூட்டி`` என்பதன் பின் `ஆட்கொண்டு` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. நிறம் - மார்பு; அஃது ஆகுபெயராய் நெஞ்சத்தைக் குறித்தது. அறிவை நெஞ்சமாக - உள்ளமாகக் கூறுதல் வழக்கு. ``நின்மலர்`` என்றது அதன் பயனாகிய ஞானத்தை உணர்த்தி நின்றது. இயற்கையை `தருமம்` என வழங்கும் வடமொழி வழக்கே பற்றி இவரும் ``அறம்`` என்றார். தித்திப்பதாகிய பால் அதன் இயற்கைக்கு மாறாகக் கசப்பது, நாவில் சேர்ந்த `பித்தம்` என்னும் செயற்கையாலேயாம். அந்தச் செயற்கை நீங்கிய பொழுது பால் இயற்கையான தித்திப்பையே உடையதாகும். அதுபோல உறவுப் பொருளாகிய திருவருள் பகைப்பொருளாக உயிருக்குத் தோன்றுதல், அவ்வுயிரை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலமாகிய செயற்கையாலேயாம். அச்செயற்கை நீங்கியபொழுது திருவருள் இயற்கையான உறவுப் பொருளாகவே தோன்றும் இதனை உமாபதி தேவர்,
``தித்திக்கும் பால்தானும் கைக்கும்; திருந்திடும்நாப்
பித்தத்தில் தான்தவிர்ந்த பின்``*
என விளக்கினார். அம்முறையிலே இங்கு நாயனார் ``அறமே புகுந்த எனக்கு`` என்றார். `புகுந்க` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பால் தித்தித்தலும், திருவருள் உறவுப் பொரு ளாதலும், செயற்கை காரணமாக முன்பு வேறுபட்டிருந்து, பின்பு விளங்குதலால் செயற்கைபோலச் சொல்லப்படுதல் பற்றி, ``புகுந்த என்னை`` என்றார். இயற்கைத் தன்மையே `குணம்` என்றும், செயற்கைத் தன்மை `குற்றம்` என்றும் சொல்லப்படும். குற்றத்தை வடமொழியாளர், `உபாதி` என்பர்.
திறம் - வகை. அது காரணத்தின்மேல் நின்றது. உயிர்களைச் சிவன் தானாகச் செய்தற்குக் காரணம் அவனுக்குள்ள அருளேயன்றிப் பிறிதின்மையை விளக்குவார், ``திறம் ஏது என்று எண்ணித் திகைத் திருந்தேன்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாய் நின்று செய்வன எல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

பொழிப்புரை :

பக்குவம் எய்தியபொழுது ஆணவ மலம் நீங்கத் திருவருட் பதிவு உயிரினிடத்து நிகழும். அப்பொழுது தான் உயிர் தன்னையும், தலைவனையும் உணரும் நிலையைப் பெறும். அப்பேற்றால் அது திருவருளாகிய பரவெளியிற் சென்று, அதன்கண் விளங்குகின்ற சிவத்தைப் புகலாக அடையும். அவ்வாறு அடைந்து நிற்றலே உயிர்பெறும் முடிநிலப் பேறாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``பின்னைச் சிவகதியாம்`` என்பதை இறுதியில் வைக்க. மருள் - மயக்க உணர்வு. அஃது ஆணவ மலத்தால் நிகழ்வன. ``நீங்க`` என்னும் செயவெனெச்சம் நிகழ்காலத்தில் வந்து உடனிலையாய் நின்றது. ``புகுந்தானை`` என்ற அனுவாதத்தால் அவன் புகுந்தமை முன்பே பெறப்பட்டது. சிவன் தனது அருளி வழியே புகுவன் ஆகலின் அவன் புகுந்தமை கூறவே அவனது அருள் புகுந்தமைதானே பெறப்பட்டது. தன்னை உணர்ந்த வழியே தலைவனை உணர்தல் கூடுமாகலின் தலைவனை உணர்தல் கூறவே தன்னை உணர்தலும் பெறப்பட்டது. உறு, துணைவினை. ``தெருளும், ஒன்றும், ஒன்றும்`` என்னும் பயனிலைகட்கு `உயிர்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. ஒன்றுதல் - பொருந்துதல். செய்யுள் நோக்கி, ``பொருளது என்ற புகலிடம்`` என்றாராயினும், `புகலிடம் என்ற பொருள்` என்றலே கருத்தென்க. எல்லாம் பொருளேயாயினும் உண்மையில் `பொருள்` எனப்படுவது மெய்ப்பொருளேயாதல் பற்றி அதனையே இங்கு, ``பொருள்`` என்றார். ``அது`` மூன்றும் பகுதிப் பொருள் விகுதிகள். `அதுவே சிவகதி` என்றற்கு, ``பின்னைச் சிவகதியாம்`` என்றார்.
இதனால், திருவருள் ஒளியாதல், அதனைப் பெற்றார் பெறும் பேறுபற்றி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை
வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர்
தேறணி யாம்இது செப்பவல் லீரே.

பொழிப்புரை :

உலகீர், திருவருளை உள்ளவாறு நீர் உணர்ந்தீ ராயின், சிவனை யொழித்து ஒழிந்த தெய்வங்களுள் எதுவாயினும் அது பல்கால் பிறந்து வாழ்ந்து இறந்தமையை வேதாகம புராணங்களைச் சான்று காட்டிப் பலர்க்கும் விளக்கிக் கூறுங்கள். அங்ஙனம் கூறுமாற்றால் அவர்கள் வேறு எந்தத் தெய்வத்தையும் அதனிடத்து மெய்ப்பொருள் தன்மையை ஏற்றி மயங்கும் மயக்கத்தை நீக்குங்கள். இவ்வாறு செய்தலே பருந்துகள் கூட்டமாகக் கூடி உண்ணத்தகும் இவ்வுடல் அங்ஙனம் ஆகும்படி கீழே வீழ்ந்த காலத்தில் அரிய உயிர்தான் தனது உண்மை நிலையைத் தெரிந்து உய்யும் வழியாகும். ஆயினும், இவ்வாறு செய்ய நீர் மாட்டுவீரோ?

குறிப்புரை :

``செய்ய மாட்டுதல் அரிது`` என்றபடி,
``நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்;
ஈறி லாலதவன் ஈசன் ஒருவனே`` *
``எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேம்; நம் சோணேசா - இல்லில்
பிறந்தகதை யும்கேளேம்; பேருலகில் வாழ்ந்து,(உ)ண்டு
இறந்தகதை யும்கேட் டிலேம்`` *
``தாமோ தரன் முதலோர் சாதல்நூல் சாற்றுவதும்
பூமேலோர் பொன்றுவதும் கண்டோமே`` 8
ஏனைய தேவர் பலரும் பிறத்தல், பின்பு உண்டு வளர்ந்து வாழ்தல், பின்பு இறத்தல் ஆகிய இவைகளை உடையவராதற்கு வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவை அனைத்தும் சான்றா இருக்கவும் அவரது அருள்களை, `திருவருள்` என்றல் மயக்க உணர்வேயாம் என்பதும், உண்மையுணர்வைப் பெற்றார் தாம் `சிவனது அருளே திருவருள்` என உணர்தலோடு பிறர்க்கும் அதனை உணர்த்தற்பாலர் என்பதும் கருத்து.
இதனால் `ஒளியாகிய திருவருளாவது சிவனது அருளே` என்பது முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

பொழிப்புரை :

ஞானம் முதிரப் பெற்றவர்க்கு இலிங்க பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கரு வறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.

குறிப்புரை :

எனவே, `அவர்க்கு இங்குக் கூறிய கருவறை முதலியன வேறு வேண்டா` என்பதாம் இங்ஙனமாகவே அவர் எஞ்ஞான்றும் இவற்றால் பூசை செய்து கொண்டேயிருப்பர் என்பதாம். வேறு கருவறை முதலியன புறத்தே நேரினும் அவற்றை அவர் இவ்வாறு பாவித்தே வழிபடுவர் என்பது உணர்க. \\\"தெள்ளத் தெளிந்தார்க்கு\\\" என்றதனால் இவ்வியல்பு ஞானியர்க்கு என்பது வெளிப்படை. பிறரெல்லாம் புறத்துக் காணப்படும் கருவறை முதலியவற்றையே அகத்தில் கற்பித்துக் கொண்டு வழிபட்டுப் பின்பு புறத்தே வழிபடுவர் என்க. அகத்தும், புறத்தும் ஞானியர் செய்யும் சிவபூசை `ஞான பூை\\\\u2970?` என்றும், ஏனையோர் செய்யும் சிவபூசை `கிரியா பூை\\\\u2970?` என்றும் சொல்லப்படும்.
\\\"ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்\\\" *
என்று அருளிச் செய்து இக்கருத்துப் பற்றியேயாகும்.
\\\"வள்ளற் பிரானார்க்கு\\\" என்றது `வள்ளற் பிரானாரைப் பூசித்தற்கு` என்றபடி. \\\"புலன்\\\" என்றது புலன் உணர்வை, அஃது இயல் பிலே மயக்கத்தைச் செய்வதாதல் பற்றி, \\\"கள்ளப் புலன்\\\" எனவும், `அஃது அங்ஙனமாயினும் ஞானியர்க்கு அது தெளிவையே தருவ தாகும்` என்றற்கு, \\\"காளா மணிவிளக்கே\\\" என்றும் கூறினார். `கலா` என்பது `களா` என்றாகிப் பின், \\\"காளா\\\" என நீண்டது. கலா - கதிர்.
இதனால், சிவபூசையின் ஞானப் பகுதியின் இயல்பு கூறப்பட்டது. இனி அடுத்து வருகின்ற மந்திரமும் இதனையே கூறும். சிறப்புப் பற்றி இதுவே முன்னர்க் கூறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

பொழிப்புரை :

வேள்வித் தீயில் சிவனை வழிபடுவோர் அவனை நோக்கி அத்தீயில் இடும் உணவை அவன் உண்டு மகிழ்வதாகவே கருதுகின்றனர். ஆயினும் அவர் கருத்தை அவன் உடன் பட்டு நின்றே அவர்கட்கு அருள் புரிகின்றான். இனி இலிங்கத்தில் அவனை வழிபடுவோர் அவ்விலிங்கத்தின் முன் வைத்துக் கையை அசைத்துக் காட்டுகின்ற பொருளை அவன் காணும் அளவிலே மகிழ்வதாகக் கருதுகின்றனர். அவர்கட்கும் அவர் கருத்தை உடன்பட்டே அவன் அருள் புரிகின்றான். அம்முறையில் அவனை உள்ளத்தலே உயிராகிய இலிங்கத்தில் வழிபடுகின்ற நாம் புறத்திலே வழிபடுவாரைப்போலப் பூசாகாலங்கலில் காட்டுதற்கு அங்கு எதனையுடையோம்? ஒன்றையும் உடையேமல்லோம். அதனால் அங்கு அவனுக்குக் காட்டும் உணவாவன அவனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற தோத்திரப் பாடல்களே யாகும். அதனால் அந்த உணவையே அங்கு நாம் காட்டுவோம். அஃது உண்மையில் சொல் வடிவாகவே யிருப்பினும் நமது கருத்து வகையால் அவனுக்கு அது பாலடி சிலேயாய் மகிழ்ச்சியைத் தரும்.

குறிப்புரை :

`ஊட்டி மகிழ்வித்தலும், காட்டி மகிழ்வித்தலும், எனச்சிவனுக்கு உணவைத் தரும் முறை இரண்டு என்றற்கும், அவ்விரண்டில் எந்த முறையையும் அவன் உணவைப் படைப்பார் கருத்து நோக்கி அதற்கிசைந்து அருள்புரிதலன்றி அவரது செயலால் தன் குறை நிரம்புதல் பற்றி அருள்புரிகின்றிலன் என்றற்கும் வேள்வி செய்வாரது செயலினையும் இங்கு உடன் குறிப்பித்தார். உண்பிப் பாரது கருத்தை உடன் படுதலையே \\\"உண்ணும்\\\" என உபசரித்துக் கூறினார். ஞான நெறியினது சிறப்புணரமாட்டாதார் புறத்தே பொருள்களைக் கொண்டு செய்யும் வழிபாட்டினையே சிறந்ததாகக் கருதுவர் என்பது தோன்றச் சிவபிரானை, \\\"வேட்டவி உண்ணும் விரி சடை நந்தி\\\" எனவும், `அங்ஙனமாயினும் ஞானபூசையே சிறப் புடையது என்றற்கு, \\\"காலையும், மாலையும் ஊட்டு அவியாவன பாட்டு\\\" எனவும், `அதுவே அவனுக்கு மிக விருப்பத்தைத் தருவது` என்றற்கு, \\\"உள்ளம் குளிர்விக்கும் பாட்டு\\\" எனவும் கூறினார்.
\\\"பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே\\\" *
என்று அருளிச் செய்ததும் காண்க.
\\\"வேட்ட\\\" என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவ்வவி காட்டுதும்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. \\\"காலையும், மாலையும்\\\" என்றதனால் காலை நேரம், மாலை நேரம் என்னும் இருநேரமாவது சிவபூசை செய்யத்தக்கது என்பது உணத்தப்பட்டது.
\\\"காலையும் மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம் ஆரூர் அரனெறி யார்க்கே,\\\"*
என்று அருளிச் செய்தமை காண்க.
`நிவேதித்தல்` என்னும் வடசொற்குப் பொருள் `நன்றாக அறிவித்தல்` என்பது. அதுவே தமிழில் `காட்டுதல்` எனப்படுகின்றது
இதனால், ஞான பூசையின் இயல்பு மேற்கூறப்பட்டவற்றிற்கு மேல் இன்றியமையாது கூறற்பாலதொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.

பொழிப்புரை :

பெருமையுடைய சதாசிவ மூர்த்தி அருவுருவத் திருமேனியனாயினும் அவன் அருவருமுங் கடந்த பரசிவனே என்பது தேற்றம், ஆதலால் இலிங்க வழிபாட்டில் சதாசிவ மூர்த்தியையே முறைப்படி ஆவாகனம் முதலியன செய்து ஒருவன் வழிபடு வானாயின், அவன் சிவனாம் தன்மைப் பெரும் பயனைப் பெறுவான்.

குறிப்புரை :

`வடிவம் யாதும் இன்மையால் அசிந்திதனாய் உள்ள சிவன் ஆன்மாக்களின் பொருட்டு வடிவங்கொண்டே சிந்திதனாய் நிற்றலால் பரசிவனைச் சதாசிவனாகக் கொண்டே வழிபட்டுப் பயன்பெறுதலே முறை என்றற்கு, \\\"பராபரன் ஆகும் சதாசிவன் றன்னை\\\" என்றார். \\\"ஆவாகித்து\\\" என்றது உபலக்கணம் ஆதலின், `ஆவாகணம் முதலியவற்றைச் செய்து` என்றதாம். ஆவாகனம் முதலியவாவன ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், நியாசம், அர்க்கியம், பாத்தியம், ஆசமனம், அபிடேகம், அலங்காரம், தூபம், தீபமம், நைவேத்தியம், ஆராத்திரிகம், பிரதட்சிணம், நமஸ்காரம், தோத்திரம், பிரார்த்தனை என்பன. இவற்றின் இயல்பெல்லாம் பத்ததிகளிலும், சிவபூசா விதி நூல்களிலும் அறிக; இங்கு விரிப்பின் பெருகும்.
\\\"மேன்முகம் ஈசானமாகவே கைக்கொண்டு\\\" என்றது, `மேல் சதாசிவலிங்கத்தின் இயல்பாகக் கூறியவற்றை அவ்வாறே உணர்ந்து செய்க` என அவற்றை இங்கு மீள நினைவுறுத்தியவாறு. `சீலம்` என்பது கடைக் குறைந்து, \\\"சீல்\\\" என நின்றது. சீலத்தை முகம் செய்தலாவது விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல்.
இம்மந்திரம் முதலாக வருவன எல்லாம் ஞானபூசை கிரியா பூசை இரண்டற்கும் பொதுவாவனவாம்.

பண் :

பாடல் எண் : 4

நினைவதும் வாய்மை மொழிவது மல்லால்
கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும்
கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

பொழிப்புரை :

சிவனை இலிங்கத்தின்கண் சதாசிவ வடிவில் வைத்து மேற்கூறியவாரெல்லாம் நினைதலும், அந்நினைவுகட்கு ஏற்ற மறை மொழிகளை அவ்வப்பொழுது முறையாகச் சொல்லுதலும், அவற்றோடு அவ்வவ்வுறுப்புக்களைப் பூவும், நீரும் கொண்டு போற்றுதலும் தவிர அவனைக் காண்பதற்கு வழி வேறில்லை. ஆகையால் அவனைக் காண வேண்டுவோர் பலரும் அவற்றையே செய்வர்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் அவற்றையே செய்மின்` என்பது குறிப்பெச்சம். சொல் சுருங்க வேண்டி வேறு வேறாக ஓதினாரேனும் இவ்வாறு ஒன்றாக வைத்துரைத்தலே கருத்தென்க. `இலிங்கத்தில்` என்பதும், `சதாசிவவடிவில்` என்பதும் அதிகாரத்தால் வந்தியைந்தன. தாம் தம் பயனைத் தப்பாது தருதல் பற்றி மந்திரங்களை \\\"வாய்மை\\\" என்றார். நினைதல் முதலிய மூன்றும் முறையே மனம், மொழி, மெய் இவற்றின் செயலாதல் தெளிவு. எனவே முப்பொறிகளும் பூசையில் ஒருங்கு இயைதல் வேண்டும் என்பது பெறப்பட்டது. ஞான பூசையில் மொழி மெய் இவற்றின் செயல்களும் அவ்வாறே பாவிக்கப்படும் என்க.
இதனால், சிவபூசை முப்பொறிகளாலும் இயற்றற்பாலதாதல் கூறப்பட்டது. இடையே சிவபூசையின் சிறப்பும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்தற்சித் தார்களே.

பொழிப்புரை :

தத்துவங்களில் ஒவ்வொன்றன் எல்லை காறும் அவற்றிற்குத் தலைவராக வைத்துப் பலராலும் திருமஞ்சனம் ஆட்டித் திருமாலை சூட்டி வழிபடப்படும் கடவுளர்களது உள்ளங்களில் சிவன் நிலைபெற்று நின்று அவ்வழிபாட்டின் பயன்களை அவரவர்க்கு வழங்கி நிற்றற்குக் காரணம் அவரெல்லாம் முன்பு சிவனைப் பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிடேகித்துப் பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து, கைகூப்பிக் கும்பிட்டு மனம் பொருந்தி வழிபட்டார்கள் என்பதே.

குறிப்புரை :

`என்பதே\' என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. அங்ஙனம் வழிபடப்படுவார் பிரமன், விட்டுணு என்னும் காரணக் கடவுளரும், பிறரும் ஆவர்.
\"அயன்றனை யாதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்\"
என்னும் சிவஞான சித்தியை இங்கு உடன் நோக்குக. இங்குக் கூறப்பட்ட மஞ்னம், மாலை, அஞ்சமுது என்பன உபலக்கணம். அவற்றால் சிவபூசைக்கு வேண்டப்படும் பொருள்கள் குறிக்கப்பட்டன. இதனால், சிவபூசையால் பெறப்படும் பயன்களுள் சிறப்புடையது ஒன்று எடுத்துக்கூறப்பட்டது. அதனானே `வழிபடப் படுபவன் சிவன் ஒருவனே\' என்பதும் `ஏனையோர் யாவரும் அவனை வழிபடுபவரே\' என்பதும் உடன் உணர்த்தப்பட்டன. வேதம், சிவன் ஒருவனையே \"விசுவ சேவியன்\" என்றும், \"தேயப் பொருள்\" என்றும் கூறும்.

பண் :

பாடல் எண் : 6

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே

பொழிப்புரை :

`சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவவிடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

\\\"இஃது அவர் வினையிருந்தவாறு\\\" என்பது குறிப் பெச்சம். \\\"உண்டு, உண்டு\\\" என்றது, அவற்றின் எளிமையும், முட்டின்மையும் கூறியவாறு.
\\\"கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள; நீருள;
கற்றைச் செஞ்சடை யானுளன்; நாமுளோம்;
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே\\\"l #
என்றதிலும் `எம் வினையே காரணம்` என்பதே குறிப்பு.
இதனால், சிவபூசை செயலால் எளிதாய்ப் பயனாற் பெரிதாயினும் அது நல்லூழ் உடையார்க்கன்றி ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

பொழிப்புரை :

(இங்கு இருக்க வேண்டிய இப்பாடல் பதிப்புக் களில் `மாகேசுர பூை\\\\u2970?` என்னும் அதிகாரத்திலும் அங்கு இருக்க வேண்டிய பாடல் இங்குமாக மாறியுள்ளன.)
புகழ்மிக்க நந்தி பெருமானாகிய எம் ஆசிரியர் எம்மை ஆளாக ஏற்றுக் கொண்டுபோய்த் திருமுன்பு சேர்ந்த, `நந்தி` என்பதையே தன் பெயராக உடைய சிவபெருமானை என்னால் ஆம் அளவும் துதிப்பதற்கு அந்த `நந்தி` என்னும் பெயரையே எப்பொழுதும் சொல்வேன்.

குறிப்புரை :

`இஃது எம் ஆசிரியர் ஆணை` என்றபடி, சிவபெரு மானுக்கு அவனது மூலமந்திரத்தில் உள்ள `சிவன்` என்பதே மெய்ப் பெயராயினும், அஃது அவனை வழிபடுவோர் யாவர்க்கும் பொதுவாய் நிற்க, அவரவரும் தம் தாம் தனித் தனிச் செய்யும் வழிபாட்டில் தம் பெருமானது மெய்ப்பெயராக ஒரு பெயரைக் கொள்ளுமாறு ஆசிரியர் பணிப்பர். அம்முறையில் நாயனார்க்கு அவர் வழிபடும் பெருமானது பெயராக `நந்தி` என்பதையே நந்தி பெருமான் அருளிச் செய்தார் என்க. இதனை நாயனார் எடுத்துக் கூறியதனால் சிவனைச் சிறப்பு வகையில் தமக்கே உரிய பெருமானாகக் கொண்டு வழிபடும்பொழுது அவனுக்கென்று ஒரு பெயரை அவரவரும் கொண்டு வழிபடல் வேண்டும் என்பது பெறப்பட்டது.
\\\"விட்ட\\\" என்பது, `அரசன் ஆக்கொடுத்த பார்ப்பான்` என்பதிற்போல, `சடையன்` என்னும் கோடற் பொருட் பெயர் கொண்டது. வருமளவும், ஆமளவும், \\\"நொந்து\\\" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `வருந்தியேனும் செய்வேன்` என்றதாம். `நந்தி யென்னும்பேர் பிதற்றொழியேன்` என்க.
இதனால், சிவபூசையில் இன்றியமையாது கொளற்பால தொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

பொழிப்புரை :

தேவர்கட்கெல்லாம் தேவனாகிய சிவபெருமானே! யான் இப்பிறப்பினின்று நீங்கி எப்பிறப்பை அடைந்து எங்கேயிருந்து எதனை மறந்து போனாலும் திருத்தமான பூ, நீர் முதலியவற்றைக் கொண்டு உன்னைச் சிறப்புடன் பூசிக்கின்ற இந்த வழக்கத்தை மட்டும் மறவாமல் கடைப்பிடித்து நிற்கும் வரத்தை அடியேன் முற்றாகப் பெறும்படி அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

`அஃது ஒன்றே யான் உன்பால் வேண்டுவது` என்பது குறிப்பெச்சம். தம் அன்பு மீதூர்வால் இவ்விண்ணப்பத்தினை நாயனார் சிவபிரானிடம் செய்து நின்றைமையால், `சிவபூசை செய்வார் அப்பூசையில் இதனையே அவன்பால் வேண்டுக எனக் கூறி, அதனானே, சிவபூசையை மேற்கொண்டவர் அதனை ஒரு ஞான்றும் கைவிடுதல் கூடாது` என்பதனையும் உணர்த்தியவாறு. சொற்கிடக்கை முறை வேறாயினும் கருத்து நோக்கி இதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது. `நின்னை வழிபடும் வண்ணம் மறப்பின்மை பெறவேண்டும் என்க.
\\\"புழுவாய்ப் பிறக்கீனும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\\\"l
என வேண்டினமையை நினைக.

பண் :

பாடல் எண் : 9

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமே
ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

தெய்வ வழிபாடுகளும், வழிபடப்படும் தேவர் கூட்டங்களும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நிலத்தில் எங்கும் அளவின்றி உள்ளன. உண்மையாக ஆராய்ந்தால், அவ்வழிபாடுகளில் வேறு வேறாகச் சொல்லப்படுகின்ற அளவற்ற பெயர்களும் சிவன் பெயர்களே என்பதும், `அனைத்துத் தெய்வங்களும் சிவனே` என்பதும் விளங்கும்.

குறிப்புரை :

`அதனால், சிவனையே நேராகப் பெரியோர் வழிபடுவர்` என்பதாம்.
\\\\\\\"காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம்; அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல்\\\\\\\"
எனவும்,
\\\\\\\"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்;மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும்; பிறக்கும்; இறக்கும்; மேல் வினையும் செய்யும்;
ஆதலால் அவையிலாதான் அறிந்தருள் செய்வனன்றே\\\\\\\"
எனவும்,
\\\\\\\"இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவர்? அன்றேல், அத்தெய்வம் அத்தனைக்காண்\\\\\\\" 8
எனவும் விளக்குதல் காண்க. (தெய்வப் பெயராய் வரும்) \\\\\\\"எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர் என்பதே வேதநூல் துணிபு என்பது ஆண்டுக் (சுவேதாச் சுவத உபநிடதத்தில்) காண்க\\\\\\\" என்னும் சிவஞான மாபாடியமும் 3 இங்கு நினைக்கத் தக்கது.
இவ்வாறெல்லாம் கூறுதல், `சிவபிரான் தவிர ஏனைத்தேவர் பலரும் பசு வருக்கத்தினரே` என்பதும், `சிவபிரான் ஒருவனே பதி` என்பதும் விளங்குதற் பொருட்டாம். ஆகவே, `பசு வருக்கத்தினரைப் பதியாகக் கருதிச் செய்தும் வழிபாடுகள் யாவும் நல்வினைகளாய்ப் பிறவியைத் தருதல் அன்றிப் பிறவியை நீக்கமாட்டா` எனவும், `சிவபிரானைப் பதியாக உணர்ந்து செய்யும் வழிபாடே தவமாய் ஞானத்தைப் பயந்து, அது வழியாக வீட்டைத் தரும்` எனவும் உணர்ந்து கொள்க. இம்மந்திரத்தல் பலவிடத்துப் பாடங்கள் திரிபெய்தன.
இதனால் சிவ பூசையின் தனிச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.

பொழிப்புரை :

பசுவினின்றும் பெறப்படுகின்ற அரிய பொருள் ஐந்தினாலும் திருமுழுக்காட்டித் தேவர் கூட்டம் வழிபட, ஆதியும், அந்தமும் இல்லாதவனாகிய சிவனது திருவருள் அவர்கள் உள்ளங்களில் மலர்ந்த தாமரை மலரில் தோன்பேல வெளிப்பட்ட விளங்கிற்று. (அதனால் அவர்கள் பேரின்பம் பெற்றனர் என்றபடி.) இங்ஙனம் தன்னை வழிபட்டு உய்தற்காகவே ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப் பத்து இந்திரியங்களையும் அவை செயற்படுதற்கு ஆற்றலைத் தருகின்ற தன்மாத்திரைகள் ஐந்தினையும் சிவன் உயிர்கட்குப் படைத்துக் கொடுத்தான்.

குறிப்புரை :

`அதனை உணர்ந்து அக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்` என்பதாம். பசுவினின்றும் பெறப்படும் அரும் பொருள் ஐந்தும், `பஞ்ச கௌவியம்` எனப்படும். அவை பால், தயிர், நெய் கோசலம், கோமயம் என்பன. இவை ஐந்தும் ஒன்றாகக் கலந்த பொழுதே `பஞ்ச கௌவியம்` எனப் பெயர்பெறும். அவற்றைக் கலத்தற்கு அளவுகள் உண்டு. கோசலம் - பசுவின் நீர். கோமயம் - சாணம். இவை தூய்மையின் பொருட்டு மிகச் சிறிதளவிலே சேர்க்கப் படும். இவற்றது சிறப்புணராது இக்காலத்துப் புத்தறிஞர் சிலர், இவற்றை நீக்கி, வெண்ணெய், மோர் இவற்றைக் கொள்ளல் வேண்டும்` என்பர். வெண்ணெய், நெய் இவற்றை வேறு வேறாகவும், தயிர், மோர் என்ப வற்றை வேறு வேறாகவும் வைத்து எண்ணிக்கை காட்டும் இவரது செயல் வியப்பிற்குரியதே. இவர்க்குச் சாத்திரமும் வேண்டா; சம்பிரதாயமும் வேண்டா ஆகலின் இழரைத் தெருட்டல் அரிது.
\\\"இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலம் அனைத்து நீக்குவது\\\"l
என்பன முதலிய மெய்ம் மொழிகளை இவர்கட்குக் காட்டிப் பெருவதென்?
தனித்தனியாக ஆட்டும்பொழுது பால், தயிர், நெய் என்னும் மூன்றுமே ஆட்டப்படும். அவைகளை எவ்வளவும் ஆட்டலாம். அதனால் சிறிதளவே கொள்ளுதற்குரிய கோசல கோமயங்கள் தனித் தனியாக ஆட்டப்படா.\\\"ஓர் பான் ஐங்குணனும்\\\" என்பதை ஓர்பானும், ஐங்குணனும்` என்க. பூதங்களின் குணமாகிப் புலப்படுத்தல் பற்றித் தன்மாத்திரைகளை, `குணம்` என்றார்.
இதனால், சிவபூசையில் கொள்ளத்தக்க ஒன்று கூறப்பட்டது. சிவபூசை செய்த மானுடப் பிறப்பின் பயன் என்பதை இடம் வாய்த்துழி உடன் கூறினார்.
\\\"மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காகஅன்றோ!
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ\\\" 3
என்றது காண்க. இச்செய்யுளிலும்.
\\\"பாவமும் பழி பற்றற வேண்டுவீர்,
ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்
மேவ ராய்மிக வும்நினைந் துள்குமின்\\\" *
என்னும் திருமொழியிலும் `சிவன் ஆவிவ் அஞ்சினை உகந்து ஆடுபவன்` என்பது உணர்த்தப்பட்டது. அஃதே, \\\"ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்\\\" * என்று அருளிச்செய்யப் பட்டது. \\\"அரன் அஞ்சு ஆடுதல்\\\" என்பதை, `அரன் ஆடும் அஞ்சு` என மாற்றிப் பொருள் கொள்க.

பண் :

பாடல் எண் : 11

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

பொழிப்புரை :

`தேவர்` என்பார் யாவரும் ஒவ்வொரு பொருட்கு அதன் எல்லையளவும் உரிமை பூண்டு நிற்பவரே. அவ்வுரிமையை அவரெல்லாம் நல்ல இடத்திலிருந் எடுக்கப்பட்ட பூவையும், அவ்வாறே நல்ல இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரையும் கையில் ஏந்திக் கொண்டு நீரை முகந்து வரும் கரிய மேகங்கள் போல ஓரோர் தலத்தில் சென்று மிக்க அன்புடன் சிவபெருமானைப் பூசித்து அவன் பெரிதும் அருள் செய்யவே பெற்றனர்.

குறிப்புரை :

`அதனால் நற்பேறுகள் யாவும் சிவபூசையின் வழிப்பெறும் பயனேயாம் என்றபடி, `முன் செய் பூசா பலம்` என்னும் வழக்கினை நினைக.
``வண்டுளரும் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்உரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்`` *
எனவும் ஆன்றோர் அருளினமை அறிக. இன்னும்,
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண் ஆள்வீர், பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனோ டொன்ற லுற்றீர்,
நல்காமலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும்
அல காமுறுவீர், அரனடி யரை அலைமின்களே`` 3
என்றற்றொடக்கத்தனவும் காணத் தக்கன. `பிழைப் பின்றிப் பெற்ற பேரருள்` என்க. அருளால் பெற்றவற்றை ``அருள்`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், `சிவபூசையே யாவராலும் செயற்பாலது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :

உள்ளே ஓட்டத்தையுடைய கடலாகிய கங்கை விரியப்பெறுகின்ற சடைமுடியை உடைய சிவபெருமான் பொருட்டு உள்ளத்திலே நிறைவதாகிய அன்பு என்னும் கடலுள் மூழ்கிப் பூவை நிறையப் பறித்துச் சுமந்துகொண்டு போய் போலியாகிய நற் குணங்களை ஒழித்து உண்மை நற்குணங்களை உடையவராய் வழிபட நினையாதவர்கள் துன்பமாகிய கடலுள் மூழ்குகின்றனர்.

குறிப்புரை :

இதனை மேற்காட்டிய `கால் நகம் தேயத் திரிந்திரப் போர்`` என்றது திருமொழிகளில் அறிக. ``வெள்ளம்`` பெருக்கெடுத்து ஓடுதலைக் குறித்தது கடலுக்கு ஓட்டம் இன்மையால் ஓடுகின்ற கடல் கங்கா நதியாயிற்று. நீர்க்கடல் புறத்தே உளதாகலின், உள்ளக் கடல்`` என்றது பேரன்பினையாயிற்று. ``ஓர்சுமை`` என்றது மிகுதியைக் குறித்தது. கள்ளம் - பொய்மை. `கள்ளக் கடல், அள்ளற் கடல்` என்பன உருவகங்கள், `அல்லல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. இனி, ``அள்ளல், ஒருவகை நாகம்`` என்றலும் ஆம்.
மேல் சிவபூசை செய்தார் எய்தும் பயன்களைக் கூறியதனால், இதனால் அது செய்யாதார் எய்தும் துன்பங்களைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 13

கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.

பொழிப்புரை :

`தம் பிறவியை கழிக்கின்றார்கள்` எனக் கூறப் படும் பழியைப் பொருட்படுத்தாது அதனுள் அகப்பட்டு நிற்கின்ற உலகர் பலரும், கழி பொருந்திய கடலின் ஆரவாரம் போலும் உலகியல் ஆரவாரங்களை ஒழித்துச் சிவனை வழிபடுகின்றவர்கள் இட்ட பூக்களும், போதுகளும் நிரம்பக் கிடத்தைப் பலகால் கண்டா ராயினும் அவை விளைக்கும் பயனை அறியமாட்டார்கள். ஆயினும், அப்பழி நீங்க அவரது கூட்டத்தினின்றும் வேறுபட்டு நின்று வழிபடுவோரைத்தான் சிவன் தனது திருவருள் வியாபகத்துள் வைத்துப் பாதுக்காக்கின்றான்.

குறிப்புரை :

`கடற் கௌவைபோலும் கௌவை` என்க. கௌவை - ஆரவாரம் உடைத்தல் - அழித்தல். வழிபடுவார்` என்பது எதுகை நோக்கி விரித்தல் பெற்றது `வழிபடுவார்` என்புழி, `சிவனை` என்பதும், ``மேவி நின்றான்`` என்புழி, `சிவன்` என்பதும் அதிகாரத்தால் வந்தன. வழிபடுவாரது மலரும் மொட்டும்` என ஆறன் உருபும், எண்ணும்மையும் விரித்துக் கொள்க பலரும் அறியார்கள்` என்க. இனி, `பலரும் அறியார்களாய்ப் பழிப்படுவார்` என முடிப்பினும் ஆம். வெளிப்படுதல் - விட்டு நீங்குதல் - தனது திருவடி வியாபகத்துள் அடக்குதலே `உச்சி மேவுதல்` எனப்படுகின்றது.
இதனால், சிவபூசை செய்வாரது உயர்வு, செய்யாதாரது இழிவும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

பொழிப்புரை :

`பயனுடைய செயலாவது இது` என அறியும் அறிவு ஒன்றே ஒன்றுதான் இவ்வுலகில் உள்ளது. அஃது யாதெனின், பலவகை மலர்களைத் தூவி வழிபட்டு, அதனால் விளையும் பயனை அறிந்து அதனையே மேலும் மேலும் செய்பவர்க்குச் சிவன் தானே பலகாலும் வலியவந்து அருள் செய்தலை அறிதலேயாகும். ஆகையால் அவ்வறிவின்வழி ஒழுகுவார்க்குச் சிவன் அவர் சொல்லியவாறெல்லாம் என்றும் எளிவந்து அருளுவன்.

குறிப்புரை :

அவ்வாறு அருளுதலை, பொதிசோறு சுமந்து வந்தளித்தமை, இரந்துவந்து சோறிட்டமை, வற்கடம் வருத்தாது படிக்காசு தந்தமை, காசி வாசி தீர்த்து வழங்கினமை, துணைவிபால் தூது சென்று ஊடல் தீர்த்தமை முதலிய பலவற்றிலும் வைத்து உணர்க.
`பயனை அறியும் அறிவு` என்க பயன் தரும் செயலை, `பயன் என்றார் இரண்டாம் அடியின் இறுதியில் `அதனை யறிதல்` என்பது எஞ்சி நின்றது. ``அரன்`` என முன்னர்க் கூறினமையால், ``நயனங்கள் மூன்றுடையான்`` என்றது, `அவன்` என்னும் சுட்டளவாய் நின்றது. `வசனம்` என்பது `வயனம்` எனத் திரிந்தது.
இதனால், சிவன் தன்னை வழிபடுவார்க்கு இம்மையிலும் இனிதருள் செய்தல் கூறப்பட்டது.
``வேதன் நாரணன் ஆரணம் அறியா விழுப்பொருள்
பேதைபால்
தூதனாய் இருகால் நடந்திடு தோழன்
வன்மைசெய் தொண்டனுக்(கு)
ஆதலால் அடியார்களுக் கெளியான்
அடிக் கமலங்கள் நீ
காதலால் அணை; ஈண்டன வேண்டின
இம்மையே தரும கண்டிடே`` l
என அறிவுறுத்தினமை காண்க.

பண் :

பாடல் எண் : 15

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.

பொழிப்புரை :

சிவனைக் காணலுறுவார் யாவரும் அவனது திருவருள் வடிவாகிய அவனது திருவடியின் கீழ்த்தம்மைத் தாமே கட்டி வைத்து, அவனை மிக்க மலர்களைத் தொழுது துதித்தலையே செய்வர். அங்ஙனமன்றி, எனக்கு எதிர் தோன்றிக் காட்சி வழங்கியவனும், என்றும் கெடுதல் இல்லாத முதற்பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனை யாரும் தாம் இருந்த நிலையிலேயிருந்து காணமாட்டார்கள்.

குறிப்புரை :

பின்னர், ``யாரும் உணரார்`` என்றதனால், முன்னர் ஏத்துதல் முதலியவற்றைச் செய்பவர் உணர்வோராதல் பெறப்பட்டது. ஆர்த்தல் - பிணித்தல். ``அருட் சேவடி`` என்பதன் பின் `கீழ்` என்னும் பொருள்பட வந்த கண்ணுரு இறுதிக்கண் தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு பட்டு என்றபடி. துதித்தல் நிலை பெற்றிருத்தல்; என்றது, ஆட்படாது தனிநிற்றலைக் குறித்தது.
``தொழுவார்க்கே யருளுவது சிவபெருமான்`` 3
என்று அருளிச் செய்தமை காண்க.
இதனால், `சிவனை இலிங்கத் திருமேனியில் மலர்தூவி வழிபடாதார் காணமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

பொழிப்புரை :

தேவர்கள் தத்தமக்கு வாய்ப்பான ஓரோர் இடத்தை அடைந்து நிலத்தல் நால்வகையாகத் தோன்றுகின்ற பூக்களையும், நீரையும் சுமந்து சென்று சிவனைத் திருவுருவங்களில் வழிபட்டு, அதனாலே மூவரில் ஓரோரொருவராயும், அவர் தவிர ஏனைத் தேவரில் ஓரொருவராயும் தலைமை பெற்ற அத்திருவருட் சிறப்பினை யறிந்து அவ்வாறு அவனை வழிபட வல்லார் யாவர்!

குறிப்புரை :

`அத்தன்மையோர் மிக அரியர்` என்றபடி, `திசை` என்பது `இடம்` என்னும் பொருட்டாய் நின்றது. நால்வகைப் பூக்களாவன - `கோட்டுப் பூ, கொடிப்பூ, நீர்ப்பு, புதர்ப்பூ` என்பன. இவை யாவும் நிலத்திலே தோன்றுதலின் அவை யாவும் அடங்க, `மண்ணோடுறும் பூ`` என்றார். ``மூவரிலும் பன்மையிலும் முதல்வராய்`` என்க. `பலர்` எனற்பாலதனை, ``பன்மை`` என எண்ணின்மேல் வைத்துக் கூறினார். ``நின்ற`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
மேல், `உழைக்கொண்ட பூநீர்`` என்னும் மந்திரத்துள் `எல்லா நலங்களும் சிவ பூசையின் பயனேயாதலை விளக்குதற்குக் கூறிய அதனை, அஃதுணர்ந்து பயன் பெறுபவர் உலகத்து அரியர்` என்ப துணர்த்துதற்கு இங்குக் கூறினார் என்க. இதன் ஈற்றடி எதுகை பெறாது வந்தது.

பண் :

பாடல் எண் : 17

உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

பொழிப்புரை :

நீரும், பூவும் சுமந்து சென்று நோற்க வல்லவர் நடுவிலே நீவிரும் அமர்ந்திருந்து அவரைப்போல நீவிரும் சிவனிடத்தும் பெரிய தவத்தைச் சிறிதும் குற்றமறச் செய்தலில் கருத்துடையீராய் அவனது திருவடிகளில் பலவகைப் பட்ட மலர்களைத் தூவி, அன்புக் கண்ணீரைப் பொழிதலால் மழையைப் பெய்யும் மேகத்திற்கு ஒப்பாகும்படி அச்செயலில் நிலைத்து நில்லுங்கள்.

குறிப்புரை :

`மலர் ஏந்தி, மலர் தூவி`` என இருகாற் கூறினமையால் இதற்கு இவ்வாறுரைத்தலே கருத்தென்க. மெய்யன்பர் மெய்யன் பரையே ஏற்றுக்கொள்ளுதல் பற்றி, அவர் நடுவில் இருந்து பூசை செய்க` என்றார். அணிகலத்தை உணர்த்தும் `இழை` என்பது இங்குச் சிலம்பினைக் குறித்து நின்றது.
இதனால் `மெய்த் தொண்டரின் உடன்படும் பூசையே பூசையாம்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வென்று விரைந்து விரைபணி என்றனர்
நின்று பொருந்த நிறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.

பொழிப்புரை :

உலகியலை அது மயக்காதவாறு வென்று போக்கி, `இனியாம் விரைந்து செய்யத்தக்க பணியாது` என எண்ணி நின்றவர் யவரும், என்றும் நல்லதொரு பணியில் நின்று சிவனை அடை வதற்கும், சிவனுக்கு மன நிறைவான பண தமக்குக் கிடைத்தற்கும் மிகுந்த நீலையும், பூவையும் கொண்டு ஆட்டியும், தூவியும் வழி பட்டால், சிவன் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வான். இது படைப்புக் காலத்திற்றானே அப்பெருமானால் சொல்லப்பட்டது.

குறிப்புரை :

``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை`` 8
என உரைத்தருளினமையை நோக்குக.
``என்றனர்`` என்பது வினையாலணையும் பெயர். `என்றனர் தொழுதிடில் நித்தனும் கொண்டிடும். இஃது அன்றே கூறியது` என முடிக்க மலருக்குரிய தூவுதல் கூறினமையின், சலத்திற்குரிய சுட்டுதல் வருவிக்கப்பட்டது. `நித்தலும்` என்பது பாடமாயின் `சிவன்` என்பது வருவிததுக் கொள்க. ``கூறியது`` என்னும் பயனிலைக்கு `அவன்` என்னும் எழுவாய் தோன்றாது கூறியது சிவாகமங்களில்` என்க.
இதனால், துறந்தார் சிவபூசையைக் குறவின்றி நிறைவாகச் செய்து சிறந்த பயனைப் பெறற் பாலர்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.

பொழிப்புரை :

சிவனை நாள்தோறும் இலிங்கததில் வைத்து, `சுயம்பு` முதலிய பெயர்களை மிகவும் சொல்லி மலர்களைச் சாத்தியும். திருப்பாடல்கள் பலவற்றால் மிகத் துதித்தும் நின்றால் காணுதல் கூடும். அஃது இயல்வதொன்றுறாய் இருக்கவும் அதனைச் செய்யாது புறக்கணித்துப் போவதால் உலகத்தார் சிவனைக் காண்கிலர். ஆயினும் இங்குக் கூறியவாறு ஆத்தி முதலிய மலர்களைத் தூவி அருச்சித்தலே அக அழுக்காகிய மும்மலங்களும் நீங்குதற்குரிய வழி. மும்மலங்களும் நீங்கினால் பெருந்திசையாகிய வீட்டு நிலையிற் செல்லுதல் எளிதாகும்.

குறிப்புரை :

``வைத்தும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. வைத்தல் - தாபித்தல். `இலிங்கத்தில்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஏற்றுதல் - மிகுவித்தல். சிவனுக்கு ஆத்தியும், கொன்றையும் சிறப்பாக உரியன ஆதலின் அவற்றுள் ஒன்றை விதந்து கூறினார்.
இதனால், `மலம் நீங்கி வீடு எய்துதற்கு வழி சிவ பூசையே` என்பதும்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம்
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.

பொழிப்புரை :

உடம்பில் கீழாக உள்ள மூலம் முதலிய ஆறும், அதற்குமேல் ஏழாவதாக உச்சியில் உள்ளதும் ஆக ஏழு உறுப்புக்களும் தாமலை மலர் வடிவின அவை, ``ஆதாரங்கள்`` எனப்படும். ஏழாம் தானத்திற்குமேல் பன்னிரண்டங்குல அளவு அருவமாய் நிற்றலால் அது `நிராதாரம்` எனப்படும். அந்த நிராதாரத்தையே, ``ஆவிக் கமலத்தின் அப்புறம்`` என்றார் இனி, அப்பன்னிரண்டங்குலத்திற்கு அப்பால் உள்ளது ``மீதானம்`` எனப்படும். `துவாதசாந்தம்` என்பதும் இதுவே. இதனையே, ``அப்புறத்தின் புறம்`` `மீதானமே பரமசிவனுக்கு இடமாவது` எனக் கூறப்படுதலால், அவ்விடத்தில், ``மேவித் திரியும் விரிசடை நந்தியை`` என்றார்.
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 3
என்றது காண்க. கூவி - அழைத்து. ஆதாரங்களையும், நிராதாரங் களையும், அதற்கு மேலேயுள்ள மீதானத்துயம் கடந்து அப்பால் உள்ள பரமசிவனை அழைக்க வேண்டுதலால், அதன் பொருட்டடு மலர்களை இருகைகளையும் தாமரைப் போது வடிவமாகக் குவித்தலும், மலர்த்தலும் இன்றி இடைப்பட்ட வடிவமாக வைத்து அதனுட் கொண்டு, இருதயம் முதலாக மேலுள்ள ஆதாரங்களில் பிராசாத மந்திர உச்சாரணத்துடன் முறையே மீதானம் மட்டும் உயர்த்துவர். அதன்பின்பு அங்கு இருகைகளையும் மலர்த்தி அவற்றுள் பரமசிவன் அளவிடற்கரிய ஒளிவடிவாய் வந்ததாகக் கருதி, கைகளை உயர்த்திய முறையிலே மீள இறக்கிக் கொணர்ந்து சிவலிங்கத்தின் உச்சியில் அம் மலர்களைச் சொரிந்து முன்னமே சதாசிவ மூர்த்தமாகப் பாவித்து நிறுத்தப்பட்ட அம்மூர்த்தியின் இருதயத்தில் இருகைகளையும் கவிழ்த்து அமைக்கும் முறையால் இருக்கப் பண்ணுவர். அழைத்தல், அல்லது கொணர்தல் `ஆவாகனம்` எனவும், இருத்துதல் `தாபனம்` எனவும் சொல்லப் படும். அவற்றையே, ``கூவிக் கருதி`` எனவும் ``கொடுபோய்ச் சிவத்திடைத் தாபித்தல்`` எனவும் கூறினார்.

குறிப்புரை :

``தாவிக்கும் மந்திரம் தாம் அறியார்`` என்றாரியினும், `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றலே கருத்தென்க. ``கூவிக் கருதிக் கொடுபோய்த் தாவித்தலை அறியார்`` என்றதனால், `இவற்றுள் ஒன்றையும் அறியார்` என்தாயிற்று. இனி, `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றதனால், `சிலர் சிவ பூசை செய்யினும் முறைப்படி ஆசிரியரை அணுகி அவர் அருளிச்செய்தபடி செய்தலை அறியார்` என்றதும் ஆயிற்று. ஆவி - உயிர். அஃது ஆகுபெயராய் அஃது இருக்கும் இடமாகிய உடம்பைக் குறித்தது. ``ஆவி`` குளமுமாம் ஆதலின், குளத்தின் கண் உள்ள தாமரை` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது.
இதனால், சிவபூசை செய்யத்தக்கது` என்பதும், `செய்யுங்கால் முறைப்படி செய்தலே சிறப்பு` என்பதும் கூறப்பட்டன.
இம்மந்திரத்தின் பின் சில பிரதிகளில் காணப்படுகின்ற ``சாணகத் துள்ளே`` என்னும் பாடல் சில பிரதிகளில் இல்லை. அது நாயனார் வாக்காகத் தெரியவில்லை.

சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணு மளவும் கருத்தறிவா ரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

அதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``பெருந்தன்மை நந்தி`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்கு உரியது.

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றோரே.

அதனை அடுத்துக் காணப்படும் ``சமைய மலசுத்தி`` என்பது ஐந்தாம் தந்திரத்தில் ``சரியை`` என்னும் அதிகாரத்தில் வந்தது.

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆமந் திரசுத்தி
சமையுநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமா னார்க்கபி டேகமே.


பண் :

பாடல் எண் : 21

ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே.

பொழிப்புரை :

பாற்கடலில் பள்ளி கொள்பவனாகிய திருமாலும், மற்றும் பிரமனும் எத்துணையோ யுகங்கள் வாழ்பவராயினும் சிவபெருமான் அவர்கட்கு எட்டாதவனாகவே யிருக்கின்றான். அதனால், அளவற்ற பிறவிகளில் அளவற்ற யுகங்களில் சிவனைப் பொது நீக்கியுணர்ந்து வழிபடுபவர்கட்கல்லது ஏனையோர்க்கு அவரது வினை அவனை அடைய ஒட்டாது.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. யாதொரு பிறப்பும் நிலையாததே ஆகையால், `ஊழிதோறும் உணர்தல் வேறு வேறு பிறப்பை எடுத்து` என்பது வெளிப்படை. உணர்தற்குச் செயப்படு பொருளாகிய `சிவனை` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனால், ``உணர்தல்`` என்றது சிவனை உணர்தலேயாகையால், பொது நீக்கி உணர்தலாயிற்று. ``உணர்வும்`` என்ற உம்மையால் பின்னின்ற உணர்தல், உணர்ந்து அடைதலைக் குறித்தது.
``பல்லூழி காலம் பயன்றரனை அற்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இவ்வுயிர் - இவ்வுலகத்துயிர்.
இதனால், `சிவனை உரை அடைதல் சிவஞானிகட்கே கூடும்` என்பதும், `சிவஞானம் சிவபூசையாலன்றி வாராது` என்பதும் முடித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.

பொழிப்புரை :

எனக்கு இனி வேறொரு துணையின்றாகத் தாம் ஒருவரே துணையாய் நிற்கின்ற நந்தி பெருமானது திருவடிகளைப் பற்றி நின்றே உயிர்கள் பற்றி ஒழுகுதற்குரிய இறைநூல், அவற்றின்வழி இறைவனை வழிபடும் வழிபாடு, அகக்கோயில்களாகிய ஆதாரங்கள், முப்பத்தாறு தத்துவங்கள், அத்தத்துவங்களைக் கடந்து அவையனைத் திற்கும் மேலே செல்கின்ற தூய்மை ஆகிய இவைகளை நான் கருத்தாக உணர்ந்து, உலகர்க்கும் உரைப்பேனாயினேன்.

குறிப்புரை :

`இது குருவருளால் கிடைத்த பேறு` என்பதாம். இறைவன் உயிர்களின் பொருட்டு அருளிச்செய்தன ஆதலான், அவனது நூலாகிய வேத சிவாகமங்களை ``உபதேசம்`` என்றார். ``போதம்`` இரண்டில், முன்னது நடத்தல்; அஃதாவது ஒழுகுதல். பின்னது, கடந்து செல்லுதல். வேதச் சிறப்பு. ஆகமச் சிறப்பு முதலி யவைகளை நாயனார் முதற்றொட்டுக் கூறிவருதல் வெளிப்படை. தமது வரலாற்றை உணர்த்துதற் பொருட்டுப் பாயிரத்துள், ``நந்தி யருளாலே நாதனார் பேர்பெற்றோம்`` எனக் கூறிய அதனை இங்குக் குருவருளின் பெருமையை உணர்த்துதற் பொருட்டுக் கூறினார். குருவருளால் தாம்பெற்ற பேற்றினையும், குருவை மறவாமையும் கூறியதனால், `நீவிரும் குருவை அடையின் இப்பேற்றினைப் பெறலாம். பெற்றபின் குருவருளை மறக்கலாகாது` என்பது குறிப் பாயிற்று, ``போகின்ற`` இரண்டில் முன்னதில் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. தூய்மையை, ``பொற்பு`` என்றார். வீட்டு நிலை, சுத்தநிலையாதலை அறிக.
இதனால், குருவருளின் சிறப்பும், அதனைப் பெற்றோர் அவரை நினைந்தே எதனையும் செயற்பாலர்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.

பொழிப்புரை :

சிவனது திருவருளை மிகப்பெற்ற நந்தி பெருமான், அப்பேறுடைமை பற்றியேயன்றிச் சிவனோடு மாறுபட்டுப் பகைச் செயலையே புரிகின்ற ஆணவ இருளுக்குப் பகலவனாய் இருத்தல் பற்றியும் அவரை முனிவரும், தேவரும் தம் இதயத்திலே எப்பொழுதும் வைத்துத் தியானிக்கின்றனர்.

குறிப்புரை :

சிவனது திருவருளினும் பெரியது வேறொன்றின் மையால் அதனையே, ``பெருந்தன்மை`` என்றார். ``பெருந்தன் மையை உடைய நந்தி`` என்க. நேமி சக்கரம் ஆதலின் அது `பரிதி` என்னும் பெயரைத் தோற்றுவித்துப் பகலவனை உணர்த்திற்று. `நேமியாம் இருந்தன்மை` என்க. இருந்தன்மை - சிறப்பு. உம்மை இறந்தது தழுவிற்றாகலின் அதற்கேற்ற பொருள் முன்பு வருவிக்கப் பட்டது. ``என் சித்தத்தே தன்னை வைத்தருளிய குருமூர்த்தி * ``என்னையிப் பவத்திற் சேராவகை`` என்றபடி ``வானவர்`` என்பதில், ``வான்`` என்பது, `உயர்வு` என்னும் பொருட்டாய் நிற்க. ``வானவர்`` என்பது, `உயர்ந்தோர்` எனப் பொருள் தந்தது. ``வானவர் தேவர்`` உம்மைத்தொகை. இதனை, ``தாங்கி நின்றார்`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. `தாங்குதல் அறிவினால்` ஆகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
இதனால் `முனிவர், தேவர் என்பவரும் குருவின் வழியே ஞானம் பெறுகின்றனர்` எனக் குருவருளின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.

பொழிப்புரை :

காட்டில் பொருந்தியுள்ள கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தெடுக்கப்பட்ட நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தையும், அதுபோலவே ஆகாயம் அளாவக் குவிக்கபப்ட்ட பெருமை மிக்க மலர்கலையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் உடம்பைத் தம்மின் வேறாக உணர்ந்து அதன்கண் உள்ள பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்பவர்க்கல்லது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

குறிப்புரை :

`அவனை அவ்வாறு உணரும் உணர்வைக் குருவினால் அன்றி அடைய இயலாது` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `மேற்கூறிய சிவபூசையும் குருவருள் பெற்றே செயற்பாலது ஆகலின், சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

பொழிப்புரை :

குருவருளால் கேள்வியாகப் பெற்ற ஞானத்தைப் பின் சிந்திதத்ல, தெளிதல் என்பவற்றின்பின் நிட்டையாக முதிரப் பெறின் அவ்விடத்தில் அந்த நிட்டையில் நிற்றலே பரசிவ பூசை யாகும். (ஆகவே அந்நிலையை அடைந்தவர்க்கு ஏனையோர்க்குக் கூறப்பட்ட சிவபூசைகள் வேண்டாவாம்) அந்நிலையை அடையாது கேள்வி முதலிய மூன்றில் நிற்போர்க்கு, ``உள்ளம் பெருங்கோயில்`` என்னும் மந்திரத்துட் கூறியவாறு செய்யும் ஞான பூசையே சாதனமும், அப்பூசையின் பயனாகத் தற்போதம் கழன்றிருத்தலே பயனும் ஆகும்.

குறிப்புரை :

`ஞானம் குருவருளாயன்றி வாராது` என்பது மேற் கூறப்பட்டமையால், இங்கு ``மேவிய ஞானம்`` என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``மெய்ப்பரன்`` என்பது `உண்மைச் சிவன்` என்பதாய், பரவசிவனைக் குறித்தது. ஞானமாவது, அவனையறியும் அறிவேயாதல் அறிக. `நிட்டையே ஞானத்தின் நிறை நிலை` என்றற்கு அதனை `ஞானத்தில் ஞானம்` என்றும், ஏனைக்கேள்வி முதலிய மூன்றனையும், `ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம்` என்றும் சிவாகமங்கள் கூறுதல் காண்க.
இனி நிட்டை நிலையை அடைந்தோரும் அந்நிலையிலே மீட்சியின்றி நிற்கமாட்டாது மீள்வாராயின் ஞானத்திற் சரியை முதலிய வற்றில் உள்ளோர்க்குக் கூறப்பட்ட நெறியிற்றானே நிற்பர். அப் பொழுது அவையெல்லாம் `உபாயநிட்டைகள்` என, `நிட்டை` என்றே சொல்லப்படும். ஏனையோர் செய்வன எல்லாம் எவ்வகையாலும் `சரியை, கிரியை, யோகம்` என்றே சொல்லப்படும். நிட்டைக்குப் பயனே ஆனந்தமாக, உபாய நிட்டைக்குப் பயன் அருள்மயம் ஆதலே என்பதுபற்றி, `செயலறல் தானே சேவடி சேரல்` என்றார்.
இதனால், `நிட்டை நிலையை எய்தினோரும் அதனில் நிற்க மாட்டாது மீள்வாராயின் பின்னும் கிழ்நிலையை எய்தாமைப் பொருட்டு, குருபூசை சிவபூசைகளைச் செயற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.

பொழிப்புரை :

உலகீர், `காலை, நண்பகல், மாலை` - என்னும் மூன்று போதிலும் சிவனை வழிபட விரும்புங்கள். அவ்வழிபாட்டில் `நம` என்பதை இறுதியில் உடைய மந்திரம் சிறப்புடையனவாகும் ஆதலால் அவற்றையே மிகுதியாக உங்கட்குப் பயனை விளைக்கும் வித்துக்களாக விதையுங்கள். அவ்வாறு விதைப்பதற்குரிய நிலமாய் விளங்குவன `கதிர், மதி, தீ` - என்னும் முச்சுடர்களுமாம். (ஆகவே, அவ்விடத்து அவற்றை விதையுங்கள்) அச்சிவன் `நந்தி` என்னும் பெயருடைய குருமூர்த்தியாயும் விளங்குவன்.

குறிப்புரை :

தமக்கு நந்திபெருமான் குருவாயினமை பற்றி, ``நந்தி நாயகனாகும்`` என்றருளிச் செய்தாரேனும், `அவரவர்க்கு அருள் செய்த அவ்வக் குருமார்களாயும் அவன் விளங்குவான்` என்பதே கருத்தென்க. எனவே, `இங்கு விதிக்கப்பட்ட முறையிலே குருவை வழிபடுக` என்றதாம். `குருவருள் பெற்றோர்க்குக் குருவே சிவனாதல் பற்றி, முச்சுடர் முதலிய எவ்விடத்தும் அவர் குருவையே காண்பர்` என்பதாம். ``நாயகன்`` என்பது இங்குக் குருவைக் குறித்தது.
செய்யுள் நோக்கி ``உச்சி`` முதற்கண் வைக்கப்பட்டது. ஆன்மார்த்த வழிபாட்டிற்கு முப்போதே அமையும் ஆதலின் அவற்றையே கூறினார். காலையின் விரிவு விடியலும், மாலையின் விரிவு எற்பாடுமாக நள்ளிரவுங் கூட்டி ஆறுகாலம் பரார்த்த வழிபாட்டில் கொள்ளப்படுகின்றன. அவை முறையே உஷத்காலம், பிராதக் காலம், மாத்தியானிக காலம், சாயங்கால உபசந்தி (பிரதோஷகாலம்) சாயங்கால மகாசந்தி (இரண்டாம் காலம்) அர்த்த ஜாமம் எனப்படுகின்றன. மலர் தூவி அருச்சித்தல் முதலாகப் பெரும் பாலானவற்றிற்கு உரியவாகும் சிறப்புப் பற்றி, `நம` என்னும் மந்திரங்களையே குறித்தார்.
இதனால், குருவழிபாடு முப்போதும் செய்தற்குரியதாதல் கூறப்பட்டது.
இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``புண்ணிய மண்டலம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்திற்கு உரியது.

பண் :

பாடல் எண் : 6

இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

பொழிப்புரை :

`சந்திர கலை` எனவும், `சூரிய கலை` எனவும் சொல்லப்படுகின்ற இடநாடி மூச்சும், வலநாடி மூச்சுக் காற்று இயங்கின் மனம் புறத்தே ஓடுதலல்லது அகத்தே அடங்கி நில்லாது. ஆகவே, அது பொழுது செய்யும் வழிபாடு குற்றம் உடைத்தாம் ஆதலின், ``அஃது அசுரர்க்கு வாரியாம்`` என்றும், மூச்சுக்காற்று இயங்காது அடங்கின் மனமும் புறத்தே ஓடாது அகத்தே அடங்கி நிற்கும். ஆகவே, அதுபொழுது செய்யும் வழிபாடு குற்றமில்லாதாம் ஆதலின், ``அது நந்திக்கு மாபூசையாம்`` என்றும் கூறினார். சிவ பூசையே பெரிய பூசையாதல் பற்றி, ``மாபூசை`` என்றார். மூச்சுக் காற்றை மேற்கூறிய இருவழிகளிலும் செல்லாது அடக்குதலே பிராணாயாமமாம். அம்முறையால் பிராணனை அடக்கியவழி கும்பகமாம். அப்பொழுது மூச்சுக் காற்று நடுநாடியிற் செல்லும். அங்ஙனம் செல்லும்பொழுது தியானங்கள் இனிது கைகூடும். ``எந்நிலையில் நிற்போரும் `வழிபாடு` என்பதை மேற்கொள்ளும்பொழுது பிராணாயாமம் செய்து செய்க`` என்றபடி. வாரி - வருவாய் அறவே விலக்குதற் பொருட்டு ``அசுரர்க்கு வாரியாம்`` என்றாரேனும், `பயன் அற்பமாம்` என்றலே கருத்து என்க.

குறிப்புரை :

இதனால், எவ்வகை வழிபாடும் பெரும்பயன் தருதற்கு ஆவதொரு வழி கூறப்பட்டது இதனை எந்த வழிபாடு கூறுமிடத்திலும் கூறலாமாயினும் குருவழிபாடு சிறந்தமை பற்றி இங்கே கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

பொழிப்புரை :

சந்திர கலையும், சூரிய கலையுமாகச் சொல்லப் படுகின்ற மூச்சுக்காற்று அடக்கப்பட்டபொழுது நடுநாடி வழியாக மேல் ஏறி விந்துத்தானமாகிய ஆஞ்ஞையையும், நாதத்தானமாகிய ஏழாந்தானத்தையும் கடந்து அதற்குமேல் பிரம ரந்திரம் வழியாகப் பன்னிரண்டங்குல அளவுள்ள நிராதாரத்தே செல்லின் அந்நிலை `சாக்கிரத்தில் துரியம்` எனப்படும். அதனையும் கடந்திருப்பது மீதானம். அது சாக்கிரத்தில் அதீதத்தானம். அந்நிலையில் சிந்தனையைச் செலுத்திச் சிவனை வழிபடுதலே எல்லாவற்றிலும் மேலான வழிபாடாம்.

குறிப்புரை :

``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` *
என்னும் திருவுந்தியார் இங்கு நோக்கத் தக்கது.
மீதானமே, ``துவாதசாந்தப் பெருவெளி`` என்றும், துரியங் கடந்த பரநாத மூலத்தலம்`` * என்றும் சொல்லப்படுகின்றது. ``சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் இந்நிலையினரே`` எனச் சேக்கிழார் விளக்குதல் காண்க. 8
என்று - எனப்பட்டு. எழுகின்றது - எழுகின்ற மூச்சுக் காற்று. ஓர் - சிந்திக்கின்ற; வினைத்தொகை. ஆகி - இடத்தால் அவையேயாய். ``சென்றிட்டு`` என்பதை ``மீதானத்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `அதீதத்ததே` என்பது இடைக் குறைந்து ``அதீதத்தே`` என நின்றது.
இதனால், `எல்லா வழிபாட்டிலும் மேலான வழிபாடு இது` என அதன் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மனபவ னங்களை மூலத்தின் மாற்றி
அநித உடல்பூத மாக்கி யகற்றிப்
புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத்
தனிஉறு பூசை சதாசிவற் காமே.

பொழிப்புரை :

மனத்தின் ஓட்டத்திற்குக் காரணமாயுள்ள இட ஓட்ட வல ஓட்ட மூச்சுக் காற்றுக்களை அவ்வழியே ஓட விடாது தடுத்து நடு நாடி வழியாக ஓடும்படி மாற்றி, பூத காரியமாய் நின்று அழிகின்ற உடலை அவ்வாறு அழியாது நிலைத்திருக்கின்ற உடலாகச் செய்தற் பொருட்டு அதன் காரணமாகிய பூதங்களில் ஒடுக்கி அவையாகச் செய்யுமாற்றால் போக்கி, மீண்டு அது திருவருளினின்றும் தோன்றச் செய்யுமாற்றால் திருவருள் உடம்பாக ஆக்கி அதனுள் தான் புகுந்து சிவமாகி அதனானே சிவானந்தம் மேலிட நின்ற வழிபடும் வழிபாடே ஒப்பற்ற வழிபாடாகும். அதனையே சதாசிவ மூர்த்தி ஏற்பர்.

குறிப்புரை :

``மூலம்`` என்பது ஆகுபெயராய் அதற்கு மேலுள்ள சுவாதிட்டானத்தையும், பின் அங்குள்ள சுழுமுனை நாடியையும் குறித்தது. ``மூலத்தான்`` என்பது பாடமாயின், `மூலமாகிட அவ் விடத்து` என உரைக்க. `அநித்தம்` என்பது, ``அநிதம்`` என இடைக் குறைந்து நின்றது. ``புக்கு`` என்றதனால் முன்பு வெளியே சென்றிருந் தமை பெறப் பட்டது. சிவபூசையைத் தொடங்குதற்கு முன்னே யோக பாவனையால் பூதசுத்தி செய்யுமாற்றால் பௌதிக உடலை அழித்துத் திருவருள் உடம்பை உண்டாக்கி அதில் தான் புகுந்து சிவோகம் பாவனையால் சிவமாகியே பூசையைத் தொடங்குதலும், அதன் பொருட்டு பூத சத்திக்கு முன்னே தன்னைப் பௌதிக உடம்பினின்றும் பிரித்துத் துவாத சாந்தமாகிய மீதானத்திலுள்ள சிவத்தின்பால் சேர்த்து நிறுத்திப் பின்பு மீட்டும் முன்ரே் கொணர்ந்து திருவருள் உடம்பிற் சேர்த்துச் சிவமாகின்ற முறை இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்தலே உண்மைச் சிவபூசையாகலானும், இதனைக் குரு முகமாக அன்றி அறிதல் கூடாமையால் `அவ்வாறு அறியாது தாம் தம் அறிந்தவாறே செய்யும் பூசைகள் எல்லாம் பொதுச் சிவ பூசைகளே` என்று சிவாகமங்கள் கூறுகின்றன. அதனையே இங்கு நாயனார் உணர்த்தினார் என்க.
இதனால், சிவபூசை உண்மைப் பூசையாக அமையுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பகலு மிரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசற் கிணைமல ராகா
பகலு மிரவும் பயிலாத பூசை
சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

பொழிப்புரை :

பகலும், இரவும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றுகின்ற பூசைகள் காலத்தைக் கடந்தவனாகிய சிவனுக்கு முற்றிலும் நேர்படும் பூசைகள் ஆகா. மற்று, அவ்வேறுபாடு தோன்றாத பூசைகளையே சிவன் முழுமையாக ஏற்பான்.

குறிப்புரை :

`உலகியல் முற்றும் மறக்கப்படாத வரையில் பகலும், இரவுமாகிய காலவேறுபாடுகள் தோன்றாமற் போகமாட்டா. அதனால் அவை சிவன் ஒருவனையே நினைந்து செய்யும் பூசைகள் ஆதல் இல்லை. உலகியல் முற்றும் மறக்கப்பட்ட பொழுது மேற்கூறிய வேறுபாடுகள் தோன்றமாட்டா ஆதலால் அந்நிலையில் நின்று செய்யும் பூசைகளே சிவனேயன்றி வேறொன்றையும் நினையாத பூசையாம்` என்றபடி.
சண்டேசுர நாயனார் சிவபூசை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்தம் தந்தை வந்து அவரை வைததையும் தண்டால் பலமுறை முதுகிற் புடைத்ததையும் அவர் சிறிதேனும் அறியா திருந்ததையும், பின்பு அவன் சிவபூசைக்கு அழிவை உண்டாக்கியதை உடனே அறிந்ததையும் இங்கு நினைவு கூர்க. அதுபோலும் சிவபூசையே முழுமையான சிவபூசை யாகும்.
``கையொன்று செய்ய விழியொன்று நாடக்
கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப்
புலால்கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே``l
எனப் பிற்காலப் பெரியார் அருளிச் செய்தது இக்கருத்துப் பற்றியேயாம். மலரால் செய்யப்படுவதனை ``மலர்`` என்று உபசரித்தார். சகலமும் - முற்றிலும்.
இதனால், சிவபூசை நிரம்பாவாறும், நிரம்புமாறு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

இராப்பக லற்ற இடத்தே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்(து)
இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.

பொழிப்புரை :

இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையேயிருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி தேனை வேறுநினைவின்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.

குறிப்புரை :

``தேறல்`` என்றது `தேன் துளி` என்னும், பொருட்டாய்ச் சிவானந்தத்தை ஓரளவே சுவைத்ததையும், ``இன்பம்`` என்றது `இன்ப வெள்ளம்` என்னும் பொருட்டாய் அதில் மூழ்கித் திளைத்ததையும் குறித்தன. யோகாவத்தையில் தியானம் துரியமும், சமாதி துரியாதீதமும் ஆதலை விளக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
இதனால், சிவ பூசையைத் தாம் நிரம்பச் செய்து பெற்ற அனுபவத்தை விளக்கி முடித்தவாறு.

பண் :

பாடல் எண் : 1

படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.

பொழிப்புரை :

கொடித் துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது எங்கும் இயங்குகின்ற உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கின்ற சிவனுக்குச் சேரமாட்டாது; அங்கேயே இருந்துவிடும். ஆனால், எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது அந்தச் சிவனுக்கு ஆதலுடன், கொடித்துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற சிவனுக்கும் போய்ச் சேர்வதாகும்.

குறிப்புரை :

`ஆகவே, இருவரையும் வழிபடல் வேண்டுமாயினும், இயங்கும் கோயிலினுள் இருக்கும் சிவனை வழிபடுதல் தவிரத் தக்கதன்று` என்றபடி.
படம் - சீலை. ``ஆடும்`` என்றதனால், அது கொடிச் சீலையைக் குறித்தது. ``கட்டடமாக மக்களால் அமைக்கப்பட்ட கோயில்` என்பதை விளக்க. ``படம் ஆடு அக்கோயில்`` எனவும், ``உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்`` என்றபடி, ``உடம்பாகிய கோயில்`` என்பதை விளக்க. ``நடமாடு அக்கோயில்`` எனவும் கூறினார். நடமாடுதல் - உலாவுதல். நடம் ஆடுதல்` என்பது, `நடனம் ஆடுதல்` எனப் பொருள்தருமாயினும் உலகவழக்கில் `உலாவுதல்` என்னும் அளவாய் நிற்றலின் அஃதேபற்றி ``நடமாடும் அக்கோயில்`` என்றார்.
`திருக்கோயிலினுள் இருக்கும் திருமேனிகள் மந்திர சாந்நியத் தால் சிவனேயாய் விளங்குதல் போல, அடியார்களது ஆன்ம சைதன் னியமும் ஆழ்நிலைத் தியான சமாதிகளாலும், அருள்ஞான உணர் வாலும் சிவனேயாம் ஆதலின், இடவேறுபாடு பற்றி வேற்றுமை யில்லை` என்றற்கு இரண்டினையும், ``பகவன், நம்பன்`` என்றே குறித் தருளினார். இதனால் `மாகேசுரர் மகேசுரனே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. ``ஒன்று`` என்றது, `எடுத்துக்காட்டிற்கு ஒன்று` என்றவாறு.
இதனால், `இலிங்க பூசை இயலாதாயினும் சங்கமபூசை ஒழியாது செய்யத்தக்கது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

பொழிப்புரை :

`சிவனிடத்தினின்று பிறிதொன்றால் நீக்கப்படாத உள்ளத்தினையுடைய மாகேசுரர்கள் மனமகிழ்ந்து உண்ட பொருள் மூன்றுலகங்களும் உண்ட பொருளாகும்; (அவற்றிற்கு அது பயனாகும்` என்பதாம்) அதுபோலவே அவர்கள் பெற்றுக்கொண்ட பொருளும் மூன்றுலகங்களும் பெற்றுக்கொண்ட பொருளாம், என்று நந்தி பெருமான் எங்கட்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.

குறிப்புரை :

`சிவன் இலிங்க பூசையை ஏற்று மகிழ்தலினும் தன் அடியவர் பூசையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி எய்துவன் ஆதலின், அம்மகிழ்ச்சியால் அவனை உயிராக உடைய உலகம் அனைத்தும் மகிழ்வெய்தும்` என்றபடி. `அத்துணை மகிழ்ச்சிக்குக் காரணம் அவரது உணர்வின் சிறப்பு` என்பதை உணர்த்த, ``தண்டறு சிந்தைத் தபோதனர்`` என்றார். தண்டல் - நீக்குதல். ``எண்டிசை`` என்பதன் பின் `புகழும்` என ஒரு சொல் வருவிக்க. ``மகிழ்ந்து உண்டது`` என்றதனால், `அவர் மகிழும்படி வழிபடல் வேண்டும்` என்றதாயிற்று. இனைத்துணைத் தென்பதொன்றில்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -திருக்குறள், 97
என்னும் பொதுமறையை இது முதலாக வருகின்ற மந்திரங்களோடு ஒப்பிட்டுணர்க.

பண் :

பாடல் எண் : 3

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :

இப்பாடலின் பொருள் பின்வரும் குறிப்புரையால் இனிது விளங்கும்.

குறிப்புரை :

`சீவன்` என்னும் பெயரின் முதலெழுத்து இரு மாத்திரையுடையதும், `சிவன்` என்னும் பெயரின் முதலெழுத்து ஒரு மாத்திரையுடையதும் ஆதல் பற்றி, `சீவன்` என்னும் நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைத்து நின்று அவனேயான அடியவனை. `மாத்திரை யொன்றின் மன்னியமர்ந்துறை - ஆத்தன்` என்றார். சிவனடியார்கள் மாகேசுரன் எனப்படும் காரணத்தை விளக்கியவாறு. `மகேசுரனுக்குள் அடங்கிநிற்பவன் மாகேசுரன்` என்றபடி. ஆத்தன் - நம்புதற்குரியவன். `தன்னை நம்பினவர்க்கு உறுதியையே சொல்லுதலும், செய்தலும் உடையவன்` என்பதாம். எனவே, `மாகேசுரர் அத்தகையினர்` என்பது பெறப்பட்டது. சிறப் புணர்த்த வேண்டிச் சாதியொருமையாற் கூறினார். `இப்பெயர் ஆசாரி யனையே குறிக்கும், என்பாரும் உளர். அங்ஙனமாயின் இம்மந்திரம் `குருபூசை` என்னும் அதிகாரத்தில் உளதாக வேண்டும் என்க.
மூர்த்திகள் மூவர் - அயன், அரி, அரன். குரவர் - முன்னோர். ஏழ்குரவர், தந்தை முதலாக முறையானே முன் முன் நோக்க வரும் எழுவர். மூவெழுவராவார், தந்தைவழி தாய் வழி மனைவி வழி என்னும் மூவழியிலும் உள்ள முன்னோர் ஓரோர் எழுவர். ``தீர்த்தம்`` என்றது, `நீர்` என்னும் பொருட்டாய் நின்றது. அஃது ஆகுபெயராய் நீர்வழியாகக் கொடுக்கும் பொருளை உணர்த்திற்று. முன்னோர்க்குப் பாவனையாற் கொடுப்பன யாவும் நீர் இறைக்குமாற்றால் கொடுக்கப் படுதலை நினைக. இதனைத் திருவள்ளுவர், `தென்புலத்தார் கடன்` (திருக்குறள், 53) என்றார்.
மாகேசுர பூசை பெரும்பான்மையும் இல்லறத்தாராலே செய்யப்படும் ஆதலின், `அவர்க்கே சிறப்பாக உரிய விருந் தோம்பலில் மாகேசுர பூசையே சிறப்புடையது` எனக் கூறுபவர், `தென்புலத்தார் கடனும் அதுவே` என்பதை இதனாற் கூறினார். இனி, `அவர்க்குத் தெய்வ வழிபாடாவதும் இதுவே என்பதை, ``மூர்த்திகள் மூவர்க்கும்`` எனத் தேவருள் தலையாயினாரைக் கூறினார்.
`விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பவற்றை அந்தணரை வழிபடுதலானே செய்தல் வேண்டும்` என்பது வைதிக நெறியே; அவைகளை மாகேசுரர் வழியாகச் செய்தலே சைவநெறி` என்பது இவ்வதிகாரத்துள் உணர்த்தப்படுதல் அறிக. இதனானே, `அந்தணர் பூசுரராயினும், மாகேசுரர் பூசிவர்` என்றதூஉமாயிற்று. இவர்களை, ``பராவுசிவர்`` (சிவஞான சித்தியார், சூ. 8. 35) என்றார் அருணந்தி தேவர்.

பண் :

பாடல் எண் : 4

அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்தே முடிக்கில்லென்
பகரு ஞானி பகலுண்பலத் துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே.

பொழிப்புரை :

அந்தணர் வாழும் வீதிகள் பலவற்றை அவர்கட்குத் தானம் செய்தலும், அவ்வீதிகளில் அவர்கட்கு உயர்ந்த மாட மாளிகைகள் பல கட்டித் தருதலும் ஆகிய இவற்றால் விளையும் பயன்கள் யாவும் மாகேசுரன் ஒருவனை வழிபட அவன் உண்டதனால் விளையும் பயனளவிற்கு ஒவ்வாது குறைவனவே என்பது உறுதி.

குறிப்புரை :

``அகரம்`` என்பது `அக்கிரகாரம்` என்பதன் மரூஉ. `முதற் சுற்று` என்பது அதன் பொருள். `கோயிலைச் சூழ்ந்த முதற் சுற்று வீதிகளே அந்தணர் இருத்தற்குரிய இடம்` என்பது வைதிக முறைமையாதலின் அம்முறைமைபற்றி அவர்கள் வீதி எங்கிருப்பினும் அஃது `அக்கிரகாரம்` எனப்பட்டது. `அந்தணர்களை மாட மாளிகை களில்தான் வாழவைத்தல் வேண்டும், என்பதும் வைதிக நெறி யாகலின், அவர்கள் வாழும் முதற்சுற்று வீதி, `மாடவீதி` எனப்பட்டது.
`திருக்கோயிலை நடுவாக வைத்து அதனைச் சூழ ஏழு சுற்று அமைய மதில்களை எழுப்ப அவைகளில் அமையும் வீதிகள் யாவும் மாடவீதிகள்` எனவும், `அவ்வீதிகளில் பரத்தையர் தவிர மற்றையோர் யாவரும் கலந்தே வாழ்தல் வேண்டும்` எனவும், `அந்த வீதிகளைச் சுற்றிக் கடைத் தெருக்கள் இருத்தல் வேண்டும்` எனவும், `ஆக எல்லா வீதிகட்கும் புறத்திலே பரத்தையர் வீதி அமைதல் வேண்டும்` எனவும் சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணத்தில் `நகர வருணனை` வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்.
பகரும் ஞானி - இவ்விடத்தில் சொல்லப்படும் ஞானி; மாகேசுரன். ``பகல்`` என்றது `ஒரு பகல்` என்றபடி. இம்மந்திரத்தில் பாடம் திரிபு பட்டுள்ளது.
இதனால், அந்தணர்க்குச் செய்யும் தானங்களினும் மாகேசுரருக்குச் செய்யப்படும் தானம் பன்மடங்கு உயர்ந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆறிடு வேள்வி அருமறை சாலவர்
கூறிடு மந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறீடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும், வேதமாகிய நூலை ஓதுகின்றவரும், முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர்கள் கோடிபேர் உண்டு மகிழ் வதனால் உண்டாகின்ற பயனோடு திருநீற்றை யணிகின்ற சிவ னடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளைந்து நிலைக்கின்ற பயனை வைத்து எண்ணிப் பார்க்குமிடத்து, முன்னர்க் கூறிய பயன் பின்னர்க் கூறிய உணவில் ஒரு பிடியினால் விளையும் பயனளவேயாகும்.

குறிப்புரை :

`அருமறை கூறிடும் நூலவர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உண்பது`` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் பயனைக் குறித்தது. ``உண்பதில்`` என்றது உருபு மயக்கம்.
இதனால், `தானங்களில் தலையாயதாய அன்னதானமும் அந்தணர்க்குச் செய்தலினும் மாகேசுரர்க்குச் செய்தலே கோடானு கோடி மடங்கு மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :

`இடபத்தை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனே! இறைவா! எங்கள் பெருமானே` என்று சிவனை எப் பொழுதும் துதித்து அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனுக்கு அடியராவார்கள், அவர்களை `இவர்களே நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள்` என்றும், `சிவபெருமான்` என்றும் கருதி அவரை மக்களின் வேறாக வைத்து வழிபடுகின்றவர்கட்கு அவரால் முன்பு செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கின்ற வினைகள் கெட்டொழிதல் உறுதி.

குறிப்புரை :

தீவிர சத்தி நிபாதர்க்கன்றி ஏனையோர்க்குச் சிவனை யொழித்தொழிந்த தேவரை வழிபடாத நிலை உண்டாகாதாகலின் அவரை நோக்கி, `இவரே தேவருமாவர்` என்றார். முன்பு ``மூர்த்திகள் மூவர்க்கும் ஆம்`` என்றதும் அவரை நோக்கி. மந்த சத்தி நிபாதத்திற் செய்யும் வழிபாடு தீவிர சத்தி நிபாதத்தைத் தந்து அதன்வழி நிகழும் வழிபாட்டினால் வினையை ஒழிக்குமாதலின் `அவருக்கும் வினையில்லையாம்` என்றார். ``தேவர்கள், அண்ணல்`` என்பன செவ்வெண்.
இதனால், மாகேசுர பூசையும் சிவபூசையேயாய்ப் பிறப்பையறுத்தல் கூறப்பட்டன.
இங்கு இருக்கவேண்டிய இப்பாடல் `சிவபூை\\\\\\\\\\\\\\\\u2970?` அதிகாரத்திலும், அங்கு இருக்கவேண்டிய பாடல் இவ்வதிகாரத் திலுமாகப் பதிப்புக்களில் மாறியுள்ளன. எனினும் இப்பாடல் நாயனார் வழிவந்த ஒருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. சில பிரதிகளில் இது காணப்படவும் இல்லை.
மிகைப் பாடல் தெ-ரை: சிவன் உயிர்கள் பொருட்டாக உண்டாக்கிய நவ தீர்த்தங்களில் சென்று முழுகும் பயன்பற்றிச் சொல்லுவோம் கேள்; `உயர்ந்தோர் யாவர்க்கும் ஒத்ததாகிய மெய்ஞ்ஞானத்தினாலே உயர்ந்து நிற்கின்ற மாகேசுரரது திருவடிகளைத் தூய்மையாக விளக்கி, அந்த நீரை உடல் முழுதும் படும்படி தெளித்துக் கொண்டாலே முத்தி கிடைக்கும் என்பது நமக்கெல்லாம் குருவாகிய திருமூலர் அருளிச் செய்தது.
கு-ரை: `எனவே, அது நவதீர்த்தங்களில் மூழ்குதலாம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

அழிதக வில்லா அரன்அடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

பொழிப்புரை :

இறைமைக் குணங்களையுடைய சிவபெரு மானை விரும்பி அவனை நாள்தோறும் தொழுது துயிலெழுதலை மட்டும் செய்தால், இவ்வுலகத்தில் உலகின்பத்தோடு சிறிது இறையின்பமும் உண்டாகும். ஆனால், தம் நிலையில் கெடுதல் இல்லாத மாகேசுரரை வழிபடுதலால், இவ்வுலகத்தில் நீங்குதற்கரிய அஞ்ஞானம் நீங்கி இறையின்பமே மிகக் கிடைக்கும்.

குறிப்புரை :

எனவே, `மாகேசுர பூசையைப் புறக்கணிப்பார் செய்யும் மகேசுர பூசையும் சிறிதளவே பயன் தரும்` என்பதாம். ``அடியவர்க்கன் பில்லார் ஈசனுக்கன் பில்லார்`` (சிவஞான சித்தயார், சூ.12-2) என்றார் அருணந்தி தேவரும். மாகேசுரபூசை செய்யாத வழி மகேசுர பூசை நிரம்பாமை நோக்கியன்றோ பெரியார் பலரும் அடியார்க்கடிமை செய்தலை ஆண்டவனை வேண்டியும் பெற்றனர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. `தொழுதைகையால்` என உருபு விரிக்க. பழுதுபடாமைக்கு `நாள்` என்னும் வினைமுதல் வருவிக்க.
இதனால், `எத்தகையோர்க்கும் மாகேசுர பூசை இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :

சிலர் மாகேசுரரிடத்துச் சிறிதளவும் அன்பில்லா தவராய் மாகேசுரனிடத்துச் சரண் புகுகின்ற பித்துக் கொள்ளிகளாய் அவனை மட்டும் பூசித்தலாகிய அந்த வழியிலே நெடுங்காலம் நின்று, அவனது அருள் மிகக் கிடையாத காரணம் யாதென்று ஆராய்ந்து, முடிபு காணாது இளைத்து விட்டார்கள்.

குறிப்புரை :

``முக்கோற் பகவர்`` (அகப்பொருள் விளக்கம்) என்பது போல, ``பகவர்`` என்பது மாகேசுரரைக் குறித்தது. பண்பு - அன்பு. `பண்பு ஏதாகிலும் இலராகி` என்க. ``பூசனை`` என்றது சிறப்புப் பற்றி சிவபூசையையே குறித்தலின், புகுதல் அவனிடத்தேயாயிற்று. மத்தர் - உன்மத்தர். உண்மையை உணராது செய்தலின் ``மத்தர்`` என்றார். ``முகம்``, `வாயில்` எனப்பொருள் தந்தது. `அதனோடு` என்பது, ``அத்தோடு`` என மருவிநின்றது. `ஆகமத்தர்` என்பது, ``அகமத்தர்`` எனக் குறுகி நின்றது. ``ஒழிந்தார்`` என்றதனால் முடிவு காணாமை பெறப்பட்டது.
இதனால், `மகேசுரனை அடையவேண்டுவார் மாகேசுரரை வழிபடல் இன்றியமையாதது என்பதே ஆகமங்களின் கருத்து` என்பது கூறப்பட்டது.
இதனை அடுத்து நிற்கும் ``வித்தகமாகிய`` என்னும் பாடலும் மேற்காட்டிய, ``அத்தன் நவதீர்த்தம்`` என்னும் பாடல்போலப் பிற ரொருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. இதுவும் ஒரு பிரதி யில் இல்லை. இதன் பொருள் வெளிப்படை. இது மாகேசுரர் உண்ட பின் எஞ்சிய சேடத்தை யுண்ணுதலின் சிறப்பை உணர்த்துகின்றது.

பண் :

பாடல் எண் : 9

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

பொழிப்புரை :

உலகீர், பின்னும், பின்னும் நீர் மிக அழுந்த வருகின்ற எதிர் வினைகள் தோன்றாமல் ஆழ்ந்தே போகும்படி, பாசக் கட்டாகிய இழிநிலையினின்றும் நீங்கி உயர்நிலையை எய்தினா ராயினும், மீட்டும் அந்த இழிநிலையில் பாசங்கள் வந்து வீழ்த்தாதபடி முன்பு செய்துபோந்த அந்தச் சரியை முதலிய அரிய தவங்களைப் பின்னும் மாகேசுரர் விடாது செய்வர். அத்தகையோர்க்கே நீவிர் தானத்தையும், தருமத்தையும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அச்செயல்கள் உங்களுடைய எதிர்வினை, பழவினை, பயன்வினை என்னும் மூவகை வினைகளையும் அறவே அழிக்கும். அவ்வினைகள் அழியவே, மீளப் பந்த உலகில் வரும் பிறப்பு இன்றி, வீட்டுலகமே கிடைப்பதாகும்.

குறிப்புரை :

எதிர் வினை - ஆகாமியம். ``ஆழ்ந்தவினை`` - எதிர் கால வினைத்தொகை. பழவினை - சஞ்சிதம். அதனை அழித்தல் அரிது ஆதலின் ``அருவினை`` என்றார். போழ்தல் - இப்பொழுது வந்து தாக்குதல். அங்ஙனம் தாக்கும் வினை பிராரத்தமாம். ``பொன்னுலகம்`` என்றது `உயர்நிலை` என்னும் அளவாய் நின்றது. ``ஆழ்வினை ஆழ`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், மாகேசுர பூசை வீடு பயத்தல் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

பொழிப்புரை :

`இடம்` என்று சொல்லப்படுவன எவையாயினும் அவை எல்லாவற்றையும் தனது உடைமையாக உடைய ஒப்பற்ற ஒரு தனிமுதற் கடவுளை உணருமாறெல்லாம் உணர்ந்து, அவ்வுணர்வினை மயக்கத்தால் குறைத்துப் பேசுபவரது மயக்கத்தை தனது அனுபவ மொழிகளாற் போக்குகின்ற சீரடியான் ஒருவனே ஒரு நாட்டில் இருப்பினும் அந்த நாட்டின்மேல் பகைமை கொள்வார் எவரும் இலராவர். அங்குப் பருவமழை பொய்யாது பெய்யும். எந்த ஓர் இல்லத்திலும் செல்வம் குறைதலோ, அல்லது செல்வம் தீர்ந்து வறுமை உண்டாதலோ நிகழாது.

குறிப்புரை :

ஏனைத் தேவரெல்லாம் சில உலகத்தளவிலே அதிகாரம் உடையராக, ``எல்லா உலகமும் ஆனாய் நீயே`` (தி.6) என்றருளிச் செய்தபடி அனைத்துலகங்களிலும் நிறைந்து அவற்றைத் தான் விரும்பியபடி இயக்குபவன் சிவன் ஒருவனே யாகலின், அவனை, ``திகைக்குரியான் ஒரு தேவன்`` எனவும், காரண காரிய முறையில் உறுதிப்பட விளக்குதல் பற்றி ``வாதி`` எனவும் கூறினார். திகை - திசை; இடம். ஒருவாதியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்த லாயிற்று. ``பார்`` என்றது இங்கு விளைநிலத்தை. நாட்டினை ``உலகு`` என்றார். ``அவ்வுலகுக்கு`` என்பதை மூன்றாம் அடியின் முதலில் கூட்டியுரைக்க.
இதனால், `சிவனடியார் உள்ள நாடு யாதொரு குறையும் இன்றி நலம் மிக்கதாகும்` என்பது கூறப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``அவ்வுலகத்தே`` என்னும் பாடல், தந்திரம 6இல், ``அருளுடைமையின் ஞானம் வருதல்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 2

கொண்ட குழியும் குலவரை யுச்சியும்
அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும்
உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.

பொழிப்புரை :

நிலத்தைத் தன்னகத்துக் கொண்ட கடல்களும், நிலத்தை நிலைபெறுத்துகின்ற எட்டுக் குலமலைகளின் சிகரங்களும், வானுலகமும், வானுலகத்திலுள்ள தேவர்களும், அத்தேவர்களுக்கு முதல்வனாகிய இந்திரனும் மற்றும் திசைக்காவலரும் ஆகிய அனைத்தும், அனைவரும் வந்து எனது கையிலும் அடங்கியுள்ளன, உள்ளனர் என்றால், இனி நாங்கள் எந்த இடர்ப்பாட்டிலும் அகப்படாமல் அவற்றினின்றும் தப்பிவிட்டோமன்றோ!

குறிப்புரை :

`கொண்ட குறி` என்பது பாடமன்று. கடலுக்கு `ஆழி` என்னும் பெயருண்மை பற்றி, ``குழி`` என்றார். `நாங்கள்` என்றது அடியார் அனைவரையும். ``என் கைத்தலத்திலும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `அடியவருள் கடைப்பட்ட என்கையிலும் உள்ளன என்றால் பிற அடியவர் கையில் இருத்தல் சொல்ல வேண்டுமோ` என்பதாம். அவை எம் வசத்தன அல்லது, யாம் அவற்றது வசத்தினேம் அல்லேம்` என்றபடி. `எல்லாப் பொருள்களும் சிவன் வசத்தின ஆதலின் அவை அவன் அடியார் வசத்தினவாம் என்றபடி.
தாமடங்க இந்தத் தலமடங்கும்; தாபதர்கள்
தாமுணரின் இந்தத் தலமுணரும் - தாமுனியின்
பூமடந்தை நில்லாள்; புகழ்மடந்தை போயகலும்
நாமடந்தை நில்லாள் நயந்து. -திருக்களிற்றுப்படியார், 68
எனவும்,
அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகம் ஆளற் குரியர். -தி.12 திருக்கூட்டச்சிறப்பு, 3
எனவும் அருளிச் செய்தல் காண்க.
இதனால், `சிவனடியாரை உலகம் வாதியாமையே யன்றி அவர் வேண்டியவாறுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

இதனால், `மேற்சொல்லியவாறு எல்லாப் பொருள்களும் சிவனடியார் வசத்தன ஆதற்குக் காரணம் சிவன் அவர்கள் உள்ளத்தில் வீற்றிருத்தலேயாகும்` என மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.
``தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன்; நாம்தொழும் தன்மையான்``
-தி.12 திருமலைச் சிறப்பு, 19
என்றது காண்க. காரணங் கூறுவார் மேற்கூறிய காரியங்களையும் அனுவதித்து உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 4

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

பொழிப்புரை :

இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.

குறிப்புரை :

`அத்தகைய பேரறிவை உடையவர்கள் சிவனடியார்கள்` என்றபடி. ``பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன்`` என்பதை ``அண்ணல்`` என்பதன் பின்னர்க்கூட்டி, `அப்பெருமையை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்`` என்றது, `விளக்கும் துணையுள்ள பொழுதன்றித் தானே விளங்கமாட்டாத உயிரினது அறிவு போலாது, தானே விளங்கி நிற்கும் அறிவை யுடையவன்` என்பதைக் குறித்தவாறு.
ஒருவராலும் அறியொணாதவனை அடியராயினார் மட்டும் அறிந்தது எவ்வாறெனின், ``ஒருவர்`` என்றது, பதியாகிய அவனது ஞானத்தைப் பெறாது, பாசஞான பசுஞானங்களை மட்டுமே யுடையவருள் ஒருவரையே ஆதலானும், அவருள் ஒருவராய் நில்லாது பதி ஞானத்தைப் பெற்றவரே அடியவராகலானும் அவை தம்முள் முரணாகா என்க. மூடம் உடையதனை ``மூடம்`` என்றது பான்மை வழக்கு. ``அறியொணா`` என்னும் பெயரெச்ச மறையும், ``காணும்`` ``கேட்டிடும்`` என்னும் பெயரெச்சங்களும் அடுக்கி, ``அண்ணல்`` என்னும் ஒருபெயர் கொண்டன. மூப்பு - முதிர்ச்சி; உயர்வு.
இதனால், `உண்டு, பூசி, உடுக்குமாற்றால் அடியவர் உலகரோடு ஒத்தாராயினும், அவர் உலகரின் வேறாய உயர் நிலையினர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாளம்
மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் பிறரைப் போலவே தாமும் மயக்க உலகத்தில் வாழ்வராயினும் அவ்வுலகம் மயக்குகின்ற மயக்கத்துட் படாது தெளிந்த உணர்வோடே வாழ்வர். உடம்பு நீங்கிய பின்னும் பிறரைப் போல மயக்க உலகங்களில் உழலாமல் சிவன் உலகத்தை அடைந்து அதன்கண் சில புவனங்கட்குத் தலைவராயும் விளங்குவர். அவையேயன்றித் தாமும் சிவனைப் போலவே எல்லா உலகங்களும் தம்முள் வியாப்பியமாய் அடங்கத் தாம் அவற்றைத் தம்முள் அடக்கி வியாபகமாயும் நிற்பர்.

குறிப்புரை :

`ஆகவே அவர்களை எளியராக எண்ணற்க` என்பதாம். ``இயங்கும்`` என்பதனை, `தாம் இயங்கும்` எனக் கொள்க. ``செல்வர்`` என்றது `வாழ்வர்` என்றபடி, ``வான்`` இங்குச் சுத்த மாயா வெளியைக் குறித்தது. அவ்வெளியே தடத்த சிவனுக்கு இடமாதல் அறிக. பின்னிரண்டடிகள், `சிவனது இயல்பாக நன்கறியப்பட்ட வற்றை இவர்களும் உடையர்` என்பதைக் குறித்தது. சிவனது இயல்பு.
``பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 17
எனவும்,
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவிற் பாதளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
எனவும் விளங்கிக் கிடந்தமை காண்க. போது - திருவடி மலர். ``பகிரண்டம்`` என்றது, `அண்டங்கள் அனைத்திற்கும் வெளியே உள்ள இடம்` என்றபடி. அதுவெற்ற வெளியாகலின், ``மயங்காப் பகிரண்டம்`` என்றார். மயங்குதல், பல பொருள்கள் ஒன்றோடொன்று விரவுதல்.
இதனால், சிவனடியாரை நம்மனோருள் சிலராக வைத்து எளியராக மதித்தல் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

பொழிப்புரை :

புறநிலையிற் செல்லாது அகநிலையிற் சென்று அங்குள்ள இறைவனை அறிகின்ற அறிவு `நான்` என்னும் முனைப்பு அடங்கி நிற்றலை அனுபவத்தில் யாம் கண்டோம். அதனால் அந்த அறிவு மாயா காரியங்கைள ஒழித்து அவற்றினின்றும் நீங்கித் தூய்மை யுறுகின்றது. ஆகவே, அகநிலையிலே நிற்கின்ற நம் பெருமானை அவ்விடத்திற் காண்கின்ற அகநிலையறிவைப் பெற்றவர்கள் துன்பத்தை அடைய மாட்டார்கள்.

குறிப்புரை :

மூன்றாம்அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``நெஞ்சம்`` என்றது அறிவை. அறிவது அறிவேயன்றி நெஞ்சம் ஆகாமை யறிக. ``அகம்படி`` மூன்றனுள் முதல் இரண்டும் `அகநிலை` எனப் பொருள் தந்தன. முதற்கண் நின்ற ``அகம்`` `உள்` என்னும் பொருளையும், ஈற்றில் நின்ற ``அகம்``, `நான்` என்னும் பொருளையும் உடையன. முதற்கண் நின்ற `படிதல்`, பொருந்துதல். ஈற்றில் நின்ற `படிதல்`, ஆழ்தல். ``கண்டாம்`` தன்மைப் பன்மை வினைமுற்று. ``கண்டவர்`` என்றது `அறிந்தவர்` என்றபடி.
``அழிக்கல்``, இங்கு வெல்லுதல். அஃதாவது அவற்றின் நீங்குதல், அசுத்த மாயா காரியங்களை, `பூதம், தன்மாத்திரை, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், புருடன், கஞ்சுகம், மாயை` - என இங்ஙனம் தொகுத்தெண்ணி, எட்டாதல் அறிக. இனி ``எட்டுத் தத்துவங்களால் ஆகிய நுண்ணுடம்பு`` எனவும் ஆம். இவற்றின் நீங்கினோரே முத்தராதல் அறிக. எனவே, `இந்நிலை அடைந்தோர் பிறவித் துன்பத்தை எய்துமாறு இல்லையாகலின், சிவனடியாராவார் இத்தன்மையுடைய முத்தரே` எனக் கூறினார்.
இதனால், சிவனடியார் பெத்தருட் சிலராகாது, முத்தரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.

பொழிப்புரை :

கடந்த காலத்தில் நிகழ்ந்துபோன அந்தச் செயல் களும், இப்பொழுது கடந்து கொண்டிருக்கின்ற காலத்தில் நிகழ்கின்ற இந்தச் செயல்களும், இவற்றைச் செய்விக்கின்ற முதல்வனும், அவன் செய்விக்கின்றபடி யான் செய்யும் பொழுது அதற்குத் துணையாய் உடன் நிற்கின்ற அன்புள்ள துணைவனும் ஆகிய எல்லாமாய் உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவனை நான் எனக்கு வருகின்ற பழியாயும், புகழாயும் விளைகின்ற அனைத்துப் பொருள்களுமாக உணர்கின்ற உணர்ச்சியோடே எனது உயிர் போய்க்கொண்டிருக்கின்றது. அதனால், எனது உடல் வழியாக நிகழும் முயற்சிகள் அனைத்தையும் அப்பெருமான் தனது முயற்சியாகவே ஏற்றுக் கொள்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் அறம் பாவங்கட்கு யான் யாதும் கடமைப் பட்டவனல்லேன்` என்பதாம். ``கழிவு, அழிவு`` என்னும் தொழிற் பெயர்கள் முறையே இறந்தகால நிகழ்கால நிகழ்ச்சிகளின் மேல் நின்றன. அந்நிகழ்ச்சிகள் அக்காலத்துப் பிறப்பின் வழியன என்பது வெளிப்படை. `இனி அடுத்து வருவதொரு பிறவி தமக்கு இல்லை` என்பது நாயனாரது துணிபாகலின் எதிர்காலம் பற்றிக் கூறாராயினார், முதல்வனை ``முதல்`` என்றது பான்மை வழக்கு. ``அழிவும்`` என்பதனை, ``கழிவும்`` என்பதன் பின் கூட்டியுரைக்க. ``அது`` என்னும் பகுதிப்பொருள் விகுதியை, `அழிவதுவும்` என மாற்றி வைத்து உரைக்க. `புகழுமாய், முற்றுமாக` என்னும் ஆக்கச் சொற்கள் தொகுத்தலாயின, `முற்றுமாகக் கொண்டு` `எனது உழவு` என வருவித்துக் கொள்க. சீவன் முத்தராயினார் `எல்லாம் அவனே` என்று எதனைச் செய்யினும் தம் செயலற்று அவன் செயலாகச் செய்வர் ஆதலின், அவர், ``பாதகத்தைச் செய்திடினும் சிவன் அதனைப் பணியாக்கி விடுவன்`` (சிவஞானசித்தியார், சூ. 10-1) ஆதலின், ``உழவு கொண்டான்`` என்றார். இத்தகைய சீவன் முத்தரே `அடியார்` எனப்படுகின்றனர் என்க.
இதனால், அடியாரது சீவன் முத்திநிலை தம்மேல் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

பொழிப்புரை :

எனக்குத் தாயாகியவளும், தந்தையாகியவனும் நான் பிறப்பதற்கு முன்பே தங்களைச் சிவனுக்கு அடிமை` என்று எழுதிக் கொடுத்த ஆளோலையை வைத்துத்தான் ஈரேழுலகங்களை யும் ஒக்கப் படைத்தவனாகிய பிரமதேவன் என்னைப் படைக்கும் பொழுது எனது தலையில், `இவன் சிவனுக்கு அடிமை` என்று எழுதினான். `அந்த எழுத்துப் பொய்யானதன்று, மெய்யானதே` என நிலை நாட்டுபவனாகவே காப்போனாகிய திருமால் அமைந்தான்.

குறிப்புரை :

`என் தாயொடு ஆவணம்` என்றது, `யான் பிறந்த குடியில் யான் மட்டுமே சிவனடியானல்லேன்; என்தந்தை தாய் ஆகியோரே சிவனடியார்தாம்` என்றும், `அதனால் யான் பிறப்பிலே சிவனடியான்` என்றும் கூறியவாறு. இவ்வாறான வாய்ப்புடையவர் களையே `பழவடியார்` என்றும், தாம் மட்டுமே தொடக்கத்திலே யாதல், இடையிலேயாதல் அடியாராயினாரை, `புத்தடியார்` என்றும் கூறுவர். நம்பியாரூரர் பழவடியாரேயாயினும் `யான் ஆளல்லேன்` என வன்மை பேசினமை பற்றி அவரை ஏயர்கோன்கலிக்காமர்,
எம்பிரான் எந்தை தந்தை தந்தைஎன் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னைநின் றீருஞ்சூலை
வம்பென ஆண்டு கொண்டான் ஒருவனோ தீர்ப்பான் வந்து.
-தி.12 ஏயர்கோன். 392
எனப் புத்தடியாராகக் கூறினமை காண்க. வம்பு - புதுமை.
நாயனார் தம் தாய் தந்தையரையே குறித்தாராயினும் `இருமரபும் சிவனுக்கு ஏழேழ் பிறவியும் ஆட்பட்ட மரபு` என்பதைக் குறித்தமை காண்க. ``ஏழ் ஏழ் பிறவி`` என்பது, `எழுவகைப் பிறப்பில் வினைப்பயன் தொடரும் ஏழ்பிறப்பு` என்றவாறு,
புத்தடியாரினும் பழவடியார்க்கு ஒரு சிறப்புண்மையை இதனாற் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 9

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.

பொழிப்புரை :

`சிவனே நமக்கு எல்லாப் பொருளும்` எனத் துணிந்தவரது உள்ளத்தில் ஒன்றி உறைபவனும், அங்ஙனம் துணிந்த படியே மனமொழி மெய்களால் தன்னை வழிபட்டு ஒழுகு வசத்தனாய் நின்று அருள்புரிகின்றவனும் ஆகிய, அழகிதாய் அருள் நிறைந்த திரு வுள்ளத்தினையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானைப் பல் காலும் நினைக்கின்ற ஒருவர்க்கு அவனை விடுதல் கூடுமோ! (கூடாது)

குறிப்புரை :

`அகம் படி` என்பது `அகத்துப் பொருந்துதல்` என்னும் பொருட்டாய் அகமாகிய இடத்தைக் குறித்தது. `சிவன் தன் அடியவர் வசத்தனாய் அவர் வேண்டியவாறெல்லாம் அருளுதல் அருள் காரணமாக அன்றி வேறில்லை` என்றற்கு ``அணிந்து ஆர்அகம்படி ஆதிப்பிரான்`` என்றார். ``உறையும், ஒழுகும்`` என்னும் பெய ரெச்சங்கள், ``அணிந்தா ரகம்படி ஆதிப்பிரான்`` என்னும் தொகைச் சொல்லில், ``ஆதிப்பிரான்`` என்பதனோடு முடிந்தன. `தேனை உண்டறியாதவர் அதனை உண்டு சுவை கண்டபின் விடாமைபோலச் சிவனது அருளின்பத்தை அறியாதார் அதனை அறிந்து நுகர்ந்தபின் விடமாட்டார்` என்பார், ``கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே`` என்றார். `கணித்தார்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``
தி.12 கண்ணப்பர்., 174
என்ற திருத்தொண்டர் புராணத்தையும் காண்க. கணித்தல், பலகால் நினைத்தல்.
இதனால், `சிவனடியார் சிவானந்தத்தைத் தெவிட்டாது நுகர்ந்து திளைப்பவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

பொழிப்புரை :

தேவர்கள் தம் தலையால் தனது திருவடிமேல் வணங்குகின்ற, தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தனக்கு உண்மையான தொண்டினைச் சிலர் செய்ய அதற்குப் பயனாக அவரைத் தேவர்கள் தம் தலைமேல் வைத்துப் போற்றும்படி வைத்தான். அதற்குமேல் அவன் அவரை முக்குணங்களும், கன்மமும், ஆணவமும் இல்லாத ஒளிமயமான மேல் உலகத்தை ஆள்கின்ற பயனையும் கூட்டுவிப்பான்.

குறிப்புரை :

எனவே, `சிவனடியார்கள் அத்துணை உயர்ந்தவர்கள்` என்பதாம். `தலையால்` என உருபு விரித்து, ``மிை\\\\u2970?`` என்பதற்கு, `திருவடி மிை\\\\u2970?` என உரைக்க. `மிலைய, இசைய` என்னும் செயவெனெச்ச ஈறுகள் தொகுத்தலாயின. `மிலைய` எனவே, `தலைமேல்` என்பது தானே விளங்கிற்று. ``மெய்ப் பணி செய்ய`` என்பதை, ``நந்தி`` என்பதன் பின்னர்க்கூட்டி யுரைக்க. புலை - கீழ்மை. அஃது அவற்றை உடையவற்றைக் குறித்தது. `புலை நீங்கிய மிசையுலகு` என்க. ``பொன்`` என்றது ஒளியென்றவாறு. மேலே உள்ள ஒளியுலகாவது சிவனுலகு. பலம் - பயன். வேறு தொடராய் நிற்றலின் மீட்டும் ``படர்சடையோன்`` என்றார்.
இதனால், `சிவனடியார்கள் தேவரால் வணங்கப்படுபவராய்ச் சிவலோகத்தை ஆளும் பெருமையுடையவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கூட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.

பொழிப்புரை :

ஒன்றும் அறியாத இளமைப் பருவத்திற்றானே சிவனடியார்களை அவரது வேடத்தால் அறிந்து மகிழ்ச்சியுற்றதே சிவனுக்கு உண்மை அடிமைத் தன்மையாகும். அதன் பின் அவர்கள் செல்லும் செலவைத் தவிர்ந்த அவர்களது திருவடிகளை விளக்கிய நீரினைத் தலையில் தெளித்துக் கொள்ளுதலே அங்ஙனம் செய்வார்க்குப் பெரிய தவமாகும்.

குறிப்புரை :

இளமையிலே அடியார் பத்தி தோன்றுதல் முன்னைத் தவத்தினாலாம். காரைக்காலம்மையார் வண்டல் பயிலும் பொழுதே தொண்டர் வரின் தொழுதமையை (தி.12 காரைக்காலம்யார்., 5) நினைக. ``நடப்பார் மறிந்த புனல்`` என்றதனால், `திருவடிகளை விளக்கிய நீர்` என்பது விளங்கிற்று. மறி - மறிதல்; தவிர்தல். முதனிலைத் தொழிற் பெயர். `மறிதலில் பொருந்திய நீர்` என்க.
இதனால், அடியவரை வழிபடுவாரது சிறப்புணர்த்து முகத்தால் அவரது பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பாற் பெருமை இலயம தாமே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்திற் கூறியவாறு இளமையிலே அடியார் பத்தியிற் சிறந்த ஒருவனை அடைந்து அன்பு செய்பவர்கள் சிவனையே அடையவும் வல்லாராவர். இன்னும் அவரிடத்தில் சிவனையே வழிபடும் ஒருவனது பெருமை அடங்கி விடுவதாகும்.

குறிப்புரை :

`சிவனுக்கு அடியாராயினாரும் அவன் அடியார்க்கு அடியாராகாவிடின் சிறந்தவராகார்` என்பதாம். அதனாலன்றோ, சிவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட நம்பியாரூரர் பின்பு அடியாரது திருக்கூட்டத்தைக் கண்டு, ``இவர்க்கு யான் அடியேனாகப் - பண்ணு நாள் எந்நாள்`` (தி.12 தடுத்தாட் கொண்டது., 189) என இறைவனை நினைத்து எண்ணினார். முன்னை மந் திரத்திற் கூறினமை பற்றி அடியார்க்கடியனை ``அவன்`` என்றமையால், பின்னர் ``இவன்`` என்றது, பின்னர்க் கூறிய சிவன் பால் அணுகுதல் செய்தவனைக் குறித்தது. `நாடும் அடியார்கண்` என ஏழாவது விரிக்க.
இதனால், `சிவனுக்கு அடியாராயினாரும் அவன் அடியார்க்கு அடியாராதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது. திருத்தொண்டத் தொகை அடியார்க்கு அடியாராதலையேயன்றி, அடியார்க்கு அடியாராதலையும் குறித்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 13

முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

பொழிப்புரை :

பதினெண்கணங்களாக வகுத்துச் சொல்லப் படுகின்ற தேவ சாதியர் பலரும் முன்னே நல்வினைகள் பலவற்றைச் செய்து அந்நிலையை அடைந்தார்கள். அதன்பின்பு அந்நிலையில் இருக்க விரும்பாமல் சிவன்பால் அன்பு செலுத்தியுய்தற்கு இந் நிலவுலகத்தில் வருவார்கள். அவ்வாறு வந்து அவர் சிவனை வழி படுகின்ற இடம் எட்டுத் திசையிலும் பன்னிரு காதப் பரப்பிற்குச் சிவ லோகமாகும்படி அவர்களது ஞானம் செய்யும்.

குறிப்புரை :

`பதினெண்கணம்` என்பதை முதற் குறையாக ``எண் கணம்`` என்றார். `பதினெண் கணங்களாவார் இவர்` என்பதைப் புற நானூற்றுக் கடவுள் வாழ்த்தின் பழைய உரையிற் காண்க. `எண்கணங் களும் முன் இருந்தார்` என மாற்றியுரைக்க. ``இருந்தார்`` என்றது அந் நிலையினராய் இருந்தார் என்றபடி. ``முன்`` என்றதனால் `பின்` என்பது பெறப்பட்டது. எண் - எண்ணம்; விருப்பம். இறந்து - நீங்கி, எனவே, `சுவர்க்கலோக இன்பம் அபக்குவர்க்கே இனிக்கும் என்பதும், `அவர்க்கும் பக்குவம் வந்தபொழுது உவர்த்துவிடும்` என்பதும் பெறப்படும். ``கொன்றைத் - தொங்கலா னடியார்க்குச் சுவர்க்கங்கள் பொரு ளலவே`` (தி.2 ப.41 பா.7) என்றருளியமை காண்க. ``பன்னிரு காதம்`` என்றது மிகுதி கூறியவாறு. சிவலோகமாகச் செய்தலாவது, மக்களைச் சிவபத்தியிற் சிறந்தவராக்கல்.
இதனால், தேவரியல்பு கூறும் முகத்தால் அடியாரது பெருமை உணர்த்தப்பட்டது. இதனானே, `அடியாருள் முற்பிறப்பில் தேவராய் இருந்தோரும் உளர் என அறிக` என்றதுமாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோக மின்றி அறிவோருண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோக மின்றிப் பரகதி யாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``சிவம்`` என்பதை ஞானிக்கும் கூட்டுக. யோகமாவது `ஒன்றுதல்` ஆதலால், அவயோகம், பயனில் பொருளோடு ஒன்று தலாம். அறிவோர் - ஞானிகள். `அறிவோர் வருகை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்துக் கொள்க. வருகை, அவதாரத்தையும் குறிக்கும். நவம் - புதுமை; அதிசயம். `அதிசயங்களை நிகழ்த்துதல் பலர்க்குக் கூடும்` என்க. காணும் - காணப்படும். பவயோகம் - பிறப்பில் சேர்தல்.
இதனால் அடியாரது பெருமைகளுள் மிக்கன சில எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

பொழிப்புரை :

பிரமன், விட்டுணு, பிறதேவர் ஆகியோ ரெல்லாம் தாம் தாம் செய்யும் அதிகாரத்தைத் தமது ஆற்றலால் அமைந் தனவாகவே கருதி மயங்குவாரல்லது, `இவை பரம்பொருளாகிய சிவனது ஆணையின்வழி நமக்கு அமைந்தன, என்று உணர மாட்டார்கள் (அதனால் அவர்கள் மெய்யடியாராதல் இல்லை) அந் நிலையில், `நமக்குக் கிடைத்த நலங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவனது அருளால் கிடைத்தன` எனச் சிவனுக்கு மெய்யடியா ராயினாரே உணர்வார்கள்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளில் `உணர்வான், உணர்வார்` என்பன பாடம் ஆகாமை அறிந்துகொள்க. மேல் - மேலான பொருள், என்றது அதன் அருளை. மிகு ஞாலம் - வானுலகம். பிரமனாதியோர் சில வேளைகளில். `எமக்கு உள்ள நலம் சிவனருளால் வந்தது எனக் கூறினாராயினும் அது முகமனுரையேயன்றி, மெய்யுரையன்று` என்க.
இதனால், அயன் மால் முதலியோரினும் அடியார் உயர்ந்தோராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.

பொழிப்புரை :

ஒரு வயலையே தங்களுடையதாகக் கொண்டிருப் பவர் அது தரிசாய்க் கிடந்தால் விளைவு ஒன்றையும் பெறமாட்டார். அது போலச் சிவனடியார்கள் `அடியார்களுக்கு` என்று நினைத்துச் சமைத்த உணவையே, `இஃது எட்டுத் திக்கினையும் நிறைவு செய்யும் அமுத மாகும்` என விரும்பி உண்பதன்றி, `தமக்கும் தம் கேளிர் கிளைஞர் கட்குமே` என்று நினைத்துச் சமைத்த உணவை உண்ணமாட்டார்கள்.

குறிப்புரை :

அவ்வாறு சமைத்து அடியவர் வரின் மகிழ்வுடன் வரவேற்று உண்பிப்பவர் உலகில் மிகச் சிலரே யாகையால் அவரை ஒருவனுக்கு அமைந்த ஒரே வயலாகவும், அவரிடத்தன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணார் சிவனடியார் ஆகலின் அவரை ஒரு வயலையே உடைய நிலக்கிழாராகவும் கூறினார். `அந்த ஒரு சிலர் இல்லையேல் சிவனடியார்க்கு உணவில்லை` என்பது பின்னிரண் டடிகளில் ஒட்டணி வகையால் கூறினமையின் இங்கு இவ்வாறு உரை கூறப்பட்டது.
`இறைவன் அடியவர்க்கு (என்று) அட்ட அடிசிலை அவ்வடியார் எட்டுத் திசையும் (விரும்பும்) அமுது என்று எதிர் கொள்வர்` என்க. அடியவரது இயல்பிற்கு ஏற்ப விளைவை ஆகு பெயரால் ``விருப்பு`` என்றார். அன்பில்லாதார் அறஞ்செய்தலை விரும்பார் ஆகலின் அறவோர் அவர்பால் உண்ணார் என்க.
அதனால், `சிவனடியார் தம்பால் அன்புடையாரிடத்தே யன்றிப் பிறரிடத்துச் சென்று உண்ணலாகாது` என்பது அவரது இயல்பின்மேல் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அச்சிவ னுள்நின் றருளை யறிபவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோஇற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.

பொழிப்புரை :

தம்முள் நிற்கின்ற சிவனுக்குள்ளே தாம் நின்று அவனது திருவருள் இயல்பை அநுபவமாக உணர்ந்த அடியார்கள் பசிமிகுந்த போது தம்முள்ளே அமர்ந்திருக்கின்ற தலைவனது இல்லமாகிய உடலில் உயிர் நின்றாங்கு நிற்றற் பொருட்டு, பிச்சையேற்று உண்டு சிவனைத் தம்மின் வேறாக நினையாது தாமேயாக நினைந்து உலகப் பற்று அற்று ஒன்றாகிய சிவ நிலையிலே உயர்ந்திருப்பார்கள்.

குறிப்புரை :

அகரச் சுட்டுப் பின்னர் வருகின்ற உள்நிற்குந் தன்மையைச் சுட்டிற்று. சிவனுள் தாம் நிற்றலாவது அவனது இச்சா ஞானக் கிரியையகளின் வியாபகத்தில் தமது இச்சா ஞானக் கிரியைகள் வியாப்பியமாய் அடங்கி நிற்க நிற்றல். ஏகாந்தத்தேயிருப்பவர்க்குக் கால வேறுபாடு இல்லையாகலின் ``உச்சியம் போதாக`` என்பது பசி மிகுகின்ற காலத்தையே குறிக்கும். அவரினும் கீழ் நிற்பார் கால வேறுபாடுணர்ந்து உச்சியம் போதாகிய ஒருவேளை உண்டு. ஏகாந்தத்தில் ஏறியிருக்க முயல்வர். `அவரினும் கீழ் நிற்பார் உச்சியம் போதுடன் இரவு ஒருவேளையும் உண்பர்` என்பது
``பரம னடியா ரானார்கள்
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும்
பறை நிகழ்த்தி`` -தி.12 திருநாவுக்கரசர்., 259
என்றமையான் அறியப்படும். `தம்மை இறைவன் உடைமையாகக் கருதுவர்` என்றற்கு ``கோ இற்கு`` என்றார். பிச்சை - தானம். அடியவர் தானம் ஏற்பரே யன்றித் தருமம் ஏலார். பிடித்தல் - ஏற்றல். ``பேதம் அற நினைந்து`` என்பது முதலாகக் கூறியன, அவையெல்லாம் வாய்த்தற் பொருட்டே அடியவர் உணவை நாடுவர் என்றற்கு.
இதனால் முன் மந்திரத்திற் கூறியவாறு அடியவர் அன்புடையார்பால் சென்று அவர் அளிக்கும் உணவை ஏற்று உண்டலும், உயர்நிலைபெற்று ஞானத்தையும் அதன் பயனையும், எய்துதற் பொருட்டு எனக்கருதி உண்ணல் வேண்டுமன்றி, வாளா, `உடலோம்புதற் பொருட்டு` எனக்கருதி உண்ணலாகாது என்பது கூறப்பட்டது. முன்பு நாயனார், மூன்றாம் தந்திரத்தில்
`உடம்பை வளர்த்தேன்; உயிர்வளர்த் தேனே``
என்றருளிச் செய்ததும் இக்கருத்துப் பற்றியேயாகும்.

பண் :

பாடல் எண் : 1

விச்சுக் கலமுண்டு வேலிச்செய் ஒன்றுண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சங்கெட் டச்செய் அறுத்துண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.

பொழிப்புரை :

அடியவர்கட்கு உலக உழவரின் வேறான விதைக் கூடை உண்டு; வேலி நிலம் உண்டு. அதனால் அவர் பசிக்குமுன்பே அவரது உழவுத்தொழில் அவர்கட்குப் பயனைத் தந்து விடுகின்றது. ஆகவே, `பசி வந்து வருத்துமோ` என்னும் அச்சம் இல்லாமல் அதற்கு முன்பே அவர்கள் அறுவடை செய்து பசியின்றி உண்கின்றார்கள். அது மாட்டாதவர்களே வயிறு வளர்க்கும் விருப்பத்தால் பலரிடம் சென்று இரந்து உயிர் வாழ்கின்றனர்.

குறிப்புரை :

ஆகவே, `அவர் அன்பர் விரும்பியளிக்கும் தானத்தை யேற்று உண்ணுதல் சோம்பலால் மானங்கெடாது வாழமாட்டாது மானம் இழந்து பிறரிடம் சென்று இரப்பவரது இரவன்று` என்பதாம்.
உருவக வகையால் ``விதைக்கூடை`` என்பது சுழுமுனை நாடியையும், `வேலி நிலம்` என்பது சந்திர மண்டலத்தையும் அதில் உண்டாகும் விளைவு விந்துத்தானத்து அமிழ்தத்தையும் உணர்த்தின. விச்சுக் கலம் - விதைக் கூடை. ``உச்சிக்கு முன்னே`` என்பது சிலேடை வகையால் `பசிக்கும் முன்னே` என்றும், சந்திர மண்டலத்துக்கு முன்னே உள்ள விந்துத் தானமாகிய ஆஞ்ஞையையும் குறித்தன. ``மாட்டாதார்`` என்றதால் அடியவர் மாட்டுவராதல் விளங்கிற்று. `யோகத்தால் காயசித்தி பெற்று நெடுங்காலம் வாழ வல்லவர் அன்பர் செய்யும் வழிபாட்டினை ஏற்றலைச் சோம்பலால் வறுமை யுற்று இரப்பவர் செயலோடு ஒத்ததாக எண்ணுதல் அறியாமை` என்றபடி.
இதனால், `அடியவர் பிச்சை யேற்றல் இரத்தலன்று` என்பது காரணத்துடன் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிரமனது தலை ஓட்டினையே கலமாகக் கொண்டு எங்கும் சென்று பிச்சையேற்றான். ஏன்? இயல்பாக அறம் செய்யாதவரும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலாகிய செயல் வாய்த்து அறம் பெறுதற் பொருட்டு. இன்னும் அஃதேயன்றி, `தானே பரம்பொருள்` என்பதை விளக்குதற்கும்.

குறிப்புரை :

`எனவே, அவன் அடியார் பிச்சையேற்றலும் அத் தன்மைத்தேயாம்` என்பது குறிப்பெச்சம். தாருகாவன இருடிகள் கருமப்பிரம வாதிகளாய், `கடவுள் இல்லை` என்னும் மயக்க உணர்வினராய்த் தம்மனைவியர்க்கும் அக்கொள்கையினையே போதித்துவர அவர்கட்கு அம்மயக்கத்தப் போக்கி, `பரம்பொருள் ஒன்று உண்டு` என்பதையும், `அப்பரம்பொருள் தானே` என்பதையும், அவர்கட்குத் தெளிவிக்கவே சிவபிரான் திருமாலை மோகினியாகச் செய்து இருடியர்பால் அனுப்பித் தான் பிச்சைப்பெருமானாய் இருடியர்தம் பத்தினிமார் முன் சென்றான். ஆகலின் அதனையே இம்மந்திரத்தின் பின்னிரண்டடிகளில் குறித்தார். பிச்சைப் பெருமானாய்ச் சென்றது, `பரம் பொருள் ஒன்று உண்டு` என்பதை உணர்த்துதற்கும், பிரம கபாலத்தை ஏந்திச்சென்றது, `அப்பரம் பொருள் தானே` என்பதை உணர்த்தற்கும் ஆதலின் ``பிரமன் சிரங்காட்டி`` என மீளவும் அனுவதித்துக் கூறினார். முதற்கண் ``பிரமன் தலைதன்னில்`` என்றது, `தானை பரம்பொருள்` என அகங்கரித்துப் பேசிய பிரமன் தலையிழந்தான் என்பதை உணர்த்து முகத்தால், `சீவர்கள் தாங்களே எல்லாவற்றுக்கும் தலைவர் என எண்ணுதல் பிழை என்பதைக் குறித்தற்கு. இரண்டாவது அடியை, `பிரியாள் அறம் செய்ய` எனவும் பாடம் ஓதுவர். அது முன்னிரண்டடிகளை வெற்றெனத் தொடுத்தல் ஆக்குமாறு அறிக.
இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. `அது` நான்கும் பகுதிப் பொருள் விகுதி. ``பிரான்`` என்பதை முன்னும் கூட்டுக. பிரிதல் - மேற்கொள்ளாதொழிதல்.
இதனால், சிவன் அடியார்கள் பிச்சை யேற்றல் சிவன் பிச்சையேற்றலை நினைப்பித்து, அதன் பயனை யெல்லாம் விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பரந்துல கேழும் படைத்த பிரானை
`இரந்துணி` என்பர் எற்றுக் கிரக்கும்
நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே.

பொழிப்புரை :

சிவபெருமானை உலக முதல்வனாக உணரா தவர்கள் அவன் இரத்தலை மட்டுமே நோக்கி அது பற்றி இகழ்ந் தொழிவர். அவர்கள் போலன்றி அவனை உலக முதல்வனாக உணர் பவர், `சிவன் ஏன் இரக்கவேண்டும்`என ஆழ்ந்து நோக்குவர். அங் ஙனம் நோக்குவார்க்கு, `அவன் அடியவர் உலகியலில் ஈடுபடாது பசி நீங்குதல் மாத்திரைக்குத்தன் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் செயலைப் போலவே இரந்து உண்டு முடிவில் தனது திருவடியடையும் நோக்குத் தப்பாது நிறைவெய்துதற் பொருட்டாம்` என்பது விளங்கும்.

குறிப்புரை :

எனவே, `சிவனடியார் இரத்தலைச் செய்தல் திருவருள் வழி நிகழ்வதாம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான் புகலே புகலாக
அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே

பொழிப்புரை :

அடியவர்களே! கருடனுக்கு அஞ்சிய பாம்புகளே சிவனையே அடைக்கலமாக அடைந்து அதனால், ஏன் கருடா சுகமா? என்று கேட்கும் அளவிற்கு அச்சமின்றி யிருக்கின்றன என்றால், `சிவன் தன்னை அடைந்தவர்களது இன்னலை எண்ணுவ தில்லை` என்றல் கூடுமோ! கூடாது. உண்மையில் அவன் நல்லவர் கட்கு இன்பத்தை அலைவீசும் கடலைப்போல மிகத்தருவதற் காகவே இருக்கின்றான். இன்னும் அவர்கட்கு அவன் தன்னையே கொடுத்துவிடுவான். ஆகையால், அவன் ஒரு காலத்தில் தலையோட்டிலே எங்கும் சென்று இரந்தானாயினும், எப்பொழுதும் தேவரும், மூவரும், யாவரும் தன்பால் வந்து வணங்கி நலம்பெற இருத்தல்போலவே நீங்களும் பலரது இல்லங்களைத் தேடிச்சென்று இரவாது இருங்கள்.

குறிப்புரை :

`அவன் உங்களைத் தேடி உணவு வரும்படிச் செய்வான்` என்பது குறிப்பெச்சம். ``புகலே புகலாக`` என்பது முதலியவற்றை ஈசன் என்பதற்கு முன்னர்க்கூட்டி, ``வர இருந்தான் வழிநின்றிடும்`` என்பதனை இறுதியில் வைத்துரைக்க. `இன்பம் அலைபொர என, பொருதற்கு வினைமுதல் வருவிக்க. அவ்வாறே ``வர`` என்பதற்கும் வினைமுதல் வருவித்துக் கொள்க. ``வழி நின்றிடும்`` என்றது, `அவனைப் போலவே இரும்` என்றபடி.
இதனால், `முன்மந்திரங்களிற் கூறியவாறு அடியவர் பிச்சையேற்றல் ஏற்புடைத்தாயினும், இருந்த இடத்திலிருந்தே ஏற்றல் சிறப்புடைத்து` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 5

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

பொழிப்புரை :

சிவனடியார்கள் தாம் எடுத்த உடம்பிலே உள்ளா ராயினும் அதன்கண் இல்லாதவரேயாவர். அஃது எங்ஙனம் எனின் அவ்வுடம்பில் உளதாகின்ற பசி, அவா, சினம் என்பவை தம்மை வெல்லும் அளவிற்கு மிகார். ஆதலின், இன்னும் அவர்கள் இந்திரன், மால், பிரமன் முதலியோர் உலகத்திலும், சிவலோகத்திலுங்கூட அங்குள்ள போகங்களை நுகர்ந்து வாழார். மற்றுச் சிவனது திருவடி நிழலில் தலைக்கூடுதல் ஒன்றனையே செய்வார்கள்.

குறிப்புரை :

`அதனால் பிச்சை ஏற்றலையும் செய்யார்` என்பது குறிப்பெச்சம். `சிவனடியார் சரீரத்திடைத் தங்கார்` என மாற்றி முதலில் வைத்துரைக்க. ``தங்கார்`` என்றது, எதிர்மறை வினைப்பெயர். ``பொங்கார்``, என்பதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இதனால், `சிவனடியார்கட்குப் பிச்சையும் மிகையேயாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார்
ஐயம் புகாமல் இருந்த தவசியர்
வையக மெல்லாம் வரஇருந் தாரே.

பொழிப்புரை :

இருந்த இடத்திலேயிருக்கும் யோகிகள் வறியவர் இரக்கும் இரவிற்குத் தாம் செல்லாமல், உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தம்பால் வந்து தம்மை வழிபடும்படி இருப்பார்கள். அங்ஙனமாயின், `ஞானத்தில் மிகுந்தவர் இரத்தலைச் செய்யார்` என்பது சொல்ல வேண்டுமோ!

குறிப்புரை :

`கையகம் நீண்டார் கடைத்தலைக்கே செல்வர்` என்பது பாடமன்று. மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `அகங்கை` எனப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய் வருவது இங்கு நேரே ``கையகம்`` என்றே வந்தது. மௌனம் உடையாரை, `வாய் திறவார்` என்றல்போல, இரவாத வரை. ``கையகம் நீட்டார்`` என்றார், `வாயிற்படி` எனப் பொருள் தரும், கடைத்தலை என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப் பன்மையாய் நின்றது. ஐயம் வறியோர் இரவும், பிச்சை உயர்ந்தோர் ஏற்கும் தானமும் ஆதல் அறிக.
இதனால், சிவனடியார் எஞ்ஞான்றும் இரவார் என்பது கூறி முடிக்கப்பட்டது. இறுதி மூன்று மந்திரங்களும் சிவனடியாருள் அதிதீவிர நிலை உடையாரது செயலே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நாலாறு மாறவே நண்ணிய முத்திரைப்
பாலான மோன மொழியில் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீதுய்க்கக்
கோலா கலங்கெட்டுக் கூடும்நன் முத்தியே.

பொழிப்புரை :

நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பும் நீங்குதற் பொருட்டு நல்லோர் தங்கள் உள்ளங்களை அவற்றிற்கு ஏற்பப் பொருந்திய முத்திரைகளாகிய பல வகைப்பட்ட மொழிகளிலே பொருத்தி, அவ்வாற்றால் பரம்பொருளாகிய சிவனடிமேல் செல்லும் படி செலுத்தினால், உலக ஆரவாரங்கள் அடங்கி, மேலான வீடுபேறு உண்டாகும்.

குறிப்புரை :

``நால், ஆறு`` என்பன தொகைக் குறிப்பாய் அத்துணையான தோற்றங்களையும், பிறப்புக்களையும் குறித்தன. `நாலாகிய ஏழ்` எனவும், `முத்திரையாகிய மோன மொழி` எனவும் விரிக்க. முத்திரைகள் வாய்திறந்து பேசாமலே கருத்தை விளக்குதலால் அவற்றை ``மோன மொழி`` என்றார். பதிவித்து உய்த்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``உள்ளம்`` என்றது, அதன் கண் எழும் கருத்துக்களை. ``பதிவித்து`` என்றது, `வாய்திறவாமல்` எனவும், கருத்துக்கள் `அவத்தின் பாலவாகாது, சிவத்தின் பாலவே ஆகல் வேண்டும்` எனவும் கூறியவாறு. மேலான வடு பரமுத்தி.
இதனால், முத்திரைகளது பயன் கூறுமுகத்தால் அவை அடியவர்க்கு வேண்டப்படுதல் கூறப்பட்டது. வாய்திறவாமையை வேண்டியது, `அதனால் உலகியல் தொடர்பு குன்றுதல் பற்றி` என்பதனை, ``கோலாகலம் கெட்டு`` என்பதனால் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

துரியங்கள் மூன்றும் சொருகிட னாகி,
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி, கேசரி உண்மை
பெருகிய ஞானம், பிறழ்முத்தி ரையே.

பொழிப்புரை :

அரிய சொற்களையே உரைப்பதாயினும் அதனையும் துரிய நிலையில் நிற்குங்கால் எழாமல் அடங்கியிருக்கச் செய்து நின்ற `சாம்பவி, கேசரி` என்னும் இரண்டு முத்தரைகளே முத்துரியங்களும் செறிந்திருக்கும் இடமாய்` உலகியலினின்றும் நீங்குதற்கும், உண்மை ஞானம் பெருகுதற்கும் ஏதுவாய முத்திரைகளாம்.

குறிப்புரை :

முத்துரியங்களை அடுத்த தந்திரத்தில் காண்க. அரிய உரை ... ... கேசரி`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. தாரம் - நாக்கு. ``அங்கே`` என்றது முன்னர்ப்போந்த துரிய நிலையை. பிறழ்தல் - நீங்குதல் உலகியலினின்று.
இதனால், `முத்திரைகள் பலவற்றுள் சிறப்புடையன இரண்டு` என அவை எடுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

சாம்பவி நந்தி தன்னருட் பார்வையாம்
ஆம்பவ மில்லா அருட்பாணி முத்திரை;
ஓம்பயில் வோங்கிய உண்மைஅக் கேசரி;
நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத்தி ரையே.

பொழிப்புரை :

சாம்பவி முத்திரையாவது தனது கண்களைச் சிவனது கண்களாகப் பாவித்துக்கொண்டு, நோக்குவன எவற்றையும் அந்தப் பாவனையோடே நோக்குதலாம். இதனால் உலகப் பொருள்கள் மாயையாகாது அருள்மயமாக, தனது ஞானேச்சாக் கிரியைகளும் சிவனது ஞானேச்சாக் கிரியைகளில் அடங்கி நிற்கும். இனித் தன்னைச் சிவனாகப் பாவித்து வணங்குவோரையும் அருளே தனுவாய் நின்று சிவமாகச் செய்யும்.
இனிக் கேசரி முத்திரையாவது, பிறப்பில்லாமைக்கு ஏது வாகிய சின்முத்திரைக் கையுடன் பிரணவ யோகத்தில் பயில்வதாகிய ஞானயோக நிலையாம். இவை இரண்டுமே நாம் நாள்தோறும் பயில்கின்ற சிவஞான முத்திரைகளாகும்.

குறிப்புரை :

பிறவியை அறுப்பது திருவடி ஞானமேயாகையால் அதனை, ``ஆம் பவம் இல்லா அருள்`` என்றார். அருட்பாணி - அருளைக் குறிக்கின்ற கை. `முத்திரையோடு` என உருபு விரிக்க. திருவடியுணர்வைக் குறிப்பது சின்முத்திரை ஒன்றேயாதல் அறிக.
இதனால், மேல் பெயர் கூறப்பட்ட இரு முத்திரைகளின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்;
ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால்
ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

பொழிப்புரை :

`ஆதாரம், நிராதாரம், மீதானம்` என்பன எல்லாம் வரையறைப்பட்ட இடங்களேயாதலின் அவ்விடங்களில் எல்லாம் விளங்குபவன் தடத்த சிவனே. (ஆகவே யோகம் முழுவதிலும் விளங்குபவன் தடத்த சிவனே. அதனால் யோக முத்திரைகள் யாவும் பதமுத்தி அபரமுத்திகளையே தரும்.) ஞானத்தில் சொரூப சிவன் விளங்குதலால் தடத்த சிவனின் வேறாகிய சொரூப சிவனைக் குறிக்கின்ற சின்முத்திரையே முத்திகளிலெல்லாம் முடிந்த முத்தியாகிய பரமுத்தியைத் தரும் முத்திரையாகும்.

குறிப்புரை :

போக சிவனாகிய சதாசிவனுக்குமேல் இலய சிவ னாகிய அருவ சிவன் உளனாயினும், `தடத்த சிவன்` என்பது இனிது விளங்குதற்பொருட்டுச் சதாசிவனையே குறித்தார். ``நற்சிவம்`` என்றது, `சொரூப சிவன்` என்றபடி. மோன முத்திரை - ஞான முத்திரை. அஃதாவது சின்முத்திரை. முத்த அந்த முத்தி - முத்திகளில் இறுதியான முத்தி, முத்தியைத் தருவதை ``முத்தி`` எனப் பான்மை வழக்காற் கூறினார். யோகத்தில் கைச்செய்கையேயன்றி, உடல் அமைப்புக்களும், அஃதாவது ஆசன வகைகளும் முத்திரை எனப்படும்.
இதனால், `யோகிகளினினும் சிறந்த ஞானிகளாகிய அடியவர் கொள்ளத் தக்கது சின்முத்திரையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்;
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்;
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே
ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.

பொழிப்புரை :

வாக்கு, மனம் என்னும் இரண்டும் வாளா இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அதைவிடுத்து, மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது வாளா இருத்தல்தான் மௌனம்` எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன விரதிகளாகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற அந்த வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?

குறிப்புரை :

`அறிந்து வாக்கும், மனமும் மௌனமாய், மோன முத்திரையுடன் இருப்போர் அரியர்` என்பது குறிப்பெச்சம். ``இரண்டும்`` என்றது, `இரண்டன் மௌனமும்` என்றபடி.
இதனால், `மோன முத்திரையுடையார் இன்ன நிலையின ராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்;
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை :

யோகம் கைவந்தமைக்கு அடையாளம் அட்டமா சித்திகள் வாய்ந்தமையாகும். அதுபோல இறைவனின் வேறாகது ஒன்றாகிய அனுபவ ஞானம் கைவந்தமைக்கு அடையாளத்தை ஆராயுமிடத்து மிக்க தகுதி வாய்ந்ததான வேதத்திற் சொல்லப்பட்ட கேசரியாகிய சாம்பவி முத்தரை யோடு கூடிய கேசரி முத்திரையே யாகும். யோக நூலினும் கேசரி முத்திரை சொல்லப்பட்டதாயினும் அஃது யோக கேசரி முத்திரையாம் .

குறிப்புரை :

ஆக்கம், இங்கு மிகுதி குறித்து நின்றது `மிக்க தகுதி யுடைய வேதம்` என்றது. ஞான காண்டமாகிய உபநிடதங்களை. அவற்றுட் கூறப்படும் கேசரி முத்திரை. `சாம்பவி முத்திரையோடு கூடிய கேசரி முத்திரை` என்றும், `யோக நாலுட் கூறப்படும் கேசரி முத்திரை தனியாகச் சொல்லப்படும் கேசரி முத்திரை` என்றும் உணர்த்தற் பொருட்டு முறையே ``கேசரி சாம்பவி`` என்றும் ``கேசரி`` என்றும் கூறினார். ஆகவே, ``சாம்பவி`` என்றது, சாம்பவியோடு கூடியது` என்றதாம். யோக கேசரி மூன்றாம் தந்திரத்துள் கேசரி யோகம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாம். இதனானே, `உபநிடதங்களிற் கூறப்படும் யோகம் ஞானயோகமே` என்பதும் பெறப்படும்.
இதனால், கேசரி முத்திரை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

யோகிஎண் சித்தி அருளொளி வாதனை;
போகிதன் புத்தி புருடார்த்த நன்னெறி;
ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.

பொழிப்புரை :

யோகி பெறும் அட்டமா சித்திகள் தருவருளால் கிடைப்பனவாயினும் அதுவும் ஒருவகைப் பந்தமே இனிப் போகியாய் இருப்பவன். `நல்ல புத்திமான்` என மதிக்கப்படுவானாயின் அவன் அறம் முதலிய மூன்று புருடார்த்தத்தைப் பெறும் நன்னெறியில் நிற் பவனேயாவான். ஆறு ஆதாரங்களையும் நன்கு தரிசித்தவன் திருவருள் நெறியைத் தலைப்பட்டவனாவன். ஆகவே ஞானி ஒருவனே ஒப்பற்ற முதற்பொருளை உணர்ந்து அதன்பால் உள்ள பேரின்பத்தவனைப் பெற்றவனாவன்.

குறிப்புரை :

`அத்தகையோனுக்கு உரியனவே சாம்பவியோடு, கூடிய கேசரி முத்திரை என்பது முன்மந்திரத்தினின்றும் வந்தியையும் ஞானியது பெருமையை விளக்குவார் ஏனையோர் நிலைகளை உடன் வைத்துக் கூறினார்.
இதனால், ஞானகேசரி முத்திரையின் சிறப்புப் பிற வற்றோடு ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துவாதச மாக்கமென் சோடச மார்கக்மாம்;
அவாஅறும் ஈரை வகைஅங்கம் ஆறும்
தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவாஅக மோடுன்னல் நற்சுத்த சைவமே.

பொழிப்புரை :

பன்னிரு கலைப் பிராசாதமே பதினாறு கலைப் பிராசாதமாய் விரியும். அதனால் அவை இரண்டும் தம்மில் வேறாவன அல்ல. விரிவில் பதினாறாகின்ற அந்தப் பிராசாத யோகமே உலகியலிற் செல்லும் அவாவை அடியோடு அறுக்கும். அதனால் அந்தப் பிராசாத யோகங்களே அவா முற்ற நீங்குதற்கு ஏதுவாகிய `வேதாந்த யோகம்` சித்தாந்த யோகம்` என்றும் சொல்லப்படும். அவற்றை மிக விருப்பத் தோடு செய்தலே சைவத்துள்ளும் மேலான சைவ நெறியாம்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட பிராசாத வகைகள் மூன்றாம் தந்திரத்து, `கலைநிலை` என்னும் அதிகார விளக்கத்தில்* விரித்து விளக்கப்பட்டிருத்தல் காண்க. ``என்``, `எனல்` என்னும் பொருட்டாய முதனிலைத் தொழிற்பெயர். `அவா அறு வகை ஈரை ஆறு அங்கமும்` என மாற்றிவைத்து உரைக்க. `தவாது` என்னும் எதிர்மறை வினை யெச்சத்தின் இறுதி எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. ``தன்மை`` என்றது அதிகாரப்பட்டுவருகின்ற யோகத்தினைப் `பிற யோகங்கள் எல்லாம் வேத யோகமாக இவை வேதாந்த யோகமாம்` எனவும், வேதாந்தத் தெளிவே சித்தாந்தம் ஆகையால், `அதுவே சித்தாந்த யோகமாம்` எனவும் கூறினமை காண்க. `நவ` என்பதன் இறுதி எதுகை நோக்கி நீட்டல் பெற்றது. நவம் புதுமை. அது புதுமை மேற் செல்லும் விருப்பத்தைக் குறித்தது. அவ்விடத்து ``அகம்`` என்றது மனத்தை.
இதனால், `ஞான கேசரி முத்திரையைக் கொள்ளதற்கு உரியவர் ஞானயோகமாகிய பிராசாத யோகம் செய்பவரே` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை;
ஞானத்து முத்திரை; நாதர்க்கு முத்திரை;
தேனிக்கும் முத்திரை; சித்தாந்த முத்திரை;
காணிக்கும் முத்திரை; கண்ட சமயமே.

பொழிப்புரை :

`மோன முத்திரை` எனப்படுவதாகிய ஞான கேசரி முத்திரையே உணர்வைச் சிவத்தில் நிறுத்தும் முத்திரையும், சிவா னந்தத்தைப் பெருகச் செய்யும் முத்திரையும் சித்தாந்த முத்திரையும், சிவன் சீவனைச் சதா நோக்கிக் கொண்டிருக்கும் முத்திரையும் ஆகும். அதனால் அதுவே சீவன் முத்தர்க்கும், சீவன் முத்தராய் ஆசிரியத் தன்மையை உடையவர்க்கும் ஏற்புடைய முத்திரையாம். அதுபற்றிப் பல சைவங்களும் அதனையே சிறந்த முத்திரையாகக் கண்டன.

குறிப்புரை :

``முத்தர்க்கு முத்திரை, நாதர்க்கு முத்திரை` என்ப வற்றை, ``கண்ட சமயமே`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``முத்திரை`` பலவற்றுள் முதற்கண் நின்றது எழுவாய்; ஏனைய பயனிலை. `தேன்` என்னும் பெயர், `இனிமை` என்னும் பொருட்டாக, அதனடியாக, `தேனித்தல்` என்னும் வினைச்சொல் பிறந்தது. மேற் பார்வை பார்த்தலை, `கண்காணித்தல்` என்பர். அதனை முதற் குறைத்து, ``காணிக்கும்`` என்றார். அடியவரைக் கண்காணிப்பவன் சிவனேயாதல் வெளிப்படை. ``காணிக்கும்`` என்து இன எதுகை யாயிற்று. `கண்டன` என்னும் முற்றுச்சொல் `அன்` பெறாது ``கண்ட`` என நின்றது. ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவ சமயத்தையே குறித்தது. சைவத்தை நாயனாரே ஐந்தாம் தந்திரத்தில் பல வகையாகப் பிரித்துணர்த்தினமை அறிக.
இதனால், ஞான கேசரி முத்திரையே, முத்திரைகளுள் தலையாவது என்பது பலவற்றாலும் வலியுறுத்தி, ஒருவாறு முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்;
மேனெறி கண்டது வெண்மதி மேதினி,
நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே.

பொழிப்புரை :

தூய நெறியாகிய யோக முறை கைவந்து உண்மையைக் கண்ட அடையாளம், புருவ நடுவில் தோன்றுகின்ற முடி நிலை ஆதாரமாய்க் காணப்பட்டு, மேருமலையின் உச்சியை அடைந்தது போலத் தோன்றும். எனினும் அதுவே முடிநிலையாகாது, அதற்கு மேலேயுள்ள ஏழாந்தானத்திற் சென்றவர் கண்டது சந்திர மண்டலமாம். ஒருவன் அதற்குமேலும் செல்வானாயின், சத்தி சிவ நெறிகளைக் கண்டு மலம் நீங்கிய தூய உணர்வினனாவன்.

குறிப்புரை :

`அந்நிலையை அடைவிப்பது மேற்கூறிய பிராசாத யோக நெறியாகிய ஞான கேசரி முத்திரையேயாம்` என்பது குறிப்பெச்சம்.
``நெறி`` நான்கனுள் ஈற்றில் உள்ளதில் இரண்டனுருபும், ஏனையவற்றில் மூன்றனுருபும் விரிக்க. பூ - பூமி; நிலம் - ஆதாரம். நகம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. மேதினி - மண்டலம். நீள் நெறி - உயர் நெறி. ``நீணெறி`` என்பது இன எதுகை.
இதனால், கேசரி முத்திரைபற்றிக் கூறப்பட்ட ஞான யோகத்தின் சிறப்புணர்த்து முகத்தானே அம்முத்திரையினது சிறப்புணர்த்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.

பொழிப்புரை :

இயன்ற அளவு யோக நெறியில் நின்ற யோகி அந்நிலையிலே தனது புற உடலை விட்டு நீங்கினால் நீங்கின காலம வளர்பிறைக் காலமாய் இருப்பின் முன்னர்த் தேவருலகை அடைந்து சில காலம் இருந்து, பின் சூரிய மண்டலத்தில் நுட்பமாய்ப் புகுந்து, அப்பால் பிதிரர்கள் உலகத்தில் தங்கி, இறுதியில் சந்திர மண்டலத்துள் தஹ்கி அங்குள்ள இன்பத்தை நுகர்வான்.

குறிப்புரை :

ஈற்றடியில் உள்ள ``யோகி உடல் விட்டால்`` என்பதனை முதலிற்கொண்டு உரைக்க. தான், ஏ அசைகள். ``வளர் பிறையில்`` என்றதனால், யோகி வளர்பிறையிற்றான் புற உடலை விட்டு நீங்குவான்` என்பது அமைந்து கிடந்தது. உளர் ஒளி - அசைகின்ற ஒளிக்கதிர். பிதிரராவார் மக்களுள் சிறந்தோரைத் தம்பால் வைத்துப் புரக்கும் கடவுளர். இவரே ``தென்புலத்தார்`` (திருக்குறள் - 43.) ஆவர்.
இதனால், யோக நிலைமுற்றப் பெறாத யோகிகளது வாழ்வின் நிறைவிற்குப் பின் உளதாம் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானிவை யொக்கும் சமாதிகை கூடாது
போனவி யோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.

பொழிப்புரை :

யோக நிலை முற்றப்பெறாது உடல்விட்ட யோகிக்கு மேற்சொல்லியன எல்லாம் பொருந்தும். அவன் அவ்வாறு மேற்சொல்லிய இடங்களிலெல்லாம் தங்கிப் பயன்களை நுகர்ந்தபின் அங்கு நின்றும் பூமியில் வந்து பிறந்து விட்ட குறையாகிய வினையைப் புசித்துத் தீர்ந்தபி திருவருளின் துணையைப் பெற்று இடைவிடாது யோகத்தின் முதிர்ந்த நிலைகளை எய்துவர்.

குறிப்புரை :

யோகத்தின் முடிநிலை சமாதி நிலையாகலின் யோகம் முற்றப் பெறாது உடல் விட்ட யோகியை, ``சமாதி கை கூடாது போன வியோகி`` என்றார். முதற்கண் ``தான்`` என்றது அவனையே யாகலின், அதனை, `தனக்கு` எனத் திரித்துக் கொள்க. `புகலிடத்தினின்றும்` என ஐந்தாவது விரிக்க.
இதனால், `யோக நிலை முற்றப் பெறாது உடல் விட்ட யோகிகள், மீண்டும் பிறந்து அது முற்றப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன்
ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய யோகி மேற்கூறியவாறு உலக மக்கள் நெறியிலே தானும் நின்று, அதற்கு இடையிலே யோகம் முதிரப் பெற்றுச் சிவயோகியாவான். அங்ஙனம் அவன் சிவயோகி ஆவதற்கு வழி பிராசாத மந்திரம். அந்த மந்தித்தில் நின்று சிவயோகி ஆவதற்கு முன்பு அவன் பொதுவான யோகப் பயிற்சியால் கிடைக்கும் காய சித்தியைப் பெறுதலும் உண்டு.

குறிப்புரை :

``விந்து`` என்றது உபலக்கணமாய் ஏனைக் கலைகளோடு கூடிய பிராசாத மந்திரத்தைக் குறித்தது. `இம்மந்திர வழிச் செய்யப்படும் யோகமே சிவயோகம்` என்பது இங்கு இனிது விளக்கப் பட்டது. எனவே, முன் மந்திரத்தில் ``மாயோகம்`` என்றதும் இதுவேயாயிற்று. `வந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
`காயமும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், `முன்மந்திரத்திற் கூறியவாறு மாயோகத்தைப் பெறுதற்குமுன் சிலர் காய சித்தியைப் பெற்று நெடுங்காலம் மண்ணிலே இருத்தலும் உண்டு` என்பது கூறப்பட்டது. காய சித்தியைக் கூறவே ஏனைச் சித்திகளையும் பெற்றிருத்தல் பெறப்பட்டது.
``தவமும் தவமுடையார்க் காகும்`` * என்றபடி, யோகம் முதிரப் பெறுதலும், சிவயோகம் கூடலும் முற்பிறவியில் பழகினோர்க் கேயாம் என்பதும் இதனால் பெறப்படுமாறு அறிக.

பண் :

பாடல் எண் : 4

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன்
புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

பிராசாத யோகமாகிய சிவயோகத்தில் நின்றவன் ஞானம் பெற்றவனோடு ஒத்தவனேயாவன். அவன் ஞானம் பெறுதற்கு முன் உடலை விட்டு நீங்கினானாயினி நேரே சிவலோகத்தையே அடைந்து அங்கு இன்பம் துய்த்தபின் மீளப் பிறந்து அந்தச் சிவ யோகத்தின் வழியே பெற்ற ஞானத்தால் மேன்மை எய்தி அத்தன்மை யாரோடே இருப்பன். அவ்வாறன்றிச் சிவலோகம் முதலியவற்றிற் செல்வோர் பசு புண்ணியம் செய்தவரே யாகையால் சிவயோகி ஆங்கெல்லாம் புகான்.

குறிப்புரை :

சிவயோக ஞானம் - சிவயோகத்தால் பெற்ற ஞானம். `பெற்ற ஞானம்` எனவே, பெறுதல் தானே பெறப்பட்டது. `பெற்ற ஞானம்` எனவே பெறுதல் தானே பெறப்பட்டது. சேர்தற்குச் செயப்படுபொருள் வருவிக்க. `நிற்பர்` என்பது பாடம் ஆகாமை அறிக. `அவரொடு` என உருபு விரிக்க.
இதனால், மாயோகத்தைப் பெற்றவரது வாழ்வு நிறைவின் பின் நிகழ்வது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவ னாகும் பரகாயஞ் சாராதே
ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.

பொழிப்புரை :

குறைவில்லாத ஞானத்தைப் பெற்றவன் `குறை வற்ற யோகி` என்றும் சொல்லப்படுவான். (அதற்குக் காரணம், உடம்புள்ள வரையில் அவன் உடலை விட்டு நீங்கியபின் வேறோர் உடலை எடுத்தல் இன்றியே, உடம்பில் மோன சமாதி நிலையில் தான் வேறின்றி இருந்தவாறே உடனே தான் சிவமேயாவன் ஆகவே, அவன் பரமுத்த னாதலன்றி, உலகியல் உணர்வைப் பொருந்திப் பிறப்பில் மீளான்.

குறிப்புரை :

`தங்கி ஆகும்` என்பதில் செய்தெனெச்சம், `ஓடி வந்தான்` என்பது போல முடிக்கும் சொற்கு அடையாய் நின்றது. ``பரகாயம் சாராதே`` என்பதை முதலடியின் இறுதியில் கூட்டியுரைக்க. இவ்வேகாரம் பிரிநிலை `முத்தராய்` எனவும், `மீளார்` எனவும் பன்மைச் சொல்லாக ஓதுவன பாடம் ஆகாமையறிக. `உணர்வுற்று மீளான்` என்க.
இதனால் ஞானம் முற்றப் பெற்றோர் தம் வாழ்வின் பின்னர் எய்தும் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.

பொழிப்புரை :

`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறை யிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம்முறை யில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை. (என்றதில், `அவர் சிறப்பாக அடையும் பயன் வேறில்லை` என்றபடி) இனிப் பொதுவான யோகத்தைச் செய்து அதன் பயனாகச் சித்திகளைப் பெற்றவர் இறந்தாரானால், அவரது புகழ் உலகில் இறவாதிருக்கும். ஆகவே, மும்மலங்களும் கெடப்பெற்றோரே வாழ்விலும், வாழ் விற்குப் பின்னரும் சிவமாய் நிற்கும் சிறந்த பேற்றை உடையராவர்.

குறிப்புரை :

``செத்தார்`` என அமங்கலமாகவே கூறியதனால், அது பிறந்த பல உயிரும் இறக்கும் இறப்பினை எய்திநின்றோரையே குறித்தது. வினாவியவருக்கு இறுக்கப்படும் விடையை வெகுளியால் அவர்மீதே வைத்து, ``நீர்`` என முன்னிலையாற் கூறினார். வெகுளி, வாளாதே பயன்பெற விழைதல் பற்றி எழுந்தது. சேர்வு+அது` என்க, சேரப்படும் பயனைச் சோர்வு என்றார். `அதுவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. சித்தி, `சித்து` எனவும் படும். புகழுடம்பு நிலைத்து நிற்க இறத்தலை, ``உளதாகும் சாக்காடு``l என்ப ஆதலின், ``இருந்தார்`` என்றார். `இருந்தாரே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயிற்று. `செகத்தில் இருந்தாரே` என்க. `வாளா இறந்தார் பெறும் பயன் யாது` என வினாவினார்க்கு, `பிறந்தோர் யாவரும் புகழோ, ஞானமோ இரண்டில் எதனையாவது எய்தல் வேண்டும்` என்றற்கு, யோகியரும், ஞானியரும் பெறும் பயனை உடன் எடுத்துக் கூறினார். சிறந்த சித்தியாவது முத்தியே யாதல் பற்றி, முத்தியும் சில விடத்து, `சித்தி` எனப்படுதல் பற்றி, முத்தி எய்துவோரை, `சித்தர்` எனக் கூறுகின்றவர் ``திண்சித்தர்`` எனச் சிறப்பித்துக் கூறினார்.
இதனால், வாளா வாழ்ந்து நாள் கழிப்பவர் வாழ்வு முடிந்த பின்னர் யாதொரு பயனும் எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள்
பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி
தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற விரும்பும் உறுதியுடையவன், `சிவனையன்றி வேறொன்றையும் நினைத்தல் கூடாது` என்னும் எண்ணமாகிய விதையை முதலிலே தனது உள்ளமாகிய நிலத்தில் ஊன்றி, (அந்த எண்ணம் சத்திநிபாதத்தால் உண்டாகும்) அங்ஙனமே சிவனையே பலகாலும் நினைத்தும், போற்றியும் வருவானாயின், அந்தச் சிவனே அவனுக்கு ஞானியர் குழாத்தை அவனுக்கு அருள் புரியும் வண்ணம் கூட்டுவிப்பான். (சேரமான் பெருமாளுக்கு வன் றொண்டரைக் கூட்டுவித்ததுபோல.) அங்ஙனம் கூட்டுவிக்கப்பட்ட பின் அவன் தானும் அக்குழாத்து ஞானியர் போல உலகத்தார் அனைவரையும் தன் மக்கள் போலக் கருதி, `அவர்களும் தான் பெற்ற பேற்றைப் பெற வேண்டும்` என விரும்புவான். அத்தகையோனுக்குச் சிவன் அவன் விரும்பியவாறெல்லாம் காட்சி தருவான்.

குறிப்புரை :

`அவ்வாறு நீவிரும் செய்து ஞானத்தோர் பெறும் பயனைப் பெறுவீராக` என்பது குறிப்பெச்சம். `வாளா செத்தார் பெறும் பயன் யாது` என வானாவியவரை வெறுத்து, `அவர் பெறும் பயன் யாதுமில்லை` எனவும், `பயன்பெறும் வழிகள் இவை` எனவும் கூறிய நாயனார், `அவற்றுள் சிறந்ததாகிய ஞானத்தைப் பெறுதல் எவ்வாறு` என அறிய விரும்புவார்க்கு அதனை இம்மந்திரத்தாற் கூறினார்.
``கரு`` என்றது எண்ணத்தை. உரவோன் - திட்பம் உடையவன். குலம் - குழாம். `என்ன புதல்வர்க்கும்` என வரற்பாலது எதுகை நோக்கி, ``என்னப் புதல்வர்க்கும்`` என வந்தது. வேண்டுதல், தான்பெற்ற இன்பத்தை அவரும் பெறுதலை. ``ஞானி`` என்றது முன்பு உரவோனாய் இருந்து பின்பு ஞானம் பெற்றவனை. `இம்மையிலும் தான் வேண்டியவாறே ஈசனைப் பெற்று நிற்பான்` எனவே, உடல் விட்டபின் அவன் ஈசனைப் பெறுதல் சொல்லவேண்டாவாயிற்று.
இதனால், முன் மந்திரத்து வினாவியவர்க்குப் பயன்பெறும் வழி காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம்
அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல்
இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.

பொழிப்புரை :

ஓரோரிடத்தில் மட்டுமே உள்ளது போலக் கட்டடங் களுக்கு உள்ளதுபோலக் காணப்படுகின்ற ஆகாயம் உண்மையில் அவ்வாறின்றி எங்கும் நிறைந்திருத்தல் போல இறைவன் ஓரோ ரிடத்தில் மட்டும் இருப்பவன் போல அங்கங்குள்ள குருலிங்க சங்க மங்களிலே இருப்பினும் உண்மையில் அவன் அந்த இடங்களை யெல்லாம் கடந்து எங்கும் இருக்கின்றான். இந்த உண்மையைத் திருவருளால் உணர்ந்து அந்தத் திருவருள் வியாபகத்திலே நிற்பவனே சிவஞானியாவான். அவன் உடல் விட்டால் அவனுக்கு சிவன் தனது எங்கும நிறைந்த நிறைவு நிலையை அனுபவமாகச் செய்து எல்லை யில்லாத இன்பத்தையும் அருளுவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `தோய்தல் போல` என உவம உருபு விரிக்க. `சிவஞானிகளுக்குத் தற்பரம் எங்குமாய்` என்பதில் `உடல் விட்டபின்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இவ்வுலகிற்றானே சீவன் முத்தி நிலையைப் பெற்றவன் உடலை விட்டபின் பரமுத்தனாய் விளக்குதல் கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

அந்தம் இன்மை ஞானத்தைச் சிறப்பித்தது. வருகின்ற மந்திரத்தில் எண்ணின்மையும் அன்னது. நோதல் பசியினால். செரு - போர். செருச்செய்வாரது நுட்பமாகிய திறமை செருவின்மேல் ஏற்றப்பட்டது. ``வந்து`` என்றதனில் `வேற்று நாட்டிலிருந்து` என்பது பெறப்பட்டது. இவ்வெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. தளை சிதைய ஓதப்படுவன பாடமல்ல.
இதனால் யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், வாளா விடுதலும் குற்றமாதல் கூறப்பட்டது. அடுத்து வரும் மந்திரமும் எரிப்படுத்தல் கூடாமையைக் கூறும்.

பண் :

பாடல் எண் : 2

எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

அண்ணல் - இறைவன். ``ஆங்கு`` அசை. இதனுள் ஞானியின் உடல் இறைவன் கோயிலுக்கு ஒப்பாதல் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.

பொழிப்புரை :

மலங்கு ஆர - மனங்கலங்குதல் மிகும்படி, மண்ணில் அழிதல் - கேட்பாரின்றிக் கிடநத் அழிதல். ஏனையவை வெளிப்படை.

குறிப்புரை :

`பங்கமாம்` என்பது பாடம் அன்று. ``அவர்`` என்றது ஆகுபெயர். இதனால் குகைக்குள் அடக்கும் புண்ணியத்தைப் பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

இதனால் ஞானியின் உடலைச் சமாதி செய்தலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.

பொழிப்புரை :

குகையை (நில அறையை) ஒன்பது சாண் ஆழமும் ஒரு பக்கத்திற்கு ஐந்து சாண் சதுரமும் ஆகச் செய்து அடியில் திருமேனி தவநிலையில் அமர்கின்ற ஆசனம் பக்கத்திற்கு மூன்றாக முக் கோணமாக அமைத்து, அதன் மேல் திருமேனியைப் பதுமாசனமாக இருத்துக.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் `உட்குகை` என்னாது `குகை` என்றே ஓதின் தளை சிதைதலை நோக்குக. உட்குகை - குகைக்கீழ். `பத்மாசனமாக இருத்துக` என இறுதியில் ஆக்கத்துடன் ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால் நிலக்குகை அமைத்து அதன்கண் திருமேனியை இருத்துமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.

பொழிப்புரை :

இதன் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

``தன்`` என்றது உடலை விட்டு நீங்கிய ஞானியை ``மனை`` என்றது ஆச்சிரமத்தையும், தங்கியிருந்த இடத்தையும் பொது வாகக் குறிக்கின்றது. சாலை - பெருவழி. `குளக்கரை, குளங்கரை` - விகற்பப் புணர்ச்சி. `யாற்றிடைத்திடல்` என்க. நற்பூமி - புனிதமான நிலம்.
இதனால் நிலக்குகை அமைத்தற்குரிய இடங்கள் வரையறுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.

பொழிப்புரை :

நில அறையின் மேலே அழகிய கோயில் ஐந்து அடிக்கு ஐந்து அடிச் சதுரமாய், உயரம் ஒன்பதடியாக மும்மூன்று அடி உயரத்தில் ஒவ்வொரு நிலையாய் மூன்று நிலைகள் தோன்றும்படி அமைத்தல் முறையாகும்.

குறிப்புரை :

``குகை`` என்பதன் பின், `மேல்` என்னும் பொருட் டாகிய கண்ணுருபு விரிக்க. ``வட்டம்`` என்றது. `சுற்றுப் பக்கம்` என்ற படி. `பாதம்` என்பது பலபொருள் தருமாதலின் `அடிக்கால்` என்பது உணர்த்துதற்கு ``அங்கபாதம்`` என்றார். அங்கம் - உடல் உறுப்பு. நில அறை இரண்டரை முழச் சதுரம் ஆதலின் அதன்மேல், `ஐந்தடிச் சதுரம்` என்பது அந்த நில அறையை உள்ளடக்கியிருப்பதாகும். நிற்கின்ற பாதம் - நிலத்தினின்றும் எழுந்து நிற்கும் வடிவையுடையது. ஓசம் - ஒளி. அஃது பெயராய் யாவரும் காண விளங்கி நிற்கும் கோயிலைக் குறித்தது. `அண்ணி என்பது இடைக் குறைந்து, ``அணி`` என நின்றது. அண்ணி நிற்பவர், ஞானியை அடுத்திருப்பவர்; மாணாக்கர் முதலாயினோர். ``செய்யும்`` என்னும் பெயரெச்சம் ``நேர்மை`` என்பதனோடு முடிந்தது.
இதனால், நில அறையின்மேல் கட்டப்படும் சமாதி கோயிலின் அமைப்பு முறை கூறப்பட்டது. நில அறை அமைப்பு முறை கூறினமையின் அதனோடு இயையக் கோயில் அமைப்பு முறையும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.

பொழிப்புரை :

நில அறையின் அடியில் ஐம்பொன்களும், ஒன்பான் மணிகளும் நிரம்ப இட்டு மூடி, அதன்மேல் மேற்கூறிய முக்கோண பீடத்தை அமைத்து, அதன்மேல் தருப்பையைப் பரப்பி, திருவெண்ணீற்றைத் திருமேனிக்கு அடியிலும், சுற்றிலும், மேலேயும் நிரம்ப இட்டு, அதன்மேல் பொன்னிறமாய் உள்ள நறுமணப் பொடியை மிகுதியாகத் தூவுதலும் சிறப்புடையதாகும்.

குறிப்புரை :

``ஐம்பொன்`` என்றது பெரும்பான்மை பற்றியே யாகலின். கரும்பொன் ஒழிந்தனவே கொள்க. பொன் செய் - பொன்னினது ஒளியைத் தருகின்ற.
இது முதல் நான்கு மந்திரங்களால் திருமேனியை் பொதியுமாறே கூறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 9

நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.

பொழிப்புரை :

நடுவில் நில அறை இருக்க, நாற்புறத்திலும் மேலே வரம்பு அமைத்தபின், அதற்கு மேற்கு பக்கத்தில் நிலத்தின்மேல் ஆசனத் தின்மேல் திருமேனியை எழுந்தருளப் பண்ணி, சந்தனத்தின் கருப்பூரம் முதலியவை கலந்த குழம்பு, தனியாக இழைத்த சந்தனம், புனுகு, பனிநீர் முதலியவை களால் திருமுழுக்குச் செய்வித்து, தேன் துளிக்க மலரும் பூவால் ஆகிய மாலையைச் சார்த்தி, தூப தீபம் காட்டுக.

குறிப்புரை :

``அதன்மேற்காக`` என்றமையால், `நிலத்தின் மேல்` என்பது பெறப்பட்டது. வழிபாடுகளை மிகச் சுருங்கக் கூறினாராயிலும் உபலக்கணத்தால் இங்குக் கூறாதனவும் கொள்ளப்படும்.

பண் :

பாடல் எண் : 10

ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.

பொழிப்புரை :

தூப தீபம் காட்டுதல் முதலியவற்றைச் செய்தபின் திருநீற்றைத் திருமேனிமேல் குப்பாயம் போல மிகுதியாகப் பூசி, நில அறையில் அமைத்துள்ள பீடத்தின் மேல் மலர்கள், நறுமணப்பொடி, திருநீறு இவைகளை இட்டு, மேலே திருமேனியை எடுத்து இருத்திச் சுற்றிலும் ஆடையைச் சூழ வையுங்கள்.

குறிப்புரை :

``வைத்து`` என்பதை, ``பொலிவித்து`` என்பதற்கு முன்னே கூட்டுக. விரித்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.

பொழிப்புரை :

குகையில் திருமேனியைச் சுற்றி ஆடையால் மூடியபின் குகையின் மேல நான்கு பக்கங்களிலும் பல வகையான படையற் பொருள்களை வாழைக் குருத்தின்மேல் மேல் இட்டு நிவேதித்த பின்பு திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிவிடுங்கள்.

குறிப்புரை :

படையற் பொருள்களை மேலே நிலத்தில் வாழைக் குருத்தின் மேல் நான்கு பக்கமும் இட்டு நிவேதித்தல் சூழ்ந்துள்ளோர் பலரும் கண்டு வணங்குதற்பொருட்டு. மற்றும் வானவரும் அப் பொழுது ஞானியை வணங்குவர் என்பது கருத்து. அலம் வைத்து - நிரம்ப இட்டு. குழை முகம் - அருள்புரிகின்ற ஞானியின் முகம். பார்வை தரித்தல் - நிவேதனங்களை ஞானி தான் பார்வை செய்து ஏற்றல். பரிவட்டம், ``வட்டம்`` என நின்றது.

பண் :

பாடல் எண் : 12

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.

பொழிப்புரை :

திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிய பின்பு திருவெண்ணீறு, மணப்பொடி, பலவகை மலர்கள், தருப்பைப்புல், வில்வ இலை முதலியவைகளை நிரம்பச் சொரியுங்கள்; பின் அருக்கியம் முதலியவைகளைக் கொடுத்துக் கோயில் எடுத்தற்குரிய தொடக்கத்தைச் செய்து விடுங்கள்.

குறிப்புரை :

`தொடக்கத்தைச் செய்யுங்கள்` என்றதனால், `திரு மேனியை மண்ணால் மூடி மறையுங்கள்` என்பது தானே பெறப் பட்டது. இவ்விடத்தில் கூறுதற்கு உரிய கோயில் எடுத்தலை ஒரு காரணம் பற்றி, ``பொற்பமர் ஓசம்`` என முன்னே கூறினார் ஆகலின், `அதனை இங்குக்கொள்க` என்றற்கு அங்குக் கூறியதனை இம்மந்திரத்து ஈற்றடியில் அனுவதித்துக் கூறினார். மீது `சொரிந்திடும்` என்பதை `வில்வமும்` என்பதன்பின் கூட்டுக. இங்கு மஞ்சனமாவது அருக்கியபாத்திய ஆசமனங்களைக் கொடுத்தல்.

பண் :

பாடல் எண் : 13

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`குகையின் மேல் கோயில் எடுத்தபின் கருவறையில் ஒரு பீடத்தின்மேல் அரச மரமாயினும், இலிங்கமாயினும் இவற்றுள் ஒன்றை நிறுவி, நாள்தோறும் பதினாறு வகையான உபசாரங்களுடன் வழிபாடு செய்க` என்பதும், `கோயிலை வடக்கு நோக்கியதாக வேனும், கிழக்கு நோக்கியதாகவேனும் அமைக்க` என்பதும் இதனால் கூறப்பட்டன. `இன்னதை` நிறுவலாம்` என்பது குரு ஆணை பற்றியும், திருவருட் குறிப்பு நோக்கியும் அறியப்படும் எனக் கொள்க.
`வாயிலை வடக்கு நோக்கியேனும், கிழக்கு நோக்கியேனும் அமைக்க` என்றதனால். `அதற்குமுன் திருமேனியும் அவ்வாறு இருத்தப் படும்` என்பதும், திருமேனி இருத்தப்பட்ட வகையிலே வாயிலும் அமைக்கப்படும்` என்பதும் உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.
கோயிலின் கருவறையிலே வில்வ மரம். பாத பீடிகை இவைகளை அமைத்தலும் மரபாக உள்ளது.
இங்ஙனம் இறுதியில் சமாதிக் கோயில்முறை சொல்லி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி
உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான்
விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி
கதியிற் கரணம் கலைவை கரியே.

பொழிப்புரை :

முழுப்படைப்புக் காலத்தில் முதற்கண் சுத்த மாயா காரியங்களே தோன்றும். அக்காரியம் வாக்குகளும், இறைவனது நவந்தரு பேதங்கட்கும் இடமாய் நிற்கும் சுத்த தத்துவங்களும் ஆகும். நவந்தரு பேதங்களை ஒடுக்க முறையில் வைத்து எண்ணினால் பிரமன் முதலியனவாக அமையும். புண்ணியம் காரணமாக இறைவனது அதிகார சத்தி பதிதலால் அப்பெயர் பெற்று நிற்கும் அணுபக்கத் தினரும் உளர். அது நிற்க. வேறு பிரமனாதியர்க்கும், மற்றும் நால்வகை வாக்கிற்கும், அனைத்துப் பொருள்கட்கும் இடமாய் நிற்பன பஞ்சகலைகள்.

குறிப்புரை :

`அந்தப் பஞ்ச கலைகளும் சுத்த மாயையினின்றே தோன்றும்` என்பது கருத்து. குண்டலியாவது எழுத்தோசையாகிய நாதமேயாம். குடிலையில்` என்பது, ``குடிலில் எனக் குறைந்து நின்றது. `விந்து, குடிலை என்பன ஒருபொருட் சொற்கள் எனினும் சில இடங்களில் குடிலை என்பது ஆகுபெயராய் அதன் காரியமாகிய வாக்குகளை உணர்த்தும். கதி - காரிய நிகழ்ச்சி. அதிகரணம் என்பது `கரணம்` எனக் குறைந்து நின்றது. அதிகரணம் - நிலைக்களம், குண்டலி` என்றது சூக்குமமாகிய காரண நிலையாகலின் பின்னர்த் தூல மாகிய வைகரியை வேறு கூறினார். ``வைகரி`` என்றது உபலக்கணம் ஆதலின் ஏனை மத்திமை பைசந்திகளும் கொள்ளப்படும். `கரணம் கலை` என்றதின் பின் `அவற்றில் வைகரி முதலியன நிற்கும் என உரைக்க. இம்மந்திரத்தின் முதல் இரண்டடிகளில் தோன்றும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. சுத்த தத்துவங்கள் ஐந்து எனப்படினும் அவை அனைத்தும் சிவ சத்தி பேதங்கட்கு இடமாகு மாற்றானே ஐந்தாய் நிற்றலின் நவந்தரு பேதங்களுள் பரநாத பரவிந்துக்கள், `அரன் அரி அயன்` என்பன ஆகிய பேதங்கட்கு உரிய அதிகரணங் களையும் வேறு வைத்து எண்ணி `வயிந்தவம் ஒன்பான்` என்றார். வயிந்தவம் - விந்துவின் காரியம். `அரன், அரி, அயன்` என்பவர் கட்குச் சுத்த வித்தையிலும், பரநாத பரவிந்துக்களுக்கு அபரநாத அபர விந்துக்களிலும் களம் உண்டு என்க. ``விதியிற் பிரமாதிகள் மிகு சத்தி`` என்றது பிராகிருதராய் நிற்கும் மூர்த்திகளை மேற்கூறப்பட்டவரோடு வைத்து மயங்காமைப் பொருட்டு, இடைப்பிறவரலாகக் கூறினார். `விதியின், மிகு சத்தியால் பிரமாதிகள் ஆவர்` என்க. விதி - புண்ணியம்.
``விரைக்கம லத்தோன் மாலும் ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே``
எனவும்,
``அயன்றனை ஆதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்``
எனவும் சிவஞான சித்தி (சூத்திரம் -2-34,60) கூறுதல் காண்க.
நவந்தரு பேதங்கள் `திருவருள் வைப்பு` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டன.
இதனால் சுத்த மாயையாகிய விந்துவின் காரியங்கள் ஓராற்றல் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

செய்திடும் விந்துபே தத்திறம் ஐயைந்தும்
செய்திடும் நாதபே தத்திறன் நாலாறும்
செய்திடும் மற்றவை ஈரிரண் டின்திறம்
செய்திடும் ஆறாறு சேர்தத் துவங்களே.

பொழிப்புரை :

நவந்தரு பேதங்களில் நாதங்களும், விந்துக்களும் முறையே சிவமும், சத்தியும் ஆதலால் சிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூற்று நிலைகளுள் அதிகார நிலையாகிய மகேசுரனது பேதங்கள் இருபத்தைந்தினையும் `சத்தியின் காரியங்கள்` என்றும், நவந்தரு பேதங்களில் விந்து, சத்தி இவை யொழிந்த ஏழும், குணமூர்த்திகள் மூவரும் ஆகப் பதின்மரும் நாயக, நாயகி பாவத்தில் நாயகர்கள் ஆதலால் அவர்களையே, `சிவ பேதங்கள்` என்றும் ஒருவாறு கூறலாம். இனி அந்தச் சத்தி சிவங்கள் ``சகுணம், சமலம், நின்மலம், ஆனந்தம்`` என்னும் காரணத்தால் நான்காகின்ற மாயையின் வகை மூன்றினின்றும் முப்பத்தாறு தத்துவங்களையும் வகைப்படத் தோற்றுவிக்கும்.

குறிப்புரை :

``செய்திடும்`` நான்கில் முதல் இரண்டையும் `அங்ஙன மாகச் செய்யும்` என்னும் பொருளையுடைய முற்றாக்கி, திறன் என்னும் எழுவாய்கட்குப் பயனிலைகளாக்குக. மூன்றாவதனைப் பெயரெச்சமாக்கி, அதனை ``அவை`` என்பதனோடு முடிக்க. மற்று - வினை மாற்று. `அவை, ஈரிரண்டினின்றும் தத்துவங்களைத் திறம் செய்திடும்` என இயைக்க.
இதனால், சுத்த மாயையாகிய விந்துவில் நிற்கும் சத்தி சிவங்களின் செயல்கள் ஒருவாறு வகுத்துரைக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

வந்திடு பேத மெலாம் பரவிந்து
தந்திடும் மாமாயை வாகீசி தற்பரை
உந்து குடிலையோடு ஓம்உறு குண்டலி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.

பொழிப்புரை :

மாயா காரியங்களாய் உள்ள பலவற்றிற்கும் காரணமாய் நிற்பது `பரவிந்து` என்னும் தத்துவம். அது சுத்த மாயையின் காரியமே எனினும் அதன்கண்ணே `அபர வாகீசுவரி, பரவாகீசுவரி`, அனைத்து மந்திரங்களையும் செலுத்துகின்ற பிரணவம், அதன வடிவமாகிய குண்டலி என்னும் நான்கும் பொருந்தி விளங்கும்.

குறிப்புரை :

பரவிந்து `சிவம்` என்னும் தத்துவத்திற்கு மேலுள்ளது. அதற்குமேல் பரநாதம் இருக்கும். அஃது இங்குக் குறிப்பிடப்பட வில்லை. `பரை` என்றது பரவாகீசுவரியை ஆகையால், வாளா, ``வாகீசி`` என்றது அபர வாகீசுவரியையாயிற்று. `பிரணவந்தானே குண்டலியாம்` என்றற்கு ``ஓமுறு குண்டலி`` என்றார். அங்ஙன மாயினும் அஃது அப்பெயரால் யோகத்தில் சிறப்பாக உன்னப்படுதல் பற்றி அதனை வேறாகக் கூறினார். அபர வாகீசுவரியும், பிரணவமும் அபர விந்துவில் விளங்குமாயினும் அவையும் காரண நிலையில் சூக் குமமாய்ப் பரவிந்துவில் விளங்குதலை, ``மேவா விளங்கும்`` என்றார். முன்னர், `பரவிந்து` என்றதனால், பின்னர் ``விந்து`` என்றதும் அதுவேயாயிற்று. ஆகவே பின்னர் ``விந்து`` என்றது, `அவ்விந்து` என்றதாயிற்று.
இதனாலும் விந்துற்பனங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

விளங்கு நிவிர்த்தாதி மேவக ராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதி உளமந்த மாமே.

பொழிப்புரை :

நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் பஞ்சகலைகளில் முறையே பொருந்தி நிற்கின்ற அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் - என்னும் சூக்கும பஞ்சாக்கரங்கள் முறையே மனம் முதலாகப் புருடன் ஈறாக உள்ள கருவிகளைச் செலுத்தி நிற்கும்.

குறிப்புரை :

``நிவிர்த்தாதி மேவு`` என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை. ``அகராதி, நாதாந்தம்`` என்பவற்றையும் அகரமாகிய ஆதியும், நாதமாகிய அந்தமும் எனச் செவ்வெண்ணாக்குக. உளம் - புருடன், அகாரம் முதலிய ஐந்தும் முறையே தூல வைகரி, சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் ஐவகை வாக்குக்களைக் குறிப்பன. அவை முறையே, அகங்காரம், புத்தி, மனம், சித்தம் என்னும் அந்தத் கரணங்கைளயும், புருடனையும் செலுத்தும் - என்பதையும், அதனாலேதான் உயிர்கட்குச் சவிகற்ப உணர்வு உண்டா கின்றது - என்பதையும் சிவஞான போதத்து முதலதி கரணத்தில் காண்க. ``மனாதி`` என்றது `அந்தக் கரணம் எனப் பொதுப் பொருள் தந்தது. அவற்றைச் செலுத்துவனவற்றை அவையேயாக உபசரித்தார்.
பிரதிட்டையாதி கலைகளில் இயற்கையாய் நிற்கின்ற உகாரம் முதலிய நான்கும் உபாதி (கலப்பு) வசத்தால் கீழ்க்கீழ்க் கலைகளிலும் பொருந்தும் என்க.
அகரம் முதலிய ஐந்தும் பிரணவத்தின் கூறுகள் (கலைகள்) ஆகும்.
இதனால் சுத்தமாயை தனது காரியமாகிய நாதம் முதலியவை வாயிலாக உயிர்கட்குச் சவிகற்ப உணர்வைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அந்தமு மாதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாகு மந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.

பொழிப்புரை :

முதல்வன் உலகத்திற்கு முதலும், முடிவுமாகி, அதனுள் எங்கும் நிறைந்து நிற்கும் முறைமையால் பல தொகுதிகளாய் நிற்கும் காரண காரியப் பொருள்களைத் தோற்றுவித்து, அவன் ஐந் தொழில் செய்ய முதற்கருவியாய் நிற்பது விந்துவாகிய சுத்த மாயையே.

குறிப்புரை :

மாயையினின்றும் தோன்றும் தத்துவங்களில் சில தம்மினின்றும் பிற தத்துவ தாத்துவிகங்கள் தோன்றுதற்குக் காரண மாகவும், அவ்வாறன்றிக் காரியமேயாகவும் நிற்றல் பற்றி, ``கந்தம தாகிய காரண காரியம்`` என்றார். கந்தம் - கூட்டம்; தொகுதி. மாயை காரியப் படுதல் முதல்வனது சந்நிதியின்றி அமையாமை பற்றி, `வியா பியாய நெறியால் செய்யும் வீயம்` என்றார். `நெறியால்` என உருபு விரிக்க. முதற்கருவியாகும் சிறப்பு நோக்கி,``ஐங்கருமமும்தான் செய்யும்`` என அதனையே வினைமுதல்போலக் கூறினார். வீயம், `பீசம்` என்பதன் திரிபு. பீசம் - விதை; என்றது முதற்காரணத்தை.
இதனால் முதற்காரணமாகிய விந்து முதல்வனது சந்நிதி யானே காரியப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புற மாகுமே.

பொழிப்புரை :

அனைத்திற்கும் முதற் காரணமாகிய சுத்த மாயை யின் ஆற்றலால் அனைத்திற்கும் வியாபகமாகிய நிவிர்த்தி முதலிய கலைகளும், அவற்றுள் அடங்கி நிற்கும் புவனங்களும் விரிந்து நிற்க, காரிய மாயையாகிய மூலப் பிரகிருதியினின்றும் பௌதிக சரீரத்திற்குக் காரணமாகிய ஐம்பூதங்களும் தோன்ற, சுத்தமாயை அவை அனைத்திலும் உள்ளும், புறம்புமாய் நிறைந்து நிற்கும்.

குறிப்புரை :

நிவிர்த்தி முதலிய கலைகள் பிறவற்றிற்கு வியாபக மாதலல்லது தாம் வேறொன்றில் வியாப்பியம் ஆகாமை பற்றி அவற்றை, `அகண்டம்` என்றார். ``பாரிப்ப`` என்பது இங்குத் தன் வினையாய் நின்றது. சாங்கியர், `காரணம்` எனக்கூறும் மூலப் பிரகிருதி உண்மையில் `கலை` என்னும் தத்துவத்தின் காரியமேயாதல் தோன்ற அதனை, ``காரிய மாயை`` என்றார். பிரகிருதி காரியங்களில் சிறப்பாக அறியப்படுவன ஐம்பூதங்களேயாதல் பற்றி அவற்றையே எடுத்துக்கூறினார்.
இதனால், சுத்த மாயை அனைத்துலகங்களிலும் வியாபித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புறமக மெங்கும் புகுந்தொளிர் விந்து
நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை
உறமகிழ் சத்தி சிவபாத மாய்உள்
திறனொடு வீடளிக் கும்செயல் கொண்டே.

பொழிப்புரை :

பிண்டத்தில் கரு உற்பத்திக் காரணமாய் ஆண் உடலில் வெண்ணிறம் உடைமை பற்றி, `சுக்கிலம்` எனப்படுகின்ற தாது `விந்து` எனப்பெயர் பெற்றதனை அண்டத்தில் புறம், அகம் என்னும் வேறுபாடின்றி எவ்விடத்தும் வியாபகமாய் நிற்கும் காரணப் பொருளாகிய `சுத்த மாயை` என்றே கொள்ளுதல் வேண்டும். (நாதத்தின் காரியத்தை `விந்து` என்னும் தத்துவமாகக் கொள்ள லாகாது` - என்பதாம்.) இனப் பெண்ணுடலில் செந்நிறம் உடைமை பற்றி, சோணிதம்` எனப்படுகின்ற தாது, காரியப் பொருளாகிய நாதம்` எனத் தக்கதாகும். ஆகவே அவை முறையே முதல்வனாகிய சிவனது கூறும், அவனுக்குத் துணைவியாகிய சத்தியது கூறுமேயாகும், (அவ்வாறில்லை யேல் அவை உயிர்க்கு இன்றியமையாக் கருவிகளாகிய தனு கரணங் களைத் தோற்றுவித்தல் இயலாது என்பதாம்.) அவை அங்ஙனமாய்த் தனுகரணங்களைத் தோற்றுவித்து உயிர்கட்கு மன உறுதியுடன் செய்யும் ஞானச் செய்தி வாயிலாக வீட்டைத் தருவனவாம்.

குறிப்புரை :

சுக்கில சோணிதங்கள் காரண காரியங்கள் அல்ல வாயினும் முதல்நிலையும், வழிநிலையும் ஆதல்பற்றி அவ்வாறு கூறினார். ``பாதம்`` என்றது, `கூறு என்றபடி, `பாகம்` எனப்பாடம் கொள்ளுதலும் பொருந்தும். `வெண்மை நிறமது விந்து; செம்மை நாதம்` என மாற்றிவைத்துரைக்க, நிறம், செம்மை இவை ஆகுபெயர்கள்.
இதனால், `விந்து நாதங்கள் அண்டத்திற்கன்றிப் பிண்டத் திற்குக் காரணம் அல்ல என மயங்கற்க; சிவம் சத்திகளது கூறுகளின் தொடர்பால் அவை பிண்டத்திற்கும் காரணமாதல் தெளிவு` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கொண்ட இவ்விந்து பரமம் போற்கோதற
நின்ற படம்குடி லாய்நிலை நிற்றலின்
கண்ட கலாதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை யாகுமே.

பொழிப்புரை :

உயிர்களை மேற்கூறியவாறு அண்டத்தையே யன்றிப் பிண்டத்தையும் ஆட்கொள்கின்ற விந்து பரம்பொருளைப் போலவே மல கன்மங்களோடு விரவுதலின்றித் தூயதாய், ஆயினும் நூலும் மண்ணும், ஆடையும் குடமுமாய்க் காரியப்படுதல் போலக் காரியப்படுவதாய், காரண ரூபத்தில் என்றும் அழிவின்றி, கலை முதலிய தத்துவங்களின் காரியமாய் உள்ள அனைத்து அண்டங் களிலும் அவையேயாய்க் கலந்து பெருமாயையாய் உள்ளது.

குறிப்புரை :

பெருமையாவது அனைத்துப் பொருட்கும் வியாபகமாய் அவற்றைத் தன்னுள் அடக்கி நிற்றல், அதுபற்றியே சுத்த மாயை `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் சொல்லப்படுகின்றது என்பதாம். ஊர்த்துவம், மேல். அசுத்த மாயை `அதோ மாயை` எனப்படும்.
`சுத்த மாயையின் காரியம் விருத்தியேயன்றிப் பரிணாம மன்று` என்பது, ``படம் குடிலாய் நிலை நிற்றலின்`` என்பதனால் கூறப்பட்டது. ``செயல் பரிணாமமன்று; புகழ்ந்திடும் விருத்தியாகும், படம் குடிலானாற் போல`` எனச் சிவஞான சித்தியிலும் (முதற் சூத்திரம், 24) சொல்லப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.
இதனால் சுத்த மாயையினது பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அதுவித்தி லேநின்றங் கண்ணிக்கும் நந்தி
இதுவித்தி லேயுள வாற்றை உணரார்
மதுவித்தி லேமலர் அன்னம தாகிப்
பொதுவித்தி லேநின்ற புண்ணியந் தானே.

பொழிப்புரை :

`அது` எனச் சேய்மையாதாகச் சுட்டிச் சொல்லப் படுகின்ற மகாமாயையாகிய அந்த விந்துவிலே நின்று, அதனை அடைந்தவர்க்கு இனிப்பவனாகிய சிவன், `இது` என அண்மையாகச் சுட்டிச் சொல்லப்படுகின்ற சுக்கிலமாகிய இந்த விந்துவிலும் நின்று உயிர்களைப் பிறப்பித்துப் பின் வீடடையச் செய்தலை உணரும் உணர்வுடையார் உலகத்து அரியர், ஆயினும், மகாமாயையையே தனக்கு உடமாகக் கொண்டு விளங்குகின்ற அந்தப்பெருமான், நீரால் உண்டாக்கின்ற உணவுப்பொருளில் தங்கிப் பின் கருவுற்பத்திக்கு யாவரிடத்தும் பொதுவாய் உள்ள காரணமாகின்ற விந்துவிலும் இருக்கும் புண்ணியன் ஆகின்றான்.

குறிப்புரை :

இதனுள் ``விந்து`` என்றன `முதற்காரணம்` என்றவாறு. ``தானே`` என்பதை, ``உணரார்`` என்பதற்குப் பின் எடுத்துக்கொண்டு உரைக்க. சுவையைச் சிறப்புக் குணமாக உடைமை பற்றி நீரை ``மது`` என்றார். மலர்தல், விருத்திப்படுதல். சூக்கும தேகியாய் நிற்கும் உயிர் முதற்கண் பயிர்களில் தங்கியே பின்னர் உணவாய் ஆண் உடம்பிற் செல்லுதலைப் பஞ்சாகினி வித்தை பற்றி அறிக. தாவரங்களிலிருந்து உண்டாகும் உணவுப் பொருளால் ஆனதே தூலசரீரம். (பருவுடம்பு) அதனால் அஃது `அன்னமய கோசம்` எனப்படுகின்றது. அதன் சிறப்பு, `தைத்திரீயம்` என்னும் உபநிடதத்தில் சொல்லப்பட்டது. சிவனுக்கு இடமான சிவதத்துவங்கள் சுத்த மாயாகாரியம் ஆதல் பற்றியும், அதன்கண் உள்ள புவனங்கள் முத்தியுலகங்கள் ஆதல் பற்றியும் சிவனை, ``அதுவித்திலே நின்று அங்கு அண்ணிக்கும் நந்தி`` என்றார்.
இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து அண்டத்திற்குக் காரணமாயுள்ள விந்துவோடொப்பதாய், சிவனுக்கு இடமாகும் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
வித்தினி லன்றி வெளிப்படுமா றில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல
அத்தன்மைத் தாகும் அரன்நெறி காணுமே.

பொழிப்புரை :

முளை விதையில்தான் உள்ளது. என்றாலும் அது விதை தனியேயிருக்கும்பொழுது தோன்றாது. நிலத்தில் விதைத்தால் தான் தோன்றும். `வித்தில் முளை உள்ளது` என்றால், அது `குடத்தில் நீர் உள்ளது` என்பது போல்வதன்று. அஃதாவது இடமும், இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியின் உடம்பும், அதினின்றும் வெளிவருகின்ற நூலும் போலக் காரண காரிய இயைபுடையனவாம். அது போன்றதே சிவன் உலகத்தைத் தோற்றுவிக்கின்ற முறையும்.

குறிப்புரை :

`அதனை அறிந்துகொள்` என்பது குறிப்பெச்சம். எனவே, இம்மந்திரத்தை ஒட்டணியாகக் கொண்டு பொருளை உய்த் துணர்ந்து கொள்ளல் செயற்பாலதாம். அங்ஙனம் கொள்ளுமாறு:- `மாயையில்தான் உலகம் உள்ளது. என்றாலும் அந்த மாயை சிவனது சங்கற்பத்தில் பொருந்தினால் அதினின்றும் உலகம் தோன்றும். `மாயையில் உலகம் உள்ளது` என்றால் அஃது இடமும் இடத்து நிற்கும் பொருளும் ஆகின்ற அவ்வளவினது அன்று. சிலந்தியினது உடம்பும், அதனுள்ளியிருந்து வெளிப்படுகின்ற நூலும் போலக் காரணகாரிய இயைபுடையனவாம்` என்பது. இங்ஙனம் கூறியதனால், சிலந்தியினது உடம்பினுள் நூல் உள்ளதாயினும் அவ்வுடம்பைத் தாங்கி நிற்கின்ற உயிர் அந்நூலை வெளிப்படுத்தினாலன்றி வெளிப்படாமை போல் மாயையைத் தாங்கி நிற்கின்ற சிவசத்தி அதினின்றும் உலகத்தைத் தோற்றுவித்தாலன்றித் தோன்றாது என்பது விளங்கும்.
``வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம்``
என்னும் சிவஞான போதமும் (சூத்திரம், 1 அதிகரணம், 2) இங்கு நினைக்கத்தக்கது.
இரண்டாம் அடியில் உள்ள ``வித்தினில்`` என்பது வேண்டா வழிப் பெற்ற இன்சாரியையுடன் வந்த, `செயின்` என்னும் வினை யெச்சம். `வித்தினில் முளை குடத்துள் நீர்போல நிற்பின் யாவரும் எளிதில் வெளிப்படுத்துதல் கூடும். இஃது அன்னதன்று ஆகலின் நிலத்தாலன்றி இயலாது` என உவமைக்கண் பொருளிலும் அவ்வாறு கொள்க. `மாயையாகிய விந்துவிற்குச் சொல்லியது சுக்கிலமாகிய விந்துவிற்கும் பொருந்தும்` என்பது கருத்து.
இதனால், அண்டபிண்டங்களாகிய உலகம் சிவனது சங்கற்பத்தாலன்றி உற்பத்தி கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

பொழிப்புரை :

பலவகையாக உண்ணப்பட்ட உணவுகள் மூன்று கூறுபடும். ஒரு கூறு உடம்பாய்ப் பரிணமிக்கும். மற்றொரு கூறு மனத்தின் தன்மையாய் அமையும். இன்னொரு கூறு மலமாகிக் கழிந்தொழியும். உணவால் திருத்தம் உறுகின்ற உடம்பும், மனமும் சேர்ந்து முன்னாட்களில் காரண நிலையில் `சாரம்` என்பதாய் இருக்கும்.

குறிப்புரை :

``உடம்பு`` என்றது அதன்கண் உள்ள குருதி, முதலிய தாதுக்களையும், ``மனம்`` என்றது அதனது நினைவையுமாகும். தாயின் முலைப்பாலுக்கு அவளது உடம்பில் உள்ள குருதி முதலி யனவும், குழவியிடத்துள்ள அன்பும் காரணமாதல் போல்வதே உடம்பில் உள்ள குருதி, ஊன், நிணம் முதலிய தாதுக்கள் சாரமாதற்குக் காரணம் ஆதல்.
இதனால், மேல், ``மது வித்திலே மலர் அன்னமதாகி`` என்றது இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இரதம் முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுற் பனிபோல்
அரிய துளிவிந்து வாகும் ஏழ்மூன்றின்
மருவிய விந்து வளருங்கா யத்திலே.

பொழிப்புரை :

மேல் சொல்லப்பட்ட `சாரம்` என்பது உட்பட ஏழ் தாதுக்களில் மூன்றிலிருந்து சில நாட்களில் புல் நுனியிற் பனியளவான துளிகள் பல உருவாகும். அந்தத் துளிகளே பிண்ட உற்பத்திக்குக் காரணமான `விந்து` எனக் குறிப்பிட்டுக் கூறப்படுகின்றன. அவை இருபத்தொரு நாள் வரையில் உடம்பினுள் அந்த நிலையிலே முதிர்ந்து வரும்.

குறிப்புரை :

தாது - மூலப்பொருள் `ஏழ் தாதுக்களில்` - என ஏழாம் உருபு விரித்துரைக்க. உடம்பிற்கு மூலமான ஏழு பொருள்களாவன மேற்கூறிய சாரம், குருதி, என்பு, தோல், ஊன், நிணம், சுக்கிலம் - என்பன. இவற்றின் நிலைபேற்றிற்கு ஒன்றிற்கு மற்றொன்று காரண மாகவேயிருக்கும். காரண நிலையில் `சுக்கிலம்` எனப்படுவதே காரிய நிலையில் `விந்து` என வேறுபட்டு நிற்கும் என்பது இங்கு அறிதற் குரியது இருபத்தொரு நாட்களுக்குப் பின் விந்து வேறொன்றாய் மாறும் என்பதும் இங்கு உணரத்தக்கது.
இதனால், பிண்டத்திற்குக் காரணமான விந்து உண்டாகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

காயத்தி லேழ்மூன்று நாளிற் கலந்திட்டுக்
காயத்து டன்மன மாகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோ டழியுமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு முன் இருபத்தொரு நாள் வரையில் முதிர்ந்து வந்த விந்துக்கள் பின் இருபத்தொரு நாட்கள் வரையில் மனத்தின் வழிப்பட்டு நிற்கும். `சத்தி நிபாதரும், உலகரும்` எனமக்கள் இருதிறத்ததராதலின் அவருள் சத்திநிபாதர் மனம் சிவன் பஞ்சமூர்த்திகளாய் விளங்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலா ரூபமாய் நிற்கும் சுத்த மாயையை நோக்கிச் செல்லுமாகலின் அவர் காம வசப்பட்டு விந்துவை வெளியே வீழ்ந்தொழிய விடாமையின் அவை அவரை விட்டு நீங்கா. (அவரது மனம் பஞ்ச கலைகளை நோக்கிச் செல்கின்ற செலவிற்கு அவை வலிமை தந்து நிற்கும் என்பதாம். அவரொழிந்த ஏனை உலகர் சிறிதுபோதிலே நிலையின்றி ஒழிவதாகிய காம இன்பத்திலே செல்பவர் ஆதலின் அவர் மனம் அங்ஙனம் சென்ற பொழுது அவரது விந்துக்களும் அதனுடன் சென்று வெளியே வீழ்ந்து அழிந்தொழியும்.

குறிப்புரை :

`கலந்திட்டு ஆகும்` `நீங்கா அழியும்` என்னும் பயனிலைகட்கு மேலை மந்திரத்தில் உள்ள ``மருவிய விந்து`` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``ஏழ் மூன்று நாளில்`` என்பதைப் பின்னும் `காயத்துடன்` என்பதோடும் கூட்டுக. ``கலா விந்து நேயம்`` என்றதை, `சிவ பத்தி, அடியார் பத்தி` என்பன போலக் கொள்க. ``விடாமையின்`` என்பதற்குமுன் `அவர்` என்பது வருவித்து `விடாமையின்`` என முடிக்க. மாயம், நிலையாமை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய இன்பத்தைக் குறித்தது. `தலைவி தலைவனோடிறந்தாள்` என்பதிற்போல, ``மனத்தோடழியும்`` என்பதில் ஓடுருபு உயர்பொருளொடு வந்தது. மனம் அழிதலாவது, தமது செலவால் விளையும் துன்பத்தால் வருந்ததுதல்.
இதனால், பிண்டத்திற்குக் காரணமாகிய விந்து அதனையுடைய மக்களது இயல்பிற்கேற்ப நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அழிகின்ற விந்து அளவை யறியார்
கழிகின் றதனையுட் காக்கலும் ஓரார்
அழிகின்ற காயத் தழிந்தயர் வுற்றோர்
அழிகின்ற தன்மை யறிந்தொழி யாரே.

பொழிப்புரை :

உலகர் தாம் செல்கின்ற போக நெறியால் அழிந் தொழிகின்ற விந்துவினது ஆற்றலை, `இவ்வளவினது` என்று அறிய மாட்டார்கள். அதனால் கீழ்நோக்கி வீழும் இயல்புடைய அந்த விந்துவை அவ்வாறு வீழாது உள்ளே நிறுத்திக் காக்கும் வழியைப்பற்றி அவர்கள் எண்ணுவதும் இல்லை. அழிவைத் தனது இயல்பாக உடைய உடம்பினுள்ளே தங்கியிருந்து, அவ்வுடம்பால் உண்டாகின்ற பல இடுக்கண்களால் துன்பமுற்று மெலிகின்றவர்கள் தாம் பெற்றுள்ள பொருள்கள் அழியுந்தன்மை உடையவாதலை அறிந்து, அவ்வழியுந் தன்மையை நீக்கிக்கொள்ள மாட்டார்கள்.

குறிப்புரை :

எனவே, `அதனை நீக்கிக் கொள்ள வழி உண்டு` என வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``அளவு`` என்றது ஆற்றலின் அளவை. ஒரு துளிவிந்துவிற்குப் பல துளி சுக்கிலத்தின் ஆற்றலும் ஒரு துளிச் சுக்கிலத்திற்குப் பல துளிக் குருதியின் ஆற்றலும், ஒரு துளிக் குருதிக்குப் பல துளி இரதத்தின் (சாரத்தின்) ஆற்றலும் உள்ளன என்பர். அதனால் அத்துணை ஆற்றலையுடைய விந்துவை இழப்பவர் தமது பேராற்றலை இழந்தவ ராகின்றனர். `உயிர்கள் கீழ் நோக்கி வீழும் விந்துவை உடையன; இறைவன் அவ்வாறன்றி மேல் நோக்கிச் செல்லும் விந்துவை உடையன்; அதனால்தான் அவன் தனது நெற்றிக்கண் வழியாக முருகனைத் தரமுடிந்தது` என்றும், `உயிர்களின் விந்துக்கள் நீர்த் தன்மையையுடையன; இறைவனது விந்து அவ்வாறன்றி நெருப்புத் தன்மையையுடையது; அதனால் தான் ஒருமுறை அவனது விந்துவை உண்ட தேவர்கள் ஆற்றமாட்டாத வெப்பு நோயை உடையராய் அலமந்தனர்` என்றும் கூறுவர்.
``ஊர்த்துவ ரேதம் விரூபாக்ஷம்``,
ருதம் ஸத்யம் பரம் ப்ரஹ்மபுருஷம் க்ருஷ்ண பிங்கலம் I
ஊர்த்வ ரேதம் விரூபாக்ஷம் விச்வ ரூபாய வை நமோ நம: II
எனப் புருஷ சூக்தத்தில் வந்துள்ளது. சிவபிரானது விந்துவை உண்ட தேவர்கள் வெப்பு நோயால் வருந்தினமை காஞ்சிப் புராண சுரகரேசப் படலத்தில் சொல்லப்பட்டது. போகத்தை விட்டு யோகியராயினோரும் இந்நிலையை எய்துவர் என்பது யோக நூற் கொள்கை. இதனால் அவர்க்கு இளமையும், யாக்கையும் நிலையாமையின் நீங்கி நிலைபேறுடையனவாதலோடு, உடம்பு புதியதோர் ஒளியும், அழகும் பெற்று விளங்கும் என்பதும் அந்நூற் கொள்கை.
இவ்வாறு இவ்வதிகாரம் முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

பொழிப்புரை :

தன்னைக் காதலோடு பார்க்கின்ற மகளிரைத் தான் அவர்க்கு இசைந்து பாராமல் விலகிச் சென்று யோகத்தில் நின்று புறப்பொருளைக் கண்ணால் பார்க்க எழுகின்ற ஆசையை மூலக் கனலை வளரப்பதில் சேர்த்து, மாதரைச் சிந்திக்கின்ற மனம் மாதேவனைச் சிந்தித்து உருகும்படி செய்கின்ற யோகியே சிவயோகியாதல் கூடும்.

குறிப்புரை :

`மனத்தில் எழுகின்ற மாதர் ஆசையை இங்ஙனம் யோக முயற்சியால் நீக்குதலே விந்து சயம் பெறுதற்குச் சிறந்த வழி யாகும்` என்பதாம். ``மூலத்தே சேர்க்கின்ற யோகி`` என்றமையால், அழல் என்றது மூலாக்கினியாயிற்று. `பொதுவான யோகத்தால் விந்து சயம் பெற்றவன் பின்பு சிவயோகியாய் விளங்குவன்` என்றபடி.
``மடவா ரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக
மாற்றி ... ... தனை நினைய வல்லோர்க்கென்றும் பெருந்துணையை`` l
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், விந்துயத்திற்கான சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம்கெடும்
ஊனே அவத்துற் றுயிரோம்பா மாயுமே.

பொழிப்புரை :

தன்னியல்பால் திருவருள் வழியில் சென்று சிவயோகத்தில் நில்லாது காமம் முதலியவற்றிலே நிற்கின்ற கீழ் மகனும் அஞ்சும் அளவிற்கு `யோகி` எனப்படுவன் காம நெறியில் மிக்குச் செல்வானாயின் விந்து மிக அழிந்தொழியும். உடம்பும் உயிரைக் காக்க மாட்டாது வீணே கெட்டொழியும்.

குறிப்புரை :

``தான்`` மூன்றில் முதல் இரண்டும் நன்னெறியிற் செல்லாதவனையும், இறுதியொன்று அடயோகியையும் குறித்தன. காமம் முதலியனவாவன காமம், குரோதம் முதலிய அறு பகைகள். அதி காரம் - அதிகரித்தல்; மிகுதல். `காமநெறியில்` என்பது அதிகாரத்தால் வந்தது. `உட்கும் அதிகாரத்தில் தானே தங்கில்` என மாற்றியுரைக்க.
இதனால், விந்து சயம் பெறாத யோகியினது இயல்புகூறும் முகத்தால் மேற்கூறிய எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு)
ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.

பொழிப்புரை :

மாமை நிறத்தால் வசீகரிக்கின்ற பெண்ணின் வசப் பட்டோராகிய இவர் அவளொடு கூட வேண்டின், என்றும் ஒழியாது மாறி மாறி வருகின்ற பூர்வ பக்க அபர பக்கங்களில் வளர் பிறையாகிய பூர்வ பக்கத்தில் முதல் எட்டு நாட்கள் போகத்திற்குப் பொருந்தா. (`விந்து சயத்தை விரும்புவோர் அந்நாட்களில் அதனைப் பெருதல் அரிது` என்பதாம்.) சோதிட நூலோரால் சிறப்பித்துச் சொல்லப்படாத அபர பக்கத்தில் முதல் ஆறு நாட்கள் வளர்பிறையின் இறுதி ஆறு நாட்களோடு ஒப்பனவாம்.

குறிப்புரை :

இவ் `வளர்பிறை, தேய்பிறை` என்பவற்றை மாதரது பூப்பிற்குப் பின்னர்ப் பதினைந்து நாளும், முன்னர்ப் பதினைந்து நாளுமாகக் கூறுதல் காம நூல் முறை. ஆகவே அம்முப்பது நாட்களில் இடைப்பட்ட பன்னிரண்டு நாட்கள் கலவிக் குரியனவாக அமைதல் காண்க. ``பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் - நீத்தகன்றுறையார் என்மனார் புலவர்``3 என்னும் தொல்காப்பியக் கட்டளையும் இதனோடு இயைந்து நிற்றல் காண்க.
இதனால், விந்து சயம் கைகூடும் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவார் பூவரின் பின்னைந்தோ(டு)
ஏறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்கவே.

பொழிப்புரை :

`பூப்பிற்குப் பின்னாட்களாகிய வளர்பிறையில் முதல் எட்டு நாட்கள் கூடதற்கு உரியன அல்ல` என மேல் விலக்கப்பட்டவற்றில் ஐந்தாம் நாளும், ஆறாம் நாளும் யோகியர்க்கு முற்றிலும் விலக்கத்தக்கன. (எனவே, `ஏனையோர்க்கு அந்நாட்கள் ஒருகாற் பொருந்தினும் பொருந்தலாம்` என்பதாம். பதினொன்றாம் நாள் யோகியர் அல்லார்க்கு ஆம்.) சக மார்க்கம் - யோக நெறி. வேறன்பு - மகளிரை விரும்புதல். ``சகமார்க்கத்தினிடையே வேறு அன்பை ஐந்து, ஆறு பதினொன்று அல்லாத நாட்களில் வேண்டுவர் நல்லோர்`` என்க. பூப்பிற்குப் பின் ஐந்து நாட்களில் அக்குற்றம் நீங்கியொழியும். (ஆயினும், `மேலும் `மூன்று நாட்கள் ஆகா` என முன் மந்திரத்தில் விலக்கப்பட்டன. அந்த ஐந்து நாட்களுக்கு மேல் இருபத்தொரு நாளில் பெண்மை சிறிது சிறிதாக மிகுந்து வரும் அந்த நாட்களில் இறுதி ஆறு நாட்களில் மிகவும் மிகுந்து நிற்கும். அதனால் இல்லறத்தில் நிற்கும் ஆடவர் அந்நாட்களில் கலவி செய்க.

குறிப்புரை :

இவ்வாற்றால் முப்பது நாட்களில் இறுதிமூன்று நாள் பெண்மையில்லா நாட்களாயின. இவையெல்லாம் நெறி பிறழா தோரை வைத்துக் கூறியனவாம். ``ஏறும், ஓங்கும்`` என்னும் பயனிலை கட்கு, `குற்றம், பெண்மை` என்னும் எழுவாய்கள் ``பூவரின்`` என்ற குறிப்பாலும், அதிகார இயைபாலும் வந்தியைந்தன. இடைத்து = இடையதாய். ``ஐந்து`` என்பது செய்யுள் நோக்கிப் பின் வைக்கப்பட்டது.
இதனால், யோகியர்க்கும், பிறர்க்கும் உரிய சில வரையறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.

பொழிப்புரை :

கலவி செய்தற்குப் பொருந்திய காலம் இரவில் முதல் யாமமும், கடையாமமும் ஒழிந்த இடையிரு யாமமேயாம். அதனுள்ளும் காலத்தை, `சூரியகலைக் காலம், சந்திரகலைக் காலம்` என வரையறுத்தற்கு ஏதுவாகிய பிராண வாயுவின் இயக்கம் சந்திர கலையாகின்ற இடநாடியின் நீங்கிச் சூரிய கலையாகின்ற வலநாடிவழியே இயங்கும்பொழுது காமநூல் முறைப்படி கலவி செய்த பின்பு சூரிய கலையும், சந்திர கலையும் அல்லாத அமுத கலையாகிய நடுநாடியில் பிராணவாயு செல்லுங்கால் விந்துவை விடுக்க.

குறிப்புரை :

`இவ்வாறு செய்யின் விந்து சயம் கூடும்` என்பதாம். ``திரு`` என்றது `சிறப்பு` சிறப்புடையதனை, `சிறப்பு` என்றார். இரு முகூர்த்தம் ஓர் யாமமாகும். பகற்காலம் இயல்பாகவே விலக்கப் பட்டமையின், ``இருநான் முகூர்த்தம்`` என்றது இராக் காலத்திலே யாயிற்று. ``கலை காலம்`` என்பதில் ஒற்று மிகாமை வடநூல் முடிபு. `காலத்துள்` என ஏழாவது விரிக்க. `இந்து பருதி காலுள் நையுமிடத்து` என்க. ``கால்`` என்பது ``இந்து`` என்பதனோடும் கூட்டிக் கொள்ளப் படும். பிராண வாயு இங்குக் கூறிய முறையில் இயங்காவிடினும் யோகம் வல்லார் தாம் வேண்டுமாற்றால் அதனை இயக்கிக்கொள்வர். இனிப் பிராண வாயு நடுநாடி வழியிற் செல்லுதல் யோகத்தாலன்றிக் கூடாது.
இதனால், மேல் நாள் வரையறுத்த பின் அந்நாள்களில் காலம் வரையறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.

பொழிப்புரை :

மண் முதல் புருடன்காறும் உள்ள இருபத்தைந்து கருவிகளும் தன்னை வந்து வாதிக்கும் பொழுது அவற்றால் சலனம் உறுதல் இன்றி இருக்கின்ற யோகியும் ஒரோ ஒருகால் பெண்ணின்பால் காதல் கொள்கின்றவனாவான் ஆயினும் அப்பொழுதும் அவன் அவள் மேல் பற்றுக்கொள்ளாது, போக காலத்தில் மிகுதியாய் இயங்குகின்ற பிராண வாயுவின் இயக்கத்தால் மெலிவடைகின்ற அந்தக் கரணங்களை அகமுகப் படுத்தி, முன் பஞ்சேந்திரியங்களைத் தன் வசப்படுத்தியது போலவே விந்துவையும் தன் வசப்படுத்தியே விடுவான்.

குறிப்புரை :

`தன் வசப்படுத்தியே விடுவான்` என்றதனால், `விடாது நிறுத்தவும் செய்வான்` என்பது பெறப்பட்டது. விடுதல் மாதின் இன்ப நிறைவின் பொருட்டாம். பஞ்சேந்திரியங்களை வெல்லுதலாவது அவற்றைத் தன் வசப்படுத்தலேயாதல் போல, `விந்து சயம்` என்பதும் அதனைத்தன் விருப்பப்படி ஆளுதல் என்பதேயாம் என்றபடி. காண், முன்னிலையசை. ``ஐயைந்தும் நண்ண`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து அங்கு நின்றும் நேரே சென்றுரைக்க. மெய்வருந்தித் தொழில் செய்யுங் கால் மூச்சுப் பெருமூச்சாய் இயங்குதல் போலக் கலவிக் காலத்திலும் அவ்வாறியங்குதல் பற்றி, ``கடுங்கால்`` - என்றார். உயிர்ப்பு நெட்டுயிர்ப்பாய காலத்தில் அந்தக்கரணங்கள் சோர்வடைதல் இயற்கை. அது பொழுது அவற்றை உலகர் செயலற்றனவாகவே இருக்கச் செய்வர். யோகியர் அது பொழுது அவற்றைத் தம் தியானப் பொருளிலே ஒடுங்கச் செய்தல் பற்றி, ``கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டு`` என்றார். `காலால் என உருபு விரிக்க. கருத்து - தியானப்பொருள்.
இதனால், யோகிகள் விந்து சயம் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொண்ட குணனே நலனேநற் கோமளம்
பண்டை யுருவே பகர்வாய்ப் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும்போதில்
கண்ட கரணம்உட் செல்லக்கண் டேவிடே.

பொழிப்புரை :

மாதர்பால் ஆடவரது மனத்தை ஈர்ப்பனவாய் உள்ளன அவருக்கு இயல்பாக அமைந்த நாணம், மடம், அச்சம், பயிப்பு` - என்னும் குணங்களும், மேனியழகும், இளமையும், வடிவமைப்பும், பேசுகின்ற வாயாகிய பவளமும், ஒன்றை ஒன்று நெருக்கும் வகையில் புடைபரந்து எழுகின்ற கொங்கைகளும் ஆகிய இவையாம். `இவை நேற்றுக் கண்டனதாம் இன்று காணப்படுகின்றன` என்னும் வகையிலே இருப்பன அல்லது அவ்வப்பொழுது புதிது புதிதாய்த் தோன்றுவன அல்ல ஆயினும் அவை அவ்வாறிருந்தே ஆடவரை வசீகரித்தல் வியப்பு. அம்முறையில், மாணவகனே, அவை உன்னைப் பற்றி நெருங்கியிருக்கும் பொழுது நீ விந்து சயம் பெற வேண்டினால் யோகியர் போல அவைகளைப் பொறிகளாற் பற்றி, அப்பற்றுதலானே திரிபெய்துகின்ற அந்தக் கரணங்களை அகமார்க்கத்தில் செலுத்தி அதனால் விந்துவை உன் வசப்படுத்தி விடு.

குறிப்புரை :

``பண்டை உருவே`` என உருவிற்குக் கூறப்பட்ட பழைமை ஏனையவற்றிற்கும் கொள்ளப்படுமாகலின் அதற்கு இவ்வாறு விரித்துரை கூறப்பட்டது. ஏகாரங்கள் எண்ணுப் பொருள. மிண்டுதல், மிடைதல், இவை `நெருங்குதல்` எனப் பொருள்தரும்.
இதனால், `விந்து சயத்திற் அந்தக்கரணங்களைத் தம் வசப்படுத்தல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.
`வாசி யோகத்தால் பிராணன் வசப்படும்; பிராணன் வசப்பட்டால் அந்தக்கரணம் வசப்படும்; அந்தக்கரணம் வசப்பட்டால் விந்து வசப்படும்,` என்பது யோக நூல் முடிவு.

பண் :

பாடல் எண் : 8

விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே
தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.

பொழிப்புரை :

ஆடவன் பெண்டினிடத்து விந்துவை விட்டபின் கலவிக் காலத்துச் சரவோட்டம் முதலியவை பற்றி அவ்விந்து கருவாகித் தோன்றும் முறையில் அதன் தொடக்கம் முதலியவை களையும், பின்பு அதன் வாழ்நாள் சாநாள்களையும், பின்பு அதன் இழி குணம், உயர்குணம் என்பவற்றையும் `தனித்தனி இவ்வியல்பினது` என்று ஆராய்ந்தறிதலையும் செய்வானாக.

குறிப்புரை :

`அவை யாவும் நல்லனவாய் அமைதலும் ஒரு வகை விந்து சயமும் அவை தீயனவாதலும் ஒரு வகை விந்து அப செயமும் ஆம்` என்பது கருத்து. எனவே, யோகி தனது யோக வன்மையால் அவற்றையெல்லாம் நல்லனவாகச் செய்வான்` என்பதாம். ``காலங்கள்`` என்றது கரு முற்றும் பத்துத் திங்களை. ஒவ்வொரு திங்களிலும் புறத்தே ஒவ்வொரு சடங்கு செய்தலும் கருமேற்கூறிய எல்லா வகையிலும் நன்மையை எய்துதற் பொருட்டேயாம். ``வாழ் நாள் சாநாள்`` எனப் பட்டன, கரு வயிற்றிலிருக்குங் காலமாகிய பத்துத் திங்களுக் குள்ளேயும் அமைவனவாம். காலத்தில் நிகழ்வனவற்றை, ``காலங்கள்`` என்றார். தோன்றுதல் - ஆராய்பவனுக்குப் புலனாதல். ``தோன்ற`` என்னும் செயவெனச்சம். ``தோன்றியபின்`` என இறந்த காலப் பொருட்டாய் நின்றது. ``கருதிய, கட்டிய`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `வாழ்நாள், சாநாள்` என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்தன. ``கருவிற்பட்ட உயிரினது வினையை நோக்கிக் கட்டிய` என்றவாறு. கட்டுதல் - நியமித்தல், கருவிற் பட்ட உயிருக்கு அக்கருவில் தானே அஃது அடைதற்குரிய அனைத்தும் அமைக்கப்படுதல் என்பதை,
``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்க டென்னும் ஆறும்முன் கருவுட் பட்டது``
-சிவஞான சித்தியார் - சூ. 2. 9.
என்பதனானும் அறிக. கருதுதல், கட்டுதல் ஆகிய வினைகட்கு `பால் வரை தெய்வம்` என்னும் வினைமுதல் வருவிக்க. ``எண்ணியும்`` என்னும் உம்மை சிறப்பும்மை, அதனால் அஃது அங்ஙனம் எண்ணிப் பார்க்க வல்லாரை நோக்கிக் கூறியதாயிற்று. ஆகவே, `சர ஓட்டம் முதலியவற்றை அறிய வல்லார்க்கு இங்குக் கூறியவெல்லாம் புலனாகும்` என்பது விளங்கும்.
இதனால், கலவி செய்வோர் அக்காலத்து மேற்கொள்ளும் முறை முறையின்மையால் மக்கள் நல்லராயும், தீயராயும் - வாழ்நாள் மிக்கராயும், குறைந்தவராயும் தோன்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பார்த்திட்டு வையப் பரப்பற் றுருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.

பொழிப்புரை :

மேற்கூறியபடி கருவைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து உலகத்தில் பொதுவாக நிகழும் புலன் அடக்கம் இன்மையைத் தந்தை, தாயர் தவிர்த்து இருத்தலால் கரு மக உருப் பெற்று வளர்ந்து முதிர்ந்து பின்பு விதி அம்மகவைத் தாயின் வயிற்றிலிருந்து நீக்கி நிலத்தைச் சேரும்படி சேர்த்து, (தாய் தந்தையர் குழவிமாட்டுள்ள அன்பால் ஊக்கம் மிகுந்து செய்விக்கும் தெய்வக் காப்புக்களால்) மேல் கருவுட் பட்டனவாகக் கூறிய அவ்வினைப் பயன்கள் குழவியை வந்து பற்றதொழியினும் அதன்பின் குழவி வளர்ந்து வரும் பிற்காலத்தில் அவையெல்லாம் வந்து பற்றுவனவேயாகும். ஆகையால், மேற் கூறியவற்றையெல்லாம் ஆடவன் எண்ணிப் பார்ப்பானாக.

குறிப்புரை :

``அகலினும்`` - என்ற உம்மையால், `அகலுதல் அரிது` என்பதும், `மிகச் செய்தவழி ஒருவாற்றால் நீங்கும்` - என்பதும் பெறப் படும். `பரப்பற` என்பது ``பரப்பற்று`` எனவும், `உருப்பெற்றபின்` என்பது, `உருப்பெற்று` எனவும் திரிந்து நின்றன. ``சேர்த்தல், அகலுதல்`` என்னும் வினைகட்கு `வினைப் பயன்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது. இதன் ஈற்றடி இனவகையால் மூன்றாம் எழுத்து எதுகையாயிற்று.
இதனால், மேல், ``எண்ணியும் பார்க்க`` என்றது பயனில் செயலாகாமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தின்இல் வித்தை விதற உணர்வோர்க்கு
மத்தில் இருந்ததோர் மாங்கனி ஆமே.

பொழிப்புரை :

உலகில் விதையை நிலத்தில் விதைப்பவர்க் கல்லது விளைவு ஏதும் கிடைக்க மாட்டாது. விதையை நன்முறையில் விதைப்பவர்க்கல்லது சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும். (அதுபோல விந்துவாகிய வித்தினை நன்முறையில் இடாதார்கக்ம் நன்மகப் பேறாகிய விளைவும் கிடைக்கமாட்டாது; அவர்க்குச் சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும்.) விந்துவாகிய வித்தினது இல்லற வித்தையை அமைந்து நோக்கி உணர்வாராயின், மரத்தில் தூங்கும் மாங்கனி போலும் பயன் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையின் அவற்றிற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. `மிக்க` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. மூன்றாம் அடியில் வந்த ``வித்தை`` என்பது `கல்வி` என்றவாறு. இல்லறத்தை ``இல்`` என்றார். விரைவினை உணர்த்தும் `விதுப்பு` என்பது முதனிலையளவாய், `விது` என நின்றது `வேதின வெரிநின் ஓதிமுது போத்து`` - என்பதில் `ஓந்தி` என்பது ``ஓதி`` என இடைக்குறைந்து நின்றது போல, `மரத்தின்` என்பது எதுகை நோக்கி, ``மத்தின்`` என இடைக் குறைந்து நின்றது. வாளா, `மாங்கனி ஆம்` எனின் குறித்த பொருள் விளங்கா தாகலின், ``மரத்திலிருந்தோர் மாங்கனி ஆம்`` என்றார். அதனால், வித்தினது விளைவே மாங்கனியாதல்போல், `விந்துவின் விளைவாக நன்மகவு உண்டாகும்` என்பது பெறப்பட்டது. இதுவும் ஒட்டணியே.
மாதொருத்தியை மணந்தவர்க்கு உளவாகிய இல்லறக் கடமைகளில் குடிவழியை நற்றவம் செய்தாயினும் நன்முறையில் தொடரச் செய்தலும் ஒன்றாகலின், `அது விந்து சயத்தால் கைகூடும்` என்றற்கு இவையெல்லாம் கூறினார்.
இதனால், விந்து சயத்தால் விளைவதோர் இம்மைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருவுயி ரோடும்
கருதத்து வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறிவை கற்பனை தானே.

பொழிப்புரை :

இறைவன் கருவிற்பட்ட உயிரோடு அதன் அறிவுக் கறிவாய்க் கலந்து நிற்கின்றான். அதனால் அவ்வறிவிற்குப் பொருள்களை அறியும் ஆற்றலையும், ஆயுள் முதலானவற்றையும் அப்பொழுதே அமைக்கின்றான். அவன் அவ்வாறமைத்தற்கும் தந்தை தாயரது எண்ணமே காரணமாய் நிற்க, அவ்வமைப்பு அக்காரணத்தின் காரியமாகின்றது. ஆகவே, குழவியின் அறிவு, ஆயுள் முதலியவை தந்தை தாயரது எண்ணத்தினால் அமைவனவேயாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொண்டு, அதனுள்ளும் ``கருவுயிரோடும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``கருத்து`` நான்கில் முதல் இரண்டு ஆகுபெயராய் அறிவைக் குறித்தன. பொரு ளுணர்வு அக்கர வடிவாதல் பற்றி, அதனை `அக்கரம்` என்றார். `நாதம்` என்றபடி. ``வித்தாய்`` என்றதனால், அவ்விடத்து, ``கருத்து`` என்றது, கருவின் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் காரணமான தந்தை, தாயருடை யனவாயின. கற்பனை - நினைவு. இவையும் அவ்வாற்றால் அவருடை யவாயின. ``மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும்`` (திருக்குறள் - 456.) எனத் திருவள்ளுவரும் குழவியது அறிவு குணங்கட்குத் தந்தை தாயரது அறிவு குணங்கள் காரணமாதல் கூறினார்.
இதனால், `கலவிக் காலத்து இருவரும் நற்கருத்துடையராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றாதலும் ஒரு வகை விந்து சயமேயாம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 12

ஒழியாத விந்து உடல்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
ஒழியாத புத்திதபம் செபம் மோனம்
அழியாத சித்திஉண் டாம்விந்து வற்றிலே.

பொழிப்புரை :

யோக முயற்சியால் விந்து வீழ்தலின் நீங்கி உடற் குள்ளே நிற்குமாயின் பிராணனும், உடலின் மிக்க வலிமையும், அறிவின் ஆற்றலும் அழியாது நிலைபெறும். இனி விந்து மூலாக் கினியால் தன் இயல்பு வேறுபட்டு உடம்பினுள் ஒன்றாய்க் கலந்து விடுமாயின் இடைவிடாத ஞானம், தவம், செபம், மௌன நிலை, எட்டுச் சித்திகள் ஆகிய எல்லாம் உளவாகும்.

குறிப்புரை :

`அழியாது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `பிராணன் முதலியவை அழியாது நிற்கும்` என முடிக்க. உடல் வலியிழந்து மெலியுமாயின் அறிவும் சோர்ந்து, பிராணனும் வலிமை குன்றி நீங்கும். பிராணன் நீங்கவே உடல் சிறிதுபோதும் நிலைக்கமாட்டாது நீங்கியொழியும். எனவே விந்து சயத்தால் வாழ்நாள் நீட்டிப்பு உளதாதல் கூறப்பட்டதாம். வாழ்நாள் நீட்டித்தலால் உயிர் தான் எடுத்த உடம்பினால் ஆகிய பயனைப் பெறுதல் கூடும் என்பது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்டது. ஒழியாத ஞானமாவது, அறியாமையால் தவிர்க்கப்படாத மெய்யுணர்வு. ``அழியாத சித்தி`` என்றது சித்தியின் பெருமை கூறியவாறு.
விந்துவின் வாளா வலிந்து நிறுத்தின் அஃது உபாதியாய், உடற்குத் தீங்கு தரும். யோக முயற்சியால் நிறுத்தின் அது, தன்னியல்பு வேறுபட்டு நிற்கும் ஆதலின் அதனால் உடல் வலிமை முதலிய நலன்கள் உண்டாகும். ஆகவே, யோக முயற்சியால் நிறுத்துதலே இங்குக் கூறப்பட்டது. இனி அவ்வாற்றானே அதனை மேலும் திரிவுபடச் செய்த வழி அஃது உடம்பினுட் சுவறியோக நெறிக்கு மேலும் உதவும் என்பது பிற்பகுதியாற் கூறப்பட்டது.
இவ்வாறு இதனால் உண்மையான விந்து சயத்தால் விளையும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழுனைச் சொருகிச் சுடருற்று
முற்று மதியத் தமுதை முறைமுறைச்
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

பொழிப்புரை :

விந்து வறளும்படி யோக முயற்சியால் மூல அனலை அதன்பால் சேர்த்து, அதனால் அது கீழ்நோக்கி வீழும் இயல்பை விட்டு மேல்நோக்கி ஏறும் இயல்பினதாகச் செய்து அவ்வாறு சுழுமுனை வழியாக மேல் ஏறி ஆஞ்ஞையை முட்டி அடையப் பண்ணி, அஃது அவ்விடத்துள்ள ஒளியோடு கலந்தபின்னர், மேலும் செல்கின்ற மூலக்கனலால் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிறைமதி மண்டலத்திலிருந்து ஊறி வழிகின்ற அமுதத்தை முறை முறையாகத் தமது பண்டை இயல்பு கெட உண்கின்றவர்களே சிவயோகியர் ஆவார்கள்.

குறிப்புரை :

`துற்ற அனலால் சுழியில் சொருகி` என்க. ``துற்ற சுழுமுனை`` என்பதில் சுழுனை ஆகுபெயராய் அதன் எல்லையைக் குறித்தது. விந்து ஆஞ்ஞை வரையிற் சென்று அங்குள்ள ஒளியோடு கலத்தலால் தானும் ஒளியாகி உடல் எங்கும் பரவும் என்க. உற்றபின், என்பது, ``உற்று`` எனத் திரிந்து நின்றது, பண்டையியல்பாவது, உலகருட் சிலராய் மனஞ்சென்றவாறே சென்று விந்துவை வீழ்ந்து அழிதல். மதிமண்டலத்து அமுது தச நாடிகளில் பாய்தலால் அதுவே உணவாயிட, வேறு உணவு வேண்டாமையை `உண்ணுதல்` என்றார். அது பலமுறையாக நிகழும் ஆதலின், `முறை முறை உண்டல்` என்றார்.
இதனால், உண்மை விந்து சயத்தின் மேல்நிலைப் பயனும், அதனை அடைவோரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தர னாவோனும்
மோக முறினும் முறைஅமிர் துண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

பொழிப்புரை :

மாதர்மேல் மையலை உற்றபோதிலும் அதனால் உண்டாகிய விந்து அவர்பால் சென்று வீழாத நிலைமையை எய்திய பெரியோன், யோகியும், மேலான சித்திகளைப் பெற்றவனும், அதே நிலையில் போகத்தை இழக்காதவனும், ஞான வேந்தனாய் விளங்குபவனும், யோக முறையில் உண்ணும் மதி மண்டலத்து அமுதத்தைப் பெற்று உண்பவனுமாவான்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது பொதுவும், ``ஞான புரந்தரன்`` என்றது அதன்கண் உயர்ந்து நிற்கும் சிறப்பும் பற்றியாம். உம்மை பெற்றுவந்த பெயர்களை எல்லாம் வேறுவேறு எழுவாயாக வைத்து உரைப்பவர்க்கு அவை, ``அண்ணல்`` என்னும் ஒருமைப் பயனிலை யோடு இயையாமை அறிக. இயைய வேண்டின், அப்பெயர்கள் யாவும் ஒருவனையே குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும்.
கு-ரை: இதனால், விந்து சயத்தால் விளையும் பயன்கள் அதனைப் பெற்றவனது சிறப்பை வகுத்துக் கூறும் முகத்தால் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து)
உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

பொழிப்புரை :

சிவோகம் பாவனையால் உயிர் சிவனாதலால், அது நின்ற உடம்பும் சிவனது உடம்பாகியபின், அவ்யோகியது விந்தும் நீர்த்தன்மை நீங்கிச் சிவனது விந்துபோல நெருப்புத் தன்மை எய்த அதனையும், உலகில் நாள்தோறும் வெளிவிடுத்துச் சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்ற பிராணவாயுவாகிய மூலப்பொருளையும் ஒற்றுமைப்பட ஒன்றாகக் கலந்து மூலாக்கினியால் சமைத்து உண்ணும் முறையை ஓர் யோகி வல்லனாயின், அவனுத விந்து தேவாமிர்தமாய் உடல் நலங்கள் பலவற்றைத் தருதலுடன், ஞானமும் நன்கு சிறந்து பிரகாசிக்கச் செய்யும்.

குறிப்புரை :

அண்ணல் - தலைவன்; சிவபிரான். `ஆகிய பின்` என்பது ``ஆகி`` எனத் திரிந்து நின்றது. அனல் விந்து - அனல் தன்மைத் தாகிய விந்து. ``அவ்வனல் விந்து`` என்னும் சுட்டு, `அது சிவவிந்து வின் தன்மை` என்பதைச் சுட்டிற்று. ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிது பிராண வாயு அழிந்தொழிதலை ``மாய்க்கும் பிராணன்`` - என்றார். ``பிராணனாம் விந்து`` என்பதில் ``விந்து`` என்பது `மூலப் பொருள்` எனப் பொருள் தந்தது. கட்புலனாகாது கருதியுணருமாறு அகத்தே நிற்றல் பற்றி மூலாக்கினியை, ``கண்ணும் கனல்`` என்றார். கண்ணல், கருதல். ``எரித்து`` என்றது, `அவ்வாற்றால் பாகம் (பக்குவம்) செய்து` என்றபடி. ``உண்ணில்`` என்பது அவ்வாறு செய்து உண்ணுதலின் அருமை தோற்றி நின்றது.
இதனால், உண்மை விந்து சயம் பெறுமாறும், அதனால், உயர் ஞானமாகிய பயன் விளைதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அறியா தழிகின்ற ஆதலால் நாளும்
பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருவிந்து சேரவே மாயுமே.

பொழிப்புரை :

உலக மாந்தரது விந்துக்கள் அவரது அறியாமை யாலேதான் வீழ்ந் தொழிகின்றன ஆதலால், அவ்வீழ்ச்சிக்கண் நாள்தோறும் அவர்ஐம்பொறி வழியில் அகப்பட்டுத்துயர் உறு கின்றனர். ஆகையால், பெரியோர் அறிவுடையராய்ச் சாக்கிரத்தில் தானே அதீத நிலையை அடைந்திருக்க, பிண்டத்திற்கு முதலாயுள்ள விந்துவாகிய சுக்கிலமேயன்றி, அண்டத்திற்கு முதலாயுள்ள விந்து வாகிய சுத்த மாயையும் ஒரு சேர அவர்க்கு அடங்கித் தம்மியல்பு கெட்டு நிற்கும்.

குறிப்புரை :

அறிவாவது, இங்கு விந்து சயம் பெறும் முறையை அறிதல். அதீதமாவது, சித்தத்தை வேறிடத்தில் வையாது, சிவன்பாலே வைத்திருத்தல். அது ஞானியர்க்கு இயல்பிலும், யோகியர்க்கு யோகமுயற்சினாலும் வாய்ப்பதாகும். ஆகவே, ஏனையோர்க்கு அது கூடாமை யறிக. செறிவு - அடக்கம். அதனை ``செறிவறிந்து சீர்மை பயக்கும்``* என்பதனாலும் உணர்க. தம்மியல்பாவது பிண்ட விந்துவிற்கு விரைய வீழ்ந்தொழிதலும், அண்ட விந்துவிற்குச் சொல்வடிவாய் நின்று, தன்னின் நீங்கித் தனித்து நிற்கவொட்டாது தளைத்து நிற்றலுமாகும்.
இதனால், விந்து சயத்திற்குச் சாக்கிராதீதம் புரிதல் வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக்
காதல தாகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி யாண்டினும்
சோதியி னுள்ளே துரிசறும் காலமே.

பொழிப்புரை :

விந்து இழப்பிற்குக் காரணம் பால் உணர்ச்சியே யாகலின், அதனை மகளிரை அந்தப் பாலினராகக் கருதாமல், அங்ஙனம் கருதுபவர்க்கு அதனால் வரும் அழிவுபற்றி அவரைக் கொல்ல வரும் கூற்றுவனாகவே கருதின் அவர்மேல் செல்கின்ற ஆசையும், அதனால் எழும் பால் உணர்ச்சியும் நீங்கிவிடும். அவை நீங்கவே விந்து இழக்கப் படாதாகலின், அதனால் மனித ஆயுள் அளவேயன்றி, மேலும் பல்லாண்டு செல்லினும் இறப்பு வாராது. இனி அந்நாட்கள் எல்லாம் பரம்பொருளின் உள்ளே குற்றமற்றிருக்கும் நாட்களாயும் அமையும்.

குறிப்புரை :

`மாய வரும்` என இயையாது, `மாயக் கூற்றம்` என்றியைத்து, `இஃது உண்மை வடிவில் வாராது, வேறொரு வஞ்ச வடிவில் வருகின்ற கூற்றம்` என்று உரைத்தலும் பொருந்தும். காதலது - காதலின்கண் உண்டாவது. ``காலமே`` என்பதன்பின் `உளதாகும்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், `விந்து சயம் பெற விரும்புபவன் மாதர் ஆசையை வெறுத்தலே சிறப்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

பொழிப்புரை :

விந்து சயம்பெற்றவன் பல்லாண்டுகள் வாழ்தலால் காலத்தைக் கடந்து நிற்பவனாவன். விந்துவை அழித்துவிட்டவன் குறிப்பிட்ட சிலகாலம் வரையில் எவ்வகையிலோ வாழ்ந்து மறைந்தவனாவான். இவ்விருவரும் முறையே கலவிக் காலம் உட்பட எந்தக் காலத்திலும் விந்துவைத் தன் உடலில் வற்றியிருக்கச் செய்தவனும், மாதி னொடு பிராணாயாம முறையில் அமைந்த கலவியை அறியா தவனும் ஆவர்.

குறிப்புரை :

செறுதல் தடுத்தலும், அழித்தலும் ஆகிய இரு பொருளும் தருவதாகலின் அதனை இங்ஙனம் `பொருட்பின் வருநிலையணி` என்னும் நயம் தோன்ற இவ்வாறு கூறினார். ``காலங்கள்`` என்ற பன்மையால் எல்லாக் காலங்களும் கொள்ளப் பட்டன. `காரிகையொடு` என ஒடு உருபு விரிக்க. ஐயுருபு விரிப்பினும் ஆம். ``காலின்கண் வந்த கலப்பு`` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றபடி.
இதனால், விந்து சயம் பெற்றாரது உயர்வும், பெறாதாரது இழிவும் ஒருங்கு தொகுத்தக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

கலக்குநாள் முன்னாள் தன்னடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாளி உதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேல்அணை வீரே.

பொழிப்புரை :

மாதினொடு கூடுவீர், நீவிர் அக்காதல் வாழக்கை இருவரிடத்தும் நலமாக அமைய வேண்டின் மேலெல்லாம் கூறிவந்த முறையில் குறித்த நாட்கு முன்னாளே அவளது உடம்பில் மலமும், சலமும் ஆகிய உபாதிகளும், வாதம், பித்தம், ஐ என்னும் அவற்றின் மிகை குறைகளும் இல்லாதபடி நீக்குதற்கு உரியவற்றைச் செய்து அதன்பின்னர்க் கூடுவீராக.

குறிப்புரை :

`உடல் நலம் கெட்டிருப்பவளொடு கூடுதல் கேடு பயக்கும்` என்பதாம். ``மலம்`` என்றதனால் சலமும், `சீதம், பித்தம்` என்பவற்றைக் கூறியதனால் ஏனை வாதமும் கொள்ளப்பட்டது. இரண்டாம் தந்திரத்தில், ``மாதா உதரம் மலம்மிகில்`` என்னும் மந்திரம் கரு உற்பத்தி யின் வகையுணர்த்தற்குக் கூறினார்; இதனை விந்து சயம் பெறுவார்க்கு ஆவதுணர்த்தக் கூறினார் என்க. எனவே, இதன் கருத்து வகையும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

மேலாம் நிலத்தெழும் விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமுதுண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.

பொழிப்புரை :

விந்து ஆறு ஆதாரங்களில் மேல் ஆதாரமாகிய ஆஞ்ஞையில் தோன்றும்; அதற்கு மூலமாகிய பொருள் ஏழாம் தானமாகிய மதி மண்டலத்தில் தோன்றும். ஆகையால், பிராண வாயுவையும், அதனால் எழும் மூலாக்கினியையும் சுழுமுனை வழியாகச் செலுத்தி ஒவ்வோர் ஆதாரமாகக் கடந்து மதி மண்டலத்தை அடைந்து அங்கே உண்டாகின்ற அமிர்தத்தை உண்டு கொண்டே மாதினை ஆசையின்றித் தழுவினால், மையல் உண்டாகாது. அஃது உண்டாகாதாகவே விந்துவும் வெளிப்படாது அகத்திலே நிற்கும்.

குறிப்புரை :

விந்துவிற்கு மூலமாதல் பற்றி அங்ஙனம் ஆகின்ற அப்பொருளை ``நாதம்`` என்றார். சுழுமுனையை, `தண்டு` என்னும் வழக்குப்பற்றி, ``கோல்`` என்றார். நடத்துதற்குச் செயப்படுபொருள் மேலெல்லாம் கூறியவாற்றால் வந்தியைந்தன. பால் - இடம். `உரிய இடத்தில்` என்றபடி. ``உண்டு`` என்னும் வினையெச்சம் `நோக்கிச் சென்றான்` என்பது போல உடன் நிகழ்ச்சிகண் வந்தது. பற்றுதற்குச் செயப்படுபொருள் முன்னை மந்திரத் தொடர்பால் வந்து இயைந்தது.
இதனால், மேல், ``காலின்கண் வந்த கலப்பறியாரே`` எனக்கூறிய கலப்பு இத்தன்மையது என்பது அறிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

விந்து விளையும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழியும் அடக்கத்தின் ஆக்கமும்
நந்திய நாசமும் நாசத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

பொழிப்புரை :

விந்து உண்டாகும் முறையும், அஃது உண்டாகி முதிர்வதனால் விளைகின்ற பயனும், அதனை வீண்போகாது அடக்குதற்குரிய வழியும், அவ்வழிப்படி அதனை அடக்குதலால் வரும் ஆக்கங்களும், விந்து கெடுவதாகிய கேடும், அக்கேட்டினால் விளையும் விளைவுகளின் வகையும் ஆகிய இவற்றையெல்லாம் முறையாக மனத்திற் கொணர்ந்து, ஆய்ந்து உணர்பவர்க்கு விந்து சயம் உண்டாக வழி ஏற்படும்.

குறிப்புரை :

``அந்த`` என்பது பின்வரும் அடக்கத்தைச் சுட்டிற்று. ``நாசத்தால்`` என்பதன்பின் `விளையும்` என ஒரு சொல் வருவிக்க. பேதம் உடையவற்றை, ``பேதம்`` என்றார். காரணம் உண்டாய விடத்துக் காரியம் நிகழ்தல் எளிதாதல் பற்றி, ``சயமாகும் விந்துவே`` என்றாராகலின், அதற்கு இதுவே பொருளாயிற்று.
விந்து உண்டாகும் முறை முதலிய பலவும் மேலெல்லாம் கூறப்பட்டமை காண்க.
இதனால், `அறிவுடையோர், பிண்டத்திற்குக் காரணமான விந்துவைப் பற்றி அறியற்பாலனவற்றை எல்லாம் அறிதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரிந்(து)
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

பொழிப்புரை :

[இமந்திரத்திலும் மேல், ``அண்ணல் உடலாகி`` என்னும் மந்திரத்துட் கூறப்பட்ட பொருளே, `அண்ணல் உடலாதல்` ஆகிய அவ்வொன்றொழியக் கூறப்பட்டது.]

குறிப்புரை :

அது சிவயோகியர்க்கு ஆகும் சிறப்புமுறை. இது யோகியர் எல்லோர்க்கும் ஆகும் பொதுமுறை. அதனால் `அறிவாதல்` நீக்கி, `அமுதாதல்` மட்டும் கூறப்பட்டது. வீசம் - (பீசம்) வித்து. நந்திய - வளர்ந்த.
யோக முறையில் மூலாதாரம் முதல், கொப்பூழ் வரையுள்ள பகுதி அக்கினி கண்டமாகவும், கொப்பூழ் முதல் இருதயம் முதல் கண்டம் வரையுள்ள பகுதி சூரிய கண்டமாகவும், அதற்குமேல் உள்ள பகுதி சந்திர கண்டமாகவும் சொல்லப்படும். அதிகண்டர் - அக்கினி கண்டத்திற்கு மேல் உள்ள கண்டம். ``சந்திரன்`` என்றதும் சந்திர கண்டத்தை.

பண் :

பாடல் எண் : 23

அமுதச் சசிவிந்து ஆம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவபோகம் ஆதலால் சித்தி
அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

பொழிப்புரை :

சந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதமாகிய துளிகளில், யோகியினது உடம்பில் உண்டாகின்ற விந்து முன் மந்திரத்தில் கூறிய முறையில் சென்று ஒடுங்க, மற்று உடம்பைக் காக்கின்ற அமுதமாய் நீர்க்கூறுகள் விரையச் சுழன்று மூலாக்கினியால் வற்ற, அவ்வாற்றால் அமுதம் போலும் இனிய சிவபோகம் விளையும் ஆதலால், அவ்யோகிக்கு அப்பொழுதுதான் அடைந்தபேறு அமுத மழை பொழிதல் போல அமையும்.

குறிப்புரை :

`சசி அமுத விந்து` என மாற்றி, `உள்` என்னும் உருபு விரிக்க. ``அமுதப் புனல், அமுதச் சிவபோகம்`` என்பன உவமத் தொகை. பிலாவனம் - ஒழுகுதல். அது மழைத்தாரை வீழ்தலைக் குறித்தது.
இதனால், `மகளிர் இன்பமாகிய குளப்படி நீரை விடுத்து விந்து சயம் பெற்றார் சிவயோகியாராயின் சிவபோகமாகிய பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து)
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.

பொழிப்புரை :

மாதும், ஆடவனும் ஒருங்கு கூடி, இருவர் உடலும் `ஓர் உடலே` எனும்படி இறுகப் புல்லிய விடத்தும் ஆடவனுக்கு அப்புல்லுதல் காரணமாக வெளிப்படுதற்குரிய விந்து வெளிப்படா திருக்கப் பெறுதலே உண்மை யோகமாகும். ஆயினும் அவ்விடத்து இன்ப நுகர்ச்சி இல்லா தொழியாது; உள்ளதேயாகும். அவ்வின்ப நுகர்ச்சி உடலின்ப நுகர்ச்சியாகாது சிவ இன்ப நுகர்ச்சியாகவே அமையும். அதுவே இன்ப நுகர்ச்சியை உடையவனுக்குத் தீங்கினை விளையாது, நன்மையையே விளைக்கும் இன்ப நுகர்ச்சியாம். இந்நுகர்ச்சியைப் பெறும் வகையில் மாதரைப் புணர அறியாதார் புணர்ச்சிக் காலத்தில் அவரை உடல் இன்ப மயக்கமின்றிப் புணர மாட்டார்.

குறிப்புரை :

`அம்மயக்கத்தில் மூழ்கிப் புணர்ந்து கெடுவர்` என்பதாம். `புணர்ந்து ... ... கலந்தாலும் அவ்விந்து ஒழியா வகை யோகம்` எனக் கூட்டியுரைக்க. `போகிக்கு` என நான்கண் உருபு விரிக்க. ``நற்போகமாம்`` என்னும் பயனிலைக்கு, `அதுவே` என்னும் எழுவாய் வருவிக்க. தீங்காவது, போகம் வினைப்போகமாய், மேலும் வினையைப் பெருக்குதல். நன்மையாவது இன்பப்பேற்றைப் பலவாகத் தருகின்ற திருவருளை நினைத்தலால் அதனிடத்து மேலும், மேலும் அன்பு மீதூர்தல்.
``மாழை ஒண்கண் பாவையைத் தந்து ஆண்டானை`` எனவும், ``நொய்யேனைப் பொருட்படுத்துச் - சங்கிலியோடு எனைப்புணர்த்த தத்துவனை`` (திருமுறை - 7. 51-10, 11. )எனவும், ``மான் திகழும் சங்கிலியைத் தந்து வருபயன்களெலாம் - தோன்ற அருள் செய்தளித்தாய்`` l எனவும், ``பண்மயத்த மொழிப் பரவே சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே`` 3 எனவும் நினைந்து, நினைந்து உருகியவாறும்,
``ஓர்ந்தனன், ஓர்ந்தனன் உள்ளத் துள்ளே உள்ள ஒண்பொருள்;
சேர்ந்தனன், சேர்ந்தனன்; சென்று திருவெற்றி யூர்புக்குச்
சார்ந்தனன், சார்ந்தனன் சங்கிலி மென்தோள்; தடமுலை
ஆர்ந்தனன்; ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே`` 8
என அருளிச்செய்தவாறும் அறிக. ``மோகங் கெட`` எனப் பொதுப்பட அருளினமையால் இவ் யோகம் வல்லார் தம்மால் கூடப்பெறும் மகளிரையும் மோகம் இலராகச் செய்வர் என்பதும் பெறப்படும். விந்து ஒழியா வகை புணரும் யோகம் வச்சிர `குலியோகம�%8

பண் :

பாடல் எண் : 25

மாத ரிடத்தே செலுத்தினால் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாகுவார்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

பொழிப்புரை :

யோகத்தைப் பொருந்தியவர் மாதரிடத்தே அவர் விழைவு நோக்கி விந்துவை விடுத்தாராயினும் அவர்மேல் கொண்ட மோகத்தால் விடுத்தாரல்லர். ஏனெனின், அவர் மாதர்பால் காட்டுகின்ற மோகத்தைச் சொல்லுமிடத்து ஏனையோர் மோகம் போன்றதாயிருப்பினும் அது வேறேயாம். (`பொதுவாக யாவர்மீதும் உளதாகிய அருளேயாம்` என்பதாம்.) இனி, யோகத்தில் பொருந்தாதவர் மாதர்மேல் தம் உயிர்மேல் வைத்திருக்கும் ஆசையைப்போலும் ஆசையை வைத்து அதனால் மெலிவெய்துவர்.

குறிப்புரை :

காதல், இங்கு மோகத்தைக் குறித்து நின்றது. `யோகியர் மோகம் இன்மையால் அப்பொழுது விந்து சயம் பெறுதலும், பின்னரும் பல இன்னலுக்கு ஆளாகாது உய்தலும் உடையர்` என்பதும், `ஏனையோர் அவற்றிற்கு மாறான நிலைலையுடையராவர்` என்பதும் கருத்து. மூன்றாம் அடியை இறுதிக்கண் வைத்து உரைக்க. ``யோகம் கலந்தவர்`` என்றதனால். ``அதனைக் கலவாதவர்`` என்பது பெறப்பட்டது. ஈற்றடி. `அங்ஙனம் காதலைச் சாற்றில், காதலர் காதல் போன்றதாம் என மாற்றியும். ஒரு சொல் வருவித்தும் உரைத்தற்கு உரியது ``அங்ஙன்`` என்றது, `அவரிடத்து` என்றபடி.
இதனால், யோகம் வல்லவரும், அல்லவரும் இன்பம் நுகருமாறு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோ(டு)
ஆற்றி அமுதம் அருந்தவிந் தாருமே.

பொழிப்புரை :

[இம்மந்திரத்திலும் மேல் ``வற்ற அனலை`` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட முறையே ``சுழி அனல் சொருகிச் சுடருற்று`` என்பதொழியச் சொல்லப்பட்டது.]

குறிப்புரை :

விந்து ஆரும் - விந்து பெருகும், பின்பு, ``சத்தியால் சயமாகும்`` என முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. ``சத்தியால்`` என்பது இரட்டுற மொழிதலாய், `திருவருளாகிய சத்தியின் வழிச் செயற்படும் தனது சத்தியால்` எனப்பொருள் தந்தது. `செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போத்வதாகிய திருவருள்`* யோக முயற்சியுடையார்க்கு அதற்கு ஏற்றவாறு அருள்செய்யும் என்பதற்கு. திருவருட் சத்தியும் உடன் கூறப்பட்டது. `ஓடாது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று நாதம் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள இடத்தில் தோன்றுவது என்பது மேல் ``மேலாம் நிலத்து எழு`` என்னும் மந்திரத்து உரையிலும் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் கூறியபடி யோகியர்க்கு விந்து சயம் கூடுதல் திருவருட் குறிப்பால் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

விந்துவும் நாதமும் மேவக் கனல்மூலம்
அந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடைச்
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு செய்யும் யோகத்தால் மூலாக் கினியால் விந்துவும், நாதமும் கலந்த ஒன்றாதலும், அவ்வக் கினியின் வெம்மை உடம்பின் மயிக்கால்தோறும் பரவி நிற்றலும் நிகழ, அவ் வாற்றால் உள்ளம் உலகை வெறுத்துச் சிவத்தினிடத்தே செல்ல, பின்பு, `சிவம் நான்` என்பதாகிய சிவோகம் பாவனை உண்டாக, அதனால் விந்து அழியா உடம்பில் அதற்கு வித்தாய், அதனுள்ளே சுவறி நிற்கும்.

குறிப்புரை :

அகம் - நான். `விந்து, உடம்பு அழியாமைக்கு வித்தாய் அதனுள்ளே மாளும்` எனக் கூறற்பாலதனை இங்ஙனம் கூறினார். ``வித்தில்`` - வித்துப்போல.
இதனால், விந்து சயத்தின் பொருட்டுச் செய்யப்படும் யோகம் சிவ யோகத்தையும், காய சித்தியையும் உண்டாக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வித்தக்குற் றுண்பான் விளைவறி யாதவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்தச்சுட் டுண்பவன்
வித்துக்குற் றுண்பானில் வேறலன் நீற்றவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்துவிற் றானன்றே.

பொழிப்புரை :

விதைக்கு வைத்திருக்கும் நெல்லைக்குற்றி உண வாக்கிக் கொள்பவன் வித்தினால் விளையக் கூடிய பெரும்பயனை இழந்தவனாவன். இனி, விதை நெல்லைக்குற்றி உண்ணாமல், பொரி யாக வறுத்து உண்பவனும் முன் சொல்லப்பட்டவனைவிட அறிவுடை யவன் ஆகமாட்டான். (ஏனெனில், அவனும் விளைவை இழக்கின்றா னன்றோ!) ஆகையால் சிவயோகி விதையைக் குற்றி, அல்லது வறுத்து உண்ணாமலும், பலரும் செய்கிறபடி நிலத்தில் விதைத்தலைச் செய்யா மலும் பொன்னுக்கு விற்பவனைப் போன்றவன் ஆவான்.

குறிப்புரை :

நீற்றவன் - முழுநீறு பூசியவன். சிவயோகி இம்மந்திரம் ஒட்டணியாகச் செய்யப்பட்டமையால், இதன் பொருள் வருமாறு:-
`விந்துவை உபாதியாக்கிக் கொண்டு அதனை எவ்வாற்றா லேனும் போக்குபவன் அதனால் எந்தப் பயனையும் பெறாமல் இழப்பவனாவன். இனி யோகத்தால் விந்துவை உடம்பினுள் வற்றச் செய்பவனும் விந்துவால் பெறக்கூடிய பெரும்பயனைப் பெற்றவன் ஆகமாட்டான். ஆகையால் சிவயோகி இந்த இரண்டு வகையிலும் இல்லாமலும் பெரும்பாலோர்போல விந்துவை மாதர்பால் விடாமலும் விந்து சயத்தால் சிவோகம் பாவனையை அடைந்து நலம்பெறுவான்`
விதை நெல் மிக்க விலையுடையது. அதனைப் பொன்னுக்கு விற்றால், அந்த அளவு உணவு நெல்லை மலிவான விலைக்கு வாங்கி உண்ணவும் செய்யலாம்; பொன்னும் இலாபமாகும். அதனால், `அதனை ஒப்பது சிவயோகியின் செயல்` என்றார்.
இதனால், `விந்து சயத்தால் பெறத்தக்க சிறந்த பயன் சிவோகம் பாவனையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.

பொழிப்புரை :

உணவிலே விந்து காரண ரூபமாய் அடங்கி யிருத்தலை அறிந்து உணவை நன்முறையில் ஒழுங்காக உண்டு வருதலாலும், பின்பு பிராணனின் அவ்வாறுள்ள விந்துவை அந்தப் பிராணனை ஒழுங்கான முறை இயக்குதலால் ஒளிவடிவாக எழச் செய்து ஒலிவடிவாகிய விந்துநாதத் தானங்களில் ஏற்றி அதற்கு மேலும் செலுத்துதலாலும் அக்கர வடிவாய் நின்று அறிவைத் தோற்றுவிக்கின்ற பெரிய சுத்த மாயையும் உடம்பினுள்ளே அடங்கி நேரிதாம்.

குறிப்புரை :

`உணவையும், பிராண வாயுவையும் ஒழுங்கான முறையில் கொண்டிருக்கும் யோகிக்கு வாக்குகள் நேரியவாக, அதனால் மனம் தன்வழிப்பட்டுச் சிவ சிந்தனை உண்டாகும்` என்பது கருத்து. மறித்தல் - அடக்குதல். `மறித்தலால் மின் ஒத்த விந்து` என் றதனால், விந்து மின்னல் போல ஒளிவடிவாதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. வன்னம் - சக்கரம். வன்னத்து இருவித்து`` என்பது, `கடிசூத்திரப் பொன்` என்பதுபோலக் கரும காரகத்தின்கண் வந்த ஆறாவதன் தொகை. நான்காவதன் தொகை` எனினுமாம்.
இதனால், விந்து சயத்தால் மேற்கூறியவாறு சிந்தனை மாறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம்
அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

பொழிப்புரை :

ஆடவர் எல்லோர்க்கும் அன்ன விந்து, பிராண விந்து` என இரு விந்துக்கள் உள்ளன. அந்த உண்மையை உணர்ந்து, அன்னத்தையும், பிராணனையும் நெறிபடுத்தி நிற்க வல்லவர்க்கு மேனி பொன்போல விளங்கும். அட்டமா சித்திகள் கூடும். மேலும் அத்தன்மை யுள்ள யோகிகள் யாவரும் நீண்ட காலம் வாழ்ந்தமை வெளிப்படை.

குறிப்புரை :

பிராண விந்துவாவது பிராணன் நெறிப்பட்டு இயங்கு தலால் விந்து வலுப்படுதலும், நெறிப்பட்டு இயங்காமையால் விந்து மெலிவடைதலும் ஆகும். ``தன்னை`` என்றது. அந்த உண்மையைச் சாதிக்க வல்லார் அடையும் பயன்களாக இங்குக் கூறப்பட்டவை மூன்றாந் தந்திரத்திலும் கூறப்பட்டன `இரு விந்து` என்பதன் பின் `உள` என்பதும், ஈற்றில் `வெளிப்படை` என்பதும் எஞ்சி நின்றன. `உருவும் சொன்னமாம்` என உம்மையை மாற்றி வைத்து உரைக்க.
இதனால், `விந்து சயம் வேண்டினார் உணவையும், பிராணனையும் நெறிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை
சென்று பராசத்தி விந்துசயந் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசந் தானே.

பொழிப்புரை :

(நீயே விந்து சயத்தைப் பெற்று விடலாம் என்று நினையாமல்) திருவருளும் அம்முயற்சியில் தலைப்பட்டு உடன் நிற்றற்பொருட்டுத் திருவைந்தெழுத்தில் உயிராய் உள்ள சிகாரத்தின் பொருளாகிய சிவனை அகார உகார மகாரங்களோடு உடன் வைத்துத் தியானிக்க விந்து சய மார்க்கத்தைப் பிறருக்கு உபதேசிக்கும் பொழுதும் இவ்வாறே உபதேசிப்பாயாக.

குறிப்புரை :

`பிரணவ யோக முறையால் விந்து சயம் எளிதில் பெறலாம்` எனக்கூற வந்தவர் `அதனைச் சிவத்தியானத்தோடு செய்யல் வேண்டும்` என்பதை இவ்வாற்றால் கூறினஆர். ``சிகாரம்`` என்றது அதனால் குறிக்கப்படும் பொருளை. ``நினைக்கும்`` என்றது `நினைக்கப் படும்` என்றபடி. `பிராணனாய் நினைக்கும்` என முடிந்து, அதன்பின் `அதனை` என்பது வருவித்து `ஒன்றவை` என முடிக்க. `பராசத்தி சென்று விந்து சயந்தன்னை ஒன்ற` என முதலிற்கூட்டியும், உபதேசம் ஒன்று உரைக்க` என இறுதியில் மாற்றியும் பொருள் கொள்க.
இதனால், சிவத்தியானத்தோடு கூடிய பிரணவயோகம் விந்து சயத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை
வானேய் உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :

முன்மந்திரத்தில், `அகாரம் முதலிய மூன்றோடு உடன் வைத்துத் தியானிக்க` எனக் கூறிய கூற்றில் சுட்டப்பட்ட சிவத்தை உபதேசிக்கும் உபதேசமே உண்மை உபதேசமாகும். ஏனெனில், சிவம் இன்றி யாதொரு பொருளும் இல்லை. இனி ஆகாயம் போல் எப்பொருட்கும் வியாபகமாய் உள்ள சுத்தமாயை யினின்றும் பிரணவ வடிவாய்த் தோன்றுகின்ற வாக்குக்கள் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கப்படும்பொழுது ஆதார யோகத்தில் ஏழாம் தானத்துடன் உலகியல் உணர்வோடு நிகழும் முதற் பதினான்கு கலைகள் ஆதார சத்திகளோடு அடங்கிவிடும். உலகியல் நீங்க சிவ உணர்வோடே நிகழும் எஞ்சிய ஏனை இருகலைகள் நிராதார யோகத்தில் நிராதார சத்திகளோடு அடங்கிவிடும். அந்நிலையே சிவத்துவ நிலையாம்.

குறிப்புரை :

`பிராசாத யோகத்தால் விந்து சயம் பெறுவார்க்குச் சிவோகம் பாவனை கைவரும் வகையில் யோகம் சிவயோகமாய் நிகழும்` என மேல், `விந்துவும் நாதமும் மேவக்கனல்மூலம்`` என்னும் மந்திரத்திற் கூறியதை அஃது இவ்வாற்றால் நிகழும் என்பது இதனுட் கூறப்பட்டது. உபதேசப் பொருள், ``உபதேசம்`` எனப்பட்டது.
`பிரணவத்தைப் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கு மிடத்து அவை எவ்வாறு அமையும்` என்பது மூன்றாம் தந்திரத்தில், ``கலைநிலை`` என்னும் அதிகாரத்தில் விரிவாக விளக்கப்பட்டது.
பூதாகாயம் ஏனை எல்லாப் பொருள்கட்கும் வியாபகமாய் நிற்றல் யாவராலும் அறியப்பட்டதாகலின் அதனைச் சுத்த மாயையின் வியாபகத்திற்கு உவமையாகக் கூறி விளக்கினார். ``வான் ஏய்`` என்பதில் `ஏய்` உவம உருபு. ``விந்துவின் வந்த`` என ஐந்தன் உருபு விரிக்க. புத்தி - ஞானம்; சிவஞானம். இந்த ஞானம் சிவத்தைத் தன்னின் வேறாக உணரும் ஞானம். இது, நீங்கினால் ஆன்மாச் சிவத்தைத் தன்னுள்ளே உணர்ந்து சிவமாம் ஆகலின் அதனை, ``சிவகதித் தன்மை`` என்றார்.
இதனால் விந்து சய உபாயங்களில் பிராசாத யோகம் சிறப்புடையதாதல் அது நிகழுமாறு கூறிய முகத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

விந்துவுள் நாதம் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும் தூலமாகவும், சூக்கும மாகவும் தோன்றுகின்ற வாக்குக்களால்தான் இங்குக் காணப்படுகின்ற பலவாகிய உயிர்களும் உளவாயின. அதனால், மந்திரங்களின் தோற்ற முடிவுகளே உயிர்களின் தோற்ற முடிவுகளாய் அமைகின்றன. ஆகவே அவ்வாக்குக்கள் பிராசாத யோகத்தால் தம் சத்திகள் அடங்கப் பெறுமாயின், சிவோகம் பாவனை உண்மையாய்ப் பயன் தரும்.

குறிப்புரை :

பயன் வகையில் இவ்வுலகத்தார்க்குத் தூலம் சிறந்த தாகலின் அதனை முன்னர்க் கூறினார். உடலினிடத்து உயிர் உளதாதல் அதன் உணர்வு பற்றியே அறியப்படுதலாலும், அவ்வுணர்வு வாக்குகளாலன்றி நிகழாமையாலும் `அவற்றது தோற்றத்தினாலே உயிர்களின் தோற்றம் உளதாயிற்று` என்றார். தோற்றத்திற்கு உள்ளது முடிவிற்கும் ஒக்கும் ஆதலின் `மந்திரங்களின் தோற்றமும் முடிவுமே உயிர்களின் தோற்றமும், முடிவுமாம்` என்பது பெறப்படும். மந்திர மொழியால் உண்டாகும் உணர்வே இறையுணர்வு ஆதலின் அதனது தோற்ற முடிவுகளையே உணர்வினது தோற்றமுடிவுகளாகக் கூறியது பொருந்துவதாயிற்று. இவற்றால் வாக்குக்களின் நீங்குதலே பந்தத்தின் நீங்குதலாம் ஆதலின், `விந்து அடங்கச் சிவோகம் விளையும்` என்றார்.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே`` l
என்னும் சிவஞான சித்தி இங்கு நினைக்கத்தக்கது. எனவே வாக்குச் சயமும் ஒரு வகை விந்து சயம் ஆயிற்று.
இதனால், சிறப்புடைய ஒரு விந்து சயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும்அந் நீள்வரை யெட்டில்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்தப் பழமே.

பொழிப்புரை :

விந்துவை வற்றச் செய்யும் முறையும், மனம் எங்கும் உலாவருவதில் அடைகின்ற வெற்றியைத் தடுத்து நிறுத்தும் முறையும், அந்த வெற்றியை எட்டுத் திக்கிலும் உயர்ந்து நிற்கின்ற மலைகளில் எழுதிப் புகழ் பெறுதலும் ஆகிய எல்லாம் உடம்பு வினைத் தொடர்பை அறுத்துக்கொள்கின்ற காலத்திலேதான் ஒருவனுக்குக் கைவரும்.

குறிப்புரை :

வறுத்தலுக்குச் செயப்படு பொருளாகிய `விந்து` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. மனோலயம் எய்தப் பெற்றாரது புகழ் எட்டுத்திக்கும் பரவுதல்.
``இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு`` 3
என்பதனாலும் விளங்கும். `அஸ்தி` என்னும் வடசொல் தமிழில் `அத்தி` எனத்திரிந்து வரும் ஆதலின் அதனை நாயனார் உடம்பைக் குறித்தற்குச் சிலேடை நயம்தோன்ற வழங்குவர். `அத்திப் பழமும், அறைக்கீரை நல்வித்தும்`` என்னும் மந்திரஉரை பார்க்க உடம்பை எடுத்து உழல்கின்ற உயிரினது செயலை உடம்பின்மேல் ஏற்றி, ``அத்திப்பழம் வினையை அறுக்கின்ற நாள்`` என்றார்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய விழுப் பயன் வினை நீங்கப் பெற்றார்க்கே கூடுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம்அக் காமத்தை நாடிலே.

பொழிப்புரை :

மேல், ``மேலாம் நிலத்தெழும் விந்துவும்`` என்னும் மந்திரத்திலும், ``விந்துவின் வீசத்தை`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டபடி விந்துவும், நாதமும் ஒன்றாகிச் சந்திர மண்டலத்தை அடைந்த பொழுது அங்கு நின்றும் அமுதம் ஒழுகும் காலத்தில் அதனுடன் கலக்கத்தக்க அவிசு `நின்ற சிகாரம்` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட பிரணவ மந்திரமேயாகும்.

குறிப்புரை :

என்றது, `பிரணவ கலைகளை அவ்வவற்றிற்கு உரிய அதிதேவர்கள் ஏற்ற மகிழ்ந்து, அவற்றின் வலியை அடக்குவர்` என்றபடி. மேற்குறிக்கப்பட்ட மந்திரங்களில் சொல்லியவற்றை மீட்டும் அனுவதித்தது வாக்குச் சயமாகிய விந்து சயம் இவ்வாற்றால் உளதாம் என்பதை உணர்த்துதற் பொருட்டு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், ``விந்துவுள் நாதம் விளைய விளைந்தது` என்னும் மந்திரத்துள் கூறப்பட்ட அவ்விந்து சயம் அமையுமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் இம்மந்திரத்தை அடுத்துக் காணப்படும், ``மனத்தொடு சத்து`` என்னும் பாடல் அதனை அடுத்து வரும் மந்திரத் திற்கு முன்னோடி போன்றுள்ளது. ஆயினும் பொருளற்றதாய் உள்ளது. அதனால் அதனை, `நாயனார் வாக்கு` எனக் கொள்ளுதற்கில்லை.

பண் :

பாடல் எண் : 36

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து)
ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.

பொழிப்புரை :

சூக்குமை முதலிய வாக்குக்களும், அவ்வாக்குக் களால் இயக்கப்படுகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களும், அந்த அந்தக்கரணங்களால் உண்டாகின்ற உணர்வுகளும் ஆகிய இவை ஒருங்கு தொக்க நிலையாகிய அறிவின் நிலையை உலகர் அறிய மாட்டார். அதனை உள்ளவாறு அறிய வல்லவர் ஆசான்ம மூர்த்தியின் அருள் பெற்றவரே ஆவர். அவர்க்கு அந்த நிலையே சிவனது இருப்பிடமாதல் விளங்கும்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட மூன்றனுள் முதலாவதாகிய வாக்கும் இறைவன் இயக்கவே இயங்கும் ஆகவே இறைவன் வாக்கினை நேராகவும், அந்தக் கரணங்களை வாக்கு வழியாகவும் இயக்கவே உயிர்கட்கு உணர்வுகள் உண்டாகின்றன. ஆகவே, `இவ்வுண்மை உணருமிடத்து வாக்கே இறைவனுக்கு இடம்` என்பது விளங்கும். வாக்குப் பிரணவ வடிவாகலின் பிரணவம் இறைவனுக்கு இடமாதல் விளங்கும். அது விளங்கவே விந்து சயம் பெறுதற் பொருட்டு, பிரணவ யோகத்தில் மனம் செல்லும் என்பதாம்.
``மனம்`` என்றது உபலக்கணம் ஆதலின், ஏனைக்காரணங்களும் கொள்ளப்படும்.
இதனால், `சுத்தமாயை யாகிய விந்துவின் சயத்திற்குப் பிரணவ யோகத்தை விரும்பிச் செய்தல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

உரவடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய நன்முலை மேவியகீழ் அங்கி
கருமுலை மீமிசைக் ககை்கீழிற் காலாம்
விரவிய கந்தர மேல்வெளி யாமே.

பொழிப்புரை :

மனித உடம்பில் எல்லாவற்றையும் தாங்கும் வலிமையுடைய கலில் (இடைக்குக் கீழ் உள்ள பகுதியில்) `நிலம்` என்னும் பூதமும், அதற்கு மேல் கொப்பூழ்வரை உள்ள பகுதியில் `நீர்` என்னும் பூதமும், கொப்பூழ் முதல் முலையிருக்கும் பரந்த இடமாகிய மார்பு பகுதியில் `தீ` என்னும் பூதமும் (இதனுள் முலையும் அடங்குதல் அறிக.) மார்பிற்குமேல் கைகளுக்கு ஆதாரமாய்க் கழுத்து வரையில் உள்ள பகுதியில் `வளி` என்னும் பூதமும், (இதனுள் கைகளும் அடங்குதல் அறிக.) கழுத்திற்கு மேல் உள்ள பகுதியில் `வெளி` என்னும் பூதமும் நிற்கும்.

குறிப்புரை :

`இஃது அறிந்து, பிண்டமும் அண்டத்தோடு ஒத்தலை உணர்ந்து கொள்க` என்பது குறிப்பெச்சம். இவ்வாறு உணர்தல் விந்து சயம் முதலியவற்றைத் தரும் யோகத்திற்கு வேண்டப்படுதல் பற்றி இதனை இங்குக் கூறினார்.
இதனானே வருகின்ற அதிகாரத்திற்கும் இயைபு தோற்று விக்கப்பட்டது. ஏனையவற்றோடு ஒப்ப, `அடியில் கீழில்` என உருபு விரிக்க. `மிசையும் கீழும் ஆகிய இடத்தில் கால்ஆம்` என்க. இவ்வதிகாரம் பெரும்பான்மை அந்தாதியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 1

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே.

பொழிப்புரை :

(சூரியன் முதலாகக் காணப்படுகின்ற அனைத்து ஒளிப் பொருள்களின் ஒளியும் சிவனது ஒளியேயன்றி, அவற்றினுடையன அல்ல. அஃது எங்ஙனம் எனின்,) சூரியன் நாள்தோறும் மகாமேரு மலையை வலம் வருதல் தெளிவு. ஏனைத் தேவர்கள் அவ்வாறு வலம் வருதலைப் பலர் அறியாராயினும் யோகியரும், ஞானியரும் அதனை நன்கறிவர். `அவர் வலம்வருதல் எதன்பொருட்டு` எனின், எங்கட்கு விள்ககாகி நின்று பயன் தருகின்ற சிவனாகிய கடவுளின் திருவடி ஒளிகள் தங்களிடத்துப் பொருந்தி விளங்குதற் பொருட்டேயாம். வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் தவத்தால்l ஆகலின் அவர் அதனைச் செய்கின்றனர்.

குறிப்புரை :

பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `தேவர்` என்பதற்கு `ஒளியுடம் புடையவர்` என்பதே பொருள். அது சூரியனிடத்தே இனிது விளங்கு தலால், `அவன் முதலாக` என்றார். தேவர் அனைவரையும் கூறினமையால், திங்கள், வியாழன், வெள்ளி முதலிய கோள்களை யும், மற்றும் நாண்மீன் விண்மீன்களையும் வேறு வேறெடுத்துக் கூறல் வேண்டாதாயிற்று. மஞ்சு - மேகம். ``காரணம்``, `நிமித்தம்` என்னும் பொருட்டாய் நின்றது. ``எம் சுடர்`` என்றது, நாயனார் தம்கூற்றாக் கூறியது. திருவடி சத்தியாகலின் அதனையே சிவன் ஒளியாகக் கூறினார். மகாமேருமலை சிவன் எழுந்தருளியிருக்கின்ற கயிலையைத் தன்னிடத்தில் உடையது. வணங்குதலையே ``தவம்`` என்றமையால் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பதிற்போல்,
``நாயகன் கண்ண யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றிக்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பின்
தேயமார் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசது`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக.
இதனால் ஆதித்தன் சிவனொளியைப் பெற்று விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம்
புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன்
இகலற ஏழுல கும்உற ஓங்கும்
பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.

பொழிப்புரை :

ஆதித்தனாலே உலகுயிர்கள் இறைவாது வாழ்தலால், அவன் காத்தற் கடவுளாகிய மாயோனாக ``சூரிய நாராயணன்`` என்று சொல்லப்படுகின்றான். அதனால் அவனே எல்லா உயிர்கட்கும் புகலிடமாகின்ற முதற்கடவுளும் ஆகின்றான். இன்னும் உயிர்கள் நால்வகை யோனிகளுள் கருவாகித் தோன்றுதலும் ஆதித்த னாலே யாகலின் அவனே அனைத்துயிர்கட்கும் முதலுமாவான்.

குறிப்புரை :

``ஏழுலகும் உற`` என்றது, `நால்வகை யோனியுட் பட்ட அனைத்துயிர்களும் தோன்ற` என்றபடி. ஏழுலகும் இகலற ஓங்குதலாவது, ``ஆதித்தனாலேதான் அனைத்து உயிர்களின் பிறப்பும், வாழ்வும் அமைகின்றன` என்பதை யாவரும் ஒருமுகமாக உடன்பட்டுப் போற்றப்படுதல். ஆதித்தனை, ``பலர்புகழ் ஞாயிறு``3 என ஆன்றோர் புகழ்ந்தவை அறிக. ``ஆதியும்`` - என்னும் உம்மை உயர்வு சிறப்பும்மை. `அனைத்துலகங்களிலும் ஆதித்தர் உளர்` என்பதை இங்கு நினைக்க.
இதனால், ஆதித்தன் உயிர்கட்குத் தோற்றமும், நிலையுமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஆதித்தனை ஆயிர நாமங்கள் விண்ணவர் சொல்லி வேண்டினாலும், வேதியர்சொல்லி வேண்டினாலும் அவையெல்லாம் சிவபிரானிடத்தில் அன்புதோன்றி முதிர்வதற்கு வழியாகவே அமையும். ஏனெனில், ஆதித்த மண்டலத்தின் ஒளிக்குள் ஒளியாய்ச் சிவபிரானே நிற்றலால்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. ``நிற்கும்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க. அப்பயனிலையின் பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. சிவபிரானது அட்ட மூர்த்தங்களில் ஆதித்தனும் ஒன்றாகலின் ``சோதியினுள்ளே சுடரொளியாய் நிற்கும்`` என்றும், அதனை அறியாது ஆதித்தனையே வழிபடுபவர்க்கும்,
``யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்`` l
என்றடி பயன் தருபவன் சிவபெருமானே யாகலின், `அவன் அவர்க்குத் தன்னை உணரும் உணர்வைச் சிறிது சிறிதாக விளங்கச் செய்வன்` என்பது பற்றி, ``ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே`` என்றும் கூறினார்.
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரன்உரு அல்லனோ`` *
என்று அருளிச் செய்ததை காண்க. சிவநெறியாளர் சூரியனை நேரே கண்டு வணங்கும்பொழுது அவனது ஒளிமண்டலத்தில் சதாசிவ மூர்த்தி எழுந்தருளி யிருத்தலை நினைன்தே வணங்குவர். சிவபிரானே ஆதித்தனாய் நின்றும் உலகிற்கு உதவுதல் பற்றியும், அவ்வுதவியின் முதன்மை பற்றியும் சிவபூசையில் முதற்கண் சூரியபூசை விதிக்கப் பட்டுள்ளது. அவ்விடத்துச் சூரியன் சிவ சூரியனாகவே பூசிக்கப் படுவான்.
``காண்பவன் சிவனே யானால்
அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்``l
என்றது காண்க. `ஆதித்தனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. வேதியர் பூதராய்க் காட்சிப்படுதல் பற்றி முன்னர்க் கூறினார். ``நாமங்கள்`` என்பதனோடு இனிதியைய, ``விண்ணவர் சொல்லினும்`` என்பது முன்னர்க் கூட்டியுரைக்கப்பட்டது. `வேண்டுதல், சொல்லுதல்` என்பவற்றை ஏனையோர்க்கும் கூட்டுக.
இதனால், ஆதித்த வழிபாடும் ஓராற்றால் சிவ வழிபாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும்
தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.

பொழிப்புரை :

ஆதித்தனே உலகிற்கு அப்பனாய் இருப்பன்; அம்மையாய் இருப்பன். சுகத்தைத் தருபவனாய் இருப்பன். இனிச் சந்திரனாய்க் குளிர்ந்த ஒளியைத் தருகின்றவனும் இவனே.

குறிப்புரை :

இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இப்பனாய் நிற்றல் கதிரவனாய் நின்றும் என்க. இந்த இருநிலைகளும் சிவம் சத்தி நிலைகட்கு உவமையாகச் சொல்லப்படுமாறு உணர்க. தத்துவம் அடிநிலை உண்மையாதலின் அது தோற்றத்திற்கு முதலாகிய அப்பனைக் குறித்தது. அதனால், ``தையல்`` என்றதும், `அம்மை` என்றதாயிற்று. ``சம்பு`` என்பது `இன்பத்தைத் தோற்றுவிப்பவன்` எனக் காரணக் குறியாய் நின்றது. சூரியனது ஒளியையே சந்திரன் பெற்றுத் தண்சுடராய் நிற்குமாறு அறிக.
இதனால், அண்டாதித்தனது பெருமை பலபடியாக வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வலயம்முக் கோணம்வட் டம்அறு கோணம்
துலைஇரு வட்டம்துய் யவ்வித ழெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா
மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.

பொழிப்புரை :

சதுரம், வட்டம், முக்கோணம் அறுகோணம், துலாக் கோல், இருவட்டம் - என இவ்வாறு மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களில் அமைந்த பீடங்களில் ஒவ்வொன்றின் மேலும் எட்டிதழ்த் தாமரையில் ஆதித்தன் அசையும் வட்டமாய் உள்ள பதினாறிதழ்களையுடைய தாமரை மலர்போல மாறுபாடின்றி விளங்கினான்.

குறிப்புரை :

`ஆகவே, அவனை அவ்விடங்களிலெல்லாம் அவ்வாறு கண்டு வழிபடுக` என்பது குறிப்பெச்சம். அசைதல் ஒளிவீசுதலைப் புலப்படுத்துக. ``வட்டம்`` எனப்பின்னர் வருதலால், முன்னர் `வலயம்` என்றது சதுரமேயாயிற்று. செய்யுள் நோக்கி முக்கோணம் முன் வைக்கப்பட்டது. ``இரு வட்டம்`` என்பதன்பின் `இவற்றின் மேல்` என்பது வருவிக்க. வட்டத்தில் - வட்டம் போல, `ஈரெட்டிதழாக` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. இவ்விதழ்கள் கதிர்வடிவினைக் காட்டும்.
இதனால், ஆதித்தனை அகத்தும், புறத்தும் வழிபடும் முறைகளுள் அகத்து வழிபடும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில்
சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங்
கேத மறுங்கேணி சூரியன் எட்டில்
சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.

பொழிப்புரை :

ஆதித்தனுக்கு மிகச்சிறந்த இடமாகிய முக்கோண மண்டலத்தில் அவன் மிக்க ஒளியுடையவனாய் விளங்குவான். அவன் மூலாதாரத்தினின்றும் நான்காவதாகிய இருதயத்தை அளாவி ஓங்குவானாயின் முன் மந்திரத்தில் சொல்லப்பட்ட பதினாறு இதழ் வடிவம் அப்பால் விசுத்தியை அடைந்து அங்குள்ள பதினாறு இதழ்களில் ஒன்றி ஒளிர்வான்.

குறிப்புரை :

`அவன் அவ்வாறாகும் வரையில் அவனை வழிபடல் வேண்டும்` என்பது கருத்து. சோதித்து - ஒளியை உடைத்தாய பொருளாய், ஆக்கம் வருவிக்க. குணத்தை, ``கேணி`` என்றார். `தாமரை பூத்தற்கு இடமாகிய குளம் போல்வது` என்பதாம். பின்வந்த ``சூரியன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது; எட்டுதல் - அளாவுதல் ``தன்`` என்றது முன்னர்க் கூறிய கேணியை, ஈரெட்டு, அங்குள்ள தாமரையிதழ். சோடகம் ஆதித்தனது கதிர்நிலை. தான், அசை. `தன் ஈரெட்டில் சோடசம் சோதியே` என இயைத்துக்கொள்க.
இதனால், `ஆதித்தனை அகத்தில் மிக வழிபடல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்ககி லீரே.

பொழிப்புரை :

ஆதித்தன் இருண்ட பொழுது அவனோடு உலகமும் இருண்டுவிட்டது. வேறுபட்ட நான்கு வேதங்களின் மொழிகளும் வெறும் பிதற்றலாய்ப் பயனற்றுப்போயின. அவ் வாறாகவும் `ஆதித்தனுக்குள்ளே சிவசத்தி நின்றே உலகிற்கு ஒளியைத் தருகின்றாள்` எனக் கூறுகின்ற வேத மொழியின் பொருளை, நீவிர் உணரமாட்டீர்.

குறிப்புரை :

`ஆதித்தன் இருண்டது சத்தி சிவனது கண்ணைப் புதைத்த பொழுது` என்பது வெளிப்படையாகலின் அதனைக் கூறா தொழிந்தார். `கழிந்தது` என்பது பன்மை யொருமை மயக்கம். வேதமொழி பயன்படாமை அதன்படியான செயல்கள் நிகழாமை யாலாம். ``சோதி`` என்றது ஆதித்தனை.
இதனால், `ஆதித்தனை வழிபடுதல் சிவ சத்தியை வழி படுதலேயாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.

பொழிப்புரை :

ஆதித்தன்மேல் எழுந்துவருகின்ற வழி நிலத்திற்குக் கீழே யாருக்கும் அறிய ஒண்ணாத அரும்பொருளாய் உள்ளது. (ஆதலின் அதனை அறிய முயல வேண்டுவதின்று.) இனிக் கண்ணிற்கு நன்கு புலனாயினும் யாராலும் அணுகிப் பற்ற இயலாத ஆதித்தன் புறப்பட்டுத் தோன்றுதல் நீருக்கும், தீக்கும் நடுவேயாகும்.

குறிப்புரை :

ஆதலின் அது முதலாக அவனைக் காண்க என்பதாம். இஃது ஆதித்தன் புறத்தும், அகத்தும் நிற்றலாகிய இரண்டிற்கும் பொருந்தக் கூறியதாம். மாலையில் மறைந்த ஆதித்தன் காலையில் புறப்படும்பொழுது நிலத்திற்குக் கீழ் நின்று புறப்படுதலால் அவ்விடம் நிலத்தின்கண் உள்ளவரால் அறிய இயலாதாம். இனி அவன் புறப்படும்பொழுது கடல் நீரைக் கிழித்துக்கொண்டு வடவா முகாக்கினி உள்ள இடத்திற்கு வேறான இடத்திற் புறப்படுவான். அப்பொழுதும் அவனை யாரும் கண்ணால் காணலாமன்றி, அருகில் சென்று கையால் பற்ற இயலாது. இஃது அவன் புறத்து நிற்கும் நிலை. இனி அகத்தில் ``பார்`` என்றது, பூமியின் அடையாள வடிவமாகிய சதுரத்தைத் தனது வடிவமாக உடைய மூலாதாரத்தை. அதற்கும் கீழே ஆதித்தன் முக நுண்ணிலையில் நிற்றலால் அஃது யாராலும் அறியப் படாதாம். ``நீர்`` என்றது சிறுநீர் தங்கும் இடமாகிய மணிபூரகத்தை. ``தீ`` என்றது; பிராணவாயுவின் கும்பகத்தால் மூளத்தக்க அக்கினியை உடைய மூலாதாரத்தை - இவ்விரண்டிற்கும் நடுவாவது சுவாதிட் டானம். அங்கு நுண்ணியனாய்ப் புலப்படுதலின் அதனை அவன் உதிக்கும் இடமாகக் கூறினார் எனினும் அவனை நன்கு புலப்படக் காணுதல் மேல், ``ஆன முக்கோணத்தில்`` எனக் கூறியது முதலிய இடங்களிலேயாம். `இவ்விரு நிலையிலும் ஆதித்தனைப் பிடிக்க முயலாமல் கண்ணால் கண்டு வணங்குங்கள்` என்றபடி.
இதனால், ஆதித்தனால் பயன்பெறும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.

பொழிப்புரை :

ஆதித்தன் நிலத்தைப் பிளந்து கொண்டு அதன் கீழேயும் ஓடுகின்றான். பின்பு மேலே வந்து ஆகாயத்தைப் பிளந்துகொண்டு எங்கும் ஒளிமயமாகவும் செய்கின்றான். மற்றும் உயிர்களின் கண்களைத் துளைத்து அவற்றுள்ளேயும் புகுந்து இருளை ஓட்டி மகிழ்ச்சியைத் தருகின்றான். அந்த இன்பத்தை நினைத்தல் கடமையாகலின் அக்கடமையில் வழுவாது நின்று அவனைத் தியானித்தற்கும் அவன் உடன்பட்டு நிற்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், அவனை வழிபடாதொழியின் அஃது உயிர்கட்குக் குற்றமாம்` என்பது கருத்து. `ஆதித்தனது உதவியை முதலிற் பெற்றே பின்பு உயிர்கள் எந்தச் செயலையும் செய்ய இயலும் ஆதலின், அதுபற்றி அவனை வழிபடுதல் முதற்கண் செய்யத் தக்கது` என்றற்கு அவனது செயலை இங்ஙனம் வகுத்துக் கூறினார். இதுவும் ஆதித்தனது புறநிலை அகநிலை இரண்டிற்கும் பொருந்தக் கூறியதேயாம். அவற்றுள் புறநிலைப் பொருள் வெளிப்படை. அதனுள் ``விண்``, வெட்டவெளி. அகநிலையில் மண், மேற்கூறிய வாறு மூலாதாரம். விண், அது முதலாக மேன்மேல் உள்ள ஆதாரங்கள். கண், மனக்கண். ``களி தந்த`` என்றதனால், களி தருதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. ``ஆனந்தம் எண்ணும்`` என்றது, அது பற்றி அவனை எண்ணும் காரியத்தை உணர்த்தி நின்றது.
இதனால், ஆதித்தனது உதவி இன்றியமையா முதல் உதவியாதல் கூறும் முகத்தால், அவனை முதற்கண் வழிபடுதல் கடப்பாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பாரை யிடந்து பகலோன் வரும்வழி
யாரு மறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்று
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

ஆதித்தன் நிலத்திற்குக் கீழிருந்து அதனைப் பிளந்து கொண்டு மேலே எழுவது போலத் தோற்றுகின்ற அந்த வழியின் உண்மையை, தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கு உரிய நூலை மட்டுமே உணர்ந்தவர்களில் ஒருவரும் அறியமாட்டார். (அதனை அவ்வாறே கொள்வர். உண்மையில் அது புறநிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு மூலா தாரத்திற்குக் கீழ் நின்றுமேல் எழுதலும் ஆகும்.) இனி அவ்வாதித்தின் விண்ணில் காணப்படும் பொழுது அவன் சிவபிரான் எழுந்தருளி யிருக்கின்ற மகாமேரு மலையை வலம் வருகின்றான் என்றே கொள்வர். (உண்மையில் அதுவும் புற நிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு வீணாத் தண்டைச் சூழ்ந்து ஒளிர்வதுமேயாகும்.) கோள்களின் இயக்கம் பற்றியும், பிராணா யாமம் பற்றியும் இனிது விளங்கக் கூறும் நூல்களின் வழி அவற்றை உணர்ந்த ஒரு சிலரே மேற்கூறிய உண்மைகளை உணர்ந்திருந்தனர்.

குறிப்புரை :

தீரன் - உலகை ஆக்கவும், அழிக்கவும் வல்ல ஆற்ற லுடையவன்; சிவபிரான், ஊர் - ஊர்தல், முதனிலைத் தொழிற்பெயர். கிணற்றுத் தவளைபோல் இல்லாமல் வெளியே பல ஊர்களையும் சுற்றினவர்` என்பது நயம். கிணறு போல்வன பருப்பொருளைக் கூறும் நூல்கள். ஆதித்தனது புறநிலையையும் உண்மையாக ஒரு சில பேரறிவாளரே அறிந்திருந்தமை இம்மந்திரத்தால் விளங்குகின்றது.
இதனால், ஆதித்தனது நிலையின் அருமையை உணர்த்தும் முகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

பொழிப்புரை :

உயிர்கள் உடம்போடு கூடிநிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் அவ் வுயிர்களில் அழுந்தப் பொருந்தியுள்ள சிவன் அவற்றின் உடம்பில் உள்ள ஆதாரங்களில் நீக்கமின்றி நிற்கின்றான். பிராணவாயு இடநாடி வல நாடிகளை ஒழித்து நடுநாடி வழியாக ஓடினால் அஃது ஆதித்தனைப் போல ஒளியுடையதாய்க் காணப்படும். அந்த ஒளியில் சிவன் மும்மலங்களை ஒழித்து, உயிர்களின் தற்போதத்தையும் அடக்கி, அவற்றின் அறிவுக்கறிவாய் விளங்குவான்.

குறிப்புரை :

`ஆகவே, நடு நாடி வழியே ஓடும் பிராணனே பிண்டாதித்தனாம்` - என்றபடி. `வல நாடி வழியாக ஓடும் பிராணனைப் பொதுவாக `ஆதித்தன்` என வழங்குதல் மரபாயினும் அஃது உண்மையில் ஆதித்தனாய்ப் பயன் தருதல் நடுநாடி வழியே ஓடும் பொழுதுதான்` என்பது கருத்து. உலகப் பொருள் உள் புறத்தல் புலப்பட்டு விளங்குதல் அண்டாதித்தனால் ஆதல் போல, உயிர்ப்பொருளாகிய சிவம் அக்தில் புலப்பட்டு விளங்குதல் நடு நாடி வழியாக ஓடும் பிராணனால் ஆதலின் அது பிண்டாதித்தனாதல் விளங்கும்` என்றற்குச் சிவனது அகநிலையை இங்கு வகுத்துக் கூறினார். `நின்றால்` முதலியன ``நின்று`` முதலியவாகத் திரிந்தன. ``கருத்து`` என்றது ஆதாரங்களை. மலங்கள் கொன்று வென்று விளங்கும்` என்பதை இறுதியிற் கூட்டி, அதற்கு `அந்நந்தி` என்னும் எழுவாயையும், ஓடுதற்கு. `பிராணன்` என்னும் வினைமுதலையும் வருவிக்க. `சுடராய்` என்பதில் ஆக்கச் சொல் தொகுத்தலாயிற்று. ``காணும்`` என்றது, `காணப்படும்` என்றபடி.
இதனால், `பிண்டாதித்தனாவது இது` என்பது உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதித்தன் ஓடி அடங்கும் இடம்கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித் துலகம் பிதற்றும் பிதற்றெல்லாம்
ஆதித்த னோடே அடங்குகின் றாரே.

பொழிப்புரை :

`பிண்டாதித்தன்` என மேற்கூறிய பிராணன் ஓடுமளவும் ஓடி ஒடுங்கி நிற்கும் இடத்தை `இது` என உணர்ந்து அவ்விடத்திலே நின்று பயன்பெற வல்லவரே தம்மை அண்டாதித்தன் இயக்கத்திற்கு வேறாய்ப் பிண்டாதித்தன் இயக்கத்தின் வழிபட்டவராக உணர்ந்து அவ்வியக்கத்தால் நீண்டகாலம் இவ்வுலகில் வாழ்வர். உலகம் இவ்வியல்பின் வேறுபட்டுத் தான் அறிந்ததையே அறிவாக நாட்டித் தான் வல்ல வற்றை ஓயாது கூறும். அக்கூற்றினைத் தெளிந்தோர் எல்லாம் அந்த அண்ட ஆதித்தனது இயக்கத்திற்கு உட்பட்டு விரைவில் மாய்பவரேயாவர்.

குறிப்புரை :

முதல் ஆதித்தன் `பிண்டாவதித்தன்` என்பது ``ஓடி யடங்கும்`` என்றதனால் விளங்கிற்று. அடங்கும் இடம் ஆஞ்ஞை அவ் விடத்திலே நின்று சாதிக்கலாவது. மேல் சந்திர மண்டலத்தினின்றும் அமுதம் ஊற்றெழப்பண்ணுதல். ``உணர்ந்தவர்`` என்றது அதன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ``எல்லாம்`` என்பதன்பின் `கேட்கின்றவர்` என ஒரு சொல்லைச் சொல்லெச்சமாக வருவிக்க. முன்னை ஆதித்தன் `பிண்டாதித்தன்` ஆயினமையின் பின்னது அண்டாதித்தன் ஆயிற்று.
இதனால், பிண்டாதித்தனை உணர்ந்து சாதித்தலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உருவிப் புறப்பட் டுலகை வலம்வந்து
சொருகிக் கிடக்கும் துறைஅறி வார்இல்லை
சொருகிக் கிடக்கும் துறைஅறி வாளர்க்(கு)
உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை :

[இம் மந்திரம் அண்டாதித்தன், பிண்டாதித்தன் இருவர்க்கும் பொருந்தக் கூறியது.]
அண்டாதித்தன் கீழ் நின்றும் ஊடுருவி மேலே புறப்பட்டு உலகைச் சுற்றிச் சென்று, முடிவில் ஒடுங்கி நிற்பது உலக முதல்வ னாகிய சிவனிடத்திலாகும். அவ்வாறே பிண்டாதித்தனும் மூலா தாரத்திற்குக் கீழ் நின்றும் உருவி மூலாதாரத்திலே வெளிப்பட்டு மேலே ஏனை ஆதாரங்களையும் கடந்து, முடிவில் ஒடுங்கி நிற்பது ஆஞ்ஞை யில் உள்ள சதாசிவ மூர்த்தியினடத்தி லாகும். ஆகவே எவ்வகை யிலும் உயிர்கட்குப் புகலிடமாகின்றவன் சிவனேயாவன். ஆயினும் இவ்வுண்மையை அறிபவர் உலகில் இல்லை. அறிபவர் எவரேனும் இருப்பின், எனது உள்ளத்தில் உள்ள அன்பு அவரிடமே சென்று உருகி நிற்கும்.

குறிப்புரை :

`ஆதித்தன்` என்பது முதற்கண் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உருவிப் புறப்படுதல் மேல், ``பாரையிடந்து`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டது.
இதனால், ஆதித்த ஞானத்தால் விளையும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
ஒருகதி ராகில் உவாவது தானே.

பொழிப்புரை :

பூர்ணிமை நாளில் மிக விளங்குகின்ற சந்திரன், தெறும் இயல்பினையுடைய கதிர்களையுடைய சூரியனுக்கு எதிரே நின்று தன் கதிர்களை வீசும் இயல்பு அமைந்திருக்குமாயின், அந்தச் சூரியனும் குளிர்ந்த கதிர்களை வீசுவோன் ஆகிவிடுவான். (அந்த அமைப்புத்தான் இல்லையே!) பிண்டாதித்தனுக்குள்ளே விளங்கு கின்ற எனது மனம் அவனால் ஓர் ஆதித்தனாயின், அது பின்பு பிண்டத் துள்ளே விளங்கும் சந்திர மண்டல்தினது அமுத தாரையால் பூர்ணிமை நாளில் தோன்றுகின்ற சந்திரனாகிவிடும்.

குறிப்புரை :

`அப்பொழுது எனதுமனம் அந்தப் பிண்டாதித் தனையும் வென்றுவிடும்` என்பதாம். `மனம் ஆதித்தனால் தூய்மை பெற்றதற்குப் பின் சந்திர மண்டலத்து அமுதத்தினாலும் தூய்மை பெறல் வேண்டும்; %E

பண் :

பாடல் எண் : 2

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.

பொழிப்புரை :

`சந்திர கலை` எனப்படும் இட நாடியில், `சூரிய கலை` எனப்படும் வல நாடிக் காற்று ஒடுங்கி இட நாடிக் காற்றே இயங்கினும் பின்னர் மாறி இயங்கும் காலமே சிவனைப் பூசித்தற்கு உரிய காலமும். (`ஆகவே, பூசை செய்வோர் அவ்வாறு செய்து கொள்க` என்பதாம்.) இனி அந்த இருவழியிலும் யோகம் ஆதலின், அவ்வாறு யோகம் செய்பவரே அந்தக்கரணம் தூய்மையாகப் பெற்றவர் ஆவர். அவரே பின்பு சிவயோகத்தால் சிவமாகி நிற்பர்.

குறிப்புரை :

பின்னர், ``பானுவில்`` என்றதனால் முன்னர், `சந்திரனில்` என அவ்விடத்தே ஏழாவது விரிக்கப்படும். `வரினும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று. அவ்வும்மையால், `சிவபூசையின்பொழுது பிராணன் அவ்வாறு இயங்குதல் கூடாது` என்பது பெறப்பட்டது. `ஏய் முறையில் ஆகும்` என இரண்டாம் அடி இறுதியில் உருபும் பயனிலையும் விரிக்க, ``உபய நிலம்`` என்றது, `இரண்டற்கும் பொதுவான இடம்` என நடு நாடியைக் குறித்தது. வருதல் வினையை மூன்றாம் அடியின் ஈற்றிலும் `வரின்` எனக் கூட்டுக. ``சிந்தை`` என்ற உபலக்கணம்.
இதனால், மனம் ஆதித்தன் ஆகும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.

பொழிப்புரை :

யோக முறையில், சூரியன், அக்கினி, சந்திரன்` எனச் சொல்லப்படுகின்ற கலைகளோடு, அக்கினி செல்லும் வழியாகிய நடு நாடியும் `கலை` என்று சொல்லப்படும். ஆகவே, கலைகளாவன நான்காம். அவற்றுள் சூரிய கலை, நடு நாடி வழியாக மேற்செல்கின்ற அக்கினியோடு சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையின் அந்நிலையே யோகியர்க்கு, மேல், `உவா` எனக்குறித்த பூரணையாகும் என்று அறிமின்கள்.

குறிப்புரை :

அருக்கன் அனல் மதி ஆகும் கலையோடு இடை ஆகும். ஆகவே, `கலை நான்கு` எனலாம் என்பர்` என இயைத்துக் கொள்க. `அனலோடு கூடி` என உருபும் பயனும் உடன் விரிக்க. `மேற்கூறிய உலாவாம்` என்றதனால், `அந்நிலையை அடைந்தோரது மனம் ஆதித்தனாய்ப் பிண்டாதித்தனை வெல்லும்` என்பதுதானே பெறப், பட்டது, ``அறியும்`` என்பது முன்னிலைப் பன்மை ஏவல் வினை முற்று.
இதனால், மேல் `உவா` எனப்பட்ட நிலை உளதாகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி
ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது
பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற
ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.

பொழிப்புரை :

கீழ்ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும், மேல் ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும் ஆகிய இரண்டு அண்டங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் விளங்குகின்ற ஓர் ஒளி பரமசிவன். அவ்வொளி எந்த உலகத்தார்க்கும் உணர இயலாத உணர் வாய் இருப்பது. எனினும் அஃது எல்லா உலகங்களிலும் விளங்குகின்ற எல்லா வகையான ஒளிகளிலும் உள்ளொளியாய் நிற்றலை அறியத் தக்கவர் யார்? அணுகத்தக்கவர் யார்? ஒருவரும் இலர்.

குறிப்புரை :

`இலங்கொளியாகிய அவ்வொளி` என்க. இரண்டாம் அடியிறுதியில் உள்ள `அது` என்பதை வேறுபிரித்து, ``நின்றது`` என்னும் பயனிலைக்கு எழுவாயாக்குக. ``நின்றது`` என்பது அத்தொழில்மேல் நின்றது. அண்டுதல் - அணுகுதல். முடிவில், மனம் ஆதித்தன் `ஆகப் பெற்றவரே அறியத் தக்கார்; அணுகத் தக்கார்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
``அண்டம் ஆரிரு ளூடு கலந்தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்`` l
என அருளிச் செய்ததையும் இங்கு நினைவு கூர்க.
இதனால், பரமசிவனது அருமையும், மன ஆதித்தனுக்கு ஆகின்ற அவனது எளிமையும் உணர்த்து முகத்தால் மன ஆதித்தனது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஒன்பதின் மேவி உலகம் அலம்வரும்;
ஒன்பதும் ஈசன் இயல்பறி வார்இல்லை;
முன்பதின் மேவி முதல்வன் அருள்இலார்
இன்பம் இலார்; இருள் சூழநின் றாரே.

பொழிப்புரை :

உலகம் ஒன்பது கோள்களில் உளம்பொருந்தி, அதனால் அமை காணாது அலமருகின்றது. (``வேரண்டத் துள்ளே பிறங்கொளியாய் நின்றது`` என மேற்கூறியபடி) `ஒன்பது கோள்களின் ஆற்றலும் சிவனது ஆற்றலே` என்னும் உண்மையை உணர்ந்து அவனையடைந்து அமைதிகாண்பவர் ஒருவரும் இல்லை. முதலில் அந்நிலையில் நிற்பினும் பின்பாவது அருளாளரது அருள் மொழிகளைக் கேட்டுச் சிவனது அருளைப் பெறாதவர் ஒரு ஞான்றும் இன்பம் இல்லாதவரேயாய்த் துன்பத்தையே உடையவராய் இருப்பர்.

குறிப்புரை :

`வலம் வரும்` - என்பது பாடமன்று. இருள், இங்குத் துன்பம். இதனுட் கூறப்பட்டாரெல்லாம் அண்டாதித் பிண்டாதித் தர்களால் மனம் ஆதித்தனாகப் பெறாதவர் என்க.
இதனால், மனம் ஆதித்தனாகப் பெறாதவர் எய்தும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து)
அந்த அபர பரநாத மாகியே
வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து)
உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.

பொழிப்புரை :

சுத்த மாயையின் ஒருகூறு சிவனது சத்தியால் உலகத் தோற்றம் நிகழத்ற்குக் காரணமாகப் பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் பக்குவப்படுத்தப்பட்ட பகுதி, `மேற்பகுதியும் கீழ்ப் பகுதியும்` என இரண்டு பகுதியாய் விரியும். அவை முறையே `பரவிந்து` என்றும், `அபரவிந்து` என்றும் பெயர் பெறும். அவற்றினின்றும் முறையே சொல்லுலகத்தின் அதிசூக்கும நிலையாகிய பரநாதமும், சூக்கும நிலையாகிய அபர நாதமும் தோன்றும். (இவையே அதிசூக்குமை வாக்கும், சூக்குமை வாக்கும் ஆகும்.) பின்பு அவற்றினின்றும் வைகரி முதலிய வாக்கு வடிவமான சொல்லுலகத்தையும், `கலை, தத்துவம், புவனம்` என்னும் அத்துவாக்களையும் சிவன் தோற்றுவித்து, அவை வழியாக ஆன்ம அறிவினிடத்தே அருணோதயம் போன்ற ஒளியை விளங்கச் செய்வான்.

குறிப்புரை :

கலை, `சாந்திய தீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என முறையே ஒன்றன்பின் ஒன்றாய் ஐந்தாகி விரியும். ஏனை ஐந்து அத்துவாக்களும் இந்த, `கலை` என்னும் அத்துவாவில் அடங்கும். அவையாவன `வன்னம், பதம், மந்திரம்` என்னும் சொல் வகையும். `தத்துவம், புவனம்` என்னும் பொருள் வகையுமாம். பரம் - சிவன், `பரம் கலையாதி வைத்து உள்ளத்து அருணோதயம் என உந்தும்` என முடிக்க. செய்யுள் நோக்கி அபரங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால், உலகத்தோற்ற முறை ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு)
உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.

பொழிப்புரை :

ஆன்ம அறிவில் அருணோதயம் போலத் தோன்று வதாக முன் மந்திரத்திற் குறித்த விளக்கத்திற்குக் காரணமான எழுத் தோசை, `பர நாதத்தின் காரியம்` என ஆகமங்களில் சொல்லப் படுதலால், அந்தப் பரநாதத்திற்குக் காரணமாக மேற்குறிக்கப்பட்ட அந்தப் பரவிந்துவிலிருந்தே வைகரி முதலியவாக்குக்களால் நிவிர்த்தி முதலிய ஐங்கலைகளிலும் அறிவு விளக்கம் சிவனால் உண்டாவதாகும்.

குறிப்புரை :

உள்ளம் - ஆன்ம அறிவு. `அருணோதயத்திற்கு` என நான்காவது விரிக்க. `வள்ளலால்` என மூன்றாவது விரித்து, அதனை ``ஒன்றும்`` என்பதனோடு முடிக்க. ``பர விந்து வாக்கு`` என்பது, பர விந்துவினின்றும் தோன்றும் வாக்கு` என ஐந்தாம் வேற்றுமைத் தொகை. இங்கும், `வாக்கால்` என உருபு விரிக்க. `ஐங்கலைக்கும் ஒன்றும் உதயம் உள்ளன` என மாறிக்கூட்டுக. உதயம் - ஒளித் தோற்றம். கலைகளின் பன்மைபற்றி உயத்தையும் பன்மையாகக் கூறினார். ``வைகரி யாதி`` என்றது ஒடுக்கமுறை பற்றி. இவற்றிற்குப் பரவிந்து பரம்பரையால் காரணமாகும் என்க.
`தூல வைகரி` சூக்கும வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை` என்னும் வாக்குக்கள் முறையே `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் நின்று ஆங்காங்குள்ள உயிர்கட்கு உணர்வைப் பிறப்பிக்கும் என்பதை,
``நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாக`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளானும் உணர்க.
இதனால், சொல்லுலகம் அனைத்திற்கும் `விந்து` எனப்படும் சுத்த மாயையே காரணமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.

பொழிப்புரை :

`தேவர்கள் தம் தம் பதவி விருப்பத்தால் விரும்பு கின்ற முழுமுதற் கடவுளாவான் பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற நூற்றெட்டு உருத்திரர்கட்கும் தலைவன்` என்றும், `பொது வாக - மும்மூர்த்திகள் என்று யாவராலும் சொல்லப்படுகின்ற - அயன், அரி, அரன் - என்பவர்கட்குத் தலைவன்` என்றும் தொன்மையாக பலர் சொல்லிவர, `முதற்கடவுள் அவ்வளவில் நில்லாது மேற்குறித்த மூவர்க்கும் மேலாய் நான்காமவனாய் உள்ள மகேசுரனை உள்ளிட்ட நால்வர்க்கும் தலைவனாவான்` எனச் சமயக் கணக்குக்களைக் கடந்து நிற்கின்ற உண்மை நூல்கள் உண்மையைச் சொல்லா நிற்கும் என உயர்ந்தோர் கூறுவர்.

குறிப்புரை :

இஃது, `ஐந்தொழிற்கும் முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே பரம்பொருள் எனக்கூறியது. `பத்துத் திசை உதயம் செய்யும் தேவர்` என மாற்றி வைத்து உரைக்க. பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற உருத்திரர் இவர். இவர் என்பதைச் சிவஞான போதம் பேருரையிலும் காணலாம். 3 ``முன்னொரு காலத்து`` என்றது பழைமை குறித்தவாறு. அப்பழைமையாவது சைவாகமங்களை உணராத உலகரது காலங்களாம். `முன் ஒரு காலத்து என` என முன்னே கூட்டிமுடிக்க. ``நடு`` என்றது அப்பாற்பட்ட நிலை அஃது ஆகு பெயராய் அந்நூல்களைக் குறித்தது; வாய் - உண்மை. ``விண்ணவர் மேவு பிரான்`` என்பதை முதலில் எழுவாயாக வைத்து, அதனை, ``பிரான், பிரான்`` என்னும் பயனிலைகளோடு முடிக்க.
இதனால், `முன் மந்திரங்களில், ``பரம்`` என்றும், ``வள்ளல்`` என்றும் குறிக்கப்பட்ட முதற் கடவுளாவான் இவன்`` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.

பொழிப்புரை :

முன்மந்திரத்திற் கூறியவாறு சதாசிவ மூர்த்தியாய் நின்று ஐந்தொழில் நடாத்தும் முதல்வன் அவ்வாறு தொழில்புரிய நிற்பதற்கு முன்பே என்னை இயல்பாகவே பற்றி நிற்கின்ற, வெறுக்கத் தக்க அக இருளை நீக்குதற் பொருட்டு என் உயிருக்கு உயிராய்க் கலந்து நின்று, அதன் பின்பு தொழில் புரிய எழுந்தான்.

குறிப்புரை :

நந்தி - சிவபெருமான். ``பொய்யிலன்`` முதலிய குறிப்பு வினைப் பெயர்கள் பலவும் அவனையே குறித்து நின்றன. பொய் - பொய்போலத் தோன்றுகின்ற அறியாமை. மெய். உள்ளதாய்த் தோன்றுகின்ற அறிவு. புவனங்கள் ``புவனா`` எனப் பெண்பாலாகச் சொல்லப்பட்டன. மையிருள் - மை போல்வதாகிய இருள். கண்ணிற்குப் புலனாவது போலத் தோற்றுகின்ற இருள். இஃது உலகை மறைக்கும் புற இருள் மனமொழி மெய்களால் செய்யப்படும் இருள்; வினை இருளாகிய மலம் காரணமாக விளைவதனை ``இருள்`` என்றார். ``இருள்சேர் இருவினை`` * என்றது காண்க. `இவ்விருளை நீக்கும் திருமுச்சுடர்கட்கு இல்லை` என்பதை நினைவூட்டுதற்கு அவற்றின் இயல்பை எடுத்துக் கூறினார். திரு - மேன்மை; சத்தி கைத்தல் - வெறுத்தல், பின்பு ``எழுந்தான்`` எனக் கூறியதனால், `கலந்தமை அதற்கு முன்னே` என்பது பெறப்பட்டது இந்நிலை, `அனாதி` எனப்படும். ``என்`` என நாயனார் தம் நிலையையே கூறினா ராயினும் அஃது அனைத்துயிர்களின் நிலையையும் பற்றியதேயாகும்.
இதனால், முதல்வன் அனாதியே உயிர்களில் உள்ளுயிராய்க் கலந்து நிற்றல் கூறப்பட்டது. அவ்வாறு கலந்து நிற்றலானே, `அவை களின் இருளை நீக்குதல் வேண்டும்` என்னும் இரக்கமும், அது பற்றிச் செய்யப்படும் தொழில்களும் முதல்வனுக்கு உளவாயின என்க.

பண் :

பாடல் எண் : 5

தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி யூறல்
கனிச்சுட ராய கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி உயிர்களது இருளை நீக்கவேண்டி அவற்றினுள்ளே உள்ள சிவனது, `திரு` எனப்பட்ட ஒப்பற்ற ஒளி தாக்கிப் பரவுதலால் அவ்விடத்துள்ள இருளாகிய மலம் நீங்கும். அது நீங்கினால் அந்த ஒளிக்கு மேலே உள்ள சிவமாகிய அரிய கனியின் சாறு அக்கனியினின்று வெளிப்பட்டு ஒழுகி இனிக்கும் அப்பொழுது ஊழிக் காலத்தும் அழியாத ஒளியினதாய் விளங்கும் கயிலாய மலைமேல் சிவன் நண்ணிப் பேரொளியுடன் திருமேனி கொண்டு வீற்றிருக்கும் காரணமும் விளங்கும்.

குறிப்புரை :

எற்றுதல் - தாக்குதல். தாவுதல் - பரவுதல் `தாய்` என்பது, `தாவ` என்பதன் திரிபு. இவ்வாறன்றி, `நீக்க`, எனப் பாடம் கொள்ளுதலும் ஆம். ``அண்ணித்திடும்`` என்பது திரிந்ததும், `கன்னி` என்பது இடைக் குறைந்ததும் எதுகை நோக்கியாம். சிவத்தை, `ஈசன் எனுங்கனி`` * என அப்பர் அருளிச்செய்ததும் இங்கு நோக்கத்தக்கது. கன்னி - அழியாமை. ``ஊழிதோறூழி மற்றும் உயர் பொன்னொடித் தான் மலை``* என அருளினமை காண்க. வண்ணம் - வகை; காரணம் ``ஆம்`` என்றது, `விளங்கும்` என்றபடி. `கயிலையில் ஈசன் உருவத் திருமேனியுடன் வீற்றிருத்தல் நிலவுலகத்து உயிர்களை உய்வித்தற் பொருட்டு என்னும் உண்மை அனுபவமாய்த் தோன்றும்` என்பதாம்.
இதனால், முதல்வன் உயிர்க்குயிராய்க் கலந்து நின்று செய்யும் பேருதவி விளக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசைஒளி யாயிடும்
ஆரறி வார்அது நாயகம் ஆமே.

பொழிப்புரை :

உயிர்களது அறிவினுள்ளே நுண்ணறிவாய் நிறைந்து நிற்கின்ற ஒரு பெரிய ஒளி, தடையின்றி எங்கும் போய் வருகின்ற பகலவனது தேர் செல்லாத இடத்தில் அங்குள்ள இருளை நீக்குகின்ற ஒளியாய் இருக்கும். இம்மறை பொருளை உணரும் அறிவுடையோர் யாவர்? எவரேனும் இருப்பாராயின் அவரது அறிவே தலைமை சான்ற அறிவாகும்.

குறிப்புரை :

நேர்மை - நுண்மை. ``அவர் நின்றதோர் நேர்மையும்`` என்று அருளியது காண்க. திசை - இடம். பகலவன் தேர் செல்லாத இடம் உயிரினது அறிவு. மேலேயும், ``மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு`` என்றது காண்க.
இதனால் முன் மந்திரங்களில் கூறப்பட்ட சிவனது நுண்ணிலை அறிதற்கரிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும்
சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

பொழிப்புரை :

அண்டத்தில் ஒரு வட்ட வடிவினனாய்க் காணப் படுகின்ற ஆதித்தன் உலகில் எட்டுத் திக்கிலும் சென்று அலமருவார்க்கு அவர் சென்ற இடத்தில் எல்லாம் காணப்பட்டு ஒளியை வழங்குவான். வெளியில் அங்ஙனம் அலமரும் நிலையை விட்டு முன் மந்திரத்தில் கூறிய நுண்ணிறிவை அறிந்து அகத்தே நோக்குபவர்க்கு அவன் உட்பினுள் காண்கின்ற பல இடத்திலும் விளங்கி ஒளிதருகின்றவன் ஆவான்.

குறிப்புரை :

`புறநோக்கு உடையவர்க்கு அண்ட ஆதித்தனே ஆதித்தன் ஆவதுபோல அகநோக்கு உடையவர்கட்குச் சிவனே ஆதித்தனாய்த் தோன்றுவான்` என்றபடி. `என் தாய் என் சிற்றன்னை யாயினாள்` என்று ஒருவன் சொல்வானாயின் அச்சொல்லில் `ஆயினாள்` என்பது `தாய்க்கு உரிய இடத்தைச் சிற்றன்னை பற்றி நிற்கின்றாள்` என்பதே பொருள் ஆதல் போலவே `ஆதித்தன் கதிரொளியான்` என்பதற்குப் பொருள் கொள்க. `கண்ட இடம், சென்ற இடம், நின்ற இடம்`` என்பவற்றில் பெயரெச்சத்து அகரங்கள் தொகுத் தலாயின. ``கண்ட இடம்`` என்றது ஆறு ஆதாரங்களை. ``உள்ளே`` என்பதன் பின் `காணப்படும்` என ஒரு சொல் வருவிக்க. ``உள்ளே காணப்படும் கதிரொளி`` என்றதுமுன் மந்திரத்திற் கூறப்பட்ட நேரறிவை, ``சென்றிடத்து`` என்பதனை முதலிலும், ``நிலை`` என் பதனை ``வரும்`` என்பதன் பின்னும் கூட்டுக. `மழை நின்றது` என்றல் போல `நிற்றல்` இங்கு ஒழிதலைக் குறித்தது. ``நின்றிடத்துக் கதிரொளி யாயிடும்`` என்றதனால், `சென்ற இடத்தே மகிழ்ந்தெழுதல் நில்லா தவர்க்கு` என்பது பெறப்பட்டது. முதலடி இன எதுகை.
இதனால், அகநோக்குடையார்க்குச் சிவன் உள்ளொலியாய் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாவிகண் நாசி நயன நடுவினும்
தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

கொப்பூழ், கண், மூக்கு, புருவநடு, தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேல் என்னும் ஐந்திடங்களிலும் தோன்றி ஒளி வீசுகின்ற அந்த ஆதித்தனைத் தேவர்கள், `உருத்திரன், மால், அயன்` என்னும் மும்மூர்த்திகளாக அறிந்து இன்புற்றிருக்கின்றனர்.

குறிப்புரை :

`சிவனே தனது திகார சத்தியால் மும்மூர்த்திகளைக் காரணக் கடவுளராகச் செய்து உலகை நடத்துவிக்கின்றான்` என்றபடி. தொடக்கத்திலும்,
``அவனை யொழிய அமரரும் இல்லை,
... ... ... அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை``
என்று அருளிச்செய்தார். மூலாதார சுவாதிட்டானங்களில் ஒளி சிறிதாய் விளங்கலின் அவற்றிற்கு, மேற்பட்ட இடங்களையே கூறினார். எல்லாவற்றிற்கும் முதலான பிராணன் இயங்குவது மூக்கு வழியாக ஆதலின் அதனையும் கூறினார். ``நயனம்`` என்றது ஆகு பெயராய்ப் புருவங்களை உணர்த்திற்று.
இதனால், சிவாதித் தனது சிறப்புணர்த்தி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
`இவ்வதிகாரத்தில் சொல்லப்பட்ட உண்மைகளை உணரும் உணர்வே ஞானித்தனாம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 1

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

பொழிப்புரை :

உயிர் அடைந்த ஞான ஒளியினுள்ளே வந்து எழு கின்ற சிவத்தினது ஒளியால் அக ஒளியாகிய அறிவை மறைந் திருந்த அக இருளாகிய ஆணவ மலமும், அதனால் விளைந்த அறியாமையும் இராக்காலத்திலே பொருந்தி எழுகின்ற அருணோதயத்தால் அதற்கு முன் திணிந்திருந்த இருள் நீங்குதல் போல நீங்கியொழியும்.

குறிப்புரை :

``சென்றிடும்`` என்பது பெயரெச்சம். `ஞானத்துள் சென்றிடும் சிவத்தின் பிரகாசத்தால்` எனக் கூட்டியுரைக்க. `அருணோ தயத்தால்` என உருபு விரிக்க. தெளிவு பற்றி எதிர்காலத்தை இறந்த காலமாக்கி, ``தொலைந்தது`` என்றார். ஏகாரம் தேற்றம். பொருளில் ``அஞ்ஞானமும்`` என்றதற்கு ஏற்ப உவமையிலும் `குருட்டுத் தன்மையும்` என்பது வருவிக்க.
இதனால், அக இருளாகிய ஆணவ மலம் சிவாதித்தனது ஒளியாகிய அக ஒளியாலல்லது நீங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்(து)
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

பொழிப்புரை :

நில உலகின்கண் நீர் நிரம்பிய குடங்களில் ஆதித்தனை நோக்கி வாயைத் திறந்துள்ள குடங்களில் தான் ஆதித்தன் விளங்குவான். அவ்வாறின்றி ஆதித்தனை நோக்காதவாறு மூடி வைக்கப்பட்ட குடங்களில் யாதொன்றன் நீரிலும் ஆதித்தன் விளங் குதல் இல்லை. சிவன் உடல்தோறும் உள்ள உயிர்களில் விளங்குதலும் ஆதித்தன் குடத்து நீரில் விளங்குதல் போல்வதுதான்.

குறிப்புரை :

`அஃதாவது, `சிவன், அவனை உணரும் பக்குவம் வாய்ந்த உயிர்களினுள்ளே விளங்குதல்லது, அவனை உணரமாட்டாது மூடமாய்க் கிடக்கின்ற அபக்குவமான உயிரினுள்ளே விளங்கான்` என்பதாம்.
ஆதித்தனது கதிரில் இருதன்மைகள் உள்ளன. ஒன்று வெம்மை; மற்றொன்று ஒண்மை. அதுபோல, சிவனது சத்தியிலும் இரு தன்மைகள் உள்ளன. ஒன்று மறைத்தல்; மற்றொன்று விளக்கல், இத்தன்மை பற்றி, சத்தி இரண்டாகச் சொல்லப்படும். ஒன்று திரோதான சத்தி; மற்றொன்று அருட்சத்தி. மூடி வைக்கப்பட்ட குடத்து நீரிலும் ஆதித்தனது வெம்மைச் சத்தி விளங்குவதேயாகும். ஆயினும் அந்நீரில் ஆதித்தனது ஒளிச்சத்தி விளங்காது. அதுபோலவே எல்லா உயிர்களிடத்தும் சிவனது திரோதான சத்தி விளங்கவே செய்யும், ஆயினும் அருட் சத்தி பக்குவம் வாய்ந்த உயிர்களில் மட்டுமே விளங்கும் என உணர்க.
இங்குக் கூறிய உவமையால் குடத்து நீருள் ஆதித்தன் தோன்றும்பொழுது அந்த ஆதித்தனுக்கும், வானத்தில் உள்ள ஆதித் தனுக்கும் இடையே தன்மை வேற்றுமை யாதும் இன்மையும், மூடி வைக்கப்பட்ட குடத்து நீருள் ஆதித்தன் சிறிதும் தோன்றாமையும் பெறப்படுதலால், பல வகையில் வேறுபட்ட தன்மையை உடைய உயிர்களையும் `சிவனது கூறுகளே; அல்லது சிவனது பிரதி பிம்பங்களே` என்பாரது கூற்றுப் பொருந்தாமையும் இங்குக் குறிக்கப் பட்டதாம். அடுக்குப் பன்மை தோற்றி நின்றது.
இதனால், சிவாதித்தன் ஞானாதித்தனுள்ளே விளங்குதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.

பொழிப்புரை :

இங்குக் கூறிவரும் சிவாதித்தன் தான் ஒருவனே யாயினும் சுடர்களை எங்கும் வீசுகின்ற ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களும் ஒன்று கூடினாற் போன்ற பேரொளியாய் இருப்பான்; தன்னை அழிப்பவனாகப் பலர் கருதினானுலும் அயனாய் நின்று படைப் பவனும், அரியாய் நின்று காப்பவனும் தானேயாகும். மேலும் அவன் உயிர்களில் மட்டுமன்றி, உடல்களிலும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்றான். இன்னும் தான் ஒருவனே ஆகாயமாயும், அதன் கண் விளங்குகின்ற ஒளிகளாயும் நிற்றலேயன்றி இருளாகவும் ஆகின்றான்.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பது குறிப்பெச்சம். `சிவாதித்தன் உலகில் காணப்படுகின்ற ஒளிப்பொருள்களோடு ஒத்த ஒளியுடைய னல்லன்; அவற்றினும் பலமடங்கு மேம்பட்ட ஒளியினை உடையன்` என்பது கூறுமுகந்தான், `அவன் உதயஞ் செய்யப்பெற்ற உயிர்க்கு வேறு வேண்டத்தக்க பயன் யாதுமில்லை` என்பது முதலடியில் குறிக்கப் பட்டது. தாபித்தல் - நிலை நிறுத்தல். `நடாத்துதல்` என்றபடி. இதற்கு `உலகத்தை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `உடல் உயிரின்கண்` என உருபு விரிக்க. இருள் முக்குணங்களும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் நிறைந்து நிற்றல் பற்றிச் சிவனை ``இருட்டுமாம்`` - என்றார்.
இதனால், சிவாதித்தனது ஒப்புயர்வில்லாத அதிசய நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறுந் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க் கிடம்மிடை ஆறங்க மாமே.

பொழிப்புரை :

தெய்வச் சுடர் அங்கி, வேள்வித் தீ ஞாயிறுமுதல் வானகம் ஈறாயினவும் ``பல்லுயிர்`` என்றதும் வெளிப்படை. ஐவர், பிரமன் முதல் சதாசிவன் ஈறானவர். அவர்க்கு இடம் ஆவன சுவாதிட்டானம் முதல் ஆஞ்ஞை ஈறாய் உள்ள ஐந்து ஆதாரங்கள். ஆறு அங்கம் ஆஞ்ஞையிலிருந்து கீழ்நோக்கி எண்ண ஆறாவதாகும் மூலாதாரம். சைவப் பெரும்பதி - இவை யாவும் சிவத் தலங்களாகும்.

குறிப்புரை :

``சைவப் பெரும்பதி`` என்றதை ``ஆம்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `இவை சிவத்தலங்கள்` என்றது, `இவ்விடங்கள் சிவனைக் கண்டு வழிபடுதற்குரிய இடங்கள்` என்றபடி எனவே, இவ்விடங்களில் சிவனைக் கண்டு வழிபட அவன் ஆதித்தனாய் உயிரினுள் விளங்குவான்` என்பது கருத்து. மிடை ஆறு அங்கம் - அவ்வைந்தோடு சேர்ந்து ஆறாவதாகின்ற உறுப்பு.
இதனால், சிவாதித்தன் உதயம் செய்தற்கு வாயில் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உன்னு மளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

சிவன் தன்னை நினைப்பவரையே தான் நினைப் பான். பல பொருள்களையும் சொல்லுகின்ற வேதங்கள் பிறரைப்போல அல்லது தன்னைப் பலவிடத்தும் பெரும்பான்மை எடுத்துச் சொல்ல நிற்பவன். என் உள்ளே என்றும் ஒளிகுறையாத விளக்காய் உள்ளவன். `அவன் உயிர்களிடத்து அன்னப் புள்ளாய் இருக்கின்றான்` என்னும் அரிய உண்மையினை நான் திருவருளால் அறியப்பெற்றேன்.

குறிப்புரை :

அன்னப் பறவைக்கு, `அம்சம்` என்பதும் ஒரு பெயர் அதனால் அம்ச மந்திரத்தை `அன்னம்` எனக் குழூஉக்குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்ச மந்திரமே பிராணனை இயக்குவது. அஃது `அசபை எனப்படும். அதனை நாயனார் நான்காந் தந்திரத் தொடக்கத்திலே கூறினார். சிவனது சத்தியே அம்ச மந்திரத்தை இடமாகக் கொண்டிருந்து பிராணனை இயக்குகின்றது ஆதலின் அவ்வுண்மையைத் திருவருளால் உணர்ந்த நான் பிராணனோடு கூடிப் பிராணமயனாய் நிற்கும்பொழுதும் சிவனை மறக்கிலேன் என்றபடி,
``என்னில் ஆரும் எனக்கினி யார்இலை;
என்னி லும்இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` *
என்றருளிச் செய்ததும் காண்க. புறம்போந்து பின் உட்புகுதல் பிராணனின் இயல்பாதலை நினைக்க. முதல் மூன்று அடிகளிற் கூறியன அவன் அன்னமயன் ஆதலை வலியுறுத்தும் குறிப்பின. ``அறிந்துகொண்டேனே`` என்னும் சொல்லியல்பால், `திருவருளால்` என்னும் இசையெச்சம் பெறப்பட்டது.
இதனால், பசு பிராணனாம் முறைமை கூறுங்கால் அந் நிலையும் சிவனருளால் உளதாதலை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.

பொழிப்புரை :

இங்கு ``ஆறு`` என்றது பிராணன் இயங்கும் வழி யினை. ``அதன் கரையில் உள்ள இரு அன்னங்கள்`` என்றது, அந்தப் பிராணனை ஒட்டி நிற்கின்ற `சிவன், சீவன்` என்னும் இருவரையும். அவ்வன்னம் இரண்டும் என்றும் இணைந்து நிற்றலி னின்றும் நீங்கித் தனித்தனியே பிரிதல் இல்லை. அவற்றுள் ஒன்று அறிவுமிக்கது. ஆதலின் அது தனியே பிரிந்து நிற்பினும் யாதொன் றினை இழத்தல் இன்றி, இனிது வாழும். மற்றொன்று அறிவு குறைந்தது ஆதலால் அது பிரிந்து தனி நிற்பின் எந்தப் பயனையும் பெறாது துன்பத்தில் ஆழும் என்றது சிவ சீவர்களது இயல்பினை விளக்கியதாம்.

குறிப்புரை :

``அழகிய சிறகையுடைய இரு பறவைகள் இணை பிரியாதவை; ஒரு மரத்தில் வாழ்கின்றன. அவற்றுள் ஒன்று அம் மரத்தின் பழத்தை உண்கின்றது. மற்றொன்று உண்ணாமல் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கின்றது`` என்னும் உபநிடதப் பொருள் இங்கு ஒப்பிடத்தக்கது. l
மூன்றாம் அடியில், `தனி நிலை` என்பது எதுகை நோக்கி, ``தன்னிலை`` என விகாரமாயிற்று. ``தன்னந் தனிநிலை தனி ஒன்று`` என்றதனை, `தனி ஒன்று தன்னந் தனி நிலையையுடையது` என மாற்றிப் பயனிலை வருவித்து உரைக்க. `உடையது` என்பது `உடையதாதல் இயலும்` என்பதாம். ``பின்னர்`` என்பது, `மற்றொன்று` என்றபடி. மற்றொன்றாகிய மட அன்னம் அது என்றக்கால் பேறு அணுகாது` என இயைக்க. மடமை - அறியாமை; `சிற்றறிவு` என்பதாம். அது என்றல் - வேறொன்றாகிய `அந்த அன்னத்தைப் போல நானும் தனித்திருப்பேன்` என்று நினைத்தல்.
இதனால், பிராணனாய் நிற்கும் பசு தான் பதியை விட்டுத் தனிநிற்றல் ஆகாமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

பொழிப்புரை :

தோன்றியழிகின்ற வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல்லுலகங்களையும். மற்றும் பொருளுலகங்களையும், அவைகளைப் பற்றி நின்று `புருடன், உருத்திரன், சிவன்` என உயிர்கள் அடையும் நிலையற்ற வேறுபாடுகளையும் தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான முதல்வன் சிவபெருமானே. இவ்வமைப்பு அனாதியே அமைந்த அமைப்பாகும்.

குறிப்புரை :

`மாய், ஆ` என்னும் முதனிலைகள் அடுக்கி, `மலம்` என்னும் பெயரோடு வினைத்தொகையாய்த் தொக்கன. அந்நிலைமை தாப்பிசைவாய், முன்னர் ``வைகரியாதி`` என்பதனோடும் இயையும். மாய்ந்து ஆகின்ற மலங்களாவன மாயேயங்கள். ``ஆதி`` என்றதனால் கன்மமும் தழுவப்பட்டது. கருவியின்றிக் கன்மம் நிகழாது ஆகையால் அக்கருவியைப் படைத்துக் கொடுத்தல் பற்றி, `கன்மத்தைச் செய்பவனும் சிவனே` எனக் கூறினார்.
உயிர் முப்பத்தாறு தத்துவங்களையும் பற்றி நிற்கும்பொழுது `புருடன்` என்னும் நிலையையும், ஆன்ம தத்துவத்தை ஒழித்து, ஏனைப் பன்னிரண்டு தத்துவத்தளவில் நிற்குமிடத்து `உருத்திரன்` என்னும் நிலையையும், அவற்றுள்ளும் வித்தியா தத்துவங்களை ஒழித்து, ஏனைச் சிவ தத்துவத்தளவில் பற்றி நிற்கும் பொவுது `சிவன்` என்னும் நிலையையும் அடையும். இவ்வாற்றானே `மூவுலகம்` என்பன சிவநெறியில் புருடலோகம், உருத்திர லோகம், சிவலோகம்` என்பனவே யாகின்றன. அட்ட வித்தியேசுரர், சுத்த கோடி மகா மந்திரேசுரர். அணு சதாசிவர் என்போர் யாவரும் `சிவர்` என்னும் வகையினரேயாவர்.
கரி - சான்று; இங்கு வினை முதலாந் தன்மையைக் குறித்தது. பொய் கரி - பொய்க்கும் கரி, மெய்கரி - மெய்க்கும் கரி, `பொய், மெய்` என்பன நிலையாமை, நிலைத்தல் இவற்றைக் குறித்தன. நடுவண் நின்ற ``கரி`` என்பது கருவியை வினைமுதல் போலக் கூறியது. விசேடம் - சிறப்பியல்பு. சிவனது சிறப்பியல்பு அவனது சத்தி. இங்கு அமைப்பாவது செய்வோனும், செய்யப்படுவனவுமாய் நின்ற இயல்பு `செய்தது` என்பது, `செய்யப்பட்டது` என்னும் பொருட்டாய்ச் செய்யாததைச் செய்ததுபோலக் கூறும் இலக்கணை வழக்காய் நின்றது.
இதனால், உயிர், `தான் புருடனாய் நிற்றல் முதலிய நிலைமை களும் சிவனால் ஆவன்` என்பதை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு)
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு)
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

பொழிப்புரை :

ஆணவ பந்தத்தால் தனது வியாபக நிலையை இழந்து அணுத்தன்மை எய்த நிற்கின்ற உயிரை அணுவிலும் பல கூற்றில் ஒரு கூற்றளவினதாகப் பாவித்து, `அணுவுக்கும் அணு` எனப்படுகின்ற நுண்ணியனாகிய சிவனை அணுக வல்லவர்கட்கே அவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

இரண்டாம் அடி ஒழிந்த ஏனைய அடிகளில் உள்ள ``இல்`` உறழ் பொருளின்கண் வந்த ஐந்தனுருபுகள். `அணோ ரணியாந்`` என்னும் கடோபநிடத வாக்கியம் இங்கு நினைக்கத்தக்கது. இவ்வடிகளில் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இரண்டாம் அடியை `அணுவை அணுவில் ஆயிரங் கூறிட்டு` என மாற்றி, முதலில் வைத்து உரைக்க. `நுண் பொருளாய் உள்ள சிவனைத் தம்மை நுண் பொருளாகப் பாவிக்கும் பாவனையாலே தான் அடைய முடியும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
``கொண்ட தொருபொருளைக் கோடிபடக் கூறுசெயின் கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட
இருபொருளு மன்றியே இன்னதிது என்னா(து)
ஒருபொருளே யாய்இருக்கும் உற்று``
- திருக்களிற்றுப்படியார் - 24
என்பதிலும் இம்முறை கூறப்பட்டது அறிக.
இது முன் மந்திரத்து உரையிற் கூறிய எல்லா நிலைகட்கும் பொதுவாதலை அறிந்து கொள்க.
இதனால், மேற்கூறிய `புருடன்` முதலிய அனைத்து நிலைகளிலும் உயிர் சிவனைப் பொருந்தி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.

பொழிப்புரை :

சிவனது திருவருளாகிய ஒளியினை ஆன்மா, பல கிளைகளும் விழுதுகளுமாய் விரிவடையும் ஆற்றலைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆலம் விதைபோலத் தன்னுள் அடக்குமாற்றால் தன்னை அச்சிவத்திற்கு ஏற்ற தூய இடமாகச் செய்யுமானால், அந்தத் திருவருள் ஒளி துணையாக, துன்பத்தையே தனது இயல்பாகக் கொண்ட ஆணவமாகிய இருளை ஓட்டி, அம்பலத்தில் ஞான நடனத்தைச் செய்கின்ற அப்பெருமான் தரக் கருதும் நல்வழியைத் தான் உணரும் வாய்ப்பு உண்டாகும்.

குறிப்புரை :

படர் - படர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். அணு - ஆன்மா. ``அணுவினை`` எனப்பின்னர்க் கூறினாராயினும், `சுடரை அணு தன்னுட் கொண்டு தன்னைத் தூவழி செய்ய` எனக்கூறுதலே கருத்தாதல் உணர்க. `ஓட்டி, நாடல்` என்னும் பயனிலைகட்கு, `தான்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது.
இதனால், மேற்கூறிய முறை உவமை காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்ற கலப்ப துணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்
தணிவற நின்றனன் சராசரந் தானே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், `உயிர் ஆலம் விதைபோலவும், சிவன் அவ்விதையில் அடங்கியுள்ள கிளை முதலியன போலவும் ஆதல் வேண்டும்` என்றது ஒருபுடை உவமையேயன்றி, முற்றுவமை யன்று. மற்று, உண்மை நிலையாது` எனின், `உயிர் மேல்; சிவன் உள்` என்றாயினும், `சிவன்மேல்; உயிர் உள்` என்றாயினும் ஒருபடித்தாக வரையறுத்தல் கூடாதபடி, புறவேற்றுமையே யன்றி, அகவேற்றுமை தானும் இன்றி ஒன்றி நிற்கின்ற கலப்பே உண்மை நிலையாகும். இவ்வுண்மையை உணர்வார் ஒருவரும் இல்லை. இனித் தன்னொப் பில்லாத் தனிப்பெரும் பொருளாகிய சிவன் எல்லாப்பொருளிலும் ஒரு படித்தாக நீக்கமின்றி நிறைந்து நிற்கின் இயங்குவனவும், நிற்பனவு மாய்க் காணப்படுகின்ற உயிர்கள் பலவும் அவனிடத்தில் தத்தமக்கு இயலும் முறையில் கலந்து நிற்கின்றன.

குறிப்புரை :

முதல் அடியின் ஈற்றில், `போல` என்பது விரிக்க. கணு - மூங்கிற் கணுவும், கரும்புக் கணுவும். அவை அக வேற்றுமைக்கு உவமையாகக் கூறப்பட்டன. ``இணையிலி`` என்றதனால் அவனது பெருநிலை குறிக்கப்பட்டது. `ஈசன் இணையிலி` என வேறு தொடராக்கி, அதன்பின், `அதனால்` என்பது வருவிக்க. தணிவு - நீக்கம். சிவனது பெருநிலை கூறியதனானே உயிர்களது சிறு நிலை பெறுவிக்கப்பட்டது. `இல்லம் முறையில்` என்பது இசையெச்சமாய் நின்றது. தான் - சிவன். `தான் ஆம்` - என்க.
இதனால், மேற்கூறிய உவமையால் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.

பொழிப்புரை :

உயிர் பருப்பொருளாகக் கருதிக்கொண்டு, `அதன் அகல, நீர், கன அளவுகள் எத்துணையன` என வினாவுவார்க்கு விடை கூறின், `பசுவின் மயிர்களில் ஒன்றை எடுத்து அதனைப் பல நூறாயிரங் கூறு செய்தால் அவற்றுள் ஒரு கூற்றின் அகல, நீள, கன அளவுகளே உயிரின் அகல, நீள, கன அளவுகள்` எனக் கூறலாம்.

குறிப்புரை :

இது, ``வன்பாற்கண் - வற்றல் மரம் தறித்தற்று`` * என்பது போல, வடிவு கூறலாகாமையைக் குறித்து நின்றது. `வடிவு` என்பது அகல நீள கனங்களையுடையதாகும். அது கண்ணில்லா தவராலும் தடவி அறிந்து கொள்ளப்படும். `உருவம்` என்பது நிறம். அது கண்ணாலன்றி அறிய இயலாது. எனவே, உயிர்க்கு `அணு` முதலாக வடிவு கூறுவோர் உயிரை, `பருப் பொருள்`, அஃதாவது, `தூலப் பொருள்` என்போராவர். உயிர் பருப்பொருளாகாது `நுண் பொருள்`, அஃதாவது, `சூக்குமப் பொருள்` என்றற்கே இவ்வாறு கூறினார். `பிராணன்` என்றல், உபாதி பற்றிய செயற்கையாலாம். தத்துவங்கள் யாவும் உபாதியேயாகலின், உயிரை மேல், `புருடன்` முதலாகக் கூறியதும் உபாதி பற்றியேயாம். மேவிய கூறு - கிடைத்த ஒரு கூறு ``ஆயினால்`` என்பதன் பின், `அதில்` என்பது வருவித்து `அதில் நூறாயிரத்தொன்றே ஆவியின் கூறு` என்க.
இதனால், `உயிர், உண்மையில் சூக்குமப் பொருளே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையி னுட்கலந் தங்குளன்
வானோ ரறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை :

கட்புலனாகாப் பொருள் சிவன் ஒருவனேயாக, பலவாகிய உயிர்களையும் அத்தகைய பொருளாகக் கூறுதல் கூடுமோஎனின், கூடும். ஏனெனில், சிவனது பெருமையை நோக்கு மிடத்து ஏனைத் தேவர் அனைவர் பெருமையினும் பெரிது. ஆயினும் பருப்பொருளாகிய உடம்புகளில் சூக்குமமாய் நிறைந் திருக்கின்ற உயிர்களினுள்ளே அவற்றினும் அதிசூக்குமமாய் அவன் நிறைந் திருக்கின்றான். (எனவே, உயிர் சூக்குமப் பொருளும், சிவன் அதி சூக்குமப் பொருளுமாம் ஆதலின் அதுபற்றி ஐயமில்லை என்றபடி,) சிவன் இத்தகைய அதிசூக்குமப் பொருளாதலின் அவன் தேவர்களா லும் எளிதில் அறியத்தக்கவனல்லன். ஆயினும் அவனே அவரவரது தவத்தின் அளவை யறிந்து அவ்வளவிற்கு ஏற்ப விளங்கி நிற்பன்.

குறிப்புரை :

`ஏனோரினும்` - என ஐந்தாவது விரிக்க. ``ஊனே சிறுமை`` என்பதற்கு, `ஊனின்கண் உள்ள சூக்குமப் பொருள்` எனப் பொருள் கொள்க. அப்பொருள் உயிர்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதற் காலத்திலே, `சிவனை அறியும் வாயில் உண்டு` எனக் கூறுதற்கு அவனைத் தம்முன்னே கொண்டு யோகம் பயில்கின்ற குணம் இல்லவிட்டாலும் பின்பு அக்குணத்தை அடைந்து தம்முன்னே கொண்டு யோகம் பயிலும். ஆகவே, உயிர்கட்கு என்றாயினும் ஒருநாள் சிவனைத் தெளிவாக உணரும் உணர்வு உண்டாகவே செய்யும்.

குறிப்புரை :

`அவ்வுணர்வு முதற்கண் தோன்றாமைக்குக் காரணம் பக்குவம் வாயாமையும், பின்பு தோன்றுதற்குக் காரணம் பக்குவம் வாய்த்தலும் ஆம்` என்பது கருத்து. `பக்குவம் சிவனது அருள் நோக்கத்தால் வாய்க்கும்` என்பது, ``பண்டு பயிலும் பயில் சீவனார்`` என்பதனால் குறிக்கப்பட்டது. பயில் சீவனார் - பயில்வை உடைய சீவனார் பயிலுதல் - நீங்காது உடன் இருத்தல். உரைத்தற்கு, `உணரும் வாயில் உண்டென` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஏகாரத்தைப் பிரித்து, ``குணம்`` என்பதனோடு கூட்டுக. `யோகம்` என்பதன்முன் உள்ள இகரம் வடசொல் நோக்கி வந்தது. இவ்வேகாரம் தேற்றம். `தெளிவு உண்டு` என மாற்றி யுரைக்க.
இதனால், முன் மந்திரத்தில், `அறியும் அளவல்லன் மாதேவன்` என்பது பற்றி நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து)
ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

பொழிப்புரை :

மாயா காரியமாகிய கருவிக்கூட்டம் சடமாகலின், அது சித்தாகிய உயிருக்குக் கூடாப் பொருளாய்க் குற்றமாகும். ஆயினும் அவ்வுயிரின் உள்ளே என்றும் உள்ள சிவன் அதனது பக்குவம் அறிந்து அருள் காரணமாகக் குருவாகி எதிர் வந்து அதனை அக்குற்றத்தினின்றும் பிரிவிக்க, அஃது அங்ஙனமே பிரிந்து திருவருளில் புகுந்து, அதன் கண் பேருறக்கத்தை எய்தி அமைதியுற் றிருக்கும். அருள் உறக்கம், இருள் உறக்கம் அன்றாகலின் அந் நிலையில் உயிர் அறிவே வடிவாய் விளங்கும்.

குறிப்புரை :

உபாதி - செயற்கைப் பொருள்; மாசு, சேதனம் - அறிவுடைய பொருள். ``சேதனத்து ஆய குரு`` என்றது, `சிவம்` என்றபடி அதனால் சிவமேகுருவாய் வருதல் பெறப்பட்டது. `குரு தூண்ட` என இயையும். தூண்டுதல் - விரிந்து செல்லும்படி அதற்குரிய உண்மையை உணர்த்துதல். அஃது ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தமையை* அறிவித்தலாம். `அதினின்றும் தூண்ட` என்க. `உயிர் உபாதி ஒன்றினோடும் ஒன்றாது துரியம் புகுந்து அறிவாகவே ஓயும்` என முடிக்க. துரியம் - பேருறக்கம். மலத்தின் உறங்குதல் கேவல துரியம். திருவருளில் உறங்குதல் சுத்த துரியம். இங்குக் குறிக்கப்பட்டது சுத்த துரியமே என்பது வெளிப்படை.
இதனால் உபாதி வசத்தால் மாசுபட்டுச் செயற்கை நிலையில் இருந்து உயிர் அம்மாசினின்றும் நீங்கித் தூயதாய்த் தனது இயற்கை நிலையை அடையுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

பொழிப்புரை :

கருவுறும் பருவம் வாயாத இளம் பசுக்கள் இனச் சார்பால் கதற மட்டும் தெரிந்து கொண்டு, கன்றை ஈன்ற பசுக்கள் தம் கன்றினை அழைக்கக் கதறுவதுபோலத் தாமும் கதறித் திரியும். கன்றை ஈனாது கருவுற்று மட்டும் உள்ள பசுக்கள் தமக்குரிய புல்லை விடுத்து மனிதர்க்கு உயிர பயிரில் சென்று மேயாதபடி அதன்தலைவன் புல்வெளியில் ஓரிடத்தில் முளையடித்து நீண்ட கயிற்றால் கட்டி வைக்க, அக்கயிற்றின் அளவிற்கு அவை கட்டில்லாதது போலத் தம் விருப்பப்படி சென்று புல்லை மேயும். எனினும் கன்றை ஈன்று தாய்மையை எய்திய பசுக்களே ஒன்று ஒரு குடம்போல நிரம்பப் பால் பொழியும் பசுக்களாகும். அவை தவிர மேற்சொன்ன மற்ற இருவகைப் பசுக்களும் பயன்படாத பசுக்களாகவே இருக்கும்.

குறிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி, ``கற்ற பசுக்கள்`` என்பதனால், நூலை மட்டும் கற்றுப் பரிபாகம் இன்மையால் அந்நூலை மட்டும் இளஞ் சிறார் காதற் பாட்டுக்களைப் பாடி அவற்றிற்கேற்ப நடித்தல் போலப் படித்துப் பொருள் விரிக்கின்றவர் குறிக்கப்பட்டனர். ``கதறித் திரி யினும்`` எனப்பின்னர் வருதலால், ``கற்ற`` என்றது, கதறக் கற்றதனையே குறித்தது. பசுக்கள் வாயொலி செய்தலை, `கதறல்` என்றல் மரபு.
கொற்றம் - வெற்றி. பசுக்களுக்கு வெற்றியாவது மலட்டுத் தன்மையின்றிக் கருவுறுதல். `கொற்றப் பசுக்கள்` என்னு சந்தி ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. குறி - முளை. கட்டி - கட்டப் பட்டு. `குறியில் கட்டி` என உருபு விரிக்க. `கருவுற்றுக் குறியில் கட்டப் பட்டு மேயும் பசுக்கள்` என்றதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்திக்கும் நிலையில் உள்ளவர் குறிக்கப்பட்டனர். அவரைப் பொய்ந்நெறியில் சென்று இரண்டும் கெட்டவர் ஆகாதபடி ஆசிரியர் தம் ஆணைவழி நிற்பித்தலே, `குறி கட்டி மேய்தல்` என்பதனஆல் குறிக்கப்பட்டது. எனவே ``கொற்றம்`` என்றது ஆசிரியரால் ஆட்கொள்ளப் பட்டமையைக் குறித்ததாம்.
``உற்ற`` என்பதற்கு, `கன்றை` என்பது வருவித்து, `கன்றை உற்ற பசுக்கள் என்க. `தாய்மை எய்துதல்` என்பதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்த பின்பு தெளிதலையும், நிட்டை கூடுதலையும் உடையராதலைக் குறித்தது.
``பால்`` என்றதனால், பரஞானம், அஃதாவது அனுபவஞானம் குறிக்கப்பட்டது. ``ஒருகுடம் பால்`` என்றதனால் `நிறைந்த ஞானம்` என்பது குறிக்கப்பட்டது.
போதுதல் - வெளிவருதல்; பொழிதல் எனவே தெளிவும், நிட்டையும் உடையவரது ஞான நிலை அயலார்க்கும் இனிது விளங்குதல் பெறப்பட்டது.
வறள் - வறட்சி; பால் சிறிதும் சுரவாமை. மலட்டுப் பசுக்களும் கதறித் திரிவனவற்றுள் அடங்கின.
இதனால், `சீவர்கட்குப் பசுத்துவம் மலபரிபாகம் காரணமாக இருவினை யொப்புச் சத்தி நிபாதமும் வாய்க்கப்பெற்று, ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்தலேயன்றித் தெளிவும், நிட்டையும் எய்துதலானே நீங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே.

பொழிப்புரை :

காப்பாருமின்றி, மேய்ப்பாருமின்றி, கறப்பாரு மின்றித் தம் விருப்பம்போல் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுப் பசுப்போன்ற மக்களை எப்படித் திருத்த முடியும். (அவர் யாருக்கும் அடங்குபவரல்லர்.) அவர் தாமே தமது இழிநிலையை உணர்ந்து ஆசிரியரை அடைக்கலமாக அடைவாராயின் அவரை ஆசிரியர் கல்லில் நார் உரிப்பதுபோலவும், கல்லைப் பிசைந்து கனியாக்குதல் போலவும்* தமது திருவருள் திறத்தால் அவரது நிலையினின்றும் நீக்கிச் சீர்செய்து, அவர் சீர்ப்பட்டமையை நன்குணர்ந்து சிவமாக்கிய பின்பல்லது அதற்கு முன் காடும், மேடும், கல்லும், முள்ளுமாய்க் கிடக்கின்ற நிலம் போன்றுள்ள அவரது மனம் உணர வேண்டியவற்றை உணராது.

குறிப்புரை :

``மேயும்`` என்றது `தம் விருப்பப்படி சென்று மேயும்` என்றபடி. `அவ்வாறு மேயும் பசுக்கள்` என்றதனால் `அவை காட்டுப் பசுக்கள்` என்பது விளங்கிற்று. ``பசுக்கள்`` என்றது உவமையாகு பெயராய், பசுக்கள்போல் உயிரைக் குறித்தது. இறுதியில் வைக்கற் பாலதாகிய ``இறைவனடி கூட்டி`` என்பதைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``செய்`` என்பது உவம உருபு. ``குறிப்பு`` என்பது ஆகு பெயராய்க் குறிக்கப்படும் பொருளை உணர்த்திற்று.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய பொருள் எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

பொழிப்புரை :

`சீவன்` எனவும், `சிவன்` எனவும் வேறு வேறாய்த் தனித்து எக்காலத்தும் இல்லை, உடலும், உயிரும் போல என்றும் ஒன்றியே நிற்கும். அவ்வாறிருந்தும் சீவன் சிவனை அறிந்ததில்லை. ஏன்? பாசங்கள் சீவனது அறிவை மறைத்து நிற்கின்றன. (அம்மறைப்பு நீங்கிச்) சீவன் சிவனை அறியுமாயின் அது சீவனாய் இராது, சிவமாகவே இருக்கும்.

குறிப்புரை :

எனவே, `சார்ந்ததன் வண்ணம் ஆதல் உயிரினது இயல்பு` என்பது பெறப்படுகின்றது. அநாதி முதலே பாசத்தைச் சார்ந்து பாசமாய் நிற்கின்ற உயிர், சிவத்தைச் சாருமாயின் சிவமாயே நிற்பதாகும். அந்நிலையில் அது `போதன்` எனப்படும்.
`ஆவர்` என்னாது ``ஆயிட்டிருப்பர்`` என்றதனால், `அதுவே உயிர் அடையும் முடிநிலைப்பயன்` என்பது விளங்கிற்று. `இத்தகைய பெருநிலைக்கு உரியதாகிய உயிர் அநாதியே இழிநிலையை எய்தியதும், பின்னரும் அந்நிலையை உணராது அதிலே இருத்தலும் வருந்தத் தக்கன` என அதன் இழிபு குறித்தற்கு இழித்தற் குறிப்பில் வரும் பன்மையால், ``சீவனார்`` என்றார். `அவருக்கு உண்மையிலே பெரியோனாகிய சிவனை அறிதல் எளிதன்று` என்றற்கு, ``சிவனார்`` என்றார். ``இல்லை`` என்பதன்பின் `ஆயினும்` என்பது வருவிக்க.
சீவன் சிவனை அறிதல் தனது அறிவினுள்ளேயாகும். அது `சிவன் நான்` எனப் பாவிக்கும் சிவோகம் பாவனையாம்.
``யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால்,
உன்னை `நான்` என்று பாவிக்கின்
அத்துவித மார்க்கம் உறலாம்``
என அருளிய தாயுமான அடிகள் வாக்கும், (``எங்கும் நிறைகின்ற சிவம்``)
``... ... ... ... நற்கமலை
ஊரிற் குறுகினேன்; ஓர்மாத் திரைஅளவென்
பேரிற் குறுகினேன் பின்``
என்னும் குமரருபர அடிகள் வாக்கும். (பண்டார மும்மணிக்கோவை, 24) இங்கு நினைவு கூரற்பாலன. இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி கொண்டது.
இதனால், `பசு` எனப்படுகின்ற சீவன் `போதன்` ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பஃறலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாமே.

பொழிப்புரை :

எண்குணங்களையுடைய கூத்தப்பிரான், மனத்தை விளக்காகக் கொண்டு பொருள்களை அறிந்து வருகின்ற, நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம், படந்தோறும் மணியாகிய விளக்கினையுடைய பலதலைப் பாம்புபோலவும், இரவிலும் பல விளக்குக்களை ஏற்றி வைத்துக் கொண்டு பொருள்களைக் காவல் செய்கின்ற கண்காணி போலவும் இருக்கின்றான்.

குறிப்புரை :

எனவே `சீவனார் ஒரு பொழுதும் சிவனாரை அறியா விடினும், சிவனார் சீவனாரை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருக்கின்றார்` என்பதாம். `ஆகவே அவரை அறியச் சீவனார் ஆவன செய்தல் வேண்டும்` என்றபடி. `சிவன் இயல்பாகவே பாசங்கள் இன்மை, இயற்கையுணர்வு, முற்றுணர்வு என்னும் குணங்களை உடையன் ஆதலின் அவன் தனக்கு அறிவிக்கும் துணையை வேண்டாது தானே எல்லாவற்றையும் அறிவான்` என்றற்கு, ``குண விளக்காகிய கூத்தப்பிரான்`` என்றும், வேறொரு விளக்கை வேண்டாது தனது மணிகளாகிய விளக்கினாலே விளக்கத்தைத் தரும் பல தலைப் பாம்பு போல உயிர்கட்குத் தான் அறிவைத் தருகின்றான்` என்றும், `உயிர்களை இமைப்பொழுதும் நீங்காது காண்கின்ற கண் காணியாய் உள்ளான்` என்றும் கூறினார். ``மன்னுயிர்க்கு`` என்னும் நான்கன் உருபு, `கரும்பிற்கு வேலி` என்பது போல, அதற்கு வினை யுடைமைப் பொருளில் வந்தது. `தான் தோன்றி` என்பது `தானே தோன்றுதலையுடையவன்` எனப்பொருள் தருதல் போல, `கண் காணி` என்பது `கண் காணுதலையுடையவன்` எனப் பொருள் தந்தது. ``ஆகும்`` என்பதை நாகத்திற்கும் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிவன் சீவனை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருத்தலால் உரிய பொழுதில் அவன் சீவனுக்கு வெளிப்பட்டு அருளச் சீவன் என்பது போதனாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தான்ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தான்ஆய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

பொழிப்புரை :

சிவன் அறியாமையோடு விரவாது அறிவாயே இருப்பவன். அவன் சீவன்களின் அறிவில் பொருந்திச் சீவர்கள் அறிவனவற்றையெல்லாம் தான் உடனாய்நின்று அறிவன். அதனால் அவன் சீவன்களாகியும் இருப்பான். ஆகையால் இந்நிலையை உணர்கின்ற சீவன் தானும் அச்சிவனேயாய் நிற்கும் ஆதலால், அத்தகைய சீவனே யாதும் அறியாத இருள் நிலையும், பொறிகளின் வழிப்பட்டு உலகை ஏகதேசமாய் அறிகின்ற மருள் நிலையும் ஆகிய இவற்றினின்றும் நீங்கிச் சிவனைப் போல எங்கும் வியாபகமாய் நின்று அறியும் நிலையை எய்தி, `போதன்` எனப்படுவதாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. பின் இரண்டு அடிகளால் சீவன் வியாபக நிலையை எய்திப் போதனாவதற் குரிய இயைபு கூறப்பட்டது. அவற்றுள் ``அறிவாய் அறிவன், சீவனு மாகும்`` என்னும் பயனிலைகட்கு, `சிவன் என்னும் எழுவாய் வருவிக்க. ``சீவனும் ஆகும்`` என்றதனால், `அவ்வாறு ஆகின்றவன் சிவன்` என்பது தானே அமைந்தது. அலவன், கலுழன், கடுவன் முதலியன போல, `சீவன்` என்பது அஃறிணைப் பெயர். அவைகளைச் சுட்டிய ``அவற்றினுள்`` என்பது செய்யுளாகலின் முன் வந்தது. வேறு தொடராய் நிற்றலால் ``நீங்கியவன், போதன்`` என்பன திணை வழு ஆகாமை அறிக.
இதனால், சீவன் போதனாதற்குரிய இயையும், போதனார் நிலையது இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.

பொழிப்புரை :

`தத்துவங்கள் சடம்` என்று அறியாமல், அவை களையே யானாக மயங்கிக் கிடந்த எனக்குச் சிவபிரான் தனது அருளைப் பற்றி நின்று அவ்வுண்மையை நான் உணர்ந்தபின் அவ்வாறு உணர்த்திய அவன் தத்துவங்கட்கு அப்பாற்பட்டு நிற்றலையும் உணர்ந்தேன்.

குறிப்புரை :

அதற்கு முன்னே, `நான் தத்துவங்களின் வேறானவன்` என்பதை உணர்ந்தமை சொல்லவேண்டாவாயிற்று. இவ்வாற்றால் `பாசம், பசு, பதி` என்னும் முப்பொருளின் இயல்புகளை உணர்ந்தமை போந்தது. `இவ்வாறு உணரும் பொழுதே சீவன் போதனாம்` என்பது குறிப்பு.
அருளால் அறிதல், அருள்வழியாக அறிதலாம். அருளே `பதிஞானம்` எனப்படுகின்றது. பாசஞான பசுஞானங்களின் நீங்கிப் பதிஞானத்தைப் பெற்று அது வழியாக எல்லாவற்றையும் அறிந்த வழியே உண்மை இனிது விளங்குவதாகும்.
``அருளால் எவையும் பார் என்றான்; அதை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி``
என்றருளிய தாயுமான அடிகள் (ஆனந்தக் களிப்பு) வாக்கையும் நோக்குக.
``ஆறாறு`` என்பது தொகைக் குறிப்பாய் அத்துணையான தத்துவங்களை உணர்த்திற்று. சொற்பொருட் பின் வருநிலையணி.
இதனால், `போதமாவது இஃது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சிவமா கியஅருள் நின்றறிந் தோரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவதறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.

பொழிப்புரை :

பிற ஆகமங்களிலன்றிச் சைவாகமங்களில் சொல்லப்படுகின்ற தத்துவங்களின் உயர்வை உணர்ந்து அவற்றைத் தெளியமாட்டாதவர் சிவமுதற் பொருளையும், அதனது ஆற்றலின் சிறப்பையும் உணர்ந்து அதிலே பழகியறியார். அதனால் அவர் உயிர் பஞ்ச மலங்களால் போதம் இழந்து நிற்றலையும் உணர மாட்டார். பிற பிற சமய நூல்களில் எல்லாம் சொல்லப்படுகின்ற தவங்களைச் செய்து, தாம் அடையவேண்டிய பயனை அடையாது இளைக்கின்றவ ராகின்றனர்.

குறிப்புரை :

``சிவமாகிய அருள்`` என்றதனை இரட்டுற மொழிந்து, `சிவம்தான் அதுவாகிய அருள்` என்றும், தான் சிவமே ஆகிய அருள்` என்றும் இரு பொருள் கொள்க. கொள்ளவே சிவமே அருளாயும், அருளே சிவமாயும் நிற்றல் பெறப்படும். ``அறிந்து ஓரார்`` என்பதனை, `ஓர்ந்து அறியார்` என மாற்றியுரைக்க. இந்நிலை சைவ தத்துவத்தை உணர்ந்தார்க்கல்லது. `ஏனையோர்க்கு உணரவாராது` என்பதே முதல் அடியால் கூறப்பட்டது.
ஆன்ம லாபத்தை அடையவொட்டாமல் ஆன்மாவைத் தடுப்பனவாகிய மலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி - என ஐந்து உளவாதலையும் அவர் அறியமாட்டார். அதனால் அவற்றை நீக்குமாற்றினையும் அறிந்து அவ்வழியில் முயலார். பிற சமயங்களில் சொல்லப் பெறுகின்ற தவங்கள் சிவ ஞானத்தைப் பயவா ஆதலின் அவற்றைச் செய்வோர் சிவனது திருவருளை அடைதலாகிய தலையாகிய பயனை எய்தாது பிறவிக் குழியினின்றும் ஏறமாட்டாதவராவர் என்பதாம். ``தலைப்பறிகின்றார் என்றது தலைப்பறியை எய்துகின்றார் எந்றபடி. தலைப்பறி - தலைபோலும் முடிநிலைப் பயனை இழத்தல். நவம் - புதுமை. அது பிற நூல்களில் காணப்பபடாத சிறப்பினைக் குறித்தது. ஈற்றடியை முதலில் வைத்துப் பொருள் கொள்க.
இதனால், போதராகாதாரது இயல்பு கூறும் எதிர் மறை முகத்தால் போதன் ஆமாறும், அதன் உயர்வும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார்
நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான்
நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

பொழிப்புரை :

நாளும் நாளும் தம்பால் நிகழ்வன யாவும் சிவ பெருமான் நிகழ்த்துவிக்க நிகழ்வனவே யாதலையும் ஊன்றியுணரார்; அங்ஙனம் அவன் நிகழ்த்துவித்தல் தாம் செய்த வினையின் பயன்களைத் தமக்குத் தனது அருள் காரணமாக ஊட்டுவித்தலே யாதலையும் கேட்டல் சிந்தித்தல்களின்வழி எண்ணிப்பாரார். சிவன் தனது அருளைத் தான் நேரே வழங்குதல் மேற்சொல்லிய உண்மைகளை ஆசிரியரது அருளால் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர் கட்கே என்பதையும் எண்ணமாட்டார். யார் எனில், நாள்தோறும் முன் மந்திரத்தில் கூறிய ஐம்பாசங்களின் வழியே உழைத்து நாட்களைக் கழிக்கின்றவர் என்க.

குறிப்புரை :

``நல்லோர்`` என்பதற்கு, `கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர்` என மாதவச் சிவஞான யோகிகள் உரைத்ததனை (சிவஞான போதம், மங்கல வாழ்த்து) உன்னுக. சொற்பொருட் பின்வரு நிலையணி.
இதனுள், \\\"வினை`` என்றது ஐம்புல நுகர்ச்சிக்கு ஆவனவற்றைத் தேடலும், அவற்றை நுகர்தலுமே யாகலின் அதனை வெறுத்துக் கூறியதனால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 1

ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

பொழிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி. ஐந்து களிறுகள். ஐம்புலன் களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம் - மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்தாயிற்று. ஆக மதத்தமை. மிகவும் மதம் கொண்டமை. அஃதாவது அவா மிக மிகுத்தமை. தறி - திருவருள். பாகன் - உயிர். அவன் எய்த்தமை - அந்த மனத்தை அவாக் கொள்ளாதவாறு தன் முயற்சியாலே தான் அடக்கி அடக்கிப் பார்த்து இயலாது இளைத்தமை. இனிக் களிறுகள் இளைத்தமை - மனம்தான் அவாவிய புலன்களை அடைந்து அடைந்து நிறைவுபெற விரும்பி, நிறைவு கூடாமையால் வெறுப்புற்றமை. இந்நிலையிலே அந்த மனம் திருந்தி நிறைவு பெறுதற்கு வழி சிவயோகத்தைத் தவிர வேறொன்றில்லாமை அறியப்பட்டது.

குறிப்புரை :

ஆதல் - மிகுதல். அஃது இங்கு அளவின் மிகுதலைக் குறித்தது. இரண்டாம் அடியில், `மதத்தால்` எனவும், ஈற்றடியில் `யோகினால்` எனவும் உருபு விரிக்க. ``யோகு`` என்பது தமிழ் முறையில் முதனிலைத் தொழிற்பெயராய் வரும். யோகம், இங்குச் சிவயோகமேயாம். `திருந்துதல்` என்பதன்பின் `ஒழிய` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. `ஒன்றையும்` என உருபும், இழிவு சிறப்பும்மையும் விரிக்க. `ஐந்திந்திரியங்களை அடக்குதல் சிவ யோகியர் சிலராலல்லது ஏனையோரால் கூடாமையும், சிவயோகத்தை எய்துதல் பலர்க்குக் கூடாமையும் நோக்கின் ஐந்திந்திரியங்களை அடக்குதற்கண் உளதாய அருமை விளங்கும் என்பது கருத்து.
இதனால், இங்கு எடுத்துக் கொண்ட பொருள் முதற்கண் இனிது புலப்படுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கருத்தின்நன் னூல்கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தினும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா(து)
எருத்துற ஏறி யிருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.

பொழிப்புரை :

இதுவும் ஒட்டணி. அடங்காமையை ஐம்பொறி மேல் வைத்துக் கூறினும் அடங்காது ஓடுவது மனமே. ஓட்டத்தின் விளைவு குறித்து மனம் குதிரையாக உருவகிக்கப்படும். பாய்மா - குதிரை. குதிரையைப் போரின்கண் செயற்படுத்தும் வீரன் அதன் முதுகின் மேல் அமர்ந்துகொண்டு கால்களால் குறிப்புத் தருவான். நல்ல குதிரைகள் அக்குறிப்பின் வழியே பாய்ந்து பாகனுக்கு வெற்றியை உண்டாக்கும். முருட்டுக் குதிரைகள் முரணி வேறுவழியிற் பாய்ந்து பாகனுக்கு வீழ்ச்சியைத்தரும். இங்கு ``பாய் மா`` என்றதை, `குறிப்பிட்ட ஒரு பாய்மா` எனக் கொள்க. அது மனம். அதனைப் பிராணாயாமத்தால் அடக்குதல் கூடும். ஆகவே ``கால்`` என்றது சிலேடை வகையால் உவமையில் பாகனது கால்களையும், பொருளில் பிராண வாயுவையும் குறித்தது. கொத்துதல் - உட்செலுத்துதல். பாகன், ஆன்மா. அவன் யோகநூலைக் கருத்துடன் கற்று அதன்படி பிராணா யாமம் செய்து தாரணை நிலையில் நின்று அடக்கினாலும் அடங்காது ஓடுவதே மனத்தின் இயல்பு. உவமையில் `நூல்` குதிரை செலுத்தும் நூல். `எருத்தம்` என்பது ஈறு குறைந்து, ``எருத்து`` என நின்றது. எருத்தம் - பிடரி; இங்கு அது முதுகைக் குறித்தது. `முதுகு` என்றது தாரணை நிலையை. திருத்துதல் - பிராணாயாமத்தினாலும், வருத்துதல், அஃதாவது அடக்குதல். தாரணையினாலும் என்றற்கு அவற்றைத் தனித் தனிக் கூறினார். திகைத்தல் - வேறு வழியில் செல்லுதல். வழி, நேர்வழி. அம் மா - மேற் குறிப்பிட்ட அந்தக் குதிரை. ``திகைத்தன்றிப் பாயாது, வழி நடவாது` என்றவை, அடங்குதல் அரிதாதலையே குறித்தது.

குறிப்புரை :

இதனால், `பொறி வழி ஓடும் மனத்தினை அடக்கி ஞான நெறியில் செலுத்துதல் யோகியர்க்கும் அரிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புலம்ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
குலம்ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலமந்து போம்வழி ஒன்பது தானே.

பொழிப்புரை :

மேய்ப்புத் தொழில் செய்து பிழைக்கும் குலங்கள் ஆமேய்க்கும் குலம், எருமை மேய்க்கும் குலம், ஆடு மேய்க்கும் குலம், தாரா, கோழி முதலிய பறவைகள் மேய்க்கும் குலம் எனப் பலவகை உண்டு. அவற்றுள் பறவை மேய்க்கும் குலத்தில் இரங்கத் தக்க ஒரு குலம் உண்டு. அந்தக் குலத்தில் ஒருவனுக்கு ஒரு குடில். அந்தக் குடிலில் ஐந்து கூடுகள். அந்தப் பறவைகள் வெளியே மேயும் இடங்களும் ஐந்து. அந்த இடத்தில் மேய்கின்ற உணவுகளும் வேறு பட்ட ஐந்து. அந்த உணவுகளின் குணங்களும் வேறுபட்ட ஐந்து. இந் நிலையில் அந்த மேய்ப்பான் ஒருவன் அந்தப் பறவைகளை ஒரு வழியிற் செலுத்தி மேய்க்க வேண்டும். இது மாற்ற முடியாத ஓர் அமைப்பு முறை - அதனால் இந்த மேய்ப்புத் தொழிலில் வெற்றி பெற மாட்டாதார் பலர் மேற்குறித்த ஒரு குடிலில் ஒன்பது வாயில்கள் இருப்பதால் அந்த வாயில்களில் எந்த ஒன்றின் வழியாகவாவது யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுகின்றார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரம் பிசிச் செய்யுள். கூடு இங்கு, `புலம்` எனப்பட்டது. அவை தத்துவங்களில் ஞானேந்திரியங்களாம். அவை புறநோக்குடைய மனத்திற்கு இடமாதல்பற்றி, `புலம்` எனப்பட்டன. ஞானேந்திரியங்கள் `புலம்` எனவும் படுதல் வழக்காதல் அறிக. புள் - மனம். அஃது ஒன்றாயினும் மேற்குறித்த இடச்சார்பு பற்றி ஐந்தாகின்றது. நிலம் - மனம் பொறிவழியாகச் சென்று பற்றும் பொருள். ``ஐந்து`` என்றது, `ஐந்து வகை` என்றபடி. மேய்க்கப்படும் பறவைகள் நீரை விரும்புதல் பெரும்பான்மையாதல் பற்றி உணவு ``நீர்`` எனப்பட்டது. அவை அப்பொருள்களில் பொறிவழியாகக் கவரப்படும் உரு, ஊறு, நாற்றம், சுவை, ஓசை என்பன. நீர்மை - குணம். அவை நுகர்வாரது தன்மைக்கு ஏற்பப் பெரிதும் சிறிதுமாக அவரது அறிவையழித்தல். ``கொண்டு`` என்பதை, ``குலம் ஒன்று`` என்பதனோடும் கூட்டுக. ``ஒருவன்`` என்பதன்பின் ``இது நிலைமை`` என்னும் இசையெச்சம் வருவிக்க. உலமருதல் - உழன்று எய்த்தல். `உலமந்தவழி` என்பது `உலமந்து` எனத் திரிந்து நின்றது. ``போம் வழி ஒன்பது`` என் றதனால், `எந்தவழியாலாவது புறப்பட்டுப் போதல் எளிது` என்றபடி, வழி - வாயில், வாயிலைக் கூறவே, `அவை உள்ளது குடிலில்` என்பது தானே பெறப்பட்டது. `அஃது உடம்பு` என்க. ``ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்`` (தி.6 ப.99) என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ஐந்திந்திரியங்கள் அடக்குதற்கு அரியனவாயுள்ள இயல்பினை விளக்கி, அதனால் அடக்க முயன்றோர் பலரது நிலையை எடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

இம்மந்திரமும் பிசிச் செய்யுளே, முன் மந்திரங்களில் களிறுகளாகவும், குதிரைகளாகவும், பறவைகளாகவும் குறிக்கப்பட்ட புலனடக்கம் இல்லாத மனம் இம்மந்திரத்தில் அதனது அடங் காமையின் மிகுதி இனிது விளங்குமாறு சிங்கமாகக் குறிக்கப்பட்டது. அடவி - வேறுபட்ட பல பெருமரங்கள் செறிந்த காடு. அது `நல்லன, தீயன` எனப் பெரும்பான்மையாக இருவகைப்பட்டு, அவற்றுள் எண்ணில வாய் விளையும் வினைகளைக் குறித்தது. நல்வினை, பயன்மரம், தீவினை, நச்சுமரம், வாய்ப்பு உள்ள பொழுது சென்று ஐம்புலன்களை நுகர்கின்ற மனம் வாய்ப்பு இல்லாதபொழுதும் அவற்றையே நாடுதல் பற்றி ``அஞ்சு அகமே புகும்`` என்றார். அஞ்சு - பொறிகள். சிங்கங்கட்கு உகிர் (நகம்) உண்டற்குரிய விலங்குகளை இறுகப் பற்றுதற்கும், எயிறு (பல்) அவ்விலங்கின் தசைகளை உண்டு சுவைத்தற்கும் உதவுவன. எனவே, `அவற்றை அறுத்தல்` என்பது மனத்திற்குப் பொருள்களின் மேல் உளதாய பற்றினையும், அவற்றை நுகர்தற்கண் உளதாய ஈடுபாட்டினையும் நீக்குதலாயிற்று. `நீக்குதற்குக் கருவி சிவயோக சிவானங்கள் என்பது மேல் பல இடங்களில் கூறப்பட்டது. ``அறுத் திட்டால்`` எனவே, ``அறுத்திடல் மிக அரிது`` என்பது விளங்கிற்று. நகமும், பல்லும் போயபின் காட்டில் வாழும் சிங்கங்கள் அங்குச்சென்றோரை அப்பாற் போகவிடாமல் மறித்துக் கொன்றொழிக்க மாட்டா. அதனால் அவர் அக்காட்டைக் கடந்து இன்புறலாம் என்பது பற்றி, ``அறுத்திட்டால் - எஞ்சாது இறைவனை எய்தலும் ஆகும்`` என்றார்.

குறிப்புரை :

இதனால், `ஐந்திந்திரியங்களை அடக்குதல் செயற்கருஞ் செயல் என்பதும், `ஆயினும் அதனைச் செய்தார் அடையும் பயன் பெரிது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவர்உம் மைந்தரும் ஆளக் கருதுவர்
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க் கிறையிறுத் தாற்றகி லோமே.

பொழிப்புரை :

அரசராகிய நம்மில் ஒவ்வொருவருக்கும் ஐவர் அமைச்சர் உள்ளிட்ட தொண்ணூற்றாறு பேர் வல்லுநர் பணியாளராய் உள்ளனர். அவர் நமக்கு அடங்கிப் பணி புரியாமல் ஒவ்வொருவரும் தனித்தனியே நம்மை ஆள விரும்புகின்றனர். எனினும் ஐவர் அமைச்சரே நம்மை ஆள்வதில் வெற்றி காண்கின்றனர். அந்த ஐவருக்குள்ளேயும் ஒற்றுமையில்லை. அதனால் அவரவரும் ஒவ்வொரு நோக்கத்தோடு நம்மை ஆள முயல்கின்றனர். அவர்கட்கு வரிசெலுத்தி நாம் எவ்வாறு நிறைவு செய்ய இயலும்!

குறிப்புரை :

`இயலாது; ஆகவே அவர் அனைவரையும் அடக்கிப் பணிய வைத்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். ஐவர் அமைச்சராவார் ஐம்பொறிகள். தொண்ணூற்றறுவர் அப்பொறிகள் உள்ளிட்ட தத்துவ தாத்துவிகங்கள். `உள்ளிட்டு` என்பது, `உள்` எனக் குறைந்து நின்றது. நோக்கம் நிறைவேறாதபொழுது சினம் உண்டாகும். ஆகையால் நோக்கத்தை, `சினம்` என்றது காரிய ஆகுபெயர். இறை - வரி; என்றது, சுவை, மணம் முதலிய புலன்களாய் உள்ள பொருள்களை, `அவற்றைப் பலகால் நுகரினும் நிரம்பாது மீள மீள அவாவே உண்டாதலின் நுகராது அடக்குதலே தக்கது` என்பது கருத்து.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை, விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு. -திருக்குறள், 343
என்றே திருவள்ளுவரும் அருளினார்.
மைந்து வலிமையாதலின், ``மைந்தர்`` என்றது, `வலியர்` என்றபடி, அதனால் அவற்றை அடக்குதல் அருமை குறிக்கப்பட்டது. ``ஐவர் உம் மைந்தர்`` என்பதில் உகரம் சுட்டெழுத்து.
இதனால், `ஐந்திந்திரியங்களை வருந்தியாயினும் அடக்குதல் வேண்டுமன்றி, அடக்காது அவற்றின் வழிச் செல்லுதல் தகாது, என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரையொத் தேனே.

பொழிப்புரை :

``துஞ்சும் போதும் சுடர்விடும் சோதியாய், (தி.5 ப.93 பா.8) உள்ள இறைவனையும், அவனோடே நீக்கமின்றி யிருக்கின்ற இறைவி யையும் நாள்தோறும் ஒழிவின்றி மந்திரமொழியாலும், தோத்திரப் பாடல்களாலும் சொல்லக் கடவேனாகிய யான் அங்ஙனம் செய்ய மாட்டாதவனாய் நிற்கின்றேன். அதனால் அங்ஙனம் மாட்டா தாரிடத்து வளர்வனவாகிய ஐம்புல ஆசைகளையும், அதனை உடைத்தாகின்ற மனத்தையும் அடக்கும் வலியிலேனாகின்றேன் அதனால், தன்மேல் இருப்பவனைக் குழியில் வீழ்த்திக் கொல்லவே நினைத்து வேகமாகப் பாய்ந்து ஓடுகின்ற குதிரையை அடக்க மாட்டாது விழிப்பவன்போலத் திகைக்கின்றேன்.

குறிப்புரை :

இரண்டாவது அடியில் வந்த ``சொல்லகில்லேன்`` என்பது சொற்பொருட் பின்வருநிலையணி. `மங்கையையும்` என்னும் இரண்டன் உருபு தொகுத்தலாயிற்று. ``வெல்லகில்லேன்`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டுக. ``தன்னை`` என்றது மனத்தை. ஐம்புலன்களை வெல்லுதல் அவற்றின்மேல் அவாக்கொள்ளாதவாறு அடக்குதலும், மனத்தை அடக்குதலாவது அதனைப் புறத்துப்போக விடாது அகத்தே நிற்கச் செய்தலும் ஆகும். `இவ்விரண்டும் கை கூடுதற்கு உபாயம் இறைவனை இறைவியோடு தியானித்துத் துதித்தலே` என்றற்கு` `அவற்றை நான் செய்ய மாட்டாதவனாய் இருக்கின்றேன்` என்றார். மாட்டாமை பரிபாகம் இன்மையால் உளதாவது. `இத்தகையோரிடத்து ஐம்புல ஆசை வளர்தல் இயல்பே, என்றற்கு, ``அங்குள புலன் ஐந்து`` என்றார். `குதிரையோடு` என ஒடு உருபு விரிக்க. ``ஒத்தேன்`` என்றது, அதனை மாற்றிச் செலுத்த வகையறியாது, `அதன் வழியிலே நிற்கின்றேன்` என்றதாம்.
இதனால், `ஐம்புலனை அடக்கும் உபாயம் இது` என்பது அனுவாத முகத்தாற்கூறி, `பரிபாகம் இல்லார்க்கு அவ்வுபாயத்தைச் செய்தல் அரிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எண்ணிலி இல்லி யுடைத்தவ் விருட்டறை
எண்ணிலி இல்லியோ டேகிற் பிழைதரும்
எண்ணிலி இல்லியோ டேகாமை காக்குமேல்
எண்ணிலி இல்லத்தோர் இன்பம தாமே.

பொழிப்புரை :

ஒரு தலைவன் எனக்கென ஓர் அறையை ஈந்துள்ளான். (தலைவன் - பிரமன். அறை - உடம்பு) அதில் உள்ள பொத்தல்களோ அளவில்லன. (மயிர்க்கால்கள்) ஆயினும் அந்த அறைக்குள்ளே சிறிதே ஒளிபுகாது இருட்டிக் கிடப்பது வியப்பைத் தருகின்றது. (ஞானம் உடம்பு வழியாக வாராமை தெளிவு,) இந்த இருட்டறையிலேதான் என்னுடைய காலமெல்லாம்போய் ஆக வேண்டும் என்றால், அஃது எத்துணைத் துன்பத்தைத் தரும் என்பது சொல்லவேண்டுவதில்லை. ஆயினும் இறைவன் என்னை அவ்வறை யிற்றானே யிருந்து காலந் தள்ளாமல் காக்கத் திருவுளம் பற்றுவா னாயின், உடனே எனக்கு அளவுட்படாத கலத்தையுடைய ஒரு பெரிய மாளிகையைத்தரின் ஒப்பற்ற பெரியதோர் இன்பம் கிடைத்துவிடும். (அம்மாளிகை வியாபகப் பொருளாகிய திருவருள். இன்பம், சிவானந்தம்.)

குறிப்புரை :

`திருவுளம் பற்றுவானா` என்பது குறிப்பெச்சம். ``அவ் விருட்டறை`` எனச் சுட்டிக் கூறினமையால், `அஃது ஒருவனால் தரப் பட்டது` என்பது பெறப்பட்டது. ``அறை`` என்றார், எண்சாண் நீளமும் இருசாண் அகலமுமே உடைமையின். ஏகுதல் - செல்லுதல், காலம் போக்குதல். `பீழை` என்பது குறுகி நின்றது. மூன்றாம் அடியில் ``இல்லி`` என்றது ஆகுபெயராய் அவற்றையுடைய அறையைக் குறித்தது. `காத்தல்` என்பது அதன் காரணம் உணர நின்றது.
இதனால், `ஐந்திந்திரியத்தை அடக்குதற்குத் திருவருள் துணை புரிய வேண்டும்` என்பது கூறி அத்துணை கிடைத்தல் அருமையாதலின் ஐந்திந்திரியங்களை அடக்குதலும் அருமையாதல் கூறப்பட்டது. திருவருள் துணைகிடைத்தலின் அருமை முன் மந்திரத்தில் கூறியவாற்றால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 8

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.

பொழிப்புரை :

உலகில் அறத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாய் உள்ள பொருளின் வலிமைக்குக் காரணம் மழையின் வலிமையே யாகும். அதுபோல, கடல் சூழ்ந்த நிலவுலகில் உள்ள அனைத் துயிர்களின் வாழ்க்கை வலி அயன் விதித்த விதியின் வலிமையும், அவ்வுயிர்களுள் மக்கள் உயிர்களின் வாழ்க்கை வலிமைக்குக் காரணம் அவர்களது ஆறாவது அறிவின் வலிமையும், சுவர்க்க லோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த பல தெய்வ வழிபாடுகளின் வலிமையும், சிவலோகத்தவரது வாழ்க்கையின் வலிமைக்குக் காரணம் அவர்கள் இந்நிலவுலகில் செய்த சிவவழிபாட்டின் வலிமையுமாகும்.

குறிப்புரை :

ஆகவே, `ஐந்திந்திரியங்களை அடக்கியொழுகி அதனால் சிவலோகத்தை அடைதற்கு வழி சிவ வழிபாடேயாம்` என்பது கருத்து. ஈற்றடி எடுத்துக்காட்டுவமை யாதலின் அதனை முதற்கண் கூட்டியுரைக்க. ``நீரின்று அமையாது உலகு எனின் அந்நீர் வான்இன்று அமையாதது`` (திருக்குறள், 20) பற்றி, ``நீர்`` என்பதற்கு `மழை` எனப் பொருள் உரைக்கப்பட்டது. ``விதியை மதியால் வெல்லலாம்`` என்பது உலக மொழியும் (பழமொழி) `ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவின்றித் தாழா துஞற்று பவர்`` என்பது ஆசிரிய மொழியும் (திருக்குறள், 620) ஆகையால் ``மானுடர் வாழ்க்கைக்குக் காரணம் மதியின் பெருவலி`` என்றார். ``வானுலகம்`` என்பதை `விண்ணுலகம்` எனவும், `மேலான உலகம்` எனவும் இரட்டுற மொழிந்து கொள்க. ஐந்திந்திரியங்களை அடக்கிப் பெறும் பயன் கூறுவார், அவற்றை அடக்காதோர் பெறும் பயனையும் உடன் கூறினார். அடக்கிக் பெறும் பயனது சிறப்பு விளங்குதற்கு. ``துதி`` என்றது உபலக்கணம். `நதியின் பெருவலி நார்வலி தானே` எனப் பாடம் ஓதி, `நாரம்` என்பது அம்முக் குறைந்து நின்றது எனினும் ஆம்.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய பொருள் உவமை முதலியவற்றால் நன்கு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.

பொழிப்புரை :

ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். எனவே அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும். ஆயினும் அவ்வாறின்றி ஒரு சாணுக்குமேல் கூடுதலாக ஒரு முழ ஆழம் உள்ளது. (குளம் - முகம். ஆழம் கழுத்திற்குக் கீழ் மூலாதாரம் வரை உள்ள இடம்.) மேற்குறித்த குளத்தில் ஐந்து கொடிய மீன்கள் உள்ளன. (அவை அந்நீர் வாழ் உயிரை அமைதியாக வாழ விடாமல் அலைக்கழிப்பன. மீன்கள், (ஐம்பொறிகள்) இந்த நிலைமை எமக்குந்தான் உள்ளது. இதனை அறிந்த ஓர் வலைஞன் எம்மிடத்தில் இரக்கங்கொண்டு வலையைக் கொணர்ந்து வீசினான். மீன்கள் தப்ப முடியாமல் அவ்வலையில் அகப்பட, வலைஞன் அவைகளைத் தான் எடுத்துக் கொண்டான். (சிவன் கருணை கூர்ந்து தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்.) அதனால் யாம் துயர் ஒழிந்தோம்.

குறிப்புரை :

எனவே, ஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்றதாயிற்று. ``வட்டம்`` என்பதன் பின் `ஆய்` என்பது வருவிக்க. ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் ஆகையால் அதனையே மனித உயிர்க்கு இட மாகக் கூறினார். எனினும் ஏனைய பகுதிகளை, `குட்டம்` என்பதனால் தழுவினார். குட்டம் - ஆழம். `பரதவன்` என்பது இடைக் குறைந்து நின்றது. அவனது சிறப்புணர்த்தும் `ஓர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `இடுதல்` அதன் காரியம் தோன்ற நின்றது. ஏதம் - துன்பம்.
இதனால், `ஐந்திரியங்களை அடக்கும் முறைகளுள் நேரிதாவது` இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்க லுறுமவன் றானே அமரன்
விடக்கிரண் டின்புற மேவுறு சிந்தை
நடக்கில் நடக்கும் நடக்கு மளவே.

பொழிப்புரை :

நாம் நடத்தினால் நடந்து, கிடத்தினால் கிடப் பதாகிய உடம்பை நம் விருப்பத்தின் படியே நடத்திட ஒட்டாது, அதினின்றும் எழுகின்ற ஐந்து இந்திரியங்களும் கிளர்ச்சி செய் கின்றன. அக்கிளர்ச்சியை அடக்குபவனே மனிதருள் தேவனாவான். அவ்வாறின்றி, அக்கிளர்ச்சியின் வழிப்பட்டு நமது உடம்பாகிய ஒரு மாமிச பிண்டத்துடன் இன்னொரு மாமிச பிண்டத்தை அணைத்து இன்பம் அடைய விரும்புவனவாய் உள்ளன தமது மனங்கள். அந்த மனத்தின் வழியே நாம் நடந்து கொண்டிருந்தால் நமது உடம்புகள் அவற்றிற்கு வரையறுத்த நாள் வரையில் நடந்து பின்பு வீழ்ந்துவிடும்.

குறிப்புரை :

`பின்பு நாம் பெறுவது யாது` என்பது குறிப்பெச்சம். `எனவே, உடம்பு நடக்கும் காலத்திலே மனத்தை அடக்கி அது வழியாக இந்திரியங்களையும் அடக்கிப் பயன் எய்துதல் வேண்டும்` என்பதாம். `அப்பயன் அமரராதல்` என்பது கூறப்பட்டது. ``அடக்கம் அமரருள் உய்க்கும்`` (திருக்குறள், 121) என்று அருளினமை காண்க. உயிருள்ள உடம்பை ``விடக்கு`` என்றார், அதனது இழிவு தோன்றுதற்கு எனவே, `அதனால் வரும் இன்பம் அருவருப்புடையது` என்பதாம். விடக்கு, மாமிசம். மற்றொரு விடக்காவது ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணுமாம், கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களையும் ஒருங்கேயுடைத்தாயது இணை விழைச்சு இன்பமாகலின், அதனையே விலக்கினார். விலக்கவே ஏனை இன்பங்கள் தாமே விலக்குண்டன. ``சிந்தை`` என்பதற்குப் பின், `பின்` என்பது வருவிக்க. ``நடக்கும்`` என்னும் பயனிலையை இறுதியிற் கூட்டி, அதற்கு `அவ்விடக்கு` என எழுவாய் வருவிக்க. ``நடக்கு மளவும்`` என்பதற்கு உண்மைக் காரணமாகாத உயிர்ப்பினை எழுவாயாக இயைபின்றி வருவிப்பாரும் உளர்.
இதனால், `உடம்புள்ள பொழுதே இந்திரியங்களை அடக்கி உயர்நிலை பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :

`ஐம்பொறிகளையும் அடக்குதல்` என்பதற்கு, `அவற்றைக் கெடுத்தல்` எனப்பொருள் செய்து, `அவற்றை அடக்கு, அடக்கு` என மாணாக்கர்க்கு வலியுறுத்திக் கூறும் ஆசிரியர் உண்மை ஞானாசிரியர் ஆகார். ஏனெனில் அவ்வாறு அடக்கி உயர்நிலை பெற்றவர் வானுலகத்திலும் இல்லை. அதற்குக் காரணம் ஐம் பொறிகளைக் கெடுத்தொழித்தால் அவற்றால் அறிந்துவருகின்ற ஆன்மா அறிவற்ற சடம்போல் ஆகிவிடும். அதனையறிந்து யான் அவற்றைக் கெடுத்திடாது செயற்பட வைத்தே பெறுகின்ற ஞானத்தை அறிந்தேன்.

குறிப்புரை :

அந்த ஞானமாவது அவற்றை மனம் சென்றவழிச் செல்லவிடாது, அருளாசிரியர் அறிவுறுத்திய வழியிற் செல்லச் செய்தலாம். அருளாசிரியர் அறிவுறுத்தல் பின்வருமாறு அமையும்.
``ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே``-தி.2 ப,44 பா.4
`` ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே`` -தி.2 ப,44 பா.7
``ஆமாத்துர் அம்மானைக்
கேளாச்செவியெல்லாம் கேளாச் செவிகளே``-தி.2 ப,44 பா.8
``கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை`` -தி.4 ப,9 பா.2
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப,9 பா.3
``வாயே வாழ்த்து கண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்தன்னை
வாயே வாழ்த்து கண்டாய்`` -தி.4 ப,9 பா.5
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணியாய் வந்தது.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்குதல் பற்றிய தவறாம் முறைமையை விலக்கி, நேரிய முறைமை தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஐந்திந்திரியங்களாகிய மத யானைகள் தறியில் கட்டுண்ணாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல் புடையன. அதையறிந்து நான் அவைகளை அடக்கி நேரிய வழியில் செலுத்துதற் பொருட்டு ஞானமாகிய அங்குசத்தைப் பயன் படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமான உணவை அளவு கடந்து உண்டு, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.

குறிப்புரை :

`அந்நிலை சொல்லுக் கடங்காது` என்பது குறிப் பெச்சம். `ஐந்திந்திரியமாகிய வேழம்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. இல்லையேல், `வேழம் எனப்பட்டன யாவை` என்பது விளங்காமை யறிக. ``உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்`` (திருக்குறள், 24) என இவ்வாறு வருதலே மரபாகலின், அறிவென்னும் கோட்டையை வைத்தேன் என்பது பாடமாகாது. `அறிவென்னும் தோட்டியை வைத்தேன்` என்பதே பாடம் என்க. அறிவு, ஞானாசிரியரால் அருளப் பட்ட அறிவென்க. அந்த அறிவு முதிர்ந்து முறுகாமையால் கூர்மை செய்யப் பெறாத தோட்டிபோல் ஆய்விட, யானைகள் அதற்கு அடங்காது ஓடின என்க. இவ் யானைகட்கு உணவாவன அவற்றிற்குரிய புலன்கள். அவற்றை உண்ணுந்தோறும் அவாவே மேன்மேல் எழுதலால் ``கொழுத்தன`` என்றார். பின் வந்த ``வேழம்`` என்பது, `அவை` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பெருங்கேடு மண்டி`` என்பதைப் பின்வந்த ``வேழம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கேடு`` என்றது கேடு பயக்கும் குணத்தை. பாட்டின் இறுதியில், `பெரிது` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `அருளாசிரியர் அறிவுறுத்தவழியால் ஐந்திந் திரியங்களை அடக்க மாட்டாது புறக்கணிப்பாய் இருப்பின் அவற்றால் பெருங்கேடு விளையும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.

பொழிப்புரை :

இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கி யிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.

குறிப்புரை :

``ஐந்து`` என்பன தொகைக் குறிப்பு, அவை முன்னை மந்திரங்களின் தொடர்ச்சியால் `யானை` எனப் பொருள் தந்து, உருவக வகையால் இந்திரியங்களை உணர்த்தின. ``அகலிடம்`` என்றது ஆகுபெயரால், உலகியல் எனப் பொருள் தந்து அறத்தை உணர்த்திற்று. பின்னர் ``தவம்`` என வருதலால் அறம் இல்லறமாயிற்று. பதம் - பதவி. அருள் - சிவஞானம். `இவை யாவும் பொறியடக்கம் இல்லாத பொழுது விளையா` என்றற்கு, பொறியடக்கத்தையே இவையாக உபசரித்துக் கூறினார். `இல்லின்கண்` என ஏழாவது விரிக்க. முன்மந்திரத்தில் ``அறிவென்னும் தோட்டி`` என்றதனால், இங்கு ``இல்`` எனப்பட்டதும் அஃதேயாதல் விளங்கும். இங்கும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், எல்லா நன்மைகட்கும் இந்திரிய அடக்கம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவ துள்ளம்
பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்
அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

`உலகம் நிலையற்றது` என்பதைக் கூறும் நூல்களைப் பலவாக எடுத்துச் சொல்லி, அவற்றின் பொருளையும் பலவாறாக விளக்கிப் பேசினாலும், `உலகம் கானல் போல்வது` என்பதைக் கல்வியளவிலும் கேள்வியளவிலும் உணர்ந்தாலும் அவை யெல்லாம் இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாவன அல்ல. ஏனெனில், நிலையாதவற்றின்மேல் அவாக்கொண்டு ஓடி அவற்றுள் முன்னர் ஒன்றைப் பற்றிக் கிடந்து, பின்பு அதனை விட்டு மற் றொன்றின்மேல் தாவி அதனைப் பற்றிக்கிடந்து இவ்வாறு முடிவின்றிச் செல்வது மனமே. அதனால் அஃது அவ்வாறு முடிவின்றி ஓட விட்டால், அது புலனுணர்வை முடிவின்றித் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கும். மனத்தை ஓடவிடாது நிறுத்திவிட்டால், புலன் உணர்வின் தோற்றமும் இல்லையாய் விடும். ஆகையால் மனத்தை யடக்குதலே இந்திரிய அடக்கத்திற்கு நேர்க்கருவியாகும். `இந்திரியங்களை அடக்குமாறு எவ்வாறு` என ஆராய்பவர்க்கு அறிய வேண்டிய பொருளாயிருப்பது அவ்வளவே.

குறிப்புரை :

பிதற்றுவது வாய் ஆதலின், அதற்கு ஏற்புடைய `நூல்` என்பது கொள்ளப்பட்டது. நினைதல் அவற்றின் பொருளையேயாம். ``பேய்த்தேர்`` என்பதன் பின் `ஆதலை` என ஆக்கமும் உருபும் விரித்து முதற்கண்வைத்து உரைக்க. ``விரித்த பொருள்`` எனப் பின்னர் வருதலின், `பேய்த்தேராவனவும் அவையேயாதல் தெளிவு. `பிரபஞ்சம்` என்பது `விரிவுடையது` என்னும் பொருளதாதலின் அது பற்றி, ``விரித்தபொருள்`` என்றார். ``பொருள்`` என்றது அவைபற்றிய உணர்வை. ஏனெனில் பெருக்கில் பெருகுவதும், சுருக்கில் சுருங்குவதும் அதுவேயாகலின்.
இதனால், `இந்திரிய அடக்கமாவது மன அடக்கமே` என அதன் உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இளைக்கின்ற வாறறிந் தின்னுயிர் வைத்த
கிளைக்கொன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
அளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கின்
துளைக்கொண்ட தவ்வழி தூங்கும் படைத்தே.

பொழிப்புரை :

இன்பத்தை நுகர்ந்து இனிதே வாழ்தற்கு உரியன வாகிய உயிர்கள் அவ்வாறின்றித் துன்பத்திற் கிடந்து துயர் உறுதலை அறிந்து அவை அத்துன்பத்தினின்றும் நீங்குதற்குரிய வழியை அமைத்துக் கொடுத்து, அதனாலே உறவாதற்குப் பொருந்தியவன் தானேயாய் நிற்கின்ற இறைவனைப் புகழ்ந்து போற்றி அதனால் தானும் என்றும் அழியாப் புகழைப் பெறுகின்ற அறிவன், ஐம்பொறிக ளாகிய பாம்புகள் ஐந்தும் தாம் படம் எடுத்து ஆடுகின்ற ஆட்டத்தை விடுத்துத் தமது புற்றிலே சென்று அடங்கிக் கிடக்கும்படி அடக்கி விடுவானாயின், அதன்பின், அவனும் துளையை உடைய அந்தப் புற்றுவழியாகவே இன்பம் பெற்று அமைதியை அடைவான்.

குறிப்புரை :

உயிருக்கு, ``இன்னுயிர்`` எனப் புணர்த்த அடை கருத்துடை அடை. அதனை முதற்கண்கூட்டி யுரைக்க. ``வழி`` எனப் பின்னர் வருதலின் முன்னர் வாளா, ``வைத்த`` என்றார் ஆகலின், அதனை முன்னரும் கூட்டி `வழி வைத்த ஈசனை` என்க. `ஈசனைப் புகழும் புகழோன்` என ஒருசொல் வருவித்து முடிக்க. கிளைக்கு ஒன்றுதல் - சுற்றம் ஆதற்குப் பொருந்துதல். ``அளைக்கு`` என்பது, `அளைக்கண்` என்பதன் மயக்கம். `கேடில் புகழோன் நாகம் அஞ்சு அளைக்கண் ஒன்ற ஆடல் ஒடுக்கத் தூங்கும், எனக் கூட்டி முடிக்க. `தூங்கும்` எனச் செய்யும் என் முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ``வழி`` என்றதும், ``அளை`` என்றதும் சுழுமுனையை என்பது தோன்றுதற் பொருட்டு, ``துளைக்கொண்டது அவ்வழி`` என்றார். `அவ்வழியானே` என உருபும், தேற்றேகாரமும் விரிக்க. வினையொடு தொகும் மூன்றாவதன் தொகையிலும் சிறுபான்மை வல்லினம் மிகாது. இனி, `அவ்வழித் தூங்கும்` எனப் பாடம் ஓதுதலும் பொருந்தும். படைத்தல் - உண்டாக்கிக் கொள்ளுதல். ``படைப்புப் பலபடைத்துப் பலரோடுண்ணும் - உடைப்பெருஞ் செல்வராயினும்``(புறநானுறு, 188) என்றது காண்க. மேல், `ஐந்திந்திரியங்கட்கு இடமாவது ஆன்ம அறிவு` எனக்கூறி, இங்கு, `அவற்றிற்கும் இடம் சுழுமுனை நாடி` என்றது, ``நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே` (புறநானுறு, 186) என்றதில், நெல் நீர்போல நேரே உணவாகாதாயினும், வழிமுறையால் உணவாதல் பற்றிப் பான்மை வழக்கமாகக் கூறியது போல, யோகப் பயிற்சியால் வழிமுறையில் இடமாதல் பற்றிக் கூறியதாகலின் முரணில்லை என்க. யோகி தூங்குதற்கு இடமும் அதுவாகக் கூறியதும் அன்னதே.
இதனால், வாசியோகமும் ஐந்திந்திரியமும் அடக்குதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடு ஞானத் தறியினிற் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்த மென்னும் அருள்செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே.

பொழிப்புரை :

பூத காரியங்களாகிய ஐம்புலப் பொருள்கள்மேல் மதங்கொண்டு செல்கின்ற ஐந்து இந்திரியங்களாகிய யானைகளை அவற்றின் வழியே செல்கின்ற உயிரினது அறிவு, தான் அடையத் தக்க தாகிய திருவடி ஞானமாகிய தறியை அடைந்து அதன்கண் கட்டிவிட, அதனைக் கண்டு, அறிவர் பலரும் அறிந்து அடைகின்ற அருளானந் தத்தை இறைவன் தருவானாயின், அதுவே, யாவரும் மேற்கொள்ளத் தக்க முதல் நூல் விதியின் பயனாகும்.

குறிப்புரை :

``பூதங்கள்`` கருவியாகு பெயர். `பூதங்களின் மேல் பாய்ந்தனவாகிய ஐந்தினையும் ஞானத் தறியினில் பூட்டிட்டு, அருள் செய்யில் அதுவே மேலை விதி` என இயைத்துப் பொருள் கொள்க. ``ஐந்து`` என்பது தொகைக் குறிப்பாய் ஐந்து இந்திரியங்களைக் குறித்தது. படர்தல் - செல்லுதல். ``ஒளி`` என்றது ஆன்ம அறிவை. சார்ந்திடும் - சாரத் தக்க. ஞானத்தை, ``தறி`` என்றதற்கு ஏற்ப இந்திரியங்களை `யானை` என்னாதது ஏகதேச உருவகம். `ஒரு கம்பத்திலே இரண்டு யானைகள் கட்டப்படுதல் கூடாது` என்பது உலகியல். அதற்கு மாறாக `ஒரு தறியில் ஐந்து யானைகளைக் கட்டல் வேண்டும்` என்றதனால், இத்தறி உலகத்தில் இல்லாததோர் அதிசயத் தறியாயிற்று. `பூட்டியிட்டு` என்பது குறைந்து நின்றது. அதனை, `பூட்டி யிட` எனத் திரித்துக் கொள்க. `ஆய்தல்` என்னும் பயனிலைக்கு `இறைவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. வேய்தல் - தலையிற் சூடிக் கொள்ளுதல். அஃது இங்கு மேற்கொள்ளுதலைக் குறித்தது. விதியின் பயனை, ``விதி`` என்றது ஆகுபெயர். தான், அசைநிலை. ஏகாரம் தேற்றம்.
இதனால், ஐந்து இந்திரியங்களை அடக்கும் முறையும், அடக்கினால் விளையும் பயனும் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.

பொழிப்புரை :

உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல் களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம் மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில் களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும்.

குறிப்புரை :

``படர்க்கின்ற`` என்பதில் உள்ள ககர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது. `சிந்தையைப் பைய ஒடுக்குமாறு எவ்வாறு` என்பதற்கு விடை மூன்றாம் அடியில் தரப்பட்டது. ஆகவே, `சிந்தை குறிவழி நோக்கி ஒடுங்குமாறு பைய ஒடுக்கி ஆம்` என வினை முடிபு செய்தல் கருத்தாயிற்று. `குறியல்லாததனைக் குறியாகக் கொண்ட சிந்தை உண்மையைக் குறியை நோக்கில்` என்பது மூன்றாம் அடியில் கூறப்பட்டபொருள். குறி- குறிக்கோள். உண்மைக் குறி, சிவன். `கோயில்` எனப்பின்னர் வருதலின், ``வடக்கு, தெற்கு`` என்பனவும் ஆகுபெயராய் அத்திசையில் உள்ள கோயில்களையே குறித்தன. ``வடக் கொடுதெற்கு`` என்றது, `நிலம் முழுதும்` என்றபடி. `அனைத்துக் கோயில்களும் மனக்கோயிலாகவே அமையும்` என்றது, `அவற்றில் எல்லாம் சென்று வழிபடுவார்க்கு அளிக்கும் பயன்களையெல்லாம் சிவன் இவர்க்கு இருந்த இடத்தில்தானே அளிப்பான்`` என்றதாம்.
c

பண் :

பாடல் எண் : 10

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.

பொழிப்புரை :

வாழ்நாளில் கழிவன சில நாழிகைகள் போலத் தோன்றுகின்றன. ஆயினும் அவை உண்மையில் சிலவும், பலவுமான நாட்களாய் விடுகின்றன. நெடுங்காலம் நிற்பதுபோலத் தோன்றுகின்ற உடம்பு நீர்மேல் எழுத்துப்போல விரைய மறைவதாகின்றது. இதனை உணர்ந்து, `அறிவுடையேம்` என உங்களை நீங்களே மதித்துக் கொள் கின்ற உலகீர், இளமையிற்றானே ஐம்புல ஆசையை வென்று, அப்புலன்களுக்குச் சார்பாய் உள்ள பொருள்களைத் துறந்து விடுங்கள். இல்லையேல், அவ்வாசையால் விளையும் வினைகள் மலைபோல வந்துவிழும்; அவைகளைத் தாங்க இயலாது.

குறிப்புரை :

``சென்றன`` என்பதைப் பின்னரும் கூட்டுக. பிற பொருள்களைப் பற்றுதற்குக் கருவி உடம்பாதலின் அதன் நிலை யாமையே முதற்கண் உணரத்தக்கது ஆகலின், ``பொருள்`` என்றது அதனையே குறித்தது.நீர்மேல் எழுத்து ஒத்து ``நின்றது`` என்றது, `என்றும் நிற்பதாக நினைக்கப்படுகின்ற உடம்பு. நிற்கும் நிலை நீர்மேல் எழுத்து நிற்பது போன்றதுதான் என்றபடி. எனவே, நிலையில்லாததனை, ``நின்றது`` என இகழ்ச்சியாகக் கூறியதாம். ``குன்று`` என்பது உவமையாகு பெயராய், அதுபோலும் வினைக்கூட்டத்தைக் குறித்தது. அதில் - அந்நேரத்தில். ஏகாரம், எதிர்மறை வினாவாய் வந்தது.
இதனால், `அறிவுடையராயினார் ஐந்திந்திரியங்களை இளமைக் கண்ணே அடக்கி நலம்பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டுப் புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத் தொருங்கலு மாமே.

பொழிப்புரை :

சிவனது திருமேனியைத் துதிக்குமாற்றால் பருப் பொருள்களாய் உள்ள அவைகளைச் சார்ந்துள்ள புலன்களை விரும்பிச் செல்கின்ற மனத்தை அச்செலவினின்றும், மீட்டு, மீண்டும் அதனையே துதி. அங்ஙனம் துதித்தால், அப்பெருமானை அவனது ஆனந்தத்தைப் பொழிகின்ற மனத்திலே ஒன்றியிருக்கச் செய்தலும் கூடும்.

குறிப்புரை :

`புனிதன் திருமேனியைப் போற்றிசைத்துப் புலன் ஐந்தும் புத்தியால் மீட்டுப் போற்றிசெய்` என்க. பருப்பொருள்மேல் செல்கின்ற மனத்தைப் பருப்பொருள் வழியாகவே மீட்டலும், நிலை நிறுத்தலும் வேண்டும் என்பது பற்றி, `திருமேனியைப் போற்றி செய்து மீட்டுப் போற்றி செய்` என்றார். ``புத்தியால்`` என்றது, `இஃதே அறிவாம்` என்றபடி. ஊற்றுகை - ஊற்றுதல்; பொழிதல், தொழிற் பெயர். இதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. ஊற்றுகை உள்ளம் - ஊற்றுதற்கு இடமாய் உள்ள உள்ளம். உம்மை, சிறப்பும்மை.
இதனால், `திருமேனி வழிபாடு இந்திரிய அடக்கத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே.

பொழிப்புரை :

சிவபெருமானது உருவத் திருமேனியினுள்ளே படிந்து நிற்றற்குரிய மனத்தை அங்ஙனம் நிற்க ஒட்டாமல் நச்சரித்துப் பெயர்க்கின்ற ஐம்புலன்களாகிய குறும்பரது தீச்செயலை உலகவர் யாரும் உணர்வதில்லை. அதனால் அங்ஙனம் உணராத நிலையில் இருந்து கொண்டே கவலையின்றி ஒருவரோடொருவர் நகையாடிச் சிலவும் பலவுமாகிய பேச்சுக்களைப் பேசி அவர் பொழுது போக்குவாரேயானால் அவரது செயல் தனது நிலையான இயற்கைப் பொலிவுடன் விளங்கத் தக்கதாகிய மலையை நிலையாது நீங்கும் அழகையுடைய மேகங்கள் வந்து சூழ்ந்து மறைத்தல் போல்வதாகும்.

குறிப்புரை :

தரித்தல் - நிலையாக நிற்றல். `சகளத்தினுள்ளே தரிக்கின்ற நெஞ்சத்தை அரிக்கின்ற ஐவர்` ``பேசில்`` - என்றது, `பேசுகின்றனர்` என்பதை அனுவாத முகத்தாற் குறித்தது. வரி - அழகு. மேகத்தின் அழகு சிறிது பொழுதில் அழியக்கூடியது. `அதனால் சூழப் பட்டது` என்றதனால், மலையினது அழகு நிலைத்து நிற்பதாதல் குறிக்கப்பட்டது. `உயிர் சிவத்தில் அழுந்திப்பெறும் அழகு இயற்கை யானது; ஆதலின் அஃது அழியாது` என்பதையும், `ஐம்புலன்களின் மேல் சென்று பெறும் அழகு செயற்கையாதலின் அது சிறிது பொழுதில் அழியும்` என்பதனையும் குறித்தவாறு. ``மைசூழ்வரை யாம்`` என்றாரேனும், `மை வரையைச் சூழ்தலாம்` என்றலே கருத்து என்க.
இதனால், சிவனது உருவத் திருமேனியை இடைவிடாது நினைத்தலே ஐந்திந்திரியங்களை அடக்கும் முறையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.

பொழிப்புரை :

`ஐந்திந்திரியங்களை அடக்குதல் நம்மால் ஆகிற காரியம் அன்று` என இளைத்து, அதனைக் கைவிடுதற்குக் காரணம் சிறிதும் இல்லை. ஏனெனில், ஐந்திந்திரியங்களின் அவாவிற்குக் காரணமான நிலையற்ற பொருள்களில் பொருந்தியுள்ள புலன்களும் ஐந்திற்குமேல் இல்லை. அந்த ஐந்தையும் அடக்குதற்குச் செய்யத் தக்க உபாயமும் ஒன்றே ஒன்றுதான். அஃது ஒருபொழுதும் நம்மை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாது, எப்பொழுதும் நம் உள்ளத்திலேயே வீற்றிருக்கின்ற சிவனை நல்ல இசைப் பாடல்களால் துதிப்பதுதான். ஆகவே, அதனைச் செய்து இந்திரியங்களை அடக்கி, இன்பம் எய்துங்கள்.

குறிப்புரை :

கைவிடுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது. ``ஒன்று`` என்றது `சிறிது` என்னும் பொருட்டாய் அவ்வளவிற்றான காரணத்தைக் குறித்தது. `துதித்தலுக்கு இயற்பாக்களிலும் இசைப் பாடல்களே சிறந்தன` என்றற்கு, ``இசையினால் ஏத்துமின்`` என்றார். ``அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே`` என அப்பரும் அருளிச் செய்தார். (தி.4 ப.77 பா.3) ஒருவர் ஒரு செயல் அன்றிப் பல செயல் செய்தல் உலகியலாய் இருக்க, `ஐவர் ஐந்து செயலே செய்பவராகின்றனர்` என அவரது மெலிவு உணர்தற்கு, ``ஐவருடைய அவாவினில் தோன்றிய புலன்களும் ஐந்தே`` எனவும், `அவரை வெல்லுதற்குரிய உபாயமும் ஒன்றே; அதுவும் எளிதானதே` என்றற்கு, ``கருத்தினுள் எய்தியவனை ஏத்துமின்`` எனவும் அருளிச் செய்தார்.
கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள நீர்உள;
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே.
எனப் பிற இடங்களிலும் இங்ஙனம் எளிமையை உணர்த்துதல் காண்க. ஐந்திந்திரியங்களை, ``ஐவர்`` என்றதுபோலப் பொய்ப்பொருள்களை அஃதாவது நிலையாத பொருள்களை, ``பொய்வர்`` என்றார். ``ஐவர்`` என்பதிற்போல, ``பொய்வர்`` என்பதிலும் வகரமெய் பெயர் இடை நிலையாய் வந்தது. ``உடைய`` இரண்டும் குறிப்புப் பெயரெச்சங்கள். முன்னதனை, `ஆறாவதன் சொல்லுருபு` என்றலுமாம்.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்கும் முறை அதனது எளிமை கூறி, `அதனால் அதனைத் தப்பாது செய்து பயன் பெறுங்கள்` என வலியுறுத்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``அசற்குருவாய்`` என்னும் பயனிலையை ``மூடன்`` முதலிய எல்லாவற்றோடும் தனித்தனி கூட்டுக. ``உணர்வு`` என்றது நல்லுணர்வை. `ஒன்று` இரண்டும் `சிறிது` என்னும் பொருளன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுக்கப்பட்டன. உண்மை - பொருள்களின் உண்மையியல்பு. `தத்துவம்` எனப்படுவது இதுவே. கணு - எல்லை, என்றது ஏகதேசத்தை. எனவே, `சற்குரவ ராவார் வேதாகமங்களை முற்ற உணர்ந்திருப்பர்` என்பது போந்தது. பரநிந்தை, புறங்கூறல். அணு - உயிர். அதற்கு இயற்கையாய் உள்ளது அறியாமை. அஃதாவது உணர்த்தினும் உணர மாட்டாமையாம். ``கொடிறும் பேதையும் கொண்டது விடா`` (தி.8 போற்றித் திருவகவல், 63) என்று அருளிச் செய்தது காண்க. `கூறப்பட்ட குற்றங்களுள் ஒன்றையே உடையராயினும் அவர் சற்குருவாகாது, அசற்குரு வேயாவர்` என்றற்கு `அசற்குருவாமே` என்பதனைத் தனித்தனி கூட்டிக் கொள்ள வைத்தார். அசத்தை உணர்த்துவோன் அசற்குரு.
இதனால், `அசற்குருவாவரிடத்துக் காணப்படும் குற்றங்கள் இவை` என்பது கூறி, அவர் `இன்னார்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.

பொழிப்புரை :

சற்குரவராதற்கு உரியன பலவற்றை உடையோரும் தமது உபதேசத்தை உணரும் தகுதியில்லாதோர்க்கு அவர் வழியாகப் பெறப்படும் சில பயன் கருதி அவரை விலக்கமாட்டாராய் அவர்க்கு உபதேசம் செய்வாராயின், அவரும் அறியற்பாலனவற்றை அறியாத அறிவிலிகளாய், அசற்குரவராய் விடுவர்.

குறிப்புரை :

மந்திரம் முத்தி நெறிக்குரிய மந்திரங்கள். தந்திரம், வேதாகமங்களில் உள்ள ஞானப் பகுதிகள். மாயோகம் - சிவயோகம். ஞானம் - சிவஞானம். இவ்விடத்து உள்ள உம்மையை ``மந்திரம்`` முதலியவற்றோடும் கூட்டுக. ``பந்தம், வீடு`` என்றது, உண்மைப் பந்தத்தையும், உண்மை வீட்டையுமேயாம். `தரிசித்துத் தெளிவி யாதோர்` என இயைக்க. இவ்வினையெச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `தரிசித்தும்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பார்ப்பவர் - அறியத்தக்கவர். `பார்ப்பவரை` என்னும் இரண்டன் உருபு உயர்திணைக்கண் தொகுக்கப்பட்டது. செய்யா - செய்து. ``ஊண்`` என்றது உபலக்கணம். ``அந்தகர்`` என்றது அகநோக்குப் பற்றி.
இதனால், `சற்குரவர்க்கு ஆகாததொன்றினை உடையராயின் சற்குரவரும், அசற்குரவராவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.

பொழிப்புரை :

`தக்கது இன்னது; தகாதது இன்னது` என உணரும் உணர்வில்லாதவன் மூடன்` என்பது உலகம் அறிந்தது. ஆயினும், அவ்வாறு அவற்றை அறிந்தும் காமம் முதலிய குற்றங்களின் நீங்கி, நல்லவற்றைப் பற்றியொழுகும் நல்லொழுக்கம் இல்லாதவன் அறிவுடையவன் ஆயினும் அதிமூடன் ஆவான். இனிக்குற்றங்களின் நீங்கி வல்லவற்றையே கடைப்பிடித்தொழுகும் நல்லொழுக்கம் உடையனாயினும் நல்லனவற்றை மதித்து உவந்து ஏற்கும் பண்பின்றி அவற்றை உணர்த்துவோரையும் இகழ்கின்ற கீழ்மக்கட்கு நல்லுபதேசத்தைச் செய்வானாயின் அவனும் அறிவிலியேயாவான். ஆகையால் அத்தகையோனும் சற்குருவாகாது, அசற்குருவாயாவன்.

குறிப்புரை :

கலதி - கீழ்மகன். ``ஆமாறு`` என்றதனானே அதன் மறுதலைப் பொருளும் போந்தது. நல்லன தீயனவற்றை அறிய மாட்டாதவன் மூடனாதல் இயல்பாகவே நன்கறியப்பட்டதாயினும், அவற்றை அறிந்தவனினும் அறிந்தவாற்றில் நிற்கமாட்டாதவன் அவனிலும் பெருமூடன் ஆதலை வலியுறுத்தி ஓதுதற் பொருட்டே இயல்பாக அறியப்பட்டதனை அனுவாதமாக எடுத்தோதினார்.
ஓதி யுணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையிற் பேதையார் இல். -திருக்குறள், 834
என அருளினமை காண்க.
`கலதிகட்கு ஆமாறு அறிவிப்பின் அது பயன்படாது ஆகலின், அஃது அரும்பொருளை அழிவு செய்ததாம்` என்பதை,
``அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்``-திருக்குறள், 720
எனவும், `ஆகவே, அவ்வாறு அறிவிப்பவன் அறிவிலியாவான்` என்பதை,
``காணாதாற் காட்டுவான் தான்காணான்`` -திருக்குறள், 849 எனவும் அருளிச்செய்தார் திருவள்ளுவர். கோமான் - தலைவன். இங்கு, `தலைவன்` என்றது ஞானத்திற்குத் தலைவனாகிய சற்குருவை. ``அசத்தாகுங் குரவனே`` என்றது, `அசற்குருவே` என்றபடி. சற்குருவினின்றும் பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை.
இதனால், மேலது பிற சிலவற்றோடு ஒருங்கு வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும்
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

பொழிப்புரை :

சற்குருவாவான் தன்னை அடைந்த மாணாக்க னிடத்தில் உள்ள குற்றங்களை முதலில் நல்லனவற்றைக் கூறும் முறையால் நீக்கி அதன் பின்பே ஞானத்தை உணர்த்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாமலே ஞானத்தை உணர்த்தினால் தனது ஆசிரியத் தன்மையுங் கெட்டுத் தனது செய்கையே தனக்குத் தீங்காய் முடியும். அதனால் நாட்டில் புல்லரே தலையெடுப்பர் ஆதலின் அரசு நல்லரசாய் இருப்பினும் அதற்கும் கேடு விளையும். நாடும் தீய நாடாகி விடும். இதனைப் படைப்புக் காலத்திற்றானே சிவன் தனது ஆகமங்களில் சொல்லி வைத்துள்ளான்.

குறிப்புரை :

கற்பு - கல்வி. அது பின்னர் அம்முப்பெற்று, ``கற்பம்`` என நின்றது. `கல்வியாகிய கல்வி` என்றது, ஆசிரியர் கற்பியாது அவர் தாமே கற்ற சொந்தக்கல்வி` எனக் குற்றங்களைக் குறித்துநின்றது. குணம்போலக் குற்றம் பிறர்கற்பிக்க வேண்டாதுதானே தோன்றி வளர்வதாதலை அறிக. பாவம் - தன்மை. தனக்குத் தீங்காதலாவது, உணர்த்தப்பெற்றோரால் நன்கு மதிக்கப்படாமையும், உலகரால் பழியும் அடைதல்.
இதனால், கலதிகட்கு ஆமாறு அறிவிப்போர் அடையும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே.

பொழிப்புரை :

குருடர் சிலர், வேறு சில குருடருடனே சேர்ந்து வழிச் செல்வார்களாயின் எல்லோருமாக `முன், பின்` என்பதின்றி ஒருங்கே குழியில் விழுவதைத் தவிர வேறு என்ன நிகழும்! ஆகையால், சில குருடர்கள் வேறுசில குருடர்களுக்கு `நாங்கள் உங்கட்கு வழிகாட்டு கின்றோம்` என்றுசொல்லி அவர்கள் கையில் கோலைக் கொடுத்துத் தாங்கள் அக்கோலைப் பற்றிக் கொண்டு முன்னே செல்வாராயின், முதலில் வழிகாட்டும் குருடர் பாழ்ங்குழியில் வீழ்வர். பின்பு அவர்களால் அழைத்துவரப்பட்ட அந்தக் குருடர்களும் அந்தக் குழியிலே வீழ்வார்கள், (அது தான் நிகழும்.)

குறிப்புரை :

``முன்பின் அறவே`` என்பது முதலாக உள்ளவற்றை முதலில் கொண்டு உரைக்க.
இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.
`அஞ்ஞானிகள் சிலர் தங்களைப் போலவே அஞ் ஞானிகளாய் உள்ள சிலரைக் குரவராக மதித்து அடைவார்களாயின் இருவரும் பிறவிக் குழியில் விழுவதைத் தவிர வீடுபேறாகிய கரையை அடையார்; அவருள்ளும் குரவராய் நின்றவரே முதலில் பிறவிக் குழியில் வீழ்வர்` என்பது இதனால் குறிக்கப்பட்ட பொருள்.
ஆதல் - ஒன்றாதல். ``ஆகில்`` எனப் பின்னர் வருதலின் நான்காம் அடியில் முதற்கண் நின்ற குருடர் `ஆகிய குருடர்` என்பது விளங்கிற்று. அதன்கண் வந்த உம்மை இறந்தது தழுவிய எச்சம். முன் தந்திரத்தில் போந்த ``குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்`` என்னும் மந்திரத்தை இதனோடு ஒப்பிடுக.
இதனால், அசற்குரவராயினார் பிறரையும் கெடுத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.

பொழிப்புரை :

சற்குருவே தன்னையடைந்த மாணாக்கர்க்குத் திரு வருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனையடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தை யாலும், திருவடி சூட்டலாலும் தன்னை யடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்துவிடுவான்.

குறிப்புரை :

`அத்தன்மைகளால் அவனது சற்குருவாம் தன்மையைத் தெளிக` என்பது குறிப்பெச்சம். திருவருளை, `திருவடி` என்றல் மரபு. தாள் முயற்சியும் ஆம் ஆதலின் அது `முயற்சி` என்னும் குறிப்பினையும் உடையது. திருவருள் எல்லாம் வல்லதாதலை நினைக. ``குருவே சிவன்`` (தி.10 மந்.6) `சற்குருவே தலைவன்` என மொழிமாற்றி யுரைக்க. தன்னை அறிந்தபின் தலைவனை அறியத் தடையில்லை ஆதலின் அதனையே கூறி யொழிந்தார். ``சீவன்`` என்றது, `பசு` என்றபடி, `அவன் வசனத்தாலும், தாள் தந்தும் தத்துவாதீதத்துப் பாசம் தணிக்கும்` என்க. முதலடி ஒழிந்த ஏனை அடிகளில் ``தாள் தந்து`` என வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், `சற்குருவினது பெருமை அவனது செயலால் விளங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

பொழிப்புரை :

(சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும் ஒன்பான் கோள்களின் தீங்கு நீங்கவும் யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.

குறிப்புரை :

இப்பொருட்கேற்ற கொண்டு கூட்டினை அறிந்து கொள்க. இதனுள்ளும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. `சற்குரு` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. அஃது, ``ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வரும்`` (தொல். பொருள், பொருளியல்) முறைமையில் வந்ததாகலின் இம்மந்திரமும் சற்குருவினது பெருமை கூறியதாதல் அறிக.
இதனால், சற்குரு அருளால் வீடுபேறாகிய முடிநிலைப் பயனேயன்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கறுத்த இரும்பே கனகம தானால்
மறித்திரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொருளில், ``குருவருள் பெற்றான்`` என்றதற்கு ஏற்ப உவமையில், `இரத குளிகை சேரப்பட்டு` என்பதும் உவமையில் ``கனக மதனால்`` என்றதற்கு ஏற்ப, `சிவமாகியவன்` என்பதும் வருவித்துக் கொள்க. ``குரு அருள் பெற்றான்`` என்பதை மூன்றாம் அடியில் முதற் கண் கூட்டியுரைக்க. குறித்தல் - சற்குரு தன் மாணவனைச் சிவமாகப் பாவித்தல். ``குரு`` என்றது, அதிகாரத்தால் சற்குரு மேலதாயிற்று.
இதனால், சற்குருவின் பெருமை மேலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்
ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப்
பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.

பொழிப்புரை :

உலகப்பற்றை ஒழித்து வீடுபேற்றில் விருப்பம் கொண்டு தன்னையும், தலைவனாகிய சிவனையும் ஆசிரியர் அருள் மொழியைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுமாற்றால் தனது அறி யாமையைப் போக்கித் தன்னை அடைந்தவரது அறியாமையையும் முற்றப்போக்க வல்லவனே குற்றம் அற்ற உண்மை ஞான குரு ஆவான். அவ்வாறன்றி, அனுபவ ஞானம் இன்றி, நூலறிவு மாத்திரையால் செய்யும் ஆரவாரத்தில் மயங்கித் தானும் அதனையே செய்பவன் உண்மை ஞான குரு ஆகான்.

குறிப்புரை :

``அறிவு`` என்றது, அனுபவ ஞானத்தை. இதனுள் பன்மையாக ஓதுவன பாடம் ஆகாமை அறிக.
இதனாலும் சற்குருவின் இலக்கணம் உடன்பாட்டானும், எதிர்மறையானும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற
நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே
ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற
நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.

பொழிப்புரை :

நித்தியனாகிய சிவன் நின்மலன் ஆகலின், அவன் மலம் நீங்கித் தன்பால் மெய்யன்பு செலுத்துவோரது அறிவிலே விளங்கி நின்று அம்மெய்யன்பினை மேலும் மேலும் பெருக்க வல்லவ னாவன். ஆகையால், மலம் நீங்கிச் சுத்தான்மாவாய் நிற்கின்றவனே தன்னை அடைந்த மாணவக் கூட்டத்தாரது உண்மை நிலையை உணர்ந்து, அவர்களில் பாசப் பற்று அறும் பக்குவத்தை எய்தி னோர்க்கே ஞானத்தை உணர்த்துவன். ஆதலால் அவனே நிலைபெற்ற சற்குரு ஆவன்.

குறிப்புரை :

`சுத்தான்ம சைதன்னியத்திலே சிவன் தான் அதுவே யாய் ஆவேசித்து நிற்றல் பற்றியே குரு சிவனாகின்றான்` என்பதை உணர்த்தற் பொருட்டு அவ்வியல்பை முதல் இரண்டு அடிகளில் கூறி, பின்பு, `சுத்தன்` என எடுத்துக்கொண்டு, ``சுத்தனே நீடும் குரவன்`` என்றார். `நித்தன் நிமலன் ஆதலின் மலம் அற்ற நேயத்தே நிற்கும்; நேயத்தை நல்க வல்லோன்` எனக் கூட்டுக. அறும் பக்குவத்தை எய்திய நிலையைத் தெளிவு பற்றி, ``அற்ற`` என இறந்த காலத்தாற் கூறினார். குரவரல்லா தாரைக் `குரவர்` என மயங்கிய மாணாக்கர் பின்பு அவரின் நீங்கி உண்மைக் குரவரை யடைவர் ஆகலின் அவர் அங்ஙனம் ஆகாமைக்கு ஏதுவாய் நிற்பவனை `நீடும் குரவனை` என்றார்.
இதனால், `பெத்தத்தின் நீங்கிய சுத்தனே சிவமாய் நிற்கும் சற்குரு` என்னும் உண்மை எடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரிசன வேதி பரிசித்த எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

வேதித்தல் பற்றி இரச குளிகை `வேதி` எனப் பெயர் பெற்றது. வேதித்தல் - மாற்றுதல். பரிசனம் - பரிசித்தல்; தீண்டுதல். தீண்டிய மாத்திரத்தில் பொன்னாக மாற்றுவது பரிசன வேதி. வரிசை - மேன்மை. குவலயம் - நிலவட்டம். அஃது ஆகுபெயராய் அதன்மேல் வாழும் உயிர்களை உணர்த்திற்று. உயிர்களுள்ளும் சிறப்புப் பற்றி மக்கள் உயிரையே உணர்த்திற்று. ``குரு பரிசித்த எல்லாம்`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், `சிவோகம் பாவனையோடு பரிசித்த எல்லாம்` என்பதே கருத்து. `தீர` என்பது. `தீர்ந்து` எனத் திரிந்து நின்றது. ஆம் - உண்டாம்; கிடைக்கும்.
முன்பு, ``கறுத்த இரும்பே வகையதுபோல`` என்றது மாணவன் அடையும் பேற்றின் சிறப்பை உணர்த்தற்கும், இங்கு ``பரிசன வேதி ... பொன்னாகுமாபோல்`` என்றது சற்குருவினது திருவருள் ஆற்றலின் சிறப்பை உணர்த்தற்கும் கூறப்பட்டன ஆகலின் கூறியது கூறல் அன்றாம்.
இதனால் சற்குருவினது அருளாற்றலின் சிறப்பு உவமையில் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

பொழிப்புரை :

`யான் சிவனே` என மாணாக்கற்கு அறிவுறுத்து கின்ற அந்தக் குருவின் சந்நிதியில் அவன் சிவனே ஆன தன்மை எவ்வாற்றா லேனும் மாணாக்கனுக்கு இனிது புலப்படுமாயின், அவனது மனித உடம்பைச் சிவனது அருள் திருமேனியாகவே உணர்ந்து, தான் அவனால் சிவமாந் தன்மையைப் பெறல் வேண்டும். (பின்னர் வேறு நினைத்தல் கூடாது.) இதனை உன் உள்ளத்திற்குள்ளே ஆராய்ந்து கொள்க.

குறிப்புரை :

சிவமாம் தன்மை புலப்படுதல், அருணந்தி தேவர்க்கு மெய்கண்ட தேவர் நோக்கின மாத்திரத்தே மலச்செருக்கு முழுவதும் அற்றொழிய, உள்ளம் அனலிடை மெழுகு போல உருகப் பெற்றமை போல்வது. அதன் பின்னர் அவர் தம் ஆசிரியரை, ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருளி - மண்ணிடை`` (இருபா இருபஃது - குருவணக்கம்) வந்த சிவனாகவே உணர்ந்தமை அறிக. அதன் பின்னரும் வேறு நினைவாராயின் அவர் உய்யும் வழி இல்லை என்றபடி. ஆசிரியனது தன்மையை மாணவன் வெளிப்பட ஆராய்தல் கூடாமையின். ``உன்னிலே தேர்ந்துகொள்`` என்றார். இதனுள் `குரு` எனப் பொதுப்படக் கூறாது ``சற்குரு`` என்றது உணர்த்துவோனது சொற்பற்றி, சதுர்பெறல் - `அருள்உரு` எனப்படும் பெருமையை அடைதல். `ஊனே சதுர்பெறல் என நினைந்து தானே தனைப்பெறவேண்டும்` என்க.
இதனால், சற்குருவைத் தெளியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வரும்வழி போம்வழி மாயா வழியே
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலும் ஆமே.

பொழிப்புரை :

பிறப்பும், இறப்பும் ஆகிய மாயையின் வேறு பாடுகளே `பிறவி நெறி` எனப்படும். அதனையே கண்டு அவ்வழியே உழல்பவர் கண்டறியாத பெருவழியாக எங்கள் நந்தி பெருமான் தம்மை யடைந்தவர்க்குக் காட்டியருள்கின்ற வீட்டு நெறியை அவரைப்போலும் சற்குரு காட்டும் வழியிலே சென்று பிறரும் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

`அதனைக் கண்டவர்` என வேறு எடுத்துக் கொண்டு உரைக்க. உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால் `உண்மைக் குரவர் வழியாக யாவரும் வீடுபெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குருஎன் பவன்வேத ஆகமம் கூறும்
பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித்
தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி
வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.

பொழிப்புரை :

`குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

ஆகவே, அவன் வழியாகவே பக்குவிகள் சிவனை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.
இதனால் குருவினாலன்றி ஞானம் எய்துதல் கூடாமையால் `குருவினாலன்றி வீடடைதல் இயலாது` என்பது கூறப்பட்டது. சகல வருக்கத்தினருள் முன்னைத் தவமிகுதியால் பிரளயாகலர் விஞ்ஞான கலரோடு ஒப்போர் மிக அரியர் ஆதலின் பொதுநிலை இதுவாதலைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 10

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.

பொழிப்புரை :

சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவன் தன் மாணாக்கர்க்கு ஒரு வார்த்தையைச் சொல்வானாயின் அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச்செய்து, ஏனை எல்லாப் பொருளும் சிவ வியா பகத்தை விட்டு வேறு நில்லாமையைப் புலப்படுத்தி, சுத்தம், அசுத்தம் என்னும் இருவகைப் போகங்களும் அல்லாத வேறு ஒரு தனிப் போக மாகிய பரபோகத்தை விளைத்து நிற்கும் வார்த்தையாய் இருக்கும்.

குறிப்புரை :

`அதனால் அத்தகைய குருவை அடைந்த மாணாக்கர் ஞானத்தை எய்தி, வீடு பெறுதல் உறுதி` என்பது கருத்து. நான்காம் அடியை முதற்கண் வைத்து, கூறுதலுக்குச் செயப்படுபொருள் வருவித் துரைக்க. `ஒருவார்த்தை, மகா வாக்கியம், பெரும்பெயர்` என்பன ஒரு பொருட் சொற்கள். ``மன்ன என்னை ஓர் வார்த்தையுட்படுத்துப் - பற்றினாய்`` (தி.8 செத்திலாப் பத்து, 2) என்றதனால் அவ்வார்த்தை இத்தன்மைத்தாதல் விளங்கும். இது பற்றியே,
``சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்நலம் வந்துறுமே``
-திருக்களிற்றுப்படியார், 6
எனச் சொல்லப்பட்டது. சத்து பதி; அசத்து பாசம்; சதசத்து பசு. சித்து - சேதனப் பிரபஞ்சம்; உயிர்கள். அசித்து - அசேதனப் பிரபஞ்சம்; உயி ரல்லன. ஆணவமும், கன்மமும் உயிரோடு, ஒற்றித்து நிற்பன. சேர்ந்து நிற்றலை விளக்குதலைச் சேர்த்தலாக. உபசரித்துக் கூறினார். `சுத்தம், அசுத்தம்` என்பன ஆகுபெயர். சுத்த போகம் சுத்தப் பிர பஞ்சத்திலும், அசுத்த போகம் அசுத்தப் பிரபஞ்சத்திலும் உள்ளன வாம். சிவபோகம் இவற்றின் வேறாய், மேம்பட்டதாய், எல்லையின்றியிருத்தலை அறிக. சுகத்தை ஆக்கும் சொல்லை, ``சுகம் ஆனசொல்`` என்றதும் உபசாரம். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், குருவினால் ஞானம் எய்தி, வீடுபெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறும் நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதக ராமே.

பொழிப்புரை :

பக்குவம் இன்மையால் உயிர் பாச ஞானத்தையே உண்மை ஞானமாகக் கருதி நிற்றலால் அனாதியே அதனைப் பற்றிய ஐம்மலங்களும் அதனை விட்டு நீங்காது அதனைப் பற்றியே நிற்கும். பக்குவம் வந்தபொழுது பாச ஞானத்தை வெறுத்துப் பதியாகிய சிவனை நோக்கி நின்று அவனைப் பல முறையால் வணங்குதலால் முன் கூறிய ஐம்மலங்களும் அற்றொழியும். ஆகவே, தம்மைக் கட்டி யுள்ள பாசக் கூட்டத்தால் தாம் சிவனை விட்டு நீங்கியிருக்கும் நிலையை முத்துரிய நிலைகளால் முறையே போக்கிச் சிவனை அடைய முயல்பவரே சற்குருவின் அருள்வழி நிற்கும் சாதகர் ஆவார்.

குறிப்புரை :

`சற்குருவின் அருளைப் பெற்றும் அங்ஙனம் முய லாதவர் சாதகர் ஆகார்; அஃதாவது பயன்பெற்றவர் ஆகார்` என்பதாம். `பாச உணர்வினால் ஐம்மலம் உற்றிடும் எனவும், `நாதன் அடியில் பணிதலால் பற்றறும்` எனவும் கூட்டுக`. `நாதன் அடியில் பணிதலாகிய செயலில் நிற்றலே சாதனையில் நிற்றலாம்` என்பது உணர்த்துதற்கு அதனையும், அதற்கு மறுதலையானதையும் முதற்கண் எடுத்துக் கூறினார். உறுதல், இங்கு நீங்காது நிற்றல். மூன்று துரியம் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்பன. இவை பற்றி அடுத்த தந்திரத்தில் காண்க.
இதனால், `சற்குருவை அடைந்து அவனால் ஆட்கொள்ளப் பெற்றோர் செயற்பாலன இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.

பொழிப்புரை :

ஞானம் வரும்பொழுது ஆன்ம இயல்பு உள்ளவாறு விளங்கப்பெற்று, ஐந்து மலங்களும் சத்தியடங்கி நிற்க அவற்றைக் கடந்து மோனம் உடையராய் நிலைபெயராத வீட்டு நிலையை அடைதல் எளிதாகும். அந்நிலை சிவானந்தமே. ஞானியர் எல்லாரும் அதனைப் பெறவல்லவராவர்.

குறிப்புரை :

புலன் - ஞானம். அது முதலாகத் தொடங்கி, ``விளையாட்டே`` என முடித்துப் பின், `இறைவன் இறைவியுடன் இன்பம் எல்லாம் வல்லார்` என வேறு முடிபு செய்க. `எல்லாம்` என்னும் பொதுப்பெயர் இங்கு உயர்திணையாய் நின்றது. இறைவன் மெய்ப் பொருளும், இறைவி அதனது ஆனந்தமும் ஆதலின், `இறைவன் இறைவியுடன் ஆன இன்பம்` என்றார். `ஆன` என்பது தொகுத்த லாயிற்று. `சொல்லாது` என்பதன் ஈறு குன்றிற்று. `இப்பயனுக்குரிய ஞானத்தை அருளுபவன் சற்குருவே` என்பது கருத்து.
இதனால், மேற்கூறிய சாதகர் எய்தும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.

பொழிப்புரை :

இழிவான பிறப்பு நிலையில் அதன் இழிவு தோன் றாதவாறு மறைத்து மீள மீள அதிலே நின்ற கருவிக் கூட்டத்தின் இயல்பை உணர்த்தி, அதனின்றும் பிரித்து உயிர் தனது இயல்பினைத் தான் உணருமாறு செய்து அவ்வுணர்விலே சிறிது காலம் நின்று தாமதிக்கச் செய்தலும், பின்பு இறைவன் இயல்பை உணர்த்தி உயிருணர்வினின்றும் பிரித்து இறை உணர்விலே நிலைத்திருக்கச் செய்தலும், பின் இறையின்பத்திலே தோய்ந்து பேச்சற்றிருக்கச் செய்தலும் ஆய இவையெல்லாம் முத்தான்மாவாய் நின்ற சற்குருவின் செய்கைகளாய் விளங்கும்.

குறிப்புரை :

``இட்டது`` என்பது கருவிக் கூட்டத்தைக் குறித்த காரணப் பெயர். ஊட்டுதல், அறிவு புகட்டல். `ஊட்டி மீட்டு` என மொழி மாற்றி, ஊட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. `அத்தானத்து` எனச் சுட்டு வருவிக்க. ``தன்`` என்றது, தனது இயல் பினைக் குறித்த ஆகுபெயர். `கருவியுணர்வு` மெய்யுணர் வாகாமை எளிதில் விளங்குதல்போல, உயிருணர்வு மெய்யுணர் வாகாமை எளிதின் விளங்குவதன்றாகலின் `அதனினின்றும் நீக்குதல் தாழ்த்து நிகழும் என்றார். ஞானம் - மெய்யுணர்வு, இறையுணர்வே அது என்க. கருவியுணர்வு - பாச ஞானம். உயிருணர்வு - பசுஞானம். இறை யுணர்வு - பதி ஞானம்` கருவிக் கூட்டத்தை `இது நானன்று` எனக் கழித் தவுடன் தோன்றுவது `சித்தாகிய யானே முதற்பொருள்` என்னும் உயி ருணர்வாம் என்பதை, ``ஆன்மா இவை கீழ் நாடலாலே - காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசுஞானம்` என்பதனான் அறிக. ``மோனத்துள்`` என்பதன்பின் `இருக்க` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது என்பதனால் அறிக. ஏகாரம் பிரிநிலை. அதனால் உணர்த்தப்பட்டது. `இவை தன் செயலால் ஆவன அல்ல` என்பது.
இதனால், சற்குருவின் அருளாற்றல் திறம் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.

பொழிப்புரை :

சிவன் தனது கருணை காரணமாகச் செய்யும் முத் தொழில்களாகிய விளையாட்டு நிகழும் இடம் சடமாய மாயை யினிடத்திலாம். ஆயினும் அவ்விளையாட்டிற்குப் பயன் அறிவுடைப் பொருளாகிய உயிரை, `சித்து இவை, அசித்து இவை` என்பதை அறியச் செய்து மும்மலங்களைத் துடைத்துத் தூய்மையுறப் பண்ணி வேறு இரு தொழில்களால் மெய்ப்பொருளை அடையச் செய்தலேயாகும்.

குறிப்புரை :

முத்தொழிலுக்கு வேறாய இருதொழில்களாவன மறைத்தலும், அருளலும். எனவே முத்தொழில்களின் வழி முன்னர் மறைத்தலை அடையப் பண்ணிப் பின்பு அதன் பயனாகப் பக்குவத்தை வருவித்து அருளலை அடையப் பண்ணுதலே சடத்தின்மேல் செய்யும் முத்தொழிற்குப் பயனாதல் விளங்கும்` ``இடம் சடம்`` என்றதனால் முதற்கண் ``விளையாட்டு`` என்றது படைத்தல் முதலிய முத்தொழில் களையே குறித்தன. என்னை? ஏனை இரண்டிற்கும் இடம் சடம் ஆகாமையின். `முத்தொழில்` என்பதை முதற்கண் வெளிப்படையாகக் கூறாமை பற்றி அவையும் அடங்க இறுதியில் ``ஐங்கருமம்`` என்றா ராயினும் அதனால் குறிக்கப்பட்டன எஞ்சிய இரு தொழில்களேயாம். சத்தாகின்றவனும் அத்தனேயாயினும் அதனை வேறு போலக் கூறினார், `முடிந்த பயனான பரமுத்தி நிலை அது` என்பது உணர்த்துதற்கு.
இதனால், `இறைவன் செய்யும் தொழில்களில் முடிவானது சற் குருவாய் வந்து ஞானத்தை அருளுதலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.

பொழிப்புரை :

உலகீர், எங்கள் சிவபெருமான் `தனக்கு வேறாய் விலகி நிற்கும் பொருள் எதுவும் இல்லை` என்று அறிந்து தன்பால் செலுத் தப்படும் அன்பிலே விளங்கி நிற்பவன். அத்தகைய அன்பர்க்கு அவன் அனைத்துப் பொருளின் உண்மைகளையும் தெளிவாக உணரக் காட்டி னான். ஆதலால் நீங்கள் `அவனது வியாபகத்தைக் கடந்து அவனின் வேறாக யாதொரு பொருளும் இல்லை` என உணர்ந்து உடம்பில் உள்ள பொழுதும் அவனை எவ்வகையிலேனும் உணர்ந்து போற்றுங்கள்.

குறிப்புரை :

`உங்கட்கும் அனைத்துப் பொருள்களின் உண்மை களையும் தெளிய உணர்த்துவான்` என்பது கருத்து. ``இல்லை`` என்பதற்கு, `எப்பொருளும்` என்னும் எழுவாய் வருவிக்க. `அப்புறம் இல்லை` என்க. `பாசத்துளேயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. ``பாசம்`` என்றது உடம்பை. ஏன்? சீவன் முத்த நிலையில் கூறப்படுதலின். ``தேசம்`` என்பது இட ஆகுபெயராய் அதன்கண் உள்ள பொருள்களைக் குறித்தது.
இதனால், சற்குருவின் அருளால் பெற்ற அறிவிற்குப் பயன் இறைவனிடத்தில் அன்பு செய்தலே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

பொழிப்புரை :

மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு வடத்தைத் தூங்கவிட்டது போல உடம்பினுள்ளே ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்து ஒளிவிட்டு விளங்கும் ஏழு மண்டலங்கள் உள்ளன, அங் கெல்லாம் அவற்றுக்கு மேல் உள்ள மாற்றுயர்ந்த பொன் போல்வ தொரு நற்பொருளினின்றும் ஓர் அமுதம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. அதனையறிந்து போற்றிக்கொண்டு உண்டவர்களே பிறப்பற்றிருக் கின்றார்கள். அதனை அறியாதவரெல்லாம் விலங்கொடொத்து உணவை உண்டு வயிறு வளர்ப்பதற்காகவே வாழ்கின்றனா.

குறிப்புரை :

`அவர் பிறவிக் கடலினின்றும் ஏறமாட்டார்` என்பது கருத்து. `மலர்ந்தன` என அன்பெறாது `மலர்ந்த` என நின்ற வினை முற்றின் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``மலர்ந்த`` என்றது, `மலர்ந்தன போன்றுள்ளன` என்னும் பொருளைத் தந்தது. ஏழு மண்டலமாவன மூலாதாரம் முதலாக உச்சி ஈறாக உள்ளவை. அவை தாமரை மலர் வடிவின ஆதல் பற்றி, `மாணிக்க மாலை மலர்ந்தன போன்றுள்ளன`, என்றார். ஏழாந் தானத்திற்கு மேல் நிராதாரமான பன்னிரண்டங்குலத்தைக் கடந்த மீதானத்தில் உள்ள செம்மேனி யனாகிய சிவனை ``ஆணிப் பொன்`` என உவமையாகு பெயரால் கூறினார். ஏழாந்தானத்திற்றானே அமுதம் ஊறுவதாயினும் அஃது அருள் மயமாதல் சிவனாலேயாதல் பற்றி அவனிடத்தினின்றே அமுதம் ஊறுவதாகக் கூறினார்.
இதனால், `சற்குரு அருளால் சிவஞானத்தைப் பெற்றோர் பின் இச்சிவயோக சாதனாத்தால் நிட்டை கூடல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே
அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.

பொழிப்புரை :

சத்தோடு கூடியவழிச் சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியவழி அசத்தாம் தன்மையும் உடைத்தாதல் பற்றி, `சதசத்து` எனப் பெயர் பெற்ற உயிரை அநாதியில் சத்தோடு சேராது நீங்கச் செய்து, அசத்தோடு சேர்த்த ஆணவ மலத்தொடர்பு இப்பெத்த காலத்தில் அற்றொழிதற் பொருட்டு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இருமாயைகளைச் செயற்படுத்தி, உயிரையும் அச்செயற் பாட்டிற்கு உள்ளாக்கியவனும், பின் என்றும் திரிபின்றி ஒருபடித்தாய் நிற்பதாகிய உண்மையை உணர்த்தி, அவ்வுயிரை உய்யக் கொள்கின்ற வனும் இறைவனேயன்றிப் பிறர் இல்லை.

குறிப்புரை :

`அசற்சத்து சத்தினின்றும் நீங்கச் செய்து அசத்தோடு இசைத்திடு பாசப்பற்று` என இயைத்துக் கொள்க. `சதசத்து` என்பதே வழக்காயினும் செய்யுள் நோக்கி அதனை முன் பின்னாக மாற்றி `அசற்சத்து` என்றார். ``நீங்க`` என்பதன் பின், `செய்து` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது. ``ஈங்கு`` இசைத்திட்டபின் உளதாகிய பெத்த நிலையை. ``அணு`` என்பது இரண்டாவதன் பொருள்மேல் ``இசைத்தான்`` என்றதனோடு தொக்கது. தான், அசை. உம்மை, மாயையை அசைத்ததேயன்றி என இறந்தது தழுவி நின்றது. அறிவித்தாய் அறிவிப்போனும் என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதன் காரியத்தையும் உடன் தோற்றி நின்றது. ஏகாரம், பிரிநிலை. எனவே, `ஒன்றை அறிவித்த சற்குரு, இதற்கு முன்னுள்ளவற்றை யெல்லாம் செய்த இறைவனே` என்றபடி.
இதனால், சற்குரு சிவனே யாதல் அருளல் தொழில் அவனுடையதேயாதலை ஏனைத் தொழில்கள் நிகழுமாற்றின் வைத்து உணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

பொழிப்புரை :

சத்திநிபாதம் படிமுறையால் நாளும் நாளும் மிகுந்து வரும் வகையால் ஆணவத்தைச் சிறிது சிறிதாக முறையே நீக்கி வருதலாலும், முடிவில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் உப தேச மொழியால் அவ்வாணவங் காரணமாக இருந்து வந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தருதலாலும், பின்னும் பண்டை வாசனையால் பாச உணர்வு தோன்றுமாயின் அதனைத் தோன்றும் பொழுதே பசையின்றி உலர்ந்து கெடும்படி வாட்டி விடுதலாலும், ஆராய்ந்து சொல்லுமிடத்து எல்லா முதன்மையும் உடையவனாக உண்மை நூல்களில் கூறப்படுகின்ற இறைவனே உயிர்கட்கு வீடுபேறு கிடைக்கும்படி குருவாய் வருபவனாவான்.

குறிப்புரை :

இறைவன் தனது அருட்சத்தியால் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைப் படிப்படியாய் நீக்குதலை,
மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின்
மன்னும் அரனே மலம் துரந்து.
-சிவஞானபோதம், சூ. 11. அதி.2
எனக் கூறியதானானும் உணர்க. மாறுதல் - ஞான நெறியினின்றும் விலகல். ``ஏறு நெறியால்`` எனவும், `ஈறில் உரையால்` எனவும் கூறியவற்றிற்கு ஏற்ப, `தனது அருள் ஞானத் தீயால் வாட்டலால்` என ஏது வருவித்துக் கொள்க.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே``
-சிவப்பிரகாசம், 9-8
எனவும்
`` ... ... ... ... இடை ஏறுவினை
தோன்றில் அருளே சுடும்`` -திருவருட்பயன் - 98.
எனவும் பின்னோர் கூறுதல் காண்க. `இங்குக் கூறப்பட்டன பிறரால் இயல்வன அன்மையின், இறுதிக்கண் கூறிய செயலும் சிவன் செய்யும் செயலேயாம்` என்பது கருத்து. `வீடுறக் குருவாம்` என இயையும்.
இதனால், மேற்கூறிய பொருள் தக்கதோர் ஏதுக்களால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர்.

குறிப்புரை :

`அவரைப் பின்பற்றி ஒழுகுதலே அறிவுடைமை யாகும்` என்பது குறிப்பெச்சம். இம்மந்திரப் பொருளையே,
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள், யாவரையும்
வஞ்சித்தோம் என்றுமகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு. -நீதிநெறி விளக்கம் - 93.
எனப் பின்வந்த பெரியார் ஞானப் பகுதியில் எடுத்தருளிச் செய்தார். மெய்கண்ட தேவரும்.
தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது. -சிவஞானபோதம் சூ. 12- அதி, 4
என ஞானியரை நோக்கியே அறிவுறுத்தமை காண்க. ``கண்காணி`` என்பது நேரே நோக்கிக் காவல் புரிபவனைக் குறிக்கும் பெயர். ``ஆக`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், `ஞானியர் தாம் அறிந்து மேற்கொள்ளும் கூடா ஒழுக்கத்தை இறைவன் பொறான்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.

பொழிப்புரை :

`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக.
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம். பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார். ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகு வோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும் அவன் நோக்கி யிருந்து அவரவர்க்குத் தக்க பயனைத் தருவான்` என்னும் குறிப்பினது. பின்னர், ``மைதாழ்ந்திலங்கு மிடறுடையோன்`` என்றமையால், முன்னர், ``செய்தான்`` என்றதும் அவனையேயாயிற்று. `நல் லொழுக்கத்தினாலே நற்பயன் பெறுதல் கூடுவதாய் இருக்க அதனை விடுத்துத் தீயொழுக்கத்தில் ஒழுகுதல் அறியாமை` என்பது கருத்து. மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது.
இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

சற்குரு அருளால் ஞானம் பெற்றவர்கட்கும் மறு பிறப்பு உண்டு` எனக் கூறுதல் அதன் பின்பும் பத்திச் செய்கைகளைத் தமக்கு விருப்பமின்றி உலகத்தார் பாராட்டுதற் பொருட்டே செய்து அதனால் புகழும் பொருளும் பெற்றுக் காலத்தைக் கழிக்கின்ற அந்தப் பித்தர்களுக்கேயாம். அவ்வாறின்றிப் புகழ் பொருள் முதலியவற்றுள் ஒன்றையும் விரும்பாது பத்திச் செய்கைகளைத் தமது அன்பானே செய்து ஒழுகுமாற்றால் மறுபிறப்பாகிய பயிருக்கு வித்தாய் அமைகின்ற ஆகாமிய வினையை வித்தைக் குற்றியுண்பார்போல வலுத்து நில்லாதபடி அழித்து, மறுபிறப்பாகிய பயிர் விளைக்கின்ற நெறியைப் பாழாய்க் கிடக்கும்படி செய்கின்ற அந்தப் பித்தர்களுக்கு ஒருஞானறும் மறுபிறப்பு உண்டாதல் இல்லை.

குறிப்புரை :

``ஞானத்திற்கு உலகம் பேய்; உலகத்திற்கு ஞானம் பேய்`` என்பது ஒரு பழமொழி. அதன்படிஞானிகளும், அஞ் ஞானிகளும் ஒருவரையொருவர் பேய் பிடியுண்டவர்களாக, அல்லது பித்தர்களாகக் கருதுதல் தெளிவு. அம்முறையில் இம்மந்திரத்தில் இருவகைப் பித்தர்களைக் குறிப்பிட்டு, ஒருவகைப் பித்தர்கட்கு மறு பிறப்பு உண்டாதலையும் மற்றொருவகைப் பித்தர்கட்கு மறுபிறப்பு உண்டாகாமையையும் வலியுறுத்தினார், ``பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி`` (தி.6 ப.6 பா.4) எனமறுபிறப்பில்லாத பித்தரை, ``பெரும் பித்தர்`` என அருளிச் செய்தமை அறிக.
``தென்பாலுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்; பெரும்பித்தன் காணேடி``
-தி.8 திருச்சாழல் 9
எனப்பட்ட அந்தப் பெரும்பித்தனுக்கு ஆட்பட்டோர் தாமும் பெரும் பித்தர் ஆதலல்லது, வேறு என் ஆவர்? `கழிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மத்தகர் - மத்தச் செயலைச் செய்பவர். மத்தம் - உன்மத்தம்; பித்து. ``அன்றோ`` என்றது தேற்றமாதல் குறித்தது. ``வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்`` என்றது ஒட்டணி.
இதனால், `ஞானம் பெற்றோர் அந்நெறியில் உறைத்து நின்று நிட்டை கூடாது, கூடாஒழுக்கம் உடையராயின் ஞானம் பெறாதவ ரோடு ஒத்தவரேயாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.

பொழிப்புரை :

குருவருளைப் பெற்றபின்னும் இறைவனை எவ்விடத்தும் ஒருபெற்றியாகவே உணர்ந்து அவனது திருவருளில் மூழ்கி நிற்றலாகிய ஞானத்தில் ஞானமாம் அசைவிலா நிட்டை நிலையை எய்த மாட்டாதவரே அவனைக் காலம், இடம் முதலிய, சிறப்புக்கள் காரணமாக ஏகதேசமாக உணர்ந்து அவ்வாற்றான் வழிபடும் வழிபாடுகளை நிறைவேற்ற முயல்வர். மேற்கூறிய அந்த நிட்டை நிலையை எய்தினார்க்கு எவ்விடத்தும், எக்காலத்தும் இறை யருட் சிறப்பு அவரது ஞானத்தினுள்ளே இனிது விளங்கியே நிற்கும்.

குறிப்புரை :

தமிழ் மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் செய்கின்றார் ஆகலானும், அம்மக்கட்கு இடம் தென்றிசை ஆகலானும், `அவர் வட திசையைச் சிவனது திருவருட்சிறப்பு இனிது விளங்கும் திசையாகக் கொண்டு முயன்று பயன்பெறும் மரபு நிலை அவருள் நிட்டை எய்தினோர்க்கு வேண்டா` என்றார். எனவே, `நிட்டை கூடப் பெறாது, ஏனைச் சிந்தித்தல் தெளிதல்களில் நின்றோர் அதனை இகழலாகாது` என்பதும் கூறினாராயிற்று. `வேண்டா` என்றது, `அவர் அது செய்யாமை குற்றம் அன்று` என்றபடி. இஃது இம் மந்திரத்தின் கருத்துரை. இதன் சொற்பொருள் வெளிப்படை. ``ஞானம்` என்றது ஞானத்தில் ஞானத்தை. ``அறிவு`` என்றதும் அதனையே. ஒன்று - ஒருசிறப்பு. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``இல்லை`` என்றது பொதுமை நோக்காது உண்மை நோக்கிக் கூறியது. வையகம் - புண்ணியத் தலங்களும், தீர்த்தங்களும். ``அகத்தில்`` என்றது, `இருந்த இடத்தில்` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
இதனால், `ஆவன இவை, ஆகாதன இவை` என்னும் வரை யறை அவற்றை மேற்கொள்வாரது நிலை பற்றியதாதல் கூறப்பட்டது.
ஏதேனும் காலமுமாம், ஏதேனும் தேசமுமாம்;
ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும்
செய்வான் ஒருவனுமாம்; செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது.
-திருக்களிற்றுப்படியார் - 60.
எனவும்,
``தேசம் இடம் காலம்திக் (கு) ஆசனங்கள் இன்றிச்
செய்வதொன்று போற்செய்யாச் செயலதனைச் செய்து``
-சிவஞானசித்தியார், சுபக்கம், 285
எனவும் வரும் சாத்திர மொழிகளையும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

பொழிப்புரை :

காயக் குழப்பன் - உயிர்களின் உடம்புகளை அவற்றின் வினைக்கேற்ப உழல் விப்பவன். காயநன்னாடன் - உயிர்க்கு உயிராய் நிற்றலால் உயிர்களின் உடம்புகளைத் தனது இடமாக உடையவன். காயத்தினுள்ளே கமழ்தல் - ``உற்ற ஆக்கையின் உறுபொருளாய் நறுமலர் எழுதரு நாற்றம்போல்`` (தி.8 அதிசயப்பத்து, 9) உள்நோக்கி உணர்வார்க்கு நுண்ணிய இனிய பொருளாய் வெளிப்படுபவன்.
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

`கருத்து அறியார் தேடித் திரிவர்கள்` என்பதன் பின், அவர்க்கு அது வேண்டுவதே` என்னும் குறிப்பெச்சம் வரு வித்துரைக்க. அதனானே, `கருத்தறிந்தார்க்கு அது வேண்டுவதின்று என்பது போந்தது போதரவே அவர் அங்ஙனம் திரியாமை அவர்க்குக் குற்றமாகாதாயிற்று. ஆகவே, அறியதார் அறிந்தார் போன்று ஒழுகுதல் கூடா ஒழுக்கம் ஆதல் அறிக.
இதனால், `கீழ் நிலையில் உள்ளோர் மேல்நிலையில் சென்றோர் போல ஒழுகுதல் கூடாது` என விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கண்காணி யாகவே கையகத்தே எழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் றானே.

பொழிப்புரை :

உயிர்களின் கண்ணைத் தன் இடமாகக் கொண்டு அவற்றிற்கு அக்கண்போலச் சிறந்து நிற்கின்ற இறைவன் ஞானிகட்கு அவர்தம் புறக் கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான்.அகக்கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான். ஆகையால் அவர்களது செயல்திறங்களை இடைவிடாது நோக்கி அவற்றிற்கு ஏற்ற பயனை அருளுதல் அவனுக்கு இயல்பாகும்.

குறிப்புரை :

``காணி`` நான்கனுள் முன்னைய மூன்றும் பகுபதம்; இறுதி ஒன்றும் பகாப்பதம். பகுபதங்களில் வந்த இகர விகுதி மூன்றனுள் முன்னைய இரண்டிலும் செயப்படுபொருண்மையிலும், இறுதி ஒன்றும் வினைமுதற் பொருண்மையிலும் வந்தன. காணி - தனக்குரிய இடம். காணி உடையவனை, ``காணி`` என உபசரித்துக் கூறினார். `உயிர் தனது வலக்கண்ணில் சிறந்து விளங்கும்` என்றும் `அவ்விளக்கத்தில் இறைவனும் சிறந்து விளங்குவான்` என்றும் கூறும் உபநிடத வழக்குப் பற்றி(பிருகதாரணியம், அத்தியாயம் 5) இறைவனை, ``கண்காணியாகிய காதலன்`` என்றார். ``கண்ணே! கண்ணிற் கருமணியே! மணியாடுபாவாய்`` (தி.6 ப.47 பா.1) என்னும் திருத்தாண்டகமும் இங்கு நோக்கத் தக்கது. ஈற்றடியை முதலில் கூட்டியுரைக்க. புறத்து விளங்குதலை, `கையகத்தே எழும்` என்றும் அகத்து விளங்குதலை ``கருத்துள் இருந்திடும்`` என்றும் கூறினார். வழி - தீரும் வாயில். ஞானியர் தற்போதம் நிகழ்ந்து செய்யின் அவற்றை அவர் செயலாகவும், தற்போதம் இழந்து செய்யின் அவற்றைத் தன் செயலாகவும் கொண்டு அவற்றிற்கு ஏற்ற பயனைத் தருதலையே இங்கு, ``வழி செய்யும்`` என்றார்.
இதனால், `ஞானியரும் தற்போதம் நீங்காநிலையில் அற நெறிபிழைப்பாராயின் அஃது அவர்க்கு ஏனையோர்க்குப் போலவே கூடா ஒழுக்கமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை
தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்பறி யாரே.

பொழிப்புரை :

திருவருட்சத்தி பதிவு எல்லோர்க்குமன்றி ஒரு சிலர்க்கே உண்டாவதால் உண்மை நூல்களை ஓதுதலை சிலர் செய்தும், மற்றும் சிலர் சிவனைக் கிரியா முறையில் வழிபடுதலைச் செய்தும், மற்றும் சிலர் யோகம் புரிதலைச் செய்தும் மற்றும் சிலர் சிவனது உண்மை நிலையைக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல்களால் உணர் தலைச் செய்தும் நிற்கின்றனர். ஆகவே, மிகப்பலர் இவற்றுள் ஒன்ற னையும் செய்யாது சிவவேடத்தை மட்டும் புனைந்து கொண்டு திரி கின்றனர். இஃது என்ன முறைமை!

குறிப்புரை :

முதற்கண் `ஒரு சிறையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. மூன்றாம் அடியிறுதியில் `ஆகின்றனர்` என்னும் பயனிலை அவாய் நிலையான் வந்து இயைந்தது. எதிர்காலத்தாற் கூறாது. இறந்தகாலத்தாற் கூறியது அவர் அந்நிலையில் முற்றினமை குறித்தற்கு. ``என் இது`` என்ற குறிப்பால், `வேடத்தை மட்டும் புனைந்துகொண்டு திரிகின்றனர்` என்பது இசையெச்சமாய் வந் தியைந்தது. `சத்திநிபாதம் தானும் ஒரு வகையாகாது பலவகையாய் நிகழ்தலின், சிவநெறியில் நிற்போரும் பலதிறத்தராயினர். அது முறைமையே, சத்திநிபாதம் வாயாதவரும் வாய்ந்தார்போல நடித்தல் என்னமுறை` என்றபடி. `அது முறைமையன்றாகவே அதன் விளைவை அவர் பெறுவார்` என்பது கருத்தாயிற்று. அதிகாரம் சத்தி நிபாதர்களைப் பற்றியதாகவும் இடையே பிறரைப்பற்றியும் கூறினார், `சத்திநிபாதரும் தற்போதத்தால் ஏலாத செய்யின் சத்தி நிபாதர் அல்லாதவரோடு ஒருங்கொத்தவராவர்` என்பது உணர்த்துதற்கு, இதுவே இம்மந்திரத்தின் திரண்ட கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 8

காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி
காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி
காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :

முகக்கண்கள் புறப்பொருளைக் காணுதல் இயல் பாயினும் சில கண்கள் அப்பொருள்களைக் காணமாட்டாதன ஆதற்குக் காரணம் அக்கண்ணில் ஒளிக்கு மாறாகப் படலம் இருப்பதே யாகும். இனி முகக்கண் உடையார்க்கே யன்றி அக்கண் இல்லா தவர்க்கும் அகக்கண்ணாகிய அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாம் சிவ ஒளியைத் தற்போத வழியாற் காணாது அருள் வழியாகக் கண்டவரே கள்ளத்தனமாகச் செய்யும் செயல்களைச் செய்யாது ஒழிவர். அந்தச் சிவ ஒளி அகக்கண்ணாகிய ஞானக் கண் இல்லா தவர்க்குக் காணப்படாத ஒன்றேயாய் இருக்கும்.

குறிப்புரை :

`அதனால் அவர்கள் வினை விட்டொழியாது செய் பவரேயாவர்` என்பது குறிப்பெச்சம். `வறியவர்கட்கு அடகுதான் சோறு` என்றல் போல, ``காணாத கண்ணில் படலமே கண்ணொளி`` என்றார். அங்ஙனம் கூறியது, காணுதற்குரிய கண் காணாதொழிதற்குக் காரணங் கூறியவாறு. புறக்கண் பற்றிய இக் கூற்று உவமையாய், அகக்கண்ணை மறைத்து நிற்கும் மலம் காரணமாச் சிவ ஒளியைக் காண்டல் இயலாமையை விளக்கிற்று. இரண்டாம் அடியில் ``காணாதவர்`` என்றது அகக்கண்ணால் காணாதவரையேயாம். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.
இதனால், `கூடா ஒழுக்கம் உடையார் ஞானியர் ஆகார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.

பொழிப்புரை :

பித்துக் கொண்டவன் அதற்காக மருத்துவன் தரும் மருந்தால் பித்து நீங்கித் தெளிவுற்று உடம்பை முன்போலத் தறிகெட்ட நிலையில் செலுத்திக் கெடுக்காமல் இயற்கை நிலையில் செலுத்தி ஏனையோர் குழாத்தில் தானும் ஒருவனாய் ஒன்றுபடுதலைப் போலவும், படலத்தால் மறைக்கப்பட்ட கண்ணும் அவ்வாறே மருத்துவன் செய்யும் சிகிச்சையால் படலம் நீங்கித் தனது ஒளி கிடைக்கப் பெறும் அத்தன்மையைப் போலவும் அஞ்ஞானத்தால் அறிவு மயங்கி, `யான், எனது` எனச் செருக்கித் திரிந்த யான் எம் ஆசிரியாராகிய நந்திபெருமான் ஞானத்தை அருளியதனால் அறிவு தெளிந்து செருக்கொழிந்து அருள் வழியில் ஒழுகி ஏனைய அருளாளரது குழாத்தில் சேர்ந்து அவர்களில் ஒருவன் ஆயினேன்.

குறிப்புரை :

`அதனால் யான்எனது என்னும் செருக்கால் கூடா ஒழுக்கத்தை மேற்கொள்ளுதலை இலன் ஆயினேன்` என்பது குறிப் பெச்சம். `ஆகவே, இப்பேற்றினைப் பெறாதவர் கூடாவொழுக்கத்தை ஒழிதல் இயலாது` என்பது கருத்தாயிற்று, உவமையில், `பிரகிருதி உய்த்து ஒன்றுமாபோல்`` எனக் கூறினமையால், பொருளிலும் அதற்கு ஏற்புடையன கொள்ளப்பட்டன. ``பிரகிருதி`` என்றது உடம்பை; சிவஞான போதத்திலும் (சூ. 3 அதி.5), ``ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பம் சீவனம் பிரகிருதிக் கின்மையின்`` என உடம்பு ``பிரகிருதி`` என்றது காண்க.
இதனால், `தற்போதத்தால் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளு தற்குக் காரணம் திருவருளின்மையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார்
சுராமய முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.

பொழிப்புரை :

கள்ளை மிக உண்டலால் உடல் அக்கள்மயமே யாய் இருத்தலை விரும்பும் வஞ்சமனத்தவர் ஞானிகட்குச் சிவமயமாகத் திகழ்கின்ற உலகப் பகுதி எட்டினையும் அருள்மயமாக எண்ணி அடங்குதலாகிய ஞானவிழிப்பைக் கொள்ளாது அஞ் ஞானத்தில் உறங்குவோராய்த் தாம் குற்றம் சிறிதும் இல்லாத தூயராய் இருத்தல் வேண்டும் என்பதைச் சிறிதும் நினையாதே கெடுகின்றனர்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்துரைக்க. பெயர்தல் - விளங்குதல். உலகப் பகுதி ஐம்பெரும் பூதமும், `ஞாயிறு திங்கள்` என்னும் இருசுடர்களும், உயிர்களும் எட்டுப் பகுதியுள்ளே அடங்குதலின், ``எட்டும்`` என முற்றும்மை கொடுத்து ஓதினார். உடலை உயிர் இயக்குதல்போல் இவற்றை இறைவன் இயக்கி நிற்றலின் இந்த எட்டும் அவனுக்குத் திருமேனிகளாகச் சொல்லப் படுதல் பற்றி இவற்றை, ``பிரான் மயமாகப் பெயர்ந்தன`` எனவும், அதனானே அவை அருள்மயம் ஆதல் பற்றி, `பராமயம் என்றெண்ணி உணரார்`` எனவும் கூறினார். பரா - பரை; சத்தி; அருள். ``உணரார்`` என்பது முற்றெச்சம். நிராமயம் - நோய் இன்மை; அஃது இங்குக் குற்றம் இன்மையைக் குறித்தது. நிராமயம் ஆகும்படி நினைத்தலை ஒழிந்தனர்` என்க. இது ஞானிகட்கு ஆகாமைபற்றி இவ்வாறான நிலையில் நிற்பவர்கள் ஞானத்தில் விழியாது அஞ்ஞானத்தில் உறங்குபவராகவே கூறினார். கள்ளால் களிப்பெய்தினார் நன்று தீது அறியாது மயங்கிக் கெடுவர் ஆதலின், கள்ளுண்டல் மற்றும் பலகுற்றங்கள் விளைதற்கு வழியாகும் என்பது கருத்து.
இதனால், `கள்ளுண்பார் ஞானியராகாது அஞ்ஞானியரே யாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு)
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.

பொழிப்புரை :

`பலவாய் உள்ள உயிர் ஒன்றாய் உள்ள சிவத்தோடு இரண்டறக் கலத்தலே முடிநிலைப் பயன்` என்பது எல்லோர்க்கும் உடன்பாடு. ஆயினும், ஒரு பொருளாய் உள்ள பிரமமே அவிச்சை யால் பலவாய் உள்ள உயிர்களாக மயங்கி அறியப்பட்டு, அவிச்சை நீங்கியவுடன் உயிர் முன்போல ஒரு பொருளாகிய பிரமத்தோடு ஒன்றாய்விடும் எனக் கூறுகின்றவர்கள் அவிச்சைக்குக் காரணம் கூறாமையால் உயிர் பிரமமேயான நிலைநிலைத்தல் இன்றிப் பிரமமும் உயிரும் வேறு வேறாய் நிற்கும் அவிச்சை நிலையே நிலைபெறுவ தாகும். ஆகவே அவர்கட்கு இரண்டும் ஒன்றாகும் நிலை என்றும் கிட்டுவதின்றாம் இனி `ஒன்றாகிய பரமனும், பலவாகிய உயிர்களும் என்றும் வேறு வேறாக இருத்தல் அன்றி, ஒன்றாதல் இல்லை` எனக் கூறுவார்க்கு அவ்வாறு நிற்றலே பயனாவதன்றி, முதற்கண் கூறிய முடிநிலைப் பயன்கிட்டாதாம்.

குறிப்புரை :

அதனால் `அவ்வாறெல்லாம் கூறுவாருடன் எதிர்வாதம் செய்து பொழுதைப் போக்குதலும் ஞானியர்க்குக் கூடா ஒழுக்கம்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில் ``ஒன்று, இரண்டு`` என்றது, `முதலாவது, இரண்டாவது` எனவும், ஏகாரம் தேற்றம். அது ஈற்றடியிலும் சென்று இயையும். ஆகவே, இரண்டிடத்தும் ``ஒன்றிரண்டு`` என்பன பயனிலையாம் ஆகலின், அவற்றிற்கு எழுவாய் வருவித்து, `ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே என்று உரைதருவார்க்கு எலாம் ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே (அவை ஒன்றாதல் இல்லை) என்க. ``ஒன்றோடொன்றானதே`` என்பதில் முதற்கண் நின்ற ஒன்று சிவம். ஒன்றாதலுக்கு உயிர் என்னும் எழுவாயும், `ஆனதே முடிநிலைப் பயன்` என்னும் சொல்லெச்சமும் வருவித்து முதலில் கூட்டியுரைக்க.
இதனால், உண்மை ஞானியர்க்குப் பிற மதத்தவரோடு தருக்க வாதம் செய்து பொழுதை வீண்படுத்துதலும் குற்றமாதல் கூறப்பட்டது. சாத்திரங்களில் சொல்லப்படுகின்ற பிற மத மறுப்புக்கள், அம்மதம் பற்றி மயங்கும் மாணாக்கரை நோக்கி விளக்கம் தருவனவேயாகும்.

பண் :

பாடல் எண் : 12

உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும்
அயரறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.

பொழிப்புரை :

உயிர் உடம்பில் இருப்பதனால்தான் அந்த உடம்பு முழுதிலும் அறியுந்தன்மை காணப்படுகின்றது. (அத் தன்மையால் உடல் வீழ்ந்தொழியாது வாழ்ந்து செயற்படுகின்றது) உயிர் உடலை விட்டு நீங்கினால் உடலைச் செயற்படுத்துகின்ற அந்த அறிவு இல்லையாய்விடும். அறிவு இல்லையானால், வேறு எல்லா அமைப்புக்களும் நிறைந்துள்ள உடம்பு அவ்வமைப்பால் பயனின்றி வீழ்ந்து அழியும். ஆகவே `உயிர்` எனப்படுவது உடம்பிற்கு வேறாதல் தெளிவாகலின் அத்தகைய உயிரும் உடம்பும் ஒன்றி நிற்கும் பயப்பாடு வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கவும் சிலர் உடம்பையே தாமாக மயங்கிக் கூடா ஒழுக்கத்தினை மேற்கொள்கின்றனர்.

குறிப்புரை :

`இஃது ஓர் அறியாமை` என்பது குறிப்பெச்சம். ``நின்றால்`` என்றமையால், `நில்லாவிடில்` என்பது வருவிக்கப் பட்டது. அயர்தல் - செயலாற்றுதல்; விருந்தயர்தல், விழா வயர்தல் முதலியன காண்க பயிர் - `பயனைத் தருவது` என்னும் பொருட்டாய் நின்றது. ``கிடந்து`` என்னும் எச்சத்தைத் திரித்து, உம்மையை மாறிக் கூட்டி, ``கிடக்கவும்`` என உரைக்க. உள்ளம் - ஆன்மா. பாங்கு - அதன் தன்மை.
இதனால், `குருவருளால் தம்மையும், தலைவனையும் உணர்ந் தாராயினும் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளின் உணராதவரேயாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும்
உயிரை அறியின் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

பொழிப்புரை :

உயிர் உடம்பு போல அன்றி அதனின் வேறாய் இருத்தலால்தான் அந்த உடம்பு முழுதும் அறிவுத் தன்மை காணப் படுகின்றது. இதனை ஆய்ந்தறியும் அறிவே மெய்யறிவாகும். உயிர் தான் உடம்போடு சேர்ந்த அன்று முதலாக உடம்பு முழுவதையும் தனது அறிவால் அகப்படுத்தி ஆண்டு வருகின்ற அந்தச் செயலை அவ் வுயிர்க்கு உயிராய் நின்று செய்து வருகின்ற ஒரு பெரும் பொருளை அறிபவர் உலகத்தில் ஒரு சிலரே.

குறிப்புரை :

``வேறாய்`` என்பது, `வேறாக` என்பதன் திரிபு. ``அன்று`` என்பதன் பின் `முதலாக` என்பது எஞ்சி நின்றது. உணர்வை அயர்தல், அறிவைச் செயற்படுத்துதல். ஆங்கு - அவ்வாற்றால் என்றது, `அவ்வுண்மையை` என்றபடி. அறியாமை` சிறிதும் அறியாமையேயன்றி, முற்ற அறியாமையையும் குறித்தது; `முற்ற அறியாதவரே கூடா ஒழுக்கத்தினை உடையராகின்றனர் என்பது கருத்து.
இதனால், முன்னை மந்திரத்திற் கூறிய பொருள் வேறோ ராற்றான் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும்
சிலஆணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை யறிவதே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களின் தொகுதியாகிய தேரினை நிலைபெறச் செய்கின்ற அச்சாணியாய் உள்ளவன் ஒளியாய் உள்ள அனாதி முத்தனாகிய சிவனே. அவன் நிவிர்த்தி முதலிய ஆதார கலைகள் ஐந்திலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்றான். அவ் வைந்து கலைகளுக்கு உட்பட்டுள்ள இடங்களில் சிற்சிலவற்றிற்குத் தலைவராய், `தேவர்` எனப்பெயர் பெற்று விளங்கும் அனைவர்க்கும் தலைவனாய் உள்ள அந்தப் பெருமானையே ஒருவன் தன் தலைமேல் வைத்து ஒழுகுவானாயின், அவன் அவ்வாறு ஒழுகுதலே தனது இயல்பை உள்ளவாறு அறிந்துஒழுகும் ஒழுக்கமாகும்.

குறிப்புரை :

`சித்தன், முத்தன்` என்பன ஒருபொருட்சொற்கள். ஆதிமுத்தர் அனைவர்க்கும் முன்னே முத்தனாய் உண்மைபற்றி அவ்வானாதி முத்தனை, ``உத்தம சித்தன்`` என்றார். நிலம் - ஆதாரம். அஃது ஏனை ஐந்து அத்துவாக்களுக்கும் ஆதாரமாய் உள்ள கலைகளைக் குறித்தது. நேர்மை - நுண்மை. `அத்தேவர் பிரானை` எனச் சுட்டுவருவித்துக்கொள்க. வாணி, `மொழி` எனப் பொருள்தரும் வடசொல். அது மொழிவடிவாய் விளங்கும் தியானத்தைக் குறித்தது. இவ்வாறு ஒழுகுவோர் கூடாவொழுக்கத்தைக் கொள்ளார் என்பதாம்.
இதனால், `எந்நிலையிலும் கூடா ஒழுக்கம் திருவருள் நெறிக்கு ஏலாததே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

தானந்த மாமென நின்ற தனிச் சுடர்
ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.

பொழிப்புரை :

மாணவகனே, நீ `எல்லாவற்றையுங் கடந்துவிட்ட எனக்கு இனி அறம் பாவங்கள் எங்குள` எனச் செருக்கி, தேன் துளியால் வரும் இன்பம்போல மிகச்சிறியனவாய்ப் பெறப்படுகின்ற சிற்றின்பத்தைப் பெறும் செயலை அறவே ஒழி. அவ்வாறு ஒழித்தால்தான் சிவனது அளவில்லாத இன்பத்திற்கு ஏதுவாகிய அவனது அருள் முற்றக் கிடைக்கும்.

குறிப்புரை :

இது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்ட பொருள், கோன் - தலைவன்; பதி; சிவன். முன்னிரண்டடிகளில் அவனது பெருமை சொல்லப்பட்டது. அஃதாவது, உலகம் அனைத்திற்கும் தானே முடிவிடம்` என வேதம் முதலிய பல உண்மை நூல்களாலும் சொல்லப்பட நின்ற விளக்காயும் எல்லாப் பொருட்கும் பின்னும் முன்னுமாய் விளங்கும் ஒளியை யுடைய விளக்காயும் உள்ளவன் என்பது. ``ஊன்`` என்றதும் உடம்பு முதலாய உலகங்களையே, `அவற்றிற்கு அந்தமாய்ப் பின் ஆதியாகி உலகமாயினான்` என்க. `எஞ்ஞான்றும்தான் சுதந்திர அறிவனே யாவதல்லது பிறிதொன்று விளக்க விளங்கும் பரதந்திர அறிவினன் அல்லன்` என்றற்கு `சுடர்` என்பதனை இருகாற் கூறினார். ``தேன் அந்தம்`` என்பதில் ``அந்தம்`` என்றது, `விரைய முடியும் துளி` என்றபடி. அவ்விடத்தும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. இங்கு ``குணம்`` என்றது ஆனந்தத்தையே, ``உணர்ந்தார்க் குணர்வரியோன்தில்லைச் சிற்றம்பலத்தொருத்தன் - குணந்தான் வெளிப்பட்ட ... ... ... ... இக்கொடியுடை தோள்`` (தி.6 ப.1 பா.5) என்பதில் ``குணம்`` என்றது போல்,
இதனால், `எஞ்ஞான்றும் சிற்றின்பத்தில் இச்சை செய்பவர் திருவருளை முற்றப் பெறார்` என்பது கூறப்பட்டது. ``வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக மாற்றி`` (தி.8 திருக்கோவையார் , 9) என்பதிலும் இக்கருத்தே அருளிச் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முத லாகிய தத்துவம் ஆமே.

பொழிப்புரை :

``காட்சியால்`` உணரப்படும் உடம்பேயன்றிக் கருதலால் உணரப்படும் உயிரும் உடம்பினுள்ளே உண்டு என்னும் உண்மையையும், `அவ்வுயிருக்குத் தலைவராகச் சொல்லப் படுவோர் பலருள்ளும் கயிலைக் கடவுளாகிய சிவனே முழுமுதல் தலைவன்` என்னும் உண்மையையும் அறிகின்றவர் உலகத்து அரியர். இனி அவ் வுண்மையை உணர்ந்தவர்களும் அவற்றை உணர்வதற்குமுன் கொண்டிருந்த ஆசை வழிப்பட்ட செயல்களை முற்றவிடுத்தால்தான், ஓர் உயிரும் எஞ்சாதபடி ஒவ்வொன்றிற்கும் முதலாய் உள்ள மெய்ப் பொருளின் விளக்கம் நிரம்ப உண்டாகும்.

குறிப்புரை :

உயிரை, `உன்னியுணரப்படும் முதல்` என்றமையால், `ஊன் - உடம்பு - கண்டுணரப்படும் முதல்` என்றது பெறப்பட்டது. உன்முதல், வினைத்தொகை. கல் - மலை, `எனும்` என்பதை ``ஈசன்`` என்பதனோடும் கூட்டுக. படிமுறையால் உணர வேண்டுதல் பற்றி இரு தொடராக ஓதினார். ஏறிய - ஏறியன. அஃதாவது `பழகிப்போன செயல்கள்` என்றபடி. `நன்குஏறிய` என்க. `நன்கு` என்பது கடைக் குறைந்து நின்றது. `நாமமும்` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று. நாமம் - பெயர்.
இதனால், `அறிதற்கரிய உண்மைகளை அறிந்தவராகிய மெய் அறிவாளரும் கூடா ஒழுக்கம் உடையாராயின் அவ்வறிவால் பயன் எய்தார்` என்பது கூறி முடிக்கப்பட்டது.
[இம்மந்திரத்திற்குப் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற ``இந்தியம் அந்தக் கரணம் இவை`` எனத் தொடங்கும் மந்திரம் அடுத்த தந்திரம் முதல் அதிகாரத்தில் இருந்ததாகும்.]

பண் :

பாடல் எண் : 1

வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.

பொழிப்புரை :

மக்கள் தமக்கு வரையறுக்கப்பட்டு அமைந்த வாழ் நாள் இத்துணையது என்று அறியமாட்டாதவராய் அன்றாடம் உண்டு வாழ்வதேயன்றி, அடுத்துவரும் ஆண்டிற்கும் உணவின் பொருட்டான முயற்சிகளை ஓயாமற் செய்வதிலேயே மனம் அமைதியுற்று விடுகின்றனர். இஃது அவர் பிரார்த்த வினைவிளைவாகிய துன்ப நிலையே என்பதையும் அவர் சிறிதும் அறிவதில்லை. இந்தப் பொய்யான இன்பத்திலே அவர் வீழ்ந்து கெடுதல் ஓங்கி எரியும் விளக்கை இனிய உணவென்று கருதிச்சென்று அதில் வீழ்ந்து மடிகின்ற விட்டிற் பூச்சியின் செயலோடு ஒப்பதாகும். அந்தோ? இஃது அவர் ஓர் அறியாமை இருந்தவாறு!.

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். நாற்றுதல் - நாற்றங்காலில் நாற்றுவிடுதல். ஒளி, ஆகுபெயர். விட்டிலை ஒப்புமைபற்றி, `ஈயல்` என்றார். இதன் ஈற்றடியில் காணப்படும் பாட வேறுபாடுகள் சில.
இஃது யாக்கை நிலையாமையை அறியாது உழலுதல் நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 2

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

பொழிப்புரை :

நாள்கள் மிக விரைவாக வந்து வந்து போவதை அறிந்திருந்தும் பலர் அந்நாள்களை வாது செய்வதிலே கழித்து விடு கின்றனர். ஒழுக்கத்தில் நில்லாமல் வாதுசெய்வதனால் அவர் என்ன பயனை அடையப் போகின்றனர்! ஒரு பயனும் இல்லை. ஒழுக்கத்தில் நின்றும், இறைவன் திருவடியை வணங்கியும் வருவராயின் நாளடைவில் இறையன்பு தோன்றி வளர அவனை அவர்நேரே அறிந்து இன்புறுவர். அதனை அவர் அறிகின்றாரில்லையே!

குறிப்புரை :

``வாது`` எனப் பொதுப்படக் கூறினமையால் உலகியல் பற்றிய வாது, மெய்ந்நெறி பற்றிய வாது என்னும் இரண்டும் கொள்ளப் படும். அதுபின்னர் ``நீதியில் நின்று`` எனவும், ``நின்மலன் தாள் பணிந்து`` எனவும் கூறியதனாலும் விளங்கும். முன்னர் அவ் விரண்டையும் கூறினமையால், பின்னர் ``ஆதியை`` என எடுத் தோதினார். ``நின்றும், பணிந்தும்`` என்னும் வினையெச்சங்கள், ``அறியகில்லார்கள்`` என்பதில் உள்ள அறிதல் வினையோடு முடிந்தது. ஆகவே, ``அறியகில்லார்கள்`` என்பது `அறிதலைச் செய்ய கில்லார்` எனப் பொருள் தந்தது.
இது, மேற்கூறிய வினைத்துயரை அறிந்து அதனினின்றும் நீங்கும் வழியை எடுத்தோதி அதனை மனிதப் பிறப்பை எய்தியும் பெறாது கெடுகின்றவரது கேடு நோக்கி இரங்கியவாறு,
``பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்``
எனப் பின்னரும் இரங்குவார்.

பண் :

பாடல் எண் : 3

கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி
உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

நெல்லைக் கடனாகவேனும் வாங்கிக் குற்றி, குற்றிய அரிசியைக் கொண்டு ஒரு சாண் வயிற்றினுள் இருக்கும் சிறு கருவி களின் வேகத்தைத் தணிக்கும் முகத்தால் உடம்பைப் பாது காக்கின்றவர்களும் தங்களை `உயிர்` என்று சொல்லிக்கொண்டு திரி கின்றார்கள். அவ்வாறு திரிகின்றவர் தம்மைப்போன்றோர் பலரது உடம்புகளும் முடிவில், மலைச்சாரலில் பற்றி எரிகின்ற தீப்போன்ற பெரிய தீயை உடைய முருட்டணையில் ஏறிப் பின் அதினின்றும் இறங் காமல் அதனையே இடமாகக்கொண்டு கிடந்து ஒழிந்துபோதலைப் பல முறை கண்டிருந்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்துதல் இல்லை.

குறிப்புரை :

இவரை, `உயிர்` என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும் என்பது குறிப்பெச்சம். ``உயிரா`` என்பது பாடமாயின், `உயிர்த்து`, அஃதாவது `மூச்சுவிட்டுச் சீவித்து` என உரைக்க. இறுதியில், `அறியார்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது. கடனாகவும், என்னும் ஆக்கச் சொல்லும், உம்மையும் தொகுத்தலாயின. குற்று, `குறு` என்பது அடியாக வந்த வினையெச்சம். அவ்வெச்சம் இக்காலத்தில் `குற்றி` என வழங்குகின்றது. குறுதல் - உரலில் இட்டு உலக்கையால் குற்றுதல். குத்துதல் - கையை முட்டியாகப் பிடித்துக் குத்துதல். இவ் வேறுபாடு உணரத் தக்கது. கை - சிறுமை. கையர், உடலார் - என்பன இழிவு நோக்கி உயர்திணையாகக் கூறப்பட்டன.
இது ``நாடாமை, நாணின்மை, நாரின்மை, யாதொன்றும் பேணாமை`` என்னும் பேதையார் தொழில்களில் நாடாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 4

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

பொழிப்புரை :

தனக்கு உண்மையிடமாகிய திருக்கயிலையின் பாங்கர் நிலவுலகத்து மக்கள் பொருட்டாகத்தான் நிலைநிறுத்திய கல்லால மர நிழலின்கண் இருந்து சிவன் படைப்புக் காலத்திலே முனிவர் நால்வர்க்கு அவர் விரும்பிய உடனே அருளிச் செய்த முதல் மொழிகள் அம்முனிவரிடமிருந்து நல்லோரால் வழிவழியாகப் பெறப் பட்டு உலகில் வழங்கா நிற்கவும் அவற்றைக் கேளாது பழித்து ஒதுக்கத் தக்கனவாகச் சிற்றறிவுடையரால் சொல்லப்பட்டு வழங்கும் மொழிகளைக் கேட்டு நிற்போர் அக்கேள்வியின் பயனாகத் தமது வன்மையையே மெய்ம்மையாகத் துணிந்து இடர்ப்படுகின்றார்களே!. இஃதென்ன அறியாமை!.

குறிப்புரை :

`மறைகள்` எனப்படும் முதல்நூல்கள் நான்கு - என்பதும், அவற்றைப் படைப்புக்காலத்தில் சிவபிரான் கல்லால மர நிழலின்கண் எழுந்தருளியிருந்து முனிவர் நால்வருக்கு அருளிச் செய்தான் - என்பதும், அந்நான்கு மறைகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்துவன என்பதும் தேவார திருவாசகங்களாகிய திருமுறைகளில் பல இடங்களில் பரவலாகவே சொல்லப்படுகின்றன. அவற்றுள் சிவன் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நால்வர்க்கு முதல் மொழி யாகச் சிலவற்றை மொழிந்தது ஒன்று மட்டும் இம்மந்திரத்தில் சொல்லப் பட்டது. மேற் கூறிய மறைகள் பற்றிய செய்திகளுள் ஒன்றேனும் இன்று வழங்கும் இருக்கு முதலிய ஆரிய நால் வேதங்களுக்கு ஆரியத்துள் ஓரிடத்தும் சொல்லப் படாமையாலும் இவ்வேதங்கள் நான்கும் அறம் முதலிய நாற்பொருள் பற்றிக் கூறாமையாலும் திருமுறைகளில் சொல்லப்பட்ட அம்மறைகள் இருக்கு முதலிய ஆரிய வேதங்கள் அல்ல என்பது தெளிவாதலால் அம்மறைகள் தமிழால் ஆயவையாய், விளங்கியிருந்து பின்னர் மறைந்தனவாகும் என்பர் ஆராய்ச்சியாளர். நீதிநூல் செய்த, ஔவையார் ``தேவர்குறளும்`` (நல்வழி) எனத் தொடங்கும் வெண் பாவில், ``திருநான்மறை`` என்றது திருமுறை களில் மேற்காட்டிய வாறாகச் சொல்லப்படும் தமிழ் மறைகளையே - எனவும், அஃது அவ்வெண்பாவில் குறிப்பிடப்பட்ட நூல்கள் யாவும் தமிழ் நூலாகவே இருத்தல் பற்றியும் அறியப்படும் - எனவும் நிலை நாட்டியவரும் உண்டு. (திரு. கா. சுப்பிரமணியபிள்ளை, எம். ஏ., எம். எம். எல்., திருநான்மறை விளக்கம்).
பரம் - மேன்மை. அது காலத்தால் அனைத்திற்கும் முன்னாக வெளிப்பட்ட மொழிகளைக் குறித்தது. பிறமொழிகளை, ``பழி மொழி`` என்றதனால், `இம்முன் மொழிகள் புகழ்மொழி` என்பது, பெறப்பட்டது. இருக்கு முதலியஆரிய நால்வேதங்களை ஆன்றோர் முன்மொழிகளாகத் தழுவிக் கொண்டமையால், ``பழிமொழி`` என்றது அவற்றிற்கு மாறாக எழுந்த நூல்களையேயாம். அவை உலகாயத சமண பௌத்த சமய நூல்களாம். அவை முற்றிலும் வேதத்திற்கு மாறாவன. வாமம், பாசுபதம், காளாமுகம் முதலிய சமயங்களின் நூல்கள் வேதத்திற்கு ஒருபுடை மாறா வனவாம். உண்மை நூல்கள், `சிவனது ஆற்றலே மெய்ம்மை` எனக்கூற, ஏனைய நூல்கள் அவ்வாறு கூறாமையால், அவற்றின்வழி நிற்போர் உயிர்களாகிய தமது ஆற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் பற்றி, ``உரம் தன்மையாக ஒருங்கிநின்றார்களே`` என்றார். உயிர்களின் ஆற்றல் உலகியலிற்றானே சிலவற்றிற் செல்லமாட்டாமை கண் கூடாகவும் அவ் வாற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் அறியாமை என்பது கருத்து. `ஏனைய எவ்வாறாயினும், இத்தன்மையோர் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கார்` என்பதே இங்குக் கருதப்பட்டது.
இது, ``நெறியல்லா நெறிதன்னை நெறியாக``க் (தி.8 அச்சோப்பதிகம்) கொள்வாரை நோக்கி இரங்கியவாறு. இவர்
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறிய சரண் ஆதல் திண்ணம்`` -தி.4 ப.11 பா.9
என்பதை அறியார்.

பண் :

பாடல் எண் : 5

நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

அனைத்திற்கும் முதல்வனாகிய எங்கள் சிவ பெருமான் உலகியலில் நிலைத்த புகழையும், நிரம்பிய மேலான தவத்தையும், அதன் பயனாகிய உண்மை ஞானத்தையும் தன்னை யடைந்த அடியார்களுக்கே அளித்தருள்வான் ஆகையால், உலகர் அவற்றை இழத்தற்குக் காரணம் அவ்வடியவரோடு மாறுபட்டு, `அது கடவுள், இது கடவுள்` எனத் தத்தமக்கு எட்டிய பொருள்களைத் தனித்தனி கூறித் தம்முள் கலாய்த்துக்கொண்டு, ஞானம் குறை கையாலேயாம். இஃது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``நிறைதவத் துண்மையும்`` என்ற அனுவாதத் தானே நிறைதவத்தை நல்குதலும் பெறப்பட்டது. அன்றுதல் - மாறுபடுதல்; ``அன்றினார் புரமெரித்தார்க்கு`` (தி.12 பூசலார். பு.1) என்றது காண்க. சிலர் நிலம், நீர், தீ முதலிய சடப் பொருள்களையே தெய்வமாகக் கூறுதல் பற்றி, ``அது, இது`` என அஃறிணையாற் கூறினார்.
இது, மேற்கூறிய பழிமொழியாளர் மெய்ப்பொருளை யுணராது தாம்தாம் கொண்டதே கொண்டு வாதிட்டு ஒழிதலை நோக்கி இரங்கியவாறு. இவரை நோக்கியே யன்றோ,
``... ... ... ... மற்றோர் தேவர் எத்தேவர் என்ன
அருவரா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே`` -தி.8 அச்சப்பத்து
என்று அருளிச் செய்தார். ``சலமிலன் சங்கரன்; சார்ந்தவர்க்கலால் நலமிலன்`` (தி.4 ப.11 பா.6) என்று அருளிச் செய்ததும் காண்க.

பண் :

பாடல் எண் : 6

இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந்
தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

பொழிப்புரை :

மக்கள் யாவரும் பிறக்கும்பொழுதே இன்பத்தில் பிறந்து, வளரும் பொழுதும் இன்பத்திலே வளர்ந்து இன்பத்திலே திளைக்கின்றவர்களே யாயினும் சிலர் இதனையறியாது தாங்கள் துன்பத்திலே மூழ்கியிருப்பதாகக் கருதிக்கொண்டு அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியாக, `உணவு` என்றும், `உடை` என்றும் அவாவி, அவற்றைப் பெறவேண்டி அல்லற்பட்டு, அவ்வல்லலை விட்டு நீங்க நினையாமல் அதிலேயே செயலற்றிருக்கின்றார்கள்; இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதே யாகலின் அந்தப் பந்தம் பின் வீடு பெறுதற்கு வழியாகும் என்பதே உண்மையாதலின், அவ்வுண்மையை உணர்வார்க்குப் பந்தமும் இன்ப முடையதாயே அமைதல் பற்றி, `இன்பத்துளே பிறந்து, இன்பத்திலே வளர்ந்து, இன்பத்துளே திளைத்து`` எனவும், இவ்வுண்மையை உணராமையாலேதான் வாழ்க்கை துன்ப மயமாகின்றது என்பது பற்றி, ``சோறொடு கூறையென் துன்பத்துளே நின்று`` எனவும், இவ் வறி யாமையுடையார்க்கு அவர் கருத்தாலும், செயலாலும் உண்டாக்கிக் கொள்கின்ற துன்பத்தினின்றும் நீங்கும் வாயில் இல்லாமைபற்றி, ``தூங்குகின்றார்களே` என்றும் கூறினார். `அனைத்தும் திருவருட் செய லாதலின் அவை இன்பமயமேயாம். ஆயினும் அவற்றை அவ்வாறு உணராதார்க்கு அவை அனைத்தும் துன்பமேயாம்` என்பது கருத்து.
``பந்தமும் வீடும் படைப்போன் காண்க``
-தி.8 திருவண்டப் பகுதி, அடி, 52
என்பது முதலிய திருமொழிகளால், வீடேயன்றிப் பந்தமும் இறைவனால் தரப்படுவதேயாதல் விளங்கும். மற்றும் இதுபற்றிய விளக்கங்கள் சாத்திரங்களில் பெறப்படும். இங்குக் கூறப்பட்ட இம்மக்களை நோக்கியே,
பால்ஆழி மீன் ஆளும் பான்மைத்(து) அருள் உயிர்கள்
மால்ஆழி ஆளும் மறித்து. -திருவருட்பயன், 34
எனச் சாத்திரத்தில் கூறப்பட்டது. உண்மையுணர்வார்க்கு, ``பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`` (திருவுந்தியார், 53) என்றது அறிக. துன்புறுவோர் பலராயினும் ``சிலர்`` என்றது, அவர்தம் அறியாமையது சிறுமை பற்றி வந்த இழித்தற் குறிப்பு.
இதனால், உண்மையுணர மாட்டாத அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 7

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

பொழிப்புரை :

பெறுதற்கரிய பிராணிகள் ஞானத்தையும், அது வழியாக வீட்டையும் பெற இயலாத பிராணிகள். அவை மக்களை யொழித்து ஏனைய உயிர்கள். அவைகளால் பெறுதற்கரிய பேறு இறைவன் திருவடி. ``பெறார் பேறிழந்தார்`` என்க,
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

``அரிய`` என்னும் பெயரெச்சக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது வினைமுதற்பெயர் கொண்டது. ஏனைய செயப்படு பொருட் பெயர் கொண்டன. இறைவன் திருவடிப் பேற்றை `ஏனை உயிர்கள் பெற இயலாத பேறு` என்றமையால், `மக்கட் பிறவியைப் பெற்றும் அப்பேற்றைப் பெற நினையாதவர்கள் மக்களாகாது, ஏனை உயிர்களேயாவர்` என்பது கருத்தாயிற்று.
இதனால், கிடைத்த சாதனத்தின் அருமையை அறியாது அதனை வீண்படுத்துகின்ற அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 8

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

பொழிப்புரை :

யாவரிடத்தும் நட்பையே பாராட்டும் மனமும், எச் செயலிலும் சோர்வடையாத ஊக்கமும், கிளைஞர் எல்லோரிடத்திலும் செல்லுகின்ற ஈரமும் குறைவின்றியிருத்தலால் தாமும், பிறரும் `இது மிக நல்லதாகிய பருவம்` என மகிழ்ச்சியுறுவதாகிய இளமைப் பருவத்திலே அந்நல்லவற்றை யெல்லாம் உமையொருபாகனுக்குப் பணி செய்வதில் பயன்படுத்தாது, அவனது இன்பத்தைப் பெறாமல் மறந்து, அந்நல்லனவெல்லாம் விரையக் கெடுதற்கு ஏதுவாகிய சிற்றின்பச் செயலிலே சிலர் ஈடுபட்டு ஒழிகின்றார்களே; ஈதென்ன அறியாமை!

குறிப்புரை :

`ஈதென்ன அறியாமை` என்பது குறிப்பெச்சம். `இன்புறு காலம் இளமைக் காலமே` என்பது தோன்ற முன்னரே ஊக்கத்தினை, அதனைத் தருகின்ற இளமையாக உபசரித்துக் கூறினார். ஆர்வம் - பேரன்பு. `அது நட்பைத் தரும்` என்பதனை,
அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. -திருக்குறள், 74
என்பதனால் அறிக. `மக்கள் மனம் அவரது இளமைக் காலத்திலே தூயதாகவே இருந்து, நாள் செல்லச் செல்ல உலகச் சூழலில் படிந்து படிந்து மாசேறிவிடுகின்றது` என்பது பொதுவான ஓர் உலக வழக்கு. அஃதே பற்றி இளமைப் பருவத்தை ``நல்ல என்று இன்புறுகாலம்`` என்றார். ஈற்றடி முதலில், `உமாதவன்` என வரற்பாலதாகிய உகரம் தொடைநோக்கி, மூன்றாம் அடியின் இறுதிக்கண் வகையுளியாய் நின்றது. ``நின்று மறந்தொழிந்தார்களே`` என்றலே கருத்தென்க. ஈற்றடி உயிரெதுகை.
இதனால் கனியிருக்கக் காய் கவர்ந்து கெடுதல் போல்வதோர் மயக்கம் நோக்கி இறங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 9

இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு
அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய உமாதவனாகிய சிவன் தன் அடியவர் முன் புறத்தே தோன்றிக் காட்சி வழங்குமிடத்துக் காலையில் தோன்றுகின்ற இளஞாயிற்றைப் போலும் உருவுடையனாய் விளங்குவான். [அது ``காலையே போன்றிலங்கும் மேனி`` (தி.11) என்பது முதலிய திருமொழிகளான் உணரப்படும்] இனி அவர்க்கு இவ்வாறு புறத்துத் தோன்றுதல் போலவே அகத்துத் தோன்றுங்கால் உள்ளக் கமலத்தை இடமாகக்கொண்டு என்றும் இருப்பவனாய் விளங்குவான். இவ்விரண்டும் இன்றிக் கரந்து நின்று அருள்புரியுமிடத்துச் சிறிதும், பெரிதுமாய தீப்பிழம்புகளின் உள்ளிருந்து அருள்புரிவான். [இவ் வுண்மைகள் எல்லாம் அவனை அறிந்து இன்புறும் பெரியோரை அடுத்துக் கேட்பின் விளங்கும்]. அவ்வாறு கேட்டுணராது நாளை வீணாகக் கழிக்கின்றோமே; இஃது அறியாமையன்றோ!

குறிப்புரை :

பரிசு - தன்மை. அண்மையிடத்தனாய் வெளிப்படும் நிலைகளை ``இப்பரிசு`` எனவும், வெளிப்படாது சேயனாய் நிற்கும் நிலையை ``அப்பரிசு`` எனவும் கூறினார். இவ்விடங்களில் `பரிசின் கண்` என ஏழாவதும், ``மெய்ப்பரிசு`` என்பதில் இரண்டாவதும் விரிக்க, பிறரது அறியாமையைப் புலப்படுத்தக் கருதினவன் அவர் உடன்படுமாற்றால் தம்மையும் அவரோடு உளப்படுத்திக் கூறினார்.
செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு. -திருக்களிற்றுப் படியார், 61
எனப் பிறரிடத்தும் இவ்வாறு வருதல் காண்க. ``அம்மானை ஈசனை`` என்பவற்றோடு இயைய, ``உரு`` என்பதைனயும், `உருவனை` என்க.
இதனால், ஞானம் இல்லாதார் அஃது உடையாரை அடைந்து அதனைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு பெறாதிருக்கும் புறக்கணிப்பு நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 10

கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.

பொழிப்புரை :

சிலர் பெரியோரைக் குரவராக அடுத்து உண்மையைக் கேட்டுணர்ந்தாராயினும் அவர் தங்கட்கு ஒருதலைப் பட உணர்த்திய குறிக்கோளை அங்ஙனமே உணர்ந்து அடைய மாட்டார். `அடைய வேண்டும்` என நினைக்கவும் மாட்டார். குரவர் தம்மை மலம் கழுவித் தூயராகச் செய்த செயலின் அருமையை அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடவும் மாட்டார். ஆயினும் பிறர் தம்மை மதிக்கும்வண்ணம் இனிமை உண்டாகப் பேசுவர். அப்பேச்சுக்கு ஏற்றவாறு நடிக்கவும் வல்லவராவர். அவர் அடையும் பயன்தான் எதுவோ!

குறிப்புரை :

`யாதொன்றும் இல்லை` என்றபடி, ``அவன்`` என்றது ஆசிரியனை. `செய்த பரிசறிந்து பாடகில்லார்` எனக் கூட்டுக. ``நயம் பேசித்திரிவர்கள்`` ``ஆடவல்லார்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. ஆடுதல், இங்கு நாடக மாத்திரையால் நடித்தலின்மேற்று.
இதனால், பெற்றதனைப் பேணிப் பயன்கொள்ளாமையாகிய பேதைமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 11

நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமானை, `ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து அங்கு ஒளிவிட்டும் விளங்குகின்ற அணையா விளக்கு` என்றும், `உயிர்கட்கெல்லாம் உண்மையான முதற் கடவுள்` என்றும் உணர்ந்து நாள்தோறும் வழிபடுங்கள். இறக்குமளவும் வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித் திருப்பின் உங்களுடைய ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த அத்தன்மையை உடைய யானைகளாய் விடும்.

குறிப்புரை :

அஃதாவது, `அவை நும்வழிப்படாது தம் வழியிலே உங்களைக் கொண்டு சென்று அலைக்கழிக்கும்` என்பதாம். நெடுமை, காலம் பற்றி வந்தது. ``நாதனை`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. ``நம்`` என்றது உயிர்கள் அனைத்தையும் ஒரு பெற்றியவாகத் தம்மோடு உளப்படுத்தி எண்ணுதலை. ``நாதன்`` என்றது சொல்லு வாரது குறிப்பால் சிவனை உணர்த்திற்று. செம்பிரான் நேர்க்கடவுள்; உண்மைக் கடவுள். ``தொழுமின்`` என்பதை ``நாடொறும்`` என்பத னோடும் கூட்டுக. `அஞ்சும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அஞ்சும்ஆம்` என இயையும். ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஓர்`` என்றது தன்மையைக் குறித்தது.
இதனால், ஐம்பொறியால் ஆட்டுண்டலின் நின்று நீங்கும் வழியறியாது அல்லலுறுவாரை நோக்கிஅவர் மேல் எழுந்த இரக்கத்தால் அவர்க்கு அவ்வல்லலின் நின்று நீங்கும் வழி கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 12

மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை
ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.

பொழிப்புரை :

விலங்குகள், மக்கள், தேவர்கள், பறவைகள், மற்றும் இவர்கள்போல் உள்ள இனத்தவர் ஆகியோரில் ஓரினத்தவரும் சிவபிரானிடத்தில் அன்பு வைத்து, அதனை மேலும் மேலும் பெருக்கி வழிபடாமையில்லை. அதனை அறிந்தவர்கள் அப்பெருமானது திரு வருளைப் பெறுதற்குரிய பெரிய தவத்தைச் செய்து, அதன் பயனாக விளைந்த அன்பினால் சிவபெருமானைக் கண்டால் இனிய பாலைப் போலப் பருகிவிடுவார் போல்வார்; `அவன் வெளிப்படும் இடம் எது` என்று தேடிப்பல திசைகளிலும் ஓடுவர். அதனால், தாம் மண்ணில் மக்களாய்ப் பிறந்த பயனை எய்துவர்.

குறிப்புரை :

`அறிவிலார் அங்ஙனமின்றி வாளாமாய்ந்து மண்ணாகிக் கழிவர்` (தி.5 ப.90 பா.3) என்பதாம். எழுவகைப் பிறவியுள் உயர்ந்தது, தெய்வப் பிறப்பு ஆதலின் அதனை எய்தினோரை, ``மிக்கோர்`` என்றார். வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அர்ச்சிப்பர்`` (சிவஞான சித்தியார், சூ. 2,91) என்பது சாத்திரம். இவையெல்லாம் புராணங்களில் மிகவெளிப்படை. ``ஒருவர்`` என்பதில் ஒன்று இனத்தைக் குறித்தது. `ஒருவரும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அன்பு வைத்துச் செய்து` என மாற்றி உரைக்க, ``உன்னாதது`` என்றது எதிர்மறைத் தொழிற் பெயர். அதனை உணர்ந்தோர் மாதவம் செய்து பருகுதல் முதலியவற்றைச் செய்வர்` என்க. அன்பால் பிறரை இறுகத் தழுவிக் கொள்ளுதலே, பருகுதல் போல்வதாகக் கூறும் மரபினை, ``பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை - பெருகலிற் குன்றலினிது`` (திருக்குறள், 811) என்னும் திருக்குறளாலும் அறிக. `தேடி ஓடுதலும் அன்புடையாரது செயல்` என்பதனை,
``... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் னெவ்விடத்தான்,
எவர் கண்டனர் என்று
ஓடிற்றிலேன்`` -தி.8 நீத்தல் விண்ணப்பம், 45
என்று அருளிச் செய்தவாற்றானும் அறிக.
இதனால், அறிவுடையாரது செயலை விதந்து கூறும் முகத்தால் அறிவிலாரது நிலைமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 13

நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை
ஆதி அயனென் றமரர் பிரானென்று
நாதியே வைத்தது நாடுகின் றேனே

பொழிப்புரை :

அற உணர்வு இல்லாதார் பொன்னைப் பெற்றால் அதனது பயனை யறிந்து அப்பயனை எய்தாது பொன்னை வாளா வைத்திருந்தே இறந்தது போலச் சிலர் சிவனை அறிந்தும் அவனால் அடையத் தக்க பயனை அறிந்து அம்முறையில் அவனை வழிபட்டு அப்பயனைப் பெறுகின்றவர் யாரும் இல்லை. ஆயினும் யான் உலகத்தைச் செயற்படுத்துதற்கு, `படைப்புக் கடவுளாகிய பிரமன்` என்றும், மற்றும் `தேவேந்திரன்` என்றும் இப்படிப் பல தேவரைத் தக்க வாறு சிவன் நியமித்திருக்கின்ற பெருஞ்செயலை நினைந்து அவனால் அடையத்தக்க பயனை அடைகின்றேன்.

குறிப்புரை :

`பிற தேவரால் அடைவிக்க முடியாது சிவன் ஒருவனாலே அடைவிக்கப்படும் பிறவி நீக்கம். அஃது அயன் முதலிய தேவர் பலரையும் அவனே படைத்து அவரவர் அதிகாரத்தில் நியமித் திருத்தலால் விளங்கும்` என்பது பின்னிரண்டடிகளால் குறிப்பால் உணர்த்தப்பட்ட கருத்து. அப்பயனைப் பெறாதோர் சிவனை உணர்ந்தும் உணராதவரேயாதல் பற்றி அவரது செயலுக்கு நீதியிலார் பொன்பெற்ற செயலை உவமையாகக் கூறினார்.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு. -திருக்குறள், 760
என்பதனால் பொன் அறத்தையும், இன்பத்தையும் எளிதின் எய்துதற்கு வழியாதல் அறிக. ``பெற்ற பொன்போல்`` எனப்பொருளுவமம் போலக் கூறினாராயினும், `பொன் பெற்றது போல` எனத் தொழிலுவுமமாகக் கூறுதலே கருத்தென்க. ``சோதி`` என்றது அறிவை. அதனால் தொடர்தலாவது அவனால் பெறும் பயனை அறிந்து அவனைப் பற்றுதல். அறிதல் அதன் காரியமாகிய வழிபடுதலையும், நாடுதல், அதன் காரியமாகிய உண்மை யுணர்தலையும் குறித்து நின்றன. `நாடி` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.
இதனால், சிவனை உணர்ந்தவரும் அவன்பால் வீடு பேற்றினை வேண்டாது, உலகப்பயனை வேண்டி அவற்றை மட்டுமே அடைதல் இரங்கத் தக்கது என்பது கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 14

இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

பொழிப்புரை :

வண்டுகள்தாம் இன்புற வேண்டும் என்றுதான் மிகுந்த தேன் உள்ள மலர்களை அறிந்து அவற்றினுட்புகுந்து கிண்டிச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து மிகுந்த தேனைச் சேர்க்கின்றன. ஆயினும் அத்தேனில் ஒருசிறிதையும் அவை பருகுவதில்லை. அதனை எண்ணிப் பாராதவர்களாய், அவற்றினும் கீழ்மையராக, தானாகவே வாயில் ஒழுகுவதும், எவ்வுலகத்திலும் கிடைத்தற்கரியதும் ஆகிய தேனை மக்களில் ஒருவரும் அறிந்து பருகுகின்றார்களில்லை. ஆயினும் யான் அவர்களைப்போல அத்தேனை நுகராமல் விட்டு வருந்தமாட்டேன்.

குறிப்புரை :

`வண்டுகளின் பெற்றிமையை எண்ணிப்பார்ப்பார் களாயின் தாமும் அவை செய்யும் தவற்றினைச் செய்யமாட்டார்கள்` என்பார், ``வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்`` என்றார். சிவம் தானே தனது கருணையால் உயிர்களுக்குத் தன் இன்பத்தை வழங்குதல் பற்றி, ``வாய்புகுதேன்`` என்றும், அது வழங்கும் அவ்வின்பம்போலும் பிறிதின்பம் வேறின்மையின், ``அருந்தேன்`` என்றும் கூறினார் `நுகராது வருந்தேன்` என மாற்றிவைத் துரைக்க.
இதனால், சிவனால் தரப்படும் பேரின்பத்த சிறப்பைக் கூறி, அதனைப் பெறாது இழப்போரது அறியாமைக்கு இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 15

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

பொழிப்புரை :

தன்னிடத்துச் செலுத்துகின்ற அன்பு உடையாரது அன்பிலே விளங்கி நிற்பவனும், தேவர்கட்கும் தேவனுமாய் உள்ள ஒருவனே அனைத்துயிர்கட்கும் ஒப்பற்ற தலைவன். அடங்காது ஓடுகின்ற மனத்தை வருத்தியாயினும் அடக்கி அவனை நினைந்து நில்லாமையால் பலர் அவனைப் பெறத் தவறுகின்றார்கள். அதனால் அவர்களது காலங்கள் உண்மையை உணராமலே கழிந்தொழியும்.

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். முதலடியை ஈற்றில் வைத்துரைக்க. துணிவு பற்றி எதிர்காலம் ``கழிந்தன`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. அருத்தி - அன்பு. அமராபதி - தேவர் உலகம். அஃது ஆகுபெயராய்த் தேவரை உணர்த்தி நின்றது. ``உள்ளான்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் எழுவாயாய் நின்றது. ``உயிர்க்கெல்லாம்`` என்பதன் பின்னும் ``ஒருத்தன்`` என்பதைக் கூட்டி மேற்குறித்த எழுவாய்க்குப் பயனிலையாக்கி முடிக்க.
இதனால், மனத்தால் அன்புசெயற்பால பொருளில் அன்பைச் செலுத்தாது, பிறபொருளில் அன்பு செலுத்தி நிற்கும் அறியாமை நோக்கி இரங்கியவாறு.

பண் :

பாடல் எண் : 16

குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

பொழிப்புரை :

உலகீர், உங்களுக்கு இவ்வுடம்போடு கூடி வாழ்தற்கு வரையறுத்த நாள்கள் யாவும் தவம் செய்யாமையால் அவமே கழிந்தொழிந்தன. ஆகவே, உங்களை இவ்வுடம்பினின்றும் பிரித்தெடுத்துக் கொண்டு துள்ளி ஓடுபவனாகிய கூற்றுவனும் வந்துவிட்டான். இப்போது நடுங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் அமைதியுற வேண்டின் கொதிக்கின்ற கூழில் கையை யிடாமல் அகப்பையை இட்டு அள்ளி ஆற்றி உண்பதுபோலும் செயலைச் செய்தலே தக்கது.

குறிப்புரை :

``சார்வாய்க் கழிந்த`` என்றாராயினும், `கழிந்து சார் வாயிற்று` என்றலே கருத்தென்க. கழிந்து, செயவெனெச்சத் திரிபு. தெளிவு பற்றி எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. சார்வு - நெருங்குதல். ``துடுப்பிடல்`` என்பது, அதுபோலும் செயலைச் செய்தலைக் குறித்தது. கொதிக்கின்ற கூழ், கூற்றுவனால் கணக்கிட்டுக் கொள்கின்ற நாட்கள். கையிடுதல், அதனையறியாது தம் வயத்தன வாகக் கருதிக்கொண்டு அவற்றைத் தவத்தில் அல்லாமல் அவத்தில் கழித்தல். துடுப்பிடுதல் - சில நாட்களையாயினும் தவத்தில் கழித்தல். ஆம் - பொருந்தும் - ஏகாரம் ஈற்றசை.
இதனால், கூற்றத்தைக் கடத்தற்குரிய செயலில் நாளைக் கழியாமல், கூற்றத்தால் அடர்த்தற்குரிய வகையில் கழித்தலை நோக்கி இரங்கியவாறு,

பண் :

பாடல் எண் : 17

கரையரு காறாக் கழனி விளைந்தது
திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரையரு கூறிய மாதவம் நோக்கின்
நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.

பொழிப்புரை :

ஆற்றங் கரையை அடுத்து ஒரு கழனி உண்டு. அதில் உண்டாகின்ற விளைவை உடையவன் பெறுதல் அரிது ஏனெனில், ஆற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் பெருகி வந்து விளைவை அழித்துவிடும். அதனை உணர்ந்து நீவிர் விழிப்பாய் இருந்து வெள்ளம் பெருகி வருவதற்கு முன்னே விளைவிற்குப் பாதுகாப்புச் செய்து விளைவின் பயனை எய்துங்கள். [இஃது ஒட்டணி. ஆறு - வினைவிளைவின் தொடர்ச்சி. ஆற்றங்கரை - அத்தொடர்ச்சியைச் சார்ந்திருக்கின்ற உடம்பு. கழனி - உடம்பில் உள்ள உயிர்; என்றது அதன் உணர்வை, அதில் விளைவது சிவபுண்ணியத்தின் பயனாக விளங்கிய சிவஞானம், அதனை எப்பொழுதும் வந்து அழிக்க இருப்பது உயிருணர்வை வேறுபடுத்தும் வினைவிளைவு. அருகாமுன்னம் - நெருங்குதற்குமுன்னே, இவற்றை இங்ஙனம் அணிவகையால் உணர்த்திய பின்பு அப்பயனைப் பெறுமாற்றைப் பின்னிரண்டடிகளால் நேராகவே உணர்த்தினார். அஃதாவது] மலைமுழை முதலிய தனியிடங்களில் இருந்து செய்வதனால் வளர்ந்து முதிர்கின்ற தவத்தில் உணர்வு செல்லுமாயின் நரை, திரை, மூப்பு இவற்றோடுகூடி வருகின்ற நாட்கள் உங்கட்கு இல்லையாகும்.

குறிப்புரை :

`ஆகையால் அத்தவத்தில் உணர்வைச் செலுத்தி உணர்வு திரியாது நின்று சிவஞானத்தை முற்றப்பெற்றுப் பயன் அடையுங்கள்` என்பதாம். ``கரையருகு ஆறா`` என்பதனை, `ஆறுகரை அருகா` எனமாற்றி உரைக்க. இங்ஙனம் மாறி நின்றமையால், `ஆறு` என்பது ஒற்று இரட்டுதலும் அம்முப் பெறுதலும் இல்லையாயிற்று. ``தவம்`` என்றதும் சிவபுண்ணியத்தையே யாகலின், அது கேட்டற்குப் பின் விடாது நிகழும் சிந்தித்தல் தெளிதல்களாகிய ஞானத்திற் கிரியை ஞானத்தில் யோகம் இவற்றைக் குறித்து நின்றன. இந்நிலையுடையோர் சிவயோகத்தையும் உடையராவர் ஆதலின் அவர்க்கு நரை திரை மூப்புக்கள் இலவாதல் அறிக.
இதனால், ஞானத்தை எய்தினோரும் பார்க்காமல் அதனை இழத்தலை நோக்கி யிரங்கி அவர் அவ்வாறு அதனை இழவாதிருக்க அறிவுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 18

வரவறி வானை மயங்கிருள் ஞாலத்
திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி

பொழிப்புரை :

பகலும், இரவும்கலந்து நிற்கின்ற உலகத்தில் உயிர்கள் தோன்றுதல், மறைதல் ஆகியவற்றின் வழிமுறைகள் முழுவதையும் நன்குணர்ந்து அவைகளை ஏற்றபெற்றியால் செய்விக் கின்றவனும், முடிவில் அவ்வுயிர்கள் இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கும்படி வைத்து அவைகட்கு என்றும் விளக்கத்தைத் தந்தும் விளங்கியும் நிற்கின்ற, சுடர்விடுகின்ற பெருவிளக்காய் உள்ளவனும் ஆகிய சிவபெருமானை, `நுண்ணறிவாளர் திரிபின்றி உணர்கின்ற ஒப்பற்ற முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து அவனை அடைந்து உய்ய அறியாமையால் பலர்வேறு வேறு தெய்வங்களை முதற் கடவுளாகக் கருதி இடருள் அழுந்துதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``மயங்கிருள் ஞாலத்து`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்றியைந்தது. மயங்குதல் - கலத்தல். ``இருள்`` என்றதனால் `ஒளி` என்பது போந்தது. மேல் உலகம் ஒளியுலகமும், கீழ் உலகம் இருள் உலகமும், இடையுலகமும் இரண்டையும் உடைய உலகமும் ஆதலின் ``மயங்கிருள் ஞாலம்`` என்றது இடையுலகத்தை யாயிற்று ஏனை இரண்டும் போக பூமியும், இதுவே கரும பூமியும் ஆதலின் உயிர்கள் இவ்வுலகத்துத் தோன்றுதல் மறைதல்களையே குறித்தார். வரவு தோற்றமாதல் வெளிப்படை. இரவு, இருள் ஆதலின் அஃது அறிவைத் தரும் தேகத்தை விட்டு அறியாமையிற் செல்வதாகிய இறப்பைக் குறித்தது. ``எழும்`` என்ற விதப்பு, எஞ்ஞான்றும் மறைதல் இன்றி விளங்கியே நிற்றலைக் குறித்தது. அதுவே அருள்வெளி என்க. அர அறிவு - அரம் போலும் கூரிய அறிவு. ``அரம் போலும் கூர்மைய ரேனும்`` (திருக்குறள், 997) என்றதும் காண்க. முன் தெய்வம் - நினைக்கின்ற கடவுள்; வினைத்தொகை. ஒரு தெய்வம் - ஒப்பற்ற தெய்வம். ``மேல்`` என்றது `வேறு` என்னும் பொருட்டு ஆக்கம் வருவிக்கப்படும். ``வைத்து`` என்றது, அதனால் இடர்ப்படுதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. `இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், இன்றியமையாது அறியற்பாலதனை அறிந்து பயன்பெறாது மயங்கி இடர்ப்படுவாரது மயக்கம் நோக்கி இரங்குதலைச் செய்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

பொழிப்புரை :

மண்மேல் உள்ள பிறவிகள் நிலையின்றிச் சின்னாளில் அழிந்தொழிவனவேயாம். ஆதலின் அவற்றுள் சில பிறவிகளை உயர்ந்தனவாகக் கருதி அப்பிறவியில் பிறக்க வேண்டும் என விரும்புதலை விட்டுவிடுங்கள். அங்ஙனம் விட்டு வீடுபெற விரும்பும் பொழுது அதன் பொருட்டுப் பிற நெறிகளை நாடாது, நெறிகள் அனைத்திலும் மிக மேலானதாகிய சிவ நெறியை நாடுங்கள். நாடி அதனை அடைந்து இறக்குங் காலம் உட்பட எக்காலத்தும் சிவனை இடைவிடாது நினையுங்கள். அவ்வாறு நினைந்தால் அவன் நலனடைதற் பொருட்டு அதற்கான வழிகளைத் தேடி எவ்விடத்தும் விரைந்து ஓடி அலையும் நம் அலைவை நீக்கியருளுவான்.

குறிப்புரை :

புதியன புகுதல் முறையில் புகுந்த முன்னிலைப் பன்மை ஏவல் விகுதியாகிய `உம்` என்பது ``மறந்தொழி`` என்பதன் ஈற்றில் தொகுத்தலாயிற்று. உலகத்தில் அரசரும், அவரோடொத்த பெருஞ்செல்வருமாய்ப் பிறக்கும் பிறவி இனிதானது என ஏனையோர் விரும்புதல் உண்டு ஆதலின், `அஃது ஒரு மயக்க உணர்வேயாதலின் அதனை விடுத்தல் வேண்டும்` எனவும், `விடுத்தவழி வீடுபெறுதலே விரும்பப்படும் ஆதலின் அதன் பொருட்டுப் பிறவி நீங்கப் பெறாத பிறர் பலரை முதல்வராகக் கொண்ட நெறிகளை நாடாது பிறப்பில் பெருமானாகிய சிவனை முதல்வனாகக் கொண்ட சிவநெறியையே நாடுதல் வேண்டும். `அதனை நாடி அடைந்தவழியும், அந்நெறியின் முறைமைகளை இடைவிடாது கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்` எனவும் அறிவுறுத்தபடி. ஈற்றடியை இரண்டாம் அடியாகக் கூட்டி யுரைக்க. ``சிறந்த`` என்பது இயைபின்மை நீக்கிய விசேடணம். இனி பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாகக் கொண்டு, `சித்தாந்த சைவம்` என உரைத்தலுமாம். ஐந்தாம் தந்திரத்தில் நாயனார் சில சைவ வேறுபாடு குறித்தமையை நினைவுகூர்க.
இதனால், `உய்திவேண்டுவார்க்கு உரிய நெறி இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.

பொழிப்புரை :

நாங்கள், `ஒருகாலத்திலும் பிறத்தலும், இறத்தலும் இல்லாதவன், எல்லாவற்றையும் அறிந்தவன், எல்லா உயிர்களிடத்தும் காரணம் இல்லாமலே இரங்குகின்ற பேரிரக்கம் உடையவன்\' என்பன போலச் சொல்கின்ற அப்படிப் பட்ட முதல்வன் ஒருவன் இல்லை; இருக்க இயலாது\' என்று சிலர் முரணிக் கூறுவராயினும் அப்படிப்பட்ட பேரதிசயமான தன்மைகளையுடைய சிவ முதல்வன் இருக்கவே செய்கின்றான். அதனை நம்பி அவனது நல்ல நெறியை நீங்கள்நாடி அடையுங்கள். அடைந்து எந்த அளவு உங்கள் மனம் சோர்வடையாது நினைக்க வல்லதாகின்றதோ அந்த அளவு அவனை நினையுங்கள். எந்த அளவு அவன் பொருள் சேர்ந்த புகழை உணர்ந்து உரைக்க இயலுமோ; அந்த அளவு உரையுங்கள்; பயனுண்டு.

குறிப்புரை :

`பயனுண்டு\' என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். -திருக்குறள், 416
என்றாற்போலும் முறை பற்றி, \"செல்லுமளவும் செலுத்துமின் சிந்தையை\" எனவும், \"வல்லபரிசால் உரைமின்கள் வாய்மையை\" எனவும் கூறினார்.
\"வாய்மை\" என்பது ஆகுபெயராய், அதனை யுடைய புகழைக்குறித்தது.
\"பெரிதுளன்\" என்றது `திண்ணமாக உளன்\" எனவும் , \"எம் இறை\" என்றது `சிவன்\' எனவும் கூறியவாறு. \"நாடுமின்\" என்றது அதன்காரியம் தோன்ற நின்றது. இதனால், `உண்மையை ஐயுறுதலை விடுத்து இயன்ற அளவு கடைப்பிடித்து ஒழுகுக\' என உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

பொழிப்புரை :

உலகத்தார் பல சாதிகளைக் கூறுவராயினும் உண்மையில் உள்ளது ஒரு சாதியே. அது சிவ சாதி. உலகத்தார் பல கடவுளர்களைக் கூறிக் கொண்டாடுவராயினும் உண்மையில் உள்ள கடவுள் ஒருவனே. அவன் சிவன். இவற்றை நீவிர் முதலில் நன்றாக உணருங்கள். உணர்ந்தால், நமனும் உங்களை அணுகான்; வெட்கமின்றி முன்முன் பிறந்து இறந்த பிறப்புகளிலே மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையும் உங்களுக்கு இல்லையாகும். அப்பால் மேற்கூறிய உண்மைகள் உங்கள் உள்ளத்தில் அசையாது நிலைபெற, அதன்வழிப் பின்னர்ச் சிவனை இடையறாது நினைந்து உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

``ஒன்றே, ஒருவனே`` என்னும் தேற்றேகாரங்களால் அவற்றிற்கு மாறாக அறியாதார் பல கூறுதல் பெறப் பட்டது. ``ஒன்று`` எனப் பட்ட குலம் இது என்பதும். ``ஒருவன்`` எனப்பட்ட தேவன் சிவன் என்பதும் முன் முன் மந்திரங்களின் வழிவரும் தொடர்பால் இனிது விளங்கின, ``சிவ சாதி`` என்றது. சிவன், சத்தி இவரையே அப்பனும் அம்மையுமாய்க் கொண்டு பிறந்தவர்கள் என்றதாம், முதற்கண் ``நினை மின்`` என்றது அதற்கு முன்கூறிய உண்மையைக் குறித்தும், பின்னர் ``நினைந்து`` என்றது, அவ்வுண்மை உள்ளத்து நிலைபெற்றதன் பயனாக நினைக்கும் பொருளைக் குறித்தும் என்க. முன்னர் ``நமன் இல்லை`` என்றதனால், பின்னர்க் கூறிய உய்தி துன்பம் நணுகாத எல்லையில் இன்பத்தை அடைதலாம். கதி - பிறப்பு.
இதனால், `பொது மக்களது பொதுநெறியிற் செல்லாமல் விடுத்து, மேன்மக்களது மேல் நெறியிற் செல்க என உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை.
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.

பொழிப்புரை :

இனி இங்கு நின்றும் இவ்வதிகாரத்தில் மேல் `` ஒருவனே தேவனும்` என ஒருதலைப் பட வலியுறுத்தி உணர்த்தி யருளிய, `சிவபிரானுக்கு ஆட்செய்வதையே நும் கடமையாகக் கொண்டு ஒழுகிப் பயன் பெறுங்கள்` என்பதையே பல்லாற்றானும் பன்னிப் பன்னி அறிவுறுத்துகின்றார்.
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

நடுவாதல் - தலைமையிடத்தனாதல். பலபொருட்கும் தலையாதலை `நடுநாயகம்` என்பர். ``திை\\\\\\\\u2970?`` என்றது ஆகுபெயராய் அவற்றில் வாழும் உயிர்களை. ``நடுவாய் நின்றநம்பன்`` என்றதனால், ``அவனே யாவராலும் வணங்கப்படுவோன்`` என்பது குறிப்பு. காற்று, பிராணவாயு. அதுவே உடம்பின் உட்கூறுகள் பலவற்றையும் தக்கவாறு இயைவித்து இயங்கச் செய்தல் பற்றி. ``காற்றிசைக்கும் ஆக்கை`` எனவும், அக்காற்று உள்ள பொழுது மெல்லவும், நீங்கியபின் மிகவும் புலால் நாற்றம் வீசுவது உடம்பு என அதன் இழிவு தோன்ற, ``கமழ் ஆக்கை`` எனவும் கூறினார். நறுமணம் வீசுதலை, `கமழ்தல்` என்றல் மரபாகலின், இங்கு தீ நாற்றம் வீசுதலை, ``கமழ்தல்`` எனக் கூறியது இழித்தற் குறிப்பு. `இசைக்கும் ஆக்கை, கமழ் ஆக்கை`` எனத் தனித் தனி இயைக்க. ``கொண்டு`` என்றது `கருவியாகப் பற்றி` என்றபடி. `அவனைத் துதித்தால் உய்தி பெறுதல் திண்ணம்` என்பதை நிறுவ, ``கூற்றுதைத்தான்றனைக் கூறிநின்று`` என்றார்.

பண் :

பாடல் எண் : 5

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

பொழிப்புரை :

`உயிராகிய நமக்கு உடல் எக்காலத்தில் வந்து பொருந்திற்று` என்று அக்காலத்தை ஆராய்ந்து உணரின், `அதனை நமக்குப் படைத்துக் கொடுத்ததலைவன் இவன்` என்பது புலனாகும். அது புலனாகவே, அவன் மீது அன்பு செல்ல அவனது அருளைப் பெறுதல் உண்டாகும். அவ்வாற்றால் இவ்வுடம்பைக் கழித்துவிட்டு, இனி மற்றோர் உடம்பில் புகுந்து பிறத்தல் இன்றி உய்ந்துபோம் வழியை நாடுங்கள்.

குறிப்புரை :

அனைத்தும் அழிந்தொழிந்த காலத்தில் உயிர்கள் உடம்பின்றியே இருக்கப் பின்பு அவற்றிற்கு உடம்பைக் கொடுத்தவன் அனைத்தும் அழிப்பவனாகிய சிவனேயாதலின், நமக்கு உடல் வந்த காலத்தை அறிந்தால், உடல் கொடுத்த தலைவன் இவன்` என்பதும் அறியப்படும் `ஆதலின் அக்காலத்தை ஆராய்ந்துணர்ந்து அருள் பெறுக` என்றும் அவ்வாறு அருள் பெறுதலே பிறவி நீங்கும் வழி யாகலின், `பிறவாமல் போம் வழி நாடுமின்`` என்றும் கூறினார். ``அந்தம் ஆதி என்மனார் புலவர்``l என்றார் மெய்கண்டதேவர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.

பண் :

பாடல் எண் : 6

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.

பொழிப்புரை :

நீவிர் போகின்ற போக்கிலே உங்களைப் போக விட்டுத் தானும், அப்போக்கிற்குத் துணையாய் உடன் வருகின்ற முதற்பொருள் சிவனே. அவன் அவ்வாறு விடுதலும், உடன் புகுதலும் நீவிர் உண்மையை உணர்தற்கு உரிய காலம் வருவதை அறிதற்காகவே யாம். ஆகையால், வாழ்கின்ற பொழுது மட்டுமின்றிச் சாகின்ற பொழுதும் அவனை நினையுங்கள். ஏனெனில், அவனே பிறவியாகிய கடலுக்கு அப்பால் உள்ள கரையாவான்.

குறிப்புரை :

அரனை முன்னர், ``பொருள்`` என்றமையால் மீட்டும் அவ்வாறே கூறினார். ஆகின்ற போது - தக்க காலம். அது, `செவ்வி` என்றும், `பருவம்` என்றும் ``போதும்`` என்றும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். எனவே, போகின்றவாறே புகுதலும் அப்பொழுது உயிர்களின் நிலையை அறிதற் பொருட்டு என்பது போந்தது. அறிவான் - அறிதற் பொருட்டு. உளன் - உடன் இருக்கின்றான். `அவனே பிறவியாகிய கடலுக்குக் கரையாகலானும், அந்தக் கரையை அடைதல் அதனை நினையும் நினைவானேயாகலானும் அவ்வழியை இடையறாது பற்றி நிற்க, அவன் எந்த நேரத்திலும் உங்களைக் கரைசேர்ப்பன்` என்பது பற்றி, ``சாகின்ற போதும் நாடுமின்`` என்றார். ``தலைவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ஆகின்ற அப்பொருள், மேற்கூறியவாறுள்ள அப்பொருள்.

பண் :

பாடல் எண் : 7

பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.

பொழிப்புரை :

கூட்டில் சிறிது போது தங்கியிருந்து பின்பு இரையை நாடி அக்கூட்டைவிட்டுப் பறந்து போகின்ற பறவையைப் போல உடம்பில் சிறிது காலம் வாழ்ந்து பின்பு அவ்வாழ்வினும் வேறான பயனை நாடி அவ்வுடம்பை விட்டு ஓடுகின்ற உயிர், உண்மையாகவே தான் அடையத்தக்க பயனை அடைய வேண்டின் உடம்பை விட்டுப் பிரிகின்ற காலத்திலும் சிவனை மறவாமல் நினைக்கும். அவ்வாறு நினைத்தால் எல்லாச் சிறப்பினும் மேம்பட்ட சிறப்பாகிய, சிவ ஞானத்தின்வழி சிவகதியைச் சேரும் இனி அச்சிவகதிதான், ஏனையுலகங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதாகிய உலகமும், அதனையும் கடந்த நிலைமையும் ஆகும்.

குறிப்புரை :

``பறக்கின்ற ஒன்று`` என்பது அடையடுத்த உவம ஆகு பெயர். ``கூட்டைவிட்டுப் பறக்கின்ற` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ``வேண்டின்`` என்றது `உண்மையாக விரும்பினால்` என்றபடி, உண்மையாக விரும்புதலாவது தப்பாது பெறக் கருதுதல். தப்பாது பெறக்கருதினால் உள்கும்` என்றமையால், ``உள்கா தொழியின் பயனில்லை` என்றாயிற்று. ``பின்னைப் பிறப்பொன் றிலாமை, பேருலகு`` என்பவற்றைப் பின்முன்னாக மாற்றிவைத்து உரைக்க. செய்யுள் பற்றி முறை பிறழ வைக்கப் பட்டன. சிவலோகம் சுத்தமாயாகாரியம் ஆதலின், அஃது அசுத்த மாயா காரியமாகிய ஏனை உலகங்களை வியாபகமாய் நிற்றல் பற்றி, ``பேருலகு`` என்றார். ``பேருலகும்`` எனத் தொக்கு நின்ற எண்ணும்மையை விரிக்க. முன்னர்ப் பதமுத்தி, அபர முத்திகளை அடைந்து, பின்னர்ப் பரமுத்தி அடையப்படும் ஆதலின் பேருலகும், பிறப்பிலாமையும் ஆம்` என்றார். ஆம் - வாய்க்கும்.

பண் :

பாடல் எண் : 8

கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானை அவன் அடியவரோடு கூடியும், தனித்தும், பாடியும், ஆடியும் வணங்குவதுடன் உள்ளத்திலே யும் அவனது திருவடிகளை நினைந்து அடிபணியுங்கள். ஏனெனில், உள்ளத்திலே நினைந்து பணிபவர்கட்குக் கன்றையீன்ற பசு அக் கன்றைவிட்டுப் பிரியாதது போலக் கரவாது விளங்கி அருள் செய்வான்.

குறிப்புரை :

செய்யுளுக்கேற்ப ``ஆடி`` என்பதனை வேறு வைத்து ஓதினாராயினும், முன்னர் கூறிய கூடுதல் முதலியவற்றுடன் ஒருங்கு வைத்து ஓதுதலே கருத்து என்க. நிற்றல் - தனித்து நிற்றல். உள்ளே நிற்றல் - ஒருங்கிய மனத்தோடு கூடி நிற்றல். பணிதல், அறிதல்களைச் சுருக்கம் கருதி வேறு வேறு வைத்தாராயினும் அவற்றையும் ஒருங்கு வைத்து இருமுறை ஓதுதலே கருத்தாம். அறிதல், இங்கு நினைத்தல், நீடுதல், பிரியாது உடன் இருத்தலைக் குறித்தது. அறிவு - அறிதல். அது பகுதிப் பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 9

விடுகின்ற சிவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.

பொழிப்புரை :

எப்பொழுதாயினும் உடம்பை விட்டு நீங்குவதே யன்றி அதில் நிலைத்திராததாகிய உயிர் அவ்வாறு எப்பொழுதாயினும் உடம்பைக் கீழே வீழ்த்தி விட்டுத் தான்மேலே செல்கின்ற பொழுது வாழ்விற்கும், சாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவனது திருவடிகளை நினையுங்கள். நினைந்தால் உங்கள் வினைகள் கெட்டொழிவன. தான் மறைந்திருப்பினும் தனது செயல் எஞ்ஞான்றும் நிகழ்வதால் அதுபற்றி முடிவின்றி வருகின்ற புகழை உடையவனாகிய சிவன் உங்களைத் தேவர்களோடு தேவர்களாய்ச் சேர்ப்பான்.

குறிப்புரை :

``விடுகின்ற`` என்றது அதன் இயல்பு கூறிய வாறு, ``சீவனார்`` என்றது நிலைநில்லாமையைக் குறிக்கும் இழிவுக் குறிப்பு. உயிர் உடம்பை இயக்குதலும், இயக்காது விட்டு நீங்குதலும் இல்லாத நேரத்தை ``நடு`` என்றார். நாதன்றன் பாதத்தை முன்பெல்லாம் துணை யாக நினைந்து வந்தவர்கட்கே அந்த நேரத்தில் அவற்றை நினைதல் கூடும் என்க. ``கெடுகின்ற`` என்பது அன்பெறாது வந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. தெளிவு பற்றி எதிர்காலம் ``கெடுகின்ற``, ``இடுகின்றான்`` என நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது. ``இமையவர்`` என்றது அவரது தகுதிக் கேற்ப மால், அயன், இந்திரன் என்னும் இவர் உலகத்தவரையும், சிவலோகத்தவரையும் குறிக்கும். பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``ஏறுடையாய்`` என்னும் மந்திரம் மேல் `மாகேசுர பூசை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப்
பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று
துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.

பொழிப்புரை :

மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து உழல்வதாகிய அந்தத் தொழிலிற்றானே நின்று, அத்துன்பத்தை அடைதற்கு ஏதுவான வினைகளில் கிடந்து உழைத்துக் கெட்டவர்களே, கேளுங்கள். எம் இறைவனாகிய சிவன் எல்லா உயிர்கட்கும் என்றும் உறுதுணையாய் இருந்து உதவி வருதலை உணர்ந்து அவனிடத்திலே அன்பு செய்யுங்கள்; அதன் மேலும் தவத்தைச் செய்யுங்கள்; அப்பொழுது உண்மை ஞானத்தைப் பெற்ற சிறப்பை உடையவராவீர்கள். அச்சிறப்பால் நிலையான இன்பத்தை எய்துவீர்கள்.

குறிப்புரை :

``பிறவித் தொழிலே நின்று`` என்பது தொடங்கி, `இன்புறுவீர்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தவமாவன சரியை கிரியா யோகங்கள். அது சிவநெறி நூல்களால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 11

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.

பொழிப்புரை :

`யாவரும் மேற்கொள்ளத்தக்க நல்ல முறை எது` என்று அறிந்து அதனை மேற்கொள்ள விரும்புபவர்க்கு அம்முறை குறிப்பிடுகின்ற ஒப்பற்ற உண்மையான தவமும், ஒப்பற்ற அரு ளாற்றாலும், ஒப்பற்ற வீட்டு நெறியும் உள்ளன.

குறிப்புரை :

`அவற்றை அறிந்து மேற்கொள்ளுதல் அறிஞர் கடனாகும்` என்பது குறிப்பெச்சம். `அத்தவம் சிவபுண்ணியமும்` சிவன் அருளும், சிவநூல் கூறும் பொருள்களின் மெய்ம்மையுமாம். என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு, தாள் - முயற்சி. அஃது அதற்கு ஏதுவாகிய ஆற்றலைக் குறித்தது. ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 12

சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

பொழிப்புரை :

பொதுவாக, `தேவரைச் சேர்தல்` என்பது தேவரை அவரை உணரும் நெறியிற் சென்று உணர்தலே யாகும். அம்முறையில் சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்ப நிலையாகிய வீட்டையும், சாராது நீங்கினவர்கட்குத் துன்ப நிலையாகிய பிறப்பையும் கொடுப்பான். இதனை உணர்ந்து அவனிடத்தில் அன்பு மிகப் பெற்றவர்கட்கே அவன் தனது திருவடி நிழலைத் தருவான்.

குறிப்புரை :

`அதனைப்பெற முயலுங்கள்` என்பது கருத்து, முதல் இரண்டு அடிகளில் சிவனது இயல்பையும், மூன்றாம் அடியில், `அவ் வியல்பினை மக்கள் உணர்தல் வேண்டும்` என்பதையும் கூறினார். ஆதலின், அது `கூறியது கூறல்` ஆகாமை யறிக. `சிவபெருமானைச் சார்தலாவது இது` என்று உணர்த்துவார் பொதுவாகத் தேவரைச் சாருமாறு கூறினார். அங்ஙனம் கூறிய ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க.
``சலம்இலன் சங்கரன்; சார்ந்த வர்க்கலால்
நலம்இலன்; நாடொறும் நல்குவான் நலன்`` -தி.4 ப.11 பா.6
என்று அருளிச் செய்ததும் காண்க. பிறவியை ``இன்னாமை`` என்றமையால், இன்பமாவது வீடாயிற்று.

பண் :

பாடல் எண் : 13

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே.

பொழிப்புரை :

வீடாகிய முடிநிலைப் பயனாயும், அப்பயனுக்கு நேர்வாயிலாகிய ஞானமாயும், அந்த ஞானத்தை முதற்கண் கேள்வி யால் உணர்த்தும் முத்தமிழின் ஒலியாயும் உள்ள சிவபெருமானையே அறிஞர் எத்துணைக் காலமாயினும் ஒழியாது துதித்து நிற்பர். அங்ஙனம் துதிக்கின்ற துதியில் அவன் தன்னுள்ளே நெய்யைக் கொண்டிருத்தலால் தன்னைப் பருகுகின்றவர்கட்கு இனிக்கின்ற பால்போல அவன் இனிப்பான். ஆகவே அறிவில் இனிக்கின்ற அறிவாயுள்ள அவனை அறிவுடையோர் விரும்பாமல் இருப்பரோ?

குறிப்புரை :

`விரும்பவே செய்வர்` என்பதாம், ``ஈசனை`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டுக. அங்ஙனம் கூட்டவே, முத்தி முதலிய மூன்றும் ஈசனையே குறித்தனவாம். தலை - இடம். இங்கு உள்ளிடம். பால் இனித்தலைக் குறித்தற்கு, ``நெய்த்தலைப் பால்`` என விதந்தோதினார். ``அங்கு`` என்றது துதியை. ``அது`` பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம் வினாப் பொருட்டாய், அதன் எதிர்மறையைக் குறித்தது. விரும்புதலுக்கு `அறிஞர்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. அறிஞர் விரும்பாதொழியார்` என்றதனால் `நீவிரும் அதனையே செய்மின்கள்` என உலகர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகமெத் தனையென் றொருவருந் தேறார்
பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

பொழிப்புரை :

`ஒவ்வொரு பொருளையும் அதனதன் தன்மையில் நிற்குமாறு நிறுத்தி நடத்துபவனாகிய சிவபெருமான் அனைத்து உயிர்களையும் வீடு பெறுவிக்க எத்தனை யுகங்களை வரையறுத் திருக்கின்றான்` என்பதை அறிய வல்லவர் ஒருவரும் இல்லை, இந்நிலையில் அவரவரும் அச்சிவபரம் பொருளை உள்ளவாறு உணரும் நெறியால் உணர்ந்து பிறவியினின்றும் நீங்குதலையே ஒவ்வொருவரும் செய்தலே தக்கதாய் இருக்க, ஒருவரும் அதனைச் சிறிதும் செய்யாது, பிறவிக் கடலிலே குதித்து அதன் கரையைக் காணாது அமிழ்கின்றனர்.

குறிப்புரை :

`அதனை அவர்கள் விட்டொழிதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். வலியுறுத்தற் பொருட்டுப் பின்னிரண்டு அடிகளில் எதிர் மறையாற் கூறப்பட்டது. தெளிவின் பொருட்டு உடன்பாட்டால் உரைக்கப்பட்டது. `பாய்தல்` என்றது குறிப்புருவகம். ``பவமது, சிவமது`` - என்ற `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். `பவ மதிலே, சிவமதை` என்பன இடையே ஒற்று விரித்தல் பெற்றன. இம் மந்திரம் உயிரெதுகை பெற்றது.

பண் :

பாடல் எண் : 15

இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை
நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.

பொழிப்புரை :

இவ்வுலகில் தமக்கு வருகின்ற நன்மை, தீமை இரண்டினையும் அவை ஒரு நிகரனவாக நிற்க வைக்கும் காலத்தில் மாணிக்க வண்ணனாகிய சிவபெருமானை, அவனது ஞானத்திலே விளங்கும் தனியொரு பொருளாக உணர்ந்து அவ்வாறான அவனது பெருமையைச் சொல்லி நினைக்கின்ற தூய மனம் உடையவர்க்கன்றி, அவனை உணர இயலாது.

குறிப்புரை :

இன்று சில இடங்களில் `அங்கு, இங்கு` என்பன அங்கிட்டு, இங்கிட்டு, என வழங்குதல் போல் முற்காலத்தில்` இங்கு` என்பது` இங்கித்தை` எனச் சில இடங்களில் வழங்கிற்று என்பது, ``எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும்`` என்னும் சிவஞான சித்தி (சூ. 10.6)ஆட்சியாலும் விளங்கும். பின்னர், ``அகிதம்`` என வருதலால் ``வாழ்வு`` என்றது இதத்தையாயிற்று. துஞ்சுதல் - தங்குதல். முதனிலைத் தொழிற் பெயர். `ஒப்பத் தங்கிய காலத்து` என ஓதற்பாலதனை, `தங்குதல் ஒத்த காலத்து` என்றார். நன்மையையும் தீமையையும், ஒருபடித்தாக நோக்குதல் இருவினையொப்பு வந்த காலத்தன்றிக் கூடாது. இருவினை ஒப்போடு உடன் நிகழ்வன மல பரிபாகமும் சத்திநிபாதமும். இம் மூன்றும் எய்தப் பெற்றவர் இறைவனைத் துதித்தலே உண்மையுணர்ந்து துதித்தலாக ஏனையோர் துதிப்பனவெல்லாம் ``ஊரா மிலைக்கக் குருட்டா, மிலைத்த`` (தி.8 திருச்சதகம், 87)வாறாம் ஆதலின், இருவினையொப்பு வாய்த் தோர்க்கன்றித் தூய்மணி வண்ணனை ``நாட ஒண்ணாது`` என்றார். எனவே, `முன் மந்திரத்திற் கூறிவயாறு ஏனையோரைச் சொல்லி என்ன பயன் `என்றதாயிற்று. ``என - என்று சொல்லி என்க. `விஞ்ஞானத்து` என்பது, `விஞ்சானத்து` என மருவிப் பின் எதுகைக் கேற்பத் திரிந்து நின்றது. விஞ்ஞானம் - மேலான ஞானம்; பதி ஞானம். விகிர்தன் - ஏனை எல்லாப் பொருளினும் வேறுபட்ட தன்மையுடைவன். அத்தன்மை யாவது பாச, பசு, ஞானங்களால் பற்றவாராமை. ``நினை நஞ்சற்றவர்`` என்பது வினைத்தொகை. நஞ்சு - தீமை. அஃது இங்கு மனக்குற்றத்தைக் குறித்தது. `மணி` என்பது நீலமணியையேயன்றி மாணிக்கத்தையும் குறித்தல் வழக்காதல் அறிக. இதன் கண் இன எதுகை வந்தது.
முதற்றொட்டு இதுகாறும் வந்த பதினைந்து மந்திரங்களாலும் யாவர்க்கும் பொதுவாகச் சிவவழிபாட்டினையே வலியுறுத் துணர்த்தினார். இனிவரும் நான்கு மந்திரங்களால் அச்சிவன் குருவாகி வந்து தன்னைக் காட்டப் பெற்றார்க்கு அவன் அக் குருவாய் நின்றே அருள்புரிவன் ஆதலின் அவரை நோக்கி, அக் குருவழிபாட்டினை வலியுறுத்துணர்த்துகின்றார். யாவருக்கும் சிவன் பொதுவாய்த் தாபர சங்கமங்களில் நின்று அருள்புரியினும் சிறப்பாக அவன் யார் யார்க்கு எவ்வெவ்வுருவில் நின்று அருள் புரிந்தானோ அவர்க்கு அவ்வுருவே சிவவடிவாம் என்பது உணர்க. ஆளுடைய பிள்ளையார் எங்கும் சென்று சிவனைக் கண்டு வழிபட்டாராயினும் திருக்கழுமலத் திருத்தோணி வீற்றிருந்தருளும் பெருமானையே தாம் சிறப்பாகக் கொண்டு வழிபட்டமை முதலியன இதற்குச் சான்றாகும். இவ்வாறான சிறப்பு வடிவங்களே அவரவர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி என்க.

பண் :

பாடல் எண் : 16

பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி
வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

பொழிப்புரை :

தமக்கு ஞானத்தை அளித்த நல்லருள் ஆசிரியரிடத்து அவரையும் ஏனைப் பலரொடு ஒப்ப நினைக்கும் நேர்மையில்லாத மனத்தையுடைய மாணாக்கர் நன்மாணாக்கருள் தாமும் ஒருவராய் இருந்து அவர்கள் போல ஒழுகிவருவாராயின் அவரது கரவொழுக்கத்தால் நாடு பஞ்சத்தை எய்தும். அவரை அணுகச் சிவனும் அஞ்சுவான். அதனால் அவரைப் பின்பு அவன் மீளுதற்கரிய நரகத்தில் இடுவான். நேர்மையான மாணாக்கரைக் கண்ணால் கண்டவர்கட்கும் நற்பேறு உண்டாம்.

குறிப்புரை :

``ஆம்புவி`` என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. ``பஞ்சமும் ஆம்`` என்பதனை, ``வைகில்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, `ஏனைத் தீங்குகளே யன்றி` என இறந்தது தழுவி நின்றது. ஈற்றடி, இதற்கு ஏதிராக, நன் மாணாக்கர் உள்ள நாடு நலம் பல எய்துதலை உணர்த்தியவாறு எனவே, இதனால் குருவை நம்மனோரில் ஒருவராக எண்ணுதலின் குற்றமே இனிதுணர்த்தப் பட்டதாம். `செஞ்செவே நிற்போர், என்பது, ``செஞ்ச நிற்போர்`` என மருவி நின்றது. செஞ்செவே நிற்றல், மிக நேர்மையாக நிற்றல்.

பண் :

பாடல் எண் : 17

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலும் ஆமே.

பொழிப்புரை :

அளவற்ற தேவர்கள் சிவனையை நேராகச் சென்று கண்டு வழிபட்டனர். ஆயினும் அவர்கள் பின்பு துன்பம் இன்றி வாழ்ந்ததாக வரலாறில்லை. பின்பும் துன்பம் எய்தியதாகவே வரலாறுகள் உள்ளன. ஆகையால், என்றும் துன்பமில்லா வாழ்வைப் பெறும் வகையில் சிவனை வழிபடும் முறையைத் தெரிவிக்கின்ற குருவை வழிபட்டால், அவரது அருளால் அவ்வழிபாட்டில் நின்று துன்பம் இல்லாத நிலையை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மே;இந்தப் பூமி
சிவன்உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
... ... ... ... ... திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்``
-8 திருப்பள்ளியெழுச்சி, 10
எனவும்,
``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்``
-சிவஞானசித்தி. சூ. 2-92
எனவும், பிறவாறும் போந்த திருமொழிகளால், `தேவரும் நிலையான இன்ப வாழ்வை எய்துதற்கு மண்மேல் மானுடராய்ப் பிறந்து ஞான குருவால் ஆட்கொள்ளப்பெறல் வேண்டும்` என்பது தெளிவாதல் போலவே இந்நாயனாரும் தேவர், குருவை வழிபடாமல் சிவனை வழி பட்டுப் பெரும்பயன் எய்தாமையை எடுத்துக் காட்டிக் குரு வழிபாட்டினை வலியுறுத்தினார். `குரு வழிபாடே ஞான வழிபாடாம்` என்பது கருத்து.
``அங்கு`` இரண்டில் முன்னது `அத்தேவர்பால்` எனவும், பின்னது, `வழிபட்ட இடத்து` எனவும் கூறியபடி. ஆமாறு - பயனால் உயர்ந்த நிலை. ஒன்றில்லை - சிறிதும் இல்லை. பின்னர் வந்த ``ஆமாறு`` என்பதற்கு, `பயனால் உயரும் முறை` என உரைக்க. உம்மை உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 18

நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலின் கண்டு
குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.

பொழிப்புரை :

மக்களே யாகுக; அவரினும் மேற்பட்ட தேவரே யாகுக; எல்லோரும் பாசத்துட்பட்ட பசுக்களேயாய் வினைவழிவந்து நீங்கிப் போதலின், `குரு` எனப்படுபவன் அந்நிலையை உணர்ந்து பாசத்தின் நீங்கி நிற்றலால், `ஞானி` என வேறுவைத்து எண்ணப் படுதலால், அவனை, `பதி` எனவே கூறுதல் வேண்டுமன்றி, வேறு சொல்லுதற்கில்லை.

குறிப்புரை :

அஃதாவது, `பசு` என்பதற்கில்லை என்பதாம். எழுவகைப் பிறப்புக்களுள் உயர்ந்தவை மக்கட்பிறப்பும், தெய்வப் பிறப்புமே யாகலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். கூறவே, ஏனைப் பிறப்புக்களும் அவற்றுள் அடங்கின. எனவே, உயிர் வகைகளாக நாம் அறிவன யாவும் பசுக்களேயாதலால் அவை நிலை யான இன்பத்தைப் பெறவிரும்பும் தமது விருப்பம் நிறைவேறாமல் துன்பப்பட்டு உழலவே காண்கையாலும், `குரு` எனப் படுபவன், அவ்வாறன்றி, ``நாம் ஆர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் ஏமாப்போம்; பிணியறியோம்; இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை`` (தி.6 ப.98 பா.1) என்று சொல்லிச் செம்மாந்து இன்புற்றிருக்கக் காண்கையாலும், அவனை ஏனையோரில் ஒருவனாக வைத்து, ``பசு`` எனல் கூடாமையும், அவ்வியல்பு பதிக்கன்றிப் பிறர்க்கு இன்மையால் ``பதி`` என்றலே ஏற்புடையதாதலும் விளங்கும் என்றவாறு. `கழிதலின் குரு என்பவன் (அவற்றைக்) கண்டு கோதிலன் ஆனால் ஞானியாதலின் பதி என்றல் அன்றிப்பகர்வு ஒன்றும் இன்றே` என இயைக்க, `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, நீ இப்படிச் செய்வதனால், நான் உன்னுடன் இருக்க இயலாது` என்பது போல. இதனால், `குரு சிவனே` எனப்படுதற்குக் காரணத்தை விளக்கியவாறு, இதனானே ``குருவே சிவம்`` என்றல் மலம் நீங்கித் தூயராய்ச் சிவன் அவரெனத் தானென வேறாகாது அவரே தானாய் அவரிடத்துத் தயிரில் நெய்போல விளங்கி நிற்கப் பெற்ற நிறைஞானியரை நோக்கியன்றி, வேடமாத்திரத்தால் `குரு` என நிற்பாரை நோக்கியன்று என்பதும் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 19

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாகிய சிவன் தான் குருவாகி வந்து ஆட்கொள்ளப் பெற்றவர்களுள் பின்னும் நாள்தோறும் அக்குரு வடிவின்கண் அன்பு மேலும், மேலும் மிகச் செய்கின்றவரது வினைகள் சேய்மைக்கண் விலகிக் கெடும்படி, தனது இயற்கை உருவத்தில் நீண்டசடையினிடத்தே கங்கையை அடக்கி வைத்திருப்பது போல் அவற்றின் ஆற்றலை அடக்கி அவரிடத்தே விட்டு நீங்காதிருப்பான்.

குறிப்புரை :

`ஆட்கொண்டவர்`` என்றது, `ஆட்கொள்ளப் பட்டவர்`` எனச் செயப்பாட்டு வினைப்பொருள் தந்து நின்றது. ``அங்கணர் ஒலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு`` (தி.12 தடுத்தாட்கொண்ட பு.1) என்பதிற் போல, `ஆட்கொண்டவருள்` என `உள்` என்னும் உருபு விரிக்க, ``தனிநாயகன்`` என்பதை முதலிற் கொள்க, நாள்தொறும் உற மேற்கொண்டவர். நீர்போல நெகிழ்ந்துபோதலை, நீர்த்துப் போதல்` என்னும் வழக்குப் பற்றி, ``நீர்ததும்புகின்ற சடையை நீர்க்கின்ற செஞ்சடை`` என்றார் ``ஆறு`` என்பது உவம உருபாய் நின்றது. சிவனது உருவத்தை இங்கு ``நீர் உருவம்`` என்றது, பகீரதன் பொருட்டு ஆகாயத்தினின்றும் குதித்த கங்கையை உடனே தாங்கி நின்ற கோலம் நோக்கியாம். உயிர்களைத் தாக்கி மெலியச் செய்கின்ற வினைகளது ஆற்றல் கரையை மோதிக் கரைக்கின்ற கடல் அலையோடு ஒத்தல் பற்றி அவையாக உருவகம் செய்தார். ``ஆகாய கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றின் உரோமத்தின் நுனியில் புல்நுனியில் நீர்போல நிற்குமாறு அடக்கிய பெருமானுக்கு வினையின் ஆற்றலை அடக்குதல் அரிதன்று` என்றற்கு `நீள்தன் உருவத்தின் நீர்க்கின்ற செஞ்சடை மேற்கொண்டவாறு வீவித்துளான்` என்றார். வீதலுக்குப் பிற வினை வீவித்தல், வீவித்தான்` என்றே ஒழியாது ``வீவித்துளான்`` என்றார் உடம்புள்ள துணையும் பிராரத்தம் விளைந்து கொண்டே விருத்தலின் அதனை மெல்வித்தற் பொருட்டு அவன் இமைப் பொழுதும் நீங்காது உடன் நிற்றல் பற்றி, சிவன் குருவாகி வந்து அருள்செய்யும் பொழுதே சஞ்சிதம் வறுத்த விதைபோலக் கெட்டொழியினும், பிராரத்தம் உடம்போடு ஒட்டி நிகழ அந்நிகழ்ச்சி உடல் ஊழாய் நிற்றல் அல்லது வரும் பிறவிக்கு வித்தாக ஆகாமியத்தைத் தோற்றுவியாது கழிதற் பொருட்டுத் தன்னால் ஆட்கொள்ளபட்டவருள் தொடர்ந்து அன்பு செய்பவரிடம் விளங்கி முன் நிற்பான் என்பது உணர்க. இங்ஙன மாகவே, சிவன் குருவாகி வந்து ஆட்கொள்ளப்பட்ட பின்பும் குருவையே சிவனாகக் கண்டு அன்புசெய்து வழிபடுவார்க்கன்றி ஏனையோர்க்கு முன்போல ஆகாமியவினை விளைந்து அது சஞ்சிதம் ஆக, மீட்டும் பிறவியே விளையும் என்பது விளங்கும். இதுபற்றியே,
தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது.
என்றார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம், இறுதி வெண்பா). பிழையலது - தப்பமுடியாத குற்றம்; உய்தியில் குற்றம். பிழைத்தல் - தப்புதல் இதனால், ``குருவான் ஆட்கொள்ளப்பட்டார் அதன்பின் குருவையே சிவமாகத் தேறி வழிபட்டு வருதல் இன்றியமையாதது` என்பதும் ``அங்ஙனம் வழிபடாதவழிப் பழையே நிலையே ஆய்விடும்`` என்பதும் கூறப்பட்டன.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியாது அத்திசை
என்பு நைந் துருக, நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள,
நன்புலன் ஒன்றி, ``நாத`` என் றரற்றி

உரைதடு மாறி, உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்,
கண்களி கூர, நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல் - 75-87
என்னும் திருமொழியும் இங்குக் கூறிய வழிபாட்டு அநுபவ வழி எழுந்தது என்க.
குருலிங்க சங்கமம்` என்னும் மூன்றன் வழிபாடு ஞானத்தைப் பெறுமுன்னர் அதற்குச் சாதனமாயும் பெற்றபின்னர் அதனைநிலை பெறுத்துவனவாயும் இருத்தலின் அவையே யாவராலும் செயற்பாலன என்பதை வலியுறுத்தியவர், அவற்றுள் குருவழிபாடு ஞானியர்க்குத் தலையாதலை எடுத்துக் கூறி, இத்தந்திரத்தை முடித்தார். இதனுள் இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.