ஐந்தாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐந்தாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடில்
ஏருமிம் மூவுல காளி இலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

பொழிப்புரை :

பல உலகங்களையும், அவை அடங்கியுள்ள பல அண்டங்களையும் ஒரு சேரப் படைக்கின்ற பேரறிவினையுடையவ னாகிய சிவனது பெருமையைக் கூறுமிடத்து, எழுச்சியை உடைய இந்த உலகங்கள் மூன்றினையும் தன்னடிப் படுத்து ஆள்கின்ற தலைவனாம் அவன், விளங்கத் தோன்றும் நிலைக்களம் நால்வகைச் சைவமுமாகும்.

குறிப்புரை :

`ஊர், உலகம் என்பன அவற்றிற்கு இடமான உலகத்தை யும், அண்டத்தையும் ஆகுபெயரால் உணர்த்தின, ஏர்தல் - எழுச்சி யுறுதல். `மேருவும்` என்பது பாடமன்று. `இலங்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``தாரணி`` என்றது, `நிலைக்களம்` என்ற வாறு. சைவ சமயத்தின் பெருமை கூறுவார். அதன் முதல்வனாகிய சிவனது பெருமையை முன்னர்க் கூறினார்.
இதனால், `முழுமுதற் கடவுளாகிய சிவன் விளங்கித் தோன்றும் சமயம் சைவசமயமே` என்பதும், `அது நால்வகைப்படும்` என்பதும் கூறப்பட்டன, அந்நால்வகையும் வருகின்ற மந்திரங்களிலும் அதிகாரங்களிலும் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 2

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்தும் அசித்துமுன் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமும் தோய்வுறா மேநின்ற
நித்தம் பரம்சுத்த சைவர்க்கு நேயமே.

பொழிப்புரை :

சுத்த சைவர்க்கு, சத்தாகிய பதியின் இயல்பையும், அசத்தாகிய பாசத்தின் இயல்பையும், இவற்றிற்கு இடைப்பட்டுச் சதசத்தாய் நிற்கின்ற பசுவின் இயல்பையும் உணர்ந்தபின், அறிவுடைப் பொருளாகிய உயிர்களுள்ளும், அறிவில் பொருளாகிய பாசங்களுள் ஒன்றாகாது வேறுபட்ட பொருளாய், சுத்தமாயுள்ள வைந்தவங்க ளிலும் அசுத்தமாயுள்ள மாயேயங்களிலும் தோய்ந்தும் தோயாமலி ருக்கின்ற நித்தியப் பொருளாகிய பரசிவம் ஒன்றே குறிப் பொருளாம்.

குறிப்புரை :

எனவே, தத்துவ ஞானத்தை விரும்புவது `சுத்த சைவம்` என்றதாம். ஆகவே, சிவஞான பாடியம் முதலியவற்றில் `சுத்த சைவம்` என்னும் பெயராற் குறிக்கப்படும் சுத்த சைவம் அன்று இது என்பது விளங்கும்.
சத்து - மாற்றமின்றி என்றும் ஒரு படித்தாய் இருப்பது. அசத்து - மாற்றத்தை உடையது, சதசத்து - இவ்விரண்டில் எதனோடும் சார்தற்கு உரியதாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நிற்பது. ``சத்து`` முதலிய ஐந்தும் ஆகுபெயராய் முன்னர் அத்தன்மையுடைய பொருளையுணர்த்திப் பின் அவற்றது இயல்பை உணர்த்தின. `கண்டபின்` என்பது `கண்டு` எனத் திரிந்தது. ``நீத்த, நின்ற`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``பரம்`` என்னும் ஒரு பெயர் கொண்டன, அச்சித்தும், நின்று` என்பன பாடமல்ல. ``சுத்தம், அசுத்தம்`` என்பன அவற்றையுடைய பொருள்களைக் குறித்தன. வைந்தவம் - விந்துவின் காரியம். விந்து - சுத்தமாயை, மாயேயம் - மாயையின் காரியம், மாயை - அசுத்த மாயை, `நித்தப் பரம்` என்பது தொடைநோக்கி மெலிந்து நின்றது. `ஞேயம்` என்பது `நேயம்` என மருவிற்று. `அறியப்படுபொருள்` என்பது இதன் பொருள்.
இதனால், நால்வகைச் சைவத்துள் `சுத்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதம் மேலித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

பொழிப்புரை :

கற்கத் தக்கனவாகிய சிவாகமங்களைக் கற்று, அவைகளிலே சிறப்பாகப் பொருந்தியுள்ள பிராசாத யோகத்தின் வழிப் பிரணவ ஞானத்தைப் படிமுறையால் பொருந்தி, சாலோகம் முதலாகச் சொல்லப்பட்ட பதமுத்திகளையும், அடைந்து, இவை யெல்லாவற்றின் விளைவாகவும் அதிதீவிரபரிபாகமும், அதிதீவிர சத்திநிபாதமும் வரப்பெற்று, அனைத்துப் பொருளுக்கும் மேலாய், ஆன்ம வியாபகத் திற்கும் மேலான வியாபகப் பொருளாகிய பரசிவப் பொருளைத் தலைப்பட்டவரே `சைவ சித்தாந்திகள்` எனப் படுகின்றனர்.

குறிப்புரை :

``சை சித்தாந்தர்`` என்றது `சித்தாந்த சைவர்` என்றவாறு. எனவே, `சைவாகம நெறிகளின் வழி ஒழுகி, அதனால், பதமுத்தி, பரமுத்திகளை அடைவதே சித்தாந்த சைவம்` என்றதா யிற்று. ஆகவே, சித்தாந்த சைவமே மேற்கூறிய சுத்த சைவமாதல் பெறப்பட்டது. ``மெய்யோகம்`` என்றது, `பொருளுணர்வுக்குக் காரணமான நாதத்தையுணரும் யோகம்` என்றவாறு. முற்பதம் - முதற்சொல்: பிரணவம்.
இதனால், `சித்தாந்த சைவமாவது இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நாதாந்தம் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்த போதாந்த மாகப் புனஞ் செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருள் இன்னது எனத் தெளிவாக விளங்குவதாகிய சித்தாந்த சைவத்தில் நின்று, நாத முடிவான தத்துவங்களைக் கண்டு கழித்தோரே, பின் ஒரு காலும் அசைவில்லாத திண்ணிய மெய்யுணர்வைப் பெற்றவராவர். பின்னும் அவர் `நான்` என்னும் தற்போதமும் கழலும்படி உணர்வு திருந்தப் பெறுவாராயின், நாதமுடிவில் விளங்கும் நிறை பரம் பொருளாகிய சிவமாந்தன்மையைப் பெறுவர். அதனைப் பெற்றோரே உண்மை ஞானத்தால் உண்மை ஞேயத்தை எய்தினோராவர்.

குறிப்புரை :

`சுத்தமாய்` என ஆக்கம்வருவிக்க. `சித்தாந்தத்துக்கண் நின்று கண்டோர்` என்பதில் இடைநின்றன தொக்கன. ``பூதம்``, ஏனைத் தத்துவங்கள் பலவற்றிற்கும் உபலக்கணம். தத்துவங்களின் அந்தத்தில் உள்ள போதம், `நான்` என்னும் பசுபோதம். அஃது அந்தமாதலாவது, நீங்குதல். புனம்செய்தல் - புனத்தைத் திருந்தச் செய்தல் போலச் செய்தல். ஞான நேயம் - ஞானத்தினால் பற்றப்படும் ஞேயம் `வேதாந்தம் தெளிவாதல் சைவ சித்தாந்தத்திலே` என்பதை, ``வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்`` 1 என்பதனால் அறிக.
இதனால், சித்தாந்த சைவத்தின் சிறப்பும், அதன்கண் நின்றாரது பயனும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இணையார் திருவடி ஏத்தும்சீ ரங்கத்
திணையார் இணைக்குழை ஈரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாம் சரியை கிரியையி னார்க்கே.

பொழிப்புரை :

சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர்க்குச் சிவனது இரண்டு திருவடிகளைத் தாம் வணங்குதற்குரிய கோலமாக உடம்பில் ஒன்று இரண்டாய்ப் பிணைந்த இருகுழைகள். இரண்டாகப் பொருந்திய முத்திரைகள், இரட்டை வடமாக அமைந்த கண்ட சரமும் ஆகியவை குறையாது பொருந்துதற்கு உரியன.

குறிப்புரை :

சீர் - அழகு. அஃது அதனைத் தருவதாகிய கோலத்தைக் குறித்தது. இணையார் குழையை, `ஆறுகட்டியும், சுந்தரவேடமும்` என்றும், இவை `ஆசிரியர்க்கு உரியன` என்றும் கூறுவர். `இவ்வாசிரியர் கிரியா குரவரே` என்பது இம் மந்திரத்தாற் பெறுதும். இருமுத்திரைகளா வனவற்றை, `இடபக்குறியும் சூலக் குறியும்` எனத் திருநாவுக் கரசரது வரலாறு பற்றிக் கூறுதல் கூடும். அவன் சமண் சமயஞ் சார்ந்திருந்த மாசு தீரவே அவற்றை வேண்டிப் பெற்றமையால், அவை சமய விசேட தீக்கைகட்கு உரியனவாக இங்குக் கூறப்பட்டன எனலாம். ``குன்றாது அணைவாம்`` என்றது, `தவறாது பொருந்துவது` என்றபடி. எனவே, சுத்த சைவர்க்கு அவை இலவாயினும் குற்றமின் றாதல் அறியப்படும்.
இதனால், `அசுத்த சைவருள் ஒருசாரார் இவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.

பொழிப்புரை :

காதில் பொன்னாற் செய்யப்பட்டுப் பொருந்திய கடுக்கன் இரண்டை அணிந்து, சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற `தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்று உடம்புகளையும் சோதித்துத் தூய்மை செய்யப் பெற்று, துவாதச கலாப் பிராசாதயோக நெறியில்நின்று, அந்நிலைக்கு ஏற்பத் தாம் உபதேச முறையாற் பெற்ற திருவைந்தெழுத்தையும் ஓதுபவர் மேற்கூறியவரின் வேறுபட்ட ஒருசார் சைவராவர்.

குறிப்புரை :

தூல உடம்பையே ``திருமேனி`` என்றார். சமய விசேட தீக்கைகளால் தூய்மை பெற்றமை தோன்ற அவ்வாறு கூறினார். சூக்குமம் பர உடம்புகளை ``உட்கட்டு`` எனக் குறித்தார். ``செய்து`` என்றது, `செய்வித்துக் கொண்டு` என்றபடி. ஒருசைவர் - மற்றொருசைவர்; என்றது `ஞானச்சைவர்` என்றவாறு. மேலை மந்திரத்துள் சரியை கிரியையினுள்ளும், இதன்கண் யோகம் ஞானத்துள்ளும் அடக்கப்பட்டன. இங்குக் குறிக்கப்பட்ட ஞானம் கேள்வியளவினது. இவற்றை ``சோதனை செய்து`` எனவும், துவாதெச மார்க்கராய்`` எனவும் போந்த குறிப்புக்களால் அறிக.
இதனால், அவருள் மற்றொருசாராரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.

பொழிப்புரை :

பாரத வருடத்தின் ஒன்பது பகுதிகளையும் சென்று கண்டவரே அவைகளில் உள்ள சான்றோர் ஆராய்ந்துகண்ட அரிய உண்மையைக் கண்டவராவர். அதனால், அவர் எல்லாவற்றையும் உணர்ந்த இறைவனது நவந்தரு பேதங்களையும் உணர்ந்தோரும், பின்னர்க் கூறப்படும் கடுஞ்சுத்த சைவருக்கு நிகரானவரும் ஆவர்.

குறிப்புரை :

பாரத வருடத்தின் ஒன்பது கண்டங்களாவன:- `இந்திரம், கசேரு, தாமிரவர்ணி, கபத்தி, நாகம், சாந்திரம் காந்தருவம், வாருணம், குமரி` என்னும் பெயருடையவாகச் சொல்லப்படுகின்றன.
`பரத கண்டமே `கடவுள் நிலம்` (புண்ணிய பூமி)` என்றும், `அது மேற் குறித்த ஒன்பது கண்டங்களையுடையது` என்றும் `அக் கண்டங்கள் அனைத்திலும் அரும்பொருளை - மெய்ப்பொருளை ஆராய்ந்துணர்ந்த `அறிவர்` பலர் நிரம்ப உளர்` என்றும் ஆகமங்கள் கூறுதலால், `அவை அனைத்திலும் தொண்டரொடு கூடிச் சென்று தூநீராடியும், தொழுதகு படிவங்களை வணங்கியும், அறிவரை அடி பணிந்து அரும் பொருள் கேட்டும் வருவோர் அசுத்த சைவராயினும் மெய்ப்பொருளைக் கண்ட சுத்த சைவர் எனச் சொல்லத்தக்க பெருமை யுடையவர்` என்றவாறு `பரத கண்டத்துக் கண்டங்கள் ஒன்பதுள்ளும் குமரிக் கண்டமே சிறந்தது` என்பதும் சிவாகம நூல் துணிபு. இரண் டாவதாய் நின்ற ``கண்டங்கள்``, இடவாகு பெயர். ``கண்ட`` எனப் பொதுப்படக்கூறிய அதனால், அது முழுதுங்கண்டதாயிற்று. இறைவனது பேதங்களை ``மாகண்டம்`` என்றார். அப்பேதங்கள் ஒன்பதும் மேலே கூறப்பட்டன.
இதனால், `சுத்த சைவரல்லாதார் தீர்த்த யாத்திரை தல யாத்திரைகளை இன்றியமையாது மேற்கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது, இதன் பயன் ஞானத்தைப் பெறுதலாகும்.
``மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே`` 1
என்ற தாயுமானவர் மொழி இங்கே நினைக்கத் தக்கது.

பண் :

பாடல் எண் : 4

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

பொழிப்புரை :

`ஞானத்தை விரும்புபவன்` என்று சொல்லப் படுவோன், உலகில் விளங்கித் தோன்றுகின்ற சமய நூல்கள் அனைத்தையும் உணர்ந்த உணர்வோடு, மன ஒடுக்கம் வரும் நிலையையும், முழுமையாக எண்ணப்படுகின்ற `எட்டு` என்னும் தொகையைப் பெற்றுள்ள சித்திகளையும், இவ்வுலகமேயன்றி, ஏனை மேல் கீழ் உலகங்களின் இயல்புகளையும், இருக்கு முதலிய நான்கு வேதங்களின் முடிவாகிய `ஆரணியகங்கள், உபநிடதங்கள்` என்பவற்றின் பொருள்களையும், எல்லாவற்றிற்கும் முதல்வனாகிய இறைவனது இயல்பையும், அவனுக்கு என்றும் அடிமையாகின்ற தனது இயல்பையும் உணரும் பண்புடையவனேயாவன்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது மேற்கூறியவாறு பொருள் படு மாற்றைப் பின் வருவனவற்றால் அறிக. நன்நூல் - ஞானநூல். இங்ஙனம் பல நூலும் கண்டபின்பே, பொய் பொய்யாய் ஒழிய மெய் மெய்யாய்த் தோன்றும் என்பது பற்றி, இங்ஙனம் ஓதினார். ``நூல் பல கல்`` 1 என்று ஔவையாரும் கூறினார். ``கல்லார் நெஞ்சில் - நில்லான் ஈசன்`` 2 என்று அருளிச்செய்ததும் இது பற்றி. ``கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்`` என்பது பழமொழி. இதில் ``கண்டது`` என்பது கொள்கை வேறுபட்ட அறிஞர் பலரும், `இதுவே நன்னூல்`` எனக் கண்டது என்பதாம். சைவ சந்தான குரவர் நால்வருள் ஒருவர் அருட் குரவரது அருளுரையைப் பெறுதற்குமுன் `சகலாகம பண்டிதர்` எனப் பலராலும் புகழப்பெற்றிருந்தமை அறியத்தக்கது.
இதனால், சுத்த சைவராக வேண்டுவார் கேள்வி ஞானத்திற்குப் பின் சிந்தனையால் முதிர்ச்சி பெறவேண்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.

பொழிப்புரை :

சுத்த சைவநிலையை அடைய வேண்டுவார் கொள்ளத்தக்க முதற் சாதனங்கள், பொன்னாற் பொதியப்பட்ட உருத்திராக்கங்களின் மாலை, விபூதி என்னும் இரண்டுமாம். இவை நன்மையைத் தருகின்ற பெரிய ஞான சாதனமும், தீமை தோன்றாவாறு செய்கின்ற பெரிய காப்புச் சாதனமுமாம். ஆதலால், அவர்கட்கு இவை இன்றியமையாச் சாதனங்களாகும்.

குறிப்புரை :

எனவே, `இச்சாதனத்தளவில் நிற்போர் ஒரு கூற்று மார்க்க சைவர்` என்றதாயிற்று. முதற்கண் ``சாதனம்`` என்றது உருத்திராக்கத்தை, இதனை ``எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால்``1 என்பதிலும் காண்க.
இதனால், மார்க்க சைவத்துள் ஒரு பகுதி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தி
னூடுறு ஞானோ தயன்உண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வன்பத்தன் நித்தனே.

பொழிப்புரை :

பின்னர்க் கெட்டொழியாது நிலை பெற்று நிற்கும் ஞானத்தை உணர்ந்தவனும், அதனால் `ஞான வேந்தன்` எனப் புகழப்படுபவனும், அழிவில்லாத வேத முடிவில் தொடங்கி விரிந்த சிவாகமங்களின் நாற்பாதங்களினுள்ளும் பொருந்தி விளங்கும் பொருள்கள் விளங்கப்பெற்ற அறிவையுடையவனும், அவற்றால் உண்மை முத்தியாகிய பரமுத்தியைப் பெறும் தகுதியை அடைந்தோனு மாகிய பெருமை பொருந்திய சுத்த சைவனுக்குத் தொண்டு பூண்டவன் பிறவிப் பயனைப் பெற்றவனாவன்.

குறிப்புரை :

எனவே, `இவன், மார்க்க சைவத்துள் மற்றொரு பகுதியினன்` என்பது பெறப்பட்டது. இதனுள் சுத்த சைவனது பெருமையை யே விரித்து, `அவன்பால் பத்தி பூண்டவன் சித்தன்` எனக் கூறப் பட்டது. சித்தன் - சித்திக்கப் பெற்றவன். பெறுதலுக்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``சித்தாந்தம்`` என்றது சிவாகமங்களை.
இதனால், சுத்த சைவர்க்குத் தொண்டு பூண்டொழுகுதலும் மார்க்க சைவத்தின் ஒரு பகுதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.

பொழிப்புரை :

தொல் ஆகமங்கள் ஒன்பதே, `இருபத்தெட்டு` என்பன அவற்றினின்றும் விரிந்தனவாம். `சிவபேதம், உருத்திர பேதம், தேவ பேதம்` என்னும் முப்பேதங்களும் `இருபத்தெட்டு` என்னும் அவற்றில் சொல்லப்படுவனவே. ஆகமங்கள் எத்துணையாக விரிந்து, எத்துணைப் பேதப்பட்டிருப்பினும் தற்போதத்தைப் போக்க வல்ல, வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த மாகிய அவற்றின் துணிபு ஒன்றேயாக முடிந்ததே சுத்த சைவநிலை வாய்ப்பதாகும்.

குறிப்புரை :

எனவே, `அங்ஙனம் பல ஆகமங்களின் பொருள்களை யும் ஒருமைப்பட உணர்தலும் மார்க்க சைவப் பகுதியாம்` என்ற தாயிற்று. இங்குக் கூறப்பட்ட ஆகமம் பற்றிய செய்திகளை முதல் தந்திரம் - ஆகமச் சிறப்பு அதிகாரத்தில் காண்க. ஆன - ஆனவை. மெய்ம்மை - முடிந்த பொருள்.
இதனால், சைவாகமங்களின் பொருள்களை ஒன்றோடு ஒன்று முரணாதவாறு ஒருமைப்படக் காண்டலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓரேழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே.

பொழிப்புரை :

`சுத்தம், அசுத்தம், மிச்சிரம்` என்னும் மூவகைப் பல்வேறு நிலைகளையும், மாயை கன்மங்களின் காரண காரிய நிலை களையும் கடந்து, பரையாவும், அபரையாதற்குரியவளாயும் உள்ள, சிவனது அருளாகிய சத்தி, எல்லாப் பொருள்களையும் நடத்து பவளாய், அவற்றின் உட்பொருளாகி எவ்விடத்திலும் நிறைந்து நிற்கின்றாள்.

குறிப்புரை :

``துரியங்கள்`` என்றதனால், ``சுத்தம், அசுத்தம்`` எனப் பட்டனவும் அவற்றில் நிகழும் சாக்கரம் முதலியனவும் அவத்தையாதல் அறியப்படும். இங்கு, `சுத்தம்` என்றது, கேவலமல்லாத சகலத்தை, அசுத்தம், கேவல சாக்கிரம் முதலியன. இவற்றின்பின் வாளா ``துரியங்கள்`` என்றதனால் அவை முன் இரண்டைக் கடந்த சுத்த சாக்கிரம் முதலியவாயின. இவ்வைந்தோடு சுத்த அசுத்தங்களை ஒவ் வொன்றாக்கி, `ஏழு என்றார், காரண காரியங்களையே சத்து, அசத்து என ஓதினார், அவை அங்ஙனம் சொல்லப்படுதற்கு உரியன வாகலின். உய்த்தல் - நடத்துதல், இதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. பின்வந்த ``பராபரை`` இரண்டும், `சத்தி` என்னும் அளவாய் நின்றன. ``அத்தன் அருட் சத்தி`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. ``அத்தன் அருட் சத்தி எங்குமாம்`` என்றது, `அந்நிலையை உணர்ந்து அதில் அடங்கி நிற்போர் மார்க்க சைவர்` என்றதாம்.
இதனால், அத்தனது அருள்நிலையை அடைந்தோர் மார்க்க சைவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சத்தும் அசத்தும் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.

பொழிப்புரை :

எங்குமாய் நிற்கும் அருட் சத்தியை அடைந்து நிற்கும் நிலைக்குமேலே, எல்லாப் பொருளையும் கடந்த பராசத்தியை அடைந்தவர், அச்சத்திக்கு முதலாய பரசிவமேயாய், சித்தும் சடமு மாய உலகங்களுள் யாதும் தோன்றாது சிவோகம் பாவனையில் அழுந்தி, பரமுத்தி நிலையில் விளையும் பேரின்பமாகிய ஆனந்த சத்தியில் மூழ்கி யிருப்பர். அவரது பேறே ஏனை எல்லார் பேற்றினும் சிறந்த பேறாகும்.

குறிப்புரை :

``தணந்தவர்`` என்று மேற்கூறிய ``தணந்தபரையை`` அடைந்தவர் என்றவாறு. எல்லாமாய் நிற்பவள் அருட் சத்தியும், எல்லாவற்றையும் கடந்து நிற்பவள் ஆனந்த சத்தியும் ஆதலின் அந் நிலையே முடிந்த பேறாயிற்று. `உளது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `உளதாமே` எனப் பாடம் ஓதலுமாம்.
இதனால், `மேற் கூறப்பட்டவர் மார்க்க சைவரேயாயின், அவருக்கு மேலேயுள்ள சுத்தசைவாராவார் யாவர்? என்னும் ஐயத்தினை நீக்குதற்கு. `அருள் நிலையைக் கடந்து ஆனந்த நிலையை எய்தினோர் சுத்த சைவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.

பொழிப்புரை :

ஆன்மா, `யாதும் செய்யாது அமைதியாயுள்ள பரசிவன், `சதாசிவன்` எனப்படுகின்ற ஐந்தொழில் முதல்வன், அப்பதியோடு ஏனைப் பசு பாசங்கள், அநாதி தொட்டே உள்ள ஆணவப் பிணிப்பாகிய முதற்பந்தம், அது நீங்கி நின்ற வீடு` என்னும் இவற்றை ஐயந்திரிபு அற ஆராய்ந்துணர்தல் என்பர். இவை சுத்த சைவராவார் தமக்கு உரிய உபாயமாகும்.

குறிப்புரை :

`மாசற்ற வீட்டினை` எனக் கூட்டியுரைக்க. `சுத்த சைவராவார் உபாயம்` என ஆக்கம் வருவித்து உரைக்க.
இதனால், `தத்துவ ஆராய்ச்சி மார்க்க சைவமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

பொழிப்புரை :

சுத்த சைவராய் உள்ளார்க்கு உளதாகின்ற அனு பவத்திற்கு, எங்கும் நிறைந்த பொருளாகிய சிவனிடத்தே வைக்கப் பட்டதனால் பிற பற்றுக்கள் நீங்கிய ஆன்ம போதத்தில், வேதாந்தம், சித்தாந்தத்தோடு ஒற்றுமைப் பட்டுத் தோன்றப்பெற்ற உணர்வோடு, பிராசாத கலைகள் பன்னிரண்டும் காட்சிப்பட, அதனால் இடையறாது விளங்கும் பேரின்பமே காரணமாம்.

குறிப்புரை :

அதனால், அத்தகைய பிராசாத யோகத்தில் நிற்பவர் மார்க்க சைவராதல் பெறப்பட்டது. இம்மந்திரத்தில் பாடங்கள் மிகத் திரிந்துள்ளன. `காட்சிக்கு` என்னும் நான்கனுருபு இன்னோசை நோக்கித் தொகுக்கப்பட்டது.
இதனால், பிராசாத யோக நெறியும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மாறாத ஞானம் மதிப்பற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.

பொழிப்புரை :

சித்தாந்த சைவத்தின் அங்கமாகும் மார்க்க சைவரது ஒழுக்கத்தைச் சொல்லுமிடத்து,தொன்று தொட்டுத் தொலையாது நிற்கின்ற தற்போதத்தைப் பெரிதாக எண்ணாமல், அஞ்ஞானத்தி னின்றும் நீங்கமாட்டாத அறிவை மேற்கூறிய உயர்ந்த யோகமாகிய பிராசாத யோகத்தால் அஞ்ஞானத்தினின்றும் நீங்கித் தெளிவடையும் படிச் செய்து, அதனைச் சிவனது அறிவேயாக ஆக்கிப் பெறற்கரிய பேறாகிய சிவோகம் பாவனையைத் தலைப்பட்டு அதனைப் போற்றி அந்தப் பதிஞான நெறியில் நிற்றலேயாகும்.

குறிப்புரை :

`யோகத்தால்` என உருபு விரிக்க. சிவம், ஆகுபெயர். ``பேறான`` என்பது, `சிறந்த பேறாகிய` என்னும் பொருளைக் குறித்தது. ``கூறாகும்`` என்னும் பெயரெச்சம். ``ஞானி`` என்பதன் முதனிலையோடு முடிந்தது. ஞானமாவது, சித்தாந்த ஞானமே யாதல் அறிந்து கொள்க.
இதனால், மார்க்க சைவரது ஞான ஒழுக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வேதாந்தங் கண்டோர் பிரமவித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணர் அன்ன சைவர் உபாயரே.

பொழிப்புரை :

சிவாகமங்களை உணராது வேதாந்தத்தை மட்டும் உணர்ந்தோர் முதற் பொருளை உண்மை மாத்திரையான் உணர்ந் தவரே. அதன் இயல்பையும், அதனைப் பெறுமாற்றையும் பெற்றவழி உளதாகும் பயனையும் அறிந்தவரல்லர். பிராசாத நெறியால் நாத முடிவைக் கண்டவர் அசைவில்லாத யோகிகளோயவர்; ஞானிகள் அல்லர். சைவாகமங்களை வேதாந்தத்தோடு ஒற்றுமைப்படவைத்து உணராது தனிப்ப வைத்து உணர்ந்தோர் பொதுச் சைவரே; உண்மைச் சைவர் அல்லர். ஆதலால், அவர் மார்க்க சைவரே; சுத்த சைவர் அல்லர்.

குறிப்புரை :

இதன் ஈற்றடியின் பாடம், ``சாதாரணர்; அன்ன சைவர் உபாயரே`` என இங்குள்ளபடியாவது, ``சாதாரணர் அன்னர்சைவம் உபாயமே`` என்றாவது ஓதப்படல் வேண்டும். மார்க்க சைவருள் இங்குக் கூறப்பட்ட சாதாரண சைவர் பாசுபதர் முதலிய அகப்புறச் சமயிகள் என்க. இவரைக் கூறுவார், மேற்கூறிய மார்க்க சைவரை அனுவதித்தும், புறச் சமயத்தாராகிய ஏகான்மவாதரைப் புடைபட வைத்தும் கூறினார்.
இதனால், சிவாகமத்தைப் பொதுவாக உணர்தலும் மார்க்க சைவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காமல் எணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே.

பொழிப்புரை :

பரந்துஎழும் மேகக் கூட்டம் அருவமாகிய ஆகாயத்தைப் பற்றமாட்டாது, பல காட்சிப் பொருள்களும் கண்ணொளியைத் தமக்கு இடமாகக் கொண்டு நிற்க மாட்டா. அவை போல, எண் வரையறை யில்லையாம்படி முடிவின்றி எண்ணப் படுவனவாகிய பசுக்களைப் பற்றிநிற்கின்ற பாசங்கள், தலைவனாகிய சிவனைச் சென்று அணுகமாட்டா.

குறிப்புரை :

இதனுள் இரண்டு எடுத்துக்காட்டுவமைகள் கூறப் பட்டன. `பாசம்` என்னாது ``பசு பாசம்`` என்றதனால், `பசுக்களைப் பற்றுகின்ற அவை பதியாகிய இறைவனைப் பற்ற மாட்டா` என்ற தாயிற்று. ஆகவே, அப்பாசங்களால் தோற்றுவிக்கப் பட்ட அறிவைக் கொண்டோ, அவற்றின் நீங்கியவழி எதனையும் அறியமாட்டாத தனது அறிவைக்கொண்டோ உயிர் இறைவனை அறியமாட்டா` என உணர்த்துதல் இம்மந்திரத்தின் கருத்தாதல் விளங்கும். அதனால், `பதி ஞானத்தால் பதியைத் தலைப்பட்டு உணர்வோரே சுத்தசைவர்` என்பதும், `அவ்வாறன்றி, பாசஞான பசுஞானங்களால் உணர்வோர் மார்க்க சைவரே` என்பதும் கூறியவாறாம். ``அண்ணலைச் சென்றணுகா`` என்பதை இறுதியிற் கூட்டி உரைக்க.
இதனால், மேற்கூறியவர் எல்லாரும் சுத்த சைவராகாது மார்க்க சைவராதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகாரம் நீங்கியே
நின்ற பராற்பர நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை :

மேற் கூறிய, `சிவனும், சீவனும் ஒருபொருளே` என்றுகூறும் `பிரம வித்தியாவாதமும், இருவரும் வேறுவேறானவர் களே` எனக் கூறும் வேதாந்தம் அல்லாத அசுரௌத வாதமும் இன்றி, `இருவரும் கலப்பினால் ஒன்றாய் பொருள் தன்மையால் வேறாய் இருப்பவர்` என்னும் சித்தாந்த அத்துவித ஞானத்தில் நிலைபெற்று நின்று, பொருளில்லாத சூனியம்` எனத்தக்க பல சமயத் தொடக்கி னின்றும் நீங்கி, அந்தச் சமயங்கள் அனைத்திற்கும் மேலே உள்ள முதற் பொருளாகிய, அறியப்படுபொருளாம் சிவனை, அவனது திருவடி ஞானத்தின்வழியே சென்று பொருந்திப் பின் அவனேயாகி விடுதலே சித்தாந்த ஞானத்தின் பயனாகும்.

குறிப்புரை :

நிராகாரம் - உருவின்மை; என்றது பொருள் யாதும் இல்லாத சூனியத்தை. மூன்றாம் அடியில் `நின்று` என்பது பாடம் அன்று `பராபரை` என்பது பாடமாயின், ``பாதம்`` என்பதற்கு `நிபாதம்` எனப் பொருள் உரைத்து, ``நேயத்தை`` என்பதை அதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``சென்று`` என்பதன்பின், `தலைப்பட்டு` என்பது எஞ்சிநின்றது.
இதனால், அசுத்த சைவம். மார்க்க சைவம் என்பவற்றது நிலை இனிது விளங்குவதற்குச் சுத்தசைவத்தினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வேடங் கடந்த விகிர்தன்றன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சஞ்செற்றுப்
பாடொன்று பாசப் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே.

பொழிப்புரை :

துறவுக் கோலம் இன்றியே, ஆசையாகிய தளையையும் அறுத்தெறிந்து, துன்பத்தொடு படுதற்கு ஏதுவாகிய மலங்களாகின்ற பசுத்துவம் இல்லையாம்படி அடித்துப் போக்குகின்ற சிவஞானச் செயலரே கடுஞ்சுத்த சைவராவர்.

குறிப்புரை :

இல்லம் துறந்து, எங்கும் செல்பவரே துறவுக் கோலத்தை உடையராவர் ஆகலின், ``வேடங் கடந்து`` என்றது இல்லந்துறத் தலாகிய புறத்துறவு இன்றி, அகத் துறவு மாத்திரம். உடையராதலைக் குறித்தது. இவர் சிவனிடத்தே அடங்கியிருத்தல், அலை ஒழியாத கடலில் அலைவின்றி மூழ்குதலோடு ஒக்கும் அருமை யுடைத்தாதல் அறிக. ஆடம்பரம் - ஆரவாரம். வேடங்கடந்தமை முன்னே கூறப்பட்டமையின், இது தமது நிலையைப் பிறர் அறிதற்கு ஏதுவாம் பேச்சினைக் குறிக்கும். இது முற்கூறியதினும் அருமை யுடையதாம். போதகர் - போதத்தை விடாதே செயற்படுவோர். ``சுத்தசைவர்`` என்றது, அதிகாரத்தால் கடுஞ்சுத்த சைவரையாயிற்று.
இதனால், `கடுஞ் சுத்த சைவ நிலை இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உடலான ஐயைந்தும் ஒன்றும் ஐந்தும்
மடலான மாமாயை மற்றுள்ளம் நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மாமே.

பொழிப்புரை :

தூல சூக்கும பர உடம்புகளாய் நிற்கும் முப்பத் தொரு தத்துவங்களும், அவற்றிற்கு மேல் உள்ள ஐந்து தத்துவங்களும் ஆக முப்பத்தாறு தத்துவங்களும் விரிவான நிலையை யுடைய பெரிய மாயையாம். அவற்றை ஆன்மா நீக்கின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவ மலத்தைக் கழுவித் தனது இயற்கை நிலையை உறுதிப்பட எய்தும். அவ்வாறு எய்துவதே சித்தாந்தச் சைவ நெறியாகும்.

குறிப்புரை :

``உடலான`` என்பது ``ஐந்தும், ஓராறும்`` என்னும் இரண்டோடே பொருந்தி நின்றது. அவற்றிற்கு மேல் உள்ள ஐந்தும் சுத்த தத்துவங்கள். அவை ஆன்மாக்களுக்கு உடம்பாய் வருதல் இல்லை. மடல் - விரிவு. `படலம்` என்பது. அம் குறைந்து நின்றது. கேவல பாசம் - ஆன்மாவோடு இயல்பாக ஒட்டி ஒன்றாய் நிற்கும் பாசம்; ஆணவ மலம், உள்ளம் - ஆன்மா. ஆன்மா என்றும் சிவ வியா பகத்தில் உள்ளதே யாகலின், அந்நிலை தோன்றாதவாறு மறைத்துள்ள ஆணவம் நீங்கியவுடன் தனது இயற்கை நிலையை எய்தலாவது சிவ வியாபகத்தில் இருத்தலை உணர்ந்து இன்புறுதலேயாதல் அறிக. ``சித்தாந்தம்`` என்பதே சுத்த சைவம் ஆதலின், `அந்த நெறியில் கடுஞ்சுத்தசைவர் இவ்வாறு நிற்பர்` எனக் கூறியவாறு.
இதனால், மேற்கூறிய அரு நெறியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சுத்தச் சிவனுறை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாம்மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரே சுத்த சைவரே.

பொழிப்புரை :

தடத்த சிவன் எழுந்தருளியிருக்கின்ற சுத்தமாகிய சிவலோகத்தை அடையினும் அங்குப் பற்றுக் கொள்ளாமல் `முத்தர்` என்னும் சொல்லுக்குப் பொருளும் முத்தியாகிய நிலத்திற்கு வித்தும் ஆகியிருக்கின்ற அந்தத் தகுதியையுடைய முத்தான்மா ஆகின்றவர் அவ்வாற்றால் சிவனைச் சார்ந்து, அதனால், மூலமலம் பற்றறக் கழிந்தவழிச் சொரூப சிவனோடு இரண்டறக் கலப்பர். அங்ஙனம் கலப்பவரே உண்மைச் சுத்த சைவராவர்.

குறிப்புரை :

`அதனால்` வேடம் முதலியவற்றை மேற்கொள்ளாமலே அத்தகுதியையுடையராய் இருப்பர் கடுஞ்சுத்த சைவர்` என்பது குறிப்பெச்சம் `சுத்தத்தானம்` என இயையும். `சிவனுரை` என்பது பாடமன்று. ``மூலம்`` என்பதை, அற்றால் என்பதற்கு முன் கூட்டி உரைக்க. அத்தகைய ஆன்மா நிலையை அடைந்தவரை ``ஆன்ம`` என்றே கூறியது ஆகுபெயர். இஃது இயற்கையில் அஃறிணை இயற் பெயராய்ப் பன்மைகுறித்து நின்று பின் ஆகுபெயர் ஆயிற்று. `சுத்த சிவமாவர்; அவரே சுத்த சைவர்` என இருசொல் நீர்மைப்படுத்து உரைக்க. `சிவலோகத்தை அடைந்தாரும் பற்று நீங்காதவழி மீள நிலத் திற்பிறப்பர்` என்பதும், `பற்றற்றிருப்பின், அவ் விடத்திற்றானே சிவன் மூன்னின்று அவரை முத்தியிற் சேர்த்துவன் என்பதும் சிவாகம உண்மையாதலின் 1 அவரையே ``முத்தர் பதப் பொருள்`` என்றும் ``முத்திக்கு வித்து`` என்றுங் கூறினார். திருவள்ளுவநாயனாரும் இத்தகையோரை, ``வரன் என்னும் வைப்பிற் கோர் வித்து`` 2 என அருளிச்செய்தார்.
இதனால், கடுஞ் சுத்தசைவரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பரம்
தானென்றும் நான் என்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில் லேனே.

பொழிப்புரை :

`நான் எங்கே யிருக்கின்றேன், `தத்` பதப் பொருளாகிய பரம் எங்கே உள்ளது` என்று நான் தேடி அலையும் நிலையில், `தான் அதோ உள்ளது, நான் இதோ உள்ளேன்` என வேறு வேறு கண்டு எண்ணுமாறு `இரண்டு` என்னும் எண்ணிற்கே இடம் இல்லாது, என்னுள் ஒன்றாயே நிற்கின்ற அது எனது அலைவுக்கு இரங்கி வெளிப்பட்டு வந்து, தான் என்றுமே நானாய் - என் உயிருக் குயிராய் - ஒன்றியிருக்கிற உண்மையை உணர்த்தினமையால், நான் இப்பொழுது `தான்` என்று அதனைத் தனியாகவும், `நான்` என்று என்னைத் தனியாகவும் எண்ணிச் சொல்லும் தன்மை இலேனாயினேன்.

குறிப்புரை :

`தற்பதம்` என்பது பாடமாயின், ``பதம்`` என்பதைச் சொல்லாகு பெயராகக் கொண்டு உரைக்க.
``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்`` 3
என்றதும் இங்கு நினைக்கத் தக்கது.
இதனால், புறக்காட்சியற்று அகக் காட்சியில் உறைத்து நிற்றல் கடுஞ் சுத்த சைவமாதல், தம்நிலை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சாற்றரி தாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

பொழிப்புரை :

சொல்ல இயலாத மேற்குறித்த உண்மை நிலை கிடைக்கப்பெற்றால், பொறுத்தற்கரிய ஐம்புலன்களும் தம் குறும்புகள் நீங்கி அடங்கிவிடும். பாசஞான பசு ஞானங்களைக் கடந்து மேலாய் விளங்கும் பதிஞானம் நொந்தா விளக்குபோல நிலைபெற்று ஒளிரும். அதன் பயனாகப் பின்னர்ப் பதிப்பொருள், மேலான சாயுச்சியமாய்க் கிடைக்கும்.

குறிப்புரை :

`அத் தத்துவம்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. பால் -அப்பால்.
இதனால், கடுஞ் சுத்த சைவத்தின் அருமையும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.

பொழிப்புரை :

`மூலன் உடன்பட்டுக் கூறிய சரியை நெறி யாது` என்று ஆராய்கின்ற கஞ்சமலையமானே, கந்துருவே` `பூமியில் உண்மையை ஓர்ந்து உணரச் செய்வதாகிய சுத்த சைவத்தின் உயிர் நாடியாம் நெறிகள் இவை` எனக் கூறுகின்றேன்; கேண்மின்கள்.

குறிப்புரை :

`மூலன் நேர்ந்திடும் சரியை` என மாற்றிக் கொள்க. `கஞ்சன் முதலியோர் நாயனார்க்கு மாணாக்கர் என்பது பாயிரத் துள்ளே அறியப்பட்டது, அவர் பெயரை ஒரோவழி நாயனார் எடுத் தோதுதல் செய்வர். ``சரியை நெறி எது`` என்று எடுத்துக்கொண்டு, ``சைவத்துக்கு உயிர் கேண்மின்`` எனப் பொதுப்படக் கூறியது, `சரியையோடு பிறவற்றையும் கூறுவன்` என்றவாறு. இதனானே இவ்வதிகாரத்துள் பிறவும் பொதுப்பட உடன் வைத்துக் கூறுதல் பெறப்படும். இதனுள் பொருட்பின் நிலையும் வந்தது.
இதனால், இனிவரும் அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை
செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் உள்ள பொருளை ஆராய்ந் தறிவது ஞானபூசை. உயிர்க்கு உணர்வுண்டாக்குகின்ற பிரணவத்தைப் பல வகையாலும் காணுதல் பெரியயோக பூசை. புறத்தில் விளங்கும் மூர்த்தி உயிருடையதாகும்படி மூர்த்திமானை அதன்கண் வருவித்துச் செய்தல் புறப் பூசை. இனிக் குற்றந் தீர்ந்த அன்புடன் செய்வனயாவும் சிவனுக்குச் செய்யப்படும் பூசையாம்.

குறிப்புரை :

அதனால், `அன்பின்றி நிகழின் இங்கு எடுத்தோதப் பட்டனவும் பூசை யாதலில்லை` என்றதாம்.
``நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும்நீ ருங்கண்டு
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே`` 1
எனவும்,
``அன்பேஎன் அன்பேஎன் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் - அன்பன்றித்
தீர்த்தந் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாத்தும் பழமன்றே தான்`` 2
எனவும் போந்தன காண்க. இதனுள் யாவற்றையும் ``பூை\\\\u2970?`` என்றே குறித்தலின், `பசுக்களாகிய உயிர்கள் பதியாகிய இறைவன் எவ்வாற்றாலும் வழிபட்டு நிற்றலே சைவத்தில் உள்ள உய்யும் நெறி` என்பது விளங்கும். `அவ்வழிபாடுதான், `ஞான யோகக் கிரியா சரியைகள்` என நான்காய் நிற்கும்` என்பது அம்முறையானே கூறப்பட்டது. முதல் மூன்று அடிகளிலும் முறையே ஞானம் முதலிய மூன்றனையும் கூறி, `அவையல்லாத பிறவெல்லாம் சரியையாம்` எனப் பொதுப்படக் கூறினார் என்க. `பிராசாத யோகம்` என்பார், ``மகா யோகம்`` என்றார். ``ஆய் நிற்றல்`` என்பது, `ஆய்` என்னும் முதனிலை, `ஆய்ந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `உயிர்ப் பெறும்` என்பது பாடமாயின், `பகரஒற்று விரித்தல்` என்க. செயிர் - குற்றம். `அறன்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்தல் போல, `செயிர்க்கடை` என்பது அதன் மறுதலையைக் குறித்து.
இதனால், சைவத்தின் ஒழுகலாறு நால்வகைத்தாதலும், அவற்றின் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``நன்மை`` என்றது அருள் விளக்கத்தை. இதனை முன் உள்ள ``நாடு, நகரம்`` என்பவற்றிற்கும் கூட்டி, `நல்ல நாட்டையும், அதனுள் நல்ல நகரத்தையும், அதனுள் நல்ல திருக்கோயிலையும் கருதித் தேடித் திரிந்து` என உரைக்க.
``தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்`` 1
என அருளிச்செய்ததும் அறிக. நெஞ்சத்தை உடையாரது தொழிலை நெஞ்சத்தின் மேல் ஏற்றி, ``கூடிய நெஞ்சம்`` என்றார். கொள்ளுதற்கு எழுவாய், முன்னர் வந்த சிவபெருமானைச் சுட்டும். `அவன்` என்பது வருவிக்க. இங்ஙனம் விரித்துக்கூறிய இவை, `சரியை` என்பது அதிகாரத்தால் பெறப்பட்டது. `நெஞ்சத்து` என்பது பாடம் அன்று.
இதனால், சரியை ஓழுக்கமாவன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பத்தர் சரியை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த இயமாதி தூயோகர் சாதகர்
சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.

பொழிப்புரை :

சரியையில் நிற்போர் பத்தியையுடைய `பத்தர்` என்றும், கிரியையில் நிற்போர் அணுக்கத் தொண்டு செய்யும் அத்தகுதியை யுடைய `தொண்டர்` என்றும், இயமம் முதலிய யோக நிலைகளில் நிற்போர் `சாதகர்` என்றும் ஞானத்தில் நிற்போர் `சித்தர்` என்றும் பெயர் பெறுவர். இவருள் முதல் இருவரும் திருவேடத்தைத் தவிராது பூண்பர்.

குறிப்புரை :

எனவே, பின்னை யிருவரும் பெரும்பான்மையும் புறக் காட்சி யிலராகலின், திருவேடம் இன்றியும் காணப்படுவர் என்பது போந்தது. பத்தர் - பத்தியுடையவர். அணுக்கத்தொண்டே `தொண்டு` எனப்படுமாதலின், இவர் `தொண்டர்` எனச்சிறப்பித்துக் கூறப் பட்டாராயினர். அணுக்கத்தொண்டினை `பணிவிடை` என்பர். சித்தர் - பேறு பெற்றவர். `சாதகர் தூயோகர்` என்பது பாடமாயினும் இதுவே பொருள் என்க.
இதனால், காரணப்பெயர் கூறும் முகத்தால், சரியை முதலிய நான்கிலும் நிற்போரது தராதரம் உணர்த்துப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே

பொழிப்புரை :

சிவமாந் தன்மையை எய்தினோரே மெய்ஞ் ஞானம் முற்றினவராவர். மனம் சமாதிநிலையில் அடங்கப் பெற்றவரே அட் டாங்கயோகம் முற்றினவராவர். ஒருநாளேனும் அர்ச்சனை தவறி யொழி யாதபடி செய்தவரே நுணுகியதான கிரியை முற்றினவராவர். நெடுந் தொலைவான நாட்டிலும் சென்று மூர்த்தி தலம் தீர்த்தங்களை முறைப்படி வணங்கினவரே தாம் ஏற்றுக்கொண்ட சரியை முற்றின வராவர்.

குறிப்புரை :

``தான்`` என்றது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், `சரியை முதலியவற்றில் நிற்பவர் அவற்றைக் கடைப்பிடியாகக் கொண்டு முதிர்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கிரியையோ கங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே.

பொழிப்புரை :

கிரியை வழிபாட்டிலும், யோக வழி பாட்டிலும் சிவனது அருள் உருவம் நிற்கும். ஞானவழிபாட்டில் உருவம் அற்ற அருவ நிலை தோன்றும். இவ்வழிபாடுகள் சத்தி நிபாத நிலைக்கு ஏற்பக் குருவின் வழி நூல் நெறியாற் செய்யப்படுவன. இவ்வாறன்றி அன்பு காரணமாகத் தத்தமக்கு இயலும் வகையிற் செய்யப்படுவன இவற்றினும் உயர்ந்த வழிபாடாய் அமையும்.

குறிப்புரை :

நிரல் நிறையில் கிரியை, யோகம் இரண்டும் `உரு` என வரும் ஒன்றனோடே இயைதற் பொருட்டு, ``கிரியை யோகங்கள்`` எனத் தொகைப்படுத்து ஓதினார். `உரு` என்பதன் ஈற்று முற்றியலுகரம் உயிர்வரச் சிறுபான்மை கெட்டது. இவை, பருவத்துத் தேர்ந்திடும் பூசை எனச் சுட்டுப் பெயர் வருவித்து முடிக்க. தேர்தல், கேட்டல் சிந்தித்தல்களால் மெல்ல உணர்தல். உரியன, இயலுந் திறம்பற்றிக் கொள்ளுதற்கு உரியன. இவை திருநீலகண்டத்துக் குயவனார். அதி பத்தர் முதலியோரால் கொள்ளப்பட்ட செயல்கள் போல்வன. இவை யெல்லாம் உலகத்தார்க்குச் சரியை போலவும், பொதுச் சிவபுண் ணியங்கள் போலவும் தோன்றுதலின், இவ்வதிகாரத்துட் கூறினார். `நேயத்து உரியன` என மாற்றிக்கொள்க. எடுத்த எடுப்பில் இதன்கண் நெறிகள் பலவும் தொகுத்துக் கூறப்படுதலும் நோக்கத்தக்கது.
இதனால், நூன்முறை வழிபாடு, அன்பு முறைவழிபாடு` என வழிபாடு இருவகைத்தாதல் உணர்த்தப்பட்டது. இவற்றை முறையே, `விதி மார்க்கம், பத்தி மார்க்கம்` என்பர்.

பண் :

பாடல் எண் : 7

சரியாதி நான்கும் தகும்ஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது நந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.

பொழிப்புரை :

`சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நான்கு நெறிகளும், அவற்றில் முடிவாக உள்ள தகுதி பெற்ற ஞானம் ஒன்றிலே `ஞானத்திற் சரியை` முதலிய நான்கும் விரிந்துள்ள இவையே வேதத்தின் தெளிவாய் அமைந்த சிவாகம நெறி. அரனையே பொருளாகின்ற நிலையைச் சிவபெருமான், அறியாமை யுடைய மக்கள் அதனினும் நீங்கித் தனது ஒளி யுலகத்தை யடைந்து தன்னை வணங்கி வாழ்தற் பொருட்டு` வைத்துள்ளான்.

குறிப்புரை :

`அதனால், இவையே வீட்டு நெறிகளாம்` என்பது கருத்து. ஏனை வேத நெறிகள் இம்மை, மறுமை என்னும் உலக நெறிகளாம் என்க. ``சித்தாந்தம்`` என்பது இங்குச் சிவாகமத்திற்குப் பெயராய், அது பற்றிக் கொள்ளப்படும் நெறிகளைக் குறித்தது. அந்நெறிகள் ஆறாவன, `பாடாண வாத சைவம், பேதவாத சைவம், சிவ சமவாத சைவம், சிவ சங்கிராந்தவாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாமவாத சைவம்` என்னும் அகச் சமயங்கள், இவற்றுள், இறுதியில் உள்ளது `சிவாத்துவித சைவம்` எனவும் படும். ஐக்கியவாத சைவமும் சிவாகம நெறியே யாயினும். அது அவ் ஆகமங்கள் முதன்மையாகக் கூறும் ஆணவ மலத்தைக் கொள்ளாமை யால், வேதாந்தத் தெளிவாகாது. அகப்புறச் சமயங் களோடு கூட்டி எண்ணப்படுகின்றது. சிவலோகத்தை அடைந்து வாழும் வாழ்வுகள் யாவும் பதமுத்திகளே. அகச் சமயங்கட்குப் பதமுத்திகளே பயன் என்றதனால், பரமுத்தி சித்தாந்த சைவத்தினன்றி எய்தலாகாமை அறியப் படும்.
இதனால், `சரியை முதலியவைகளே வீட்டு நெறிகள் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சமையம் பலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி
சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.

பொழிப்புரை :

வீட்டு நெறிளாகிய சரியை முதலியவைகளில் நிற்க விரும்புவோர், ஆசிரியரை அடைந்து தீக்கை பெற்று நின்ற வழியே அவை உண்மைச் சரியை முதலியனவாய்ப் பயன்தரும். அத்தீக்கை, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நான்கு வகைப்படும்.
சமய தீக்கை தூல உடம்பைப் பல வகையில் தூய்மைப் படுத்து வதாகும். அதன் பயனாக, மாணவன், இது காறும் எல்லாச் செயல் களையும் தன்னால் ஆகின்றனவாகவேயாக மயங்கியிருந்த மயக்கம் நீங்குமாறு. `எல்லாம் அவன் செயல் (சிவன் செயல்)` ஆதலை உணரும் வாய்ப்பினைப் பெறுவான். அதனை அடுத்துச் செய்யப்படும் விசேட தீக்கை சிவமந்திரங்களைப் பீசங்களோடு கூட்டி உபதேசித்து, அதனால் பெரும்பயன் அடையச் செய்வதாகும். சாந்தத்தை உடைய நிருவாண தீக்கை, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தி யாதீதை` என்னும் கலைகள் ஐந்தில் ஏனைய பொருட் பிரபஞ்சம், சொற்பிரபஞ்சங்களாய் அடங்கியுள்ள அத்துவாக்களிடமாக நிற்கும் சஞ்சித கன்மங்களை ஆகுதிகளால் அழித்து, மாணவனது ஆன்மாவை நின்மலம் (மாசற்றது) ஆக்குவதாம். அதற்குமேல் உள்ள அபிடேகம்` ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்கும் தீக்கை செய்தற்கு உரிய பெரிய ஞானத் தகுதியுடையவர்க்கு அவ் ஆசிரியத்தன்மையை அபிடேகம் செய்து அளிப்பது.

குறிப்புரை :

சமய தீக்கை பெற்றவன், `சமயி` எனப் பட்டுச் சரியையில் நிற்றற்கு உரியன், `இந்நிலையில் கணிக்கப்படும் மந்திரங்கள் நிர்ப்பீசம்` என்னும் கொள்கை பற்றி இதனை நாயனார் `மந்திரசுத்தி` என்னாராயினார். எனினும், இங்கும் மந்திரங்களைச் சபீசமாகச் சொல்லும் வழக்கமும் காணப்படுகிறது. விசேட தீக்கையில் மந்திரங்கள் சபீஜமாகச் சொல்லும் அதிகாரத்தைத் தந்து, கிரியையிலும் யோகத்திலும் நிற்பித்தலால் இதனையே ``மந்திர சுத்தி`` என்றார். மந்திரம் ஆறத்துவாக்களில் ஓரத்துவாவேயாம். நிருவாண தீக்கையில் மட்டுமே ஏனை ஐந்தத்துவாக்களையும் அடக்கியுள்ள கலைகளைச் சுத்தி செய்து சஞ்சித கன்மம் துடைக்கப்படுதலால், அதனையே ``கலா சுத்தி`` என்றார். நிர்ப்பீசம் - பீசாக்கரங்களோடு கூடாதது - சபீசம் - பீசாக்கரத்தோடு கூடியது. `சமயம், விசேடம், நிருவாணம்` என்னும் மூன்றிலும் `நிர்ப்பீசம், சபீசம்` என்னும் இரண்டும் உள என்றலும், சமயம் நிர்ப்பீசமே; ஏனைய இரண்டும் சபீசமே, என்றலும் ஆகிய இருவேறு கொள்கைகளும் ஆகமங்களில் உள என்பர். `சபீச தீக்கை உயர்ந்தோர்க்கே செய்யப்படும்` என்பது ஒரு படித்தான கொள்கை யாகையால், `விசேடமும், நிருவாணமும் சபீசமே` என்னும் கொள்கை யில் `அவ் இரு தீக்கையும் உயர்ந்தோர்க்கே செய்யப்படுவன` என்பது விதியாய் அமையும். ``அமை மன்னும்`` என்பதற்கு. `அமைந்து நிலைபெறும்` எனப் பொருள் உரைக்க.
இதனால், சரியை முதலியவற்றைக் கூற எடுத்துக் கொண்ட நிலையில் அவற்றிற்கு உரிமையைத் தரும் தீக்கை வகைகள் இம்முதல் அதிகாரத்தில் சொல்லப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வமுண்டு
எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

பொழிப்புரை :

எல்லாத் தெய்வங்கட்கும் மேலான ஒரு தெய்வ மாகிய சிவபிரான் பத்துத் திசைகளிலும் நிறைந்திருக்கின்றான். அவனை எந்தத் திசையில் `இல்லை` என்று கூறமுடியும்! ஆதலால், பலவகை மலர்க் கூட்டத்தைக் கொண்டு அவனது திருவடியையே புகலிடமாகக் கருதி வழி பட்டால், பொங்கிப் புரண்டு வருகின்ற வினையாகிய கடல் வந்து மோத மாட்டாது ஒழியும்.

குறிப்புரை :

`ஆதலின், அதனைச் செய்க, என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில், ``எத்திக் கினிலில்லை`` என்பதைப் பிறவாறு ஓதுவன பாடமாகா என அறிந்து கொள்க. `கொத்தோடு` என மூன்றாவது விரிக்க.
இதனால், `கிரியையாவது சிவபெருமானை மலர்தூவி வழி பகுதலேயாம்` என்பது கூறப்பட்டது.
இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``கானுறு கோடி`` என்னும் மந்திரம் பின்னர் ஏழாம் தந்திரத்தில் `குருபூஜை` அதிகாரத்தில் வருவது.

பண் :

பாடல் எண் : 2

கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.

பொழிப்புரை :

தலைவனாகிய சிவபெருமானது நடனம் புரிகின்ற திருவடிகளைத் துதியுங்கள். ஏனெனில், `ஞானக்கன்றுகளின் கூட்டம்` எனத் தக்க அடியார் கூட்டத்தின் நடுவே திரிந்துகொண்டிருப்பவனும், வானத்தில் வாழும் பசுக்கன்றுகளாகிய தேவர்களால் தொழப் படுபவனும் ஆகிய சிறப்பால் யானையை ஒத்த அடியவனுக்கே மறுமையில் சிவனது திருவருட் பெருக்கு உளதாகும்.

குறிப்புரை :

`கோன் நக்கன் தாய குரை கழல்` எனவும் `ஞானக் கன்று ஆய நடுவே` எனவும், `ஆனைக்கு அன்று` எனவும் கண்ணழித்து உரைக்க, ``உழிதரும், கைதொழும்` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆனை`` என்னும் ஒருபெயர் கொண்டன. ``ஆனைக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல் பெற்றது. `அருள் பள்ளமாமே` எனவும் பாடம் ஓதுவர். `வள்ளமாமே` என்பது பாடமன்று.
இதனால், கிரியையுள் தோத்திரம் சிறந்ததோர் உறுப்பாதல் கூறப்பட்டது. ``பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி`` 1 என்றார் நாவுக்கரசரும்.

பண் :

பாடல் எண் : 3

இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
எதுபணி மானுடர் செய்பணி? ஈசன்
பதிபணி செய்வது பத்திமை யாமே.

பொழிப்புரை :

உலகங்கள் அனைத்தையும் செயற்படுத்தலாகிய அச்செயலைச் செய்பவளாகிய அம்மையும் அதனைச் செய்தல் அவளை ஒரு கூற்றிலே உடைய சிவனிடத்து இக்கிரியைத் தொண்டைச் செய்தேயாம். அங்ஙனமாயின், `மக்கள் செய்யத் தக்க பணி` யாது என்பார்க்கு, பதியாகிய அவனிடத்துச் செய்யுங் கிரியையே` என்பது கூற வேண்டுமே! இனி, `பத்திமை` எனக் கூறப்படுவது இக்கிரியையேயாம்.

குறிப்புரை :

``பணிந்த`` என்பது, `பணியைச் செய்து` என இருசொல் நிலைமைத்தாய் நின்றது. `எண்டிசை மண்டலம் எல்லாம் செய் கின்றவள் அது பணி அவளொடு கூறன்பால் இது பணிந்து` எனக் கூட்டியுரைக்க. அம்மையும் இறைவனை வழிபட்டு வரம்பெற்றமை பல இடங்களில் வெளிப்படை. ``கூறன்`` என்பதில் ஏழாவது இறுதிக் கண்தொக்கது. மூன்றாம் அடியிலும் `இது பணி` என ஓதுதல் பாட மாகாது. `பதியாகிய ஈசன் பணி` எனக் கூட்டுக. `இது செய்வதே பத்திமை` என வேறு தொடராக்கியுரைக்க. சரியை முதலிய நான்கனுள் முன்னிரண்டும் `பத்திச் செயல்கள்` எனவும், பின்னிரண்டும், `ஞானச் செயல்கள்` எனவும் பொதுவாக வழங்கப்படுமாறு அறிக. இது வருகின்ற திருமந்திரத்தாலும் பெறப்படும்.
இதனால், கிரியையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.

பொழிப்புரை :

பத்தியை வேண்டுபவன், முன்னே சரியை கிரியை களிற் பழகிப் பின்பு சத்திநிபாத முதிர்வால் குற்றம் அற்ற சிவயோகத் தில் மனத்தை செலுத்தும் வழியிலே பொருந்தி, அதனால், முதிர்ந்து வருகின்ற ஞானத்தால் குருவருள் வாய்க்கப் பெற்றுப் பின்பு அவ்வருளானே சிவத்தை அடைந்து சிவமேயாவான்.

குறிப்புரை :

அதிகார இயைபுபற்றி, கிரியை முற்கூறப்பட்டது ``சுத்தம்`` என்றது பிறவற்றைக் கீழ்ப்படுத்துத் தான்மிக்குத் தோன்று தலை. அடயோகம் முதலியவற்றால் மலம் நீங்காமையின் அது நீங்குத லாகிய சிவயோகத்தை, ``துரிசற்ற யோகம்`` என்றார். உய்த்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. ``சித்தம்`` என்றது அறிவை ``குரு வருளால்``என்ற அனுவாதத்தால், குருவருள் ஆதலும் பெறப் பட்டது. `சரியை கிரியைகளாகிய பத்தி நெறியில் நின்றோன் பின்பு யோக ஞானங்களாகிய ஞான நெறியைத் தலைப்பட்டுப் பின் அது வழியாகச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வு எய்துவன்` என்றவாறு.
இதனால், மேற் கூறிய பத்தி நெறி, ஞானம் வாயிலாக வீட்டைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள்
என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே.

பொழிப்புரை :

செம்பொன்போலும் திருமேனியும், அதனுட் சிறப்பாகக் குறிக்கத் தக்க தாமரை மலர்போலும் திருவடிகளும் என் கண்முன் தோன்றினாற்போல, என் உடம்பகத்து இருதய கமலத்தில் ஒளியாய் விளங்குகின்ற சிவன், புறத்தில் இலிங்க மூர்த்தியிடமாக எனக்கு விளங்கிநிற்கின்றான். அதனால், அடியேன் அவன்மேல் வைத்த அன்பினால் மனம் நெகிழ்ந்து உருகுகின்றேன்; அவன் இடும் பணிகளைச் செய்கின்றேன்; எல்லாம் செய்து அவனை வேண்டுவது அவனது அருள் ஒன்றையே.

குறிப்புரை :

``மொழிவது எனக்கருள்`` என்பதை முதலடியின் இறுதி யிற் கூட்டி அஃது ஈறாக அனைத்தையும் ஈற்றில் வைத்து உரைக்க. ``செய்`` உவம உருபு. `இலிங்கு நின்றானே. இலங்குகின்றானே` என்பன பாடமல்ல. இடும்பணி, ஆகமத்தின் வழியாகப் பணித்த பணிகள். மோனை நயம் கருதாது, `நாளும் பணி செய்வன்` என்றலுமாம். இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், இலிங்க மூர்த்தியில் சிவனை முடிமுதல் அடிகாறும் தோன்ற வெளிநிற்கப் பாவித்து வழிபடுதலே கிரியையாதலும், அது பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யப்பட்ட வழியே உண்மை யாதலும் கூறப்பட்டன, ``என்பினுட் சோதி இலிங்கம் நின்றான்`` என்பதனால், கிரியையாளன் அவ்வாறு அகத்தும் புறத்தும் வழிபடல் வேண்டும் என்பதும் கூறியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.

பொழிப்புரை :

வளி நிலை (பிராணாயாம) முறைப்படியே மூலாதார முதலிய ஆறு ஆதாரங்களிலும் உணர்வாய் ஏறிச்சென்று இறுதியில் சிவனது அருவத் திருமேனியில் நிலைத்து நின்று, ஊன்றி நிறுத்தப்பட்ட தூண்போலும்படி தமது உடலை நேராக நிமிர்த்துச் சிறிதும் அசைவற நிறுத்தி, அதனைப் பிறர் கீறினாலும், தாக்கினாலும் அவற்றால் உணர்வு பிறழ்ந்து விரைய அவரை நோக்குதல் இல்லாது, தியானப்பொருள் ஒன்றையே உணர்ந்திருக்க வல்ல மாயோகிகட்கே அந்தத் தியானப் பொருளாகிய சிவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

நேர்மை - நுண்மை. அஃது அருவத்தை யுணர்த்திற்று. ``தாம்`` ஆகுபெயர். `இவ்வாறிருப்பார் யோகிகளே` என்பது வெளிப்படையாதலின், `யோகியர்` என்பதனை எடுத்தோதாதே போயினார்.
இதனால், `யோகத்தினது இயல்பு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

பொழிப்புரை :

யோகப் பயிற்சியால், பல ஊழிகள் செல்லவும் எடுத்த உடம்பு நீங்காது நிற்க, அதன்கண் நின்று அவ்வூழிகளைக் காண வல்லவர்க்கல்லது, ஊழிகள்தோறும் காரணக் கடவுளர்களது தொழிலிற்பட்டுப் பிறந்து இறந்து உழல்பவர்கட்கு அப்பிறப்புக்களில் பல்லூழிகள் சென்றாலும் அவர் தன்னை உணர நில்லான் சிவன். பாற் கடலில் பள்ளி கொள்பவனாகிய மாயோனும், பிரமனும்` என்று சொல்லப்பட்ட தலைமைத் தேவர்களே பல்லூழிக்காலம் தேடியும் காணவராமல் அவர்களது ஆற்றலுக்கு அப்பாற்பட்டு அவன் நின்றதே அதற்குச் சான்று.

குறிப்புரை :

``உச்சி`` என்றது, மேல் உள்ள இடத்தை.
இதனால், இறைவன் `சரியை, கிரியை` என்பவற்றிற் போலன்றி யோகத்தில் வெளிப்பட்டு விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணரவல் லார்கட்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.

பொழிப்புரை :

பூ மலர்தற்குமுன் அதன் மணம் அதனுள் அடங்கி யிருத்தல் போல, உயிர் பக்குவப்படுதற்கு முன் அதன் அறிவுக்கு அறிவாய் அதனுள்ளே தோன்றாதிருந்த சிவம், பக்குவத்தால் உள்ளமும், உடலும், எழுதப்பட்ட ஓவியம் போல அசைவற்று நிற்கப் பெற்ற யோக உணர்வினர்க்கு வெளிப்பட்டு விளங்கும். அப்பொழுது அவர்களது உள்ளமும், உடலும் புனுகு பூனையால் கூடப்பட்ட மூங்கில் தறி அதன் மதநீரால் மணம்பெற்றுத் திகழ்ந்தது போலச் சிவமணம்கமழப் பெற்றுச் சிவதனுவும், சிவகரணமுமாய் விளங்கும்.

குறிப்புரை :

``பூத்தது`` என்பதனை மூன்றாம் அடியில் இறுதியிற் கூட்டி,அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சமும், ``ஆம்`` என்பதற்கு வினைமுதலும் வருவித்து உரைக்க. புனுகு பூனையே, `கத்தூரி மான்` எனப்படுகின்றது. இதன் மதமே மிக்க நறுமணம் கமழ்வதாகிய கத்தூரி, கத்தூரியே `மான் மதம்` என்றும், ``மிருக மதம்`` என்றும் சொல்லப்படுவது. இவ்விலங்கினிடமிருந்து இதன் மதத்தைக் கொள்ள வேண்டுவோர் இதனைக் கூட்டில் அடைத்து நல்லுணவு கொடுத்து, இதற்கு இன்ப வேட்கை மிகும்படி செய்வர். அதுபொழுது இஃது அக்கூட்டினுள் முன்பே பொருத்தப்பட்டுள்ள மூங்கிற் குழாயை அணைந்து தனது மதத்தை வெளிப்படுத்த, அதனை அம்மக்கள் எடுத்துக்கொள்வர். அம்மதம் உள்ள பொழுதும், எடுக்கப்பட்ட பின்பும் அம் மூங்கிற் குழாய் தன்னுள்ளே அம்மணம் கமழப் பெறுவதாயே இருக்கும். அதனையே, ``நாவி அணைந்த நடு தறியாமே`` என உவமித்தார். ஆக்கம், உவமை குறித்து நின்றது.
``நாவியின்கண் - போதுறு மதம் விடுத்துப்
புன்மலங் கொள்ளு மாபோல்`` 1
என்ற சிவப்பிரகாசர் மொழியிலும் இம் மான்மதம் குறிப்பிடப்படுதல் காணலாம்.
இதனால், மேற்கூறிய சிவ விளக்கம் உவமையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.

பொழிப்புரை :

உலகீர்! நீவீர், உய்திக்குக் காரணமாய்ப் பொருந்தியுள்ள பொருளை அறியவில்லை. ஆயினும், `யாம் உய்ந்தோம், உய்ந்தோம்` என்று மயங்கி உரைக்கின்றீர். மலரில் மணம்போல உம்மிடத்து உள்நின்று தோன்றக்கூடிய சிவனை, யோக நெறியால் உள்ளத்தில் பொருந்தக்கண்டு, அதனால் உம் மயக்கம் நீங்கப் பெற்றால், தொன்று தொட்டு வருகின்ற பிறவிக்கு மூல காரணமாய் உள்ள ஆணவ மலம், கீழ்ப்பட்டு அடங்கிவிடும்.

குறிப்புரை :

`உறுபொருள் காண்கிலீர், உய்ந்தமை என்பீர்` எனவும், `மலரிற் கந்தம்` எனவும் மாற்றியுரைக்க. `யோக நெறியால்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஆணவம் ஆழ்தலாவது தனது சத்தி மடங்கிக் கிடத்தல். மூலவித்தாமே, மூலவித்தாகுமே` என்பன பாடம் அல்ல.
இதனால், யோகத்தால் ஆணவ சத்தி மெலிவடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா
அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.

பொழிப்புரை :

இயல்நூற் கல்வி, பாடல்களை ஓதுதல், மற்றும் அறுபத்து நான்கு கலைகளையும் பயிலல் இவையெல்லாம் இகழ்ச்சிக் குரிய பாசத்தால் விளையும் பிறவியை நீக்கமாட்டா. அதனால், நான் அப்பிறவியை அழிக்கும் முறையை. `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` எனப் பெயர்பெறும் மூச்சின் இயக்கங்களை நெறிப்படச் செய்யும் வகையால் அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

பழித்தலைப் பாசம் - பழியின்கண் நிற்கும் பாசம். `பிறவியும் நீங்கா` என்பது பாடம் அன்று. `அழித்தலை உணர்ந்தேன்` என இயையும். இதற்குமுன், `அதனை` என்பது வருவிக்க. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் நாடிவழி இயங்கும் பிராணன் `சந்திர கலை` முதலிய பெயர்களைப் பெறுதல் அறிக. ``வழித்தலை`` என்பதன்பின், `பட` என்பது எஞ்சி நின்றது. `வகையால்` என உருபு விரிக்க. நூலறிவு ஒன்றே பிறவியை நீக்கமாட்டாது; அதற்கு யோக முயற்சி வேண்டும்` என்றதாம்.
இதனால், யோகம் பிறவி நீக்கத்திற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.

பொழிப்புரை :

யோகத்தைத் தியானப் பொருளிடத்து வைக்கும் பேரன்புடன் செய்த வழியே அதனால் விளையத்தக்க பயன்கள் யாவும் விளையும்.

குறிப்புரை :

`இல்லையேல், ஒரு பயனும் விளையாது` என்பதாம். நான்கிடத்தும், `செயினே` என ஏகாரத்தை மாற்றியுரைக்க. மெய்த் தவன் - மெய்ப்பொருளைத் தலைப்பட்டு அதுவானவன். இது, `மெய்` என்னும் பெயரடியாகப் பிறந்த வினைப்பெயர். இதன்பின், ``ஆகும்`` என்ற செய்யுமென் முற்று. உயர்திணை ஆண்பாலில் வந்தது. ஈற்றில் வருவதும் அன்னது. இடை நின்ற இரண்டும் `உண்டாகும்` என்னும் பொருளன. விண் - சிவலோகம். ``மெய்த்தவனாகும்`` முதலிய நான்கும் சிறப்புடைப் பொருளை முற்படக் கிளக்கும் முறையிற் கூறப் பட்டன. முதலடியில் `மெய்த்தவராகும்` என்பது பாடமன்று. இரண்டாம் அடியில் `மெய்யுரையாகும்` எனப்பாடம் ஓதி, `குருமொழி கிடைக்கும்` எனவும் பொருளுரைப்பர்.
இதனால், `யோகம் பயன் தருதலும் அன்புள்ள வழியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
காணில் தனது கலவியு ளேநிற்கும்.
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடும்அங்கி உத்தமன் றானே.

பொழிப்புரை :

உடம்பினுள் நின்று வெப்பத்தைத் தருகின்ற மூலாக் கினியாய் உள்ள சிவன், அவ்வக்கினியை அணையாது ஓம்பி நின்றால் வீட்டுலகத்தை அளித்தருள்வான். அவ்வக்கினியை எழுப்பிக் காணும் அளவில் நின்றால், அங்ஙனம் நிற்கும் யோகிக்கு அவன் உறவான பொருளாய்ப் பல நலங்களைச் செய்தருள்வான். இவ் இரண்டும் இன்றி, உலகரது பழிப்பு நோக்கி அந்நெறியிற் செல்ல ஒருவன் கூசுவனாயின், அவன் நரகத்தை நோக்கிப் போகும் வழிக்கே வகையைச் சிவன் உண்டாக்குவான்.

குறிப்புரை :

`ஆதலின், மூலாக்கினியை எழுப்பிப் பயனடையும் விருப்பமும், ஆற்றலும் உடையோர் உலகரது இகழ்தல் புகழ்தல்களை நோக்காது, அதன்கண் முயல்க` என்பது குறிப்பெச்சம். ``கலவியுள்`` என்பதில், `உள்` என்பது ஏழனுருபு. ஈற்றடி இனவெதுகை பெற்றது.
இதனால், யோகத்திற்குத் தகுதியுடையோர் தப்பாது அதன் கண் முயலல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.

பொழிப்புரை :

யோகத்தில் விருப்பங்கொண்டு, மேற்கூறியவாறு மூலாக்கினியை ஓம்பி நின்றவனைத் தனது பூத உடலை விட்டுப் போவதற்குள், நீதிக்கு ஒத்த செங்கோல் அரசராயும், அமர முனிவ ராயும் உள்ளோர் எத்தனை ஆயிரவர் இறந்தார்கள்! எண்ணில்லாதவர் இறந்தார்கள். அதனால், சித்தர், தேவர், மும்மூர்த்திகள் ஆகியோரும் மேற்கூறிய யோகியை, `இவனே சிவன்` என்று பெருமையாகப் பேசி, அவனிடத்து அன்புடையராவர்.

குறிப்புரை :

``விரும்பி நின்றே செயின்`` எனவும் பேணின் எனவும், மேற்போந்த அதிகாரம் அறாது வருதலின், இம்மந்திரமும் அவனது சிறப்புக்கூறுவதேயாய், ``இவன்`` எனப்பட்டவனும் அவனேயாயினான் என்க. `தேவ இருடியர், முனிவர்` என்பார், ``உலப்பிலி மாதவர்`` என்றார். அவர் அவ் இருடியரும், முனிவரும் ஆயது முன்னைப்பசு புண்ணியத்தால் ஆதலின், அப்புண்ணியந் தீர்ந்தவழி அவரும் அப்பதவியின் நீங்குதல் பற்றி, அவரையும் வீழ்வாருள் ஒரு சாராராக ஓதினார். இங்குக் கூறும் யோகம் சிவயோகமாதலின், இவன் இறவாது வீட்டுலகம் புகுவன் என்க. `எண்ணிலி, உலப்பிலி` என்பவற்றை ஓர் எண்ணுப் பெயர்போலவும் வைத்து ஓதுவார் இந்நாயனார்.
இதனால், சிவனிடத்துச் செய்யும் அன்போடு கூடிய யோகத்தை உடையவனது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற்
காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள்
ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

பொழிப்புரை :

யோக நெறியில் நிற்பவனுக்கு, `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்றும் செய்ய உரிமை உண்டு. கிரியை நெறியில் நிற்பவனுக்கு, `கிரியை, சரியை` என்னும் இரண்டும் செய்ய உரிமை உண்டு. உலகியல் அவாவை விட்டுச் சரியையில் நிற்பவனுக்கு அஃது ஒன்றற்குமட்டுமே உரிமை உண்டு. அங்ஙனமாயினும் எந்த ஒன்றில் அன்புடையவனாயினும் அவனது அன்பை நான் விரும்புகின்றேன்.

குறிப்புரை :

`சரியை முதலியவற்றுள் எந்த ஒன்றில் நின்றோரும் பின்னர் உலகியலில் வீழாது வீடு பெறுதல் உறுதி` என்பதாம். இம் மந்திரத்துள் திரிவுபட்ட பாடங்கள் பற்றி இடர்ப்பட்டுப் பொரு ளுரைப்பர். ஆதிசரியை - முதற்படியாகிய சரியை. மூன்றாம் அடியில் `சரியையில் ஒன்றேயாம்` என விரிக்க. ஈற்றடியில் ``ஆகி`` என்பது பெயர். அதன்பின் ஒற்றுமிக்கது செய்யுள் விகாரம்.
``... ... ... ... ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரியா வான்தான் ஒண்கிரியை யாதி
ஆனஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேயுரியன்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே கூறப்படுதல் காண்க.
இதனால், யோகி, `சரியை, கிரியை` என்னும் இரண்டில் நிற்பாரின் உயர்ந்தவனாதல் கூறப்பட்டது. அங்ஙனமாயினும் `அவை பசு புண்ணியங்கள் போல மலத்தின் வழிப்பட்டன ஆகா` என்றற்கு. ``ஒன்றுள் ஆகித்தன் பத்தியுள் அன்புவைத்தேனே`` என்றருளிச் செய்தார்.

பண் :

பாடல் எண் : 10

யோகச் சமயமே யோகம் பலஉன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே.

பொழிப்புரை :

யோக நூல் பற்றி யோக வகைகள் பலவற்றையும் உணர்தல் `யோகத்தில் சரியை` எனப்படும். இயமம் நியமம் முதலிய எட்டுநிலைகளிலும் நிற்றல் `யோகத்தில் கிரியை` எனப்படும். உள்ளொளிக் காட்சி கிடைக்கப் பெற்று நிற்றல். `யோகத்தில் யோகம்` எனப்படும். மூன்றாம் தந்திரத்தில் `பரசித்தி` எனக் கூறப்பட்ட அவற்றைப் பெறுதல் `யோகத்தில் ஞானம்` எனப்படும்.

குறிப்புரை :

சரியை முதலியவற்றை அவற்றிற்குரிய தீக்கைப் பெயர் களாற் கூறினார், `யோக நிலையில் அவ் அவ்யோகப் பகுதிகளே அவ்வத் தீக்கைகளாயும் அமையும்` என்றற்கு நிர்வாண தீக்கை ஞான தீக்கையாயினும் சாதகருக்கு ஞானத்தை முதிர்விக்கப் பிராசாத யோகம் உண்மை பற்றி யோகப் பகுதியாகக் கூறினார். அதற்கேற்ப ஞானத்தின் மிக்க ஆசாரிய நிலையையே `ஞானம்` என்றார், வருகின்ற அதிகாரத்து இறுதியிலும் இவ்வாறே கூறுதல் காணத்தக்கது. யோகத்தில் சரியை முதலியன பிறவாறுகூறப்படினும், `இவ்வாறு கூறுதலும் உண்டு` என்பது இதனால் பெறப்படுகின்றது, ``உற்றல்`` என்பதில் றகர ஒற்று விரித்தல்.
இதனால், யோகத்தின் படிநிலைகள் பல கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

பொழிப்புரை :

ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை. இருப்பதாகக் கருதும் சமயம் யாதேனும் உண்டாகுமானால், அது நல்ல சமயம் ஆகாது. ஞானத்தின் நீங்கிய எந்தச் சாதனங்களும் முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே மக்களுட் சிறந்தவராவர்.

குறிப்புரை :

மேற் சரியை முதலியவற்றின் சிறப்புக்களை இதுபோல மிக உயர்த்துக் கூறாமையால், `அவையெல்லாம் ஞானம் வாயிலாக வீட்டிற்குச் சாதன மாதலல்லது நேரேசாதனமாவன அல்ல` என்பதும், `ஞானம் ஒன்றே வீட்டிற்கு நேர்ச்சாதனம்` என்பதும் பெறப்பட்டது.
``ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம்
நல்லஆ கமம்சொல்ல, `அல்லவாம்` என்னும்
ஊனத்தார் என்கடவர்! அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான்
ஆனத்தால் அதுபோவ தலர்கதிர்முன் இருள்போல்
அஞ்ஞானம் விடப் பந்தம் அறும்; முத்தி ஆகும்`` 1
எனச் சிவஞான சித்தியிலும் இவ்வாறே வலியுறுத்தி ஓதினமை காண்க.
ஞானம் - மெய்யுணர்வு. அஃதாவது, `பொருளல்லவற்றைப் பொருள் என்று உணராது` 2மெய்ப்பொருளை உணர்தல். இது `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பை அளவைகளாலும், பொருந்துமாற்றானும் நன்கு சிந்தித்துத் தெளிதலே உளதாவதாம். இதனையே, வடமொழியில் `தத்துவ ஞானம்` என்பர். இம்மெய்யுணர் வாவது சிவஞானமே என்பதையும் சித்தியார் மேற்குறித்த செய்யுளின் இறுதியில்,
``ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்;
இறைவனடி ஞானமே ஞானம் என்பர்``
எனக் கூறி முடித்தது. உண்டி சுருக்கல், கொல்லாமை, புலால் உண் ணாமை, ஐம்பொறி யடக்கல், உயிர்கள்மாட்டு இரக்கம் முதலிய பொது அறங்களும், நித்திய நைமித்திக கன்மங்களாகிய சிறப்பறங்களும் ஞானத்தை உணரும் பக்குவத்தை உண்டாக்குவன வன்றி, அவை தாமே ஞானமாய் நின்று வீட்டினைப் பயவா. ஆதலின், அவற்றையே `ஞானம்` என்றாயினும், `ஞானத்தினும் மேம்பட்டன` என்றாயினும் கூறுவார் உளராயின், அவர் கூற்று அறியாமையின்பாற் பட்டதாகும் என்ப தனையே முதலிரண்டு அடிகளில் குறித்தார். அங்ஙனம் கூறுவோர் சமணரும் பௌத்தரும் ஆகிய அவைதிகரும், வைதிகருள் மீமாஞ்சகரும் ஆவர். ஆகவே, அவரது மதங்களை உளத்திற் கொண்டே இதனைக் கூறினார் என்க. அவருள் மீமாஞ் சகரையே மாணிக்கவாசகரும்,
``விரத மேபர மாக வேதியரும்
சரத மாகவே சாத்திரங் காட்டினர்`` 1
என்று அருளிச் செய்தார். இடை இரண்டு அடிகளில் வந்த மிகுதி,
``மிகுதியான் மிக்கவை செய்தாரை`` 2
என்பதிற்போலப் புறம்பாதலை உணர்த்திற்று.
இதனால், ஞானத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சத்தமும் சத்த மனமும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஓசை முதலிய புலன் வகைகளும், அவற்றைப் பொறிகளின் வழிச்சென்று பற்றுகின்ற மனமும், பின்பு அம்மனம் பொதுப்படப்பற்றி ஐயுற்றதை ஒருதலையாகத் துணியும் புத்தியும், எவ்விடத்தும் எழுச்சியுற்று எவ்வுணர்வையும் உணரத் தூண்டுகின்ற அகங்காரமும். அம்மூன்றானும் பெற்ற தெளிவுணர்வைப் பதியக் கொண்டு பின்னும் நினைப்பதாகிய சித்தமும் என்னும் இவற்றினது இயல்பை நன்குணர்தலே ஓசை முதலிய ஐம்புலன்களையும் கடந்த ஞானிகள் பெற்ற ஞானமாகும்.

குறிப்புரை :

ஓசை முதலிய புலன்களே காரண நிலையில் தன் மாத்திரைகளாய் நின்று ஆகாயம் முதலிய பூதங்களைத் தோற்று வித்தலாலும், பின்னும் தன்மாத்திரையாய் ஐம்பூதங்களோடும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுக்குத் துணையாய் நின்று அவை தத்தம் காரியங்களைச் செய்ய உதவுதலாலும், `ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம்` என்பவற்றையும் `புலன்வகை` என அடக்கினார். எவ்விடத்தும் ``சத்தம்`` என்றது, ஏனைப் பரிசம் முதலிய வற்றிற்கு உபலக்கணம். அஃது அதன் வகையை உணர்த்திற்று. ஆகவே, `புலன் வகை` என்றதனால், `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து` ஆக இருபது கூறப் பட்டனவாம். இவற்றோடே மனம் முதலிய அந்தக் கரணங்கள் நான்கும் கூறப்பட்டமையால், சிவாகமங்களில் `ஆன்ம தத்துவம்` என எண்ணப்படும் இருபத்து நான்கு தத்துவங்களும் கூறப்பட்டதாயிற்று. சிறிது சிறிது வேறுபாட்டோடே இவை வைதிக சமயங்கள் எல்லா வற்றாலும் உணரப்பட்டன. ஆதலின், இவற்றது இயல்பை உணரும் ஞானத்தையே தத்துவஞானமாக ஓதினார். ``சுவைஒளி ஊறோசை`` என்னும் திருக்குறளையும் நோக்குக. வைதிக சமயங்களின்வழியும், அவற்றிற்கு ஒத்த அளவில் சைவாகமங்களின் வழியும் இவற்றின் இயல்பை உணர்ந்த பின்பு, சைவாகமம் பற்றியே சிறப்பாக உணரத் தக்க வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் இயல்பை விரைய உணர்வர் என்பது கருத்து. வித்தியா தத்துவம், `காலம், நியதி` கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என ஏழு. சிவதத்துவம், `சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம்` என ஐந்து, ஆக, `தத்துவம் முப்பத்தாறு` என்பது சைவாகமங்களின் முடிபு. இவற்றின் இயல்பெல்லாம் அவ் ஆகமங்களிலும், அவற்றை முதலாகக் கொண்டெழுந்த பிரகரணங்களிலும், மெய்கண்ட சாத்திரம் முதலிய சித்தாந்த நூல்களிலும் காணப்படுகின்றன.
சிவ தத்துவம் ஐந்தும் ஏனைத் தத்துவங்களை இயக்கிநிற்கும் முறையால் ஆன்மாவிற்கு உதவுவன அன்றி, அவை ஏனைத் தத்துவங்கள்போல் ஆன்மாவிற்குநேரே உடம்பாய்ப்பொருந்தி நின்று உதவுவன அல்ல. வித்தியா தத்துவங்கள் ஆன்மாவின் அறி விச்சை செயல்கள் வெளிப்படுதற்குக் காரணமாய், அதனோடு ஒட்டி ஒன்றாய் நின்று ஆன்மாவை ஆன்மாவாகச் செய்யும் இயல்புடைமையால் அவை அனைத்தையுமே `புருடன்` என ஒன்றாக வைத்து, தத்துவங்களை, `இருபத்தைந்து` என்றே கூறுதலும் உண்டு.
``ஐயஞ்சின் அப்புறத் தானும், ஆரூ ரமர்ந்தஅம் மானே``
என்ற திருநாவுக்கரசர் திருமொழி இம்முறைபற்றி எழுந்ததே. தத்துவங்கள் மாயையின் காரியங்களாம். அவற்றின் இயல்பை ஆராய்ந்து உணரவே அவற்றினின்றும் நீங்குதல் உளதாம் என்க. தொகுத்தல் பெற்ற அகரத்தை விரித்து, `சித்தம் என்ற செய்கையும்` என இயைக்க. செய்கையுடையதனை, ``செய்கை`` என்றார்.
இதனால், தத்துவங்களை ஆராய்ந்து உணர்தல் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தன்பால் உலகம் தனக்கரு காவதும்
அன்பால் எனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

பொழிப்புரை :

சிவனது வியாபகத்தில் உள்ள உலகம் சிவனது உடைமையும், அடிமையுமாய் அவனுக்கு உரித்தாதலை உணர் தலையே `ஞானம்` என்றும், சிவனிடத்து வைத்த அன்பு காரணமாக அவனது திருவருள் தமக்குக் கிடைக்கப் பெறுதலையே `சிவோகம் பாவனை` என்றும் ஞானிகள் கூறுவார்கள். அவ் இரண்டையும் பெற்றோர், அவற்றின் பயனாகப் பின்பு, அறியத்தக்க பொருளையே அறிந்து, அதில் அழுந்துவார்கள்.

குறிப்புரை :

`ஆவதும், ஆவதும் - ஞானமும், சிவோகமும்` என்றது நிரல்நிறை. ``என்பார்கள்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. ``தன்`` என்றது சிவனாதல் விளங்குதற்கே, பின்னர், ``எனக்கு`` எனத் தம்மேல் வைத்துக் கூறினார். ``பெற்றிடும்`` என்பதற்கு, `அந்நிலையை எய்தினோன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. சடமும், சித்துமாகிய இருவகை உலகத்துள் சடம் சிவனது உடைமையும், சித்து சிவனது அடிமையும் ஆம் என்க.
இதனால், தத்துவ ஆராய்ச்சியால், `யான்` எனத் தன்னையே முதல்வனாக மதிக்கும் அகமயக்கமும், பலவற்றையும் தனித்தனி `எனது` எனப் பற்றும் புற மயக்கமும் நீங்கி. எல்லாம் சிவனது அடிமை யும், உடைமையுமாகின்ற உண்மையை உணர்தலே ஞானமாதல் கூறப்பட்டது. இதனையே, `தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்`` 1 என்றார் மெய்கண்ட தேவநாயனார்.

பண் :

பாடல் எண் : 4

இருக்குஞ் சேம இடம்பிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை :

மாறுபாடில்லாத ஞானத்தை ஓர்ந்துணர்ந்தவர்க்கு அவர் இருத்தற்குரிய பாதுகாவலான இடம் `பிரமம்` எனப்படுகின்ற சிவமே. ஏனெனில், உலகம் `இயங்கியற்பொருளும், நிலையியற் பொருளும்` என்னும் ஈரினமாய் நின்று உணர்வை அலைப்பனவாம். (ஆதலின் அவை அவர்க்கு இருத்தற்குரிய இடமாகா என்பதாம்.) ஆதலின், சிவ வியாபகத்தில் நிற்கின்ற பெருமகிழ்வோடு செய்கின்ற செயல்களே, எல்லா இன்பங்களையும் தருவனவாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்தும், `உலகம் சராசர வருக்க மாகும்` என மாற்றியும் உரைக்க. முதல் இரண்டடிகள் காரிய காரணப் பொருளவாய் நின்றன. தருக்குதலோடு நிகழ்கின்ற ஆசாரத்தை, ``தருக்கிய ஆசாரம்`` என்றார். ஆசாரம் - நடை; செயல்கள் ``எல்லாம்`` என்றது, `உலகர்க்கு `நன்மை, தீமை` என இருவகையாய்த் தோன்றி நிகழும் பலவும்` என்றவாறு. `அருள்வழி நின்று செய்யின், தீயசெயல்களும் நல்ல செயல்களாய் இன்பம் பயக்கும்` என்றதனால், `அருளை மறந்துசெய்யின், நல்லசெயல்களும் தீயசெயல்களாய்த் துன்பம் பயக்கும்` என்பது போந்தது.
``அரனடிக் கன்பர் செய்யு ம் பாவமும் அறமதாகும்;
பரனடிக் கன்பி லார்செய் புண்ணியம் பாவ மாகும்;
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளும், திருமுறைகளிலும் இத்தக்கன் வரலாறு சண்டேசுர நாயனார் வரலாறுகள் சிறந்தெடுத்தோதப்படுத லும் நன்குணரத்தக்கன. `சிவவியாபகத்தின்நீங்கி உலகிடைப்புகின் தீங்கு வருதலையுணர்ந்து ஞானிகள் அதனின் நீங்காது அதனுட்டானே நிற்பர்` என்பதை உமாபதிதேவர்,
``புலனடக்கித் தம்முதற்கட் புக்குறுவர்; போதார்
தலன்நடக்கும் ஆமை தக`` 1
என்று அருளிச் செய்தார். இதனானே,
``ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து``2
என்னும் திருவள்ளுவர் திருமொழியும் இப்பொருட் குறிப்புடைய தாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், தன் பணியறுத்து அருள்வழி யொழுகுதல் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.

பொழிப்புரை :

தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாதலை உணரும் உணர்வும், அவ்வுணர்வால் அதற்குட்டானே அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி, அதனைமறவாதுஉணர்கின்ற உணர்வால் பெருகுகின்ற அன்பும் என்னும் இவை ஒரு சேரக் கூடி நீங்கா திருக்கின்ற அந்த உள்ளமாகிய கோயிலிலே நீங்காதிருக்கின்ற பேரரு ளாளனாகிய சிவனது அருட்டிரு மேனி, அருட்குணம், ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடி இவைகளை மறவாதிருக்கின்ற முறையை உணர்ந்த ஞானிகட்கு இவ்வுலகமாகிய இருள் நீங்கி, ஞானமாகிய ஒளி பிரகாசிக்கும்.

குறிப்புரை :

`குரை கழலும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஈற்றடியில் `இது நீர்த்தொனி யாமே, நீர்த் தோணி யாமே` என்பன பாடம் அல்ல. ` `அறிவும் ... ... ... ... பிறியா நகர்``,
இதனால், அருளது உபகாரத்தை உணர்தல் முதலிய மூன்றும் ஞானமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.

பொழிப்புரை :

ஞானத்தை விரும்பி எழுச்சி பெற்ற உள்ளத்தில், பிராணவாயுவாகிய ஊர்தியை விரும்பி ஏறி மேலே செல்லும்பொழுது வழியில் எதிர்ப்படுகின்ற இடந்தோறும், சந்திர மண்டலத்திலிருந்து பெருகும் அமுத தாரை நிரம்பியிருக்கக் கண்டு, அதனால் உடற்கும், உள்ளத்திற்கும் வருவனவாகிய குறைகளைப்போக்கி நிலைபெற்று ஒளிமயமாக ஆகுங்கள்.

குறிப்புரை :

இரண்டாம் அடியில் `ஏனம்` என்பது பாடம் அன்று. உடற்கு வரும் குறைகள், `நரை, திரை, மூப்பு, சாக்காடு` என்பன. உள்ளத்திற்கு வரும் குறை, ஒருவழி நில்லாமை. இவை யோகத்தால் நீங்குதல் அறிக. ஒளி, உடற்பொலிவும், ஞானமும் என்க.
இதனால், ஞானவேட்கை யுடையோர் யோகத்தால் உள்ளமும் உடலும் நிலையுடையதாகப் பெறின், இப்பிறப்பிலே அதனைத் தப்பாது அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொழிப்புரை :

ஞானத்தைத் தலைப்பட்டவனுக்கு, ஞானத்திற் சரியை முதலிய நான்கு படிகள் உள்ளன. நான்காவது படியிற் சென்று முற்றிய மௌன எல்லையை அடைந்தவனுக்குப் பின் இவை என்றும் வேண்டாவாம். ஞானத்தைத் தலைப்படுதற்குமுன் யோகத்தையே `ஞானம்` என மயங்கிச் சத்தி மண்டலத்திலே நின்று, அங்குள்ள சத்தியைத் தரிசித்தோர்க்கு அந்தச்சத்தி ஞானத்தைத் தருதலாகிய பயனைத்தரும். அதற்குக் கீழ் உள்ள ஆறு ஆதார சத்திகளை அடைந்தவர்கட்குக் கிடைக்கும் பயன் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை என்பனவேயாம்.

குறிப்புரை :

`ஆறு ஆதாரங்களிற் பெறுவன யோகத்தில் சரியையும், யோகத்தில் கிரியையும்` எனவே, `ஏழாந் தானமாகிய சகத்திராரத்தில் நிற்போர்க்கு விளைவது யோகத்தில் `யோகம்` என்பதுபோந்தது. குணம் - இயல்பு. வித்தை - ஞானம். தானி - ஆதாரசத்தி `குலத் தோர்க்கு` என்னும் நான்கனுருபு தொகுத்தல் பல ஆதாரங்களிலும் விளங்குவது ஒரு சத்தியேயாதல்பற்றி ஒருமையாற் கூறினார். `கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல்` என்னும் நான்குமே ஞானத்திற் சரியை முதலிய நான்கு என்க. நிட்டை கூடினவனையே ``மோனி`` என்றார்.
இதனால், யோக முதிர்ச்சி யுடையோன், பின் ஞானத்தில் சென்று அதன் நான்கு படிகளில் ஏறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

பொழிப்புரை :

ஞானத்தில் ஞானத்தை அடைந்தவனுக்கு, அந்த ஞானத்திற்குக் கீழுள்ள மூன்றும் முன்பே கைவந்தனவாம். ஞானத்தில் ஞானமாவது `யான், எனது` என்னும் ஞாதுரு ஞானங்கள் தோன்றாது, ஞேயம் ஒன்றேயாக அதனுள் அழுந்துதல். ஞானத்தில் யோகமாவது தத்துவாதீதத்தில் எல்லையற்ற சிவ ஒளியில் சேர்தல். ஞானத்தில் கிரியையாவது தத்துவக் கூட்டத்தினின்றும் விடுபடுமாற்றைச் சிந்தித்தல்.

குறிப்புரை :

சிந்தித்தல் கூறியதனானே, தான் தத்துவங்களின் வேறாதலைக் கேள்வியுறுதல் ஞானத்தில் சரியை என்பது அறியப் படும். ``ஞானி`` என்றது இவ்வாறே பொருள்படுதல் அறிந்துகொள்க.
இதனால், `மேற் குறித்த நான்கு படிகள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

பொழிப்புரை :

ஞானத்தில் ஞானம் முதலியவற்றை அடைவோன், முதற்கண் வினைக்கட்டு அற்றவனாயும், இரண்டாவது சிவஞானத் தால் ஞேயமாகிய சிவத்தைத் தரிசித்தவனாயும், மூன்றாவது மும் மலங்களின் வாசனையும் நீங்கிய நின்மலனாயும், முடிவில் சிவனை அனுபவமாய்ப் பெறுதலாகிய முத்தியை அடைந்த, முடிந்த பேறுடையவனாயும் விளங்குவன்.

குறிப்புரை :

ஞானாதி நண்ணுவோனது தன்மையைக் கீழிருந்து கூறும் முறையாற் கூறினார். இந்நான்கு அனுபவங்களும் கேட்டல் முதலிய நான்கினாலும் நிகழ்வனவாதல் அறிக. வினைக்கட்டு நீங்கினமைகூறவே, அதற்குப் பற்றுக்கோடாகிய மாயைக்கட்டு நீங்கினமையும் தானே பெறப்பட்டது. கண்ணல் - கருதல். கரை ஞானம் - மேல் எல்லையாகிய ஞானம். `கரை ஞானத்தால்` என உருபு விரிக்க. திண்மை வாதனை காரணமாக அசைதல் இன்மை. `உறைப்பு` என்றபடி. சித்தன் - சித்திக்கப் பெற்றவன்.
இதனால், மேற்கூறிய நான்கு படிகளிலும் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே.

பொழிப்புரை :

ஞானத்திற் சரியை முதலிய நான்கையும் பெற்றோர் முறையே ஞான சமயி, ஞான புத்திரன், ஞான சாதகன், ஞான ஆசாரியன் என்பவராயும் நிற்பர்.

குறிப்புரை :

நாடும் தனைக்காண்டல் `நான் யார்` என்று ஆராய் கின்றவன் தன்னை `இன்னான்` என அறிதல், பர உதயம் - பரம் பொருட்காட்சி. நன்றறிவான் - எல்லாவற்றையும் நன்கு அறிகின்ற சிவன். அருள் - அவனது அருளைப் பெறுதல். இங்கு, `நற்சிவோகம் பாவம்` என்ற பாடமும் காணப்படுகின்றது. குரு பாதம் - குருவாம் நிலை.
இதனால், மேற்கூறிய நால்வரும் உலகில் விளங்கும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவத்
தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

எல்லாவற்றினும் மேலானதாகச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற சொரூப சிவத்தின் உண்மை இயல்பை விளக்குவனவாகிய வேத சிவாகமங்களில் ஞானப் பகுதியின் பொருளை உள்ளவாறு உணர்ந்து, அதனால் `வெகுளி, காமம், மயக்கம்` என்னும் முக்குற்றங் களும் நீங்கிச் சிவத்தோடு ஒன்று படும் நிலை சித்திக்கப் பெற்றுக் காலனை வென்றவரே குறிப்பொருளை (இலட்சியப் பொருளை) அறிந்து அடைந்தோராவர்.

குறிப்புரை :

`சன்மார்க்கமாம் சுடர்` என இயையும். இயல்பினை, ``தோற்றம்`` என வைத்து, காரணத்தைக் காரியமாகக் கூறினார். சிவா கமங்களும் சுருதியாதல் அறிக. `சுருதியில் கண்டு` என உருபு விரித்து முடிக்க. சுடர் - ஞானம்; அஃது அதனை உணர்த்தும் பகுதியைக் குறித்தது. ``சீற்றம்`` என்றது உபலக்கணம். கூற்றத்தை வெல்லுத லாவது, தூல உடம்பை விட்டு எமலோகம்போகாது, தூல, சூக்கும, பர உடம்புகளாகிய அனைத்தையும் விடுத்து இறைவனை அடைதல். `வெல்வார்` எனறப்பாலது, துணிபு பற்றி `வென்றார்` எனப்பட்டது.
இதனால், சரியை முதலிய நான்கனுள் முடிவாகச் சொல்லப் படுகின்ற உண்மை ஞானம், பிறவியாகிய பெருந்துன்பத்தை நீக்கிச் சிவானந்தமாகிய எல்லையில் இன்பத்தைத் தருதலால், `சன்மார்க்கம் - நன்னெறி` எனப்படுவதாயிற்று என்பது கூறப்பட்டது. `இதனின் மிக்க நன்னெறி பிறிதில்லை` என்பதாம்.
[இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``சைவப்பெருமை`` என்னும் மந்திரம் இத்தந்திரத்தின் இறுதி யதிகாரத்தில் வருவது.]

பண் :

பாடல் எண் : 2

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத் தோர்க்குத்
தரும்முத்தி சார்பூட்டும் சன்மார்க்கந் தானே.

பொழிப்புரை :

குருபத்தி செய்யும் நன்மாணாக்கர் கண்ணால் காணுதல், திருமுழுக்கு, ஒப்பனை, புகை, ஒளி, படையல், மலரிடல் முதலாக முறைப்படி வழிபடுதல், தியானித்தல், தீண்டி அடிவருடல் முதலியன செய்தல், துதித்தல், பாதுகையைத் தலைமேல் தாங்குதல் முதலியவற்றால் குருவை வழிபட்ட வழியே சன்மார்க்கமாகிய ஞானம் கைகொடுத்து, முத்தி நிலையைத் தரும்.

குறிப்புரை :

`குருபத்தி செய்யும் குவலயத்தோர்` என்று எடுத்துக் கொண்டு, ``சூட`` என்பதன்பின், `அவர்க்கு` என ஓதற்பாலதனை இவ்வாறு ஓதினார். ``கீர்த்திக்க`` என்பது வடநூல் மதமுடிபு. `குவலயத் தோர்க்கே சன்மார்க்கம் சார்பு ஊட்டும்; முத்தி தரும்` எனக் கூட்டுக. சார்பு ஊட்டுதல், தன்னோடு இயைபினை உண்டாக்குதல். தான், அசை.
இதனால், `ஞானம், நல்லாசிரியரானே (சற்குருவாலே) தரப் படும் நன்னெறி - சன்மார்க்கமாம்` என்பது கூறப்பட்டது. அந்நெறி ஞானமேயாதல் அறிக. இதனுள் குருபத்தி செய்யும் வகையும் கூறப் பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 3

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

பொழிப்புரை :

குருவருளால் பெறப்படும் உண்மை ஞானத்தைப் பெறாதவர் சிவனது இயல்பை உணரமாட்டார், அதனால், அவர் ஆன்மலாபத்தை அடைதற்குரிய ஆன்மாவும் ஆகார். (`சடத்தோ டொப்பர்` என்பதாம்.) ஆதலின், அவர் சிவமாம் நிலையைப் பெறுதலும், அப்பேற்றால் பிறவி யற்றவராதலும் இல்லை.

குறிப்புரை :

கேட்டுச் சிந்தித்துத் தெளிவதனையே ``தெளிவு`` என்றார். உம்மை, எச்சப்பொருட்டு.
இதனால், குருவருளாலன்றிப் பிறவாற்றாற் பெறும் ஞானங்கள் உண்மை ஞானம் அல்லவாய், நன்னெறி சன்மார்க்க மாகாதொழிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தானவவ னாகித்தான் ஐந்தாம் மலம்செற்று
மோனம தாம்மொழிப் பால்முத்த ராவதும்
ஈனமில் ஞானானு பூதியில் இன்பமும்
தானவ னாய்உற லானசன் மார்க்கமே.

பொழிப்புரை :

சீவன் சிவனேயாய் நிற்கும் முறையால் அஃது ஐந்து மலங்களை அழித்து, மௌனோபதேசத்தின் வழி முத்தி நிலையைப் பெறுதலும், பின் குறையில்லாத ஞானத்தால் உண்டாகும் அனுபவத் தில் விளைகின்ற இன்பமும் ஆகிய இவையே சீவன் சிவனேயாய் விடுகின்ற சன்மார்க்கமாகும்.

குறிப்புரை :

``தான் அவனாதல்`` இரண்டனுள் முன்னது அவ்வாறு உணர்தலாகிய சாதனையையும், பின்னது, அங்ஙனமேயாதலாகிய பயனையும் குறித்தன. ஐந்து மலங்களாவன. `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம்` என்பன. ``மலங்கள் ஐந்தாற் சுழல் வேன் தயிரிற் பொரு மத்துறவே`` 1 என மணிவாசகரும் அருளிச் செய்தார். மௌனோபதேசம், சின்முத்திரையால் உணர்த்தல். இனி, `மௌன நிலையைத்தரும் மொழி` என்றும் ஆம்.
இதனால், ஞானமே சன்மார்க்க மாதல், ஏதுக்காட்டி விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கு இடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ.

பொழிப்புரை :

எந்நிலையில் நிற்போர்க்கும் நோக்கும் திசை, இருக்கும் இருக்கை, உறையும் இடம், தியானிக்கப்படுகின்ற தெய்வம், இணங்கும் கூட்டம், வழிபடப்படும் குறி முதலிய எல்லாம் சன் மார்க்கத்தார்க்குப் போலவே குருவருளால் கொள்ளத் தக்கனவாம்.

குறிப்புரை :

`அங்ஙனம் கொண்டவழியே அவை சன்மார்க்கத்திற் குரிய மார்க்கமாய் தாமும் சன்மார்க்கமாம் தன்மையைப் பெறும்; இன்றேல் துன்மார்க்கமாய்விடும்` என்றவாறு. `சற்குருவே இங்குக் கூறிய திசை முதலியவற்றைச் சிவனையடையும் முறையில் உணர்த் துவர்; பிறர் அதுமாட்டாது பிறவற்றை உணர்த்துவர்` என்பதாம். ``சன்மார்க்கத் தார்க்கு`` என்றது, `சன்மார்க்த்தார்க்கு உள்ள` என்ற வாறு. ``சன்மார்க்கத் தார்க்கும்`` என்னும் உம்மை அசைநிலை. `எம் மார்க்கத்தார்க்கும் ஆம்` என ஒருசொல் வருவிக்க. ``இயம்புவன் கேண்மின்`` என்றது `என் சொல்லைக் கேளுங்கள்` என வலியுறுத்தவாறு.
இதனால், சன்மார்க்கம் அல்லாதன நல்லன ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சன்மார்க்க சாதனந் தான்ஞானம் ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதைய தாய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தானவ னாகும்சன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஞானம் ஒன்றே சன்மார்க்கத்தில் கொள்ளப்படும் சாதனமாகும். அந்தச் சாதனம் பின் ஞேயமாகிய சாத்தியத்தை அடை விக்கும். சகமார்க்கம் முதலியவைகளில் ஞானமல்லாத பிறவே சாதனங்களாம். பிற மார்க்கங்களைக் கடந்து சன்மார்க்கத்தில் நிற்போர் அதில் துரியத்தைக் கடந்தபொழுது விரும்புகின்ற சன்மார்க்கம் சீவன் சிவமாம் தன்மையாகிய சன்மார்க்கமே.

குறிப்புரை :

`ஞானந்தான் சன்மார்க்க சாதனம்` என மாற்றி, `அதனால், ஞேயம் ஆம்` என வேறு தொடராக்கியுரைக்க. பிறவற்றை, `பேதை - பேதைமை` என்றது, ஞானமல்லவாதல் பற்றி. `ஞான மாவது, தத்துவ ஞானமே` என்பது மேலே கூறப்பட்டது. சன்மார்க் கத்தில் நிகழ்வதை, ``துன்மார்க்கம் விட்டது`` என்றார். துரிய நிலை யிலும் திரிபுடி ஞானம் அற்றொழியாமையால் ``துரிசு`` என்றார்.
இதனால், அதீதமாகிய ஆனந்த நிலையே சன்மார்க்கத்தில் சன்மார்க்கமாதல், துரிசறுதலாகிய ஏதுக்காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சன்மார்க்கம் எய்த வரும்அருஞ் சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பொழிப்புரை :

சன்மார்க்கம் கைவரப்பெறும் தகுதியை அடைய விரும்பும் அரிய மாணாக்கர்க்கு, அதற்கு முன்னே ஏனை, யோகம் முதலிய மூன்றும் முற்ற வேண்டுதலே முறையாகுமாயின், வீடடையும் நெறியாவது, தன்னைச் சிவனுக்கு உரிய பொருளாக உரிமைப்படுத்து அறிதலேயாகின்றது, `இதுதான் ஆசிரியன்மார் தம் மாணாக்கர்க்கு அறிவுறுத்தத்தக்க நெறி` என்று உண்மை வேதம் தனது துணிவாகக் கொண்டு கூறுகின்றது.

குறிப்புரை :

அருமை, பக்குவ நிலை. ``என்றால்`` என்பது, `என்பதே முறை என்றால்` எனத் தெளிதற் பொருள் உணர்த்தி, ஏனைப் பசுபுண்ணியத்தளவில் அத்தகுதி வாராமை யுணர்த்திற்று. நன்மை - வீடு. அதனை அடையும் மார்க்கம். ``நன்மார்க்கம்`` எனப்பட்டது. `சிவனொடு படுத்து` என ஒரு சொல் வருவித்து, படுத்தல், நாடல் இரண்டற்கும் `தன்னை` என்னும் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. இம்மந்திரம், `சிவ ஞானமாகிய சிறப்புணர்வின்றி, பிரம்ம ஞானமாகிய பொதுவுணர்வே வீடு பயக்கும் என்பதே வேதத்தின் முடிபு, என்பாரை மறுத்துக் கூறியது.
இதனால், உண்மைச் சன்மார்க்கம் சிவஞானமேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அன்னிய பாசமும் ஆகும் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

பொழிப்புரை :

பூர்வபக்க மதங்களின் உணர்வுக்கு அப்பால் உள்ள பிரதி பந்தமாகிய ஆணவ மலத்தை, முன்னர் உணர்ந்து பின்னர் ஏனைய கன்மம், மூலப்பகுதி, அம்மதங்களால் உணரப்பட்ட சாக்கிரம் முதலிய அவத்தைகள், அவைகளில் தொடக்குண்டு நிற்கின்ற அறிவின் நிலைகள், பொருள்களிடையே உள்ள சிறியனவும், பெரியனவுமாகிய வேறுபாடுகள் என்பவற்றோடு தலைவனாகிய இறைவனையும் உணரும் சித்தாந்த ஞானம் வாய்க்கப் பெற்றவரே `சன்மார்க்கத்தோர்` எனப்படுவர்.

குறிப்புரை :

`சித்தாந்த ஞானம் கைவரப்பெற்றவர்க்கே பிற வெல்லாம் பூர்வ பக்கமாதல் இனிது விளங்கும்` என்றவாறு. ``முன்னும் அவத்தையும்`` என்பதனை, ``மூலப்பகுதியும்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. அதிபேதம் - பெரியவேற்றுமை. ``தன்`` என்றது ஒருவனான இறைவனை. இது, ``கண்டவர்`` என்பதனோடு இயைதல் கூடாமையின், கண்டவரை உணர்த்தாமை அறிக.
இதனால், பிற ஞானங்கள் `சன்மார்க்கம்` எனப்படாது, சித்தாந்த ஞானமே `சன்மார்க்கம்` எனப்படுதல் பொருந்துமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பசுபாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆனசன் மார்க்கமே.

பொழிப்புரை :

ஆன்மாவின் பசுத்துவம் காரணமாக வந்து பொருந் திய சம்பந்தங்களாகிய கருவி கரணங்கள் அனைத்தையும், `தன்னின் வேறானவை` எனக்கண்டு கழித்துத் தன்னைப் பதியாகிய சிவனுடன் பொருத்தி, அங்ஙனம் முன்பு பொருந்தாதிருந்த நிலையில் மறந்திருந்த அவனது உபகாரத்தை இடைவிடாது உணர்தலால், முன்பு அன்பினால் நெகிழ்தல் இன்றி வன்மையுற்றிருந்த மனத்தை இப்பொழுது நெகிழ்ந்து உருகும்படி உருகப்பண்ணி, அவ்வன்பினாலே, என்றும் மாற்றம் இன்றி நிற்கும் மெய்ம்மையாகிய சிவனது தன்னியல்பு வெளிப் பாட்டில் அசைவின்றி நிற்றலே முற்ற முதிர்ந்த சன்மார்க்கமாகும்.

குறிப்புரை :

``பசு பாசம் நீக்கி`` என்றது, ஆன்ம தரிசனத்தில் நிகழும் தத்துவ சுத்தியாகிய சுத்த சுழுத்தியையும், ``பதியுடன் கூட்டி`` என்றது, சிவயோகத்தில் நிகழும் ஆன்ம சுத்தியாகிய சுத்த துரியத்தையும், ஏனையவெல்லாம் சிவபோகமாகிய அதீதத்தையும், குறித்தனவாம். இரண்டாம் அடி முதலாயவற்றில் கூறியவற்றை மெய்கண்ட தேவரும்,
``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` 1
என அருளிச்செய்தல் காண்க.
இதனால், முற்ற முதிர்ந்த சித்தாந்த ஞானத்தின் சிறப்புணர்த்து முகத்தால், அது சிறந்த சன்மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மார்க்கம்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம்சன் மார்க்க மெனும்நெறி வைகாதோர்
மார்க்கம்சன் மார்க்க மதுசித்த யோகமே.

பொழிப்புரை :

இங்குக் கூறிய சன்மார்க்கம் இதனைப் பெறுதற் குரியோர் பெறுதற் பொருட்டு வகுக்கப்படுவது. தலை சிறந்த நெறி. இந்தச் சன்மார்க்கமன்றி வேறொன்று இல்லை ஆயினும், இந்தச் சன் மார்க்கத்தை அடைந்து இன்புற்றிருக்க மாட்டாதவர்க்குரிய சன் மார்க்கம், மன ஒடுக்கத்தைப் பயனாக உடைய யோக நெறியேயாம்.

குறிப்புரை :

முதலடியில், `இம் மார்க்கம்` எனச்சுட்டு வருவித்து உரைக்க. இரண்டாம் அடி, `இஃது ஒருதலையாக அடையத் தக்கது` என்பதனை நிலைபெறுத்தியது. மூன்றாம் அடியில் உள்ள தொடர், `இந்நெறி` என்னும் சுட்டளவாய் நின்றது. ``வைகாதோர்`` என்றது, ``சென்று வைக்காதோர்`` எனப் பொருள் தந்தது. `வைகாதோர் சன்மார்க்கம் சித்தயோக மார்க்கமாம்` எனக்கூட்டுக. சித்த யோக மார்க்கம் - மனம் ஒடுங்கும் நெறி.
இதனால், சன்மார்க்கத்தை அடையமாட்டாதார்க்கு அதனை அடையும் வழி கூறும் முகத்தால், வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாய் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மன்மார்க்கம் மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்கம் ஞானத் துறுதியு மாமே.

பொழிப்புரை :

சிவநெறியில் யோகத்தை, `சகமார்க்கம்` - ஒத்துடன் நிற்கும் தோழமை நெறி - எனக் கூறுதல், சன்மார்க்கமாகிய ஞானத்தின் தன்மையையே கொண்டு விளங்குதல் பற்றியாம். அதனால், சிவநெறியோகம், உண்மை ஞானத்தால் உளதாகின்ற முத்திப் பேற்றுள் உய்க்கும். ஏனையோர் கூறும் யோகங்கள் ஓயாது பிறந்து இறத்தலை வெறாது விரும்பிக் கொள்வனவேயாகும். அவற்றால் ஞானமாகிய உறுதிப் பொருள் கிடைத்தலும் கூடுமோ!

குறிப்புரை :

சிவமாந்தன்மையைப் பெறுதற்கு அணித்தாம் நிலையை எய்துவித்தல் பற்றியே யோகம், `சகமார்க்கம் தோழமை நெறி` எனப்படுகின்றது என்பதும், அதனால், அந்நிலையை எய்து விக்கமாட்டாத பிற யோகங்கள் `சகமார்க்கம்` என்பதற்குப் பொரு ளாகா என்பதும் கூறியவாறு. எனவே, பிற யோகங்களைச் சிவ நூல்கள் யோகமாகச் கொள்ளுதல் இல்லை என்பது பெறப்பட்டது. யோகத்திலும் ஞானத்தன்மையே உளதாதல், ஆதார பங்கயங்களை ஆறு அத்துவாக்களாகவும், நிராதார சத்தி மண்டலம் கொள்ளப்படுத லும் அதற்கும் மேலான மீதானம் கூறப்படுதலும் பிறவுமாம். இவை அடயோகம், பாதஞ்சலி யோகம் முதலியவற்றில் இல்லாமை அறிக.
``சன்மார்க்க ஞானமதின் பொருளும், வீறு
சமயசங்கே தப்பொருளுந் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை`` 1
என்றார் தாயுமான அடிகளும்.
``மெய்ம்மைச் - சிவயோக மேயோகம்; அல்லாத எல்லாம்
அவயோகம் என்றே அறி`` 1
என்ற திருக்களிற்றுப்படி இங்கு நினைக்கத் தக்கது. ``பிறந்து, இறந்து உன்மார்க்கம்`` என்றது, `பிறந்து இறந்து உழன்றும் அதனையே விரும்புகின்ற மார்க்கமாம்` என்றவாறு. எனவே, அவை மல நடையே யாய் பிறவியை அறுக்கமாட்டா என்பது போந்தது. `ஆனது` என்றது, பிறவற்றுள் ஒவ்வொன்றையும் தனித்தனி நோக்கிற்று. ``இறந்தும்`` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அதனையே உன்னும் மார்க்கமாம்` என்க. ``உறுதியும்`` என்னும் உம்மை சிறப்பு. ``ஆமே`` என்பது எதிர்மறைப் பொருட்டு.
இதனால், சிவயோகத்தது சிறப்புக் கூறும் முகத்தால், அது `சகமார்க்கம்` எனப்படுதற்கு ஏது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீடில்லை யாகும்
உருவும் கிளையும் ஒருங்கிழப் பாரே.

பொழிப்புரை :

சிரசிற்குமேல் பன்னிரண்டங்குலமாகச் சொல்லப் படுகின்ற நிராதாரத்தைப் பொருந்துகின்ற யோகநெறி யில்லாது, பிற வற்றையே யோகமாக மயங்குவோர், ஞான குருவையும், சிவனை யும், உண்மைச் சமயத்தையும் அடையமாட்டார். அவர் அணி மாதியாக விரும்பும் சித்திகளாகிய செல்வத்தைத் தரும் திருமகளும் அவர்பால் அணுக அஞ்சுவாள்; மோட்சமும் அவருக்கு இல்லை. உடம்பையும், சுற்றத் தொடர்பையும் வீணே இழப்பர்.

குறிப்புரை :

துவாதச மார்க்கம், பிராசாத யோகமுமாம். மேற் காட்டிய திருக்களிற்றுப்படியின்படி, சிவயோகம் அல்லாதன அவ யோகமாதலை வலியுறுத்துக் கூறியவாறு, சுற்றமும் பயன் செய்யாமை கூறவே, இறைவன் தோழன்போல அணியனாய் நின்று அருளுதல் இன்மையும் தானே பெறப்பட்டது. அதனால், அவை சகமார்க்கம் ஆகாமை அறிக. ``சிவனும்`` என்பதில் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.
இதனால், சிவயோகமே சிவனை அணியனாக்கும் சகமார்க்க மாதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

யோகச் சமாதியி னுள்ளே அகலிடம்
யோகச் சமாதியி னுள்ளே உளரொளி
யோகச் சமாதியி னுள்ளே உளள்சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

பொழிப்புரை :

சிவயோக சமாதியுள்ளே உலக முழுதும் அடங்கித் தோன்றும். உள்நிற்கும் ஒளியும் விளங்கும். அருட்சத்தியும் விளங்கு வாள். ஆதலால், சிவயோக சமாதி பெற்றவரே எல்லாம் சித்திக்கப் பெற்றவராவர்.

குறிப்புரை :

``இடம், ஒளி`` என்பவற்றின்பின், `விளங்கும்` என்பது எஞ்சி நின்றது. உளர்தல் - அசைதல்; ஒளிவிடல். இவ்வொளி திரோ தான சத்தியாம். `அகலிடமும், இவ்வொளியும் உள்ளன` என்றது, கால இடங்களைக் கடந்த பொருள்கள் விளங்குதல் கூறியதாம். அருட்சத்தி விளங்குதலாவது, சத்திநிபாதம் முதிர்தல்.
இதனால், சிவயோகத்தால் உலகம் கடந்த வியாபகம் பெற்றுச் சிவனோடு ஒக்கும் நிலைவாய்த்தலால் அது சகமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

பொழிப்புரை :

சிவயோகிகட்கு யோகத்தோடு உலக போகமும் சுத்தபோகமாய் வரும். சிவயோகத்தால் சிவசாரூபம் கிடைக்கும். ஆகவே, இம்மை, மறுமை இரண்டையும் இழவாது பெறும் சிவ யோகிக்கு அவன் உலகில் விரும்புகின்ற புருடார்த்தம் உளதாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியில், `யோகத்தால்` என உருபு விரிக்க. `உள்ளத்தின்கண் ஓர்கின்ற போகமாகிய புருடார்த்தம் சித்தியாகும்` என்க. அது, பகுதிப் பொருள்விகுதி.
இதனால், சிவரூபம் உற்றிடுதல் பற்றிச் சிவயோகம் சக மார்க்கம் ஆதல் தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாம்சக மார்க்கத்தே.

பொழிப்புரை :

சிவயோகத்தில் ஆறு ஆதாரங்களிலும் சிவனது நிலைகளையே காணுதலால் உணர்வை உண்டாக்கும் நாடிகள் நல்லனவாகும். மேதாகலை முதலிய பதினாறுகலைகளின் முடிவில் பர வெளியில் விளங்கும் ஒளியாகிய சிவம் தோன்றும். சீவ போதம் ஒடுங்கிப் பஞ்சேந்திரியங்கள், அந்தக்கரணம் இவையும் சீவத் தன்மை கெடச் சிவத்தன்மையைப் பெறும். அதனால், அவ்யோகம் சகமார்க்கம் ஆதற்குத் தடையில்லை.

குறிப்புரை :

சுத்திப்பட்டனவற்றை, ``சுத்தி`` என்றார். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலையும், ``விண்ணொளி`` என்பதன்பின், `தோன்றும்` என்னும் பயனிலையும் எஞ்சிநின்றன. `ஆலயம்` என்பதும் `ஒடுக்கம்` எனப்பொருள்தரும். சாதாரணம் - பொதுமை. ``சகமார்க்கத்தே`` என்பதனை, முதலில் வைத்து உரைக்க. `சகமார்க்கமே` என்பது பாடமன்று.
இதனால், சிவயோகத்தின் பயன்கள் பலவும் கூறி, அது சகமார்க்கமாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயில்மன வாளால்
கணம்பதி னெட்டும் கருதும் ஒருவன்
வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவயோகம் வல்லானது சிந்தையிடமாகப் பதினெண் கணங்களும் வணங்குகின்ற தனித்தலைவனாகிய சிவன் வந்து நிலைத்து நிற்பானாயின், பின்பு அவன் தன்னோடு இகலி நிற்கின்ற ஐம்பொறிகளாகிய பகைவர்களைத் தனது மனமாகிய கூரிய வாளால் தாக்கி வெட்டி யொழிப்பான்.

குறிப்புரை :

`பிணங்கி நிற்கின்றவையாகிய ஐந்தையும்` என்க. `பிணங்கி நிற்கின்ற ஐயைந்தையும்` எனப் பிரித்து, `இருபத்தைந்து தத்துவங்களையும்` எனவும் உரைப்பர். அணங்குதல் - வருத்துதல். `அணங்க` எனப்பாடம் ஓதுதலுமாம். `அயில்மனம்` என்பது, `இன்பதுன்பங்களை நுகர்கின்ற மனம்` என்னும் பொருட்டாய், `சிலேடை வகையால் கூர்மையான மனம்` எனப் பொருள் தந்தது. இனி, `மனத்துக்குக் கூர்மை நுண்ணிதாக நோக்கல்` எனலுமாம். `அயிர்மனம்` என்பது பாடம் அன்று. யோகமாகிய அக வழிபாட்டினையே இங்கு, ``வணங்குதல்`` என்றார். `நின்றானேல்` என்பதில், `எனில்` என்பதன் மரூவாகிய `ஏல்` என்பது எஞ்சி நின்றது, `நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தால், பின் நீ என் செய்வை` என்பதிற்போல. `சிந்தை சிவன் வந்து நின்றானேல்` `பின்னை ஐந்தையும் எறிவன்` என்றது, `சிவன் வந்து நிற்கும் சிந்தை யில்லாதார் அது மாட்டார்` என்பதைத் தோற்றுவித்து நின்றது.
இதனால், சிவயோகமே ஐம்பொறிகளை வென்று, சிவனோடு சிந்தையால் கூடி நிற்கின்ற சகமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ளே உகந்துநிற் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

பொழிப்புரை :

மேற் கூறிய சிவன், வேடத்தால் வளப்பமானகனி (சிவப் பழம்) போன்ற பொலிவையுடையராய் உள்ள சரியை கிரியா மார்க்கத்தார்க்கும் வளப்பமான கனி கிடைத்தாற்போலும் உண்மையையே உடையனாவன். ஆயினும், யோகத்தால் உள்ளம் பழுத்து அவனை உள்ளத்தே விரும்பிக் கண்டுகொண்டிருப்பவர்க்குப் பழம் அளிந்து கிழிந்து சாற்றைப் பொழிதல் போல மிக்க இன்பத்தைத் தருபவனாய் இருப்பன்.

குறிப்புரை :

வளங்கனி - வளவிதாகிய கனி. பகுதல் - கிழிதல். ``பகுந்து`` என்றது, `கிழிந்து பொழிந்தாற் போன்று` எனப் பொருள் தந்தது. ஈற்றடி இனவெதுகை பெற்று நின்றது.
இதனால், சரியை கிரியைகள் சகமார்க்கமாகாது, யோகமே சகமார்க்கமாயினவாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மேவிய சற்புத் திரமார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாம் சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன் மார்க்கந் தெளிவதே.

பொழிப்புரை :

விரும்பப்படுகின்ற சற்புத்திர மார்க்கமாகிய கிரியை யாவது, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் ஒளிவடிவில் சிவனை நிறுத்தி முகம் முதலிய உறுப்புக்களை நினைவால் (பாவனை யால்) கண்டு பல முகமன்களும் (உபசாரங்களும்) செய்து வழி படுதலாம். சகமார்க்கமாகிய யோகமாவது, உலகத்தோடு ஒட்டி நிகழும் முகமன் நிகழ்ச்சிகள் `அகம், புறம்` என்னும் இரண்டிடத்தும் நிகழ்தலாகிய அத்தன்மை இன்றி, யோகத்தில் வெளிப்படும் யோக சத்தியை அகத்தில் கண்டு, அதனோடு ஒன்றாதலாம். அனைத்தினும் மேலான சன்மார்க்கமாவது, தெளிவான ஞானமேயாகும்.

குறிப்புரை :

`உண்மை ஞானம் சன்மார்க்கமாய் நிற்க, உடனாய் நிகழும் திருவருளோடு கூடுமாற்றால் யோகம் சகமார்க்கமாதலின், அவ் இரண்டிற்கும் முன்னே நிகழும் ஒளியுருவ வழிபாடு சற்புத்திர மார்க்கமா யிற்று` என்பதாம். ஆகவே, இக்கருத்து இனிது விளங்குதற் பொருட்டே சகமார்க்க சன்மார்க்கங்களின் இயல்புகள் இங்கு எடுத்துக் காட்டப் பட்டன என்பது விளங்கும். சற்புத்திரமார்க்கம் - மகன்மை நெறி - அல்லது - மைந்தர்நெறி. மகன் தந்தைக்கு வேண்டும் உபசாரங் களை அணுக்கமாயிருந்து அவனது மெய்யைத்தீண்டி அன்புடன் செய்தல் போலச் செய்தலே கிரியையாதல் அறிக. `அகல நின்று செய்யும் புறம்படித் தொழில்கள் சரியையாக, அணுகி நின்று செய்யும் அகம்படித் தொழில்களே கிரியை` என உணரலாம். `கிரியைக்கு உரியது அருவுருவத்திருமேனி` என்பது ``தாவிப்பது`` என்றதனால் பெறப்படும்; என்னை? உருவத் திருமேனியாயின், வழிபடும் பொழுதெல்லாம் தாவித்து வழிபடல் வேண்டாமையின். இங்ஙனம் செய்யும் அருவுருவ வழிபாடு பின்னர் அருவ வழிபாடாகிய யோகத்தில் செலுத்த வல்லதாகும். அதனானே, கிரியையில் அக வழிபாடும் ஒரு பகுதியாய் நிகழ்கின்றது. அருவுருவத்திருமேனி அல்லது ஒளியுருவமாவது இலிங்க வடிவாம்.
``மெய்த்தொழில்`` என்றது `கிரியை` என்றவாறு, ``சகத் தொழில்`` என்பது, `உலகியலோடு ஒத்த மார்க்கம்` என்னும் பொருட் டாய்ப் பல முகமன் செயல்களை உணர்த்திற்று. இரண்டு - அகம், புறம். `இரண்டினும் ஆவது அகன்று` என்க. `சகமார்க்கம் ... ... ... இரண்டும் அகன்று ... ... ... தேவியோடு ஒன்றல்` என இயையும்.
இதனால், கிரியை சற்புத்திர மார்க்கம் ஆமாறு ஏனைய வற்றோடு வைத்துக் காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.

பொழிப்புரை :

அருக்கிய. பாத்திய. ஆசமனாதி முகமன்களைச் செய்தலும், தோத்திரம் சொல்லலும், திருமேனியைக் கண்ணை இமை காத்தல்போலப் பேணிக் காத்தலும், வழிபாட்டு முடிவில் மந்திரத்தைப் பலமுறை கணித்தலும், பசி தாகம் முதலியவற்றைப் பொறுத்துக் கொண்டு, செயல்களை விரையாது அமைந்து செய்தலும், உண்மையே பேசலும், காம வெகுளிகளாகிய மனக் குற்றங்கள் இல்லா திருத்தலும், அன்போடு படைக்கப்படுகின்ற அன்னம், பெரிதும் உதவு கின்ற நீர் என்பவற்றையும் செயலாலும், பாவனையாலும் மிகத் தூயன ஆக்குதலும், மற்றும் இன்னோரன்ன செயல்கள் பலவும் அன்போடும், ஆர்வத்தோடும் செய்யப்படுதலால், கிரியை குற்றம் அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகின்றது.

குறிப்புரை :

``உற்றநோய் நோன்றல்`` (திருக்குறள் - 291) முதலிய வற்றை வாளா செய்யாது வழிபாடு பற்றிச் செய்தலை, ``நற்றவம்`` என்றார். `இட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `இடுதல்` என்பது `படைத்தல்` என்னும் பொருட்டாய் ``அன்னம்`` என்பத னோடும், `உதவுதல்` என்னும் பொருட்டாய் ``நீர்`` என்பதனோடும் இயைந்தது. சிறப்புடைய இவ் இரண்டற்கும் நேசித்தல் கூறவே, பிறவற்றிற்கும் அஃது உண்மை தானே பெறப்பட்டது. ``அன்னமும்`` என்னும் சிறப்பும்மை ``நீர்`` என்பதனோடும் இயையும். அதனால், பிறவும் சுத்தி செய்யப் படுதல் தானே அமைந்தது. சுத்திகளை ஐந்தாகக் கிரியாபாதம் கூறும். அவை: `பூத சுத்தி, தான சுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி` என்பன. இவற்றின் இயல்பெல்லாம் கிரியை பற்றிய நூல்களிற் கண்டு கொள்க.
இதனால், இவையெல்லாம் அன்பின் வெளிப்பாடாக நிகழ்தலால், கிரியை சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரைஅன்னம் தாமரை நீலம்
குறுகா நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அரன்நெறி சேரகி லாரே.

பொழிப்புரை :

`அறுகாற் பறவை` எனப்படுகின்ற வண்டுகள் தேன் உள்ள மலர்களையே தேடித் திரியும்; வெறும் மலர்களை அணுக மாட்டா. வெண்ணிறத்தையுடைய அன்னப் பறவைகள் தாமரை மலரையே விரும்பியடையும்; நீலப் பூவை அடையமாட்டா. அவை போலச் சிவ வழிபாடு செய்வோர் சிவனுக்கு உவப்பாகின்ற நல்ல மலர்களையே பறிப்பர்; பிற மலர்களைப் பறியார். இவற்றையெல்லாம் நேரிற் கண்டும் நல்லறிவில்லாதார் இளமைக்காலத்திற்றானே சிவனை வழிபட்டு சிவபுத்திரராய் விளங்கும் வழியை அறிகின்றிலர்.

குறிப்புரை :

``அலர்`` என்பது, இசையெச்சத்தால், `தேன் நிறைந்த மலர்` எனப்பொருள் தந்தது. `அன்னம் தாமரையைக் கண்டு மறுகா; நீலம் குறுகா` எனக் கூட்டுக. மறுகுதல் - வருந்துதல்; வெறுத்தல். அஃது இன்மை விரும்புதலை உணர்த்திற்று. ``அரன் நெறி சேரகிலார்`` எனப் பின் வருதலின், நறுமலர் கொய்வார் அந்நெறியைச் சேர்ந்தோராதல் அறியப்படும். ``சிறுகால்`` என்பது `முன் நேரம்` எனப் பொருள் தந்து இளமைப் பருவத்தைக் குறிக்கும்.
``கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார்`` 1
என்பதனானும் அறிக. `சிவ புத்திரராதற்கு இளமைப் பருவம் மிக ஏற்புடைத்து` என்றற்கு, `சிறுகால் சேரகிலார்`` என்றார்.
``முன்னடைந்தான் சம்பந்தன்`` 2 என ஞான சம்பந்தர் தாமே அருளியவாறும், சேய்ஞலூர் பிள்ளையாரும் அங்ஙனமே ஆயின வாறும், ``முன் இளங் காலத்திலே பற்றினேன்`` 3 எனப்பிறரும் அருளியவாறும் இங்கு நினைவு கூரத்தக்கன.
இதனால், கிரியை இளமைக் காலத்தேயும் கொள்ளத் தக்கதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அருங்கரை யாவ தரனடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாய்உல கேழின் ஒத்தானே.

பொழிப்புரை :

பிறவிக் கடலுக்கு காணுதற்கு அரிய கரையாய் உள்ளது அரனது திருவடி நிழலே. உலகில் உயிர்கள் ஒழுக வேண்டிய நெறிமுறையாகச் சொல்லப்படுவது அவனது ஆணையே. அவ் வாணையின்வழி அவனது திருவடி நிழலாகிய கரையை நோக்கிச் செல்கின்ற உயிர்கள் பலவற்றிற்கும் தொகை நிலையாய் அமைந்த ஒரு பேரரசினை உடையவனாய், அனைத்துலகின் மேலும் கோட்டம் இன்றி ஒருபடித்தான கருணையையே யுடையவனாய் அரன் இருக்கின்றான்.

குறிப்புரை :

ஆகவே, `உயிர்கள் யாவும் அவ்வரசன் மைந்தரே யாய் இருந்தும், அதனை அறியாமல் மயங்குகின்றன` என்பதாம்.
``மன்னவன்றன் மகன்வேட ரிடத்தே தங்கி
வளர்ந்தவனை யறியாது`` 1
என்றமை காணத்தக்கது. `உயிர்களாகிய மைந்தர்க்கெல்லாம் பெரு நிலையையும், பெருநலத்தையும் தருகின்ற பேரரசத் தந்தை அரன்` என்பது கூறுவார், `அவனது திருவடி நிழலே உயிர்கள் அடையும் இடம்` என்பதும் அதனை அடையுமாறும் உடன் கூறினார். `அவ்வடி நீழல்` என்பது பாடமன்று. `பெருங்கரை` என்பதில் கரை. `வரம்பு` என்னும் பொருளாய், ஒழுகும் நெறியைக் குறித்தது. அந்நெறியை இறைவன் தன் ஆணையாக வகுத்து வைத்திருத்தலை இரண்டாம் அடியிற் குறித்தார்.
``பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி` 2 எனத் திருவள்ளுவரும் கூறினார். `அரசாய்` என்பது, `அரைசாய்` எனப் போலியாய்ப் பின், `அரையாய்` என நின்றது.
இதனால், எஞ்ஞான்றும் உயிர்கள் இறைவன் மைந்தராய் இருக்கும் உரிமையுடைமையின் கிரியை இளமைக் காலத்தில் மறந் தொழியினும் பின்னராயினும் அறிந்து மேற்கொள்ளுதற்கு உரித்தாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உயர்ந்தும் பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயன்அது வாகும்
பயந்து பரிக்கிலர் பால்நவை யாமே.

பொழிப்புரை :

அரனது திருவடிகளின் நேரேநின்றும், வீழ்ந்தும், மனம் விரும்பியும், கைகளால் பிடித்தும், புகழ்ந்தும் முறைப்படி வழிபாடு செய்யுங்கள். அம்முறையீடு உலகப் பயனையும் தருவதா யினும், மானுடப் பிறப்பின் பயனாகிய வீடு பேற்றைத் தருவது அஃது ஒன்றே, ஆதலின், அதனை மேற்கொள்ள அஞ்சி ஒழிவாரிடத்தில் குற்றம் வந்துதங்குவதாம்.

குறிப்புரை :

``தழுவி`` என்புழியும் எண்ணும்மை விரிக்க. ``முறை`` என்பது அதன் வழிபட்ட செயலைக் குறித்து. `விதி` என ஓதினுமாம். பிறவற்றைப் பயந்தும், என்பது ``பிறவிப் பயன்`` என்றதனால் போந்தது. ஈற்றடியைப் பிறவாறும் பாடம் ஓதுவர்.
இதனால், கிரியை இறைவன் மைந்தராகிய மக்கட் பிறப்பினர் யாவரும் தவறாது மேற்கொள்ளற்பாலதாய்ச் சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது.
``யாவர்க் குமாம்இறை வற்கொரு பச்சிலை`` 1
என இந்நாயனாரும்,
``உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணாராகில் ... ... ... ...
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே`` 2
என்று திருநாவுக்கரசு நாயனாரும் அருளினமை அறிந்து போற்றற் குரியது.
``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை என உரைத்தருள`` 1
என்றே சேக்கிழாரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 6

நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியை
துன்றுமலர் தூவித் தொழுமின் தொழுந்தொறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

பொழிப்புரை :

எம் பெருமானாகிய சிவனை யான் அவன் முன்னே, நின்றும், கீழே வீழ்ந்தும் மிகுந்த மலர்களைத் தூவி வணங்குவேன். இஃது ஒருகாலத்தில் மட்டுமன்று; எக்காலத்துமாம். இவ்வாறு தொழு வாரிடத்தில் அவர் தொழுந்தோறும் தேவர் தலைவனாகிய சிவபிரான் சென்று வெளிப்பட்டு நிற்பான். அதனால், நீங்களும் அவனை அவ்வாறு வணங்குங்கள்.

குறிப்புரை :

தம்மை அடுத்தார்க்கு மலர் தூவித்தொழுமாறு பணித் தமையால், தாமும் அவ்வாறு தொழுதல் பெறப்பட்டது. ``என்றும்`` என்றது, `யோக ஞானங்கள் கைவந்த பின்னும்` என்றவாறு.
இதனால், கிரியை சிவனை வெளிப்படக் காணும் பயனைத் தருவதாய்ச் சகமார்க்க சன்மார்க்கங்களை அடைந்தோர்க்கும் ஒழியலாகாத சற்புத்திர மார்க்கமாதல் கூறப்பட்டது. இந்நாயனார் இம் மந்திரத்தில் தம் செய்கையை எடுத்துக் கூறினமையே இதற்குப் போதிய சான்றாகும். மற்றும் ``புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க`` 2 என்றற் றொடக்கத்தனவாகச் சாத்திரங்களிலும், வரும் உரையளவை களும், நால்வர் ஆசிரியர் முதலியோரது ஒழுகலாறுகளுமாகிய சான்றுகள் பலவும் நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 7

திருமன்னும் சற்புத்திர மார்க்கச் சரிதை
உருமன்னி வாழும் உலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இரும்மன்னும் நாடோறும் இன்புற் றிருந்தே.

பொழிப்புரை :

மக்கள் உடம்பிற் பொருந்தி வாழ்கின்ற உலகத் தவரே! சிவனாகிய தந்தைதன் செல்வத்தில் பொருந்தி வாழ்தற்குரிய சற்புத்திர மார்க்கத்தின் மரபினைக் கூறுகின்றேன்; கேளுங்கள். பிறவிக்கு ஏதுவாய் நிலைபெற்றிருக்கின்ற ஆணவ மலம் தனது செயல் மடங்கி நிற்குமாறு உங்கள் இருகைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து குவியும் படி சிவனைத் தொழுது, என்றும் இன்பத்திலே பொருந்தியிருங்கள்.

குறிப்புரை :

``கைகூம்ப`` என்பதனை இரட்டுற மொழிந்து பாசத்திற்குச் `செயல் மடங்க` எனவும், தொழுவார்க்கு, `கைகள் குவிய` எனவும் உரைத்துக் கொள்க. கை செயலாதல், `கையறுதல்` என்னும் சொற் பற்றியும் அறியப்படும். ஆணவம் செயல் மடங்குதல் ஆவது, தன் சத்தி மடங்கி நிற்றல். தொழுதல், மலர் தூவித் தொழுதலாம். இதனை, ``கைகாள் கூப்பித் தொழீர்;- கடி - மாமலர் தூவி நின்று``1 என்பதனாலும் அறிக. `இது செய்யாதார் வாளா பொழுது போக்குபவராவார்` என்பதை,
``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்
றழுது காமுற் றரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக் கின்னம்ப ரீசனே`` 2
என்னும் நாவக்கரசர் திருமொழியால் உணர்க. ஈற்றடியில் உள்ள `மன், உம்` அசைகள். ``உற்றிருந்து`` என்பது ஒரு சொல்.
இதனால், சற்புத்திர மார்க்கத்தது முறையும், பயனும் சுருங்கக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.

பொழிப்புரை :

திருக்கோயிலில் விளக்கிடுதல், மலர்களைக் கொய்து கொடுத்தல், தொடுத்துக் கொடுத்தல், அலகிடல் மெழுகல், துதி பாடல், ஊர்தி சுமத்தல், பலவகைத் திருமஞ்சனப் பொருள்களைக் கொணர்ந்து கொடுத்தல் முதலிய எளிய பணிகளைச் செய்தல், தாச மார்க்கம், தொண்டர் நெறியாகும்.

குறிப்புரை :

``எளியன`` என்பதை ஈற்றடியின் முதலிற் கூட்டி உரைக்க. எளிமையாவது, மன ஒருக்கம், பொறியடக்கம் முதலியன செய்ய வேண்டாமை. தளி - கோயில். இதனைக் குறிக்கும் ``அது`` என்னும் சுட்டுப்பெயர் செய்யுளில் முன் வந்தது. தூர்த்தல் - குப்பைகளைப் போக்கல்; அஃதாவது அலகிடல். பள்ளி - இருக்கை. சிவிகை முதலிய ஊர்திகள்; இஃது இடைக் குறைந்து நின்றது. அதற் குரிய பணியாவது சுமத்தல். `தளித்தொழில்` என்பதில் தகரவொற்றுத் தொகுத்தல் பெற்றது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்று, `புறத்தொழில் மாத்திரையால் சேய்மையில் நின்று செய்தலால் சரியை தாச மார்க்கமாயிற்று` என்பது விளக்கி நின்றது.
இதனால், `சரியைத் தொண்டாவன இவை` என விளக்கும் முகத்தால், சரியை தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அதுவிது ஆதிப் பரமென் றகல்வர்
இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே

பொழிப்புரை :

`அந்தத் தெய்வம் முதற்கடவுள், இந்தத் தெய்வம் முதற்கடவுள்` என்று பலவான எண்ணங்களைக் கொண்டு பலர் சிவனை அடையாது நீங்குவர். அதனால், `சிவனை அடைவதே உய்யும் நெறி` என்று தெரிந்து, அவனை வணங்குவார் அரியர். `எல்லாத் தேவர்க்கும் தலைவன் சிவபெருமான்` என்பது வேதாகமங் களை உணரின் தெளிவாம். ஆதலால், அம்முறையே சென்று அவனையே விரும்பி அடையுங்கள். அவ்வாறு அடையும் முறையே மக்கள் உள்ளத்தில் பொருந்தி நிற்கும்படி ஆன்றோர் உணர்த்துகின்ற நெறியாகும்.

குறிப்புரை :

``வேந்தனை`` என்பது பின்னர் வருதலால், வாளா, ``இறைஞ்சினரில்லை`` என்றார். ``வேந்தன்`` என்று, முன் `அது, இது` எனச்சுட்டிய தெய்வங்கட்கு வேந்தனை என்றவாறு. ``விதி`` என்றது, சிறப்புப்பற்றி வேதாகம விதியையே குறித்தது. `அதன் வழியே சென்று நாடும்` என்றதனால், அது சிவனே வேந்தனாதலை இனிது விளக்கி நிற்றல் பெறப்பட்டது. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், `சிவனுக்குரிய தொண்டுகளைச் செய்தலே, தொண்டர் நெறி` என்பது ஆன்றோர் துணிபாதலை விளக்கும் முகத்தால், சரியையே தாசமார்க்கமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.

பொழிப்புரை :

நான் முதலில் இடநாடியின் வழியும், பின்பு வல நாடியின் வழியும் பிராண வாயுவை அடக்கியும், விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் இயன்றன.

குறிப்புரை :

அந்தித்தல் - அடக்குதல். இதனை, ``ஞாயிறு`` என்ப தற்கும் கூட்டுக. திங்கள் - சந்திர கலை. ஞாயிறு - சூரிய கலை. `மந்திர செபம், தியானம்` என்பவையும் பிராணாயாமத்தோடு கூடியவழிச் சிறந்து நிற்றலை முதல் இரண்டடிகளில் கூறியவாறு. புறத்தே சிவனை வழிபடும் இடங்களில் ஞாயிற்று மண்டலம் இங்கு முதற்கண் கொள்ளத் தக்கது. வகை, தாசமார்க்கமாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. சரியை யாகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்வராயின், அவரது சரியைத் தொண்டு பொதுவாய் ஒழியாது சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.
இதனால், தாச மார்க்கம் சிறப்பு நிலை எய்துமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

பொழிப்புரை :

சிவனைத் தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லி உளம் மகிழ்ந்து போற்றித் தியானிப்பர். அவர் அவன்பாலே நின்று அங்ஙனம் செய்யினும் அவன் தன்னைத் தமக்குக் கண்போலச் சிறந்தவன் எனக் கருதி, அன்பும், ஆர்வமும் கொண்டு வழிபடுகின்ற அடியவரது உள்ளத்தில் நீங்காது நின்று, அவர்கள்பாலே பேரருள் உடையவனாகின்றான்.

குறிப்புரை :

தேவர்கள் ஆயிரம் பெயர்களைச் சொல்லிப் போற்றுதலை,
``பேரா யிரம் பரவி வானோர் ஏத்தும் - பெம்மானை`` 1
என அப்பரும் எடுத்தோதியருளினார். தேவர்கள் எத்துணைப் பணி வுடையராயினும், `யாம் தேவர்` என்னும் செருக்கு முற்றிலும் நீங்கப் பெறாமையின், அச் செருக்குச் சிறிதும் இல்லாத அடியார்களிடத்தே சிவன் மிக்க கருணையுடையவனாய் இருக்கின்றான் என்பதாம்.
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி`` 2
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்`` 3
என்பவனவற்றையும் நோக்குக. `உள்மகிழ்ந்து உன்னுவர்` என மாற்றிக்கொள்க. `தொழவும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. தேவ இனத்தராய் அருகணைதல் பற்றி ``உள் நின்று`` என்றார். ``பண்ணவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிறப்பு நிலைத் தாச மார்க்கமும் செருக்கு நீங்கி அன்போடு கூடியவழியே பெரும் பயன் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருந்த நினைவறி யாரே.

பொழிப்புரை :

சிவபெருமானது புகழைக் கூறும் நூல்களை ஓதுதல், இயன்ற வகையில் சிவனை வழிபடுதல், மலர் கொய்து கொடுத்தல் முதலிய தொண்டுகளைச் செய்தல் என்னும் இவை போல்வனவற்றைச் செய்யினும், கல் வந்து விழப்பட்ட பாசிக் குளம் அக் கல்வீழ்ச்சியின் வேகம் உள்ள துணையும் பாசி நீங்கி நின்று, பின் பாசியுடையதாய் விடுதல் போல, மனத்தின் இயல்பை ஆராயுமிடத்து அத் தொண்டு களில் ஈடுபடும் துணையும் அஃது ஐம்புல ஆசையின் நீங்கி நின்று, பின் அதனை உடைத்தாய்விடும். அப்பொழுது மக்கள் சிவன்பால் அன்பு கொண்டிருக்கும் நிலை இல்லாதவராவர்.

குறிப்புரை :

`ஆதலின், புறத்தொண்டு இல்லாதபொழுதும், செபம், தியானம் என்ற இவற்றை யுடையராதல் யாவர்க்கும் நன்று` என்பது குறிப்பெச்சம். ``பாசிக் குளத்தில் வீழ் கல்லாம் மனம்`` என்றா ராயினும், `கல்வீழ் பாசிக் குளமாம் மனம்` என மாற்றியுரைத்தல் கருத்தென்க.
``பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப்
படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதிற் பரக்கும்`` 1
என்றார் சிவஞான சித்தியிலும். இரண்டாம் அடி யிறுதியில் `அவ்விடத்து` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இம்மந்திரம் பின்வருமாறும் ஓதப்படுகின்றது:-
``வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசக் கிணற்றினில் வீழ்கின்ற பாவிகாள்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருக்க நினைவறி யீரே.``
இது கொள்ளப்படுமாயின், இரண்டாம் அடியை முதல் அடியாகக் கொண்டு ஓதிக் கொள்ளுதல் நன்று.
இதனால், `சிவனை எஞ்ஞான்றும் மறவாதிருக்க முயலல் வேண்டும்` என்பது, இறுதிக்கண், நான்குமார்க்கத்திற்கும் பொதுமை யாக வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுறு ஆமே.

பொழிப்புரை :

சாலோகம் முதற் பயன் அது சரியையாகிய முதல் நெறியாற் பெறப்படுவதாகும். கிரியையாகிய நெறியால் அந்தச் சாலோகப் பயனில் சாமீபப்பயன் உண்டாகும். சாலோகத்தில் சாமீபம் கிடைத்தால் அதன் பின் சாரூபம் வரும். முடிவாக விரிந்த பல உலகங்களில் யாதொன்றிலும் இல்லாது பரசிவத்தோடே ஒன்றாகின்ற பயன் கிடைப்பதாம்.

குறிப்புரை :

`லோகம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவலோகத்தையே உணர்த்தலின், `சாலோகம்` என்பது சிவலோகத்தை அடைந்து அங்கு எவ்விடத்தும் செல்லும் உரிமையைப் பெறுதலாம். ``பெறும்`` என்றது, `பெறப்படும்` என்றதாம். ஏனைச் சாமீப சாரூபங்களும் அவ்வுலகத்தில் பெறும் பயனே யாதலின், அவற்றை, ``சாலோகம் தங்கும்`` எனவும், ``மாலோகம் சேரில் ஆகும்`` எனவும் கூறினார். இரண்டாம் அடியில், `சாலோகத்துக்கண்` என உருபு விரிக்க. இவ்வடியில், `சரியையால்` என்பது பாடம் அன்று. மூன்றாம் அடியிலும் அவ்வாறே `மாலோகத்துக்கண்` என உருபு விரித்துக் கொள்க. மாலோகம் - பெரிய உலகம்; சிவலோகம் ``சேரில்`` என்பதற்கு, `சாமீபம்` என்னும் வினைமுதல் மேலையடியினின்றும் வருவிக்க. வழி - பின்பு. பரன் - பரசிவன். அவன் உரு ஆதல், அவனோடு ஒன்றாதலாம். இதுவே சாயுச்சம். ``வழி ஆகும்`` என்றதனால் `அஃது யோகத்தால் வரும்` என்பது பெறப்பட்டது. படவே எஞ்சி நின்ற ஞானத்தின் பயனே சாயுச்சமாதல் விளங்கிற்று` சாயுச்சம் - இரண்டறக் கலத்தல். சாலோக முதலிய பயன்கள் மூன்றும் முறையே பணியாளர், மைந்தர், தோழர் என்னும் இவர்கட்கு உள்ள உரிமையோடொத்தலின், சரியை முதலிய மூன்றும் முறையே `தாசமார்க்கம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்` எனவும் சாயுச்சமே சிறந்தபயனாகலின் ஞானம் `சன்மார்க்கம்` எனவும் பயன் பற்றிப் பெயர் பெற்றன என்றார் சிவஞான போத மாபாடியம் உடையார்.
இதனால், சரியை முதலிய நானெறியின் பயன் சாலோகம் முதலிய நான்குமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.

பொழிப்புரை :

தீக்கைகளில் சமயதீக்கை சிவனை மனத்தால் நினைக்கப் பண்ணும். விசேடதீக்கை சைவ சமய மந்திரங்கள் பல வற்றை பல முறையில் பயிலப் பண்ணும். மூன்றாவதாகிய நிருவாண தீக்கை சைவ சமயத்தின் முதற் பொருளுளாகிய சிவனது பெருமையை உள்ளவாறுணர்ந்து, `அவனே முதற்கடவுள்` எனத் தெளியப் பண்ணும். சைவ அபிடேகம் தான் சிவமாயே நின்று பிறர் சிவனது திருவருளைப் பெறும் வாயிலாய் விளங்குப் பண்ணும்.

குறிப்புரை :

இங்கு, ``கிரியை`` என்றது, சிவனது கிரியா சத்தியின் செயற் பாடாகிய தீக்கையை. இதனை முதலில் வைத்து, எல்லா வற்றோடும் கூட்டி உரைக்க. மனத்தைக் கோயிலாக்குதலாவது, சிவனைப் புறத்தில் பல வடிவங்களில் கண்டு தொழுதல் மாத்திரையான் அன்றி, தியானிக்கும் நெறியைத் தருதல். இதனை `அனுட்டானம்` எனப. பல மந்திரங்களைப் பல வகையில் பயிலல் எனவே, `கிரியை, யோகம்` என்னும் இரண்டும் அடங்கின. தான் சிவமாய் நின்று பிறரும் திருவருள் பெறுதற்கு வாயிலாவது ஞானா சிரியனாய் விளங்குதலாம். `சரியை முதலிய நான்கும் சமயம் முதலிய தீக்கைகளால் இங்ஙனம் ஒன்றின் ஒன்று உயர்ந்த நிலையை உடைய ஆதலின், பின்னர் அவற்றால் விளையும் பயனும் அன்னவாயின` என்றவாறு.
இதனால், மேற்கூறிய நெறிகட்கும், அவற்றின் பயன்கட்கும் உளவாய இயைபு கூறப்பட்டது. அபிடேகம் பெறாதோரும் ஞானியராய்ச் சாயுச்சம் பெறுவராயினும், அவரினும் ஆசிரியராய் விளங்கினோர் பிறரையும் உய்விக்கும் சிறப்புடையர் என்றற்கு அவரையே சாயுச்சம் பெறுவார்போலக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாசம் அருளான தாகும்இச் சாமீபம்
பாசம் சிவமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே.

பொழிப்புரை :

சாலோகம், மாயா கருவிகள், தாமே உயிர் என்று உயிரை மருட்டி அதனைத் தம் வயப்படுத்தியிருந்த நிலை நீங்கித் தாம் அதனின் வேறாய சடங்களாதலைத்தோற்றி, அதன்வயப்பட்ட நிலையை உடையது. சாமீபம், அக்கருவிகள் அருள்வயப்பட்டதாய் உயிர் இறைவனை அணுகுதற்குத்துணை செய்து நிற்கும் நிலையை உடையது. சாரூபம், அக்கருவிகள் சிவமயமாய் உயிருக்குச் சிவானந்தத்தைத் தரும் நிலையை உடையது. சாயுச்சம், அக்கருவிகள் யாவும் கழிய, உயிர் தான் நேரே சிவனைக் கூடியிருக்கும் நிலையை உடையது.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், `சிரமானது` என்பது பாடம் அன்று. ``பதி`` என்பது, `பதியோடு ஒன்றாய் இருக்கும் நிலை` எனப் பொருள் பட்டு, `பழம் உதிர்ந்த கோடு` என்பது போல நீக்கப் பொருட்டாய வினைத் தொகையாய்க் ``கரை`` என்பதனோடு தொக்கது. ``ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள``1 என்ற அனுபவநிலை. பாசம் அருளானதாதலை ஓர்ந்துணர்ந்துகொள்க.
இதனால், சரியை முதலியவற்றின் பயனாய சாலோகம் முதலிய நான்கின் இயல்பு வேற்றுமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது
அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக இழிவற்ற யோகரே.

பொழிப்புரை :

சாலோக சாமீபங்கட்கு மேலே பொருந்தியுள்ள சாரூபம் அட்டாங்க யோகங்களுள் எட்டாம் நிலையாகிய சிவ சமாதி கைவரப் பெற்றோர்க்கே கிடைப்பதாம். அந்தச் சாரூப நிலையினராய முதிர்ந்த யோகியர்க்கு அல்லது அதற்கு மேலே உள்ள சன்மார்க்க மாகிய ஞானம் உண்டாக மாட்டாது. மேலும் அட்ட அங்கங்களும் நிரம்பிய இந்த யோகத்தாலே காய சித்தியும் உண்டாகும். அதனால், இம்மையில் காய சித்தியும், மறுமையில் சாரூபமும் பெறுபவரே குறைவற்ற யோகத்தைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`எட்டாம் யோகத்தால்` எனவும், `அங்கத்தால்` எனவும் உருபு விரித்துக் கொள்க. ``அங்கம்`` என்றது அவற்றை முற்ற உடைய யோகத்தை குறித்த ஆகுபெயர். ``தனில்`` என்றது, யோகத்தையே குறித்தது, `ஆவர்` என ஓதற்பாலதனை,``ஆக`` என விதியாக ஓதினார். அன்றி `ஆவர்` என்றே பாடம் ஓதலுமாம்.
இதனால், சாரூபம் வருமாறும், அவ்வாற்றானே பிற பயன்கள் கிடைத்தலும் கூறப்பட்டன. ``சன்மார்க்கம் தனில் அன்றிக் கை கூடாது`` என்றதனால், `சரியை முதலிய மூன்றற்கும் உண்மைப் பயன் ஞானமே` என்பதும், `சாலோகம் முதலியவை இடைநிலைப் பயன்களே` என்பதும் போந்தவாறு அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 2

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலமா தாகும் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

பொழிப்புரை :

பொன்மலையைச் சார்ந்த சராசரங்கள் யாவும் பொன்னேயாய் விளங்குதல்போல், திருக்கயிலாய மலையில் கல்லால் நிழலில் தென்முகக் கடவுளாய் நீங்காதிருந்து ஞான நெறியைத் தக்கார் வழியாக உலகிற்கு என்றும் அளித்து வரும் சிவபிரான் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானது உலகத்தை அடைந்த யோகிகளது உருவம் கயிலையில் மேற்கூறியவாறு வீற்றிருந்தருள்கின்ற பெரு மானது ஒளி பொருந்திய உருவத்தோடு ஒத்த உருவமேயாகிவிடும்.

குறிப்புரை :

உவமை, ``கதிர்வடிவாம்`` என்பது. அதனோடு ஒன்றேயாய் அதுவாகிவிடாது, அதனோடு ஒத்த தாம் என்பது விளக்கி நின்றது `லோக சயிலத்தினை` என மாற்றி உரைக்க. `அச்சயிலம தாகும்` எனச் சுட்டியுரைக்க, உலோகம், இங்கு,பொன். முன்னர், ``பொற் சயிலம்`` என்றதனால், பின்னர், `அச்சயிலம்` என்பது, `பொன்` என்னும் பொருட்டாய் நின்றது. பொன் மலையைச் சார்ந்தன யாவும் பொன்னாய் விளங்குதலை,
``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே`` 1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியானும் அறிக. ``புக்க போதே`` எனப் பொதுப்படக் கூறினாரேனும், யோகத்தால் ஒன்றிப் புக்க பொழுது` என்பது, ``சார்ந்த பொழுதே`` என்ற உவமையிற் போந்த சார்ச்சி வகை யால் பெறப்பட்டது. படவே, கதிர்வடிவாதல் அவரது உருவமேயாதல் விளங்கிற்று. இவ்வுலகரும் தன் உலகத்தை அடைதற் பொருட்டுச் சிவபெருமான் அருள்புரியுமாற்றை உணர்த்தற்கு, ``பயிலுங்குருவின் பதி`` எனவும், ``கயிலை இறைவன்`` எனவும் அருளிச் செய்தார்.
``மண்ணுல கிற்பிறந்து - நுமை - வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறுதல் - தொண்ட - னேன்இன்று [கண்டொழிந்தேன்`` 2
என்று அருளிச்செய்ததும் காண்க.
இதனால், சாரூபத்தினது இயல்பு உவமையின் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

பொழிப்புரை :

`சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறை வான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனை யன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறை வுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறி யின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், `சிவந் தன்னை` என ஓதுதல் பாடம் அன்று. இவ்வடியை, `சைவம் பசுபாசம் சாராமல் நீங்குதல் - (அல்லது) நீவுதல்` எனவும் ஓதுவர்.
இதனால், `சிவநெறியின் முடிந்த பயன் சாயுச்சமே` என்பது பல்லாற்றானும் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே.

பொழிப்புரை :

சாயுச்சம், சீவன் முத்தி நிலையில் சாக்கிராதீதமாய் அமைதியிற்படுத்தி, சிவம் அன்றிப்பிறிதொன்றும் தோன்றாமல் சிவம் ஒன்றையே தோற்றுவித்து, அறிவின்கண் சிவனது குணமான எல்லையில் இன்ப வெள்ளத்தைத் தந்து நிற்கும்.

குறிப்புரை :

இவற்றைப் படிமுறையால் வேறு வேறு தொடராக ஓதினாரேனும் அவற்றை ஒருங்கெண்ணித் தொகுத்தல் கருத்து என்க. ``முடிவிலா`` என்பதனை ``ஆனந்தம்`` என்பதற்கு முன் கூட்டுக. மனம், கருவியாகுபெயர். குணத்தை ``சத்தி`` என்றார்.
இதனால், சிவநெறியின் முடிந்த பயன் இம்மையிற்றானே பெறப்படுதல் கூறப்பட்டது.
``மூதறிவார்க்கு - அம்மையும் இம்மையே யாம்`` 1
என்பது திருவருட்பயன். இந்நிலை எய்தினாரையே, `சீவன்மூத்தர்`, எனவும், `அணைந்தோர்` எனவும் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 1

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.

பொழிப்புரை :

இதன் சொற்பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

இஃது ஒட்டணியாய், ``இருட்டறை`` என்பது ஆணவ பந்தத்தையும் ``மூலையிருந்த`` என்றது, தன் இயல்பு தோன்றாது மறைந்திருந்ததையும், ``கிழவி`` என்றது அநாதியாய அருட் சத்தியை யும், ``குருடு`` என்றது அஞ்ஞானத்தையும்,``கிழவன்`` என்பது ஆன்மாவையும், ``குணம் பல`` என்றது நிலையாமை உணர்வு, துற வுள்ளம் முதலியவற்றையும், ``மருட்டுதல் என்பது மேற்கூறியவாறு உலகியல் உணர்வில் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கு தலையும், ``மணம் புணர்தல்`` என்பது ஆன்ம அறிவிற் பதிதலையும் உணர்த்தி நின்றன. இருட்டறை மூலையிருத்தல் முதலாகக் கூறிய பலவற்றானும் இது சத்திநிபாதத்தின் முதற்படியின் இயல்பாதல் இனிது விளங்கும். ``கிழவி`` என்பதனை, `குமரி` எனவும் பாடம் ஓதுப.
இதனால், சத்திநிபாதம் முதற்கண் நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.

பொழிப்புரை :

`உண்மையில் இன்பப் பொருளாய் உள்ள சிவனை அறிந்து அவனை அடையும் வழியை நாடினால், அங்ஙனம் அறிந்து நாடுவோர்க்கு அவன் தான் ஒருவனே இன்பப் பொருளாய்த் தோன்றித் தேவாமுதம்போலத் தித்தித்து நிற்பான். அவ்வாற்றால் அதற்குமேல் அவனது உண்மை நிலையைத் தெளிந்தவர்கட்கு அவன், தனக்கு நல்ல புல்லும், நீரும், நிழலும் உள்ள இடம் யாது என நோக்கிய பசுவிற்கு அங்ஙனமே உள்ளதாய்க் கிடைத்த புனம்போல நின்று எல்லையில் இன்பத்தை அளிப்பான்.

குறிப்புரை :

``புலன்`` என்பதனை நான்கிடத்தும் `புனல்` எனப் பாடம் ஓதுவாரும் உளர். கோ - பசு. `கோப்புலன்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
இதனால், இச்சத்திநிபாதம் வரப் பெற்றார்க்குச் சிவானந்த வேட்கை விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.

பொழிப்புரை :

`ஆதி` எனப்படும் சத்தி (முற்பக்கத்து நிலவுபோல) ஆணவ இருளை நாள்தோறும் படிமுறையாகப் பல பிறவிகளிலும் நின்று கழித்து, அம்மலம் பரிபாகம் உற்ற காலத்து அருளாகிய தனது இயற்கை தன்னைவிட்டு நீங்கியது போலக் காட்டிய அதனைவிடுத்து அருளேயாதலில் மாறாது நின்று, தனது மறைத்தலினின்றும் நீங்கமாட்டாத தேவர்களை அவரவர்க்கு ஏற்ற நிலையில் வைத்து ஆள்பவனாகிய சிவனோடு நீங்காதுநின்று அழிவில்லாத இன்பத்தை நுகர்தலாகிய நிலையை ஆன்மாவுக்கு அருளுவாள்.

குறிப்புரை :

``ஆதி`` என்பதனை முதலில் வைத்து ``எண்ணில் பிறவி கடத்தி`` என்பதனை அதன்பின்னரும்,. ``அருளும்`` என் பதனை இறுதியிலும் கூட்டி உரைக்க. ``அருள்`` என்பது ``அருளாகிய இயல்பு`` என்றவாறு. `நீங்காவண்ணமாய்` என ஆக்கம் வருவிக்க. மருள் - மயக்கம். இது மலங்களின் காரியம். இக்காரியமும் சிவனது சத்தியின்றி நிகழாது. அதனால், அச்சத்தி இதனை நிகழ்த்து விக்கும் நிலையில் `திரோதானசத்தி` எனப் படுகின்றது. இங்கு, ``ஆதி`` என்றது திரோதான சத்தியையே. ஓரிடத்தினின்றும் நீங்கிப் பிறிதோ ரிடத்துச் செல்லுதலினின்றும் நீக்கி, நசித்தலை உணர்த்தற்கு, ``பொருள் நீங்கா`` என்றார். புலம் - அறிவு. அஃது ஆகுபெயராய் ஆன்மாவைக் குறித்தது. பயில் - பயிலல். நுகர்தல்; முதனிலைத் தொழிற்பெயர்.
இதனால், சிவனது சத்தி மலபரிபாகம் வருதற்கு முன்பு திரோ தானமாய் நின்று உபகரித்து, பரிபாகம் வந்தபின் அருட்சத்தியாய்ப் பதிந்து உபகரித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.

பொழிப்புரை :

இருள் சூழ்ந்திருந்த அறையில் உள்ள பொருளைக் காணலுறும்பொழுது ஒளிமிக்க விளக்குச் சென்று எரிந்தாற்போல, அறியாமை சூழ்தலால் மயக்கம் பொருந்தி நின்ற உள்ளத்தாமரை யின்கண் சிவன், அருள் மிகுந்து, அப்பனும், அம்மையுமாய் நிற்பான்.

குறிப்புரை :

எனவே, விளக்குச் சென்று எரிந்தபொழுது அந்த அறையில் இருள் நீங்கினாற்போல, இறைவன் அருள் மிகுந்து நின்ற பொழுது உள்ளம் மருள் நீங்கி உண்மையை உணர்தல் பெறப்பட்டது. இது பயன் பற்றிய சுட்டிக்கூறா உவமை. பொருளாவது, இங்கு ஒளி `மயக்கத்து மலர்` எனவும் `நந்தி ஆம்` எனவும் இயையும். ``மலரின் கண்` என உருபுவிரித்து, அதனையும், ``ஆம்`` என்பத னோடு முடிக்க.
இதனால், முதற் சத்திநிபாதத்தின் இயல்பு உவமையில் வைத்து விளக்கப்பட்டது. முதற் சத்திநிபாதத்தில் சத்தி நிவிர்த்தியாய்ப் பதிந்து, நிலை, நிலையாமை உணர்வைத் தோற்றுவித்து, `உலகப் பற்றை நீக்கும்` என்பர் சிவாக்கிர யோகிகள்.
1498. இனி ஐந்து மந்திரங்களால் இரண்டாம் சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 5

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.

பொழிப்புரை :

``இருட்டறை மூலை`` என்னும் மந்திரத்திற் கூறியவாறு, ஆன்மாவைத் தன் வயமாக்கிப் பதிந்த சத்தி, பின்பு, ஆன்மாவின் மயக்க உணர்வை முற்றிலும் போக்கி, வினைகளை வெருண்டோட ஓட்டி, அவ்வினைகளால் உளவாகிய அலமரல் நீங்கியதனால் உண்டாகும் அமைதியை உணர்த்தி, சிவனை உணரமாட்டாதிருந்த அந்நிலையை நீக்கி, அவனது அருட்குணங்கள் பலவற்றை உணரப் பண்ணி, அவனது அருளில் விளங்கி நிற்கும் உணர்வைத் தருவாள்.

குறிப்புரை :

அருட் சத்தி தனது முதற் பதிவில் உலகப் பற்று நீங்கச் செய்தபின், ``ஊசல் கயிறற்றால் தாய் தரையே யாந் துணையான்`` 1 என்றவாறு, தனது இரண்டாம் பதிவில் சிவனது திருவடியை நோக்கிச் செலச் செய்தலை இவ்வாறு விரித்தார் என்க. `இரண்டாம் முறையில் சத்தி பிரதிட்டையாய்ப் பதிந்து, மேற்கூறிய நிவிர்த்தி நிலையை நிலை பெறுத்தும்` என்பர் சிவாக்கிர யோகிகள். ``புணர்ந்து`` என்றது, `புணர்ந்தபின்` என்றவாறு. ``குணம்``, இங்கு சிவனுடையன. புரிதலுக்கு, `சத்தி` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்து இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

பொழிப்புரை :

கன்னியாகுமரிக் கடல் துறையில் மூழ்கி விளை யாடும் மாந்தர் அந்நீர் வடிவாய் நிற்கும் சத்தியின் பதிவில் மூழ்கி விளையாடும் எண்ணத்தினைக் கொள்கின்றாரில்லை. அக்கருத்து அவருக்கு உண்டாகுமாயின், அடுத்து ஒரு பிறவிதானும் உண்டாக மாட்டாது; வீடு பெறுவர்.

குறிப்புரை :

``ஆடிய, ஆடுங் கருத்திலர்`` என்ற குறிப்புக்களால், `கன்னித் துறை` என்பது சொற்பின் வருநிலையாய், இரண்டிடத்தும் வேறு வேறு பொருளைக் குறித்தது.
இதனால், சத்திநிபாதம் வரப்பெற்றார்க்குப் பிறவியறுதல் கூறப்பட்டது. இதுபோல்பவை இவ்வதிகாரத்தின் எப்பகுதியிலும் இயையுடையனவாம்.

பண் :

பாடல் எண் : 7

செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

பொழிப்புரை :

சிவனை யடையும் வேட்கை யுண்டாயினோரே, அவனை, `சிவப்பன்` என்றோ, `கறுப்பன்` என்றோ. `வெளுப்பன்` என்றோ, `பச்சையன்` என்றோ நன்கு உணரவல்லவராவர். ஆதலால், அவனை, `நெருப்புமிழுங் கண்களையுடைய பெரிய கொலை யானையை யாவரும் வியக்கும் வண்ணம் உரித்து அத்தோலைப் போர்த்த வெவ்விய கையை உடையவன்` என்று அறிந்து அவனை அடையும் வேட்கையுடையீராகுங்கள்.

குறிப்புரை :

முதலடியின் ஈற்றில் நின்று, முன் வந்த எல்லாவற் றோடும் இயைந்த ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல் விகற்பத் தின்கண் வந்தது. எய்த உணர்தல், அடைய விரும்புதல். எய்வர் - அறிவார். ``ஐ`` வியப்பு `ஐயெனெப் போர்த்த` என்க. கரி, ஆகுபெயர். `மைவென் றகன்ற பகடுரி போர்த்தவன்` என்பது பாடமாகவும் ஓதுப. யானையை உரித்துப் போத்தமை அவனது எல்லாம் வல்ல தன்மையை வெளிப்படையினாலும், ஐம்புல ஆசையை அறுக்கும் தன்மையைக் குறிப்பினாலும் உணர்த்தி, அவற்றை உணர்தல் அவன் மாட்டு அன்பு நிகழ்தற்கு ஏதுவாதலைக் கொள்ள நின்றது. `சிவனை அடையும் காதல் உடையவரே அவனை அடைதல் கூடும்; ஆதலின், அக்காதல் உண்டாதற்கு ஏதுவாய அறிவைப் பெறுங்கள்` என்றவாறு. `அவ்வறிவும், அதன் வழியான இக்காதலும் சத்திநிபாதத்தால் உண்டாம்` என்பது கருத்து. இரண்டாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், சத்திநிபாதம் சிவஞானத்திற்கும், சிவ பக்திக்கும் ஏதுவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.

பொழிப்புரை :

`பிறந்து இறந்து உழன்ற காலங்கள் எத்துணையன கழியினும், அவ்வுழலலை நீக்கி நிலைபெறச் செய்யும் தலைவர் சத்தியும், சிவனுமாய அவரன்றிப் பிறர் இலர்` என, அனுபவம் வந்தோர் அறுதியிட்டுரைப்பர். இனித் தன்னை நாள்தோறும் தப்பாது வழிபடுவோர்க்குச் சிவன் கைமேல் பயனைப் பெறுவிக்கின்ற துணைவனாய் விளங்குவான்.

குறிப்புரை :

எய்திய காலங்கள் - சென்ற காலங்கள். யாண்டும், உகமும், கற்பமும் என்னும் இப்பகுதிகள் பற்றி, ``காலங்கள்`` எனப் பன்மைப்படுத்து ஓதினார். தனி - ஒப்பின்மை; `தம்மோடொப்பர் பிறரை இவர்` என்றவாறு. நாயகம் - தலைமை; தலைமை யுடையாரை, `தலைமை` என்றே உபசரித்து ஓதினார். முன்னர், `சிவனும்` என்னாது ``தானும்` என்றமையால், பின்னர், ``தன்னை`` என்றது சிவனையே யாயிற்று. கருமம் - பயன். காட்டு - காட்டாய் நிற்கும் பொருள். ``அது`` பகுதிப் பொருள் விகுதி. காட்டாதற்கு. ``தான்`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `சத்திநிபாதம்` என்றே கூறப்படினும், சத்தி தனித்து நில்லாமை உணர்த்துவார். ``தையலும் தானும்`` என முன்னர்க் கூறிப்பின்னர்க் காட்டாதலைச் சிவன்மேல் வைத்தே கூறினார். சிவாக்கிர யோகிகளும் `சத்தி தனது பதிவில் நிவிர்த்தி முதலியவளாய் உள்ள பொழுது, சிவனும் நிவிர்த்தீசன், பிரதிட்டேசன், வித்தியேசன் முதலியவனாய் நிற்பன்` என்பர். ``வணங்கும் அவர்கட்குக் காட்டாம்`` என்றதனால், இச்சத்திநிபாதம் கிரியையின்வழி மலத்தைப் பாகம் அடைவித்துத் தானும் முதிருதல் பெறப்பட்டது.
இதனால், இரண்டாம் சத்திநிபாதம் கிரியையால் ஆன்மாவை உய்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.

பொழிப்புரை :

`சந்திர கலை, சூரியகலை` என்னும் இரு வாயுக்களை முறைப்படி தொடருமாற்றால் அவை ஒரு வழிப்பட்டு முடியும் அவ்விடத்தை அடைந்து, அங்குள்ள ஒளியை நாங்கள் கண்டு பற்றிக்கொண்டோம். அவ்வொளியே முன்னே முன்னே பலர் காண முயன்று காணாது இளைத்த பெரியோன்; எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப்பவன்; (சிவன்) அவன் அவ்விடத்தில் நிலைத்து நின்று தன்னைக் காண்பவர்க்கு அஞ்ஞான இருளைப்போக்குவான்.

குறிப்புரை :

``ஆங்கு`` எனப்பண்டறி சுட்டாற் குறித்து, ஒளிக் காட்சியைக் கூறினமையால் இஃது யோகத்தை உணர்த்தியதாதலின், ``இரண்டு`` என்று இப்பொருட்டாயிற்று. ஆங்கு என்றது, ஆஞ்ஞைத் தானத்தை. மூன்றாம் அடி, `சிவன்` என்பது உணர்த்தி நின்றது. இரண்டாம் சத்திநிபாதம் தனது முதிர்வில் யோகத்தையும் தருதல் கூறியவாறு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், இரண்டாம் சத்திநிபாதத்தால் யோகமும் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற களியது வாமே.

பொழிப்புரை :

இனி, நான்கு மந்திரங்களால் மூன்றாவதாகிய சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.
முன் துன்பமாய் நின்ற நிலை மாறி இப்பொழுது இன்பமாய் நிற்கின்ற சத்தி, சிவனால் கட்டிக்கொடுக்கப்பட்ட குடிலாகிய ஓர் உடம்பினுள் நின்று, `ஏழ்` என்னும் வகையுட்டானே மாறி மாறி வருகின்ற பலவாகிய பிறப்புக்களிலும் உளவாகின்ற துன்பங்களை யெல்லாம் உணரச்செய்வாள். பின் அவ்வுணர்ச்சி காரணமாக உயிரின் அகத்தே யுள்ள பல வகையான விருப்பு வெறுப்புக்களும் ஒழிந்துபோக, முதல்வனாகிய சிவனைக் கண்டு களிக்கும் களிப்புமாவாள்.

குறிப்புரை :

அண்ணித்தல் - இனித்தல். `எண்ணுவிக்கும்` என்பது திரிபெய்தி நின்றது. ``ஏழ் ஏழ்`` ஒருசொல் அடுக்கு. அறிவு உடம்பிட மாக நிகழ்தலின், அறிவின்கண் நிற்றலை உடம்பின்கண் நிற்பதாகக் கூறினார். ``நிலவாத புலால் உடம்பே புகுந்து நின்ற - கற்பகமே``1 என்ற அப்பர் திருமொழியையும் காண்க. ``பிறவி`` என்பது, விடாத ஆகுபெயர். ``கண்ணுற்று நின்ற`` என்பது ஒருசொல் நீர்மைத்து. அப் பெயரெச்சம் `ஆறு சென்ற வெயர்` என்பதுபோல, ``களி`` என்னும் காரியப்பெயர் கொண்டது. ``உணர்விக்கும்`` ``கண்ணுற்ற நின்ற களியாகும்`` என்றதனால், தீவிர சத்திநிபாதம் ஞானத்தைத் தருதல் பெறப்பட்டது. சிவாக்கிர யோகிகளும், ``தீவிர சத்திநிபாதம் சிவஞானம் பிரகாசம்`` என்றார். `இதில் சத்தி வித்தையாய்ப் பதியும்` என்பதும் அவர் கூறுவது. இந்த ஞானம் சிவநூல்களைக் கற்றல் கேட்டல்களால் வரும் கருவி ஞானமே (அபர ஞானமே) என்க.
``ஞானநூல் தனைஓதல், ஓது வித்தல்,
நற்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை`` 1
என்பதில், முதலில் உள்ள மூன்றும் இந்த ஞானமேயாதல் அறிக.
``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` 2
என்று அருளிச்செய்ததும் இந்நிலையினரை நோக்கியே என்க.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

பொழிப்புரை :

இமய மலையில் தோன்றி வளர்ந்த மகளும், அபர ஞான பரஞானங்களையே இருதனங்களாகக் கொண்டு உயிர்கட்கு அந்த ஞானமாகிய பாலை ஊட்டி வளர்ப்பவளும் ஆகிய சத்தி, மேற் கூறியவாறு முதல்வனைக் கண்ணுற்று நிற்கும் ஞானத்தால் வழிபடு கின்றவர்கட்குத் தவங்கள் எல்லாவற்றினும் சிறந்த தவமாகிய சிவ புண்ணியத்தை வழங்குவாள்; அதனால் பிறப்பை ஒழிப்பாள்; சிவனை மறக்கும் மறதியாகிய அஞ்ஞானத்தை நீக்குவாள்; யாவரும் அவரை வழிபடும் நிலையில் உயர்த்து வைப்பாள்.

குறிப்புரை :

காரண காரிய முறையால் முன் நிற்கற்பாலதாய பெருந் தவம் நல்கல், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. குறச்சாதியாகக் கூறியது, மலைமகளாதலை நயம்படக் குறித்தவாறு. சிறப்பு, இங்கு ஞானம், ஒடு உருபு, ``வேலொடு நின்றான், கோலொடு நின்றான்`` 1 என்பவற்றிற் போலச் சிறப்பித்தற் பொருளில் வந்தது. நின்றார் - உரியராயினார்.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.

பொழிப்புரை :

எட்டுத் திசைக்கும் தலைவனாகிய சிவனை அவன் துணைவியோடும் அறிவினுள் அறிந்து மறவாதிருங்கள். ஏனெனில், அவ்வாறு இருக்கும் அறிவை உடையவர்கட்கே சத்திநிபாதம் தொடர்ந்து முதிர்வதாகும்.

குறிப்புரை :

தாங்குதல் - சுமத்தல்; இங்கு அறிவினுள் அறிதலைக் குறித்தது. `தலைமகனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. தூங்குதல் - மிகுதல். ``ஒளி நீலம்`` என்பதில் பொதுப்பெயர் முன்னும், சிறப்புப்பெயர் பின்னுமாய் நின்றன. சிவ ஒளி செம்மையும் சத்தி ஒளி நீலமும் ஆதல் அறிக. `தலைமகனைப் புரிகுழ லாளொடும் தாங்குமின்` எனக் கூட்டுக.
இதனால், `சத்தநிபாதக் குறி தோன்றப் பெற்றோர் பின்னர் அந்நிலையை நெகிழாது பற்றி நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.

பொழிப்புரை :

தனு காரணங்களின் வழிவருபவற்றுள் ஒன்றையும் நோக்குதல் இல்லாத சத்திநிபாதன், தன்னை யார் அணுகினாலும் அவர்கட்கு முதிர்ந்த ஞானம் ஒன்றையே உணர்த்துவன். சிவனைப் புறத்தில் மலர் தூவி வழிபடினும் படுவான். தான் அடையும் எவ்விடத் திலும் அங்கு உள்ளார்க்கு உயிர்போலச் சிறந்து விளங்குவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலிற் கொள்க. சத்தி நிபாதர் தம்மை அணுகினவர்க்கு ஞானம் ஒன்றையே உணர்த்துவர், ``அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்துதவார் ஆகலான்`` 1 என்பதில் எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டது. ``பணிகினும்`` என்பதை ``பணிவன்`` என்பதற்கு முன்னே கூட்டுக. உம்மை, அஃது ஒருதலை யாகாமை குறித்தது. ``உலகெங்கும்`` என்பதின்பின், `அவ்விடத் தார்க்கு` என்பது எஞ்சி நின்றது.
இதனால், தீவர சத்திநிபாதம் வந்தோரது இயல்பு கூறப் பட்டது.
இனி மூன்று மந்திரங்களால் தீவிரதர சத்திநிபாதம் உணர்த்து கின்றார். இஃது `அதிதீவிரம்` எனவும் சொல்லப்படும்.

பண் :

பாடல் எண் : 14

இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணமல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

பொழிப்புரை :

இருவகை வினைகளும் ஒரு தன்மையவாக ஒத்து நிற்குங் காலத்தில் உண்டாவதே இனிய அருட்சத்தியது பதிவு. `அஃது உண்டானபொழுது சிவன் குருமூர்த்தியாய் வந்து குற்றங்கள் யாவற்றையும் நீக்கி வழங்குவான்` எனப்படுகின்ற அந்த ஞானத்தாலே புருடன் தன் செயல் அற்று அருள் வழியில் நிற்பானாயின், மும்மலங்களும் பற்றற்று ஒழிய, அந்தச் சிவனே தானாவான்.

குறிப்புரை :

சத்திநிபாதமாவது சிறப்புடைய இந்நான்காஞ் சத்தி நிபாதத்தின் இயல்புகளை இங்கே முற்ற எடுத்தோதினார். இரு வினைகளும் நேரொத்தலாவது அவற்றது பயன்களாகிய உலகியல் இன்பம், துன்பம் இரண்டனையும் ஒரு பெற்றியவாகவே உணர்ந்து, அவற்றில் விருப்பு வெறுப்புக்கள் இல்லாதிருக்கும் நிலையாம். இதுவே ஆணவ மலம் பரிபாகமானதற்கு அறிகுறியாகும். ஆகவே, `இருவினை யொப்பும், மலபரிபாகமும் வந்தால், சத்திநிபாதம் வரும்` என்பர். ஞானத்தைப் பரிபாகம் வருமுன் உணர்த்துதல், வந்தபின் உணர்த்தாதிருத்தல் இரண்டுமேகூடா ஆகலின், சத்தி நிபாதம் வரப்பெற்றார்க்குச் சிவன் குருவாய் வந்து ஞானத்தை உணர்த்துதல் ஒருதலையாம். இது பற்றிய செய்திகள் பலவற்றையும் சிவஞானபோத எட்டாம் சூத்திரத்திலும், அதன் உரைகளிலும் விளங்கக் காண்க. சத்தி நிபாதத்தின் வழிச் சிவன் வந்து செய்தலை அச்சத்தியே செய்வதாகக் கூறினார்.
இதனால், சத்திநிபாதத்து இயல்பெல்லாம் இதனுள் வைத்து முற்ற உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி
அரவசெய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி யாளும் பராபரை தானே.

பொழிப்புரை :

உயிர் தனு கரணாதிகளைப் பெறாது ஆணவத் தோடு மட்டுமே கூடிச் சடம்போலக் கிடந்த இராக்காலமாகிய கேவல நிலையும், பின் தனு கரணாதிகளைப் பெற்றுப் பிறப்பு இறப்புக்களில் உழன்ற பகற் காலமாகிய சகல நிலையும் பின் ஒருபோதும் உண்டாகாது ஒழிந்த சுத்தநிலையாகிய முத்திக் காலத்திலே, சத்தி யாகிய திருவருள் ஒன்றையே நோக்கித் தற்போதத்தைச் சிறிதும் எழாத படி அடக்கி அவ்வருளோடே ஒன்றியிருக்க, அவ் அருளாகிய சத்தி யும் இவன்பால் இரக்கம் மிக்கவளாய் இவனைத் தன் அடியவனாக ஏற்றுக்கொள்வாள்.

குறிப்புரை :

`அதன்பின் துன்பம் ஏதும் இல்லை` என்பது குறிப் பெச்சம். கேவல சகலங்களை `இரவு, பகல்` என்றல் மெய்ந்நூல் வழக்கு, ``இரவும்பகலும் இறந்த இடம்`` என்றதனால் `அழிப்புக் கேவலம், படைப்புச்சகலம்` என்பனவும், `உறக்கக் கேவலம், விழிப்புச் சகலம்` என்பனவும், `மறப்புக் கேவலம், நினைப்புச் சகலம்` என்பனவுமாகிய இடைநிலை மாற்றங்களும் எய்தாது ஒழிந்த நிலை என்பது போந்தது. இதனை இவ்வாறே,
``இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே``
என்றும்,
``கங்குல் பகல் அற நின்ற எல்லையுளது எது`` 1
என்றும் பிறவிடங்களிலும் குறித்தல் காண்க. குரவம் செய்கின்ற - குராமலர் அழகைச் செய்கின்ற. அரவம் - ஓசை; பேச்சு; என்றது, தற்போதம் தலையெடுத்தலை. `பரிவொன்றிலாளும்` என்பது பாடமன்று.
இதனால், சத்திநிபாத நிலையது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்
தூனை விளக்கி உடனிருந் தானே.

பொழிப்புரை :

என்னுள் விளங்காது மறைந்து கிடைந்த ஞானத்தை அம்மறைவு நீக்கி விளங்கி எழச்செய்த என் குருநாதன் `மாலை, இரவு, பகல்` ஆகியவற்றில் ஒரோவொரு காலத்தில் விளக்கத்தைத் தருகின்ற `விளக்கு, சந்திரன், சூரியன்,` என்னும் ஒளிகளுக்கும் ஒளியைத் தருகின்ற ஒப்பற்றபேரொளி` அவன் என் உள்ளே புகுந்து உயிரை மட்டுமின்றி உடலையும் ஒளியாய் விளங்கச் செய்து, பின் என்னைவிட்டு அகலாது உடனாயே இருக்கின்றான்.

குறிப்புரை :

விளக்கு விளக்கந்தரும் காலத்தைக்கூறவே, ஏனை இரண்டும் விளக்கந்தரும் காலத்தையும் எடுத்துக்கூறுதல் கருத்தா யிற்று. `விளக்கு முதலிய மூன்றும் காலத்தாலும், இடத்தாலும் வரை யறுக்கப்படும் ஒளிகள்` என்பதை எடுத்தோதி, `அவற்றுக்கும் விளக்கம் தரும் ஒளி` எனவும், `ஒப்பற்றது` எனவும் கூறியவற்றால் அக இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞான ஒளியாய் விளங்குதலும், அது பிறிதொன்றால் ஆகாமையும் குறிக்கப்பட்டன, மாயையும் கன்மமும் ஆன்மா மருள்நிலையில் உள்ளபொழுது மருளாயும், அருள்நிலையை எய்தியபொழுது அருளாயும் நிற்கும் இயல்புடையனவாதல் பற்றி, `ஊனையும் விளக்கினான்` என்றார். மாயையும், கன்மமும் இவ்வியல்பின் ஆதலை,
``மாயைமா யேயம் மாயா வரும் இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின்மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்`` 1
என்னும் `சிவப்பிரகாசத்தால்` அறிக. `தீவிரதர சத்தநிபாதத்தால் அனுபவ ஞானமாகிய நிட்டை கைவந்து, ஆன்மா சிவமாம் தன்மையைப் பெறும்` என்றவாறு. சிவாக்கிர யோகிகளும் இங்கு சத்தி சாந்தியாய்ப்பதிந்து, உபசாந்தத்தைத்தரும் என்றார். இப்பாட்டு இருவிகற்பம் பெற்றது.
இதனால், சத்திநிபாதத்தின் நிறைந்த இயல்பும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந் துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள்தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்ம்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.

குறிப்புரை :

`அறுசமயத்தவர் காண்கிலர், விழுவர்` என்பனவும் பாடம். `அதனுள்` என்பதில் அன்சாரியை தொகுத்தல் பெற்றது, அறிவுள் நிற்பவனை ஒற்றுமைபற்றி உடலுள் நிற்பவனாக ஓதினார். முன்னும், பின்னும் பல இடங்களில் இவ்வாறே ஓதுதல் காண்க. மாயம் - பொய்; இங்கு மயக்கத்தைக் குறித்தது. ``பதைக்கின்ற ஆறே`` என்னும் பயனிலைக்கு, `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனுள் `ஆய்தல்` என்பது `சிவனே முதற்கடவுள்` என்னும் சைவத்தின் துணிபை முற்றாகவும், ஒருவாறாகவும் மறுத்துக் கூறுதலை ஆதலின், அச்செயலையுடையன மேற்கூறிய மதங்களேயாதல் அறிக. ஈற்றடியில் சகரமும் போலிவகையால் இன எதுகையாம். அன்றி, `உயிரெதுகை பெற்றது எனினும் அமையும்`.
இதனால், புறச் சமயங்கள் சிவனது முதன்மையைச் சிறிதும் உணராதனவும், முற்ற உணராதனவுமாய்க் கேடுபயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் அவற்றின் அறிவில் பொருந்தி யிருத்தலை விரும்பி, அண்டத்தில் உலகெங்கும் நிறைந்தும், பிண்டத்தில் உள்ளக்கமலத்தில் தியானப்பொருளாய் விளங்கியும் நிற்பவனும், அருள் வள்ளலும், அனைத்துலகிற்கும் தலைவனும், பொள்ளல் நிறைந்த உடலில் உயிர்ப்பாய், உட்புகுதல் வெளிவருதல் களைச் செய்தும் உயிர்களால் அறியப்படாது மறைந்து நிற்பவனும் ஆகிய முதற்பெருங்கடவுளாம் சிவபெருமானைப் புறச் சமயிகள் தங்கள் கருத்தில் கொள்ளமாட்டாதவர்களாகின்றனர்.

குறிப்புரை :

`இஃது அவர் வினை யிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `எங்கும் நிற்றல் முதலிய பலவற்றிற்கும் உயிர்கள்மீது வைத்த கருணையே காரணம்` என்றற்கு, உள்ளத்துள்ளே நிற்றலை விரும் பினமையை முதற்கண் தனிப்பட எடுத்து ஓதினார். ``உள்ளம்`` என்பது அறிவைக் குறித்தது என்னை? ``மலர்`` எனப் பின்னர் இதயத்தைக் குறித்தலின். ``தவம்`` என்றது தியானத்தை. தவன் - தவத்தால் அடையப்படுபவன். புகுதல் புறப்படுதல்களைக் கூறினமையின், அஃது உயிர்ப்பாதல் விளங்கிற்று.
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` 1
என்று அருளினமையும் இங்கு நோக்கத்தக்கது. இறைவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றல். அவை உடலொடு நிலைத்து நின்று, அந்தக் கரணங்களின்வழி வினைகளை நுகர்ந்தும், ஈட்டியும் வருதற் பொருட்டாம். உயிர்ப்பு இதயத்துடிப்பின் வழித்தாதலையும், இறைவன் இதய வெளியில் ஆடுபவனாகக் கூறப்படுதலையும் இங்கு நினைக்க. இங்ஙனம் உயிர்ப்பாய் உள்ளவனை அறியமாட்டாதவர் தங்களை அறிவராக (ஞானியராக)ச் சொல்லிக்கொள்ளுதல் நகை விளைப்பது என்பதாம். `தலைவனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.
இதனால், புறச்சமயிகள் உண்மை ஏதுக்கள் பல இருப்பவும் அவற்றைக்கொண்டு உண்மையைக் கருதியேனும் உணர மாட்டாதவ ராயிருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானை அகச் சமயிகள் பொதுவாகவும், சிறப்பாகவும், `அகம், புறம்` என்னும் இரண்டிடங்களிலும் உள்ளவனாக அறிந்து, இயன்ற அளவில் அவனை அணுக முயல்கின்றனர். அவர்கட்கு அவன் அவர்களது தகுதிக்கு ஏற்ப அவ்விடங்களில் ஏற்ற பெற்றியால் அகப்படுகின்றான். புறச்சமயிகள் அவனை `எவ்விடத்திலும் இலன்` எனக் கூறிப் பிணங்கு கின்றார்கள், அவர்கட்கு அவன் அவற்றுள் ஓரிடத்தும் காணப்படுதல் இல்லை.

குறிப்புரை :

``உண்மையுமாய் இன்மையுமாய்``1 என்ற திரு வாசகத்திற்கும் இதுவே கருத்தாதல் அறிக. நான்கிடத்தும் ``புறத்தும்`` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. தான், அசைநிலை, ஏகாரம், தேற்றம்.
இதனால், புறச்சமயிகள் அச்சமயத்தை விட்டு அகச்சமயம் புகுந்தன்றி உய்யமாட்டாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

புறச்சமயங்கள் ஆறனையும் தோற்றுவித்தவர்கள் மெய்ப் பொருளைக்கண்டு அதனைப் பிறருங் காணவழி கூறினா ரல்லர். அதனால் சிவன் அந்த ஆறுசமயப்பொருளில் ஒன்றேனும் ஆயிற்றிலன். இந்த உண்மையை, உலகீர், தெளிமின்கள்! நன்கு தெளி மின்கள்!! தெளிந்தீர்களாயின், அதன்பின் தவற்றின் நீங்கி, நேர் வழியை அடைந்து, வீடு பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``சமயம்`` என்றது இங்குப் புறச் சமயத்தையே யாதல் வெளிப்படை. காணுதல் - உணர்தல். அதுபின் பிறர்க்கு உணர்த்தி யதனைக் குறித்தது. இனி, ``சமயம்`` என்றதனை ஆகுபெயராக்கி, `அவற்றை உணர்ந்தும்நூலை ஆக்கியவர்` என்று உரைப்பினும் ஆம். இச் சமயத்தவரும். இவர்தம் நூல்களும் பசுக்களும், பசு வாக்கியங் களும் ஆதலின், அவராலும் அவர்தம் நூலாலும் மெய்ப்பொருள் பற்றப்படாதாயிற்று.
``இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வோடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன`` 2
எனவும்,
``சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கிஓர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்`` 1
எனவும் போந்த திருவாக்குகளும் புறச்சமயங்கள் மயக்க உரைக ளாதலை விளக்குதல் காண்க.
``அவன்`` என்றது, மேல், ``எம் இறை`` என்றதனைச் சுட்டிற்று. ``தேறித் தெளிமின்`` என்றது ஒருபொருட் பன்மொழி மறித்தும் இவ்வாறு கூறியது வற்புறுத்தற் பொருட்டு. மாறுதல் - நெறியின் நீங்குதல். `அஃது இன்றி` எனவே, நேர்வழியைப் பற்றுதல் பெறப்பட்டது. `வீடு` என்பது இல்லத்திற்கும் பெயராய் வழங்குதலின், அச் சொல் நயம் பற்றி ``மனைபுகலாமே`` என்றார். `வழி தவறிச் சென்று காடு மேடுகளில் அலையாமல், நேர்வழியைக் கண்டு, அதன் வழி விரைவில் இல்லத்தை அடைந்து இன்பறலாம்` என்பது நயம். இங்கு, ``அவன் அலன்`` என்று, சிவமாய் விளங்காமையை ஆதலின், ``அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`` 2என்றாற் போல்வன இதனொடு மாறுகொள்ளாமை அறிக.
இதனால், புறச் சமயங்கள் வீடாகிய பேரின்பத்தைப் பயவாமையே யன்றிப் பிறவியாகிய பெருந்துன்பத்தை மிகுவித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சிவமல்ல தில்லை இறையே சிவமாம்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
கவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொழிப்புரை :

சிவம் அல்லது வேறு பதிப்பொருளும், சிவமாம் பயனைத் தருகின்ற தவம் அல்லது வேறு தவமும் இல்லை. ஆறாகக் கூறப்படுகின்ற புறச்சமயங்கள் தம்மை அடைந்தவர்க்கு இவ்வுலகில் வீண் முயற்சியாவதன்றி வேறு இல்லை. அதனால், அவை தவமாதல் இல்லை. ஆகையால் மெய்ப்பொருளை அடைய விரும்புகின்ற வர்களே, நீங்கள் சிவபெருமானது திருவடியைச் சார்ந்து பிழை மின்கள்.

குறிப்புரை :

`சிவம் அல்லதில்லை அறையே` என்பது பாடமாயின், `சிவம்` என்பதன்றிப் `பொருள் பொதிந்த சொல் வேறில்லை` என உரைத்து, `சிவமன்றி வேறு மெய்ப்பொருள் இல்லை` என்பது அதனாற் போந்த பொருளாகக் கொள்க. ``சிவமாந் தவம்`` என்பதில், பெயரெச்சம், `நோய் தீரும் மருந்து` என்பது போலத் `தவமல்லது இல்லை தவம்` என ஒருசொல் வருவிக்க, ``அவம்`` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சிநின்ற கருவிப் பெயர் கொண்டது. `அவை தவமல்ல` என எழுவாய் வருவித்துக்கொள்க. ``நீர்`` என்றது உண்மையைத் தலைப்பட விரும்பினோரையாதலின், அவரே விளிக்கப்படுவாராயினர். ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு`` 1 என்றார் ஔவையாரும்.
இதனால், புறச் சமயம் வேறு முயற்சியைப் பயத்தலல்லது` பயன் தாராமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அண்ணலை நாடிய ஆறு சமயரும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியும் முயற்றில ராதலின்
மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.

பொழிப்புரை :

சிவபிரானை இகழாது போற்றுகின்ற அகச் சமயங்கள் ஆறிலும் நிற்போர் அவ்வச்சமயக் கடவுளரது உலகத்தை அடைந்து இன்புற்றிருக்க, புறச் சமயிகள் அவற்றை விடுவித்துப் பிற விண்ணுலகங்களை அடைதலை மிகவும் விரும்பி, வினைக்கட்டி னின்றும் வெளிப்படமாட்டாது, அதனுள் நின்றே அழிகின்ற அவச் செயலாதலால், அவர்கள் பிரகிருதிக்கு மேல் செல்லும் வழியை அறியாதவர்களேயாவர்.

குறிப்புரை :

`ஆறு சமயமும்` என்பது இரட்டுற மொழிதலாய், `வேறு விண்ணவர் ஆக` எனப்பொருள் தந்து, ``மிகவும் விரும்பியே`` என்பத னோடும் இயைந்தது. ``முள்`` என்றது முட்புதரை. `வினையைக் காடாக உருவகித்துக் கூறலும் மரபு` என்பது, ``நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் ... ... ... 2 என இதனுட் பின் வருதலும், ``இருவினை மாமரம்``3 என்றமையும் போல்வன பற்றி உணர்க. முயற்று - முயற்சி; என்றது தவத்தை யாகலின், `அதனை யிலர்` என்றது. அவச்செயலை உடையாராதலைக் குறித்தது. ``மண்`` என்றது அது முதல் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்கட்கு உபலக்கணமாய், அவ்வத் தத்துவ புவனங்களின் மேல் நின்றது.
அகச்சமயம் ஆறாவன:- பாசுபதம், மாவிரதம், வைரவம்` சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்பன. காபாலமும், காளா முகமும், பாசுபதம், மாவிரதம் என்பவற்றுள்ளே அடங்கும். `சாத்தம்` என்றது சுத்த சாத்தத்தையே; வாம மதத்தையன்று. இம்மதங்களில் நிற்போர் சிவதீக்கை பெறுதலில்லையாயினும், உருத்திரன் முதலி யோரைச் சிவனது மூர்த்தி பேதங்களாகக்கருதி வழிபடுதலும், சிவனைத் தேவருள் ஒருவனாக வைத்து இகழ்தல் இன்மையும் உடைய ராகலின். இவரை ``அண்ணலை நாடியசமயர்`` என்றும், இவர் பிர கிருதிக்கு மேல் உள்ள சீகண்ட வுருத்திரர் முதலிய உருத்திரலோகங் களை அடைவர் ஆகலின் பிறரை ``மண்ணின் றொழியும் வகையறி வார்களாய், விண்ணவராவர்`` என்றும் அருளிச் செய்தார். இவருள் பாசுபதர் மதம் முதலியவற்றையே பொதுமையில் `சைவம்` என வைத்து, `சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` எனச் சமயங்கள் ஆறு என்பாரும் உளராயினர். சைவத்தை நீக்கி, `சௌமியம்` என்பது கூட்டி, `ஆறு` என்பாரும் ஒருசாரார்.
`உலகாயதர் விண்ணவராக விரும்புதல் இன்மையின்` அங்ஙனம் விரும்புபவராகக் கூறியது புத்தர் முதலிய பிறரையேயாம். அவரெல்லாம் தாம் தாம் ஓர் உலகத்தை முத்தியுலகமாகக் கற்பித்துக் கொண்டு அவற்றின்கண் செல்ல விரும்பினாராயினும், அவர் அடைவது பிரகிருதிக்குக் கீழ் உள்ள தத்துவ புவனங்களையே என்பது நாயனாரது திருவுள்ளமாதலின் அவரை, `மண்ணின்றொழியும் வகையறியாதவர்` என்று அருளிச்செய்தார்.
இதனால், புறச்சமயங்கள் பிரகிருதியைக் கடப்பிக்க மாட்டாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை ஆமே.

பொழிப்புரை :

சிவனது உலகத்தையும், சிவனையும் அடைவதே பிறவியற்ற முத்தியாம். அவையன்றி, `முத்தி` எனப் பிறராற் கூறப் படுவன எல்லாம் முத்தியல்லாத பிறப்பு நிலையேயாம். அதனால், அவைகளில் எல்லாம் பாசத்தால் வருகின்ற பிறவியாகிய ஒரு பெருந் துன்பம் இருக்கவே செய்யும். அதனால், சிவனை நோக்கிச் செய்யப் படுவனவாகிய சரியை முதலிய நெறிகள் ஒருவனுக்குக் கிடைக்கு மாயின், முத்தியுலகம் அல்லவாய்ப் பிறவி யுலகங்களாகிய `அயன், அரி, அரன்` என்னும் குணமூர்த்திகள் மூவரது பதவிகளும் அத் தன்மையவாய்ப் போம்.

குறிப்புரை :

அஃதாவது, `அவன் அப்பதவிகளை எய்தாது, மேற்கூறிய சாலோகம் முதலியவற்றையே அடைவான்` என்பதாம். ``கதி`` என்றது பத முத்தி பரமுத்திகளை. பத முத்தியடைந்தோரும், ``நாதனே முன் நிற்கின்``1 பரமுத்தியை அடைவர் ஆதலின், அதுவும் `பிறவியற்ற நிலை` எனப்பட்டது.
ஒன்று - ஒன்றாய் பெரிய துன்பம். `உண்டே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல். தவகதி - தவமாகிய நெறி. தவமாவது சரியை முதலியனவே யாதல் அறிக. `அதனொடு நேர்தலாகிய ஒரு பேறு வாய்க்குமாயின்` என்க. ``மூவர்`` என்றது ஆகுபெயர்.
இதனால், அகச் சமயங்களை மேல்; `அண்ணலை நாடிய` சமயங்களாகக் கூறினமை பற்றி, அவையும் தவநெறிபோலும்` எனவும், அவற்றால் அடையும் நிலைகளும் `முத்திபோலும்` எனவும் நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்
ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.

பொழிப்புரை :

சமயங்களைப் பற்றிச் சொல்லுமிடத்துச் சிறி யனவும், பெரியனவும் ஆகிய பல வேறுபாடுகளால் சமயங்கள் மிகப் பலவாய் உள்ளன. `அகம், புறம்` என்பவற்றுள் `ஆறு` என ஒருவாறு வரையறுத்துக் கூறப்படும் சமயங்கள் மேற்கூறிய பலவற்றுள்ளே உள் ளனவாம். அங்ஙனம் சொல்லப்படும் சமயங்கள் பலவும் `உண்மை` எனக் கொண்ட நெறிகளிலே மக்கள் நின்று இறுதியாக அடையும் மேலான் நெறி, மேற் கூறிய அவற்றுள் ஒன்றிலும் இல்லாத நெறியாம்.

குறிப்புரை :

`அந்நெறி சித்தாந்த சைவமாம்` என்பதே நாயனாரது திருவுள்ளமாதலும், அந்நெறி பிற சமயங்களில் இல்லாமையும் இத் தந்திரத்தின் தொடக்கத்திலே அருளிப் போந்த மந்திரங்களான் அறிக. ``நூறு`` என்றது, `மிகப் பல` என்றவாறு. ``ஆறு`` எனப் பொதுப்பட அருளிச் செய்ததனால், அகம், புறம் இரண்டும் கொள்ளப்படுவ ஆயின. பின் வந்த ஆறு, நெறி. `ஆற்றுள்`, `ஈற்று` என்னும் ஒற்றுக்கள் தொகுத்தல் பெற்றன. நில்லா - நின்று. `அவற்றுள் இல்லா நெறி` என்க.
இதனால், `சித்தாந்த சைவத்துக்கு நிகராகாமை பற்றி இங்கு இகழ்ந்து கூறினும், பிற சமயங்கள் அதற்குப் படிகளாய் உள்ளன` எனக் கூறி, ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.

பொழிப்புரை :

தம் குரல் பிற உயிர்கட் கெல்லாம் கடியனவாய் வெறுக்கப்படுதலை அறியாது உவகையால் உரத்துக் கத்துகின்ற கழுதைகள்போலப் பாழ்நெறி நூல்களை உரத்து ஓதுகின்ற கன்மிகள், தம் குற்றத்தை உணர மாட்டார்கள். தூயனவாகிய சிவன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நின்றும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்கின்ற சிறப்பை அறிவு நூல்களைக் கற்கும் முகத்தால் உணர்ந்து பாராட்ட மாட்டார்கள். மற்று, மயக்கம் மிகுந்து, வீணே பிறந்தும், இறந்தும் உழல்வார்கள்.

குறிப்புரை :

``கத்தும்`` என உடம்பொடு புணர்த்ததனால் பயனில் லாத நூல்களாம். உவமை அதுபற்றியதாகலின் உவமிக்கப்பட்டார் பயனில்லாத நூல்களை ஓதுபவராயினர். பாராட்டிக் கற்கின்றவர் களைக் குறித்து.
``அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஉந் துணையறிவா ரில்``
(நாலடி)
என்றார் பிறரும். கலதி - முகடி; ``கலதிகள்`` என்றது, `நல்வினை யில்லார்` என்றதாம். ``சுத்த சிவன்`` என்றது, `பிறவற்றிற் கலந்தும் அந் நிலை கெடான்` என்றற்கு `தோய்வுற்று` என்பது பாடமன்று. ``குற்றந் தெரியார்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. `குற்றந் தெரியார்`` என்பது பாடமாயின், அஞ்ஞானமாகிய குற்றம் நீங்கப் பெறார்; அதனால், குணங்கொண்டு கோதாட்டார்` என்க. `அக்குணங் கொண்டு` எனச் சுட்டு வருவித்து உரைக்க. கோதாட்டல் - பாராட்டல்.
``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` 1
என்று அருளிச் செய்தார் வாதவூரடிகளும். மூன்றாம் அடி இன வெதுகை பெற்றது.
இதனால், பிற சமயங்களின் நிற்பாரது கல்வியின் இழிவு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை
முயங்கி இருவினை மூழை முகப்பா
இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.

பொழிப்புரை :

புறச் சமயங்களில் நின்று அறிவு மயங்குகின்றவர் களும் சைவசமயத்தை அடைந்து அறிவு தெளிந்தவர்கள்பால் சென்று கூடி, இருவினைப்பயன்கள் அகப்பையால் முகக்கும் அளவில், உடலூழாய்க் கழியும்படி ஒழுக வல்லவராயின், அவர்கட்கு அவ்வுடல் வாழ்க்கை முடிகின்ற நிலை தோன்றும்பொழுது யம பயம் இல்லாது ஒழிய, ஒப்பற்ற பரமுத்தி நிலை கிடைக்கும்.

குறிப்புரை :

``மயங்குகின்றாரும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு `தெளிந்தாரும்` என்பது பாடமன்று. மூழை - அகப்பை. மூழை முகப் பதாவது உணவை முகக்கின்ற அகப்பை அதனை முகந்தொழிதல் அல்லது உண்ணுதல் இன்றி வாளா புறத்தே ஊற்றிவிடுதல் போல இருவினைகளின் பயனாகிய இன்பத்துன்பங்களை விருப்பு வெறுப் பின்றி உடலூழாக்கிக் கழியவிடுதல். இந்நிலை திருவருள் நெறியில் நிற்பார்க்கல்லது கூடாமையானும், திருவருள் நெறி சைவ சமயத்தில் அல்லது இல்லாமையானும் `புறச் சமயத்தவர் சைவ சமயிகள்பால் பகை பாராட்டாது நட்புக்கொண்டு பழகுவாராயின், பேரின்பமாகிய நலத்தைப் பெறுவர்` என்றார்.
``நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு`` 1
எனவும்,
``கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்`` 2
எனவும் கூறப்படுதல் அறியத்தக்கது. ``காட்டில்`` என்பது `தோன்றில்` எனத் தன் தன்வினையாய் நின்றது. ``கெட்டு`` என்பதனை, `கெட` எனத் திரிக்க. ``அவர்க்கு`` என்பதனை, ``பெறுவரேல்`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. ``ஈறது... ... ஆமே`` என்பதற்குப் பிறவாறும் உரைப்ப.
இதனால், புறச் சமயத்தவரும் சைவ சமயிகளை அடையின் பயன் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

சேயர்க்குச் சேயனாயும், அணியர்க்கு அணிய னாயும் நின்று, ஒன்றிலும் தொடக்குண்ணாதிருக்கின்ற அவனதுபெயர் `நந்தி` என்பதாகும். அவன்தன்னை அலைவின்றி ஒரு பெற்றியே நோக்கி நிற்பார்க்குத் தெளிவைத் தருபவனாயும், அங்ஙனம் நோக்கா தார்க்கு மயக்கத்தைத் தருபவனாயும் இருக்கின்றான். அவனது மாயத்தால் மயங்கிய மக்களாகிய புறச்சமயிகள் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் உடம்பு தரும் பயனை அறியும் அறிவிலராய் அப்பயனை இழப்பர்.

குறிப்புரை :

`சேயன் அணியன் ஆகிய பிணியிலனது பேர் நந்தி` என்க. பிணி - பிணிப்பு; முதனிலைத் தொழிற்பெயர். சேயன் முதலிய மூன்றும் எதிர்மறை வினைக்குறிப்புப் பெயர். பின்னர், ``மாயன்`` என்றலின், ``தூயன்`` என்பது அதன் மறுதலையை உணர்த்திற்று. மாயன் - மாயத்தை - மயக்கத்தை - செய்பவன். `துளக்கற நோக்கு வார்க்குத் தூயன்` எனவே. மாயனாதல், அங்ஙனம் நோக்காதார்க் காயிற்று. ஐந்தொழிலில் அருளலையே `தெளிவித்தல்` எனவும், மறைத்தலையே `மயக்குதல்` எனவும் கூறினார். இவை இரண்டும் அவரவரது பக்குவம் பற்றியாம். அதனால், பக்குவம் இல்லாதார் புறச் சமயங்களையே `மெய்ச்சமயம்` என மயங்கி, மக்கட் பிறப்பின் பயனை எய்தா தொழிவர் என்பதாம்.
``பரசம யங்கட் கெல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே`` 1
என்ற சிவஞான சித்தியையும் நோக்குக.
இதனால், புறச் சமயங்களின் நீங்குதல் பக்குவம் இல்லா தார்க்குக் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

பொழிப்புரை :

`பிறப்பு, வீடு` என்னும் இருவழிகட்கும் வித்தாய் உள்ளது, நிலவுலகில் வாழ்தலாகிய ஒரே வழியாம். அதனால், இவ்வுலகில் வாழ்பவர் யாவராலும் அடையப்படுவது, பிறவிச் சூழலின் நிலையை அறிந்து, அதனை அகற்ற வல்ல ஆசிரியனது உப தேசமாகிய வழியே. ஆயினும், அத்தகைய ஆசிரியன் உளனாதலைக் கண்டு வைத்தும், தாம் கெடும் நெறியை அறிந்து அந்நெறியிலே செல்வோர் அவ்வாசிரியன் அறிவுறுத்தும் நெறியைப் பெற விரும்புதல் இலர்.

குறிப்புரை :

``உறுதல்`` என்றது, அதன் செயப்படுபொருள் மேல் நின்ற ஆகுபெயர். ``சுழி`` என்பதற்கு, `தலைப்பொறி` என உரைப்பினும் ஆம். `சொல்லாகிய வழி` என்க. `முன்னின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அந்நெறி` எனச் சுட்டு வருவித்து உரைக்க.
இதனால், புறச் சமயிகள் நல்லாசிரியரை யடுத்து நன் னெறியை உணர அறியாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப் படும்நந்தி
பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

பொழிப்புரை :

பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன் பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறிய வாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.

குறிப்புரை :

நாதம் - தலைமை. பிரான், அண்மை விளி பயனிலைப் பெயராகக் கொண்டுரைப்பின். அது முன்னரே கூறப்பட்டதாதல் அறிக. ``நந்தியை`` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. ``அந்நெறி`` என்பதே, `அம் நெறி` எனப் பிரித்துப் பொருள் கூறுக. அம் - அழகு; நன்று. `அந்நெறி` எனச் சுட்டாகவே கொள்ளின், `தானே பிரானாம் நெறி` என உரைக்க.
இதனால், `சிவ நெறி யல்லாதன பலவும் அறியாதார் கொள்ளும் மயக்க நெறியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
உரநெறி யாகி உளம்புகுந் தானை
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

பொழிப்புரை :

`உலகியலின் மேம்பட்ட வீட்டு நெறியாது` என்று ஆராய்கின்ற அன்பர்களது உள்ளம், சிவ நெறித் தந்தையும், முதற் கடவுளும், ஞான நெறியாய் ஞானிகளது உள்ளத்து விளங்கு பவனும் ஆகிய சிவனை அறியா தொழியுமாயின், அவ்வுள்ளங்கள் பலவகையாலும் வீட்டு நெறிக்கு மிகச் சேய்மைப்பட்டனவே யாகும்.

குறிப்புரை :

``யதா சர்மவ தாகாசம் வேஷ்ட இஷ்யந்தி மானவா;I
ததாசிவ மவிக்ஞாய துக்க ஸ்யாந்தோ பவிஷ்யதி II``
என்னும் உபநிடத வாக்கியத்தையும்,
``பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும்
விரவிய துயர்க்கீ றெய்திவீடுபே றடைது மென்றல்
உருவமில் விசும்பின்தோலை உரித்துடுப்பதற் கொப்பென்றே
பெருமறைபேசிற்றென் னின்பின்னுமோர்சான்று முண்டோ`` 1
எனவும்,
``மானிடன் விசும்பைத்தோல்போல் சுருட்டுதல் வல்லனாயின்
ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடு மெய்தும்
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமேயறிதல் வேண்டும்`` 2
எனவும் இதனை மொழிபெயர்த்துக் கூறியவற்றையும் இங்குக் காண்க. உரம் - அறிவு. ``உரனென்னும் தோட்டி`` 3 என்பதும் காணத்தக்கது. ``பரன்`` என்பதை அவ்விடத்துத் தொகுக்கப்பட்ட இரண்ட னுருபை விரித்து, ``புகுந்தானை`` என்பதன்பின் கூட்டி உரைக்க.
இதனால், புறச்சமயங்கள் வீட்டுநெறி ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொழிப்புரை :

மாணவனே, உயிர்களது வினையின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அவைகளைப் படைப்புத் தொழிலிற் படுத்துகின்ற பிரமன், உயர்குணமாகிய `சத்துவ குணத்தை உடையன்` எனக் கூறப்படுகின்ற மாயோன். பகலவன், மக்களோடு படுத்து நோக்குங்கால் உயர்ந் தோராக எண்ணப்படுகின்ற இந்திரன் முதலிய தேவர்கள் இவர்களது பதவியில் விளங்க விருப்பும் உனது விருப்பம் அறும்படி நீதூய மாணிக்கம் போலும் நிறத்தை உடைய சிவனைநினை; ஏனெனில் அவன் அருளிச்செய்த சிவநெறி ஒன்றே அடைதற்கு அரிய நல்ல நெறியாகும்.

குறிப்புரை :

பெரிது, `பெரிசு` என மருவிற்று. அப்பண்புகொள் பெயர். `பெரும்பொருள்` என நின்று, உயர்வை யுடையாரைக் குறித்தது. அன்றி ஆகுபெயராய் நின்ற பண்புப் பெயர்` என்றலுமாம். `பெரிசாக` என ஆக்கம், வருவிக்க. ``திகழும்`` என்பது திகழ விரும்பும் காரணத்தின்மேல் நின்றது. `வண்ணனை, என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. அருமை, நிலையுடையதாதல் பற்றிக் கூறப்படுவது.
இதனால், புறச்சமயங்கள் பிற தேவர்களது பதவிகளை நிலை யுடையனவாகக் கருதும் குற்றத்தைப் பயப்பனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆன சமயம் அது இதுநன் றெனும்
மான மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே.

பொழிப்புரை :

`அதுவே பொருத்தமான சமயம், இதுவே நன்றான சமயம்` என ஓரோர் காரணம் பற்றிப் பற்றுக் கொண்டு பிதற்றுகின்ற மக்களது பிதற்றலால் உண்டாகின்ற மயக்கம் உம்மை விட்டு நீங்க, நீவிர் நாதம் கடந்த கடவுளாகிய சிவனை நினையுங்கள்; ஏனெனில், அந்த நினைவே குற்றமற்ற வகைமையைத் தருவதாம்.

குறிப்புரை :

மானம் - அபிமானம். `மாயம்` என்பது பாடமன்று. ``மனிதர் மயக்கம்`` என்னும் ஆறாவதன் தொகை `வாளது வெட்டு` என்பதுபோல நின்றது. ``மயக்கமது`` என்னும் அது, பகுதிப்பொருள் விகுதி. `ஒழிய` என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது. அன்றி வினைத்தொகை யாக்கி, `ஒழிக்கின்ற கடவுளை` எனலுமாம். ``கானம்`` என்னும் இசையின் பெயர் சொல்லொற்றுமையால் நாத தத்துவத்தைக் குறித்தது. ``உரு`` என்பது `வண்ணம்` என்னும் பொருட் டன்மையை உணர்த்திற்று. உருவைத் தருவதனை ``உரு`` என்றார்.
இதனால், புறச்சமயிகள் தம்மில் ஒற்றுமையிலாராய் மாறுபட்டுப் பலதலைப்பட்ட கருத்துக்களைக் கூறிமக்களை அலைக்கழிப்பவராதல் கூறப்பட்டது.
``தம்மை - உணரார்; உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்`` 1
என்றார் சிவஞான போதத்திலும்.

பண் :

பாடல் எண் : 17

அந்நெறி நாடி அமரர் முனிவரும்
சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

தேவர்களும், முனிவர்களும் `சிறப்புடைய நெறி யாது` என ஆராய்ந்து உணர்ந்து சென்ற நெறியையே நேரிய நெறியாகக் கொண்டு ஒழுகி, அதனால், சிவனேயாய் நின்ற பேற்றினைப் பெற்றார் சத்திநிபாதர். மற்றுச் சத்திநிபாதம் இல்லாதவர் தம் மனம் சென்ற நெறியையே நேரிய நெறியாக்கொண்டு முற்கூறிய நேரிய நெறியிற் செல்லமாட்டாது, பிறவிக் கடலுட் கிடந்து கலங்கு கின்றது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

`இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். அம்நெறி - அழகியநெறி. ``முதல்வன் அருள்`` என்றது சத்திநிபாதத்தை, பின்னதில். ``அருளிலார்`` என்பதனால், முன்னதில் ``அஃது உடையார்`` என்பது பெறப்பட்டது. முன்நெறி வினைத்தொகை.
இதனால், புறச்சமயங்கள் சத்திநிபாதம் வாயாத உலகர்க்கே உரியனவாய்ப் பிறவிக் கடலைக் கடப்பியாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

பொழிப்புரை :

அடையத்தக்க நல்ல நெறியை அறிய எழுகின்ற அறிவைச் சாருமாற்றை அறிந்துவிடுமாயின், பிழை யாதும் இல்லையாகும். ஆனால், அறிவில்லாத மக்கள், குற்றங்கள் யாவும் எரிந் தொழிதற்கு ஏதுவாம் நெருப்பாகிய அந்த அறிவினுள் புகுந்து தம் அல்லலை ஒழியுமாற்றை அறிகின்றார்களில்லை.

குறிப்புரை :

`அதனால், அவர்கள் புறநெறிகளிற் சென்று அல்லல் உறுகின்றார்கள்` என்பது குறிப்பெச்சம். ``அறிவது`` என்றது அறிவை. உம்மை சிறப்பு. அறுதற்கும், இறுதற்கும் வினை முதல்கள் வருவிக்கப்பட்டன.
இதனால், புறச் சமயங்கள் மயக்க அறிவினை யுடையார்க்கு ஆவன ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

பொழிப்புரை :

பிறவிச்சுழலிலே கிடந்து எய்துகின்ற துன்பங்களை யெல்லாம் போக்கி, அதனால், அறிவுடையவர் பழிக்கும் பழியையும் போக்கிக்கொள்ள விரும்புவார்க்கு நிலத்திலே பயணம் செய்தல் போன்ற நல்லவழி ஒன்று உண்டு. அதைப் போற்றி அடைதல் அத்துன்பங்கள் நீங்கும் காலம் வரப்பெறாதோ ரெல்லாம் சுழிவழியே பயணம் செய்வோர் போலப் புறச் சமயிகள் கூறும் கற்பனை உரைகளை `மெய்` என்று கேட்டு அவற்றின்படியே நடப்பர்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதலடியில், ``வையம்`` என்பதனை முன் வைத்து, ``பரவலும் ஆம்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``வையத்தின்கண் வழி நடக்கும்`` என்க. தரை வழியாகப் பயணம் செய்வோர் துன்பம் இன்றிக்குறித்த இடத்தை அடைதலும், சுழிவழியாகப் பயணம் செய்வோர் ஓரிடத்தும் தரையை அடையாவிடின் சுழன்று கொண்டே இருப்பவராதலும் அறிக. காலம், சத்தி நிபாதம் காலம், ``ஒன்று உண்டு`` எனக்கூறியொழிந்தமையால், `அஃது அருமறையாய், (அரிய இரகசியமாய்) தக்கார்க்கே உணர்த்தப் படுவது` என்னும் குறிப்பினதாயிற்று. அவ் ஒன்றாவது, சித்தாந்த சைவமாம்.
இதனால், புறச் சமயங்கள் வெறும் சுழற்சியாய்ப் பயன் தாராது உலகரை மயக்கி நிற்பனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.

பொழிப்புரை :

``வையத்தின் கண் வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு`` என மேற்கூறப்பட்ட வழியிலே சென்றதாகிய பெரிய தவம் தனது பயனைக் கொடுக்கின்ற காலத்தில் மக்கள் தங்கட்குப் பழிவரக் கூடியதான வலிய வினைக்கட்டினை அறுத்தொழித்து, அது காரணமாக, முன்பெல்லாம் அழிவு வழியில் சென்று கொண்டிருந்த அச்செயலில் பொருந்துதலாகிய தன்மையை விடுத்து நல்ல இடத்தை அடைவர். அங்ஙனம் அடைந்தால், தேவர் பிரானாகிய சிவன் வெளிநின்று அருள் புரிவான்.

குறிப்புரை :

`வைக்கின்ற` என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. `வாய்க்கின்ற` எனப்பாடம் ஓதலுமாம். பழி, அறிவுடையோர் பழித்துச் சொல்லும் சொல். ``அழி`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அதனைத்தரும் வழியை உணர்த்திற்று. `அழிவில் செல்லும் அவ்வினை` என்க. ஆர்தல் - பொருந்துதல். ``உழி`` என வாளா கூறினமையின், சிறந்த இடமாயிற்று. அது, ஞானமாகிய நிலம் என்க. ``செல்லில் என்ற அனுவாதத்தால், `செல்லுவர்` என்பதும் பெறப்பட்டது.
இதனால், தவம் உடையார்க்கே புறச்சமய மயக்கம் நீங்கிப் பயன் உண்டாதல் கூறப்பட்டது. தவமாவது, மேற் கூறிய சரியை முதலிய மூன்றுமே யாதலை நினைக. இங்கு, ``மாதவம்`` என்றதும் அதனைக் குறித்தற் பொருட்டேயாம்.

பண் :

பாடல் எண் : 1

சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

மலைபோன்றவர்களாக மதிக்கப்படுகின்ற தேவர் பலருக்குரிய புறச்சமயங்களைத் தமக்கு உரியனவாகக் கொண்டோர் அவற்றின் நூல்களை ஓதி, `அதனால், நிறை நிலையை அறிந்து விட்டோம்` என்று பெருமை பேசிக்கொள்வார்கள். ஆயினும், முதற் கடவுளாகிய சிவபெருமான் அவர்களது உள்ளத்தில் தோன்றாது மறைந்து, பொறையுடைமை, வெகுளாமை முதலிய ஒழுக்கங்களை உடையவரது உள்ளத்திலே விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

சிமயம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. `மலைபோல்வாராக மதிக்கப்படுதல் அறிவு நிரம்பாதாரால்` என்க. `இமையங்கள்` என்பது பாடமன்று. ``சிமையம், சமையம்`` என்ப வற்றில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. அமை, முதனிலைத் தொழிற் பெயர். அமைதல் - நிரம்புதல். கமை - பொறை. இது மற்றைய ஒழுக்கங்கட்கு உபலக்கணம். `புறச்சமய நூல்களையே உண்மை நூல்கள் என மயங்கினாராயினும், அவை பற்றிப் பிற சமயங்களைப் பழித்து நிற்றலை விடுத்து, அவை கூறும் ஒழுக்கத்தை உடைய ராயினார்க்குச் சிவன் அருள்புரிவன்` என்றவாறு. இதனானே சிவ நூலை ஓதினார்க்கும் இது குறிப்பாற் கூறப்பட்டவாறு அறிக.
இதனால், நூல்களை ஓதியவழியும் ஒழுக்கம் இல்வழிப் பயன் இன்றாதல் கூறப்பட்டது. இதனை,
``ஓதலின் நன்றே வேதியர்க் கொழுக்கம்`` 1
``மறப்பினும் ஓத்துக்கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` 2
என உயர்குலத்தார்மேல் வைத்தும்,
``ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை`` 3
`ஓதியுண்ர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்`
எனப் பொதுப்பட வைத்தும் பிறவிடங்களிலும் கூறுமாறு அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 2

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே.

பொழிப்புரை :

நன்மை அமைந்த சிவபெருமானது திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கின்ற மனத்தை உடையவர் இப்பூமியில் தமக்குத் தாமே ஒப்பாகும் பெருமையை உடையவராவார். அவ்வாறின்றி அவற்றை எஞ்ஞான்றும் நீங்கி நின்ற வண்ணமாய் ஒருபோதும் நினையாதவர் உலகில் விரும்பியது ஒன்றனையும் பெறாது வாளா இருந்து துன்புறுவார்கள்.

குறிப்புரை :

`தமக்கு நேர் தாமேயாவர்` என்பதனை, ``நேர் ஒப்பர்`` என்றார். இது, செல்வம் முதலிய எல்லாவற்றாலுமாம். ஏங்குதல் - விருப்பம் நிறைவுறாமையால் அதனையே நினைத்துக் குறையுறுதல். இதனை `ஏக்கறுதல்` எனவும் கூறுவர். `இரந்தழுவார்` எனப்பாடம் ஓதி, ``இரத்தலை மேற்கொண்டு அதனானும் நிரம்பப் பெறாது துன்புறுவர்`` என்று உரைப்பினுமாம்.
``வானகம் ஆண்டுமந் தாகினி ஆடினந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும், சிதவல் சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப் போரும் - கனகவண்ணப்
பானிற நீற்றற் கடியரும், அல்லாப் படிறருமே`` 1
என்றாற்போல்வனவற்றையும் இங்கு நினைக.
இதனால், சிவனடியை நினைதல் நினையாமைகளே ஒழுக்கமும், இழுக்கமுமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

வாழும் வழி யாதும் அறியாது திகைத்திருந்து அழுகின்றவர்களும், முன்னர் வாழ்வுடையராய் இருந்து பின்னர்க் கேடு எய்தினவர்களும் (தாம் முழுத் தீவினையும், அரைத் தீவினையும் உடையராய் இருத்தலை அறிந்து அவை ஒழிதற்பொருட்டு) அந்நிலை யில் அரிய தவம் செய்தலை மேற்கொண்டு சிவபிரானை நினைவரா யின், தேவ தேவனாகிய அவன் அவர்களது தாழ்நிலையை நீக்கி, உயர் நிலையைத் தருவன் - அதுவே யன்றி அவர்கட்குப் பிறப்பற்ற வீடுபேறும் உண்டாகும்.

குறிப்புரை :

`சிவபிரானை நினைத்தலே மேலான தவமாம் என்றற்கு, ``அருந்தவம் மேற்கொண்டு`` என்றார்.
இதனால், சிவ பத்தியாகிய தவ ஒழுக்கம் உடையோர் தீவினையின் நீங்கி நலம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
நீரறி வாளர் நெடுமுகி லாமே.

பொழிப்புரை :

தூர்ந்த அறிவினை உடையோர் தோன்றாத் துணை யாயுள்ள இறைவனை நினைக்கமாட்டாது யாதொரு பயனையும் எய்தார். தூல அறிவினை உடையோர் வருவதை அனுபவித்துக் கொண்டிருப்பர். மயக்க அறிவினை உடையோர் உள்ளதை `இல்லை` என்று சொல்லி மறைத்து, அதனால், பின் வறியராய்ப் பிறப்பர். அறத்தின் தன்மையை அறிந்த அறிவினை உடையோர் பெரிய மேகம் போலப் பலர்க்கும் கைம்மாறு கருதாது உதவி, அதனால், பின் செல்வராய்ப் பிறப்பர்.

குறிப்புரை :

தூரறிவு, படுபயன் என்பன வினைத்தொகை. பாரறிவு, காரறிவு என்பன பண்புத்தொகை. தூர்ந்த அறிவாவது அறிவின்மை; பேதைமை. `துணைவனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தல் பெற்றது. ``நினைப்பிலர்`` என்றது தன் காரியமும் உடன் தோன்ற நின்றது. `நாகரது பலி` என்பது போலும் ஆறாவதன் தொகை எனினுமாம். `காரறிவு, மயக்க அறிவு` என்பதனை, ``களவென்னும் காரறிவாண்மை``1 என்பது பற்றியும் உணர்க. நீர் - நீர்மை. நீர்மையை அறியும் அறிவினை ஆளுதல் உடையார்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆவரே` என்னாது `ஆமே` என்றது ஆரிட அமைதி. ``கரந்து`` என்றதனால், `வறியவராய்ப் பிறப்பர்` என்பது பெறப் பட்டது. படவே, முகில்போல்வார் செல்வராய்ப் பிறத்தல் கூறப்பட்டதாம்.
இதனால், அவரவர் அறிவு நிலைக்கு ஏற்பவே அவரவரது ஒழுக்கம் உண்டாமாறு கூறுமுகத்தால், மெய்யறிவினை யுடையோர் சிவ பத்தி யுடையராய் ஒழுகல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

பொழிப்புரை :

சிவனது திருவடியாகிய, ஞானத்தொடு பொருந்தி வருவித்துஏறிய ஒப்பற்ற ஓர் தோணி, வினையாகிய சரக்கினை அது நின்ற உடலாகிய மூடையோடு சிவலோகமாகிய பழைய நகரத்தை அடைந்து, இறக்கிவிடுகின்ற அறிகுறிகளை அறிந்தும், தீவினை யுடையோர் அத்திருவடிகளைப் பொருந்தி நிற்க எண்ணுவதில்லை.

குறிப்புரை :

``அறிவுடன் கூடி அழைத்தது`` என்றது `நல்ல தோணியை அறிந்து அழைத்து அதில் ஏறுதல் அறிவுடையோர்கன்றி ஆகாமைபோலச் சிவனடியை வேண்டிப்பெறுதல் ஞானிகட்கு அல்லது ஆகாது` எனக் கூறியதாம். பறி - கூடை, அது சரக்குப் பொதிந்த மூடையைக் குறித்தது. தோணி, பறி, பழம்பதி என்பன சிறப் புருவகங்கள். அறிகுறிகள், அவ் அடியைப்பற்றினோர் மாட்டுக் காணப்படும் ஏமாப்பு, நமனையும் அஞ்சாத அச்சமின்மை 1 முதலியன.
இதனால், அறிவேயன்றி, ஒழுக்கமும் நல்வினையுடையார்க் கன்றி வாயாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

பொழிப்புரை :

அழிவிலனாகிய இறைவன் தன்னை நினைப்ப வரது நினைவே வடிவாய் விளங்குபவன் என்று வேதாகமங்கள் சொல்லவும் அதனை அறியாது இவ்வுலகத்தில் உள்ள அறிவிலிகள் அவனை நினையாது இகழ்ந்தொழிவார்கள். நீவிர் அங்ஙனம் செய்யாது மனம் பொருந்தி அவனை வணங்குங்கள். வணங்கினால், அப்பொழுதே ஒப்பற்ற ஒருவனாகிய அவனை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``என்னில்`` என்பது, அதனை உணர்ந்து நினைதலே அவனைத் தலைப்படுதற்குக் காரணமாதலைக் குறித்தது. `மனிதர்` என்னும் விதப்பு, `மனிதத்தன்மை இலர்` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினது.
இதனால், அறிவிலும் ஒழுக்கமே சிறந்த சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.

பொழிப்புரை :

பிரணவத்தின் உள்ளே விளங்குவதாகிய ஒளியை அறிவினுள்ளே வெளிப்படுதலால் உண்டாகின்ற அனுபவத்தை அடையப் பெறார்; இறப்பு என்றாயினும் ஒருநாள் உளதாதலை நினையார்; அதனை நினைந்து, மேலும் பிறந்து இறத்தலை ஒழியும் நெறியைப் பற்றார்; வாளா சமயத்தை மட்டும் பற்றிக்கொண்டு அதன் பயனைப் பெறாதொழிகின்றார்கள் மக்கள்.

குறிப்புரை :

சமயத்தில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை எதிர்மறை முகத்தான் உணர்த்தி, அவற்றையுடை யோரே சமயத்தின் பயனைப் பெறுவர் எனக் கூறியவாறு. `உறுதலான்` என்பதன் திரிபாகிய ``உற்று`` என்பது ``கைகூடார்`` என்பதன் முதனிலையோடு முடிந்தது.
இதனால், சமய ஒழுக்கம் இல்லாத சமயிகள் சமயத்தின் பயனை எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்க ளாறுந்தன் தாளிணை நாட
அமையங் கழல்கின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

தேவர்களையும், மக்களாகிய எம்மையும் உய்தி பெறுதற்குப் பொருந்தும் வகையினராகப் படைத்த அனாதியான பழையோன், அகச் சமயங்கள் ஆறும் தன் திருவடியையே நாடி நிற்கும்படி அமைய, அவற்றைக் கடந்து நிற்கும் முதல்வனாகின்றான்.

குறிப்புரை :

எழுவகைப் பிறப்பினுள் தெய்வப் பிறப்பும், மக்கட் பிறப்பும் ஒழிந்தவை பெரும்பாலும் வீடு பெறுதற்கு வாயிலாதல் இல்லையாக, இவ்விரு பிறப்புக்களுமே அதற்கு வாயிலாதல் வெளிப் படை. `அவை அங்ஙனமாதலும் இறைவனது திருக்குறிப்பின் வழியது` என்பதும், `அவ் இருவகைப் பிறப்பின் உயிர்களும் உய்தி பெறுதல் அகச் சமயங்களின் வழியே` என்பதும், `அங்ஙனமாயினும் இறைவனது உண்மை நிலை சமயங்களைக் கடந்தது` என்பதும் கூறிய வாறு. ``சமையம்`` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. `தன் தாளினை நாட அமைந்தன` என்பதனால், ``சமயங்கள்`` எனப் பட்டன உட்சமயங்களே ஆயின. `அமையக் கழல்கின்ற` என்னும் ககர ஒற்று மெலிந்து நின்றது. இவ்வாறன்றி, `அச்சமயங்களது (செவ் வழிகளை) நிலைகளைக் கடந்து நிற்கின்ற எனலுமாம்.
இதனால், வீடுபெறும் உயிர்கட்கு அதற்குரிய வழிகளாய் நிற்பன அகச் சமயங்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒன்றதே பேரூர் வழிஆ றதற்குள
என்றது போலும் இருமுச் சமயமும்
நின்றிது தீதிது என்றுரை ஆதர்கள்
குன்று குரைத்தெழு நாயைஒத் தார்களே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``உள`` என்பதனை, ``இருமுச் சமயமும்`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியாற்போந்த பொருள், `கலாய்ப்பவர்` என்பது. ஆதர்கள் - அறிவில்லாதவர்கள். `மலையைப் பார்த்து நாய் குரைத்தல் போல` என்பது பழமொழி. ``ஒத்தார்கள்`` என்றது, அகச் சமயத்தவருள் ஒரு சமயத்துள் நின்றுபிற சமயங்களை இகழ்பவரை. `அங்ஙனம் இகழ்தல் அவையும் பிறவாற்றால் உண்மையை உணர் தற்கு வழியாதலை அறியாமையாலாம்` என்பது கருத்து. இறுதியிற் போந்த உவமை, அகச் சமயிகளிடைப் பூசல் விளைப்பார்க்கே ஆதல், வெளிப்படை. இதன் முதல் அடியோடு ஒப்ப,
``சுத்தவடி வியல்பாக உடைய சோதி
சொல்லியஆ கமங்களெலாம் சூழப் போயும்
ஒருபதிக்குப் பலநெறிகள் உளவா னாற்போல்``1
எனச் சிவஞானசித்தியும் கூறுதல் காண்க. `ஒரு பதிபோல்வது` கருத்து என்பதும், `பல நெறிகள் போல்வன சொற்கள் என்பதும் சித்தியுள் தோன்றுதல் காண்க.
இதனால், அகச் சமயங்கள் சொல் வகையாலும், செயல்வகை யாலும் வேறுபடினும், கருத்து வகையால் ஒன்றாதலைக் கூறி, அஃது அறியாது அவற்றிடை நிற்போர் தம்மிடைக் கலாய்த்தலும், சைவரை இகழ்தலும் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.

பொழிப்புரை :

அகச் சமயங்கள் அறிந்தோ, அறியாமலோ கருத்து வகையால் சைவத்தோடு ஒன்றி நிற்றலை அவருள் அறியாதாரை நோக்கி அதனையே இதுமுதலாக அறிவுறுத்துகின்றார். இதனை, சைவ சமயச் சிறப்பு என்பதொரு தனி அதிகாரமாகக் கொள்ளினும் பொருந்தும்,
சைவ சமயத்தால் கொள்ளப்படும் ஒப்பற்ற தலைவனும், மக்கள் உயிர் நெடிது வாழ்ந்து உய்தி பெறுதற் பொருட்டு உயிர்ப்பாய் இயங்கு கின்றவனும், சிறந்த ஞான வடிவானவனும், தன்னை உணரும் பெருமை யுடையவரிடத்துத் தானும் அன்பு செய்கின்றவனும், அனைத்துயிர்க்கும் முடிவில் அவை விரும்பும் பேரின்பத்தைத் தருபவனும், இவ்வியல்புகளால் உண்மைத் தலைவன் தானே ஆகின்றவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் நீங்கி நிற்றலை விடுத்து, அணுக வந்து அடைந்து பிழையுங்கள்.

குறிப்புரை :

`சைவ சமயமே தலையாய சமயம்` என்பது, மேல் பல விடத்தும், பலவகையானும் விளக்கப்பட்டமையின், அச்சமயத்தாற் கடவுளாகக் கொள்ளப்படுதலும் பெருமையாயிற்று. இறைவன் உயிர்ப்பாய் இயங்குதல் மேலேயும் (1512) கூறப்பட்டது. எய் - எய்தல்; அறிதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எய்ய`` என்பது இதனடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு. ``வையம்`` என்றது உயிர்களை, ``வந்தடைந்து உய்மின்கள்`` என்றது, அவர்மாட்டு எழுந்த கருணைபற்றி.
இதனால், சைவக் கடவுளாகிய சிவபிரானது பெருமையை வகுத்துணர்த்தி, அவனைச் சார, அழைத்தல் செய்யப்பட்டது, அகச்சமயிகளாதலின் அவர்தாம் உணர்த்தியவாறே உணர்ந்து ஒழுகுவார்கள் ஆதலின், இனி வருவனவும் இவைபற்றி என்க.

பண் :

பாடல் எண் : 4

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியில்
பவனவன் வைத்த பழவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே.

பொழிப்புரை :

தெய்வந் தெளிந்து அதன் இயல்பை ஆராயும் எல்லாச் சமயங்களையும் உலகில் ஆக்கி வைத்தவன் சிவபெருமானே எனினும் அவற்றுள் முற்பட்டதாகிய சமயம் சைவமே. அதனை அடைந்தோர் `இச்சமயக் கடவுளாகிய சிவனே ஏனைச் சமயங் களினும் நின்று பயன் தருகின்றான்` என்பதை உணர்வர். அங்ஙனம் உணர்ந்தவர்க்கு அவன் அச்சமயங்களில் ஏற்ற பெற்றியால் நின்று அருள்புரிதலும் விளங்கும்.

குறிப்புரை :

ஓர்தல் - ஆராய்தல் `ஓர் நெறி` என இயையும். `பவன்` என்பது சிவனது நாமங்களில் சிறந்ததொன்று. ``பழவழி`` என்றது, `முன்னர்த் தோன்றியநெறி` என்றவாறு.
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி`` 1 என அப்பரும் அருளிச்செய்தார். மூன்று, நான்காம் அடிகளில் வந்த ``அவன்`` என்பன, பிற சமயக் கடவுளரைத் தனித்தனிச் சுட்டிற்று. ஈற்றடியில் நின்ற ``அவன் அவன்`` என்பது ஒரு சொல் அடுக்கு `அவன் அவனாய் உளது` என ஆக்கம் வருவிக்க. ``உளது`` என்பது அப்பண்பு குறித்துநின்றது. கடன்முறைமை. `உள்ள முறைமை` என்பதனை ``உளதாங் கடன்`` என்றார். இறுதிக்கண் ``ஆம்`` என்றது `விளங்கும்` என்றவாறு.
இதனால், `அகச் சமயத் தோர்களிடமாக நின்று அருள் பவனும் சிவனே` என்பது கூறப்பட்டது.
``யாதொரு சமயங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்`` 2
என்ற சிவஞான சித்தியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதுஅங்
காமாம் வழிஆக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமாறவ் வாதாரப் பூங்கொடி யாளே.

பொழிப்புரை :

பொருந்தும் வழியையே கூறுகின்ற அகச் சமயங்கள் ஆறுக்கும் தலைவனாகிய சிவபெருமானை நேரே சென்று அடைதற்குப் புண்ணியம் தவிர வேறில்லை. சைவத்தில் நிற்பவர்க்கேயன்றி பிறசமயங்களில் நிற்கும் அனைத்துயிர்கட்கும் மேற்செல்லும் வழியாகிய அந்தச் சிவசத்தியாகிய முதல்வியே அவ்வுயிர்கட்கு அச்சமயங்களைப் பொருந்தும் வழியாகக் கூட்டு விப்பாள்.

குறிப்புரை :

``சமயாதி`` நான்காவதன்தொகை `ஆதிக்கு` என்னும் நான்காவதை ஏழாவதாகத் திரித்துக்கொள்க `ஆம் ஆம்` என்னும் அடுக்கு, `அவ்வவற்றிகுப் பொருந்துகின்ற, என்னும் பொருட்டு. வழி ஆக்கும் - வழியாகக் கூட்டுவிக்கும். ``ஆமாம் வழி ஆக்கும்`` என்பதனை இறுதியிற் கூட்டி உரைக்க. `போமாறாகிய கொடி` என்க. ஆதாரம் - அனைத்திற்கும்` நிலைக்களம். அங்ஙனம் ஆவது சிவ சத்தியே யாதல் அறிக.
இதனால், `அகச் சமயங்களும் சிவசத்தியின் செயலால் அமைந்தனவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரனெறி யாவ தறிந்தேனும் நானும்
சிவநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி உள்ளக் கடல்கடந் தேறும்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே.

பொழிப்புரை :

அகமாகிய சிவநெறிகளைத் தேடித் திரிந்த அக்காலத்திலும் ஞான நெறியால், அளவற்ற எண்ணமாகிய கடலைக் கடந்து ஏறுதற்குரிய உயர்ந்த நெறியாய் உள்ள ஒப்பற்ற ஒளி நெறி யாவது சிவனது நெறியே யாதலை அறிந்தவனு மாயினேன் நானும்.

குறிப்புரை :

ஆகவே, `அகநெறியில் (உட்சமயங்களில்) நிற்போர் சிவநெறியை அடைந்து உய்யும் நிலையைப் பெறுவர்` என்றவாறு. உம்மைகள் இரண்டனுள் முன்னது உயர்வு சிறப்பும், ஏனைய இழிவு சிறப்புமாம். ``அறிந்தேனும்`` என்பதன்பின் `ஆயினேன்` என்பது எஞ்சிநின்றது. முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. உரம் - ஞானம். ``உள்ளம்`` என்றது, அதன்கண் தோன்றும் எண்ணத்தை,
``கருதுப - கோடியும் அல்ல பல``1
என்ப ஆகலின், அவற்றைக் கடலாக உருவகித்தார். `அவற்றைக் கடத்தல் ஞானம் துணையாய வழிக் கூடும்` என்பதையும், அத் துணையைத் தருவதே உயரிய நெறி என்பதையும், அதனால், அஃது `ஒளிநெறி` எனப்படுகின்றது என்பதையும் எடுத்தோதி, `அவ் ஒளி நெறி அரன் நெறியே` என்பது உணர்த்தினார். `இதனை அடைதல் உட் சமயிகளுக்கல்லது இயலாது` என்றவாறு. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், உட்சமயங்கள் சிவநெறிக்குத் தடையாகாது துணையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி ஆமே.

பொழிப்புரை :

அறிவுடையோர் ஆராய்ந்து கண்டு பற்றிச் சிவனை அடைந்து உய்ந்த சைவநெறி, முன்னர் ஆராய்தல் இன்றி நீங்கினோர் பலர் பின்னர் ஆராய்ந்து மீண்டு வந்தடைந்த பெருமை யுடையதும், பொருந்தி நின்றோர் மேற்கதியைப் பெற்றதுமாகும். அதனால், அதுவே, யாவரும் புறநோக்கை விட்டுத் திரும்பிப் புகழ்ந்து அடைதற்குரிய நெறியாகும்.

குறிப்புரை :

``சிவன்`` எனப் பின்னர் வருதலின்` முன்னர், ``தன்னை`` என்றார். பெயர்ந்து வந்தவர் அப்பரைப் போல்வார். பொருந்தினோர் மேற்கதியிற் சென்றமை கூறவே, பொருந்தாது இகழ்ந்து நீங்கினோர் தாழ்கதியிற் சென்றமை பெறப்பட்டது.
``வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூர்அரன் பொன்னடி
யுள்ளி ருக்கும் உணர்ச்சி யிலாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே`` 1
என அப்பரும் அருளிச் செய்தார். புகழை, `புனைந்துரை` என்ப ஆகலின், புனைதல் புகழ்தலாயிற்று.
இதனால், அகச் சமயங்கள் மேற்கூறியவற்றால் தாழ்கதியிற் செலுத்தாதனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஈரும் மனத்தை இண்டற வீசும் இய்
யூரும் சகாரத்தை ஓது முன் ஓதியே
வாரும் அரன்நெறி மன்னியே முன்னில் அத்
தூரும் சுடரொளி தோன்றலு மாமே.

பொழிப்புரை :

இருதலைப் படுகின்ற மனத்தை அவ்வாறு இரண்டாதலினின்றும் நீங்க நீங்குங்கள்; நீக்கி, இகரம் ஊர்ந்த சகர எழுத்தை ஓதுங்கள். ஓதி, சிவனது நெறியில் எம்முடன் வாருங்கள்; வந்து அதில் நிலையாக நின்று அவனை நினைத்தால், உம்முள் மறைந்து நிற்கின்ற விளக்கொளி உங்கட்கு வெளிப்படுதல் கூடும்.

குறிப்புரை :

இருதலைப் படுதல் - ஐயமாய் நிற்றல். `இரண்டின் அற` என ஐந்தாவது விரிக்க. வீசுதல் நீக்குதல். `வீசுமின்` என்பது பாடமாகாமை, பின்னர், ``வாரும்`` என வருதலானும் அறியப்படும். இகரம் ஊர்ந்த சகரம், சி. திருவைந்தெழுத்தில் ஏனையவை இதன்கண் அடங்குதல் அறிந்துகொள்க. `முன்னியத்` தென்பதும் பாடமன்று. முன்னுதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
இதனால், சிவநெறி திருவைந்தெழுத்தால் பல்லாற்றானும் பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரானை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தின்
அனைக்குறி காணில் அரன்நெறி ஆமே.

பொழிப்புரை :

பெண்ணாகச் சொல்லப்படுகின்ற சத்தியாகிய நல்ல வடிவினையும், அந்தணர்கள் வேதத்தின்வழி வளர்க்கின்ற அக்கினி யாகிய வடிவினையும், அன்பர்கள் நினையும் நினைவாகிய வடிவினையும் உடைய சிவபெருமானை ஞானத்தின் முடிநிலை யாகிய அந்த வழியாற் காணுதல் உண்டாகுமாயின், அப்பொழுது சிவநெறி கைவந்ததாம்.

குறிப்புரை :

`மின்னாகிய நற்குறி` என்க. பின்னர்க் கூறப்படும் வடிவங்கள் பலவற்றினும் சிறப்புடையது இதுவேயாதல் பற்றி இதனை, ``நற்குறி`` என்றார். `சிவன்` என்னும் பொருட்டாய் நின்ற, ``ஆதிப்பிரான்`` என்பதை, `நினைக் குறியாளனை` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நினை` முதனிலைத் தொழிற்பெயர். `அஃது` என்னும் பொருட்டாகிய `அனைத்து` என்பது ஈறுகுறைந்துநின்றது. `அயக்குறி, நயக்குறி` என்பன பாடமல்ல. ஆதல், இங்கு கைவருதல்.
இதனால், சிவநெறி முதல்வன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பலவகையில் நின்று தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரன்நெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே.

பொழிப்புரை :

உண்மை நூல்களை ஆராய்ந்து உணர மாட்டாதவர் களது, ஏனைய பல திறமைகளும் பொருந்தி உணராதபடி நிற்பது சிவநெறி, அஃது, உண்மை நூல்களில் நுழைந்து அவற்றின் பொருளை உணர்கின்றவர்கள், அவ்வுணர்வின் வழியே சிவனது திருவடியை முதற்கண் அவற்றின் வேறாய் நின்று வழிபட்டுப் பின்னர், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நுகர்கின்ற இன்பமாய் உள்ளது.

குறிப்புரை :

நான்காம் அடியில், உரை என்பது பாடமன்று.
இதனால், சிவநெறி புறச்சமயிகட்கு உணர ஒண்ணாததாய்ச் சிவநெறியாளர்க்கு முன்னர்க் கரணத்தாற் பெறும் இன்பமாயும், பின்னர்க் கரணங் கடந்த இன்பமாயும் விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய
வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

`சைவ சமயத்தின் ஒப்பற்ற தலைவன்` எனப் பலராலும் அறியப்பட்ட சிவன் ஆன்மாக்கள் உய்தற்பொருட்டு அமைத்த ஞானநெறி ஒன்றே உள்ளது. அது, தெய்வத் தன்மை பொருந்திய சிவநெறியே. உலகத்தில் ஞானத்திற்குத் தகுதியுடையராய் உள்ளார் அதனை அடைந்து உய்தற்கு அந்த ஒன்றையே அவன் அமைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

``சைவ சமயத் தனி நாயகன்`` என்பது எழுவாயும், ``நந்தி`` என்பது பயனிலையாயும் நின்று ஒரு பெயர்த் தன்மைப் பட்டது. ``சன்மார்க்கம் சேர்ந்துய்ய`` என்பது முதலாக மறித்தும் கூறியது, நன்கு வலியுறுத்தற்பொருட்டு.
இதனால், உண்மை உய்யும் நெறி சிவநெறியேயல்லது வேறின்மை வலியுறுத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும்
பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி
எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்!
ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.

பொழிப்புரை :

`இத்தவம், அத்தவம்` என்று தவங்கள் பல இருப்பனபோலச் சுட்டிப் பேசும் பித்தர்களைக் காணும்போதெல்லாம் எங்கள் பெரும்பெருமானாகிய சிவன் நகைப்பான். ஏனெனில், எந்தச் செயலாய் இருந்தால் என்ன? எந்தச் சமயத்தில் பிறந்தால் என்ன? தவத்தையும், அதனால் அடையப்படும் இறைவனையும் சிவநெறி யாளரோடு ஒத்த உணர்வினராய் உணர்பவர்கட்கு விரைவில் வீடு பெறுதல் கூடுவதாகும்.

குறிப்புரை :

``எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்`` 1
என்னும் முடிபுரையையும், அதற்கு இலக்கியமான சாக்கிய நாயனாரது வரலாற்றையும் உணர்க. `பெருநந்தி` என்பது செய்யுள் முடிபெய்தி நின்றது.
தவம், தவச் செயல். ``எங்கு`` எனச் சமயத்தை இடமாக வைத்து ஓதினார். இனி ``எந்நாட்டில்`` எனப் பொருள்கொண்டு, `நாடு களது வேறுபாட்டால் இங்குப் பெறப்படுவது சமயவேறுபாடு` என்றலு மாம். ஒத்தற்கும், உணர்தற்கும் செயப்படுபொருள்கள் வருவிக்கப் பட்டன. வீடு பெறுதலை, ``ஊர் புகல்`` என்றது ஒப்புமை வழக்கு.
இதனால், பிறப்பின் சார்பால் அதன் சமயத் தொடக்கி னின்றும் நீங்கமாட்டாதோரும் சிவநெறிப் பற்றுடையராயின் உய்தி பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க்
காமே பிரானுக் கதோமுகம் ஆறுள
தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்குத் தனது நிலைக்கு உரியன வான ஐந்து முகங்களோடு, கீழ்நிலையில் உள்ள உயிர்களுக்கு உரிய அதோமுகமும் உண்டு. இவ்வாறாக உள்ள ஆறுமுகங் கட்கும், அவன் அணிந்திருக்கின்ற தலைமாலைக்கும் உயிர்கள் அச்சத்தைப் பொருந்துகின்ற அப்பெருமானுக்கு அருள் இயல்பாய் உள்ளது.

குறிப்புரை :

`பிரான் முகம ஐந்தொடு ஆருயிர்க்கு ஆம் அதோ முகம் பிரானுக்கு ஆம்` எனக் கூட்டி உரைக்க. `ஆறாய் உள்ள தாம்` என ஆக்கம் வருவிக்க. ``அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்`` அன்றி நான் காவதும் வரும் பிற்கால வழக்குப்பற்றி, ``பிரானுக்கும் மாலைக்கும்`` என்றார். நாம் - அச்சம். நார் - அருள். முன் இரண்டடிகள் சிவனது முழுமுதல் தன்மையையும், பின் இரண்டடிகள் அவனது வடிவை அஞ்சத்தக்கதாக எண்ணி மருள்வாரைத் தேற்றுதலையும் குறித்தன. யாவரும் அறியும் ஐம்முகம் அவன் தனது உலகத்தில் நின்று தானே ஐந்தொழில் செய்வதற்கும், ஞானியரே உணரத்தக்க அதோமுகம் அனந்த தேவர் சீகண்டர் வழி. உருத்திர லோக தேவ மானுட லோகங்களில் ஐந்தொழில் நிகழ் வித்தற்கும் அமைந்தன என்பது, மேல் இரண்டாம் தந்திரத்து, அதோ முக தரிசன அதிகாரத்துட் கூறப்பட்டதனை இங்குச் சிறப்புணர்த்துதற் பயன் நோக்கிக் கூறினார். எனவே, ``ஆருயிர்`` என்றது `நிறைந்த உயிர்` என்னும் பொருட்டாய்ப் பிரளயாகலர் சகலரைக்குறித்த தாயிற்று. இம்மந்திரத்துள் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், சிவநெறியே மெய்ப்பொருளை முதலாக உடையது` என்பதும், `அம் முதலது தன்மை யறியாது வெருளுதல் மயக்க உணர்வாம்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

ஆதிப் பிரான் உல கேழும் அளந்தஅவ்
வோதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

பொழிப்புரை :

முதற் கடவுளாகிய சிவபெருமான், நிலவுலகத் தில் உள்ள ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) சூழ்ந்த ஏழு கடலாயும், அப்பொழில்களில் வாழ்கின்ற அனைத்து உயிர்களாயும் நிற்பான். அவனின் வேறுபடாநிற்கின்ற சத்தி, ஆக்கல் அழித்தல்களைச் செய்யும் கடவுளரிடத்துப் பொருந்தி அவர்கள் வழியாக அத்தொழில்களை நிகழ்த்துவாள்.

குறிப்புரை :

அளத்தல் - இங்கு உள்ளடக்கல். `அளந்தவன்` என்பது பாடமாயின், அதன்பின், `ஆதலான்` என்பது வருவிக்க. சிவனது பெருமையையும், ஏனையோரது சிறுமையையும் உணர்த்தற்குக் கடலும் உயிருமாய் நிற்றலைச் சிவன் மேல் வைத்தும், பிற கடவுளராய் நிற்றலைச்சத்திமேல் வைத்தும் கூறினார். ``அந்தம்`` என்பதும் ஆகுபெயராய் `அந்தத்தின் கண் தெய்வம்` எனப் பொருள் தந்தது.
இதனால், சிவநெறி முதல்வராகிய சிவனும், சத்தியுமே அனைத்துச் சமய முதல்வராயும் நின்று அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரன்நெறி
ஆய்ந்தறிந் தேன்அவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேன்இம்மை அம்மை கண்டேனே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் ஆய்ந்து அறிபவர்களாகிய தேவர்கள், வித்தியாதரர் முதலியோர் ஆய்ந்து அறிய இயலாதவாறு உள்ள சிவனது நெறியை, நான் ஆய்ந்தறிந்தேன். அதன்பின் அச் சிவனது திருவடிகளை வழிபடும் முறைமையையும் ஆய்ந்தறிந்தேன். அதனால், இம்மை அம்மை இரண்டின் இயல்புகளையும் நன்குணர்ந்தேன்.

குறிப்புரை :

ஆய்ந்து அறிதலாவது ஆய்தலைச் செய்து, உண்மையை உணர்தல். பிற பொருள்களின் உண்மையை உணர் வோர்க்கும் முன்னைத் தவம் இல்வழி, `சிவநெறியே நெறி` என்பது உணர்தல் கூடாமையை முதல் இரண்டடிகளிலும், முன்னைத் தவம் உடையார்க்கு அஃது எளிதில் கூடுதலை மூன்றாம் அடியில், உள்ள ``ஆய்ந்தறிந்தேன்`` என்பதிலும், `சிவநெறியே நெறி` என உணர்ந் தார்க்கும் அதிற் சொல்லப்படும் சாதனமும், பயனும் வாய்த்தல் அரிதாதலை ஏனைப் பகுதியிலும் கூறினார்.
இதனால், சிவநெறியைச் சார்தல் சார்ந்து பயன்கொள்ளுதல் இவற்றது அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அறியஒண் ணாத உடம்பின் பயனை
அறியஒண் ணாத அறுவகை ஆக்கி
அறியஒண் ணாத அறுவகைக் கோசத்
தறியஒண் ணாததோர் அண்டம் பதிந்ததே.

பொழிப்புரை :

அறிதற்கு அரிதாகிய மானுட உடம்பின் பயனை அறிதற்குத் தடையாக ஆறுசமயங்களைப் படைத்து, அறிதற்கு அரிய ஆறு ஆதாரங்களை உடைய உடம்பாகிய பிண்டத்தில், அறிதற்கு அரிதாகிய ஓர் அண்டம் பொருந்தியுள்ளது.

குறிப்புரை :

`அதனை அறிந்தால் மானுட உடம்பின் பயனைப் பெற்றுவிடலாம்` என்பது குறிப்பெச்சம். ``அரிய ஒண்ணாத` எனவந்த நான்கினுள் இரண்டாவ தொழித்து, ஏனையவற்றில் ஒண்ணாமை, அருமை குறித்து நின்றது. ``அறிய ஒண்ணாததோர் அண்டம், ஆக்கிக் கோசத்துப் பதிந்தது`` எனக் கூட்டி முடிக்க. ``உடம்பு`` என்றது சிறப்புப் பற்றி மக்கள் உடம்பைக் குறித்தது. அதன் பயன், வீடு பெறுதல். பொதுப்பட ``அறுவகை`` என்றதனால், பிறசமயங்கள் யாவற்றையும் கொள்க. அவைபடிகளே யாயினும் தாம் தாமே மெய்யெனக் காட்டி நிற்றல் பற்றி அவற்றைத் தடையாகக் கூறினார். `அவற்றை ஆக்கியது படிகளாய் உதவுதற்பொருட்டு` என்பது மேல் பலவிடத்தும் கூறப்பட்டது. ஓர் அண்டம்`` என்றது, `பர வெளி` என்றவாறு. அது `சத்தி` என்பதையும் அதனையே தனக்குக் குணமாக உடையது சிவம் என்பதையும் நினைக்க. ``அறு வகையை உடைய கோசத்துப் பதிந்தது`` என்றதனால், அதனை யோக சாதனையால் அறிதல் கூடுவது பெறப்பட்டது.
இதனால், `சிவநெறியை அடைந்து சிவயோக ஞானங்களால் சிவனைத் தலைப்படுதலே மக்கட் பிறப்பின் பயன்` என முடித்துக் கூறப்பட்டது.
முன்னைத் தந்திரத்தில் சமயங்கள் பலவற்றையும் ஒருங்கு வைத்து அவற்றது நிலைகளை உணர்த்துமுகத்தால் சிவநெறியது சிறப்பினை உணர்த்திய நாயனார், இதன்கண் அந்நெறியில் நிற்றற்குரியாரது நிலைகளை உணர்த்துகின்றார்.

ஐந்தாம் தந்திரம் முற்றிற்று.