தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சங்ககால ஊன்‌ உணவும்‌ சமகால உணவு அரசியலும்‌ - ஆய்வு கட்டுரை

 சங்ககால ஊன்‌ உணவும்‌ சமகால உணவு அரசியலும்‌

ரா.சிலம்பரசன்‌
முனைவர்பட்ட ஆய்வாளர்‌
தமிழ்த்துறை

பெரியார்‌ பல்கலைக்கழகம்‌
சேலம்‌ - 636 011

முகவுரை

உணவு என்பது வயிற்றுப்பசியைத்‌ ஜீக்கும்‌ வழிமுறை மட்டுமன்று. அது உயிரைத்‌ தாங்கும்‌ உடலுக்கும்‌, உடலை இயக்கும்‌ உயிருக்கும்‌ ஆதாரமானதாகும்‌. அவ்வகையான்‌ “உடம்பை வளர்க்கும்‌ உபாயமறிந்தே உடம்பை வளர்த்தேன்‌ உயிர்‌ வளர்த்தேனே” என்கிறார்‌ திருமூலர்‌. உலக உயிர்கள்‌ அனைத்திற்கும்‌ உணவென்பது பொது. யாதெனில்‌ வாழ்வதற்கு அதுவே அடிப்படை என்பதாம்‌. அந்நெறியே உணவுச்‌ சங்கிலியாலான உலக இயக்கம்‌. மனிதன்‌ தோன்றிய நாள்‌ முதலே உணவுத்‌ தேடலும்‌ தொடங்கிற்று. மனிதனது உணவுத்‌ தேடலுக்கு இயற்கையே பெரும்‌ நன்கொடை நல்கியது. மலைகளும்‌ காடுகளும்‌ மனிதனது வாழ்விடமான காலத்தில்‌ அவனது உணவுத்‌தேவைகளை அவைகளே பூர்த்தி செய்தன. காய்‌, கனி, பழங்கள்‌ என கிடைத்ததை உண்டான்‌. சில நேரங்களில்‌ விலங்குகளை வேட்டையாடியும்‌ உண்ணத்‌ தலைப்பட்டான்‌. எனவே மனித நாகரிக வளர்ச்சிப்‌ படிநிலைகளில்‌ வேட்டைச்‌ சமூகம்‌ முதலிடம்‌ பெறும்‌. இதனைத்‌ தொடர்ந்தே கால்நடை வளாப்பும்‌ வேளாண்மைச்‌ சமூகங்களும்‌ பின்‌ நின்றன. இவ்வாறான பண்பாட்டூப்‌ படிநிலைகளுக்குச்‌ சற்றும்‌ விதிவிலக்காகாதது தமிழினச்‌ சமூகம்‌.

இலக்கியங்களின்‌ அடிப்படையில்‌ தமிழினச்‌ சமூகத்தை அறிய முற்பட்டால்‌ சங்க இலக்கியங்களே அதற்கான முதன்மைச்‌ சான்றாதாரங்கள்‌. பொதுவெளியில்‌ சங்க இலக்கியங்கள்‌ ஒரு தலைச்சிறந்த பண்பாட்டின்‌ உச்சம்‌ என்றே போற்றப்படுகின்றன. அவை ஆராயப்படுமாயின்‌ அதுவே உண்மையாதலும்‌ திண்ணம்‌. அவ்வாறமைந்த சங்கத்‌ தமிழரின்‌ பண்பாட்டுப்‌ பழக்க வழக்கங்களைப்‌ பகுத்தாராயுமிடத்து அவர்தம்‌ உணவுப்‌ பழக்க வழக்கங்கள்‌ தனிச்சிறப்பிடம்‌ பெறுகின்றன.

இந்நிலையில்‌ சங்கப்‌ பனுவல்களை அணுகுமிடத்து சங்ககாலத்‌ தமிழாகள்‌ ஊன்‌ உணவின்‌ மீது அதீத நாட்டமும்‌ பிரியமும்‌ உள்ளவர்களாக விளங்கியமை நன்கு புலப்படூம்‌. மான்‌, முயல்‌, உடும்பு,

ஆடு, மாடு, ஈசல்‌, கோழி முதலான விலங்கு மற்றும்‌ பறவை உள்ளிட்ட ஊன்‌ உணவுகளை மிக விரும்பி உண்டு களித்திருப்பதைச்‌ சங்க இலக்கியங்களின்‌ வழியே கண்டூணரலாம்‌. இவை ஒருபுறமிருக்க திணையடிப்படையிலான வாழ்விடங்களில்‌ அதன்‌ மண்‌ சார்ந்த உணவுப்‌ பழக்க வழக்க முறைகளையும்‌ அறிய இயலுகிறது.

தொடக்கத்தில்‌ பசிக்காக உணவு என்றும்‌, பின்னாளில்‌ பண்பாட்டோடு உணவு என்றும்‌ உணவுகளின்‌ மீது குவிந்திருந்த சமூகப்‌ பார்வை. சமகாலத்தில்‌ வாழ்க்கைப்‌ பொருளாதார அடிப்படையிலும்‌, சமய அடிப்படையிலும்‌, சாதியப்‌ பாகுபாட்டு அடிப்படையிலும்‌ அரசியலாக்கப்படுகிறது. இவ்வரசியல்‌ பல அடக்குமுறைகளுக்கும்‌ ஒதுக்கு முறைகளுக்கும்‌ சாதகமாக இருக்கின்றது. இத்தகைய பிற்போக்குச்‌ சிந்தனையைச்‌ சுட்டிக்காட்டி உணவு என்பது அவரவா சுயச்சார்பு என்ற புரிதலை உண்டாக்குவதாகவும்‌, சங்க காலம்‌ முதலே ஊன்‌ உண்ணுதல்‌ என்பது தமிழா வாழ்வியலில்‌ தவிர்க்கவியலாத பழக்க வழக்கமாக இருந்து வந்துள்ளமையை விளக்குவதாகவும்‌, ஊன்‌ உண்ணுதல்‌ தொடாபான சமகாலப்‌ பார்வைக்குச்‌ சாதி, சமய மற்றும்‌ பொருளாதார ஏற்றத்‌ தாழ்வுகள்‌ பின்புலமாக இருப்பதனை எடூத்துரைப்பதாகவும்‌ இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

சமூக வளர்ச்சிப்‌ படிநிலைகளில்‌ மனித இனம்‌ தொடக்க கால மனிதனின்‌ தேடல்‌ உணவுகளுக்காக மட்டுமே தொடங்கிற்று. அது நாகரிக வளர்ச்சியற்றக்‌ காலம்‌. மனிதன்‌ ஒரு சமூக விலங்கு என்னும்‌ சமூகவியலாளர்களின்‌ கருத்து அங்கிருந்துதான்‌ தொடங்கியிருக்க வேண்டும்‌. விலங்குகளைப்‌ போலவே பசியை மட்டும்‌ அறிந்திருந்த மனிதக்‌ கூட்டத்தின்‌ வாழ்வு ஓர்‌ ஒழுங்கு முறையற்ற இயற்கையுடனான வாழ்க்கைப்‌ போராட்டமாகவே அமைந்தது. இத்தகைய பின்புலத்தை அடியொற்றியே வளரத்‌ தொடங்கின மனித இன நாகரிக வளாச்சிப்‌ படிநிலைகள்‌. உணவும்‌ தொழிலும்‌ ஆகிய இரண்டூமே மனித இனத்தை வள்ச்சிப்‌ பாதைக்கு அழைத்து வந்த அடிப்படைக்‌ காரணிகளாகும்‌. அவற்றுள்‌ உணவை தாம்‌ வாழும்‌ புறச்சூழலிருந்தே மனிதன்‌ பெற்றுக்‌ கொண்டான்‌. இதனை, மனிதனின்‌ உணவுப்‌ பழக்கம்‌ அவன்‌ வாழும்‌ இடத்தின்‌ தட்பவெப்பநிலை, அப்பகுதியில்‌ விளையும்‌ தானியங்கள்‌, காய்கறிகள்‌, வளரும்‌ உயிரினங்கள்‌ மற்றும்‌ பல காரணிகளைக்‌ கொண்டு அமைவதாக கட்டுரையொன்றில்‌ இராமியா குறிப்பிடுவார்‌ (சிந்தனையாளன்‌,ப.23,செப்டம்பர்‌-2018). இவ்வாறான புறச்சூழல்களே அங்கு வாழும்‌ மனிதனுக்கு உணவை ஈந்தாலும்‌ தன்‌ அறிவின்‌ முயற்சியால்‌ அச்சூழலைத்‌ தன்வசமாக்கிக்‌ கொண்ட மனிதன்‌ தன்‌ உழைப்பினாலும்‌ உணவைப்‌ பெற முயன்றான்‌; அம்முயற்சியே தொழிலாகப்‌ பரிணமித்தது; அங்கிருந்துதான்‌ குழு அல்லது கூட்டு முயற்சியையுடைய ஒரு நாகரிகமான சமூகம்‌ தோன்றியது: அதன்‌ விளைவே வேட்டை, கால்நடை வளர்ப்பு, பயிர்த்தொழில்‌ என்னும்‌ சமூகக்‌ கட்டமைப்புகளாகும்‌.

இக்கட்டமைப்புகளின்‌ அடிப்படையில்‌ சங்ககாலத்‌ தமிழ்ச்‌ சமூகத்தை ஆராய முற்படும்‌ கா.சுப்பிரமணியன்‌, உணவு சேகரிக்கும்‌ நிலை (அகம்‌.309,331,377 பெரும்பாண்‌.89.97), வேட்டையாடும்‌ நிலை (அகம்‌.31,58,182,193,248.261,282,284: நற்றிணை 3,285), காடுகளை எரித்துப்‌ பயிர்செய்யும்‌ நிலை (ஐங்‌.252,259.266,270.,295 அகம்‌.140,194 நற்றிணை.122.209), கால்நடை வளர்ப்பு நிலை (அகம்‌.103,168,265,274 நற்றிணை.80,142,192), பயிர்த்தொழில்‌ (அகம்‌.204,237,249 நற்றிணை 60,210) என்னும்‌ சங்க காலச்‌ சமூக வளர்ச்சிப்‌ படிநிலைகளை ஐந்தாக வகுத்தும்‌, அதற்கான உரிய சான்றுகளைச்‌ சங்க இலக்கியங்களிலிருந்தே கொடுத்தும்‌ நிறுவ முயல்வார்‌. (சங்ககாலச்‌ சமுதாயம்‌, ப.2,2011) இவ்வரையறையின்‌ கீழ்‌ தமிழினச்‌ சமுதாயத்தை மட்டுமின்றி மனித இனச்‌ சமுதாயத்தையே பொருத்திக்காணவியலும்‌. சங்கத்‌ தமிழினச்‌ சமுதாயத்தில்‌ உணவு

உணவு என்னும்‌ சொல்‌ தொல்காப்பியத்தில்‌ காணக்கிடைக்கும்‌. தொல்காப்பியர்‌ அகப்பாட்டூ மரபிற்குரிய முதல்‌, ௧௬, உரிப்பொருட்களை எடுத்துரைக்கும்‌ முகத்து கருப்பொருள்களாவன 
  • “தெய்வம்‌ உணாவே மா மரம்‌ புள்‌ பறை செய்தி யாழின்‌ பகுதியொடு” (தொல்‌.964) 
 என்பார்‌. இவற்றுள்‌ அவர்‌ கூறும்‌ உணா என்பது உணவே ஆகும்‌. திணையடிப்படையிலான ஐவகை நிலங்களுக்குரிய உணவு வகைகளைப்‌ பட்டியலிடுவதே அதன்‌ நோக்கம்‌. இந்நிலையில்‌ தெய்வத்தையடுத்து உணவுக்கு முதன்மையிடம்‌ அளித்திருப்பதனால்‌ அதன்‌ இன்றியமையாமை நமக்கு நன்கு புலனாகும்‌. இதன்வழி முல்லைக்கு வரகு, சாமை- குறிஞ்சிக்கு ஐவன நெல்‌, திணை, மூங்கிலரிசி, கிழங்கு- மருதத்திற்குச்‌ செந்நெல்‌, வெண்ணெல்‌, கரும்பு- நெய்தலுக்கு மீன்‌, உப்பு- பாலைக்கு ஆறலைத்த பொருள்‌, சூறைகொள் பொருள்‌ என விளக்கம்‌ தருவார்‌ ச.பாலசுந்தரனார்‌ (பக்‌.43-44). மேலும்‌ உணவு என்ற பொருள்‌ தரும்‌ உணா என்ற சொல்லைப்‌ புறம்‌.160, புறம்‌.335 ஆம்‌ பாடல்களில்‌ காணலாம்‌.

சங்க இலக்கியத்தில்‌ சோறு என்னும்‌ பதத்தைப்‌ பல இடங்களில்‌ காணவியலும்‌. 
  • “சோறு ஆக்கிய கொழுங்‌ கஞ்சி” (பட்டின.44) 
என்ற பாடல்‌ வரியே அதற்குச்‌ சான்று பகரும்‌. 
 
சோற்றின்‌ அளவீட்டின்‌ அடிப்படையில்‌ அதனை சிறுசோறு, பெருஞ்சோறு என  பாகுபடூத்தியிருப்பதையும்‌ காணலாம்‌. பெரும்‌ படையுண்ணும்‌ மிகுதியான சோற்றினைப்‌
  • “பெருஞ்‌ சோற்று மிகு பதம்‌”(புறம்‌.2) என்றும்‌, 
  • “பெருஞ்‌ சோறு கொடுத்த ஞான்றை”(அகம்‌.233) என்றும்‌, 
அளவில்‌ குறைவானதைச்‌ 
  • “சிறுசோறு குவைஇயும்‌”(அகம்‌.110) என்றும்‌ சங்கப்பாடல்கள்‌ குறிப்பிடுகின்றன. 
உணவு சமைப்பதற்காக அடிுப்புகளைச்‌ சங்கத்‌ தமிழாகள்‌ பயன்படூத்தியுள்ளமைக்கு 
  • “*ஆடூ நனி மறந்த கோடூ உயர்‌ அடுப்பின்‌”(புறம்‌.164), 
  • “ஆண்தலை அணங்கு அடுப்பின்‌” (மதுரை.29) முதலிய சங்கப்‌ பாடல்‌ வரிகள்‌ சான்றுகளாகின்றன.

சங்க கால உணவு முறைகளுள்‌ கீரைகள்‌, காய்‌, கனிகள்‌, பழங்கள்‌, சிறுதானிய உணவு வகைகள்‌, தேன்‌, கிழங்கு வகைகள்‌, பால்‌, தயிர்‌, மோர்‌, மாவடூ, உப்பு எனப்‌ பல பண்டங்கள்‌ நிறைந்திருப்பினும்‌ நெல்லினாலான சோறு பெருஞ்சிறப்புடையது. அது விளையும்‌ மருதம்‌ செல்வச்‌ செழிப்பு மிக்கது. அதனானே சோழ நாடூ சோறுடைத்து என்பது மரபு. இதன்வழி நிலம்‌ உழுது, நெல்‌ விளைவித்து, நெல்லை அரிசியாக்கி பின்‌ அதனை சோறாக்கும்‌ கலன்களும்‌ கருவிகளும்‌ கண்டறிந்து வேளாண்‌ உற்பத்தியில்‌ தன்னிறைவுப்‌ பெற்ற சமூகமாகச்‌ சங்க மருதநிலச்‌ சமூகம்‌ இருந்திருப்பதனாலேதான்‌ அவை பற்றிய குறிப்புகளைச்‌ சங்க இலக்கியங்கள்‌ தாங்கி நிற்கின்றன.
அதுமட்டுமின்றி பிற நிலத்தவரும்‌ பண்டமாற்றால்‌ அரிசியினைப்‌ பெற்றிருப்பது நெல்லின்‌ உற்பத்தி உபரியையும்‌ அதன்‌ தேவையையும்‌ நன்கு புலப்படூத்துகிறது.

சங்ககால ஊன்‌ உணவு

சங்ககாலத்‌ தமிழாகளுக்கு உணவு குறித்த புரிதலும்‌ தெளிவும்‌ நிறைய உண்டு. சங்கத்தமிழா மரக்கறியுணவாயினும்‌, இறைச்சியாயினும்‌ நிரம்பவும்‌ நன்றாக உண்பதில்‌ அக்கறையுடையவாகள்‌. அவ்வாறு உண்டூ பழகியவர்கள்‌ என்பார்‌ ந.சுப்ரமண்யன்‌ (ப.399). உலக உயிர்கள்‌ அனைத்தும்‌ உணவுக்காக பிற உயிரினங்களையே சார்ந்திருக்கின்றன. அதன்‌ விளைவே உணவுச்‌ சங்கிலி என்னும்‌ தொடா்‌ சார்பு அமைப்பு. இதனடிப்படையிலேயே அமைந்துள்ளது உலகின்‌ இயக்கம்‌.

இறைச்சியைக்‌ குறிக்கும்‌ ஊன்‌ என்னும்‌ சொல்‌ புறம்‌.384, புறம்‌.359, அகம்‌.89, அகம்‌.265, பொருந.105 முதலிய சங்கப்‌ பாடல்களில்‌ வந்துள்ளது. மேலும்‌ நிணம்‌ என்னும்‌ சொல்‌ இறைச்சி அல்லது கொழுப்பு என்ற பொருண்மையில்‌ புறம்‌.150, புறம்‌.359 ஆம்‌ பாடல்களில்‌ வந்துள்ளமையைக்‌
காணமுடிகிறது. இறைச்சி (தொல்‌.1175, 1176) என்னும்‌ சொல்லே தொல்காப்பியத்தில்‌ இடம்‌ பெறுவதைக்‌ காணலாம்‌. ஆனால்‌ அது அகப்பாட்டுக்குரிய மறைபொருளான ஓர்‌ உத்தி முறையைக்‌
குறிப்பதாகும்‌. இருப்பினும்‌ அவ்வுத்தி விலங்குகளின்‌ ஒழுகலாற்றினால்‌ உணாத்தப்படும்‌. இதனால்‌ விலங்குகளோடூ தொடர்புடைய இறைச்சி என்னும்‌ சொல்லையே அவ்வுத்தி முறைக்கு பெயராகக்‌
கண்டிருக்கலாம்‌.

சங்ககால வெறியாட்டு நிகழ்வில்‌ ஆட்டினைப்‌ பலியிடும்‌ பழக்கம்‌ இருந்துள்ளமைக்கு 
  • “மறிக்‌ குரல்‌ அறுத்து”(குறு.263) என்ற பாடல்‌ வரியும்‌, 
  • “பலி கொடுத்து””(அகம்‌.22) என்ற பாடல்‌ வரியும்‌
நடுகல்‌ வழிபாட்டூ மரபில்‌ பலியிடும்‌ பழக்கம்‌ பின்பற்றப் பட்டுள்ளமைக்கு 
  • “ோப்பிக்‌ கள்ளொடூ துரூஉப்‌ பலி கொடுக்கும்‌”(அகம்‌.35)  என்ற பாடல்‌ வரியும்‌ 
காக்கைக்கு ஊன்‌ படைக்கும்‌ பழக்கம்‌ நடைமுறையிலிருந்தமைக்கு 
  • “பச்சூன்‌ பெய்த பைந்நிண வல்சி பொலம்‌ புனை கலத்தில்‌ தருகுவென்‌”(ஜஐங்குறு.391) என்ற பாடல்‌ வரியும்‌, 
  • “செஞ்சோற்ற பலி மாந்திய கருங்காக்கை””(பொருந.183)

என்ற பாடல்‌ வரியும்‌ சான்றுகளாகின்றன. இதன்வழி பலியிடூதலும்‌ அதன்‌ ஊனும்‌ சங்கத்‌ தமிழர்களின்‌ உணவு முறைகளோடு நெருங்கியுள்ள தொடர்பினை அறியலாம்‌.

மான்‌

மானை வேட்டையாடி உண்ணுதலை 
  • “மான்‌ கணம்‌ தொலைச்சிய குருதி அம்‌ கழற்கால்‌” (புறம்‌.150) 
என்ற பாடல்‌ வரியும்‌, 
  • “வருவிசை தவிர்த்த கடமான்‌ கொழுங்குறை””(மலை.175) 
என்ற பாடல்‌ வரியும்‌ எடுூத்துக்காட்டுகின்றன. முல்லைநில மக்கள்‌ வாழும்‌ இடங்களில்‌ மான்களும்‌ முயல்களும்‌ வான்கோழிகளும்‌ வழங்குவன. அவற்றைக்‌ கொன்று அவர்‌ உண்பர்‌ என்பது சு.வித்தியானந்தன்‌ தரும்‌ விளக்கம்‌ (ப.204).

முயல்‌

முயற்கறி உண்டமையைக்‌ 
  • “குறுமுயலின்‌ குழைச்‌ சூட்டோடூ” (புறம்‌.395), 
  • “எல்லு முயல்‌ எறிந்த வேட்டுவன்‌ சுவல”ருற்‌.59), 
  • “நெடுங்‌ செவிக்‌ குறுமுயல்‌ போக்குஅறை வளைஇ” (பெரும்‌.115)
முதலிய சங்கப்பாடல்‌ வரிகள்‌ விளக்கி நிற்கின்றன.

உடும்பு

சங்கத்‌ தமிழாகள்‌ உடும்புக்கறி உண்டமைக்கு 
  • “உடும்பு கொலீஇ”ரநற்‌.59), 
  • “குமலி தந்த மமனவுச்சூல்‌ உடும்பின்‌?” (பெரும்‌.132), 
  • “பிணவுநாய்‌ முடிக்கிய தடியொடுூ விரைஇ” (மலை.177)
ஆகிய பாடல்‌ வரிகள்‌ சான்றுகளாகின்றன. உடும்பு வேட்டைக்கு நாயைப்‌ பயன்படுத்தியுள்ளமையை மலைபடூகடாம்‌ நூலின்‌ வழி அறியவியலுகிறது.

ஆடு

கரிகாற்‌ பெருவளத்தான்‌ பொருநாகளுக்கு ஆட்டிறைச்சியைக்‌ கொடுத்து உண்பித்து மகிழ்ந்தான்‌ என்பதனைத்‌ 
 
  • “துராஅய்‌ துற்றிய துருவைஅம்‌ புழுக்கின்‌ பராஅரை வேவை பருகு எனத்‌ தண்டி, காழின்‌ சுட்ட கோழ்‌ஊன்‌ கொழுங்குறை”(பொரு.103-105) 
 
என்று முடத்தாமக்‌ கண்ணியார்‌ பாடியுள்ளார்‌.

மாடு

  • “தோகைத்‌ தூவித்‌ தொடைத்தார்‌ மழவர்‌ நாகுஆ வீழ்த்து” (அகம்‌.249), 
  • “இன்சிலை எழில்‌ஏறு கெண்டி, புரைய நிணம்‌ பொதி விழுத்தடி நெருப்பின்‌ வைத்து எடூத்து””(அகம்‌.265), 
  • “கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்‌ புலவுப்புழுங்கு உண்ட” (அகம்‌.309), 
  • “கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்‌” (அகம்‌.129), 
  • “கேளா மன்னர்‌ கடிபுலம்‌ புக்கு நாள்‌ஆ தந்து” (பெரும்‌.140) 
 
முதலிய சங்கப்‌ பாடல்‌ வரிகள்‌ தொல்தமிழாகள்‌ மாட்டிறைச்சியினை உணவாக உட்கொண்ட செய்தியினை
எடூத்தியம்புகின்றன..

மீன்‌

மீன்‌ பிடித்தலும்‌ மீனை விற்றலும்‌ நெய்தல்‌ நில மக்களின்‌ தொழிலாகவே இருந்துள்ளமை சங்க இலக்கியங்களின்‌ வாயிலாக நன்கு புலனாகும்‌. 
 
  • “இருங்கெடிற்று மிசையொடுூ”(புறம்‌.384),
  • “நெடூவாளைப்‌ பல்‌ உவியல்‌”(புறம்‌.395). 
  • “வராஅல்‌ கோட்டுமீன்‌ கொழுங்குறை”(புறம்‌.399), 
  • “கருங்கண்‌ வராஅல்‌ பெருந்தடி மிளிர்வையொடூ”(நற்‌.60), 
  • “குறுக வாரல்‌”?(அகம்‌.196), “பெருங்கடற்‌ பரதவர்‌
  • கோள்மீன்‌ உணங்கலின்‌??(குறு.320), 
  • “கொழுமீன்‌ குறைஇய துடிக்கண்‌ துணியல்‌”(மதுரை.320),
  • “வறற்குழற்‌ சூட்டின்‌””(சிறுபாண்‌.163), 
  • “தண்‌ மீன்‌ சூட்டொடூ””(பெரும்பாண்‌.282), 
  • “கடல்‌ இறவின்‌ சூடூ தின்றும்‌” (பட்டினப்‌.63)  
 
முதலிய இப்பாடல்‌ வரிகள்‌ மீன்‌ உணவை மிக விரும்பி உண்டமையைப்‌ புலப்படூத்துகின்றன. 

முள்ளம் பன்றி
  • “முளவு மா வல்சி எயினர்‌”(ஞங்குறு.364) 
 
இங்கு முளவு மா என்றது முள்ளம் பன்றியை என்பது உரைக்காரர்கள்‌ கருத்து. 
  • “வீழ்‌ முகக்‌ கேழல்‌ அட்ட பூசல்‌”(மதுரை.295,) 
  • “முளவுமாத்‌ தொலைச்சிய பைந்நிணப்‌ பிளவை”(மலை.176) 
  • “வளைமருப்பு ஏனம்‌ வரவுபார்த்‌ திருக்கும்‌” (பெரும்பாண்‌.110)

முதலிய பாடல்‌ வரிகள்‌ முள்ளம் பன்றியை உணவாகக்‌ கொண்டமையை வெளிக்காட்டுகின்றன.

தவளை

தவளையை உணவாக உட்கொள்ளுதலை 
 
  • “வரி நுணல்‌ அகழ்ந்து? (நற்‌.59) 
 
என்னும்‌ பாடல்வரி விளக்கும்‌.

ஆமை

ஆமை இறைச்சியைச்‌ சங்க காலத்தவர்‌ உணவாக உட்கொண்டமைக்கு 
 
  • “யாமைப்‌ புழுக்கின்‌ காமம்‌ வீட ஆரா? (புறம்‌.212) 
 
என்னும்‌ பாடல்‌ வரி சான்றாக அமைகிறது.

ஈசல்‌

  • “செம்புற்று ஈயலின்‌ இன்‌ அளைப்‌ புளித்து” (புறம்‌.119), 
  • “நெடுங்‌ கோட்டுப்‌ புற்றத்து ஈயல்‌ கெண்டி”௫ந்‌.59), 
  • “புற்றத்து ஈயல்‌ பெய்துஅட்ட இன்புளி வெஞ்சோறு””(அகம்‌.394) 

முதலிய பாடல்‌ வரிகள்‌ ஈசலை உணவாக உண்டதற்கான சான்றுகளாகும்‌.

கோழி

  • கோழி வளாத்தலை “கோழி எறிந்த கொடூங்கால்‌ கனங்குழை” (பட்டினப்‌.23) 
 
என்பதன் வழி கண்டூணரலாம்‌. சங்கத்‌ தமிழர்கள்‌ கோழியின்‌ இறைச்சியை உணவாக பயன்படூத்தியமைக்கு

  • “வினைஞர்‌ தந்த வெண்ணெல்‌ வல்சி மனைவாழ்‌ அளகின்‌ வாட்டொடுூம்‌ பெறுகுவிர்‌””(பெரும்பாண்‌.255),

என்ற பாடல்‌ வரிகள்‌ உதாரணங்களாகின்றன. 

மான்‌, முயல்‌, உடும்பு, பன்றி முதலியன குறிஞ்சி மற்றும்‌ முல்லைநில மக்களின்‌ உணவுகளாக அறியப்படுகின்றன. மான்‌ முதலானவை வேவட்டைக்குரியனண எனவே அவை குறிஞ்சிக்குரியன. பன்றி தினைபுனத்தைத்‌ தகாக்க வருமிடத்து அதனை வேட்டையாடி கொன்றமையால்‌ அதுவும்‌ குறிஞ்சிக்குரியது. முயல்‌ முல்லைக்குரிய கருப்பொருளாகவே அறியப்படுவதாகும்‌. மாடு நிரைகவாதலால்‌ உணவின்பாற்பட்டது. ஆடூ பலியிடூதலுக்கான பொருளாகவே இருந்துள்ளது. ஆடு, கோழி முதலியன மருதநில வாழ்வுயிரினங்களாகவே அறியப்படுகின்றன. மீன்‌ நெய்தல்‌ நில மக்களாகிய பரதவார்களின்‌ உணவுப்‌ பொருளாக சங்ககாலந்‌ தொட்டு இன்றளவும்‌ இருந்துவருகின்றமை கண்கூடு.

சமகால உணவு அரசியல்‌

உணவு, உடை, உறையுள்‌ இம்மூன்றும்‌ மனித தேவைகளுக்கு அடிப்படையானவை. இம்மூன்றின்‌ மீதும்‌ நெடுங்காலந்தொட்டே ஓர்‌ ஆதிக்கம்‌ தனது அதிகாரத்தைச்‌ செலுத்தி வருகின்றது. அதிலும்‌ குறிப்பாக உணவின்‌ மீதான மேலாதிக்கம்‌ சமகாலத்தில்‌ சற்றே மிகுதியாக தென்படூகிறது. இதற்கான காரணங்களைக்‌ கீழ்க்காணும்‌ மூன்று நிலைக்களன்களை அடிப்படையாகக்‌ கொண்டூ ஆராய்வது பொருத்தமுடையதாகவிருக்கும்‌.

வாழ்க்கைப்‌ பொருளாதார அரசியல்‌ இந்த உலகில்‌ எல்லா மனித நுகா்வுகளும்‌ மூன்று விதமான அமைப்புகளுக்குள்‌ உள்ளடங்கியதாக உள்ளன. அவை பொருளாதாரத்தில்‌ தன்னிறைவு, பொருளாதாரத்‌ தன்னிறைவை நோக்கி, பொருளாதார தேக்கம்‌ அல்லது மந்தம்‌ முதலியன. பணம்‌ படைத்தவனுக்கு ஒன்றுமாய்‌, பணம்‌ அற்றவனுக்கு ஒன்றுமாய்‌ இந்த உலகம்‌ விலைபோய்‌ கொண்டிருப்பதுதான்‌ இச்சமகாலச்‌ சூழல்‌. உதாரணமாக கல்வியும்‌ மருத்துவமும்‌ இரண்டு விதமான போக்குகளை உள்ளடக்கியதாகதானே உள்ளன. அந்த போக்கு உணவின்‌ மீதும்‌ குவிந்திருக்கின்றது. இன்று பழைய சோறு என்பதன்‌ மீதான பார்வையும்‌, நியாய விலைக்‌ கடையின்‌ அரிசி என்பதன்‌ மீதான பார்வையும்‌ ஓர இழிநிலை உடையதாகவே பல்லோரால்‌ பார்க்கப்படுகின்றது. இந்தக்‌ கற்பனையே ஒரு சமுதாயத்தின்‌ கற்பிதம்‌ ஆக்கப்படுவதுதான்‌ இன்னும்‌ கொடுமை. சாலையோர உணவகங்கள்‌, நட்சத்திர உணவகங்கள்‌ இவற்றின்‌ தேவைகளை ஒப்பிட்டுப்‌ பார்த்தால்‌ அவை யாருக்காக யாரால்‌ நடத்தப்படுகின்றன என்பது தெளியவரும்‌. ஒரு பள்ளியில்‌ அரசு வழங்கும்‌ மதிய சத்துணவை வாங்கி உண்டூ பயிலும்‌ ஒரு மாணவனின்‌ மனநிலையும்‌, அதே பள்ளியில்‌ தன்‌ வீட்டு உணவை எடுத்துக்‌ கொண்டூ வந்து உண்டு மகிழும்‌ ஒரு மாணவனின்‌ மனநிலையும்‌ எவ்வாறு சரிநிகர்‌ சமானம்‌ ஆகும்‌. அங்குதான்‌ வேற்றுமை நிலவுகிறது. சீறுடையில்‌ இல்லை ஒற்றுமை. சிந்தனையில்‌ உண்டு. அவனிடம்‌ வசதி வாய்ப்பு உண்டு, இவனிடம்‌ இல்லை என அசாதாரண காரண காரியங்களைக்‌ கற்பித்துவிடலாம்‌. ஆனால்‌ அவனிடம்‌ உள்ள இருத்தலையும்‌, இவனிடம்‌ உள்ள இல்லாமையையும்‌ விளங்கிக்‌ கொள்ளும்‌ போதுதான்‌ அந்த சமூகம்‌ விழிப்படையும்‌.

சமய அரசியல்‌

சங்கத்‌ தமிழர்களின்‌ உணவுகள்‌ மீதான கட்டுப்பாட்டை சமண, பெளத்த சமயங்கள்‌ மேற்கொண்டன. சங்கத்‌ தமிழர்களின்‌ உணவுகளும்‌ பழக்கவழக்கங்களும்‌ சமண, பெளத்த சமயங்களுக்கு முரணானதால்‌ அவர்தம்‌ கொள்கைகளுக்கு ஏற்றாற்‌ போல சங்கத்‌ தமிழர்களை மாற்ற எண்ணினர்‌. உதாரணமாக வேட்டைத்‌ தொழில்‌, ஊன்‌ உண்ணுதல்‌, கள்ளுண்ணுதல்‌, பரத்தமை, போர்‌, பூசல்‌ முதலியன சமண பெளத்தர்களால்‌ எதிர்க்கப்பட்டன. ஆனால்‌ அவை யாவும்‌ சங்கத்தமிழா வாழ்வியலில்‌ இரண்டறக்‌ கலந்திருந்தன.

சமண, பெளத்த சமயங்களுக்குப்‌ போட்டியாக எழுந்த சைவ, வைணவ சமயங்களும்‌ சமண, பெளத்த சமயங்களைப்‌ போலவே உணவு மீதான கட்டூப்பாட்டினைத்‌ தொடர்ந்தன. குறிப்பாக அசைவ உணவின்‌ மீதான கட்டுப்பாடு பெரிதும்‌ மேலோங்கி நிறுத்தப்பட்டது. பிள்ளைக்‌ கறி கேட்கும்‌ இறைவனையும்‌, காளத்தி வேடனாகிய கண்ணப்பன்‌ தன்‌ அன்பின்‌ மிகுதியினால்‌ தந்த இறைச்சியை ஏற்றுக்‌ கொண்ட இறைவனையும்‌ சைவம்‌ பறைசாற்றினாலும்‌, கங்கை வேடனாகிய குகன்‌ தந்த மீன்‌ உணவை இராமபிரான்‌ ஏற்றுக்கொண்டதாக வைணவம்‌ விதந்து கூறிடினும்‌ நடைமுறையில்‌ உணவின்‌ அடிப்படையிலான சமய அரசியல்‌ சமூகத்தில்‌ இல்லாமலில்லை. பின்னாளில்‌ சைவ வைணவ

சமயங்களின்‌ இணைவு வைதீக சமய நெறிக்கும்‌ அது இந்து என்னும்‌ மத முயற்சிக்கும்‌ வித்திட்ட போதிலும்‌ இந்து என்னும்‌ கட்டமைப்பில்‌ கொணப்படும்‌ மனிதக்‌ கூட்டத்தின்‌ சில குழுக்கள்‌ உணவுமுறைகளின்‌ அடிப்படையிலேயே பாகுபடுத்தப்பட்டிருப்பது இங்கு வெளிப்படையான உண்மையாகும்‌. அதுமட்டுமின்றி அக்குழுக்கள்‌ மீதான பெரும்பான்மையோரின்‌ மேலாதிக்கமும்‌ அடக்குமுறைகளும்‌ கட்டவிழ்க்கப்படூவதுதான்‌ ஒரு சமூகத்தின்‌ பிற்போக்குச்‌ சிந்தனைக்கு வழிவகுத்துக்‌ கொடுக்கின்றது.

சாதியப்‌ பாகுபாட்டு அரசியல்‌

முன்பு வாழும்‌ நிலவியல்‌ சார்ந்தே உணவுகள்‌ அறியப்பட்டன. ஆனால்‌ சமகாலத்தில்‌ சாதியின்‌ அடிப்படையிலேயே சில உணவுகள்‌ அடையாளப்படுத்தப்படுகின்றன. சமீபத்தில்‌ உணவுகளுக்காக மாடுகளைப்‌ பயன்படுத்துவதற்கான தடை சட்டம்‌ கொண்டுவரப்பட்டது. அது மாடுகளின்‌ நலன்‌ கருதியன்றோ என கருத்தில்‌ கொள்ளத்தக்கது. இல்லை மாட்டின்‌ இறைச்சியுண்ணும்‌ சிறுபான்மையினத்தவரின்‌ நலனை நசுக்குவதாகவே அமைந்திருத்தல்‌ கண்கூடு. இங்குதான்‌ உணவின்‌ மீதான அடக்குமுறை தொடங்குகிறது.

அவ்வுணவுகளின்‌ மீது பல பொய்யான அறிவுப்‌ பூர்வமற்ற கற்பிதங்களை உருவாக்கி அவ்வுணவுகளின்‌ மீதும்‌, அவ்வுணவு உண்பவர்களின்‌ மீதும்‌ ஆரோக்கியமற்ற வெறுப்பு உணர்வையும்‌, தவறான புரிதலையும்‌ பார்வையையும்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ அவ்வுணவு உண்ணும்‌ சிறுபான்மையின மக்களுக்குப்‌ பாதுகாப்பற்ற சூழலைத்‌ தந்தும்‌, அச்சுறுத்தியும்‌, அடக்குமுறைகளுக்கு உட்படுத்தியும்‌ பெரும்பான்மையினத்தவர்‌ மேலாத்திக்கம்‌ செய்திட வேண்டுமென்ற எண்ணம்‌ சமகாலத்தில்‌ மேலோங்கி நிற்பது சிறுபான்மையினத்தவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த மனித இனத்தையே அச்சுறுத்துவதாக
அமைத்துவிடுகிறது. எனவே உணவு என்பது அவரவா்‌ சுய விருப்பு வெறுப்புகளுக்கு உட்படுத்தப்பட்ட சுயச்சார்பும்‌ தேவையுமே ஆகும்‌ என்ற கற்பிதம்‌ இன்றைய சமகாலத்திற்குத்‌ தேவைப்படுகிறது.

நிறைவுரை

சங்ககாலத்‌ தமிழ்ச்‌ சமூகம்‌ உணவு உற்பத்தியில்‌ தன்னிறைவுப்‌ பெற்ற சமூகமாகவே விளங்கிற்று என்பதற்குச்‌ சான்றுகள்‌ பல உள. சங்கத்‌ தமிழர்கள்‌ ஊன்‌ உணவை மிக விரும்பி உண்ணும்‌ பற்றாளர்கள்‌. ஊனை சமைத்து சுவைப்பட உண்டூ மகிழும்‌ அளவிற்கு சமையல்‌ நுட்பமும்‌ கருவிகளும்‌ வாய்க்கப்பெற்றவர்கள்‌. தொடர்ந்து வரும்‌ காலச்சுழற்சியால்‌ சங்கத்‌ தமிழாகளின்‌ உணவு பழக்க வழக்கங்கள்‌ சமயக்காராகளால்‌ தொடாந்து இருட்டடிப்புச்‌ செய்யப்பட்டே வந்துள்ளன. இந்நிலையில்‌ ஊன்‌ உணவு மீதான பார்வை காலந்தோறும்‌ புதிய புதிய சிக்கல்களுக்கு அடிகோலிய வண்ணம்‌ அமைந்துள்ளது. சமகாலச்‌ சூழலும்‌ பொருளாதாரம்‌, சமயம்‌, சாதி முதலான சார்புத்‌ தன்மை நோக்கில்‌ உணவு மீதான பார்வையைச்‌ செலுத்துகின்றது. அதன்‌ விளைவு பல பிற்போக்குத்தனமான செயற்பாடுகளுக்கு வழிவகுத்துக்‌ கொடுக்கின்றன. எனவே உணவு மீதான சரியான அறிவார்ந்த புரிதலை உண்டாக்குவது சமகாலத்திற்கான காலத்தேவையாக உள்ளது. 
 
துணை நின்ற நூல்கள்‌

  1. இராமியா (கட்டூரையாசிரியா்‌), சிந்தனையாளன்‌-திங்களிதழ்‌, சுவடி-43, ஏடூ-3, செப்டம்பர்‌ 2018.
  2. சுப்பிரமணியன்‌,கா. சங்ககாலச்‌ சமுதாயம்‌, நியூ செஞ்சுரி புக்‌ ஹவுஸ்‌(பி)லிட்‌., 2011.
  3. சுப்பிரமண்யன்‌.ந. சங்ககால வாழ்வியல்‌, நியூ செஞ்சுரி புக்‌ ஹவுஸ்‌(பி)லிட்‌., 2010.
  4. பாலசுந்தரம்‌,ச. தொல்காப்பியம்‌, பொருளதிகாரம்‌ தொகுதி-3, பகுதி-1, பெரியார்‌ பல்கலைக்கழகம்‌, சேலம்‌, 2012.
  5.  வித்தியானந்தன்‌.சு. தமிழா சால்பு, பாரி புத்தகப்‌ பண்ணை.