அறத்துப்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறத்துப்பால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

குறள் - அறத்துப்பால் - புதல்வரைப் பெறுதல் - 61 - 70

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்.


குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


மணக்குடவர் உரை:
ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.

பரிமேலழகர் உரை:
பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

மு. கருணாநிதி உரை:
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

Translation:
As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

Explanation:
Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.

குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.


மணக்குடவர் உரை:
எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

பரிமேலழகர் உரை:
எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். ('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.).

மு. வரதராசன் உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

மு. கருணாநிதி உரை:
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

சாலமன் பாப்பையா உரை:
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

Translation:
Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth.

Explanation:
The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

குறள் 63:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.


மணக்குடவர் உரை:
தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை: அம்மக்களுடைய பொருள் தத்தமுடைய வினையோடே கூடவருதலான்.

பரிமேலழகர் உரை:
தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள் தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம் வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை, 'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப் பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப் 'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப் பயன் கூறப்பட்டது.

மு. வரதராசன் உரை:
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

மு. கருணாநிதி உரை:
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

சாலமன் பாப்பையா உரை:
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

Translation:
'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise.

Explanation:
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.


மணக்குடவர் உரை:
இனிமையுடைத்தாகிய அமிழ்தினும் மிகவினிது, தம்முடைய மக்கள் சிறுகையாலே யளையப்பட்ட கூழ்.

பரிமேலழகர் உரை:
அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188).

மு. வரதராசன் உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

மு. கருணாநிதி உரை:
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

Translation:
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play'd.

Explanation:
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


மணக்குடவர் உரை:
தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.

பரிமேலழகர் உரை:
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.).

மு. வரதராசன் உரை:

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

மு. கருணாநிதி உரை:
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்.

Translation:
To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.

Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

குறள் 66:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.


மணக்குடவர் உரை:
குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.

பரிமேலழகர் உரை:
குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம். இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் இம்மைப் பயன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

மு. கருணாநிதி உரை:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

Translation:
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.

Explanation:
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.

குறள் 67:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


மணக்குடவர் உரை:
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.

பரிமேலழகர் உரை:
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

மு. கருணாநிதி உரை:
தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

Translation:
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.

Explanation:
WThe benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


மணக்குடவர் உரை:
தம்மக்க ளறிவுடையாரானால் அது தம்மினும் உலகத்துயிர்கட்கெல்லாம் இனிதாம்.

பரிமேலழகர் உரை:
தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

மு. கருணாநிதி உரை:
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

Translation:
Their children's wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.

Explanation:
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.

குறள் 69:


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.


மணக்குடவர் உரை:
தான்பெற்ற காலத்தினும் மிக மகிழும்; தன்மகனைச் சான்றோனென்று பிறர் சொல்லக் கேட்ட காலத்துத் தாய்.

பரிமேலழகர் உரை:
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும், 'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர் ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

மு. கருணாநிதி உரை:
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

சாலமன் பாப்பையா உரை:
தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

Translation:
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore.

Explanation:
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.

குறள் 70:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.


மணக்குடவர் உரை:
மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம் இவன் தந்தை என்ன தவஞ்செய்தானென்று உலகத்தார் சொல்லுஞ் சொல்லைப் படைத்தல். இது நெறியினொழுகுவாரை உலகத்தார் புகழ்வாராதலான், மகனும் ஒழுக்கமுடையனாக வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி - கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார் இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன் காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ் சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது).

மு. வரதராசன் உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

மு. கருணாநிதி உரை:
ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

Translation:

To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'.

Explanation:
(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.

குறள் - அறத்துப்பால் - வாழ்க்கைத் துணைநலம் - 51-60

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.


குறள் 51:

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.


மணக்குடவர் உரை:
தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

பரிமேலழகர் உரை:
மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

கலைஞர் உரை:
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

சாலமன் பாப்பையா உரை:
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

Translation:
As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

Explanation:
She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

குறள் 52:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.


மணக்குடவர் உரை:
குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

பரிமேலழகர் உரை:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.).

மு. வரதராசன் உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

கலைஞர் உரை:
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

Translation:
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.

Explanation:
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.


மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.

பரிமேலழகர் உரை:
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

கலைஞர் உரை:
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

Translation:
There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.

Explanation:
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.

குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.


மணக்குடவர் உரை:
பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

பரிமேலழகர் உரை:
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

கலைஞர் உரை:
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.

சாலமன் பாப்பையா உரை:
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.

Translation:
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain? .

Explanation:
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?.

குறள் 55:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.


மணக்குடவர் உரை:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

கலைஞர் உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.

Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.


மணக்குடவர் உரை:
தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.

பரிமேலழகர் உரை:
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

கலைஞர் உரை:
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

சாலமன் பாப்பையா உரை:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

Translation:
Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.

Explanation:
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.


மணக்குடவர் உரை:
மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

பரிமேலழகர் உரை:
மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

மு. வரதராசன் உரை:
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

கலைஞர் உரை:
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

Translation:
Of what avail is watch and ward? Honour's woman's safest guard.

Explanation:
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.

குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.


மணக்குடவர் உரை:
பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

பரிமேலழகர் உரை:
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

கலைஞர் உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

Translation:
If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.

Explanation:
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.

குறள் 59:

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.


மணக்குடவர் உரை:
புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

பரிமேலழகர் உரை:
புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

கலைஞர் உரை:
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

Translation:
Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.

Explanation:
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

குறள் 60:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.


மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.

பரிமேலழகர் உரை:
மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

கலைஞர் உரை:
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

Translation:
The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.

Explanation:
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.

குறள் - அறத்துப்பால் - இல்வாழ்க்கை - 41-50

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை.


குறள் 41:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


மணக்குடவர் உரை:
இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

பரிமேலழகர் உரை:
இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.).

மு. வரதராசன் உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

கலைஞர் உரை:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

Translation:
The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain.

Explanation:
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.

குறள் 42:

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.


மணக்குடவர் உரை:
வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்) மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:
துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.

கலைஞர் உரை:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

Translation:
To anchorites, to indigent, to those who've passed away, The man for household virtue famed is needful held and stay.

Explanation:
He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

குறள் 43:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


மணக்குடவர் உரை:
பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

பரிமேலழகர் உரை:
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், 'தென்புலத்தார'¢ என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'. 'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.).

மு. வரதராசன் உரை:
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

கலைஞர் உரை:
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

Translation:
The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity.

Explanation:
The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.

குறள் 44:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.


மணக்குடவர் உரை:
இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை. மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

பரிமேலழகர் உரை:
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் - பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.

Translation:
Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs.

Explanation:
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).

குறள் 45:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


மணக்குடவர் உரை:
இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே. பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

பரிமேலழகர் உரை:
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

கலைஞர் உரை:
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

சாலமன் பாப்பையா உரை:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

Translation:
If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain.

Explanation:
If the married life possess love and virtue, these will be both its duty and reward.

குறள் 46:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.


மணக்குடவர் உரை:
இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார.

பரிமேலழகர் உரை:
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.).

மு. வரதராசன் உரை:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

கலைஞர் உரை:
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?

Translation:
If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain?

Explanation:
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state?

குறள் 47:

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.


மணக்குடவர் உரை:
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.

பரிமேலழகர் உரை:
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.).

மு. வரதராசன் உரை:
அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.

கலைஞர் உரை:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.

Translation:
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place.

Explanation:
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.

குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.


மணக்குடவர் உரை:
பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து. ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

பரிமேலழகர் உரை:
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.).

மு. வரதராசன் உரை:
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

கலைஞர் உரை:
தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மற்றவர்களை அவர்களின் வழியில் வாழச்செய்து, தானும் அறத்திலிருந்து விலகாமல், மனைவியுடன் வாழும் வாழ்க்கை, துறவறத்தார் காட்டும் பொறுமையிலும் வலிமை மிக்கது.

Translation:
Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shines.

Explanation:
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.

குறள் 49:

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.


மணக்குடவர் உரை:
அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை:
அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது' என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன் பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

கலைஞர் உரை:
பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
அறம் என்று சிறப்பிக்கப்பட்டது, மனைவியுடன் வாழும் வாழ்க்கையே; துறவற வாழ்க்கையும், பிறரால் பழிக்கப்படாமல் இருக்குமானால் நல்லது.

Translation:
The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claim.

Explanation:
The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.


மணக்குடவர் உரை:
இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

பரிமேலழகர் உரை:
வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்).

மு. வரதராசன் உரை:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.

கலைஞர் உரை:
தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:
மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

Translation:
Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed.

Explanation:
He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.

குறள் - அறத்துப்பால் - அறன்வலியுறுத்தல்

பால்: அறத்துப்பால். இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல்.


குறள் 31:

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.


மணக்குடவர் உரை:
முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று

பரிமேலழகர் உரை:
இல்லறவியல் சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

மு. வரதராசன் உரை:
அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

கலைஞர் உரை:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?.

சாலமன் பாப்பையா உரை:
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.

Translation:
It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?

Explanation:
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess?

குறள் 32:

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை - ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை - அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. ('அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை'. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.

கலைஞர் உரை:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.

Translation:
No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.

Explanation:
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

குறள் 33:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.


மணக்குடவர் உரை:
தமக்கியலுந் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாமிடமெல்லாஞ் செய்க. இயலுந்திறமென்பது மனமொழிமெய்களும் பொருளும். செல்லும்வாய் என்பது அறஞ்செய்தற் கிடமாகிய பல விடங்களும் ஒழியாதென்றது நாடோறு மென்றது. இஃது அறம் வலி தென்றறிந்தவர்கள் இவ்வாறு செய்க வென்றது.

பரிமேலழகர் உரை:
ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுந்திறத்தான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல் - அறம் ஆகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க. (இயலுந்திறம் ஆவது - இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல், ஓவாமை, இடைவிடாமை, எய்தும் இடம் ஆவன மனம் வாக்குக் காயம் என்பன. அவற்றால் செய்யும் அறங்கள் ஆவன முறையே நற்சிந்தையும் நற்சொல்லும் நற்செயலும் என இவை. இதனான் அறஞ்செய்யும் ஆறு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

Translation:
To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thrive.

Explanation:
As much as possible, in every way, incessantly practise virtue.

குறள் 34:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.


மணக்குடவர் உரை:
ஒருவன் தன்மனத்தின்கட் குற்றமிலனாதலே எல்லாவறமுமாம்; அதில் அழுக்குண்டாயின் மேற்செய்வன வெல்லாம் ஆரவார நீர்மைய. பிறரறியவேண்டிச் செய்தானாமென்றவாறாயிற்று. மேல் நான்கு பொருளைக் கடியவேண்டுமென்றார் அவை நான்கும் மனமொன்றுந் தூயதாகப் போமென்று அதன்பின் இது கூறினார்.

பரிமேலழகர் உரை:
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் - அவ்வாற்றான் அறஞ் செய்வான் தன் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆக; அனைத்து அறன் - அவ்வளவே அறம் ஆவது; பிற ஆகுலநீர - அஃது ஒழிந்த சொல்லும் வேடமும் அறம் எனப்படா, ஆரவார நீர்மைய; (குற்றம் - தீயன சிந்தித்தல். பிறர் அறிதல் வேண்டிச் செய்கின்றன ஆகலின், 'ஆகுல நீர' என்றார். மனத்து மாசுடையான் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

கலைஞர் உரை:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

Translation:
Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claim.

Explanation:
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

குறள் 35:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


மணக்குடவர் உரை:
மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும். பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை:
அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது. (இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

கலைஞர் உரை:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.

Translation:
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

Explanation:
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

குறள் 36:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.


மணக்குடவர் உரை:
பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.

பரிமேலழகர் உரை:
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

மு. வரதராசன் உரை:
இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

கலைஞர் உரை:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Translation:
Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Explanation:
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

குறள் 37:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.


மணக்குடவர் உரை:
நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம். இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.

பரிமேலழகர் உரை:
அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னது ஆகலின் 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

மு. வரதராசன் உரை:
பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

கலைஞர் உரை:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

Translation:
Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear!

Explanation:
The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

குறள் 38:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


மணக்குடவர் உரை:
ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.

பரிமேலழகர் உரை:
வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் - அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்குங் கல்லாம். (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

மு. வரதராசன் உரை:
ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

கலைஞர் உரை:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

Translation:
If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil.

Explanation:
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

குறள் 39:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.


மணக்குடவர் உரை:
அறத்தால் வருவது யாதொன்று, அதுவே இன்பமும் புகழுமாம்; அதனாலன்றி வருவனவெல்லாந் துன்பமாம்; புகழுமிலவாம். இஃது எல்லாப் போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

பரிமேலழகர் உரை:
அறத்தான் வருவதே இன்பம் - இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பம் ஆவது; மற்று எல்லாம் புறத்த - அதனோடு பொருந்தாது வருவன எல்லாம் இன்பம் ஆயினும் துன்பத்தினிடத்த; புகழும் இல - அதுவேயும் அன்றிப் புகழும் உடைய அல்ல. ('ஆன்'  உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது, 'தூங்கு கையான் ஓங்கு நடைய' (புறநா.22) என்புழிப்போல. இன்பம் - காம நுகர்ச்சி; அஃது ஆமாறு காமத்துப்பாலின் முதற்கண் சொல்லுதும். இன்பத்தின் புறம் எனவே துன்பம் ஆயிற்று. பாவத்தான் வரும் 'பிறனில் விழைவு' முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றும் ஆயினும், பின் துன்பமாய் விளைதலின் 'புறத்த' என்றார். அறத்தோடு வாராதன 'புகழும் இல' எனவே, வருவது புகழும் உடைத்து என்பது பெற்றாம். இதனான் அறம் செய்வாரே இம்மை இன்பமும் புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.

கலைஞர் உரை:
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

சாலமன் பாப்பையா உரை:
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா.

Translation:
What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's light.

Explanation:
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

குறள் 40:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.


மணக்குடவர் உரை:
ஒருவனுக்குச் செய்யும் பகுதியது அறமே, தப்பும் பகுதியது பழியே. மேல் அறஞ் செய்யப் பிறப்பறு மென்றார், அதனோடு பாவமுஞ் செய்யின் அறாதென்றற்கு இது கூறினார்.

பரிமேலழகர் உரை:
ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.).

மு. வரதராசன் உரை:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.

கலைஞர் உரை:
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

Translation:
'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shun.

Explanation:
That is virtue which each ought to do, and that is vice which each should shun.

நாலடியார் - அறத்துப்பால்

நாலடியார் - 1.செல்வம் நிலையாமை

கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.

வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)

நூல்

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.
1

ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று.

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
2

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
3

யானையின் பிடா¢யிலே அமர்ந்து எல்லாரும் காணுமாறு குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைவராகச் சென்ற அரசர்களும், தீவினை கெடுப்பதனால், முன்னிருந்த நிலையினின்றும் வேறுபட்டு, தம் மனைவியையும் பகைவர் கவர்ந்துகொண்டு போக, வறுமையில் வீழ்வர். (நல்வினை போய், தீவினை வருமானால் அரசரும் தாழ்வடைவர். எனவே, செல்வம் உள்ளபோதே அறம் செய்க என்பதாம்.)

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
4

நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைக்கப்பட்ட பொருள்கள் நிலைத்திராது அழியும் என்று உணர்ந்து உங்களால் செய்யக்கூடிய அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்க! (ஏனெனில்) வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டேயிருக்கின்றன. எமன் கோபித்து வந்துகொண்டே யிருக்கிறான்.

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.
5

ஏதாகிலும் ஒரு பொருள் தமது கையில் சேரப் பெற்றால், முதுமைக் காலத்தில் பயன்படும் என்று அதனைப் பிடித்து வைத்திராமல் அப்பொருள் அழிவதற்கு முன்பே அறம் செய்தவர்கள் தனது தொழிலில் தவறாத கொடிய எமன், பாசக் கயிற்றால் கட்டியிழுத்துச் செல்லும் பாலை வழியினின்றும், தப்பிச் செல்வர். (அறம் செய்பவர் நரகம் புகார்; துறக்கம் எய்துவர் என்பது கருத்து.)

இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.
6

ஆயுட் காலத்தின் எல்லையைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே! அதைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை 'தழீம் தழீம்' என்னும் ஓசையுடன் எழும்

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; - ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்.
7

எமன், ஒளி மிக்க சூரியனை, 'நாழி' என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாள்தோறும் அளந்து ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருளுடையவராக ஆகுங்கள்! அப்படி காதவர் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே வர்!

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
8

நாம் செல்வம் உடையயோம்!' என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவினா¢ன் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தொ¢யாமல் அழிந்துவிடும்!

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும்.
9

ஒருவன் தான் உண்ணாதவனாய், மதிப்பை நிலை நிறுத்தாதவனாய், மிக்க புகழுக்குரிய செயல்களைச் செய்யாதவனாய், நெருங்கிய உறவினா¢ன் துன்பங்களைக் களையாதவனாய், இரப்பார்க்குக் கொடாதவனாய், வீணாகப் பொருளைக் காத்திருப்பானாயின், ஐயகோ! அவன் அந்தப் பொருளை இழந்து விட்டான் என்றே கருதப்படுவான்! (செல்வம் நிலையில்லாதது. ஆதலின் இருக்கும்போதே அதனை நன்கு பயன்படுத்தாவிடின் அந்தப் பொருள் இழந்த பொருளாகக் கருதப்படும்.)

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.
10

வானளாவிய மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனே! உடுக்காமலும் உண்ணாமலும், உடம்பு நலிவுற்ற போதும் கெடாத நல்லறம் செய்யாராகி இரவலர்க்குக் கொடாது பொருளைச் சேர்ப்பவர், அதனை இழப்பர். பல மலா¢னின்றும் கொண்டு வந்து சேர்த்து வைக்கும் தேனை இழக்கும் தேனீயானது இதற்குச் சான்றாகும்!

நாலடியார் - 2.இளமை நிலையாமை

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.
11

நல்லறிவாளர், மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு பூண்டனர்; குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன, - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
12

நட்பாகிய கயிறுகள் அற்றுப் போயின; பெண்களும் அன்பில் குறைந்தனர்; சுற்றத்தாரின் அன்பாகிய கயிறும் அவிழ்ந்து வீழ்ந்தது; மனத்திலே யோசித்துப் பார்! கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி உயிரோடு இருப்பதில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இல்லை.

சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
ஏம நெறிபடரும் ஆறு.
13

பேச முடியாது சொல் தடுமாறி, கோல் ஊன்றித் தள்ளாடும் நடையினராய்ப் பற்களும் வீழ்ந்துபட, தமது உடலைப் பிறர் பார்த்து எள்ளி நகையாடுமாறு இல்வாழ்க்கையில் பொ¢தும் ஈடுபாடு கொண்டு, சிற்றின்ப ஆசையிலே மூழ்கிக் கிடக்கும் அற்ப அறிவீனர்க்குப் போ¢ன்பமாகிய வீட்டு நெறியிலே செல்லும் வகை இல்லை.

தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
14

முதுகு வளைந்து கூனி உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தடியை ஊன்றி நடந்து தள்ளாடி வீழ்ந்து இறக்கும் நிலையில் உள்ள இவளிடத்தும், மன உறுதி யில்லாத காம மயக்கம் கொண்ட மனிதருக்கு, இவள் கையிலிருக்கும் ஊன்று கோலானது இவள் தாய்க்கு ஊன்று கோலாக இருந்த நாளில் (இவள் இளமையோடிருந்த நாளில்) மிக்க ஆசை உண்டாகியிருக்கும். (இந்தக் கிழவி இளமையோடிருந்தபோது, இவள் மீது ஆசை உண்டாகியிருக்கும் என்றதனால், இப்போது இளமையோடிருப்பவர், நாளை முதுமையடைந்து வெறுக்கத்தக்க நிலையடைவர் என்பது உணர்த்தப்பட்டது.)

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள்; - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
ஏகும் அளித்திவ் வுலகு.
15

எனக்குத் தாயாக இருந்தவள் என்னை இவ்வுலகத்தில் விட்டு விட்டுத் தனக்கொரு தாயைத் தேடிப் போனாள். (இறந்துவிட்டாள்) அப்படிப் போன என் தாய்க்குத் தாயாக இருந்த என் பாட்டியும், தனக்கொரு தாயைத் தேடிச் சென்றாள். இத் தன்மையாய் இந்த உலகம் ஒரு தாய் மற்றொரு தாயைத் தேடிக்கொண்டு செல்லும் எளிமை உடையது! (எத்தகைய இளமை அழகுடையோரும் இறந்துபடுவர் என்பது கருத்து)

வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
16

வெறியாடும் பலிக் களத்தில், வெறியாடும் பூசாரியின் கையில் கட்டியுள்ள தளிர்கள் நிறைந்த மணமுள்ள பூமாலை எதிரில் விளங்க, அது கண்ட பலி ஆடு, அந்தத் தளிரை உண்டு மகிழ்தல் போன்று, நிலையில்லாத இளமை இன்பத்தில் மகிழ்தல், அறிவுடையவா¢டத்து இல்லை!

பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.
17

இளமைப் பருவமானது, குளிர்ச்சி மிக்க சோலையில் உள்ள பயனைத் தரும் மரங்களெல்லாம், பழங்கள் உதிர்ந்து வீழ்ந்தாற்போல் ஆகும்! ஆதலால் இப்போது இப்பெண்ணை இளமை அழகுமிக்க, வேல் போன்ற கண்ணையுடையவள் என்று வியந்து, இவளிடம் மிகவும் ஆசை கொள்ளாதீர்! இந்த இளம் பெண்ணும் ஒரு காலத்தில் முதுகு வளைந்து கூனியாகி, கோலாகிய கண்ணையுடையவளாவாள்! (கனிகள் உதிர்ந்த மரம் விரும்பத் தகாததாகி விடும். அதுபோல இளமை கழிந்த உடலும் விரும்பத் தகாததாம். முதுமையில் பார்வை குறைவதால் கோலைத் தட்டி வழி கண்டு செல்வாள் என்பதை உணர்த்த 'கோல் கண்ணள்' என்றார்.)

பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.
18

வயது எத்தனை ஆயிற்று? பல்லின் நிலைமை என்ன? ஆடாது இருக்கிறதா? இரு புறங்களிலும் மென்று தின்ன முடிகிறதா?' என்று வயதானவர் நிலையைக் கேட்டறிவதால், அறிவுடையோர், இளமையின் உடல் வலிமையை நிலையானது என்று கருதமாட்டார்கள்.

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
19

நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு. (பெருங்காற்று வீசும்போது பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல, வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டு. ஆதலால் இப்போது இன்பங்களை அனுபவித்து, வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பது கருத்து)

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
20

ஆயுள் முடியும் ஆளைத் தேடிக்கொண்டு திரிகின்ற, அருள் இல்லாத எமன் என ஒருவன் இருப்பதால் (மறுமைப் பயணத்துக்கு வேண்டிய) தோளில் சுமக்கத்தக்க கட்டுச் சோற்றை (புண்ணியத்தை) தக்க காலத்தில் தேடிப் பிழைத்துக்கொள்ளுங்கள்! வயிற்றில் இருக்கும் கருவை வெளிப்படச் செய்து, தாய் அலறி அழுமாறு பிள்ளையைக் கொண்டு போவதால், அந்த எமனுடைய வஞ்சனையை அறிந்து நல்வினை செய்தல் நல்லது!

நாலடியார் - 3.யாக்கை நிலையாமை

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
21

மலையின் மீது காணப்படும் சந்திரனைப் போல, யானைத் தலையின் மீது பிடித்த குடையுடைய அரசர்களும், உலகில் இறந்தனர் என இகழப்பட்டார்களே அல்லாமல், இவ்வுலகில் இறவாது எஞ்சி இருந்தவர் யாரும் இல்லை. (மன்னாதி மன்னர்களும் மாண்டனர் என்றதனால் யாக்கை நிலையாமை உணர்த்தப்பட்டது.)

வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
22

உயிரோடு வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் உதயமாதலால், ஆயுள் கெடா முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். (சூரியன் தோன்றுவது - ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இருத்தலால், வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது கருத்து.)


மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
23

திருமண மண்டபம் முழங்க மண வாத்தியமாக நின்றவை, அன்றைக்கே, அங்கேயே அந்த மனிதர்க்குப் பிணப்பறையாய் ஒலித்தலும் உண்டு என நினைத்து, மாட்சிமையுடையோர் மனமானது, பிறவிப் பிணியினின்று நீங்கும் வழியையே உறுதியாய்ப் பற்றியிருக்கும்.

சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
24

(பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிப்பதற்குள் சாகப் போகிறவர்கள், செத்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்பை எடுத்துக்கொண்டு சுடுகாட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்வர். (எனவே யாக்கை நிலையாமையை நன்கு யோசித்துப் பார்!)

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
25

கூட்டமாகக் கூடி உறவினர் கூவி அழ, பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டில் இடுபவரைப் பார்த்தும், திருமணம் செய்துகொண்டு, இவ்வுலகில் நிச்சயமாய் 'இன்பம் உண்டு, இன்பம் உண்டு' என்று மயங்குபவனுக்கு, 'டொண் டொண் டொண்' என ஒலிக்கும் சாப்பறையானது, இவ்வுலக வாழ்க்கையில் இத்தகைய இன்பம் இல்லை (யாக்கை நிலையில்லை) என்னும் உண்மையை உரைக்கும்!

நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
26

தோல் பையாகிய உடம்பிலிருந்து, தான் செய்ய வேண்டிய தொழில்களை முழுமையாகச் செய்து, அப்பயனைத் தானே அனுபவிக்கின்ற கூத்தாடியாகிய உயிர் உடலைவிட்டு அப்புறம் சென்றால், பின் அவ்வுடலைக் கயிற்றால் கட்டியிழுத்தால்தான் என்ன? நன்றாகச் சுத்தம் செய்து அடக்கம் செய்தால் தான் என்ன? கண்ட இடத்திலே போட்டால்தான் என்ன? பலரும் பழித்தால்தான் என்ன? (ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதும் உயிர்தான்; அந்தச் செயலின் பயனை அனுபவிப்பதும் உயிர்தான். அத்தகைய உயிர் இருக்கும்போது மேலான செயல்களைச் செய்க! என்பதாம். ஒவ்வொரு நேரமும் வெவ்வேறு சிந்தனைகளை, செயல்களையுடையதால் உயிரைக் கூத்தன் என்றார்.)

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.
27

வீழ்கின்ற மழை நீரிலே தோன்றும் குமிழிபோலப் பலமுறை தோன்றி அழியும் ஒருவகைப் பொருள் இந்த உடம்பு எனக் கருதி, இப்பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்வோம் நாம் என்று உணர்ந்து, அதற்கான அறங்களைச் செய்யும் உறுதியான நல் ஞான முள்ளவரை இப்பொ¢ய உலகில் ஒத்திருப்பவர் யார்? ஒருவரும் இல்லை!

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க; - யாக்கை
மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
28

உடம்பை உறுதியுடையதாக முன் செய்த நல்வினைப் பயனால் பெற்றவர், அதனால் ஆகும் பயனான நற்காரியங்களைச் செய்வாராக! ஏனெனில் மலை மீது உலாவும் மேகம்போல் காணப்பட்டு நிலை பெறாது இவ்வுடல் அழிந்துவிடும்

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
29

ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!


கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
30

மனிதர்கள் 'வரட்டுமா' என்று கேளாமல் வந்து உறவினராய் ஒரு வீட்டில் பிறந்து பின், தாம் வாழ்ந்த கூடு மரத்திலே கிடக்கத் தூரத்தே பறந்து செல்லும் பறவைகளைப் போலச் சுற்றத்தாரிடம் உடம்பை விட்டு விட்டுப் பேசாமல் இறந்து போவார்கள். ('குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு' என்பது குறள்.)

நாலடியார் - 4.அறன் வலியுறுத்தல்

அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
31

(அதற்கும் முன் பிறப்பில் தவம் செய்யாத காரணத்தால்) முற்பிறப்பில் தவம் செய்யாதவர், 'இவ்வீட்டில் உள்ளவர்களே சிறப்புடன் வாழ்பவராவர்! என்று கருதி உயர்ந்தோங்கி நிற்கும் ஒரு வீட்டை அண்ணாந்து நோக்கி, உள்ளே போக முடியாதவராகி, தலை வாயிலைப் பிடித்துக்கொண்டு மிக வருந்தியிருப்பர். (முற்பிறப்பில் தவம் செய்யாதவர் என்றதனால், அதற்கு முன் பிறப்பிலும் அவர் தவம் செய்யாதவர் என்பது கருத்து. 'தவமும் தவமுடையார்க்கு ஆகும்' என்பது திருக்குறள்.)

ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.
32

செல்வத்தை விரும்பி அதனைப் பெருக்கிப் பெருஞ்செல்அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! வராவோம் என்றெண்ணி ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், உன் வாழ் நாட்கள் ஒழிந்தன! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்ததனைத்
தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
எல்லை இகந்தொருவு வார்.
33

அறிவில்லாதவன், முன் செய்த தீவினை இப்போது வந்து பயனைத் தந்து துன்புறுத்தும்போது பெருமூச்சு விட்டு மனம் வருந்துவான். அத்தீவினைப் பயனை நினைத்துப் பார்த்து, இது முற்பிறப்பின் பாவத்தால் நேர்ந்தது என்று உணர்ந்து அதனை ஏற்று அமைதியாக அனுபவிக்கும் அறிவுடையோர் பிறவித் துன்பத்தின் எல்லையைக் கடந்து நீங்குவர்.

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
34

பெறுதற்கு அரிய இம்மனித உடம்பை (இம் மனிதப் பிறவியை) புண்ணியப் பயனால் பெற்றிருக்கிறோம். அப்படிப் பெற்றதைக் கொண்டு சிறந்த புண்ணியத்தை மேலும் மிகுதியாகத் தேடிக்கொள்ள வேண்டும். அப்புண்ணியம், கரும்பிலிருந்து உண்டான சாறுபோல், உயிருக்குப் பொ¢தும் உதவும். அக்கரும்பின் சக்கை போல் உடம்பு பயனற்றதாய் அழிந்து போகும்!


கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
35

கரும்பை ஆலையில் ஆட்டி அதன் சாற்றினால் ஆகிய வெல்லக் கட்டியை நல்ல பதத்திலே கொண்டவர்கள். அந்தக் கரும்பின் சக்கை தீப்பற்றி எரியும்போது துன்புறமாட்டார்கள். அதுபோல, முயன்று நல்லறம் செய்து பிறவிப் பயனைப் பெற்றவர் எமன் வரும்போது துன்பமடையார்.


இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
36

இறப்பு இன்று வருமோ அன்று வருமோ என்று வருமோ என்று நினையாமல், எமன் பின் புறத்திலேயே நிற்கிறான் என எண்ணித் தீய செயல்களை விட்டு விடுங்கள். முடிந்த அளவு மாண்புடையார் போற்றிய அறத்தைச் செய்யுங்கள். (இன்று, அன்று, என்று என்பன இளமைக் காலத்தையும், முதுமைக் காலத்தையும் இடைக் காலத்தையும் உணர்த்தின. ஒல்லும் வகை - இல்லறத்தைப் பொருள் நிலைக்கு ஏற்பவும், துறவறத்தை உடல் நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளல்.)


மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
37

மக்கட் பிறவியால் செய்யத்தக்க நற்செயல்களைப் பற்றி எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அவை மிகப் பலவாம். அப்படியிருக்க, எலும்பும், தோலும், சதையும், இரத்தமும் கூடிய இந்த உடம்புக்கே உதவி செய்து வாழ்ந்து கொண்டிராமல் மறுமை இன்பங்களை நுகர்தற்கேற்ற நல்லறங்களைச் செய்ய வேண்டும்.

உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
38

(விரலால் கிள்ளி எடுக்கும் அளவுள்ளதான) மிகச்சிறிய ஆலம் விதை, வளர்ந்து ஓங்கித் தழைத்து மிக்க நிழலைத் தருவதுபோல, அறப்பொருள் மிகச்சிறியதாயினும் அது தகுதியுடையவர் கையில் சேர்ந்தால், அதன் பயன் வானினும் பொ¢தாக விளங்கும் (வான் சிறிதா-வானினும் பொ¢தாக)


வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
39

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள் தோறும் நாள் கழிதலை அறியாதவர், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக் கழிவதை உணராது, அது 'நிலையாக இருக்கிறது' என நினைத்து இன்புறுவர். (இதனால் ஒவ்வொரு நாளும் கழிதற்கு முன் நல்லறம் செய்ய வேண்டும் என வற்புறுத்தப்பட்டது)


மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
40

இழிவான காரியத்தைச் செய்து உணவு ஊட்டுவதனாலும் உறுதியுடன் கூடி இவ்வுடம்பு நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பது உண்மையானால் மானம் என்னும் சிறந்த அணிநலனைக் களைந்தெறிந்து விட்டு உயிர்வாழ்வேன் (எப்படி ஊட்டினாலும் இந்த உடம்பு அழியக் கூடியதே

 நாலடியார் - 5.தூய் தன்மை

மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
41

மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று மாதரை நோக்கிப் பிதற்றும் அறிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு கோல் வேண்டும். (அறிவுடையோர் என்பது எள்ளல் குறிப்பு.)


தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.
42

தோலாகிய போர்வையின் மீதும் துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வையினால், பெருமையுடையதாக இருக்கிறது இவ்வுடம்பு! அப்படி ஆதலால், மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.)


தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
43

எப்பொழுதும் உண்ணும் தொழில், உடம்பின் உள்ளே அழுக்கை மிகுவிக்கும் என்று உணர்ந்து பொ¢யோர் விலக்கிவிட்ட ஆசை என்னும் மயக்கத்தைத் தரும் உடம்பின் அழுக்கு (கெட்ட நாற்றம்) வால்மிளகு, வெற்றிலை, பாக்கு முதலான வாசனைப் பொருள்களை வாயிலிட்டு மென்று தின்று, தலை நிறைய மணமலர் சூடிச் செயற்கையாக அலங்கா¢த்துக் கொள்வதால் ஒழியுமா? ஒழியாது!


தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
44

உள்ளே இருக்கும் நீரை நீக்கிவிட்டால், பனை நுங்கைத் தோண்டியெடுத்தாற் போல் காணப்படும் கண்ணின் இயல்பை அறிந்து, பற்றற்று நடக்கும் நான், மகளிரின் கண்களைத் தெளிந்த நீரிலே உள்ள குவளை மலர்கள் என்றும், புரளும் கயல்மீன்கள் என்றும், வேற்படை என்றும் கூறி அறிவுக் கண் இல்லாத அற்ப மனிதர்கள் எனது மனத்தைத் துன்புறுத்தவிடுவேனா? (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா? விடமாட்டேன்.)

முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
45

எல்லோரும் காணுமாறு சுடுகாட்டில் உதிர்ந்து சிந்திக்கிடக்கின்ற பல்லாகிய எலும்புகளைப் பார்த்துப் பற்றற்று ஒழுகும் நான், மகளிரின் பற்களை முல்லை அரும்புகள் என்றும், முத்துக்கள் என்றும் கூறிப் பிதற்றும் மேலான நூலறிவு அற்ற கீழ் மக்கள் எனது உள்ளத்தைத் துன்புறுத்த விடுவேனா? (ஒழுக்கத்தை விட்டு விடுவேனா? விடமாட்டேன்.)

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
46

குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் கிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்? (இத்தகைய பொருள்களின் சேர்க்கையான உடம்பில் பற்று வைத்து அறத்தை விடக் கூடாது என்பது கருத்து

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
47

அழுக்குகள் ஊறி, வெறுக்கத்தக்க ஒன்பது துளைகளையுடைய புலன்கள் வழியாக அவ்வழுக்குக் குழம்பை வெளிப்படுத்தும் உடலாகிய ஒரு குடத்தைப் பார்த்து அறிவில்லாத ஒருவன், மேலே போர்த்திருக்கும் அழகான தோலினால் கண்கள் கவரப்பட்டு, 'பெருத்த தோளையுடையவளே! வளையல்களை அணிந்தவளே! என்று பிதற்றுவான்! (அறிவிலான் உடம்பின் புற அழகைக் கண்டு மயங்குவான்!)

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
முடைச்சாகாடு அச்சிற்று உழி.
48

உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவர்கள் அதன்மேல் பூசப்படும் சந்தனத்தையும், அணியப் பெறும் மலர் மாலையையும் கண்டு பாராட்டுகின்றனர். அவர்கள், முடை நாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அதன் அச்சாகிய உயிர் முறிந்தபின் பெண்ணும் ஆணுமான வலிமை மிக்க கழுகுகள் நெருங்கிக் கூடிப் புரட்டிக் குத்தித் தின்பதைப் பார்க்கவில்லை போலும்!


கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.
49

இறந்தவர்களுடைய, சுடுகாட்டில், எரிக்கப்பட்ட தலைகள், பார்த்தவர் மனம் அஞ்சுமாறு, பள்ளமாய் ஆழ்ந்திருக்கின்ற கண்களையுடையனவாகத் தோன்றி, இறவாதிருக்கும் மற்றவரைப் பார்த்து, ஏளனமாக, மிகவும் சிரித்து, 'இவ்வுடம்பின் தன்மை இப்படிப்பட்டது! எனவே அறத்தைப் போற்றி நன்னெறியில் நில்லுங்கள்!' என்று கூறும் போலும்!


உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.
50

இறந்தவரது மண்டை ஓடுகள், கண்டார் அஞ்சும்படி நகைத்து, இல்லறத்தில் இறுமாந்து கிடப்பவருடைய குற்றத்தைப் போக்கும், மயக்கமாகிய அக்குற்றத்தினின்றும் நீங்கியவர்கள், உண்மையை உணர்ந்து, இத்தகையதுதான் இவ்வுடம்பின் இயல்பு என்று நினைப்பதால், தமது உடம்பை ஒரு பொருளாக மதிப்பதில்லை!

 நாலடியார் - 6.துறவு

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
51

விளக்கொளி வர, அங்கே இருந்த இருள் அகல்வது போல, ஒருவன் செய்த தவத்தின் முன்னே பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, இருள் பரவுவது போல் நல்வினை நீங்குமிடத்துப் பாவம் நிலைத்து நிற்கும்


நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
52

நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என ஞான நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு திரியும் பித்தரைவிட அறிவில்லாதவர் உலகில் இல்லை!


இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.
53

இல்லற வாழ்வு, இளமை, மிக்க அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என்று கூறப்படும் இவையெல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போதலை அறிந்து, சான்றோர்கள் தாம் கடைத்தேறும் வழியை மேற்கொண்டு காலம் தாழ்த்தாது இருவகைப் பற்றையும் துறப்பர்.


துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.
54

அறிவில்லாதவர், பல நாட்கள் துன்பத்தால் வருந்தினாலும் ஒரு நாள் கிடைக்கும் அற்ப இன்பத்தையே விரும்புவர். கல்வி கேள்விகளால் நிறைந்த சான்றோர், இன்பத்தின் நிலையற்ற தன்மையையும் அதனால் நேரும் துன்பத்தையும் உணர்ந்து இல்லறத்தின் நீங்கினர். (துறவறத்தை மேற்கொண்டனர்).


கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
பிணியோடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.
55

இளமைப் பருவமும் வீணாகக் கழிந்துவிட்டது. இப்பொழுதே நோயும் முதுமையும் வந்து சேரும்; ஆதலால் துணிவுடன், என்னோடு ஆராயாது புலன்வழி செல்லும் மனமே! நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் வருவாயாக! (புலன் வழி செல்லாது அறிவுவழி செல்வாயாக! என ஆத்மா, மனத்தை நோக்கிக் கூறியது இது.)


மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
பூண்டான் கழித்தற்கு அருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
56

மாட்சிமைப்பட்ட குணங்களும், பிள்ளைப் பேறும் மனைவியிடம் இல்லாவிட்டாலும், மணம் செய்து கொண்ட கணவன் அவளை விட்டுவிட முடியாது! எனவே திருமணம் என்பது ஒருவன் தானே மேற்கொண்ட துன்பம் ஆகும். ஆதலால்தான் மேலான ஒழுக்க நூல்களிலே உள்ள கருத்துக்களைக் கற்றுணர்ந்த ஞானிகள் 'திருமணம் செய்து கொள்ளாதீர்!' என்றனர்.


ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
57

முயற்சியுடன் தாம் மேற்கொண்ட விரதங்களும் (தவங்களும்) உள்ளமும் சிதையுமாறு, தடுக்க முடியாத துன்பங்கள் வந்தபோதும், எப்படியாவது அத்துன்பங்களை விலக்கித் தம் விரதங்களை நிலை நிறுத்தும் மன வலிமை மிக்கவரே துறவற ஒழுக்கத்தைக் காக்கும் சிறப்புடையவராவர். (நல்ல துறவிகளாவர்.)

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
58

பிறர் தம்மைப் பழித்துப் பேசியதைப் பொறுத்துக்கொள்வதல்லாமல், 'இவர்கள் எம்மை இகழ்ந்த தீவினைப் பயனால் மறுமையில் எரியும் நரகத்தில் வீழ்ந்து துன்புறுவார்களே!' என்று இரங்குவதும் துறவிகளின் கடமையாகும். திருவத்தவர் - சிறப்பினை உடையவர். (மேல்பாட்டில் துறவிகளின் பொறையுடைமையும், இப்பாட்டில் அவர்தம் அருளுடைமையும் கூறப்பட்டுள்ளன.)

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.
59

மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான். (ஐம்புலன்களை அடக்கி ஆள்பவனே வீடு பேறு அடைவான்.)

துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.
60

அறிவிலாதார், வாழ்க்கையில் துன்பமே மிகுதியாக வருதலைக் கண்டும், துறத்தலை நினையாதவராய்ச் சிறிதளவாகிய இன்பத்தையே விரும்பியிருப்பர்! ஆனால் அறிவுடையவரோ அச்சிறிதளவு இன்பம் கிடைக்கும் போதெல்லாம் அதனைத் தொடர்ந்து வரும் துன்பத்தைக் கண்டு அச்சிற்றின்பத்தை விரும்பார்.

நாலடியார் - 7.சினம் இன்மை

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
61

தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
62

ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர், சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தைப் பொறுத்துத் தாங்காமல், அழியாச் சிறப்புடைய இனிய உயிரை விடுவரோ? (மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். முந்திக்குரிய உயிர் ஆதலின் அழியா உயிர் என்றார்).

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
63

ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும் ஆதலால், ஓயாது ஆராய்ந்தறிந்த அறிவையும், கேள்வி ஞானத்தையும் உடைய சான்றோர், எப்போதும் சினம் கொண்டு கடுமையான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பிறர் மீது சினம் கொண்டு தாக்கும் கடுஞ்சொற்கள் திருப்பித் தம்மையே தாக்கும். ஆதலால் ஞானிகள் கடுமையான சொற்களைச் சொல்ல மாட்டார்கள்).

நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
64

மேலோர், தமக்கு நிகா¢ல்லாதவர் தம்மை எதிர்த்து நன்மையற்ற தீய சொற்களைச் சொன்னால், அதற்காக மனம் புழுங்கிச் சினம் கொள்ளார். ஆனால் கீழ்மக்களோ, பிறர் கூறும் இழி சொற்களையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறா¢டம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் சினம் அடைந்து ஆற்றாது துள்ளிக் குதித்து தூணில் முட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர்.

இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
65

வாலிபப் பருவம் உடையவனது புலனடக்கமே அடக்கம் எனப்படும். நிறைந்த பொருள் இல்லாதவனது கொடையே பயனுள்ள கொடையாம். அவை போல, எல்லா எதிர்ப்புகளையும், வெல்லத்தக்க உடல் வலிமையும், உள்ள உறுதியும் உடையவன், சினத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமை ஆகும்.

கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
66

மந்திரித்து இட்ட திருநீற்றினால் உடனே சீற்றம் தணிந்து படம் அடங்கும் பாம்பைப் போல, தங்கள் உயர்குலப் பெருமையால் தடைசெய்யப்பட்டு, கல்லால் எறிந்தது போல் கீழ் மக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை, யாவரும் காண, பொ¢யோர் சினம் கொள்ளாது பொறுத்துக்கொண்டு நல்லொழுக்க நெறியிலே தமது அறிவைச் செலுத்துவர்.

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
67

பகைவராக நின்று அப்பகைமைப் பண்புக்கேற்பக் காரியங்களைச் செய்யும்போது, தாமும் எதிர்த்துப் பகைமை கொள்ளாதவருடைய பொறுமையை, 'இயலாமையாகிய பலவீனம்' என்று கூறமாட்டார்கள், அறிஞர்கள். அப்பகைவர், தம் தீமையை அடக்கிக் கொள்ளாது மேலும் கொடுமைகள் செய்தாலும் தாம் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்யாதிருத்தல் நல்லது.

நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
68

கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது மேன்மேல் வளரும். ஆனால் புகழ் பெற்ற மேன் மக்களின் சினமானது, சுட வைக்கும் போது தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானாகவே தணியும். (இயல்பில் குளிர்ச்சியும், பிறர் சுடவைத்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பொ¢யோர் குணத்திற்கும் உண்டு. பிறர் துன்புறுத்தும் வரை உள்ளம் சினம் கொண்டாலும், பிறர்க்கு யாதொரு துன்பமும் செய்யாது அச்சினம் தானே தணியும் என்பது கருத்து).

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
69

தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவா¢டம் இல்லை.

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
70

சினம் கொண்டு நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், அதற்குப் பதிலாகத் தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை! அதுபோல, தகுதியின்றி, கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ? சொல்லமாட்டார்கள்.

நாலடியார் - 8.பொறையுடைமை

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
71

மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
72

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்குரிய செயலாகக் கொள்ளாது; பழிக்குரிய செயலாகக் கருதும்.

காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ - போதெல்லாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
ஆவ தறிவார்ப் பெறின்.
73

மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள் ஒலிக்கும் குளிர்ச்சி பொருந்திய கடற்கரையையுடைய வேந்தனே! நமக்கு நன்மை தருவதை ஆராய்ந்து சொல்லும் அறிஞரை உறுதுணையாகப் பெற்றால், அவர்கள் நம் மீது அன்பு கொண்டு கூறும் கடுமையான சொல்லானது, அயலார் மகிழ்ந்து கூறும் இனிமையான சொல்லினும் தீதாகுமா? ஆகாது. (ஏதிலார் என்பதற்குப் 'பகைவர்' எனப் பொருள் கொண்டு, உள்ளத்தில் பகையுணர்வுடன், அதை மறைக்க முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுபவா¢ன் இன்சொல்லைப் போல், அன்புடையார் கடுஞ்சொல் தீதாகுமோ? எனவும் பொருள் கொள்ளலாம்.)

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
74

அறிய வேண்டிய நன்மை தீமைகளை அறிந்து, அடக்கமுடையவராகி, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அஞ்சி, செய்வதை உலகம் மகிழுமாறு செய்து, அறநெறியில் வந்த பொருளால் மகிழ்ந்து வாழும் இயல்புடையவர் எக்காலத்தும் துன்புற்று வாழ்தல் இல்லை. (நன்மை தீமைகளை அறிந்து தீமைக்கு அஞ்சி உலகம் மகிழ வாழும் அடக்கமுடையவர் துன்புறுதல் இல்லை.)

வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.
75

மனவேற்றுமை சிறிதும் இன்றி இருவர் நண்பரான பிறகு, தகாத ஒழுக்கம் ஒருவனிடம் உண்டானால் அதனை மற்றொருவன் பொறுக்கக் கூடிய அளவு பொறுத்துக் கொள்க! பொறுக்கமுடியாமற் போனால் பிறர் அறிய அவனது குற்றத்தை வெளிப்படுத்திப் பழிக்காமல் அவன் நட்பை விட்டு விடுக. (நண்பா¢டையே மன வேறுபாடு தோன்றினால் விலகிவிட வேண்டுமேதவிர, பழி தூற்றித் திரியக்கூடாது. குறிப்பு : விட்டு நீங்குதல் என்பது இறுதி நிலை ஆதலால், இப்பாடல், அடுத்த இரு பாடல்களுக்குப் பின் அமைதல் நன்று).

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது.
76

காடுகள் நிறைந்த நாட்டையுடைய மன்னனே! நண்பர்கள் நமக்குத் தீமைகள் செய்தாலும் அவை நன்மையாகக் கடவது என்று நினைத்து, வினைப்பயன் என எண்ணித் தன்னையே தான் வெறுப்பதல்லாமல், நெருங்கி மனம் ஒன்றிப் பழகியவரை விட்டு விடாதே! சேர்ந்தபின் பிரிதல் விலங்கினிடத்தும் இல்லை! (பிறர் செய்யும் தீமையும் நாம் பொறுக்கும் தன்மையால் அவர் மனமாற்றத்துக்குக் காரணமாதல் கூடும். ஆதலால் 'விட்டு விலகாதே' என்றார்).

பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்ப என்றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
நல்லசெய் வார்க்குத் தமர்.
77

ஓல்' என ஒலிக்கும் அருவிகளைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டின் வேந்தனே! பொ¢யோர்களின் மேன்மையான நட்பைக் கொள்ளுதல், தாங்கள் செய்த அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுத்துக்கொள்வார்கள் அல்லவா? எப்போதும் நல்ல செயல்களைச் செய்பவர்க்கு நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா? கிடைப்பார்கள். (பழகியவர் பிழையைப் பொறுத்தலே உயர்ந்த நட்பாம்).

வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
துறக்கும் துணிவிலா தார்.
78

உடல்வற்றித் துரும்பு ஒத்த நிலை எய்துமாறு பசி வந்தாலும், உதவி செய்யும் பண்பு இல்லாதவா¢டம் சென்று வறுமையைச் சொல்லாதீர்! உயிரை விடும் துணிவில்லாதவர், உதவி செய்யும் பண்புடையவா¢டம் மட்டும் தமது வறுமைபற்றியுரைப்பர். (பசித் துன்பத்தைப் பொறுத்து, உழைத்து வாழ வேண்டுமே தவிர, பிறர் உதவிகேட்டு வாழ்தல் சிறப்பன்று என்பது பொருள்).

இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
பழியாகா ஆறே தலை.
79

இன்பம் தந்த செயலிலே தாழ்வு நேர்ந்தாலும் இன்பத்தையே கருதி, அவ்வின்பத்திலேயே நிலைத்திருக்கும் உனக்கு இன்பம் இடையறாது பெருகுவதைக் கண்டாலும், நீ பழியுண்டாகாத செயலைச் செய்வதுதான் சிறந்ததாகும். (ஒரு செயலைச் செய்யும்போது அதில் இன்பம் உண்டாவதோடு தாழ்வும் பழியும் உண்டானால், அச்செயலை விட்டு விட வேண்டும்).

தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோடு இடைமிடைந்த சொல்.
80

தான் கெட்டாலும் தக்கார்க்குக் கேடு செய்ய எண்ணாதிருப்பாயாக! தனது உடலில் உள்ள சதை முழுதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாதவா¢டத்து உணவை உண்ணாதிருப்பாயாக! வானம் மூடிய இந்த உலகம் எல்லாம் பெறுவதாயினும் பொய் கலந்த சொற்களைச் சொல்லாதிருப்பாயாக!

நாலடியார் - 9.பிறர்மனை நயவாமை

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் - நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.
81

காமத்தால் வரும் அச்சம் பொ¢து! அந்த அச்சத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது பெறும் இன்பம் சிறிதே! யோசித்துப் பார்த்தால் அரசனால் கொலைத் தண்டனையும் உண்டு! எந்நாளும் நரக வேதனையை அடைதற்குரிய மிக்க பாவச் செயலாகும் அது! ஆதலால் நாணம் உடையவர்கள் பிறன் மனைவியை விரும்பாதிருப்பாராக!

அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.
82

புண்ணியம், புகழ், தக்கோர் நட்பு, பெருமை ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் சேரமாட்டா, மாறாகப் பகை, பழி, பாவம், அச்சம் ஆகிய இந்நான்கும் பிறன் மனைவியை விரும்புபவா¢டத்தில் வந்து சேரும்.

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
83

பிறர் மனைவியை நாடி அவள் வீட்டிற்குள் புகும்போது அச்சம்; திரும்பி வெளியே வரும்போது அச்சம்; இன்பம் நுகரும்போது அச்சம்; பிறர் அறியாமல் காப்பதில் அச்சம்; இவ்வாறு எப்போதும் அச்சம்; இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது ஒருவன் பிறன் மனைவியை விரும்புவது என்ன பயன் கருதியோ?

காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.
84

அயலார் கண்டால் தன் குலத்திற்குப் பழிப்பாகும்; கையில் அகப்பட்டால் கால் முறியும்; ஆண்மையற்ற இப்பிறர்மனை புகுதலைச் செய்யின் அச்சம் தோன்றும்; பின் நரகமாகிய துன்பத்தைத் தரும்! எனவே தீய ஒழுக்கம் உடையவனே! நீ இதில் கண்ட இன்பம் எவ்வளவு? எனக்குச் சொல்!

செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
85

சிறிதும் நல்லொழுக்கம் இன்றிச் சிற்றினம் சேர்ந்து, அழகிய கோலம் எழுதப் பெற்ற கொங்கைகளையுடையவளின் தோளைச் சேர விரும்பி, முற்பிறப்பில் தமது வலிமையால் பிறர் மனைவியிடம் சென்றவரே, இப்பிறப்பில் அலித் தன்மையுடையவராய்க் கூத்தாடி உண்டு வாழ்வர்.

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க - மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.
86

பலரும் அறியுமாறு மண முரசு கொட்டி, நல்ல நாளிலே திருமணம் செய்து கொண்டு, தன் காவலிற் புகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த அன்புடைய மனைவி வீட்டில் இருக்க, ஏன் ஒருவன் பிறர் மனையாளைக் கெட்ட எண்ணத்துடன் நோக்குகிறான்? (தன் மனைவி வீட்டில் இருக்கப் பிறன் மனைவியை நாடுதல் குற்றமாகும்; தன் மனைவிக்குச் செய்யும் துரோகமாகும்).

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்னது உடைத்து.
87

அயலார் பழித்துரைக்க, சுற்றத்தார் பயந்து வருந்தி நிற்க, அயலான் மனைவியைத் தழுவி மகிழ்ச்சியுற்ற, யாவராலும் நம்பத்தக்க இயல்பு இல்லாத மனத்தையுடையவனது காம நுகர்ச்சி, பாம்பின் தலையை நக்கியது போன்ற தன்மையுடையது! (பிறர் மனைவியை விரும்புதல் பாம்பின் தலையைத் தொடுவது போன்ற ஆபத்தானது).

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.
88

காமநோய் கொடியது! ஆயினும் அந்நோய் மனவலிமை மிக்கவா¢டம் வளராது; ஒருகால் வளர்ந்தாலும் வெளிப்படாது; அப்படி ஒருகால் வெளிப்பட்டாலும் அயல் மாந்தா¢டம் செல்லாது! பலருக்கும் நாண வேண்டியிருப்பதால் மனவலிமை மிக்க அவர்தம் காம உணர்வு சிறிதும் தோன்றாது உள்ளேயே தணிந்து ஆறிவிடும்.

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.
89

அம்பும், தீயும், ஒளிவீசும் கதிர்களையுடைய சூரியனும் வெப்பத்துடன் சுட்டாலும், உடம்பை மட்டுமே சுடும். ஆனால் காமமானது வெப்பமாகி மனத்தை வருத்திச் சுடுதலால், அந்த அம்பு முதலியவற்றைக் காட்டிலும் அஞ்சத்தக்கதாம்.

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
90

ஊர் நடுவே பற்றிக் கொண்ட செந்தழலுக்கு, அருகில் இருக்கும் நீருள் மூழ்கியும் தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் நீருள் மூழ்கினாலும் காமம் சுடும்; மலைமீது ஏறி ஒளிந்துகொண்டாலும் அது சுட்டு எரிக்கும்!

நாலடியார் - 10.ஈகை

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.
91

பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.
92

எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகியிருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.
93

பிறருக்குக் கொடுத்துத் தானும் அனுபவித்தாலும் பொருள் சேரும் காலத்தில் சேரும். (நம்மிடத்தில் பொருளைச் சேர்த்த) நல்வினை தொலைந்தபோது, அப் பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கிவிடும். (இந்த உண்மையை அறியாதவர்) வறுமையால் வாடி வருந்தித் தம் உதவி நாடி வந்தவா¢ன் துயரைப் போக்க மாட்டார்கள் (அறிந்தவர்கள் பிறர் துன்பம் களைவர் என்பது கருத்து).

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.
94

ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.
95

மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறா¢டம் சென்று பிச்சை எடுக்காமல் இருத்தல், கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது. (வறுமையால் பிறருக்கு ஒன்றும் தர முடியாவிட்டாலும் பிறா¢டம் பிச்சை கேட்காமல் இருத்தல் மிக நன்று).

நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
96

பலரும் தம்மை விரும்புமாறு வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், ஊர் நடுவிலே மேடையால் சூழப்பட்ட பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர், தன் குடும்பம் வளமுடையதாயிருக்கும் போதும் பிறர்க்குக் கொடுத்துத் தான் உண்ணாத மாக்கள் சுடு காட்டில் உள்ள ஆண் பனை மரமே ஆவர். (ஊர் நடுவில் பழம் தரும் பெண் பனையும் இருந்து, அதைச் சுற்றிலும் திண்ணையும் இருந்தால், பலரும் வந்து பழத்தைப் பறித்துத் திண்ணையில் அமர்ந்து உண்பர். அதுபோலச் செல்வர் தம்மை அடைந்தவர்க்கு உண்ண உணவும், இருக்க இடமும் தருவர். செல்வம் பெருகியிருந்தும் யாருக்கும் கொடாதவர் அனைவராலும் வெறுக்கத்தக்க சுடுகாட்டில் உள்ள ஆண் பனை போல்வர்).

பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யு மாறு.
97

கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை மலர்கள் போக்கும் அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய அரசனே! பருவ மழை தவறியபோதும், உலகில் உள்ள உயர்ந்தோர் செய்யத்தக்க உதவிகளைப் பிறருக்குச் செய்யாவிட்டால் உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?

ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.
98

வளம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரையையுடைய வேந்தே! ஏந்திய கையை மறுக்காது,எதையாவது, இன்னார் இன்னார் என ஒரு வரையறை செய்யாது, திருப்பித்தர முடியாத வறியருக்கு ஒன்று ஈதலே ஆண் மக்களின் கடமையாகும். மீண்டும் திருப்பிக் கொடுப்பவர்க்கு ஒன்றை ஈதல் யாவரும் அறிந்த 'கடன்' என்னும் பெயருடையது.

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
99

நாம் தருவது மிகவும் சிறியது என்று கருதாது, இல்லை என்று சொல்லாது, எப்போதும், பயனுடைய அறத்தை அனைவா¢டத்தும் செய்க! அது, வாயில் தோறும் பிச்சைக்குச் செல்லும் தவசியின் பிச்சைப் பாத்திரம் சிறிது சிறிதாய் நிரம்புவது போல, மெல்ல மெல்லப் புண்ணியப் பயனைப் பூரணமாக்கும்

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.
100

குறுங்கோலால் அடித்து ஒலிக்கப்படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! மேகத்தின் இடி ஓசையை ஒரு யோசனை தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர்! ஆனால் தகுதியுடையவர்க்குக் கொடுத்தார் என்னும் புகழ்ச் சொல்லை, ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களில் உள்ளாரும் கேட்பர். (இதனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடல் உணர்த்தப்பட்டது

நாலடியார் - 11.பழவினை

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு
101

பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும். (பல பசுக்களின் நடுவே விட்ட கன்று தன்தாயைத் தேடி எப்படி அடைகின்றதோ அப்படியே ஒருவன் செய்த பாவ புண்ணியமும் அவனை வந்து அடையும். இதனால் கருமங்கள் அந்தந்தப் பிறப்பிலேயே கழியும் என நினையாமல் பல பிறப்பிலும் தொடர்ந்து பயனைத் தரும் என உணர்ந்து நல்வினையே செய்ய வேண்டும்).

உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
நின்றுவீழ்ந் தக்க துடைத்து
102

அழகும், வாலிபமும், மேன்மையான பொருளும், பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்தும், யாதேனும் ஒரு வகையில் ஒரு நற்செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை, உடலெடுத்துச் சில காலம் நின்று பயனில்லாது பின் அழிந்து போகும் தன்மையுடையது.

வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
காரெனச் செய்தாரும் இல்
103

செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுடைய இன்ப நுகர்வுகள் (சுகபோகங்கள்) வரையறை செய்யப்பட்டுள்ளன. விளாங்காயை உருண்டை வடிவமாகச் செய்தவரும் இல்¨ல் களாப்பழத்தைக் கருமையுடையதாகச் செய்தவரும் இல்லை! (விளாங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையாகத் திரண்டிருப்பது போலவும், களாப்பழம் ஒருவரால் கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும், அவரவர் இன்பமும் அவரவர் புண்ணிய இயற்கையால் அமைந்துள்ளது. ஆகவே இன்பம் விரும்புவோர் நல்வினையே செய்தல் வேண்டும்).

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.
104

வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக் கூடிய நன்மைகளையும் யாராலும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தால் அதனைப் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை! (மழை வறண்ட போது அதனைத் தருவதற்கோ, அது அதிகமானால் அதனைத் தணிப்பதற்கோ எப்படி ஒருவருக்கு ஆற்றல் இல்லையோ அப்படியே ஒருவருக்குத் தீவினைப்பயன் நோ¢ட்ட போதும் நல்வினைப் பயன் நோ¢ட்ட போதும் தடுக்கும் ஆற்றல் இல்லை! அவற்றின் பயன்களை அனுபவித்தே ஆக வேண்டும்).

தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
வினைப்பயன் அல்லால் பிற.
105

பனை அளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாகச் சிறுத்துச் சிறுமையுற்று வருந்தி வாழ்வர்! இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயன்றி வேறில்லை. (உயர்ந்தோர் தாழ்ந்தோர் வதற்குக் காரணம் முன் செய்வினையே).

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.
106

பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.

இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.
107

அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பொ¢ய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).

அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்.
108

காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே).

ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.
109

மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லாரும் சிறிய தீமையையும் விரும்பமாட்டார்கள். நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால் வரத்தக்கவை வராமற் போவதில்லை. (நம் விருப்பத்திற்கும் விரும்பாமைக்கும் ஏற்ப எதுவும் நடப்பதில்லை; வினைப்படியே எல்லாம் நடக்கும்)

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத் தென்னை பரிவு.
110

கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்ட வளரமாட்ட முறைமாறி வரமாட்ட துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்ட எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்? (ஒருவனது வினைப்பயன் குறைந்தும், வளர்ந்தும், மாறியும் வருவதில்லை. வரும் காலத்து நிச்சயம் வரும். ஆதலால் நேரும் துன்பங்கள் குறித்துத் துயருறுவது வீண்).

நாலடியார் - 12.மெய்ம்மை

இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.
111

வா¢சையாக வளையலை அணிந்தவளே! தம்மால் தர முடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறுதல் யார்க்கும் பழியாகாது. அ·து உலகில் இயற்கை. ஆனால், ஏற்பவன் ஆசை கெடும்படி பல நாட்கள் கழித்து இல்லையென்று சொல்லுதல் செய்ந்நன்றி மறந்தவா¢ன் குற்றத்தைப் போன்ற குற்றமாகும். ('தருகிறேன். தருகிறேன்' என்பவன் வள்ளல் தன்மையில் இருப்பது போல இரப்பவனை நம்பச் செய்து, நன்றிக்குரியவனாக இருந்துபின் பொய்த்தல் செய்ந்நன்றி கொன்றதற்கு இணையான குற்றம் என்பதாம்).

தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர்! - அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு.
112

சான்றோரும், சான்றோர் அல்லாதாரும் தத்தம் குணங்களில் எப்போதும் குறையாமல் இருப்பர். வெல்லத்தை யார் தின்றாலும் கசக்காது. வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்கும். (தக்காரும் தகவிலாரும் தங்கள் தங்கள் இயல்பிலேயே என்றும் நிலைத்து நிற்பர். இ·து உலக இயல்பு).

காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
தொடர்புடையேம் என்பார் சிலர்.
113

குளிர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! செல்வம் உண்டான காலத்தில் மேலே வானத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட நெருங்கிய உறவினர் பலராவர். தகாத, கொடிய வறுமையை ஒருவர் அடைவராயின், அப்போது, 'அவர் எம் உறவினர்' என்று உரிமை பாராட்டுவோர் ஒரு சிலரே ஆவர். (இதுவும் உலக இயல்பாகும்).

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
அடுவது போலும் துயர்.
114

குற்றமற்ற இந்த உலகத்தில் போற்றத்தக்க அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள் மூன்றனுள் நடுவில் உள்ள பொருளை ஒருவன் அடைந்தால் அவன், அதன் காரணமாக முதலில் உள்ள அறத்தையும், இறுதியில் உள்ள இன்பத்தையும் அடைவான். பொருளைப் பெறாதவன், கொல்லன் உலையிலிட்டு இரும்பைக் காய்ச்சுவதுபோல வறுமைத்துன்பமெய்தி வருந்துவான். (பொருள் உள்ளவன் அறம், இன்பம் ஆகிய இரண்டையும் பெறுவான். பொருள் இல்லாதவன் அறம் முதலான உயிர்ப் பண்புகளை இழந்து வருந்துவான்).

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.
115

உயர்ந்த சாதிப் பசுவின் கன்றாக இருந்தால் இளங்கன்றும் நல்ல விலை போகும். கல்லாரேயாயினும் செல்வரது வாயிலிருந்து வரும் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சிறிதே ஈரமுள்ள காலத்தில் உழுதலைப் போல, வறியவர் வாய்ச்சொல் மதிக்கப்படாது ஒழியும். (சிறிது ஈரத்தில் உழுதால் கொழு மேலே நிற்குமேயன்றி, உள்ளே செல்லாது. அதுபோல, வறியவனுடைய சொற்கள் மேலுக்குத் தலையசைத்துக் கேட்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா).

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்.
116

அகன்ற கண்களையுடையவளே! பேய்ச் சுரைக்காயை உப்புடன் நெய்யும், பாலும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. அதுபோல, மெய் அறிவை உணர்த்தும் நூல்களை மிக விரிவாக எக்காலமும் கற்றாலும் இயல்பாக அடக்கமில்லாதவர் எப்போதும் அடங்காமலே இருப்பர்.

தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரோடு பட்டது - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும்.
117

புன்னையின் அழகிய பூமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த கடற்கரையையுடைய வேந்தனே! ஒரு காரணமும் இன்றித் தம்மை இகழ்ந்து பேசுபவரை, அவர் முன்னிலையிலேயே கடிந்து பேசிப் புறக்கணித்துவிட வேண்டும். அவருடைய தொடர்பால் வருவதென்ன? வருபவை ஊழால் வரும். (ஒரு காரணமும் இன்றிப் பழிப்பவரை அடக்கும் வழி அவர் எதிரிலேயே அவரைக் கண்டிப்பதுதான்; புறங்கூறிப் பயனில்லை என்பது கருத்து

ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
பால்வே றுருவின அல்லவாம்; - பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு.
118

பசுக்கள் பல்வேறு நிறத்தனவாயினும் அவை தரும் பால் வெவ்வேறு நிறமுடையதன்று; ஒரே நிறம் உடையதுதான். பாலைப் போல், அறப்பயனும் ஒரே தன்மை உடையதாகும். அவ்வறத்தை ஆற்றும் முறைகள், பசுக்களின் நிறங்களைப் போலப் பலவாகும்.

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? - யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
கடைபோக செல்வம்உய்த்தார்?                             119

மனித வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, ஒரு பழிச்சொல் இல்லாமல் வாழ்ந்தவர் யார்? ஒரு தொழில் இன்றி வாழ்ந்தவர் யார்? வாழ்நாளின் இடையே துன்பத்தை அடையாதவர் யார்? வாழ்நாள் முழுதும் செல்வத்துடன் வாழ்ந்து அதனை அனுபவித்தவர் யார்?

தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
யாங்கணும் தேரின் பிறிதில்லை; - ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
கூற்றம் கொண்டுஓடும் பொழுது.
120

எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் உயிருக்குத் துணையாக வருவது அவரவர் நல்வினைகளேயன்றி வேறில்லை. எமன் உயிரைக் கொண்டு செல்லும்போது, அதுவரை ஆடை அணிகளால் அழகுடன் பாதுகாத்த உடம்பும் உயிருக்குத் துணையாக வராது. (உடம்பும் வராது என்றதால், செல்வம் முதலானவையும் வாரா வினையே தொடர்ந்து வரும் என்பது கருத்து).

நாலடியார் - 13.தீவினை அச்சம்

துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
புல்லறி வாளர் வயிறு.
121

சுடுகாடுகள், துயரங்களைத் தரும் இல்வாழ்க்கையில் கிடந்து உழன்று அவற்¨றிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து). ஒழிக்கும் துறவற நெறியை அடையாத மக்களின் பிணத்தையுடையன. அற்ப அறிவுடையவர்களின் வயிறுகளோ, தொகுதியான விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுடுகாடுகளாக இருக்கின்றன. (புலால் உண்பது தீவினைகளுள் தலையானது என்பது கருத்து)


இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
கரும்பார் கழனியுள் சேர்வர் - சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.
122

வண்டுகள் ஒலிக்கும் காட்டில் வாழும் கவுதாரியையும், காடையையும் பிடித்துக் கூட்டில் அடைத்து வைப்பவர்கள், மறு பிறவியில் பகைவர்களிடம் அடிமைகளாகி, காலில் விலங்குகள் பூட்டப்பட்டு, வலிய பார் நிலங்களிலோ கழனிகளிலோ வேலை வாங்கப்படுவார்கள்.

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே - அக்கால்
அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால்.
123

அந்தக் காலத்தில் (முற்பிறவியில்) நண்டைப் பிடித்து அதன் காலை ஒடித்து விரும்பித்தின்ற தீவினை வந்தடைந்தபோது சங்கு மணியைப் போல உள்ளங்கை மட்டும் வெண்ணிறமாய் விளங்க, விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம் தரும் தொழுநோயால் வருந்துவ

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்
கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
கடுவினைய ராகியார்ச் சார்ந்து.
124

உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டால், உடம்பில் பட்டுச் சுட்டுத் துன்பம் தரும் நோயை உண்டாக்கும். அதுபோல, நெறி தவறாத நல்லோரும் தீவினையாளரைச் சார்ந்தால் நெறிகெட்டுக் கொடுந்தொழில் செய்பவர் ஆவர். (சிற்றினம் சேர அஞ்சுதல் வேண்டும் என்பது கருத்து).

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
125

பொ¢யோர் நட்புப் பிறைச் சந்திரனைப்போல, நாள்தோறும் படிப்படியாக வளரும். கீழோர் உறவு வானத்தில் தவழும் முழுமதி போல நாள்தோறும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து குறைந்து ஒழியும்.

சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.
126

நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்! (ஆராயாமல் நட்புக் கொள்ள அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.
127

மலைச் சாரல்களில் ஒளிவிடும் மணிகள் மிகுந்திருக்கும் நாட்டையுடைய அரசனே! கேட்பாயாக! உலகில் ஒருவருடைய மனத்தில் உள்ள எண்ணத்தை அறியும் வல்லமையுடையவர் யார் இருக்கிறார்கள்? (ஒருவரும் இல்லை) ஏனெனில், மக்களின் மனம் வேறாக இருக்கிறது! சொல் வேறாக இருக்கிறது! செயல் வேறாக இருக்கிறது! (ஒருவர் நினைத்தபடி, சொன்னபடி, செய்யாம் வஞ்சனை புரிதலால் அவருடன் தொடர்பு கொள்ள அஞ்ச வேண்டும் என்பதாம்).

உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.
128

தெளிந்த தன்மையுடன் கூடிய அருவிநீர் சேற்றை அலசி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே! மனப்பூர்வமாக நட்புக் கொள்ளாமல் (இவர் உண்மையாக அன்பு கொள்பவர் என நம்புமாறு) உறுதியான செயல்களைச் செய்து வஞ்சனையாக உறவு கொள்பவருடைய மிக்க நட்பு மனத்தில் பெருங் குற்றமுடையதாக இருக்கும். (வஞ்ச மனத்தான் நட்பு நஞ்சாகும்; அதற்கு அஞ்சுக என்பது கருத்து).

ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.
129

தான் பகைவர் மீது வீசிய ஒளிமிக்க வாள், அப்பகைவர் கையில் அகப்பட்டால், அது தனது மனவலிமையைக் கெடுப்பது உறுதி. அதுபோல, தீயோர்க்குச் செய்த உதவி, உதவி செய்தவனின் இம்மை மறுமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுப்பதால், அத்தகைய தீயோரிடமிருந்து விலகி இருப்பது நல்லதே ஆகும். (ஒருவனைக் கொல்ல வீசிய வாள் அவன் கையில் அகப்பட்டால், அவ்வாளை வீசியவனின் உறுதி கெடும். தலால் அவ்வாளுக்கு அஞ்சி அவனிடமிருந்து விலக வேண்டும். அப்படியே ஒரு மூடனுக்கு ஓர் உதவி செய்தால் அவன் அதைக் கொண்டு பல கொடுமைகள் செய்வான். அதனால் உதவி செய்தவனுக்கு இம்மையில் நன்மையும் புகழும் கெடுவதுமன்றி மறுமையில் நரகத்திற்கும் காரணமாகும். ஆகவே வாளுக்கு அஞ்சுவதைவிட, மூடனுக்கு உதவி செய்வதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பது கருத்து).

மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
130

நெஞ்சமே! நீ மனைவியிடம் கொண்டுள்ள ஆசையை விடமாட்டாய்! மக்களுக்குப் பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏக்கமுற்று இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? சிறிதளவாயினும் செய்யும் அறச்செயலாலன்றி உயிர்க்கு வேறு செயலால் கிடைக்கும் பயன் எதுவும் இல்லை! (மனைவி மக்களிடத்துப் பற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என ஏக்கம் கொண்டு இன்னும் எவ்வளவு காலம் வாழப்போகிறாய்? இந்த ஏக்கத்தினாலேயே நீ இறக்கப் போவதன்றி வேறொரு நற்பயனையும் பெறப் போவதில்லை! இருக்கும் குறைந்த ஆயுட்காலத்திலாவது அறம் செய்தால் அதுவே உயிர்க்கு நற்பயனாகும். ஆதலால் உயிர்க்கு உறுதி செய்யாமல் வாழ்வதற்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து).