இரண்டாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாம் தந்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமந்திரம் - இரண்டாம் தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

பொழிப்புரை :

ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, `இருதய வெளியுள் பரஞ்சுடரை எப்பொழுதும் இருத்தி நிற்றலால் அகத்தியன் (அகத் தீயன் - உள்ளொளியைப் பெற்றவன்) எனப்பெயர் பெற்ற முனிவனே, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்; அதனால், இவ்வுலகம் நிலை பெற்றது.

குறிப்புரை :

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்
தாங்காது மன்னோ பொறை. -குறள், 990
என்றவாறு உலகம் சான்றாண்மை குன்றி, அழிவெய்தும் நிலை உண்டாகின்றபொழுது, தனது திருவருள் காரணமாகத் தக்காரை நிலவுலகில் விடுத்து அதனைச் செந்நெறி நிற்கச் செய்பவன் சிவபெருமானே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்க உண்மை என்பது நாயனாரது திருவுள்ளக்கிடை என்பது இதன்கண் இருபொருள் படவைத்த சொற்குறிப்புக்களால் அறியப்படும்.
எனவே, ஒருபொழுது இவ்வுலகம் நடுவு நிலைமை பிறழ்ந்து, மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நிலை யின்றித் (தி.11 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, 7) தமக்கும், தம்மைச் சார்ந்தவர்க்கும் உளவாகும் நன்மை ஒன்றே பற்றிப் பிறர்க்குக் கேடு சூழும் தன்மை உடையதாய்த் தீநெறிக் கண் சென்றதாக, அதனைப் பொறாது வேண்டிய நல்லோர் சிலரது தவம் முன்னிலையாகச் சிவபெருமான், உயர்ந்த சிவஞானத்தால் அந் நடுவுநிலை உடைய பெரியார் ஒருவரை விடுத்துச் செந்நெறி நிறுத் தினான் என திருமந்திரம் பிறிதொரு பொருளையே சிறப்பாகத் தோற்றுவித்தல் அறிந்து கொள்க. இதனானே, `உலகில் செந்நெறி பிறழுங்காலத்து அதனை நிலைநிறுத்துதற்குக் கடவுளே வந்து பிறக் கின்றான் என்றல் சிவ நெறிக்கு ஒவ்வாது; கடவுள் தனது திருவருள் வழி நிற்கும் பெரியோரை விடுத்தே செந்நெறி நிறுத்துகின்றான் என்பதே சிவநெறிக்கு ஒப்பது` என்பதும் கூறியவாறாயிற்று.
``எம்பெருமான்`` என்றது விளி. என்ன - என்று சொல்லி முறையிட. இதற்கு, `தேவர்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``நடுவுள அங்கி அகத்திய`` என்றதற்கு, `இருதயத்தின்கண் உள்ள ஒளியை உடைய அகத்திய` எனவும், `நடுவு நிலைமை உடைய, ஞானத்தை உடைய அகத்திய` எனவும் இரு பொருள் கொள்க. இரண்டாவது பொருட்கு, ``நடுவுள`` என்பது, `அகத்திய` என்பத னோடு இயையும். உடலின் நடுவிடத்து இருக்கும் இருதயத்தை ``நடு`` என்றது ஆகுபெயர். முன் - மேல்நிலம்; முதன்மை இடம்.
சிவபெருமான், மலைமகளை மலையரையனிடம் சென்று மணம் புரிந்த ஞான்று தேவர், முனிவர், கணங்கள் முதலிய பலரும் ஒருங்கு கூடினமையால் நிலம் தென்பால் எழுந்து, வடபால் வீழ்ந்து புரள்வதாகலும், தேவரது வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அகத்திய முனிவரைத் தென்பால் பொதிய மலையிற் சென்று இருக்கச் செய்து, நிலம் முன்போலச் சமனாகும்படி நிறுத்திய வரலாற்றின் விரிவைக் கந்த புராணத்துட் கண்டு கொள்க. `தேவர் முதலிய பலர்க்கு முனிவரொருவர் நிகர்ப்ப இருந்தார்` என்பதனால், சிவனடியாரது பெருமை தோற்றுவித்தவாறாயிற்று. இவ்வரலாற்றுள் நிலம் நிலை குலைந்தமைக்குரிய காரணத்தை நாயனார் எடுத்தோதாது, வரலாறு பற்றியே உணர வைத்தார் என்க.
புராண வரலாறுகள் பலவும், உண்மை நிகழ்ச்சியை மருட்கைச் சுவைபடப் பெரிதும் புனைந்துரைப்பனவும், உண்மைக் கருத்துக்களை உருவகமாக்கி உரைப்பனவும் என இருதிறப்படும். காலப் பழமையால் அவ் இருவேறு திறத்துள் `இஃது இத்திறத்தது` எனப் பகுத்துணர்த்தல் அரிது. ஆயினும் அவ் வரலாறுகளைப் புராணங்கள் பலவிடத்தும், பலகாலத்தும் வலியுறுத்திவருதல், அவற்றின் உண்மை மக்கள் உள்ளத்தில் மறவாது நிற்றற் பொருட்டே என்பது நாயனாரது திருவுள்ளம் என்பதனை இத் தந்திரம் பற்றி உணர்ந்துகொள்க. இத் தந்திரத்துள் குறிக்கப்படும் வரலாறுகளும், இவை போல்வனவுமான தொன்மையான வரலாறுகள் சிவபெரு மானையன்றிப் பிற கடவுளருக்கும் அவர்தம் அடியவர்க்கும் சொல்லப் படாமை கருதற்பாலது என்பது நாயனாரது கருத்து என்க.
இதனால் அகத்திய முனிவர் பொதிகை சென்ற வரலாற்றால் அவரது பெருமை கூறப்பட்டமை வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதய வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.

பொழிப்புரை :

`புறத்தும் அகத்தும் சுடர் விட்டுளன் எங்கள் சோதி` (தி.3 ப.54 பா.5) என்றபடி, புறத்தும், அகத்தும் தீயை உண்டாக்கி வளர்க்கின்ற, மேற்றிசைக்கண் ஞானாக்கினியாய் விளங்கிய அகத்திய முனிவர் தென்றிசையிலும், தவம் உடையவரே காணத்தக்காராக அரிதில் விளங்குகின்ற தவக் கோலத்தை உடைய முனிவனாகிய சிவபெருமான் வடதிசையிலும் வீற்றிருந்து உலகமுழுவதையும் விளக்குகின்ற ஒளியாய்த் திகழ்கின்றார்கள்.

குறிப்புரை :

`அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியனாகிய, மேல்பால் அங்கி உதயம் செய் (தென்பால்) அவனொடு` எனக் கூட்டுக. `உதயத்தை வளர்க்கும்` என இரண்டாவதும், `அங்கிபோல உதயம் செய்` என உவம உருபும் விரிக்க. மேல்பால் என்றது, சையமலைப் பக்கத்தை. அகத்தியர் முதற்கண் இங்குத் தங்கியிருந்தமையைக் கந்த புராணம் அகத்தியப் படலத்தால் அறிக. மேற்குத் திசை, `குட திை\\\\u2970?` எனப்படுதலால், அகத்தியர் `குடமுனி` எனப்பட்டார். `குடமுனி` என்பதைப் புராணங்கள் `கும்பமுனி` எனப் புனைந்துரைத்தன. `மங்கிய` என்பது ஈறு குறைந்தது. மங்கிய உதயம் - அரிதில் காணப்படுதல். `மங்கி உதயம் செய்` என்பது பாடம் அன்று.
``வடபால்`` என்றதனால், `தென்பால்` என்பது பெறப் பட்டது. `வடக்கில் கயிலாய மலையில் சிவபெருமானும், தெற்கில் பொதிய மலையில் அகத்திய முனிவரும் வீற்றிருத்தலாலே இவ்வுலகம் வளப்பமும், ஞானமும் பெற்றுத் திகழ்கின்றது` என்பதாம். இது மேற்கூறிய வரலாற்றைப் பிறிதொரு வகையால் தொடர்புபடுத்து விளக்கியவாறு.
இதனால், அகத்திய முனிவரது பெருமை கூறும் முகத்தால் சிவபெருமானது மெய்யடியார், உண்மையாகவே சிவனோடு ஒப்பவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

பொழிப்புரை :

அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது `திருக்கோவலூர் வீரட்டம்` என்னும் தலமாம்.
ஆணவமலம் அறிவை அழித்தல் பற்றி அதற்கு, `மிருத்தியு` என்ற ஒரு பெயர் உண்டு. `அந்தகன்` என்பதற்கு `இறுதியைச் செய்பவன்` என்பது பொருள். அதனால் இவ்விரு பெயர்களும் ஒரு பொருளவாதல் பற்றி, ``கருத்துறை அந்தகன்றன்போல் அசுரன்`` என்றார். கூற்றுவனுக்கு `அந்தகன்` என்ற பெயர் கூறப்படுதலும் இப் பொருள் பற்றியேயாம். அதனால், `மிருத்தியுவைக் கடத்தல்` என்பதற்கு, `ஆணவ மலத்தின் நீங்குதல்` என்பதே உண்மைப் பொருள் என்பர். உபநிடதங்கள் `இருளைக் கடந்து மேற் போகின் றான்` என்றலும் ஆணவ மலத்தின் நீங்கி இறைவனை அடை தலையே யாம். எனவே, சிவபெருமான் அந்தகாசுரனை மூவிலை வேலால் அழித்த வரலாறு, `அவன் ஆணவ மலத்தை இச்சா ஞானக் கிரியை வடி வாய்த் தொழிற்படும் தனது சத்தியைக் கொண்டு அழிப்பவனாவன் என்னும் உண்மையை விளக்கும்` என்பதும், `அப்பயன் கருதி அவனை வழிபடுதலே சிறந்தது` என்பதும் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் அறிக. குருத்து - நுனி. `குருத்தினால்` என உருபு விரிக்க. `உயர் சூலம் கைக்கொண்டு குருத் தினாற் கொன்றான்` எனக் கூட்டுக. இச் செயல் வைரவக் கடவுளைக் கொண்டு செய்வித்ததேயாயினும், `அரசன் ஆலயம் எடுத்தான்` என்பது போல, ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்வித்தமை பற்றிச் சிவபெருமான் தானே செய்ததாக வைத்து அருளிச் செய்தார். ``அந்தகனை அயிற் சூலத் தழுத்திக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.5) என்பது திருநாவுக்கரசர் திருமொழி.
`இரணியன், (இரணிய கசிபு) இரணியாட்சன்` என்னும் இரு வருள் இளையவனாகிய இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற வரத்தினால் வலிமை மிக்க வனாய்த் திருமால் முதலிய தேவரையெல்லாம் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது மகளிர் உருவங்கொண்டு ஓடிக் கயிலையில் அம்பிகையின் தோழியர் கூட்டத்துள் மறைந்திருந்தனர். அதை அறிந்த அந்தகாசுரன் அங்கும் சென்று போர் செய்ய நினைத்த பொழுது, தேவர்கள் முறையீட்டிற்கு இரங்கிச் சிவபெருமான் வைரவக் கடவுளை ஏவ, அவர் தமது சூலத்தலையில் அவனை ஏற்றிப் பலநாள் துன்புறச் செய்து பின் முத்தி பெற அருளிய வரலாற்றின் விரிவைக் காஞ்சிப் புராணம் அந்தகேசுரப் படலத்தில் காண்க. `சிவதீக்கை பெற்றோர் குற்றம் செய்யின், அவர் கூற்றுவனால் தண்டிக்கப்படார்; இவ்வாறு வைரவக் கடவுள் சூலத்தில் ஏற்றித் தண்டிக்கப்படுவர்` என்பது சிவாகம நூற் கருத்து என்பது இங்கு உணர்ந்து கொள்க.
இதனால், சிவபெருமான் அந்தகாசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான்அங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையை யரிந்திட்டுச் சந்திசெய் தானே.

பொழிப்புரை :

தக்கன் சிவபெருமானை இகழ்ந்து செய்த வேள்வியை அப்பெருமானது அருளாணையின்வழி வீரபத்திரக் கடவுள் சென்று அழித்தபொழுது, தக்கனது இகழ்ச்சியை மறாது உடன் பட்டிருந்த தேவர் பலரையும் பலவாறு ஒறுத்தலோடு ஒழித்து, அவ் இகழ்ச்சியைச் செய்தவனாகிய தக்கனது தலையை வெட்டித் தீக்கு இரையாக்கி, `சிவனை இகழ்ந்தவர் பெறும் இழிநிலைக்கு இவன் தக்க சான்றாகற்பாலனாகலின், அதன் பொருட்டு இவன் உலகிற்கு இன்றியமையாத ஒருவன்` எனக் கருதி அவனை அழித்தொழியாது ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிரோடு இருக்கச் செய்தார்.

குறிப்புரை :

இவ்வீரச்செயலைக் குறிப்பது திருப்பறியலூர் வீரட்டம்.
கொலையில் - வேள்வியை அழித்தபொழுது. பிழைத்த - பிழை செய்த. பிரசாபதி - பிரமன்; இப்பெயர் அவன் மகனாகிய தக்கனுக்கும் வழங்கும். அதனால், அவனை, `தட்சப் பிரசாபதி` என்பர். பிரசாபதி, இங்கு, தட்சப் பிரசாபதியே. ``தான்`` என்றது வீரபத்திரக் கடவுளை. நிலை - இழிநிலை; இதில் நான்கனுருபு தொகுத்தல். ``தலையை அரிந்திட்டு`` என்பதில், ``ஆட்டுத் தலையை`` என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. சந்தி செய்தல் - பொருத்துதல். இவ்வரலாறு கந்தபுராணத்துள் விரித்துக் கூறப்படுதல் காண்க. இவ்வரலாறும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் உணர்க.
இதனால் தக்கன் வேள்வியை அழித்த வரலாறும், சிவ நிந்தை உய்தியில் குற்றமாதலாகிய உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்கச் சுதனை உதிரங்கொண் டானே.

பொழிப்புரை :

ஆகாயத்தினும் மேலாய்ப் பரந்து எல்லாப் பொருட் கும் இடங்கொடுத்தும், பூமியினும் கீழாய் நின்று அனைத்தையும் தாங்கியும் நிற்கும் தன்மைத்தாகிய சிவபெருமானது திருவடியின் பெருமையை மறவாது உணர்ந்து அடங்கி ஒழுகற் பாலராய தேவர்கள், தம் அதிகாரச் செருக்கால் ஓரோவழி அதனை மறந்து மாறுபடுகின்ற காலத்து அவர்தம் செருக்கைச் சிவபெருமான் அழித்து அவரைத் தெருட்டுதற்கு அறிகுறியாகப் பிரமன் செருக்குற்ற பொழுது அவன் தலையை, வைரவக் கடவுளை விடுத்து அரிந்து, அத்தலை ஓட்டில் தேவர் பலரது உதிரத்தையும் பிச்சையாக ஏற்பித்து, முடிவில் திரு மாலது உதிரத்தையும் கொள்வித்துச் செருக்கொழித் தருளினான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிப்பது திருக்கண்டியூர் வீரட்டம்.
ஒருமுறை பிரமனும் மாலும் மகாமேரு மலையின் சிகரம் ஒன்றில் சேர்ந்திருந்தபொழுது தேவர், முனிவர் முதலிய பலரும் அங்கு வந்து அவரை வணங்கி, `நீவிர் எங்களைப் படைத்துக்காக்கும் தலைவராதலின், அனைத்துலகிற்கும் முதல்வனாய், உயிர்க்குயிராய் நிற்கும் முதற்கடவுள் யாவன் என்னும் ஐயத்தினையும் நீக்கி உண்மையை உணர்த்தல் வேண்டும்` என வேண்டினர். அதுபொழுது பிரமனும், மாயோனும் தம் அதிகாரச் செருக்கால் மயங்கித் தாங்களே முதற்கடவுளாகத் தனித்தனிக் கூறி வாதிட்டனர். வேதங்களும், மந்திரங்களும் உருவாய் வெளிப்பட்டு, `நும்மில் ஒருவரும் முதல்வரல்லீர்; சிவபெருமானே அனைத்துயிர்க்கும் முதல்வன்` எனக் கூறவும் தெளிவு பெறாது வாதிட்டனர். அதனால், சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளியாய்த் தோன்றி, அதினின்றும் உமையொருபாகனாய் வெளிப்பட, திருமால் தெளிந்து அச்சுற்று, `எம் தந்தையே, பிழைபொறுத்தருள்க` என வணங்கினார். ஆயினும், பிரமன் செருக்கு நீங்காதவனாய், அன்று ஐந்து தலைகளோடு இருந்த அவன், தனது உச்சித் தலை வாயினால், `என் மகனே, வருக` என்று அழைத்து இகழ்ந்தான். அதனால், சிவபெருமான் வைரவக் கடவுளை உண்டாக்கி `நம்மை இகழ்ந்து பேசிய இப் பிரமனது நடுத்தலையைக் கிள்ளிக்கொண்டு, இப்பிரமனே யன்றிச் செருக்கால் மயங்கி நம்மை இகழ்ந்து நிற்போர் யாவராயினும் அவர்தம் உதிரத்தைப் பிச்சையாகப் பிரம கபாலத்தில் ஏற்று, அவரது செருக்கை நீக்கித் தெளிவுபெறச் செய்க` என்று அருளிச் செய்து மறைந்தார். திருமாலும் தம் உலகை அடைந்தார். வைரவக் கடவுள் அவ்வாறே தமது நகத்தால் பிரமனது உச்சித் தலையைக் கிள்ளி எடுத்த உடன் அவனது உதிரம் உலகை அழிக்கும் வெள்ளம்போல் பெருக, அவன் நினைவிழந்து வீழ்ந்தான். பின்பு வைரவக் கடவுள், தமது நெற்றிக் கண்ணால் உதிர வெள்ளத்தை வற்றச் செய்து, பிரமனையும் உயிர்ப்பிக்க, அவன் நல்லறிவு பெற்று வணங்கிப் பிழைபொறுக்க வேண்டினான். அப்பால் வைரவக் கடவுள் அவனை மன்னித்து, அவனை என்றும் நான்முகனாகவே இருக்கச் செய்து, தாம் ஏந்திய பிரம கபாலத்துடன் தேவர், முனிவர் முதலான வர்களில் செருக்குக் கொண்டவர்பால் சென்று, `எனது கபாலம் நிறைய உங்கள் உதிரத்தைத் தாருங்கள்` என்று கேட்க, அவர்கள் அனைவரும் அச்சத்தால், ஏற்ற பெற்றியில் தம் தம் உடம்பினின்றும் இரத்தத்தைப் பிரம கபாலத்தில் சொரிந்து சோர்வுறலாயினர். பின்பு வைரவக் கடவுள் அவர்களுக்கும் உயிர்ப்பிச்சை தந்து தெளிவை உண்டாக்கி, வைகுந்தம் சென்று, அங்குத் தம்மைத் தடுத்த சேனா முதலியாகிய விடுவச் சேனனைச் சூலத்தின்மேல் கோத்தெடுத்துக் கொண்டு செல்லத் திருமால் இதனை அறிந்து எதிர்வந்து வணங்கி, `எந்தையே நீ வேண்டுவது யாது` என, வைரவக் கடவுள், `உன் கபாலத்தின் வழி யாக எனது பிரம கபாலம் நிறைய உதிரம் தரல் வேண்டும்` என்றார். திருமால் தாமே தமது நகத்தால் தம் நெற்றியி னின்றும் ஒரு நரம்பைப் பிடுங்கிப் பிரம கபாலத்தில் விட, அது வழியாக உதிரம் பல்லாண்டு காறும் ஒழுகிற்று. திருமால் நினைவிழந்து வீழ்ந்தார். ஆயினும், வைர வரது கைக் கபாலம் பாதியாயினும் நிறைந்ததில்லை. அதனைக் கண்ட `சீதேவி, பூதேவி` என்னும் இருவரும் நடுக்கங் கொள்ள, வைரவக் கடவுள் அவர்கள்மீது இரக்கம் வைத்துத் திருமாலை உயிர்ப்பித்துத் தந்து, விடுவச் சேனனையும் சூலத்தினின்றும் இறக்கிவிட்டுச் சிவபெரு மான் முன்பே தமக்காகப் படைத்துக் கொடுத்த கணங்களுடன் தமது புவனத்தில் தங்கி, அண்டங்கள் பல வற்றைக் காத்து வருவாராயினார். இவ்வாறு கந்த புராணத்துள்ளும், காஞ்சிப் புராணத்துள்ளும் இவ்வரலாறு விரித்துப் பேசப்படுதல் காண்க.
``அவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற (பின்) அச்சுதனை உதிரங் கொண்டான்`` என்றதனால், `செல்வம், அதிகாரம்` முதலியவற்றால் எழும் செருக்குக் காரணமாக முதல்வனாகிய கடவுளை மறந்து `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கித் திரிவாரை அம்முதல்வனது திருவருள் ஒறுத்து அடக்கும் என்னும் உண்மையை வலியுறுத்தவே இவ்வரலாற்றைப் புராணங்கள் வலியுறுத்துகின்றன என்பது உணர்த்துதல் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் பெறப்படும். தக்கன் வரலாறு, என்றும் செருக்குடை யராய் இருப்பவரை ஒறுத்தலையும், இஃது, ஓரோவழிச் செருக்குறு வாரை ஒறுத்தலையும் குறிக்கும். இவையே இவற்றிடை உள்ள வேற்றுமை.
பரத்தல், `இடங்கொடுத்தல்` என்னும் பொருட்டு. இதனால், ஆகாயத்தையும் அடக்கி நிற்றல் பெறப்பட்டது. நிலத்தையும் தாங்குதல் கூறினமையால், அதற்கும் நிலைக்களமாதல் பெறப்பட்டது. `தங்கும் படித்தாகிய தாள்` என்க. அவன் பண்டறி சுட்டு. `உணர் தேவர்கள்` என்னும் முக்கால வினைத்தொகை, அஃது அவர்க்குரிய பண்பாதல் விளக்கி நின்றது. பொங்கும் சினம் - மிகக் கொண்ட சினம். `தேவர்கள் கொண்ட சினம்` என்க. சினம் - பகை. இஃது இங்கு மயக்கத்தால் கொள்ளும் மாறுபாட்டினைக் குறித்தது. ``சினத்துள்`` என்பது வினைசெய்யிடத்தில் வந்த ஏழாம் வேற்றுமை. எனவே, `சினங்கொண்ட பொழுது` என்பது பொருளாயிற்று. முன் - முதலில். ``முன் அயன் தலை அற`` என்றதனால், `பின் அச்சுதனை உதிரங் கொண்டான்` என்பது போந்தது. இதுவும் சிவபெருமான் ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்ததேயாதல் அறிக.
இதனால், பிரமனது தலையை அரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

பொழிப்புரை :

எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவிற்குடி வீரட்டம்.
ஒருமுறை சிவபெருமான், தமது கயிலைக்கு வந்த இந்திரன் முன், ஒரு திருவிளையாடலால் வேற்றுருக் கொண்டபொழுது, உண்மையறியாத இந்திரன், அப்பெருமானை இகழ்ந்து நோக்க, அதனால் அவர் உருத்திர வடிவுடன் நின்று கொண்ட சினத்தைக் கண்டு இந்திரன் அஞ்சி வணங்கினான். அதனால், சிவபெருமான் தாம் கொண்ட சினத் தீயை மேற்றிசைக் கடலில் எறிய, அஃது ஓர் அசுரக் குழந்தையாயிற்று. அதனைக் கடல் அரசனாகிய `வருணன்` வளர்த்தான். சலத்தால் (நீரால்) தாங்கப்பெற்ற காரணத்தால் `சலந்தரன்` எனப் பெயர் பெற்ற அவ்வசுரன் மிக்க வன்மை உடைய வனாய்த் தேவரைத் துன்புறுத்தத் திருமால் முதலிய தேவர் பலரும் அவனுக்கு அஞ்சி ஓடிக் கயிலையில் வசித்தனர். அதனை அறிந்த சலந்தராசுரன் சிவபெருமானோடு போர் செய்யக் கருதிக் கயிலை நோக்கிச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட அப்பெருமான், அவன் தன்னாலே தான் அழிய வேண்டியவனாதலை உணர்ந்து, ஓர் அந்தண வடிவில் அவன்முன் சென்று, `சலந்தரனே, உனது ஆற்றலை அளந்து காணவே யாம் வந்தோம்; உன்னால் இயலுமாயின், இச்சக்கரத்தை எடுத்துச் சுமக்க` என்று சொல்லித் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறினார். சலந்தரன் செருக்குக் கொண்டு அதனை அரிதில் பெயர்த்து மிக முயன்று உயர எடுத்துத் தன் தலைமேல் வைத்துக்கொள்ள, அச்சக்கரம் சிறந்த படைக்கலமாய் அவன் உடலை இருகூறு செய்து, சிவபெருமானிடம் மீண்டது; தேவர் துன்பம் நீங்கி இன்புற்றனர். இவ்வாறு இவ்வரலாறு கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இது சிவபெருமான், தான் நேரே செய்த வீரச்செயலாதல் அறிக.
`அறம், மறம் அனைத்திற்கும் நிலைக்களமாய் உள்ளவன் இறைவன். அவன் உரிய காலத்தில் மறத்தினை வெளிப்படுத்தி, ஏற்கும் முறையால் அதனை அழித்து அறத்தினை வளர்த்தருளுவான் என்பது இதனால் அறியத் தக்க உண்மை` என்பது நாயனார் திருவுள்ளமாதல், ``எங்கும் கலந்தும் என் உள்ளத்தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதி`` என்ற குறிப்பால் அறியப்படும்.
இதனால், `சலந்தரன்` என்னும் அசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.

குறிப்புரை :

இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவதிகை வீரட்டம். ஏனைய பலவற்றினும் இது சிறப்புடையதாய்ப் பண்டைத் தமிழ் நூல்களிலும் பயின்று வருவதாகலின், இதன் உண்மையை நாயனார் கிளந்தோதினார் என்க.
``தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்னும் மூவர் அசுரர் சிவபத்தியிற் சிறந்தவராய் மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர். சிவபெருமான் `நம்பால் பத்தி பண்ணுவோரை அழித்தல் ஆகாது` என்று அருளிச் செய்யத் திருமால் புத்தனாக உருக்கொண்டு பிடக நூலைச் செய்து, நாரத முனிவரைத் துணைக்கொண்டு முப்புரத் தவர்பால் சென்று சிவநெறியை இகழ்ந்து, புத்த மதத்தையே சிறந்ததாகக் காட்டி மருட்டினார். அதனால் அம்மாயோன் மயக்கில் அகப்பட்ட முப்புரத் தசுரர் சிவநெறியைக் கைவிட்டுச் சிவனை இகழ்ந்து புத்தராயினர். அதன்பின் திருமால் முதலியோர் சிவபிரானிடம் சென்று வணங்கி, முப்புரத்தவர் சிவநிந்தகராயினமையை விண்ணப்பித்து, அவர்களை அழித்தருள வேண்டினர். சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியாயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கியபொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக் கூறப்பட்டது.
இதனுள் தேவர் பலரும் சிவபெருமானுக்குக் கருவியா யினமை, `அப்பெருமானே கருத்தா` என்பதை விளக்கும். பூட்டிய அம்பினை எய்யாமலே திரிபுரத்தைச் சிரித்து அழித்தமை, அவன் யாதொரு செயலையும் கருவியாலன்றி நினைவு மாத்திரத்தானே செய்பவனாதலை விளக்கும். மலையை வில்லாக வளைத்தமை அவன் எல்லாம் வல்லனாதலைக் குறிக்கும். இவ்வாறு இத்திரிபுரம் எரித்த வரலாறு பல அரிய உண்மைகளை விளக்குவதாம். அவற்றுள் சிறந்த தொன்றினை எடுத்தோதியதனானே ஏனையவற்றையும் தழுவிக் கொள்ள வைத்தார்.
இதனால், திரிபுரம் எரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரிஅர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயி னுள்ளெழுந் தன்று கொலையே.

பொழிப்புரை :

முனிவர் சிலர் செய்த வேள்வியுள் எழுந்த யானை உருவினனாகிய கயாசுரனால் தம் ஆற்றலையே பெரிதாகக் கருதி யிருந்த தேவர் பலரும் அன்று அங்குச் சென்று கொலையுண் டாரேயாகச் சிவபெருமான் ஒருவனே அவனை அழித்து அவனது தோலைப் போர்வையாகக் கொண்டான் என்பதைக் கேட்டும் அப்பெருமானது பெருமையைச் சிலர் அறியாது, ஏனைத் தேவருள் அவனையும் ஒருவனாக வைத்து எண்ணுகின்றனர்.

குறிப்புரை :

`அஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். சிவபெருமான் செய்த இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவழுவூர் வீரட்டம்.
சிவபெருமான் யானையை உரித்த வரலாறு கந்த புராணத்துட் சொல்லப்பட்டது. அதில் அவன் பிறப்பு வரலாறு சொல்லப்பட வில்லை. ஆயினும், நாரத முனிவர் செய்த வேள்வியுள் ஆட்டுக் கிடாய் ஒன்று தோன்றித்தேவர் முதலிய பலரையும் துன்புறுத்தினமை கந்த புராணத்தால் அறியக் கிடப்பதுபோல, முனிவர் சிலர் செய்த வேள்வியுள் கயாசுரனாகிய யானை தோன்றித் தேவர்களைத் துன்புறுத் தினமை இத்திருமந்திரத்தால் அறியக் கிடக்கின்றது. சிவபெருமான் யானையை உரித்த பொழுது அவர் கொண்டிருந்த உருத்திரத் திருமேனியின் ஒளியையும், வீரச் செயலையும் காணமாட்டாது உமாதேவியை உள்ளிட்ட பலரும் நடுக்கங் கொள்ளச் சிவபெருமான் யானையை உரித்து அத்தோலைப் போர்வையாக அணிந்து அவர் களது அச்சத்தைப் போக்கினமை கந்த புராணத்துட் கூறப்பட்டது.
ஐம்பொறிகளை யானையாகக் கூறுதல் மரபாகலின், ஏனைத் தேவர் பலரும் மதங்கொண்ட யானைபோலும் அவ்வைம்பொறிச் சூழலில் அகப்பட்டுச் சுழலும் பசுக்களேயாக, அவற்றை வென்று நிற்கும் பதி சிவபெருமான் ஒருவனே என்பது இவ்வரலாற்றால் அறியத்தக்கது என்பதை நாயனார் உய்த்துணர வைத்திருத்தலை நுண்ணுணர்வால் நோக்கி உணர்க. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயலாம். இதனைக் காசியில் நிகழ்ந்ததாகவே கந்தபுராணம் கூறிற்று.
கொளுவுதற்கும், முழங்குதற்கும் ``முனிவர்`` என்னும் எழு வாய் வருவித்து, ``கொளுவி முழங்கு`` என இயைக்க. முழங்குதல் - மந்திரத்தை உரத்து உச்சரித்தல். வேள்வியுள் அத்தி - வேள்வியுள் எழுந்த யானை. ``உரி`` என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகு பெயராய், ``உரித்தவன்`` எனப் பொருள் தந்தது. தாம், அசைநிலை. ``பல தேவர்தாமும்`` என்பது மாறிநின்றது. உம்மை, முற்றும்மை. ``தீயின்`` என்றதும், `தீச் சாலையின்` என ஆகுபெயராயிற்று. `அத்தி யினுள்` என்பதே பாடமாயின், `தீ` என்பது குறுக்கல் பெற்றது என்க. எழுந்து - சென்று தங்கி. ``கொலையே`` என்றதன்பின் `உண்டார்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.
இதனால், சிவபெருமான் யானையை உரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

பொழிப்புரை :

சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.

குறிப்புரை :

இது காலசங்கார மூர்த்தியைத் திருக்கடவூரில் உள்ள ஓர் யோகிபோல வைத்துச் சிலேடையால் உவமித்தது. இதனை,
யோகிக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`மூலாதாரமாகிய இடத்தில் வைத்துக் கீழ்நோக்கித் துயில் கின்ற நாகராசனை அதன்மேல் உள்ள சுழுமுனைக்கு மேலதாகிய புருவ நடுவாகிய இலாடத் தானத்தை நோக்கி நிற்குமாறு எழுப்பி, அதன்பொருட்டு வாயுக்களுள் முதலாவதாகிய பிராண வாயுவைச் சுழுமுனை நாடியின் அடியில் அசைவற நிறுத்தி, அத்தகைய வாயுப் பயிற்சியாலே, தனக்கு அளந்த வாழ்நாள் எல்லைக்கண் கூற்றுவன் வந்து தன்னை அணுகாதவாறு தடுத்துத் திருக்கடவூரில் நலத்துடன் நீடு வாழ்கின்றமை `வியப்பு` எனவும்,
காலசங்கார மூர்த்திக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`முப்பத்தாறு தத்தவங்களுள் கீழ் நிற்பதாகிய நிலத்தின்கண் அமைந்த கோயிலிலே வழிபாட்டில் முனைந்து நின்ற மார்க்கண்டேய முனிவரை நாதமாகிய மேல்தத்துவ புவனத்தில் மேலான அபர முத்தராய்ச் சென்று வாழுமாறு கடைக்கணித்து, அவர் வழிபட்ட இலிங்கத் திருமேனியில் வெளிப்பட்டு அவர்மேல் வந்த காலனைக் காலால் உதைத்துத் தள்ளி, அருளோடு நீடு நிற்றல் வியப்பு` எனவும் உரைத்துக் கொள்க.
நாகராசன், குண்டலினி. இதனைப் பெண்பாலாகக் கூறுதல் மரபாயினும், `நாகராசன்` என்னும் வழக்குண்மை பற்றி ஆண்பாலாக ஓதினார். இரண்டாவது பொருட்கு, துவாரம் - வாயில்; கருவி. முதல் உரையுள் ``நோக்கி`` என்பது, அதன் காரியம் தோன்ற நிற்கும். `சிவபெருமான்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது. `அங் கியோகமாய்` என்பதில், யகரம் வருவழி இகரங் குறுகிற்று(தொல். எழுத்து, 411) `யோகியாய்` எனற்பாலதனை, ``யோகமாய்`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது. இறுதியில் `வியப்பு` என்பது சொல்லெச்சம். இங்ஙனம் சிலேடித்ததனானே, அட யோகம் செய்வார், வாழ்நாள் சிறிது நீட்டிக்கப் பெறுதலையும், சிவயோகம் செய்வார், ஞானம் பெற்று வீடு அடைதலையும் குறிப்பால் உணர்த்திச் சிவனது திருவருட் பெருமையை விளக்கினார் என்க. எனவே, சிவபெருமான் காலனைக் காலால் உதைத்த வரலாறு ` யோக மதத்தவர், சிவநெறியாளர்` என்னும் இருதிறத்தார்க்கும் ஏற்ற பெற்றியால் மேற்குறித்த இரண்டு உண்மை களையும் விளக்கி நிற்றல் பெறப்பட்டது.
மிருகண்டு முனிவர் புத்திரப்பேறு இன்மையால் தம் இல்லா ளோடும் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யச் சிவபெருமான் வெளிப்பட்டு `உங்கட்கு அறிவிலியாய் நூறாண்டு வாழும் மகன் வேண்டுமோ, அறிவுடையவனாய்ப் பதினாறாண்டு வாழும் மகன் வேண்டுமோ` என வினாவ, தவம் புரிந்த இருவரும், `அறிவுடைய மகனே வேண்டும்` என்றனர். அதன்படி கொடுத்து மறைந்த சிவபெரு மானது வரத்தின்படி அவர்கட்கு மார்க்கண்டேய முனிவர் பிறந்து, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பொழுது பதினாறா வது ஆண்டு வந்து அடைய, பெற்றோர் இருவரும் மகனைக் காணுந் தோறும் வருந்திக் கண்ணீர் விடுத்தனர். மார்க்கண்டேயர் அவர்களது வருத்தத்திற்குக் காரணத்தை அவர்பால் கேட்டறிந்து அவர்களிடம் விடைபெற்றுச் சென்று சிவபெருமானை இலிங்க வடிவில் பூசை செய் திருந்தார். அவருக்கு அளந்த நாள் முடிவில் கூற்றுவன் வந்து அவரை அழைக்க, அவர் சிவபெருமானையே தஞ்சமாக அடைந்து நின்றார். கூற்றுவன் அம்முனிவர் பற்றி யிருந்த இலிங்கத்தோடு அவரைப் பாசத் தாற் பிணித்து இழுத்தபொழுது, சிவபெருமான் அவ் இலிங்கத்தி னின்றும் வெளிப்பட்டுத் தமது இடக் காலால் கூற்றுவனை உதைத்துத் தள்ளி, மார்க்கண்டேயரை என்றும் பதினாறாண்டாக இருக்க அருள் புரிந்து மறைந்தார். இவ்வாறு இவ் வரலாறு கந்த புராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்கடவூர் வீரட்டம் என்பதை நாயனாரே அருளிச் செய்துள்ளார். இது காசியில் கங்கா நதியின் மணி கண்ணிகைத் துறையில் நிகழ்ந்ததாகவே கந்த புராணத்தில் சொல்லப் பட்டது. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால் சிவபெருமான் காலனை உதைத்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.

குறிப்புரை :

`இந்நிலை பல சமயத்தார்க்கும் பொது` என்பது பற்றி, `அருந்தவ யோகம்` எனப் பொதுப்படக் கூறிப் போந்தார். லிங்கம் - குறி. வழி - ஒழுக்கம். சிவபெருமான் காமனை எரித்த வரலாற்றால் அறியக் கிடக்கும் உண்மை வெளிப்படை என்பது பற்றி, இவ்வாறு இனிது விளங்க ஓதியொழிந்தார். ``அங்கண்`` என்றதன்பின் `நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. `குறுக்கை` என்பது, `கொறுக்கை` என மருவிற்று. `குறுக்கை என்பதே பாடம்` எனலுமாம். `சிவபெருமான் கொறுக்கை அமர்ந்தது, இருத்தி, போக்கி, அழித்து நிற்கும் யோகமே` என வினை முடிவு செய்க.
உமாதேவி, `தக்கன் மகள்` என்னும் நிலையை மாற்றிக் கொள்ள விரும்பிச் சிவபெருமானது அருளிப்பாட்டின்படி மலை யரையனுக்கு மகளாய்த் தோன்றி வளர்ந்து இமயமலையில் தவம் செய்துகொண்டிருக்க, சிவபெருமான் சனகாதி நால்வர் முனிவர்கட்கு உண்மை ஞானம் உணர்த்த வேண்டித் திருக்கயிலையில் தென்முகக் கடவுளாய் யோக நிலையில் இருந்த பொழுது, திருமாலின் சொற்படி, பிரமன் முதலிய தேவர்கள் தமக்குத் துயர் விளைத்த சூரபதுமனாதி அசுரரை அழித்தற்குச் சிவபெருமான் உமாதேவியாரைக் கூடி முருகப் பெருமானைத் தருதற் பொருட்டு அவருக்குக் காமத்தை விளைக் குமாறு காமவேளை ஏவினர். அவன் சென்று சிவபெருமான்மீது தனது மலர் அம்புகளை விடுத்தபொழுது, சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைச் சிறிதே திறக்க, அதினின்றும் புறப்பட்டுப் படர்ந்த தீயால் காமவேள் சாம்பராயினன். இவ்வரலாற்றைக் கந்த புராணம் விரித்துக் கூறும். இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்குறுக்கை வீரட்டம் என்பதையும் நாயனார் தாமே எடுத்தோதினார். இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால், சிவபெருமான் காமனை எரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.
சிவபெருமானது அட்ட வீரட்டங்களையும் அவை குறிக்கும் வீரச் செயல்களோடு கூறும் பழைய தனிப்பாட்டு ஒன்று வருமாறு:
பூமன் சிரம்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் கொறுக்கை, யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.
-தனிப்பாட்டு
(பூமன் - பிரமன். மாமன் - தக்கன். தேம் மன்னு - தேன் மிகுந்த. சேவகம் - வீரம்)
இவற்றுள் வழுவூர் ஒன்றும் வைப்புத்தலம்; ஏனைய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
இவ்வாறு நாயனார் ``வீரட்டம்`` எனச் சிறப்புப் பெற்றத் தலங்களைக் குறித்தருளினமையால், பிறவகையில் சிவபெருமானது அறக்கருணைச் செயல் மறக்கருணைச் செயல்களைக் குறிக்கும் தலங்களும், அவை பற்றிய வரலாறுகளும் சிவநெறி நிற்பார்க்கு இன்றியமை யாதனவாதல் அறியப்படும். இவ்வாற்றானே சமய குரவர் நால்வரும் தமது திருப்பாடல்களாலும், சென்று வணங்கிய திருநெறி ஒழுக்கத்தாலும், அதியற்புத விளைவுகளாலும் திருக்கோயில்களின் இன்றியமையாமையை இனிது விளக்கினமை கருத்திற் கொள்ளற் பாலது.

பண் :

பாடல் எண் : 1

அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.

பொழிப்புரை :

உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.

குறிப்புரை :

`அதனால் சிவபெருமான் யாவராலும் வழிபடத் தக்கவன் என்பது விளங்கும்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியை முதலிற்கொண்டு உரைக்க. ``அரசன்`` என்றற்கு ``முடிசேர் மலைமகனார்`` என்றார். ``உமையம்மை`` என்னும் எழுவாய் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உமையம்மையே சிவனை வழிபட்டமை கூறப் பட்டது. இத்தகைய தலங்கள் காஞ்சி முதலியனவாகச் சிறப்புற்று விளங்குதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

பொழிப்புரை :

`முப்புரத்தை எரித்த முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மை போன்றார்க்கன்றி நம்மனோர்க்குக் கிடைத்தற்கரியன்` என்று தளர்ச்சி எய்த வேண்டா. அன்புடையார் யாவராயினும் அவர்க்கு அவன் எளியனே. அன்புடையார் பால் அருளுடையவ னாய் நின்று அவரவர்க்குத் தக்க வகையில் அவன் அருள் செய்வான்.

குறிப்புரை :

புரிவு - விருப்பம்; அன்பு, பொய், இங்கு அருமை. பரிவு - தன்மை; தகுதி. `அவரவர்க்குத் தக அருள்புரிவான்` என்றதனால்,`பயன் கருதியும் அவனை வழிபடலாம்` என்பது உணர்த்தப்பட்டதாம்.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ``யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை`` (தி.10 பா.251) என மேற்குறித்த வழிபாடு அவரவர்க்கு இயலுந் திறத்தால் சிவனுக்குச் செய்தல் தக்கது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே.

பொழிப்புரை :

மிக்க வலிமை பொருந்தித் தம்மில் போர்செய்த பிரமன், திருமால் என்னும் இருவரும் தம்முன் தீப்பிழம்பாய்த் தோன்றிய சிவபெருமானைப் பின்பு இலிங்கத் திருமேனியில் நெடுங் காலம் வழிபட, அவர்கட்குச் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரப் படையையும், பிரமனுக்குத் தண்டாயுதத்தையும் வழங்கி, முறையே, காத்தல் படைத்தல்களைச் செய்யுமாறு அருள்புரிந்தான்.

குறிப்புரை :

எனவே, குற்றம் செய்தலை இயல்பாக உடைய உயிர்கள் தாம் செய்த குற்றத்திற்குச் சிறந்த கழுவாய் (பிராயசித்தம்) ஆகச் செய்யத்தக்கதும் சிவ வழிபாடே என்றதாயிற்று. ஆழி இரண்டில் முதற்கண் உள்ளது `ஆழம்` எனப் பொருள்தந்து, மிகுதியை உணர்த் திற்று. வலம் இரண்டில் முன்னது வலிமை. அஃது அதனால் ஆகிய போரைக் குறித்ததது. `கொண்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வாள் - படைக்கலம். `வாள் பெற்றான்` என்றே கொள்ளுதலும் பொருந்தும்.
ஒருகற்பத்தில் பிரமனும், மாலும் தாம் தாமே உலகிற்கு முதல்வர் எனத் தருக்கிப் போர்புரிய, அவர்க்கு இடையே சிவ பெருமான் அடிமுடி அறியப்படாத அனற் பிழம்பாய்த் தோன்றியருள, அவ்விருவரும் `இதன் அடி முடிகளை அறிபவரே முதல்வர்` என வரையறுத்துக்கொண்டு அவற்றைக் காண முயன்றனர். திருமால் வராக வடிவங்கொண்டு நிலத்தைப் பிளந்து பல்லாயிரம் யாண்டு கீழ்சென்று அடியைக் காண முயன்று முடியாதவராய், `இது சிவ பெருமானது திருவிளையாடல்` என்று அறிந்து தருக்கொழிந்தார். பிரமன் அன்னப் பறவை உருவங்கொண்டு பல்லாயிரம் யாண்டு மேலே பறந்து சென்றும் முடியைக் காண இயலாதவனாய், திருமால் அடியைக் கண்டிருப்பார் என்னும் கருத்தினால் அவர்முன் வந்து `யான் முடியைக் கண்டேன்` என்று பொய் கூறினான். அவன் பொய்ம் மொழிக்குச் சான்றாகச் சிவபெருமானது முடியினின்றும் வீழ்ந்த தாழை மலர் நின்றது. பிரமன் பொய் கூறுதலைப் பொறாத சிவபெருமான் அக்கினித் தம்பத்தைப் பிளந்துகொண்டு உக்கிரவடிவத்துடன் காட்சி யளித்துப் பிரமதேவனுக்கு இவ்வுலகில் எங்கும் கோயில் உண்டா காதவாறு சபித்தும், தாழை மலரைத் தமக்கு ஆகாது என்று விலக்கியும் ஒறுத்தருளினார். பின்பு பிரமதேவன் அஞ்சி வணங்க, அவனுக்கு அந்தணர் இல்லமே கோயிலாகவும், அவரைப் பிறர் வழிபடும் வழி பாடே அவனுக்குச் செய்யும் வழிபாடாகவும் அருள் செய்தார். பின்பு, மால் அயன் இருவரும் வேண்டச் சிவ பெருமான் தம் வழிபாட்டிற் குரிய இலிங்கவடிவாயினார். அவ் வடிவில் இருவரும் சிவபெரு மானைப் பூசித்துப் பயன் பெற்றனர். இதுவே இலிங்கத் தோற்றத் திற்குப் புராணம் கூறும் வரலாறு. இவ் வரலாற்றை விரித்துக் கூறும் புராணமே இலிங்க புராணம். இதனைக் கந்த புராணம் ஓரளவில் கூறும். ``இலிங்க புராணம்`` என்பது ``சைவ புராணம்`` என்பதன் மறுபெயர்.
பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால்
பரமமியாம் பரமமியாம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
- தி.8 தோணோக்கம் , 12
என மாணிக்கவாசகர் இவ்வரலாற்றை எடுத்தோதியருளினார். ``திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி`` - தி.8 தெள்ளேனம், 1 என்று பிறவிடங் களிலும் குறித்தருளுவார். தேவாரத் திருமுறைகளுள் இவ்வரலாறு பயின்று வருதல் வெளிப்படை. திருநாவுக்கரசர் `இலிங்க புராணத் திருக்குறுந்தொகை` என ஒரு திருப்பதிகமே அருளிச்செய்தார்.
இதனால், சிவபெருமானே முதல்வனாதலை விளக்கும் இலிங்க வரலாறு கூறப்பட்டது. இதனானே அப்பெருமான், உயிர்கள் தன்னை வழிபடுதற்குக் கொண்ட வடிவங்களுள் இலிங்கத் திரு மேனியே சிறப்புடையதாதலும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தனது கயிலைப் பெருமலையைத் தூக்கி எறியக் கருதி இருபது தோள்களாலும் மேல் எழுமாறு தாங்கி எடுத்த இராவணனது நிகரில்லாத பேராற்றலைத் தனது கால் விரலால் விரைய ஊன்றி அவன், இறைவனே என்று அழைத்து அலறி முறை யிட்ட பின் அவனை விடுத்து, அழிவில்லாத வரத்தையும் கொடுத் தருளினான்.

குறிப்புரை :

இவ்வரலாறு இராமாயணம் உத்தர காண்டத்துள் சொல்லப்பட்டது.
இதனால், சிவபெருமான் இராவணனுக்கு மறக்கருணையும், அறக்கருணையும் செய்தமை கூறப்பட்டது. வழிபட்டவர்க்கே அறக்கருணை செய்வான் என்க.

பண் :

பாடல் எண் : 5

உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.

பொழிப்புரை :

`செய்யத் தக்க செயல் இது` என்பதை முற்பிறப்பிற் செய்த தவமுதிர்ச்சியால் தெளிந்த தண்டீசநாயனார் மணலால் இலிங்கம் அமைத்து, வினை கெடும்வகையில் பசுவின் பாலையே எல்லாத் திருமஞ்சனப் பொருளுமாகக் கருதி ஆட்டி வழிபட, அவரைப் பெற்ற தந்தை தன்மகன் வேள்விக்குரிய பாலை வீணாக்கு வதாக நினைத்து வெகுண்டு ஒறுக்க வேண்டித் தண்டுகொண்டு அடித்து, அது பயன்படாமையால், இலிங்கத் திருமேனியைக் காலால் அழிக்க, நாயனார் சினந்து, தாம் ஆனிரை மேய்க்கும் கோலை எடுத்தபொழுது அதுவே மழுவாய் மறுவடிவங்கொள்ள, அதனாலே அவன் காலை வெட்டி, அதற்குப் பரிசிலாகச் சிவபெருமான் சண்டேசுர பதவியில் இருத்தித் தன் முடிமேல் இருந்து எடுத்துச் சூட்டிய கொன்றை மாலையைப் பெற்றார்.

குறிப்புரை :

எனவே, `சிவ வழிபாட்டின் மிக்க வழிபாடும் இல்லை; அதனை இகழ்தலின் மிக்க பாவமும் இல்லை` என்பதும், அங்ஙன மாகவே, `அவ்வழிபாட்டினை இகழ்வார் எவராயினும் அவரைப் பாவிகளாகக் கருதி ஒறுத்தல் பேரறமாம்` என்பதும் குறித்தவா றாயிற்று. தமிழ் நாட்டில் வரலாற்று முறையால் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வழங்கி வந்த இவ்வரலாற்றினை நாயனார் இத் திருமந்திரமாக ஆக்கியருளினார். இச்சிறப்புக் கருதித் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு, நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டு மன்றே.
-தி.3 ப.54 பா.7
என்று அருளிச் செய்தார்.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபரம் மணலால் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக்கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
-தி.4 ப.49 பா.3
என அப்பரும் இதனை வகுத்தோதியருளினார்.
இவையெல்லாம் பற்றித் தொகையாகவும், வகையாகவும் அவ்வக்காலத்தில் வெளிப்பட்ட திருத்தொண்டர் வரலாற்றினை விரிவாகச் செய்தருளிய சேக்கிழார் நாயனார் தமது திருத்தொண்டர் புராணத்துள் இவ்வரலாற்றை விரித்தருளியவாறு இது.
`சோழநாட்டில் திருச்சேய்ஞலூரில் வைதிக அந்தணர் குலத்தில் `எச்ச தத்தன்` என்னும் தந்தைக்கும், `பவித்திரை` என்னும் தாய்க்கும், `விசார சருமர்` என்னும் அரும்பெறற் புதல்வர் ஒருவர் தோன்றினார். அவர் முன்னைத் தவமுதிர்ச்சியால் கல்வியைச் சிறக்கக் கற்று, உபநயனம் பெற்று, வேதம் முதலிய கலைகளினும் வல்லவராய், `சிவபெருமானே முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து, அவனது திரு வடிக்கண் அன்பு மீதூர்ந்து நின்றார். அவர் ஒருநாள் பிற மாணாக் கருடன் வேதம் ஓதிச் செல்லுகையில் வழியில், அவ்வூர்ப் பசு மேய்க்கும் ஆயன், தன்னை முட்டிய பசு ஒன்றினைக் கோலால் நன்கு புடைத்ததைக் கண்டு வருத்தமும் சினமும் கொண்டு, `பசுக்களின் பெருமையை அறியாத நீ இனி இவற்றை மேய்த்தல் வேண்டா; இன்று முதல் யானே இவற்றை மேய்க்கின்றேன்` என்று அன்று முதல் அவ் ஆனிரைகளை அவரே மேய்த்து வருவாராயினார்.
அவர் அப்பசுக் களிடத்துக் கொண்ட உண்மை அன்பால் அப்பசுக்களும் அவரிடம் பேரன்பு கொண்டன. நல்ல மேய்ப்பினால் அவை தம்மை உடை யவர்க்கு முன்னையினும் மிகுதியாகப் பால் தந்தன. அதனால், `இம் மாணியின் மேய்ப்பே நல்ல மேய்ப்பு` என ஊர் அந்தணர் பலரும் மகிழ்ந்தனர்.
பசுக்கள் பலவும் விசார சருமரைக் காணும் பொழுது தம் கன்றினைக் கண்டாற்போல அன்பு பெருகி நின்றமையால், அவற்றின் மடியில் பால் தானாகவே விம்மிப் பெருகுவதாயிற்று. சிவ வழிபாடு ஒன்றற்கே உரிய பசுக்களின் பால் வீணாவதைக் கண்ட விசார சருமர், அதனைச் சிவபெருமானுக்கு ஆக்கக் கருதித் தாம் பசுமேய்க்கும் மண்ணியாற்றங்கரையில் மணல் இலிங்கம் அமைத்து அப்பாலைக் குடங்களில் ஏற்று ஆட்டி வழிபட்டார்.
இவ்வாறு நாள் பல செல்ல, இதனை அறிந்த ஒருவன், `பசுமேய்க்கின்ற சிறுவன் பாலைக் கறந்து மண்ணியாற்று மணலில் ஊற்றுகின்றான்` என்று அந்தணர்களிடம் சென்று கோள் உரைத்தான். அந்தணர்கள், தமக்குப் பால் குறைவறக் கிடைப்பினும், விசார சருமரது வழிபாட்டின் சிறப்பை அறியாத வர்களாய் அவர் தந்தையாகிய எச்ச தத்தனிடம் கூறினர். எச்ச தத்தன், `நாளைமுதல் இச்செயல் நிகழாதவாறு செய்கின்றேன்` என்று உறுதி கூறி, விசார சருமர் பசு மேய்க்கச் சென்றபின், அவர் அறியாதவாறு அவர் பின்னே சென்று மண்ணியாற்றங்கரையில் ஒரு குராமரத்தின் மேல் ஏறி மறைந்திருந்து, தன் மகனாரது செயல் பலவற்றையும் நோக்கி யிருந்தான்.
அவர் முன்புபோல மணலால் கோயிலும், இலிங்கமும் செய்து, பாலைக் கொணர்ந்து வைத்துப் பூ முதலியவைகளையும் சேர்த்துக் கொணர்ந்து வழிபாட்டில் அமர்ந்து அன்புடன் வழிபடுவா ராய்ப் பாலை எடுத்துக் குடம் குடமாக ஆட்டும்பொழுது எச்சதத்தன் சீற்றம் மிகுந்து இறங்கிச்சென்று மகனாரைவைது, கோல் ஒன்றினால் முதுகில் புடைத்தும் நின்றான்.
ஆயினும் அவற்றை விசார சருமர் பூசை நினைவால் அறிந்திலர். அதனால் எச்ச தத்தன் கோபம் மூண்டு சென்று, அவர் வழிபடும் மணல் இலிங்கத்தைக் (இலிங்கத்தை இடறினமையை வாயால் சொல்லுதலும் கூடாது என்று சேக்கிழார் பாற்குடத்தை இடறியதாகக் கூறினார்) காலால் சிதைத்தான். அதனால் மிக வெகுண்ட விசார சருமர், தம் பக்கத்திருந்த பசுமேய்க் கும் கோலை எடுக்க, திருவருளால் அது மழுவாயுதமாக மாறிற்று. அதனாலே அவர் எச்சத்தத்தனது இரண்டு கால்களையும் துணிந்து வீழுமாறு வெட்டினார். எச்சதத்தன் அலறித் துடித்து மண்ணில் விழுந்தான்.
விசார சருமர், `இனிச் சிவபூசைக்கு வரும் இடையூற்றை நீக்குவதற்குக் கருவியாக இம் மழுப்படை திருவருளால் கிடைத்தது` என்று மகிழ்ந்து மீளவும் சிவபூசைக்கு ஆவனவற்றைச் செய்ய முயன்றார்.
அப்பொழுது சிவபெருமான் தேவர், முனிவர், கணங்கள் புடைசூழத் தோன்றிக் காட்சியளித்து, `நம் பொருட்டு நின் தாதையைத் தடிந்த நினக்கு இனி நாமே தந்தை; நீ நம் மகன்` என்று திருவாய் மலர்ந்து, தம் கையால் அவரைத் தழுவி எடுத்து மார்போடு அணைத்து, உச்சிமோந்து சீராட்ட, விசார சருமர் முன்னை மாயா உடம்பு நீங்க, அருளுடம்பு பெற்றுச் சிவகுமாரர் ஆயினார்.
பின்பு சிவபெருமான், `நம்மை வழிபடுவோர் நமக்கு ஆக்கிப் பெறும் நின்மாலியப் பொருள்கள் உனக்கு மட்டுமே உரியனவாக` என அருளிச்செய்து, சிவனடியார் பலர்க்கும் தலைமையாய் அவர்கட்கு அவர் தம் திருத்தொண்டின் பயனை வழங்கும் சண்ட பதவியை அவருக்கு அளித்து, அதற்கு அடையாளமாகத் தமது திருமுடியில் உள்ள கொன்றை மாலையை எடுத்துச் சூட்டியருளினார்.
நாயனாரால் தண்டிக்கப் பெற்றமையால், எச்சதத்தனும், அவனைச் சார்ந்தோரும் சிவாபராதத்தால் `எரிவாய் நிரயம் புகாது நீங்கிச் சிவலோகத்தை எய்தினர்`.
`சண்டேசுரர்` என்பது இவரது பதவியாற் பெற்ற பெயர். கையில் தண்டு கொண்டு ஆனிரை மேய்த்து, அத்தண்டே மழுவாகப் பெற்றுப் பிழைசெய்தவனை ஒறுத்தமை பற்றி, `தண்டீசர்` எனவும் அழைக்கப்படுகின்றார். சிவகுமாரர் ஆயினமைபற்றி இவர், `பிள்ளையார் - சேய்ஞலூர்ப் பிள்ளையார்` எனப்படுகின்றார்.
திருத்தொண்டத் தொகை அடியவருள் ஒருவராயினமைபற்றி நாயன்மார்களுள் இவரும் அவருள் ஒருவராய் நின்று திருக்கூட்டத்து வழிபடப்படுதலே யன்றிச் சிவபெருமான் இவருக்கு அளித்த தனிச்சிறப்புக் காரணமாகச் சண்டேசுர நிலையில் நின்று தனி வழிபாடும் பெறு கின்றார்.
அதனால் இவரை நாயன்மார்களுள் ஒருவராகமட்டும் வைத்து வழிபட்டுச் சண்டேசுரராக வழிபடாது ஒழிபவர் சிவபெருமானது அருளாணையைக் கடந்தவராவர். அவர்கட்குச் சிவவழிபாட்டின் பயன் கிட்டுதல் அரிது.
இவ்வரலாற்றால் சிவவழிபாடு வீடுபேற்றைத் தரும் என்பது அறியப்படும். மற்றும், `சிவவழிபாட்டிற்கு இடையூறு விளைப்பாரை ஒறுத்தல் பெருஞ் சிவபுண்ணியமாம் என்பது இதனால் விளங்குவது` எனச் சேக்கிழார் திருப்பாசுரத் திருக்குறிப்பருளலில் குறித்தல் காண்க. (தி.12 திருஞான - 839)
`சிவனடியாரால் ஒறுக்கப்பெற்றவர் தம் குற்றம் முழுதும் நீங்கித் தூயராவர்` என்பது, நாயனாரால் தண்டிக்கப்பெற்ற எச்சதத்தன் குற்றம் நீங்கிச் சிவலோகம் புகுந்தமையால் அறியப்படும். `சிவ வழிபாடு நன்கு நடைபெறுதல் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் யாவும் சிறந்த சிவபுண்ணியங்களே` என்பதை மாணிக்கவாசகர்,
தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் சிவனருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.
-தி.8 தோணோக்கம் ,7
என நன்கு எடுத்து அருளிச்செய்தார்.
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்தசண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூ ருளானே. -தி.7 ப.55 பா.3
என்று நம்பியாரூரர் இனிது விளங்க எடுத்தருளிச்செய்தமை காண்க.
இதனால், சிவபெருமான் சண்டேசுர நாயனாருக்கு வியத்தகும் அறக்கருணை செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.

பொழிப்புரை :

தேவர் பலரும் பற்பல காலங்களில் பற்பல துன்பங்களை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டு அத்துன்பம் நீங்குதல் வேண்டி அப்பெருமானை அவன் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லி மலர்தூவிப் போற்றிசெய்து வழிபட, சிவபெருமான் அவர்களை அத்துன்பங்களினின்றும் நீங்கச் செய்தான்.

குறிப்புரை :

எனவே, `இங்கும், மேலேயும் கூறியவாறு தேவர், மூவர், முனிவர், அசுரர், இராக்கதர் முதலிய யாவரும் சிவபெரு மானை வழிபட்டே தாம் கருதிய பயனை அடைந்தனர்` என்பது முடித்துக் கூறியவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

பொழிப்புரை :

தக்கனது வேள்விக் குண்டத்தில் தீ நன்கு வளர்க்கப் பட்டபொழுது அங்குக் கூடியிருந்த தேவர், யாவர்க்கும் தந்தையும், தலைவனுமாகிய சிவபிரானை இகழ்ந்த அத்தக்கனுக்கு, முதல் ஆகுதியைச் சிவபெருமானுக்குச் செய்யுமாறு அறிவு புகட்டி அவ்வாறு செய்வித்து அவ்வேள்வியை முடிக்க மாட்டாதவராய், அவனுக்கு அஞ்சி முறை திறம்பித் திருமாலுக்கு முதல் ஆகுதியைச் செய்ய இசைந்திருந்தமையால், பின் அப்பெருமான் சினந்து வீரபத்திரரை விடுத்தபொழுது அவரால் அனைவரும் அழிந்தனர்.

குறிப்புரை :

இது முதலாகக் கூறுவன பலவற்றையும் கந்த புராணத்துட் பரக்கக் காண்க. `வெந்தழல் ஊடே புறப்பட` என்பதை முதலிற் கொள்க. `குண்டத்தின்` என்பது வருவிக்க. `பிரானை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. வெகுண்டானாகிய தக்கன் என்க. `முந்திய பூசையால்` என உருபு விரிக்க. `முடியார்` என்றது முற்றெச்சம். `கெடுதலால்` என்பது, `கெட்டு` எனத் திரிந்து நின்றது.
இதனால், அச்சம் காரணமாகச் சிவநிந்தையைத் தடுக்க மாட்டாது உடன்பட்டிருந்த தேவரைச் சிவபெருமான் ஒறுத்து முறைப் படுத்தினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.

பொழிப்புரை :

வீரபத்திரர் தன்மேற்கொண்ட சினந்தணிந்து நின்றதை அறிந்து அச்சம் நீங்கி எழுந்த மாயோன் `எம் தந்தையே; நாங்கள் இத்தக்கன் போலச் சிவநிந்தை செய்பவர் அல்லேம்; (ஆதலின், எங்களைத் துன்புறுத்தாதீர்)` என்று சொல்லி மண்ணில் பதிந்த அவரது பாதங்களில் வீழ்ந்து துதிக்க, சிவனேயாயுள்ள அவரும் அவன்மேல் இரக்கங்கொண்டு ஒறுத்தலை ஒழிந்தார்.

குறிப்புரை :

வீரபத்திரர் மாயோனை வெகுளாது சினம் தணிந்தது, அவர் அவனை ஒறுக்கச் சென்றபொழுது சிவபெருமான், வான் மொழியாக, `சினம் தவிர்தி` என்று கூறினமையாலாம். `எழுகின்ற` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. தான், அசைநிலை. உம்மை, சிறப்பு. ``யாமே`` என்ற ஏகாரம் அசைநிலை. இதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது. பந்தம் - சம்பந்தம். `உலகினில் பந்தம்செய் பாதம்` என்றது, அவ்வாறாதலின் அருமை குறித்தவாறு. `பாசம்` என்பது பாடம் அன்று. ``தவம்`` என்பது துதியை.
இதனால், சிவபெருமான் மாயோனது பிழையைப் பொறுத்து அவனுக்கு அருள்செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே சிவ நிந்தை செய்பவனாகிய தக்கனது தலைமையான வேள்வியில் அக்கினி தேவன் ஏனையோர் வேள்வியிற் போலவே கிளர்ந்தெழுந்து தன் கடமையைச் செய்யமுற்பட்டது வியப்பு என்றாலும், தக்கனோ டேயன்றி ஏனைத் தேவரோடும் மாறுபடுதற்கு அஞ்சிய அவனது நிலைமையைத் திருவுளத்தடைத்து அவனுக்கு அளித்திருந்த ஆற்றலை மாற்றாது சிவபெருமான் வாளா இருந்தான்.

குறிப்புரை :

`அயன்` என்பது தக்கனுக்கும் பெயராய் வழங்கும். பதி - தலைமை. `அந்நீர்மை` எனற்பாலதனை, ``அது நீர்மை`` என்றார். `அப்பரிசாய அந்நீர்மை` என்க; ஆலித்தல் - மகிழ்தல்; இசைந்திருந்தல். இதனால், சிவபெருமான் அக்கினிதேவனை மன்னித் தருளினமை கூறப்பட்டது. அக்கினி தேவன் கையை வெட்டினமை திருவாசகத்துத் திருவுந்தியாரில் கூறப்பட்டது. `அது பெருந் தண்டம்` அன்று என்னும் கருத்தால் அவனது சுடும் சத்தியை மாற்றாதிருந்தமை கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 4

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே அயன், மால் முதலிய தேவர் பலரும் சிவனை நிந்தியாதொழியினும், நிந்தித்த தக்கனைத் திருத்தமாட்டதவராயினர். அன்னராயினும், தக்கனது வேள்வியில் அவர் ஒருங்கு கூடியிருந்து அவனுக்கு ஊக்கம் மிகச் செய் தமைக்குக் காரணம், தானும் அவர்போலவே அச்சங் கொண்டவனா கிய அக்கினி தேவன், ஏனை இடங் காலங்களிற் போலவே தன் கடமை யுட்பட்டுத் தன் செயலைச் செய்யக் கிளர்ந்து நின்றமையேயாம்.

குறிப்புரை :

`காரணமாவது` என்று தொடங்கினமையால், `அலர்ந் திருந்தான்; அதுவே` என உரைக்க. உள நாள் - பிற இடங்களில் உள்ள காலம். ``நாளும்`` என்பது பாடமாயின், ``உள்ள பல நாள்களிலும் போல`` என உரைக்க.
இதனால், தக்கன் வேள்வியில், குற்றத்திற்கு ஆளானவருள் அக்கினி தேவன் முதல்வனாயினமை கூறி, அவ்வாறாகவும் மன்னித் தருளினமை குறிக்கப்பட்டது. அக்கினிதேவன் தன் காரியத்தைச் செய்யாதொழியின், வேள்வி நடத்தற்கே வழி இல்லையாதல் அறிக.
`தேவர் பலர்க்கும் இடும் அவியைத் தான் சுமக்கலாற்றாத அக்கினிதேவன் ஒருமுறை நீருள் ஒளிந்துகொள்ளத் தேவர் பலரும் வருந்தித் தேடியபொழுது மீன்கள் சில அவன் நீருள் ஒளிந்திருத்தலை அறிவிக்க, அறிந்து அவனைப் பிடித்துச் சென்றனர்` என்பதொரு வரலாறு காஞ்சிப் புராணச் சகோதர தீர்த்தப் படலத்துள் கூறப்படுதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 5

அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
உவந்த பெருவழி யோடிவந் தானே.

பொழிப்புரை :

அக்கினிதேவன் கிளர்ந்தெழுந்தமைக்குத் தக்கன் முன்னிலையில் தேவர் பலரும் அவனைப் புகழத் தேவ கூட்டத்துள் கடைப்பட்டவனாகிய அக்கினிதேவன் முதற் குற்றவாளி யாயினமையை அறிந்து சிவபெருமான் கொண்ட சினமாகிய மேலான தீ அவ்வேள்விச் சாலையிற் சென்று பற்ற, அக்கினிதேவன் தனக்குப் பொருந்தியதொரு பெரிய கள்ள வழியினால் வேள்விச் சாலையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டான்.

குறிப்புரை :

வைதிகருள் கருமகாண்டிகள், தேவர் பலர்க்கும் அவரது அவியைச் சுமந்து சென்று கொடுத்தல்பற்றி அக்கினி தேவனை, `தேவர் பலர்க்கும் கீழ்ப்பட்டவன்` - விண்டு பரமன். அக்கினி அவமன்: அவ்விருவர்க்கும் இடையே எல்லாத் தேவரும் (சிவஞானபோத மாபாடியம் சூ.1 அதி.2) என்பர். அவர் கொள்கையே தக்கன் வேள்விக்குப் பொருந்தியது ஆதலின், ``குலந்தரும் கீழ் அங்கி`` என்றார். `குலத்தால் தரப்பட்ட கீழ்மையை உடைய அங்கி` என்க. கோள் - குற்றம். சிவந்த - கோபித்த. சிவத்தற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. சிவந்த இது - சினந்ததனால் வந்த இத் தீ. `அது` எனின், அக்கினி தேவனைச் சுட்டுமாகலின், `இது` என்றார். ``கீழ் அங்கி`` என்றதற்கு ஏற்ப, ``பரம் இது`` என்றார். கீழான தீ மேலான தீயின்முன் நிற்கலாற்றுமோ என்பது நயம். சிவபெருமானது சினத் தீயாவது, வீரபத்திரரே என்பது வெளிப்படை. ``தீ`` என்றதற்கு ஏற்ப, ``கதுவ`` என்றார்.
இதனால், தக்கன் வேள்வியுள் ஓட்டமெடுத்தவருள் முதல்வன் அக்கினிதேவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

பொழிப்புரை :

சிவபெருமானது கருணையைப் பெறாமையால், தலை, முகம், கை, தோள் என்பவற்றை இழந்த குற்றவாளிகள் முறையே, `மால், அயன், தக்கன்` என்பவரும், சூரிய சந்திரர் கலை மகளும், அக்கினிதேவனும், அழகிய இந்திரனும் ஆவர்.

குறிப்புரை :

``தலை`` என்றதைத் திருமாலுக்கு `தலைமை` என்ற வாறாகக் கொள்க. எண்ணொடுவின் பொருட்டாகிய ``உடனே`` என்ற தனால், `சூரிய சந்திரர்` என ஒரு தொகையாக்குக. வாலை - வெண் ணிறம் உடையவள். இதனைத் தக்கன் மனைவிதன் பெயர் என்பாரது உரைக்குச் சான்றில்லை. தக்கன் மனைவி பெயர், `வேதவல்லி` என்றே கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இதனுள்ளன்றித் திருவாசகத்தும்,
``நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகனெரித் துந்தீபற;
தொல்லை வினைகெட உந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 13.
என நாமகள் நாசி அறுபட்டமை கூறப்பட்டது. `முகம்` என்பது `வாய்` எனவும் பொருள்தருமாகலின், அதனை இரட்டுற மொழிந்து, `அருக்கன் (சூரியன்) பல்லிழந்தான்` என்க.
``சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற;
மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற``
-தி.8 திருவுந்தியார், 15
என்றருளினமை காண்க.
இந்திரன் போகியாதலைக் குறிக்க, `நல் இந்திரன்` என்றார். ``நல்லோர்`` என்றது இகழ்ச்சி பற்றி.
இதனால், தக்கன் வேள்வியில் தேவர் பலரும் பலவாற்றால் ஒறுக்கப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

பொழிப்புரை :

தம் ஆசிரியர் தம் செவியிலே சொல்லக் கேட்ட மந்திரத்தை அவ்வாறே பொருளறியாது ஒப்புவிக்கின்ற அதனையே தவமாகக் கொண்ட நிலத்தேவர் (பூ சுரர்) ஆகிய அந்தணர்கள் அந்நிலை பிறழ்ந்து தக்கன் ஆணைவழியே யாகசாலை அமைத்து, அதில் நெருப்புக் குண்டம் விளைத்து, சிவபெருமானைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களைப் பிறரைப் புகழ்ந்து கூறும் மந்திரங்களாக மாற்றும் முகத்தால் அப்பெருமானை இகழ்ந்து, தாங்கள் நலம் பெற நினைத்து மிகச் சொல்லிய மந்திரங்கள், அவரையே கொல்கின்ற மரண மந்திரங்களாய் விட்டன.

குறிப்புரை :

அவி மந்திரம் - அவிசை வழங்கும் இல்லம். யாக சாலை. அடுக்களை - அட்டில்; என்றது தீக் குண்டத்தை. சவித்தல் - சபித்தல்; இகழ்தல். மூன்றாம் அடியிலும், செவி மந்திரம் என ஓதுதல் பாடம் அன்று. குவி மந்திரம் - குவித்த மந்திரங்கள். ``கொடியது`` என்றது பன்மை மயக்கம். ``ஆம்`` என்றது, `அவை அன்னவாதல் இயல்பு`` என்றவாறு.
இதனால், சிவபெருமானை இகழ்ந்தவர்க்கு மந்திரங்கள் கேடு விளைத்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

பொழிப்புரை :

நல்லோர்கள், நவகண்டமாகிய ஒன்பது கூறுபட்ட இடங்களிலும் துன்பம் நீங்கி இன்புற்று வாழ்தற் பொருட்டுத் தேவர் பலரும், `எமக்கு விரைந்து அருள்செய்க` என வேண்ட, மலையை வில்லாகக் கொண்ட சிவபெருமானே, தீய அசுரர்கள் அழியும்படி ஒளிவிடுகின்ற நெருப்பாகிய அம்பைத் தொடுத்தான்.

குறிப்புரை :

அவ்வாறாக, அத்தேவர் தக்கன் வேள்வியில் அவியை உண்ண அப்பெருமானை விலக்கித் தாம் மட்டுமே சேர்ந்திருந்தது என்னை` என்பது குறிப்பெச்சம். மாணிக்கவாசகரும் இவ்வாறே,
``சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாய்என் றவிதா இடும்நம் மவர் அவரே``
- தி.8 திருச்சதகம், 4
எனத் தேவரது இரங்கத்தக்க நிலையை எடுத்தோதியருளினார். `நல்லோர் இன்புற` என இயையும். `நவகுண்டம்` என்பது பாடம் அன்று. ``ஒன்பதும்`` என்றது, `முழுதும்` என்றவாறு. `ஒன்பதன் கண்ணும்` என உருபு விரிக்க. நாவலம்பொழில் ஒன்பது கண்டமாதல் பற்றி, உலகத்தை `நவகண்டம்` எனக் குறித்தல் வழக்கு. ஐ - தலைவன். `ஐயே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `பொன்றும்படிக்கு விளங்கு எரி கோத்தனன் வில்லார் வரை ஐ` எனக் கூட்டுக. மூன்றாம் அடியின் பாடம் பலபட ஓதப்படுகின்றன.
இதனால், தேவர்கள் தக்கன் வேள்வியில் சென்றமை நன்றி கோறலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே.

பொழிப்புரை :

சிவபெருமானை இகழ்ந்தமையால் அப்பொழுதே செத்தவனாகிய தக்கனது வேள்வியை அழியுமாறு வைதும், பின்னர் அழிந்த அனைவரையும் மீள எழுமாறு வாழ்த்தியும் அருளிச் செய்த வாய்மையை உடைய எங்கள் உமாதேவியே, யாவர் தங்கள் மனத் திட்பத்தை இழந்து நிலைகலங்கிப் பிறரைச் சார்ந்தபோதிலும், நீ நிலை கலங்காமலே நின்று அன்போடு அணைவது எங்கள் சிவபெரு மானையே யன்றோ!

குறிப்புரை :

படர்க்கையில் வைத்து வியக்கற்பாலளாய உமா தேவியை முன்னிலைப்படுத்து வியந்தார், அச்சுவை மிக்கு விளங்குதற் பொருட்டு, பின் இரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. நெளிதல் - நெகிழ்தல். `தெளிந்தார்` என்பது பாடம் அன்று. `ஆர் நெளிந்து கலங்கினும்` என மாற்றுக. அளிந்து - அன்பு மிக்கு. `ஆதிப் பிரானையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``விளிந்தான்`` என்றது துணிவு பற்றி எதிர்காலத்தை இறந்த கால மாகக் கூறியது. சுளிந்து - வெகுண்டு. `சுளிந்துகூறி` என ஒரு சொல் வரு விக்க. தக்கன் தனது வேள்வியைத் தொடங்கிய பொழுது, உமை அம்மை தன்னை அவன் அழையாதிருக்கவும் சென்று அவனுக்கு அறிவுரை கூறியும் கேளாமையால், அவனது வேள்வி அழியும்படி சபித்து மீண்டமையும், பின்னர் வீரபத்திரரால் யாவரும் அழிந்து கிடந் தமையைச் சிவபெருமானுடன் அங்கு அவள் எழுந்தருளியபொழுது கண்டு இரக்கம் உற்று அவர்களை உயிர்ப்பித்தருளுமாறு சிவபெரு மானை வேண்டினமையும் கந்தபுராணத்தால் அறிகின்றோம். அம்மையை வியக்கும் முகத்தால் தேவரது இழிபுணர்த்தியவாறு. இதனால், உமாதேவி தனது செயலால் ஏனையோர்க்கு உண்மை யுணர்த்தினமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே.

பொழிப்புரை :

கரிய மலைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு மேல் எழுந்து பரந்த பிரளய வெள்ளத்திடையே மால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே (தி.10 பா. 345) காட்டப்பட்டது. கோ - தலைவன். இது பன்மை ஒருமை மயக்கமாயிற்று. `ஆகிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், பிரளய காலத்தில் அயன் மால் இருவரும் இகலினமை இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிரளய வெள்ளத்தில் மேற்கூறிய வாறு அனற்பிழம்பாய்த் தோன்றியபொழுது அலைகின்ற கடலை ஊடறுத்துக் கீழ்ப்போகியும், வானத்தை ஊடறுத்து மேற்போகியும் அடி தலை தெரியாவகை நின்று, `தேவர்க்கும் முதல்வன்` என்னும் சிறப் பினைத் தான் உடையவனாய் இருத்தலின், உலகம் தான் கொண்ட தழல் வடிவைக் கண்டு வெருண்டு அதனுள் வீழ்ந்து ஒடுங்காதவாறும், அதனினின்றும் சேய்மையில் ஓடிப் பிரளய வெள்ளத்தில் வீழ்ந்து அழியாதவாறும் அவற்றிற்கு, ``அஞ்சல்`` என்று அபயந்தந்து காத்தருளினான்.

குறிப்புரை :

எனவே, `தெறலும், அளியும் அவ்வவர்க்கு ஏற்ற வாற்றாற் செய்யும் அவனது தலைமைப் பாடு இனிது விளங்கும்` என்றவாறு.
`கொள்ளுதலால்` என்பது `கொண்டு` எனத் திரிந்து நின்றது. தான் தலைவன் எனப்படுதலால் அவனுக்கு உளதாவது ஒரு பயன் இல்லை. அனைத்தையும் உய்விக்கும் சுமையே உளதாவது என்றற்கு, ``தலைவன் எனும் பெயர், தான் தலை மேற்கொண்டு`` என்றார். இதற்குக் காரணம் கைம்மாறு கருதாத கருணையே என்பதாம். ``எடுத்துச் சுமப்பான்`` என்றார் திருவருட்பயனில் (பா.65).
இதனால், சிவபெருமான் தெறலும் அளியும் அக்காலத்துச் செய்து நின்றமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.

பொழிப்புரை :

தண்ணிய கடல் பொங்கி வந்து மலைகளை மூடிய நிலையின் நீங்கி அடங்கிற்று; எனவே, பிரளய வெள்ளம் வற்றிற்று. அதுபொழுது தேவர்கள், `ஏழ்கடலோடு பெரும்புறக் கடலும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் ஓங்கிய அழலாய் நின்றவன் எங்கள் சிவபெருமானே` என அவனைப் பலவாற்றால் துதித்து வணங்கினர். அதன்பின்பு அவர்கள் விண்ணுலகத்தைக் கடல்போலப் பரக்க அமைத்துக்கொண்டு, அங்குச் சென்று குடிபுகுந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் சுவர்க்க இன்பத்தில் திளைக்கின்றனரேயன்றிச் சிவபெருமானை நினைந்து காதலாகிக் கசிந்து, கண்ணீரால் கடலை உண்டாக்கும் எண்ணமே இலராயினர்.

குறிப்புரை :

`இறைஞ்சுவர்` என்பது பாடம் அன்று.
இதனால், ஊழிதோறும் உயிர்கள் சிவபெருமானது முதன்மையை மறந்து வினையிற் சுழலுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான். இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை ஏற்குமாற்றாற் கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் ஒருபெற்றியனாய் நிற்பவனும் ஆகிய அப்பெருமானை அத்தன்மையன் என்று அறிந்து துதித்து உளத்துள் இருத்த வல்லவர் இவ்வுலகத்து உளரோ! இல்லை.

குறிப்புரை :

பின் இரண்டு அடிகளை முதலிற்கொண்டு உரைக்க. சயம்பு `சுயம்பு` என்பதன் திரிபு. சுயம்பு - தானே தோன்றியவன். `உலகத்து உளாரே` என்னாது, `உலகத்துள் ஆரே` என்றலுமாம். அது மிகாமை அங்கி வைத்தான் என்க. இக்கருத்து முன்னேயும் (தி.10 பா.57) கூறப்பட்டது. இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், சிவபெருமான் ஊழி முதல்வனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளியபொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான் தாழ் வின்றிச் சிறந்து நிற்கின்ற இடமாகிய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக் கின்ற பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.

குறிப்புரை :

``பண் பழி`` என்றதற்கு, `பண்ணாற் பழிச்சுதல்` என உரைக்க. `இப் பழிச்சுதலாகிய வழிபாட்டினைச் செய்தவை வேதங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, ``பண்`` என்றதனை ஆகுபெயராக்கி, `வேதம்` என்று உரைப்பினும் ஆம். முதற்கண் `சென்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். கண் - இடம். சென்ற - கழிந்த. பழியாத - இகழப்படாத; என்றது, `புகழத் தக்க` என்றவாறு. இத்தகைய சிறந்த இடத்தில் இருப்பவன் அதற்கேற்ற அறிவுபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பு. நண்பழி, வினைத் தொகை. ஆளன் - அதனை உடையவன். ``சென்று`` என்றது, சென்று கொய்த தன் காரியம் தோன்ற நின்றது. `சிரத்தின்கண்` என உருபு விரிக்க. பழியாத விருத்தி - இகழாமைக்குக் காரணமான தொழில்.
இதனால், மேல், ``அயன்தலை முன் அற`` (தி.10 பா.337) என ஓதப்பட்ட வரலாறும் இப்பொழுதே நிகழ்ந்தது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே.

பொழிப்புரை :

`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.

குறிப்புரை :

`சக்கரம் மேல்போக ஏழும் படைத்துள்ளான்` என்றாரேனும், `ஏழு பார் போகமும் படைத்து அவற்றை நிலை நிறுத்தச் சக்கரம் மேற்போக அளித்துள்ளான்` என்றல் கருத்து என்க. போதகன் - போதிப்பவன். இதற்கு `அறம்` என்னும் செயப் படுபொருள் வருவித்துக்கொள்க. திருமால் அறத்தைப் போதித்தல் சில நூல்களாலும், கொடியோரை அழிக்கும் செயலாலுமாம். கால் போது - வெளிப்படுத்தும்பொழுது: என்றது, `செருக்கினால் அறத்தை அழிவுசெய்து ஒழுகும்பொழுது` என்றதாம். ``அங்கையினோடு`` என்றது, `வறுங்கையால் போர் செய்யாது வலியதொரு கருவி கொண்டு போர் செய்தற்கு` என்றபடி. அம் - அழகு. தரம் - மேன்மை. `மேல் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுச் சிவபெருமான் உண்டாக்கியதாகக் கூறிய சக்கரத்தைத் திருமால் பெற விரும்பிச் சிவபெருமானை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச் சித்து வழிபட்டு வர, ஒருநாள் அவற்றுள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்தருளத் திருமால், அம்மலருக்கு ஈடாகத் தமது கண்ணைப் பறித்து அப்பெருமான் திருவடியில் சாத்தினார். அதனால் மகிழ்ச்சி யுற்ற சிவபெருமான் அவருக்கு அக்கண்ணை அளித்து, அவர் விரும்பிய அச் சக்கரப் படையையும் அளித்தருளினார்` என்பதும் கந்த புராணத்துள் அங்குத் தானே கூறப்பட்டது. கண்ணைத் தாமரை மலராகச் சாத்தினமையால், திருமாலுக்குச் சிவபெருமான், `பது மாட்சன்` (தாமரைக் கண்ணன்) என்னும் பெயரையும் அளித்தார் என்பது, காஞ்சிப் புராணத் திருமாற்பேற்றுப் படலத்துட் கூறப்பட்டது.
இவ்வரலாறு,
சலமுடைய சலந்தரன்ற னுடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ,
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
-தி.8 திருச்சாழல், 18
எனவும்,
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.
-தி.8 திருத்தோணோக்கம், 10
எனவும் திருவாசகத்து எடுத்தோதப்பட்டது.
இதனால், திருமால் தமது காத்தல் தொழிலை இனிது நடத்தற் பொருட்டு அவருக்குச் சிவபெருமான் சக்கரம் அளித்தருளினமை கூறப்பட்டது. இவ்வரலாற்றைக் குறிக்கும் தலங்கள் திருவீழி மிழலையும், திருமாற்பேறுமாம். இதனை ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்களால் அறிக.

பண் :

பாடல் எண் : 2

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே.

பொழிப்புரை :

சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.

குறிப்புரை :

இவ்வரலாறு இந்நூலாலே அறிகின்றோம். `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``செய்தது`` என்றதன்பின், `வியப்பு` என்பது எஞ்சிநின்றது.
இதனால், சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரத்தை அளித்ததேயன்றி, அதனைத் தாங்கும் ஆற்றலையும் அளித்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

பொழிப்புரை :

சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத் தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற்பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.

குறிப்புரை :

`அவனது கருணைப்பெருக்கு அளவிடற்கரிது` என்பது குறிப்பெச்சம். `சிவபெருமான்` என்பதுதோன்றா எழுவாயாய் நின்றது. `சத்தி` என்பது மூன்றாம் அடி முதலிலும் சென்று இயைந்தது.
இதனால், இயைபு பற்றி சிவபெருமானது வள்ளன்மையின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே.

பொழிப்புரை :

தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.

குறிப்புரை :

இவ்வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க. `வட்கி` என்பது திரிந்து நின்றது. உமிழ்தலுக்கு, `வலிமை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. வாய் உக்கிரம், உங்காரம்.
இதனால், சிவபெருமானது ஆற்றற் சிறப்பு அவ்வாற்றானே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

பொழிப்புரை :

இறந்தாரது எலும்புகள் பலவற்றையும், தலைகள் பலவற்றையும் தாங்கி நிற்பவனாகிய சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற வெற்றிப்பாடு, அவன் தேவர் பலர்க்கும் முதல்வ னாதலை விளக்கும். அதுவன்றியும், அவன் அவற்றைத் தாங்கா தொழிவனாயின், அவை உலகில் நிலைபெறாது அழிந்தொழியும்.

குறிப்புரை :

``ஏந்தி`` என்பது பெயர். வினையெச்சமாகக் கொண்டு எழுவாய் வருவித்தலுமாம். வலம் - வெற்றிப்பாடு. `பல் வானவர்` என இயையும். ``வலம்`` என்ற எழுவாய், ``ஆதி`` என்றதன்பின் எஞ்சி நின்ற `என்னும்` என்பதனோடு முடிந்தது.
`சிவபெருமான், இறந்த தேவரது எலும்புகள் பலவற்றையும், பிரமரது தலைகளையும் மாலையாகக் கோத்து அணிந்தும், ஒருகாலத்தில் சேர இறக்கும் பிரம விட்டுணுக்களது கங்காளத்தினை (எலும்புக் கூட்டினைத்) தோள்மேல் சுமந்தும் நிற்கின்றான்` என்பது, `அவர் யாவரும் வினைவயத்தால் பல்காலும் பிறந்து இறக்கின்ற பசுக் கூட்டத்தினரேயாகத் தான் ஒருவனே பிறப்பு இறப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் நின்று அனைத்துயிர்கட்கும் பந்தம் வீடுதரும் பதியாகின்றான் என்பதை விளக்கும்` என்பது கூறியவாறு. மாணிக்க வாசகரும்,
நங்காய்இ தென்னதவம், நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ!
கங்காளம் ஆமாகேள்; காலாந் தரத்திருவர்
தங்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ
-தி.8 திருச்சாழல், 11
என்று அருளிச்செய்தார்.
`அரிபிரமேந்திராதி தேவர் பலரும் நிலையாமையுட்பட்ட பசுக்களேயாகச் சிவபெருமான் ஒருவனே என்றும் ஒருபெற்றியனாய பதி` என்பதனைத் திருநாவுக்கரசர்,
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே;
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே. -தி.5 ப.100 பா.3
என விளக்கியருளினார்.
`எலும்பையும், தலையையும் அணிந்த கோலம் மேற்குறித்த உண்மையேயன்றி, அவன் காரியப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலையும் உணர்த்தும்` என்பது பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது. இதனானே, `சாம்பலை அணிதல், காரணப் பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்றலை உணர்த்தும்` என்பதும் கொள்ளப்படும்.
சிவபெருமான் கங்காளத்தை ஏந்தி நிற்றலைக் குறிக்கும் தலங்களே `காயாரோகணம்` எனப்படுகின்றன. காயாரோகணம், `காரோணம்` என மருவி வழங்கும்.
இதனால், `சிவபெருமான் எலும்பு முதலியவற்றை அணிந்த கோலத்தினன்` என்பதன் உண்மை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.345) `நானே பிரான்` என மாற்றித் தனித்தனிக் கூட்டி உரைக்க. பின்னும், ``பிரமன் மால்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. தங்கள் தம் பேதைமை - தம் தம் பேதைமை. `பேதைமையாலே நிற்க` என்றது, ``கள்வனால் திரண்டனர் மக்கள்` என்பதுபோல நின்றது. ``அரனடி தேடி`` என, அடியை மட்டுமே குறித்தது, அவ்வரலாற்றைத் தொகுத்துக் கூறியபடி. ``அரற்றுகின்றாரே`` என்பதே பாடமாக ஓது கின்றனர்.
இதனால், சிவபெருமான் பேதைமையாளர்க்கு அறிய ஒண்ணாதவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :

மாலும் பிரமனும் முறையே சிவசோதியின் அடியையும், முடியையும் காண முயன்று அவற்றின் உருவத்தைக் காணமாட்டாதவராய் மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து கூடிய பின்பு, திருமால், `நான் அடியைக் காணவில்லை` என்று உண்மையைச் சொல்ல, பிரமன், `நான் முடியைக் கண்டேன்` என்று பொய் சொன்னான்.

குறிப்புரை :

`அதனால் அவன் இவ்வுலகில் தனக்குக் கோயில் இலனாயினான்` என்பது குறிப்பெச்சம். `அடி, முடி` என்றவற்றை ``அயன் மால்`` என்பவற்றொடு எதிர்நிரனிறையாக இயைத்தல் வேண்டும் என்பது பின்னிரண்டடிகளில் விளங்கும். இத்திருமந்திரம் பாயிரத்ததாகாது, ஈண்டையதே என்பதுமேலே குறிக்கப்பட்டது.
இதனால், மால், அயன் என்னும் இருவரது தகுதி வேறு பாடுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே.

பொழிப்புரை :

விரிந்த பரந்த அனைத்துலகிலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்ற சிவபெருமான், பிரம விட்டுணுக்களது போர் காரணமாக அவ்விடங்களிலெல்லாம் பெரிய அனற் பிழம்பாய் நின்ற ருளினான். நின்றும் அவனை அவ்விடங்களில் ஓரிடத்தும் ஒருவரும் கண்டிலர். ஆயினும், நான் அவனை எல்லா இடத்திலும் காண் கின்றேன்; அது நான் அவனுக்கு ஆட்செய்கின்ற முறைமையாலாம்.

குறிப்புரை :

`ஆம், தாம்` என ஓதுவன பாடம் அல்ல. ஆன் - அவ் விடம். இவ்வாறு சேய்மையாகச் சுட்டியது உலகத்தின் பரப்பு உணர்த் துதற்கு. ``யானே அறிந்தேன்`` என்றமையால், பிறர் அறிந்திலர் என்பது இனிது விளங்கிற்று. அடிமுடி காணாமையேயன்றி, `அது சிவ சோதி` என்பதனையும் அறியாது திகைத்தமையின், `பிறர் அறிந்திலர்` என்றும், எவ்விடத்தும் எப்பொருளையும் நாயனார் சிவமாகக் காணுதலால், ``யானே அறிந்தேன்`` என்றும், `சிவனை அறிதல் அவனுக்குத் தொண்டு புரிந்து நிற்பதனாலேயன்றிப் பிற ஆற்றல்களால் அன்று` என்பதற்கு, `அவன் ஆண்மையாலே` என்றும் கூறினார். இக்கருத்தையே திருநாவுக்கரசு நாயனார் தமது இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையிலும் (தி.5.100) பலபட வகுத்தோதினார். சேக்கிழாரும் இவ்வரலாற்று உண்மையை,
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாய கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்.
-தி.12 பெ.பு. திருஞான., 78
என விளக்கினார்.
தேடிக் கண்டு கொண்டேன்; - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன். -தி.4.ப.9.பா.12
என்று அருளிச்செய்ததும் இக்கருத்தினைப் புலப்படுத்துவதாம். ``அவன்`` என்பதில் தொக்குநின்ற ஆறாவது, நான்காவதன் பொருளது. ஆள்மை - ஆளாம்தன்மை.
இதனால், மாலும், அயனும் அடிமுடி காணமாட்டா ராயதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

பொழிப்புரை :

இயல்பாகவே பல உடம்புகளாயும், அவ்வுடம்பில் உள்ள உயிர்களாயும், அவ்வுயிர்களினுள் அறிவொளியாயும் எல்லை யற்ற தனது பேராற்றலால் நிறைந்து நின்ற வடிவமே, பிரம விட்டுணுக்களின்முன் அண்டத்தைத் தாங்குகின்ற தூண்போல்வதாய் நீண்டு, சூரியசந்திர மண்டலங்களைக் கடந்து, தன்னால் ஆளப் படுகின்ற அண்டம் முழுதும் ஊடுருவ நின்றான் அம் மணிகண்டன்.

குறிப்புரை :

`அதனால், அவனது வியாபகத்துள் ஒரு பகுதியிலே அடங்கிக் கிடப்பவராகிய பிரம விட்டுணுக்கள் அவனை அளவிடுதல் எங்ஙனம் கூடும்` என்பது குறிப்பெச்சம். முன்னம் - முன்பே. ``தாணுவும்`` என்புழி, `ஆய்` என்பது விரிக்க.
``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 10
``பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
என்றாற்போலும் திருமொழிகளும் சிவபெருமானது அளவிடப்படாத பெருநிலையை விளக்க எழுந்தனவாம். ``ஆகி`` என்றதனை, `ஆக` எனத் திரிக்க. இது முதலாக இவ்வதிகாரத்தில் உள்ள திருமந்திரங்கள், `சாருவோபாதாளம்` என வேறோர் அதிகாரமாகச் சில பிரதிகளில் உள்ளன என்பர். ``திருவுரு`` என்பதில் உரு, நிலை. முன்னை மந்திரத்தில் உள்ள `மணிகண்டன்` என்பதைச் சுட்டுவதாகிய `அவன்` என்பது தோன்றா எழுவாய்.
இதனால், சிவபெருமானது பெருமை கூறும் முகத்தால், பிரம விட்டுணுக்களது சிறுமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான், மண்ணும், விண்ணும் ஆகிய உலகம் முழுதும் நின்றும் வளர்ந்தும் நிற்பவன் அல்லனோ! அதனால், அவனது திருவுருவத்தைக் கண்டு பிரம விட்டுணுக்கள் இருவரும் அஞ்சுதலும், அறியாமையால் அதனை அளந்தறியச் சென்றவழி எய்த்து வருந்துதலும் இயல்பே.

குறிப்புரை :

``அவன்`` என்றதனைத் தாப்பிசையாக முதலிலும் கூட்டி எழுவாயாக்குக. நீளியன் - நீண்டிருப்பவன்; ``திருமுடி மேல் செல, கழலடி நாட ஒண்ணாது`` என்றது, திருமுடியை அறிந்தார் ஒரு வருமிலராயினும், ``திருவடியை அறிந்தார் பலர்; அதுவும் இவர்கட்கு அகப்படாதாயிற்று`` என்றபடி. `கழலடியும்` என்ற உம்மை தொகுத் தலாயிற்று. ஈற்றில் உள்ள ஏகாரமும் தேற்றப் பொருட்டு. திருமுடி முடிவையும், திருவடி தொடக்கத்தையும் குறிப்பனவாதலின், திருவடி சிலராலேனும் காணப்பட்டதாகும். `அவன் வடிவை அஞ்சினராய் அது ஆய்ந்து சென்றார் இருவர் நாட ஒண்ணாதே` என முடிக்க.
இதனால், பிரம விட்டுணுக்களது இயல்பாய சிறுமை, செருக்குக் காரணமாகப் பின்னும் மிகுதிப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே.

பொழிப்புரை :

சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!

குறிப்புரை :

``முனிவர்`` என்றது, கருமகாண்டிகளை. அவர் தேவரைத் தெளியாராயினும், அவரை நோக்கிச் செய்யும் கருமங்கள் பயன் தரும் என்னும் தெளிவுடையர். இறுதிக்கண் கூறற்பாலராய அவரைச் செய்யுள்நோக்கி இடையே கூறினார். தா அடி, படைவீரர் போர்க்கு அணிவகுத்து நடக்கும் நடை. அஃது இங்குச் செருக்கினால் எதிரிட்டுக் காண முயலுதலைக் குறித்தது. தலைப்பெய்தல் - சந்தித்தல்; காணுதல். இறுதிக்கண், `கூடுமோ` என்பது சொல்லெச்சம். `வான வரும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இதனால், அயன், மால் என்பவரோடு இனம்பற்றிப் பிறரது சிறுமைகளும் தோன்றக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

தானக் கமலத் திருந்த சதுமுகன்
மானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே.

பொழிப்புரை :

தாமரை மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும் தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி உள்கத்தக்க பெரும் பொருளாகிய சிவபெருமான், அவர்தம் புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!

குறிப்புரை :

`கமலத் தானம்` என மாற்றிக்கொள்க. `சதுமுகனும்` என்னும் உம்மை தொகுத்தல். மானம் - பெருமை. கருமை, இன அடை. `உணர்கின்றதான` என்பதன் பின் பகரமெய் விரித்தல். ``அண்மையதாமே`` என்புழி, ``அவர்க்கு`` என்பது அவாய் நிலையான் வந்தது. ஏகாரம், எதிர்மறை உணர்த்திற்று. ``தானக் கருங் கடல், ஊழித் தலைவன், தன்மையதாம்`` என்பன பாடம் அல்ல.
இதனால், மாலும் பிரமனும் ஆயினும் சிவபெருமானை உள்குவோரன்றி, அவனால் உள்கப்படுவோர் ஆகாமை கூறி, அவர் அடிமுடி அறியமாட்டாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

பொழிப்புரை :

அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி நின்ற சிவசோதி, அதன்பின் இவ்வாறு பிரம விட்டுணுக்களால் அடிமுடி அறியப்படாத நிலைமையைக் காட்டி நிலைபெறச் செய்த மேலான சிவநெறியை முன்னர் அறிந்து, உலகம் முழுதும் ஒருங்கே வழி படுகின்ற இலிங்க வடிவை வணங்கித் தம் குறையை எடுத்துக்கூறி முறையிட்டு, மக்கள் இவ்வுலகப் பயனையேயன்றி அவன் அருளைப் பெறுதலாகிய ஞானத்தையும் அடையலாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியிலும் முதலில் வந்தசொல் வருதலும், மோனை சிதைதலும் பொருந்தாமையால், அவ்விடத்து `ஆலிங்கனம் செய்து` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிக. ஓலம், `ஓல்` என வருதல் செய்யுட்கண் ஏற்றதேயாம். ஓலம் செய்தல் - முறையிடுதல். கோல் - தறி; இலிங்கம். `அமைந்து` `அமைஞ்சு` எனப் போலியாயிற்று. அமைதல் - மனம்பற்றி வணங்குதல். `அமைஞ்சு ஓல் இங்ஙனம் செய்து அருள்கூடலும் ஆம்` எனக் கூட்டுக.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியால் விளைந்த பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருமால் முதலிய தேவர்க்கும், இராவணன் முதலிய அரக்கர்க்கும் படைக்கலங்களை அளித் தருளிய செய்தியை அறிந்து அவ்வாறே தாமும் பலவற்றைப் பெற விரும்பி அவனை வழிபடுகின்ற தேவர்கள், எம்மைப் போல அவனுக்குத் தம்மை ஆளாகக் கொடுத்து அன்பினால் அவனை நினைப்பதில்லை. அதனால், தன் அடியார்களுக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்து, பின் பேரின்பத்தைத் தந்து, என்றும் புகலிட மாகத் தனது திருவடியை வழங்குகின்ற அவனது திருவடியை அத் தேவர்கள் காண்பதில்லை.

குறிப்புரை :

கோள் - கொள்ளப்படும் பொருள். மூன்றாம் அடியிலும் ``ஆள்கொடுத்து`` என ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``கோலிங்கு அமைஞ்சருள் கூடலுமாமே`` என்றவாறும், ``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை அற்சிப்பர்`` (சிவஞானசித்தி சூ. - 2.92) என்றவாறும் இவ்வுலகில் தேவர் பலர் வந்து சிவபெருமானை வழிபட்டமை அறியப்படுகின்ற தாயினும், அவர் தம் வழிபாடு பயன் கருதாத அன்பு வழிபாடாகாமையால், சிவபெருமான் அவர்கட்கு அரியனே ஆகின்றான் என, மால் அயன் என்பவரோடு, இனம்பற்றி ஏனைத் தேவரும் சிவபெருமானை வழிபட்டும் அவனை அறியாரா யினமைக்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.

பொழிப்புரை :

பிரளய வெள்ளத்தில் ஆலிலைமேல் மிதந்து எங்கும் திரிந்து, `இனி என்ன செய்வது` என்று ஆராய்கின்ற திரு மாலுக்கு மகனாக நான்முகன் தோன்றுவான். அதன்பின், ஊழிக் காலத்தில் எரிகின்ற சூரியனது ஒளியையும் வென்ற திருமேனி யனாகிய சிவபெருமான், `அழிந்த இவ்வுலகத்தை நீவிர் மீளப் படைத்துக் காமின்` என்று பணித்தருளுவான். அவ்வாற்றால் பின்பு படைப்பு முதலிய தொழில்கள் நிகழும்.

குறிப்புரை :

இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது. `காமின்` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. வாழி, அசைநிலை. `தாவென்` என்பது பாடம் அன்று. ``விதித்துக் காமின் எனும்`` என்றது, `சதுமுகன் விதித்தலையும், மாயோன் காத்தலையும் செய்க` என்பான் என்றவாறு.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியின் பின்விளைவு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருளைக் கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.

குறிப்புரை :

முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.
`பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி)
ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல.
பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß நாதம் நாத தத்துவம்.
`பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே.

பொழிப்புரை :

இதன் பொருளையும் கீழ்வரும் குறிப்புரை பற்றி உரைத்துக்கொள்க.

குறிப்புரை :

மேற்கூறிய `நாதன்` என்னும் சிவன், பொதுவாய் நாத மாத்திரமாய்த் தோன்றிய எழுத்தோசையைச் சிறப்பாகத் தோற்றுவிக்க விரும்பிக் கிரியா சத்தியால் பொதுவாக முயல்வான். அவ்வாறு அவன் பால் எழும் முயற்சியே `விந்து` என்னும் சத்தியாவாள். அவள், மேற் குறித்த நாத தத்துவத்திலிருந்து `விந்து` என்னும் தத்துவத்தைத் தோற்று வித்து, அதன்கண் நிற்பாள். அதனால் ``நாதத்தில் விந்துவும்`` என்றார்.
பின்னர் ``நாத விந்துக்களின்`` என்றதில் இன் சாரியை யின்பின் `கீழ்` எனப் பொருள் தரும் கண்ணுருபு விரிக்கப்படும்.
``ஞானம், கிரியை`` என்றது சிவன் சத்திகளுக்கு நிரல் நிறை. ``சிவன் சத்தி என்ன`` என்றது, `சிவன் என்றும், சத்தி என்றும் இருவர் தோன்றுவர்` என்றவாறு. `பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்` என்றது, `ஆதி சத்தி தானே, ஞானம், கிரியை என்னும் வேறு பாட்டோடு தோன்றுதலால்` என்றவாறு. எனவே, `முதல்வன் ஞான சத்தியால் சிறப்பாக அறியும் நிலையிலே சிவன் என நிற்பான்` என்பதும், `அவன் கிரியாசத்தியால் சிறப்பாக முயலும் நிலையே சத்தி என்னும் நிலை` என்பதும் விளங்கும்.
`சிவன்` எனப் பெயர் பெற்று நின்ற சிவன் மேற்கூறிய விந்து தத்துவத்திலிருந்து `சிவம்` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பான். `சத்தி` எனப் பெயர்பெற்று நின்ற சத்தி, `சிவம்` என்னும் தத்துவத்திலிருந்து `சத்தி` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பாள். இவ்வாற்றால் இத்தோற்றம் பின்வருமாறு அமையும்.
ஆதிசத்தி சுத்தமாயை
ß ß (1) நாதன் நாதம்
ß ß (2) விந்து விந்து
ß ß (3) சிவன் சிவம்
ß ß (4) சத்தி சத்தி
இவற்றுள் சிவன் சத்திகட்கு உள்ள பெயர்களே, அவர்களால் தோற்று விக்கப்பட்டுத் தமக்கு இடமாகக் கொள்ளப்படுகின்ற தத்துவங்கட்கும் பெயராதல் விளங்கும்.
இங்கு இந்நாயனார் கூறிய இம்முறை சில ஆகமங்களுட் கூறியவாறாகும். வேறு சில ஆகமங்கள் இங்கு, `நாதம், விந்து` என்றவற்றை, `சிவம், சத்தி` என்றும், இங்கு, `சிவன், சத்தி` என்ற வற்றை, `நாதம் விந்து` என்றும் மாற்றிக் கூறும். அம்முறை பற்றியே சிவஞானசித்தி (சூ. 2-74),
``சிவம் சத்தி நாதம் விந்து ... ... ... ...
ஒன்றின் ஒன்றாய்ப் பவந்தரும்``
என்று கூறிற்று. எவ்வாறாயினும், `இந்நான்கும் முதல்வனது அருவத்திருமேனிகள்` என்பதில் மாறுபாடில்லை. இனி முன் இரண்டு நிலைகளை முறையே `பரநாதம், பரவிந்து` என்றும், பின் இரண்டு நிலைகளை `அபரநாதம், அபரவிந்து` என்றும் கூறுதல் எல்லா ஆகமங் களுக்கும் ஒப்ப முடிந்தது.
``வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே`` என்றது `சிவம் சத்திகள் தம்மில் தாம் வேறுபட்ட விருப்பம் காரணமாகச் சுத்த மாயை வேறு வேறு நிலைகளாக விருத்திப்பட்டு நிற்கும்` என்றவாறு. இச்சையில் - இச்சையின்படி.
``விந்து`` (பிந்து) என்பது `சுத்தமாயை, அதன் ஒருவகை நிலை, அதனை இடமாகக் கொள்ளும் சத்தி` என்னும் மூன்றற்கும் பெயராகும். அவற்றுள் ஒன்றைக் கொள்ளவேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொள்ளலாகாது. இவ்வாறே, `நாதம்` என்பதும், சிவனது நிலைகளில் ஒன்றற்கும், அவன் இடமாகக் கொள்ளுகின்ற தத்துவத்திற்கும் பெயராய் நிற்கும். நாயனார் சொற்சுருக்கம் கருதி ஏற்ற பெற்றியால் பொருள் கொள்ள ஓதினார். எனவே, முன் மந்திரத்தில் ``அதன் பால் திகழ் நாதமே`` என்றதற்கு நேர்பொருளாக, `ஆதி சத்தியினிடமாக நாதம் என்னும் சிவன் தோன்றுவன்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அச்சிவனால் நாத தத்துவம் தோன்றும்` எனவும் கொள்ளப்படும். அவ்வாறே இம் மந்திரத்தில் ``நாதத்தில் விந்துவும்`` என்றதற்கு, நேர் பொருளாக, `நாதம் என்னும் சிவனிடத்து விந்து என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அவளால் நாத தத்துவத்திலிருந்து விந்து என்னும் தத்துவம் தோன்றும்` எனவும், ``நாத விந்துக்களில் சிவன், சத்தி தோன்றும்`` என்றதற்கு நேர்பொருளாக, `நாத விந்துக்களின் கீழ் விந்து` என்னும் சத்தியினின்றும் சிவன் என்னும் சிவன் தோன்றுவான்; அவனிட மிருந்து சத்தி என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `விந்து என்னும் தத்துவத்திலிருந்து சிவம் என்னும் தத்துவமும், சிவம் என்னும் தத்துவத்திலிருந்து சத்தி என்னும் தத்துவ மும் தோன்றும்` எனவும் கொள்ளப்படும் என்க.
`மாயை` என்பது, குடத்திற்கு மண்போல, உலகமாகிய காரியப் பொருட்கு முதற்காரணமாவது, அது பல்வேறு வகைப்பட்ட சட (அறிவில்லாத) ஆற்றல்களின் தொகுதி (சத்திகளின் சமூகம்). அதனைச் சிவபெருமான் தனது இச்சைப்படி ஞானக் கிரியா சத்திகளால் தொழிற்படுத்துவான். அந்த மாயைதான் ஆணவ மலத்தின் தர தம நிலைகளோடு கலந்து தூய்மை இழந்தும் கலவாது தூய்மையாயும் இரு பகுதிப்பட்டு நிற்கும். தூய பகுதியே, `சுத்த மாயை` என்றும், தூய்மை இழந்த பகுதியே `அசுத்த மாயை` என்றும் சொல்லப்படும். `மாயை` என்றால் `மயக்குவது` எனக் கருதப் படுவதால், சுத்த மாயையை ஆகமங்கள் `மாயை` என்று குறிப்பதே இல்லை. `விந்து, குடிலை, குண்டலினி` என்றாற்போலவே குறிப் பிடும். மாயை எனக் கூறவேண்டின், `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் குறிப்பிடும். மகத்து - பெரிது. ஊர்த்துவம் - மேல் உள்ளது; வியாபகம் - எனவே, ``மாயை`` என வாளா கூறுமிடத் தெல்லாம், ``அசுத்த மாயை`` என்றே கொள்ளுதல் வேண்டும். சுத்த மாயையை ஆகமங்கள் ``விந்து`` எனக் கூறுதல்போல, அசுத்த மாயையை ``மோகினி`` என்று கூறும். மோகினி - மயக்கற் கருவி. எனவே, ``அசுத்த மாயையே மயக்கத்தைத் தரும்`` என்பதும், ``சுத்த மாயை மயக்கத்தைத் தராது`` என்பதும் அறிந்துகொள்ளப்படும். மயக்கமாவது, ஐம்புல இன்பங்களையே பெரியனவாகக் கருதி, அவற்றால் விளையும் துன்பங்களை அறியாதிருத்தல்.
இறைவன் உலகைத் தோற்றுவித்து நடத்தக் கருதும்பொழுது ``அருவம், அருவுருவம், உருவம்`` என்னும் மூவகைத் திரு மேனிகளைக் கொண்டு விளங்குவன். அங்ஙனம் விளங்குமிடத்துச் சுத்தமாயையினின்று தோற்றுவிக்கப்படுகின்ற தத்துவங்களையே தான் இடமாகக் கொண்டிருப்பன். அதனால் அத்தத்துவங்கள் அசுத்த மாயா தத்துவங்களைப் பெற்று நிற்கும் உயிர்களுக்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை.
முதற்காரணப்பொருள் காரியப்படும் முறைகள் பல. அவற்றுள் சிவாகமங்களிற் கொள்ளப்படுவன, `விருத்தி, பரிணாமம்` என்னும் இரண்டுமேயாம். அவற்றுள் விருத்தியாவது சுருங்கிக் கிடப்பது விரிவடைந்து நிற்றல். இதற்கு, `படம்குடிலானாற்போல` என உவமை கூறுவர். அஃதாவது கட்டிச்சுருட்டி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த துணி, பின், விரித்து அமைக்கும்பொழுது பெரிய கூடாரமாகக் காட்சியளிப்பது போல்வதாம். பரிணாமமாவது ஒரு பொருள் மற்றொரு பொருளாய் உருமாறி நிற்பது. மண் குடமாவதும், பால் தயிராவதும் போல்வன இதற்கு உதாரணமாகும். பரிணாமமும், `முழுவதும் பரிணமித்தல், ஒரு கூற்றிற் பரிணமித்தல்` என இருவகைப் படும். பால் தயிராவது முழுவதும் பரிணமித்தல். வெண்ணெயில் புழுத் தோன்றுதல் ஒருகூற்றிற் பரிணமித்தல். இவ்விரண்டனுள்ளும் சிவாகமங்களில் கொள்ளப்படும் பரிணாமம் ஒரு கூற்றிற் பரிண மித்தலே. ``விருத்தி, பரிணாமம்`` இரண்டனுள், சுத்தமாயை காரியப் படுவதெல்லாம் விருத்தி முறையிலாம். அசுத்தமாயை காரியப் படுவதெல்லாம் பரிணாம முறையிலாம். `பரிணாமம் ஒரு கூற்றிற் பரிணமித்தலே` என்பதை மறக்கலாகாது.
முதல்வன் உலகத்தைக் கருதாது பராபர சத்தியோடு கூடிப் பராபரனாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையே இயற்கை நிலை. அதுவே ``சொரூபம்`` எனப்படும். பிறவெல்லாம் உலகத்தைக் கருதி அதற்கேற்ப வேறுபட்டு நிற்கும் நிலையாதலின், அவையெல்லாம் செயற்கை நிலையே. இவை `தடத்தம்` எனப்படும். தடத்தம் - சார்பு பற்றியது. ``சொரூபம், உண்மை; தன்னிலை`` என்பன ஒருபொருட் சொற்கள். முதல்வனை, சொரூப நிலையில் வைத்துக் கூறும் பொழுது, ``சொரூப சிவன்`` என்றும், தடத்த நிலையில் வைத்துக் கூறும்பொழுது ``தடத்த சிவன்`` என்றும் கூறுவர். சொரூப சிவனுக்கு உருவம், பெயர், தொழில், ஒன்றும் இல்லை; தடத்த சிவனுக்கு அளவற்ற உருவம், பெயர் தொழில்கள் உள்ளன என்க. உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன், அவைகளை மேற்கொள்வது உயிர்களை உய்விக்கவேண்டும் என்னும் கருணையினாலேயாம். அதனால், அவ்வுருவம், பெயர், தொழில் யாவும் அருள்மயமானவையே; நம்மனோரது உருவம் முதலியன போல மாயாமயம் ஆனவை அல்ல; அருள் அவனது சத்தியே யாதலால், எல்லாம் வல்ல அச்சத்தியால் தனது இச்சைப் படியான உருவம் முதலியவற்றை அவன் தானே கொள்வன்; அதனால், அவைகளை அவனுக்குப் படைத்துத்தர வேறொருவர் வேண்டுவ தில்லை.
இதனால், படைப்புத் தொடர்ச்சி சிறிது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

பொழிப்புரை :

சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாத சத்தி, உலகம் செயற்படுதற்பொருட்டு இவ்வாறு அச்சிவத்தினிடமாகத் தோன்றி வேறு நிற்பது போலச் சொல்லப்பட்டாலும், சத்தி எஞ்ஞான்றும், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு ஒன்றி நிற்றலன்றித் தனித்து நிற்றல் இல்லை சிவமும் சத்தியைவிட்டுத் தனித்து நிற்றல் இல்லை. எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல், அறிவு, செயல் (ஞானம், கிரியை) என்னும் வேறுபாடுபற்றிக் கொள்ளப்படும் உருவு, பெயர், தொழில் என்பன பற்றியேயாம் என்பதாயிற்று. இவ்வாறு தன்னின் வேறாகாத சத்தியை அதுதானே எல்லாம் செய்யவல்லதாக வேறு நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளை (முதல்வனை) `இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்` (தி. 6 ப.97 பா.10) என்று சொல்லாற் சொல்லி விளக்கப்புகின், அஃது ஒருவாற்றானும் இயலாது. ஏனெனில், சொற்கும், அப்பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 4

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.

பொழிப்புரை :

சொல்லுக்கு எட்டாது நின்ற முதல்வனோடு நின்ற பராபரை அவனைத் தொடர்ந்து நின்றே `ஆதி` என்னும் பெயருடைய சத்தியாய்ப் பின்பு, நாதமாய் நின்ற அச்சிவனை அன்போடு கூடி, `விந்து` எனத் தோன்றி, பின் அச்சிவன்தானே சதாசிவன் முதலிய ஐவராய் நின்று நில முதலிய ஐந்து தத்துவங்கட்கும் தலைவனான பொழுது அவனது அந்நிலைகள் ஐந்தினும் உடன் கொள்ளப்படும் துணைவியாய் நிற்பாள்.

குறிப்புரை :

இங்கு `நாதம், விந்து` என்றது, அபர நாத விந்துக்களை. எனவே, பரநாத விந்துக்களை விதந்திலர் என்க. அபர விந்துவினின்றும் சதாசிவர் தோன்றுவர். அவரிடமிருந்து `மகேசுரர், உருத்திரர், மால், அயன்` என்பவர் முறையே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவரும் முறையே, `நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் பூதங்கட்குத் தலைவராவர். சதாசிவன் முதலிய ஐவர்க்கும் உரிய சத்திகள் முறையே மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் என்பவராவர். இச்சத்திகளெல்லாம் அபர விந்து முதலிய சத்தி பேதங்களினின்றே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். இங்குக் கூறப்பட்ட உருத்திரன், மால், அயன் என்னும் மூவரும் சிவனின் வேறானவர் அல்லர்; சிவன் தானே கொள்ளும் நிலைகளாம். இவ்வாறு சிவன் தானே பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவும், பெயரும், தொழிலும் கொண்டு நிற்றல் `சம்பு பட்சம்` எனப்படும். புண்ணிய மிகுதியால் இந்நிலைகளை ஆன்மவருக்கத்துட் பட்டவருக்கும் முதல் வன் வழங்குதல் உண்டு. அவை `அணுபட்சம்` எனப்படும். அணுபட்ச சம்புபட்சங்களைக் கூறுமிடத்து, `மகேசுரனுக்குக் கீழ் சம்புபட்சம் இல்லை; உருத்திரனுக்கு மேல் அணுபட்சம் இல்லை என்பவரும், சம்புபட்சம் எல்லா நிலைகளிலும் உண்டு என்பவரும், `எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு` என்பவருமாகப் பலதிறத்தர் ஆசிரியர். அவருள் எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு என்பவரது கொள்கையே இந்நாயனாரது கருத்தாகத் தெரிகின்றது.
சார் வத்து - சார்பாய பொருள்; தலைமைப் பொருள். இதன் பின் `ஆக` என்பது எஞ்சிநின்றது. சார்த்துமான் - துணையாக உடன்வைத்து எண்ணப்படுகின்ற பெண்; துணைவி.
சதாசிவமூர்த்தி ஞானம், கிரியை இரண்டும் சமமாய் நிற்கும் நிலையினர். இவர் தோற்றுவித்து இடமாகக் கொள்ளும் தத்துவம் சாதாக்கியம். இது மேற்கூறிய அபரவிந்துவிலிருந்து தோன்றுவதாம். ஞானம் குறைந்து, கிரியை மிகுந்திருப்பதே மகேசுர நிலை. மகேசுரன் சாதாக்கியத்திலிருந்து ஈசுர தத்துவத்தைத் தோற்றுவித்து அதனைத் தனக்கு இடமாகக் கொள்வான். கிரியை குறைந்து ஞானம் மிகுந்த நிலையில் சிவன் வித்தியேசுரன் என நின்று, ஈசுர தத்துவத்திலிருந்து `சுத்த வித்தை` என்ற தத்துவத்தைத் தோற்றுவித்து அதன்கண்ணே `உருத்திரன், மால், அயன்` என மூன்று நிலைகளில் நிற்பன். அதனால், வித்தியேசுரனை வேறு வைத்து எண்ணுதல் இல்லை.
இதுகாறும் கூறிவந்தவாற்றால், பரநாதம், அபரநாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சிவபேதம் ஏழும், `பரவிந்து, அபரவிந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` எனச் சத்திபேதம் ஏழும் ஆதல் விளங்கும். எனினும், பரநாதத்திலிருந்து அபரநாதம் தோன்றாமல், இடையே பரவிந்து தோன்ற, அதினின்றே அபரநாதம் தோன்றுதலானும், அவ்வாறே அபரநாதத்திலிருந்து சதாசிவன் தோன்றாமல், இடையே அபரவிந்து தோன்ற, அதினின்றே சதாசிவன் தோன்றுதலானும், பர அபர விந்துக்களாகிய சத்தி பேதங்களையும் சிவபேதமாகக் கூட்டி எண்ணி, `சிவபேதம் நவந்தருபேதம்` என்கின்றன ஆகமங்கள். அதனையே சிவஞானசித்தி (சூ. 2.74) நூல்,
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்திரன்றான், மால், அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; உருவம்நால்; இங்கருவம்நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.
எனக் கூறிற்று. இதனுள், `பரநாதம், பரவிந்து, அபரநாதம், அபரவிந்து, என மேலே உள்ள நான்கும் அருவத் திருமேனிகள்` என்பதும், `மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனக் கீழே உள்ள நான்கும் உருவத் திருமேனிகள்` என்பதும், `இடையே உள்ள சதாசிவமூர்த்தம் ஒன்றும் அருவுருவத்திருமேனி` என்பதும் கூறப்பட்டவாறு அறிக. அருவுருவத் திருமேனி என்பதே மேல் கூறப்பட்ட இலிங்க வடிவம். எனவே, சதாசிவ மூர்த்தமாவது இலிங்க வடிவமே என உணர்க.
இதனால், சுத்த மாயையில் நிகழும் படைப்புக் கூறி முடிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொழிப்புரை :

`மகத்து` எனப்படும் தத்துவத்தினின்றே ஐம் பூதங்கள் தோன்றுவனவாம். அவை தோன்றுமிடத்து, அவற்றின் சாரம் எனத் தக்கனவாய், `சூக்கும பூதம்` எனப் பெயர்பெற்று நிற்கும் தன்மாத்திரைகளினின்றே தோன்றும். அவை தோன்றுதல், `வானம், காற்று, தீ, நீர் நிலம்` என்னும் முறையிலாம். தன்மாத்திரை ஒவ்வொன்றிலும் இருந்தே மேற்கூறிய வானம் முதலிய ஒவ்வொரு பூதமும் தோன்றும். பூதங்கட்கு அவ்வவற்றிற்குரிய தன் மாத்திரை களே காரணமல்லது, ஒரு பூதத்திற்கு மற்றொரு பூதம் காரணம் அல்ல. அதனால் ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுவதில்லை. ஒரு தன்மாத்திரையிலிருந்து ஒரு பூதம் தோன்றியபின், மற்றொரு தன்மாத்திரையிலிருந்து மற்றொரு பூதந்தோன்றும். இவ்வாறே ஐந்து தன் மாத்திரைகளினின்றும் ஐந்து மாபூதங்களும் மேற்கூறிய அம்முறையிலே தோன்றுவனவாம். அவற்றுள் இறுதியில் உள்ள நிலம் என்னும் பூதத்துட்பட்டனவே நாம் காணும் இவ்வுலகம்.

குறிப்புரை :

எனவே, `வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றும்` எனக் கூறுதல் தூலாருந்ததி நியாயமாகப் பொதுப் படக்கூறுதலே; உண்மையாற் கூறுமிடங்களில் தன்மாத்திரையினின்று பூதங்கள் தோன்றும் என்றே கூறப்படும் என்பதாயிற்று.
`மகத்து` என்னும் வடசொல், தமிழில், ``மான்`` எனப்படும். நம்மனோர் உலகிற்கு இதுவே முதற்காரணமாதலால் இது, `மகத்து` எனப்படுகின்றது. `பிரகிருதி` எனவும், `மூலப் பிரகிருதி` எனவும் கூறப்படுவது இதுவே. சிவாகமங்கள் இதனை, `பிருகிருதி மாயை` எனவும் கூறும். பிற சமயங்கள், `இது பிறவற்றிற்குக் காரணமாவ தல்லது காரியம் ஆகாது` எனவும், `அதனால் இதுவே உலகிற்குப் பரம முதற்காரணம்` எனவும் கூறும். ஆயினும் சிவாகமங்கள், `இது அசுத் தமாயை யினின்றும் தோன்றுகின்ற, கலை என்னும் தத்துவத்தினின்றும் தோன்றும் காரியமே` எனக் கூறும்.
`சுத்த உலகம், மிச்சிர (கலப்பு) உலகம், அசுத்த உலகம்` என உலகம் மூவகைத்து என்பதும், `அதனால், அதற்கு முதற்காரணமும் மூன்றாதல் வேண்டும்` என்பதும், அம்மூன்றாவன, ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்பன என்பதும், ``அவற்றுள் சுத்த மாயையும், அசுத்த மாயையுமே எஞ்ஞான்றும் காரணமாயே நிற்பன; பிரகிருதி மாயை தன் காரியங்களை நோக்கக் காரணமாய் நிற்பினும், அசுத்தமாயையைின் காரியமேயாம்`` என்பதும் சிவாக மங்களின் துணிவு. சுத்த மாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் யாவும், `வைந்தவம்` என்றும், அசுத்த மாயையே `மாயை` எனப்படுதலால் அதன் காரியங்கள் யாவும் `மாயேயம்` எனவும், பிருகிருதியின் காரியங்கள் யாவும் `பிராகிருதம்` எனவும் கூறப்படும். பிராகிருதத்தையும், மாயேயமாக அடக்கிக் கூறுதல் உண்டு.
``மானின்கண் பூதங்கள் ஐந்தும் தோன்றும்`` என்று தொகுத்துக்கூறி ஒழியாது, வகுத்துக் கூறினார், அவற்றின் தோற்ற முறை உணர்த்தற்கு. ``கனலின்கண்`` என்பது திரிந்து நின்றது. `கான் - காடு. அஃது ஆகுபெயராய்த் தீயை உணர்த்திற்று` எனவும் உரைப்பர். ``நீரும்`` என்றதற்கு, `நீர் வெளிப்பட்டபின்` என்பது பொருள். ``கலந்து`` என்றது `அவற்றொடு கூடி, `பூதங்கள் நான்கு` என்று ஆகிய பின்` என்றபடி. ``கடினம்`` என்றது ஆகுபெயரால், அக்குணத்தை யுடைய ``நிலம்``என்னும் பூதத்தை உணர்த்திற்று. ``கடினமாய்`` என்பதில், ``ஆய்`` என்பதனை ``ஆக`` எனத் திரிக்க. ஆதல், தோன்றுதல்.
தேன் வடித்தெடுத்த தேறல் ஆதலின், அதுபோலப் பூதங்களின் நுண்ணிலையாய அவற்றின் காரண நிலையை, ``தேன்`` என்றார். இக்காரண நிலையே தன்மாத்திரையாதல் அறிக. இவற்றைத் தேன் என்றதனானே, காரணத்தன்மை காரியத்தினும் உளதாகும் முறைமை பற்றிச் சத்தம் முதலிய தன் மாத்திரைகளது தன்மை அவற்றின் காரியங்களாகிய வானம் முதலிய பூதங்களினும் காணப்படும் என்பது குறிப்பாற் கூறப்பட்டதாம். `தேனின்கண் செறிந்து பூதமாய்` என்று ஒழியாது, ``ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்`` என இருமுறை தொகை கொடுத்து ஓதினார், `ஒரு தன்மாத்திரையிலே ஐந்து பூதமும் தோன்றுதலும் ஒரு தன்மாத்திரையிலே ஒரு பூதந்தோன்ற, அதன்பின், ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுதலும் இன்றி, வேறு வேறாய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து, ஒரு தன்மாத்திரையில் ஒரு பூதமாக ஐந்து தன்மாத்திரையில் ஐந்து பூதமும் தோன்றும்` என்றற்கு ஐந்தும் தேனின்கண் செறிந்து ஐந்துமாம் என்றது, `ஐந்து பூதங்களும் முன்பு தனித்தனிக் காரணநிலையில் நின்று, பின் காரியமாகத் தோன்றும்` என்றவாறு. இவ்வாறு உரையாக்கால், இத்திருமந்திரத்துள் மூன்றாம் அடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``பூதமாய்`` என்பதில் ``ஆனபின்`` என்பது, ``ஆய்`` எனத் திரிந்து நின்றது. `இப்புவனம்` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. இப்புவனம், பிருதிவி தத்துவ புவனம். எனவே, ``இவ்வாறே ஏனைத் தத்துவங்களினும் புவனங்கள் உள`` என்பது குறித்துவாறு காண்க. இவ்வாற்றால் இங்குக் கூறிய தத்துவத்தோற்றம் பின் வருமாறாதல் காண்க.
மான் (பிரகிருதி)
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
(ஓசை) (ஊறு) (ஒளி) (சுவை) (நாற்றம்)
வானம் காற்று தீ நீர் நிலம்
(ஆகாயம்) (வாயு) (தேயு) (அப்பு) (பிருதிவி)
``சுவை ஒளி ஊறோசை நாற்றம்என் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு`` -குறள், 27
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்``
(தொல். பொருள்) என்றற்றொடக்கத்தனவாக இவ்வுலகம் பற்றிப் பெரும்பான்மையாக யாண்டும் யாவரும் அறியக் கூறப்படுவன தன்மாத்திரைகளும், ஐம்பெரும் பூதங்களும் ஆகிய தத்துவங் களேயாதலின், `சிறப்புடைப் பொருளைத் தான்இனிது கிளத்தல்`` என்னும் முறையால் அவற்றின் தோற்றத்தையே சிறந்தெடுத்துக் கூறினார்.
எனவே, மானின்கண் தோன்றுவனவாக (பிரகிருதியின் காரியங்களாக) வேறும் சில தத்துவங்கள் உள என்க. அவை அந்தக் கரணங்களும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுமாம். ஆகவே, மானின் காரியங்கள் அனைத்தையும் பின் வருமாறு கண்டு கொள்க.
மான் (பிரகிருதி)
குணம்

புத்தி
அகங்காரம்
(தைசதம் வைகாரிகம் பூதாதி)
மனம் - செவி, தோல், வாக்கு, பாதம், பாணி,
கண், நாக்கு, மூக்கு. பாயு, உபத்தம்
(ஞானேந்திரியம்) கன்மேந்திரியம்
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி
குணதத்துவமே `சித்தம்` என்னும் அந்தக்கரணமாம். ஆகவே, ``சித்தம், புத்தி, அகங்காரம், மனம்`` என்னும் அந்தக்கரணம் - 4, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5, தன்மாத்திரை - 5, பூதங்கள் - 5, ஆக 24 மானின் காரியங்கள் என உணர்க.
இதனால், பிரகிருதி மாயையில் உளவாகும் படைப்புக் கூறப் பட்டது. இடைநின்ற அசுத்த மாயைப் படைப்பினை நாயனார் இங்கு விதந்திலர். எனினும், அசுத்த மாயா காரியங்களை இங்கு ஒருங்கு இயையக் காட்டுதும்:-
அசுத்த மாயை
1. மாயை
2. காலம், 3. நியதி, 4. கலை,
5. வித்தை பிரகிருதி
6. அராகம்
7. புருடன்
காலம், `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என மூன்றாகி, முறையே ஒரு கன்மத்திற்கு எல்லையையும், மற்றொரு கன்மத்திற்குப் பயனையும், வேறொரு கன்மத்திற்குப் புதுமையையும் உண்டாக்கும். நியதி, அவரவர் செய்த கன்மத்தை அவரவரே நுகருமாறு நியமிக்கும். கலை, வித்தை, அராகம் என்பன முறையே ஆன்மாவின் ``கிரியை, ஞானம், இச்ை\\\\u2970?`` என்னும் சத்திகளை விளங்கச்செய்யும். காலம் முதலிய ஐந்தும் வந்து பொருந்திய பொழுதுதான், ஆணவமல மறைப்பால் சடம்போலக் கிடந்த ஆன்மா கன்ம நெறியில் நின்று ஒன்றை அறியவும், விரும்பவும், செய்யவும் உரியதாய், `புருடன்` எனப் பெயர்பெற்று நிற்கும். அதனால், `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. ஆன்மா காலம் முதலிய ஐந்தோடும் கூடி வினை நெறியில் செல்லும் நிலையே புருட தத்துவமாம். `மாயை` என்பது, காலம் முதலிய ஐந்தும் தோன்றுதற்கு ஏதுவாக அசுத்த மாயையில் பக்குவப்பட்ட ஒரு பகுதியேயாம். எனவே, இது மற்றவைபோலக் காரியமாகாது. காரணமேயாயினும், பக்குவப்பட்டமை பற்றி மற்றைய தத்துவங்களோடு ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது. எனவே, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் ஏழாதல் அறியப்படும். சுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஐந்து. அசுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஏழு, பிரகிருதி மாயையில் தோன்றும் தத்துவம் இருபத்து நான்கு ஆகத் தத்துவம் முப்பத்தாறு ஆதல் காண்க. ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என நின்ற இவை முறையே ``சிவதத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம்`` எனப் பெயர்பெறும். இவைகளில் இங்கு எடுத்தோதியவைபோக, ஏனையவற்றை நாயனார் பின்னர் ஆங்காங்கு இடம் வந்துழி வந்துழிக் குறித்தருளுவார்.

பண் :

பாடல் எண் : 6

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே.

பொழிப்புரை :

உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்ற வன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.

குறிப்புரை :

எனவே, `சிவபெருமான் தானே நேர்நின்றும், தக்கார் பிறரைக்கொண்டும் உலகத்தை நடத்துவான்` என்பதாம். தானே நின்று நடத்துதல் சுத்த மாயையில். ஏனை இருமாயைகளிலும் பிறரைக் கொண்டு நடத்துவன் என்க. தோற்றுவிக்கப் படுபவரை, ``புத்திரர்`` என்றார். `படைப்பானும்` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஆகவே, ஏனைநால்வரும் தத்தமக்கு ஏற்ற வகையில் நின்று காத்தல் முதலியவற்றைச் செய்வர் என்பது பெறப்பட்டது.
இதனால், சிவபெருமான் படைத்தல் முதலியவற்றைச் செய்யு மாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.

பொழிப்புரை :

புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.

குறிப்புரை :

``இயமானனை`` என்பது குறைந்து நின்றது. இயமானன் - ஆன்மா. ``கலவி`` என்றது, கலத்தலோடு கலந்து நின்று செய்யும் செயலையும் குறித்தது. ``உலகெங்கும் பொருந்தி`` என்றதனால் சிவபெருமான் ஐந்தொழில் செய்யுங்கால் உலகுயிர் களோடு அத்துவிதமாய் (கலப்பினால் ஒன்றாய்ப் பொருள் தன்மையால் வேறாய், உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாய்) நின்றுசெய்வன் என்பதும், ``இயமானனை வளர்த்திடும்`` என்றதனால், அவன் அவ்வாறு நின்று ஐந்தொழிலைச் செய்வது உயிர்கட்கு மலபாகம் வருவித்து அவைகளை வீடடையச் செய்தற் பொருட்டே என்பதும், ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, அவன்தான் செய்யும் தொழில்கள் பலவற்றையும் தனது சத்தியால் செய்வன் என்பதும், `பூவில் மணம்போல` என்றதனால், சத்தி அவனின் வேறாகாது, மரமும் காழ்ப்பும்போலக் குணகுணி பாவத்தால் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் நிற்கும் என்பதும் பெறப்பட்டன.
தண்மை, இங்கு எளிமை. ``தண்பதத்தால் தானே கெடும்`` (குறள், 548) என்பதிற்போல. ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, சிவமும் அத்தன்மையதாதல் பெறப்பட்டது. கண்ணுதல் - கருதுதல். கண் இயல்பாய் - கருதுதல் வடிவாய். எனவே, `சிவபெருமான் தான் செய்தனவற்றை நினைவு மாத்திரத்தால் செய்வதல்லது, சில கருவி களைக் கொண்டு செய்பவனல்லன்`` என்பது போந்தது. அக் கருதுதல் தானே அவனது சத்தி வடிவம் என்க. `மண்` என்னும் பூதத்தின் சிறப்புப் பண்பு நாற்றமாதல்பற்றி நாற்றத்தை, ``மண்ணியல்பு`` என்றார். `பூவில் மண் இயல்பாக மலர்ந்தெழும்` என மாற்றி உரைக்க. `மலர்ந்து எழுதல்` பல்வேறு வகைப்பட்ட நினைவுகளாய் விரிந்து, நினைந்தவாறே ஆக்குதல். இத்தகைய சத்தியானே அவன் எங்கும் நிறைந்தவன் ஆகின்றான் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு.
இதனால், ஐந்தொழில் செய்யுமிடத்துச் சிவபெருமான் உயிர்களோடு நிற்கும் முறைமையும், அம்முறைமைக்குத் துணை யாகின்ற அவனது சத்தியின் நிலைமையும், அச்சத்திக்கும், அவனுக் கும் இடையே உள்ள தொடர்பு வகையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே.

பொழிப்புரை :

சத்தி நீரின்கண் `சுவை` என்னும் பண்பாயும், நெருப்பின்கண் எரிகின்ற `ஒளி` என்னும் பண்பாயும், காற்றின்கண் `ஊறு` என்னும் பண்பாயும், வானின்கண் `ஒலி` என்னும் பண்பாயும் விளங்குவாள். நீரால் சூழப்பட்ட `மண்` என்னும் பூதத்தில்தான் பல்வேறு நிலைகளையுடைய உயிர்கள் தோன்றி வளரும்.

குறிப்புரை :

எனவே, `எஞ்சிய நாற்றம் அதன்கண் உள்ளது` என்றாராயிற்று. சுவையை, ``இன்பம்`` என்றார். உயிர்ப் பண்பாகிய உணர்தல் தன்மையில் முதலாவது ஊற்று உணர்வேயாகலின், அதனையே ``உயிர்`` என்றார். ஊற்று உணர்வு முதல் என்பதனை ``ஓரறிவுயிர்`` என்பவை பற்றி அறிக.
``ஓர்வுடை நல்லுயிர்`` எனச் சிறப்பித்தலும் அதுபற்றி. பாதம் - அடி; முதல். அது முதலாவதாகிய பூதத்தை உணர்த்திற்று. ``சத்தி`` என்னும் எழுவாய் இறுதிக்கண் நின்றது. உலகத்தோற்றம் முதலியவற்றை நம்மனோர் காணும் இவ்வுலகியல்பில் வைத்தே உணர்த்துகின்றாராதலின், ``நீரிடைமண்`` எனவும், ``மண்ணின் நிலைப்பிறப்பாம்`` எனவும் கூறினார். மேல், `பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே` (தி.10 பா.382) என்றாற்போல. ``இன்பம், சோதி, உயிர், ஒலி`` என்றவற்றில் `ஆய்` என்பது விரிக்க. மேல், `சிவசத்தியே உலகைப் பலவாறு ஆக்கி நடத்தும்` என்றதற்கு ஏற்ப இங்கு, `சத்தியே இவ்வாறு வெளிப்பட்டு நிற்கும்` என ஒற்றுமைபற்றிக் கூறினார்.
இதனால், மேல் தோற்றம் கூறப்பட்ட பூதங்களின் பயப்பாடு கூறப்பட்டது. இடைநின்ற இரண்டு திருமந்திரங்கள் இயைபுடைய வற்றை இடையே விதந்தனவாம்.

பண் :

பாடல் எண் : 9

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.

பொழிப்புரை :

உலகம் முழுதுடையான் சிவபெருமானே யாயினும், `அயன், அரி, அரன்` என்னும் மூவர்தாமும் உலகிற்குக் காரணக் கடவுளராய் நின்று ஓரோவொரு தொழிலைச் செய்தல், தத்தம் புண்ணிய மிகுதிக்கு ஏற்ப அப்பெருமானால் தரப்பெற்று நடத்துதல் பற்றியேயாம்.

குறிப்புரை :

``அதற்குக் காரணம் அறியற்பாற்று`` என்பது குறிப் பெச்சம். பிரகிருதி புவனங்கட்குப் பதியாதல் பற்றித் திருமாலையே உலகினை ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் நிற்பவனாக வைத்து, ``உலகத்தை உண்டு உமிழ்ந்தவன்`` எனக் கூறுதல் வெளிப்படை. ``உடனாகி, ஓடு`` என்பன எண்ணின்கண் நின்றன. சிவபெரு மானுக்குரிய ``ஆதி`` என்னும் பெயரை அவனது உருவைப் பெற்ற உருத்திரனுக்கு ஆக்கிக் கூறினார். அதனால் அவனே தேவர் பலர்க்கும் மேலானவன் என்பது விளக்குதற்கு, ``அண்டத்தமரர் தலைவனாம்`` என்றார். கண்டம் - சிறுமை. இறுதியிற் கூறுதல் பற்றி, ``முன்னை இருவரினும் மேம்பட்டவன்`` என்பது படாமைப் பொருட்டு, ``கண்டச் சதுமுகன்`` என்றார்.
இதனால், உலக முதல்வனாகிய காரணனைப் பற்றி ஓர் உண்மை உணர்த்தற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும் பாங்கார் கயிலைப் பராபரன் தானும் வீங்குங் கமல மலர்மிசை மேலயன் ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தனது தொழில்களுள் ஒவ் வொன்றைத் திருமாலும், பிரமனும் ஏற்றுச் செய்யுமாறு திருவுளம் பற்றினான்.

குறிப்புரை :

`அதனால், அவரும் உலக காரணர் எனப்படுகின்றனர்` என்பது குறிப்பெச்சம். மாலும், அயனும் சிவபெருமானது ஆணையை ஏற்ற அதிகார மூர்த்திகளாதலின் அது பற்றி, ``உலக முதல்வன் சிவ பெருமானே`` என்றற்கு இழுக்கில்லை என்பது கருத்து. இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``தானும்`` என்பதில் தான், அசை நிலை. உம்மை, ``அவர் தவம் செய்யத் தானும் அதற்கு இசைந்தான்`` என இறந்தது தழுவிற்று. வீங்கு - மணம் மிக்க. ``உயிர் வைத்தல்`` என்றது, படைத்தல், காத்தல் இரண்டனையும் இரட்டுற மொழிதலால் குறித்ததாம். உணர்ந்தான் - எண்ணினான்; திருவுளம் பற்றினான். உருத்திரனை வேறாக எண்ணுவோர் சிவபெருமானை முதல்வன் என்பாரோடு மாறுபடாமை பற்றி இங்கு மால், அயன் இருவரைப் பற்றி மட்டுமே கூறினார் என்க. எனவே, உருத்திரனும் அத்தகையோனாதல் பெறப்பட்டது. ``அயன், மால், உருத்திரன்`` என்னும் மூவரும் முறையே ``படைப்பவன், காப்பவன், அழிப்பவன்`` என்பது வெளிப்படை.
இதனால், புராணங்களில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற காரணர் மூவர் பற்றிய உண்மை தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனே தனது பேரருளால் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிந்தும், செய்தும் நிற்பவன். திருமால், ``தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம்`` என்னும் ஐவகை உடம்புள் முதல் உடம்பாகிய தூலசரீரம் முதல் நடுவுடம்பாகிய குண சரீரங்காறும் நிறைந்து நின்று செயலாற்றுவன். பிரமன், முதல் உடம்பாகிய தூல சரீரத்துள்ளும் பிருதிவி தத்துவத்தளவிலே நிறைந்து சென்று செயலாற்றுவன். பிரமனை, `வேத முதல்வன், உலகத் தந்தை` என்றெல்லாம் சொல்வது இந்த அளவில்தான்.

குறிப்புரை :

இங்கு, ``முதல் உடம்பு`` என்றது, ஒடுக்கமுறை பற்றி என்க. மேற்கூறிய தத்துவம் முப்பத்தாறனுள், ``ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம் என்னும் பதினைந்தும் தூல சரீரமாம்`` எனவும், ``தன் மாத்திரை ஐந்தும், மனம் அகங்காரம் புத்தி என்னும் அந்தக்கரணங்களும் ஆகிய எட்டும் சூக்கும சரீரமாம் `` எனவும், ``சித்தம், குணம், பிரகிருதி என்று பலவகையாய் நிற்கும் ஒன்றே குண சரீரமாம்`` எனவும் `` வித்தியா தத்துவங்கள் ஏழனுள் மாயை தவிர ஏனைய ஆறுமே கஞ்சுக சரீரமாம்``, ``மாயை காரண சரீரமாம்`` அறிந்து கொள்க. இவற்றுள் நிலமுதல் பிரகிருதி அளவுமே திருமால் வியாபகன் ஆதலின், ``நாரணன் என்றும் நடுவுடலாய் நிற்கும்`` என்றும், நான்முகன் பிருதிவி அளவிலே வியாபகனாதலின், ``நான் முகன் பார் அண்ணல்`` என்றும் கூறினார். சிவபெருமானை விடுத்து இவ்விருவருள் ஒருவனை முதல்வன் எனச் சிலர் மயங்குதலன்றி, உருத்திரனைச் சிவபெருமானின் வேறாக எண்ணி மயங்குவார் இலராதல் பற்றி இவ்விருவரது வியாபக எல்லைகளை மட்டுமே உணர்த்தி அருளினார். சீகண்ட உருத்திரன் மாயாதத்துவங்காறும் வியாபகன் எனவும், மகேசுரன் ஈசுர தத்துவங்காறும் வியாபகன் எனவும், சதாசிவன் நாத தத்துவங்காறும் வியாபகன் எனவும் உணர்ந்துகொள்க.
``அன்பு`` இரண்டில் முன்னது அருள்; பின்னது ஆசை. `அன்பிற் செய்யும்` என இயையும். பதம் - உலகம். செய்தல் - படைத்தல்.
இதனால், சிவபெருமானது முதன்மைக்கண் நிகழும் ஐயத்தினை முற்ற நீக்குதற் பொருட்டு, அதிகார மூர்த்திகளது அதிகார எல்லைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.

பொழிப்புரை :

பிரம தேவன் அறிவுடையவனாய் இருந்து, படைத் தல் தொழிலை வெற்றிபெறச் செய்கின்ற காரணத்தை நான் நன்கு அறிந்தேன். அஃது என்றும் நிலையாயுள்ள இன்பம் எளிதாகக் கிடைத்தற் பொருட்டுத் தன்னை விரும்பினால், அப்பயனை அவ் வாறே எளிதில் தருகின்ற பருத்த இரத்தினம் ஒன்று அவனிடம் உள்ளது என்பதே.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, அதன் பின், `நம்பப் பயன் எளிதாம் மணி ஒன்றுண்டு` என்பதைக் கூட்டி உரைக்க. பருமாமணி, சிவபெருமான். செம்மை - மாறுபாடின்மை. நயன் - இன்பம். ``ஆகிய`` என்பது ``செய்யிய`` என்னும் வினையெச்சம். நம்புதல் - விரும்புதல். ``நம்பன்`` என்பது பாடம் ஆகாமை வெளிப் படை. ``உண்டு`` என்னும் குற்றியலுகரத்தின்முன் உயிர் உடம்படு மெய் பெற்றது. அங்கே - அவ்வாறே; அறிந்தவாறே. வயன் - வெற்றி. வயணம் - காரணம். படைத்தலைச் செய்பவனையே முதல்வனாக உலகம் மயங்குதல் இயல்பு என்பது பற்றிச் சிவபெருமான் பிரமனுக்கு உள்ளொளியாய் நிற்றலையே விதந்தார்.
இதனால், படைத்தல் முதலியவற்றைச் சிவபெருமான் பிறரால் செய்விக்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்கள்மாட்டு அருள் கூர்தலால், உலகம் ஒடுங்கல், தோன்றல், நிற்றல் என்னும் செயல்கள் அவனது திருவுள்ளத்தில் எழுந்தபொழுது, எல்லையின்றிப் பரந்து நிற்கின்ற மாயையைத் தனது சிற்சத்தி வழியாகப் பொருந்தி அதனைக் காரியப்படுத்துபவன் அவனே.

குறிப்புரை :

எனவே, `அவனது அதிகார சத்தி பதிவால் அயன், அரி, அரன் என்போர் தமது படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்கின்றனரல்லது, தாங்களே தங்கள் விருப்பப்படி செய்கின்றா ரல்லர்` என்பதாம். ஆக்கம் - வளர்ச்சி. இதனை, ``வரவும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `புரிதலால்` என்றது `புரிந்து` எனத் திரிந்து நின்றது. மேக்கு - உயரம். மாயையை `மேக்கு மிகநின்ற எட்டுத்திை\\\\u2970?` என ஆகாயமாக உருவகம் செய்தார். தாக்குதல் - தோய்தல். கலக்குதல் - காரியப்படுத்துதல். இங்கு, `சத்தி வழியாக` என்பது ஆற்றலால் வந்தியைந்தது.
இதனால்,மேல், `ஒளியாய்` எனக் குறிக்கப்பட்ட ஒளியாவது, அதிகார சத்தி என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.

பொழிப்புரை :

சிவன் முதல்வனாய் நின்று, உடலோடு கூடிய உயிர்களைப் படைக்கும்பொழுது, முதலில் அவைகட்கு வினைகளை வரையறுத்துக் கூட்டுவான். பின் அவற்றை அவை நுகர்தற்கு உடலுக்கும் துணையாய் நின்று அதனை இயக்குவான். ஏனெனில், அவன் அவரவர் செய்திக்குத் தக்க பயனை அவரவர்க்குத் தப்பாமல் ஊட்டுவித்து நிற்கும் நடுவுநிலைமையனாதலின்.

குறிப்புரை :

`உயிர்களைப் படைத்தல் என்பது, அவைகளை உடலொடு பொருந்தச் செய்தலாம்` என்பது விளக்குதற்கு. ``ஒன்றுயிர்`` என்றார். அளவை - கால வரையறை. ``துயர்`` என்றது அதற்கு ஏதுவான வினைகளை. `உயிர்ப்பிப்பான்` என்னாது `உயிர்ப் பான்` என்றார். அவையே தானாய் நிற்கும் ஒற்றுமை தோன்றற்கு. வினைகளைக் கூட்டுவிப்பவன் முதல்வனாயின், நல்வினை ஒன்றையே கூட்டுவியாது, தீ வினையையும் கூட்டுவித்தல் என்னை என்னும் வினாவை விடுத்தற்கு ``நடுவு நின்றான்`` என்றார். எனவே, படைப்பு ஒருபடித்தாகாது பலபடித்தாய்த் தோன்றுதற்கும், உலகில் நன்மையோடு தீமையும் உளதாதற்கும் காரணங்கூறியதாயிற்று.
இதனால், சிவபெருமான் உலகத்தைத் தொழிற்படுத்தும்வழி நெறியின்றித் தொழிற்படுத்தாது, உயிர்களின் வினைக்கேற்பவே தொழிற்படுத்துவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

பொழிப்புரை :

பிறக்கும் தன்மை இல்லாத சிவபெருமான், உயிர் ஓர் உடலை எடுக்கின்ற காலத்து அதற்கு அதனைக் கொடுக்கின்ற தலைவனும், பின்பு அவ்வுயிர் அவ்வுடலை விட்டு நீங்குகின்ற காலத்தில் பின்னர்ச் சென்று புகும் மற்றோர் உடலையும் அதற்குக் கொடுத்து, அங்கும் அதற்குத் துணையாய் நிற்பவனுமாவன்.

குறிப்புரை :

எனவே, `உயிர்களுக்கு வினைக்கீடாகத் தரப்படும் பிறப்பு ஒன்றன்று; பல` என்றவாறு. அக்கு - எலும்பு. செம்பொனின் மேலணி மேனியன் - செவ்விய பொன்னின்மேலே உள்ள அழகு (நிறம்) போலும் மேனியன். `புகுந்த` என்பதன் ஈறு தொகுத்தல்.
இதனால், சிவபெருமான் எண்ணற்ற உயிர்களுள் ஒவ்வொன்றற்கும் எண்ணற்ற உடலைக் கொடுத்துக் கூட்டியும், நிறுத்தியும், பிரித்தும் நடத்தும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.

பொழிப்புரை :

ஒருவனும் ஒருத்தியுமான இருவர் (சிவனும், சத்தியும்) விளையாடலை மேற்கொண்டுள்ளார்கள். அவ் விளை யாடல் அவர்கட்குப் பொழுது போக்காகாது, எண்ணிலா உயிர்கட்கு எண்ணிலாப் பயனை விளைப்பது. அப்பயனும் உயிர்களின் பக்குவ நிலைதோறும் அதற்கேற்ப வேறு வேறாய் விளைவனவாம். உயிர்கள் வீடுபெறின், அவ்வொருவன் ஒருத்தியரது உலகத்தின் தொழிற்பாடு முற்றுப்பெறும்.

குறிப்புரை :

`சிவம், சத்திகட்கு உலகை மேற்கூறியவாறு பலபடச் செயற்படுத்தல் பெருஞ்செயலாய்த் துன்பம் விளைப்பதன்று; நினைத்த அளவிலே எளிதில் நிகழ்வனவாம்` என்றற்கு ``விளையாடல் உற்றார்`` என்றும், `விளையாட்டு` என்பதேபற்றி, `வீண்தொழில்` என்றாதல், `தம் நலம் கருதியது` என்றாதல் கருதலாகாது என்றற்கு, `எல்லாம் விளைக்கும்` என்றும், `எல்லாம்` எனப் பொதுப்படக் கூறினும், எல்லாப் பயனும், எல்லார்க்கும், எப்பொழுதும் ஆவனவல்ல என்றற்கு, ``பருவங்கள் தோறும் ஆன`` என்றும், `படைப்பின் குறிக்கோள் உயிர்களை வீடடைவித்தலே`` என்றற்கு, ``திரு ஒன்றின் செகம் செய்கை முற்றும்`` என்றும் கூறினார்.
``காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` (தி.8 திருவெம்பாவை, 12) என்றாற் போல, இறைவன் உலகை நடாத்துதலை `விளையாட்டு` என்றல் வழக் காதலும், ``ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் - உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்`` (தி.8 திருவெம்பாவை, 11) என்றாற் போல, அவனது செயல் உயிர்களை உய்வித்தற் பொருட்டு நிகழ்வ தாதலும் அறிந்துகொள்க. ``போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7ப.59 பா.1) என்பதனால் `திருவாவது வீடுபேறு` என்பது இனிது பெறப்படும். திரு - நன்மை. வீடுபேறே முடிந்த நன்மையாதல் அறிக. உயிர்கள் வீடு பெற்ற பின்பும் அவ்வின்பத்தை நுகர்தல் முதல்வனது அருட் செயலின்றி அமையாது என்பதனை, ``இன்பம் கொடுத்தல் இறை`` (உண்மை விளக்கம் , 50) எனவும்,
மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயமுடன்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம், 36
எனவும் கூறுமாற்றால் அறிந்து கொள்க. இக்கருத்துப்பற்றியே, ``முதல்வன் செயல் முற்றுப்பெறும்`` என்னாது, ``செகத்தின் செய்கை முற்றுப்பெறும்`` என்றார் என்க. இக்கருத்துணராதார், `உயிர்கள் வீடு பெற்ற பின்னை முதல்வற்குச் செயல் இல்லை போலும்` என மயங்குப.
இதனால், படைப்பு முதலியவைபற்றி அறியற்பாலன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

பொழிப்புரை :

`உருத்திரன், மால், அயன்` என்னும் மூவரும் தம் தம் எல்லை யளவும் உயிர்க்குயிராய் நிறைந்து நின்று அங்குள்ள நிலைகளையெல்லாம் நன்குணர்வர். ஆயினும், அவரெல்லாம் எங்கும் அவ்வாறு நின்று உணரும் சிவபெருமானாகிய தலைவனுக்கு உரிய அடியரேயாவர்.

குறிப்புரை :

`ஆகவே, அவனை அடைதலே வீடுபெறுதலாம்; ஏனையோரை அடைதல் யாவும் பந்தமே` என்பது குறிப்பெச்சம். எனவே, சிவபெருமான் தனது படைத்தல் முதலிய தொழில்களின் பயனாக உயிர்கட்கு முடிவில் தன்னையே வழங்கியருள்வான் என்பது போந்தது. புவனாபதி - உலக காரணியாகிய உமைக்குத் தலைவன். முடி - தலைமை. அது தலைமையை உடையான் மேல் நின்றது.
இதனால், முடிந்த வீடுபேறு (பரமுத்தி) ஆவது இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங்
காணியர் காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே.

பொழிப்புரை :

ஆணவ மலத் தொடக்கினுள் அகப்பட்டு நிற்கின்ற அந்நிலையில், அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிற்கின்ற அயன், மால், உருத்திரன், சீகண்டர், அனந்தர் என்னும் ஐவரும் பிறரால் கண்காணிக்கப்படும் காரியக் கடவுளரே. இனிக் காரணக் கடவுளராவார், மேற்சொல்லிய அந்நிலைக்குப் பின்னர்த் தாம் முன்னர் மேற்கொண்டிருந்த அத்தொழில்களாலே பக்குவம் முதிரப்பெற்று ஆணவம் நீங்கி அதன் வாதனை மாத்திரம் உடையராய்ச் சுத்த மாயையில் உடம்பு முதலியவற்றைப் பெற்று நிற்பவர்களே.

குறிப்புரை :

அவர், `அணுபட்ச அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவர் என்க. அதில் - அந்நிலையில். காணியர் - காணப்பட்டவர். `காரியர்` என்றேயும் ஓதுப. `கடைமுறை` என்றது, `பின்` என்றவாறு. பின்னர், ``விந்துவிற் பிறந்து`` என்ப தனால், முன்னர், மோகினி மான்களின் நிற்றலைக் கூறுதல் கருத்தாதல் அறிக. ``ஐந்தொழில்`` என்றதற்கு, காரியர் ஐவருள் சீகண்டரை மறைப் பவராகவும், அனந்தரை அருள்பவராகவும் கொள்க. `செலுத்துவோர் காரணர்` எனவும், `செலுத்தப்படுவோர் காரியர்` எனவும் உணர்க. ``பிறந்து நீங்காதவர்`` என்றாராயினும், `நீங்காது பிறந்தவர்` என்றலே கருத்து என்க. நீங்காமை, பற்றறக் கழியாமை. `காரியர் பக்குவம் முதிரப் பெற்றபின் ஞானத்தை அடைந்து வீடு பெறுவர்` என்பதும், `காரணர் ஞானம் முதிரப் பெற்று வாதனை நீங்கியபின் வீடு பெறுவர்` என்பதும் உய்த்துணர வைத்தமை காண்க. அனந்தர் சுத்தமாயையில் உள்ளவராயினும், தூல வாசனை உடையராய் அசுத்த மாயையைத் தொழிற்படுத்துதல் பற்றி ஆணவத் தொடக்குடையவராக ஓதினார்.
இதனால், மேல், `பந்த நிலையினர்` எனக் குறிக்கப்பட்டவரது பந்த நிலைகள் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.

பொழிப்புரை :

நிலமுதல் மாயை ஈறாக உள்ள முப்பத்தொரு தத்து வங்களும் அசுத்த மாயையின் காரியங்கள். அதற்கு மேல் உள்ள ``சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம்`` என்னும் மூன்றும் `மகாமாயை` எனப்படும் சுத்த மாயையின் காரியங்கள். சாதாக்கியத்திற்குமேல் உள்ளது விந்து. அவ்விந்துவைப் பெற்ற அந் `நாதம்` என்னும் தத்துவம், பரவிந்துவிற் பிறத்தலால், யாவும், எல்லாத் தத்துவங் களையும் தனது உடைமையாக உடைய பராசத்தியோடு கூடிய பரம சிவனது பழைய திருவிளையாடலேயாம்.

குறிப்புரை :

இங்குக் கூறிய தத்துவங்கள் இவை என்பதை மேலே காண்க. (தி.10 பா. 124)
இதனால், அனைத்தையும் தனது விபூதியாக (சிறந்த உடைமையாக) உடையவன் பரமசிவன் என்பது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.

பொழிப்புரை :

`வானம், காற்று, தீ, நீர், நிலம்` என்னும் பூதங்கள் ஐந்தற்கும் முறையே, `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்னும் ஐவரும் தலைவராவர் என்று உணர். இவர் அனைவரும், யாதொரு பொருளையும் விட்டு நீங்காது நிறைந்து நிற்கும் சிவசத்தி பதிய ஒருங்குதோன்றியவரே. இவருள் மகேசுரன் முதலிய நால்வரும் உருவம் உடையவர். (சதாசிவன் அருவுருவினன்) இவர் ஐவர் தொழிலும், மேற்கூறிய ஆகாயம் முதல் பூமி ஈறான பூதங்களைக் காரியப்படுத்தலாம்.

குறிப்புரை :

`ஆகாயமாதிக்குச் சதாசிவன் ஆதியோர் தலைவர்` எனத் தொகுத்தலாயும், சொல்லெச்சமாயும் நின்ற சொற்களை விரித்துரைத்துக்கொள்க. என் - என்று உணர். ``உட்போத`` என்பது, ``உட்போந்து`` எனத் திரிந்து நின்றது. மா காயம் - தூலவடிவம்; உருவம். ``அளித்தல்`` என்றது `ஆளுதல்` என்னும் பொருட்டாய் நின்றது. `அளித்தலே தொழில்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், மேல், தத்துவங்களை, `பரமசிவனது விபூதி` என்று கூறியபின், அத்தத்துவத் தலைவர்களும் அவனது விபூதியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே.

பொழிப்புரை :

சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபர நாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களமாகத் தோன்றும் சாதாக்கிய தத்துவத்தினைத் தோற்றுவிக்கும். அருள் காரணமாக, `திரிபுரை` என்னும் சத்தி தோன்றுவாள். அவளே அத்தத்துவத்தின் தலைவனாகிய சதாசிவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று, அருளல் முதலிய ஐந்தொழிலையும் செய்வாள்.

குறிப்புரை :

இவளே மனோன்மனி என்பதனை அடுத்து வரும் திரு மந்திரத்துள் அறிக. இவளது சிறப்பை நாயனார் நாலாந் தந்திரத்துள் விரித்தோதுவார். அளி - அருள்.
இதனால், மேற்கூறிய தத்துவங்களும், தத்துவத் தலைவர் களும் பரமசிவனது விபூதியாதற்குக் காரணம் தோன்றுதற் பொருட்டு, அவனது சத்தியே எல்லாம் செய்யும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே.

பொழிப்புரை :

அத்திரிபுரையே `மனோன்மனி` எனப்படுவாள். அவள் நித்திய சுமங்கலை. எல்லாவற்றிற்கும் காரணி. அதுவேயன்றிக் காரியப்பட்ட பொருள்களிலும் கலந்து நிற்பாள். `உமை, வாணி, திருமகள், மகேசுவரி` என்றும் பாகுபட்டு நிற்பாள். உயிர்கட்குச் சுட்டறிவையும், சுட்டிறந்த வியாபக அறிவையும் தருவாள்.

குறிப்புரை :

`வாரணி - யானைத் தோலைப் போர்த்தவள்` என உருத்திரனது சத்தியைக் குறித்தது. ஆரணி - வேதம் ஓதுபவள். வானவர் மோகினி - தேவர்களை மாயையால் மயக்குபவள். பூரணி - நிறைந்த தலைமை உடையவள். செய்யுள் நோக்கி இவர்களை முறை பிறழ வைத்தார்.

பண் :

பாடல் எண் : 23

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.

பொழிப்புரை :

மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.

குறிப்புரை :

என்றது, மகேசுரன் முதலாகக் கீழுள்ள நிலைகளே அதிகார நிலை எனக் கூறியவாறு. சதாசிவ நிலை, `போக நிலை` எனவும், அதற்குமேல் உள்ள நிலைகள் இலய நிலை எனவும் உணர்க. இறைவன் உலகத்தைத் தொழிற்படுத்தும் பொழுது இவ்வாறு, `இலயம், போகம், அதிகாரம்` என மூன்று நிலைகளில்நின்று தொழிற்படுத்துவன் என்பது முதல் திருமந்திரத்தே குறிக்கப்பட்டது. இதனை இங்குக் கூறியது, மேற் கூறியவாற்றால், `சத்தியே எல்லாம் செய்யச் சிவன் வாளாவிருப்பான் போலும்` எனவும், `அதனால் அவ்விருவரும் வேறு வேறு நிற்பவரே போலும்` எனவும் ஐயம் நிகழாது, `சத்தியும் சிவனும் யாண்டும் உடனாகியே நிற்பர்` என்பதும், `அதனால் சத்தி செய்வனவெல்லாம் சிவன் செய்வனவே` என்பதும் உணர்த்தற் பொருட்டாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.

குறிப்புரை :

`அவ் வொருவன் சிவபெருமானே` என்பது கருத்து.
இதனால், சிவபெருமானது முழுமுதற் றன்மை வலியுறுத்திக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானே செந்தாமரை மலரில் உள்ள அழகிய பிரம தேவனும், மேகம்போலும் நிறத்தையுடைய திருமாலும், நெருப்புப் போலும் நிறத்தை யுடைய உருத்திரனுமாவான். ஆதலின், அவனே மாயை என்னும் முதற் காரணத்தினாலும், மகளிரை ஆடவர் கூடும் கூட்டமாகிய துணைக் காரணத்தினாலும் ஐந்து கூறாய்ப் பொருந்தும் உடம்புகளைத் தோற்று வித்து நிற்கின்றான்.

குறிப்புரை :

முதலில் உள்ள வண்ணம் - அழகு; பொன்னிறம். இறுதியிற் கூறத்தக்க தீவண்ணனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``எம் இறை`` என்றதனை முதலில் வைத்துப் பிரிநிலை ஏகாரம் விரிக்க. ``செந்தாமரை வண்ணன்`` முதலிய மூன்றும் `எம் இறையே` என்னும் எழுவாய்க்குப் பயனிலைகளாய் நின்றன. ``முகில் வண்ணன்`` என்பதன் பின், `அவனே` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `ஆடவர்` என்பது சொல்லெச்சம்.
உடம்பின் ஐந்து கூறுகளாவன, ஐங்கோசங்கள். அவை, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` என்பன. இவற்றின், விளக்கம் பின்னர்க் காணப்படும். இவற்றுள் அன்னமய கோசம் பிரம தேவனது ஆளுகைக்கும், பிராணமய கோசம் மாயோனது ஆளு கைக்கும், மனோமய கோசம் சீகண்ட உருத்திரரது ஆளுகைக்கும் ஏனை இரு கோசங்களும் அனந்த தேவரது ஆளுகைக்கும் உட்பட்டு இயங்குவனவாம். இவற்றுள், முதல் மூன்றும் பிரகிருதி மாயையின் காரியங்களும், ஏனை இரண்டும் அசுத்த மாயையின் காரியங்களு மாகும்.
இதனால், படைப்பு வேறுபாடு ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.
இவ்வாறாகவே, `படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் சிவபெருமான் சுத்தமாயையில் தான் நேரே செய்வன்` என்பதும், `அசுத்த மாயையில் அனந்த தேவரை வாயிலாகக் கொண்டு (அதிட்டித்து நின்று) செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழியாகச் சீகண்ட உருத்திரனை வாயிலாகக் கொண்டு செய்வன்` என்பது போதரல் காண்க.
இதனால், சிவபெருமான் மும்மாயையிலும் படைத்தல் முதலியவற்றைச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே.

பொழிப்புரை :

பல்கோடி அண்டங்களிலும் தனக்காவதொரு புக்கிலை (நிலையான வீட்டைத்) தேடி அலைகின்ற சீவான்மாவின் பொருட்டு, உடலும், உயிரும் கன்மத்தால் தொடர்பு கொள்கின்ற பல பிறவிகளை அவ்வவ்வுயிர்க்கு ஏற்றவாறு மேற்கூறிய வாற்றால் மாயையினின்றும் தோற்றுவிக்கின்ற பரமான்மாவாகிய சிவபெரு மான், தான் தனது திவ்வியாகமங்களுள் கூறியுள்ள அப்படைப்பு முறைகளைத் தெளியமாட்டாது அவற்றொடு மாறுபடுகின்றவரது உள்ளத்துள்ளே நின்று, அவரது அறிவோடே ஒத்துக் கூறிய பல சமயக் கொள்கைகளையும் யான் அறிவேன்.

குறிப்புரை :

அக்கொள்கைகளாவன, `பூதங்கள் நான்கே; அவை தம்முட் கூடுதல் பிரிதல்களால் உலகம் தோன்றும்; அழியும். அதனால், அச்செயல்கட்கு முதல்வன் ஒருவன் வேண்டுவதில்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் உலகாயத மதத்தினர்) `வித்தின் கேட்டில் அங்குரம் (முளை) போல எல்லாப்பொருளும் ஒன்றன் கேட்டில் மற்றொன்றன் தோற்றமாக ஒரு கணத்தில் தோன்றி, மறுகணத்தில் அழிந்து செல்லும். இத்தொடர்ச்சி பொருட்பெற்றியானே நிகழும்; இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் புத்த மதத்தினர்) `உளதாதல், இலதாதல் என்னும் இரண்டு தன்மையும் ஒருங்கே உடைமையால் இத்தன்மைத்தென வரையறுத்துச் சொல்லொணாத இவ்வுலகம் உளதாதல் தன்மையால் தோன்றி, இலதாதல் தன்மையால் அழிதல் இயல்பாதலின், இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் சமணமதத்தினர்) `பிரகிருதிக்குமேல் மாயை இல்லை; அதனால், அதன் காரியமாகிய இருபத்து நான்கிற்கு மேல் தத்துவம் இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் ஏகான்மவாதிகள், யோகர், சாங்கியர் முதலிய பலருமாவார். இவருள் ஏகான்மவாதிகள் மாயை `அநிர்வசனம்` - இன்னதெனச் சொல்லொணாதது, எனக்கூறி, அதனுள் சக சீவ பரங்கள் விவர்த்தனமாய் - மயக்கக் காட்சியாய் - தோன்றும்` எனவும், ஏனையோர், `மாயையை உள்பொருள்` எனவும், `அதனால், அதன் காரியங்களும் உள்பொருளே` எனவும் கூறுவர். சாங்கியருள் ஒரு சாரார், `மாயை தானே தனது காரியத்தைத் தோற்றுவிக்கும்; இறைவன் வேண்டா` என்பர்.) இன்னோரன்ன பலவுமாம். மேல் ``பருவங்கள்தோறும் பயன் பலவாகும்`` (தி.10 பா.393) என்று அருளிச் செய்தபடி, சிவபெருமான் அவ்வவ்வுயிர்களின் பரிபாகத்திற்கேற்ப அவற்றின் வழி நின்று துணைபுரிவனாதலின், அதனை, `அவர்தமதுள்ளத்துள் நாடும் வழக்கம்` என்றார். வழக்கம் - மரபு; கொள்கை.
`திசை எட்டும் தேடும் சீவன்` என மாற்றி, `சீவனுக்கு` என நான்காவது விரிக்க. குணம் - பிரகிருதி.
இதனால், `பிறநெறிகளுட் கூறப்படும் முறைமைகள் பலவும் பூர்வபக்கம்` என்பது கூறும் முகத்தால், `சிவநெறியுட் கூறப் படும் முறைமையே சித்தாந்தம்` என மேலன பலவும் வலியுறுத்தப் பட்டன.

பண் :

பாடல் எண் : 27

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே.

பொழிப்புரை :

`படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.

குறிப்புரை :

`வேத சிவாகமங்களில் பூதம் முதலிய தத்துவங் கட்கும், பல்வேறு பிறவிகளில் நிற்கும் உயிர்கட்கும், அவற்றது உடம்பில் அமைந்த பல்வேறு உறுப்புக்களுக்கும், அவ்வுடம்புகட்கு நிலைக்களமாய் `அண்டம்` எனவும், `புவனம்` எனவும் பெயர் பெற்று நிற்கும் இடங்கட்கும் தலைமை தாங்கி அவ்வவற்றை ஏற்ற பெற்றி யான் இயக்கும் கடவுளர் எண்ணிறந்தோர் எனக் கூறி, அவர்க்கு உரிய உருவம், பெயர், தொழில் முதலியனவும், இடம் பொருள் ஏவல்களும், அவரை வழிபடும் முறைகளும் பலபட எடுத்துச் சொல்லப்பட்டாலும், அவர் பலரும் தாம் தாம் தம் இச்சைவழி நின்று செயல்புரிவோரல்லர்; சிவபெருமானது அடியவர் குழாங்களே எனத் தெளிவித்தவாறு, `அமைப்பால் வேறுபட்ட பல கூட்டமாயினும், ஒருவனது பணி யாளராம் முறைமையால் ஒரு கூட்டமே` என்றற்கு, ``ஓர் ஆயமே`` என்றார். ஆயம் - கூட்டம்.
இதனால், அனேகேசுர வாதம் பற்றி எழும் ஐயம் பொது வகையான் அகற்றி, மேலே வலியுறுத்தப்பட்டது. மேல் ``ஒருவனுமே`` (தி.10 பா.401) என்ற மந்திரம் ஒருவனே பலராய் நின்று காரியம் செய்தல் கூறியது. இது பலரும் ஒருவனது ஏவலரே எனக் கூறியது. இவை தம்முள் வேற்றுமை.

பண் :

பாடல் எண் : 28

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே.

பொழிப்புரை :

தலைவனாகிய சிவபெருமான் ஒருவனும், அவனது அருட்கு உரியராயினமையின் நல்லோராகிய `மால், அயன்` என்னும் இருவரும் ஆக மூவரும் தீயது, நல்லதுமாகிய முக்குணங் களைக் கூட்டிக் குழைத்து உலகை ஆக்குகின்றனர். எனினும், ``அடியேங்கட்கு இடும் பணி யாது`` என்று விண்ணப்பித்து அவற்றைச் செய்ய இசைந்து நிற்கும் நல்ல இருவருக்கு நாதனாகிய சிவபெரு மானே அவர் செய்யத் தக்க பணியை அருளிச் செய்கின்றான்.

குறிப்புரை :

கோது - குற்றம்; தீமை. குலம் - நன்மை. இராசதமும், தாமதமும், ``கோது`` எனப்பட்டன. சாத்துவிகம், ``குலம்`` எனப் பட்டது. `ஏனைத் தேவர் பலரும் தலைவராகாதொழியினும், புராணங்களிலும், பிறவிடத்தும் தலைவராகச் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற மூவர் தலைவராகாமை இல்லை போலும்` எனப் பௌராணிக மதம்பற்றி மீளவும் எழும் மலைவை நீக்கியவாறு.
``முக்குணத்தால் உலகை ஆக்குகின்றனர்`` என்ற குறிப்பால் `குணாதீதனாகிய சிவன் முதல்வனாதலன்றிக் குணவயப்பட்ட ஏனையோர் முதல்வராமாறு இல்லை` என வழி வகை கூறித் தெளிவித் தவாறாயிற்று. உருத்திரனைச் சிவபெருமானின் மேம்பட்ட வனாக மயங்கிக் கூறுவார் இன்மையின், அழித்தல் தொழிலைப் பேறாக உடைய உருத்திரனைப் பற்றி விளக்கம் கூறிற்றிலர்.
இதனால், தலைமைபற்றி, `பௌராணிகம், ஐரணியகருப்பம், பாஞ்சராத்திரம்` என்னும் மதம் பற்றி எழும் ஐயத்தைச் சிறப்பு வகையான் அகற்றி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே.

பொழிப்புரை :

`எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப் படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங் களைப் பொருந்தி நின்று உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச் சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனா கின்றான்.

குறிப்புரை :

``உரைசேரும் எண்பத்து நான்குநூறாயிரமாம் யோனி பேதம்`` (தி.1 ப.132 பா.3) என்றற்றொடக்கத்தனவாகப் பலவிடத்தும் பிறப்பு வகை வேறுபாடுகள் எண்பத்துநான்கு நூறாயிரம் என்பது கூறப்படுதல் காண்க. இவை அனைத்தும், `அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம்` என்னும் நால்வகைத் தோற்றமும், `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுவகைப் பிறப்புமாய் அமைவனவாம். அண்டசம் - முட்டையில் பிறப்பன. சுவேதசம் - வியர்வையில் (அழுக்கில்) பிறப்பன. உற்பீசம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளைப் பிளந்து கொண்டு மேல்நோக்கி முளைப்பன. சராயுசம் - கருப்பப் பைக்குள் உரு நிரம்பிப் பிறப்பன. எண்பத்து நான்கு நூறாயிரமும் எழுவகைத் தோற்றத்துட் பொருந்துமாறு:-
தோற்றிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தாகும்;
ஊர்வபதி னைந்;தமரர் பதினொன்றோ;டுலவா
மாற்றருநீர் உறைவன,நற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து;மானுடர்ஒன் பதுமாம்;
ஏற்றியொரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
-சிவப்பிரகாசம் - 47
என்பதனால் விளங்கும். இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில்சீர்த் தாவரம்நா லைந்து.
-திருக்குறள், 62. பரிமேலழகர் உரை மேற்கோள்
எனச் சிறிது வேறுபடவும் கூறுவர். எவ்வாறாயினும், `எண்பத்து நான்கு நூறாயிரம்` என்பதில் மாறுபாடில்லை.
`இத்துணை வேறுபட்ட பிறவிகளில் ஏனையவற்றிற் செல்லாது மானுடப் பிறப்பினுள் வருதல் பெரிதும் அரிது` என்பதை,
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தால்
உண்டுபல் யோனி; எல்லாம் ஒழித்துமா னுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்.
எனச் சிவஞான சித்தி (சூ. 2.89) நூல் கூறிற்று.
``மூடி`` என்பது பெயர். `மூடியாய்` என ஆக்கச்சொல் விரிக்க. இனி, வினையெச்சமாகக்கொண்டு, `இருளால் மறைத்து நின்றான்` என உரைத்தலுமாம்.
இதனால், படைப்பு எண்பத்து நான்கு நூறாயிர வேறு பாடுகளை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

பொழிப்புரை :

அசுத்த மாயையில் உளவாகின்ற தத்துவ தாத்து விகங்களோடு ஒத்த தத்துவ தாத்துவிகங்களும், பிறப்பு வகைகளும் சுத்த மாயையின்கண்ணும் உளவாவனவாம்.

குறிப்புரை :

பிறப்பு வகைகள் பலவற்றையும் உபலக்கணத்தாற் கொள்ளுதற்கு, `எண் பாலர்கள்` என்றார். எண் பாலர் - திசைக் காவலர். போதித்த - சிறப்பித்துச் சொல்லப்பட்ட. ஒளி - தேசசு; நெருப்பு. `ஒலி` என்பது பாடம் அன்று. வாதித்த - வாதத்தோடு கூடிய. வாதம் - காற்று. `கூடிய` என்றது, `சொல்லப்பட்ட ஐம்பூதங்களோடும் கூடிய` என்றவாறு. ``சத்தாதி`` என்றதை, `தன்மாத்திரை, விடயம்` என இரட்டுறமொழிந்து கொள்க. ``ஆதி`` என்றதனை, ``வாக்கு`` என்றதனோடும் கூட்டுக. வாக்காதி, `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள்; இவற்றைக் கூறவே `செவி, தோல், கண், மூக்கு, நாக்கு` என்னும் ஞானேந்திரியங்களும், சத்தாதி ஞானேந்திரிய விடயங்களைக் கூறவே, `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்` என்னும் கன்மேந்திரிய விடயங்களும் கொள்ளப்படும். மனாதி, `மனம், அகங்காரம், புத்தி, சித்தம்` என்னும் அந்தக்கரணங்கள். `ஆதித்தன், சந்திரன்` என்றது, உபலக்கணத்தால் தாத்துவிகங்களைக் கொள்ள வைத்ததாம்.
`தத்துவங்கள் முப்பத்தாறு` எனவும், `அவற்றுள், சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்தும் சுத்த மாயையில் உள்ளவை; ஏனைய அசுத்த மாயையில் உள்ளவை` எனவும் மேற்கூறியவாற்றால், `சுத்த மாயையில் உள்ள தத்துவங்கள் மேற்கூறிய ஐந்துமே; பிற இல்லை` என்பது பட்டமையின் அதனை விலக்கி, `மேற்கூறிய ஐந்தும் சுத்த மாயையின் சிறப்புத் தத்துவங்கள்; அவை அசுத்த மாயையில் இல்லை; ஏனைய முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தமாயை, அசுத்த மாயை இரண்டற்கும் பொதுத் தத்துவங்கள்; அதனால் அவை அவ் இருமாயையிலும் உள்ளன. சுத்த மாயையில் அவை மலகன்மங்களோடு கலவாமல் சுத்தமாய் உள்ளன; அசுத்த மாயையில் அவை அவற்றொடு கலந்து அசுத்தமாய் உள்ளன; அவ்வளவே வேறுபாடு` எனத் தெரித்துக் கூறியவாறு. `இதுவே சிவாகமங்களின் துணிபு` என்பது.
``காலம் முதல் நிலம் ஈறாகிய தத்துவங்கள் எல்லாம் அசுத்த மாயையிற்போலச் சுத்த மாயையினும் உள; அவை இவை போலன்றிச் சுத்தமாய் உள்ளன என்னும் பௌட்கர வசனத்தான் அசுத்த தத்துவ புவனங்களின் உள்ளன அனைத்தும் சுத்த தத்துவ புவனங்களினும் சுத்தமாய் உளவாம் என்பது போதருதலானும்``
எனச் சிவஞானபோத மாபாடியத்தும் (சூ.2 அதி.2) இனிது எடுத்து விளக்கப் பட்டமை காண்க. அசுத்த மாயா உலகத்தவராகிய அயன், மால், உருத்திரன் முதலியோர்போலச் சுத்த மாயையிலும் அப்பெயர் முதலியன உடையோர் உளர் என்றலும் இதுபற்றி என்க. இனி, பூலோக புவர்லோக சுவர்க்கலோகம் முதலிய உலகங்களில் கீழ் உலகத்துள்ளனபோல மேல் உலகத்தும் உள்ளன பொருள்கள் என்றலும் இவ்வாற்றானே அமைதல் அறிந்துகொள்க.
இனி, `சுத்த மாயை மேலே உள்ளது; அசுத்த மாயை கீழே உள்ளது` எனக் கூறுதல், சூக்கும தூல முறைமையால் வியாபக வியாப் பியமாதல் பற்றியல்லது, ஒருமரத்தில் அதன் அரையும், கிளையும் போல இட வேறுபாடு பற்றியன்றாதலால், சுத்த மாயையில் உள்ளன பலவும் அசுத்த மாயையில் தோய்வின்றி வியாபகமாய் நிற்கும் என்பதும் நுண்ணுணர்வால் உணர்ந்துகொள்க. அங்ஙனம் அல்லாக் கால் மந்திரங்களும், அவற்றிற்கு உரியராய கடவுளரும் அசுத்த மாயா புவனத்தில் உள்ளார்க்குப் பயன் தருமாறு இல்லை என்க.
`மாயையிற் போல` என ஒருசொல் வருவிக்க. ``உற்றது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. `உற்றவே` என ஓதுதலும் ஆம்.
இதனால், படைப்புப் பற்றியதொரு புறனடை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.

பொழிப்புரை :

என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனாலே அவை நிலைத்து நிற்கின்றன` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. இதில் `நின்றான்` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்றெச்சம். ஒவ்வோர் அடியிலும் எச்சங்களை முதலிலே கூட்டி முடிக்க. `வெளி` எனினும் `ஒளி` எனினும் ஒக்கும். இங்கு, ``ஒளி`` என்றது, ஆன்ம அறிவை விளக்கும் மாயா காரியங்களை. ``இருள்`` ஆணவமாதல் வெளிப் படை. அதனுள்ளும் இறைவன் நிற்றல், அதன் சத்தியை இடையறாது தொழிற்படச் செய்து மெலிவித்தற்காம். புகழ்வு - புகழ்தல். இகழ்வு - இகழ்தல். இத்தொழிற் பெயர்கள் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளாய அவ்வச்சொன்மேல் நின்றன. இவற்றால் அவன் அச்சொற் கட்குப் பொருளாம் உயர்பொருள் இழிபொருள்களின் நிற்றல் குறிக்கப்பட்டது. ``உடல்`` என்றது சடப்பொருள்கட்கு உபலக்கணம்.

பண் :

பாடல் எண் : 2

தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தான் ஒருவனே பல பொருள் களினும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பித்தலுடன், அவற்றைத் தன் இச்சைவழி நடத்துபவனுமாகின்றான்.

குறிப்புரை :

`அதனால் அவை இயங்கிவருகின்றன` என்பது குறிப் பெச்சம். முதல் மூன்றடிகளும் அனுவாதம்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், `காத்தலாவது, அழியாது நிற்பித்தலும், நடத்துதலுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் இவ்வாறு எல்லாப்பொருளிலும் நிறைந்து நிற்றல், அவன் பிறபொருள்களால் அடைக்கப்படாத பெருவெளியாய் நிற்றலினாலாம்.

குறிப்புரை :

``உலகம்`` என்றது, விதந்தோதாதன பிறவற்றை. வான் - மேகம். இடை - வெளி; ஆகாயம். உலப்பிலி எங்கும் - அள வில்லாத இடம் எங்கணும். ``அடையாப் பெருவெளி அண்ணல்`` என்றது உடம்பொடு புணர்த்தல். அன்றி, `அண்ணல் ஆதலின்` எனச் சொல்லெச்சம் வருவித்துரைத்தலுமாம். அங்ஙனம் வருவிப்பின், இத்தொடர் முதலில் வைத்து உரைக்கப்படும்.
இதனால், `ஒருவன் பிற எல்லாப் பொருளிலும் நிற்றல் எவ்வாறு கூடும்` என்னும் ஐயத்தினை, இங்கும் நீக்குதற்கு அங்ஙனம் நிற்குமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் சிருட்டி அதிகாரத்தில் வந்த ``தேடுந்திசை எட்டும்`` என்னும் மந்திரம் இங்கு மீளவும் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 4

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயனு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்களது அறிவு நிலைக்கு ஏற்பக் கதிர்க்கடவுள், வளிக்கடவுள், மழைக்கடவுள், (இந்திரன்) முதலிய பல்வேறு கடவுளராய்த் தோன்றுவான். ஆதலின், அவன் திருமாலாய்த் தோன்றுதலில் வியப்பில்லை.

குறிப்புரை :

ஒருகால் - ஒருகாலத்தில்; என்றது, `உயிர்களின் பக்குவ நிலையில்` என்றவாறு. சுடர் முதலியன அவற்றை இயக்கும் கடவு ளரைக் குறித்தன. தண்மை, சத்துவகுணத்தைச் சுட்டியது. `பிறர் சத்துவ குணத்தை யுடையவனாகக் கூறும் மாயோன்` என்றவாறு. மாயோன் தொழிலால் மட்டுமே சத்துவன்; குணத்தால் தாமதனே. சிவபெருமான் பல்வேறு கடவுளராய்த் தோன்றலாவது, அவர் அவர் அறிவிற்கு ஏற்ப அவரையே முதற்கடவுளாக மயங்குமாறு அவர்பால் தனது ஆணையை வைத்துத் தத்தமக்கு இயலும் அளவு உலகத்தை நடத்தச் செய்தல். `அவ்வாற்றால் காக்கும் ஆணையைத் திருமாலிடத்து வைத்து நடத்துகின்றானாதலின், அத்திருமாலையே காத்தற் கடவுளாக உண்மை நூல்கள் ஓரோர் இடங்களிற் கூறுதலும், அங்ஙனம் கூறுதலின் உண்மையை உணரமாட்டாதார் அவனையே காத்தற் கடவுளாகவும், முதற்கடவுளாகவும் மயங்குதலும் இயல்பாகலின், அதுபற்றி ஐய மில்லை` என்பதாம். சண்டம் - வேகம். மாருதம் - காற்று. தளி - துளி.
இதனால், `காப்பவன் மாயனன்றோ` எனப் பௌராணிக மதம் பற்றி எழும் ஐயத்தினை நீக்கி, `காப்பவனும் சிவனே` என்பது இங்கும் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

திருவருளால் ஐம்பூதங்களிலும் நிற்கும் சிவ பெருமானே, குணங்கள் மூன்றாயும், காலங்கள் மூன்றாயும் நிற்பான்.

குறிப்புரை :

`அதனால் சத்துவ குணத் தொழிலாகிய காத்தலைச் செய்பவனும் அவனே` என்பதாம். அன்பு முதலாக இன்பம் ஈறாகக் கூறியவை சத்துவ குணத்தை விரித்தவாறும், இன்பக் கலவி தாமத குணத்தைக் குறித்தவாறுமாம். முன்புறு காலம் - உலகத்தது தோற்றக் காலம். ஊழி அதன் இறுதிக் காலம். இவை முறையே இறப்பும், எதிர்வும் குறித்தன. இராசத குணமும், நிகழ்காலமும் உபலக்கணத்தாற் கொள்ளநின்றன.
சிவபெருமான் எட்டுருவினன் (அட்ட மூர்த்தி) ஆதலும், அவற்றுள் ஐம்பூதங்கள் முக்குண வடிவினவாதலும் பலரும் அறிந்தன வாதலின், அவனை, `தாமத குணம் ஒன்றே உடையன்` எனவும், `அதனால், அழித்தலையே செய்வன்` எனவும் கூறுதல் அறியாதார் கூற்றேயாம் என்றபடி. இனி அவன் குணாதீதன் ஆதலும் நூல்களால் நன்குணர்த்தப்படுவது என்றற்குக் காலங்கள் மூன்றாதலையும் உடன் கூறினார்.
இதனால், `சிவபெருமான் காத்தற்கு உரியனல்லன்` எனப் பிணங்கிக் கூறும் பாஞ்சராத்திர மதத்தை மறுத்து, மேலது வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.

பொழிப்புரை :

முதற்கண் உலகுயிர்களை அவற்றிற்கு அம்மை அப்பனாய் நின்று படைப்பவனும் சிவபெருமானே. பின்பு அவற்றைத் தன் மக்களாகக் கொண்டு புரப்பவனும் அவனே. இவை `தேவர், மக்கள்` என்னும் சிறப்புடைப் பிறப்பினர்க்கு மட்டுமன்று; `விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் சின்னஞ்சிறிய பிறவிகட்குமாம்.

குறிப்புரை :

``வனைதல்`` மூன்றனுள் முன்னது `ஆக்குதல்` எனவும், இடையது `திருத்தல்` எனவும், ஈற்றது `இரண்டனையும் செய்தல்` எனவும் பொருள் தந்தன. ``உலகு, பிறவி`` என்பன சொல் வேறுபட்டுப் பொருட்பின்வருநிலை அணியாய் நின்றன. சால் முதலிய நான்கும் பெரியனவும், சிறியனவுமாய உடம்புகளை உணர்த்தி நின்றன. மற்றும் - ஏனைய கலங்களும். தூதையை, `மொந்தை` என்பர். `தூதையும்` என்னும் உம்மை தொகுத்தல். ``வனையவல்லான்`` என்றதனால், இது குறிப்புருவகம்.
இதனால், சிவபெருமானது ஆற்றலின் பெருமையை மீளவும் நினைப்பித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

`தூய உயிர்` எனப்படும் பரமான்மாவாகிய பெருவெளியாய், தூய்மையின்றி மாசுண்டு கிடக்கும் சீவான்மாவாகிய உயிரினுள் அறிவு தோன்றுதற்கு ஏதுவாய் நிற்பதாய இயற்கை அறிவே உயிரின் உடலையும் இடமாகக்கொண்டு நிற்கும் `பரம்பொருள்` எனப்படுவது. அதனை இழந்துநிற்கும் உயிர் அதுவாம் வண்ணம், அதன் உடலாயும், அவ்வுடல் வாழ்வுறுதற்கு அதனுள் நிற்கும் உயிர்ப் பாயும் உள்ள சிவபெருமானே அதனைக் காத்து நிற்கின்றான்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, ``தாங்கி நின்றான்`` என்பதை உள்ளவாறே நிறுத்தி முடிக்க. ``விளங்கொளி`` என்பதன்பின் `ஆய்` என்பது விரிக்க. `நிலங்கொளி` என்பது பாட மன்று. ``தள் உயிர்`` என்பதில் ``தள்ளுதல்``, தவறவிடுதல். இதன்பின் `அது` எனப் பரம்பொருளைச் சுட்டும் சுட்டுப்பெயர் எஞ்சி நின்றது. `பரம்பொருளை அறியாது நிற்கும் உயிர் அதனை அறியும் வண்ணம் பக்குவம் முதிர்தற் பொருட்டே அதனை உடலில் நிறுத்திப் புரக்கின்றான்` என்றவாறு. ``உயிர்ப்பாய்`` என்றதனால் உடலை நிற்பித்தலையும், ``உடலாய்`` என்றதனால் உயிரை அஃது எடுத்த பிறப்பில் நிறுத்துதலையும் குறித்தவாறு. இறைவன் உடலினுள் உயிர்ப்பாதலை,
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` -தி.5 ப.21 பா.1
என்பதனான் அறிக.
இதனால், காத்தல் தொழிலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் பல உயிர்களையும் அவற்றது உடலில் நிறுத்திக் காக்கின்ற காலத்தில் அக் காத்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவரும், அவைகளை அவற்றது உடம்பினின்றும் பிரிக்கின்ற காலத்தில் அப்பிரித்தல் தொழிலை அரிதாகுமாறு செய்பவருமாக அவனுக்கு எதிராவார் பிறர் இல்லை. இனி விடாது வந்த எழுவகைப் பிறப்பிற்கும் முடிவாவது ஞானமே. அந்நெறியில் அவ்வுயிர்களைப் பிறழாது நிற்பிப்பவனும் அச் சிவபெருமானே.

குறிப்புரை :

தன்மையைச் செய்வாரை, ``தன்மை`` என்றது ஒற்றுமை வழக்கு. பின் முன் உள்ள சொற்குறிப்புக்களால், `தாங்கிய காலத்து` என்பது முன்னரும், `வாங்கருந் தன்மையும்` என்பது பின்னரும் வருவித்துக் கொள்ளக் கிடந்தன. அதனால், `தாங்கிய காலத்துத் தாங்கருந் தன்மை செய்வாரும், வாங்கிய காலத்து வாங் கருந்தன்மை செய்வாருமாக மாற்றோர் பிறரில்லை` என்பது முன் னிரண்டடிகளின் பொருளாயிற்று. மாற்றோர் - எதிராவார். ``அந்தம்`` என்றது, `எழுமைக்கும்` என்றதனோடும் இயையும். `ஓங்கிய` என்னும் அகரம் தொகுத்தலாயிற்று. யோகத்தின் அந்தத்தில் தோன்று வதனை ``யோகாந்தம்`` என்றார். `ஞானம்` என்னாது ``யோகாந்தம்`` என்றதனானே, `சரியை முதலிய தவங்களில் நிறுத்திக் காப்பவனும் அவனே` என்பது போந்தது. தார் - (கொன்றை) மாலையை. அணி - அணிந்தவன். `மற்றோர் பிறிதில்லை` என்பது பாடம் அன்று.
இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாய் செய்யப் பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே.

பொழிப்புரை :

அண்ணலாகிய சிவபெருமான், உயிர்களோடு உடனாய் நிற்பினும், அவற்றால் அறிதற்கரியனே. யோக முறையால் பிராண வாயுவை அடக்கி மூலாதாரத்தினின்றும் எழுப்பப்படும் அங்கியின்வழி மேல்நிலமாகிய புருவ நடுவை அடைந்து தியான சமாதிகளால் அவனை உணரினும், உண்மையில் ஞான முதிர்ச்சி ஒன்றுமே அவனைப் பெறுவிக்கும். அதனால், சரியை முதலிய மூன்றால் அவனை வழிபடும் தவநெறியில் நிற்பினும், அதனில் செல்லாது உலகரோடு கூடி அவநெறியில் தாழினும் அவன் பிறவியை அறுத்தல் இன்றி அதனைக் கூட்டவே செய்வான்.

குறிப்புரை :

`ஒன்றுமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `அவனை நல்கும்` எனச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. தணிதல் - தாழ்தல்; கீழ் நிலையை எய்தல். மன் உடல் - நீங்காது வரும் பிறப்பு. செய்வான் - உண்டாக்குவான். ``மண்ணுடல்`` என்பது பாடமன்று.
இதனால், அருளல் தொழிலது சிறப்பை உணர்த்துமுகத்தான், அதற்குச் சிறப்பு வகையால் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.

குறிப்புரை :

கடவுட் கொள்கை இல்லாதவருள் சிலர் (உலகாய தரும், மீமாஞ்சகரும்) `உலகம் தோன்றலும்,அழிதலும் இல்லாது என்றும் உள்ளதேயாகும்` என்பர். கடவுட் கொள்கை உடையவ ருள்ளும் சிலர் (பாஞ்சராத்திரிகள் முதலியோர்) `உலகத்தைக் கடவுள் அழிக்கமாட்டான்` என்பர். `அவரெல்லாரும் `நெருப்பு` என்ற ஒரு பொருள் இருப்பதை உற்று நோக்குவாராயின், தமது மயக்கம் நீங்குவர்` என்றற்கு நெருப்பு இறைவனுக்கு அழித்தற் கருவியாய்ப் பயன்படுமாற்றைக் கூறினார். ``அழிப்பு இளைப்பாற்றல்`` (சிவஞானசித்தி. சூ. 1.37) என்று இதனை முதற்கண் எடுத்துக் கூறியதும் இதுபற்றி என்க. உலகம் அழி பொருளாதலை உணர்வார் எவரும் அது தோற்றம் உடைத்து என்பதையும் உணர்வர் என்க. பூதங்கள் ஐந்தனுள் ஆகாயம் ஒழிந்த, காட்சிப் பொருளாய் நிற்கும் ஏனை நான்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் செய்யுமாயினும் நிலத்திற்கு உரிமைத் தொழில் படைத்தலும், நீருக்கு உரிமைத் தொழில் காத்தலும், நெருப்பிற்கு உரிமைத் தொழில் அழித்தலும் ஆதல் பற்றி அதனையே இறைவனுக்கு அழித்தற் கருவியாக அருளிச்செய்தார். `நிலம், நீர், தீ` என்ற மூன்றற்கும், `பிரமன், மால், உருத்திரன்` என்பவரை உரிமைக் கடவுளராகக் கூறலின், சிவாகமங்கட்கும் கருத்து இதுவாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், `இறைவன் உலகத்தைப் படைத்தல் காத்தல் களுடன் அழித்தலும் செய்வன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே.

பொழிப்புரை :

மூவகைச் சங்காரங்களுள் `கற்ப சங்காரம்` என்பதும் ஒன்று. அதில் எல்லாப் பொருளும் சங்கரிக்கப் பட்டொழிந் தமையை ஏனைய இரண்டு சங்காரங்களில் நிற்குமாற்றால் நான் கருதியுணர்ந்துகொண்டேன். கால வயப்பட்டுநிற்கும் உலகம் உலை யில் இடப்பட்ட அரிசிபோல்வதாம். ஆகவே, என்றும் அழியாதன போல மலைவைத் தந்து நிற்கும் இப்பெரு நிலம் முடிவில் அழிந் தொழிந்தது.

குறிப்புரை :

`மூவகைச் சங்காரம் இவை` என்பது, வருகின்ற திரு மந்திரங்களுள் கூறப்படும். `நனவு நிலையில் நிற்பவன் அந்நிலையில் ஒருபெற்றியே நிற்கமாட்டாது காலவயத்தால் கனவு முதலியவற்றிற் சென்று அறிவு கெடுதலையும், பிறந்த உயிர் அந்நிலையிலே நிற்க மாட்டாது காலவயத்தால் அவ்வுடலைவிட்டு இறந்தொழி தலையும் உற்றுநோக்கினால், உலகம் முழுதும் இவ்வாறே காலவயப் பட்டு அழிந்து பின்பு தோன்றியதாகும் என்பது விளங்கும்` என்பார், ``கற்பாந்தம் நிலையன்றழிந்தமை நின்றுணர்ந்தேன்`` என்றார். நிலை - நிலைத்தொழிலை உடைய பொருள்கள்; ஆகுபெயர். இது, `நீவிரும் அவ்வாறு உணர்மின்` என்றவாறு. இவ்வாறே திருவள்ளுவரும்,
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என்று உடலின் அழிவுதோற்றங்களை அறிவின் அழிவின் தோற்றங் களில் வைத்துத் தெளிவித்தார். முன்பு இருவகை அழிப்பின் வைத்து உலக அழிவை வலியுறுத்தினாராகலின், ``உலை தந்த மெல்லரி போலும் உலகம்`` என அதன் நிலையாமையைப் பின்னர் வலியுறுத்தி, ``மாநிலம் தான் வெந்ததுவே`` என நிலவுலக அழிவை முடிவில் நிறுவினார். அரி - அரிசி. மலை - மலைவு; மயக்கம்; முதனிலைத் தொழிற்பெயர். பிரம கற்பம், விட்டுணு கற்பம் முதலாகக் கற்பங்கள் தாம் பல. அவற்றுள்ளும் அவரவர் உறங்கும் காலம் அவரவர்க்கு நித்திய கற்பமாகவும், இறக்குங் காலம் மகாகற்பமாகவும் சொல்லப் படும். கற்பம் - ஊழி. காணப்பட்ட உலகத்தை ``வெந்தது`` என்றது, முன்னை ஊழியிறுதி நோக்கியாம். எனவே, `பின் தோன்றியது` என்பதும் பெறப்படும். ஆகவே, `வெந்தது` என்பது இறந்தகால வினைப்பெயர்.
இதனால், உலக சங்காரம் இல்லை என மயங்குவார்க்கு, `அது உண்டு என்பத

பண் :

பாடல் எண் : 3

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.

பொழிப்புரை :

பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.

குறிப்புரை :

`உதகம், குரோதம்` என்பன இடைக் குறைந்து நின்றன. ஐம்பூதங்களுள் ஆகாசம் அருவப் பொருளாதலின், உருவழிந்த நிலையை அதன் வகையாக ஓதினார். விதம் - வகை. `விதமாக` என ஆக்கம் வருவிக்க. `நெஞ்சின் செய்யும்` என மாறுக. கிடந்தவாறே வைத்து, `நெஞ்சின் என, வேண்டா கூறி, வியப்பின்மையை வலியுறுத்தினார்` என்றலுமாம்.
இதனால், நிலமேயன்றிப் பிறவும் அழிதல் கூறுமாற்றால், மகாசங்காரம் உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே.

பொழிப்புரை :

மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் அவ்விடத்ததாகிய குண்டத்தில் விளங்கும் மேலான நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.

குறிப்புரை :

`வானின்று உலகம் வழங்கி` வருதல்பற்றி காத்தற் சத்தியை, `மழை` என்றே கூறினார். நீரைப் பெண்ணாகக் கூறுதல் மரபாதல் அறிக. `நிற்ப` என்பது, ``நின்று`` எனத் திரிந்தது. மேகம், மலைமேல் தங்கியே மழை பொழிதல் வெளிப்படை. ``அண்டம்`` என்பது, `உலகம்` என்னும் அளவாய் நின்றது. திரை, ஆகுபெயர். பதம் - உணவு. செய்தல் - உண்டாக்குதல். `செய்ய` என்பது நிகழ்காலத்தின்கண் வந்தது. புறம் - இடம். `உலக நெருப்பன்று; தனது அழித்தற் சத்தியே` என்றற்கு, ``ஓம் என்ற ..... அங்கி`` என்றார்.
இதனால், `நிலைத் தொழில் அதன் கால எல்லையில் முற்றுப் பெறும்` என்பது கூறி, ஒடுக்கம் நிகழ்தல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

பொழிப்புரை :

மூவகைச் சங்காரத்துள் நித்திய சங்காரமாவது அன்றாடம் கீழாலவத்தையில் அறிவிழந்திருத்தல். பிறவி எடுத்த எல்லா உயிர்கட்கும் பொதுவாக வைக்கப்பட்ட ஆயுட் சங்காரமாவது விழித்தல் இல்லாத உறக்கமாகிய இறப்பாகும். சருவ சங்காரமாவது ஆன்மா செயலற்று ஆணவத்திலே அழுந்திச் சடம்போலக் கிடத்தல். அதனால், உயிரை நீங்கா இன்பத்தில் செலுத்துதலாகிய திருவருட் சங்காரமாகிய அருளலே இறைவனது உண்மை நிலையைப் பெறுதலாகும்.

குறிப்புரை :

மீளச் சாக்கிரம் எய்தாத நிலையை, ``சாக்கிராதீதம்`` என்றார். எனவே, இது விழியா உறக்கமாயிற்று. ``சுத்தம்`` என்றது, ஒன்றும் இன்மையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 6

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே.

பொழிப்புரை :

இன்னும் வேறொருவகையாற் கூறுமிடத்து, `நித்திய சங்காரம், தூலம், சூக்குமம்` என்னும் இரண்டு உடம்புகள் உள்ளபொழுதும் அவற்றோடு ஒட்டாது நீங்கி நிற்றல்` எனவும், `ஆயுட் சங்காரம் தூல உடம்பு அழிந்தொழிதல்` எனவும், `சருவ சங்காரம் சூக்கும உடல் நீங்குதல்` எனவும் கூறுதற்குரியன. எனவே, திருவருட் சங்காரமாகிய அருளலே சிவப்பேறாகும்.

குறிப்புரை :

இரண்டுடலும் உள்ளபொழுதே ஒட்டாதிருத்தல் உறக்கத்திலாம். `சூக்கும சரீரம் முத்தி பெறுங்காறும் நீங்காது நிற்கும்` எனக் கூறுதல், ஆயுட் சங்காரத்தை நோக்கியாம். ``மாயா சங்காரம்`` என்றதில், ``மாயை`` என்றது பிரகிருதியை. சகல வருக்கத்தினருக்குப் பிரகிருதியளவு சங்கரித்தலே சருவ சங்காரமாதல் பற்றி ``சுத்த சங்காரம் மனாதீதம் தோய்வுறல்`` என்றார். ``மனம்`` என்றது பிற அந்தக் கரணங்கட்கும் உபலக்கணம். நீவுதல் - துடைத்தல்.

பண் :

பாடல் எண் : 7

நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.

பொழிப்புரை :

இனி, நித்திய சங்காரம் தூல உடம்பொடு நிற்கும் பொழுதே அதனொடு கூடாதிருக்கச் செய்வதென்றால், ஆயுட் சங்காரம் அதனை அடியோடு விடச் செய்வதாகும். சருவ சங்காரம் சூக்கும உடம்பையும் விடப்பண்ணுவது. ஆகவே, திருவருட் சங்கார மாகிய அருளலே சிவனை அடைதல் என்பது கடைப்பிடித்து உணரத்தக்கது.

குறிப்புரை :

``கரு`` என்றது, கருவாய்த் தோன்றி வளரும் தூல உடலை அதன் இடர் நீங்குதல் - அதனால் வரும் அனுபவம் இன்மை. ``நீக்கினால்`` என்னும் எச்சம் தெளிவின் கண் வந்து, பின் வருவதும் அத்தன்மையது என்பதனைத் தெரிதற்கு ஏதுவாய் நின்றது. ``நீரின்றமையா துலகெனின்`` (குறள் - 20) என்றாற்போல.

பண் :

பாடல் எண் : 8

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.

பொழிப்புரை :

நித்திய சங்காரம், அன்று உழைத்த உழைப்பினால் உண்டாகிய இளைப்பினை ஆற்றக் காண்டலால், ஆயுட் சங்காரமும் அப்பிறப்பில் உண்டான இளைப்பை ஆற்றுதற்பொருட்டு என்றும் உளதாய்நிற்கும். `சருவ சங்காரத்தில் எல்லாக் கருவிகளும் முற்ற அழிந் தொழிவதால், அதுவே சிவப்பேறு போலும்` எனின், அன்று; திருவருட் சங்காரம் உண்டாய வழியே `பிறத்தல், வாழ்தல், இறத்தல்` என்னும் மூன்றும் அற்ற நான்காம் நிலையாகி `வீடுபேறு` எனப்படும் சிவப்பேறாம்.

குறிப்புரை :

தோயா அருள் - அருள் தோயாதது. `உய்த்த சங்காரம் முன் உதிக்கில் நால் ஆம்` எனக் கூட்டுக. நான்கு, `நால்` என நின்றது. இவை நான்கு திருமந்திரங்களாலும், `இலயங்கள் (சங்காரங்கள்) மூன்று (தி.10 பா. 417) இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் பலவாற்றால் விளங்கக் கூறி, சங்காரத்தையே வீடுபேறு என மலைவார்க்கு அங்ஙனம் மலையாமைப்பொருட்டு அதனையும் ஒரு சங்காரமாக வைத்து அதன் இயல்பு உணர்த்தப்பட்டது.தத்துவம் முப்பத்தாறனுள் மா பூதம் - 5, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5 ஆகப் பதினைந்தும் தூல சரீரம். `அன்னமய கோசம்` என்பதும் இதுவே. தன்மாத்திரை - 5, சித்தம் ஒழிந்த அந்தக் கரணம் - 3 ஆக எட்டும் சூக்கும சரீரம். `பிராணமய கோசம்` என்பதும் இதுவே. எட்டுத் தத்துவம் கூடியதாதல் பற்றி இதனை `புரியட்டச் சரீரம்` எனவும் கூறுவர். இந்த 23 - க்கு மேல் 24 ஆவதாகிய குண தத்துவமே குண சரீரம். `மனோமய கோசம்` என்பதும் இதுவே. `குண தத்துவமே சித்தம்` என்பது மேலே ((தி.10 382ஆம் பாடலின் குறிப்புரை) சொல்லப்பட்டது. குண தத்துவத்திற்குமேல் உள்ள `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் - ஐந்தும் கூடியது கஞ்சுக சரீரம். விஞ்ஞானமய கோசம் என்பதும் இதுவே. `மாயை` என்னும் தத்துவமே காரண சரீரம். `ஆனந்தமய கோசம்` என்பதும் இதுவே. சிவ தத்துவங்கள் `நம்மனோர்க்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை` என்பது மேலே கூறப்பட்டது. (தி.10 பா. 379)

பண் :

பாடல் எண் : 9

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

பொழிப்புரை :

மாயை வித்தாக, அதனினின்றும் முளைக்கின்ற பயிராய் உலகம் தோன்றும். பின்பு அப்பயிராகிய உலகம் வித்தாகிய அம்மாயையினிடத்தே ஒடுங்குவதாம். அவ்வாறு ஒடுங்கினும், என்றும் உளதாகிய மாயை ஒன்றிலும் ஒடுங்குதல் இல்லை. உலகம் மாயையின் ஒடுங்குதலாகிய சருவ சங்காரமின்றிப் பிரகிருதிகாறும் அழிவதாகிய அந்தச் சங்காரகாலத்திற்கு உட்பட்டே மால் அயன் செய்திகளாகிய காத்தல் படைத்தல்கள் நிகழும். ஆகவே, தத்தம் கால எல்லையில் மடிந்து போகின்ற பயிர்போல, உலகம் முழுவதும் ஒடுங்குவது மாயையிலல்லது பிரகிருதியில் அன்று.

குறிப்புரை :

``பாழ்`` என்பது முதற் காரணம் தனது காரியத்தைத் தோற்றுவியாத நிலை. இது பற்றியே பிரகிருதியையும் `பாழ்` என்ப (பரிபாடல் ... ... ``பாழெனக் காலெனப் பாகெனத் தொண்டென``) . இவ்வாறன்றி முதல்வனைப் `பாழ்` என்றல் பொருந்தாமை அறிக. உலகம் மாயையின் ஒடுங்காது பிரகிருதியின் ஒடுங்கிய பொழுது பரசரீரம் உளதாயினும் போகம் நிகழாதாகலின், அதனை, `வாழாச் சங்காரம்` என்றார். இச்சங்காரம் குணிருத்திரனால் செய்யப் படுவதாதல் அறிக. (சிவஞான மாபாடியம் - முதற் சூத்திரக் கருத்துரை விளக்கம்) குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் இம் மூன்றன் தொகுதியே பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரம். ``பயிராய்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது.
இதனால், `அசுத்தமும், சுத்தமும் ஆய மாயைகளில் அவ்வவ் வுலகம் ஒடுங்குவதே சருவ சங்காரம்` என்பதும், அவற்றிற்குக் கீழ்நடைபெறுவன எல்லாம் அவாந்தர (இடைநிகழ்) சங்காரம் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே.

பொழிப்புரை :

நிலையில்லாததாகிய உலகத்தை உண்டாக்கி நிறுத்திய சிவன், அதனையே உயிர்களுக்கு என்றும் வாழிடமாக வையாது அழிய வைத்து, அழிவின்றி வைத்த வாழிடம் ஒன்று உள்ளது. அதனை அறிந்து அடைதற் பொருட்டே உடம்பையும், பல உட்கருவிகளையும், நூல்களையும் தந்தருளினான். அவற்றைக் கொண்டு, தற்போதத்தால் ஈண்டும் வினைகளை ஈண்டாதபடி அழித்து, அந்த வாழிடத்தை அடைந்து இன்பத்தை நுகர்மின்கள்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `சேரும் வினைகளைத் தீய வைத்து ஆர்மின்கள்` என மாற்றி முடிக்க. வன்மை - அழிவின்றி நிலைபெறுதல். பரமுத்தி நிலையை இவ்வாறு உருவகம் செய்தார் என்க. திருவள்ளுவர் ``புக்கில்`` என்றது காண்க. `ஒன்று உண்டு` என்ற குறிப்பால், பின் வருவன அதனை அடைதற் பொருட்டுக் கொடுக்கப்பட்டனவாதல் போந்தது. காயம், இடத்தால் வரையறை உடைய தூல சரீரம். ``எங்கும் கலந்து நினைப்பது`` என்றதனால், `அஃது அவ்வரையறையைக் கடந்த சூக்கும சரீரம் பர சரீரங்களைச் சுட்டிற்று` என்பதும், ``ஆயம்`` என்றதனால், `அவைதாம் தன்மாத்திரை அந்தக் கரணங்களும் வித்தியா தத்துவங்களும் ஆகியவற்றது தொகுதிகள்` என்பதும் போந்தன. ஆய் உணர்வு ஆர - ஆராய்ச்சி அறிவு நிரம்புதற்கு; என்றதனால் அதன்பொருட்டு வைக்கப்பட்டவை நூல்கள் என்பது இனிது விளங்கிற்று. இதனானே, அந்நூல் நுதலிய பொருளை ஒருசொல்லானும், நூற்பொருளைப் பல சொல்லானும் அறிவுறுத்தும் அருளாசிரியர்களை வைத்தமையும் பெறப்படும். ``நினைப்பது`` எனக் கருவி வினைமுதல் போலக் கூறப்பட்டது. இவ்வொருமை ஆயத்தின் மேல் நிற்றல் அறிக.
இதனால், `மேற்பல இடத்தும், `உய்த்த சங்காரம்` எனப்பட்ட திருவருட் சங்காரத்தையே பயனாக உடையன பிற சங்காரங்கள்` என அதன் சிறப்பு உணர்த்தப்பட்டது. இங்ஙனம் அருளலையும் சங்கார மாக வைத்துக் காட்டியது, இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்னாது மூன்று எனக் கூறும் வழியும் மறைத்தல் காத்தலுள்ளும், அருளல் அழித்தலுள்ளும் அடங்கி நிற்கும் என்பது உணர்த்துதற்கு என்க.

பண் :

பாடல் எண் : 1

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே.

பொழிப்புரை :

சிவன், ஆன்ம அறிவேயாயும், அவ்வறிவுக்கு அறிவாயும், அதனில் சிறிதும் பிரிவின்றியும் அதனோடு யாண்டும் உடனாயே நிற்பினும் அவ்வறிவு மல மறைப்பால் அவனது இருப்பை அறியமாட்டது.

குறிப்புரை :

`அம்மறைப்பு நீங்குதற் பொருட்டே திரோபவம் (மறைத்தல்) செய்யப்படுகின்றது` என்பது குறிப்பெச்சம். `மலமறைப் பால்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. ``உள்ளம்`` என்றது ஆன்ம அறிவை. ``ஓரடி`` என்றது இடச்சிறுமை குறித்தது. இதனானே, காலச் சிறுமையும் கொள்ளப்பட்டது. உண்மை அளவாகப் பொதுப்பட உணரப்படுவதனை ``உரு`` என்றார். மறைத்தலைச் செய்வதாகிய மலத்தின் வழி நின்று அதனைச் செய்வித்தலால், அம்மலத்தின் ஆற்றல் தேய்ந்தொழியும் என்க. மாயை கன்மங்களால் பிறவியில் ஆழ்த்துதலே, `மறைத்தல்` எனச் சிறப்பாகக் குறிக்கப்படும். இதுவும் ஆணவத்தைத் தேய்த்தற் பொருட்டேயாம். மறைத்தலைச் செய் வதையே, `இறைவன் பந்தத்தையும் தருபவன்` என்பர்.
இதனால் திரோபவத்திற்குக் காரணம் கூறப்பட்டது.
இத்திருமந்திரத்துள் நாயனார் ஆன்ம அறிவை `உள்ளம்` என்னும் சொல்லாற் குறித்தருளினார். இவ்வாறே மெய்கண்ட தேவரும் குறித்தார். இவைகளால், திருவள்ளுவர், ``ஓர்த்துள்ளம் உள்ள துணரின்`` என்றதில் `உள்ளம்` என்றதும் ஆன்மாவையே யாதல் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 2

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே.

பொழிப்புரை :

பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.

குறிப்புரை :

இன்பப் பிறவி - இன்பத்திற்கு ஏதுவாம் பிறவி; இஃதுஇயைபின்மை நீக்கிய விசேடணம். உடம்பு துன்பமாகாது துன்பம் வெளிப்படுதற்கு வாயிலேயாக வினையே துன்பம் தருவது ஆகலின், ``துன்பஞ்செய் பாசம்`` என்றது வினையையேயாம். வினை இன்பமும் செய்வதாயினும், முன்னும் பின்னும் துன்பத்தோடே தொடர்புற்று நிற்றலின், துன்பம் செய்வதாகவே கூறினார். என்பு முதலியவற்றாலான உடம்பையே பெரும்பான்மையும், `உடம்பு` என வழங்குப ஆகலான். அவற்றையே எடுத்தோதினார். `கொழுவி இசைந்துறு தோல் தை\\\\u2970?` என்றது, அவ்வாறியன்ற உடம்பின்மேல் நின்றது. முன்பு - ஆணவமலம் நீங்குதற்கு முன்பு, ``முன்பில் கொளுவி`` என்பதில் கொளுவுதற்கு, `துன்பம்` என்னும் செயப்படு பொருள் வருவிக்க.
இதனால், திரோபவமும், அறுத்தும், சுட்டும் சிலநோயைத் தீர்க்கின்ற மருத்துவன் செய்கைபோல அருளே (மறக்கருணை) யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.

பொழிப்புரை :

`உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.

குறிப்புரை :

``இன்பம்`` என்றது ஆகுபெயராய் மேற்குறித்த பிறவியை உணர்த்திற்று. ``மூவரும்`` என்ற உம்மை சிறப்பு; முற்றன்று. `யாக்கை வந்து உடன் கூடி` என முன்னே கூட்டுக. ``இறையவன்`` என்பது உருத்திரன் மேலதாய், முன்னர்க் குணி ருத்திரனையும், பின்னர்ச் சீகண்டவுருத்திரரையும் குறித்தது. ``மறையவன்`` இரண்டில் பின்னது, `கள்வன்` என்னும் பொருட்டு. `மறைப்பறியாரே` என ஓதுதல் சிறக்கும்.
இதனால், மும்மூர்த்திகளும் திரோபவத்துட் பட்டவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கை செயலணை யாரே.

பொழிப்புரை :

சிவபெருமானைப் பொருள்களைக் காண்கின்ற கண்ணினது ஒளியைக் காதலிப்பதுபோலக் காதலித்து, சுவையற்ற நாவினை உடைய மனத்தால் நினைந்து, நெடுங்காலமாக வருகின்ற பிறப்பு இறப்புக்களை விட்டொழிதற்கு ஏதுவான தவத்தில் தலைப்படுகின்றிலர் உலகர்.

குறிப்புரை :

`அது சிவபெருமானது மறைத்தல் தொழிலால், நிகழ்வதே` என்பது குறிப்பெச்சம். `சுவையை வெறுத்த உணர்வுடை நெஞ்சம்` என்பதனை ``ஊண்படு நாவுடை நெஞ்சம்`` என்று ஓதினார். முன்பு உண்ட அறுசுவையைப் பின்னும் நாடி நிற்பது மனமாகலின், அதனை எடுத்துக் கூறினார். ``நெஞ்சம் உணர்ந்து`` எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `பொய் + கை` எனப் பிரித்து நிலையைாமை உவர்த்துவிடுகின்ற எனப் பொருள் கூறுக. கை செயல் - கைத்து விடுதற்கு ஏதுவான செயல். `கண்ணொளியைப்போல` என விரிக்க.
இதனால், மறைத்தல் தொழிலால் இறைவன் உயிர்கள் தன்னை அறியாவாறு மறைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே.

பொழிப்புரை :

ஆதிப் பிரானகிய சிவபெருமான், பரிபாகம் பெற்ற உயிர்கட்கும், பரிபாகத்தால் ஞானத்தை எய்தினோர்க்கும் தனது திருவருள் நன்கு புலப்படும் வகையில் விளக்கத்தைத் தருவான். ஏனையோர்க்குப் பகலவனும், நிலாவும் பகலிலும், இரவிலும் இருள் நீங்க எரிப்பினும் இருள் பொதிந்து நிற்கும் அறைபோல நின்று மறைத்தலையே செய்வன்.

குறிப்புரை :

`ஓளியுடையோர்` என்னும் பொருட்டாகிய `தேவர்` என்னும் பெயர், இங்கு இடுகுறியாகாது காரணமாய் நின்று, `ஞானிகள்` எனப் பொருள் தந்தது. இறைவன், பரிபாகிகட்கு அறிவா யும் ஞானிகட்கு இன்பமாயும் விளங்குவன். இவை இரண்டுமே, `அருளல்` எனப்படும் என்க. முன்னர், ``தெருளும் உலகிற்கும் தேவர்க்கும்`` என்றதனால், பின்னர், `ஏனையோர்க்கு` என்பது போந்தது. ``செய்யும்`` என்றது முற்று. சுருளும் சுடர் - எதிர்ப்பட்ட பொருள்கள் வெதும்பி மடிதற்கு ஏதுவாகிய ஒளி; ஞாயிறு. `நின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தல். `நிற்ப` என்பது ``நின்று`` எனத் திரிந்துநின்றது. ``இருட்டறை``, இறந்த கால வினைத்தொகை. இருளுதலை, `இருட்டுதல்` எனவும் வழங்குப. ``ஆம்``என்றது, ``போல்வான்`` என உவமமாய் நின்றது.
இதனால், மறைத்தல் பரிபாகம் இல்லாதார்மேலதாயே நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

பொழிப்புரை :

தான் ஒருவனே, நிலமுதல் நாதம் ஈறாய கருவிகள், நால்வகை வாக்குக்கள், நான்காகவும் எட்டாகவும் பத்தாகவும் மற்றும் பலவாகவும் சொல்லப்படுகின்ற திசைகள், ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பல்வேறு வகையினவாய் நிற்கின்ற உடம்புகளும் பிறவுமாகிய உருவங்கள், நிலவுலகம் முதலிய உலகங்கள் இவை அனைத்துமாய் நின்று, மெய்யுணர்வைத் தடுக்கின்ற அப்பொருள்களை ஆக்கிய, எல்லா உயிர்களாலும் அறிந்து அடையத்தக்க இறைவனே அத் தடையை நிகழ்விக்கின்ற மறக்கருணையைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`அரைக்கின்ற, கரக்கின்ற` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. அரைக்கின்ற அருள் - துன்புறுத்துகின்ற கருணை; மறக்கருணை; என்றது திரோபவத்தை. `அரிக்கின்றருள்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ``தரும்`` என்றது முற்று. தனித்து நில்லாது தொக்குநின்று காரியத்தைத் தோற்றுவித்தலின், நிலம் முதலிய கருவிகளை, ``அங்கங்கள்`` என்றார். அங்கங்கள் முதலாக வேண்டும் இடங்களில் தொகுக்கப்பட்ட எண்ணும்மைகளை விரித்துக் கொள்க. ``தான்`` என்பதனை முதலில் வைத்து உரைக்க.
இதனால், சிவபெருமான் உலகத்தை ஆக்கி, அதனுட்கரந்து நின்று திரோபவிக்குமாறு கூறப்பட்டது. ``அருள்`` என்றதனால், மறைத்தலும் அருளேயாதல் குறித்தார்.

பண் :

பாடல் எண் : 7

ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.

பொழிப்புரை :

மறைத்தலைச் செய்கின்ற அவனை அவன் என்னேடு உடனாய் நிற்கின்ற அருட்டொடர்பை உணர்ந்து பிறர் அறி யாதவாறு என் உள்ளத்திலே மறைத்து வைத்தேன். அதனால், இனி அவன் எனக்கு வெளிப்படையாகத் தோன்றி அருள்புரிதல் திண்ணம். நீவிரும் என்னைப்போலவே அவனது அருட்டொடர்பை உணர்ந்து, அவ்வுணர்வினால் எழுகின்ற இன்பத்தோடு கூடிய `பேரன்பு` என்னும் சிறப்புத் தன்மை வெளிப்பட, அவனை அகத்தும், புறத்தும் வழிபடுவீர்களாயின், `அவன் எமக்கு எப்பொழுது வெளிநிற்பான்` என்று ஏக்கமுற்றிருக்கின்ற உங்கள் வேட்கை நிரம்புவதாகும்.

குறிப்புரை :

மெய்யுணர்வினால் உணர்பவர் உள்ளத்தில் இறைவன் இனிது வெளிப்பட்டுநிற்கவும், பிறர் அவனை `யாண்டுளன்` எனத் தேடி எய்க்கின்றாராதலின், மெய்யுணர் வுடையார், இறைவனைத் தங்கள் உள்ளத்தில் ஒளித்து வைத்திருப் பதாகவும், வெளியே புறப்பட ஒட்டாது தளையிட்டு வைத்ததாகவும் கூறுதலைப் பின்வரும் திரு மொழிகளாலும் உணரலாம்.
ஆர்வல்லார் காண அரனவனை! அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தலைநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து. -தி.11 அம்மைத் திருவந்தாதி, 96
முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
றன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. -தி.5 ப.91 பா.2
`அவ் வீசனை` எனச் சுட்டு வருவித்து உரைக்க, வேட்சி - வேட்கை. உம்மை இறந்தது தழுவிற்று.
இதனால், மறைத்தலைச் செய்பவனாகிய இறைவனை அருளலைச் செய்பவனாகப் பெறும் முறை கூறப்பட்டது.
(இம் மந்திரத்தின்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `நின்றது தானாய்` என்னும் மந்திரம், மேல் 400 ஆவது திருமந்திரமாக வந்தது.)

பண் :

பாடல் எண் : 8

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கது வாமே.

பொழிப்புரை :

கடலில் அகப்பட்டவன் அதன் கரையை அடைந்து இன்புறவேண்டி நீந்தும்பொழுது அக்கரை அருகில் வருவதை அறியாதிருத்தல் போலவும், கங்கைக்கரையில் நிற்பவன் அதனுள் மூழ்காமல் கரையிலே நிற்றல்போலவும் மேலான சித்தாகிய ஆன்மா, கீழான மலத்துள் நின்று மாசும் துன்பமும் உடையதாகின்றது.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `உத்தம சித்தன் பாசத்துள் அழுக்கதுவாம்` எனக் கூட்டி முடிக்க. சித்தாகிய உயிரை, `சித்தன்` என ஆண்பாலாக ஓதியது வடமொழி முறை. ``வருங் கரை`` என்றது, கடற் கரையை என்பது ஆற்றலால் விளங்கிற்று. பேண், முதனிலைத் தொழிற்பெயர். இல் இரண்டும் ஒப்புப் பொருளில் வந்த உருபுகள். ``அழுக்கு`` என்றது, துன்பம், மாசு இரண்டிற்கும் ஒப்பக் கூறியது. துன்பம் நீங்காமைக்கும், மாசு நீங்காமைக்குமாக வேறு வேறான இரண்டு உவமைகள் கூறினார். `நாடி` என்றது பெயர்.
இதனால், பரிபாகம் இல்லாத உயிர் மறைத்தலுட் படுமாறு கூறப்பட்டது.
இதனால், மலபரிபாகம் இல்லாத உயிர்கள் மறைத்தல் தொழிலுட்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே.

பொழிப்புரை :

மண் ஓன்றே கலங்கள் (பாத்திரங்கள்) பலவற்றிலும் பொருந்தி நிற்கின்றது. அதுபோலச் சிவபெருமான் ஒருவனே உயிர் கள் அனைத்தினுள்ளும் நிற்பான். ஆயினும், கண் பிற பொருளைக் காணுமாயினும், தன்னையும், தன்னொடு பொருந்தியுள்ள உயிரையும் காணாததுபோல, உயிர்கள் பிறவற்றை அறியுமாயினும், தம்மையும், தம்மோடு உடனாய் நிற்கின்ற சிவனையும் அறிதல் இல்லை.

குறிப்புரை :

முதற்காரண நிமித்த காரணமாய வேறுபாடு உண்டா யினும், ஒன்று பலவற்றுள் நிற்றல் மாத்திரைக்கு மண்ணை உவமை கூறினார். பொருளால் உவமத்துள் கண் உயிரைக் காணாமையும், உவமத்தால் பொருட்கண் தம்மைக் காணாமையும் கொள்ள வைத்தார். ``இவ்வண்ணம்`` என்றது;` உயிர் கண்ணினது காட்சிக்கு அகப்படாது நிற்றல் போல` என்றவாறு. உயிர் காணாமையை இறைவன் மேல் வைத்து ஓதினார், இங்குக் கூறுகின்றது அவன் தொழிலாதல்பற்றி. இத்திருமந்திரப் பொருளே பற்றி மெய்கண்டதேவர்,
காட்டிய கண்ணே தனைக்காணா; கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்றான் உள்ளத்தின் கண். .
- சிவஞானபோதம் - சூ 9, அதி 1.
என ஓதினமை காண்க.
இதனால், மறைத்தல் தொழில் நிகழுமாற்றிற்கு உவமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே.

பொழிப்புரை :

`காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம்` என்னும் ஐம்பெரும் பூதங்களும் ஒருங்கியைத்துப் பின்னிய `உயிருக்கு இடம்` எனச் சொல்லப்படுகின்ற இந்த உடம்பாகிய பைக்குள் உயிர்களை முன்பு அடைத்துக் கட்டிவைத்துப் பின்பு அவிழ்த்து வெளிவிடுகின் றான் சிவபெருமான்.

குறிப்புரை :

``வட்டத் திரை``, கடல்; பின்மொழி ஆகுபெயர். இது நீரைக் குறித்தது. ``ஒட்டி`` என்பதன்பின் `ஆக்கிய` என ஒருசொல் வருவிக்க. `கட்டியவன் கட்டியவாறே விட்டொழிதல் இல்லை; அவிழ்க்கின்றான்` என அருளலாகிய அறக்கருணையது சிறப்பை உணர்த்தினார்.
இதனால், பந்தமாகிய மறைத்தலையேயன்றி, வீடாகிய அருளலைச் செய்பவனும் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கின் அல்ல
தெட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்``
-திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது - 9
என்று அருளியதும் இதனை.

பண் :

பாடல் எண் : 2

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சு மவனே சமைக்கவல் லானே.

பொழிப்புரை :

தம் தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேலாய் ஓங்கி, அறிவு வடிவாய் ஒலிக்கின்ற சிவபெருமானது திருவடிச் சிலம்பொலியையே விரும்பிக் கேட்டு அதனால், இன்பம் அடை பவர்கட்கு இறப்பு இல்லை. உலகமாகிய தேர்க்கு உறுப்புக்களாகிய நிலம் முதலிய பூதங்களும், முச்சுடர்களும் ஆகிய பொருள்களையும் படைத்து, அவற்றால் அத்தேரினைப் பண்ணி இயங்க விடுகின்ற தச்சராகிய வினைஞர்களைப் படைப்பவனும் அவனேயாகலின்.

குறிப்புரை :

`பிறப்பு இறப்புக்களைத் தந்து நிற்பவனாகிய தலைவனை அடைதலையன்றி, அவ்வல்லல் தீர்வதற்கு வழி வேறில்லை` என்றவாறு. இறப்பாவது, இப்பிறப்பிற்கு ஏதுவாக முகந்துகொண்ட வினை முடிவெய்த, மறு பிறப்பிற்கு ஏதுவாம் வினை வந்து நிற்றலின் இவ்வுடல் நீங்குதலாம். இந்த நீக்கத்தையே யமன் செய்வன். இறைவனது திருவருள் பெற்றார்க்கு அவர் பல பிறப்புக்களிலும் ஈட்டக் குவிந்து கிடக்கும் சஞ்சித வினை அவனது அருள்நோக்கத்தானே சுட்டெரிக்கப்படுதலின், அவர்க்கு மறுபிறப்பிற்கு ஏதுவாய் வரும் வினை இல்லையாம். ஆகவே, அவர்க்கு இவ்வுடம்பு நீங்கியபின் கிடைப்பது முத்தியேயாகும். இந்நீக்கத்தினை இவர்க்கு `நீலருத்திரர் செய்வார்` எனச் சிவாகமங்களும், `சிவகணத்தினர் செய்வர்` எனப் புராணங்களும் கூறும். ஆகவே, `இவர்கட்கு நமன் இல்லை` என்றார். எனவே, `சாவா நிலை` எனப்படுவது இதுவே என்பது இனிது விளங்கும். இஃது அறியாதார், `உடல் நீக்கம் யாவும் சாவே` என மயங்கி, `இறைவன் திருவருள் பெற்றாரும் சாவாதிருந்திலர்` என்று இகழ்தலும், `உடல் நீங்காது நிலைக்கப்பெறுதலே திருவருள் நிலை` எனக்கொண்டு அதனைப்பெறப் பெரிதும் விழைதலும், உழத்தலும் செய்வர். அவையெல்லாம் அருளாசிரியரது அருள்மொழிகளின் பொருளை உள்ளவாறு உணரும் ஆற்றல் இல்லாமையால் விளைவனவே என உணர்க. அருளாசிரியராயினார் ஒருவரும் உடலை நிலைக்கப்பண்ண எண்ணாமை அறிக. திருவருள் பெறாதார் எடுத்த உடலினின்று நீங்குதல், ஒருவர் குடியிருந்த வீட்டிற்கு உடையவர் அவரை அதினின்றும் போக்கப்போவது போல்வதும், திருவருள் பெற்றார் எடுத்த உடலின் நீங்குதல் பிறர் வீட்டில் குடியிருந்தவர் தமக்கென வீடு அமைந்தமையால் குடியிருந்த வீட்டை விடுத்துப்போதல் போல்வது மாம். ஆகவே, இருதிறத்தாரும் தாம் இருந்த வீட்டை விடுத்துச் செல்லுதல் காணப்படுமாயினும் அச்செலவு இரண்டினிடை உள்ள வேறுபாடு பெரிதாதல்போல, சாகின்றவரும், வீடுபெறுகின்றவரும் எடுத்த உடலின் நீங்குவாராயினும், அவ்விருவரது நீக்கத்திடை உள்ள வேறுபாடு பெரிது என்க.
வித்து, `விச்சு` என மருவிற்று, ``விச்சதின்றியே விளைவு செய்குவாய்`` (தி.8 திருச்சதகம், 96) ``விச்சின் றிநாறுசெய்வானும்`` (தி.4 ப.4 பா.2) என்பவற்றிற் போல. `உலகப் பகுதிகள் எட்டு` என்னும் வகைபற்றி ஓதுகின்றாராதலானும், மேலைத் திருமந்திரத் தொடர்பானும், உலகிற்கு வித்துப் பூதங்களாகவே உரைக்கப்பட்டது. தச்சனை, ``தச்சு`` என்றது, `அரசு, அமைச்சு` என்பனபோல ஒற்றுமை வழக்கு. இது குறிப்புருவகமாக லின், `வித்து, உலகு` என்பவற்றிற்கு உரிய உருவகங்களும் விரித்து உரைக்கப்பட்டன.
இதனால், பிற தொழில்களைப் பிறர்பால் வைத்துச் செய் யினும், அருளல் தொழிலை அவனன்றிச் செய்வார் இல்லை என்பது கூறப்பட்டது.
`பட்டிப் பசுவைக் கால்சேரக் கட்டியவனே அதற்கு அப் பட்டித்தன்மை நீங்கியபின்னர் அவிழ்த்தல்போல, இறைவனும் ஆணவம் உடைய உயிர்களைக் கன்மம் மாயைகளுட் படுத்து, ஆணவம் நீங்கியபின்னர் அவற்றினின்றும் விடுப்பன்` என்றற்கு, ``கட்டி அவிழ்ப்பன்`` என்று முதற்கண் அருளிச்செய்தவர், அவிழ்க் கின்ற அவ்வருளின் சிறப்புத் தோன்றுதற் பொருட்டு அவன் கட்டுங் காலத்துக் கட்டியவாற்றை எல்லாம் விரிக்கின்றார். இதுமேல் போந்த விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே சமைத்தலின் விரிவாதல் உணர்க.

பண் :

பாடல் எண் : 3

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசைவில் உலகம் அதுஇது வாமே.

பொழிப்புரை :

மட்கலத்தை வனைகின்ற குயவன் மண்ணைக் கொண்டு ஒருவகைக் கலத்தையே வனையாது, குடம் சால் கரகம் முதலாகப் பல்வேறு வகைப்பட வனைவன். அதுபோலவே, எங்கள் சிவபெருமானது இச்சையால் தளர்வில்லாத உலகம் பல்வேறு வகைப்படத் தோன்றும்.

குறிப்புரை :

``அது இது ஆம்`` என்றது, `பல்வேறு வகையினவாம்` என்றவாறு. `அங்ஙனம் பல்வேறாகத் தோற்றுவிக்க விரும்புதல், உயிர்களது கன்மத்துக்கு ஏற்பவாம்` என்பது, குயவன் பல்வேறாக வனைதல், கொள்வார் விருப்பம் நோக்கியதாலாகிய உவமத்தால் பெற்றாம். உவமைக்கேற்ப, `வேண்டி உலகத்தை அது இதுவாக வனைவான்` என்று இறைவன் மேல் வைத்து ஓதாது. ``உலகம் அது இது ஆம்`` என உலகின்மேல் வைத்து ஓதினார், குயவன் கருவியால் செய்தல்போலச் செய்யாது இறைவன் நினைவு மாத்திரையானே செய்ய அவனது முன்பில் உலகம் தொழிற்படும் என்றற்கு.
இதனால், கட்டிய வகை ஒன்றன்றிப் பல என்பது பொது வகையால் கூறப்பட்டது. இதனானே, அவிழ்க்கும் காலத்து அவை அனைத்தையும் முற்ற நீக்குதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

பொழிப்புரை :

நன்மையே (மங்கலமே) வடிவாய் உள்ள சிவ பெருமான் உலகியிலின் வேறுபட்டவன்; அஃது அவன் இடபத்தையே ஊர்தியாகவும், பூதங்களையே உறுதிச் சுற்றமாகவும் கொண்டிருத்த லால் விளங்கும். அதனால், உயிர்களின் வினைகட்குத் தக்க பரிசாக உலகத்தைப் படைத்துக் கொடுக்கும் கொடையாளனும், கொடுத்து அவ்வுயிர்களின் அறிவிற்கறிவாய் நின்று வினைப் பயனைத் துய்ப்பித்து அவை செவ்வி முதிர்ந்த காலத்தில் வீடுபெறச் செய்கின்றவனும் அவனே.

குறிப்புரை :

``குணமே குணமாகும் சடையுடையான்`` என்பதனை முதற்கண் வைத்து, `விகிர்தன்` என்றதனை அதன் பின்னர்க்கூட்டி, அதன்பின்னும், `படையுடையான்` என்பதன் பின்னும் ``ஆதலின்`` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. ``குணம்`` இரண்டனுள் முன்னது `நன்மை` என்னும் பொருட்டு. ``குணம் நாடிக் குற்றமும் நாடி`` (குறள், 504) ``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` (தி.8 திருவம்மானை, 20) ``குன்றே யனைய குற்றங்கள் குணமாம் என்றே நீகொண்டால் - என்றான் கெட்டது`` (தி.8 குழைத்த பத்து, 3) ``குற்றம் செய்யினும் குணம்எனக் கருதும் கொள்கை கண்டு`` (தி.7 ப.55 பா.4) என்பவற்றிற் போல. `குணம் எண்குணமாம்` எனவும் பாடம் ஓதுப.
இதனால், சிவபெருமானே கட்டவும், அவிழ்க்கவும் வல்லனாதல் தெளிவிக்கப்பட்டது.
``கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடீ``
-தி.8 திருச்சாழல், 15
என்றருளியவாற்றால், இடப ஊர்தி உலகியலுக்கு ஒவ்வாமை பெறப் படும்.

பண் :

பாடல் எண் : 5

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் `சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்` எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்பு களை, தேவஉடம்பு, மக்கள்உடம்பு முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய வேண்டும் என்று விரும்பியேதான்.

குறிப்புரை :

எனவே, சிவன் குயவன் போலத் தன் நலம் கருதிப் பல படப் படையாது, உயிர்களின் நலம் கருதியே அவ்வாறு படைக் கின்றான் என்றதாம்.
இதனால், படைப்பினை இறைவன் பலபடப் படைத்தற்கண் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் மேற்கூறியவாறு பலவற்றையும் படைத்து, அவற்றுள் சித்துப்பொருளை அடிமைகளாகவும், சடப் பொருளை உடைமைகளாகவும் கொண்டு, தான் தலைவனாய் நின்று, அவையனைத்தையும் ஆள்கின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, அடிமைகளாகிய உயிர்கட்கு, வேண்டுங் காலத்து வேண்டுவனவற்றைத் தருதல் அவனுக்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். ``பல சீவர்`` என்றது, தேவர் ஒழிந்த பிற உயிர்களை. தேவர், `அமரர்` (இறவாதவர்) எனப்படுதல்பற்றி அவர் பிறவாத வரோ என ஐயம் நிகழுமாதலின், அது நிகழாமைப் பொருட்டு அவரை வேறு கூறினார்.
இதனால் உயிர்கட்குப் பந்தமும், வீடும் தருதல் அவனுக்குக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய பலவற்றையும் படைத்த சிவபெருமான், படைத்ததனோடு ஒழியாது, அவற்றைக் காத்தும் நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால், அருளலும் அவனது கடன்` என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகள் அனுவாதம்.
இதனால், ஏதுக் காட்டி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதமாமே.

பொழிப்புரை :

ஆன்ம அறிவினுள் நிற்கின்ற அறிவாயும், ஆன்ம அறிவின்வழி உடலை இயக்குதலின் உடலாயும், தேவர்களும் விரும்பி அடையும் இன்பப் பொருளாயும், `மண்ணுலகத்தேவர்` (பூசுரர்) என்று சொல்லப்படுகின்ற அந்தணர்கள் வேதம் முதலிய வற்றால் புகழ்கின்ற அருட்கோலத்தை உடையவனாயும் உள்ள சிவபெருமானே, கண்ணில் உள்ள கருமணி, உடல் செல்லுதற்குரிய நன்னெறியைக் காட்டுதல்போல, உயிர் செல்லுதற்குரிய ஞான நெறியைக் காட்டுகின்ற பேராசிரியனாய் வருவன்.

குறிப்புரை :

`அவ்வாறு வந்து ஞானத்தை அருளுதலே அநுக்கிரகம் எனப்படுவது` என்பது குறிப்பெச்சம். `போதகன்` என்பது குறைந்து நின்றது. இனி, `ஆம்` என்பதனைச் சொல்லெச்சமாகக் குறைத்து `மாபோதகனே` என்றும் பாடம் ஓதுப.
இதனால், அநுக்கிரகமாவது, இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆரும் அறியாத அண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகம்அறிந் தேனே.

பொழிப்புரை :

ஒருவராலும் அறியப்படாத சிதாகாசத் திருமேனி யனாகிய சிவபெருமான், மண் முதலிய பூதக் கூட்டுறவாலாகிய மானுட உடம்பிலே நிற்கின்ற உயிரின்கண், நீரிற் கலந்த பால்போல வேறற நின்று, செவ்விபெற்ற உயிர்கட்கு அருள் புரிகின்ற செம்மையை அறியாமையால் மறந்தொழியாது, அறிவால் அறிந்துநின்று, அதனால் விளைகின்ற இன்பத்தையும் நான் பெற்றேன்.

குறிப்புரை :

`ஆரும் அறியா அகண்டத் திருவுரு` எனப்பாடம் ஓதுதலும் ஆம். கடம், சிறப்புருவகம். இதனால், ``நீர்`` என்றது உயிராதல் பெறப்பட்டது. இவ்வுயிர், மலம் நீங்கிய சுத்தான்ம சைதன்னியம் என்க. `இதனையே இறைவன் தானாக ஆவேசித்து நின்று பக்குவிகளுக்கு ஞானத்தை உணர்த்துவன்` என்பது,
``இனி இவ்வான்மாக்கட்குத் தமது முதல்தானே குருவுமாய் உணர்த்தும் என்றது, அவன் அந்நியமின்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்`` (சிவஞானபோத வார்த்திகம் - சூ. 8).
என்றதனானும், அதன் உரையானும் உணர்க. நேர்மை - செம்மை. திரோபவம் அவனுக்கு இயற்கையன்றாக அநுக்கிரகமே இயற்கையாதல்பற்றி ``நேர்மை`` என்றார். இனி `நேர்மை - நுட்பம்` எனினுமாம். இவ்வாறு சிவனே குருவாய் நிற்றலை அறிதலும், அறிந்தபின்னும் பயிற்சி வயத்தால் மறத்தலை ஒழிதலும் அரியவாதல் பற்றி ``சோராமல் காணும்`` என்றார். காணும் சுகம் - காண்பதனால் விளையும் இன்பம். அது அநுபவத்தாலன்றிக் காட்டப்படாமையின், `அறிந்தேன்` என்றார். இத்திருமந்திரப் பொருளையே மெய்கண்ட நூல்கள் பரக்க எடுத்து விரித்தல் அறிக.
இதனால், அநுக்கிரகத்தின்கண் படுவனவெல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.

பொழிப்புரை :

ஓர் உயிரைக் கருப்பையுள் தோற்றுவிக்கின்ற சிவ பெருமான் அதன் முன்னைத் தூல உடம்போடு ஒழிந்த ஐந்து ஞானேந் திரியம், ஐந்து கன்மேந்திரியம், ஐந்து பூதம், சத்தாதி ஐந்து விடயம், வச னாதி ஐந்து விடயம் என்னும் இருபத்தைந்தையும் மீள அதன் சூக்கும உடம்பினின்றும் தோற்றுவிப்பான். அங்ஙனம் தோற்றுவித்தல், அக் கருப்பையுள் அத்தோற்றத்திற்குத் தடையாகவரும் ஊறுபாடு களையறிந்து அவற்றை நீக்குதற்பொருட்டு அவ்விடத் திருந்தேயாம்.

குறிப்புரை :

முதற்கண் ``ஆக்குகின்றான்`` என்பது பெயர். ஏனைய, சொற்பொருட்பின்வருநிலையாய் நின்றன. `ஆதியும் எம் ஆருயிருமாகிய அவன்` என மாற்றியுரைக்க. கோளகை - வட்டம்; இங்குக் கருப்பை.
இதனால், சிவபெருமான், கருவைத் தோற்றுவித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்களினும் முதலாவதாக அறியப் படுகின்ற மூலதாராத்திற்குமேல் உதராக்கினியும், உணவாக உண்ணப் படும் நீரும் நிறைந்திருக்கின்ற சுவாதிட்டானத் தானத்தில், `பூதசார சரீரம், யாதனா சரீரம்` என்பவற்றிற்கேனும், அவை இரண்டுமின்றித் தனக்கேனும் (சிவனுக்கேனும்) சுமையாய் நின்ற உயிர் வந்து பொருந்துமாற்றை எண்ணி, முதற்கண் செந்நீராகிய நிலைக்களத்தை நிற்பித்து, அந்நிலையை அக்கரு வெளிப்போதுதற்குப் `பத்துத் திங்கள்` என்னும் சுமைக் காலத்தையும் சிவபிரான் ஆக்குகின்றான்.

குறிப்புரை :

செந்நீர் - தாயின் கருப் பையுள் நின்று கருவைத் தாங்கி வளர்ப்பது. நிலைக்களத்தை, ``தாள்`` என்றார். நிலவுலக உடலாகிய பூத உடம்பை விட்ட உயிர் நுண்ணுடம்போடு சென்று, நல்வினை, பயன்தருமாயின், அவ்வுடம்பு பூதசார சரீரத்தைத் தோற்றுவிக்கப் புத்தேள் (தேவ) உடம்பு பெற்றுத் துறக்கத்தை (சுவர்க்கத்தை) அடை யும். தீவினை, பயன் தருமாயின் நுண்ணுடம்பு யாதனா சரீரத்தைத் தோற்றுவிக்க அதனைப் பெற்று நிரயத்தை (நரகத்தை) அடையும். இரண்டும் இல்லையாயின், நுண்ணுடம்போடே கல்லுப்போல் அதற்குரிய புவனங்களுள் யாதானும் ஒன்றிற் செயலற்றுக் கிடக்கும். அம்மூன்று நிலைகளுமே முறையே பூதசார சரீரம், யாதனா சரீரம், இறைவன் திருவருள் என்பவற்றிற்குச் சுமையாகச் சொல்லப்பட்டன. உயிர் நுண்ணுடம்பைப் பற்றி நின்று கருவில் வந்து பொருந்தித் தூல உடம்போடு பிணிப்புண்டு, அதுவே தானாய் ஒற்றுமைப்பட்டு, அதற்கேற்ற உணர்வுகள் அனைத்தும் பொருந் துதற்குப் பத்துத் திங்கள் கால எல்லை வேண்டுவதாதலையறிந்து இறைவன் அத்துணைக் காலமும் அக்கருவைத் தாய்க்குச் சுமையாமாறு வைத்துக் காக்கின்றான் என்றபடி. இதனானே ஊழ் வேறுபடுமாயின், சில திங்களுக்குள்ளே அவ்வுயிர் `அந்நிலையினின்றும் நீங்கிப் பிறிது நிலையை அடையச் செய்வான்` என்பதும் பெறப் பட்டது. ``அங்கி அப்புச் செறிகின்ற தானத்து`` என்றதனால், `அவ் விரண்டாலும் அக்கரு அழிவுறாது காக்கின்றான்` என்பதும் கூறியவாறாயிற்று. `ஞானத்து` என்பது பாடம் அன்று.
இதனால், அப்பெருமான் கருவை வளர்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இன்புறு காலத் திருவர்முன்பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.

பொழிப்புரை :

முதற்கண் தந்தை தாயர் இன்பம் நுகர்கின்ற காலத்து அவர்தம் உடம்பினின்றும் வெளிப்படும் வெண்டுளி செந்துளிகளால் அமைந்த இல்லமாவது உடம்பு துன்பத்தைத் தருகின்ற வினையின்வழி அதனை நுகரும் அவ்வில்லமாகிய உடம்பின்கண் அதன் தலைவ னாகிய உயிர்க்கிழவன் பலவகைப் பண்புகள் பெற்று வாழும் காலத்தையும், அக் காலத்து அவனுக்கு உளவாகின்ற வாழ்க்கை முறைகளையும் கருவைத் தோற்றுவித்து வளர்க்கத் திருவுளம்பற்றிய அப்பொழுதே அதன்கண் அமையுமாறு சிவபெருமான் அமைத்து விடுகின்றான்.

குறிப்புரை :

`முன்பு இருவர் இன்புறு காலத்து ஊறிய மனை` என்க. காரணப் பொருளின் தன்மையைக் காரியப்பொருள்மேல் ஏற்றி, ``ஊறிய மனை`` என்றார். ``நூலாக்கலிங்கம்`` (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து 2) என்பதிற்போல. வான் - பெருமை; தலைமை. உளம் - ஆன்மா; அதனை, `உளன்` என ஆண்பாலாக ஓதினார். அன்றி, இறுதிப்போலியாகக் கொள்ளினும் ஆம். அருளை, ``அன்பு`` என்றார்.
இதனால், கருவில் உள்ள உயிர் பிறந்தபின் வாழ்தற்குரிய முறைகளைச் சிவபெருமான் முன்பே வகுத்தமைத்தல் கூறப்பட்டது.
``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்காடென்னும்
ஆறும்முன் கருவுட் பட்டது``
எனச் சிவஞானசித்தி (சூ. 2.9)கூறுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 4

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

பொழிப்புரை :

மெய்யுணர்வால் பிறப்பின் நீங்கிய அறிவர் கண்ட, நில முதல் புருடன் ஈறாக உள்ள இருபத்தைந்து கருவிகளும் (தத்துவங்களும்) தந்தை உடலிலே பொருந்தியிருந்து, பின் தாயது கருப்பைக்குள்ளே, ஆண், பெண் இரண்டில் யாதேனும் ஓர் உருவமாமாறு புகும். இதனை மெய்யுணர்வில்லார் அறியார்.

குறிப்புரை :

மற்று, அசைநிலை. ``ஓரார்`` என்றதனை ஈற்றில் வைத்து உரைக்க. `புகுந்த அது` என்பதில் அகரம் தொகுத்தல்; புகுதலை அனுவாத முகத்தாற் கூறினார் என்க.
இதனால், சிவபெருமான், தாயது கருப்பைக்குள் மட்டுமன்றி, அதிற் புகுமுன்பே தந்தையது உடம்பில் அதனை வைத்துக் காத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.

பொழிப்புரை :

தந்தையது உடலில் பொருந்தியிருந்த இருபத்தைந்து கருவிகளும் தாயின் கருவில் புகுதற்கு அவ்விருவரது கூட்டம் நிகழும். அப்பொழுது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, பூதம் ஐந்து ஆகிய பதினைந்து கருவிகளால் பருவுடம்பு வளருமாறு தந்தை உடம்பினின்றும் வெண்பால் (சுக்கிலம்) பொழியும். அதன்பின் பருவுடம்பு வளர ஏனைத் தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும் அவ்வுடம்பினுள் புருவ நடுவிலும், தலையிலும் பொருந்தி நிற்கும்.

குறிப்புரை :

`தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும்` என்றது, `நுண்ணுடம்பு` என்றவாறு. அதனை இவ்வாறு கருவியாக வகுத் தோதியது, மேல், ( தி.10 பா.448) ``நால் மூவேழ்`` என்றதனோடு இயைதற் பொருட்டு. `பொழிந்தது` என்பது ஈறு குறைந்தது.
பூதத்தின் காரணத்தைப் ``பூதம்`` என்றார். `ஒழிந்த` இரண்டும், `நுண்ணுடம்பிற்கு வேறாய்` எனப் பொருள் தந்தன.
இதனால், தந்தை உடலில் தொகுத்து வைத்துக் காத்த இருபத்தைந்து கருவிகளைப் பின் தாயுடலில் வகுத்து வைத்துச் செயற்படுத்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே.

பொழிப்புரை :

பூவின் மணத்தைக் காற்றே உலகிடை எங்கும் பரவச்செய்தல்போல, நுண்ணுடம்பின் செயல்களைத் தச வாயுக்களே பருவுடம்பில் கூவி அழுதல் முதலிய தொழில்களாக நிகழச் செய்யும், அவ்வாறு செய்விக்கச் சிவபெருமான் நினைந்தபொழுது.

குறிப்புரை :

தசவாயுக்கள், `பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பன. சீவன் - உடம்போடு கூடிய உயிர். அஃது இங்கு உடம்பையே குறித்தது. `பிராணன் முதலிய வாயுக்கள் இல்லையேல் நுதலிலும், உச்சியிலும் நிற்கும் அந்தக்கரணங்களின் ஆற்றல் பயன்படாது` என்பதாம். கூவி அழுதல் - அழைத்து அழுதல். `அவிழும்` என்பது பாடம் அன்று. பிறந்த குழவிக்கு முதற்செயல், வாய்விட்டு அழுதல். ஆதலின், அதனையே எடுத்தோதி ஏனைய வற்றை உடன்கொள்ள வைத்தார். நுண்ணுடம்பின் செயலாற்றலே தூல உடம்பில் செயலாக வெளிப்படும். அதற்குத் துணைசெய்வன தச வாயுக்கள் என்க.
இதனால், குழவி பிறந்தபின் அதனைச் சிவபெருமான் தச வாயுக்களின் வழிச் செயற்படுத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.

பொழிப்புரை :

குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாதுவிடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.

குறிப்புரை :

போகின்ற எட்டு, உயிரோடு ஒட்டிச் செல்கின்ற சூக்கும சரீரத் தத்துவங்கள். புகுகின்ற பத்து எட்டு, கருவில் வந்தபின் வருகின்ற மேற்சொன்ன (தி.10 பா. 449) பதினைந்துடன் `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` என்னும் முதல் நாடிகள். மூழ்கின்ற - ஆன்மா அழுந்துகின்ற. `முத்தனுவும்` என்பது குறைந்து நின்றது. முன்பு, `எட்டும், பதினெட்டும்` எனவும், பின்பு, `ஒன்பது வாய்தலும்` எனவும் கூறினாராயினும், `அனைத்துக் கருவிகளும் மூவுடம்பாய் அடங்கு கின்றன` என்றற்கு, ``முத்தனுவும்`` என்றார். குண்டலினி மூலாதாரம் முதலாகப் பிரமரந்திரம் ஈறாகத் தலைகீழாக நிற்கும் பாம்பு வடிவாய் இருத்தலின் அதனை, ``நாகம்`` என்றார். ``புரவி`` என்றது, இடைகலை பிங்கலை வழிச் செல்லும் பிராண வாயுவை. அஃது ஆகுபெயராய், அதற்கு இடமாகின்ற அந்நாடிகளைக் குறித்தது. விடுதல் - தூண்டுதல். ``பன்றி`` என்ற இழிவு வகையால் பயன்படாமை குறித்தவாறு.
இதனால், சிவபெருமான் உயிர்ப்பு வழியாகப் பருவுடம்பை நிலைப்பித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே.

பொழிப்புரை :

தந்தையும் தாயும் கூடுங்காலத்துக் காமம் மிக்கிருப்பின், பிறக்கும் மகன் தாமத குணம் மிக்கிருப்பான். காமம் குறைந்திருப்பின், மகன் சத்துவகுணம் மிக்கிருப்பான். காமம் மிகுதலும் குறைதலும் இன்றி அளவிற்பட்டதாக இருப்பின், மகன் இராசதகுணம் மிக்கிருப்பான். இம்முத்திறத்து மைந்தருள் சத்துவ குணம் மிக்கவன் அரசனாதற்கும் உரியவனாவான்.

குறிப்புரை :

எதிர்த்தல் - கூடுதல். இறையவன் - உருத்திரன். ``அரியவன்`` என்பதில் அவன், பகுதிப்பொருள் விகுதி. `மைந்தன் அரசும் ஆளும்` என உம்மையை மாற்றி உரைக்க. உருத்திரன், மால், அயன் என்னும் குணமூர்த்திகள் மூவரும் தொழிலால் முறையே தாமதம், சாத்துவிகம், இராசதம் என்னும் குணத்தினராதலின், அக்குணம் மிக்க மைந்தரை அவர்களாகவே கூறினார். அதனானே, `அம்மைந்தர்க்கு அத்தேவர், இயக்கத் தேவராய் (அதிதேவராய்) நிற்பர்` என்பதும் கொள்ளப்படும். இருவரிடத்தும் காமம் ஒருவகையாய் நில்லாது மாறி நிற்பின், இங்குக் கூறிய பயன் தந்தையின்பால் வைத்துக் கொள்ளப்படும். என்னை வித்தின்கண் உள்ளதே விளைவின் கண்ணுமாம் ஆதலின், ``மகனறிவு தந்தை யறிவு`` (நாலடியார், 367) எனப் பிறவிடத்தும் கூறப்படுதல் காண்க.
தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
என்னும் திருக்குறளும் (குறள், 114) இப்பொருள்மேல் நோக்குடையதேயாம். இதனால், `தோன்றும் கருவினது வினைக்கு ஏற்பச் சிவன் தந்தை தாயரது கூட்டத்தில் அவர்கட்கு இந்நிலையே விளைப்பன்` என்றவாறு. `பேர் ஒத்தமைந்தன்` என்பதில், ``பேர்`` என்றது, முன்னர்க் கூறிய மூன்றனுள் ``அரி`` என்பது, அரசனை மால் எனக் கூறும் வழக்குப்பற்றிக் கொள்ளப்படும். ஏறுதல் முதலியவற்றிற்குத் தந்தை உடற்பொருளாகிய வெண்டுளியையே வினை முதலாக உரைப்பர்; அது பொருளாயின் எடுத்தோதலே வேண்டும் என்க.
இதனால், ``பண்புறுகாலமும்`` என மேற்கூறப்பட்ட (தி.10 பா. 445) பண்புகளைச் சிவபெருமான் கருவில் அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

பொழிப்புரை :

காமம் பொருந்திய ஒருவனும் ஒருத்தியுமே பற்றுக் கோடாக நின்று அவரின் நீங்கிப் பாய்கின்ற கருமுதற் பொருள்கள், பின்பு கருப்பதிந்து உருவாதற் பொருட்டுப் பதிவிற்கு முன்பே அப்பொருள்களில் அவர் உடம்புகளிலே பல கூட்டுப்பொருள்கள் வந்துசேர, கருப் பதிந்தபின் அக்கருவிற்குக் குணங்கள் மேற்கூறிய முறையில் அமையும்.

குறிப்புரை :

`அதனால், மேற்கூறியவாறு நிகழும் கூட்டத்தினால் பிறக்கும் மைந்தர் மேற்கூறிய வகையினராய் இருப்பர்` என்பது குறிப்பெச்சம். ஏயம் - இழிவு; காமம். `தஞ்சம்` என்பது `தஞ்சு` எனக் கடைக்குறைந்து நின்றது. `நிறம்` என்னும் பொருட்டாகிய `சாயம்` என்னும் திசைச்சொல் நாயனார் காலத்து இன்மையின் `சாயத்து` என்பது பாடம் ஆகாது. கரு, ஆகுபெயர். உருவாம் என - உருவாய்த் தோன்றும் என்னும் காரணத்தால். காயம் - கூட்டுப் பொருள். கலந்து, `கலக்க` என்பதன் திரிபு. ``அது`` என்றது, `கரு` என்றதன் இயற் பெயர்ப்பொருளை. காண - உருத்தோன்றுமாறு. மாயம் - நிலை இல்லாது மாறிவருகின்ற. மனம் - அந்தக்கரணம். அவை ஒடுங்குதல் குணதத்துவத்திலாகலின், ``மனோலயம்`` என்றது ஆகுபெயரால், முக்குணத்தை உணர்த்திற்று. ஆனது - பொருந்திற்று.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது. இதனானே கருவில் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் `மனோமய கோசம்` எனப்படும் குண சரீரத்தைக் கூட்டுமாறும் பெறப்பட்டது. குண சரீரம், பர சரீரம் முத்திறத்தினுள் ஒன்று. பரசரீரத்தின் முத்திறம், `காரண சரீரம், கஞ்சுக சரீரம், குண சரீரம்` என்பன. இவைமுறையே `ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமய கோசம்` எனவும் பெயர்பெறும்.
இதனால், கருவினுள் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் சூக்கும தேகத்தையும் வாக்குகளையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.

பொழிப்புரை :

கருப்பையுள் முதற்கண் அதீத நிலையில் உள்ள குழவிக்குப் பின் `மாயை` (அசுத்த மாயை) என்பவள் தனது சுற்றமாகிய வித்தியா தத்துவங்களைச் சேர்ப்பிக்கத் துரிய நிலையைப் பெறும். பின்பு அத் துரிய நிலையும் நீக்கிச் சுழுத்தி சொப்பன சாக்கிரங்களாகிய நிலைகள் கூடுமாறு வலிமை மிக்க வினைப் பயன்களாகிய `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம்` என்னும் பாவங்கள் எட்டும் மாயேயமாய்ப் பொருந்தும். அதனால், குழவி தனது வினை நுகர்ச்சிக்குரிய தன்மைகள் யாவும் நிரம்பப் பெறும்.

குறிப்புரை :

``மாயாள்`` எனவும், `கிளை` எனவும் உருவகமாக்கிக் கூறியது, குழவியது அறிவைச் செவிலிபோல வளர்த்தல் தோன்றுதற்கு. `துரியமும்` என்பதும் பாடம். `கான்மிகம்` என்பது ``காமிகம்`` என நின்றது. தன்மம் முதலிய புத்தி குண பாவங்களைக் கூறியது குழவி நிரம்பிய வளர்ச்சி உடையதாதலைக் குறித்தவாறு. `பொருந்தும்` என்பது சொல்லெச்சமாய் நின்று ``எழ`` என்ற எச்சத்திற்கு முடிபாயிற்று. `மாயேயம் எட்டாதல் பொருந்தும்` என மாற்றி உரைக்க. `மறை வாக்குப்போலச் சொல் உளதாம்` என்க. அஃதாவது `தெளிவான உணர்வுநிலை உளதாம்` என்றபடி. இதனால், சிவபெருமான் குழவிக்கு உணர்வு நிரம்பச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.

பொழிப்புரை :

எலும்புகளைக் கழிகளாகவும், நரம்புகளைக் கயிறுகளாகவும், குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண்ணைச் சுவர்களாகவும் பொருந்த அமைத்து, உயிர் இன்புற்று வாழ்தற் பொருட்டு இல்லம் ஒன்றை ஆக்கி, அளித்த, நீதி மிக்கவனாம் நல்லவனாகிய ஒருவனை (சிவபெருமானை) நான் நினைக்கின்றேன்.

குறிப்புரை :

`அவ் இல்லத்தில் வாழும் நீவிரும் அவனை நினைத்தல் வேண்டும்; நினையீராயின், நன்றிகொன்றீராவீர்` என்பது கருத்து. மிடைந்து - கழிகள் நெருங்க வைத்து. ``என்பால்`` என்றற்கேற்ப, `நரம்பால், செம்பாலால்` என உருபு விரிக்க. வரி - வரிய; இறுக. செம்பால் - இரத்தம். இறைச்சி திருந்த - ஊன் பதப்பட. ``இன்பால்`` என்பது ``நிலை`` என்னும் தொழிற்பெயர் கொண்டது. நிலை - நிற்றல்; இஃது ஆகுபெயராய், நிற்கும் இடத்தைக் குறித்தது. இறை - இறைமை; நடுவு நிலைமை. ``இறைபுரிந்து`` (குறள், 541) என்றார் திருவள்ளுவரும். நன்பால் ஒருவன் - நன்மைப் பகுதிக்கண் நிற்கின்ற ஒப்பற்றவன். இது தூலதேகத்தின் ஆக்கப்பாட்டினை விரித்தவாறு. இவ்வாறே,
``என்பினால் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் மில்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின்
மூழ்கி டாதே`` -தி.2 ப.79 பா.8
என ஞானசம்பந்தரும்,
``என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோ
ருருவ மாக்கி`` -தி.4 ப.5 பா.2
என நாவுக்கரசரும் அருளுமாறு அறிக.
இதனால், கருவுள் நின்ற உயிருக்குச் சிவபெருமான் தூல சரீரத்தைக் கூட்டுதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.

பொழிப்புரை :

கருவிற்குத் தூலதேகம் அமைந்த பின்னர் தாயது சந்திரகலையாகிய மூச்சுக் காற்றுச் சூரிய கலையொடு மாறு கொள்ளாமல் இயங்கிக் குழவியது தூலதேகம் முழுதும் பரவிக் குளிர்ச்சியைத் தந்து வளரப்பண்ணும். அவளது சூரிய கலையாகிய மூச்சுக் காற்றும் அவ்வாறே சென்று குழவியின் உடலில் வெப்பத்தை உண்டாக்கி அதனை அழியாதிருக்கச் செய்யும். இவ்வாறு அவ்விரு வகைக் காற்றினையும் சிவபெருமான் தாயது மூலத்தின்கண் உள்ள வெப்பம் மிக்கெழாது அளவில் நிற்குமாறு அமைக்கின்றான்.

குறிப்புரை :

`ஒத்து எங்கும் புகுந்து` என்பதை முன்னும் கூட்டி, `பால்வண்ணன் ஒத்து மேனி எங்கும் புகுந்து பதம் செய்யும்` எனவும், `பகலோன் ஒத்து உடல் எங்கும் புகுந்து இதம் செய்யும்` எனவும் உரைக்க. பால்வண்ணன் - சந்திரன். கருவில் நிற்கும் குழவிக்குத் தாயது மூச்சே மூச்சாவதன்றி வேறில்லையாகலின், பொதுப்பட வாளா ஓதினார். தேகத்தை அழியாமல் இருக்கச் செய்வது வெப்பமே யாகலின், அதனை, ``இதம்`` என்றார். பதம் குளிர்ச்சியாதல் வெளிப்படை.
இதனால், சிவபெருமான், கருவினுள் குழவியது தூல தேகத்தை வளர்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.

பொழிப்புரை :

கருவினுள் வீழ்ந்த உயிர் அவ்விடத்தே இறக்கும் ஊழ் உளதாயின், பதிந்த கருவைச் சிவபெருமான் பலநிலைகளில் பல்லாற்றான் அழிந்தொழியச் செய்வான். அவ்வாறின்றிப் பிறந்து வாழும் ஊழ் உளதாயின், இடையூறுகள் பலவற்றால் தாக்கப்படுகின்ற வினைக்கட்டுடைய அக்கருவைச் சிவபெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் சுழிகளில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோற் குவையிலிருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும், நெருப்பாலும் அழியாது காப்பான்.

குறிப்புரை :

ஒழி - ஒழிதல்; அழிதல். முதனிலைத் தொழிற்பெயர். ``செய்யும்`` என்பது முற்று. ``வினையுற்ற நாள்`` என்பது தாப்பிசையால் முன்னரும் சென்றியையும். மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. உயிர் மண்ணில் வாராது கருப்பையுள் நிற்கும் காலத்தை ``வழி`` என்றார். ``சுழிபல வாங்கி நீராட்டி, வைத்தழு வாங்கிச் சுடாமல் வைத்தான்` எனக் கூட்டுக. வை - வைக் கோல். வைக்கோற் குவையைத் `தழு` என்றல் வழக்கு.
இதனால், கருவைச் சிவபெருமான் வினைக்கேற்றவாறு அங்கே அழித்தல், காத்தல் இரண்டனையும் செய்தல் கூறப்பட்டது.
குழவி கருவினுள் அழியாது தப்புதலை மாணிக்க வாசகர் போற்றித் திருவகவலுள் பலபட விரித்தருளிச் செய்தார்.
``கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவதாயும்
பரிணமித் தழிவதாயும் பாலனாய் அழிவதாயும்``
எனச் சிவஞான சித்தி (சூ. 2.93) யும் கூறிற்று.

பண் :

பாடல் எண் : 14

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.

பொழிப்புரை :

தந்தையது வெண்டுளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த வெண்டுளியும், அவ்வாறே தாயது செந்துளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த செந்துளியும் கலந்து, பன்னிரண்டு அங்குலமாகிய தாயது மூச்சுக்காற்றில் நான்கு அங்குலம் புறத்தே போந்தொழிய, எட்டங்குலமே உட்புகுதலால், அக் கரு தனது கையால் எண்சாண் அளவினதாய் வளரும்.

குறிப்புரை :

யோனி, ஆகுபெயர். மூச்சுக் காற்று நான்கு அங்குலம் ஒழிய, எட்டு அங்குலம் உட்புகும் என்பது நன்கறியப்பட்டதாகலின், அக்காற்றினை எடுத்தோதாராயினார். புறப்பட்டு `புறப்பட` என்பதன் திரிபு. ``அக் கரம்`` என்றது, `அக்குழவியின் கரம்` என்றவாறு. எட்டும் - நீட்டியளக்கின்ற.
இதனால், உடம்பு எண்சாண் ஆகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.

பொழிப்புரை :

ஒருவன், ஒருத்தி ஆகிய இருவரது இன்பநுகர்ச்சிக் காலத்தில் கருவைத் தோற்றுவிக்கப் புகுந்த சிவபெருமான், அவ்வொருத்தியது கருப் பையினுள் ஓர் உடம்பைக் கொணர்ந்து வைத்த கொடைத் தொழிலாலே வெள்ளிய துளிகள் பலவற்றுள் ஒரு துளியின்கண்ணே முப்பத்தொரு கருவிகள் ஆகிய மாயா காரியங்கள் சேர, அவற்றால் முதற்கண் ஒரு பிண்டத்தை அமைக்கின்றான்.

குறிப்புரை :

மோகம் - மோகினி. ஆன்ம தத்துவத்திற்கும் இது வழிமுறையாற் காரணமாதல் பற்றி இதனையே கூறினார். `இரண்டெட்டும், மூவைந்துமாகிய மோகத்துள்` என்க. மோகம், கருவியாகுபெயர். ``கோசம்`` என்பது உயிரெதுகை.
இதனால், பரசரீரத்துள் குண சரீரமே யன்றிக் கஞ்சுக சரீர காரண சரீரங்களும் கூட்டப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.

பொழிப்புரை :

உடம்பிலே பொருந்தியுள்ள மயக்கத்தை உடைய ஐம்பொறிகளும் அவ்வுடம்பையே என்றும் பற்றுக்கோடாகக் கொள்கின்றன. அதுபோலவே முட்டை வடிவாகத் தோன்றும் கருவைப் பற்றியுள்ள உயிரும் அக்கருவையே பற்றுக்கோடாகக் கொண்டு தாயின் கருப்பைக்குள் இருக்கும்.

குறிப்புரை :

இது, கைகால் முதலிய உறுப்புக்கள் இல்லாத பிண்டமாகிய கருவில் உயிர் செயலற்றிருத்தல் எவ்வாறு என்பார்க்கு, `செயலின்றி, அறிதல் மாத்திரையாய் நிற்கும்` என ஐயம் அகற்றியவாறு. ``பிண்டம்`` என்றது உடம்பை. `மரித்தது` என்பது பாடம் ஆகாமை அறிக. விந்துவை அடக்கிக் கொள்ளுதலால் கருப்பை ``நாதம்`` எனப்பட்டது. `பிறவற்றை நோக்க அறிவாய் நிற்கின்ற ஐம்பொறிகள், அவ்வறிவுத் தன்மை யில்லாத உடம்பிலே நிற்றல் போல, சடம் போல்வதாகிய பிண்டத்தில் சித்தாகிய உயிர் நிற்கும்` என்பதாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன்
அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி
நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.

பொழிப்புரை :

எனது உடலில் நிற்கின்ற சிவபெருமான் ஒவ்வோர் உயிர்க்கும் கருவில் அதன் விதியாகிய எழுத்தோலையைத் தலையிலே வைத்து, தானே இயங்குதல் உடைய யந்திரம் போன்ற ஐந்து உடல்களை நிலைபெறச் செய்தளித்து, அவ் ஐந்துடல்களில் வேறு பட்ட, நிலையான முப்பது கருவிகளை அமைத்து, ஒன்பது வாய்களை உடைய ஒரு துருத்தியைச் செய்து தருகின்றான்.

குறிப்புரை :

ஓலையை ``இலை`` என்றது, `பத்திரம்` என்னும் வடநூல் முறை. அதன்கண் பொறிக்கப்படுவது எழுத்து. ``அலைப் பொறி`` என்பதில் அகரத்தைத் துகரமாக மயங்கினமையின், பாடம், ``துலைப் பொறி` எனப் பிழைபட்டது.
ஐந்து உடல், மேலே சொல்லப்பட்டன. (பாடல் - 402, 424) நிலைத்தல், தம் காரியம் அழியினும் தாம் அழியாது நிற்றல். முப்பது கருவிகள், ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவங்களில் புருடன் ஒழிந்தவை. புருடன் தனித் தத்துவம் அன்றாதலின் அதனை நீக்கி ஓதினார். `நீர்மையாக` என ஆக்கம் வருவித்து `அவற்றின் தன்மை தோன்ற` என உரைக்க.
உலைப் பொறி - துருத்தி. `ஒன்பதில் உலைப்பொறி ஒன்று செய்தான்` என மாறிக் கூட்டுக. ஒன்பது, எண் ஆகுபெயர். `ஒன்பதில்` என்பதில் இல், ஐந்தாம் உருபு. ``கரு`` என்றதை ``ஈசன்`` என்றதன் பின்னர்க் கூட்டி, இரண்டையும் முதற்கண் வைத்து உரைக்க. ஒன்பது வாயையுடைய துருத்தி, இல் பொருள் உவமை. இஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது. `ஒன்பது வாய்கள்` இவை என்பதை அடுத்துக் காண்க.
இதனால், துருத்திபோல் அமைந்த தூல உடம்போடே ஏனை நான்குடம்புகளும் ஒட்டிக்கிடக்கச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் வனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.

பொழிப்புரை :

ஒருவனும், ஒருத்தியும் ஆகிய இருவர் இன்பம் நுகர்தற்கண் பொருந்த வைக்கும் மண்ணால் துன்பத்திற்கு ஏதுவான கலங்கள் பலவற்றையும் செய்பவன் ஒருவனே. அப் பல கலங்கள் ஆவன, நீர்ச்சால்கள் ஒன்பதும், அவற்றில் நீரை முகந்து ஆள்கின்ற கலயங்கள் பதினெட்டுமாம். இவ்வாறு குயவனது சூளை கலங்களை உருவாக்கிற்று. அதனாலே கலங்கள் உளவாயின.

குறிப்புரை :

மண், கருப் பிண்டம். ``கலசம்`` என்றது, `கலம்` எனப் பொதுப்பட நின்றது. உடம்பு ஒன்றேயாயினும், அதன் உட்கூறுகளைப் பகுத்துணர்த்துதற்குப் பலவாகக் கூறினார். அணைவான், உயிர், ஒன்பது, ஒன்பான் துளை (நவத்துவாரம்). அவை, கண் இரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, வாய் ஒன்று, எருவாய் ஒன்று, கருவாய் ஒன்று. இவை நீர்வடிவாய்க் கழியும் கழிவுப் பொருள்கள் வெளிப் படும் பெருவாயில்களாதல் பற்றி ``நீர்ச் சால்`` என்றார். பதினெட்டா வன, நானூற்று ஐம்பதாம் திருமந்திரத்தில் குறிக்கப்பட்ட கருவிகள். அவை அருவப் பொருளாய் நின்று இவ்வாயில்கள் பயன்படச் செய்தலின், `கலயம்` என்றார். சூளை இறைவன் செயல். விளைந்தது, கிடைத்தது; இவ்வொருமை தொகுதி மேல் நின்றது. `தான், ஏ` அசைநிலைகள்.
இதனால், உயிர்களின் பொருட்டு உடம்பை அமைக்குமா றெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீரதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே.

பொழிப்புரை :

உலகீர், வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகளாகிய ஆறும் கருவிலே அமைக்கப்பட்டன என்பதை அறியமாட்டீர். அதனால், அவற்றில் அழுந்துதலின்றி நீங்கமாட்டீர். அவ்வுடம் பிற்றானே நல்லன பல பெருகுமாற்றையும், சிவபெருமான் அந்நல்லனவற்றால் பல பயன்கள் விளைய வைத்திருத்தலையும் உணர்ந்து அடையமாட்டீர்; ஆயினும், நீவிர் அனைவீரும் பிண்ட மாகிய உங்கள் உடம்புகள் தாயர்தம் வயிற்றில் பத்துமாதம் தங்கி வளர்ந்து வந்ததை அறிவீர்கள்.

குறிப்புரை :

`அதனால் பயன் என்னை` என்பது குறிப்பெச்சம். வாழ்வில் நிகழும் ஆறு மேலே சொல்லப்பட்டன. (தி.10 பா.440) `அதனில்` என்பதில் சுட்டு, ஆக்கத்தைக் குறித்தது. குணங்கள் தன்மைகள். அவை அறவுணர்வும், இறையுணர்வும் பற்றி எழும் விருப்பமும், செயல்களும். சித்திகள் - அவற்றின் பயன்கள். `இட்டது, ஆனது` என்பன தொழிற் பெயர்கள். `ஏனையவற்றை அறியாவிடினும், பிண்டம் பத்து மாதம் தங்கிப் பிறந்ததை அறிவீர்` என இகழ்ந்தவாறு. இவ்விகழ்ச்சி, முற்கூறிய அறியாமைபற்றியதாதல் அறிய.
இதனால், சிவபெருமான், `வேம்பினோடு தீங்கரும்பும் விரவி ஊட்டுதல்போல` (தி.7 ப.46 பா.2) உயிர்கட்கு வினைப் போகத்தை நுகர் வித்தலோடு, மெய்யுணர்வைப் பெறுவித்தற்பொருட்டும் உடம்பைக் கருவினில் தோற்றுவித்துக் காத்துத் தருகின்றான் என அதன் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.

பொழிப்புரை :

சிவபெருமான், உடலை அமைத்து, அதில் உயிரைக் கூட்டிய குறிப்பை உணர்ந்து, அவ்வுடல் நிலை பெறுதற் பொருட்டு அதில் நீர்மடைபோல் உள்ள ஒன்பான் துளைகளையும் அமைத்து, உறுதிப்பாடுள்ள நெஞ்சத் தாமரையின் மேல் தனது உருவத்தைத் தீயின் முனைபோல வைத்துள்ள அவனையே கூடி நான் இன்புறுகின்றேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு அவற்றை உணர்ந்து அவனைக் கூடுதலே உடல் எடுத்ததன் பயன்` என்பது கருத்து. ``உயிர் வைத்தவாறும்`` என்பதன்பின், `உணர்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``மடைவைத்த`` என்பதில் வைத்த, உவம உருபு. திடம், உண்மை அன்பு. `இருதய கமலத்தின் மேல் இறைவன் தீக்கொழுந்து வடிவாய் உள்ளான்` என, உபநிடதங்களில் தகர வித்தை கூறும் வழிகூறப் பட்டது. யோகியர் அதனையே நினைத்தலின், ``தாமரைச் சென்னியுள் அங்கிக் கடைவைத்த ஈசன்`` என்றார். ``சென்னி`` என்றது மேல் இடத்தை. உடம்பொடு நிற்குங்கால் தியானத்தாலும், பாவனையாலும் இறைவனைக் கூடும் இடம் இருதயமும், புருவ நடுவுமேயாக, அவற்றை யொழித்து `சென்னித் தாமரை` என மொழிமாற்றி, உடம்பை விட்டுப் போகுங்கால் பற்றும் இடமாகிய பிரம ரந்திரத்தைக் கொள்ள வேண்டாமை அறிக. ``கைகலந்தேன்`` என்பதில் கை, இடைச்சொல்.
இதனால், உடம்பினை அளித்த தலைவனது குறிப்பை உணர்ந்து, அதன்கண்ணே அவனைக் கூடும் முறையறிந்து கூடுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வைஉரு
நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.

பொழிப்புரை :

நான்கு வேத சிவாகமங்கள் அனைத்திலும் கேட்டு நின்றது, `என்றும் அழிவில்லாத பேரொளியாகிய சிவபெருமானே உலகனைத்திற்கும் முதற்காரண வடிவாய் நின்று அவற்றைக் கோக்கின்றான்` என்பது. எனவே, தாயது வயிற்றில் நெகிழ்ந்து பட்ட கருவை உறுதிப்படுத்தி உருவாக அமைப்பவன் அவனே. ஆதலின், தந்தை தாயாரது உடற்கூட்டம் அவனது செய்கைக்கு ஒரு கருவியாய் அமையும் அளவேயாம்.

குறிப்புரை :

மூட்டுதல், தேர் உறுப்புக்களை ஒருங்கிணைத்துத் தேராக்குதல்போல, உலகுறுப்புக்கள் பலவற்றைத் தொகுத்து உலக மாக்குதல். `யோனி` என்பதற்கு `வாயில் அல்லது காரணம்` என்பதே பொருள். உலகிற்கு முதற்காரணம் மாயையாயினும், வித்திற்கு நிலம் போல இறைவன் அதற்கு நிலைக்களமாதல் பற்றி அவனையே, `முதற் காரண வடிவினன்` என்று நூல்கள் சில இடங்களிற் கூறும். அவ் வாற்றால், ``முதல் யோனி மயன் அவன்`` என்றார். `அவன் மூட்டு கின்றான்` என முன்னே கூட்டுக. ``கேட்டு நின்றேன்`` என்பதன்பின், `அது` என்னும் எழுவாயும், ``மூட்டுகின்றான்`` என்பதன்பின், `என்பது` என்னும் பயனிலையும் அவாய் நிலையாய் நின்றன. மூட்டு தற்கு, `உலகம்` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `கருவை உருவாக நீட்டி நின்று கூட்டுகின்றான்` என்க. `ஆகத்து உளவாதல்` என ஒருசொல் வருவிக்க. நேர்படுதல் - நினையாததொன்றாய் இடை வருதல். இவ்வாறு கூறியது, அதன் தலைமையின்மை உணர்த்தற்கு.
இதனால், கருவை உருப்படுத்துகின்றவன் சிவபெருமான் என்பதே உண்மை நூல் துணிபாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

பொழிப்புரை :

தாய் தந்தையரது கூட்ட உறுப்புக்கள் தம்மிற் கூடிய காலத்து முன்பு தந்தையுடலில் நின்ற கரு, தாயது கருப்பையுட் சென்று கலந்து முட்டை (பிண்டம்) ஆகும். அம்முட்டையினுள் நீர்க்குமிழியில் நிழல்போல நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் பருவுடல் எங்கும் பரந்து அதனைத் தாங்கி நிற்கும்.

குறிப்புரை :

`இவ்வாறு தாங்கிநிற்றல், அவன் திருவுளக் குறிப்பால் அல்லது ஆகாது` என்பது கருத்து. காவுடை - சுமையாதல் உடைய. ``தீபம்`` என்றது, கருவை என்பதை 478 ஆம் திருமந்திரம் பற்றி அறிக. இவை இரண்டானும், `கரு, பருவுடம்பு` என்பது கூறினார். நுண்ணுடம்புண்மையை உணராதார், `இப்பருவுடம்பே உடம்பு` என மயங்குவராதலின், அவர், `கருவுற்பத்தியில் இறைவன் திருவருள் என்பது இல்லை` என்றலும் மயக்க உரையேயாம் என்றற்குப் பருவுடம்பிற்குப் பற்றுக்கோடு நுண்ணுடம்பாதலை ஓதினார். குமிழி யில் நிழல், நுண்ணிதாய் உள்நிற்றற்குக் கூறிய உவமை. பாருடல் - பருவுடல். இத்திருமந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், மேலதற்கு ஏதுக்கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

பொழிப்புரை :

நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந் திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவ பெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.

குறிப்புரை :

நுண்ணுடம்பு இல்லையேல், பருவுடம்பு பயனிலதாம் என்பது கூறியவாறு. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் வான் முதலிய மாபூதங்கள் ஐந்தனையும் முறையே தோற்றுவித்துப் பின் அவற்றின் குணமாய்ச் செவி முதலிய ஞானேந்திரியங்கட்குப் புலனாய் வந்து பொருந்துதலால், `நிருவிகற்ப ஞானம்` எனப்படும் பொதுவுணர்வும், பின் அவற்றை மனம் முதலிய அந்தக் கரணங்கள் பற்றிக்கொள்ளுதலால் `சவிகற்ப ஞானம்` எனப்படும் சிறப்புணர்வும், தோன்றுதலின், `நுண்ணுடம்பு இல்வழி, யாதோர் உணர்வும் நிகழாது` என்பதனை,
``ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்கள் என்று
பேசுமாத் திரைகள் ஐந்தும் பிறக்கும்பூ தாதிகத்தின்;
நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்``
எனவும்,
``சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்
கேற்றமாம் ஓசை யாதி இருங்குணம் இயைந்து நிற்கும்``
-சிவஞானசித்தி சூ. 2.64.65
எனவும்,
அந்தக் கரணம் அடைவே உரைக்கக் கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - புந்தியிவை
பற்றிஅது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர். -உண்மைவிளக்கம் - 17
எனவும் கூறுமாற்றான் அறிக. மாயா காரியங்களாகிய இக்கருவிகளின் வழி வரும் உணர்வெல்லாம் புறவிடயமேயாகலின், அவையெல்லாம் பாசஞானமே என்க. ஒட்டிய பாசம் - அவையே தானாகப் பொருந்திய மாயாகாரியங்கள். ``உணர்வென்னும் காயம்`` எனக் காரணத்தைக் காரியமாக ஒற்றுமை வழக்காற் கூறினார். கட்டி அவிழ்த்தற்கு `உயிர்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. இது முதற் பதின்மூன்று திருமந்திரங்கள் அந்தாதியாய் வரும்.
இதனால், பருவுடற்கு நுண்ணுடம்பு இன்றியமையாததாதல் கூறுமுகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே.

பொழிப்புரை :

உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

நூல்கள் என்றது சொற்பிரபஞ்சத்தை. அவை நிவிர்த்தி முதலிய கலைகளில் வைகரி முதலிய வாக்குக்களாய் நிற்றலை அறிந்துகொள்க. வாக்குகள் சுத்த மாயையின் காரியங்களாம். அதனால், அவை மயக்கத்தை நீக்கித் தெளிவுதரும் என்க. `பாச ஞானத்தால் மயங்கும்படி பொருட் பிரபஞ்சத்தால் உயிர்களைக் கட்டி வைத்த சிவபெருமான், பின்னர் அதினின்றும் நீங்கிப் பசுஞானமும், பதிஞானமும் முறையானே எய்தி வீடுபெறுதற்குச் சொற்பிரபஞ்சத்தை யும் அமைத்துள்ளான்` என்றவாறு. `வேதமொடு` என்ற எண்ணிடைச் சொல் தொகுத்தல்.
இதனால், மேல் ``கட்டி அவிழ்த்திடும்`` என்றவழி, `அவிழ்த் தற்கு வாயிலாவன எவை என்னும் அவாய்நிலை நிரப்பப்பட்டது`. சிவபெருமான் கருவினுள் வாக்குகளைக் கூட்டுதல் மேலே (தி.10 பா.454) கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

அருளல்ல தில்லை அரன்அவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.

பொழிப்புரை :

அருளின்றிச் சிவன் இல்லை. சிவனின்றி அருள் இல்லை. ஆகவே, என்றும் அருளோடே நிற்கின்ற அவன், கருவில் வீழ்கின்ற அந்த ஒர் உயிரை வளர்க்கத் தருகின்றபொழுது திரோதான சத்தி, அதனை வளர்க்கின்ற செவிலித் தாய் என்னும் இரு தாயாரிடத்து அன்பை உண்டாக்கித் தருவான்.

குறிப்புரை :

அருளும், சிவனும் ஒன்றாதலைக் காட்டியது உயிரை வளர்த்தற்குக் காரணமும், வளர்க்கின்ற தாயும் அவனே ஆகின்றான் என்பதும் தோன்றுதற்கு. `அருட்சத்தியே உயிருக்கு நற்றாய்` என்னும் கருத்தால், திரோதான சத்தியையும் செவிலியாகக் கூறினார்.
இதனால், கருவைப் பிறப்பித்த பின்னர் வளர்ப்பவனும் சிவபெருமானேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

வகுத்த பிறவியை மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.

பொழிப்புரை :

பாசஞானத்தைத் தருகின்ற உடம்பை வளர்க்கின்ற அம்மையும், நூல்களை மிக உணர்த்திப் பாச ஞானத்தைப் போக்கிப் பசுஞான பதிஞானங்களைத் தருகின்ற அப்பனும் செய்யும் செயல்களாவன முறையே, ஐம்புலன்களைப் பகுத்துணரும் வகையில் உயிர்கட்குப் பலவகைப் பிறப்புக்களைத் தருதலும், அவற்றின் அறிவுக்கறிவாய் நிற்றலைப் புலப்படுத்துதலும் ஆகும்.

குறிப்புரை :

`பிறவியை வகுத்த` என மாற்றிக்கொள்க. தொகுத் தற்குச் செயப்படுபொருள் மேல் (தி.10 பா.468) `வேதம் முதலாக இசைந்த பரப்பினை` என்பதனால் பெறப்பட்டது. அருளை அம்மையாகவும், சிவனை அப்பனாகவும் கூறும் முறை பற்றியும் உடலை வளர்ப்பவள் தாயும், அறிவை வளர்ப்பவன் தந்தையுமாகச் சொல்லப்படும் வழக்குப்பற்றியும் `அருளே பிறப்பைத் தருவது` எனவும், `சிவனே வீடு தருபவன்` எனவும் இருபொருளும் வேறு வேறுபோலக் கூறினார். அங்ஙனம் கூறினாராயினும், `இருபொருளும் ஒன்றே` என்பது மேலைத் திருமந்திரத்தால் இனிது விளக்கப்பட்டது. ``வகுத்த, நீக்கிய`` என முன்னர் உடம்பொடு புணர்த்தலால் பொது வாகச் சுட்டிய வற்றைப் பின்னர்ச் சிறப்பாக இனிது விளக்கினார் என்க.
இதனால், கண்ணுதல்தானே உயிர்களைக் கட்டியும், அவிழ்த்தும் நிற்குமாறு (தி.10 பா.467) கூறப்பட்டது. அஃதாவது திரோதான சத்தி வழியே கட்டுப்படுத்தும், அருட் சத்தியால் வீடுபெறு வித்தும் நிற்பான் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 27

மாண்பது வாக வளர்கின்ற வன்னியும்
காண்பது ஆண்பெண் அலியென்னுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான்அச் சோதிதன் ஆண்மையே.

பொழிப்புரை :

மாட்சிமையோடு கருப்பையுள் வளர்கின்ற கருவைச் சிவபெருமான் செய்வது, `ஆண், பெண், அலி` என்னும் மூவகை அச்சாக. அவ்வச்சுக்கள் அமைவது, மாதா பிதாக்களின் உடற் கூறாகிய காரணப் பொருட்கு ஏற்பவாம். அவற்றிற்கெல்லாம் தக்கவாறே அப்பெருமான் தனது ஆற்றற் பதிவைச் செய்கின்றான்.

குறிப்புரை :

தந்தை தாயரது வெண்டுளி செந்துளிகளை `வன்னி - நெருப்பு` என்றார், அவை அப்பூதத்தின் கூறாதல் பற்றி. அச்சு, வடிவை அமைப்பதாகலின் அதனைக் ``கற்பனை`` என்றார். `கற்பனையாக` என ஆக்கம் வருவிக்க. `பூண்பது` என்பது தொழிற்பெயர். வழி - வாயில்; காரணம். பதிவை ``பதி`` என்றது முதனிலைத் தொழிற்பெயர். ஆண்மை - ஆற்றல். ``ஆம்பதி`` என்றது இன எதுகை.
இதனால், கருவைச் சிவபெருமான் மூவகை அச்சுப்பொருந்த அமைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

பொழிப்புரை :

கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப் பயனின்றி அழிந்தொழியும்.

குறிப்புரை :

வெண்டுளி கருவாதலும், செந்துளி அதனை வளர்ப்பதும் ஆகும். அதனால், அவை இரண்டின் தன்மைக்கும் ஏற்பக் கரு அமையும் என்க. பாழ் நவம், `பாணவம்` எனப் புணர்ந்தது. நவம் - புதிது புதிதாய்த் தோன்றும் பொருள். பாழ் நவம் - பாழாதற்கு ஏதுவாம் பொருள். ஆண், பெண் என்பவற்றுள் முன் வந்தவை ஆகுபெயர்கள்.
இதனால், முன்னை மந்திரத்துள் ``பூண்பது மாதா பிதாவழி போலவே`` என்றது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.

பொழிப்புரை :

துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.

குறிப்புரை :

வெளிக்காற்றை ஒருமுறை உள்ளே வாங்கிச் சிறிது நிறுத்திப் பின் வெளியே செல்லவிடுத்து மீண்டும் அவ்வழியே வாங்கி உள்ளே நிறுத்துதல் `ஒருமூச்சு` எனப்படும். இஃது எல்லா மக்கட்கும் இயல்பில் நிகழ்வதே. ஆழ்ந்த நினைவு இயற்கைக்கு மாறுபட்ட வழிச்செலவு, வருந்திச் செய்யும் தொழில் முதலியவற்றில் மூச்சின் இயக்கம் இயற்கை நிலையினின்றும் வேறுபடும். அவ்வாற்றால் கலவி முடிவின்கண்ணும் அது மாறுபடுதல் இயல்பே. அதனால், கலவிக்குப் பின்னும் கலந்தோர் இருவரும் தம் இயற்கை நிலையில் இருத்தல், கருக்குழவியது உடற்கட்டு முதல் நிலையிலே நன்கு அமைதற்கு வாயிலாய் அமைகின்றது என்க. மூக்கு, வாய் என்பவை வழியாக மூச்சு நிகழ்தலே வெளிப்படையாக விளங்கினும், உடம்பு முழுதும் உள்ள நுண்டுளைகள் அனைத்து வழியாகவும் அது நிகழ்வதேயாம். அதனால் தந்தை தாயரது - சிறப்பாகத் தந்தையது - மூச்சுக் காற்று, கருவுற்ற குழவிக்குப் பயன்தருவதாகும் என்க.
பாய்ந்திடும் யோகிக்கு - மூச்சு நெறிப்பட இயங்கி நிற்கும் யோகிக்கு - `பாய்ந்திடும் யோகிக்கு இவ்வகை பகுத்தறிந்து பாய்ச்சலும் ஆம்` எனக் கூட்டுக. ``பாய்ச்சல்`` என்றது, இங்கு மூச்சுக் காற்றினை.
இதனால், சிவபெருமான் குழவிக்கு வாழ்நாளை வரையறுக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்துள், `அஞ்சு, நாலு` எனக் குறிக்கப்பட்ட மூச்சுக்காற்று அங்ஙனம் இயங்கும்பொழுது இயல்பாக இயங்கும் அளவில் சிறிதே குறையுமாயின், குழவி குறளாய் (வளராது குட்டையாய்க் கிடப்பதாகப்) பிறக்கும். மிகக் குறையுமாயின் குழவி கைகால்கள் முடமாகப் பிறக்கும். இஃது ஆடவரது மூச்சுக் கணக்கேயன்றி மகளிரது மூச்சுக் கணக்கன்று.

குறிப்புரை :

எனவே, மகளிரது அப்போதைய மூச்சின் அளவு குழவி உடலைத் தாக்குதல் இல்லை என்பதாம்.

பண் :

பாடல் எண் : 31

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.

பொழிப்புரை :

கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.

குறிப்புரை :

`ஆதலின், கலவிக் காலத்தில் துணையர் மல சல உபாதிகள் இல்லாதவராய் இருத்தல் வேண்டும்` என்பதாம். இவ்வாறு இருத்தற்கு அவர் இயல்பிலே நல்லுடல் உடையராதல் வேண்டும். இந்நிலை குழவி வளர்ச்சிக் காலத்தில் எனவும் கருதுவர். நாயனார் முன்னும் பின்னும் கலவிக்காலத்தையே கூறி வருதல் நோக்கத் தக்கது.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் குழவியது வினைக் கீடாகச் சிவபெருமான் அதன் புற உறுப்புக்களையும், அகக் கருவிகளையும் அமைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.

பொழிப்புரை :

கலவிக் காலத்தில் கணவனுக்கு மூச்சுக்காற்று வலமூக்கின் வழி இயங்கிக் கொண்டிருப்பின், குழவி ஆணாய் அமையும். இடமூக்கின் வழி இயங்கிக்கொண்டிருப்பின், குழவி பெண்ணாய் அமையும். இருவழியிலும் மாறி மாறி இயங்கிக் கொண் டிருப்பின் குழவி அலியாய் அமையும். இவை நிற்க, கருத் தங்கும் காலத்தில் தாய் வயிற்றில் கீழ்ப்போகும் காற்றுப் போக்கப் படாமல் தடுக்கப்பட்டு மேலெழுந்து பாயுமாயின், இரண்டு கரு தங்கும்.

குறிப்புரை :

ஆண் பெண் அலியாதற்குத் தந்தையது கூறே முதற் காரணமாதலோடு, `பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை` என மேல் (பா. 474) எடுத்தோதியதனால், `வலத்தது` முதலியன தந்தையது மூச்சு என்பதும், குழவி ஒன்றும் பலவுமாய்க் கருக்கொண்டு பிறத்தற்குத் தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளே முதற்காரண மாதலோடு, ``மாதா உதரம் மலம்மிகில்`` என மேல் (பா.475) எடுத்தோதியதனால், ``அபானன் எதிர்க்கில்`` என்றது தாயது வயிற்றிலே என்பதும், பின்னர், ``கொண்ட கால் ஒக்கில்`` என்றதனால், ``வலத்தது, இடத்தது`` என்றதும் அக்காற்றையே யாதலும் அறியப்படும். மூன்றாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க. மேல், (பா. 472) ``ஆண்மிகில் ஆணாகும்`` என்றற் றொடக்கத்தனவாகக் கூறினமையின், இங்கு வலத்தது வாதல் முதலாகக் கூறப்பட்டவை, அவை அவ்வாறு மிகுதற்குக் காரணங்கள் ஆதல் பெறப்படும். அதனால் இவை துணைக்காரணமும், மேற் கூறியவை முதற்காரணமும் ஆதல், விளங்கும். அபானன் எதிர்த்தலும் துணைக்காரணமேயாம். அதனால், இவை, அவற்றிற்கு இவ்வாறு ஒருதலையாக வேண்டப்படாமையும் பெறப்படுவதாம். இவை எல்லாம் தந்தை, தாய், குழவி இவரது வினைக்கீடாகவே நிகழும் என்பது அறிக.
இதனால், குழவியது அச்சு அமைப்பிற்கும், எண் அமைப் பிற்கும் துணைக்காரணமாவன இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடும்
கொண்டநல் வாயுஇரு வர்க்குங் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.

பொழிப்புரை :

கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.

குறிப்புரை :

``ஒத்து`` என்றது, இடம், அளவு இரண்டற்கும் ஒப்பக் கூறியது. அதனானே, `அளவு ஒவ்வாதொழியின், அழகின்றி யிருக்கும்` என்பது பெறப்படும். `மாறிடில்` என்னாது, ``குழறிடில்`` என்றார், `பன்முறை மாறி நிகழின்` என்பது அறிவித்தற்கு.
குழவி ஆணும், பெண்ணும் ஆதற்குத் தந்தையது மூச்சுக் காற்றுத் துணைக்காரணம் என்பது மேற்கூறி, இதனால், `அதனோடு தாயது மூச்சுக்காற்று ஒத்தல் அழகிற்குக் காரணம்` என்பதும், தாயது மூச்சு ஒவ்வாமை கரு நிலைபெறாதொழிதற்குக் காரணம் என்பதும் கூறினார்.
``கொண்டதும்`` என்ற உம்மை, சிறப்பு. `கோல்வளை யாட்கு` என்பதனை, `கோல்வளையாள் கண்` எனத் திரித்து, `கோல்வளை யாள்கண் கொண்டதும் இல்லையாம்` என மாற்றுக. கொண்டது - கொண்ட கரு.

பண் :

பாடல் எண் : 34

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியும்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
போல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.

பொழிப்புரை :

தாய் தனது கருப்பையில் ஏற்றுக்கொண்ட குழவி, முதற்கண் தந்தையது நடுநாடியில் தீயின் கூறாக விளங்கி முதிர்ந்து, பின் தாயது கருப்பையினுள்ளே ஞாயிற்றின் நிறம்போலும் செந்நிறத்தை உடையதாய் முற்றி, அதன்பின்னர், வகைபடத் தோன்றுகின்ற உறுப்புக்களை உடையதாகும்.

குறிப்புரை :

தால் - தாலு; நாக்கு. நாக்கின் முதலிடம் நடுநாடி (சுழுமுனை) ஆதல் பற்றி இவ்வாறு கூறினார். சோதி - தீ. பால் - பகுதி. `சோதியாம் பாலாய்` என ஆக்கம் கொடுக்க. இரண்டிடத்தும், `உள்ளே வளர்ந்து` என மாற்றுக. `தந்தையது, தாயது` என்பன ஆற்றலாற் பெறப்பட்டன. பொருந்துதல் - வளர்ந்து பொருந்துதல். கரு, தாயது செந்நீரால் முதற்கண் செந்நிறம் உடையதாயே இருக்கும் என்க.
தந்தையது வெண்டுளியை, `நீர்க் கூறு` என்பராயினும், அதன்கண் உள்ள உயிராற்றல் தீயின் கூறேயாதலை இந்நூலால் அறிகின்றோம். இவ்வுயிராற்றலை, இக்காலத்தார் `அணு` என்பர். `நீர்` என்னாது, `துளி` (விந்து) என வழங்குதலும் நுண்ணிதாதல் பற்றியும், கருவாகி நிலைபெறுதல் சிறிதளவேயாதல் பற்றியுமாம். தந்தையது உடற் கூற்றில் வளரும் உயிராற்றல், தாயது கருப்பையில் உள்ள பூப்புப் பொருளினுள் புகுந்து கெடாது நிற்றலே கருத் தங்குதலாம். குழவி ஒன்றாதல் பலவாதற்கும் உயிராற்றல் புகப்பெறும் பூப்புப் பொருள்களின் எண்ணிக்கையே காரணம். இக் காரணங்கள் முதற் காரணங்கள் ஆதலின், பிறவாறு மேற்கூறியன பலவும் துணைக் காரணங்களேயாம் என்க. தாயது வயிற்றில் வந்தபின் வளருமாறு கூறுவார், அதற்கு முன்னர் வளர்ந்தவாறும் உடன் கூறினார். இதனால், கரு வளருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே.

பொழிப்புரை :

தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள்காறும் கருப் பையிலே வளரும். பத்தாந்திங்களே பிறக்கும் பருவமாக, அப்பொழுது நிலத்தில் வந்து சேரும். வந்தபின் தாய் தந்தையரைப் புறந்தருபவராகப் பொருந்தி வளரும். அவ்வளர்ச்சி, சுவரெடுத்தல், ஆடைநெய்தல், மாலைதொடுத்தல் முதலியவற்றிற்போலக் கட்புலனாகாது, மாயையினாலே கணந்தோறும் நிகழ்தலை ஒருவரும் காணவல்லரல்லர்.

குறிப்புரை :

`வளர்ந்தபின் அவ்வளர்ச்சியைக் கண்டு வியப்ப தல்லது, வளர்ச்சி கட்புலனாகாது` என்றற்கு ``மாயையினாலே`` என எடுத்தோதினார். இதனால், மாயையின் ஆற்றலும் அறியப்படும் என்க. அருவம் - கட்புலனாகாமை. ஆவது - வளர்வது; என்றது தொழிற்பெயர். `அருவமதாகிய ஆவது` என்க.
இதனால், கரு, கருப்பையுள் வளர்ந்து குழவியாய்ப் பிறக்குமாறும், பிறந்து வளருமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 36

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே!

பொழிப்புரை :

கருவை இட்டவனாகிய தந்தையும் அதனை இட்டமை இடாமைகளை அறிந்தானில்லை. ஏற்றவளாகிய தாயும் அதனை ஏற்றமை ஏலாமைகளை அறிந்தாளில்லை. அக்கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணியாக்குகின்ற பொற்கொல்லனாகிய பிரமன் அவற்றை அறிந்திருந்தும் அவருள் ஒருவர்க்கும் சொல்லிற் றிலன். வினை நிகழ்ச்சி இருந்தவாறே அப்பொற் கொல்லனுக்குப் பணிக்கின்ற தலைவனாகிய சிவனும் அவ்விருவரோடே இருக் கின்றான்; அவனும் அவர்க்கு அவ் வினையியல்பையே உரைத்திலன். அந்தோ! இம்மாயையின் வஞ்சனை எவ்வகையினதாய் உள்ளது!

குறிப்புரை :

`இதனினின்றும் உயிர்கள் உய்திபெறுதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ``பட்டாங்கு`` என்பதில் படுதற்கு வினை முதலாகிய `வினை` என்பது வருவிக்க. சொல்லுதல் - பணித்தல். ``பரமன்`` என்றது, `தலைவன்` என்னும் பொருட்டு. கெட்டேன், இரக்கக் குறிப்பு இடைச்சொல். தட்டானும், பரமனும் உரையாமை, இட்டானும் ஏற்றாளும் தம்மை எண்ணாமையாலாம்.
இதனால், கருவினது தோற்றம் முதலியவற்றிற்குத் தந்தை தாயரே உண்மை நிமித்த காரணர் அல்லாராதல், அவர் மாயையின் வலியைக் கடக்கமாட்டாமையின் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோன்றிய
தொண்புற நாடிநின் றோதலு மாமே

பொழிப்புரை :

ஒருவன், ஒருத்தி ஆகிய இருவர் தம்முள் இன்பம் நுகரவே விரும்பிக் கூட, துன்பத்திற்குக் காரணமான அவ்விருப் பத்தால் ஓர் உயிர் பிறந்து வளர்ந்தபின், அவ்வுயிர், தான் நிலத்தில் வந்து சேர்தற்கு முன்பு கருப்பையினுள் உள்ள துன்பத்தால் `விரைவில் வெளிப்படல் வேண்டும்` என்று விரும்பிப் பெரிதும் முயன்று வெளிப் பட்டுப் பிறந்த செய்தியைப் பின் அறிவுடையோர் அவ்வுயிரும் தம்போல அறிவைப் பெறுமாறு அதற்குச் சொல்லுதல் கூடுமோ!

குறிப்புரை :

`இருவரும் கூடினமை தம் இன்பம் கருதியல்லது, ஓர் உயிர் மக்கள் உடம்பைப்பெற்று உய்தல் வேண்டும் என்னும் கருத்தினால் அன்று` என்பார் ``இன்புற நாடி இருவரும் சந்தித்து`` என்றும், `அக்கூட்டத்தால் அவர் பின்பு குழந்தையை வளர்க்கக் கடமைப்பட்டவராய்த் துன்புறுகின்றனர்` என்பார், ``துன்புறு பாசத்தில் தோன்றி`` எனவும் கூறினார். இவையெல்லாம் பெரும்பாலராய் உலகியலின் நிற்பாரது செயல்பற்றிக் கூறியன. `உலகுய்ய மகப்பெறுவான்` (தி.12 பெ. பு. திருஞான - 59) சந்திப்பாரும் உளர் என்க. ``சந்தித்து`` என்றதனை, `சந்திக்க` எனத் திரிக்க. ``நிலத்தின்`` எனப்பின்னர் வருகின்றமையின், ``உற நாடி`` என்றொழிந்தார். ஒண்மை, `ஒண்பு` என வந்தது. ஒண்மை - அறிவு. `பிறத்தற்கு முன் தான் பட்ட துன்பத்தை உணரின், அவ்வுயிர் மீளப் பிறவி எய்தாது வீடடைய விரையும்; அறிவிப்பினும் அதனை அறியமாட்டாமையால், மேலும் அது பிறவிக்கே வழிதேடுகின்றது; இஃது அதன் வினையிருந்தவாறு` என்றதாம். நான்காம் அடி, இன எதுகை. `தொன்பு` என்பது பாடம் அன்று.
இதனால், இட்டான், ஏற்றாள் என்பவரேயன்றி இடப்பட்ட அது தானும் தனது நிலையைத் தான் அறியாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை
மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.

பொழிப்புரை :

குயிற்குஞ்சாகத் தக்கமுட்டையை அவ்வாறாதற் பொருட்டு அதன் தாய் காக்கையினது கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டை என்றே கருதி அடை காத்தல்போல, சிவன் தனது மகவாகிய உயிர், உடல் பெற்றுச் செயற்படுதற் பொருட்டுக் கருவிலே இட, தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாது, உடல் வருந்தத் தொழில் செய்யாமலும், அதனைப் போக்கிவிட நினையாமலும், `ஏன் வந்தது` என்று மனம் வருந்தாமலும் பேணிக் காத்தல் மயக்கத்தாலாவதே.

குறிப்புரை :

குயில் தன் முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிக்க அறியாமையால் காக்கையின் கூட்டில் அதனை இடும் என்பர். வளர்த்தல், இங்கு முட்டையை அடை காத்தல். ``குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட்டிட்டால்`` என்றது சுட்டிக் கூறா உவமம் ஆதலின், அதற்கேற்ற பொருள் வருவிக்கப்பட்டது. அங்ஙனம் காக்கப்பட்ட கரு, தாயது விருப்பம்போல இல்லாமையும் காணப் படுதலால், அது, காக்கையது விருப்பத்திற்கு மாறாய்த் தோன்றும் குயிற்குஞ்சு போல்வதே என்றபடி ``இல்லை`` என்பவற்றை `இன்றி` எனத் திரிக்க. `வளர்க்கின்றவாறு மயக்கத்தாலாம்` என்க.
இதனால், `கருவாய்த் தோன்றும் குழவி, உண்மையில் சிவன் மகவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதர்ப்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

மரவகைகளுள் சில, கிழங்காய் நின்றே பயன் படும்; சில, முளையானபின் பயன்படும்; சில, முளைக்குப் பின் புதலாய் நின்று பயன்படும்; சில, காய்த்துப் பழமாய்ப் பயன்படும். அந்த அந்த மரவகைக்கு அந்த அந்தப் பொருளே உளதாகிப் பயன் தருதல்போலச் சிவபெருமான் மக்கள் உயிர்க்கேயன்றிப் பிற உயிர்கட்கும் அவ்வவற்றின் தோற்றத்திற்கு ஏற்ப அத்தோற்றப் பொருள்களாய் நின்று அவற்றைத் தோற்றுவிப்பன்.

குறிப்புரை :

`எல்லா மரங்களும் பழமாய்த்தான் பயன்படும் என்பதின்றிப் பல்வேறு வகையில் பயன்படுதல்போல, எல்லா உயிர்களும் மக்களேயாய் - அல்லது கருப் பையில் தோன்றுவனவேயாய் நின்று தோன்றும் என்பதின்றிப் பலவேறு வகையில் தோன்றும்` என்றற்கு இவ்வாறு உவமை கூறினார். `மரவகை` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. அதர் - வழி. இதனால், மக்கள் உயிர்களின் தோற்றத்தை இவ்வாறு செய்விக்கின்ற சிவபெருமான், பிற பிற உயிர்களையும் அவ்வவற்றிற்கு ஏற்ற பெற்றியால் தோற்றுவிப்பன் என்பது இதுபற்றி அறியப்படும் என ஒரு திருமந்திரத்தால் தொகுத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டின்
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே.

பொழிப்புரை :

உலகம் ஒடுங்குங் காலத்து உடம்பும் பல தத்துவங்களாய் ஒடுங்கி, முடிவில் எல்லாவற்றுடனும் மாயையில் ஒடுங்கும். ஒடுங்கிய உடல் மீளவும் முன்போலத் தோன்றுதல் வேண்டும் எனச் சிவபெருமான் திருவுளம் கொள்ளின், கடல் நீரில் தோன்றாது நின்ற உவர்ப்புச் சுவை பின் தோன்றி நிற்கும் உப்பாகத் திரண்டு உருவெடுத்தல்போல, அவனது திருவருட் செயலாலே மீளவும் முன்போலத் தோன்றும்.

குறிப்புரை :

மாயையில் ஒடுங்கும் உலகத்தை, அதற்கு நிலைக்களமாதல் பற்றி முதல்வனிடத்தில் ஒடுங்குவதாகக் கூறினார். ``வேண்டில்`` என்றது இச்சையையும், ``திருவருளாலே`` என்றது கிரியையும் என்க. திரித்து - மீண்டு.
இதனால், உடம்பு ஒடுக்கமும், தோற்றமும் உடையதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.

பொழிப்புரை :

எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.

குறிப்புரை :

விஞ்ஞானம் - விசேட ஞானம்; மெய்யுணர்வு. `விஞ்ஞானாகலர்` என்பது `விஞ்ஞானகலர்` என மருவி வழங்கும். அகலர் - கலை நீங்கினவர் கலை - மாயாகாரியம் என்றல் முக்குண வடிவாகிய பிரகிருதியை. விஞ்ஞானத்தால் கலை நீங்கியவர் விஞ்ஞானாகலர். விஞ்ஞானமாவது, சிவனால் உணர்த்தப்படும் விசேட ஞானம். இது வருதற்கு ஆணவமலத்தின் சத்தி மெலிதாதல் வேண்டும். அஃது இயல்பாகவே அமையப் பெற்றோர், இயற்கை விஞ்ஞானகலர்; இயற்கையாகவன்றித் தவத்தால் இந்நிலை வாய்க்கப்பெற்றுச் சிவனால் உணர்த்தப்படும் ஞானத்தைப்பெற்றுக் கலை நீங்கினோரும் மேற்கூறியவரோடு ஒப்பர் ஆதலின், அவர் செயற்கை விஞ்ஞானகலராவர்.
பிரளயாகலர் - பிரளயத்தில் (உலகம், யாவும் ஒடுங்கிய காலத்தில்) கலை நீங்கப் பெற்றவர். எனவே, `இவர் உலகம் ஒடுங்கிய காலத்தில் ஆணவ மலத்தின் சத்தி மெலிவடையப் பெற்றவர்` என்பது விளங்கும். இவர் இயற்கைப் பிரளயாகலர்; உலக ஒடுக்கத்திற்கு முன் இந்நிலையைப் பெற்றோர் செயற்கைப் பிரளயாகலர்.
சகலர் - பாசப்பற்று நீங்காதவர்; அஃதாவது ஆணவமல சத்தி வலிதாகப் பற்றப்பட்டவர். இவ்வன்மை மென்மைகளை, `தூலதரம், தூலம், சூக்குமம்` எனப் பகுப்பர். ஆணவமலப் பிணிப்புத் தூல தரமாக (மிகவன்மையாக) உடையவர் சகலர்; தூலமாக (சிறிது வன்மையாக) உடையவர் பிரளயாகலர். சூக்குமமாக (மென்மையாக) உடையவர் விஞ்ஞானகலர். இவருள், `நால்வர்` மூவர், மூவர்` எனப்பட்டோர் இவர் என்பது வருகின்ற திருமந்திரத்தால் விளங்கும்.
தம் ஞானம் - பசுஞானம். அஞ்ஞானம் - பாசஞானம் ஒரு புடை ஒற்றுமைகொண்டு சகலர் பிரளயாகலர் விஞ்ஞானகலரது ஞானத்தைப் பாசஞான பசுஞான பதிஞானங்களாக ஒதினார் என்க. ``விஞ்ஞானராதியர் வேற்றுமை`` என்றது `அனைவரது வகையும்` என்றவாறு.
இதனால், `உயிர்கள் மூவகைப்படும்` என்பதும், `அவற்றின் உள்திறங்கள் பத்தாம்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே.

பொழிப்புரை :

மேற்கூறியோருள் விஞ்ஞானகலர் நால்வராவார், `ஆணவமலத்தில் அழுந்தாத அவ்வளவில் நிற்போரும், அட்ட வித்தியேசுரபதவி, சத்தகோடி மகாமந்திரங் கட்குத் தலைவராம் பதவி இவற்றைப் பெற்றோரும், ஞானம் முதிரப் பெற்றோரும், அம்முதிர்ச்சியால் ஆணவமலம் பெரிதும் நீங்கப்பெற்ற முத்தரும்` என இவராவர்.

குறிப்புரை :

மூவகை உயிர் வருக்கத்திலுள்ளாரும் `அபக்குவர், பக்குவர்` என இருதிறத்தினராய் இருப்பர். அபக்குவர், `சிவனைப் பெறவேண்டும் என்னும் ஆர்வம் இன்றித் தாம் உள்ள உலகத்துப்` போகங்களை நுகர்ந்திருப்போர். பக்குவர், சிவனைப்பெறவேண்டும் என்னும் ஆர்வத்தால் அவனை அடைந்திருப்பவர். ஆர்வம் உளதாய வழி அடைதற்கு இடையீடில்லை. இந்த ஆர்வம் சத்திநிபாதத்தால் உண்டாவதாகும். இவருள், ``கேவலத்து ஆராது விட்டவர்`` என்றது அபக்குவரை. கேவலமாவது ஆணவ மலத்தில் மூழ்கி அதுவேயாய்க் கிடத்தல், எனவே, இதுவே, `விஞ்ஞானகலர்` என்பவரது இயல்பாதல் பெறப்பட்டது. அவர் பக்குவம் எய்தியவழி ஞானத்தைப் பெற்று மூவகை நிலையில் நிற்பர். அஃதாவது, ஆணவ மலம் நீங்கிய தாயினும் அதன் வாசனை, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலையினதாய் நீங்காது நிற்கும். இவை ஓன்றின் ஒன்றுமிக்க வன்மையுடையன; அவற்றுள் இலயமல வாசனை உடையவரையே, ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றார். ``விட்டு`` என்றதனால் மலம் நீங்கப் பெற்றமையும், ``நின்றார்`` என்றதனால், இலய வாசனை யளவாய் நிற்கப்பெற்றமையும் பெறப்பட்டன. இவர் சாந்திய தீத கலையில் சத்தி சிவ தத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்ந்திருப்பர். `அபரமுத்தர்` எனப்படுவார் இவரே என்க. ஆணவம் விட்டபின் இவர்போல நில்லாது, சிவனோடு இரண்டறக் கலந்து சிவனது பேரின்பத்தையே நுகர்ந்திருப்பவர் பரமுத்தராவர். அவரை உயிர் வருக்கத்தினருள் வைத்து எண்ணுதல் கூடாமையின், அவரைக் குறித்திலர்.
இனிப் போகமல வாசனை உடையவரையே `ஆணவம் விட்டார்` என்னாது ``மெய்ஞ்ஞானர்`` என்று மட்டும் குறித்தார். இவர் சாந்தி கலையில் சதாசிவ தத்துவத்தில் உள்ள புவனங்களில் அமைந்த போகங்களை நுகர்ந்திருப்பர். ஆகமங்களைக் கேட்டவராகச் சொல்லப்படும் `பிரணவர்` முதலிய பதின்மரும் இந் நிலையினராகவே சொல்லப்படுகின்றனர். உயிர் வருக்கத்தினராய்ச் சதாசிவ புவனத்துள் சாலோகம் முதலிய நிலைகளைப் பெற்று நிற்றலின் இவர்கள், `அணு சதாசிவர்` எனப்படுகின்றனர்.
அட்ட வித்தியேசுரராவார், அனந்தர், `சூட்சுமர், சிவோத்தமர் ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர்` சிகண்டி என்போர். இவர்கள் சிவாகமங்களைப் பலர்க்கும் உணர்த்துபவராதலின் `வித்தியேசுரர்` எனப் பெயர் பெற்றனர்.
சத்த கோடி மகா மந்திரங்கள், `நம:, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வௌஷட், பட், ஹும் பட்` என்னும் ஏழுமுடிபுகளை உடையன. கோடி - முடிபு. இம் மந்திரங்களைக் கணிப்போருக்கு அவற்றின் பயனைத் தரும் தலைவராய் உள்ளோரே `மந்திர மகேசுரர்` எனப்படுவர். இவ்விருதிறத்தாரும் இப்பதவிகளைப் பெற்றுச் சாந்தி கலையில் ஈசுர தத்துவ புவனங்களில் வாழ்பவராவர். அதனால், இவ்விருவரும் ஒருவகையினரே என்க.
இவருள், அனந்த தேவர் சுத்த வித்தியா தத்துவத்திலும் சென்று அங்குள்ள பிரமனுக்கு வேதத்தையும், சீகண்டவுருத்திரருக்குச் சிவாகமத்தையும் அறிவுறுத்தி அங்குள்ள உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோர் வழியாக வித்தியா கலையுட்பட்ட புவனங் களையும், சீகண்ட உருத்திரர் வாயிலாகப் பிரதிட்டை நிவிர்த்தி கலைகளுட்பட்ட புவனங்களையும் நடத்துவர். இங்ஙனம், விஞ்ஞான கலர் நால்வரது இயல்பு ஒருவாறு கண்டுகொள்க.
எஞ்ஞானர் - எல்லா ஞானமும் உடையோர்; என்றது, `மந்திரம் கணிப்போர் அனைவரது செயலையும் உணர்வர்` என்றபடி. ``விஞ்ஞானர்`` என்றது, `விஞ்ஞான வகையினராவர்` என்றவாறு. இறுதியில் `இந்நால்வருமே` என்னும் தொகை எஞ்சி நின்றது. வித்தியேசுரர்களும் மந்திர மகேசுரர்களும் ஒருவகையினரேயாதல் வெளிப்படை.
இதனால், மேல், ``விஞ்ஞானர் நால்வர்`` எனப்பட்டார் இவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.

பொழிப்புரை :

இனிப் பிரளயாகலர் மூவராவார், `அபக்குவரும், பக்குவரும்` என இருதிறப்படும் நிலையில் பக்குவர், `சுத்தவித்தையில் நின்று அசுத்த மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், குண தத்துவத்தில் நின்று பிரகிருதி மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், எனத் தனித்தனி நூற்றெண்மராம் உருத்திரர்களாவர். எனவே, இவ்விருவரோடு, பெத்தராகிய அபக்குவரும் கூடப் பிரளயாகலர் மூவராகின்றனர். இனிச் சகலராவார் ` ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும் மலமும் உடையவரே.

குறிப்புரை :

``இரண்டாவதில் முத்தி எய்துவார்`` என்றது, `அடுத்த படைப்பில் முத்தி எய்துபவர்` என்றவாறு. எனவே, இது `பிரளயாகலர்` என்னும் பொருளதாயிற்று. எய்துவார்`` என்றது பெயர். அத்தனை - அத்துணையர், அஃதாவது `இரண்டாவது` என்பதில் அமைந்த `இரண்டு` என்னும் துணையினர். `அத்தனை யராவர் பெத்தரும், உருத்திரரும் என்பர்` என முடிக்க. மீள ``இரண்டாவதுள்ளே`` என்றது, பிரளயாகலர் என்னும் வகையுள்` என்றவாறு. ``உருத்திரர்`` என்பதன்பின் `உளர்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. முரண் - (ஆணவமலத்தின்) வலிமை. மேல் ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றதனால் `விஞ்ஞானகலர் ஆணவம் ஒன்றே உடையார்` என்பதும், `கலை, என்பது மாயையைக் குறிப்பதாகலின், `அகலராகிய பிரளயாகலர்க்கு அஃது இல்லை` என்பதும் போந்தன. ``பெத்தர்`` என்று ஒழியாது, `இருமல பெத்தர்` என்றது, அவரது இயல்பை விதந்தவாறு. ``நூற்றெட்டு`` என்னும் தொகைச் சொல் ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்க, ``இரண்டாகும்`` என்றது, அத்தொகை முழுவதையும் விசேடித்தது. `சகலராவார் இவர்` என்பதனையும் ஈற்றடியால் ஈண்டே கூறினார்.
இதனால், `பிரளயாகலர் மூவர் இவர்` என்பது கூறப்பட்டது. பன்மை பற்றி இவரையே எடுத்தோதி, சுத்தவித்தையில் நிற்கும் உருத்திரன், மால், அயன், இந்திரன், சீகண்ட உருத்திரர், நந்தி, கணங்கள் என்பவரையும் உபலக்கணத்தால் தழுவிக்கொள்ள வைத்தார் என்க. `பிரளயாகலர் மூவரும் தவத்தால் விஞ்ஞான கலரோடொத்து அவரது நிலைகளில் நிற்றல் உண்டு` என்பதுமேலே குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.

பொழிப்புரை :

சகலரும், `அபக்குவர், பக்குவர்` என இருதிறப் பட்ட நிலையில் பக்குவர், `சாதகரும், சீவன்முத்தரும்` என இரு வகையினர் ஆவர்.

குறிப்புரை :

எனவே, `அபக்குபவர்`, சாதகர், சீவன் முத்தர்` எனச் சகலரும் மூவராகின்றனர்.
பெத்தத்த சித்து, ஆன்மா. முத்தச் சித்து, சிவம். இவ் விரண்டும் ஒருமைப்பட இரண்டிலும் நிற்பவரே, `சீவன்முத்தர்` எனப்படுவர். சித்துமாய் (சிவமாயும்) மலமயக்கத்தை முற்றக் கழிக்கமாட்டாமல் அதனைக் கழித்தற்பொருட்டு முயல்பவரே `சாதகர்` எனப்படுவர். `சித்தாயும்` என உம்மையை மாற்றியுரைக்க. சத்தம் - உலக ஆரவாரம்.
ஈற்றடியினால் சகலருள் அபக்குவரது தன்மையை விளக்கினார். எனவே, அந்நிலையை உடையார் அபக்குவர் என்பது போந்தது. ஊடு, எழனுருபு. மத்தம் - மயக்கம். `சகலத் துளார் ஊடுற்றாரும், மாட்டாரும் ஆவர் என முடிக்க. `ஆவர்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `சகலர் மூவராவர் இவர்` என்பது கூறப்பட்டது. இவருள்ளும் தவத்தால் பிரளயாகலரோடு ஒப்பவும், விஞ்ஞான கலரோடு ஒப்பவும் அவ்வப்புவனங்களிற் செல்வார் உளர் என்பது மேலே குறிக்கப்பட்டது.
[இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் மந்திரம் இவ்வதிகாரத்தின் இறுதியதாம்.]

பண் :

பாடல் எண் : 5

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.

பொழிப்புரை :

இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.

குறிப்புரை :

இங்கு, `வித்தியேசுரர், மகேசுரர்` இருவரையும் வெறெண்ணியும், உருத்திரராவர் அனைவரையும் ஒன்றாக வைத்து ஏனையோரை உடன்வைத்து எண்ணியும் தொகை கூறினார், `சகலரும் இவ்வாறெல்லாம் ஆவர்` என்பது உணர்த்துதற்கு.
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `சகலத்தர் அகலராம் ஒன்பானான வேறுயிர்களாவார்` என்று எடுத்துக்கொண்டு, கேவலம் மேவுவோரும், தங்கும் இருமலரும் ஆவர்` என முடிக்க. `விஞ்ஞானராகிய மேவுவோரும்` எனவும், `தஞ்ஞானராகிய இருமலரும்` எனவும் இயையும். `இருமலரும்` என்பதன் பின் `ஆவர்` என்பது எஞ்சிநின்றது. ``வேறுயிர்கள்`` என்றது, `இயற்கையாலன்றிச் செயற்கையால் உயரும் உயிர்கள்`` என்றதாம். சகலரை இவ்வாறு கூறவே, பிரளயாகலரும் விஞ்ஞானகலராதல் சொல்லாமே அமைந்தது.
இதனால், விஞ்ஞானாகலர், பிரளயாகலர்` என்னும் வகையைச் செயற்கையால் பெறுவோரும் உளர்` என்பது கூறப்பட்டது.
`கேவலம்` என்பது, இங்கு `ஒன்று என்னும் பொருள்பட நின்றது. இத்திருமந்திரத்தைப் பாடம் பலபட ஒதுவாரும், `விஞ்ஞானகலர் முதலிய ஒவ்வொரு வகையினருள்ளும் அங்ஙனமே விஞ்ஞானகலர் முதலிய மூவர் உட்பிரிவினராக உளர்` என இயற்கை நிலையினரே வேறோராற்றால் ஒன்பது வகையினராவர் என்பது இதற்குப் பொருளாக உரைப்பாருமாவர். அவ்வுரையால் சிறப்பு ஒன்றும் இல்லாமை அறிக.

பண் :

பாடல் எண் : 6

வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே.

பொழிப்புரை :

சகல வருக்கத்தினர் வெவ்விய ஞானமாகிய சீவ போதத்தால் செய்துகொண்ட வினைகளில் சில நல்வினை காரணமாக மக்களுடம்பைப் பெற்றுப் பூலோகத்தில் வாழ்ந்து, அங்கும் அந்தச் சீவபோதத்தால் செய்த கன்மங்களில் சில நல்வினை காரணமாகச் சுவர்க்கலோகத்தில் தேவராய் இன்பந்துய்த்துப் பின் எம் ஞானம் போல்வதாகிய மெய்ஞ்ஞானத்தைத் தலைப்பட்டு, அது முதி ராமையால் இடையீடுபட்டுப் பதமுத்தி அபரமுத்திகளில் நின்று, முடிவில் மெய்ஞ்ஞானம் முதிரப்பெற்றுச் சிவத்தோடு இரண்டறக் கலத்தல் உள்ளதே.

குறிப்புரை :

`அதனால் அவர் பிரளயாகலர் விஞ்ஞானகலராதற்குத் தடையில்லை` என்பது குறிப்பெச்சம். இதனானே, சகல வருக்கத்தினர் மேல் நிலையை எய்துமாறு கூறப்பட்டவாறு அறிக. சகலர்க்குக் கூறிய இம்முறைபற்றி ஏனை இருவகையினர் மேல் நிலை எய்துமாறும் அறியப்படும்.
`கூடி, புக்கு, போய், மேவல்` என்பதற்கு, `சகலத்தார்` என்னும் எழுவாய், மேலைத் திருமந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `விஞ்ஞான, அஞ்ஞான` என்பன பாடம் அல்ல.
இதனால், ஏதுக் கூறி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே

பொழிப்புரை :

ஆணவத்தால் மிகுவிக்கப்பட்ட அறியாமையில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளைக் கடந்தவர்க்கே, நாதம், விந்து முதலிய எல்லாத் தத்துவங்களும் தெளிவாய் விளங்கும். ஏனெனில், ஆணவமும், அதுவழியாகக் கன்ம மாயைகளும் ஆகிய அவற்றுட் கட்டுண்டு நின்றவர் பொருட்டன்றோ அவ் விந்து நாதம் முதலிய தத்துவங்கள் தோன்றுகின்றன!

குறிப்புரை :

துற்ற-செறிவித்த. `அவித்யா` என்னும் ஆரியச்சொல்; `அவித்தா` எனத் திரிந்தது. ``நனவு`, என்றது உபலக்கணம். அஞ்ஞானத்தில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகள், கேவல சாக்கிராதியும், சகல சாக்கிராதியுமாம். அவற்றை நீங்கினோர் சுத்த சாக்கிரம் முதலியவற்றை எய்துவர். அவர்கட்கே தத்துவங்கள் பலவும், `உருவம் தரிசனம், சுத்தி` என்னும் முறையில் படிப்படியாக விளங்கும். அங்ஙனம் விளங்கவே மாயா காரியங்களாகிய அத்தத்துவங்களும், அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு நிற்கும் கன்மங்களும் நீங்கும். இவற்றின் நீக்கத்திற்கு, மூலமலமாகிய ஆணவம் நீங்கியதே காரணமாகும். அதனால், ``ஆணவம் துற்ற ... ... சகலாதி`` என்றார்.
காணிய `செய்யிய` என்னும் வினையெச்சம். `காணிய ஆம் விந்து நாத சகலாதி` என மாற்றுக. சகலம் - எல்லாம். ``சகலாதி`` என்றதில் ஆதி, தத்துவம். இது தமிழ் வழக்காய்ப் பன்மை குறித்து நின்றது, ஈற்றடியையும் `சிவதத்துவம் சத்தியாம்` என மாறிக் கூட்டுக. `தத்வம்`, ஆரியமாயே நின்றது. `நாதம், விந்து முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியமாகிய தாத்துவிகங்களும் ஆணவமாதி அடைந் தோர் பொருட்டு` எனவே, ஆணவமாதி உள்ள துணையும் இவை இனிது காட்சிப்படா என்பது விளங்குதலின், ஆணவ முதலிய அகன்றோர்க்கு அவை காட்சிப்படுதல் அருத்தாபத்தியால் பெறப் படும் என்றவாறு. `அவர் அன்றே` என்பது பாடம் அன்று.
இதனால், `விஞ்ஞானகலரேயாயினும் மெய்ஞ்ஞானமின்றி வீடு அடையார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.

பொழிப்புரை :

ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர் பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.

குறிப்புரை :

நாடிக் காணுதலே, `தத்துவ தரிசனம்` எனப்படும். தெளியக் காணுதலே தத்துவ சுத்தியாம். தத்துவ சுத்தி எய்தினோர் ஆன்மதரிசனமும் சிவரூபமும் உடன் நிகழப்பெற்றுப் பின் சிவதரிசன சிவயோகங்களால் ஆன்மசுத்தி எய்தப் பெறுவராகலின் ``பசுபாசம் அற்றோர்`` என்றாற்போல இறந்த காலத்தாற் கூறாது, ``பவமான தீர்வோர்`` என எதிர்காலத்தாற்கூறினார். `பசு பாசம்` என்பன, அந்த அந்த ஞானத்தைக் குறித்த ஆகுபெயர்கள். `நாடிக்கண்டோர் அற்றோர், தீர்வோர்` எனக் கூட்டுக.
இதனால், `ஞானம் பெறினும் அது முதிராதவழிப் பரமுத்தி கூடாது` என்பது கூறப்பட்டது. இவ்விரு திருமந்திரங்களும், `விஞ்ஞானகலராதலே வீடுபேறு போலும்` என மலையாமைப் பொருட்டு அருளிச்செய்யப்பட்டமையின், இவ்வதிகாரத்தவாயின.

பண் :

பாடல் எண் : 1

திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே.

பொழிப்புரை :

கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னேயாயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெருஞ் சித்திகளையும், பதமுத்தி அபர முத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலமத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.

குறிப்புரை :

சிவஞானியர்க்குச் செய்யப்படுவதைச் சிவன் தனக்குச் செய்ததாக ஏற்றுக்கொள்ளுதலால், அது பெரும்பயன் தரவல்ல தாகின்றது. யாதும் அறியாதார்க்கு ஈவது வஞ்சரை வளர்க்கும் செய்கையாய் முடிவதால், அது, கருதிய பயன் தாராமையே யன்றிக் கெடுதற்கும் ஏதுவாம் என்க. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். - குறள், 87 எனவும், ``தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்`` -நாலடியார், 38 எனவும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலின் சிறப்பு இவ்வாறே யாண்டும் எடுத்தோதப்படுதல் அறிக. ஈண்டுக் கூறுவன தற்போதம் இறவாத நூனெறி பற்றியனவும், ``எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி`` (தி.6 ப.1பா.3) என்றற்றொடக்கத்தன தற்போதம் இறந்த பத்திநெறி பற்றியனவும் ஆகலான், இவை தம்முள் முரணா என்க. ஈதல், இங்கு, `கொடுத்தல்` என்னும் பொருளது. அறங்கருதித் தாழ்ந்தோர்க்கு அவர் வந்து இரந்தவழி ஈதல் ஈகையாகும். குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக்கொடுத்தல் கொடையாகும். இவற்றுள் கொடை செய்யும்வழிக் கொள்பவரையே, `பாத்திரம்` என்பர். அதனால், இவ்வதிகாரம் கொடை செய்வாரை நோக்கியதன்றி, ஈகை செய்வாரை நோக்கியது ஆகாமை அறிக. இதனானே, இது பயன் கருதிச் செய்யப்படுவதாதலின், பின்னர் (தி.10, 7ஆம் தந்திரம்) வருகின்ற, பயன்கருதாத `மாகேசுரபூசையின்` வேறாதல் அறிக. கொடை, `தானம்` என்றும், ஈகை, `தருமம்` என்றும் சொல்லப்படும். ஈகை, `ஐயம்` எனவும்படும். திருவள்ளுவர் கொடையை விருந்தோம்பலில் கூறினார். ஈகையை, ஈகை என்றே வைத்துக் கூறினார். ஔவையாரும், `ஐயம் இட்டுண்` `தானமது விரும்பு` (ஆத்திசூடி) என்றார். பயன்பெரிதாதலும், பயன் கெடுதலும் இனிது விளங்குதற்பொருட்டு அபாத்திரத்தையும் இங்கு உடன் வைத்துக் காட்டினார். இத்திருமந்திரப் பொருளே பற்றி, சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலமளவே செய்திடினும் நிலம்மலைபோல் திகழ்ந்து பவமாயக் கடலில் அழுந் தாதவகை எடுத்துப் பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுத்துத் தவமாரும் பிறப்பொன்றில் சாரப் பண்ணிச் சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே. எனச் சிவஞானசித்தி (சூ. 8 - 26) நூல் கூறுதல் காண்க. ``சித்தி`` என்றதை ``முத்தி`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. இதனால், கொடை செய்வோர் சற்பாத்திரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

பொழிப்புரை :

உலகத்தில் உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன் கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண் டவரது உயிரைத் தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக் கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களாதலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.

குறிப்புரை :

`அதனால், அவரே சற்பாத்திரர்` என்பது குறிப் பெச்சம். ``உயிர்கொள்ளும் குணத்தான்`` என்றதனை, தி.8 `உயிருண்ணிப் பத்து` என்பதனோடு வைத்து நோக்குக. `ஆம்` என்பதனை நாயனார் படர்க்கை ஐம்பாற்கும் உரித்தாகவே ஓதுவர். இதனால், சிவஞானிகள் சிலரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.

பொழிப்புரை :

நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.

குறிப்புரை :

`அவ்விளக்கினை அடைந்தோரே சற்பாத்திரர்` என்பது குறிப்பெச்சம். மெய் - உடம்பு. `விட்டிலேன்` என்றது, அதனொடு கூடி வாழ்தலைக் குறித்தது. இடிஞ்சில் - அகல். அஃது ஆகுபெயராய் விளக்கை உணர்த்திற்று. `இடிஞ்சிலும் ஆம்` என்ற உம்மை, `காணப்படு பொருளும் ஆம்` என ஆக்க உம்மை. ``அவனருளாலே அவன் தாள் வணங்கி`` (தி.8 சிவபுராணம், 18) என அருளிச் செய்தமை காண்க. ஈற்றடியை, `நெய் விட்டிலாத` என ஓதி, ``ஆமே`` என்பதற்கு, `பயன்தருமோ` என உரைத்து, சிவஞானம் இல்லாதவரால் பயன் இன்றாதலை ஒட்டணி வகையால் பெறுவாரும், `புரிசடையான் அடியாகிய நெய்` என உருவகமாக்கி அப்பொருள் பெறுவாரும் ஆவர். அவருள் முன்னையோர்க்கு `அடி` என்பதனை இருகாற் கூறவேண்டாமையும், பின்னை யோர்க்கு இடிஞ்சிலாதற்கு ஏற்புடைய பொருள் கூறப்படாமையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 4

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.

பொழிப்புரை :

விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமே யன்றி நில்லா; வருவன வருமே யன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.

குறிப்புரை :

`அவனும் சற்பாத்திரனே` என்பது குறிப்பெச்சம். காவலன் - அரசன்; முதல்வன். `கண்டு, அவன் ஏவின செய்யும்` என்க. இழை - நூல். ``இலங்குநூல்`` (குறள், 410) என்றார் திருவள்ளுவரும். `இளங் கிளையோன்` எனப் பாடம் ஓதி, `புத்தடியான்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். சிவன் காட்டிற்றையே கண்டு அவன் ஆணைவ ழியே நிற்றல் புத்தடியாற்குக் கூடாமை அறிக. அன்றியும் இத்திரு மந்திரம் பின்னர் ஓரிடத்தில் உள்ளவாற்றையும் நோக்குக. இதனால், சற்பாத்திரராய சிவஞானியருள் நூனெறியாளரது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.

பொழிப்புரை :

சிவநெறி ஒழுக்கமும், தவமும் இன்மையால் உயர்வு பெறாத மக்களை வேடமாத்திரத்தால் வழிபட்டுத் தானம் செய்வது, வறட்டுப் பசுவைப் பிறவி மாத்திரத்தால் வணங்கி உணவளித்துப் பாலைக் கறந்து பருக நினைத்தலோடு ஒக்கும். இனித் தானத்தை உயர்ந்தோரை அறிந்து செய்யாமல் எவரிடத்தும் செய்தல், ஒரு பயிரைக் காலம் அறிந்து செய்யாது, எக்காலத்திலும் செய்தலையும் ஒக்கும்.

குறிப்புரை :

பசுவினது வறட்டுத் தன்மையை அறிதலினும், காலத்தை அறிதல் அரிதாதல் பற்றி, உயர்ந்தோரை அறிதலின் அருமையை விளக்கப் பின்னும் அவ்வுவமையைக் கூறினார். இரண்டு உவமைகளானும் `உயர்ந்தோர் எய்தியவழி இகழ்ந்திராது ஏற்று வழிபட்டுத் தானம் செய்க` என்பதும் பெற்றாம். ``குனிந்து`` என்பது பொருளினும் சென்று இயையும். ``ஈந்தது`` என்றே போயினா ராயினும், `ஈந்து பயன்பெற நினைப்பது` என்பது உவமையால் விளங்கும். `அது பயிரும் ஆகும்` என்க. உம்மை, தொகுத்தல். இதனால், அசற்பாத்திரத்தில் செய்த தானம் பயன்படாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொ ளீரே.

பொழிப்புரை :

பொருளைத் தானம் செய்தல், யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரனுடையோர்க்கேயாம். அவ் வாறன்றி, அவ்வுரனிலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.

குறிப்புரை :

``ஈவது`` முதலிய நான்கும் தொழிற்பெயர்கள். `தவிர்வன செய்வன` என்னாது ``யோக இயம நியமங்கள்`` என்றார், `அறநெறியளவில் நில்லாது, கடவுள் நெறியினும் சென்றவராதல் வேண்டும்` என்றற்கு. `அன்பால் தங்கும்` என உருபு விரிக்க. பின்னர் வந்த, ``அறிந்து`` என்னும் எச்சம் ``தங்காதவர்`` என்பதன் எதிர் மறையோடு முடிந்தது. இத்தொடர், `அந்நிலையில் நில்லாதவர்` என்னும் சுட்டளவாய் நின்றது, `அவர்க்கே` என்னும் ஏகாரம் தொகுத் தலாயிற்று. ``அன்றி`` என்பது முதலியவற்றை வேறு தொடராக்குக. `தகாதார்க்குக் கொடுக்கப்படும் பொருள் தீய வழியிற் சென்று பலர்க்கும் தீங்கு விளைக்குமாகலின், அக்குற்றம் பொருளை ஈந்தாரையே முன்னர்ச் சாரும்` என்பது கருத்து. அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினால் அலறு முந்நீர்த் தடங்கடல் நடுவுள் தீவு பலஉள அவற்றுள் தோன்றி உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வார் மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேல் மன்ன ரேறே. -சீவகசிந்தாமணி - முத்தியிலம்பகம் , 27 என்றதும் காண்க. இதனால், அசற்பாத்திரத்தில் இட்ட தானம் பயன்படா தொழிதன் மேலும், துன்பம் பயக்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசர்க்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தூடணம் கற்பிப்போன்
போமா நரகில் புகான்போதங் கற்கவே.

பொழிப்புரை :

குற்றம் நீங்குதற்கு நிமித்தனாய சிவபிரானுக்கும், சிவகுரவர்க்கும், சிவயோகியர்க்கும் குற்றம் கற்பித்து இகழ்பவன் பின் விளைவதை அறியான். அவன் பஞ்ச மாபாதகனிலும் பெரும் பாதகன். அதனால், அவன் பின்னர்ப் பெரு நரகில் வீழ்வான். இகழ்ந்து நிற்கும் அவன் பின்னொரு ஞான்று நல்லறிவைப் பெற்று அவர்களைப் புகழ்ந்து வழிபடுவானாயின், முன் செய்த பாதகத்தினின்றும் நீங்கி நரகம் புகாதொழிவான்.

குறிப்புரை :

முதலடியை மூன்றாமடிக்குப் பின்னர் வைத்து `மா நரகில் போம்` எனவும், `போதம் கற்கப் புகான்` எனவும் கூட்டி உரைக்க. இதனால், சற்பாத்திரராய் உள்ளாரை அசற்பாத்திரராக இகழ்தலால் வரும் குற்றம் கூறப்பட்டது. இதுவும் தானம் செய்வார்க்கு ஆகாமை பற்றி இவ்வதிகாரத்திற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் சிவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதாற் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழாம் நரகக் குழியிலே.

பொழிப்புரை :

`தலைவனே, சிவபெருமானே` என்று அவனது நாமத்தைச் சொல்லிக் கைகூப்பி அவனை நினைத்து வணங்கித் தானம் வாங்க அறியாதவர்க்கு, நிலத்தளவும், மலையளவுமான பெரும் பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் அப்பொருளால் பயன் பெறாது, ஈந்தோனும் ஈயப்பட்டோனும் (ஏற்போனும்) ஆகிய இருவரும் மீளாத நரகக் குழியிலே வீழ்வர்.

குறிப்புரை :

``அத்தனை`` என்றதனை, `மண்` என்றதற்கும் கொள்க. `இறைஞ்சாதார்க்கு ஈயினும்` என மேலே கூட்டுக. தானம் வாங்கு வோர் அதனைத் தமக்கு உரியதாக நினையாது சிவனுடையதாக நினைந்து, `சிவனுக்கு ஆகுக` (சிவார்ப்பணமஸ்து) எனக் கூறியே ஏற்றல் வேண்டும். அவ்வாறு ஏலாதார் சிவனது பொருளைக் கவர்ந்த சிவத் துரோகிகளாவர். அதனால், `அவரும், அவருக்குக் கொடுத் தோரும் நரகுறுவர்` என்றார். தானம் வாங்காது தம் பொருளை நுகர்வோரும் அங்ஙனமே நினைத்தல் வேண்டுமாயினும், அவர், `அங்ஙனம் நினைக்கும் உயர்ந்தோர்` எனத் தம்மைக் கூறிக் கொள்ளாமையின் அவர்க்கும், அவரொடு பழகுவோர்க்கும் பெருங் குற்றம் இல்லை`. தானம் வாங்குவோர் அத்தன்மையுடைய உயர்ந் தோராகத் தம்மைக் கூறிக்கொண்டு, தானம் செய்வாரை வஞ்சித்தலின் குற்றமுடையராகின்றனர். இதனை உட்கொண்டே திருவள்ளுவரும், நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். - குறள் - 276 என்றார். இனிக் கொடுப்பாரும் அவ்வாறே சிவனை நினைந்து, ஏற்போரைச் சிவனாகவும், பொருளைச் சிவனுடையதாகவும் கருதி `சிவனுக்கு ஆகுக` என்று சொல்லிலே கொடுத்தல் வேண்டுமாதலின் ``இருவரும்`` என்றார். ``ஈந்த`` என்னும் பெயரெச்சம் வினைமுதற் பொருண்மையும், கோடற் பொருண்மையுமாக இருநிலைமை எய்திநின்றது. இதனால், மேல், ``பெரும்பிழை`` எனப்பட்ட, அசற் பாத்திரத்தில் இடும் குற்றத்தால் விளையும் துன்பம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

பொழிப்புரை :

உள்ளத்திற்றானே நற்புண்பகளாகிய பல தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்குமாறு அவற்றில் மூழ்குதலை மெல்லப் பயிலாத வஞ்ச மனம் உடைய அறிவிலிகள், புறத்தே பல தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும், மேடும் கடந்து நடந்து இளைக்கின்றனர்.

குறிப்புரை :

கல்வி, அத்தீர்த்தத்தில் மூழ்கக் கற்றல்.
இதனால், அகத்தூய்மையின்றிப் புறத்தே தீர்த்தத்தில் மூழ்குதலால் பயனில்லை என்பது கூறப்பட்டது.
கங்கை யாடிலென்! காவிரி யாடிலென்!
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்!
ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்!
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே. -தி.5 ப.99 பா.2
கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
என அப்பரும் அருளிச்செய்தல் காண்க. -தி.5 ப.99 பா.9

பண் :

பாடல் எண் : 2

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.

பொழிப்புரை :

தெளிந்த ஞானிகளது உள்ளத்தில் வீற்றிருப் பவனாகிய சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிக்கத் தெரிந் தவர்க்குக் குளிர்ச்சி உடையனாய் விளங்குவான். யோக நெறியில் மூச்சை அடக்க அறிந்தவர்க்கும் அவன் ஒருகால் விளங்குதல் கூடும். ஆயினும், ஞானம், அன்பு, யோகம் என்ற இவற்றுள் ஒன்றும் இன்றித் தீர்த்தத்திலே மட்டும் சென்று முழுகத் தெரிந்தவர்க்கு அவன் அடைதற்கு அரியன்.

குறிப்புரை :

நான்கு, இரண்டாம் அடிகளை ஒன்று நான்காம் அடிகளாக வைத்து உரைக்க. தளி - நீர்த்துளி. ``தண்ணிது`` என்பது பண்புப்பெயராய் நின்றது. குளி - குளித்தல், முதனிலைத் தொழிற் பெயர். ``கூடவும்`` என்ற உம்மை, சிறப்பு. தியான சமாதிகளிற் செல்லாது இயம நியம பிராணாயாமங்களில் நிற்பவர்க்கு எளிதன்மை கூறுவார், ``வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்`` என்றார்.
இதனால், ஞானமாகிய அன்பும் இல்லாதவர் தீர்த்ததில் சென்று முழுகின் பயன் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே.

பொழிப்புரை :

அகத்தே உயிர்க்குயிராக உணரப்படும் ஒருவ னாகிய சிவபெருமானை அவ்வுள்ளத்துள் அன்பில்லாது ஆரவார மாத்திரையாகச் செய்யும் செயல்களால் ஒருவரும் அடைதல் இயலாது. ஆகவே, அன்புமிகும் வழியை நாடாமலே புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றை நாடிச்செல்பவர், தீவினையாகிய கிணற்றில் போகடப்பட்ட பத்தலேயாவர். அதனால், அவருள்ளத்தில் அவன் விளங்குவனோ!

குறிப்புரை :

``நாடிவிடும்`` என்பது ஒருசொல். `பத்தலாவர்` எனவும், `அவருள் உள்ளானே` எனவும் இருதொடராகக் கொள்க. பத்தல் - நீர்முகக்கும் கருவி. `அன்பின்றித் தீர்த்தத்தில் முழுகுதலாலே சிவனைப் பெறுதல் கூடுமாயின், நீர்ப்பத்தலும் சிவனை அடையும்` என நகையுண்டாகக் கூறியவாறு.
இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே.

பொழிப்புரை :

சிவபெருமானை அறிவால் அறிகின்றவரே அமரர் (இறப்பும், பிறப்பும் இல்லாதவர்) ஆவர். அவரே சிவலோகத்தில் சென்று வீறு பெற்று வாழ்ந்து, பின் மீளாநிலையைப் பெறுவர். ஆகவே, சிலர் அவனை அங்ஙனம் அறிவால் அறிதலைச் செய்யாமலே, தன்னிடத்து மூழ்குவாரை ஈர்த்துச் செல்ல வருகின்ற கங்கையாற்றில் மரக்கலம் செல்லத்தக்கவாறு ஆழ்ந்தும் அகன்றும் ஓடும் நீரில் முழுகிய துணையானே அறிவராய் விடுவரோ!

குறிப்புரை :

`ஆதிப்பிரானை அறிவார்` என முன்னே கூட்டுக. செறிவான் - எங்கும் செறிந்தான்; (தி.8 திருவம்மானை, 13) சிவன். அவன் உறைபதம், சிவலோகம். `திருக்கோயில்கள்` என்பாரும் உளர். அவற்றிற்கு இங்கு இயைபின்மை அறிக. வலம் - வெற்றி; வீறு. ``கொள்`` என்னும் முதனிலை, `கொண்டு` என எச்சப்பொருள் தந்தது. ``மறியார்`` என்பதைப் பெயராக்கி, `வலங்கொள் மறியார்` என வினைத்தொகை யாக்கலுமாம். வளைத்தல் - ஈர்த்து ஆழ்த்தல். `வளைக்கைக் கங்கை` எனப்பாடம் ஓதி, உமையம்மையது கைவிரல்களினின்றும் கங்கை தோன்றிய புராண வரலாற்றை அதற்குப் பொருளாக உரைப்பாரும், பிற கூறுவாருமாவார். பொறி - எந்திரம். காற்றால் இயங்குதலின், பாய்மரக் கப்பலையே அக்காலத்தார் எந்திரமாகக் கருதினர். ``புண்ணியர்`` என்றது, `ஞானியர்` என்னும் பொருளது.
இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தெளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. சரியை முதலியன இறைவனை அறிவால் அறியும் முறையேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

பொழிப்புரை :

சிவபெருமானை, `எங்குளன்` என்று தீர்த்தங்களில் வருந்தி முழுகிக் காணச் செல்பவரது செயல், கடலில் போகடப்பட்ட பொருளைக் குளத்தில் எடுக்கச் செல்பவரது செயல்போல்வதாம். அவரை ஒத்த அறிவிலிகள் பிறர் இலர். ஏனெனின், என்றும் ஒருபெற்றியனாகிய சிவபெருமான், தனது திருவருள் காரணமாக யாவர் உடலிலும் புகுந்து நிற்றலைச் சிறிதும் உணராமையால்.

குறிப்புரை :

``தேடுவார்`` என்றது ஆகு பெயர். `உடலிலே நிற்பவனை அவ்வுடலைப் பெற்றிருந்தும் பிறவிடத்துக் காண முயன்று வருந்துதல் அறியாமைப்பாலது` என்பதாம். உயிருள் நிற்பவனை உடலில் நிற்பவனாக ஓதியது, அவனை அதனுள் நிற்பவனாக நினைத்து யோகநெறியில் முயல்வார்க்கு அவன் அங்கு வெளிப்படுதல் பற்றி.
இதனால், `தீர்த்தங்களில் முழுகுவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

பொழிப்புரை :

நீர்தான், `நிலம், காற்று` என்பவற்றில் கலப்பினும் அது அதுவாம் இயல்புடையது. ஆதலின், அஃது எவ்வுடம்பிற் கலந்ததாயினும் அவ்வுடம்பின் தன்மைக்கு ஏற்பக் கறுத்தும், சிவத்தும், வெளுத்தும் நிற்பதாம்.

குறிப்புரை :

`அதனால், சிவஞானமின்றி வாளா தீர்த்தத்தில் மூழ்கு வோர்க்கு அவரவர்க்கு உள்ள குணமே பின்னும் மிகுந்து நிற்கும்` என்றவாறு. நான்கிடத்தும், ``கலந்தது`` என்றதன்பின், `ஆயின்` என்பன சொல்லெச்சமாய் நின்றன. ``கலந்ததேல்`` என்றே பாடம் ஓதுதலும் ஆம். ஈற்றடி நீரின் தன்மையைக் கூறிற்று; நீர் காற்றாதல் ஆவியாய்க் கலந்தபொழுதாம். ஈற்றடியை முதலில் வைத்து, ``நிலம், காற்று`` என்றவற்றிலும் ``உடம்பில்`` என்பனபோல இல்லுருபு விரிக்க. ``நீரது`` நான்கிலும் அது, பகுதிப்பொருள் விகுதிகள். கறுத்தல் முதலிய மூன்றும் தாமத இராசத சாத்துவிக குணங்களை மிகுவித்தலைக் குறித்த குறிப்பு மொழிகள். `கலந்ததன் இயல்பாகும்` என்றதனால், ``உடம்பு`` என வாளா கூறினாரேனும், கறுத்தல் முதலிய மூன்றிலும், `அவ்வக் குணமுடைய உடம்பு` என்பது கொள்ளப்படும்.
இதனால், `தீர்த்தம் தெய்வ நீராதல், உள்ளத்துணர்வாலன்றி இல்லை` என்பது கூறப்பட்டது. அப்பரும், நீராண்ட புரோதாயம் ஆடுங்காலத்து, `மாதேவா மாதேவா என்று வாழ்த்தி ஆடப் பெற்றோம்` (தி.6 ப.93 பா.3) என்று அருளிச்செய்தமை அறியற்பாற்று.

பண் :

பாடல் எண் : 1

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.

பொழிப்புரை :

ஒரு திருக்கோயிலில் உள்ள அசையாத சிவக் குறியைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வேறொரு திருக்கோயிலில் நிறுவினால், அச்செயல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அரசனது ஆட்சி நிலைகுலையும்; அச்செயலுக்கு உரியவன், தான் இறப்பதற்கு முன்பு தொழுநோய் கொண்டு துன்புற்று இறப்பான். இவ்வாறு எங்கள் தலைவராகிய நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.

குறிப்புரை :

எனவே, `அரசன் தனது நாட்டில் இச்செயல் எங்கும் நிகழாதவாறு காத்தல் வேண்டும்` எனவும், `அரசன் அறியாதவாறு இச்செயலை முடித்துவிட ஒருவரும் எண்ணலாகாது` எனவும் கூறியவாறாம். `இலிங்கம் இல்லாத கோயிலின் நலம் கருதி இலிங்கம் உள்ள கோயிலைப் பாழாக்கிவிடுதல் கூடாது` என்பதும், ஒரு கோயிலில் உள்ள இலிங்கம் எப்பொழுது யாரால் நிறுவப்பெற்றதோ அதனை அவர்களது கருத்திற்கு மாறாகப் பெயர்த்துக்கொண்டுபோய் வேறிடத்தில் வைத்தல் கூடாது என்பதும் கருத்து. `சிறந்து விளங்கும் கோயிலில் உள்ள இலிங்கத்தைக் கொண்டுபோய்ப் புதிய கோயிலில் நிறுவினால் அக்கோயிலுக்குச் சிறப்பு உண்டாகும்; இதனால் குற்றமில்லை` என்று எண்ணும் சிலரது அறியாமையைப் போக்குதற் பொருட்டு இத்திருமந்திரத்தை அருளிச்செய்தார். இதனானே, ஒரு கோயிலில் முன்பு உள்ள மூர்த்தியைத் தக்க காரணம் இல்லாமல் நீக்கி வேறொரு மூர்த்தியை நிறுவுதலும் குற்றம் என்பது பெறப்பட்டது.
இதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்திக்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

பொழிப்புரை :

திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக் குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக் குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.

குறிப்புரை :

`கட்டுவித்தவர்க்கே இவ்வாறாம் எனின், பிறர் அது செய்யக் கருதுவராயின் என்னாவார்` என்பது சொல்ல வேண்டா வாயிற்று. இதனானே, கோயில் மதில் முதலியவற்றிற்கே யன்றி அதன் உள்ளிடம், திருக்குளம், நந்தவனம் முதலியவற்றிற்கும் பழுதுண்டாக்க லாகாமை அறிந்துகொள்க. ``வாங்கிய`` என்பதன்பின், `அவரை` என்பது வருவிக்க.
இதனால், திருக்கோயில் முதலிய இறைவன் இடத்திற்குச் செய்யும் குற்றம் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருக்கோயில்களில் அன்றாட வழிபாடு, சிறப்புநாள் விழாக்கள் முதலியவை இல்லாதொழியினும், ஆகமங்களில் சொல்லப்பட்ட முறை தவறி நடப்பினும், நாட்டில் தீர்க்கலாகாத நோய்கள் பரவி, மழையும் பொய்த்துப்போக, சிற்றரசரால் வணங்கப்படுகின்ற பேரரசர்களும் பகைவரை வெல்லும் வலியிலராய்த் தம் நாட்டை இழப்பர்.

குறிப்புரை :

ஆதலால், அரசர் தம் நாட்டில் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கள் செவ்வனே நடைபெறச் செய்தலைத் தம் தலையாய கடமையாகக் கொள்ளல் வேண்டும் என்பதாயிற்று. ``அவனி`` என்றது, அக்கோயிலில் உள்ள நாட்டைக் குறித்தது. ``பூசை`` என்றது நைமித்திகத்தையும் அடக்கியேயாம். \"மழை குன்றும்\" என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 4

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருக்கோயில்களில் மேற்கூறிய குறைகள் உளவாகுமாயின், அரசர்கள் வலிமை யிழத்தலேயன்றிப் பிற தீமைகளையும் அடைவர். நாட்டில் விளைவும், பிற வருவாய்களும் குறையும். மாளிகைகளில் கன்னம் இட்டுக் களவாடுதல், கொள்ளை முதலிய பிற களவுகள் மிகுதியாகும். எங்கள் அருளாசிரியராகிய நந்திபெருமான் எங்கட்கு இவ்வாறு எடுத்து அருளிச்செய்தார்.

குறிப்புரை :

முதலடி அனுவாதம். கன்னம் இடுதலை முன்னர்ப் பிரித்தமையின், ``களவு`` என்றது பிறவற்றையாயிற்று. `காசினிக்கு` என்பதும் பாடம்.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் திருக்கோயில்களில் நித்திய நைமித்திகங்கட்குக் குறையுண்டாகச் செய்தல் விலக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பொழிப்புரை :

பிறப்புப் பற்றிப் பலராலும் சொல்லப்படுகின்ற `பார்ப்பான்` என்னும் பெயரைமட்டும் பெற்றுச் சிவபிரானிடத்து அன்பும், சிவாகம அறிவும், ஒழுக்கமும் இல்லாத அந்தணன் திருக் கோயிலில் சிவபெருமானைப் பிறர் பொருட்டு வழிபடுவானாயின், அக்கோயிலை உடைய நாட்டில் உள்நாட்டுக் கலகங்களும், வெளி நாட்டுப் போர்களும் விளைதலோடு, அந்நாட்டில் கொடிய நோய் களும், வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று எங்கள் திருமரபின் முதல்வராம் சிறப்புப் பொருந்திய நந்திபெருமான் எங்கட்கு ஆகமங்களை ஆய்ந்துரைத் தருளினார்.

குறிப்புரை :

``மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்``(குறள், 134) எனவும், ``அந்தணர் நூல்`` (குறள், 543) எனவும் கூறியவாற்றால், வேதம், `அரசரும், வணிகரும்` என்னும் ஏனையிருவர்க்கும் பொதுமையின் உரியதாயினும், அந்தணர்க்கே சிறந்ததாதல் அறியப்படும். படவே, `வேதம் ஓதுதலைத் தொழிலாக உடையோரே அந்தணர்` என்பதும் போதரும்.
திருவள்ளுவர், ``பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்`` (குறள், 134) என்று ஓதுதலானும், பிறப்புப் பற்றிவரும் பெயரைப் பெறாமல், வேதாகமங்களை ஓதும் தொழிலாகிய சிறப்பை மட்டும் பெற்ற அந்தணன் சிவபிரானைப் பிறர் பொருட்டு அர்ச்சித்தலை இங்கு நாயனார் விலக்காமையானும் பிறப்பைவிடச் சிறப்பே அர்ச்சனைக்கு யாண்டும் வேண்டப்படுதல் விளங்கும்.
பிறப்பாவது சில பல தலைமுறைகளில் உள்ளார், ஒழியாது ஒரு தொழிலே கடைப்பிடித்தமை பற்றி அவர் அந்தணர் முதலிய பெயரைப் பெற்று நிற்க, அவர்தம் வழித் தோன்றலாய்ப் பிறந்தோரும் அப்பிறப்புப் பற்றி அப்பெயரை உடையராதல். சிறப்பாவது அவரவர் அவ்வப்பொழுது தத்தமக்குரியதாகக் கொண்ட தொழில்.
சிறப்பு நிலையில் சிவபெருமானையே முதற் கடவுளாகக் கொண்டு திருநீறும் உருத்திராக்கமும் ஆகிய சிவசின்னங்களை அணிந்து அப்பெருமானை வழிபடுவோர் யாவரும் `சைவர்` எனப் படுவர். அவருள் சிவாகமத்தின்வழித் தீக்கை பெற்றோர் `சிறப்புச் சைவர்` எனவும், அவ்வாறு தீக்கை பெறாதோர், `பொதுச் சைவர்` எனவும் பெயர் பெறுவர். சிறப்புச் சைவருள் உபநயனமும் பெற்றுச் சிவாகமத்தைப் பொதுவாகவும், வேதத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு சிவபெருமானை வேத மந்திரங் களால் வேத விதிப்படி வழிபடுவோர் `மகா சைவர்` என்றும், வேதத்தைப் பொதுவாகவும், சிவாகமத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவாகம மந்திரங் களால், சிவாகம விதிப்படி வழிபடுவோர் `ஆதி சைவர்` எனவும் பெயர்பெறுவர். மகாசைவரும், ஆதிசைவரும் உபநயனமும் பெற்று வேதாகமங்களை ஓதுதலையே தொழிலாக உடைமையால், `அந்தணர்` எனவும் படுவர். ஆகவே, மகா சைவர் `மகாசைவ அந்தணர்` என்றும், ஆதி சைவர் `ஆதிசைவ அந்தணர்` என்றும் சொல் லப்படுவர். இவருள் மகாசைவ அந்தணர் சிவாகமவழி நில்லா மையால், அவருக்கு ஆசாரியாபிடேகமும், அதன்வழி வரும் ஆசிரியத் தன்மையும் இல்லை. அதனால், அவர் சைவரல்லாத பிறர்க்கே ஆசிரியராதற்கு உரியர். ஆதி சைவ அந்தணர் சிவா கமத்தையே சிறப்பாக ஓதி அவற்றின்வழி நிற்றலால், அவருக்கே அபி டேகமும், அதன்வழி ஆசிரியத் தன்மையும் பெறும் உரிமை உண்டு.
உபநயனம் இன்றி வேதத்தில் உரிமை கிட்டாததுபோலச் சிவ தீக்கையின்றிச் சிவாகமத்தில் உரிமை கிட்டாது. அதனால்; சிவ தீக்கையின்றி உபநயனம் மட்டுமே பெற்று வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், வேதத்தின்வழி வேட்டல், வேட்பித்தல்களைச் செய்து, சிவபெருமானையே முதற்கடவுளாகக் கொள்ளுதலில் வழுவாது நிற்போர், `வைதிக சைவர்` எனப் பெயர்பெறுவர். அதனால், இவர் `வைதிக சைவ அந்தணர்` எனப்படுவர். இவர் பொதுச் சைவரே. இவர் சிவாகமங்களை இகழார்.
வேதத்தை ஓதுதல், ஓதுவித்தல், அவற்றின்வழி வேட்டல், வேட்பித்தல்களைச் செய்யினும், சிவபெருமானை முதல்வனாகக் கொள்ளாமல் பிறவாறு கொள்வோருள் சிவாகமங்களையும், அவற்றின் வழி நிகழும் தீக்கை முதலியவற்றையும் இகழ்வோர் ஒருவாற்றானும் `சைவர்` எனப்படாமையேயன்றி, அவர் அந்தணராதலும் இல்லை என்னும் கருத்தால், `துர்ப்பிராமணர்` எனச் சைவர்களாலும், சைவ நூல்களாலும் இகழப்படுவர். செந்நெறியில் நில்லாது கொடுநெறியில் செல்லுதலால் இவரை, `கொடுநெறி அந்தணர்` எனலாம்.
பிறப்பு மாத்திரத்தால் ஆதி சைவ அந்தணரும், மகாசைவ அந்தணருமாய்ப் பிறந்து, அவற்றிற்குரிய நெறியில் நில்லாதோர் `அப்பிராமணர்` எனப்படுவர். இவரை `ஒழுக்கமில் அந்தணர்` எனலாம். இன்னும் புறத்தே சிவவேடம் புனையினும், அகத்தே சிவபிரானை முதற் கடவுளாகக் கொண்டு சிறப்பு வகையில் அன்பு செய்யாத அந்தணரும் அப்பிராமணரேயாவர். இவர் யாவரும் `பார்ப்பார்` எனவே படுகின்றனர். அதனால், ஆதிசைவப் பார்ப்பார், மகாசைவப் பார்ப்பார், வைதிகசைவப் பார்ப்பார், கொடுநெறிப் பார்ப்பார், ஒழுக்கமில் பார்ப்பார் எனப் பெயரால், பார்ப்பார் ஐவகையராகின்றனர். `இவருள், ஆதிசைவப் பார்ப்பாரே தலை யாயவர்` என்பது மேற்கூறியவாற்றானே இனிது விளங்கிக் கிடத்தலால், அவரையே, `உண்மைப் பார்ப்பார்` என வைத்து, ஏனை நால்வரையும் நாயனார் பேர்கொண்ட பார்ப்பாராக ஓதினார் என்பது நன்கு பெறப்பட்டது.
``அர்ச்சிக்கில்`` என்பதில் அர்ச்சித்தல், `பிறர்பொருட்டு` என்பது, பின்னர்க் கூறிய தீய விளைவுகளை நாட்டிற்கு ஓதிய குறிப் பால் நன்கறியப்படும். பிறர்பொருட்டு வழிபடுதல், `பரார்த்த பூை\\\\u2970?` எனப்படும். ஆன்மார்த்த பூசையை அவரவரும் தமக்கென எழுந் தருளுவித்துக்கொள்ளும் விருப்பக் குறி (இட்டலிங்கம்) ஆகிய பெயர் வுடைக் குறியில் (சல லிங்கத்தில்) செய்தல், எளிதின் இயல வேண்டிய தேயன்றித் திருக்கோயிலில் உள்ள பெயராக் குறியில் (அசல லிங்கத்தில்) செய்தல் விலக்கப்பட்டதன்று. திருக்கோயிலில் சென்று ஆன்மார்த்த பூசையைச் செய்தல் அரிதாதலின், அது பண்டே அருகி விட்டது. ஆன்மார்த்த பூசையைச் சைவர்கள் திருக்கோயிலில் சென்று செய்து வந்தமைக்குத் தி.12 திருத்தொண்டர் புராணத்தில் உள்ள திரு நீலநக்க நாயனார், அரிவாட்ட நாயனார் இவர்களது வரலாறுகளே போதிய சான்றாகும். இவ்விருவரும் செய்த பூசை ஆன்மார்த்த பூசையே என்பது அவ்வரலாறுகளிலேயே தெற்றென விளங்கிக் கிடப்பது. திருக் கோயில்களில் மூல இலிங்கமேயன்றி, அதனைச் சூழ வேறும் சில இலிங்கங்கள் காணப்படுதல், அங்குச் சென்று ஆன்மார்த்த பூசை செய்வோர் அவைகளையே மூல இலிங்கமாகக் கருதிக் கொண்டு அவற்றில் அவ் வழிபாட்டினைச் செய்தற்பொருட்டேயாம். இனி, மூல இலிங்கங்கள்தாமும் ஓரொரு காலத்தில் ஓரோவொருவர் ஓரோஒரு பயன்கருதி நிறுவித் தம் பொருட்டாக வழிபட்டு அப்பயன்களைப் பெற்றுப் பின் நிலையாக வைத்துச் சென்றனவே எனத் தல புராணங்கள் பலவும் இனிதெடுத்து விளம்புதலும் கருதத்தக்கது.
`ஆன்மார்த்தம், பரார்த்தம்` என்னும் பகுப்புப் பூசையின் பயனைப் பெறுவாரை நோக்கியதன்றிப் பூசிக்கப்படும் மூர்த்தியை நோக்கியதன்றாதல் வெளிப்படை. அஃதாவது, பூசை செய்பவர், `அப் பூசையின் பயன் தமக்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் ஆன்மார்த்த பூசையும், `பிறர்க்கு ஆகுக` என நினைத்துச் செய்தல் பரார்த்த பூசையும் ஆகும். அதனால், திருக்கோயிலில் உள்ள மூர்த்தியையே தம் பொருட்டாகப் பூசிக்கின் அஃது ஆன்மார்த்த பூசையாதலும், தாம் எழுந்தருளுவித்துக் கொண்ட மூர்த்தியையை பிறர் பொருட்டாகப் பூசிக்கின் பரார்த்த பூசையாதலும் தாமே விளங்கும். எனினும், பெரும்பான்மை பற்றித் திருக்கோயிற் பூசை பாரார்த்தமாகவும், தம் பொருட்டாய மூர்த்தி பூசை ஆன்மார்த் தமாகவும் சொல்லப் படுகின்றன. `இவற்றுள் திருக்கோயிலில் உள்ள மூர்த்தியைப் பிறர் பொருட்டாகப் பூசிக்கும் உரிமை சிறப்புச் சைவ அந்தணருக்கே சிறப் பாக உரியது` எனவும், `அவருள்ளும் ஆதிசைவ அந்தணர்க்கே சிறப் பாக உரியது` எனவும் வைத்து, ஏனைய அந் தணர்க்கு அஃது இல்லை என்பதையே நாயனார் இத்திரு மந்திரத்தால் அருளிச் செய்தமை அறிக. `மக்களுட் சிறந்தார் அந்தணர்` என்பதே பற்றி, சிறப்புச் சைவ ரல்லாத ஏனை அந்தணரையும் திருக் கோயிலிற் பரார்த்த பூசைக்கு உரியராக்குதலையே நாயனார் இத்திரு மந்திரத்தால் விலக்கினாரன்றிச் சிறப்புச் சைவருள் ஒருவரையும் விலக்கினாரல்லர் என்பது நுண்ணுணர்வான் நோக்கி உணர்ந்து கொள்க.
மேற்கூறிய ஆதிசைவர், மகாசைவரேயன்றிப் பிற சைவரும் உளர். அவர் `அனு சைவர், அவாந்தர சைவர், பிரவர சைவர், அந்திய சைவர்` என இவர். சிவபெருமானைப் பொதுநீக்கி வழிபடுவாருள் நாடாளும் தொழில் உடையவரும், வாணிகத் தொழில் உடையவரும் அனு சைவர். உழவுத் தொழில் செய்வோர் அவாந்தர சைவர். பிறதொழில் செய்வோர் பிரவர சைவர். இவரெல்லாரும் சுதந்திரர். யாதொரு தொழிலாயினும் அதனைப் பிறருக்கு அடியவராய் இருந்து செய்பவர் அந்திய சைவர். எனினும், அமைச்சர், படைத்தலைவர் போன்றோர் அரசரோடொப்ப மதிக்கப்படுதலால் அனுசைவரே யாவர். இங்குக் காட்டிய அறுவகைச் சைவரொடு சதாசிவக் கடவுளையும், `அனாதி சைவர்` என வைத்துச் சைவர் எழுவராகச் சொல்லப்படுதலை, `சைவ சமயநெறி, சிவதருமோத்தரம்` முதலிய நூல்களிற் கண்டுகொள்க.
ஆதிசைவரும், மகாசைவரும் சிறப்புச் சைவரேயன்றி, அவருள் பொதுச் சைவர் இல்லை. ஏனைய அனுசைவர் முதலிய நால்வரும் தீக்கை பெறாது இருப்பின் பொதுச் சைவரும், தீக்கை பெற்று இருப்பின் சிறப்புச் சைவரும் ஆவர். எவ்வாற்றானும் சிவனை வழிபடாதவரும், வழிபடினும் பொது நீக்கிச் சிறப்பாக வழிபடாதவரும் `சைவர்` எனப்படார்.
ஊன் உணவும், கட்குடியும் இல்லாதவரே சிவதீக்கை பெறுதற்கு உரியர். அவற்றை உடையோர் சிவதீக்கையைப் பெறின் அவரும், அவருக்கு அதனைப் பெறுவித்தோரும் நிரையம் புகுவர். அதனால், தீக்கைக்கு உரியரல்லாதார் பொதுச் சைவராயே இருந்து சிவநூலை ஓதல், கேட்டல், சிவாலயத்திற்கும், சிவனடியார்க்கும் ஏற்புடைத் தொண்டு செய்தல் என்னும் இவற்றையே மேற்கொண்டு வாழக்கடவர்.
இனிச் சிவதீக்கையும் அவரவர் ஆற்றலுக்கேற்ப, `சமயம், விசேடம், நிருவாணம், அபிடேகம்` என நால்வகைத்தாகும். அவற்றால் அவற்றைப் பெற்றோரும் `சமயிகள், புத்திரர், சாதகர், ஆசிரியர்` என நால்வகைப்படுவர்.
சமய தீக்கையாவது, சிவ மூல மந்திரமாகிய திருவைந் தெழுத்தை முறையறிந்து கணித்தற்கும், `சிவாகமம், திருமுறை, சாத்திரம்` என்னும் சைவப் பெருநூல்களை ஓதுதற்கும், சரியை முறை யால் சிவபெருமானைச் சிறக்க வழிபடுதற்கும் உரிமைதந்து, சிறப்புச் சைவராகச் செய்வது. இச்சமய தீக்கை பெற்றோரே `சமயிகள்` எனப்படுவர்.
விசேட தீக்கையாவது, மேற்கூறியவற்றோடு கிரியை முறையாலும், யோக முறையாலும் சிவபெருமானை வழிபட்டு அவனுக்கு அணுக்கராயும், அவனோடு ஒப்பவும் இருக்கும் உரிமையைத் தருவது. இதனைப் பெற்றோரே `புத்திரர்` எனப்படுவர்.
நிருவாண தீக்கையாவது, சரியை கிரியா யோகங்களின் பயனாக மலம் பரிபாகமாயிட, இருவினையொப்பும், நாலாம் சத்தி நிபாதமும் வரப்பெற்று, அதனால் சிவனையே அடையும் அவா உண்டாகப் பெற்றவர்க்கு அவனை அடையுமாற்றை அறிந்து அடைதற் பொருட்டு முப்பொருளின் இயல்பை இனிதுணர்த்துவது. இங்ஙனம் உணர்த்தப் பெற்றவர் சிவபெருமானை அடையும் நெறிக்கண்ணே நிற்றலின், `சாதகர்` எனப்படுவர்.
சமயம் முதலிய தீக்கை மூன்றும் `சாதிகாரை, நிரதிகாரை` எனத் தனித்தனி இருவகைப்படும். அவற்றுள் சாதிகாரையாவது, நித்திய வழிபாட்டோடு, `நைமித்திகம், காமியம்` என்னும் இரு வழி பாடுகளையும் இயற்றுதற்கு உரிமை தருவது. நிரதிகாரையாவது, நித்திய வழிபாடு ஒழிந்த ஏனை இருவழிபாட்டிற்கும் உரிமை தாராதது.
நித்திய வழிபாடாவது அன்றாடம் காலை, மாலை என்னும் இருபொழுதினும் நீராலும், நீற்றாலும், மந்திரங்களாலும் தம்மைத் தூய்மை செய்துகொண்டு, தருப்பணம் செய்து, சிவபெருமானது திருவைந்தெழுத்தைக் கணித்தலும், வேத சிவாகம திருமுறை சிவ புராணங்களை ஓதுதலும், கேட்டலும், சிவாலய தரிசனம் செய்தலும், அழல் ஓம்பலும், சிவனடியார்களை வரவேற்று உணவு முதலியன அளித்தலுமாம்.
நைமித்திக வழிபாடாவது யாதானும் ஒரு சிறப்புப் பற்றிச் சில நாட்களில் செய்வது. அது, அட்டமி, பூரணை, பிரதோடம், சதுர்த்தசி, மாதப் பிறப்பு, அயனப் பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் முதலிய காலங்களில் மேற்கூறியவற்றைச் சிறப்பாகச் செய்யும் வழிபாடாகும். வேதமாதிய நூல்களைத் தக்கார்க்கு ஓதுவித்தலும் நைமித்திகமேயாம்.
காமியமாவது தான் செய்த தீவினை நீங்குதல் கருதிச் செய்யப்படும் கழுவாயும் (பிராயச்சித்தமும்) இம்மை மறுமைப் பயன்களில் ஒன்றையாயினும், பலவற்றையாயினும் வேண்டி அவ்வவற்றிற்கு ஏற்ற முறையில் செய்யும் வழிபாடுமாம்.
இவற்றுள் சாதிகார தீக்கை அதனைப் பெற்றபின்னர் நைமித் திகத்தையும், காமியத்தையும் தவறாது செய்யும் ஆற்றல் உடையார்க்கே செய்யப்படும். அவ் வாற்றல் இல்லாதார்க்கெல்லாம் நிரதிகார தீக்கையே செய்யப்படும். நிரதிகார தீக்கை பெற்றோர் ஓரோவொருகால் தம்பொருட்டாக நைமித்திகமும் காமியமும் செய்ய விரும்புவராயின், சாதிகார சாதகர் ஆசாரியர் என்போரால் செய்வித்துக் கொள்ளுதல் வேண்டும்.
சாதிகார சமய விசேட தீக்கைகளுக்குமேல், சாதிகார நிருவாண தீக்கை பெற்றோர், நைமித்திக காமியங்களைப் பிறர் பொருட்டாகச் செய்யும் உரிமையையே அபிடேகத்தாற் பெறுவர். அவ்வுரிமையும் `அங்க உரிமை, அங்கி உரிமை` என இருவகைத்து. அங்க உரிமையாவது, அங்கிக்கு இன்றியமையாத கழிப்பு (சாந்தி) மண்கோள் (மிருத்துசங்கிரகணம்) முளை தெளித்தல் (அங்குரார்ப் பணம்) குட நீர்க்கோள் (கலசாகருடணம்) முதலியவற்றைச் செய்யும் உரிமை. அங்கி உரிமையாவது தீக்கைசெய்தல், திருக்கோயில்களில் சிறப்புக் காலங்களில் விழா எடுத்தல், குடவழிபாடு செய்தல் (கலச பூசை செய்தல்) வேள்வி (யாகம்) செய்தல் முதலியவற்றில் பெறும் உரிமையாம். ஆன்மார்த்த மூர்த்தியைப் பிறருக்கு எழுந்தருளு வித்தலும் `விசேட தீக்கை` எனத் தீக்கை செய்தலுள் அடங்குவதாம்.
இவற்றுள், அங்க உரிமைமட்டும் பெற்றோர் `சதகாசாரியர்` எனவும், அங்கி உரிமையைப் பெற்றோர் `ஆசாரியர்` எனவும் சொல்லப்படுவர். சாதகாசாரியர், மணவினை, மாய்ந்தோர்வினை முதலியவற்றில் வேட்டல் முதலியவற்றைச் செய்வித்தற்கும், சிவன் கோயிலில் நித்திய பூசைக்கும் பிறகோயில்களில் நித்திய, நைமித்திக, காமியத்திற்கும் உரியராவர். அங்கி உரிமையைப் பெற்ற ஆசாரியர் எல்லாவற்றிலும் உரிமையுடையராதலின், அவரது உரிமை `பேரதிகாரம்` எனப்படும்.
ஆசிரியராதற்குச் சத்திநிபாதம், ஒழுக்கம் என்னும் இவை மட்டுமே போதா; சிறந்த பல நூற்கல்வியும், நல்லுடலும், செய்முறைப் பயிற்சியும் வேண்டும். அவற்றுடன் இரண்டு தலைமுறைக்குக் குறையாத முன்னோர், ஊனுங் கள்ளும் உண்டறி யாதவராயும், அவற்றை உண்பாரொடு உறவுகொள்ளாதவராயும் இருத்தல் வேண்டும். அதனால், அபிடேகத்திற்கு உரியவர் ஒருசிலரேயாவர். அவரும் முன்னர்ச் சாதகாசாரியராய் இருந்து பின்னர் ஆசிரியராதலே பெரும் பான்மை. பெரும்பான்மை ஆதிசைவ அந்தணருள்ளும் சிறு பான்மை ஏனைச் சைவருள்ளும் ஆசாரியராய் உள்ளவரே சிவன் கோயிலில் பிறர்பொருட்டுச் செய்யும் பூசையைச் செய்தற்கு உரியர் எனின், வைதிகப்பார்ப்பார் முதலிய பிற பார்ப்பனர் எங்ஙனம் திருக்கோயிற் பூசைக்கு உரியராவார். அதுபற்றியே நாயனார், `பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை அர்ச்சிக்கில் ... ... பஞ்சமும் ஆமே` என்று விலக்கினார். அபிடேகம் பெற்றாருள் சாதகாசாரியர் சிறுபான்மை பிற பிழைப்புத் தொழில் செய்யினும், ஆசாரியர் ஒருபோதும் அவற்றைச் செய்யார்.
அபிடேகம் பெறாது நிருவாண தீக்கை பெற்றோரை, `சாதகர்` என்னாது `விசேடபுத்திரர்` என்றும், அபிடேகத்தால் அங்கவுரிமை பெற்றோரையே `சாதகர்` என்றும் கூறுப. ஆதிசைவருள் ஆசாரிய ராயினாரை, `சிவாசாரியர்` என்றும், பிற சைவருள் ஆசாரிய ராயினாரை `சைவாசாரியர்` என்றும் குறியிட்டு வழங்குவர்.
மாணாக்கர், (பிரமச்சாரிகள்) இல்வாழ்வார், (கிருகத்தர்) இல்லந்துறந்தார், (வானப்பிரத்தர்) முற்றத்துறந்தார் (சந்நியாசிகள்) என்னும் நால்வகை நிலையினருள் மாணாக்கர், `இற்புகா மாணாக்கர்` (நைட்டிகப் பிரமச்சாரிகள்) என்றும், `இற்புகு மாணாக்கர்` (பௌதிகப் பிரமச்சாரிகள்) என்றும் இருவகைப்படுவர். மணம்புரிந்து கொள்ளாது வாழ்நாளளவும் மாணாக்கர் நிலையில் நின்றே வீடு பெறுவோர் இற் புகா மாணாக்கராவர். அவ்வாறின்றி வாய்க்கும் காலத்தில் மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்த விரும்புவோர் இற்புகு மாணாக் கராவர். `இல்வாழ்வார் ஆசாரியராதல் ஆதிசைவருள்ளேயன்றிப் பிற சைவருள் இல்லை` என்றும், `பிறசைவர் ஆசிரியராதல் வேண்டின், அவர் இற்புகா மாணாக்கராயிருத்தல் வேண்டும்` என்றும் சில ஆகமங் களில் விதி காணப்படுகின்றது. எனினும் அதனை, `இவ் யுகத்திற்கு ஒவ்வா விதி` என விடுத்து, எல்லாச் சைவருள்ளும் அபிடேகத்திற்கு மேற்குறித்த தகுதியெல்லாம் உடையவர் உரியவர் என்னும் விதியே கொள்ளப்படுகின்றது. அதனால், சிவன்கோயிலில் பிறர்பொருட்டுச் செய்யப்படும் நித்திய நைமித்திக காமிய வழிபாடு கட்குப் பிற சைவா சாரியர்களும் மேற்குறித்த சாதக, ஆசாரிய முறையின்படி உரியவரே யாவர். ஆயினும், வழக்கில் ஆதிசைவ சாதக, ஆசாரியர்களே சிவன் கோயிலில் பரார்த்த பூசைக்கு உரியவராய் விளங்குகின்றனர். அங்குப் பூக்கொய்து கொடுத்தல், மாலை கட்டித் தருதல், திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், திருவிளக்கேற்றுதல் முதலிய புறத்தொழிலில் மட்டுமன்றித் திருவமுது அமைத்தல், திரு மஞ்சன நீர் நிரப்புதல், தூபம், தீபம் முதலிய பொருள்களை எடுத்துக் கொடுத்தல் முதலிய அகத்தொழிலுக்கும் எல்லாச் சைவரும் உரிமை பெறத்தக்கவரே. எனினும், வழக்கத்தில் ஆதிசைவ அந்தணர்க்கேற்ப, மகாசைவ அந்தணரேயன்றி வைதிக அந்தணரும் அத்தொழிலில் உரிமையுடை யாராய் உள்ளனர். `சிவ தீக்கை பெற்றவருள்ளும் சிலர் தாம் திருக் கோயிலில் அகத் தொழின்மைக்கு உரியர்` என்பது சொல்லப் படுமாயின், தீக்கையே இல்லாதவரை அதற்கு உரியராக்குதல் எத்துணை முறைகேடான செயல் என்பதை எடுத்துக்கூற வேண்டுவது இல்லை.
``செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலை
தெரிந்த அவரோ(டு)
அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர்
கின்ற அரன்ஊர் ... ... ... ...வீழிநகரே`` -தி.3 ப.80 பா.4
தடங்கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்
படங்கொண்டதோர் பாம்பரை யார்த்த பரமன்
இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.-தி.1 ப.32 பா.2
நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையும் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.1
பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
காலினால் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.-தி.1 ப.61 பா.5
என்றாற்போலும் அருட்டிருமொழிகளால் `வடமொழி, தென்மொழி` என்னும் மொழி வேறுபாடும், `ஆதிசைவர், பிற சைவர்` என்னும் இன வேறுபாடும் இன்றி இருமொழிகளாலும் அனைத்துச் சைவரும் திருக் கோயிலில் சிவபிரானைப் பல்வகையாலும் நாள்தோறும் முறை வகுத்துக்கொண்டு வழிபாடு செய்தல் வழக்கத்திலிருந்தமை நன் கறியப்படுதலால், அதற்கு மாறாக, ``ஆதிசைவர் ஒருவர்தாம் வட மொழியானே திருக்கோயிலில் வழிபாடு செய்தற்கு உரியர்`` எனக் கட்டளை வகுத்தல், விருத்திப் பொருட்டாகச் செய்யப்பட்டது என்றே கொள்ளப்படும். இன்னோரன்ன கட்டளைகள் கங்கைகொண்ட சோழன் (முதல் இராசேந்திர சோழன்) காலத்திற்குப் பிறகே தமிழ்நாட்டில் தோன்றினவாதல் வேண்டும். ஏனெனில், ``அச்சோழ மன்னன் கங்கைக் கரையிலிருந்து ஆதிசைவர் பலரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் ஆங்காங்குக் குடியேற்றினான்`` என்பது சித்தாந்த சாராவளி உரையிலேயே சொல்லப்பட்டுள்ளது.
இனி, ``முப்போதும் திருமேனி தீண்டுவார்`` (தி.7 ப.39 பா.10) என்ற சுந்தரர் வாக்கும், பிறப்பு வேறுபாடு மொழிவேறுபாடுகளைக் குறிக்கும் கடப்பாடுடையதன்று; என்னை? அஃது உடையதாயின், ``தில்லை வாழ்ந்தணர்`` எனவும், ``திருநீலகண்டத்துக் குயவனார்`` எனவும், ``திருநீலகண்டத்துப் பாணனார்`` எனவும் பிறப்பினை எடுத் தோதினாற்போல எடுத்தோதப்பட்டிருக்கும் என்க.
இனி, முப்போதுந் திருமேனி தீண்டுவாரைப் பற்றிக் கூறு மிடத்தில் நம்பியாண்டார் நம்பிகள்தாமும், ``நீடாகமத்தின் அறிவால் வணங்கி அர்ச்சிப்பவர்`` (தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 74) என்று, `சிவபெருமானிடத்து அன்பு உண்டாதற்குச் சிவாகம ஞானம் இன்றியமையாதது` என்னும் அளவே குறித்ததன்றி இன வரையறையும் மொழி வரையறையும் கூறினாரில்லை. எனவே, சேக்கிழார் நாயனார், ``முப்போதும் அர்ச்சிப்பார் முதற் சைவராம் முனிவர்`` எனவும், `வருங் காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள்சிவ வேதியர்க்கே உரியன; அப் பெருந்தகையார் குலப் பெருமை யாம்புகழும் பெற்றியதோ`` (தி.12 முப்போதும் திருமேனிதீண்டுவார் புராணம்) எனவும், `முப்போதும் திருமேனி தீண்டுவார் ஆதிசைவரே`` என்றும், ``அவர்தாம் வழி வழிவரும் பிறப்புரிமையர்`` என்றும் வரையறுத்துக் கூறியது அஃது அங்ஙனம் அவர்க்குச் சிறப்புரிமையாதல் குறித்தேயாம். அங்ஙனம் கொள்ளாக்கால், மேற்காட்டிய ஞானசம்பந்தரது திருவாக்கோடும், அனுபவத்தோடும் முரணும் என்க. எனவே, இது, முந்நூலணிதலும், வேதம் ஓதுதலும அந்தணர்க்கேயன்றி அரசர் வணிகர்கட்கும் உரித்தாயினும் வேதத்தை ``அந்தணர் நூல்`` (குறள், 543) என்றும், ``அதற்குரியார் அநத்ணரே`` (திருவள்ளுவமாலை, 23) என்றும், பிறவாறும் கூறுதல் போல்வதும், அந்தனரையே ``முந்நூல் மார்பர்`` எனவும் ``இருபிறப்பாளர்`` எனவும் ``மறையவர், வேதியர்`` எனவும் குறிப்பிடல் போல்வதும் ஆம் என்பது ஓர்ந்துணர்ந்து கொள்ளப்படும்.
``குலவிச்சை கல்லாமல் பாகம் படும்`` (பழமொழி நானூறு, 6) ஆகலின், யாதொரு செயலும் அது வழிவழியாக இடையறாது வருவதொரு குடியிற் பிறந்தார்க்குச் சிறப்புரிமை உடைத்தாதல் இயல்பே. அஃதே பற்றிப் பிற குடியிற் பிறந்தாரும் தமது சிறப்பினால் பெறும் உரிமை விளக்கப்பட்டதாம். அது கருதியே பிறப்புரிமை கருதிய தமிழ் நூல்களில் யாண்டும் சிறப்புரிமை விலக்கப்பட்டிலது என்பது அறியற்பாலது. பிறப்பினாலன்றிச் சிறப்பினால் உரிமை பெற்றவராக வடநூல் முனிவருள்ளும் பலர் கேட்கப்படுகின்றனர். தமிழாசிரியருள்ளும் திருநாவுக்கரசரை அப்பூதியடிகளும் மெய்கண்ட தேவரைச் சகலாகம பண்டிதரும் தம்மின் மிக்கராய்த் தமக்கு நெறியருளவல்ல ஆசிரியராகக் கொண்டமை வெளிப்படை. ``இவ்வாறாகவும் பிறப்புரிமை ஒன்றே கொள்ளப்படுவது சிறப்புரிமை கொள்ளப்படாது`` என முரணிக் கூறுதல் விருத்தி வேண்டுவாரது கூற்றேயாய் முடியும் என்க.
இதனால் திருக்கோயிலில் நிகழும் பெருவழிபாடு பற்றிய குற்றம் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொழிப்புரை :

பிரகிருதி புவனத்தில் நிலவுலகத்தில் வாழ்ந்த சூரபதுமனாகிய அசுரனால் விளைந்த துன்பத்தை இயற்கை மணம் கமழும் மேனியராகிய தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று சொல்லி முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.

குறிப்புரை :

`ஆகவே, அவன் சுத்தமாயையில் உள்ளார்க்கு மட்டுமின்றி, ஏனை அசுத்தமாயை பிரகிருதி மாயைகளில் உள்ளார்க்கும் அருளி புரிபவனே; அதனால், எவ்விடத்து அவனை வழிபடினும் அவ்விடத்து அவன் ஏற்ற பெற்றியால் நின்று அருள் புரிவன்; எனவே, நிலவுலகத்துத் திருக்கோயில்களில் திருமேனிகளில் அவன் நின்று அருள் புரிதற்கு ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம்.
``தாபர சங்கமங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்`` என்ற சிவஞானசித்தி (சூ. 2,28) இங்குக் காணத்தக்கது.
வம்பு - மணம். ``வலி`` என்றது, அதனால் விளைந்த துன்பத்தைக் குறித்தது. `பவழம்` என்பது கடைக்குறைந்து நின்றது. `பவளம்` என்றேயும் பாடம் ஓதுப. ``பவழத் தன்ன மேனி`` (குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து) என, வேறிடத்தும் முருகனது மேனிக்கு பவழம் உவமையாகக் கூறப் பட்டது. பகைவனை `பகை` என்றது ஒற்றுமை வழக்கு.
பல்லாற்றானும் தீமையைத் தேய்த்து நன்மையை வளர்த்து நிலவுலகத்து உயிர்களைப் புரந்தருளுதல் கூறுவார், கந்தபுராண வரலாற்றை எடுத்தோதியருளினார். அதோ முகத்தது இயல்பு கூறுகின்றாராதலின், அது வெளிப்பட நின்ற இவ்வரலாற்றையே எடுத்தோதியருளினார்.
இதனால், சிவபெருமான், மேலுலகத்துள்ளார்க்கேயன்றிக் கீழுலகத்துள்ளார்க்கும் அருள்புரிதல் கூறப்பட்டது. இவர்க்கு அருளுதலே `அதோ முகம்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 2

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகமே நிலவுலகத்தைப் புரப்பது. அதற்கு அறிகுறியாகவே அது கறுத்த கண்டத்தையுடைய வடிவினதாய்த் தோன்றுதலை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனால், பலரும், `அது நஞ்சுண்டது` என்று மட்டுமே கூறி யொழிகின்றனர். இனி அவ்வடிவாகிய கறைமிடற்றண்ணலுக்கு மார்பில் அணியும் மாலையும் இறந்தாரது வெள்ளிய தலைகளால் ஆயதே. அதனது உண்மையையும் அறிவாறில்லை.

குறிப்புரை :

``அண்டமொடு எண்டிை\\\\u2970?`` என்றது, `உலகம்` என்னும் பொருளது. `உலகம்` என வாளா கூறின், நிலவுலகத்தையே குறித்தல் வழக்கு. `அதோமுகம் தாங்கும்` என மாற்றி உரைக்க. `அதோமுகமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால் பிரிக்கப் பட்டன ஈசானம் முதலிய ஏனைத் திருமுகங்கள். ஆகவே, சுத்த மாயையில் ஐந்தொழில் செய்வனவாகச் சொல்லப்படுகின்ற அவை, நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் யாங்ஙனம்` என்பார்க்கு, `நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் ஆறாவதாகிய மற்றொரு திருமுகமாம் அதோ முகமே` என மலைவு நீக்கியவாறாயிற்று.
`அதோமுகம்` என்பதற்குப் பொருள், `கீழ்நோக்கி நிற்பது` என்பதேயாகலின், அது கீழ் உலகத்தார்க்கு அருளுதல் குறித்த கருணையே என்பது சொல்லாமே அமைந்தது. ``அது கண்டம் கறுத்த கருத்தறிவார் இல்லை`` என்றதனால், `அத்திருமுகமே நிலவுலகத் தார்க்குக் கறைமிடற்றண்ணல் வடிவினதாய்த் தோன்றும்` என்பது அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. இதனுள் `அது` என்பது தோன்றா எழுவாய். கருத்து என்றது, `அகலரையன்றிச் சகலரையும் ஏற்றுக் கொள்ளும் கருணையது` என்பதனை.
`அஃது எவ்வாறு பெறப்படும்` எனின், மூவகைச் சீவ வருக்கத்தார்க்கும் ஆணவமலம் உளதேயெனினும், சகல வருக்கத் தார்க்கே அது பெரிதும் உளது எனப்படுவதாலும், ஆணவ மலம், `இருள், மூர்ச்சை, மிருத்து` முதலிய பெயர்கட்கும் உரித்தாய் நிற்ற லானும் இறைவனது கண்டத்தில் உள்ள கறை (இருள் - நஞ்சு) ஆணவ மலத்தை அவன் நீக்கி யருளுதற்குச் சிறந்த அடையாளமாம் என்க. இனி, அக் கறைதானும் மார்பு, வயிறு முதலிய பிற இடங்களில் நில்லாது முகத்திற்குக் கீழ்க் கண்டத்திலே நிற்றல், அஃது ஆறாவதாகிய அதோ முகத்தின் வடிவாதல் குறிக்கும். ஆகவே, `இத்துணை உண்மை களும் உணரற் பாலனவாக, அவற்றைவிடுத்து நஞ்சுண்டதாகிய வரலாற்றை மட்டுமே கூறியொழிதல் கூடாது` என்றற்கு, ``கருத்தறி வார் இல்லை; உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்`` என்றார்.
``உண்டது`` என்றது முற்று. ``நஞ்சு`` என்றதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. இறுதிக்கண் வருவித்துரைத்த, `அதனையும் அறிவாரில்லை` என்பது இசையெச்சம். `கறைமிடற்றண்ணல் மார்பில் உள்ள மாலையாக அமைந்த வெண்டலைகள் அமரர் தலைகளே` எனப்படுதலால், `அவரும் ஏனை மக்கள் போலச் சகலரே என உணர்தல் வேண்டும்; அங்ஙனம் உணரவே, அவர் பொருட்டு நஞ்சுண்ட வரலாறு அனைத்துச் சகலர்க்கும் அருள் புரிதலைக் குறித்தல் விளங்கும்` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.
இனி, பரமசிவன் ஐந்தொழில் செய்யுங்கால் அவற்றைச் சுத்த மாயையில் தானே நேர்நின்று செய்வன்` என்பதும், `அசுத்தமாயையில் அனந்தேசுரர் வாயிலாகச் செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழிச் சீகண்ட உருத்திரர் வாயிலாகச் செய்வன்` என்பதும் ஆகமங்களின் முடிபு ஆதலால், சுத்த மாயைக்குச் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நின்று நேராகவும், அசுத்தமாயைக்குச் சுத்த வித்தியா தத்துவத்திலே வித்தியேசுரனாய் நின்று அநந்ததேவர் வாயிலாகவும் ஐந்தொழில் செய்தல் போலப் பிரகிருதி மாயைக்கும் சுத்த வித்தியா தத்துவத்திலேயே சீகண்டனாய் நின்று அனந்த தேவர் வழிச்சீகண்ட உருத்திரர் வாயிலாக ஐந்தொழில் செய்வன் என்பது பெறப்படும்; என்னை? அசுத்த மாயையில் நிகழும் காரியத்திற்கு `அனந்தர்` என்னும் வித்தியேசுரர் கர்த்திருத்துதவம் பெறுதற்குப் பரமசிவன் வித்தியேசுரனாய் நிற்றல் இன்றியமையாதவாறு போல, பிரகிருதி மாயையில் நிகழும் காரியத்திற்குச் சீகண்ட வுருத்திரன் கர்த்திருத்துவம் பெறுதற்கும் பரமசிவன் சீகண்டனாய் நிற்றல் இன்றி யமையாதாகலின். சுத்தமாயையில் போக ( பரிபாலன) மூர்த்தியாய் நிற்கும் பரமசிவனுக்கு உரித்தாய், நிற்றலின், போக தத்துவம் (சாதாக்கிய தத்துவம்) ஒன்றேயாக, அதற்குக்கீழ் அதிகார தத்துவம் அவ்வாறு ஒன்றாகாது, `ஈசுரம், வித்தை` என இரண்டாயினமை, ஒன்றுமேல் நின்று சுத்தமாயையில் அதிகாரம் புரிதற்கும், மற்றொன்று கீழ்நோக்கி நின்று அதிகாரம் புரிவித்தற்குமேயாம். முன்னையதில் கிரியாசத்தி மிக்கு நிற்றல் செயலாற்றுதற் பொருட்டு என்பதும், பின்னையதில் ஞானசத்தி மிக்கு நிற்றல் பிறரை ஏவுதல் மாத்திரையாய் நிற்றற் பொருட்டும் என்பதும் தெரிந்து கொள்ளப் படுமாறு அறிக.
பரமசிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளுள் அதிகாரம் ஒன்றாகாது `சூக்குமம், தூலம்` என இரண்டா யினமை, முறையே செய்தலும், செய்வித்தலும் பற்றியேயாம். அவற்றுள் தூலவதிகாரமாகிய செய்வித்தல் நிலையில் நிற்றற் பொருட்டே `சுத்த வித்தை` என்னும் சுத்த தத்துவம் உளதாயிற்று என உணர்க.
இனி, இலய தத்துவமும் ஒன்றாகாது இவ்வாறே தூலம், சூக்குமம் என இரண்டாவது, அபர முத்தருள்ளும் அதிகாரமல வாசனை நீங்குங்கால் தூல லயமாயும், சூக்குமலயமாயும் இவ்வாறு படி முறையானன்றி நீங்குதல் கூடாமையின், அவ்வந்திலையினின்று அவரவர்கட்கு அருளுதற்பொருட்டேயாம் என்பதும் உணர்ந்து கொள்க. இலய தத்துவம் இரண்டனுள் `சத்தி தத்துவம் தூல லயம்` என்பதும், `சிவ தத்துவம் சூக்கும லயம்` என்பதும் நன்கறியப் பட்டவை.
இனி அசுத்த மாயையிலும், பிரகிருதி மாயையிலும் பிறர்வழி நிகழ்த்தும் `ஐந்தொழில்களுள் ` அருளல்` என்பது அபர ஞானமாகிய சிவாகமங்களை அறிவுறுத்தலேயாம். பரஞானத்தை அசுத்த மாயையில் உள்ளார்க்கும் வித்தியேசுரனாயும், பிரகிருதி மாயையில் உள்ளார்க்குச் சீகண்டனாயும் நிற்கும் பரமசிவனே ஏற்றபெற்றியால் அருளுவான், என்னை? சீகண்ட உருத்திரனும், அனந்தேசுரனும் மலம் நீங்கப் பெற்ற முத்தரேயாயினும், அதிகார மலம் நீங்கப் பெறாதவரேயாதலின், மலம் முழுவதையும் பற்றறக் கழிக்கும் பரஞானத்தை அவரைப் பற்றி நின்று பரமசிவன் உணர்த்துதல் கூடாமையின், ``சகல ருக்குப் பரமசிவன் ஞானத்தை அருளுதல் சீகண்ட உருத்திரன் வழி`` என்னாது, ``ஆசான் மூர்த்தி வழியேயாம்`` என ஆகமங்கள் கூறுதலும் இது பற்றியே என்க. எனவே, பிரளயா கலருக்குப் பரமசிவன் பர ஞானத்தை அருளுதலும் இவ்வாறு ஏற்ற பெற்றியானேயாம் என்பது உணரப்படும்.
இங்ஙனமாகவே, ``அறுபான் மும்மை நாயன்மார் முதலியோர்க்குப் பற்றற்ற பரஞானத்தை அருளியவன் பரமசிவனே`` என்பதும், ஆகவே, `அவர் அடைந்த பதமுத்தி அபர முத்திகள் அவனுக்கு நேரே இடமாய சுத்த மாயையின்கண் உள்ள புவனங்கள்` என்பதும் தானே பெறப்படும். இவ்வாறு சீகண்டனாய் நிற்கும் பரமசிவனும், அவனது அருளால் அவனோடு ஒத்த உருவமும், பெயரும், பிறவும் பெற்று விளங்கும் சீகண்ட உருத்திரனும் வேறு வேறு என்பது உணரமாட்டாதார், ``அறுபான் மும்மை நாயனார் முதலாகப் பரஞானத்திற்கு உரியராய் நிற்போர்க்கு அருளுபவனும் சீகண்ட உருத்திரனே`` எனவும், ``அவர் அடைந்த முத்திப் பேறும் அவனது இடமே`` எனவும் மயங்கிப் பெறலரும் பேறு பெற்ற உயர் ஞானத்தின ராகிய பலரை ஏனைப் பொதுத் தவத்தாரோடு ஒப்ப வைத்து எண்ணுபவராவர்.
சமய தீக்கை பெற்றுச் சரியையில் நிற்போர்க்குச் சிவநூல்களை ஓதினும் தத்துவ ஞானம் விளங்காமையானும், விசேட தீக்கை பெற்றுக் கிரியையிலும், யோகத்திலும் நிற்பார்க்கு அவை விளங்குதல், ஒரு நாட்டினை நேரே சென்று காணாது அதன் படத்தைக் காண்பார்க்கு அந் நாட்டியல்பு விளங்குதல் போலப் பாவனையானன்றி உண்மையான் அன்றாகலானும் அவ்விருவர்க்கும் பரமசிவன் சீகண்ட உருத்திரர் வழியாகவே அருள் புரிபவன். நிருவாண தீக்கை பெற்றார்க்குத் தத்துவ ஞானம் உண்மையான் விளங்குமாகலின், அவர்க்குப் பரம சிவன் பற்றற்ற பரஞானத்தால் சீவன் முத்தராய் நிற்கும் ஆசான் மூர்த்தி களது சுத்தான்ம சைதன்னியத்தில் விளங்கி அவராய் நின்றே அருள் புரிவன். ஆகவே, சமய தீக்கையின்பின் விசேட தீக்கை பெற்றுக் கிரியை அனுபவமும், யோக அனுபவமும் பெற்றார்க்குச் செய்யப் படும் நிருவாண தீக்கையே உண்மை நிருவாண தீக்கையாம். ஏனை யோர்க்கு அதனைச் செய்தல் நாடக மாத்திரையேயாம். இன்னும் முன்னைப் பிறவியிலே ஆசான் அருள்பெற்று நிட்டைகூட மாட்டாத வராய் அது கூடுதற் பொருட்டு நிலவுலகில் பிறந்தார்க்கும் சீகண்ட னாய் நிற்கும் பரமசிவன் தானே நேர் நின்று அருள்புரிவன் என்க.
மேன்மேல் உள்ள தத்துவங்கள் கீழ்க்கீழ் உள்ள தத்துவங் களினும் வியாபகமாவன வேயன்றி, இயைபின்றி மேலே நிற்பன அல்ல என்பது மேலேயும் (388, 407 பாடல்கள்) காட்டினாம் ஆதலின், இங்குக் கூறப்பட்டன அனைத்தும் பொருந்துவனவாதல் அறிந்து கொள்க.
சமயம் முதலிய மூவகைத் தீக்கைகளைப் பெற்றச் சரியை முதலிய நான்கினும் நிற்போர் திருக்கோயில் வழிபாட்டினைச் செய் தும், செய்வித்தும் நிற்கும் பொழுது பரமசிவனைத் தத்தம் இயல்பிற்கு ஏற்பவே உணர்ந்து நிற்பராகலான், பரமசிவனும் அவர்தம் உணர் விற்கு ஏற்ப மேற்கூறிய முறையானே அங்கு நின்று அருள் புரிவன் என்பது,
``திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவன்எனவே கண்டவர்க்குச் சிவன் உறைவன் அங்கே;
`உருக்கோலி மந்திரத்தால்` என நினையும் அவர்க்கும்`
`உளன் எங்கும் இலன் இங்கும் உளன் என்பார்க்கும்`
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தில் வந்துதித்தும், மிகும்சுரபிக் கெங்கும் உருக்காண; ஒண்ணாத பால்; முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல் வெளிப்பட்டருளுவன் [அன்பர்க்கே
எனச் சிவஞான சித்தியுட் (சூ. 12.4) கூறப்படுதல் காண்க.
இதனால். சிவபெருமான் கீழுலகத்துள்ளார்க்கு அதோ முகத்தின் வழியாகவே அருள் புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே.

பொழிப்புரை :

படைப்பவனாகிய பிரமதேவனது அண்டம் எனப்படும் நிலவட்டத்தின் கண் நின்றுகொண்டு அறியாமை காரணமாக வேறு வேறு தேவரை, `முதற்கடவுள்` என்று சொல்லிக் கொண்டாடுகின்ற மனிதர்கள், அறியாமை நீங்கிப் பரமசிவன் தமக்குக் கறைமிடற்றண்ணலாய் (சீகண்டனாய்) நின்று அருள் புரிதலை உணர்ந்து புகழவல்லாராயின், அவ்வண்ணல் அவர்களை முன்பு அவரால் புகழப்பட்ட தேவர்களே வந்து வணங்குமாறு உயர் நிலையில் வைத்தருளுவன்.

குறிப்புரை :

எனவே, நிலவுலகத்தார்க்குச் சீகண்ட உருத்திரன், மற்றும் குணிருத்திரன், மால், அயன், இந்திரன் முதலாகப் பலரிடத்தும் நின்று அருள்புரிவது பரமசிவனது அதோமுகமே என்பதாம்.
``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``
என்ற சிவஞானசித்தி (சூ. 2.25) க்கும் இதுவே கருத்தாகக் கொள்க.
இங்கு ``மெய்`` எனப்பட்டது, ``பொருள்சேர் புகழ்`` (குறள், 5) எனத் திருவள்ளுவர் கூறிய புகழையாம்.
மேல், `அதோமுகந்தானே கண்டங் கறுத்து நின்றது` எனக் கூறினமையால், இங்கு ``மைதாழ்ந்திலங்கு மணிமிடற்றோன்`` என்பது அம் முகத்தையே குறித்தல் இனிது விளங்கும்.
``தொழப்படுந் தேவர்தம் மால்தொழுவிக்குந்தன் தொண் டரையே`` (தி.4 ப.112 பா.5) என்ற அப்பர் திருமொழியை இங்கு, ``விண்ணோர் தொழச்செய்வன்`` என்றதனோடு வைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 4

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகம் வடதிசைத் தீ, (ஆகவநீயம் தென்றிசைத்தீ, (தக்கிணாக்கினி) என்னும் இரண்டற்கும் நடுவிலே இல்லத் தீ, (காருகபத்தியம்) எனப் பெயர்பெற்று வளர்ந்து எரிகின்ற தீயினுள் நின்று அதனைச் சிவாக்கினியாகச் செய்யும். இனி ஏனைய இரண்டு தீயினுள்ளும் சென்று கலந்து உலகம் முழுதும் பரவியும் நிற்கும்.

குறிப்புரை :

எனவே, ``நிலவுலகில் இல்லத்து வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும், திருக்கோயில்களில் வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும் சிவபெருமானது அதோ முகமே`` என அத்திருமுகம் நிலவுலகத்தார்க்கு அருள் புரியும் வகைகளைக் கூறியவாறாயிற்று. ``செந்தீ`` என்றே போயினாராயினும், அதன் வடிவாய்ப் பல பொருள்களால் அமைந்த இலிங்கங்களையும் கூறியதேயாம்.
``இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை``
-தி.8 திருவெம்பாவை, 17
``நின் அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே``
-தி.8 திருப்பள்ளியெழுச்சி
என்றாற் போலும் திருமொழிகள் இறைவன் தன் அடியவர் இல்லத்துக் கொண்ட குறியினுள் நின்று அருள்புரிதலைக் குறிப்பனவேயாம். அக்குறியை அந்தணரும், ஆசாரியரும் நித்தியாக்கினியாகவும், ஏனையோர் ஆன்மார்த்த லிங்கமாகவும் கொள்வர் என்க. ``செந்தீ`` என்பது குறுகிநின்றது.
இனி, ``நடுவுற ஓங்கிய செந்தீ`` என்றதும், ``உந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்`` என்றதும் முறையே அகத்தே இருதயத்துள் சுடர்வடிவில் நிற்றலையும், மூலாதாரத்தினின்று, சுவாதிட்டானம், மணிபூரகம் முதலாக மேலோங்கி உடல் முற்றும் பரவும் மூலாக்கினியையும் குறித்துப் பொதுமையில் நிற்பனவேயாம். அதனால், கிரியையாளர் செய்யும் அகவழி பாட்டிலும், யோகியர்கள் செய்யும் யோக பாவனைகளிலும் நின்று அவர்க்கு அருள்புரிவதும் அவ்வதோமுகமே என்பதும் பெறப்பட்டது. ``உலகம் வலம் வரும்`` என்று உடலையும் உலகம் போலவே கூறியொழிந்தது, சிவபெரு மானது அதோ முகத்துடன் தோன்றிய அறுமுகக் கடவுள் ``உலகத்தை யெல்லாம் ஒரு நொடியில் வலம் வந்தான்`` என்ற புராண வரலாறும் இவ்வுண்மையையே விளக்கும் என்பது தோன்றுதற்கு. அந்தி இறைவன் - அந்திச் செவ்வானம் போலும் நிறமுடைய சிவன். ``காலை, நண்பகல், அந்தி`` என்னும் காலங்களில் செய்யும் வழி பாடுகளில் அந்தியில் வழிபடப்படும் இறைவன் என்றலுமாம்.
இதனால், அதோமுகம் நிலவுலகத்தார்க்கு நின்று அருள் புரியுமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

அதோ முகத்தால் அதோ மாயையாகிய அசுத்த மாயையின் காரியங்களாகிய அண்டங்களில் நிறைந்து நிற்கும் பழையோனாகிய சிவபெருமான், அவ்வதோ முகத்தோடே எங்கும் பொருந்தி நின்று செயலாற்றுவான். அதனால், தாமரை மலர் மாலையை அணிந்த பிரமதேவனும், பிரம கற்பத்திற்குத் தலைவனும் அவனேயாவன்.

குறிப்புரை :

நூற்றிதழ்த் தாமரை, `சதோமுகம்` எனப் பட்டது. `நிவிர்த்தி கலைக்குத் தலைவன் எனப் படுகின்ற பிரமனாகி நிற்பதும் அதோமுகமே` என்றவாறு.
இதனால், அதோமுகமே கீழுலகத்தார்க்கு அருளுவது என்பது வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகம் பெரியதொரு தாமரை மலராய் நிற்கும் முறையினைக் கேண்மின்கள்; சுத்த மாயை யினின்றும் கீழ்நோக்கி வருகின்ற அவனுடைய அளவில்லாத சத்திகள் அதோமுகமாகி நூறிதழ்களை உடையதாய் விரிந்து நிற்க, அம்மலரின் கண்ணே சிவபெருமான் அமர்ந்திருக்கின்றான்.

குறிப்புரை :

``நூறு`` என்றது, பன்மை குறித்தற்கு ஓர் எண் கூறியவாறு. ஒன்றாகிய சிவனது சத்திதானே காரியங்களை நோக்கிப் பலவாய் நிற்குமாதலின், அதனை ஒரு மலரின்கண்ணே உள்ள பல இதழ்களாக உருவகித்தார். `அளவிறந்த காரியங்கள்` என்றவற்றை, `வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்னும் கலைகளோடே ஒன்றின் ஒன்று வியாப்பியமாய் நிற்கும் ஏனைத் தத்துவங்களையும் எண்ணாற்கூறி, அவற்றில் நிகழற்பாலனவாகிய காரியங்களின் விரியைக் கருதி உணர்ந்துகொள்க. சத்திமான் இன்றிச் சத்தி செயற் படாதாகலின், அவன் அவற்றோடெல்லாம் இயைந்து நிற்றலையும் உணர்த்தினார். ``ஆகி`` என்றது, `ஆக` என்பதன் திரிபு. மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னே கூட்டியுரைக்க.
இதனால், `சிவபிரானது அதோமுகம் எனப்படுவது, அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிறைந்து நின்று காரியங்களைச் செய்யும் அவனது சத்தியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே.

பொழிப்புரை :

யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருக் கோலத்தின் உண்மைகளை நூல்களாலும், நாட்டில் அமைந்த திருக் கோயில்கள், அவற்றில் நிகழும் விழாவகைகள் முதலியவற்றாலும் ஓர்ந்துணர்ந்து, அதனால் தெளிவுபெற்ற ஞானத்தை உடையராய் உள்ளத்தில் அன்புமிகப் பெறுவோர் பின்னர்த் தேவராவர். அவ்வாறு ஓர்ந்துணரவும், தெளியவும் மாட்டாத கீழ்மக்கள் அப்பெருமானை, எலும்பு, தோல், சாம்பல், வெண்டலை முதலியவைகளை உடைய வனாய்ச் சுடுகாட்டில் ஆடுதல், தலையோடு ஏந்தி இரத்தல் முதலிய வைகளையே நோக்கிச் சிறுதெய்வமாகக் கருதி இகழ்வார்களாயின், அச்செயல், கிளி ஒன்று தானே பூனையின் அருகுசென்று அகப்பட்டு நின்றது போல்வதாய்விடும்.

குறிப்புரை :

``பதி நாடி`` என்றதனை முதலிற்கூட்டி உரைக்க. அளியுறுதல் - அன்பினால் நெகிழ்ந்து உருகுதல். `அமரராவர்` என்னும் ஆக்கம் விரித்துரைக்க. பதி - தலைவனாம் தன்மை. ``ஈசன்`` என்பது முன்னே ``பதி`` என்றதனோடும் ஆறாவதன் பொருள்படச் சென்று இயைந்தது. ``அமரர்`` என்றது பொதுப்பட உயர்நிலையைக் குறித்ததாகலின், பதமுத்த, அபர முத்தர் முதலிய பலரது நிலைகளும் கொள்ளப்படும். `அமராபதி` என்பது பாடம் அன்று. கீழது - கீழ்நின்றாற்போல்வதொரு செயல். கீழ் நிற்கும் நிலையை, ``கீழ்`` என்றார். இதற்குக் `கீழ்தல் - கிழித்தல்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். இங்குக்கூறிய உவமையை, `கூற்றத்தைக் கையால் விளித் தற்று` (குறள், 894) என்றாற் போல்வனவற்றோடு வைத்துக் காண்க. சிவபெரு மானது முதன்மையை அறியாது நிற்றல்தானே தீங்கு பயப்பதாக, அதன்மேலும் அப் பெருமானை இகழ்தல் விரையப் பெருங்கேடு எய்துவிப்பதாம் என்பது இவ்வுவமையாற் பெறப் படுவது. `இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு` என்பது முன்னர் கூறப்பட்டது (தி.10 பா.336 உரை).
நிந்தனை செய்வாரது இழிநிலை இனிது விளங்குதற்கு, துதித்தல் செய்வாரது உயர் நிலையையும் உடன் கூறிக்காட்டினார்.
இதனால், சிவநிந்தை உய்தியில் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே.

பொழிப்புரை :

`தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப் படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.

குறிப்புரை :

`அமரர்` எனப் பெயர் பெற்றாராயினும் கற்ப காலங்களை வருணிக்கும் நூல்களில் அவர் இறந்தமை நன்கெடுத்துக் கூறப்படுதலாலும், அசுரர் பலர் தம் அகந்தையால் அழிந்தமை, பலராலும் நன்கறியப்பட்டதாகலானும், ``எல்லாம் விளிந்தவர்`` என்றும், இறப்பைக் கடக்க மாட்டாமையால் வினையின் நீங்காமை பெறப்படுதலால், ``முளிந்தவர்`` என்றும், வினையுள்ள துணையும் ஞானம் விளங்காதாகலின், ``மெய்ந்நின்ற ஞானம் உணரார்`` என்றும் கூறினார். மெய்ம்மை - திரிபின்மை. `மெய்யாய்` என ஆக்கம் விரிக்க. `தாமே ஞானத்தை எய்தாதார் பிறர்க்கு ஞானத்தைத் தருதல் எவ்வாறு` என்பது கருத்து. `உயிர்கட்குப் பெருந்துன்பந் தருவது அஞ்ஞானமும், பேரின்பம் தருவது மெய்ஞ்ஞானமுமேயாகலின், அவற்றை முறையே போக்குதலும், ஆக்குதலும் மாட்டாதாரைப் புகழ்தலும், அவை வல்லானை இகழ்தலும் பேதைமைப் பாலவாம்` என்றவாறு. அறிவுடையோர் பலர் தேவரைப் புகழ, அறிவிலார் சிலர் அசுரரையும், அவரொடு ஒத்த தீய தெய்வங்களையும் (துர்த்தேவதைகளையும்) புகழ்ந்து அடைதல் பற்றித் தானவரையும் எடுத்தோதினார். தளிதல் - குளிர்தல்; அன்பு செய்து மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.
இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே.

பொழிப்புரை :

அசுரரும், தேவரும் அறியாமையாகிய பகை தம் உணர்விலே நின்று கெடுத்தலால் தம்முள் மிக்க பகைகொண்டு தம் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிந்தனர். ஆகவே, சிவபெருமானை உண்மையில் இகழும் கருத்தினரல்லாதவரும், அவனை இகழ்வார்க்கு அஞ்சித் தாமும் இகழ்வார் போல நிற்பினும் அவர் அழிவே எய்துவர்.

குறிப்புரை :

`பகையாகிய தீக்குணம் அழிவைத் தருதலல்லது ஆக்கத்தைத் தாராது` என்பது உணர்த்துதற்குத் தேவாசுரரது நிலைமையை எடுத்துக் காட்டினார். `இவ்வாறு எவ்விடத்தும் தீமையையே பயக்கும் பகை, சிலரது உள்ளத்தில் சிவபிரானைப் பற்றித் தோன்றின், அவர் பெருந்தீங்கிற்கு உள்ளாதல் சொல்ல வேண்டுமோ` என்பது பின்னிரண்டு அடிகளால் பெறப்படும் கருத்து.
தேவர்கட்கு இறப்பில்லையாயினும், இறந்தாரொடு ஒப்பக் கரந்துறைதலும், அசுரர்க்கு அடிமைசெய்து நிற்றலும் ஆகிய நிலையை இறத்தலாக வைத்துக் கூறினார். ``எப்பகையாகிலும் எய்தார்`` என்றது, `உள்ளத்தில் சிறிது பகையும் இல்லாதவர்` என்றவாறு. தமக்குப் பகையில்லையாயினும், பகைகொண்டாரைத் திருத்தும் வலியின் மையால் தாமும் பகைகொண்டு சிவபிரானை இகழ்வார்போல நிற்பார் அழிதற்கு, தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களே சான்றாவர். `எய்தாரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், எளியன் என்று எண்ணும் எண்ணத்தினாலன்றிப் பகையால் சிவநிந்தை செய்தலின் குற்றமும், அச்செயலுக்கு உடன் படுதலின் குற்றமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே.

பொழிப்புரை :

வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர்பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங் களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.

குறிப்புரை :

``வேதியராயும்`` என்பதனை முதலிற் கொள்க. ``மாதர்`` என்பது தாப்பிசையாய் நின்றது. `மாதரது போகத்தையும் புல வியையும் நினைந்து தமது நெஞ்சேயன்றி உடம்பும் அவர் வசப்பட்டு கிடக்கின்றாராதலின், நினைப்பொழிவார்` என்க. விகிர்தனாம் நீதி - உலகியலுக்கு வேறுபட்ட முறைமை. அது, மணிமுடி சூடாது சடைமுடி தாங்குதல், பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகளை அணியாது எலும்பும் தலையும் பாம்பும் அணிதல், சந்தனம் குங்குமம் பூசாது சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், பட்டும் துகிலும் உடுத்தாது தோலை உடுத்தும் போர்த்தும் நிற்றல், யானை குதிரை சிவிகைகளில் ஏறாது எருதின்மேல் ஏறிவருதல் முதலிய ஒழுகலாறு. இதுபற்றி `அவன் இகமும் பரமுமாய செல்வம், இன்பம், வெற்றி என்பவற்றை அருள வல்லனல்லன்` என விடுத்து, அவற்றின் பொருட்டு அவனின் வேறாய ஒரு தெய்வத்தையோ, பல தெய்வங் களையோ அன்போடு வழிபடும் அறியாமையுடையார் வேதியருள்ளும் சிலர் உள்ளனர் என்பது பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. எனவே, ``இது கற்றறி வுடையார்க்குச் சிவநிந்தையாம்`` என்பதும், ``இந்நிந்தையால் அவர் விரும்பிய பயன் கைகூடாமையேயன்றி, அவற்றிற்கு நேர்மாறாய தீங்கு விளைதலும், ஒரோவொருகால் பயன் கைகூடினும் அது நிலை பெறாது இடையே நீங்குதலும் உளவாம்`` என்பதும் கூறியவா றாயிற்று. இவற்றிற்கு, அமுதம் வேண்டிக்கடலைக் கடைந்த தேவர்க்கு ஆலகால விடம் கிடைத்ததும், நூறுபரிமேத வேள்வி செய்து இந்திர பதவியை அடைந்த நகுடன் அதனை ஒருநொடியில் இழந்து மலைப் பாம்பாய் நெடுங்காலம் இன்னலுற்றதும் போல்வனவாகிய வரலாறுகள் சிறந்த எடுத்துக் காட்டாதல் அறிக. `வேதத்தை ஓதும் வேதியர் தாமே அதன் விழுப் பொருளை உணரமாட்டாது இன்ன ராவார் எனின், ஏனையோரைப் பற்றிச் சொல்லவேண்டுமோ` என்ற வாறு. இவ்வேதியர் சுமார்த்தரும், வைணவரும் போல்வார் என்க. ``நீதியுள் நின்று`` என ஒருசொல் வருவிக்க.
``சிவபெருமான் முத்தியைக் கொடுப்பவன்`` என்பது எங்கும் எடுத்துச் சொல்லப்படுதற்குக் கருத்து, ``முத்தியை அவனன்றிக் கொடுப்பவர் பிறரில்லை`` என்பதேயன்றி, அவன் அதனிற் பன் மடங்கு சிறுமையுடையனவாய இகபர நலங்களை அருளமாட்டான் என்பதன்று. இது செயற்கரியவற்றைச் செய்யவல்லார் செயற்கெளிய வற்றைச் செய்தல் தானே பெறப்படும் முறைமை பற்றி விளங்குவதாம். இம் முறைமையை விளக்குதற்கு, `தண்டா பூபிகா நியாயம்` (தண்டம் - கழி. அபூபம் - பணியாரம். `பணியாரத்தைப் பூனை வந்து விழுங்காதிருத்தற்கு அதனை ஒரு கழியில் கட்டி வைத்திருக்க, ஒரு பூனை அந்தக்கழியை விழுங்கிவிட்டது என்பது அறியப்பட்டால், பணியாரத்தை விழுங்கியது என்பது தானே அமைதல்போல` என்பதே தண்டா பூபிகா நியாயம். மற்றைப் பூனைகளால் விழுங்கமுடியாத கழியை ஒரு பூனை விழுங்குமாயின், அது மற்றைப் பூனைகளால் விழுங்கத்தக்க பணியாரத்தை எளிதின் விழுங்குதல் தானே பெறப்படுதல் போலப் பிற கடவுளால் தரமுடியாத முத்தியைச் சிவபெருமான் கொடுப்பன் என்றால், அவன் பிற தெய்வங்களால் தரப்படுகின்ற இகபர நலங்களை எளிதின் வழங்குதல் தானே பெறப்படும் என்பது இங்குக் கொள்ளத்தக்கது.) என்றொரு நியாயம் கூறுவர் நியாய நூலார்.
இக்கருத்துப்பற்றியே திருமுறைகளில்,
``சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே, செயமகள் தலைவரே, கலைமகள் தர நிகழ்வரே, எழில்உரு உடையவர்களே, சிவபுரம் நினைபவர் புகழ்மிகும் உலகிலே, குலன் நிலனிடை நிகழுமே, வழி புவிதிகழுமே`` -தி.1ப.21
``அன்பன்அணிஆரூர் - நன்பொன் மலர்தூவ -
இன்பம்ஆகுமே``

``ஐயன்அணிஆரூர் - செய்ய மலர்தூவ -
வையம் உமதாமே`` -தி.1ப.91
``நீலமாமிடற் - றாலவாயிலான் - பாலதாயினார் -
ஞாலம் ஆள்வரே``
``அண்ணல் ஆலவாய் - நண்ணினான்றனை - எண்ணியேதொழத் - திண்ணம்இன்பமே``
``அம்பொன் ஆலவாய் - நம்பனார்கழல் -
நம்பிவாழ்பவர் - துன்பம் வீடுமே`` -தி.1ப.94
``அண்ணல் மருதனைப் பண்ணின் மொழிசொல்ல விண்ணுந்தமதாமே``
``எரியார் மருதரைத் தரியா தேத்துவார்
பெரியார் உலகிலே``
``எந்தை மருதரைச் - சிந்தை செய்பவர் - புந்தி நல்லரே``
``மறையார் மருதரை - நிறையால் நினைபவர் -
குறையார் இன்பமே`` -தி.1ப.95
``அரவன் அன்னியூர் - பரவுவார் விண்ணுக் -கொருவ ராவரே`` -தி.1ப.96
என்றாற்போல்வன பலவும் ஆங்காங்குப் பலபட எடுத்துக் கூறப் படுகின்றன. எனினும் வேதியரேயாயினும், இன்னோரன்ன அருள் முழக்கங்கள் செவியில் ஏறப்பெறுதலும், அவற்றில் தெளிவுண் டாதலும் முன்னைத் தவத்தாலன்றி ஆகாவாம்.
இனி, முத்தி சிவபெருமானால் அன்றிப் பிறரால் தரப் படாமையை,
பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும் விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றுமுண்டோ.
-கந்த புராணம் - தட்ச காண்டம் - உபதேசப் படலம் , 25 மானுடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்ல னாயின் ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமே அறிதல்வேண்டும்.
-காஞ்சிப் புராணம், சனற்குமார படலம், 43
அவனவ ளதுவெனு மவைதொ றொன்றுமிச்
சிவனலால் முத்தியில் சேர்த்து வாரிலை;
துவளரும் இம்முறை சுருதி கூறுமால்;
இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்.
-காஞ்சிப்புராணம், திருநெறிக்காரைக் காட்டுப் படலம், 29
என்றாற்போல்வனவற்றால் நன்கறியப்படும். வீடாவது பிறவி யறுதலேயாகலின், `அதனைப் பிறவியுடைய வேறு சிலரும் தருவர்` என்றல் பேதைமைப்பாலதேயாம். இவற்றுள், `சுருதி என்றது அதர் வணவேதம்` என்பது காஞ்சிப் புராண வயிரவேசப் படலத்துள் கூறப்பட்டது.
இதனால், பேதைமையால் சிவபெருமானை இகழ்தலும் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.

பொழிப்புரை :

கீழ்மக்களாயுள்ளார் ஏனைப் பெரியோரைப் பேணிக் கொள்ளாமையேயன்றித் தம்மைப் பெற்ற தாய் தந்தையரையும் பேணமாட்டார். மற்றும் உறவினராய் உள்ளவரையும் அவர் மனம் நோகத்தக்க சொற்களைச் சொல்லி இகழ்வர்; தாய் தந்தையரையும், உடன் பிறந்தார் முதலிய சுற்றத்தாரையும் தக்கவாற்றால் பேணுதல் ஆகிய சான்றோர் நெறியில் நிற்பவரன்றி நல்லன பலவும் வேறு யாவர் பெறும் பேறாகும்!

குறிப்புரை :

``கற்றிருந்தார்`` என்றது ``கற்று வல்ல சான்றோர்`` என்றவாறு. ``உற்றிருந்தாரவர்`` என்றதில் அவர் பகுதிப் பொருள் விகுதி. ``நல்லன பலவும்`` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.
தாய், தந்தை, தமையன்மார் மாதுலன் முதலிய மூத்த உறவினர் இவரெல்லாம் ``குரவர்`` எனப்படுவராகலின், ``அவரை நிந்தித்தல் கூடாது`` என்பதனையும் இவ்வதிகாரத்துள் முதற்கண் வைத்துக் கூறினார். இனி ``கல்வி கற்பிக்கும் ஆசிரியர் குரவராதல்`` வெளிப்படை. அவரை, ``கற்றிருந்தார்`` என்பதனுள் அடக்கினார்; அவர்தாம் எழுத்தறிவிப்பவரும், நூற்பொருள் உணர்த்துபவரும், தொழில் கற்பிப்பவரும் முதலாகப் பல திறத்தராதலின்.

இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``ஓரெழுத்தொரு பொருள்`` என்னும் பாடல் முழுவதும் யாப்பு வேறுபட்டுக் கிடத்தலின், அது நாயனார் திருமொழியன்றாம். அதன் பொருளும், ``மந்திரம் ஒன்றை`` என வரும் திருமந்திரத்துட் பெறப்படுகின்றது.

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

பண் :

பாடல் எண் : 2

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

பொழிப்புரை :

கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.

குறிப்புரை :

``பத்தினிகள்`` என்பதில் விகுதி தொகுத்தலாயிற்று. தத்துவ ஞானம் நூலானும், அநுபவத்தானும் வருவது. பத்தினிகள் முதலிய மூவரும் நேரே குரவராகாவிடினும், தமது ஒழுக்கத்தால் உலகம் நன்னெறி நிற்கச் செய்தலால் உலக ஆசிரியராதல் பற்றி அவர்கட்குத் தீங்கு செய்வது உலகிற்கே தீங்கு செய்வதாய் முடிதலின், அதனால் விளையும் தீமை பெரிதாயிற்று. சதாநந்தி - சதா ஆநந்தி; எப்பொழுதும் இன்பம் உற்றிருப்பவர்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், உபதேச குரவரையே யன்றிப் பிற குரவரை இகழ்தலும் கூடா என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மந்திரம் ஒன்றே உரைசெய்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
பிந்திச் சுணங்காய்ப் பிறந்தொரு நூறுரு
வந்து புலையராய் மாய்வர்கள் மண்ணிலே.

பொழிப்புரை :

மந்திரமாவனவற்றுள் ஒன்றையே உபதேசித்தவ ராயினும், அவரது மனம் நோவத் தீமைகளைச் செய்தவர்கள், இம் மண்ணுலகில் யாவரும் இகழ்ந்து ஒதுக்குகின்ற நாயாய் நூறுமுறை பிறந்து, பின்பு மக்களாய்ப் பிறக்கினும் புலையராய்ப் பிறந்து, இம்மை மறுமைகளில் யாதொரு பயனையும் எய்தாது வாளா இறந்தொழிவர்.

குறிப்புரை :

`ஒருபிறப்பில் குருவை இகழ்ந்தவர் பல பிறப்புக்களில் பலராலும் இகழும் நிலையை அடைவர்` என்பதாம். மந்திரத்தைப் பன்முறை கணித்துப் பயன் பெற்றவரை ``மாதவர்`` என்றார். `சுணங்கன்` என்பது கடைக்குறைந்தது. இத் திருமந்திரத்தின் பாடம் பெரிதும் வேறுபட்டுள்ளது.
இதனால், மந்திர குருவை (கிரியா குருவை) நிந்தித்தல் விலக்கப்பட்டது.
இதன்பின்னர் உள்ள, ``ஈசனடியார்`` என்னும் திருமந்திரம் அடுத்த அதிகாரத்ததாம்.

பண் :

பாடல் எண் : 4

சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க முங்குன்றி ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.

பொழிப்புரை :

ஞான நெறியை உணர்த்துகின்ற ஞானகுருவின் திருமுன்பில், `பொய், குறளை, கடுஞ்சொல், பயனில சொல்` என்னும் தீய சொற்கள் எவர் வாய்வழியாக நிகழினும் உலகில் நன்னெறி அழிந்து, மெய்யுணர்வும் இல்லாதொழியும். தொன்றுதொட்டு வரும் உலகியல் துறைகளும், மெய்ந்நெறித் துறைகளும் மக்களால் மறக்கப்பட்டுப் பல சமயங்களும் கெட, நாட்டில் பஞ்சமும் உண்டாகும்.

குறிப்புரை :

ஞானநெறி, `சன்மார்க்கம்` என வழங்கப்படுதலை அறிந்துகொள்க. ``பொய்`` என்றது உபலக்கணம்.
இதனால், ஞான குருவை இகழ்தல் பெரிதும் தீமை தருவதாம் என, அது விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே.

பொழிப்புரை :

கன்மி ஞானிக்கு ஒப்பாதல் - அஃதாவது, ஞானிக்கு ஒப்பாகக் கருதி, ஞானகுரு இருக்கவும் அவனை விடுத்துக் கன்மியைக் குருவாகக் கொள்ளுதல், கையில் மாணிக்கம் கிடைத்திருக்கவும் அதனை எறிந்துவிட்டு, வெயிலால் வெதும்பிக் கிடக்கும் பரற்கல்லைக் கையில் எடுத்துச் சுமப்பவன் செயல்போலவும், கையில் நெய்யுள்ள பாலும், இளநீரும், தயிரும் இருக்க அவற்றை உண்ணாமல், பின்புதான் அழிதற்கு ஏதுவாகிய எட்டிப்பழத்தை முயன்று பெற்று உண்பவன் செயல் போலவும் ஆம்.

குறிப்புரை :

ஒப்பு - ஒத்தல். இஃது ஒப்பாகக் கருதிச் செய்யும் செயலின் மேல் நின்றது. கன்மி - `கன்மமே முத்தி தரும்; ஞானம் வேண்டுவதில்லை` என்பவன். இக்கொள்கையினரை, `கன்ம காண்டிகள்` என்பர். கன்மி ஞானிக்கு ஒத்தல், சுமப்பான் விதி போன்றும், கைப்பு இட்டு உண்பான் (செயல்) போன்றும் ஆம் என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், உண்மைக் குரவரது பெருமையை அறியாமையும் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே.

பொழிப்புரை :

சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே.

குறிப்புரை :

``சிவனடியாரை வெறுத்துப் பேசுதற்குக் காரணம், செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கும், சமயக் காழ்ப்பும் போல்வனவேயன்றிப் பிறிதில்லை`` என்றற்கு முதல் இரண்டடிகளைக் கூறினார். ``ஊர்கள்தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்`` (தி.6 ப.98 பா.2) என்றதும், ``சிவனடியார்க்கு உலகத் தாரோடு உறவினா லாதல், பகையினாலாதல் தொடர்பில்லை என்பது விளக்கியதேயாம்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான். -குறள், 1062
என்றதில், ``இரத்தல் இல்வாழ்வார் மேற்கொள்ளும் தொழில்களுள் ஒன்றன்று`` என்றதன்றி,
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. -குறள், 41
என்புழிக் கூறப்பட்ட இயல்புடைய மூவரை விலக்கியதன்று. இனி,
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -குறள், 42
என்புழித் ``துறந்தார்``என்றது கிளைஞரால் கைவிடப்பட்டவரை. இவரை, ``அனாதைகள்`` என்பர். இவர் சிறுமகாரும், கழிமூப்பினரும், ``காணார் கேளார் கால் முடம்பட்டார்`` (மணிமேகலை, காதை.13, வரி.111) முதலியோருமாய், முயற்சி செய்யமாட்டாதவராய் இருப்பவர். இவர் தாமே கிளைஞரால் கைவிடப்படாதவழி. அவரால் வயிறு நிரம்பப் பெறாராயின், ``துவ்வாதவர் வறியார்`` எனப்படுவர். ``இவர்க்கும் ``இல்வாழ்வான் துணை`` என்றமையால், இவரையும் மேற்காட்டிய ``இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்`` என்னும் குறள் விலக்கியதின்றாம். ஆகவே, இவரையெல்லாம் பொதுப் பட நோக்கியே, ``ஈகை`` (குறள் அதிகாரம், 23) என்னும் அதிகாரமும்,
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. -குறள், 1058
என்னும் குறளும் சொல்லப்பட்டனவாம். இவ்வாசிரியரும் ``யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி`` (பா. 51) என்றதும் இவரை நோக்கியேயாம்.
இங்ஙனம் நூல் முழுவதையும் முற்றநோக்கி உண்மை உணரமாட்டாதார். `இங்குக் காட்டியன பலவும் தம்முள் ஒன்றி நில்லாது ஒன்றை ஒன்று விலக்குவனவாய் முரணிநிற்கும்` என்று இகழ்வர். அவர் ``ஏற்பதிகழ்ச்சி, ஐயம் இட்டுண்`` (ஆத்திசூடி, 8,9) என்றாற் போல்வனவற்றையும் அன்னவாக வைத்து இகழ்தல் சொல்ல வேண்டுமோ என்பது.
சிவனடியாராகிய மாகேசுரரை நல்விருந்தினராக வரவேற்று ஓம்புவார் சத்திநிபாதர். அவர் உலகத்து அரியராக, இரவலராக வைத்து ஐயம் ஏற்று உண்டலையே கூறினார். ஐயம் இடுவோர் அவரின் மிக்குளதாதல் பற்றி இங்கு `ஆர்க்கும் விரோதிகள்` என்பது பாடமாயின், `ஆண்டான் அடியவராய யார்க்கும் விரோதிகளாய் ஐயம் ஏற்றும் உண்பவராய அவ்வடியவரை வேண்டாது பேசினார்` என உரைத்தலன்றிப் பிறவாறுரைத்தல் பொருந்தாமை அறிக. `தாந் தாம் விழுவது` என்பதில் இரண்டாவது `தாம்` அசைநிலை.
இதனால், மாகேசுர நிந்தை மாபாதகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.

பொழிப்புரை :

சிவனடியாரது உள்ளம் எவ்வாற்றாலேனும் நோகு மாயின். அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக நாடும், அதன் சிறப்புக்களும் அழிதலேயன்றி விண்ணுலக வேந்தன் ஆட்சி பீடத் துடன் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்தொழியும். இஃது எங்கள் நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.

குறிப்புரை :

இவ்வாறே,
தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும்; தாபதர்கள்
தாம்உணரில் இந்தத் தலம்உணரும் - தாம்முனியில்
பூமடந்தை தங்காள்; புகழ்மடந்தை போயகலும்;
நாமடந்தை நில்லாள் நயந்து.
எனத் திருக்களிற்றுப்படி(பா.68)யும் கூறிற்று. இதனால், சிவனடியாரது மனம் நோவாமைக் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் பெறப்படுதலின், அது பற்றியே நாயனார் முன்னர்,
ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன்; காவா தொழிவனேல்,
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. -தி.10 பா. 242
என விதித்தார்.
``மதுரையில் ஆளுடைய பிள்ளையாரோடு ஒட்டி வாதில் தோற்ற சமணரை நின்றசீர் நெடுமாறர் கழுவில் ஏற்றியது, அவர்தாமே, `வாதில் அழிந்தோமாகில் - வெங்கழு வேற்றுவான் இவ் வேந்தனே` (தி.12 பெ.பு ஞானசம், 798) என உடன்பட்டமையை முதன்மையாகக் கொண்டன்று; அதற்கு முன்பே பிள்ளையார் எழுந்தருளியிருந்த திருமடத்தில் இரவில் தீயிட்டுத் திருக்கூட்டத்தார் பலரை உளம் நடுங்கச் செய்த மாபாதகம் அவரையும், தன்னையும், பின்பு தொடராமைப் பொருட்டே`` என்பதையும் ``அஃது அன்னதாகலின் அதனை விலக்கின் தமக்கும் குற்றமாம் என்று கருதியே பிள்ளையார் அரசன் செயலைத் தடுத்திலர்`` என்பதையும் சேக்கிழார்,
மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால் அனுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற்றி முறைசெய்க என்று கூற.
-தி.12 பெ.பு ஞானசம். 853
எனவும்,
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனைக் கேட்டும்
இகல்இலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த எல்லை.
-தி.12 பெ.பு ஞானசம். 854
எனவும் இனிது விளங்க அருளிச்செய்தார். ஆயினும், அவற்றைச் செவிமடாது, `பிள்ளையார் வேந்தன் செய்கையை விலக்காதிருந்தமை அவர்க்கு அறமாதல் இல்லை` எனக் கூறிப் பிணங்குவார் உளராயின், அவர்க்கு நாம் கடவதொன்றில்லை. தண்டியடிகள் நாயனாரோடு ஒட்டித் தோற்ற சமணரைச் சோழ மன்னன் ஊரை விட்டு அகற்றியது அவர் செய்த தீமையை ஒப்பநாடி அத்தக ஒறுத்ததேயாதல் அறிக. (புறம், 10)
இச் சிவாகமப் பொருளை மணிமேகலைக் காப்பியத்துள் புத்தர்க்கு ஏற்றியுரைத்தார் அதன் ஆசிரியர். (காதை.14, 29, 29, 21, 22)
இதனால் மாகேசுர நிந்தையால் விளையும் கேடு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே.

பொழிப்புரை :

`சிவஞானியை நிந்திப்பதே நலம்` என்று கருதி நிந்திப்பவனும், அவ்வாறன்றி, `வந்திப்பதே (வணங்குவதே) நலம்` என்று அறிந்து வந்திப்பவனும் முறையே நல்வினையின் நீங்கித் தீவினையை எய்துபவனும், தீவினையின் நீங்கி நல்வினையை எய்துபவனுமாவர். ஏனெனில், சிவஞானிகட்கு அடியவரான பின்பே எவர்க்கும் சிவபெருமானது திருவருள் கிடைப்பதாகலின்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது கிளைப்பெயர். ``நல்வினை தீவினை தீர்வார்`` என்றதனை, மேல் ``நிந்திப்பவன், வந்திப்பவன்`` என்றவற்றோடு நிரனிரையாக இயைக்க. `அவன்வயமாக` என ஆக்கம் வருவிக்க. போதல் - அடைதல். `ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கன்பில்லார் (சிவஞானசித்தி. சூ. 12 - 2) ஆதலின், ``அவன் வயமானபொழுதே புகும் சிவபோகம்`` என்றார். இவ் ஏகாரம் பிரிநிலை. சிவனது திருவருளால் கிடைப்பது சிவானந்தமாகலின், அத்திருவருள் புகுதலைச் சிவானந்தம் புகுதலாகவே கூறினார். இங்கு ``நல்வினை, தீவினை`` எனப்பட்டவை, சிவ நல்வினை தீவினைகளேயாதலின், சிவ ஞானிகளை வந்திப்பவர் சிவபுண்ணியச் சீலராய் சிவஞானம் பெற்று அதன் வழிச் சிவானந்தத்தை எய்துதலும், சிவஞானிகளை நிந்திப்பவர் சிவாபராதிகளாய் அருநரகும், இழிபிறப்பும் எய்துதலும் பெறப் பட்டன. இதனாலன்றோ,
``நமக்கு உண்டுகொலோ, தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே`` -தி.4 ப.101
என அப்பரும் திருவாய்மலர்ந்தருள்வாராயினர்.
இதனால், `சிவனடியாரை வந்தியாதொழியினும். நிந்தித்தல் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே.

பொழிப்புரை :

சிவஞானம் கிடைக்கப்பெற்ற சிவனடியார்களை விரும்பி வழிபட்டால், எவ்விடத்தும் அரசர்கள் தம் படையுடன் வந்து வணங்க, சிறுபயன்களைத் தருகின்ற தேவர்க்கெல்லாம் முதல்வ னாகிய சிவபெருமானை அவன் அருளால் அடைந்து பேரின்பம் எய்துதல் கூடும்.

குறிப்புரை :

`விளைந்தவரை என்னும் இரண்டனுருபு தொகுத்த லாயிற்று. நம்புதல் - விரும்புதல்; அன்புசெய்தல், `ஊனம்` என்பதும், `ஏனையது` என்பதும் கடைக்குறைந்து நின்றன. ஊனம் -குறை யுடைது. `அருளால்` என உருபு விரிக்க. ஈற்றடியில் உள்ள சொற்களை, `அருளால் எட்டி, ஏனையது விளைதலும் ஆம்` எனப் பின்முன்னாக நிறுத்தி, விகுதிபிரித்துக் கூட்டி உரைக்க. விளைதல் - விளையப் பெறுதல். `வணங்குவார்க்கு இப்பயனெல்லாம் விளையும்` எனவே, `வணங்காது பிணங்குவார்க்கு இவற்றின் மறுதலையாய அரச தண்டமும், இருளுலகமும் கிடைக்கும்` என்பது பெறப்பட்டது.
இதனால், மாகேசுர நிந்தை செய்வார்க்கு வரும் குற்றம் மறுதலை முகத்தாற் கூறப்பட்டது.
இங்கு நிற்கத்தக்கதாய இத்திருமந்திரம், பதிப்புக்களில் அடுத்த அதிகாரத்தில் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 1

பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

பொழிப்புரை :

பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.

குறிப்புரை :

கடுஞ்சொற் பேசுதற்குக் காரணமான வெகுளியை, அடக்கமின்றிப் பலகாலும் படபடத்து ஒலிக்கின்ற பல்லியாக உரு வகித்தார். அது மூக்கையும் நாக்கையும் மூடிக்கிடப்பதாகக் கூறியது, அவை இரண்டுமே எழுத்தொலி புறப்படும் இடமாய் இருத்தல் பற்றி. வெகுளியால் முணுமுணுக்கின்றவர்கட்குப் பேச்சுப் பெரும் பான்மையும் மூக்கின் துணையோடே நிகழ்தல் அறிக. தெற்றுதல் - துடைத்தல். ``பற்றி நின்றார்`` என்றதற்குச் சொல்லெச்சத்தால் வந்தியைந்த `பற்று` என்பது தானே `தெற்றுதல், சிதைத்தல். என்ப வற்றிற்கும் செயப்படு பொருளாதல் காண்க. `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களுள் நடுவுநின்ற வெகுளியுளதாயின் ஏனை இரண்டும் நீங்கினவாகா ஆதலின், அவ்விரண்டையும் விட்ட மாகேசுரர் வெகுளியுடையராதல் கூடாது என்பதனை வலியுறுத்தற்கு, வெகுளி, காமமும், மயக்கமும் உடையாரையே பற்றிநின்று கடுஞ் சொற் பிறப்பித்தலை உடன் கூறினார். அதனானே, மாகேசுரர் கடுஞ் சொற் கூறலாகாமையும் பெறப்பட்டது. ஆளுடைய பிள்ளையார் சமணரால் இடப்பட்ட தீயைப் `பாண்டியன்பால் செல்க` என வெஞ் சொற் சொல்லியது` மாகேசுரராய அவர்க்குத் தகுவதோ` என ஐயுறாமைப் பொருட்டன்றே அவர், ``செல்க`` என வாளா கூறாது, ``பையவே செல்க`` எனப் பணித்தமையை எடுத்துக்காட்டி, ``பையவே `` என்றாராயினும் ``செல்க`` என்றது என்னை என்பார்க்கு.
``... ... ... அரசன்பால் அபராதம் உறுதலாலும்
மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும்
வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர்
தீண்டியிடப் பேறுடையன் ஆத லாலும்
தீப்பிணியைப் பையவே செல்க என்றார்``
-தி.12 பெ.பு.ஞானசம். 705
என விளக்கியருளினார் சேக்கிழார். அப்பர் பெருமான், தம்மை நீற்றறையில் இடுதல் முதலியவற்றைச் செய்தும், செய்வித்தும் நின்றார் மாட்டு வெகுளுதலும், வெஞ்சொற் சொல்லுதலும் இன்றிவாளா அமைந்திருந்தமை, மாகேசுரரது பொறையுடைமைக்கு எல்லையாய் அமைந்ததோர் எடுத்துக்காட்டாதல் அறிக.
``வற்றாதெழுவது`` என்றது குறிப்புருவகம். `வற்றா தொழிவது` என்பது பாடம் அன்று. பயிர்வளர்வதற்கு நீர்போலச் சிவபத்தி வளர்வதற்குப் பொறை யுடைமை இன்றியமையாததாதலின் அதனை நீராக உருவகம் செய்தார்.
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி
விளையு மாறே. -தி.4 ப.76 பா.2
என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.
இதனால், `மாகேசுரர் பிறர் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``ஓலக்கம் சூழ்ந்த`` என்னும் திருமந்திரம் சிறிது வேறுபட முன்புவந்துள்ளதே. (பா. 91).

பண் :

பாடல் எண் : 2

வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.

பொழிப்புரை :

காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. செய்யும் - செய்யுங்கள். பயிற்றிப் பதஞ் செய்தற்கு, `உள்ளம்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. `கொல்லை, காடு` என்பன ஒருபொருட் சொற்கள். இலயம் - ஒடுக்கம்; பொறுமை. உண்டு ஆம் - உள்ளதாய் (பொருளாய்) நிற்கும். பொருண்மையாவது உளதாந் தன்மையாதலின், பொருளை `உள்ளது` என்றார். இங்ஙனம் அன்றிக் கிடந்தவாறேகொண்டு, `பதம் செய்தால் உம்மிடத்துக் கூத்தனுக்கு எல்லையில்லாத ஒற்றுமை (இரக்கம்) உண்டாகும்` என உரைத்தலும் ஆம். வெகுளியுடைய உள்ளத்தில் அன்பும், அருளும் தோன்றா ஆதலின், அன்பையும், அருளையும் பொருளாக விரும்பும் சிவ பெருமான் அதற்கு முதலாகிய பொறையைப் பொருளாக விரும்புவன் என்பது உணர்க.
இதனால், மகேசுரனுக்கு இனிதாவனவற்றுள் பொறை யுடைமை முதலதாதல் கூறப்பட்டது.
இவ்வாறு, பொறையுடைமையை விதிக்கவே, அதனடியாகப் பிறக்கும் இன்னா செய்யாமையும் விதிக்கப்பட்டதாம். புலால் உண்ணாமையாகிய இயைபு பற்றி, கொல்லாமை முன்பே விதிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே.

பொழிப்புரை :

சிவபிரானை அடைய விரும்பிய யான், பத்தி காரணமாக, அவன் வெளிப்படும் இடங்கட்கெல்லாம் ஓடியும், அவனையே புகழ்ந்து பாடியும் இன்னோரன்னவற்றால் அவனை அடையவல்லாரது அடிநிழலைப் பிரியாது சேர்ந்திருப்பேன்.

குறிப்புரை :

எனவே, ``அச் சேர்ச்சிதானே அவனை அடை விக்கும்`` என்பதாம். ``ஓடவல்லார், பாடவல்லார்`` என்றதும் கூட வல்லார் கூடுமாற்றை விதந்தவாறேயாம். ஆகவே, `நடாவுவன், வாழ்குவன்` என்பனவும். ``கூடுவன்`` என்றதனை வகுத்தோதியவாறாம். `ஓட வல்லாராகிய தமர்` என்க. `சிவனையடைய விரும்புவார்க்கு அவனடியவரே உறவினர்` என்பதை`
`உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்``
-தி.6 ப.98 பா.4
என்பதனாலும் அறிக. `ஓலியொடு` என உருபு விரிக்க. ஒலியொடு வாழ்தலாவது தாமும் அவரொடு சேர்ந்து பாடுதல். பாடவல்லாரை. ``பரமனையே பாடுவார்``(தி.7 ப.39 பா.10) எனத் திருத்தொண்டத் தொகையுள் அருளிச் செய்தமை காண்க. `பாடவல்லாரொடு` என்றே பாடம் ஓதுதலும் ஆம். தேடுதல் - அடையுமாற்றாலெல்லாம் முயலுதலும். ``ஓட வல்லார்`` முதலிய நான்கும், பெரியாராவாரது இயல்பு இவை என்றவாறாம்.
பாடிற் றிலேன்;பணி யேன்; மணி நீயொளித்
தாய்க்குப்பச்சூன்
வீடிற் றிலேனை விடுதிகண் டாய்; வியந்
தாங்கலறித்
தேடிற் றிலேன், சிவன் எவ்விடத் தான் எவர்
கண்டனரென்
றோடிற் றிலேன்;கிடந்துள்ளுரு கேன்;நின்
றுழைத்தனனே. -தி.8 நீத்தல், 45
என்றதனையும் நோக்குக. இங்கு, கூடவல்லார் அடி கூடுவன் என்றாற் போலவே,
``கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே`` -தி.6 ப.96 பா.10
``... ... ... ... ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே`` -தி.7 ப.75 பா.1
என்றற்றொடக்கத்தனவாக வருவன பலவற்றுள்ளும் அடியார்க்கு அடியவராதலே சிறந்தெடுத்துப் பேசப்படுதல் அறிக. ``யான்`` என்றது இசையெச்சத்தால், ``சிவபிரானை அடைய விரும்பிய யான்`` எனப் பொருள் தருதல் காண்க.
இதனால், ``பெரியாரைத் துணைக்கோடலே இறைவனை அடைவிக்கும்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே.

பொழிப்புரை :

நெஞ்சே, நீ உன்னை அகப்படுத்துகின்ற துன்பத்தில் அகப்பட்டுத் தீயில் வீழ்ந்த தளிர்போல் வாட்டமுற்றாலும் சிவபெரு மானிடத்து அன்பு வைத்திலை. இவ்வாறு அத்துன்பத்திலே இருந்து நீ என்ன செய்யப் போகின்றாய்? நான் போகின்ற இடத்திற்கு நீயும் என்னோடு வா.

குறிப்புரை :

`தாவும்` என்னும் பெயரெச்சத்து உகரம் கெட்டது. தாவுதல் - அகப்படுத்தல். ``தளிர்போல்`` என்றாராயினும், தீயில் வீழ்ந்த தளிர்போல்`` என்றல் கருத்தாதல் அறிக. நெஞ்சை முன்னிலைப் படுத்தமையின், அதற்கும் ஒரு மனம் இருப்பது போலக் கூறினார். ``என் செய்வாய்`` என்றது, ``வேறு பயன் என்ன பெறப் போகிறாய்`` என்றவாறு. ``பெறுவது ஒன்று இன்மையால் என்னொடு வருதலால் இழப்பில்லை`` என்பதாம். ``சிறியார் பெரியாரை அணுக வாரார்`` என்பது தோன்றுதற்குப் ``பெரியோரிடத்து`` என்னாது, ``போமிடத்து`` எனப் பொதுப்படக் கூறினார். `போந்தால் அத்துன்பம் நீங்கும் `என்பது குறிப்பெச்சம். ``கண்டாய்`` முன்னிலை அசை. இத் திருமந்திரத்துள் மூன்றாம் அடி உயிர் எதுகை பெற்றது.
இதனால், `பெரியாரைத் துணைக் கொள்வார்க்குத் துன்பம் நீங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.

பொழிப்புரை :

அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்.

குறிப்புரை :

`அறிவார் செறிவார்` எனவும், `நெறி நின்று` எனவும் இயையும். `ஆதலின்` என்பது சொல்லெச்சம். பேரின்பத்தைத் தருவதனைப் பேரின்பம் என்றார்.
இதனால், பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பத்தைத் தருதல் காரணத்துடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே.

பொழிப்புரை :

நீண்ட சடையை உடைய சிவபெருமானுக்கு அடி யவராயினமையினால் உலகம் முழுதும் போர்த்த புகழை உடையவ ராய், அப்பெருமானது அழகிய திருவடியையன்றிப் பிறிதொன்றையும் அடைய விரும்பாதவராகிய அவரிடத்துச் சென்று சேர்ந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் சிவபெருமான் அருளுடையவனாவன். அதனால், அவன் அருள் புரியும் நெறி வாய்க்கப் பெற்று. அவனோடு ஒன்றுதலாகிய பேற்றினையும் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``தார் சடையான்`` என்பது பாடம் அன்று. ``போர் புகழ்``, வினைத்தொகை. ``வாய்`` என்றது ஏழனுருபு. ``கோ அருள் செய்யும்`` என மாற்றுக. ``அந்நெறி அடைந்து (அவனைக்) கூடலும் ஆம்`` என்க. இத்திருமந்திரத்துள் இன எதுகை வந்தது.
இதனால், பெரியாரைத் துணைக்கோடல், பிரானருளைப் பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் அடியவர் யாவரும் தம்மைப் போலும் அடியாருடன் கூடியே சிவபுரத்தை அடைந்து அதன் வாயிலில் நின்றனர். அப்பொழுது அவ்வாயிலில் உள்ள கணங்கள் சிவபெருமானிடம் சென்று, `அடியவர் குழாமாக வந்துள்ளனர்` என்று விண்ணப்பிக்க, அப்பெருமான், `அவர்கள் உள்ளே வருவாராக` எனத் திருவாய் மலர்ந்தருள, அவ்வருளிப்பாட்டினை அக் கணங்களால் உணர்ந்து, `முறையோ` என்று ஓலமிட்டுச் சென்று தம் குறை தீர்ந்தனர்.

குறிப்புரை :

என்றது, ``சிவனடியார்கள் பலரும் பெரியாரைத் துணைக்கொண்டே அவனை அடைந்தார்கள்`` என்றபடி இதற்குச் சேரமான்பெருமாள் நாயனார் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டாகும். படை - சூலம். ``படையும், ஆரழலும் உடையவன்`` என்க. ``புக்கு, அறிவிப்ப`` என்னும் எச்சங்கள் இரண்டும், ``என்றார்`` என்பதனோடு முடிந்தன. அடியாருடன் புக்கே` என்ற ஏகாரம், தனித்துப் புகாமையை விளக்கி நின்றது.
இதனால், சிவனை அடைதற்கு அவனை அடைந்த பெரியாரைத் துணைக்கோடல் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

பொழிப்புரை :

எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானை உணர்த் தும் நூலறிவினால் வருகின்ற பெருமையை உடைய கலைஞன், காலக் கழிவின்கண் பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமான் திருவடியை அடைவான். அந்நூலறிவைத் தன தாக்கிக் கொள்ளும் அனுபூதிமான், அப்பொழுதே சிவனைப் பெற்று, உலகம் உள்ளளவும் வாழ்வான். ஆகையால் சிவமே பெறும் திரு நெறியொழுக்கம் வல்ல சிவானுபூதிச் செல்வரோடேயான் சேர்ந்திருக்கின்றேன் (தி.8 திருச்சதகம்).

குறிப்புரை :

அருமை வல்லான் - பிறரால் ஆகாதவற்றையும் செய்ய வல்லவன்; சிவபெருமான். வல்லான் கலை என்னும் ஆறாவதன் தொகை ``வனைகலத்தது திகிரி`` என்பதுபோல, செயப்படுபொருள் ஆகிய காரகத்தின்கண் வந்தது. `ஞானத்துள்` என்றது வேற்றுமை மயக்கம். ``தோன்றும்`` என்றது எச்சம். ``நீந்தும், இருக்கும்`` என்ற செய்யுமென் முற்றுக்கள் எதிர்காலம் உணர்த்தி நின்றன. `ஆகையால்` என்பது சொல்லெச்சம். ``திருமை`` என்பதில் ``மை`` உடையராந் தன்மை குறித்து நின்றது. ``யானே`` என்ற பிரிநிலை ஏகாரம் ``வல்லாரொடு`` என்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டது. அதனால், ``அவரொடு சேர்தல் பெரும்பயன் உடைத்தாதல்`` விளங்கிற்று.
இதனால், ``பெரியாருள்ளும் மிகப் பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பெரும்பயன் தரும்`` என்பது கூறப்பட்டது.
இங்கு உரைத்தவாற்றானே இறுதியிரண்டு அதிகாரங்களும் பொது அறம் ஆகாது ஈண்டே கூறுதற்குரிய சிறப்பறம் ஆதல் அறிந்துகொள்க.