திருமந்திரம் - தந்திரம் 01 -

 

விநாயகர் வணக்கம் .......................................பாடல்கள்:01 

பாயிரம் : பதிக வரலாறு: ...........பாடல்கள்:39

முதல் தந்திரம்: 27-பதிகங்கள்:

பதிகம் 01. சிவபரத்துவம் (01-20/56) பகுதி-I


பாடல் எண் : 01

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை

அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை

புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்

தவனச் சடைமுடித் தாமரை யானே.


பொழிப்புரை :  தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவபெருமானே.

****************************************************

பாடல் எண் : 02

அவனை ஒழிய அமரரும் இல்லை

அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை

அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.


பொழிப்புரை : சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

****************************************************

பாடல் எண் : 03

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்

தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்

தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்

பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.


பொழிப்புரை : பொன்போலும் மேனியையுடைய, யானைத்தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 04

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்

ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை

சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்

தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.


பொழிப்புரை :   நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.

****************************************************

பாடல் எண் : 05

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்

பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி

என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்

தன்னால் தொழப்படு வாரில்லை தானே.


பொழிப்புரை : என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெருமான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.

****************************************************

பாடல் எண் : 06

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்

இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை

முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே

பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.


பொழிப்புரை : எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், `நந்தி` என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.

****************************************************

பாடல் எண் : 07

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்

எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்

மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்

அண்ணல் இவன்என் றறியகி லார்களே.


பொழிப்புரை : சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, `இவனே முதல்வன்` எனத் துணியமாட்டாத வராகின்றனர்.


****************************************************

பாடல் எண் : 08

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்

எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை

விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை

கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.


பொழிப்புரை : திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 09

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி

அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல

முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.


பொழிப்புரை :  `சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.


****************************************************


பாடல் எண் : 10

கடந்துநின் றான்கம லம்மல ராதி

கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்

கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்

கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.


பொழிப்புரை :   பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.


****************************************************

பாடல் எண் : 11

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற

வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்

சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்

நீதியு மாய்நித்த மாகிநின் றானே.


பொழிப்புரை : அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்

****************************************************

பாடல் எண் : 12

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை

மாது குலாவிய வாள்நுதல் பாகனை

யாது குலாவி அமரருந் தேவரும்

கோது குலாவிக் குணம்பயில் வாரே.


பொழிப்புரை :   திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்ம்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்குகின்றார்கள்?

****************************************************

பாடல் எண் : 13

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்

மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி

தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்

ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.


பொழிப்புரை :   ``காயம், கத்தூரி`` என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; சிவனருளே மேம்பட்டு விளங்கும்.

****************************************************

பாடல் எண் : 14

அதிபதி செய்து அளகையர் வேந்தனை

நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி

அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்

இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.


பொழிப்புரை :   அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு அறிந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.

*************************************************


பாடல் எண் : 15

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்

முதுபதி செய்தவன் மூதறி வாளன்

விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி

அதுபதி யாக அமருகின் றானே.


பொழிப்புரை :  சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்றுவித்தவன்; அவ்வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 16


முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த

அடிகள் உறையும் அறனெறி நாடில்

இடியும் முழக்கமும் ஈசர் உருவம்

கடிமலர்க் குன்றம் அலையது தானே


பொழிப்புரை : உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

****************************************************

பாடல் எண் : 17

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்

நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்

எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்

பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே


பொழிப்புரை : கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 18

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்

நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை

இல்லென வேண்டா இறையவர் தம்முதல்

அல்லும் பகலும் அருளுகின் றானே..


பொழிப்புரை :  உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்து வருகின்றான்.

****************************************************

பாடல் எண் : 19

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி

தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல

மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை

மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.


பொழிப்புரை : `நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.

****************************************************

பாடல் எண் : 20

காணநில் லாயடி யேற்குற வாருளர்

நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்

கோணநில் லாத குணத்தடி யார்மனத்

தாணிய னாகி அமர்ந்து நின் றானே.


பொழிப்புரை : `இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 21

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்

இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்

துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்

மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.


பொழிப்புரை :சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாதவன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.


****************************************************

பாடல் எண் : 22

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்

படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்

கடந்துநின் றான்கம லம்மலர் மேலே

புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே..


பொழிப்புரை : யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

****************************************************

பாடல் எண் : 23

சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்

தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று

நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்

புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே..


பொழிப்புரை :   `அந்திவானம் என்று சொல்லத் தக்க நிறத்தையுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்` என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 24

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்

பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்

உணங்கிநின் றான்அம ராபதி நாதன்

வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே


பொழிப்புரை :  மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.


****************************************************

பாடல் எண் : 25

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்

ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்

கானக் களிறு கதறப் பிளந்தஎங்

கோனைப் புகழுமின் கூடலு மாமே.


பொழிப்புரை : மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.

****************************************************

பாடல் எண் : 26

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்

தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்

ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை

நானின் றழைப்பது ஞானங் கருதியே.


பொழிப்புரை :    `வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம் போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.

****************************************************

பாடல் எண் : 27

மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்

விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்

பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே

கண்ணகத் தேநின்று காதலித் தேனே.


பொழிப்புரை :   மக்கள்முன் தோன்றி அருள் புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.

****************************************************

பாடல் எண் : 28

தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்

மேவு பிரான்விரி நீருல கேழையும்

தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை

பாவு பிரான்அருள் பாடலு மாமே.


பொழிப்புரை :   சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.

*************************************************

பாடல் எண் : 29

பதிபல வாயது பண்டிவ் வுலகம்

விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்

துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்

மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.


பொழிப்புரை :  பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.

****************************************************

பாடல் எண் : 30


சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்

வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி

ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்

போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.


பொழிப்புரை : சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.


****************************************************

பாடல் எண் : 31

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்

போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்

மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்

ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.


பொழிப்புரை : பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்.

****************************************************

பாடல் எண் : 32

அப்பனை நந்தியை ஆரா அமுதினை

ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை

எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்

அப்பரி சீசன் அருள்பெற லாமே.


பொழிப்புரை : எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெருமானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத்தக அவனது அருளைப் பெறலாம்.

****************************************************

பாடல் எண் : 33

நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்

தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்

வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்

தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.


பொழிப்புரை :சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.

****************************************************

பாடல் எண் : 34

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்

பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்

பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்

பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே. 


பொழிப்புரை : யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.

****************************************************

பாடல் எண் : 35

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை

ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்

ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.


பொழிப்புரை : தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும், `எம் தலைவன்` என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.

****************************************************

பாடல் எண் : 36

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்

நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்

மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்

புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.


பொழிப்புரை : கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.

****************************************************

பாடல் எண் : 37

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்

புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்

கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே

இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.


பொழிப்புரை : சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத்தோடு ஒப்பச் செய்யப் பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத் தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.

****************************************************

பாடல் எண் : 38

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது

நாயக னான்முடி செய்தது வேநல்கும்

மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்

வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே


பொழிப்புரை :  சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.

****************************************************

பாடல் எண் : 39

அரனடி சொல்லி அரற்றி அழுது

பரனடி நாடியே பாவிப்ப நாளும்

உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு

நிரனடி செய்து நிறைந்துநின் றானே.


பொழிப்புரை : சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறு துணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கி நிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.

****************************************************

பாடல் எண் : 40

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி

போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி

போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி

போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.


பொழிப்புரை :   தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

****************************************************

பாடல் எண் : 41

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்

விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை

துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்

பதிவழி காட்டும் பகலவ னாமே.


பொழிப்புரை :   கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.

****************************************************

பாடல் எண் : 42

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று

சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ

முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று

வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.


பொழிப்புரை :   `அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.

************************************************* 

பாடல் எண் : 43

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்தது போல

நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.


பொழிப்புரை :  சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.

****************************************************

பாடல் எண் : 44


அடியார் பரவும் அமரர் பிரானை

முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்

படியார் அருளும் பரம்பரன் எந்தை

விடியா விளக்கென்று மேவிநின் றேனே.


பொழிப்புரை : மெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்..


****************************************************

பாடல் எண் : 45

பரைபசு பாசத்து நாதனை உள்ளி

உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்

திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்

கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.


பொழிப்புரை : தன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.

****************************************************

பாடல் எண் : 46

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று

பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்

றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று

நாடுவன் நானின் றறிவது தானே.


பொழிப்புரை : சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.

****************************************************

பாடல் எண் : 47

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்

அளவியல் காலமும் நாலும் உணரில்

தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்

அளவில் பெருமை அரிஅயற் காமே.


பொழிப்புரை :என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.

****************************************************

பாடல் எண் : 48

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத் தலர்மிசை யானும்

சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்

பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 


பொழிப்புரை : யாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!

****************************************************

பாடல் எண் : 49

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்

பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது

ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்

தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.


பொழிப்புரை : வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத்தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!

****************************************************

பாடல் எண் : 50

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த

அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்

அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.


பொழிப்புரை :  `சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

****************************************************

பாடல் எண் : 51

பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்

அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை

நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்

வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.



பொழிப்புரை : மேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங்கால் சீகண்டவுருத்திரர்க்குக் கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.

****************************************************

பாடல் எண் : 52

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்

பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ

மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ

ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.


பொழிப்புரை :  எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.

****************************************************

பாடல் எண் : 53

வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்

தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது

தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை

ஊனமர்ந் தோரை உணர்வது தானே.


பொழிப்புரை : உடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை..

****************************************************

பாடல் எண் : 54

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற

ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்

நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று

பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.


பொழிப்புரை :   சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளியாகிய அநாதிப்பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறுவேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.

****************************************************

பாடல் எண் : 55

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக

வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்

தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்

கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.


பொழிப்புரை :   சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வருதலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல்வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கியருளுகின்றான்.

****************************************************

பாடல் எண் : 56

தானொரு கூறு சதாசிவன் எம்இறை

வானொரு கூறு மருவியும் அங்குளான்

கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற

தானொரு கூறு சலமய னாமே.


பொழிப்புரை :    எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்து வதாகிய இலய சிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.

*************************************************

முதல்தந்திரம்-பதிகம் எண்:02. வேதச் சிறப்பு (பாடல்கள்:6)


பாடல் எண் : 01

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.


பொழிப்புரை : அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர், `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.

****************************************************

பாடல் எண் : 02


வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்

வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.


பொழிப்புரை : வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமனும் வேதத்தைச் செய்தவனாயினானில்லை. ஏனெனில், வேதத்தைச் செய்தவன் அதனைச் செய்தது, அப்பிரமன் அதனை ஓதி அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும், மற்றும் கன்மத்தில் விருப்பம் உடைய வர்க்கு வேள்விகளை உளவாக்குதற்பொருட்டும், மெய் யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டுமாம்.

****************************************************

பாடல் எண் : 03

இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே

உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி

வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்

கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே.


பொழிப்புரை : பூனையை ஒத்த புறத்தோற்றம் உடைய வேதியர்கள் சொல்கின்ற, பிறப்பை உடைய ஆசிரியனாகிய மாயோன் றானும், மந்திரவடிவாகிய எழுச்சியான ஓசையை உடைய கன்ம காண்டத்துள் உள்ளத்தை உருக்குகின்ற அன்புருவாயும், ஞான காண்டத்துள் கேள்வி, ஆய்வு முதலியவற்றால் துணியப்படும் மெய்ப் பொருளாயும் உயர்ந்து நிற்பவனாவனோ? ஆகான்.

****************************************************

பாடல் எண் : 04

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்

பெருநெறி யாய பிரானை நினைந்து

குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்

ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.


பொழிப்புரை : வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.

****************************************************

பாடல் எண் : 05

ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்

கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை

வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்

பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.


பொழிப்புரை : ஆறு அங்கங்களை உடையதாய், மேற்றொட்டு எழுதாக் கிளவியாய் வருகின்ற அவ்வேதத்தைச் செய்த சிவபெரு மானை அதன் முடிவில் விளங்குபவனாக உணர்ந்து அவனது அருட் குணங்களைப் போற்றுபவர் உலகருள் ஒருவரும் இல்லை; அவர் பலரும் வேறு எவ்வெவற்றையோ தங்கள் கடனாக நினைந்து, அவற் றால் சில பேறுகளை உளவாக்கிக் கொண்டு அவற்றால் கிடைக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பேயாக அவற்றைப் பெருக்கி உழல்கின்றார்கள்

****************************************************

பாடல் எண் : 06

பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்

ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்

வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்

ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே. 


பொழிப்புரை : இயலும், இசையும், நாடகமும் ஆகிய கலை களின் பயனை அறியாவிடினும் அவற்றை இடையறாது நிகழ்த்தி நிற்கின்ற இவ்வுலகில், வேதத்தை இடையறாது ஓதுகின்ற வேதியரும் அத் தன்மைரேயாய்ப் பொருள் பெறவிரும்பி, பொருளாசை நிறைந்த நெறி முறை இல்லாத அக்கலைவல்லுநர் பொருள் ஈட்டும் இடத்திற் சென்று அவரோடு மாறுகொண்டு நிற்கின்றனர்.

*************************************************

முதல்தந்திரம்-பதிகம் எண்:03. ஆகமச் சிறப்பு (பாடல்கள்:10)

பாடல் எண் : 01


அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்

அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.


பொழிப்புரை : சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப்பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக்களைக் கேட்டுணர்ந்தனவாம்.

*************************************************

பாடல் எண் : 02

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.


பொழிப்புரை : சிவபெருமான் உயிர்கள்மேல் வைத்த அருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்களை எண்ணாற்கூறின், `இருபத்தெட்டு` என்னும் அளவில் நில்லாமல், அளவின்றியுள்ளன. அவைகளால் மேற்கூறிய அறுபத்தறுவரும், பிறரும் சிவபெருமானது மேன்மையைத் தத்தமக்கியைந்தவாற்றால் விளங்க உரைத்தார்கள். அவ்வாறு உரைக்கப்பட்ட அளவிலே நானும் கேட்டுச் சிந்தித்துத் துதிக்கத் தொடங்கினேன்.

****************************************************

பாடல் எண் : 03

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி

தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.


பொழிப்புரை : சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த மேலான ஆகமங்கள் வானத்தில் உள்ள தேவர்களாலும் அறிதற்கரிய பொருள்களை உடையன. அதனால், அவை அளவிறந்து கிடப்பினும், உயிர்கட்குப் பயன்படுதல் அரிது.

****************************************************

பாடல் எண் : 04

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்

தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்

தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி

உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.


பொழிப்புரை : சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

****************************************************

பாடல் எண் : 05

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற

நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே..


பொழிப்புரை : தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.

****************************************************

பாடல் எண் : 06

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்

உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்

மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்

துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. 


பொழிப்புரை : மேற்கூறியவாறு நந்திபெருமான் சீகண்டரிடம் சிறப்பாகப்பெற்ற ஒன்பது ஆகமங்கள், `1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6 ... ... 7. ... ... 8 சுப்பிரபேதம், 9. மகுடம்` என்பன.

****************************************************

பாடல் எண் : 07

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்

அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

 

பொழிப்புரை : சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறிய மாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்.

****************************************************

பாடல் எண் : 08

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்

றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து

ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 


பொழிப்புரை : பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப்பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவபெருமான் ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

****************************************************

பாடல் எண் : 09

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்

சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே. 


பொழிப்புரை : சிவபெருமான் உயிர்களைப் பாசத்தளையினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயிலாகத் தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையேயன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்.

****************************************************

பாடல் எண் : 10

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்

கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க

பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.  


பொழிப்புரை : கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. அதனால், `கற்றவர்` எனப்படுவார், பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.

****************************************************

பதிகம் எண் :4. உபதேசம்(பாடல்கள்:01-15/30) பகுதி:I


பாடல் எண் : 01

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.


பொழிப்புரை : மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பினால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.

****************************************************

பாடல் எண் : 02



களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.


பொழிப்புரை : என் மலத்தைப் பற்றற நீக்கியவனாகிய எங்கள் சிவபெருமான் நந்தி தேவரே. அவர் மேற்கூறியவாறு அருட்கண்ணை எனக்குத் திறப்பித்து ஆணவ மலமாகிய களிம்பை அறுத்து, அக் களிம்பு அணுக ஒண்ணாத சிவமாகிய மாற்றொளி மிக்க பொன்னை உணர்வித்து, பளிங்கினிடத்துப் பவளத்தைப் பதித்தாற் போல்வதொரு செயலைச் செய்தார். அவர் பதிப்பொருளேயன்றி வேறல்லர்.

****************************************************

பாடல் எண் : 03

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போற்பசு பாசம் அனாதி

பதியினைச் சென்றணு காபசு பாசம்

பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.


பொழிப்புரை : (பதி ஒன்றேயன்றோ என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது விட்டு நீங்கும். (என்று அருளிச்செய்தார்)

****************************************************

பாடல் எண் : 04

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்

கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி

தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்

தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.


பொழிப்புரை : கால வழிப்பட்டு, `குழவி, இளமை, முதுமை` என்னும் மாற்றங்களை உடையதாய் நிலையற்றதான இவ்வுடம்பு என்கின்ற கோயிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்ற தலை வனாகிய சிவன், மூங்கிலில் மறைந்து நின்ற தீ, தான் வெளிப்படுங் காலத்து வெளிப்பட்டு விளங்குதல்போல, ஆன்மாவின் பக்குவ காலத்தில் மும்மல இருளை நீக்கி எழுகின்ற சூரியனாய் வெளிப்பட்டு விளங்குவான். அப்பொழுது அவன் தாயன்பினும் மிக்க பேரருளாகிய வெள்ளமாயும் நின்று பேரின்பத்தைத் தருவான்.

****************************************************

பாடல் எண் : 05

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே

சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 


பொழிப்புரை : `பதியினைப்போல் அனாதியே` என மேல் விளக்கப்பட்ட பசுக்களும், பாசங்களும் முறையே சூரியகாந்தக் கற்களும், அவற்றை மூடியுள்ள பஞ்சும் போல்வனவாம். அவற்றுள், சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரியனாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.

****************************************************

பாடல் எண் : 06

மலங்களைந் தாமென மாற்றி அருளித்

தலங்களைந் தான்நற் சதாசிவ மான

புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி

நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 


பொழிப்புரை : யாவரும் புகழும் அம்பலத்துள் ஆடுவோனாகிய சிவபெருமான், எனது பக்குவத்தை அறிந்து எனக்கு ஐந்து மலங்களையும் போக்கித் தன்னைத் தந்து, சுத்த தத்துவங்கள் ஐந்தினாலும் தான் ஐந்தொழில்புரிவோனாய் நிற்கும் கருத்தை என்னளவில் தவிர்த்தான். தவிர்த்து, நன்மையைத் தரும் திருவைந்தெழுத்தால் என் உள்ளத்தில் நீங்காது விரும்பி நின்றான்.

****************************************************


பாடல் எண் : 07

அறிவைம் புலனுட னேநான் றதாகி

நெறியறி யாதுற்ற நீராழம் போல

அறிவறி வுள்ளே அழிந்தது போலக்

குறியறி விப்பான் குருபரனாமே.


பொழிப்புரை : (பாசத்தில் அகப்பட்ட உயிரினது அறிவு தானே அதனின்றும் விடுபடமாட்டாதோ எனின், மாட்டாது. ஏன் எனின், ஆணவமாகிய இயற்கைப் பாசத்தின் வழிவந்து பற்றியுள்ள மாயையின் காரியமாகிய பொறி, புலன் முதலிய செயற்கைப் பாசத்தில் உயிரினது அறிவு கட்டுண்டு, நீரின் ஆழத்தில் அமிழ்ந்து கரை ஏற அறியாத நிலைமைபோல, அவற்றினின்றும் விடுபடும் நெறியை அறியாது இடர்ப்படும். ஆகவே, அதற்கு அந்நெறியை அறிவிப்போன் நீராழத்தினின்றும் எடுத்துக் கரையேற்ற வல்லவன் போல்பவனாய், ஆசிரியர்க்குள் மேலானவனாகிய ஞானாசிரியனே.

****************************************************

பாடல் எண் : 08

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்

தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்

தீமேவு பல்கர ணங்களுள் உற்றன

தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 


பொழிப்புரை : தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் எரி சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.

****************************************************


பாடல் எண் : 09

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்

சுத்தத் துரியம் பிறந்து துடக்கற

ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு

செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே. 


பொழிப்புரை : குருவருளால் சிவயோகம் கைவரப் பெற் றவர்கள், பிறவிக்கு வித்தாகிய கிடைவினையை (சஞ்சித கருமத்தை) முற்கூறியபடி அழித்து, குரு அருளிச்செய்த உபதேச மொழியிலே உறைத்து நின்று, சுத்த துரிய நிலை மிகவும் தோன்றப் பெற்று, ஐம்புலன்களை நுகர்கின்ற உணர்வு அவற்றால் கட்டுண்ணாமலே அவற்றோடு பொருந்தி நிற்கச் சிவத்தோடு ஒன்றாய் உடம்பு உள்ளபொழுதே செத்தார்போல உலகத்தை நோக்காது புருவ நடுவிலே நிற்பார்கள்.

****************************************************

பாடல் எண் : 10

சிவயோக மாவது சித்தசித் தென்று

தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்

அவயோகஞ் சாரா தவன்பதி போக

நவயோகம் நந்தி நமக்களித் தானே 


பொழிப்புரை :மேற்குறிக்கப்பட்ட சிவயோகமாவது, `சித்தாகிய (அறிவுடைப் பொருளாகிய) ஆன்மாவும், தானே அறியும் தன்மை இன்மையால் தானே அறிந்தும், அறிவித்தும் நிற்கின்ற சிவத்தை நோக்க அசித்தாம் (அறிவில்லாத பொருளேயாம்) என்றுணர்ந்து, ஏகமாந் தன்மையுள் மிகச்சென்று, சிவனது அருளொளியே தானாகப் பெற்று, பிற பொருள்களைச் சார்தலாகிய பயனில்லாத சேர்க்கையிற் செல்லாதபடி, மிகுகின்ற அன்பினால் விளைகின்ற சிவபோகத் தினைத் தருகின்ற புதியதோர் யோகம். அதனையே எங்களுக்கு நந்திதேவர் அளித்தருளினார்.

****************************************************


பாடல் எண் : 11

அளித்தான் உலகெங்குந் தானான உண்மை

அளித்தான் அமரர் அறியா உலகம்

அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்

அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.

 

பொழிப்புரை : மேற்கூறிய நவயோகத்தை எங்கட்கு அளித்தருளிய நந்தி தேவராகிய சிவபெருமான், அப்பொழுதே உலக முழுதும் தான் ஒழிவற நிறைந்து நிற்கும் மெய்ம்மையையும், மாயோன் முதலிய புத்தேளிராலும் அறியப்படாத தனது சிவலோக நிலையையும், திருமன்றுள் பேரின்ப நடனம் செய்தருளும் தனது எடுத்த திருவடியாகிய பற்றுக்கோட்டினையும், அப்பற்றுக் கோட்டினால் கிடைக்கின்ற அருளாகிய பேரின்ப வெளியையும் அளித்தருளினான்.

****************************************************

பாடல் எண் : 12


வெளியில் வெளிபோய் விரவிய வாறும்

அளியில் அளிபோய் அடங்கிய வாறும்

ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்

தெளியும் அவரே சிவசித்தர் தாமே.


பொழிப்புரை : குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறிவாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.

****************************************************

பாடல் எண் : 13

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்

சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்

நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர

முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.


பொழிப்புரை : சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவலோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற்றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கினவர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத்தாறினின்றுமாம்.

****************************************************

பாடல் எண் : 14

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா

ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்

செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்

தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.


பொழிப்புரை : சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச்சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.

****************************************************

பாடல் எண் :15

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி

இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி

இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்

கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 


பொழிப்புரை : சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச்செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.

****************************************************

பாடல் எண் : 16
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 

பொழிப்புரை :செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.
****************************************************
பாடல் எண் :17
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
 
பொழிப்புரை : சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங்களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக் கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற்கரிதாம்.
****************************************************
பாடல் எண் : 18
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 

பொழிப்புரை : அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.
****************************************************
பாடல் எண் : 19
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
 
பொழிப்புரை : மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!
****************************************************
பாடல் எண் : 20
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
  
பொழிப்புரை :மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.
****************************************************
பாடல் எண் : 21
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
 
பொழிப்புரை :  பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.
****************************************************
பாடல் எண் :22


புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

பொழிப்புரை : குற்றம் அற்ற பாலில் உள்ள நெய் அப்பாலினுள் வேற்றுமையின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமை அற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப் பொருளில் அழுந்திநிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மாத் தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று, என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்
****************************************************
பாடல் எண் : 23
சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

பொழிப்புரை : சடமாகிய சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும், சடமாகிய தத்தம் காரணத்துள்ளே சென்று சேர்ந்துவிடுமாயின் அதன்பின் சித்தாகிய ஆன்மாவிற்குச் சித்தாகிய சிவத்தையன்றிச் சாருமிடம் வேறுண்டோ? இல்லை. அதனால் அந்நிலையில் அப் பயனைத் தரக் கருதியே குருவாய் வந்து ஆண்டுகொண்ட திருவருளாகிய வெள்ளத்தின் செயலால், தூய பரவெளியில் விளங்கும் சிவமென்னும் ஞாயிறாகிய பேரொளியிடத்து ஆன்மா என்னும் விண்மீனாகிய சிற்றொளி சென்று சேர்ந்து ஒன்றாய்விடும்.
****************************************************
பாடல் எண் : 24
அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொழிப்புரை : கடல்நீரில் ஒன்றாய் நிற்கும் உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் அந்நீரின் வேறாய் உருவெய்தி `உப்பு` எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடையதாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.
****************************************************
பாடல் எண் :25
அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 
பொழிப்புரை : எல்லாப்பொருளும் அடங்கி நிற்கும் இடமாகிய `அண்டம்` என்னும் பேருருண்டையுள் அணு என்னும் சிறியதோர் உருண்டை அடங்கி நிற்பதல்லது, அதற்குப் புறம்பாய் வேறோ ரிடத்தில் நிற்றல் இல்லை. அதுபோலப் பலவகை உடம்புகளை எடுத்து அவற்றின் அளவாய் நிற்கின்ற சிற்றுயிர்களுக்குப் பிறவிக் கடலினின்றும் நீங்கி அலமராது நிலைத்து நிற்கும் கரையை அடைவதாயின் அக்கரை, என்றும் அலமரல் இல்லாது ஒருபெற்றியே நிற்பவனாகிய சிவபெருமானது திருவடியே. இதுவன்றி வேறு கரை உண்டோ?
****************************************************
பாடல் எண் : 26
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 
பொழிப்புரை :உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லுமிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம்பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத் தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.
****************************************************
பாடல் எண் :27
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. 
 
பொழிப்புரை :  `பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத்திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக் கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.
****************************************************
பாடல் எண் : 28
தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. 

பொழிப்புரை : ஒருவன், `நான்` என்னும் முனைப்பு இன்றி ஞானாசாரியரை அடுத்து நிற்பானாயின், அவனது ஐம்புல ஆசை தன்னியல்பில் உலகப் பொருள்கள் மேல் செல்லாது அவன் வழிப்பட்டுச் சிவனிடத்திற் செல்வதாய்ப் பள்ளமடையில் வீழ்ந்து பயனின்றிக் கழிந்துகொண்டிருந்த நீர் அம்மடை அடைக்கப்பட்ட வழித்தேங்கி நின்று மேட்டுமேடையிற் போய்ப் பாய்ந்து பயன்தருதல் போலத்தன் அறிவினிடத்தே மாறுவதாகும்.
****************************************************
பாடல் எண் : 29
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
 
பொழிப்புரை : நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிரு வுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.
****************************************************
பாடல் எண் : 30
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
  
பொழிப்புரை :உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெருமானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந்தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.
****************************************************

பதிகம் எண் :5. யாக்கை நிலையாமை (பாடல்கள்:01-12/25)பகுதி:I

பாடல் எண் : 01
மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

பொழிப்புரை : இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தினின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப்படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.
****************************************************
பாடல் எண் : 02
பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 

பொழிப்புரை : பல பண்டங்களை நிரப்பிவைத்துள்ள இல்லம் போல்வதாகிய உடம்பு, உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தொழியுமாயின், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம் பினுள் நின்ற உயிராகிய இல்லத் தலைவரைப் பின் தொடர்ந்து செல்லும் வலியிலராவர். இனிச் சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் அல்லது பிறிதொன்றும் அவரோடு உடன் செல்லாது.
****************************************************
பாடல் எண் : 03
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

பொழிப்புரை :உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படுவோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பலவற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றாராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.
****************************************************
பாடல் எண் : 04
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே. 

பொழிப்புரை :  உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப்பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீளவந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.
****************************************************

பாடல் எண் :05
சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே. 

பொழிப்புரை :  `சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற்படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.
****************************************************
பாடல் எண் : 06
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

பொழிப்புரை : உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சில வற்றை உசாவுதல் செய்தார்; அச்செயலுக்கிடையே, `உடம்பில் இடப்பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார்; படுத்தவர் படுத்துவிட்டவரேயாயினார்; மீள எழுந்திருக்கவில்லை.
****************************************************
பாடல் எண் :07
மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.


பொழிப்புரை :  நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத்திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலைவனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.
****************************************************
பாடல் எண் :08
வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.
பொழிப்புரை : குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய்விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.
****************************************************
பாடல் எண் : 09
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 
 
பொழிப்புரை : உடல் நிலையை நாடியால் ஆய்ந்துணர்வோர் அவ்வாறு ஆய்ந்து கைவிட்டுவிட, அதன்பின் அறிவு அழிந்து, உடலாகிய தேர்க்கு அச்சாய் இருந்த உயிர் நீங்கிவிட, சோற்றை நெய்கலந்து சுவைபட உண்டு வாழ்பவனவாகிய ஐம்பூதக் கூறுகளும் அழிவன வாயின, அப்பொழுது, முன்பு, உடம்பால் தழுவப்பட்டிருந்த மனைவியும், செல்வமும் முன்போலவே இருக்கவும், அவ்வுடம்பு அவர்களை விட்டு வேறிடத்திற்குப் போக விடை பெறுவதுதான் கண்டது.
****************************************************
பாடல் எண் : 10
பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.
  
பொழிப்புரை :மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.தீய ஊழ்விரைய வந்தமையால், தங்க நிழல் தரும் பந்தல் போல்வதாகிய உடம்பு நிலை கெட்டு விட்டது. அதனால் அதற்குள் கருவூலம் போல இருந்த உயிர், காவலற்றுக் கொள்ளை போகும் நிலையை (யமதூதுவர் கொண்டு செல்லும் நிலையை) அடைந்து விட்டது. பந்தலில் ஒன்பது வாயில்கள் அமைக்கப் படிருந்தன; அவை அனைத்தும் அடைபட்டு விட்டன. அன்புடைய சுற்றத்தார் என் செயவல்லார்! தொடர்ந்து அழுததோடு போய்விட்டனர்.
****************************************************

பாடல் எண் : 11
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
  
பொழிப்புரை :ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.
****************************************************
பாடல் எண் : 12
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. 
  
பொழிப்புரை: வினையாகிய மதிலால் சூழப்பட்ட உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்வன் தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்கள். அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர விரைய நீங்கும்.

****************************************************
பாடல் எண் : 13

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.
 

பொழிப்புரை : எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.

***************************************************

பாடல் எண் : 14

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே 



பொழிப்புரை : இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.

****************************************************

பாடல் எண் : 15

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 



பொழிப்புரை :கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழிவார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.

****************************************************

பாடல் எண் : 16

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. 

பொழிப்புரை :  உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.

****************************************************

பாடல் எண் : 17

ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே. 



பொழிப்புரை :  தலைக்கூடைபோல உலகங்களைத் தாங்கி நடத்தும் சிவதத்துவங்கள் ஐந்து; அக்கூடையில் உள்ள பொருள்போல வித்தியா தத்துவம் ஏழும் பிரகிருதி ஒன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகிய பதினெட்டு: ஒரு வீட்டினுள் அமைந்த பல கட்டுக்கள் போல உடலில் ஆறு ஆதாரங்கள்; அக்கட்டுக்களில் அமைந்த அகன்ற முற்றம்போல வாயுக்கள் பத்தும்; நாடிகள் பத்தும், `காமம் குரோதம் முதலிய குற்றங்கள் ஆறும், நால்வகை வாக்கும் ஆகிய முப்பது; அம்முற்றத்தை மூடிய பந்தல் போல யோனி பேதத்தால் ஒன்பதாகிய மக்கள் உடம்பு, அப்பந்தலில் அமர்ந்து உண்ணும் பந்திபோலச் சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், குணம் மூன்றும், இன்ப துன்பங்களாகிய பயன் இரண்டும் ஆகிய பதினைந்து உளவாகி இயங்கின. ஆயினும், உடம்பு வெந்து கிடப்பதையே பார்க்கின்றோம். மற்றவை என்னாயின என்பதை அறியோம்.

****************************************************

பாடல் எண் : 18

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 



பொழிப்புரை : அட்டில் தொழில் செய்வார் வறிய குடும்பத் தலைவன் ஒருவனுக்கு அத்திப் பழத்தையும், அறைக் கீரை விதையையுமே திருத்தி உலையில் இட்டு உணவும், கறியுமாக ஆக்கிவைத்தார்கள். அந்த உணவை அக்கறியோடு உண்பதற்கு, வேண்டப்படாத கூரிய கத்தியை எடுத்து அவாவுடன் புகுந்த அத்தலைவன், அதற்குள்ளே சுடுகாட்டை அடைந்தான்.
****************************************************

பாடல் எண் : 19  
மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே. 
 
பொழிப்புரை :  ஓலையால் வேய்ந்த வீட்டை, உடையவர் தாமே செய்யாமல், கூலியாளைக் கொண்டு செய்வித்தமையால் அவனால் செப்பமின்றி வேயப்பட்ட பொத்தற் குடில்போலும் உடம்பிற்கு மேலேயும் கவிப்பில்லை; கீழேயும் அடிநிலை இல்லை. ஒப்பிற்கு வைக்கப்பட்ட இரண்டு கால்களும், ஒரு நடு விட்டமுமே உண்டு.
****************************************************
பாடல் எண் : 20
கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
 
பொழிப்புரை :  கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்.
****************************************************
பாடல் எண் : 21
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.. 
 
பொழிப்புரை :அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டையாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது. பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும் உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக் கொண்டது யாதும் இல்லை.
****************************************************
பாடல் எண் : 22
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.
  
பொழிப்புரை :அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள்களை விளக்குகின்ற சுடரை அணைத்து விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும் உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக் கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.
****************************************************
பாடல் எண் : 23
மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 
  
பொழிப்புரை :விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறியாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங்காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.
****************************************************
பாடல் எண் : 24
குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதரார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 


பொழிப்புரை: வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.
****************************************************
பாடல் எண் : 25
காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 

பொழிப்புரை:  தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவதுதான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படுவதுதான் யாது!
****************************************************
பதிகம் எண் :06. செல்வம் நிலையாமை (பாடல்கள்:09)

பாடல் எண் : 01
அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே. 

பொழிப்புரை :  குடிகளிடத்து இரக்கங்கொள்ளும் நல்ல அரசனாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இலனாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலமருவன், அவன் செய்த அறம் தன் வாழ்நாள் முழுதும் அரசனேயாய் வாழ்தற்கு ஏற்ற பேரறம் என்பது ஒரு தலையன்றாகலின்.
****************************************************
பாடல் எண் : 02
இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொழிப்புரை :  வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் இருட்பிழம்பு போல்வதாகி விடுகின்ற துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. (நேற்று அரசனாய் இருந்தவன் இன்று அடியனாயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே.) ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, துறக்கச் செல்வத்தினரான தேவர்கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள்; அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவனாகின்றான்.
****************************************************
பாடல் எண் : 03
தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 

பொழிப்புரை :   தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக்காவாது இடையே விட்டொழிகின்றது. (அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள்கண்ணில் உள்ளது. அதனைக்கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.
****************************************************
பாடல் எண் : 04
ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

பொழிப்புரை :    ஈக்கள் தேனைச் சேர்த்தற்குப் பூக்களின் மணங்களை அறிந்து அதன் வழியே பூக்களை அணுகித் தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, அவையாதும் செய்யமாட்டாது அத்தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.
****************************************************
பாடல் எண் : 05
தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 

பொழிப்புரை :  அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.
****************************************************
பாடல் எண் : 06
மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. 

பொழிப்புரை :   மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந்தொழிதலைப் போல விழுந்தொழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினையால் கூட்டுவிக்கப் பட்டிருத்தலை உலகர் அறிந்திலர்.
****************************************************
பாடல் எண் : 07 
வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே. 

பொழிப்புரை :   ஒத்து வாழ்கின்ற, `மனைவி, மக்கள், உடன் பிறந்தார்` என்போரும் தம் தலைவரால் தங்கட்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவிற்று என்றே நோக்கி நிற்பர். அவரால் விரும்பப்படுகின்ற அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாள் போக்குவார்க்கு இறுதிக்கண், `அந்தோ! எம்மைக் காக்க எம்முடன் வருக` என்று அழைத்துச் செல்லும் துணை ஒன்றைப் பெறுதலும் கூடுமோ!
****************************************************
பாடல் எண் : 08
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 

பொழிப்புரை :   உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப்பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசைமிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.
****************************************************
பாடல் எண் : 09
உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

பொழிப்புரை :   உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யமதூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.
****************************************************
பதிகம் எண் :07. இளமை நிலையாமை (பாடல்கள்:10)

பாடல் எண் : 01
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

பொழிப்புரை : நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண்ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.
****************************************************

பாடல் எண் : 02
ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே. 

பொழிப்புரை : மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.
****************************************************
பாடல் எண் : 03
தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே. 

பொழிப்புரை :சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்ட பின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என்பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவபெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.
****************************************************
பாடல் எண் : 04
விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே. 

பொழிப்புரை : முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய் போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.
****************************************************
பாடல் எண் :05
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 

பொழிப்புரை :ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ்வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நிலவுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.
****************************************************
பாடல் எண் : 06
காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே. 

பொழிப்புரை :நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர்தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.
****************************************************
பாடல் எண் :07
பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொழிப்புரை :நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையு மாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.
****************************************************
பாடல் எண் : 08
கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபதுயாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.
****************************************************
பாடல் எண் : 09
ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே. 

பொழிப்புரை :பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந்தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத்துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.
****************************************************
பாடல் எண் : 10
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே. 

பொழிப்புரை :மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக்கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.
****************************************************

பதிகம் எண் :08. உயிர் நிலையாமை (பாடல்கள்:10)


பாடல் எண் : 01
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

பொழிப்புரை :தண்ணிய பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாக அதனால் தோற்றுவிக்கப் படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே அவரது சொற்கடவாது அதனையடைதற்கு முயலாது, `பின்பு முயல்வோம்` என்று புறக்கணித் திருப்பர்.
****************************************************
பாடல் எண் : 02
ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே. 

பொழிப்புரை : உடையான் ஒருவனால் ஐவர் உழவர்க்கு ஒரு நிலம் விளைவு செய்ய விடப்பட்டது. அவ்ஐவரும் அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத்தது. ஆயினும், உடையான் அந்நிலத்தை மாற்றக் கருதி அவர்களை விலகுமாறு ஓலை விடுத்தமையால், அவ் ஐவரும் அந்நிலத்தைக் கைவிட்டனர்.
****************************************************
பாடல் எண் : 03
மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 

பொழிப்புரை :பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.
****************************************************
பாடல் எண் : 04
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொழிப்புரை : இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.
****************************************************
பாடல் எண் :05
சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 

பொழிப்புரை : பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப்பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.
****************************************************
பாடல் எண் : 06
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 

பொழிப்புரை :: பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை: என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர்யாண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொருவர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், `தம் அறிவும் ஆற்றலும் இன்றுள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக் கின்றனர். இன்னதோர் அறியாமை இருந்தவாறு இரங்கத் தக்கது!
****************************************************
பாடல் எண் :07

துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

பொழிப்புரை :ஓர் அகப்பையே இடப்பட்ட ஐந்து பானைகள் அடுக்காய் உள்ளன. அவை அனைத்திலும் இட்டு அடப்படுகின்ற அரிசி ஒன்றே உள்ளது. அப்பானைகளை ஏற்றி வைக்கின்ற அடுப்புகள் மூன்று உள. அம்மூன்று அடுப்பிலும் மாட்டி எரிக்கின்ற விறகுகள் ஐந்து உள்ளன. இதனால் அவ்வரிசி நன்முறையில் அடப்படுமோ! படாது. அதனால், அவைகளில் வைத்து அவ்வரிசியை அட நினையாமல், நல்ல அட்டில் தொழிலாளனிடம் கொடுங்கள்; கொடுத்தால் நன்கு அட்டு உண்ணலாம். முன்சொன்ன வகையில் அரிசியை அடலாம் என்று நினைத்துக் கழித்த நாள்களும் பலவாய் முன்னே போய்விட்டன. இனியேனும் அவனிடம் அவ்வரிசியை விரையக் கொடுங்கள்.
****************************************************

பாடல் எண் : 08
இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்

உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே. 


பொழிப்புரை : தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாதது போல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.
****************************************************

பாடல் எண் : 09
ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்

போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 


பொழிப்புரை :மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசு புண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுதலாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.
****************************************************

பாடல் எண் : 10
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்

வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.


பொழிப்புரை : வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்டதென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.
****************************************************

பதிகம் எண் :9.கொல்லாமை  (02பாடல்கள்)

பாடல் எண் : 01
பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. 

பொழிப்புரை : மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.
****************************************************
பாடல் எண் : 02
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை. குறிப்புரை : : ``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யமதூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது. இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.
****************************************************
பதிகம் எண் :10.புலால் மறுத்தல்  (01பாடல்)
பாடல் எண் : 01
பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  பொல்லாங்கு, கொலையால் வருவதாயும், கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, `புலையர்` என்றார். புலையர் - கீழ்மக்கள்.    
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை`` -குறள் 315  ......என்றவாறு, அருளில்லார், `அறிவுடையார்` எனப்படாமை யானும்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 252.....என்பதனால் புலால் உண்பவர் அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் `உயர்ந்தோர்` எனப்படாது `இழிந்தோர்` எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்துத் தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. -குறள் 255.....எனத் திருவள்ளுவரும், `புலால் உண்பவர் நிரயம் புகுந்து மீளார்` என்றார். இரண்டிடத்தும், `மீளாமை` என்பதற்கு, `நெடுங்காலம் கிடத்தல்` என்பதே கருத்து என்க.
****************************************************

பதிகம் எண்: 11 பிறன்மனை நயவாமை (பாடல்கள்:03)
பாடல் எண் : 01
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

பொழிப்புரை :  அறமுதலிய நான்கற்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப்பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.
****************************************************
பாடல் எண் : 02
திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை

அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

பொழிப்புரை :  தமக்கு உறுதியை அறியாதவர் ஆத்தமனையாள் அகத்தில் இருக்கவே, பிறன் காத்த மனையாளைக் காமுறுதல், காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்ற வாறன்றியும், தாம் செழிப்புறப் பேணி வளர்த்த தேமாமரத்தில் பழுத்த பழத்தைக் குறையுடையதென்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்த புளி, மாமரத்தின் நுனிக்கிளையில் ஏறிக் கீழே விழுந்து கால் ஒடிந்ததையும் ஒக்கும்.
****************************************************

பாடல் எண் : 03
பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொழிப்புரை : செல்வச் செருக்கில் ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.
****************************************************

பதிகம் எண் :12.மகளிர் இழிவு  (06 பாடல்கள்)

பாடல் எண் : 01
இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே. 

பொழிப்புரை : இலை, தளிர் முதலியவற்றால் கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவருமாயினும், குலை மாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்கு பயப்பதாம். அதுபோல உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந்நகை காட்டி அதனால் மேலும் கருத்தைக் கவர்வாராயினும், நகைப்பு மாத்திரத்தால் அன்புடையராய்த் தோன்றுகின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன்னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.
***************************************************
பாடல் எண் : 02
மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே. 

பொழிப்புரை : இல்லறநெறியில் நிற்கக் கருதுவார்க்குத் தம் மனைவியது இன்பத்தை நினைக்கும் பொழுது சுனையில் உள்ள நீர், மூழ்குவார்க்குத் தண்ணிதாய்த் தன்னினின்று மீளாதவாறு தன்னுள் ஆழ்த்திக் கொள்வது போல இருவர்க்கும் அரும்பெறல் இன்பமாய் அவரைப் பிரியாவகைச் செய்யும். அந்நெறியில் நிற்கக் கருதாத பிறர்க்குப் பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம்போல அவர் தம் உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்தொழியும். அதனால், பொதுமகளிரது இன்பத்தை உண்மை என்று நினைத்தலும் கூடாது.
****************************************************

பாடல் எண் : 03
இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 

பொழிப்புரை : ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம் கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில்லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.
****************************************************
பாடல் எண் : 04
வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே. 

பொழிப்புரை : நிலவுலகத்தில் வாழும் பொழுது மகளிரோடும் கூடிப்பெறுவது யாதும் இல்லை. ஆயினும், உடம்பொடு கூடி நிற்பாரது உள்ளத்தில் ஊழ்கூட்டிய ஒரு மயக்கமே அக்கூட்டத்தின்கண் உளதாய விருப்பம். இன்னும் அவ்விருப்பம், கையிலே கிடைத்த கருப்பஞ்சாறு போன்ற சிவானந்தத்தை உடைய மக்களுடம்பில் ஒருபக்கம் வைக்கப்பட்ட வேம்பு போல்வதுமாகும்.
****************************************************

பாடல் எண் : 05
கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 

பொழிப்புரை : வீரம் இல்லாத ஒழுக்கத்தால் பொது மகளிர் மயக்கத்தில் ஆழநினைத்து அதன்பொருட்டுத் தம் பொருளை அளக்கின்ற பேதையரை அறிவுடையோர் இடித்து வரை நிறுத்தி விலக்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவரது நிலைமை படுகுழியில் வீழ்ந்தவர் மீளமாட்டாது அழுந்தியொழிதல் போல்வதேயாம்.

****************************************************
பாடல் எண் : 06
கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே. 

பொழிப்புரை : `பிறஉயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காத வழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.
****************************************************

திகம் எண் :13.நல்குரவு  (05 பாடல்கள்)

பாடல் எண் : 01
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. 

பொழிப்புரை : ` ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்த தென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந்ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.
****************************************************
பாடல் எண் : 02
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொழிப்புரை : ``பொழுது விடிந்து விட்டதே; காலை உணவுக்கு என் செய்வது` என்று நிலையில்லாத வயிற்றை நிரப்புதற்கு வருந்தி, அதற்குரிய அரிய பொருள்களைத் தேடி அலைகின்றவர்களே! நீவிர் உங்கள் வயிற்றை நிரப்பினாலும், உங்கள் சுற்றத்தார் வயிற்றை நிரப்பினாலும், வேறு யார் வயிற்றை நிரப்பினாலும், குற்றமில்லை. அவைகளை நிரப்பும் முயற்சியால் சிவனை மறவாதீர்கள்; மறவாது நின்று துதியுங்கள். அப்பொழுதுதான் வினை நீங்கும்; வினை நீங்கினால் வறுமை நீங்கும்.
****************************************************

பாடல் எண் : 03
கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே. 

பொழிப்புரை : ` மக்கள் அன்னமே(சோறே)யன்றிச் சொன்னமும் (பொன்னும்) தேடுதல், இயல்பாகவே தூர்ந்து போவதாகிய மட்குழிபோலாது, தூர்க்கினும் தூராத கற்குழி போன்ற வயிற்றை நிரப்புதற்கேயாம். ஆயினும், அப்பொன்னை நிரம்பக் குவித்து வைத்தவர்க்கும் வயிற்றை நிரப்புதல் இயலாததே எனினும், அதனை நிரப்புதற்கு வழி ஒன்று உண்டு; அவ்வழியை அறிந்தால் உள்ளம் தூய்மைப்பட்டு வயிறும் நிரம்பும்.
****************************************************
பாடல் எண் : 04
தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே. 

பொழிப்புரை : ` புதிய வினைகள் பலவற்றைச் செய்யத் தூண்டுதலால், `ஒருவரைப் பற்றி மற்றொருவர், அவரைப் பற்றி வேறொருவர்` என்று இவ்வாறு தொடர்ந்துவரும் சுற்றத்தார் பழவினையினும் பார்க்கக் கொடியோரே. அதனால், அவரைப் புறந் தருதலில் தனது நாள் பல வற்றைக் கடந்துவிட்ட ஓர் உயிர், அந்நாளை முற்றக் கடந்தொழிவதற்கு முன்னே என்றாயினும் ஒருநாளில் அச்சுற்றத்தை வெறுத்து மெய்யுணர்வாகிய விளக்கை ஏற்றினால், அவ்விளக்கொளியைப் பற்றிச் சென்று, பின்னும் அவர்களோடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைத்தலும் கூடுவதாம்.
****************************************************
பாடல் எண் : 05
அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே. 

பொழிப்புரை : ` ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக் கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல; பல. (இவற்றையெல்லாம் நோக்கி) நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.
****************************************************
பதிகம் எண் :14.அக்கினி காரியம்   (10 பாடல்கள்)
பாடல் எண் : 01
வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

பொழிப்புரை : சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.
****************************************************

பாடல் எண் : 02
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்

போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓதுகின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.
****************************************************


பாடல் எண் : 03
அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே. 

பொழிப்புரை :உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து  நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.
****************************************************


பாடல் எண் : 04
போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு

மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே. 

பொழிப்புரை : இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.
****************************************************

பாடல் எண் : 05

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே. 

பொழிப்புரை : நெய் பொருந்துதலால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறிகின்ற அந்தணர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.
****************************************************
பாடல் எண் : 06
பாழி அகலுள் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய் தங்கி வினைசுடு மாமே. 

பொழிப்புரை :ஆழ்ந்த அகலில் நின்று எரிகின்ற திரிபோலச் சேர்க்கப்பட்டுப் பல்லூழி காலம் தொடர்ந்து நின்று வருத்துகின்ற மிக்க பாவப்பயனாகிய துன்பங்களோ பல. அவை அனைத்தும் ஓமாக்கினி அணையாது நின்று ஓங்க ஒழிவனவாம். அன்றியும், அவ்வக்கினியே வினைக்கட்டு முழுவதையும் அழித்தலையும் செய்யும்.
***************************************************************
பாடல் எண் : 07

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே. 

பொழிப்புரை :மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து  நும் அருஞ் செல்வமாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.
***************************************************
பாடல் எண் : 08

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

பொழிப்புரை : எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப்பவனும், இறப்பில்லாத முதல்வனும் ஆகிய அவனை நினைத்தால், ஒளி பெற்றுத் திகழ்கின்ற எனது உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, முச்சுடர்களையே மூன்றுகண்களாக உடைய அப்பெருமானே உலகங் கடந்த தண்ணிய ஒளிப்பொருளாகிய முதற்பொருளும், வேள்விக்குத் தலைவனும் ஆவன்.
***************************************************************
 பாடல் எண் : 09 
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை  
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்  
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்  
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.

பொழிப்புரை : வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.
****************************************************  
பாடல் எண் : 10
அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே. 
பொழிப்புரை : வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.
***************************************************

பதிகம் எண் :15.அந்தணர் ஒழுக்கம் (14 பாடல்கள்)
பாடல் எண் : 01
அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. 

பொழிப்புரை : ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லனவும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.
****************************************************
பாடல் எண் : 02
வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.


பொழிப்புரை : வேதத்தின் முடிந்த பொருளை உணர்தற்கண் விருப்பம் உடையவராய், மூன்று கூறுகளை உடையதாய் நூல்களின் முடிவாகிய பிரணவ மந்திரத்தின் பொருள் நிலையில் நின்று, நாத முடிவான பொருட் பிரபஞ்சத்திற்கும், வேத முடிவான சொற்பிரபஞ்சத்திற்கும், உயிர்களது அறிவின் எல்லைக்கும் அப்பால் நிற்கும் முதல்வனாகிய சிவபெருமானை உணர்ந்து, இன்பத்தின் எல்லை காணாராய் அதில் திளைத்திருப்பவரே அந்தணர் எனப்படுவோர்.
****************************************************


பாடல் எண் : 03
காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே. 

பொழிப்புரை : அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.
****************************************************

பாடல் எண் : 04
பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே. 

பொழிப்புரை : பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான்காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.
**************************************************** பாடல் எண் : 05

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே. 

பொழிப்புரை : `பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்கதாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.
****************************************************
பாடல் எண் : 06
வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே. 

பொழிப்புரை : வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையேயாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.
****************************************************
பாடல் எண் : 07 
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

பொழிப்புரை : முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.
****************************************************

பாடல் எண் : 08
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே. 

பொழிப்புரை : மேல் (தி.10 பா.225) சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்த்தலில் விருப்பம் மிக்க அறிவிலிகள் ஒருபோதும் பிராமணராதல் இல்லை.
****************************************************

பாடல் எண் : 09
திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே. 

பொழிப்புரை : ``சத்தியமும் தவம்`` (தி.10 பா.227) என்னும் திருமந்திரத்துட் கூறப்பட்ட முறைமையில் நிற்கும் உண்மை அந்தணர்கட்கே சித்தாகிய தம்மையும், அசித்தாகிய பாசங்களையும் பொருளென உணரும் தன்மை நீங்கி, ``வேதத் திருநெறி`` (தி.10 பா.226) என மேற்கூறிய உபதேச பரம்பரை முறையிலே ஞானகுருவைத் தலைப்பட்டு, நாட்கடன் நோன்பு முதலியவை `உறங்கினோன்கை வெறும்பாக்கென்னத் தானே தவிர` (சங்கற்ப நிராகரணம் - 4. 234) ஞேயம் ஒன்றையே கண்டிருக்கின்ற துரியாதீத நிலை கை கூடுவதாகும்.
****************************************************

பாடல் எண் :10
மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே. 

பொழிப்புரை : அந்தணர் என்று சொல்லப்படுவோர் அந்தணரேயாதல் உண்மையாயின், `அந்தணர்க்குரிய வேத முடிவின் மெய்ப்பொருளால் அடையும் தூய்மையாவது, உயிர்களின் குறை பாட்டினை உணர்தலே` என்றும், ``நூலும் சிகையும் முதலிய பிற வெல்லாம் வெளிப்பகட்டாகிய ஆரவாரங்களே` என்றும் அறிவார். அவ்வாறு அறிந்தவரே வேதம் உணர்ந்த அந்தணராவர்.
****************************************************

பாடல் எண் : 11
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 

பொழிப்புரை : உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப் பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.
****************************************************

பாடல் எண் : 12
வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.

பொழிப்புரை :  நாதமுடிவான தத்துவங்களின் ஞானத்தைப் பெற்றவர்க்கே அஃது ஆன்ம போதத்தைக் கடந்த இறைவனை அடையும் நெறியாக அமைவது, ஆதலின் அதுவே வேதாந்த ஞானமாம். அதனால் அந்த ஞானத்தை உணரும் ஊழ் இல்லாமையால் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்களையே உணர்வார்க்கு மேற்கூறிய இறைவனை அடையும் பரமுத்தியாதல், அதற்குக் கீழாய்ச் சுத்த தத்துவ புவனங்களை அடையும் பதமுத்தியாதல் கிடைக்குமோ! கிடையா.
****************************************************
பாடல் எண் : 13
தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
* * * * * * 

பொழிப்புரை : இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.
****************************************************
பாடல் எண் : 14
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே
* * * * * * 

பொழிப்புரை :இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.
***************************************************
பதிகம் எண் :16.அரசாட்சி முறை  (10 பாடல்கள்)
பாடல் எண் : 1
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

பொழிப்புரை : நீதி நூலைக் கல்லாத அரசனும், கூற்றுவனும் யாவரிடத்தும் கொலையே புரிதலால் தம்முள் ஒருபடியாக ஒப்பர். ஆயினும், கல்லா அரசனினும் கூற்றுவனே மிக நல்லவன். என்னை? கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; கூற்றுவன் அறமுடையவர்பால் தண்டம் செய்தற்கு அடையான்.
****************************************************
பாடல் எண் : 2
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

பொழிப்புரை : நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலையறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வனே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.
****************************************************
பாடல் எண் : 3
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. 

பொழிப்புரை : யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்குரிய கோலம் இன்றியமையாதாயினும், அத்தொழிற்கண் செவ்வனே நில்லாதார் அதற்குரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்! செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.
****************************************************
பாடல் எண் : 4

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே. 

பொழிப்புரை :  `பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன்` என்று வாய்ப்பறை சாற்றிவிட்டு, அப்பொழுதே அம் முயற்சி சிறிதும் இன்றி மூடத்தில் அழுந்திக்கிடப்போர் குலப்பெருமை கூறிக்கொள்ளுதற் பொருட்டுப் பிராமணர்க்குரிய சிகையையும், பூணூலையும் முதன்மையாக மேற்கொள்வாராயின், அத்தன்மையோர் உள்ள நாடும், நன்னெறி நிகழாமையால் வளம் குன்றும்; அந் நாட்டிற்குத் தலை வனாகிய அரசனும் பெருவாழ்வுடைய னாயினும், தன் கடமையைச் செய்யாமையால், பெருமை சிறிதும் இலனாவன். ஆதலால், அத்தன்மையாளரது உண்மை நிலையை அரசன் பல்லாற்றானும் ஆராய்ந்தறிந்து, வெளியாரை மருட்டும் அவரது பொய்வேடத்தைக் களைந்தெறியச் செய்தால், பலர்க்கும் நன்மை உண்டாகும்.
****************************************************
பாடல் எண் : 5
ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொழிப்புரை : சிவஞானம் இல்லாத வெறுவியர் சிவஞானம் பெற்றுச் சிவனே ஆயினார் போலச் சிவனுக்குரிய சடை, சிகை, பூணூல் என்பவற்றைப் புனைந்துகொண்டு சிவஞானிகள் போல நடிப்பார் களாயின், அவரை அரசன் சிவஞானிகள் வாயிலாகவே பரிசோதனை செய்து உண்மைச் சிவஞானிகளாகச் செய்தல் நாட்டிற்கு நன்மை பயப்பதாகும்.
****************************************************
பாடல் எண் : 6
ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. 

பொழிப்புரை : ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரையும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடி யாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழிவனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.
****************************************************
பாடல் எண் : 7

திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

பொழிப்புரை : பல சமய நூலாரும் தாம் தாம் அறிந்தவாறு கூறும் யாதொரு முத்தியைப் பெறவேண்டினும், இம்மை மறுமைச் செல்வங்களை எய்த வேண்டினும் அரசன் மறந்தும் தனது அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது. அதனால், அவன், தன்கீழ் வாழும் குடிகளிடத்து விரும்பற்பாலது அவர்தம் தொழில் வருவாயுள் ஆறில் ஒன்றேயாம்.
****************************************************
பாடல் எண் : 8
வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. 

பொழிப்புரை :  அரசன் உலகத்தை மேற்கூறியவாற்றாலெல்லாம் காப்பது பலர்க்கும் நன்மையை மிகத் தருவதாகும். எவ்வாறெனில், அத்தகைய ஆட்சியில் பொருந்திய மக்கள் மேற்கூறிய நெறிகளிலே வழுவாது நிற்பராகலின். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து தனது நாட்டைப் பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு தான் தனது குடிமக்களைத் தமக்கும், அறத்திற்கும் உரியவராகக் கருதாது, தனது நலம் ஒன்றற்கே உரியதாகக் கருதிவிடுவானாயின், அவன் தனது பசியின்பொருட்டுப் பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியோடொத்த தன்மையனே ஆவன்.
****************************************************
பாடல் எண் : 9
கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொழிப்புரை : `கால் கட்டி மேல் ஏற்றிப் பால் கொண்டு சோம பானம் செய்க` என்பது யோகியரிடை வழங்குவதொரு குறிப்புச் சொல். அதன் பொருள் `காற்றை (பிராண வாயுவை) இடைகலை பிங்கலை வழிச் செல்லாதவாறு தடுத்து, சுழுமுனைவழி மேல் ஏறச் செய்து, அதனால் வளர்கின்ற மூலக்கனலால் நெற்றியில் உள்ள சந்திரமண்டலத்தினின்றும் வழிகின்ற அமுதத்தை உண்டு சமாதியில் அழுந்திப் பரவசம் எய்தியிருக்க` என்பதேயல்லது, `ஒருவனை இருகால்களையும் கட்டிக்கொண்டு பனை மரத்தின்மேல் ஏறச்செய்து, அவன் அதன் பாளையினின்றும் இறக்கிக் கொணர்கின்ற கள்ளை உண்டு அறிவிழந்திருக்க` என்பது பொருளன்று. அதனால், அவ்வுட் பொருளை உணரும் அறிவிலாதோர் தமக்குத் தோன்றிய வெளிப்பொருளே பொருளாக மயங்கித் தாமும் கள்ளுண்டு களித்துப் பிறரை யும் அவ்வாறு களிக்கச் செய்வர். அப்பேதைமாக்களை ஒறுத்தலை அரசன் தனது முதற்கடனாகக் கொண்டு ஒறுத்தல் வேண்டும்.
****************************************************
பாடல் எண் : 10
தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

பொழிப்புரை :  சமயிகள் பலரும் தம் தம் சமய அடையாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லாதொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.
***************************************************

பதிகம் எண் :17.வானச்சிறப்பு  (02 பாடல்கள்)
பதிகம் எண் :18.தானச்சிறப்பு  (01 பாடல்.)
முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
பாடல் எண் : 1
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. 

பொழிப்புரை : வற்றாத அமுத ஊற்றுப் போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.
***************************************************

பாடல் எண் : 2
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 

பொழிப்புரை : எம் தந்தையாகிய சிவபெருமான் பொழிகின்ற திருவருளாகிய வெள்ளம் அன்பரது நெஞ்சகத்தினின்றும் ஊறுகின்ற சூக்குமமாகிய தெளிநீராம் ஆதலின், அதற்கு உலகில் மழையால் மலையினின்றும் பாய்கின்ற வெள்ளிய அருவி நீர்க்கு உள்ளதுபோல இடமும், காலமும் சுட்டும் சொல்லில்லை; நுரை இல்லை; மேலே மூடுகின்ற பாசியில்லை; கரையில்லை.
***************************************************
முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
பாடல் எண் : 1
ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொழிப்புரை : அறம் செய்தலில் விருப்பம் உடையவர்களே, அறம் வேண்டுமாயின், இரப்பாரை `அவர் நல்லர் இவர் தீயர்` என அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள். காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடி வைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.
***************************************************

பதிகம் எண் :19.அறஞ்செய்வான் சிறப்பு   (09 பாடல்கள்)
பாடல் எண் : 1
தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

பொழிப்புரை :  `சிவபெருமானது திருவடியை வணங்குதல், பிறர்க்கும் பிற உயிர்க்கும் உதவுதலை மேற்கொண்டு செய்தல், தத்துவ உணர்வு பெறுதல்` என்னும் இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ உடையவரே அறிவுடையோராவர். அவர்க்கே சிவபெருமான் உறுதுணையாவான்.
***************************************************

பாடல் எண் : 2
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 

பொழிப்புரை :  உண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.
***************************************************
பாடல் எண் : 3
அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. 

பொழிப்புரை : `பொருள் இல்லாத வறியவர், பொருள் உடை யவர் கொடுக்க உண்ணும் அதுவே பொருள் உடையவர்க்கு அறமாகி நிலை பெறும்` என்பதை நூல்களால் அறிந்த அறிவு செயலில் மணக்கப் பெறுபவரே மக்களாக மதிக்கப் பெறுவர். ஆயினும் அவ்வறிவைப் பெற்றும், சிலர், நீர்வேட்கையுடையார் பலரும், (பெரிய நீர் நிலையாகிய கடலை நோக்கிச் செல்லாது) ஊருணியாகிய சிறிய கிணறு குளங்களைத் தேடிச் சென்று உண்ணும் செயலின் தன்மையை அறிதல் இல்லை.
***************************************************
பாடல் எண் : 4
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.

பொழிப்புரை : அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?
***************************************************
பாடல் எண் : 5
தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொழிப்புரை : கூற்றுவன், தன்னைப் பிறர் காணாதபடியும், தன்னால் பற்றப்படுவர் நற்பண்பினை உடையர் என்றோ, தம்மை யன்றித் தம் சுற்றத்தார்க்குக் களைகணாவாரை இலர் என்றோ முதியர் என்றோ, இளையர் என்றோ எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவன். அவ்வாறு வருமுன்னே நீவிர் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.
***************************************************
பாடல் எண் : 6
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. 

பொழிப்புரை : மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.
***************************************************
பாடல் எண் : 7
தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 

பொழிப்புரை : மக்கட்பிறப்பைப் பெற்றுடையீர், அறிவுடை மகனால் செய்யத்தக்கது தவம் ஒன்றே. தவநெறி சிவபிரானையே பரம் பொருளாக உணர்ந்து ஒழுகுதலாய் இருக்கும். பலர் இந்நெறி நில்லாது உடம்பையே தெய்வம்போலப் பேணி மூச்சு விடுகின்ற பிணங்களாய் நிற்கின்ற உலகாயத நெறியில் உள்ளனர். அவர்க்கு இறுதியில் யமன், `தெய்வம் இல்லை என்ற உங்கட்குக் காட்சியளிக்கின்ற தெய்வம் நான்தான்` என்று சொல்லுவான்போலக் கண்முன் வந்து நிற்பான்.
***************************************************
பாடல் எண் : 8
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே. 

பொழிப்புரை : அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.
***************************************************
பாடல் எண் : 9
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொழிப்புரை : சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.
***************************************************

பதிகம் எண் :20.அறஞ்செயான் திறம் (10பாடல்கள்)
பாடல் எண் : 1
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே. 

பொழிப்புரை : எட்டிமரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிந்தாலொப்பனவாகிய, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மிகப் பெறுதலாலே குவிந்து, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டொழிவதேயாகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.
***************************************************
பாடல் எண் : 2
ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 

பொழிப்புரை : உலகில் பல்லுயிர்கட்கும் அவை வாழுங் காலம் நிலைபெறாது ஒழிதலையும், உலகம் நிலைபெறும் காலமாகிய ஊழிகளும் நில்லாது பல நீங்குதலையும், தாம் எண்ணிய எண்ணங் களும் கைகூடாது கனவுபோலக் கழிதலையும், பசி பிணி பகை முதலியவற்றால் பெருந்துன்பத்தை எய்துகின்ற தங்கள் உடம்பும் இறுதி நாள் நெருங்க, சாறுபிழியப்பட்ட கரும்பின் கோதுபோலாகி வலியழி தலையும் கண்டுவைத்தும் மக்களிற் பலர் அறத்தை நினைக்கின்றிலர்.
***************************************************
பாடல் எண் : 3
அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

பொழிப்புரை : அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 4
இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே. 

பொழிப்புரை : பலவகை நோய்களும், இடைஇறப்பும் (அவ மிருத்தும்) போல்வனவாகிய இம்மைத் துன்பங்கள் பலவும் அறம் செய்யாதவரிடத்தே செல்வன; அறஞ்செய்வார் இருக்கும் திசையையும் அவை நோக்கா.
***************************************************
பாடல் எண் : 5
பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.

பொழிப்புரை : வாழ்நாள் வாளா குறையப்பெற்ற மக்களே, நீவிர் யாவராலும் போற்றப் படுகின்ற சிவபெருமானைத் துதிக்கவும் இல்லை; இரப்பார்க்கு ஈதலும் இல்லை; குடத்தால் நீர்முகந்து ஊற்றிச் சோலைகளை வளர்க்கவும் இல்லை; ஆகவே, இறந்தபின் நரகத்தில் நீங்காதிருக்கப் போகின்றீர்களோ?
***************************************************
பாடல் எண் : 6
வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.

பொழிப்புரை : உலகில் நல்வழியில் நடத்தல் இன்றி மேலுலகம் கிடையாதொழியும் தீய வழியிலே நடக்கின்றவரே பலர். அவரொழிய, ஞானம் நிகழம் செயல்கள், மிகப் பெற்ற சிலரே, கேடு நிகழ்தற்கு ஏதுவான பாவத்தை நீக்கி நரகத்தையும் கடந்தவராவர்.
***************************************************
பாடல் எண் : 7
கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.

பொழிப்புரை : உயிர்கள் நலம்பெறுதலும், தீங்குறுதலும் இறைவன் செய்யும் நடுவு நிலைமையே (நீதியே) அதனால், அவை அறம் அல்லாதவற்றைச் செய்து அவற்றானே இன்பம் அடைய விரும் புதலை அவன் ஒருபோதும் உடன்படான். ஆகையால், மாந்தரீர், இன்பம் கெடுதற்கு ஏதுவாகிய பாவத்தைச் செய்தல் விலங்கின் செயலேயாகி விடும்; அதனை அறிந்து நீவிர் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலையும், தாழ்ந்தோர்க்கு ஈதலையும் செய்ய நினையுங்கள்.

***************************************************
பாடல் எண் : 8
இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.


பொழிப்புரை : இறைவன் உயிர்கட்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்தவினை அறமும், மறமும் என இரண்டாய் இருத்தல் பற்றியேயாம். அதனால் முற்பிறப்பில் அறம் செய்தவர்கள் இப்பிறப்பில் இன்பம் நுகர்தலைக் கண்டுவைத்தும் இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே யாவர். அவர் அறம் என்பதையும் அறியார். 
***************************************************
பாடல் எண் : 9
செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே
பொழிப்புரை : அறிவுடையீர், சிலவிடத்துச் சிலராகவும் சில விடத்துப் பலராகவும் வாழ்வாரது பெருவாழ்வாகிய செல்வத்தைக் கண்டு, அதனானே அவர் ஈவர் என்று கருதி அற்பராயிருப்பாரைப் புகழ்ந்து, பயன் கிடையாமையால் பின் மெலிவடைதலைச் செய்யாமல், நுமக்குப் புக்கிலாம் வீடு கருதி இறைவனைத் துதியுங்கள். அதுவே வில் வல்லோன் எய்த அம்புக் குறிபோலத் தப்பாது பயன் தருவதாகும்.
***************************************************
பாடல் எண் : 10
கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 

பொழிப்புரை : பொருள் உடையவரேயாயினும், இலரே யாயினும் அன்பால் இளகுகின்ற மனம் உடையவரே சிவபெருமானது திருவடிகளை அடையும் நெறியைப் பெறுவர். அங்ஙனம் அந் நெறியைப் பெற்று அவனது திருவடிகளே எல்லா உயிர்கட்கும் பற்றுக் கோடு என ஒருதலையாக உணர்பவரே அவன் உலகத்தை அடைந்து வாழ்வர். அவன் திருவடியல்லாத பிற பொருள்களில் ஆசை நிறைந் தவர், தாம் இறக்குங்காறும் தமக்கு உய்யப்போவதொரு நெறியும் இன்றி, அறிவின்மை காரணமாக, தம்பால் வந்து இரப்பவரிடத்தும், `இரப்பவர்க்கு இல்லை என்னாது ஈக` என்று அறிவுறுப்பாரிடத்தும் கொள்கின்ற சினமாகிய தீயில் விழுந்து அழிவர்.
***************************************************

பதிகம் எண் :21.அன்புடைமை  (10பாடல்கள்)

பாடல் எண் : 1
அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
**************************************************
பாடல் எண் : 2
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொழிப்புரை :  ஏனை அன்பினும் சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பின் பெருமையை நான் அறிந்தவாற்றால், என் உள்ளத்தில் சிறந்திருப்பது அந்த அன்பே.
**************************************************
பாடல் எண் : 3
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.

பொழிப்புரை :  மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றல், வேனிலில் ஐந்தீ நாப்பண் நிற்றல் முதலிய துணைச்செயல்களைச் செய்து உடம்பை ஒறுத்தாராயினும், முதற் செயலாகிய அன்பு செய்தல் இல்லாதார் என் தலைவனாகிய சிவபெருமானை அடைதல் இயலாது.
**************************************************
பாடல் எண் : 4
ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே. 

பொழிப்புரை :  சிவபெருமானிடத்துப் பேரன்பு உள்ளவரே அவனை முற்றப் பெறுவர். சிறிது அன்பு உடையவர் அவனது அருளைப் பெறுவர். அன்பே இல்லாது குடும்ப பாரத்தை உடையவராய் இருப்பவர் பிறவிக் கடலையே காண்பவராய், கொடுமை நிறைந்த வழியிற் சென்று, கொங்கு நாட்டை அடைந்தவர்போல் ஆவர்.
**************************************************
பாடல் எண் : 5
என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே. 

பொழிப்புரை :  உலகீர், நீவிரும் எனது அன்பு போன்ற அன்பைப் பெருக்கிச் சிவபெருமானைத் துதியுங்கள். நீவிர் முன்னே அதனைச் செய்யுங்கள்; அவன் பின்னே உங்கட்கு அவ்வன்பு பெருகுமாறு வெளிப்பட்டுத் தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்கட்கும் கைவரச் செய்வான்.
**************************************************
பாடல் எண் : 6
தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொழிப்புரை :   வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாதவாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.
**************************************************
பாடல் எண் : 7
முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

பொழிப்புரை :  தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.
**************************************************
பாடல் எண் : 8
கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. 

பொழிப்புரை :  கருத்தில் ஒளிரும் பொன்னொளியாகிய சிவ பெருமானை உளத்திற் கொண்டும், புறத்தில் வைத்து வணங்கியும், `இறைவனே` என்று துதித்தும், அன்பினால் அவனை அவனது அரிய அருளைத் தருமாறு வேண்டினால், தேவர் தலைவனாகிய அவன் அங்ஙனம் வேண்டுவார்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பான்.
**************************************************
பாடல் எண் : 9
நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடகி லாரே. 

பொழிப்புரை :  எவ்வுயிர்க்கும் உறக்கமும், விழிப்பும் நாள்தோறும் நிகழுமாறு செய்தவன் அங்ஙனம் செய்த குறிப்பை அறியாதார் நிற்க, அறிந்தவர் தாமும் உலக ஆசையையே உள்ளத்தில் கொள்கின்றனர். அத்தலைவனை விரும்பி, அவனையே தமக்குப் பெருமானாக நினைக்கின்றிலர்.
**************************************************
பாடல் எண் : 10
அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே. 

பொழிப்புரை :   உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறுதுணையாவான்.
**************************************************

பதிகம் எண் :22.அன்பு செய்வாரை அறிவன் சிவன் (10பாடல்கள்)

பாடல் எண் : 1
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே. 

பொழிப்புரை :  மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத்தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலிற் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள்புரிவன்; அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தேயாம்.
**************************************************
பாடல் எண் : 2
இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. 

பொழிப்புரை :  முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.
**************************************************
பாடல் எண் : 3
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொழிப்புரை :  அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடைய வளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.
**************************************************
பாடல் எண் : 4
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே. 

பொழிப்புரை :  பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப்பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகி விளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.
**************************************************
பாடல் எண் : 5
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொழிப்புரை :  அடியவர்கள் தங்களுக்கு உளதாகிய அன்பினாலே சிவபெருமானை நிலத்தில் வீழ்ந்து பணிந்தும், கை கூப்பிக் கும்பிட்டும் பல்லாற்றானும் வழிபட அப்பெருமான் அவர்க்கு முத்தியைக் கொடுத்து, அவரது செயல் யாதொன்றிற்கும் தானே முன்னிற்பான். இவ்வாறு தன்னையே சார்ந்து நிற்கும் அவரோடே தானும் அவரையே சார்ந்து நிற்கின்ற சிவபெருமானது தன்மையைச் சித்தர்கள் ஆராய்ந்தறிகின்றார் களில்லை.
**************************************************
பாடல் எண் : 6
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 

பொழிப்புரை :  கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத்தாமரையின் கண் விளங்குபவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.
**************************************************
பாடல் எண் : 7
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 

பொழிப்புரை :  அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவரல்லது பிறர் அறியமாட்டார்.
**************************************************
பாடல் எண் : 8
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.

பொழிப்புரை :  இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.
**************************************************
பாடல் எண் : 9
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே. 

பொழிப்புரை :  இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
**************************************************
பாடல் எண் : 10
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 

பொழிப்புரை :  மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெருமானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெருமானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.
**************************************************

பதிகம் எண் :23.கல்வி (10பாடல்கள்)

பாடல் எண் : 1
குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே. 

பொழிப்புரை :  மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.
***************************************************
பாடல் எண் : 2
கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

பொழிப்புரை :  கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ்வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லுகின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.
***************************************************
பாடல் எண் : 3
நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே. 

பொழிப்புரை :  இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 4
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே. 

பொழிப்புரை :  கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழிகின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவதாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.
***************************************************
பாடல் எண் : 5
துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே. 

பொழிப்புரை :  உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.
***************************************************
பாடல் எண் : 6
நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொழிப்புரை :  வருந்தியாயினும் நூல் ஏணியைப்பற்றி ஏறுவோர் மதிலின் உச்சியை அடைந்து கோட்டையைப் பிடிப்பர். அது செய்யமாட்டாதார் பக்கத்தில் உள்ள சில வழிகளைப்பற்றி ஏறின் இடையே நின்று பயன்பெறார். அதுபோல நுண்ணிதாயினும் மெய்ந்நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் ஆன்மலாபமாகிய முடிந்த பயனைப் பெற்று இன்புறுவர். அதுமாட்டாது அயலாகிய மயக்க நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் பிற சில சிறுபயன்களைப் பெறுதலோடு ஒழிவர்; ஆன்மலாபத்தைப் பெறார். இன்னும் ஓர் உணவுப் பொருளைக் காப்பவர் கையில் கோல் ஒன்றை உடையாராய் இருப்பின் அப்பொருளைக் கவர எண்ணும் பறவைகள் அணுகமாட்டா. அதுபோல மெய்யறிவு உடையாராய் இருப்பாரது மனத்தை ஐம்புலன்கள் அலைக்க அணுகா. இவற்றையெல்லாம் அறியாது மக்கள் அறியாமையுள் நின்று மயங்கு கின்றார்களே, இஃது இரங்கத்தக்கது!
***************************************************
பாடல் எண் : 7
ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே

பொழிப்புரை :  பகலவனது கதிர்கள் எங்கும் பரவி நிற்பினும் தூயதாகிய சூரியகாந்தக் கல்லே அதனால் நெருப்பை உமிழ்வதாகும். அதுபோல, இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் கற்றவரே அத்திருவருளால் இறைவனைக் காண்பவராவார். ஆகவே, இளம்பிறையை அணிந்த சிவபெருமானை அடையும் ஆற்றலுடையார்க்குப் பொருந்திய மனம் நிறைந்த மெய்ந்நூல்களே ஏணிபோல உதுவுவனவாம்.
***************************************************
பாடல் எண் : 8
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே. 

பொழிப்புரை :  வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)
***************************************************
பாடல் எண் : 9
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொழிப்புரை :  யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.
***************************************************
பாடல் எண் : 10
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. 

பொழிப்புரை :  சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.
***************************************************
பதிகம் எண் :24.கேள்வி கேட்டமைதல் (10பாடல்கள்)

பாடல் எண் : 1
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொழிப்புரை :  முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.
*********************************************************
பாடல் எண் : 2
தேவர் பிரான் றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே. 

பொழிப்புரை :  `சிவபிரானை உள்ளவாறு உணர்ந்தோர் யாவர்` என்பதனை முன்னே அறிந்து, பின்னர் அவர்பால் கற்றலையும், கேட்டலையும் செய்யுங்கள். கற்றும் கேட்டும் அறிந்த பின், சிந்தித்துத் தெளியுங்கள். ஏனெனில், கற்றுக் கேட்ட பின்னர்ச் சிந்தித்துத் தெளிந்தவரே சிவனைப் பெற்று உயர்ந்து நின்றனர்.
*********************************************************
பாடல் எண் : 3
மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே. 

பொழிப்புரை :  திருமால், பிரமன் முதலிய தேவரை வழிபடும் முறைகளும் கேட்கத்தக்கன வாதல், சிவபெருமானது ஆணைவழியேயாம். அதனால், முதல்வனாகிய அப்பெருமானை வழிபடும் முறையைக் கேட்டு, அவனை வழிபடுதலே சிறந்தது. ஆகவே, மக்கட் பிறப்பின் பயனும், உயிர்க்கு உறுதுணையாவதும் சிவபெருமானை வழிபடும் முறையைக் கேட்டலேயாம்.
*********************************************************
பாடல் எண் : 4
பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 

பொழிப்புரை :  உலகியலை விட்டு மெய்ந்நெறி நோக்கி வருகின்ற தவத்தோர்க்கு அதனை அருளுபவன் அரிய தவக்கோலத்தையே தனது கோலமாக உடைய எங்கள் சிவபெருமானே. அதனால், `இவனே யாவர்க்கும் தலைவன்` என்று உணர்ந்து அவனது புகழைத் தம்மிடையே பேசிக் களிக்கும் திருவுடை மக்களே பின்னர் எப் பயனையும் எளிதிற் பெறுவர்.
*********************************************************
பாடல் எண் : 5
ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :  சிவபெருமானது திருவருளின் பெருமையையும், இறப்புப் பிறப்புக்களது சிறுமையையும் ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து, அவனது திருவருளையே காதலித்துப் பிதற்றி மகிழ்ந்தால், அப்பெருமான்மேல் அன்பு, முறுகி வளரும். வளர்ந்தால், அப்பெருமான் அவ்வன்பில் விளங்குகின்ற பேரொளியாய் எதிர்ப்பட்டு நின்று, பின்னர் மலரில் நின்று கமழும் மணம்போல உள்ளே நிலைபெற்று, இன்பம் தருவான்.
*********************************************************************
பாடல் எண் : 6
விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 

பொழிப்புரை :  `உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச்செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.
*********************************************************
பாடல் எண் : 7
சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே.

பொழிப்புரை :  சிறுமகார் தம் விளையாட்டு விருப்பம் காரணமாகத் தாம் சோறாகக் கருதிக்கொண்ட மணலாலே வயிறு நிரம்பினார் போலத் தேக்கெறிந்து கொள்ளுதல்போல, உலகப் பற்றுக் காரணமாகச் சுற்றத் தொடக்குண்டு வாழும் வாழ்க்கையாலே இன்பம் கிடைத்துவிடும் என்பவர் உளராயின் அவர், தம்மையும், தலை வனையும் அறியாத மடவோரேயாவர்.
*********************************************************
பாடல் எண் : 8
உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 

பொழிப்புரை :  உயிரும் உடம்பும் ஒன்றற்கு ஒன்று உறுதுணை யாவன. அவை அவ்வாறு நிற்றற்கு உறுதுணையாய் நிற்பதே உலகியல் பற்றிய கேள்வி; (என்றது, யாண்டும் உயிர் உடம்பொடு நிற்றலாகிய பிறப்பு நிலையை நீக்க மாட்டாது; அதன்கண் சில நன்மையைத் தருவதே என்றபடி) இனி உயிரோடு ஒட்டி நிற்கும் துணையாவன சிவபெருமானது திருவடிச் சிந்தனையைத் தூண்டும் சிவநெறிக் கேள்விகளே; பெறுதற்குரிய துணையாகிய அக்கேள்விகளைக் கேட்டபின், பிறப்பு இறப்புக்கள் இல்லாத வீடு கூடுவதாம்.
*********************************************************
பாடல் எண் : 9
புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. 

பொழிப்புரை :  எங்கள் சிவபெருமான், ஒருப்பட்டு நிற்கும் அன்பர்க்கும், ஒருப்படாது முரணி, இகழ முற்பட்டு நிற்கும் வன்பர்க்கும் மூதாதையே. எனினும், தம்மொடு மேவாத மைந்த ரிடத்து அன்பு செய்யாத தந்தையர்போல, தன்னை இகழ்ந்து, தனது பெருமையை மகிழ்ச்சியுண்டாகக் கற்றும் கேட்டும் உணராது நீங்கி நிற்பார்க்குத் துன்பத்திற்கு ஏதுவாக, பால் கறவாத கற்பசுப்போல அருள்செய்யாது நிற்பன்.
*********************************************************
பாடல் எண் : 10
வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே. 

பொழிப்புரை :  சிவபெருமானை மனம் ஒருங்கி உணர்ந்தவனே அப்பெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.
*********************************************************

பதிகம் எண் :25.கல்லாமை (10பாடல்கள்)
பாடல் எண் : 1
கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

பொழிப்புரை :  `கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.
*********************************************************************
பாடல் எண் : 2
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 

பொழிப்புரை :  கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.
*********************************************************************
பாடல் எண் : 3
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 

பொழிப்புரை :  நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.
*********************************************************************
பாடல் எண் : 4
கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.

பொழிப்புரை :  நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.
*********************************************************************
பாடல் எண் : 5
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 

பொழிப்புரை :  கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.
*********************************************************************
பாடல் எண் : 6
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 

பொழிப்புரை :  நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.
*********************************************************************
பாடல் எண் : 7
கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொழிப்புரை :  நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப்பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியாதவர்க்கு அவை கூடாவாம்.
*********************************************************************
பாடல் எண் : 8
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :  கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.
*********************************************************************
பாடல் எண் : 9
கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 

பொழிப்புரை: சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.
*********************************************************************
பாடல் எண் : 10
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 
பதிகம் எண் :26.நடுவு நிலைமை  (03பாடல்கள்)
பாடல் எண் : 1
நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 

பொழிப்புரை :  நடுவுநிலைமையிற் பிறழாதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவர் வழியிலே நிற்கின்றேன்.
********************************************************************
பாடல் எண் : 2
நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
*****************************************
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

பொழிப்புரை :  நடுவுநிலைமை பிறழாதவர் மால் அயனாம் நிலைகளைப் பெறுதலேயன்றிச் சிவஞானிகளாய்ச் சிவமாந் தன்மையையும் பெறுவர்.

குறிப்புரை : ``ஓதி`` என்பது பெயர். ``கார்வண்ணன், மறையோதி`` என்னும் ஈரிடத்தும் `ஆவன்` என்பது எஞ்சி நின்று. அவற்றோடு இயைய, ``நடுவு நின்றான்`` என ஒருமையாற் கூறினாராயினும், ஏனையபோலப் பன்மையாற் கூறுதலே கருத்து என்க. இனி `கார் வண்ணன், மறையோதி` என்பவற்றை எழுவாயாக்கி, அவற்றை `நின்றான்` என்பவற்றோடு முடிப்பாரும் உளர். `நடுவுநின்றார்` என்று ஒழியாது, ``சிலர்`` என்றது, `நடுவுநிற்றல் அரிது` என்பது உணர்த்துதற்கு. `சிவமாதல் ஞானம் இன்றி அமையாது` என்றற்கு அதனை இடையே விதந்தோதினார்.  இவ்விரண்டு திருமந்திரங்களானும் நடுவுநிற்றலின் பயனே கூறப்பட்டது.  பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் பாடல் இடைச் செருகல்.
********************************************************************
பாடல் எண் : 3
தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 

பொழிப்புரை :  தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்குபவன் சிவபெருமானே. அதனால் `அயன், அரி, அரன்` என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே, `மற்றுப்பற்றின்றிப்` (தி.7 ப.48 பா.1) பற்றி நிற்பவரே உண்மையாக நடுவு நிற்பவராவர்.
********************************************************************
பதிகம் எண் :27.கள்ளுண்ணாமை (11பாடல்கள்)
 
பாடல் எண் : 1
கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 

பொழிப்புரை :  பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக்கழுநீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மையவாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.
********************************************************************
பாடல் எண் : 2
சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே. 

பொழிப்புரை :  சித்த விருத்தியைக் கெடுத்துச் சிவமாய் நிற்கின்ற, அதீத நிலையில் விளைகின்ற சிவானந்தமாகிய தேனே தூய மதுவாம். அதனை உண்டால், இயற்கை இன்பம் நீங்காது நிற்கும். அஃதல்லாத பிற மதுக்களை நாள்தோறும் உண்டு மகிழ்தலும், செயலற்றுக் கிடத்தலும் பிறபொருட் கலப்பாலாகிய செயற்கை விளைவேயாம்.
********************************************************************
பாடல் எண் : 3
காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. 

பொழிப்புரை :  காமக் களிப்பும், கள்ளுக் களிப்பும் கீழ்மக்கட்கே உரியனவாம். அதனால், அவற்றைச் சிறப்பித்துச் சொல்கின்ற, அறியாமையும் மயக்க உணர்வும் பொருந்திய சமயத்தில் நிற்பவர்க்கு அறிவு அழிவதேயாகும். தூயோனாகிய சிவபெருமானது திருவடியி னின்றும் உண்டாகின்ற, மாசற்ற, நிறைந்த இன்பத்தேனில், அறிவு நிலைபெற்று நிற்கும்.
********************************************************************
பாடல் எண் : 4
வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 

பொழிப்புரை :  `சத்தியை வழிபடுகின்றோம்` என்று சொல்லிக் கொள்ளும் அவைதிகராகிய வாம மதத்தினரும், அக்கொள்கை இல்லாதே கள்ளுண்ணும் மடவோர் போலக் கள்ளுண்டு அறிவு அழிபவரேயன்றிச் சிறப்பு ஒன்றும் இலர். இனிக் காமத்தை மட்டும் விரும்புபவர் அறிவு அழியப்பெறாராயினும், மயக்கம் உடையவரே. (ஆகவே, கள், காமம் இரண்டையும் போற்றிக் கூறும் சமயங்களால் உய்தி கூடாது) அவ்விரண்டையும் வெறுத்தொதுக்கும் வைதிக சமயிகளே வழிமுறைக் காலத்தில் அறிவினுள் அறிவாய் நிற்கின்ற முதற் பொருளினுள் ஒடுங்கி அதன் இன்பத்தை நுகர்வர். சிவநாமத்தை உய்யும் வழியாகப் பற்றும் சித்தாந்த சைவர் அவ்வின்பத்தை இடையீடின்றி அப்பொழுதே பெறுவர்.
********************************************************************
பாடல் எண் : 5
உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :  கள்ளினை உண்டு களிக்கும் அவைதிகராகிய வாம மார்க்கத்தவர் வேதாகமங்களின் கருத்துக்களை உணரமாட்டாமையின், `சுரௌதம்` எனப்படும் திவ்வியாகமங்களாகிய சிவாகமங்களில் சொல்லப்பட்ட `பதி, பசு, பாசம்` என்னும் மூன்று பொருள்கள் உண்மையை உணர்தலும், அவ்வுணர்வால் அவற்றுள் மேலானவனாகிய பதியின் அருளைப் பெற விழைதலும், அவ்விழைவால் சரியை கிரியா யோகங்களாகிய இறப்பில் தவத்தில் நின்று அதன் பயனாகத் தெளிந்த உண்மை ஞானமாகிய சிவ ஞானத்தைப் பெறுதலும், அச்சிவஞானத் தெளிவினால் சிவனோடு ஏகமாகிய இறைபணி நின்று இன்புறுதலும் இலராவர்.
********************************************************************
.பாடல் எண் : 6
மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொழிப்புரை :  மயக்கத்தைத் தருகின்ற மயக்க நோய், மயக்கம் இல்லாதாரையும் மயங்கச் செய்யும் மருந்தால் நீங்கும் எனக் கூறுவார் கூற்றைத் தெளிந்து அம்மருந்தை உண்ணின் உண்டாவது பெரு மயக்கமேயன்றி வேறுண்டோ! இல்லை. அதுபோல, `உலகப்பற்றாகிய மயக்கம், அறிவை மயக்குவதாகிய கள்ளினால் நீங்கும் எனக் கூறி மயக்குகின்ற அறியாமையையுடைய சமயத்தில் உறைத்து நிற்கும் அறிவிலிகள், அவ்வறியாமையால் அறிவை அழிக்கும் கள்ளை உண்டு மேலும் பேரறியாமையில் அழுந்துவர்; அவரைத் தெளிவித்தல் இயலாது.
********************************************************************
பாடல் எண் : 7
மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொழிப்புரை :  தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய கள், வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!
********************************************************************
பாடல் எண் : 8
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. 

பொழிப்புரை :  சத்தியின் அருளைப் பெறவேண்டிச் சத்தி மதத்தார் (வாம மதத்தவர்கள்) கள்ளுண்பார்கள். அதன் பயனாக அவர்கள் பெறுவது இயல்பாகத் தமக்கு அமைந்த சத்தியையும் (வலிமையையும்) இழத்தலேயாம். (ஆகவே, அவர்தம் கொள்கை அறியாமை வழிப்பட்டது என்பது தெளிவு. அஃது எவ்வாறு எனில், கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து வீழ்ந்து செயலற்றுக் கிடத்தலால்) உண்மையில் `சத்தி` என்பது சிவபெருமானது அறிவு வடிவாகிய ஆற்றலே; அச்சத்தியால் பெறும் பயன், அதன்வழி நின்று, நிலைபேறும், தெளிவும் உடைய சிவானந்தத்தைப் பெறுதலே.
********************************************************************
பாடல் எண் : 9
சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே. 

பொழிப்புரை :  சத்திமானும், (சத்தியை உடையவனும்) சத்தியும் தன்மையால் இரண்டாதலல்லது, பொருளால் இரண்டாதல் யாண்டும் இல்லை. (இதனைத் தெரிவிக்கவே, `சிவன்` என்னாது சத்தன் என்றார்) ஆகவே, சிவமும், சத்தியும் தம்முள் வேறல்லர் என்பது வெளிப்படை. அதனால், முதற்பொருளை அடைய வேண்டுவார், `சத்தி, சிவம்` ஆகிய இரண்டனையும் ஒப்பக்கொள்ளல் வேண்டுமன்றி, அவற்றுள் ஒன்றனையே புகழ்ந்து கொள்ளுதலும், ஏனையதை இகழ்ந்து நீக்கலும் கூடாவாம். மேற்கூறியவாறு அவ்விரண்டனையும் ஒப்பக்கொண்ட வழியே எப்பயனும் கிடைத்தல் உறுதி.
********************************************************************
பாடல் எண் : 10
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே. 

பொழிப்புரை :  மேல் பலவிடத்தும் சொல்லிவந்த சிவானந்தமாகிய தேன், உயிர், நிலமுதல் நாதம் ஈறாகிய தத்துவங்களே தானாய்த் தன்னை அறியாது நிற்கும் நிலையே முதற்கண் நீக்கி, அதன்பின்னர், தன்னைச் சடமாகிய தத்துவங்களின் வேறாகக் கண்ட உயிர் `யான் சித்தாகிய பிரமமே` என மயங்கும் மயக்கத்தையும் போக்கிச் சிவமாகச் செய்து, காமியத் தவங்களைக் கைவிடப்பண்ணி, இன்பத்தைத் துய்ப்பதாகிய அவ்வுயிர் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவத்தின்பால் சென்று அடங்கி இன்புறவைத்து உடம்பு உள்ள துணையும் நிற்பதாகிய இவ்வுலகத்தின் இன்ப துன்ப நுகர்ச்சியை உடல் ஊழாக நுகர்ந்து கழித்து, உடம்பு நீங்கிய பின்னர்ப் பேரா இன்பப் பெருவாழ்வாகிய பரமுத்தியைத் தலைப்படச் செய்யும்.
********************************************************************
பாடல் எண் : 11
யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.

பொழிப்புரை :  உண்மை யோகிகள் ஆவார், பிராணவாயுவைத் தடுத்து அதனால் எழும் மூலக்கனலால் புருவநடுவில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும், அறிவை வளர்க்கின்ற, இனிய அமுதத்தை உண்பவரே. (அவ்வமுதம் சிவானந்தத் தேறலில் இச்சையுண்டாக்கும்) அந்நிலையைப் பெறாத சிலர் அணிமா முதலிய சித்திகளில் இச்சையுடையராய்க் கள்ளை உண்டு மயக்கம் உற்று, அம்மயக்கத்தால் எழும் உன்மத்தம் உடையராய் அறிவழிகின்றனர்.
முதல் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.
********************************************************************

பொழிப்புரை :  உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.
*********************************************************************