நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாலடியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாலடியார் : காமத்துப்பால்

நாலடியார் - 38.பொது மகளிர்

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின்வே றல்ல; - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.
371

விளக்கினது ஒளியும் பொது மகளிரது அன்பும் ஆகிய இரண்டையும் தெளிவாக ராஆய்ந்து பார்த்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கினது ஒளியும் எண்ணெய் வற்றிய போதே நீங்கும். பொது மகளிர் அன்பும் (தம்மை நாடுவார்) கைப்பொருள் நீங்கியபோதே நீங்கும்.


அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன்; - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
372

---------


அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மா லாயினும் ஆகமன்; - தம்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தம் கையால் தொழுது.
373

அழகிய இடமகன்ற தேவர் உலகில் உள்ள தேவர்களால் தொழப்படும் சிவந்த கண்களையுடைய திருமாலைப் போன்றவராக இருப்பினும், பொருள் இல்லாதவரை, கொய்தற்குரிய இளந்தளிர் போலும் மேனியுடைய பொது மகளிர், தம் கையால் கும்பிட்டு அனுப்பிவிடுவர்.


ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னர் அவர்க்கு.
374

அன்பில்லாத மனத்தையும், அழகிய குவளை மலர் போன்ற கண்களையும் உடைய பொது மகளிர்க்கு, பொருள் இல்லாதவர் நஞ்சு போல் விரும்பத்தகாதவர் ஆவர். பலரும் காணச் செக்காட்டுவோர் ஆயினும், மிகுதியாகப் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர் அப்பொது மகளிர்க்குச் சர்க்கரை போல் இனியவராவர்.


பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் - ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார்.
375

இனிமை மிக்க, தெளிந்த நீருள்ள பொய்கையிலே பாம்புக்கு ஒரு தலையைக் காட்டி, மற்றொரு தலையை மீனுக்குக் காட்டும் விலாங்கு மீனை ஒத்த செய்கையையுடைய பொதுமகளிரின் தோள்களை, மிருகத்தைப் போன்ற அறிவற்றவர்கள் தழுவுவர். (பாம்புக்கும் மீனுக்கும் ஆசைகாட்டி இரண்டையும் ஏமாற்றும் விலாங்கு மீனைப் போன்ற வஞ்சகமுள்ளவர் பொதுமகளிர்).


பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
நிற்றியோ போதியோ நீ.
376

நூலும் (அதில் கோத்த) மணியும் போன்றும், இணை பிரியாத அன்றிற் பறவைகள் போன்றும், நாளும் நம்மை விட்டுப் பிரிய மாட்டோம் என்று சொன்ன, பொன்னாலான வளையலையுடையவளும் போர் செய்யும் ஆட்டுக் கடாவின் முறுக்கேறிய கொம்பினைப் போல் குணம் மாறினாள். ஆதலின் நெஞ்சே! நீ இன்னமும் ஆசை கொண்டு அவளுடன் போவாயோ? அன்றி என்னிடம் நிற்பாயோ? சொல்!


ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
தாமாம் பலரால் நகை.
377

காட்டுப் பசுவினைப் போல், இன்பம் உண்டாகத் தழுவி, தம்மைச் சேர்ந்தவருடைய பொருளையெல்லாம் கவர்ந்துகொண்டு அவர் வறுமையுற்றதும், அவரைப் பார்த்து உடனே குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைத் 'தமது' என மயங்கி ஏமாந்து இருப்பவர், பலரால் ஏளனமாகச் சிரிக்கப் பெறுவர்.


ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் - மானோக்கின்
தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
செந்நெறிச் சேர்தும்என் பார்.
378

தம்மை நாடி வந்தவர், தம் அழகில் மயங்கியிருக்கும்போது (பொருளைப் பறித்துக்கொண்டு) பின் அவர்கள் வறுமையுற்றதும், ஆட்டுக் கடாவின் வளைந்த முறுக்கேறிய கொம்புபோல் மாறுபடும் குணத்துடன் கூடிய, மான்போலும் பார்வையுடைய பொது மகளிரின் கொங்கைகளை, அறநெறி செல்லும் சான்றோர் விரும்ப மாட்டார்கள்.


ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமரல்லர் தம்உடம்பி னார்.
379

ஒளி வீசும் நெற்றியையுடைய பொது மகளிர் துன்பம் செய்யும் மனத்தைப் பிறர் அறியாதவாறு தம்முள்ளே மறைத்து வைத்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி, 'இவள் எமக்கு உரியவள்' என நினைப்பார் நினைக்கட்டும்! உண்மையில் அப்போது மகளிர் யார்க்கும் உரியரல்லர்!


உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்.
380

ஒளி பொருந்திய நெற்றியுடைய பொதுமகளிரின் மனம் ஒருவனிடத்தே இருக்க, அதனை மறைத்து, தம்மை அடைந்தவா¢டம் எல்லாம் சையுடையார் போல் பேசும் போலிச் சொற்களைத் தெளிவாக உணர்ந்தபோதும் பழி நிறைந்த உடம்பை உடைய பாவிகள், அப்பொது மகளிரின் உடம்பை விட்டொழித்தலை அறியார்.

 நாலடியார் - 39.கற்புடை மகளிர்


அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.
381

பெறுதற்கு அரிய கற்பினையுடைய இந்திராணியைப் போன்ற புகழ்மிக்க மகளிரேயாயினும் அவர்களுள், தன்னை அடைய வேண்டும் என்னும் ஆசையால் தன் பின்னால் டவர் நிற்காத முறையிலே தன்னைத் காத்துக்கொள்ளும் நல்ல நெறியை உடைய ஒருத்தியே சிறந்த மன¨வி ஆஸ்வாள்.


குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.
382

ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரையே காய்ச்சிக் குடிக்கத்தக்க வறுமை வந்தாலும், கடல் நீரே வற்றுமாறு பருகத்தக்க அளவு மிகுந்த எண்ணிக்கையில் சுற்றத்தார் வந்தாலும், விருந்தோம்பும் குணத்தை ஒழுக்க நெறியாகக் கொண்டு இனிய மொழி பேசும் பெண், இல்வாழ்க்கைக்குரிய சிறந்த குணம் உடையவள் ஆவாள்.


நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.
383

சுவர்கள் இடிந்தமையால் நான்கு பக்கங்களிலும் வழியாகி, மிகவும் சிறியதாகி, எல்லா இடங்களிலும் கூரையின் மேற்புறத்திலிருந்து மழைநீர் வீழ்வதாயினும், இல்லறக் கடமைகளைச் செய்ய வல்லவளாய், தான் வாழும் ஊரில் உள்ளார் தன்னைப் புகழுமாறு மேன்மை பொருந்திய கற்பினையுடையவளாய்த் திகழும் மனைவி இருக்கும் இல்லமே சிறந்த இல்லமாகும்.


கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.
384

கண்ணுக்கு இனிய அழகினளாய், தன் கணவன் விரும்பும் வகையில் தன்னை அலங்கா¢த்துக்கொள்பவளாய், அச்சம் உடையவளாய், ஊரார் பழிக்கு நாணம் உடையவளாய், கணவனுடன் சமயம் அறிந்து ஊடல் கொண்டு, அவன் மகிழும் வண்ணம் அவ்வூடலிலிருந்து நீங்கி இன்பம் தரும் இனிய மொழி உடையவளே நல்ல பெண் ஆவாள்.


எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.
385

நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவி எழுந்தாலும் முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகின்றோம். (இப்படியிருக்க) பொருள் ஆசையால் பலருடைய மார்பையும் தழுவிக்கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணமின்றித் தழுவுகின்றனரோ? (கற்புடை மகளிர்க்கு நாணமும் ஓர் அழகாகும்).


ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
386

இயல்பாகவே கொடைத் தன்மையுடையவனிடம் கிடைத்த செல்வமானது, நுண்ணறிவாளன் கற்ற கல்விபோல யாவர்க்கும் பயன்படும். நாணம் மிகுந்த குல மகளின் அழகு, அறிவிற்சிறந்த வீரனின் கையில் உள்ள கூரிய வாள் போல்யாராலும் நெருங்குதற்கு அரிதாம்.


கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.
387

ஒரு சிற்றூரான் தாழ்ந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் வேறுபாடின்றி காசுக்கு ஆறு மரக்கால் என வாங்கிக் கொண்டானாம்! அது போல, முழுதும் எம்மோடு ஒத்திராத அழகிய நெற்றியையுடைய பொதுமகளிரை அனுபவித்த மலை போன்ற மார்புடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான் (அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் உடையவர் கற்புடை மகளிர்).


கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.
388

பாணனே! கொடுமையான சொற்களை எம்மிடம் கூறாதே! ஏனெனில், தலைவனுக்கு உடுக்கையின் இடப் பக்கத்தைப் போலப் (பயன்படாதவர்களாக) நாங்கள் இருக்கிறோம். அத்தகைய சொற்களைக் கூறுவதானால் மெதுவாக இங்கிருந்து விலகிச் சென்று, உடுக்கையின் வலப் பக்கத்தைப் போல அவருக்குப் பயன்படும் பொதுமகளிர்க்குச் சொல்! (தலைவா¢ன் பிரிவை உணர்த்திப் பாணனை நோக்கித் தலைவி கூறியது இது. இதனால் தன் கணவனைப் பற்றிய எந்தப் பழிப்புரையையும் கற்புடைய பெண் கேட்கவும் விரும்பமாட்டாள் என்பது புலப்படும்).


சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.
389

கோரைப் புற்களைப் பறித்த இடத்தில் நீர் சுரந்து விளங்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊரில் உள்ள தலைவன் மீது முன்பு ஈ பறந்தாலும் அது கண்டு வருந்தியவளும் யானே! இப்போது, தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின் கொங்கைகள் மோதப் பெற்றுச் சந்தனம் கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு பார்த்துக் கொண்டு இருப்பவளும் யானே! (தம் கணவர் பரத்தையரைக் கூடிய போதும் கற்புடை மகளிர் பொறுத்திருக்கும் இயல்பினர் என்பது கருத்து).


அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண; - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
இடைக்கண் அனையார்க்கு உரை.
390

பாணனே! அரும்புகள் மலர்கின்ற மாலைகள் அணிந்த தலைவன் எமக்கு அருள் புரிவார் என்று பொய்யான சொற்களைக் கூறாதே. ஏனெனில், நாங்கள் கரும்பின் கடைசிக் கணுக்களை ஒத்திருக்கிறோம். அதனால் இப் பேச்சை இடையில் உள்ள கணுக்களைப் போன்ற பரத்தையா¢டம் சொல்!' (நுனிக் கரும்பாகவோ, இடைக் கரும்பாகவோ இல்லாமல் எப்போதும் அடிக்கரும்பாக இருக்கவே குல மகளிர் விரும்புவர் என்பது கருத்தாம். 'மறுமையிலாவது தலைவனின் அன்பைப் பெறவேண்டும்' எனக் குறுந்தொகைப் பாடல் ஒன்றின் தலைவி கூறும் கருத்து இந்தப் பாடலுடன் ஒப்பிடத் தக்கது).

 நாலடியார் - 40.காம நுதலியல்


முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.
391

கடல் அலைகள் ஓயாது மோதுதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம். (தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியின் புலவி நீங்கச் சொல்லியது).


தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப்
பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.
392

தம்மால் விரும்பப்படும் தலைவருடைய மாலை அணிந்த அழகிய மார்பை, உடம்பு பூரிக்கத் தழுவும், அத் தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, 'இம்' என்னும் ஒலியுடன் மேகம் நீரைப் பொழிய திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை சாப்பறையை ஒத்திருந்தது. (பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்கு உரைத்தது).


கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.
393

மிக வருந்தி வேலை செய்யும் கம்மாளரும் வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து வைக்கும் மயக்கம் பொருந்திய மாலைக் காலத்தில், மலர்களை ஆய்ந்தெடுத்து மாலையாகத் தொடுத்து, அம்மாலையைக் கையில் வைத்துக்கொண்டு, தலைவன் இல்லாத மகளிர்க்கு இம்மாலை என்ன பயனைத் தரும் என் மனம் கலங்கி அழுதாள். (தலைவி செலவுடன் படாமையைத் தோழி தலைவனுக்குக் கூறியது).


செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
தோள்வைத்து அணைமேற் கிடந்து.
394

சூரியன் மறையும் மாலை நேரத்தைக் கண்டு வருந்தி, செவ்வா¢ பரந்த கண்கள் கொண்ட நீரை மெல்லிய விரல்களால் முறையாக எடுத்தெறிந்து விம்மி அழுது, தனது மெல் விரல்களால் நான் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிட்டு, படுக்கையில் தனது தோளையே தலையணையாகக் கொண்டு படுத்து, நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ? (வினை முடித்து மீண்ட தலைவன் பாகன் கேட்பக் கூறியது).


கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; - பின்சென்றும்
ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து.
395

சிறிய மீன் கொத்திப் பறவை என் தலைவியின் கண்களைக் கயல் மீன் எனக் கருதி அவளைப் பின் தொடர்ந்து சென்றது. அப்படிச் சென்றும், ஊக்கத்துடன் முயன்றும், அவளுடைய ஒளிமிக்க புருவத்தை வில்லின் வளைவு என்று எண்ணிக் கண்களைக் கொத்தாமல் விட்டு விட்டது. (தலைவன், தலைவியின் அழகை வியந்து தோழனிடம் கூறியது).


அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ; - அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி.
396

செவ்வாம்பல் போன்ற வாயையும், அழகிய இடையையும், உடைய என் மகள் முன்னர், செம்பஞ்சுக் குழம்பைப் பாதத்தில் பஞ்சினால் தடவிய போதும், மெல்ல மெல்ல எனக்கூறிக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற்கற்கள் பொருந்திய பாலை வழியின் கொடுமையை எவ்வாறு தாங்கின? (தலைவனுடன் போன தலைவியை எண்ணித் தாய் ஏங்கியது).


ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து.
397

ஓலையிலே எழுதும் கணக்கா¢ன் ஓசை ஒழியும்படியான மாலை நேரத்தில், தலைவன் பிரிதலை நினைத்து, மாலையைக் கழற்றி, வீசியெறிந்து, அழகிய கொங்கைகளில் பூசப்பட்டிருந்த சந்தனக் குழம்பையும் உதிர்த்துத் தள்ளித் துன்புற்று அழுதாள். (தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவியின் துன்ப றிலையைத் தோழி கூறியது).


கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; - சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.
398

ஒளி பொருந்திய வளையலையுடையளே! 'கடந்து போதற்கு அரிய பாலை வழியிலே காளை போன்ற நின் காதலனுடன் நாளை நடந்து செல்லும் ஆற்றல் உடையையோ?' என்று தானே கேட்கின்றாய்? ஒருவன் ஒரு குதிரையை எப்பொழுது பெற்றானோ அப்பொழுதே அதில் ஏறிச் செல்லும் முறையையும் கற்றவன் ஆவான். ஆதலால் காதலன்பின் செல்லுதல் அரிதன்று. (தலைவனுடன் போகச் சம்மதித்த தலைவி தோழிக்குக் கூறியது).


முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி.
399

முலைக்காம்புகளும் முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை வழியில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத் தான் அப்படி அன்பாகத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் மகளை எண்ணி நற்றாய் வருந்திச் சொல்லியது).


கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்ததென் - பொன்னீன்ற
கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி.
400

பொன் போலும் தேமல் பொருந்திய, கோங்க மலரைப் போன்ற முலையையுடைய தோழி! முக்கண்ணனான சிவபெருமானும், காக்கைப் பறவையும், படமுடைய பாம்பும், என்னைப் பெற்ற தாயும் எனக்கு என்ன குற்றம் செய்தனர்? அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை! பொருளாசையால் என் தலைவன் பிரிந்த வழியே எனக்குக் குற்றம் செய்தது. (தலைவி தனது பிரிவாற்றாமையைத் தோழிக்கு உரைத்தது. மன்மதனை முழுதும் எரிக்காமல் உயிர் கொடுத்த சிவனும், தன் கூட்டில் பொரித்த குயில் குஞ்சைக் கொல்லாமல் வளர்த்த காக்கையும், சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த பாம்பும், தன்னைப் பெற்ற போதே கொல்லாமல் வளர்த்த தாயும் குற்றம் செய்தவர் ஆவர் எனக் கூற வந்தவள், அப்படிக் கூறாது, அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை என மாற்றிக் கூறினாள். இதன் நயம் உணர்ந்து மகிழத்தக்கது).

நாலடியார் : பொருட்பால்

நாலடியார் - 14.கல்வி
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
131

தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.


இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
132

கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.


களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.
133

களர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர், நல்ல நன்செய் நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கருதுவர். அதுபோலக் கீழ்க்குடியிற் பிறந்தவர்களானாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும்.


வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற.
134

வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாது; தமக்குக் கிடைத்துப் பிறருக்குக் கொடுத்தால் அழிவதில்லை; மேலான படை வலிமையையுடைய மன்னர் சினந்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது. ஆதலால், ஒருவன் தன் மக்கட்குப் 'செல்வம்' எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே; பிற அல்ல!


கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
135

கல்விகள் முடிவில்லாதன; ஆனால் கற்பவருடைய வாழ்நாட்கள் சில! சற்றுப் பொறுமையாக நினைத்துப் பார்த்தால் அந்தச் சில வாழ்நாட்களிலும் பிணிகள் பலவாக இருக்கின்றன. ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையார், நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பர்.


தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.
136

படகு செலுத்துபவனைப் பழமையான சாதிகளில் கீழ்ச்சாதியைச் சார்ந்தவன் என இகழமாட்டார்கள் மேலோர்! நீ காண்பாயாக! அப்படகு ஓட்டுபவனின் துணைகொண்டு ஆற்றைக் கடப்பது போலாகும். நல்ல சாத்திரங்களைக் கற்ற கீழ்மகனின் துணைகொண்டு நூல் பொருளைக் கற்றல்.


தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
உம்பர் உறைவார் பதி.
137

குற்றமற்ற, பழமையான நூற்கேள்வியுடையவராய், பகைமையில்லாதவராய், கூர்மையான அறிவுள்ளவராய் விளங்கும் கற்றோர் குழுவில் சேர்ந்து அளவளாவி மகிழ்தலைவிட இன்பம் உடையதாயின், அகன்ற வானத்தின் மேல் தேவர்கள் வாழும் திருநகரைக் காண முயல்வோம். (கற்றோருடன் சேர்ந்து பெறும் இன்பத்தை விடத் துறக்க இன்பம் சிறந்ததன்று.)


கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்புதின் றற்றே - நுனிநீக்கித்
தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
ஈரமி லாளர் தொடர்பு.
138

ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய துறையையுடைய வேந்தனே! கற்றறிந்தவா¢ன் நட்பு, நுனியிலிருந்து கரும்பைத் தின்பது போலாம். அதன் அடிப்பகுதியிலிருந்து தின்பது போலாம், நற்பண்பும், அன்பும் இல்லாதார் நட்பு.


கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.
139

பழமையான சிறப்பினையுடைய அழகிய பாதிரிப்பூவைச் சேர்ந்திருப்பதால் புதிய மண்பானையானது, தன்னிடத்தில் உள்ள தண்ணீருக்குத் தான் நறுமணத்தைக் கொடுத்து, அத்தண்ணீரையும் நறுமணமுள்ளதாக்கும். அதுபோல கல்லாரே ஆயினும் கற்றாரைச் சார்ந்து அவர்போல் நடந்தால் நல்லறிவு நாளும் உண்டாகப் பெறுவர். (புதிய மண்பானையானது பாதிரிப்பூவைச் சேர்தலால் தன்னிடமுள்ள தண்ணீருக்கு நறுமணம் தருவது போல, கல்லாதார்க்கும் கற்றவர் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்பது கருத்து).


அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.
140

எல்லையற்ற கல்விகளுக்குள்ளே மெய்ஞ்ஞான நூல்களைக் கற்காமல் விட்டுவிட்டு, வெறும் உலக அறிவை மட்டும் தரும் நூல்களைக் கற்பதெல்லாம் 'கலகல' என்னும் வீணான சலசலப்பே யாகும்! இத்தகைய இவ்வுலக அறிவு நூல்களைக்கொண்டு பிறவியாகிய தடுமாற்றத்தைப் (துன்பத்தை) போக்கும் வழியை அறிபவர் எங்கும் இல்லை.


நாலடியார் - 15.குடிப்பிறப்பு


உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.
141

பசித்துன்பம் மிகுதியாக வந்த போதும் சிங்கம் அருகம்புல்லைத் தின்னுமோ? தின்னாது. அதுபோல, உடை கிழிந்து, உடல்மெலிந்து, வறுமையுற்ற போதும் உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் தமக்குரிய ஒழுக்கங்களில் சிறிதும் குறைய மாட்டார்கள்.


சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது - வான்தோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.
142

மேகங்கள் தவழும், வானளாவிய மலைகளையுடைய மன்னனே! பெருந்தன்மை, மென்மை, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் என்னும் இவை மூன்றும் மிகவும் உயர்ந்த குடியில் பிறந்தவா¢டம் அல்லாமல், பெரும் செல்வம் உண்டான காலத்தும் பிறா¢டம் உண்டாகமாட்டா.


இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று.
143

பொ¢யோர் வரக் கண்டால் தன் இருக்கையிலிருந்து எழுதலும், சற்று எதிர் சென்று மகிழ்வுடன் வரவேற்றலும், மற்ற உபசாரங்களைச் செய்தலும், அவர் பிரியும் போது சற்றுப் பின் செல்லுதலும் அவர் விடைதரத் திரும்பி வருதலும் ஆகிய நற்குணங்களை, உயர்குடிப் பிறந்தார் தமது அழியாத ஒழுக்கங்களாகக் கொண்டுள்ளனர். ஆனால் கீழ் மக்களிடம் இவற்றில் ஒன்றேனும் பொருந்தியிருக்கும் என எண்ணுதல் சா¢யன்று.


நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
புணரும் ஒருவர்க் கெனின்? 144

உயர்குடிப் பிறந்தார் நல்ல செயல்களைச் செய்தால் அ·து அவர்க்கு இயல்பு என்று கருதப்படும். தீய செயல்களைச் செய்தால் பழிக்கத்தக்கதாக முடியும். தலால் ஒருவர்க்கு உயர்குடிப்பிறப்பு வாய்க்குமானால், வாய்த்த அக்குடிப்பிறப்பால் அவர் அடையும் பயன்தான் என்ன? (உயர்குடிப் பிறப்பால் பயன் என்ன என்று கூறியது பழிப்பது போலப் புகழும் வஞ்சகப் புகழ்ச்சியாம்.)


கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந்தார்.
145

உயர்குடிப் பிறந்தோர் (தாம்) கல்லாமைக்கு அஞ்சுபவர்; கீழோர்க்குரிய இழிதொழிலைச் செய்ய அஞ்சுவர்; தகாத சொற்களை வாய் தவறிச் சொல்லி விடுவோமோ என அஞ்சுவர்; இரப்பார்க்கு ஒன்றும் தடி முடியாமை நேருமோ என அஞ்சுவர். (இவ்வாறு அச்சம் கொள்ளுதல் உயர்குடிப் பிறந்தார் இயல்பாகும்). ஆதலால் இத்தகைய மாண்புகள் அற்ற குடியிற் பிறந்தவர்கள் மரம் போல்வர் ஆவர்.


இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
இற்பிறந்தார் கண்ணே யுள.
146

சிறந்த மாணிக்க மணிகள் முத்துக்களுடன் சேர்ந்து ஒளி வீசுவதற்கு இடமான ஒலிக்கும் கடலின் குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! நல்லோர் தொடர்பு, இன்சொல் கூறுதல், வறியார்க்கு ஒன்றைக் கொடுத்தல் மற்றும் மனத்தூய்மை என்னும் இப்படிப்பட்ட நற்குணங்கள் எல்லாம் நல்லகுடியில் பிறந்தவா¢டம் பொருந்தியிருக்கின்றன.


செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.
147

கட்டுக் குலைந்து கறையான் பிடித்திருந்தாலும் பொ¢ய வீடானது, மழைநீர் ஒழுகாத ஒரு பக்கத்தை உடையதாயிருக்கும். அதுபோல, எத்தகைய வறுமைத் துன்பங்களில் ஆழ்ந்திருந்தாலும் நற்குடிப்பிறந்தோர் தம்மால் இயன்ற நற்செயல்களைச் செய்வர்.


ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.
148

ஒரு பக்கத்தினை இராகு என்னும் பாம்பு பிடித்துக் கொண்டாலும், தனது மற்றொரு பக்கத்தால் அழகிய பொ¢ய இவ்வுலகத்தினை ஒளிபெறச் செய்யும் திங்களைப் போன்று, வறுமையினால் எவ்வளவு துன்புற்ற போதிலும், உயர்குடிப்பிறந்தவர் பிறர்க்கு உதவி செய்வதில் மனம் தளரார்.


செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.
149

மான், சேணத்தைத் தாங்கியிருந்தாலும், பாயும் குதிரைபோலத் தாக்கிப் போரிட இயலாது. அதுபோல, வறுமைக் காலத்தும் உயர்குடிப் பிறந்தார் செய்யும் நல்ல செயல்களைச் செல்வக் காலத்தும் கீழோர் செய்ய மாட்டார்கள். ('பருமம் பொறுப்பினும்' என்பதற்குப் பருத்திருள்தூறும் எனப் பொருள் கொள்வரும் உண்டு.)


எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.
150

நீரற்ற அகன்ற ஆறு, தோண்டிய உடனே சுரந்து தெளிந்த நீரைத் தரும். அதுபோல, உயர்குடிப் பிறந்தோர் தம்மிடம் யாதொரு பொருளும் இல்லாத போதும், துன்புற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கு அவரது தளர்ச்சி நீங்க ஊன்றுகோல் போல உதவுவர்.

நாலடியார் - 16.மேன் மக்கள்


அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.
151

அழகிய இடத்தினையுடைய வானத்தில் விரிந்த நிலவினைப் பரப்பும் சந்திரனும் மேன்மக்களும் பெரும்பாலும் தம்முள் ஒப்பாவார். ஆனால், திங்கள் தன்னிடமுள்ள களங்கத்தைப் பொறுத்துக்கொள்ளும்; மேன்மக்களோ அதனைப் பொறார். அவர்கள் தமது ஒழுக்கத்தில் ஒரு சிறிது தவறு நேர்ந்தாலும் வருந்தி மெலிவர்.


இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?
152

விரைவோடு நா¢யின் மார்பைப் பிளந்து சென்ற அம்பைவிட, சிங்கத்தை நோக்கிவிடப்பட்ட குறி தவறிய அம்பு உயர்ந்ததாகும். அதனால் முடிந்தாலும் முடியாவிட்டாலும் சான்றோர் பழியற்ற செயல்களையே எண்ணிச் செய்வர்.


நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் - உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.
153

நரம்புகள் மேலே தோன்றுமாறு உடல் மெலிந்து வறுமையுற்ற போதும், மேன்மக்கள் நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து இரத்தலாகிய குற்றத்தை மேற்கொண்டு பிறா¢டம் செல்லார். அவர்கள் தம் அறிவைப் கவறாகக் கொண்டு முயற்சி என்னும் நாரினால் மனத்தைக் கட்டி (இரத்தல் என்னும் தீய நினைவை அடக்கி) தம்மிடம் உள்ள பொருளுக்கு ஏற்ப நற்செயல்களைச் செய்வர். (கவறு-பிளவுள்ள பனமட்டை; ஒன்றைப் பிடித்து இறுக்கிக் கயிற்றால் கட்ட உதவுவது).


செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி.
154

நல்ல மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! மேன்மக்கள் தாம்போகும் வழியில் ஒருவரை ஒருநாள் கண்டாலும், பல நாள் பழகியவர் போல் அன்பு கொண்டு விரும்பி அளவளாவி அவரை நட்பினராக (அல்லது உறவினராக)க் கொள்வர். சில நாள் காலடிப் பட்டு நடந்து சென்றால், கல் மிகுந்த மலையிலும் தேய்ந்து வழி உண்டாகும். (பல நாள் பழகிப் பின் நட்புக் கொள்வதில் என்ன பெருமையிருக்கிறது? மேன் மக்கள் ஒரு நாள் பழகினும் நண்பராவர்).


புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
155

கல்வியறிவு இல்லாத பயனற்ற வீணர் அவையில் நூல்களைக் கல்லாத ஒருவன் பொருத்தமில்லாமல் உரைப்பனவற்றையும் (அறிவுடையோர்) அவனது குற்றங்களைச் சுட்டிக் காட்டினால், அவன் பல்லோரிடை அவமானப்பட நோ¢டும் என்பதற்காக இரங்கி, மனம் வருந்தினாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பர்.


கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
156

கரும்பைப் பல்லால் கடித்தும், கணுக்கள் நொ¢யுமாறு ஆலையிலிட்டுச் சிதைத்தும், உரலில் இட்டு இடித்து அதன் சாற்றைக் கொண்டாலும், அச்சாறு, இனிய சுவையுள்ளதாகவே இருக்கும். அதுபோல, மேன் மக்களின் மனம் புண்ணாகுமாறு பிறர் எவ்வளவு தான் இகழ்ந்துரைத்தாலும் அம் மேன்மக்கள் தம் வாயால் தீயன சொல்லார்.


கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் - தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர்.
157

குற்றமற்ற அறிவுடைய மேலோர் திருடார்; கள் அருந்தார்; விலக்கத்தக்க தீயனவற்றை விலக்கித் தூயராகி விளங்குவர்; பிறரை அவமதித்து இகழ்ந்து உரையார்; மறந்தும் தம் வாயால் பொய் கூறார். ஊழ் வினையால் வறுமையுற்றாலும் அதற்காக வருந்தவும் மாட்டார்.


பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
158

ஒழுக்கத்தின் மேன்மையை யுணர்ந்து, ஒருவன் பிறருடைய இரகசியங்களைக் கேட்பதில் செவிடனாகவும், அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாகவும், பிறர் இல்லாதபோது அவரைப் பற்றிப் பழித்துப் பேசுவதில் ஊமையாகவும் இருப்பானானால் அவனுக்கு வேறெந்த அறமும் கூற வேண்டியதில்லை.


பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு.
159

நற்பண்பு இல்லாத கீழ் மக்கள் தம்மிடம், ஒருவர் பல நாட்கள் வந்து கொண்டிருந்தால், (இவர் எதையோ விரும்பி இங்கு வருகிறார்) என்று கருதி அவரை அவமதிப்பர். ஆனால் நற்குணம் நிறைந்த மேன் மக்களோ தம்மிடம் வருபவர் எதையாவது விரும்பினாலும் 'நல்லது' என்று கூறி மகிழ்ந்து நாள் தோறும் அவர்க்கு நன்மையே செய்வர்.


உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்; - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.
160

இவர் செல்வம் உடையவர்' என்று மதித்து, கீழ் மக்கள் பின்சென்று அவர் தருவன பெற்று வயிறு வளர்ப்பர் பெரும்பாலோர், அவர்களுக்கு நற்குணம் மிக்க மேன்மக்களின் தொடர்பு கிடைக்குமானால் பொருள் நிறைந்த ஒரு சுரங்கமே கிடைத்தது போல் இருக்குமல்லவா?

நாலடியார் - 17.பெரியாரைப் பிழையாமை


பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது.
161

ஒலிக்கும் அருவிகளை அணிகளாகக் கொண்ட மலைகள் மிக்க நாட்டையுடைய வேந்தனே! 'பொறுத்துக் கொள்வர்' என நினைத்து, மாசற்ற பொ¢யோரிடத்தும் அவர் வருந்தத்தக்க குற்றங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் கோபித்த பின் அதனால் ஏற்படும் துன்பங்களை யாராலும் விலக்க இயலாது. ('சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பொ¢யோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே' என்பது இங்குக் கருதத் தக்கது).


பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்.
162

பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கா¢ய பொ¢யோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே! (அருமையான பொ¢யோர் தொடர்பு வாய்க்கப் பெற்றும் அவரைக் கொண்டு நன்மை பெறாமல் காலம் கழிப்பதும் பொ¢யாரைப் பிழைத்தலாம் என்பது கருத்து.)


அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.
163

அவமதிப்பும், மிக்க மதிப்பும் கிய இரண்டும் மேன்மக்களாகிய பொ¢யோர்களால் மதிக்கத்தக்கனவாகும். (கருதத்தக்கனவாகும்). ஒழுக்கமில்லாக் கீழ் மக்களின் பழிப்புரையையும், பாராட்டுரையையும் கற்றறிந்த பொ¢யோர்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். (உலகில் சான்றோர், ஏற்றமிகு செயல் கண்டு உள்ளத்தில் மதித்து மகிழ்வர். நிகழ்வன பொருத்த மற்றவையாயின் அவற்றை மதியாமல் விடுப்பர். எனவே பொ¢யோர் மதிக்க வாழ வேண்டும் என்பது கருத்து).


விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.
164

படம் விரிக்கும் நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே இருந்தாலும், தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும். அதுபோல மேன்மை மிக்க பொ¢யோர் சினம் கொள்வாரானால் தவறு செய்தவர் பாதுகாவலான இடத்தைச் சேர்ந்திருந்தாலும் தப்பிப் பிழைக்கமாட்டார்.


எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்.
165

எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிப்பது பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பொ¢யோர்' என மதிப்பதே பெருமையாகும்.


நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு.
166

பொ¢ய கடலின் குளிர்ந்த கரையையுடையவனே! சிறியோர் நட்பு, காலை நேரத்து நிழல்போல வர வரக் குறையும்; புகழ் மிக்க பொ¢யோர் நட்பு அவ்வாறு குறையாது மாலை நேரத்து நிழல்போல் மேலும் மேலும் வளரும்.


மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.
167

மன்னா¢ன் செல்வத்தையும், மகளிரின் அழகையும் நெருங்கினவர்கள் துய்ப்பர்; அதற்குத் தகுதி ஒன்றும் வேண்டாம். எதுபோல் எனின், கிளைகள் நெருங்கித் தளிர் விட்டுத் தழைத்து இருக்கும் குளிர்ச்சியான மரங்களெல்லாம் தம்மிடம் வந்தடைந்தவர்களுக்கு நிழல் தருவது போல! (இங்கு மகளிர் என்பது பொது மகளிரைக் குறிக்கும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்ற வேறுபாடின்றி வந்தவரையெல்லாம் தம்மிடம் சேர்க்கும் மரங்கள் போலவும், பொது மகளிர் போலவும், மன்னர் - பொ¢யோரைச் சிறியாரோடு ஒருமிக்க சேர்த்தலும் பொ¢யாரைப் பிழைத்தலாகும் என்பது கருத்து).


தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும்.
168

நீர் வளம் குன்றாத கழிக்கரையுடைய வேந்தனே! நன்மை தீமைகளை ஆராய்ந்து உணரும் தெளிவிலாரிடத்தும் நட்புக் கொண்டு பின் பிரிய நேர்ந்தால், அப்பிரிவு மிக்க துன்பத்தை உண்டாக்கும். ஆதலால் யாரிடத்தும் நட்புக் கொள்ளாமை கோடி பங்கு சிறந்ததாகும். (அற்பர் நட்பைப் பிரிதலே துன்பமானால் அறிவுடையோர் நட்பைப் பிரிதல் மிகத் துன்பமாகும். ஆதலால் யாரிடமும் நட்புக் கொள்ளாமையே நலம் என்பதாம். இதனால் பொ¢யாரைச் சேர்தலில் இருக்கும் நன்மையைச் சுட்டிக் காட்டி, அத்தகையோரிடம் பிழைத்தல் நல்லதன்று என்பது உணர்த்தப்பட்டது).


கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.
169

கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிந்த நாளும், கேள்வியின் காரணமாகப் பொ¢யோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாளும், இயன்ற அளவு பொருளை இரப்பார்க்குக் கொடாது கழிந்த நாளும் பண்புடையாரிடத்தில் உண்டாகாவாம். (இப்பாடலும் பொ¢யோர்பால் சேரும் நன்மையைக் காட்டி அவா¢டம் பிழையாமை நன்று எனக் கூறுவதாகும்).


பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.
170

பொ¢யோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். வீடு பேற்றை விரும்பும் மெய்ஞ்ஞானிகளுக்குரிய பண்பாவது மனம், மொழி, மெய்களின் அடக்கமுடையாம். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவா¢ன் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். (பொ¢யோர் பணிவுடைமையும், அடக்கமுடைமையும், ஈகைத் தன்மையும் உடையவராவர் என்பதும், ஆதலின் அவரைப் பிழைத்தல் தகாது என்பதும் கருத்தாகும்).

நாலடியார் - 18.நல்லினம் சேர்தல்


அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
171

அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு கூடி நெறியல்லாதன செய்தமையால் நேர்ந்த பாவங்களும், நல்லாரைச் சார்ந்து ஒழுகலால், வெயில் மிகுந்தோறும் புல்லின்மேல் படிந்த பனிநீர் அதனை விட்டு நீங்குதல் போலக் கெடும்.


அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
172

அறத்தின் நெறியை அறியுங்கள்! எமனுக்கு அஞ்சுங்கள்! அறியார் கூறும் கடுஞ் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! வஞ்சனைக் குணம் உங்களிடம் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்! தீயோர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! எப்போதும் பொ¢யோர் அறவுரைகளைக் கேளுங்கள்!


அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் - தொடங்கிப்
பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.
173

அன்புடன் தன்னைச் சார்ந்திருப்பவர்களைப் பிரிதலும், மருந்தால் தீர்தற்கா¢ய நோயும், மரணமும் உடம்பு எடுத்தார்க்கு உடனே வந்து எய்தலால், பழையதாய்த் தொடர்ந்து வரும் பிறப்பினைத் துன்பம் தருவது என்று அறியும் சிறந்த அறிவுடையாரை என் நெஞ்சமானது சிக்கெனப் பற்றுவதாக! (பிறப்புத் துன்பத்தை உணரும் ஞானிகளைச் சேர்தல் நல்லதாம்.)


இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் - பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
174

மிகவும் ஆராய்ந்து பார்த்தால், பிறப்பு, துன்பம் தருவது எனினும் நற்குணங்கள் நிறைந்த நல்லோருடன் சேர்ந்து அவர் தம் நற்குணங்களைப் பெற்று எல்லா நாளும் அவர்களுடன் நட்புக் கொள்வாராயின் அப்போது யாரும் இந்தப் பிறப்பினை வெறுக்கமாட்டார்கள். (இந்தப் பிறப்பு இனிமையுடையது என்பர்).


ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.
175

ஊரில் உள்ள சாய்க்கடை நீர், கடல்நீரைச் சேர்ந்தால், அது (தன்தன்மை மாறுபடுவதோடு) பெயரும் வேறுபட்டுத் 'தீர்த்தம்' என்னும் பெயர் பெறும். அதுபோல, பெருமையில்லாத குடியிற் பிறந்தவரும் பெருமை மிக்க பொ¢யாரைச் சேர்ந்தால், மலைபோல் உயர்ந்து நிற்பர் (தீர்த்தம் - தூயநீர்).


ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின்.
176

அழகிய இடத்தையுடைய வானத்திலே உள்ள ஒளி பொருந்திய சந்திரனைச் சேர்ந்திருப்பதால், முயலும் சந்திரனைத் தொழும்போது சேர்த்துத் தொழப்படும். அதுபோல, சிறப்பு இல்லாதவராயினும் குன்றுபோலும் உயர்ந்த நற்குணங்கள் உடையாரைச் சேர்ந்தவராயின் பெருமை பெறுவர். (குன்று போல் உயர்ந்து தோன்றுவர்).


பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; - தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.
177

பாலுடன் கலந்த தண்ணீர் பாலாகவே தோன்றுமே அல்லாமல் நீரின் நிறத்தை வேறுபடுத்திக் காட்டாது. அதுபோல், ஆராயுமிடத்து நற்குணமுடைய பொ¢யோரின் பெருங்குணத்தைச் சேர்ந்தால் சிறியோரின் சிறுமைக் குணமும் தோன்றாது.


கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம்.
178

புன்செய் நிலத்திலும், பொ¢ய நன்செய் நிலத்திலும் மரக்கட்டையைச் சார்ந்து முளைத்திருக்கும் புல்லானது, உழவா¢ன் கலப்பைக்குச் சிறிதும் அசையாது. அதுபோல, வலிமை அற்றவராயினும் வலிமை மிக்காரைச் சார்ந்திருப்பாராயின், பகைவர் சினம் அவர்மேல் செல்லாது.


நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினம் சேரக் கெடும்.
179

நிலத்தின் வளத்தினால் செழித்து வளரும் நெற்பயிர் போல, மக்கள் தாங்கள் சேரும் கூட்டத்தின் சிறப்பால் உயர்வர். கடலில் செல்லும் மரக்கலத்தைச் சுழல் காற்றுத் தாக்கிக் கெடுப்பது போல, ஒருவா¢ன் உயர் குணங்கள் தீயோருடன் சேர்தலால் கெடும்.


மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் - புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.
180

காடு தீப்பற்றி எரியும்போது மணம் வீசும் சந்தன மரமும் வேங்கை மரமும்கூட வெந்து போகும். அதுபோல, மனத்தில் ஒரு குற்றமும் இல்லாத நல்லவராயினும் அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக இகழப்படுவர்.

நாலடியார் - 19.பெருமை


ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர்; - காதலித்து
ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொருள்.
181

பொருள் இன்மையால் பிறர்க்கு ஒன்றைக் கொடுக்கவும் இயலவில்லை. இளமையும் வீணாகக் கழிந்துவிட்டது. முன்பு நம்மிடம் பற்றுக் கொண்டிருந்த மனைவி மக்களும் இப்போது அப்படி இல்லை; ஆதலால் 'இன்னும் நாம் வாழ்வோம்' என்னும் ஆசையை விட்டுத் துறந்து போவதே நல்ல செயலாகும்.


இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; - அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.
182

இல் வாழ்க்கையை மேற்கொண்டதனால் இன்புற்றோம்; இந்த இல்வாழ்க்கையில் ஒரு குறையுமின்றி இருக்கின்றோம்' என்று எண்ணிப் பின்னர் வரப்போகும் துன்பத்தை மறந்து நடப்பர் அறிவிலாதார். இல்வாழ்க்கை இன்பங்கள் நிலைபெற்றன போல் காணப்பட்டு நிலையில்லாது அழிபவை என்ற உண்மையை அறிந்தவர்கள் ஒரு போதும் வருந்தார், இல்வாழ்க்கையில் வருவன துன்பமே என்ற உணர்வுடையர் எதிலும் பற்றற்று இருப்பர் என்பது பெருமையாகும்).


மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் - அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவும் உள.
183

இருந்த இடத்தில் இருந்தே இளமை முதலான பருவங்கள் மாறிப் போகும். காரணம் தோன்றாமல் இன்னும் பல வேறுபாடுகளும் உண்டாகும். ஆதலால் மறுமைக்கு வித்தாகிய நல்லறங்களை மயக்கமின்றிச் செய்து அறிவுடையோராய் வாழுங்கள்! (பருவம் முதலியன மாறும்போது மனக்குறையின்றி இருத்தல் பெருமையாம்).


உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; - கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
ஆஅயம் கண்ணும் அரிது.
184

மழை இல்லாத கோடைக் காலத்தும், நீர் சுரக்கும் கிணறு தன்னிடம் உள்ள தண்ணீரைப் பிறர் இறைத்து உண்ணக் கொடுத்து ஓர் ஊரைக் காப்பாற்றும். அது போல, பொ¢யோர் வறுமையால் தளர்ந்த போதும் பிறர்க்குக் கொடுப்பர். ஆனால் பெருமையற்ற சிறியோர் செல்வம் மிக்க காலத்தும் பிறர்க்குத் தரமாட்டார்கள்.


உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; - செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை.
185

(மழைக் காலத்தில் வெள்ளம் வரும்போதும்) மிக்க நீரைக் கொடுத்து உலக மக்களை உண்பித்த ஆறானது (கோடைக் காலத்தில்) நீரற்றபோதும், தோண்டப் பெற்ற ஊற்றுக் குழியில், நீர் சுரந்து உதவி செய்யும். அந்த ஆற்றைப் போல, பொ¢யோர் தமது செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து வறுமையுற்ற காலத்தும் தம்மால் இயன்ற அளவு பிறர்க்கு உதவி செய்வர். (வறுமையிலும் பிறர்க்குத் தருவது பெருமை).


பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; - கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
186

பொ¢ய மலைகளைக் கொண்ட நாட்டையுடைய வேந்தனே! பொ¢யோரிடம் உண்டான குற்றம் பொ¢ய வெள்ளை எருதின்மீது போடப்பட்ட சூடுபோல எங்கும் விளங்கித் தோன்றும். சிறந்த வெள்ளை எருதைக் கொன்றது போன்ற கொடிய குற்றத்தைச் சிறியோர் செய்தாலும் அது ஒரு குற்றமாகத் தோன்றாமல் மறையும். (பொ¢யோர் ஒரு குற்றம் செய்தாலும் அ·து எல்லார்க்கும் தொ¢யும். சிறியோர் எத்தனை செய்தாலும் பிறர்க்குத் தொ¢யாது. ஆதலால் பெருமையுடையோர் ஒரு சிறிய குற்றமும் செய்யாது தம்மைக் காக்க வேண்டும் என்பது கருத்து).


இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பயைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
187

அற்பத்தனம் மிக்க, நற்குணம் இல்லாதவா¢டம் நட்புக் கொண்டிருக்கும் வரை துன்பமே மிகும். விளையாட்டாகக் கூடத் தீயனவற்றைச் செய்ய விரும்பாத நல்லறிவாளா¢டம் கொண்ட பகையேனும் பெருமையைத் தரும். (அயோக்கியா¢டம் கொள்ளும் நட்பைவிட யோக்கியா¢டம் கொள்ளும் பகை நல்லது).


மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; - எல்லாம்
சலவருள் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
188

மென்மைத் தன்மையுள்ள மகளிரிடம் மென்மைக் குணம் உடையராய்த் திகழ்க! பகைவா¢டத்தில், அந்த மென்மையை விட்டுவிட்டு எமனும் அஞ்சத்தக்க குணம் உடையவராகத் தோன்றுக! பொய்யர்தம் கூட்டத்தில் மிகவும் பொய்யராக மாறுக! நல்லவர் குழாத்தில் நன்மையின் வரம்பாய் விளங்குக! (பொய்யர் கூட்டத்தில் பொய்யராதல் தம்மைக் காக்கும் பொருட்டாம்).


கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
189

ஒருவன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு பிறர்பற்றி மிகவும் பொல்லாத கோள் சொற்களைச் சொல்லித் தம் அறிவை மயங்கச் செய்தாலும், அப்பிறர்பால் சிறிதும் மனவேறுபாடின்றி அசைவில்லாது இருப்பவரே, விளக்கில் ஒளிரும் சுடர் போலத் தூய மனத்தவராவர். (புறங்கூறலைப் பொருட்படுத்தாமையும் பெருமையாகும் என்பது கருத்து).


முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
190

சான்றோர்கள் முன்னர் உண்ணத் தகும் உணவினை நாள்தோறும் அறம் செய்த பின்னரே உண்பர். அப்படி உண்ட உணவு காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் போக்குவதுடன், வாழ்நாள் வரை அவர்களைத் துன்பத்தினின்றும் காப்பாற்றும். (முதலில் உண்பதற்குக் கொண்ட உணவை இரப்போர்க்கு அளித்து மீதியை உண்டு வாழ்பவருக்கு வாழ்நாள் முழுதும் துன்பம் இல்லை; புண்ணியம் உண்டு).

நாலடியார் - 20.தாளாண்மை


கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க்கு உண்டோ தவறு?
191

நீரை மிகுதியாகக் கொள்ளாத ஏரியின் கீழ் உள்ள பயிரைப் போல (ஒரு முயற்சியுமின்றி) சிலர், தம் உறவினர் தருவதை உண்டு (அவ்வுறவினர்) வறுமையுற்றபோது வேறு வழியின்றிச் சாவர். ஆனால் வாளின் மேல் கூத்தாடும் மகளிருடைய கண்ணைப் போல் இயங்கி, ஓடி ஆடிச் சுறுசுறுப்பாக உழைக்கும் முயற்சியுடையார்க்கு இத்தகைய பிழைபட்ட வாழ்வு உண்டாகுமோ?


ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.
192

அசையும் கொம்பாகி வழியில் நின்ற இளமரமும் வயிரம் கொண்டு உறுதி வாய்ந்த பொ¢ய மரமாக வளர்ந்த பின்னர், ஆண் யானையைக் கட்டும் தறியாகும். அதுபோல, ஒருவன் தன்னைத் தாழ்ந்த நிலையில் இல்லாமல் முயற்சி செய்தால், அவனுடைய வாழ்வும் அப்படிப்பட்ட பெருமை உடையதாகும்.


உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால்
கால்தொழில் என்று கருதற்க கையினால்
மேல் தொழிலும் ஆங்கே மிகும்.
193

வலிமை பொருந்திய புலியும் தனக்குரிய இறைச்சியுணவு ஒரு நாள் கிடைக்கவில்லையெனில் சிறிய தேரையைப் பிடித்துத் தின்னும்,ஆதலால் அறிவினால் ஆராய்ந்து எந்தச் சிறிய தொழிலையும் அற்பமான தொழில் என்று எண்ணவேண்டா அந்த அற்பமான தொழிலே முயற்சியால் உயர்ந்த தொழிலாக மேம்படும். (தொழில் சிறியதாயினும் அக்கறையுடன் செய்தால் உயர்வு கிடைக்கும் என்பதாம்).


இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
பெண்டிரும் வாழாரோ மற்று.
194

தாழையை அலைகள் அசைத்தற்கிடமான சோலைகள் சூழ்ந்த கடற்கரையையுடைய வேந்தனே! மேற்கொண்ட ஒரு செயல் எளிதில் முடியாததாயிருப்பினும், தளராது முயன்று செய்வதே ஆண்மையாகும். எடுத்த காரியம் எளிதில் முடியுமானால் மென்மைத் தன்மை வாய்ந்த மகளிரும் அதனை முடித்துப் பெருமையடைய மாட்டார்களா? (எளிதான செயலை யாவரும் முடிப்பர்; அதில் பெருமை இல்லை. கடினமான செயலை மெய்வருத்தம் பாராது, கண் துஞ்சாது, இடைவிடாது செய்து முடிப்பதே ஆண்மையின் பெருமையாம்).


நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.
195

நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும். (ஒன்றோ என்பதனை ஒண்பொருள் ஒன்று, தவம் ஒன்று, கல்வி ஒன்று, ள்வினை ஒன்று எனக் கூட்டுக).


ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.
196

தாம் மேற்கொண்ட செயலை, அது முடியும்வரை அறிவின் திறத்தால் மனத்துள் அடக்கிக் கொண்டு, தமது முயற்சியினை வெளிப்படையாக உரையார் அறிவுடையார். மேலும் அவர்கள், பிறர் முயற்சியினை அவர்தம் உறுப்புகளின் குறிப்பினால் ஆராய்ந்து அறிவர். இத்தகையோர்க் கீழ் அடங்கும் உலகு. (அவர்க் கீழ் உலகம் அடங்கும் என்பது அவரது ஆற்றலை வியந்து கூறியதாம்).


சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
197

கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தினை அதன் விழுது தூணாக நின்று தாங்குவது போல, தந்தையிடம் முதுமையினால் தளர்ச்சி உண்டாகும்போது, அவன் பெற்றமகன் முன் வந்து பாதுகாக்க, தந்தையின் தளர்ச்சி நீங்கும். (ஒவ்வொருவரும் தமது குடி தாழாதிருக்க முயலல் வேண்டும் என்பது கருத்து).


ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர்.
198

யானையின் புள்ளிகள் பொருந்திய முகத்தைத் தாக்கிப் புண்படுத்தவல்ல கூர்மையான நகங்களையும், வலிமையான கால்களையும் உடைய சிங்கத்தைப் போன்ற வலிமையுடையோர், வறுமையுற்று நிலைதாழ்ந்த போதும் மானம் கெடத்தக்க செயலைச் செய்வரோ? செய்யார்.


தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.
199

இனிய கரும்பு ஈன்ற, திரண்ட காம்பினையுடைய, குதிரையின் பிடா¢ மயிர்போல் கற்றையான பூவானது, நறுமணத்தை இழந்ததுபோல, ஒருவனிடம் தன்பெயரை நிலைநாட்டும் பெருமுயற்சி இல்லாதபோது, அவன் மிகச் சிறந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாகும்?


பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
200

முயற்சியற்ற கீழ்மக்கள் பெருமுத்தரையர் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற செல்வர் மகிழ்ந்து தரும் கறிகளோடு கூடிய உணவை உண்டு மகிழ்வர். கறியின் பேரையும் அறியாத மேலோர் தாம் மிகவும் விரும்பிச் செய்த முயற்சியால் வந்தது நீர் உணவாயினும் அதனை அமிழ்தமாக உண்பர். (தமது முயற்சியால் வருவது கூழ் நீராயினும் அமிழ்தமாம்).

நாலடியார் - 21.சுற்றம் தழால்


வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
201

கருக்கொண்ட காலத்து உண்டாகும் மசக்கையாகிய நோயும், அது பற்றி வரும் பல துன்பங்களும், குழந்தை பெறுங்காலத்து உண்டாகும் நோவும், ஆகிய இத்தகைய துன்பங்களையெல்லாம் மடியில் இருக்கும் குழந்தையைக் கண்டு தாய் மறப்பதுபோல், தளர்ச்சியால் தான் உற்ற துன்பம் எல்லாம் நலம் விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும்.


அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
202

வெப்பம் மிகும் கோடைக்காலத்தில் தன்னை அடைந்தார்க்கு எல்லாம் நிழலைத்தரும் மரம் போல, தன்னைச் சார்ந்த சுற்றத்தாரையெல்லாம் ஒரே தன்மையாகக் காத்து, பழுத்த மரம் போலப் பலரும் பயன் நுகர, தான் வருந்தி உழைத்து வாழ்வது நல்ல ஆண்மகனுக்கு உரிய கடமையாம்.


அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
எடுக்கலம் என்னார்பெரியோர்; - அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
203

அடுக்கடுக்கான மலைகள் பொருந்திய நாட்டையுடைய அரசனே! ஒரு மரத்தில் பொ¢ய பொ¢ய காய்கள் பலவாகக் காய்த்தாலும் தன் காய்களைத் தாங்க மாட்டாத கிளை இல்லை. அதுபோல, பொ¢யோர் தம்மைச் சார்ந்தவர்களை 'தாங்க மாட்டோம்' என்று சொல்ல மாட்டார்.


உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
204

உலகத்தார் அறியும்படி மிகுதியாக உறவு கொண்டாலும், சிற்றினத்தாரிடம் கொண்ட உறவு, நீடித்து நில்லாது சில நாட்களே நிற்கும். பிறரைத் தாங்கும் பண்பில் தளர்ச்சியில்லாதவா¢டம் கொண்ட உறவோ, இயல்பாகவே தம் பண்பில் திரியாது நிற்கும் பொ¢யோர், வீட்டினை அடையத் தவம் செய்யும் காலத்தில் அவ்வீட்டு நெறியில் ஊன்றி நிற்பதுபோல நிலைத்து நிற்கும்.


இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.
205

இவர், இப்படிப்பட்டவர்; எம் உறவினர்; அயலார்' என்று வேறுபாடு குறிக்கும் சொல்லைச் சொல்லாத இயல்பினராய், வறுமைத் துன்பத்தால் வாடும் மக்களைச் சார்ந்து அவர்தம் துயரத்தைக் களைபவரே யாவர்க்கும் தலைவர் கும் தன்மையுடையவர் ஆவர்.


பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானும் இனிது.
206

பொற்கலத்தில் இட்ட, புலிநகம் போன்ற வெண்மையான சோற்றைச் சர்க்கரையுடன் பாலும் கலந்து பகைவர் தர, அதைப் பெற்று உண்பதைவிட, உப்பில்லாத புல்லா¢சிக் கூழை, உயிர்போன்ற சுற்றத்தாரிடத்திலே பெற்று, எந்தக் காலத்திலும் இட்டு உண்ணல் இனிதாம்.


நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது.
207

நெஞ்சமே, கேள்! பகைவர் இல்லத்தில் வேளை தவறாமல் பொரிக்கறியுடன் கூடிய உணவினை உதவியாகப் பெற்றாலும் அது, வேம்புக்கு நிகராகும், உணவுக்குரிய நேரம் கடந்தபோதும், சுற்றத்தாரிடமிருந்து கீரை உணவே கிடைத்தாலும் அ·து இனிமையாகும்.


முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.
208

சம்மட்டி போல, வெறுக்காமல் இருக்கும்படி நாள்தோறும் நெருங்கி இதமாக வாங்கி உண்பவர்களும், காலம் வாய்த்தால் (நெருப்பிலே இரும்பைப் போட்டு விட்டு மீளும்) குறடு போல் கைவிட்டுப் போவார். ஆனால் அன்புள்ள உறவினரோ, பொருளுடன் நெருப்பை அடையும் சூட்டுக்கோலைப் போன்று (சுற்றத்தார்க்குத் துன்பம் நேர்ந்தபோது) நெருப்பிலும் மூழ்குவர்.


நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.
209

நறுமண மலர்களால் கட்டிய குளிர்ந்த மாலையுடையவளே! உறவினர்க்கு உறவினராவார், சாகும் வரை அவர் இன்புறுங்கால் இன்புற்று, அவர் துன்புறுங்கால் அவரோடு சேர்ந்து தாமும் துன்புறாவிடில், மறுபிறப்பிலே போய் அவர்களுக்கு உதவுவதும் உண்டோ? (சுற்றத்தார் சமமாக இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது கருத்து).


விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து.
210

தன்னை விரும்பாதார் வீட்டிலே தனித்திருந்து உண்ணும், பூனைக்கண் போன்ற நிறமுள்ள, வெம்மையான பொரிக்கறி உணவும் வேம்பாகும். ஆனால் தன்னிடம் விருப்பம் கொண்டவர் வீட்டில் உண்ணப்படும் தெளிந்த நீருடன் கூடிய குளிர்ச்சியான புல்லா¢சிக் கூழும் உடம்புக்குப் பொருந்தும் அமிழ்தம் ஆகும்.

நாலடியார் - 22.நட்பாராய்தல்


கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
குருத்திற் கரும்புதின் றற்றே; - குருத்திற்கு
எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.
211

நூல்களின் உட்பொருளை உணர்ந்து கற்று அறிந்தவருடன் கொண்ட நட்பு எப்போதும் குருத்திலிருந்து கரும்பைத் தின்பது போலாம். எக்காலத்தும் நன்மையில்லாதாரிடம் கொண்ட நட்பு, கரும்பை அடியிலிருந்து நுனியை நோக்கித் தின்பது போலும் தன்மையுடையதாகும். (கரும்பை நுனியிலிருந்து தின்றால் வரவர இனிமை அதிகமாவதுபோல், கற்றோர் நட்பு நாளுக்கு நாள் இனிமை மிகும்; அதற்கு எதிர் செலத் தின்றால் வரவர இனிமை குறைவதுபோல் கல்லாதார் நட்புச் சுவை குறைந்து வெறுக்கப்படும் என்பதாம்).


இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
நற்புடை கொண்டமை யல்லது - பொற்கேழ்
புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
மனமறியப் பட்டதொன் றன்று.
212

பொன்னைக் கொழித்து விழும் அருவியின் ஓசையால் பறவைகள் அஞ்சி ஓடுதற்கு இடமான அழகிய மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! ஒருவா¢ன் உயர் குடிப்பிறப்பை நோக்கி, 'இவர் இடையில் மாறமாட்டார்' என்னும் நம்பிக்கையால் நட்புக் கொள்வதேயல்லாமல், பிறருடைய மனநிலையை அறிந்து நட்புக் கொள்வது என்பதில்லை. (எனினும் நட்புக்கு மனக்கருத்தும் அறிதல் வேண்டும் என்பது உட்பொருள்).


யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
213

யானை போன்ற பெருமையுடையார் நட்பை விலக்கி, நாய் போன்ற இழிவுத் தன்மை உடையராயினும் அவரது நட்பை விரும்பிக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் யானை பலநாள் பழகியிருந்தும் சமயம் வாய்க்கும்போது பாகனையே கொல்லும்! ஆனால் நாயோ, தன்னை வளர்த்தவன் சினம் கொண்டு எறிந்த வேலானது தனது உடலில் அழுந்திக் கிடக்க, அவனைக் கண்டதும் வாலை ஆட்டி அவன் அருகே செல்லும். (கல்வி நலம், குல நலம் ஆகியவற்றை மட்டுமே கருதாமல், மனநலத்தையும் அறிந்து ஒருவா¢டம் நட்புக்கொள்ள வேண்டும். அகன்ற கல்வியும், சிறந்த குடியும் இல்லையெனினும் மனம் தூயராயின் அவருடன் நட்புக் கொள்ளலாம் என்பது கருத்து.


பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; - பலநாளும்
நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு.
214

பலநாட்களாகப் பக்கத்தில் இருந்து பழகுவராயினும் சில பொழுதேனும் தன் மனத்துடன் பொருத்தமில்லாதரோடு அறிவுடையோர் சேரமாட்டார்கள். அங்ஙனமின்றித் தம் நெஞ்சம் பிணித்தாரோடு கொண்ட நட்பினை, தம்மை விட்டுப் பல நாட்கள் விலகியிருந்தார்கள் என்பதற்காக அவர்களைக் கைவிடுவார்களோ? (மனப்பொருத்தம் உடையாரை நண்பராகக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. 'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான் நட்பாங்கிழமை தரும்' என்பது குறள்).


கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல்.
215

கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும். அப்படியின்றி, தோண்டப்பட்ட குளத்திலே இருக்கும் பூவைப் போல முதலில் மலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கும் தன்மையுடையவரை விரும்புவாரும் இல்லை; நட்புச் செய்வாரும் இல்லை. (என்றும் முகமலர்ச்சியுடன் பழகுவரே நட்புக்கு அழகாம்).


கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.
216

நட்புத் தன்மையில் கடையாயவர், நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சிப் பராமா¢க்க உதவும் பாக்கு மரம் போல, நாள்தோறும் உதவி செய்தால்தான் பயன்படுவர்; இடையாயவர், விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கவனித்து வந்தால் உதவும் தென்னை மரம்போல அவ்வப்போது உதவி செய்தால் பயன்படுவர்; தொன்மைத் தொடர்பு பாராட்டும் (ஒரு முறை செய்த நட்பினைப் போற்றும்) தன்மையுடைய தலையாயவர். விதையிட்ட நாளில் வார்த்த தண்ணீரன்றிப் பிறகு ஒரு பராமா¢ப்பும் செய்யாமலே உதவும் மதிப்பு மிக்க பனைமரம் போல் பயன்படுவர்.


கழுநீருள் காரட கேனும் ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; - விழுமிய
குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங் காய்.
217

அரிசி கழுவிய நீரிலே உப்பின்றி வெந்த, கறுத்த கீரைக் கறியானாலும் ஒருவன் (நண்பா¢டமிருந்து) அன்புடன் பெற்றால் அ·து அமிழ்தமாகும். (ஆனால்) சீரிய தாளிப்பினையுடைய துவையலுடன் கூடிய வெள்ளிய சோறேயாயினும், அன்பிலாதார் கையிலிருந்து வாங்கி உண்பதாயின், அ·து எட்டிக் காயைத் தின்பது போலாம். (உணவின் சுவையும் நட்பினர் பண்புக்கு ஏற்ப அமையும்).


நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
218

நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவா¢ன் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும் என்பது கருத்து).


தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று.
219

அறிவுத் தெளிவில்லாதவர் நட்பைவிட அவர் பகை நல்லது; மருந்தினால் தீராத கொடிய நோயை விடச் சாதல் நல்லது; ஒருவரது மனம் மிகவும் வருந்தும்படி இகழ்தலைவிட அவரைக் கொல்வது நல்லது; ஒருவா¢டம் இல்லாத சிறப்புக்களைக் கூறிப் புகழ்தலைவிட அவரைப் பழித்தல் நல்லது. (நோயினும் சாதல் நன்றாதல் போல, புகழ்தலை விடப் பழித்தல் நன்றாதல் போல, அறிவிலார் நட்பைவிடப் பகை நல்லது என்பது கருத்து).


மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇப் பின்னைப் பிரிவு.
220

பலருடன் சேர்ந்து பலநாள் கலந்து பழகிப் பலருடைய குணங்களையும் ஒப்பிட்டு அறிந்து தகுதியுடைய மேலோரை நண்பராகக்கொள்ள வேண்டும். ஏனெனில் பல்லினால் கடித்து உயிரைக் கொல்லும் பாம்போடாயினும், பழகிவிட்டுப் பின் பிரிதல் துன்பம் தருவதாகும். (கூடிப் பழகியபின் பிரிதல் துன்பம் ஆதலின், முன்பே ஒருவரது குணங்களை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பது கருத்து).

நாலடியார் - 23.நட்பிற் பிழை பொறுத்தல்


நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
221

(யாவரும் விரும்பும்) நெல்லுக்கு உமியாகிய குற்றம் உண்டு; தண்ணீருக்கு நுரையாகிய குற்றம் உண்டு; பூவிற்கும் புற விதழாகிய குற்றம் உண்டு; ஆதலால் 'இவர் நல்லவர்' என்று மிகவும் விரும்பி நண்பராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர், பின் கெட்ட குணமுடையவராகத் தோன்றினாலும், அவர்தம் குற்றங்களைப் பிறர் அறியாமல் மறைத்து, அவரை நட்பினராகவே மதிக்க வேண்டும்.


செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.
222

தண்ணீர், அடைக்குந்தோறும் கரையினை உடைத்துக் கொண்டேயிருப்பினும், அந்த நல்ல நீருடன் யாரும் சினம் கொள்ளார்; அதனை விரும்பி வாழ்பவர் மீண்டும் அந்த நீரை அணை கட்டித் தடுப்பர். அதுபோலத் தாம் விரும்பி நண்பராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் மனம் வெறுக்கத் தக்க பிழைகளைச் செய்தாலும் சான்றோர் அவற்றைப் பொறுத்துக்கொள்வர்.


இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறைஇருவர் நட்பு.
223

பொன்னிறமான கோங்க மலா¢ல் அழகிய வண்டுகள் ஆரவாரிக்கும் உயர்ந்த மலைகள் உள்ள நல்ல நாட்டுக்கு அரசனே! ஒருவனுடைய பொறுமையினால் இருவருடைய நட்பு வளரும். ஆதலால் நண்பர் மிகவும் தீயனவற்றைச் செய்தாலும், அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல் தகுதியான ஒரு செயல் அல்லவா?


மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ.
224

மடிந்து விழும் அலைகள் கொணர்ந்து குவித்த ஒளி பொருந்திய முத்துக்களை, மிகுந்த வேகமுள்ள கப்பல்கள் கரையிலே அலையச் செய்கின்ற கடற்கரையையுடைய வேந்தனே! கை விடற்கா¢ய நண்பர்கள் நற்குணம் இல்லாதவரானால் அவர்கள் நம் நெஞ்சைச் சுடுவதற்காக நம்மாலேயே மூட்டப்பட்ட தீயாவர். (கைவிடற்கா¢ய நண்பர்கள் மனத்திற்கு வருத்தம் தரும் செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும் என்பது கருத்து).


இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
225

பொன்னுடன் நல்ல வீட்டையும் சுட்டொ¢க்கும் நெருப்பை (உணவு படைக்க உதவும் தேவை கருதி) ஒவ்வொரு நாளும் வீட்டில் அதனை உண்டாகிப் போற்றி வருகிறோம். அதுபோல, இடையிடையே துன்பங்களைச் செய்தாலும் கைவிடற்கா¢ய நண்பர்களைப் பொன்போல் நினைத்து மேலாகக் கொள்ள வேண்டும்.


இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
கண்குத்திற்று என்றுதம் கை.
226

அடைதற்கா¢ய வானளவு உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு அரசனே! கண்ணைக் குத்தி விட்டது என்பதற்காக யாராவது தன் கைகளில் உள்ள விரல்களை வெட்டி எறிவார்களா? அதுபோல, துன்பங்களைச் செய்தாலும் அரிய நண்பர்களை விலக்கி விடுதல் தகுதியாகுமோ? ஆகாது.


இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை.
227

விளங்கும் நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர்.


ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! - காதல்
கழுமியார் செய்த கறங்கருவி நாட!
விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.
228

ஒலிக்கும் மலை அருவிகளையுடைய நாட்டுக்கு அரசனே! அயலார் செய்த தீங்கு மிகவும் கொடியதானாலும் இ·து ஊழால் நேர்ந்தது என்று நோக்குங்கால் அதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது? அங்ஙனமிருக்க, அன்பு மிகுந்தவர் உரிமையால் செய்த தீமை நெஞ்சில் நின்று சிறந்ததாகிவிடும். (அயலார் செய்ததை ஆராயுங்கால், வெறுக்கத் தகாததானால் அன்பர் செய்தது பிரியமானதாகும் என்பது கருத்து.


தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தார் ஆயின், - அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல்.
229

தம் நண்பர் என்று தம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் தம்மை, தம் நண்பராதற்குரிய தன்மையில்லாதவர் என்று பிறகு உணர்ந்தார்களாயின், அப்போதும் அவர்களைத் தம் நண்பர்களைவிட மேலாகக் கருதி, நண்பராதற்குரிய பண்பு இல்லாத அவரது தன்மையைத் தம் மனத்திற்குள்ளேயே அடக்கிக் கொள்ள வேண்டும். (அப்படிக் குற்றம் மறைத்து அவர்களை மதித்தால் அவர்கள் பிழை உணர்ந்து வருந்தித் திருந்துவர் என்பது கருத்து).


குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான்
மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
அறைகடல்சூழ் வையம் நக.
230

ஒருவனை மனம் விரும்பி நண்பனாக ஏற்ற பிறகு, அவனது குற்றத்தையும் ஆராய்ந்து திரிவேனாகில், ஒலி கடல் சூழ் உலகத்தார் என்னைப் பார்த்து இகழ்ந்து சிரிக்குமாறு நான், நண்பனின் குற்றத்தை மறைக்காது வெளிப்படையாகத் தூற்றுபவன் செல்லும் நரகத்தைச் சென்றடைவேனாக.

நாலடியார் - 24.கூடா நட்பு


செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், - கறைக்குன்றம்
பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
தங்கருமம் முற்றும் துணை.
231

மேகம் சூழப்பட்ட கா¢ய நிறத்தையும், பொங்கி விழும் அருவிப் புனலையும் உடைய மலை நாட்டு மன்னனே! சுயநலவாதிகள், கட்டுக்கோப்பற்ற பழைய வீட்டின் உள்ளே தண்ணீர் புகாதவாறு அணைகோலியும், முன்னரே புகுந்த நீரை வெளியே இறைத்தும், மேல் விழும் நீரைப் பாத்திரத்தில் ஏற்றும் தம் காரியம் ஆகும் வரை நம்மிடம் இருப்பர்; பின் பிரிவர். (சிலர் ஒருவரால் ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தால், அக்காரியம் முடியும்வரை, அவர் துன்புறுங் காலத்தில் அதனைத் தாங்களும் தாங்கிக் கொண்டிருந்து அக்காரியம் முடிந்தபின் அவரை விட்டு நீங்கிவிடுவர். ஆதலின், இப்படிப்பட்டவருடன் நட்புக் கொள்ளக்கூடாது என்பது கருத்து).


சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு.
232

மிகவும் வெண்மையான அருவிகளைக் கொண்ட மலை நாட்டு வேந்தனே! உயர்ந்தோர் நட்பு மேலான சிறப்புடையதாய் மழைபோலும் சிறந்த பயனுள்ளதாகும். நற்குணமில்லாதார் நட்பு மிகுந்தால், மழை பெய்யாமல் வறண்ட காலத்தை ஒக்கும். (மழை இல்லாததால் வளம் குறைதலோடு வெயிலும் சுட்டொ¢ப்பதுபோல, கூடா நட்பால் நன்மையின்றித் தீமை நேரும் என்பது கருத்து).


நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் - நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.
233

நுட்பமான அறிவினை உடையவர்களுடன் நட்புச் செய்து அதன் பயனை அனுபவித்தல், விண்ணுலக இன்பத்தினைப் போல மேன்மையுடையதாகும். நுட்பமான நூலறிவு அற்ற பயனில்லாதவருடன் நட்புக் கொள்ளுதல் நரகங்கள் ஒன்றினுள் சேர்ந்திருத்தல் போல் துன்பம் தருவதாகும்.


பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் - அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
பந்தமி லாளர் தொடர்பு.
234

பக்கங்களில் எல்லாம் சந்தன மரத்தோப்புக்களைக் கொண்ட மலை நாட்டு அரசனே! அன்பு இல்லாதவருடன் கொண்ட நட்பு வளர்வது போலத் தோன்றி (வைக்கோலில் பற்றிய தீயைப் போல) ஒரு கணப்பொழுதும் நில்லாது கெடும்.


செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் - மெய்யாக
இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.
235

செய்ய முடியாத காரியங்களையெல்லாம் நாம் செய்வோம் என்று உரைத்தலும், செய்ய முடிந்த காரியத்தை முடிக்காமல் காலம் கடத்தலும் ஆகிய இவை, உண்மையாகவே, இன்புறத்தக்க பொருள்களையெல்லாம் வெறுத்துத் துறந்தவர்க்கும் அப்பொழுதே துன்பத்தைத் தரும். (செய்ய முடியாததைச் செய்வோம் என்பது வெற்று ஆரவார மொழியாகும்; செய்ய முடிந்ததைச் செய்யாது காலத்தை ஓட்டுதல் நம்பிக்கை மோசடியாகும். எனவே, இத்தகையோருடன் நட்புக் கொள்ளக்கூடாது என்பது பொருள்).


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
கருமங்கள் வேறு படும்.
236

ஒரே குளத்தில் தோன்றி, ஒன்றாகவே நீண்டு வளர்ந்த போதிலும், விரிந்து மணம் வீசும் தன்மையுள்ள குவளை மலர்களுக்கு அல்லி மலர்கள் இணையாக மாட்டா. அது போலச் சிறந்த குணங்கள் பொருந்தியவருடைய நட்பைப் பெற்றாலும் நற்குணங்கள் இல்லாதார் செயல்கள் வேறுபட்டிருக்கும். (நல்லோருடன் பழகினாலும் தமது கெட்ட குணத்தை விடாதவருடன் நட்புக கொள்ளக்கூடாது என்பது கருத்து).


முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
237

இளைய சிறிய பெண் குரங்கு, தன் எதிரே வந்த தந்தையாகிய பொ¢ய ஆண் குரங்கினை, பயற்றம் நெற்றைக் கண்டாற் போன்ற தன் கைவிரல்களால் முறுக்கிக் குத்தி (அதன் கையில் உள்ள கனியை) பறித்துக்கொள்வதற்கு இடமான மலைகள் உள்ள நாட்டையுடைய மன்னனே! மனம் பொருந்தாதவா¢டம் கொள்ளும் நட்பு துன்பம் தருவதாகும்.


முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் - நட்டான்
கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
நெடுமொழி வையம் நக.
238

என் நண்பன் துன்புற்றபோது விரைந்து சென்று எனது அருமையான உயிரை அவன் கையில் கொடுத்து அவனது துன்பத்தைப் போக்காவிடின், மிக்க புகழுடைய இந்த உலகம் சிரிக்குமாறு, நண்பனின் சிறந்த மனைவியைக் கற்பழித்த பாவி செல்லும் நரகத்திற்கு நான் செல்வேனாக!


ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ - தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.
239

தேன் கூடுகள் பொருந்திய மலைநாட்டு மன்னனே! நன்மையை அறிவாரோடு கொண்ட நட்பை நீக்கிப் புல்லறிவினையுடையாரோடு கொண்ட நட்பு, பசுவின் நெய் ஊற்றி வைக்கும் பாத்திரத்தில் அந்த நெய்யை நீக்கி, வேப்பெண்ணெயை ஊற்றி வைத்தது போலாகும்.


உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
விரிபெடையோடு ஆடிவிட் டற்று.
240

அழகுடையவனாக அமைந்த ஒருவனிடம் ஒப்புரவு (உபகாரம்) இல்லாமை, பருகுதற்கு அமைந்த பாலில் நீரைக் கலந்தது போலாகும். அறிவுடையோர் தீயோரைச் சார்ந்து கெடுதல், நாகப்பாம்பு விரியன் பெடையுடன் புணர்ந்து உயிரை விட்டது போலாகும். (உருவ அழகு இருந்து பயனில்¨ல் உதவும் பண்பும் வேண்டும் என்பதும் சேரத்தகாதவருடன் சோ¢ன் கெடுவர் என்பதும் இப்பாடற் கருத்துக்களாம்).

நாலடியார் - 25.அறிவுடைமை
பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.
241

வருத்தத்தைச் செய்யும் மிக்க வலிமையுடைய பாம்பு, திங்கள் இளம்பிறைச் சந்திரனாக இருக்கும் பொழுது, அதனை விழுங்கச் செல்லாது. அதுபோல, வெல்லும் தகுதியுடையோர், பகைவர் மெலிந்திருக்கும் சமயம் பார்த்து, அவர்தம் மெலிவுக்குத் தாமே வெட்கம் அடைந்து, அவருடன் போர் செய்யப் புறப்படமாட்டார்கள். (பகைவர் தளர்ந்திருக்கும்போது அவரை வெல்ல நினையாது அவரது நிலைகண்டு இரங்குதல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).


நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
கோத்திரம் கூறப் படும்.
242

பொ¢ய, குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு அரசனே! வறுமையுற்ற மக்களுக்கு அணிகலமாவது அடக்கமுடைமையாகும்; அடக்கமின்றி அளவு கடந்து நடப்பாராயின் ஊரில் வாழ்பவரால் அவர்களது குலமும் இழித்துரைக்கப்படும். (வறுமையிலும் அடங்கியிருத்தல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).


எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.
243

எந்த நிலத்தில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக வளராது; தென்னாட்டிலே பிறந்தவரும் நல்லறம் செய்து தேவர் உலகம் செல்வதால், ஒருவருக்குத் தம் முயற்சியாலேயே மறுமைப்பேறு கிடைக்குமேயன்றிப் பிறந்த இடத்தாலன்று. வட நாட்டில் பிறந்தவராயினும் நல்லற முயற்சியின்றி வீணாகக் காலத்தைக் கழித்து நரகம் புகுவார் மிகப் பலர். (தென்னாட்டை நரக பூமி என்றும் வடநாட்டைப் புண்ணிய பூமி என்றும் கூறுவர். ஆயினும், வித்தின் இயற்கையன்றி மரத்திற்கு நிலத்தின் இயற்கை இல்லாததுபோல, மறுமைப் பயன் அடைய அவரவர் செய்கையே காரணமாதலன்றித் திசையினால் ஒன்றும் இல்லை என்பது கருத்து).


வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.
244

வேம்பின் இலைகளிடையே வாழை பழுத்தாலும் அதன் இனிய சுவை சிறிதும் வேறுபடாது. அதுபோல, பண்புடையார் சேர்ந்த இனம் தீதாயினும் அதனால் அவர்கள் மனம் தீயதாகும் தன்மை இல்லை. (மனத் திண்மையுடையவர் தீயோர் சேர்க்கையால் குணம் மாறார் என்பது கருத்து).


கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
மனத்தனையர் மக்கள்என் பார்.
245

அலை மோதும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு அரசனே! கடல் அருகிலும் இனிய நீர் உண்டாகும்; மலை அருகிலும் உப்பு நீர் சுரக்கும். ஆதலால் மக்கள் தாம் தாம் சார்ந்த இனத்தை ஒத்தவரல்லர்; தம் தம் மன இயல்பை ஒத்தவராவர். (மாசற்ற, தெளிந்த அறிவுடையார் எந்தச் சூழலிலும் மனம் திரியார் என்பது கருத்து).


பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
246

பருத்த அடி மரத்தினையுடைய புன்னை மரங்களால் பொலிவு பெற்ற குளிர்ந்த கடற்கரையையுடைய மன்னனே! நிலையான மனம் உடையவர்கள் இனிய செய்கையுடை யாரிடத்தும் நீங்குதலும் பின் சேர்தலும் செய்வார்களா? செய்ய மாட்டார்கள். இப்படிச் சேர்ந்து நீங்குதலை விட முதலிலேயே நட்புச் செய்யாதிருத்தல் நல்லது. (அறிவுடையார் கூடிப் பிரிதலும் மீண்டும் கூடுதலும் இலர் என்பது கருத்து).


உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
247

நாம் ஒன்றை மனத்தில் நினைக்க, அதனைக் குறிப்பால் உணரும் நுண்ணறிவு உடையோரை நண்பராகக் கொண்டால் இன்பம் மிகும். அப்படியின்றி, நமது எண்ணங்கள் வெளிப்படையாகத் தொ¢ந்த போதும் அவற்றை உணராத அறிவிலாரை நண்பராகக் கொள்வோமானால், அவர்களால் உண்டாகும் துன்பம், அவர்களை விட்டுப் பிரிய, தானே நீங்கும். (குறிப்பறியும் நுண்ணறிவுடையாரைக் கூடுதலும் அ·து இலாதாரைப் பிரிதலும் அறிவுடைமையாகும் என்பது கருத்து).


நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.
248

நல்ல நிலையிலே தன்னை நிறுத்திக்கொள்பவனும், அந்த நிலையைக் கெடுத்துத் தன்னைத் தாழ்ந்த நிலையில் சேர்க்கின்றவனும், இருக்கும் நிலையைவிட மிகவும் மேலான நிலையிலே தன்னை உயர்த்திக்கொள்பவனும், தன்னைத் தலைமையுடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான். (ஒருவனது உயர்வு தாழ்வு அவனது அறிவினாலேயே உண்டாகும் என்பது கருத்து).


கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
பேதைமை யன்றுஅது அறிவு.
249

அருமையாக ஒரே சீரான முறைப்படி அலைகள் ஆரவாரம் செய்யும் குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டுக்கு வேந்தனே! சமுதாயத்திற்குப் பயன்தரத்தக்க ஒரு நல்ல காரியம் முறைப்படி இனிதே நிறைவேறும் பொருட்டு, பெருமை யுடையோரும் அறிவில்லார் பின் செல்வது அறியாமையன்று; அ·து அறிவுடைமையே! (கல்லாதாருடன் ஒரு நல்ல காரியத்தின் காரணமாகக் கலந்து வாழ்தல் அறிவுடைமையாகும் என்பது கருத்து).


கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
250

நல்ல தொழில் முயற்சியிலும் ஈடுபட்டுப் பொருளைச் சேர்த்து, இன்பமும் துய்த்து, தருமத்தையும் தகுதியுடையார்க்கே செய்து, ஒரு பிறப்பிலேயே இம்மூன்று செயல்களையும் தடையில்லாமல் நிறைவேற்ற முடியுமானால், அச்சாதனை, வாணிகத்தை வெற்றியுடன் முடித்துத் தான் சேர வேண்டிய துறைமுகப் பட்டினத்தைச் சேர்ந்த கப்பல் போல் இன்பம் தரும் என்பர். (ஒரு கப்பல், பல நாடுகளுக்கும் சென்று அலைந்து வியாபாரத்தை முடித்துத் தன்னிலையில் சேர்வதுபோல ஒருவன் பல பிறவிகள் எடுத்து உழன்று கடைசிப் பிறவியில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் பெற்று முத்தி அடைதலால் அப்பிறவி பயனுள்ள பிறவியாம் என்பது கருத்து).

நாலடியார் - 26.அறிவின்மை
நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்
பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
கண்ணவாத் தக்க கலம்.
251

பெண்மை இயல்பு மிகுந்து ண்மை இயல்பு குறைந்துள்ள பேடியும் கண்கள் விரும்பிக் காணத்தக்க அணிகளை அணிய மாட்டாளோ? அணிந்து கொள்வாள். (ஆயினும் இவை செல்வமாகா) ஆராய்ந்து நோக்குமிடத்து, நுட்பமான அறிவின்மையே வறுமையாகும். அ·து உடைமையே மிகப்பொ¢ய செல்வமாகும். மனிதர்க்குச் செல்வம் என்பதும் வறுமை என்பதும், அறிவும், அறிவில்லாமையுமேயன்றிப் பொருளும் பொருளின்மையும் அன்று என்பது கருத்து).


பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்லல் உழப்பது அறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
பூவின் கிழத்தி புலந்து.
252

பல வகை நூல்கேள்விகளால் நிறைந்த பயனை அறிந்த நல்லறிஞர் தம் பெருமை குன்றி வறுமைத் துன்பத்தால் வாடுவதற்குரிய காரணத்தை அறிய விரும்புவீராயின் கூறுகிறேன். கேளுங்கள்! பழமையான சிறப்புள்ள நாவிற்குரிய கலைமகள் தங்கியிருப்பதால் பூவில் உறைதற்குரிய திருமகள் வெறுப்புற்று அந்நல்லவா¢டம் சேரமாட்டாள். (காலமெலாம் கற்று அறிவைப் பெருக்குவதிலேயே நாட்டமுள்ள நல்லறிஞர் பொருள் சேர்க்க வேண்டும் என்ற விருப்பமே இல்லாமல் வறுமையடைகின்றனர் என்பது கருத்து).


கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.
253

இளம் பருவத்தில் தந்தை 'படி' என்று சொல்லியும், அச்சொல்லை ஒரு சொல்லாக மதியாது புறக்கணித்தவன், பிற்காலத்தில் மெதுவாக ஒருவன், எழுத்துக்களைக் கொண்டிருக்கும் ஓர் ஓலையைப் பலருக்கு முன்னிலையில் 'படி' என்று தர, (அது கண்டு அவன் தன்னை அவமதித்ததாகக் கருதி) வெகுண்டு அவனைத் தாக்கத் தடித்த கோலைக் கையில் எடுத்துக்கொள்வான்.


கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
254

படிக்காமலே காலம் கழித்து உயரமாக வளர்ந்த ஒருவன், நல்லறிவாளர் அவையில் புகுந்து பேசாமல் இருந்தாலும் நாய் இருந்தது போலாம். அவ்வாறு இராது ஏதாவது ஒன்றைப் பேசினாலும் அது+F251 நாய் குரைத்தது போலாம். (கல்வி அறிவு பெறாதவர் நாய் போல் கருதப்படுவர். 'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல், கற்றாரோடு ஏனையவர்' என்னும் குறள் இங்குக் கருதத்தக்கது).


புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
கல்லாத சொல்லும் கடையெல்லாம் - கற்ற
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
படாஅ விடுபாக் கறிந்து.
255

அறிவொடு பொருந்தாத புல்லிய புலவர் அவையில் புகுந்து, அற்பர் எல்லாரும் தாம் கல்லாதவற்றை யெல்லாம் ஆரவாரமாக எடுத்துரைப்பர். ஆனால் அறிவுடையவரோ தாம் கற்ற கருத்தைப் பிறர் கேட்டாலும், தாம் கூறுவது ஒரு வேளை பொருளோடு பொருந்தாது போய் விடுமோ எனக் கருதி உடனே சொல்லார். (சிந்தித்துப் பார்த்தே உரைப்பர்).


கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி.
256

நூல்களைக் கற்று அவற்றின் உட்பொருளை அறிந்த நாவினையுடைய புலவர், பேசினால் ஏதேனும் பிழை நேருமோ என அஞ்சி, எதையும் கண்டபடி பேசார். கற்றறியாதவரோ வாய்க்கு வந்தபடி பேசுவர். பனைமரத்தில் உலர்ந்த ஓலைகள் எப்போதும் 'கலகல' என ஒலி எழுப்பும். பச்சை ஓலை அவ்வாறு ஒலிப்பதில்லை. (எப்போதும் அறிவுடையவர் அடங்கியிருப்பர்; அறிவற்றவர் அடக்கமின்றி ஆரவாரத்துடன் இருப்பர் என்பது கருத்து).


பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
சென்றிசையா வாகும் செவிக்கு.
257

நன்மையை அறியாத மக்களுக்கு அறத்தின் வழியைச் சொல்வது, பன்றிக்குக் கூழ்வார்க்கும் தொட்டியில் இனிய மாங்கனியின் சாற்றை ஊற்றுவது போலாகும். அன்றியும், குன்றின் மேல் அடிக்கப்படும் முளைக்குச்சியின் நுனி சிதைந்து அதனுள் இறங்கிப் பொருந்தாமை போல, அறவுரையும் அவர் காதுகளில் நுழைந்து பொருந்தாமற் போகும். (அறிவற்றவர்க்குச் செய்யும் அறவுரை பயனற்றது என்பது கருத்து).


பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு.
258

பல நாளும் பாலால் கா¢யைக் கழுவி உலர்த்தினாலும் அதற்கு வெண்மையாகும் தன்மை இல்லை. அது போல, என்னதான் கோலால் அடித்துக் கூறினும் புண்ணியம் இல்லாதவனுக்கு அறிவு வராது. (தவமும் தவமுடையார்க்கு ஆகும் என்பது போல, அறிவும் புண்ணியம் இருந்தால்தான் பெற முடியும் என்பது கருத்து).


பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், - இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.
259

பூவானது இனிய தேனைப் பொழிந்து நறுமணம் வீசினாலும் ஈயானது அப்பூவில் இருக்கும் தேனை உண்ணுதற்குச் செல்லாது. இழிவான பொருள்களையே விரும்பிச் செல்லும். அத்தகைய ஈயைப் போன்ற இழிவான குணங்கள் பொருந்திய நெஞ்சினார்க்கு, தகுதிமிக்க பொ¢யோர் வாயிலிருந்து வரும் தேன் போல் இனிக்கும் உண்மை உரைகள் என்ன பயனைத் தரும்? (அறிவிலார் தாமும் அறியாது, பிறர் கூறினாலும் உணராது, எப்போதும் இழிந்த பொருளையே விரும்புவர் என்பது கருத்து).


கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; - மற்றுமோர்
தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.
260

(சான்றோர் அவையில்) கற்றவர் உரைக்கும் குற்றமற்ற, நுண்ணிய கருத்துக்களைத் தன் நெஞ்சம் பிடித்து வைத்துக்கொள்ளாது உதைத்துத் தள்ளுவதால் கீழ் மகன், தன் போன்ற ஒரு கீழ் மகனது முகத்தை நோக்கித் தானும் உரையாடுவதற்கு ஒரு புல்லிய அவையைக் கூட்டுவான்.

நாலடியார் - 27.நன்றியில் செல்வம்


அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
கருதுங் கடப்பாட்ட தன்று.
261

(தான் வாழும் மரத்துக்கு) அருகிலே இருப்பதாகிப் பல பழங்களைக் கொண்டதாக இருப்பினும், பொரிந்த அடி மரத்தையுடைய விளாமரத்தை வெளவால் நெருங்காது. அதுபோல, தாம் இருக்கும் இடத்துக்கு மிகவும் பக்கத்தில் இருப்பவராயினும் பெருமையில்லாதார் செல்வம் 'அவர் தருவார்' என ஏழைகளால் நினைக்கத்தக்க தன்மையுடையதன்று. (பெருந்தன்மையில்லாதார் செல்வம் எளியோர்க்குப் பயன்படாது).


அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடை யார்.
262

அள்ளிக்கொள்வது போலச் சிறிய அரும்புகளை உடையவையானாலும், அவை சூடிக்கொள்வதற்கு ஏற்ற மலர்கள் அல்லாமையால், யாரும் கள்ளி மரத்தின்மீது கை நீட்டமாட்டார்கள். அதுபோல, மிகப்பெரும் செல்வம் உடையவரானாலும் அவர் செல்வம் பயன்படாமையால் கீழ்மக்களை அறிவுடையோர் விரும்பிச் சேரமாட்டார்கள்.


மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.
263

மக்கள், மிகுந்த அலைகளையுடைய கடற்கரையில் இருந்தாலும், தோண்டத் தோண்டச் சிறிதே சுரக்கும் உப்புச்சுவை இல்லாத கிணற்றைத் தேடிச் சென்று நீரைப் பருகுவர். அதுபோல, அருகில் இருப்பவர் மிகுந்த செல்வம் உடையவர்களானாலும் ஈயாதாரை விட்டு தூரத்தில் சென்று, உதவுகின்றவா¢டத்திலே விரும்பிக் கேட்டுப் பெறுவர். (அறிவிலார் செல்வம் அவரது கெட்ட குணத்தால் தக்கோர்க்குப் பயன் தராது என்பது கருத்து).


புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.
264

கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தா¢யும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறி முள்ளியும் கத்தா¢ச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)


நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன்று ஆகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
நினைப்ப வருவதொன் றில்.
265

இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை. (அறிவொழுக்கம் அற்றவர் செல்வராக வாழ்வதற்குக் காரணம் ஊழ்வினையே! ஆயினும் அவா¢டம் இரக்கத் தன்மையின்மையால், செல்வம் பெற்றும் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து).


நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
நீறாய் நிலத்து விளியரோ - வேறாய
புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து.
266

நறுமணமற்ற புற இதழைப்போல, நல்ல தாமரை மலா¢லே இருக்கும் அழகான பதுமை போன்ற திருமகளே! நீ பொன்போன்ற நல்ல குணமுடைய மேன்மக்களை விட்டு விலகி, கீழ்மக்களைச் சேர்கிறாய்! ஆதலால் பூமியில் சாம்பலாகி அழிந்து போ! ('நறுமணம் இல்லாமலே பூவிலிருக்கும் புற இதழ் போல, நீயும் நற்குணமின்றிப் பூவிலிருக்கிறாய்!' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. தீயோர் செல்வம் சீக்கிரம் தொலைதல் நன்று; இல்லையேல் அது பிறர்க்கும் தீங்கு உண்டாக்கும் என்பது கருத்து).


நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
பயவார்கண் செல்வம் பரம்பப் - பயின்கொல்
வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
நயவாது நிற்கு நிலை.
267

வேல் போன்ற கண்ணையுடையவளே! பிறர்க்கு உதவும் நல்ல குணங்கள் உள்ளவா¢டத்தே இருக்கும் வறுமைக்கு வெட்கம் இருக்காதோ? ஒருவருக்கும் நன்மை செய்யாத கீழ்மக்களிடம் உள்ள செல்வம் அவர்களை விட்டு நீங்காமல் ஒட்டிக்கொள்ளும் பிசினோ! இந்த வறுமையும் செல்வமும் ஆகிய இரண்டும் நல்லோரிடமும் கீழோரிடமும் விரும்பத்தகாத முறையில் நிற்கும் தன்மைகளைக் கண்டு நீ வியப்பாயாக!


வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் - வலவைகள்
காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேலாறு பாய இருந்து.
268

வெட்கமற்றவர்கள் அல்லாதார் (வெட்கம் உள்ளவர்கள்) வறுமையுற்றபோதும் நடந்து சென்று ங்காங்கே (செய்யும் சிறு தொழிலால்) பெறும் கலவைச் சோற்றை உண்டு காலத்தைக் கழிப்பார்கள். வெட்கமற்றவர்கள் காலால் நடந்துசெல்லாராகி (உழைப்பின்றி) தம் வீட்டினுள்ளேயேயிருந்து, உடல்மேல் வியர்வை மிகுதியாக வடிய, பொரிக்கறியுடன் கூடிய உணவைத்தாமே உண்டு மகிழ்வர். (நாணமில்லார் தமது செல்வத்தைப் பிறர்க்குத் தராமல் தாமே அனுபவிப்பர் என்பது கருத்து).


பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.
269

பொன்போலும் நிறமுடைய செந்நெற் பயிரானது, தன்னுள் பொதிந்திருக்கும் கதிர்களுடன் வாடிக் கொண்டிருக்க, மின்னல் விளங்கும் மேகமானது, அங்கே பெய்யாது, கடலிலே பெய்துவிடும். அறிவற்றார் மிக்க செல்வத்தைப் பெற்றால் அவர் கொடையும் அத்தன்மையாகும். (அறிவற்றவர் தாம் பெற்ற செல்வத்தால் செய்யும் உதவி நல்வழியில் அமையாது).


ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார்; - தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.
270

உலக நடையினை அறியும் அறிவிலாதார் கற்றவராயினும் கல்லாதவரே ஆவர்; உலக நடையினை அறியும் அறிவுடையார் கல்லாராயினும், கற்றவரே ஆவர். வறுமையுற்றாலும், மனம் தூயராய் இருந்து, பிறா¢டம் சென்று ஒன்றையும் இரவாதவர், செல்வரே ஆவர். செல்வரும் வறியோர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவாராயின், வறியரே ஆவர். (உலகியல் அறிவும், கொடைக்குணமும் இன்றேல் செல்வம் சிறப்படையாது என்பது கருத்து).

நாலடியார் - 28.ஈயாமை
நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; - அட்டது
அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக் கதவு.
271

நண்பர்க்கும், நண்பர் அல்லாதார்க்கும் தம்மிடம் உள்ள பொருளைக் கொண்டு சமைத்த உணவினைப் பகுத்துக் கொடுத்துப் பின் தாமும் உண்பதுதான் உண்மையில் சமைத்து உண்பதாகும். அவ்வாறின்றிச் சமைத்த உணவினை, கதவை அடைத்துக் கொண்டு, உள்ளேயிருந்து தாம் மட்டும் உண்டு வாழும் நன்மையில்லாத சுயநலமாக்கள் உள்ளே புக முடியாதபடி மேல் உலகத்தின் கதவுகள் அடைக்கப்படும். (இம்மையில் பகுத்து உண்ணாதவர்க்கு மறுமை இன்பம் இல்லை என்பது கருத்து).


எத்துணை யானும் இயைந்த அளவினால்
சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; - மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
அழிந்தார் பழிகடலத் துள்.
272

----


துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து
அருளும் அவனை நகும்.
273

பொருளை உண்டு அனுபவிக்காதவனாய்த் துறவிகளுக்கும் ஒன்றை ஈயாதவனாய், பொருளை அப்படியே விட்டு விட்டு இறந்து போகும் அறிவில்லாதவனை, அவன் தேடி வைத்த பொருளும் நோக்கி (இம்மையில்) என்னை நீ நன்கு பயன்படுத்திக்கொள்ளவில்லையே எனச் சிரிக்கும். (தான் தேடிய பொருளால் அறம் செய்து மறுமைப்பேறும் பெற்றிலனே என அருளுடையோரும் சிரிப்பர். (ஈகை இல்லாதார் இம்மை மறுமை இன்பங்களை இழப்பர் என்பது கருத்து).


கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப் படும்.
274

பிறர்க்குத் கொடுப்பதையும், தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில் பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும். (உலோபியின் செல்வத்தை அயலாரே அனுபவிப்பர்).


எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
275

மோதுகின்ற அலைகளையுடைய கடலை அடைந்திருந்தாலும், அதன் நீர் பயன்படாததால், மக்கள் அடிக்கடி நீர் வற்றிப் போகும் சிறு கிணற்றினது ஊற்றினையே தேடிக்கண்டு பருகுவர் ஆதலால் மறுமை இன்பத்தை நாடி அறம் செய்தலை அறியாதாரின் செல்வத்தைவிடச் சான்றோரின் மிக்க வறுமையே மேலானது. (உலோபிகள் செல்வம் பெற்றிருப்பினும் வறியரான சான்றோரளவு கூட உதவார்).


எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
எனதெனது என்றிருப்பன் யானும் - தன தாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது.
276

அறிவில்லாதவன், தான் சேர்த்த பொருளை, 'என்னுடையது என்னுடையது' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். நானும் அப்பொருளை 'என்னுடையது என்னுடையது' என்று எண்ணிக் கொண்டிருப்பேன். ஏனெனில், அ·து அவனுடைய பொருளாக இருத்தலின் அதனைப் பிறர்க்குக் கொடுக்க மாட்டான்; தானும் அனுபவிக்க மாட்டான். அது போலவே நானும், அப்பொருளைப் பிறர்க்குத் தராமலும், நான் அனுபவிக்காமலும் இருக்கிறேன். (தனக்கும் பயன்படாத, பிறருக்கும் பயன் தராத செல்வம் யாரிடம் இருந்தாலென்ன? வறியவர்க்குக் கொடுக்காத செல்வம், அதனைப் பெற்றவனுக்கும் உதவுவதில்லை என்பது கருத்து).


வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல.
277

ஒருவருக்கு ஒன்றைக் கொடாத செல்வரைவிட வறுமையாளரே பல துன்பங்களிலிருந்து தப்பியவர் ஆவர். எவ்வாறெனில், 'செல்வத்தையெல்லாம் இழந்தார்' என உலகோர் பழிக்கும் பழிச் சொல்லினின்றும் தப்பினர்; வருந்திச் செல்வத்தைக் காத்தலின்றும் தப்பினர்; அச்செல்வத்தைப் பிறர் அறியாதவாறு புதைப்பதற்காக நிலத்தைத் தோண்டும் துன்பத்தினின்றும் தப்பினர். இப்படி அவ்வறியவர் தப்பினவை பல உண்டு. (ஈயாதார்க்குத் துன்பமேயன்றி இன்பம் இல்லை).


தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
தமதாய போழ்தே கொடாஅர் - தனதாக
முன்னே கொடுப்பின் அவர்கடியார் - தான்கடியான்
பின்னை அவர்கொடுக்கும் போழ்து.
278

பொருள் தன்னுடையதாக இருக்கும்போது ஓர் உலோபி தானும் பிறர்க்குக் கொடுக்க மாட்டான். அவனுடைய பங்காளிகளும் அப்பொருள் தமதான காலத்தில் கொடுக்க மாட்டார்கள். முதலில் தன்னுடையதாயிருந்தபோது அவன் கொடுக்க முனைந்திருப்பினும் அப் பங்காளிகள் தடுத்திருக்க மாட்டார்கள். பின் பங்காளிகள் கொடுக்கும்போது இறந்துபோன அவன் வந்து தடுக்கமாட்டான். அப்படியிருக்க அவர்கள் கொடாமைக்குக் காரணம் யாதோ? (பொருள் தனக்கு உரியதாய் இருக்கும்போதே பிறர்க்குக் கொடுத்துப் பயன்பெற வேண்டும் என்பது கருத்து).


இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
விரகிற் சுரப்பதாம் வன்மை - விரகின்றி
வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்.
279

இரப்பவர் கன்றாக இருக்க, கொடுப்பவர் பசுவாக இருந்து அறிவுடன் கொடுப்பதே சிறந்த கொடையாம். அவ்வறிவு இல்லாமல், வல்லவர் கோலால் அடித்து வருத்த, பால் தரும் பசுவைப் போல, வல்லோர் பல சூழ்ச்சி செய்து வற்புறுத்தி வருத்திய பின் கொடுப்பது கீழ்மக்கள் இயல்பாகும். (ஒருவன் வெறுப்புடன் தருவது கொடையாகாது என்பது கருத்து).


ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.
280

பொருளைத் தேடுவதும் துன்பம்; தேடிய பொருளைக் காத்தலும் அவ்வாறே மிகுந்த துன்பம்; காக்கப்படும் பொருளில் சிறிது குறைந்தாலும் துன்பம்; அப்பொருள் முழுதும் அழிந்தால் மிகப் பெரும் துன்பம். ஆதலால் அந்தப் பொருள் துன்பத்துக்கெல்லாம் இருப்பிடமாகும். (பொருள் துன்பத்திற்குக் காரணமாக இருப்பதை அறிந்து, அதனை இன்பத்திற்கு உயா¢தாகச்செய்தல் வேண்டும் என்பது கருத்து).

நாலடியார் - 29.இன்மை

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்திற் கடை.
281

காவி தோய்ந்த ஆடையை இடுப்பில் சுற்றிக்கொண்டு ஞான வாழ்வு வாழ்ந்தாலும், பத்தோ எட்டோ உடையவராயின் அவர்கள் பலர் இடையிலும் நன்கு மதிக்கப்படும் சிறப்பினை அடைவார்கள். அவ்வாறன்றி, உயர்குடியிலே பிறந்தவராயினும், ஒரு பொருளும் இல்லாதார் உயிர்போன பிணத்திலும் இழிந்தவராகக் கருதப்படுவர்.


நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்; - தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
புகற்கரிய பூழை நுழைத்து.
282

தண்ணீரை விட நெய் நுட்பமானது என்பர்; அந்த நெய்யைவிடப் புகை நுட்பமானது என்பதனை யாவரும் அறிவர். ஆராய்ந்து பார்க்குமிடத்து இரத்தலாகிய துன்பம் உடையவன் அப்புகையும் புகுதற்கு அரிய துவாரத்தில் நுழைந்து செல்வான். (வறுமையாளன் எல்லாக் காவலையும் கடந்து, செல்வரை நாடிச் செல்வான் என்பது கருத்து).


கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம்; - கொல்லைக்
கலாஅற் கிளிகடியும் கானக நாட!
இலாஅஅர்க் கில்லை தமர்.
283

கல்லாலே கிளிகளை ஓட்டுதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே! பொ¢ய கற்களையுடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராதபோது, சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை.


உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
தொண்டரா யிரவர் தொகுபவே; - வண்டாய்த்
திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
ஒருவரும் இவ்வுலகத் தில்.
284

உயிர் நீங்கிப் பிணமானபோது அதனைப் பிடுங்கித் தின்னக் கூடும் காக்கைக் கூட்டம் போல, ஒருவன் செல்வத்தோடு திகழும் காலத்தில், அவனுக்குத் தொண்டு செய்ய மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர்; ஆனால் அவனே வறுமையுற்று வண்டு போலப் பல திசைகளிலும் சென்று ஒரு வேளை சோற்றுக்காக அலைந்து திரியும் காலத்தில் அவனைப் பார்த்து, 'தீதில்லாமல் வாழ்கிறீரா?' (நலந்தானா?) என்று வினவுவார் இல்வுலகில் யாரும் இல்லை.


பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
சிறந்ததம் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு.
285

ஒலிக்கும் அருவிகள் கல்மேல் வீழ்ந்து அதன் மாசு போகக் கழுவும் பொ¢ய மலைகளையுடைய நாட்டுக்கு மன்னனே! உலகில் வறுமையால் சூழப்பட்டவர்க்கு, அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; பொ¢ய வல்லமை கெடும்; சிறந்த கல்வியும் கெடும்.


உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; - உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று.
286

வயிற்றின் உள்ளே மிகுந்த பசியால் துன்பமெய்தித் தன்னிடத்தில் விரும்பி வந்தவர்க்கு, உள்ளூ ரில் இருந்தும் கூட ஒன்றும் கொடுக்க இயலாதவன், அங்கேயே இருந்து தனது வாழ்நாளை வீணாகக் கழித்து உயிர்விடாது, வேறெந்த ஊருக்காவது போய்ப் பிறருடைய வீட்டில் விருந்தாளியாக இருப்பதே நல்லது. (பிறர்க்கு உதவமுடியாத வாழ்க்கை வீண் வாழ்க்கை என்பது கருத்து).


நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; - கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
அல்லல் அடையப்பட் டார்.
287

கூர்மையினால் முல்லை அரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே! வறுமை என்னும் துன்பம் சேரப் பெற்றவர், தமது சிறந்த குணங்களையே அல்லாமல் தம்மிடம் நிறைந்து ஓங்கியிருக்கும் நுண்ணறிவையும், மற்றச் சிறப்புகள் அனைத்தையும் ஒருசேர இழப்பர்.


இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
கெட்டாற்று வாழ்க்கையே நன்று.
288

வறுமை என்னும் குழியில் விழுந்து துன்புற்று, ஏதாவது ஒரு பொருளை யாசித்து வருபவர்க்கு உதவ முடியாமல், முட்டுப்பாடான வறுமை நெறியிலே தானும் நின்று முயற்சியால் ஒன்றும் ஆகாமல் உள்ளூ ரில் வருந்தி வாழ்வதைவிட, நெடுந்தூரம் நடந்து சென்று, வெளியூர்களில் வா¢சையாக இருக்கும் வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட வழியில் வாழ்வதே நலமாம். (இரப்பார்க்கு ஒன்று தர இயலாத வாழ்க்கை, இரத்தலினும் துன்பமானது என்பது கருத்து).


கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் - குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால்.
289

அனுபவிக்கப்படும் பொருள்கள் நீங்கிச் செல்ல வறுமையுற்றபோது, (முன்பு) பொற்கடகம் அணிந்திருந்த தம் கைகளாலே, செடியை வளைத்துக் கீரைகளைப் பறித்துக் கொண்டு போய் வேகவைத்து, பனையோலைக் குடைகளையே பாத்திரமாகக் கொண்டு, உப்பில்லாது வெந்த அந்தக் கீரையை உண்டு மனவூக்கம் குன்றித் துன்பத்துடன் வாழ்வர்.


ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் - நீர்த்தருவி
தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
வாழாதார்க் கில்லை தமர்.
290

நீரையுடைய அருவிகள் ஒரு காலத்தும் மாறாமல் விழுகின்ற சிறப்பினையுடைய மலை நாட்டு மன்னனே! நிறைந்த புள்ளிகளையுடைய வண்டினம், பூத்து உதிர்ந்த கொம்பின் மேல் செல்லமாட்டா, அது போல பொருள் பெற்று வாழாதார்க்கு உறவினர் இல்லை

நாலடியார் - 30.மானம்


திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
பெருமிதம் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக்
கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
மான முடையார் மனம்.
291

செல்வச் செருக்கினால் நற்குணம் இல்லாதார் செய்யும் அவமதிப்பைக் கண்டபோது, மானம் உடையார் மனத்தில், காட்டிலே பற்றிப் படர்ந்து எறியும் தீப்போல அனல் மிகும்


என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.
292

தம் மானத்தைக் காப்பவர், பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் கூறுவரோ? கூறமாட்டார்கள். சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பரோ? கூறுவார்கள். (மானமுள்ளவர் எந்த நிலையிலும் தமது வறுமையைப் பண்பிலாரிடம் கூறார்; கூறுவதெனின் குறிப்பறியும் அறிஞா¢டம் கூறுவர் என்பது கருத்து).


யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப்
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
மறந்திடுக செல்வர் தொடர்பு.
293

வறுமையுடையோராயினும், நாமாக இருந்தால், செல்வரை உள்ளே அழைத்துச் சென்று அவர்க்கு வீட்டைச் சுற்றிக் காட்டி மனைவியையும் அறிமுகம் செய்து வைப்போம். செல்வரோ, நாம் பார்த்தவுடனே தம் மனைவியின் கற்புக் கெடும் என்பவரைப் போல நாணி, நம்மை வாயிலின் புறத்தே உட்கார வைத்துச் சோறிடுவர். ஆதலால் அவர் தொடர்பை மறந்து விடுக.


இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.
294

நன்றாகக் கஸ்தூரி மணம் கமழும் கூந்தலையுடையவளே! மானம் உடையாரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை உண்டாக்கும்; இறந்த பிறகும் புகழைத் தரும்; ஒழுக்க நெறிகள் கெடாத புண்ணியத்தால் மறுமையிலும் நன்மையை விளைவிக்கும். ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக!


பாவமும் ஏனைப் பழியும் படவருவ
சாயினும் சான்றவர் செய்கலார்; - சாதல்
ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
அருநவை ஆற்றுதல் இன்று.
295

பாவமும் மற்றப் பழியும் தோன்றக் கூடிய செயல்களைச் சான்றோர் தாம் சாவதாயினும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் சாவுத் துன்பம் ஒரு நாளில் அதுவும் ஒரு கணப் பொழுதில் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது. மேலும அந்தச் சாவுத் துன்பம் அப்பாவமும் பழியும்போல உயிர் உள்ள அளவும் நிலைத்து நின்று துன்பம் தருவதன்று.


மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
296

வளமுடைய இப்பொ¢ய உலகில் வாழ்பவர் எல்லாரினும் மிக்க செல்வம் உடையவராக இருந்தாலும் வறியோர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாராயின் வறியவரே ஆவர். வறுமையுற்றிருந்தாலும் செல்வா¢டம் சென்று இரவாதார், பெரு முத்தரையர் (முத்துக் குவியலையுடைய பாண்டியர்) போன்ற செல்வம் உடையவர் ஆவர்.


கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
இடையெலாம் இன்னாமை அஞ்சும் - புடை பரந்த
விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
சொற்பழி அஞ்சி விடும்.
297

வில் போன்ற வளைந்த புருவத்தின் கீழ் வேல் போல் உலாவிவரும் நீண்ட கண்ணையுடையவளே! கீழ் மக்கள் எல்லாம் தம்மை வாட்டும் பசிக்கு அஞ்சுவர்; இடைப்பட்டவர் எல்லாம் தமக்கு வரும் துன்பங்களுக்கு அஞ்சுவர்; தலையாய மேன்மக்கள் எல்லாம் தமக்கு நேரும் பழிக்கு அஞ்சுவர். (மேலான வாழ்வு வாழ விரும்புவோர் மானத்துக்கு அஞ்சி வாழவேண்டும் என்பது கருத்து).


நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் - கொல்லன்
உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
தலையாய சான்றோர் மனம்.
298

முன்பு இவர் நல்லவர்; மிக்க அருளுடையவர்; இப்போது வறுமை யுற்றார்' என்று கூறி இகழ்ந்து செல்வர் அலட்சியமாக நோக்குங்கால், மானமுடையார் உள்ளம், கொல்லன் உலைக் களத்தில் துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்பைப் போல உள்ளே கொதிக்கும்.


நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; - எச்சத்தின்
மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண்.
299

நம்மை விரும்பி வந்தவர்க்கு ஒன்றைக் கொடாமல் இருப்பது நாணம் அன்று; எல்லா நாளும் தீயவைக்கு அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும் நாணம் அன்று. உண்மையில், நம்மை எளியராக நினைத்து, செல்வத்தால் உயர்ந்தவர் நமக்குச் செய்த அவமா¢யாதையைப் பிறருக்குச் சொல்லாதிருப்பதே நாணம் ஆகும். (வேண்டியவர்க்கு ஒன்றைத் தர இயலாமையும் நாணம்; தீயனவற்றைச் செய்ய அஞ்சுதலும் நாணம். ஆயினும் அவற்றைவிடத் தமக்கு நேர்ந்த அவமானத்தை வெளியே சொல்லாமல் இருப்பது சிறந்த நாணமாம் என்பது கருத்து).


கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய
வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
மானம் அழுங்க வரின்.
300

காட்டில் இருக்கும் புலியானது தான் கொன்ற காட்டுப் பசு இடப்பக்கம் வீழ்ந்ததாயின், அதை உண்ணாது பட்டினி கிடந்து இறக்கும். அது போல், இடம் அகன்ற விண்ணுலகம் கைக்குக் கிடைப்பதாயினும், அது மானம் கெட வருமாயின் அந்த விண்ணுலகையும் வேண்டார், விழுமியோர்.

நாலடியார் - 31.இரவச்சம்


நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவி னவர்.
301

இவ்வறியவர்கள் நம்மால்தான் வாழ்கிறார்கள்; எப்பொழுதும் தாங்கள் சம்பாதித்த பொருள் இல்லாதவர்கள்' என்று தங்களை மேலானவராக மதித்து மயங்கும் மனமுடையவர் பின்னே, தெளிந்த அறிவினையுடையார் இரத்தற்குச் செல்வரோ? செல்ல மாட்டார்கள்.


இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு.
302

தாழ்வதற்குக் காரணமான இரத்தலை மேற்கொண்டு ஒருவன் வயிறார உண்பதினும், பழிக்கத் தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு தக்க அந்த இரத்தலை மேற்கொள்ளாதவனாய்ப் பசியோடு இருந்து இறப்பது குற்றமா? ஆகாது. ஏன் எனில் ஒருவன் இறந்தபின் பிறக்கின்ற பிறப்பு, கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்வதல்லவா? (இந்த உடம்பு போனால் வேறு நல்ல பிறவி கிடைக்காது என்று கருதவேண்டாம். நல்வினை செய்யுங்கள்! இதை விட நல்ல பிறவி கிடைக்கும்; அதுவும் கண் இமைக்கும் நேரத்தில் இறந்த பின் கிடைக்கும் என்பது கருத்து).


இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
செல்லாரும் அல்லர் சிறுநெறி - புல்லா
அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?
303

வறுமை காரணமாக இரத்தலாகிய இழிதொழிலைத் துணிந்து மேற்கொள்பவரும் உண்டு. அப்படி இரக்கச் சென்றாலும், அதிலும் மேன்மையைக் கருதும் மேலோர், தம்மை அன்புடன் நோக்கி, 'எங்கள் வீட்டுக்கு வாருங்கள்; உணவு கொள்ளுங்கள்!' என்று விரும்பி அழைத்து உபசா¢ப்பவர் இல்லத்திற்கு அல்லாமல் வேறோர் இல்லத்தில் தலை காட்டவும் மாட்டார். (வறுமையால் யாசிக்கச் சென்றாலும் கண்ட இடத்திற்குச் செல்லாமல், அன்புடன் அழைக்கும் இடத்திற்கே செல்வர் மேலோர், ஆயினும் உலகில் அப்படி அழைப்போர் இல்லாமையால் இரப்புக்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து).


திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.
304

செல்வம் தம்மை விட்டு விலகினாலும், தெய்வம் (ஊழ்வினை) சினந்து வருந்தினாலும், மேலோர் ஊக்கம் குன்றாமல் உயர் நெறி (தொழில் செய்து வாழும் வாழ்க்கை) கருதுவார்களே அல்லாமல், பொருளைப் புதைத்து வைத்துப் பாதுகாப்பவராகிய அற்பர் முன்னே சென்று, 'என்னிடம் ஒன்றும் இல்லை; ஏதேனும் தாருங்கள்' என்று கூறி நாணித் தலை குனிந்து நிற்க மாட்டார்கள்.


கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.
305

தம்முடைய பொருளை ஒளிக்காது கொடுக்கும் திடமான அன்புடைய, கண்போன்ற இனியவா¢டத்தும் இரவாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை ஆகும். ஏனெனில் 'சென்று யாசிப்போம்' என இரத்தலை நினைக்கும்போதே, நெஞ்சு வெந்து உருகுகிறது. அவ்வாறிருக்க, ஒருவா¢டம் பொருளை யாசித்துப் பெறும் போது, அப்பொருளைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ? (என்ன பாடுபடுமோ?)


இன்னா இயைக இனிய ஒழிகென்று
தன்னையே தானிரப்பத் தீர்வதற் - கென்னைகொல்
காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
டேதி லவரை இரவு.
306

துன்பங்கள் நம்மிடம் வந்து சேரட்டும்; இன்பங்கள் நம்மைவிட்டு விலகட்டும் (நெஞ்சமே, எதற்கும் அஞ்சாதே! அமைதியோடு இரு!') என வேண்டி மனத்தை நிறைவு (திருப்தி) செய்வதால் தீரும் தன்மையது வறுமை, அப்படியிருக்க, பொருள் ஆசை துன்புறுத்தும் மனத்துடன், அறிவு கெட்டு அயலாரிடம் சென்று இரப்பதால் என்ன பயன் கிடைக்கும்? ஒரு பயனும் கிடைக்காது.


என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
தென்று மவனே பிறக்கலான் - குன்றின்
பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
இரப்பாரை எள்ளா மகன்.
307

குன்றுகளின் பரந்த இடங்களில் எல்லாம் பொன் பரவுவதற்குக் காரணமான அருவிகளையுடைய மலை நாட்டு வேந்தனே! இவ்வுலகில் எக் காலத்திலும் புதிய மனிதர்கள் பிறந்து கொண்டேயிருந்தாலும், (இனி) என்றும் பிறவாதவன் ஒருவன் உளன். (அவன் எவன் என்றால்) இரப்பாரை இகழாது ஆதா¢க்கும் மகனே, அவன்! (யாசிப்பவரை இகழாது அன்ன தானம் செய்து பாதுகாப்பவனே, புதிய புதிய மனிதர் பிறந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் இனிப் பிறவாத நிலையாகிய வீடு அடைவான் என்பது கருத்து).


புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
மாயானோ மாற்றி விடின்.
308

தனது வறுமையானது புறமாகிய தன் உடலை வருத்த, அதற்காகத் தன் அகத்தே ஒளி விடும் மெய் அறிவை விலக்கி, அறியாமையை நிறுத்தி, செல்வன் ஒருவனிடம் சென்று, 'ஒன்றைத் தரவேண்டும்' என இரப்பானாகில், அச்செல்வன் 'இல்லை' என்று மறுக்க, அதைக் கேட்டபோதே அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானோ? உயிர்விடுவான். (மானத்தால் உயிர் துறப்பான் என இரங்கிக் கூறியது).


ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுத லல்லால் - பாசழிந்து
செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
பையத்தான் செல்லும் நெறி?
309

வறியவர் ஒருவர் செல்வர் ஒருவரைச் சார்ந்து, அவர் சொன்னபடி செய்து வணங்கித் தாழ்ந்து வாழ்தல் உலக முறைமை கும். அப்படியின்றி மானம் கெட்டு 'எனக்கு ஏதேனும் தரமாட்டீர்களா?' என்று இரப்பதைவிட, மெல்லப் பிறரைச் சார்ந்து அவர் ஏவல் கேட்டு வாழும் முற்கூறிய வாழ்க்கை அவ்வளவு துன்பம் தருவதோ? (ஒரு தொழில் இன்றிப் பிறரைத் தொழுது உண்டு வாழ்தல் துன்பம் தருவதுதான். ஆயினும் அதை விடத் துன்பம் தருவது இரந்து உண்டு வாழ்தல் என்பது கருத்து).


பழமைகந் தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
தறாஅச் சுடுவதோர் தீ.
310

நெடுநாள் பழகிய நட்புரிமையே பற்றுக் கோடாக உதவி நாடி வந்தவர்க்கு, அதே நட்புரிமையால் ஒன்றைக் கொடுப்பாராக! அப்படிக் கொடுத்ததை மன நிறைவின்மையால் வந்தவர் ஏற்க மறுப்பின் அது, கொடுத்தவர் மனத்தில் நீங்காது நிலைத்து நின்று சுடும் தீயாகும்.
 
நாலடியார் - 32.அவையறிதல்
மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்.
311

ஞான நூல்களை அறிந்தோர் அவையில் சேர்ந்து ஒன்றைத் தொ¢ந்துகொள்வதை விட்டு, அங்கே ஓர் அறிவற்ற பேச்சைப் பன்னிப் பன்னிப் பேசி அதையே நிலைநாட்ட முற்படும் சிற்றறிவாளர் முன்னிலையில், தமது அறிவார்ந்த சொல்லைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக.


நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
தீப்புலவன் சேரார் செறிவுடையார்; - தீப்புலவன்
கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
தோட்புடைக் கொள்ளா எழும்.
312

தன் வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி, உட்கருத்தை உணர்ந்தவன் போல் தன்னைக் கருதிக்கொண்டு, அவையைக் கூட்டும் தீய புலவனை, அடக்கமுடைய நற்புலவர்கள் சேரமாட்டார்கள். ஏனெனில் அந் நற்புலவர்கள் வருகையால், அத்தீய புலவனின் பேச்சுத் தாழ்வதால், அவர்களது குலத்தைப் பழித்துப் பேசுவான். அல்லது தோளைத் தட்டி ஆர்த்துச் சண்டைக்கு எழுந்திருப்பான். (போலிப் புலவர் அவையை நற்புலவர் சேராதிருக்க வேண்டும் என்பது கருத்து


சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; - கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
பலவுரைக்கும் மாந்தர் பலர்.
313

பேச்சாற்றல் ஒன்றையே ஆதாரமாகக்கொண்டு விரைந்து சொல்ல ஆசைப்படுவோர், கல்வி மிகுதியுடையோர் வன்மையையும் அறியார்; தாம் கற்றவற்றைப் பிறர் விரும்பிக் கேட்குமாறு சொல்லுதலையும் அறியார். தாம் வாதில் தோற்பதையும் அறியார்; இவ்வாறிருந்தும் விடாமல் பலவற்றைப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர். (பயனில் பேசுவோருடன் சேரக் கூடாது என்பது கருத்து).


கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
புல்லறிவு நாட்டி விடும்.
314

ஓர் அறிவற்றவன் ஆசிரியரை வழிபட்டுக் கற்காமல், பள்ளியில் அவ்வாசிரியர் பிறருக்குச் சொல்லுங்கால், தற்செயலாகத் தொ¢ந்துகொண்ட ஒரு பாட்டினை, கற்றோர் அவையில் நாணாமல் கூறித் தன் புல்லறிவினை வெளிப்படுத்துவான்.


வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு - ஒன்றி
உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
சுரைவித்துப் போலும்தம் பல்.
315

வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே காரணத்தால் விலங்கினை ஒத்து, உண்மைப் பொருளை ஏற்காதவராய் மனம் புழுங்கி, சினம் மிகுந்து பேசுபவரை நெருங்கி, தாமும் தம் சொல்லாற்றலைக் காட்ட முயல்வார். (அவரால் தாக்கித் தகர்க்கப்பட்ட) தம் பல்லினைச் சுரை விதைபோல, தம் கையிலே விழக் காண்பார். (அறிவிலார் முன் அறிஞர் தமது நாவன்மையைக் காட்டிச் சிறுமை அடையக் கூடாது என்பது கருத்து).


பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், - கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
316

ஏதோ ஒரு பாடலை மனப்பாடம் செய்து அதன் பொருளை அறிந்து உணராத மூடர்கள் வெறுக்கத்தக்கவற்றைக் கூறும்போது, கேடில்லாத மேன்மையுடைய சான்றோர், அந்த மூடரைப் பெற்ற தாய்க்காக 'என்னே இவள் செய்த பாவம்!' என மனம் வருந்தி நாணத்தால் தலை குனிந்து நிற்பர். (அறிவிலிகள் தவறாகக் கூறினாலும் அறிஞர்கள் அமைதியோடு இருக்க வேண்டும் என்பது கருத்து).


பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள்.
317

பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.


புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
318

புத்தகங்களை மிகுதியாகச் சேர்த்து அவற்றின் பொருள் அறியாதவராகிக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்து வைத்தாலும் அப்புலவர்கள் வேறு; அவற்றின் பொருளைத் தொ¢ந்து மற்றவர்க்கும் தொ¢விக்கின்ற புலவர்கள் வேறு. (புத்தகங்களைச் சேர்த்து வைப்பதோடு அவற்றைப் படித்துப் பயனடைய வேண்டும் என்பது கருத்து).


பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு? 319

குற்றமில்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைத் தம்மிடத்தே கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நாட்டுக்கு வேந்தே! நூலின் பொருளைத் திரட்டிச் சுருங்கக் கூறும் பொழிப்புரை, விரித்துக் கூறும் அகல உரை, சாரங்களை மட்டும் கூறும் நுட்ப உரை, வெளிப்படையாக அல்லாமல் குறிப்பாகச் சுட்டிக் காட்டப்பட்ட பொருளான விசேட உரை ஆகிய இந்நான்கு வழிகளிலும் பொருளை விளக்கிக் கூறாத சொற்கள் நூலிற்குச் சிறந்த உரையாகுமோ? ஆகாது. (நூலைப் பல வகையிலும் ஆராய்ந்து உரைப்பவரே அவைக்கு உரியவர் என்பது கருத்து).


இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? - இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில்.
320

உயர்குடிப் பிறப்பு இல்லாதவர் எவ்வளவுதான் நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும் இன்னொருவரது சொற்களில் உள்ள குற்றங்களைப் பிறர் அறியாதவாறு காத்தற்குரிய அடக்கமுடைமை உடையவரோ? அல்லர், நற்குடிப் பிறந்த நல்லறிவாளர். நூற்பொருள்களைத் தெளிவாக உணராதவரது புல்லிய அறிவினைத் தாம் அறிந்தாலும் அறியாதவர்போல் இருப்பர். (பிறர் குற்றம் கண்டு இகழாது இருப்பவரே அவைக்கு உரியர்).

நாலடியார் - 33.புல்லறிவாண்மை


அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
மூழை சுவையுணரா தாங்கு.
321

அருள் காரணமாக அறம் உரைக்கும் அன்புடையவர் வாய்மொழியை நல்லோர், தமக்குப் பொ¢தும் பயனுடையதாக மதித்து ஏற்பர். ஆனால் ஒன்றுக்கும் உதவாத பேதை ஒருவன் அவ்வறவேர் வாய்மொழியைப் பால் சோற்றின் சுவையைத் துடுப்பு உணராதது போல இகழ்ந்து கூறுவான்.


அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்வி கொளல்தேற்றா தாங்கு.
322

தோலைக் கவ்வித் தின்னும் புலையருடைய நாயானது, பால் சோற்றின் சுவையை அறியாதது போல, பொறாமை இல்லாதார் அறநெறியைக் கூறும்போது அதனை, நற்குணமில்லாதார் காது கொடுத்தும் கேளார், (புல்லறிவினார் அறநெறிகளைக் கேளார்).


இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கால் என்? 323

கண் இமைக்கும் நேரத்திற்குள் இனிய உயிர் போகும் தன்மையை, எல்லா வகையாலும் தாம் பார்த்திருந்தும், தினை அளவேனும் அறநெறி கேட்பதும் அந்த அறவழியிலே செல்வதும் ஆகிய நல்ல செயல்களை மேற்கொள்ளாத நாணமும், அறிவும் அற்ற மக்கள் இறந்தால் என்ன? இருந்தால் என்ன? (இறந்தாலும் இழப்பில்லை; இருந்தாலும் லாபமில்லை).


உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
பலர்மன்னும் தூற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
தண்டித் தணிப்பகை கோள்.
324

வாழும் நாட்கள் சில! அந்தச் சில (நாட்களிலும்) உயிருக்கு அரணாகத் தக்க நல்லறச் செயல் ஒன்றும் இல்லை. ஆனால் பிறர் தூற்றும் பழிச் சொற்களோ மிகப் பல. இப்படியிருக்க, எல்லாருடனும் இனிமையாகக் கலந்து பேசி மகிழாது, தனித்திருந்து பலருடனும் பகை கொள்வதால் என்ன பயன்? கேடுதான் பயன்! (எல்லாரிடமும் பகை கொள்வது புல்லறிவாகும்).


எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை; - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.
325

பலர் கூடியிருந்த அவைக்கு முன்னே ஒருவன் போய் அங்கிருக்கும் ஒருவனை இகழ, இகழ்ச்சிக்கு ஆளானவன் ஒன்றும் சொல்லாது பொறுத்திருப்பானானால், இகழ்ந்தவன் தீவினையால் அழிவான். அவ்வாறு அழியாது வாழ்வானாகில் அவன் வியக்கத்தக்கவனே! (பிறரை இகழும் புல்லறிவாளனுக்கு நல்வாழ்வு இல்லை என்பது கருத்து).


மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.
326

முதுமைப் பருவம் வருவதற்கு முன்னமே அறநெறியை மேற்கொண்டு அதனை முயன்று செய்யாதவன், தன் வீட்டு வேலைக்காரியால் தள்ளப்பட்டு, 'வெளியிலே இரு; இங்கிருந்து போ!', என்னும் இன்னாச் சொற்களால் இகழப்படுவான். (புல்லறிவாளரை ஏவலரும் எள்ளுவர்).


தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.
327

புல்லறிவினார் (செல்வம் உடையவராயின்) அதைக் கொண்டு தாமும் இன்பம் அடையார் தகுதியுடையார்க்கும் நன்மை செய்யார்; உயிருக்குக் காவலாக இருக்கும் அறநெறியையும் சேர மாட்டார்; செய்வதறியாது செல்வத்திலேயே மயங்கிக் கிடந்து வாழ்நாளை வீணாகக் கழிப்பர்.


சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம்.
328

இளமையிலேயே, தாம் (மரணத்துக்குப் பின்) போகும் மறுமை உலகுக்குரிய அறமாகிய சோற்றை, மிக அழுத்தமாகத் தோள் மூட்டையாக எடுத்துக்கொள்ளாதவர்களாய், பணத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு, அறத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கும் பேதையார், சைகை செய்து காட்டும் பொன் உருண்டையும் புளிப்பாகிய விளாங்காய் ஆகும். (இளமையில் தருமம் செய்யாது பணத்தைச் சேர்த்து வைக்கும் பேதையர் மரண காலத்தில் வாயடைந்தபோது, 'தானம் செய்யப் பொன்னைக் கொண்டு வருக' எனச் சைகை செய்ய, அங்கிருந்த வஞ்சகர் புளிப்பான விளாங்காய் வேண்டும் என்கிறார். அதற்கு இது தருணமன்று என்று அப்பொன்னைக் கவர்ந்துகொண்டு போனாற் போல, சேர்த்து வைத்த பொருள் தமக்கு உதவாமற் போகும். இவ்வாறு இளமையில் அறம் செய்யாது பின் வருந்துவது புல்லறிவாளர் இயல்பு என்பது கருத்து).


வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனைத்தாரே யாகி; - மறுமையை
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.
329

புல்லறிவினார் வறுமையுற்ற போதும், கடும் நோய் உற்றபோதும், மறுமைக்குரிய அறநினைவினராய் இருப்பர்; ஆனால், அறம் செய்தற்குரிய ஆற்றல் மிக்க பொருள் வளம் நிறைந்த காலத்தில், மறுமைக்குரிய அறத்தைப் பற்றி, சிறுகடுகின் அளவேனும் சிந்தியார்.


என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.
330

அளவற்ற அன்புக்கு உரியவரான தமது அரிய உயிர் போன்றவரைக் கொண்டு செல்ல முயலும் எமனைக் கண்டும், ஐயோ புல்லறிவினார், பெறற்கா¢ய இம்மனிதப் பிறவி பெற்றும் அறநினைவு அற்றவராகித் தமது வாழ்நாளை வீணாகக் கழிக்கின்றனர். (இவ்வதிகாரம் அறத்துப் பாலில் இருக்கத் தக்கது).

நாலடியார் - 34.பேதைமை


கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.
331

கொல்லும் தொழிலில் வல்ல பொ¢ய எமன், உயிரைக் கவர்ந்துகொண்டு போகும் நாளை எதிர் பார்த்திருக்க, அதனை உணராது இவ்வுலக வாழ்க்கையாகிய வலையில் இறுமாந்திருப்பவரது பெருமையானது, கொலைஞர் உலையிலே ஆமையை இட்டு நெருப்பை மூட்ட, அந்த ஆமையானது தனது நிலையை உணராது அந்த உலை நீரில் விளையாடுவது போலாம்.


பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.
332

குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய காரியங்களைக் குறைவற முடிக்கும் அறச் செயல்களைப் பற்றி யோசிப்போம் என்றிருப்போர் பெருமையானது, பொ¢ய கடலில் நீராடச் சென்றவர், அந்த கடலின் ஓசை ஒருசேர அடங்கிய பிறகு நீராடுவோம் என்று கருதியது போலாம். (குடும்பத்துக்கு ஆற்றவேண்டிய பணிகள் முடிவில்லாதவை. ஆதலால் அறத்தைப் பிறகு செய்யலாம் என்றிருப்பது பேதைமை).


குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.
333

நற்குலம், தவம், கல்வி, குடிப்பிறப்பு, முதுமை ஆகிய இவ்வைந்தும் ஒருவா¢டம் தப்பாமல் பொருந்திய போதும், நன்மை மிகுந்த, குற்றமற்ற, பழைமையான சிறப்புடைய உலக இயல்பு அறியாதிருத்தல், நெய் இல்லாத பால் சோற்றுக்கு ஒப்பாகும். (சர்க்கரை முதலானவற்றைப் பெற்றாலும் நெய் கலந்தது போன்ற இனிமை பால் சோற்றுக்கு இல்லை. அதுபோல, கல்வி முதலான சிறப்புகள் இருந்தாலும், உலகத்தோடு ஒட்டி வாழாதார் வாழ்க்கை சிறப்பில்லாததாம்; பேதைமை உடைத்தாம்).


கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
சொல்நனி தாமுணரா வாயினும் - இன்னினியே
நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
உற்றவர்க்குத் தாம்உதவ லான்.
334

கற்கள் மிகவும் நல்லனவாகும். எப்படியெனில், பிறர் சொல்லும் சொல்லை அறிந்துகொள்ளாதவையானாலும், தம்மைச் சார்ந்தவர்க்கு அப்போதே நிற்பதும், உட்காருவதும், படுப்பதும், நடப்பதும் ஆகிய செயல்களுக்கு உதவுதலால், அவை யாருக்கும் ஓர் உதவியும் செய்யாத பேதைகளைவிட நல்லனவாகும்.


பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
கறுவுகொண் டேலாதார் மாட்டும் - கறுவினால்
கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
நாத்தின்னும் நல்ல தினத்து.
335

தான் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லாத போதும், ஒரு பயனைப் பெற்றவன் போல், தன்னை எதிர்க்காதவா¢டம் பகை கொண்டு சினத்தினால் துன்பம் தரும் சொற்களை அடுக்கடுக்காகக் கூறாவிடின் பேதையின் நாக்கை நல்ல தினவானது தின்றுவிடும். (ஒரு பயனுமின்றிப் பிறரைப் பழித்தல் பேதையர் தொழில் என்பது கருத்து).


தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
எங்கண் வணக்குதும் என்பர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று.
336

நல்ல தளிர்கள் நிறைந்த புன்னை மலர்தற்குரிய கடற்கரையையுடைய வேந்தனே! தம்மிடம் விருப்பம் இல்லாதார் பின் சென்று, 'அவரை எம்மிடம் விருப்பம் உள்ளவராகச் செய்வோம்' என்று நினைப்பவர் கொள்ளும் அற்பர் உறவு. கல்லைக் கிள்ளிக் கையைப் போக்கிக் கொள்வது போலாம்.


ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும்; - யாதும்
கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
விடாஅர் உலகத் தவர்.
337

எறும்புகள், தம்மால் கொள்ள முடியாது எனினும், ஒரு பாத்திரத்தில் நெய் இருக்குமானால், அப்பாத்திரத்தின் மேலே சுற்றிக்கொண்டேயிருக்கும். அதுபோல ஒன்றும் கொடாதவராயினும் பொருள் உள்ளவரைச் சார்ந்த பேதைகள் அவரை விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.


நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் - எல்லாம்
இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
முனியார்கொல் தாம்வாழும் நாள்.
338

நாள்தோறும் நல்லோர் அவையை அடையார்; அறம் செய்யார்; இல்லாதவர்க்கு எதையும் தர மாட்டார்; எல்லா வகையிலும் இன்பம் அளிக்கத் தக்க மனைவியின் தோள்களைத் தழுவார்; புகழுடன் வாழார்; இப்படி ஒரு பயனும் இல்லாத பேதைகள் வாழ்க்கையில் வெறுப்படைய மாட்டார்களா? (மனைவியின் தோள்களைத் தழுவார் என்றதனால், பரத்தையின் தோள்களைத் தழுவுவர் என்று பொருளாயிற்று).


விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை - தழங்குகுரல்
பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
ஆய்நலம் இல்லாதார் மாட்டு.
339

ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேச, 'நாம் இப்படிப்பட்ட புகழுரைகளை விரும்பமாட்டோம்' என்று வெறுத்துப் புறக்கணிக்கும் நற்குணமில்லாதவா¢டம் கொள்ளும் நட்பானது, கடல் சூழ்ந்த உலகையே தருவதாயினும் துன்பம் தருவதாம். (தம்மை மதிப்பவரைத் தாம் மதியாதிருத்தல் பேதையின் இயல்பு).


கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.
340

ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து).

நாலடியார் - 35.கீழ்மை
கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
குப்பை கிளைபோவாக் கோழிபோல்; - மிக்க
கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
மனம்புரிந்த வாறே மிகும்.
341

நொய்யா¢சியை வேண்டும் அளவு காலைப் பொழுதிலேயே வாயில் போட்டாலும், குப்பையைக் கிளறுதலை விட்டு விடாத கோழியைப் போல, மிக்க அறநெறி பொருந்திய நூற்பொருளை விரிவாக எடுத்துக் கூறினாலும் கீழானவன் தன் மனம் விரும்பிய வழியிலேயே முனைந்து செல்வான்.


காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான்
உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
மறங்குமாம் மற்றொன் றுரைத்து.
342

உறுதியான நூற் பொருளைக் கற்றுக்கொள்ளக் குற்றமற்ற பொ¢யோரிடத்து, 'காலம் தாழ்த்தாது போகவேண்டும்' என்று ஒருவர் சொன்னால், கீழானவன், 'தூங்க வேண்டும்' என்று சொல்லி எழுந்து போவான். அல்லது வேறொரு காரணத்தைக் கூறி மறுத்துச் செல்வான்.


பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர்; - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
வற்றாம் ஒருநடை கீழ்.
343

விளங்கும் மலையருவிகளையுடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! மேலோர் மிக்க செல்வத்தை அடைந்தாலும் தம் ஒழுக்கத்தினின்றும் சிறிதும் குன்றாமல் ஒரே சீரான நிலையில் இருப்பர். கீழோர் செல்வம் பெற்றபோது, தாம் முன்னர் மேற்கொண்டிருந்த ஒழுக்கத்திற்கு வேறாக நடந்து கொள்வர்.


தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.
344

விளங்கும் மலையருவிகளையுடைய நல்ல நாட்டுக்கு மன்னனே! ஒருவன் செய்த உதவி தினை அளவே இருக்குமாயினும் சான்றோர் அதனைப் பனை அளவாகக் கருதிப் போற்றுவர். பனை அளவு உதவி செய்தாலும், நன்றி உணர்வில்லார், அதனை ஓர் உதவியாகவே நினைக்க மாட்டார்கள்.


பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; - அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்.
345

பொன் கலத்தில் இட்டு நல்ல உணவினை உண்பித்தாலும் நாய், பிறர் எச்சில் சோற்றைக் கண் கொட்டாமல் பார்த்திருக்கும். அதுபோல, கீழான ஒருவனை மதித்து எவ்வளவுதான் பெருமை செய்தாலும், அவனது செயல்கள், அப்பெருமையினின்றும் முற்றிலும் வேறுபடும். (கீழ்மையுடையனவாகவே இருக்கும்).


சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்
முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
இந்திரனா எண்ணி விடும்.
346

மேலோர், உலகமெங்கும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தக் கூடிய அரச செல்வத்தைப் பெறினும், ஒரு போதும் வரம்பு கடந்த சொற்களைச் கூறார். ஆனால் எப்போதேனும் முந்திரி என்னும் சிறு தொகையுடன், காணி என்னும் சிறுதொகை சேருமானால் ஒரு கீழ் மகன் தன்னை இந்திரனாகக் கருதி இறுமாந்திருப்பான்.


மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப் படும்.
347

குற்றமற்ற நல்ல பொன்னின் மீது, மாட்சிமை பொருந்திய நவமணிகளைப் பதித்துச் செய்யப்பட்டதானாலும் செருப்பு காலில் அணிதற்கே பயன்படும். அதுபோலக் கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றாலும் கீழ் நிலையில் வைக்கத் தக்கவரேயன்றி மேல் நிலையில் வைக்கத் தகார்.


கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், - அடுத்தடுத்து
வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.
348

சிறந்த மலைகள் விளங்கும் நல்ல நாட்டை உடைய அரசனே! கீழ் மகன் கடுமையான சொற்களைச் சொல் வல்லவன்; யாரிடமும் இரக்கம் இல்லாதவன்; பிறர் துன்பம் கண்டு மகிழ்பவன்; அடிக்கடி சினம் கொள்பவன்; எங்கும் திரிபவன்; யாரையும் பழிப்பவன்.


பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
உழையினியர் ஆகுவர் சான்றோர்; - விழையாதே
கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
எள்ளுவர் கீழா யவர்.
349

தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மலிந்து, ஒலிக்கும் கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய நாட்டு வேந்தனே! ஒருவர் தம் பின்னே நின்றால் 'இவர்கள் பலநாள் பழக்கம் உள்ளவர்கள்' என மேலோர் அவர்களிடம் இனியராய் இருப்பர். ஆனால் கீழ்மக்களோ அப்படி நிற்பவர்களை விரும்பாது பழிப்பர். (சில நாள் தம்மிடம் வந்தவர்களையும் பழைய நண்பர்களைப் போலக் கருதுவர் மேலோர்; பலநாள் பழகியவா¢டமும் அன்பு செலுத்தாது பழிப்பர் கீழோர்).


கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
வையம்பூண் கல்லா சிறுகுண்டை; - ஐயகேள்,
எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
செய்தொழிலாற் காணப்படும்.
350

மன்னனே கேட்பாயாக! நாள்தோறும் அறுக்கத்தக்க புல்லை அறுத்துத் தின்பதற்குக் கொடுத்தாலும் சிறிய எருதுகள் பொ¢ய வண்டியை இழுக்கமாட்டா. அதுபோல, செல்வம் உடையவர்களானாலும் கீழ் மக்களை, அவர்கள் செய்யும் காரியத்தால், இவர்கள் கீழ் மக்கள் என்று அறிந்து கொள்ளலாம். (வளர்ச்சியில்லாத, குள்ளமான, வயதில் மூத்த, வயிறு பொ¢தான எருது 'சிறு குண்டை' எனப்பட்டது. பயனற்ற இந்த எருதைப் போல் ஒன்றுக்கும் பயன்படாதார் கீழ் மக்கள் என்பது கருத்து).

நாலடியார் - 36.கயமை
ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.
351

நிறைந்த அறிவுள்ளவர், வயதிலே இளையராயினும் தம் புலன்களை அடக்கித் தீய நெறி செல்லாது ஒழுக்கத்துடன் இருப்பர். ஆனால், புல்லறிவினையுடைய கயவரோ வயது முதிருந்தோறும் தீய தொழிலிலேயே உழன்று கழுகு போல் திரிந்து, குற்றம் நீங்கப் பெறார். (கழுகு பிணத்தை விரும்புவது போல், கயவர் தீயவை விரும்புவார் என்பது கருத்து).


செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; - வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.
352

நீர் நிறைந்த பொ¢ய குளத்திலே வாழ்ந்தாலும் தவளைகள் தம் மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ளமாட்டா. அதுபோல, குற்றமில்லாத சிறந்த நூல்களைக் கற்றாலும், நுண்ணறிவு சிறிதும் இல்லாதவர்கள், அந்நூல்களின் பொருளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.


கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.
353

நெருங்கிய மலைகள் உள்ள நாட்டுக்கு அரசனே! ஒருவர் எதிரில் நின்று, அவரது குணங்களைக் கூறுதற்கும் நா எழுதல் அரிதாகும். அப்படியிருக்க அவர் குணம் கெடும்படி குற்றத்தையே எடுத்துக்கூறும் கயவா¢ன் நாக்கு எப்படிப்பட்ட பொருளால் (இரும்பால் அல்லது கல்லால்) செய்யப்பட்டதோ?


கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.
354

பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குலையுடைய நற்குல மகளிர் விலைமகளிரைப் போல் தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல் ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர். (கயவர் வேசியர் போல் வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து).


தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; - அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
355

தளிர்மேலே நின்றாலும் ஒருவர் (கொட்டாப்புளி அல்லது மரத்தாலான சுத்தியல்) தட்டினாலன்றி, அத்தளிரைத் துளைக்காத உளி போல்வர் கயவர். அவர்கள் கருணை இயல்புடையார்க்கு ஓர் உதவியும் செய்யார்; தம்மைத் தாக்கித் துன்புறுத்துவார்க்கு எல்லா உதவிகளையும் செய்வர்.


மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.
356

குறவன் தான் வாழும் மலை வளத்தை நினைந்து மகிழ்வான்; உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைந்து உள்ளம் உவப்பான்; சான்றோர், தமக்குப் பிறர் செய்த நன்றியை நினைந்து இன்புறுவர்; ஆனால் கயவனோ, தன்னை ஒருவன் இகழ்ந்ததையே நினைத்துப் பகை கொள்வான்.


ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.
357

தமக்கு ஒரு நன்மை செய்தவர் தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்தாலும் சான்றோர் பொறுத்துக்கொள்வர். ஆனால் கயவர்க்கு எழுநூறு நன்மைகளைச் செய்து, தவறிப்போய் ஒன்று தீமையாய் நேர்ந்து விடினும், முன்செய்த எழுநூறு நன்மைகளும் தீமையாகவே ஆகிவிடும். (தீமையை மறப்பது சான்றோர் இயல்பு; நன்மையை மறப்பது கயவர் இயல்பு


ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; - கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.
358

வாள்போன்ற கண்ணையுடையளே! பன்றியின் கொம்பிலே, வயிரம் இழைத்த பூணினைப் பூட்டினாலும் அது சினம் மிக்க யானை ஆகிவிடாது. அதுபோல, வறுமையுற்ற காலத்தும் நற்குடிப் பிறந்தவர்கள் செய்யும் உதவிகளை, கயவர் தமக்கு மிகுந்த செல்வம் உண்டான காலத்தும் செய்யார். (மேலோர் இயல்பும் கயவர் இயல்பும் எப்போதும் மாறாதவை என்பது கருத்து).


இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து - ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.
359

இன்று செல்வம் உடையவர் ஆவோம்; இப்பொழுதே ஆவோம்; இன்னும் சில நாட்களில் ஆவோம்' எனச் சிந்தித்துக்கொண்டேயிருந்து, அப்படிச் சொல்வதிலே மகிழ்ந்து, அது நிறைவேறாத போது உள்ளம் உடைந்து, பின் தாமரை இலைபோல மாய்ந்தவர் பலராவர். (கயவர், கற்பனை உலகில் திரிந்து காலத்தை வீணாக்குவர்).


நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.
360

நீரிலே தோன்றிப் பசுமை மிக்க நிறத்துடன் இருப்பினும், நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாகும். அதுபோல நிறைந்த பெரும் செல்வத்திலே இருந்தாலும், பாறையாகிய பொ¢ய கல் போன்றவர்களை (ஈர நெஞ்சம் இல்லாதவர்கள்) இவ்வுலகம் பெற்றிருக்கிறது.

நாலடியார் - 37.பன்னெறி


மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.
361

மேகம் தவழும் மாடி உள்ளதாய், சிறப்பு மிக்க காவல் உடையதாய், அணிகளே விளக்காக நின்று ஒளி வீசுவதாய் இருப்பினும், மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெற்றிலாதவனுடைய இல்லம் என்ன பயனையுடையது? அது பார்க்கக் கூடாத சுடுகாடே ஆகும்.


வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
362

தளர்வில்லாத கொடிய வாள்வீரா¢ன் காவலில் இருந்தாலும், மகளிர் ஒழுக்கம் தவறுதலை மேற்கொள்வாராயின், சில சொற்களே பேசும் அம்மகளிர் குற்றம் செய்யாதிருக்கும் காலம் சிறிதே! ஆனால் ஒழுக்கம் இல்லாத காலமோ பொ¢தாம்!


எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
அட்டில் புகாதான் அரும்பணி; - அட்டதனை
உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.
363

கணவன் சொல்லுக்கு அஞ்சாது 'அடி' என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் போக்கற்கா¢ய நோய்; சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் பெண்கள் மூவரும் கொண்ட கணவனைக் கொல்லும் கொலைக் கருவிகள் ஆவர். (அரச தண்டனைக்குக் கணவனை உட்படுத்த நினைத்ததால் 'எறி' என எதிர் நிற்பவளைக் கூற்றம் எனவும், காலத்தே உணவு கொள்ளாவிடில் நோய் உண்டாகும். ஆதலால் அட்டில் புகாளைப் பிணி எனவும், பிறர் பசி நோக்காது தான் மட்டுமே உண்பது பேயின் தன்மையாதலால், உண்டி உதவாளைப் பேய் எனவும், கொல்லுதற்கு உரியது படை ஆதலால் இத்தகைய மூவரையும் பகை எனவும் கூறினார்).


கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; - பேர்த்துமோர்
இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண்டு எறியும் தவறு.
364

இல்வாழ்க்கையை நீக்கி விடு' என்று பொ¢யோர் சொல்லக் கேட்டு அதனை நீக்காதவனாய், தலை வெடித்துப் போகும்படி சாப்பறை ஒலிப்பதைக்கேட்டு இல்வாழ்க்கை நிலையில்லாதது எனத்தொ¢ந்துகொள்ளாதவனாய், மறுபடியும் ஒருத்தியை மணந்து கொண்டு இன்புற்றிருக்கும் மயக்கம், ஒருவன் கல்லை எடுத்துத் தன் மேலேயே எறிந்து கொள்ளும் தவறு போன்றது எனக் கூறுவர் சான்றோர்.


தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.
365

(ஒருவருக்கு) தவத்துக்குரிய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தொ¢ந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்


கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.
366

தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர்.


செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
மகனறிவு தந்தை அறிவு.
367

நல்ல நெற்களால் உண்டான நல்ல விதைகள் மேலும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே! தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும். (நல்ல நெல் விதையினால் நல்ல நெல் விளைவது போல, தந்தையின் நல்ல அறிவினால் மகனுக்கு நல்ல அறிவு உண்டாகும் என்பது கருத்து).


உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.
368

மிகுந்த செல்வமுடையோரும், சான்றோரும் தம் நிலைகளிலிருந்து தாழ்ந்து, புறப் பெண்டிரின் (வைப்பாட்டி) மக்களும், கீழ்மக்களும் உயர்ந்து, கால் பக்கம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்புபோல், உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது. (கீழே இருக்க வேண்டிய குடையின் காம்பு, குடையை விரித்துப் பிடித்திருக்கும் போது மேலே இருக்கும். அதுபோலக் கீழோர் மேலோராகியிருத்தல் உலக இயல்பாம்).


இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார்; - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
வாழ்வின் வரைபாய்தல் நன்று.
369

மணிகளை வாரிக்கொண்டு விழும் அருவிகளையுடைய மலைகள் நிறைந்த நல்ல நாட்டின் அரசனே! நண்பர்கள் தம் மனத்திலிருந்து துன்பத்தைக் கூற, அத்துன்பத்தைப் போக்காத கல் மனம் உடையவர்கள் வாழ்வதைவிட மலை மேலேறிக் கீழே குதித்து உயிர் விடுதல் நல்லதாகும்.


புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல; - புதுப்புனலும்
மாரி அறவே அறுமே, அவரன்பும்
வாரி அறவே அறும்.
370

புது வெள்ளமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பும் ஆகிய இரண்டும், நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல. (ஒரே தன்மையுடையனவே), புதுவெள்ளம் மழை நீங்கினால் நீங்கும். அதுபோலப் பொது மகளிர் அன்பும் பொருளின் வரவு நீங்கியதும் நீங்கும்.