புத்தகம் - சொல்லாய்வு

பொத்தகம் - புத்தகம் - புஸ்தகம் 

பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய (அகத்தியம் 259)

நூற்பா விளக்கம் சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும் அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.

கொன்றை வேந்தன் - ஔவையார்

கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

நூல்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல்
48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர் ஆகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை செற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்
83. விருந்து இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்

மறைநூல்களில் இடைச்செருகல்கள்

பாரதம் பாடிய பெருந்தேவனார் 

இவர் சங்ககாலப் புலவர் அல்லர். வியாச பாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப் பாடி வெளியிட்டமையால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பெற்றார். இவர் பிறந்தது தொண்டை நாடு எனத் தொண்டை மண்டலம் குறிப்பிடுகின்றது. சங்கநூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தவர். எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர். இவரது கடவுள் வாழ்த்துப் பாடல்களை நூலுக்குத் தொடக்கப் பாடலாக இணைத்துள்ளார். 

இவரது பாடல்கள் சங்க நூல்களான 1) அகநானூறு 2) ஐங்குறுநூறு 3) குறுந்தொகை 4) நற்றிணை & 5) புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இவரது காலத்தில் சேர்க்கப்பட்டன.

கடவுளின் வரையறையாக அந்த நூல்கள் சொல்வதற்கு முரணாக அந்த கடவுள் வாழ்த்துகள் அமைந்துள்ளன. எந்தவித அதிகாரமும் இல்லமால் பிறர் இயற்றிய சங்கநூல்களில் இப்படி கருத்து திரிபு செய்யும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறதோ? உதாரணமாக, 

புறநானூறு கடவுள் வாழ்த்து
 
கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை(2);
ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை                    5
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை
பதினெண் கணனும்(1) ஏத்தவும் படுமே;                                10

பொருளுரை:  தவமுதிர்ச்சியின் சான்றாவது அவனது தாழ்சடை. அனைத்து உயிர்க்கும் காவலாகும் அருளுடைமையைக் காட்ட, நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையிலே உள்ளது. மேலும், அவன் தலையிலும் மார்பிலும் கொன்றைப்பூவினை அணிபவன். வாகனமாகவும், கொடியாகவும், தூய ஆனேற்றைக் கொண்டிருப்பவன். அவன் கழுத்தை நச்சுக்கறை அழகு செய்கிறது. மறைகளை ஒதுபவரான அந்தணரால் அது புகழவும் படுகிறது. பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான். அவனது நெற்றிக்கு வனப்புத் தரும் பிறை பதினெண் கனத்தால் போற்றவும் படுகிறது.  

முரண் 1: பதினெண்கணங்கள் - தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரகணம், ஆகாசவாசி, போகபூமியர் என்று கூறப்படுகிறது ஆனால் பிறவாவது தேவ, அசுரர் இயக்கர் என மூன்று மட்டும் என்று தொல்காப்பியம் சொல்கிறது. 

முரண் 2: இந்த கொண்டை, நீல் முடி, கமண்டலம், போன்றவைகள் நல்லடியார் என்பதற்கான சான்றால்ல என்று பொருகுருக்கள் என்கிற தலைப்பில் பலவேறு சித்தர்களும் நூல்களும் எச்சரித்து உள்ளன. சான்று  

மாற்றான் பிள்ளைக்கு தனது முகவரியை (inital) தருவது போன்ற இழி செயல் இது. ஆனால் உண்மையை ஏற்றுக்கொண்ட இவரைக்கூட சகிக்கலாம். கீழே வரவிருப்பவைகள், நூலாசிரியர் எழுதினார் போல சொருகப்பட்ட விஷ விதைகள். 

திருமூலர் 

திருமந்திரத்தின் உண்மை கடவுள் கொள்கை 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே - திருமந்திரம் 2066

மாயனை நாடி மனநெடுந் தேர்
ஏறிப்போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. - ஒன்பதாம் தந்திரம் - 28. பாடல் எண் : 1

பொருள்: கண்ணால் காண இயலாத இறைவனை மனம் என்னும் தேர் ஏறி பொய் தேடி ஆவான் நாடு  இடம் அறியாமல் புலம்புவர் தேகம் என்னும் நாட்டுக்குள் தேடி திரிந்து ஊன் என்னும் நாட்டிடை கண்டுகொண்டேன் என்ப்று 

திருமந்திரத்தின் கடவுள் கொள்கையானது ஒரே இறைவன் அவனை கண்களால் காண இயலாது என்பதாம். 

புகுத்தப்பட்ட கடவுள் கொள்கை 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. - திருமந்திரம் கடவுள் வாழ்த்து 

பல கடவுளிகளில், முழுமுதற் கடவுள் விநாயகர் என்றும், அவருக்கு ஐந்து கைகள், யானை முகம் என்று வருணிப்பது திருமந்திரத்துக்கு நேர் எதிர் கருத்தல்லவா? 

இந்த பாடல் பின்னர் நுழைக்கப்பட்டது, திருமூலர் தமது நூலை “ஏனவெயிறணிந்தாரை ஒன்றவன்றான்“ எனத் தொடங்கினார் என்பது தான் சேக்கிழார் கூறுவது. ஆகவே கடவுள் வணக்கமாக இப்பாடல் பிற்கால இணைப்பானது என்பதையும் அறியலாகும்.

அத்துடன், திருமந்திரம் பாயிரப்பகுதியிலுள்ள 112 பாடல்களில் 67 பாடல்களே திருமூலர் வாக்கென்றும் ஏனைய 45 பாடல்களும் இடைச்செருகல் என்றும் கருத்தும் உள்ளது. அவ்வாறே, பாயிரத்திறுதியில் திருமந்திரப் பாடல் தொகையினையும் பொருட் சிறப்பினையும் கூறும் 99, 100ஆம் பாடல்களும், குரு வரலாறு கூறும் 101, 102 ஆம் பாடல்களும் பிற்காலச் சேர்க்கையாகும் என்றும் அறியப்பட்டுள்ளது (சைவ சித்தாந்த சாத்திர வரலாறு).

இப்பொழுது இதில் காப்புச் செய்யுளோடு சேர்த்து 3048 பாடல்கள் உள்ளன. மற்றும் சிலர் 3100 செய்யுட்கள் என்றும் கணக்கிடுகின்றனர். இருந்தாலும், “முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி” என்ற சேக்கிழார் கூற்றாலும், ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பது வழக்கு என்பதாலும் 3000 செய்யுட்களே மூலப்பாடம் மற்றவை பிற்சேர்க்கை என்பது அறியக்கூடியது. பாடல் எண்ணிக்கை 3000 என்பதற்கும் மேல் சென்ற காரணம் சில பாடல்கள் மீண்டும் மற்றொரு பகுதியில் கொடுக்கப்பட்டதும், சொல் பிரித்து எழுதுகையில் வேறு பாடலாகக் கணக்கிடப்பட்டதாலும் என்ற கருத்தும் உண்டு.

அவ்வையார் பாடல்கள்  

அவ்வையாரின் உண்மை கடவுள் கொள்கை 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி வெண்பா 40

விளக்கம்: தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும், நான்கு வேதத்தின் முடிவும், அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூவர் பாடிய தேவாரமும், மாணிக்க வாசகர் பாடிய திருவாசகமும், திருக்கோவையும், திருமூலர் பாடிய திருமந்திரம் ஆகிய நூல்கள் சொல்லும் பொருள்கள் அனைத்தும் ஒன்று தான் என்று நீ உணர்ந்து கொள்.

 அவ்வையார் நூல்களில் கடவுள் வாழ்த்து திணிப்புகள் 

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. - மூதுரை கடவுள் வாழ்த்து 

பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய இலக்குமியின் அன்பும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா. - நல்வழி கடவுள் வாழ்த்து 

விளக்கம்: பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும்தா.

“ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே” - ஆத்த்திச்சூடி கடவுள் வாத்து 

பொருள்: திருவாத்தி பூமாலையை அணிபவராகிய சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை வாழ்த்தி வாழ்த்தி வணங்குவோம் நாமே.

ஔவையார் சான்றிதழ் தரும் திருக்குறள் "தனக்குவமை இல்லாதான்" என்றும், திருமந்திரம் "ஒருவனே தேவன்" என்றும் கூறும் கடவுள் கொள்கைக்கு எதிராக அமைந்துள்ள இந்த அவ்வையாரின் நூல்களில் உள்ள கடவுள் வாழ்த்தும் எனவே இவைகள் இடைச் சொருகல்களே. 

திரிகடுகம் 

கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி. - கடவுள் வாழ்த்து

பொருள்: உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே. 

முடிவுரை 

இவைகளெல்லாம் கண்ணுக்கு தெரிந்த இடைச்சொருகல்கள். நாம் கண்டறியாத பாடல்களில் மாற்று நூலின் பொழிப்புரையில் பொய் கலந்திட்ட விடயங்களையெல்லாம் எப்படி கண்டறிவது? 

எங்கெல்லாம் விநாயகரும் திருமாலும் இடம் பெறுகிறார்களோ அப்பொழுது அறியலாம் அது இடைச்சொருகலாக இருக்கலாம் என, குறைந்தது பொழிப்புரையில் விளையாடி உள்ளனர் என.

கண்டறிந்து என்ன செய்யப் போகிறோம்? இந்த மறைநூல்களெல்லாம் (அ) அறநெறி நூல்களெல்லாம் நாம் கற்று பின்பற்றுவதற்க்காக நமக்கு வழங்கப்பட்டது. அதை கற்பதால் ஏற்படும் நன்மையையும் கல்லாமையினால் ஏற்படும் தீமையும் கல்வி என்னும் தலைப்பில் ஒவ்வொரு நூலிலும் விளக்கப் பட்டுள்ளது.