திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

பொழிப்புரை :

`வித்தியா குரு, கிரியா குரு, ஞான குரு எனக் குருமார் முத்திறப்படுவர். அவருள் வித்தியாகுருமார் இருக்குமிடம், `குருகுலம்` எனப்படும். குலம் - இல்லம். ஏனை இருதிறத்தார் இருக்குமிடம் `மடாலயம்` எனப்படும். அஃது இங்குச்சுருக்கமாக, ``மடம்`` எனப்பட்டது. அவருள்ளும் இங்கு, ``குரு`` என்றது, சிறப்பாக ஞான குருவையே.
வித்தியா குரவராவார் இல்லறத்தவரே. வானப்பிரத்தராயும் இருப்பர். ஏனையிருவரும் `கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்` என்னும் மூன்று ஆச்சிரமங்களில் தங்கட்கு ஏற்புடையதில் இருப்பர். இம்மூவரது இருப்பிடங்களுமே `மடம்` எனப்படும். எனினும், கிருகத்தர் தவிர ஏனையிருவரது இருப்பிடங்களையே வழக்கத்தில் `மடம்` என்பது குறிக்கின்றது.
``தாவில் சீர் முருகனார் திருமனைக் கெய்தி``
என முருக நாயனாரது இல்லத்தை, ``திருமனை`` என ஓரிடத்தில் அருளிச் செய்த சேக்கிழார் தாமே, அதனை வேறிடங்களில்
``திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல, அவர்மடம் சென்று புக்கார்``3
``முருகனார் திருமடத்தின் மேவுங் காலை``
``ஓங்குபுகழ் முருகனார் திருமடத்தில் உடனாக``3
என, ``மடம்`` என்றும், ``திருமடம்`` என்றும் அருளிச் செய்தார். ஆதலின், சிவனுக்கு அடியவராய்ச் சிவப்பணி செய்வார் யாவ ராயினும் அவரது இல்லங்கள், `திருமடம்` எனக் குறிக்கப்படுதற்கு உரியவாதல் விளங்கும். இன்னும் அவர், (சேக்கிழார்) அப்பரும், சம்பந்தரும் திருவீழிமிழலையில் சிலநாட்கள் எழுந்தருளியிருந்த இடங்களையே, `அக்காலங்களில் அந்த இடங்கள் திருமடங்களாய் விளங்கின` என்னும் கருத்தால்,
``ஈறி லாத பொருளுடைய
இருவர் தங்கள் திருமடமும்``l
``நாவினுக்கு வேந்தர் ``திருமடத்தில்``*
``பிள்ளையார்தம் திருமடத்தில்``
எனத், ``திருமடம்`` எனக் குறித்தருளினார். இன்னும் திருஞான சம்பநத்ர் திருமணத்தின் பொருட்டுச் சென்று, அதற்குமுன் சிறிதுபோது எழுந்தருளியிருந்த இடத்தையே, அவர் எழுந்தருளியிருந்தமை காரணமாகச் சேக்கிழார்,
``பூதநா யகர்தம் கோயிற்
புறத்தொரு மாமடத்திற் புக்கார்``*
என, ``மடம்`` என்று அருளிச்செய்தார்.
இனித் திருநாவுக்கரசு நாயனார், திருப்பூந்துருத்தியில்,
``திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் ஆங்கொன்று செய்தார்``
எனப்பட்டது, ஆசிரியன்மார்களும், அடியார்களும் எழுந்தருளி யிருக்கத் தக்கதாக, நிலையாக அமைந்த திருமடமாகும்.
``நான்காம் வருணத்தாறருள் நைட்டிகருக்கல்லது
ஆசாரியத் தன்மையில் அதிகாரம் இல்லை``
என்றும்,
``ஆதிதசைவராயின் கிருகத்தருக்கும் ஆசாரியத்
தன்மையில் அதிகாரமும் உண்டு``
என்னும் சிவஞான யோகிகள் தமது சிவஞான போத மாபாசியத்துச் சிறப்புப் பாயிரப் பாடியத்துள், ``ஆசாரியத் தன்மையின் அதிகாரம்`` என்னும் தலைப்பின்கீழ்ப் பலவகைத் தடைவிடைகளால் நிறுவினார். அதுபற்றிச், `சைவ சமய நெறி` நூலின்,
``சூத்திரனும் தேசிகனா வான்மரணாந் தம்துறவி,
சாத்திரத்தின் மூன்றும்உணர்ந் தால்``8
என்னும் திருக்குறளின் உரையில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பின்வருமாறு கூறியுள்ளதை இங்கு அறிதல் இன்றியமையாதது. (மூன்றும் - முப்பொருள்களின் இயல்பும்.)
``சூத்திரருள் நைட்டிகப் பிரமசாரிகட்கே
குருத்துவம்; கிருகத்தர்களுக்குச் சமயி,
புத்திர, சாதகத்துவம் மாத்திரம்; குருத்துவம்
இல்லை - என்று காமிகாகமத்தில் கூறப்படுதல்
பற்றி இவ்வாறுரைத்தார்.
- சூத்திரருட் கிருகத்தருக்கும் குருத்துவம்
உண்டு - என்று வேறுசில ஆகமங்களில்
விதிக்கப்பட்டது.
முன்னை விதி, நைட்டிகப் பிரமசரியம் வழுவாது
அநுட்டிப்போர் பலருளராகப் பெற்ற முனை
யுகங்களிலும், பின்னை விதி, நைட்டிகப்
பிரமசரியம் வழுவாது அநுட்டிப்போர்
மிக அரியராகப் பெற்ற இக்கலியுகத்திலும்
கொள்ளற்பாலன வாதலின், விரோதமின்மை
தெளிக.``
இதனால், `ஆகமங்களில் சூத்திரர்களில் கிருகத்தருக்கும் ஆசாரியத் தன்மையில் அதிகாரம் உண்டு` எனக் கூறப்பட்டிருப்பதை அறிகின்றோம். வழக்கத்திலும் அவ்வாறு உள்ள ஆசாரியர்கள், `தேசிகர்கள்` எனப் பெயர் பெற்று விளங்கக் காண்கின்றோம். அவர்களைச் சிவஞான யோகிகள் `ஆசாரியர்கள்` என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், தீக்கையைப் பற்றி விரிவாகவும், சுருக்க மாகவும் கூறுகின்ற, சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் என்னும் நூல்களிலும, சாதியை வைத்துத் தீக்கை வேறுபாடு கூறவில்லை. அவ்வாறே சாதி பற்றிக் கூறப்படும் சைவ பேதங்களையும் அந்நூல்கள் குறிப்பிடவில்லை. இந்நாயனாரும் குருமார்களைப் பற்றிப் பேசும் இடங்களில் இவ்வாறெல்லாம் கூறவில்லை.
`ஞான தீக்கையால், உயிரே சீவனாய் இருந்தது, சிவமாகி விடுகின்றது` என்றால், அதன்பின் அதற்குக் கருவியாய் அமைந்து, அது வேண்டியவாறே பயன்படுகின்ற உடம்பைப் பற்றிய சாதி, தீக்கை யினாலும், மாறுதல் இல்லை` என்பதை உடன்பட முடியவில்லை.
சிவப்பிரகாச நூலில் உமாபதி தேவர், ``பெத்தான்மாவின் உடம்பே பாசம்; முத்தான்மாவின் உடம்பு திருவருளே`` என்கின்றார்.3 இந்நாயனாரும்,
``திண்மையின் ஞானி சிவகாயம்``l
என்பதனால், ``சிறந்த ஞானியின் உடம்பு சிவனது திருமேனியே`` என முன் தந்திரத்தில் கூறியிருத்தலைப் பார்த்தோம். துறவிகள் உடம்பிற்குச் சமாதிக் கிரியை விதித்ததும் இது பற்றியே. திருநாவுக்கரசு நாயனார்,
``எவரேனும் தாம்ஆக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்டபோது
உகந்தடிமைத் திறம்நினைந்து அங்கு உவந்து நோக்கி,
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.``9
எனப் பொதுவான திருவேடமுடையாரைப் பற்றியே இவ்வாறு அருளிச் செய்தார். அங்ஙனமாக, `சிறந்த ஞானாசிரியரால் பலவகைத் தீக்கைகளையும் செய்து, ஔத்திரி தீக்கையால் அத்துவ சோதனையும் செய்யப்பட்டபின்னும் அந்த அத்துவாக்களையுடைய உடம்பு, தாய் வயிற்றினின்றும் பிறந்தது பிறந்தபடியேதான் உள்ளது. சிறிதும் மாற்ற மில்லை` எனக் கூறுதல், `சமயத்திலும் சாதியே வலுவுடையது; அது பிறப்பு மாறினாலன்றி, மாறாது` எனக் கறும் மிகுதி நூல்களையே தலை யாய பிராமாணங்களாகக் கொள்கின்ற சுமார்த்த சமயத்தின் தாக்கமே யாகும். `சைவத்தில் அஃதல்லை` என்பது திருத்தொண்டர் புராணத்தில் மிக மகி வெளிப்படை. `தீக்கையால் உயிரினது நிலை மட்டுமே மாறும்; உடலது நிலையில் மாற்றம் உண்டாகாது` எனக் கூறினால், `துறவிகளது உடம்பிற்குச் சமாதி விதித்தலால் பயன் என்னை, என்க. `அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்` என்போர்` நிருவாண தீக்கைபெற்றுச் சைவ சந்நியாசமும் பெற்ற பின்னரும், `முன்பு இருந்த அந்தணன் அந்தணன்தான்; வேளாளன் வேளாளன் தான்` எனக் கூறுதல் எவ்வளவு தொலைவு உண்மையோடு ஒட்டு கின்றது என்று பார்த்தல் வேண்டும்.
எனவே, இங்கு, ``குரு`` என்றது, எவ்வாற்றாலேனும் ஆசிரியத்தன்மை பெற்றோரையேயாம். எனினும் சந்நியாச ஆச்சிரமத்தில் உள்ள குருமார் இருப்பிடத்தற்கே `மடம்` என்னும் பெயர் சிறப்பாக உரியது. வானப்பிரத்த, கிருகத்த ஆசாரியர்கள் இருப்பிடத்திற்கு அது பொதுவாக உரியதே.
இனி, `சந்நியாசிகட்கு ஆசாரியத் தன்மை இல்லை` என்னும் ஓர் வாதமும் உண்டு.*
அது தபசுவி - என்னும் சந்நியாசியைக் குறித்து மட்டுமே கூறியது` எனச் சிவஞான யோகிகளே மேற்குறித்த இடத்தில் விளக்கினார். இங்கு வானப்பிரத்தர் `தபசுவி` அல்லாத சந்நியா சிகளுள் அடங்குவர்
``அப்பாஇம் முத்திக்(கு) அழியாத காரணந்தான்
செப்பாய், அருளாலே; செப்பக்கேள் - ஒப்பில்
குருலிங்க வேடம்எனக் கூறில்இவை கொண்டர்,
கருஒன்றி நில்லார்கள் காண்``
``கற்றா மனம்போல் கசிந்துகசிந் தேஉருகி
உற்றாசான் லிங்கம் உயர்வேடம் - பற்றாக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோகிக்கும்
பத்திதனில் நின்றிடுவார் பார்``9 என்றபடி, சித்தாந்த முத்திக்குத் துணையான, குரு லிங்க சங்கமங்களே யாதல் பற்றி அவைகளை, மேல் இடம் வாய்த்துழிக் கூறிய நாயனார், இங்கு முதற்கண் குரு இடமாகிய திருமடத் தரிசனத்தின் சிறப்பைக் கூறுகின்றார். இவ்வதிகாரம் ஆறு மந்திரங்களையுடையது.
`சிவபெருமான் ஒருவனுக்கே உரியன` எனக் கருதிக் கொண்டு, தனியாகப் படைக்கப்படுகின்ற படையல்களும், நெருப் பிடமாக இடப்படுகின்ற அவிசுகளும், தூபம், வேள்வி, குருலிங்க சங்கமங்கட்காக அடுகின்ற அட்டில் இவற்றினின்றும் எழுகின்ற புகைகளும், வழிபாடுகளில் மெல்ல ஓதுகின்ற மந்திர ஒலிகளும், இசையுடன் உரக்க ஓதுகின்ற வேதம், திருமுறை இவற்றின் ஓசைகளும் வந்து வந்து பரவிக் குவிகின்ற இடம் குருமடம், இதைக் கண்ணால் கண்டவர்களும் சிவலோகத்திலே சிவனது திருவடியைச் சார்வார்கள்.

குறிப்புரை :

`கண்டவர்கட்கு உலக ஆசைகள் நீங்க, சிவபத்தி தோன்றி முதிரும்` என்பதாம். ``நல்லாரைக் காண்பதுவும் நன்றே``8 என்றதும் இது பற்றி, ``ஈசன்றனக் கென்றே உள்கி`` என்பதை முதலிற்கொள்க, கருதுதலைச் `சங்கற்பம் செய்து கொள்ளல் என்பர். `அங்ஙனம் செய்து கொண்டு செய்வனவற்றிற்குப் பயன் மிகுதி என்பது ஆகமங்களின் துணிபு. ``ஈசன்`` என முன்னர்ப் போந்தாமையால், ``மலரடி`` என்றதும் அவனது திருவடியே யாயிற்று. `ஈசன்` என்பது சிவ பெருமானுக்கே உரிய சிறப்புப் பெயர். ``உள்கி`` என்பதன்பின், `செய்ய` என ஒரு சொல் வருவித்து ``பரந்து`` என்பதைக் ``குவியும்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. தெளிவு நோக்கி எதிர்காலம் `சார்ந்து நின்றார்` என இறந்த காலம் ஆயிற்று. பின்னிரண்டடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், குருமட தரிசனம் பத்தியைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

இவன்இல்லம் அல்ல(து) அவனுக்கங் கில்லை
அவனுக்கு வேறில்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன்இல்லம் என்றென் றறிந்தும்
அவனைப் புறம்பென்(று) அரற்றுகின் றாரே.

பொழிப்புரை :

`சிவனுக்கென்று சுத்த தத்துவங்களில் உலகங்கள் உள்ளன` எனக் கூறப்படுவன, அவனுக்காக அமைக்கப்பட்டன அல்ல இந்தச் சிவகுருவுக்காக அமைக்கப்பட்டனவே. (ஏனெனில், சிவனுக்கு இருக்க ஓர் இடம் தேவையில்லை. சிவகுருவுக்கு, மாசுடம்பு நீங்கிய வுடன் இருக்க ஒரு தூய இடம் வேண்டும்.) `சுத்த தத்துவ உலகம் தவிர, அவற்றின் வேறாகச் சிவனுக்கென்றே இடம் இருக்கின்றது` என்று சொன்னால் அந்த இடம் இந்தச் சிவகுருதான். இதை உண்மை நூல்கள் பலவற்றால் அறிந்தும் சிலர், `குருமடம் வேறு; சிவனது உலகம் வேறு` எனக் கூப்பாடு செய்கின்றனர்.

குறிப்புரை :

`குருமடம் சிவலோகமே` என்றபடி. ``இல்லம்`` என்பதை ``அங்கு`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியில், `சிவனே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப்பட்டது. (அவனுக்கு இல்லம் இவனே` என மாற்றிக்கொள்க. ``என்று என்று`` என்னும் அடுக்கு, பலமுறை கற்றும், கேட்டும் அறிதலைக் குறித்தது` ``அவனைப் புறம்பென்று`` என்பதற்குக் கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது.
இதனால், `குருமட தரிசனம், சிவலோக தரிசனமே` என அதனது சிறப்புக் கூறப்பட்டது. `அவ்விடம் திருவருள் விளக்கம் நிரம்பியுள்ள இடம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரிய சிறப்பில்லி எம்மிறை
ஓடும் உலகுயி ராகிநின் றானே.

பொழிப்புரை :

ஞானமாகிய கடலில் மூழ்குதற்கு உரிய பெரிய துறையாகிய குருமடத்தைச் சென்று நான் தரிசித்தபின்பு, எல்லா உயிர்களும் சென்று சேரும் இடமாகிய சிவனது, அப்பொழுது கொய்த தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகள் தேடிக் காண்பதற்கு அரியனவாகவே இருக்க, திருமடத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ள சிவகுருவே எங்கட்குச் சிவனாய் இயங்குகின்ற உலகம், உயிர் எங்கும் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

``பெருந்துறை`` என்றது, குறிப்புருவகம். `பெரிதாகிய கடலில் சென்று ஆடுதல், அதற்குரிய துறைவழியாக அன்றி இயலாத வாறு போல, அகண்ட ஞானத்தைப் பெறுதல் அதற்குரிய குருமடத்தில் சென்றன்றி இயலாது` என்பது தோன்ற இவ்வாறு உருவகித்தார். ``பெருந்துறை`` என்னும் சொற் குறிப்பால், `இந்நாயனார் ஆளுடைய அடிகள் காலத்திற்குப் பின் இதனை அருளிச்செய்தார்` எனக் கருதலாம்.
``பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன்``3
என அடிகளைச் சிவப்பிரகாசர் போற்றினார். `ஞானத்தைப் பெற்றவர்களுக்கு அதனை அளித்தருளிய ஞானகுருவே சிவன்` என்பதை, ``குருவே சிவம் எனக்கூறினன் நந்தி``88? என நாயனார் முதற்கண் கூறியதுபோலவே, அருணந்தி தேவரும்,
``பரம்பிரமம் இவன்என்றும், பரசிவன்றான் என்றும்,
பரஞானம் இவன்என்றும், பராபரன்றான் என்றும்,
அரன்தரும்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
அருட்குருவை வழிபட``9
எனக் கூறினமை அறியற்பாலது. இவ்வாற்றால், `சிவனது சேவடி தேடி அடைய அரியன அரியனவாகவே இருக்க, நாங்கள் குருமடத்தில் குருவினது சேவடியையே சிவனடியாக அடைந்து விட்டோம்` என்றார். சிறப்பு இல் - ஞானம் நிலையம். இகர ஈறு, அதனையுடைய குருமூர்த்தியை உணர்த்திற்று. ``கைகூடும் சிவனது ... ... ... தேட அரிய`` என்பதை இடைப் பிறவரலாக்கி, இம் மந்திரத்தை வினை முடிபு செய்க. `அரிய ஆக` என ஆக்கமும், `எம்மிறையும், உலகுயிராகியும்` என எண்ணும்மைகளும் விரிக்க.
இதனால் ஞானிகட்குக் குருமடம் புகலிடமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.

பொழிப்புரை :

`சிவன் எழுந்தருளியிருக்கின்ற இருக்கை, கயிலாய மலை, ஞானிகளது உள்ளம் என்பன. முறையே திருமடத்தில் உள்ள பீடமும், மடலாயமும், திருநந்தவனமுமே` என்று நான், பன்னிரு பகுதியாகிய, பெரிய தமிழ்நாட்டு மக்கட்கு உறுதியாகக் கூறுவேன்.

குறிப்புரை :

`சிவனுடைய` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. ``இயம்புவன்`` என்பது மீள மீள வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. மடம் முதலிய மூன்றினையும் ஆசனம் முதலிய மூன்றதனோடும் நிரல் நிறையாக இயைக்க. ``ஆதாரம்`` எனப்பின்னர் வருதலால், ``படம்`` என்பது பீடத்தைக் குறித்தது. தானியாகு பெயராக, மடத்தையே `பீடம்` என வழங்குதல் உண்மையையும் இங்கு நோக்குக. நந்தவனம் மலர்பொதுளி விளங்குதலால், அது ஞானிகளது உள்ளமாயிற்று. அதன் மணம், ஞான மணமாம். ஈராறு நிலம் - தமிழ்ப் பன்னிரு நாடுகள்.
``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்``8
என்றமையால், தொல்காப்பியர்க்கு, இவைகளைக் கொடுந்தமிழ் நாடாகக் கூறுதல் கருத்தாகாமை விளங்கும்.
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே``3
என நாயனாரே பாயிரத்துட் கூறியவாறு தமிழ் மக்கட்கே தாம் நூல் செய்கின்றார் ஆகலானும், ``தமிழ் மண்டலம் ஐந்து`` எனத் தமிழ்நாடு முழுதையும் நோக்கினார் ஆகலானும் தமிழ் மக்களையே குறித்தார். இனி, `ஈராறும், இரண்டும் ஆகிய நிலம்` என வைத்து,`பதினான்கு உலகங்களில் உள்ளார்க்கும் இயம்புவன்` என்றும் உரைப்பர். `அஃது எத்துணைப் பொருத்தம் உடையது` என அறிந்துகொள்க.
இதனால், `குருமடத்தில் உள்ள பீடம் முதலியன சிவனது பீடம் முதலியனவேயாம் சிறப்புடையன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

முகம்பீட மாம்மட முன்னிய தேகம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி
அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

பொழிப்புரை :

குருமடத்தில் முதன்மையாக அமைந்துள்ள பீடம், சிவபெருமானுடைய முகம். மடாலயம் உயிர்களால் நினைக்கப் படுகின்ற சிவனுடைய திருமேனி. திருமடத்தில் உள்ள பல உயிர்ப் பொருட்கள், உயிரல் பொருட்கள், சிவனுடைய வியாபகத்துள் அடங்கியுள்ள உயிர்களும், உயிர் அல்லாதனவும் ஆகிய உலகங்கள். குருமூர்த்தியின் ஆட்சி, சிவபெருமான் உயிர்களின் பாசத்தைப் போக்குதற்குச் செய்கின்ற செயல்கள். குருமூர்த்தியினுடைய உள்ளம், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மேலான இருக்கை. குருமூர்த்தி தாம் இருப்பதாகக் கொண்டுள்ள குகை, சிவனுடைய இடமாகிய சிதாகாசம். ஆகவே, குருமூர்த்திக்கு அவர்தம் மாணவர் செய்யும் பதினாறு வகை முகமன்களோடுகூடிய வழிபாட்டுச் செயல்கள். உலகில் சிவபெருமானுக்கு அந்தணர் முதலியோர் அவ்வாறு செய்யும் வழிபாட்டுச் செயல்களே.

குறிப்புரை :

``அகம்`` இரண்டில் முன்னது இடவாகு பெயராய், அதில் உள்ள பொருட்களைக் குறித்தது பரவர்க்கம் - ஏனைப் பொருட்கள். செய் - செயல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஆசு இன்மைக்கு ஏதுவான செயல்` என்க. `தேயம், காட்சி` என்பன பாடம் அல்ல. பரம் + ஆதனம் = பரமாதனம். எண் எண் - எட்டும் எட்டும்; பதினாறு. இஃது எண்ணாகு பெயராய் அத்துணை வழிபாட்டுச் செயல்களைக் குறித்தது எழுவாயாய் நின்று ``கிரியை`` என்னும் பயனிலையைக் கொண்டது. `குகையாகிய ஆதாரம்` என்க. குகையை `ஒடுக்கம்` என்பர்.
`பீடம் முகமாம்; பரவர்க்கம் அகம்; ஆட்சி செயல்; தற்குகை ஆதாரம் சிதம்பரம்; ஆகவே, எண்எண் முகமன் கிரியை` என இயைத்துக் கொள்க. ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிர் எதுகையுமாம்.
இதனால் குருமடமே சிவசொரூபமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும்
சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும்
செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

பொழிப்புரை :

புற ஆரவாரங்களை விடுத்து, அகநோக்குக் கொண்டு நோக்குகின்ற ஞான குரவர்கட்கு, அனைத்திற்கும் அடி நிலையாகிய அந்த அக நோக்கு உணர்வே சிவன் எழுந்தருளி யிருக்கும் ஆசனமாகும். அந்த அகநோக்கு உணர்வு. நிலை திரியாதே மாணாக்கர்பொருட்டு உலகை நோக்குகின்ற அதுவே சிவன் கொள்கின்ற திருவுருவமாகும். அங்ஙனம் நோக்கி மாணாக்கர்க்குச் செய்யும் அருட் செயல்களே அத்திருவுருவத்தில் உள்ள சிவபெருமானாகும்.

குறிப்புரை :

வழிபாடு, `ஆசனம், மூர்த்தி, மூர்த்திமான்` என்னும் மூன்றும் அமையச் செய்யப்படும் ஆகலின் அம்மூன்றும் குரு மூர்த்திகளது அருட்செயலில் அமைதல் காட்டியபடி. `ஞானகுரு தம் மாணாக்கர்க்கு அருள்புரியுமிடடத்துத் தமது நிலையை இவ்வாறு பாவித்து நின்றே புரிதலால், அவர் செயல் அவருக்குச் சிவப் பணியாயும், ஏனையோர்க்குத் திருவருட் செயலாயும் அமைந்து பயன் தருகின்றன` என்பதாம்.
`அகமுமாம் ஆதாரம் பீடம் ஆம்` என்க.
ஆதனம் - ஆசனம். என்றது, இங்கு, உறையும் இடமாகிய உருவத்தைக் குறித்தது. சிவனுக்குச் சத்தியே திருமேனியாதல் அறிக வழிபாட்டிற்கு உரிய வகையில் கட்புலனாகியிருக்கும் நனி நுண்ணுடம்பு சிவன் அவ்வுடம்புகளின் உள்ளிருக்கும் உயிர் ஆதலின், நனி நுண்ணுடம்பையே இங்குக் கூறினார். சத்தி வெளிப்படும்பொழுது சிவமும் உடன் வெளிப்பட்டு நிற்கும் ஆதலின் ``சகமுமாம் சத்தி`` என்றும், ``தெய்வம்`` என்றது, திவ்வியமாகிய செயல்களை.
இதனால், ஞானகுருவினது பாவனை முதிர்ச்சியால் அவர் சிவமாய் நிற்றலின் அவரது மடம் சிவசொரூபமாயிற்று` என்பது விளக்கப்பட்டது.
ஆறு, ஏழாந் தந்திரங்களில் குருவைப் பற்றிக் கூறினா ராயினும் அங்குக் குருமடத்தின் சிறப்புப் பற்றிக் கூற இயைபில் லாமையால், அவற்றின் ஒழிபாக இதனைக் இங்குக் கூறினார். இது முன்னைத் தந்திரத்து இறுதிக்கண் நின்ற `பத்தி யுடைமை` அதிகாரத்தோடு இயைந்து நிற்றலும் காண்க.

பண் :

பாடல் எண் : 1

மாயை இரண்டு மறைக்க மறைவுறும்
காயம்ஓ ரைந்தும் கழியத்தா மாகியே
தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்
ஆயவர் ஞானாதி மோனத்த ராவரே.

பொழிப்புரை :

`அசுத்த மாயை, பிரகிருதி மாயை` என்னும் இரு மாயைகள் தம்முள் ஒடுக்க ஒடுங்குகின்ற ஐந்து உடல்களையும் அவற்றது இயல்பை உள்ளவாறு உணர்ந்து, `அவை நாம் அல்ல` என்று கழிக்கக் கழிதலால், மூன்னர்த் தாம் சடமாகிய அவையாகாது, சித்தாகி நின்று, அங்ஙனம் நின்ற அந்நிலையில், இயற்கையிலே அசுத்தமாய் நின்ற பாசஞானமும், செயற்கையால் அசுத்தமாகிய பசு ஞானமும் போலாது, இயல்பாகவே தூய்தாகிய பதிஞானம், தோன்ற, அதனானே அந்த ஞானத்திற்கு முதலாய் உள்ள சிவத்தை அறிந்து, அதனுள் அடங்கியிருப்பவர்` மோனிகட்கு மேலாகிய மோனிகளாவார்.

குறிப்புரை :

`அத்தகையோரே ஞானக் குரவர்` என்பது குறிப்பெச்சம். சுத்தமாயை சகலர்க்கு உடம்பாய் வருதல் இன்மையானும், இங்குக் கூறுவது சகலரையே ஆகலானும் ``மாயை இரண்டு`` என்பதற்கு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என உரைத்தல் கூடாமையறிக. சிவசத்தியால் செய்யும் மாயைகளை அவையே செய்வனபோலக் கூறினார் ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தில் கூறப்பட்டன. ஞான அதிமோனர் - ஞான முதிர்ச்சியால் முற்றிய மௌன நிலையை அடைந்தவர்.
ஞானகுரு தரிசனச் சிறப்பைக் கூறுதற்கு முதற்கண் ஞானகுருவின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடல்
கூறக் குருபரன் கும்பிடு தந்திடும்
வேறே சிவபதம் மேலா அளித்திடும்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகியே.

பொழிப்புரை :

உயிர்க்குச் சிவத்தைக் காட்டாது தம்மையே காட்டி நிற்கின்ற முப்பத்தாறு கருவிகளின் சேட்டைகளும் அடங்கும் முறையை மேலான குரு உபதேசம் செய்யும் பேற்றினை அக்குருவைத் தரிசித்து வணங்குவதாகிய வணக்கமே தரும். அவ்வுபதேச வாயிலாக அது மேலும் சிறப்பாகச் சிவனது திருவடியைத் தரும் பின்பு முடிநிலைப் பேறாக அவனது ஆனந்தத்தைத் தந்து, அஃது எல்லை யின்றிப் பெருகி வருமாறு பேணியும் நிற்கும்.

குறிப்புரை :

`ஆகவே, உபதேசத்திற்கு முன்னும், அதன் பின் சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நிலைகளிலும் குரு வழிபாட்டினைத் தவிரற்க` என்பது குறிப்பெச்சம்.
``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது - முன்னவனே
தானேதா னாச் செய்தும், தைவமென்றுந் தைவமே;
மானே தொழுகை வலி``3
என்றார் மெய்கண்ட தேவரும்.
அங்கே - அப்பொழுதே. ``அடங்கிடல்`` என்றது, அதற்குரிய வழியைக் குறித்தது. `குருபரன் கூற, அவனைக் கும்பிடுதல் தந்திடும்` என இயைக்க. கும்பிடு, முதனிலைத் தொழிற்பெயர். `தத்துவம் முப்பத்தாறனுள் மேலே உள்ள சிவதத்துவம் ஐந்தும் செலுத்துதல் அளவாய் நிற்க, ஏனை முப்பத்தொரு தத்துவங்களே சகலர்க்கு மேற்கூறிய ஐந்துடம்புகளாய் வந்து பொருந்தும்` என்க.
இதனால், ஞான குரு தரிசனம் அடைதற்கரிய பேறுகளை யெல்லாம் அளித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய பரசிவம் யாவையு மாகி
விரிவு குவிவற விட்ட நிலத்தே
பெரிய குருபதம் பேசஒண் ணாதே.

பொழிப்புரை :

தம்மை அடைந்தவரை, முத்துரியங்கட்கும் அப்பாற்பட்டு ஒளிரும் பேரொளிப் பிழம்பாகிய, அணுகுதற்கரிய பரசிவப் பொருளேயாய், அதனைப்போலவே எங்கும் வியாபகமாய், அறிவு மாயாகாரியங்களின்மேல் படர்ந்து செல்லுதலும், அதனை விட்டு ஒன்றும் அறியாது அறியாமையுள் மூழ்கிக்கிடத்தலும் ஆகிய `சகலம், கேவலம்` என்னும் இரண்டும் அற்ற இடமாகிய சுத்த நிலையிலே தங்கும்படி கொண்டுபோய்ச் சேர்க்கின்ற பெருஞான குருவின் திருவடி தரிசனச் சிறப்பை அளவிட்டுச் சொல்ல இயலாது.

குறிப்புரை :

முத்துரியங்களை முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஆகி` என்பதை, ``பரசிவம்`` என்பதனோடும் கூட்டுக. விரிவு, சகலம். குவிவு, கேவலம். ``விரிவு குவிகு அற`` என்றதனஆல், `அவை அற்ற நிலத்தே விட்ட பெரிய குரு` என்க. விடுதல் - சேர்த்தல். அதிகாரம் `தரிசனம்` ஆதலின், ``பதம்`` என்பதும், பாத தரிசனத்தையே என்க. பாதம் பயன் தருதலும் தரிசனத்தினாலே யென்பதும் உணரற்பாற்று.
இதனால், முன் மந்திரத்தில் `வேறே சிவபதம் மேலா அளித்திடும்`` எனக் கூறப்பட்ட பயனின் பெருமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆயன நந்தி அடிக்கென் தலைபெற்றேன்
வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன்
காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன்
சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனே.

பொழிப்புரை :

என் ஞானகுரு நந்தி பெருமான்; அவர் தாயைப் போலும் கருணையுடையவர்; உயிர்க்கு உறுதி பயக்கும் சொல்லை யுடையவர்; கட்புலனாகின்ற திருமேனியை உடையவர். எனினும் பாவிகட்கு எட்டாதவர். யான் தலையைப் பெற்றது அவரது திருவடிகளில் படும்படி வணங்குதற்காகவே; மற்றும் அவற்றைச் சூட்டுதற்காகவுமாம். நான் வாய்பெற்றது அவரை வாழ்த்துதற்காகவே. நான் கண்பெற்றது அவரைத் தரிசித்தற்காகவே, நான் மனத்தைப் பெற்றது அவரை நினைத்தற்காகவே.

குறிப்புரை :

`ஞானத்தை விரும்புவோர் பலரும் எந்த ஞான குருவையேனும் அடைந்து, அவருக்கு ஆட்படுதலையே தங்கள் பிறவிப் பயனாக உணர்தல் வேண்டும்; இல்லையேல், ஞானம் கிடையாது; கிடைப்பினும் நிலைத்து நின்று பயன் தாராது` என்பதாம். ஆயன் - ஆய் தாய் போன்றவன். வாய் - வாய்மை. `காயத்தன்` என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. `அந்நந்தி` என்பது, நான்கடிகளிலும் சந்தி நகர ஒற்று தொகுக்கப்பட்டு நின்றது. ``அடிக்கு, நந்திக்கு`` என்னும் நான்கன் உருபுகள் `அடியை வணங்குதற்கு, நந்தியைச் சிந்தித்தற்கு` என வினை பற்றி நின்றன. `பூவினைச் சென்றான், கடைக்குச் சென்றான்` என்பனபோல.
இதனால், ஞான குரு தரிசனமே மானுடப் பிறப்பின் பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடந் தீர்த்து பயங்கேடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`கருடோகம் பாவனையால் விடம் நீங்குவது போல்ச சிவோகம் பாவனையால் மும்மலங்களும் நீங்கும்` என்பது இதன் திரண்ட பொருள். சிவோகம் பற்றி முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. கருடோகம் பாவனை, சிவஞான போத ஒன்பதாம் சூத்திர பாடியத்துள் இனிது விளக்கப்பட்டிருத்தல் காண்க. இதனானே, `பாவனை பொய்யன்று` என்பதும் நிறுவப்பட்டதாம். ``கருட தியானத்தால் விடம் அகலும் அதுபோல``8 எனச் சிவஞான சித்தியிலும் சொல்லப்பட்டது. ``அவன்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக. ``அவன்`` என்றது பாவிப்பவனை.
இதனால், குருத்தியானமே சிவோகம் பாவனையாதல் கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்`` என்னும் மந்திரம், மூன்றாம் தந்திரத்து, `கால சக்கரம்` அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 6

தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும்
மான்ற அறிவும் மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.

பொழிப்புரை :

தோன்ற அறிதல் - பொருள்களை இனிது விளங்கத் தெளிய உணர்தல். தோன்றல் தோன்றாமை - விளங்கவும் விளங்காமலும் ஐயமாக உணர்தல். மான்ற அறிவு - யாதும் அறியாது அறிவு மூடமாதல். இவையே மறித்து மறித்து வரும் நனவு கனவு உறக்கங்களாம். இம்மூன்றும் நீங்கிய நான்காம் நிலை துரியம் அது மூன்று வகையாய் நிகழும். (அவை முன் தந்திரத்தில், `முத்துரியம்` என்பதில் காட்டப்பட்டன. அம்மூன்று துரியங்களும் நீங்க, ஐந்தாவதாகிய அதீதத்தில் ஞான குருவை உணர்பவன் (மேற்கூறியவாறு கருடோகம் பாவனை செய்பவன் கருடனே யாதல் போலக்) குருவேயாகிவிடுவான்.

குறிப்புரை :

`மலம் நீங்கிய முத்தனாய் விடுவான்` என்பதாம். நந்தி நிலையை யடைந்தவனையே ``நந்தி`` என்றார். ``உயர் மோனந்தான்`` என்றது `ஞானகுரு` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், `துரிய பாவனை முதிர, அதீதபாவனையால் பாவகன் பாவிக்கப்படும் பொருளாகிவிடுவான்` என, மேல், ``சிவன் அவன் ஆம்`` எனக் கூறியது மெய்ம்மையாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சந்திர பூமிக்குள் தன்புரு வத்திடைக்
கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும்
பந்தம் அறுத்த பளிங்கின் உருவினர்
பந்தம் அறுத்த பரம்குரு பற்று.

பொழிப்புரை :

புருடனது உடம்பில் சந்திர மண்டலம் எனக் குறிக்கப்படுகின்ற அந்த எல்லைக்குள்ளேயிருக்கின்ற புருவ நடுவில், நறுமணம் பொருந்திய ஈரிதழ்த் தாமரை மலரில் அருட்சத்தி, பிறிதொரு நிறத்தொடு கூடாது தூய்மையாய் உள்ள படிகம்போன்றிருக்கின்றார். உனது பாச பந்தங்களை முற்ற அறுத்த ஞான குருவை நீ அவ்விடத்திலே தியானி.

குறிப்புரை :

`தியானித்தால் அவர் உன்னைச் சிவனாக்கி விடுவார்` என்பது குறிப்பெச்சம். ஞான பூசைக்கு ஓமத் தானம், பூசைத் தானம், தியானத் தானம் முறையே உந்தி, இதயம், புருவநடு ஆதலின், `தியானத்தைப் புருவ நடுவிலே செய்க` என்றார். புருவ நடுவே `ஆஞ்ஞை` எனப்படும். ஆஞ்ஞை, சிவனது ஆணை. அது சத்தியேயாதலை உணர்க. `இரண்டிதழ்க் கந்த மலரில்` என மாற்று. ``கன்னியும்`` என்னும் உம்மை சிறப்பு. பரம் குரு - மேலான குரு.
இதனால், கருடோகம் பாவனைபோலக் குருவைப் பாவகன் தானாகப் பாவித்தலைச் செய்யும் இடம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மனம்புகு தான்உல கேழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க
சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே

பொழிப்புரை :

`ஏழுலகங்களிலும் உள்ள உயிர்கள் மகிழும்படி அவைகளின் மனத்தினுள் இருப்பவனும், நீண்ட வானுலகத் தேவரையும், மண்ணுலக மக்களையும் அருள்புரிந்து காக்க வேண்டிப் பல தலங்களில் எழுந்தருளியிருப்பவனும். பாவத்திற்கு அஞ்சாது உலகிற்குக் கொடுமையை விளைப்பவர் யாராயினும் அவர்கள் அஞ்சி நடுங்கும்படி சினம் கொள்கின்றவனும், காட்டை இடமாகக் கொண்டு ஆடல் புரிகின்றவனும் ஆகிய ஒருவனது இருப்பிடம் இப்பெரு நிலத்திற்கு வடக்கெல்லையாகிய இடத்தில் உள்ளது` என்று அறிந்தோர் சொல்லுவர்.

குறிப்புரை :

கயிலை மலையை இவ்வாறு குறிப்பாற் சுட்டினார் `நகர்` என்பது இறைவன் இடத்தைக் குறிப்பதுபோலவே, `ஊர்` என்பதும் அவனது இடத்தைக் குறிக்கும்.
``பணியியர் அத்தைநின் குடையே, முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே``
என்னும் புறப்பாட்டில், இறைவனது இடம் `நகர்` எனச் சொல்லப் பட்டது. `இறைவனாவான் சிவன் ஆதலின், `ஊர்` என்பது அவன் இயல்பாக இருக்கும் இடமாகிய கயிலாய மலையைக் குறிக்கும்` என்னும் கருத்தினால், ``ஊர்க் கோட்டம்``9 எனச் சிலப்பதிகாரம் கூறியதற்கு அரும்பத உரையாசிரியர், `ஷ்ரீ கைலாயம் நிற்கும் கோயில்` என்றும், பொருள் உரைத்தமை இங்கு அறியற்பாலது. ஞான குரு தரிசனத்தில் இதனைக் கூறியது `கயிலை மலையில் தென்முகக் கடவுளாய் இருந்து நால்வர் முனிவர்க்கு ஞானத்தை நால்வர் முனிவர்க்கு ஞானத்தை அளித்த முதலாசிரியன் சிவனே` எனவும், `ஆகவே, உலகில் ஞானத்தை அருளும் ஞானாசிரியர் யாவரும் அவனாகவே கொள்ளற்பாலர்` எனவும் உணர்த்தற் பொருட்டாம்.
``யோகியார் யோக முத்தி உதவுத லதுவும் ஓரார்``l என்னும் சிவஞான சித்தியும் தென்முகக் கடவுள் வடிவத்தையேயாதல் அறிக. இரண்டு மூன்றாம் அடிகளில் அநுக்கிரக நிக்கிரகங்களைச் செய்வோன் ஆதலையும், முதலடியில் அவற்றை அவன் உயிர்களோடு அத்துவிதமாய் நின்று செய்தலையும் குறித்தார். ``உலகு`` என்றது உயிர்களை மகிழ்தற்குரியன அவையேயாகலின்,
``வானிடத் தவரும் மண்மேல் வந்து
அரன்றனை அற்சிப்பர்``8
ஆகலின் நிலவுலகத் தலங்கள் அவர்களது நன்மைக்காகவும் இருத்தலையறிக. இரண்டாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிரெதுகை பெற்றதுமாம்.
இதனால், இவ்வுலகத்து ஞான குரவரெல்லாம் தென்முகக் கடவுளாதலைக் கூறுமாற்றான், அவரது தரிசனத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும்
தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன
தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில்
தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.

பொழிப்புரை :

சார்ந்ததன் வண்ணமாம் தனது இயல்பினால் ஐந்து உடம்புகளைச் சார்ந்து அவையேதானாய் நிற்கின்ற பறவையாகிய உயிர் அது சென்ற திரியும் காடாகிய சொல்லுலகத்தில் `பதினாறு பாகளை உடைய ஒரு நல்ல வழியைக் கண்டு நடக்குமாயின், அது சிவமாம் தன்மையை அடையும், இனி, அஃதேயன்றி, அப்பறவை சிவமாதற்குப் பத்து படிகளையுடைய வேறொரு வழியும் உண்டு.

குறிப்புரை :

ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தே காட்டப் பட்டன. அவை பறவைகளின் உடம்பாகவும், அவற்றில் உள்ள உயிர் பறவையாகவும் உபநிடதங்களில் உருவகிக்கப் படுதலும் மேலே கூறப் பட்டன* சொல்லுலகமாவது மொழி மொழி வாயிலாகவே உயிர் உலகத்துப் பொருள்கள் பலவற்றையும் மிக விரைவாக, மாறி மாறி உணர் கின்றது. அதனால், மொழியை உயிராகிய பறவை பறந்து திரியும் காடாக உருவகித்தார். ஆயினும் உயிருக்கு உறுதி பயக்கின்ற மந்திரங்களும் அந்தச் சொல்லுல கிலேதான் உள்ளது. ஆதலின் அவற்றை அந்தக் காட்டில் கிடைக்கும் வழியாக வைத்து, அவற்றுட் சிறந்த சோடச கலாப் பிராசாத மந்திரத்தைப் பதினாறு படிகளையுடைய நல்ல வழியாகக் கூறினார். `தசாங்கம்` என்றது தச காரியத்தை. பிராசாத யோகம் யோகமாய் நிற்க, தச காரியம் ஞானம் ஆதல் பற்றி அவற்றின் வரிசையை ``வேறுள்ளது`` என்றார். இனி, ``சோடச மார்க்கம்`` என்பதை, `சரியை -யிற் சரியை, சரியையிற் கிரியை முதலிய பதினாறு` என்பாரும் உளர். இங்கு விளக்கப்படுவது ஞானம் ஒன்றேயாகையாலும், பிரிசாத யோகம் ஞானயோகமே ஆதலாலும் அவர் கூறும் பொருள் சிறவாமை அறிக.
பிராசாதயோகம், தச காரியம் - இவற்றை அவ்வந் நூல்களிற் காண்க.
``தான்`` நான்கில் முன்னிரண்டும்` ஆன்மாவால் சாரப்படும் பொருள். பின்னிரண்டும் சிவம். `வண்ணத்தோடும்` என உருபு விரிக்க. ``சார்தரும்`` என்பது, `சார்தந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `வனம் எனத் தக்கனவற்றில்` என ஏழாவது விரிக்க. `சோடசத்தையுடைய மார்க்கம்` என்க. மூன்றாம் அடியில் உள்ள ``ஆன`` என்னும் பெயரெச்சம், ``மார்க்கம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``ஆன்`` என்னும் இரண்டு இறந்த காலங்களும் முன்னை நிகழ்ச்சி வாயிலாக முக்கால நிகழ்ச்சியையும் குறித்தவாறு.
இதனால், `ஞான குரு தரிசனத்தால் உயிர் உய்யும் வழியை உணரும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மருவிற் பிரவறி யான்எங்கள் நந்தி
உருவம் நினைக்கின்நின் றுள்ளே உருக்கும்
கருவிற் கலந்துள்ளம் காணவல் லார்க்(கு) இங்(கு)
அருவினை சோரும் அழிவார் அகத்தே.

பொழிப்புரை :

ஒருவரை அணுகிவிட்டால், பின்பு அவரை விட்டு ஒருபோதும் நீங்குதல் இல்லாதவர் எங்கள் நந்தி பெருமான். அந்நிலையில் அவரது திருவுருவத்தை உள்ளே நினைத்தால், நினைக்கின்ற உள்ளங்களை அஃது உருக்கிவிடும். அதனால், அங்ஙனம் உருகிய உள்ளம் உடையவர்கள் அவரிடத்தே ஒடுங்கி, அவரது அருள் கண்ணாகவே எதனையும் காண்பர். அங்ஙனம் காண வல்லார் முன்பு அவரது பிராரத்த வினை இவ்வுலகத்தில் மிகவும் மெலிந்து விடும். (உயிரைத் தாக்காது, உடல் ஊழாய்க் கழியும்` என்பதாம்.) அதனால், அவர் தியானித்த அந்த உருவத்திலே அடங்கித் தற்போதம் அற்றிருப்பர்.

குறிப்புரை :

`அதனால், அவர்க்குப் பின்னை வினையாகிய ஆகாமியமும் உண்டாகாது` என்பதாம் கரு - முதற்பொருள் தாக்க வரும் வினை தாக்க மாட்டாது மெலிதல் பற்றி, ``வல்லார்க்குச் சேரும்`` என தாக்கப்படுவோர்க்கு நான்கன் உருபு கொடுத்துக் கூறினார்; அவனை `அவனுக்கு இவன் இளைத்தான்` என்பது போலக் கொள்க. அரு - சூக்குமம். பிராரத்தம் யாரும் அறியாதபடி வருதாதல் அறிக. `அருவிகண் சோரும்` என்பதும் பாடம்.
இதனால், `ஞான குருவாய் வந்து ஞானத்தைத் தந்த சிவன் பின்பு நீங்கான் ஆதலின், ஞானியரும் அவனை விடாது பற்றி வினை திரப்பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை
அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பட நாடி நினைப்பற உள்கின்
தலைப்பட லாகும் தருமமுந் தானே.

பொழிப்புரை :

எங்களது மெய்ப்பொருளாகிய சிவனைப் பலரும் அடையலாம். ஆயினும், அதன்பின்பும் அலைகள் போல வந்து வந்து தாக்குகின்ற பாசங்களை அவ்வப்பொழுது அவை தாக்காதபடி அறுத்தறுத்துப் போக்கி, அடைந்த அடைவு நிலைப்பில் நிற்கமாற்றை ஆராய்ந்து, தற்போதம் தலையெடாதபடி குறிக்கொண்டிருந்தால், அடைந்தது அடைந்ததாகவேயிருக்கும். அதுவே சிவனை அடைந்தவர்க்குரிய தருமமும் ஆகும்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்து நிலைத்திருத்தல் அரிது` என்பதாம். இது பற்றியே ஞானம் பெற்றோர் தம் ஞானாசிரியரது அடி நிழலைப் பிரியாது உறைவர் என்க. அதிதீவிர நிலையை உடையவர்க்கு இவ்வாறான இடர்ப்பாடு தோன்றாது. ஏனையோர்க்கு இவை தோன்றும். அதனையே அருணந்தி தேவர்
``நேசமொடும் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நிலையுடையோர் நின்றிடுவார் நிலையதுவே ஆகி;
ஆசையுடன் அங்கும் இங்கும் ஆகி அலமருவோர்
அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி உரைப்பாம்.3
என்றார். மெய்ப்பொருளைத் தலைப்பட்டும் அதிலே நிற்கமாட்டாது மீளப்பிறவியிற் செல்வோரைக் கருதியே திருவள்ளுவர், ``தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்``9 என்றார். பின்னர் நிற்கும் நிலை, கழைக் கூத்தர் கரணம் இடுதலும் கயிற்றின்மேல் நடத்தலும், குடநீரைத் தலையிற்கொண்டவன் கையிரண்டையும் வீசி நடத்தலும் போலும் அருஞ்செயலாதல் பற்றி முதற்கண், ``தலைப்படலாம் எங்கள் தத்துவன்றன்னை`` என எளிது போலக் கூறினாராயினும் அதுவும் எளி தன்று என்பது வெளிப்படை. தருமம் கடமை. ``அவர்க்குத் தருமமும் ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. அது செய்யாவழித் தீங்கு வருதல் பற்றி, ``தருமம்`` என்றார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், ஞானத்தைப் பெற்றுவிட்டவர்க்கும் ஞானகுரு தரிசனம் இன்றியமையாததால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.

பொழிப்புரை :

சிவபெருமான், தன்னை நினைத்தால், நினைப்பவரைத் தானும் நினைப்பான். (நினைத்து, அவரை மேன்மேல் உயரச் செய்வான்) அதனால், சுனைக்குள்ளே மலர்ந்த ஒரு தாமரை மலரின்மேல் எழுகின்ற சோதிபோல இருதய கமலத்திலே ஒளிவடிவாய் விளங்கும் அப்பெருமானை `அடைதல்` என்பது மனத்தால் அடைதலேயாதலின் அவ்வாறு அவனை முதிர்ந்த அன்பால் அடைந்தவர், உலகியலில் எத்துணைச் சிறுமையராய் இருப்பினும், உயர்ந்தோரினும் உயர்ந்தோரேயாவர்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவரை அடைந்தோரும் உயர்ந்தவரே` அவரை அடைந்து பயன் பெறுதலே அறிவுடைமையும், அங்ஙனம் செய்யாது, உலகியல் பற்றி அவரைப் புறக்கணித்தல் அறியாமையும் ஆம்` என்பது கருத்து. `கொப்பூழ் அடியாகத் தோன்றிட தண்டின்மேல் மலரும் மலர் இருதயம்` எனச் சொல்லப்படுவதால், அதனை, `சுனையின் விளைந்த மலர்`` என்றார். அச்சோதியினை` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. `தினை, பனை என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டப்படும் சில அளவைகள்9 பரிமேலழகர் உரை. ஆதலின், சிறுமையை, ``தினைப்பிளந்தன்ன சிறுமையர்`` எனக் குறித்தார். பகர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது களத்தல் முதிர்தல். அஃது இங்கு அன்பு முதிர்தலைக் குறித்தது.
இதனால், `உயர்ந்தோரினும் உயர்ந்தோராவர் ஞான குரவரே` என்பது கூறும் முகத்தால், அவரது தரிசனத்தின் உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தலைப்படுங் காலத்துத் தத்துவன் றன்னை
விலக்குறின் `மேலே விதி`என்று கொள்க
அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை
நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே.

பொழிப்புரை :

சிவனை மனத்தால் அடைந்து நிற்கும் பொழுது இடையே அதனை நீக்குகின்ற ஊறு ஏதேனும் தோன்றுமாயின், அதனை, `இது நாம் முன்பு செய்த வினையினின்றும் முகந்து கொண்டு வந்த பிராரத்தத்தின் விளைவு` என அறிக. அங்ஙனம் அறியுமிடத்து, `அந்தப் பிராரத்தம் தானே வரும் சுதந்திரம் உடைத்தன்று; சிவனே அதனைக் கூட்டுவிக்கின்றான்` என உணரவல்லவர், அதனாலும் சிவபத்தி செய்பவராயே விளங்குவர்.

குறிப்புரை :

வினையை நுகர்வோர் ஆகார்; அதனால், அந்தப் பிராரத்தம் கட்டாயமாக விளைத்துச் செல்லும் ஆகாமியத்தையும் விளைக்கமாட்டாது உடல் ஊழாய் ஒழியும்` என்பதாம்.
``நின்னைஎப் போதும் நினையலொட்டாய் நீ;
நினையப்புகின்,
பின்னைஅப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று
நாடுவித்தி``9
எனப் பிராரத்த விளைவிலும் சிவனையே நினைந்தவாற்றை உணர்க. `தத்துவன் றன்னைத் தலைப்படும் காலத்து` என மாற்றியுரைக்க. விதி - பிராரத்தம் விதியை விளைவை, ``விதி`` என்றும், அயர்வொழிந்து நிற்றலை, ``நேடி`` (தேடி) என்றும் கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்று வந்தது.
இதனால், ஞானியர் பிராரத்தத்தால் தாக்குண்ணாது நிற்குமாறு கூறப்பட்டது. இவ்வாறு நிற்பவர் ஞானகுரு என்பதாம்.

பண் :

பாடல் எண் : 14

நகழ்வொழிந் தார்அவர் நாதனை உள்கி
நிகழ்வொழிந் தார்எம் பிரானொடுங் கூடித்
திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தியனுள்ளே
புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே.

பொழிப்புரை :

`யான், எனது` தன்முனைப்புக் கொண்டு தருக்குதலை ஒழிந்து, `எல்லாம் அவனே` என்று அடங்கி யிருப்பவர்களது அறிவினுள்ளே சிவன் நின்று எல்லாக்கலைகளாலும் புகழப்படுகின்ற தனது திருவருள் நெறியையே விளக்கி நிற்பான். அதனால், அவர்கள் அவனையே அறிந்து நிற்றலால் அத்திருவருள் நெறியைவிட்டு அப்பால் நகர்தல் இல்லை. மற்றும் அவனிடத்திலே அழுந்தி நிற்றலால் பிறவிக்குரிய நெறியில் சென்று பிறப்பதில்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. நகழ்வு - நகர்வு. திகழ்வொழிந்தாரைச் சுட்டுவதாகிய ``அவர்`` என்னும் சுட்டுப் பெயர் செய்யுளாகலின் முன் வந்தது. `நாதனை உள்கி நகழ் வொழிந்தார்; எம்பிரானொடுங் கூடி நிகழ்வொழிந்தார்` என்க. ``உள்கி, கூடி`` என்னும்`` செய்திகள் எச்சங்கள் காரணப் பொருளாவாய் நின்றன. (கற்றுப் பெரியன் ஆயினாள் என்பதிற் போல`. ``காட்டிப் புகுந்து நின்றான்`` என்பதை, `புகுந்து காட்டி நின்றான்` எனப் பின்முன்னாக வைத்துரைக்க.
இதனால், `ஞான குரவர் ஏனையோர் போலவாரல்லர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வந்த மரகத மாணிக்க ரேகைபோய்ச்
சந்தித் திடும்மொழி சற்குரு சன்மார்க்கம்
இந்த ரேகை இரேகை இலாடத்தின் மூலத்தே
சுந்தரச் சோதியுட் சோதியும் ஆமே.

பொழிப்புரை :

ஞான குரு காட்டும் ஞானநெறி, அன்று அயன் மால் தேடும்படி வந்த, மரகது மணியொளிவும் மாணிக்க மணி யொளியும் சேர்ந்த ஓர் ஒளிவடிவை அடையும் உபதேச மொழியே யாம். அந்தமொழியின் பொருளே மூக்கின் அடி இடமாகிய புருவ நடுவில், ஆன்மாவின் அறிவினுள் அறிவாகத் தியானிக்கப்படும் ஒளியுமாகும்.

குறிப்புரை :

``மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்``3
என்பதனால், அயன், மால் இவர்கட்டுமுன் ஒளிவடிவம் பச்சை நிறமும், செம்மை நிறமும் விரவிய ஒளியாய் இருந்தமை அறியப்படும் முதற்பொருள் `சத்தி, சிவம்` என இருதிறப்பட்டு இயைந்து நிற்றலை இந்நிறங்கள் குறிக்கும்.
``அழகாயும், மெய்ம்மையாயும் உள்ளவனும்,
பரப்பிரம்மம் - என்று பேசப்படுபவனும்,
உயிரினுள் இருப்பவனும், கருமை நிறமும்,
பொன்னிறமும் கலந்த உருவத்தை உடையவனும்,
மேல்நோக்கி பாயும் வீரியத்தை உடையவனும்,
மாறுபட்ட கண்களை யுடையவனும்,
உலகத்தைத் தன் வடிவமாகக் கொண்டவனும்
ஆகிய அவனுக்கு வணக்கம்! வணக்கம்!!*
என வேதமும் கூறிற்று. இரேகை - ஒளி. ``எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய``* என்பது பற்றித் தொகைச் சொல் இடையில் ரகர லகர முதல் ஆரியச் சொற்கள் முதற்கண் அகர இகர உகரங்களில் யாதும் பெறாது வருதலைக் `குற்றம்` என்றல் இல்லை. அதனால் ``மாணிக்க ரேகை`` என்றே வந்தது. ``மரகத மாணிக்க ரேகை`` என்னும் மும்மொழித் தொகைச் சொல் முதல் இருமொழிகள் உம்மைத் தொகையாய்ப் பின்பு `ரேகை` என்பதனோடு ஆறாம் வேற்றுமைத் தொகையாய்த் தொக்குப் பின்பு விடாத ஆகுபெயராய், அவற்றையுடைய ஓர் ஒளியைக் குறித்தது` ``வந்த`` என்பது, அயன், மால் இவர்முன் வந்த` என ஆற்றலாற் பொருள் தந்தது. `ரகையைச் சந்தித்திடும்` என இயையும். இவ்விரேகையை, ``சிவ`` என்னும் மந்திரம் உணர்த்து -மாறும், அதுவே உபதேசம் ஆமாறும் உணர்க. ``மூலம்`` என்றதை, `நாசியின் மூலம்` எனக் கொள்க. சுத்தான்ம அறிவை, ``சுந்தரச் சோதி`` என்றார்.
இதனால், ஞான குரு உபதேசம் பரசிவத் தியானத்தை உணர்த்திப் பயன் பெறச் செய்தல் கூறும் முகத்தால், அவரது தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது
மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய்
விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.

பொழிப்புரை :

நிலம் முதலிய பூதங்கள் ஐந்தையுமேயன்றி, அவை தோன்றியொடுங்கும் இடமாகிய மூலப் பகுதியையும் கடந்து அறிவேயான ஞானியரது உடம்பில், யோகத்தால் கருதியுணரப் படுகின்ற கடவுள் இருப்பது, உணவை உண்கின்ற வாய் முதலிய உறுப்புக்கள் அவற்றையுடைய, உடம்பு அதனுள்ளிருக்கும் உயிர் ஆகிய அனைத்திலும் ஒன்றாய்க் கலந்தேயாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. அருவமாதல் பற்றி மூலப் பகுதியை ``விண்`` என்றார். இங்குக் குறிப்பது சகலரையேயாதலின் அவருக்குரிய மூலப் பகுதியை மட்டுமே கூறினார். எனினும், உபலக்கணத்தால் அசுத்த மாயையும் கொள்ளப்படும். வெளியாதல் - விடுபடுதல். மாயையினின்றும் விடுபடுதலாவது, அவற்றின் காரியங்களைத் தாமாக மயங்காது, தம்மை அவற்றின் வேறாக உணர்வில் நிலைபெற்றிருத்தல் அத்தகையோர் மாசுடையாராகாது தூயராகலின், அவரது உடம்பும் தூயதாக, அதன் கண்ணும் சிவன் விளங்குவான்` என்க. இது பற்றியே,
``... ... நிலாவாத புலால் உடம்பே புகுந்துநின்ற
கற்பகமே``3
எனவும்,
``எந்தையே! ஈசா! உடல்இடம் கொண்டாய்;
யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே``l
எனவும் திருமொழிகள் எழுந்தன என்க. `மேனியில்` என ஏழாவது விரிக்க. உடம்பு நிலைபெறுதற்கு உணவு இன்றியமையாதாதல் பற்றி அதனை உண்ணும் உறுப்புச் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது. கண்ணல் - கருதல்.
``இருப்பது`` என்ற வினைப்பெயர் அத்தொழில் மேல் நின்றது ஆதலின், அவ்வெழுவாய்க்கு, ``ஆய்`` என்ற வினையெச்சம் பயனிலையாயிற்று. `ஒருவன் உயர்வது உழைத்து` என்பதிற்போல.
``மாயோகக் கடவுள்`` என்றது, தென்முகக் கடவுளையே என்பர்.
இதனால், ஞானிகளது திருமேனியைச் சிவன் தனதாகக் கொள்ளுதல் கூறும் முகத்தால், குரு தரிசனம் சிவ தரிசனமேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால்
பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு)
உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.

பொழிப்புரை :

வேதாகமங்களால், `பதி` என்று போற்றப்படுகின்ற பரமசிவனது திருவாணை எவ்வுலகிலும் தடையின்றிச் செல்லும். அதில் ஒரு கூற்றினால் முன்னுள்ள அடியார்களை அவன் தானாகச் செய்து, மற்றொரு கூற்றினால் பின்னுள்ள அடியார்களுக்காகப் பலவகையான உலகங்களைப் படைத்து வைத்துள்ளான்.

குறிப்புரை :

பரசுதல் - துதித்தல். அதற்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `பதியென்று பரசு பரசிவன் ஆணை பார்முழுதெல்லாம் நடக்கும்` என இயைக்க. `பாதி` என்றது கூறு` என்னும் பொருட்டாய் நின்றது. ஆணை - சத்தி. அதன் ஒரு கூறு` திரோதான சத்தியாய் நின்று உலகைச் செயற்படுத்தும் மற்றொரு கூறு அருட் சத்தியாய் நின்று உயிர்களைச் சிவத்தோடு சேர்த்துச் சிவமாக்கும். இதனையே இம் மந்திரத்தாற் கூறினார். இரண்டையும் புடைபடவைத்துக் கூறியது இவ் விடத்திலேயாகும். எண்ணுப் பெயர்கள் இரட்டிக்குமிடத்து, ஒவ் வொன்று. இவ்விரண்டு, மும்மூன்று என்பன முதலாக வருதல் போல, ``பாதி பாதி`` என்பது ``பப்பாதி`` என வந்தது. அதனுள் ஒவ்வொன்று, `பதி செய்தல், பார் ஆக்கல்` என்பவற்றோடு வேறு வேறு சென்றியைந்தது. பின் ஆம் அடியார் - பின்பு தான் ஆதற்கு உரிய அடியார். எனவே, `முன் ஆம் அடியார்` என்பது தானே பெறப்பட்டது. பின் வந்த `பதி, வாழும் இடம். `பதியாகிய பாரினை ஆக்கியும் நின்றான்` என உம்மையை மாற்றியுரைக்க.
இதனால், `ஞானகுரு, பர சிவனால் பதியாக்கப்பட்டவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அம்பர நாதன் அகலிட நீள்பொழில்
தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.

பொழிப்புரை :

மக்கள் நிலவுலகத்துள்ளாராயினும் அவர்கள் எங்கள் சிவபெருமானது திருவருளைப் பெற்றிருக்கின்றார்கள் ஆகையால், அவர்கள், `அகன்ற இடத்தையுடைய அனைத் துலகங்களும் சிதம்பர நாதன் ஆகிய அவனது ஆணைவழியல்லது பிறவாற்றால் நடத்தலைத் தாங்கள் அறியவில்லை` என்று கூறுகின் றார்கள். அஃதாவது, `அவன் அன்றி ஓர் அணுவும் அசைதலைக் காணவில்லை` என்கின்றார்கள். தேவரும் மக்களுக்கு மேலிடத்துள் ளாராயினும் இந்த உண்மையை அவர்கள் உணர்ந்திலர்.

குறிப்புரை :

`காரணம், அவர்கள் எம்பெருமான் அருள் பெறாமை` என்பதாம்.
``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற் கருளினை போற்றி!``
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்``
``புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாளும்
போக்குகின் றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி ... ... [திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்தமெய்க் கருணையும், நீயும்
அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``3
என்னும் திருமொழிகளும் இக்கருத்தே பற்றி எழுந்தன.
மக்கள், `யாம் மானுடர்; சிவன் கடவுளர். ஆகவே அவன் நமக்கு அருள்புரிதல் வேண்டும்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையவர். அதனால், அவர்களில் முயற்சியுடையோர் அவனது அருளைப் பெறுகின்றனர். தேவர், `நாமும் தேவர், சிவனும் தேவர்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையர். அதனால் அவர்களுள் அவன் அருள் பெறுபவர் அரியர் ஆகின்றனர். சிலர் பெற நினைப்பினும் தாழ்வெனும் தன்மை வருதற்பொருட்டு மண்ணுலகில் வந்து வழிபட்டே சிவன் அருளைப் பெறுகின்றனர்.
``வானிடத் தவரும் மண்மேல்
வந்து அரன்றனை அற்சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ``9
என்னும் சாத்திர மொழியைக் காண்க.
``அகலிடநீள் பொழில்`` என்பதை முதலிற்கொள்க. அம்பரம் சிறப்புப் பற்றி, சிதம்பரத்தைக் குறித்தது. `தாம் என்பர்` என இயையும். உம்பர் - மேலிடம். ``உம்பர்`` என்றதனால், `இம்பர்` என்பது பெறப்பட்டது. மூன்றாம் அடியை இறுதியிற் கூட்டுக. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், `சிவன் அருள் பெறாதார் சிவனது மேற்கூறிய இயல்பை உணர்தல் இயலாது` என்பது கூறப்பட்டது. `அதனாலே ஞான குருவின் பெருமையையும் அவர்கள் அறியார்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 19

கோவணங் கும்படி கோவண மாகிப்பின்
நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான்
தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம்
போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே.

பொழிப்புரை :

எங்கள் ஞான குருவாகிய நந்தி பெருமான் எங்களுடைய நாங்கள் எங்களையே புகழ்ந்து கொள்ளும் இயல்புடையனவாய் இருந்த நிலையை மாற்றித் தமக்கு வணக்கங் கூறுவன ஆகும்படி அருள்புரிந்தார். அதனால், பின்பு எங்கள் அறிவுகள் தெளிவுடையன ஆகப் பெற்றோம். ஆகி, தேவர்கோவும் மக்கட் கோக்கள் பலரும் வணங்கும்படி `கோவணமும் மிகையே` என்னும் மனப்பான்மையுடன் துறவுக் கோலத்தை உடையர் ஆயினோம். யாவரும் பல அரிய சாதனங்களின் வழியே சென்று அடையப்படும் பொருளாகிய சிவமேயாய் இருக்கின்றோம். ஆகவே இனிப் `பிறிதொரு தெய்வத்தை வணங்குதல்` என்பது எங்கள்பால் நிகழாது.

குறிப்புரை :

`நந்தி, நா வணங்கும்படி அருள் செய்தான்; பின் சித்தம் தெளிந்தனம்; கோ வணங்கும்படி கோவணம் ஆகிப் போய் வணங்கும் பொருளாகி யிருந்தோம்; இனித்தே வணங்கோம்` என இயைத்துக் கொள்க.
நா வணங்குதல் கூறவே, ஏனைத் தலையும், உள்ளமும் வணங்குதலும் உடன் கொள்ளப்படும். ஈற்றடி ஆசிடை எதுகை.
இதனால் ஞான குரு தரிசனத்தால் விளையும் பயன் தம் அனுபவ்தில் வைத்துக் காட்டி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.

பொழிப்புரை :

வேதங்களில் உயர்த்துச் சொல்லப்படுகின்ற பிரணவ மந்திரம் மெய்ப்பொருள் இன்பத்தைப் பொதுவாக விளக்கும் தூல மந்திரமேயாம். (அஃது அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாகவே சொல்லப்படுகின்றது. அக்கரங்கட்கும் அத்தியான்மிக சத்திகள் உண்டு. எனினும் அவை வேத வேதாந்தங்களில் சொல்லப் படவில்லை. ஆகவே அத்தியான்மிக சத்திகளையுடையனவாகச் சொல்லப்படுகின்ற சீபஞ்சாக்கரமே (திருவைந்தெழுத்தே) சூக்கும மூல மந்திரமாகும். (இது பிரணவத்தை நோக்கி, `சூக்குமம்` எனப்பட்டது) இனித் திருவைந்தெழுத்திலும் மிகச் சூக்குமமானது ஞான குரு தமது கையால் காட்டுகின்ற சின்முத்திரை. இவற்றுள் முதற்கண் சொல்லப்பட்ட பிரணவ யோகம் வேதாந்த முறையாம்.

குறிப்புரை :

எனவே, சீபஞாசாக்கர யோகமும், அதன் பொருளைச் சின் முத்திரையால் உணர்வதும் சித்தாந்த முறை` என்பது அருத்தா பத்தியால் பெறப்பட்டது. பஞ்சாக்கர யோகமாவது பஞ்சாக்கரத்தைச் சுத்தமானதாக அறிவாற் கணித்தலாம். சின்முத்திரையை உணர்தல் அனுபவமாம். ``பிரணவம்`` என்பதை முதலிற் கூட்டுக. சொரூபம் - மெய்ப்பொருள். `தூலப் பேருரை` என இயையும். மூல மந்திரம், ``பேருரை`` எனப்பட்டது. திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு கூட்டிச் சொல்லுதல் `ஆறெழுத்து மந்திரம்` எனப்படும். ஆறெழுத்தைச் சிகாரம் முதலாக வைத்து நோக்கி, பிரணவத்தை, `பரன்` என்றும், சிகாரம் முதலிய ஐந்தையும் முறையே `ஈசானம் முதலிய பஞ்சப் பிரமங்களின் சத்தி` என்றும் சிவாகமங்கள் கூறும். ஈசானம் முதலிய ஐந்தின் சத்திகள் முறையே `ஈசானி பூரணி, ஆர்த்தி வாமை, மூர்த்தி` எனப் பெயர் பெறும். இச்சத்திகள் ஐந்தும் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டுமாகிய கலைகளை (கூறுகளை) உடையன. இந்த முப்பத்தெட்டுக் கலைகளின் வடிவமாகவே சதாசிவ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவையெல்லாம் சிவாகமங்களிலும், சைவ பத்ததிகளிலும் காணத்தக்கவை. இந்தப் பஞ்ச சத்திகளையே நாயனார் இங்கு, `மேலைச் சொரூபப் பெண்`` என்றார். எனவே, `அக்கரங்களாகச் சொல்லும் வேதாந்தத்திலும், சிவசத்திகளாகச் சொல்லும் சித்தாந்தம் நுட்பமானது` என்பதை, ``பாவித்த சூக்குமம்`` என்றார். பாவித்த - மறைபொருளாக வைத்துக் காக்கப்பட்ட. சின்முத்திரையில் பெருவிரல் `சிவ` என்பதையும், சுட்டு விரல் `ய` என்பதையும், நடுவிரல் `ம` என்பதையும் ஏனை ஆழிவிரல் சிறுவிரல்கள் கன்மம் மாயைகளாய் `ந` என்பதையும் குறிப்பனவாம். ஆலித்தல் - உருப்படுதல். விரைவில் கரைவதாகிய பனிக்கட்டி (கல்மழை) அவ்வாறு கரைவதற்குமுன் `ஆலி` எனப் பெயர்பெற்று நிற்கும். ``காரணம்`` என்றது, `அதி சூக்குமம்` என்றபடி.
இதனால், ஞான குரு தரிசனத்தால் கிடைக்கும் பிரணவ யோகம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என மூன்றாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

பொழிப்புரை :

வேதாந்த சித்தாந்த ஞான குரவர்கள் ஒரு வார்த்தையாகச் சொல்லுகின்ற உபதேச மொழிகளும், சிவன் கொள்ளு கின்ற உருவம், அருவம். அருவருவம் என்கின்ற மூவகைத் திருமேனி களும், பலவகை மொழிகளும் ஆகிய எல்லாம் `ஓம்` என்பதாகிய பிரணவத்தில் உள்ளனவேயாம். அதனால் பிரணவயோகத்தால் சித்தி முத்திகள் யாவும் கிடைக்கும்.

குறிப்புரை :

`சொல்லுலகங்கள் யாவும் பிரணவத்தின் காரியமே` என்பதாம். ஓங்காரம் நான்கும் `பிரணவம்` என்னும் அளவில் வாளாபெயராய் நின்றன. ஒருமொழியே மகாவாக்கியமாம். மகாவாக்கியங்கள் முன் தந்திரத்துள் கூறப்பட்டன. `ஒருமொழி` என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப்பன்மை குறித்து நின்றது. முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் `உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. உருவும், அருவும் கூறவே இனம் பற்றி உருவருவும் கொள்ளப்பட்டது. வருகின்ற மந்திரத்துள் `சராசரம்` என வருதலால், இங்குக் கூறப்பட்ட உருவம் முதலியன இறைவனுடைய திருமேனிகளாயின. `திருமேனிகள் ஓங்காரத்தில் உள்ளன` என்றது அவற்றது மந்திரங்களை நோக்கி இறைவனை `மந்திரத்தால் உருக் கோலி`9 எனக் கருதுதல் கிரியா மார்க்க முறை. அருவத் திருமேனியை மந்திரமாகவே உள்குதல் (தியானித்தல்) யோகமுறை `இம் முறைகளால் பிரணவம் சித்தியையும், முத்தியையும் தரும்` என்பதாம். சிறப்பு பற்றி முத்தி முன்னர்க் கூறப்பட்டது. முத்தியையும், சித்தியையும் தருவதை அவையேயாக உபசரித்துக் கூறினார்.
இதனால், பிரணவத்தினது இயல்பும், அதன் வழித்தான யோகத்தின் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.

பொழிப்புரை :

பஞ்ச பூதம் முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியங்களாகிய பலவகை உடம்புகளும் பிரணவத்திலிருந்தே தோன்றின. பிரணவமாகிய அதற்கு அப்பால் உள்ளன மூவகை உயிர்கள், ஆகவே பிரணவமே வடிவான உயிரை, `பரசிவன்` என்றே சொல்லலாம்.

குறிப்புரை :

``உள்`` இரண்டிலும் `நின்று` என்பது வருவிக்க சொல்லாலன்றிப் பொருள்கள் பற்றி `விளங்கிய ஞானம்`3 உண்டாதல் கூடாமை பற்றிச் சொற்களையே பொருளாகக் கூறும் முறை பற்றி அச்சொற்கள் அனைத்திற்கும் மூலமான பிரணவத்தினின்றே பொருள்கள் பலவும் தோன்றினவக்கா கூறினார். எனினும் சித்தாகிய உயிர்கள் ஓங்காரத்திற்கு வேறாதல் பற்றி `அவை ஓங்காரத்திற்கு அப்பால் உற்றன` என்றும், பிரணவத்தைச் செலுத்தி நிற்பது சிவ சத்தியேயாகலின் `பிரணவ வடிவான உயிரை, சிவன் என்றல் கூடும்` என்றும் கூறினார்.
``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்,
ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே``.
என்னும் சிவஞான சித்தயைக் காண்க.9 இதனால் உயிர் தன்னை உணர்தல் பிரணவ யோகத்தின் வழியாதல் விளங்கும்.
இதனால் பிரணவத்தின் சிறப்பும், `அதன்வழித்தான யோகத்தால் உயிர் தன்னை உணர்ந்து, தலைவனையும் உணரும்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை :

`ஓம்` எனச் சமட்டியாகச் சொல்லப்படுவது `பிரணவம்` எனவும் அதனை `அகாரம், உகாரம், மகாரம், விந்து. நாதம் எனப் பெரும்பான்மை ஐந்தாகவும், மற்றும் பலவாகவும் பிரித்து வியட்டியாகச் சொல்லப்படுகின்றவற்றை, `பிரணவத்திற்கு` இனம் எனவும் கூறுவர். அவ் இனங்களை மேல், `கலைநிலை` என்னும் அதிகாரத்தில் காணலாம். * அந்த இனங்கள் ஞான வடிவான பல சத்திகளாகும். சத்திக்கும் சிவத்திற்கும் வேற்றுமையின்மையால் அவைகளை, `ஆனந்த மயமான சிவம்` என்றும் சொல்லலாம். அச்சத்திகள் அண்டத்தில் சரம், அசரம் ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்து நிற்கும். மற்றும் பிண்டமாகிய உடம்பில் ஆறாதாரங்கள் முதலான பல இடங்களிலும் நிற்கும். இத்தன்மைகள் எல்லாவற்றையும் உணர்ந்தவர்கட்கே விரிந்த ஞானம் உளதாகும்.

குறிப்புரை :

இனத்தை, ``வருக்கம்`` என்றார். ``சுகமாம் பிரமம்`` என்பது பெயரெச்சத் தொடர் உம்மை இறந்தது தழுவியதனோடு, சிறப்பு. அதனால் சத்தியாதல் பெறப்பட்டது. ஞாயிற்றைக் குறிக்கும் `அருக்கம்` ஒன்பது `ஒளி` (விளக்கம்) என்னும் பொருட்டாய் நின்றது. மேனி - வடிவம். அது தியான வடிவம். `மேனி உளதாம்` எனவும், `ஞானம் உளதாம்` எனவும் எச்சங்கள் வருவித்து முடிக்க.
இதனால் பிரணவ யோகத்தில் பிரணவ பல கலைகளாய்ப் பிரிந்து நின்று பயன் தருதல் கூறப்பட்டது. அக்கலைகள் சராசரங்கள் அனைத்துமாய் நிற்றலைப் பிராசாத நூல்களில் காண்க.
இனி, இம்மந்திரத்திற்கு வைதிக முறையில் பொருள் கூறுவோர், `வருக்கமாவன` ஐம், க்லீம், ஸௌம், ஹ்ரீம், ச்ரீம்` எனவும், `அவை மூலாதாரம் முதலிய இடங்களில் நிற்கும்` எனவும் கூறுவர். அம்முறை சிறப்புச் சிவயோகமாகிய பிரணவ பிராசாத யோக முறையாகாது, பொதுயோக முறையேயாம். இதனையடுத்து வரும் ``சோடச மார்க்கமும், ஈராறின் அந்தமும்`` என்பவற்றாலும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 5

மலையுமனோ பாவம் மருள்வன வாவ
நிலையின் தரிசனம் தீப நெறியாம்
தலமும் குலமும் தவம் சித்த மாகும்
நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.

பொழிப்புரை :

தன்னறிவாலே தனக்குள் தோன்றும் மலைவுகள் எல்லாம் தெளிவைத் தாராது. மேலும், மேலும் மயக்கத்தையே தரும், இருள் நெறிகளேயாகும். ஆகையால், ஞான குருவின் தரிசனமே நிலையான உணர்வைத் தருகின்ற ஒளி நெறியாம். ஆகவே, தவத்திற் குரிய புண்ணியத் தலங்களும், அங்குள்ள தவத்தோர் கூட்டங்களும், அவரோடு கூடி ஒழுகுகின்ற தவ ஒழுக்கமாகிய நன்மையும் எல்லாம் நன்னெறியை உணர்த்துகின்ற நல்லாசிரியரது உபதேசமே.

குறிப்புரை :

உபதேசத்தின் வழிபட்டனவற்றை `உபதேசம்` என உபசரித்துக் கூறினார். நல்லாசிரியர்தம் உபதேச வழிபட்ட பொழுதே புண்ணியத் தலம் முதலியன உண்மைப் புண்ணியத் தலம் முதலியனவாம்` என்றபடி. `அவற்றைத் தன்னறிவளவிலே தான் அறிந்து கைக்கொள்ளுதல் பயனுடைத் தாகாது` என்பதாம். இங்ஙனம் கூறுமுகத்தானே, `பிரணவ யோகமும் உபதேச முறையான் உணர்ந்து மேற்கொள்ளற்பாலது` என்பது உணர்த்திய வாறு, `சித்தம் தவம் ஆகும் நலம்` என மாற்றிக் கொள்க. தவம் - தவ விருப்பம்.
இதனால், `உண்மைப் பிரணவ யோகம் இன்னது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு)
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து)
ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.

பொழிப்புரை :

ஞானத்தை அடைதற்குரிய வழியை அடைய விரும்புவோர்கட்கு, அவர்கள் ஆதாரயோகத்தின் முடிநிலையாகிய புருவ நடுவையும் கடந்து மேல் ஏறி ஏழாந்தானத்தை அடைந்து உணர்ந்த ஞானத்தினால் நிராதாரத்தையும் கடந்துள்ள ஞேயமாகிய சிவத்திற் சென்று அடங்கியிருத்தற்பொருட்டு, `பன்னிருகலை, பதினாறுகலை` என்று பிராசாத யோகங்களைப் பதினான்கு வித்தைகளின் முடிவாகிய பிராசாத நூல்கள் கூறும்.

குறிப்புரை :

`சன்மார்ககிகட்கு. கோதண்டமும் கடந்த ஏறிய ஞானத்தால் ஞேயமாகிய அந்தத்து இருக்க, சோடசத்தையும், ஈராறையும் ஈரேழில் கூடிய அந்தமும் சொல்லும்` என இயைத்துக் முடிக்க. ஆடிய - முன்னோர் பயின்ற இது தாப்பிசையாய். `சோடச மார்க்கம்` என்பதனோடும் சென்றியைந்தது.
புருவநடு ஆதார யோகத்தின் முடிநிலை இடமாகலின் ``கோதண்டமும்`` என்னும் உம்மை சிறப்பு ஏறிய ஞானம் - ஏறியதனால் விளைந்த ஞானம். `ஞானத்தால்` என உருபு விரிக்க. ஞேய அந்தம் - ஞேயமாகிய அந்தம். இதுவே பிராசாத யோக முடிநிலை இடமாதலின் ``அந்தம்`` எனப்பட்டது.
பதினான்கு வித்தைகளாவன வேதம் நான்கு, வேதாங்கம் ஆறு, உபாங்கம் நான்கு இவற்றுடன் உபவேதம் நான்கு கூட்டி, `பதினெண் வித்தை` என்றலும், உபவேதம் நீக்கி, ``பதினான்கு வித்தை`` என்றலும் ஆக இரு வழக்குக்கள் உள்ளன. அவற்றுள் பின்னதை இங்குக் கூறினார்.
``ஈரேழிற் கூடிய அந்தமும்`` என்னும் உம்மை முற்றும்மை. அந்தத்தின் பொருளை ``அந்தம்`` என்றது ஆகுபெயர். பின்னர் அப்பொருளைக் கூறும் நூலை ``அந்தம்`` என்றது இருமடியாகு பெயர். ஈற்றடி உயிரெதுகை பெற்றது.
இதனால், `ஞானத்தைப் பெறவேண்டினார்க்குச் சிறந்த வழியாவது பிரணவ யோகமே` என்பது கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன்இருந் தானே.

பொழிப்புரை :

உலகத்தில் கண்வழியாகக் காட்சி நிகழுங்கால் அக்காட்சி காணப்படும் பொருள், அதுவும் அதனைக் காணும் கண்ணொளியும் விளங்குதற்கு இன்றியமையாத் துணையாகிய ஒளி, அவ்வொளியால் விளங்கி உருவத்தைக் காண்பதாகிய கண்ணொளி ஆகிய மூன்றன் கூட்டத்திலே நிகழ்வதாகும். ஆயினும் கண்ணால் உருவத்தைக் காண்கின்றவன் அம்மூன்றனையும் ஒருங்கே அறிதல் இயலாது) மற்று காணப்படும் உருவத்தையும், காண்பதாகிய கண்ணொளியையும் விளக்கி நிற்கின்ற அந்த ஒளியை அறிவானாயின் அப்பொழுது ஏனை யிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இனிக் காணப்படும் உருவத்தை அறிவானாயின் அப்பொழுது ஏனையிரண்டும் மறைந்து நிற்கும், இனிக் கண்ணொளியின் இயல்பை அறியின் அப்பொழுது ஏனையிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இம்முறையில் தான் சிவன்தான் ஆன்ம ஒளி மறைந்தவிடத்து அவன் அவ்வான்மாவினோடு உயிர்க்குயிராய் என்று உடனாகியிருத்தல் விளங்கும்.

குறிப்புரை :

`ஆகவே, அவ்வாற்றால் அவனை அறிந்து நிற்றலே அறிவுடைமையாம்` என்பது குறிப்பெச்சம். தத்துவத்துறையில் `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களுக்கிடையே உள்ள உறவு எத்தகைய உறவு, என்னும் ஆராய்ச்சியல் ``அவ்வுறவு த்துவித உறவு`` என்னும் சிவாகநூல் துணிவினை முன்னைத் தந்திரத்தில், `பதி, பசு, பாசம் வேறின்மை` என்னுக. அதிகாரத்தில் ஓராற்றால் விளங்கிய நாயனார், அவ்வுறவு பிரசாத யோகத்தில் நிகழும் ஒளிக் காட்சியில் வைத்து அறியின் இனிது விளங்குதல் பற்றி அதனை இங்கு இவ்வாறு நுண்ணிதாக விளக்கினார். மெய்கண்ட தேவரும்,
``காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்``3

என அருளிச் செய்ய, அதனையே அருணந்தி வேதர்,
``... ... காட்டக் கண்டிடும் தன்மை உடைய கண்ணிற்கு
ஏயும் உயிர் காட்டிக்கண் டிடுமா போல
ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன்``9

எனவும், உமாபதி தேவர்,
``அறிவொளிபோல் பிறிவரும் அத்துவிதமாய்``l எனவும் கூறினர். ``அறிவொளி`` என்றதில் அறிவு, ஆன்ம அறிவு. ஒளி, கண்ணொளி.
முதற்கண் உள்ள `ஒளி`, காட்டும் ஒளி அது விளக்கொளி ஞாயிற்றின் ஒளிகளில் ஒன்றாகலாம். இரண்டாவதாய் உள்ள `ஒளி`, காணும் ஒளியாகிய கண்ணொளி இரண்டாம் அடியில் உள்ள ``ஒளியும்`` என்பது `செய்யும்` என் முற்று. `மறையும்` என்பது அதன் பொருள். அஃது, ``உருவும், ஒளியும்`` என்னும் எழுவாய்கட்கும் பயனிலையாய் நின்றது. ஒளிதல் தன்வினை; ஒளித்தல் பிறவினை. அவை `செய்யும்` என் முற்றாகுமிடத்து முறையே `ஒளியும்` எனவும், `ஒளிக்கும்` எனவும் வரும் ``ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்``8 என்பதில் ``ஒளிக்கும்`` என்பது தன்வினையால் நின்றது இரண்டாம் அடிப்பகுதியை, `உருவகத்தை அறியில் உருவேயாம்` என விரித்துக்கொள்க. `ஏனையிரண்டும் தோன்றா` என்பது கருத்து. மூன்றாம் அடியில் உள்ள ஒளிகள், கண்ணொலியாம். அவ்விடத்து ``உருவம்`` என்றது அதன் இயல்பை. இங்கும் ``ஒளியே`` என்றது, `அவ்வொளியே தோன்றும்; ஏனையவை தோன்றா` என்றதாம். மூன்றடடிகளாலும் உவமையே கூறப்பட்டது. ஈற்றடியில் உள்ள ஒளி, ஆன்ம அறிவு. அஃது உருகுதலாவது, நிலையழிதல் உம்மை, `பாச அறிவேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``உருக`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது. `இருப்பான்` என்னும் எதிர்காலம், விரைவு பற்றி ``இருந்தான்`` என இறந்த காலமாயிற்று. இருத்தல் இருக்கும் அது விளங்குதல் இருத்தலுக்கு `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
உவமையில், `மூன்றில் ஒன்றை யறியுமிடத்து ஏனையவவை மறைந்து விடும்` என ஒரு தொடராற் சுருங்க ஓதாது, மூன்று தொடரால் விரியக் கூறினார். `மூன்று யாவை` என்பதை முன்னர்த் தொகுத்து கூறாமையின் அவை விளங்கா என்பது பற்றி. பொருளில், காட்டுவது சிவனருளும், காண்பது ஆன்ம அறிவும், காணப்படும் பொருள் பதி, பசு, பாசங்களுமாகக் கொள்க. கண் உருவங்களைக் காணும்பொழுது காட்டுவதாகிய ஒளியையும், காண்பதாகிய தன்னையும் மறந்து, உருவங்களை மட்டுமே காண்பதுபோல, ஆன்ம அறிவு பெத்த காலத்தில், அறிவிப்பதாகிய திருவருளையும், அறிவதாகிய தன்னையும் அறியாது அறியப்படுவதாகிய உலகத்தை மட்டுமே அறிந்து வருதலால் அது பொழுது அது தன்னையும், தலைவனையும் அறியாது மயங்கு கின்றது. ஆசிரியர் அருளுரையைக் கேட்டு அதன்வழி நின்று அதுதான் அறியும் முறைமையை உற்றுணருமாயின் மயக்கம் நீங்கி மெய் யுணர்வைப் பெறும்` என்பதும் `மெய்யுணர்வாவது முப்பொருளும் பிரித்தறியுமாறு வேறு வேறு நில்லாது அத்துவிதமாய் இருத்தலின். அந்நிலையை அறிதல் ஆசிரியரது அருளாலன்றிக் கூடாது` என்பதும் கூறியவாறு. இம்மந்திரம் சொற்பின்வரு நிலையணி பெற்றது,
இதனால் `உலகில் காட்டுவதும், காண்பதும், காணப்படுவதும் ஆகிய மூவகை ஒலிகளின் முறைமையில் வைத்து பிரணவ யோகத்தில் வெளிப்படும் ஒளிகளின் இயல்பு உணரற்பாலன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி கலையில் `நூற்றியெட்டு` என்றும், பிரதிட்டா கலையில் `குய்யாட்டகம், அதிகுய்யாட்டகம், குய்யதராட்டகம்` என்று இன்ன பலவாகவும் எட்டு எட்டாகச் சொல்லப்படுகின்ற, சகல வருக்கத்தினராலும் எளிதில் அடையப்படும் புவனங்களிலும் ஞான ஒளியைப் பரப்பி அறியாமையாகிய இருளைப் போக்குகின்ற சிவனாகிய ஞாயிறு வெளிப்பட்டு விளங்குவதும் உள்ளதுமாகிய தாமரையிலேயாம். அத்தாமரையில் அந்த ஞாயிறாகிய சிவன் ஒன்றோடு ஒன்று மாறுபட்ட இரு நிற ஒளியுடையனாய் விளங்குகின்றான்.

குறிப்புரை :

`அதனை அறிவுடையார் உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். மாறுபட்ட இருநிற ஒளிகளாவன சிவப்பும், நீலமும். இவை முறையே சிவமும், சத்தியும் ஆகும். நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் உள்ள புவனங்கள் எட்டு எட்டாகச் சொல்லப்படுதலைச் சிவாகமங்களிலும் சிவஞான போத மாபாடியம் முதலியவற்றிலும் காண்க. அவை சகல வருக்கத்தினர்க்கு இடமாதல் பற்றி, `புகல் எளிதாகும்` என்றார். திருவருள் அண்டத்திலும் ஞானிகட்கு விளங்குதல் பற்றி ``அகல் ஒளி செய்து இருள் ஆசற வீசும் பகல்`` என்றார். அகல் ஒளி - விரிந்த ஒளி. தாய் - தாவ; பாவ. ஆகமலம் இருள் மலம் ஆணவம். வீசுதல் - அகற்றுதல். பகல் - பகலவன் `இருள் மலம் அகற்றும் பகலவன்` என்றதனால் அது சிவனாகி ஞாயிறாயிற்று. ஒளி செய்தல் ஒளியைத் தருதல். ``செய்ததும்`` என்னும் உம்மை இருத்தலாகிய எதிர் வருவதனைத் தழுவிற்று `சிவ ஒளி அண்டம், பிண்டம் இரண்டிலும் விளங்கி அறியாமையாகிய இருளைப் போக்கும் என்றபடி.
இதனால், மேற்கூறிய ஒளிகளில் ஆன்ம அறிவிற்குக் காட்டாகி நிற்கும் சிவ ஒளியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.

பொழிப்புரை :

[முன் மந்திர்ததிற் கூறியவாறு, `சிவனே அண்டத்திலும், பிண்டத்திலும் ஒளியைத் தருகின்றான்` என்றால், `இங்குக் கண்கூடாகக் காணப்படும் - தீ ஞாயிறு, திங்கள் - என்பவை ஒளியைத் தருகின்றன` எனக் கருதுதல் பிழையோ எனில், அன்று; மற்று.]
ஆங்காங்கு அவ்வப்பொழுது காலவரையறை ஏதும் இன்றி வெளிப்பட்டு மறைகின்ற தீயும், சில கால வரையறைகளின்படி தோன்றி நின்று ஒளியைத் தந்துவிட்டு மறைகின்ற ஞாயிறும், திங்களும் ஆகிய அவையும் அவ்வாற்றால் ஏற்ற பெற்றியால் ஒளியைத் தந்து விளங்குதலு, ஒளியைத் தாராது மறைந்து போதலும் ஆகிய நிலைமையை உடையனவாகச் சிவன் அருள் செய்தனாலேயே அவை ஒரளவில் உலகிற்கு ஏற்ற பெற்றியால் ஒளியைத் தரும் செயற்கைச் சிற்றொளிப் பொருள்களாய் உள்ளன. என்றும் வற்றா வளம் கொண்டவனாகிய சிவன் கொண்டுள்ள ஒளியே முற்றும் நீக்க மாட்டாது சிறிது சிறிது நீக்குகின்ற அந்தச் சிற்றொளிப் பொருள்களை உலகிற்குப் படைத்துத் தந்து தான் அவற்றோடு இரண்டறக் கலந்து அவற்றை நிலைபெறுத்தியும் நிற்கின்றான்.

குறிப்புரை :

துளங்குதல் - அலைதல்; நிலையில்லாது நீங்கியும், தோன்றியும் வருதல். `அங்கி, கதிர், சோமன் ஆகியவை துளங்கு ஒளியையே பெற்றன; சொதி அருளப் பெற்றன` என்க. வளம் கொளி - வளத்தைக் கொண்டிருப்பவன்; இயற்கையாகவே கொண்டிருப் பவன். `பெற்றது` என்றதும், `இயற்கையில் பெற்றிருப்பது` என்றதேயாம். பேரொளி - கால வரையறையும், இட வரையறையும் இல்லாத ஒளி - இஃது, `அளவில் பேரொளி` எனப்படும் `களங்கம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து நின்றது களங்கமாவது இருள். அதனை அறவே நீக்காது அதனுடன் இருக்கின்ற ஒளிகள் களங்கொளிகளாம். வேறு களங்கொளி - களங்கம் இல்லாத தனது பேரொளிக்கு வேறான களங்க ஒளி. செய்தல் படைத்தல். கலந்து நிற்றல் அவற்றை நிலைபெறுத்தற் பொருட்டு ஆதலின் அது வருவித் துரைக்கப்பட்டது. ``செய்து நின்றான்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `உலகில் காணப்படும் முச்சுடர்களாகிய ஒளிகளும், சிவனது திருவருட் பேரொளி தந்த ஒளிகளே; சுதந்திர ஒளிகள் அல்ல; அவை அளவில்லனவும் அல்ல` என்பது கூறப்பட்டது. இவ் வுண்மையை விளக்குவதே உமை சிவனது கண்களைப் பொத்திய போது, உலகம் ஒளியையிழந்து இருளடைந்ததைக் கூறும் வரலாறு.

பண் :

பாடல் எண் : 4

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.

பொழிப்புரை :

சிவன் என்றும், எவ்விடத்தும் பிறத்தலை இல்லாதவன் ஆதலால், அவனே இயற்கையாய் விளங்கம் ஒளி. அவனொழிந்த பிற பொருள்கள் எல்லாம் தோற்றம் உடையனவே யாதலால் அவற்றுள் சிலவாகிய முச்சுடர்களும் அவன் ஆக்கிய செயற்கை ஒளிகளே. முச்சுடர்களுள் ஞாயிறும், திங்களும் அவனது வல இடக் கண்களாகவும், தீ பிறருக்கில்லாத மூன்றாவதான நெற்றிக் கண்ணாகவும் உயர்ந்தோரால் சொல்லப்படுகின்றன. இனி அவனது திருமேனியே ஒளிமயமாகலின், ஒளியுடன் விளங்குகின்ற ஆகாயம் அவனது திருமேனியாகச் சொல்லப்படுகின்றது.

குறிப்புரை :

`இலங்கு` என்பது எதுகை நோக்கி ``இளங்கு`` எனத் திரிந்தது. இயற்கையாகவே இலங்குகின்ற ஒளி என்க. இதனை முதல் அடியின் ஈற்றிற் கூட்டி. அதற்கு முன் `ஆதலால்` என்பது வருவித் துரைக்க. ஏனையோரெல்லாம் பிறந்திறந்தமை பலவிடத்தும் கேட்கப் படுகின்றது. துளங்குதல், செயற்கையை உணர்த்திற்று. `மற்றை நெற்றிக்கண்` என மாற்றியுரைக்க. இதனை வேறு வைத்துக் கூறினமையால், இஃது ஏனையோர்க்கு இல்லாமை விளங்கிற்று. முச்சுடர்களும் இறைவனது உறுப்பாதலைக் கூறுகின்றவர், அவற்றிற்கு இடமாகிய ஆகாயம் அவனது உடம்பாதலையும் உடன் கூறினார்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9
என அப்பர் அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரம்ம`` எனத் தைத்திரீய உபநிடதம் கூறிற்று. மற்றை உபநிடதங்களிலும் இவ்வாறு கூறப் படுகின்றது. முன் மந்திரத்தில் இயற்கையிற் பெற்றுள்ளதைக் குறித்த ``வளங்கொளி`` என்பது இம்மந்திரத்தில் சிவனிடமிருந்து பெற்றதைக் குறித்தது. காயம் - ஆகாயம் - `காயம் மெய் ஆம்` என இயைக்க.
இதனால், `சுதந்திரமான ஒளியையுடையவன் சிவன் ஒருவனே` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

பொழிப்புரை :

எல்லா ஒளிகளினும் மேலான ஒளியாகிய திருவருள் ஒளியின்கீழ் அதினின்றும் தோன்றியனவை, விரிந்து பரந்த ஒளியை யுடைய ஆகாயம், காற்று, ஒளிப்பொருளாகிய தீ, நீர், நிலம் ஆகியவை. இவை ஐந்தும் உயிர்கட்கு அறிவைத் தந்து, ஆகாயம் ஒன்றிற்குள்ளே ஏனை நான்கும் அடங்கியிருப்பினும், இவை ஐந்தும் ஒடுங்கும் இடம் திருவருள் ஒளிதான்.

குறிப்புரை :

மேவிய - மேவின. செய்யுள் நோக்கிப் பூதங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. செவ்வெண்ணாகச் சொல்லப்பட்ட இவற்றின் இறுதியில் `ஐந்தும்` என்னும் தொகை வருவித்து, ``மேவிய`` என்பதற்கு முடிபாக்கிப் பின், `ஐந்தும் ஒளி செய்து விசும்பின் ஒன்றினும் ஒருங்கு ஒளி ஓரொளியாம் என இயைத்து முடிக்க. முதலடி இன எதுகை. `பரந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ஐம்பூதங்களும் தூல சரீரமாகி, ஒளி செய்வனவாகக் (அறிவைத் தருவனவாக) கூறினார். ஒருங்குதல் - ஒருசேர அடைதல். `ஒடுங்கொளி` என்றே பாடம் ஓதுதலுமாம். `மாயா காரியங்கள் ஆன்மாவிற்கு விளக்காய் அமையினும் அவை திருவருளால் விளக்கம் பெருவனவே, என்பது கூறியவாறு.
இதனாலும் `அனைத்து ஒளிகட்கும் மூல ஒளி அருள் ஒளியே` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
உன்னிய ஆறொளி ஒத்தது தானே.

பொழிப்புரை :

[`ஒளி` என்பதனை `மின்னியல்` ஞானம் என்பவற்றோடும் கூட்டுக.]
சிவனது சத்தி, பரை, ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என முன்னர் ஆறாகி நின்று அருள்புரிவனவாம். (ஈசானி முதலிய ஐந்துமே ``ஈசானம்`` முதலிய பஞ்சப் பிரம மந்திரங்களாம்) அந்த ஆறின் வடிவாகவே நாள்தோறும் பிரணவத்துடன் கூட்டிச் சிகாரம் முதலாக வைத்து எண்ணப்படும் திருவைந்தெழுத்துக் கொள்ளப்படும்.

குறிப்புரை :

`அதனை உணர்ந்து அம்மந்திரத்தைக் கணிக்கவே சிவஞானம் உளதாம்` என்பது கருத்து.
பராசத்தி ஏனைச் சத்திகளாய் வெளிப்படுதலல்லது நேரே வெளிப்படாமையின் அதனை ``மின்னியல் ஒளி`` என்றும், ``ஈசாளி பளிங்குபோன்றது, என்பதனால் அதனை, ``தூவொளி`` என்றும், பூரணி கன்ம சாதாக்கியமாய் நின்று எல்லாவற்றையும் செவ்வனே ஏற்றல் பற்றியும் அதனை, மேதக்க செவ்வொளி`` என்றும், ஆர்த்தி பற்றியும் அதனை, மேதக்க செவ்வொளி`` என்றும் ஆர்த்தி அஞ்ஞானத்தை அழித்தல் பற்றி அதனை`` ``பள்ளிய ஞானம்`` என்றும், (பன்னிய - வேதாகமங்கள் சொல்லிய) வாமை உலகுயிர்கள் அனைத்தையும் வினைவழி நடத்துதலின் ``பரந்த பரவொளி`` என்றும், (``பரத்து`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை) மூர்த்தி உயிர்களைப் பலபேதப்படத் தோற்றுவிக்குமாற்றால் சிவனை அடைய வழிவகுத்தல் பற்றி அதனை, ``துன்னிய ஆறொளி`` என்றும், (ஆறு - வழி நகரம் இரட்டியாமை செய்யுள் விகாரம்.) என்றும் கூறினார். இவ்வாறு நுண்பொருள்களை மறை பொருட் கூற்றுக்களால் உய்த்துணரக் கூறுதல் நாயனாரது நெறி என்பது பலவிடத்தும் நன்கறியப்பட்டது. ``துன்னிய ஆறொளி`` என்பதன்பின் ``இந்த ஆறு ஒளியும்`` என்பது வருவித்து. ``நாடொறும் உன்னிய ஆறு ஒளி ஒத்தது`` என முடிக்க. ``ஒத்தது`` என்பது பன்மை யொருமை மயக்கம். தான், ஏ அசைகள்) தூமொழி - தூய்மையைத் தரும் மொழி, திருவைந்தெழுத்து.
இனித் திருவைந்தெழுத்திற்கு ஈடாகப் பிரணவ கலைகளாகிய `அ, உ, ம், விந்து, நாதம்` என்பவற்றைக் கொள்ளுதல் பொது நெறியாம்.
இதனால், மூல மந்திரம் சிவசத்தி வடிவாய் நின்று ஒளியை (ஞானத்தை)த் தருதல் கூறும் முகத்தால் திருவருள் பேரொளியாமாறு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் மிக விளங்கு கின்ற ஒளியாய் இருப்பினும் தன்னை நினைக்கின்றவனது உள்ளத்தில் மட்டுமே விளங்கி நின்று, உடலிலும் உயிர்ப்பாய் இயங்குகின்ற வண்மையுடையவனாயும், மற்றை எல்லாப் பொருள்களிலும் மேகத்தில் ஒரே ஒரு காலத்தில் மட்டுமே சிறிது விளங்கி விரைவில் மறையும் மின்னல்போல மறைந்துள்ளவனாயும் இருக்கின்றான். ஆகையால் அவனை ஈங்கள் இடைவிடாது துதியுங்கள்.

குறிப்புரை :

`துதித்தால் உங்கள் உள்ளத்தில் விளங்கி, உடலில் உயிப்பாயும் இயங்குவான்` என்பது குறிப்பெச்சம். `துலங்கொளி` என்பது எதுகை நோக்கி, ``துளங்கொளி`` எனத் திரிந்து நின்றது. `ஈசன், உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற வளங்கொளியாய், எங்கும் விளங்கொளி மின்னொளியாகிக் கரந்து மருவி நின்றான். (அவனை) எப்போதும் சொல்லும் என இயைத்து முடிக்க. முதல் அடியில் உள்ள ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``உளம் கொளி`` என்பது, சாதியொருமை.
இதனால், பேரொளியாகிய சிவன் தன்னை நினைப்பவரது நெஞ்சில் மட்டுமே விளங்கி நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருதது மாமே.

பொழிப்புரை :

சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் விளங்குகின்ற தனது ஒளியை, எல்லா இருளிலும் மேலானதாய் மிக மறைக்கின்ற ஆணவ இருளின் வலிகெடுதற்கு ஏதுவான ஒளியாக உடையவன். அவ்வொளியை அவன் எவ்வுயிரிடத்தும் மறைத்தல் இல்லை. ஏனெனில், விளங்கும் ஒளியுடம்பினராகிய தேவர்கள் அமுதம் உண்டற்பொருட்டு நஞ்சம் நிறைந்த கண்டத்தையுடைய அவனது திருவுள்ளம் அத்தகையது.

குறிப்புரை :

``ஈசன்`` என்பதே முதலிற் கொள்க. ``விளங்கொளி யாகிய அவ்வொளியைத் துளங்கொளியாக உடையான்` என்க. அவ்விருள் - ஒளிகளின் மேலான ஒளிபோல, இருள்களின் மேலான அந்த இருள். அஃது ஆணவ மலம்.
``ஒரு பொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``9
என ஆணவ இருளின் கொடுமை மிகுதி கூறப்படுதல் காண்க. துளங்குதல் - பெரிதும் மெலிதல். ஆணவம் அநாதியாதலின் அழியாது சத்தி மெலிந்தே நிற்பதாதல் பற்றி, `துளங்குதல்` என்றார். அலங்குதல், `அளங்குதல்` என மருவி வந்தது. தொழுவார்க்கும் என்ற உம்மையால், `தொழாதார்க்கும்` என்பது கொள்ளப்பட்டது. ஒளியான் - கரவான். அது - அத்தன்மையது. அஃதாவது உயிர்கள் ஒளியைப் பெறத் தான் இருளைத் தாக்கி அடக்கும் தன்மை.
``சிற்றுயிர்க் கிரங்கிக் - காய்சின ஆலம் உண்டாய்
அமுதுண்ண``3
``விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு
விடம் உண்ட
கண்ணாளா``
என்பனபோலும் திருமொழிகளைக் காண்க.
இதனால், பிற ஒளிகளால் நீங்காத கொடிய திணியிருளை நீக்குகின்ற செவ்விய நுண்ணொளியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.

பொழிப்புரை :

பிறிதொரு பொருள் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளி எந்த ஒளியோ அந்த `ஒளியே சிவன்` எனப்படும் பொருள். (எனவே, விளக்கினால் விளக்கும் ஒளி எந்த ஒளியே சீவன்` எனப்படும் பொருள் என்பது தானே விளங்கிற்று.) இனி, ஞாயிறு, பிறரால் காணப்படுதற்கு ஏதுவாய் அதனினின்றும் வியாபிக்கின்ற அதன் கதிர்போன்றது சிவனது சத்தி. ஆக, விளக்கம் உடைய ஒளிகள் மூன்றாகும். அவற்றுள் பேரொளியாகிய சிவன் தன்னை நினைக்கின்ற உயிரினது நெஞ்சத்தில் வெளிப்பட்டு அதனது ஒளியைத் தனது ஒளிக்குள் அடக்கி விளங்குவான்.

குறிப்புரை :

``இலங்கியது`` என்றது, `தானே இலங்கியது` என்றபடி. தூங்குதல், நீக்கமின்றியிருத்தல். இதனுள் இன வெதுகை வந்தது.
இதனால், சிவ ஒளி சீவ ஒளிக்கு உதவும் ஒளியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

பொழிப்புரை :

பிறிதோர் ஒளியைத் தன்னுட் கொண்டிருக்கும் ஒளியாவது எந்த ஒளி? உடலினுள்ளே ஒளியாய் நிற்கும் சீவ ஒளியாம் அந்த ஒளிக்குள் ஒளியாகி நிற்கும் வன்மையை உடைய பெரிய மாணிக்க ஒளியாகிய சிவனஅ, தன்னைக் காணும் பக்குவம் எய்தினார் கண்முன் முதற்கண் திடீரென விளங்குகின்ற மின்னல் ஒளிபோல மின்னிப் பின்பு பரவெளியிலே ஒன்றி அதுவாகி, பேரொளியைப் பெற்ற திருக்கூட்டத்துள் நீங்காது நிற்பான்.

குறிப்புரை :

``உளம் கொளி`` என்பதில் கொள்வதும், கொள்ளப்படுவதும் ஒளிகளாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. அதனால் ``மாமணிச் சோதி`` என்பதும் ``விளங்கொளியாய் மின்னி`` என்பதும் பொருந்துவவாயின. வளம், ஒளிக்கு ஒளியாய் நிற்கும் செழுமை. இங்கும் அலங்கொளி அளங்கொளியாயிற்று.
இதனால், சிவ ஒளி பக்குவம் எய்தினார்க்கு வெளிப்பட்டு விளங்கிப்பின் மறையாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விளங்கொளி யான விகிர்தன் இருந்த
துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.

பொழிப்புரை :

தானே விளங்கும் ஒளியாகிய சிவன் விளங்கி நின்ற மெலியப்பெற்ற சீவ ஒளியின் உடல் பொறி காரணங்களில் முன்பு சேர்ந்திருந்த ஆணவ இருள் சேரமாட்டாது ஒதுங்கியிருக்கும். அவ்வாறு அந்த இருள் மெலிதற்குரிய அதிசூக்கும நடனத்தைச் செய்து கொண்டு தன்னை நினைக்கின்ற உயிரின் நுண்ணுடம்பில் முடிநிலைத் தானமாகிய உன்மனாந்தத்திலே இருப்பான்.

குறிப்புரை :

விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன். ``பாசம்`` என்றது இங்கு மாயேயத்தை, அதனானே அதனைப் பற்றுக் கோடாகக் கொள்ளும் வினையும் பெறப் பட்டது. `இருள் கலங்கு நட்டம்` என மாற்றியுரைக்க. அது ஞான நடனம். உன்மனை பற்றிக் `கலைநிலையில்` காண்க.l உயிரை ஆணவம் பற்றியுள்ள பொழுதே அதனை `மாயை, மாயேயம், வினை` என்பவற்றையும் இருள் பற்றி உயிரை ஆணவம் பற்றாது நீங்கிய பொழுது அதன் மாயை முதலியவற்றையும் ஆணவம் பற்றாது; அதற்குக் காரணம் திருவருள் விளக்கமே என்பதை,
``மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்,
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``* என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறிக. மூன்றாம் அடி இன எதுகை. `சேராது` என்பது ஈறு குறைந்து நின்றது. `உன் மனாந்தத்து` என்பது `உன் மனத்து` என இடைக் குறைந்து நின்றது.
இதனால் சிவ ஒளியால் சீவ ஒளி உடம்பொடு நலம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் சிவனுக்குத் தலைவனுக்குப் புதுமணம் செய்துகொண்ட மனைவியர் போன்றவர்கள். சிவனோ, புதுமணம் செய்து கொள்ளப்பட்ட மனைவியர் எளிதில் செல் லொணாத காவற் கட்டடத்தில் உள்ள தலைவன்போல் உள்ளான். இவர் இருதிறத் தாரிடையே தூதாகின்றவள் தலைவனுக்குக் காதற் பரத்தைபோன்ற ஆதி சத்தி. (திரோதான சத்தி) அவளது தூதின் பயனாகச் சிவன் இரங்கி வந்து ஆன்மாக்களது திணிந்த இருளை நீக்கியது வியப்பு.

குறிப்புரை :

போது - பேரரும்பு. `அதனை அணிந்த கருங்குழல்` என்றது, அக்குழலையுடைய புதுமண மனைவியை போல்நவர் - அவளோ டொத்த புதியர். பந்தத்தில் பழையவராயினும் வீட்டிற்குப் புதியரே. உவமையில் பன்மையில் ஒருமை மயங்கிற்று. அருட் சத்தியும், திரோதான சத்தியும் வேறு வேறல்லவாயினும் திரோப வித்தல் சிவனுக்குக் கருத்தன்றாகலின், அதனைச் செய்கின்ற செயல் பற்றித் தனது அறத்திற்கு ஒத்த அருட்சத்தியாகிய தேவியின் வேறான, தனது அறத்திற்கு ஒவ்வாத பரத்தையாக உருவகம் செய்தார். `பரத்தை` என்பது சொல் நயத்தால் பிறிது பொருள் தந்ததாயினும், அது, தொழு பவனை `தொழுத்தை` என்பது போல, `பரத்தின்பால் உள்ளவள்` என்றே பொருள் தரும். சிவனையடைந்து இன்புறுதற்கு உரியவாதல் பற்றித் தலைவனை அடைந்து இன்புறுதற்குரிய சீவான்மாக்கள் பெண்டிரோடு ஒப்பிக்கப்படுதலை,
``இருவர் மடந்தையருக்கு என்னபயன் உண்டு? உண்டாம்,
ஒருவன் ஒருத்தி யுறின்``8
என்பதிலும் காண்க. `இஃது உவமை மாத்திரையேயன்றிப் பொருளன்று` என்பது உணராதார். `உயிர்கள் எல்லாம் பெண்டிர்` எனவும் `இறைவன் ஒருவனே ஆடவன்` எனவும் கூறி மகிழ்வர். அவர், ஆடவர், பெண்டிர்` என்னும் வேற்றுமை மாயாகாரியப் பொருளான உடம்பின் கண்ணதன்றி அறிவேயான நுண் பொருளிடத்து எங்ஙனம் விளங்கக் கண்டனரோ!.
எண் ஒடு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் சென்று இயையுமாயின் இங்கு `ஒடு` `போல்நவர்` என்பதனோடும் சென்றியைந்தது. உம்மை அசை. `போது கருங்குழல்போல் நவரோடும், அமரர் பிரானோடும் இடை தூது ஆதி பரத்தை, எனக் கூட்டுக.
இதனால், அனைத்தையும் கடந்து நிற்கும் பேரொளியாகிய சிவன், அனைத்துப் பொருளிலும் கலந்து நின்று இயக்கும் சிற்றொளியாகிய திரோதான சத்தயுடன் நின்று ஆன்மாக்களது ஆணவ இருளை நீக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

`உண்டில்லை` என்னும் உலகத் தியல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

பொழிப்புரை :

உலகம், சிலர் சிலவற்றை `உண்டு` எனக் கூறினால், உடனே அவற்றை `இல்லை` என மறுத்துக் கூறும் இஃது உலகத்தின் இயல்பு ஆதலை எளிதில் காணுதல் கூடும். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு, எளிதில் அகப்படுகின்ற பொருள் பற்றியே இவ்வா றாதலின், `காலம், இடம் இவற்றைக் கடந்த, `முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் உண்டு`8 என அறிந்தோர் கூறுவதை, உலகம் `இல்லை` எனக் கூறிப் பிணங்குகின்றது இவ்வுலகத்திற்கு `மேற்கதி` என்பது உண்டாகுமோ! உண்டாகாது. அந்த முன்னைப் பழம்பொருளை மக்கள் கண்டதில்லை. ஒரு சிலர் கண்டனரேனும், அவர் `அதன் இயல்பு இது` என விளக்கிச் சொல்லியதில்லை. `மற்று அதன் இயல்புதான் யாது` எனின், புறக்காட்சியை விடுத்து அறிவிற்குள்ளே ஒற்றித்துக்காணும் அகக்காட்சியில் விளங்குகின்ற ஓர் அதிசய விளக்கொளியாகும் அது.

குறிப்புரை :

`பண்டு` என்பது இடைச் சொல்லாயினும் பெயர்த் தன்மைப் பட்டு ஆகுபெயராய்ப் பண்டையதைக் குறித்தது. `கண்டது, விண்டது` என அவ்வத்தொழில் மேல் நிற்கும் வினைப் பெயர்களில் அகரச் சாரியையும், துவ்விகுதியும் தொகுத்தலாயின. `கண்டவர் விண்டில, விண்டவர் கண்டிலர்` என்பது ஒரு பழமொழி. விள்ளுதல் - விளக்கிச் சொல்லுதல். `உண்மை மாத்திரையாற் சுட்டப்படுமே யன்றி, இலக்கண வகையால் விளக்கிச் சொல்லுதல் இயலாது, அநுபவித்து அறியத் தக்கது` என்பதாம். இதனை,
``மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லெனின் சொல்லுமா றெங்கனே``
எனப் பின்னர் நாயனாரும்,
``இங்ஙனம் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்;
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``9
எனவும்,
``அன்றுமுதல் ஆரேனும் ஆளாய், உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்!
அவ்வா றிருந்த தது``l எனவும்,
``மருவி இருவரும் புணர வந்த இன்பம்
வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்``3
எனவும் பின்னை ஆசிரியன்மாரும் கூறுமாற்றால் உணர்க. இங்ஙன மாதலின், `முன்னைப் பழம்பொருள்` என்பது சூனியம் போலும் என மலையாமைப் பொருட்டு, ``உள்ளே விளக்கொளியாமே`` என்றார்.
இதனால் `சிவ ஒளி பேரொளியாதலுடன் உள்ளொளி நுண்ணொளி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசி
உடலுறு ஞானத் துறவிய னாமே.

பொழிப்புரை :

உலகத்தில், விளக்கு முதலாய் நிற்க, அதினின்றும் வியாபிக்கின்ற ஒளி இருந்தும் இல்லையாய்ப் போகும்படி தோன்றி விளங்குகின்ற ஞாயிறு போன்றவன் சிவன். ஆகவே, உடல், பொறி, உலகு நுகர் பொருள்களாய்ப் பல்வேறு வகைப்பட்டு நெருங்கி யிருக்கின்ற மாயா கருவிகள் செய்யும் மயக்கத்தை அடக்கி, அதற்கு மாறான ஞானத்தினால் உயிர்களோடு உறவுகொள்பவன் அவன்.

குறிப்புரை :

`அஃதறிந்து, கருவி ஞானத்தை நீக்கி, அவனது ஞானத்தை நாடிப்பெறுக`` என்பது குறிப்பெச்சம். ``ஆங்கு`` என்றது, `அங்து நின்றும்` என்றபடி. படர்தல், இங்கு நீங்குதல். படர் உறு காட்சிப் பகலவன் படர்தற்கு ஏதுவாய் உறுகின்ற காட்சியையுடைய பகலவன். ``மாயை`` என்றது, மாயையின் காரியத்தை. இன், சாரியை மயக்கத்தை ``இருள்`` என்றார். மயக்கத்திற்கு ஏது அதுவாகலின். வீசுதல் - போக்குதல். உடலுல் - மாறுபடுதல். ``உறவியன்`` என்பதில் அன் ஆடூவை அறிவித்தற்கு வந்த விகுதிமேல் விகுதி.
இதனால், `மேற்கூறிய அக விளக்கைக் காணுதல் அதன் ஒளியாலல்லது, பிற ஒளிகளால் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருமேனி பவளமும், செம்பொன்னும் போல்வதற்கு ஏற்ப அருமையாலும் அன்பினால் பிறர்க்கு அளிக்கப்படுகின்ற பவளமும், பொன்னும் போல்பவன் அவன், உலகிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற பகலவன், உலகத்துத் திணிந்த இருளைப் போக்குதல் போல எனது உள்ளத்தில் திணிந்த இருளைப் போக்கி, `என் அறிவினுள்ளே இருக்கும் பவளம்` என்று சொல்லும்படி என்னும் இருக்கின்றான்.

குறிப்புரை :

``ஆதிப்பிரானும்`` என்பதை முதலிற் கொள்க. உம்மை சிறப்பு. ஆதிப்பிரானும்`` என்பதுடன் முதல் அடியும் கூடிய தொடர் `சிவபெருமான்` என்னும் பொருட்டாய் நின்றது. `வெண்ணீற்றில் ஒளிந்த - மறைந்த பவளத் திருமேனியன்` என்க. ``பவளச் செம் பொன்`` என்னும் உம்மைத் தொகை ஒரு சொல் நீர்மைப்பட்டு நிற்க, அதனோடு ``அளி`` என்பது வினைத்தொகை நிலைப்படத் தொக்கது. அளி - அளிக்கப்படுகின்ற. அன்பினால் ஒருவர் பிறர்க்கு அளிக்கும் பரிசுப் பொருள்களில் பவளமும், பொன்னும் சில அரும்பொருள் களாம். அவ்அருமை பற்றியே அவை இங்குச் சிவபெருமானுக்கு உவமையாகச் சொல்லப்பட்டன.
``வைப்பர் - பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து``* என்பதிலும் பொன் பொதிந்து வைத்துப் போற்றப்படும் அருமை பற்றியே பொறுத்தார்க்கு உவமையாகக் கூறப்பட்டது. இன்னும் ``முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் - பொன்னே போற் போற்றுவம்``* என்பதிலும் பொன் அருமை பற்றியே உவமை யாயிற்று. ``பவளத்தையும் பொன்னையும்போலச் சிவபெருமான் உள்ளத்துப் பொதிந்து வைத்தப் போற்றுதற்குரியவன்` என்பது, ``அளி பவளச் செம்பொன்`` என்பதனால் குறிக்கப்பட்டது. ``பவளச் செம்பொன்`` என்னும் உம்மைத் தொகை உவம ஆகுபெயர் இனன் - பகலவன் பவளத்து இனன் - பவளம் போலும் நிறத்தையுடைய இனன். களி இனன் - உலகம் களிப்புறுதற்கு ஏதுவாகிய இனன். திணிந்த இருள்` என்றற்குக் ``காரிருள்`` என்றார். `இனன்போல` எனவும் `பவளத்தைப் போல` எனவும் உவம உருபு விரிக்க. ஒளி பவளம் உள்ளத்தில் மறைந்து நிற்கும் பவளம். ``ஈசன்`` என்பது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. அதனை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக.
இதனால், சிவன் உயிர்களின் உள்ளொளியாய் நின்று உளளிருளை நீக்கும் அருமை அறியற்பாலதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.

பொழிப்புரை :

உள்ளத்துள்ளே உள்ளொளியாகிய சிவனும் இருக்கின்றான். கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவர்களும் இருக்கின்றார்களும். இருப்பினும், அவர்கள் ஒளி தம்மிடத்தில் சிறிதும் இல்லாததுபோல, `ஒளி எங்கே உள்ளது` எனத் தேடித் திகைத்து, `சிவனே! சிவனே` என ஓலமிடுகின்றனர். அதற்குக் காரணம், ஆணவமாகிய ஒரு பாசம் முதலிலே பற்றியிருக்க, அது காரணமாக வகையால் இரண்டாய், விரியால் அளவிறந்தனவாகிய வினைகள் வந்து பற்றியிருப்பதேயாம். ஆகவே, அவர்களது செயல், மலர் இருந்தும் மணம் கமழாதது போன்றதாகும்.

குறிப்புரை :

`தேசு` என்பது, `தேசம்` என அம்முப்பெற்று வந்தது. தேசு - ஒளி. இன்றி - இல்லாதது போல. `பற்றற` என்பது பாடம் அன்று. ``வாசம், ஒன்றாமலர் போன்றது`` என்றலே கருத்தென்க. `மலர் உயிரும், மணம் சிவமும்` என்க.
``பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்,
சீவனுக் குள்ளே சிவணம் பூத்தது``3
என முன்னரும் கூறினார். இதனை,
``உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். உயர் பிறப்பினராகிய தேவர்களைக் கூறவே மக்கள் நிலை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `சிவன் உள்ளொளியாய் இருந்தும் பாசப்பற்றால் விளங்கிலன்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பாசம் பற்று அற்றால் விளங்குவன` என்பது சொல்லாமே அமைந்தது.

பண் :

பாடல் எண் : 17

தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பாவலும் ஆமே.

பொழிப்புரை :

வேதமாய் இருப்பவனும் சிவனே. வேதத்தைச் செய்தவனும் சிவனே. இனி வேதமும் இயல்பாகவே அவனையே, `முடிநிலைப் பொருள்` எனக் கூறி முடியும். ஆகவே, ஆகாயத்திற்குள் அடங்கியிருக்கும் உலகம் அனைத்தினுள்ளும், `ஞான சூரியனாய் உள்ளவன் சிவன் ஒருவனே` எனப் புகழ்ந்து பாடி அவனை அடைதலே தக்கது.

குறிப்புரை :

முதலில் உள்ள, `தான்` சிவன் என்பது, அதிகாரத்தால் விளங்கிற்று. `இருக்கு` என்பது பொதுப்பட அனைத்து வேதங் களையும் குறிக்கும் பெயராயும் வரும். இரண்டாம் அடியில் ``இருக்கும்`` என்னும் உம்மை சிறப்பு. அவ்விடத்து, ``தானே`` என்றது `இயல்பாகவே` என்றபடி. ``அவன்`` என்பதன்பின் `முடிநிலைப் பொருள்` என்பது எஞ்சி நின்றது. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. `வானின் உள்ளாய் இருக்கும்` என உருபு விரிக்க. `சான்றோராவார் வேதாகமங்களின் வழி நிற்பவர் ஆகலான், எவ் விடத்தும் சிவனையே ஞான மயமான மெய்ப்பொருளாகப் போற்றி வணங்குதலே சான்றோராயினார்க்கு உரிய இயல்பு` என்றபடி. `பானுவாய்` என்பதில் ஈற்று உகரம் குறைந்து, `பானாய்` என வந்தது.
இதனால், `வேதாகம வழக்காகிய சான்றோர் சென்ற நெறிப்படி உயிர்களுக்குள்ளே ஒளி வளர் விளக்காய் ஒளிர்பவன் சிவனே` என உணர்ந்து அவனைக் கண்டு இன்புறல் வேண்டும்` என்பது கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது `உணர்த்தரிது` என எஞ்சி நின்ற சொல்லெச்சம் பற்றி. ``கண்டீர்`` மூன்று தொடர்ப் பொருளை வலியுறுத்தி நின்ற முன்னிலையசைகள். ``உலகு`` இரண்டில் பின்னது உயிர்த்தொகுதி. நன்றாவது ஞானம். அதனைத் தருவதனை ``நன்று`` என உபசரித்துக் கூறினார். இனித் தின்று கண்டேன் என இயையும். இனி - இப்பொழுது.
இதனால், `ஞானத்தைத் தருதல் பற்றி மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரம் `என்பதும், அது நகாரம் முதலாக அமையின் தூல பஞ்சாக்கரமாம்` என்பதும் சொல்லப்பட்டன. இதனைப் பிரணவத்தோடு கூட்டிக் கூறின தூல சடாக்கரமாம்.
வடமொழி `ம` என விசர்க்க ஈறாய் நின்று முப்பதாம் மெய்யோடு புணருங்கால், விசர்க்கம் அம்முப்பதாம் மெய்யாகத் திரிந்து வருதல் பற்றித் தமிழில் நமச்சிவாய` எனச் சொல்லப்படும். அவ்வாறாயினும் வடமொழியிலாயினும், தென்மொழியிலாயினும் மெய்யெழுத்து எண்ணப்படாமையின், எழுத்து ஐந்தேயாம். `நமசிவாய` என்றல் யந்திர முறையாகிய கிரியா மார்க்கமாம். திருமுறைகளில் எல்லாம் ஞானமார்க்க முறையாகிய `நமச்சிவாய` என்றே சொல்லப்படும். திருமுறைகளில் பெரும்பான்மையாக இத்தூல பஞ்சாக்கரமே எடுத்தோதப்படுதல் வெளிப்படை.

பண் :

பாடல் எண் : 2

அகாரம் முதலாக ஐம்பத்தொன் றாகி
உகாரம் முதலாக ஓங்கி உதித்து
மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி
நகார முதலாகும் நந்திதன் நாமமே.

பொழிப்புரை :

சிவன், ``சொல் இறந்து நின்ற தொன்மையன்`` ஆயினும் சொல்லாலன்றி உயிர்கள் அவனை உணர்தல் கூடாமை பற்றி அவன் சொல்வடிவான பல பெயர்களையும் உடையவன் ஆகின்றான். எல்லாப் பொருள்களும் பெயராலே அறியப்படுதலாலும் எல்லாப் பொருள்களிலும் சிவன் அவையேயாய்க் கலந்து நிற்றலாலும் ஒரு வகையில், எல்லாப் பெயர்களும் சிவன் பெயர்களேயாகின்றன. பெயர்கள் யாவும் எழுத்துக்களால் ஆனவை. `அவ் எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` எனப்படுகின்றன. அந்த எழுத்துக்கள் பிரணவ கலைகளாகிய அகார உகார மகாரங்களால் முறையே `தோற்றம், நிலை, இறுதி` என்பவற்றை அடைவனவாகச் சொல்லப்படுகின்றன. ஆகவே, அனைத்துப் பெயர்களும் தோன்றி அழிவன ஆகின்றன. இந்நிலையில் தோற்றமும் அழிவும் இல்லாத சிவ நாமம், நகாரத்தை முதலாக உடைய ஐந்தெழுத்தாதல் ஆவதாம்.

குறிப்புரை :

எனவே, இந்த ஐந்தெழுத்துக்கள் ஐம்பத்தோர் அக்கரங்களுள் அடங்கி நிற்கின்ற அந்த எழுத்துக்கள் ஆகாது, வேறு எழுத்து என்பதாம். இது பற்றி, ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே`` என்ற மந்திரத்தை நோக்குக. மற்றும்,
``அஞ்செழுத்தீ தாகில் அழியும் எழுத் தாய்விடுமோ!
தஞ்ச அருடகுருவே சாற்று``
என்னும் உண்மை விளக்க அடிகளில் அமைந்த குறிப்பையும் உன்னுக. ஆதல் - தோன்றுதல். ஓங்கி உதித்தல் - நிலைத்து நிற்றல்.
``மாய்ந்து மாய்ந்து ஏறி`` என்றது, `பலவாய்த் தோன்றி மறைந்து பெயர்களாய் எண்ணிக்கை மிகுந்து` என்றபடி. இங்ஙனம் கூறியது பெயராயின பலவற்றையும் ``ஏறி`` என்பதன் பின் `முடிவாக` என்பது வருவிக்க. `முதலது` என்பதில் இறுதி நிலை தொகுத்தலாயிற்று.
இதனால், சிவ நாமமாகிய ஐந்தெழுத்துக்கள் ஏனை எழுத்துக்கள் பலவற்றில் சில ஆவன அல்ல` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அகாராதி யீரெட் டலர்ந்த பரையாம்
உகராதி சத்தி உள்ளொளி ஈசன்
சிகாராதி தான்சிவம் ஏதமே கோணம்
நகாராதி தான்மூல மந்திரம் நண்ணுமே.

பொழிப்புரை :

`ஐம்பது` அல்லது, `ஐம்பத்தொன்று` எனப்படும் அகரம் முதலாகிய எழுத்துக்களில் பதினாறு வகையாய்ப் பராசத்தி நிறைந்து நிற்கும். (பதினாறாவன சயை, விசயை, அசிதை, பராசிதை, நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, இந்திகை, தீபிகை, இரோசிகை, மோசிகை, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை` என்பன.
அந்தச் சத்தியைக் குறிக்கும் பெயர் உகாரத்தை முதலாக உடையது `உமா, என்பது (இஃது உ, ம், அ என்பது கூட்டாக இருத்தலால், `சத்தி பிரணவம்` எனப்படும்.) சத்தி ஒளியாய் நிற்க. அதற்குப் பற்றுக் கோடான சுடராய் உள்ளார்ந்து நிற்பவன் சிவன் முன் மந்திரத்திற் கூறிய ஐந்தெழுத்து மந்திரத்தைச் சிகாரம் முதலாகக் கொண்டு நோக்கினால் அம்மந்திரம் மூன்று கூறாய், `பதி, பசு, பாசம்` என்னும் மூன்றையும் உணர்த்தும், ஆகவே, முன் மந்திரத்திற் கூறியவாறு நகாரத்தை முதலாகக் கொண்ட ஐந்தெழுத்தாலாகிய அந்த மந்திரமே அனைத்து மந்திரங்கட்கும் மூல மந்திரமாம் தகைமையை உடையதாகும்.

குறிப்புரை :

அகாராதி - அகரம் முதலாகிய எழுத்துக்கள். `அகாராதியில்` என உருபு விரிக்க. `பரையாம் தன் சத்தி உகராதி` உகாராதி - உகரத்தை முதலாக உடைய மந்திரம் என மாற்றியுரைக்க. ``உள்ஒளி`` என்பது, `ஒளி உள்` என்பது பின் முன்னாக மாறி நின்ற ஆறாவதன் தொகை. ``உள்`` என்பது ஆகுபெயராய் உள்ளார்ந்து நிற்கும் பொருளைக் குறித்தது. ஐந்தெழுத்து மந்திரத்தில், `சிவா` என்பது பதியையும் `ய` என்பது பசுவையும், நம என்பது பாசத்தையும் குறிக்கும். அவற்றுள்ளும் சிகாரம் சிவனையும், வகர ஆகாரம் அவனது அருட் சத்தியையும் குறிக்கும். `நம` என்பதிலும் மகாரம் ஆணவத்தையும், நகாரம் திரோதான சத்தியையும் குறிக்கும். மாயை கன்மங்கள் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்கும். இவற்றையெல்லாம், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம் முதலிய நூல்களில் காண்க. ஏதம் - குற்றம்; பாசம். கோணம் - வளைவு. இரு பக்கமும் வளைந்து சென்று பாசத்தோடும், பதியோடும் பற்றும் தன்மையுடையது பசு, மந்திரம்` என்றது, மூல மந்திரமாம் தன்மையை.
இதனால், முன் மந்திரத்தில் ``நந்திதன் நாமம்`` எனக் கூறிய நகாராதி ஐந்தெழுத்தால் ஆகிய மந்திரம் ஏனை மந்திரங்கள் அனைத்திற்கும் மூலமாதற்குக் காரணம் விளக்கிக் கூறப்பட்டது. அதனோடே அக்கரங்கள் எல்லாம் சத்திமயம் ஆதலும் உடன் இணைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி
ஆய இலிங்கம் அவற்றின்மே லேஅவ்வாய்த்
தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல்
ஆயதீ ரும்ஐந்தோ டாம்எழுத் தஞ்சுமே.

பொழிப்புரை :

நந்தி நாமமாகிய நகாராதி ஐந்தெழுத்தாலாகிய மந்திரத்தின் நிலையை நுணுகி நுணுகி நோக்கினால், அடி அண்ணம், கண்டம், (மிடறு, இருதயம், உந்தி, மூலம் என்பவற்றில் முறையாகப் போய், முதல் நிலையாய் நிற்கும். அந்நிலையே `நாதம்` என்பர். அதனை `அகரம்` எனவும் வழங்குவர். இனி அது தியானிக்கப்படும் நிலையில் புருவநடு, நெற்றி, உச்சி அதற்கு மேலும் செல்வனவாகிய நிராதாரம், மீதானம் ஈறாகிய ஐந்திடத்திலும் பொருந்தும்.

குறிப்புரை :

எல்லாச் சொற்களுமே ஒருவன் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி சொல்லும்பொழுது பல், இதழ், நா, அண்ணம் முதலியவற்றின் முயற்சியால் பிராண வாயுவோடு கூடிப் பருமையாய் வெளிப்பட்டு வைகரி வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `வாசகம்` எனப்படும். தன் செவிக்குக்கூடக் கேட்காதபடி மெல்ல உச்சரிக்கும் பொழுது `அடி, அண்ணம், கண்டம்` என்னும் இடங்களில் மத்திமை வாக்காய் நிகழும். இவ்வாறாக மந்திரங்களை உச்சரித்தல் `உபாஞ்சு` எனப்படும். இவ்வாறு உச்சரித்தலே இல்லாமல் பொருள்கள் கருத்தளவாய் நிற்கும்பொழுது இருதயத்திலும், கருத்தளவாய் உருவாக நிற்கும்பொழுது உந்தியிலும் பைசந்தி வாக்காய் நிற்கும். கருத்தளவாய் நிற்க மந்திரங்களை எண்ணுதல் `மானதம் எனப்படும். இவற்றிலும் நுண்ணிதாய்க் காரண நிலையில் நிற்கும் பொழுது மூலாதாரத்தில் சூக்குமை வாக்காய் நிற்கும். அந்நிலையே சிறப்பாக, `குண்டலி சத்தி` எனப்படுகின்றது. இந்நிலைதான் ஐந்தெழுத்து மந்திரத்திற்கும் உள்ளது. ஆயினும், புருவ நடுமுதல் மீதானம் ஈறாகத் தியானப் பொருளாய் வியாபித்து நிற்றல் ஐந்தெழுத்து மந்திரத்திற்கன்றிப் பிற சொற்களுக்கில்லை. இச்சிறப்பை விளக்குதற் பொருட்டே முதற்கண் அனைத்துச் சொற்களும் நால்வகை வாக்காய் நிகழுமாற்றை எடுத்துக் கூறினார். ஆகவே அது ஞாபக மாத்திரையேயாம். புருவ நடு முதலாக மேற்செல்லுதல் எல்லாம் தியானமே யாதலின் அதனைக் கூறிற்றிலர். இலிங்கம், அதனை அடுத்துள்ள மூலத்தைக் குறித்தது. `அவ்வாய்` ஆம், என முடிக்க. துண்டம் - மூக்கு. அஃது அதன் அடியாகிய புருவ நடுவைக் குறித்தது. மத்தகம் - தலை நெற்றியையும் சுட்டுதற்கு, ``இருமத்தகம்`` என்றார். செல்லல் - அதற்குமேற் பெயராய்ச் செல்லும் இடங்களைக் குறித்தது.
இதனால், ஐந்தெழுத்து மந்திரம் பிற சொற்களின் வேறுபட்டதாதல் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தான்எழும் போதும்
மரணங்கை வந்துயிர் மாற்றிடும் போதும்
அரணங்கை கூட்டுவ தஞ்செழுத்தாமே.

பொழிப்புரை :

``தோற்றம் உண்டேல் மரணம் உண்டு.(திருமுறை - 7-7-2) என்றபடி பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இயற்கை நியதியின்படி இறப்பை எய்திய மக்களின் உடம்பை உறவினரும், ஊராரும் முறைப்படி எரியூட்டுவார்கள். அவ் எரி, ஏழுவகையான கதிர்கள் மிக்குத் தோன்றும் வகையில் ஓங்கி எரியும். அப்பொழுதுதான் பருவுடம்பில் எஞ்சி நின்ற `தனஞ்சயன்` என்னும் காற்று முதலிய சில கருவிகள் அவ்வுடம்பை விட்டு நீங்குவனவாகும். அவையும் நீங்க உயிர் நுண்ணுடலோடு வினைக்கீடாகத் தான் செல்ல வேண்டிய இடம் நோக்கிச் செல்லும். இவ்வாறான இயற்கை இறப்புவரினும், உயிர் செய்த பெருந்தீவினை காரணமாக இடையே திடீர் செயற்கை இறப்பு வரினும் எப்பொழுதும் உயிருக்குப் பாதுகாவலைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே.

குறிப்புரை :

`நெருப்பிலும், ஞாயிற்றிலும் ஏழுவகையான ஒளிக் கதிர்கள் உள்ளன` எனவும், `அந்த ஏழு கதிர்களே பகலவன் தேரில் ஏழு குதிரைகளாக உருவகிக்கப்பட்டன` எனவும் இக்கால அறிவியலார் கூறி விளக்குவர். அதனை நாயனார் முன்பே, ``கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கி`` எனக் கூறினார். கரணங்கள் - கருவிகள். ``விட்டு`` என்னும் செய்தென் எச்சம் எண்ணின்கண் வந்தது. ``எரி பொங்கி`` என்றதனால் `இயற்கை மரணம்` என்பது போந்தமையின், பின்பு ``மரணம்`` என்றது, அகால மரணத்தையாயிற்று. இரு நிலைகளிலும் அஞ்செழுத்துப் பாதுகாவலைத் தருதலாவது, உயிர், சுவர்க்க நரகங்களில் புகாது, சிவலோகத்தை அடைவித்தல். சிவலோகத்தை அடைந்த உயிர் ஏனை உயிர்கள்போல மீள இவ்வுலகத்தில் வந்து பிறத்தல் நியதியன்று. பிறக்கினும் ஞானத்திற்கு உரியதாகவே பிறக்கும். `அந்நிலையைத் தருவது ஐந்தெழுத்து` என்றபடி.
இதனால், பிறப்பை நீக்குவது ஐந்தெழுத்து மந்திரம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற ஓதி வழுத்தலும் ஆமே.

பொழிப்புரை :

`ஞாயிறும், திங்களும் எழுகின்ற காலை, மாலை என்னும் வேளைகளில் சிறப்பாகக் கணிக்கத் தக்க மந்திரம் இது` என்பதை அக்காலங்களில் மந்திரக் கணிப்புச் செய்வோரில் பெரும்பாலோர் அறிந்திலர். (ஆகவே அவர்கள் காயத்திரி மந்திரத்தையே அவ்வேளைகளில் கணிக்கின்றனர். ஆகவே) `சந்தியா தேவதை` எனப்படும் சத்திக்கு மிகவும் விருப்பத்தைத் தருவது திருவைந்தெழுத்து மந்திரமே என்பதை அறிந்து அதனை அக்காலங்களில் வாசகம் முதலிய மூவகையானும் ஓதுதலாகிய சிறப்பு அவர்கட்குக் கூடுமோ!.

குறிப்புரை :

`கூடாது` என்பதாம். நவிலுதல் - முறைப்படி அமைதல். ஞாயிறு எழும் காலம் காலை வேளையாதல் வெளிப்படை. `திங்கள் எழும் காலம் ஞாயிறு மறையும் நேரம்` என்றே கொள்ளப்படும் இவையிரண்டும் கூறவே, இனம் பற்றி நண்பகலும் கொள்ளப்படும். இவையே முப்போதுகளாம் `சந்தியா காலம் எனப்படும் ஆசாரியராயினார் நள்ளிரவிலும் வழிபடுவர். அது சிறுபான்மை.
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்(கு)
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே``9
என்னும் ஞானசம்பந்தர் திருமொழியை இங்கு உடன் வைத்து உணர்க. ஆய் - ஆய்வு; முதனிலைத் தொழிற்பெயர். சேயுற் கண் - செவ்வரி பொருந்திய கண். மந்திரங்களைக் கணிக்கும் முறை `வாசகம், உபாஞ்சு மானதம்` என மூன்று என்பதை மேல், `வாயொடு கண்டம்`` எனப் போந்த மந்திர உரையிற் காண்க. ``வழுத்தலும்`` என்னும் உம்மை சிறப்பு, ஈற்றில் உள்ள ஏகாரம் எதிர்மறை வினாப்பொருட்டு.
``ஞாயிறு, திங்கள்`` என்பவற்றை வல இட உயிர்ப்புக்களாகக் கொண்டு, `அவற்றை முறையாக இயக்கித் திருவைந்தெழுத்தைக் கணிப்பினும், அம்ச மந்திரத்தைக் கணித்தலோடொப்பதே` என உரைத்து, ``ஊனில் உயிர்ப்பை`` எனத் தொடங்கும் ஞானசம்பந்தர் திருப்பாடலை மேறகோளாகக் காட்டுவர்.
இவ்விருபொருளையும் இம்மந்திரத்திற்குப் பொருளாகக் கொள்க.
[இதனை அடுத்துச் சில பதிப்புக்களில் காணப்படும் ``தெள்ளமு தூறச் சிவாய நம என்று`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.]

பண் :

பாடல் எண் : 7

குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வருவழி மாள மறுக்கவல் லார்கட்
கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

சிவகுரு உபதேசித்த மொழி வழியில் நின்று, பிறப்பிற்கு ஏதுவான வழியையே கூறும் சமய நூல்களைக் கைவிடவும், மற்றும் பிறவி வரும் வழிகெட்டுப் போகும்படி அதனைப் போக்கவும் வன்மை பெற வேண்டுவார்க்கு அவ்வன்மையைத் தருவதாகிய திருவருளாகிய வழியைக் காட்டுவது திருவைந்தெழுத்து மந்திரமே யாகும்.

குறிப்புரை :

குரு வழி - குரு காட்டிய வழி. அஃது உபதேச வடிவின தாம். குணம் - நற்பண்பு; என்றது நல்லொழுக்கத்தை. குணத்ததைத் தருவதனை, ``குணம்`` என்றார். `நின்று அறுக்கவும், மறுக்கவும் வல்லார்` என்க. கணக்கு - நூல். ``வல்லார்`` என்றது, `வன்மையை வேண்டுவார்` என அக்காரணத்தின்மேல் நின்றது. அருள் வழி - அருளாகிய வழி. `அதனைக் காட்டுவது அஞ்செழுத்து` எனவே, பிறவெல்லாம் அருள் அல்லாத மருள் வழியையே காட்டுதல் பெறப்படும்.
இதனால், `திருவருளைப் பற்றச்செய்வது திருவைந் தெழுத்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

பொழிப்புரை :

செயலற்று நிற்கும்படி வினையின் பயனாகிய துன்பங்கள் வந்து விளையும்பொழுது, அவற்றால் சோர்வுறாதபடி உறுதியைத் தருகின்ற திருவைந்தெழுத்தை ஓதும் கருத்தைக் கொண்டால் அக்கருத்து அதனை உடையவனைச் சிவனது திருவடியில் சேர்க்கும். மேலும் அக்கருத்துடையவன் செய்யும் செயல்கள் சிவனது உருவேயாகும்.

குறிப்புரை :

வெறித்தல் - வெறிச்சோடிப் போதல், செறிதல், அடங்குதல் ஆதலின், செறித்தல் அடக்குதல். அஃதாவது, துயரத்தை வெளிக்காட்டு இருத்தல். குறிப்பு - கருத்து.

பண் :

பாடல் எண் : 9

நெஞ்சு நினைந்து தம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுறை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

பொழிப்புரை :

மேகங்கள் தவழும் வெள்ளி மலையில் வீற்றிருகின்ற இறைவனை திருவைந்தெழுத்து வழியாக நெஞ்சால் நினைதலும், வாயால், `தலைவனே` என்று சொல்லி வாழ்த்துதலும், இறக்கும்பொழுது, `உனது திருவடியே புகல்` என்று சொல்லியும் நின்றால் அவ்விறைவனது அருளை எளிதில் பெறலாம்.

குறிப்புரை :

``அஞ்சில்`` என்பதில், இல், ஏதுப் பொருள்கள் வந்த ஐந்தாம் உருபு. இதனை முதலிற் கொள்க. இதற்குப் பிறவாக உரைப்பன இவ்விடத்திற்கு இயையா. ``வாயால்`` என்பதனோடு இயைய, `நெஞ்சால்` என உருபு விரிக்க. ``என்று`` இரண்டின் பின்னும் வருவிக்கப்பட்ட சொல்லெச்சங்கள் காரணப் பொருளவாய், `பெறலாம்` என்பதனோடு முடித்தன.
இதனால், திருவைந்தெழுத்தான் சிவனது திருவருளைப் பெறுதல் எளிதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பிரான் வைத்தஐந்தின் பெருமை உணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழொடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கள் உய்தியின் பொருட்டு உண்டாக்கி வைத்துள்ள சாதனம் திருவைந்தெழுத்து மந்திரம். அதுவே அவனது பேராற்றலாகிய பொருட் சத்தியும், குண்டலினியாதல் பற்றி, `பாம்பு` என உருவகித்துக் கூறப்படும் சுத்த மாயையால் பலவகையாலும் வியாபிக்கப்பட்டு விளங்கும் அசுத்த மாயையும் பல புவனங்களும் ஆகும். ஆகவே, அதன் பெருமையை உணரமாட்டாத எளிய மக்கள் தங்கள் அஞ்ஞானமாகிய இருளைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ!.

குறிப்புரை :

`ஆகார்` என்பதாம். குண்டலினி - வளைந்திருப்பது; அஃதாவது, அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அவற்றைச் சூழ்ந்திருப்பது. அது சுத்த மாயையே அது நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாய் விரிந்து அனைத்தையும் உள்ளடக்கி நிற்பதைக் குறிக்கவே சிவாலயங்களில் சிவலிங்கத்தின் மேல் பாம்பு ஒன்று ஐந்து தலைகளுடன் படம் எடுத்துக் கவிந்திருப்பதாக வைக்கப்படுகின்றது. இனிப் பூமியை அதன் அடியில் `ஆதிசேடன்` என்னும் பாம்பு தாங்குவ தாகக் கூறப்படுவதும், சுத்த மாயை எங்கும் வியாபித்துள்ளதைக் குறிப்பதே. திருமால் பாம்பணையிற்பள்ளி கொண்டிருப்பதாகக் கூறுவதும் பழமையாக இந்தக் கருத்து இந்நாட்டில் பலர்க்கும் பொதுவாய் இருந்ததைக் காட்டும். ஆயினும் பிற்காலத்தில் மாயோன் சமயம் சைவ தத்துவத்தை விட்டுச் சாங்கிய தத்துவத்தை ஏற்றுக் கொண்டது. இங்குப், ``பல்வகையாலும்`` என்றது, சுத்த மாயை நால்வகை வாக்குகளாயும், சிவம், சத்தி முதலிய சுத்த தத்துவங்களாயும், நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாயும் விரிந்து நிற்றலை. இவற்றுள் நால்வகை வாக்குக்களே சிறப்புடையனவும் ஆதலின், `மந்திரங்களில் தலையானதாகிய திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்துமாய் உள்ளது` என்றும், இதனை உணராதார்க்கு ஞானம் உதியாது ஆதலின், `அவர் அஞ்ஞானத்தைப் போக்கிக் கொள்ள வல்லவராவரோ` என்றும் கூறினார். இரா - இரவு; இருள். பரா - பரா சத்தி. கீழ் - கீழது; அதோ மாயை; அசுத்த மாயை, பரா முற்றும், கீழொடு, அராப் பல்வகையாலும் சூழ்ந்த அகலிடம் முற்றும் தானே` என இயைக்க. தானே - அத்திருவைந்தெழுத்தே.
இவ்வாறு திருவைந்தெழுத்தின் பெருமையை பொதுப்படக் கூறி, தூல நிலை முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.

பொழிப்புரை :

எவராலும் மறுக்க ஒண்ணாத உண்மையை எளிய மக்கள் மிக எளிதாக உடன்படாது மறுத்து வாதிடுவர். அவர் அவ்வாதத்தினை விட்டு அஞ்ஞான இருளை அகற்றும் ஞான ஒளியாகிய எங்கள் சிவபெருமானை நினைந்து உருகுகின்ற மனத்தை உடையவராய்க் கணிப்பார்களாயின. அப்பெருமான் அந்த, `சிவாயநம` என்னும் குளிகையினால் அவர்களது உயிரை மட்டுமன்று; உடம்பாகிய செம்பையே பொன்னாக்கி விடுவான்.

குறிப்புரை :

`அப்பேற்றினை அவர்கள் பெறுகின்றிலர்` என்பது குறிப்பெச்சம். குளிகை பிற உலோகங்களைப் பொன்னாக்கும் இரச மணி. இதனைச் செய்யும் முறையை அக்காலத்தில் சித்தர்கள் அறிந் திருந்தனர். பிற உலோகங்களைப் புடம் இட்டு உருக்கிப்பதம் அறிந்து இக்குளிகையைச் சேர்த்தால், அந்த உலோகங்களில் உள்ள வேற்றுப் பொருட்கள் நீங்கி அவை பொன்னாய் ஒளிரும். கூடு - உடம்பு. ``கூட்டையே`` என்னும் தேற்றேகாரத்தால் உயிரை அதற்கு முன்பே பொன்னாக்குதல் பெறப்பட்டது. உயிர் ஆணவத்தால் அறிவையிழந்து களிம்பினால் ஒளியிழந்து நிற்கின்ற செம்புபோல் உள்ளது. திருவைந்தெழுத்துக் கணிப்பினால் ஆணவம் நீங்கி விட்டால், இரச குளிகையால் களிம்பு நீங்கிச்செம்பு பொன்னாய் ஒளிர்வது போல உயிர் சிவமாய் விளங்கும். உயிர் சிவமாயின், அதன் உடம்பும் சிவகாயமேயாம். இதனை மேலேயும் சில இடங்களில் கூறினார்.8
மேல், ``நகார முதலாகும்``9என்றதனை, `ஆகி உதித்து, ஏறி ஆகும்` என்றமையால் நகாரம் முதலாக அமைவது `தூலபஞ்சாக்கரம்` என்பதும், இங்கு, `உன்னி உருகும் மனதீதராய்த் தெளியவே ஓதின் கூட்டையே பொன்னாக்குவன்` என்றதனஆல், சிகாரம் முதலாக அமைவது `சூக்கும பஞ்சாக்கரம்` என்பது போந்தன.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
``சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்
றிருக்கினல்லால் ... ... ... ...
அத்தன் அருள்பெற லாமோ, அறிவிலாப்
பேதை நெஞ்சை``
``உனதருளால் - திருவாய்ப் பொலியச்
சிவாய நம என்று நீறணிந்தேன்,
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே``3
``நானேயோதவம் செய்தேன், சிவாயநம எனப்பெற்றேன்``l
எனத் திருமுறைகளில் இச்சூக்கும பஞ்சாக்கரம் சிறுபான்மையாகச் சில இடங்களில் எடுத்தோதப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 2

தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :

புறத்தில் தெளிவான அமுதமான கண்ணீர் கரந்து பாயவும், அகத்தில் அன்பு பெருகவும் சிவாயநம` என்று ஒருமுறை சொல்வதால் உண்டாகும் இன்பமாகிய அமுத வெள்ளத்தை உண்ண விரும்பாதவர்கள் பெருங்காற்றில் அகப்பட்ட மழைத்துளிபோல அடையும் இடம் அறியாது அலமருதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``உள் அமுது`` என்றது அன்பினை ``அமுது ஊற`` என்பதையும் ``தெள்ளமுதூற`` என்பதனோடு இயைக்க. உரைத்திடும் அமுது - உரைத்தலால் விளையும் அமுதம் `வெள்ள அமுது` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``விரும்பி உண்ணாதவர்`` என்றாராயினும் `உண்ண விரும்பாதவர்` என்றலே கருத்தென்க. ``துள்ளிய நீர்`` என்பதற்கு ஆற்றல் பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது, இறுதியில் `இரங்கத் தக்கது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது.
இதனால், பஞ்சாக்கரத்தைச் சூக்குமமாக வைத்து ஓதுவார் சிறந்த பயனை அடைதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.

பொழிப்புரை :

சூக்கும பஞ்சாக்கரத்தில் சிகாரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் முறையே சிவம், அருட் சத்தி, உயிர், திரோதான சத்தி, ஆணவ மலம்` என்னும் ஐந்தையும் குறிக்கும். (மாயேயம் மாயையில் அடங்க, மாயை கன்மங்கள் திரோதாயி வழிபட்டு அதனுள் அடங்க, திரோதாயியைக் குறிக்கு நகாரம் ஆணவம் ஒழிந்த மற்றை நான்கு மலங்களையும் குறிக்கும்.) ஆகச் சீவன் ஐந்து மலங்களிலும் நீங்கிச் சிவம் சத்திகளோடே சேர்ந்திருக்குமாயின், பயனில்லாத செயல்களில் செலுத்துகின்ற பாசங்கள் சிவனைச் சாராமாட்டா.

குறிப்புரை :

திரோதான சத்தி மலங்களைச் செயற்படுத்துதல் பற்றி அதுவும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறப்படும். மலத்தைக் கெடுத்தலே அதன் குறிக்கோள் ஆதல் பற்றி அதனை, ``செறு மலம்` ஒன்றார். `மலத்தைக் கெடுக்கின்ற மலம்`` என்பது அதன் பொருள். மாயையாகிய அவத்தினைச் சேர்த்த பாசம் ஆணவம். உண்மை விளக்கம். சிவப்பிரகாசம் ஆகிய நூல்களிலும் இவ்வாறே,
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன்எழுத் தஞ்சின் அடைவாம்``*
எனவும்
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத்
திரோதம், மாசு, அருள், சிவம்-சூழ்
தர, நடு நின்றது.3
எனவும் கூறப்படுதல் காண்க. சிவப்பிரகாசச் செய்யுளில், ஆன்மா நடு நின்றமை கூறப்பட்டது, முதற்கண் ``பாசம்`` என்பதன்பின் `இவற்றில்` என்பது வருவிக்க. இவற்றைக் குறிப்பன சிகாரம் முதலிய எழுத்துக்கள்` என்பது, மேல் அவற்றைக் கூறியதனானே அமைந்தது.
``சீவனார்`` என உயர்த்துக் கூறியது, பாசத்துள் அகப்பட்டுத் துன்புறுதலைக் குறிக்கும் இழித்தற் குறிப்பு. சீவனார் மலம் ஐந்து அகல, சிவம் சத்தி தன்னுடன் சேர` என்றது அதிசூக்கும பஞ்சாக்கரதத்திற் செல்லல் வேண்டும் குறிப்பின் உட்கொண்டது. ``உடன்`` என்பதைச் சிவனுடனும் கூட்டுக. ``பதி அணுகின் பசு பாசம் நில்லாவே``9 என முதலிலேயும் கூறினார்.
திருவைந்தெழுத்தை நகராம் முதலாகச் சொல்லுமிடத்து ஒரு தொடர்மொழியாய் நின்று, `சிவனுக்கு வணக்கம்` என்னும் ஒரு பொதுப் பொருளையே தந்து நிற்றலால் `தூல பஞ்சாக்கரம்` எனச் சொல்லப்பட, சிகாரம் முதலாகச் சொல்லுமிடத்து ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் நுண்பொருளைக் குறிக்க. உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் சிறப்புப் பொருளைக் குறித்தலால் `சூக்கும பஞ்சாக்கரம்` எனப்படுகின்றது என்க.
தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையிலும், சுக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையிலும் உபதேசிக்கப்படும். விசேட தீக்கை வேண்டுவோர் உலகியலில் ஓரளவேனும் பற்றுவிட்டவராய் இருத்தல் வேண்டும்.
``அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி``8 என்னும் திருமுறைத் திருமொழியுள் அஞ்செழுத்தை, ``அஞ்சு பதம்`` என்றது, சூக்கும நிலைபற்றி எனக் கொள்ளுதல் உண்டு.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் உட்கிடைப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.

பொழிப்புரை :

(சிவனுடையனவாகச் சொல்லப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் அவனது அருளேயாகலின்) அவனது திருப் பெயராகிய திருவைந்தெழுத்தும் அவனது அருளேயாகும். அதில் சிகாரம் முதலிய எழுத்துக்கள் மேற்கூறியவாறு, `சிவன், அருட்சத்தி, சீவான்மா, திரோதான சத்தி, ஆணவ மலம்` எனஅபவற்றைக் குறித்து நிற்குமிடத்து அவ்வெழுத்துக்கள் சிகாரம் முதலாக நின்று முத்திக்கு வழி யாகும். (ஆகவே `நகாரம் முதலாக நிற்பின் அஃது அத்தன்மையது ஆகாது` என்றதாயிற்று) அதனால், சிகாரம் முதலாகக் கொண்டு கணிக் -கின், அவ்வாறு கணிப்பவன் பிறவியினின்றும் நீங்கிச் சிவனாவான்.

குறிப்புரை :

முன் இரண்டடிகளால், முன் மந்திரத்தில் கூறியதனையே அனுவதித்துக் கூறினார். அது முத்தி நெறி ஆதலைக் கூறுதற் பயன் நோக்கி, உண்மை விளக்கத்திலும்,
``நம்முதலா ஓங்கிஅருள் நாடாது, நாடும்அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று``2
``அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில், இராப்பகல்அற் றின்பத்தே - நண்ணி
அருளா னதுசிவத்தே ஆக்கும் அணுவை,
இருளா னதுதீர இன்று``
ஆதி, மலம்இரண்டும் ஆதியா ஓதினாவ்
சேதியா மும்மலமும் தீர்வாகா``3
என்றும், (ஆதி, திரோதான சத்தி) சிவப்பிரகாசத்தில்,
``ஆசுறு திரோதம் மேவா(து)
அகலுமா சிவம்முன் னாக
ஓசைகொள்அதனில் நம்மேல்
ஒழித்(து) அருள் ஓங்கும்``*
என்றும்,
திருவருட் பயனில்,
``மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ,
மேலாசி மீளா விடின்``
``சிவம் முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்; இதுநீ ஓதும் படி``*
என்றும் எல்லா இடத்திலும் இவ்வாறே கூறப்பட்டன.
`சிறந்த`` என்னும் செய்தென் எச்சம் காணப் பொருளில் வந்தது. நிரோதம் - நீக்கம்; பாச நீக்கம். நிரோதம் ஆம்` எனப் பயனிலை வருவித்து முடிக்க. ``அகன்று ஆம்`` என்பதற்கு சீவன் என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால் சுக்கும பஞ்சாக்கரம் முத்தி நெறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாகம் ஆக
நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.

பொழிப்புரை :

நமாதி - `நம` என்பதை முதலாக உடைய தூல பஞ்சாக்கரம். திரோதாயி ஆகி நனவாதி - திரோதான சத்தி வசப்பட்டதாய்ச் சகல கேவலங்களில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளை உண்டாக்கும். (இனி) சமாதித் துரியம் தமது அகம் ஆக-நின்மலாவத்தையே சீவர்களுக்கு உடம்பதாற் பொருட்டு தம் ஆதியாய் நிற்க - அப்பாஞ்சாக்கரம் சிவன் சத்திகளது வசமாதற் பொருட்டு தான் அந்தத்து உற்று முன் சொன்ன `நம` என்பது ஈற்றில் பொருந்த நம ஆதி சமம் சிவ ஆகி ஆதல் எண்ண - `நம` முதலுக்கு ஈடாகச் `சிவ` முதல் ஆவலைக் கருதுக.

குறிப்புரை :

`நனவாதி` என்பது அகரம் தொக ``நனாதி`` என்று ஆயிற்று. திரோதாயி ஆதல் திரோதாயி வசம் ஆதல். அஃதாவது, பந்தத்தைத் தருவது ஆதலாம். நின்மலாவத்தை `சமாதித் துரியம்` எனப் பின்னர் வருதலால், முதற்கண் உள்ள நனவாதிகள் சகலத்திலும் கேவலத்திலும் நிகழ்வனவாம் `நனவாதியைத் தரும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ``தமாதியது`` என்பதலி ``தம்`` என்றது சிவனையும், சத்தியையும் அங்கு ``ஆதியது`` என்றது, முதன்மையையுடையது வசப்பட்டது என்றவாறு. ``நிற்க`` என்பது, ``ஆக`` என்பதனோடு முடிய, ``ஆக`` என்பது ``ஆதல்`` என்பதனோடு முடிந்தது ``நிற்க`` என்பதற்கு நமாதியைச் சுட்டும் `அத` என்பது வருவிக்க ``தான்`` என்றது, முதற்கண் கூறிய நம ஆதியதைதான் ``அந்தம் உற்று`` என்பதில், ``உற்று`` என்பதை `உற` எனத் திரித்து, அத்தொடரை ஈற்றடியின் முதலிற் கூட்டுக. தமது - சீவர்களது. ஆகம் - உடம்பு. சமாதி - பரம்பொருளோடு ஒன்றுதல், அஃது அத்தன்மையதாகிய நின்மலாவத்தையைக் குறித்தது. அந்நிலையில் திருவருளாய் நிற்றலால் ``தமது ஆகம் சமாதித் துரியம் ஆக`` என்றார் `சிவ ஆதி, நம ஆதி சமம் ஆதல் எண்ண` என மாற்றியுரைக்க. `சமம்` என்பது ஈற்று அம்முத் தொகநின்றது. சமம் ஆதல், ஈடாதல். ``எண்ண`` என்பது அகர ஈற்று வியங்கோள் `எண்ணுக` என்றது `ஆய்ந்தறிக` என்றதாம்.
அவத்தை வேறுபாடுகளை முன் மந்திரத்தில் காண்க.
இதனால், தூல பஞ்சாக்கரம் சகல கேவலங்களாய் , நிற்க, சூக்கும பஞ்சாக்கரம் சுத்தத்திற்கு ஏதுவாதல் கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்தட்(டு)அவ்
ஆதி தனைவிட் டிறைவன் அருட்சத்தி
தீதில் சிவஞான யோகமே சித்தக்கும்
ஓதும் சிவாய மலம்அற்ற உண்மையே.

பொழிப்புரை :

மேல் எல்லாம் சொல்லப்பட்டு வந்த தூலமும், சூக்குமமும் ஆகிய ஐந்தெவுத்துக்களுள் திரோதாயியைக் குறிக்கும் நகாரமும், ஆணவத்தைக் குறஇக்கும் மகாரமும் ஆகிய இவ் இரண்டெழுத்துக்களையும் முற்ற நீக்கி, அதனாலே சிவனது `ஆதி` என்னும் சத்தி அருட் சத்தியாக மாறுவதால் முன்னர்க் குற்றம் அற்ற சிவஞானமும் பின்னர்ச் சிவயோகமும் கிடைக்கும். ஆனால் அவ்வாறு ஓதப்படும், `சிவாய` என்னும் மூன்றெழுத்தே பாசம் நீங்கிய முத்தி பஞ்சாக்கரம் ஆகும்.

குறிப்புரை :

`இதுவே அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பது குறிப்பெச்சம். ``ஆதி`` என்றது, ஆதியாய் நிற்கும் தன்மையை. `விட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அருட் சத்தியால்` என உருபு விரிக்க. சிவஞானமாவது, சிவனது அறிவு; திருவருள். `பதிஞானம்` எனப்படுவது இதுவே, பாச எழுத்துக்களை. விடாது ஓதுவதால் பாச ஞானமும், பசுஞானமும் உளவாகும். அவற்றுள்ளும் நகாரத்தை முன் வைத்து ஓதுவதால் பாச ஞானமும், சிகாரத்தை முன் வைத்து ஓதுவதால் பசு ஞானமும் உளவாம்.
பாச ஞானமாவது கருவி கரணங்களால் தரப்படும் அறிவு. சிவனையே நினைத்தும், வாழ்த்தியும், வணங்கியும் நிற்பினும் அவை யெல்லாம் கருவி கரணங்களின் வழிபட்டனவேயாகலின் பாச ஞானங் களேயாம். சரியையிலும், கிரியையிலும் இந்நிலையே உளதாகும்.
இனி யோகத்தால் கருவி கரணங்கள் அடங்க யோகி தனது அறிவாலே தான் சிவனை அறியுமிடத்து அறிவே முற்பட்டு நிற்றலால், அச்செயல் பசு ஞானத்தின் வழிப்பட்டதாம். இந்நிலையில் நிற்பவனுக்கு `எனது` என்னும் புறப்பற்று ஓரளவு நீங்கினாலும், `யான்` என்னும் அகப்பற்று நீங்குவதில்லை. திருவைந்தெழுத்தைச் சரியையாளன் நகாரம் முதலாகக் கணிப்பான்; கிரியையாளனும், யோகியும் சிகாரம் முதலாகக் கணிப்பர்.
யோகத்தால் `யான்` என்னும் அகப்பற்றும் மெலிவடைந்த பின் ஞான குருவைத் தேடியடைந்து, அவர் ஞான தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிக்க, பாச ஞான பசு ஞானங்கள் நீங்கிப் பதிஞானம் தோன்ற அதனால் உயிர் பதியைக் கண்டு இன்புறும். இதனையே இங்கு நாயனார் ``சிவஞானம் சித்திக்கும்`` என்றார் இதனானே பின்னர்த் தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம் கூடும் ஆதலின், அதற்குத் தோற்றுவாயாகவே இங்கு ``யோகமே சிந்திக்கும்`` என்றார். இவ்யோகம் கிரியையின் பின் நிகழ்வதாகிய யோகம் அன்று. தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய யோகமாம்.
மெய்கண்ட தேவரும் இவ்வாறே சிவஞான போதத்தில எட்டாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக்கர உபதேசத்தை, ``தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த`` என்றும், ஒன்பதாம் சூத்திரத்தில் ``பாசம் ஒருவப் பதி தண்ணிழலாம்`` என்றும், ``விதி எண்ணும் அஞ்செழுத்தே`` என்றும் கூறி, ஒன்பதாம் சூத்திரவார்த்திகத்தில், ``இனி இவ்விடத்தில் சீ பஞ்சாக்கரத்தை
விதிப்படி உச்சரிக்க``
என்றும் கூறினார். முரணிக் கூறுவனவாவன, முத்தி பஞ்சாக்கரத்தை வேறுவேறாகக் கூறுவன. திருவருட் பயனிலும்
``ஆசின் நவா நாப்பண் அடையாது அருளினால்
வாசி இடைநிற்கை வழக்கு``.*
என்றே கூறப்பட்டது. சிகாரம் முதலாக ஓதும் பொழுது ஆன்ம எழுத்தாகிய யகாரம் நகாரத்திற்கும், வகர ஆகாரத்திற்கும் இடை நிற்கின்றது. `அது வேண்டா` என விலக்கப்பட்டது. யகாரத்தை, `வா,சி` இவற்றின் இடையே நிற்க வைத்து உச்சரித்தல் வழக்கம் எனக் கூறப்பட்டது. அதனால் `சிவாயசிவ` என்பதே முத்தி பஞ்சாக்கரம் எனக் கொண்ட கொள்கையும் உள்ளது. ஆயினும் மந்திரங்களில் அது வே எழுத்தாக எண்ணப்படுதல் இல்லை. `சிவாயசிவ` என்பது பார்ப்பதற்கு ஐந்தெழுத்துப் போலத் தோன்றினஆலும், பின் வந்த `சிவ` என்பது முன்பு வந்ததே மீண்டும் வந்தது ஆகலானும் `முன்பு வந்த எழுத்துக்களின் பொருள்வேறு, பின்பு வந்த எழுத்துக்களின் பொருள் வேறு` என்றல் கூடாமையானும் அம்மந்திரம் உண்மையில் மூன்றெழுத்து மந்திரமேயாகும். ஆகையால் நகார மகாரங்கள் நீங்க நிற்கும் `சிவாய` என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் ஆகும். அதனை ஓர் உருக்கணித்து, அடுத்த உருத்தொடங்குகையலி யகாரம் வகர ஆகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைநிற்பதாக ஆகின்றது. இதனையே உமாபதிதேவர் `வா சி இடைநிற்கை` என்றார்.
வேடிக்கைக் கதை ஒன்று உண்டு. `பல சரக்குக்கடை வாணிகர் ஒருவர் தம் காலத்தையெல்லாம் வாணிகத்திலே கழித்தவர். இறக்கும் சமயத்திலும் தாம் விற்ற சரக்குக்களில் முதலில் விற்பது அரிசி என்பதையும், கடைசியில் கொடுப்படு வசம்பு என்பதையும் நினைத்து இரண்டையும் சேர்த்து `அரிசிவசம்பு அரிசிவசம்பு` என்று பலமுறை பிதற்றினார். ஆயினும் அஃது அவரது அவர், `அரி, சிவ, சம்பு` என விட்டுணு நாமத்தையும், சிவ நாமத்தையும் சொன்னதாக ஆக, அவர் முன்னே வைகுந்தம் சென்று, பின்பு சிவலோகம் சென்றார் என்பது அக்கதை.
``வால்மீகி முனிவர் முதலில் `ராம` எனச் சொல்லவாராமல் `மரா` மரத்தை நினைத்து, `மரா, மரா` என்று சொல்லிக் கொண்டிருந் -தாராம். அது ராம நாமத்தைச் சொன்னதாக ஆகிச் சிறந்த முனிவர் ஆகி விட்டார்` என்று வைணவத்தில் ஒரு கதை உண்டு. இவை போன்றது தான் முத்தி பஞ்சாக்கரத்தைக் கணிக்கும் பொழுது யகாரம் வாசி இடை நிற்றல்.
இனித் திருவைந்தெழுத்தில் சிகாரம் வேதாந்த மகா வாக்கியத்தில் `தத்` பதப் பொருளுடையதும், வகாரம் `அசி பதப்பொருளுடையதும் யகாரம் துவம், பதப்பொருளுடையதுமாதல் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. அந்நிலை உண்மையாய்ப் பயன் தருதற்குச் சிகார வகார யகாரங்கட்கு மேலும் எழுத்துக்களைக் கூட்டுதல் பொருந்தாமையும் நோக்கத்தக்கது.
`தத்துவமசி` வாக்கியத்தின் பொருள் `அது நீ ஆகிறாய்` என்பதாகலின், அவ்வாக்கியத்தில் `நீ` என்பது எழுவாயும், `ஆகிறாய்` என்பது பயனிலையும், `அது` என்பது பயனிலைக்கு அடைமொழி யுமாம் அள்ள நிலைமை எப்பொழுது மாறுவதில்லையாகலின், `முதல், இடை, கடை` என்னும் மூன்றிடங்களில் அவற்றுள் எந்தச் சொல் எந்த இடத்தில் நிற்பினும் பொருள் மாறுபடுதற்கில்லை. அதனால், முத்தி பஞ்சாக்கரத்தில் வகாரம் இடைநிற்றலால் தவறில்லை. இனி, `யகாரம் வா, சி இடை நிற்க ஓதுதலால், வா சிய்யை அருளி, யவ்வை வாழ்விக்கும் நிலை உண்டாகின்றது என்றார் உமாபதி தேவர்.*
சிவஞானபோத எட்டாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக் கரத்தைக் குரு உபதேசிக்கக் கேட்டல் மட்டுமே கூறப்பட்டமையால், அந்த அளவில் ஆன்ம தரிசனமும் சிவரூபமும் நிகழும். பின்பு ஒன்பதாம் சூத்திரத்தில் முத்தி பஞ்சாக்கரத்தைச் சிந்தித்தல் கூறப் பட்டமையால், அந்நிலையில் சிவ தரிசனம் தோன்றி ஆன்ம சுத்தி நிகழும். அது பின்பு, சிவ தரிசனத்தின்பின் நிகழ்வதாகிய சிவயோகம் தோன்றுதற்கு ஏதுவாகும்.
சிவஞான சித்தி சுபக்கம் ஒன்பதாம் சூத்திரத்தில் ``சோகம் எனப் பாவிக்க.``8 என்றது, பொருள் பற்றி ஓதியதன்றிச் சொற்பற்றி ஓதியதன்று. `சொற்பற்றி ஓதியதே` என வாதிப்போர் வாதிக்க; அதனால் நமக்கு வருவதொரு குறையில்லை. பொருள் பற்றி ஓதவே, அருணந்தி தேவரும் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர் கூறிய பஞ்சாக்கரத்தைத்தான் கூறினாராதல் விளங்கும்.
``விண்ணி னார்பணிந்தேத்த வியப்புறும்
மண்ணி னார்மற வாது சிவாய என்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னாரவர் பாலைத் துறையரே``*
என்று திருமுறையில் இவ்வதி சூக்கும பஞ்சாக்கரம் மிக அருமையாக எடுத்தோதியிருத்தல் அறிக.
இதனால், `அதிசூக்கும பஞ்சாக்கரமாவது இது` என்பதும், `இது முத்தி பஞ்சாக்கரம்` என்பதும் சொல்லப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்கச் `சிவாய` என்(று)ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழுந் தாமே.

பொழிப்புரை :

சீவான்மாவாகிய ஒருவனைத் தாயும், தந்தையுமாய்த் தம்மிற் கூடி ஈன்றவர்கள் மறமும், ஆம் இருவகையில் தோன்றும் அருளைத் தருகின்ற மகளிரும் சிவனும் ஆவர். மகளிருள் பிற நிலை யுடைய தாய்க்குத் தோழியாய் நின்றவள் மாயை. (அவளைச் சார்ந்து கன்ம மகளும், அவ்விருவர்க்கும் தலைவியாக ஆணவப் பெண்டும் உள்ளனர். ஆகவே அம்மூவரும் நீக்கத் தக்கவர்களே. அங்ஙனம் அவர்களை நீக்கவல்லது, பாச எழுத்துக்களை நீக்கி `சிவாய` என்று ஓதப்படும் அதிசூக்கும பஞ்சாக்கரமேயாகும்.

குறிப்புரை :

ஆயம் - மகளிர் கூட்டம், திரோதான சத்தி செயல் வகையால் அளவிறந்து நிற்ப, அவற்றோடெல்லாம் அவற்றிற்கு ஏற்ற வகையால் சிவன் கூடி நிற்றலாலும், சீவான்மா முதலில் திரோதான சத்தியாம் பாச அறிவு, பசு அறிவுகளைப் பெற்றுத் தோன்றி வளர்ந்து, முடிவில் அருட் சத்தியால் பதியறிவு விளங்கப்பெற்றுச் சிவசமம் ஆதலின் அச்சத்தி பேதங்களை எல்லாம் ஆயமாக உருவகித்து, `தம்மிற் கூடி ஒருவனை ஈற்றவர் ஆலயமும், அத்தனும்` என்றார். `கூடி` என ஒரு சொல் வருவிக்க. ``ஒருவன்`` என்றது சாதியொருமை ஈனல் கூறவே புறந் தருதலும் கொள்ளப்படும் இங்கு ஈனலும், புறந்தருதலும் அறிவைத் தோற்றுவித்து வளர்த்தலாம். `ஈன்று புறந்தரப்பட்டோர் அளவிறந் தோராயினும் அவரெல்லாம், `சீவர்` எனச் சாதியால் ஒருவரே என்றற்கு ``ஒருவனை ஈன்றவர்`` என்றார். உள்ளுறை அகம்படித் தொண்டு செய்யும் அடித்தோழி உள்ள உறைபவனை, ``உள் உறை`` என்றார். ``திரிமலம் தீர்ந்து`` எனவும், ``அரு வினை தீர்ப்பதும்`` எனவும் பின்னர் வருதலால் மாயையோடு ஏனை ஆணவ கன்மங்களும் திரோதான சத்தியின்கீழ் இருந்தமை பெறப் பட்டது. ``தீர்ப்பதும்`` உம்மை சிறப்பு. ஆணவ மலம் பரிபாகம் ஆய வழியே வினை நீங்குதலும், வினை நீங்கவே, மாயையும் உடன் நீங்குதலும் நிகழ்தல் பற்றி வினை நீங்கவே, மாயையும் உடனஅ நீங்குதலும் நிகழ்தல் பற்றி வினை தீர்த்தலையே சிறப்பாக எடுத்துக் கூறினார்.
இதனால், திருவைந்தெழுத்தில் பாச எழுத்துக்கள் நீக்கற்பாலனவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அ தற்றால்
அவமதி தீரும அறும்பிறப் பன்றே.

பொழிப்புரை :

`சிவாய நம` என்னும் ஐந்தெழுத்தில், `நம, என்னும் உறுப்பினை நா அளவில் கொண்டு, அதனையும் சொல்லாமல் அடக்கி, ஏனை மூன்றெழுத்தை மட்டும் மந்திரமாகக் கொண்டு அறிவாற் கணித்தலாகிய சுத்த மானதமாக உணர்ந்துணர்ந்து நிற்க வினை நீங்கும். வினை நீங்கவே பதிஞானம் இனிது விளங்க ஏனைப் பசுபாச ஞானங்கள் யாவும் அகற்றுவிடும். அவை அற்றுவிடவே பிறவியறுதல் நிண்ணமாம்.

குறிப்புரை :

`மூன்றெழுத்துக்களில் பிறவி நீக்கத்திற்குக் காரணமாதற் சிறப்பு நோக்கி முதல் இரண்டெழுத்தையே கூறினார். அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் ஆயிற்று. பரிசு அது - அப்பரிசு; வினையாகிய பாசம், பாசம் உம்மை, `ஆணவமே யன்றி` என இறந்தது தழுவிற்று அவ மதி - பயன் இல்லாத ஞானம். அவை பாச ஞானமும், பசு ஞானமும் இவற்றை `அவம்` என்றது பெருந்துன்பமாகிய பிறவியை உண்டாக்குதல் நோக்கி, முதலடி உயிரெதுகை.
இதனால், அதிசூக்கும் பஞ்சாக்கரத்தின் சிறப்பு தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் ளடங்கச்
சிவசிவ ஆய தெளிவின்உள் ளார்கள்
சிவசிவ மாகும் திருவரு ளாமே.

பொழிப்புரை :

முன் அதிகாரத்திற் கூறிய மூன்றெழுத்துக்களுள் ஈற்றில் உள்ள ஆன்ம எழுத்தாகிய யகாரத்தையும் நீக்கி, எஞ்சிய இரண்டெழுத்துக்களை மட்டுமே மந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இடைவிடாது கணித்தல் சிறப்புடைத்து` என்பதைத் தெளிய மாட்டாதவர் அவ்வாறு கணியாமையால், பேசும் வன்மையிருந்தும் அஃது இல்லாத ஊமரேயாவர். அம்மந்திரத்தைக் கணிக்கும் தெளிவினுள் நிற்பவர்கள் அதனால் அடங்க, ஆன்ம போதமும் அடங்கச் சிவம் ஆதற்குரிய திருவருள் நிலை வாய்க்கப் பெறுவார்கள்.

குறிப்புரை :

இது மேற்கூறிய அதிசூக்குமத்தினும் சூக்குமம் ஆதலின் காரண பஞ்சாக்கரமாம். ``சிவ சிவ`` என்றது இரண்டெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும் முறையைக் கூறியது; நான் கெழுத்தைக் கூறியதன்று. இதன்பின் `சிறப்புடைத்து` என்பது வருவிக்க. `இம்மந்திரக் கணிப்பால் வாயு (பிராணவாயு) அடங்கும்` என்றதனால் இவ்விரண்டெழுத்தும் முறையே இரேசக பூரக எழுத்துக்களாய் அசபா மந்திரமாய்ப் பயன்படுதல் குறிக்கப்பட்டது. மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. சிவ சிவ ஆய தெளிவு - `சிவ சிவ` என்றலே உறுதி பயக்கும் எனத் தெளிந்த தெளிவு. இரண்டாம் அடியில் `சிவசிவவாய்` எனவும் ஈற்றடியில் `சிவவாய்` எனவும் மூன்றாம் உருபு விரிக்க. ஆகும் திருவருள் ஆம் - ஆதற்கு ஏதுவாகிய திருவருள் உண்டாகும்.
இதனால், அதி சூக்குமத்தினும் சுக்குமமாகிய காரண பஞ்சாக்கரம் இது` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.
`சிவ` என்பதைத் தொடர்ந்து உச்சரித்தால் `வசி` என வருதல் பற்றி, `வசி` என்பதே காரண பஞ்சாக்கரம் எனக் கூறுவாரும் உளர். அவர்,
``கலந்தருள் பெற்றது மாவசியே;
காழி அரனடி மாவசியே``3
என்னும் திருமுறையை எடுத்துக்காட்டி,
``நாலாய பூதமும், நாதமும் ஒன்றிடின்
நாலாம் நிலையாம் என் றுந்தீபற``9
என்னும் திருவுந்தியார் `வசி` என்பதையே காண பஞ்சாக்கரமாகக் கூறிற்று என்பர். நாலாய பூதம் ஆகாயத்திலிருந்து எண்ண நான்காவது வாயு. அதன் பீசம் வகாரம். நாதம் சிவதத்துவ மூர்த்தி சிவன். அவனைக் குறிப்பது `சி` என்னும் எழுத்து. நாலாம் நிலை நின்மல துரியம், அல்லது சாயுச்சியம் என்பர்.

பண் :

பாடல் எண் : 2

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

`தேவர்` என்றது அபரமுத்தரை. உம்மை சிறப்பு. அதனால் பத முத்தர் ஆதல் தானே பெறப்பட்டது. சிவகதி - சிவமாம் நிலை. இது சீவன் முத்தி நிலை, பரமுத்தி நிலை இரண்டையும் குறிக்கும். தான், அசை. ஏகாரம் தேற்றம். இதனால் சிவகதியின் அருமை விளங்கும்.
இதனால், `காரண பஞ்சாக்கரம் முத்தியை எய்தும் நிலையுடையவர்கட்கே கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புறம்
மஞ்சண வும்முறை ஏறி வழிக்கொண்டு
துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

பொழிப்புரை :

இறக்கும் நிலையை அடைந்த ஒருவன் அப்பொழுது இந்தக் காரண பஞ்சாக்காரத்தை இரண்டு முறையேனும் சொல்வா னாயின், அவன் சூரிய மண்டலத்தைப் பிளந்துகொண்டு, அப்பால் மின்னல் உலகத்தையடைந்து, பின்பு அதனையும் கடந்து சிவனையே தனக்கு உயிராகக் கொண்டிருக்கும் நிலையைப் பெறுவான்.

குறிப்புரை :

``அபர முத்தியைப் பெறுவான்`` என்பதாம். `ஞானிகள் தாம் நின்ற உடலை விட்டு நீங்குங்கால் இங்குக் கூறியவாறு ஒளி வழியிற் சென்று இறைவனை அடைவார்கள்; ஞானம் இல்லாதவர்கள் பிறவழிகளில் சென்று தேவர் உலகம், அல்லது மானுடர் உலகம் இவற்றிற் செல்வார்கள்` என்பது உபநிடதங்களின் கருத்தாதல் சாந்தோக்கியம் பிருகதாரணியம் முதலிய உபநிடதங்களாலும், உத்தர மீமாஞ்சை நூலாலும் அறியப்படுவன. அவற்றுள், `ஒளிவழியில் சென்று இறைவனை அடையும் வீட்டு நிலை இக்காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் உண்டாகும்` என்பது இங்குக் கூறப்பட்டது.
``துஞ்சும் அவன் சொன்ன காலத்து`` என்பதனை முதலிற் கூட்டி, சொல்லுதலுக்குச் `சிவசிவ` என்னும் செயப்படுபொருளை அதிகாரத்தால் வருவித்து உரைக்க. ``நெஞ்சு`` என்றது உயிரை. `இறைவனையே உயிராகக் கொண்டிருத்தலாவது, அவனோடு பிரிவின்றி ஒன்றி, அவன் வழிப்பட்டு நிற்றல்` என்பதை நாயனாரே, ``நீங்கா நிலைபெற லாகுமே`` என விளங்க ஓதினார்.
இதனால், காரண பஞ்சாக்கரத்தால் பயன் எய்தும் முறை வகுத்துக் கூறப்பட்டது.
``கடல் நாகைக் காரோண, நின்
நாமம் பரவி நமச்சிவா யவ்வென்னும் அஞ்செழுத்தும்
சாம் அன்றுரைக்கத் தகுதிகண் டாய்எங்கள் சங்கரனே``*
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 1

அங்கமும் ஆகம வேதமும் ஓதினும்
எங்கள் பிரான்எழுத் தொன்றில் இருப்பது
சங்கைகெட்(டு) அவ்வெழுத் தொன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

பொழிப்புரை :

வேதம், வேதாங்கம், வேதாந்தம் முதலாக உள்ள அனைத்து நூல்களையும் ஒருவன் ஓதி உணர்ந்தாலும் ஏனெனில், சிவன் இருப்பது ஓர் எழுத்திற்குள்ளே. (அஃதாவது, `சி` என்னும் எழுத்தின் உள்ளேயாம். எனவே, `அதன் உண்மையை உணராமல், மற்றை எத்தனை நூல்களை ஓதி உணர்ந்தாலும் அவனை உணர்தல் இயலாது` என்பதாம்.) இது கேட்பதற்கு முக வியப்பாய் இருக்கும் ஆகையால், `இஃது உண்மையாய் இருக்க முடியுமா` என எழும் ஐயம் நீங்குதல் அரிது. முன்னைத் தவத்தாலும், குருவருளாலும் அந்த ஐயம் நீங்கப் பெற்று அதனை உறுதியுடன் சாதித்தால் அங்ஙனம் சாதிக்கின்ற ஆன்மாத் தான் என்று அடைந்தறியாத அழகிய கரையை அடைந்த மரக்கலத்திற்கு ஒப்பாகும்.

குறிப்புரை :

அஃதாவது; `பிறவியாகிய கடலைக் கடந்து, வீடுபேறாகிய கரையை அடையும்` என்பதாம். வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``ஓர் எழுத்து`` என்றது முன் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டெழுத்தில் வகாரம் நீங்க நின்ற சிகாரத்தினை ஆதல் எளிதின் விளங்கும்.
`தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகா காரணம்` என ஐந்து வகையாகக் கூறப்படுகின்ற பஞ்சாக்கரத்துள் சமய தீக்கைப் பேற்றால் தூல பஞ்சாக்கரத்தை ஓதிச் சரியையிலும், விசேட தீக்கைப் பேற்றால் சூக்கும பஞ்சாக்கரத்தை ஓதி முன்னர்க் கிரியையிலும், பின்னர் யோகத்திலும் நின்று, நிருவாண தீக்கைப் பேற்றால் அதி சூக்கும பஞ்சாக்கரத்தைக் கேட்டுப் பொதுப்பட உணருமாற்றால் தத்துவ சுத்தி ஆன்ம தரிசன சிவரூப நிலைகளையடைந்து, பின், அதனை நன்கு சிந்தித்துச் சிறப்பாக உணருமாற்றால் ஆன்ம சுத்தி சிவ தரிசன நிலைகளையடைந்து, பின் அதனை நன்கு தெளியுமாற்றால் காரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவயோக நிலைமை அடைந்து, பின் நிட்டை கூடுமாற்றால் மகாகாரண பஞ்சாக்கரத்தை ஓதிச் சிவபோக நிலையைப் பக்குவான்மா அடையும் என்க.
`சிவ யோகம்` என இங்குக் கூறப்படுவது, ஆன்மாத் தன்னை உணர்தல் இன்றிச் சிவனை மட்டுமே உணர்ந்து நிற்கும் நிலை. இதனால் இங்கு ஆன்ம எழுத்தாகிய யகாரம் நீக்கப்படுகின்றது. ஆன்மாத் தற்போதத்தை இழத்தலும் சிவபோதமே போதமாக நிற்றலும் திருவருளேயாகலின் இங்கு அருள் எழுத்தாகிய வகாரம் இருத்தல் இன்றியமையாததாகின்றது.
இந்தச் சிவயோக நிலை அருள்நிலையேயன்றி, ஆனந்த நிலையன்று. சிவபோதம், மேலிட மேலிட சிவானந்த வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்க அதனுள் ஆன்மா மூழ்குதலே ஆனந்த நிலை. அதுவே நிட்டை நிலை. அங்கு ஆன்மா அருளையும் நினையாது மது உண்ட வண்டுபோல் அந்த ஆனன்தமாயே நிற்றலால் அவ்விடத்து அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்குவதாயிற்று.
``மாயநட் டோரையும் மாயா மலம் எனும் மாதரையும்
வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு, மெய்யருளாம்
தாயுடன் சென்று,பின் தாதையைக் கூடிப்,பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே`` என்னும் பிற்காலப் பட்டினத்தடிகள் பாடலும் அதிசூக்கும, காரண, மகா காரண பஞ்சாக்கரங்களையே குறிப்பால் உணர்த்துதலை ஓர்ந்துணர்க.
தூல சூக்கும பஞ்சாக்கரங்களை ஓதுதல் சகல நிலையாய் முடிய, அதிசூக்குமம் முதலாக ஓதுவனவே சுத்த நிலையாகும். அதனுள் கேட்டல் சுத்த சாக்கிரம். சிந்தித்தல் சுத்த சொப்பன சுழுத்திகள். தெளிதல் சுத்த துரியம் நிட்டை சுத்த துரியாதீதம்.
ஆன்ம சுத்திக்குப்பின் ஆன்மா அடையும் ஆன்ம லாபம் இரண்டு. ஒன்று பாச நீக்கம். இதுவே அருள்நிலை மற்றொன்று சிவப்பேறு. இதுவே ஆனந்த நிலை, சிவஞான போத சூத்திரங்களுள் எட்டாவது முதலாக நான்கு சூத்தரங்களாலும் முறையே கேட்டல் முதலிய நான்கும் கூறப்பட்டன. பன்னிரண்டாம் சூத்திரம் அணைந்தோர் தன்மை கூறுவது.
உமாபதி தேவர் தாம் அருளிச் செய்த எட்டு நூல்களுள் இறுதி நூலாகிய சங்கற்ப நிராகரணத்து இறுதியில் இப்பஞ்சாக்கரங்களின் உண்மையே ஒருவாறு விளங்கும்படி பரம சித்தாந்தமாக ஓதியருளினார். அப்பகுதி வருமாறு:-
``பதிபசு பாச முதிர் அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனம்இல் ஞாதுரு, ஞானம், ஞேயம் என்(று)
இசைய மூன்றாய், பசு, பதி என்(று) அவற்(று)
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயன்எனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிறை யியற்கை இயம்புதல் தகுமே``
சிவப்பிரகாசத்து, ``ஆசுறு திரோதம் மேவாது`` என்னும் செய்யுளின் பொருளை வல்லார்வாய்க் கேட்டுணர்க. `அதிசூக்கும` முதலிய பஞ்சாக்கரங்கள் உலகப்பற்று `அற்று` ஞான வேட்கை கொண்டு, ஞானாசிரியரை அடைந்து ஞானோபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுவார்க்கே உரியன. மற்றையோர்க்குத் தூலமும், சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்களே உரியன.
தூலமும், சூக்குமமும் ஆகிய இருபஞ்சாக்கரங்களும் பிரணவத் தோடு கூட்டியும், கூட்டாதும் ஆசிரியர் உபதேசித்தபடி ஓதப்படும். அதி சூக்குமம் முதலிய மூன்றுவகைப் பஞ்சாக்கரங்களும் பிரணவம் இன்றியே ஓதப்படும்.
``எல்லா உணவிற்கும் உப்பு இன்றியமையாதது. ஆயினும் சிறந்த உணவாகிய பாலுக்கு உப்புக் கூடாது. அதுபோல எல்லா மந்திரங் கட்கும் பிரணவம் இன்றியமையாதது. ஆயினும் மிகச்சிறந்த சிவமூல மந்திரமாகிய பஞ்சாக்கரத்திற்குப் பிரணவம் தேவையில்லை`` என்கின்ற ஒரு மரபு உண்டு. அது அதிசூக்குமம் முதலிய பஞ்சாக்கரங்களை நோக்கி எழுந்ததேயாகும்.
பிற மந்திரங்கள் கூட நிர் பீச தீக்கையில் பிரணவம் இன்றியே சொல்லப்படும்.
இனி, உமாபதி தேவர், தமது, `கொடிக்கவி` நூலில் ``எட்டெழுத்து, நாலெழுத்து``l எனக் கூறியவை `பிராசாத பஞ்சாக்கரம், தார பஞ்சாக்கரம்` எனக் கூறப்படுமேயன்றி அதிசூக்கும பஞ்சாக்கரம் என கூறப்படாது. அவையும் யோகிகட்கே உரியன. எட்டெழுத்து, நாலெழுத்து முதலியவற்றை அச்செய்யுளின் உரையிற் காண்க.
ஆகம வேதங்களைக் கூறவே இனம் பற்றி வேதாந்தமும் கொள்ளப்பட்டது. ``ஓதினும்`` என்னும் உம்மை சிறப்பு. அதனால் `அறிதல் இயலாது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது. ``ஒன்றையும்`` என்னும் உம்மை முற்று. அதனால் அதனது ஆற்றல் மிகுதி உணர்த்தப்பட்டது.
அதிகாரத்தை வேறுபடுத்தி விரிவு கூறாவிடினும் இம்மந்திரத்திற்குப் பிறகும் இப்பொருளையே கூறினமை காண்க.
இதனால், `மகா காரண பஞ்சாக்கரமாவது இது` என்பது குறிப்பால் உணர்த்தி, அதனது ஆற்றல் மிகுதி தெளிவாக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.

பொழிப்புரை :

மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது.

குறிப்புரை :

சித்தர் மரபில் உயர்ந்த பொருள்களைப் பிறர் அறியாவண்ணம் இழிந்தனபோல மறைத்தக் கூறுதல் வழக்கம். அம்முறையில் இஃது அவர்களால் `நாய் ஓட்டும் மந்திரம்` எனக் குறிக்கப்படுதலை இங்குக் கொண்டு கூறினார். ``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி``8 முதலியனவும் காண்க. நாயை ஓட்டுமிடத்தச் சொல்லப்படுவது. `சீ` என நெட்டெழுத்தாய் இருப்பினும், அதுவே அதனைக் குறிக்கும் தொடராகாமல், குறிப்பால் பொருளையுணர்த் தலின், `சி` எனக் குற்றெழுத்தையே குறித்ததாயிற்று. நால் வேதங்களும் சிவபிரானது பெருமையை விரித்தலால், `இதுவே நால் வேதங்கள்` என்றும், சிவனே இதன் பொருளாதல் பற்றி ``நாதன் இருப்பிடம்`` என்றும், ``நாதந்த சோதி`` என்றும் சிவன் பொது மக்களால் அறிதற்கரியன ஆதலின் தம்மைப் பிறர் போல வைத்து, `இம் மந்திரத்தை நாம் அறியோம்` என்றும் தமிழ், ஆரியம் இரண்டாலும் கூறி வலியுறுத்துவார், ``நான்மறை நால்வேதம்`` என்றும் கூறினார்.
இதனால் மகாகாரண பஞ்சாக்கரமே எல்லாமாய் இருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவாய நம`எனச் சித்த ஒருக்கி
அவாய3ம் அறவே அடிமைய தாகிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் உள்ளம் உலகியலின் நீங்கிச் சிவன்பாற் செல்லும். அதனால் ஆன்மாத் தான் சிவனுக்கு ஆளாகி வினையாகிய தீங்கினின்றும் நீக்கும். அப்பால் அதி சூக்கும பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்ம அறிவு பாசஞானமாகிய தீங்கில்லதாம். அப்பால் காரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாப் பசு போதம் நீங்கிச் சிவபோதம் பெற்றுப் பிறப்பாகிய தீங்கினின்றும் நீங்கும். அப்பால் மகாகாரண பஞ்சாக்கரக் கணிப்பினால் ஆன்மாச் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும் ``என்று என்று`` என்னும் அடுக்கினுள் முன்னதைச் ``சிவாய`` என்பதனோடு கூட்டி, `அவாயம் அறநிற்க` என ஒருமுறையும் பின்னர் நிற்கும் ``என்று`` என்பதனை ``அவாயம்கெட`` என்பதனோடு மற்றொரு முறையும் முடிக்க. ``அவாயம்`` என்பது ஏற்ற பெற்றியால் பொருள் தந்தது. ``நிற்க`` என்பதன்பின், `பின்னர்` என ஒரு சொல் வருவிக்க. அதனால், `ஆனந்தம் ஆதல் ஓரெழுத்து மந்திரத்தால்` விளங்கிற்று. ``ஆம்`` என்றது `விளையும்` என்றபடி.

குறிப்புரை :

இதனால், உலகியலைத் தரும் தூல பஞ்சாக்கர் நீங்க, மற்றைய நால்வகைப் பஞ்சாக்கரத்தின் பயனும் ஒருங்கு தொகுத்துக்கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்தங் குறங்கும் வினையறி வார் இல்லை
எழுத்தறி வோம்என் றுரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்தறி யாரே.

பொழிப்புரை :

பஞ்சாக்கரம் பழமையான வேதமாகிய மரத்தில் அரும்பாய் அரும்பி, போதாய் முதிர்ந்து, பிஞ்சாய் உருப்பட்டு, காயாய்க் காய்த்து, பழமாய்ப் பழுத்து, உண்ண வல்லவர்க்கு இனித்துப் பயன்படுகின்றது. அதனை உண்டு, அல்லல் அறு அமைதியுடன் அறிதுயில் கொள்ளும் பயிற்சியை அறிபவர் உலகில் இல்லை. ஆயினும் பள்ளியில் எழுத்தறி கல்வியை மட்டும் கற்றவரகள் கூட, `இந்த ஐந்தெழுத்துக்களை நாங்கள் அறிவோம்` எனக் கூறுகின்றனர். ஆயினும் வேதம் முதலிய அனைத்தையும் கற்றவர்கள் கூட ஐந்தெழுத்து ஊழை நீக்கும் எழுத்தாதலை அறிய மாட்டார்கள்.

குறிப்புரை :

ஐந்து வகையான பஞ்சாக்கரங்களும் நிலையால் வேறு பட்டன அன்றிப் பொருளால் வேறுபட்டன அல்ல ஆதலை. ``பழுத்தன`` என்னும் குறிப்பால் உணர்த்தினார். அது பற்றியே அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``பழுத்தன`` என்றது குறிப்புருவகம். ``அங்கு`` என்றது, ``விழித்திருக்கும் போதே`` என்றபடி. விழித்தல் அறிவு அறியாமையுட் படாது விளங்கியிருத்தல் உறங்குதல் - உலக வாதனை யின்றியிருத்தல். எனவே, சிவத்தை மறவாது உணர்ந்திருத்தலாயிற்று. இந்நிலை ஆனந்த நிலையாதல் பற்றி, உலகத்தில் உறங்குவார் அல்லல் இன்றி இருத்தலோடு உவமித்து இந்நிலையில் நிற்பவரை, `தூங்குபவர்` என்றும், செயலற்றிருத்தல் பற்றி, ``சோம்பர்`` என்றும் நயம்படக் கூறுவர். ``தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்முள்ளே`` ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``* என்னும் மந்திரங்களைக் காண்க.
``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்;மற் றேதுண்டு சொல்``8
என்றார் உமாபதி தேவரும் இதனை, ``தூங்காமல் தூங்குதல்`` என்றும் கூறுவர். ஏதர் - குற்றம் உடையவர். ஏதம் - குற்றம்; அறியாமை. ஈற்றடியின் முதலில் உள்ள எழுத்து ஊழ். அதனை `அயன் எழுத்து` என்றும், `தலையெழுத்து` என்றும் கூறும் வழக்குண்மை யறிக. அழுத்துதல் - அடங்குதல். ஊழ் வினை ஊட்டியல்லது ஒழியாமை பற்றி `ஒழிக்கும்` என்னாது, ``அழுத்தும்`` என்றார். `உயிரைத் தாக்காது உடல் ஊழாய் வந்து போகும்` என்பதாம்.
``திருவாஞ்சியத் துறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை
நலிய ஒட்டாரே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டு. திருவைந்தெழுத்தை ஓதுவாரை ஊழ்வினை நலியா என்பதனை,
``பந்தமா னவை யறுத்துப்
பௌதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொழியா தங்குத்
தன்மைபோல் வினையும் சாரும்;
அந்தம்ஆ திகள் இலாத
அஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை
வாதியா பேதி யாவே``*
என்பதனான் அறிக.
``சிவாய நமஎன்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை;- உபாயம்
இதுவே; மதிஆகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்``* என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. இறுதியில் உள்ள ``எழுத்து`` எழுத்தாம் தன்மை. இசை வல்லுநர்கள், `ச ரி க ம ப த நி` என்னும் எழுத்துக்களைச் சொல்லக் கேட்ட ஒருவன் `இந்த எழுத்துக்களை நான் அறியேனா` என்று சொல்வது போல்வதுதான், `ஐந்தெழுத்துக்களை நாம் அறிவோம்` என்றல் என்றபடி.
இதனால், இதுகாறும் பலவாறாகக் கூறிவந்த அஞ்செழுத்தின் சிறப்பனைத்தும் ஒருவார்த்தையாகத் தொகுத்துணர்த்தி முடிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.

பொழிப்புரை :

சிவனது சத்தி `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந்திருத்தலால், `சத்தியே அவனது திருமேனி` என்பது பற்றி எங்கும் அவனது திருமேனி உள்ளதாம். `சத்தியே அவனது இருப்பிடமாகிய பர வெளி, அல்லது சிதாகாசம்` என்பது பற்றி, எங்கும் அவன் இருக்கும் சிதாகாரம் உள்ளதாம்; `அவனது சத்தி, அல்லது திருவருளே அவனது செயல்கள்` என்பது பற்றி, அவனது திருக்கூத்து எங்கும் நிகழ்வதாம். இவ்வாற்றால் எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், எங்கு நிகழும் எந்தச் செயலும் அவனது திருவருள் திருவிளையாட்டேயாம்.

குறிப்புரை :

`எங்கும் சிவ சத்தி ஆதலால் எங்கும் திருமேனி ... ... ... இருத்தலால், சிவனது அருள் விளையாட்டே எங்கெங்கும் தங்கும்` என இயைத்து முடிக்க. `அது` பகுதிப் பொருள் விகுதி.
இதனால், `எங்கும் நிகழும் எல்லாச் செயல்களும் அவனது திருவிளையாட்டாம் ஆதலின் அவ்விளையாட்டாகிய அவனது திருக்கூத்துக்கள் தாம் பலவாம்` என அவை தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

பொழிப்புரை :

அறிவே வடிவாதல் பற்றி, பரஞ்சோதியாய் மேலான ஒளியாய் - விளங்குகின்ற சிவனது அருள் விளையாட்டாக முன் மந்திரத்தில் கூறப்பட்ட அத்திருக்கூத்துத் தான் பலவாயினும் அவை, `சிவானந்தத்க் கூதது, சுந்தரக் கூத்து பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து` என ஓராற்றால் ஐந்து வகையாகின்றன. அவற்றின் மேலும் பலவாகின்ற கூத்தினை இயற்றுகின்ற அவனது ஆற்றலை யாரே அளவிட்டறிவார்!

குறிப்புரை :

இவைகளை ஒரோ ஒன்றாக நாயனார் பின்வரும் அதிகாரங்களில் விளங்கக் கூறுவார்.
இதனால் திருக்கூத்து வகைகள் தொகுத்துப் பெயரளவில் கட்டப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

பொழிப்புரை :

மேற்கூறிய ஐவகைக் கூத்துக்களுள் சிவானந்தக் கூத்தாவது, என்றும் அழிதல் இல்லாமையால் சத்தாய், அதனோடே சித்தாய், ஆனந்தமாய் உள்ள சத்தியிடமாக நின்று ஆனந்தத்தை முடிவின்றிப் பொழியும் கூத்தாகும் ஆகவே, ஆன்ம அறிவைக் கடந்து அந்தக் கூத்தினை இயற்றும் சிவனுக்கு அவ்விடத்தில் அந்த நடனத்தைச் செய்தற்கு அரங்காய் நிற்பது மேற்கூறிய அந்தச் சத்தியே.

குறிப்புரை :

`பரா சத்தி` என்பது உணர்த்துதற்கு, `சத்தாயும், ஆனந்தமாயும் உள்ளது` என்றார். அதனானே சித்தாதலும் தழுவப்பட்டது. `சத்தாவது உள்ளது` என்று மட்டும் கூறுவாரை மறுத்துச் சித்தாந்தம் கூறுதற்பொருட்டு, தோற்றக் கேடுகள் இன்றி உள்ளது` என்பார். ``தான் அந்தம் இல்லாச் சத்தி`` என்றார். அந்தம் இன்மை கூறவே, ஆதியின்மையும் பெறப்பட்டது. `ஆன்ம அறிவைக் கடந்து தன்னியல்பில் நிற்கும் சத்தியே பராசத்தி` என்றற்கு ``ஞானம் கடந்து`` என்றார். `அவ்வானத்தக் கூத்து` எனச்சுட்டு வருவிக்க. ``ஆடரங்கு`` என்பதில் ஆடுதல் வாளா பெயராகி நின்றது. `ஆனது அந்தச் சத்தியே` எனப்பயனிலை வருவித்து முடிக்க.
``ஆனந்த மாநடம்`` என்பதை முதலிற் கூட்டுக. கண்டீர், முன்னிலையசை. `சத்திமேல் நிகழ்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``உந்தும்`` என்பது கூறப்பட்டது.
எனவே, இது பரமுத்தியை அடைந்த ஆன்மாக்கட்கு அந்நிலையில் பராசத்தி வழியாகப் பேரானந்தத்தை இடையறாது தந்து கொண்டிருக்கும் கூத்தாதல் விளங்கும்.
``மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும் - ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும், அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து``
``பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக் கெட்டா ஒருவன் - வரைமகள்தான்
காணும் படியே கருணைஉருக் கொண்டாடல்
பேணுவர்க் குண்டோ பிறப்பு`` என்பவற்றால் அறிக.

பண் :

பாடல் எண் : 2

ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.

பொழிப்புரை :

`ஆனந்தம்` என்னும் சொல் வழியாக உணரப் படுகின்ற அந்தப் பொருள், ஆருயிர்களுக்கு அனுபவப் பொருளாதற் பொருட்டு ஆனந்தக் கூத்தை விரும்பிச் செய்யும் சிவனுக்கு அந்நிலையில், `மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி` என்பதுபோல, உடன் நிகழும் அரங்கமும் ஆனந்தமாய்; பாட்டுக்களும் ஆனந்தமாய்; பலவகை வாத்தியங்களும் ஆனந்தமயம்; இயங்கு திணை றிலைத் திணைகளாகிய அனைத்துப் பொருள்களும் ஆனந்தமயம்.

குறிப்புரை :

வாச்சியம் - சொற்பொருள். `ஆனந்த வாச்சியம் ஆனந்தமாக, ஆனந்தக் கூத்து உகந்தானுக்கு என்பவற்றை முதலில் கூட்டியுரைக்க. ``ஆனந்தம் ஆக`` என்றது, `உண்மையில் ஆனந்த மாகும்படி` என்றதாம். உண்மையாவது, அனுபவம் அகத்தல், தன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ஆனந்தத்தை விளைப்ப வற்றையும், பெறுபவற்றையும் ஆகுபெயரால் ``ஆனந்தம்`` என்றார். ``சராசரம்`` என்றது அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. ``சராசரம்`` என்ற அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. `எஞ்ஞான்றும் எல்லாப் பொருள்களும் முதல்வன் வழியாவனவற்றி வேறாவன அல்ல` என்பதாம். `பூவோடு சேர்ந்த நாரும் மணங் கமழும்` என்பது போல, `ஆனந்தக் கூத்தோடு இயைந்த அனைத்தும் ஆனந்தமாம்` என்பது கருத்து. பராகாசத்துள் நிகழும் ஆனந்தக் கூத்தின் இயல்பு இது வாகலின், அதுதானே இவ்வுலகில் நிகழுமிடத்தும் இவ்வியல்பினதேயாம்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை எனப்போற்றி``
என்ற ஆளுடைய பிள்ளையாரது அனுபவ நிலையை இங்கு நினைவு கூர்க.

இதனால், சிவானந்தக் கூத்தினால் எல்லாப் பொருளும் ஆனந்தமாய் விளங்குதற் பயன் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 3

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

பொழிப்புரை :

`உள்ளது` என வழங்கபப்டும் சத்தாதல் தன்மையும், `ஒளி` என வழங்கப்படும் சித்தாதல் தன்மையும், சமய நிலையில் `சிவகாமி` என வைத்து வணங்கப்படும் அருள் வடிவான ஆனந்த மாதல் தன்மையும் ஆகிய இம்மூன்று தன்மைகளையும் உயிர்கள் பெறுதல், சிவன் செய்யும் ஆனந்த நடனத்தை உள்ளத்தில் தெளிவாகக் கண்டு தியானிக்கும் தியானத்தினாலாம்.

குறிப்புரை :

``பரம்`` மூன்றும் பரமாதல் தன்மை மேல் நின்றன. பரமாதல் தன்மையை உபநிடதங்கள், `சத்து சித்து, ஆனந்தம்` என மூன்றாகக் கூறும் வழக்குப்பற்றி அவற்றையே எடுத்துக் கூறினார். செய்யுள் நோக்கிச் சித்து முதற்கண் கூறப்பட்டது. `சிவகாமி` என்பது பொதுவாக, `சிவனை விரும்புவள், விரும்பச் செய்பவள்` எனப் பொருள் தரினும் உண்மையில் `காமம்` என்பது இன்பத்தைக் குறிப்பதாக `சிவகாம வல்லி` என்பதை, தன் ஆனந்தக் கொடி`l எனக் கூறுமாற்றால் அறிக. தெளிவு, இங்கு, தியானம். ``தெளிவாம் நட்டத்தின்`` என்றது, `நட்டமாம் தெளிவானதின் சத்தி` எனப் பொருள் தந்து நின்றது.
இதனால் சிவானந்தக் கூத்துப் பரமுத்தி ஆனந்தத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.

பொழிப்புரை :

அருவம், உருவம் அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளை உயிர்களின் பொருட்டுக் கொள்கின்ற சிவன் படைத்தல் முதலிய ஐந்தொழிக்கு ஏற்ப ஐந்து வகை வடிவங்களையும், அவற்றிற் குரிய பெயர்களையும் கொண்டு செய்தலை நாடகமாக உடையவன். ஆகையால் அவன் செய்யும் தொழில்கள் யாவும் அருள் காரணமாகச் செய்வனவே அந்நிலையில் அத்தொழிலை அவள் ஐந்தாக வகுத்து அம்மையோடு உடனாய் நின்று திருக் கூத்தாடுகின்றான். அக்கூத்தும் ஐந்தாகும்.

குறிப்புரை :

அகளம் - உருவம். சகளம் - உருவம். இற்றைக் கூறவே, இனம் பற்றி அருவுருவமும் கொள்ளப்பட்டது. ``ஆடி`` என்பது பெயர். ``நடம் ஐந்து`` என்றது, பொன், வெள்ளி, செம்பு, இரத்தினம், பல்வகைக் கூட்டு, என்பவற்றாலாகிய மன்றங்களில் செய்யும் நடனத்தை எனவே, மன்றம் ஐந்தாதல் பற்றி நடனம் `ஐந்து` எனப்பட்டதாம். பொன் மன்றம் முதலியன முறையே `தில்லை` கூடல்` திருநெல்வேலி, திருவாலங்காடு, திருக்குற்றாலம்` என்னும் தலங்களில் உள்ளவை. ஆகம் - திருமேனி ஐந்தொழிலுக்கு ஏற்ற ஐந்து திருமேனிகளாவன யன், மால், அரன், மகேசுரன் சதாசிவன் ஆகிய திருமேனியின் அயன் முதலிய மூவரையும் இங்கு, `சம்பு பக்கத்தினர்` என்க. ஆன தொழில், தான்என்று கொண்டு தொழில், அருளால் ஆவன` என ஒருசொல் வருவிக்க.
``அகள சகளத்தன் ஐங்கருமத்து ஆகம் ஆன நடம் ஆடி`` எனத் தொடங்கி, `பாகனாய்` என ஆக்கம் வருவித்து, `ஆன நடம் ஐந்து` என முடிக்க. ``ஐந்தொழில் செய்து`` என்பதைத் `தொழில் ஐந்து செய்து` என மாற்றிக் கொள்க.
இதனால் முடிநிலைக் கூத்தாகிய ஆனந்தக் கூத்திற்குமுன் அதற்கு ஏதுவான வேறு கூத்தக்களையும் சிவன் செய்தருளுகின்றான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.

பொழிப்புரை :

`நிலையற்ற இன்பத்தில் மோகத்தை உண்டாக்குவ தாகிய சுவர்க்கம், மக்கள் விலங்கு முதலிய வேறுபட்ட பல உடம்புகளையுடையதாகிய பூமி, துன்பத்தையே தருவதாகிய நரகம்` என்றும் மூவகை உலகங்களில் உயிர்களைச் செலுத்தி ஐந்தொழில் செய்து அவைகளை ஆட்கொள்கின்ற, மேலான பரம்பொருளும் அனைத்துப் பொருட்கட்கும் இடமாதல் பற்றி, `பிரமம்` எனக் குறிக்கப்படுவதும் ஆகிய அந்த ஒரு பொருளில் அடங்கியுள்ள அண்டங்களோ பல கோடி என்றாலும் அவை ஐந்து தொகுப்புக்களில் அடங்குகின்றன. அவை, `பூதாண்டம், பேதாண்டம், போகாண்டம் இவை அனைத்திலும் பழைதான முத்தாண்டம்` என்பன.

குறிப்புரை :

இவை முறையே, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் அடங்கியுள்ளனவாம். ``மோகாண்டம்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ``மோகாண்டம்`` என்பது முதலிய மூன்றிலும் ``அண்டம்`` என்றது உலகத்தை உலகத்தை. ``தாகாண்டத்து`` என்பதில் அத்துத் தொகுத்த லாயிற்று. `ஐங்கருமத்தால்` என உருபு விரிக்க. ஆண்டதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. `ஏக அந்தமாம் பிரமமாகிய அண்டத்தன பூதாண்டம் ... ... ... முத்தாண்டம்` என முடிக்க. `பிரமத்தை அண்டம்` என்றது இடமாதல் பற்றி.
``பூதாண்டம்`` என்பதில் ``பூதம்`` என்றது யாவரும் நன்கறிந்த பிருதிவியை. ``பேதம்`` என்றது அதற்குமேல் அப்பு முதல் பிருகிருதி முடிய உள்ளவற்றை. ``போகம்`` என்பது போக்தா. (நுகர்வோன் மேலதாய்ப் புருட தத்துவத்தையும் அதற்குக் காரணமான மற்றை வித்தியா தத்துவங்களையும் குறித்தது.) யோகாண்டம், தவத்தோர் அடையக் கூடிய வித்தியேசுர புவனங்கள். அவை `சுத்த வித்தை ஈசுரம், சாதாக்கியம்` என்னும் தத்துவங்களில் உள்ளன. முத்தாண்டம், அபர முத்தித் தானங்களாகிய சிவதத்துவ, சித்தி தத்துவ புவனங்களை தோற்ற முறையில் இவை முற்பட்டனவாதல் பற்றி ``மூதாண்டம்`` எனப்பட்டன. ``மூதாண்டம்`` என்பது, ஏனைய வற்றோடு இயைந்து இன்னோசை தர வேண்டி, ``மூதாண்டம்`` என நீட்டல் பெற்றது. ``மோகாண்ட தேகாண்ட தாகாண்டம்``, உம்மைத் தொகை தற்பரத்து - தற்பரமாம் தன்மையையுடைய. அத்தன்மை யாவது உயிர்கள் அனைத்திற்கும் மேலானதாதல்.
`இவ் ஐங்கலைகளிலும் சிவனது ஆனந்தக் கூத்து நிகழ்கின்றது` என்பது கருத்து. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.
இதனால் ஆனந்தக் கூத்தின் வியாபகம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.

பொழிப்புரை :

(``அவனன்றி ஓரணுவும் அசையாது`` என்னும் பழமொழி. `அவன் அசையவில்லையாயின் எதுவும் அசையாது` என்பதையும் தெரிவிப்பதுடன் `அவன் அசைந்தால் அனைத்தும் அசையும்` என்பதையும் தெரிவிக்கின்றது. ஆகவே, `அனைத்தும் அசைய வேண்டி அவர் அசைகின்றான்` என்பது விளங்குகின்றது. அசைதல், அது அது தன் தன் இயல்பிற்கு ஏற்பச் செயற்படுதல், `அவனது திருக்கூதினாலே அனைத்தும் செயற்படுகின்றன` என்பதையே இம்மந்திரம் உணர்த்துகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சொல்லும், பொருளும்` என அனைத்தப் பொருளும் இருவகைப்படும். சொல் `வழக்குச் சொல், செய்யுட் சொல்` என இருவகைத்து. செய்யுட்களும் முதல் நூல்களே தலையாயவை. ஆகவே அவற்றை வேதங்கள் ஆட, மிகும் ஆகமம் ஆட`` என எடுத்தோதவே, ஏனைய சொல்வகைகள் ஆடுதல் தானே அமைந்தது. சொற்கள் அசைதலாவது வழக்கிலும், செய்யுளிலும் நின்று பொருளுணர்த்தி வருதல். செய்யுட்கண் தம்மியல்பில் நிற்குங்கால் இயற்செய்யுளாயே நிற்கும். இசையோடு பொருந்தினால் இசைச் செய்யுளாய் முன்னையினும் இனிமையைத் தரும். அதனால், ``கீதங்கள் ஆட`` என அவற்றை வேறெடுத்தோதினார். அண்டம் - உலகம். உலகங்களை `ஏழ்` என்றல் வழக்கு. ``பூதங்கள்`` என்றது உபலக்கணத்தால் தத்துவம் அனைத்தையும் தழுவி நின்றது. புவனங்கள், உலகங்களை ஆட்சி புரியும் அதிகார தேவர்களுக்கு உரிய இடங்கள், `அவை இருநூற்று இருபத்து நான்கு என்பது சைவ சித்தாந்தம். நாதன் ஞானானந்தக் கூத்தினைக் கொண்டு ஆடினான்` என இயைக்க. கொள்ளல், மேற்கொள்ளல், ஞானத்தைக் கூறவே, அதனோடு உடன் நிற்பதாய உண்மையையும் கொள்ளப்படும். உண்மை அறிவு இன்பக்கூத்தே ஆனந்தக் கூத்து ஆதல் விளங்கும்.
இதனால் சிவனது உண்மையறிவின்பக் கூத்தே அனைத்துப் பொருள்களும் நிலைத்துத் தத்தம் இயல்பிற்கேற்பச் செயற்பட்டு பயன் விளைக்கச் செய்வது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில், `அளைத்துப் பொருள்களின் இயக்கங்கட்கும் காரணமாய் நிகழ்வது சிவன் கூத்து` என்பது கூறப் பட்டது. இம்மந்திரத்தில், அவை இயங்குங்கால், அக்கூத்து அவற்றோடு உடனாயும் இயங்கி திகழ்கின்றது` என்பது கூறப் படுகின்றது. இவையே இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வேற்றுமை. எனவே மேற்கூறிய மந்திரத்தின் பொருளே இம்மந்திரத்திற்கும் ஆகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பாரதத்தை அதன் சிறப்புப் பற்றி, `ஐந்தாம் வேதம்` என்றல்போல வேதத்தின் பொருளை உபவிருங்கணம் செய்யும் புராண இதிகாசங்களை உபசாரத்தால் `வேதம்` என வைத்து, ``வேதங்கள் ஐந்து`` என்றார். துணை நூல்களாய் நின்று முதல் நூலின் பொருளை விரித்து விளக்குதல் ஓதும் - நூல்களில் சொல்லப்படுகின்ற கலை, காலம் இவை வித்தியா தத்துவங்களில் தலையாயவை. ஊழி, உலகத்தின் நிலைப்புக் காலம். `அண்டம் ஐந்தில் போதம்` என மாற்றியுரைக்க. அண்டம் ஐந்து, நிவிர்த்தி முதலிய கலைகளில் உள்ள அண்டத்தின் வகை ஐந்து, போதம் - அறிவு. இஃது உயிர்களின் அறிவு, என்றது அதன் நிகழ்ச்சியை. புணர்தல் - உடனாய் நிற்றல்.

பண் :

பாடல் எண் : 8

தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.

பொழிப்புரை :

முன் இரு மந்திரங்களில் அஃறிணையாக வைத்துக் கூறிய பொருளை இம்மந்திரம் உயர்திணையாக வைத்துக் கூறுகின்றது.
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`ஆதியின் மூவர்கள்` என மாற்றிக் கொள்க. ஆதி உலகத் தோற்றக் காலம். சாத்தர் - சாத்தியர். `சாத்தியர்` என்னும் ஒருசாராரும் தேவர் கூட்டத்துள் சொல்லப்படுகின்றனர்.
சிவனது திருக்கூத்து உலகத்தின் செயற்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் ஆதல் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.

பொழிப்புரை :

பிரகிருதி உலகங்களுக்கு அப்பால் உள்ளவை அசுத்த மாயா உலகங்கள். அவற்றிற்கு அப்பால் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் தத்துவ புவனங்கட்கு அப்பால் உள்ளவை சத்தி தத்துவ புவனமும், சிவ தத்துவ புவனமும், அவைகளில் முறையே `சத்தி` என்றும், `சிவன்` என்றும் இருதிறப்பட்டு நின்று ஐந்தொழில் புரிகின்ற சிவன், அத்தொழிலின் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு சத்தி காணத்தான் ஆடலை விரும்பி ஆடுகின்றான்.

குறிப்புரை :

எனவே, அங்ஙனம் ஆடுகின்ற கூத்தே சுந்தரக் கூத்தாம்` என்பது போந்தது. சுந்தரம் - அழகு. எனவே, அது வடிவைக் குறிக் -கின்றது. வடிவுதான் `அருவம், அருவுருவம், உருவம் என மூவகைப் படுதல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அவற்றுள் உருவத்திருமேனி கொண்டு செய்யும் கூத்தையே நாம் கூத்தாகக் காணினும், அதனோடு ஒப்ப ஐந்தொழில் இயற்றும் மற்றைத் திருமேனிகளின் செயலும் சுந்தரக் கூத்து` என்றே இங்குக் கூறப்படுகின்றன. `சூக்கும நடனம், அதிசூக்கும நடனம்` எனச் சாத்திரங்களில் கூறப்படுவனவற்றை இங்கு நினைவு கூர்க. இதனால் மேல் தொகுத்துக் கூறிய கூத்து ஐந்தனுள் முதலாவதாகிய சிவானந்தக் கூத்து ஒன்றும் சொரூப நிலைக் கூத்தம், ஏனைய நான்கும் தடத்தநிலைக் கூத்தும் ஆதல் அறிக.
``அண்டங்கள் ஏழ்`` என்றது, பிரகிருதி அண்டங்களை யாதலின், பின்னர்க் கூறப்பட்டவை அசுத்த மாயை, சுத்தமாயா அண்டங்களாதல் விளங்கிற்று. சிவன் இன்றிச் சத்தியில்லையாதலின், சத்தியைக் கூறவே, சிவன் தானே பெறப்பட்டான். `சத்தி, சிவன்` என்பன அவரையும், அவர்க்கு இடமாய தத்துவங்களையும் குறித்து நின்றன. `உச்சிமேல் உள்ளது` என ஒருசொல் வருவித்து முடிக்க. ``கண்டம் கரியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தலாம். உகத்தல் தன் காரியம் தோற்றி நின்றது.
இதனால், `சுந்தரக் கூத்தாவது ஐந்தொழில் பற்றிய கூத்து` என்பது கூறப்பட்டது.
(பதிப்புக்களில் இதனை அடுத்துள்ள ``கொடுகொட்டி பாண்டரம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.)

பண் :

பாடல் எண் : 2

பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் வியாபித்து நிற்றலால் சுத்த மாயை யின் வியாபகம் பரமாண்டம் ஆகும். அதற்குள்ளே உள்ள அனைத்து இடங்களிலும் பராசத்தியின் கூறாகிய ஆதி சத்தி பரவியுள்ளது. ஆகவே அந்தச் சத்தயைத் தனது விரிந்த ஒளியாகக் கொண்ட தடத்த சிவன், அவ்விடங்களில் எல்லாம் உளன். அவையேயன்றிச் சுத்தமாயையின் காரியமாகிய வாக்குக்களும் `அதிசூக்குமம், சூக்குமம், தூலம்` என்னும் வகையில் அந்த எல்லா இடங்களிலும் உள்ளன. ஆகவே, அந்த எல்லா இடங்களிலும் சிவன் தனது சுந்தரக் கூத்தினைச் செய்கின்றான்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உள்ளது, உளன், உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. மூன்றாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பதும் உடன் எஞ்சி நின்றது. நாதம் இல்லையேல் பொருள் விளங்காமை பற்றி அதன் இருப்பையும் உடன் கூறினார். நடம், அதிகாரத்தால் இங்கு நடைபெறுமாறு கூறப்பட்டடது.

பண் :

பாடல் எண் : 3

`அங்குசம்` என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.

பொழிப்புரை :

(`அம்சம்` என்பதை இடையே குகரச் சாரியைக் கூட்டி, `அங்குசம்` என ஒரு கருவியின் பெயர்போல ஆக்கி மறை பொருட் கூற்றாக வழங்குதல் சித்தர் மரபு. எனவே,) அங்குசம் என்ன எழும் மார்க்கம்` என்பது, `அம்சம்` என எழுகின்ற வழி என்பதாம். இம்மந்திரம் இரேசக பூரகமாய் நிகழும் வாயு இயக்கத்தால் இயல்பாக நிகழ்தலின் `அசபா மந்திரம்` எனப்படும். அம்மந்திரவழி இயங்கும் உயிர்ப்பினாலே அறிவு நிகழ்தலி அவ்வாற்றால் அறிவை விளக்கு கின்ற இறைவனது செயல் `அசபா நடனம்` எனப்படுகின்றது. அந்த நடனத்திற்கு, `அம், சம்` என்பனவே, `தொம், தி` என ஒலிக்கின்ற தாளங்களாம். அந்தத் தாள ஒற்றுக்கு இயையச் சிவன் சுழுமுனை நாடிக்குள் நின்று சுந்தரக் கூத்து ஆடுதலை அறிவு விளங்கிய காலத்தில் தொடங்குகின்றான். ஆயினும் அக்கூத்தினை அவன் முடித்துவிட்டு அப்பாற்போதல் இல்லை.

குறிப்புரை :

போதம் - அறிவு. மூல நாடி, சுழுமுனை நாடி. தரித்தல் - தங்குதல். அறிவு விளங்குதல், குரு உபதேசத்தால் அசபா நடனத்தை அறியப் பெறுதல்`. ``புகுதல்`` எனப் புதிதுபோலக் கூறியது, அறிவுக்குப் புலனாகும் காலம் பற்றி. விளங்கிய அறிவு பின் விளக்கம் அற்று மறவாமை பற்றி, ``போதல் இல்லை`` என்றார். அசபா நடனத்தால் இங்ஙனம் அறிவு விளங்கச் செயதல் ஐந்தொழில் நடனத்தில் `அதிசூக்கும நடனம்` எனப்படும். எனவே, இதுவும் சுந்தரக் கூத்தின் வகையாயிற்று.
இதனால், சுந்தரக் கூத்த வகைகளுள் ஒன்றன் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.

பொழிப்புரை :

எனக்குத் தலைவனாகிய சிவபெருமான் முதலில் சுந்தரக் கூத்திற்கு ஆயத்தங்களைச் செய்தும், பின் அதனை, `அருவம் நான்கு அருஉருவம் ஒன்று, உருவம் நான்கு` என்னும் முறையில் திருமேனி கொண்டு மும்மாயைகளின் மேலும் நிகழ்த்திப்பின் முற் றொடுக்கத்தைச் செய்தும், அக்காலங்களில் உயிர்களின் அறிவின்கண் நின்று அதனை விளக்கியும், தோற்றம் நிலை, இறுதி மூன்றனுள் இடையதாகிய நிலைப்புக் காலத்தில் முன் மந்திர்ததில் கூறியவாறு சுழுமுனை நாடியில் நின்று உயிர்ப்பு வழியாகப் புலன் உணர்வைத் தந்து; இறுதியாக, என்றும் அழிதல் இல்லாத பெருநிலவுமாகிய முத்தி நிலத்தில் பேரானந்தத்தைத் தரும் நடனத்தைச் செய்தும் நிற்பதாக அக்கூத்தினை இங்ஙனம் வரையறை செய்துகொண்டான்.

குறிப்புரை :

ஆளத்தியாவது, பண் அமைதற்கு ஏழிசை முறையால் அதனை ஏற்றிழிவு வகைகளில் முன்னர் அமைத்துக் காண்பது. அஃது இங்குச் சுந்தரக் கூத்தினை இயற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலைக் குறித்தது. காலம் - ஊழி; பேரூழி; முற்றழிப்புக் காலம். ``கருத்து`` என்றது அறிவை, ``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் ஆறும் எண்ணுப் பொருளவாய் முறையே `ஆயத்தம், தூலம், சூக்குமம், கேவலம், சகலம், சுத்தம்` என்னும் அறுவகைக் கூத்தினையும் குறித்தன. சிவன் ஆயத்த நிலையில் பரநாத பரவிந்துக்களாயும், தூல நிலையில் அபநாத அபவிந்து சதாசிவன் முதலிய ஐவராயும் நிற்பன் `நவந்தரூ பேதம்` என்னும் மரபில் மலைபு வாராமைப் பொருட்டு. ``நவக்கூத்தாடி`` என ஒன்பது பேதம் கூறினாராயினும், அவற்றுள் முதலில் உள்ள பரநாத பரவிந்துக்கள் ஒழிந்த ஏழனையே அங்குக் கொள்க. இனி `நவக் கூத்தாடி` என்றே போயினால், ஆயத்த நிலை தோன்றாமை பற்றி அதனை வேறு வைத்தும் முற்றழிப்புத் தனிச் சிறப்புடைமையின் அதனைப் பின்னரும் எடுத்தோதியும் வலியுறுத்தினார். சுத்த நிலைக் கூத்து முன் அதிகாரத்திற்குரிய ஆனந்தக் கூத்தேயாயினும் அதுவும் கூத்தினுள் ஒன்றாதல் தோன்றுதற் பொருட்டு, ``முடிவிலா ஞானத்துள் ஆடி`` எனத் தொகுத்தோதினார். ``முடித்தான்`` என்றது, `இவ்வாறு முடித்தான்` என வரையறை செய்தமையைக் குறித்தது. இனிச் சுத்தம் ஒழிந்த கேவல சகலக் கூத்துக்களும் நவக் கூத்தில் அடங்குவனவே என்க. முதல் அடி இன எதுகை.
இதனால் சுந்தரக் கூத்தின் வகைகள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன. ஆனந்தக் கூத்தைக் கூறியது எய்தியது இகந்து படாமைக் காத்தது.

பண் :

பாடல் எண் : 5

சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும்
சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.

பொழிப்புரை :

சத்தி பேதங்கள் ஐந்து, அவை, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என்பன. இவற்றோடு இயைந்த சிவபேதமும் ஐந்து, அவை, `பரம், சிவன், சிவன், கருணாகரன், நாதமூர்த்தி, விந்துமூர்த்தி` என்பன. திருவருள் பெற்றோர் அடையும் முத்திகள் எட்டு. அவை, காலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம், சிவன் முத்தி, அதிகாரமுத்தி, போகமுத்தி, இலயமுத்தி, பரமுத்தி அல்லது சாயுச்சியம்` என்பன. முதன்மைப்பதவிகள் எட்டு. அவை, `கணபதி, குமாரன்` நந்தி, சண்டி, அரன், அரி, அயன், இந்திரன்` என்போரது பதவிகள். சித்திகள் எட்டு. அவை அணிமாதிகள். சிவபதம் - சிவனது நிலை. அவை எட்டாதல் அட்டமூர்த்தியாய் நிற்றலால். அட்ட மூர்த்தமாவன `ஐம்பூதம், ஞாயிறு, திங்கள், உயிர்` என்பன. இவற்றில் நிற்குமிடத்தே `பவன், சர்வன்` முதலிய எட்டுப் பெயர்களைச் சிவன் உடையவன் ஆகின்றான். சுத்திகள் எட்டு, வழிபாட்டில் செய்யப் படுவன. `நிரீக்கணம், புரோக்கணம், தாடனம், அப்பியுக்கரணம்` என்பன. இவை முறையே `பார்த்தல், தெளித்தல், தட்டுதல், மூடுதல் மும்முறை கை கொட்டல், திசைக்காப்புச் செய்தல், சுற்றுதல், அமுதமய மாக்கல்` என்பனவாம். இவை முதலாக அனைத்தும் நிகழும்படி சிவன் தொன்று தொட்டுச் சுந்தரக்கூத்தினை நிகழ்த்தி வருகின்றான்.

குறிப்புரை :

``பேதம்`` என்பதைச் ``சத்தி`` என்பதனோடும் கூட்டுக. ``எட்டீசன்`` என்பதில், `எட்டும் நிகழ` என ஏனையவற்றோடு இயைய எண்ணும்மை விரித்து, அவற்றிற்கு முடிக்கும் சொல் ஒன்றும் வருவிக்க.
இதனால், சுந்தரக் கூத்தின் பயன்கள் பலவும் விரித்தோதப் பட்டன.

பண் :

பாடல் எண் : 6

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.

பொழிப்புரை :

மேகங்கள் ஏழு:- பிங்கல நிகண்டிலும், சூடாமணி நிகண்டிலும்` சிறிது சிறிது வேறுபடச் சொல்லப்பட்டன. நீர்மழையை அளவாகவும், மிகையாகவும், சிறிதாகவும் பொழிவன, மண்மழை, கல் மழை, பொன் மழை, மணி மழை என்பவற்றைப் பொழிவன இவைகள். கடல் ஏழு:- உப்பு, பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன், நன்னீர் - என்பவற்றை உடையன. தீவு ஏழு:- அந்த ஏழு கடல்களாலும் சூழப்பட்டுத் தனித்தனியே ஏழு நிலப்பகுதிகள். அவை:- சம்பு, சாகம், குசை, கிரௌஞ்சம், சான்மலி கேரமேதகம், புட்கரம் என்னும் காரணப் பெயர்களையுடையன. சம்புத்தீவு, நாவலந் தீவு. இதுவே நாம் வாழும் நிலம். தேகங்கள் ஏழு:- `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுபிறப்புக்கள். பாற்கரன் - சூரியன். சிவ பாற்கரன் - சிவ சூரியன். சிவன் உள்ளிருந்து அறியாமை இருளைப் போக்கி அறிவைப் பிறப்பித்தற்குக் கருவியாய் அவனால் அமைக்கப்பட்டவை. அவை ஏழாவன:- ஐம்பொறிகளும், மனமும் புத்தியும் ஆய அந்தக் கரணங்களுமாம். இன்னும் `ஏழ்` என்றதனானே வித்தியா தத்துவம் ஏழினையும் கொள்க. தாகம் - வெப்பம்; அஃது அதனையுடைய தீயைக் குறித்தது. ``தீக்கு நாக்கு ஏழ் உள` என்பர். அது பற்றி அஃது ஏழ் எனப்பட்டது. சாந்தி என்றது சுத்தத்தை அஃது ஏழாதல் கலா சுத்தி ஐந்தும், கன்ம சுத்தி ஒன்றும், ஆணவ சுத்தி ஒன்றுமாம். இந்த ஏழ் சுத்தியாலும் ஆன்ம சுத்தி உளதாகும்.

குறிப்புரை :

இதனால், வகை வகையாகச் சொல்லப்படுகின்ற அனைத்துப் பொருள்களும் சுந்தரக் கூத்துள் அடங்குதல் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.

பொழிப்புரை :

தேவதாரு வனம், தில்லை வனம், திருஆலவனம் (திருவாலங்காடு என்பவற்றில் எழுந்தருளியுள்ள தலைவன் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம், ஆகிய சங்காரக் கூத்தக்களையும் அட்ட மூர்த்தத்தில் நின்று அவற்றை இயக்கி ஆடும் எட்டுக் கூத்தினையும், ஐந்தொழிற் கான ஐந்து கூத்தினையும், சுழுமுனை நாடியில் அறியப்படும் ஆறு ஆதாரங்களில் ஆறு கூத்தினையும் உறுதியாகக்கொண்டு ஆடுகின்றான்.

குறிப்புரை :

எனவே, `எங்கும் அகண்டாகாரமாய், அருவால் நின்று ஆடுதலேயன்றி, சில உயர் இடங்களில் அவற்றைத் தன்னுடையனவாக வரையறை செய்து கொண்டு அங்கு உருவத்திருமேனி கொண்டு ஆடுவதே பொற்பதிக்கூத்து` என்றதாயிற்று. `பொன்` என்றது தெய்வத்தன்மையை. பொற்பதி - தெய்வத் தன்மையுடைய தலங்கள்.
`கொடுகொட்டி, பாண்டரங்கம்` என்னும் கூத்துக்களை அசுரரை அழித்த காலத்தில் சிவபெருமான் ஆடினவாகச் சிலப்பதிகார உரை கூறிற்று.9 கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில், `சிவன் கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் - என்னும் கூத்துக்களை ஆடும் பொழுது அக்கூத்திற்கு உமையம்மையே தாளம் தருவான்` எனக் கூறியதற்கு, ஆண்டுப் பிறர் இல்லையே`` என்ற நச்சினஆர்க்கினயரது விளக்கத்தால் அக்கூத்துக்கள் சங்காரத்தின் முடிவில் செய்யப்படுவன வாதல் விளங்கும். இனி, பிரம கபாலத்தை ஏந்தி ஆரும் கூத்தே காபாலக் கூத்து ஆதலின் அதுவே தாருகாவனத்தில் அம்முனிவர்தம் பத்தினியர் முன்பும், முனிவர் முன்பும் ஆடிய கூத்தாகும். இவை போன்ற எல்லா வகைக் கூத்துக்களையும் சிவன், மேல், ஆன நடம் ஐந்து``3 எனக் குறிக்கப்பட்ட ஐந்து மன்றங்களில் ஆடல் திருமேனி ஆடுகின்றான் என்பது, ``தாருவனத் தில்லை (வன), வடமாவன மன்னவன்`` என்றதனால் விளங்கிற்று. தாருகாவனம் ஒரு தலமாக விளங்கவில்லை. தில்லை வளமும், திருஆலவனமும் தலங்களாய் விளங்குதல் வெளிப்படை. இவற்றைக் கூறவே சிறப்பாக ஏனை மூன்றும், பிறவும் கொள்ளப்படும். கோடு, கிளை` என்னும் பொருட்டால், முதல் உறுப்பாய தலையைக் குறித்தது. `பாண்டரங்கம்` என்பது ஈறு குறைந்து, `பாண்டரம்` என நின்றது. ``கோடு`` என்பதன் பின் `ஆகிய சங்காரங்கள்` என மாற்றிக்கொள்க. `இவற்றைத் திடமாகக் கொண்டு எழும் மன்னவன்` என வினைமுடிபு செய்க. எழுதல் - முயலுதல்; அது நிகழ்த்துதலைக் குறித்தது.
இதனால், அனைத்து வகையான கூத்துக்களையும் சிவன் உருவத் திருமேனி கொண்டு தலங்களில் ஆடுவதே பொற்பதிக் கூத்தாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

பொழிப்புரை :

சிவன் `உருவம்; அருவுருவம்` என்னும் இருவகை வடிவில் தலங்களில் எழுந்தருளியிருக்குங்கால் எங்கும் கிழக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பான். கோயில் வாயில் எத்திசையை நோக்கியிருப்பினும் அது கிழக்குத் திசையாகவே பாவிக்கப்படும். அந்நிலையில் உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் ஐந்து பக்கங்களிலும் முறையே ஈசானம், தற்புருடம், அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் முகங்கள் உள்ளனவாம். கோயிலின் வாயில் திசை மாறியிருப்பின் தற்புருட முகம் அந்தத் திசையில் வர அந்தத் திசையின் முகம் தற்புருட முகத்தில் சென்றுவிடும். சிவனது இந்த முகங்கள் ஏனை யோரது முகங்கட்கு இல்லாத பல அதிசய ஆற்றல்களை உடையன. அந்த முகங்களின் ஆற்றலால் சிவன் உயிர்களை நிகரற்ற பேரின்ப நிலையில் செலுத்துதற்கு மேற்கூறிய இருவகைத் திருமேனிகளிலும் இருந்து ஒப்பற்ற திருக்கூத்துக்களைச் செய்கின்றான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி உச்சி, கிழக்கு முதலிய பக்கங்கள் முன் பின்னாகக் கூறப்பட்டன. இந்த ஐந்து முகங்களும் முன் தந்திரத்தில், ``நடுவு கிழக்குத் தெற்குத் தரம்மேற்கு`` என்பது முதலிய மந்திரங்களிலும் கூறப்பட்டமை காண்க. இங்குக் கூறிய குறிப்புக்களால் சிவனது, `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியேசாதம்` என்னும் முகங்கள் ஐந்தும் சிவனது `உச்சி, முன்பக்கம், வலத்தோள், இடத்தோள், முதுகு` என்பவற்றின்மேல் உளவாகச் சிவன் எங்கும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருப்பவனாதல் விளங்கும்.
பக்கங்கள் பலவற்றிலும் முன்பக்கமே கொள்ளத்தக்கது ஆதலின், வழிபாடுகள் பலவும் தற்புருட முகத்திலே செய்யப் படுகின்றன. `தற்புருட முகத்தில் செய்யப்படுவது எதுவும் எல்லா முகத்திலும் செய்ததேயாம்` என்பது சிவாகமங்களில் சொல்லப்படுவது.
ஐந்து முகங்களும் ஐந்து சாதாக்கியங்களாகச் சொல்லப்படும். சத்தியோசாதம் அமூர்த்தி சாதாக்கியம், வாமதேவம் மூர்த்தி சாதாக்கியம். அகோரம் கர்த்திரு சாதாக்கியம். தற்புருடம் கரும சாதாக்கியம் முதலாக ஒவ்வொன்றும் அடுத்த சாதாக்கியத்தை முறையே சார்ந்து நிற்க, முடிவில் நான்கு சாதாக்கியமும் சிவ சாதாக்கியத்தைச் சார்ந்து நிற்கும் என்க.
1. `உச்சிமுகம் ஈசானம்; ஒளிதெளிஅப் பளிங்கே;
உத்தரபூ ருவத்திசையை நோக்கிஉறும் உகந்தே.
2. நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி
நிகழும்முகம் தற்புருடம்; கோங்கலர்போல் நிறமே.
3. அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது; கராளம்
அவிழ்தாடி; வலத்தோளில் தென்னோக்கி அமரும்.
4. செச்சைநிறத் தெரிவைமுகம்; இடத்தோள்மேல் வாமம்.
5. சிறுபுறத்தின் முகம் சத்தி யோசாதம் நிகழ்வால்.
என்னும் சிவதருமோத்தரச் செய்யுளாள் மேற்கூறியவை விளங்குதல் காண்க. உத்தர பூருவம் - வட கிழக்கு. பூர்வதிசை கிழக்குத் திசை. அறக் கரிது - மிகவும் கறுப்பானது.
அகோரமுகம் தோற்றத்தால் அச்சுறுத்தும் கோர வடிவாய் இருப்பினும் அது கோரத்திற்குக் கோரமாய்க்கொடிய வினைகளை அழித்தொழித்தலால் உண்மையில் அகோரமே - கோரம் இல்லாத - சாந்தமே. ``கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார்`9 என்னும் சிவஞான சித்தியை நோக்குக. இதனானே அகோர மந்திரம் பிராயச்சித்த மந்திரமாய் உள்ளது. ``ஒப்பில் பேரின்பத்து`` என்பதனை, ``தனி நடம் செய்யும்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. பேரின்பத்து நடம், பேரின்பத்துக்கு ஏதுவாய நடம். ``உபயம்`` இரண்டில் முன்னது, `இரண்டாவதான உருவம்` என்றும், பின்னது, `அருவம், இருவம் இரண்டுமான அருவுருவம்` என்றும் பொருள் பயந்தன. மூன்றாம் அடி இனவெதுகை.
இதனால், ஐந்து முக மூர்த்தியாகிய சதாசிவ மூர்த்தியே நிலவுலகத் தலங்களில் உருவத் திருமேனி கொண்டு நடம் செய்தல் கூறப்பட்டது.
சிவாலயங்களில் கருவறையில் உள்ள இலிங்கம் சதாசிவ மூர்த்தமே. ஏனை உருவத் திருமேனிகள் மகேசுர மூர்த்தங்களாம்.

பண் :

பாடல் எண் : 3

அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

பொழிப்புரை :

பொன்னம்பலம் முதலிய ஐந்து அம்பலங்களிலும், மற்றும் பல இடங்களிலும் ஆடற் பெருமானைக் கண்டு வணங்கினவரே `அடியார்` எனப்படுவர். அவரே சிவானந்தத்தை அடைந்தவர்; சிவன் அருளைப் பெற்றனர்; சிவனது திருவடியைச் சேர்ந்தவர்.

குறிப்புரை :

``பொன்னம்பலத்தாடல் கண்டோர்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. தலைமைபற்றிய இதனைக் கூறவே, மற்றவை தழுவப் பட்டன. மூன்றாம் அடியொழிந்த மற்றை மூன்றடிகளிலும் ``அடியார்`` என வந்தனவும், மூன்றாம் அடியில் ``அடியில்`` என்றதும் சொற்பொருட் பின்வருநிலையனி. ``அரன் அத்தன்`` என்றது இருபெயர் ஒட்டு.
இதனால், சிவாலய தரிசனத்தில் ஆடற்பெருமானது தரிசனத்தினஅ இன்றியாமையாச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.

பொழிப்புரை :

பலவகையான நடனங்களையும் செய்பவன் சிவன். அவன் மிக மேலான ஞான டனத்தையும் செய்ய வல்லவன். அந்த ஞான நடனத்தினால், அடங்காத எனது தற்போதத்தைத் தனது வலது தாளால் மிதித்து அடக்கி, இடப்பக்கத்தில் காணப்படுவதாய, எடுத்த பாதத்தை எனது தலைமேல் வைத்து, என்னைப் பேரின்பக் கடலுள் ஆழ்த்தினான். இனி ``உள்ளக் கிழியின் உருவெழிதிப்``* பார்க்கும் யோகிகட்கு அக்கிழி யுருவில் ஒன்றி விளங்குகின்றான்.

குறிப்புரை :

``என்னை`` இரண்டில் முன்னது, `எனது போதத்தை` என்றபடி. ``அடங்காத என்னை அடக்கி`` என்பதனோடு, ``மலம் சாய அமுக்கி``* என்பதையும், ``இடம் காண் அடி வைத்து என்னைப் பரானந்தத்து இட்டு`` என்பதனோடு, ``அருள்தான் எடுத்து - நேயத்தால் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்`` என்பதையும் ஒப்பீடுக.
மூன்றாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ``நடந்தான்`` என்பதில் `தான்`, அசை. ஞானக்கூத்தை வகுத்தரைப்பதே ``மாயை தனை உதறி``* எனத் தொடங்கும், ஞானக்கூத்து ஞானியர் பொருட்டச் செய்வதாகலின், ஈற்றடியிற்கூறியது யோகியர்க்காயிற்று. ஞானியரும், யோகியரும் அல்லாத பிறர்க்கெல்லாம் சிவன் ஊன நடனத்தைச் செய்வான் என்க. அது, ``தோற்றம் துடியதனில்``* என்னும் வெண்பாவில் சொல்லப்பட்டது.
இதனால், பொற்பதிக் கூத்துள் ஞான நடனம் உயிர்கட்குத் தரும் பயன் கூறும் முகத்தால், அதன் தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.

பொழிப்புரை :

நான், பிறவியாகிய துன்பத்தினின்று நீங்கி, வீடாகிய இன்பத்தை அடைதற்குரிய வழி யாது` என்று ஆராய்ந்து கூத்தப் பெருமானை என்னுடைய அன்பிற்குள் அகப்படும்படி வைத்தேன். தேவருள் அஅவனே கூத்தாட வல்ல பெருமான். அவனது கூத்து எல்லார் கூத்தினும் மேலாய கூத்து; செம்பொன் அம்பலத்தில் வெற்றியுடன் விளங்குதல் கூத்து; அனைத்துப் பொருள்காவல் இயகத்தோடு மிக நெருக்கமான தொடர்புடைய கூத்து. உபநிடதங்கள், `தத்` என்னும் சொல்லால் சுட்டுகின்ற பரம் பொருளின் கூத்து.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``கூத்தன்`` என வந்தன பலவும் ஒருபொருள்மேல் வந்த பல பெயர். கூத்தின் சிறப்பை அதனை உடையானோடு பலவகையில் சேர்த்துக் கூறினார்.
``கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்``8
என்பதனால், காளியோடு ஆடி, `அவளை வென்ற அந்த நடனமே தில்லையில் செய்யப்படுகின்றது` என ஆளுடைய அடிகள் அருளிச் செய்தவாறே இவரும் பொன்மன்றுட் கூத்தினைச் ``சேவகக்கூத்து`` என்றார். சேவகம் - வீரம், வெற்றி. கோயிற் புராணமும் இவ்வாறே கூறுதல் காண்க.
``சம்பந்தம்`` என்றது, இங்கு அத்துவித சம்பந்தத்தை. அதனைச் சித்தாந்த நூல்கள் இனிது விளக்கும்.
``நாடி வைத்தேன்`` என்றதனால், அதன் பயன் எண்ணியது எண்ணியவாறே கிடைத்தமை பெறப்பட்டது. அதனை இங்குக் கூறியதனால், `நீவிரும் அதனை அவ்வாறு வைத்தால் இன்புறுவீர்கள்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
``சித்தமும் செல்லாச் சேட்சியன காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!``J
``ஆர்காண வல்லார் அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோர் மறைத்து``l
``அழலார் வண்ணத்து அம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``3
எனப் பிற திருமுறைகளிலும் வந்தவாறு இங்கும் நாயனார், ``அன்பில் வைத்தேன்`` என்று அருளிச்செய்தார். அதனால், வேதங்களாலும் அறியவாராது `அது` எனச் சேய்மைச் சுட்டாகப் பொதுவிலே சுட்டப் படுகின்ற பரம்பொருள் அன்பர்தம் அன்பிற்குள்ளே வந்து அகப் படுதல் தெளிவாகும். பொற்பதிப் கூத்துப் பல வகைக் கூத்தும் ஆதல் தோன்றுதற்கு. இடையே ``சொம்பொன் திருமன்றுட் கூத்து`` என்றார்.
இதனால், பொற்பதிக் கூத்தின் தரிசனம் பலவகைக் கூத்தின் தரிசனமுமாய் வீடு பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.

பொழிப்புரை :

சிவன் தனது கூத்தினை மாணிக்கச் சபையில் மாணிக்கக் கூத்தாக இயற்றுவான். தில்லை பொற்சபையில் பொற் கூத்தாக இயற்றுவான். மற்றும் வெள்ளி முதலிய சபைகளில் அது அதற்குத் தக்க கூத்தாக இயற்றுவான். அனைத்தையும் கடந்த தனது இயற்கைப் பரஞ்சோதி வெளியில் சிவானந்தக் கூத்தாக இயற்றுவான். (அது முதலிலே சொல்லப்பட்டது.) ஆகவே, ஒருவகையாய் இல்லாமல் பலவேறு வகையாக இயற்றுகின்ற ஆணிப்பொற் கூத்தனது கூத்து வகைகளையெல்லாம் யார் வரையறை செய்து கூறவல்லவர்!.

குறிப்புரை :

`ஒருவரும் இல்லை` என்பதாம். பூணுதல் - வெள்ளி முதலியவற்றைத் தாமதமாகக் கொள்ளும். ``சடைக் கூத்து`` என்பதைச் `சடைபோலும் கூத்து` என உவமத் தொகையாக்கி, `சிவனது சடை ஒன்றாய் இல்லாது பலவாய் விரிதல் போலப் பலவாய் விரியும் கூத்து` எனத் தொழிலுமாம் ஆக்குக. ஆணிப்பொன் - பிற பொன்னின் மாற்றுக்களையெல்லாம் அளந்து காட்டித் தான் வேறொன்றால் அளக்கப்படாத பொன். இதனை `உரையாணி` என்பர். ஆணிப்பொன் போலும் கூத்து, பிற கூத்தின் தகுதிகளைத் தான் அளந்து, பிறிதொரு கூத்தினால் தன் தன்மை அளக்கப்படாத கூத்து.
``யார் அறிவாரே`` என்றது, `பொற்பதிகளில் சென்று காணின் அக்கூத்துக்களின் வகையை ஒருவாறு உணர்ந்துரைத்தல் கூடும்` என்றபடி.
இதனால், பொற்பதிக் கூத்து அவனது கூத்து வகை பலவற்றையும் காட்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.

பொழிப்புரை :

பொற்பதிகளுள் உள்ள நேர்மை மிகுந்த அம்பலங்களில் நிகழும் திருக்கூத்தில் அழகிய மலரும் பொன்னும் போலும் எடுத்த திருவடியில் தம் அன்பை வைப்பவர்கட்கு அவ்வன்பினால் உடம்பு அழுகையில் விம்மும்; `அதிருவடி எங்கே மறைந்து விடுமோ` என அஞ்சி நடுங்கும்; தந்து அடைக்கல நெறியையும், பிழைபொறுக்க வேண்டுதலையும் இனிது புலப்படுத்த வேண்டி நிலத்தின்மேல் நெடுங்கிடையாய் விழும்; பின்பு திருக்கூத்தினைக் காண வேண்டி எழும்; தளர்ச்சியடையும்; முடிவாக அவர்கள் தம்மையே தாம் மறந்துவிடுவார்கள் என்றால் `தற்பெருமை` என்பது அவர்கட்கு எங்கேயிருக்கப் போகின்றது? அஃது எங்கும் இல்லாது, அறவே கெட்டொழியும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பின், ``மெய்`` என்பதை ``விம்மும்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``தம்மையும்`` என்னும் உம்மை சிறப்பு. சதுர் - பெருமை. திருக்கூத்தை அன்போடு தரிசிப்பவர்க்கு இம்மெய்ப்பாடுகள் உளவாதலைத் திருநாவுக்கரசரது வரலாற்றில் சேக்கிழார்,
``கையும் தலைமிசை புனைஅஞ் சலியன;
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங் களும்உடன்
உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழும்;முன் பெழுதரும்;
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்``
எனக் கூறியவாற்றானும் அறிக.
இன்னும்,
``விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்;
தம்மாண் பிலராய்த் தரியார்; தலையால் முட்டுவார்;
எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்``
என்றதையும் காண்க. நேர்மை - மலக்கோண் நீங்கிய திருவருள் நேர்மை.
இதனால், பொற்பதிக் கூத்தினைத் தரிசிப்பார்க்கு உண்டாகும் அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.

பொழிப்புரை :

காண்பவரது உள்ளங்களில் சிவானந்த நாட்டத்தையே முறுகி வளரச் செய்கின்ற பொற்பதிக் கூத்துக் கண்டவுடன் கண்டவர்களது சித்தம் வேறு எதனையும் சிந்தியாது; அந்தத் திருக்கூத்து ஒன்றை மட்டுமே சிந்திக்கும். உயிர்ப்பினால் பொறிகள் வழியாகப் புலன்களின்மேல் செல்வனவாய ஏனைய அந்தக் கரணங்களும் அவ்வாறு செல்லமாட்டா. (``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக``* என்ற அனுபவத்தை நினைவு கூர்க.) அங்ஙனமாகவே, உலக ஆசைகள் பலவும் அற்றொழி வனவாம். அவை ஒழியவே உலகப் பொருள்களைத்தேடி, அவை கிடையாமையால் மனம் திகைத்தலும், தேடுதலாலும், திகைத்தலாலும் உடல் இளைத்தலும் நிகழா.

குறிப்புரை :

``ஆனந்த நாட்டம்`` என்பது முதலாகத் தொடங்கி, `சிந்தை தேட்டறும்` என மாற்றி, ``திகைப்பறும், பிண்டத்துள் வாட்டறும்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தேடுதல் - ஆராய்தல். தேடு, தேட்டு - முதனிலை திரிந்த தொழிற்பெயர். `காலால், புந்தியாகி வரும் புலன்மேல் (மனம்) ஓட்டறும்; திகைப்பறும்` என உருபு விரித்து, `மனம்` என்பது வருவிக்க. மனம் பொறிவழிச் சென்று கவர்கின்ற புலன்கள் முடிவில் புத்தியின்கண் வந்து முடிதலின், ``புந்தியாகி வரும் புலன்`` என்றார். `புலன்மேல்` என, `மேல்` என்பது விரிக்க. பிண்டம் - உடல். `வாட்டம்` என்பதில் அம்முக் குறைந்து நின்றது.
இதனால், பொற்பதிக் கூத்துக் காண்பவர்க்கு அக்கட்சியே முத்திப் பேரின்பமாதற் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.

பொழிப்புரை :

சிவன், படைப்புக் காலத்தில் உயிர்களைக் காளியின் பிடியிலிருந்து விடுவித்தற்கு அவளோடு நடனப் போட்டி யிடும் முறையில் நடனம் ஆடி அவளை வெள்கச் செய்து வென்றான். பின்பு தேவர்கள் கண்டு தனது முதன்மையை உணர்ந்து உய்தற் பொருட்டு அவர்கள் முன் மேரு மலையில் நடனம் ஆடினான். பின் நில உலகில் சுடலைகளில் பேய்களோடு கூடி நடனம் ஆடினான். பஞ்ச பூதங்களில் எப்பொழுதும் ஒருவரும் அறியாதபடி நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றான். அவன் பொற்பதிகளில் உள்ள அம்பலங்களில் யாவரும் காண, எந்நாளும் ஆடிக்கொண்டிருக்கின்றான்.

குறிப்புரை :

`அவ்வருமை யறிந்து அப்பதிகளில் சென்று அந்த நடனத்தை வணங்குதல் மானிடர்க்குக் கடன்` என்பது குறிப்பெச்சம்.
`காளி, தாருகன்` என்னும் அசுரனை அழித்து அவனது குருதியைக் குடித்த காரணத்தால், அவனைப் போலவே உலகை அழிக்கத் தொடங்கியபொழுது சிவன் அவளோடு நடனப்போர் செய்து அவளது சினத்தை அடக்கினான்` என்பது புராண வரலாறு.
``நீடுயர் மண்ணும் விண்ணும் நெடுவேலை குன்றொடு
உலகேழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதிஓதி நின்று தொழலும் ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்தும்
ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம்
அவையாம் நமக்கொர் சரணே`` என்னும் அப்பர் திருமொழிக் குறிப்பைக் காண்க. தாருகன் - ஆணவ மலம். அவனை அழித்த காளி - மாயை. சிவன் அவனது கோபத்தை அடக்கியது. மாயையின் மயக்கத்தை நீக்கியது. எனவே, உயிர்களைக் கேவல சகலங்களின் நீக்கிச் சுத்தத்தை அடையச் செய்தலே சிவன் செய்யும் திருக்கூத்து` என்பது விளங்கும். காளியோடு நடனம் ஆடிய ஐதிகத்தைக் குறிப்பதே திருவாலங்காட்டுத் தலம். எனவே, அவ்விடத்து நடனமே பழைய நடனம் ஆதல் விளங்கும்.
தேவர்கள் காண மேருமலையில் ஆடியதை இம்மந்திரத்தால் அறிகின்றோம்.
சிவன் சருவ சங்காரத்தின் பின் உடல்அற்ற உயிர்களோடு கூடி நடனம் ஆடுதல் அறியாதார் உலகத்தில் பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் ஆடுவதாக எண்ணுவர். அவர்தம் மனப்பான்மை பற்றி அதனையும் சிவன் உடன்பட்டுக் கொள்கின்றான். `குவலயத்தக் கூளியோடு ஆடி` என ஒரு தொடராக ஓதற்பாலதனை இரண்டு தொடராகப் பிரித்து ஓதினார். சிவனது செயல்கள் எல்லாம் அவனது திருக்கூத்தாகவே கூறப்படுதல் பற்றி. அவன் பஞ்ச பூதங்களைச் செயற்படுத்தி நிற்றலையும் அவனது திருக்கூத்தாகக் கூறினார். `எத்துணைப் பெரியோன் எத்துனை எளியனாய் வந்து பொற்பதிகளில் ஆடுகின்றான்` என்பதை விளக்குதற்கு அவனது பெருநடனங்கள் பலவற்றையும் எடுத்தோதினார். மூன்றாம் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால், பொற்பதிக் கூத்தின் அருமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.

பொழிப்புரை :

(`சிவன் அண்டம், பிண்டம்` இரண்டிலும் நடம் புரிகின்றான்` என்பதனாலும், `பிண்டத்துள் இருதயத்திலே நடம் புரிகின்றான்` என்பதனாலும் அண்டமும், பிண்டமும் சமம் ஆகின்றன. அம்முறையில் நோக்கும் பொழுது) பிண்டத்தில் நடு நாடியாகிய சுழுமுனா நாடியே மேரு மலையும், இடைநாடியே இலங்கையும், பிங்கலை நாடியே மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனையும் ஆகும். `இனி, `மேரு` எனப்படும் நடுநாடி மேல் நோக்கிச் செல்கின்ற மணிபூரகம் பொதிய மலையும். இருதயம் தில்லைவனமும் ஆகும். ஆகவே மேரு முதலியவற்றை உடைய நிலம் சிவனது திருவருள் மிக்கு விளங்குகின்ற சிவநிலம் ஆதல்போல், சுழுமுனை முதலியவற்றை உடைய பிண்டமும் சிவநிலமேயாம்.

குறிப்புரை :

`நடு நாடி மேரு வாய் உறும்; இடை இலங்கையாய் உறும், பிங்கலை குறியாய் உறும்; மலயத்தூடு ஏறும் சுழுனை தில்லை வனத்துச் சாரும் ஆகவே, இவைகளையுடைய பிண்டம் வெளியே இனிது விளங்குகின்ற நிலம் போல சிவபூமி என இயைத்துக் கொள்க.
குறி - எல்லை. அது வட எல்லையைக் குறித்தது. முன்னர்க் கூறிய உருவக முறையால், ``மலயம், தில்லைவனம்`` என்பன மணி பூரகத்தையும் இருதயத்தையும் குறிப்பவாயின. ``வான்`` என்றது அதன்கண் அடங்கி விளங்கும் நிலத்தை. இன், உவம உருபு. `இலங்கை, குறி` என்பவற்றை, இடைபிங்கலைகளோடு நிரல் நிறையாக இயைக்க. `ஆய் உறும்` என ஆக்கம் விரித்து எல்லா வற்றோடும் கூட்டுக. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ``இவை`` என்பது தானியாகு பெயராய் இவைகளையுடைய உடம்பைக் குறித்தது.
இதனால், அண்டத்தில் பொற்பதிகள் இருத்தல் போலப் பிண்டத்திலும் பொற்பதிகள் இருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

பொழிப்புரை :

[முன் மந்திரத்தில் பிண்டம் அண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கும் முறை கூறியது போல, அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கினால்,]
மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனை நிலமகட்குப் பிங்கலை நாடியும், தெற்கேயுள்ள இலங்கை இடைநாடியும், சிவன் நடனம் புரிகின்ற தலங்களுள் தலையாயதாகிய தில்லை நடுநாடியும் ஆகும். பூதகாரியமாகிய அண்டம், பிண்டம் இரண்டனுள் அண்டம் பிண்டத்தோடு ஒப்ப இவ்வாறு வரையறை செய்து உணரப்படும்.

குறிப்புரை :

`அண்டம், பிண்டம் என்பவற்றுள் பிண்டத்தை அண்டத்தோடு ஒப்பித்தலே மரபு போலும்` என மலையாமைப் பொருட்டு, `அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்பித்தலும் மரபே` என்றற்கு இது கூறினார். இதனால், அண்டம் பிண்டம் இரண்டும் தம்முட் சமம் ஆதல் விளங்கிற்று. கோயிற் புராணத்திலும்,
``அலைந்திடும் பிண்டம், அண்டம்
அவைசமம் ஆத லாலே,
இலங்கைநேர் இடைபோம்; மற்றை
இலங்குபின் கலையாம் நாடி
நலங்கிளர் இமய நேர்போம்;
நடுவுபோம் சுழுனை நாடி``
என்றும்,
``நாடரு நடுவின் நாடி
நலங்கிளர் தில்லை நேர்போய்க்
கூடும்``*
என்றும் இவ்வாறே கூறப்பட்டது.
`புறத்து ஆனது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. ``இடை பிங்கலை`` என்பவற்றை முன் மந்திரத்திற்கு இணங்க, `புறத்து ஆனது, தெக்கணம்` என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க. ``தெக்கணம்`` என்றது. தென் கோடியாகிய இலங்கையை, `நட்டம் பயில்` எனப் பயிலுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. நில உருண்டைதான் பல பகுதிகளை உடைத்தாயினும், அவற்றுட் சிறந்தது, `சுரும பூமி` எனப்படுகின்ற பரத கண்டமே இவ்வாறான பல சிறப்புக்களை உடையது என்க.
இதனால், பிண்டத்தைப் போல அண்டமும் நாடி முதலியவற்றை உடைத்தாதல் கூறப்பட்டது.
`அண்டம், பிண்டம் இரண்டும் சிவன் நடம்புரியும் பொற்பதிகளை உடையன` என்றற்கு இவ்விரு மந்திரங்களும் இவ்வதிகரத்தில் அருளிச்செய்யப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை :

பொன் வகைகளில் சிறந்தமை பற்றி, `அம்பொன்` எனப்படும் செம்பொன் நகரமாகிய தில்லைப் பதியே அனைத்து அண்டங்களாகவும், அப்பதியில் உள்ள ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம் போலாது, அதற்கு மிக முன்னே சுத்த மாயையில் தோன்றி, அனைத்துப் பொருள் களையும் தம்முள் அடக்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைக ளாகவும், அவ் ஆலயத்தின் முதல் ஆவரணத்துள் உள்ள திரு வம்பலமே ஐந்தொழில் செய்யும் சத்தியாகவும் அமையும்படி நின்று, அனைத்தையும் கடந்து நிற்கும் மேலான ஒளியாகிய சிவன் நடனத்தை விரும்பிச் செய்கின்றான்.

குறிப்புரை :

அண்டப் பகுதிகளை எடுத்துக் கூறவே, முன் அதிகாரத்தில் அண்டத்தோடு ஒப்பிக்கப்பட்ட ஒப்புமை பற்றிப் பிண்ட வகைகளும் அடங்கின. அதனால், `பொற்றில்லைக் கூத்துத் தானே அண்டபிண்டம் அனைத்தையும் இயக்குகின்ற கூத்தாம்` எனக் கூறியவாறாயிற்று. இன்னும் ``பரஞ்சோதி`` என்றதனால், ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத அந்தப் பரமசிவன்தானே பொற்றில்லையுள் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான்` என்பது தோற்றுவிக்கப்பட்டது.
தண்டு, `தெண்டு` என மருவிற்று. தண்டு - செங்கோல்` நீதி. அஃது உயிர்களை வினை நெறிக்கு உட்படுத்தி ஆளும் ஆளுகையைக் குறித்தது. ``தெண்டினினின்`` என இன்னுருபின் மேல் இன்சாரியை வந்தது சிறுபான்மை வழக்கு உகத்தல் - விரும்புதல். அது தன் காரியந்தோன்ற நின்றது.
கோயிலை, `நகர்` என்றல் பற்றி, `பதி` என்றார். அதனை ஐந்து ஆகாசமாகக் கூறினமையின், அஃது ஐந்து ஆவரணங்களை உடைத்தாதல் விளங்கிற்று. அனைத்தையும் அடக்கி நிற்றல் பற்றிக் கலைகள் `ஆகாசம்` எனப்பட்டன.
இதனால், `தில்லைத் திருக்கோயிலின்கண் உள்ள திருவம்பலத்தில் செய்யப்படும் திருக்கூத்தே பொற்றில்லைக் கூத்தாம்` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.

பொழிப்புரை :

குரு உணர்த்தியருள்கின்ற இன்பக் கதிராய்ப் பின் பெருகி விளைகின்ற தலையாய இன்பத்தைத் தன்னுள் நிரம்பக் கொண்டு சிவன் தென்னாட்டில் தில்லையை அடைந்து மங்கையோடு உடனாம் இன்பப் போக வடிவினனாய், நிலையான இன்பத்தைத் தரும் நடனத்தைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`அதனைத் தவறாது சென்று கண்டு தொழுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.
குரு + ஆனந்தம் = குரானந்தம். `ரேகை`, ஒளியின் சிறு கூறு. குரு உபதேசத்தில் சிவானந்தம் கேள்வியளவில் சிறிதே புலப் படுதலால் அதனை ``ரேகை`` என்றும், பின்னர்ச் சிந்தித்தல், தெளிதலால் பெருகி வருதலால் ``கூர்ந்த`` என்றும், அங்ஙனம் பெருகி எல்லையின்றி விளைகின்ற இன்பம் சிவனுக்கு ``வரம்பில் இன்பம்`` என்னும் குணமாய் இருத்தலின் ``குணமாம் சிரானந்தம்`` என்றும், அஃது அவனது நடனத்தில் பொங்கி வழிதலால் ``பூரித்து`` என்றும் கூறினார். ``தென்திை\\\\u2970?`` என்றது இங்குத் தில்லையை ஆதலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. தில்லையை அவன் தேர்ந்து கொண்டது, `அதன் சிறப்பு நோக்கி` என்றே கொள்ளப்படும். ``மாதவம் செய்த தென்றிை\\\\u2970?``9 எனச் சேக்கிழாரும் குறித்தருளினார். புரம் - திருமேனி; வடிவம். `பூவையும் தானுமாம் ஆனந்த போக புரனாய்` என்க. ஆனந்தம், சிவானந்தம். போகம் - உலக இன்பம். அவன் போக வடிவினனாய் இருந்து தரும் போகம் சிவானந்தத்திற்குத் தடையாகாமை பற்றி, ``ஆனந்த போகம்`` என்றார், மொழியின் இனிமை பற்றி மகளிரைக் `கிளி, பூவை` என உவம ஆகுபெயராற் கூறுதல் இலக்கிய வழக்கு. `நிர்` என்னும் உபசர்க்கம் நிலை பேற்றையும் உணர்த்தும், நிர்த்தாரணம் நிர்ணயம்` முதலியவற்றிற் போல. இம்மந்திரத்திற்குப் `பரஞ்சோதி` என்னும் எழுவாயை முன் மந்திரத்திலிருந்து கொள்க.
இதனால், தில்லைக் கூத்தினைச் சிவன் மேற்கொண்ட வகை -யும், அது போகம், மோட்சம் இரண்டையும் தருதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

பொழிப்புரை :

சிவன் தான் ஆடும்பொழுது, அவனோடு உடன் ஆடுவன பல. அவ்வாறு அனைத்தும் ஆடும்படி அவன் தான் நாதாந்தத்தைக் கடந்து செய்யும் நடனத்தைத் தில்லையில் நாதத்தோடு கூடியே ஆடுகின்றான்.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பதாம். ``ஆதிபரம்`` என்பதன் பின் `தான்` என்பது வருவிக்க. கை முதல் மதியீறாகச் சொல்லப் பட்டன எல்லாம் அவனுடையனவே. ஓதும் சடை, பிறருக்கு உரித் தாகாது அவனுக்கு உரித்தாகச் சொல்லப்படுகின்ற சடை. எனவே, `முதல் இருடியாவான் சிவனே` என்பது விளங்கும். ``விஸ் வாதிகோ ருத்ரோ மகரிஷி;`` என வேதமும், ``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி``* எனத் திருமுறையும் கூறும். உன்மத்தம் சடையில் அணிந்த ஊமத்தை மலர். அனல், வினையைப் போக்குதலையும், சடை ஞானத்தைத் தருதலையும், ஊமத்தை ஆனந்தம் விளைத்தலையும், பிறை அருள் வழங்குதலையும், குறிப்பால் உணர்த்துவன. `பாரும், மீது அண்டமும் ஆட` என்க. இது அவன் ஆட, அனைத்தும் ஆடுதலைக் குறிக்கும். ``நாதமொடு`` என்பதில் நாதம் சிலம்பொலி. கந்திருவர் யாழொலி முதலிய இன்னொலிகள். நாதாந்தம் - முடிவில் உள்ள நாத தத்துவத்திற்கு அப்பால். `அங்குச் செய்யப்படுவதே ஆனந்த நடனம்` என்பது மேற் கூறப்பட்டது.8 `அந்த நடனத்தைச் சிவன் இந்நிலையில் செய்கின்றான்` என்றார்.

பண் :

பாடல் எண் : 4

கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.

பொழிப்புரை :

அழகிய திருமேனியுடன் பெருமான் தில்லை யம்பலத்தில் ஆடுகின்ற தலைமை வாய்ந்த அந்த நடனம் அகில உலகங்களுக்குமான நடனமாகும், அதனை வணங்க வேண்டி அவ்வம்பலத்தை அடைந்தால், அவ்அடைவே மேலான ஞானத்தின் முடிநிலையாகிய மௌன நிலைப்பேறாகும்.

குறிப்புரை :

``அம்பரன்`` என்பதை முதலிலும், `கும்பிட` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிலும் கூட்டி உரைக்க. அம்பலம், அதிகாரத்தால் இங்குத் தில்லையம்பலம் ஆயிற்று. கோ - தலைமை. `அகிலாண்டத்திற்கும் ஆடும் நட்டமாம்` என்க. செம்பொருள், கண்கூடாக அறியப்படும் பொருள். ஈண்டுள்ளாரால் அங்ஙனம் அறியப் படும் சிவலோகம் தில்லையம்பலம்` என்க. ``கும்பிடச் சேர்ந்துற்றால்`` என்றது, `கும்பிடுதற்கு முன்பே பயன் விளையும்` என விளைவு கூறிய வாறு. உம்பர்அம் எனப் பிரிக்க. உம்பர் - மேன்மை. அம் - அழகு; சிறப்பு` என்றபடி `மோனமாகிய அந்தம்` என இயையும், மௌன மாவது, தற்போதம் அற்ற நிலை. ``மோனம் என்பது ஞான வரம்பு``*\\\\`20என ஔவையாரும் அருளிச் செய்தார். ஞான அந்தத்தின் உண்மை - ஞானத் -தின் முடிநிலையால் விளையும் மெய்யான பேறு; பரமுத்தி. தில்லைத் திருநடம், கண்டு வணங்கினஆர்க்கு வீடுபேற்றைத் தரும்` என்றபடி.
இதனால் தில்லைக் கூத்தின் தலைமையும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே.

பொழிப்புரை :

நில அண்டத்தின் பகுதி மூவேழும், அவற்றிற்கு மேல், `நீர் முதலிய பூதம் நான்கு, அகங்காரம், புத்தி, பிரகிருதி` என்னும் தத்துவ அண்டங்கள் ஏழும் உண்மை வீட்டிற்கு வழியாகின்ற உபநிடத நூல்கள் நூற்றெட்டும், இன்னும் அராகம் முதல் நாதம் முடிவாய் உள்ள தத்துவ புவனங்களும் ஆகிய அனைத்தும் சிவனது திருக்கூத்தின் எல்லையையே எல்லையாக உடையன. இனி உயிர்கள் அடையும் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய முத்திகளும் மாதுடன் ஆடும் சிவனது திருவடி நிலைகளேயாகும்.

குறிப்புரை :

நில அண்டப் பகுதி மூவேழாவன, கீழுலகம் ஏழு, நிலப்பரப்பின் தீவுகள் ஏழு, மேலுலகம் ஏழு, புவனங்களை நோக்கும் பொழுது தன்மாத்திரை, கன்மேந்திரியம், ஞானேந்திரியம், மனம். இவை அகங்காரத்தில் அடங்குதலைச் சிவஞான யோகிகளது இரண்டாம் சூத்திர மாபாடியத்துப் பிரதிட்டாகலை விளக்கத்தில் காண்க. வேதாந்த சித்தாந்த நூல்களே உண்மை ஞான நூல்களாதல் பற்றி அவைகளையே `சாதகம்` எனக்கொண்டு, அவற்றுள் வேதாந்த நூல்களையே சமய நூல்களாகச் சுட்டினார். `சமயம்` என்றது சமய நூல்களை. ஒடு, எண் ஒடு. அதன் இயல்பு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் இயைதல் ஆதலை அறிக. அந்தம், இங்கு எல்லை. முன் நின்ற அந்தம் மேதினி முதலிய பிறவற்றோடும் சென்றியையும். `மேதினி யந்தமொடு, மூவேழ் அந்தமொடு` என இவ்வாறு எண்ணி, ``நடனாந்தம்`` என்பதனோடு முடிக்க. ``பதம்`` என்றது முத்தியை, ``பாதி`` என்றது பாதியாய் இருப்பவனை.
இதனால், அனைத்தும் திருக்கூத்துள் அடங்குதல் பொது வகையால் கூறப்பட்டதாயினும், கருத்து வகையால் தில்லைக் கூத்துள் அடங்குதலே கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 6

இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.

பொழிப்புரை :

பிண்டத்தில் இடைகலை பிங்கலை நாடிகள் அண்டத்தில் உள்ள இலங்கையும், இமயமுமாகவும் நடு நாடியாகிய சுழுமுனை இரேசக பூரக வாயுக்களால் சூழப்படுதலால் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுகின்ற மேருவாகவும் மதிக்கப்படும். அந்நிலையில் தில்லை நடுநாடியாக மதிக்கப்படுதலால், அங்கு நடனம் புரிகின்ற பெருமானே யோகியர் தம் மனம் ஒன்றி உள்கும் முதற் பொருளாவான்.

குறிப்புரை :

அஃதாவது, `உலகம் முழுவதையும்` இயக்குபவ னாவான்` என்பதாம்.
`கடவும் மூலம், கைகண்ட மூலம்` எனத் தனித்தனியாக இயைக்க. கடவுதல், யோகியர் பிராணனைச் செலுத்துதல். ``கடவும்`` என்னும் பெயரெச்சம், ``மூலம்`` என்னும் இடப்பெயர் கொண்டது. கைகண்ட - அனுபவம் பெற்ற. இஃது ஏதுப் பெயர் கொண்டு முடிந்தது. `அனுபவம் பெற்றோர் யோகியர்` என்க. ``மூலம்`` என்றது நடு நாடியை. படர்வு - நினைவு. ``பரம்`` என்றது, `முதற்பொருள்` என்றபடி. `அங்கு (தில்லையில்) நடிகும் பரமே பரமாம்` என முடிக்க.
இதனால், தில்லைத் திருத்தலத்தின் முதன்மை கூறும் முகத்தால், அதன்கண் திருக்கூத்து நிகழ்த்தும் இறைவனது முதன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.

பொழிப்புரை :

பரத கண்டத்தின் தென்னெல்லையாகிய, `கன்னி துறை` எனப்படும் குமரித் துறையும், காவிரியும், பிற நவ தீர்த்தங்களும், `ஆனை மலை, பசுமலை, நாகமலை சிராமலை, அண்ணாமலை, மறைமலை, காளத்திமலை` என்னும் ஏழு மலைகளும், வேத ஆகம ஒழுக்கங்களுள் சிறந்து விளங்குதலால், அக்கண்டத்தில் நிலைதிரியாததாகிய தென்பகுதியே நிலவுலகத்தில் முத்தி நிலமாகும்.

குறிப்புரை :

காவிரியோடு உடன் வைத்து எண்ணத்தகும் வேறு ஒன்பது யாறுகள் `பொருநை, (தாமிரவருணி) வையை, மணிமுத்தம், நிலா, (வெள்ளாறு), கெடிலம், தென்பெண்ணை, பாலி, கம்பை, பொன் முகலி` என்பன. மிக்குள்ள ஏனைய வெற்புக்களினும் மேம்பட்டுள்ளன. `பிறத்தலால் என்பது பாடம் அன்று.
பரத கண்டத்தின் வடபகுதி யவனர்கள், முகமதியர்கள் முதலியோரால் பேரிடர்ப்பட்டுத் தனது நிலை திரிந்தது போலத் தென்பகுதி என்றும் நிலை திரிதல் இல்லாமை தோன்ற, ``மாறாத தென்திசை`` என்றார். `அசோக மன்னனும் பாலாற்றைக் கடந்து அப்பால் தெற்கே செல்ல இயலாமல் திரும்பி விட்டான்` என்பர்.
கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி முதலிய நதிகளாலும், இமயத் தொடராலும், காசி, கேதாரம் முதலிய தலங்களாலும் வடபகுதி இயற்கையில் சிறந்து நிற்பினும் அயலவர் நுழைவால் நிலை திரிந்தமை அறிக.
`வேதாகமங்கள் வடபகுதியில் தோன்றினவாகச் சொல்லப் படினும் அவைகளின் ஒழுக்கம் சிறந்து விளங்குதல் தென்பகுதியில் தான்` என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை ``சுத்தம்`` என்றது முத்தி நிலையை. சுத்தத்தைத் தருவதனை, ``சுத்தம்`` என்றார்.
சேக்கிழார் நாயனாரும் இவ்வாறே, `மாதவம் செய்த திசை தென்திசையே` எனக் கூறி, அதற்குக் காரணம் யாது` என முனிவர்கள் வினாவ, உபமன்னியர், `தில்லை, திருஆரூர், காஞ்சி, திருஐயாறு, சீகாழி முதலிய இறை தலங்களை மிகப்பெற்றிருத்தலே` என விடை யிறுத்து, பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை`` என வலியுறுத்திக் கூறினார் என அருளிச் செய்தார்.l இன்னும் அவர்,
``திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற`` எனவும்,
`அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல`3 எனவும் அருளிச்செய்தார்.இந்நாயனார்,
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச் செய்யு மாறே,``
``தங்கி மிகாமைவைத் தான்தமிழ் வேதம் ... ...
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்,``9
என்பவற்றால் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தி, இங்குத் தமிழ் நிலத்தின் சிறப்பை உணர்த்தினஆர். இவற்றால் எல்லாம் தமிழ் மொழியும், தமிழ் நிலமுமே சிவனருள் பெறுதற்குச் சிறந்த வாயிலாதல் விளக்கியவாறாம்.
இதனால், தென்திசையே சுத்தமாகத் தில்லை சுத்தத்தில் சுத்தமாய் உள்ளது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

பொழிப்புரை :

சொல்லுலகத்திற்கு முதலாகிய நாதத்திலும் அதன் காரியமாகிய நால்வகை வாக்குக்களிலும், அவ்வாக்குகளாய் வெளிப் படுகின்ற வேதாகமங்களிலும், அவற்றின்வழி வேட்கப்படுகின்ற வைதிகாக்கினி, சிவாக்கினி என்பவற்றின் கொழுந்திலும், உயிர்களின் அறிவிலும், எல்லா அண்டங்களிலும் ஆடுபவனாகிய சிவபிரான்,

குறிப்புரை :

(இதனை அடுத்துவரும் மந்திரத்தோடு கூட்டி முடிக்க.)

பண் :

பாடல் எண் : 9

தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.

பொழிப்புரை :

கூத்துக் கோலம் உடையனாய், `கோயில்` எனப் -படும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தேவர்களும், மூவர்களும், முனிவர்களும் வேதமும், தமிழும் பாட, உமையம்மைதன் கண்முன் ஆடுகின்றான்.

குறிப்புரை :

``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் பலவும் எண்ணின்கண் வந்தன. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. ``நாதத்தில் ஆடி`` என்னும் மந்திரத்துள் `சிவன் உலகரால் அறியப் படாத பல இடங்களில் ஆடுபவன் என்பதைக் கூறி, ``தேவரொடாடி`` என்னும் மந்திரத்தில் `அத்தகையோன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவத் திருமேனி கொண்டு ஆடுகின்றான்` என்பதைக் கூறினார். `நாதம் முதலியவற்றில் ஆடுபவன் தில்லையில் தேவர் முதலியோர் சூழ அம்மைமுன் ஆடுகின்றான்` என ஒரு தொடரால் சுருங்கக் கூறிப் போகாமல், `ஆடி, ஆடி, ஆடி ... ... ... ஆடுகின்றான்` என பல தொடரால் விரியக் கூறினார் தில்லைக் கூத்தின் அருமையை வலியுறுத்தற்கு. யாண்டும் மந்திரங்களைக் குனகமாகச் செய்தார். இக்கூத்தின் பெருமை ஒரு செய்யுளில் அடங்காமை காட்டிச் சொல்லில் அடங்காமை தோற்றுவித்தற்குப் ``பராசத்தியில்`` என்பது `பரா சத்தி யிடத்தில்` என்னும் பொருட்டாய், `பரா சத்தி முன் னிலையில்` எனப் பொருள் தந்தது. `கோவிலுள் கூத்தப் பிரானாய்` என ஆக்கம் வருவித்து, ஆடிடும்` என முன்னே கூட்டி முடிக்க.
இவ் இருமந்திரங்களாலும், `தில்லைக் கூத்தின் பெருமை சொல்லில் அடங்காதது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும்
கூறு சமயக் குருபரன் தான் `என்றும்
தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.

பொழிப்புரை :

கூத்தப் பிரான் ஒரு திருமுகத்தையே கொண்டு, ஒருவனேயாய் இருப்பினும் `ஆறு திருமுகங்களையுடைய முழுமுதற் கடவுளும் தானே` எனவும், அநைத்துச் சமய முதல்வனும் தானே` எனவும் தனது திருநடனக் குறிப்பை உணர வல்லவர்கள் உணர்ந்து கொள்ளும்படி தில்லைத் திருவம்பலத்துள் எஞ்ஞான்றும் விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`உச்சியில் ஒன்றும், நான்கு திசைகளிலும் நான்கும் ஆக ஐந்து முகங்களையே உடையவனாய்ச் சிவபிரான் உலகத்தை ஐந்தொழிற்படுத்து நடத்துகின்றான் என்றே வேதாகமங்கள் கூறியபோதிலும், `அந்த ஐந்து திருமுகங்கள் வெளிப்படையாய் விளங்குவன` என்பதும், `கீழ்நோக்கிய ஒருமுகம் ஞானியரே உணரும் வண்ணம் மறைந்துள்ளது` என்பதும் வேதாகமத் துணிபுகள் என்பதை நாயனார் இரண்டாம் தந்திரத்து `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள் குறிப்பால் உணர்த்தினமை காண்க. ஐந்து முகங்களும் பொதுவாக ஐந்தொழிலை இயற்றினும், அவரவர் விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றும் சிறப்புத் தொழில்களை அதோமுகம் செய்யும் என்க. அது தேவர் வேண்டுகோளுக்கு இரங்கி முருகனை அளித்த வரலாற்றால் நன்கு விளங்கும்.
`தோற்றம் துடியதனில்` என்னும் உண்மை விளக்க வெண்பாவால் கூத்தப்பிரான் ஐம்முகம் செய்யும் ஐந்தொழில்களைச் செய்தல் விளங்கும். `வரைமகள்தான் காண்படியே`` எனவும், ``மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் - நாதனார்`` எனவும் பிற இடங்களிலும் ``பரா சத்தியில் ஆடி`` என முன் மந்திரத்திலும் கூறிய வாறு தேவியை உடன் கொண்டு, அவள் காண ஆடுதலே அதோமுகம் செய்யும் செயலைக் குறிக்கும். சமயங்கள் யாவும் அவற்றின் முதலாசிரியர்களாலே தோற்றுவிக்கப்படினும் அவர்களை அவ்வாறு தோற்றுவிக்கச் செய்தவனும் சிவனே யாதல் பற்றி, ``கூறு சமயக் குருபரன் தான்`` என்றார். அதுவும் அதோமுகச் செயல்களில் ஒன்றே என்க. வேறின்மை - நீங்குதல் இன்மை.
இதனால், தில்லைக் கூத்தபிரானே எல்லா மூர்த்திகலுமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.

பொழிப்புரை :

எம் இறைவனாகிய சிவன், தில்லைத் திருவம் பலத்திலே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் ஓய்வின்றி ஆடுவான். அவனது வலம், இடம் ஆகிய இரண்டு திருவடி களினின்றும் எழும் கழல் சிலம்பின் ஓசைகள் முறையே நாதமும், விந்துவுமாய் நிற்கும். அவை பரநாத பர விந்துக்களாம். அவையே அவற்றின் கதிர்களாகிய `அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை` என்னும் ஐந்து தத்துவங்களில் அவற்றின் நிலைமையவாய் நிற்க, சிவனும் அம்முறையால் உயிர்களிடத்துப் பொருந்தி அவற்றிற்கு அறிவைத் தருவான்.

குறிப்புரை :

`உப்பாம்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. உகரச் சுட்டு மேலிடத்தை உணர்த்திற்று. ``பரமாம் என்பதன்பின், `அவை` என்னும் சுட்டு வருவித்து, ``நின்று`` என்பதனை, `நிற்க` எனத் திரிக்க. `இவ்வாற்றால் யாது சொல்லப்பட்டது` எனின், தில்லைப் பெருமான் திருக்கூத்தினின்றே பரநாத பர விந்துக்கள் தோன்றி, சிவம், சத்தி முதலிய சிவதத்துவம் ஐந்திலும் அவற்றிற்கு ஏற்ற வகையில் பொருந்தி நின்று உயிர்களுக்கு அறிவை உண்டாக்குகின்றன` என்பது சொல்லப்பட்டதாம். இவ்வாறு அறிவைத் தருகின்ற நடனம், `அதி சூக்கும நடனம்` என்றும், `பர நடனம்` என்றும், `அது புருவ நடுவில் நிகழும்` என்றும் சொல்லப்படுகின்றது.
``நாதத்து ரேகை`` என்பதில் நாதம், பரநாதம், அதனைக் கூறவே பரவிந்துவும் உடன் கொள்ளப்பட்டது. ரேகை - கதிர், என்றது கூற்றினை. சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்த, உயிர்களுக்கு அறிவு பொதுவகையான் நிகழும். பின்பு வித்தியா தத்துவங்கள் அந்தக் கரணங்களைச் செலுத்த அறிவு அவ்வப் பொருள்கள் மேல் சிறப்பு வகையால் நிகழும் `இவ்வாற்றால் இறைவன் உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கின்றான்` என்பதும், `அவ்வாறு பிறப்பித்தலே அவனது பர நடனம்` என்பதும் சைவ தத்துவங்களாதலை நாயனார் இம்மந்திரத்தால் உணர்த்தியருளினார்.
இதனால், தில்லைத் திருக்கூத்தே உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கும் கூத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

பொழிப்புரை :

ஞான குருவாய் நின்று ஞானத்தைத் தருகின்ற சிவன், அவ்வாறன்றி, ஊன்றியும் தூக்கியும் ஆடும் கால்களும் அவற்றில் கழலும் சிலமும் ஆகியவற்றின் ஓசைகளும், அருகில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்களும், பலவகையான கரணங்களும் கூடிய கூத்துக் கோலத்தைக் கொண்டு ஆடுதலை அறியாமல், அவனை எங்கெங்கோ தேடியலைந்து, பின்பு என் உள்ளத்திலே அந்தக் கூத்துக் கோலத்தைக் கண்டேன். அக் காட்சியே யான் பிறவிக் கடலினின்றும் நீங்கிக் கரையேறிய நெறியாகும்.

குறிப்புரை :

``குரு பரன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `குருபரனாய் வந்து செய்கின்ற அருளையே கூத்தனாய் நின்று செய் கின்றான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. கூத்தனாய் என ஒரு சொல்லாற் சொல்லியொழியாது, அக்கோலத்தை வகுத்துக் கூறினார், அதனை உள்ளத்தே கண்டவாறெல்லாம் இனிது விளங்குதற்கு. கண்டது, `உள்ளே` என்றதனால், தேடியது `வேளியே` என்பது போந்தது. `பிறவி யறுதலை எண்ணாதவர் திருக்கூத்தினைப் புறத்தே மட்டும் ஒருகாற் கண்டு ஒழிவர்` என்பதும், `பிறவியற வேண்டுபவர் அதனை எஞ் -ஞான்றும் உள்ளத்தே கண்டு கொண்டிருப்பர்` என்பதும் கூறியவாறு. கண்டமைக்கும், அற்றமைக்கும் `யான்` என்னும் எழுவாயும், `அற்றவாறு அறியத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. கூத்தப் பிரான் ஒருகாலிற் சிலம்பும், ஒரு காலிற் கழலும் அணிந்திருத்தல் அவற்றுள் ஒன்றைக் கூறவே மற்றொன்றும் பெறப்பட்டது.
இதனால், `கூத்துக்கோலம், போகியர்க்கு போகவடிவாதலே யன்றி, யோகியர்க்கு யோக வடிவுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.

பொழிப்புரை :

(`பிற உலோகங்களை நோக்கப் பொன் உயர்ந்தது` என்பதில் ஐயம் இல்லை. ஆயினும், `பொன்னிலும் மாணிக்கம் உயர்ந்தது` என்பது தெளிவு ஆதலால்) ஐவகை மன்றினுள்ளும் மணிமன்றினுள் ஆடும் ஆடற்பிரானே யோகியர்க்கு யோகமும், போகியர்க்குப் போகமும் ஆகின்ற அருட் கூத்தினை எல்லா இடங்களிலும் சென்று ஆடுகின்றான். `அஃது எதுபோலும்` எனின், இருதயத்திலே நிறைகின்ற பிராண வாயுவும் அவ்விடத்தினின்றும் குருதியோடு ஓடி உடம்பெங்கும் நிறைதல் போலும்.

குறிப்புரை :

`இச்சிறப்புப் பற்றியே அந்த மன்று மணிமன்றாய் உள்ளது` என்க. அது திருஆலங்காட்டு மன்றமாம். அவ்விடத்துக் கூத்து, காலை உயர்த்தி ஆடும் கூத்து (ஊர்த்துவ நடனம்) ஆதலும், ``எண்டோள் வீசிநின்று ஆடும் ஆடல்``33திருமுறை - 4.9.2. ஆதலும் எண்ணத் தக்கன.
``இன்னும் வேண்டும், நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும்போது `உன் அடியின்கீழ் இருக்க``*
என வேண்டிய அம்மைக்கு. இறைவன் ஆலங்காட்டு நடனத்திலே அவ்வாறு இருக்க அருள்புரிந்தமையும் கருதத் தக்கது. முன் அதிகாரத்தில் நாயனார் சிவன் ஆடும் இடங்களை எல்லாம் கட்டியதில், கனகா சலத்தில் ஆடுதலுக்கும் முன்னே காயோடு ஆடிய ஆலங்காட்டு நடனத்தையே முதலாவதாகக் குறித்தார். இது உலகம் காளியால் அழிந்தொழியாதவாறு காத்த நடனமாகச் சொல்லப்படுதலும் நோக்கத்தக்கது.
``தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்(கு) ஊட்டாங்காண் சாழலே``*

பண் :

பாடல் எண் : 1

குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே.

பொழிப்புரை :

சிவபிரானது கூத்த வடிவமே சகல வருக்கத் -தினருக்குக் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் வடிவமும், திருக் கோயில்களில் மூலத் தானத்தில் எழுந்தருளியிருந்து வழிபாட்டினை ஏற்று அருள்புரியும் இலிங்க வடிவமும் ஆகும். இனி அவ்வடிவத்தின் பக்கத்தில் பெண்ணுருவாய் நிற்பவளும், மற்றும் சிவனுக்கு மூவகைத் திருமேனியாய் விளங்குபவளும் கூத்தப் பெருமானது சத்தியே.

குறிப்புரை :

`குனிக்கும் உருவமே குரு உரு; அன்றி, அரு உரு ஆவதும் அந்த உருவே` என இயைத்துக் கொள்க. புரம் - திருமேனி. புரை - திருமேனியாய் உள்ளவள். `உருவாய் வருவாளும்` என ஆக்கம் விரிக்க. ``உமையவள்`` என்றது, `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. இவ்வாறெல்லாம் கூறியது, கூத்தப் பெருமானை வணங்கும் வணக்கத்தின் பயனை நோக்கியாம்.
இதனால், `கூத்தப் பெருமான் வணக்கமே அனைத்துத் திருமேனிகளின் வணக்கமாம்` என அவனது சமட்டி நிலை அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

பொழிப்புரை :

ஒருவனுக்கு வீட்டு நெறியாவது, அவனது உள்ளத்தில் அவனுக்குக் குருவாய் வந்து அருள் புரிந்தவர் நீங்காதிருக்க, வெளியில் சிற்றம்பலத்தில் அம்பலவாணர் ஆடுதலேயாகும். (உள்ளத்தில் குருவைத் தியானித்தலும், வெளியில் திருக்கூத்தைக் காணுதலுமேயாகும்` என்பதாம்.) உண்மையை ஊன்று உணர்ந் தோர்க்கு மூவகைத் திருமேனிகளும் ஞான நெறியும் அவையேயாம்.

குறிப்புரை :

`திரு` என்பது வீடாதலை, ``போகமும், திருவும் புணர்ப்பானை``3 என்பதனால் அறிக. `உன் குருவடிவு ஆக` என மாற்றி, ``திருவழியாவது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``குணக்கும் உருவே`` என்றாராயினும் `உருவாய்க் குனித்தலே` என்றலே கருத்தென்க. `குனித்தல்` என்றதும் அதனைக் காணுதலையே. உற்று உணர்ந்தோர்க்கு, உருவாவதும், அருவாவதும், அருள்வழி யாவதும் அவ்வழியே என இயைத்து முடிக்க. தான், அசை, வழி-வாயில். `உரு, அரு` என்பவற்றைக் கூறவே, உருவாருவமும் கொள்ளப்படும். தியானிக்கப்படுவதும் குனிப்பதும் உருவம் முதலியன ஆவனவும் வேறுவேறாய் இருக்க, அவற்றை, ``குனிக்கும் உருவே`` என, அஃது ஒன்றேயாகக் கூறியதுதான் இங்குக் குறிப்பிட்ட அற்புதம்.
``சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தை
யுள்ளுக உறைவான்``
என்றவிடத்தும் இவ்வற்புதம் குறிக்கப்பட்டமை காண்க.
இதனால், மேற்கூறிய சமட்டி நிலையில் உள்ளவைகளில் தலையாயதாகிய ஞான நிலை, சிறப்புப் பற்றி வேறெடுத்துக் கூறப்பட்டது.
``மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற
வாணுதல் மான்விழி மங்கை யோடும்
பொய்ம் மொழி யாமறை யோர்கள் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே!
``எம்மிறையே` இமை யாத முக்கண்
ஈச!என் நேச!இ தென்கொல் சொல்லாய்;
மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே``
``அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ,
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வம் மல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள
கங்குல் விளங்கெரி யேந்தியாடும்
கணபதி யீச்சரங் காமுறவே``1
``பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றி நின்று
நாடகம் ஆடும்நள் ளாறுடைய
நம்பெரு மான்!இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தை மார்கள்
துணைவ ரொடுந்தொழு தேத்தி வாழ்த்த
ஆடக மாடம் நெருங்கு கூடல்
ஆலவ யின்கண் அமர்ந்தவாறே``
``பருமதில் மதுரைமன் அவையெதிரே
பதிகம் தெழுதிலை யவை யெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே``2
``... ... ... ... பேணு பெருந்துறையுட் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்``3
என்றாற்போல ஏனை ஆசிரியர்களும் ஏகதேசியாய்க் காணப் படுபவன் எங்குமாய் நின்று அருள்புரிதலை வியந்தருளிச் செய்தல் காணத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.

பொழிப்புரை :

உள்ளே புகுந்து, வெளியே ஓடும் இயல்புடைய பிராணன் மூலாதாரத்திலினின்றும் எழுந்து சுழுமுனை வழியாக மேலே செல்லுங்கால், புருவ நடுவையும் கடந்து உச்சியை அடைந்து, அதற்கு மேலேயும் பன்னிரண்டங்குலம் சென்றால் பின்பு கிடைப்பது மேல் நிலைத் தத்துவமாகிய நாதத்தையும் கடந்து நிற்கின்ற நம் பெருமானாகிய சிவன் மிகவும் விரும்பி ஆடும் இடமாகிய திரு வம்பலமே. அதனை நீங்கள் உணருங்கள்.

குறிப்புரை :

``நாடுமின்`` என எடுத்தோதியது, பொற்பதிக் கூத்து, பொற்றிலைக் கூத்து ஆகியவற்றில் காணப்படும் அம்பலங்களை இம்மீதான அம்பலமாக உணர்ந்து வணங்குதல் சிறப்பு` என்பது உணத்துதற் பொருட்டாம்.
ஆறு ஆதாரங்களில் மேல் உள்ளதாகிய ஆஞ்ஞைக்கு அப்பால் உச்சி வரை ஏழாந்தானம். அதற்கு மேல் பன்னிரண்டங்குலம் நிராதாரம்; அதைக் கடந்த பெருவெளி மீதானம். அதுவே பரவெளி. `துவாதசாந்தம்` என்று சொல்லப்படுவது.
பிராணன் ஏழாம் தானத்திற்கு அப்பால் செல்லுதல் இல்லை. வலிந்து செலுத்தினால் பின் திரும்பாதாக, உடம்பு வீழ்ந்துவிடும். ஆயினும் பிராசாத கலைகளால் பிராணன் நிராதாரத்தளவு செல் வதாகப் பாவித்து நிற்றல் பற்றி ``பன்னிரண்டங்குலம் உதித்திட`` என்றார். உதத்தல், இங்கு, செல்லுதல். `உதித்திட அப்பால் அம்பலந் தான்` என ஒருசொல் வருவித்து முடிக்க. தான் என்பது தேற்றப் பொருள் தந்து நின்றது.
``ஓடும் உயிரெழுந்து ஓங்கி`` என்பதை முதலிலும், ``நாடுமின்`` என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க.
இதனால், புற அம்பலங்கள் அக அம்பலங்களாகச் சிறந்து நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.

பொழிப்புரை :

[அம்பலங்கள் பலவற்றையும் உகந்து ஆடும் நம்பெருமான் வானத்தில் அடங்கியுள்ள காற்று, மேகம், மின்னல், வில், இடி, ஓசை என்பவைபோல,] நிவிர்த்தி முதலிய கலைகளில் அடங்கியுள்ள `தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம்` என்னும் ஐந்தோடும், கலையையும் கூட்ட ஆறோடும் ஒன்றாய், வேறாய், உடனாய்க்கலந்து அறிவு வடிவாய் அவற்றினின்றும் பிரித்துக்காண வாராமல் மறைந்தே நிற்கின்றான்.

குறிப்புரை :

`அம்பலங்கள் பலவற்றிலும் காணப்படுகின்ற இவன், மேல் நுண்ணியவாய் மிகப்பெரிய அளவில் விரிந்து கிடக்கின்ற அவை அனைத்திலும் ஒளிந்து நிற்றல் வியப்பு` என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து வந்து இயைந்தது. காற்று வடிவம் உடைத் தாயினும், உருவம் இல்லது ஆகலின் அது காரண ரூபமான தத்துவங் கட்கும், மேகம் பல்வேறு வடிவங்களாய் வியப்புறத் தோன்றுவது ஆகலின் அது விசித்திரமான பல புவனங்கட்கும், மின்னல் விரையத் தோன்றி, விரையமறைவது ஆகலின், அது விரையத் தோன்றி விரைய மறையும் வன்னங்கட்கும், (எழுத்துக்களுக்கும்) வானவில் பல நிறங்களையுடையதாய், அழகிதாய் உள்ளத்தைக் கவர்தலின் அது பொருளுணர்ச்சியைத் தரும் பதங்கட்கும் இடியோசை பெருமுழக்கம் ஆதலின் அது நன்கு உச்சரிக்கப்படுகின்ற பாட்டாகிய மந்திரத்திற்கும், வானம் இவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றலின் அஃது அத்து வாக்கள் ஆறில் ஏனை ஐந்தையும் தன்னுள் அடக்கி நிற்கும் கலைக்கும் உண்மையாயின. இனி, ``ஓை\\\\u2970?`` என்பதை, `ஆகாயத்தின் குணமாகிய ஓை\\\\u2970?` எனக் கொள்ளலும் ஆம். பிற ஓசைகளை நீக்குதற்கு ``வானக ஓை\\\\u2970?`` என்றார். களிஒளி - களிப்பைத் தருகின்ற ஒளி. ``ஒளி`` என்றது அறிவை. அறிவைத் தருவனவற்றை `அறிவு` என்றார். `அறிவைத் தருகின்ற ஆறு` எனவே, அவை அத்துவா ஆதல் விளங்கிற்று. `கலந்து - ஒன்றாய்க் கலந்து` என்க.
இதனால், பொற்பதிகளிலும், பொற்றில்லையிலும் ஆடும் பெருமான் அகண்ட வியாபகனாய் நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே.

பொழிப்புரை :

இருளை ஓட்டுதலால் முதன்மை பெற்ற தீ முதலிய ஐம்பெரும் பூதங்களும், கிழக்கு முதலிய எட்டுத் திசைகளும், மற்றும் அவற்றோடு உடன் எண்ணப்படுகின்ற `கீழ், மேல்` என்னும் பக்கங்களும், இவற்றையெல்லாம் பற்றி ஆராய்ந்தறிவதாகிய உயிர்களின் அறிவும் ஆகிய இவையெல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளது உண்மையான இன்பம், அதனை அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய இருமாயைகளையும் கடந்தவரே பெறுவர். அவர் அங்ஙனம் அதனைப் பெறுதற் பொருட்டே சிவன் நிலவுலகில் நின்று பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து இவற்றைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`நாயகன் நின்று நடம் செய்யும் ஆறு, தீ முதல் அப்புற ஆனந்தம் கடந்து நின்றார் காண` என இயைத்து முடிக்க. ``அறி வினுக்கு`` `அறிவும் ஆகிய இவற்றுக்கு` என விரிக்க இகர. உயிரும், யகர மெய்யும் மொழியீற்றின் உறழ்ந்து வரும் இயல்புடைமையால்9 ஈகாரம் ஒன்றே யகர எதுகையை நிரப்பிற்று? என்க.
இதனால், நிலவுலகக் கூத்து பரானந்தத்தைத் தருகின்ற அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

பொழிப்புரை :

கூத்தப் பெருமான், தான் மட்டும் தனியே நின்று ஆடாமல், உமை ஒருபால் நிற்கக் கொண்டு, அவள் கானவே ஆடுதல் வெளிப்படை. அதனாலேதான் அவனது கூத்து ஆனந்தமயமாயும், ஞானமயமாயும் உள்ளது. ஒரு கூத்திலே இருவர் பங்கும் உள்ளனவேயன்றி, இருவரும் இருகூத்து இயற்றிலர்.

குறிப்புரை :

`ஞானமும், ஆனந்தமும் இறைவனுக்குக் குணங்கள் ஆதலின் அவை அவனது சத்தியேயாம்` என்பதும், `சத்தியின்றிப் பொருள் இல்லை ஆதலால், அவள் இன்றி அவன் ஆடுதல் இல்லை` என்பதும், `பொருளும், சத்தியும் வேறு வேறு ஆகாமையின், இருவரும் ஒரு கூத்தினையே உடையர்` என்பதும் கூறியவாறு. `வேறொரு கூத்தை ஆடியவன் காளி` என்க.
``கூத்ததின்மேலே`` என்பதற்கு, `ஒரு கூத்ததின்மேலே` என உரைக்க. அது பகுதிப் பொருள் விகுதி. `மேலே உள்ளனர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. கோது - துன்பமும், அறியாமையும். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், ஒரு நடனத்தை இருவர் இயற்றுதலும், அதனால் பிறவற்றில் பெறப்படாத பயன் விளைதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.

பொழிப்புரை :

`எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூடைபோல ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்.

குறிப்புரை :

``சத்தி`` என்றதனால், `சிவன்` என்பதும், ``எந்தை`` என்றதனால், `எம்தாய்` என்பதும் பெறப்பட்டன. `கருதல் அளவையால்` என்பது, ஆற்றலால் வந்தது. கருதலளவையால் அதனை யறிந்தவாறாவது,
``சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும், பெண்ணும், உயர்குண குணியுமாகி``9
நிற்றலைக் கொண்டு அறிவதாம்.
``இடம்`` என்றது உடம்பின் இடப்பாகத்தை யாதலின், `ஒருவரே இருவராய் நிற்றல்` பெறப்பட்டது. ``ஓர் உடம்பு இருவராகி``8 என அப்பர் அருளிச்செய்தமை காண்க. `இவர்கள் நடனம் ஆடுதல் உயிர்களின் பொருட்டே` என்பதை ஞான சம்பந்தரும்,
``ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் ... ... ... ... ... ...
நாடும் திறந்தார்க்கு அருளல்லது நாட்டலாமே``9
என அருளிச் செய்தமை காண்க.
இதனால், ஒருவரே இருவராய் நின்று ஆடுதலும் அவ் விடத்து, அடங்கலும் தாமாய் நின்று ஆடுதலும், தம் பொருட்டன்றிப் பிறர் பொருட்டாகவே ஆடுதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.

பொழிப்புரை :

எல்லா உயிர்கட்கும் ஏற்புடையதாகிய `இன்பம்` என்பது `சத்தி` என்னும் கூறே. அதனால், எந்த இன்பப் பொருளிலும் உள்ள எந்த இன்பமும் `சத்தி` என்னும் கூறே. (பொருள், `சிவம்` என்னும் கூறாம்) இனி எல்லாத் திருமேனி வகைகளும் சத்தியே. அந்நிலையில் பெருமானது சத்தியால் தோன்றி நிகழ்கின்ற ஒப்பற்ற நடனம், முத்தியின்பமாகிய பேரின்ப நடனமாகும்.

குறிப்புரை :

`திருக்கூத்துச் சத்தியால் உண்டாகி, ஆனந்தத்தைப் பொழியும்` என்றபடி. சகலம் - எல்லாம். உம்மை, முற்று. இனி, `சகலம் சகலநிலை` எனவும் உரைப்பர். அவர் உம்மையை இழிவு சிறப்பாகக் கொள்வர். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல். `சகளத்து` என்பதில் `அத்து` அல்வழிக்கண் வந்த சாரியை. `சகளமாய் எழும்` என ஆக்கம் வருவிக்க. ``சகளம்`` என்பது, பொதுவாகத் `திருமேனி` என்னும் அளவாய் நின்றது. `எழுந்து ஒத்த ஒரு நடம் ஆனந்த நடனமாம்` எனக் கூட்டுக. இரண்டு - இருவினை `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `இரு வினை யொப்பு` என்பது உபலக்கணத்தால் மலபரி பாகம், சத்திநிபாதம், ஞான முதிர்ச்சி இவைகளைத் தழுவி `முத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. ஒத்த காலத்தில் நிகழ்வதை ``ஒத்த`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், திருக்கூத்து ஆனந்தக் கூத்தாதலாகிய அற்புதத்திற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை :

நெற்றிக்குக் கீழே, இரு புருவங்கட்கு இடையே யுள்ள வெற்றிடம் தன்னை உற்று உற்றுப் பார்க்க, பார்க்குந்தோறும், பார்க்குந்தோறும் பார்ப்பவர்க்கு ஒளியை மிக மிக வீசுகின்ற ஓர் இல்லமாய் விளங்கும். `அந்த இல்லமே` சிவன் யாவரும் பற்றுதற்குரிய பற்றாய் இருக்குமிடம். அஃதாவது `ஞானாகாசம் என நான் திருவருளால் ஆராய்ந்து அடைந்தேன்.

குறிப்புரை :

உற்று உற்றுப் பார்த்தலாவது, உளம் ஒருங்கித் தியானித்தல். எனவே, அது தியானித்திற்குரிய இடமாதல் பெறப் பட்டது. ஒளி - ஞானம். மந்திரம் - இருப்பிடம். மேல் துவாத சாந்தத்தை `அம்பலம்` என்றும், இருதயத்தை `அம்பலம்` என்றும் கூறி, இங்கும் புருவ நடுவை `அம்பலம்` என்றது என்னையெனின், அண்டத்தில் அம்பலங்கள் பலவாதல்போலப் பிண்டத்திலும் அம்பலங்கள் பலவாதல் பற்றியாம். இருதய அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்கு உரியது, புருவ நடு அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்குரியது, புருவ நடு அம்பலம் தியானித்து ஞானம் பெறுதற்குரியது. துவாதசாந்த அம்பலம் அமைதியுற்று ஆனந்தம் எய்துதற்கு உரியது என்க. அண்டத்து அம்பலங்களும் வெள்ளி, பொன், மணி என வகைப்பட்டு நிற்றல் போலப் பிண்டத்து அம்பலங்களும் இவ்வாறு வகைப்பட்டு நிற்கும். ``மந்திரம்`` என்பதனை, `பஞ்சாக்கர மந்திரம்` என்பாரும் உளர். அஃது இவ்விடத்திற்கு இயைபில்லதாம் என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால் ஓர் அம்பலம் உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் அம்பலமாய் உள்ள அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை :

உலகங்கள் ஏழு, சாதாக்கியம் முதலாகக் கீழ் நோக்கியும், மேல் நோக்கியும் எண்ண வருகின்ற தத்துவங்கள் ஏழு, `தண்டு` எனப்படுகின்ற சுழுமுனை நாடியில் உள்ள, `சத்தம்` எனப்படுகின்ற வாக்கிற்கு முதல்வியாதல் பற்றி சாத்தவியாம் குண்டலி சத்திக்குரிய ஆதாரங்கள் ஏழு, அவற்றிற்குமேல் `வியாபினி, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்னும் சிவசத்திகளது இடங்கள் ஏழு, யாழ், குழல் முதலிய வற்றினின்றும் எழுகின்ற இசைகள் ஏழு ஆகியவற்றை எல்லாம் தனது இடமாகக் கொண்டு சிவன் நடம் புரிகின்றான்.

குறிப்புரை :

`இஃது அற்புதம்` என்பது குறிப்பெச்சம். ``ஏழும்`` என்பது இறுதி நிலை விளக்காய், ஏனை எல்லாவற்றோடும் சென் றியைந்தது. `சதாசிவம் ஆதி தத்துவம்` என இயைக்க. `சிவ தத்துவம் ஐந்து` என்பதே பெரும்பான்மையாக எங்கும் சொல்லப்படினும் பரநாத பரவிந்துக்களைக் கூட்டி, `ஏழு` என்றும் சிறுபான்மை சில ஆகமங்களில் சொல்லப்பட்டது. ``ஆதனம்`` என்பதைச் ``சாத்தவி`` என்பதனோடும் கூட்டுக. `தண்டு` என்பது, ``தெண்டு`` என மருவி வந்தது. தண்டு - யாழ். உபலக்கணத்தால் குழலும் கொள்ளப்பட்டது. இறைவன் சொல்லும், பொருளும் ஆதலேயன்றி ஏழிசையாய், இசைப்பயனுமாய்8 நிற்றலும் நன்கறியப்பட்டது. ``சிவாசனம்`` என்பதில் `சிவன்` என்பது `தன்` என்னும் பொருட்டாய் நின்றது அன்றி, `மங்கலப் பொருட்டாய் நின்றது` என்றலும் ஆம்.
இதனால், திருக்கூத்தின் வியாபக அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அம்பலங்கள் தாம் அளவிலவாதல் பெறப்பட்டமையால், அவைகளில் விளக்கொளி போல விளங்கி ஆடும் மூர்த்திகளும் எண்ணிலர். இனி அந்த அம்பலங்கள் மலராக விளங்க, இருநூற்றிருபத்து நான்கு புவனங்கள் அவற்றின் இதழாக, நிலையின்றித் தோன்றியழிவன. ஆகவே, என்றும் நிலையாயுள்ள சத்தியே அவனுக்கு என்றும் உள்ளதாகிய அம்பலமாம். ஆகவே, இதுவே அவனுக்கு நன்றாய அம்பலமாகும்.

குறிப்புரை :

`மன்று நிறைந்த விளக்கொளி நூறு; அவை மாமலராக, இதழ் தான் நாலொடு இருபத்து இருநூறு உள; சென்றது; நின்றதுதான் நெடு மண்டலம்; இதுதான் நன்று` என இயைத்துப் பொருள் கொள்க.
இதனுள் ``நூறு`` என்றது அளவின்மையைக் குறித்தது. `மலராக` என உவமம் குறித்த ஆக்கச்சொல் வருவிக்க. ``சென்றது`` என்றது பன்மையொருமை மயக்கம். `செல்வது` என எதிர்காலத்தாற் கூறற்பாலது, விரைவு பற்றி ``சென்றது`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. `நிற்பது` என்பதும் தெளிவு பற்றி ``நின்றது`` எனப்பட்டது. காலத்தின் நெடுமை அதில் உள்ள மண்டலத்தின்மேல் ஏற்றப்பட்டது. அம்பலத்தை, `மண்டலம்` என்றார்.
இதனால், அம்பலங்கள் பலவாயினும் உண்மை அம்பலம் சத்தியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.

பொழிப்புரை :

அளவின்றி உள்ள அண்டங்கள், பிண்டங்கள், (உடல்கள்) பிருதிவி அண்டங்கள் தோறும் உள்ள அளவற்ற எழுவகைக் கடல்கள், அவைகளால் சூழப்பட்ட எழுவகைத் தீவுகள், எல்லாத் திசைகளிலும் நிறைந்துள்ள அளவற்ற மூர்த்தங்கள் இவை அனைத்தும் சிதாகாச வெளியில் உள்ள சிவன் நடனம் புரியும் இடங்களாம்.

குறிப்புரை :

``எழுகோடி`` என்றது அளவின்மையைக் குறித்தபடி. ``திை\\\\u2970?`` என்பது `இடம்` என்னும் பொருட்டாய்த் தீவுகளைக் குறித்தது.
இதனால், அளவிலா, எல்லா இடங்களிலும் திருக்கூத்து நிகழும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.

பொழிப்புரை :

ஆகாயம் ஒன்றேயாய் எங்கும் வியாபித்துள்ளது. ஆயினும் செயற்கையால் வரையறுக்கப்பட்டு, `மடாகாயம், கோயில் ஆகாயம், மன்ற ஆகாயம்` முதலாகப் பலவாறு வழங்கப்படுகின்றன. அவையெல்லாம் சிறு ஆகாயங்களாக, இயற்கை ஆகாயம் `மகாகாயம்` எனப்படும். சிறு ஆகாயங்களில் பல உருவங்களில் நடனம் செய்கின்ற சிவன் மகாகாயத்தையே அம்பலமாக ஒன்றேயான விசுவ ரூபத்தை உடையவனாயும் நடனம் புரிகின்றான். அந்நிலையில் அவனுக்கு ஆகாயமே உடல்; உயிர்களின் ஆணவ மலமே முயலகன்; போர்வை போலச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளே எட்டுக் கைகள்; சூரியன், சந்தரன், அக்கினி என்னும் முச்சுடர்களே விரும்பத்தக்க மூன்று கண்கள் என இவ்வாறு அமையும்.

குறிப்புரை :

`ஆங்காரம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, ``ஆங்கார்`` என நின்றது. அஃது அதற்குக் காரணம் ஆணவ மலத்தைக் குறித்தது. `மோகமார்` என்பதும், அவ்வாறு, `மோகார்` என நின்றது. மோகம் - விருப்பம். ``மாகாயம்`` என்பதில் காயம் - ஆகாயம்.
இதனால் அகண்டமாய் உள்ள விசுவரூப நடன அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி
அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவன அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கூத்தியற்றுதற்குரிய அம்பலமாய் நிற்பன, நீர், தீ (இனம் பற்றி, நிலம், வளி, வான்) இவற்றின் அண்டங்களும், அனைத்து இயங்கு திணை நிலைத்திணை உயிர்களும், திருவைந்தெழுத்தும், அவனது வட இடத்திருவடிகளும் ஆகும்.

குறிப்புரை :

இவை தூல சூக்கும வகையில் ஒன்றைவிட ஒன்று சூக்கும மாகிய அம்பலம் இவை செய்யுள் பற்றி ஏற்ற பெற்றியில் கூறப் பட்டன. அஞ்செழுத்து அருட்சத்தி, திரோதான சத்தி, உயிர் என்பவை களாய் நிற்றலின் அவையும், பிரானது வலத்திருவடி திரோதான சத்தியும், இடத்திருவடி அருட்சத்தியும் ஆதலின் அவையும் அம்பலமாயின.
இதனால், திருக்கூத்து அனைத்த தூல சூக்கும அதிசூக்கும அம்பலங்களில் நடைபெறும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.

பொழிப்புரை :

சிவனது பலவகைக் கூத்தில் `பாண்டரங்கம்` என்னும் கூத்து (திரிபுரத்தை எரித்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆதலின்,) ஒன்றோடு ஒன்று இயைந்து ஒலிக்கும் மத்தளமும், குழலும் `ஓம்` என்று ஒலிக்கவும், அந்நடனத்தின் குறிப்பை ஆராய்ந்து நோக்கிய பதினெண் கணங்களும் நிறைந்த பூதப்படைகளும் பல பாடல்களைப் பாடவும், அவர்களோடு மக்களும் கண்டு, `இவனே முதற்கடவுள்` என உணர்ந்து களி நடம்புரியவும் நிகழ்ந்தது.

குறிப்புரை :

``பூதங்கள் பாடியவாறு`` - என்றாராயினும், `பூதங்கள் பாட மானுடர் ... ... ... ஆடியவாறு` எனக் கூட்டி, `நிகழ்ந்தது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இதில், மானுடர் கண்டு தெரிந்து ஆடினமை சிறப்பாகக் குறிக்கப்பட்டது.
``தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன்பாண்ட ரங்கமும்``3
என்பதற்கு,
``வானோராகிய தேரில், நான்மரைக் கடும்பரி பூட்டி நெடும் புறம் மறைத்து, வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன்னின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும்``
என்ற அடியார்க்கு நல்லார் உரையைக் காண்க. `பாண்டரங்கம்` என்பது கடைக் குறைந்து நின்றது.
இதனால், திருக்கூத்து வகைகளில் ஒன்றன் அற்புதம் எடுத்தோதி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

பொழிப்புரை :

வானம் அண்டங்களுக்கு உள்ளேயும் உள்ளது; வெளியேயும் உள்ளது. அதுபோல, நிலத்திற்கு அண்மையிலேயும் உள்ளது. சேய்மையிலேயும் உள்ளது. அதனால் அந்த இடங்களில் எல்லாம், வானவராகிய தேவர்களும் இந்த இடங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தில்லைப் பொன்னம்பலத்தில் கூத்தப் பெருமான் தாமரை மலர்போலும் திருவடிகளைப் பெயர்த்து ஆடும் திருக்கூத்தினைக் கண்டு வணங்கி நற்கதியை அடைகின்றார்கள்.

குறிப்புரை :

`தேவர்களைக் கூறவே, மக்களைக் கூறவேண்டா` என்பது கருத்து.
இதனால், மண்ணுலகத் திருக்கூத்தினை விண்ணவர்களும் கண்டு வணங்கி நற்கதிபெறும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

பொழிப்புரை :

புளியை நாவில் இட்டுச் சுவையாவிடினும் அதனைப் பார்த்தபோதே பார்த்தவர்கட்கு அதனைச் சுவைத்தாற் போல நாவில் நீர் ஊறுதல் அனைவரும் அறிந்தது. அதுபோல, கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்கட்கு அக்கூத்தில் காணப்படும் குறிப்பின் பொருளைப் பெறாவிடினும் பெற்றுவிட்டது போன்ற இன்பம் உள்ளத்தில் ஊற்றெடுக்க உடலிலும் அதற்குரிய மெய்ப்பாடுகள் தோன்றும்.

குறிப்புரை :

அம்மெய்ப்பாடுகள் கண்ணீரரும்புதல் ஒன்றை மட்டும் தோற்றுவாயாகச் சுட்டினார். மயிர் சிலிர்த்தல், உடல் கம்பித்தல், நாத்தழுதழுத்தல் முதலியன பிறவாம். களிக்கும் திருக்கூத்து - களித்தற்கு ஏதுவாய திருக்கூத்து. ``துளிக்கும் கண்ணீர் சேரா`` என்றது, `முன்பு அரும்பிப் பின்பு தாரையாய் ஒழுக` என்றபடி. `அக்கூத்து நெஞ்சை உருக்கும்` என்க. ஒளி - சிவம். அதனுள் ஆனந்தமாவது, அதில் தோய்ந்து பெறும் ஆனந்தம்.
`பெறத் தக்க பொருள்களைப் பெற்ற வழியே இன்பம் உண்டாதல் எங்ஙனம்` என்னும் ஐயத்தை உவம வாயிலாக நீக்கினார்.
``உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று``*
எனக் கூறிய அவ்வின்பத் தன்மை இவ்வின்பத்திற்கும் உண்டென்க. காமத்திற்கு உரியரல்லார்க்கு மேற்கூறிய காமத்திற்கு ஏதுவான காட்சி மகிழ்செய்யாதவாறு போல, இறையின்பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் கூத்துக்காட்சி இன்பம் செய்யாதாகலின், அவர், யாம், அக்கூத்தினைக் கண்டபொழுது எமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே ஏன்? என நாயனாரைக் கடாவலாகாமையறிக. ``புளிக் கண்டவர்க்கு`` என்பதில் சகர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது. புளி சுவைக்கப்பட்டு பொருளாகலின், `நாவில்` என்பது கூற வேண்டாவாயிற்று. `சோர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். ``ஆனந்தக்கூத்து`` என்பதில் அது, அல்வழிக்கண் வந்த சாரியை.
இதனால், திருக்கூத்துக் கண்ட அளவிலே ஆனந்தம் விளைக்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

பொழிப்புரை :

சிவானந்தத்தை அடைந்தவர்கட்கு உளவாகும் மெய்ப்பாடுகள் உடல் நிற்கலாற்றாது தள்ளாடி வீழ்தல் முதலியன வாம். (இந்நிலை எய்தினாரை, `ஆவேசம் வரப்பெற்றவர்` என்பார்.) இனிய உணவுகளால் விளையும் மகிழ்ச்சி அவற்றை உண்டபின்பே உண்டவர்க்கு உளவாகும். ஆயினும் யாவராலும் புகழப்பெறும் திரு வம்பலத்தில் சிவன் செய்யும் கூத்துக் கண்டவுடனே கண்டவர்க்குப் பெருமகிழ்வை உண்டாக்கும். (எனவே, திண்டாடி வீழ்தல் முதலியன கண்டார்க்கும் உண்டாவனவாம்.) இனி அதனைக் கண்டார்க்கே யன்றிக் கண்டவர் அக்கூத்தின் இயல்பைச் சொல்ல, அதனைக் கேட்டவர்க்கும் அத்தகைய மகிழ்வை அக்கூத்து உண்டாக்கும்.

குறிப்புரை :

`திண்டாடுதல்` என்பது நிலையாகாமல் தளர்ந்து வீழ்தலைக் குறிக்கும் நாட்டுப்புற வழக்கு. ``சிவானந்தம்`` என்பது அதனால் உண்டாகும் மெய்ப்பாட்டினைக் குறித்த ஆகுபெயர். பின் மூன்று அடிகள் வேற்றுமையணி பெற்றன. `இன்பம் பயத்தலால் இனிய உணவும், திருக்கூத்தும் ஒக்குமாயினும், இனிய உணவினும், திருக்கூத்துத் தனித்ததொரு சிறப்புடையது` என்பதாம். மேற்காட்டிய, ``உண்டார்கண் அல்லது`` என்னும் திருக்குறளும் அவ்வணியை உடையதே - `மகிழ்ச்சி கண்டவர்க்கு மட்டுமன்று; கேட்டவர்க்கும் உளதாம்` என்பதை இம்மந்திரம் கூறிற்று. `கண்டார்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது. ``குணம்`` என்றது நிகழ்ச்சிகளை.
இதனால், மேற்கூறிய அற்புதத்தினும் அற்புதம் ஒன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துங்கால், நான்கு கைகளோடே நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துங்கால் அவற்றில்,) தீயகல், உடுக்கை, உருத்திராக்க வடம், பாசம், அங்குசம், சூலம், பிரம கபாலம் என்பவற்றுடன் ஞானத்தின் பயனாகிய அஞ்ஞானத்தை நீக்குதலைக் குறிக்கும் நீல மலரையும் ஏந்தி, உமையம்மை ஒருபால் நிற்க ஆடுவான்.

குறிப்புரை :

நீல மலர் கரிய நிறத்தை உடையதாய் இரவில் முகிழ்த் திருந்து, கதிரவன் தோன்ற மலர்வது ஆதலின், அஃது ஆணவத்தில் அறியாமை எய்திக்கிடந்து, திருவருள் தோன்ற அது நீங்கி அறிவு நிகழ்தலைக் குறிப்பால் உணர்த்தும். இதனை நாயனார் எடுத் தோதவே, ஏனையவை பற்றிய குறிப்புக்களும் உணரப்படும். அவை நெருப்பு அழித்தல் தொழிலையும், வினையை எரித்தல் தொழிலையும், உடுக்கை ஒலியைப் பிறப்பித்துப் படைத்தல் தொழிலையும், மாயையை உதறித் தள்ளுதலையும், அக்கமாலை ஞானோபதேசம் செய்தலாகிய அருளல் தொழிலையும், குலம் இச்சா ஞானக்கிரியா சத்திகளுடன் கூடி அனைத்தையும் நடத்துதலையும், பிரம கபாலம் தனது நித்தியத் தன்மையையும் குறிக்கும். தேவி திருவருளைக் குறித்தல் வெளிப்படை. பயம் - பயன். `சிவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவித்துக்கொள்க. கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் கூத்துக்கோல வருணிப்பில்,
``ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய், கேளினி``
என எட்டுக் கையே கூறப்பட்டது.
இதனால், ஒருவகை நடனக்கோலம் வகுத்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர தேயத்தே
ஆடிய நந்தி புறம்அகத் தானே.

பொழிப்புரை :

கூத்துப் பதினொன்றின் உறுப்புக்கள் எல்லாம் முறையாகக் கூடிய பாதத்தில் அணியப்பட்டுள்ள சிலம்பும், கையில் கொண்டுள்ள உடுக்கையும் ஒலியை எப்பொழுதும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக, மேலானவற்றிற்கெல்லாம் மேலான இடத்தில் ஆடுபவனாகிய சிவன் எல்லா உலகிலும் உள்ள உயிர்களின் அகத்தும், புறத்தும் ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஆடல் பதினொன்றாவன, `அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்` என்னும் நின்றாடல் ஆறும், `துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை` என்னும் வீழ்ந்தாடல் ஐந்துமாம். இவற்றிற்கு உரிய உறுப்புக்கள் முறையே ஆறு, நான்கு, நான்கு, ஐந்து, ஆறு, ஐந்து, ஐந்து, ஆறு, நான்கு, நான்கு, நான்கு, இரண்டு. இவற்றின் இயல்பெல்லாம் ஆடல் நூலுள் (பரத சாத்திரத்தில்) சொல்லப்படும். சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக்காதை உரைகளில் சிறிது காண்க. `எல்லா ஆடலும் எல்லாரும் வல்லராகார்; சிலர் சிலர் சில சிலவே வல்லவராவர்; சிவன் எல்லா ஆடலும் வல்லன்` என்பதும் `ஆயினும் அவ்வாடல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவன்` என்பது கூறியவாறு `நாதம் நீடிய` என மாறுக. நீடிய - நீடின. நேயம் - விருப்பம். அது விரும்பப்படும் இடத்தைக் குறித்தது.
இதனால், `சிவன் ஒருவனே ஆடல் வல்லான்` ஆகும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை :

சிவவேதங்கள் ஒன்பதும், பிராசாத கலைகள் பதினாறும், சமயங்கள் ஆறும் ஒருங்கு ஆடும்படியும், உயிர்கள் இன் புறும் இடமாகிய ஏழ்அண்டத்துள் சிறப்பாக நிலவுலகில் ஏழு தீவுகளும், அவற்றினும் சிறப்பிற் சிறப்பாக பரத கண்டத்து ஐம்பத்தாறு நாடுகளும் ஆடும்படியும் உயிர்கள் மாட்டு அருள் உடையோனாகிய சிவன் ஆனந்தத்தை விளைக்கும் திருக்கூத்தைத் தில்லையில் ஆடுகின்றான்.

குறிப்புரை :

நில உலகத்தைச் சிறப்பாகக் கூறினமையால், கூத்து முன் அதிகாரத்திற்போந்த தில்லைக் கூத்தாயிற்று. சிவ பேதங்கள் ஒன்பதாவன, நவந்தரு பேதங்கள். அவை ஆடுதலாவன, தாம் கருதி யவற்றை நிகழ்த்துதல், `பிராசாத கலைகள்` என்றது அவற்றின் அதி தேவர்களையும் `சமயங்கள்` என்றது அவற்றை மேற்கொண்டவர்களை -யுமாம். ஒன்பது முதலிய மூன்றும் ஞான வாயிலாதல் பற்றி அவற்றை முன்னர்க் கூறினார். ``அன்பனும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், தில்லையில் உள்ள ஒருவன் ஆட, அனைத்தும் ஆடுதலாகிய அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழினை நாடகத் தேஇசைந் தானே.

பொழிப்புரை :

ஏழ் நரம்புகளில் ஏழு வகையாய்த் தோன்றி, அவற்றிற்குப் பொருந்திய ஏழ் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு, அந்த ஏழ் எழுத்துக்களில் ஒன்றே ஏற்றத்தின் தொடக்கமும், இறக்கத்தின் முடிவுமாய் நிற்க அமையும் ஏழு பண்களினாலும் பாடப்படுகின்ற நன்னெறியை எங்கள் சிவபெருமான் ஏழிசைகளோடு கூடிய தனது கூத்திலே பொருந்தி ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஏவு வகைகளாவன, `குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்` என்பன. இவற்றிற்குப் பொருந்திய எழுத்துக்களாவன முறையே `ஆ` முதல், `ஔ` ஈறான நெட்டெழுத்து ஏழுமாம். இவற்றை,
``களையறு குரலே துத்தம்,
கைக்கிளை உழையி னோடே,
இளியொடு, விளரி, தாரம்
என்ப ஏழிசையின் நாமம்``. ``ஆங்குள ஆ,ஈ ஊ,ஏ,
ஐ,ஓ,ஔ என்னும் ஏழும்
தீங்கிலா அக்க ரங்கள்
செப்பும்ஏ ழிசைக்குந் தானே``9 என்னும் சூடாமணி நிகண்டாலும் உணர்க. முற்காலத்தில் இருந்த யாழின் முன்னேற்றமாக வீணை தோன்றினாற்போல, முற்காலத்தில் இருந்த இசையின் பெயர்கள், இசையின் எழுத்துக்களின் முன்னேற் -றமே, ``சட்சம் இடபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நீடாதம்` என்னும் பெயர்களும், `ச,ரி,க,ம,ப,த,நி` என்னும் எழுத்துக் களும் என்க. எழுத்துக்களில் முதலாவதினின்று இசை மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்தை அடையும்பொழுது அந்த எழுத்தே சொல்லப் பட்டு, மீண்டும் அதினின்றும் மெல்ல மெல்ல இறங்கி முடிவடையும் பொழுதும் அந்த எழுத்தே சொல்லப்படுதல் பற்றி, ``ஏழினில் ஒன்று ஆய், இழிந்தமைந்து ஒன்றாய்`` என்றார். ஆதல் - மேன்மேல் உயர்தல். பண்கள் ஏழாவன, கோடிப்பாலை, செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை` என்னும் ஆதாரப் பண்கள். `இவற்றினின்றும் பிறக்கும் பிறவிப் பண்கள் நூற்று மூன்று` எனவும் `மற்றும் திறங்கள்` எனவும், `திறத்திறம்` எனவும் கூறுவர். இவையெல்லாம் இசைத் தமிழ் நூல்களில் சொல்லப்பட்டன. அந்நூல்கள் பலவும் இறந்து போயின. சிலப்பதிகார உரைகளில் சிறிது காணப்படுகின்றன.
நமது சிவநெறிப்பொருள்கள் இயற்றமிழ்ச் செய்யுட் -களிலன்றியும், இசைத்தமிழ்ப் பாட்டுக்களிலும் இனிமை பெறச் சொல்லப்பட்டமையை, ``ஏழினிற் சன்மார்க்கம்`` என்றும், அப் பொருள்களெல்லாம் பெருமான் தனது கூத்தில் குறிப்பினால் தோன்ற ஆடுதலை, ``ஏழிசை நாடகத்தே இசைந்தானே`` என்றும் கூறினார்.
`இயைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஏழது` என்பதில் `அது` பகுதிப்பொருள் விகுதி. அவ்விடத்து, ``எழுத்து`` என்றது சாதியொருமை. கூத்தின் வினையாகிய இசைதல் அதனைச் செய்வான் மேல் ஏற்றப்பட்டது.
இதனால், இசைத்தமிழ்ப் பாடல்களால் இனிமை பெற விளக்கப்படும் பொருள்கள் எல்லாம் திருக்கூத்தில் விளங்குதலாகிய அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

பொழிப்புரை :

(காலம், கதிர், மதி, சேய், மால், பொன், வெள்ளி காரி` என்னும் ஏழு கோள்களின் இயக்கம் பற்றிப் பலவகையாகப் பகுக்கப்படும். அவற்றுள் கதிரியக்க அளவில் அதற்கும், மதிக்கும் இடையேயுள்ள வழியளவு பதினைந்தாகப் பகுக்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு பகுதியும் `திதி` (ஸ்திதி-நிலை) எனப்படுகின்றது. மதி கதிருக்கு முன்னாக அகன்று செல்லும் நிலை பதினைந்தும் `முற்பக்கம் பூர்வ பட்சம் - மதியது ஒளி மிகுந்து வருதலால் சுக்கில பட்சம்` என்றும், மதி கதிரை அணுகிப் பின்னாக வருதலால் `அபர பட்சம்` என்றும், மதியது ஒளி குறைந்து வருதலால் கிருட்டினபட்சம் என்றும் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு பட்சத்திலும் உள்ள திதிகள் மூன்று வட்டங்களாக வகுக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள ஐந்து திதிகளும் முறையே `நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை` எனப்பெயர் சொல்லப்படும். எனவே, ஒன்று, ஆறு, பதினொன்றாம் திதிகள் நந்தையும் இரண்டு, ஏழு, பன்னிரண்டாம் திதிகள் பத்திரையும், மூன்று, எட்டு, பதின்மூன்றாந் திதிகள் சயையும் நான்கு, ஒன்பது, பதினான்காம் திதிகள், இரித்தையும், ஐந்து, பத்து, பதினைந்தாம் திதிகள் பூரணையும் ஆகின்றன. இவ்வாறு.) பதினைந்து திதிகளும் ஐந்தாகத் தொக்கு நின்று பயன் தருதலையே ``மூன்றினில் அஞ்சாதி`` என்றார். மூன்று - மூன்று. வட்டம். அஞ்சு - நந்தை முதலிய ஐந்து சிறப்பு நிலை. இவையெல்லாம் கணி நூல்களில் (சோதிட சாத்திரங்களில்) காணப்படும்.

குறிப்புரை :

முந்நூற்றறுபது - ஓர் ஆண்டில் உள்ள நாள்கள். ஒரு திங்களுக்கு முப்பது நாள்களாகப் பன்னிரண்டு திங்களுக்கு 30X12=360. (சிறிதே ஏறிப் பெரும்பான்மையாக நாள்கள் முந்நூற் -றறுபத்தைந்தும் ஒரோவோர் ஆண்டில் முந்நூற்று அறுபத்தாறும் ஆகின்ற அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் ஆண்டிற்கு முந்நூற் றறுபது நாள்` என்றல் பொது வழக்கு.) இந்த நாள்கள் முந்நூற்றறுபதும் பன்னிரண்டு அடிநிலைப் பகுதிகளாய்த் தொக்கு நிற்கும். அவையே பன்னிரு திங்கள்களாம். அவற்றையே ``முதற் பன்னீர் மூலமாய்`` என்றார். முதல் - `முந்நூற்று அறுபது` என் எண் பெறுதற்கு முன்பு. `மூலம் பன்னிரண்டாய்` என மாற்றிக் கொள்க.
பன்னிரு திங்களும் `கார், பனி, வேனில்` எனப் பெரும் பான்மை மூன்றாகிப் பின் அவற்றுள் ஒவ்வொன்று இரண்டாகப் பருவங்கள் ஆறாகும். அவற்றையே ``மூன்றினில் ஆறாய்`` என்றார். இவற்றை ஆவணி முதலாக நந்நான்காகக் கொள்க. கார்ப்பருவத்தின் பின் இரு திங்களும் `கூதிர்ப் பருவம்` (பெருமழையின்றிச் சிறு தூற்றலும், துளியும் மிகுந்து தொல்லை தரும் பருவம்.) பனிப் பருவத்தின் முன் இருதிங்கள் முன்பனிப் பருவமும், பின் இரு திங்களும் பின்பனிப் பருவமும் ஆகும். முன் பனியில் குளிர் மிகுந்தும், பின்பனியில் குளிர் குறைந்தும் இருக்கும். `முன்பனி, பின்பனி` என்பன, பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகைகள். வேனிற் பருவத்தின் முன் இரு திங்களும் `இளவேனில் (வேனில் இளமையுடைத்தாய் வெப்பத்தை மிகத் தரும் பருவம்) எனவும், பின் இருதிங்கள் `முதுவேனில்` (வேனில் முதுமையை எய்தி வெப்பத்தை மிகத் தரமாட்டாத பருவம்) எனவும் சொல்லப்படும்.
அக்கம் - கண்; சிவனது கண்கள் மூன்று `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்கள். `மூன்று, அக்கத்தில் முடிய` என மாற்றுக. முடிதல் - அடங்குதல். பெரும்பாலும் முச்சுடர்களாலே காலம் பல வகை நிலையை அடைந்து பல விளைவுகளை உண்டாக்குதலை அறிக.
மூன்றிலும் ஆடினான் - ஏதேனும் ஒருகாலத்தில் உள்ளார்க்கு அக்காலத்தோடு, அதற்கு முன்னும், பின்னும் ஆகிய காலங்களிலும் ஆடினான். எதிர்காலம் பற்றி நோக்குங்கால் ``ஆடினான்`` என்பதைத் தெளிவு பற்றி வந்த வழுவமைதியாகக் கொள்க.
மோகம் மயக்கம்; திரிபுணர்ச்சி. இஃது ஆணவ மலத்தின் காரியம். அந்தக் கூத்து - அந்தத்தை உண்டாக்கும் கூத்து. எனவே, `உயிர்களின் ஆணவ மலத்தை நீக்குதற்கே இவ்வாறு சிவன் அனவரத தாண்டவத்தைச் செய்கின்றான்` என்பதாம். ``ஆகி, ஆய், ஆய், ஆய், ஆக`` என்பவற்றிற்கு, `காலம்` என்னும் எழுவாயும், ``ஆடினால்`` என்பதற்கு, `சிவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. முந்தியே - அனாதி தொட்டே.
மேல் இட வரையின்றி எங்கும் ஆடும் அற்புதம் கூறப்பட்டாற்போல, இதனால், கால வரையின்றி என்றும், எப்பொழுதும் ஆடும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

பொழிப்புரை :

கற்பக மலர் மாலையை அணிந்த முடியை உடைய தேவர்களது தலைமேல் இருப்பனவாகிய, மாணிக்கம்போலும் சிவபெருமானது இருபாதங்களும், தகுதி வாய்ந்த அணியாகிய அன்பை உடையவர்களது உள்ளத்திலே விளங்கும் கற்பகத் தருவும், சிந்தாமணியும் ஆகும். ஆயினஉம் அவன் உலகத்தைக் கடந்தே யிருக்கின்றான்.

குறிப்புரை :

`கற்பகத்தரு இரந்தவற்றைக் கொடுக்கும்; சிந்தாமணி பெற நினைத்தவற்றைக் கொடுக்கும். உலகத்தைக் கடந்து நிற்கின்றவன் அன்பர்கள் உள்ளத்தில் கற்பகத் தருவும், சிந்தாமணியும் போல இருத்தல் கருணையினாலேயாகலின், அவன் மேற்கூறியவாறு எங்கும், எஞ்ஞான்றும் ஆடுதல் கருணையினாலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
`தாமமூடி` என்பது, ``தாமுடி`` எனக் குறைந்து நின்றது. அதனால் தேவர்களது தலையினது உயர்வு குறிக்கப்பட்டது. `உறை தாளிணை` என இயையும். `உறை மாமணி` என இயைத்தலும் ஆம். ``தாள்`` என்பது, கால் முழுவதையும் குறிக்க ``அடித் தாள்`` என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய், பாதத்தைத் குறித்தது.
இங்கு ``அணி`` என்றதை, ``ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி``* என்பதிற்போலக் கொள்க. ``கடந்து நின்றான்`` என்பதற்கு, `அவன்` என்னும் சுட்டு வருவிக்க.
இதனால், ஞானம் கடந்து நின்றவன் சிலரது உள்ளங்களிலே விளங்கி, எண்ணியவற்றை எண்ணியாங்கு முடிக்கும் அற்புதம் கூறும் முகத்தால் அவனது கூத்து அற்புதமும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.

பொழிப்புரை :

அனைத்தையும் படைத்தவனாகிய சிவன் அடி பெயர்த்து ஆடினால், அவனால் படைக்கப்பட்ட அகலிடங்கள் அனைத்தும் தாமாகவே ஆடும். (இயங்கும் `அவன் ஆடாவிடில் அவையும் ஆடா; இயங்கா` என்பது கருத்து.) இதை அறிந்த சிவன் அவை ஆடும் பொருட்டுத் தான் ஆடுமளவும் எங்கள் அறிவுகள் அறிதலைச் செய்யும். (`அவன்` ஆடாவிடில் எங்கள் அறிவுகளும் அறிதலைச் செய்யா` என்பது கருத்து.) இது பற்றி அவன் கருணை கூர்ந்து எங்கும், எப்பொழுதும் ஆடுகின்றான். அப்பொழுது அவனது சுற்றமாகிய பல பூதங்களும் களிப்பினால் ஆடுகின்றான். நாங்கள் இன்பம் அடைந்ததும் அவன் சோதியாய் விளங்கி நின்று ஆடுதலைக் கண்டேயாம்.

குறிப்புரை :

``புரிந்தவன், தெரிந்தவன்`` என்பன வினை யாலணையும் பெயர்கள். `அவன் புரிந்து ஆடில்` எனவும், `அவன் எரிந்து ஆடல்` எனவும் மாற்றி வைத்துரைக்க. `சிந்தையும்` ஆடும் என, இறந்தது தழுவிய எச்ச உம்மையும் அதனை முடிக்கும் சொல்லும் வருவிக்க. எரிதல் - ஒளி வீசுதல். `யாம் இன்புற்றவாறு ஆடல் கண்டு` என எடுத்து முடிக்க. ``இன்புற்றவாறு`` என்பதிலும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால் திருக்கூத்தினால் அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் அனைத்தும் செயற்படும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் முதல்வனாகிய சிவன் கூத்தனாய் நிற்றலைக்கண்டு, அதன் உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்கள், அக்கூத்தினை அவன் எவையோ சில பயன்களைப் பெற வேண்டி ஆடுகின்றான்` எனப் பிதற்றுவார்கள். (`எப்பொருட்கும் முதல்வ னாகியவனுக்குப் பிறர்பால் பெற வேண்டியது யாதுளது` என்பது கருத்து.) அவன் நடம் செய்தபின் உண்மை யாவராலும் அறிதற்கு அரிதேயாம். யாரேனும் அவ்வுண்மையை அரிவார் களாயின், `அவனுக்கு இயல்பாய் உள்ள கருணையின் விளைவே அவனது கூத்து` என்பதே அவ்வுண்மையாய் முடியும்.

குறிப்புரை :

`ஆராயினும்` என்பது, `ஆரும்` எனத் தொகுத்தல் பெற்று நின்றது. `அறிந்தால்` என்பது, ``அறிந்த பின்`` எனத்திரிந்து நின்றது. குணத்தை, ``சத்தி`` என்றார். `அருட் சத்தி ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. செய்கையின் உண்மையை, ``செய்கை`` என்றும் சத்தியின் விளைவ ``சத்தி`` என்றும் உபசரித்தார். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், சிவனது திருக்கூத்துச் சிறிதும் தன்பொருட்டாகாது, பிறர் பொருட்டேயாகின்ற அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து)
அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.

பொழிப்புரை :

தனித்தனி ஒன்பது, ஒன்பது பகுதிகளையுடை யனவும், `தத், துவம்` என்னும் இரு சொற்களால் குறிக்கப் படுவனவும் ஆகிய, `பதி, பசு` என்னும் இரண்டும் `அசி` என்னும் சொல்லில் இணையும்படியும், அதற்கு முன்னே பசு துன்பத்தைச் செய்கின்ற திரோதான சத்தியின் வசப்பட்டு எங்கும் பிறந்தும், வாழ்ந்தும் சுழலும் படியும் பசுக்களின் கருணையுடையவனாகிய எம்தந்தை சிவன் ஆடல் தொழிலைப் பொருந்தி நிற்கின்றான்.

குறிப்புரை :

என்றது, `உயிர்கட்கு `பிறப்பு, வீடு` என்னும் இருநிலைகளையும் `தருதற்காக ஆடுகின்றான்` என்றபடி. வீடு சிறந்தமை பற்றி முற்கூறப்பட்டது. வீட்டைத் தருவது ஞான நடனம். பிறப்பைத் தருவது ஊன நடனம். `ஒன்பதும் ஒன்பதும் ஆம் கோணம்` எனவும், `இருபதத்து உற்ற கோணம்` எனவும் தனித்தனி இயைக்க. அவற்றுள் முன்னையது பதியையும், பசுவையும் தனித்தனி நவகோண சக்கரமாக உருவகம் செய்ததாம். பதியின் ஒன்பது பகுதிகள் நவந்தரு பேதம். பசுவின் ஒன்பது பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றில் ஒவ்வொன்றிலும் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மும்மூன்று உட்பிரிவுகளாம். அவையெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன. அன்புறுதல், ஒன்றையொன்று நேசித்தல். `அசி` பதம் சீவன் சிவன் ஆதலைக் குறிப்பது என்பதும் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. ``ஒன்பதொ டொன்பது`` என்பதில் உள்ள ஒடு எண் ஒடு. ``ஆடிட, ஆட`` என்னும் எச்சங்களும் எண்ணின்கண் வந்தன.
இதனால், உயிர்களின் பல நிலைகளும் நிகழ்தற்பொருட்டுச் சிவனும் பல நிலைகளில் நின்று ஆடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
வைத்த சராசரம் ஆட மறைஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி பசு பல நிலைகளில் செயற்படும்படி சத்தி ஆடுதலால், சிவனும் அதற்கு இயையப் பல நிலைகளில் நின்று ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஐந்தொழிற்கும் முதல்வன் சதாசிவன் ஆதல்பற்றி அவனை வேறு பிரித்துக் கூறினார். சித்தம் - உயிர்களின் அறிவு. சராசரம் - பிறப்பு வகைகள். ``சிவசத்தி தான் ஆட`` என்பதை மூன்றாம் அடியின் ஈற்றில் வைத்து, `அவள் ஆட, அத்தனும் ஆனந்தக்கூத்து ஆடினான்` என முடிக்க. காரியப்பொருளில் வந்த ஏனை, `ஆட` என்னும் எச்சங்கள். `சிவசத்தி தான் ஆட` என்பதனோடு முடிந்தன. `தான்` இரண்டும் அசைகள். சத்தி, இங்கு ஆதி சத்தி.
இதனால், திருக்கூத்துக்கள் யாவும் சத்தியின் நிலைகட்கு ஏற்ப நிகழ்த்தப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

பொழிப்புரை :

உண்மையில் அருட்சத்திக்கு உள்ளே சென்று அடையப்படுபவனாய் ஆனந்தத்தைப் பொழியும் சிவன் இவ்வுலகில் `பதஞ்சலி, வியாக்கிரபாதர்` என்னும் முனிவர் இருவர் எப்பொழுதும் கண்டு களிக்கும்படி, உருவம் `அருவம், உருஅருவம்` என்னும் மூன்று திருமேனிகளில், அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.

குறிப்புரை :

``இருவரும் காண்`` என்றதனால், இங்குக் கூறிய அம்பல தில்லை அம்பலம் ஆயிற்று. அங்கு உருவம், கூத்துக் கோலம். அருவம், ஆகாசத்தைச் சுட்டும் இரகசியம். உருஅருவம், `திருச்சிற்றம்பலம் உடையார்` என்னும் இலிங்கத் திருமேனி. சித்தன் - அடையப்படுபவன். மூன்றாம் அடியை முதலில் வைத்து உரைக்க.
இதனால் தில்லைம்பலக் கூத்தின் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.

பொழிப்புரை :

சிவ முதற்பொருள், தான் செய்வோனாய் நின்று சங்கற்பிக்க, அச்சங்கற்பந்தானே சத்தியாகிப் பலவகையில் நிற்க, அதனால் உலகத்தில் தீயனயாயும் நிலைகெட்டு நீங்கும் நிலையை எய்த, உலகில் அசைவற்றதாக எண்ணப்படுகின்ற ஆகாயமும் ஒலி அலைகளைத் தோற்றுவித்துச் செயற்பட, புதிது புதிதாய்த் தோன்றி யமைகின்ற தத்துவங்கள் நிலம் முதல் நாதம் ஈறாக நின்று செயற்பட எப்பொழுதும் ஆடும் இவ்வுண்மை வேதாந்தத்திலும், சித்தாந்தத் திலுமே காணப்படும்.

குறிப்புரை :

`பிறவற்றில் காணப்படாது` என்றதாம். அஃதாவது, `புறச் சமயிகள் இதனை உணரார்` என்றதாம். ஈற்றில் உள்ள ``சிவம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. முதற்கண் உள்ள `சிவம் என்பது செய்வோன்` என்னும் பொருட்டாய் நின்றது. அதன்கண், `சிவமாய்` என ஆக்கம் வருவிக்க. ``சிவம் ஆட`` என்பதில் ஆடுதல், சங்கற் பித்தல், ``நாதாந்தம்`` என அந்தம் கூறவே, நிலமாகிய ஆதியும் பெறப் பட்டது. ``வேதாந்த சித்தாந்தம்`` என்பது உம்மைத் தொகை. `உள்ளது` என்பதில் இறுதிநிலை தொகுக்கப்பட்டு, ``உள்`` என நின்றது.
இதனால், திருக்கூத்தின் அற்புத நிலை வேதாந்த சித்தாந்தங்களிலே விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.

பொழிப்புரை :

உயிர் தத்துவங்கள் அனைத்தையும் `தான் அல்ல` என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணர்தலும், பின்பு, `தான், அறிவித்தால் அறியும் தூல சித்தாவதல்லது, தானே அறியும் சூக்கும சித்தன்று` எனத் தனது உண்மையை உணர்ந்து, அதனானே, `தானே அறிந்தும், உயிர்கட்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்துத் தலைவனாம் சிவன்` என அறிதலும், இவ்வறிவு வேதாகமங்களாகிய அபர ஞானங்களாய் இல்லாது, அவற்றைக் கடந்த அனுபவமாம் பரஞானமாகப் பெறுதலும் ஆகிய இவையெல்லாம் தனக்கு ஒரு மூலம் இல்லாது தானே மூலமாய் நிற்கும் சதாசிவ மூர்த்திக்கு மேலே நாதமாய் நின்று `நாதப்பிரமம்` எனப்படுகின்ற ஆதி சிவனது நடனத்தின் பயனேயாகும்.

குறிப்புரை :

``அந்தம்`` என்பன கடந்த நிலையைக் குறித்தன. தாது - மூலம். ஐந்தொழில்களில் இறுதியான அருளலைச் செய்வோன் சதா சிவன் ஆதலை நினைக. ``மெய்ச் சிவம்`` என்பதில் சிவம், சிவத்தைத் தரும் சிவாகமம். சத்தப் பிரம வாதிகள் சடமாகிய நாதத்தையே `நாதப் பிரமம்` என்பர். அது பொருந்தாது; நாதத்தை அதிட்டித்து நிற்கும் சிவனே நாதப்பிரமம் என்பார் `நாதப் பிரம சிவன்` என்றார். இந்தச் சிவன் அநாதி சிவனாகிய பரம் சிவத்தினின்றும் தோன்றிய ஆதி சிவன் ஆதலையறிக. நடத்தின் பயனை, ``நடம்`` என உபசரித்தார்.
இதனால், சுத்தாவத்தை பராவத்தைகள் யாவும் திருக்கூத்தின் விளைவாதல் கூறப்பட்டது. இவ் அவத்தைகள் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 32

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.

பொழிப்புரை :

சரியை முதலிய இறப்பில் தவங்களை நிரம்பச் செய்த உயிரைப் பாசங்கள் அப்பொழுதே விட்டு நீங்குதலால், அவ்வுயிர் சிவன் முதலிய ஐவரால் உண்டாகும் அலமரல் நீங்கும்படி, தவத்தின் வடிவாய் விளங்கும் சிவன் எங்கும் தானாய்த் திருக்கூத் தியற்றுவன். அக்கூத்துத் தவத்தால் விளைந்த ஞானத்தின் பயனாக அதற்கு உரியோர் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து `பசுவினின்றும்` என உருபு விரிக்க தனித்து. தனித்தலால், எங்கும் தான் ஆக-தனது வியாபக நிலை தோன்றும்படி. அஃதாவது, `எங்கும் சிவமாய்த் தோன்றும்படி` என்பதாம். `அது ஞானக் கூத்து` எனச் சுட்டு வருவித்து தவமாம் சிவானந்தத்தோர்க்கு` என உருபு விரித்து முடிக்க.
சிவமாதி ஐவர், சிவ தத்துவம் முதலிய சுத்த தத்துவம் ஐந்திலும் நிற்கும் முதல்வர்கள். இவர்கள் பந்தத்தில் உள்ள உயிர்களை அவற்றி னின்றும் நீங்குதற்கு ஆவன செய்வாராயினும், அச்செயல் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல் அப்பொழுது துன்பமாய் தோன்றுதல்போல அலமரலை விளைக்குமாகலின், அந்நோய் நீக்கத்தை, அவரால் விளையும் திண்டாட்டம் நீங்குதலாகக் கூறினார். `திண்டாட்டம்` என்னும் நாட்டுப்புற வழக்கு, 2736 ஆம் மந்திரத்திலும் வந்தது.
இதனால், திருக்கூத்து வகைகளுள் ஞானக்கூத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.

பொழிப்புரை :

`தேவர் என்பார் அனைவரும் தனது முன்னிலையில் ஒருங்கு கூடி வணங்க இருப்பவனும் அவர் அனைவருமே அழிந்து இல்லையாகிய காலத்திலும் தான் அழியாது ஒருவனாய்த் தனித்திருப் பவனும், உள்ள காலத்திலும் உயிர் வருக்கத்துட் பட்டார் யாவரும் `எம்மில் வேறாம் தன்மையுடையவனே`, (தலைவனே) என அந்தப் பெயரைச் சொல்லித் தேட நிற்பவனும் தனது முக்கண்கள் சுழலுதலால், உலகத்தார் முன் விளங்குகின்ற, `ஞாயிறு, திங்கள், தீ` என்னும் முச்சுடர்களும் சுழலும் படி ஆடகின்றவனும் ஆகிய அவன் என்னை ஆட்கொண்டவாறு வியப்பிற்குரியது.

குறிப்புரை :

கூடுதல், தன் பயனைத் தோற்றுகின்றது. ``தேவர்கள்`` என்பதை, ``கூட`` என்பதனோடும் கூட்டுக. `வீடவும்` என்னும் சிற்பபும்மை தொகுத்தலாயிற்று. விகிர்தன் - வேறுபட்டவன். மூன்றொளிகள் ஆடுதல் கூறினமையால் அவன் ஆடுதல் பெறப்பட்டது. `வியப்பிற்குரியது` என்பது சொல்லெச்சம்.
இதனால் ஆடல் வல்லானது அற்புத நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

பொழிப்புரை :

வேதாந்தத்திலே விளங்குகின்ற நம் சிவன், நாத தத்துவத்தையும் கடந்த முதல்வன். அவனை இந்தப் பூமியிலே இங் குள்ளவர்கள் தெளிவாகக் கண்டு ஆனந்தத்தை அடைகின்றார்கள். அது பற்றி அவன் அவர்களிடத்து வைத்த கருணையும், நடுவு நிலைமையும் முரணாகிவிடவில்லை; நேரொன்றியே நிற்கின்றன. அவ்வாறு உள்ளது அவன் இப்பூமியில் இயைந்து நிற்கின்ற நிலை.

குறிப்புரை :

`நாத தத்துவம்` என்பது கடைக்குறைந்து `நாதத்துவம்` என நின்றது. இனி `நாதத்தின்மை` எனக்கொண்டு `சுத்த மாயை` எனினும் ஆம். சிறப்பும்மையும்; `கடந்த` என்பதன் ஈற்று அகரமும் தொகுத்தலாயின. ``மறை`` என்றது அதன் முடிவை. `மறை நம்பி நாதத்துவமும் கடந்த ஆதி` என்க. இதனை அனுவதித்து ஓதினார், அவன் மிகக் கீழ்த் தத்துவத்தின்கண் விளங்கிநிற்கும் எளிமை யுணர்த்தற்கு. பூ - பூமி. `பூத் தத்துவம்` என ஒற்று மிகாமை வடநூல் முடிவு. பொலிந்து, `பொலிய` என்பதன் திரிபு. இன்பம் எய்துதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. `நேசத்துவம்` என்பது, எதுகை நோக்கித் திரிந்தது. நேசம் இறைவனுடையது இன்பம் எய்துவார் பலராகலின், அவர்மேல் வைத்த நேசமும் பலவாகச் சொல்லப்பட்டது. நீதி, ``மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பம்`` எனச் சொல்லி வைத்த நீதி. அது பேதப்பட்டாமை, அவனது காட்சியாலே மோகம் அற்றமையினாலாம். ஆகவே, அவரது நிலைமை அவ்வாறாகும்படி அவன் இவ்வுலகில் இயைந்து நிற்கின்றான்` என்பதாம். இனி, `நேதியும்` என்பதே பாடமாகக் கொண்டு ஏற்குமாறு உரைப்பர்.
``பின்னி நின்றான்`` எனப் பொதுப்படக் கூறினாரேனும் இங்குச் சிறப்பாகக் கூத்தனாய் நிற்றலைக் கூறுதலே கருத்தென்க. இன்பம் எய்துதல் அதனானே சிறக்க நிகழ்தலின்.
இதனால், திருக்கூத்தினால் சிவநெறி உண்மை அற்புதமாக விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின்
ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

``பேரின்பத்தை அடைய வேண்டும், அடைய வேண்டும் என்று, அஃது இருக்குமிடத்தை அறியாத பலர் அதனைத் தேடி அலைகின்றனர், ஆயினும் பேரின்பம் இவ்வுலகில் சிவன் செய்யும் திருக்கூத்திலே இருத்தலை யாரும் அறிதல் இல்லை. அறிவார்களாயின், அக்கூத்து, உலக இன்பம் அனைத்தும் கெடும்படி பேரின்பமாய் நிகழும்.

குறிப்புரை :

``ஆனந்தம்`` பலவற்றில் ஈற்றடியின் முதலில் நின்ற ஒன்று தவிர ஏனைய யாவும் சிறப்புப் பற்றிப் பேரின்பத்தையே குறித்தன. அடுக்கு, இடைவிடாமை பற்றி வந்தது. `வேண்டும்` என்பது சொல்லெச்சம். ஆனந்தத்தைத் தருதல் பற்றி நடனத்தையே ``ஆனந்தம்`` என உபசரித்துக் கூறினார். `அறுதல் விடயானந்தம் - ஐம்புல இன்பம்` என்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய அற்புதத்தை அறிய மாட்டாதாரது நிலை இரக்கத்திற்குரியதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.

பொழிப்புரை :

சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால். அதில் உதறிய கையை, மாயையை, `சீ` என்று உதறும் கையாகவும், வீசி அணைத்த கையை, அடியவனை, `வா` என்று அழைத்து அருள் வழங்கும் கையாகவும், சார்ந்தவிடத்து, `அஞ்சற்க` என அமைந்த கையை, `இனிதிருக்க` எனத்தேற்றம் தரும் கையாகவும், தீ ஏந்திய கையை, வினைகள் கெடத் திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகவும், ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகவும் காணுதல் வேண்டும்.

குறிப்புரை :

திருவைந்தெழுத்தில் உள்ள எழுத்துக்களின் சிலேடை தோன்ற உண்மை யுணர்த்தியவாறு. உதறுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இங்குக் கூறியவற்றில் அமைந்துள்ள எழுத்துக்களை வருகின்ற மந்திரத்துள் ``உதறிய கை, அணைத்த கை, `இய` என்ற கை`` - என உடம்பொடு புணர்த்து ஓதப்பட்ட பொருள்கள் இனிது விளங்க வெளிப்படையாக உரைக்கப்பட்டன. ``தீ, நிலை`` என்பன ஆகுபெயர்களால் அவற்றையுடைய கையையும், அடியையும் குறித்தன. ``ம்`` என்றது, மலத்தை அதன் முதலெழுத்துக் குறிப்பாற் கூறினார். `மவ்வை மிதித்தல்` என ஒரு சொல் வருவிக்க. வேண்டும் இடங்களில் எல்லாம் `ஆக` என்பது வருவித்து, அவற்றை ``ஆகும்`` என்பதனோடு முடிக்க. ``திருந்து அத் தீ ஆகும்`` என்பதை, `அத் தீ திருந்து ஆகும்` என மாற்றி உரைக்க. திருந்து - திருந்துதல்; அஃதாவது, தற்போதத்தால் வினைகளைச் செய்யாது திருவருள் வழி நிற்றல். முதனிலைத் தொழிற்பெயர் ``இய`` என்றது, `இயல்` என ஏவியதனைக் குறித்தது. ``ஆகும்`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறைகளுள் ஒரு வகை முறை கூறப்பட்டது.
``மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி,அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனன்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்``.* என்னும் உண்மை விளக்க வெண்பாவை இங்கு ஒப்பு நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 37

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.

பொழிப்புரை :

கூத்தப் பிரான் திருவுருவத்தில் உடுக்கை வீச்சு, அமைப்பு, நெருப்பு இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே `சி, வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக.

குறிப்புரை :

``சேர்க்கும் துடிசிகரம்; சிக்கெனவா வீசுகரம்;
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம்; அடிக்கீழ் முயலகனார்
தங்கு மகரமது தான்``* என்னும் உண்மை விளக்க வெண்பாவினைக் காண்க. திருவைந் தெழுத்து இவ்வாறு சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் ஆகும் என்பதனை நினைவூட்டுதற் பொருட்டு, ``உரு இல் சிவாயநம`` என்றார். உரு இன்மை அருவம்; சூக்குமம். இனி நகாரம் முதலாக அமையும் தூல பஞ்சாக்கர வடிவத்தை அந்நூல்,
``ஆடும் படிகேள்; நல் அம்பலத்தான்; ஐயனே,
நாடும் திருவடியி லேநகரம் - கூடும்
மகரம் உதரம்; வளர்தோள் சிகரம்;
பகருமுகம் வா;முடிய; பார்``9
என்பதனால் விளக்கிற்று. அதனை நாயனார் இங்குக் குறித்திலர். அஃது உலகப் பயனையே விளைத்தலின். கரு, ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. உடம்பு, முயலகனது. அன்றி, அம்மந்திரம் கிடைத்திலது என்றலும் ஆம். `கருவின்கண்` என `மேல்` என்னும் பொருட்டாகிய ஏழாவது விரிக்க.
இதனால், முன் மந்திரத்தில் சிலேடை வகையான் குறித்த சூக் கும பஞ்சாக்கர முறை வெளிப்படையாக இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.

பொழிப்புரை :

கூத்தப் பிரானது திருவுருவில் தோன்றும் குறிப்பைக் கூறுமிடத்து, உடுக்கையால் ஒலியை உண்டாக்கல் படைத்தல் தொழிலை யும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், மேல் எடாமல் உறுதியாக முயலகன்மேல் ஒருகாலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் இவ்வாறாக ஐந்தொழிலையும் உணர்த்தும் என்க.

குறிப்புரை :

மேல், ``திருந்த நற் `சீ` என்றுதறிய கையும்`` என்றதில் உணர்த்தப்பட்ட குறிப்பு முத்தர்கட்கான ஞான நடனக் குறிப்பு` எனவும், இது, பெத்தர்கட்கான `ஊன நடனக் குறிப்பு` எனவும் உணர்க. இதனையும்,
``தோற்றம் துடியதனில்; தோயும் திதி அமைப்பில்;
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்; - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்; முத்தி
நான்ற மலர்ப்பதத்தே; நாடு``3 என உண்மை விளக்க நூல் கூறுதல் காண்க. `ஊன்று` என்னும் முதனிலை வலித்தல் பெற்று, ஈற்றில் `அம்` ஏற்று, `ஊற்றம்` என வந்தது. ஊற்றமா - உறுதியாக. இஃது இம்மந்திரத்தில் ஆக்கம் இன்றி வந்தது. அணைத்தல் - (முயலகன் முதுகில்) சேர்த்தல். ``அரன்`` என்றது. இங்குக் கூத்தப் பெருமானையே. அப்பெயர் சொற்பொருட் பின்வருநிலையாய்ப் பின்னரும் வந்தது. ``ஊற்ற அணைப்பு`` என ஊன்றிய திருவடியைக் கூறினமையால், பின் வந்த ``அடி`` தூக்கிய திருவடியாயிற்று.
இது பெத்தர்க்கான குறிப்பாயினும், ஐந்தொழில் செய்தல் முதல்வனுக்கு இலக்கணமாதல் சிறப்பு நோக்கியும், இறுதியில் அருளல் அமைந்திருத்தலாலும் இதனையும் இங்கு நாயனார் கூறினார் என்க. ``அறையின்`` என்பதை முதலிற் கொள்க.
இதனால், கூத்தப் பெருமானது வேறொரு வகைக் கூத்தின் குறிப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன்
மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

பொழிப்புரை :

அக்கரங்கள் ஐம்பதைக் குறிக்கும் சுடர்கள் மேல் எல்லாம் விளங்குகின்ற, முதல் ஒளியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கும் கூத்தப் பெருமானது கூத்தினை எப்பொழுதும் காண்கின்ற அழகிய கண்களை யுடைய சிவகாமியம்மை அந்தக் கண்களினாலே மூவர் மூர்த்திகளும் பெருமானது மூன்று கண்களினின்றும் தோன்றும் வண்ணம் பார்த்தாள். (உடனே அவர்கள் தோன்றினார். பின்பு அவர்களுக்கு வழிகாட்டுதற் பொருட்டுப்) பல வேதங்களையும் பாடி உணர்த்தினாள்.

குறிப்புரை :

`அதனால் உலகம் நடைபெற்று வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``9
என்னும் உண்மை விளக்கப் பகுதியை இங்கு ஒப்பிடுக. `படைப்புக் காலத்தில் சிவன் தன்னிடத்தினின்றும் சத்தியை, `இலலிதா` என்னும் பெயருடன் தோற்றுவிக்க, அவள் தனது மூன்று கண்களினின்றும் மும்மூர்த்திகளைத் தோற்றுவித்து, அவர்களை முத்தொழில் புரியுமாறு அருளினாள்` என்பது படைப்பு முறைகள் பலவற்றில் ஒருமுறையாகச் சொல்லப்படுகின்றது.8 அம்முறை இங்கு ஒருவாறு குறிக்கப்பட்டது. கூத்தப் பெருமான் உலகத்தை நடத்தும் முறையைக் கூறியவாறு. `உள்ளொளியாகிய கூத்தன்` என்க. ``இடை`` என்பதைப் பெயராக வைத்து, முதல்வனிடையினின்றும் செல்லப் பார்த்தனன்` என்க. செல்லுதல் - தோன்றிச் செயல்புரிதல்.
இதனால், `மும்மூர்த்திகளும் கூத்தப் பெருமான் தனது சத்தியால் தோற்றுவித்து நிறுத்தி, ஒடுக்கப்படுபவர்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

பொழிப்புரை :

மேல், ``சுந்தரக் கூத்து`` எனக் கூறப்பட்ட கூத்தினைச் செய்யும் சிவன் இங்குள்ளவர்களுக்கு `ஓம்` என்னும் அந்த ஒரு மந்திரத்திலும், அதற்கு மேலாய திருவைந்தெழுத்து மந்திரத்திலும் நிறைந்து நின்று அருள்புரிகின்றான் என்றாலும், உண்மையில் அவன் அவற்றைக் கடந்து, எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டே யிருக்கின்றான். ஆகையால், `அவன் இன்ன தன்மையன்தான்` என்று யார் வரை செய்து கூற இயலும்!.

குறிப்புரை :

`நந்தி` என்பது சிவன் பெயர்கள் பலவற்றில் ஒன்று. அது முதலாக வந்த மூன்றும் சுந்தரக் கூத்தனையே குறித்தமை வெளிப் படை. மந்திரம் ஒன்று, பொது நோக்கில் பிரணவமும், சிறப்பு நோக்கில் திருவைந்தெழுத்துமாம். கூத்தப் பெருமான் அவற்றின் வடிவாய் நிற்றல் இங்கு விளக்கப்பட்டது. `மருவியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``ஓர் ஊரன் அல்லன் ... ... ... இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்டொ ணாத னாகிய``9 அவன், இங்கு மந்திரவடிவாய் நின்று ஆடல் புரியும் அருட் பெருமையை அறிந்து, அன்பு செய்து உய்தல் மக்கட்குக் கடன் என்பது கருத்து.
இதனால் திருக்கூத்தின் அருமை அறிந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

பொழிப்புரை :

ஆசிரியராய் உள்ளார் அனைவர்க்கும் அவ் ஆசிரியத் தலைமையை அருளிய இயற்கை ஆசிரியத் தலைவன் சிவபெருமானே. அவனே திருவம்பலத்தில் கூத்துக் கோலமும் கொண்டு ஆடுகின்றான். அதனால் அவனது திருமேனியின் தன்மை ஆய்ந்துணரத்தக்கது. அதனை அவ்வாறு ஆய்ந்துணர்ந்தவர் யாரும் இல்லை அதன் தன்மையாவது, நெருப்புப் பார்வைக்குச் சிவப்பு நிறத்தையும், உண்மையில் வெளுப்பு நிறத்தையும் உடையதுபோல இருதன்மைப்பட்டது. அதனை உணர்ந்தால் அவனைச் சார்ந்து அவனுள்ளே இரண்டறக் கலந்துவிடலாம்.

குறிப்புரை :

சீயம் - சிங்கம். இது தலைமை பற்றி வந்த உவமை. நந்தி ஆய் உறு மேனி என்க. ஆதல் - பொருந்துதல். மீட்டும் வந்த ``ஆய் உறு மேனி`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்று, ஆகுபெயரால் அதன் தன்மையைக் குறித்தது. ``ஆரும் அறிகிலர்`` என்றதனால், ஆய்ந்துணரற்பாலதாதல் பெறப்பட்டது. `தீ வெளுப்போடு செம்மை உறும் அத்தன்மை` என இயைக்க. தீயைப் பார்ப்போர் அனைவரும்` அது சிவப்பானது` என்றும் கருதுகின்றனர். `ஆயினும் தீ உண்மையில் வெளுப்பானதே` என நியாய நூலார் நிலை நாட்டுவர். இன்றைய அறிவியலாரும் `ஏழு நிறங்களின் சேர்க்கையே வெண்மை` என்பர். கூத்தப் பெருமானது சத்தி, `திரோதான சத்தி, அருட் சத்தி` என இரண்டாதல் பற்றி `சத்தி வடிவான அவனது மேனி இரு தன்மையுடையது` எனஅறார். திரோதான சத்தியால் பெத்தத்தையும், அருட்சத்தியால் முத்தியையும் உயிர்கட்கு அவன் அருளுகின்றான்; அவ்வருட்செயல் திருக்கூத்தினால் நிகழ்கின்றது என்க. ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து` என எச்சப்பொருள் தந்தன.
இதனால் திருக்கூத்து இரு சத்திகளால் இருவேறாகச் செய்யப் பட்டு, இருவகைப் பயனை விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.

பொழிப்புரை :

சத்தி சிவனின் வேறன்று ஆதலால், சிவன் உயிர்களைக் கடந்து `நிற்றல் போலவே சத்தியும் உயிர்களைக் கடந்து நிற்கும் (`இந்நிலையில் சிவன், `பரமசிவன்` என்றும், சத்தி, `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர். எனினும் அந்தச் சத்தி) பரமசிவனுக்கும், அவனுக்குக் கீழே உள்ள உயிர்கட்கும் முறையே ஐந்தொழில் செய்தலிலும், போக மோட்சங்களை அடைதலிலும் இச்சையையும், அவற்றிற்கு ஆவனவற்றை அறியும் அறிவையும், அறிந்தவாறே ஆற்றும் செயலையும் தந்து, உலகத்தை நடத்தும். நடத்துமிடத்து அஃது `ஆதி சத்தி` எனப் பெயர் பெறும். (`திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.) இவ்வாறு உயிர்களை நடத்துதலே திருக்கூத்து இயற்றுதல் ஆதலின் அக்கூத்தின் பயனாக உயிர்கள் திருவருளைப் பெறும் தன்மையை எய்துமாயின், அந்த ஆதி சத்தியே அருட்சத்தியாய் அவைகட்கு இறைவனுடைய திருவடியில் அன்பைப் பெருக்கும்.

குறிப்புரை :

எனவே, `இதுவே திருக்கூத்தின் முடிந்த பயன்` என்ற தாயிற்று. ``தான்`` இரண்டும் சிவன். இரண்டாவதில், `தானே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தானேயாதலாவது பிறி தொன்றையும் பற்றாது தனித்து நிற்றல். தற் பரை - தனக்கு மேலாய் நிற்பவள். ``தன்`` என்றது உயிரை. இச்சை ஞானங்களைக் கூறவே, இனம் பற்றிச் செயலும் கொள்ளப்பட்டது. `ஞான இச்ை\\\\u2970?` என்னும் உம்மைத் தொகை செய்யுள் நோக்கி பின்முன்னாய் நின்றது. `ஆதியாய்ப் பேதங்களை நடத்தும், அங்ஙனம் நடத்துதலாகிய நாடகத்தை நடித்து நேயத்தது ஆம்` என முடிக்க. தனது உண்மை யியல்பில் மாற்றம் எய்தாமையைக் குறிக்க இவற்றை, `நாடகம்` என்றார். நேயத்தது - நேயத்தைப் பெருக்குவது. உயிர்களது உள்ளத்தின் செயலை அவற்றின்மேல் வைத்து, ``அருள் ஆனால்`` என்றார்.
இதனால், திருக்கூத்தின் செயல் வகைகளையும், பயன் வகைகளையும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.

பொழிப்புரை :

உயிர்களின் அறிவிலே சிவன் `ஓம்` என்னும் பிரணவ வடிவாயும், அதனால் உண்டாக்கப்படுகின்ற உணர்வு வடிவாயும், அவ்வுணர்வில் தோன்றுகின்ற அற வடிவாயும் விளங்குகின்றான். அவனை அங்கு அம்முறையானே சென்று தலைப்படும் இடம் அருள் வெளியேயாம்.

குறிப்புரை :

ஒருவன் - ஒப்பற்றவன். ``அங்கி`` என்றது ஒளியை. அஃது உணர்வேயாம். உணர்வுகள் நாதத்தானே உளவாதல் மேலெல்லாம் சொல்லப்பட்டது. ``நீதி`` என்றது அறத்தை. `அது தானும் அற உணர்வை` என்க. `நாதம், பொருள் உணர்வு, அவற்றுள் அற உணர்வு, திருவருட் பேறு இவை காரண காரியமாய் முறையானே நிகழும்` என்பதும், `அவற்றுள் திருவருட் பேறே முடி நிலை` என்பதும் கூறியவாறு. ஆகவே, `திருக்கூத்தினைக் கண்டு, இம்முறையானே திருவருளைப் பெறுக` என்பது குறிப்பெச்சமாயிற்று. ``உறல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய், உறும் இடத்தைக் குறித்தது. `உடல்` என்பது பாடம் அன்று.
இதனால், ஆகாசப் பேறே முடிநிலைப் பேறாதலும், அதற்குமுன் உள்ள படிநிலைப் பேறுகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

சிவன் (உடலில் உயிர்போல எப்பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பினால்) பெரிய பூமியாயும், அப்பூமிபோன்ற பல உலகங்களையும் அடக்கி நிற்கும் அண்டங்களாயும் இருப்பினும் அவை அனைத்தையும் கடந்த திண்ணிலமாகிய அருள் வெளியிலே விளங்குபவனாய்த்தான் இருக்கின்றான். அதனாற்றான் அவன் எல்லாவற்றையும் தாங்கும் பெரிய பூமிபோல. எல்லாவற்றையும் தாங்கும் ஆற்றலையும் ஒருவராலும் சென்று அணுகுதற்கரிய இடத்தையும் உடைய முதற்கடவுளாய் இருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், அவனை அவ்வருள்வெளியில் சென்று தலைப்படவே முயலவேண்டும்` என்பது குறிப்பெச்சம், ``கொள்கை`` என்றது உண்மையை. தாள் - ஆற்றல். ``அரு நிலமாய் நின்ற ஆதிப்பிரான்`` என்றது உடம்பொடு புணர்த்தல் ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. குருநிலம், அருநிலம் இரண்டும் ஆகுபெயராய், அதன்கண் உள்ளவனைக் குறித்தன. குரு - திண்மை; பேராற்றல்.
இதனால், அருள் வெளியது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

பொழிப்புரை :

அகண்ட ஒளியாகிய சிவ சொரூபத்தையும் தான் கண்ணாற் காணும் போல ஞாயிறு, திங்கள், பிறகோள்கள், விண்மீன் ஆகிய ஒளிகளைப் போலவே உடன் வைத்து எளிதில் கண்டு விட்டதாக, உடம்பாற் பெற்ற சிற்றறிவு கொண்டு பிதற்றுலாகிய சிறுமையை, அதனை விழுங்கி நிற்கின்ற அருள் வெளிக்குள்ளே ஒளியாகிய சிவ ஒளிக்குள் மறைந்து நிற்கச் செய்வதே, சீவன் தான் பெற்றுள்ள `சீவன்` என்னும் அப்பெயரைப் போக்கும் செயலாகும்.

குறிப்புரை :

அஃதாவது, `சிவமாகின்ற செயலாம் என்றபடி. `அண்ட ஒளியையும்` என உருபு விரிக்க. உம்மை, இழிவு சிறப்பு. பிதற்றுதல், அறிந்தோர் நகைக்கும்படி, அறிந்ததாக எங்கும் சென்று கூறுதல். பிதற்றுதலாகிய சிறுமையை ``பெருமை`` என்றது எள்ளற் குறிப்பு. அனைத்தையும் விழுங்கியுள்ள (அடக்கியுள்ள) வெளி அருள்வெளி. ``ஒளித்தது, குலைத்தது`` என்பன தொழிற் பெயர்கள். `ஒளிக்குள் ஒளித்தலைச் செய்யாமல் வேறுநின்று கூறுவன எல்லாம் வெறும் பிதற்றல்களே என்பதாம்.
இதனால் ஆகாசப் பேறல்லன எல்லாம் பேறாகாகமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு)
உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.

பொழிப்புரை :

உயிர்கட்குப் புறத்தே பெறப்படும் பயனாகிய மகளிரது இன்பத்தைப்போல, அகத்தே பெறப்படும் பயனாய் விளையும் இன்பமாய் நிற்பது, எல்லாவற்றிற்கும் முதலாயும், மேலாயும் உள்ள பேரொளிப் பொருள். அஃது அயன், மால் முதலியோர்க்கும் அறிய வாரா நிலைமையதாயும், மேலாய நெறியின் பயனாயும் பரவொளியின்கணுள்ள ஒரு பொருளாகும்.

குறிப்புரை :

ஈரிடத்தும், `பயனாய்` என ஆக்கம் விரிக்க. பின்னர் ``உள்ளே`` என்றமையால், முன்னர், `புறத்தே` என்பது பெறப்பட்டது. இன், உவம உருபு. ``உறும்`` என்பது முற்று. ஈற்றில் உள்ள ``அது`` என்பதை, ``சோதி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. நெறியின் பயனை, ``நெறி`` என்றார்.
இதனால், ஆகாசப் பேறே பேரின்பப் பேறாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.

பொழிப்புரை :

உயிர்களின் அறிவுக்கறிவாய் நிற்கின்ற, `சிவம்` என்னும் ஒளியுடைப் பொருளையும், அதனை விட்டு நீங்காது தாதான்மியமாய் நிற்கும் ஆற்றலாய் எங்கும் பரவி நிற்கும் `இச்சை, ஞானம், கிரியை` என்னும் முச்சுடர்களையும் ஒருவன் தன்னின் வேறாக வைத்துச் சுட்டி உணராமல் அவற்றினுள்ளே அடங்கி ஒன்றாகி, அந்நிலையினின்றும் நீங்காதிருப்பானாயின், அவன் காலத்திற்குக் காலமாய் விளங்குவான்.

குறிப்புரை :

``காலத்தைக் கடந்து நிற்பான்`` என்பதாம். காலத்தைக் கடந்து நிற்றல் கூறவே, இடத்தைக் கடந்து நிற்றலும் தானே பெறப்பட்டது. ``ஒளி`` இரண்டனுள் முன்னது, ஒளியை உடையதனைக் குறித்தது. வலம் - வல்லமை; ஆற்றல், வலத்தினில் - `வல்லமை` என்னும் நிலைமையில் உள்ள. `பெயரொளி` என்பது ``பேரொளி`` என மருவி வந்தது. பெயர்தல் - பரவுதல். `வலத்திற் பெயரொளி மூன்றும்` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். `அத்தன் அடிக்குள் அடங்கிடில்` என முன்னே கூட்டுக. இதனால், `பரவெளி காலத்தைக் கடந்தது` என்பதும், அஃது அதுவேயாய் அடையத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.

பொழிப்புரை :

ஐந்து தத்துவங்களாய் நிற்கும் சுத்த மாயை யினையே ஐந்து தலைகளையுடைய பாம்பாக ஆடைபோல் அணிந்து, அந்தத் தத்துவங்களிலே நிற்கின்ற சிவன் அவையாகிய சுத்த மாயை யிடத்தவனாய், `அமரர்` என்னும் பெயருக்கு, முகமனாக அன்றி, உண்மையாகவே உரிய சிவலோகத்தார்க்குத் தலைவனாவான். இன்னும் அவன் அத்தத்துவங்கட்கு அப்பாற்பட்ட பர வெளியில் நிற்றலையே விரும்பி நிற்பினும் இங்குள்ளார் பொருட்டு இப்பூதா காசமாகியும், அதன்கண் விளங்குகின்ற ஒளியாகியும் இருக்கின்றான்.

குறிப்புரை :

ஏகாசம் - மேலாடை; உத்தரீயம். மேலாடையே, ஆடி அசைதல் பற்றி, `ஆடை` எனவும், இடையில் இறுக உடுத்தப்படுவது, `உடை, உடுக்கை` எனவும் சொல்லப்படும். இரண்டாம் அடியை முதலில் கூட்டி உரைக்க. முதற்கண் உள்ள ``ஆகாசம்`` சுத்த மாயை. வண்ணம் - வடிவம். அதிட்டானம் `வடிவம்` எனப்படுதலை, ``சுத்த தத்துவம் சிவன்றன் சுதந்திர வடிவமாகும்``3 என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. அமரர் - மரியாதவர்; இறவாதவர். இது தேவர்கட்கு முகமனாகிய பெயரே என்பதை,
``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சம் படு முகமனே யானபோல்``l
என்னும் கந்த புராணச் செய்யளாலும் அறிக. குலம் - கூட்டம். கொழுந்து தலைவன். இதன்பின் ``அப்புறம்`` என்பதை இயைக்க. ``ஆகாசம்`` மூன்றும் முறையே சுத்தமாயை, பரவெளி, பூதாகாசம் இவற்றைக் குறித்தன. இவையெல்லாம் ஒருங்குதோன்ற அப்பர், ``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9 என்று அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரஹ்ம``8 என்பது உபநிடதம். அமர்தல் - விரும்புதல். ``அங்கி`` என்றது ஒளியை. காசம் - ஒளி, அது, `ப்ர` என்னும் இடைச்சொல்லை முதலிற் பெற்று, `ப்ரகாசம்` எனவழங்கும். ஒளிக்கு இடமாதல் பற்றியே, `ஆகாசம்` எனப் பெயர் பெற்றது.
இதனால், ஆகாசங்களது சிறப்புணர்த்தும் முகத்தால் பராகாசத்தினது சிறப்புணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.

பொழிப்புரை :

`சேதனம், அசேதனம்` என்னும் இருவகை உலகங்களும் இயங்குமாறு உளங்கொள்கின்ற உள்ளொளியாகிய சிவன் தன்னைச் செலுத்தியபோது, குயில்போலும் குரலையுடைய அருட்சத்தி அவனோடே குலாவி உலாவுதலால், எனது உள்ளம் அவனது ஒளியைப் பெற்று, இருள் நீங்கிப் பிரகாசிக்கின்றது.

குறிப்புரை :

உயிர்த்தல், உயிர்த்தன்மை பெற்று உணர்தல். எனவே, அதனைச்செய்வது சேதனமாயிற்று. ஆகவே, பின்னர் ``உலகம்`` என்றது அசேதனத்தையாயிற்று. பின் வந்த உயிர்த்தல், திருவுளங் கொள்ளுதல். `உயிர்க்கின்றவாற்றையும், உலகத்தையும் ஒக்க உயிர்க் கின்ற உள்ளொளி` என்க. சேர்தல். தன் காரியம் தோற்றி நின்றது. உலாவி - உலாவுதலால். `பரவெளியாவது அருட்சத்தியேயாதலின் உயிர் உடம்பொடு கூடியிருக்கும் பொழுதும் அஃது அந்தப் பரவெளியைச் சேர்தலாற்றான் ஒளியுடையதாய்த் திகழ்கின்றது` என்பது உணர்த்தியவாறு.
இதனால், சீவன் முத்தியும் பர வெளியிருப்பேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து)
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே.

பொழிப்புரை :

சிவன் தன்னைச் சாராமல் உலகத்தைச் சாரின் அவர்களை விட்டு மிகச் சேயனாய் நீங்கி நிற்பன். உலகத்தைச் சாராது தன்னைச் சாரின், அவர்களை விட்டு எப்பொழுதும் நீங்கான். முதற்கண் மின்னல் ஒளி போலத் தோன்றிப் பின்னர்ப் பேரொளியாகி விளங்கு கின்ற பரவெளியாம் அவனை வணங்கினால் அவன் கூறியவாறு நீங்காது நின்று அமுதத்தைப் பொழிவான். அதனை உண்டு தேக்கி மகிழலாம்.

குறிப்புரை :

``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்``* என்னும் முறைமையால், `சிவன் பொதுவாகவே யாவர்க்கும் தலைவனாயினும் அவன் சிறப்பாகத் தலைவனாய் நிற்றல் தன்னைச் சார்ந்தவர்க்கே` என்பதை முன்னிரண்டடிகளில் உணர்த்தி `அவனைச் சார்ந்து பயன் பெறுக` எனப் பின் இரண்டடிகளில் அறிவுறுத்துகின்றவ், `அவனைச் சார்தல் பர வெளியிலாம்` என விளக்கினார். `ஒளியும், சோதியும் ஆம் வெளி` என்க. வெளியில் உள்ளவனை ``வெளி`` என்றார். ``நந்தி`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. அகல்கிலனாகிய நாதன்` என்க. `நாதன், பதி` என்பன பொருட் பின்வரு நிலையணி.
இதனால், `உண்மைச் சிவப்பேறு பர வெளிப்பேறே` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.

பொழிப்புரை :

(பதிப்புக்களில் வருகின்ற அதிகாரத்தில் மூன்றாவதாய்க் காணப்படும் இம்மந்திரம் இங்கிருத்தற்குரியது.)
எழுவகைப் பிறப்புக்களில் மேற்பிறப்பை எய்தினவராகிய தேவர்கள் அமுதுண்ண வேண்டித் தான் அதற்கு முன்னே தோன்றிய விடத்தை உண்டதனானே, `எல்லாரினும் மேலானவன் சிவன்` என்பது இனிது விளங்கும். இன்னும்,
``அப்புறுத்த கடல்நஞ்சம் உண்டான் தன்னை,
அமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை``*
என்று அருளிச்செய்தபடி, அமுதத்தை உண்டவர் சாவவும், தான் நஞ்சுண்டும் என்றும் ``சாவா மூவாச் சிங்கமாய்`` இருத்தலாலும் அவனது மேன்மை தெளிவாகும். அறிவும், ஆற்றலும் உடையாரினும் அருளுடையாரே மேலானவர் ஆதலாலும், அவ்வருட் பெருக்கம் தன்னையடைந்தார் அமுதுண்ண வேண்டித் தான் நஞ்சத்தை உண்டமையானே தெற்றென விளங்குதலாலும் ``மிக்கார் அமுதுண்ணத் தான் நஞ்சுண்டவன் மேலவன்``* ஆகின்றான். அவனைத் தக்கார் உரைத்த தவநெறியில் சென்று அடைந்தால் அங்ஙனம் அடைந் தவர்களைத் தானாம் வண்ணம் அருளுவான். ஆகையால் அவரது பொன்போலும் மொழியால் விளக்கப்படும் ஞானத்தை `இதுவோ ஞானம்` என இகழ்கின்றவர்களை விட்டு விலகும் உபாயத்தை நீங்கள் ஆராய்ந்து அறிவீர்களாக.

குறிப்புரை :

``பணியின் அமுதம் பருகலும் ஆமே`` என மேற் கூறியதனை அனுபவமாக நிறுவியவாறு. `இம் மேலவனை (பராகாசத் தவனை) இகழ்வாரை நீங்குமாற்றையறிதலே ஞானோதயத்தின் முதல் நிலையாகும் என இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.

பொழிப்புரை :

(`ஆகாசமாவது யாது` என்பார்க்கு, `ஆகாசமாவது ஏனை யெல்லாப் பொருள்கட்கும் இடம் தருவது` என்பது விடையாயின், பிற பொருளுக்கு இடம் தருவன யாவும் ஆகாசமாம். அந்நிலையில் பூதங்களில் ஒன்றை மட்டும் `ஆகாசம்` என்றல் இடுகுறியாம். அவ்வாறன்றிக்) காரண வகையால் நோக்கின் `புவனங்கள்` என்றும், `உலகங்கள்` என்றும் சொல்லப்படுவன புற ஆகாசங்களாம். எல்லாப் பொருள்களும் அறிவினுள் அகப்பட்டுத் தோன்றுதலால் நம் அறிவுகள் அக ஆகாசங்களாம். நமது அறிவுகளையும் அகப்படுத்தி நிற்பது சிவனது அறிவு ஆதலின் அஃது உள்ளுக்குள் ஆகாசமாம். அதனை அகப்படுத்தி நிற்பது வேறொன்றில்லை ஆகலின் அதுவே பரமாகாசமாம். அந்த ஆகாசத்தை இந்த உலகிலே பெறுதல் அழகிய `சமாதி` என்னும் நிலையாகும்.

குறிப்புரை :

`அதனைப் பெறவே முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம். புவனங்களாவன அவ்வவ் அண்டங்களைப் புரக்கும் கடவுளரது இடங்களாம். அவர்களது காப்பிற்கு உட்பட்ட அண்டங்களில் உலகங்கள் உள்ளன. ஆதி அறிவு - முதல் அறிவு. அது கருவிகளால் உண்டாகும் பாச அறிவாம். ``அறிவு`` என்பதை, ``சிவத்து`` என்பதற்கும் கூட்டுக. `அதற்கு மேலானது ஒன்று இல்லை` என்பதே ``செஞ்சுடர்ச் சோதி`` என்பதனால் குறிக்கப்பட்டது. இதற்கு `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ஈற்றில் நின்ற ஆகாசம், அதனைப் பெறும் பேற்றினைக் குறித்தது. தான், அசை. அழகு, இங்கு நிரம்பிய இயல்பைக் குறித்தது. சமாதி, `யோக சமாதியும் ஞான சமாதியும்` என இருவகைத்து. ஞான சமாதியே ஞான நிட்டையாகும்.
இதனால், ஆகாசப் பேறுகள் பலவற்றுள் முடிநிலையான ஆகாசப் பேறே பேறாதல் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.

பொழிப்புரை :

மனம் புறக் கருவிகளோடு கூடிப் புறப்பொருளைப் பற்றும் நனவு நிலை (அவ்விடத்து இன்பமும் சிறிது உளதாயினும்) பொதுவாகத் துன்ப நிலையேயாதலும், அந்த மனம் புறத்திற் செல்லாது அகத்தே அடங்கிய கனவு, உறக்கம் முதலிய நிலைகள் இன்ப நிலையாலும் அனுபவமாக அறியப்படுவன. அந்த முறையை ஆராய்ந்து பார்த்தால், `இன்பமாவது, கருவி கரணங்களின் மேற் செல்லுதலை ஒழிதலே` என்பது விளங்கும். அவ்வொழிவினை எய்தியவன் அடையும் இன்பங்கள் இரண்டு. (உலகின்பம், வீட்டின்பம் என்பன.)

குறிப்புரை :

``கனவுற ஆனந்தம்`` எனப் பின்னர்க் கூறினமையால் முன்னர் `நனவு துன்பமாகும்` என்பது பெறப்பட்டது. வினவுதல் - ஆராய்தல். மீது - கருவி கரணங்களின் மீது. `மீது செல்லுதல்` என ஒருசொல் வருவிக்க. ஒழிவு - ஒழிதலையுடைய நிலை. பெத்த நிலையில் உளதாகும் இம்முறைமையை உவமையாகக் கொண்டு உணரும் உவம உணர்வால் `முத்தி நிலையின் இயல்பையும் உணரலாகும்` என்பார். ``இனம் உற்ற ஆனந்தி ஆனந்தம் இரண்டு`` என்றார். இனம், `ஆனந்தம்` என்னும் சாதி, ஆனந்தி ஆனந்தத்தை எய்தும் உயிர். `அஃது எய்தும் ஆனந்தம் இரண்டு என்க. முன்னர்க் கூறியவாற்றால் `அவ்விரண்டு இவை` என்பது விளங்கலின், வாளா, ``இரண்டு`` என்று போயினார். வீட்டிற்கு நேர் வாயிலாகிய `ஞானம் தோன்றுதல் கருவி கரணங்களினின்று நீங்குதல்` என்றபடி. உலகில் விழிப்புத் துன்பமாகவும், கனவும், உறக்கமும் இன்பமாகவும் உணரப்படுதல் வெளிப்படை. இது பற்றி ஏகான்ம வாதிகள் சகல சுழுத்தியையே, `பிரமானந்த நிலை` என்பர்.
இதனால், ஞானோதயத்தின் முதற்படி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால்
கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.

பொழிப்புரை :

சிவபெருமானை, மந்திரம் 337-இல் கூறியவாறு, `பிரமன் தலையைக் கிள்ளிக் கையில் ஏந்தியவன்` எனவும் மந்திரம் 340-இல் கூறியவாறு `யானையை உரித்தவன்` எனவும், `தக்கனுடைய சாபத்திற்கு அஞ்சி வந்து அடைக்கலம் புகுந்த சந்திரனைத் தலையில் அணிந்து காத்தவன்` எனவும் மற்றும் இவ்வாறு வரும் வரலாறுகள் பலவற்றால் உயர்ந்தோர் புகழ்ந்து கூறிய சொற்களால் அவனையே, `அரியவன்` என்றும், பெரியவன் என்றும் துணிந்து யான் அவனுக்கு ஆட்பட்டதல்லது, அவனை யான் நேரில் `கறுப்பன்` என்றோ, `சிவப்பன்` என்றே பார்த்து உணர்ந்ததில்லை.

குறிப்புரை :

இது, நாயனாரது தொடக்க நிலையைக் கூறியது. ஏனெனில், சிவனை நிருவிகற்பமாக உணர்ந்ததையே கூறிற்று ஆதலின்,
``அன்றும திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்!
இன்றும் திருஉருவம் காண்கிலேன்-என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்,
எவ்வுருவோ நின்னுருவம் ஏது``3 என்ற அம்மை திருவாக்கு, `சிவன் உருவிலன்` என்பதை உணர்ந்திற்றாதலின் அஃது இதனின் வேறு என்க.
இதனால், `அனுபூதிமான்கள் அருளிச்செய்த திருமொழியை ஐயுறாது பற்றுதலே ஞானத் தோற்றத்தின் முதல் நிலை` என்பது கூறப்பட்டது. ஞான சம்பந்தரும்,
``ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி,
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே``l

பண் :

பாடல் எண் : 3

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

பொழிப்புரை :

ஆணவ இருளால் அறிவை இழந்த நின்ற உயிருக்கு அந்த ஆணவ இருளைச் சிறிதே நீக்கும் விளக்குப் போல்வன மாயா காரியங்களாகிய தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகள். அறிவை விளக்கி நிற்கும் கருவிகளாகிய அவைகளையே `அறிவாகிய தான்` என உயிர் மயங்குகின்றது. அம்மயக்கம் நீங்கி, அவ்வுடம்புகளைத் தனக்கு வேறாக நீக்கி, அறிவு விளக்காம் தன்னைத் தான் உணர்ந்து, பின் தன் அறிவிற்குள்ளே அறிவாய் விளங்கும் திருவருளை விளங்கச் செய்து, பின் அந்தத் திருவருளாகிய விளக்கினுள் தானாகிய விளக்கினை, வெயிலின்முன் உள்ள பகல் விளக்குப்போல அடங்கி விளங்கச் செய்யவல்லவர்க்கு அந்தத் திருவருளாகிய ஒளியை உடையவனாகிய சிவனது இன்பக்கடலைப் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``விளக்கு``ப் பலவற்றுள் முதலாவது, மாயா காரியமாகிய உடம்புகள். இரண்டாவதும், மூன்றாவதும், ஆறாவதும் உயிரினது அறிவு. ஏனையவை திருவருள். கழல் - திருவடி, அஃதே சத்தி; அஃது அறிவாயும் இன்பமாயும் இருக்கும். அறிவாய் இருத்தல் முன்பு ``விளக்க`` எனக் கூறப்பட்டமையால், இங்கு, ``கழல்`` என்றது இன்பத்தையாம்.
இதனால், ஆசிரியரது அருள்மொழி வழியே தத்துவ சுத்தி, ஆன்ம தரிசனம், சிவ தரிசனம், சிவ யோகம் என்பன முறையாக நிகழ்தலே ஞானோதயத்தின் வளர்ச்சியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்ந் தொழியாது, அவற்றின் மெய்ம்மையை உணர்ந்தவரிடத்தில்தான் மெய்ப்பொருளாய் உள்ள சிவனும் விளங்கியிருப்பான். மெய்ம்மையை உணராதவரிடத்தில் அவன் விளங்குதல் இல்லை. ஆகவே, மெய்யுணர்வி சிறப்பினை உணர்ந்து அதனை ஒருவன் பெற்றுவிட்டால், உடனே சிவன் அவனிடம் வந்து விளங்குவான்.

குறிப்புரை :

``தத்துவம்`` என்றது மெய்ம்மையை; பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்தலாவது. வானவில் தோன்றினஆல், `இது மிக அழகிதுய பல நிறங்களைக் கொண்டு விளங்குகின்றது இஃது எங்கிருந்து வந்தது? அதிசயம்! அதிசயம்! என்று இவ்வளவில் உணர்தல் போல்வது. மெய்ம்மையை உணர்தலாவது, வானவில்லைக் கண்டபொழுது, இஃது ஓர் உண்மையான வில் அன்று. பெருவட்டமாகிய சூரியனது வடிவில் ஒரு பாதியின் பிரதிபலனம். நமக்குப் பின்னால் ஓரிடத்தில் மழை பெய்கின்றது. அதற்கு அப்பால் சூரியன் பிரகாசிக்கின்றான். அவனிடத்தில் உள்ள பல நிறக் கதிர்களும் மழைத்துளிகளின் இடையே ஊடுருவி, நமக்கு முன்னால் பிரதிபலித்தலால் இந்தப் பலநிற அரைவட்டம் நமக்கு வில்போலத் தோன்றுகின்றது. இஃது உண்மையில் வில் அன்று. பின்னால் பெய்கினஅற மழை நின்றால் இந்தப் பிரதிபலனமும் மறைந்து விடும் என இவ்வாறு அதன் உண்மையை உணர்தல் போல்வது. இந்த உண்மை உணர்வே மெய்யுணர்வே - தத்துவ ஞானம். பொது உணர்வும், ஐய உணர்வும், திரிபுணர்வும் `ஞானம்` எனப்படா. `அஞ்ஞானம்` என்றே சொல்லப்படும். ஆகவே, அந்த அஞ்ஞானம் உள்ள இடத்தில் சிவன் விளங்கமாட்டான். `கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்``* என்னும் ஞானசம்பந்தர் திருமொழியில், ``கல்லா நெஞ்சு`` என்பது, `ஞானத்தைக் கல்லாத நெஞ்சு` என்றும், `கற்றாலும் கல்லுப்போல நின்று உருகாத (கல் ஆம் நெஞ்சு) நெஞ்சு` என்றும் இருபொருளையும் தருவது. ``கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை``* என்னும் திருவாசகத் தொடரில் ``கல்லா மனம்`` என்பதும் அத்தகையது. மூன்றாம் அடியில் வந்த `அறிதல்,` அதன் காரியத்தை உணர்த்தி நின்றது. தத்துவத்தை உணரும் முறையே முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.
இதனால், ஞானமாவது `தத்துவ ஞானமே` என்பதும், அதன் இன்றியமையாச் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பினின் நூறும் ஆரமு தாகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

பொழிப்புரை :

பசிய பொன்போல விளங்கும் தனது விரிந்த சடையின்கண் குசும்ப மலரின் வாசனை கமழ நிற்கின்ற சிவன் ஆகாயத்தைப்போல எல்லாப் பொருளையும் தன்னுள் அடங்கக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானத்திலிருந்து கசிந்து ஊறுகின்ற அரிய அமுதமாவான்.

குறிப்புரை :

என்றது, `உதயமான ஞானம் பின் முறுகி வளரச் சிவானந்தம் பெருகும்` என்றவாறு. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``ஒன்ற`` என்பது உவம உருபு. `சிவஞானம் ஆகாசம் போன்றது` என்பது முன் அதிகாரத்தில் விளக்கப்பட்டது. அசும்பின் - அசும்பாக. அசும்பு - கசிவு. குசும்ப மலர். `செந்துருக்க மலர்` என்பர்.
இதனால், தத்துவ ஞானத்தின் சிறப்பும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

பொழிப்புரை :

முத்து, வைரம், பவளம், கட்டியான பசும்பொன், மாணிக்கம் ஆகியவற்றில் உள்ள ஒளிகளைப் போல அண்டங்களால் வேறறக் கலந்து நிற்கின்ற ஞான ஒளியை நீவிர் அவற்றினின்றும் வேறுபடுத்திப் பெறுவீர்? சொல்லுமின்.

குறிப்புரை :

`அதனை அவ்வாறு அவ்அண்டங்களில் வைத் துணர்தலே அதனைப் பெறுதலாகும்` என்றபடி. அவ்வாறு உணர்தலைச் ``சுத்த பராயோகம்`` எனத் துகளறு போதம் கூறும்.8 இவ்வுணர்வின் நிலையையே, ``மரத்தை மறைத்தது மாமத யானை`` என்னும் மந்திரத்தில், ``மரத்தில் மறைந்தது மாமத யானை`` என்றும், ``பரத்தில் மறைந்தன பார்முதல் பூதம்`` என்றும் கூறினார். கட்டியை, ``தொத்து`` என்றார். `மாணிக்கத்தின் தூவொளி ஒத்து` என மாறிக் கூட்டுக.
இதனால், ஞானக் காட்சியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

பொழிப்புரை :

(`நான்` என்று உணர்கின்ற என்னையன்றி, எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இல்லை என்று இறுமாந்திருந்த எனக்கு, `தான் என்று ஒருவன் இருக்கின்றான்`` என்று ஞான குரு உணர்த்த, அவர் உணர்த்திய முறையில்,) `நான்` என்கின்ற எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இருத்தலை முறையான ஆய்வினால் ஆராய்ந்து உணர்ந்தேன். அங்ஙனம் அவனது இருப்பை, மட்டும் உணர்ந்த யான், எனது இயல் பிற்கு வேறாக அவன்தான் கொண்டிருக்கின்ற இயல்பு யாது` என ஆராயும் பொழுது அவன் என்னின் வேறாய் இல்லாது, என்னில் யானாகவே கலந்து நிற்றலையும், முதற்கண், `நான் அன்றித் `தான்` என்று ஒருவன் இல்லை` என யான் உணர்ந்திருந்த அந்த உணர்வையும், பின்னர், `என்னின் வேறாய், `தான்` என்று ஒருவன் இருக்கின்றான்` என்று உணர்ந்த உணர்வையும், இது பொழுது `என் இயல்பு யாது, அவன் இயல்பு யாது` என ஆராயும் ஆராய்ச்சி உணர்வையும், அந்த ஆராய்ச் சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற் கின்றான்` என உணர்ந்த உணர்வையும், அந்த ஆராய்ச்சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற்கின்றான்` என உணர்ந்த உணர்வையும் `தந்தவன் அவனே` என்னும் உணர்வையும் அவனே அருளினான். அதனஆல், நான், `நான்` என என்னை உணர்தலை அறவே ஒழித்து, அவனை மட்டுமே உணர்ந்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகளையே `நான்` என உணர்தல் பாச ஞானம். அஃது இங்குக் குறிக்கப்படவில்லை. பின்னர், `அவ்வுடம்புகள் அனைத்தும் சடம் ஆதலின் அவை சித்தாகிய நானல்ல` எனத் தன்னை உணரும்பொழுது, பாசத்தினும் மேம்பட்ட தனது மேம்பாடு விளங்குகின்ற நிலையில், `நானே பரம்பொருள்; எனக்கு மேலாய் ஒரு பரம்பொருள் இல்லை` என உணர்தல் பசு ஞானம். `அதுவும் அஞ்ஞானமே` எனவும், `உன்னின் வேறாய், உனக்கு மேலாய், இதற்குமுன் உனக்கு உண்டான பாச ஞானத்தையும், இப்பொழுது உண்டாகிய பசு ஞானத்தையும் உள் உணர்வினுள் உணர்வாய் இருந்து நல்கியவன் அவனே` என ஞானகுரு உணர்த்த, அதனால், பாசங் களையோ, எனது உணர்வையோ கண்ணாகக் கொள்ளாமல், அவனது உணர்வையே எனது உணர்விற்குக் கண்ணாகக் கொண்டு நோக்கிய பொழுது `நான்` என என்னை உணர்கின்ற உணர்வு தலைக்காட்டாமல், `அவன்` என்னும் உணர்வே மேலோங்கி நிற்பது பதிஞானம். அந்தப் பதிஞானத்தையே இங்கு உணர்த்தும் முக்ததால் பசுஞானம் விலகும் முறையும் உணர்த்தப்பட்டது. நாடுதல் - ஆராய்தல்.
``ஞான முதல்வன்`` என்பதில் ஞானம்,உயிரினது உணர்வு. அவ்வுணர்விற்கு முதல்வனாதலாவது, உயிரின் உணர்வு கேவலப் பட்டு மூடமாய்க் கிடந்ததனை முதற்கண் கருவி கரணங்களோடு கூடி பாச ஞானமாய் நிகழச் செய்து, பின்பு ஆராய்ச்சியால் அதனைப் பசு ஞானமாய் நிகழப் பண்ணி, முடிவில் பதி ஞானமாய் நிகழச் செய்தல். இவற்றுள் முன்னை இரண்டும் பெத்த நிலையும். பின்னது முத்தி நிலையுமாகும். பெத்த நிலையைத் திரோதான சத்தியாலும், முத்தி நிலையை அருட்சத்தியாலும், சிவன் செய்கின்றான். `நானும் நானென்று நினைத்தலை ஒழிந்தேன் என மாற்றியுரைக்க.
பாச ஞானம் உள்ளபொழுது அதற்குப் பசுவும், பதியும் புலன் ஆதல் இல்லை. பசுஞானம் உள்ளபொழுது பாசமும் பசுவும் புலன் ஆதல் இல்லை. பதிஞானம் வந்தபின் பாசமும், பசுவும் புலன் ஆதல் இல்லை. ஒவ்வொரு நிலையில் சிற்சில பொருள்கள் புலனாகாமை பற்றி, `அவைகள் அறவே இல்லை என வாதிடுதல் அறியாமையின் பாலதாம். ஆகவே, பாரமார்க்கத்தில் (உண்மை நிலையில்) பசு பாசங்கள் புலனாகாமை பற்றி, `பதி ஒன்றே உளது; ஏனைய இரண்டும் இல்லை. அவை பொய்` என்றல் உண்மையாமாறில்லை.
``வேதசாத் திரம்,மிருதி, புராணகலை ஞானம்,
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானஎலாம் பாச ஞானம்;
நணுகி ஆன்மா இவை கீழ் நாட லாலே
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசுஞானம்``
-சுபக்கம், சூ-9,2.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளால் இவ்வியல்புகளையெல்லாம் தெற்றென உணர்க.
இதனால், ஞானங்களின் வகைகளை உணர்த்தும் முகத்தால், `உண்மை ஞானம் இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

பொழிப்புரை :

ஞானமாகிய உயர்நெறியில் முதற் கண்ணதாகிய ஞானத்திற் கிரியையாவது, நிலம் முதல் நாதம் ஈறாய்ச்சுட்டி அறியப் படுகின்ற அனைத்தையும் `சடம்` எனவும், அவற்றில் அவையேயாய்க் கலந்து ஒன்றி நிற்கின்ற உயிரை, `சித்து` (அறிவு) எனவும் இவ்வாறு இரண்டன் தன்மைகளும் வேறு வேறாதலை ஆராய்ச்சியால் உணர்ந்து, அங்ஙனம் உணர்கின்ற உயிர் அவை யனைத்தையும் தள்ளித் தன்னை அவற்றின் வேறாக உணர்தலாம்.அப்பால் ஞானத்தில் யோகமாவது, தான் சடத்தின் வேறாதலை யுணர்ந்தபின் மீட்டும் அவற் றின்கண் வீழ்ந்து தன்னை அவையாக மயங்காமல், உயர்நிலையில் நிற்றலாம். (உயிர் எப்பொழுதும் தனித்து நில்லாது ஆகையால் தனக்குத் தாரகமாகிய திருவருளில் நிற்றலே சடத்தில் வீழாது நன்னிலைக்கண் நிற்றலாகும் என்பது கருத்து. `நன்மை` என்றது திரு வருளையேயாம்.) இனி ஞானத்தில் ஞானமாகிய முடிநிலையாவது, நாதத்தின் துணையில்லாமலே பொருள்களை நன்குணரும் நிலையாம்.

குறிப்புரை :

இங்குச் சரியை கிரியையுள் அடக்கப்பட்டது. `சரியையே யன்றி யோகமும் சில இடங்களில் கிரியையில் அடக்கப் -படும்` என்பது, `கிரியையென மருவும் அவையாவும் ஞானம் கிடைத் -தற்கு நிமித்தம்``8 என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம்.
``கேட்டலுடன், சிந்தித்தல், தெளிதல், நிட்டை
கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்``3
யோகம், ஞானத்தில் ஞானம்` எனப்படும். இங்கு ``மோனம்`` என்பதும் ஞானத்தோடு ஒருபொருட் சொல்லாய் வந்தது. கேட்கவும், சிந்திக்கவும், தெளியவும் படுவது குருமொழி. ``அந்தம்`` இரண்டில், முன்னது `முடிவு` என்றும், பின்னது நீங்கிய நிலை` என்றும் பொருள் தந்தன. `நான் அறிவு என்று ஓர்தல்` என மாற்றியுரைக்க. ``பின்னர் அறிவு என்று ஓர்தல்` என்றதனால், முன்னர், `நாதாந்தம் சடம் என்னும் நன்னெறி` என்பது பெறப்பட்டது. ஓர்தல் - ஆராய்தல்; சிந்தித்தல். சரியையைக் கிரியையுள் அடக்கினாராகலின், அதற்கேற்பக் கேட்டலைச் சிந்திதலுள் அடக்கி, ஓர்தலையே கூறினார்.
கேட்டல் முதலிய நான்குமே `தசகாரியம்` எனப் பத்தாக விரித்துணர்த்தப்படும். `எத்தகையோர்க்கும் நாதம் இல்லையேல் பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகாது` என்பதை `நாதம் இல்லாமலே பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகுமாயின் அதுவே முத்தி நிலையாம்` என்பதையும்,
``மூவகை அணுக்க ளுக்கும்
முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில்
விளங்கிய ஞானம் இன்றாம்;
ஓவிட விந்து ஞானம்
உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன்
சேவடி சேர லாமே`` -சுபக்கம் - சூ, 1.26.
என்னும் சிவஞான சித்தியால் அறிக. நன்னெறிக்கு வாயிலாதல் பற்றி கிரியையே இங்கு ``நன்னெறி`` எனப்பட்டது. `அறிதற் கருவி` என்னும் பொருளதாகிய `வேதம்` என்பது, இங்கு `அறிவு` என்றே பொருள் தந்தது.
இதனால், ஞானத்தின் படிநிலைகள் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.

பொழிப்புரை :

பிறவித் துன்பத்தினின்றும் தப்ப வல்லவர்கட்கு அவர்தம் உயிர்போலச் சிறந்த நிற்பன சிவஞானமும், அதனால் அறியப்படுகின்ற சிவமாகிய கடவுளுமாம். அவர்கள் புறத்தே பரந்து சென்று அலையாமல் அகத்தே ஒடுங்கி அமைதியுறுதற்குத் துணை யாவது பிரணவ மந்திரம். அம்மந்திரத்தின் வழியாக அவர் அகத்தே ஒடுங்கி, அறிவினுள் அறிவாய் நிற்கும் சிவத்தை அடைவார்கள்.

குறிப்புரை :

பிரணவ யோகத்தாலே அறிவு, அறிவினுள் அறிவை அறிந்து அடங்குதல், மேல் `பிரணவ சமாதி` முதலிய அதிகாரங்கலில் விளக்கப்பட்டது. அங்ஙனம் அடங்கினவர்களே சிவஞானமாகிய கண்ணைப் பெற்றுச் சிவனை நேரே கண்டு அடைவார்கள். `சிவன் பிறப்பிலியாதலின், அவனையடைந்தோரும் பிறவியிலராவர்` என்பது கருத்து. ``முக்குணங்கள்வாய் மூடா ஊடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``9 என்பதனாலும் இதனை அறியலாம். ``ஒடுக்கம்`` என்பது அதற்காம் கருவியை உணர்த்திற்று.
இதனால், சிவஞானமே ஞானமும், சிவமே பரமும் ஆதலை வலியுறுத்தி, `உய்தி வேண்டுவார் அந்த ஞானத்தால், அந்தப் பொருளை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.

பொழிப்புரை :

(பிறபொருள்களை அறிதல்போல அறிவால் அறியாது, அறிவிறந்தே அவனை அறிதல் வேண்டும்.) அவ்வாறு அறிவார்க்கு அவன் அவர்தம் அறிவினுள் அறிவாய் விளங்கி, தேவர்கள் கடலைக் கடைந்து வருந்திப்பெற்ற அமுதம்போல வருந்தாது பெறப்பட்ட அமுதமாய்ப் பேரின்பத்தை விளைப்பான். அங்ஙனமாயின், (பெற்றதைச் சிறிதாயும், பெறாததைப் பெரிதாயும் கருதும் பழைய பழக்கத்தின்படி அவனைப் பேணாதொழிவார்க்கு அவன் முன்போல அயலவனாய் விடுவான். ஆதலால், அவ்வாறின்றிப்) பின்னும், பின்னும் பேணி ஒழுகுவாரை விட்டு அவன் நீங்குதல் இல்லை. ஆனந்த வடிவினன் ஆதல் பற்றி, `நந்தி` எனப்பெயர் சொல்லப்படுகின்ற அவன் அன்புடையார்க்கே அவ்வாறு உடனாய் நிற்பன்.

குறிப்புரை :

காணுதல், இங்கு அறிதல். ஆகவே, ``கண்ணின் மணி`` என்றதும், அறிவினுள் அறிவாயிற்று.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``3
என்றபடி, பெற்றதைப் பேணாதிழத்தல் பேதையார் செயலாதலின் ``பேண வல்லார்க்குப் பிழைப்பிலன்`` என்றார். பிழைத்தல் - தவறுதல். ஆணம் - ஆன்பு. ``ஆணம் இல் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக் - காண மிலாதார் கடுவணையர்``l என்றது காண்க.
`ஆணம் பெய்ய` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், தலைப்படுதலேயன்றிப் பேணுதலும், அன்பு செய்தலும் ஞானத்தினஅ பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

பொழிப்புரை :

``ஓம்`` என்று எழும் இசையோசையின் உள்ளீடாய் நிற்கும் எழுத்தோசையாகிய நாதம் போல, சுத்த மாயா உலகத்தில் வாழும் ஞான ஒளியினர் உயிர்க்குயிரான பரம்பொருளாக என்றும் விரும்பப்படுபவன் எங்கள் சிவபெருமான். அவனது அருள் சத்தி நிபாதர் அல்லார்க்கு ஞானம் இல்லாமையால் சேயனவாயினும் சத்திநிபாதராய் ஞானத்தைப் பெற்றவர்க்கு அவர்தம் அகத்தே விளங்குவனவாம்.

குறிப்புரை :

``மேல் நின்ற தேவர்`` என விதந்தோதினமையால் அதற்கு இதுவே பொருளாகும். `விழுப்பொருளாகிய எம்பெருமான் அடி` என இயைக்க. ஆய்நின்ற - ஆய்வின்கண் நின்ற ஆய்வு, இங்கு ஞானம். முன்னிரண்டடிகள் இன எதுகையும் பின்னிரண்டடிகள் ஆசெதுகையும் பெற்றன.
இதனால், `ஞானியரே சிவனை இம்மையிலும் பெற்று விளங்குவர்` என்பது உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வைத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.

பொழிப்புரை :

(காரியங்கள் ஒடுங்குதற்கு இடமாதல் பற்றிக் காரணங்கள் `பாழ்` எனப்படும். அதனால்,) ``எப்பாழும் பாழாம் யாவுமாய்`` என்றது, எக்காரணங்களும் ஒடுங்குதற்குக் காரணமாய் உள்ள பரம காரணங்கள் எல்லாமாகி` என்றதாம். உலகிற்குக் காரணம் தத்துவங்கள். அவை தோன்றி ஒடுங்குதற்கு இடமான பரம காரணங்கள் சுத்த மாயையும், அசுத்த மாயையும். ஓராற்றால் பிரகிருதி மாயையும் பரம காரணமாகக் கொள்ளப்படும். கலப்பினால் மெய்ப்பொருள் அம்மும்மாயையாகியும் நிற்கும். ஆயினும் மாயைகளின் தன்மே வேறு; மெய்ப்பொருளின் தன்மை வேறு ஆதலின் பொருள் தன்மையால் மெய்ப்பொருள் அம்மாயைகளின் வேறாகியும் நிற்கும்.

குறிப்புரை :

இனி இரண்டாம் அடியிற் கூறப்பட்ட பாழ்கள் பரம காரணத்தைக் குறியாது, அவற்றினின்றும் தோன்றிப் பிறவற்றிற்கும் காரணமாகின்ற இடைநிலைக் காரணங்களாம் தத்துவங்களைக் குறித்தன. மேல் உள்ள மூன்று தத்துவங்களாவன, `இலய தத்துவம், போக தத்துவம், அதிகார தத்துவம்` என்பன. அவை முறையே இரண்டும், ஒன்றும், இரண்டும் ஆக ஐந்தாம் முதல் இரண்டும் சிவம், சத்தி. இடை ஒன்று சாதாக்கியம். இறுதி இரண்டு ஈசுரம், சுத்தவித்தை. கீழ் உள்ள மூன்று தத்துவங்களாவன, `காரண தத்துவம், கஞ்சுக தத்துவம், குணதத்துவம்` என்பன. காரண தத்துவம், மாயா தத்துவம், கஞ்சுக தத்துவம், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், இவ்வைந்தில் அடங்கும் குண தத்துவம் சித்தம் முதலிய இருபத்து நான்கு. முன்னுதல் - நினைத்தல்; சங்கற்பித்தல். அஃதாவது மும்மாயைகளினின்றும் இம் மூவகைத் தத்துவங்களும், பின் அவற்றின் காரியங்களும் `இவ்விவ்வாறு தோன்றுக` எனவும் `இத்துணைக் காலம் நிலைபெற்றுச் செயலாற்றுக` எனவும், `இனி இப்பொழுது ஒடுங்குக` எனவும் சங்கற் பித்தல். இதனானே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழில்களும், அவற்றிற்குக் காரணமாம் மறைத்தல் தொழிலும் அவற்றின் காரியமாய் அருளல் தொழிலும் நடைபெறும். ``இப்பாழும்`` என்றதனோடு இயைய இன்னவாறும்` எனவந்த எண்ணும்மை தொகுத் தலாயிற்று. `இங்குக் கூறிய காரணங்களில் ஒன்று` என்றோ, அவையல்ல வாயின் `வேறு இன்ன தன்மையது` என்றோ ஒன்றதனோடு சார்த்திச் சொல்ல ஒண்ணாத இயல்பினது, பொதுவாக, `அது` எனச் சுட்டிச் சொல்லப்படும் மெய்ப் பொருள். ஆயினும் அதனைப் பற்றி உணர் வார்க்கு அது பேரின்பப் பொருளாய், உயிரினது அறிவுக்கு மேலான அறிவாய், ஆனந்தமாய் உள்ளது.
`சத்திய ஞானம்` என்றது, `சத்துச் சித்து` என்றபடி. எனவே, மெய்ப் பொருளின் உண்மை இயல்பு, `சத்துச் சித்து ஆனந்தம்` என்றதாயிற்று. சத்து என்றும் ஒருபடித்தாய்த் திரிபின்றியிருத்தல். சித்து - அறியாமை சிறிதும் இன்றி அறிவேயாய் இருத்தல். ஆகவே, அறிவிக்க. வேண்டாது தானேயறிதலும், ஒரு காலத்து ஓரிடத்து ஒன்றை மட்டும் அறிதல் என்பதின்றி, எக்காலத்தும், எவ்விடத்தும் எல்லாப் பொருளையும் அறியும் அறிவாதலும் தானே பெறப்பட்டது. ஆனந்தம் - துன்பக் கலப்பு இன்மையால் எஞ்ஞான்றும் வரம்பின்றி விளையும் இன்பமாதல். தற்பரம் - தனக்கு (உயிர்கட்கு) மேல், தன், சாதியொருமை. ``தான்`` என்பது தேற்றப்பொருளில் வந்தது.
``அது`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``ஆகும்`` என்றது, இயற்கையைச் செயற்கைபோலக் கூறும் இலக்கணையாய் உளதாதலைக் குறித்தது.
`காரணப்பொருள்கள் அனைத்திலும் தான் அவையேயாய்க் கலந்தும், பொருள் தன்மையால் வேறாகியும் நின்று தனது சங்கற்ப மாத்திரையானே ஐந்தொழிலை நடாத்துவதாயினும் மெய்ப்பொருள் பிறிதொரு பொருளோடு சார்த்தி, `இன்ன தன்மையது` எனச் சொல்ல ஒண்ணாத இயல்பினையுடையது. சத்தாய்ச் சித்தாய், ஆனந்தமாய் இருத்தலே அதன் உண்மையியல்பு` என்பது இம்மந்திரத்தின் திரண்டபொருள். பின்பு ``கீழுள முப்பாழ்`` என்றதனால் முற்கூறிய முப்பாழ் `மேல் உள` என்பது பெறப்பட்டது.
``ஒன்றும் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றும் குறியொன் றிலாமையினால் - ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை; ஒவ்வாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று``8 என்னும் திருக்களிற்றுப்படியாரைக் காண்க.
இதனால், மெய்ப்பொருளின் பொதுவியல்பு சிறப்பியல்புகள் தொகுத்துக் கூறப்பட்டன.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``தொம்பதம் தற்பதம்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்தில் `முத்துரிய` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

பொழிப்புரை :

சிவனது சத்தி `பரா சத்தி` என்றும், `ஆதி சத்தி` என்றும் இரண்டாய் இருக்கும். (பராசத்தியே அருட் சத்தியும், ஆதி சத்தியே திரோதான சத்தியும் ஆகும்.) அவையிரண்டும் வேறு வேறல்ல. அஃது எது போல்வது எனின், மணியின்கண் (இரத்தினங் களில்) அதனிடத்தே நின்று அதனையே விளக்கி நிற்பதும், வேறிடத் திலும் சென்று பிற பொருள்களைப் பற்றுவதும் ஆகிய ஒளி செய்கையால் இரண்டாதல் அல்லது பொருளால் இரண்டாகாமை போல்வது. மணியொளி மணியையே விளக்கி நிற்குமிடத்து `பிரகாசம்` என்றும், பிற பொருள்மேல் பாயுமிடத்து `காந்தி` என்றும் சொல்லப்படும். (காந்தியே சோபை) இனி ஆதிசத்தியும் `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாம். ஆதி சத்தி இவற்றின் வேறல்ல வாயினும் அதனையும், பரை ஆதியின் வேறல்ல வாயினும் அதனை -யும் வேறு வேறாக வைத்து எண்ணினால், `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` எனச் சத்திகள் ஐந்தாகும். அதுவும் எதுபோலும் எனின், குவளை மலரின் குணம் ஒன்றேயாயினும் அதனை, பொலிவு, சிறப்பு, நிறம், மணம்,அழகு` என இவ்வாறு வேறுவேறாக உணர்வது போலும். சத்தி குணமும், சிவன் குணியும் ஆகலின், குணமாகிய சத்தி வேறுபாடு ஐந்தனோடு குணியாகிய சிவம் ஒன்றையும் கூட்டி எண்ண மெய்ப்பொருள் ஆறு கூற்றதாம்.

குறிப்புரை :

மன் சத்தி - நிலையாய் உள்ள சத்தி; மூல சத்தி. அது பரா சத்தி. இது காலத்தைக் கடந்தது. அதனால் அநாதி. இதினின்றும் ஒரு காலத்தில் தோன்றுவது ஆதி. மணியினது `ஒளி, சோபை` என்பவற்றை ``மன் சத்தி, ஆதி`` என்பவற்றோடு நிரல் நிறையாக இயைக்க. ``சத்தி`` என்பதை ஆதிக்கும் கூட்டுக. ஒளியாகிய `அன்னதோடு, சோபையாகிய அன்னதோடு` எனத் தனித் தனி இயைக்க. ``ஒப்ப`` என முற்று. மிடல் - சத்தி ``ஒன்றா மாறாது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `மிடல் ஒன்றாமாறு, உற்பலம் ஒண்மை முதலியன ஆமாறுபோலும்` என முடிக்க. உற்பலம் - குவளை. அது முன்னர் பொருளாகு பெயராய் அதன் மலரையும், பின்னரும் அவ்வாகுபெயராய், அதன் குணத்தையும் குறித்த இருமடியாகுபெயர். ஒண் - ஒண்மை. சீர் - சிறப்பு. அது மலர்களுள் மேலானதாகப் புகழப் படுதற்றன்மை. ``சோபை`` என்பதன்பின், `ஆனவாறு` என்பது எஞ்சி நின்றது. ``ஆறும் ஆனது`` என்னும் உம்மை, `ஒன்றானதேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``ஆனது`` என்னும் பயனிலைக்கு, `மெய்ப்பொருள்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது.
இதனால், மெய்ப்பொருள் `தானும், தன் சத்தியும்` என இரு கூற்றாகப் பின் சத்தி காரணமாகப் பல கூற்றதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.

பொழிப்புரை :

சத்தி, சிவம் இவற்றது இயல்பைச் சொல்லுமிடத்து முறையே பர ஞானமும், அதனால் தரப்படுகின்ற முடிவில் பொருளும் ஆகும். இனிச் சிவம் பிறிதொன்றிலும் இல்லாத, தனி ஒரு பேரானந்தப் பொருளுமாம். அந்தச் சிவத்தின் மேனிலைச் சத்தியே பக்குவான் மாக்களை ஆட்கொள்ளுதற்கு இந்நிலவுலகில் வந்து உலாவச் செய்கின்ற குரு வடிவும் ஆகும். இங்குக் கூறிய பரஞானம், முடிவின்மை, ஆனந்தம், ஆன்மாக்களை ஏற்ற பெற்றியால் ஆட்கொள்ளும் பேரருள் என்பனவற்றுக்கு முன் மந்திரத்திற்கூறிய குவளை மலரே உவமையாம்.

குறிப்புரை :

``சாற்றுங்கால்`` என்பதனை, ``சிவம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உய்த்தல் - தரப்படுதல். ``அனந்தம்`` என்பதிலும் எண்ணும்மை விரித்து, எஞ்சிநின்ற `ஆம்` என்னும் பயனிலையை வருவிக்க. அனந்தம் - முடிவின்மை. முடிவு காலம். இடம் இரண்டு பற்றியது. காலம் பற்றிய முடிவின்மை` நித்தியத்துவத்தையும், இடம் பற்றிய முடிவின்மை பூரணத்துவத்தையும் விளக்கும். நித்தியத்துவமே மெய்ம்மையும், பூரணத்துவமே பெருநிறைவும் ஆகும். மெய்ப் பொருள் `மெய்யாயும், அறிவாயும், முடிவிலதாயும் உள்ளது` என்பதை தைத்திரீய உபநிடதம், ``சத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம``8 எனக் கூறிற்று. சத்தி தன்னிலையில் நிற்குங்கால் `சொரூப சத்தி` என்றும், பிறவற்றோடு தொடர்புற்று நிற்குங்கால் `தடத்த சத்தி` என்றும் சொல்லப்படும். `அவற்றுள் சொரூப சத்தியே அருளுருவாய் வந்து ஆட்கொள்ளும்` என்பது பின் இரண்டடிகளில் கூறப்பட்டது. முன் மந்திரத்திற்கூறிய உற்பல உவமையை, `பூவண்ணம், பூவின் நிறம் போல மெய்ப்போத இன்ப மாவண்ண மெய்கொண்டவன்``3 என்னும் பரஞ்சோதி திருவிளையாடலாலும் அறிக.
இதனால், `மேற்குறித்த சத்தி சிவங்களாவன இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.

பொழிப்புரை :

மேல் உவமையாகக் கூறிய குவளை மலரின் நிறம், பொலிவு, மணம், அழகு என்பன அம்மலரின் வேறாகாததுபோல உயிர் சிவனிடத்தில் வேற்றுமையின்றி ஒன்று பட்டு நின்றால், `சிவாய` எனவும், `சிவத்துவமசி` எனவும் சொல்லப்படும் மகாவாக்கியங் களின் பொருளாய் உள்ள சிவனது அனந்த சத்தி, அலுத்த சத்தி முதலிய எண்குணங்களும் உயிரினிடத்து விளங்கி நிற்க, உயிர் சிவனாகியே நிற்கும்.

குறிப்புரை :

உரு - அழகு. `உற்பலத்தில்` என ஏழாவது விரிக்க. `தரமாய்` என ஆக்கம் விரிக்க. மருவுதல், அறிந்து நிற்றல். முப்பதங் களில் இரண்டொன்றையே முதற்குறிப்பாகக் கூறி, மகா வாக்கியங் -களை நினைப்பித்தார். சொரூபம், இங்குப் பொருள். சிவனது எண் குணங்களில் இரு குணம் `சத்தி, என்னும் பெயராற் சொல்லப் படுதலின். அவை முதலிய குணங்களைச் ``சத்தியாதி`` என்றார். முன்னர் `உயிர்` என்றதனைப் பின்னர் ``நின்றான்`` என ஆடூவறி சொல்லாற் கூறியது வடமொழி மதம் பற்றி. சிவத்திற்கும், உயிருக்கும் இடையே உள்ள தொடர்பு குணிக்கும், குணத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு போன்றது அன்றாயினும் வேற்றுமையின்றி நிற்றல் மாத்திரைக்கு அத்தொடர்பினை உவமையாகக் கூறினார்.
இதனால், உயிர் ஞானத்தால் மெய்ப்பொருளாகிய சிவமாம் நிலையை எய்துதல் கூறப்பட்டது. அந்நிலையை எய்திய வழி உயிரும் மெய்ப்பொருளாதல் பற்றி இஃது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

பொழிப்புரை :

சிவனை அன்பால் நினைதற்குப் பக்குவம் வேண்டும். அது வாய்க்கப் பெற்று, அவனை அன்பினஆல் நினைந்தும், வணங்கியும், புகழ்ந்து பாடியும் நின்றால் ஒன்றிலும் அகப் படாத அவனை நம்முள்ளே அகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமானும் எனக்கும் பக்குவம் வாய்த்தமையை அறிந்தே தமது அருளை வழங்கிச் சிவனை நினைக்கச் செய்தார்.

குறிப்புரை :

என்றது, `நினைத்து வணங்கவும், புகழ்ந்து பாடவும் செய்தாரா` எனவும், `அதனால், நான் சிவனை இப்பொழுது என்னுள்ளே அகப்படுத்தியுள்ளேன்` எனவும் கூறியவாறு. நெகிழ்வது மனம். வணங்குவது உடம்பு. புனைதல், ``பூமாலை புனைந்து ஏத்துதலையும், புகழ்ந்து பாடுதலையும்``l ஒருங்கே குறித்து நின்றது. புகழ்ந்து பாடுதல், ஆசிரியன்மார் அருளிச் செய்த பாடல்களையும்,தாமே பாடும் பாடல் களையும், அவை அவன் அருள்வழியே அமையும். `நாயனார் இந் நூலால் அவனைப் புகழ்ந்து பாடினார்` என்க,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``3
எனவும்,
``இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கெழுந் தருளுவ தினியே``1
எனவும்,
``அழலார் வண்ணத் தம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``2
எனவும் இவ்வாறு அருளிச்செய்ப ஆதலின், அவனைப் பொதியலும் ஆகும்`` என்றமை பொருந்துவதாதல் காண்க. உம்மை சிறப்பு. நந்தி பெருமான் தம் அருளை வழங்கியது, நினைவிற்கு எட்டாதவனை நினைக்குமாற்றையும், வணங்குமாற்றையும், பூப்புனையுமாற்றையும், புகழ்ந்து பாடுமாற்றையும் விளக்கியருளியது. `அவர் அவற்றை அருளிச் செய்யாராயின், யான் எதனை அறிவேன்` என்பது கருத்து.
இதனால், `மெய்ப்பொருளை யுணர்தலும், அடைதலும் பக்குவ காலத்தில் குருவருள் வாய்க்கப் பெறுதலாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

பொழிப்புரை :

முன் தந்திரத்திற் கூறிய முத்துரியத்துள்
நிலையிற் புக்கபொழுது, பாலுந்தேனும் கலந்த கலப்பின்கண் உள்ளதும், கனிந்த பழத்தின் சாற்றில் உள்ளதும், மிகத் தூயதாகிய தேவரது அமுதத்தில் உள்ளதுமாகிய இனிமைகள் போன்ற ஓர் இனிமை அவ்வுயிரினது உடம்பில் உள்ள மயிர்க்கால்கள்தோறும் தேங்கி நிற்கும்.

குறிப்புரை :

`பாலொடு தேன் ஆகும் மதுரமும், பழத்துள் இரதம் ஆகும் மதுரமும்` என ``ஆகும் மதுரம்`` என்பதை ஏனையவற்றிற்கும் கூட்டுக. வாலிய - தூய. பேரமுது, தேவர் அமுது, ``துரியம் பொடிபட உள்புக`` என்பதை முதலிற் கூட்டி உரைக்க. பொடிபடல் - விலகுதல். சீலம் - தன்மை, என்றது இங்கு இனிமையை மயிர்க்கால் தோறும் தேக்குதலை.
``வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன்``*
என்னும் திருவாசகத்தாலும் அறிக.
இதனால், இங்கு எடுத்துக்கொண்ட ஆனந்தத்தின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `இறவா நிலை` எனப்படும் அபர முத்தி நிலையையும், அந்நிலைக்கு ஏற்புடைய சுத்தமாயா புவனங்களையும் கடந்து, அவ்விடத்தை அடைந்த தன் அடியார்களோடே கூடி, அவர்கட்கு ஒப்பற்ற தலைவனாய் இருப்பவன். (எனவே, `நிரதிசய சுத்த போகத்தையே தருபவன்` என்றதாம்.) ஆயினும் அவன், பவழம் போன்ற இதழையும், அதற்குள்ளே அரும்பும் முத்துப்போன்ற நகையினையும், அதற்குள்ளே மெல்ல மிழற்றுகின்ற இனிய சொல்லையும் உடைய மாதராளாகிய, கெடுதல் இல்லாத ஞான சொரூபியைத் துணையாகப் பற்றி நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால், பலவகைப்பட்ட மாயா போகங்களை வேண்டுவார்க்கு அவற்றையும் தருகின்றான்` என்பதாம். தமர் - அடியார். ``விண்வத்துக் கொட்டும் வண்ணத் தமரர்`` என்றாற்போல மகர ஈறொழிந்த ஏனையீறுகளின் முன்னும் சிறுபான்மை அத்துச் சாரியை வருதல் அறிக. `தமரிடத்து நின்ற` என ஏழாவதன் பொருள் பட விரிக்க. `அண்டம் கடந்து நிற்பவன், ஆயினும் தமரிடத்து நிற்பவன்` என்க. ``தனியைமன்`` என்றது, `சிவன்` என்னும் நிலையையும் , ``சோதி தொடர்ந்து நின்றான்`` என்றது, `சத்தன்` என்னும் நிலையும் குறித்தனவாம். இதனால், மெய்ப்பொருளின் இரு நிலைகள் விளங்கும். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `ஞான ஆனந்தமேயன்றி ஊன ஆனந்தமும் மெய்ப்பொருளால் ஆவதே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.

பொழிப்புரை :

`மத்தியாலவத்தை` எனப்படும் சகலத்திற் சகலமாகிய மாசகலத்திலே முப்பத்தாறு கருவிகளுள் யாதொன்றும் ஒடுங்காது எழுச்சியுற்றிருப்பினும் தான் அவற்றின் வசப்படாது, அவற்றை வேறு நிறுத்தி, அங்ஙனம் நிறுத்தியதனால் கேவலாவத்தை வந்துவிடாதபடி அதனையும் நீக்கிச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையை அடைந்து, பின் `அதுவும் சீவச் செயலேயாம். என அதனை நீக்கிப் பரா வத்தையை எய்தியவழியே பந்தம் முற்றும் நீங்கிய நிலையாகும். அந் நிலையை அடைந்து, `சீவன்` என்னும் நிலைமை மாறி, `சிவம்` என்னும் நிலைமையை அடைந்து, அதனால் சத்திய ஞானானந்தத்தை அடைந்தவனே நிறைவான ஞானத்தை அடைந்தவனாவான்.

குறிப்புரை :

``மத்திமம்`` என்றது மத்தியாலவத்தையை. `மத்திமத் தின்கண்` என ஏழாவது விரிக்க. ``மாற்றி`` என்றதும் `நீக்கி` என்றதே. `பிறழ்வுற்றுச் சிவமாகி` என மாறிக்கூட்டுக. ``சார்ந்தான்`` என்பது வினையாலணையும் பெயர். `சார்ந்தானே ஞானி` என ஏகாரத்தை மாற்றி வைத்துரைக்க.
இதனால், சத்திய ஞானானந்தமே நிறைஞானத்தின் பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானனந் தத்தே
துவமார் துரியம் சொரூபம தாமே.

பொழிப்புரை :

பயன் இலதாம் பிறவியிற் செலுத்துகின்ற மும்மலங்களும் நீங்கி உயிர் சிவமாதற்பொருட்டு உண்மையான மூன்று துரிய நிலைகளைப்பிற பற்றுக்கள் நீங்குதற் பொருட்டுப் பற்றினால், தவத்தின் பயனான சத்திய ஞானானந்தம் கிடைக்கும். அந்நிலையில் அந்த ஆனந்தத்தையுடைய பொருளும் காட்சிப்படும்.

குறிப்புரை :

``சிவமாம் மும்மலந்தீர`` என்பதனைப் பின்முன்னாக நிறுத்தி, `மும்மலந்தீர்ந்து சிவமாக` விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. பவம் - உண்மை. துரியம், `பாழ்` எனப்பட்டது. `துரிய நிலையில் ஆனந்தம் தோன்ற, அதனானே அதனையுடைய பொருள் உண்மை தோன்றும்` என்றபடி. சொரூபம், `வந்து` (பொருள்) எனவும் பொருள் தரும். ஆனந்தம் தோன்ற, அஃதே பற்றி அதனையுடைய பொருளை உணர்தல், அருணோதயம் உண்டாக, அஃதே பற்றி ஞாயிற்றை உணர்தல் போலும்.
இதனால், துரியத்தை எய்தி, அதில் ஞானானந்தத்தை உணர்ந்து, அதனானே பொருளை உணர்க` என்பது கூறப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

பொழிப்புரை :

`குருமார்களில் எல்லாம் மேலான குருவாகிய ஞான குருவே எங்கும் நிறைந்த பரம்பொருளாவான்` என்பது நன்கறியப் பட்டது. அதற்கேற்ப அவன் தன் மாணாக்கனை விட்டு நீங்காது, அவன் செல்லுமிடமெல்லாம் சென்று நிலையாகப் பொருந்தி, கண்ட பொருள்களில் எல்லாம் அது அதுவாகும் இயல்புடைய அவனது ஆன்ம சொரூபத்தினுள் அஃது அவ்வாறாகாமல் நிலைபெற்று விளங்கும் அறிவின்பப் பொருளாய், அடைதற்கரிய துரிய நிலையில் கிடைத்திருப்பான்.

குறிப்புரை :

என இவ்வாறு குருவின்மேல் வைத்துக் கூறினா ராயினும், ஞான குருவின்பால் ஞானத்தைப் பெற்ற நன்மாணாக்கர் எங்கும், எப்பொழுதும், எவ்வாற்றானும் அக்குருவை மறவாது அவனைச் சிவமாகவே அறிவினுள் கண்டு ஆனந்திப்பர்` என்பதே கருத்து. `அக்காட்சி வெறும் கருதுகோள் காட்சியன்று; உண்மைக் காட்சியாய்ப் பயன் தரும் காட்சியே` என்பதைத் தெளிவித்தற் பொருட்டே இம்மந்திரத்தைக் குருவின்மேல் வைத்து இவ்வாறு அருளிச்செய்தார். `எங்கும் ஆம் பரமாகி` என்க. ``ஆகி`` என்பது பெயர். ஒழிவு - விட்டு நீங்குதல். `எங்கணும் ஒழிவற்று திரம் உறச் சேர்ந்து` என மாற்றிக் கொள்க. நிரவுதல் - அது அதுவாய் வசப்பட்டு நிற்றல். `நீடும் சொரூபமாய்` என ஆக்கம் வருவிக்க. ``துரியத்து நின்றான்`` என்றதனஆல், `ஞானிகள் துரியத்தினின்றும் கீழ் இறங்கார்` என்க. துரியம் முதலிய அவத்தைகளின் இயல்பு முன் தந்திரத்தில் கூறப்பட்டது.
இதனால், `அடையத் தக்க பொருள் ஞான குரு உருவமே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

பொழிப்புரை :

மண் தன்னை அழிக்கும் தன்மையுடைய நீரினுள் அழியும், அவ்வாறே நீரும், காற்றும் முறையே நெருப்பினுள்ளும் ஆகாயத்தினுள்ளும் அழியும். எனவே, இப்பொருள்களுள் அடங்கியிருப்பவர் அல்லன் சிவன். அவன் பூமியையும் கடந்து மேற்போகியும் அளவின்றியிருப்பவன். (``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர் - போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``* அவனை ஒரு சிறுகுடிலுள் அடக்கி வைத்துக் கண்ணாற் கண்டு, காலால் வலம் வந்து, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி இன்புறுதல் எளிதாயிருக்க, அம்முறையை யறியாமல் யான் அல்லல் உறுகின்றேன்.

குறிப்புரை :

என்றது, அறிவிலாதார் செயலைத் தம்மேல் வைத்து அருளிச் செய்து இரங்கியவாறு. `குவலயம் குலைக்கின்ற நீரில்` என மாற்றி, அதன்பின்னும், ``ஆகாசம்`` என்பதன் பின்னும் `அழியும்` என்பன வருவிக்க. வரைத்தல் - அளவுட்படுத்தல். `படுத்தப்படுவது குருவுருவம்` என்க. என்றாற்போலும் திருமொழிகளால் ஞான குருவின் அருமையில் எளிமையை ஆய்ந்துணர்க. வலம் செய்தல் கூறவே, இனம் பற்றி ஏனையவும் கொள்க.
இதனால், அடைதற்கரிய பொருளை எளிதில் அடையும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

பொழிப்புரை :

அயன், மால் முதலிய தேவர்கள் முதலாக எங்குள் ளவர்களும் இறைவனை, `அவன் பரமாகாசத்தில் இருக்கின்றான், ஆயினும் ஏத்துவார்க்கு அருள்புரிகின்றான் என அவனைக் காணாமலே கருதிநின்று ஏத்துவார்கள். ஆயினும் எங்கட்கு அவன் குருஉருவாகி எதிர் வந்து எங்களோடு நீங்காது உறைகின்றான்.

குறிப்புரை :

`அதனால் நாங்கள் அவனை நேரிற்கண்டு வலம் வந்து வணங்கி, ஆடிப்பாடி, அளவளாவி மகிழ்கின்றோம்` என்பது குறிப் பெச்சம். ``அங்கு நின்றான்`` என்பதனை, ``இறைவன்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `தேவர்கள் முதலாக` என ஒரு சொல் வருவிக்க. ``தனி நாயகன், புவனாபதி`` என்னும் பெயர்கள் இரண்டன் உருபு ஏற்று, ``ஏத்துவர்`` என்பதனோடு முடிதற்கு உரியன; செய்யுள் நோக்கி வேறுபட்டு நின்றன. ``எம் இறை`` என்றது, குருவாகி வந்து அருள் புரிந்த உரிமை பற்றி. பொங்குதல், கூர்தலாகிய உள்ளது சிறத்தலே யாகலின் அதனை இங்கு, ``பொங்கி`` என்றார். ``பொங்கி நின்றான்`` எனப் பண்பின் வினைப் பண்பின்மேல் ஏற்றப்பட்டது. கூர்ந்தது அருள். `அது கூர்ந்து, குருவுருவாய் வந்தது` என்பதாம். புவனங்களை ``புவனா`` என பெண்பாலற் கூறினார். அன்னதொரு வழக்குப் பற்றி,
இதனால், அருட் குருவின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.

பொழிப்புரை :

ஒவ்வோர் உயிரும் தன்னைத் தான் அறியக் கடமைப் பட்டவை. அவற்றை அவ்வாறு அறியச் செய்யாமல் மயங்கச் செய்வன, புறச் சமய நூல்களும், அடக்கம் இன்றி, வேண்டியவாறே ஒழுகத் தூண்டும் காமம் முதலிய குற்றம் எட்டும், அவற்றுக்குக் காரணமான ஆணவ மலமும் ஆகும். அவை முற்றாக நீங்குமாறு ஞான குருவைப் பிரியாது அவரது நிழல்போல உடன் இருப்பவர் வானவர்க்கும் தலைவராவர்.

குறிப்புரை :

சுவடு - எழுத்தின் வரிவடிவம். அவற்றை உடையது சுவடி. எனவே சுவடிகளில் உள்ள எழுத்துக்களை, ``சுவடு`` என்றார். `தனை அறியாமற் செய்யும்` என ஒரு சொல் வருவித்து, அதனை முதலிற் கூட்டுக. கமை - பொறுமை. அஃது அடக்கத்தைக் குறித்தது. `ஆணவ மலத்தின் காரமயம் எட்டு` என்பதை,
``... ... ... ... விகற்பம், கற்பம்,
குரோதம், மோகம், கொலை, அஞர், மதம், நகை``3
என்னும் இருபா இருபஃதால் அறிக. இவற்றுள் `மோகம்` என்பதனையே தலையாயதாக எடுத்து, ``காமம்`` என்றார். இனி, காமம் முதலிய அறுபகைகளோடு, `மண், பொன் இரண்டு கூட்டி, `எட்டு` என்பாரும், `இடும்பை, அசூயை, இரண்டு கூட்டி `எட்டு` என்பாரும் உளர். திமிரம் - இருள்; அணவ மலம். ``செயல்`` என்றது எட்டொழிந்த பிறவற்றை அவை மறைப்பு. திரிப்பு முதலியன. `தெளிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `குருவுடன்` என்பது அதிகாரத்தால் வந்தது. தலைவராதல், மேல் நிலையில் நிற்றல்.
இதனால், சொரூப உதயத்தாலே உயிர் தூய்மை பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

பொழிப்புரை :

`முக்குணங்களால், `அயன், அரி, அரன்` எனச் சொல்லப்படும் மூவருள், `தனி ஒருவன்` எனச் சுட்டப்படும் அரன், குணம் பற்றி ஏனையிருவரோடு ஒத்தவனாகச் சொல்லப்படினும் ஏனையிருவர்போலச் சகலனாகாது, பிரளயாகலருள் பக்குவம் உற்ற வனாய், சிவனை மறந்து, `தானே முதல்வன்` என மயங்கும் மயக்கம் இன்றிச் சிவனையே முதல்வனாகத் தெளிந்து அவன் பணியையே ஆற்றுபவன் ஆதலின் வேற்றியல்புடையனாதல் போல முத் துரியத்திலும் சீவனும், சிவனும் ஒரு பெற்றியராய் நின்ற போதிலும் பல வகையில் சிவன் சீவனின் வேறு பட்டவன்` என்று சிவநூல்கள் செப்பும்.

குறிப்புரை :

முதல் உரு - காரணமூர்த்தி. தனது வலப்பாகத்தினின்று அயனையும், இடப்பாகத்தினின்று அரியையும் தோற்றுவித்தலால் அரன் காரண மூர்த்தியாயினன். இவனே சீகண்ட உருத்திரன். `முதல் உரு ஆயதனால்` என உருபு விரிக்க. அணு - உயிர். ``அணுப் பரன்,`` சேய - சேய்மையில் உள்ள. ``சிவம்`` என்பது, `சுத்தம்` என்னும் பொருளதாய் நின்றது. கேவல சகலங்களைக் கடந்து நிற்றலின் சுத்தாவத்தைகள் சேய வாயின. `முத்துரியம்` முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. `ஒரு சீர் பெற ஏயும் நெறி` என்க. ஏய்தல் - பொருந்துதல்.
`அணுவும், பரனும் ஏயும் நெறி, மூவகைத் தெய்வத்து ஒருவன் வேறாயது` என இயைத்து முடிக்க. முதல் அடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `சொரூப உதயத்துச் சிவ சீவர்கள் அருள் நிலையால் சமமாயினும், பொருள் நிலையால் வேறானவர்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

பொழிப்புரை :

சிவன் தான், தனக்கு ஓர் உடம்பில்லாமலே பல உயிர்கட்கும் பல்வேறு வகையான உடம்புகளைப் படைத்துக் கொடுக்கின்றான். தனக்கு ஒரு காரணம் இன்றித் தானே அனைத் திற்கும் காரணமாய் உள்ளான். எந்தப் பொருளின் தன்மையும் தன்னைப் பற்றாது தான் அனைத்துப் பொருளிலும் தாமரை இலையில் தண்ணீர் போலப் பொருந்தி நிற்கின்றான். ஆகவே, அவனது நிலை யாவராலும் அறிய ஒண்ணாத பெருமறையாய் இருத்தலின், அம்மறையை அறிந்த நல்லா சிரியன் வழியாக அன்றித் தாமே நேராக அவனை அடைதல் யாவர்க்கும் இயலாது.

குறிப்புரை :

``கரு`` என்றது காரணத்தை. மருவுதல் பற்றுறப் பற்றல். மாயம், இங்கு மறைவைக் குறித்தது, அதனையுடைய தன்மையை உணர்த்திற்று.
``கருவினா லன்றியே கருவெலாம் ஆயவன்
உருவினா லன்றியே உருவுசெய்தான்`` (திருமுறை - 3.35.3.) என்னும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியை இம் மந்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், `உண்மைச் சொரூபமாம் சிவனது தோற்றத்திற்கு முற்பட்ட நிலை குருவினது தோற்றம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.

பொழிப்புரை :

குருவின் உருவத்தை உள்ளத்தில் உள்கியிருப்பவர் கட்கு அங்குச் சிவ சோதியே பிரகாசிக்கும். அவர்கள் ஊழிக் காலம் நிலவுலகில் வாழ்வர்; பின்பு சிவலோக வாழ்வினரும் ஆவர். அங்ஙன மாகவும் குரு உருவத்தின் சிறப்பை அறிந்து அதனை உள்ளத்தில் உள்குவோர் உலகத்தில் எத்துணைப் பேர்!

குறிப்புரை :

உருவம், அதிகாரத்தால் குரு உருவேயாயிற்று. `மணி மந்திர ஔடதங்களாலும், மற்றும் அடயோகம் முதலிய உழைப்புக் களாலும் அடையும் பயனை ஞான குருவால் அடையலாம்; ஆனால் ஞான குருவால் அடையும் பயனை வேறு வழியால் அடைய இயலாது` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார்.
``மந்திரத்தால், மருந்துகளால், வாய்த்தஇயோ கத்தால்,
மணியிரத குளிகையினால், மற்றும் மற்றும்
தந்திரத்தே சொனைமுறை செய்ய, வேத
சகலகலை ஞானங்கள், திரிகால ஞானம்,
அந்தமிலா அணிமாதி ஞானங்கள் எல்லாம்
அடைந்திடும்; ஆசான் அருளால் அடிசேர் ஞானம்
வந்திடும்; மற்றொன்றாலும் வாரா தாகும்;
மற்றவையும் அவன்அருளால் மருவு மன்றே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சொரூபத்தியானத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``உள்ளுறும் சோதி`` எனப்பட்ட அந்த மேலான ஒளி என் உள்ளத்துள்ளே தோன்றியவுடன் நான் அதனைச் சிக்கெனப் பிடித்தேன். பிடித்தபொழுது முதற்கண் அஃது என்னுள்ளே அடங்கப் பின்பு நான் அதனுள்ளே தோய்ந்தேன். தோயத் தோய, அஃது எல்லையின்றி விரியக் கண்டேன்.

குறிப்புரை :

`பதியாகும் பரஞ்சோதியை` என மாறிக் கூட்டி உரைக்க. உதயம் உள்ளத்துள் ஆதலின், `முதற்கண் அஃது என்னுள் படிந்தது` என்றும், விறகினின்றும் தோன்றிய தீ பின் அவ்விறகைக் கதுவுமாறுபோல, ஆன்ம அறிவில் தோன்றிய சிவஒளி பின்பு அவ்வறிவை விழுங்கி நிற்றல் பற்றி, `பின்பு நான் அதனுட் படிந்தேன்` என்றும், முன்பு சுட்டுணர்வாய் நின்ற ஆன்ம அறிவு பின்பு வியாபக அறிவாய் விரியுந்தோறும் சிவஒளி அவ்வறிவிற்கு வியாபகமாயே விளங்குதல் பற்றி, `அதனைப் பறையக் கண்டேன்` என்றும் கூறினார். பறைதல் - பறத்தல். அஃது இங்கு வியாபித்தலைக் குறித்தது. இனி, `பறைதல், சொல்லுதல்` எனக் கொண்டு, அஃதாவது, தன்னியல்பை அறிவித்தல்` என்பாரும் உளர். தன், சாரியை. ``பறைய`` என்னும் செயவென் எச்சம், `பறையும்பொழுதில்` எனக்காலம் உணர்த்தி நின்றது. இதனுள்ளும் முன் மந்திரத்திற் போந்த அணியே வந்தது.
இதனால், சொரூப உதயத்தின் படிநிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக் குரவன் சுகோயத் தானே.

பொழிப்புரை :

கவர்ச்சியான வடிவம், நிறம், மணம் முதலிய பிற பண்புகள் ஆகியவற்றை இயல்பாகவே கொண்டிருத்தலாலே குவளை மலர்கள் பிற மலர்களினும் கிடைத்தற்கரிய சிறந்த மலர்களாகக் கருதப்படுகின்றன. அதுபோலவே, `சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்னும் மெய்ப்பொருள் இயல்புகளைத் தனது ஞானமாக அடைந்த உண்மைக் குருவே வீட்டின்பத்தைத் தர வல்லவனாவான்.

குறிப்புரை :

குவளை மலரையே எல்லா மலர்களினும் சிறந்த மலராக நாயனார் கூறிவருதலை மேலேயும் சில மந்திரங்களிற் கண்டோம். அதற்குக் காரணம், அது தீக்கைக் காலத்தில் அணியப் படுதல் பற்றிப்போலும்! ``சொரூபம்`` இரண்டில் முன்னது வடிவம். பின்னது உண்மை. உருவம் - நிறம். `தொன்மை` என்பதில் விகுதி தொகுக்கப்பட்டது. `தொல்லாக` என ஆக்கம் வருவிக்க. இயல்பை, ``தொன்மை`` என்றார். விழுங்குதல், கொண்டிருத்தல். ``விழுங்கி`` என்னும் எச்சம் காரணப் பொருளில் வந்தது. `உற்பலம் அரியன ஆமாறு போல` என மாற்றிக் கொள்க. சத்தியம் முதலிய நான்கு மெய்ப்பொருளின் இயல்பாதல் மேலேயும் கூறப்பட்டது.
இதனால், `சிவனைப் போல, `சொரூபம்` எனச் சொல்லத் தக்கவன் உண்மையான ஞான குருவே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

பொழிப்புரை :

(`சொரூபம்` என்பதைப் பொதுப்பட இயல்பு` - என வைத்துக் காணும்பொழுது அது, `மேனிலைச் சொரூபம், கீழ்நிலைச் சொரூபம்` என இரண்டாகும். அவற்றுள்) சிவனது மேனிலைச் சொரூபம் சொல்லைக் கடந்தது; இன்ப உருவானது. அநாதி; சிவமாவது கீழ்நிலைச் சொரூபம். `அகார உகார மகாரம்` என்னும் பகுதிகளாயும், அங்ஙனம் பகுக்கப்படாத தொகுதியாயும் உள்ள தாரக மந்திரத்தின் உள்ளொளியாகும். ஆதி; சத்தியாவது.

குறிப்புரை :

`உரையற்ற` எனப் போந்த இரண்டில் முன்னது ``மோனம்`` என்பதனை விளக்கியது. பின்னது `வெளிப்படச் சொல்ல வாராதது` என்னும் பொருட்டாய் ஓங்காரத்தைக் குறித்தது. உள் ஒளி - அதனால் சுட்டப்படும் பொருள். `தாரகம்` என்பது இடைக்குறைந்து நின்றது, `கீழ் நிலைச் சொரூபமும் அளவுட் படாதது` என்றற்கு, ``கரை -யற்ற`` என்றார். `மருவுற்ற` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
சொல்லைக் கடந்ததாய், இன்பமாய் அநாதியாய், `சிவம்` என நிற்பவனே, ஆராயுமிடத்து, அகார உகார மகாரங்களின் பொருளாயும், அவை ஒருங்கு தொக்க `ஓம்` என்பதன் பொருளாயும், ஆதியாயும் `சத்தி என நிற்பான்` என்பது இம்மந்திரத்தின் பொருள். சிவம் மேல்நிலைச் சொரூபம். சத்தி கீழ்நிலைச் சொரூபம். இவ் விரண்டையும் அனுபவமாக உணர்ந்தவனே ஞானகுரு. அவனே `சொரூபம்` எனப்படுவான். கீழ்நிலைச் சொரூபத்தை மட்டும் உணர்ந்தவன் கிரியா குரு. அவனும் ஓராற்றால் `சொரூபம்` எனப் படுவான் என்றற்கு இது கூறினார். கூறவே, கீழ்நிலைச் சொரூபத்தைத் தானும் உணராதவன் குருவாகாமை விளங்கும்.
இதனால், மேல்நிலைச் சொரூப உதயமே சொரூப உதயமாதல் அன்றிக் கீழ்நிலைச் சொருப உதயமும் ஓராற்றால் சொரூப உதயமாதல் கூறப்பட்டது.
இதனையடுத்துப் பதிப்புக்களில், ``தலைநின்ற தாழ்வரைமீது தவம் செய்து`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து `வாய்மை` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 11

ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே.

பொழிப்புரை :

பாச ஞான பசு ஞானங்களால் எளிதில் அறியப் படும் பொருள்கள் யாவும் நமக்குப் புறத்தே நிற்பனவாக, அந்த ஞானங்களால் அறிதற்கரிய பொருள் நம்மின் வேறாகாது நம் உள்ளே யிருத்தலை நான் அறிந்தேன். மேலும், அந்தப் பொருள் நம்மை விட்டு நீங்குதற் காரணத்தையும் நான் `இது` என அறிந்தேன்; நீங்கிப் போன அது மீட்டும் வந்து புகுதற் காரணத்தையும் `இது` என அறிந்தேன். இனி நான் `யான், எனது` எனச்செருக்கு மாட்டேன்; அந்தப் பொருளை யன்றி வேறொரு புகலிடமும் எனக்கு இல்லை. இந்நிலைமை, `முன்பு தானாய் இராது நாமாகவேயிருந்த முதல்வனும் நாமே` எனத் தக்கதாய் உள்ளது.

குறிப்புரை :

`அரும்பொருள் அகத்தின் ஆமாறு அறிந்தேன்` எனவே, எளிய பொருள்கள் புறத்தேயிருத்தல் பெறப்பட்டது. போதல் - நீங்குதல். அது விளங்காது மறைந்திருந்தைம அதற்குக் காரணம். ஆன்ம அறிவு `யான் எனது` எனச் செருக்கினமை. புகுதல், மறைவின்றி வெளிப்பட்டு விளங்குதல். அதற்குக் காரணம் அச்செருக்குக்கள் இன்றி, அடங்கி ஒடுங்கினமை. முன்பு செய்த குற்றங்களை இனிச் செய்யமாட்டேன்` என்பார். ``ஏமாப்பதில்லை. இனி ஓர் இடமில்லை`` என்றார். பெத்த காலத்தில் முதல்வன் வேறு விளங்காது, உயிர்களாயே நின்றதனை, ``நாம் ஆம் முதல்வன்`` என்றும், முத்தி காலத்தில் உயிர் வேறு விளங்காது முதல்வனாயே நிற்றலின், ``முதல்வனும் நாம் எனலாம்`` என்றும் கூறினார். இதனை மெய்கண்ட தேவர்,
``அவனே தானே யாகிய அந்நெறி
ஏக னாகி``8
என்றார். தம்மோடு தம் மாணாக்கரையும் உளப்படுத்த, ``நாம்`` என்றார்.
இதனால், சொரூப உதயத்தின் முடிநிலை இயல்பு கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

பொழிப்புரை :

தங்கள் உடம்பைப் பிறர் செத்தினால் தான் என்ன? சீவினால்தான் என்ன? உச்சந் தலையிலே உளியை நாட்டி அடித்தால்தான் என்ன? இவ்வாறன்றி சிவந்த சந்தனத்தைக் குளிர்ச்சியாகப் பூசினால்தான் என்ன? மெய்யுணர்வு எய்தினோர் ஞானகுரு உபதேசித்த உபதேச வழியில் நிற்றல் அல்லது, அதனினின்றும் பிறழார்.

குறிப்புரை :

செத்துதல் - ஆழப் போழ்தல். சீவுதல் - மேற்போக்காப் போழ்தல். இவ்விரண்டிற்கும் வினைமுதலும் செயப்படுபொருளும் வருவிக்கப்பட்டன. மறித்தல் - அசையாதபடி தடுத்தல்; அஃது அறைதலைக் குறித்தது. மிகக் கொடிய துன்பங்கள் சிலவற்றைக் கூறும் முகத்தால் பல துன்பங்களையும் குறித்தவாறு. வித்தகம் - சதுரப்பாடு; அது ஞானம். தம் குருவாகிய நந்தி பெருமானைச் சுட்டினாராயினும், பொதுப்பட, `குரு` என்றலே கருத்து. விதி - நெறிமுறை. `நந்தி சொல்லிய நெறிமுறை` என்க. அஃது, `உனக்கு இப்பொழுது வரும் துன்ப இன்பங்கள் எல்லாம் நீ முன்பு எர் உடலில் நின்று செய்த வினை இவ்வுடலை வந்து பற்றுவனவே. ஆதலின் அவை பற்றி நீ கவலுதலோ` மகிழ்தலோ கூடாது` என்பது. இவ்விடத்தில்,
``ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக; ... ... ...
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்
நிரயம் சேரினும் சேர்க; உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி,
`நல்லன்` எனினும் என்க; அவரே
`அல்லன்` எனினும் என்க; நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளம் சிதையாது
இன்பத் தழுந்தினும் அழுந்துக; அல்லாத்
துன்பம் துதையினும் துதைக; ... ... ஒன்றினும்
வேண்டலும் இலனே; வெறுத்தலும் இலனே,
ஆண்டகைக் குரிசல்நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும், நின் செய்யப்பொற் பாதமும்
அடையவும், அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே``3
என்னும் அனுபவ மொழியையும்,
``கேடும், ஆக்கமும் கெட்ட திருவினார்;
ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்``9
என அவ்வனுபவம் உடையாரது இயல்பை எடுத்து விளக்கிய திருமொழியையும் ஒப்பு நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 2

தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.

பொழிப்புரை :

ஒவ்வோர் உயிரும் தான் தான் முற்பிறப்பில் செய்த வினையின் பயனைத்தான் இப்பிறப்பில் அனுபவிக்கின்றதே தவிர, இப்பிறப்பில் சிலர் அவ்வுயிர்கட்கு நன்மை தீமைகளைப் புதியன வாகக் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றார்கள் இல்லை. (ஆகவே, அவைகளைப் பிறர் கொண்டு வந்து சேர்ப்பிப்பதாகக் கருதி அவர்களை விரும்புதலோ, வெறுத்தலோ செய்தால் அச்செயல்களே அடுத்த பிறப்பிற்குக் காரணமான ஆகாமிய வினையாய்விடும். இதை உணர்ந்த நான் எனது முன் வினையின் பயனைக் கூட்டுகின்ற முதல்வன் என் தலையில் எழுதிய எழுத்துப்படியே இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் பொழுதெல்லாம் அவைகளை அவனது அருளாகவே கருதி அனுபவித்ததல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொண்டதில்லை. அவ்வாறு செய்த எனது செயல் எனது நன்மைக்குச் சிறந்ததொரு காரணமாயிற்று.

குறிப்புரை :

`எனது நண்மை` என்றது, வினைத் தொடர்ச்சி அறுபட்டதை, ``தான்`` என்றது உயிர்களைப் பொதுப்படச் சுட்டியது. விதி - வினை. ``வழி`` என்றது பயனை. `அனுபவித்தல் அல்லால்` என ஒரு சொல் வருவிக்க. ``வான்`` என்பது `வெளி` என்னும் பொருட்டாய்ப் புறத்துள்ளாரைக் குறித்தது. மாட்டு - தொடர்பு. `சென்னியில் குறித்த வழியே` என்க. சென்று - செல்லாநின்று; என்பது, `செல்லும் பொழுது` என்றபடி ``செய்தது`` எனப் பொதுப் படக் கூறினாராயினும், ``கோன் முன்னம் குறித்த வழியே சென்றேன்`` என்றதனால் அது அவன் அருள் வழி நின்றதையே குறித்தது. நிலம் - நிலைக்களம். அது, `சிறந்த காரணம்` எனப் பொருள் தந்தது. நாயனார் சாத்தனூரில் பாதுகாப்பில் வைத்த தம் மூலன் உடம்பு காணாமற் போனதையும், தாம் மூலன் உடம்பிலே இருக்க நேர்ந்ததையும் சிவன் அருளாகவே கருதி ஏற்றமை நினைக்கத்தக்கது.
இதனால், ஊழின் பயனை அனுபவிக்கும்பொழுது அதனை, அவன் அருள்` என்று அனுபவிக்கின் அஃது உடல் ஊழாய்க் கழிதலோடு, ஆகாமியமும் விளையாது` என்பது கூறப்பட்டது.
``சிவாய நமஎன்று சிந்தி திருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லைனா;- உபாயம்
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியாய் மதிய்யா விடும்``*
என்ற ஔவையார் வாக்கு இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்வெண்பாவில் ``அபாயம்`` என்றது ஊழின் தாக்குதலும், அதனால் விளையும் ஆகாயமியமுமாம். ``விதியை மதியால் வெல்லலாம்`` என்னும் பழமொழியில் `மதி` எனப்பட்டது `சிவாயநம` எனச் சிந்திதிருப்பதே எனவும், அஃது அல்லாத வழியெல்லாம் அந்த ஊழ் உண்டாக்கும் மதியே` எனவும் ஔவையார் விளக்கியிருத்தல் அறியத்தக்கது. ஊழ்வினை நன்மையாகவோ, தீமையாகவோ வந்து விளையும்பொழுதெல்லாம் அதனைச் ``சிவாயநம`` என்று சொல்லி ஏற்க வேண்டும் என்கின்றார் ஔவையார்.

பண் :

பாடல் எண் : 3

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.

பொழிப்புரை :

(ஆற்றில் மணல் சமப்பரப்பாய்ப் பரந்திருப்பின் அஃது அதற்கு ஒரு சுமையாய் இராது. ஆனால் ஆறு சமமாய் இல்லாமையால், அதில் வெள்ளம் வரும்பொழுது பள்ளம் மேடுகள் மாறி மாறி அமைய சில இடங்கள் பெரிய மேடுகள் ஆகிவிடுகின்றன.) அந்த மேடுகளை அந்த ஆறு தான் சுமக்க வேண்டுமேயன்றி, அவைகளைப் பங்கு செய்து எடுத்துக் கொண்டு போய்ச் சுமப்பார் ஒருவரும் இல்லை. (அதுபோல, அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டுமன்றி அனுபவிப்பவர் வேறுயாரும் இலர். இதனை நன்குணர்ந்த எனது உள்ளம்) சிவனைப் பெறற்கரிய பேறாக உணர்ந்து அவனைத் தவிர வேறொன்றைப் பற்றுதலை ஒழிந்தது;

குறிப்புரை :

`அதனால், ஊழும் என்னைத் தாக்கவில்லை. அத் தாக்குதலால் தோன்றக் கூடிய ஆகாமியமும் தோன்றவில்லை` என்பது குறிப்பெச்சம். ``நீறிட்ட மேனி`` என்றது, `அவன் தன் அடியார்களது வினையைப் பொடியாக்குபவன்` என்னும் குறிப்பையும், ``நிமிர் சடை`` என்றது, உலகப் பற்றநைீக்கு பவன்` என்னும் குறிப்பையும் உடையன. பேறிட்டு - பேறாதலையிட்டு. `இட்டு` என்பது காரணத்தை உணர்த்தி வருதல் நாட்டு வழக்கு. முன் இரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையால், அதற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. ஆறு - உயிர். அது சமம் இன்மை உயிர் சமபுத்தி உடையதாகாமை. வெள்ளம் - ஊழ். மேடு பள்ளங்கள் - ஊழால் விளையும் ஆகாமிய வினைகள். ``சமவாதே`` என்னும் ஏகாரம், அசை.
இதனால், அவரவர் வினை அவரவருக்கே பயனாதல் உவமை முகத்தால் விளக்கப்பட்டது. சித்திற்குச் சட்டம் உவமை யாதலும் உவமத்திற்கு ஏற்புடையதே. அதிகாரப் பொருளை வலியுறுத் -தற்கு அதனை வெல்லுமாறும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
நானொன்றி நாதனை நாடுவன் நானே.

பொழிப்புரை :

இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

`இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட
உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்
றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்
அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்;
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான்
கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
கானத் துழுவை கலந்து வளைக்கில்என்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவினை நான்உழு வேனே.

பொழிப்புரை :

இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

`இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட
உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்
றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்
அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்;
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான்
கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்கட்கே.

பொழிப்புரை :

குருவருள் வாய்க்கப்ப பெற்றவர்கட்கு, `ஓர் உயிரின் உடம்பு அழிந்துவிட்டால், மற்றோர் உடம்பை அவைகட்குப் படைத்துக் கொடுக்க ஒருவன் இருக்கின்றான்` என்பது தெளிவாம். ஆதலால், `இறப்பு` என்பது அவர்கள் உள்ளத்திற்கு. `உயிர்கள் அழிந்துபோவதன்று; மற்று, ஒருநாடு எவையேனும் காரணத்தால் அழிவுறுமாயின், அதில் உள்ளவர்கள் வேறு நாட்டில் சென்று வாழ்தல் போல்வதும், ஓர் இல்லம் இடிந்து பாழாயின், அதில் வாழ்ந்தவர்கள் வேறோர் இல்லத்தில் குடிபுகுதல் போல்வதுமேயாகும்.

குறிப்புரை :

ஆகவே அவர்கள், உயிர்கள் எடுத்த பிறப்பில் அனுபவிக்கும் இன்பத் துன்பங்கள் அவை முற்பிறப்புக்களில் செய்த வினையின் பயனே` எனத் தெளிந்து, அனைத்துயிர்கட்கும் அவற்றின் வினைப் பயனை ஊட்டுவிக்கின்ற முதல்வன் திருவருளை உணர்ந்து நிற்குமாற்றால் தங்கள் ஊழினை வென்றிருப்பார்கள் என்பது கருத்து. ``நந்தி பரிசறிவார்க்கு`` என்பதை முதலிற் கூட்டி, ``உளன்`` என்பதன்பின் `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, ``ஒக்கும்`` என்பதை, ``இல்லை`` என்பதனோடும் இயைத்து, `பாடு இல்லை ஒக்கும்` என முடிக்க. ``இல்லை`` என்பது பண்பு; முற்றன்று. பாடு - இறப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், `முன் மந்திரத்தில் ஊழை வெல்லுதற்குத் தாம் செய்யும் செயலையே ஞானிகள் செய்து ஊழை வெல்வர்` என்பது குறிப்பால் உணர்த்தி முடிக்கப்பட்டது. ஆகவே மேற்கூறியபடி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் இதன்கண் அமைந்ததாம்.

பண் :

பாடல் எண் : 1

சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொழிப்புரை :

அறிவுப்பொருளாகிய உயிரும், அறிவுக்கறிவாய் உள்ள சிவனும் பொருளால் வேறேயாயினும், உடல் உயிர் போல ஒன்று பட்டு நிற்கும் கலப்பினால் வேறு நிற்பவர் அல்லர். ஆகவே, உயிரினது அறிவினுள்ளே, விறகில் தீயும், பாலில் நெய்யும் போலத் தோன்றாது மறைந்து நிற்கும் சிவன் அவ்விடத்தில் தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதனால், தங்கள் அறிவு மாசற்று விளங்கும்படி அவ்வுண்மை உணர்வில் உறைத்து நிற்க வல்லவர்கட்கு, கடைய வல்லவர்க்கு விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படுதல் ஒருதலையாதல் போல அவர்களது அறிவில் சிவன் வெளிப்பட்டு விளங்குதல் ஒருதலை.

குறிப்புரை :

``விறகில் தீயினன், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே``3 என்னும் அப்பர் அருள்மொழியை நெஞ்சினுள் ஆழப்பதித்துக் கொள்க. தெளிதல் இரண்டில் முன்னது மாசு நீங்கி, விளக்கம் பெறுதலையும், உறுதிப்பட உணர்தலையும் குறித்தன. அவை ஈரிடத்தும் செயவென் எச்சமாய் நின்றவற்றில் முன்னது காரியப் பொருட்டாய வினை யெச்சமாயே நின்றது; பின்னது தொழிற் பெயர்ப்பொருள் தந்தது. ``இருந்தான்`` என்னும் இறந்த கால வினை தெளிவை விளக்கி நின்றது. ஏகாரம், தேற்றம். எனவே, `மெய்யுணர்ந்தோர் ஒருஞான்றும் தங்கள் சிந்தையில் சிவன் இருத்தலை மறவார்; அதனால், அவர் மீள ஒரு ஞான்றும் பந்தத்தில் வீழார்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
இதனால் ஞானிகள் சிவரூப நிலையினின்றும் வழுவாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் சிந்தையினுள்ளே இருப்பதாகச் சொல்லி சிவன்) வாக்கும், மனமும் அடங்கி ஒடுங்கி நிற்கும் நிலையில் உள்ள ஓர் உள்ளீடான பொருள். ஆகவே, அவனை நேக்கும் முறை யறிந்து நோக்குங்கள். அங்ஙனம் நோக்கும்பொழுது அந்நோக்கிற்கு அவன் மிக நுண்ணிதாய்ப் புலனாகும் பொருளாவான். புலனாகியபின் அவன் போதல் இல்லை புலனாகும் பொழுதும் புதியனாய் அப்பொழுது தான் வந்து புகுதலும் இல்லை (முன்பே உள்ளவன் என்பதாம்.) அவனுக்கு என்றும் அழிவில்லை. `அழிவில்லை` எனவே தோற்றமும் இல்லையாம். நன்மையாவன பலவும் அவனை அவ்வாற்றால் நுணுகி நோக்கி அடைவார்க்கே உளவாம்.

குறிப்புரை :

மறைந்தவிடத்துத் தோன்றும் பொருளை மறைந் ததனால் தோன்றும் பொருளாக உபசரித்தார் ஆதலின், மறைந்த பொருள் என்பதில் பெயரெச்சம் காரியப்பெயர் கொண்டதாம். மறை பொருள் - மறைவை உடைய பொருள். ``மறைப்பொருள்`` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்த `சிவன்` என்னும் எழுவாய்க்குப் பய னிலையாய் நின்றது. பொருளை `வாக்கு மனம் மறைந்தது` என்றும், `மறைவுடையது` என்றும் கூறிப்பின், ``நோக்குமின்`` என்றதனால், `நோக்குமாற்றால்` என்பது போந்தது. நோக்குமாறாவது பிற ஒளிகள் அடங்கியொடுங்க நிற்கும் ஞாயிற்றைப் பிற ஒளி கொண்டு நோக்காது அதன் ஒளியையே கொண்டு நோக்குதல் போல அதன் ஒளியையே கொண்டு நோக்குதல். `அவ்வொளி அருள் ஒளி என்க. அது, நோக்கப் படும் பொருளாய், நுண்ணிதாம் என்க. நன்மைகளாவன ஆசை யறுதலும், அதனால் துன்பம் நீங்கலும், அன்பு வளர்தலும், இன்பம் மிகுதலுமாம். இறுதியில், `உளவாம்` என்னும் பயனிலை வருவிக்க. `முன்னர் அஃறிணையாகக் கூறியனயாவும் `சிவனே` என்றற்கு ஈற்றில், ``அத்தன்`` என உயர்திணையாகக் கூறினார்.
இதனால், அருள் ஒளியாலே சிவரூபம் தோன்றுதல் கூறும் முகத்தால், ஞானிகள் அருளாலல்லது எதனையும் நோக்காமை கூறப்பட்டது.
``அருளே உலகெல்லாம் ஆள்விப்ப(து); ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு``*
என்னும் அம்மை திருமொழியையும்,
``அருளால் எவையும்பார் என்றான்; - அத்தை
அறியாதே, சுட்டிஎன் னறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன்; என்னேடி தோழி``3
என்னும் தாயுமானவர் வாக்கையும் நினைக.

பண் :

பாடல் எண் : 3

பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்(று)
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர்
தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

பொழிப்புரை :

(இங்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்ற சிவன்) உலகங்கள் பலவற்றிலும் மேல் உள்ள உலகில் உள்ளான். இனிமேல் உள்ள பொருளுக்கும் மேலாய் அவற்றைக் கடந்தும் இருக் கின்றான். ஆயினும் தனக்குக் கீழே உள்ள எல்லா உலகங்களிலும் நிறைந்து நின்று உயிர்களின் பிறவித் தொடர்ச்சி அறுபட அருள் புரிகின்றான். அஃது எங்ஙனம் எனின், பிறிதொரு பொருளால் வெல்லப்படாத ஆற்றலையும், பிறர் அறிவிக்க வேண்டாது தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் அறிவினையும் உடையனாயும், அனைத்துப் பொருளையும் ஆதாரமாய் நின்று தாங்குபவனாயும், பாசங்களை அறித்தல் தெரியாமலே அரிப்பவனாயும் இருந்து.

குறிப்புரை :

பரன் - மேலானவன். இங்கு இஃது இடம் பற்றி வந்தது. அவ்விடமாவது நாத தத்துவன். `பராற் பரன்` என்பது ``பராபரன்`` என மருவி வந்தது. `அப்பாற் சென்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. `சென்றும் உலகில் அருள் புரிந்தான்` என இயைத்து முடிக்க. `ஆகவே, அவனை வாக்கு மனங்களைக் கடந்தவன்` எண்ணிச் சோர்ந் தொழியாது, மேற்கூறியவாறு நோக்குமாற்றால் நோக்கிக் காணுதல் கூடும்` என்பதும், `ஞானிகள் அவனை அங்ஙனம் கண்டிருப்பர்` என்பதும் கருத்துக்களாம். உரம் - அறிவு. `வழக்கு` எனினும், `தொடர்ச்சி` எனினும் ஒக்கும். அது பிறவித் தொடர்ச்சியையே குறித்தது. ``சுடர்`` என்றது அறிவை. தான், அசை. தான் - தாங்குபவன். ஆறு - வழி. தனாதென ஆறு அறிவொண்ணா - தான் கையாளும் வழி இது என அறிய ஒண்ணாமல், `ஒண்ணாது` என்பது ஈறு குறைந்து நின்றது. அரன் - பாசத்தை அறிப்புன். ``உரனாய் ... ... ... அரனாய்`` என்றது, சிவன் உலகில் நிற்கும் நிலையில் கொண்டிருக்கும் இயல்புகளை விரித்தது. அதனால், அவை அவன் அருள் புரிதற்குக் காரணமாக, அதற்குப் பின் வைத்து உரைக்கப்பட்டது.
இதனால், சிவன் பொருள் நிலையில் வாக்கு மனங்களைக் கடந்தவனாயினும், அருள் நிலையில் உலகில் எங்கணும் நிறைந்து நிற்றலால் இங்குள்ளார் அவன் உண்மை உணர்தல் கூடும் என்பது கூறப்பட்டது.)

பண் :

பாடல் எண் : 1

ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

பொழிப்புரை :

ஐந்தொழில் செய்யக் கருதிய காலத்துக் கொள்ளப்படுகின்ற `உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகை வடிவங்களும் இன்றி, அவற்றைக் கடந்துள்ள, உண்மை நூல்களால் கூறப்படுகின்ற சொரூப சிவனது மேலான இயல்பாவது, அவனைத் தன்னின் வேறாக வாயினும், ஒன்றாகவாயினும் உணரும்பொழுது அவ்வாறு உணரும் உயிரினது மயிர்கால்தோறும் தவறாது ஊறித்ததும்பகின்ற அமுதம்போலும் பேரின்பமேயாம்.

குறிப்புரை :

ஆதி - குறிப்பிட்ட ஒருகாலம். அக்காலத்தில் வடிவம், பெயர். தொழில் இவைகளைக் கொண்டு நிற்கின்ற சிவன். `தடத்த சிவன்` எனப்படுவான். அவைகளுள் ஒன்றும் இன்றித் தன்னியல்பில் நிற்கின்ற சிவன் `சொரூப சிவன்` எனப்படுவான். அவன் அநாதி. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, உரைக்க. ``சொரூபங்கள்`` என்றது வடிவங்களை. மூன்றும் என்னும் முற்றும்மை தொக்கது. ஓதுதல், இங்கு உணர்தலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. `ஓதும்` என்பது பாடம் அன்று. அமுது ஊறிய - `அமுதம்போல ஊறிய` என உவமத் தொகை. பேதம், வேறாக உணர்தல். அபேதம், ஒன்றாக உணர்தல், முன்னது முதல்நிலை. பின்னது முடிநிலை. இவற்றின் பின், `இரண்டிலும்` என்னும் தொகைச் சொல் வருவிக்க இரண்டிலும் உளதாகும் ஆனந்தம் முறையே காதலன் காதலியைக் களவுக் காலத்து இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் இடந்தலைப்பாடு முதலிய காலங்களிலும், கற்புக் காலத்துப் பிரிந்து மீண்ட பின்னும் காணும் பொழுதும், கூடிய பொழுதும் உளவாகும் இன்பங்களை ஒக்கும். அவற்றிடையே வேற்றுமை உளதாயினும் இன்பம் ஆதலில் வேற்றுமையின்மை பற்றி, ``பிறழாத ஆனந்தம்`` என்றார். `சிந்தையுள்ளே நிற்கும் சிவனை ஞானிகள் சுகோதயனாகவும், சுக வாரியாகவும் உணர்ந்து இன்புறுவர்` என்பதாம்.
இதனால், சிந்தையில் உள்ள சிவனது இன்ப நிலையை உணர்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பொழிப்புரை :

பொருள்களை உணர்தற் கருவியாகிய உணர்வும், அவ்வுணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் சிவன் ஒருவனே. அனைத்துப் பொருள்களையும் தக்கவாற்றால் இயைத்துச் செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் தனியே நினைக்கவும் வாரான். ஆயினும் கொத்தாய் உள்ள மலர்களினின்றும் மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயற்பாட்டில் அவன் விளங்குகின்றான்.

குறிப்புரை :

`அவனை அத்தன்மையனாக உணர்தல் வேண்டும்; ஞானிகள் அவ்வாறு உணர்ந்திருப்பர்` என்பதாம்.
`எல்லாம் அவனே` என்றல் அவன் அவற்றில் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியாம். ``அவன்`` என்பது பண்டறி சுட்டு. ``புணர்வு`` என்பது, விடாது பற்றுதல். அஃது அதற்கு ஏதுவாய விருப்பத்தைக் குறித்தது. ``இணரும்`` என்பது பெயரடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. `இணராக்கும்` என்றபடி. இணராக்கல் - கொத்தாக்கல். துணர் - பூங்கொத்து. `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.
இதனால், `அனைத்துப் பொருள்களின் செயற்பாட்டினையும் அவனது செயலாக உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு``
-திருக்குறள் - 355.
என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 3

துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு மலர்க் கந்தம்போலத் துள்ளி நிற்கின்ற சிவன் தன்னை நினைந்திருப்பவர் குறையை முடிப்பவன். வேதத்தை ஓதும் அயன், மற்றும் மால் முதலியோருடைய தலைக்குள் இருந்து அறிவைப் பிறப்பிப்பவனும் ஆவன். ஆகையால் அவனையே நினைத்து அவன் திருமுன்பில் இரு.

குறிப்புரை :

`இருப்பின் உனக்குக் குறை உண்டாகாது` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``கேள்வி`` என்றது `சுருதி` என்றபடி. சிவனது திருமுன்பிலே (சந்நிதியிலே) இருத்த லானது புற உலகை நோக்கும்பொழுதும் அவற்றின் இயல்பினைச் சிவனது அருளாகவே கண்டிருத்தலாம். ``மறையவன், மாதவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், சிவனைச் சேர்ந்திருப்பவர் செம்மையராய் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவானான் என்விழித் தானே.

பொழிப்புரை :

மின்னல் மின்னினாற்போலத் திடீரெனத் தோன்றி மறைந்த ஓர் ஒளியால் மூடிக்கிடந்த எனது அறிவாகிய கண்ணைத் திறந்தேன். திறந்தவுடன் சிவன் அக்கண்ணில் என் அறிவினுள்ளே அறிவாய் விளங்கினான்.

குறிப்புரை :

இடையிரண்டு அடிகள் சிவனது இயல்பைக் குறித்து நின்றன. எனவே, ``தலைவன், இணையிலி, நந்தி`` என்பன ஒரு பொருள்மேற் பல பெயராய் வந்தனவாம். தன் உற்ற சோதி - தன்னை இயல்பாகவே பற்றியுள்ள ஒளி; அஃது அறிவேயாம். அந்த அறிவாகிய ஒளியே மின்னல்போலத் தோன்றி மறைந்தது. அஃதாவது, `சத்தி நிபாதம். முதற்கண் ஆன்ம அறிவில் ஓர் அதிர்ச்சி உண்டாகும் படி தோன்றிப் பின் மெல்ல முதிர்ந்தது` என்பதும், `அதனால் எனது அறிவு சிவத்தை அறியும் நிலையைப்பெற்றது` என்பதும், அதனைப் பெற்றபின் சிவன் அறிவினுள் அறிவாய் விளங்கினான்` என்பதும் கருத்து. அறிவினுள் அறிவே சிவஞானம். `விழிக்கண்` என ஏழாவது விரிக்க. அறிவு, ``சிந்தை`` எனப்பட்டது. `சிந்தையை விழித்தேன்` என்க. ``விழித்தேன்`` என்றது குறிப்புருவகம்.
இதனால், சத்தி நிபாதத்தில் திருவருள் மிக்கு விளங்க, அதனாலே பெற்ற சிவ தரிசனத்தை எய்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.

பொழிப்புரை :

உண்மையாயும், ஞானமாயும், உள்ள ஒப்பற்ற பரம்பொருள் அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கும். அந்த ஆனந்தம் ஆன்ம அறிவு இருந்துகொண்டிருக்கும் பொழுது இராது. (எனவே, ஆன்ம அறிவு தோன்றாத நிலையே அனுபவமாம்.) ஆயினும் ஆன்ம அறிவு உள்ளபொழுது மேற்கூறிய ஆனந்தத்தைக் காட்டுகின்ற அருள் ஒளி உளதாகும். (அந்த அருள் ஒளியால் சிவத்தை உணர்தல் சிவ தரிசனமாகும்.) அதன் பின் அருள் ஒளி ஆன்ம அறிவை விழுங்கி நிற்கும் நிலை நின்மல சிவ துரியமாகும். (இதுவே சிவயோகமாம்.) இத்துரியத்துள் விளங்குகின்ற அருள் ஒளியே ஆனந்த அனுபவமாகிய பர துரியத்துள் ஆன்மாவைச் செலுத்து.

குறிப்புரை :

``நில்லா`` என்னும் எதிர்மறைப் பெயரெச்சம், ``சிவானந்தம்`` என்பதனோடு முடிந்தது, சிவானந்தப் பேரொளி - சிவானந்தத்தைக் காட்டும் பேரொளி. சுத்தம் - நின்மலம். அஃதாவது மலம் நீங்கினும் அதன் வாசனை நீங்காமையால் ஆன்ம அறிவு `யான், எனது` என முனைந்து நிற்றல் இன்மை எனவே, இம்முனைப்பின்றி பேரொளியாம் நிற்றலே சுத்தப் பிரம துரியம் ஆதல் அறிக. சிவத்தை, ``பிரமம்`` என்றார். ``துரியம்`` என்றதன்பின், ``துரியத்துள்`` என்றது. `அதனினும் மேலான துரியத்துள்` என்றதாம். ``உய்த்தல்`` என்னும் தொழிற்பெயர் உய்ப்பதாகிய வினைமுதலைக் குறித்தது. இதன்பின் ``துரியம்`` என்றது, முற்கூறிய பிரம துரியத்தை.
இதனால், `ஆனந்த அனுபவமே சிவபோக நிலை` என்பதையும் அருள் அனுபவம் `சிவ யோக நிலை` என்பதையும் விளக்கும் முகத்தால், அவற்றிற்கு முன் நிற்கும் சிவ தரிசன நிலை உயிர் சிவஞானம் கண்ணாகச் சிவத்தை உணரும் நிலை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரனல்லன் நீடும் பராபரன் அல்லன்
உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன்
தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும்
அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.

பொழிப்புரை :

``பரனாய்ப் பராபரன் ஆகி``9 என்னும் மந்திரத்திற் கூறியபடி சிவ ரூபத்தில் `பரன்` முதலிய இயல்பினனாய் வேறு தோன்றுகின்ற சிவன், சிவ தரிசனத்திலும் அத் தன்மையனாய், அவற்றிற்கு மேற்பட்ட சிவயோக சிவ போகங்களில் அவ்வாறு காணப்படாது அவற்றைக் கடந்து ஆன்மாவைத் தன்னுள் அடக்கி அருளையும், ஆனந்தமாயும் விளங்குவன்.

குறிப்புரை :

இது, ``பரனாய்ப் பராபர னாகி`` என்னும் மந்திரத்துட் கூறியவற்றை எதிர்மறுத்துக் கூறுமாற்றால், சிவரூப சிவதரிசனங்கட்கு மேற்பட்ட நிலைகள் உளவாதலைக் குறித்தது. `அதனால் அவற்றை அடைந்தார் புறப் பொருள்களை நோக்குமிடத்து சிவயோக நிலையில் நின்றே நோக்குதல் வேண்டும் என்பது கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 7

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.

பொழிப்புரை :

`வீடு பேறு` என்பதில் வீடு - விடுதல். பேறு - பெறுதல். விடுதல் பாசத்தை; பெறுதல் பதியை. வீடும், பேறுமே இங்கு ``முத்தியும், சித்தியும்`` என ஓதப்பட்டன. முற்றிய ஞானத்தோன் - இவ்விரண்டன் இயல்புகளையும் முற்றும் உணர்ந்தவனே நிறை ஞானி -யாவான். ``இருமை வகைதெரிந்து ஈண்டும் அறம் பூண்டார்``3 என்றார் திருவள்ளுவரும். இத்தகையோன் தனது ஞாநத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அதனானே அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, அவ்வாற்றால் சிவத்துள் அடங்கி, அதனானே அறிவர் யாவரும் ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் ``தலைப்படுதலால், சகலத்தில் சுத்தாவத்தை யாகிய சிவானந்தத்தை அடைந்த ஞானியர் ஆவர்.

குறிப்புரை :

``மா சத்தியுள் நின்று`` என்பதை, பரந்தன்னுள் நின்று`` என்பதற்கு முன்னே கூட்டுக. ஓர்த்தல் - ஆராய்தல். தத்துவம் - மெய்ப் பொருள். ``சுத்தி`` என்றது சகலத்திற் சுத்தத்தை. ``அகன்றோர் போதர்`` என்பது வேறு முடிபாகலின், ஒருமை பன்மை மயக்கம் இன்று.
இதனால், நின்மலாவத்தையைக் கடந்து பராவத்தையை எய்தினோர் அந்நிலையினின்றும் ஒரோ ஒருகால் இறங்கினும் சிவயோக நிலையினின்றும் தாழார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன்
உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.

பொழிப்புரை :

எவ்வகை அவத்தையிலும் `துரியாதீதம்` என்பது உயிர் தன்னை மறந்திருக்கும் நிலையாகும். ஆகவே, நின்மலா வத்தைத் துரிய துரியாதீதங்களே யாயினும் அந்நிலைகளை அடைந்த ஆன்மா புறத்துச் செல்லுதல், அகத்தில் மீளுதல், பொருள்களை நோக்கி ஓடுதல் என்பனவாகிய தனது இயல்பு அனைத்தினும் நீங்கி நிற்கும் என்றால், அவ்வான்மாவை முன்னது போல வைத்து, `சீவன்` என்று சொல்வது எங்ஙனம்?

குறிப்புரை :

`கூடாது` சிவம் என்றே சொல்லுதல் வேண்டும்` என்பதாம். முன் மந்திரத்தில் ``சுத்தி`` நின்மலாவத்தை இடம் பெற்றமையால் இங்கு, ``துரிய அதீதம், துரியம்`` எனப்பட்ட நின்மலாவத்தைய ஆயின. புரிதலுக்கு, `ஆன்மா` என்னும் எழுவாய் வருவிக்க. விள்ளா - விள்ளாது; இடைவிடாமல் மிளிர்தல். இங்கு அறிவு செல்லுதல். ``விரியும்`` என்பது முதலிய `செய்யும்` என்னும் எச்சங்கள் மூன்றும் அடுக்கி, ``உரு`` என்னும் ஒரு பெயர் கொண்டன. `உரு` என்றது இயல்பை. திரிதல் - வேறுபடுதல்; நீங்குதல். ``உரைப்பது`` என்பது தொழிற்பெயர். `முன்னது போல` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
பராவத்தையை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமைக்கு நின்மல துரியாதீதங்களை எடுத்துக் காட்டினார்.
இதனால், சொரூப சிவனை எய்தினோர் சீவத் தன்மை எய்தாமை உவமை முகத்தால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.

பொழிப்புரை :

நூல்களில் சொல்லப்பட்ட முத்தி, வரிசைப்பட்ட `துரியம், துரியாதீதம்` என இரண்டாகும். அவற்றுள் துரிய முத்தியாவது, ஆதியாய், ஆயினும் பரத்தோடு வேற்றுமையில்லாத சிவத்தை அடைந்து நிற்றலும், துரியாதீத முத்தியாவது, அநாதியாகிய பரத்தை அடைந்து நிற்றலும் ஆம் பரத்தை அடைந்த உயிர் பின் எவ்வாற்றானும் மீளா நிலையே அனைத்தும் நீங்கிய முடிநிலை முத்தியாகும்.

குறிப்புரை :

அடைவு - வரிசை. ``அடைவே`` எனக் கூறியதனால் துரியம் முன்னதும், துரியாதீதம் பின்னதும் ஆதல் விளங்கிற்று. `பரம், சிவம்` என்பன ஒன்றேயாயினும் தடத்த சிவத்தை, `சிவம்` என்றும், சொரூப சிவத்தை, `பரம்` என்றும் நாயனார் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார். அதனானே சகலத்திற் சுத்தாவத்தயை, `சிவாவத்தை` என வைத்து தனிச் சுத்தாவத்தையை, `பராவத்தை` என்றார். பரத்தை ``அநாதி`` என்றமையால், சிவம் ஆதியாதல் விளங்கிற்று.
`பரம், சிவம் வேறல்ல` என்றற்கு ``பரத்தொடு பேதம் இலாச் சிவம்`` `பரத்தொடு` எனவும் `சிவத்தை` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. ``சிவத்தை எய்தும் துரியம்`` என உடம்பொடு புணர்த்துக் கூறினமையால், `துரியமாவது சிவத்தை எய்துதல்` என்பது பெறப் பட்டது. சிவ நிலையிலும் அதீத நிலை உளதாயினும், அது நிலை பெறாது துரியமே மேற்பட்டு நிகழ்தலால், சிவ நிலையை, ``துரியம்`` என்றே கூறினார். இந்நிலை `சீவன் முத்தி` என்னும் முதல் முத்தியாம். ``சொரூபம்`` என்றது, சொரூபத்தை அடைந்த நிலையைக் குறித்தது. ``ஏதம் இலா நிருவாணம்`` என்றதனால், சொரூபத்தை அடைந்த நிலையை அனைத்துக் குற்றங்களும் பற்றற நீங்கிய `முழுத் தூய நிலை` என்றதாயிற்று. இது பரமுத்தி - முடிநிலை முத்தி. இதனை அடைந்த பின் மீட்சியில்லை. நிருவாணம் - முழு நீக்கம். `கரும நிருவாணம்` எனப்பட்டதும் அது.
`பராவத்தையிலும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகள் உள` என்பது மேற்காட்டப்பட்டமையின் அதனுள்ளும் அதீத நிலையை எய்தினோர்க்கே மீட்சியில்லை ஏனையோர்க்குச் சிவனது சங்கற்பத்தால் சிறுபான்மை மீட்சி உண்டாதலும் உண்டு.
இதனால், `முத்தி பேதம் இரு வகைத்து` என்பதும் `அவற்றுட் பின்னதே முடிநிலை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

பொழிப்புரை :

பரத்தை எய்துதலாகிய அதீத நிலையை அடைந் தவர்களே உலகர் செய்யும் செயல்களினின்றும் முற்றும் நீங்கினவராவர்.

குறிப்புரை :

எனவே, `ஏனையோர் பயிற்சி வயத்தால் ஒரோ ஒருகால் அச்செயல்களைத் தம் இழப்பில் நின்று செய்யினும் செய்வர்` என்பதாம். ``அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை``3 என அப்பர் குறிப்பு மொழி -யால் அருளிச்செய்தது பரத்தை எய்தினோர் நிலையையே ஆகும்.
பரத்தின் சிறப்பை இதனுட் பலவாறாக எடுத்தோதினார். பரத்தை, ``பரம்பொருள்`` என்றார், ``கண்ணுதல், சோதி`` எனக் குறித்ததும் அதனையே. இவை பொருட் பின்வருநிலையணி. கற்றல், இங்கு ஆசிரியர்பாற் கேட்டல். கருதுதல், சிந்தித்தல். ``சுற்றம் அற்றவர்`` என்பதில் `சுற்றம்` என்பது அம்முக்குறைந்து நின்றது. அவர் முற்றத் துறந்தோராவர் இங்ஙனம் கூறியது தெளிவெய்தினோரை. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, ``உற்றவர்கள்`` என்பதனோடு கூட்டியுரைக்க.
இதனால், பரமுத்தியின் சிறப்பு வகுத்தோதி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

பொழிப்புரை :

சிவன் கொடுத்த பொருளை அஃது அன்னதாதலை அறியாது தம்முடையனவாகக் கருதிச் சிவனுக்கும், சிவனடியார் களுக்கும் கொடுக்க மறுத்தவர்களது பொருளை மூர்க்க நாயனார் சூதாடிப் பறித்ததுபோல தம்மையுணருமுகத்தால் தமையுடைய தன்னை உணரற்பால வாகிய உயிர்கள் அதனைச் செய்யாது, தம் கருவி கரணங்களைத் தாம் விரும்பும் வகையிற் செலுத்தி அல்ல லுறுதலை அறிந்த சிவபெருமான் அவைகள் அறியாமல் அவை களோடு கூடியிருந்தே அக்கருவி கரணங்களின் வழித் தன் வழியில் அவைகளைத் திருப்புதலாகிய சூதாட்டத்தினைச் செய்வதாகக் குறிப்பிட்டு, ஆயினும், சூதாடுவோர் பிறர் தமக்கு எதிர் இருந்து தம் பொருளைக் கவர முயலுதலை நன்கு அறிதல் போல உயிர்கள் சிவனை அறிந்து கொள்ளவில்லை` எனக் கூறுகின்றார்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்த பொருளாயினும் அப்பொருளை கட்குடிக்கும், கவறொடுதலுக்கும் ஒருவன் பயன்படுத்துவானாயின் அஃது அவனுக்குப் பாவமேயாதல் போல, மூர்க்க நாயனார் சூதாடிப் பொருள் ஈட்டினாராயினும் அதனை அவர் சிவனுக்கும், சிவன் அடியார்களுக்குமின்றி, வேறுவகையில் செலவிடாமையால், அஃது அவர்க்குச் சிவ புண்ணியமேயாயிற்று. வாதவூரடிகள் பாண்டியன் பணத்தைச் செலவிட்டது இத்தகையதோ. சிவன் மறைந்து நின்று செய்யும் செயலும் இப்படிப்பட்டதே.
உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்தபோதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியிற் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று மாற்று கின்றான். அஃது ஒரு சூதாடியின் செயல் போன்றுள்ளது. ஆகவே சிவபெருமா -னாகிய சூதாடிக்கு உயிர்கட்கு அவனால் தரப்பட்ட உடம்புகளே சூதாடும் பலகைகள். சாக்கிரம் முதலிய மூன்றவத்தை இடமாகிய புருவ நடு, கண்டம், இருதயம் ஆகியவையே சூதாடு களம். உடம்பின் புறத்தும், அகத்தும் உள்ள கருவிகளே உருட்டியோ, குலுக்கியோ பந்தயம் பெறும் கருவிகள். எழுத்தும், சொல்லும், சொற்றொடருமாய் உணர்வைத் தரும் மொழிகளே. அக்கருவிகளின் வழிப்பெற்ற பந்தயத்தின் படி காய்களை இடம் பெயர்த்து வைத்து, வெற்றி தோல்வியைத் துணிகின்ற வரைகோடுகள் அல்லது கட்டங்கள், இவை -களில் பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.

குறிப்புரை :

`இஃதொரு பெருவியப்பு` என்பது குறிப்பெச்சம். ``ஐந்து`` என்றது உபலக்கணம் ஆதலின் தொண்ணூற்றாறையும் கொள்க. கண் - இடம்; களம். ஆயம் - தாயம். அது பத்து, பன்னிரண்டு முதலாகக் கொள்ளப்படும். `ஆயத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. பொருவது - பொருது, வெற்றி தோல்வி அறியும் கூட்டம்; வரைகோடுகள். அக்கரத்தையே கூறினாராயினும் அவற்றால் ஆகும் `பதம், வாக்கியம்` என்பனவும் கொள்ளப்படும். ஏயஏவிய `உடன் இருந்து` என்க. `உலகர் ஆடும் சூதுபோல்வதன்று; வியப்பைத் தரும் சூது` என்றற்கு ``மாயக்கவறு`` என்றார் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றிச் சிவனைக் ``கள்ளர்`` எனக் கூறிற்றுத் திருவுந்தியார்.8 குமர குருபர அடிகளும் ``வஞ்சித்த எங்கும் உளன் ஒருவன்`` என்றார். 9 மறைப்பு - மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்ற உணர்தல்.
இதனால், சிவன் தனது மறைத்தற் சத்தியை (திரோதான சத்தியை)க் கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு)
ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை :

அனைவரும் சிறிதும் துன்பம் இன்றி மிக இன்பத்துடன் நடந்து செல்லத் தக்க நல்ல வழி ஒன்று இருக்கின்றது. ஆயினும் முட்புதர்கள் பல அதனை மூடிக்கிடக்கின்றன. அதைத் தெரிந்து அப்புதர்களை நீக்கி நல்வழியைக் கண்டு நடப்பவர் மிகச் சிலராகவேயிருக்கின்றனர். அந்தச் சிலர்மேல்தான் எனது உள்ளத்தில் உள்ள அன்பு கரந்து பாய்கின்றது.

குறிப்புரை :

`நல்ல வழி` என்றது, நாயனார், ``சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` எனவும், ``சேயினும் நல்லன், அணியன் நல்ல அன்பர்க்குத் - தாயினும் நல்லன் தாள்சடையானே``3 எனவும் முதற்கண் கூறி அவனை அவ்வாறுணர்ந்து நிற்கும் நெறியை.
தூறுகளாவன, அச்சிவனை, ``அவன் தாமச குணத்தன், பித்தன்; சாம்பலைப் பூசிக்கொண்டு, எலும்பு மாலைகளையும், தலைமாலைகளையும் அணிந்துகொண்டு சுடுகாட்டில் ஆடுபவன்`` என்பனபோல் இகழ்ந்து கூறும் உரைகள்.
``இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்``l
என்னும் அம்மை திருமொழியையும் நோக்குக. அதனுள், ``பொருள்` என்றது, `உண்மை` என்றபடி. ஈற்றடி, `நல்லார்கண் நல்லான் அன்பு செய்வர்` என்பதை உணர்த்தி நின்றது.
இதனால், `சிவநெறியாகிய நன்னெறியை இகழ்ந்து கூறும் புன்னெறிகள் உள; அவற்றை அறிந்து விலக்கி அந்நன்னெறிக் கண் செல்ல வல்லார் மிகச் சிலரே` என்பது உள்ளுறையாக உணர்த்தப் பட்டது. ``சைவ சித்தாந்தத் - தேனமு தருந்தினர் சிலரே``l எனக் குரம குருபர அடிகளும் குறித்தருளினார். எனக் குமர குருபர அடிகளும் குறித்தருளினார்.

பண் :

பாடல் எண் : 3

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனைஉள
ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை
ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.

பொழிப்புரை :

ஆறு தெருக்கள் - அறிவினால் மிக்க அறு சமயங்கள். அவை அனைத்தும் சந்திக்கின்ற சந்தியிடம் - பக்குவான்மா. அதற்கு வீடு பேறாகிய சாற்றைத் தருவனவாய் முறைப்பட மேட்டு நிலத்தில் உயர்ந்து உயர்ந்து நிற்கும் நான்கு பனை மரங்கள் - சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆறு தெருவில் செல்பவர்களில் யாரும் அந்தப் பனை மரங்களில் ஒன்றிலேனும் ஏற இயலாது. அவற்றை விடுத்துச் சிவ குருவினை அருளால் சிவ நெறியை அடைந்தோரே அவற்றில் ஏற இயலும் ஆகையால், அந்தச் சிவநெறியே அந்தப் பனைமரங்களில் ஏறுதற்கு அரிதல் கிடைக்கும் ஏணி. அந்த ஏணி வழியாக நான் அவற்றில் முறையாக ஏறினேன். ஏறியவுடன் எழுவகைப் பிறவியாகிய கடல்கள் ஏழினது கரையையும் கண்டுகொண்டேன்.

குறிப்புரை :

`நாட்டில் வாழ்பவர்கள் கடற்கரையை அங்கிருந்தே காண வேண்டுமாயின் உயர்ந்த பனைமரத்தின்மேல் ஏறிக் காண வேண்டும். அதுபோலப் பிறவிக் கடலின் கரையை உலகியலில் நின்றே காணவேண்டுமாயின் மிக மேட்டு நிலத்தில் உள்ள ஞானமாகிய பனை மரத்தின்மேல் ஏறிக் காணவேண்டும். அதை அந்த மேட்டு நிலத்தில் சென்று அடைவதற்கு அதற்குக் கீழே கீழே `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்று பனை மரங்கள் உள்ளன. அவற்றில் முதலில் உள்ள `சரியை` என்னும் பனை மரம் முதலாக முறையே ஏறிச் சென்று, ஞானமாகிய பனை மரத்தை அடைந்து அதில் ஏறி நான் பிறவியாகிய ஏழு கடல்களை நான் கண்டுவிட்டேன்` என்கின்றார் நாயனார்.
`ஆறு தெருக்கள் சந்திக்கின்ற சந்திப்பை அடைந்த ஒருவன். தான் குறித்த மேலிடத்தை அடைதற்கு எந்தத் தெரு வழியாகச் செல்வது என்று திகைப்பான். அப்பொழுது அருளும், அறிவும் உடையான் ஒருவன், `இவைகளில் எதன் வழியாகவும் செல்லாமல், இதோ தெரிகின்ற இந்த பனைமரங்கள் வழியாக முறையே ஏறிச் சென்று அடைக` எனக் கூறி உதவி செய்தாற்போல ஆறு சமயங்களைக் கண்டு திகைத்த எனக்கு எங்கள் நந்தி பெருமான் வழிகாட்டினார் என்றபடி.
பனைமரத்தில் ஏறி இளைத்தவர்கட்கு ஓர் ஆறுதலாகக் கிடைப்பது அம்மரத்தின் சாறு. அதனை, `பத நீ` என்பர். அது போலச் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன் சாலோக சாமீப சாரூபங்களாகிய பத முத்திகளும் ஞானத்தில் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன்கள் அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி` - என்னும் அபர முத்திகளுமாம் ஆதலின் அவற்றைக் குறித்தற்கு, ``சாறு படுவன நான்கு பனை`` என்றார்.
இதனால், `ஒன்றோடொன்றொவ்வாத சமயங்களின் வழிச்செல்லாது, சித்தாந்த சைவ நெறியைச் சிவ குருவழியாக அறிந்து, அதில் சரியை, கிரியை, யோகங்களில் வழி ஞானத்தை அடைந்து, அது வழியாகச் சிவப்பேற்றினைப் பெறுதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

பொழிப்புரை :

என்னுடைய தோட்டத்தை ஒருசிலர் தங்களுடைய தாக ஆக்கிக்கொண்டு அவர்கள் விருப்பம்போல அதனைப் பயன் படுத்தி வந்தனர். இருப்பினும் அவர்களுக்கிடையே நான் ஒட்டி ஒன்றிச் சிறிது இடத்தைத் தோண்டிக் குழிசெய்து, எனக்குப் பழக்க -மான உணவாகிய கத்தரிக்காயைப் பெறவேண்டி அதன் விதையை ஊன்றினேன், ஆயினும் அந்த விதையினின்று பாகற் கொடி முளைத்துப் படர்ந்தது. படர்ந்த அக்கொடியோ பூசணிப் பூவைப் பூத்தது. அந்தப் பூவோ வாழைக் காயைக் காய்த்தது. அந்தக் காய் பழுத்ததைப் பார்த்துவிட்டு, முன்பு வலிசெய்து குடியிருந்த அந்த அற்பர்கள், `ஐயா, உங்கள் தோட்டம் மிகப்பெரிய புதுமைகள் விளைகின்ற தோட்டமாய் உள்ளது; உங்களுக்கு ஒரு கும்பிடு` என்று சொல்லிக் கும்பிட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.

குறிப்புரை :

`காய்களில் கத்தரிக்காயையே உண்டு களித்து வந்த நான் கனிகளில் சிறந்த வாழைக்கனி தானாகக் கிடைத்ததை உண்டு, அந்தக் கத்தரிக்காயை வெறுத்துவிட்டுப் பேரானந்தம் அடைந்தேன்` என்பது குறிப்பெச்சம்.
தோடம் - ஆன்ம அறிவு. அதில் குடியிருந்த அற்பர்கள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய மும்மலங்களின் காரியங்கள். தோண்டிய குழி குருவை அடைந்து வழிபட்டது. அதில் கத்தரி விதைத்தது, `குருவும் இவ்வுலகில் நல்வாழ்வை அடைய வழிசொல்வார்` என்று நினைத்து அவர உபதேசத்தைக் கேட்டது. கத்தரி விதையினின்றும் பாகற்கொடி முளைத்தது. குருவினுடைய உபதேசம் காதில் விழுந்தவுடன் உலகத்தின்மேல் வெறுப்புத் தோன்றியது. இது, `கடல் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டுவான்` என்று கருதித் திருவெண்காடர் வளர்த்த மகன் அவருக்குக் காதற்ற ஊசியை வைத்து விட்டு மறைந்தது போல்வது. சிலருக்கு இவ்வாறு ஞானம் எதிர்பாராத வகையில் கிடைப்பதுண்டு. திருவாதவூரடிகள் ஞானம் பெற்ற வரலாற்றையும் இங்குக் குறிக்கலாம். இறைவன் சுந்தரரைத் திருமுது குன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கூடலையாற்றூரில் கொண்டு விட்டதைக் கூறலாம். பாகற்கொடி பூசணிப் பூவைப் பூத்தது, உலகத்தை வெறுத்த வெறுப்புணர்ச்சியிலிருந்து வீடுபேற்றில் விருப்பம் பிறந்தது. அவ்விருப்பம் ஆன்மாத் தான் கொள்ளத்தக்க விருப்பமாய் அதற்கு அழகு செய்தல் பற்றி, அதனை `பூசு அணி` எனச் சிலேடைப் பொருள்படக் கூறினார். பூசு பூசப்படும் பொருள். அணி - அணியப்படும் பொருள். ``வாழை`` என்பதும் அவ்வாறு `வாழ் ஐ` எனப் பிரிந்து சிலேடைப் பொருள் உணர்த்திற்று. வாழ் - வாழ்வு. ஐ - வியப்பு; அதிசயம் அதிசயமான வாழ்வு, பேரின்ப வாழ்வு. இதனை, ``நீடு வாழ்தல்``3 என்பார் திருவள்ளுவர். `ஞானம் வந்தபின் மும்மல காரியங்கள் ஓடிவிட்டன` என்றார். `வழுதலை, வழுதுணை` என்பன ஒரு பொருட் சொற்கள். ``புழுதியைத் தோண்டினேன்`` என்பதை முதலிலும் ஈற்றடியை இரண்டாம் அடியின் பின்னும் கூட்டுக.
இதனால், ``ஆசாரியராய் உள்ளவரை அடைந்து வழிபட்டால் நம்மையறியாமலும் நமக்கு ஞானம் பிறக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

பொழிப்புரை :

`ஐ` என்று வியக்கத்தக்க மிகச் சிறிய பொருளையே (கடுகு, மிளகு, கொத்துமல்லி போன்ற பொருள்களையே) விளைக்கக் கூடிய விதைகளை இட்டால், அவற்றிலிருந்தே ஆனைபோன்ற மிகப்பெரிய (மாங்காய், தேங்காய், பலாக்காய் போன்ற) பொருள் -களையே விளைவிக்கின்ற அதிசய நிலம் ஒன்று உண்டு. அஃது அத்தன்மைத்தாதலை அறிந்து அதில் விதை விதைக்கின்றவர்கள் உலகத்தில் பலர் இல்லை. அந்த நிலம் சிவன் மனம் வைத்தால், தவறாமல் எளிதில் அடையப்பெறுவதாகும்.

குறிப்புரை :

`ஐ` என்பது வியப்புப் பொருட்டாய், வியப்பிற்குக் காரணமான, ``புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்`` என்னும் நான்கனுள் சிறுமை பற்றி வந்தது. ஆனை, உவமையாகுபெயராய் அதுபோலும் பொருளை உணர்த்திற்று. ``தெளிவு`` என்பது தெளியப்படும் தன்மை குறித்து நின்றது. ``மனம்`` என்றது. மனத்தின் உவகையை, `நிலம், சிவனது திருமேனி வகைகள்` எனவும், விதைகள் அவற்றிற் செய்யும் சரியை, கிரியை, யோகம் என்னும் வழிபாட்டு வகைகள் எனவும் கொள்க. சிலந்தி ஒன்று வெண்ணாவற் கீழ் உள்ள இலிங்கத்திற்கு வாய் நூலால் பந்தலிட்டுச் சோழ மன்னன் ஆயினமையும், எலியொன்று, திருக்கோயில் உள்ள விளக்கைத் தூண்டி, மூவுலகங்களையும், அடிப்படுத்து ஆண்டமகாபலிச் சக்கரவர்த்தியாயும் ஆயினமை போன்றவற்றை வைத்து இவ்வாறு கூறினார். முதல் இரண்டு அடிகளில், பெரியோர்க்குச் செய்த உபகாரம் பொருளால் சிறிதாயினும் பயனால் பெரிதாதல் அறநூல்கட்கெல்லாம் உடன்பாடாதலின் தேவர்க்கெல்லாம் தேவனாம் பெரியோனுக்குச் செய்யும் வழிபாடு பொருளால் மிகச் சிறிதாயினும், பயனால் மிகப் பெரிதாம்` எனச் சிவபுண்ணியத்தின் சிறப்பை உள்ளுறை வகையால் உணர்த்தி அதனைச் செய்யாதார் நிலைக்கு இரங்கியவாறு. `அச்செயின்` எனச் சுட்டு வருவிக்க. ``தவமும் தவம் உடையார்க்கு ஆகும்``8 என்றபடி. `சிவபுண்ணியத்தில் மனம் செல்லுதற்கும் சிவ புண்ணியம் வேண்டும்` என்பது குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

பொழிப்புரை :

மக்களில் ஒவ்வொருவருக்கும் உள்ளது ஒரு நிலந்தான். அந்த நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நீர் எளிதில் பாய்ந்து விளைவைத்தரக் கூடியதாய் உள்ளது மற்றை இரண்டு பகுதிகள் நீர் செல்லாது, முரம்பாய்க் கிடக்கின்றன. மூன்றிலும் உழமுடியாதபடி கருங்கற்கள் உள்ளன. இவற்றைச் சமப்படுத்தி உழ வல்லவர்கட்கு அந்த ஒரு நிலமே வேண்டுமளவு நீர் தேங்கி நிற்கின்ற நிலமாய், நல்ல விளைவைத் தருகின்றது.

குறிப்புரை :

ஒரு நிலம் - ஆன்ம அறிவு. மூன்று பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று அவத்தைகள் (இம்மூன்றையும் சகலத்தின் பகுதியாகவே கொள்க.) பள்ள நிலம், அஃதாவது, நன்செய் - சுத்தாவத்தை. `நின்மலாவத்தை` எனப்படுவதும் இதுவே. இதில் திருவருளின் வழிச்சிவம் பிரகாசித்து நிற்றலால், நீர் நன்கு பாயும், ``பள்ளச் செய்`` எனப்பட்டது. ஏனைக் கேவல சகலங்கள் திருவருள் விளக்கம் இன்றி இருத்தலால், ``பாழ்ச் செய்`` எனப்பட்டன. ``கல்ல செய்`` என்பது, எதுகை நோக்கித் திரிந்தும், ஒற்றுமிக்கும் நின்றது. கல்ல செய் - கற்களை உடைய நிலம். இங்ஙனம் கொள்ளாது, `கள்ளம்` என்றே கொள்ளின், கள்ளத்திற்கும், செய்க்கும் இயைபு யாதும் இன்மை அறிக. `கல்லச் செய்` என்றே பாடம் ஓதி `ஒற்று மிக்கது விகாரம்` என உரைப்பினும் ஆம். ``உள்ளச் செய்`` என்பதிலும் சகர ஒற்று, விரித்தல் `இள்ள செய்யாகிய அங்கே` என்க. ``உள்ள செய்`` என்றதனால் வேறு செய் இன்மை பெறப்பட்டது. ``உழவு செய்வார்`` என்றது, சொல்லுவாரது குறிப்பால், `செய்ய வல்லார்க்கு` எனப் பொருள் தந்தது. பாழ்ச் செய்யிலும், கற் செய்யிலும் உழ வல்லவர் அரியராதலை அறிக. நிலம் ஒன்றையே தொல்காப்பிடனார் பகுதி பற்றி ``காடுறையுலகம், மைவரையுலகம்`` என்பன முதலாய்ப் பலபோலக் கூறினாற்போல, இவரும் ஒரு செய்யினையே பகுதி பற்றி, ``பள்ளச் செய், பாழ்ச் செய்`` எனப் பல செய்கள்போலக் கூறினார். இம்மூன்றிலும் நிறைந்துள்ள கற்களாவன ஆணவ மலத்தின் சத்திகள். ஆகவே, இங்கு, சுத்தம் ஆவதும் சகலத்திற் சுத்தமே. மூன்றையும் சமப்படுத்தி உழுதலாவது, குருவுபதேசத்தை நனவிலே மட்டுமன்றிக் கனவிலும் மறவாது உணர்தலாம்.
``துஞ்சலும், துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும்``3
``துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை``9
என்றாற்போல ஆசிரியன்மார் அருளிச் செய்தலை அறிக. வெள்ளம் - நீர்த் தேக்கம். ``வெள்ளச் செய்யாகி`` என்றது, முதற்கண் கூறிய, ``பள்ளச் செய்`` போலவே ஆகி - என்றதாம்.
இதனால், `குரு உபதேசத்தை எந்நிலையிலும் மறவாது உணர்வார் உலகில் உலாவினும் முத்தராய் விளங்குவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
காலணை கோலிக் களர்உழு வார்களே.

பொழிப்புரை :

மூன்றாகப் பொருந்தியுள்ள ஏர்கள் மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. (அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்றும் நாடிகள் வழியாகச் செல்லும் பிராண வாயுக்கள், வழி பற்றி இவை மூன்றாயின.) அந்த ஏர்கள் அனைத்தும் உழுதுகொண்டிருப்பது முக்காணி (முக்கால் மா) அளவான சிறிய நிலத்தையே, (ஒரு மாவில் நான்கில் ஒரு பங்கு `காணி` என்னும் பெயரை உடையது. ஆறு ஆதாரங்களில் முதலாவதாகிய மூலாதாரம் முக்கோண வடிவினது ஆதலின், அதனை ``முக்காணி`` என்றார். சுவாசம் இயல்பாக மூலாதாரத்தினின்று எழுந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது) அந்த ஏர்களைத் தடை செய்து செலுத்தினால் அவை குறித்த வழியில் இயங்கிப் பயன் தர வல்லன அவ்வாறு அவற்றைக் குறித்த வழியில் செலுத்திச் சில சொற்களால் அதட்டி அடக்கி, நடுவில் உள்ள நல்ல நிலத்தை உழுதால் நல்ல பலன் கிடைக்கும். மக்கள் அவ்வாறு அந்த நல்ல நிலத்தை உழாமல், வடிகாலை மட்டும் பெரிதாக்கிக் களர் நிலத்தை உழுது கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம். `மூ அணை ஏரும்` என்பதில், `மூன்றாய் அணைந்த ஏர்களும்` என ஆக்கம் வருவிக்க. முற்றும்மை கொடுத்தமையால் `உள்ள ஏர்கள் மூன்றே` என்பது பெறப்பட்டது. ``தாம்`` என்றது உழுபவரை. அவர் அணைகோலலாவது, உழும் பகடுகளைத் தம் வழிப்படுத்தி ஓட்டுதல். குறித்த வழியை, குறிக்கோளாதல் பற்றி, ``தறி`` என்றார். ``பாய்ந்திடும்`` என்பது, பாய்ந்து பயன் விளைக்கும்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. யோகம் செய்வார் மூலாதாரத்தினின்றும் எழுத்து இயங்கும் வாயுவைத் தடுத்துச் சுழுமுனையில் செலுத்தி, அது பிரமரந்திரத்தில் சென்றபொழுது நா அடியால் மேல் துளையை அடைந்து நிறுத்துவர். அதனையே, ``நா அணை கோலி`` என்றார். எனினும் சூனிய சம்பாடணையாகக் கூறலால், `நா` என்பது ஆகுபெயராய் அதனுள் எழும் சொல்லைக் குறித்து, ஏர் உழுபவர் அதட்டும் மொழிகளைக் குறித்தது. ``நடுவில் செறு`` என்பதற்கு `நடுவில் உள்ள நல்ல நிலம்` என்பது வெளிப்பொருள். `புருவ நடுவில் வில்லைபபோன்ற வடிவத்தை உடைய ஆஞ்ஞை என்னும் ஆதாரம்` என்பது உள்ளுறைப் பொருள். `பிராண வாயுவை நடுநாடியில் பிரமரந்திரம் வகையில் செலுத்துதலால், மூலாதாரத்தில் அடங்கிக் கிடக்கின்ற குண்டலி சத்தி எழுந்து ஆஞ்ஞையை அடையும். அஃது அவ்வாறு அடைந்தால், உண்டாகும் விளக்க உணர்வுகளும், காயசித்தி முதலிய சித்திகளும் பலவாம். ஆகவே, மக்கள் அதனைச் செய்ய மாட்டாது. பிராண வாயுவை அது போன வழியிலே போக விட்டு, விரைவில் மக்கட் பிறப்பை இழக்கின்றனர்` என்பதாம். கால் - வடிகால்; வெளிப்பொருள். பிராண வாயுவின் இயற்கை இயக்கம்; உள்ளுறைப் பொருள். நிலத்திற்கு வடிகால் இன்றி, வடிகால் மட்டும் இருப்பின் காய்ந்து, கமர் வெடித்துக் கெடும். கனர் - எதுவும் விளையாத நிலம். அவை இடை பிங்கலை நாடிகள். இரண்டு, நான்காம் அடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், `யோகம் பயின்று பயனடைதற்குரிய மக்கள் அதனைச் செய்யாது, காலத்தை வீணடித்துக் கெடுகின்றனர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.

பொழிப்புரை :

(`ஏத்தம்` என்பதுதான் நீர் இறைக்கும் ஏத்தத்தின் பெயர். அஃது அறியாதார் `ஏற்றம்` என்பர்.) ஏத்தம் இரண்டு - இடை நாடி, பிங்கல நாடி. ஏழு தூவு - ஆறு ஆதாரங்களும், சகஸ்ராரமும், (துரவு - கிணறு) மூத்தோன் - `அகங்காரம்` என்னும் அந்தக் கரணம். இதுவே பிராணவாயுவை இயக்குவது. இளையான் - `மனம்` என்னும் அந்தக் கரணம். (பிராண வாயு இயங்குதலாலே உயிர் அறிவு பெற்று விளங்குகின்றது. அந்த அறிவை நீராகவும், அந்த அறிவு நிற்கும் இடங்களைத் துரவாகவும் பிராண வாயுவின் இயக்கத்தால் உயிரின் அறிவு பிரவர்த்திக்கச் செய்யும் செயலை நீரைப் பயன்படுத்த இறைப்ப தாகவும், அறிவு மனத்தின் வழியே சென்று பயன் விளைத்தலின் மனத்தை நீரை வேண்டும் இடத்திற்குக் கொண்டுபோய்ப் பாய்ச்சுபவ னாகவும் கூறினார். உயிர்க்கு அறிவை உண்டாக்கும் கருவியை நீர் இறைக்கும் மூத்த சகோதரனாகவும், அறிவைக் கொண்டு போய்ப் பயன் படுத்தும் கருவையை, நீரை வேண்டுமிடத்தில் பாய்ச்சும் இளைய சகோதரனாகவும் கூறினார்.) பிராண வாயு நடு நாடியாகிய சுழுமுனையில் சென்றால், ஞானமாகிய பயன் விளையும். அதனால் அதனை, ``பாத்தி`` என்றார். பிராண வாயுவை மனம் சுழுமுனையிற் செலுத்தாது வெளியில் செலுத்தி, அஞ்ஞானமே விளையப் பண்ணுதலால் மூத்தோன் ஓர் ஏத்தத்தின் வழியாக (இடைகலை வழியாக) நீரைத் துரவுக்குத் தந்து மற்றோர் ஏத்தத்தின் வழியாக (பிங்கலை வழியாக) வெளியேற்ற, `அந்நீர் பாத்தியிற் பாயாது, பாழ் நிலத்தில் பாய்கின்றது` என்றார்.

குறிப்புரை :

``பழியுடை ஆக்கை தன்னில், பாழுக்கே நீர் இறைத்து``*
என அப்பர் பெருமானும்,
``ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ கால மெலாம்
பாழுக் கிறைத்தேன்``8
என மாணிக்க வாசகரும் அருளிச் செய்தனர்.
கூத்தாடும் ஆடவன் `கூத்தன்` எனப்படுதல்போல கூத்தாடும் மகள் `கூத்தி` எனப்படுகின்றாள். இங்குக் குறிக்கப்பெறுகின்ற இக்கூத்து, அவிநயக் கூத்து. இதனைப் பழங்காலத்தில் விறலியர் (பாணத்திகள்) ஆடியபோதிலும், பிற்காலத்தில் இது விலைமாதர்க்கே உரியதாய் விட்டது. கோழியைப் பெரிதாக வளர்த்தற்கு மிகத் தொல்லை உண்டு. கூத்தி அத்தொல்லைகளுக்கு உள்ளாகிக் கோழியை வளர்ப்பது, பெரும் -பாலும் தனக்காக அன்றித் தனக்கு விலை கொடுத்துத் தன்னிடம் வருகின்ற விடர்கள் மகிழ்ச்சியடைய அவர்கட்கு ஆக்குதற் பொருட்டேயாம். ஆகவே, கூத்தி வளர்க்கும் கோழிகள் அவளையும், அவள் வாயிலாகப் பலரையும் தீநெறியிற் செல்ல ஊக்குவிப்பனவே யாகும். அது பற்றி உலகியலிலே ஊக்கம் பிறப்பிக்கின்ற பிராண வாயுவை, ``கூத்தி வளர்த்த கோழிப்புள்`` என்றார்.
இதனால், `மக்களத் தமது மூச்சினை வாயியோகமாக்கினால் பயன் மிகவிளையும்; அதைச் செய்யாது வீணடிக்கின்றனர் என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.

பொழிப்புரை :

பட்டி - தொழுவம். `பட்டியில்` என ஏழாம் வேற்றுமை உருபு விரிக்க. பட்டி, தூல, சூக்கும பர தேகங்களும், திரோதான சத்தியும். கன்றை, ``குட்டி`` என்றது மரபு வழுவமைதி. குட்டிப் பசுக்கள் - கன்றையுடைய பசுக்கள். பின்னால், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறி, முன்னே வாளா, ``பசுக்கள்`` என்றமையால், அவை தன்றை ஈனாத மலட்டுப் பசுக்களாயின. கன்றையீனாத பசுக்குள் துளிப் பாலும் தாராமையும் கன்றை யீன்ற` பசுக்கள் குடம் குடமாகப் பாலைத் தருதலும் வெளிப்படை. அவ்வாறிருந்தும் அனைத்தையும் பட்டிக்குள் வைத்துள்ள பார்ப்பானுக்கு மலட்டுப் பசுக்கள்தாம் தெரிந்தன; கன்றையுடைய பசுக்கள் தெரியவில்லை. இதற்கு அவன் கண்ணில் உள்ள கோளாறு காரணம்.

குறிப்புரை :

இருபத்து நான்கு, ஆன்ம தத்துவம். ஏழு, வித்தியா தத்துவம், ஐந்து, சிவதத்துவம். ஆக முப்பத்தாறு தத்துவங்கள் உள்ளன.
ஆன்ம தத்துவங்கள் போக்கிய கண்டமாய் ஆன்மாவால் நுகரப்படுவனவேயன்றிப் போசயித்திருகாண்டமாய், ஆன்மாவை நுகர்வோன் (போக்தா) ஆகவும், செய்வோன் (கர்த்தா) ஆகவும் ஆக்க மாட்டா. அதனால் போக்கிய காண்டமாகிய ஆன்ம தத்துவங்களை `மலட்டுப் பசுக்கள்` என்றும், போசயித்திரு காண்ட மாகிய வித்தியா தத்துவங்களை, `கறவைப் பசுக்கள்` என்றும் கூறினார். வித்தியா தத்துவங்கள் பிரேரக காண்டமாகிய சிவ தத்துவங் களாலே செயற்படுதல் பற்றி அவற்றையும் கறவைப் பசுக்கள் என்றார். பனவன் - பார்ப்பான், ``வாய்த்ததே`` என்று இரங்கிக் கூறினமையால், பார்ப்பான், கண் பார்வை குறைந்த பார்ப்பான் ஆகின்றான். பார்ப்பான், சமய வாதிகள். இது சாதியொருமை. `புறப்புறம், புறம்` என்னும் சமயத்தைச் சார்ந்தவர்கள் ஆன்ம தத்துவங்களை மட்டுமே மறைமுகமாகவோ, நேராகவோ அறிந்து வித்தியா தத்துவம் சிவ தத்துவங்களை அறியாமையால், `கண் பார்வை குறைந்த பார்ப்பான்` என்றது அவர்களையே. கண் பார்வையாவது, சமய ஞானம்.
இதனால், `தத்துவ உணர்வு வேண்டுவோர் சித்தாந்த சைவத் தத்துவங்களை உணராவிடில் பயனில்லை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

பொழிப்புரை :

ஈற்றுப் பசுக்கள் - ஈன்றணிய. அஃதாவது, கன்றை யீன்று ஒன்றிரண்டு நாட்களேயான பசுக்கள். இவைகளின் பாலும் பூசைக்கோ, வேள்விக்கோ பயன்படாது. மக்களுக்கு உணவாக்கூட ஆகாது. பயன்படாமை பற்றி மேல், `மலட்டுப் பசுக்கள்` எனக் கூறியவற்றையே, `ஈற்றுப் பசுக்கள்` எனக் கூறினும் இழுக்கில்லை என்னும் கருத்தால் இங்கு இவ்வாறு கூறினார். எனவே, முன் மந்திரத்திற் கூறிய அந்த இருபத்து நான்கே இங்குக் கூறிய இருபத்து நான்கும் ஆகின்றன. முன் மந்திரத்தில், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறியவைகளை இங்கு ``ஊற்றுப் பசுக்கள்`` என்றார். `பாலைச் சுரந்து பொழியும் பசுக்கள்`` என்றபடி. `தனித் தனி ஒவ்வொரு குடம்` என்க. `குடமாக` ஆக்கம் விரிக்க. `புகுதும்` என்பது. `போதும்` என்றபடி ``காற்று`` என்பது பகாப் பதமாய்ப் பிராணனையும், `கால்+று` எனப் பகுபதமாய், கறக்கும்படி துன்புறுத்தப்படும் பசுக்களையும் சிலேடை வகையால் குறித்து நின்றது. காலுதல் - கக்குதல். அஃது இங்குப் பாலைப் பொழிதலைக் குறித்தது. காணுதல், தன்வினை. காற்றுதல், பிறவினை. காற்றுதல், இங்குப் பாலைக் கொடுக்கப்பண்ணுதல். சில பொல்லாத பசுக்கள் கன்றை யீன்றாலும், கன்றுக்கும் பால்கொடாது உதைத்துத் தள்ளும். யாரையும் கறக்கவிடா அப்படிப்பட்ட பசுக்களை அடித்துத் துன்புறுத்தியும், மடியில் மருந்து பூசியும் வலியுறுத்திப்பால் கொடுக்கப் பண்ணுவர்.

குறிப்புரை :

``சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்``9
என்றார் திருவள்ளுவர்.
இவ்வாறு வருத்திக் கறக்கக் கறக்கும் பசுக்கள்போல இடை கலை பிங்கலைக் காற்றுக்கள் யோக முறையால் அடக்கி இயக்கப் பயன்தருதல் பற்றி அவைகளை, காற்றுப் பசுக்கள்`` எனச் சிலேடையாகக் கூறினார். மாற்றுப் பசுக்கள், காற்றுப் பசுக்களுக்கு வேறான பசுக்கள். என்றது, முதலிற் கூறிய ஈற்றுப் பசுக்களையே. வாசியோகம் பயிலுமிடத்து ஞானேந்திரிய கன்மேந்திரியங்களின் செயல் வந்து தடைசெய்ய மாட்டாமையால்,
``காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே``
என்றார். `காற்றுப் பசுக்களை` என இரண்டன் உருபு விரிக்க. வரவு அறியோம் - வருதலைக் காணோம்.
இதனால், `பிற சமயிகளும் ஹடயோகம் செய்யாது, தியான யோகம் செய்யின், அவரவர் சமய முத்தியை அடைவர்` என்பதும் `சித்தாந்தம் தத்துவ ஞானம் உண்டாயின், சிவஞானம் கைவந்து, சித்தாந்த முத்தி எளிதில் கிடைத்துப் பெரும்பயன் தரும்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

பொழிப்புரை :

தட்டான் ஒருவனது இல்லத்தின் மச்சுமேல், அவன் நண்பன் ஒருவன் தட்டானிடம் இருந்த நம்பகத்தால், `மொட்டு` என்னும் அளவில் பொன்னை வைத்திருந்தான். அது பின்பு அதிசய மாகச் `செம்பு` அளவாக விரிவடைந்தது. அதன் பயன் அனைத்தையும் தட்டான் தனதாக்கிக் கொள்ள எண்ணி உண்மையை மறைத்து, முழுவதையும் கவர்ந்து கொண்டான். (நண்பன் ஏமாற்றப்பட்டான்.)

குறிப்புரை :

தட்டான் - தூல சூக்கும அதிசூக்கும சரீரங்களைத் துருவித் தேடினாலும் அகப்படாதவன்; ஆன்மா. அகம் - உடம்பு. மச்சு - உச்சந்தலை. `குழை, தோடு` என்னும் இயற்கைப் பொருள்களைப் பொன்னால் செயற்கையாகச் செய்து ஆடவரும், மகளிரும் காதில் அணிதல் போல, `மொட்டு` (அரும்பு) என்னும் இயற்கைப் பொருளையும் பொன்னாற் செய்து, ஆடவர் கால் விரலில் அணிவர். `மொட்டு` என்பது தவறு எனக் கருதிச் சிலர் அதனை, `மெட்டு` என்பர். ``எழுந்தது`` என்றது, `காணப்பட்டது` என்றபடி காணப்பட்டமைக்குக், காரணம் குறிப்பாற் கொள்ளக்கிடந்தது. இப் பொன்னாவது, ஏழாம் தானத்தில் உள்ள சகஸ்ராரமே, அது குழவிப் பருவத்தில் மொட்டாயே இருக்கும். ஆகவே, ``மொட்டு`` என்றது சிலேடையாயிற்று. குழந்தை களின் வளர்ச்சி நம் கண்ணிற்குப் புலப்படுவதில்லையாகையால், `அதிசயமாக மலர்ந்தது` என்றார். செம்பு, நீர் முகக்கும் சிறு கலும். `சிறிய மொட்டாய் எழுந்தது, செம்பு அளவு பெரிதாய் விரிந்தது` என்றபடி. வட்டம் - வாசி, என்றது இலாபத்தை. இலாபம் - ஆன்ம லாபம். உச்சந் தலையில் சகஸ்ராரமாகிய பொன்னை மொட்டாக வைத்தவன் பிரம தேவன். அவன் தட்டா னிடத்தில் கொண்ட நம்பிக்கையாவது, `வினையை நுகர்தலாகிய தன் குறிக்கோளை நிறைவேற்றுவான்` என நம்பியது. ஆயினும் ஆன்மாத் தனது பக்குவ முதிர்ச்சியால் அதனை யோகக் காட்சிக்குப் பயன் படுத்திக் கொண்டதே, தட்டான் உண்மையை மறைத்துப் பொன்னைக் கவர்ந்து கொண்டதாகும்.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய, காற்றுப் பசுக்கைளக் கறந்துண்ணுதலாகிய பயன் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

பொழிப்புரை :

நெற்கதிரை அரி அரியாகக் கொள்ளும்படி மிக விளையக்கூடிய நல்ல வயலைப் புல்லும், பூடுகளும் ஆகிய களையைத் தந்து துன்பம் விளைக்கின்ற கழனியாக மாற்றுகின்ற ஒழுக்கலை உறுதியாக அடைத்து, உழும்பொழுதே பாலைப் பொழிந்து கொண்டு போகின்ற வலிய பசுக்களைப் பூட்டி உழுதலா, படர்ந்து செல்கின்ற வெல்ளரி விதையும் செந்நெல் விதையாய்ச் சிறந்த பயனைத் தரும்.

குறிப்புரை :

அரித்தல் - அரி அரியாகச் சேர்த்தல். நாற்று உள்ள இடமே `நாற்றங்கால்` எனப்படுமாயினும், ``அரிக்கின்ற`` என்னும் அடைமொழியால் அது நாற்றுக்களை நட்ட வயலைக் குறித்தது. நெல் வயலில் நீர் நீர் எப்பொழுதும் நிரம்பி நின்றால்தான் நெற்பயிர் வளர்ந்து பயன் தரும். அத்தகைய நீர் தேங்கி நில்லாமல், உழுபவனும் காணாதபடி வரம்புகளுக்குள்ளே சிறு துளைகளால் வெளியேறி விடுவதுண்டு. அத்துளைகளை `மோழை` என்பர். நீர் தங்காது போய் விட்டால், பயிர் வளராது; களைகள் வளர்ந்து விடும். நீரை இங்கு ``ஓட்டம்`` என்றார். ``நாற்றங்கால்`` என்றும், ``கழனி`` என்றும் கூறப்பட்டது உடம்பு. `கழனியாக` என ஆக்கம் விரிக்க. நீர், உடல் வலிமை. உடல் வலிமையுடன் நலம் பெற்றிருந்தால்தான், கற்பன கற்றுக் கேட்டுச் சிந்தித்து அறிவு பெறுதல் இயலும். இல்லையேல் பிணி பல நலிய, மூப்பும் விரைவில் வரும். இயல்பான மூச்சுக்காற்று வெளிச் செல்லும்பொழுது பன்னிரண்டங் குலம் வெளியேறப் பின்பு எட்டங்குலமே உட்புகுகின்றது. இவ்வாற்றால் உடல் வலிமை கணந்தோறும் இழக்கப்படுகின்றது. அதனைத் தடுத்து நிறுத்தினால் உடல் வலிமை பெற்றுத் திகழும். அதனையே, ``சிக்கெனக் கட்டி`` என்றார். வரித்தல் - விரும்பிக் கொள்ளுதல். நன்மை, இங்கு உடல் நலத்தைக் குறித்தது. ``மேல் காற்றுப் பசுக்கள்`` என்றற்கு ஏற்ப. இங்கு ``ஆன் கறவை`` என்றார். விரித்தல் - படரும் கொடிகளைத் தருதல். வெள்ளரி வித்து, சுக்கிலம். உம்மை இழிவு சிறப்பு. அதனால், பின் வந்த விந்து நெல்வித்தாயிற்று. யோகிகட்கு விந்து சயம் வந்து பயன் தருதல் முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.
இதனால், `மக்கள் வீணே மாய்ந்தொழியாது. யோகம் பயின்று பயன் பெறவேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இங்கு, ``சோறு`` எனப்பட்டது வீடுபேறாதல் தெளிவாகலின், அதுபற்றி ஏனையவும் அதற்கு ஏற்பனவாக உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.

குறிப்புரை :

இடா - கூடை. இஃது எருவைக் கொண்டுபோய் நிலத்தில் இடுதற்குப் பயன்படும்; விதையை நிரப்பி எடுத்து விதைக்கவும் பயன்படும். எரு ஓரிடத்திலே சேர்ந்துவிடாமல் தூவுதல் வேண்டும். எனவே, `எருவை இடாக் கொண்டு தூவி இட்டு` என மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். எரு, ஞானத்தில் வேட்கை. இது, விதை, முளை, பயிர் எல்லா வற்றையும் செழிக்கச் செய்யும். விதை - ஞானம். முளை - அன்பு; பக்தி. ``வித்தினைத் தேடி முளையைக் கை விட்டவர்``3 என்றார் திருவுந்தியாரில். கிடாய் - ஆட்டுக் கிடாய். இஃது இளம் பயிரைக் கறித்துப் பாழாக்கிவிடும். `கடா` என்பது எருமைக் கடாவையும், `கிடாய்` என்பது ஆட்டுக்கிடாயையும் குறித்து வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு பயிரை அழிக்க வரும் மற்றை விலங்கு முதலியவற்றையும் கொள்க. `சுற்றம்` என்னும் தொல்பசுக் குழாங்கள்l ``கொண்டு பூட்டி`` என்றது, `பிடித்து ஓரிடத்திலே நிற்கும்படி கட்டிவிட்டு` என்றபடி. முளையைக் கிளறுத லாவது தடையிற்றி முளைத்தற்கும், பின் நன்கு வளர்வதற்கும் ஆவன செய்தல். அவை முளை நீர் வடித்தலும், முளைநீர் பாய்ச்சுதலும் போல்வன. அவை இங்குக் குருலிங்க சங்கமங்களைச் சிவனெனவே கண்டு வழிபடுதலைக் குறித்தன. மிடா, இங்குச் சோறு சமைக்கும் பானை. சிவபோகத்தை ஏற்கின்ற ஆன்ம உணர்வைக் குறித்தது. ``மெள்ள`` என்றது `சுவைத்து` என்றதாம். விழுங்கார் - உண்ண மாட்டாதவர். `இவை மாட்டாதவர் செந்நெல்லை அறுப்பதாகக் கூறிக்கொள்ளுதல் எவ்வாறு பொருந்தும்` என்பதாம். அடர் - அடர்த்தல்; அறுத்தல். அஃது ஆகுபெயராய் அதற்குரிய கருவையைக் குறித்தது. அதன் உள்ளுறைப் பொருள் ஆன்மாவின் கிரியா சத்தி. ஈற்றில், `எங்ஙனம்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `ஞான வேட்கையும், அதன் வழியவாகிய ஞானம், பத்தி, பற்றறுதி என்பனவும் இல்லாதார் வீட்டு நெறியில் நிற்பதாகக் கூறிக்கொள்ளுதல் போலியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுக் காதமே.

பொழிப்புரை :

உயிர்களாகிய உழவர்களுக்கு இம்மைக் காலம் முடிவதற்குள்ளே மறுமை தோன்றுதற்கு விதை விளைந்து கிடக்கின்றது. அஃது `ஆகாமியம்` என்னும் வினையாம். பிராரத்தத்தின் பயன் விளையும் பொழுது அதுபற்றி மகிழ்ச்சியோ, வருத்தமோ கொள்ளாது ஒட்டின்றிருப்போருக்கு ஆகாமியம் தோன்றாது. மகிழ்ச்சி வருத்தங்களால் அதில் அழுந்துகின்றவர்கட்கு அவை பற்றி நிகழும் முயற்சிகள் ஆகாமியமாய்த் தோன்றிச் சஞ்சிதமாய் நிலைபெறும்.) இம்மை முடிவெய்தப் பெற்ற உயிர் மறுமையில் செல்லும் இடம் இந்நிலம். சுவர்க்க லோகம், நரக லோகம் என்பன ஆதலாலும், அவற்றிடையே உள்ள தொலைவு வேறுபட்டன ஆதலாலும் `இந்த உயிர் இன்ன இடத்தில் செல்லும்` என்னும் வரையறையும் அஃது இங்குச் செய்த வினையால் வரையறுக்கப் படுதலை, ``மேலைக்குக் காதம் விளைந்து கிடந்தது`` என்றார். காதம் - வழியளவு. இப்படி, `முன் விளைந்ததிலிருந்து பின் விளைவு; பின்பு அதிலிருந்து பின் விளைவு என்று விளைவு இடைவிடாது தொடர்ந்து கொண்டே போவதால். அந்த வினையின் பயனைக் கொள்கின்ற உயிர்களுக்கு அவை மாறி மாறிச் செல்லும் மூன்று உலகங்களும் `இது` என்பது முன்னதாகவே வரையறுக்கப்படுகின்றன.

குறிப்புரை :

`ஆகையால் அலைவு நீங்கி, அமைதியுற வேண்டுவார் பின் விளைவு தோன்றாதபடி பார்த்துக் கொள்க` என்பது குறிப் பெச்சம். பின் விளைவு தோன்றாமைக்கு வழி மேற்குறிக்கப்பட்டது. அடுக்கு, இடைவிடாமை குறித்து நின்றது. முக் காதம் - மூன்று வழிகளின் அளவு. சொற் பொருட் பின்வரு நிலையண் வந்தது.
இதனால், `பிறவிக்கு வித்தாகிய ஆகாமியத்திற்குக் காரணமான விருப்பு வெறுப்புக்களை விடுதல் வேண்டும்` என்பது குறிப்பால் அறிவுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை :

வினை நிலம் இருக்கப் புல்லும் முளையாத களர் நிலத்தை உழுகின்றவர்கள் அதில் தப்பித் தவறி முளைத்த வஞ்சிக் கொடியின் பொலிவினைக் கண்டு, `அஃது உணவாகும்` என்று மயங்கிப் பின் அஃது அவ்வாறு ஆகாமையால். பட்டினியால் இறத்தலும் கூடுவதே. இவ்வாறு களர் நிலத்தை உழுகின்றவர்கள் `நாம் ஏன் இதனை உழுகின்றோம்` என்றும் எண்ணுவதில்லை. ஆகவே, அவர்களது குறிக்கோளாக நாம் ஒன்றையும் அறியவில்லை.

குறிப்புரை :

`அவர்களது செயலுக்கு அவர்களது முன்னை வினைதான் காரணம்` என்பது குறிப்பெச்சம். விளைநிலம், சிவநெறி; தவநெறி. களர் நிலம், உலகர் நெறி. அதில் தப்பித் தவறி முளைக்கும் வஞ்சிக் கொடியாவது மகளிர் இனம். ``குறிக்கோளிலாது கெட்டேன்``* என்றார் அப்பர் பெருமானும். இம்மந்திரத்தின் அடிகளை 3,4,2,1 என்னும் முறையிற் கூட்டிக் காண்க.
இதனால், `உலகர் வழிபட்டுக் குறிக்கோள் இலாது நாளைக் கழித்தல் பிழை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை :

கூப்பிடு - கூப்பிடுதல்ஓ உரக்கக் கத்தி வெருட்டுதல். முதனிலைத் தொழிற்பெயர். அதனைச் சிறிதும் மதியாத குறுநரிகள் (குள்ள நரிகள்) ஐம்பொறிகள். அவைகட்கு இடமாய் உள்ள கொட்டகாரம் உடம்பு. யாப்பிடல், கட்டுதல். அஃது ``ஆப்பிடு`` என வந்தது. பாசம் - கயிறு. ``ஆப்பிடு பாசம்`` இறந்த கால வினைத் தொகை. கயிறு, வினை, அதில் உயிராகிய மகன் எப்படியோ அகப் பட்டுக் கொண்டான். அவன் அவ்விடத்திலேயே நெருப்பை உண்டாக்கி (சில புண்ணியங்களைச் செய்து) கயிற்றை எரித்துவிட்டுச் சிலநாள் உலாவியிருந்தான். அதை அறிந்து நன்றே அங்குப் புகுந்த மகள் ஒருத்தியின் துணை கிடைத்தமையால் (திரோதான சத்தி அருட்சத்தியாய்ப் பதிந்ததனால்) அந்தக் கொட்டகையை விட்டு வெளியேறி (உடம்பை விட்டு நீங்கி) நல்லதோர் இல்லத்தை (சிவத்தை) அடைந்து இன்பத்துடன் இருக்கின்றான்.

குறிப்புரை :

அவனைப்போல் மற்றவர்களும் ஏன் சிவ புண்ணியத்தைச் செய்து உய்த பெறுதல் கூடாது` என்பது குறிப் பெச்சம். `நலமாக` என ஆக்கம் வருவிக்க. `புகுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. தோன்றா எழுவாய் வருவிக்கப்பட்டது. பின்னிரண்டடிகள் இன எதுகை பெற்றன.
இதனால், `வினைத்தொகையை நீங்கிச் சத்திநிபாதம் வருவித்துச் சிவனை அடைவிப்பன சிவபுண்ணியங்கனே` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

பொழிப்புரை :

(மலைமேல் மழை பெய்தால், அங்கு வாழும் மான்கன்று வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியெய்தித் துள்ளத்தானே செய்யு?) யோகிகள் சுழுமுனா நாடியை `மேரு` என்பர் ஆகலான். இங்கு ``மலை`` என்றது அதனையே. மான் கன்று, அதில் உள்ள ஆதாரங்களைச் சார்ந்து நினைக்கும் அந்தக் கரணங்களை. துள்ளுதல், மகிழ்ச்சியெய்தல். கொல்லன் - கருமான்; இரும்புத் தொழில் செய்பவன். இங்கு ``கொல்லன்`` என்றது யோகியை. உலை, கொல்லன் உலை. என்றது மூலாதாரத்தை. அதில் அக்கினியிருத்தலால் ``உலை`` எனப்பட்டது. மூலாக்கினியை ஓங்கி எரியச் செய்தலின் யோகி ``கொல்லன்`` எனப் பட்டான். கொல்லனது உலைமேல் உறுப்பாவது இரும்பு. ``என`` என்றது உவம உருபு. ``அமிர்தம் பொழிய வைத்தான்`` என்றது. `அமிர்தத்தைப் பொழியும்படி செய்து விட்டான்`, அஃதாவது, உலைமேல் உறுப்பை வெதுப்புவதுபோல வெதுப்பிவிட்டான்` என்றதாம் ``முலைமேல் அமிர்தம்`` என்னும் குறிப்பால்` ``ஒருத்தியை`` என்னும் சொல்லெச்சம் வந்து இயைந்தது. ஒருத்தி, குண்டலினி சத்தி. `மூலாக்கினி வெதுப் பிய தால், குண்டலினி சத்தி விழித்தெழுந்து, தனது அமிர்தத்தைப் பொழிவா ளாயினாள்` என்றபடி. `தனது முலைமேல் அமிர்தத்தை` என்க. ``மேல்`` என்றது, `ததும்பி வழிகின்ற` என்னும் குறிப்பினது. ``குலைமேல் இருந்த கொழுங்கனி`` அருட் சத்தி. வீழ்தல், நிபாதமாதல். அந்தக் கனி சுவை மிகுதற்குக் குண்டலி சத்தியின் அமுதமும் வேண்டப்பட்டது.

குறிப்புரை :

இதனால், சிவயோகத்தால் தியான சமாதிகள் கைகூட, சத்தி நிபாதம் வந்து, அது முதிர்ச்சியடைதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 18

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.

பொழிப்புரை :

பார்ப்பான், கடவுளைத்திரு உருவிலாயினும், தீயிலாயினும் வைத்து வழிபடுவன், அவனுக்குப் பாற்பசுக்கள் இன்றி யமையாதன. அத்தகைய பசுக்கள் ஐந்து உள்ளன. ஆயினும் பார்ப்பான் பசுமேய்க்க மாட்டான். மேய்ப்பவர் வேண்டும். அவர் யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் அவிழ்த்து ஓட்டிய அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே போய்க் கொட்டிலுக்கு வாராமலே உள்ளன. மேய்ப்பவர் கிடைத்தால், அவை வழிப்பட்டு வந்து வேண்டிய அளவு பாலைக் கொடுக்கும். (மேய்ப்பவர் கிடைக்கவில்லையே!)

குறிப்புரை :

பார்ப்பான், ஆன்மா. அகம், உடம்பு, பாற் பசு ஐந்து, இறைவனைக் கண்டும், அவன் புகழைக் கேட்டும், அவன் புகழ் பாடுதலிலே சுவைகண்டும், அவன் வழிபாட்டில் மணம் கண்டும் கைகளால் அவனுக்குரிய பொருள்களைத் தீண்டியும் உவகையடைந்து ஆன்மாவுக்கு உதவக் கூடிய `கண், காது, நா, மூக்கு, மெய்` என்னும் ஐம்பொறிகள். மேய்ப்பர், குருவின் அறிவுரைகள். அவை அப் பொறிகளை அதற்கு உதவும் வகையில் நடத்தும். அவ்வுரைகள் இல்லாமையால் ஆன்மா ஐம்பொறிகளால் வரும் பயனை அடைய இயலாமல் அலமருகின்றது` என்பதாம்.
பாற்பசு - கறவைப் பசு. ``உண்டாய், அடங்கினால்`` என்றமையால், `உண்டாயின் அடங்கும்` என்பது பெறப்பட்டது. ``பாலாய்`` என்பதில் உள்ள ஆக்கம் மிகுதி குறித்தது. `சோறு கல்லும், மண்ணுமாய் உள்ளது` என்பதிற்போல.
இதனால், குரு உபதேசம் பெறாதார், நன்னெறியை அடைய மாட்டாது அல்லல் உறுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

பொழிப்புரை :

ஒரு காட்டிலே ஐந்து காட்டுப் பசுக்கள். முப்பத் தொரு சிங்கங்கள், தெய்வத் தன்மை வாய்ந்த இரண்டு குதிரைகள், ஒன்பது கொடிய புலிகள், காட்டெருமைக் கடாக்கள் வாழ்கின்றன. அங்குச் செல்வோர் அவைகளில் இரண்டு குதிரைகளை மட்டும் தம் வசப்படுத்தி, அவற்றின்மேல் தக்கபடி ஏறிச் செல்வாராயின், மேற் கூறிய கொடுவிலங்குகள் யாவும் அவர் விருப்பப்படி அடங்கி நடக்கும். மாறாக, குதிரைமேல் ஏறாது, கட்டுடல் வாய்ந்த அந்தக் கடாக்களின் மேல் ஏறுவாராயின், மேற்சொல்லிய கொடுவிலங்கு களையும் வெறியேற்றித் தாமே தமக்குத் துன்பத்தை வருவித்துக் கொள்பவராவார்.

குறிப்புரை :

ஆமா - காட்டுப் பசு. அவை ஐந்தாவன சிவ தத்துவங்கள். `காட்டுப் பசு, மக்களுக்கு இதம் செய்வது போல, நாவால் நக்கி நக்கியே கொன்றுவிடும்` என்பர். சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்தி, உலக இன்பத்தில் அழுத்திப் பிறப்பை உண்டாக்குதல் பற்றி அவைகள் காட்டுப் பசுக்களாகச் சொல்லப்பட்டன. பக்குவம் வாயாத ஆன்மாக்களுக்கு இறைவனது சத்தி திரோதான சத்தியாய்ப் பிறவித் துன்பத்தை பயத்தலால், அந்தச் சத்தியின் வேறுபாட்டால் உண்டாகிய சிவ தத்துவங்களே அவ்வாறு உருவகித்தார். ஆன்மாப் பக்குவம் எய்தியவுடன் திரோதான சத்தி அருட் சத்தியாக மாறினால் சிவதத்துவங்கள் மட்டுமல்ல; எல்லாத் தத்துவங்களுமே நல்லனவாக மாறிவிடும். அதுவரையில் அவை யாவும் பிறவித் துன்பத்தையே தரும். அரி - சிங்கம். முப்பத்தொரு சிங்கங்களாவன. சிவ தத்துவம் ஐந்து தவிர, மற்றைய தத்துவங்கள். புலியை நோக்கச் சிங்கங்கள் அத்துணைக் கொடியன அல்ல. ஏனெனில் `சிங்கம் பசித்து, உணவை நாடும்பொழுது தான் பிற விலங்குகளைக் கொல்லும்` என்றும், `மற்றை வேளைகளில் எதனையும் கொல்லாது` என்றும் கூறுவர். அம்முறையில் வீடுபேற்றினை நோக்கத் தத்துவங்கள் தடையாயினும், உலகியலை நோக்க, வை உறுதுணைகளேயாம். அது பற்றி அவற்றை `அரிகள்` என்றார். தே - தெய்வத்தன்மை. மா - குதிரை. இப்பல பொருள் ஒருசொல், விலங்குகளின் இடை வைத்து எண்ணப்பட்டதனால், குறித்த பொருளை உணர்த்திற்று. இரண்டு குதிரைகளாவன இடநாடி, வலநாடி மூச்சுக்கள். ஒன்பது புலிகளாவன தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள். இவை எஞ்ஞான்றும் தம் செயலைச் செய்யத் தவறுவதில்லை. அதனால் அடக்கப் படாமை பற்றி அவைகளை, ``தீப் புலி`` என்றார்.
``எண்ணென்றா, உறழ் என்றா ஆயிரண்டும் இனன் ஒன்றல் வேண்டும்`` என்ப.3 ஆகலின், `ஆமாக்கள், தாமாக்கள், கடாக்கள்` என்பவற்றோடு, திப்பிலியை உடன்வைத்துக் கூறுதல் பொருந்தா மையின், `திப்பிலி` எனப்பாடம் ஓதுதலும் ``தேமா`` என்பதற்கு `மா மரம்` எனப் பொருள் உரைத்தலும் பொருந்தாமையறிக. ``அறியேறு முப்பதும்`` எனப்பாடம் ஓதி, `முப்பது, என்பதற்கு, `மூன்றும், பத்தும்` எனப் பொருளுரைத்து, சிலவற்றை இடர்ப்பட்டுக் கொணர்ந்து, `பதின் மூன்று` எனக் காட்டுதலும் வேண்டாதனவேயாதல் அறிந்துகொள்க.
தாமா - தாவுகின்ற குதிரை. ``தாவுகின்ற`` அடையானே, `மா` என்பது பாய்மா ஆயிற்று. குரம் - குதிரையின் குளம்பு. இதனை ஊன்றி நடத்தல் பற்றியே குதிரையை வடமொழியாளர் `குரகதம்` என்றனர். ``குரங்கொளின்`` என்பது, ``நடக்குமாயின்`` என்பதைக் குறிக்கும் குறிப்பு மொழியாய்ப் பின்னும் ஏறிச் செலுத்துதலைக் குறித்தது. ``தம்மனத்து உள்ளன்`` என்பதற்கு, `தங்கள் மனத்தின்படி உள்ளன வாம்` என்க. ஆமா முதலியவற்றைக் கூறினமையால் `காடு` என்பது போந்தமையின், குதிரையை ஏறுவாரும், ``தம்மனம்`` என்பது அவர்மனமும் ஆதல் விளங்கிற்று. மூவாமை, தன் எதிர் மறையாகிய இளமையைக் குறித்தது. `முட்டுகின்றாரே ஆவர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. குதிரையை ஏறிச் செலுத்துதலாவது, வாசியோகம் செய்தலாம். யோகம் வல்லார்க்கு மூச்சுக் காற்று அவர் வழிப்படுதலின், அந்நிலையில் அதனைக் குதிரையாகவும், ஏனையோர்க்கு அதுதான் சென்ற வழியே செல்லுதலின் அந்நிலையில் அதனைக் கடாகவும் உருவகித்தார். ஒரு பொருளே நிலை வேறுபாடு பற்றிப் பல பொருளோடு உவமிக்கப் படுதலை, ``நட்டார்க்கு அமிழ்தொத்து, நள்ளார்க்கு நஞ்சொக்கும் இவன்`` என்னும் வழக்கத்தாலும்,
``கார்; அணி கற்பகம்; கற்றவர் நற்றுணை;
பாணர் ஒக்கல்;
சீரணி சிந்தா மணி; அணி தில்லைச்சிற்
றம்பலவன்
தாரணி கொன்றையன்; தக்கோர்தம் சங்கநிதி;
விதி; சேர்
ஊருணி உற்றவர்க்கு; ஊரன், மற்றியாவர்க்கும்
ஊதியமே``l
என்னும் செய்யுளாலும் அறியலாம்.
இதனால், யோகம் பயில்வார்க்கு அவரது கருவி கரணங்கள் அவர் வழிப்பட்டனவாய் வீடு பயத்தலும், அது பயிலாதார்க்கு அவை தம்மியல்பிற் சென்று அதனைப் பயவாமையும் உள்ளுறையாகக் கூறப் பட்டன. முன் தந்திரத்தில் ஐம்பொறிகளை மட்டும் கூறினார்; இம் மந்திரத்தில் அனைத்துக் கருவிகளையும் கூறினார். ஈற்றடி உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 20

எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.

பொழிப்புரை :

எழுத்துக்கள் எழுதப்படாத ஏடு ஒன்று உள்ளது; அதை, `புத்தகம்` என்கின்றனர். அந்தப் புத்தக்கத்தைப் பார்க்காமலே ஒரு பெண் அதில் உள்ள பொருளைத் தானே உணர்ந்து, பிறருக்கும் உணர்த்துகின்றாள். (இது நிற்க. மற்றொரு செய்தி.) மலராத மலர் ஒன்று உள்ளது; அதில் தேனை, பிறவாத வண்டு ஒன்று அதன் மணத்தின் வழியாக அறிந்து சென்று உண்கின்றது. (இவைகளை யெல்லாம் `நம்ப முடியாது` என்றாலும், உண்மையான அதிசய நிகழ்ச்சிகளாய் உள்ளன.)

குறிப்புரை :

எழுதாத ஏடு, இறைவனது ஞான சத்தி. எல்லாப் பொருள்களும் முதலில் அதன்கண் இயல்பாகத் தோன்றுகின்றன. கன்னி, அவனது கிரியா சத்தி அது ஞான சத்தியின் வேறன்மையால், ஞான சத்தியில் தோன்றியவற்றை அப்படியே உயிர்களை அறிவித்தும், செய்வித்தும் நடாத்துகின்றது. இது முதற்கண் கூறப்பட்ட பொருள்.
இனி, மலராத பூ, அரும்பாய்த் தோன்றிப் போதாய் முதிர்ந்து மலராத, அதனால், பின்பு வாடாத பூ, சிவம் என்றும் ஒருபடித்தான இன்பமாய் உள்ளது. பிறக்கும் பொழுது புழுவாய்ப் பிறந்து பின்பு வண்டாக மாறுகின்ற வண்டுகள் போலாது, பிறக்கும்பொழுதே வண்டாய்ப் பிறந்த வண்டு, முற்பிறவிகளிற்றானே ``புறச்சமய நெறி நின்றும், அகச்சமயம் புக்கும், புகல் மிருதி வழி உழன்றும் ... ...``3 வருதலாகிய படிகளையெல்லாம் கடந்து, பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபில் பிறந்த ஆன்மா. மணம், அருள்ஒளி. தேன், சிவானந்தம். ``சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேரத்திச் - செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக வைத்து ஆண்டு, மலம் கழுவி, ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிவன்`* ஆதலின் பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபிற் பிறந்த ஆன்மாவை, ``பிறவாத வண்டு`` என்றார்.
``ஓத`` என்னும் செயவெனெச்சம் நிகழ் காலத்ததாய் நிற்க, `உண்டவாறு வியப்பு` எனச் சொல்லெச்சத்தோடு முடிந்தமையால் `இரண்டும் வியப்பு` என்றதாயிற்று. `மணத்தால் உண்ட` என ஆல் உருபு விரிக்க. ஈரடி உயிரெதுகை வந்தது.
இதனால், உயிர்கட்கு ஞானம் நிகழுமாறும், பிறக்கும் பொழுதே ஞானத்திற்கு உரியவராய்ப் பிறந்தோரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

பொழிப்புரை :

பறவைகள் தங்கிக் கூவுகின்ற நாவல் மரத்தி னின்றும் உணவாய் அமைகின்ற கனிகள் சில பயன்படாத இடத்தில் உதிர்வனவாயும், சில, மரத்திற்கு அடியில் உதிர்ந்தும் புதர் முதலிய வற்றால் பயன்படாதனவாயும் போய்விட, அந்த நாவல் மரத்தை உள்ளடக்கியுள்ள குடிலில் வாழ்கின்ற ஐவர், வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்தொழிவதாய் உள்ளது.

குறிப்புரை :

நாவல் மரம், சுவாச கோசம். அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி, வெளிச்செல்லும் காற்று. புகுகின்ற கனி, உள்ளே வரும் காற்று. புகுகின்ற காற்றை வெளிவிடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றி அதனை ``வித்து`` என்றார். `எனினும், அதனைத் தடுப்பார் இன்மையால் வெளிச்சென்றே வீணாகின்றது` என்றற்கு இரண்டையும் ``பொய்`` என்றே கூறினார். பறவைகள் சுவாச கோசத்தில் உள்ள நரம்பு முதலியன. `கூவுகின்ற` என்பது குறைந்து நின்றது. ஆகின்ற - வளர்கின்ற. பைங்கூழ் - பயிர், அது கருவியாகு பெயராய், அதன் விளைவைக் குறித்தது. பயிராவது, முற்பிறவியில் ஆக்கிய வினை. அதன் விளைவாவது, பிராரத்த விளைவு. அதனை உண்ணும் ஐவர், ஐம்பொறிகள். உண்பது உயிரேயாயினும் அது தன்னை `வேறு` என உணராது அவையாய் நின்று உண்ணுதலின் அவற்றையே உண்போராகக் கூறினார். உயிர் தன்னை, `அவற்றின் வேறு` என உணர்ந்து நீங்கியிருப்பின், பிராரத்த விளைவு உணவாகாது` என்பது கருத்து. விரைவு பற்றி, ``வேகின்ற`` என, எதிர்காலம் நிகழ்கால மாயிற்று. கூரை - குடில். வேவதாய குடிலாவது. தூல உடம்பு. `கூரையில்` என ஏழாவது விரிக்க. விருத்தி - பிழைப்பு.
``நாவலின்`` என்னும் `இன்`, நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபு. கூழ் - உணவு. கனியே உணவாயினும் உணவாம் தன்மையை நோக்கி அதனை வேறு போல வைத்து, ``கூழைத் தரும் கனி`` என்றார். சுவாசத்தை நாவற் கனியாகக் கூறியது, அக்கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும் மரங்களினின்று சாலை நடுவில் உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி. `சுவாசமும் இயற்கையாய் அமைந்து, அருமையறியப்படாததாய் உள்ளது` என்பதாம். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி, முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
``பைங்கூழ்`` எனப்பட்ட பிராரத்த விளைவையே, ``போகின்ற பொய்`` என்பதற்கும் பொருளாக வைத்து, ``புகுகின்ற வித்தாவது ஆகாமியம்`` என்றவர், அதற்கு இயைபு காட்டிற்றிலர்.
இதனால், `சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவரே யாவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முளை, நிலத்தளவில் நிற்பதாகலின், அது அடி நிலத்தில் உள்ள மூலாதாரத்தைக் குறித்தது. சுவாசம் எழுதற்கு வழியை உடைத்தாய் இருத்தலின் அம்முளை உள்துளையை உடைய ``மூங்கில்`` எனப்பட்டது. வேம்பு, நல்லதொரு மருந்து ஆதலின், காய சித்தியைத் தருவதாகிய சுவாசமே ``வேம்பு`` எனப்பட்டது. அந்த வேம்பு மேற்கூறிய மூங்கில் முளையினின்றும் எழுவதாதலை அறிக. பனை, சுழுமுனா நாடி. அதனையே சுவாசம் சார்ந்திருப்பினும், ஒற்றுமைபற்றிச் சுழுமுனை சுவாசத்தைச் சார்ந்திருப்பதாக வைத்து, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனை`` என்றார். கிடந்த பனை என்ற அனுவாதத்தால், `வேம்பினைச் சார்ந்து பனை கிடந்தது` என்பதும் பெறப்பட்டது. குண்டலி சத்தி சுழுமுனையைப் பற்றியிருப்பது ஆகலின் அதனை, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்புண்டு`` என்றார். அந்த பாம்பு நன்கு துயின்று கொண் டிருப்பதால், அதனோடு பனையைப் பற்றியிருக்கின்ற வேம்பினைத் தின்றல் கூடாததாய் உள்ளது. அந்தப் பாம்பினை எழுப்பி விலகச் செய்தால் வேம்பினைத் தின்ன முடியும். அதனைச் செய்ய வல்லவர் இல்லை. அதனால் வேம்பு வீணே வற்றி வெடித்துப் போகின்றது.

குறிப்புரை :

`குண்டலி சத்தி துயில்வதால், நல்லுணர்வு உண்டாகவில்லை. ஆகவே, அதனை எழுப்பினால், நல்லுணர்வு உண்டாகும்; யோகம் பயில முடியும். அவ்வாறு செய்வார் இல்லாமையால், சுவாசம் வீணாய் அழிகின்றது` என்பதாம். துரத்துதல், இங்கு எழுப்பி இயங்கச் செய்தலைக் குறித்தது. `வெடிக்கின்றவாறு இரங்கத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால் யோகத்தைப் பற்றாத உலகர் நிலைக்கு இரங்குதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.

பொழிப்புரை :

(சித்தாந்தத்தில், `கருவிகள் தொண்ணூற்றாறு` என்பவற்றில் `தத்துவம் முப்பத்தாறு, தாத்துவிகம் அறுபது` எனச் சொல்லப்படுகின்றன. படைப்புக் காலந்தொட்டு, அழிப்புக் காலம் வரையில் நிலைத்து நிற்கும் கருவிகள் தத்துவம். அவற்றின் காரியங்களாய், இடையே தோன்றியழிவன தாத்துவிகம். ஆகவே, தாத்துவிகங்கள் யாவும் தூல உடம்பில் உள்ளனவாம். அது பற்றி அத்தாத்துவிகங்களை மட்டுமே இம் மந்திரத்தில் குறிக்கின்றார்.)

குறிப்புரை :

புலி, பாயும் தன்மை உடையது ஆகலின், `பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்` எனப் பெயர்பெற்று இயங்கும் வாயுக்கள் பத்தினையும் ``பத்துப் பரும்புலி`` என்றார். பருமை புலியின் உடலின் கண்ணது, இவை பத்தும், `வாயு` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.
யானை பதினைந்தாவன, பிருதிவி, அப்பு, தேயு, என்னும் மூன்று பூதங்களின் மூவைந்து பதினைந்து கூறுகளாகிய தாத்து விகங்கள். அவற்றுள்,
பிருதிவியின் கூறுகள்:
மயிர், தோல், நரம்பு, எலும்பு, தசை.
அப்புவின் கூறுகள்:
இரத்தம், வெயர்வை, சிறுநீர், நிணம், சுக்கிலம்.
தேயுவின் கூறுகள்:
பசி, தாகம், உடல் வெப்பம், சோம்பல், பித்து. இவைகளைத் தூல உடம்புடைய யானைகள்` என்றார்.
வித்தகர் - திறமையாளர். `ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்னும் புலன்கள் ஐந்தும் எல்லோரையும் தம்பால் ஈர்த்து நிற்றலின் இவைகளை ``வித்தகர்`` என்றார். இவ்வைந்தும் முறையே ஆகாயம் முதலிய ஐந்து பூதங்கட்கும் சிறப்புக் குணமும் ஆகும்.
வினோதகர் - பொழுது போக்கிற்கு வேடிக்கை செய்வோர். `இடை கலை, பிங்கலை, சுழுமுனை, அத்தி, அலம் புடை, காந்தாரி, குகு, சிகுவை, புருடன்` என்னும் நாடிகள் பத்தும் உடம்பை வாழச் செய்வதலாம், `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் குற்றம் ஆறும் உடலில் வாழும் உயிர் தன் வாழ்நாளைக் கழித்தற்கு ஏதுவாய் நிற்றலாலும் இவைகளை `வினோதகர்` என்றார்.
நாடிகள் பத்தும் `ஆகாயம்` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.
`மூவரோடு அறவர்` என உருபு விரித்து, `ஒன்பதின்மர்` என உரைக்க. இவ்வொன்பதின்மர் ஆவார். தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள், இவைகள் `ஒன்பது வாயில்கள்` என்றும் சொல்லப்படும். கண் இரண்டு, காது இரண்டு. மூக்கு இரண்டு, வாய், எருவாய், கருவாய் இவை ஒவ்வொன்று. இவைகளில் இறுதி மூன்றும் உடல் நிலைப்பிற்கு இன்றியமையாதனவாய் இருத்தலின் இவைகளை ``மூவரோடு`` என வேறு பிரித்து ஓதினார் இவ்வொன்பதும் உடல் நிலைப்பிற்குக் காரணம் ஆதல் பற்றி உடல் நலத்தைச் செய்கின்ற மருத்துவர்களாகக் கூறினார்.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதற்கு, `மற்றும் ஓர் ஐவர்` என உரைக்க. `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம், என்னும் கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தையே `மற்றும் ஓர் ஐவர்` என்றார். இவைகளும் ஆகாயம் முதலிய பூதங்களில் ஒவ்வொன்றின் சிறப்புக் குணமாகும்.
ஆகத் தாத்துவிகம் அறுபதினையும் கூறியவாறு காண்க.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதை, ``அத்தலை`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆகிய இவர்கள் அத்தலை அமர்ந்து நின்றார்` என முடிக்க. திணை விராய் எண்ணிய வழிச் சிறுபான்மை அஃறிணையால் முடியாது, உயர்திணையால் முடிதல், ``பலவயினானும்``* என்ற இலே -சினாற் பெறப்படும். தலை - இடம். சூனிய சம்பாடணையாதல் பற்றி, `அத்தலை` என மறை பொருளாகக் கூறினார். அது தூல தேகமே என்க.
இதனால், `தத்துவ ஆராய்ச்சி செய்வோர் தூல தேகத்தின் இயல்பினை இவ்வாறு ஊன்றி உணர்தல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

பொழிப்புரை :

(மேல், ``ஆமாக்கள் ஐந்து`` என்னும் மந்திரத்தில்,* `பிராண வாயுத் தன்னை அடக்குவார்க்குக் குதிரையாயும், அல்லாதார்க்குக் கடாவாயும் நிற்கும்` எனக் கூறியதனை இங்கு வேறோராற்றான் வலியுறுத்துகின்றார்.
இரண்டு கடாக்கள், இடநாடி வலநாடிகள் வழியாக இயங்குல் பிராணன். அஃது ஒன்றேயாயினும் இயக்க வகையால் இரண்டாகின்றது. இவ்வூர், இந்தத் தூல தேகம். தொழும்பன் - அடியான். ஆண்டான் சொற்படி அக்கடாக்களை மேய்ப்பவன். அஃது அகங்கார தத்துவம். ஆன்மாவாகிய ஆண்டான் அந்தக் கடாக்களை அந்த அடிமையினிடம் விடாமல் தானே தன்னிடத்தில் கெட்டியாகப் பிடித்து வைப்பானேயானால், அந்த இரண்டு கடாக்களும் ஒரு கடாவாய் விடும். அஃதாவது, `இடை நாடி பிங்கலை நாடி வழியாக இயங்காமல், சுழுமுனை நாடியில் நின்றுவிடும்` என்பதாம்.

குறிப்புரை :

இடை நாடியால் பெரியோர் ஆதலின், ஒன்றே தொழும்பன்` என்பது பாடமன்று.
`ஊர் பெரிது; அதற்கு உழைக்க இரண்டு கடாக்களே இருத்தல் அதிசயம். பின்னும் அவை இரண்டும் ஒன்றாகி விடுதல் அதிசயத்தினும் அதிசயம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 25

ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.

பொழிப்புரை :

பயிரிடுதற்கு ஏற்புடைய ஒரு கொல்லையை, அதனுட்கிடக்கும் மேடு பள்ளங்களைச் சமன் செய்து, வரம்பு கோலி, வரிசை வரிசையாக வேலியைக்கட்டிப் பருத்தியை நான் பயிரிட் -டதனால், எங்கள் ஊரில் உள்ளவர்களில் மூவர் யான் கொண்டிருந்த உள்ள நட்பையே சூதாடு கருவியாகக் கொண்டு இடைவிடாது என்னுடன் சூத பொருது, இப்பொழுது அதை விட்டுவிட்டார்கள்.

குறிப்புரை :

`உழைத்துப் பொருள் தேட விரும்பாதவரே சூதாடு களத்தில் சென்று சேர்வார்கள். நான் பயிர் செய்ய முனைந்து விட்டமையால், அங்கு செல்லவில்லை. அவர்களும் என்னை அங்கு அழைக்கவில்லை` என்பதாம். ஒத்தல், கொல்லைக்கு ஆகுங்கால், பயிருக்கு ஏற்புடைய தன்மையும், மனத்திற்கு ஆகுங்கால் தவத்திற்கு இயையும் பான்மையையும் குறிக்கும். ``மணல்`` என்பதை `மண்+நல்` எனப் பிரித்து, `மண்` என்றதன் உள்ளுறை `மனத்தின் இயல்பு` என்பதாக் கொள்க. கொல்லை, மனம். மேடு - பள்ளம், வெறுப்பு, விருப்பு. `பத்தி - வரிை\\\\u2970?` என்பது வெளிப்பொருள். ``வலை`` என்பதற்கு `வேலி` என வெளிப்பொருள் கொள்ளாவிடில் மறை பொருட் கூற்றாகாது. `பருத்தி` என்பதை உள்ளுறைப் பொருட்டு, `தீ` என்பது குறுகி நின்றதாகக் கொண்டு பெரிய தீ, மூலாக்கினி` என உரைக்க. நிறுத்தல், நிலைப்படுத்துதல். ``முத்தம்`` என்பது முத்தங் கொடுத்தல் போன்ற மிக நெருங்கிய நட்பைக் குறிப்பதாய், வேற்றுமை யின்றி ஒன்றி இயைபை உணர்த்திற்று. மூவர், முக்குணம். நிரம்புதல் - தம் அளவில் தாம் நிற்றல்.
இதனால், `வேண்டுதல், வேண்டாமையை விட்டு, சிவ பத்தியுடன் சிவயோகம் செய்தால், முக்குண விகாரங்கள் நீங்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

பொழிப்புரை :

கருடனைப் போலக் கூகையும் பாம்பைக் கண்டவுடன் கொல்லும். அதனால் கூகையும், பாம்பும் தம்முட் பகையாவன. கிளியும் பூனையும் தம்முட் பகையினவாதல் தெளிவு. நாகை - நாகணவாய்ப் புள். இதுவும் கிளியைப்போலப் பேசும் தன்மையுடையது; குறும்பூழ் (காடை) அத்தன்மையைப் பெறாமையால் அவையும் ஒன்றுவன அல்ல. இவை அனைத்தும் வாழ்கின்ற ஒரு காட்டில் எலிகளும் வாழ்கின்றன. ``கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்``3 என்றதனால், `பேசும் தன்மையோடு, கேட்கும் தன்மையுடையது நாகணவாய்ப்புள்` என்பது விளங்கும்.

குறிப்புரை :

கூகை, மற்றைப் பறவைகள் போல வெளியே விருப்பப்படி பறந்து காணப்படாது. இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்து கிடக்கும். பாம்பு மிகக் கொடியது. கிளி யாவராலும் மிக விரும்பப்படுவது. பூனை வெளிக்கு நல்லதுபோல இருந்து பாயும் நாகணவாய்ப்புள், கிளியோடு ஓரளவு சமமாக மதிக்கப்படுவது. குறும்பூழ், ஒன்றிலும் சேராதது. `சிறு துரும்பும் பல்லுக்குதவும்` என்பதுபோல, ஓரோர் காலத்தில் சகுனத்தை அது தரும். இவற்றின் நடுவில் உறைவன எலிகள். `இவற்றின்` என்பது எஞ்சி நின்றது.
இவைகளைப் போல, உலகத்தில் பல திறப்பட்ட மக்கள் வாழும் நிலையில், அவர்களுக்குள்ளேயும் ஒற்றுமையின்றி இகலி வாழ்கின்றார்கள். இங்குக் குறஇக்கப்படும் இகல், சமயப் பூசல்.
எலி, ஓர் எளிய பிராணி. மக்களுக்கு அதுவும் பகைதான். ஆயினும் இங்கு மக்களை நாம் கருத வேண்டியதில்லை. மேற்கூறிய, அனைத்தும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ எலிக்குப் பகையாவனதாம். அது போல, எத்திற மக்களும் ஏழைக்கு உதவுபவர் அல்லர். மாறாக, நலிவும் செய்வர்.
தத்துவத் துறையில் ஏழையராவார். சற்குரு கிடைக்கப் பெறாதவர். அவர்கள், `நமக்கு யார் வழிகாட்டுவார்கள்` என்று அலமந்திருக்கும் பொழுது, கூகை போல வெளியுலகத்தில் தொடர்பு கொள்ளாத சிலர் சில அறிவுரைகளை வேண்டி, நாகணவாய்ப் புள் போன்றவர்களிடம் அறிவுரை கேட்கச் செல்லும்பொழுது, செல்பவரது நிலை தெரியாமல் அவரைக் குருவைத் தேடுபவர் குருவாக அடைந்தால் என்ன ஆகும்?
``குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே``*
என இவரே முன்பு அருளிச் செய்தபடி, இருவரவுங் கெடுவது தவிர, வேறு எதுவும் விளையாது. இதனையே இங்கு,
``நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கையைக் கண்டு எலி கூப்பிடுமாறு``
என்றார். கூப்பிடுதல் - தன்பால் வரவழைத்தல். ஆறு - நெறிமுறை. `ஆறு உள்ளது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. பிற்பகுதிப் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு, முற்பகுதியில் பல பொருள்களைக் கூறினார்.
இதனுள் உய்த்துணர வைத்த காடாவது உலகம்.
இதனால், சற்குருவைச் சாராது அசற்குருவைச் சார்தலின் குற்றம் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

பொழிப்புரை :

(சிலர் இனிய நகை முகங்காட்டித் தீங்கு விளைவித்தல் உண்டு; சிலர் அவ்வாறன்றிக் கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தல் உண்டு.) அவர்களில் பின்னர்க் கூறிய வகையைச் சார்ந்தவன் ஒருவன் கொங்கு நாட்டு உழக்கில் அடைத்து மூன்று வெள் ளெலிகளைக் கொணர்ந்தான். அவைகள் கொல்லனது உலை போல எரிகின்ற எரிக்கு அப்பால் இருப்பின், ஓடும்; இருக்கும்; இன்னும் பிற வற்றை யெல்லாம் செய்யும். ஆகவே, அவைகளை எரியில் இட்டால், இட்டவனுக்கு உணவாய் விடும். தொல்லை நீங்கும். எனவே, இழிந்த இனத்தவாகிய அவைகளை ஒழிப்பதற்கு வழி அதுவே.

குறிப்புரை :

கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தவன் சிவன். தீமை, திரிபுரத்தவர். விளைத்தவை குலைத்தற்கு, `தீமை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. நிலைத்தல், வாழ்தல். ``வெள்ளெலி`` என்பதில் வெண்மை நிறம் குறித்ததன்று; வெற்ற வெளியைக் குறித்து இவைகளை `நாட்டெலி` என்றும், வீடுகளில் உள்ளவற்றை, `வீட்டெலி` என்றும் கூறுவர். நாட்டெலியே விளைவுச் சேதத்தை உண்டாக்குவன. `வெள்ளெலி மூன்று` என்றது. `புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக் கரணங்களை. அவையே புறப் புலன்களைப் பற்றிப் பல்வேறு விவகாரங்களை எய்துவன ஆகலின், அவற்றை, ``வெள்ளெலி`` என்றார். இனி, `மூன்றெலி முக்குணம்` என்பாரும் உளர். முக்குணங்கள் இங்ஙனம் காரியமாய்ப் பரிணமித்தன்றிச் செயற்படாமை யறிக. மாயையினின்றும் கருவி கரணங்கள் யாவும் சிவனது சங்கற்பத்தாலே தோன்றுதலின், அவன் இவ்வெலிகளைக் கொணர்ந்ததாகக் கூறினார். உழக்கு, ஒரு முகத்தலளவைக் கருவி. இங்கு அஃது உடம்பைக் குறித்தது. இன்னும் அதன் சிறுமையைக் குறித்தற்கு, ``கொங்குழக்கு`` என்றார். `கொங்கு நாட்டு அளவை அளவிற் குறைந்தன` என்பர். ``உலை`` என்றது, மூலாதாரத்தைக் குறித்துப் பின்னும் அதிலுள்ள அக்கினி எழுந்தோங்கிச் செல்லும் சுழுமுனா நாடியைக் குறித்தது. பிராண வாயு சுழுமுனா நாடியிற் செல்லாது, இடைகலை, பிங்கலை வழியிற் செல்லும், அந்தக் கரணங்களும் அவ்வுயிர்ப்போடு பொருந்திப் புறத்தே உலாவுதலை, ``உலைப்புறம் செல்லின் ஓடும்; இருக்கும் என்றார். அதினின்றே, `உலையகத்து அடங்கின் அடங்கி ஒடுங்கும், என்பது பெறப்பட்டது. புலை - கீழ்மை. கீழ்மையுடைய பொருளை, `கீழ்மை` என்றது உபசாரம். `கீழ்மையுடையது` என்றது, மூலப்பிரகிருதியை. அது தானே குணதத்துவமாகிச் சித்தமாய் நிற்றலால், சித்தம் இங்கு வேறு கூறப்படவில்லை. போதல் - அழிதல் ``போகின்றவாறு இது`` என ஒரு சொல் வருவித்து முடிக்க` வெள்ளெலியை உண்பவர் நெருப்பில் இட்டு உண்டல் பற்றி, `அவை போகின்றவாறு உலையில் இடுதலே` எனக் கூறினார்.
இதனால், `அந்தக் கரணங்களில் அடங்கி ஒடுங்கிப் பயன் தருதல் வாசியோகத்தாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.

பொழிப்புரை :

இருள் செறிந்த காட்டிற்குள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள், அதினின்றும் நீங்கி, ஒளி விளங்கும் வெளி யிடத்தைக் காணுதல் அரிதேயாம். இனி, நாம் குறிப்பிடும் காட்டிற் குள்ளே காட்டுக் குதிரைகள் ஐந்தும், எப்பொழுதுமே நற்குணத்தை அடையாத ஒட்டகங்கள் ஆறும் உள்ளன. (என்றால், இதர்குள் புகுந்துவிட்டவர்களது நிலைமை என்ன!) அந்தக் காட்டிற்குள் புகாமல் இருந்தால், வெளியில் மூன்று நல்லரசுகள் உள்ளன. அவைகளின் கீழ் நல்வாழ்வு வாழலாம்.

குறிப்புரை :

காடு, இருவினைப் புதர்கள். `கூடு, மூடு` என்பனவும் காட்டையே குறித்து நின்றன. ``ஆனது`` இரண்டும் பன்மையொருமை மயக்கம். ``புகாவிடின்`` என்றது வெளியே இருப்பின்`` எனப் புகுதலின் மறுதலைப் பொருளைத் தந்தது. அணை, அரியணை. குதிரைகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள். ஒட்டகம் ஆறு, `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் அகப் பகை ஆறு. `மூவணை` முத்துரியங்கள். முத்துரியங்கள் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. முதல் அடிவேற்றுப் பொருள் வைப்பணியாய் வந்தது. கடுமை, மிகுதி குறித்தது.
இதனால், `இருவினைகள் வெட்ட வெட்டத் தளிர்க்கும் காடுபோல் உள்ளன; அவற்றிற்குள்ளே அகப்பட்டு அடங்காது நிற்கின்றன பஞ்சேந்திரியங்கள்; அந்நிலையில் மேலும் காமம் முதலிய அறுபகைகள் துன்பம் விளைக்கின்றன. இவற்றிலிருந்து நீங்கினாலே இன்பம் உளதாகும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :

பரத்தையர் உடுத்துகின்ற ஆடை, அவர் நல்லுணவு உண்டு வளர்த்துக்கொள்ளும் தசை, குழாய்களில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்போல வெளியே தோன்றாது உள்ளே ஓடுகின்ற இரத்தத்தால் விளங்கும் மேனியழகு, கழுத்தில் அணிகின்ற காறையும், மார்பில் அணிகின்ற பொன் வடமும், கைகளில் அணிகின்ற வளையலும் முதலான அணிகலன்கள் ஆகியவற்றைக் கண்டவர்கள் அவவைகளிலே மயங்கி, பாறைமேல் உலர்த்தப்பட்ட சீலை விரைவில் ஈரத்தை இழந்து காற்றில் பறப்பதுபோலப் பறந்துபோய், அவர்களது உந்திக் குழியில் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

`அவர்களை மீட்குமாறில்லை` என்பது குறிப்பெச்சம்.
இம்மந்திரம் பரத்தையர் கூட்டத்தை விலக்கியதன்று. என்னை யெனின், இது சூனிய சம்பாடணையாகிய குறிப்புப் பொருளை உடையதன்றி, வெளிப்பபைபொருளதன்று ஆகலானும், அதனை விலக்குதற்கு இங்கு ஓர் இயைபின்மையானும் என்க. மற்று, பரத்தையர் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிதாதலாகிய உலகியலை வைத்து, `மாயையின் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிது` என்பதையே உணர்த்திற்றாம். ஆகவே, உடம்பு மாயையேயாகலின் அதுவே பரத்தை. திருவருளால் தோன்றும் சிவஞானமே இல்லக் கிழத்தி. அவளோடே கூடியிருப்பின், நாற் பயனும் நன்கு விளையும். இவளது மயக்கிலே வீழ்ந்தால், அனைத்துப் பயனும் கெடும்.
இப்பரத்தை உடுத்தியுள்ள அழகான சீலை தோல். தசை தசைகளே. எண்ணெய் - உதிரம். இஃது உலகியற் பொருளில் ஆகு பெயராய் மேனியழகைக் குறித்தது. காறை, எலுமப். நாண் - கயிறு; நரம்புகள். வளையல், நேர்நில்லாது வளைகின்ற மயிர்கள். ஆறு, ஆற்று நீர். ஐக்குழி - அழகிய குழி; என்றது அதன் சுழியை. அஃது இங்கு உவமையாகுபெயராய், உவமையில் உந்தியையும், பொருளில் கருப்பையையும் உணர்த்திற்று. `ஆற்றைக் குழி` என்னும் றகர ஒற்று, எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. மங்கையர் முயக்கில் மயங்கு -வாரை அவர்தம் உந்தியாகிய மடுவில் வீழ்பவராகக் கூறுதல் வழக்கு.
``மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தேந்தெனென்
வண்டினம் கண்டுதொடர் குழல்மாதர்
... ... ... ... ... ... உந்திஎன் கின்றமடு விழுவேனை
உன் ... ... ... ... அடி சேராய்``
என்னும் திருப்புகழைக் காண்க.
``சீலைபோல்`` என வாளா கூறாது, பாறையில் உற்ற சீலைபோல்`` என்றமையால் அச்சீலை விரைவில் ஈரம் இழத்தல் போல, அறிவையிழத்தல் குறிக்கப்பட்டது.
இதில், `பரத்தையர்` என்னும் முதற்பொருள் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உலகியலில் பரத்தையர் மோகம் நோயும், வறுமையும் போலும் பெருந்துன்பங்களைப் பயத்தல் போல, மெய்ந் நெறியில் உடல் மோகம் பிறவித் துன்பத்தைப் பயக்கும் என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.

பொழிப்புரை :

ஆற்றிடைக் குறை ஒன்று உள்ளது; அந்த ஆற்றின் அக்கரையில் மலை ஒன்று இருக்கின்றது. அந்த மலைமேல் நின்று தமது செயல்களைக் கண்காணிக்க நாள்தோறும், `காலை, மாலை, இரவு` என்பவற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவர் போகின்றார்`; திரும்பி வருகின்றார். அவரது கண்காணிப்பை முதலில் சிறிது சிறிதாகவும், பின்பு முழுமையாகவும் தன்பால் ஈர்த்து, அவரை அந்த மலைக்குச் செல்லாதபடி தடுக்கின்ற ஒருத்தி அவரோடு கூடவே இருக்கின்றாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதை நாம் அறியமாட்டோம்.

குறிப்புரை :

``துருத்தி`` என்பது ஆற்றிடைக்குறை. கொல்லன் துருத்தி இரண்டையும் குறிக்கும் பலபொருள் ஒரு சொல்லாகலின், அது வெளிப்படைப் பொருளில் ஆற்றிடைக் குறையையும், குறிப்புப்பொருளில் கொல்லன் உலைத்துருத்தியையும் குறித்தது. கொல்லன் உலைத்துருத்தியாவது சுவாசத்தை வாங்கியும், விட்டும் நின்ற சுவாச கோசம். எனினும் அஃது, அதற்கு இடமாய் உள்ள உடல் முழுவதையும் குறித்தது. `உடல்` என்பது தலைக்குக்கீழ் உள்ள பகுதிக்கெல்லாம் பெயராய், மூலாதாரம், உந்தி, இருதயம், கண்டம் ஆகியவற்றைக் குறித்தது. எனவே, அக்கரையில் உள்ள மலையாவது புருவ நடு. அதுவே ஆன்மாவின் சாக்கிரத்தானம் ஆதலின் உயிர் தன் கருவி கரணங்களின் வாய்ப்பிற்கு றே்ப மூலாதாரத்தினின்று படிப்படியாக மேல் ஏறி வந்து தன் செயலைக் கண்காணிக்கும் இடமாயிற்று. ஆகவே, `போவார் ஆவார் உயிர்` என்பது விளங்கும். ``போவார்`` எனவே, `வருவார்` என்பதும் அமைந்தது. போதல் மேல் ஏறுதலையும், வருதல் கீழ் இறங்குதலையும் குறித்தன. இவை முறையே மேலாலவத்தை, கீழாலவத்தை எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.
இனி மறதியை உண்டாக்குவது ஆணவ மலமேயாதலின், ``மலையைத் தவிர்ப்பாள் ஒருத்தி`` என்றது ஆணவ மலத்தையேயாம். ஆணவ மலம் வந்தவாறு அறியப்படாமையால், ``அவன் ஊரறி யோமே`` என்றார்.
விருத்தி - தொழில். வருத்தி - வருவித்து; தன்பால் ஈர்த்து.
இதனால், முன் தந்திரத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்ட மேலாலவத்தை கீழாலவத்தையின் இயல்புகள் உள்ளுறையாக உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 31

பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

பொழிப்புரை :

கானக மக்களில் மங்கைப் பருவம் எய்திய மகளிர், உண்மை வாச்சியங்களில் ஏதும் இன்றிப் பருந்தும் பறவையும், ஓசை வேறுபட்டபோதிலும் அடிநிலையிசை ஒன்றேயாக முழக்குகின்ற ஓசைகளையே வாச்சியமாகக் கொண்டே எப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளப்படுகின்றார்கள். அவர்கட்குப் பிறக்கின்ற பிள்ளை களும் பேயும், பூதமுமாகவே பிறக்கின்றன. ஆயினும் அவர்களில் யாரும் இதைப் பற்றி வருந்துவதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சி யுடனேயே வாழ்கின்றார்கள்.

குறிப்புரை :

`இது வியப்பு` என்பது குறிப்பெச்சம். உண்மை வாச்சியம் அருள் நாதம். பருந்து தீவினை. கிளி நல்வினை. இவை பறை கொட்டல், ஆரவாரத்தைத் தோற்றுவித்தல். அடிநிலையிசை. ஆணவ மலம். கானக மகளிர், கருவி கரணங்கள். அவர்கள் பருவம் அடைதல், ஒடுங்காது எழுச்சியுற்று நிற்றல். இவர்கட்குக் கணவராகும் கானவர், பெத்தான்மாக்கள். அதீதம் முதலாகச் சாக்கிரம் ஈறாக உள்ள கீழாலவத்தைகள். பிறக்கின்ற பிள்ளைகள், இவ்வவத்தைகளில் நிகழும் அனுபவங்கள். இவைகள் திருவருளை நினைய ஒட்டாது, மீட்டும் மீட்டும் வினைப்பயன்களையே நினைப்பித்தலால் அவை, `பேய் பூதம்` என இகழப்பட்டன. ஆயினும் அவைகளின் உண்மை உணராது மகிழ்ந்து வாழும் உயிர்களை, ``இன்புறுவாரே`` என்றார். ஏகாரம், தேற்றம்.
``பருந்தும், கிளியும் படுபறை கொட்ட`` என்ற குறிப்பினால், மணம் கானவர் மணமாதல் அறியப்பட்டது. `பெறல் உரு, தவப் பெரும் பூதம் ஆகும்` என மாற்றிக்கொள்க. ``ஆகும், இன்புறுவார்`` என்பன போலவே, `படுவார்` என எதிர்காலமாக ஓதற்பாலதனையே வேறோ ராற்றால், ``பட்டார்`` என இறந்த காலமாக மயக்கிக் கூறினார். `இருந்த` என்னும் பெயரெச்சம் இடையே ஓர் இகரம் பெய்து விரிக்கப்பட்டது.
இதனால், முத்திறத்து ஐந்தவத்தைகளுள் சகல ஐந்தவத்தையும் கேவல ஐந்தவத்தையும் பயனிலவாதலை உணர்ந்து சுத்தாவத்தையிற் செல்லமாட்டாதவாறு இழிவு உள்ளுறையாக உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 32

கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.

பொழிப்புரை :

கூட்டில் வாழும் பறவை இரையைத் தேடித் தின்று விட்டுக் கூட்டிற்குள் புகுந்து பின் அதனைச் சீரணிக்கப் பண்ணிக் கொண்டுமட்டும் இருந்தால், அந்தப் பறவை தனக்கு என்ன உறுதிப் பயனைச் செய்துகொள்ளும்? (ஒன்றையும் செய்து கொள்ளாது. ஆகலின் தம் உயிர்க்கு உறுதி செய்துகொள்ள விரும்புவோர் அந்தப் பறவையின் செயலைக் கைக்கொள்ளாமல் விடுத்து,) நெய்யை உணவாக உண்டு அதனாலே ஓங்கி எரிகின்ற நெருப்புப் பின் நறுமணமும், குளிர்மையும், அழகையும் உடைய சாந்தத் தருகின்ற அந்த மேலான செயலை நோக்கி, அதனைக் கடைப்பிடிக்க.

குறிப்புரை :

`கூட்டுப் பறவை` என்னும் பகர ஒற்று, எதுகை நோக்கித் தொக்கப்பட்டது. `மற்று`, வினைமாற்றின் கண் வந்தது. அறுதல் - சீரணித்தல். ``அற்றால் அளவறிந்துண்க``8 என்பது காண்க. அறுத்தல் - சீரணிக்கப்பண்ணுதல். சீரணித்தல் இயல்பிலே நிகழ்வ தாயினும் அது தவிரப் பிறிது செய்யாமையைக் குறித்தற்கு, அதனைப் பரவையால் செய்யப்படுவதுபோலக் கூறினார். உணவை உண்டு அதனைச் சீரணித்துக் கொள்வதனோடு அமைகின்ற உயிர்கள் பல உள ஆயினும் கூட்டில் வாழும் பறவையையே கூறினார், அஃது உடம்பில் வாழும் உயிரைக் குறித்தற்கு, `கூடு` என்பது உடம்பிற்கும் பெயர். அதனை, ``கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்பு ஆரே அனுப விப்பார் - பாவிகாள் அந்தப் பணம்``9என்பதனானும் அறிக. `சுடு` என்பது எதுகை நோக்கி நீண்டமையால் ஈற்றுகரம் குற்றுகரமாய் உயிர் வரக்கெட்டது. `சுடு எரி` முக்கால வினைத்தொகை. நெய்யை உண்டு, மையைக்காலும் எரி, விளக்கெரியும், ஓம குணடத்து எரியும். பாடு - உயர்வு; மேன்மை. ``அறிவார்க்குப் பன் எளிதாமே`` என்றாராயினும் `பயன் வேண்டுவார் அறிந்து கடைப்பிடிக்க`` என்பதே கருத்து.
இதனால், `மக்கள் உணவைத்தேடி உண்டு உடம்பை வளர்ப் பதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை; அவ்வளர்ச்சிக்கு ஏற்ப மெய் யறிவையும் வளர்த்து, அதற்கேற்ற செயல்களையும் உடையராதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை
தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

பொழிப்புரை :

எல்லாச் சமயங்கட்கும் வேர்போன்றது திருவருள். அஃதாவது, `திருவருட் குறிப்பின்றி, எந்தச் சமயமும் உலகில் இருக்கவில்லை` என்பதாம். அத்திருவருளே உணர்ந்த சமயங்கள் வேரின்மேல் வளர்ந்து தழைத்த மரங்களாகும். திருவருளை உணராத சமயங்கள் வளராது முடம்பட்ட மரங்களாம். அவைகளையே, ``வேர் உண்டு; தலையில்லை`` என்றார்.

குறிப்புரை :

பிறர்க்கு உறுதிப்பொருள்களை நன்கு விரித்துரைப்பாரது விரிவுரைகள், நல்லாசிரியரது உபதேசத்தின் வழி அமைந்தனவாயின், அவை பசுமையோடு தழைத்த இலைகளின் நடுவிலே பூத்த பூக்களாய், `பயன்` என்னும் தேன் உள்ளூறப்பெற்று நுகர்ந்து மகிழத் தக்கனவாய் இருக்கும். தான்றோன்றிகளாய் உள்ளாரது விரிவுரைகள் அத்தன்மை உடையன ஆகா. அவைகளையே, ``இலை இல்லை; பூ உண்டு; இன வண்டிங்கில்லை`` என்றார். இவையும் மேற்குறித்த சமயங்களின் பிரச்சாரங்களையேயாம்.
பிற சில கொள்கைகளில் வேறுபாடு உளவாயினும் கடவுட் கொள்கையுடைய சமயங்களிடையே `திருவருள் என்னும் ஓர் ஒற்றுமை உண்டு. அதனால் அவை ஒரு கொத்திலே பூத்த பூக்கள் போல விளங்கும் கடவுட் கொள்கையில்லாத சமயங்களிடையே அத்தகைய ஒற்றுமையில்லாமையால், அவை ஒன்றோடொன்று சேராத தனிப் பூக்கள் போலும். (தனிப் பூவிலும், கொத்தாய் உள்ள பூக்கள் சிறந்து நிற்றல் தெளிவு. இத்தன்மை பற்றிக் கடவுட் கொள்கையில்லாத சமயங்களை, ``(பூவுண்டு; ஆயினும்) பூவின் குலையில்லை; (அதற்குக் காரணம்) தாள் இல்லை`` என்றார். குலை - கொத்து. தாள் - காம்பு.
கடவுட் கொள்கை இல்லாவிடினும், ``நல்லதன் நலனும், தீயதன் தீமையும் இல்லன அல்ல; அங்ஙனமே அவற்றிற்கு ஏற்ற மறுபிறப்புக்களும இல்லன அல்ல``lஎனக் கொள்ளும் சமயங்கள் உள. ``அவை பலரால் எளிதில் பின்பற்றப் படுதலால், எளிதில் பறிக்க வரும் மலர்போல்வனவாம். ஆயினும் கடவுட் கொள்கை இல்லாமையால், நாற்றம் இல்லாத மலர் போலும். அதனால் அவை சூடப் பெறும் தலைகளை இல்லனவாம் - என்பதனை, ``கொய்யும் மலர் உண்டு; சூடும் தலையில்லை`` என்றார்.
இனி, மலர்கள் எளிதில் கொய்ய வருவதற்குக் காரணம், அவை பொருந்தியுள்ள கிளை தாழ்ந்திருத்தலேயாம். `அதுபோல நாற்றம் இல்லாத மலர்கள்போலும் அந்தச் சமயங்கட்கு அடி நிலை யாகிய, கடவுட் கொள்கையற்ற வெற்றறம் உலகில் நிலை பெற்றுத்தான் உள்ளது` என்பதை, ``தாழ்ந்த கிளைபுலராதே`` என்றார். புலர்தல் - உலர்தல்; வற்றுதல். கிளை வாடாமைக்குக்; காரணம், வேர் பசுமையாய் இருத்தல். `சமயங்களின் வேர் திருவருட் குறிப்பு` என நாயனார் முதற்கண் கூறியதை நினைக.
இரண்டாம் அடியின் முற்பகுதியை, `வேர் உண்டு இலையில்லை` என மாற்றி முதலிற் கூட்டியும், அதன் பின்னர், `பூவின் குலையில், (காரணம்) தாள் இல்லை` என மாற்றியும் பொருள் கொள்க. ``பூவின் குலையில்லை`` என்று மட்டுமே கூறியதால், `பூ உண்டு` என்பது பெறப்பட்டது.
இதனால், `புறப்புறம், புறம்` என்னும் இரு கூற்றுப் புறச் சமயங்களின் இழிபுகள் `மருட்கை` என்னும் மெய்ப்பாடு தோன்ற, உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 34

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

மக்கள் யாவரும் வினைத் தொடர்ச்சியாகிய ஆற்று வெள்ளத்தில் போய்க்கொண்டிருப்பவரே. ஆயினும் அவருள் ஒரு சிலர் மட்டும் ஆற்றின் அக்கரையில் ஓர் ஆலமரத்தையும், அதன் கீழே உடையின்றியிருக்கும் ஓர் அந்தணரையும் கண்டு வாழ்த்து கின்றார்கள். அதனால் அவ்வந்தணரால் தாம் கடலிற் சென்று விழுவதற்கு முன்னே கரைசேர்க்கவும் பெறுகின்றார்கள். மற்றவர் களும் அவ்வாறே கரை சேரலாம். ஆயினும் அவ்வாறு செய்யாமல் ஐந்து வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வெள்ளத் திலே மிதந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`வெள்ளம் கடலிற் கொண்டுபோய் விடுதல் உறுதி` என்பது கருத்து.
``ஆல நீழல் உகந்த திருக்கையே;
ஆன பாடல் உகந்த திருக்கையே``3
என்பது முதலாக வரும் பல அருட்டிரு மொழிகளால் ஆலமர நிழல் சிவபிரானது இருக்கையாதல் தெளிவு. சங்க இலக்கியங்கலிலும் இது பெறப்படும். ஆகவே, ``நக்கர்`` என்றது சிவபிரானையே என்பதில் ஐயமில்லை. நடுவே - கடலில் சென்று வீழ்வதற்கு முன்பே ஆல மரத்தை அக்கரைக்கண் நிற்பதாகக் கூறியது, சிவன் வினைத் தொடர்ச்சியோடும், பிறவிப் பெருங்கடலோடும் யாதொரு தொடர்புமின்றி அகல நிற்றலைக் குறித்தற்கு. ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பார் கரை சேர்த்தல் கூடுமன்றி, போவாருள் ஒருவர்க்கு அது கூடாமை சொல்ல வேண்டா.
ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பவர் கண்டால், எவரும் தாமே சென்று மீட்பர். அதற்கு மேல், அதற்கு மேல், வெள்ளத்திற் செல்வார் அவர்களை அழைத்து வாழ்த்தினால், அந்தணர் ஒருவர் மீட்கா தொழிவாரோ? ஒழியார். ஆதலின் ``வாழ்த்திப் பயன் கொள்வர்`` என்றார்.
ஆல மரம் விரிந்து படரக் கூடியது; அதன் விழுதுகள் எத்துணைத் தூரமும் எட்டக் கூடியன. ஆகவே, ஆலமரத்தின் கீழ் உள்ள அந்தணர் அந்த விழுதுகளில் ஒன்றன் வழியாக செல்வாரை எளிதில் மீட்பார். ஆயினும் அந்தணர் வீசும் ஆலம் விழுதை ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் பலர் ஆற்றோடே போகின்றனர்` என்பதை, ``தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே`` என்றார். தாழ்தல், ஆற்றில் வீழ்தல்.
ஆல மரம், வேதம். அதன் விழுதுகள், அதன் வழி நூல் சார்பு நூல்கள்.
ஆல மரமே பண்டு தொட்டு அருள் வடிவான மரமாகக் கொள்ளப்பட்டு வர, அதனை மாற்றி, அசோக மரத்தையும், அரச மரத்தையும் கொண்டவர்களையும், அவருள் ஒரு சாரார், ``நக்கன்`` என்பது, `திசைகள் தவிர வேறு ஆடை இலன் என்பதாகப் பொருள் தந்து, விபாயக நிலையை உணர்த்தி நிற்க, அதனை யறியாது, உலகியலுக்கு மாறாய், `ஆடையின்றி யிருப்பவன்` எனப் பொருள் கொண்டவர்களையும் குறிப்பிற் குறிப்பாய் உணர்த்தற்குச் சிவனை வேறோராற்றால் சுட்டாது, ``நக்கன்`` எனச் சுட்டினார்.
அசோகும், அரசும் ஆற்றிற் செல்வாரை மீட்கலாகாமை -யையும் நோக்குதல் வேண்டும்.
மிக்கவர் - எஞ்சினோர் ``அஞ்சு துயரம்`` என்பது வெளிப்படைப் பொருளில், `பல துயரம்` என்றும்` உள்ளுறைப் பொருளில் பஞ்சேந் திரியங்களின் துயரம் என்றும் பொருள் தரும். கிடக்கின்றவாறு இரங்கத் தக்கது` என எஞ்சி நின்ற சொல்லெச்சத்தோடு முடிக்க.
இதனால், முன் மந்திரத்தில் பொதுப்படக் கூறிய சமயங்களுல் ஒரு சாரனவற்று இரங்கத் தக்க நிலை வகுத்துக் கூறப்பட்டது. இதனால், காலத்திற்றானே களப்பிரர் ஆட்சி முதலிய காரணங்களால் தமிழ்நாட்டில் சிவனடியார்கட்கு இடுக்கண் தோன்றினமையை உணர்தல் கூடும்.

பண் :

பாடல் எண் : 35

கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.

பொழிப்புரை :

கூப்பிடு தூரத்தளவேயான குறு வழி ஒன்று உள்ளது. அதற்குள்ளே கடுமையான இரண்டு காடுகள் தனித்தனி ஒவ்வொரு காதம்போல உள்ளன. அந்தக் காடுகளில் வழிச் செல்வாரே மறித்துக் கொண்டுபோய் சிற்றறையில் அடைத்து வைக்கின்ற கள்வர்கள் வாழ்கின்றார்கள். ஒன்றும் அறியாத வழிப்போக்கர்கள் அந்தக் கள்வரை வழிகாட்டுபவராகக் கருதி அவரைப் பின் பற்றிச் சென்று, தமக்கு உதவுபவரை அழைக்க வேண்டிய நிலைமையராய் இச்சிறுவழியில் சிறு குடில் ஒன்றே புகலிடமாக அடைகின்றனர்.

குறிப்புரை :

ஓரிடத்தில் நின்று அழைத்தல், வேறோர் இடத்தில் உள்ளவர் காதில் விழுகின்ற அளவு தூரத்தை, கூப்பிடுதூரம்` என்பர். நெடுவழியின்றிக் குறுவழி` என்றற்கு, ``கூப்பிடும் ஆறு`` என்றார். ஆறு - வழி. இந்தக் குறுவழியாவது, எண்சாண் உடம்பேயாம். இதிற் செல்லும் வழிப்போக்கர், உடம்பில்வாழும் உயிர்கள். ``வன்காடு இரண்டு`` என்பது, சொல்வாரது குறிப்பால் விளங்கிற்று. அவை `கீழாலவத்தை, மேலாலவத்தை` என்பன. அந்தக் காட்டிலே வாழும் கள்வர் கருவிகள். (தத்துவ தாத்து விகங்கள்) இவைகள் மிகுதியாக உயிரைமேல் ஏற்றினால், புருவ நடுவிற்கு மேற் செல்லவிடாது அவ் விடத்தே தடுத்து நிறுத்தலால் ``காப்பிடு கள்வர்`` என்றார். இதனால் இக்கள்வர்கள் எய்தும் பயன் மெய்யறிவாக பொருளைக் கவர்ந்து கொள்ளுதலாம். (கருவிகள் சடமாயினும் உருவக நயம் பற்றிப் பயன் எய்துவனபோலக் கூறினார்.) எண்சாண் உடம்பில் புருவநடு ஓரங்குலமே யாதலாலும் அதற்குள்ளே உயிர் நிற்றலாலும் `இந்தக் குறுவழிக்குள்ளே ஒரு சிறுகுடிலில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள்` என்பார், ``ஈண்டதோர் கூரை கொண்டாரே`` என்றார். ``ஈண்டு`` என்றது, முன்னர்க் கூறிய கூப்பிடு தூரத்தை. கூரையாவது குடில்.
`சிறு குடில்` எனப்பட்டது புருவ நடுவாகவே, அதன்கண் அடைபட்டிருத்தல், கேவல சாக்கிரமும், மாசகலமும் ஆயிற்று. அவற்றில் கிடைப்பன. பெரிய அளவாகக் கூறின், ஐம்புல இன்பங்களுக்குமேல் இல்லை. அவையும் கண்டதையே கண்டும், உண்டதையே உண்டும், பிறவும் இவ்வாறானவேயாம். அந்நுகர்ச்சி களும் கருவிகளின் சேட்டையால் நிலையின்றி, `சொப்பனம், சுழுத்தி` என்று இப்படியான நிலைகளால் இழக்கப்படுவனவேயாம். இவற்றை யெல்லாம் அடைபட்டிருப்பர் எண்ணி இன்னலுறுவாராயின் இந்தச் சிறுகுடிலினின்றும் தம்மை மீட்டு உதவுபவரை அழைக்கவே செய்வர். அதனால் அக்குடில், ``கூப்பிடு கூரை`` எனப்பட்டது. உதவுவது திருவருளேயாதலான் அதனை அவர்கள் அழைத்தே ஆக வேண்டும். அழைத்தவாற்றை,
``தரிக்கிலேன் காய வாழ்க்கை;
சங்கரா போற்றி! போற்றி!!``3
``தினைத்துணை யேனும் பொறேன் துயர் ஆக்கையின்
திண்வலையே``l
என்பன முதலியவாற்றான் அறிக.
திருவருளாள் உயிர் புருவ நடுவற்கும் மேலே செலுத்தப் படுமாயின் துவாதசாந்தப் பெருவெளியை அடைதலாகிய யோகா வத்தையையும் அதனையும் கடந்து அகண்டாகாரமாய் நிகழும் ஞானா வத்தையையும் எய்தும். `அவ்வாய்ப்பினைப் பெறாத உயிர்கள் சகல கேவலங்களில் நின்று புருவ நடுவை மட்டுமே மேல் நிலையாகக் கொண்டு, இருட்டறையில் கிடக்கின்றன` என்பதே இம்மந்திரத்தால் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

குளம் ஒன்றில், பொருட்படுத்தி எண்ணலாகாத கொட்டியும், சிறந்தனவாகிய வெல்ளாம்பல் செவ்வாம்பல்களும் பூத்துள்ளன. அதுபோலவே, பார்வைக்கு அழகாய் உண்டால் கொல்லும் எட்டிப் பழமும், அழகும் இன்றி, இனிமையும் இன்றி, உண்டால் நோயைத் தீர்க்கும் வேப்பம் பழமும் அழகும், இனிமையும் உடையதாய், உண்டால் பசியைத் தீர்த்து, உடல் நலத்தை நல்குவ தாகிய வாழைப் பழமும் அந்தக் குளக்கரையில் பழுத்திருக்கின்றன. வாழையே மேலும் சுவைப்படுத்தி உண்ண வேண்டுமாயின், கட்டியும், தேனும் மக்கட்குக் கிடையாதன அல்ல; எங்கு கிடைப்பனவே. ஆகவே, வாழப்பழத்தைப் பறித்துக் கட்டியும், தேனும் கலந்து உண்டு, நாவிற்கு நறுஞ்சுவை பெற்றுப் பசி தீர்ந்து, உடல் நலத்தையும் எய்துமளவிற்கு அறிவில்லாத மக்கள், பார்வைக்குக் கவர்ச்சியாய் உள்ள எட்டிப் பழத்தையே பெவேண்டி, `அதனை அம்மரத்தில் ஏறிப் பறிப்பது எவ்வாறு` என்று எண்ணுவதிலேயே காலம் கழித்து இளைக்கின்றார்கள். இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`உலகம் சிறுமையும், பெருமையும் கலந்தது` என்பதை முதல் அடி விளக்கிற்று. கொட்டிப்பூ, சிறியனவற்றையும், ஆம்பற் பூ, பெரியனவற்றையும் குறித்தன. இரண்டாம் அடி இறுதியில், `பழுத்துள்ளன` எனச் சொல்லெச்சம் வருவிக்க. `குளத்திடை பழுத் -துள்ளன` என்றாரேனும், `அதன் கரையில் பழுத்துள்ளன` என்பதே கருத்து. `குளம்` என்றதும், `குளக்கரை` என்றதும் உலகத்தையே.
எட்டிப் பழமாவது, ``முற்பயக்கும் சின்னீர இன்பத்திற் பிற்பயக்கும் பீழை பெரிதாம்``* காம இன்பம். வேப்பம் பழமாவது, கவர்ச்சியும், தன்னலமும் இல்லாது, செய்தால், முன்பு உள்ள பாவத்தைப் போக்கும் பசு புண்ணியங்கள். வாழைப் பழம், பத்தியுடைய உள்ளங்கட்கு விருந்தாய், என்றும் நிலைத்து நின்று, ஞானத்தைத் தரும் சிவபுண்ணியங்கள்.
கட்டியும் தேனும் சிவபுண்ணியங்களைச் சிறப்பித்துக் கூறும் சிவ தோத்திர சாத்திர நூல்கள்.
`இளைக்கின்றவாறு இரங்கத் தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், `நன்மையும், தீமையும் கலந்துள்ள இவ் வுலகத்தில் அறிவுடையோர் தீமையை விலக்கி, நன்மையைப் பொருந்தி இன்புறுவர்` என்பதும், `அறிவிலார், நன்மையை விலக்கித் தீமையைப் பொருந்தித் துன்புறுவர்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 37

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும்
கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.

பொழிப்புரை :

வண்டினங்களில் `அரசவண்டு` (கோத்தும்பி) எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற அந்த இனத்தில் பெண் வண்டும், ஆண் வண்டும் உயர்ந்த தாமரை மலர்களையே நாடிச் சென்று தேன் நுகர்தலுடன், அவற்றை அரியணையாகவும், வெண்கொற்றக் குடையாகவும் கொண்டு அன்புடன் கலந்து அரசு வீற்றிருக்கும். சிற்றின வண்டுகளும் இனத்தால் அவற்றோடு ஒப்பனவாயினும் அவை அத்தன்மையின்றிச் சிறு பூக்களையும் நாடி ஒடுலுடன், மற்றும் தம் கண் சென்று கலந்த பொருள்களின் மேல் எல்லாம் ஓடிச்சென்று விழும். ஆகவே, அவ்வினத்துப் பெண்வண்டு அதன் ஆண் வண்டினால் இன்பம் பெற்றதாயினும் அந்த இன்பம் அரசப் பெண் வண்டு, அரச ஆண் வண்டினால் பெற்ற இன்பம் ஆகுமோ! ஆகாது.

குறிப்புரை :

`உடையான், அடியார்` என்னும் முறைமையில் சிவனும் சிவன் அடியார்களும், ஏனைத் தேவரும் அவன் அடியார் களும் ஒரு தன்மைப்பட்டவர் போலக் கருதப்பட்டாலும், சுத்த போகத்தையன்றித் தராமையும் நாடாமையும், மற்றும் அனைத்துலகங்களையும் ஆட்சி செய்யும் உரிமையும், ``இருநிலத்தல் எமக்கெதிரா வாருமில்லை``*\\\\`20``தென்றிசைக்கோன் தானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`` என இருக்கும் பெருமிதமும், இவ்வாறன்றிச் சில விடத்தளவில் சிலவற்றை மட்டுமே தரும் உரிமையும், காமம், வெகுளி, மாற்சரியம் காரணமாகத் தலைப்படும் செயல்களில் வெற்றியைத் தருதலும் விரும்புதலும், அவற்றுள்ளும் தம்மின் வலியாரைக் காணின் அஞ்சு தலும், மூவகைத் துன்பங்களில் ஆதி தெய்விகமாய் வருவனவற்றைக் கடப்பிக்கவும், கடக்கவும் மாட்டாமையும் போல்வனவற்றை நோக்கின், அவ் இரு திறத்தவர்க்கும் இடையேயுள்ள வேறுபாடு, மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வேற்றுமை போல்வதாம். ஆகவே, ஏனைத் தேவரையடைந்து அவன் அடியார் பெறும் இன்பம், சிவனை யடைந்து, அவன் அடியார் பெறும் இன்பம் ஆகாது என்பதைப் `பிறிது மொழிதல்` என்னும் அணிவகையால் தோற்றுவித்தது இம்மந்திரம்.
சிவானந்தத்தைத் `தேன்` என்றல் மரபாகலின், அதனை நுகரும் அடியார்களை வண்டாக உருவகிப்பார், அதற்கேற்ப ஏனையவற்றையும் ஒருபுடை ஒப்பாக வைத்து உருவகித்தார்.
``கடைவண்டு`` எனப் பின்னர் வருதலால், முன்னர்க் கூறப் பட்டவை அரச வண்டாயின. அரச வண்டிற்கு ஏற்புடைமை பற்றி, `பீடிகையும், குடையும் ஆவன தாமரை மலர்கள்` என்பது அறியப்படும். கொண்ட பாசம், கொள்வதற்கு ஏதுவாய் நின்ற பாசம். கோலம் - உருவம். `பாசத்தையுடைய உருவம்` என்க. `உண்டாயினும்` என்பது, `உண்டானும்` என மருவி நின்றது. ``எனைத்தானும் நல்லவை கேட்க``9 என்பதிற்போல. `கலந்திட்ட வற்றை` என இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. ஈற்றில் நின்ற பெடை வண்டு, கடை வண்டு இனத்தைச் சார்ந்தது. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய் வினா.
இதனால், ``சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை`` என முதற்கண் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாக வலியுறுத்தப் பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``கொல்லையில் மேயும் பசுக்கள்`` என்னும் மந்திரம் ஏழாந் தந்திரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 38

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

பொழிப்புரை :

தட்டம் - ஆழம் இன்றிப் பரவலாகத் தேங்கியுள்ள நீர். குட்டம் - ஆழமாய்ச் சிறிது இடத்தில் நிற்கும் நீர்; குளத்து நீர் போல்வது முன்னதில் குவளையும், பின்னதில் தாமரையும் பூத்தல் இயல்பு. ஆயினும் இங்கு அவை மாறிக் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றை விரைந்து சென்று பறியாமல், பக்கத்தில் இருக்கும் மரக்கிளையில் சிறிது நேரம் யாரேனும் காத்திருப்பார்களாயின், இந்த முரண்பாட்டு நிலை நீங்குதல் தெரியவரும்.

குறிப்புரை :

தட்டத்து நீர் விரைவிற் காய்ந்து மறைந்து விடும். குட்டத்து நீர் நீடு நின்று பயன் தரும். ஆகவே, அவை முறையே உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் குறித்தன.
தாமரை பெரு விருப்பினையும் குவளை சிறுவிருப்பினையும் குறித்தன. நிலையானதில் பெருவிருப்பும், நிலையாததில் சிறு விருப்பும் உண்டாதல் முறைமை. மெய்ப்பொருள் இயலில் இவை மாறி நிகழ்தலை முன் இரண்டடிகள் குறித்தன. இவை இயற்கைக்கு மாறாகலின் செயற்கையே. செயற்கை காரணம் உடைத்து. அஃது இங்கு ஆணவம். செயற்கை நிலையாதாகலின் ஆணவம் நீங்க இந்நிலை மாறித் தன்னியல்பு நிகழும். அதற்குச் சிறிது காலம் வேண்டும். அதனையே பன்னிரண்டடிகள் குறித்தன. பறித்தல், இங்கு அதனையே நிலையானதாகக் கருதுதல். விட்டமாவது, அதுபோலும் மரக்கிளை. விளங்குதல், அப்பால் செல்லாமல் காத்திருத்தல்.
கொம்மட்டி, ஒருவகைக்கொடி. அது நிலத்திற் படரும். ஆகவே, அதனை நீரில் இட்டால், அழுகிக் கெடும் ஆதலின், அது நிலையாமைக்கு உவமையாயிற்று. ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஆம்`` என்னும் பயனிலைக்கு, `அத்தன்மை` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், உயிர்கட்குச் சிவானந்த வேட்கையே இயற்கையும், விடயானந்த வேட்கை செயற்கையும் ஆதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

ஐந்து இல்லங்கள் உள்ளன. அந்த ஐந்திலும் ஆறு வாவல்கள் வாழ்கின்றன. ஐந்து இல்லங்களில் ஒன்றில் உள்ள ஒரு மரத்தின் நுனிக் கிளையில் நூறு வாவல்கள் வாழ்கின்றன. (இந்த இல்லங்களில் எப்படி நாம் குடியிருக்க முடியும்?) வாவல் முதலிய எந்த இடையூறும் இல்லாத வேறோர் இல்லம் உள்ளது. அது போகப் போக உயரமாய் உள்ள இடத்தில் உள்ளது. அந்த ஏறு நிலை முறையில் ஏழு பெரிய ஊர்களைக் கடந்தால், அந்த இல்லத்துட் புகலாம்.

குறிப்புரை :

ஆறு வாவல்கள், காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள். ஐந்து அகம், பஞ்ச கோசங்கள். அவை முன் தந்திரத் தொடக்கத்தில் காட்டப்பட்டன. மரம், பிராணமய கோசம், அதன் நுனிக்கிளை, புத்தி தத்துவம். நூறு வாவல்கள், புத்தி தத்துவத்தின் அளவிலாப் பாவங்கள். நூறு, அளவின்மையைக் குறித்தது. பெரும் பதி ஏழு, ஆதாரம் ஆறும், `நிராதாரம்` எனப்படும் சகச்சிராரமாகிய ஏழாம் தானமும். மனை, `மீதானம்` எனப்படும் துவாதசாந்தம். பிரணவ யோகத்தால் அதனையடைந்தோர் சிவனைச் சார்வர். மாறுதல், பின் விட்டு தீங்குதல். இது பிறப்பு எய்துதலைக் குறித்தது.
` `பறவை`` எனப்பட்டன ஏற்புழிக் கோடலால் வாவலாயின. வாவல், இனத்தால் பறவையன்றாயினும், பறத்தல் பற்றி, `பறவை` எனப்படும்.
இதனால், `ஆதார யோக நிராதார யோகங்களில் நிற்பின், காமம் முதலிய அகப் பகைகளும், புத்தி குண பாவங்களும் நீங்கிச் சிவனைத் தலைப்படுதல் கூடும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.

பொழிப்புரை :

[`அனம்` என்பது ``வட்டனம்`` என்பதில் பண்புப் பெயர் விகுதியாகவும், ஏனைய மூன்றிலும் தொழிற்பெயர் விகுதியாகவும் வந்துள்ளது. `கட்டு` என்பது அடியாக. `கட்டணம், கட்டடம்` என்னும் சொற்கள் இக்காலத்தில் வழங்கக் காண்கின்றோம். இங்கும் `அனம்` என்பதற்கு ஈடாக, `அணம்` என்ற பாட வேறுபாடும் காணப்படுகின்றது. கூலிக் நெற்குற்றுதலை, `கொட்டணம் குற்றுதல்` என்பர். எனவே, இம்மந்திரத்தின் முதற்சீர் நான்கும் முறையே, `கொட்டுதல், வட்டம், கட்டுதல், ஒட்டுதல்` என்னும் பொருளவாம். கொட்டுதல் - நிலத்தைத் தோண்டுதல்.]
நிலத்தைத் தோண்டி, மண் அல்லது மணலை அப்பால் குவிக்கின்ற கிணற்றில், அல்லது ஊற்றுக்குழியில் நீரோடு, சுற்றிலும் மண், அல்லது மணலும் உடன் சேர்ந்துவரும். அந்நீர் கலங்கல் நீராய் இருக்கும். மரத்தாலான வட்டத்தின் மேல் சுடுமட் பலகைகளால் ஓரளவு சுவர் எழுப்பி, அதனைக் கயிற்றால் இறுகக் கட்டிப் புறஞ்சுவரோடு ஒட்டிவைத்தால், மண், அல்லது மணல் வாராது, நீர் மட்டுமே ஊறி வந்து தெளிந்து எல்லார்க்கும் பயன்படும்.

குறிப்புரை :

கிணறு தோண்டி, அதனை இடிந்து வீழாமல் நிலைக்கச் செய்தற்கும் இன்றும் இவ்வாறு செய்யப்படுதலைக் காணலாம். இஃது இங்கு நிலத்தை அகழ்ந்து, அதன் அடியில் உள்ள நீரைபபெற்று இன்புறுவார்க்குச் சுற்றிலும் உள்ள மண், அல்லது மணல் ஆகிய கலங்கல் வந்து சேர்வதுபோல, ஞான சாதனைகளால் அஞ்ஞானத்தை அகழ்ந்தெறிந்து தோன்றாத் துணையாய் நின்று சிவத்தைத் தலைப் பட்டு இன்புறுபவர்கட்குச் சிவானந்தத்துடன், பிராரத்த வாசனையும் வந்து தாக்கும். அதனைத் திருவருளாகிய பாதுகாவலைப் பத்தியால் உறுதிப்படச் செய்யின் சிவானந்தமே மேலிட்டு யாவர்க்கும் பயன்தரும், என்பதைக் குறித்து நின்றது.
``தொழுமி`` என்பதும், `கட்டி` என்னும் பொருட்டாய் நின்றது இவையெல்லாம் சில நாட்டு வழக்குப்போலும்!.
(இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் இரு மந்திரங்கள் வெளிப்படைப் பொருள் ஆகலின், பின் அதிகாரத்தில் இருத்தற்குரியன.)

பண் :

பாடல் எண் : 41

கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

பொழிப்புரை :

கொட்டு - மண்வெட்டி. குந்தாலி - கோடலி. `இந்த இரண்டே உள்ளன` என்க. `உள்ளன` என்பது சொல்லெச்சம்.

குறிப்புரை :

``இரண்டுக்கும்`` என்பதை இரண்டாம் அடியில், ``குந்தாலிக்கும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. இரண்டாம் அடியில் `கோட்டுக் குந்தாலி` என்பது உம்மைத் தொகையாய் நின்றது. அதன் ஈற்றில் நான்கனுருபு. உறழ்பொருளாகிய ஐந்தாவதின் பொருளில் வந்தது. ஈற்றில் உள்ள உம்மை சிறப்பு.
பாரை - கடப்பாரை. ``பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின் - வேருக்கு நெக்குவிடும்``l என்னும் ஔவையார் வாக்கைக் காண்க.
மண்வெட்டி ஈர மண்ணைத்தான் பறிக்கும். கோடாலி மரத்தை மேலோடு வெட்டும். பாரை வலிய நிலைத்தையும் அகழும். மரத்தை வேரேடும் சாய்க்கும். ஆகவே, மண்வெட்டி, கோடாலி இரண்டையும் விடப் பாரை வலியது. ``இரண்டே உள; பாரை வலியது`` என்றதனால், பாரை கிடைத்தற்கரிதாதல் கூறப்பட்டது.
மண்வெட்டி இடைகலை நாடி, இது பூரிப்பால் நோயைப் போக்கும். கோடலி, பிங்கலை நாடி, இஃது இரேசகத்தால் மாசு நீக்கும். பாரை, சுழுமுனை நாடி. இது கும்பகத்தால் இறப்பு நீக்கல், அறியாமையைப் போக்கல் ஆகியவைகளைச் செய்யும். எனவே, முன்னிரண்டடிகளால் வாசி யோகத்தின் சிறப்புணர்த்தப்பட்டதாம்.
இட்டம் - வெளிப்படை பொருளில், `இட்ட+அம்` எனப் பிரித்து, மேகம் பெய்த மழையையும். (அம்-நீர்) உள்ளுறைப் பொருளில் அன்பையும் குறித்தது. அன்பு, சிவ பத்தி.
மழை நீர் நிலத்தையும் எளிதில் அகழும்; மரங்களையும் எளிதில் வேரோடு கல்லிவிடும். ஆகவே அது, மண்வெட்டி, கோடாலி, பாரை மூன்றையும் விட வலியதாம்.
`வாசியோகத்தைவிடப் பத்தி வலிது` என்றபடி,
`ஈசன் அருள் நிலை இவ்வாறு உள்ளது` என்க.
``ஆறு பார்ப்பானுக்கு இரண்டே கண்கள்;
மாறுகோள் இல்லை; மதியுள்ளோர் சொல்லுங்கள்``
என்றால், பின்னடி முன்னடியைச் சார்ந்து வந்ததேயன்றி, உள்ளுறைப் பொருளதாகாது. (ஆறு - வழி, அல்லது யாறு. பார்ப்பான் - பார்ப்பவன்.) அஃதே போல், இங்கு, ``ஈசன் அருள்`` என்பது உள்ளுறைப் பொருள் இன்றி, முற்கூறிய பொருளைச் சார்ந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 42

கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.

பொழிப்புரை :

குளத்தில் கயல் மீன்களில் ஒவ்வொன்றை அதன் துள்ளல், பிறழ்ச்சி முதலியவற்றின் கவர்ச்சியால் கண்டு மயங்கினோர் அதைக் கண்டுகொண்டிருப்பதோடே ஒழிவர். (இஃது, `உலகத்தில் மாயையின் விசித்திரத்தில் மயங்கினோர் அம்மயங்குதலோடே ஒழிவர்` என்பதைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது,
``மறை`` என்பது சிலேடையாய், காட்டுப் புதர் மறைவையும், வேதத்தையும் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள். `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின் வழி நில்லாதாரைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள் `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின்வழி நில்லாதாரைக் குறித்தது.
``பிறருக்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார்,
தமக்குப் பயன்வே றுடையார்; ... ... ...
... ... ... தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்`` *
என்றார் குமரகுருபரரும். பூசல் - ஆரவாரம்.

குறிப்புரை :

``ஓதி யுணர்ந்து, பிறர்க்குரைத்தும் தான் அடங்காப் - பேதையிற் பேதையார் இல்``l என்றபடியுள்ள வாய்ப்பறை சாற்று வானது இழிவு நோக்கி ஒருமையாற் கூறினார். அம்மூன்றாம் அடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க. உலக நெறி பிறவி நெறியாகலின் அதனைக் குளமாகவும், தவநெறி வீட்டு நெறியாகலின் அதனை நிலமாகவும் கூறினார். இதில் ஈரடி எதுகை வந்தது.
இதனால் உலக நெறியில் நிற்பார் உலக இன்பத்தையும், தவநெறியில் நிற்பார் வீட்டின்பத்தையும் பெறுதலும், யாதொரு நெறியிலும் நில்லாது வாய்ப்பறை சாற்றுவார் யாதும் எய்தாமையும் உடன் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 43

கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.

பொழிப்புரை :

இயல்பாகவே வலிய கோரைப் புற்கள் முளைத்துப் படர்ந்து கிடக்கின்ற ஒரு குளத்தில், அதற்கு மேல் மெல்லிய ஆரைக் கொடிகளும் தொடர்ந்து படர்ந்துவிட்டன. இந்நிலையில் அந்தக் குளத்தை உடைய நல்ல தலைவர் ஒருவர், அதில் நாரைகள் மூழ்குவதுபோலத் தரையளவும் செல்ல மூழ்குவது எங்ஙனம்?

குறிப்புரை :

`இயலாததாய் உள்ளது` என்பதாம். குளம், சீவான்மா, அதன் அறிவு அக்குளத்தின் நீர், வலிய கோரை ஆணவ மலம். அதன் மேல் தொடர்ந்து படர்ந்த ஆரைக் கொடிகள் மாயையும், கன்மமும், குளத்தை உடைய நாதனார், பரமான்வாகிய சிவன். நாதனார் குளத்து நீரில் தரையளவும் செல்ல முழுகுதல், சிவன் சீவான்மாவின் அறிவு முழுதும் பற்றி விளங்குதல். இஃது இயற்கையாயினும் ஆணவ மலம் காரணமாகச் செயற்கையாய்ப் புதிதாக விளங்குதல்போலக் கூறப்பட்டது. ``நாரைபோல்` என்பது இடைக்கண் போந்த உவமை. ``நாரை`` என்றது நீர்மூழ்கும் பறவைகளைக் குறித்த குறிப்பு மொழி. ``பாரை`` என்னும் இரண்டன் உருபை `பார்க்கண்` என ஏழாவதாகத் திரித்துக் கொள்க. படிதல் - மூழ்குதல் `படிகின்றவாறு எங்ஙனம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால், `வலிய மூல மலமாகிய ஆணவ பந்தமும், அதற்கு மேல் ஆகந்துக மலங்கலாகிய மாயா கன்ம பந்தங்களும் உள்ள வரையில் சிவ விளக்கம் சீவ போதத்தில் முழுமையாக உண்டாதல் இயலாது` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு)
ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.

பொழிப்புரை :

இரண்டு வழிகள் தனித்தனியே பிரிந்து விளங்காமல் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. ஒரு வழி மூன்று காத தூரம் உள்ளது. அதிற் சென்றால், விளைவுள்ள கொல்லையை அடைந்து இன்புறலாம்.
மற்றொரு வழி அரைக்காத தொலைவே உள்ளது. அது கருதி அதிற் சென்றால் அஃது இருள் அடர்ந்த காட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே, அவ்வழிகளில் முக்காத வழியை ஊன்றியுணர்ந்து கண்டு நடக்க வல்லவர் உளரானால், அவர் மேற்குறித்த கொல்லையை யேயன்றி, அதைக் கடந்துள்ள நல்லதோர் ஊரையும் விரைவில் அடையலாம்.

குறிப்புரை :

முக்காத வழி தவ நெறி அதனைக் கடைபோகச் செல்லுதல் அரிதாதல் பற்றி, முக்காவதம் என்றார். கொல்லை, சிவலோகம், அதைக் கடந்த ஊர் பரமுத்தி நிலை.
அரைக் காதவழி வினைவழி. அஃது எளிதாதல் பற்றி, ``அரைக் காதம்`` என்றார். எனவே, `இதிற்றான் பெரும்பாலோர் செல்வர்` என்பது விளங்கும்.
``செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்``
- திருக்குறள் - 26.
என்னும் திருக்குறளை இங்கு நினைவு கூர்க. காடு - பிறவிச் சூழல்.
முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
இதனால், உலகர் அவநெறி சென்று பிறவியை அடைய, பெரியோர் தவநெறி சென்று வீடு பெறுதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து)
எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யானே.

பொழிப்புரை :

வெள்ளிதாய் எழுந்த மேகம் மழை பெய்தல் இல்லை. அப்பொழுது உழவுக்கு வேண்டுவதாகிய விதைகள் சேமித்து வைக்கப்பட்ட இடத்திலே கிடக்க, நிலமும் பதப்படாது, உழவுத் தொழிலும் நிகழ்ந்து பயன் தாராது.
(இதனானே, `கரிதாய் எழுந்த மேகம் மழைபொழிந்த காலத்து, மேற்கூறியன மேற்கூறியவற்றிற்கு மறுதலையாய் நிகழும்` என்பதும் பெறப்படும்.) ஆகவே, மழையைப் பெய்விப்போனாகிய சிவன் பெய்வியாது ஒழிதல் இல்லை.

குறிப்புரை :

``மழை`` (மேகம்) என்றது, சிவனது அருளை. அதனைப் போககாமிகளை நோக்கி, மறக் கருணையாகிய திரோதான சத்தியாகவும், மோட்ச காமிகளை நோக்கி, அறக் கருணையாகிய அருட் சத்தியாகவும் கொள்க.
இனி, `உழவு, வித்து` என்பனவும் போகத்திற்கு ஆகாமியம் ஏறுதலும், சஞ்சிதம் கிடத்தலுமாகவும், மோட்சத்திற்குத் தவம் மிகுதலும், ஞானம் முதிர்தலுமாகவும் கொள்க. நிலம், இரண்டிற்கும் ஆன்ம உணர்வேயாம்.
``எழு மழை பெய்யாது`` என்பதனை முதலிற்கூட்டிப் பொருள் கொள்க. பெய்யாது - பெய்யாமையால், வினை. உழவுத் தொழில். மழையின் இன்றியமையாமையையே உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் வலியுறுத்தினார்.
இதனால் `போகமாயினும், மோட்சமாயினும் சிவனருள் இன்றி ஆகாது; அவன் அன்றி ஓரணுவும் அசையாது` என்பது உள்ளுறை வகையால் வலியுறுத்தப்பட்டது.
``கண்ணுதல் யோகிருப்பக்
காமன் நின்றிட வேட்கைக்கு
விண்ணுறு தேவ ராதி
மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ,
எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப்
பேரின்பம் அளித்த தோரார்``
என்பது சிவஞான சித்தி.* இதனை ஒட்டி,
``எல்லா உயிர்க்கும் உயிர் அருணேசர்;
இவர் அசைவி
னல்லாது அணுவும் அசையாது என்பது
அறிந்தனமே;
வில்லாடன் மாரன் இருக்கவும் யோகம்
விளைத்த அந்நாள்
புல்லா திருந்தன எல்லா உயிருந்தம்
போகத்தையே``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இதன் ஈற்றடி, முதல் மூன்று அடிகளின் சார்பு பொருளாக வந்தது.

பண் :

பாடல் எண் : 46

பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

பொழிப்புரை :

காட்டிலே வாழ்கின்ற ஒருவன் அங்குள்ள ஒரு புலிக்கு அஞ்சி எங்கே பதுங்கியிருந்தாலும் அந்தப் புலி பன்னிரண்டு காதம் வரையிலும் பாய்கின்றது. அதனால் அவன் அந்தக் காட்டை விட்டு ஒரு கடற்கரையை அடைந்தான். அங்கே புலிப் பாய்ச்சல் இன்றிக் குளிர்ச்சியான அலைகள் அழகாக வந்து வந்து சென்றன. பின் அவன் பெற ஒட்டாமல் ஐவர் வந்து கூர்மையான கருவியாற் குற்றினர். ஆயினும் அவன் அவர்களை வளைத்துக் கொண்டு அடித்துத் துரத்தினான். (பின்பு அவன் அமிர்தத்தை உண்டு மகிழ்ந்தான் என்பதைச் சொல்ல வேண்டுமோ!.)

குறிப்புரை :

காடு, தூல உடம்பு. அதில் உள்ள பிராண வாயு பன்னிரண்டங்குலம் வெளியேறி வாழ்நாளைச் சிறிது சிறிதாக உண்டு வருதலால் அதனைப் பன்னிரண்டு காதம் பாய்ந்து தாக்கும் புலியாகக் கூறினார். `பன்னிரு காதம் பாயும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
உடம்பையே உடம்பாகக்கொண்டு செயற்படுதலை விடுத்து, அருளையே உடம்பாகக் கொள்ளுதலைக் கடற்கரையை அடைந்ததாகக் கூறினார். கடற்கரை இனிய இடமாதல் தெளிவு. அருளை உடம்பாகக் கொண்டோர்க்கு நிகழ்வன யாவும் அருட் செயலாகத் தோன்றுதலைக் கடல் அலைகள் வந்து உலவுவதாகக் கூறினார்.
அமிர்தம், சிவானந்தம். அதனைப் பற்ற ஒட்டாமல் வந்து தாக்கும் ஐவர் ஐம்பொறிகள். அருள்வழி நிற்பார்க்கு ஐம்பொறிகளை வெல்லும் எளிதாதல்பற்றி, ``ஐவரைப் போய் வளைத்தான்`` என்றார்.
அதுக்குதல், பொதுக்குதல் என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. அதுக்குதல் வாயில் இட்டுச் சுவைத்தல். பொதுக்குதல், உடம்பில் தைத்தலும், தைக்கச் செய்தலும்.
`ஆர்கலி அதுக்கிய ஆரமுது ஊற` என்க.
``பாய்புலி`` என்றதனால், `பதுங்குதல் காட்டில்` என்பது பெறப்பட, அதனால் `ஒருவன்` என்னும் எழுவாய் பெறப்பட்டது. ஒருவன் உயிர்.
பெத்த நிலையில் நிற்பார்க்கு மாயா உடம்பே உடம்பாகவும் முத்தி நிலையில் நிற்பார்க்கு அருளே உடம்பாகவும் நிற்றலும், முறையே அவற்றால் விளையும் துன்ப இன்பங்களும் இதனால் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 47

தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து)
ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.

பொழிப்புரை :

கடலில் தோணி ஒன்றில் ஏறிப் புகுந்து சென்றும், மீண்டும் தொடர்ந்து வாணிபத்தைச் செய்தும் ஆக்கம் பெற்று வருகின்ற ஒருவன் தனது ஆக்கத்தை மனைவியர்க்குக் கொடுத்து வாழ்க்கை நடத்தச் சொல்லாமல் பரத்தைக்கு வழங்குவானாயின், நாளடைவில் அவன் கவலை மீதூர, ஆலங்கட்டி பழம்போலத் தோன்றிச் சாற்றைத் தாராமல் நீரையே தருதல் போலும் நிலையை அடைவான்.

குறிப்புரை :

``உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்``3 என்பது போல அவன் வாழ்க்கை கெடும் என்றபடி.
தோணி, மனம். ``மனம் எனும் தோணி பற்றி``l என அப்பரும் அருளிச்செய்தார். அந்தக் கரணம் அனைத்தும், `மனம்` எனத்தொகுத்து வழங்கப்படும். அந்தக் கரணமே சூக்கும தேகம். அது முத்தியடையுங்காறும் நீங்காதிருக்கும். `உயிர்கள் செய்த புண்ணிய பாவங்கள் புத்தி தத்துவத்தைப் பற்றிக் கிடந்து பயன் தரும்` என்பது சைவ சித்தாந்தம் அதனால், அதனைப் பிறவியாகிய கடலில் பயணம் செய்தற்குரிய தோணியாக உருவகித்தார். வழங்குதல் - பயணம் செய்தல்.
உயிர் உடம்பை பற்றி நின்று பிற உயிர்களிடத்து நல்லன தீயனவற்றைச் செய்தல், வாணிபத்தில் விலை கொடுப்பதனோடும், அதனால் செய்த உயிர் தான் அடைகின்ற அறம் பாவங்கள் பண்டத்தைக் கொள்வதனோடும் ஒக்கும். ஆதலின் இச்செயலை ``வாணிபம்`` என்றும், `அதனை உயிர் தொடர்ந்து நடத்துகின்றது` என்றும் கூறினார்.
அற உணர்வும் இறையுணர்வும் மனைவியர். கொண்ட பண்டங்களாகிய அறம் பாவங்களை இவ்விருவகை உணர்வுகளும் முதிர்வதற்குப் பயன்படுத்தினால் நலன் விளையும். அது பற்றி இவ்வுணர்வுகளை மனைவியராகக் கூறினார்.
பொய்க் கண்ணீர் வடிக்கின்றவளை `நீலி` என்றல் வழக்கு. அது பற்றிப் பொய்யாக பரிவு காட்டும் பரத்தையை, ``நீலி`` என்றார்.
பரத்தை, பல பொருள்கள் மேலும் செல்லும் ஆசை. ஒருவன் தனது அறிவால் மேலும் மேலும் ஆசையை வளர்த்தால் அவன் கெடுவானன்றோ! அது பற்றி, ``நெஞ்சின் நிலைதளர்ந்து ... ... அன்பே`` என்றார். அளிதல், மெலிந்து கரைதல். `அப்பே ஆம்` என முடிக்க. இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `அறிவால் அற உணர்வையும், இறையுணர்வையும் பெருக்கிக் கொள்ளாமல், ஆசையை வளர்ப்பார் கெடுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.

பொழிப்புரை :

முக்காத ஆறு - தனித்தனி ஒவ்வொரு காதத் தொலைவுள்ள மூன்று ஆறுகள். அவை, `உலகியல் ஒழுக்கம், மெய்நெறி ஒழுக்கம், மெய்யுணர்வு` என்பனவாம்.
அந்த ஆறுகளில் தனித்தனி ஒன்றாக, மூன்று வாழை மரங்கள் உள்ளன. அவை அவற்றால் விளையும், அறமும், அருளும், வீடு பேறுமாம்.

குறிப்புரை :

`செகு` என்னும் பகுதி ஒற்றிரட்டி, `செய்து` என்னும் இறந்த கால வினையெச்சமாய் நின்றது. இது, `செகுத்து` எனவும் வரும். செகுத்தல் - அழித்தல். பழுத்த - முற்றிய. ``காய்த்தன`` என்பது, `ஒழித்தன` என்னும் குறிப்பு. அதனால் ஏற்புடையன கொள்ளப் பட்டன.
`மலம்` என்பது இங்கு, `அழுக்கைக் குறித்து, அதனால் விளையும் நோயைக் குறித்தது. மூன்று வாழைகளும் முறையே பூ, காய், பழம் என்பவற்றால் ஒவ்வொரு நோயைப் போக்கும் நிலையில் உள்ளன. பக்குவம் மிக்கவர்கள் பழத்தை உண்டு எல்லா நோய்களும் நீங்கப்பெற்று அமைதியுற்றார்கள். (`பக்குவான்மாக்களாய் உள்ளவர்கள் மெய்யுணர்வாகிய பழத்தை உண்டு வீட்டை அடைந்து இன்புற்றார்கள்` என்பதாம்.)
`பக்குவனார்` என்பது, `பக்கனார்` எனக்குறைந்து நின்றது. `மிக்கு ஆர்பு அடங்கினார்` எனப்பிரிக்க. ஆர்பு - உண்டு; `செய்பு` என்னும் வினையெச்சம்.
பக்குவம் வாயாத சிறு மகளிரைப் போலப் பக்குவம் எய்தாது, அபக்குவராய் உள்ளோர் பூவையும். காயையுமே மகிழ்ந்து உண்டு, `நோயுற்றோர், நோயற்றோர்` என்னும் இருதிறத்தார்க்கும் நடுப்பட்ட வர்களாய் நின்றார்கள். பழத்தின் அருமையறிந்து அதனைப்பறித்து உண்பதற்கும் அறிவு வேண்டும் என்க.
[பக்குவம் முதிராது அபக்குவராய் உள்ளவர்கள், மெய் யுணர்வைப் பெறாது, இருவகை ஒழுக்கங்களை மட்டுமே உடையராய், `அறம், அருள்` என்பவற்றை மட்டும் பெறுதலோடு, உலகர்க்கும், அறிவர்க்கும் இடைப்பட்டவராய் உள்ளனர்` என்பதாம்.]
உடலில் உண்டாகும் மூன்று நோய்களாவன `தோல் நோய்` வயிற்று நோய் குருதி நோய்` என்பன. இவை முறையே, `மாயை, கன்மம், ஆணவம்` என்னும் மலங்கலைக் குறித்தன. இவைகளில் வாழைப் பூத் தோல் நோயையும், காய், தோல் நோயோடு வயிற்று நோயையும், பழம் எல்லா நோயையும் போக்கும். அது போல அறம் மாயையாகிய உலகியல் துன்பத்தைப் போக்கும். அருள் இருவினை யொப்பு வருவிக்கும் முகத்தால் கன்ம மலத்தைப் போக்கி, உலகியல் துன்பமும் உயிரைத் தாக்காதவாறு செய்யும். அருளாகிய சத்தி நிபாதத்தில் உண்டாகும் மெய்யுணர்வு, முன்பே பாகம் எய்திய ஆணவ மலத்தை அடியோடு போக்கி, மெய்ப் பொருளைக் காட்டி, வீடு அடைவிக்கும், ஆணவம் நீங்கவே, ஏனை மலங்களுக்கும் தொடர்பு யாதும் இன்றி, அகன்றொழியும். ஆகவே, வீடெய்தினார்க்குத் துன்பம் யாதும் இல்லையாம்.
``திரிமலம்`` என்பது, உள்ளுறைப் பொருளில் மும்மலங்களைக் குறித்தது.
நகுதல் - மகிழ்தல். ``மலர் உண்டு`` என்றாரேனும், ``மலரையும், காயையும் உண்டு`` என்றல் கருத்தென்க.
இதனால், அபக்குவ பக்குவிகளது இயல்பும், அவர் செய்யும் சாதனைகளும், அவற்றின் பயன்களும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 49

அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.

பொழிப்புரை :

வேரும், கிளையும் அமைய வேண்டிய முறையிலே அமைந்த அத்தி மரம் ஒன்று உள்ளது (அத்தி - எலும்பு. அது சிலேடையாய், உள்ளுறையில் உடம்பைக் குறித்தது. உடம்பிற்கு வேர் வித்தியா தத்துவத்தில் உள்ள மாயா தத்துவம். கிளை, பிருதிவி தத்துவம்.)

குறிப்புரை :

முடியும் நுனி - கிளைக்கும் மேல் உள்ள இடம். மூங்கில், சுத்த தத்துவம். முத்தலையாவன அதிகார போக, லய தத்துவங்கள்.
கொடியும், படையும் தாத்துவிகங்கள். கொடி, படர்க்கொடி. படை, இலை தளிர் பூ முதலியவற்றின் கூட்டம். கொள் சார்பு - கொடி கட்கும், படைகட்கும் பற்றாய் உள்ளவை. ``ஐயைந்து`` உம்மைத் தொகைப் பத்து. அவை ஞானேந்திரியம் ஐந்தும், கண்மேந்திரியம் ஐந்தும். இவைகளாலேயே உயிர்க்கு எல்லா அறிவும், செயலும் நிகழும்.
அத்திப்பழம் உணவாகவும், மூங்கில் பலவற்றுக்குக் கருவி யாகவும் நமக்கு உதவுவனபோலத் தோன்றினாலும் இவையெல்லாம் பேருதவிகள் அல்ல. இவற்றின் வேறாய் இனியதொரு சோலை உண்டு; அதனை அடைந்தால், அல்லல்கள் அற்று, அமைதியுடன் வாழலாம். ஆயினும் அந்தச் சோலையை இந்த அத்தி மரத்தின் வழியாகவே அடைய வேண்டியுள்ளது. அதனால் இந்த அத்தி மரத்தையும் புறக்கணித்தற்கு இல்லை.
வலம்புரி - நந்தியாவட்ட மலர். அது நல்லதொரு சோலையைக் குறித்த குறிப்பு மொழி. மடிதல், இங்கு, அல்லலற்று அமைதியுடன் இருத்தல். ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``3 என முதற்கட் கூறியதையும் நினைக.
சோலை, முத்தி நிலை. `அதனை அடைதற்குச் சாதனமாகவே இவ்வுடம்பு அமைந்துள்ளது` என்பதை, ``வலம்புரி வாய்த்தது அவ் ஆறே`` என்றார். ஆறு - வழி. `ஆற்றால்` என உருபு விரிக்க. ஏகாரம், பிரிநிலை.
இதனால், முன்பு, ``உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே`` என வெளிப்படையாகக் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாகக் கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

பன்றியும் பாம்பும்பசு முசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள்
குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒரு குறு நரிக் கூட்டத்திற்குள்ளே, பன்றி, பாம்பு, பசு, குரங்கு இவைகளும் நிறைந்துள்ளன. அவைகளின் இயல்பை முற்றவும், துலாக்கோலில் இட்டு நிறுப்பது போல நுட்பமாக ஆராய்ந்து உணர்ந்தால் அவற்றால் விளையும் துன்பங்களைச் சிறிது சிறிதாகக் குறைக்கும் நிலை உண்டாகும்.

குறிப்புரை :

குறுநரிகள், சகல வருக்கத்து ஆன்மாக்கள். பிரளயாகலர் விஞ்ஞான கலர்கள் பெரு நரிகள். நரி தந்திரம் உடையது ஆதலின் அது அறிவுடைய - சிற்றறிவுடைய ஆன்மாக்கட்கு உவமையாயிற்று.
பன்றி, பாம்பு, பசு இவை முறையே தாமத, இராசத, சாத்துவிக குணங்கள். குரங்கு, மனம், முசு, வானரம், இரு பெயர் ஒட்டு. தராசில் இட்டு நிறுத்தல் தத்துவ ஆராய்ச்சியை நுண்ணிதாகச் செய்தல்.
`குன்றியளவாக` என ஆக்கம் வருவித்து, `குன்றி குன்றியாக` என உரைக்க. குன்றி - குன்றிமணி. நிறை, பன்றி முதலியவற்றின் வலிமை. `குறைக்கின்ற ஆறு உளதாம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
`தெற்றி` என்பது மெலிந்து நின்றது. கிடந்த - கிடந்தன. தெற்றிக் கிடத்தல் - நெருங்கிக் கிடத்தல்.
இதனால், தத்துவ ஆராய்ச்சியே பந்த நீக்கத்திற்கு வழியாதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை :

ஓர் இல்லத்திற்குள்ளே சிறிதளவே அரும்பிய அரும்பு ஒன்று உள்ளது. அது மலராமைக்குக் காரணம் அதனை இறுக்கியுள்ள பொருள்கள். ஆகவே, இறுக்கிய பொருள்கள் நீங்கினால், அந்த அரும்பை மலர் நிலையிலும் வைத்துக் காண முடியும். (ஆனால், அரும்பு இல்லத்திற்குள் இருப்பதால், கதிரவன் ஒளி, காற்று முதலியன புக முடியாமையினால், இறுக்கியுள்ள பொருள்கள் நீங்குமாறில்லை.) உடையவள் அந்த இல்லத்தின்மேல் உள்ள பற்றைவிட்டு, அதனை வெற்ற வெளியாகச் செய்தால், இறுக்கிய பொருள்களும் நிங்கும்; அரும்பும் மலரும். ஆகவே, அந்த நிலையை அந்த இல்லம் வெளியானாலன்றிக் காண இயலாது.

குறிப்புரை :

மொட்டித்தல் - அரும்புதல். மொட்டு - அரும்பு. ஓர் மொட்டு, சாதியொருமை. அஃது பக்குவம் அடையாத உயிர்களைக் குறித்தது. பக்குவம் வாராதபடி தடுப்பது சூழ்நிலை. அஃது இங்கு மும்மலங்களைக் குறித்தது. இல்லம், அறிவர் இனம் இல்லாத, உலகர் இனம், `அவ்வினத்தை விட்டு அறிவர் இனத்தை ஒருவன் அடைந்தால், கட்டு நீங்குதற்குரிய நிலைமை உண்டாகி அறிவு முதிரப் பெற்று வீடு பெறலாம்; இல்லையேல் இயலாது` என்றபடி.
மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. ``அம்மனை`` எனச்சுட்டிக் கூறினமையால், அரும்பு மனைக்குள்ளே இருத்தல் பெறப்பட்டது. அரும்பு, உயிருணர்வு. ``கட்டு விட்டு ஓடின்`` என்ற அனுவாதத்தால் கட்டு விட்டோடுதல் பெறப்பட்டது. `மலர்தல் நிலையில் காணலாம்` என்க. உம்மை சிறப்பு. ஈற்றடி, எதிர்மறை முகத்தலால் வலியுறுத்தியது.

பண் :

பாடல் எண் : 52

நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.

பொழிப்புரை :

வயல்கள் யாவும் மேல் நீர் வந்து பாயவே பயிர்களை யுடையவாகும். ஆயினும் ஒரு வயல், மேல் நீர் வந்து பாயாமல் உள்ளிருந்தே ஊறும் நீரை உடையதாய்ப் பயிரை உடைய தாகும். அந்த வயலை அறிபவர் ஒருவரும் இல்லை. (அதனால் அவர்கள் வானத்தை நோக்கியிருந்து, `பஞ்சம், பஞ்சம்` என்கின் றார்கள்.) மேற் குறித்த வயலில் வானம் எதுவும், எப்பொழுதும் பொழிதல் இல்லை. இனி மழை நீரில் தன்மையை ஆராயுமிடத்து, அது `மேட்டில் ஏறாது` என்பது தெளிவு. (அதனால் பெய்கின்ற மழை நீரும் அந்த வயலில் ஏறிப் பாய்வதில்லை. ஆகவே, `மழையால் விளையும், மழையின்மையால் பஞ்சமும், என்கின்ற நிலை அந்த வயலிடத்தில் இல்லை.)

குறிப்புரை :

அந்த அதிசய வயலாவது சிவம். அதில் விளைவன எல்லாம் அதன் அருளாலே. ஆகவே, அந்த அருள் உள்ளிருந்தே ஊறும் நீராயிற்று.
மற்றை வயல்கள் உயிர்கள். அந்த வயல்களுக்கு ஆணவ மாகிய வானத்தில், மாயையாகிய மேகம் தோன்றி, கன்மமாகிய மழையைப் பொழியவே நன்செய்ப் பயிர்களும், புன்செய்ப் பயிர்களும் உளவாகும். இந்த மழை நீர் மேற்குறித்த அந்த மேட்டு வயலில் ஏறமாட்டாது. ஆகவே, இந்த மழை வளம்படுதலாலோ, வறட்சியடைதலாலோ அந்த வயலுக்கு வருவதொன்றில்லை.
``இந்த அரிய செய்தியை அறிந்து கொண்டு அந்த வயலை அடைந்து வாழ அரியாதவர்களாய், உலகர் அல்லல் உறுகின்றார்கள்` என்பதாம்.
பாய்தல் - இங்கு, மேல் எழுந்து பாய்தல்; ஊறுதல். நிலம் - வயல். ``பச்ை\\\\u2970?``, ஆகுபெயராய்ப் பயிர்களைக் குறித்தது. இங்கு முத்தான்மாக்காளைக் கொள்க.
படர்தல் - உள்ளது சிறத்தல். அஃது ஆவி மேகமாய், மேகம் மழையாதலால். `அங்குப் பொழியாது` என ஒருசொல் வருவிக்க. புனல், அதன் தன்மையைக் குறித்த ஆகுபெயர். இந்நீர்மை - இந்த நீரின் தன்மை. திடரில் நில்லாமையைக் கிளந்து கூறியது. `இந்நீர் அவ்வயிலில் செல்லாது` என்பதைப் பெறுவித்தற்கு.
இதனால், `பாசங்களால் விளையும் பயன்களை விரும்பாது விடுத்து, பதியால் விளையும் பயன்களை விரும்பி, அதனையடைய முயலல் வேண்டும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

பொழிப்புரை :

கூகை, கதிரவன் விளங்கி நிற்கவும் கண் தெரியாது அலமரும் பறவை. அது, சிவம் வில்கி நிற்கவும் அதனை அறிய மாட்டாது அல்லர் உறும் பெத்தான்மாவைக் குறித்தது.
கூகை பகற் குருடாயினும் அதற்கு நல்லதொரு குருந்த மரம் கிடைத்து, அதில் வாழ்கின்றது. அஃதாவது, வேதாகம வழக்கும், ஆன்றோர் ஒழுக்கமும் மிக்க கரும பூமி.
இருப்பினும், அந்தக் கூகை தன் குருடாதல் தன்மையால், அம்மரத்தில் பற்றுவன விடுவனவற்றையும் விலக்குவன கொள்வன ஆகியனவற்றையும் பிரித்தறிய மாட்டாது, தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது அத்தடுமாற்றத்தின் நடுவே தெய்வம் ஒன்று திடீரென அதற்குக் கண்கொடுத்தது. ஆகவே, அந்தத் தெய்வந்தான் அந்தக் கூகைகளை வழிநடத்தும் பாகனும், உற்றுழியுதவும் நண்பனும் ஆகும்.

குறிப்புரை :

`குணத்தால் பயில் மோகத்தை உணர்கின்ற காலத்து` என்க. குணம் - கூகையின் குணம்; குருட்டுத் தன்மை. மோகம் - திரிபுணர்வு. ``உலகுக்கு`` என்னும் நான்கன் உருபு, ``நாணற் கிழங்கு மணற்கீன்ற முளை``8 என்பது போல் ஏழாவதன் மயக்கமாய் வந்தது. நாகம் - விண்ணுலகம். ந + அகம் = நாகம். `பாவம் இல்லாத உலகம்` என்பது இதன் பொருள். அஃது ஆகுபெயராய், அங்கு வாழும் தெய்வத்தைக் குறித்தது. தெய்வம் கண் தந்ததாவது, சத்தி நிபாதம் வந்து ஞானத்தை உணரச் செய்தமை. அப்பால் அந்த சத்தியே (திருவருளே) ஆன்மாவுக்கு எல்லாமாய் உதவும்.
திணை மயக்கம், உருவக உவமைகளில் `வழு` எனக் கடியப் படாது ஆகலின், `நாகம் பாகனும், பண்பனும் ஆம்` என்றது திணை வழுவாகமையறிக.
``நாகமும்`` என்னும் உம்மை சிறப்பு, உரைசெய்தது, (கண் தெரிய) வரம் கொடுத்தது. வெளிப்படை பொருள் இறந்த காலம் ஆகற்பாற்றாயினும் உவமைகளில் சிறந்தது நோக்கி, முக்காலத்திற்கும் பொதுவாகக் கூறினார். ஆகின்ற பண்பன் உறுதுணை யாகின்ற பண்பினை யுடையவன்; நண்பன்.
இதனால், `சத்தி நிபாதத்தாலே அஞ்ஞானம் அகன்று பிரகாசிக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 54

வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒருவன் வாழும் இல்லத்தில் வாழைச் செடியும், முள் மிகுந்த பிரப்பங் கொடியும் வளர்ந்து, அதில் உள்ள இடம் முழுவதையும் கவர்ந்து கொண்டன, இந்நிலையில், அதில் வாழவேண்டிய தலைவன் எவ்வாறு வாழ்வது?
வாழையை அழிப்பதைவிடப் பிரப்பங்கொடியை வேரோடு அறுத்தெறிவது `கடினம்; கடினம்` என்கின்றார்கள். இருப்பினும் வாழை நல்லது போலத் தோன்றினாலும் வாழ இடம் இல்லாமல் செய்வதால் அதையும், பிரப்பங் கொடியையும் ஒருங்கே அறுத்தெறிந்துதான் வாழ வேண்டும்.

குறிப்புரை :

வாழை, இன்பம். சூரை - துன்பம் இவவைகளால் கவர்ந்து கொள்ளப்பட்ட இடம் புத்தி தத்துவம்.
ஈற்றடியில் உள்ள ``வாழை`` என்பதை, `வாழ்+ஐ` எனப்பிரித்து, `வாழ வேண்டிய தலைவன்` என உரைக்க.
தலைவன், ஆன்மா. வாழ்தல், பசுகரணத்தைச் சிவகரணம் ஆக்கிச் சிவானந்தம் எய்துதல். `வாழ்கின்றவாறு, வன்துண்டம் செய்திட்டு` என மாறிக்கூட்டி முடிக்க. இரண்டையும் துண்டம் செய்தலாவது, அவற்றில் அழுந்தாது விடுதல்.
அடுக்கு, வலியுறுத்தற் பொருட்டு, `இன்பத்தில் அழுந்தாமல் இருத்தல் கூடும்; துன்பத்தில் அழுந்தாமல் இருப்பது அரிது` என்பதை, ``வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர்`` என்றார்.
இதனால், ``ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்`` இருவினையொப்பு வந்தாலன்றிச் சிவானந்த வாழ்வு வாழ இயலாது` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

பொழிப்புரை :

குறிஞ்சி நிலத்தவனாகிய குறவன் ஒருவன் அவ் விடத்துத் தன்தொழிலை விடுத்து, அதே நிலத்தை அடைந்து நிலத்தை உழுதான். பின்பு அத்தொழிலையும் முற்ற முடியாமல் இடையே உள்ள கொழுத்த மீனைப் பிடித்துக் கொணர்ந்தான். (`இவன் இந்தத் தொழிலையேதான் தொடர்ந்து செய்து நிலைபெறுவான்` என்பது என்ன நிச்சயம்!) ஆகவே, இவனைப்போல நிலையின்றி வாழ்தலைத் தவிருங்கள். தவிராது வேண்டின் நிற்பின், என்றும் நிலைத்து ஊதியத்தைத் தரக்கூடிய முதலைப் பெறுதலும் இன்றி, கொல்வது போலும் நிச்சல் நிரப்பு``3 (வறுமை) வந்து பற்றிக் கொள்ளுதலும் கூடும்.

குறிப்புரை :

`எந்தத் தொழிலையும் நிலையாகச் செய்யாது, தாவித் தாவிச் செல்பவன் நிலைபேறு எய்தான்` என்பதை நினைவூட்டி, `அது போல எந்த ஒரு சமயத்திலும் (மதத்திலும்) நிலைத்து நில்லாதவன் எந்தப் பயனையும் அடையமாட்டான்`, என்பதை உள்ளுறையாக உணர்த்தினார். `நிலையாகச் செய்தல்` என்பது, அந்தச் சமயத்தின் வழி நிற்றலை.
`உயிர் இயல்பாகவே ஐம்பு வேடருட்பட்டது` என்பதனால் அதனை, `குறவன்` என்றார். குறவர் பண்பாடில்லாத வாழ்க்கையர் ஆதலின் அவர் இதனால் அவைதிக மதங்களைக் குறித்தது அவற்றில் உள்ள நவநிலையாகவும் பற்றாது விடுத்தலே, `அம்மதங்களை விடுத்தல்` எந்த நிலையாக ஓட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
மருத நிலத்தவர் பண்பாடுடைய வாழ்க்கையர் ஆதலின் அவர் இனம் வைதிக சமயங்களைக் குறித்தது.
நெய்தல் நில மக்கள் கொலை, களவு செய்யாது வாழ்தலால் குறவரினும் மேம்பட்டவராயினும், இழிதொழில் செய்பவர் ஆதலின் அவர் இனம் வாம மார்க்கங்களைக் குறித்தது. வாம மார்க்கத்தவர் கடவுட் கொள்கையினராதல் நினைவு கூரத்தக்கது.
`மீன்பிடி தொழிலின் இழிவினை உணர்ந்த காலத்தில் அதனையும் விட வேண்டி வரும்` என்பது குறிப்பு. தம்முள் வேறுபாடுடைய குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நிலங்கள், உயிர் வருக்கத்தவரால் தோற்றுவிக்கப்பட்டுத் தம்முள் மாறுபாடும் சமயங்கள் ஆகவே, இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு, `இது ஆகும்; அது அல்லது எனும் பிணக்கில்லாது``9 அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்ட சித்தாந்த சைவம், ``தெண்கடல் வளாகம் பொதுமையின்றி - வெண் குடை நிழற்றும் ஒருமையரசன்,8 வாழ்வு போன்ற, என்றும் மாறாது நின்று நிலவும் வாழ்வாம்`` என்றதாயிற்று. ``புனத்துக் குறவன்`` என்பதை முதலில் வருவிக்க. ``மீன் விலக்குமின்`` என்றாராயினும், `அதுபோன்ற செயலையும்` கருத்தையும் நீக்குதல் என்றலே கருத்து.
`வேண்டின், யாவர்க்கும் அருத்தமும் இன்றி, அடுவதும் ஆம்` எனக் கூட்டி யுரைக்க. அருத்தம் - முதல். அது திருவருள். வறுமை - வினை. இதனுள் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.
இதனால், `சித்தாந்த சைவமே ``பேரா இயற்கை``3 யாகிய வீடுபேற்றினைத் தரும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

தட்டான் - எதிலும் அகப்படாதவன். ஆறு அத்துவாக்களையும் துருவித் துருவி ஆராய்ந்தாலும் அறியப்படாதது ஆன்மா. அதன் அகம், தூல உடம்பு. அதில் வளர்கின்ற பிள்ளை மூச்சுக்காற்று. தளிர்த்தல் - வளர்தல். விளித்தல் - அழைத்தல். சங்கு குறிக்கப்பட்டால் குழந்தைகள் அதனை நோக்கி ஓடுதல் இயல்பு. சங்கு, இங்கு `ஹம்ஸம்` என்னும் அசபா மந்திரம். அதுவே மூச்சினை விட்டும், வாங்கியும் இயக்குதலால், அதனை அக்குழந்தையை அழைக்கும் சங்காகக் கூறினார். அம்மந்திரத்தின் பயனை ஆராய்ந்து உணர் பவர்கட்கு அஃது, அரசனைச் சார்ந்த குயவர் முதலிய சிறு தொழிலா ளர்க்கும், காவிதிகள் முதலிய பெருமையுடைய தொழிலாளர்க்கும் அரசன் இடும் கட்டளையாக முடியும். அக்கட்டளைகளாவன `போ, வா` என்பன. சிறுதொழிலாளர்களை அரசன் அகன்று செல்லும்படியும், பெருந்தொழிலாளர்களை அணுகி வரும்படியும் கூறுவான். `போ` என்பது இரேசித்தலையும், `வா` என்பது பூரித்தலையும் குறித்தன. காவிதிகள், வரி தண்டுவோர். பதம் - சொல். `தனித்தனி ஒன்றாம்` என்க. `அச்சங்கு` எனத்தோன்றா எழுவாய் வருவித்து, `பதத்து ஒன்றாம்` என முடிக்க. ``குசவர`` என்றது உபலக்கணம்.

குறிப்புரை :

இதனால், `யோகத்தை அசபா மந்திரத்தை உணர்ந்து செய்யும் பிரணவ யோகமாகச் செய்தல் வேண்டும்` என்பது, உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை :

தலைவன் ஒருவனது இல்லத்தில் கொட்டிலில் இருந்த எருமை அதைவிட்டுப் புறப்பட்டு மேயப் போந்தது. ஆயினும் உயிர்களைத் துன்புறுத்தும் படைகள் எதிரே வருதலைக் கண்டு அந்த எருமை பாதி வழியிலே திரும்பிவிட்டது. அதையறிந்து அந்தத் தலைவ -னுடைய அமைச்சன் அந்தப் படைகளை விலக்க, அந்த இல்லத்திற்கு உள்ள ஒன்பது வாயில்களுள் ஒன்றையும் ஒருவரும் அடைக்கவில்லை.

குறிப்புரை :

`அதனால் அந்த எருமை தன் விருப்பம் போலச் சென்று மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
கோ - தலைவன்; உயிர், அதனது இல்லம், தூல உடம்பு. எருமை, பிராண வாயு. இதுவே உயிர்க்கு வலு ஊட்டுவதாய்க் கட்டுப்படுத்தி நடத்தினால் பெரும் பயனைத் தருவதாய் இருத்தல் பற்றி இதனை, வலியையும், மிகுந்த பாலைப் பொழிதலையும் உடைய எருமையாக உருவகித்தார்.
குடை, குடைபோல் அமைந்த கொட்டில். அது மூலாதாரம். மூச்சு அதனினின்றும் போதல் வெளியேபோய் வலுப்பெற்று மீறாதற்கு. படைகள் பிராரத்தத்தால் வரும் நோய்கள். இந்நோய்கள் உடம்பின் வாயில்கள் ஒன்பதையும் அடைத்து, அகால மரணத்தை உண்டு பண்ணும். இவைகளால் மூச்சும் தடைப்படும். ஆகவே, ``படை கண்டு மீண்டது பாதி வழியில்`` என்றார்.
உயிர்க்கு அமைச்சன் சித்தம். அஃது அனைத்தையும் சிந்தித்து, உயிர்ப்பாகிய எருமையைத் தன் விருப்பப்படி நடத்திச் செல்ல, அந்த எருமையைத் தடுத்து நிறுத்தற்கு, உடம்பாகிய இல்லத்தின் வாயிலை அடைக்க ஒருவரும் முன்வரவில்லை. எனவே, எருமை தொடர்ந்து நன்கு மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது. அஃதாவது உடம்பை எந்த நோய் முதலியனவும் அழிக்க எழவில்லை. அதனால், `வாழ்நாள் எல்லையின்றி நீட்டிக்கின்றது` என்பதாம்.
``ஊரார்`` என்றதும், படைகளையே. உள்ள, அதன் காரியமாகிய நெறிப்படுத்தி நடத்துதலைக் குறித்தது. நெடுங்கடை - பெரிய வாயில். ஐந்தொடு நான்கு - ஒன்பது.
இதனால், `வாசியோகம் புரியின், உடல், நரை, திரை மூப்புப் பிணிகள் இன்றி வலிதாக, வாழ்நாள் நீட்டிக்கும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.

பொழிப்புரை :

வீரன் ஒருவன் ஓர் யானையையும், பன்னிரண்டு குதிரைகளையும் முறையாக வெளியே ஓட்டி நடத்தி, உள்ளே கொணர்ந்து கட்டிப் பணிபுரிதற்கு ஏற்புடைத்தாக அரசன் வெளிச் செல்லும் பொருள் எட்டும், உள்ள வந்து சேரும் பொருள் பதினெட்டுமாக, ஒன்பது வாயில்களையுடைய ஒரு கூடத்தைக் கட்டிக் கொடுத்தான். வீரன் அதில் முறையாக அந்த யானையையும், குதிரை -யையும் வைத்து நடத்தாவிடில், அவை பன்றிபோல யாவராலும் இகழப் படுவனவாய், அந்தக் கூடத்தையும அருவருக்கத் தக்கதாகிவிடும்.

குறிப்புரை :

நாகம் - யானை. இது மனத்தைக் குறித்தது. ``தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி``8 என்பது போல, ஐம்பொறிகளையே யானை யாகக் கூறுதல் பெருவழக்காயினும், உண்மையில் யானைபோல அடங்காது புலன்களின்மேல் செல்வது மனமே. `மனத்தொடு கூடாத வழி, இந்திரியங்கள் விடயங்களைக் கவரமாட்டா` என்பது தருக்க மதம். இஃதே பற்றி, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``l என்னும் குறள் உரையில், `ஐந்து அவா` எனப் பொருள் உரைத்த பரிமேலழகர், `அவா ஒன்றுதானே; ஐந்து எப்படியாகும்` என்னும் தடையைக் கருத்துட் கொண்டு, ``புலன்கள் ஐந்தாகலான் அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று`` என உரைத்தார். எனவே, ``ஐந்து`` என்றல் சார்பு பற்றியேயாகலான், `ஒன்று` என்பதே உண்மையாம். ஆகவே, ``அஞ்சு களிறு`` என்றல் சார்பு பற்றியேயாக, களிறு ஒன்றேயாதல் அறியப்படும். அடங்காது புலன்கள்மேற் செல்வது` மனமேயாகலான்` அதனை `யானை` என்றற்குத் தடையின்மை யறிக.
குதிரை பன்னிரண்டாவன, வெளிச்செல்லும் பன்னிரண் -டங்குல மூச்சு. பாகன் - நடாத்தும் வீரன். அவன் ஆன்மா விடுதல் - அடக்கிச் செலுத்துதல்.
ஒன்பது வாயிலையுடைய கூடம் தூல உடம்பு. அதில் வெளிச்செல்லும் பொருள்கள், `வெயர்வை, கோழை, பீளை, சளி, குறும்பி, மலம், சிறுநீர், சுக்கிலம்` என்பன.
உள்வந்து சேரும் பொருள் பதினெட்டாவன, ஞானேந்திரிய விடயங்கள் ஐந்தும், கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தும், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றம் மூன்றும், ஆதியான்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் ஆகிய துன்பம் மூன்றும், இவற்றால் ஏறும் நன்றும் தீதுமாய வினையிரண்டுமாம். முக்குற்றங்கள் அகத்து நிகழ்வன வாயினும் புறப்பொருள் ஏதுவாக அன்றி நிகழாமையறிக. வாயில்களையே கூறினாராயினும் அத்துணை வாயில்களையுடைய கூடத்தைக் குறித்தலே கருத்து.
முதற்கண் கூடத்தையே சிந்தெடுத்துக் கூறினமையால், ``பன்றியுமாம்`` என்றதன்பின், கூடம் பாழ்படுதலையுணர்த்துதல் கருத்தாயிற்று. ``பன்றியும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
இதனால், `வாசி யோகம் செய்து, மனத்தை அடக்காவிடில் எடுத்த பிறப்பு வாளா மாயும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

பாசி படர்ந்த குளம், மலத்தால் மறைக்கப்பட்ட ஆன்ம அறிவு. குளத்தில் இரைதேர்ந்து வாழும் குருகு, (பறவை) அவ்வறிவால் பயன்பெற்று வரும் ஆன்மா. பாசி படர்ந்து கிடத்தலால் குருகு தனக்குரிய இரையை எளிதில் காண இயலவில்லை. வருந்தி வருந்திச் சிறிது காண்கின்றது. அஃதாவது ஆன்மாத் தனக்குரிய சிவத்தை எப்பொழுதாவது, எவையோ சிலமுறையில் அறிகின்றது. கூசியிருத்தல் - உயிரற்றது போல ஒடுங்கியிருத்தல்.

குறிப்புரை :

தூசி மறவன் - படைகளில் முன்னணியிற் செல்லும் வீரன். அவன் குரு மூர்த்தியை அதிட்டித்து நிற்கும் சிவன். படை வீரன் தன் போக்கிலே போய்க்கொண்டிருக்கும் பொழுது குளத்தை அடுத்துச் செல்லும் வழியை அடைவானாயின், நீர் பருக வேண்டிக் குளத்தை அடைவான்; அவனால் பாசிகள் அப்புறப்படுத்தப்படும். அப்பொழுது குருகு, தனக்கு வேண்டிய இரையை வேண்டிய மட்டும் உண்டு மகிழும். `அதுபோலக் குருமூர்த்தி தம் இயல்பில் இருப்பினும், ஒருவனது சத்திநிபாத நிலையைக் காணின், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்``9 என்னும் வேட்கையால் அவனை ஏற்று அவனது பாசத்தைப் போக்குவார். அப்பொழுது அவன் `சிவத்தை நன்குணர்ந்து, சிவானந்தத்தில் மூழ்கித் திளைப்பான்` என்பதாம்.
ஆறு - முறைமை; நிலைமை. `மறவன் எய்திடப் பாசி பதைக்கின்ற நிலைமை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. துணை வழி, அருகில் சார்ந்து செல்லும் வழி.
இதனால், குருவருள் கிடைத்த வழியே பாச நீக்கமும், சிவப்பேறும் உளவாம்` என்பது உள்ளுறையாக உணர்தத்ப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள்
வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

பொழிப்புரை :

கும்பம் - குடம். இதனைக் கவிழ்த்து வைத்த குடமாகக் கொள்க. கவிழ்த்து வைத்த குடம் கீழே குறுகியும், மேலே விரிந்தும் இருக்கும். அதுபோலப் பிருதிவியிலிருந்து பிரகிருதி முடியப் போகப் போக விரிந்துள்ளன ஆன்ம தத்துவங்கள். ஆகவே அவற்றின் தொகுதியை, ``கும்பமலை`` என்றார். கும்பமலை - கும்பம் போன்ற மலை.

குறிப்புரை :

``கொம்பு`` என்றது தறி. மலையின் உச்சியில் தறி ஒன்று மலையுள்ளே அடிவரையில் ஊடுருவ அடிக்கப்பட்டு, மேலேயும் உயர்ந்து நிற்பதாகக் கொள்ளவேண்டும். ஏனெனில், இவையெல்லாம் அதிசயப்பொருள்களாகவே கூறப்படுதலின், இத்தறி, இத்தறி ஆன்ம தத்துவத்தை வியாபித்து, அவற்றிற்கு மேலேயுள்ள, அராகம் முதல், மாயை முடிய உள்ள வித்தியா தத்துவங்களின், தொகுதி. இவை ஆன்ம தத்துவங்களை நிலைபெறுத்தித் தாமும் நிலைபெற்றிருத்தலால் இவ்வாறு கூறப்பட்டன.
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்று சுத்த தத்துவங்கள். அவை சூக்குமமாயும், காற்றுப்போல வீசிப்பிற தத்துவங்களைத் தூய்மை செய்து, முற்றிலும் வியாபித்திருத்தலாலும் இவ்வாறு உருவகிக்கப்பட்டது.
வம்பு - புதுமை. புதுமையாய் மலர்ந்ததோர் பூ, தத்துவ ஆராய்ச்சியால் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம். தத்துவ சுத்தி இவைகளைச் செய்து இவற்றின் நீங்கி, அவற்றின் மேலாய் விளங்குகின்ற சுத்தான்மா.
இது வரையில் உருவக முறையால் தாம் கருதிய பொருளை உள்ளுறைப் பொருளாக உணர்த்திய நாயனார், `ஆன்மாக்களின் இரு தய கமலத்தில் விளங்குபவன் சிவன்` என்னும் முறைமை பற்றி, அவன் தயிரில் நெய்போல இனிது விளங்குவது சுத்தான்ம சைதன்னியத்தில் தான்` என்பதை, `சிவன் இந்தப் புதுமலரில்தான் வண்டாக் கிடந்து மணங்கொள்வன்`` எனச் சிறிது வெளிப்படை யாகவே கூறிவிட்டார்.
`மலர் ஆன்மா` எனவே, மணம், அதன் போதம் ஆயிற்று. ஆகவே, `இந்தப் புதுமலரில் ஈசன் வண்டாய்க் கிடந்து மணங் கொள்ளுதல்` என்பது, சீவபோதத்தைத்தான் உண்டு, சிவபோதம் வாயிலாகச் சிவானந்தத்தை வழங்குதல் ஆயிற்று. இதன் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், `தத்துவங்களின் நீங்கித் தூய்தாய் நின்ற சுத்தான்ம சைதன்னியத்தில் தான் சிவன் விளங்கி நிற்பான்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

பொழிப்புரை :

வீணை, நாதத்தைத் தரும் நரம்புகள். அது கன்ம மலத்தைக் குறித்தது. தண்டு, நரம்புகள் கட்டப்பட்டுள்ள கோல். அது மாயா மலத்தைக் குறித்தது. கோல் பற்றுக்கோடாக நின்று நரம்புகள் நாதத்தைத் தருதல் போல, மாயை பற்றுக்கோடாக நின்று நரம்புகள் கன்மம் விளைவுகள் பலவற்றையும் தருவதாதலை அறிக. இசை முரல் தாணு, வீணை வல்லான். அவன் மாயை கன்மங்களைக் கூட்டிச் செயற் படுத்துகின்ற சிவன். வீணை வல்லான் தன் இசை வன்மையைக் கொடுத்து, அரங்கில் உள்ளவர்களது உள்ளங்களைக் கவர்கின்றான். இஃது அவன் செய்யும் ஒரு வாணிபம் ஆகும். இங்கு அவ்வாணிபம், மாயை கன்மங்களைச் செயற்படுத்தும் முறையால், முன்பு தன்னை நோக்காது பிறவற்றை நோக்கியிருந்த உயிர்களைத் தன்னை நோக்கும் படியாகச் செய்தலைக் குறித்தது. சிக்கென்றது - பயனளித்துவிட்டது. அதனையே முன்பு ``தருதலைப்பெய்தது`` என்றார். தகு - தகுதி; உயிர்களின் பக்குவம்; முதனிலைத் தொழிற்பெயர். அடைத்தல், கடையை அடைத்தல்; அஃதாவது, `வாணிபத்தை விட்டுவிடுதல். அது சிவன் தனது ஐந்தொழிலை நிறுத்திவிடுதல். முத்தி பெற்ற உயிர் களிடத்தில் அவன் ஐந்தொழில் நடாத்துதல் இல்லை. எனவே, கடையை அடைப்பதற்கு முன் வாணிபம் தேவைப்படாத, நிலையான காணி யுரிமை வாய்த்துவிட்டது. அஃதாவது, `முத்தி நிலை வாய்த்துவிட்டது` என்பதாம்.

குறிப்புரை :

கலக்கின்றவாறு வியப்பு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. மேனி - மேவியதனால்.
இதனால், `இறைவன் மாயை கன்மங்களைக் கூட்டி ஐந்தொழில் செய்தலாலே உயிர்கள் பக்குவம் எய்திய வீடு பெறுகின்றன` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது. ஆகவே, `இறைவன் ஐந்தொழில் செய்தல் உயிர்களை உய்வித்தற் பொருட்டே` என்பதை உணர்த்தியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 62

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து)
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

பொழிப்புரை :

பரத கண்டத்திற்கு வெளியே உள்ள யவனர் பரத கண்டத்தில் வந்து இறங்குவது கொங்கு நாட்டிலே. அஃதாவது சேரநாட்டிலே. அவர்களோடு பரத கண்டத்தவர் வாணிபம் செய்து நல்ல அருங்கலம் முதலியவைகளைப் பெறுதலைப் பரத கண்டத்தில் உள்ளவர்கள் அந்தக் கொங்கு நாட்டில் சென்று பார்த்தால் தான் அறிந்துகொள்ள முடியும். அங்குச் செல்லாமல் தொண்டைநாடு. சோழ நாடு, பாண்டி நாடு இவைகளில் இருந்து கொண்டே அறிய முடியாது.
சந்திரன் உதயமானால் இருளைப் பார்க்கமுடியாது. (அது போலக் கொங்கு நாட்டை அடைந்தால் மேற்குறித்த அறியாமை நீங்கிவிடும்.) ஆயினும் நல்லூழ் உள்ள ஒரு சிலரே கொங்கு நாட்டையடைந்து வாணிபத்தில் நற்பயன் எய்தி வாழ்கின்றார்கள். (ஏனையோர்க்கு அஃது இயலவில்லை.)

குறிப்புரை :

பரத கண்டத்தின் நடுவில் வடக்குத் தெற்கு நீளத்தில் போதிய இடைவெளி விட்டு இமயம் முதல் குமரி வரை பிரித்தால், பரத கண்டம் கீழைக்கரை, நடுப்பகுதி, மேலைக்கரை` என மூன்று பிரி வினதாய் நிற்கும். அவற்றுள் மேலைக் கரைப்பகுதியையே ``கொங்கு நாடு`` எனறார். கீழைக்கரை முதலிய மூன்று பகுதிகளும், உடம்பில் யோக முறையில் கீழ் நின்றும் மேல் நோக்கிச் சொல்லப்படுகின்ற, அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம்` என்பவற்றைக் குறித்தன.
இவற்றுள் அக்கினி மண்டலம் கீழாலவத்தைக்கும், சூரிய மண்டலம் மத்தியாலவத்தைக்கும், சந்திர மண்டலம் யோகாவத்தை யாகிய மேலாலவத்தைக்கும் இடமாகக் குறிக்கப்பட்டன. கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் துவாத சாந்தத்தில் உள்ள சிவம் தோன்றா -மையால், கீழைக் கரைப் பகுதியும், நடுப்பகுதியும் மேலை நாட்டவர் தொடர்பு கொள்ளாத இடமாகவும், யோகாவத்தையில் சிவம் புலனாதல் பற்றி மேலைக்கரையை மேலே நாட்டவர் வந்து புகும் இடமாகவும் கூறினார். எனவே, பரத கண்டத்தவர் மேலை நாட்டவரோடு வாணிபம் செய்தலாவது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளில் உழல்கின்ற உயிர், யோகாவத்தையாகிய மேலாலவத்தையை எய்தி, ``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்``9 என்றபடி சிவனுடன் கொண்டும், கொடுத்தும் ஊடாடுதலையேயாயிற்று.
மேலாலவத்தையை எய்தினோர்க்கு அஞ்ஞான இருள் நீங்குதலையே மூன்றாம் அடி குறித்தது.
``தாபதர்`` என்றது, வெளிப்படைப் பொருளில் பசு புண்ணியம் செய்தாரையும், உள்ளுறைப் பொருளில் சிவ புண்ணியம் செய்தாரையும் குறித்து நின்றது. இச்சிவபுண்ணியம் `சரியை கிரியைகள்` என்க.
கொங்கு புக்கார், மேலை நாட்டவர். தங்கு - அவர் வந்து தங்குமிடம்; கொங்கு நாடு. தங்கு, தொழிலாகு பெயராய், தங்கும் இடத்தைக் குறித்தது. `அங்குப் புக்கால்` என்னும் பகர ஒற்று செய்யுள் நோக்கித் தொகுத்தலாயிற்று. பிற ஏழாவதன் தொகையில் ஒற்று மிகாமை இலேசினாற் கொள்க. இனி ஒற்று மிகுத்தே பாடம் ஓதினும் ஆம். அப்பொழுது, `திங்கட் புக்கால்` என, ஒற்றுத் திரிந்து நிற்கும்.
இதனால், `யோக நிலையை எய்தினோர் சிவத்தைத் தலைப்படுவார்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.

பொழிப்புரை :

பொழுது விடிந்துவிட்டது. அதனால், மலர்களை யுடைய புன்னைமரம் விளங்குகின்ற, கடலின் இக்கரை, அக்கரையாகிய இருகரைகளும் பொன்னிறம் பெற்று விளங்குவன வாயின் ஆகவே, அந்தக் கரைகள் சிவனும், சத்தியும் எழுந்தருளி யிருக்கும் இடமாகவும் ஆகிவிட்டன.

குறிப்புரை :

பொழுது விடிதலாவது, ஆணவ மலம் நீங்குதல். ``தாதவிழ் புன்னை`` என்னும் அஃறிணை யியற்பெயர். இங்குப் பன்மையில் வந்து, பல உயிர்களைக் குறித்தது. புன்னை அரும்பு ஆன்ம பூதம். அவ்வரும்பு மகரந்தத்தோடு மலர்தலாவது, திருவருள் உணர் உடையதாய் விரிவடைதல் பொழுது புலர்ந்தால் புன்னை மகரந்தத்தோடு மலர்தல் போல, ஆணவம் நீங்கியதால் ஆன்மாக் களின் அறிவு சிவகணமாகிய திருவருள் உணர்வைப் பெற்று விரி வடைந்தது. இரு கரை, பெத்த முத்திகள். முத்தியில் ஆன்ம உணர்வு சிவணம் பெற்றுத் திகழ்தல் நன்கறியப்பட்டது. பெத்த நிலையிலும் அவ்வுணர்வு அன்ன தாதல் சீவன் முத்தி நிலையிலாம் ஆகவே, ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. ஆணவ மலம் நீங்கினால், ஆன்மா இவ்வுடம்போ -டிருக்கும் பொழுதே முத்தியை அடைந்து நிற்கும்` என்பது உணர்த்திய வாறு. ``பொன்னிறங் கொண்டது`` என்பது அழகு பெற்று விளங் -குதலைக் குறித்தது. புன்னை மலரின் மகரந்தம் பொன்னிறம் உடையது. தயங்குதல் - விளங்குதல்.
பிறவி `கடல்` என்றும், முத்தி `அக்கரை` என்றும் சொல்லப் படுதலால், பெத்தத்தை `இக்கரை` என்றார். `இருகரையும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. பன்மையொருமை மயக்கம். ``போதும்`` என்னும் உம்மைச் சிறப்பு.
`மாதர், சத்தி, சிவமும், சத்தியும் இருக்கும் இடம்` என ஒருங்கு கூறற்பாலதனை வலியுறுத்தற் பொருட்டுத் தனித்தனியே கூறினார்.
இதனால், ``ஆணவ இருள் நீங்கினால், `அம்மை` என்பதின்றி இம்மையே முத்தியாம்`` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

பொழிப்புரை :

செங்கோல் அரசன் உண்மையாகவே மிகவும் அன்பு செலுத்தினாலும் அவனது தன்மையை அறியாத குடிகள் வெளிப்படையாக இன்றி, மறைவாகத் தங்களுக்குள்ளே வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் அவ்வரசனைப் பற்றிப் பல தூற்றுதல் மொழிகளைக் கூறிக்கொள்வார். ஆயினும் கால வரையறையின்றிக் குடிகளுக்கு அவை வாழ வழிவகுத்து வரும் அரசன் தன் கடமையி னின்று தவறுவானேயானால், நாம் உணவு முதலியவற்றைப் பெற்று வாழ இயலுமோ! (இயலாது.)

குறிப்புரை :

அமர்தல் - விரும்புதல். உம்மை, சிறப்பு. குடிகளை உண்மையாகவே மிகவும் விரும்பும் செங்கோல் அரசன், ஆன்மாக் களின்மேல் உண்மையான அறக்கருணையை உடைய சிவன். அவன் அத்தகைய கருணையாளனாய் உயிர்கட்கு, `பெத்தம், முத்தி` இரு நிலைகளிலும் உபகரித்துவரினும், அறிவற்ற உயிர்கள், `சிவன் இல்லை` என்றும், `இருப்பினும் அவனுக்குக் கண் இல்லை` என்றும் இன்னோரன்னவாகத் தம் வாய்க்கு வந்ததைத் தங்களுக்குள் கூறிக் கொள்வர். அதனையே, ``கடைதொறும், காமுற்ற கத்தியிடுவர்`` என்றார். கடை - இடம்; வாய்ப்பு. காமுற்ற - விரும்பிய சொற்கள். வீதல் - முடிதல் எல்லை, கால எல்லை. அரசன் ஒருவனேயன்றிப் பலர் வரினும் அரசு நீடு செல்வதேயாகலின் அதனைச் சிவன் செயலுக்கு உவமையாகக் கூறினார். ``வழிகாட்டி`` என்பது பெயர். `யாம் உற்றவற்றைத் தட்டினால்` என்க. தட்டுதல் - தவறுதல். ஐந்து, ஐம்புல நுகர்ச்சி.
அரசு கால வரையறையின்றிக் குடிகளை ஓம்பன், சிவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு உபகரித்தலைக் குறித்தது. பலவற்றைச் சொல்லுமிடத்துப் படர்க்கையில் வைத்துக் கூறிய பொருள் நமக்கும் பொருந்தவதாயின், அதனைப் பின்பு ஓரிடத்தில் நம்மேல் வைத்துக் கூறுதலும் பொருந்துவதே. அதனை, `நீர் இன்றி யமையாது உலகம் என்றால், மழையின்றி நாம் எங்ஙனம் அமைவேம்` என்பதுபோலக் கூறிக் காண்க. இம்முறையில், ``தம்மிலே கத்தி யிடுவர்`` எனக் கூறிப் பின்பு, ``உற்ற தட்டினால் யாம் உண்ணலாமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை குறித்த வினா, `ஐம்புல நுகர்ச்சி` என்பது வெளிப்படைப் பொருளில் உடல் ஓம்புதலையும். உள்ளுறைப் பொருளில் வினை நுகர்ச்சியையும் குறித்து நின்றது. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
`பெத்த நிலையிலும் சிவன் உடனாய் நின்று உபகரியாகிவிடின், உயிர்கள் வினையை ஈட்டுதல் நுகர்தல்களைச் செய்தல் இயலாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 65

தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொழிப்புரை :

தோட்டம் - வேதம், ஆகமம், திருமுறை ஆகிய முதல் நூல்களின் தொகுதி. அதில் பழுத்த மாம்பழம், திருவைந்தெழுத்து. ``வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே``3 என்னும் அருட்டிரு மொழியைக் காண்க.
தொண்டி விடுதல் - பழுத்து விழுதல். பழமையைக் குறிக்கும் `தொண்டு` என்னும் பெயரடியாகப் பிறந்த வினை. பழுத்த முதியோனை. `தொண்டு கிழவன்` என்பர். ``தொந்தி சரிய, மயிரே வெளிற, நிரை தந்தம் அலைய`` எனத் தொடங்கும் திருப்புகழைக் காண்க. திருவைந்தெழுத்துப் பழுத்து விழுதலாவது, சமயாசாரியர்கள் போன்ற பெயியோர்கள் கருணை மீதூர்ந்து அதனை உலகறிய எடுத்தக் கூறி வலியுறுத்துதல். நாயனார் காலத்திலும் அத்தகைய பெரியோர்கள் இருந்திருக்கலாம்.
``நமச்சி வாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க``9
என்றும்,
``தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான், ஆதிரையான், ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான்` செம்பொற் கழல்``l
என்றும்,
``வாயிலே வைக்கு மளவின் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயஏ
கம்பெருமான், தேவியொடு மன்னு கயிலாயத்(து)
எம்பெருமான் ஓரஞ் செழுத்து``
``அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைக ளாவனவும்,
அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும், - நஞ்சவித்த
காளத் தியில்யார்க்கும் கண்டற் கரிதாய்போய்,
நீளத்தே நின்ற நெறி``3
என்றும் அருளிச்செய்த ஆளுடைய அடிகள், காரைக்காலம்மையார், நக்கீர தேவ நாயனார் முதலிய பெரியோர்களை இங்கு நினைவு கூர்தல் நன்று.
நரி - நரிக்கூட்டம் அதனை, ``நாட்டின் புறத்தன`` என்றமையால், ஒரு கூட்டம் வேதத்திற்குப் புறம்பான. மற்றொரு கூட்டம் வேதத்திற்குள் இருப்பினும் சிவாகமத்திற்குப் புறம்பானது. `இவை எவை` என்பதை அறிந்துகொள்க. இந்த நரிக்கூட்டங்கட்கும், மேற்குறித்த மாம்பழத்திற்கும் என்ன தொடர்பு உண்டாகும். யாதும் தொடர்பு உண்டாகாது. அதனையே, ``நாட்டின் புறத்த நரிஅழைத் தென்செயும்`` என்றார். அழைத்தல் - கூப்பிடுதல்.
இனி, அகப்புறச் சமய நூல்களிலும், அகச்சமய உரைகளிலும் திருவைந்தெழுத்தின் சிறப்புக் குறிக்கப்பட்ட தாயினும், அவர் அதனைத் தெளியமாட்டாது புறக்கணித்துவிடுவர். அத்தனையே, ``காட்டிக் கொடுத்தவர் கைவிட்டவாறு`` என்றார். கொடுக்கப்பட்டவர் கொடுத்தவர் அந்நூல்களின் ஆசிரியர்களும், உரையில் ஆசிரியர்களும். `மாம்பழத்தைக் கனவிலும் கருதாது கூப்பிட்டுக் கொண்டிருக்கின்ற நரிக் கூட்டங்கள் போக, ஒரு சில மக்கட் கூட்டமும் அப்பழத்தைக் காட்டுவார் காட்டிக் கொடுக்கவும் எடுத்து உண்டு பயன்பெற்றில என்பதாம்.
மூட்டிக் கொடுத்த முதல்வன், தோட்டத்தை உண்டாக்கி வளர்த்த தலைவன். அவன் சிவன். தோட்டத்தையுடையான் கருணை காரணமாக, பசித்தவர்க்கு இதன் பழத்தைக் கொடுக்க` என்று தன் ஏவலாளர்க்குச் சொல்லியுள்ளான். அஃதே அவன் ஆணை. எனவே, `பிறவிப் பிணியால் துன்புறுவார்க்குத் திருவைந்தெழுத்தின் சிறப்பினை உணர்ந்தோர் உணர்த்துக` என்பதே சிவனது சங்கற்பம் என்பதும், அவ்வாற்றால் உணர்ந்தோர் உணர்த்தினும் மக்கள் அவரவர் பக்குவ பேதங்கட்கு ஏற்ப அதனைச் செவிமடாதோரும், செவிமடுப்பினும் பேணாதோரும், பேணினும் உட்கிடைப் பொருளை முற்ற உணர்ந்து முழுப் பயனைப் பெறாதோருமாய் உளர்` என்பதும் கூறியவாறு.

குறிப்புரை :

`முதல்வன்`, என்பது ஆகுபெயராய் அவனது ஆணையைக் குறித்தது. `கொடுத்தவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `கைவிட்டவாறு இரங்கத் தக்கது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால் சமயிகள் பலரும் திருவைந்தெழுத்திகள் உண்மை அடியோடே அல்லது முற்றவோ உணராதவர்களாய்ப் பிறப்பின் பயனை இழத்தல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.

பொழிப்புரை :

தலைவன் தலைவியர் இன்பமாகக் கூடியிருத்தற் குரிய காலம் இராக்காலம். பொழுது விடிந்துவிட்டால், தலைவன் துயிலை விட்டு வெளியே அறம், பொருள் ஆகியவற்றின் செயல்களில் செல்லுதற்கு உரியன். பொழுது விடிதலைத் தலைவன் தானே உணராவிடினும் அதனை அவனுக்கு, ``கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்``3 என்றபடி சிறப்பாகக் கோழி கூவ, அதனுடன் மற்றைப் பறவைகளும் ஒலித்து அறிவிக்கின்றன. அதனால் பொழுது விடிந்ததை நன்குணர்ந்தும் தலைவர் சிலர் விரைந்தெழுந்து வெளிச் செல்வதில்லை. அது நிற்கத் தலைவியருள்ளும் ஒரு சிலர் தலைவனை எழ விடாது புலம்புவர். இவ்வகையில் எவ்வகையிலோ, புட்கள் ஒலித்தும் எழுந்து வெளிச்சொல்லாதவர்கட்குப் புட்கள் ஒலித்தாலும், மற்றும் என்ன நிகழ்ந்தாலும் எப்பொழுது பொழுது விடிவதேயில்லை. (பகலாயினும் இரவேயாய் இருக்கும்.)

குறிப்புரை :

மக்கள் வாழ்க்கையில்,
``முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம்; காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு``
என்ற ஔவையார் வாக்கின்படி, கற்பன கற்று, அறிவன அறிந்து அறத்திற்குரியராம் தன்மை பெறுதற்குரிய காலம் முதல் முப்பது ஆண்டுகளாகும்.
பின்பு இல்லாளோடு கூடி இன்பம் நுகர்ந்து, அறத்தையும் தேடிக்கொள்ளுதற்குரிய காலம் அடுத்த முப்பதாண்டுகளாகும். அஃதாவது அறுபதாம் ஆண்டு முடியவாம். பின்பு உலகப்பற்றை விடுத்துத் துறவு பூணுதல் வேண்டும். இதுபொதுவான ஒரு முறை. சிறப்பாக இல்லறத்திற் செல்லாமலே உள்ளத்தில் பற்றில்லையாயின் துறவை மேற்கொள்ளுதல் சிறப்புடையதே.
தமிழாசிரியர் கூறும் துறவு, `நாட்டை விடுத்துக் காட்டிலே தான் வாழவேண்டும்` என்பதன்று. `பற்றற்று இருத்தல் வேண்டும்` என்பதே. பற்றில்லாதவர் உடல் நிலைமையைப் பொறுத்து எங்கிருப்பினும் துறவரே. `நாட்டை விடக் கூடாது` என்பதில்லை. விடுதல் விடாமை அவரவரது உடல் நிலையைப் பொறுத்தது.
துறவற இயலில் துறவு நிலையைப் பலவகையாக விளக்கிய திருவள்ளுவர் `நாடு, காடு` என்னும் இரு வாழ்விடங்களில் எதனையும் வரையறுக்கவில்லை.
அறுபதாண்டு வரையில் இன்பம் நுகரும் காலமாக வகுக்கப் பட்டமையால், அந்தக் காலத்தை `இராக் காலம்` என்றும், அறுபதாண்டு கடந்ததை, `பொழுது விடிந்துவிட்ட காலம்` என்றும் நாயனார் கூறியருளினார்.
அறுபதாண்டு கடந்து விட்டதை ஒவ்வொரு தன் மகனும் அறிவான். ஆயினும், உலகப் பற்று அறது அதனையே அவன் பற்றிக் கிடப்பதற்கு, அவனுடைய மனநிலை அல்லது குடும்பச் சூழ்நிலை இரண்டில் எந்த ஒன்றும் காரணமாகலாம். அதனையே நாயனார் பொழுது விடிந்தும் படுக்கையை விட்டு வெளிவாராதவனது தன்மையாகக் கூறினார்.
``பூங்கொடி`` என்பது உருவகம். ஆகவே, அஃது அஃறிணைப் பெயராய், பூங்கொடி புல்லி`` என்பது, `பூங்கொடியைப் புல்லி` என இரண்டாவதன் தொகையாகவும், `பூங்கொடியாற் புல்லப்பட்டு` என மூன்றாவதன் தொகையாகவும், `புலி கொன்ற யானை` என்பது போலத் ``தடுமாறு தொழிற் பெயராய்``* நின்றதாம். புலம்பினவள் - தனிமையைப் பொறாதவள். அஃது இங்குக் குடும்பச் சூழ்நிலையைக் குறித்தது.
புலம்பன், நெய்தல் நிலத்தலைவன். நிலத்திற்கு உரியது இரங்கல். எனவே, `இத்தகைய தலைவன் இரக்கத்திற்கு உரியவன்` என்பது குறிப்பு.
கோழி கூவுதல், நாள் நிலைச் சுவடிகள் ஒருவனது ஆண்டளவைத் திட்டவட்டமாகக் காட்டுதல். பிற புட்கள் ஒலித்தல், உடம்பில் நரையும், திரையும் முதலானவை தோன்றுதல் `மனத்திட்பம் இல்லாதவனுக்கு எவை நிகழ்ந்தும் என்ன பயன்` என்றற்கு. `புலம்பனுக்கென்றும் புலர்ந்தின்று போதே`` என்றார்.
இதனால், அறநூல் முறைப்படி வாழாதவர் மக்கட் பிறப்பின் பயனை எய்தாமை உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 67

தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கின் அதுஇது ஆமே.

பொழிப்புரை :

அடித் தட்டினைத் தக்கபடி மிதித்து, குறிப்பிட்ட ஐந்துபேர் ஓட்டினால், சென்று சேர வேண்டிய துறையில் கொண்டு போய் விடுகின்ற தோணி ஒன்று உள்ளது. (அது திருவைந்தெழுத்து மந்திரமாகும். ``அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை``3 என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். ``ஆணி`` என்றது அடித்தட்டினை. அதனைத் தக்கபடி மிதித்தலாவது பளு சமமாக இருக்கும்படி வைத்தல். படகின் அடித்தட்டுப் பளுவைத் தாங்கி நிற்பது. பளு சமமாய் இல்லாவிடில் தோணி புரண்டுவிடும். ``தோணி`` என்றது ஒரு மரத்தோணியன்று படகேயாம். பளுவைச் சமமாக வைதத்ல் அது வல்லார்க்கே கூடுவது. அதனால் இங்கு அது திருவைந்தெழுத்தின் மேலோட்டமான பொருளாகாது, உள்ளீடான பொருளாய் நிற்றலாம். அஃது உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் எனும் நூல்களில் ஐந்தெழுத்திற்கும் சொல்லப்பட்ட ஐந்து பொருள்கள்.) அவைகளையே இங்கு ``ஐவர்`` என்றார். அவர்கள் கோல் ஊன்றி ஓட்டுதலாவது, திருவைந்தெழுத்தை, `தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம்` என்பனவாகப் படிப்படியாக நுணுகி நுணுகி வர உணர்த்துதல்த. ``அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி``l என, ஐந்தையும், ``ஐந்து பதம்`` என அருளிச் செய்தமையும் உணரற்பாற்று.

குறிப்புரை :

தோணியில் சென்று வாணிபம் செய்வார், திருவைந்தெழுத்தின் உட்பொருளை ஆசிரியர் உபதேசிக்கக் கேட்டு, அதனை மேற்கூறியபடி முறையில் ஓதி, மேன்மேல் உயரும் உயிர்கள்.
தோணியை ஓட்டுவார் அதனைத் செவ்வனே ஓட்டுதற்கு, அதில் ஏறியிருப்பவர்களும் ஒத்துழைத்தல் வேண்டும். அவ்வாறின்று முரண்விளைப்பார்களாயின் தோணி கவிழ்ந்துவிடும். தோணி கவிழ்தலையே, ``ஆணி கலங்கின்`` ``அது இது ஆம்`` என்றது, `மேலது கீழாகியும், கீழது மேலாகியும் புரளும்` என்றபடி. ``அது இது ஆம்`` என்றதனானே, இது அது ஆம் என்பதும் கொள்க. ``வழியிடை யாற்றிடை`` என்றதில் வழி, செல்லும் வழியையும், யாறு, `அவ்வழியாவது இது` என்பதையும் குறித்துச் சிறப்பும், பொதுவுமாய் நின்றன. இரண்டாம் அடியை முதலில் வைத்து, `துறையில்` விடுவது தோணி ஒன்று உண்டு` என மாற்றியுரைக்க.
இங்குக் குறித்த வாணிபத்தின் இயல்பை, மேல் ``கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது``3 என்றதில் காண்க.
இதனால், பலதிறப் பொருள்களை மறைத்துரையாடலாகக் கூறிவந்து, இறுதியில் அந்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்து முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.

பொழிப்புரை :

புற உலகத்தை நோக்குமிடத்து நிலமும், வானமும் ஆகிய இரண்டிடங்களில் நிலத்தில் அதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களும், நிலத்தைத் தாங்குகின்ற எட்டு உயர் மலைகளுமாகியும், வானத்தில் நெருப்பு மயமாய் உள்ள ஞாயிறும், பிற மீன்களும், மேகமும், காற்றும் ஆகியும் வியப்பூட்டுவதாய் என்றும் அழியாது நிலைத்திருப்பது போலக் காணப்படுகின்றது. இப்படியிருத்தலைக் கண்டு இந்த மண்ணுலகத்தைப் பொருளாகக் கருதி இல்லை நீடு வாழ நினைத்தால், உண்மையில் இதன் தன்மையோ, இவ்விரிவுகள் எல்லாம் ஒன்றும் இன்றி அடங்கி ஒடுங்கிப் போவதாய் உள்ளது.

குறிப்புரை :

`ஆகவே, அறிவுடையோர் இதில் வாழ நினையாது, நிலைத்த வேறொரு நிலையில் வாழவே முயல்வர்` என்பது குறிப் பெச்சம். நிலைத்த நிலை, வீட்டு நிலை தாழ்தல் - தங்குதல். அது, பகுதிப் பொருள் விகுதி. லயம் - ஒடுக்கம். ஆலயம் - ஒடுக்கத்தை அடைவது.
இதனால், மோன சமாதிக்கு வாயிலாக உலகத்தின் நிலையாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.

பொழிப்புரை :

உலகத்தில் ஒருவனும், ஒருத்தியும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுமாற்றால் `அவளது வயிற்றிற்றானே அங்குள்ள தீயால் வெந்து உருவாகி நிலைப்பதாகிய மண் பாண்டத்தைக் கருவிலே அமைத்து, அதற்கு எந்தத் தன்னுரிமையும் இல்லாமற் செய்து விடுகின்றார்கள். பின்பு அது வெளியில் வந்த பிறகு அதற்கு வளர்ச்சி முறை அமைகின்றது. அப்பொழுது கிணற்றுப் பறவைகள் போல் வெளியுலகைப் பற்றி யாதும் அறியாத மக்கள் அந்தப் பாண்டத்திற்கு அமைத்து வைக்கும் நெறி, முன்பே பலமுறை அமைந்துகிடந்த மயக்க நெறியே யன்றிப் புதிய தெளிவு நெறி யாதுமன்று.

குறிப்புரை :

அந்நெறியாவது, உருவாவதும், உடைந்து போவதும் - பின்னும் உருவாவதும், உடைந்து போவதுந்தான். `செய்து, அமைத்து, கவிர்த்தனர்` என்பவற்றிற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. ``அகம்`` என்றது வயிற்றை. ``சுட`` என்றதனால் அதற்குரிய `தீ` என்பது வருவிக்கப்பட்டது. அஃதாவது உடல் வெப்பம். சூல் - கருப்பம். அத்து, வேண்டா வழிச் சாரியையாய் வந்து, ஏழாவதன் பொருளைத் தோற்றுவித்தது. சால் - மண் பாண்டம்; என்றது உடம்பையேயாதல் வெளிப்படை. உடம்பை மண்பாண்டமாக வருணித்தல் சித்தர் பாடல்களில் பல இடங்களில் காணலாம். உடம்பில் உயிர் உள்ளதேனும் அது தன்னியல்பை இழந்து, உடம்பின் இயல்பாயே நிற்றலின் அதனைக் குறியாது உடம்பையே குறித்தார். தலைமை தன்னுரிமை. அஃதாவது, உள்ளே முடங்கிக் கிடவாது வெளி வர விரும்பினும் அது மாட்டாமை. ``தலைமை தவிர்த்தனர்`` என்பது `அடைத்து வைத்தார்கள்` என்றவாறு. கோல், ஒழுங்கு. வெளியுலகம், வீட்டு நெறி. மால் மயக்கம், `மால் வழியே` என இயையும். ``முன்பின்`` என்பதில், `இன்`, சாரியை. `முன்பு உள்ள நெறியே` என்க. அது பிறந்தும், இறந்தும் மீளப் பிறந்தும், இறந்து வருதலாம். எனவே, முன் மந்திரத்திற் கூறியவாறு. `இவ்வுலகிற்றானே நீடு வாழ நினைவாரது நிலைமையெல்லாம் இவ்வாறே முடியும்` என்பதாம்.
இதனால், முன் மந்திரத்தில், `ஆலயம் ஆமே` எனப் பொதுவாகச் சுட்டிய நிலையாமை இனிது விளங்க உணர்த்தப்பட்டது. ஆகவே, இவ்விரு மந்திரங்கலாலும், `உலக வாழ்க்கையை விடுத்து, மோன சமாதியையே பெரியோர் அடைவர்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 3

நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

பொழிப்புரை :

உலகில் பலர் மறைகின்ற காலத்தில், ``நின்றான்; இருந்தான்; கிடந்தான்; தன் கேள் அலறச் சென்றான்``8 என்னும் சொல் நிகழும்படியாக, காளையராய்ப்பின் மூத்து ஒடுங்கிப் பின் பிணியுற்று கிடந்தே மறைகின்றனர். அவ்வாறின்றி, ஊர்ப் பயணம் புறப்படுவது போல இவ்வுலகை விட்டு நல்ல உணர்வோடு மறைகின்றவர்களது உணர்வு உற்றிருந்த நிலைமையே `மோன சமாதி` எனப்படுகின்றது. அந்த நிலை பலரும் சென்று அடையத்தக்க மன்றம் போன்றதுதான். மன்றம் ஆயினும் அங்கு மறைந்து நிற்கும் பொருள். அஃதாவது, அறி -வினுள் அறிவாய் நிற்கும் பொருள் ஒன்று உண்டு. அதை அடைந்தவர் அடைந்த முறையே முறை. `பிற எல்லாம் முறையல்ல` என்பதாம்.

குறிப்புரை :

``இல்லா`` என்பது, துவ்வீறு கெட்ட எதிர்மறை வினை யெச்சக் குறிப்பு. ``சித்தம்`` என்றது உணர்வை. அஃது ஆகுபெயராய், அதன் நிலைமையைக் குறித்தது. `அதனை அடைதற்கு எவர்க்கும் தடையில்லை` என்பது உணர்த்துதற்கு, அதனை, `மன்றுபோல்வது` என்றார். ஏயும், உவம உருபு. `ஆங்குச் சென்று அணைந்தவர்` என மாறிக் கூட்டுக. `சேர்கின்ற ஆறே ஆறு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ஆறு - முறைமை.
இதனால், மோன சமாதியாவது இன்னது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

பொழிப்புரை :

காட்டு - எடுத்துக்காட்டு. குறி - ஏது. நேரே காண வாராத பொருளை அதனை விட்டு நீங்காததாய்க் காணப்படும் ஏதுவாலும், அதனோடொத்த உவமத்தாலும் கருதியுணரலாம். ``ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டா``9 என்று அருளிச் செய்தபடி, முன் மந்திரத்தில் ``மறைபொருள்`` எனப் பட்ட அந்த மெய்ப்பொருளை விட்டு நீங்காது அதனை அறிவிக்கும் ஏதுவாய் நமக்குக் காணப்படுவதும் ஒன்றில்லை. இனி, தனக்குவமை யில்லாதான்``3 என்றபடி, அப்பொருளோடு ஒத்ததாய், அதற்கு உவமையாவதும் ஒன்றில்லை. அது பற்றி அப்பொருளை, ``காட்டும் குறியும் கடந்த அக்காரணம்`` என்றார். அப்பொருளே எல்லா வற்றிற்கும் முதலாய் நிற்றலின், ``காரணம்`` எனப்பட்டது. `காரணம், முதல்` என்பன ஒரு பொருட் சொற்கள். இங்ஙனம் காட்சி கருதல்கட்கு எய்தாத அப்பொருளை உணர்த்துவன உரைத்திட்சிகளேயாம். ஆயினும் அவ்வுரைப் பொருள்களை அனுபவமாகப் பயிலாது, உரைகளை ஏட்டின் புறத்திலே எழுதி வைத்தால், அதனால் என்ன பயன் விளையும்? ஒரு பயனும் விளையாது. இனி அப்பொருளை அனுபவமாகப் பற்ற அதனோடு சேர்ப்பிக்கின்றவர் சிவ குருவே. அவர் சேர்ப்பித்தால் மேற்குறித்த உரைப் பொருள்கள் எல்லாம் அனுபவமாகப் பயன்படும். இல்லாவிடில் ஏட்டில் எழுதி வைத்தன எல்லாம் ஆட்டின் கழுத்தில் மடிக் காம்புபோல்வன தூங்குகின்ற அத்தன்மையனவேயாம்.

குறிப்புரை :

`எழுதி மட்டும் படிப்பின், தமக்கும், பிறர்க்கும் அவை யாதொரு பயநையும் செய்யா` என்பதாம். இஃதே பற்றி, ``நூலறிவு பேசி நுழைவி லாதார் திரிக``* அம்மைத் திருவந்தாதி - 33.என்னும் அனுபவ மொழியும்,
``ஒன்றும் குறியே குறியாத லால்அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால், ஒன்றோடு
உவமிக்க லாவதுவும் தானில்லை; ஒவ்வாத்
தவமிக்கோ ரேஇதற்குச் சான்று``9
என்னும் சாத்திரத் திருமொழியும் எழுந்தன.
கு-ரை: ``காரணம்`` என்றது, காரணமாய் உள்ள இயல்பையும், அதனை அடையும் வழியையும் கூறும் உரைகளைக் குறித்தது என்னை? எழுதப்படுவன உரைகளேயாதலால், ``நந்தி`` என்றது, `சிவ குரு` என்னும் குறிப்பினது. `அவர் கூட்டினல்லது` என எடுத்துக் கொண்டுரைக்க. ``அல்லதை`` என்பது ஐயிற்றிடைக் குற்றுகரம்.
இதனால், `ஒரோ ஒருகால் பிற கல்விகள் எல்லாம் ஆசிரியன் இன்றியும் பயன்படும்; மோன சமாதியைப் பற்றிய கல்வி, ஆசிரியன் இன்றிப் பயன்படாது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. (இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``உணர்வுடையார்கட்கு உலகமும் தோன்றும்`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, ``சம்பிரதாயம்`` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 5

மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.

பொழிப்புரை :

தன்னை மறப்பதையே தனது தொழிலாகக் கொண்ட, வஞ்சக நாட்டில் வாழும் ஒருவன் (பெத்தான்மா) அம் மறதியால் அடைவது பிறவித் துன்பமே. அத்துன்பத்தை, அவன் தன்னை என்றும் மறவா நிலையை அடைவிக்கும் முகத்தால் நீங்கி யருளிய பெருங்கருணையாளன், எவ்வாற்றானும் பிறப்பை எய்தாத சிறப்புடையவன். (சிவன்) அவன், பிறவித் துன்பத்தின் நீங்கிய அவன் (முத்தான்மா) முன்போலத் தன்னை மறப்பதாகிய அந்த உறக்கம் அல்லாத வேறு உறக்க இன்பத்தில் இருக்கும்பொழுது, தானும் தன் தேவியுடன் அந்த உறக்கத்தில் பங்கு பற்றியிருப்பான்.

குறிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளில் கேவல நிலையே மறப்பும். சகலம் நினைப்புமாயினும் அந்நினைப்பு நிலையிலும் சிவனை நினைத்தல் இல்லையாகலின், பெத்தான்மாவை ``மறப்பே வடிவமாய் நின்றவன்`` என்றார். அது, பகுதிப் பொருள் விகுதி.
``நின்னை எப்போதும் நினைய லொட்டாய் நீ;
நினையப்புகின்
பின்னை அப்போதே மறப்பித்துப்
பேர்த்தொன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு
உனக்கு இனிதாய் இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு
வாழி இறைவனே``3
என்னும் அப்பர் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. மாயம் - வஞ்சனையும், நிலையாமையும். அவற்றை உடைய மாயா காரியங்களாகிய தத்துவங்கள். மறதியைத் தருதல் பற்றி வஞ்சனையையே இங்குப் பொருளாகக் கொள்க. அவை உயிர்க்கு இடமாதல் பற்றி, `நாடு` என்றும், கேவலத்தை நீக்குதல் பற்றி `நன்று` என்றுங் கூறினார். சுத்த நிலையே சிவனை மறவா நிலையும், அதனால் பிறவியற்றிருக்கும் நிலையுமாகும். `நாடனது` என ஆறாவது விரிக்க. சிவபோக நிலை, சிவனை மறந்து துயிலும் கேவல சகல அதீதங்கள் போலாது சிவனை நினைந்தே துயிலும் சுத்த அதீதம் ஆகலின் அதனை, ``உறக்கம் இல் போகம்`` என்றும், `அந்நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்றற்கு. ``திருமங்கையும் தானுமாய் (அப்போகத்தில்) தான் உறங்கிடும்`` என்றும் கூறினார். `சிவ போக நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்பதைச் சிவஞான போதப் பதினொன்றாம் சூத்திரத்து நுண்பொருள் பற்றி உணர்க.
ஈற்றில் நின்ற ``தான்`` என்பதை, ``சிறப்புடையான்` என்பதன் பின்னர்க்கூட்டி, `மங்கையும், தானுமாய்` என ஆக்கம் விரித்துரைக்க.
இதனால், `சுத்த துரியாதீதமே மோன சமாதி நிலை` என்பதும், `அந்நிலையும் சிவனது அருளாலே பயன்படும்` என்பதும் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.

பொழிப்புரை :

சிவன், `கேவல துரியம், சகல துரியம், யோக துரியம்` என்னும் இம்மூன்று துரியங்களையும் கடந்து நிற்கும் ஒளியாய் உள்ளவர். (இத்துரியங்கள் முன் தந்திரத்தில் விளக்கப் பட்டன. இம்மூன்றையும் கடந்தது அரிய துரியம். அது நின்மல துரியம். (இதுவும் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.) அதன்கண் உள்ள மூன்றாவன, ஞாதிரு, ஞானம், ஞேயம் (அறிபவன் அறிவு, அறியப்படும் பொருள்.) `இவை தோன்றி நிற்றல் விரிவு` எனவும், தோன்றாது மறைதல் குவிவு` எனவும் உணர்க. துரிய நிலையில் விரிவும், அதனையும் கடந்த அதீத நிலையில் குவிவும் உண்டாகும். ஆகவே, `விரிவை விழுங்கிக் குவிவை உமிழ்ந்தது` என நிரல் நிறையாகக் கொள்க. குவிந்த நிலையே பேசா அனுபூதி, அல்லது, மோன சமாதி ஆதலின், ``உரைஇல் அனுபூதிகத்து உள்ளான்`` என்றார். `சோதி, விழுங்கி, உமிழ்ந்து உள்ளான்` என முடிக்க. ``மீது`` என்பது ஏழன் உருபாயும், `மேல்` என்னும் பொருட்டாயும் நின்றது. ``ஆய்`` என்னும் வினையெச்சம், ``விரிவு`` என்னும் தொழிற்பெயர் கொண்டது.

குறிப்புரை :

இதனால், மோன சமாதி முத்துரியங்களையும் கடந்த அதீத நிலையாதல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரிக்கின்றது.)

குறிப்புரை :

உரு இலி - தன் இயல்பில் உருவம் இல்லாதவன். ஈன் இலி - பிறர் பொருட்டாக உருவம் கொள்ளுமிடத்தும் அவ்வுருவில் புலால் இல்லாதவன்; (`மாயா சரீரியல்லன்; சத்தி சரீரி` என்றபடி. ``அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள் காரணத்தின் வருவார்``3 என்னும் திருமுறையையும், காயமோ மாயையன்று; காண்பது சத்தி தன்னால்``l சாத்திரத்தையும் ஊன்றி யுணர்தல் வேண்டும்.)
ஊனம் - குறை. தனக்கு இயல்பாய் உள்ள ஆற்றல் குறைவு படுதற்குரிய காரணம். அது பாசம். அதனை இயல்பாகவே இல்லாதவன். பாசங்கள் பல ஆதலின், `அவற்றுள் ஒன்றும் இல்லாதவன்` என்க. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
திருஇலி - திருவை இல்லாளாக உடையவன். திரு - அருள். இல்லாள் - தேவி.
``தீதிலி`` என்றதே பற்றி, `நன்றிலி` என்பதும் கொண்டு, `உலகில் வரும் தீமை நன்மைகளில் ஒன்றினாலும் தாக்குண்ணாதவன்` என்க.
மருவு இலி - புதிதாக வந்து பொருந்துதல் இன்றி, அனாதியே அத்துவிதமாய்க் கலந்து நிற்பவன். அத்தகையோனைப் ``புகுந்தான்`` என்றது, புதியோன்போல விளங்கி நின்றமை பற்றி, ``மனம்`` என்றது அறிவை.
ஏனைய வெளி. பல பெயர்களும் ஒரு பொருள் மேலவாய், ``வந்து என் உளம் புகுந்தான்`` என்பதனோடு முடிக்க.
இதனால், `எத்துணையும் அரியன் மோன சமாதியில் எளியனாய் நிற்றல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.

பொழிப்புரை :

சிவபெருமானை அறிஞர் பலரும் `முதற் கடவுள்` என்று உணர்ந்து போற்றுகின்றனர். ஆயினும் அவன் அவரவர் உடலிற் குள்ளேயிருந்து அருள் புரிதலைப் பலர் அறிந்திலர், (புறத்திலேதான் வைத்துப் போற்றுகின்றனர் என்றபடி) ஆகவே, அதனை அறிந்த ஒரு சிலரே அவனுடைய மெய்த்தொண்டர் ஆகின்றனர். அவர்கள் உலகங்களைக் கடந்து ``கரையிலாக் கருணை மாகடலாயும்``3 அதனானே கரையிலா இன்ப மாகடலாயும் உள்ள சிவனிடத்தில் அந்த ஆனந்தத்தைத் தம்மால் ஆமளவும் முகந்து உண்கின்ற துறையை நாமெல்லாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.

குறிப்புரை :

``நந்தியை`` என்பது முதலாகத் தொடங்கி, `காயத்தில் கண்டறிவார் இல்லை`` என மாற்றி; அதனை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டியுரைக்க.
காயம் - தூய உடம்பு. அதன் உள்ளிடமாகச் சொல்லப்படுவது இருதயம். அதனைப் பூசாத்தானமாகக் கொண்டு செய்யும் அகப் பூசையே சிறப்புடைப் பூசையாகும். இஃது `அந்தரி யாகம்` எனப்படும். ``அந்தரியா கந்தன்னை முத்தி சாதனமாய் அறைந்திடுவர்; அதுதானும் ஆன்ம சுத்தி யாகும்``l என்றது சிவஞான சித்தி. இது கிரியா பூசை.
ஞான நிலையில், `சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம்` என்னும் முறையில் அறிவுக்கறிவாய் அறிவினுள்ளே வைத்துச் சிவன் உணர்ந்து வழிபடப்படுவான். அது ஞான பூசை. இவை ஒன்றின் ஒன்று மேம்பட்டன. இந்த மூவகை நிலையும், `காயத்தின் உள்` என்பதாகக் கொள்ளப்படுதலின், இவற்றுட் செல்லாது புறத்தில் மட்டும் வைத்து வழிபடுவாரை நாயனார், `நந்தியைக் காயத்தின் உள்ளே கண்டறிவார் இல்லை` என்றார். காயத்தின் உள்ளே என்பதில் சாரியை நிற்க, உருபு மறைந்தது.
``எந்தையே ஈசா, உடல்இடம் கொண்டாய்;
யான்இதற் கிலன் ஒர்கைம் மாறே``*
``நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே, யான் உன்னை விடுவே னல்லேன்``*
என்றாற்போல வரும் திருமொழிகளும் இவற்றையே குறிக்குமாற்றை ஓர்ந்துணர்ந்துகொள்க. இனி இவற்றிற்கெல்லாம் இவ்வுண்மைப் பொருளைக் கொள்ளாது, தூல உடம்பில் தரிக்கப்படும் சின்னங்களையே இவை குறிப்பனவாகக் கொண்டமை வாரும் உளர்.
``அண்டம் கடந்த பொருள்
அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்``8
``... ... பேரா, ஒழியாப், பிரிவில்லா,
மறவா நினையா, அளவிலா,
மாளா இன்ப மாகடலே``9
என்னும் திருமொழிகளை இதன் மூன்றாம் அடியோடு ஒப்பிட்டு உணர்க. நுகரும் பகுதியை முகக்கும் துறையாக உருவகித்தவர். முழு நிலையையும் கடலாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
இதனால், சிவனை அகத்தில் வழிபடுதலே மோன சமாதியைப் பயத்தல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
அற்புத மாகி அனுபவக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

(இம்மந்திரத்திற்கு முன் மந்திரத்திற் போந்த, ``நந்தி`` என்பதை எழுவாயாக வருவிக்க.)
சிவன், மோன சமாதியை அடைந்தவர்கட்கு, அதற்கு முன் பெல்லாம் அவர்கள் பாவித்த பாவனைகளில் தோன்றியது போலத் தோன்றாமல், அவர்களது பாவனைகளில் ஒன்றற்கும் உட்படாத வேறோர் அதிசயப் பொருளாய், அநுபவப் பொருளாய் விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`சிவன் ஒருவன் உளன்` என, வேதாகமங்கல் பற்றுக் கோடாகப் பொதுவகையான் உணர்ந்த நிலையில் அவன்,
``தேவராயும், அசுர ராயும், சித்தர், செழுமறையேர்
நாவராயும், நண்ணு பாரும், விண், எரி, கால், நீரும்
மேவ ராய விரைமலரோன், செங்கண்மால் ஈசன் என்னும்
மூவ ராயும்``3
இங்ஙனம் பல திறப்பட்டுக் காணப்படுகின்ற உயிர் வகைகளையும், ஐம்பூதம் முதலிய உயிரல்பொருள் வகைகளையும் வைத்து, `சிவன் இவை அனைத்திற்கும் மேலாய் உளன்` என்று உணர்ந்த அளவில், அவன் உண்மை மாத்திரையாக நிருவிகற்பமாகவே தோன்றினான். தற்பரம் - தனக்கு மேலானது. தான் உயிர். உயிர்களாகிய அறிவுடை உலகத்தைக் கூறவே, இனம்பற்றி, உயிரல்லாத அறிவிலா உலகமும் கொள்ளப்படும். இந்த நிருவிகற்ப உணர்வும் பாவனையே யாதல் அறிக. இவ்வாறும் அவன் இப்பொழுது இல்லை.
இனி, `உளன்` எனப் பொதுவாக உணரப்பட்ட சிவன் ஏழ்வியல்பினன்? என ஆராயுமிடத்து, `அவன் தன் பொருட்டாக யாதொரு தொழிலையும் வேண்டாதவனாயினும், உயிர்களின் பொருட்டாக ஐந்தொழில்களைச் செய்கின்றான்` என ஆசிரியர், வேதாகமங்களின்வழி அறிவிக்குமிடத்து, `அவ்வைந்தொழில் - அதி சூக்குமம், சூக்குமம், தூலம் என மூவகைப்படும்` எனவும், அதி சூக்கும ஐந்தொழிலை அருவத் திருமேனியை யுடையனாயும், சூக்கும ஐந்தொழிலை அருவுருவத் திருமேனியை யுடையனாயும், தூல ஐந்தொழிலை உருவத் திரமேனியை யுடையனாயும் நின்று செய்வன்` எனவும் அறிவிக்க. அவ்வாறே அறியுமிடத்து, அத்திருமேனிகள் ஏனைப் பொருள்கள்போலக் கட்புலனாகாமையால் ஆசிரியர் அறிவித்தவாறே பாவித்து வழிபடும் வழிபாட்டுப் பொருள்களாயின. அவற்றுள் உருவம் சரியை நிலையிலும், அருவுருவம் கிரியை நிலை யிலும், அருவம் யோக நிலையிலும் வழிபடும் பொருள்களாயின. அந்தப் பாவனைப் பொருள்களாகவும் அவன் இப்பொழுது இல்லை. இங்ஙனம் இவை எல்லாம் அல்லவாம் நிலைகளையே முதல் இரண்டடிகளில் எடுத்தோதினார். சதாசிவன் - அருவுருவத் திரு மேனியன். நிட்களம் - அருவத்திருமேனி. அது, `சிவம், சத்தி` என இருவகைத்து. சகளம் - உருவத் திருமேனி. இது, `மகேசுரன், வித்தை` என இருவகைத்து.
இவையெல்லாம் ஐந்தொழில் செய்தற்பொருட்டுக் கொள்ளப் பட்ட தடத்த வடிவங்களே யாதலாலும், தடத்தம் பெத்தான்மாக்களுக்கே உரியதாக, முத்தான்மாக்களுக்கு அவையனைத்தினும் வேறாய், வாக்கு மனோதீதமாய் உள்ள சொரூப நிலையே உரித்தாகலும் மோன சமாதியை அடைந்தோராகிய முத்தர்களுக்கு சிவன் `சதாசிவன்` முதலாகச் சொல்லப்படும் நிலையினன் அல்லன் என்றார். இந்நிலையைத் திருஞான சம்பந்தரும், ``கறையணி வேலிலர் போலும்``* எனத் தொடங்கும் திருப்பதிகம் முழுவதிலும் பலவாக விரித்தருளிச் செய்தார்.
தடத்த மெல்லாம் பாவனை யளவினவாய் நிற்றலாலும், சொரூபம் எவ்வகையும் பாவிக்க வாராது பாவனையால் கண்டு வந்த அவற்றினும் வேறாய் அநுபவத்தில் உணரப்படுவது ஆகலானும், ``அற்புதமாய்க் கற்பனையின்றி, அனுபோகக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார்.
காம இன்பமும், `கற்பனை இன்பமும், அனுபவ இன்பமும்` என இருவகைத்து. காதலனும், காதலியும் மெய்யுறு புணர்ச்சியின்றி, உள்ளப் புணர்ச்சி மட்டுமே வாய்த்த நிலையில் அவர்களது உள்ளத்தில் தோன்றுகின்ற இன்பம் கற்பனை இன்பம். மெய்யுறு புணர்ச்சி வாய்த்த காலத்தில் அவர்கள் அடையும் இன்பம் அனுபவ இன்பம். `அவ்வாறே குரு உபதேசத்தைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல்களால் விளையும் சிவானந்தம் கற்பனை ஆனந்தமாக, நிட்டையாகிய மோன சமாதியில் விளையும் சிவானந்தமே அனுபவ ஆனந்தமாய்` என்றற்கு, ``கற்பனையின்றி அனுபவக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார். ``மருவி யிருவரும் புணர வந்த இன்பம் வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்;* என்றது போல இதுவே மோன சமாதி அனுபூதி என்க. இதனுள் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சொரூப அனுபவமே மோன சமாதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதற்கண் கூட்டி, ஈற்றில் தொக்கு நின்ற `அச்சுகம், மகள் தன் மணாளனோடு ஆடிக் காணத்தக்கதே` என்னும் இசையெச்சத்தை விரித்து, `ஆனந்தம் சுகத்தில் கண்கொண்டு காண்பதே` என மாற்றியுரைத்து முடிக்க. முதல் அடி, இடைப்பிற வரலாய் வந்தது. இஃது எடுத்துக்காட்டுவமை.
காண்பதே - காணப்படுவதே. ஆனந்தம், ஏற்புழிக் கோடலால் இங்குச் சிவானந்தமே யாதல் தெளிவு. முகத்தினிற் கண்ணை `ஊனக் கண்` என்றும், அகத்தினிற் கண்ணை, `ஞானக் கண்` என்றும் வழங்குப. `தசையைக் குறிப்பதாகிய `ஊ` என்னும் பெயர், புணர்ச்சிக்கண் னகரச் சாரியை பெற்று, ஊன என வரும்` என்பது தொல்காப்பியம்.8 பிற்காலத்தி அஃது, `ஊன்` என னகர ஈறேயாய்ச் சில இடங்களில் அகரச் சாரியை பெற்று வருவதாயிற்று. அகக் கண்ணால் காண வேண்டுவதை முகக் கண்ணால் காண முயலுதலும், அகக்கண்ணிற்கு அஃது அகப்படாமை பற்றி, `அஃது இல்லை` என முரணி நிற்றலும் உடைமை பற்றி அத்தன்மையுடையாரை ``மூடர்காள்`` என விளித்தருளினால். இம்மந்திரத்துட் கூறப் பட்ட பொருளையே திருவுந்தியார்,
``இங்ஙன் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``3
என்றும், திருக்களிற்றுப்படியார்,
``அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை,
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அவ்வா றிருந்த தது``l
என்றும் கூறின.
இதனால், சிவானந்த அனுபவம் மோன (மௌன) சமாதி நிலையேயன்றி, மனோ வாக்குக்களின் செயற்பாட்டு நிலையன்று` என்பது வலியுறுத்திக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.

பொழிப்புரை :

செப்பு பராபரம் - குரு மொழியும், வேதாகமங் -களும் சொல்லுகின்ற மெய்ப்பொருள். `பராற் பரம்` என்பது, `பராபரம்` என மருவிற்று. `மேலானதற்கும் மேலானது` என்பது அதன் பொருள்.

குறிப்புரை :

சேர்பரம் - முன்பு பரமாய் இல்லாது பராபரத்தைச் சேர்ந்ததனால் `பரம்` எனச் சொல்லப்படுவது. அஃது ஆன்மா.
இவ்விரண்டையும் விடுதலாவது, சீவான்மா இது, பரமான்மா இது` எனப் பகுத்துக்காணும் நிலையை விடுவது. அஃதாவது, ஆன்மா `யான், எனது` என்னும் பகுத்துணர்வின், நீங்கியநிலை. `கப்புறுதல்` எனப்பட்டதும் அதுவே. கப்புறுதல் - கவர்த்தல்; இரண்டு படுதல்.
கப்பு உறு சொல் பதம் மாள - பகுத்துச் சொல்லும் சொல் நிலை நீங்க. கலந்தமை - சீவான்மா பரமான்மாவோடு ஒன்றுபட்ட நிலை.
`அப்பினில் உப்பென, அத்தென ஆன்மா அணைந்திட்டுக் கலந்தமை` என்க. `கலந்த நிலை எப்படி எனில; அஃது இப்படி - என இலக்கண வகையாற் கூறு வாராது - அப்படி எனப் பொதுவகையால் சுட்டும் தன்மையினதேயாம்` என்பது ஈற்றடியின் பொருள். இதன் முதல் மூன்றடிகளில் கூறப்பட்ட பொருளே சிவஞான போதத்துள்,
``நசித்து மலம் - அப்பணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்;
கப்பின்றாம் ஈசன் கழல்``9
எனக் கூறப்பட்டமை காண்க.
இதனுள் பாடம் பெரிதும் திரிபுற்றது.
இதனால், `மோன சமாதியின்பம் அனுபவத்தால் அறியப் படுமன்றி, அயலவர் உரையால் அறிய வாராது` என்பது உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

பொழிப்புரை :

எட்டி மரத்தின் பழம் பார்ப்பவர்கண்கட்கு மிக அழகிதாய்த் தோன்றும். ஆயினும் அதனைத் தின்றாலோ, சுவை கைப்பாதலுடன், தின்றவரையும் கொல்லும் தன்மையுடையது. (அதனால், அறிவுடையோர் ஒருபோதும் அப்பழத்தைத் தின்னார்.)
இனிப் பெண்ணொருத்தி பெண்மை நிரம்பி, `பெண்டு` என்பதற்குத் தகுதியடைந்த பின்பே அவளைக் கொண்டவன் அவளோடு தனிமையிற் பழகி, அவளுடைய குணங்கள் பல வற்றையும் உள்ளவாறு உணர்ந்து அவளது குணங்கட்கு ஏற்ப ஒழுகி இன்புறுத்துவான். (அவள் பெண்மை நிரம்பாதபொழுது கொண்டவன் அவ்வாறு செய்யான்.)

குறிப்புரை :

மோன சமாதி அல்லாதவற்றை மோன சமாதியாகச் சொல்லிச் சொற்சாலம் செய்யும் நூல்களும், உரைகளும் உள. ஆயினும் அவற்றின்வழி நின்றோர் அவற்றால் ஏமாற்றமே எய்தி, வாழ்நாள் வீணாளாயினமை அறிந்து இரங்குவர்.
``இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்டு
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே``*
என்னும் அப்பர் திருமொழியே இதற்குப் போதிய சான்று.
சிவன் எல்லா உயிர்கட்கும் உய்யும் நெறி காட்டி உய்விப்பவனே யாயினும் பக்குவம் எய்திய உயிர்கட்கே அவன் முன் வந்து அதனைச் செய்வான். (பக்குவம் எய்தாத உயிர்கட்கு அவன் அதனைச் செய்யான்.)
இவ்விரு பொருள்களையே இம்மந்திரம் முன், பின் இரு பகுதிகளாலும் உணர்த்தி நிற்றலின், இது பிறிதுமொழிதல் அணியைப் பெற்றதாம்.
பேதை, பெதுமைப் பருவத்திலேயும் மகளிரை மணம் செய்து கொடுத்தல் அக்காலத்து வழக்காதலைப் பற்றி இதன் பிற்பகுதியிற் போந்த உவமை வந்தது. `மடவியள் ஆனாலே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அறிதல், அறிந்து ஒழுகுதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. இதன் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சற்குரவன் கிடையாமை பற்றிப் பொறுமையிழந்து, அசற்குரவரை அடைந்து அல்லல் உறல் கூடாது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
``இரைதேர் கொக்கொத்து இரவு பகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்``
எனவும்,
``நல்கா தொழியான் நமக்கென்று உன்
நாமம் பரவி, நயனம் நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா,
வணங்கா, மனத்தால் நினைந் துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவி``*
எனவும் அருளிச் செய்தவாறு `அடங்கியிருத்தல் வேண்டும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 13

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை :

சிவன் நடுத் தெருவிலே வெளிப்படையாகத்தான் இருக்கின்றான். (ஆயினும், இருள் மூடியிருப்பதால் அவனைக் காண இயலவில்லை.) பின்பு அந்த நடுத் தெருவின் முதலில் எரிகின்ற ஒரு விளக்கை எனது அறிவுக் கூர்மையாற் கண்டு பற்றிச் சென்றேன்; சிவனைக் கண்டு கொண்டேன். அப்பொழுது மேற்குறித்த அந்த விளக் -கின்றிச் செய்யும் சந்தியானுட்டானங்களும், அவ்வனுட்டானத்தில் செய்யப்படும் தியானங்களும் என்னையறியாமலேயே நீங்கிவிட்டன.

குறிப்புரை :

நடுவுத் தெரு, ஆறு ஆதாரங்களுள் மேலதான ஆஞ்ஞை. அங்குச் சிவன் தியானப் பொருளாய் விளங்கியே நிற்றலால், ``நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே`` என்றார்.
யோகக் காட்சியைத் தருவது குண்டலினி சத்தியே. ஆகவே, குண்டலினி யோகத்தை மேற்கொள்ளாத நிலையை இருள் நிலையாக வைத்து, குண்டலினியை, ``சோதி`` என்கின்றவர், அது மூலாதாரத்தில் உள்ளபொழுது எழாது துயில் கொள்வதாய், மூலாக்கினியால் எழுப்பப்பட்ட பொழுது எழுந்து சுவாதிட்டானத்தைக் கடந்து, மணி பூரகத்தை அடைந்த பொழுதே விளக்கத்தைத் தருதலால் அவ் விடத்தில் விளங்குவதாக, ``உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியை`` என்றார். சோதி, இங்கு விளக்கு. அந்த விளக்குப் புறத்தே உள்ள கையால் பற்றப்பட்டது. அகத்தே அறிவால் பற்றப்படுவது ஆதலின், ``புந்தியினுள்ளே புணர்ந்து`` என்றும், விளக்குக் கிடைத்தலின் வெளியில் உள்ள பொருளை அடைதற்குத் தடையில்லாமை பற்றி, ``கொண்டேன்`` என்றார். கொள்ளுதல், கைப்பற்றுதல்.
யோகத் தியான சமாதிகளில் இருப்பவர்பால் கிரியானுட் டானங்களும், தியானங்களும் நிகழாதுபோதல் இயல்பேயன்றோ? அதனையே, ``சத்தி சமாதிகள் தாமே ஒழிந்தன`` என்றார். இதனுள் ``நான் ஒழிந்தேன்`` என்னாது, ``தாமே ஒழிந்தன`` என அருளிச் செய்ததை ஊன்றி உணர்தல் வேண்டும். யோக சித்தர்களும், ``நட்ட கல்லை தெய்வம் என்று`` என்னும் பாடல்போன்ற பல பாடல்களில் கிரியைகளை விலக்குதல் போலக் கூறியனயாவும், `கிரியையோடே நில்லாது யோகத்திற் செல்க` என அறிவுறுத்தியனவேயாம். அஃது அறியாதார், `கிரியைகள் பயன் இல் செயல்கள்` எனச் சித்தர்கள் கடிந்தொத்தினார்கள்` எனத்தாம் அறிந்தவாறே கூறித் தாமும் பயனை இழந்து, பிறரையும், இழப்பிப்பர்.
இதனால், `யோகத்தில் குண்டலினி யோகம் சிவனை விளக்கி நிற்கும், என்பது கூறப்பட்டது. அது `பிரணவ யோகம்` அல்லது `பிராசாத யோகம்` ஆம். ஹடயோகம் அதனைச் செய்யாது` என்பது கருத்து. எனவே, மோன சமாதிக்கு வாயிலாகிய யோகம் குண்டலினி யோகம்` என்னும் கருத்தினால் இம்மந்திரம் இவ்வதிகாரத்ததாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :

விதறு படுதல் - சோர்வு உண்டாதல். `வேறு ஆய்ந்து, இருந்து ஆய்ந்து` எனத் தனித்தனி இயையும். வேறு - முன் மந்திரத்திற்கூறிய அதற்கு வேறாக. இருந்து - மனம் ஒதுங்கியிருந்து. பதறு படுதல் - பதற்றம் உண்டாதல். ``பதறு படாதே`` என்றதும் ``இருந்து`` என்றதை வலியுறுத்தியதேயாம். மறை - மந்திரம். ``பழ மறை`` என்றது, `முதல் மந்திரம்` என்றபடி. அது திருவைந்தெழுத்தே.

குறிப்புரை :

``ஆதி மந்திரம் அஞ்செழுத்து``8
எனச் சேக்கிழாரும் அருளிச்செய்தார். பார்த்தல் - பொருளை ஊன்றி உணர்தல். பார்த்து - பார்த்தலால். `பார்த்தலால், கடந்து ஒடுங்கு கின்றேன்` என்க. ``பாழ்`` என்பது, `பயனற்றது` என்னும் பொருட்டாய், உலகியலைக் குறித்தது. கதறுதல் - துன்புறுதல் கூடாததனைக் கூடுவதுபோல் மனத்தாற் கருதிக்கொள்ளும் இன்பம் இல்லாத உலகியலை, `இதில் இன்பம் விளையும், விளையும்` என்று கருதி, விடாது பற்றி நிற்றல் பற்றி, அதனை, ``அந்தக் கற்பனை`` எனச் சுட்டிக் கூறினார். உலகியலை உதறிய பாழாவது, மாயையின் தொடர்பு சிறிதும் திருவருள் வியாபகம். `அதில் நான் முன்பு போல இன்றி ஒடுங்குகின்றேன்` என்க.
இதனால், குண்டலி யோகத்தால் பக்குவம் எய்திய உணர்வினால் திருவைந்தெழுத்தின் பொருளை உணர உணரத் திருவருள் வியாபகத்தில் ஒடுங்கியிருக்கும் மோன சமாதி கூடும்` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. `மேற் கூறியது யோக நிலை` எனவும், `இது ஞான நிலை` எனவும் உணர்க.

பண் :

பாடல் எண் : 15

வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடா அமுதுற நாடார் அமுதமே.

பொழிப்புரை :

தேவர்கள் இருவினைகளும் நல்வினையால் விளைந்த இன்பத்திலே மூழ்கிக் கிடத்தலால் அவர்கள் சிவனது திருவடியின்பத்தை நாடுதல் இல்லை. அவ்வாறே பெருமை நிறைந்த உள்ளக் கமலத்தில் ஒளிரும் ஒளி விளக்காகிய சிவனை அடைந்து, அவன் அருளால் தானே விளையும் அமுதத்தை உண்ணவும் அவர்கள் விரும்புதல் இல்லை. (ஆயினும் தாங்கள் அமுதத்தை உண்டு வாழ்வதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.) அவர்கள் உண்ணும் அமுதம் அமுதமாகமோ? (ஆகாது.)

குறிப்புரை :

`அமிர்தம்` என்பதற்கு `மிருத்யுவை (மரணத்தை) ஒழிப்பது` என்பது பொருள். அதனால் அமிர்தத்தை உண்பவர்கள் `அமரர்` (`மரித்தல் இல்லாதவர்`) எனப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் என்றுமே இறப்பதில்லையோ? தங்கள் நல்வினை முடிந்த வுடன் மாறி, வேறு பிறப்பை அடைவர். ஆதலால், அவர்கள் உண்ணும் உணவை `அமிர்தம்` என்றலும், அதனை உண்ணும் அவர்களை `அமரர்` என்றலும் உபசார வார்த்தைகளேயன்றி உண்மையாவன அல்ல. இதனை,

``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமனே யானபோல்``3
என்னும் கந்த புராணச் செய்யுளாலும் அறியலாம். இக்கருத்து பற்றியே` `தேவர் உண்ணும் அமுதம் அமுதமோ` என்றார். ``அமுதமே`` என்னும் ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாகிய வினாப்பொருட்டு. `அவர் உண்ணும் அமுதம்` என்னும் இசையும்.
சிவனை அடைந்தோரே இறப்பின் நீங்கினோர் ஆவர் ஆதலால், அவனது திருவடியின்பமே உண்மை அமுதமாகும். அஃது உள்ளத்துள்ளே இயல்பாக என்றும் உள்ளதேயாதல் பற்றி அதனை ``நாடா (தேட வேண்டாத) என்றார். `சென்று உற நாடார்` என இயைக்க. உறுதல் - பொருந்துதல். சேடு - பெருமை.
கற்பக மலர்க்கு வாட்டம் இன்மையால், ``வாடா மலர் புனை வானவர்`` என்றார். `இத்தகைய மலரைச் சூடுதல் பற்றியும் அவர்க்கு ஒரு செருக்கு உள்ளது` என்பதைக் குறித்தபடி. ``சேவடி`` என்பதை, இரண்டாம் அடியின் முதற்கண் வைத்து, `வானவர், அறப் பயனாம் இன்பம் நாள்தோறும் உறுதலால் சேவடி நாடார்` என்க. ``நெறி`` என்றது முன்னர் அதனின் நின்ற ஒழுக்கத்தையும், பின்பு அதன் பயனையும் குறித்து நின்றது. `அறப் பயன் இன்பம் சுவர்க்க இன்பமே` என்பதும், `அது நிலையற்றதாகலின் இன்பம் ஆகாது என்பதும்` கூறியவாறு. ``கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே``1 என்றார் ஆளுடைய பிள்ளையார்,
``பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``2
என்பது சிவஞான போதம், `சுவர்க்க இன்ப மயக்கத்தால் தேவர் சிவனை நாடுதல் இல்லை` என்றருளிச்செய்த இக்கருத்தே, பற்றி
``தேவர் கனாவிலும் கண்டறியாச்செம்மலர்ப் பாதங்கள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார்.
தேவர்களது செருக்கைக் கூறிய இதனால், மக்கள் செருக்குச் சிவனை நாட ஒட்டாகையை உணர்த்தி, `உலகியல் மயக்கம் அற்றோர்க்கே மோன சமாதி கூடும்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

பொழிப்புரை :

காமக் கலவிக்கு உரியராய் அமைந்த இருவர் (ஒருவனும் ஒருத்தியும்) அது பற்றித் தம்முட் குறிப்புச் சொற்களால் உரையாடுதலை எதிர்பாராத வகையில் கேள்வியளவிற் கேட்டாலும் அவரோடு ஒத்த பருவத்தினர்க்கு அடங்கியிருந்த காமக்குறிப்புச் சடக்கென அவர் உள்ளத்தில் எழுந்து அவரைத் தன் வயப்படுத்துதல் போல, மோன சமாதிக்கு உரியராய் உலகரோடு சேராது தனித் திருக்கும் ஞானியரை எதிர்பாராத வகையில் கண்ணாற் கண்டாலும் அவரோடு ஒத்த ஞானியர்க்கு, அடங்கியிருந்த மோன சமாதி அப்பொழுதே சடக்கெனமிக்கெழுந்து, அவரைத் தன்வயப் படுத்தும்.

குறிப்புரை :

``அதுக்கு`` `அதற்கு` என்பதன் மரூஉ. பின்வரும் ``காமம்`` என்பதைச் சுட்டுகின்ற அது என்னும் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்னர் வந்தது. `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. என்ற - என்று அமைந்த. அமர்தல் - விரும்புதல். ``கேட்டும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. உவமையில் வந்த இவ் வும்மைக்கு ஏற்புடைபபொருளிலும் `காணவும்` என உம்மை விரித் துரைக்க. சதுர் - பொதுக்கு, என்பது விரைவுக் குறிப்பாய நாட்டு வழக்கு இடைச்சொல். இது, `பொசுக்கு` என்றும் வழங்கும். பெருமை அஃது இங்கு அதிகாரத்தால் மோன சமாதியைக் குறித்தது. `மதுக் கொன்றைத் தாரானது வளம்` என ஆறாவது விரிக்க. அவ்வளமாவது, அவனது ஆனந்தம். அந்த ஆனந்த நிலையே மோன சமாதியாதலை அறிக. அன்றே - அப்பொழுதே` `காணினும் அக்காட்சி வளம் தரும்` என்க.
இதனால், `மோன சமாதி எய்தினார், உலகியலின் தாக்குதலால் அஃது இழக்கப்படாமைப் பொருட்டு அதில் உறைத்து நின்றாரொடு கூடியிருக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

பொழிப்புரை :

நான் மோன சமாதியில் மூழ்கிவிட்டபொழுது, எனக்கு அந்த நிலையை வருவித்த குருவும் தோன்றவில்லை. அவர் அளித்தருளிய செல்வமாகிய ஞானமும் தோன்றவில்லை. அவரால் தூய்மை செய்யப்பட்ட உடம்பும் தோன்றவில்லை. அந்த உடம்பை ஆட்டிப் படைத்த உயிரும் தோன்றவில்லை. அந்த உடம்போடு கூடி நான் இருந்த இடமும் தோன்றவில்லை. உடம்பிற்கு உள்ளும், வெளியுமாய் அலைந்து கொண்டிருந்த மனமும் தோன்றவில்லை. அந்த மனத்திற்குமேல் அதன் செயலை ஆராய்ந்து நின்ற அகங்காரம் புத்தி சித்தங்களும் தோன்றவில்லை. கடைசியாக, `நான், நான்` என்று என்னால் `சொல்லப்பட்டும் உணரப்பட்டும் வந்த அந்த ஆன்மாவும் தோன்றவில்லை. இவையனைத்தும் தோன்றாமல் எப்படி எங்கே மறைந்துவிட்டன என்பது தனக்குத் தெரியவில்லை.

குறிப்புரை :

`அழிந்தன` என்றது, புலனாகாமை பற்றியேயாம். ஏனெனில், அந்தச் சமாதி நிலையினின்றும் பிரிந்த வழி இவ்வாறு சொல்லும் சொற்கள் நிகழ்தலானும், அழிந்தவை மீள இவ்வாறு நின்று சொல் நிகழ்த்தா ஆகலானும் என்க.
`இவையெல்லாம் முன்னர்த் தோன்றினமை வெறும் கற்பனையே யாகலின், கற்பனை கழியவே அவையும் தோன்றுதல் இலவாயின. ஆகவே, ``அழிந்தன`` என்றது `அழிந்தன` என்று கூறியதேயாம்` என்பாரும் உளர்.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
எனவும்,
``அண்டங்கள் ஏழும் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளே உளஒளி``
எனவும், மற்றும் இன்னோரன்னவாக மேலெல்லாம் கூறிவந்த நாயனார்க்கும் அது கருத்தாகாமை யறிக.
``உயிர்`` என்றது, உடம்பை இயக்கிநிற்கும் நிலையை. ``வான்`` என்பது இடத்தைக் குறித்தது. மனத்தைக் கூறவே, இனம் பற்றி ஏனை அந்தக் கரணங்களும் கொள்ளப்பட்டன. ``நான்`` என்றது ஆன்மாத் தன்னைப் பதி பாசங்களின் வேறாக அறிந்து நின்ற நிலையை. `நான்` என்பது அழிந்தபின் பிற அழிந்தவாற்றை அந்த `நான்` எனப்பட்டது எங்ஙனம் அறிதல் கூடும்? கூடாமையின், ``நான் அறியேன்`` என்றார். ``அழிந்து`` என்னும் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. உம்மைகள் எண்ணும்மைகள்.
இதனால், `மோன சமாதி எய்தினோர் மது உண்ட வண்டு, அந்த மது மயக்கத்திலே தன்னையும் அறியாது கிடத்தல்போல சிவா னந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள்` என்பது கூறப்பட்டது.
``ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்,
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ``8
என்னும் திருவாசகத்தை இங்கு ஒப்பு நோக்குக.

பண் :

பாடல் எண் : 18

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.

பொழிப்புரை :

(`இம்மந்திரம் அதிகப்படியாக உள்ளது` எனப் பதிப்புக்களில் குறிக்கப்பட்டபோதிலும் இங்கு இருத்தற்குரியதே.)
மோன சமாதியை அடைந்தோர் பின்பு உலகத்தில் ஒன்றோ டொன்று மாறுபட்ட செயல்களைச் செய்தபோதிலும் திருவருள் உணர்வு சலியாது நிற்றலால் சிவஞானம் திரிபெய்தல் இன்மையால் சிவானந்தா -னுபவமும் குறையாது. அவர்கட்கு இனிப் பிறப்பும் இறப்பும் இல்லை இஃதே நிருவிகற்ப சமாதியாகிய நிட்டை நிலையாம்.

குறிப்புரை :

``சற்று`` என்பதன்பின் `சற்றும்` என உம்மை விரித்து, ``பேராமல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தங்குதலால் பிறப்பற்றது` என்க. ஒளிர்தல், மாசற்று விளங்குதல். ``நிட்டை`` என்பதன்பின், `ஆம்` என்பது வருவித்து முடிக்க.
இதனால், மோன சமாதியை முற்றப்பெற்று நின்றோர் உலகியல் தாக்குதலால் சலித்தல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

பொழிப்புரை :

`கேவலம் சகலம்` என்னும் இரு நிலைகளையும் கடந்து சுத்த நிலையை எய்தி, அதில் மேற்பொருள் மேற்பொருளே யாயும், கீழ்ப்பொருள் கீழ்ப்பொருளேயாயும் விளங்க, அந்த மேற் பொருளுக்குள்ளே அடங்கியதனால், இடையிட்ட முன் மந்திரத்திற் கூறியபடி அனைத்தும் திருவருளால், தோன்றாது மறைவதாகிய சிவனது திருவடி நிழலில், சிறிதும் நகர்ந்து அப்பாற் செல்லாத கல்போன்ற உணர்வை நான் இப்பொழுது பொருந்தி நிற்கின்றேன்.

குறிப்புரை :

கேவல நிலையில் யாதும் தோன்றிற்றிலது. சகல நிலையில் மேற்பொருள் கீழ்ப்பொருளாயும், கீழ்ப்பொருள், மேற்பொருளாயும் மாறித்தோன்றின. அவ்விரண்டும் குற்றம் ஆகலின், `சுத்தத்தில் அவை உள்ளவாறு விளங்கின` என்பார், ``பொருளிற் பொருளாய்ப் பொருந்த உள்ளாகி என்றார். ``ஆகி`` என்றது, ஆகினமையால்` எனக் காரணப்பொருட்டாய் நின்றது. ``அத்தன் அடி`` என்பது திருவருள் வியாபகமே. ``அடிக்கு`` என்பது, ஏழாவதன் பொருளில் நான்காவது வந்த உருபு மயக்கம். ``மனம்`` என்றது உணர்வை. சிறிதும் சலியாமை பற்றி, `கல்போன்றது` என்றார். அவ்வாறு நிற்றலே உறைத்து நிற்றலாம்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய சலியா நிலை உவமை முகத்தால் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

பொழிப்புரை :

நான் வெளியே எங்கெங்கு ஓடி ஓடி அலைந்ததை விட்டு, எங்கும் செல்லாது என்னளவுக்கு நின்று, என்னிடத்திலே என் அறிவை ஒன்ற வைத்து என்னுள் தானே நோக்கினேன். அப்பொழுது பரம்பொருள் காட்சிப்பட்டு பின் அதனை அடைந்து இன்புறும் வழியும் தோன்றிற்று. அவ்வழியாவது என் அறிவுக்கறிவாய் இருந்து பெத்தம், முத்தி இரண்டிலும் அறிவித்து வரும் திருவருளை அறிவாற் பற்றுதல். ஆயினும் இவைகளை நான் உணர்தற்கு எனக்குப் பல ஊழி சென்று விட்டன.

குறிப்புரை :

`சிவம்` என்பது, இங்கு, `பேரின்பம்` எனப்பொருள் தந்தது. `கதி, மார்க்கம், வழி` என்பன ஒரு பொருட் சொற்கள். `பேரின்ப வழி` என முன்னர்ப் பொதுவாகச் சுட்டிப் பின்னர் அதனை ``உணர்வு`` என விளக்கியருளினார். உணர்வு - உணர்வுக்கு உணர்வு; திருவருள். ``தம் உணர்வின் தமி அருள்``l என்றார் சிவஞான போதத்திலும், `திருவருளின் இடையறா உதவியை அறிந்து, அதன்கண் இடையறாப் பேரன்பு செய்தலே பேரின்ப வழி` என்பதை, ``அயரா அன்பின் அரன்கழ் செலுமே``9என்னும் சிவஞான போதத்தாலும் அறிக.
``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தோடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்``3
என அப்பர் பெருமானும் தாம் சிவனைக் கண்டுகொண்ட முறையை இங்ஙனமே அருளிச் செய்தவாறு அறிக.
``பல்லூழி காலம் பயின்றானை அர்ச்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``
என்ப ஆகலான் இந்நிலை வாய்த்தற்கு ஒரு பிறப்பில் செய்யும் தவம் போதாது; பல பிறப்புக்களில் தவம் செய்தல் வேண்டும் ஆகலின், ``ஒன்றி நின்றேன் பல ஊழிகண்டேனே`` என்று அருளியதன் உண்மையை உணர்க. இதில் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், மோன சமாதியை அடையும் வழியும், அதனை உணர்தல் பற்றல்களின் அருமையும் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தான்வரை வற்றபின் ஆரை வரைவது
தான்அவன் ஆனபின் ஆரை நினைவது
காமனை வென்றகண் ஆரை உகப்பது
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.

பொழிப்புரை :

தூய்மையாகிய சுத்தாவத்தையைப் பயக்கும் முத்தி பஞ்சாக்கரக் கணிப்பினால் ஓர் ஆன்மா தனது ஏகதேச உணர்வாகிய சுட்டுணர்வு கழியப்பெற்ற பின் அஃது யாரை வரைந்து சுட்டியுணரப் போகின்றது? இனி அது தான் சிவமாகி விட்டபின்பு யாரைத் தியானப் பொருளாக வரைந்து கொண்டு தியானிக்கும்? அவாவின் வேரையே அஃது அறுத்து விட்டபின்பு அஃது யாரை விரும்பும்? மாணவர்களே, நீங்களே சொல்லுங்கள்.

குறிப்புரை :

`இவற்றிற்கெல்லாம் சிறிதும் இடம் இல்லை` என்பது கருத்து. வினாக்கள் யாவும் இன்மையைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. `உலகத்தை உணர்வது சுட்டுணர்வினாலும், விருப்பு, வெறுப்புக்கள் தோன்றுதல் அச்சுடணர் வினை பயனாலும் ஆகலின் சுட்டுணர்வு நீங்கவே அவையெல்லாம் இயைபின்றி நீங்கும்` என்பதும் கருத்து. காமன் - மன்மதன். அவன் அவாவின் வேருக்கு ஓர் உருவகம். `அவன் சிவனது நெற்றிக்கண் முன் நில்லான் ஆகலின், சிவ ஞானியர் கண்முன்னும் நில்லான்` என்னும் நயம் தோன்றச் சிவ ஞானியரது அறிவை, காமனை வென்ற கண்` என்றார். `சுட்டுணர்வு நீங்கவே, சிவத்தையும் ஆன்மாத் தன்னின் வேறாக வைத்துச் சுட்டியுணர்தல் இன்றித் தன்னுள்ளே அறிவுக்கறிவாக அநந்நியமாய் நின்று உணரும்` என்பது, ``ஆரை`` நினைவது என்பதனால் குறிக்கப் பட்டது. ஆன்மாச் செயற்கையாய் எய்திய சுட்டுணர்வு நீங்குதல் பாச நீக்கத்தாலும், இயற்கையாகிய வியாபக உணர்வைப் பெறுதல் சிவத்தைத் தலைப்படுதலாலும் ஆதல் பற்றி, வியாபக உணர்வு எய்தினமையை, ``தான் அவன் ஆதல்`` என்றார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரமாகிய வரையுரை சீவனைச் சிவமாக்கியருளும் மாட்சிமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள்
கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போலச் சிந்தைதெளி வார்க்குப்
புரையற் றிருந்தான் புரிசடை யோனே.

பொழிப்புரை :

`கடலுக்கு கரை யில்லை` என்பது தெளிவு. (`கரை` எனப்படுவன எல்லாம் தீவுகளே) அங்ஙனமாகவும் அதற்குக் கரை யிருப்பதாகக் கருதிக்கொண்டு, அந்தக் கரையைச் சென்று காண முயலுதல் அறிவுடைமையாகுமோ? ஆகாது. அதுபோலச் சிவம் வியாபகப் பொருள்; சொல்லிற்குள்ளும் அடங்குவதன்று. அவ்வா றிருக்கவும், மாணவர்களே, நீங்கள், `சிவத்தை யாம் சொல்லாற் சொல்லி உணர்த்திவிடுவோம்` என்று உணர்த்த முயல்வீர்களேயானால், ஊமன் தனது கருத்தைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்த முயலுங்கால் அடையும் இடர்ப்பாடுகளைத் தான் அடைவீர்கள் அடைந்தாலும் உங்கள் கருத்து நிறைவுறாது. உண்மையென்ன வெனில், `அலை யில்லாத கடல் ஒன்று இருக்குமேயானால் அதனோடு ஒத்துச் சிறிதும் சலனம் அற்றுத் தெளிந்த விரிந்த அறிவினை யுடையாரது அறிவில் சிவன் வரம்பில் பொருளாய் ஒளிர்கின்றான்` என்பதே.

குறிப்புரை :

`பஞ்சாக்கரத்தை அறியும் முறையில் அறிந்து, ஓதும் முறையில் ஓதினால், அஃது இந்தத் தெளிந்த அறிவைத் தந்துவிடும்` என்பது கருத்து. முன்னிரண்டடிகளில் வேற்றுப் பொருள் வைப்பணி வந்தது. ``நீர்`` என்றது கரையற்ற நீரை ஆதலால், அது கடல் நீரேயாயிற்று. ``திரையற்ற நீர்போல்`` என்றது இல்பொருளுவமை. புரை - சிற்றிடம் அஃது` `ஏகதேசம்` ஒரு புடை) என்பதைக் குறித்தது. ``உரையற்ற தொன்று`` என்றதனால், முத்தி பஞ்சாக்கரத்தையும் சுத்தமானதம் ஆக அறிவாற் கணித்தலே இங்கு விதிக்கப்பட்டதாம்.
இதனால், முத்தி பஞ்சாக்கரத்தை அறியும் முறை ஓதும் முறைகளின் மாட்சிமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மனமாயை மாயைஇம் மாயை மயக்க
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந் திருப்பது தத்துவந் தானே.

பொழிப்புரை :

மாயையின் உண்மை யாதாயினும் பொதுவாக `மாயை, மாயை` எனச் சொல்லிப் பலரும் முறை செய்வன எல்லாம் மாயா காரியங்களுள் ஒன்றாகிய மனத்தைக் குறித்தேயாம். (``மனம் எனவும் ஒரு மாயை எங்கேயிருந்து வரும்`` என்றார் தாயுமான வரும்.) இந்த மனமாகிய மாயை, `பிறரை மயக்குவது` என்பது இல்லாமல் அது மயங்கும்படி செய்க. அஃதாவது, `அதன் கொட்டம் அடங்கும்படி செய்க` என்பதாம். மனம் அடங்கிவிட்டால், ஆன்மாவை அலைப்பது வேறு எதுவும் இல்லை. ஆகவே, அப்பால் அடங்க வேண்டுவதாகவும் எதுவும் இல்லை. மனத்தின் வழிப்பட்டு உள்ளத்தில் தோன்றியவற்றைத் தோன்றியவாறே பலபடப் பேசும் பேச்சுக்களும் அற்றொழியும். அப்பால் புறப்பொருள்களைத் துருவித் துருவி ஆராய்வதை விடுத்து, ``நான் ஆர், என் உள்ளம் ஆர், ஞானங்கள் ஆர்``3 என்பன போல உள்நோக்கி ஆன்மாத் தன்னையும், தலைவனையும் ஆராய்ந்து உணர்வதே மெய்ப் பொருளைக் கூட்டுவிக்கும் மெய்யுணர்வாகும்.

குறிப்புரை :

மனமாயை, `மனமாகிய மாயை` என இருபெயர் ஒட்டு. இதில் ``மாயை`` என்பது அதன் காரியத்தைக் குறித்தது. `இம்மாயையை` என இரண்டாவது விரிக்க. `மயக்க` என்பது அகர ஈற்று வியங்கோள். பின்வந்த ``மன மாயை``, `இது` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. தான், அசை. ``வேண்டா`` என்பது. வேண்டப் படாதாய் அற்றொழிதலைக் குறித்தது. `தன்னை` என்பது இடைக் குறைந்து, `தனை` என நின்றது. தன்னை ஆய்தல் கூறவே, அதனோடு உடன் நிகழ்வதாகிய தலைவனை ஆய்தலும் கொள்ளப்பட்டது. பிறவற்றை ஆராயாது, தன்னையும், தலைவனையும் ஆராய்தலை மட்டுமே கூறினமையாயினும், இந்த ஆராய்ச்சி அருள்வழி நிகழ்வதே யாகலானும் `திருவைந்தெழுத்தில் பாச எழுத்துக்கள் இரண்டை நீக்கி ஏனை மூன்றெழுத்தையே கொண்டு உணர்க` என மறைபொருளாக உணர்த்தியதாயிற்று. `முத்தி பஞ்சாக்கரமாவது இதுவே` என்பது, மேல்` ஐந்தெழுத்து` அதிகாரத்தில் சொல்லப்பட்டது. `இதனைக் கணித்தல்` என்பதும் சுத்தமானதாக அறிவாற் கணித்தலேயாதல், முன் மந்திரத்தில் ``திரையற்ற நீர்போல்`` என உவமையாற் கூறப்பட்டது. இங்கு ``மன மாயைதான் மாய`` என்றதனால் நேரே கூறப்பட்டது.
இதனால், `பஞ்சாக்கரத்தை முத்தி பஞ்சாக்கரமாகக் கொண்டு, அதனையும் `வாசகம், உபாஞ்சு, மானதம்` முறைகளுக்கு அப்பாற்பட்ட சுத்த மானத முறையிலே கணிப்பின் முத்திப் பயன் உளதாகும்` என அதன் மாட்சிமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற்று` அதன் பயனாகச் சிவத்தில் புறம் போகாது, அன்பினால் தம்மை ஆழ்த்திவைத்திருப்பவர்கட்குப் புறத்தோற்றம் உலகத்தாரது தோற்றத்தோரடு ஒத்துத் தோன்றினும், உண்மையில் அவை இல்லையாம்.

குறிப்புரை :

மலம், ஆணவம், அஃது இங்கு ஆகுபெயராய் `யான், எனது` என்னும் செருக்கினைக் குறித்தது. உலகத்தார்போல இவர்களும், `யான் செய்தேன்; பிறர் செய்தார்` என வழங்கற்பாடு பற்றிக் கூறினாராயினும் அவர் உணர்வு, `எல்லாம் சிவன் செய்தது` என்றே உணர்ந்திருக்கும். மாசு - குற்றம். அஃது அவர் செய்த பிறவியைத் தருதலின் குற்றமேயாதல் அறிக. பாம்பு கடித்து இறந்த வணிகன் ஒருவனையும், அப்பூதியடிகள் மகனையும் உயிர்பெற்றெழச் செய்தும், முதலை வாயில் அகப்பட்டு இறந்த அந்தணச் சிறுவனை அவனது வளர்ச்சியோடு மீட்டும் வணிக்கன்னி யொருத்தி, அப்பூதி யடிகளும், அவர்தம் துணைவியாரும், அந்தணப் பெற்றோரும் ஆகியோர்ககு யாதொரு கைம்மாறும் வேண்டாமல் பெருநலம் தந்து உதவிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகி. மூவர் முதலிகட்கும் அவற்றால் யாதொரு புண்ணியமும் விளையாமையையும், தாதையைத் தாள் அற வீசிய சண்டேசரருக்கு அதனால் யாதொரு பாவமும் விளையாமையையும் அறிக. இவர்கட்குப் புண்ணியமும், பாவமும் விளைந்திருப்பின் இந்திராதி தேவர்கள் வாழும் சுவர்க்கத்திலும், பாதகன் சென்றடையும் நரகத்திலும் சென்றிருத்தல் வேண்டும். அவை அவர்க்கு இல்லாது போயினமை வெளிப்படை.
மானமாவது, தம்மைப் பிறர் இழிவு படுத்துதலைப் பொறுக்க மாட்டாமை, அப்பரைச் சமணர்கள்,
``தவ்வை சைவத்து நிற்றலின், தருமசேனரும் தாம் பொய்வகுத்ததோர் சூலைதீர்ந்திலதெனப் போயினார்``
என அரசனிடத்திற் கட்டிக் கூறி,
``தலைநெறியாகிய சமயந் தன்னைஅழித்து; உன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பின் நெறியழித்த பொறியிலி`` *
எனப் பலர்முன் இகழ்ந்தபோதும் வாளா இருந்ததை எண்ணுக.
அபிமானம் - பற்று. அஃதாவது, உடம்பும், தாய் தந்தையார், மனைவி, பிறர் ஆகிய சுற்றமும், பொன், பொருள், மக்கள், மாட மாளிகை, காணி முதலிய செல்வமும் ஆகியவற்றைத் துறக்க விரும் பாமல், அவை தாமே நீங்கும் நிலைமை எய்தியவழி உயிர் போவது போலக் கையற வெய்துதல். இந்நிலை நாயன்மாரிடத்து இல்லாமை தெளிவு.
குலம் இல்லாமை திருநீல நக்க நாயனார் திருநீல கண்டப் பாணருக்கு அவர் தம் துணைவியாரோடும் இரவுப் பொழுதைக் கழிக்க வேள்வி அறையை அளித்ததில் இனிது விளங்கிற்று.
``கொள்ளும் குணங்களும் இல்லை`` என்றதனால், `தள்ளும் குற்றங்களும் இல்லை` என்பது போந்தது. அவை, `நியமம்` என யோக உறுப்புக்களுள் ஒன்றாக வைத்துச் சொல்லப்படும் விதி முறைகள். குற்றங்கள், அவற்றிற்கு எதிரவாயுள்ள விலக்குமுறைகள். அவற்றை விலக்கியொழுகல், `இயமம்` எனப்படும். மோன சமாதியில் நிற்போர் உலகை மறந்திருத்தலால், `இவைகள் அவர்பால் கட்டாயமாக நிகழும்` என்பது இல்லை.
நலமாவது இன்பம். இதனானே தீங்கும் பெறப்பட்டது. `நலத்தில் விரும்பும், தீங்கில் வெறுப்பும் அவர்பால் நிகழா` என்பதாம். ``ஓடும்`` செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்`` என அருளிச் செய்தமை காண்க. ``நலத்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்``* என்றதனையும் நோக்குக.
`இவற்றையெல்லாம் இவர்கள் தாமே வலிந்து நீங்காது, உறங்கினோன் கையிலிருந்த பொருள் அவனையறியாது தானே வீழ்ந்துவிடுதல்போல, மோன சமாதியை அடைந்த இவர்களிடத்தி லிருந்து தாமே நீங்குவன` என்பதை,
``உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவும்
தானே தவிரா தானால், புரியாது
ஒழித்திடில் நிரயத் தழுந்துதல் திடமே`` *
என்னும் சங்கற்ப நிராகரணத்தால் அறிக.
``ஞாலமதில் ஞான நிட்டை யுடையோ ருக்கு
நன்மையோடு தீமையிலை; நாடுவதொன் றில்லை;
சீலமிலை; தவமில்லை; விரதமொடாச் சிரமச்
செயலில்லை; தியானமிலை; சித்தமல மில்லை;
கோலமிலை; புலனில்லை; கரண மில்லை;
குணமில்லை; குறியில்லை; குலமுமில்லை;
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்
பாடலினோ டாடல்இவை பயின்றிடினும் பயில்வர்``9
என்ற சிவஞான சித்திக்கும் இதுவே கருத்தென்க.
ஞானத்தினாலே நந்தியைப் பலம் மன்னி அன்பில் பதித்து வைப்பார்க்கு` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. பலம் - பயன். `பலமாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சிவனை அனுபவமாக அணைந்தோர், தோற்றத்தில் உலகர்போலவே காணப்படினும் அவரது நிலை முற்றிலும் வேறாதல் கூறப்பட்டது. இத்தன்மை யுடையாரே `சீவன் முத்தர்` எனப்படுவர்.

பண் :

பாடல் எண் : 2

ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.

பொழிப்புரை :

நல்லதொரு வளமான சார்பாய் உள்ள சீவனை நான் சார்ந்துவிட்டேன். அதனால், முன்பு எனக்குச் சார்பு போலத் தோன்றி என்னைப் பிறவிக் கடலிலே அலைய வைத்த பாசங்களினின்றும் நீங்கிவிட்டேன். இப்பொழுது நான் அப்பாசங்கட்கு மேலே போய்விட்டேன். `பரம்பொருள் வேறு நான்வேறு` என்பதன்றி, `ஒன்றே` எனப்படும் நிலையை `எய்தினேன்? ஆகவே, இறப்பதும், பின் பிறப்பதும் இனி எனக்குத் தவிர்க்க முடியாத சூழல் இல்லை.

குறிப்புரை :

ஈற்றடியை முதற்கண் கூட்டி உரைக்க. ``கழிந்தேன்`` என்பது அவற்றின் நீங்கி உயர்ந்தேன்` எனப் பொருள் தந்தது. `ஒன்று ஆனேன`` என்பது `ஒன்று எனச் சொல்லப்படும் நிலையினன் ஆயினேன்` என்றபடி.
ஆக்கம் - பிறப்பு. தம் குறிப்பின்றியும் வருவனவற்றைக் குறிப்பொடு கூடி வருவன போல, ``வேண்டேன்`` எனக் கூறியது இலக்கணை வழக்கு.
இதனால், மோன சமாதியை அடைந்தவர்கக்கு ஏனை யோர்க்கு உளவாகும் துன்பங்களுள் யாதும் இல்லாமை கூறப்பட்டது. ``இன்பமே எந்த நாளும்; துன்பம் இல்லை;3 என அருளிச் செய்ததையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 3

ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.

பொழிப்புரை :

ஆலையில் இடப்பட்ட கரும்பும், சோறும், வெல்லக் கட்டியும், சோலையின் நடுவில் உள்ள பொய்கை நீரும் ஆகியவற்றை உடையது எங்கள் நாடு. அதில் அழகிய சாலம் வல்ல பெண்ணொருத்தி யுள்ளாள். அவள் மயிலின் தோகையில் காணப்படும் வியத்தகு `புள்ளிகளைப்போல் பல பொருள்களை விளக்கத்தக்க வகையில் தோற்றுவிப்பாள். அதனால் பலர்க்குப்பல பயன்கள் விளைதலால் அவட்குப்புகழ் உளதேயன்றிச் சிறிதும் இகழ்வில்லை.

குறிப்புரை :

இம்மந்திரமும் மறைபொருட் கூற்றாகவே செய்யப் பட்டது. நாடு - நின்மலாவத்தை, ஆலைக்கரும்பு - உழைத்துப் பயன் பெறல் வேண்டும். அது நின்மல சாக்கிரம். சோறு, வாளா எடுத்து விழுங்கப்படும். அது நின்மல சொப்பனம். வெறும் சோறு சுவை யில்லாதது போல இதில் சிவானந்தம் இனிது விளையாது, அதன் உண்மை மட்டும் விளங்கும. வெல்லக்கட்டி வாயில் இட்டவுடன் இனிக்கும். இது நின்மல சுழுத்தி. துரியமும் உடன் நிகழும். இவற்றில் சிவானந்தத் தோற்றம் உளதாகும். சோலைத் தண்ணீர், குளிர்ச்சி யுடையதாய் உடல் வெப்பம் தணித்து, உண்ணீர் வேட்கையையும் தணித்து, நீந்தி விளையாடவும் இடமாம், இது நின்மல துரியாதீதம். இதில் சிவானந்த மேலீடு உளதாம். இவற்றையெல்லாம் தந்து நிற்பது அருட்டத்தி. அதுவே கோலப்பெண். இது திரோதான சத்தியைப்போல இடரை விளவியாது, இன்பத்தையே விளைத்தலால், இதனை உபசாரமாகக் கூட, `மலம்` என ஒருவரும் குறைத்துக் கூறார். ஆகவே, `இவட்குக் குறை ஒன்றும் இல்லையே` என்றார். ஏகாரம், தேற்றம். மோன சமாதியை அடைந்தோர் உடல் உள்ள அளவும் ஒரோ ஒரு கால் அதனின்றும் நீங்கிப் புறமோக்குடையராதலும் உண்டு. அந் நிலையிலும் அவர் பண்டை நிலை வந்து பற்றாதபடி நின்மலா வத்தையில் நிற்றல் அல்லது, அதற்குக் கீழ்ப்பட்ட மேலாலவத்தை மத்தியாலவத்தை கீழாலவத்தைகளில் வாரார் என்பதும் கூறியவாறு. அணைந்தோருள் தம்மையும் உளப்படுத்திக் கூறினார் என்க. `உடைத் தாகிய எங்கள் நாட்டிடையுள்ள பெண்ணாட்குக் குறையொன்றும இல்லையே` என்க.
இதனால், மோன சமாதி யுற்றருள் ஒரோர்கால்மீட்சி உறுவாரதுசெயல் கூறப்பட்டது.
``நேசமொடுத் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நீனைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
ஆசையொடும் அங்கும இங்கும் ஆகி அலருவோர்
அரும்பாசம் அறுக்கும் வகை அருலின் வழியே [உரைப்போம்.l
என்றார் சிவஞான சித்தியிலும்.

பண் :

பாடல் எண் : 4

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :

முதலடியை இறுதியில் கூட்டி, `இனிஎன்னை ஆராலும் அமட்ட ஒண்ணாது` என மாற்றியுரைக்க. அமட்டுதல் - அசைத்தல்; நிலைகலங்கச் செய்தல். சீர் - சிறப்பு. பிறர் ஒருவருக்கும் இல்லாத அருட்குணம். `சிந்தை` என்றது அறிவை, `அச்சீராடி எனச் சுட்டு வருவிக்க. ஆடுதல் - பயிலுதல் ஊடாடுதல்` என்னும் வழக்கையும் நோக்குக. அங்கு அவனிடத்தே. திரிதல் - உலாவுதல்; செயற்படுதல்.

குறிப்புரை :

பாடு - பக்கம். சாரா அறிவு, சாராமைக்கு ஏதுவாய அறிவு. `தான் சுதந்திரனாய் உள்ளவனைச் சார்ந்தால், நாமும் சுதந்திரமாய் வாழலாம்` என்னும் அறிவு.
``தாம் ஆர்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் ... ... ... ... ... ... ...
கோமற்கே நாம் என்றும் மீள் ஆளாய்க்
கொய்ம்மலராச் சேவடியிணையே குறுகி னோமே``
என அருளிச் செய்தமையும் காண்க.
``அறிவு அறிந்தேன்`` என்றது, `அறிவைப் பெற்றேன் என்றவாறு.
இதன் பொருள் வெளிப்படை.
இதனால், `சிவனை, பெறும் பொருளாகப் பெற்றார். எவ் வாற்றானும் பிறர்க்கு, அல்லது பிறவற்றில் அடிமையாகாது, வேண்டிய வேண்டியாங்கு எய்தி இன்புறுதல் கூறப்பட்டது. ``ஒன்றாலும் குறை வில்லை`` (திருமுறை - 6.98.1.) என்ற அருள் மொழிமையயும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

பொழிப்புரை :

நான் இப்பொழுது, முன்பு பிரமன் என் தலையில் எழுதி நியமித்த கட்டினின்றும் நீங்கிவிட்டேன். `ஊழ்வினைகள் வந்து என்னை ஒன்றும் செய்யா` என்பதாம்.) சிவனை அடையும் வழியைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான்செய்யும் செயல்களால் நான் பின்பு நுகரக் கடவனவாகப் புண்ணியமோ, அல்லது பாவமோ எதுவும் முளைக்காதபடி `ஞானம்` என்னும் கூரிய வாளால் அவைகளை அறுத்தெறிந்தேன்ய (`எனக்கு ஆகாமியம் இல்லை` என்றபடி.) என்னை வெளியில் செல்லாதபடி தடுத்து வைத்துள்ள உடம்பாகிய சிறைக் கூடம் இடிந்த பாழாய்விடப் பெற்றேன். ஆகவே, நான் எங்கும் செல்கின்றேன். (கருவிகளின் வயப்பட்ட ஏக தேச நிலை நீங்கி, வியாபகமாகப் பெற்றேன்` என்பதாம்.)

குறிப்புரை :

``நிலை`` என்றது வழியை. கதி - புகலிடம்.
``தொல்லையில் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்,
அல்லொளி புரையும் ஞானத்
தழலுற அழிந்து போமே``*
எனவும்
``ஏன்ற வினை உடலோ டேகும்;இடை யேறும்
தோன்றில், அருளே சுடும்``*
எனவும் கூறுபவ ஆகலான், ``மனம்`` என்று ஞானமேயாதல் அறிக. ``ஞான வாள் ஏந்தும்; ஐயர் நாதப் பறை அறைமின்`` * என்னும் திருவாசகத்தையும் காண்க.
``தண்டா யுதமும்,திரிசூ லமும் விழத்
தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்;செந்தில்
வேலனுக்குத்
தொண்டா கியஎன் அவிரோத ஞானச்
சுடர்வடிவாள்
கண்டா யடா அந்த காவந்து பார்சற்றென்
கைக்கெட்டவே,``
``பட்டிக் கடாவில் வரும் அந்த கா! உனைப்
பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாது விடேன்; வெய்ய
சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெருமான்
திருமுன்பு நின்றேன்;
கட்டிப் புறப்படடா! சத்தி வாள் என்றன்
கையது வே``
என எவ்விடத்தும் ஞானமே வாளாக உருவகிக்கப்படுதலை அறிக. (``சத்தி`` என்பது சிலேடை வகையால், `சத்தி` என்னும் ஆயுதத்தையும், ஞானத்தையும் ஒருங்கே குறித்து நின்றது. சத்தி, முருகனது படைக்கலங்களுள் சிறந்த ஒன்றாதல் தெளிவு.)
புரம் - உடம்பு. முரிந்தேன் - முரிந்ததாகப் பெற்றேன்.
இதனால், மோன சமாதியை எய்தினவர்க்குப பிராரத்தமும் ஆகாமியமும் இலலையாதலும், அதனானே தனு கரண புவன போகங்களாகிய மாயையின் மயக்கம் நிகழாமையும் கூறப்பட்டன. இக்கருத்தினை நாயனார் முன் தந்திரத்தில்.
``தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்;
முன்னை வினையும் முடிச்சை அவிழ்ப்பர்கள்;
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே``
எனக் கூறியருளினார். சஞ்சித சுன்மம் குருவின் திருக்கண் நோக்கத்தால் எரிசேர்ந்த வித்தபுபோல அப்பொழுதே கெட்டொழிந்தது. சஞ்சித கன்மம் நீங்காத வரையில் ஞானம் பிறவாது. ஆகவே, ஞானியர்க்குச் சஞ்சித கன்மம் இல்லை.

பண் :

பாடல் எண் : 6

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும்
நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை :

`கடவுள்` என்பதும், `தெய்வம்` என்பதும் வேறு வேறு. இரண்டும் ஒன்றல்ல. தெய்வம் எழுவகைப் பிறப்புக்களில் ஒரு பிறப்பு வகையைச் சேர்ந்ததது. அது தமிழில் `புத்தேள், அணங்கு` முதலிய பெயர்களால் குறிக்கப்படும்` கடவுள் பிறப்பில்லாது, அனைத்தையும் கடந்த நிற்கும் தனிமுதற் பொருள். கடவும் ஒன்றே; தெய்வங்கள் பல. மக்கள் அவர்தம் மரபுபடியும் விருப்பப்படியும் வேறு வேறு தெய்வங்களை வழிபடுவர். கற்புடை மகளிர் யாவர்க்கும் தெய்வம் கணவனே. கணவன் ஒரு தெய்வத்தை வழிபடுவானாயின் அவனோடு இசைந்த நின்று மனைவியும் அத்தெய்வத்தை வழிபடுவாள் ஆயினும், மனைவிக்கத் தெய்வம் கணவன் தான். இதனையே திருவள்ளுவர் ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்`` எனக் கூறினார். ஆகவே, மகளிர் கணவன் தொழாத தெய்வத்தைத் தாம் விரும்பி வழிபடுதல் குற்றமே யல்லது, கடவுளை வழிபடுதல் குற்றம் அன்றாம். ஏனெனில், கடவுள் யாவராலும் தெழத்தக்கவர்.
`மனைவி தன் கணவனைத் தவிரத் தான் ஒரு தெய்வத்தை வழிபடுதல் குற்றம்` என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. இந் நிலையில், `மனைவி கடவுளைத் தொழலாமா, தொழக்கூடாதா என்னும் வினா, சமண பௌத்த மதங்களில் இல்லை. ஏனெனில் அவை `கடவுள் உண்டு` எனக் கொள்ளவில்லை. கடவுளைக் கொள்ளாத அம்மதங்கள், `தெய்வங்கள் உள` என நம்புகின்றன். ஆகவே, `மனைவி கணவனைத் தவிரப் பிற தெய்வங்களைத் தொழ லாகாது` என மறுப்பதோடு அவை நின்றுவிடுகின்றன. `மனைவி கடவுளைத் தொழுதால் என்ன` என்று வினவினால், `அத்தொழுகை பயனற்ற செயல்` என்பது அம்மதங்களின் முடிவு. `கடவுள் உண்டு` எனக் கொள்கின்ற மதங்கள், `கடவுள் ஒன்றே` என்றும், `அஃது யாவராலும் தொழத் தக்கது` என்றுமே கூறும். தெய்வங்களும் கடவுள் அருளால் சில ஆற்றல்களைப் பெற்று விளங்குதலால் இவ் இடங்களில் `கடவுள்` என உபசரித்துக் கூறப்படும். கடவுள்பொது மக்களால் `தெய்வம்` என்றே` கருதி வழிபடப்பட்டு அவ்வழிபாட்டினை ஏற்று அவர்விருமிபிய பயனைத் தருதல் பற்றி, தெய்வம்` என உபசரித்துக் கூறப்படும். இம்மந்திரத்தில், ``உலகுக்கு ஒரு தெய்வம்` என்றமையால், கடவுளே `தெய்வம்` எனப்பட்டாமை தெளிவாம்.)
``ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்`` என்றது, `கடவுள் பல இல்லை`` ஒன்றே` என்பதைத் தெளிவித்தது. தெய்வங்களை யெல்லாம் `கடவுள்` எனக் கூறி, `அவற்றிடையே உயர்வு தாழ்வுகள் இல்லை` எனக் கொள்வோர், அநேகேசுர வாதிகள்` எனப்படுவர். `கடவுளே இல்லை` என்போர் நிரீச்சுரவாதிகள். அவருள் அநேகேசுர வாதிகள் கொள்கையை மறுத்ததே இதன் முதல் அடி.
அக்கடவுள் உலகுக்கு உயிர்`, அஃதாவது, `எல்லாப் பொருளிலும் எள்ளினுள் எண்ணெய்போல் நிறைந்து அவ்வப் பொருள்களின் தன்மை பயன்படச் செய்வது` என்பதாம். ஒன்றாய கடவுள். இவ்வாறு அனைத்துப் பொருள்களிலும் அது அதுவாய் நிற்றலையே மாணிக்க வாசகர்.
``ஏகன், அநேகன் இறைவனடி வாழ்க`` 8 என அருளிச் செய்தார்.
இந்நிலை `அந்தரியாமித்துவம்` எனப்படும்.
ஒன்றாய், உலகுக்கு உயிராய் உள்ள கடவுள் மந்திரம் `நமச் சிவாய` என்பதே உண்மை. அதன் உண்மைப்பொருளை உணர்ந்து பயில்கின்றவர்கள் கடவுள் இன்பம் கரையின்றி விளைதலைக் காண்பர். ஒரு பழத்தின் இனிமையை அதனைத் தின்று பார்த்தவர் அறிவாரேயன்றி, வாளா காண்பவர் அறியார். அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த இன்பத்தைக் கண்டேன். (பயிலாதவர் அதனை அறிதல் அரிது) ஆகையால், அம்மந்திரத்தை உருவகமாகக் கூறினால், `கிடைத்தற்கரிய தனி ஓர் இனியகனி` என்று கூறலாம்.
[இம்மந்திரம் முடிவான பொருளைக் கூறுதலாலும் அப் பொருளை உள்ளவாறுணர்தல் அரிதாய் இருத்தலாலும் உரை இங்ஙனம் விரித்தெழுதப்பட்டது.]

குறிப்புரை :

`கண்டீர்` முன்றும் முன்னிலையசைகள். `நன்று` என்றது, `பிழையற்றது`; உண்மை என்றபடி `நமச்சிவாய` என்பது ஒரு மந்திரம் - என்பதும், `மந்திரங்கள் எல்லாம் தெய்வங்களைப் பொருளாக உடையன் என்பதும் தெளிவாகலின், `நமச்சிவாயப் பழம் நன்று` என்பது இப்பொருட்டாயிற்று. ``இன்மைச்சிவாய`` என்பதை இன்னகை` என்பது போலக் கொண்டு சந்தி பிரித்துக் காள்க. `நமச்சிவாய இன்பழம்` என மாற்றிக்கொள்.
இதனால், `சிவானந்தப் பேற்றை எய்தினோர் அது நீங்காமைப் பொருட்டுத் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தமக்குரிய முறை யறிந்து ஓதியிருப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சந்திரனும், பாம்பும் பகைப் பொருள்கள்` என்பது புராணக் கொள்கை, அவை யிரண்டையும் சிவன் ஒருங்கே தனது முடியில் அணிந்துள்ளான். இது, `சிவன் உயிர்களை நடுவு நிலையில் நின்றே நோக்கியிருளுவன்` என்னும் குறிப்பையும், `உயிர்கல் அவை சார்ந்துள்ள உடம்பு காரணமாகப் பகைகொள்வனன்றி, இயற்கையில் அவற்றிடைப் பகையேதும் இல்லை என்னும் குறிப்பையும் உடைய தாகும். ஆகவே ``பாம்பும், மதியும் புனலும் தம்மிற் - பகை தீர்த்துடன் வைத்த பண்பா போற்றி``9 என்றது காண்க. இத்தகைய நடுவு நிலைமையும், பேரருளும், ஆதியந்தம் அற்ற நித்தியத் தன்மையும் உடைய சிவன் இனிது விளங்கப் பெற்ற நல்லறிவையுடைய பெரி யோர்க்குத் தியக்கம் (கலக்கம்) தோன்றுமாறில்லை என்பது குறிப்பு.
இதனால், `மோன சமாதி யுற்றார்க்கு நிலைகலங்கும் தன்மை யில்லை` என்பது ஏதுவுடன் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

பொழிப்புரை :

`படைப்புக்காலத்தில் எங்கள் கடவுளாகிய சிவன் அரியை முன்படைத்து, அவன் வழியாக அயனைத் தோற்றுவித்து, படைத்தல், காத்தல்களைச் செய்வித்த, அவர்கள் செயலைக் கண் காணித்துக் கொண்டிருக்கின்றான்` என்று வேதாகமங்கள் கூறுகின்றன. இஃது உண்மையாமாற்றை அறிய மாட்டாதவர் `அரி, அயன்` என்போருள் ஒருவனையே `முதல்வர்` என்றும், `அவர் உள்ளிட்ட பலர் முதல்வர்` என்றும் கூறிப் பிணங்குகின்றனர். தோற்றம் உடையவர்களாய்ச் சிவனின் வேறாகத் தோன்றிச் செயலாற்றுவோர், `நமது தோற்றமும், செயல்களும் சிவனது சங்கற்பத்தால் நிகழ்வன` என்பதை எண்ணாத வேறு நிலை உடையவர்களாய் இருப்பராயின், அவரது நிலைமை, ஒரு முப்பொருளில் ஒரு பகுதி துண்டாகிப் பிரிந்தவழி உளதாகும் பாழ் நிலையையே எய்தும்.

குறிப்புரை :

`காணப்படுகின்ற இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்யும் கடவுளர், அதிகார மூர்தத்களேயன்றி, முதற்கடவுள் அல்லர்` என்பது கடவுட் கொள்கையுடைய வேத மதங்கள் அனைத்திற்கும் ஒத்த முடிவு. `இவர்கள் முதற்கடவுள் அல்லர்` எனவே, `உயிர் வகுக்கதினர்` என்பதும், `மூவகை உயிர்களையும் மும்மலங்களுள் முதல்மலமாகிய ஆணவ மலம் பற்றியே உள்ளது` என்பதும், ஆயினும் அது மிக வன்மையாகப் பற்றியுள்ள உயிர்கள் அது காரணமாக முக்குண வடிவான பிரகிருதி வயப்பட்டு, முதல்வனை உணராமல் மயங்குகின்றன, அதனால் அவை சகல வருக்கத்தின` என்பதும், ஏனை இருவகை உயிர்களையும் ஆணவ மலம் மெய்மையாகவும் மிக மென்மையாகவும் பற்றியிருத்தலால் அவை பிரகிருதி வயப்படாதும், அதனானே முதல்வனை மறவாதும் உள்ளன; அதனால், அவை சகல வருக்கத்தின` என்பதும் சித்தாந்தம். `அரி, அயன்` என்போர்களில் அரி இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து உண்டு வளர்ந்து இன்பத் துன்பங்களை மயங்கினமையும் புராண இதிகாசங்களில் பரக்கக் கேட்கப் படுதலால் அவனை, `சகல வருக்கத்தினன்` எனக் கொள்ளுதலே பொருந்தும். அவன் சகலரே யாதல் சொல்ல வேண்டா. சிவன் இவ்வுலகில் பிறந்தமை ஓரிடத்தும் சொல்லப்படாமையேயன்றி சிவன் பிறப்பிலி` என்பது பலவிடத்து பேசப்படுகின்றது. ஆகவே, அவன் உயிர் வருக்கத்தினன் ஆகாது முதற்கடவுள் ஆகின்றான். நடுவுநின்று ஆராய்வார் இவ்வுண்மையை நன்கு உணரவே செய்வர், ஆயினும் பலர் நடுவு நில்லாது மாறுபடப் பேசுதல் பற்றி, ``எங்கள் ஈசன் கண்டு அங்கு இருக்கும் கருத்து அரிவார் இல்லை` என்றார். கருத்து - உண்மை. ``எங்கள்`` எனத் தம்மோடு உளப்படுத்தியது, பிறப்பின்மையே முதற் கடவுட்கு அடையாளம்` என்பதையும், `சிவன் பிறப்பிலி` என்பதையும் உடன்படுகின்ற பலரையும்.
``மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்;
தென்றலர்தொத் துள்ளார் துணை``
-திருவருட்பயன் - 13.
என்றது காண்க.
`தன்பொருட் டில்லையாயினும் உயிர்கள் பொருட்டாக இப்பரகிருதி உலகத்தில் பிறப்பெடுத்தலும் கடவுளது இயல்பு` எனக் குறின், அது, `முன்னே கடவுளின் இயல்புகள் யாவை` என ஆராய்ந்து வரையறுத்துக்கொண்டு, பின்னே, இவ்வுலகில் சிலரை, `இவர் கடவுளா, உயிர் வருக்கத்தவரா` என ஆராய்ந்து வரையரை செய்யாது, முன்னே சிலரை, `கடவுள்` என முடிவு செய்துகொண்டு, பின்னே `அவரது இயல்பே கடவுளின் இயல்பு` என மாறிக் கூறுவதாக்ம். இது `தலைக்கு ஏற்ப அமைவது தலை` என்பது போலத் தலைகீழபா பாடமாய்விடும். அன்றியும், எவையோ சில காரணங்களால், `பிறத்தலும் கடவுட்கு இயல்பு` எனக் கூறினால், `பிறப்பு இல்லாமையே கடவுள் தன்மை` என்பது நிலையாத ஒன்றாகி, `பிறவாமை` இழிவுடையதாகியும் விடும். அதனால், `எது உயிர்? எது கடவுள்? என ஐயுறுவார்க்கு, அவைகளை அடையாளம் காட்டித் தெளிவுபடுத்தலும் இயலாது. இத்துணை இடர்ப் பாடுகளும் பிறப்புடையாரை, `கடவுள்` என நிறுவ முயல்வதால் உளவாவனவாம். அதனால், உலகில் உயர்ந்தோர் சிலரை. `இவர் தமது தூய தன்மையால் கடவுள் தன்மையை எய்திய பெரியோராவர்` எனக் கூறியமைதலே பொருந்துவது.
மும்மூர்த்திகளில் ஒருவனாகிய உருத்திரன், அம்மூவருள் ஒருவனாயினும் அவன் சிவனை மறந்து செருக்குற்றதாக வரலாறு இல்லை. அதனால், அவன் சகல வருக்கதினனாகச் சொல்லப் படுகின்றான்.
இருமலம் உடையவனர் பிரளயாகலர். ஒருமலம் உடையவர் விஞ்ஞானகலர். இவர்களிலும் அதிகார மூர்த்திகளாய் அமைப்பவர் உளர். அவருள் `உருத்திரர்` எனப்படுவோர் பிரளயாகலர் வருக்கத் தினர். `வித்தியேசுரர்` என்றும், `மந்திரேசுரர்` என்றும் சொல்லப்படுபவர் விஞ்ஞான கலர் வருக்கத்தினர். விஞ்ஞானகலருள் `அணு சதாசிவர்` என நிற்பாரும் உளர் இவ்வாறான அதிகாரமூர்த்திகள் பலர் உளராயினும் சைவ நூல்களுள் அயன், மால் இருவரை மட்டுமே பெரும்பான்மையாக எடுத்துக் கூறுதற்குக் காரணம் அவர்கள் சகல வருக்கத்தினராய் இருத்தலாலேயாம்.
சகல வருக்கத்து ஆன்மாக்களும் அவை செய்த சிவபுண்ணியக் குறைவு மிகுதிகளால், இங்குக் காட்டிய எந்த அதிகார மூர்த்திகளாகவும் ஆதல் கூடும்.
``விறைக்கம லத்தோன் மாலும்
ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி
புண்ணியம் நண்ண லாலே``9
``வித்தைகள், வித்தை யீசர்,
சதாசிவர் என்றி வர்க்கு,
வைத்திடும் பதங்கள், வன்னம்,
புவனங்கள், மந்தி ரங்கள்,
தத்துவம்,சரீரம், போகம்,
கரணங்கள் தாம்எ லாமும்
உய்த்திடும் வயிந்த வந்தான்
உபாதான மாகி நின்றே`` 3
என்பன சிவஞான சித்தி.
காண்டல் - உண்டாக்கல். `அங்கு இருந்ததோர் துண்டின் தூறு ஆண்` என்க. பின் வந்த ``அங்கு`` இரண்டும், பொதுப்படக் குறித்த ஓர் இடத்தில்` எனப் பொருள் தந்தன. `தூறு, பாழ்` என்பன ஒரு பொருட் சொற்கள் ஈற்றில் நின்ற ``அது`` மேற்போந்த வெறுமனம் ஆதலைச் சுட்டு வந்தது.
இதனால், முன் மந்திரத்தில், `என்னை மோன சமாதியில் வைத்தவன் சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரனேயன்றிப் பிறர் அல்லர்` எனக் கூறியது வலியுறுத்தி நிறுவப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து)
அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.

பொழிப்புரை :

இவ்வுலகில் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், எல்லோராலும் அறியப்பட்ட அவ்விருவரும் `யான் பிறக்க வேண்டும்` என்று விரும்பித் தம்முட் கூடியதும், அதனால் யான் பிறந்ததும் உண்மை. ஆயினும் தங்களால் பிறந்த என்னை `யார்` என்று அவர்களில் ஒருவ ரேனும் அறிவாரோ? அறியார். அப்பால் வாழும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது முன்பு அவர்கள் என்னைக் காப்பாற்றியதுபோக அவர்களை யான் காப்பாற்றும் நிலை உண்டாயிற்று.

குறிப்புரை :

`ஆகவே, அவர்கள் எப்பொழுதுமே என்னைக் காப்பவர் ஆவரோ? சிலகாலமே அன்னராவர். என்றுமே என்னைக் காக்கும் அன்னையும், அத்தனும் வேறுனர்` என்பது குறிப்பெச்சம். `அந்த அன்னையும், அத்தனும் யாவர்` என்னும் வினாவிற்கு விடையும் பின்னிரண்டடிகளில் குறிப்பாய் அமைய அவற்றை இரட்டுற மொழிந்தார்.
முத்தி பஞ்சாக்கரத்துள் வகாரம் அன்னை; சிகாரம் அத்தன்; யகாரம் யான்; மூவரும் உடன் இருப்பது முத்து பஞ்சாக்கரம். புரத்தல் - பேணுதல், அது முத்தி பஞ்சாக்கரத்தை அயராது கணித்து அதன் பொருளை உணர்த்திருத்தல். `இதனால் யான் மோன சமாதியில் நிலைத்துள்ளேன்` என்பது கருத்து.
அன்புற்றது, அதன் காரியமும் உடன் தோன்ற நின்றது.
இரண்டாம் அடியில் ``அத்தனும்`` என்பதன்பின் `அவருள்` என்பது வருவிக்க. ஈற்றடியில், `அன்னையையும்` என உருபும், `அத்தனையும்` என உருபும் உம்மையும் விரிக்க.
இதனால், `உடம்பைப் பயந்த தாய் தந்தையார்க்கு மக்கள் கடமைப்பட்டவராயினும், உயிர்க்கு அறிவைப்பயந்து வரும் தாய் தந்தையாரை மறவாது போற்றுதல் அதனினும் பெரியதொரு கட்டுப்பாடு; அதனை மோன சமாதி அடைந்தோரே நிரம்பச் செய்வர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.

பொழிப்புரை :

இம்மந்திரம் சிவனது அருளைப் பெற்றுச் சிவனைச் சார்ந்து நிற்கும் மோன சமாதியினர்க்கு உலகு அனைத்தும் தமது வியாபகத்துள்ளே அடங்கித் தோன்றுதலைச் சில வகைகளால் விளக்கிற்று.

குறிப்புரை :

சுழி - சுழல், இதன்கண் தொகுக்கப்பட்ட துவ் விகுதியை, `சுழல் கொண்டது` என மாற்றி வைத்து உரைக்க. பல சுழல்களைக் கொண்டது கடல். குல வரை - உயர்ந்த மலை. இதனையும், உச்சிக் குலவரை` என மாற்றியுரைக்க. உச்சி - சிகரம், அண்டர் - வானுலகத் தவர். அவர்கட்குத்தலைவர் அண்டத்தலைவர் எண்டிசையோர், திசைக்காவலர், ஆதி - பிரமன். இவரைக் கூறியது உபலக்கணம் ஆதலின் எஞ்சியோரும் எஞ்சிய பொருள்களும் கொள்ளப்படும். சீவத்தன்மை நீங்கிச் சிவமாம் தன்மையடைந்தார்க்கு உலகம் தம்முள் அடங்கித் தோன்றிதற்குச் சான்று, உபநிடங்களில் வாம தேவர் முதலிய முனிவர்கள். ``யானே மனுவாய் இருந்தேன், சூரியனாய் இருந்தேன்``9 என்றாற்போலக் கூறியதாக உள்ள வாக்கியங்களும் சருவஞ்ஞானத் தரத்தில், ``யானே எல்லாமாய் நின்றேனும், எல்லாவற்றையும் கடந்து நின்றேனும்`` என்பனபோல் உள்ள வாக்கியங்களுமாகும். `கொள்` என்பது அடியாகக் `கொண்டனர்` எனவும் `விள்` என்பது அடியாக `விண்டனர்` எனவும் வருதல்போல் `உள்` என்பது வினைப் பகுதியாகாது, பண்புப் பகுதியாகலானும் `மாண்` என்னும் பண்படியாக `மாண்டது` என வருதல்போல, `உள்` என்பது அடியாக ஓரிடத்தும் `உண்டது` என வாராமை யாலும் இஃதோர் அரிய ஆட்சி. `உளராயினர்` என்பது இதன் பொருள். உய்ந்தேன் - பிறவியினின்றும் தப்பினேன். `ஒழி` துணிவுப் பொருள் விகுதி. பின் அதுவும் சேர்ந்து பகுதியாயிற்று.
மோன சமாதி என்றது மீளப் பிறவாமையை, ``வீட்டையடைந்திடுவர் நிட்டை மேவினோர்கள்; மேவாது தப்பினவர் ... ... ... இந்தப் பார்மேல் நாட்டிய நற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் ஞானநிட்டை அடைந்தடைவர் நாதன் தாளே``3 என்னும் சிவஞான சித்தியால் அறிக. [இதன்பின் பதிப்புக்களின் காணப்படும்`` தானே திசையொடு தேவருமாய் நிற்கும்`` என்னும் மந்திரம் இரண்டாம் தந்திரத்தில் `திதி` என்னும் அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 11

நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.

பொழிப்புரை :

ஞான நிட்டையில் நிற்கும் அறிவையுடையார்க்கு அவர்தம் உடல் நீங்கும் காலத்து அதனை நீங்கச் செய்து சிவனே முன் வந்தருளுவான். (ஏனையோர்க்கு யமதூதுவர் வந்து உடலை நீக்கி, உயிர்முன் நிற்றல்போல நில்லார்.) யான் தவத்தால் முன்பே பிறப்பிற்குக் காரணமான வினைகளை யெல்லாம் அருத்தொழித்துச் சிவனை மறவாமையாகிய நிட்டையில் நின்றேன். (ஆகவே, யம தூதுவர் என் முன்வாரார்.) `வந்தாலும், சிவனை உணரும் உணர் வாகிய வாளால் அவர்களை எறிய இயலும்` என்னும் உறுதி யுடையேன். முற்கூறியவாறு சிவன் தான் என்முன் வருவான். வந்தால் அவனுடன் நான் மகிழ்ச்சியோடு செல்வது திண்ணம்.

குறிப்புரை :

ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டிப் பின் அவற்றை முதலில் வைத்து உரைக்க. `தானே எதிராம்` எனப் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. `எதிராரே` என்பது பாடமாயின், `தாம் எதிராரே` என வருதல் வேண்டும். `அதுவும் அவ்வாறு ஆம் `எனில், `நிட்டையுடையார்க்கு மாறாய் முன்னிற்பவர் இலர்; அதனால் அவர்முன் நமன் தூதர் செல்லார்` என உரைக்க. ``நமன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, `வருதல் இல்லை` என்பதையும், சிவன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, வருதல் உறுதி` என்பதையும் குறித்து நின்றன. ஞானம் வாளாதல் மேலேயும் சொல்லப்பட்டது. 9 ``சிவன்வரின் நான் உடன் போவது` என்பதில் வருதல் போதல்கள் இடையீடகல ஒன்றுதலைக் குறித்தது.
பவம் - பிறப்பு. முகந்து வந்த பிராரத்த வினை முடிந்தால், எடுத்த உடம்பு வீழ்ந்துவிடும். அவ்வீழ்ச்சி, மேலும் வினை யுடையார்க்கு `இறப்பு` என்றும், வினையில்லாதார்க்கு `வீடு பேறு` என்றும் சொல்லப்படும். `இறவா நிலை` என்பது முதற்கண் கூறிய வகையில் உடம்பு நீங்காமையாம். ``நமனை அஞ்சோம்`` 3 என்ற அப்பர் திருமொழியும் காண்க. முதல் அடி உயிர் எதுகை பெற்றது.
இதனால் `மோன சமாதியடைந்தார்க்கு உடலை விழ்த்துவது திருவருளேயன்றி, வினைப் பயனை அடைவிக்கின்ற கூற்றுவன் அல்லன்` என்பது கூறப்பட்டது. இது பற்றியே, `ஞானிகளது` உடலை எரிப்படுத்தல் கூடாது` என ஏழாம் தந்திரத்தில் `சமாதிக் கிரியை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.

பொழிப்புரை :

மும்மலங்களையும் நீக்கித் தமது அறிவு சிவனது அறிவே யோகப் பெற்ற ஞானிகள், சீவராகாது, இயல்பாகவே பாசம் இன்மையால் தூயனாய் உள்ள சிவனேயாவர், ஆகையால் அவர்கள் மாயா மலமாகிய உடம்போடு கூடி, உலகில் உலவினாராயினும் அவற்றால் அவர் கட்டுறார். `சிவன் இல்லை` என அழித்துப் பேசுவாரது அழிப்புரையும், சிவனை அடைதற்கு இத்துணை விரைவு ஏன்` என மயக்க உரை கூறுவாரத் ஆரவார உரையும் `இவர்களது உரைகள் யாவும் பாசங்களுள் ஒன்றாகிய சுத்த மாயை அளிவினவே என எண்ணித்தம்பால் அணுகக் காணாதவராவர்.

குறிப்புரை :

முதலடி அவ்வாறு கூறப்பட்தாயினும், அதனை `மலம் மூன்றுஞ் செற்றுச் சித்தம் சிவம் ஆயவர்` என்றதாகவே கொள். ``சித்தம்` என்றது அறிவை. சிலுகு - புன்மொழி. அவை நாத்திகர் பேசும் நாத்திக உரை. கலகம், ``ஆத்தம் ஆனார் அயலார் கூடி நாத்திகமாகப் பேசும்`` மயக்க உரை. சொற்கள் யாவும் சுத்தமாயா காரியமேயாயின் பாசத்திள் நின்று கூறுவாரது சொல் அந்த மாயா நாதமே யாக, திருவருளில் நின்றாரது சொல் அருள் நாதமாம். `அவற்றுள் இங்குக் குறிக்கப்பட்டவர் சொல் மாய நாதமே` என்பதை, ``சத்தம் பரவிந்து மாயை. `சத்தம்` என்னும் வடசொல், `சொல்` என்றே பொருள் தருமாயினும், இங்கு, `வெற்றாரவாரம்` என்னும் நயத்தையும் தோற்றுவித்தது.
பின்னிரண்டடிகளில் வரும்பொருளை நிறுவுதற்கு முன்னிரண்டடிகள் அநுவாதமாய் வந்தன.
இதனால், மோன சமாதி எய்தினோர் அதன் சிறப்பை உணர மாட்டாதார் கூறுவனவற்றிற்குச் செவி கொடார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

பொழிப்புரை :

நினைப்பு, மனம் முதலிய கருவிகள் செயற் படுதலால் நிகழ்வது. மறப்பு, கருவிகள் செயற்படாது ஒடுங்குதலால் நிகழ்வது. கருவிகள் இல்லாத பொழுது அறிவு நிகாழமை ஆணவ மல மறைப்பினாலாம், ஆகவே, ஆணவ மலம் நீங்கினால் கருவிகளால் ஆவதொன்றில்லை. ஆன்ம அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும்; அறியாமையாகாது. இவை ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடி வேண்டாது, எப்பொழுதும் பார்வை நிகழ்வதும் போல்வன வாகும். ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட அறிவு ஒளி குறையாத கண் போல்வது. பெத்தான்மாக்களது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டிருத்தலால் அவ்வறிவு மேற்குறித்த நினைப்பும், மறப்புமாய் நிலைமாறிக் கொண்டேயிருக்கும். முத்தான்மாக்களின் அறிவு ஆணவ மலம் நீங்கப் பெற்றமையால் மாற்றம் இன்றி, அறிவாயே விளங்கும். அதனால் அவைகட்குச் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிறுகும்.

குறிப்புரை :

நினைப்பே சகலம்; மறப்பே கேவலம் இவைகளை, `பகல், இரவு` எனச் சாத்திரங்கள் குறியீட்டுச் சொல்லாற் கூறும். நினைப்பும், மறப்பும் இன்றி அறிவு ஒரே நிலையில் நிற்புது இரவு பகல் அற்ற இடமாகக் கூறப்படும்.
``இரவு பகலில்லா இன்பவெளி யூடே
விரவி விரவிநின் றுந்தீபற;
விரைய விரையநின் றுந்தீபற``9
என்றது திருவுந்தியார்.
இவ்வாற்றால், ``வினைப்பற்றறுக்கும் விமலன், நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சத்து இருக்கும்`` எனவு நினைப்பும் உள்ளவர் நினைப்பினாலே அவனைப்பற்ற முயன்றால் அவன் கிட்டான் ஆதலின், ``அவவைத் தேடி நினைக்கப் பெறில் நீளியன் ஆம்`` என்றும் கூறினார். நீளியன் - சேய்மையன். ``தேடி நினைக்கப் பெறில்`` என்றே கூறஇனாராயினும், `நினைத்துத் தேடப் பெறில்` என்றலே கருத்தென்க. விமலன் - பரிசுத்தன். என்னே, அவன் ஆவண மலத்தில் அகப்பட்டான்` என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் என்க. இனி, `அவன் ஆணவத்தில் அகப்படா னாயினும் வளர்பிறை மதி இருளைச் சிறிது சிறிதாக ஓட்டி வருதல்போல அவன் உயிர்களில் மறைந்து நின்று ஆணவத்தை நீக்கியே வருகின்றான் என்பதை ``வினைப் பற்று அறுக்கும்`` என்பதனால் குறித்தார். `நெஞ்சத்து` என்னும் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது.
இதனால், மோன சமாதி யுற்றார்குச் சிவன் கரவின்றி விளங்குதல் எதுக் காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

பொழிப்புரை :

நான் சிவபெருமானைச் சிவபெருமானாகவே அறிந்து, அப்பெயரையே சொல்லி ``சிவனே, சிவனை என்று ஓலம் இட்டுத் துதிக்க. `அந்த மெய்த்தவத்திற்கும் தலைவனே நான்` என்பான் போல அப்பெருமான் என்முன்னே வந்து நின்றான். இவ்வாறுதன் பெயரைச் சொல்லுவாரிடத்தெல்லாம் உடனே தோன்றுகின்ற அப்பெருமானை, `யார், யார் எவ்வெப்பெயரால் அழைக்கின்றாரோ, அவர் முன்னெல்லாம் அவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் அருளாளன்` எனவும் அறிந்து நான் பணிபவனாயினேன்.

குறிப்புரை :

சிவபெருமானை, `சிவபெருமான்` என்று சொல்பவ ரெல்லாம் அப்பெயரின் பொருளை உணர்ந்து சொல்லாமல், பொதுவாக ஓர் இடுகுறியாகவே நினைத்துச் சொல்கின்றனர். ஆயினும் அப்பெயர், `அமங்கலம்(பிறப்பிறப்பு) ஒருபோதும் இல்லாத நிறைந்த மங்கல குணத்தை யுடையவன்`3 எனவும், பேரின்பத்துக்குக் காரணன்` எனவும், `முற்றுணர்வினன்` எனவும், தூய தன்மையன்` எனவும் l பொருள் தருதலால் `அவ்வெல்லாத் தன்மைகளையுடையவனே அவன்` என உணர்ந்ததையே ``சிவபெருமான் என்று`` என்றார். இதில் `உணர்தல்` என்பது சொல்லெச்சம். தவம், `பொதுத் தவம்` என்றும், `மெய்த் தவம்` என்றும் இருவகைப்படும். பொதுத் தவம் பசு புண்ணியங்கள். மெய்த்தவம் சிவபுண்ணியம், இது சிவஞான போதத்துள், ``இறப்பில் தவம்`` எனப்பட்டது. இவற்றுள் இங்கு, ``தவம்`` என்றது மெய்த் தவத்தை. பின்மூன்று அடிகளிலும் சந்திப் பகர ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப் பட்டது. மூன்றாம் அடியில் அதனுடன், அகரத்தையடுத்து வந்த சந்திரவகர ஒற்றும் தொகுக்கப்பட்டது. ``அவ்வப்பெருமான்`` என்றது, அவரவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் பெருமான் என்றபடி இக்கருத்தே, ``யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்``3 எனக் கூறப்பட்டது. சிவனைச் சிறப்பாகக் குறிக்கும் மற்றைப் பெயர்களுள் `பவன்` என்னும் பெயர் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. `பவன்`` எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால் இவன் எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே``9 என அப்பரும் அருளிச் செய்தார். ``பவன்`` என்பதற்குப் பொருள், `நினைத்த இடத்தில் நினைத்த உடன் தோன்றுபவன்` என்பது ஆகலின், அப்பெயரையே சொல்லி அழைப்பவன்முன் அவன் எதிர்படுதல் உறுதி` என அப்பர் அருளிச்செய்தார். அந்தக் குறிப்பே இங்கு, சிவபெருமானைப் பணிந்து நின்றேன்`` என்பதில் அமைந்திருத்தலை உணர்க. ``நின்றேன்`` என்றது, `இனி நான் வேறொன்றை நினையேன்` என்றவாறுஎனவே இதுவே மோன சமாதியாதலை உணர்க.
இதனால், சிவபெருமானை உள்ளவாறுணர்ந்த அடையவரே மோன சமாதியில் நிற்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

பொழிப்புரை :

முதல்வகட்கெல்லாம் முதல்வனாய் முடிநிலை முதல்வனாயுள்ள சிவனையே நான் முதல்வனாகத் துணிந்தேன். அதனால் அவனையே நான் வணங்கினேன். இனி அவனை வணங்குதலைத் தவிர பிறிதொன்றையும் அவாவ மாட்டேன். அவனையே என்உள்ளத்தில் இருத்தினேன். அதனால், எனது முனைப்பு நீங்கப் பெற்றேன். அவனது உண்மை யியல்புகள் எல்லாம் எனக்கு அனுபவமாயின.

குறிப்புரை :

மோன சமாதி வாய்க்கப் பெறும் வழியையும் அது வாய்க்கப் பெற்றாரது இயல்பையும் தம் அனுபவத்தின்மேல் இட்டுக் கூறியவாறு.
பரம் +அதிபதி =பரமாதிபதி; வடமொழித் தீர்க்க சந்தி அதிபதி - முதல்வன். ``பரமாதிபதியைத் துணிந்து நின்றேன்`` என்பதை முதலிற் கூட்டியும், `ஆதிப் பிரானை உடல் அணிந்து நின்றேன்` என மாற்றி வைத்தும் உரைக்க. அணிதல் - தரித்தல். உள்ளத்தை ``உடல்`` என நாயனார் குறித்தலை மேலேயும் கண்டோம்.* `உடலில்` என ஏழாவது விரிக்க. காண்டல், அனுபவமாக உணர்தல்.

பண் :

பாடல் எண் : 16

என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.

பொழிப்புரை :

எனது நெஞ்சம் சிவனது இரண்டு திருவடிகளையே சார்ந்து, அவற்றையே நினைத்து, அவற்றையே துதித்தலால், எனது பிறவித்தொடர் முடிவடைந்து அற்றொழியும்; இது திண்ணம். இனித் தனக்கு மனம் முதலிய மாயா கருவிகள் ஒன்றும் இல்லாதவனாகிய அவன், இப்பிறப்பிலும் நான் முகந்து கொண்டு வந்த ஊழ்வினையை எனக்கு ஆகாதபடி பிரித்து, எனது உடலுக்கே ஆகும்படி செய் தமையால், எனக்கு இன்பத்தில் மகிழ்ச்சியும், துன்பத்தில் வாட்டமும் ஆகிய முரண்பட்ட நிலைமைகள் இல்லாதபடி அறவே நீக்கிவிட்டான்.

குறிப்புரை :

முன்னம் செய்தல் - நினைத்தல். ஏத்த - ஏத்தலால். ஏத்துதல் வாயின் தொழிலாயினும் அது மனத்தின் வழி இயங்குதல் பற்றி நெஞ்சமே ஏத்துவதாகக் கூறினார். தலைவிதி - ஊழ்; பிராரத்தம். பின்னம் செய்தல் - வேறுபடுத்தல். உடம்பை `யான்` என மயங்குதலும். அதனைப்பற்றிய பொருள்களை `எனது` என மயங்கும் சிவனையே நினைப்பார்க்கு இல்லாமையால் உடலை வந்து பற்றுவ தாகிய ஊழ் அவரைப் பற்றுதலும், அதனால் அவர் மகிழ்ச்சியும், வாட்டமும் அடைதலும் இல்லையாம். இந்நிலையே, `ஞானியர்க்கும் அவர்தம் பிராரத்த வினை உடல் ஊழாய்க் கழியும்` என்று சொல்லப் படுகின்றது. எனவே, இதனால் அணைந்தோரது இத்தன்மைகள் கூறப்பட்டமை காண்க.
``என்னைப் பிணக்கறுத்தான்`` என்பதை, `யானையை அரட்டடக்கினான்` என்பது போலக் கொள்க.

பண் :

பாடல் எண் : 17

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

பொழிப்புரை :

எங்கள் நந்தி பெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கினார். ஆகவே, என் உடம்பு நோய் உறு தலையும், முதுமை எய்தித் தளர்வுறுதலையும் போக்கி `அவை வரும் என்று எண்ணும் எண்ணங்களையும், அஃதாவது கவலையையும் போக்கி, என்னைத் தமக்கு ஆளாகக் கொண்டவராயினார். யானும் தொன்று தொட்டு என்னோடு கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்த வெறுப்பு விருப்புக்களைப் போக்கி, அவரையே சிவமாகக் கண்டு வழிபட்டேன். அதனால் சிவமே என்முன் வந்து நின்றது.

குறிப்புரை :

``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. ``பிணக்கறுத் தான்`` என்பதன்பின் `அதனால்` என்பது வருவிக்க கணக்கு - எண்; எண்ணம். காண், முன்னிலையசை, `என்னை ஆண்டனன்` என முன்னே கூட்டி முடிக்க. ``முன்`` என்பது `முற்றொட்டு` எனப்பொருள் தந்தது. ``துன்பம்`` என்றதனால், `இன்பம்` என்பதும் கொள்ளப்பட்டு, `என்னும்` என ஒரு சொல் வருவித்து, `துன்பம் இன்பம் என்னும் பிணக்கு` என உரைக்கப் பட்டது. `வணங்கல்` என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. தான், அசை, `தானே வந்தது` என்றலும் ஆம்,
இதனால், குருவருளாலே சிவப்பேறு முறையானே வந்து வாய்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு)
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.

பொழிப்புரை :

சிவன் ஒருவனே எனக்குத் தந்தை; குருவாகி வந்து ஆட்கொள்ளும் முதற்கடவுள். அத்தகையோன் முன்பெல்லாம் எனக்கு அகப்படாதிருந்து, இப்பொழுது வந்து என் உள்ளத்திலே அகப்பட்டமை தேவர் கூட்டமும் உடன் வர அவன் பற்றி நின்ற பாசத்தை அரித்தமையாலேயாம்.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முன் வைத்து உரைக்க. உரைக்கவே, முன்னின்ற ``அவன்`` என்னும் சுட்டுப் பெயர் `சிவன்` என்னும் சிறப்புப் பெயராயும் , `சிவன்` என்னும் சிறப்புப் பெயர், அவன் என்னும் சுட்டுப்பெயராயும் நிற்கும். இதனால் சிவன் நந்தி பெருமானாய் நின்று நாயனாரை ஆட்கொண்டதேயன்றி தன் இயற்கை வடிவிலும் காட்சியளித்து அருள்புரிந்தமை பெறப்படுகின்றது. ``ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகின் அளவில்லை``l ஆதலின், `குருவாகி நின்று அருள் செய்தபின்பும் இவர்க்கு இவ்வாறு தோன்றி அருள்புரிவான் ஏன்` என்றும், `இங்ஙனமாயின் ஏனை யோர்க்கும் இவ்வாறு ஏன் அருள் புரிதல் கூடாது` என்றும் அவனை வினாவ நாம் யார்?
`சிவன், தேவர் உடன் கூட வந்து` என மாற்றியுரைக்க, `அகப் பட்ட ஆறு` என்பதில் அகப்பட்டதையே `ஆறு` எனக் கூறினமையின் பெயரெச்சம் தொழிற் பெயரொடு முடிந்ததாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பது போல, `இவன் வாழ்தல், அவனைச் சார்ந்து` என்பது போலத் தொழிற்பெயர் எழுவாய்கள் வினையெச்சப் பயனிலைகளைக் கொண்டு முடிதல் உள ஆகலின், `அகப்பட்ட ஆறு பாசம் அறுத்திட்டு` என முடிந்தது.
இதனால், இயைபு பற்றி நாயனார் தமது தனி அனுபவம் ஒன்றை அருளிச் செய்தார். இதனானே பிறர்க்கும் இது கூடலாம் என்பது உணர்தல் வேண்டி.

பண் :

பாடல் எண் : 19

கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.

பொழிப்புரை :

கருப்பஞ் சாற்றையும், தேனையும் கலந்து உண்டவழி, `அதன் இனிப்பு இத்தகையது` என வரையறுத்துச் சொல்ல வாராமைபோல, `இன்னது` என வரையறுத்துச் சொல்ல வாராத ஓர் இன்பம் இவ்வுடம்பிற்றானே உண்டாகின்றது. (அஃது அரிவையர் இன்பம். அதனால் அதனை மக்கள் பின்னும் வெறாதே விரும்பு கின்றனர்.) ஆயினும், மலரில் மணம் போல அறிவினுள் அறிவாய் எழுகின்றஓர் ஆனந்தம் உண்டு. (அது சிவானந்தம்) அதனை அடையவே உயர்ந்தோர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த ஆனந்தம் அவர்களது முயற்சியால் அவர்கள் அறிவிலே வெளிப்பட, அதனை அவர்கள் நுகர்ந்த பின் அவர்கட்கு மேலே, குறிப்பிட்ட கருப்பஞ்சாறு போன்ற இன்பங்களும் கசந்து விடுகின்றன; ஏதன் போன்ற இன்பங்களும் புளித்துவிடுகின்றன.

குறிப்புரை :

எனவே, `அவை யிரண்டும் கலந்தது போன்ற இன்பமும் அவர் கடுகக் கசப்பும், புளிப்பும் ஆகின்றதேயன்றி, இனிப்பதால் இல்லை` என்பது இசையெச்சம். `இங்ஙனமாகவே அவ்வின்பம் அவர்களால் வெறுக்கப்படுவதாதலைச் சொல்ல வேண்டா` என்பதாம்.
``பெரும்பைம் புனத்தினில் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்,மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்து(து)றக் கைத்ததுவே, 3
என்னும் அனுபவ மொழியை இங்கு எண்ணுக
``கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை தோள்
புணர்ந்தால், புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்,
மணந்தாழ் புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றதே``l
என அருளிச் செய்த திருப்பாட்டிற்கும் உலகத்தாரது பேதைமையைப் புலப்படுக்கு முகத்தால், சிவபோகமே நுகருந் தொறும் நுகருந்தொறும் புதிது புதிதாய் எல்லையின்றி வினைவதாகிய பெரும் போகம் என்னும் உண்மையை உணர்த்தலே கருத்து` என்பதைச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரத்துச் சிற்றுரையால் அறிக.
``பாலொடு தேன்கலந் தற்றே, பணிமொழி
வாலெயி றூறிய நீர்``9
என்னும் திருவள்ளுவப் பயனும் அன்னது.
இதனுள் பாடம்மிக வேறு பட்டதுய ``ஓர் காயத்தில்`` என்பதை முதளிற் கூட்டுக. ``ஓர் காயம்`` என்றாரேனும், இன்பத்தை `ஓர் இன்பம்` என்றலே கருத்து, கலந்தது - கலந்தது போன்றது.
இதன்பின் `உண்டு ஆயினும்` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. `ஆகிய என்னும் ஆக்கச்சொல் உவமை குறித்து நின்றது விரும்புதற்கு எழுவாயும், கைத்தல் புளித்தல்களுக்குக் கோடற் பொருளும் வருவிக்கப்பட்டன.
இதனால், சிவானந்தத்தை நுகர்வார்க்கு ஐம்புல இன்பம் இன்பம் ஆகாது, உவர்ப்பேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளமின்றிக் கருக்கடந் தேனே.

பொழிப்புரை :

வள்ளலாகிய சிசிவபெருமான் முதலில் `சரியை, கிரியை, யோகம்` என்னும் தவ நிலையில் என் உள்ளத்தில் உள்ளப் படும் பொருளாய்ப் பொருந்தி, பின்பு ஞான நிலையில் தனது அருளை வைத்த அந்தப் பயனையே நினைந்து நான் போற்றிக்கொண்டு, என்னால் நிகழ்த்தப்படும் செயல்களையெல்லாம் என் செயலாகக் காணாது அவன் செயலாகவே நான் கண்டுவருதலால், எனக்கெனச் செயலின்றி பிறவியைக் கடந்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

`உள்ளம் ஒட்டியே` என இயைக்க. ஒட்டுதல், உண்மை மாத்திரையால் விளங்குதல், ஆகவே, ``சரியாதி`` என்பதும் சரியை முதலிய மூன்றையே குறித்தன. `அன்பு` எனப் பொருள் தரும் ``அருத்தி`` என்பது இங்கு `அருள்` எனப் பொருள் தந்தது. சிவன் சீவர்களிடத்தில் தான் அவை என்னாது ஒன்றி நிற்றல் அருள் வடி வாயேயாகலின் தம்மிடம் சிவன் அவ்வாறு நின்றமையை, ``அருத்தி வைத்து`` என்றார். அதனானே `அந்நிலை ஞான நிலை`` என்பது போந்தது. `சிவன் தவநிலை அந்நியமாயும், ஞான நிலை அந்நிய மாயும் நின்றான்` என அருளியவாறு ``மீட்டு`` என்பது, வினைமாற் றாய `மற்று` என்பதன் பொருட்டாய் நின்றது. ``வள்ளல்`` என்பதை முதலிற் கூட்டுக. `அருத்தி வைத்த வளமே பாடி` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றிவைத்துரைக்க. நினைவு தோன்றாத வழிப் பாடுதல் தோன்றாமையால் ``பாடி`` எனவே, `நினைந்து` என்பதும் தானே பெறப்பட்டது. ``துருத்தியாய், திருந்தடி உளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந் துரைப்பனே``l என ஆளுடைய பிள்ளையாரும் அருளிச்செய்தார். `மனம், மொழி, மெய்` என்பவற்றுள் மெய்யால் ஆவனவற்றை, கையால் ஆவனவாகவே கூறும் வழக்குப் பற்றி அவற்றை, ``கை வளம்`` என்றும், முப்பொறிகளாலும் வினை வரு மாயினும், வினை பெரும்பான்மை காய்த்தால் வருவனவாகவே கருதப் படுதலால் வினைவாராமையை, ``கைவளம் இன்றி`` எனவும் கூறினார். ``இன்றி`` எனப் பண்பின் நிலை பண்பின்மேல் ஏற்றப் பட்டது. அன்றி, `இன்றாக` எனத் திரிப்பினும் ஆம். இஃது ஈரடி எதுகை பெற்றது. `குறிலை யடுத்த யகர மெய் அசைக்கு ஐகாரம் எதுகையாய் வரும் என்க.
இதனால், மோன சமாதியுற்றார்க்கு அவரது நினைப்பின் தன்மையால் வினை இன்றாமாறும் அதனால் பிறப்பின்றாமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

பொழிப்புரை :

உலகியலிற் செல்லும் செலவிலிருந்து மீண்டவரது உள்ளக் கமலமாகிய தகளியில் ஞானமாகிய விளக்கு அணையாது எரியும் படி, தூண்டா விளக்கின் தகளியில் நெய்யையே, உலகத் தலைவியாகிய ஒப்பற்ற ஒருத்தி எடுத்துவார்க்கும் செயலை முன்சென்று மேற்கொண்டாள், அதனால், அவ்விளக்கின் ஒளி விளக்கத்தில், அனைவரிலும் மாட்சி மிக்கோள் ஒருவனது கை வன்மை இனிது நிகழ்ந்தது.

குறிப்புரை :

`இது குறிப்பிடத்தக்க ஒன்று` என்பது குறிப்பெச்சம். ``அங்கி`` என்றது சுடரை. இது ஞானமே மிக - மிகும்படி, `சோர்வித்தல்` என்னும் பிறவினைத் தொழிற்பெயரில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது. சோர்வித்தல் - சொரிதல்; வார்த்தல். `சோர் வித்தலும்` என்னும் உம்மை சிறப்பு. தூண்டா விளக்காவது மணி விளக்கு. அஃது மாணிக்க மணியே விளக்காக வைக்கப்பட்டு ஒளி தருவது. ``நொந்தா ஒணசுடர்`` என்பேது இதனையே, இதில் மணியே தகளியாகவும், அதன் தன்மையே நெய்யாகவும், அதன் ஒளியே சுடராகவும் இங்குக் கொள்ளப்படுதலின், சிவத்தை அவற்றினுள் தகளியாகவும், அதன் தன்மையாகிய அறிவு அல்லது ஞானத்தை நெய்யாகவும், அருட் சத்தியை உள்ளத் தகழியில் ஞானச் சுடர் அணைந்து விடாதபடி அந்நெய்யை வார்க்கும் பெண்ணாகவும் உருவகித்தார். `புவன சூடாமணி யாகிய ஒருத்தி` என்க. ஞானச் சுடர் ஒளிவிட்டு விளங்கவே, அவ்விளக்கத்தில் சிவத்தின் செயற்பாடு தடையின்றி நிகழ்ந்தது என்பதாம்,
ஞானம் முதலியவற்றைச் சுடர் முதலியவாக உருவகித்து, உள்ள கமலத்தைத் தகளியாக உருலவகம் செய்யாமையால், இஃது ஏகதேச உருவகம். `அங்கு, தூண்டா விளக்கு, தகளி, நெய்` என்பன சிறப்புருவங்கள் யாவரினும் மாட்சிமையுடைய ஒருவன் சிவன். ``கை`` என்பது அதன் செயலைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், முத்தரது அறிவில் அருட்சத்தி மேன்மேற் பதிந்து ஞானத்தை மிகுவித்தலால், அவர்களது அறிவில் சிவ விளக்கம் மிகுந்து, சிவானந்தம் மேன்மேல் விளைவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.

பொழிப்புரை :

`தன்பால் காதல் மிக்க பெண்டினிடம் காதல் மிக்க ஆடவன் அவளது நலத்தை எவ்வாறு கண்டு, கேட்டு உண்டு, உயிர்த்து, உற்று அனுபவிப்பானோ அது போல என்பால் அருள்மிக்க சிவனிடத்தில் நான் அன்பு மிகுந்த அவனது ஆனந்தத்தைப் பல்லாற்றானும் அனுபவிக்கின்றேன் என்பது இம் மந்திரத்தின் திரண்ட பொருள். (திருத்துதல் - தனக்கு ஏற்ற வகையில் கொள்ளுதல். `தானே` என்பது பாடமன்று)

குறிப்புரை :

`அன்பால்` என உருபு விரித்து, `அன்பால் உள் உருகி, என்பும் உருக. அழுவன்;அரற்றுவன் எனவும் `என் பொன் மணியை இறைவனை, ஈசனை இராப் பகல் ஏத்தி, தின்பன் ... நானே எனவும் இயைக்க.
`அன்பே இன்பாவதன்றி, வேறில்லை` என்பதை,
``ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்து
இன்பமே! என்னுடை அன்பே``8
எனவும் `யான் அனுபவிக்கும் இன்பமாவது என்னுடைய அன்பே` என அருளிச் செய்த திருவாசகத்தாலும்,
``இன்பில் இனிதென்றல் இன்றிண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையை அது`` *
என்னும் திருவருட் பயனாலும் அறிக.
``அன்பே சிவமாவது ஆரூம் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே``*
என இந்நாயனாரும் மேலே கூறினார்.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``*
என்றார் தொல்காப்பியனாரும், எனவே அன்பு நிலைதான் இன்ப நிலையேயன்றி, அனபில்லாத நிலை ஒரு வறட்டு நிலையேயாகும்.
இதனைத் திருவள்ளுவர்,
``அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதேதால் போர்த்த உடம்பு`` *
என வேறொரு வகையால் விளக்கினார். இஃதே பற்றி மெய்கண்ட தேவரும், ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``3 என்றார்.
ஞானமாவது, பொருளியல்புகளை உள்ளவாறு உணர்தல், அது, துன்பப் பொருளின் நீங்கி, இன்பப் பொருளைப் பற்றுதற்கு ஏதுவாம், ஆயினும் அதனாலே இன்பப் பொருளை உணர்ந்து பற்றினவன் அதனை மேலும் மேலும் விரும்பிதலாற்றான் அதனது இன்பத்தை அனுபவித்தல் கூடும். அந்த விருப்பமே அன்பு, அது முடிவின்றி வளர்தலாற்றான் இன்பமும் முடிவின்றி வளர்கின்றது. இதனையே ``பெருமபோகம் பின்னும் புதிதாய் ... ... ... வளர்கின்றதே`` என்னும் திருக்கோவையார் விளக்கிற்று.
``அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்,
செறிதொறும் சேயிழை மாட்டு``3
என்றதும் இதனையே. ஆகவே, `ஞானத்தால் அடையத்தக்கது அன்பே` என்பதும், `அந்த அன்பே இன்பத்தை விளைக்கும்` என்பதும் போதரும். இதனையே சேக்கிழார்.
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்`` l
என அருளிச்செய்தார். இவ்வாற்றால், ஞானம் வித்தாக, அன்பே விளைவதால் விளங்கும். வித்தை வேண்டுவது, விளைவின் பொருட்டேயன்றோ! ஆகவே, ஞானத்தை மட்டும் வேண்டு, அன்பை வேண்டாதவர், வித்தை வேண்டி, விளைவை வேண்டாதவர் ஆகின்றனர். இதனைத் திருவிந்தியார்.
``வித்தினைத் தேடி, முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவந் கென்பெணே!உந்தீபற``8
எனக் கூறிற்று. இன்னும் ஞானத்தை வேண்டி, அன்பை வேண்டாத சமயங்களைச் சுட்டி அந்நூல்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவியறாதேயென் றுந்தீபற;
அவ்வுரை கேளாதே; உந்தீபற``8
என்றும் கூறிற்று. இவ்வுந்திகளின் கருத்தைத் திருக்களிற்றுப் படியார்.
``வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்;
வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில், - வித்ததனில்
காணாமை யால்அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால்அற்றார் பேறு`` *
என விளக்கிற்று.
``விறகில் தீயின், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்(டு) உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே`` 3
என்னும் அப்பர் திருமொழியில், ``உறவு`` என்றது, சிவன் சீவர்களோடு அருள் காரணமாகக் கொண்டுள்ள ஆண்டான்
அடிமைத் தொடர்பினை அறியும் அறிவையும், ``உணர்வு`` என்றது, அத்தொடர்பினை அறிந்து, அவனையே விரும்பி, அவனிடத்திற் செலுத்தும் அன்பையும் குறிப்பன. அவற்றுள், அறிவைக் கோலாகவும் அன்பைக் கயிறாகவும் உருவகித்தமையால், `கயிற்றில் வழிக்கோல் இருந்து கடைதல் கூடாமையால் விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படாதவாறுபோல, அறிவாகிய ஞானம் இருந்தும் அன்பு இல்லாவிடில் சிவனிடத்தில் தோய்தல் கூடாமையால், மறைய நின்றிள்ள அவன் முன்னிற்றல் இயலாது` என்பது போவ்தவாறு அறிக. எனவே, இன்ப நிலைக்கு முடிநிலை ஏது அன்பேயாயிற்று.
இதனையே இம்மந்திரத்தால் அனுபவமாகக் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும்,
``மனம்வி ரிந்து குவிந்தது! மாதவ
மனம்வி ரிந்து குவிந்தது வாயு;
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்;
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே``
என்பது யாப்பு, முற்றிலும் வேறுபட்டதுடன், பொருள் சிறப்பிலதாயும். இவ்விடத்திற்கு இயைபில்லாதாயும் இருத்தலின் நாயனாரது வாக்காகத் தோன்றவில்லை.]

பண் :

பாடல் எண் : 1

மாயனை நாடி மனநெடுந் தேர்ஏறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் நாதனைக்
காயமின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரை :

எத்துணையோ பேர் எத்துணையோ வகையில் காண முயன்றும் காணப்படாது ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவனை, `எப்படியும் கண்டுவிட வேண்டும்` என்று பலர் அவன் ஒளிந்திருக்கும் இடத்தையறியாமல், மனமாகிய நெடுந்தூரம் செல்லத்தக்க தேர்மேல் ஏறிக்கொண்டுச் சென்று வருந்துகின்றார்கள். நானும் அவர்களைப் போலத்தான் எங்கெங்கோ அவனைத் தேடி வருந்தினேன். ஆயினும் நான் `அவன் ஒளிந்திருக்கும் இடம் எனது உடம்பாகிய ஒளியிடந்தான்` என்று தெரிந்து அங்குச் சென்று அவனைக் கண்டு விட்டேன்.

குறிப்புரை :

மாயம் - வஞ்சனை; கள்ளத்தனம். அதனையுடையவன் மாயன். சிவன், பல்லாற்றானும் தேடிய பல்லோர்க்கும் அகப்படாத கள்வன் ஆதலை மாணிக்க வாசகர் தமது திருஅண்டப் பகுதியுள் நூற் றிருபத்து நான்கு முதல் நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்தமை காண்க. தேடுவார் தேடும் பொருளாயிமை பற்றி. ``போயின்`` என்றாரேனும், `இருந்த` என்றலே கருத்தென்க. ``நாடு`` மூன்றனுள் நடுவணது ஒன்றே தன் பொருளைத் தந்தது; ஏனை இரண்டும் `இடம்` என்னும் பொருளவாய் நின்றன. `தேயம் பெருநாடும், நாடு உள்நாடும் ஆம்` என்க. `காய நாடு, மின் நாடு` எனத் தனித் தனி முடிக்க. மின் - ஒளி. `ஞானியரது உடம்பு ஊனுடம்பாகாமல் ஒளியுடம்பாம்` என்பது கொள்கை. ஆகவே, `அஞ்ஞானியரது உடம்பன்றி, ஞானியரது உடம்பே சிவன் இருக்கும் இடம்` என்றற்கு, ``மின் என்றும், ``கண்டறி வார் இல்லை காயத்தில் நந்தியை`` என்று முன்னருங் கூறினார்.1
இதனால், `இத்தோத்திரம் புறக்காட்சித் தோத்திரம் அன்று; அகக் காட்சித் தோத்திரம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மன்னும் மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் யாரெனின்
முன்னியல் காலம் முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றேதம் பாடறி வீரே.

பொழிப்புரை :

நிலைபெற்ற மலைபோலும் தோற்றத்தை உடையதாய், ஆயினும் மதத்தால் அடங்காது நடக்கும் யானையின் மேல் பலர் இனிய இசைபாடிச் சூழ்ந்து வர இப்பொழுது உலாவரும் அரசர்கள் யாவரெனின், `முற்பிறப்பில் சிவனது ஆயிரம் நாமங்களை எடுத்தோதித் திரித்தவர்` என்றே அவரது பெருமையின் காரணத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

குறிப்புரை :

முன் இயல் காலம் - முற்பிறப்பு. ``என்றே`` என்னும் கோரம் தேற்றம்.
``வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி,
நந்தாவனஞ் சூழ்
தேனக மாமலர் சூடிச்செல் வோரும்,
சிதவல் சுற்றிக்
கால்நகம் தேயத்திரிந் நிரப்பாரும்
கனக வண்ணப்
பால்நிற நீற்றற்கு அடியரும், அல்லாப்
படிறருமே``
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண்ணாள்வீர்,
பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனொடு
ஒன்றலுற்றீர்,
நலகா மலரால் அருச்சிமின்; நாள்
நரகத்து நிற்கு
அலகா முறுவீர் அரனடி யாரை
அலைமின்களே``1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.
``மத வாரணம்`` என்றது, ஐராவதத்தையும் குறிக்கும் குறிப்பினது.
``வண்டுளருந் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்டரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் (இந்திரன்) இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்``2
``வானம் ஏத்த யான் (மாயோன்) வைகுந்த வாழ்வுபெற்றதுவும்,
ஞான நான்முகன் சத்திய உலகம்நண் ணியதும்,
ஏனை விண்ணவர் தத்தம வாழ்க்கை எய்தியதும்
ஆனுயர்த்தவர் அருட்குறி அருச்சனைப் பயனால்``3
எனக் காஞ்சிப் புராணத்திலும் சொல்லப்பட்டன. நல்வாழ்வு வாழ் வோரைக் கண்டால், ``அஃது அவர் பூசா பலம்`` என்றல் இன்றும் வழக்கில் உள்ளது. ``பாடறிவீரே என்றது, பன்னுவீராயின் நீவிரும் பெருவாழ்வு வாழலாம்` என்றபடி.
இதனால், தோத்திரத்தின் பயன் உணர்த்தும் முகத்தால் அதன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

முத்தினில் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணா(து) அரற்றுகின் றேனை ஒர்
பித்தன் இவன்என்று பேசுகின் றாரே.

பொழிப்புரை :

பொன்னின் தராதரத்தை அளத்தற்கு உதவுகின்ற பொன் `ஆணிப் பொன்` எனப்படும். அஃது ஏனை எல்லாப் பொன்னினும் உயர்ந்தது. அதுபோல முத்துக்களின் தராதரத்தை அளக்க உதவுகின்ற முழுதும் `ஆணி முத்து` எனப்படும். அஃது ஏனை எல்லா முத்துக்களினும் உயர்ந்தது. அதுபோலச் சிவன் ஏனைத் தேவர் பலரினும் உயர்ந்தவன். பின் அவன், திருமேனி அழகால் காலையில் தோன்றும் ஞாயிற்றை ஒப்பான்,
``காலையே போன்றிலங்கும் மேனி; கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலும் சடைக்கற்றை; மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு``1
என அம்மையாரும் அருளிச்செய்தார். தேவர் என்று எத்துணைப் பேர் உளரோ அத்துணைப் பேராலும் `இறைவன்` என்று ஏத்தப் படுபவன் அவன்; கருவுற்ற நாள்முதல் இன்றுகாரும் அவன் என்னைப் புரந்து வருதலால் எனக்குத் தந்தை. ஆகவே, அரைக்கணமேனும் அவனை நான் காணமல் எப்படியிருத்தல் கூடும்?
``பாணியில் வீணை பயின்றவர் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே``2
என அப்பரும் அருளிச்செய்தார். அதனால் இவ்வுலக நிலை அவனை இடையறாது காணும் தன்மையுடைத்தாகாமையால் யான் `ஓ` என்று அழைத்து அரற்றிக் கதறுகின்றேன். எனது நிலைமையை அறிந்து கொள்ளாத உலகர், `துன்பத்திற்கு ஏதும் காரணம் இல்லாதிருக்கவும் இப்படி இவன் எப்பொழுது அழுது கொண்டிருக்கின்றான்; இவன் பித்துக் கொள்ளியல்லது வேறு யார்? என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றார்கள்.

குறிப்புரை :

`அதற்கு நான் என் கடவேன்` என்பது குறிப்பெச்சம். ``சகம் `பேய்` என்று தம்மைச் சிரிப்ப``3
``உத்தமன், அத்தன், உடையான் அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு `மால்இவன்` என்ன மனநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்தெவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே``4
என்றார் மாணிக்க வாசகரும்.
இதனால், உடம்பில் நிற்குங்காறும் சிவனது தலைப்பாடு இடையிடும் பொழுதெல்லாம் ஞானிகள் ஆற்றாமையால் அழைத்தும், அலறியும் நிற்றல் கூறப்பட்டது. அழைத்தலே தோத்திரம் ஆதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றான்அடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

பல்வேறு வகைப்பட்ட அறங்களையெல்லாம் தனது வடிவாகக் கொண்டிருத்தலால் `அற ஆழி` எனப்படுபவனும், எல்லா வற்றையும் ஒருங்கேயறிதலால், பேரறிவாளன் - முற்றுணர்வினன்` எனப்படுபவனும், எல்லாப் பொருள்களிலும் தான் நீக்கம் அற நிறைந் திருப்பினும் அங்கெல்லாம் பாலல் நெய்போல விளங்காது நின்று, தன் அடியவர் உள்ளங்களில் தயிரில் நெய்போல விளங்கி நிற்பவனுமாய் இருப்பவன் எங்கள் சிவபெருமான். அவன் என் உள்ளத்திலும் புகுந்துவிட்டமையால் அவனையே தோத்திரித்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஈற்றில் வந்த ``புகுந்து நின்றான்`` என்பது, `புகுந்து நின்ற அவன்` எனப்பொருள் தந்தது. புண்ணிய மூர்த்தி - அற வடிவினன். போது அறிவு - நிரம்பிய அறிவு. புகுதல், விளங் -குதலையே குறித்தது.
இதனால், `சிவன் இத்தன்மையன் ஆகலின் அவனே தோத்திரிக்கப்படுதற்கு உரியவன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூதக்கண் ணாடி புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் றேனே.

பொழிப்புரை :

பூதக் கண் ஆடி - பூத காரியமாகிய `கண்` என்னும் ஆடி. இஃது உருவகம். இது முகத்தில் உள்ள கண்ணைக் குறித்தது. இக் கண்ணிற்கு அகப்படாதவன் சிவன். ஆயினும், போது - அடியார் களுடைய உள்ளக் கமலத்தில் என்றும் விளங்கியே நிற்கின்றான். வேதக் கண்ணாடி - வேதமாகிய கண்ணாடி. இதுவும் உருவகம். பொருள்களைத் தெளிவுற விளக்குதல் பற்றி வேதத்தைக் கண்ணாடியாக உருவகம் செய்தார். இஃது ஆகமத்தையும் உள்ளடக்கியதே. வேதாகமங்களை உணர்வார்க்குச் சிவன் அந்நூல்களின் பொருளாய், உணர்பவர்க்கு வேறாய் நின்று விளங்குகின்றான். இனி, நீதிக்கண் நாடி நினைவார் மனத்து - ``சிவன் - நீதி பலவும் தன்ன உருவாம் என மிகுத்த தவன்``1 என உணர்ந்து அந்த உணர்வு வடிவாகத் தமது அறிவினுட் காண்பவர் கட்கு அவன் அவர்தம் அறிவுக்கறிவாய், ஒன்றாகியே விளங்கு கின்றான். அத்தகையோனை நான் பலர் பாடும் தோத்திரப் பாடல் -களில் கேட்டுக் கண்ணாடி நிழலைத் தெளிவாக உணர்தல் போல உணர்ந்து நின்றேன். இங்குள்ள கண்ணாடி அதன் நிழலைக் குறித்த ஆகுபெயர். அந்நிழல், தெளிவாக உணரப் படுதற்கு உவமையாயிற்று.

குறிப்புரை :

`அதனால், நானும் அவனைத் தோத்திரித்தலையே மேற்கொண்டேன்` என்பது கருத்து. முதல் மூன்று அடிகள் அவன் தோத்திரிக்கப்படுவதற்கு உரியன ஆதலையும் ஈற்றடி தோத்திரங்களில் அவன் இனிது விளங்கி நிற்றலையும் குறிப்பால் உணர்த்தின. இவையே இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டன என்க.

பண் :

பாடல் எண் : 6

நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.

பொழிப்புரை :

`அளவற்ற மந்திரங்களை ஓத வல்லேம்` என்று சொல்லி, வேத வேள்விகளை அளவின்றிச் செய்தோர் யாவரும் அவற்றின் பயனாகிய போகங்களை அனுபவித்தலோடு போய் விட்டார்கள். ஆகவே, சிவனை அவனது அளவற்ற திருப்பெயர்களைச் சொல்லித் தோத்திரியுங்கள்; அளவற்ற இன்பத்தில் பொருந்துவீர்கள்.

குறிப்புரை :

`ஓமம் செய்தவர்கள் பெற்றது காமம்` எனவே, `நாமம் ஓதுவார் பெறுவது மோட்சம்` என்பது பெறப்பட்டது. ``காமம், ஏமம்`` எனவும், `ஒழிந்தார், இசைவீர்` எனவும் கூறிய சொற்குறிப்புக்களால், ஓமத்தை விலக்குதற்கண்ணதே நாயனாரது கருத்தாதல் விளங்கும். ``பசித்துண்டு பின்னும் பசிப்பானையொக்கும் - இசைத்து வருவினையில் இன்பம்``2 என மெய்கண்ட தேவரும் அதனை விலக்குதலையே மேற்கொண்டார்.
``அவிசொரிந் தாயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று``2
என்னும் திருக்குறளும் இக்குறிப்புடைத்து. ``ஆயிரம்`` என்றவை அளவின்மை குறித்து நின்றன.
இதனால், வேள்வி மந்திரங்களை ஓதுதலைவிட, வழி பாட்டுத் தோத்திரம் பயனுடைத்தாதல் கூறப்பட்டது.
[இதன் பதிப்புக்களில் காணப்படும், ``போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை`` என்னும் மந்திரம் நான்காம் தந்திரத்தின் தொடக்கமாய் வந்தது.]1

பண் :

பாடல் எண் : 7

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தி னூடுசென் றப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டவன்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

பொழிப்புரை :

தேவருலகமும் உங்களை வழிபடுமாறு, நீவிர் உங்கள் உடம்பில் உள்ள ஆதார கமலங்களில் மந்திர ரூபமாய் நுணுகிச் சென்று, அவற்றிற்கு அப்பால் நிராதாரம், அதற்கப்பால் மீதானம் ஆகிய இடங்களை அடைந்து அங்கே நின்றுகொண்டு சிவனைப் பல்லாற்றானும் நினையுங்கள். அவ்வாறு நினைகின்றவர்களில் எவனாயினும் ஒருவன் மீண்டு கீழே வருவானாயின், அவன் மயக்கம் தருகின்ற மதுவை நிரம்ப உண்டு, அதன் கீழ்மையை உணர்ந்து வெறுப்படையும் நிலை உண்டாதலும் கூடும்.

குறிப்புரை :

``வானோர் உலகம் வழிபட`` என்பதை இரண்டாம் அடியின் முன்னர்க் கூட்டிப் பின் இரண்டாம் அடியோடு முதலிற் கூட்டி யுரைக்க. நானாவிதம் செய்தல் - பலவகைப்படுத்துதல். அஃதாவது, சிவன், (ஹடயோகம், மந்திரயோகம், ஆதாரயோகம், நிராதார யோகம் முதலியவற்றில் நின்று அருளுமாற்றையெல்லாம் நினைத்து துதித்தல். மீளுதல் யோக நிலையினின்றும் நீங்கி உலகமுகப்படுதல். ``தேன்`` என்றது, மதுவை. `தண்ணீர்` என, நகை தோன்றக் கூறுதல்போலக் கூறிய வஞ்சப்புகழ்ச்சி. ``மீண்டவன் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆம்`` என்றது, `உலக மாயையில் வீழ்ந்து அல்லற்பட்டுப் பின் வெறுத்தலும் கூடும்` என்னும் பொருளைத் தோற்றுவித்தலின், பிறிது மொழிகல். `நிராதார மீதானங்களினின்று மீளுதல் கூடாது` என்பதை இங்ஙனம் கூறினார். `மீட்சியைத் தோத்திரம் விலக்கும்` என்பது இங்குள்ள குறிப்பாகக் கொள்க.
இதனால் தோத்திரம் மீதானத்தில் சென்றோர்க்கும் உரித்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வந்துநின் றான்அடி யார்கட் கரும்பொருள்
இந்திர னாதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர்த துழனிஒன் றல்லது
அந்தர வானத்தின் அப்புற மாமே.

பொழிப்புரை :

(`தோத்திரம்` என்னும் அதிகாரத்தை முதலில் `தோத்திரத்தின் சிறப்புணர்த்துவது` என்னும் பொருளதாக வைத்து, முன் மந்திரம் வரையில் அதனையே கூறிவந்த நாயனார் தோத்திரத்தைக் கூறுவது` என்னும் பொருளதாக வைத்து, இது முதலாக வரும் மந்திரங்களில் தோத்திரமே செய்கின்றார். `இவ்வாற்றால் பிறரும் தோத்திரம் செய்யப் பயன்படும்` என்பது பற்றி திருவள்ளுவ நாயனாரும், `பெரியாரைப் பிழையாமை` என்ற ஓர் அதிகாரத்தை இரண்டு பொருளதாக வைத்துக் கூறியதைக் காணலாம்.) இவ்வுலகில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற இன்ப ஆரவாரமே யல்லது பிறிதொரு சிறப்பும் இல்லாத விண்ணுலகச் சிற்றின்பத்தை, நூறு பரிமேதங்களை வேதம் நுவன்றவாற்றானே சிறிதும் குறையின்றி வருந்திச் செய்து இந்திர பதவி எய்துவோர் முதலாகப் பலர் மயக்கத்தால் விரும்பினாராயினும் தன் அடியவர்களால் மட்டுமே பெறப்படுகின்ற சிவன் தரும் இன்பமே அவ்விண்ணுலக இன்பங்கட் கெல்லாம் அப்பாற்பட்ட அரிய பெரிய இன்பமாகும்.

குறிப்புரை :

``அந்தம்`` `வெளி` என்னும் பொருட்டாய், யாதும் இன்மையைக் குறித்தது. ``வானம்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்து விளையும் இன்பத்தைக் குறித்தது. இதனை முன்னர், வேண்டுதலுக்குச் செயப்படுபொருளாக்கிப் பின்னர், `அரும்பொருள் அதனின் அப்புறம் ஆம்` என இயைத்துரைக்க. எல்லாம், `பொருள்` எனப்படுதலின், இங்கு இன்பம் ``பொருள்`` எனப்பட்டது. `அடியார்கட்கு வந்து நின்றானது பொருள்` என இயைக்க. வந்து நிற்றல், கிடைத்தல்.
இதனால், சிவன் பிறவிடத்தில்லாத பேரின்பத்தைத் தருதல் எடுத்தோதிப் புகழப்பட்டது.
``செங்க ணவன்பால், திசைமுகன்பால், தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா``1
என்ற திருவாசகத்தைக் காண்க.

பண் :

பாடல் எண் : 9

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி `இறைவன் இவன்` என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணிற் படுத்தச் சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

வானில் தெளிவாய் இருந்த நீர் மண்ணில் வீழ்ந்த வுடன் அம்மண்ணின் தன்மையைப் பெற்றுத் தன் தன்மை திரிந்தது போல, மக்களும் அநாதியே மும்மலச் சார்பினால் அறிவு கலங்கி, வேதாகமங்கள், ``சிவனொடொக் குந்தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை`` என அறுதி யிட்டுரைக்கவும் அதனைத் தெளிய மாட்டாராய், ``அதேவர் தேவர் அவர் தேவர் என்றிங்ஙன் - பொய்த்தேவு பேசிப் புலம்புவார்`` ஆயினர். ஆயினும், பருகுதற்கு உரிய நீராக ஒருவன் குளத்தினின்றும் சிறிது நீரை எடுத்து இல்லத்தில் ஒரு பக்கத்தில் தேற்றாங் கொட்டை யிட்டுத் தெளிய வைப்பதுபோல நல்லாசிரியன் ஓரிடத்திலிருந்து, பல சொல்லி ஆரவாரியாது ஒரு சொல் உறுதியாற் சொல்லித் தெளிவித்த வழி. அங்ஙனம் தெளிவிக்கப்பட்டவன், `சிவனே தெய்வம்` என்று தெளிந்து சிவனை அடைந்து, சிவனே ஆய்விடுவான்.

குறிப்புரை :

எண் - எண்ணம்; என்றது அறிவை. ``இவன்`` எனச் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்வந்தது. ``உண்ணில்`` என்பது, `உண்ண வேண்டின்` என்னும் பொருட்டாய், ``படுத்த`` என்பதனோடு முடிந்தது. `தெண்மையின்` என்பதில் மையீறு தொகுத்தலாயிற்று. தெண்மை - தெளிவு. இன், உவம உருபு. ``படுத்த`` என்பது, `ஆக்க` என்னுப் பொருட்டாகிய செயவெனெச்சம்.
``குருவே சிவம்``2 என்றாராகலின், `சிவன் குருவாய் வந்து பாசத்தை நீக்கி, உண்மையை உணர்த்தாதவழிச் சீவன் சிவனாமாறு இல்லை` என்பதை வலியுறுத்தி முகத்தான் `சிவன் யாண்டும் உள்நின்று உணர்த்தி வருதலே யன்றி முடிவில் குருவாகி வந்து பாசத்தை நீக்கிச் சீவனைத் தானாக்கியும் வைக்கும் கருணையாளன்` என அவனது கைம்மாறு கருதாத கருணையுள்ளத்தை இதனால் புகழ்ந்தார் என்க.
``சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``1
என்னும் திருமுறையால், சிவன் சீவரைத் தானாகச் செய்யும் கருணையையும்,
``சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்வளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய் இதனைச் செப்பு``2
என்னும் சாத்திரத்தால் குருவினாலன்றி மெய்யுணர்வு பிறவாமையையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 10

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலஞ் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே.

பொழிப்புரை :

சிவன், மெய்த்தவத்தாலன்றிப் பொய்த்தவத்தால் அணுகப்படாதவன்; பிறிதொன்றை விரும்பாது தன்னையே விரும்பு -பவர்கட்கு அங்கை நெல்லிக் கனியென விளங்கி அதனோடேதானும் தூயனாய், அவரையும் தூய்மை செய்து இன்பப் பொருளாயும் இலங்குபவன். ஆகவே, நானும் அவனையே நாடிய காரணத்தால், ``அலையிலாத சாகரம் போலவும், அநிலம் இல்லா விளக்குப் போலவும்`` அலையின்றி அமைதியுற்றேன்.

குறிப்புரை :

சிவ நெறியில் `தவம்` எனப்படுவன சரியை கிரியா யோகங்களே. அவை பயன் கருதிச் செய்யுமிடத்து `உபாயச் சிவ புண்ணியம்` எனப்பட்டு, நேரே ஞானத்திற்குச் சாதனமாகாது, உண்மைச் சிவ புண்ணியம் வழியாகவே ஞானத்திற்குச் சாதனமாம். பயன் கருதாது செய்யப்படும் சரியை முதலியனவே `உண்மைச் சிவ புண்ணியம்` எனப்பட்டு ஞானம் வாயிலாகச் சிவனைக் கூட்டுவிக்கும். அது பற்றியே சிவனை, `மெய்த்தவத்தாலே அடையப் படுவன்` என்றார். பயன் கருதாது செய்யும் சிவ புண்ணியம் மெய்த்தவம். ஆகவே, பயன் கருதிச் செய்யும் சிவ புண்ணியம் பொய்த்தவம் ஆயிற்று.
``கள்ளனேன்`` கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கவித்துப் போக்கி``1
``காமியம் செய்து காலங் கழியாதே``2
``யானே பொய்;என் நெஞ்சும் பொய்; என்
அன்பும் பொய்``3
என்றாற்போல, `கள்ளம், பொய்` என வருவன எல்லாம் பயன் கருதிச் செய்யும் சிவத் தொண்டையும்,
``மெய்கலந்த அன்பர்அன்பு எனக்கும ஆக வேண்டுமே`` 4
``மெய்த்தொண்டர் செல்லும் நெறியறியேன்``5
என்றாற்போல, `மெய்யன்பு, மெய்த்தொண்டு` என வருவன எல்லாம் பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யும் சிவத் தொண்டையும் குறிப்பனவாம். பொய்த் தொண்டர்கட்குச் சிவன் அகப்படாமையை மாணிக்க வாசகர் தமது திருவண்டப்பகுதி நூற்றிருபத்தாறு முதல், நூற்று நாற்பத்தைந்து முடிய உள்ள அடிகளால் விரித்துக் கூறி, மெய்த்தொண்டர்களுக்கு அங்கை நெல்லிக்கனிபோல் விளங்குதலை, ``தடக்கையின் நெல்லிக் கனி எனக்கு ஆயினன்`` என நூற்றறுபத் -தாறாம் அடியில் விளங்கக் கூறினார்.
நெல்லிக்கனி தூய்மைக்கும் இனிமைக்கும் உவமை. இன்னும் அருநெல்லிக்கனி சாவா மருந்தாதல் அதியமான், ஔவையார் வரலாற்றால் அறியப்படும். கனிந்த நெல்லிக்கனி, தன் உள்ளே யிருக்கும் விதையை ``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``6 இனிது விளக்குதல் பற்றி அஃது இனிது விளங்குதற்கு உவமையாகச் சொல்லப்படும். அக்கனி அகங்கையில் இருந்துவிட்டால், தெளிவு இன்னும் மிகுதியாம். இஃது அதன் தூய்மையாலே நிகழ்வதாம். நெல்லிக்காயைத் தின்றபின் குடிக்கும் தண்ணீரும் இனித்தல் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டது. அத்தன் - தந்தை. ``தேவர்கள் அத்தன்`` என்பது, `சிவன்` என்றவாறாய், ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. ``நின்ற`` என்னும் பெயரெச்சத்திற்கு முடிவாயிற்று. இங்குச் சிவனது பெருமைகளை எடுத்துக் கூறியது, அவனை நாடியபின் பிறரை நாட வேண்டாமையைக் குறிப்பால் உணர்த்தற்கு. `ஒழி` துணிவுப் பொருண்மை விகுதி.
இதனால், சிவபெருமான் தன்னை அடைந்தவர்க்குக் குறைவிலா இன்பமும், தூய்மையும் உளவாக விளங்கி நிற்கும் தகைமையனாதல் கூறப்புகழ்தல் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அமைந்தொழிந் தேன் அள வில்புகழ் ஞானம்
சமைந்தொழிந் தேன் தடு மாற்றம்ஒன் றில்லை
புகைந்தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலு மாமே.

பொழிப்புரை :

இம் மண்ணுலகம் தீக்குணங்கள் பலவும் மூண்டு எரியும் இடம். புண்ணியமே வடிவான சிவன் இதன்கண் தன் திருவடி தோயும்படி எழுந்தருளி வந்து மெய்ந்நெறிப் பொருளை வகை வகையாக வகுத்துத் தெளிவிக்கின்ற குருமூர்த்தியும் ஆவான். அத்தகைய குருவருளால் நான் அளவற்ற புகழையுடைய ஞானத்தைப் பெற்றுவிட்டேன். அதன் கண் எனக்குத் தடுமாற்றம் யாதும் இல்லை. எனவே, யான் அலைவு ஒன்றும் இன்றி, முழு அமைதியை உடையவனாயினேன்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ``அமைந் தொழிந்தேன்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. ``வள்ளலும் ஆம்`` என்றது சிவன் பலர்க்கு அருள்வதைப் பொதுவாக எடுத்துக் கூறியது. உம்மை, சிறப்பு. வகைந்து - வகை செய்து. தாம் குருவருள் பெற்றவாற்றை மேல் பல இடங்களில் கூறினார் ஆகலான் இங்கு அதனைக் கூறாது பயனை மட்டுமே கூறினார். இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், சிவன் குருவாகியும் வந்து அருளும் கருணைத் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வள்ளல் தலைவனை வானநன் னாடனை
வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்றென்(று)
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந் தாளுமே.

பொழிப்புரை :

[தலைவனை, நாடனை, முதல்வனை என வந்த வற்றிற்கு, `இத்தன்மையேனாகிய என்னை` என்பதே கருத்தாகலான், இவை தன்மைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி.]
`ஒப்புயர்வற்ற தலைமையையும், சிற்பர வியோமத்தில் இருக்கும் இருப்பையும், வேதத்தைச் செய்த முதலாசிரியத் தன்மையும் உடையேனாகின்ற என்னை, எனது உண்மையை உணராது, தாங்களையே தலைவர்களாகக் கருதிக் கொண்டு செயற்படுகின்ற மாக்கள் என்று உணர்வார்களோ` என்னும் அருள் நோக்குடன் சிவபெருமான் உயிர்களின் உள்ளத்துள்ளே தோன்றாத் துணையாய் இழிந்து, காலம் வந்தபொழுது தோன்றி ஆட்கொள்கின்றான்.

குறிப்புரை :

கள்ளம் உடையரை, ``பெருமக்கள்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``உடம்போ டுயிரிடை நட்பு``1 என்றது போல. கொல், அசை ``வள்ளல் தலைவன்`` என்பது முதலிய குறிப்பினால், ``ஒளிந்திருந் தானாம்`` என்னும் பயனிலைக்கு. `அவன்` என்பது தோன்றா எழு வாயாய் நின்றது. என்று இரண்டில் முன்னதை, என்று காண்பர் கொலோ` என மாற்றிவைத்துரைக்க. ஓர் என்றே பாடமாக ஓதுதல் பாடமன்று.
இதனால், சிவன் காலம் வாராத முன்னெல்லாம் தோன்றாத் துணையாயும், காலம் வந்தபொழுது தோன்றி ஆறாம் துணைவனாயும் நிற்கும் கருணைத்திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை
நாளும் வழிபடும் நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத்தொடு வைத்தொழிந் தேனே.

பொழிப்புரை :

[இங்கும் ``கடவுளை`` என வேறுபோலக் கூறப்பட்டதை, `கடவுளாகிய தன்னை` என ஒன்றுபடுத்தி உரைக்க.]

குறிப்புரை :

நாளும் - நாள்தோறும். நன்மை - நன்றிச்செயல். ``தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப் - பின்னை மறத்தல் பிழையலது``1 என்றார் மெய்கண்ட தேவர். `நின்றவரது, குரிசிலினது` என ஆறாவது விரிக்க. கோள் - கிரக சாரம். ``கோட்பாலனவும், வினையும் குறுகாமை``2 என்றார் ஞானசம்பந்தரும். குரிசில் - சிவபிரான். அவன் தந்த வாள், ஞானம். ``நமன் வரின் ஞானவாள் கொண்டே எறிவன்``3 என முன்னருங் கூறினார் உம்மை, சிறப்பு `மனத்தொடு பொருந்த` என ஒருசொல் வருவிக்க.
இதனால், ஞானம் பெற்றபின்னும் தன்னை வழிபடுவாரைச் சிவன் கைவிடாது காக்கும் கருணை புகழ்ந்து கூறப்பட்டது. ``துறக்குமா சொலப்படாய், துருத்தியாய்``4 என்பதும் ஞானசம்பந்தர் வாக்கு.

பண் :

பாடல் எண் : 14

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமு மாகும்
வருந்தி அவனடி வாழ்த்த வல்லார்க்கே.

பொழிப்புரை :

``கோழை மிடறாக, கவி கோளும் இலவான``5 நிலைமையை யுடையோரும் முயன்று, ``இசை கூடும் வகையால்``6 சிவனது திருவடிகளை வாழ்த்துபவர்கட்கு அவர்கள், `வீர சுவர்க்க இன்பம் எவ்வாறு உள்ளது` எனக் காண ஒரு கால் விரும்புவாராயின் அத்திருவடிகளே அதுவாய் நின்று அவர்கட்கு அதனைக் காட்டும். அங்கு அவர்கள் செல்ல வேண்டுவதில்லை.
இனிப் பொதுவான சுவர்க்க இன்பத்தைக் காண அவர்கள் அவ்வாற்றான் விரும்புவராயின் அதுவாயும் அத்திருவடிகள் நின்று இனிப்பிக்கும்.
தீர்த்தங்கள் பலவற்றில் சென்று மூழ்க அவர்கள் விரும்பு வராயின் அவையாயும் அத்திருவடிகள் அவர்கட்கு நின்று அவர்கள் விருப்பத்தை நிறைவு செய்யும்.

குறிப்புரை :

`இத்துணை ஆற்றல்களையுடையது சிவனது திருவடிகள்` என்றபடி. இதற்கு எடுத்துக்காட்டாக ஞானசம்பந்தர் திருவீழிமிழலையினின்றும் சீகாழிக்குச்செல்ல நினைத்தபொழுது திருவீழிமிழலைக் கோயிலேக் கோயிலாகிக் காட்சியளித்தமை, திருமருகல் கோயிலும் அவ்வாறே திருச்செங்காட்டங்குடிக் கோயிலாகிக் காட்சியளித்தமை, நாவுக்கரசர்க்குத் திருவையாற்றுக் கோயிலே திருக்கயிலையாகிக் காட்சியளித்தமை முதலியனவாம்.
``பொருந்தில்`` என்றதும், `மனம் பொருந்தில்` என்றதேயாம். திருந்துதல் - செந்நெறியிற் செல்லுதல். அதுவும் செல்ல விரும்பு தலையே குறித்தது. ``விரும்பில்`` முதலிய மூன்றும் பெரும்பான்மை விரும்பாமையைக் குறித்து நின்றது. `வருந்தியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அவன் `பண்டறி சுட்டு`.
இதனால், சிவனது திருவடிகளைத் தோத்திரிப்பார்க்கு அவை அவர் வேண்டும் பொருள் அனைத்துமாகிப் பயன் தரும் சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

வானகம் ஊடறுத் தான் இவ் வுலகினில்
தானகம் இல்லாத் தனியாகும் போதகன்
கானக வாழைக் கனிநுகர்ந் துள்ளுறும்
பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.

பொழிப்புரை :

ஞானாசிரியன் தனது ஞானத்தால் அண்டங் கடந்த பொருளாய் உள்ளான். அவன் இவ்வுலகத்தில் இருப்பினும் ஏனையோர் போல `யான், எனது` என்னும் பற்றுடையவன் ஆகாது, பற்றற்றுத் தூயனாய் இருக்கின்றான். அவன் தந்த மலைவாழைக் கனியை நுகர்ந் -தமையால், நான் என்னுள்ளே ஊறுகின்ற அமுதமாயும், ஒளியாயும் உள்ள அம்மெய்ப் பொருளைப் பற்றி அசைவின்றி நிற்கின்றேன்.

குறிப்புரை :

``போதகன்`` என்பதை முதலிற் கொள்க. போதகன், இங்கு ஞான போதகன், கானக வாழைக் கனி, இனிமைக்கு ஒன்றனை எடுத்துக் கூறியவாறு. பானகம் - இனிப்புடைய நீர்ப் பொருள். அஃது இங்கு அமுதத்தைக் குறித்தது. தனி - தனிமை. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது.
இதனால், சிவன் அவன் தானாகும்படி ஆவேசித்து அருளும் ஆன்ம சைதன்னியததின் சிறப்புக் கூறும் முகத்தால், அத்தன்மைத்தாகிய சைதன்னியத்திலன்றி ஆவேசியாத அவனது மாண்பு புகழ்ந்து கூறப்பட்டது.
``நம்செய லற்று,இந்த நாம்அற்றபின் நாதன்
தன்செயல் தானேயென் றுந்தீபற;
தன்னையே தந்தான்என் றுந்தீபற``1
என்னும் திருவுந்தியாரையும் காண்க.

பண் :

பாடல் எண் : 16

விதியது மேலை யமரர் உறையும்
பதியது பாய்புனற் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
மதியது வவ்விட்ட(து) அந்தமும் ஆமே.

பொழிப்புரை :

ஓர் அறிவு எனது அறிவைத் தன்னுள் விட்டது. அஃது எல்லாப் பொருள்கட்கும் அதுவது இயங்குதற்குரிய நெறி முறைகளை வகுப்பது. சுவர்க்க லோகத்தில் வாழும் அமரர்கட்கு மேலான அமரர்கள் வாழ்கின்ற அந்த உலகத்தில் அஃது உள்ளது. அதன் சடை முடியில் வேகமாகப் பரந்து பாய்கின்ற வெள்ள நீர் அடங்கிக் கிடக்கின்றது. யார் யார் எந்த எந்த பெயரைச் சொல்லிப் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளையெல்லாம் உண்மையில் தன்னுடையனவாகவே உடையது. அது பழவினையாகிய கட்டினை ஆசானைக் கொண்டு அறுப்பிக்கும். கடைசியாக எல்லாப் பொருட்கும் அதுவே புகலிடமாய் உள்ளது.

குறிப்புரை :

``மதியது வவ்விட்டது`` என்பதை முதலிற் கொள்க. ``மதியது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `வவ்வியது` என்பது, ``வவ்வியிட்டது`` என, `இடு` என்னும் அசைச்சொல்லோடு வந்து, இகரம் தொகுக்கப்பெற்றது. ``வவ்வியிட்டது`` என்னும் வினைப் பெயரே மேல் வந்த பயனிலைகளுக்கெல்லாம் எழுவா யாயிற்று. `மதியை வவ்வியது` என்றதனால் அதுவும் மதியாதல் பெறப் பட்டது. ``விதியது`` என்றது, `விதியை வகுக்கும் ஆற்றலுடையது` என்றவாறு. மேலை அமரர் சுத்த மாயா புவனங்களில் வாழ்வோர். பாய்புனற் கங்கையை உடைமை கூறியது. இங்குச் சொல்லப்பட்ட பெருமைகளையெல்லாம் உடைய அந்தப் பெரும்பொருள் இவ்வுலகத்தில் வெளிப்படும்பொழுது இவ்வுருவுடையதாய்த்தான் வெளிப்படும்` என்பது உணர்த்தற்கு.
``அண்டம் ஆரிரு ளூடுகடந் தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்? அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``1
என்னும் அப்பர் திருமொழியைக் காண்க. உம்மை, `பதயதேயன்றி` என இறந்தது தழுவிநின்றது. ``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்`` என்னும் முறைமையால் துதிப்பார் துதிக்கும் துதிகள் யாவும் சிவனுடைய துதிகளேயாதல் அறிக.
``எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர்
என்பதே வேதநூல் துணிபு``
என்பது சிவஞான மாபாடியம்.2

பண் :

பாடல் எண் : 17

மேலது வானவர் கீழது மாதவர்
தானிடர் மானுடர் கீழது மாதனம்
கானது கூவிள மாலை கமழ்சடை
ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே.

பொழிப்புரை :

மேலே உள்ள வானத்தில் வாழ்பவரும் கீழே உள்ள நிலத்தில் வாழும் பெருந்தவத்தோரும் தவம் இன்மையால் துன்புறுகின்ற உலகரும் ஆகிய அனைவர்க்கும் வெளித்தோன்றாது புதைந்துள்ளது ஒரு பெருநிதி. அது வில்வமாலை மணக்கும் சடையை உடையது. எங்கட்கு ஆவனவற்றையெல்லாம் அது தானாகவே செய்யும். அதுவே எங்கட்கு அரிய உயிர்.

குறிப்புரை :

``மேலது`` என்பது ``வான்`` என்பதனோடே முடிந்தது. முதற்கண் நின்ற ``கீழது`` என்பது கீழ் உள்ளதாகிய நிலத்தைக் குறித்தது. கீழ்தன்கண் உள்ள மாதவர், மானுடர்` என்க. தான், அசை, `வானவர், மாதவர், மானுடர்` என்னும் செவ்வெண்ணிற்குரிய தொகைப் பொருட்டாகிய `யாவரும்` என்பதனோடு, `யாவர்க்கும் என உருபும் விரிக்க. பின் வந்த ``கீழது`` என்பது `மறைந்துள்ளது` என்னும் பொருட்டு. கான் - மணம். இதன்பின் வந்த `அது` என்பது பகுதிப்பொருள் விகுதி. கூவிள மாலை கான கமழ் சடை` என மாற்றியுரைக்க. `சடைத்து என்னும் துவ்விகுதி தொகுக்கப்பட்டது. இவ்வாறன்றி, `சடையொடு` என உருபு விரித்து, அவனை, ``செய்யும்`` என்பதனோடு முடிப்பினும் ஆம். மூன்றாம் அடிக்கு, முன் மந்திரத்தில் இரண்டாம் அடிக்கு உரைத்தது. ``ஆனது தானே`` செய்யும்` என இயைக்க. முதலடி `எதுகை யின்றி, முரண் தொடை நயமே பெற்று வந்தது.
இதனால், சிவன் தன் அடியார்க்கே ``எய்ப்பினில் வைப்பாய்``1 அவர்க்கு ஆவனவற்றைத் தானே செய்து, அவர்கட்கு உயிர்போலச் சிறந்து சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை
ஏழின் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி
ஆழும் சுனையும் அடவியும் அங்குளன்
வாழும் எழுத்தைந்தின் மன்னனு மாமே.

பொழிப்புரை :

`நஞ்சத்தை உண்டமையால் கருமை நிறம் பெற்ற கண்டத்தை உடையவன்` எனச் சொல்லப்படுகின்ற அந்தச் சிவனையே கருமை நிறம் பொருந்திய கடல் சூழ்ந்து நிற்கின்றது என்றது, `நில உலகச் சிவன் கறைமிடற்றண்ணல்` என்றபடி. இவன், `சீகண்ட பரம சிவன்` எனப்படுவான். `பிரமாண்டம்` எனப் பெயர் பெற்ற இந்த அண்டத்தில் உள்ள, கீழ் ஏழ், மேல் ஏழ் ஆகிய பதினான்கு உலகங்கட்கும் இவனே மகேசுரன்; பிறப்பிறப்பில்லாத பரமசிவன். ஆழ்ந்த சுனைகளையும், காடுகளையும் உடைய கயிலாய மலையில் இவன் எழுந்தருளியிருக்கின்றான். மேலும் இவ்வுலகில் உள்ளார் ஓதும் திருவைந்தெழுத்து மந்திரத்திற்கு முதல்வனும் இவனே.

குறிப்புரை :

சிவாகமங்களில் சொல்லப்படுகின்ற ஒரு தலையாய பொருளை நாயனார் `தோத்திரம்` என்னும் இவ்வதிகாரத்தில் இம் மந்திரத்திற் கூறினார். அஃதாவது, `சுத்தம் மிச்சிரம், அசுத்தம்` என்னும் மூவகை உலகங்கள் முறையே `விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர்` என்னும் மூவகை உயிர்கட்கு உரியனவாய் உள்ளன. அவற்றுள் சுத்த உலகத்திற்குச் சிவனே நேராய்த் தலைவனாய் இருக்கின்றான். அவ்விடத்து அவன் `அருவம், அருஉருவம், உருவம்` என்னும் திருமேனிகளைக் கொண்டிருக்கின்றான். அருவத்திருமேனியில் `சிவன்` என்றும், அருஉருவத் திருமேனியில் `சதாசிவன்` என்றும், உருவத்திருமேனியில் `மகேசுரன்` என்றும் பெயர் பெறுகின்றான். இம்மூவகைப் பேதங்களும், `சம்பு பட்சம்` எனப்படும். மிச்சிர உலகத்திற்கு, விஞ்ஞானகலருள் பக்குவன் பெற்றுச் சுத்த வித்தையில் சிவனது அருளைப் பெற்று வைகும் அட்ட வித்தியேசுரர்களில் முதல்வ ராகிய அனந்த தேவரே தலைவராய் உள்ளார். அசுத்த உலகத்திற்குப் பிரளயாகலருட் பக்குவம் பெற்றுக் குண தத்துவத்தில் சிவனது அருளைப் பெற்று வைகும் சீகண்ட உருத்திரரே தலைவராய் உள்ளார் என்பது, இவ்விருவரும் உருவம் ஒன்றையே உடையர். `அணு பட்சத்தினர்` எனப்படுவர். சிவனது அருளால் மலம் நீங்கப் பெற்று ஞானத்தை அடைந்திருத்தலால், இவர்கள் அவனது முற்றுணர்வு முதலிய எண்குணங்களைப் பெற்று நிற்கின்றனர்.
இதனால், சிவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி அனைத்தையும் செய்பவனாகின்ற மாட்சிமை புகழ்ந்து கூறப்பட்டது.
சீகண்டர் குண தத்துவத்தில் இருப்பவராயினும் அவரது வியாபகம் ஆன்ம தத்துவம் முழுவதிலும் இருத்தலால், கீழ்த் தத்துவமாகிய பிருதிவி உலகத்தில் இங்குள்ள உயிர்களின் பொருட்டுக் கயிலாய மலையில் எழுந்தருளியிருக்கின்றார். இஃது பற்றி இவருக்குரிய குண தத்துவம் `மகா கயிலாசம்` எனப்படுகின்றது. `பிருதிவி தத்துவ உலகத்திற்கு இவரே சிவனாய் உள்ளார்` என்பதையே நாயனார் இம்மந்திரத்து இரண்டாம் அடியால் வலியுறுத்தினார். இவர் அணுபட்சத்தினராயினும் இவர் செய்வன வற்றை எல்லாம் தற்போதத்தின்வழிச் செய்யாது, சிவபோதத்தின் வழியே செய்தலால் அச்செயல்கள் அனைத்தும் சிவன் செயலே ஆகின்றன. இதனைச் சிவஞான சித்தியார், வேதத்துள் சிவனைப் பற்றிச் சொல்லப்பட்ட, `விசுவாதிகள், விசுவ காரணன், விசுவத்திற்கு அந்தரியாமி, விசுவரூபி` என்னும் பெயர்கள் ஆதலை நிறுவும் சான்று களாக இந்நில உலகத்தில் சீகண்ட உருத்திரர் பால் நிகழ்ந்த செயல் களையே எடுத்துக் காட்டிற்று. [சுபக்கம் - சூ - 1]. அது பற்றிச் சிவஞான யோகிகள் இவ்விடத்தில்,
``சீகண்ட ருத்திரர்க்குரிய வடிவங்களும்,
பெயர்களும், தொழில்களும் முதல்வனுக்கும்
ஒப்ப உள - என்பது வாயுசங்கிதையுட்
கூறப்படுதலின், ஈண்டுக் கூறியன
எல்லாம் முதல்வனுக்கு உரியனவேயாம்
எனக் கொள்க``
எனவும்,
``அற்றாகலின்றே ஈண்டுக் கூறிய
வடிவங்க ளெல்லாம் மாகேசுரமூர்த்தம்
இருபத்தைந்தனுள் வைத்தெண்ணப்பட்டன
என்பது``
எனவும் உரைத்தார். எனினும் சிவன் சருவ வியாபியாதலானும் அவன் எதனுள் நிற்பினும் அதன் தன்மை தனக்கு எய்தான் ஆகலானும் `அவன் இவ்வுலகத் தொடர்புடையன் அல்லன்` என்றோ, `ஈண்டுள்ளார்க்கு` அவன் காட்சி வழங்குதல் இல்லை` என்றோ கொள்ளுதல் கூடாதாம்.
உலகப் பயன் வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்பவர்கட்கெல்லாம் சீகண்ட உருத்திரரே தோன்றிப் பயன் கொடுத்தலைக் கந்தபுராணம் முதலிய பல புராணங்களாலும், இதி காசங்களாலும் உணரலாம். ஞானத்தைச் சிவன் சீகண்டர் வழியாகவும் அருளலாம்; தான் நேர் நின்றும் அருளலாம். இதனை, `சகல வருக்கத்தினர்க் கெல்லாம் ஞானத்தைச் சிவன் குரு மூர்த்திகளை ஆவேசித்து நின்று அருளுவான்` என்பதே பெரும்பான்மை பற்றிய விதியாய் இருப்பினும், வாதவூரடிகட்குச் சிவன், தானே குருவாகி வந்து ஞானத்தை வழங்கினமை கொண்டு அறிக. சீவன் தானை குருவாகி வந்து அருள்செய்த அந்த அருமையைத்தான் வாதவூரடிகள் பல விடத்திலும் பெரிதும் போற்றிப் புகழ்கின்றார்.
``அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``1
``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி!2
``பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க;
கண்ணால் யானும கண்டேன் காண்க``3
``புவனியிற் சேவடி தீண்டினன் காண்க;
சிவன்என யானும் தேறினன் காண்க;
அவன்எனை ஆட்கொண்டருளினன் காண்க``4
என்னும் திருவாக்குக்களைக் காண்க.
`அங்ஙனமாயின், வாதவூரடிகட்கு அருள்புரிந்த குரு சிவனே` என்பது தெளியப்படுதல் எவ்வாறு` எனின்` அடிகட்கு அருள்புரிந்த குரு நெடுநாள் இங்கில்லாமல் உடன் வந்த அடியவர்களோடும் விரைந்து திருவுருத் தோன்றாமல் மறைந்தமையால் தெற்றென விளங்கும் பலரை மாணாக்கராகக் கொண்டு ஞானத்தை அருளிய குருமூர்த்திகள் பலர் எங்கே, எப்பொழுது, எந்தப் பெற்றோருக்குப் புதல்வராய்த் தோன்றினர்? எப்படி வளர்ந்தார்? எப்படி ஞானம் பெற்றார்? என்பன பற்றிய வரலாறுகள் உள. அத்தகைய வரலாறு மாணிக்கவாசகருக்கு அருள்புரிந்த குருவுக்கு இல்லை. மற்றவர்களெல்லம் மாணாக்கர்க்கு ஞானத்தை உபதேசிப்பது மட்டுமன்று; பல காலம் உடன் இருந்து சிந்திப்பித்து தெளிவித்து, நிட்டை கூடுவித்து, பின்னும் அதிலே நிற்குமாறு நிறுத்தி இவ்வாறெல்லாம் அருள்புரிந்து, உடன் இருப்பர். உடம்பினால் அவரெல்லாம் நம்மனோருட் சிலரே. ஞானத்தினாலும் சிவனது திருவருளாலுமே அவர்கள் சிவமாகின்றனர். மாணிக்க -வாசகருக்கு அருள்புரிந்த குரு அவ்வாறெல்லாம் இல்லாது விரைய மறைந்தமையால் அவர் சிவனே யன்றி வேறல்லராதல் தெளிவு.
``... ... உன்தா ளிணை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார்;
புறமே போந்தேன் யான்``
``சிவமா நகர் குறுகப் - போனார் அடியார்;
யானும் பொய்யும் புறமே போந்தோமே``1
``உடையானே! நின்றனை உள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையார், உடையாய் நின்பாதம்
சேரக்கண்டு இங்கு ஊர்நாயிற்
கடையானேன், நெஞ்சு உருகாதேன்
கல்லாம் மனத்தேன், கசியாதேன்,
முடையார் புழுக்கூடு இத காத்து,
இங்கு இருப்பதாக முடித்தாயே``2
என்றாற்போல் அடிகள் அருளிச்செய்த குறிப்புக்கள் பலவும் அவரை ஆட்கொண்ட குருமூர்த்தி அவருடன் பலநாள் இல்லாது விரைய மறைந்தமையைத் தெரிவிக்கின்றன. ஆகவே அவரை சிவனே` எனக்கொள்ளுதற்கு ஐயுறவு யாது மில்லையாம்.
மூவர் முதலிகளுள் சுந்தரரையே சேக்கிழார் கயிலாயம் சென்றதாகக் கூறினார்.
``மன்னும் வன்றொண்டர் ஆலால சுந்தரராகித்
தாம் வழுவாத
முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்``1
என்னும் அடிகளால் `அவர்` முன்பு விட்டு வந்த பதவியிலே மீண்டும் சென்று அமர்ந்தார் என்றார். அப்பரும், சம்பந்தரும் சாயுச்சிய பரமுத்தியையே அடைந்ததாகவே கூறினார். இத்தகைய ஞானச் செய்திகள் எல்லாம்,
``ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்
கேட்பான் புகின் அளவில்லை; கிளக்கவேண்டா;
... ... எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றினை கேட்க, தக்கார்``2
என அருளிச் செய்ததில் சேர்வனவாம்.
சீகண்ட உருத்திரரை நஞ்சுண்ட கண்டராகக் கூறுதல், `அசுத்த உலகத்தில் தங்கு தருவனவாய் உள்ளவற்றையும் நன்மை தருவன வாக்கும் ஆற்றலுடையார்` என்பதைக் குறிப்பால் உணர்த்தற் பொருட்டேயாம். உருத்திரருள், `சீகண்ட உருத்திரர்` என இவர் விசேடித்துச் சொல்லப்படுதற்கும் இதுவே காரணம். இங்ஙனமாகவும் மகேசுரருக்கும் கறைக் கண்டம், அல்லது நீல கண்டம் சொல்லப் படுதல். இவருடைய செயல்கள் எல்லாம் அவருடைய செயல்களே` என ஒற்றுமை யுணர்த்தற் பொருட்டாம்.
`நஞ்சுண்ட கண்டனைக் கருங்கடல் சூழும் என மாற்றியுரைக்க. இது, `மண்ணுலகம் இவரையே முதல்வராகக் கொண்டுள்ளது` என்னும் குறிப்பினதாம். `சுனையையும், அடவியையும் உடைய அங்கு` என்க.
இதனால், இவ்வுலகத்தார் சொல்லும் தோத்திரங்களின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

உலகம தொத்துமண் ஒத்(து) உயர் காற்றை
அலகதிர் அங்கிஒத்(து) ஆதிப் பிரானும்
நில(வு) இயல் மாமுகில் நீர்ஓத்தும் ஈண்டல்
செலவொத்(து) அமர்திகைத் தேவர் பிரானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்கட்கும் முதலாயுள்ள சிவன் நிலம், நீர், தீ, காற்று, வானம், ஞாயிறு, திங்கள் என்னும் பொருள்களாக அவற்றுடன் ஒன்றாய்க் கலந்திருத்தலால், எல்லா உயிர்களும் அவனேயாய், அவை செல்லும் நெறிகளிலும் அவற்றோடு உடனாய் உதவி புரிந்து எண்திசைக் காவலர்கட்கும் தலைவனாய், உலக முதல்வன் ஆயினான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி நிலம் முதலியன முறையின்றி, ஏற்ற பெற்றியில் வைக்கப்பட்டன. கதிர் முதலிய பிறவற்றிலும் இரண்டன் உருபு விரிக்க. நிலவு - சந்திரன். முகில், இங்கு ஆகுபெயராய், வானத்தை உணர்த்திற்று. ``உலகம்`` என்றது உயிர்த் தொகுதியை. அது, பகுதிப்பொருள் விகுதி. ஒத்தல், அவற்றோடு ஒன்றாய் இயைந்து நிற்றல். `அமர் தேவர்` என இயையும். `ஆதிப் பிரான் ஒத்து, ஒத்துப் பிரான் ஆயினான்` என வினை முடிக்க. `உலகு` நிலம் முதலிய எட்டுக் கூறுகளாய் அடங்குதலாலும், அவ் எட்டுக் கூறுகளிலும் நிறைந்து அவற்றை இயக்குதலாலும் சிவன் உலக முதல்வனாயினான்` என அவனது பெருமையை விளக்கியவாறு. ``ஆதிப்பிரானும்`` என்னும் உம்மை. அசைநிலை. இறுதியில் `ஆயினான்` என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. எண் திசைக் காவலர்களுக்குப் பிரான் ஆயினமை கூறும் முகத்தால் உலக முதல்வன் ஆயினமை குறித்தவாறு.
இதனால், சீவன் அட்ட மூர்த்தியாம் சிறப்பினால் உலக முதல்வன் ஆயினமை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன்
பரிசறித் தங்குளன் மாருதத் தீசன்
பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப்
பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே.

பொழிப்புரை :

தீக்குத் தலைவனாகிய தீக் கடவுள், கதிர்க்குத் தலைவனாகிய கதிர்க் கடவுள். மதிக்குத் தலைவனாகிய மதிக்கடவுள், மற்றும் காற்றிற்குத் தலைவனாகிய காற்றுக் கடவுள் ஆகியோரும், நிலத்திற்குத் தலைவியாகிய நிலமகள், `எல்லாப் பொருள்களையும் தாங்கும் திண்மையை எனக்கு அருளியவன் சிவன்` என்னும் உண்மை யுணர்வோடே எல்லாவற்றையும் தாங்குதல் போலவே`` தாம் தாம் தீ முதலாக மேற்கூறியவற்றிற்குத் தலைவராய் இருந்து, அவற்றின் செயல்களைச் செய்வித்து வருகின்றனர்.

குறிப்புரை :

`எல்லாக் கடவுளரும் சிவனது முதன்மையை உணரும் உண்மை ஞானத்தாலே தம் தம் அதிகாரத்தை நடத்தி வருகின்றனர்` என்பதை உடம்பொடு புணர்த்தலாக நிலமகள் மேல் வைத்து, வேறு எடுத்துக் கூறினார். அட்ட மூர்த்தத்தில் இயமானன் தவிர ஏனை ஏழும் சடப்பொருள்கள். அவற்றுள், `நிலம், நீர், வானம்` என்னும் மூன்றிற்கும், `நிலமகள், நீர் மகள், வான் மகள்` எனப் பெண்மையர் முதல்வராகவும், `முச்சுடர், காற்று` என்னும் ஏனை நான்கிற்கும் ஆண்மையர் முதல்வராகவும் கூறப்படுதலின் அவருள் பெண்மையர்களில் நிலமகளை எடுத்துக் கூறி, ஏனை இருவரையும் உபலக்கணத்தால் தழுவினார்.
முச்சுடர்களை முதலிற் கூறுதல் கருத்தாகலின் பரிசறிந் தங்குளன் மாமதி என்பதை, ``அருக்கன் உளன்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. முதற்கண் உள்ள, ``பரிசறிந்தங்குளன்`` என்பதை ``அருக்கன்`` என்பதற்கு முன்னும் கூட்டுக. ``அருக்கன் ஈசன்`` என்பவற்றோடு இயைய, `அங்கி, மதி` என்றவற்றையும் `அங்கியன், மதியன்` என ஆடுவறி சொற்களாக்குக. அல் நிலம் - இவர்கள் அல்லாத நிலம். ``நிலம்`` என்றது நிலமகளையே. `பரித்தல்` என்பது முதல் நீண்டு வந்தது. பரித்தல் - தாங்குதல். `அல் நிலம், ஞானப் பரிசு அறிந்து பரிக்குமாறே, ஏனை அங்கியன் முதலியோரும் அங்கங்கு உளர் என்பது இம்மந்திரத்தின் சொற்சுருக்கம். அங்கு என்றது, `அவற்றை இயக்கி நிற்கின்றனர், என்றபடி. சிவனே எல்லாப் பொருள் கட்கும் அதுவதற்குரிய ஆற்றலைத் தந்தருளினானஅ` என்பதை,
``அருக்கனில் சோதி அமைத்தோன், திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன், பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கம் கண்டோன், நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் - என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத்து அவ்வயின் அடைத்தோன்`` -திருவண்டப் பகுதி, 20-28.
என்னும் திருவாசகத்தால் உணர்க. இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால், `தேவர் யாவரும் சிவனது ஆணையால் சிற்சில அதி காரங்களைப் பெற்று அவற்றை அவனை நினைந்தே நடத்தி வருகின்றர்` என்ற அவனது முழுமுதற்றன்மை புகழ்ந்து கூறப்பட்டது. இதனானே, சிவனுக்கு, `தேவ தேவன்` எனவும், `மகா தேவன்` எனவும் சொல்லப் படும் பெயர்கள் பொருள் பொதிந்த பெயர்களாதல் விளங்கும். `பிறரெல்லாம் சிவனது ஆணையை நினைந்தே தம் அதிகாரத்தைச் செலுத்துபவர் - என்பது, சிவனை மறந்து தம் மனம் சென்றவாறே அதிகாரத்தைச் செலுத்த முற்படும்பொழுது இவர்க்கு ஒறுப்புண்டாயினமையால் அறியப்படும்` என்பதைச் சிவஞான யோகிகள்.
``அரன் நினைந்தவாறன்றி ஆகாமை,
தக்கன் வேள்வி, மார்க்கண்டி வாழ்நாள்,
ஆலாலத் தோற்றரவு முதலியவற்றால்
இனிது விளங்கக் கிடத்தலின்``
என விளக்கினார்.1 கூற்றுவனுக்குச் சிவன் இட்ட ஆணை `நம் அடியவர்க்கு வாழ்நாள் முடிந்தால், நாம் அவர்களை அழைத்துக் கொள்வோம் நீ அவர்களிடம் செல்ல வேண்டா` என்பது. அதனை மறந்து அவன் மார்க்கண்டேயரிடத்துச் சென்றமையால் ஒறுக்கப் பட்டான். அவ்வினையை இனிமேலாயினும் மறவாது செய லாற்றுங்கள் என அறிவுறுத்தும் முறையில்தான் அப்பர் கால பாசத் திருக்குறுந்தொகையை அருளிச்செய்தார்.2
தேவர்கள் சிவபெருமானை வேண்டி இசைவு பெறாதே தாமும் அவனைப் போல என்றும் இறவாதிருக்க அமுதம் பெற வேண்டிப் பாற் கடலைக் கடைந்தனர். அதனால் அவர்கள் பெற்ற பயன் என்றும் இறவா நிலையை வேண்டியவற்கு மாறாக, அன்றே இறக்கும்படி வந்த ஆலகால விடந்தான். பின்பு அவர்கள் சிவபெருமானை அடைந்தே நலம் பெற்றனர். இவைகளையே சிவஞானயோகிகள் குறித்தார். இவற்றால் எல்லாம் நாம் அறிய வேண்டிய முடிநிலைப் பொருள், `சிவபெருமானது சங்கற்பமே சங்கற்பமாக நின்று முற்றுப்பெறும் அன்றி ஏனையோர் சங்கற்பங்களெல்லாம் முற்றாப்பெரா என்பதே. இதனால் சிவனது சங்கற்பம் வேதங்களில் `சத்திய சங்கற்பம்` எனப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 21

அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.

பொழிப்புரை :

தான் படைத்த உலகத்திற்குத் தானே முன்னைப் பழம் பொருளும், பின்னைப் புதுப் பொருளுமாய்,1 நிற்கும் சிவன், தான் தன் மேல்நிலையினின்றும் இறங்கி வந்து உலகத்தைப் படைக்கின்ற முறை அதுவாகும் (அஃதாவது, `உலகத்திற்கு அது தோன்றும் இடமும், பின் ஒடுங்கும் இடமும் தானேயன்றிப் பிறரில்லாத தனியொரு முதல்வன்` என்பதாம்.) அவன் உலகத்திற்கு வித்தாகிய மாயையின் வியாபகத்தைக் கடந்து அப்பால் உள்ளவ -னாயினும் அசுத்த உலகமாகிய இந்தப் பிரகிருதி புவனத்தில் உள்ளவர்கட்கும் அவனே முதல்வன்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `பரம், உபரம்` என்பன, `முன், பின்` என்னும் பொருளைத் தந்தன. `கடலினின்றும் தோன்றும் அலை, நுரை, திவலை முதலியவற்றிற்குக் கடலே முன்னைப் பொருளும், பின்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளுமாய் இருத்தல் போல இறைவன் உலகிற்கு முன்னைப் பொருளும் தானேயாய் இருக்கின்றான்` என்பதை,
``நுரையும் திரையும், நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடற்
பெருத்தும், சிறுத்தும் பிறங்கு தோன்றி
எண்ணில வாகி யிருங்கட லடங்கும்
தன்மை போலச் சராசரம் அனைத்தும்
நின்னிடைத் தோன்றி, நின்னிடை அடங்கும்; நீ
ஒன்றினும் தோன்றாய்; ஒன்றினும் அடங்காய்``2
என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கால் உணர்க. உபநிடதமும், ``எல்லாம் பிரமத்தினின்றும் தோன்றி அதிலே அடங்குகின்றன. இடையிலும் அதிலேதான் நிலைத்திருக்கின்றன``1 எனக் கூறிற்று.
சிவன் தான் படைத்த உலகத்திற்கு வெளியிலே வியாபித்த லன்றியும் எல்லாப் பொருள்களினுள்ளும் எள்ளினுள் எண்ணெய் போல நிறைந்தும் நிற்றலால், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்`` என்றார். பெந்தம் - பெத்தம். என்றது இங்கு, முக்குண வடிவாய் அறிவை மாறி மாறி மயக்குகின்ற மூலப் பிரகிருதியை. `இதன் காரிய புவனங்களில் வாழ்பவர் மூவகை ஆன்மாக்களுள் கீழ்ப் பட்ட சகலர்` என்பதை ``கீழோர்`` என்பதனால் குறித்தார். `கீழோர்க்கும்` எனத் தொகுக்கப்பட்ட உருபையும், உம்மையையும் விரிக்க. `அதிகார மூர்த்திகள் பலரும் சிவனது ஏவல் வழி நிற்பவரே யன்றிச் சுதந்திரர் அல்லர்` என்பது முன் மந்திரத்தில் இனிது விளக்கப்பட்டமையால் ஈண்டுள்ளார்க்கும் சிவனே முதல்வன் ஆதற்கு இழுக்கின்மை அறிக.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய பொருள் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

முத்தண்ட ஈரண்ட மேமுடி யாயினும்
அத்தன் உருவம் உலகே ழெனப்படும்
அத்தன்பா தாள அளவுள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்துண ராரே.

பொழிப்புரை :

மூன்றும், இரண்டும் ஆக ஐந்தாய உலகங்களே அனைத்துலகங்கட்கும் முடியாய், `சிவனுக்கு உரியன` என்று சொல்லப்பட்டாலும், எல்லா உலகங்களுமே அவனுக்கு உருவமாகும். அப்படிப் பார்க்கின்றபொழுது, பிருதிவி அண்டத்தில் அதன் கீழ்ப் பகுதியாகச் சொல்லப்படுகின்ற பாதாள உலகங்களே அவனுக்குத் திருவடியாம். (சிவ தத்துவ உலகமே முடியாதல் முதலடியிற் கூறியதனானே பெறப்பட்டது.) அறியாமையுடையவர்கள் இந்த உண்மையை அறிந்து மகிழ்வெய்தும் நிலையில்லாதவராவர்.

குறிப்புரை :

இதுவும் முன் மந்திரத்தில், ``பெந்த உலகினிற் கீழோர் பெரும்பொருள்`` என்றதனை விளக்கியவாறு. ``முத்தண்ட ஈர் அண்டம்`` என்றதனை `மு இரு தண்ட அண்டம்` என மாற்றிக்கொள்க. `மூ இ` என்பது, ``மூன்றும் இரண்டும்` என உம்மைத் தொகை. ``ஐந்து`` என்பது, தத்துவங்களைக் குறித்த தொகைக் குறிப்பு. முடியாவது, பிறவற்றிற்கெல்லாம் மேல் நிற்பது. `உரு, பெயர், தொழில் ஒன்றும் இல்லாத சிவன் அவைகளை உடையனாய பொழுதும், சுத்த தத்துவத்திலன்றி, ஏனைத் தத்துவங்களில் இருத்தல் இல்லை` என்னும் தத்துவக் கோட்பாடு பற்றி, `அவன் அத்தத்துவங்கட்குக் கீழ்ப்பட்ட தத்துவ உலகங்கட்கு முதல்வனாதல் எவ்வாறு` என மலைவெய்து வார்க்கு அம்மலையை நீக்குதற்கு இவ்வாறு கூறினார் என்க. `திரு மேனி கொண்டு விளங்குதல் சுத்த தத்துவத்திலாயினும், எள்ளினுள் எண்ணெய்போல எல்லாப் பொருளிலும் அவன் நிறைந்திருக் கின்றான் ஆதலின், அவன் அனைத்துலகங்கட்கும் முதல்வனாதல் கூடுவதாம்` என விடுத்தவாறு. இந்நிறைவு நிலை பற்றியே அவனை, `விசுவ ரூபி` என்றும், `அட்ட மூர்த்தமாய் நிற்பவன்` என்றும் உண்மை நூல்கள் கூறுகின்றன என்க. இதனானே எவ்வுலகத்தார் செய்யும் வழி பாட்டினையும் அவன் ஏற்றுப் பயனளித்தல் கூடுவதாதலையும் அறிக.
தண்டம் - கோல். இஃது ஒரு நீட்டலளவை. சுத்த தத்துவங்கள் ஐந்தின் அண்டங்களையும் தனித் தனி ஒரு கோல் அளவினதாகக் கூறியது, பொதுப்பட அவையும் அளவுட்பட்டனவே தொகுத்த லாயிற்று. `உலகேழும் அத்தன் உருவம் எனப்படும்` எனவும், `அத்தன் சேவடி பாதள அளவுள்ள` எனவும், உணர்ந்து மகிழார் எனவும் மாற்றிக் கொள்க. பாதாள அளவு - பாதாளமாகிய அவ்வளவினதாகிய இடம் `சேவடியாய் உள்ளது என்க. இத்துவ்விகுதி தொகுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஆதிப் பிரான்நம் பிரான் இவ்வகலிடச்
சோதிப் பிரான்சுடர் மூன்றொளி யாய்நிற்கும்
ஆதிப் பிரான்அண்டத் தப்பும் கீழவன்
ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களும் ஒடுங்கிய பின்னும் தான் ஒடுங்காது, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதற்கு முதல்வனாய் உள்ளவன் எவனோ அவனே நமக்குப் பெருமான். அவன், விரிந்த இடத்தையுடைய இந்த உலகத்திற்கு விளக்காய் உள்ள `கதிர், மதி, தீ` என்னும் மூன்றிற்கும் ஒளியைத் தரும் பேரொளிப் பெருமான்; முன் மந்திரத்திற் கூறியவாறு விசுவ ரூபியாய் நிற்றலேயன்றி, விசுவாதி கனாய், அனைத்துலகங்களையும் கடந்து அவற்றிற்குமேலும், கீழும் இருக்கின்றான். இனி மேற்கூறியவாறு அவற்றினுள்ளும் விசுவ ரூபியாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அவனது பெருமையை அறிய வல்லார் யார்` என்பது குறிப்பெச்சம். ``ஆதிப் பிரான்`` என்பது மீள மீள வந்தது சொற் பொருட் பின்வருநிலையணி. ``ஆதிப் பிரான்`` என்று இதனையே மெய்கண்ட தேவர் ``ஆதிப் பிரான்`` புலவர்``1 என்றார். `அகலிடச் சுடர் மூன்றின் ஒளியாய் நிற்கும் சோதிப் பிரான்` என இயைக்க. ``அப்புறம்`` என்பதிலும் `அப்புறத்தவன்` என்னும் விகுதி தொகுத்த லாயிற்று. சிவன் அண்டத்து அப்புறத்தவனும், கீழவனும் ஆதலை,
``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்;
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``2
என்னும் திருவாசகத்தால் அறிக.
இதனால், சிவபிரானது நித்தியத் தன்மையும், அளவில் ஆற்றலும் புகழ்ந்து கூறப்பட்டன. `எல்லாம் ஒடுங்கும் பொழுது ஒருவன் மட்டும் எங்ஙனம் ஒடுங்காது நிற்பான்` என்பனபோலும் ஐயங்கள், `திருவருள் கிடைக்கப் பெற்றார்க்கன்றி நீங்கா` என்பதை அப்பர்,
``கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலோ டொக்கு மோகடல்? என்றல்போல்,
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்,
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே``3
என அருளிச் செய்தமை காண்க.

பண் :

பாடல் எண் : 24

அண்டங் கடந்துயர்ந் தோங்கும் பெருமையன்
பிண்டங் கடந்த பிறவிச் சிறுமையன்
கண்டர் கடந்த கனைகழல் காண்டொறும்
தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றாரே.

பொழிப்புரை :

அண்டங்கள் அனைத்தையும் கடந்து எல்லையற்று விளங்கும் அகண்டப் பொருளாய் இருப்பினும் பிறவாய் பிறவியாகிய திருமேனிகள் பலவற்றைக் கொண்டு கண்டப் பொருளாயும் விளங்குகின்ற சிவனது, தீயோர் அணுகாத திருவடிகளைக் காணுந் தோறும் அவன் அடியார்கள் சுத்தாவத்தையில் அழுந்துகின்றார்கள்.

குறிப்புரை :

`ஆகவே, யாவரும் அவனது திருவடிகளைக் காணுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பெருமை, சிறுமை` என்பன `அகண்டம், கண்டம்` என்னும் பொருளவாய் நின்றன. ``பெருமையன்`` என்பதன் பின் `ஆயினும்` என்பது வருவிக்க. பிண்டம் - தசை. நிணம் முதலிய தாதுக்களின் திரட்சி. எனவே, அது, தாய் தந்தையரது உடற் கூற்றால் தோன்றி வளர்ந்து, பின்னும் உணவால் பெருக்கின்ற புலால் உடம்பைக் குறிக்கும். `அவ்வா றில்லாத பிறவி` என்றது அருட்டிரு மேனியை. சிவனை, ``பிறவா யாக்கைப் பெரியோன்``1 எனப் பிறருங் கூறினார். அஃதாவது, `சிவனுக்கு யாக்கை உண்டு; ஆயினும் அது மேற்கூறியவாறு தாய் தந்தையரால் பிறந்து, அவரால் வளர்க்கப்பட்டது அன்று` என்றதால் ``சிறுமை`` `பிறப்பிப்பதுதான் கடவுட்குப் பெருமை`` எனக் கூறுவாரை நோக்கி, `அத்தகைய பெருமையில்லாத சிறுமையன் எங்கள் சிவன்` என நகை தோன்றக் கூறிய, பழிப்பது போலப் புகழ் புலப் படுத்திய வஞ்சப் புகழ்ச்சியாக உரைப்பாரும் உளர். `சிறுமை யானது` என ஆறாவது விரிக்க. கண்டர் - கண்டகர்; தீயோர். `இவர்கள் கடந்த கழல்` என்றது `அணுகாது விலகிச் சென்ற கழல்` என்றதாம். கனை கழல் அடையடுத்த ஆகுபெயர். `தொண்டர் நடந்த கனைகழல், என்பது பாட மன்று. ``நெறி`` என்றது அவத்தையை. சுத்தாவத்தையின் இயல்பு முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.
இதனால், சிவன் அகண்டப் பொருளாயினும் உயிர்களின் பொருட்டுக் கண்டப் பொருளாய்த் தோன்றியருளும் அருட்சிறப்புப் புகழ்ந்து கூறப்பட்டது. `இதுபற்றி அவன் பிறத்தல் இல்லை` என்னும் உண்மையும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

உலவுசெய் யோக்கப் பெருங்கடல் சூழ்ந்த
நிலமுழு தெல்லாம் நிறைந்தனன் ஈசன்
பலம்முழு தெல்லாம் படைத்தனன் முன்னே
புலம்உழு பொன்னிற மாகிநின் றானே.

பொழிப்புரை :

சீவன் ஓவாது வீசுகின்ற அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுதும் நிறைந்து நிற்கின்றான். நின்று, இதன்கண் உளவாகின்ற அனைத்துப் பயன்களையும் தோற்று -விக்கின்றான். இவையல்லாமலும் உயிர்களின் பட்பொறி சென்று பற்றும்படி பொன்னார் மேனியாய் முன் வந்து காட்சியும் தருகின்றான்.

குறிப்புரை :

`வேறு என்ன வேண்டும்` என்பது குறிப்பெச்சம். உலவு, உலவுதல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஓங்கு` என்னும் முதனிலை `அம்` என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று, வலித்தல் பெற்று, `ஓக்கம்` என வரும். தேங்கு, தேக்கம்; அடங்கு, அடக்கம்; விளங்கு, விளக்கம் முதலியவற்றைக் காண்க. இஃது இங்கு ஆகு பெயராய், ஓங்கியெழுகின்ற அலைகளைக் குறித்தது. இவ்வாறன்றி, `நோக்கம்` என்னும் பாடத்திற்கு இங்கு இயைபு யாதும் இன்மை அறிக. பலம் - பயன். `முழுதெல்லாம்` என்பது ஒரு பொருட் பன்மொழி. ``முன்னே`` என்பதை, ``நின்றான்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. ``புலம்`` என்பது பொறியின் மேலதாய், இங்குக் கண்ணைக் குறித்தது. கண் உழுதலாவது, பற்றிக் காணுதல். ``பொன்னிறம்`` என்பது பண்பாகு பெயராய், அதனையுடைய திருமேனியைக் குறித்தது. `சிவன் திருமேனி கொள்ளுங் காலத்தில், பொன்மயமான திருமேனியையே கொள்ள விரும்புகின்றான்` என்பதாம்.
இதனால், சிவனது மற்றும் பல அருட் சிறப்பே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

பராபர னாகிப்பல் லூழிகள் தோறும்
பராபர னாய்இவ் வகலிடம் தாங்கித்
தராபர னாய்நின்ற தன்மை யுணரார்
நிராபர னாகி நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், மேலான பொருள்கட்கெல்லாம் மேலான பெரும்பொருளாய் நிற்பினும் ஊழிகள் தோறும் அவற்றின் தொடக்க மாயும், முடிவாயும் நிற்கின்ற அளவினனும் ஆய், நாம் கண்டும், கேட்டும் உணர்கின்ற அனைத்துலகங்களையும் நிலம் போலத்தாங்கி நிற்கும் தன்மையுடையனாதலை உலகர் உணர்தல் இல்லை. ஆயினும், அவன் அதனால் கீழ்மை ஒன்றும் இலனாய், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து அவற்றை இயக்கியே நிற்கின்றான்.

குறிப்புரை :

`சிவன்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தது. ``பராபரன்`` இரண்டில் முன்னது, `பராற்பரன்` என்பதன் மரூஉ. பின்னது, `பரனாயும் அபரனாயும் நிற்பவன்` என்றதாம். பரம் - மேல், அபரம் - கீழ். `பராபரன்` என்பதை, ``மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்திலும் காண்க. இந்த, `பரம், அபரம்` என்பன இங்கும், ``அந்தம் கடந்தும்`` 2 என்னும் மந்திரத்திற் போலவே, `முன், எனப் பொருள் தந்தன. `தராபரன்` என்னும் வட சொல் தொகை மொழி உவமத் தொகை. பரன் - தன்மையுடையவன். ``உணரார்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. `அபரன்` என்பது முதல் நீண்டு, `நிர்` என்பதனோடு புணர்ந்து` ``நிராபரன்`` என வந்து, `கீழ்மை யில்லாதவன்` எனப் பொருள் தந்தது.
``தரையை யுணராது தாமே திரிவார்;
புரையை உணரா புவி``3
என்றாற்போல், நிலம் யார் தன்னைப் போற்றினும், போற்றா தொழியினும் தாங்குதலாகிய தன் கடமையை அஃது ஆற்றி வருகின்றது. அதுபோலத்தான் சிவன் தன் செயலைச் செய்து நிற்கின்றான் - என்பதையே ``தராபரனாய் நின்ற தன்மை என்றார். இதனையே அப்பர் பெருமான், ``தன்கடன் அடியேனையும் தாங்குதல்`` அஃது யார் போற்றிடினும் நிகழ்ந்து கொண்டே யிருக்கின்றது. ஆயினும், ``என்கடன் பணி செய்து கிடப்பதே``4 என்பதை நான் உணர்ந்தேனா என்னும் ஐயம் எழுகின்றது என்று அருளிச் செய்தார். சிவன் இவ்வகலிடத்தைத் தாங்குதலை நாயனார் சில இடங்களில் நினைவு கூர்கின்றார். அப்பரும் சிவனை, ``பொய்யாத பொழில் ஏழும் தாங்கி நின்ற - கற்றூண்காண்``5 எனக் குறித்தருளினார் உலகனைத்தையும் தாங்கும் சிவனது சத்தி, `ஆதார சத்தி` எனச் சிவாகமங்களில் சொல்லப்படுகின்றது. ``நின்றான்`` என்பது, நின்று செய்தலாகிய தன் காரியம் தோன்ற நின்றது.
இதனாலும், சிவனது சில திருவருட் சிறப்புக்களே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 27

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறிதில்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்றுடல் தான்என் றதுபெருந் தெய்வம்
காற்றது ஈசன் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

பொருள்களும், சொற்களும், சொற்கள் ஒடுங்குகின்ற இடமும் தனக்கு வேறாயினும் அவை தனக்கு உடலாய் நிற்க, அவற்றிற்கு உயிராய் நிற்பது எதுவோ, அது பெருந்தெய்வம். (முதற் கடவுள்.) அத்தகைய பெருந்தெய்வம் சிவனன்றிப் பிறிதில்லை. அஃது எங்ஙனம் எனின், சிவனே எல்லா உயிர்களிடத்தும் அவற்றின் உயிராகிக் கலந்து நின்று அவற்றைப் புரந்து வருகின்றான்.

குறிப்புரை :

ஊற்றம் - பிறிதொன்றைத் தாங்கும் திட்பம். அஃது அதனையுடைய பொருளைக் குறித்தது. சொல் ஒடுங்குமிடம் நாதம். எனவே, `சொல்லும், பொருளுமாகிய இருவகை உலகங்களும் தனக்கு உடலாகத் தான் அவற்றுக்கு உயிராக் அவற்றைப் புரந்து வருவதே பெருந்தெய்வம்` எனப் பெருந்தெய்வத்தின் இலக்கணம் கூறப்பட்டதாம். `உடல் நிலை பெறுவது உயிரால்` என்பது வெளிப்படையாதலின், `இருவகை உலகங்கட்கும் உயிராவது பெருந் தெய்வம் எனவே, `உயிர்போல அவற்றை நிலைப்பிப்பது பெருந்தெய்வம்` என்றதாயிற்று. `அந்த இலக்கணத்திற்கு இலக்கியம் சிவபெருமானே` என்பதை நிறுவுதற்கு, ``காற்றது ஈசன் கலந்து நின்றானே`` என்றார். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை, நான்காம் தந்திரத் தொடக்கத்தில் அசபா மந்திரத்தால் நாயனார் விளக்கினார். அப்பரும், ``என்னுளே உயிப்பாய்ப் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``6 என்று அருளிச் செய்தார். ``காற்றது`` என்பதில் `அது` பகுதிப் பொருள் விகுதி. ``காற்றதன்கண்`` ஏழனுருபு விரிக்க. `மர வகைகளும் உயிர்க்கின்றன` என இக்கால அறிவியலார் கூறுவர். முதல் அடியை இரண்டாம் அடியின் பின்னர்க் கூட்டி, அதன்பின் `என்னையெனின்` என்பதும், இறுதியில் `ஆகலின்` என்பதும் வருவித்து முடிக்க. இடையிலும் `உடலாக, உயிர்` என வேண்டும் சொற்கள் வருவிக்க. இதனுள், ``ஈசன்`` என்றது `சிவன்` என்றதேயாதல் வெளிப்படை. ``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினு மில்லை``7 என முதற்கணே கூறினார்.
இதனால், முதற்கண்கூறிய சிவனது முதன்மை வலியுறுத்திப்புகழப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

திகைஅனைத் தும்சிவ னே அவன் ஆகின்
மிகைஅனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே
புகைஅனைத் தும்புறம் அங்கியிற் கூடும்
முகைஅனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

மனம் உடைமையால், `மனிதர்` எனப் பெயர் பெற்றவர்களே! (அந்த மனம் திருந்தியதாய் இல்லையே.) (``மனிதர்காள்! இங்கே வம்மொன்று சொல்லுகேன்``1 என்பதிலும் இக்குறிப்பு உள்ளது.) உலகனைத்தும் சிவமயேமே. அனைத்தும் அவனானபின்பு சொல்ல வேண்டியது என்ன இருக்கின்றது? ஆகவே, வீண் வாதங்களைக் கிளப்ப வேண்டா. ஏனெனில், சில இடங்களில் வெளியே காணப்படுகின்ற புகை உள்ளே மறைந்திருக்கின்ற நெருப்பினின்றும் வந்ததுதான். பின்பு அஃது அடங்குவதும் நெருப்பில்தான் அது போலத் -தான் காணப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் சிவனிடத்திலிருந்து வந்தவைதாம். ஆகவே, அவை ஒடுங்குவதும் அவனிடத்தில்தான்.

குறிப்புரை :

இவ்வாறு கூறுவன ஆணை மொழிகளாம். அஃதாவது உபதேச மொழிகளாம். ஆசிரியர் மாணாக்கனை `இவ்வாறு நில்` என்றால் மாணாக்கன் அவ்வாறு நிற்க வேண்டியவனே தவிர, `ஏன், ஐயா, இவ்வாறு நிற்கச் சொல்கின்றீர்` என வினாவுதற்கு உரியன் அல்லன். அத்தகையவான மொழிகள் ஆணை மொழிகளாம். ``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த``2 எனத் தொல்காப்பியர் கூறியதும் இவ்வாறான மொழிகளை நோக்கியே. இவ்வாறான நல்லாசிரியரை, தொல்லாணை நல்லாசிரியர்``3 எனச் சங்க இலக்கியங்கள் கூறும். ஞானசம்பந்தரது பாடல்களில் பல இத்தகையினவாய் இருத்தல் காணலாம். ``புறம்`` என்பதற்கு, `புறத்து உள்ளன`` எனவும் `பின் அங்கியிற் கூடும்` எனவும் உரைக்க. இஃது எடுத்துக் காட்டுவமை. முகை - அரும்பு. அரும்புதல் தோன்றுதல் ஆகலின் அது தோன்றிய பொருள்களைக் குறித்தது. ஆதிப் பிரான் - ஆதி சத்தியை உடைய கடவுள். ``எல்லாம் சிவன் என்ன நின்றாய் போர்றி``4 என்ற அப்பர் திருமொழியை, ``திகை அனைத்தும் சிவம்`` என்பதனோடு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், சிவன் எல்லாப் பொருளுமாய் நிற்கும் பெருமை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன் றாகி
இவன் `தான்` எனநின்(று) எளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகி
நவின்றா உலகுறு நம்பனு மாமே.

பொழிப்புரை :

சிவன், ஏழுலகங்களும் ஒன்றாக ஓர் உருவாய்க் கலந்து, அப்பொழுதே தான் அவற்றுள் ஒன்றும் ஆகாது தனியனாய் நிற்பினும், தனிமையானோர் பலர் பிறர்க்கு எளியராதல்போல எளியனல்லன்; அரியனே, இனி இவன் அளவற்ற உயிர்களோடு அவையேயாய்க் கலந்து அவற்றின் செயல்களில் எல்லாம் தானும் உடன் பயின்று, அனைத்துயிர்கட்கும் ஆத்தனும் ஆகின்றான்.

குறிப்புரை :

செய்யுளாகலின், ``இவன்`` என்னும் சுட்டுப் பெயர் முன் வந்தது. `தான் என நின்றும் எளிய னல்லன்` என உம்மையை மாற்றிவைத் துரைக்க. நவிலுதல் - பயிலுதல். நம்பன் - நம்பத் தக்கவன். இதுவே வடமொழியில் `ஆத்தன்` எனப்படுகின்றது. இதனுள் சிவன் எல்லாப் பொருளிலும் ஒன்றாய்` வேறாய் உடனாய் நின்று உயிர்கட்கு உறுதுணையாதல் கூறல் பட்டவாறு அறிக. இரு பொருள் ஒன்றாய், வேறாய், உடனாய் இயைந்து நிற்பதொரு சம்பந்த விசேடமே சைவ சித்தாந்தத்துள் கூறப்படும் சுத்தாத்துவிதம் ஆதலை நினைக. சிவன் இவ்வத்துவிதப் பொருளாம் முறைமை இங்குப் புகழ்ந்து கூறப்பட்டது.
இம்மந்திரம் பதிப்புக்களில் இரண்டாம் தந்திரத்தில் `அனுக்கிரகம்` என்னும் அதிகாரத்திலும் காண்பபடுகின்றது.

பண் :

பாடல் எண் : 30

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப
உரையில்லை உள்ளுறும் உள்அவன் தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளில் முதல் மூன்றைக் கடந்து, மேலேயுள்ள `சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் விளங்குவோனாய் உள்ளவன் சிவனேயன்றிப் பிறரல்லர். (பிறர் எல்லாரும் மேற்கூறிய மூன்று கலைக்குள் இருப்பவரே` என்றபடி.) ஆகவே அவனே யாவர்க்கும் தலைவன் எல்லாத் தத்துவங் கட்கும் முதல்வன். உயிர்கட்கெல்லாம் உயிராய் அவைகளின் அறிவினுள் உள்ளவனும் அவனே. ஆதலின், ஏனைத் தேவர்களோடு அவனையும் ஒப்ப வைத்துக் கூறும் கூற்றுக்கே இடமில்லை. இனி அவன், எவராயினும் தம்மை அவனுக்குக் கொடுத்துப் பெறத் தக்கவனேயன்றி, வேறு பொன், பொருள் முதலியவற்றைப் பண்ட மாற்றாகக் கொடுத்துப் பெறத்தக்கவன் அல்லன். இவற்றையெல்லாம் அறிந்து அவனை நினைமின்கள்.

குறிப்புரை :

``கலையொரு மூன்று`` என்பவற்றை `இடைகலை, பிங்கலை, சுழுமுனை` எனவும், `தந்திர கலை, மந்திர கலை, உபதேச கலை` எனவும், ``அருள் நூலும், ஆரணமும் அல்லாதும்``1 எனவும் உரைப்பாரும் உளர், சிவனை ஏனை விண்ணவரின் வேறு வைத்துக் கூறுதற்குக் காரணம் கூறுகின்றார் ஆகலின், அவற்றிற்கு இங்கு இயைபின்மையறிக. சிவனை `பரம்பொருள்` எனக் கொள்பவர் தவிர ஏனையோரெல்லாம் போக்கிய காண்ட தத்துவங்கட்குமேல் (ஆன்ம தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும், போசயித்திரு காண்ட தத்துவங்கட்குமேல் (வித்தியா தத்துவங்கட்குமேல்) உள்ள தத்துவங்களையும் உணராமையால் அவரால் கொள்ளப்படும் கடவுளர்கள் யாவரும் `நிவிர்த்தி பிரதிட்டை, வித்தை` என்னும் மூன்று கலைகட்குள்ளே நிற்பவராவர். ஆன்ம தத்துவங்களில் கீழ் உள்ளதாகிய பிருதிவி தத்துவத்தளவில் நிற்பவன் பிரமதேவன். ஆகவே இந்திரன் முதலிய பலரும் அவனுக்குக் கீழ்நிற்போரேயாவர். அவரெல்லாம் நிவிர்த்திக் கலைக்கு உட்பட்டவர்கள்.
பிருதிவிக்குமேல் பிரகிருதியானவும் சென்று நிற்பவன் மாயோன். ஆகவே, அவனும், அவனைச் சார்ந்த அதிகாரிகளும், அடியவர்களும் எல்லாம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டவர்கள். ஆயினும் பௌத்தரும், சமணரும் `உயிரும், வினையும் உண்டு` என நம்புபவர்கள். வினை, புத்தி தத்துவத்தையே பற்றிக் கிடத்தலாலும் அவர்கள் `அறிவு, அல்லது, உயிர்` என்பன எல்லாம் புத்தி தத்துவத்தையேயாகலானும் அவர்கள் புத்தி த்ததுவத்தளவில் செல்லுதற்கு உரியர். `புத்தி தத்துவம் பிரதிட்டா கலைக்கு உட்பட்டது` என்பது மேலே பெறப்பட்டது.
புறச் சமயிகளில் மீமாஞ்சகரும், சாங்கியரும் கடவுட் கொள்கை இல்லாதவர்கள். ஆயினும் உயிரும், அதற்குக் கருவியாகிய உடம்பு முதலியனவும், வினையும் உள்ளன` என நம்புபவர்கள். அவருள் சாங்கியர் கூறும் தத்துவமே மீமாஞ்சகர், ஏகான்ம வாதிகள் ஆகியோருக்கும் ஆகையால் அவரெல்லாம் பிரகிருதிக்குமேல் உள்ள புருட தத்துவத்தளவில் செல்லுதற்குரியர். புருட தத்துவம் வித்தியா கலையின் கீழ் எல்லையாகலின், இவர்களை பிரதிட்டாகலைக்குள் நிற்பவர்களாகவே கருதலாம். இவருள் ஏகான்ம வாதிகள் `கடவுள் இல்லை` எனக் கூறாவிடினும் `கடவுள் வியாவகாரிக சத்தைய வதன்றிப் பார மார்த்திக சத்தை அன்று` எனவும், `பாமார்த்திகப் பொருள் பரப்பிரம்பம்; அது நாமேயன்றி வேறில்லை` எனக் கூறுதலால் அவர்கட்கு எல்லையும் புருட தத்துவமே யாகின்றது.
அகப்புறச் சமயிகளாகிய பாசுபதர், மாவிரதர், காபாலிகர் வைரவ மதத்தினர் முதலியோர், `சிவன், சிவன்` எனக் கூறினாலும், அவர் கருதுவன எல்லாம் உருத்திர வகையினரையே. வாம மதத்தவர் `சத்தி` என்பதும் உருத்திராணிகளில் ஒருத்தியையே. சுத்த சாத்த மதத்தினர் இவரின் வேறுபட்டவர்கள். அவர்கள் அகச் சமயிகளுள் வைத்து எண்ணத் தக்கவர்கள். ஆகவே அகப்புறச் சமயிகளது கடவுளரும் வித்தியா கலைக்கு உட்பட்டவர்களே.
அகச் சமயிகளாகிய பாடாண வாத சைவர் முதலியோர் `இலய சிவன், போக சிவன், அதிகார சிவன்` எனப் பகுதிப்பட்டு, முறையே உருவம், அருவுருவம், அருவம் என்னும் திருமேனிகளைத் தாங்கித் தூல, சூக்கும, அதிசூக்கும ஐந்தொழில்களைச் செய்யும் தடத்த சிவபேதங்களுள் ஒரோ ஒருவனையே பரம சிவனாகக் கொள்வர். அதனால் அவர்களது கடவுளர், வித்தியா கலைக்கு மேல் உள்ள சாந்தி, சாந்தியதீதை கலையில் உள்ளவராவர். இம்மந்திரத்தில் ஐந்தொழில் இயற்றுதல் இன்றிச் சித்தாந்த சைவர்க்கே உரியவனாய்த் தன்னளவில் நிற்கும் சொரூப சிவனைக் கூறாமல், ஐந்தொழில் இயற்றி, `பதி` எனப் பெயர்பெற்றுத் தலைவனாய் அகச் சமயத்தார்க்கு உரிய தடத்த சிவனையே கூறினார் ஆதலின், `கலை ஐந்தும் கடந்து` என்னாது, ``கலையொரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற தலைவன்`` என்றார்.
ஒரு பொருளைப் பெறுதற்கு அதற்கு நிகரான மற்றொரு பொருளைக் கொடுக்குமிடத்து, அவ்வாறு கொடுக்கப்படும் பொருளே `விலை` எனப்படுவதல்லது, தன்னையே தான் கொடுப்பது விலை யெனப்படாது, ஏனெனில் விலையைக் கொடுப்பவன் பின்பு அவ் வலைக்கீடாகத் தான் வாங்கும் பொருளைப் பின் சுதந்திரமாய் நின்று அனுபவித்தற்கு உரியன். தன்னையே கொடுத்தவன் தன்னை வாங்கி -னவனுக்கு அடிமையேயல்லது, சுதந்திரமிலன். இவ்வகையில் உயிர்கள் தம்மையே கொடுத்துப் பெறத் தக்கவன் சிவன் ஆதலின், `அவனுக்கு விலையில்லை` என்றார். ``உள்ளுறும் உள்`` என்றதில் பின்னுள்ள ``உள்`` என்பது ஆகுபெயராய், அவ்விடத்துள்ள பொருளைக் குறித்தது. உம்மை சிறப்பும்மை. இதனால் பிறரோடு ஒப்ப வைத்துக் கூறுதல் கூடாமை சொல்லவேண்டாவாயிற்று. `விண்ணவரோடும் ஒப்பித்து உரைப்ப` என ஒரு சொல் வருவிக்க. உரைப்ப உரை. உரைக்கப்படுவன -வாகிய உரைகள். ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், சிவனது முதன்மை தத்துவங்களில் வைத்து இனிது விளங்கக் கூறிய புகழ்ந்துரைக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.

பொழிப்புரை :

மேற்கூறிய தலைவன், மேற்கூறிய கலைகளும் கீழதாகிய நிவிர்த்தி கலையில் இருக்கும் பிரம தேவன் செய்கின்ற படைத்தலையும் நீக்கி, அவனுக்குமேல் இருபத்து மூன்று தத்துவங் -கட்குத் தலைவன் ஆதலின், `நெடியோன்` எனப்படுகின்ற மாயோன் செய்கின்ற சின்னாள் நிலைப்பதாகிய காத்தலையும் நீக்கி, அவனுக்கு மேல் உள்ள உருத்திரன் அறியாமையிற்படுத்துத் துன்பக்கிடையில் கிடத்துகின்ற அழித்தலையும் நீக்கி அடியேனை உய்ய வைத்து, என்மீது அருள்மிக உடையன் ஆயினான்.

குறிப்புரை :

`அவனது பெருமை அத்தகையது` என்பது குறிப் பெச்சம். கால் - அடிநிலை. இதனை, `கடைக்கால்` என்பர். பாசம், பிணிப்பது. ``பிரமன் செய் குறுமை நேசம்`` என மொழி மாற்றுக் கொள்க. நேசம் - கருணை. கருணையால் செய்யப்படுவதநை, `கருணை` என உபசரித்துக் கூறினார். முத்தொழில்களுள் காத்தல் தொழிலையே கருணைத் தொழிலாக மக்கள் கருதுதல் பற்றி அதனை, ``குறுமை நேசம்`` - என நகையாடிக் கூறினார். செடி - கீழ்மை. அஃது இங்கு அறியாமையைக் குறித்தது. ஊழியை முடிப்பவன் உருத்திரன். அது முடிந்தபொழுது கருவிகளுள் யாதும் இன்மையால், உயிர்கள் ஆணவத்துள் அழுந்தி, யாதும் அறியாது கிடக்கும் சிலவகைக் கேவலங்களுள் இது `சகல கேவலம்` எனப்படும். `தவம்` என்பது, `தாபம் - வெப்பம்` என்பதினின்றே வருதலால் இக்கேவல நிலையையும் `தவம்` என்கின்றவர் `செடியார் தவம்` என வேறு படுத்திக் கூறினார். ``சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் - சுடச்சுட நோற்கிற் பவர்க்கு``1 என்னும் திருக்குறளும் `தவம்` என்னும் சொல்லியல்பை விளக்குவதாய் உள்ளது. இவ்வாற்றால் அழித்தலைக் குறிக்கவே, அதனைச் செய்வோனை எடுத்தோதல் வேண்டா வாயிற்று. இங்கு, செய்தல், சேர்த்தலாம். முத்தியாவது விடுதலை யாகலின், `அவ்விடுதலை யாது` என்பார்க்கு, `படைத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் காரணக் கடவுளர்களது செயல்களினின்றும் விடுபடும் விடுதலை` என்பதே விடையாகக் கூறப்படுகின்றது. அதனையே நாயனார் இம்மந்திரத்தில் இவ்வாற்றாற் கூறினார்.
இதனால், முன் மந்திரத்தில் ``நாடுமின்`` எனக் கூறிய அத் தலைவன் உயிர்களிடத்துக் கொண்டுள்ள அருள்நிலை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஈசன்என் றெட்டுத் திசையும் இயங்கின
ஓசையி னின்றெழு சத்தம் உலப்பிலி
தோசம் ஒன்(று) ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `நாதம்` எனப்படும் சூக்குமை வாக்கினின்றும் தோன்றிய அனைத்து மொழிகளுமாகிய சொற் பிர பஞ்சத்திலும் நீங்காது நிறைந்து நிற்கின்றான். `தேசம், என்று சொல்லப் படும் பூமி ஒன்றுதான் ஆயினும் அஃது ஒன்பது கண்டங்களாகப் பிரிந்து நிற்கின்றது. அப் பிரிவுகளாகிய பொருட் பிரபஞ்சத்திலும் அவன் மலரில் மணம்போல் மருவி நிற்கின்றான். அதனால் அனைத்துலகங்களும், சிவனாகிய முதலையே முதலாகக் கொண்டு இயங்குகின்றன.

குறிப்புரை :

`ஆகலான் அவனைத் தோத்திரித்தல் உயிர்கட்குக் கடன்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி யுரைக்க. `சத்தத்தும்` என அத்தும், உம்மையும் விரிக்க. ``இமயம், குமரி இவற்றின் இடைப்பட்ட நிலம், `பாரத வருடம்` என ஒன்றாகவும், அதுதானே குமரி முதலிய ஒன்பது கண்டங்களாகவும் சொல்லப்பட்டது`` என்பதைச் சிவஞான மாபாடியத்து இரண்டாம் சூத்திரத்து, மூன்றாம் அதிகரணப் பகுதியில் காண்க. `அனைத் துலகங்களும்` என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பாரத வருடம் முழுவதையும் கூறினார். ``வாச மரல்போல்`` என்பதை, `மலர் வாசம் போல்` என மாற்றியுரைக்க. ஈசன் - சிவன். `சிவன் என்று` என்றது, `சிவனே முதல் என்று கொண்டு` எனக் கூறியவாறு. இங்ஙனம் கூறியதனால், ``உலப்பிலி`` எனவும், ``மருவி நின்றான்`` எனவும் போந்த பயனிலைகட்கு, `சிவன்` என்பதே எழுவாயாயிற்று.
இதனால், சிவன் தோத்திரிக்கப்படும் பொருளாதல் காரணங் கூறி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

இல்லனு மல்லன் உளனல்லன் எம்மிறை
கல்லது நெஞ்சம் பிளந்திடுங் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லருஞ் சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், உலகர் எத்தனை கூறினாலும், அவனை உணர்ந்தோர். ``என் புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென்பனோ``1 எனவும், ``ஏதுக்களாலும், எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி``2 எனவும் உறுதிப்பட உரைத்தலால், இல்லாதவனும் அல்லன். அவர் எத்தனை சொல்லினும் உலகர், ``காணாதான் கண்டானாம் தான் கண்டவாறு``3 என்றபடி. தாம் கூறுவதையே கூறி, `சிவன் இல்லை` எனப் பிணங்குதலின், உள்ளவனும் அல்லன். `இல்லை` என்பவரது கல் போன்ற நெஞ்சங்களிலும் ஒரு காலத்தில் அந்நெஞ்சைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றுவான்; ஏனெனில், அவன் பழமையாகவே எங்கும் இருப்பவன்; இயல்பிலே மாசற்றவன் ஆதலின் மாசிலாமணிபோல ஒளிவிடுந் தன்மையன்; தோன்றியபின் தோன்றிய இடத்தினின்றும் பெயர்தல் இல்லாதவன்; சொல்லைக் கடந்த அறிவு வடிவினன். என்றாலும் அனைத்துயிர்களையும் தொடர்ந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

``உண்மையுமாய், இன்மையுமாய்``4 என்னும் திருவாசகத்தையும் காண்க. ``உளதன் றிலதன்று``5 எனப் பிற்காலத்தவரும் கூறினார். ``தூய்மணி`` என்பதை, ``தூயவன்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தூயன் ஆகலின் தூய்மணிபோல்பவன்` என ஒரு சொல் வருவித்துரைக்க.
இதனால், சிவனது பெருமைகளே புகழ்ந்து கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவார் உள்ளத் தகத்தும் புறத்தும்
வேறுசெய் தாங்கே விளக்கொளி யாமே.

பொழிப்புரை :

எப்பொழுதும் பகையாய் ஒருவரை ஒருவர் எதிர்ப்பவராகிய தேவரும், அசுரரும் தாம் தாம் தனித் தனியே வந்து நாள்தோறும் சிவபெருமானைத் துதித்து அவன் திருவடியை நினைப்பர். துதிப்பவர்க்கு அருளும் முறையில் அவர் வேண்டிய வற்றை அவர்க்கு அவன் அளித்து நிற்பான். (அவற்றால் விளையும் விளைவுகட்கு அவன் பொறுப்பாதல் இல்லை. மனிதருள்ளும் இத்தகையோர் உளர். அவர்களிடத்தும் சிவபெருமான் அத்தகையோ -னாகியே நிற்பன். ஆயினும், உள்ளத்தில் அன்பு மிகத் துதிக்கின்ற வர்களுக்கு அவன் அகமாகிய உயிரைப் பற்றியும், புறமாகிய பொருள், சுற்றம் பற்றியும் அவர் வேண்டுவனவற்றை வேண்டிய வாறே தாராது, ஆவனவற்றைத் தந்து, ஆகாதனவற்றை விலக்கி, அவர்களது அறிவையும் திருத்துவான்.

குறிப்புரை :

இதனை அப்பர் பெருமான் கயிலையை அடைய முயன்று அணுகியும் அடையச் செய்யாது மீள்வித்தமையும், வாதவூரடிகள் ஏனையடியார் போலத் தம்மையும் உடனழைத்துச் செல்ல வேண்டியும் அழையாது இருத்தினமையும் போல்வனவற்றால் உணரலாம்.
``வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மை எல்லாம்தொழ வேண்டி``1
என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. ``மாறாய் எதிர்`` என ஆக்கம் வருவிக்க. `உள்ளத் ஊறுவார்` என மாற்றியுரைக்க. `அகம், புறம்` என்பன முதற்கண் அவ்விடத்துப் பொருள்களைக் குறித்துப் பின் அவை பற்றிய பற்றுக்களைக் குறித்தன. `அப்பற்றுக்களில் அவர் வேண்டியவாறன்றி வேறு செய்தும்` என்க. `செய்தும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `விளக்கொளியாதல் அறிவிற்கு` என்க. ஊறுவார் உள்ளத்திற்கு அருளும் முறை கூறியதனால், அவரின் வேறானவர்க்கு அருளும் முறை பெறப்பட்டது.
இதனால், சிவன் தன் அடியார்க்குச் சிறந்த வகையில் அருள்புரிதல் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

விண்ணினுள் வந்த வெளியினன் மேனியன்
கண்ணினுள் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினுள் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில்ஆ னந்தமும் எங்கள் பிரானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், ஆகாயத்திற்கு உள்ள அருவத்தன்மையன், ஆயினும் உருவம் உடையவனே. கண்ணாற் காணப்படும் பொருளல்லன். ஆயினும் கண்ணாற் காணப்படுபவனே. ஒன்றை ஆக்கும் செயலின் பலனாய்த் தோன்றுவது பலத் தோன்றியவன் அல்லன்; ஆயினும் அத்தன்மை உடையவனே. ஆகவே அவன் எல்லையுட்படாத இன்பமும் ஆவான்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளிலும் முன்னர்ச் சிவனது சொரூபத் தன்மையும், பின்னர்த் தடத்தத் தன்மையும் கூறப்பட்டன. `தடத்தத் தன்மையால் அளவுபட்ட இன்பத்தையும் தருவன்` என்றபடி. பண் - பண்ணுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எண்`` இங்கு அளவைக் குறித்தது. உம்மையால் எண்ணுடை ஆனந்தமும் பெறப்பட்டது. ஆனந்தம் இரண்டில் எண்ணில் ஆனந்தம் அவனே. எண்ணுடை ஆனந்தத்தைத் தருதல் பற்றி அதனையும் அவனேயாக உபசரித்தார். இதன்கண் பாடங்கள் வேறுபட்டன.

பண் :

பாடல் எண் : 37

உத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :

சிவன் ஏனை யாவரினும் மேலானவன்; எந்த இடத்திலும் முகந்துகொள்ளக் கூடிய பேரானந்தப் பெருங்கடலாய் உள்ளவன்; முத்துப்போலும் வெண்மை நிறம் உடையவன். அப்பொழுதே நீலமணிபோலும் கருமை நிறத்தையும் உடையவன். அத்தகையோனைச் சித்தர்களும், தேவர்களும் எத்துணையோ காலமாக பொதுவாக எண்ணுகின்றார்கள். ஆயினும் இன்னும் உண்மையாக அறிந்திலர்.

குறிப்புரை :

சிவபெருமான், ``பொங்கழல் உருவன்``1 ஆயினும் பளிங்குபோன்றவன் என்பதை, ``தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே``2 என்பதனான் அறிக. வெண்ணிறம் அப்பன், கருநிறம் அம்மை. `எவரும் தாம் தாம் இடத்தில் இருந்தே முகந்து கொள்ளக் கூடியகடல் எதுவும் இன்மையால் சிவன் அத்தகைய கடலாய் இருத்தலாலும், ஒருபாதி உடம்பு ஒரு நிறமும், மற்றொரு பாதி உடம்பு வேறொரு நிறமும் உள்ளார் எவரும் இன்மையால் சிவன் அத்தகைய உருவம் உடையவனாக இருத்தலாலும் இந்த அதிசயங்களைச் சித்தரும், அமரரும் எண்ணி வியக்கின்றார்களேயன்றி, `எவ்வாற்றால் இவன் இப்படியிருக்கின்றான்` அறிந்தாரில்லை` என்பதாம். ``ஓருடம் பிருவாரகி``3 என வேறிடத்தும் வியந்தோதுதல் காணத்தக்கது. ``ஈசன்`` எனப்பின் வருவதனை வைத்து, அவ்விடத்தில், `அவனை` எனச் சுட்டியுரைக்க.
இதனால், சிவனது, யாவராலும் அறுதியிட்டறியப்படாத அதிசயத் தன்மை புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.

பொழிப்புரை :

உயிர்களுக்குச் சிவனது அறக்கருணை எந்த அள வினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாக வீட்டின்பம் உள தாகும். அவனது மறக்கருணை எந்த அளவினதாகக் கிடைக்கின்றதோ அந்த அளவினதாகப் பிறவித் துன்பம் உளதாகும். இவையறிந்து, உலகில் எத்தனை வண்ணங்களும், வடிவங்களும் உள்ளனவோ அத்தனை வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குதலைக் கண்டும் மக்கள் அவனைத் துதிக்க மாட்டா தவர்களாய் உள்ளனர்.

குறிப்புரை :

முதலடியை இரண்டாம் அடிக்குப் பின்னர்க் கூட்டி யுரைக்க. ``அவ்வண்ணம் ஈசன்`` என்பதில் ``வண்ணம்`` என்று ஆகு பெயராய், `வண்ணத்தன்` எனப்பொருள் தந்தது. வண்ணம் கூறவே, வடிவமும் பெறப்பட்டது. யாதொரு தெய்வங் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்``1 என்பது சித்தாந்தமாகலின் தெய்வத் திருவுருவங்கள் எல்லாம் சிவன் வடிவே யாதல் பற்றி, `எல்லா வண்ணங்களுடனும், வடிவங்களுடனும் சிவன் உலகில் விளங்குகின்றான் என்றார். `சிவன்` என்னும் வண்ணம் இன்றியே தெய்வங்களை வழிபடினும் அவ்வழிபாடு பின்பு சிவ நெறியிற் சேர்த்தல் பற்றி, ``போற்றகிலாரே`` என்றார். புறச்சமய நெறி நின்றும் அகச் சமயம் புக்கும் ... ... சென்றால் சைவத் திறத்தடைவர்`` என்னும் சிவஞான சித்தியால் பிற தெய்வ வழிபாடுகள் சிவநெறி அடைதற்கு வழியாதல் விளங்கும் ``ஈசன்`` என்றதன் சார்பால் ``அறம், மறம்`` என்பன அத்தன்மையவான அவனது கருணை வகைகளைக் குறித்தன. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியும் ஆகும். பவம் - பிறப்பு. அது, ``பாவம்`` என நீட்டப்பெற்றது. `இன்பம், பவம்` என்பன ஒன்றால் ஒன்று விளங்க வைத்தன ஆதலின், பவத்துன்பம், வீட்டின்பம்` என உரைத்துக் கொள்க. ``புறம் பல`` என்பதில் பல, பல தெய்வ வடிவங்கள்.
இதனால், `மக்கள் எவ்வளவாயினும் தோத்திரம் செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
``எப்பரி சாயினும் ஏத்துமின்; ஏத்தினால்,
அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே``1
என முன்னருங் கூறினார்.

பண் :

பாடல் எண் : 39

இங்குநின் றான் அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான் புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறாய்
எங்கும்நின் றான்மழை போல்இறை தானே.

பொழிப்புரை :

சிவன் இங்கிருக்கின்றான்; அங்கிருக்கின்றான்; எங்கும் இருக்கின்றான். எல்லாப் பொருள்கட்கும் மேலே யிருக்கின்றான்; உலகிற்குத் தலைவன்; அற வடிவினன்; இரவில் தண்கதிர் மதியாய் நிற்கின்றான்; பகலில வெங்கதிர் ஞாயிறாய் நிற்கின்றான்; மேகத்தைப்போலக் கைம்மாறு கருதாது எவ்வுயிர் கட்கும் தனது அருளைப் பொழிகின்றான்.

குறிப்புரை :

`அத்தகையோனை மக்களுயிர்கள் தோத்திரிக்க வேண்டாவோ` என்பது குறிப்பெச்சம். ``இங்கு, அங்கு`` என்பன இவ்வுலகத்தையும், பிற உலகங்களையும் குறித்தன. `எங்கும் உளன்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இது முடிந்தது முடித்தல். பொங்குதல் - மேல் எழுதல். உலகங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். `கங்குலில் கதிர் மதியாய் நின்றான்` என மாற்றி ஆக்கம் வருவித்துரைக்க. இதனானே ``ஞாயிறாய்`` என்பதில், `பகலில் நின்றான்` என்க. ``இறைதான்`` என்பதில் `தான்` எழுவாய்ப் பொருள்படவந்த அசை நிலை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

உணர்வது வாயுமே உத்தம மாயும்
உணர்வது நுண்ணற(வு) எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானாகிய சிவன், சார்ந்ததன் வண்ண மாவதும், ஒருகாலத்து ஒன்றனை மட்டுமே உணர்தலின் சிறிதாயும் உள்ள அறிவினையுடைய உயிர்களாயும் அவ்வுயிர்கட்கு நிலைக் களமாகிய உடல்களாயும் அவ்வுடல்களுக்கு இடமாகிய அண்டங் களாயும் உள்ளான். அவனை, உயிர்களின் அறிவுக்கறிவாகவும், உயிர்க்குணங்கலின் மாறுபட்ட குணங்களையுடையவனாகவும் உணரும் அறிவே நுண்ணறிவாகும்.

குறிப்புரை :

``புணர்வது`` என்பது `அழுந்துவது` என்னும் பொருட்டு. `புணர்வதாயும், புல்லிதாயும் உள்ள உணர்வு` என்க. `எம்பெருமான்` என எடுத்துக்கொண்டு, மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``உணர்வு, உடல்`` என்பவற்றிலும் உள்ள எண்ணும்மைகள் தொகுக்கப்பட்டன. ``எம்பெருமானை`` என்பதை `அவனை` என்றவாறாகக் கொள்க. முதற்கண் உள்ள, ``உணர்வது`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. முதலடியில் உள்ள, ``ஆயும்`` என்றவற்றை, `ஆகவும்` எனத் திரிக்க. ஏகாரங்கள் அசை.
இதனால், மக்கட்குச் சிவனைத் தோத்திரித்தல் கடமையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினுந் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் சார்பவன்
தன்வலி யாலே தடங்கட லாமே.

பொழிப்புரை :

சிவன் தனது ஆற்றலால் தானே உலகத்தை யெல்லாம் தாங்குகின்றான்; அதனால் அவன் மிகப்பெரிய பொருள் போலத் தோன்றினும் தனது ஆற்றலாலே அணுவினுள் அணுவாய் நிற்கும் நுண்ணியனும் ஆகின்றான்; எட்டுப் பெருமலைகளிலும் நின்று நிலத்தை நிலைபெறுவிக்கின்றான்; நிலம் முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள பெரிய கடலாயும் விரிந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அவனது ஆற்றல் எத்தகையது? எவ்வளவினது? என அறிதல் அரிது` என்பது குறிப்பெச்சம். `சாரான்` என்பது பாடமன்று. சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சிவனது ஆற்றல் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

ஏனோர் பெருமைய னாகிலும் எம்மிறை
தானே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான் ஏனைத் தேவரினும் பார்க்க மிகப் பெரியோனாயினும், உயிர்களின் சிற்றுடம்பினுள் அவற்றினும் சிறியவாய இருதயத்துட் சிறியனாய்க் கலந்து, அங்குச் சுடர்வடிவாய் விளங்குகின்றான். ஆகவே, அப்பெரியோன் ஏனைத் தேவரால் அளவிட்டறியப்படும் அளவினன் அல்லன். இங்ஙனமாகவே உயிர்கள் செய்யும் தவங்களை அளவிட்டறிபவன் அவனே.

குறிப்புரை :

``தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற் றரற்றுகின் றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்ப ரீசனே``1
என அப்பர் பெருமானும் அருளிச் செய்தார். `சிறுமை` என்பது ஆகுபெயராய்ச் சிறியவாகிய உடல்களைக் குறித்தது. சிவன் உயிர்களின் இதயங்களில் சுவர் வடிவாய் நிற்றலைச் சாந்தோக்கிய உபநிடதம் தகர வித்தை கூறுமிடத்தில் கூறிற்று. `அம்மாதேவன்` எனச் சுட்டு வருவித்துரைக்க.
இதனால், சிவன் பெரியவற்றிற்கெல்லாம் பெரியவனாய்ச் சிறியவற்றிற்கெல்லாம் சிறியவனாய் நிற்கும் திறம் புகழ்ந்து கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளை
குண்டாலங் காய்த்துக் குதிரை பழுத்தது

உண்டார்கள் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துட் பட்டுப் பிணங்குகின் றார்களே.

பொழிப்புரை :

ஆல் மரத்தினின்றும் பாகுபட்ட பழத்தின் விதையி லிருந்து முளைத்த சிறு முனை, பெரிய மரமாகி, உருண்ட வடிவான ஆலங்காயே காய்த்தது. ஆயினும், அந்தக் காய் மாம்பழமாகப் பழுத்தது. இந்த அதிசயப் பழத்தை உண்டவர்கள் பிறவித் துன்பத்தி னின்றும் நீங்கிக் களித்தார்கள். உண்ணும் உணர்வு இல்லாத பேதை -யர்கள், பிறவித் துன்பத்தில் அகப்பட்டு முரணியே நிற்கின்றார்கள்.

குறிப்புரை :

இம்மந்திரமும் மறைந்துரையாடலாகவே அமைந்தது. ஆலமரம் - உடம்பு. உடம்பை அலமரமாகச் சிவாகமங்களின் கிரியா பாதங்கள் வருணிக்கும் பிண்ட - பாகுபட்ட. ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆல் - ஆலம் பழம்; ஆகுபெயர். அது முன் மந்திரத்திற் கூறிய இருதயம் முளை, இருதயத்தில் சுடர்விடும் சிவன். மரம், தியானம் - தியானிக்கப்படும் பொருட்டும் தியானத்திற்கும் வேற்றுமையின்மையாலும் வளர்வதாதலின் தியானமே `மரம்` எனப்பட்டது. பெருமுளை - பின் பெரிதாதற்குரிய முளை. காய், தியானத்தில் வரும் திருவருள். உருண்டைக்கு, கீழ், மேல், வலம் இடம் ஆகிய பக்க வேறுபாடுகள் இன்மை பற்றி யாவர்மாட்டும் ஒப்பச் செல்லும் திருவருட்கு உருண்டை வடிவம் கற்பிக்கப்பட்டது. `மா` எனக் கூறி, ஒருவகை மரத்தை உணர்த்தற்பாலதனை, `மா` என்னும் பெயருடைமையே பற்றி, `குதிரை` எனக் கூறியது. அதிசயத்தின் மேலும், மற்றும் ஓர் அதிசயம் தோற்றுவித்தற்பொருட்டு. இவ்வாறு எழுத்தொப்புமையால் ஒன்றாகின்ற சொற்களால் அவற்றின் பொருளல்லாத பிற பொருளைக் கூறுதலையும் ஒட்டணி வகையிற் சேர்ப்பர். கந்தபுராண ஆசிரியர், `சூரபதுமன் மாமரமாய் நின்றான்` எனக் கூறுமிடத்தில், `அத்தி, அரசு, வாகை, வன்னி, வீரை, இருப்பை` என்னும் மரப்பெயர்களை உடன் வைத்து, இந்திரன், அக்கினி முதலிய பிறபொருள்கள் தோன்றக் கூறியது முதலியன இதற்கு எடுத்துக்காட்டாகும். சீவக சிந்தாமணி ஆசிரியரும், `புத்திசேனன்` என்னும் பெயருடையவனை. ``திங்கள் விரவிய பெயரினான்``1 என்றார். அதற்கு நச்சினார்க்கினிரய், ``திங்கள் - மதி. `மதி எனவே புத்திசேனரும்`` என உரைத்து, தீத்தீண்டு கையார்`` என்றது வேங்கையை உணர்த்தினாற்போல - எனத் திணைமாலை நூற்றைம்பதின் தொடரை மேற்கோளாகக் காட்டினார். `வேங்கை` என்பது ஒரு சொல்லாயினும் அது, `வேம் கை` என்னும் புணர் மொழிபோல வைத்து, `வேகின்ற கை - தீத்தீண்டு கை` எனப் பட்டது பிற்காலத்தில் காளமேகப் புலவரும்,
``கரிக்காய் பொரித்தாள்; கன் னிக்காயைத் தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்; - உருக்கமுடன்
அப்பைக்காய் நெய்த்துவட்ட வாக்கினாள், - அத்தைமகள்;
உப்புக்காண் சீசீ உமி``2
எனப் பாடினார். கரி - யானை; அத்தி. கரிக் காய் - அத்திக் காய் கன்னி - அரம்பை. அரம்பை - வாழை. கன்னிக் காய் - வாழைக் காய். பரி - குதிரை; மா. பரிக்காய் - மாங்காய். பை - பாம்பின் படம் அது. `படத்தையுடைய பாம்பு` என்று ஆயிற்று. பாம்பில் ஓர் இளம் கத்தரி. அப்பைக் காய் - கத்தரிக் காய். இவை போல்வன எல்லாம் சொற்சுவை பட வருவனவாகும். மாம்பழம், சிவானந்தம், பிண்டம் - உடல், முதற்கண் உள்ள ``பிண்ட`` என்பதனையும் இப்பொருட்டாகவே உரைப்பர். அது மறைபொருட் கூற்றிற்கு ஒவ்வாமை அறிக.
`அம்முச் சாரியை இடையினம் வருமிடத்துக் கெடும்` எனத் தொல்காப்பியர் கூறினாராயினும், பிற்காலத்தில் கெடாதே வழங்கும் வழக்கம் உண்டாயிற்று. ``உறக்கும் துணையதோர் ஆலம் வித்து``3 என்னும் நாலடி வெண்பாவைக் காண்க.
``பிணங்குகின்றார்கள்`` என்றது சமய வாதிகளை.
இதனால், தோத்திரத்தால் சிவானந்தப் பேறு உளதாதலைக் கூறி, அது செய்யாதாருக்கு இரக்கம் காட்டி முடிக்கப்படுகின்றது. எனினும், சமய வாதிகளைக் கூறிய இயைபே கொண்டு சமயங்களைப் பற்றி மூன்று மந்திரங்கள் கூறி முடிக்கின்றார். அவை பதிப்புக்களில் `அதிகப் பாடலகள்` எனக்காட்டப்படுகின்றன.

பண் :

பாடல் எண் : 44

முதல்ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக் கை கால்
மதியுடன் அந்தர் வகைவகை பார்த்தே
அதுகூற லொக்குமவ் வாறு சமயமே.

பொழிப்புரை :

``ஒன்றே பொருள் என்னின், வேறென்ப; வேறென்னின் - அன்றென்ப ஆறு சமயத்தார்.1 என்றாற்போலச் சமய வாதிகள் ஒருவர் கொள்கையை மற்றவர் மறுத்து வாதம் புரிதலை யானை கண்ட குருடர் கதையில் வைத்து உணர்த்திற்று இம்மந்திரம்.

குறிப்புரை :

``சமய வாதிகள் தத்தம் மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்``2
என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார். ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள``3 3மந்திரம் - 15,38. என்னும் மந்திரத்திற்கு இங்கும் கூறி முடிக்கின்றார்.
இதன் பொருள் வெளிப்படை. ஆனையாகிய முதல் ஒன்றேயாம்; ஆயினும் அந்தகர் அதன் உறுப்புக்களை வேறு வேறு முதல்களாகக் கூறிக் கலாம் விளைத்தல் போலவே, மெய்ப்பொருள் ஒன்றேயாயினும் அதன் இயல்புகளை வேறு வேறு பொருள்களாகக் கருதிச் சமய வாதிகள் ஒருவரை ஒருவர் மறுக்கின்றனர்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. சிவஞான போத அவையடக்கத்தில்,
``தம்மை - உணரார்; உணரார் உடங்கியைந்து தம்மில்
புணராமை``
என்றதன் உரையிலும் மாதவச் சிவஞான யோகிகள் இக்கதையையே உவமையாகக் காட்டினார்.
அகரம், பண்டறி சுட்டு அன்றி, `ஆறு ஆறாகச் சொல்லப் படுகின்ற சமயம்` எனினுமாம். `ஒருபுடையுணர்வே முரண்பாட்டிற்குக் காரணம் ஆதலின், முழுதுணர்வார்க்கு முரண் ஏதுமில்லை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 45

ஆறு சமயம் முதலாம் சமயங்கள்
ஊற தெனவும் உணர்க உணர்பவர்
வேற தறஉணர் வார்மெய்க் குருநந்தி
ஆற தமைபவர்க் கண்ணிக்குந் தானே.

பொழிப்புரை :

சமயங்களுட் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்ற ஆறு சமயம் முதலாக அனைத்துச் சமயங்களிலும் ஒரோ ஒன்றே `நன்று` என உணர்பவர் உணரட்டும் (அஃது அவர் விருப்பம்) சமய வேற்றுமை பாராட்டாது, `அனைத்துச் சமயங்களையும் அதனதனளவில் நன்றே` என உணர்பவர்க்கு உண்மைக் குரு நந்தி பெருமானேயாவார். அவரது மரபு நெறியே சான்றோர்க்கு இனிதாய் இனிக்கும்.

குறிப்புரை :

அதனதன் அளவில் நன்றாதலாவது, ஓரோர் பக்குவம் உடையார்க்கு அவர்க்கேற்ற நன்மையைத் தருவதாதல் ``எச்சமயத் தோர்செல்லும் - தீதொழிய நன்மை செயல்``1 1நல்வழி. என ஔவையார் கூறியதும், எல்லாச் சமயங்களும் ஓரோர் நன்மை கருதியே எழுந்தனவாதல் பற்றியே. அங்ஙனமாயின் பிற மதங்களை நூல்கள் மறுத்தல் ஏன் எனின், மறுப்பு, அதில் உள்ள நன்மையைப் பற்றி எழுதல் இல்லை; அவ்வச்சமயத்திற்கு மேம்பட்ட சமயத்தில் உள்ள நன்மையை மறுப்பதைப் பற்றித்தான் எழும் என்க.
உறுவது - நன்றாவது, ``உணர்வார் குரு`` என்னும் கிழமை்ப பொருள் தொகையில், `குரு` உயர்திணையாகலின் `உணர்வாரது குரு` என ஆறாவது விரியாது, `உணர்வார்க்குக் குரு` என நான்காவது விரிக்க. `அவரது ஆறு` எனச்சுட்டு வருவிக்க. `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். அமைபவர் - சான்றோர். சான்றோர் முழு துணர்ந்தவர். எனவே, `உணர்வார் உணர்க என்றது ஒருபுடை உணர்ந்தாரை நோக்கியாம்.
சமயங்களுட் சிறந்த சமயங்களாகச் சொல்லப்படும் ஆறாவன ஆறு தரிசன மதங்கள். அவை `வைசேடிகம், நையாயிகம், பூர்வ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை, சாங்கியம், யோகம்` என்பன. இவை வேதத்தின் தத்துவத்தை ஆராயும் நூல்களாகச் சொல்லப்படுதலின் சிறந்தனவாகச் சொல்லப்படுகின்றன. ``அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து``1 எனச் சுந்தரர் அருளிச் செய்ததும், வாதவூரடிகள் ``இருமுச் சமயம்``2 என்றதும் இவற்றையே. ``அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்``3 என அவர் அருளிச் செய்தது, காணாபத்தியம் கௌமாரம் முதலிய அறுவகைச் சமயங்களை. அவற்றிடையே கொள்கைப் பூசல் பெரும்பான்மையாக இல்லை.
இதனால், பிற சமயங்களெல்லாம் ஒருபுடை உண்மையை உடையனவாக, சைவம் முழுதுண்மை உடையதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திலர்
அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின்
முத்தி விளைக்கும் முதல்வனு மாமே.

பொழிப்புரை :

`புறப்புறம், புறம் அகப்புறம், அகம்` எனப் பாகுபட்ட சமயங்கள் பலவற்றுள் பெரும்பான்மை ஒத்த கொள்கை யுடையவாய்ச் சிறுபான்மையே வேறுபட்ட சமயங்கள் அகச் சமயங்களாகும். அவையாவும் சைவமே. அவை ஆறு வகைப்பட்டன. அந்த ஆறும், `தம்மை ஆக்கினவன் சிவனே` எனக் கருதுகின்றன. அதனைப் பிற சமயிகள் மறுக்கின்றனர். அம்மறுப்புக்களைக் கேளாமல், `அகச் சமயங்கள் ஆறும் சிவனையே முதல்வனாக உடையன` என்பதை ஒருவன் அறிந்து, அவற்றுள் எந்த ஒன்றனையேனும் தெளிந்து அதில் நிற்பானாயின், அவன் சிவஞானியாய்த் தானும் முத்திக்கு உரியவனாய்ப் பிறரையும் முத்திக்கு உரியவராகச் செய்ய வல்ல ஆசிரியனும் ஆவான்.

குறிப்புரை :

`சமயங்கள்` என்னாது, ஒத்த சமயங்கள் என்றதனால், அவை அகச் சமயங்களாயின. எனவே, அவை தம்முள் ஒத்தனவாதல் பற்றியே ``ஒன்றதே பேரூர்; வழி ஆறதற்குள்`` எனவும், அவற்றுள் ஒன்றை இகழ்வோரையும், ``குன்று குரைத்தெழு நாயைஒத் தாரே`` எனவும் முன்பு4 கூறினார். அவ்வகச் சமயங்கள் `பாடாண வாத சைவம்` முதலிய ஆறுமாம். அவற்றைச் சங்கற்ப நிராகரண நூலுட்காண்க. அந்நூலுள் இறுதியில் அடைமொழியின்றி, `சைவம்` என்றே கூறப்பட்டது சுத்த சைவம். அதற்கும், சித்தாந்த சைவத்திற்கும் இடையேயுள்ள வேற்றுமை மிகமிகச் சிறிதே. `குரு` என்பது பொது வாயினும், சைவத்துள் `சிவாச்சாரியார்` `சைவாச்சாரியர்` என்றும் குறிக்கப்படுவோரே `சிவகுரு` எனப்படுவர். சிறுசிறு வேறுபாட்டால் அவருள் தாரதம்மியமும், சித்தாந்த சைவாசாரியரை நோக்க ஆசிரியத்தன்மை முற்றப்பெறாமையும் உடையரேனும், அவரெல்லாம் சிவப்பேறாகிய முத்தியை வழிமுறையில் அடைவிப்பவரேயாவர் அதனால், `சிவப் பேற்றை விரும்புவர் அவருள் எவரையேனும் ஆசிரியராகத் தெளியின் பழுதடையார்` என்பதாம்.
இதனால், `சித்தாந்த சைவமும் பொதுவாக, `சமயம்` என வழங்கப்படினும், அது சமயங் கடந்த நெறியேயாம்` என்பதை அதற்கு அணியவாகிய அகச் சமயங்களது சிறப்புக் கூறும் முக்ததால் சமயங்களைப் பற்றிய கூற்றுக்களில் இறுதியாக முடித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 1

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

பொழிப்புரை :

ஆன்மா, பரமுத்தி நிலையில் விளைகின்ற சிவபோகத்தை நுகர்தலாகிய இஃது ஒன்றைத்தவிர, அந்தப் போகத்தைத் தருகின்ற சிவத்தைத் தனக்கு வேறாக வைத்து ஆராய்கின்ற அறிவையும், மாயா மலத்தின் காரியமாய்ப் பொருந்திய அதிசூக்கும, சூக்கும, தூல உடம்புகளைப்பற்றி, புறஞ்செல்லுதலையும் உடையதாகின்ற வரையில் அதனது இயற்கைத் தன்மையைத் தலைப்பட்ட வியாபக நிலை அதற்கு நிலைக்கமாட்டாது.

குறிப்புரை :

`சிவனைப்போல எங்குமாம் வியாபகமே ஆன்மாவின் இயற்கைத் தன்மை. ஆயினும் சிவனைப்போல ஆன்மாச்சூக்கும சித்தாகாது. தூல சித்தாய் இருத்தலின், அதனை அநாதியே ஆணவ மலம் பற்றி, அணுத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை வியாபகமும், ஆணவ மலம் காரணமாக அடைந்த செயற்கைத் தன்மையே அணுத்தன்மையும் ஆதலால், ஆணவம் நீங்கிய பொழுது, ஆன்மாத் தனது இயற்கையாகிய வியாபகத் தன்மையை எய்தும். ஆணவ மலம் காரணமாகவே ஆன்மாவை மாயையும், கன்மமும் வந்து பற்றின ஆகலான், ஆணவ மலம் நீங்கினாலும் அதன் வாசனை நீங்காத வரையில் ஆன்மாவிற்கு அது அடைந்த இயற்கைத் தன்மையாகிய வியாபகத்தன்மை அதற்கு நிலையாதாக, மாயை கன்மங்களைப் பற்றித் தனது முன்னைச் செயற்கைத் தன்மையாகிய அணுத்தன்மை உடையதாகும்` என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்ட பொருளாகும். ஆணவ மலத்தின் வாசனையே ஆன்மாவைச் சிவபோகத்தை நுகர்தலினின்றும் நீங்கிச் சிவனைத் தனக்கு வேறாக வைத்து ஆராயத்தூண்டும். அதனாலே ஆன்மா மாயா கருவிகளையும், அவற்றின செயற்பாட்டிற்கு ஏதுவான கன்மத்தையும் உடையதாகும் என்க. ஏய்தல் - பொருந்துதல். ஓர் ஒளி - சிவம். `ஒளியை` என உருபு விரிக்க. உபாதி - செயற்கை; குற்றம். ``பரிய`` என்பதில் `பரியவற்றை` என இரண்டாவது விரிக்க. `பரியவற்றைப்பற்றி` என ஒருசொல் வருவிக்க. ``சாயும்`` என்பதை இறுதியிற்கூட்டி முடிக்க. சாய்தல் - மெலிதல்; நீங்குதல். தான், ஏ அசைகள்.

பண் :

பாடல் எண் : 2

நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளை நம்மின் வேறாகத் தேடி அடையும் இடம், நான் அறிந்தவரையில் எதுவும் இல்லை. அதனை நாம் நம்மிலே அறிதல் எவ்வாறு` எனின், `பரவியோமம்` எனப்படும் திருவருளை முன்னே அறிந்து. நம் வழியை நாம் விட்டு, அதன் வழியில் நின்றால், மெய்ப்பொருள் விறகைக் கடைந்தவழித் தோன்றும் தீ, பின் அந்த விறகைத் தானி அழிப்பதுபோல. நம் அறிவிலே விளங்கிப் பின் `நாம்` என வேறு முனைத்து நிற்கும் தற்போதத்தை அழித்து, நம்மைத் தானாக்கிக் கொள்ளும். ஆகவே, கருவிக் கூட்டங்களை `நாம் அல்ல` என்று கண்டு கழித்து நாம் தனித்து நின்றவழி, முன்னெல்லாம் உயிர்ப்பு வடிவில் இருந்த அந்த ஒளி விளக்கு இப்பொழுது தானேயாய் விளங்கும். ஆகவே இம்முறையில் ஒருவன் அதனை அறிவானே ஆயின், அவன் அதனோடு ஒற்றித்துத் தனது செயற்கைத் தன்மையாகிய அணுத் தன்மையின் நீங்கித் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலைப்படுதல் கூடும்.

குறிப்புரை :

``அறிந்து`` நான்கில் முதலு. அறிந்த அளவு என அறியப்பட்ட இடத்தைக் குறித்தது. ஏனைய மூன்றும், `அறிந்தவழி` என்பன திரிந்து நின்றவை, `உற விம்மிடும்` என்பதில் செயவெ னெச்சம், `மழை பெய்யக் குளம் நிறையும்` என்பது போலக் காரணப் பொருளில் வந்தது, விம்முதல் - பெருகுதல். ஆன்மாவைத் தன்னுள் அடக்கித் தாம் மேம்பட்டு நிற்றல். ``ஊன்`` என்பது, பலவகை உடம்புகளால் நிற்கும் கருவிகளைக் குறித்தது. கருவிகளில் ஒவ்வொன்றையும் `இது` எனச் சுட்டி, நான் அன்று எனக் கழித்தல் `நேதி வாக்கியம்` எனப்படும். (நேதி = ந + இதி இவ்வாறான தன்று) `நாஹம்` (நான் அது) எனப் பாவிக்க வேண்டும். `நாஹம்` என்னும் உணர்வால் பாச நீக்கமும், `சோஹம்` என்னும் உணர்வால் `சிவப்பேறும், உளவாம் என்பர். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை`
``என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்(கு)
என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``1
என்னும் அப்பர் திருமொழியாலும் உணர்க. `அம்` எனப் புறம் போந்து `சம்` என உட்புகுந்து அசபா மந்திரம் வடிவாய் நிற்பன் என்பதை, ``ஊனங் கத்துரு வாய்உல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை``1 என்னும் சுந்தரர் திருமொழியால் உணர்க.
இதனால் ஆன்மா ஆணவ மலத்தால் தான் இழந்த வியாபக நிலையைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து)
உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்
உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே.

பொழிப்புரை :

ஆரவாரம் மிக்க கடலாற் சூழப்பட்ட உலகத்தில் உடலில் தங்கி வாழ்கின்ற ஆரவார வாழ்வின் உண்மையை ஆராய்ந்துணர்ந்தால், அந்த உடலிற்றானே தன்னோடு உடன் உறைகின்ற சிவானந்தத் தேனை கடலிடை நிரம்பப் புதிது புதிதாக எல்லையின்ற எழுந்து வருகின்ற அலைபோல்வதாகக் காண முடியும்.

குறிப்புரை :

``கௌவை`` என்பதைக் கடலுக்கும் கூட்டுக. கடல் கௌவையுடைத்தாதல் போல, அதனால் சூழப்பட்ட உலகத்தில் வாழும் வாழ்க்கையும் ஆரவாரம் மிக்கதாய் உள்ளது - என ஒரு நயம் தோற்றுவித்தவாறு, `கடலின் ஆரவாரம் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்தாதல்போல, உலக வாழ்வின் ஆரவாரவும் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்து` என்பது குறிப்பு. உடலிடை வாழ்வின் உண்மையாவது சில காலமே உளதாய்ப் பின் இல்லாதொழிவது. உள்ளொளி, சிவம். அதனை நாடும் முறை மேற் கூறப்பட்டது. `மலிதிரையின்` என, ஒப்புப்பொருளதாகிய ஐந்தன் உருபு விரிக்க. தேன் தான் உள்ள இடத்தில் சிறிதளவினதாகவே இருக்கும். `இந்தத் தேன் கடல்போல எல்லை யற்றதாம்` என அதிசயம் உணர்தியவாறு. ``காணலும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், `ஆன்மாத் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலையை அடைந்தவழி வியாபகமாகிய சிவத்தினது, கால, இட எல்லைகளில் ஒன்றும் இன்றிப் பெருகுகின்ற இன்ப வெள்ளத்தில் திளைக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.

பொழிப்புரை :

`கதிர், மதி, தீ` என்னும் பெருஞ்சுடர் மூன்றையும் அவை உலகிற்குப் பயன்படுவ ஆதலைத்தெரிந்து, தனக்கு உடம்பாகக்கொண்டு அந்த ஒளிப்பொருட்கட்கு ஒளியைத் தருகின்ற உள்ளொளியாய் அவற்றில் நிறைந்து நிற்கின்ற சிவனும் வியாபகப் பொருளாகிய ஆன்மாக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட அடையும் நிலைகளில் எல்லாம் தான் அருள் கூர்ந்து அவற்றின் அறிவுக்கு அறிவாய், அவற்றோடு உடனாய்ப் பலவாகின்றான்.

குறிப்புரை :

தெரிந்து உள்ளொளியாகி எனவும், `இகலிடம் எல்லாம் பரிந்து, இருஞ்சுடர் விட்டு உடன்போகின்ற பல்குரையாமே`` எனவும் இயைக்க. இகல் இடம் பெத்தமும் முத்தியும். ``பிரானும்`` என்னும் உம்மை எதிர்வருகின்ற `உயிர்` என்னும் பொருளைத் தழுவிநின்றது. பல உயிர்களிலும் நிறைந்து நிற்றல் பற்றி இறைவன், ``அநேகன்``1 எனப்படுதல் காண்க.
``பல்கு உரை`` என்பதில், `சொல்` எனப் பொருள் தரும் `உரை` என்பது அதனால் குறிக்கப்படும் பொருளைக் குறித்தது. பொருள், இங்கு உயிர். இனி, `பல் + குரை` என்றே பிரித்து, `குரை அசைநிலை இடைச்சொல்` என்றலுமாம். ``அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே``2 என்பது போலும் சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ``நல்குர வென்னும் நசையின்மை பல்குரைத் துன்பங்கள் சென்று படும்``3 எனத் திருக்குறளிலும் `குரை` என்னும் இடைச்சொல் ஆளப்பட்டமை காண்க. `பல் கோரை என்றே பாடம் ஓதித் தாம் தாம் வேண்டுமாறேயும் உரைப்பர்.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத்தால் பல உயிர்களோடும் உடனாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் எல்லா உயிர் களோடும் உடனாய் நிற்பினும், மாயா காரியங்களில் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் உளவாகின்ற வினைகளில் அகப்பட்டு உழன்ற போதிலும் முடிவில் தன் அடியில் வந்து, `அடைக்கலம்` என அடைந்தவர்க்கே பொன்போலப் பயன்படுவான். சிறியதிலும் சிறியதாய் விளங்குகின்ற ஒளிவடிவாகிய அவன், தன்னைப் பெற்றதனால் மேன்மை பெற்றவர்கட்கே எல்லையில்லா ஒளியாய், எங்கும் நிறைந்து விளங்குவான்.

குறிப்புரை :

``உறுதியினுள்`` என்பதில் `உள்` என்பது மூன்றாவதன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். உள் வினை - உளவாம் வினை. `இரணியம்` என்னும் வடசொல். `இரணம்` எனத் திரிந்து நின்றது. `அறுதி, பெறுதி` என்பனபோல, ``சிறுதி`` என்பது திவ்விகுதி பெற்ற தொழிற் பெயர். `சிறுத்தல்` என்பது அதன் பொருள். அஃது ஆகு பெயராய், அதனையுடைய பொருளைக் குறித்தது. ``ஒளி மூர்த்தி`` என்பது, `ஒளித்த மூர்த்தி` என வினைத்தொகை. `மேலோர்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது.
இதனால், சிவன் சருவ வியாபியாயினும் மலம் நீங்கப்பெற்றார்க்கே அவன் வியாபகன் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.

பொழிப்புரை :

பற்றப்படும் பொருள்களில் எல்லாம் மேலான பொருளாய், மேலான ஒளியாயும் உள்ள சிவன் அண்டம் முழுதும் நிறைந்து, `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்களாய்ப் புலப்படுவான். பிண்டத்தில் புருவ நடுவிலே தியானிக்கப்படும் பொருளாய் நிலைத் திருப்பான். பின்னும் அவ்வாறு தியானிப்போனும் தானேயாகின்ற தவ வடிவினனும் ஆவான்.

குறிப்புரை :

முதற்கண், ``பற்று`` என்றது, பற்றப்படும் பொருளை. பற்றப்படும் பொருள் நற்பொருளும், விடப்படும் பொருள் தீப் பொருளும் ஆதலை நினைக. `அத்தைகய பொருள்களுள் மேலானவன்` எனவே, அவனின் மிக்க நன்றாம் பொருள் இல்லை யாயிற்று. நன்மையே, வடமொழியில் `சிவம்` எனப்படுகின்றது. நன்மையை உடையது` என்பது அதன் பொருள். சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது. ``முளைக்கின்ற மூன்றொளி`` என்றதனால், ``முற்றும்`` என்றது அண்டத்தைப் பற்றியதாயிற்று. உம்மை முற்றும்மை. முற்றுதல் - நிறைதல். நெற்றி - ஆஞ்ஞை. இதுவே தியானத்தானம் ஆதலை யறிக. நினைவு - தியானம்; என்றது தியானிக்கப்படும் பொருளை. மூன்று ஒளியாய்ப் புலப்படும் நிலை மாறி மாறி நிகழ்வது. தியானிக்கப்படும் பொருளாதல் ஒன்றேயாகலின், ``நிலைதரும்`` எனவும், `தியானமும் அவன் உடனாகாத விடத்து நிகழாது` என்றற்கு ``அவனாய் நின்ற`` என்றும், அவன் தியானமுமாய்க் கலந்து நிற்றல் பற்றி ``மாதவன்`` என்றும் கூறினார். தான்ஏ அசைகள்.
இதனால் சிவன் அண்டத்திலும், பிண்டத்திலும் வியாபியாய், ஏற்ற பெற்றியில் அருள்புரியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும்
ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனு மாகி நவிற்றுகின் றானே.

பொழிப்புரை :

இன்னும், முன் மந்திரத்திற்கூறிய பரஞ்சுடராகிய சிவன், எல்லாத் திசைகளிலும் அதுவதற்குத் தலைவனாய் நிற்கின்றான். அவைகள் உள்ள எல்லாப் பொருள்களுமாய் இருக்கின்றான்; ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவுகளையும் ஆக்குபவனுமாகி, அவை அனைத்திலும் நிறைந்து அவற்றை நிலைக்கச் செய்பவனுமாய், அங்குள்ளாரது நாவில் அவையாய்க் கலந்து சொற்களைச் சொல்கின்றான்.

குறிப்புரை :

அடுக்கு, `அதுவது` எனத் தனித்தனியைச் சுட்ட வந்தது. `ஒவ்வொரு திசையையும் காக்கும் காப்பாளர் வேறு வேறாகச் சொல்லப்படினும் அவரிடத்தும் சிவனே வியாபியாய் நின்று காவல் புரிவிக்கிறான்` என்பது கருத்து. சிவாகமங்கள் பத்துத் திசைகளிலும் ஒவ்வொன்றிலும் பத்துப் பத்து உருத்திரர் இருந்து திசை காப்பாளரைச் செலுத்துகின்றனர்` என்று கூறுதலோடு, அவர்களின் பெயர்ப் பட்டியலையும் தருதற்கு இதுவே கருத்து என்க. `எவன்` என்னும் வினாப் பெயர் முதல் நீண்டு நின்றது. ``விரிநீர் உலகு`` என்றதனால், ``உலகு`` என்றது நிலவுலகத்தையாயிற்று. காட்சிப் பொருளாய நில வுலகத்தின் பகுதிகளை வகுத்துக் கூறியதனால், உரைப்பொருளாய பிற உலகங்களை ஆக்குதலும் தானே பெறப்பட்டது. `ஆக்குவன்` என்பது இடைக்குறைந்து நின்றது. அமர்தல் - தங்குதல். இதன் பயன் அப்பொருள்கள் நிலைபெறுதலாம். `எங்குமாம் உலகினும்` என ஆக்கம் விரிக்க. ``எங்கும்`` என்றது ஆகாயத்தை உணர்த்திற்று. நாவன் - நாவே வடிவானவன். `நவிற்றுதல்` என்பது பிறவினை வாய்பாடாய்த் தன்வினையையும் குறிப்பதொன்று. ``நம்பு வார்அமர் நாவின் நவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது``1 என்பதிலும் இவ்வாறு வந்தமை காண்க. ``நட்பாடல் தேற்றாதவர்`` 2 என்றார் போல்வன காண்க. நாவாய் நின்று நவிற்றுதல், பொதுப்பட எல்லார் மொழியையும் குறித்தலுடன் அருளாளர்களது நாவில் இனிது விளங்கி நின்று அருளிச்செய்யும் உறுதிச் சொல்லைச் சிறப்பாகக் குறிப்பதாம். ``எனதுரை தனதுரையாக``3 என்னும் அருள் மொழியை ஓர்ந்துணர்க.
இதுவும் சிவனது சருவ வியாபகத்தையே கூறியது.

பண் :

பாடல் எண் : 8

நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புரணவல் லானே.

பொழிப்புரை :

(ஆகாயத்தில் இருந்து அனைத்துப் பொருளையும் காணும் கருடன் நம்மால் அறியப்பட்டது.) அதுபோலப் பரம வியோம மாகிய சிதாகாசத்தில் இருந்து கொண்டு ஏனை எல்லாப் பொருளையும் அறிந்தாங்கறியும் கருடன் சிவன் பின்பு அழிக்கப்படுவனவாகிய ஏழுலகங்களையும் இதுபொழுது அவனே காக்கின்றான். ஆகவே உலக முதல்வன் அவனே. ஆதலின், அவ்வுலகங்களில் உள்ள வினைகளையெல்லாம் நீக்குகின்ற, இயல்பாகவே பாசம் இல்லாத, எஞ்ஞான்றும், எவ்வாற்றானும் பிறப்பினுட்படாத கடவுளும் அவனே. பிறப்பு இறப்பு இன்மையால், போக்கும், வரவும் இவன் ஆகிலும், உயிர்களில் அவையேயாய்க் கலந்து நிற்றலால், அவற்றது போக்கு வரவுகளில் நீங்காது நிற்கவும் அவன் வல்லவனாவான்.

குறிப்புரை :

``கருடன்`` என்றது, உவமையாகு பெயர். கருடன் மேற்கூறிய இயல்பினது ஆதல் பற்றியும், புள்ளரசு ஆதல் பற்றியும் இறைவனுக்கு அஃது உவமையாயிற்று. வேதத்தில் கருடனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது பற்றி, அங்கு, `கருடன்` என்பதைச் சிவனாகக் கொள்க என்றற்கும் இது கூறினார். `நோக்குதல்` என்பது பெரும்பான்மையும் காத்தல் தொழிலையே குறித்தலால், காத்தற் கடவுளாகிய மாயோனுக்குக் கருடன் ஊர்தி சொல்லப்பட்டது. `அங்குள வினை` என மாறிக் கூட்டுக. `வினையே நீக்குதற்கு உரியவன், வினையும், அதனால் வரும் பிறவியும் இல்லாதவனே என்றற்கு, `அங்குள வினையை நீக்கும் நிமலன்; பிறப்பிலி`` என்றார். `புணரவும்` என்னும் எதிர்மைறையும்மை தொகுத்தலாயிற்று. நொடித்தல் - அழித்தல். `நொடி உலகு, என் நிமலன்` - இவை வினைத் தொகைகள். அவை செயப்படு பொருள்மேல் தொக்கன. ``காக்கும்`` என்பது முற்று - எச்சமாகக் கொள்ளினும் ஆம். `தலைவனும் ஆவன்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் எல்லாப் பொருள்களையும் கடந்து நிற்பினும் எல்லாப் பொருளிலும் வியாபியாய் நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன் திருமேனி கொள்ளும்பொழுது சிவந்த சடை, சொம்பொன்போலும் நிறம் இவைகளையுடையனவாகவே கொள்வான். ஏனைப் பொருள்களில் ஒன்றன் வடிவிலேயும் அவன் தோன்றானாகிலும் அவை அனைத்திலும் உடன் நிறைந்து நீங்காமலே நிற்கின்றான். ஆயினும் அவை பிறப்பதுபோல அவன் பிறப்பதில்லை. அவன் ஒடுங்கல் தோன்றல்கள் இல்லாதவனாயினும் அவைகளை யுடைய உலகத்தோடு ஒட்டி நிற்கின்றான்.

குறிப்புரை :

``ஈசன்`` என்பதை முதலிற் கொள்க. `அவன் மேனி செம்பொனே ஒக்கும்` என்க. `எங்கும் கழிந்திலன்` என மாறிக் கூட்டுக. ``எங்கும்`` என்பது, `அப்பால் எங்கும்` எனப் பொருள் தந்தது. உலகத்தின் இயல்பாகிய ஒடுங்குதல் இலகுதல்களைப் பின்னர் கூறுகின்றார் ஆதலின். `சிவனுக்கு அவையில்லை` என்றற்கு ``பிறப்பிலன்`` என்பதை முன்னே கூறினார். இலகுதல் - தோன்றுதல்.
பிற வகையான தெய்வ வடிவங்களையே சிவன் வடிவாகக் கொண்டு வழிபடின் குற்றம் என்னை? என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். இது பற்றியே இத்தகைய வடிவங்கள், `சிவனது இயற்கை வடிவங்கள்` எனப்படுகின்றன. இவ்வாறன்றி, நாயன்மார் சிலரிடம் சிவ யோகியாகவும், பிரமசாரியாகவும், சிவனடியாராகவும் வந்து சில திருவிளையாடல்களைச் செய்த வடிவங்கள் யாவும் சிவனுக்கு நிலையானவாய் இல்லாது, அவ்வப்பொழுது ஏற்ற பெற்றியாற் கொள்ளும் செயற்கை வடிவங்கள் என்க.
``அண்டம் ஆர்இரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர், அச்சுடர்
கண்டிங் கார்அறிவார்? அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``
என அப்பர் பெருமான் அருளிச்செய்ததும் இக்கருத்தை விளக்கவேயாம்.
இதனால், `சருவ வியாபியாய் அகண்டனாய் நிற்கும் சிவன் கண்டனாய்த் தோன்றுமாறு இது` என்பது கூறப்பட்டது. இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் உணர்வும் அவனே உயிரும் அவனே`` என்னும் மந்திரம் மேல், `சிவ தரிசனம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 10

புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையில் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

பொழிப்புரை :

எங்கள் தந்தையாகிய சிவபெருமான், வெறும் நூலறிவில் மட்டும் தோன்றுபவன் அல்லன்; தவத்தில் தோற்றஞ் செய்பவன். அப்பால் அத்தவத்தின் பயனாகப் பெறப்படுகின்ற நன்மையுடைய ஞானத்தில் இடையறாது தொடர்ந்து விளங்குபவனும் ஆவான். இனி, `இன்ன செயலுக்கு இன்ன பயன்` எனப் பண்ட மாற்றுப் போலக் கொண்டு வேதியர்கள் கூறுகின்ற காமிய கன்மங்களிலும் எங்கும் நிறைந்து வேதியர்கள் அவர்கட்குப் பயனளித்து வருகின்றான்.

குறிப்புரை :

நாற்றம் - தோற்றம். நாறுதல் - முளைத்தல். `நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க``1 என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. `நன்மை` என்பது எதுகை நோக்கி இடையே அகரம் பெற்று, ``நன்மை`` என வந்தது. `நன்மையின்` எனச் சாரியை நிற்க இரண்டன் உருபு, தொக்கது. `நன்மையைப் பயனாக உடைய ஞானம்` என்க. நன்மை, இங்கு வீடுபேறு வழக்கம் - தொடர்ச்சி, `விலைமை, என்பது, எதுகை நோக்கி, ``வில்மை`` என நின்றது. `பண்ட மாற்றுத் தன்மை, என்பது பொருள். பலம் - பயன். பலமை - பலன் தரும் தன்மை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய கன்மங்களைக் குறித்தது.
இதனான், சிவன் சருவ வியாபியாய் நிற்பினும் அவரவருக்கு ஏற்ற பெற்றியால் அருள்புரியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவன், பராகாயத்தில் அனைத்துலகங்கட்கும் மேலேயும் இருக்கின்றான். அப்பொழுதே மிகக் கீழே உள்ள மண்ணில் திண்மையாய் உள்ளவனாயும், அதனைச் சூழ்ந்துள்ள நீரில் தண்மையாய் உள்ளவனாயும், இவ்வாறு எல்லாவற்றிலும் அதனதன் தன்மையாய் நிற்பதுடன், உயிர்களுக் கெல்லாம் வேறோர் அறிவாயும் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`தன்மை` என்பது எதுகை நோக்கி இறுதி நிலை தொகுத்த லாயிற்று. `அதனதன்` என்னும் அடுக்கும் தொகுத்தலை பெற்றது, கண் - அறிவு. ``நிற்பதோர் கண்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின் நிற்றலையும், கண் ஆதலையும் வேறு வேறாகக் கொள்க. ``தண்ணவன், கண்ணவன்`` என்பவற்றில், ``அவன்`` என்பன பகுதிப் பொருள் விகுதிகள். எழுவாய் முன் மந்திரத்தி -னின்றும் வந்தது.
இதனால், சிவன் தனது வியாபகத் தன்மையால் மேலான வற்றிற்கெல்லாம் மேலாயும், கீழானவற்றிற்கெல்லாம் கீழாயும் நிற்றல் கூறப்பட்டது. ``மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 12

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேல்என
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாமே.

பொழிப்புரை :

சிவன், முன் மந்திரத்திற் கூறியபடி உலகத்தைக் கடந்து அப்பால் மேலும், கீழுமாய், உலகத்தில் எல்லாப் பொருளுமாய் வியாபித்து நிற்றலால் `மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்களை அதிட்டித்துக் காத்தல் படைத்தல்களைச் செய்பவனும் அவனே. அதனால், எல்லாப்பொருள்களின் முழுத்தன்மையும் அவனே.

குறிப்புரை :

``தான் நிலம்`` என்பது தொடங்கி, ஈற்றடியில் ``நின்றனன்`` என்பது காறும் சென்று, பின், `அதனால், என்பது வருவித்து மாலோடு நான்முகன் தானாகி நின்றனன்; தானே வளங்கனியாம்` என முடிக்க. ``என`` என்பதை ``வரை, கடல்`` என்பவற்றோடும் கூட்டுக. கனி, கனிவு; முதிர்ச்சி முதனிலைத் தொழிற்பெயர். சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. இதன் கண்ணும் எழுவாய் முன் மந்திரத்திற்போல வந்தது.
முன் மந்திரத்தில் `சிவனே எல்லாப் பொருளுமாய் நிற்பினும் மாலும், அயனுமாகிய காரணக் கடவுளரும் அவனேயோ` என ஐயுறுவார்க்கு அவ்வையத்தை நீக்குவார் முன் மந்திரத்திற்கூறிய பொருள்களையே மீண்டும் இம்மந்திரத்தில் அனுவதித்துக் கூறினார். இங்ஙனம் உரையாதார்க்கு இவை கூறியது கூறலாம். ``நாரணங்கான்; நான்முகன்காண்; நால்வேதன்காண்``2 என்னும் திருத் தாண்டகத்தையும் காண்க.

பண் :

பாடல் எண் : 13

புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறைஎன மாலுற்ற வாறே.

பொழிப்புரை :

பெரியோர்கள் சிவனிடத்திலேயே காதல் மிக்கவர்களாய் அவனையே நோக்கி நிற்றற்குக் காரணம், `எல்லாப் புவனங்கட்கும் அதிபதி அவனே; புண்ணியத்தின் பயனாய்க் கிடைப்பவனும் அவனே, யாவர்க்கும் தந்தையும் இவனே; உலகத்தை வலிமை வாய்ந்த தலைமையோடு நடத்துவோனாகி அதனை நடத்துபவனும் அவனே; எண்ணித்தொகை கூறுதற்கு இயலாத அனைத்துயிர்களும் அவனே; ஆகலின் அவன் ஒருவனே கடவுள்` என உணரும் மெய்யுணர்வேயாகும்.

குறிப்புரை :

`சிவன்பால்` என்பதும், `பெரியோர்கள்` என்னும் தோன்றா எழுவாயும் வருவித்து, ``மால் உற்ற ஆறு`` என்பது தொடங்கி உரைக்க.
புவனங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். நிலத்தைப் பெண்ணாகக் கூறும் வழக்குப் பற்றி. `புவனா` என்பாள் ஒரு சத்தி என்றலுமாம். மிகுதி, பன்மை குறித்து நின்றது. ``என`` என்னும் செயவெனெச்சம், `என்பதனால்` என்னும் பொருட்டாய், ``மாலுற்ற ஆறு`` என்னும் எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. `பெரியோர்கள் சிவனிடத்துச் செலுத்தும் அளவிலா அன்பு, தலைவி ஒருத்தி தன் தலைவனை அவனை யின்றித் தான் அமையாளாய்க் காதலிப்பதனோடு ஒத்தது` என்றற்கு அதனை, `அன்பு, காதல்` என்பவற்றுள் ஒரு சொல்லாற் கூறாது. ``மால்`` என்னும் சொல்லாற் கூறினார். மால் - மயக்கம், மோகம்.
இதனால், மெய்யுணர்ந்தோர், சிவனே சருவ வியாபகனும், சருவேசுரனும் ஆதலையறிந்து அவன்பால் கரை கடந்த காதலை யுடையாராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.

பொழிப்புரை :

உயிர்களின் உடம்புள்ளிருந்து ஓவாது இயங்கி, உயிரை நிலைப்பிக்கின்ற பிராணனும், வானத்தில் இயங்கி உலகிற்குப் பல நலங்களை விளைவிக்கின்ற, அளவற்ற கதிர்களையுடைய பகலவனும், மண்ணில் ஒரு சிற்றிடமும் விலக்கின்றி எங்கும் இயங்கி வாழ்விக்கும் காற்றும், மற்றும் அனை்ததுப் பொருள்களுமாய் நிற்பவன் சிவன்` என்றால், உயிர்களின் அறிவினுள் விளங்கி, அவ்வறிவை அறியச் செய்பவனும் அவன்தானே? வேறுயாராய் இருக்கமுடியும்?

குறிப்புரை :

``ஒளிரும்`` என்பது ``ஒளிர்விக்கும்`` எனப் பிறவினைப் பொருட்டாய், நிலைப்பித்தலைக் குறித்தது. உலவா - உலவி; சஞ்சரித்து. `உலவா ஒளிரும்` என மாறிக் கூட்டுக. உம்மை கொடுத்து எண்ணியது, உபலக்கணத்தால் அனைத்தையும் எண்ணிக்கொள்ளுதற்கு, ``நிற்கும்`` என்பதன் பின் `எனின்` என்பது வருவிக்க. அல்லாக்கால், மேல், ``நின்றனன்`` என்னும் மந்திர உரையிற் கூறியவாறு. `கூறியது கூறல்` என்பது படும். ``நிற்கும்`` என வேறு தொடராக்கி முடிந்தமையையும் நோக்குக. கண் - அறிவு. கருத்து அதில் தோன்றும் புலன் கருத்திற்கு ஏதுவாவதனை, `கருத்து` என்றது உபசார வழக்கு. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. ஏகாரம், உடன்படுவித்தற்பொருட்டாகிய வினா.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத் தன்மையால் அனைத்துப் பொருளையும் நிலைப்பித்து, உயிர்களின் அறிவையும் அறியச் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணில் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின் றுருக்கி ஓர் ஆயமும் ஆமே.

பொழிப்புரை :

என் அறிவையும், எழுத்து அவ்வறிவின் வழி இன்பத்தையும் உண்டாக்குதல், அவையிரண்டும் இயற்றமிழில் அறிஞரால் ஓர் இனப்படுத்தி எண்ணப்பட்டன. (``எண் என்ப, ஏனை - எழுத்தென்ப``1 ``எண்ணெழுத் திகழேல்``2 ``எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்``3 என்பவற்றைக் காண்க.) இசைத்தமிழில் பண், திறம், (இன்னும் - திறத்திறம்) என்பனவும் அவ்வாறு ஓரினப்படுத்தி எண்ணப்படுவனவாம் இன்னோரன்ன பலவற்றை இனம், இனமாகப் படைத்த சிவபெருமானைக் கண்ணிலும், பொருள்களை உணரும் கருத்திலும் `அது` என்றும், `இது` என்றும் சேய்மைப் பொருளாகவும் அண்மைப் பொருளாகவும் தம்மின் வேறு வைத்து உணர்வார்க்கு அவன் அங்ஙனம் உணரும் உணர்வை, அவ்வுணர்வின் வழியே சென்று உணர்விற்கு உணர்வாய்த் தோன்றி அழித்து, `அவனே தாம் எண்ணும்படி ஒன்றாகியே நின்று, ஒப்பற்ற ஓர் ஊதியமும் ஆவான்.

குறிப்புரை :

``செயல்`` என்னும் தொழிற்பெயர் ஆகுபெயராய்ச் செயப்படு பொருளை உணர்த்திற்று. `பண்ணும் திறனும் அவ்வழியவே` எனச் செயப்படு பொருள் வருவித்துரைக்க `கண்ணிலும் கருத்திலும்` என எண்ணும்மை விரிக்க. ``அது இது`` என்பது அவ்வாறு உணரும் உணர்வைக் குறித்தது. அஃது உம்மைத் தொகை. `அது இதுவை உருக்கி` என இயைக்க. ஆயம் - ``பொருளாயம்``1 ``ஆயும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், சிவன் எங்கும் சருவ வியாபியாய் நின்று, தன்னை உணர்வார்க்கு முன்னர் அவரின் வேறாகியும், பின்னர் அவரேயாகியும் பெரும்பேறாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இருக்கின்ற எண்டிசை அண்டம் பா தாளம்
உருக்கொடு தன்நடு ஓங்க இவ் வண்ணம்
கருக்கொடே எங்கும் கலந்துநின் றானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

பொழிப்புரை :

`தோன்றல், நிற்றல், ஒடுங்கல்` என்னும் முத்தொழில்களில் நடுவணதாகிய நிற்றல் தொழிலுடையவாய் உள்ள உலகங்கள் அனைத்தும் தனது உருவத்திற்குள்ளே `இவ்வாறு அடங்கியிருக்க` எனச் சங்கற்பித்துச் சிவன் அவற்றில் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`இவ்வண்ணம் ஓங்கக் கருக்கொடு` என மாற்றியுரைக்க. ஓங்குதல் - நிலைத்து நிற்றல். கருக்கொள்ளுதல், திருவுளத்திற்குள் சங்கற்பித்தல். ஈற்றடி `சிவன்` என்னுந் துணையாய் நின்றது. ``ஓங்கக் கருக்கொடே எங்கும் கலந்திருந்தான்`` என்றதனால், `அவனது சங்கற்பத்தானே உலகம் நிலை பெற்றுள்ளது` என்பதும், `பிறவாறு சங்கற்பிக்கின் அவ்வாறே ஆம்` என்பதும் `பிறர்போலக் கரணத்தாலன்றிச் சங்கற்பத்தாலே எல்லாம் செய்வன்` என்பதும் போந்தன. ``தன்`` என்றது தனது உருவத்தை. அவனது உருவம் சத்தியேயாதலை நினைக.
இதனால், சிவனது சருவ வியாபகச் சிறப்புடன், இயைபு பற்றி அவன் செயலாற்றும் முறையும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அதுஅறி வானவன் ஆதி புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வான் நந்தி எங்கள் பிரானே.

பொழிப்புரை :

சிவனது பெருமை, உபநிடதங்களில் `அது` எனப் பொதுவாகச் சுட்டியும், `சித்து` என வரையறுத்தலும் கூறப்படுதலும், எல்லாப் பொருட்கும் ஆதியாயினும், தான் அநாதீயேயாதலும், எந்த அளவையினாலும் அளந்தறியப் படாமையும், உயிர்கள் பல வற்றிற்கும் பொதுப்பட இடமாய் விரிந்து உலகம் முழுதிலும் வியாபகம் ஆதலும் ஆகும். இன்னும் அவனது பெருமையை எல்லாம் எங்களுக்குக் குருவாகிய நந்தி பெருமான்தான் அறிவார்.

குறிப்புரை :

``பொதுவது`` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. எட்டும் - வியாபிக்கும். பெருமைகள் பலவாயினும் பொதுப்பட, `பெருமை` என்னும் அளவில் ``இது`` என்றார். ``ஈசன்`` என்பதை முதலில் கொள்க.
இதனால் முடிவில் முதற்கண் குரு வணக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

பொழிப்புரை :

எங்கள் சிவன் ஐம்பூதங்களுடன், `ஒளி` எனத் தக்க மற்றும் முப்பொருள்கள் கூட எடடுப் பொருள்களாகிய வடிவினை உடையவன், `பராபரன் பிஞ்ஞகன்` என்பன போன்ற பெயர்களால் புகழப்படுபவன், எல்லா இடங்களும் அவனுக்கு இடங்களே எல்லாவற்றிற்கும் இறுதியாயினும் தனக்கு இறுதியில்லாதவன். அவனை யான் வாழ்த்துகின்றேன்.

குறிப்புரை :

இறுதியிற்கூறியது குறிப்பெச்சம். சோதி - ஒளி. ஞாயிறும், திங்களும் ஒளிப் பொருள்களாதல் வெளிப்படை. இனி அறிவும் ஒளியாதலின் அவ்வாற்றால் `ஒளி` என்பது ஆன்மாவையும் குறித்தது. ஆக அட்ட மூர்த்தமும் சொல்லப்பட்டமை காண்க. பராபரன் - மேலோடு கீழாய் விரிந்தவன். பிஞ்ஞகன் - தலைக் கோலத்தை உடையவன். தலையில் உலகம் அழியாதபடி கங்கையைத் தாங்கினவன்; பாம்பையும், நிலவையும் பகையின்றி ஒன்றி வாழ அணிந்தவன்; தலைமாலைகளை அணிந்து தனது நித்தியத்தை உணர்த் துபவன்; பிரணவத்தைக் குறிக்கும் கொன்றை மலர் மாலையைத் திருஅடையாளமாலையாக அணிந்தவன். குரண்டாசுரனை அழித்துக் கொண்ட கொக்கிறகை அணிந்து, கொடியோரை ஒறுத்தலை உணர்த் துபவன்; இன்னோரன்ன பல புகழ்கள் `பிஞ்ஞகன்` என்பதனால் பெறப்படுதல் அறிக. தூரும் உடம்பு - சோற்றால் தூர்க்கப்படும் உடம்பு; அதனுள் சோதி உயிர். ``சோதியும்`` என்னும் உம்மையால் ஏனை ஒளியும் தழுவப்பட்டன. ``பேரும்`` என்னும் உம்மை சிறப்பு. ஊர் - இடம். சகலன் - எல்லாம் ஆனவன். ஈற்றடி, கால இட வரையறைகள் இன்மையைக் குறித்தது.
இது நூற்பொருள் கூறியதன்று. நூற்கும், தமக்கும் முதல்வனாகிய இறைவனை வாழ்த்தியது. `வாழ்த்து, வணக்கம்` என்பவற்றுடன் பொருளியல்புரைத்தலும் வாழ்த்தாதலை உணர்க.

பண் :

பாடல் எண் : 20

தானே கடல்மலை ஆதியு மாய்நிற்கும்
தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல்உயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை. நூலைச் சிவனது முதன்மையோடு தொடங்கிய நாயனார் முடிவையும் அவனது முதன்மையோடு முடித்தமை நினைந்து இன்புறத் தக்கது.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 21

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.

பொழிப்புரை :

இது நூல் சிதையாமைப் பொருட்டு இதன் அளவை நூற்குள்ளே வரையறை செய்தது.

குறிப்புரை :

``தமிழ்`` என்பது தமிழால் ஆகிய பாடலைக் குறித்தது. இந்நூலின் பாடல் தொகை மூவாயிரம்` என்பதாம்.
`இந்நூற் பாடல்கள் அனைத்துமே `மந்திரம்` எனப் பெயரிடப்பட்ட போதிலும், சிறப்பாக மந்திரமாகவே அமைந்த பாடல்கள் முந்நூறு` என்றபடி. அவை நான்காம் தந்திரத்தில் எண்ணிக் கொள்ளற்பாலன. `எந்திரம்` எனப்படும் சக்கரங்களும் `மந்திரம்` என்றதனானே பெறப்பட்டன. அவை மிகச்சில ஆதலின், தொகை சொல்லப்படவில்லை. இங்ஙனமாயினும், `முந்நூறு மந்திரம்` என்றே ஒரு தனி நூலும் வெளி வந்துள்ளது.1
`உபதேசம்` என்பது ஓர் அதிகாரம். முப்பது பாடல்களுடன் முதல் தந்திரத்தில் இருத்தல் நன்கறியப்பட்டது. முந்நூறு மந்திரத்தை வேறு கண்டவர்க்கு, முப்பது உபதேசம் வேறு கிடைக்கவில்லை போலும்!.
ஈற்றடியில் ``மூன்றும் ஒன்றாமே`` என முடிபு கூறியது, `மந்திரம் உபதேசம்` - எனக் கூறியவற்றை மூவாயிரம் வேறு என மலையற்க - என மலைவு தீர்த்தது. ``செய்த`` `செய்தன` என அன் பெறா அகர ஈற்றுப் பன்மை வினைப் பெயர். இவை செயப்படு வினையாய் நின்றன. இதிலும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இங்ஙனம் நாயனார் பாதுகாப்புச் செய்தும், பிரதிகள் நன்கு போற்றாமையால் பாடங்கள் மிகத் திரிக்கப்பட்டும், பாடல்கள் இடம் மாற்றப்பட்டும் சொற்கள் இருமுறை, மூன்றுமுறை சேர்க்கப்பட்டும், சில பாடல்களை விடுத்தும், சில பாடல்களை. இடைச் செருகல்களாக மிகுத்தும் செய்யப்பட்டமை பாதுகாத்தவர்களது. ஊக்கக் குறைவால் நேர்ந்துள்ளதை உணர்ந்து கொள்ளுதல் அறிஞர்க்குக் கடனாய் உள்ளது.

பண் :

பாடல் எண் : 22

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலம்அறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலம்இலான் பாதமே.

பொழிப்புரை :

இது இறுதியில் வாழ்த்துக் கூறி நூலை முடிவு செய்தது. ``என் நந்தி`` என்றதனானே இது நாயனாரின் திருமொழியாதல் விளங்கும்.

குறிப்புரை :

இவ்வாழ்த்து இரட்டுற மொழிதலாகக் குருவையும், சிவனையும் ஒருங்கே வாழ்த்தியது. மலர் அறுத்தது நாயனார்க்கும் அவரோடு உபதேசம் பெற்றவர்கட்கும் என்க.
முதற்கண், `சிவ பரத்துவம்` எடுத்துக் கொடுத்து இடையிலேயும், அதனையே பல்லாற்றானும் வலியுறுத்தித் தம் குருவையும், பல இடங்களில் நினைவு கூர்ந்து, ஈற்றிலும் சிவன் பெயரையே கூறிச் சிவன் திருவடியையன்றி, மறந்தும் பிறிதொன்றை நினையாது அவனது நெறியை விளக்கிய நாயனாரது திருமொழியின் அமைப்பையும், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`` என்ற அவரது திருவுள்ளத்தையும் நினைந்து நினைந்து பயன் பெறுதல் அறிஞர் கடனாகும்.
ஒன்பதாம் தந்திரம் முற்றுப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக