இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயில்


பண் :

பாடல் எண் : 1

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 

தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டுரைத்தானே.
 

பொழிப்புரை :

தாவரத்தின் குறியீடாக உள்ளதை (பூவை) பறித்து ஒன்றில் தாபித்தால் (தொடங்கினால்/சூட்டினால்), அச்செயல் முற்றுப்பெறுவதற்கு முன்பே அரசு அது இருக்கவேண்டிய நிலையிலிருந்து கெடும்; அச்செயலுக்கு உரியவன், பெருநோய் கொண்டு துன்புறுவான். இவ்வாறு எங்கள் காவலன் நந்திபெருமான் எங்கட்கு உறுதிப்பட உரைத்தார்.

குறிப்புரை :

லிங்கம்  - குறியீடு 
தாபித்தால் - தொடங்கினால் 
நந்தி - மூலனுக்கு வேதம் உறைத்த வானவர் 

பண் :

பாடல் எண் : 2

கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. 

கட்டுவித்தார் மதில் கல் வாங்கிடில்
வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும் முனி வேதியராயினும்
வெட்டுவித்தேவிடும் விண்ணவன் ஆணையே. 

பொழிப்புரை :

கோயில் மதில் சுவர் கட்டியவர் அதிலிருந்து ஒரு கல் வாங்கினாலும், 
அழிக்கும் ஆற்றலுடைய திருமுடி சூடிய அரசரை தாங்கி நிற்கும் முனிவர் ஆயினும் வேதம் ஓதுபவர் ஆயினும் அழிக்கப்படுவர் என்பது இறைவன் கட்டளை. 

குறிப்புரை :

கட்டுவித்தார் மதில் - கோயில் மதில் சுவர் கட்டியவர்
மதில் கல் வாங்கிடில் - அதிலிருந்து ஒரு கல் வாங்கினாலும் 
வெட்டுவிக்கும் - அழிக்கும் 
அபிடேகத்தரசரை - திருமுடி சூடிய அரசரை
முட்டுவிக்கும் முனி - வழிகாட்டி தங்கி நிற்கும் முனிவர் ஆயினும் 
வேதிய ராயினும் - வேதம் ஓதுபவர் ஆயினும்  
வெட்டுவித் தேவிடும் - நீக்கிவிடும் / அழித்துவிடும் 
விண்ணவன் - இறைவன் 
ஆணையே - கட்டளை 


பண் :

பாடல் எண் : 3

ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. 

ஆற்றரு நோய் மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்றுதைத்தான் திருக்கோயில்களெல்லாம் 
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

பொழிப்புரை :

தாங்க முடியா நோய்களும் உலகில் மழையின்றி போதலும் வலிமை வாய்ந்த அரசர் போர் வலிமை குன்றி போதலும் நடைபெறும் சிவனின் கோயில்களில் செலுத்தப்பட்ட பூசைகள் நிறுத்தப்பட்டால்.

குறிப்புரை :

ஆற்றரு நோய் மிக்கு - தாங்க முடியா நோய்கள் 
அவனி - உலகம் 
மழையின்றிப் - மழையின்றி போகும் 
போற்றரு மன்னரும் - வலிமை வாய்ந்த அரசரும் 
போர் வலி குன்றுவர் - போர் வலிமை குன்றுவர் 
கூற்றுதைத்தான் - இவ்வேதத்தை சொல்லியவனின் (சிவன்)
திருக்கோயில்களெல்லாம் - கோயில்களில் 
சாற்றிய பூசைகள் - செலுத்தப்பட்ட பூசைகள் 
தப்பிடில் தானே. - நிறுத்தப்பட்டால் 

பூசை என்ற சொல்லுக்கு இறையன்பில் மலர்தல் என்பது பொருள். பூசையின் போது வேத மந்திரங்களையும்,  தெய்வத்தின்மீது புனையப்பட்ட தோத்திரங்களையும், பக்திப் பாடல்களையும் ஓதுவார்கள்.

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே

என்று திருஞான சம்பந்தர் தேவாரமும்,

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் - உன்
நாமம் என் நாவில் மறந்தறியேன்

என்று திருநாவுக்கரசர் தேவாரமும் பூசை பற்றிக் குறிப்பிடுகின்றன.


பண் :

பாடல் எண் : 4

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னங் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. 

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்கு வாரி வளங்கும் என்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னருமை நந்தி எடுத்து உரைத்தானே. 

பொழிப்புரை :

எல்லார்க்கும் எப்பொருட்கும் முன்னவளுய் உள்ள இறைவனாம் சிவபெருமானின் கோயில் பூசைகள் தடைப்படின், அரசர்கட்குத் தீங்குகள் பலவாகும். மழையின் வளம் குறையும். கன்னக்கோல் கொண்டு செய்யும் திருட்டு மிகும். இவ்வாறு குருநாதன் நந்தி தேவர் எடுத்து மொழிந்துள்ளார்.

குறிப்புரை :

முன்னவளுர் - எல்லார்க்கும் எப்பொருட்கும் முந்தியவன், இறைவன்,
காசினி - பூமி, 
நந்தி - குருநாதன் நந்தி தேவர்.

பண் :

பாடல் எண் : 5

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. 

பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் 
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே

பொழிப்புரை :

பார்ப்பான் என்னும் பெயரை மட்டும் பெற்று அப்பெயருக்கு உகந்த குணங்களான சிவபிரானிடத்து அன்பும், பக்தியும், பயமும், சிவாகம அறிவும், ஒழுக்கமும், அறமும் இல்லாமல் பிறர் பொருட்டு சிவபெருமானை வணங்கினால், போர் புரியும் அரசனுக்கு மோசமான வியாதிகளும், அந்த நாட்டில்  வயல்கள் வன்னிலங்களாய் விளைவில்லாது பஞ்சமும் உள வாகும் என்று நந்தி தேவர் அறிந்து அதை நமக்கு கூறுகிறார்.

குறிப்புரை :

அர்ச்சித்தால் - வணங்கினால்
நந்தி - குருநாதன் நந்தி தேவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக