திருமந்திரம் - பாயிரம்

பாடல் எண் : 1

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

குறிப்புரை :

`இந்து` என்பது வடசொல்லாதலின் இன்பெறாது என்று, `இந்து விளம்பிறை` எனப்பாடம் ஓதுவாரும் உளர். `நந்தி` என்பது சிவபெருமானுக்கே பெயராதல் அறிக. திருமூலர் தமது நூலை ``ஒன்றவன்முன்`` எனத் தொடங்கினார் என்பது சேக்கிழார் திருமொழி யாதலின், இது, பிற்காலத்தில் இந்நூலை ஓதுவோர் தாம்முதற்கண் ஓதுதற்குச் செய்து கொண்டது என்க. திருமுறைகளுள் ஒன்றிலும் முதற்கண் விநாயகர் காப்பு இல்லாமையும், சாத்திரங்களிலும் உந்தி, களிறு முதலிய சிலவற்றில் இல்லாமையும் நோக்கத்தக்கன. ``ஒன்றவன்றான் எனஎடுத்து முன்னிய அப்பொருள்மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி`` என்பதே சேக்கிழார் திருமொழியாகலின், இந் நூலின் தொடக்கப்பாடல் ``ஒன்றவன்றானே`` என்னும் பாடலே என்பது இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 1

கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

பொழிப்புரை :

ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும். அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான். நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் உறுதிப் பொருள் நான் கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.

குறிப்புரை :

முதற்கடவுளை, `அவன்` எனப் பண்டறிசுட்டாற் கூறுதல் வழக்கு. ``அவன்தானே`` என்றதில் தான் அசைநிலை; ஏகாரம் பிரிநிலை./n ``பிரமம் ஒன்றே இரண்டாவதில்லை``1 எனவும், ``மெய்ப் பொருள் ஒன்றே``2 எனவும், வேதமும் கூறுதல் காண்க. ``தனக் குவமை இல்லாதான்`` என்றதும் இப்பொருட்டு. அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியுமாம். இலயம் முதலிய வற்றின் இயல்பையும் ஆறத்துவாக்களின் இயல்பையும் சிவாகமங் களிலும், மெய்கண்ட நூல்களிலும் கண்டுகொள்க./n ``அழிந்த சிந்தை அந்தணாளர்க் கறம்பொருளின்பம் வீடு - மொழிந்த வாயான்``3 எனவும், ``விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்``4 எனவும், போந்த அருட்டிரு மொழிகளால், அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள்களையே முனிவர் நால்வர்க்கு நான்கு வேதங்களால் உணர்த்தியருளினான்` என்பது இனிது விளங்கிக் கிடத்தலின், `நான்கு உணர்ந்தான்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``உணர்ந்தான்`` என்னுமிடத்து, `தானே` என்பது இசையெச்சம். அவ்வினைச் சொல் உணர்ந்து உணர்த்துதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது./n ``வென்றனன்`` என்றது, `அவற்றொடு பொருந்திநின்றே அவற்றால் திரிபின்றி நின்றான்` என்றவாறு. ``வினையின்நீங்கி`` 5 என்றும், ``பற்றற்றான்``6 என்றும் ஓதியவற்றிற்கும் இவ்வாறே உரைக்கப்படுதல் காண்க. இவற்றானே, ``பொறிவாயில் ஐந்த வித்தான்``7 என்றதும் இப்பொருட்டாயிற்று. ``நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் - வென்றானை``8 ``மங்கை யோடிருந்தே யோகுசெய்வானை``9 என்பனவும் இக்கருத்தே பற்றி வந்தன. மனைவியோடிருந்த முனிவரைத் திருவள்ளுவர், ``ஐந்த வித்தான்`` 10 என்றதும் இங்கு நினைக்கத்தக்கது./n நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகட்கு உட்பட்ட புவனங்களை அவற்றிற்கு முதல்வராகிய கடவுளரது உலகங்களாகவும், இறுதிக் கண்ணதாகிய சாந்தியதீத கலையில் இலய புவனங்களை வேறிரண் டாகவும் வைத்து `ஏழுலகம்` என்றலே ஆகம முறை. `பூலோகம், புவ லோகம், சுவலோகம், மகலோகம், தவலோகம், சத்தியலோகம்` என வேதமுறையிற் கூறப்படும் ஏழுலகங்களில் ஏழாவதாகிய உலகம் புவனபதி உலகமாகவும், ஏனைய ஆறும் கீழ்க்கீழ் நோக்க ஒன்றின் ஒன்று தாழ்ந்தோர்க்குரிய உலகமாகவும் மேல் ஆகம முறையிற் கூறிய ஒவ்வோர் உலகத்திலும் உட்கூறுகளாய் அவ்வவ்வுலகங்கட்கு ஏற்ற பெற்றியில் அமைந்துள்ளவை என்பது சிவாகம நூல் துணிவு. கீழ்க்கீழ் உள்ள உலகங்களில் மேன்மேல் உள்ள புவனபதிகட்குரிய இடங்களும் உள; மேன்மேல் உள்ள உலகங்களில் கீழ்க்கீழ் உள்ள புவன பதிகட் குரிய இடங்கள் இல்லை என உணர்க. ``சென்றனன்`` என்றது முற்றெச்சம்./n ``தான் இருந்தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரமும், ஆக்கச் சொல்லும் தொகுத்தல் பெற்றன. தானேயாய் இருத்தலாவது சத்தி யோடு கூடிச் செயற்படுத்தலைத் தவிர்ந்திருத்தல். இதுவும், முதற்கண் ``ஒன்றவன்றானே`` என்றதும் இறைவனது, `சொரூபம்` எனப்படும் உண்மை நிலை. ஏனைய, `தடத்தம்` எனப்படும் பொது நிலை. ஒன்று முதலாகத் தொடங்கி ஆறு ஈறாகக் கூறியது, `ஒருவனே பலவாய் விரிந்து நிற்கின்றான்` என்பது உணர்த்துதற்கு. ``ஏழும்பர்ச் சென்றனன்`` என்றது, `அவ்வாறு விரிந்து நிற்பினும் அவன் மன வாக்கிற்கு எட்டாதவனே`` என்றற் பொருட்டு./n ``எட்டு`` என்றது, சொல் ஒப்புமையால் எண்ணலங்காரத்தை நிரப்பிற்று, ``நால்வாய் ஐங்கரத்தன்``1 என்பதிற்போல. எட்டுதல் - முயன்று பற்றுதல். அம் முயற்சிகள் பலவும் நூலுட் கூறப்படும். ``உணர்ந்து எட்டு`` என்றது, `மேற்கூறியவாற்றால் அவன் ஒருவனே உணரப்படுதற்கும், அடையப் படுதற்கும் உரியவன்` என்பது அறிவித்தவாறு./n `வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல்` என்னும் மூவகை வாழ்த்துள் இது பொருளியல்புரைத்தல். இதனானே இந்நூல் நுதலிய பொருள் தொகுப்புக் குறிப்பாற் கூறப்பட்டது. அஃது ஆமாறு, `முதற்கடவுள் உளன்; அவன் ஒருவனேயன்றிப் பலர் இல்லை. ஆயினும் அவன் தன்னின் வேறாகாத சத்தியால் `அருளல், மறைத்தல்` என்னும் இரண்டனையும் செய்தற் பொருட்டு, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூவகை நிலைகளில் நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு, என்பவற்றை அடையும் நெறிகளை உலகிற்கு உணர்த்தித் தான் ஒன்றிலும் தோய்விலனாய் நின்றே எப்பொருளுமாக விரிந்து, அங்ஙனம் விரிந்தவிடத்தும், மன வாக்குக்களைக் கடந்த தனது நிலைமையில் மாறுபடாதே நிற்கின்றான். ஆதலின், அவனை அறிந்து அடைதலே உயிர்கள் செயற்பாலன` எனக் கண்டு கொள்க. நூல்நுதல் பொருள் இங்ஙனம் குறிப்பால் தோன்றவருதல் நூன்முகத்து வரும் கடவுள் வாழ்த்திற்கு இயல்பு என்க./n இப்பாட்டு இந்நூல் நுதலிய பொருள் இது என்கின்றது.

பண் :

பாடல் எண் : 2

நுதலிய பொருள்

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பொழிப்புரை :

மலமாசகன்ற தூய உயிரிடத்து நிலைபெற்று விளங்கும் தூயவனும், உலகம் முழுவதற்கும் நலந் தருபவளாகிய அம்மைக்குக் கணவனும், தென்திசைக்குத் தலைவனாம் கூற்றுவனை உதைத்தவனும் ஆகிய சிவபெருமானது பெருமையை யான் துதிமுறையால் கூறுவேன்!

குறிப்புரை :

போற்று, முதனிலைத் தொழிற்பெயர். போற்றுதல் - துதித்தல். `போற்றி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தல் பெற்றது எனக் கொண்டு, `வணக்கம்` எனப்பொருள் கொள்ளலும் பொருந்தும். `போற்றிசைத்து` என்றதனை, `கூறுகின்றேன்` என்பதற்கு முன்னே வைத்து உரைக்க. `தூய உயிர்` என்றதற்கு, `இன்னுயிர்` என்றார். தயிரில் நெய்போல இறைவன் இனிது விளங்கி நிற்றல் சுத்தான்ம சைதன்னியத்திலே யாதல் அறிக. `நாற்றிசைக்கும்` என்றது, `உலகம் முழுவதற்கும்` என்றவாறாம். நன்மை, அருள். உலகத்தோடு இறைவ னுக்கு உளதாய தொடர்பு அவனது சத்தி வழியே ஆதலின், `நாற்றி சைக்கு நாதன்` என்னாது, `நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதன்` என்றார் `அளி யன்றித் தெறலும் அருளே` என்றற்கு `நல்ல` என்றும், `அவ்விரண் டனையும் செய்வது சத்தியே` என்றற்கு, `மாது` என்றும், `சத்தி, முதலன்று; முதலது பண்பே` என்றற்கு, `நாதன்` என்றும் கூறினார். `மாது` உயர்திணை ஆதலின், சாரியை வேண்டாதாயிற்று. மேல் திசை - மேற்சுட்டிய நான்கு திசைகள். `ஒரு வேந்தன்` என்றது, `திசைக்காவலர் எண்மருள் ஒருவன் என அவனது சிறப்பின்மை கூறியவாறு. கூற்றுதைத்தமையைக் கூறியது, மேல், `அவன்` எனப் பொதுப்படக் குறித்த முதற்கடவுளை, `சிவபெருமான்` எனச் சிறப்பு வகையால் விளக்குதற் பொருட்டு, சிறப்பாதற்கு `மாதுக்கு நாதன்` என்றதினும் இது வலி யுடைத்து என்க. முதற் கடவுளை முதற் கண்ணே சிறப்புப் பெயராற் கூறாது இலக்கணத்தாற் பொதுப்படக் கூறியது, `முதற்கடவுளாவான் இத்தன்மையனே, என்பது உணர்த்து முகத்தால், தாம் கூறும் சிவபெருமானையன்றி ஏனையோர் கூறும் கடவுளரை முதற்கடவுள் என்றல் ஒவ்வாமையை நிறுவுதற் பொருட்டாம். `புனிதன்` முதலியன ஆகுபெயராய் அவனது பெருமைமேல் நின்றன. எனவே, `இந்நூல் சிவபெருமானது பெருமையை உணர்த் தற்கு எழுந்தது` என்பது பெறப்பட்டது. `சிவபெருமானது பெருமையே யன்றி உயிர்களின் இயல்பு, அவைகளைப் பற்றியுள்ள பாசங்களின் இயல்பு என்பனவும் இதனுட் கூறப்படுகின்றன அல்லவோ, எனின், அவை அவனது அடிமையும், உடைமையுமே ஆதலின்` அவற்றது இயல்புகளும் அவனது பெருமையாய் அடங்கும் என்க./n `போற்றிசைத்துக் கூறுகின்றேன்` என்றதனால். வரையறை வகையால் கூறாமை பெறப்பட்டது. வரையறை வகையாற்கூறின், அளவு படாமையின் குன்றக் கூறலாய் முடியும்` என்பது கருத்து. `யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனென்`1 எனப் பிறிதோரிடத்தும் கூறப்பட்டமை காண்க. இதனானே இந்நூல் தோத்திர வகையாகிய திருமுறைகளுள் ஒன்றாயிற்று./n `கூறுகின்றேன்` என வாளா கூறின், `வரையறை வகையாற் கூறுகின்றார்` என்பதே படும் ஆதலின், அது படாமைப் பொருட்டு, `போற்றிசைத்து` என்றதனையும் உடன் கூறினார். ஆகவே, நுதலிய பொருளோடு அதனைக் கூறும் முறைமையும் இதனுள் பெறப்பட்டது. `கூறுகின்றேன்` எனத் துணிவுபற்றி எதிர்காலம் நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது./n இதுவும், அடுத்த பாட்டும் நூற்சிறப்புக் கூறுகின்றன/n

பண் :

பாடல் எண் : 3

நூற் சிறப்பு

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

பொழிப்புரை :

எண்ணில்லாத தேவர்களில் ஒருவனாய் அவர் களோடொப்ப நிற்பவனும், அவ்வாறு நிற்பினும் அவர் அனை வராலும் என்றும் வணங்கப்படுபவனும், தன்னை அடைந்தவர் களாலும் தன் தன்மை முழுதும் அறியப்படாத மேலானவனும், ஆகிய சிவபெருமானது பெருமையை யான் அவனுள் அடங்கிநின்று உணர்ந்து துதிக்கின்றேன்.

குறிப்புரை :

`உலப்பிலி தேவர்கள்` என்றது தாப்பிசையாய், முன்னும் சென்று தொகைநிலை வகையான் இயைந்தது. இலி என்பது இன்மையென்னும் பொருட்டாய் அதனையுடைய பொருண்மேல் இந் நூலுட் பயின்றுவரும். திகம்பரன் என்னும் பொருட்டாகிய `நக்கன்` என்பது வியாபகனாதலைக் குறித்து, ஏனையோரால் ஏத்தப்படுதற் குரிய இயைபு உணர்த்தி நின்றது. நம்பன் - விரும்புதற்குரியவன். `பழை யோன்` என்றும் ஆம். `நாள்தொறும் ஏத்திடும்` என முன்னே கூட்டுக./n `பக்கம் நின்றார்` என்றது சீவன் முத்தரையும், பரமுத்தரையும். `பக்கம் நின்றாரும்` என்னும், சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. நாதன், பரமன் என்பனவும் மேலனபோல ஆகுபெயர்கள். இறைவனது பெருமை முத்தராலும் முற்றும் அறியப்படாது என்பதனை,/n கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும்/n கடல்அளக்க வாராதாற் போலப் -படியில்/n அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம்/n கருத்திற்குச் சேயனாய்க் காண். -திருக்களிற்றுப்படியார். 90/n என்பதனான் அறிக./n புக்கு நின்று என்றது அதீத நிலையையும், உன்னி என்றது துரியநிலையையும் குறித்தவாறு. உன்னுதலன்றிப் புகாதே நிற்கும் துரிய நிலையிலே நிற்பின் சிவானந்தத்தை உணர்தல் கூடாமையால், `புக்குநின்று` என்றும், புக்கு உன்னுதலொழித்த அதீத நிலையிலே நிற்பின் மனவாக்கினால் போற்றுதல் கூடாமையால், `உன்னி` என்றும் கூறினார். இந்நிலைகளின் இயல்புகளை நூலுள் அறிக. இதனால் தமது அநுபவ நிலையை உணர்த்தியவாறாயிற்று./n

பண் :

பாடல் எண் : 4

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தவராகிய மக்கட்கும், விண்ணுலகத் தவராகிய தேவர்கட்கும் முதலாய் நிற்பவனும், வந்த இடத்திலே எனது உடம்பை விழச்செய்தவனும் ஆகிய சிவபெருமானை நான் பகலும், இரவும் வணங்கியும், துதித்தும் மயக்கத்தைச் செய்யும் இவ்வுலகத் திற்றானே மயக்கமின்றி இருக்கின்றேன்.

குறிப்புரை :

சிறப்புப்பற்றி, ``அகலிடத்தார்`` என மக்களையே கூறி னாராயினும், இனம்பற்றிப் பிற உயிர்களும் கொள்ளப்படும். நிலை பேறு உடைமைபற்றிக் காரணத்தை, ``மெய்`` என்றார். காரணம் இங்கு வினைமுதல். அகலிடத்தார் என்றதனோடு இயைய `அண்டத்தார்` என நின்றதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. அனைத்துயிர்க்கும் முதல்வனாதலை வலியுறுத்தற்பொருட்டு இரு தொடராக வகுத்தருளிச் செய்தார். ``விட்டான்`` என்பது `விடு வித்தான்` என்னும் பொருளது. `போத இட்டார்` எனப் பிரித்து, `மிக இருத்தினான்` என்றலும் ஆம். நாயனாரது உடம்பை நீக்கி அவரை மூலன் உடம்பில் இருக்குமாறு இறைவன் செய்த வரலாறு பெரிய புராணத்துள் விரித்துரைக்கப் பட்டது. `எம்மெய்யை, என்றனை` என்பனவும் பாடங்கள். ஐம்புலன் கள் உயிர்செல்லும் வழிக்கு மாறாய் நின்று மறித்தலின், அவற்றின் வடிவாகிய உலகத்தை ``இக லிடம்`` என்றும், அஃது அன்னதாயினும், மேற்கூறியவாறு நான் இறை நிறைவில் நீங்காது நிற்குமாற்றால் மயக்க மின்றி இருக்கின்றேன் என்பார், ``இருள் நீங்கி நின்றேன்`` என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டாலும், `இந்நூல் அருள்வழி நின்று செய்யப்படுவதன்றி, ஆன்ம போதத்தின் வழிநின்று செய்யப்படுவ தன்று எனவும், அன்ன தாயினும். பதி போதமும் ஒரோவழி உள தாங்கொல்லோ` என ஐயுறல் வேண்டா எனவும் கூறி, நூலது சிறப்பு உணர்த்தப்பட்டது.
இவற்றின் பின்னவாகப் பதிப்புக்களில் காணப்படும் ``சிவனோ டொக்கும் தெய்வம்`` என்பது முதலிய பாட்டுக்களும், வேதச்சிறப்பு, ஆகமச்சிறப்பு, திரிமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறை என்னும் அதிகாரப் பாட்டுக்களும் எடுத்துக்கொண்ட பொருளையே கூறலின், அவை நூற்பாட்டுக்களன்றிப் பாயிரப் பாட்டுக்களல்லவாதல் இனிது விளங்கும். அதனால், ஏடுசேர்த்தோர் அவற்றை முறைபிறழக் கோத்தார் எனவே கொள்க.
இந்நூல் பொருள் வரலாற்றுமுறையாற் கேட்டுச் சொல்லப் பட்டதன்றித் தாமே தம் மனவழிப்பட்டுச் சொல்லியதன்று என்றற்கு இது முதல் ஏழு பாட்டுக்களால் தமது அருட்குடி வரவு கூறுகின்றார். குரு பாரம்பரியம் - ஆசிரியத் தலைமுறை.

பண் :

பாடல் எண் : 5

பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

பொழிப்புரை :

எங்கள் நந்தி பெருமான், ஆனேறு, மான், மழு என்ப வற்றை விடாது கொண்டுள்ள சீகண்ட பரமேசுரனது உபதேசப் பொரு ளாகிய பொருட் பெற்றியாம் மறைபொருளையும் எனக்கு விளக்கி, தமது ஞானத்தைத் தரும் திருவடிகளையும் அடியேனது தலைமேல் சூட்டியருளினார்.

குறிப்புரை :

சீகண்ட வுருத்திரர் என்பது விளங்குதற் பொருட்டே வாளா, `தற்பரன்` என்னாது, பெற்றம் முதலிய அடையாளங்களைக் கூறினார். கற்பனை - உபதேசம். சராசரம் என்பது, `சித்து, அசித்து` என்னும் பொருட்டாய், அனைத்துப் பொருள்களையும் குறித்தது. அற்றம் - மறை பொருள்; இரகசியம். நன்மை - ஞானம். இதனால், சீகண்ட பரமேச்சுரன்பால் நந்திபெருமானும், நந்திபெருமான்பால் இவ்வாசிரியரும் ஞானம் பெற்றமை கூறப்பட்டன. இப்பாட்டும் பதிப்புக்களில் இடம் மாறி உள்ளது.

பண் :

பாடல் எண் : 6

நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

பொழிப்புரை :

நந்திபெருமானது அருளைப்பெற்ற ஆசிரியன்மார் யாவர் என்று ஆராயுமிடத்து, அவரோடு ஒத்த நால்வரும், சிவயோக முனிவரும், தில்லை அம்பலத்தை வணங்கிய பதஞ்சலி, வியாக்கிர பாதரும் என்ற இவர் என்னொடு கூட எண்மருமாவர் என்பதாம்.

குறிப்புரை :

ஆசிரியரை, நாயனார் `நாதர்` என்கின்றார். ``நமச் சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க`` என்ற திருவாசகம் இங்கு நினைக்கத் தக்கது. நந்தி பெருமானோடு ஒத்தமை, சீகண்ட பரமேசுரன் பால் அறம் முதலிய நான்கையும் கேட்டமையாலாம். `அந்நான்கையும் உணர்த்துவன வேதங்கள்` என்பது முதல் திருப்பாட்டின் உரையுட் காட்டப்பட்டது. அறமுதலியவற்றோடு ஒருங்கோதிய வீட்டுநெறி பொதுவகையானன்றிச் சிறப்பு வகையான் அன்மையின், அதனைச் சிறப்பு வகையான் இனிதுணர்ந்து அடைய அப்பெருமான் அவர் களை, நந்தி பெருமான்பால் கேட்க என விடுத்தவண்ணம் அவர்களும் நந்தி பெருமான்பால் ஆகமவழியாக வீட்டு நெறியைச் சிறப்பு வகையாற் கேட்டுணர்ந்தார். ஆகவே, அவர்கள் நந்தி பெருமானோடு ஒருங்கொத்த மாணவராய், முதிய மாணாக்கரிடம் இளைய மாணாக்கர் கேட்கும் முறையிற் கேட்டனர் என்றற்கு, ``நந்திகள் நால்வர்`` என்றார். அவர்களை `சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர்` என்ப. சிவயோகமுனி என்பவரைப் பற்றிப் பிற நூல்களில் ஓரிடத்தும், ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் அவரைப்பற்றி யாதும் அறிதற்கில்லை. சிலர் இவரை `அகத்தியர்` என்றும், `துருவாசர்` என்றும் கூறுவர். அவ்வாறாயின், நாயனார் அப்பெயரால் கூறுதலல்லது பிறவாறு கூறார் என்க. எனவே, சிவயோக முனி என்பது பெயரேயன்றித் தன்மை கூறுவதன்று என்க.
பதஞ்சலியாரும், வியாக்கிரரும் தமிழ்நாட்டோடு தொடர் புடையவர் என்பதற்கு, ``மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்`` என்றார். எனவே, மன்று தொழுத என்னும் அடைமொழியைப் பதஞ்சலிக்கு மட்டுமே உரியதாக வைத்து அஃது யோகநூல் பதஞ்சலி யாரினை வேறு படுத்தற்குக் கூறப்பட்டது என்றல் பொருந்தாதாம். ஆகமத்துள் யோக பாதமும் உளதாதலின், அதனையே இப் பதஞ்சலியார் செய்யப் பின் வந்தோர் அதனை நன்குணராது வேறு கூறினமையின் அது, `பாதஞ் சலம்` என வேறு மதமாயிற்று எனக் கொள்ளுதலில் தவறில்லை. பொருட்பெற்றியை இனிதுணர்த்துவது ஞானபாதமேயாதலின், யோக பாதத்துட் கூறப்பட்ட தத்துவங்கள் சிறிது சுருங்கியிருத்தல் கூடும். மன்று தொழுது நின்றமையால் நூல்செய்தல் கூடாதென்பது இல்லை யன்றோ! நாயனாரும் மன்று தொழுதவராதல் பின்னர்க் காணப்படும்.
இங்குக் கூறப்பட்ட எண்மரும் ஒருகாலத்தே நந்தி பெரு மானிடம் ஞானம்பெற்றனர் என எண்ணுதல் கூடாது. நந்திகள் நால் வரும் முதற்கண் பெற்றனர் என்றும், சிவயோக மாமுனி அதற்குப்பின் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும், அவருக்குப்பின் பதஞ்சலி வியாக் கிரர் இரு வரும் ஒருகாலத்திற் பெற்றனர் என்றும் இறுதியாக இவ்வாசிரியர் பெற்றனர் என்றும் கொள்ளற்பாலன. ``மன்று தொழுத`` என இறந்த காலத்தால் கூறினமையின், முன்னே மன்று தொழுது பின்னர் அதன் பயனாக நந்தி பெருமானை அடைந்து ஞானம் பெற்று மீண்டனர் என்பது பெறப்படும். வியாக்கிரர் மூத்தோராகவும், வழி பாட்டில் பெரும்பற்றுடையராகவும் சொல்லப்படுதலால், தில்லை, `பெரும்பற்றப்புலியூர்` என அவர்பெயராலே வழங்கப்பட்டது. பதஞ் சலியாரும் அத்தலத்திலே தங்கி யோகநூல் செய்தார் என்க. வியாக் கிரர் நூல் செய்திலர். வியாக்கிரர் வசிட்ட முனிவர்தம் தங்கையை மணந்து பெற்ற உபமன்னிய முனிவர் இமயத் தாழ்வரையிலே பிறந்து சிறிது வளர்ந்து, பின்னர்ச் சில்லாண் டுகள் தில்லையில் தந்தையார்பால் வளர்ந்து பின்னர்த் தவத்திற்கு உரியராய காலத்து மீளவும் அத்தாழ் வரைக்கண்ணே சென்று தங்கினார் என்க. உபமன்னியரை யாதவன் - துவரைக் கிறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தான் என்று சேக்கிழார் அருளிச் செய்தமையால் இம் முனிவர் பாரத காலத்தவர் என்பது பெறப்படும். இருக்கு என வழங்கப்பட்ட ஆரிய மந்திரப் பாடல்களை, இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என வியாச முனிவர் முறைப்படுத்து நான்காக வகுத்து பிராமணம், உபநிடதம் என்ப வற்றையும் அவற்றுக்கு உரிமை செய்து அனைத்திற்கும் வேதம் எனப் பெயரிட்டதும் பாரத காலத்திலேயாம். அதன் பின்னரும் உப நிடதங்கள் தோன்றின என்க.

பண் :

பாடல் எண் : 7

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

பொழிப்புரை :

நந்தி பெருமானது அருளால் நான், ஆசிரியன் எனப் பெயர்பெற்றேன். பின்பு மூலன் உடலைப் பற்றுக்கோடாகக் கொண்டேன். அவரது அருள் இவ்வுலகில், நேரே எதனைச் செய்யும்? ஒன்றையும் செய்யாது. அதனால், அவரது அருள் வழியை உலகிற்கு உணர்த்த நான் இங்கிருக்கின்றேன்.

குறிப்புரை :

பெற்றோம், நாடினோம் என்பன பாடமாயின் அவற்றை ஒருமைப் பன்மை மயக்கமாகக் கொள்க,

பண் :

பாடல் எண் : 8

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த எழுவரும் என்வழி யாமே.

பொழிப்புரை :

எனது நூலாகிய இத்திருமந்திரத்தைப் பெற்று வழி வழியாக உணர்த்த இருப்பவர், மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், தறிபோன்ற உருவத்துடன் யோகத்தில் இருக்கும் காலாக்கினி, கஞ்சமலையன் என்னும் எழுவருமாவர். இவரே என்வழியினர்.

குறிப்புரை :

மந்திரம் எனப்பின்னர்க் கூறப்படும் பெயரை இங்கு எதிரது போற்றிக் கூறினார். இந்திரன் முதலியோர் கடவுளரல்லர், அப்பெயர்பெற்ற மாணாக்கர் என்க. இவர்களை ஓரோரிடத்தில் நாயனார் பின்னர்க் குறித்தல் காண்க. இவர் என்வழியாம் என வேறு தொடராக்குக. இங்ஙனமாகவே, இவர் எழுவரும் திருமூலர்தம் நேர் மாணாக்கராய்ப் பின்பு அவரது மரபினை வேறுவேறிடத்தில் இருந்து வளர்த்தனர் என்பது பெறப்படும். அண்மையில் வாழ்ந்த தாயுமான அடிகள் தம் ஆசிரியராகிய மௌன குருவை, மூலன் மரபில்வரு மௌன குருவே என விளித்தமை காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 9

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

பொழிப்புரை :

நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.

குறிப்புரை :

அதனால், அவர் இந்நிலவுலகத்திற்கு வந்திலர் என்ற வாறு. அந்நால்வருள் சனற்குமாரர்க்குச் சத்தியஞான தரிசினிகளும், அவர்க்குப் பரஞ்சோதி மாமுனிகளும் மாணாக்கராக, பரஞ்சோதி மாமுனிகள் வான்வழிச் செலவின் இடையே தமிழ்நாட்டில் திரு வெண்ணெய்நல்லூரில் கருவிலே திருவுடையவராய் (சாமுசித் தராய்)த் தோன்றி, சுவேதவனப்பெருமாள் என்னும் பிள்ளைத் திருப் பெயர் உடையாராய் இருந்தவர்க்குச் சிவஞானத்தை உபதேசித்து, மெய் கண்டார் எனத் தீக்கைத் திருப்பெயரும் இட்டுச் செல்ல, அவரது மரபு இன்றும் தமிழ் நாட்டில் நின்று நிலவுதல் அனைவராலும் அறியப் பட்டது. நான் என்றது, பன்மை ஒருமை மயக்கம். மெய்கண்டாரது தோற்றம் நாயனார்க்குப் பன்னூறாண்டுகட்குப் பிற்பட்டது என்பதைப் பலர் அறிவர்.

பண் :

பாடல் எண் : 10

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

பொழிப்புரை :

பிறப்பு இறப்புகள் இல்லாத பெருமையை உடைய முக்கட் கடவுள் தனது எல்லையில்லாத பெருமையைப் பிறர்க்குக் காட்டமாட்டானாயினும், அதனை அவன் ஆசான்மூர்த்தி வாயிலாகக் காட்டியது மேற்குறித்த நால்வரோடு, சிவயோகமாமுனி முதலிய மூவர்க்குமேயாம்.

குறிப்புரை :

அவர்களோடு அப்பேறு எனக்கும் கிடைத்தது என்பது குறிப்பெச்சம். பணிவினால் இதனை எடுத்தோதாது குறிப்பாற் பெறவைத்தார். நாங்கள் பெற்ற பேறு பிறர் பெறுதற்கரியது என அதன் அருமை கூறியவாறு. இரண்டாம் அடிமுதலாகத் தொடங்கிப் பொருள் கூறுக. மூன்று, நான்கு என்னும் முறைமையால் உளதாகும் செய்யுளின்பம் நோக்கி மூவரை முன் வைத்தார். இறப்பும், பிறப்பும் ஒழிந்த பெருமையை உடைய தேவன் என்க. ஒழிந்த அதனையே பெருமை எனக் கூறலால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். மூன்றன் என்னும் சாரியை தொகுத்தலாயிற்று. முச்சுடர்களின் ஒளியும் சிவபெருமானது முக்கண்ணின் ஒளியாதல்பற்றி, செழுஞ்சுடர் மூன்றன் ஒளியாகிய தேவன் என்றார்.

பண் :

பாடல் எண் : 11

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

பொழிப்புரை :

தன்னைவிட்டு இமையளவும் பிரிய விரும்பாத நந்திகள் நால்வர்க்கும் சிவபெருமான் எதிர்ப்படத்தோன்றி, உலகம் அழிகின்ற ஊழிக் காலத்திலும் நீங்கள் நம்மை வழிபட்டிருப்பீராக என்று அருள்புரிந்தான்.

குறிப்புரை :

அதனால் அவர்கள் என்றும் அவனோடு இருப்பர் என்றவாறு. எழுந்து நீர் பெய்வன ஏழுமேகங்களும். அவைவிடாது பெய்யினும் என்றது, ஊழிக் காலத்தும் என்றவாறு. எட்டுத் திசையும் பெய்யினும் என முன்னே கூட்டுக. மூன்றாம் அடி சிவபெருமான் காட்சி வழங்கினமையைக் குறித்தது. ஆசான் மூர்த்தி வாயிலாக அருள்செய்தபின்னர் நேர்நின்று அருள்புரிந்தார் என்பதாம்.
நந்திகள் நால்வரும் நிலவுலகத் தொடர்பிலராயினார் எனக் கூறி, `இந்த எழுவரும் என்வழியாமே` எனத் தமது மரபினை எடுத்துக் கூறிப்போந்தமையால், ஏனை மூவரும் இவ்வாறே தம் தம் மாணாக்கர் சிலரால் நந்திமரபினை நிலைபெறுத்தினர் என்பது கொள்ளக் கிடக்கின்றது. எனினும், இன்று சனற்குமாரர் மரபாகிய மெய்கண்ட மரபு ஒன்றுமே நிலைபெற்றுளது என்க.
மேல் ஆசிரியமரபுவகை பலவற்றையும் கூறிய நாயனார் இனி அவற்றுள் ஒன்றன் முதல்வராகிய தாம் தமது நெறிப்பொருளை உலகிற்கு உணர்த்தற்பொருட்டுச் செய்யும் இந்நூலாசிரியர் வரலாறு விளங்குதற் பொருட்டுத் தம் வரலாற்றைக் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 12

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

பொழிப்புரை :

என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்.

குறிப்புரை :

முதலிரண்டு அடிகளும் ஆசிரிய வணக்கங்கூறும் கருத்துடையன. `மந்திரம்` என்பது `மனத்தில் நிலைத்து நிற்பது` எனவும் பொருள்தருமாதலின், பின்னிரண்டடிகளால் நூற்பெயர்க் காரணமும் புலப்படுத்தவாறாயிற்று, இதனானே நாயனார் சிவாக மங்களை மொழிபெயர்த்துச் செய்யாது, அவற்றது தெளிந்த பொருளையே திரட்டி இந்நூலால் அருளிச் செய்கின்றார் என்பது பெறப்பட்டது. படவே, ``ஆகமம்`` என்றது அவற்றின் தெளிந்த பொருளையாயிற்று. சிவாகம நெறியே `சைவம்` எனப்படும் சிவநெறி யாதலின், நாயனார் தமிழ்நாடு செய்த தவப்பயனானே இங்கு எழுந் தருளியிருந்து, அந்நெறியின் முறைமையை இந்நூலால் அறியச் செய்தார் என்க.

பண் :

பாடல் எண் : 13

செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.

பொழிப்புரை :

உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்றபின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்திபெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.

குறிப்புரை :

இருந்தது கயிலைத் தாழ்வரையிலாம். இவ் வரலாற்றைத் தமக்கு இயைபில்லாமைபற்றிச் சேக்கிழார் கூறிற்றிலர் என்க. மண்ணுலகத்தார் மன்றின்கட்சென்று திருக்கூத்துக் காண்டல் இன்றியமையாதது என்னும் மரபு நிலைபெறுதற்கு நந்திதேவர் நாயனாரை அது செய்யுமாறு பணித்தருளினார் எனக் கொள்க. அநுபவ ஞானம் கைவரப்பெற்றோர் உடம்பொடு நிற்க விரும் பாமையை வாதவூரடிகளது நிலைபற்றி உணர்க. ஞானம் கைவந்தபின் நாயனாரது நிலை இதுவாயினும், அதற்கு முன்னர் அவர் நெடுங்காலம் இருக்க விரும்பிச் செய்த பெருந்தவம் தனது பயனைத் தந்து நின்றமை யின், அவர் அவ்வாறே இருத்தல் வேண்டுவதாயிற்று என்பதை அவர் அடுத்தபாட்டிற் கூறுதல் காண்க. இவ்வாற்றானே இவரைச் சேக்கிழார், `அணிமாதி சித்திபெற்றவர்` எனக் குறித்தல் காண்க. ஒப்பு - உடன்பாடு. இவ்வாறு உடன்பாடின்றி இருந்தமையால், ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் யுகம்போலத் தமக்குத் தோன்றின என்பது தோன்ற, ``எழுகோடியுகம் இருந்தேன்`` என்றார். பலவற்றைக் குறித்தற்கு, `கோடி` எனக்கூறலும், பலவற்றைக் குறிக்கு மிடத்து ஏழென்னும் எண்ணோடு தொடர்புபடுத்தலும் வழக்கு. எனவே இன்னோரன்ன வாக நாயனார் கூறுவனவற்றிற்கு, `பன்னெடு நாள் இருந்தார்` என்னும் பொதுப்பொருளே கொள்ளலாவது அறிக. இது பற்றியே நாயனாரது வாழ்நாளைச் சேக்கிழார் அவரது நூலின் பாடற்கணக்கொடு தொடர்பு படுத்தி, `மூவாயிரம் ஆண்டு` என வரையறுத்து, `பாடலும் மூவா யிரம், நாயனார் வாழ்ந்த ஆண்டும் மூவாயிரம்` என்னும் நயம்பற்றி, `ஓராண்டுக்கு ஒன்றாக ஒன்றவன்றான் என எடுத்து இந் நூலை அருளிச் செய்தார்` எனக்குறித்தருளினார். நாயனார் தாம் வாழ்ந்த காலத்தை `மூவாயிரம் ஆண்டு` என ஓரிடத்தும் குறியாமையை நோக்குக.

பண் :

பாடல் எண் : 14

இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

பொழிப்புரை :

இந்திரனே, உடன்பாடின்றியும் நான் அவ்வாறு நெடுநாள் உடம்போடிருந்த காரணத்தைக் கூறுகின்றேன்; கேள். எல்லா உலகங்கட்கும் தலைவியாம் அருந்தவமாகிய செல்வியை அடியேன் அன்பினால் விரும்பி உடன் நின்று பணிந்துவந்தேன்.

குறிப்புரை :

`அதனால் அவள் என்னை அவ்வாறு இருக்கச் செய் தாள்` என்றவாறு. அருந்தவச் செல்வி, உருவகம். ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும் செய்ய வல்லது தவமாகலின், அதனை உலகத்தின் தலைவியாகக் கூறினார். கல்வி செல்வங்களைக் `கலை மகள், திருமகள்` என்றல்போலத் தவத்தை, `புவனாபதி` என்றார். `புவனா` என்பது உலகமாகிய பெண்பாலை உணர்த்தி நின்றது. `பதி` என்பது, `அவனைப் பதமாக உடையவள்` என்னும் ஈகார ஈற்று ஆரியச்சொல். `இந்திரனே` என்றது, அப்பெயருடைய மாணாக்கரை முன்னிலைப் படுத்ததாம்.

பண் :

பாடல் எண் : 15

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.

பொழிப்புரை :

இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக் காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெரு மானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.

குறிப்புரை :

கீழுள்ள மகேசுரர் முதலியவர்க்கும் தலைவர் சதா சிவரேயாதலின், அவரே ஐந்தொழிற்கும் தலைவராதல் வெளிப்படை. அதனால், ஐந்தொழில் நிலையை, `சதாசிவம்` என்ற ஒன்றினாலே குறித்தார். இனி அதனை `உபலக்கணம்` என்றலும் ஆம். `முத்தமிழ்` என்ற இதனால், கயிலைத் தாழ்வரையிடத்தும் அக்காலத்தில் தமிழ் போற்றிக் கற்கப்பட்டது என்பது தெளிவாகும். அதனாலன்றோ பிற் காலத்திற் சேரமான் பெருமாள் நாயனார் தமது `திருக்கயிலாய உலா` என்னும் ஞானத் தமிழ்ப்பாடலைத் திருக்கயிலையில் யாவரும் கேட்க அரங்கேற்றினார்! இதனால், நாயனார் தாம் பலகலை வல்லுநராயி னமையைக் குறித்தவாறு காண்க. இவற்றையெல்லாம் இவர் நந்தி பெருமானது அருள்பெற்ற பின்னர் அதனையே துணையாகப் பற்றி நன்குணர்ந்தார் என அறிக. எனவே, இறைவன் திருவருள் உலகர் உய்தற்பொருட்டு இவரை இந்நிலையினராக்கியது என்பதும் உணரற் பாற்று. `மிருதம், இதம்` என்பன செய்யுள் நோக்கி; `மிதா, இதா` என நின்றன. சனித்தல் - தோன்றுதல். உதா சனித்தல் - புறக்கணித்தல். இரண்டாம் அடியில் `நிதாசனி` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 16

மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

பொழிப்புரை :

மாலாங்கனே, திருக்கயிலையை விட்டு இத்தமிழ்நாட்டிற்கு நான் வந்தகாரணம் கேள். சிவபெருமான் முதற்கண் உமை அம்மைக்கு முதல் நூலாகச் சொல்லிய சிவாகமத்தின் ெபாருளைச் சொல்லுதற்காகவே வந்தேன்.

குறிப்புரை :

`மாலாங்கன்` என்பவர் நாயனார்தம் மாணாக்கருள் ஒருவர் என்பது மேலே சொல்லப்பட்டது. `மொழிந்த வேதம்` என இயையும். பல தேவர்களையும் பொதுப்பட வைத்துக்கூறிய வேதமும், தான் ஒருவனையே முதல்வனாக வைத்துக் கூறிய வேதமும் எனச் சிவ பெருமான் கூறிய வேதங்கள் இரண்டு எனவும், அவற்றுள் முன்னதை முனிவர் நால்வர்க்கும், பின்னதை உமையம்மைக்கும் கூறினான் எனவும் கூறப்படுவனவற்றுள், பின்னதாகிய வேதம் என்பார், திருக் கூத்தின் சீலாங்கவேதம் என்றார். அது சிவாகமம் என்பது வெளிப் படை. ஆகமமும், முதல்நூல் என்னும் பொருளில் வேதம் எனப்படுதல் அறிந்து கொள்க. சீலம் - இயல்பு. அங்கம் - வகை. நாயனார் வந்தது அகத்தியரைக் காணுதற்பொருட்டேயாயினும், திருவருட் செயல் இவ்வாறு இருந்தது என்பது இப் பாட்டின் கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 17

நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

பொழிப்புரை :

`உமையம்மை` என்று சொல்லப்படுபவள் வரம்பில் இன்பமாகின்ற பெருமையை உடையவள். அவள் எனது பிறப்பை அறுத்து வீடு தந்து என்னை ஆட்கொண்டவள்; மிக்க புகழை உடையவள்; சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய இச் சிறந்த திருத்தலத்தைத் தனதாக உடையவள். அவள் திருவடி நிழலில் இதுபொழுது இருக்கின்றேன்.

குறிப்புரை :

`தேவியாவாள் சிவனது சத்தியே` என்பது பற்றி இவ்வாறு அருளிச்செய்தார், ``பேரின்பமான பிரமக்கிழத்தி`` என்றார் திருவுந்தியாரிலும் (பா.34). இதனால், தாம் திருவாவடுதுறையில் நிரதி சயானந்தம் உற்று இருந்த நிலையைக் கூறினார் என்க சீர் - செல்வம். `சீராக` என ஆக்கம் வருவிக்க. ஆவடுதுறை அம்மை ஆவாய் நின்று பூசித்த தலமாதல் அறிக,

பண் :

பாடல் எண் : 18

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

பொழிப்புரை :

சீருடையாள் பதம் சேர்ந்தமையால் அவளை ஒருபாகத்தில் உடைய சிவனையும் சேர்ந்திருக்கின்றேன். இத் திருவா வடுதுறை அவளுடையது மட்டுமன்று; அவனுடையதுந்தான். இங்குச் சிவஞானத் திருவின்கீழ் அவனது திருப்பெயர் பலவற்றையும் ஓதித் துதித்துக்கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

போதம் - ஞானம். போதத்தை உடையது போதி. `புத்தருக்குப்பின் அரசமரத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று எனினும், இதன் கீழ்ப் புத்தர்பெற்றது சூனியஞானம்; நான் பெற்றது சிவஞானம்` என்பார், `அரச மரம்` என்னாது ``சிவபோதி`` என்றார்.

பண் :

பாடல் எண் : 19

இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.

பொழிப்புரை :

இங்கும் இவ்வுடம்பிலே பல்லாண்டுகள் இருந்தேன். அங்ஙனம் இருந்த காலம் முழுவதும் சிவஞானப் பேரொளியில்தான் இருந்தேன். அது தேவராலும் வணங்கப்படும் எங்கள் நந்தி பெருமானது திருவடி நிழலேயன்றி வேறில்லை.

குறிப்புரை :

ஆசிரியர் சிவமேயாதல்பற்றி, நந்தி இணையடி சிவனடியேயாதல் அறிக. `இரவு, பகல்` என்பன அறியாமையும், அறிவுமாம். இவை கருவி கரணங்களின் நீக்கத்தாலும், தொடக் கினாலும் வருவன. இவை அற்றஇடம், என்றும் ஒரு பெற்றியாய் விளங்கும் பேரறிவாம். அதனால் அங்குத் துன்பம் என்பதின்றி, இன்பமே உளது என்க.

பண் :

பாடல் எண் : 20

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

பொழிப்புரை :

முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.

குறிப்புரை :

`ஆதலால் இதனைச் செய்கின்றேன்` என்பது குறிப் பெச்சம். மூலன் உடம்பில் புகுதற்குமுன்னே இருந்தநிலையை முற் பிறப்பாகவும், அதற்குப்பின் இருந்த நிலையைப் பிற்பிறப்பாகவும் வைத்து, இதில் நாயனார் அருளிச் செய்தார். ஆகவே, `படைத்தனன்` என்றது, மூலன் உடம்பில் இருக்கச் செய்ததையேயாயிற்று. தவம் இன்றியாதொன்றும் ஆகாது என்பதே முதல் இரண்டு அடிகளால் உணர்த்தப் பட்டது. `தமிழ்செய்தல்` என்னும் இரண்டாவதன் தொகை ஒருசொல் நீர்மைத்தாய்ப் பாடுதல் எனப் பொருள்தந்து, ``தன்னை`` என்றதற்கு முடிபாயிற்று. `தமிழ்ச்செய்யுமாறே` என்பதும் பாடம். இரண்டாம் அடியை முதலில் வைத்துரைக்க.

பண் :

பாடல் எண் : 21

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப் பாடல்கள் மேற்கூறியவற்றை மிகப் பின்வந்து கூறுதலாலும், இவர் மாணாக்கரல்லாத ஒருவரை நோக்கிக் கூறுதலாலும், `நாயனார் தரைவழியாகவே பல தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை அடைந்தார்` என்ற சேக்கிழார் திருமொழிக்கு மாறாக. வான் வழி வந்ததாகக் கூறுதலாலும் `இவைநாயனார் அருளிச் செய்தன அல்ல` என்க.

பண் :

பாடல் எண் : 22

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப் பாடல்கள் மேற்கூறியவற்றை மிகப் பின்வந்து கூறுதலாலும், இவர் மாணாக்கரல்லாத ஒருவரை நோக்கிக் கூறுதலாலும், `நாயனார் தரைவழியாகவே பல தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையை அடைந்தார்` என்ற சேக்கிழார் திருமொழிக்கு மாறாக. வான் வழி வந்ததாகக் கூறுதலாலும் `இவைநாயனார் அருளிச் செய்தன அல்ல` என்க.

பண் :

பாடல் எண் : 23

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

பொழிப்புரை :

மக்களுடைய உள்ளத்தில் சிறந்து நிற்கின்ற நூல்கள் பலவற்றிலும் தலையானதாகச் சொல்லப்படுகின்ற வேதத்தைச் சொல்லுதற்கு ஏற்ற உடம்பையும், உள்ளக்கருத்தையும் எனக்கு இங்கு இறைவன் அளித்தது, தனது அருள் காரணமாகவாம்.

குறிப்புரை :

`தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு நியமித்து அதற் கேற்ற உடம்பைக் கொடுத்துக் கருத்துக்களையும் தோற்றுவித்தான்` என்றபடி. `உற்பத்தியும்` என்ற உம்மை தொகுத்தல் பெற்றது.

பண் :

பாடல் எண் : 24

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

பரவெளியைப் பற்றிநிற்கின்ற வேதப் பொருளை உள்ளவாறு உணர்ந்து சொன்னால் அதுவே, `உடம்பைப் பற்றி நிற்கின்ற உயிருணர்வில் நிலைத்துநிற்கும் மந்திரம்` எனப்படும். அம்மந்திரத்தை இடையறாது உணர உணரப்பேரின்பம் கிடைப்பதாம். அவ்வாற்றால் நான்பெற்ற இன்பத்தை, இவ்வுலகமும் பெறுவதாக.

குறிப்புரை :

உயிர்களின் உணர்வில் தோன்றும் கருத்துக்களே சுத்தமாயையின் காரியமாகிய நாதத்தைப்பற்றி நிற்பனவாக, இறைவன் உலகிற்கு உணர்த்தும் பொருள்கள் அவனது அருள் வெளியைப் பற்றுக்கோடாகக் கொண்டுநிற்றல் பற்றி ``வான் பற்றி நின்ற மறைப்பொருள்`` என்றார். இதனால், மந்திரங்களின் இயல்பும், அவற்றின் பயனும் இவை எனக் கூறுவார்போன்று, தாம் செய்யும் நூல் மந்திரமாதலையும், அதன் பயனையும் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 25

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.

பொழிப்புரை :

தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.

குறிப்புரை :

`உண்மைச் சிவநூல் எங்கு உளதாயினும் அதனைத் தேவர் மகிழ்ச்சியோடும் கைக்கொண்டு போற்றுவர்` என்னும் துணிவு பற்றி; ``வானவர் மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை`` என்றார். இக்கருத்தே பற்றிச் சேக்கிழாரும், `ஞானசம்பந்தர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை வானமும் நிலனுங்கேட்க அருளிச்செய்தார்` என்றும், `நாவுக்கரசரது திருப்பெயரை உலகேழினும் மன்னுக என்று இறைவன் அருளிச்செய்தான்` என்றும் கூறினார். ``மந்திர மாலை`` என்றது நூற் பெயர் குறித்தவாறு. எனவே, இவை இரண்டுபாட்டாலும் நூற் பெயரும், நூலது பெருமையும் கூறப்பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 26

அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

பொழிப்புரை :

உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப்படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல் களையும் கற்பாரின்றி வீணேகிடக்கவையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.

குறிப்புரை :

`ஆகவே, தமிழாலாய இந்நூலும் மூவாயிரம் பாடலுள் இன்றியமையாப் பொருள்களைக் கூறுவதாய் அமையும்` என்பதாம். `இலட்சம் கிரந்தம், கோடி கிரந்தம் என்றாற்போல் வனவற்றை நோக்க, இம்மூவாயிரம் பாடல் எம்மட்டாய் எல்லா ஆகமங்களுமாகும் என்று இகழற்க` என்றவாறு. இதனானே, `சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராய்ச் சுருங்கிய நில வுலகத்தின் கண் வாழும் சகலராய மக்கட்கு ஏற்புடையன தமிழ் நூல்களே` என்பதும் குறித்தவாறு காண்க. ``உலகேழ்`` என்றது நாவலந்தீவு முதலிய ஏழு தீவுகளை. நாயனார் இந்நூல்செய்த காலத்தில், `தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருவாசகம், திருக்கோவையார்` என்னும் இவையே தமிழ்மொழியில் சிறந்த நூல்களாய் விளங்கிப் பயனைக் குறை வின்றித் தந்தமையின்; ``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் - பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே`` என்றார். காரைக்காலம்மையார் பாட்டு முதலாக இன்று பதினொன்றாந் திருமுறையில் உள்ளனவற்றுள் சில, நாயனார் காலத்து இருந்தனவா என்பது ஆராய்ந்துணரத் தக்கது. மாணிக்கவாசகர் தாம் கூறும் தலங்களுள் திருவிடைமருதூரைக் குறித்துத் திருவா வடுதுறையைக் குறியாமையால், இந்நாயனாராலே அத்தலம் `நவகோடி சித்தபுரம்` என்பது முதலிய பல சிறப்புக்களைப் பெற்றது, அவர் காலத்திற்குப் பின்னரே என்பது துணியப்படும். நாயனாரது காலத்தில் திருவாவடுதுறை பொதுவான ஒரு சிவதலமாய் இருந்தது எனவும், எக்காரணத்தாலோ இறைவன் திருவருள் இவரை அத்தலத்தில் இருத்தியது எனவும் கொள்க. `கோகழி` என்பதைத் `திருவாவடு துறை` எனச் சிலர் கருதுதல் பொருந்துவதாய் இல்லை.
இப்பாட்டின் பின்பதிப்புக்களில் காணப்படும் ``அடிமுடி காண்பார்`` என்னும் பாட்டுச் சிவபரத்துவத்தில் இருத்தற்குரியது.

பண் :

பாடல் எண் : 27

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொழிப்புரை :

இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.

குறிப்புரை :

சுத்த தத்துவம் காலம் கடந்தன ஆதல்பற்றி, `நித்தப்பொருள்` என்று சொல்லப்படுதலால், காலத்திற்கு உட்பட்ட ஏனைத் தத்துவங்களை, `மாயம்` என்றார். மாயம் - மாய்தலுடையது. `பரை` என்றது பரநாதத்தை. ஆயம் - கூட்டம்; தொகுதி. `பரை முதலாகிய தொகுதி` எனச் சுத்ததத்துவங்களைக் குறித்தவாறு. மாயையைக் கூறவே, ஏனைய கன்ம ஆணவ மலங்களும் பெறப் படும். `அறிபவன்` எனப்பட்டது பசுவாகிய ஆன்மாவே என்பது வெளிப்படை. `ஞாதுருவத்தை` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. பதியாகிய இறைவன் அறியப்படும் பொருளாய் நிற்றல் தடத்தநிலையிலாதலின், ``ஞேயம்`` என்றது தடத்த சிவனையாம். ஞானம், அவனது சத்தி. `சொரூப சிவன்` என்பது உணர்த்துதற்கு, ``அச்சிவன்`` எனச் சேயனாகச் சுட்டிக் கூறினார். அகோசரம் - அகப் படாமை. பசு பாசங்களின் உண்மை இயல்புகளும் வாக்கு மனங்கட்கு அகப்படுவன அல்லவாதல் பற்றி அனைத்தையும் `அகோசரம்` என்றார். `பீசம்` என்னும் ஆரியச்சொல். `வீசம்` என்று ஆகிப் பின் எதுகை நோக்கி, `வீயம்` எனத் திரிந்தது. பீசம் - வித்து. `சிறிய அளவில் செய்யப்படினும், `இந்நூலுள் ஆகமப்பொருளாகிய முப்பொருள் இயல்பு முழுவதும் எஞ்சாமற் கூறப்படும்` என்றவாறு. துணிவு தோன்ற, ``விளக்கியிட்டேன்`` என இறந்த காலத்தாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 28

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொழிப்புரை :

இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெரு மானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.

குறிப்புரை :

பரமாகும் சோதி, பெருமையன், ஆனந்த நந்தி என்பனவும் சிவபெருமானையே குறித்தன. `வளப்பம்` என்பது, `வளப்பு` என நின்றது

பண் :

பாடல் எண் : 29

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றிநின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்திநிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.

குறிப்புரை :

``மூலனை நாடி`` என்றது வழிமொழிதல். `ஆகமத்தை அருளிச்செய்தவர் சதாசிவ நாயனார்` என்றல் பற்றித் தம்மை அவ்வாறு கூறினார். `சீவன் முத்தி நிலையிலிருந்தே இதனைச் செய்கின்றேனாதலின், இது, சிவன் மொழியேயன்றி என்மொழி யன்று` என்பதாம். உலகம் உய்தல் காரணமாக அருளாளர் இங்ஙனம் பட்டாங்குக் கூறுவனவற்றை நம்மனோர் சொற்போலத் தற்புகழ்ச்சி என்றல் கூடாமை அறிக. இது பற்றி யன்றே `நிறைமொழி மாந்தரா யினார் சில சொற்களை ஆணையாற் கிளப்பர்` (தொல் - செய்யுள் - சூ. 178) என்றதூஉம் என்க. `பல்லாண்டுகள்` என்பது ஆற்றலான் வந்தது.

பண் :

பாடல் எண் : 30

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.

பொழிப்புரை :

பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறை விடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இரு காற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும் படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.

குறிப்புரை :

`அவ்வாற்றால் நான் பல்லாண்டுகளாக இருக் கின்றேன்` என்பதாம். இரண்டாம் அடி முதலாகத்தொடங்கி, `இருக்கும் ஆரழலை அருக்கனும் சோமனும் வீச இருக்கில் எண்ணிலி கோடி இருக்கும்` எனக்கூட்டி, ``இருக்கும்`` என்பதற்கு `உடம்பு` என்பது வருவிக்க. உருக்குதல் - மனத்தைக் கவர்தல்.

பண் :

பாடல் எண் : 31

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

பொழிப்புரை :

இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.

குறிப்புரை :

விடாது சொல்லுதலை, `பிதற்றுதல்` என்றார். `நந்தி பேர் தன்னை` என மாற்றுக. நெஞ்சத்து இயற்றுதல், நினைத்தல். `உஞற்றுவன்` என்பது, `உயற்றுவன்` என நின்றது. `முயற்றுவன்` எனவும் பாடம் ஓதுவர். `இயல்பாகத் திகழ்கின்ற சோதி` என்க. இறைவன், ஆகுபெயர். ``ஆம்`` என்றதற்கு எழுவாய் வருவிக்கப் பட்டது.
பதினெட்டுத் திருமந்திரங்களால் தம் வரலாறும், நூல் வரலாறும் கூறிய நாயனார், நான்கு திருமந்திரங்களால் அவையடக்கம் கூறுகின்றார். நாயனார் அவையடக்கம் கூறியது, இறைவனது பெருமையை மாணாக்கர் உணர்தற்பொருட்டு என்க.

பண் :

பாடல் எண் : 32

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணர வல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.

குறிப்புரை :

``ஒன்று`` எனச் சிவபெருமானையே வேறு போலக் கூறினார். மெய்ம்மையை, ``வேர்`` என்றார். `அறியாமல்` என்றது, `முற்ற உணராது சிறிதுணர்ந்த அளவிலே` என்றவாறு. `அறிந்த அளவில் செய்கின்றேன்` என்றபடி. விளம்புதல் - பலரறியக் கூறுதல்.

பண் :

பாடல் எண் : 33

பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே.

பொழிப்புரை :

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் ஒன்றையும் நெறிப்பட அறிகிலேன். அளவை நூல் முறையால் ஆராயவும் வல்லனல்லேன். பேரன்பினால் இறைவனையே தேடி அலையும் நிலைமையும் இல்லேன்.

குறிப்புரை :

`நான் சிவபெருமானது பெருமையைக் கூறுதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். எனவே, `எனது சொல் அறிவுடை யோர்க்கு நகை விளைக்கும்` என்பதாம். பாடுதல், இயல்வகையாலும். இசைவகையாலும் என்க.

பண் :

பாடல் எண் : 34

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொழிப்புரை :

தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசைபோல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெரு மையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.

குறிப்புரை :

`அவ்வாற்றால் ஆகமத்தின்வழிச் சிறிது கூறு கின்றேன்` என்பது குறிப்பெச்சம். எனவே, `அம்முதனூற் பொருளை யுடையது என்பதுபற்றி அறிவுடையோர் இந்நூலை இகழார்` என்பது கருத்து. `மதித்தவர் உள்ளே இன்னிசைபோல எழுகின்ற ஈசனை` எனக் கூட்டுக. ``இன்னிசை வீணையில் இசைந் தோன் காண்க`` (தி.8 திருவாசகம் . திருவண்டப்பகுதி - 35) என்றமை நினைக்கத்தக்கது. பின்னைப் படைத்தல் - மீளப் படைத்தல்.

பண் :

பாடல் எண் : 35

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொழிப்புரை :

மன்னிய வாய்மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத் தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக்கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தி யருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.

குறிப்புரை :

`அதனால், அவற்றை வேதத்திற்குப் புறம்பான நூல் என்று இகழ்வர். அவர் என்னையும் இகழ்வராதலின், அது பொருளன்று` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `பத்திமையால் தத்துவஞானம் தாழ்வரை உரைத்தது` எனக்கூட்டி உரைக்க. ``உரைத்தது`` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன்னைப் பாட்டினின்றும் வந்தது. `பத்திமையால் உரைத்தது` எனவே, அறியார் அஃதில்லாதோர் என்பது விளங்கிற்று. இதனால், `வேதம் உலகர்பொருட்டும், சிவாகமம் சத்திநிபாதர் பொருட்டும் சிவபெருமானால் செய்யப்பட்டன` என்பது சொல்லப்பட்டது.
இதனை,
``வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறுமுள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம்;
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
எனச் சிவஞானசித்தி விளக்குதல் காண்க.
பாயிரத்திறுதியில் நூற்பாட்டின் தொகையும், நூற்பயனும் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 36

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.

குறிப்புரை :

``மூலன்`` என்றது தம்மைப் பிறர்போலக் கூறியவாறு. ஞானசம்பந்தரும், நம்பியாரூரரும் தம் பதிகத்திறுதியில் இவ்வாறு கூறுதல் காண்க. இங்ஙனம் நாயனார் ``மூவாயிரம் தமிழ்`` என்றமை யானும், மேல் ``மந்திர மாலை`` என்றமையானும் சேக்கிழார், ``நற்றிரு மந்திரமாலை`` எனவும், ``தமிழ் மூவாயிரம் சாத்தி`` எனவும் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 37

வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தரும்இவை தானே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 38

வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 39

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பர மானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங் கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என் பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.

பண் :

பாடல் எண் : 1

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

பொழிப்புரை :

தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.

குறிப்புரை :

``இங்கு`` என்றது ``இம் மண்ணுலகில்`` என்றபடி. `சித்தியாலும், முத்தியாலும் சிலர் சிவனோடு ஒத்திருப்பர்` என மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு, ``அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` என்றார். ``ஆதலின்`` என்பது சொல்லெச்சம். ``அன்று கடந்து`` என மாற்றுக. ``அன்று`` என்றது ``அநாதி`` என்னும் பொருளது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பொன் - பகலவன். ``பொன்னொளியாய்`` என உருவகப் பொருண்மைத்தாய ஆக்கம் விரிக்க. தவன் - தவத்தின் பயனாய் உள்ளவன்; பரமுத்திப் பேறாய் உள்ளவன்; ``முதற்கடவுள்`` என்றவாறு. தா மரையான் - தாவுகின்ற மானை ஏந்தியவன். ``சடைமுடித் தா மரையான்`` என்றது, `சிவபெருமான்` என்னும் பெயரளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 2

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.

பொழிப்புரை :

சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

குறிப்புரை :

``சிவனொடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை`` என மேற்கூறியதனையே அநுவதித்தார்; அதனால், பின்வருவன வற்றை வலியுறுத்தற்பொருட்டு. அருந்தவம், வீடடைவிக்கும் தவம். ``ஊர் புகுதல்`` என்றது ஒட்டணியாய் நின்று, முத்திபெறுதலைக் குறித்தது. இறவாமை முதலிய நான்கும் முதற்கடவுளது இயல்புகள் என்பதைப் பெயர்த்துரை (அநுவாத) வாய்பாட்டாற் கூறி, `அவ்வியல் புகளை உடையவன் சிவபெருமான் ஒருவனே` என்பது உணர்த்திய வாறு. நஞ்சுண்ட வரலாறு கூறும் புராணத்தால் சிவபெருமான் இறவாதவன் என்பது தெளிவாதலாலும், `சிவன் முத்திக் கடவுள்` என்பதே வழக்காதலாலும் ``அவனை ஒழிய அமரரும் இல்லை; அருந்தவம் இல்லை`` என்றார். அவை அங்ஙனமாகவே, ஏனைய இரண்டும் இனிது பெறப்பட்டன. ``நீல மணிமிடற் றொருவன்போல மன்னுக``, (புறம் - 91) ``சாவா மூவாச் சிங்கமே`` (தி. 6. ப.99 பா.2) என்றாற் போலும் மெய்ம்மொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 3

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.

பொழிப்புரை :

பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

``முன்`` என்றது பல ஊழிக்காலங்களை. ``முன்னோன்`` என்றது, அவர்களை என்றும் தானே படைத்தல் பற்றி. ``படைப்போற் படைக்கும் பழையோன்``, ``முன்னோன் காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 13,29) என்றமை காண்க. ``அயனைமுன் படைத்திடும் ஒரு கற்பத்து; அரியை முன் படைத்திடும் ஒரு கற்பத்து`` (சிவஞானபாடியம் - சூ. 1 அதி. 2) என்றது அறிக. ``தன்னை யொப்பாய் ... ... தலைமகன்`` என்றது, ஒருவனாதல் குறித்தபடி. ``ஏகோ ஹிருத்ர:`` (சுவேதாசுவதரம்) ``தன்னேரில்லோன் தானே காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 30) என்றதும் காணத்தக்கது. இவ்வாறாகவே இது, ``ஒன்றவன்றானே`` என்றதனை விளக்கியவாறாம். ``அப்பனும், அம்மையும்`` என்றது, ``உலகிற்கு முதல்வன்`` என்றதாம். இதுவும், முதற் கடவுள் இயல்பும், அவற்றைச் சிவபெருமான் உடையனாதலுங் கூறியது.

பண் :

பாடல் எண் : 4

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

பொழிப்புரை :

நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.

குறிப்புரை :

அறியாமையாவது, உலகில் நிகழும் மறமும், அறமும் அவன் ஆணைவழியால் நிகழ்வன என்பதை அறியாமல், பிறவாற்றான் நிகழ்வனவாக எண்ணுதல். தெறலும் கருணை யேயாதல் பற்றி, `அருள்` எனப் பொதுப்படக் கூறினார். தாயது தன்மை; குழவிக்குத் தனது பாலைக் கைம்மாறு கருதாது அளித்தல் ஆதலின் அஃது, உயிர்கட்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது வழங்கும் கடவுட்டன்மைக்கு உவமையாயிற்று. தாய்க்குக் குழவி பசித்த காலத்தில் பால்கொடுத்தல் இயலாமையும், இயலினும் நிரம்பக் கொடுக்க இயலாமையும், அவை காரணமாகக் குழவி மாட்டு அவட்கு வெறுப்பும் ஒரோவழித் தோன்றுதலும் உண்டாகலின், அன்ன குறைபாடில்லாத கடவுளை, ``தாயினும் நல்லன்`` என்றார். ``பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து` (தி.8 திருவாசகம் - பிடித்த பத்து 9) என்றதும் காண்க. இதனால், `ஒறுத்தல், அளித்தல்களால் உலகத்தை உடனாய்நின்று நடத்துதலும், அவ்வாறு நடத்தினும் உலகர்க்கு வெளிப்படாது, உணர்வினர்க்கே வெளிப்படுதலும், வெளிப்படக் கண்ட உணர்வினர்க்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது இடையறவின்றி வழங்குதலும்` ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன. `சேயினும் நல்லன்` என்பது பாடம் அன்று. `நற்றாழ்சடையோனே` என்பது பாடமாதல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 5

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

பொழிப்புரை :

என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

`தானே எல்லாராலும் வணங்கப்படுபவன்` என்பதாம். ``பொற்சடை`` என்பதில், ``பொன்`` என்றது, வாளா பெயராய் நின்றது. பின் - பின்னுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஆல், ஒடுவின் பொருளில் வந்தது. ``பின்னால்`` என்பதனை இடப்பொருட் டாக்கி, அது பிறரைத் தலைதாழ்த்து வணங்காமையைக் குறிக்கும் குறிப்புமொழியாக உரைப்பாரும் உளர். `பின்தாழ் சடையானை`(தி.1 ப.74 பா.4) என்றாற்போல வரும் எவ்விடத்தும் அங்ஙனமே உரைத்தல் அவர் கருத்து. சடை தவக்கோலத்தை உணர்த்துதலால், பற்றின்மையைக் குறிக்கும் குறிப்பாகும். பொன்மை கவர்ச்சியையும், பின்னல் பழமையையும் குறிக்கும். நந்தி - இன்பம் உடையவன். ``அதனைத் தனக்கே உரிய பெயராக உடையவன்`` என்றவாறு. ``சிவன்`` என்பது இப்பொருளும் தரும். இன்பம், இயல்பாய் இருத்தற்குக் காரணம் மெய்ம்மையும், அறிவும் இயல்பாக இருத்தலே என்பது தோன்ற, முதற்கடவுளை, ``சச்சிதானந்தன்`` என உபநிடதங்கள் கூறுதல் அறிக. எனவே, அவையும் இதனாற் குறிக்கப்பட்டனவாம். இதனால், பற்றின்மையும், கவர்ச்சியும், காலத்திற்கு உட்படாமையும், மெய்யறிவின்பங்களை இயல்பாக உடைமையும், தனக்கு மேலாவார் இன்றித் தானே எல்லார்க்கும் மேலானவனாதலும் ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், `நந்தி` என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.

குறிப்புரை :

முயல் - முயற்சி; `முயற்சி` எனினும், `உழவு` எனினும் பொருந்தும். ``சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்``(குறள். 1031) என்பதனால், உலகத்திற்கு முதலாதலை இவ்வாறு கூறினார். இதனானே மெய்ந்நெறியிலும் சாதனமும், அதனைத் தருகின்ற திருவருளும், அதற்கு முதலும் ஆதலும் பெறப்படுவதாம். இதனால், பந்தம், வீடு இரண்டற்கும் முதல்வனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

பொழிப்புரை :

சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, `இவனே முதல்வன்` எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். ``காதல்`` என்றது அருளை. ஒருபெற்றியாய அருளை, `ஓர் அருள்` என்றார். நிற்றல் - அழிவின்றி நிலைத்திருத்தல். இதனால், அழிவில னாதல் கூறப்பட்டது. ஆகவே, `அவனை ஒழிய அமரரும் இல்லை` என்பது விளக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 8

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

எண் - எண்ணம்; சிந்தனை. `எண்ணால் அளந்து` என்க. கண் - இடம். ``எங்கும்`` என்றது, `எவ்விடத்தையும்` என்றவாறு. இதனால், அவனது பெருநிலை (வியாபகம்) கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :

`சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

குறிப்புரை :

`காண்பாராய இருவர்` எனவும், `கண்டிலராய்க் கூடி` எனவும் இயைத்துரைக்க. இருவருள் ஒவ்வொருவரும் அடி, முடி இரண்டையுங் காணுங் கருத்தினராய் முதற்கண்ணே தோல்வியுற் றமையின், ``அடி முடி காண்பார் அயன் மால் இருவர்`` எனப் பொதுப் படவே கூறினார். படி - தாம் கருதிய நிலை. நிலவுலகினின்றே புறப்பட் டமையின், ``மீண்டும் பார்மிசைக் கூடி`` என்றார். சிவபெருமானைப் பொதுநீக்கி உணர்தற்கு இவ்வரலாறு பெரிதும் சிறந்ததாய்ப் பயின்று வருவதாகலின், பின்னர்க் கூறப்படும் புராண வரலாறுகளுட் கூறுத லன்றி இவ்விடம் குறித்தருளினார். இவ்வாறன்றி, `இத் திருமந்திரமும் பின்னர் வரும் இவ் வரலாற்று மந்திரங்களுள் ஒன்றாகற் பாலதே` என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 10

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

ஆதி - முதல்வன். இறுதியில், ``கடந்து நின்றான்`` என்றதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. இதனால் மேலதனை வலியுறுத்தி, எங்கும் நிறைந்து நிற்றலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

பொழிப்புரை :

அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.

குறிப்புரை :

ஆதி - பிரமன். அரன் - உருத்திரன். வேதி - மாற்றம். ``உடலுள் நின்ற`` என்றதனால், அஃது இன்பதுன்ப நுகர்ச்சியைக் குறித்தது. எனவே, இது நிலைத்தொழிலை உணர்த்திற்று. முதல் இரண்டடிகளால் முத்தொழிற்கும் முதல்வனாதல் கூறப்பட்டது. இறுதி இரண்டடிகளால் அத்தொழில் புரிதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலால் கூறப்பட்டது. முன்னைத் திருமந்திரத்தில் பேரறிவு கூறப்பட்டாற்போல, இத் திருமந்திரத்தில் பேராற்றல் கூறப்பட்டவாறு காண்க. `எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிதலின், உயிர்கள் நன்மையடைதற்பொருட்டு நடுவு நிலையாளனாய் என்றும் நின்று ஆக்கல் அழித்தல் முதலியவற்றைச் செய்கின்றான்` என்றபடி. `விரிந்து ஆர்ந்திருந்தான்` என்றது, `அவனது பெருநிலையால் விளையும் பயன் இது` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 12

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

பொழிப்புரை :

திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்கு கின்றார்கள்?

குறிப்புரை :

``தாம்தாம் வேண்டுவன யாவற்றையும் விரும்பியே அவ்வாறு வணங்குகின்றார்கள்`` என்பது குறிப்பெச்சம். `கோது` இரண்டனுள் முன்னது, `கொழுது` என்பதன் மரூஉ. கொழுதுதல் - திருத்துதல். பின்னது - குற்றம். மகளிர் கூந்தலும் சிலபொழுது குழல் போலத் திருத்திவிடப்படுதல் பற்றியே, `குழல்` எனப்படுகின்றது. அமரர் என்றது ஏனையோரை நோக்க நெடுநாள் வாழ்வுடையராதல் பற்றி மும்மூர்த்திகளைக் குறித்தது. `கோது குணமாகக் குலாவிப் பயில்வார்` என மாற்றிக் கொள்க. குற்றமாவன, எலும்பும் சாம்பலும் அணிதல், சுடுகாட்டில் ஆடுதல், இரந்துண்டல் முதலியன.
கானார் புலித்தோல் உடை, தலைஊண், காடுபதி
ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலுங் கேளாய் அயனும் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.
-தி.8 திருவாசகம். திருச்சாழல். 12
என்றமை காண்க. ஒன்றும் இல்லாதவன்போலவும், பித்தன் போலவும் காணப்படினும் வேண்டுவார் வேண்டுவன பலவற்றையும் அருளுதல் இதனால் தொகுத்துக் கூறப்பட்டது. ``மாது குலாவிய வாள்நுதல் பாகன்`` என்றதும் அதனைத் தெளிவிக்கும் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 13

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே.

பொழிப்புரை :

``காயம், கத்தூரி`` என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; சிவனருளே மேம்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

``கத்தூரி`` எனப் பின்னர் வருதலின், அது முன்னரும் கூட்டி எண்ணப்படும். மாயம் - மருட்கை. ``மாயமாக`` என ஆக்கம் வருவிக்க. ``அவ்வழி`` என்றதனை, ``கொதிக்கும்`` என்றதன் பின்னர்க்கூட்டுக. ``தேசம்`` என்றது மக்களை. கலத்தல் - ஒப்ப வைத்தல். `ஏனைத் தேவர் பிற சில பயன்களைத் தரவல்லராயினும், உண்மை ஞானத்தையும், வீடு பேற்றையும் தரவல்லராகாமையின், அவரது அருளால் பெறும்பயன் யாது`` என்பதும், `பிற பயன்களிலும் சிவபெருமானால் தரப்படுவனவேமிக்கு விளங்கும்` என்பதும் கருத்து. சிவபெருமான் இம்மை, மறுமைப் பயன்களையும் நிகரின்றித் தருதலும், முடிந்த பயனாய வீடு பேற்றைத் தருதலும் இதனால் வகுத்துக் கூறப்பட்டன. பின்னிரண்டடிகளில் யகரத்திற்குச் சகரம் எதுகையாயிற்று. உயிரெதுகையுமாம்.

பண் :

பாடல் எண் : 14

அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே.

பொழிப்புரை :

அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு புரந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.

குறிப்புரை :

`அதனால் பெருஞ்செல்வம் உடையவன்` எனப் புகழப்படுகின்ற குபேரனுக்கு அந்நிலையை வழங்கினவனும், `எங்கள் சிவபெருமானே` என்றவாறு. `அளகை வேந்தனை` `கொள் என்ற` என்பன பாடமல்ல. `அந்நிதிபதி` என்னும் சுட்டு வருவிக்க. `அது பதியை, இதுபதி; இதனை ஆதரித்து ஆக்கமதாக்கின் கொள் என்றான்` என முடிக்க. இதுகாறும் சிவபிரான் தேவர்க்குந் தேவனாதலைக் கூறி, `சிவனோடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை` என்பதனை விரித்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 15

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே.

பொழிப்புரை :

சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; அவ் வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆதலின், அவன் அருளைப் பெறுதற்கு அத்தவமே செயற்பாலது` என அதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. `இப்பதி` என்பதனை `இது பதி` என்றார். `பதி` நான்கில் முன்னவை இரண்டும் உலகம். இறுதியில் உள்ளது உறைவிடம். விது - சந்திரன். பதி செய் தவன் - பதித்தலைச் (சூடுதலை) செய்தவன். ``ஏலங் கமழ்`` என்றது சொல்லளவாய் நின்ற பொழிலுக்கு அடை. எல்லாவற்றையும் நினைத்த அளவாலே செய்தலின், செயலைக் கூறாது அறிவையே கூறி னார். `சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவமே மெய்த்தவம்` என்ப தனை விளக்கவே, `தவம்` என்றொழியாது; `மெய்த்தவம்` என்றார். `சிவபுண்ணியம்` அல்லது `பதிபுண்ணியம்` எனப்படுவதும் இதுவே என்க. எனவே, இதனால், `அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை` என்பதனை விளக்கியவாறாயிற்று. `சிவனை நோக்கிச் செய்யும் தவமே மெய்த் தவமாதற்குக் காரணம் உண்மைக் கடவுள் அவனாதலே` என்பதனை விளக்கவே, பொழில் ஏழும் முதுபதியும் செய்தவனா தலை எடுத்தோதினார். முதுமை, இங்குப் பெருமைமேல் நின்றது.

பண் :

பாடல் எண் : 16

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே.

பொழிப்புரை :

உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

குறிப்புரை :

`ஆதலின், அந்நூல்களின்வழி நின்று தவம் செய்து அவனது திருவுருவை விளங்கக் கண்டு பயன் பெறுக` என்பது குறிப் பெச்சம். ``அறனெறி`` என்றது காரியவாகு பெயராய் அதனை உணர்த்தும் நூலைக் குறித்தது. அறம், இங்குச் சிவதன்மமாதலின் அதற்கு, `தவம்` எனப் பொருள் உரைக்கப்பட்டது. சிவதன்மத்தைக் கூறும் நூல்கள் சிவாகமங்கள். அவை இறைவன் திருவருள் வடிவா மாகலின், அவற்றை அவனுக்கு உறைவிடமாக அருளினார். அதனால் அந்நூல்கள் அவனது திருவருளை அங்கை நெல்லிக் கனியென இனிது விளக்குதல் பெறப்பட்டது. `அவற்றின்வழி நிற்பின் அப்பெருமான் அநுபவப் பொருளாதல் தப்பாது` என்றற்கு, `அவனது உருவம் மலையும், கடலும்போல விளங்குவது` என்றார். ``முழக்கம்`` என்றது, முழங்கும் பறைகளைக் குறித்த காரியவாகு பெயர். இதன்பின், `போலும்` என்பது எஞ்சி நின்றது. கடி - மணம். மலைகள் மணம் நிறைந்த மலர் மரங்களை உடையவாதல் அறிக. அலை, ஆகுபெயர். `அரனெறி` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 17

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே.

பொழிப்புரை :

கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.

குறிப்புரை :

`ஆதலின் அவன் அருளைப் பெறுதற்கு அவனை நினைத்து நிற்றலே செய்யத்தக்கது` என்றவாறு. மாய நாடன் - வஞ் சனையை இடமாகக் கொண்டு நிற்பவர். `வஞ்சம்` என்றது புலனாகாமையை. `பிறர்க்குத் தீங்கு சூழும் வஞ்சனை அன்று` என்பது தோன்ற, `நல்` என்னும் அடை கொடுத்தார். ``எனக்கு`` என்றது பன்மை் ஒருமை மயக்கம். `எனக்கு அன்பிலன்` என இயையும். பிழைத்தல், பிறவற்றினின்று நீங்குதல். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை.

பண் :

பாடல் எண் : 18

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே.

பொழிப்புரை :

உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்துவருகின்றான்.

குறிப்புரை :

`உலகம் ஒருவனது ஆணை வழிநடப்பதும், அவ் வொருவன் எல்லாம் வல்லவன் என்பதும் கடல் கரையின்றியே அடங்கி நிற்கும் இவ்வொன்றானே அறியப்படும்` என்பது முன்னிரண்டு அடிகளின் கருத்து. ``வல்லவன், முதல்`` என்பவற்றில் ஆக்கச்சொல் விரிக்க.

பண் :

பாடல் எண் : 19

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே.

பொழிப்புரை :

`நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.

குறிப்புரை :

``சிவனடிக்கே செல்வம்`` என்பது பாடமாயின், `இவ்வாறு செய்தால் சிவனடியை அடைவோம்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 20

காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே.

பொழிப்புரை :

`இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் அவ்வாற்றால் அவனை மனத்தில் எழுந் தருளப் பண்ணிக்கொண்மின்கள்` என்பதாம். இரண்டாம் அடியை முதற்கண் மொழிமாற்றி வைத்து, ``உளர்`` என்றதன்பின், `என்று` என்பது வருவித்து உரைக்க. இது காறும் நினைதல் கூறியவாறு; இதன் பின் வாழ்த்துதலைக் கூறுதலே முறையாயினும், அஃது இந்நூற்குச் சிறந்ததாதல் பற்றி இறுதிக்கண் கூறுவாராய், வணங்குதலை முன்னர் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 21

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாத வன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

`சிவபெருமான்` என்பது அதிகாரத்தால் வந்தது. ``தன்னை`` என்றது, `அவனை` என்றவாறு. இவ்வாறு `பிறப்பிலி` முதலியவற்றைப் பயனிலையாக்காது, பெயராக வைத்துரைத்தல் சிறவாமை அறிக. பிறப்பிலி முதலிய பலவும் அவன் ஒருவனே வணக்கத்திற்கு உரியவனாதலைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. சடைமுடி யோகியாதலைக் குறித்தலின், அதுவும் வணக்கத்திற்கு உரிய வனாதலைக் குறித்தல் அறிக. மாயா விருத்தம் - மாயைக்கு மாறானது. மாயை - அஞ்ஞானம்; `அதற்கு மாறு` எனவே, `ஞானம்` என்பது போந்தது. இறைவனை மறக்கும் மறதி அஞ்ஞானத்தால் உளதாவதாம். அது நீங்கவே, மறவாமையாகிய மெய்ஞ்ஞானம் உளதாம் என்க.

பண் :

பாடல் எண் : 22

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

பொழிப்புரை :

யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

பரி பாரகம் - எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலமாகிய இடம். ``பாரகம் முற்றும்`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்று இயையும். ``கமலமலர்`` என்றது அன்பரது உள்ளங்களை. `புணர்ந்து` என்றது உயிரெதுகை. `உடந்திருந்தான்` என்பது பாடம் ஆகாமை அறிக. `படர்ந்து நிற்றல், நடந்து நிற்றல், புணர்ந்திருத்தல்` என்னும் மூன்றும் முறையே இறைவன் உலகத்தோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்கும் முறைமையை உணர்த்தியவாறு. `அம் முறைமையே சிவநெறி அத்துவிதம்` என்பதும், `அதனை உணர்தலே சிவஞானம்` என்பதும் அறிக. சிவனடிப் புண்ணியம் - சிவதன்மம்; சிவதன்மத்தால் விளைகின்ற சிவஞானத்தை, `சிவதன்மம்` என்றார்.

பண் :

பாடல் எண் : 23

சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.

பொழிப்புரை :

`அந்தி வானம் என்று சொல்லத் தக்க நிறத்தை யுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்` என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் வணங்குமின்` என்பது கருத்து. படுதல் - உடன்படுதல்.

பண் :

பாடல் எண் : 24

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே.

பொழிப்புரை :

மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.

குறிப்புரை :

இங்கு வழிபடுதல், பயன் கருதாத மெய்யன்பினால் வழிபடுதலாதலின், `திருமாலும் அது செய்யவில்லை` என்றும், பயன் கருதி வழிபட்டுச் சக்கரம் பெற்றமையால் ``இணங்கி நின்றான்`` என்றும் கூறினார். பிரமனும், இந்திரனும் அவ்வாறு வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறு ஒன்றும் சிறப்பாகச் சொல்லப்படாமையால், அவர் களை, பிணங்கியும், வணங்கியும் நிற்பவராகக் கூறினார். ``எங்குமாகி நின்றான்`` என்றது, `விட்டுணு` என்னும் சொற்பொருளை எடுத்தோதியவாறு. ``பின்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. மேல் பொது வணக்கம் கூறி, இதனால், உண்மை வணக்கம் கூறியவாறு. இதுகாறும் வணங்குதல் கூறப்பட்டது. இனி, வாழ்த்துதல் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 25

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே.

பொழிப்புரை :

மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.

குறிப்புரை :

வானம் - விண். ``கூடலும்`` என்ற உம்மை சிறப்பு.

பண் :

பாடல் எண் : 26

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே.

பொழிப்புரை :

`வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.

குறிப்புரை :

`நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே` என்றதனால், `பலர் பயன் கருதித் துதித்து அவற்றைப் பெற்றனர்` என்பது பெறப்பட்டது. `அவர் அங்ஙனம் பெற்றமை அனுபவ மாகலின், சிலர்போல நீங்கள் ஐயுற வேண்டுவதில்லை` என்றபடி. `ஞானம் கருதித் துதித்தலே சிறந்தது` என்பதும் குறிக்கப்பட்டது என்க.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரம்முரலுந் தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே.
என்ற திருவாசகத்தையும் காண்க. (தி.8 திருச்சதகம். 20) `போல்` என்பது வினைத்தொகையாய், ``நந்தி`` என்பதனோடு இயைந்தது.

பண் :

பாடல் எண் : 27

மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

பொழிப்புரை :

மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.

குறிப்புரை :

``ஒக்கும்`` நான்கும் பெயரெச்ச அடுக்கு. அவை, ``பாடலுற்றான்`` என்பதனோடு முடிந்தன. `யாவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்ப நின்று அருள்புரிபவனாகிய சிவபெருமான் விரும்புவது இசை என்பதை உணர்ந்து, அவன் அருளாலே அவனைப் பாடித் துதிக்கின்றேன்` என்பது இத் திருமந்திரத்தின் திரண்ட கருத்து. துதிக்கும்பொழுதும் நான் என்ற முனைப்புடன் துதியாது, `இப் பேறும் அவனது அருளால் கிடைத்தது` என அவனது அருள்வழி நின்று துதித்தல் வேண்டும் என்றற்கு, ``கண்ணகத்தே நின்று`` என்றார். `அவன் கண்ணகத்தே நின்று` என்க. ``அவனரு ளாலே அவன்தாள் வணங்கி`` என்றதும் காண்க. (தி.8 திருவாசகம். சிவபுராணம் அடி 18).

பண் :

பாடல் எண் : 28

தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.

குறிப்புரை :

``தேவர் பிரான்`` முதலியவற்றைப் பல தொடராகக் கூறியது, அவற்றின் சிறப்புணர்த்தற்கு. காட்சிக்கு எய்துதல் பற்றி ``விரிநீர் உலகு ஏழையும்`` என நிலவுலகத்தையே கூறினாராயினும், மேல், ``திசை பத்தும்`` கூறினமையால் பிற உலகங்களும் கொள்ளப் படும். `முற்ற அறிய வாராமை பற்றி அவன் முனிதல் இல்லை; அறிந்த அளவு பாடின் உவப்பான்` என்பது கருத்து. ``யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் - நின்னடி உள்ளி வந்தனென்`` (திருமுருகாற்றுப் படை. 277 - 279) என்றதும் காண்க. மேவுதல் - விரும்புதல்; அது, பற்றிநிற்றலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 29

பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

பொழிப்புரை :

பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.

குறிப்புரை :

`அதனால் சிவனது முதன்மையாகிய மெய்ம் மையைத் தெளிவித்தல் அரிதேயாம்` என்பது குறிப்பெச்சம். பதி - கடவுள்.

பண் :

பாடல் எண் : 30

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

பொழிப்புரை :

சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு செய்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். `மான்மத மணம் சந்தன மணத்தினும் வேறாய் மிக்குத் தோன்றுமாறுபோலச் சிவபிரான் அறிவுறுத்திய நெறி ஏனை நெறி யினும் மிக்குத் தோன்றுதல் அறிவுடையார்க்குப் புலனாகும்` என்பது, `சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்` என்ற உவமையால் குறிக்கப் பட்டது. ``மாயங்கத் தூரியது மிகும் அவ்வழி`` என மேலேயும் கூறினார். (தி.10 திருமந்திரம் - 51) கவரி, ஆகுபெயர்.
`முத்தியுலகத்தில் மெய்ந்நெறி அறிவுறுக்கப்பட்டோர் பிரணவர் முதலியோர்` என்பது பின்னர்க் காணப்படும் `மெய்ந் நெறி யானே` என உருபு விரிக்க. ``ஆர்ந்தசுடர்`` பன்மையும், ஒளியும் பற்றி வந்த உவமை. `பேர்ந்தும்` என்பதும் பாடமாகலாம்.

பண் :

பாடல் எண் : 31

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

பொழிப்புரை :

பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்.

குறிப்புரை :

``ஆற்றுகிலா`` என்றதில் ஆற்றுதல், ``வையகமும் - வானகமும் ஆற்றல் அரிது`` (குறள். 101) என்பதிற் போல `ஒத்தல்` என்றும், ``ஆற்றுவன்`` என்றதில், ஆற்றுதல் ``அற்றார்க் கொன்றாற் றாதான் செல்வம்`` (குறள். 1007) என்பதிற்போல, `கொடுத்தல்` என்றும் பொருள் தந்து நின்றன. `வழக்கும், எதிர்வழக்கும் கூறு வோரது கூற்றினுள் மெய்ம்மை இது என்பது நடுவுநிற்பார்க்கு இனிது விளங்கி நிற்றல்போலப் பல நெறிகளும் பிறர்கோள் மறுத்துத் தம் கோள் நிறுவுமாயினும், உண்மை காண் பார்க்குச் சிவநெறியது உயர்வு `சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்` (தி.10 பா.69) இனிது விளங்கியே நிற்கும் என்பார், சிவநெறியை `ஆற்று கிலா வழி` என்று அருளினார்.
ஆதல், உளவாதல். அஃது இங்குப் பெறப் படுதலைக் குறித்தது. ``மேற்கு, கிழக்கு`` என்பவை, `மேல், கீழ்` என்னும் பொருளவாய் நின்றன. திசைக்கண் உள்ளவற்றை, `திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்றார். மூவுலகமும் இங்கு, `மேல், கீழ்` என இரண்டாக அடக்கப் பட்டன. அப் படி - அவ்வுலகம். `தம் விருப்பப்படி நடத்தலாம்` என்பது தோன்ற, `ஆளலுமாம்` என்னாது, ``ஆட்டலுமாம்`` என்றார்.
இனி, `ஆளலுமாம்` என்பதே பாடம் என்றலும் ஆம். `சிவபிரானைப் போற்றுவோர் எவ்வுலகத்தை ஆளநினைப்பினும் ஆள்பவராவர்` என்பது திருமுறைகளுள் பலவிடத்தும் இனிது எடுத்துச் சொல்லப்படுவது. `ஏனைக் கடவுளர்பால் அடையும் பயனையும் சிவபிரான்பால் அடையலாம்` என்பது கூறி, அவனை வாழ்த்துதலை வலியுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 32

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத் தக அவனது அருளைப் பெறலாம்.

குறிப்புரை :

`பொது நீக்கி ஒப்புயர்வற்ற தலைவனாக உணருந்தன்மை இல்லாது பொதுப்பட ஏத்தினும் அது பின்னர் உண்மையுணர்வைப் பயக்கும்` என்பதும், பயன்கருதித் துதிப்பினும் அது பின்னர்ப் பயன் கருதாது துதிக்கும் மெய்யன்பினைப் பயக்கும் என்பதும் கருத்து.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ``
(தி.5 ப.23 பா.9)
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசரும்.

பண் :

பாடல் எண் : 33

நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பொழிப்புரை :

சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.

குறிப்புரை :

உம்மைகள் எச்சம். ``தழல்தான்`` என்பதில்தான், அசைநிலை. `தழலொக்கு மேனியனாகிய தானும் மதிபோல் உடலுள் உவந்து நின்றான்` எனக் கூட்டுக. உவத்தல் - நிறைதல். ``ஊனில் நின்று`` என்பதனால், அவன் அதனோடு இயைபில்லாத தூயனாதல் பெறப்பட்டது. ``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே`` (தி.6 ப.95 பா.4) எனவும், ``எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய் யானிதற் கிலனொர்கைம் மாறே`` (தி.8 கோயில் திருப்பதிகம் 10) எனவும் போந்த அருட்டிருமொழிகளைக் காண்க. உயிர்ப்பாய் வெளிப்படுதலாவது, உயிர்க்குந்தோறும் புறத்தும், அகத்தும் இன்பமாய்த் தோன்றுதல்.
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` (தி.5 ப.21 பா.1)
என்றருளியதும் காண்க. இதனை அசபா மந்திரத்தின் அநுபவம் என்ப. ஏத்தினால் ஈசன் அருளைப் பெறுதலை அனுபவத்தின் வைத்து உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 34

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே.

பொழிப்புரை :

யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.

குறிப்புரை :

பிதற்றுதல் போலுதலின், `பிதற்று` என்றார்; இது முதனிலைத் தொழிற்பெயர். ``பிதற்றொழியேன்`` என்பதனைச் சொற்பொருட்பின் வருநிலையாகப் பலகாற் கூறியது, வலியுறுத்தற் பொருட்டு. வேறு வேறு தொடராதலின், இஃது ஒருசொல்லடுக்கன்மை உணர்க. `பெரியானை` என்னும்
இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. `இத்தன்மையனை இடையறாது துதித்தல் தவமிலார்க்குக் கூடாது` என்றற்கு, `பெருமைத் தவன் நானே` என்றார். `தவமும் தவமுடையார்க்கே ஆகும்` (குறள் 262) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
யானே தவமுடையேன்; என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேஅக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். -அம்மை திருவந்தாதி. 7
என்றது காண்க.

பண் :

பாடல் எண் : 35

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே.

பொழிப்புரை :

தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும், `எம் தலைவன்` என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.

குறிப்புரை :

``அங்கே`` என்பது ``தீர்த்தன்`` என்பதனோடும் இயையும். ``திளைக்கின்ற`` என்பது, ``தேவன்`` என்ற செயப்படு பொருட்பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 36

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.

பொழிப்புரை :

கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.

குறிப்புரை :

`குரைகழலை நாடும்; அது செம்பொன்னின் ஒளியொக்கும்` என்னும் தொடர்கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. `நாடும்` என்பது உம்மீற்றுப் பன்மை ஏவல். மறைஞ்சு, `மறைந்து` என்பதன் போலி. `மறைந்தடம்` எனவும் ஓதுவர். உள்ளத்தைச் சடம் என்றது, உடம்பையும் குறித்தற்கு.

பண் :

பாடல் எண் : 37

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

பொழிப்புரை :

சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத் தோடு ஒப்பச் செய்யப்பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத்தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.

குறிப்புரை :

`நெஞ்சிடை வைத்து` என ஒருசொல் வருவிக்க. பார்வை விலங்கினை குருவடிவிற்கேயன்றி, உள்ளத்தில் நினைக்கப் படும் வடிவிற்கும் கூறினார் என்க. ``கனஞ் செய்த`` என்றதில் `செய்த` உவம உருபு. கனம் - மேகம். `வாள் நுதல்` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 38

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.

குறிப்புரை :

``நான்`` என்றது, `நான்` என்னும் முனைப்பிற்குக் காரணமான பசுபோதத்தைக் குறித்த காரியவாகுபெயர். முடி - முடிவு; முதனிலைத் தொழிற்பெயர். `செய்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இஃது எதிர்காலத்து இறந்த காலம். ``அது`` என்றது, ``அந்தப்பயன்` எனச் சிவபோதத்தை உணர்த்திற்று. ஆணவ சத்தி மெலிதல், அனாதிதொட்டே நோக்கிவரும் இறைவனது திரு வருள் நோக்கத்தாலாதலின், `நாயகன் முடிசெய்த அது` என்றார். `பெறுவது` எனக் கூறிப் பின்னரும், `நல்கும்` என்றார்; `தானே விரும்பிக் கொடுப்பான்` என்பது உணர்த்துதற்கு. ``அகம்`` என்றது, `நான்` என்னும் பொருளதாகிய வடசொல், ``அகத்தால்`` என உருபு விரித்து, சூழ்தற்குச் செயப்படு பொருளாகிய, `சிலவற்றை` என்பது வருவிக்க. ``வல்லர்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ஒன்றுதல் - உடன்படுதல்; அது, கொடுத்தலாகிய தன் காரியம் தோன்றநின்றது. சிவபெருமானை வாழ்த்துவார், போகம், மோட்சம் இரண்டும் பெறுவர் என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 39

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`நாளும் பாவிப்ப` எனவும், `அடி உரன் செய்து` எனவும், ` அடி நிரன்` செய்து எனவும் மாற்றுக. உரன் - வலிமை; அது துணைவலிமேல் நின்றது. `நிறன்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. நிறன் - விளக்கம்.

பண் :

பாடல் எண் : 40

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

பொழிப்புரை :

தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் அதுவே செய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். இயக்கர், கந்திருவர் முதலியோரைத் தேவருள்ளும், நரகரை அசுரருள்ளும் அடக்கினார். நரகரும் தேவராதற்குச் சிவனது திரு வடியைத் துதிப்பர் என உணர்க. வேறு வேறு தொடராகக் கூறியது, போற்றுதலின் சிறப்பை விளக்குதற்கு. சிவன் அப்பெயரால் கூறப் படுதல், `நிறைமலம் அனாதியின் நீங்கி நிற்றல்`. (காஞ்சிப் புராணம். திருநெறிக்காரைக்காட்டுப் படலம். 23) பற்றியும் ஆதலின், `புனிதன்` என்றார்.

பண் :

பாடல் எண் : 41

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.

குறிப்புரை :

`ஆதலின் வினைவழியினின்று விடுதிபெற வேண்டு வோர் சிவபெருமானைத் துதிக்க` என்பது குறிப்பெச்சம். திருவள்ளுவ நாயனாரும், வினை நீங்குதற்கு வாயில் இறைவனது பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதலே எனக் கூறுமாறு அறிக.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள். 5)
``இன்பம்`` என்றதன்பின்,`உளதாதல்` என்பது வருவித்து, உம்மையைப் பிரித்து அதனொடு கூட்டுக. ``இல்லை`` என்பது ``அல்லது`` என்றதனோடும் இயை யும்.
இதன்பின், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. வினை உள தாவது அஞ்ஞானத்தால் ஆதலின் அது மெய்ஞ்ஞான வடிவினனாகிய சிவபெருமானால் நீங்கும் என்பார், ``சோதிப் பிரான்`` எனவும், ``பகலவன் ஆம்`` எனவும் கூறினார். ``சோதிப் பிரானும்`` என்ற உம்மை, அசைநிலை.

பண் :

பாடல் எண் : 42

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :

`அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.

குறிப்புரை :

அரன் - பாசத்தை அரிப்பவன். சிவன் - மங்கலமான வன். வடிவத்தை ``வண்ணம்`` என்றார். ``தொழ`` என்றது, ``ஞாயிறு பட வந்தான்`` என்பதிற்போல நிகழ்கால வினை. `அடியார் தொழ நானும் தொழுதேன்` என்றது, `அவர் செய்ததை நானும் செய்தேன்; அச் செயலின் திறம் முற்றும் அறிந்து செய்தேனில்லை` என்றபடி.
``ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே`` -தி.5 ப.91 பா.3
என்ற அப்பர் திருமொழியும் காண்க. ``என்று`` என்றது, தன்மை ஒருமை இறந்த காலமுற்று. இங்கு ``என்றேன்`` என வருதல் யாப்பிற்கு ஒவ்வாமை அறிக. ``இவ்வண்ணம்`` எனச் சுட்டியது தம் அநுபவங்களை. இத்துணையும் வாழ்த்துதலே கூறினார். வணங்குதல், திருவடிவின் முன்னன்றிச் சிறவாது. நினைதற்கு நெஞ்சு ஒடுங்குதல் அரிது. அதனால் எப்பொழுதும் யாவர்க்கும் எளிதிற் கூடுதல் பற்றி வாழ்த்துதலையே பெரிதும் வலியுறுத்தினார். தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் பரக்க எழுந்தமைக்கும் இதுவே காரணம் என்க. திருவள்ளுவரும் மேற்குறித்த குறளில் இறைவனது பொருள்சேர் புகழையே எப்பொழுதும் இடைவிடாது சொல்லுதல் வேண்டுமென விதித்தல் நினைக்க. இனி மூவகை வழிபாட்டினையும் இறுதிக்கண் தொகுத்துணர்த்துவார்.

பண் :

பாடல் எண் : 43

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.

குறிப்புரை :

பின்னர் `நினையாதவர்` என வருதலால், முன்னர் `நினைப்பவர்` என்பதும், முன்னர் ``மனையுள் இருந்தவர்`` என்றதனால். பின்னர், `துறந்திருந்தவர்` என்பதும் பெறப்பட்டன. `ஞானம் ஈசன்பால் அன்பே` (தி.12 பெ. பு. ஞானசம்பந்தர். 843) ஆதலின், ஞானத்தை, ``நேசம்`` என்றார். `நின் இன்பம்` என்பது பாடம் அன்று. இதனால் நினைத்தலின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொழிப்புரை :

மெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

மெய்யுணர்ந்தோரே சிவனுக்கு ஆட்படுவாராதலின், அடியாராவர் அவரேயாதல் அறிக. `படி ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``முடியால்`` என்றதற்கேற்ப, `மனத்தால்` என்பது வருவிக்கப்பட்டது. ``வணங்கி, முன்னி`` என்று ஒழிந்தாராயினும், முன்னர் ``பரவும்`` என்ற குறிப்பால், வாயால் வாழ்த்தலும் பெறப்பட்டது. ``அமரர் பிரான்`` முதலாக வந்த சிறப்பினால் வணங்கப் படுதல் முதலியவற்றிற்கு அவனே உரியவன் எனக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 45

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.

பொழிப்புரை :

தன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``உரை பசு பாசம்`` என்பதில், ``பாசம்`` என்றது உடம்பை. ``உள்ளி உரை பாசத்து ஒருங்க`` என்றது, `மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் அவனிடத்தே ஒரு நெறிப்பட` என்றவாறு. ``திரை`` என்பது, ``கடல்`` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. பாவம் - உளதாந்தன்மை; என்றது பிறப்பை. செழுமை, அளவிடப்படாத அகல ஆழங்கள். `நீந்திக் கடந்து கரை எய்தல் ஆம்` எனக்கூட்டுக. ஆதல் - கூடுதல்.

பண் :

பாடல் எண் : 46

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

பொழிப்புரை :

சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.

குறிப்புரை :

`நான் இன்று அறிவது இவ்வளவே` என்றது, `இதற்குமேல் உண்மை வேறில்லை` என்றதாம். `பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த - மக்கட் பேறல்ல பிற` (குறள் - 61)
`யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை - எனைத்தொன்றும் - வாய்மையின் நல்ல பிற`(குறள் - 300) என்றவற்றிற்கும் கருத்து இவ்வாறாதல் அறிக.
நாற்பத்தாறு திருமந்திரங்களால் சிவபெருமானது முதன் மையை முதற்கண் கூறிய நாயனார், `சிவன் ஒருவனே கடவுளாயின் `அயன், அரி, அரன்` என மும் மூர்த்திகளாக யாண்டும் கூறப்படு வோரது நிலை என்னை?` என்னும் ஐயத்தை நீக்குதற்கு அம்மூவரது மேல் கீழ் நிலையைப் பத்துத் திருமந்திரங்களால் விளக்குகின்றார்.

பண் :

பாடல் எண் : 47

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

பொழிப்புரை :

என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.

குறிப்புரை :

எனவே,`புண்ணிய மிகுதியால் அத்தொழில்களுள் சிலவற்றை இயன்ற அளவு பெற்று நடாத்துதல் பற்றி அவரும் ஒருபுடைத் தலைவராய் நிற்பர்` என்றவாறு. தோற்றத்தை ``இளமை`` என்றார்.
``அந்தம்`` என்றது உயிர்களின் அலைவிற்கு முடிவாதலை; எனவே, அஃது அருளலாயிற்று; இறுதியில் நிற்கற்பாலதாய அதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார்.
ஈறு - ஒடுக்கம். அளவியல் காலம், `தோற்றத்திற்குப் பின்னதாயும், ஈற்றிற்கு முன்னதாயும் இடைநிற்றலின் வரையறைப்பட்டு நிகழ்கின்ற காலம்; அஃது அதனை உடைத்தாகிய நிலைத்தொழிலின்மேல் நின்றது. மறைத்தலின் வகையே படைப்பு முதலிய மூன்றுமாகலின், அதனை வேறுவைத்து எண்ணாது,``நாலும் உணரில்`` என்றார். இத்தொழில் அனைத்தும் என்றும் நிகழ்வன வாகலின், அவற்றிற்கு, `அளவில்` என்ற அடை கொடுத்தார்.

பண் :

பாடல் எண் : 48

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

பொழிப்புரை :

யாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!

குறிப்புரை :

தொழில் இயைபு பின்னர் விளக்கப்படும். இயைபு பட்ட தொழில்கள் பலவற்றைப் பலர் இயற்றுங்கால் தம்முள் இணங்கி இயற்றுதலன்றிப் பிணங்கி இயற்றாமையும், ஒரோவழிப் பிணங்கி இயற்றியவழி ஒன்றும் நடவாதொழிதலும் காட்சியால் அறியப் படுவனவாகலின், அவைபற்றி இடையறாது நிகழும் படைப்பு முதலியவற்றை இயற்றுவோர் அவற்றைத் தம்முள் இணங்கியே இயற்றுகின்றமை துணியப்படும் என்பார், ``மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித்துப் பிணங்குகின்றார்களே`` என்றார். எனவே, `மால், அயன் இருவரும் பொருளால் சிவபெருமானின் வேறாயினும், தொழிலால் அவனோடு ஒருவரே என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 49

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

பொழிப்புரை :

வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத் தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!

குறிப்புரை :

``ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``ஈசனே, தூரே`` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. முதலதனால், `ஏனைத் தேவர் பலரும் வினையாற் கட்டுண்டு நிற்பவரே` என்பது பெறப்பட்டது. `இருக்கும்` என்பது முற்று. ``உலகில்`` என்றதனால், காட்சிப் பொருளாய `கோயில்` என்பது விளங்கிற்று. பெருமை, இங்கு முதன்மையைக் குறித்தது. ``ஆனது`` என்றது, `ஆகிநின்றது` என்றவாறு. இதன் முதல் அடி மேற்கோளாயும், இரண்டாம் அடி ஏதுவாயும் நின்றன. நினைப்பு - ஆய்வு. ``தூசு`` என்றது பின்வரும் தூரினை. தூர் - பள்ளங்களைத் தூர்த்து நிற்கும் பொருள்கள். கூரிய நோக்குடையவரே, தூரினை அறிந்து அகற்றி உள்ளே கிடக்கும் பொருளைக் காண்பர். அதுபோல அறிவுடையவரே கலாய்ப்புக்களை அகற்றி உண்மையை உணர்வர் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 50

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :

`சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

குறிப்புரை :

`இதனை யறியாது மேற்கூறியவாறு தம்முள் முரணிக் கூறிக் கலாய்க்கின்றவரைத் தெருட்டுதல் இயலாது`` என்பது குறிப்பெச்சம்.
முதற்கடவுள் ஒருவனே, பிறிதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது `பரசிவன்` அல்லது `பரமசிவன்` எனப் படுவான். பரமசிவனே, `சொரூபசிவன், சுத்தசிவன்` என்றெல்லாம் சொல்லப்படுவான். அப்பொழுது அவனது, சத்தி `பராசத்தி` எனப்படும். பின் அப்பரமசிவன் உலகைத் தொழிற்படுத்த நினைக்கும் பொழுது `சிவன்` அல்லது `தடத்த சிவன்` எனப்பட, அவனது சத்தி பராசத்தியில் பல கூற்றில் ஒருகூறாய் `ஆதிசக்தி` எனப்படும், `திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.
சிவனுக்கு உலகை உய்வித்தற்கு உள்ள விருப்பமே `இச்சாசக்தி` என்றும், அச்செயலுக்கு ஆனவற்றை அறியும் அறிவே `ஞான சத்தி` என்றும், அறிந்தவாறு செய்யும் செயலாற்றலே `கிரியா சத்தி` என்றும் சொல்லப்படும், இவற்றுள் இச்சை, என்றும் ஒருபெற்றியாய் உள்ளதே. ஏனைய ஞானம் கிரியை இரண்டுமே பலவாறு அவ்வப்பொழுது செயற்படும். சிவன் (தடத்த சிவன்) சுத்த மாயை முதற்கண் தனது ஞானசத்தி மாத்திரத்தால் பொதுவாக நோக்கிப் பின்பு கிரியா சத்தியைப் பொதுவாக அதன்கண் செலுத்துவான். கிரியையின் செயற்பாடே செய்கையாகையால் இந்நிலை சத்திக்கே உரியது. அதனால், இந்நிலை `சத்தி` என்றே சொல்லப்படும். இது முன் சொன்ன ஆதிசத்தியன்று. முன்பு, ஆதி சத்தியும், தானும் வேறின்றி ஒருவனேயாய் நின்ற சிவன், இச்சத்தி தோன்றிய பின்பு `சிவன், சத்தி` என இரண்டாய் நிற்பன். அச்சிவன் பின்பு சுத்தமாயையை ஞான சத்தியால் சிறப்பாக நோக்கி `நாதம்` என நின்று, பின்பு கிரியா சத்தியைச் சிறப்பாகச் செலுத்துவன். அந்நிலை யில் அவனது சத்தி `விந்து` எனப்படும். எனவே, இந்த அளவிலே, இறைவனது நிலை, `சிவன் சத்தி, நாதம், விந்து` என நான்காதல் அறியலாம், இந்நான்கிலும் ஞானமே மிகுந்திருப்பதால் இவை அருவம் (சூக்குமம்). சிவனை, `பர நாதம்` என்றும், சத்தியை, `பர விந்து` என்றும் ` நாதத்தை, `அபர நாதம்` என்றும், விந்துவை `அபர விந்து` என்றும் சொல்வது உண்டு. பரம் - மேல். அபரம் - கீழ். `நாதனை` என்பதற்கு `நாதம் என்கின்ற நிலையில் நிற்பவன்` என்பதே பொருள். நாதம் - ஒலி. சுத்த மாயையில் நாத தத்துவமே எழுத்தொலி என்பது உணர்க.
மேற்கூறியவாறு ஞான சத்தியே மிக்கு விளங்கிய நிலைக்குப் பின் ஞான சத்தியையும், கிரியா சத்தியையும் இறைவன் சமமாகச் செலுத்தி மாயையைச் செயற்படுத்த முயல்வன். இந்நிலையில் அவன் `சதாசிவன்` எனப்படுவன். இந்நிலை அருவுருவம் (சூக்குமத்திற்கும், தூலத்திற்கும் இடைப்பட்டது). பின்பு ஞான சத்தியைக் குறைவாகவும் கிரியா சத்தியை மிகுதியாகவும் செலுத்திச் சுத்தமாயையில் ஐந்தொழில் செய்வான், அப்பொழுது அவன் `மகேசுரன்` எனப் பெயர் பெறுவான். பின்பு ஞானசத்தியை மிகுதியாகவும், கிரியா சத்தியைக் குறைவாகவும் செலுத்தி உரியோர் சிலரை ஏவி அசுத்த மாயை, பிரகிருதி மாயைகளில் ஐந்தொழில் செய்யச் செய்வான், இந்நிலையில் அவன் `வித்தி யேசுரன்` எனப்படுவான். வித்தியேசுரன் கீழ் நிற்போருள் உயர் நிலையை அடைந்தோரும், `வித்தியேசுரர்` எனப் பெயர்பெறுவர். அவர், `அனந்தர், சூட்சுமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி` என எண்மராவர். இவருள் முதல்வராகிய `அனந்தர்` என்பவரே அசுத்த மாயையில் ஐந்தொழில் செய்தும், சீகண்டருத்திரரை ஏவி அவர் வாயிலாகப் பிரகிருதி மாயையில் ஐந்தொழிலைச் செய்வித்தும் நிற்பார்.
ஐந்தொழில்களுள், `படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் மாயையின் மேலும், `மறைத்தல், அருளல் `என்னும் இரண்டும் ஆன்மாக்கள் மேலும் நிகழ்வன, இவற்றை இறைவன் பிறரைக் கொண்டு செய்விக்குங்கால், படைப்பு முதலிய மூன்றனையும் தான் அவரேயாய் மறைந்து நின்றும், ஏனை இரண்டனையும் அவர் தானேயாக விளங்கி நின்றும் செய்வன். எனவே, படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்யும் `அயன், அரி. அரன்` என்னும் மூவரே மகேசுரனுக்கு வேறாக வைத்து எண்ணப்படுவர். அனந்த தேவரது தொழிலோடு எவ்வாற்றானும் நம்மனோர்க்கு நேரே தொடர்பு இன்மையால் அவரையும் அவர்கீழ் நிற்பாரையும் வேறு வைத்து எண்ணுவதில்லை. சீகண்டரது மறைத்தல், அருளல் தொழில் சிவனுடையனவே என்பது மேலே குறித்தவாற்றால் விளங்கும். எனவே, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சதாசிவனுக்குக் கீழ் நான்கு நிலைகளே சொல்லப்படுகின்றன. இவை நான்கும் உருவம் (தூலம்). அனைத்தும் கூட, `சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகள் ஒன்பது என்பது விரியாக அமைந்துள்ளன. இவை `நவந்தரு பேதம்` எனப்படும். முதல் நான்கும் இலய நிலைகள்; இடை ஒன்று போக நிலை; இறுதி நான்கு அதிகாரநிலை. இவைகளை மூன்றாகத் தொகுத்துக் கூறுமிடத்து. `சிவன்` என்னும் இலய நிலையுள் ஏனைய மூன்றும் `மகேசுரன்` என்னும் அதிகார நிலையுள் ஏனைய மூன்றும் அடங்கும். ஐந்தாக வகுத்துக் கூறுமிடத்து, `சிவன்` என்பதில் நாதமும், `சத்தி` என்பதில் விந்துவும் அடங்க, `உருத்திரன்` மால், அயன் என்னும் மூன்றும் `வித்தை` என ஒன்றாகச் சொல்லப்படும். இவற்றையே, ``சிவன் முதல் மூவர்`` என்றும், ``ஐவர்` என்றும், ``ஆறு இரண்டு ஒன்று-ஒன்பது`` என்றும் கூறினார். ஒன்பது நிலைகளுள் `சத்தி, விந்து என்பன சத்தியின் நிலைகளே` என்பதை மேலே குறித்தோம். எனவே, இறைவன்` `சிவன், நாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன், என்னும் நிலைகளுள் நிற்கும்பொழுது இறைவி, முறையே, சத்தி, விந்து, மனோன்மனி, உமை, திரு, வாணி` என நிற்பாள். எனவே, மறைந்து நிற்றல் வகையாயினும், விளங்கி நிற்றல் வகையாயினும் ஒன்பது நிலைகளும் எவ்வாற்றானும் சிவபெருமானுடையனவே. ஆதலின்,`மால், அயன்` என்போரை அப்பெருமானின் வேறாக எண்ணி உயர்த்தியோ, தாழ்த்தியோ கூறிப் பிணங்க வேண்டுவது இல்லை என்பதாம்.
சிறந்த அவை முதல் ஒன்பது - சிறப்புடைய அவை முதலாய் நிற்கின்ற ஒன்பது, `முதலுகின்ற ஒன்பது` என வினைத்தொகை. இரண்டாவதாய் நின்ற ``அவை`` என்றது, ``ஓங்க` என்பதனோடு இயையும், இதனை அடுத்து நின்ற முதல், கருவி; தத்துவம். தத்துவத் திற்கு ஏதுவாகும் இறைவன் நிலைகளை `தத்துவம்` என்றார். சவை - சபை. தொகுதி. ``பெயர்` எனச் சொல்மேல்வைத்துக் கூறினாரேனும், அதனால் உணர்த்தப்படும் நிலைகளைக் கூறுதலே கருத்து என்க. இறைவனது நிலைகளை இவ்வாறு தொகுத்தும், வகுத்தும் விரித்தும் கூறப்படுதலை எடுத்தோதி, இவையெல்லாம் ஒருவனது பல நிலைகளே யன்றி பொருளால் வேறல்ல என்பார். `ஒன்று ஆகும்` என்றார்.

பண் :

பாடல் எண் : 51

பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.

பொழிப்புரை :

மேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங் கால் சீகண்ட வுருத்திரர்க்குக்கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.

குறிப்புரை :

``எண்ணும்`` என்றதற்கு, `அவற்றை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க, இங்கு, `அயன், மால்` என்றது சீகண்ட உருத்திரர்க்குக் கீழ் நிற்பவரையே என்பது. ஏற்புழிக் கோடலால் விளங்கும், `அன்னியம் இல்லை` என அமைதிகூற வேண்டுதல் அவரைப்பற்றியே யாகலின், அன்னியராவாரை, ``அன்னியம்`` என்றார். அதன்பின், ஆதலால் என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `மாலும்` எனவும், `அவ்வானவராலும்` எனவும் போந்த இழிவு சிறப்பும் தொகுத்தலாயின, ``அன்னியம் இல்லை` என்றது சிவ பிரானுக்கு வேறானவராய்த் தோன்றுதல் இல்லை என்றவாறு. அவரால் சிவனடியாராதலைப் பெறுதலாவது, `இவரும் சிவ பெருமானது தொழிற்குரியராம் நிலைமையைப் பெற்றுச் சீகண்ட உருத்திரர் வாயிலாக அப்பெருமானது திருவருளைப் பெற்று நிற்பவர்` என உணர்ந்து அவனது அடியவராகக் கருதி வழிபட்டுச் சிவ புண்ணியத்தைப் பெறுதல். ``ஆம்`` என்றது எச்சம்; முற்றாதற்கு ஏலாமை அறிக. `வயணம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `வயணம்` என்பதே பாடம் எனலுமாம், வயணம் - வகை.
நவந்தரு பேதங்களில் இறைவன் தன் அடியவரை அவர்க்கு விருப்பம் உள்வழி ஏற்புடையவற்றில் நிறுத்துதலும் உண்டு. ஆகவே, அவை `சம்பு பட்சம், அணு பட்சம்` என இருவேறு வகையாய் நிற்கும். இறைவன் தானே கொள்ளும் நிலைகள் சம்பு பட்சம்; தன் அடியவரை அந்நிலைகளில் நிறுத்தித் தானே செய்விப்பனவும், பிறர் வாயிலாகச் செய்விப்பனவும் அணுபட்சம், இவ்விருவகை நிலைகளும் சுத்த மாயையிலே உள்ளன. ஏனை இருமாயைகளிலும் அணுபட்சம் மட்டுமே உள்ளன. அவற்றுள்ளும் தூலமாய் உள்ள உருவநிலை நான்குமே உள்ளன. அந்நான்கனுள் மகேசுர நிலையில் நிற்பவர் முறையே அனந்த தேவரும், சீகண்டருமேயாவர். ஆன்ம வருக்கத் தினராகிய இவர் எல்லாரிடத்தும் பதியாகிய சிவபெருமான் தான் அவரேயாய்க் கலந்துநின்று அவரவர் தொழிலை இயற்றுவிப்பான், இவ்வாற்றால் அணுபட்சத்தினராகிய அயன், மால் என்பவரும் ஓராற்றால் சிவ நிலையினரேயாகலின், ``அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை`` என்றார். இவ்வாறே.
``ஒருவிண்முதல் பூதலம் - ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை`` -தி,1 ப.28
``நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்``
-தி,6 ப.8 பா.3
``மாதிவர் பாகன் மறை பயின்ற
வாசகன் மாமலர் மேய சோதி`` -தி.8 திருவார்த்தை 1
``ஆதி - அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்``
-ஞானவுலா 5
என அருட்டிருமொழிகள் `அயன், மால்`` என்பவரையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுமாறு அறிக.
அருட்டிருமொழிகளில் மேற்காட்டியவாறு அயனையும், மாலையும், சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுவனவேயன்றி,
``முந்நீர்த் துயின்றோன் நான்முக னறியாப்
பண்பொடு நின்றனை`` -தி.1 ப.28
``பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன்`` -தி.4 ப.14 பா.2
``பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க``
-தி.8 திருவாசகம். திருவண்டப் பகுதி 32
என வேறாக வைத்து இழித்துக் கூறுவனவும் உள்ளனவன்றோ எனின், ஆம், அவையெல்லாம், `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்பதும், அவை ஐந்தும் ஒருவனது தொழிலே என்பதும் உணராது படைத்தல் முதலிய மூன்றே தொழில்கள் உள்ளன எனவும், அவற்றுள் அழித்தல் தொழில் கொடியதாகலின் அதனைச் செய்வோன் இறைவனாகான் என விடுத்து ஏனைய இரண்டும் செய்யத் தக்கனவாயினும் அவற்றுள் ஒவ்வொன்றே உயர்ந்தது எனவும் கொண்டு அதுவதற்கு உரிய ஒவ்வொருவனையே இறைவன் எனப் புகழ்ந்து, ஏனை இருவரையும் இகழ்ந்தொதுக்குவாரை நோக்கி, `முதல்வனாவான் ஓரோர் தொழிற்கே முதல்வராய் அவர் எல்லாரினும் மேம்பட்ட ஒருவன்` எனத்தெளிவித்தற் பொருட்டு வருவனவாகலின், `அவை, முன்னர்க் காட்டியவற்றோடு முரணுவன அல்ல` என்க.
எனவே, அயனையும், மாலையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்துக் கூறும் திருமொழிகள் சிவபெருமான் தானே செய் வோனாய் சம்பு பட்சங்களில் வெளிப்பட்டு நிற்கும் நிலை, செய்விப் போனாய் அணுபட்சங்களில் மறைந்து நிற்கும் நிலை என்னும் இவற்றை நோக்கின எனவும், அவ்விருவரையும் வேறாக வைத்துக் கூறுந்திருமொழிகள் அவர் அணுபட்சத்தினராகின்ற நிலையை நோக்கின எனவும் பகுத்துணரற்பாலன என்பதாயிற்று.
இதுபற்றி யன்றே இந் நாயனாரும், ``பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில் ... ... நமக்கு அன்னியமில்லை`` என்றார்! `அவ்வழி எண்ணும் அளவில் அன்னியம் இல்லை` எனவே, `சிவபெருமானது நிலைவேறுபாடுகளாகிய சம்புபட்சங்களை எண்ணாது அணுபட்சங்களாகிய அவரவரையே எண்ணிய வழி அன்னியம் உண்டு`` என்து போந்தது.
``நமக்கு அன்னியம் இல்லை`` என்றது, `சம்புபட்சங்களை எண்ண வல்ல சிவநெறியாளராகிய நமக்கு அன்னியம் இல்லை`` என்றவாறு. எனவே, `அது மாட்டாது அணுபட்சத்தையே எண்ணும் ஐரணியகருப்பர், பாஞ்சராத்திரிகள் முதலியோர்க்கு எவ்வாற்றானும் உளதாவது அன்னியமே என்பதும் போந்தது. இதனானே, `இது மாட்டாத பௌராணிகர், அனைவரையும் ஒப்பவைத்து அனேகேச்சுர வாதம் பேசுவர்` என்பதும் பெறப்படும்.
இன்னும், ``பயனறிந்து அவ்வழி எண்ணும் அளவில்`` என்ற தனால், உயிர்களின் நன்மையின் பொருட்டு இறைவன் கொள்ளும் தடத்த நிலைகள் மேற்கூறியவாற்றான் முன்னும் பின்னுமாய் நிற்றல் நோக்கிச் சம்புபட்சமாகிய அவற்றில் மேல், கீழ் கூறப்படுதல் பற்றி அணுபட்சத்திலும் மேல், கீழ் கூறப்படுகின்றனவன்றி, அணுப் பட்சத்தில் உண்மையில் மேல் கீழ் இன்றி யாவரும் ஒரு தன்மையினரே என்பதும் உணர்த்தப்பட்டதாம். இதனை,
அயனை முன்படைத் திடுமொரு கற்பத்
தரியை முன்படைத் திடுமொரு கற்பத்
துயரு ருத்திரன் றனைமுனம் படைப்பன்
ஒருகற் பத்தின்மற் றொருகற்பந் தன்னின்
முயலு மூவரை ஒருங்குடன் படைப்பன்
முற்பி றந்தவர் மற்றிரு வரையும்
செயலி னாற் படைக் கவும் அருள் புரிவன்
சிவபிரான் எனில் ஏற்றமிங் கெவனோ.
எனச் `சிவதத்துவ விவேக` நூல் விளக்கிற்று.
`இச் சிவதத்துவ விவேகச் செய்யுளில் `சிவபிரான்` என்றதற்கு ஈடாக `மாயோன்` அல்லது `நான்முகன்` என்பதைப் பெய்து, இவை அனைத்தையும் மால் அல்லது அயனுக்கு ஆக்கிக் கூறின் வரும் குற்றம் யாது` எனின், ``சிவம் சாந்தம் சதுர்த்தம்` என்று சிவபெருமானைக் குணமூர்த்திகளாகிய மூவரின் மேம்பட்ட நான்காமவனாய நிர்க்குண மூர்த்தியாகக் கூறியது போல, அவரை ஓரிடத்தும் கூறாமையானும், மாயோனையும், நான்முகனையும் முதல்வராகக் கூறுவோர் அவரை முறையே `சத்துவ மூர்த்தி, இராசத மூர்த்தி` என்பதல்லது, நிர்க்குண மூர்த்திகளாகக் கூறாமையானும் அங்ஙனம் கூறுதல் கூடாது என்க. உருத்திரனைச் சிவபிரானின் மேம்பட்டவனாகக் கூறிப் பிணங்குவார் இன்மையின், அவன் அன்னியன் ஆகாமையைக் கூறிற்றிலர்.

பண் :

பாடல் எண் : 52

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

பொழிப்புரை :

எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.

குறிப்புரை :

`ஆகவே, மக்களுலகத்துள்ளாரைச் சிவபெருமான் மாலும் அயனுமாகச் செய்தல் உண்டு` என்றவாறு. ``உலப்பிலி தேவர்கள்`` என்றதை முதலிற் கூட்டுக. சிவபெருமானது திருமேனி, பால் போலுதல் திருநீற்றுப் பூச்சினாலாம். இனிபால், இனிமை பற்றிவந்த உவமை என்றலுமாம், அருளை, `அடி` என்றல் மரபு என்பது, ``இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆை\\\\\\\\\\\\\\\\u2970?`` என்ற சிவஞான சித்தியானும் (சுபக்கம் - பாயிரம் - 4) உணர்க. திருமாலும், பிரமனும் வேதம் முதலியவற்றால் பலர்க்குச் சிவபிரானது திருவருட் பெருமையைப் பலர்க்கு உணர்த்துவோராதல் அறியத்தக்கது. `ஞாலக்கு` என்பதே பாடம் போலும். நாயனார்க்கு சிவபெருமான் இவ்வாறு ஆணை தந்தது நந்திதேவர் வாயிலாக என்க. இனித் திருவாவடுதுறையில் சிவபோதியின் கீழ் இருந்து கண்ட யோகக் காட்சியில் என்றலும் பொருந்துவதேயாம், இவ் ஆணையின் வழி நல்கப்பட்டதே இத் திருமந்திர மாலை என்க.

பண் :

பாடல் எண் : 53

வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

பொழிப்புரை :

உடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை.

குறிப்புரை :

`அதனால், ஏனைத் தேவரும், தலைமக்களும் மாலயன் போலச் சிவபெருமானது கலப்பினை நோக்கும்வழி அவனாதலும், இவர்தந் தன்மையை நோக்கும்வழி இவரோயாதலும் பெறப்படும், என, வானுலகத்தில் இந்திரன் முதலாகவும், மண் ணுலகத்தில் அரசர் முதலாகவும் உள்ள தலைவரது நிலைமையை விளக்கியவாறு. இவ்வாற்றானே. ``திருமாலுக் கடிமைசெய், தெய்வம் இகழேல், சக்கர நெறிநில் (ஆத்திச்சூடி) என்றற்றொடக்கத்து அறநூற் கட்டளைகள் எழுந்தன என்க. ``ஓரும்`` என்றது செயப்பாட்டு வினையாய் நின்றது. தனிமை, இங்குச் சுதந்திரத்தைக் குறித்தது. மற்று, அசைநிலை,

பண் :

பாடல் எண் : 54

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

பொழிப்புரை :

சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளி யாகிய அநாதிப் பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறு வேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.

குறிப்புரை :

`அவர் உரை பொருளாதல் இன்று` என்பது குறிப்பெச்சம். ``ஆதி`` என்றதனால், `அநாதி` என்பதும், நீதி நூல் என்றதனால் ``சிவதன்ம நூல்`` என்பதும் கொள்ளப்பட்டன. நீதி - உலகியல்; இஃது ஆகுபெயராய் நின்றது. ``நீதிக்கண் நின்று`` என ஒருசொல் வருவிக்க. ஈசன் முதலிய மூவரும் நின்று` என ஒரு சொல் வருவிக்க ஈசன் முதலிய மூவரும் பின்னர்க் கூறப்படுதலின் முன்னர்க் கூறாயினார். `அவரைப் பேதித்துப் பிதற்றுகின்றார்` என மாறிக் கூட்டுக.
`உலகியல் நூல், பல்வேறு சமயத்தாருக்கும் பொது வாய அறங்களைக் கூறும் நூல், அஃது `முதற்கடவுளாவது இதுவே` என ஒருதலையாக ஒருதெய்வத்தை வரையறுத்துணர்த்தாமையின், அதனையே பற்றி நிற்பார்க்கு மலைவுண்டாதல் இயல்பு` என்பதும், `அம்மலைவு, மெய்ந்நெறி நூலை உணர்வார்க்கு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 55

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வரு தலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல் வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கி யருளுகின்றான்.

குறிப்புரை :

எனவே, `இவற்றிற்கெல்லாம் காரணம் பல்வேறு நிலைப்பட்ட உயிர்கள் மாட்டுக் கொண்ட அருளேயன்றிப் பிறி தில்லை` என, `ஒருவன் ஒருநிலையில் நில்லாது பல நிலையை மேற் கொள்ள வேண்டுவது என்னை` என்னும் ஐயத்தை நீக்கியவாறு ``மாயவன், அயன்``, ``தரம்`` என்பன உபலக்கணம். வரத்து, `வரவு` என்னும் தொழிற் பெயர். சொரூபம் நிலையும், தடத்தம் வரவும் ஆதல் உணர்ந்து கொள்க. கரம் போல்வதனை, ``கரம்`` என்றார். இறைவனது சத்தியை அவனுக்குக் கை போல்வதாதலை.
``நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனாம்``
என்னும் திருக்களிற்றுப்படியார். 78 இதனாலறிக. இதனானே, ``என்னை இப்பவத்திற் சேராவகை எடுத்து`` (சிவஞானசித்தி. பாயிரம். 2) என்பதில் எடுத்து என்றது, `அருளாகிய கையால் எடுத்து` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 56

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொழிப்புரை :

எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவதாகிய இலயசிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.

குறிப்புரை :

`அதனால் அவனது நிலைவேறுபாடுகளை அறிதல் உயிர்கட்கு அரிது` என்பது கருத்து. `இந்நிலையெல்லாம் தன் இச்சையாற் கொள்வனவே` என்றற்கு முதற்கண், ``தான்`` என்றார். சாந்தியதீத கலையும் ஆகாயம் எனப்படுமாறு அறிக. உண்மையை ``அங்கு`` என்பதனுடன் கூட்டுக. ``கோன்`` என்றது. `எசமானன்` என்னும் பொருளது. பாசத்தின் வழி நின்று நடத்துதலை, `உடலுள் நின்று உயிர்த்தல்` என்றார். இறுதிக் கண் நின்ற ``ஒரு கூறு`` என்றது முன்னும் சென்று இயையும், ``ஆம்`` என்பதனை, ``தான்`` என்றதற்கும் கூட்டுக. தண்ணியனாதல் பற்றி அருள்வோனாதலை, ``சலமயன் ஆம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 1

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே.

பொழிப்புரை :

`அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர், `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.

குறிப்புரை :

`கொல்லாமையே சிறந்த அறம்; அது வேதத்துள் இல்லை` எனக் கூறும் புத்த சமண மதத்தவரது கூற்றை உட்கொண்டு கூறியது இத்திருமந்திரமாதலின், இதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. வேதத்துள் ஊன் வேள்வி கூறப்பட்டதாயினும், வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுட் கூறப்பட்ட அறங்கள் அவ்வத்திறத்தார்க்கே உரியனவன்றி, எல்லா அறங்களும் எல்லார்க்கும் உரியன அல்ல; அவ்வாற்றால், ஊன் வேள்விகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கியே கூறப்பட்டன என்பதும், ஊன் வேள்வியன்றித் தூய வழிபாடுகளும், தூய நோன்பு களும் அவற்றிற்கு உரியாரை நோக்கி வேதத்திற் கூறப் பட்டுள்ளன என்பதுமே வேதத்தை உடன்பட்டோர் துணிபாகலின் ``வேதத்தை விட்ட அறமில்லை`` என்பது முதலியவற்றால் வேதத்தின் சிறப்பை வலியுறுத்தினார் நாயனார். திருவள்ளுவ நாயனாரும்,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
என `ஊன்வேள்விகள் உயர்ந்தோர்க்கு உரியன அல்ல என்பது மாத்திரையே கூறியதல்லது, `ஒருவர்க்கும் ஆகாது` என முற்றக் கடிந்து கூறினாரல்லர். ஊன் வேள்விகளை அறிவுடையோர் விலக்கா மைக்குக் காரணம், அவற்றாலும் சிலர்க்குக் கடவுள் உணர்ச்சி உள தாதல் பற்றியேயாம். புத்த சமண மதங்கள் கடவுட் கொள்கை இல்லாத மதங்களாதலின் அவை அவற்றை மறுக்கு முகத்தான் கடவுள் வழி பாட்டினையே மறுப்பனவாயின. அன்றியும், ஊன் வேள்வியை விலக்குதலைத் தம் மதத்தினைப் பரப்புதற்குத் தக்கதொரு கருவி யாகவுங் கொண்டு தம் ஆரவார உரைகளைப் பெருக்கின என்பது, ``கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம்`` (தி.12 திருநாவுக் கரசர் புராணம். 37) என்ற சேக்கிழாரது திருமொழிக் குறிப்பால் நன் குணரலாம்.
``வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை`` -தி.3 ப.108 பா.7
என்னும் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
`கடவுள் வழிபாடு உயிர்க்கொலையோடு கூடாது நிற்றலே சிறப்பு; கூடினும் அமைக` என்பது வேத மதங்களின் கருத்து. `கடவுள் வழிபாடு செய்யப்படாது ஒழியினும் ஒழிக; உயிர்க் கொலை கூடாது` என்பது புற மதங்களின் கொள்கை. `இப்புறமதக் கொள்கையால் ஒழிவது கடவுள் வழி பாடேயன்றி உயிர்க்கொலையன்று` என்பதை ஊன்றியுணரவல்லார்க்கு, அம்மதங்களால் விளையும் தீங்கு புலனாவ தாகும். அது நோக்கியே அறிவுடையோர் அனைவரும் வேதத்தை உடம்பட்டு ஒழுகினர் என்க.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். -குறள் 543
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின். -குறள் 560
என்பவற்றால் திருவள்ளுவ நாயனாரும் வேதத்தை உடம்பட்டமை புலனாகும். ``வேதத்தில் அறம் எல்லாம் உள`` என்றதனால், `வேதம் அறத்தைக் கூறும் பொது நூல்` என்பது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

பொழிப்புரை :

வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமனும் வேதத்தைச் செய்தவனாயினானில்லை. ஏனெனில், வேதத்தைச் செய்தவன் அதனைச் செய்தது, அப்பிரமன் அதனை ஓதி அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும், மற்றும் கன்மத்தில் விருப்பம் உடைய வர்க்கு வேள்விகளை உளவாக்குதற்பொருட்டும், மெய் யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டுமாம்.

குறிப்புரை :

`பிரமன் வேதத்தால் அறிவு விளங்கப்பெறுதல், அவன் அதனை இடையறாது ஓதுதலால் அறியப்படும்` என்றற்கு, அவனை `வேதம் உரைத்தான்` என்னும் பெயராற்கூறினார். உம்மை நான்கனுள் முதலது, சிறப்பு; ஏனையவை எச்சம். `வேதத்தை ஓதி அறிவு விளங்கப் பெறுபவன், அவ்வேதத்தைச் செய்தவனாதல் எவ்வாறு` என்றற்கு, ``வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட`` என்றார். இக்கருத்தால் இது கூறப் புகுந்தவர், வேதத்தால் உளவாகும் ஏனைய பயன்களையும் உடன் கூறினார் என்க. இப்பயன்களது சிறப்பை வலிறுத்தற்கு எச்ச உம்மை புணர்த்து வேறு வேறு தொடராற் கூறினார். அவ்வும்மைகட்கு முன் `உரைத்தது` என்பன சொல் லெச்சமாய் எஞ்சிநின்றன. இதனால் `வேத்தைச் செய்தவன் பிரமன் எனக் கூறும் ஐரணிய கருப்பமத`த்தவர் முதலாயினவர் கூற்றும் பொருந்தா` என்பதும், `வேதத்தின் பயன் இவை` என்பதும் கூறப்பட்டன. இதனானே வேதம் ஒருவராலும் செய்யப்பட்டதன்று என்னும் மீமாஞ்சகரது கொள்கையும் பொருந் தாமை பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே.

பொழிப்புரை :

பூனையை ஒத்த புறத்தோற்றம் உடைய வேதியர்கள் சொல்கின்ற, பிறப்பை உடைய ஆசிரியனாகிய மாயோன் றானும், மந்திரவடிவாகிய எழுச்சியான ஓசையை உடைய கன்ம காண்டத்துள் உள்ளத்தை உருக்குகின்ற அன்புருவாயும், ஞான காண்டத்துள் கேள்வி, ஆய்வு முதலியவற்றால் துணியப்படும் மெய்ப் பொருளாயும் உயர்ந்து நிற்பவனாவனோ? ஆகான்.

குறிப்புரை :

`அதனால், அவனும் வேதத்தைச் செய்தவன் ஆகான்` என்றபடி. வேதத்தின் பாகங்களையும் `வேதம்` என்றல் வழக்கு. உருக்கு உணர்வு, அன்பு உணர்வேதம், உணரப்படும் வேதம். ``ஓங்கி`` என்றது பெயர். `வேதம் முதல் நூலாதலின், அதனைச் செய்தவன் யாவர்க்கும் முன்னோனாய தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவனேயாதல் வேண்டும். அதனால், அவன் தனது தன்மையை உணர்ந்து தன்னைச் சாரமாட்டாத பிறர்க்கு அன்பினானும், ஆராய்ச்சியானும் தன்னை அடையுமாற்றையே அந்நூலுட் கூறியிருத்தல் வேண்டும். ஆகவே, அவன் அதன் கன்ம காண்டத்துள் அன்பிற்கும், ஞானகாண்டத்துள் அறிவிற்கும் பற்றாய் நிற்றல் வேண்டும். அத்தன்மை பிறப்பினுட்பட்டு நிற்கும் மாயோனுக்கும் கூடாது` என்பார், ``கருக் குரு வாய் நின்ற கண்ணனும் ஆமே`` என்றார். ``கரு`` என்றது பிறப்பை. ``கருக்குரு`` என்றதை, `கருவை உடை குரு` என விரிக்க. `கருவில் வீழ்பவன் குருவாகமாட்டான்` என்பது குறிப்பு. `கண்ணன்` மாயோன்` என்பன ஒருபொருட்சொற்கள். ``கண்ணனும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `ஆமே` என்ற வினா, `ஆகான்` என எதிர்மறைக்கண் வந்தது. `கண்ணனும் உருக்குணர்வாய் ஓங்கி ஆமே` எனக் கூட்டுக.
வரையறை இன்மையின், ``வெருக்குரு`` என, வேற்றுமைப் புணர்ச்சியுள் நிலைமொழியில் சிறுபான்மை ககரம் இரட்டிற்று. ``வெருக்குக்கண்`` (நாலடியார் 210) எனப் பிறவிடத்தும் வந்தது. `பிரமத்தை உணர்ந் திருத்தலால் பிராமணர் எனவும், பிரமஞானம் மிக்கிருத்தலால் விப்பிரர் எனவும் சொல்லப்படுகின்றோம்` என்று சொல்லிக்கொண்டு, பிரமமாகிய சிவபெருமானைச் சிறிதும் உணர்ந்து அன்பு செய்யாமலே, மாயோன் முதலியோரையே புகழ்வதோடு சிவபெருமானை இகழ்வதும் செய்துகொண்டே, நூலும் சிகையும் முதலாய தோற்றத்தால் மட்டும் சிலர் பிராமணராய் நிற்றலின், அவரது தோற்றத்திற்குத், தவத்தோடு சிறிதும் இயைபின்றி அதற்கு மாறாய் நின்று கொண்டே தோற்றத்தால் பெரிதும் தவமுடயைது போலத் தோன்றுகின்ற பூனையினது தோற்றத்தை உவமை கூறினார். பிராமணருட் சிலர் இவ்வாறு நிற்றற்குக் காரணம், ததீசி, கௌதமர் முதலிய முனிவர் சிலரது சாபம் என்பதைக் காந்தம், கூர்மம் முதலிய புராணங்களுட் காண்க.
இதனால், `வேதத்தை மாயோன் இயல்பாய் நின்றே செய்தான்` எனப் பாஞ்சராத்திரிகளும், `வியாதனாய் அவதரித்துச் செய்தான்` எனப் பௌராணிகரும் கூறுங் கூற்றுக்கள் பொருந்தா என்பது உணர்த்தினார். `வேதத்தைச் செய்தவன் பிரமனு மல்லன்; மாயனுமல்லன், என்பதைப் பொருந்துமாற்றின் வைத்து உணர்த்தி, `அது செய்தவன் சிவபெருமானே` என்பதைப் பாரிசேடத்தாற் பெறுவித்தார் என்க. வியாச முனிவன் வேதத்தை வகைப்படுத்திய தல்லது செய்திலாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

பொழிப்புரை :

`வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.

குறிப்புரை :

`அதனால், வேதத்தைச் செய்தவன் சிவபெருமானே` என்பது குறிப்பெச்சம். `திரு` என்பது வீடாதலை `போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7 ப.59 பா.1) என்பதனுட் காண்க. வியாபக நிலையை, ``பெரு நெறி`` என்றார். ``சிவமாம் நெறி`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பிரான்`` என்று போயினார். ``குருவே சிவம்`` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவாராகலின், ``குருநெறிஆம்`` என்றது, `அவனருளால் அல்லது கிடைக்கப்பெறாத` என்றவாறு. ``ஒருநெறி`` என்றதன்பின், `என்று` என்பது எஞ்சிநின்றது. `பிரானையே, ஒருநெறியே` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `திருநெறியாவது சிவமாம் நெறி கூடும் ஒருநெறியே` என வேதாந்தம் கூறுதல், ``பிற எல்லாவற்றையும் விடுத்துச் சிவன் ஒருவனே தியானிக்கப்படத் தக்கவன்; அதர்வ சிகை முற்றிற்று`` ``ஸிவ ஏகா தியேயக சிவங்கர ஸர்வ மன்யத் பரித் யஜ்யேதி ,மாப் தார்த்த வஸிஹா`` என்று வேதாந்தம் (அதர்வசிகோப நிடத முடிவு) இறுதியிற் கூறி முடிதலால் அறியப்படும்.
இதனால் மேல் பாரிசேடத்தாற் பெறப்பட்டதனைப் பொருந்து மாற்றின் வைத்துணர்த்தி வலியுறுத்தல் செய்யப்பட்டது. இதனானே, சிவமாம் நெறியாகிய திருநெறியது இயல்பும் தொகுத்துணர்த்தப் பட்டவாறு அறிக.
திருஞானசம்பந்தரது, ``அருநெறிய மறை`` (தி.1 ப.1 பா.11) என்னும் திருப்பாடல் இத்திருமந்திரத்தை அடியொற்றிச்செல்வதாய் இருத்தலும், அவர் தமது பாடலை, ``திருநெறிய தமிழ்`` என்று குறித்திருத்தலும் இங்கு நினைவுகூரத் தக்கன.

பண் :

பாடல் எண் : 5

ஆறங்க மாய்வரு மம்மறை ஓதியைக்
கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை
வேறங்க மாக விளைவுசெய் தப்புறம்
பேறங்க மாகப் பெருக்குகின் றாரே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களை உடையதாய், மேற்றொட்டு எழுதாக் கிளவியாய் வருகின்ற அவ்வேதத்தைச் செய்த சிவபெரு மானை அதன் முடிவில் விளங்குபவனாக உணர்ந்து அவனது அருட் குணங்களைப் போற்றுபவர் உலகருள் ஒருவரும் இல்லை; அவர் பலரும் வேறு எவ்வெவற்றையோ தங்கள் கடனாக நினைந்து, அவற் றால் சில பேறுகளை உளவாக்கிக் கொண்டு அவற்றால் கிடைக்கின்ற பயன் மேலும் மேலும் வரும் பிறப்பேயாக அவற்றைப் பெருக்கி உழல்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது அவர் வினையிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `சிவஞானத்தாலன்றிப் பிறவி அறமாட்டாது` என்பது கருத்து. ஆறங்கம்`-`சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தோவிசிதி` என்பன. அவற்றுள் `சிட்சை வேதத்தை ஒலிக்கும் முறையை நன்குணர்த்துவது; வியாகரணம், வேதத்தில் உள்ள தொடர் மொழிகளின் இயல்பைப் புலப்படுத்துவது; நிருத்தம், வேதத்தின் தனி மொழிகளின் இயல்பைக் கூறுவது; சோதிடம், வைதிக கருமங்கட் குரிய காலத்தின் இயல்பைத் தெரிவிப்பது. கற்பம், வைதிக கருமங் களை அனுட்டிக்கும் முறையைக் கூறுவது சந்தோவிசிதி வேதத்தின் சந்தங்களை எழுத்தெண்ணிக்கை கூறி உணர்த்துவது. இவையின்றி வேதத்தாற் பயன்கொள்ளுதல் கூடாமையின், இவை வேதத்திற்கு அங்கமாயின. அங்கம் உடையதனை ``அங்கம்`` என்றார்` ``ஆறங் கமாய்`` என்றும், ``வரும்`` என்றும் கூறியது, `இவ்வாற்றால் வேதத்தை வருந்திக் கற்றும் சிலர் அதனால் பயன் பெறாத வராகின்றனர்` என்பது உணர்த்துதற்கு.
கூறு அங்கம் - சிறப்பாகச் சொல்லப்படும் உறுப்பு; தலை; ``வேறு அங்கம்`` என்றதில், ``அங்கம்`` என்பது, `இன்றியமையாதது` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

பாட்டும் ஒலியும் பரகுங் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதமில் லாதவர்
ஈட்டும் இடஞ்சென் றிகலுற் றாரே.

பொழிப்புரை :

இயலும், இசையும், நாடகமும் ஆகிய கலை களின் பயனை அறியாவிடினும் அவற்றை இடையறாது நிகழ்த்தி நிற்கின்ற இவ்வுலகில், வேதத்தை இடையறாது ஓதுகின்ற வேதியரும் அத் தன்மைரேயாய்ப் பொருள் பெறவிரும்பி, பொருளாசை நிறைந்த நெறி முறை இல்லாத அக்கலைவல்லுநர் பொருள் ஈட்டும் இடத்திற் சென்று அவரோடு மாறுகொண்டு நிற்கின்றனர்.

குறிப்புரை :

``பாட்டு`` என்றது, இயற் பாட்டினையும், ``ஒலி`` என்றது பண்ணமைந்த இசைப் பாடல்களையுமாம். நெறிப்பட்ட வாழ்க்கையை `விரதம்` என்றார் `இயற் பாட்டு முதலிய கலைகள் யாவும் நற்பண்பினை வளர்த்தற்கு உரியனவாகவும், அவற்றில் வல்லுநராகியும் அவை வளரப் பெறாதார் பொருளீட்டுதல் ஒன்றே அவற்றாற்பெறும் பயனாகக்கொள்வர். என்பார். ``விருப்பு ஆர் விரதம் இல்லாதவர்`` என்றும், `அவர் பொருளீட்டும் இடம் அரசர் முதலிய செல்வம் மிக்கோர்களாதலின், அவ்விடத்தில் இவ்வேதியரும் சென்று, அவர்க்கு முன்னே எமக்குத் தம்மின் என அவரின் முந்துகின்றதல்லது, தாம்வேதம் ஓதியதற்குப் பயன் பிறிதில்லை` என்பார், ``அவர் ஈட்டு மிடஞ்சென்று இகலலுற்றாரே`` என்றும் கூறினார். வேதியர் அவரின் முந்துதல், `தக்கார்க்குக் கொடுத்தலாகிய இது முன்செய்யத் தக்கது` என அறிவுறுத்தி நிற்றல். `வேதியர், பிறரெல்லாம் இலௌகிகர், யாம் வைதிகர் என்று சொல்லால் தம்மை உயர்த்திக் கொள்வதல்லது, செயலால் இலௌகிகரோடு ஒக்கின்றார்` என்பதும் கூறியவாறு. `சிவபிரானை உணராதார்க்கு உலகப் பற்று நீங்காது` என்பதாம்.
இம்மூன்று திருமந்திரங்களாலும், `வேதத்தின் பயன் சிவநெறியே நெறி என்று உணர்ந்து அந்நெறிநிற்றலே` என்பது உடம்பாட்டானும் எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது. ``வேதப் பயனாம் சைவம்`` (தி.12 சண்டேச்சுரர் 9) என்று அருளிய சேக்கிழார் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. இப்பயன் எய்தாதாரை நோக்கியே,
``அசிக்க ஆரியங்கள் ஓதும்
ஆதரைப் பேத வாதப்
பிசுக்கரைக் காணாக் கண்; வாய்
பேசாத பேய்க ளோடே`` (தி.9 திருவிசைப்பா. 4, 5)
என்றாற்போலும் திருமொழிகள் எழுந்தன.
`வேதத்தைச் செய்தவன் இவன்` என்பது பற்றியும், அதனால், முடித்துக் கூறப்படும் நெறி இன்னது` என்பது பற்றியும் நாயனார் இவ்வாறெல்லாம் வலியுறுத்து அருளிச் செய்தமையால், `வேதம் அவரவர் தகுதிக்கேற்பப் பலவாற்றாற் பொருள் கொள்ள நிற்பது` என்பது பெறப்பட்டது, எனவே, நாயனார் பின்னர்க் கூறுமாறுபோல, உண்மையை முதற்கண்ணே முற்ற உணர்த்தினால் உணர்தல் அரிதாதல் பற்றி அதனை முதற்கண் ஒருவாற்றான் உணர்த்தும் பொது நூலே வேதம்` என்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 1

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

பொழிப்புரை :

சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம்.

குறிப்புரை :

அவ்வாகமங்கள், `காமிகம், யோகசம், சிந்தியம், காரணம்,அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்` என்பன.
சிவபெருமானுக்கு நாற்றிசை நோக்கி நான்கு முகங்களும், உச்சியில் வான்நோக்கி ஒருமுகமுமாக உள்ள ஐந்து முகங்களையும் கீழிருந்து முறையே, `சத்தியோசாதம் (மேற்கு), வாமதேவம் (வடக்கு), அகோரம் (தெற்கு), தற்புருடம் (கிழக்கு) ஈசானம் (உச்சி)` என எண்ண, ஐந்தாவதாக வருவது ஈசான முகம். `சிவபெருமான் மேற்சொல்லிய இருக்கு முதலிய வேதங்கள் நான்கனையும் கீழுள்ள தற்புருடம் முதலிய நான்கு முகங்களானும், ஆகமங்களை மேலே உள்ள ஈசான முகத்தாலும் அருளிச்செய்தான்` என்பவாகலின், ஆகமங்களை, ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றார்.
அஞ்சாம் முகம் - ஐந்து என்னும் எண்ணின்கண் நிற்கும் முகம். இனி, `சத்தியோசாதம் முதல் கீழே உள்ள நான்கு முகங்களாலும் முகத்திற்கு ஐவைந்தாகக் காமிகம் முதல் முகவிம்பம் ஈறாக உள்ள இருபது ஆகமங்களையும், மேலே உள்ள ஈசானமாகிய ஒருமுகத்தால் எஞ்சிய எட்டு ஆகமங்களும் அருளிச்செய்தான்` எனக் கூறுதலும் உண்டு. ஆதலின், அப்பொருளும் தோன்றுமாறு ``அஞ்சாம் முகத்தில்`` என்றார். இப்பொருட்கு, ``அஞ்சாம் முகம்`` என்றதை, `அஞ்சாகி நிற் கின்ற முகம்` என்றவாறாக உரைக்க. பின்னர்க் கூறிய முறைமைக்கு, `மேல்முகமாகிய ஈசானம் ஒன்றே சத்தியோசாதம் முதலிய ஐந்தனை யும் உடையதாய் இருக்கும்; அவற்றின்கண்ணே காமிகம் முதலிய ஆகமங்கள் ஐவைந்தாகவும், எட்டாகவும் தோன்றின` என, இரண்டு கருத்தும் தம்முள் முரணாதவாறு விளக்கம் தருபவர் உளர்.
இனிச் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் முகங்களால் முறையே, `கௌசிகர், காசிபர், பாரத்து வாசர், கௌதமர், அகத்தியர்` என்னும் முனிவர்கட்கு மேற்சொல்லிய ஆகமங்கள் உணர்த்தப்பட்டன என்பது, `நிலவுலகில் மகேந்திர மலையில்` என்ற, தி.8 திருவாசகக் கீர்த்தித் திருவகவலால் (அடி. 19. 20) அறியப் படுவதாம்.
இனி, ஆகமங்களைக் கேட்ட அறுபத்தறுவருள், `எல்லாரும் எல்லா ஆகமங்களும் கேட்டனர்` என்பதில்லை; `காமிகம் முதல் சுப்பிரபேதம் ஈறாக உள்ள பத்தினையும் ஒன்றை ஒருவராகப் பதின்மர் சிவபெருமானிடங் கேட்க, அவருள் ஒருவரிடத்து ஒருவராக ஓரா கமத்தை மற்றும் இருவர் கேட்டனர்` என்பதே வரலாறு. ஆகவே, காமிகம் முதலிய பத்தினையும் கேட்டவர் முப்பதின்மராகின்றனர்.
அவருள் காமிக முதலிய பத்தினையும் சிவபெருமானிடம் நேரே கேட்ட பதின்மராவார், `பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர்` என்போர்.
இனி இப்பதின்மருள் ஒருவரிடத்தினின்று இவ்விருவராக வழிவழிக் கேட்ட இருபதின்மராவார், `திரிகலர், அரர் - பசுமர், விபு - கோபதி, அம்பிகை - சர்வருத்திரர், மிரசேசர் - சிவர், அச்சுதர் - திரிமூர்த்தி, உதாசனர் - வைச்சிரவணர், பிரபஞ்சனர் - பீமர், தருமர் - உக்கிரர், ஆதித்தியர் - விக்னேசர், சசி` என்போர்.
இம்முப்பதின்மரும், `சிவர்` எனப்படுதலால், இவர்களால் கேட்கப்பட்ட காமிகம் முதலிய பத்து ஆகமங்களும் `சிவபேதம்` எனப்படுகின்றன.
இனி, எஞ்சிய விசயம் முதல் வாதுளம் ஈறாக உள்ள பதினெட்டு ஆகமங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொருவர் சிவபெரு மானிடம் நேரே கேட்க, அவரிடம் அவற்றை மற்றும் ஒவ்வொரு வராகக் கேட்டனர். ஆகவே எஞ்சிய பதினெட்டு ஆகமங்களைக் கேட்டோர் முப்பத்தறுவர் ஆகின்றனர். அவர் பெயர் முறையே வருமாறு:
அநாதிருத்திரர் (அநாதிருத்திரரை, `மகாருத்திரர்` என்றும் சொல்வது உண்டு.) பரமேச்சுரர் - தசாரணர், பார்வதி - நிதனேசர், பதுமபூ - வியோமர், உதாசனர் - தேசர், பிரசாபதி - பிர மேசர், நந்திகேசர் - சிவர், மகாதேவர் - சர்வான்மர், வீரபத்திரர் - அநந் தர், பிருகற்பதி - பிரசாந்தர், ததீசி - சூலி, கவசர் - ஆலயேசர், இலளிதர் - பிந்து, சண்டேசர் - சிவநிட்டர், அசம்பாதர் - சோமதேவர், நிருசிங்கர் - சீதேவி, உசனர் - தேவவிடி, சம்வர்த்தர் - சிவர், மகா காளர், இவரெல்லாம் `உருத்திரர்` எனப்படுதலின், இப்பதினெட்டு ஆகமங்களும், `உருத்திரபேதம்` எனப்படுகின்றன.
இவர்களுள் ஒருவர் பெயரையே பிறரும் உடையவராய் இருத்தல் பற்றியும், ஆகமங் கேட்டவரல்லாத பிறரது பெயரும் இவர்களுட் சிலர்க்குக் காணப்படுதல் பற்றியும் நாம் மலைவெய்துதல் கூடாது. இவரெல்லாரும் சுத்தாமாயா புவனங்களுள் சதாசிவ புவனத்தில் சதாசிவ மூர்த்திபால் ஆகமங்களைநேராகவும், வழிமுறை யாலும் கேட்டவர் என்க.
ஐந்து முகம் உடைய மூர்த்தி சதாசிவ மூர்த்தியே. அதனால், ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றது, இவரிடம் கேட்டதையே என்பதாதல் அறிக. இவரது நிலை மேலே விளக்கப்பட்டது.(தி.10 பா.89 - 90) ``அஞ்சாம் முகத்தில் அரும் பொருள் கேட்டது`` என்பதற்கு ஈடாக, `எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும்`` என்று ஓதுவது, தாமே தமக்கு வேண்டியவாறு கட்டிக் கொண்ட பாடம்.
``அரும்பொருள்`` என்றது, மெய்யுணர்வினை. எனவே, `ஆகமங்கள் மெய்ந்நெறியை உணர்த்தும் சிறப்புநூல்` என்பது கூறியவாறாயிற்று. ``பாகத்தன் ஆகமம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகை.

பண் :

பாடல் எண் : 2

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்கள்மேல் வைத்த அருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்களை எண்ணாற்கூறின், `இருபத் தெட்டு` என்னும் அளவில் நில்லாமல், அளவின்றியுள்ளன. அவைகளால் மேற்கூறிய அறுபத்தறுவரும், பிறரும் சிவபெரு மானது மேன்மையைத் தத்தமக்கியைந்தவாற்றால் விளங்க உரைத்தார்கள். அவ்வாறு உரைக்கப்பட்ட அளவிலே நானும் கேட்டுச் சிந்தித்துத் துதிக்கத் தொடங்கினேன்.

குறிப்புரை :

``கோடி நூறாயிரம்`` என்றது அளவின்மை கூறிய வாறு. அற்றாயினும் முற்கூறிய இயைபு தோன்றுதற் பொருட்டு, ``இருபத்தெண்கோடி நூறாயிரம்`` என்றார். விண்ணவர் என்றது மக்களினும் மேம்பட்ட பலரையும், `அவர் இவர்` என்பது பின்னர் விளக்கப்படும். `வேதம் நான்கு` எனவும், `ஆகமம் இருபத் தெட்டு` எனவும் வரையறை கூறப்படினும், அவ்வப்பொழுது இறைவன் அவரவருக்கு உணர்த்துமாற்றால் உண்மையில் அவை அளவில் லனவே என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார். ``வேதங்கள் அநந்தம்`` என்ற வாக்கியமும் உண்டு. இது பற்றியே, ``ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் - திங்கள் போலத் திசைவிளக் கும்மே`` என்னும் திருமுருகாற்றுப் படைப் பகுதிக்கு நச்சினார்கினியர் உரைகூறுமாறும் அறிக.
இனி `இஃது ஆகமங்களின் கிரந்தங்கள் எண்ணில வாதலையும், உபாகமங்கள் இருநூற்றேழாதலையும் கூறியது` என்றலுமாம். சேக்கிழாரும் ``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்`` என்றமை அறியத் தக்கது. (தி.12 திருக்குறிப்புத் தொண்டர். 51) இதனால், `ஆகமங்கள், அறுபத் தறுவரேயன்றிப் பின்னும் பலரால் கேட்கப்பட்டு வந்து நிலவுலகில் விளங்கின` என்பது கூறப்பட்டது.
ஆகமங்களின் கிரந்த அளவு மரபாகச் சொல்லப்பட்டுவரும் முறை வருமாறு:
1. காமிகத்திற்குக் கிரந்தம் பரார்த்தம்.
2. யோகஜத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்.
3. சிந்தியத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்.
4. காரணத்திற்கு கிரந்தம் ஒரு கோடி.
5. அஜிதத்திற்கு கிரந்தம் நியுதம்.
6. தீப்தத்திற்கு கிரந்தம் நியுதம்.
7. சூட்சுமத்திற்கு கிரந்தம் பத்மம்
8. சகஸ்ரத்திற்கு கிரந்தம் சங்கம்
9. அம்சுமானுக்கு கிரந்தம் ஐந்து லட்சம்
10. சுப்பிரபேதத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
11. விஜயத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
12. நிஸ்வாசத்திற்கு கிரந்தம் ஒரு கோடி
13. சுவாயம்புவத்திற்கு கிரந்தம் ஒன்றரைக் கோடி
14. ஆக்னேயத்திற்கு கிரந்தம் முப்பதினாயிரம்
15. வீரத்திற்கு கிரந்தம் நியுதம்
16. ரௌரவத்திற்கு கிரந்தம் எட்டு அற்புதம்
17. மகுடத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
18. விமலத்திற்கு கிரந்தம் மூன்று லட்சம்
19. சந்திர ஞானத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
20. முக விம்பத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
21. புரோத்கீதத்திற்கு கிரந்தம் மூன்று லட்சம்
22. லளிதத்திற்கு கிரந்தம் எண்ணாயிரம்
23. சித்தத்திற்கு கிரந்தம் ஒன்றரைக் கோடி
24. சந்தானத்திற்கு கிரந்தம் ஆறாயிரம்
25. சர்வோக்தத்திற்கு கிரந்தம் இரண்டு லட்சம்
26. பாரமேசுரத்திற்கு கிரந்தம் பன்னிரண்டு லட்சம்
27. கிரணத்திற்கு கிரந்தம் ஐந்து கோடி
28. வாதுளத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
இருபத்தெட்டு மூலாகமங்கட்கு உபாகமங்களின் அளவு மரபாகச் சொல்லப்பட்டு வரும் முறை வருமாறு:
1. காமிகத்திற்கு உபாகமம் 3:- வக்தாரம், பைர
வோத்தரம், நாரசிம்மம் (மிருகேந்திரம்).
2. யோகஜத்திற்கு உபாகமம் 5:- தாரம்,
வீணாசிகோத்ரம், ஆத்மயோகம், ஸந்தம், ஸந்ததி.
3. சிந்தியத்திற்கு உபாகமம் 6:- ஸுசிந்தியம்,
ஸுபகம், வாமம், பாபநாசம், பரோத்பவம், அம்ருதம்.
4. காரணத்திற்கு உபாகமம் 7:- காரணம்,
வித்வேஷம், பாவனம், மாரணம், தௌர்கம், மாஹேந்திரம், பீனஸம்ஹிதை.
5. அஜிதத்திற்கு உபாகமம் 4:- பிரபூதம்,
பரோத்பூதம், பார்வதீஸம்ஹிதை, பத்மஸம்ஹிதை.
6. தீப்தத்திற்கு உபாகமம் 9:- அமேயம், சப்தம்,
ஆச்சாத்தியம், அஸங்கியம், அமிருதோஜஸம், ஆனந்தம், மாதவோத்பூதம், அற்புதம், அக்ஷயம்.
7. சூட்சுமத்திற்கு உபாகமம் 1:- சூட்சுமம்.
8. சகஸ்ரத்திற்கு உபாகமம் 10:- அதீதம்,
மங்கலம், சுத்தம், அப்ரமேயம், ஜாதிபாக்கு, பிரபுத்தம், விபுதம், அஸ்தம், அலங்காரம், ஸுபோதம்.
9. அம்சுமானுக்கு உபாகமம் 12:- வித்தியா
புராணம், தந்திரம், வாஸவம், நீலலோகிதம், பிரகரணம், பூததந்திரம், ஆத்மாலங்காரம், காசியபம்,
கௌதமம், ஐந்திரம், பிராமம், வாசிட்டம், ஈசானோத்தரம்.
10. சுப்பிரபேதத்திற்கு உபாகமம் 1:- சுப்பிரபேதம்.
11. விசயத்திற்கு உபாகமம் 8:- உற்பவம்,
சௌமியம், அகோரம், மிருத்யுநாசனம், கௌபேரம், மகாகோரம், விமலம், விசயம்.
12. நிசுவாசத்திற்கு உபாகமம் 8:- நிசுவாசம்,
நிசுவாசோத்தரம், நிசுவாச சுகோதயம், நிசுவாச நயனம், நிசுவாச காரிகை, நிசுவாச கோரம், நிசுவாசகுய்யம், மந்திர நிசுவாசம்.
13. சுவாயம்புவத்திற்கு உபாகமம் 3:- பிரஜாபதி மதம், பதுமம், நளினோற்பவம்.
14. ஆக்னேயத்திற்கு உபாகமம் 1:- ஆக்கினேயம்.
15. வீரத்திற்கு உபாகமம் 13:- பிரஸ்தரம்,
புல்லம், அமலம், பிரபோதகம், அமோகம், மோகசமயம், சகடம், சகடாதிகம், பத்திரம்,
விலேகனம், வீரம், அலம், போதகம்.
16. இரௌரவத்திற்கு உபாகமம் 6:- காலாக்கியம்,
காலதகனம், இரௌரவம், இரௌரவோத்தரம்,மகாகாலமதம், ஐந்திரம்.
17. மகுடத்திற்கு உபாகமம் 2:- மகுடம், மகுடோத்தரம்.
18. விமலத்திற்கு உபாகமம் 16:- அனந்தம்,
போகம், ஆக்கிராந்தம், இருடபிங்கம், இருடோதரம், இருடோற்பூதம், இரௌத்திரம், சூதந்தம், தாரணம்
ஆரேவதம், அதிக்கிராந்தம், அட்டகாசம், பத்திரவிதம், அர்ச்சிதம், அலங்கிருதம், விமலம்.
19. சந்திர ஞானத்திற்கு உபாகமம் 14:- ஸ்திரம், ஸ்தாணு,
மகாந்தம், வாருணம், நந்திகேசுரம், ஏகபாதபுராணம், சாங்கரம், நீலருத்திரகம், சிவபத்திரம், கற்பபேதம்,
சீமுகம், சிவசாசனம், சிவசேகரம், தேவீமதம்.
20. முக விம்பத்திற்கு உபாகமம் 15:- சதுமுகம்,
சமத்தோபம், பிரதிபிம்பம், அயோகஜம், ஆன்மாலங்காரம், வாயவியம், பட்டசேகரம்,
தௌடிகம், துடிநீரகம், குட்டிமம், துலாயோகம்,
காலாத்தியயம், மகாசௌரம், நைருதம், மகாவித்தை.
21. புரோத்கீதத்திற்கு உபாகமம் 16:- வாராகம், கவசம்,
பாசபந்தம், பிங்கலாமதம், அங்குசம், தண்டதரம், தனுதரம், சிவஞானம், விஞ்ஞானம், சீகாலஞானம்,
ஆயுர்வேதம், தனுர்வேதம், சர்பதம், ஷ்டரவிபேதனம்,
கீதகம், பரதம், ஆதோத்தியம்.
22. இலளிதத்திற்கு உபாகமம் 3:- இலளிதம்,
இலளிதோத்தரம், கௌமாரம்.
23. சித்தத்திற்கு உபாகமம் 4:- சாரோத்தரம்,
ஔசனசம், சாலாபேதம், சசிமண்டலம்.
24. சந்தானத்திற்கு உபாகமம் 7:- இலிங்காதியட்சம்,
சுராத்தியட்சம், அமரேசுரம், சங்கரம், அசங்கியம், அனிலம், துவந்தம். 25. சர்வோக்தத்திற்கு உபாகமம் 5:- சிவ
தருமோத்தரம், வாயுப்புரோத்தம்,
திவ்வியப்புரோத்தம்,ஈசானம், சருவோற்கீதம்.
26. பாரமேசுரத்திற்கு உபாகமம் 7:- மாதங்கம்,
யட்சணிபதுமம், பாரமேசுரம், புட்கரம், (பௌட்கரம்) சுப்பிரயோகம், அமிசம், சாமானியம்.
27. கிரணத்திற்கு உபாகமம் 9:- காருடம்,
நைருதம், நீலம், இரூட்சம், பானுகம், தேனுகம், காலாக்கியம், பிரபுத்தம், புத்தம்.
28. வாதுளத்திற்கு உபாகமம் 12:- வாதுளம்,
வாதுளோத்தரம், காலஞானம், பிரரோகிதம், சருவம், தருமாத்மகம், நித்தியம், சிரேட்டம், சுத்தம்,
மகானனம், விசுவம், விசுவான்மகம்.
ஆக உபாகமங்கள் இருநூற்றேழு - 207
காமிகம் முதலிய இருபத்தெட்டு மூலாகமங்கள் சிவபெருமானுக்குப் பாதம் முதலிய உறுப்புகளாகவும், ஆடை, ஆபாரணம் முதலிய பிற பொருள்களாகவும் அமைந்த முறைமை ஆகமங்களுட் சொல்லப்படும்.
எண்ணற்ற கிரந்தங்களாயும், உபாகமங்களாயும் விரிந்த ஆகமங்களைப் பின்வந்த ஆசிரியர்கள் பலவாறு சுருக்கிச் சொன்னார்கள். அச்சுருக்கங்களிற் சிலவே இப்பொழுது கிடைக்கும் ஆகமங்கள்.

பண் :

பாடல் எண் : 3

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த மேலான ஆகமங்கள் வானத்தில் உள்ள தேவர் களாலும் அறிதற்கரிய பொருள்களை உடையன. அதனால், அவை அளவிறந்து கிடப்பினும், உயிர்கட்குப் பயன்படுதல் அரிது.

குறிப்புரை :

`அஃது அறிந்து சிவபெருமான் அவற்றைத் தானே நேராகவும், பிறர் வாயிலாகவும் பலர்க்கு விளக்கியருளினான்` என்பது குறிப்பெச்சம். ``நீர்மேல் எழுத்து`` பயன்கொள்ளுதல் அரிதாதற்கு உவமை. `அங்ஙனம் விளக்கம் பெற்றோர் இவர்` என்பதனை வருகின்ற திருமந்திரங்களால் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 4

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

பொழிப்புரை :

சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

குறிப்புரை :

இஃது ஆகமங்கள் நிலவுலகிற்கு வந்த வரலாற்றைத் தொகுத்துக் கூறியது. பராபரம் - உயர்ந்ததும் தாழ்ந்தனவும் ஆகிய பொருள்; அவை பதியும், பசு பாசங்களுமாம். எனவே, `முப் பொருளின் இயல்பு` என்றவாறாம். தரனாய் - ஏற்ற பெற்றியில் நிற் பவனாய். இங்ஙனங் கூறவே, `சிவபெருமான் ஆகமங்களை முதற் கண் அனந்ததேவர் வாயிலாகச் சீகண்ட உருத்திரர்க்கு உணர்த்தி, பின்பு அவர் வாயிலாகத் தேவர், முனிவர், கணங்கட்கு உணர்த் தினான்` என்பது கொள்க.`வேதங்களை அனந்ததேவர் வாயிலாகப் பிரமதேவர்க்கு உணர்த்தினான்` என்ப. அரன் - உருத்திரன்; அஃது ஏற்புழிக் கோடலால், சீகண்ட உருத்திரரைக் குறித்தது. பரமசிவன் சீகண்ட உருத்திரராய் நிற்றல், அவரே தானாக அவருள் நிற்றல். சிவ தன்மம் - சிவபுண்ணியம். `அவை சரியையும், கிரியையும்` என்பது, ``நல்லசிவ தன்மத்தால் நல்லசிவயோகத்தால் நல்லசிவ ஞானத்தால்`` (திருக்களிற்றுப்படியார். 15) என்பவற்றால் அறிக. சிவதன்மங் கூறவே, இனம் பற்றிச் சிவயோகமும் கொள்ளப்படும். ``பராபரம், சிவதன்மம்`` என்றவை, ஏனையிடங்களிலும் சென்று இயையும். எனவே, சிவாகமங்கள் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நாற்பாதங்களாய் உள்ளன என்பது உணர்த்தப்பட்டதாம்.
சிவாகமங்களில்,
சிவபெருமானது இலிங்கத் திருமேனி, உமா மகேசுர மூர்த்தம் முதலிய உருவத் திருமேனி, நந்திதேவர் முதலிய பரிவார மூர்த்தங்கள் முதலியவற்றின் அமைப்புமுறைகளையும், திருக் கோயில் அமைப்பு, புட்ப விதி, பிராயச்சித்த விதி, பவித்திர விதி, செப மாலை யோகபட்டம் முதலியவற்றின் அமைப்பு, அந்தியேட்டி விதி, சிரார்த்த விதி முதலியவற்றையும் கூறும் பகுதிகள் சரியாபாதம் எனவும்,
மந்திரங்களின் உச்சாரணமுறை, குண்டமண்டல வேதிகை முதலியவற்றின் அமைப்புக்கள், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் முதலியவற்றின் விதிகள், சமய விசேட நிருவாண தீட்சைகள் ஆசாரியாபிடேகம் என்பவற்றின் விதிகள், ஆன்மார்த்தமும், பரார்த்தமும் ஆக அமைந்த நித்திய நைமித்திய பூசை முறைகள் விழா முறைகள் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் கிரியா பாதம் எனவும்,
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகளின் முறைமையும், மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களின் இயல்பும், ஞானபாதத்திற் சொல்லப்படும் பொருள்களைப் பாவனையாற்காணும் முறைகளும் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் யோக பாதம் எனவும்,
`பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பு, உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள், அண்டகோடிகளின் இயல்புகள், நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதத்தின் இயல்புகள், வினைவகை வினைப்பயன் வகைகள், ஞானத்தின் படிநிலைகள், அவற்றின் பயன்கள் முதலிய வற்றைக் கூறும்பகுதிகள் ஞானபாதம் எனவும்
உணர்க.
சிவாகமங்களைச் சிவபெருமான் சொல்லியருளினமையைத் திருஞானசம்பந்தரும்,
``திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான்``
-தி.2 ப.43 பா.6
எனக் குறிப்பிட்டருளினமை காண்க. இதனுள், ``அறங்கொண்டு`` என்றது, ``சார்ந்தாரைக் காத்தல் வேண்டுவதாகிய கடன் பற்றி`` எனப் பொருள் தரும். உரன் - உரம் உடையவன். உரம் - மெய்யுணர்வு, ``உரனென்னுந் தோட்டியான்`` (குறள். 24) என்பதிற்போல, ஓங்கி - ஓங்கப்பெற்று. ஓங்குதல் - விளங்குதல்.

பண் :

பாடல் எண் : 5

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

பொழிப்புரை :

தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.

குறிப்புரை :

``உவமா`` என்பது, `ஒப்பு` என்னும் பொருளதாகிய ஆரியச்சொல். `உருத்திரன், திருமால், பிரமன்` என்போர் சுத்த மாயையில் உள்ளோர் என்பது அறி வித்தற்கு, `உருத்திர தேவர்` என்றும், ``தவமால்`` என்றும், ``பிர மேசர்`` என்றுங் கூறினார். மால் - பெருமையுடையோன். தவமால் - மிக்க பெருமையுடையோன். முதற்கண் கூறியவாறு அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்ட அறுபத்தறுவரும் சதாசிவ புவனத்தில் வாழும் அணுசதாசிவராகலின், இது அவ்வாகமங்கள் கீழ்க்கீழ்ப் புவனங்களில் வந்த முறைமை கூறியவாறு. மந்திர மகேசுரர் ஈசுர தத்துவத்திலும் உருத்திரர் முதலிய மூவரும் சுத்த வித்தியாதத்துவத்திலும் வாழ்வார் என்று அறிக. உருத்திரதேவர்க்கு மந்திர மகேசுரரால் உணர்த்தப்பட்டது எனவே, `சுத்த வித்தையில் அவரோடு ஒப்ப நிற்கும் அனந்த தேவர்க்கும் அவர்வழியாகவே உணர்த்தப்பட்டது` என்பதும், அங்ஙனமாயினும் அனந்ததேவர் சதாசிவரிடமிருந்தே ஆகமங்களைப் பெற்றார் எனச் சில ஆகமங்களில் கூறப்படுதல் முகமனுரை என்பதும் பெறப்படும்.
நந்தி பெருமான் ஆகமங்களில் ஒன்பதைச் சிறப்பாகப் பெற்றமையாவது, ஆசிரிய வழிமுறையால் (குருபரம்பரையால்) சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோராகிய மக்கட்கு விண்ணோர் தமக்கும் விளங்கரிய எல்லா ஆகமங்களின் பொருளையும் எளிமை யாகத் தொகுத்துணர்த்தற் பொருட்டாம். எனவே, அவ்வொன்பது ஆகமங்களுள் ஏனை எல்லா ஆகமப் பொருளும் அடங்கி நிற்றல் பெற்றாம். ``ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு`` (தி.10 ஐந்தாம் தந்திரம்) என்னும் திருமந்திரத்தால் இக்கருத்து வலியுறுத்தப் படுகின்றது. `அவ்வாகமங்கள் இவை` என்பதனை அடுத்துவரும் திருமந்திரத்தால் உணர்த்துவார். `அவற்றை நந்தி பெருமானிடம் கேட்டு உலகிற்கு உணர்த்தினோர் இந் நாயனாரை உள்ளிட்ட எண்மர்` என்பதையும், `இவர் வழியாக மற்றும் பலர் அவற்றை உலகிற் பரப்பினர்` என்பதையும் முன்னே கூறினார் (தி.10 எட்டாம் தந்திரம்) இன்னும் சனற்குமார முனிவர் கேட்டுச் சத்திய ஞான தரிசனிகள் நில வுலகில் வழியாகப் பரஞ்சோதிமாமுனிவர்க்கும், அவர்வழியாக திரு வெண்ணெய்நல்லூரில் `சுவேதவனப் பெருமாள்` என்னும் பிள்ளைத் திருநாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவர்க்கும் உணர்த்தற்ப்பட்டு, அவர் வழியாகப் பலவிடத்தும் ஆகமப்பொருள் விளங்கிவருதல் அம் மரபினராகிய உமாபதிதேவ நாயனார் அருளிச் செய்த சிவப்பிரகாச நூலாலும், பிறவற்றாலும் நன்கறியப்பட்டது.
`சிவபெருமான் ஆகமங்களைப் பிரதி சங்கிதை முறையால் (ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றாக வகுத்துக் கூறும் முறையால்) பிரணவர் முதலிய இருபத்தெண்மர்க்கும் நேரே உணர்த்தி, மகௌக முறையால் (எல்லாவற்றையும் ஒருவர்க்கு ஒருங்கு தொகுத்துக் கூறும் முறையால்,) அனந்த தேவர் வாயிலாகச் சீகண்டருக்கு உணர்த்த, அவர் நந்திபெருமானுக்கும் அவ்வாறே அனைத்தையும் உணர்த்தி னார்` என ஆகமங்களில் கூறப்படுதலால், ``நவ ஆகமம் எங்கள் நந்திபெற்றானே`` என இங்கு நாயனார் அருளிச்செய்ததற்கு, குருபரம்பரையால் நிலவுலகிற்குத் தருமாறு உணர்த்தப்பட்டவை ஒன்பது` என்பதே கருத்தாதல் அறிக.
ஆகமங்களைச் சிவபெருமானிடம் நேரே கேட்டவர் மந்திர மகேசுரர் ஆதலின் அது `அதிபர சம்பந்தம்` என்றும், மந்திர மகேசுரரிடம் அனந்ததேவர் கேட்டது `பர சம்பந்தம்` என்றும், அனந்த தேவரிடம் சீகண்டர் கேட்டது `மகா சம்பந்தம்` என்றும், சீகண்டரிடம் நந்திபெருமான் கேட்டதும், திருமால் முதலிய தேவர்கள் கேட்டதும் `அந்தராள சம்பந்தம்` என்றும், நந்தி பெருமானிடத்தும், திருமாலி டத்தும், மற்றைய தேவர்களிடத்தும் முனிவர்களும் சித்தர்களும் கேட்டது `திவ்வியசம்பந்தம்` என்றும், தேவர்களிடமும், முனிவர்களிடமும் மக்கள் கேட்டது `திவ்வியாதிவ்விய சம்பந்தம்` என்றும், மக்களிடம் மக்கள் கேட்டது `அதிவ்விய சம்பந்தம்` என்றும் சொல்லப் படுகின்றன.
`வேதம், சிவாகமம்` என்னும் இரண்டும் `ஆப்த வாக்கியம்` எனப்படுகின்றன. `ஆப்தன்` என்பதற்கு, `உள்ளது கூறுவோன்` என்பது பொருள். பொதுமக்கட்கு நன்மக்கள் ஆப்தர். நன்மக்கட்கு முனிவர்களும், தேவர்களும் ஆப்தர். முனிவர்கட்கு நந்தி பெரு மானும், தேவர் கட்குப் பிரமதேவரும் ஆப்தர். நந்திதேவர், பிரம தேவரினின்று மேன் மேல் உள்ளவர் கீழ்க்கீழ் உள்ளவருக்கு ஆப்தர். எல்லார்க்கும் ஆப் தராய்த் தமக்கோர் ஆப்தர் இல்லாத அதிபரமாப்தர் சதாசிவ நாயனார். அவர்க்குமேல் உள்ள சத்தியும், சிவமும் இலய நிலை (ஒடுக்கநிலை) ஆதலின், அங்கு வேத சிவாகமங்கள் விளங்கித் தோன்றுதல் இல்லை.

பண் :

பாடல் எண் : 6

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நந்திபெருமான் சீகண்டரிடம் சிறப்பாகப்பெற்ற ஒன்பது ஆகமங்கள், `1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6 ... ... 7. ... ... 8 சுப்பிரபேதம், 9. மகுடம்` என்பன.

குறிப்புரை :

இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, `நாயனார் திருமொழியன்று` என்பது தெளிவாய்த் தெரிகின்றது. எவ்வாறெனில், `யாமளமாகும் காலோத்தரம்` என்பது பெரும்பான்மையும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாய் உள்ளது. அவ்வாறு கொண்டால், ஒன்பது கூறவந்தவர் ஒன்றனை மறந்தார் ஆவர். `யாமளம், ஆகும் காலோத்தரம்` என இரண்டாகக் கொள்ளினும், யாமளம் சைவாகம மன்று; வாம தந்திரம். அது சைவத்திற்குப் புறம்பானது. `காலோத்தரம்` என்ற பெயரில் பல உள. ஒன்றேனும் மூலாகமம் அன்று. அதனால், வாம மதத்தினர் ஒருவர் தமது தந்திரத்தையும் திவ்வியாகமங்களில் ஒன்றாக்கிக்கொள்ள இத்திருமந்திரத்தைத் திரித்துவிட்டார் போலும்! அவ்விடத்தில் நாயனார் கூறிய இரு ஆகமங்கள் இவை என்பது அறியப்படாது போயினமை வருத்தத்திற்குரியது. `நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்கள் ஒன்பது` என்பதற்கேற்ப அவர்பால் அவற்றைப்பெற்ற இந்நாயனார் இந்நூலையும் ஒன்பது தந்திரங்களாக அருளிச்செய்திருத்தல் அறியத் தக்கது. எனினும், ஒவ்வோர் ஆகமத்தையே ஒவ்வொரு தந்திரமாகச் செய்தார் என்பதற்கில்லை. ஏனெனில், அவ்வாறு செய்திருப்பின், அவற்றின் தொடக்கத்தில் `இன்ன ஆகமத்தைச் செப்புகின்றேன்` எனச் சொல்லித் தொடங்கி யிருப்பார். அவ்வாறன்றி முதற்கண் ``சிந்தைசெய்து ஆகமம் செப்ப லுற்றேனே`` எனப் பொதுப்படக்கூறி அமைந் தமையானே அது பெறப்படுவதாம்.
ஆகமங்கள் பலவும் தனித்தனி வேறு வேறு பொருளைக் கூறுவன அல்ல; எல்லா ஆகமங்களும் எல்லாப் பொருளையும் கூறு வனவே எனினும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் கூறுமாற்றால் வேறு வேறு ஆகமங்களாயின. ஆகவே, நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்களை உணரின், அனைத்து ஆகமங்களை யும் உணர்ந்ததாம். அவற்றின் பொருளையே கூறினமையால், இந் நூலை உணரினும் அனைத்து ஆகமங்களும் உணர்ந்தவாறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறியமாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்.

குறிப்புரை :

என்றது, வருகின்ற திருமந்திரங்கட்குத் தோற்றுவாயாக லின், `அதனால் அவற்றின் பொருளை அறிதற் பொருட்டுப் பல மொழிகளை அவன் படைத்தனன்` என்பது குறிப்பெச்சமாக உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

பொழிப்புரை :

பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

குறிப்புரை :

`அவற்றையே பின்னர் பாணினி முனிவர்க்கும், அகத்திய முனிவர்க்கும் செப்பஞ் செய்யுமாறு உணர்த்தி, உலகில் பரவச்செய்தான்` என்க. `வடமொழிக்கு இந்திரனால் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமே முதல் நூல்` என்றல் பழங்கதையேயாக, உண்மையில் உள்ளது பாணினீயமே. அதனால்,
``வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்``
-காஞ்சிப்புராணம்
என்றலே சிவநெறி மரபு என்க.
பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்துசென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரியமொழியும், அவ்வாறன்றி ஒருதலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன்பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ்மொழியுமாக இருமொழியை இறைவன் சொல்லியருளினான் என்பது,
``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்`` -தி.10. பா.26
என நாயனார் மேலே அருளிச்செய்தவாற்றால் பெறப்படும். இவ்வாறு இவ்விருமொழியையும் ஒப்பக்கொண்டதன்றி ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் ஆன்றோர் கொண்டிலர் என்பது இதனால் பெறப்பட்டது. இங்ஙனமாகவும் சிலர் இவற்றுள் ஒன்றைப் பற்றி மற்றொன்றனை இகழ்வர். அவர், இது முதல் மூன்று திருமந்திரங்களை, `நாயனார் வாக்கல்ல` என விலக்கிச் செல்வர். அவர், ``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர`` (தி.1 ப.77 பா.4) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற் போல்வன வற்றையும் அவ்வாறு விலக்கிப்போவர் போலும்!
மொழிகளது நிலை, `நுண்மை, பொதுமை, இடைமை, பருமை` என நான்கு வகைப்படும். அவை முறையே, `சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். அவற்றுள், `மத்திமை, வைகரி` எனப்படுகின்ற இடைமொழி பரு மொழிகள் தாம் ஆரியம், தமிழ் முதலிய பாகுபாடுகளைப் பெற்று நிற்கும். அவற்றிற்கு முந்திய நிலைகள் பாகுபாடின்றியே விளங்கும். அவற்றுள் பிரணவர் முதலியோரும் அனந்த தேவரும் ஆகமங்களைப் பெற்றது `சூக்குமை` எனப்படும் நுண்மொழியினாலாம். சீகண்டர் பெற்றது `பைசந்தி` என்னும் பொதுமை மொழியால். சீகண்டரிட மிருந்து நந்தி முதலிய கணங்கள், தேவர், முனிவர், சித்தர் பெற்றது இடைமொழியாகிய மத்திமையினால். அவர்களிடமிருந்து மக்கள் பெற்றது `வைகரி` எனப்படும் பருமொழியினால். `சிலர்க்கு இயல் பாகவே மெய்யுணர்வு உண்டாயிற்று` என்றல் இறைவன் உள்நின்று நுண்மொழி இடைமொழிகளால் விளக்கியதே என்க. அதனால், கணங்கள் முதலியோர் பொருட்டே பாகுபட்ட மொழிகளை இறைவன் சொல்லினன்` எனக் கொள்க. இவற்றுள், இடைமொழிக்கு (மத்தி மைக்கு) முற்பட்டவற்றையே, ``சொற்பிரிவிலாத மறை`` (தி.3 ப.78 பா.2) என்று திரு ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதற்கு இவ்வாறு பொருள் கொள் ளாது `சொற்கள் நீங்காது நிற்கின்ற மறை` என உரைப்பின் பொருள் படாமை அறிக. ``எழுதா மறை`` எனப்படுவதும் இச்சொற்பிரிவிலாத மறையே. அதனையே ஆரிய வேதத்திற்கு மரபாகக் கொண்டனர் அந்தணர். `எழுதா மறை` என்பதற்கு, `எழுத வாராத மறை` என்பதே பொருளன்றி, `எழுதாமல் இருப்பதையே மரபாகக் கொண்ட மறை` என்பது பொருளாகாது.
``ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றிஉரைத் தேட்டின் புறத்தெழுதார்`` -திருவள்ளுவமாலை. 15
என்ற செய்யுளும், `எழுதப்படுவதனை எழுதாதிருக்கின்றனர் அந்தணர்` என்றே கூறிற்று. எனவே, `எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை` (தி.12 பெ.பு.ஞானசம். 75) என்பதில், `எழுது மறை` என்றது, `சொற்பிரிவிலாத மறையைத் `தமிழ்` என `ஒரு மொழியாய்ப் பிரிந்து தோன்றி எழுதப்படுமாறு வைத்த மறை` என்றவாறாயிற்று.
இதனால், மேலுலகத்தில் பிரணவர் முதலியோர்க்குச் சொல்லிய ஆகமங்கள் கீழுலகத்தார்க்கு விளங்குதற்பொருட்டு இறைவன் பருமொழிகளைப் படைத்தமை கூறப்பட்டது. `ஆகமங்கள் விளங்குதற்பொருட்டே மொழிகளைப் படைத்தான்` என்றமையால், அம்மொழிகளில் அவ்வாகமங்களை அவன் கூறினமையும் பெறப்படும்.
``மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்``
-தி.8 திருவாசகம். கீர்த்தி. 9. 10
``கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்``
-தி.8 திருவாசகம் கீர்த்தி. 16. 20.
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுதே
தெள்ளும் வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
-தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 50.
என்றாற்போல வருவன பலவும் சிவபெருமான் தனது ஆகமங்களைப் பருமொழியால் விளக்கிய வரலாற்றைக் குறிப்பனவேயாம். இறைவன் படைத்த பருமொழியை இந்நாயனார், `ஆரியம், தமிழ்` என இரண்டாகக் கூறினமையின், ஆகமங்கள் அவ் இருமொழியிலும் கூறப்பட்டன என்றல் பொருந்துவதே என்க. இதனானே, பிறநெறிகள்யாவும், `ஆரியம் ஒன்றே கடவுள்மொழி; தமிழ் முதலிய பிறமொழிகள் யாவும் தேசியம் - அஃதாவது அவ்வந் நிலப்பகுதியில் வாழும் மக்கட்கு அமைந்த மொழி` என்னுமாயினும், சிவநெறி, ஆரியம் தமிழ் இரண்டையுமே கடவுள்மொழி என ஒப்பக்கொள்வது என்பது பெறப்பட்டது. இந்நாயனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பின் பிறர் சிலரும் இவ்வாறு கொண்டனர்.

பண் :

பாடல் எண் : 9

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்களைப் பாசத்தளை யினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயி லாகத் தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையே யன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்.

குறிப்புரை :

``உயிர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``அவிழ்க் கின்றவாறு`` என்றார். ``அது`` என்றது, `அவ்வினத்தை` என்றவாறு. `சிமிட்டலை` எனவும் பாடம் ஓதுப. `உணரலும்` என்ற உம்மை, உணர் தற்கு அருமை குறித்து நின்ற சிறப்பும்மை. `ஆரியம், தமிழ் இரண்டனையும் உணர்தல் சிறப்புடைத்தாயினும் அஃது எல்லார்க்கும் கூடாமையின், ஒன்றை உணரினும் பயனைப்பெறுதல் தப்புதல் இல்லை` என்றவாறு. ஈற்றடி ஆசிடை வந்த மூன்றாம் எழுத்து எதுகை.

பண் :

பாடல் எண் : 10

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.

பொழிப்புரை :

கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. அதனால், `கற்றவர்` எனப்படுவார், பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.

குறிப்புரை :

`அவனன்றி ஓரணுவும் அசையாது` ஆதலின், உலகில் மொழிகள் பலவாய்த்தோன்றி வளர்தலும் சிவபெருமானது திருவுளத்தின்படியே எனவும், `அங்ஙனம் அவன் திருவுளம் செய்தது, தான், பிரணவர் முதலியோர், அனந்ததேவர், சீகண்டர், உமையம்மை முதலியோர்க்குச் சொல்லிய ஆகமப் பொருள்கள் நிலவுலகில் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் விளங்குதற்பொருட்டே` எனவும் கூறுவார், ``பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறம் சொன்ன ஆறே`` என்றார். `சொன்ன ஆறே` என்பதில் ``சொன்ன`` என்றதை ``அன்போடியைந்த வழக்கு`` (குறள். 73) என்பதில் `இயைந்த` என்றதுபோலக் கொள்க.
ஆறு - வழி; வாயில். ``பதினெட்டுப் பாடை`` என்றது `மொழிகள் பதினெட்டு` என்னும் வழக்குப் பற்றி. எனவே, `பன்மொழியும்` என்பதே அதற்குக் கருத்தாகும். ஆரியம், தமிழ் இரண்டும் முன்னர்க் கூறப்பட்டமையின், `பன்மொழிகள்` என்றதில் அவை இரண்டும் ஒழிந்தனவே கொள்ளப்படும். ``கண்டவர்`` என்றது, ``அறிந்தவர்`` என்றபடி. `அவ்வம்மொழிகளில் வல்லோர் அவை வாயிலாக உயர்ந்த பொருள்களை மக்கட்கு உணர்த்துவாராதலின், அப்பொருள்களும் தமிழ்ச்சொல் வடசொற்களில் அமைந்த பொருளின் பகுதியவே; பிற அல்ல` என்பார், ``பண்டிதராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார்`` என்றார். ``கருத்தறிவார்`` என்றதனால், `அச்சொற்களை அறிதல் வேண்டும் என்பதில்லை` என்றவாறாயிற்று. அங்ஙனமாகவே, `அவற்றில் உள்ள பொருள்கள்` தமிழ்ச்சொல் வடசொற்களில் உள்ள பொருள்களின் பகுதியே என்பதும் உணர்த்தப்பட்டதாம். அதனானே, `தமிழும், ஆரியமுமே தொன்மை மொழிகள்` என்பதும், `பிறமொழிகள் இவற்றின் வழித்தோன்றின` என்பதும் போந்தன.
இதனால் வழிமொழிகளாகிய பிறமொழிகளும் பயனுடைய வாதலை அறிந்து அவற்றை இகழாமை வேண்டும் என்பது கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக