திருமந்திரம் - எட்டாம் தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.

பொழிப்புரை :

ஒரு பையில் பல பண்டங்களை அடைத்து வைத்தல் போல, யாவராலும் நன்கு அறியப்படும் உடம்பாகிய ஒரு பை ஒவ்வோர் உயிர்க்கும் கிடைத்திருத்தல் கண்கூடாக, அதன்கண் அடைக்கப்பட்டுள்ள பண்டங்களோ பல உள்ளன. (அவற்றை ஆராய் கின்றார் ஒருவரும் இல்லை) இனி, அந்தப் பை மாயம்போலக் கட்புல னாகி, விரைவில் மறைவதாகும். என்றாலும், அந்தப் பைக்குள்ளே மற்றொரு பையும் உண்டு; (அதனை அறிந்தோர் சிலரே.) யாவரும் அறிந்த அந்தப் பைக்குள் அதற்கு வேறாகிய ஒன்று உள்ளதோ, இல்லதோ` என ஐயுறுமாறு ஒளிந்து நிற்கின்ற உயிர் அதனை விட்டு வெளியே போய்விடுமானால், தோன்றியழிவதாகிய அந்த உடம்பு மண்ணோடு மண்ணாய்ப்போக, அதனை நிலையானதாகக் கருதி, அதனைத் தமக்கு உறவாகத் தெளிந்திருந்தோர் திகைப்புற்று நிற்கும் நிலை இரங்கத்தக்கதாகும்.

குறிப்புரை :

`காயப்பை` என்றது உருவகம், சரக்காவன. என்பு, தசை, நரம்பு, குருதி, கோழை முதலியனவற்றை, `சரக்கு` எனவே கூறியது சிறப்புருவகம். `காயப்பை ஒன்று` என்பதன் பின்னும் `உண்டு` என்பது எஞ்சி நின்று. ஈரிடத்தும் `மாய் அப்பை` எனப் பிரிக்க மாய்தல் கூறவே, தோன்றுதல் தானே பெறப்பட்டது. `மற்றும் ஓர் பை உண்டு` என்பதை உணர்த்தப்புக்கவர், `முற்கூறிய அந்தப் பையே அன்றி` என்றற்கு `மாய் அப்பை ஒன்றுண்டு` என அதனையே மீளச்சுட்டிக் கூறினார். முதற்கண் கூறிய பையை `மாயும் பை` என்றதனால், மற்றும் ஒன்றாகக் குறிக்கப்பட்ட பை, `மாயாப் பை` என்பது பெறப்பட்டது. மாயும் பை தூல உடம்பும், மாயாப் பை சூக்கும உடம்புமாம் என்க. உயிர்கட்கு அவ்வப்பொழுது வினைக்கீடாக விரைவில் மாறி மாறி வருவது தூலவுடம்பேயாதலும், நுண்ணுடம்பு அவ்வாறன்றி, உயிர் வீடுபெறும் வரையிலாவது, அல்லது உலகம் அழியும் வரையிலாவது உயிர்களோடு நீங்காது நிற்பது ஆதலும் அறிக. இங்ஙனமாகவே, பஞ்ச பேதங்களுள் `தூலம, சூக்குமம்` என்னும் இரு பேதங்களைக் குறிப்பிட்டு அவற்றது இயல்பு தொகுத்துக் கூறியவாறாயிற்று. என்பு, நரம்பு, குருதி முதலியவற்றின் கூட்டமே தூல தேகமாயினும், அவை அங்ஙனம் வெளித் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றித் தூல தேகத்தைப் பையாகவும், என்பு முதலியவற்றை அதனுள் அடைக்கப்பட்ட சரக்காவும் உருவகம் செய்தார். தூலதேகத்தைப் `பை` என்றமையால் அதனோடு ஒப்ப ஏனைய தேகங்களையும் `பை` என்றார். `ஆக` என்பது ஈறு குறைந்து நின்றது. `மற்றும் ஓர் பை உண்டு` என அறிவுறுத்தமையால், `உடம்பாவது கண் கூடாய்த் தோன்றி யழிகின்ற அஃது ஒன்றுமே போலும்` எனவும், `அது மாய்ந்தபொழுது உயிர் தனித்து நிற்பதுபோலும்` எனவும் மயங்காது, `தூல உடம்பு நீங்கிய பொழுது உயிர் சூக்கும உடம்பளவாய் நிற்கும்` எனவும், தூல உடம்பு உள்ளபொழுது அதனை உயிர் சூக்கும உடம்பு வழியாக இயக்கும்` எனவும் உணர்க - என உணர்த்தினமை காண்க. . ஈற்றில், `இரங்கத் தக்கது` என்பது அவாய் நிலையாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 2

அத்தன் அமைத்த உடல்இரு கூற்றினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமன்ஆங் காரம் புரியட்ட காயமே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்காக அமைத்துக் கொடுத்த, `தூலம், சூக்குமம்` என்னும் இருவகை உடம்புகளுள் (தூலஉடம்பின் இயல்பு பற்றி மேலே கூறினோம்) இனி அதுபோலப் புலால் நாற்றம் நாறுதல் இன்றியே உயிர்க்குப் பயன்படுகின்ற சூக்கும தேகத்தைப் பற்றிக் கூறுமிடத்துச் சத்தம் முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், அந்தக் கரண நான்கனுள் சித்தம் ஒழிந்த ஏனை மூன்றும் ஆக எட்டும் கூடிய தாகும். அதனால் அது, `புரியட்டகாயம்` என்றும் சொல்லப்படும்.

குறிப்புரை :

ஐவகை உடம்புகளில் மேற்கூறிய இரண்டு உடம்பின் இயல்பினையே கூறப் புகுந்தமை பற்றி, `அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்` என்றாரல்லது, `ஏனை உடம்புகள் அத்தனால் அமைக்கப் பட்டன அல்ல` என்றிலர் ஆகலின், அனைதுடம்புகளும் அத்தனால் அமைக்கப்பட்டன ஆதற்குத் தடையின்மை அறிக. `அனைத்தையும் ஆக்கி, அழிக்கும் அத்தன் ஒருவன் உளன்` என்பதை மேலெல்லாம் பல்லாற்றானும் தெளிவித்துப் போந்தமையால், இங்கு அதனை நினைப்பிக்கும் அளவில் `அத்தன் அமைத்த உடல்` என அனு வாதமாகக் கூறினார். வகையை `கூறு` என்றார். சத்தம் முதலிய ஐந்தும் சிறப்பு நிலை எய்தியவழியே செவி முதலிய பொறிகட்குப் புலனாகும். அப்பொழுது அவை `புலன்` என்றும், `விடயம்` என்றும் சொல்லப் பட்டு, ஆகாயம் முதலிய பூதங்களின் குணமாய் நிற்கும். அப்பொழுது அவை, தாத்துவிகங்களாம். அவை சிறப்புநிலை எய்தாது பொதுமை யில் நிற்கும்பொழுது பொறிகட்குப் புலனாகாது, புலனாகாது, ஆகாயம் முதலிய பூதங்கள் தோன்றுதற்குக் காரணமாய் நிற்கும். அப்பொழுதே அவை `தன்மாத்திரைகள்` எனப்படும். தன் மாத்திரைகள் தத்துவங்களாம். ஆகாயம் முதலிய பூதங்கட்குக் காரணம் ஆதல் பற்றித் தன்மாத்திரைகள் `சூக்கும பூதம்` என்றும் சொல்லப்படும்.
அந்தக்கரணங்கள் நான்கனுள் மேல் நிற்பதாகிய சித்தம் பரசரீரப் பகுதியாதலின், ஏனை மூன்றுமே சூக்கும சரீரப் பகுதியாம் என்க.
ஆகம பேதங்களின், `தாத்துவிகங்களே தூலசரீரம்; தத்துவங்கள் யாவும் சூக்கும சரீரம்` என்னும் ஒரு கருத்து உள்ள தாயினும் இங்கு நாயனார், `தன்மாத்திரை ஐந்தும், அந்தக்கரணம் மூன்றும் கூடியதே சூக்கும சரீரம்` எனத் தெளிவாகக் கூறினமையின், மேற்கூறிய ஒரு கருத்தை இங்கு நோக்க வேண்டுவதில்லை, `இங்குக் கூறப்பட்ட கருத்தே காலோத்தரம் முதலிய ஆகமங்களில் சொல்லப் பட்டது. என்றார் சிவஞான போத மாபாடியம் உடையார். l
`மனம்` என்பது கடைக் குறைந்து `மன்` என நின்றது,
இதனால், மேற்கூறிய இரு பேதங்களுள் `சூக்குமம்` எனப்பட்ட உடலின் இயல்பு வேறெடுத்து வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.

பொழிப்புரை :

எட்டுக் கருவிகள் கூடியதனால் `புரியட்ட காயம்` எனப்படும் உடம்பு - என மேற்கூறப்பட்ட சூக்கும சரீரத்திலிருந்தே மாபூதங்கள் ஐந்தும், இருவகை இந்திரியங்களும் தோன்றும். (எனவே, அப்பதினைந்தும் கூடியதே தூலசரீரமாம்.) இனித்தூல சரீரத்தில் உள்ள இருவகை இந்திரியங்களும், சூக்கும சரீரத்தில் உள்ள அந்தக்கரணங்கள் மூன்றும் `சரீரம்` எனப்பட்டாலும், உண்மையில் அவை கரணங்களேயாம்.
அறிவுக்குத் துணையாதல்பற்றி ஆன்மாவோடு பெரிதும் ஒற்றுமைப் பட்டு நிற்கின்ற அவற்றைக் கொண்டே சிவன் ஆன்மாவின் அறிவைப் புலன்களில் அகப்படுத்தி வைத்துப் பின்பு அப்புலன்க ளினின்றும் பிரித்துவிடுவான்.

குறிப்புரை :

`ஐந்து` என்றது மாபூதங்களையாதல் தெளிவு ஆகும்` என்பதனை `இந்திரியங்கள்` என்பதன் பின்னும் கூட்டுக. `இந் திரியங்கள்` எனப் பொதுப்படக் கூறியதனால் ஞானேந்திரியம், கன் மேந்திரியம் இரண்டும் கொள்ளப்படும். மாபூதங்கள் தன்மாத்திரை களிலிருந்தும், ஞானேந்திரியங்கள் அகங்காரத்தின் சாத்துவிகக் கூற்றி லிருந்தும், கன்மேந்திரியங்கள் அகங்காரத்தின் இராசதக் கூற்றி லிருந்தும் தோன்றுவனவாம். இங்ஙனம் தோன்றிய பதினைந்தனுள் மாபூதங்களே எலும்பு, தோல், தசை முதலியவனவாகப் பரிணமித்துத் தூலதேகமாக, இருவகை இந்திரியங்களும் பிறவாறு பரிணமியாது நிற்கும். ஆகவே, மாபூதங்களே உண்மையில் தேகம் ஆக, இருவகை இந்திரியங்கள் அத்தேகத்தின் நிற்றலால் ஒற்றுமை பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும், அந்தக் கரணங்களும் அவ்வாறு சூக்கும தேகத்தில் நிற்றல் பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும் உண்மையில் கரணங்களே என்பது உணர்த்தற்கு, `இந்திரியங்களும்` மூன்றும் கரணமாதாயிடும்` என்றார். இவ்வாறு `மூன்றும்` என்பத னோடு இயைதற் பொருட்டு, `ஆகும்` என்பதனை மீண்டும் கூறாது விடுத்தார். ஆகவே, `இந்திரியங்களும்` என்பதனை `இந்திரியங்களும் ஆகும்` எனவும் `இந்திரியங்களும் மூன்றும்` எனவும் இருமுறை ஓதி இயைத்துக் கொள்க. சூக்கும சரீரத்திலிருந்தே தூல சரீரம் தோன்றும் என்றற்கு, `எட்டினில் ஐந்து ஆகும்; இந்திரியங்களும் ஆகும்` என்றும், `தத்துவங்கள் யாவும் பொதுவாக, `தனு` என்று கூறப்பட்டாலும், அவற்றுட் சில உண்மையில் கரணங்களே` என்றற்கு, `இந்திரியங் களும் மூன்றும் கரணமதாகும்` என்றும், `அவற்றுள் அறிவுக் கரணங்களே வலியபந்தங்கள்` என்றற்கு, `ஒட்டியபாசத்து உணர்வது வாகவே கட்டிய` என்றும் கூறினார். கட்டிய - ஒன்று படுத்தப்பட்ட. காணும், முன்னிலை அசை. `அறிமின்` என்றும் ஆம்.
இதனால், `மேற்கூறிய என்பு முதலிய தாத்துவிகங்களே யன்றி, இருவகை இந்திரியங்களும், மாபூதங்களும் ஆகிய பதினைந்து தத்துவங்களும் தூலசரீரமாம்` என்பதும், `அவற்றுட் சில உண்மையில் கரணங்களேயாம்` என்பதும் கூறப்பட்டன.
தனு, அல்லது தேகம் ஆன்மாவிற்கு நிலைக்களமும், கரணங்கள் ஆன்மாவிற்குக் கருவியுமாய் உதவும் என்க. இந்திரியங்கள் புறக்கருவிகளும், மனம் முதலியன உட்கருவிகளும் ஆதல் அறிக. `உட்கருவிகள்` என்பனவே, `அந்தக் கரணங்கள்` எனப்படுகின்றது.
[பதிப்புக்களில் முன் தந்திரத்தில், `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்து இறுதியில் காணப்படும் `இந்தியம் அந்தக்கரணம் இவை உயிர்` என்னும் மந்திரம் இத்தந்திரத்தில் இம்மந்திரத்தை அடுத்து இருந்ததாகும்.]

பண் :

பாடல் எண் : 4

இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.

பொழிப்புரை :

`மாபூதங்கள் மட்டுமே உயிர்க்குக் கரணம் ஆகா தொழிய, `இருவகை இந்திரியங்களும் அந்தக்கரணம் போல உயிர்க்குக் கரணமாம்` என மேலே சொல்லப்பட்டமையால், `மாபூதங்ளும் அவற்றின் காரியங்களுமே தூல தேகமாக இந்திரியங் களும் அந்தக்கரணம்போலச் சூக்கும தேகமாம் என்றலே பொருத்த முடைத்துப்போலும்` எனின், அங்ஙனம் கொள்ளுதல் பொருந்துவ தன்றாம். (இந்திரியங்கள் தூலதேகத்தில் இருந்து புறப் பொருளை அறிதலும், பொருள்களை எடுத்தல், கொடுத்தல் முதலிய வற்றைச் செய்தலும் கண்கூடாதலின் அவை தூல தேகமேயாம் என்பது கருத்து.) இனி மூலப்பிரகிருதியினின்றும் தோன்றுவனவாகிய பஞ்சக் கிலேசங்களால் அவற்றிற்கு முன்பே தோன்றிய பொதுப் புருட தத்துவத்தில் சிறப்புப் புருட தத்துவம் பொருந்தும். வித்தியா தத்துவம் ஏழில் `புருடன்` தவிர மற்றை ஆறு தத்துவங்களும் புருட தத்துவத் திற்கு மேலே உள்ளனவாகும்.

குறிப்புரை :

`இந்திரியம்` என்பது இடைக் குறைந்து நின்றது. `வந்தன என்பதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `இவை என்பு, தோல், இறைச்சி முதலியனபோலன்றி, உயிரின் அறிவு செயல்களுக்குக் காரணமாய் நிற்றலின் உயிர்போலவே தோன்று மாயினும்` என உரைக்க. இதனால், `இருவகை இந்திரியங்கள் - சூக்கும தேகம் - என்றால் என்ன` என்னும் ஐயத்தை நீக்கியவாறு. `உயிர் வந்தன` என்பது `உயிர்போல வந்தன` என வினையுவமத் தொகை, `உளத்தின்கண் மன்னும்` என ஏழன் உருபு விரிக்க.
தூல தேகம், சூக்கும தேகம் இவற்றைக் கூறியபின், `பண் புடம்பு` எனப்படும் குண சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `போர்ப்புடம்பு` எனப்படும் கஞ்சுக சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `முதலுடம்பு` எனப்படும் காரண சரீரத்தின் இயல்பையும் கூறினார்.
மான் - மகத்து; மூலப் பிரகிருதி. அது முக்குணமயமானது. அக்குணங்கள் வெளிப்படாது சூக்குமமாய் நின்றநிலை அவ்வியத் தமும், தூலமாய் வெளிப்பட்டுச் சமமாய் நின்றநிலை வியத்தமும் ஆகும். அவ்வியத்தமே பிரகிருதி. வியத்தமே காரணநிலையாதலின் அதனால் உயிர்க்கு வருவது ஒன்றுமில்லை. வியத்தமே காரிய நிலையாதலின் அதனாலே உயிர் முக்குணமயமாய் விகாரம் எய்துகின்றது. ஆகவே இந்த வியத்தமே குணசரீரம் ஆதல் அறிக.
பஞ்சக் கிலேசமாவன, அவிச்சை, அகங்காரம், இச்சை, ஆசை, கோபம் - என்பன. `இவை பிரகிருதியினின்றும் தோன்றும்` என்பதும், `இவற்றின் தொடர்பினாலே, இயற்கையில் விகாரம் இன்றியிருக்கும் உயிர் விகாரம் எய்தி, அகக் கரணம் புறக் கரணங்களால் புறத்து நிற்கும் பொருள்களைப் பற்றி, இன்பத் துன்பங்களை அடையும்` என்பதும் சாங்கிய மதக்கொள்கைகள். `அக்கொள்கை ஆகமங்கள் சிலவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது` என்பது இம்மந்திரத்துள், `மானது தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் முந்துளம் மன்னும்` என்பதனால் அறியக் கிடக்கின்றது. இந்தப் பஞ்சக் கிலேசத்தாலே உயிர் முக்குண உலகத்தோடு தொடர்பு பட்டு வினைகளை ஈட்டுவதும், நுகர்வதுமான நிலையை அடைதல் பற்றி இக் கிலேசத் தொகுதி `பும்சூத்துவ மலம்` எனப்படும் என்றும், பும்சுத்துவ மலத்தை எய்திய உயிர் `புருடன்` எனப்படும் என்றும் சிவஞான போத மாபாடியத்தில் சொல்லப்பட்டது. 3
இனி, `பிரகிருதிக்கு முன்பே புருடதத்துவம் உள்ளது` என்பது ஆகமங்களில் வெளிப்படை. அது பற்றி மாபாடியம் உடையார், `முன்பு உள்ளது பொதுப் புருடதத்துவம்` என்றும், `பின்பு பஞ்சக்கிலேசத்தால் ஆவது சிறப்புப் புருட தத்துவம்` என்றும் கூறிச் சிவஞான சித்தியாரின் `நிச்சயம் புருடனாகிப் பொதுமையில் நிற்பனன்றே`l என்பதைத் தம் கொள்கைக்கு மேற் கோளாகக் காட்டினார். `பொதுமையில் நிற்பன்` என்றது பொதுப் புருட தத்துவத்தைக் குறிக்குமாயின், பின்னர் பும்சுத்துவ மலத்தைக் குறிப்பிட்டு, அதனால் சிறப்புப் புருட தத்துவம் தோன்றும்` என்பதனையும் கூறியாக வேண்டும். அவ்வாறு பஞ்சக் கிலேசமோ, பும்சுத்தவ மலமோ, சிறப்புப் புருட தத்துவமோ எந்தச் சித்தாந்த மூல நூலிலும், எங்கும் சொல்லப்படவில்லை. எனினும், `இம் மந்திரத்தில் அவை கூறப்படுதல் சில ஆகமங்களின் கூற்றுப் பற்றி` எனக் கொள்ள வேண்டியுள்ளது. பும்சுத்துவம் - புருடத் தன்மை.
சித்தாந்த நூல்களில், புருடத்தத்துவம் வித்தியா தத்துவம் ஏழனுள் தோற்ற முறையில் இறுதியானதாகச் சொல்லப்படுகின்றது அதனால் மூலப் பிரகிருதியை அடுத்து மேல் நிலையில் உள்ளதாகும். அதற்குமேல் ஏனை வித்தியா தத்துவங்களில், `அராகம், வித்தை, கலை, நியதி, காலம்` என்பன முறையே ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ளன. இந்த ஐந்து தத்துவங்களையும் ஐந்து சட்டைகளாக உயிர் அணிந்து நின்ற நிலையில்தான் அது `புருடன்` எனப் பெயர் பெறுகின்றது. அது பற்றி அந்நிலை ஒரு தத்துவமாகச் சொல்லப் படுகின்றது. காலம் முதலாக உள்ள ஐந்தும் ஐந்து சட்டை போல்வதால், அவற்றது தொகுதி `கஞ்சுக சரீரம்` எனப்படுகின்றது. இந்த ஐந்து தத்துவங்களும் `மாயை` என்னும் தத்துவத்தின் காரியமாய், அதனின்றும் நேரேயும், பின் ஒன்றின் ஒன்றாயும் தோன்றும். ஆதலால் அம் மாயா தத்துவம் ஏனை வித்தியா தத்துவங்கட்குக் காரணமாதல் பற்றி, `காரண சரீரம்` எனப்படுகின்றது. ஆகவே, வித்தியா தத்துவங்கள் ஏழனுள் புருடன் கீழே நிற்க, ஏனை ஆறும் அதற்கு மேல் உள்ளனவாதல் பற்றி, ``மற்றாறும் முடிவிலே`` என்றார்.
தற்புருடன் - தானாகிய புருடன். அஃதாவது, சகலனாகிய புருடன். பிரளயாகலரினின்றும் சில உயிர்கள் `சகலர்` எனப் பெயர் பெறுதற்குக் காரணம் அவை முக்குண வடிவாகிய பிரகிருகியாற் கட்டுண்பதே யாதலின், `ஐவிதத்தால் தற்புருடன் மன்னும்` என்றார். முந்து உளம் - இப்புருடனுக்கு முன்னே உள்ள புருடன் அது, வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் இறுதியானது. அந்த அளவில் நிற்கும் உயிர்கள் பிரளயாகலராகும்.
வித்தியா தத்துவங்கள் அசுத்த மாயையின்காரியம். எனினும் அசுத்த மாயை பெரிதாய், வியாபகமாய் இருத்தலால், அது முற்றிலும் தத்துவங்களாய்ப் பரிணமித்துவிடுவதில்லை. அதனில் ஒரு சிறு கூறே தத்துவங்களாய்ப் பரிணமிக்கும். இது `மண் குடமாயிற்று` என்றால், அளவின்றியுள்ள மண்முழுதும் குடமாய் விடாது அதில் ஒரு சிறு பகுதியே குடமாயது போல்வதாம்.
இனி, மண்குடமாவதற்கு முன் அங்ஙனம் ஆகுமாறு பிசைந்து பக்குவப்படுத்தப்படுதல் போல அசுத்த மாயையின் ஒரு கூறு தத்துவங்களாய்ப் பரிணமிக்குமாறு பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் செய்யப்பட்ட அதுவே, `மாயா தத்துவம்` என ஒரு தத்துவமாகச் சொல்லப்படுகின்றது. `இவ்வாறு அசுத்த மாயையை அனந்த தேவர் தமது சத்தியால் பக்குவப்படுத்துவார்` என்பது ஆகமங்களின் கருத்து. இந்த மாயா தத்துவமே காரண சரீரம் என்க.
இதனால், பஞ்ச பேத உடல்களில் முன் சொல்லப்பட்ட இரு பேதங்கள் போக, எஞ்சிய மூன்று பேதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே?

பொழிப்புரை :

நிலையாய் இராமல் நிலையழிந்து ஒழிந்து போவன வாகியகுருதி, இறைச்சி முதலிய அழுக்குப்பொருள்களாம் பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும்?

குறிப்புரை :

`கூடாது, அதனால், இருவகை இந்திரியங்களும் ஆற்றலேயாயினும் அவை செவி, தோல் முதலிய உறுப்புக்கள் இன்றிச் செயற்படுதல் கூடாமையால், அவை தூல உடம்பே யல்லது சூக்கும உடம்பாகா` என்பதாம்.
இரதம் - இரசம்; அஃதாவது, உண்ணப்படும் உணவிலிருந்து ஊறிக் குருதி முதலியவாய்ப் பரிணமிப்பது அதுவே, குருதி முதலியன நிலைபெறுதற்குத் துணையாதல் பற்றி முதற்கண் கூறப்பட்டது. மேதை - நிணம். `கொழுப்பு` என்பர். அத்தி - அஸ்தி; எலும்பு. வழும்பு - நிணத்தில் உள்ள பசை. இதனை நிணத்திற்கு வேறாக எண்ணுதல் இல்லை. மச்சை - பித்த நீர். இங்குக் கூறப்பட்டவற்றுள் இரதம் வழும்பு இவை தவிர ஏனைய ஏழும் `தாதுக்கள்` எனப்படும். தாது - மூலப்பொருள். பாழாதல் - காணந்தோறும் பதனழிந்து, முடிவில் அழிந்து போதல். தாதுக்கள் யாவும் அத்தன்மையவே யாதல் பற்றி, `பாழாம் உபாதி` எனவும், இவ்வுபாதிகள் யாவும் பருப் பொருள்களாய்க் கட்புலனாவனவே` என்றற்கு `உருவம்` எனவும் கூறினார். உபாதி - மாசு. `இரதம் முதலியவாகக் கூறப்பட்ட செவ் வெண்ணின் இறுதியில் தொகைச் சொல் தொக்கது. ஏகாரம் வினாப் பொருளாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், மேல், `சூக்கும உடலன்று` எனக் கூறப்பட்டவை தூலதேகமே யாதல் காரணம் கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆரே அறிவார் அடியின் பெருமையை
ஆரே அறிவார் அருந்தவம் நின்றது
ஆரே அறிவார் அறுபத்தெட் டாக்கையை
ஆரே அறிவார் அடிக்காவ லானாதே.

பொழிப்புரை :

மேல், `அத்தன் அமைத்த உடல்` என்றபடி உயிர்களின் தகுதியை அறிந்து அத்தகுதிக்கேற்பப் பல்வேறு வகையான உடம்புகளை அமைத்துத் தருகின்ற இறைவனது அருள் மிகுதியையும் ஆற்றலின் மிகுதியையும் அறிய வல்லுநர் யாவர்; அந்நிலையில் `மக்களாய்ப் பிறந்தோர் அவ்வுடம்பைப் பெறுதற்குப் பல பிறவிகளில் தாம் செய்த நல்வினை இவை` என்பதை அறிய வல்லுநர் யாவர்; மக்களுடம்பு அசுத்த உலகத்து உளது ஆதலின் அஃது அவ்வுலகத்திற்கு மேல் உள்ள மிச்சிர உலகம், சுத்த உலகம் என்பவற்றில் உள்ளோரது உடம்புகளில் உள்ள கருவிகட்குமேல் அறுபத்தெட்டுக் கருவிகள் கூடியது என்பதை அறிபவர் யாவர்! மூவகை உலகத்து உயிர்கட்கும் திருவருளே முதற்காவலாய் உள்ளது என்பதை அறிகின்றவர் யாவர்! ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

முதற்கண் `அடி` என்றது இறைவனது திருவடியை, அது திருவருளே. `தத்துவம் தொண்ணூற்றாறு` என்பது வைதிகசமயம் அனைத்திற்கும் பொதுவான ஒரு கொள்கை. அத்தொண்ணூற்றாறும் தத்துவம், தாத்துவிகம்` என இரண்டாகவே பகுக்கப்படும். அவற்றுள் `தத்துவம் எத்தனை` என்பதில் சமயங்கள் வேறுபடுகின்றன. ஆகவே, `தாத்துவிகங்கள் எவை, என்பதிலும் ஒருமித்த கருத்து இல்லை. கட்டளைகளிலும் தாத்துவிகங்கள் பல்வேறு வகையாகவே சொல்லப் படுகின்றன. சைவ சித்தாந்தத்தில் தத்துவம் முப்பத்தாறு ஆகலின், தாத்துவிகம் அறுபதேயாதல் வேண்டும். அந்த அறுபதையும் கட்டளை களை ஒட்டிப் பலர் பல வகையாகக் கூறுகின்றனர். அவைகள் சில காரணங்களால் பொருத்தமாகத் தோன்றவில்லை. மாதவச் சிவஞான யோகிகள் `தாத்துவிகம் அறுபதும் ஐம்பெரும் பூதங்களின் கூறுகளே` என்கின்றார்.8 அதுவே பொருத்தமானதாகத் தெரிகின்றது. எனினும், பூதங்களின் கூறுகளாக அவர் ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன்மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து என்னும் இருபதை மட்டுமே கூறி `மற்ற நாற்பது எவை` என்பதைக் கூறாது விடுத்தார் ஆயினும் நாடிகள் பத்தும் ஆகாயத்தில் கூறுகளாகும். ஆக முப்பது போக மற்றை முப்பதும் மேற்கூறிய என்பு, தோல், இறைச்சி முதலியனவாகவும், மற்றும் பூதக் கூறுகளாகக் கட்டளைகளில் கூறப் படுவனவற்றையும் கொள்ளுதல் வேண்டும். எனவே, தாத்துவிகம் அறுபதில் அவற்றிற்கு மூலமாகிய மாபூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து என்பவற்றையும், அந்தப் பூதமும், தன்மாத்திரையும் இன்றிச் செயற்படமாட்டாத இருவகைப் பத்து இந்திரியங்களையும் அடக்கி, தூல தேகக் கருவிகளை `அறுபதே` என்றும், சூக்கும தேகக் கருவி `மேற்கூறப்பட்ட எட்டே` என்றும் வைத்து, `ஆகத் தூல சூக்கும தேகக் கருவிகள் அறுபத்தெட்டு` என, அறுபத்தெட்டாக்கை என்றார். எனவே `ஆக்கை` என்றது, தூல சூக்கும தேகங்களை யாயிற்று. இந்த இருவகை உடம்பும் சகலருக்கல்லது, பிரளயாகலர் விஞ்ஞான கலருக்கு இல்லையாதல் அறியத்தக்கது.
இதனால், `மக்களுக்குச் சிறப்பாக அமைந்த தூல சூக்கும தேகத்தின் இயல்பையும், அவற்றை அவ்வுயிர்கட்கு வழங்கிய இறைவனது அருளையும், ஆற்றலையும் அறிவுடையோர் ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள்
கண்கால் உடலில் கரக்கின்ற கைகளில்
புண்கால் அறுபத்தெட் டாக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால்உடம் பாமே.

பொழிப்புரை :

உடம்பை `எண்சாண் உடம்பு` என்றல் யாவரும் அறிந்தது. `அவரவர் கையால் எண்சாணேயாகும்` என்பது இதன் பொருள். `எறும்பும் தன் கையால் எண்சாண்` (தனிப்பாடல் திரட்டு, என்றார் ஔவையார். இந்த அளவு யாவராலும் நன்கறியப்பட்ட தூல தேகத்தைப் பற்றியதே. அந்த உடம்பிற்றானே கண் முதலிய ஞானேந்திரியங்களும், கால் முதலிய கன்மேந்திரியங்களும் ஆற்றல் வடிவாய்ச் சூக்குமமாய்த் தோன்றாது நிற்கின்றன. எவ்வாற்றா லேனும், எவ்விடத்திலேனும் ஊறு உண்டாகுமாயின் அவ்விடம் புண்ணாகிக் குருதியையும், சீழையும் ஒழுக விடுகின்ற தூல தேகத்தைத் தோற்றுவித்தற் பொருட்டு மேற்கூறிய அறுபத்தெட்டுக் கருவிகளைத் தக்கவாற்றால் திருவருள் ஒன்று சேர்க்கின்ற சேர்க்கையால் ஓர் உடம்பிலிருந்து மற்றோர் உடம்பு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

எடுத்த - ஆக்கப்பட்ட. `உடலிற் கைகளில் எனக் கூட்டுக. `கரக்கின்ற` என்றது. அன்பெறாதுவந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. `கை` என்றது `ஒருபுடை` என்றபடி. `அந்த இடம் ஊறுபட்ட இடம்` என்பது, `புண்கால்` என்றதனால் விளங்கிற்று. காலுதற்குச் செயப்படுபொருள்கள் வருவிக்கப்பட்டன. `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டன் நண்பால், உடம்பால், உடம்பு ஆம்` என இயைக்க. `புண் கால் ஆக்கை` என்றது, `தூல உடம்பு` என்ற வாறு. `அதனைத் தோற்றுவித்தற்காகவே அதற்குமுன் சூக்கும உடம்பு ஆக்கப்படுகின்றது` என்றற்கு, `புண் கால் ஆக்கை புணர்க்கின்ற அறுபத்தெட்டு` என்றார். சேர்க்கை, `நண்பு` எனப்பட்டது. அது பான்மை வழக்கு, `உடம்பால் உடம்பு ஆம்` என்றதற்கு, சூக்கும `உடம்பால் தூல உடம்பு தோன்றும்` எனவும், சில தூல உடம்புகளால், வேறு சில தூல உடம்புகளும் தோன்றும் எனவும் இருபொருள் கொள்க. தூல உடம்பால் தூல உடம்பு தோன்றுதலே இனப் பெருக்கமாம். தன், சாரியை.
இதனால், தூல சூக்கும உடம்புகள் ஒருவகையில் காரியங்களாயும், ஒருவகையில் காரணங்களாயும் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உடம்பிற்குள் நாலுக் குயிராய சீவன்
ஒடுங்கும் பரனோ(டு) ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி
அடங்கியே அற்றதிங் காரறி வாரே.

பொழிப்புரை :

தூல உடம்புக்குள் சூக்கும உடம்பாய் நிற்கின்ற அந்தக்கரணங்கள் நான்கிற்கும், மேலும் நுண்ணிதான அதிசூக்கும உடம்பைக் கொண்டு இயக்கும் முதற்பொருளாய் உள்ள சீவான்மாத் தான் பரமான்மாவாகிய சிவத்தில் வியாப்பியமாய் நிற்கும். ஆகவே, எப்பொருளிலும் எஞ்சாது நிறைந்து நிற்கும் பிரமப் பொருளாகிய சிவம், தான் ஒன்றேயாயினும் பல சீவான்மாக்களிலும் வியாபித்து அதனதன் தன்மைக்கேற்ப ஏகதேசமாயும் நின்று, பின் சீவான்மா சீவத்துவம் (பசுத்துவம்) நீங்கிய பொழுது தன்னைப் போலவே வியாபகமாகிவிடுதலால் அவ்வேகதேசத் தன்மை நீங்கி வியாபகமாகி விடுகின்ற தன்மை, ஞாயிறு ஒன்றேயாய் வியாபகமாயினும் பல குடங் களில் உள்ள நீரில் எல்லாம் அதனதன் அளவிற்கேற்ப வேறு வேறு அளவில் பலவாய்த் தோன்றி, அக்குடங்களில் நீர் நீங்கிய பொழுது முன்பு நின்ற சிறு நிலையின் நீங்கி வியாபகமாகிவிடுகின்ற தன்மையை ஒக்கும் என்னும் உண்மையை அறிந்தனர் எத்துணைப் பேர்!

குறிப்புரை :

`கணக்கு` என்றது, `நிலைமை` என்றபடி. அஃது உவமம் குறித்து நின்றது. அது, பகுதிப்பொருள் விகுதி. `கடம்` என்றது, `நீர் உள்ள குடத்தையே என்பதும் `நின்றது ஞாயிறு` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `காட்டி` என்றது, `ஒத்துநிற்றலைத் தெளிவாகப் புலப்படுத்தி` என்றவாறு. `அடங்கி` என்றது, `ஏக தேசமாய்த் தோன்றி` எனவும், `அற்றது` என்றது, `அவ்வேகதேசத்தின் நீங்கி வியாபகமானது` எனவும் கூறியவாறு. `ஆர் அறிவார்` என்றது, `ஒரு பிரமமே, ஞாயிறு ஒன்றாயினும் பல குடங்களில் பலவாய்த் தோன்றுதல் போல, பல உடம்புகளில் பல சீவராய்த் தோன்றும்` என மயங்கிக் கூறும் ஏகான்மவாதிகளை உட்கொண்டு கூறியது. ஞாயிறு குடங்களில் உள்ள நீரில் தோன்றினும் ஞாயிறேயாய் விளங்குத லன்றிப் பிற இயல்புகளைப் பெற்று வேறுபட்டுத் தோன்றுதல் இல்லை. சீவரோ பிரமப் பொருளின் தன்மையினின்றும் பெரிதும் வேறுபட்டுத் தோன்றுதல் தெளிவு. சிறப்பாகப் பிரமம் ஞானானந்த மயத்தது. சீவர் அஞ்ஞான துக்கமயத்தர். இதனை அறியாமையே யன்றி, உவமையில், `குடம், நீர், ஞாயிறு` என மூன்று பொருள்கள் உளவாக, பொருளில் `பிரமமும், உடம்பும்` என இரண்டையே கூறுதலால் அவரைக் கருதி, `ஆர் அறிவார்` என்றார்.

பண் :

பாடல் எண் : 9

ஆறந்த மாகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென் றிருந்திடும்
கூறுங் கலைகள் பதினெட்டுங் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம் பென்னுமே.

பொழிப்புரை :

யோகமுறையால் ஆறு ஆதாரங்களும் கீழாகி யதனால், அவற்றிற்குமேல் உள்ள பிரமரந்திரத்தை அடைந்தால், அங்ஙனம் அடைந்தவருடைய தூல உடம்பு விரையில் அழிந் தொழியாது உறுதி பெற்று நெடுநாள் இருக்கும். அந்நிலையில் சூக்கும உடம்பும் அதற்கு சார்பாய் உறுதிப்பட்டு நின்று, அதனை என்றுமே உயிர் உள்ள உடம்பாகச் செய்யும்.

குறிப்புரை :

முன்னர், `மூவாறு` என்றது தூல உடம்பின் கூறுக ளாகிய பூதம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, இவற்றிற்கு முதலாக அகங்கார வகை மூன்று ஆகிய பதினெட்டினை, பின்னர், `கலைகள் பதினெட்டு` என்றது. புரியட்ட காயமாகிய சூக்கும உடம்பின் தத்துவம் எட்டும், பத்து வாயுக்களாகிய தாத்துவிகம் பத்தும் ஆகப் பதினெட்டினை. வாயுக்கள் தூல தேகத்தனவாயினும் அவற்றாலே சூக்கும உடம்பு செயற்படுதல் பற்றிச் சூக்கும தேகக் கூறுகளுடன் கூட்டி எண்ணினார். இக்கருத்தே பற்றிச் சூக்கும உடம்பு. `பிராணமயகோசம், எனப்படுதலை நினைக. `ஊறும் உடம்பு` என்றது மேல், `புண் கால் ஆக்கை` என்றது போன்றது என்னும் - எனச் செய்யும். சிக்கென்றிருத்தல் - உறுதிபெற்றிருத்தல்.
இதனால், விரைவில் அழிதற்பாலதாகிய தூல உடம்பை அங்ஙனமாகாது நீடியிருக்கச் செய்யுமாறு கூறப்பட்டது. இது மேல் மூன்றாம் தந்திரத்துள் `காய சித்தி` அதிகாரத்துள் விரிவாகக் கூறப்பட்டதாயினும். `உடம்புகளைப் பற்றிக் கூறும் இவ்விடத்தில் நினைவூட்டுதல் நன்று` என்னும் கருத்தால் சுருங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

பொழிப்புரை :

`தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்றுடம்பு களையும் ஒருங்குசேர்த்து ஓர் உடம்பிற்கு உவமித்தால், தூல உடம்பு முகத்தையும், சூக்கும உடம்பு கழுத்திற்குக் கீழும், காலுக்கு மேலும் உள்ள உடலையும், பர உடம்பு கைகால்களையும் ஒத்து நிற்கும் அவ்வாறு அமைந்த அந்தப் பேருடம்பு சிவனது திருவருளில் அடங்கும்.

குறிப்புரை :

மெய்யினில் தூலம் - கண்கூடாக விளங்குதலால் ஐயத்திற்கு இடமின்றித் துணியப்படுகின்ற தூல உடம்பு. பொய்யினில் பொருந்தும் சூக்க உடல் - காட்சிப் புலனாகாமையால் உண்மை எளிதில் துணியப்படாது நுண்ணிதாய் உள்ள சூக்கும உடம்பு. `தூலம், சூக்குமம்` என்பவற்றின்பின் `ஆக` என்பது வருவிக்க. காட்டும் உடல் - உயிர்க்கு அறிவைத் தரும் பர உடம்பு. இங்கு `உடலை` என்றதில் ஐ சாரியை; வேண்டாவழி வந்தது. முகத்தையும், உடலையும் என்பவற்றோடு இயைக்க `கையினில்` என்பதையும் `கையையும்` எனத்திரிக்க. இஃது உருபு மயக்கம். துல்லியம் - ஒப்பு. இதன்பின் `என்க` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `துல்லியம் என்க` என உரைக்க. ஈற்றில் நின்ற `உடம்பு` என்பதற்கு, இவ்வாறான உடம்பு,` என உரைக்க.
இதனால், `மூவகை உடம்புகளும் வேறுவேறு இயல்பின வாயினும் செயற்பாட்டின்கண் ஒன்றுபோல இணங்கிச் செயற்படும்` என்பது கூறப்பட்டது. `அதற்குச் சிறந்த காரணம் திருவருள்` என்றற்கு அஃதும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

காயுங் கடும்பரி கால்வைத்து வாங்கல்போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காயத் துகிற்போர்வை ஒன்றுவிட் டாங்கொன்றிட்
டேயு மவரென்ன ஏய்ந்திடுங் காயமே.

பொழிப்புரை :

பகைவரைச் சினக்கின்ற வேகம் பொருந்திய போர்க் குதிரை அண்மை, சேய்மை என்னும் இடங்கட்குத் தக்கபடி முன்கால்களை எட்டி வைத்துப் பின் கால்களை வாங்கிக்கொண்டு தடையின்றி ஓடுதல் போலச் சூக்கும உடல் அண்மை சேய்மைகளுக்கு ஏற்ப விரைந்து செல்ல வல்லது. அதனால், உயிர் அவ்வுடலைப் பற்றிக் கொண்டு, அத்தன்மையில்லாத தூல உடம்புகளுள் ஒன்றை விட்டு நீங்கி மற்றொன்றை எங்கு வேண்டுமானாலும் சென்று எடுத்துக் கொள்ளும். தூல சரீரம் சூக்கும சரீரத்தின் மேல் போர்வைபோலவே உள்ளதாகும். அதனால், உயிர் தூல உடம்பில் ஒன்றை நீக்கி விட்டு, மற்றொன்றை எடுத்துக் கொள்ளுதல் மக்கள் தமது போர்வை ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றை எடுத்துப் போர்த்துக் கொள்ளுதல் போல்வதே.

குறிப்புரை :

`வல்லது` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன் மந்திரத்தினின்றும் வந்தது. `போர்வை ஒன்றை விட்டு ஒன்றை இட்டு ஏயும் அவர் என்ன உயிர் காயத்தை ஏயும்` என்க. காயம் - தூல தேகம். ஏயும் - பொருந்தும். `உயிர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `ஏயும் அவரென்ன` என்றாராயினும் `அவர் ஏய்த்தல் என்ன` என்றலே கருத்து என்க. தாம் கூறிய சொற் கிடக்கைக்கு ஏற்ப `அவர்` என்றார். ஆகவே கருத்திற்கு ஏற்ப அது `மக்கள்` எனப்பட்டது.
இதனால், `தூல தேகத்தை விட்டு உயிர் நீங்குதலே இறப்பு என்பதும், அது மற்றொரு தூல தேகத்திற் சேர்தலே பிறப்பு` என்பதும் கூறப்பட்டன. தூல தேகம் சூக்கும தேகத்தினின்றே தோன்றுவ தாயினும் அதனைக் கொண்டே சூக்கும தேகம் அறிதல் செய்தல்களை இயற்றலால் எடுத்துக் கொள்வதாகக் கூறப்பட்டது. இதனானே உயிர் பல பிறப்புக்களில் செல்லுமாறும் கூறப்பட்டதாம். பிறப்புக்களின் மாற்றம் வினை நிமித்தமாக நிகழ்வது.

பண் :

பாடல் எண் : 12

நாகம் உடல்உரி போலும் நல் அண்டசம்
ஆகும் நனாவில் கனாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்(று)
ஏகும் இடம்சென்(று) இருபயன் உண்ணுமே.

பொழிப்புரை :

இவ்வுலகில் ஓர் உடம்பை விட்டு நீங்கிய உயிர் இறைவனது அருளாணையின்படி வேறோர் உடலில் சென்று, அவ் வுடலுக்குரிய இடத்தை அடைந்து, முன்பு இருந்து இடத்தில் அனுபவித்த அனுபவங்களை மறந்து அவ்விடத்து வரும் இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் அவை எவை போல எனின், பாம்பு முன்பிருந்த உடம்பாகிய தோலை நீக்கிவிட்டுப் புதிய உடம்பைப் பெறுதல் போல்வதும், முட்டையிற் பிறக்கும் உயிர்கள் முன்பு முட்டைக்குள் இருந்து பின்பு வெளிவந்து வேறு இடத்தை அடைதல் போல்வதும், கனவில், முன்பு நனவில் நிகழ்ந்தவற்றை மறத்தல் போல்வதுமாகும்.

குறிப்புரை :

`அரனருளாலே` என்பது முதலாகக் கொண்டு உரைக்க. முதற்கண் `சென்று` என்பதற்கு மற்றோர் உடம்பில் சென்று என்பது பொருளாகும். இஃது இவ்வுலகிலே மறுபிறப்பு எடுப்பதையே குறித்தது. `ஆகும்` என்றனவும், `போலும்` என்றவாறேயாம். நனவு, கனவோடொப்ப, `நனா` எனப்பட்டது. அல்லது - வேறு நிகழ்ச்சி. போகல் - நிகழ்தல். `நனாவில் நிகழ்ந்தவற்றைக் கனாவில் மறந்து, அல்லது போகல் போல்வதுமாம்` என்க. பாம்பு தோல் உரித்தல் ஓர் உடலைவிட்டு வேறு உடலில் செல்லுதற்கும். அண்டசம் ஓர் இடம் விட்டு, வேறொர் இடத்தை அடைதற்கும், நனவில் நிகழ்ந்தவற்றைக் கனவில் மறத்தல் முன் பிறப்பில் நிகழ்ந்தவற்றை அடுத்த பிறப்பில் மறத்தற்கும் உவமையாகச் சொல்லப்பட்டன. `பன்னகம் அண்டசங்கள்` என்னும் சிவஞான சித்திச் செய்யுளையும்,l அதன் உரையையும் இங்கு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், மறுபிறப்பு உளதாதல் பற்றித் தூல தேகத்திற்கு வேறாய்ச் சூக்கும தேகம் முதலியன உளவாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரண மாச்செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.

பொழிப்புரை :

ஓர் உயிர் நிலத்தில் இறந்தபின் சூக்கும சரீரம் பற்றாகச் சென்று நரக சுவர்க்கங்களை அடைந்து அங்கு உள்ளவைகளைப் பார்த்து அவற்றால் வரும் துன்ப இன்பங்களை நுகர்ந்து, அந்த உலகங்களை விடுத்துத் தான் செய்த வினையில் மேற் கூறிய உலகங்களில் நுகரப்பட்டு எஞ்சி நிற்கின்ற வினைகள் தொடர்த லால், யோக சித்தர் ஓர் உடம்பை விட்டும் மற்றோர் உடம்பில் புகுதல் போல வேறு பிறப்பை அடைந்து மீண்டு நிலவுலகத்தில் அப்பிறப்பிற் குரிய உடம்பை எடுத்துக் கொள்ளும்.

குறிப்புரை :

`இறப்பு எய்திச் சூக்கம் காரணமாச்செல நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு உண்டு பண்டு தொடர (சூக்கம் காரணமாச் செல) பிறப்பு எய்திப் பிண்டம் எடுக்கும் எனக் கூட்டிப் பொருள் கொள்க. `ஓர் உயிர்` - தோன்றா எழுவாய்.
`சூக்கம் காரணமாக` என்பதும், `எய்தி` என்பதும் பின்னும் கூட்டுதற்கு உரியன. காரணம் - கருவி. புடைபெயர்தற்கு உரிய கருவி. செல - செல்லுதலால். `நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு உண்டு` என்றது, `வினையிருந்த வகைக்கு ஏற்ப முன்னும் பின்னுமாக அடைந்து கண்டு நுகர்ந்து` - என்றபடி. தூல உடம்பை விட்டுச் சூக்கும தேகத்தோடு இருத்தற்குப் பாம்பு தோல் உரித்தலும், மறுபிறப்பில் முன் பிறப்பில் நிகழ்ந்தவற்றை மறத்தலும் முன் மந்திரத்தில் உவமையாகக் கூறியபின், ஒருதூல தேகத்தை விட்டு மற்றொரு தூல தேகத்தை எடுத்தற்கு யோகிகள் பரகாயப் பிரவேசம் செய்தல் இம் மந்திரத்தில் உவமையாகக் கூறப்பட்டது.
இதனால், மேற்கூறியது உவமைகூறி வலியுறுத்தப்பட்ட துடன், சுவர்க்க நரக அனுபவங்களைக் கூறும் முகத்தாலும் சூக்கும தேகம் உண்மை நிறுவப்பட்டது. சுவர்க்க நரக லோகங்கட்கும் வேறு வேறு தூல உடம்பு உளவாயினும் நிலவுலகத் தூல உடம்பே இங்குச் சிறப்பாக எடுத்து, அதன் இயல்பு விளக்கப்பட்டது.


பண் :

பாடல் எண் : 14

தானவ னாகிய தற்பரந் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை உயிர்வினைக் கெய்து மிடஞ்சென்றும்
வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.

பொழிப்புரை :

தான் சிவனேயாய் நிற்கின்ற சிவ யோகி, அது காறும் தான் அடைந்திருந்த நிலைகளை யெல்லாம் போக்கி, உடல் நீங்கினபின் அந்நிலைக்கு அப்பாற்பட்ட முடிநிலைப்பேற்றை அடைவான். அந்நிலையை அடையாது தாமேயாய் நிற்கின்ற மற்ற உயிர்கள் தாம் செய்த வினைக்கீடாகக் கிடைக்கின்ற இடங்களில் செல்வனவாய், விண்ணுலகிலும், மண்ணுலகிலும் புகுந்து துன்புறும்.

குறிப்புரை :

தற்பரம் - தனக்கு மேல் உள்ள பொருள். அதனைத் தான் தாங்குதலாவது அதன்கீழ் அடங்கியிருத்தல். அஃதாவது தனக்கென ஒன்றின்றி, எல்லாவற்றையும் அதனுடையதாகவே கண்டிருத்தல். `தான் அவன் ஆதலாவது இதுவே என்றற்கு, `தான் அவன் ஆகிய` என்றதனோடு அமையாது, `தற்பரம் தாங்கினோன்` என்றார். இதுவே ஞான சிவ யோகம். இந்நிலை `அருள் நிலை` என்றும், `சுத்த துரியநிலை` என்றும் சொல்லப்படும். அதனையும் கடந்தது ஆனந்த நிலையாகிய அதீத நிலை யாகலின் அதனை, `பரமம்` என்றார். பரமம் - மேல் எல்லை. `விண் மண், இரண்டுலகத்துள்ளும் உயர்வு தாழ்வான இடங்களில் உயிர் செல்லும்` என்றற்கு, அவற்றை வேறு போல வைத்து, `எய்தும் இடம் சென்றும்` `வானும் நிலனும் புகுந்தும்` வருந்தும் என்றார்.
இதனால், தூலதேகமே நிலையின்றி, மாறி மாறி வருவதாகச் சூக்கும தேகம் வீடுபெறுங்காறும், அல்லது ஊழி முடிவுகாறும் நிலைத்திருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாம் அஞ்
ஞானிக்கூன் நிற்கு முடம்பே யதுவாகும்
மேனிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

பொழிப்புரை :

மெய்ஞ்ஞானிக்கு உடம்பாவது சிவனது அரு ளாகிய உடம்பேயாம், அஞ்ஞானிக்கு உடம்பாவது புலாலால் ஆகிய அந்த உடம்பேயாம். அஞ்ஞானிக்குமேல் நிற்பவனாகிய யோகிக்குப் பைசந்தி வாக்கும் அதற்கு மேல் உள்ள சூக்குமை வாக்கும் தக்கபடி உடம்பாகும். ஞானத்தின் மேல் எல்லையாகிய மோன நிலையை எய்தியவன் முப்பாழையும் கடந்த முத்தி நிலையையே உடம்பாகக் கொண்டிருப்பான்.

குறிப்புரை :

சிவம் ஏய் தனு - சிவத்தைப் பொருந்தி உள்ள உடம்பு. அஃது அருளே. முதல் இரண்டடிகளில் முறையே மேல் நிற் பவனையும், கீழ் நிற்பவனையும் பற்றிக் கூறினமையின், மூன்றாம் அடியில் இடை நிற்பவனைப் பற்றிக் கூறினார். ஈற்றடி முடிநிலையை எய்தினோனைப் பற்றிக் கூறியது. எனவே, `ஞானி` என்றது துரிய நிலையில் நின்றவனையேயாம். மோனி, அந்த நிலையை அடைந் தவன். சீவன் முத்தனாவான் அவனே. யோகிகளுள் சவிகற்ப சமாதியை அடைந்தவன் பைசந்தி வாக்கைக் கடக்கமாட்டாது அதனுட் பட்டும், நிருவிகற்ப சமாதியை அடைந்தோன் சூக்குமை வாக்கைக் கடக்க மாட்டாது அதனுட்பட்டும் நிற்பன் என்றபடி. `உடம்பாகும்` என்பது மூன்றாம் அடி ஈற்றிலும் சென்றியையும். எனவே, மோனியைத் தவிர ஏனையோர் யாவரும் ஓரளவில் பந்தம் உடையவர்களேயாயினர். முப்பாழ் ஆவன பின்னர்க் கூறப்படும்.
இதனால், `யோகியரும், ஞானியரும் தூலசூக்கும சரீரங்களோடு கூடி நிற்பாராயினும் அவர் அவற்றால் கட்டுண்ணாது, மந்திர வடிவராயும் நிற்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

விஞ்ஞானத் தார்க்கா ணவமே மிகுதனு
எய்ஞ்ஞானத் தார்க்குத் தனுமாயை தானென்ப
அஞ்ஞானத் தோருக்குக் கன்மம் தனுவாகும்
மெய்ஞானத் தோர்க்குச் சிவதனு மேவுமே.

பொழிப்புரை :

மூவகை ஆன்ம வர்க்கத்தினருள் விஞ்ஞானகலர் நிலையை ஆணவமே சூக்கும தேகமாய் நிற்கும். இனி அந்த விஞ்ஞானகலர்க்கு அடைய இருப்பவராகிய பிரளயாகலருக்கு அசுத்த மாயையே எல்லா உடம்புமாய் இருக்கும். `ஞானம் இல்லாதவர்` எனப் படுகின்ற சகலர்க்குக் கன்மத்திற்கு ஈடாக வருகின்ற பிராகிருதங்களே உடம்பாகும். ஆகவே, அருள் உடம்பு மெய்ஞ்ஞானைத்தை எய்தினவர்கட்கே வாய்ப்பதாம்.

குறிப்புரை :

மிகு தனு - சூக்கும தேகம். இஃது ஒப்புமையாகக் கூறியது. `நுண்ணிய பந்தம்` என்றபடி. `ஏய்` என்பது `எய்` எனக் குறுகிநின்றது. ஆகவே, அதனையடுத்து `ஞானம்` என்றது முன் சொன்ன விஞ்ஞானத்தையாயிற்று. பிரளயாகலருள் நேரே முத்தி பெறுபவரன்றி, விஞ்ஞானகலராகி முத்தி பெறுபவரும் உளர் என்க. கன்மத்தால் வருவதை, `கன்மம்` என்றார். அவ்வாற்றால் வரும் தனு பெரும்பான்மை பற்றிப் பிராகிருத சரீரத்தைக் குறித்தது. `ஞானிக்குக் காயம் சிவமேய் தனுவாகும்` என்றதனால், `ஏனையோர்க்கு அது வாயாது` என்பதனை வகுத்துக் காட்டி, இறுதியடியால் அதனை நிறுவினார்.
இதனால், மேற்கூறியவற்றுள் சிறப்புடையது ஒன்று இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மலமென் றுடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றும்இவ் வண்டத்தே.

பொழிப்புரை :

அறிவுடையீர், தம் உடம்பை அருவருத்து நீக்கத் தக்கதாக அறிவும் அறிவையில்லாதவர் அதனையே தாம், என்றும் இருக்கும் இடமாகக் கருதி, அதன்கண் தனியான ஒருபற்று வைத்துப் போற்றிவருதலைக் கண்டீரன்றோ! அவர் நிலையை அடைந்திருக்கும் உயிர்கள் அதன் பயனாகப் பற்பல தூல தேகங்களை எடுத்து உலகங்களிலேயே உழலும்.

குறிப்புரை :

`வீடு பெறா` என்றபடி. `இருக்கின், பற்றும்` - என்னும் பயனிலைகட்கு, `அத்தகைய உயிர்கள்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `கண்டீர்; பற்றும்` எனக் கூறியவற்றால், `நீவிரும் அவ்வாறு நிற்பின் அந்நிலையை அடைவீர்கள்` எனக் குறித்தவாறு.
இதனால், `உடம்புகள் யாவும் அழுக்குப்பொருளே` என்பதும், அஃதறிந்து அவற்றின் நீங்குதலே அறிவுடைமை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 18

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்லவிளை யாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் மிகுத்தார் பசித்தே.

பொழிப்புரை :

நல்ல சொற்களையே பேசுகின்ற வாக்கிலும், நல்ல நினைவுகளையே நினைக்கின்ற மனம் முதலிய அகக்கருவிகளிலும் இறைவன் மெல்ல மெல்ல வெளிப்பட்டு விளையாடுவான். நல்லன அல்லாத சொற்களையே கேட்க விரும்புகின்ற செவியையும், அவ்வாறே, அறியத் தகாத தம் தம் புலன்களையே அறிய விரும்புகின்ற கண் முதலிய ஏனைப் பொறிகளையும், நல்லன அல்லாதவற்றையே நினைக்கின்ற உட்கருவிகளையும் உடைய மக்கள் இவ்வுலகில் வறுமையால் பசி மிக்கவராய் வருந்துவர்.

குறிப்புரை :

`அவர்மறுமையில் நற்பிறப்பையும், பிறப்பற்ற வீட்டையும் அடைதல் எங்ஙனம்` என்பது குறிப்பெச்சம். `உடம்புகளை அருவருத்து நீக்கத் தக்கனவாக உணர்பவரே நல்ல வாக்கு. மனங்களையும், அங்ஙனம் உணராவதவர் தீயனவாகிய வாக்கு மனங்களையும் உடையவராய், அதுவதற்குத் தக்கபயனை அடைவார்கள் என்றபடி. ஆகவே, `வாக்கு மனங்கள் நல்லன வாகும்படி செய்து` அதனால், உடம்புகளின் நீங்கப் பெறுதலே செயற் பாற்று` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 1

பண்ணாரும் காமம், பயிலும் வசனமும்,
விண்ணாம் பிராணன், விளங்கிய சத்தமும்,
புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

பொழிப்புரை :

நன்கு அமைந்த உடலால் எழுகின்ற காமமும், பலவகையாகப் பேசுகின்ற பேச்சுக்களும், வெளிச்செல்லும் பொழுது விளங்கி நிற்கின்ற மூச்சும், அம்மூச்சுப் பெரிதாயவழி எழுகின்ற ஓசையும், புலால் வடிவாகிய உடம்பின் உள்ளே இருப்பதாகிய மனமும் ஆகிய இவைகளையெல்லாம் பிறர், `எங்கே போயின` என்று திகைத்து அண்ணாந்து பார்க்கும்படி உடல் முதலில் நிலையழிந்து, பின்னர் உருவும் அழிந்தொழியும்.

குறிப்புரை :

ஆகவே, `இதனை நிலையுடையதாக எண்ணிப் பற்றுச் செய்தல் நன்றன்று` என்பதாம். முதல் தந்திரத்தில் `யாக்கை நிலை யாமை` கூறியது அறத்தை வலியுறுத்தல் பற்றி. எனினும் ஞானத்தை உணர்த்தும் இவ்விடத்திலும் அதனையுணர்தல் இன்றி யமையாமை பற்றி, வேறொரு கருத்துப் பற்றிக் கூறுகின்றார். `பண்` என்னும் முதல் நிலை, பண்ணி அமைக்கப்பட்ட நல்ல நிலையை ஆகு பெயரால் உணர்த்தும். முறைப்படி அமைந்த இசை `பண்` எனப்படுவதும் அவ் வாற்றாலேயாம். `அந்நிலையில்தான் காமம் உளதாகும்` என்றற்கு, `பண் ஆரும் காமம்` என்றார். `மனத்தையும்` என்றதனோடு இயைய, ஏனை உம்மைகட்கு முன்பும் இரண்டன் உருபு விரிக்க. `அண்ணாந்து பார்த்தல்` என்பது, எங்கும் காணாது திகைத்து நிற்றலைக் குறிக்கும் குறிப்பு. பார்க்க - பார்க்கும்படி.
இதனால், `காமம் முதலிய சிறிய இன்பம் காரணமாக உடம்பை விரும்புதல் சிறப்புடையதாகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அழிகின்ற ஓர்உடம் பாகும் செவி,கண்,
கழிகின்ற கால்,அவ் இரதங்கள், தானம்,
மொழிகின்ற வாக்கு, முடிகின்ற நாடி;
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.

பொழிப்புரை :

நிலையின்றி அழிவதாகிய உடம்பை இடமாகக் கொண்டிருப்பனவே செவி, கண் முதலிய அறிவுப் பொறிகளும், வாக்கு முதலிய செயற்பொறிகளும், அவற்றின்வழி வருகின்ற புல இன்பங்களும், அந்தக் கரணங்களுக்கு வலுவூட்டுகின்ற பிராண வாயு வும், ஒன்றையொன்றோடு முடிந்துவைத்துள்ள நாடிகளும், மற்றும் பல ஆற்றல்களுக்கு உரிய இடங்களும். ஆகவே, உடம்பு அழிந்தால், அவையும் அதனோடே அழிந்தொழிதலால், அழிவதாகிய உடம்பிற்கு அதனை அழியாது நிலைபெறுத்துவதொருதுணை எதுவுமில்லை.

குறிப்புரை :

`உடம்பின்கண் ஆகும்` என ஏழாவது விரிக்க. `ஆகும்` என்னும் செய்யுமென்னும் முற்றிற்குச் செவி, கண் முதலியபல பெயர்களும் முடிவாயின. செய்யுள் நோக்கி அப்பெயர்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. கால் - காற்று; பிராண வாயு. இரதம் - சுவை; என்றது இன்பத்தை.
இதனால், `தூல தேகம் அழிவுடையதாகலின், அதன் இயல்பை மாற்றுமாறில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இலையாம் இடையில் எழுகின்ற காமம்
உலைவாய நேசத்து மூழ்கும் உளத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.

பொழிப்புரை :

மாதரது நுண்ணிய இடையின்மேல் எழுகின்ற காம உணர்ச்சி மக்கள் உள்ளங்களில் உலையிடத்தில் உள்ள நெருப்புப் போல மிகுகின்ற ஆசையாலே பெருகி மிகும். ஆயினும் அந்த ஆசையால் சிறிதும் கலங்காது கல்போல உறுதியுற்று நிற்கும் உள்ளம் உடையவர்கள், சிவனது திருமுன்பில் காமம், குரோதம் முதலிய குற்றங்களோடு கூடாது மேன்மையுற்று விளங்குகின்ற ஒளி உடம்பைப் பெற்று வாழ்வார்கள்.

குறிப்புரை :

இலையாம் இடை - `இல்லை` என்றே சொல்லத்தகும் முறையில் அமைந்த இடை. `இடை` என்றது இடக்கர் அடக்கல். உலை வாய - கொல்லனது உலையின்கண் உள்ளவை; நெருப்பு இடம் பற்றிப் பன்மையாகக் கூறப்பட்டது. `உலைவாயன போலும் நேசம்` என அஃது உவமத் தொகையாய் வந்தது. `மூழ்குவிக்கும்` என்பதில் பிற வினை விகுதி தொகுத்தலாயிற்று. அதற்கு `அவற்றை` என்னும் செயப் படு பொருள் வருவிக்க. `உளத்து` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. `மின்னுடல்` என்றது, `ஒளியுடம்பு` என்றபடி. `திவ்விய சரீரம்` என்பர். சித்தத்தை உடையவரது செயலை, `சித்தம் திருமுன்னிடக்கே தாங்கித் திரியும்` எனச் சித்தத்தின் செயலாக உபசரித்துக் கூறினார். முன்னிடை - முன்னிடம். குவ்வுருபைக் கண்ணுருபாகத் திரித்துக் கொள்க. சிவலோகத்தையே, `சிவ முன்னிடை` என்றார். `சிவ முன்னிலைக்கே` எனப்பாடம் ஓதுதலுமாம்.
இதனால், `நிலையில்லாத உடம்பினாலே சிவ புண்ணியங்களைச் செய்து நிலையுடைய வீட்டைப் பெறுதல் தக்கது` என்பது, அவ்வாறு செய்யாதாரது செயலையும், செய்தாரது செயலையும் ஒப்பிட்டுக் கூறுமுகத்தால் உணர்த்தி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

பொழிப்புரை :

மேற்கூறிய அவத்தைகளில் மத்தியாலவத்தை ஐந்தும், கீழாலவத்தைச் சாக்கிரமும் நிகழும் இடம்புருவநடு, அவற்றுள் மத்தியா லவத்தைச் சாக்கிரமும் ஒன்றிலேதான் எல்லாக் கருவிகளும் குறை வின்றிச் செயற்படும். மற்றையவற்றில் சிற்சில கருவிகள் செயற்படாது நிற்கும். அவற்றைப் பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளாகக் கூறுவர். மத்தியாலவத்தையை விட்டு, ஆன்மாக் கீழாலவத்தையில் சாக்கிரத்தை அடைதற்குக் காரணம் ஆன்ம தத்துவங்களில் சிலவும், தாத்துவிகங் களில் சிலவும் குறைதலேயாகும். அந்நிலையில், கீழாலவத்தைச் சாக்கிரத்தில் செயற்படும் கருவிகள் முப்பத்தைந்து` என்று சொல்லப் படுகின்றது. `சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்` என்பது சிவஞான சித்தியார்.3 முப்பத்தைந்தில் தத்துவம் பதினைந்து; தாத்துவிகம் இருபது. ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று. இவை தத்துவங்கள், ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன் மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து. இவை தாத்து விகங்கள். `முப்பத் தைந்து` எனத் தொகை கூறி வரையறுத்தது பிரிந்தும், கூடியும் வரும் நிலைமையுடைய கருவிகளை நோக்கியேயாம். ஆகவே, பிரிவின்றி எஞ்ஞான்றும் கூடியே நிற்கும் கருவிகள் இந்த அவத்தை பேதங்களில் நீங்குவன அல்ல. அவை வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்துமாம். `புருடன்` என்பது ஒரு தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஐந்தும் கூடிய நிலையேயாம். இவை ஐந்திற்குக் காரணம் `மாயை` என்னும் தத்துவம். எனவே, புருடன்` என்றதனால், மேற்கூறியவற்றோடு சிவ தத்துவமும் பெறப்படும். ஆகையால் `முப்பத்தைந்து` எனச் சுருக்கமாகக் கூறியபோதிலும் `நாற்பத்தாறு` என்பதே உண்மையாம். எனவே, கீழாலவத்தை தொடங் குங்கால், தொண்ணூற்றாறு கருவிகளில், நீங்குவன ஐம்பதே` என்பது விளங்கும். ஐம்பதில் தத்துவம் பத்தும், தாத்துவிகம் நாற்பதும் ஆகும். தத்துவம் பத்தாவன மாபூதங்கள் ஐந்து; தன்மாத்திரை ஐந்து, தாத்துவிகம் நாற்பதவான. மேற்கூறிய சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து ஆகிய இருபது தவிர மற்றவையாம்.

குறிப்புரை :

இம்மந்திரத்தில், `மத்திமை` என்றது புருவ நடுவை. `சாக்கிரம் என்றது, அதிகாரத்தால் கீழாலவத்தைச் சாக்கிரமாயிற்று. `ஐயைந்து` என்றது, பிராணாதி வாயுக்கள் பத்தினையும் விடுத்து, அஃது, ஒன்று இடைவிட்டு வரும் மந்திரத்தால் விளங்கும். `ஐயைந்தால் என உருபு விரித்து மத்திமையில் ஐயைந்தால் சாக்கிரம் ஆனது` என இயைத்துக் கொள்க.
இனி, இரண்டாம் அடியில், `மேற்கூறிய ஐயைந்தில் விடயங் களாய் நிற்கும் கருவிகள் பதினான்கினால் கண்டத்தில் சொப்பனம் நிகழும் என்பர்` எனக் கூறினார் `விடயங்களாய் நிற்கும் கருவிகள்` என்றதனால், `அவ்விடயங்களை அறிகின்ற கருவிகள் சாக்கிரத் தோடே நின்றுவிடும்` என்பதாயிற்று. அவையாவன ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்துமாம், புருடன் கருவியாகாமை பற்றி அதனை நீக்கி, ``பன்னான்கு`` என்றார். ஆகவே, சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து, அந்தக் கரணம் நான்கு புருடன் ஒன்று என இருபத்தைந்து கருவிகளால் கண்டத்தானத்தில் சொப்பனம் நிகழும் என்றமை அறிக.
மூன்றாம் அடியில், `இதயம்` என்பது இரட்டுறமொழிதலாய், முன்னர்ச் சித்தத்திற்குப் பரியாயப் பெயராயும், பின்னர் இருதயத் தானத்தைக் குறிப்பதாயும் இருபொருள் தந்து நின்றது. ஆகவே, `புருடன், சித்தம்` என்னும் இருகருவிகளாலே இருதயத் தானத்தில் சுழுத்தி நிகழும்` எனக் கூறியது காண்க. சுழுத்தியைச் செய்யுள் நோக்கி, `சுழுனை` என்றார். முதற்றொட்டே வாயுக்களைக் கூறாமை யால், இங்கும் கூறிற்றிலர் ஆதலின் `பிராணன்` என்னும் ஒரு வாயு மட்டும் சுழுத்தியில் நிற்கும் என்பது அறிக. அவ்வாயுவைக் கூட்டக் கருவிகள் மூன்றாகும். `பொய் கண்டிலாத` என்றது, `விடயங்களை நன்கு உணர்ந்து வருகின்ற` என்றபடி. எனவே ஈற்றடியில் `மெய்கண் டவன் என்றது அப்புருடனை ஆயிற்று. ஆகவே, அஃது ஒன்றினாலே உந்தித்தானத்தில் துரியம் நிகழும்` என்றதாயிற்று. இங்கும் பிராணன் உண்டு. ஆகவே, சுழுத்தியோடு நீங்கியது சித்தம் ஒன்றுமேயாயிற்று.
துரியத்தைக் கடந்த துரியாதீதத்தில் தத்துவம் பற்றிக் கூறற் பாலது இல்லாமையால் அதனைக் கூறாதொழிந்தார். ஆகவே, புருடன் ஒரு காலத்தும் நீங்குதல் கூடாது ஆகையால், `அதீதம்` பிராணன் ஒன்றும் நீங்கப் புருடன் மட்டும் இருப்பதாயிற்று. அதற்கு இடம் மூலாதாரம் - என்பதும் கீழாலவத்தை இறுதியில் உந்தியைக் கூறியொழிந்ததனால் விளங்கும். `மெய்கண்டவனால் உந்தியில் துரியம் ஆகும்` என்க.
இதனால், கீழாலவத்தை ஐந்தன் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும்
செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களாலும் (எனவே, தாத்து விகம் அறுபதும் உளவாம் ஆதலின் தொண்ணூற்றாறு கருவிகளாலும்) நிரம்பிய அறிவாய்க் கீழாலவத்தைக்கு முன்னே உள்ள மத்தியா லவத்தையில் சாக்கிரம் நிகழும். அதுபொழுது சிவதத்துவம் ஐந்து உள்ளனவாம். அதன் பின் மத்திய சொப்பனம், மத்திய சுழுத்தி, மத்திய துரியம், மத்திய துரியாதீதம் - என்பவை முறையே சிவ தத்துவங்களில் ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு குறைய நிற்கும் தத்துவங்கள் நான்கு, மூன்று, ஒன்று, ஆகுமாற்றால் நிகழும் நீங்குவன சுத்த வித்தை முதலாகவாம் ஆதலின், இறுதியில் நிற்பது `சிவம்` என்பதொன்றுமே யாம். தத்துவங்கள் செலுத்துவனவும், கலை முதலிய ஐந்தும் செலுத்தப் படுவனவும் ஆதலின், செலுத்துவன நான்கும் நீங்கிய பொழுது செலுத்தப்படுவனவற்றிலும் நான்கும் நீங்கும். அவை, `அராகம், வித்தை, கலை, நியதி - என்பன. எனவே, எப்பொழுதும் நீங்காது நிற்பன `சிவம்` என்னும் தத்துவமும், அதனால், செலுத்தப்படுகின்ற காலமும் ஆம். ஆகவே, மத்திய துரியாதீதத்தில் நிற்பன அவை மட்டுமேயாம். இவற்றை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று` எனப்பட்டன சிவ தத்துவங்களின் எண்ணிக்கையே. வித்தியா தத்துவம் ஏழில் புருடன் தனித்தத்துவம் அன்று. மாயை காரணமாய் நிற்பதன்றிச் செயற் படாது. அவையொழிந்த ஐந்துமே செயற்படுவன ஆதலின் சிவ தத்துவம் ஐந்தும் அந்த ஐந்தையே செலுத்தி நிற்கும். செலுத்தும் முறை யாவது, சிவம் - காலம், சத்தி - நியதி. சாதாக்கியம் - கலை. ஈசுரம் - வித்தை. சுத்தவித்தை - அராகம் என்க. செலுத்துவனவற்றில் நீங்குவன சுத்தவித்தை முதலாகவும், அதற்கேற்பச் செலுத்தப்படுவன நீங்குதலும் அராகம் முதலாகவுமாய் நிகழும். தத்தவங்களை எண்ணுங்கால் தோற்ற முறை பற்றி எண்ணுதல் வழக்காதல் பற்றி `நியதி முதலாக` என்றாராயினும் நீங்கும் முறை அராகம் முதலாகவே என்க. செலுத் துவன செலுத்தப்படுவனவற்றின் இயைபை வேறு கூறுவாரும் உளர்.
`இரண்டொன்று` என்றது இரட்டுற மொழிதலாய், முன்னர் உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாய் `மூன்று` எனவும், பின்னர் உம்மைத் தொகையாய் `இரண்டும், ஒன்றும்` எனவும் இருபொருள் தந்தது. நியதி முதல் - நியதி முதலிய தத்துவங்கள். `அவை ஆகும்படி சிவம் ஈறாய் அப்பதி ஆகும்` என்க. பதி - சிவ தத்துவம்.
கீழாலவத்தையில் நிகழும் சொப்பனம் முதலியவற்றை, `இஃது இத்தன்மையது` என யாவரும் தாமும் உணரவும். பிறர்க்கு உணர்த்தவும் கூடிய முறையில் அவை இனிது விளங்கக் கால நீட்டிப் புடன் அன்றாட அனுபவமாய் நிகழும். மத்தியாலவத்தை அவ்வா றின்றி நன்கு விழித்திருக்கும்பொழுதே மிக விரைவில் நினைப்பும், மறப்புமாய் மாறி மாறி நிகழ்வன ஆதலின் அவற்றை யாவரும் தாமும் இனிதுணர்தல் அரிது; பிறர்க்கும் உணர்த்துதல் அரிது. இதன் வேகத்திற்குக் கறங்கோலையை (கற்றாடி ஓலையை) உவமையாகக் கூறுவர். அதபற்றி அருணந்தி சிவாசாரியரும்,
``அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும்
செறிதரும்; கரணந் தன்னில் செயல்தொறும் கண்டுகொள்நீ``*
என்னும் அளவே கூறிச் சென்றார். ஆயினும் சிவாக்கிரர் முதலியோர் கைப்பொருளைத் தொலைத்துவிட்டவன் அத்துன்பமிகுதியாலும், மற்றும் புத்திர சோகம் முதலியவற்றாலும், மூர்ச்சை எய்துதலை `மத்திய துரியாதீதம்` - என வைத்து, அதினின்றும் சிறிது சிறிதாகத் தெளி வடைந்து பழைய நிலையை எய்தும் வரையிலான நிகழ்ச்சிகளை மத்திய துரிய, மத்தி சுழுத்தி, மத்திய சொப்பன, மத்திய சாக்கிரா வத்தைகளாக வகுத்துக் காட்டுவர். ஆயினும், அவையெல்லாம் ஓரளவு தரும் விளக்கங்களேயன்றி, `அவைதம் மத்தியாலவத்தை` எனக்கொண்டு விடுதல் கூடாது. மத்தியாலவத்தை விழிப்புநிலையில் நாம் பொருள் களை உணர்ந்து நிற்கும்பொழுதே நிகழ்வனவாம். அவற்றுள் நினைப்பு, `சகலத்தில் சகலம் என்றும், மறப்பு, `சகலத்தில் கேவலம்` என்றும் சொல்லப்படும். சகலம் `பகல்` எனவும், கேவலம் `இரவு` எனவும் உருவகித்து வழங்கப்படும். ஆகவே, நினைப்பும், மறப்பும் இல்லாத சுத்த நிலை `இராப் பகல் அற்ற இடம்` எனக் கூறப் படுகின்றது.
இதனால், மத்தியாலவத்தைகளின் இயல்பு தொகுத்துக் கூறப்பட்டது. `அவத்தைகளின் பொது இயல்புகள் முதற்கண் ஒருங்கு வைத்துக் காட்டப்படவேண்டும் என்னும் கருத்தினால் இவை இங்குக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.

பொழிப்புரை :

கேவலம் வருமாறு செய்கின்ற அந்தச் சாக்கிரா வத்தையானது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அவற்றின் விடயங்கள் பத்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று - என்னும் முப்பத்தைந்து கருவிகளால் நிகழும்.

குறிப்புரை :

ஞானேந்திரிய விடயங்கள் முன்பு தன் மாத்திரை நிலையில் இருந்தமை பற்றி அவற்றை, `தன்மாத்திரை` என்கின்றவர், அவற்றோடொத்த கன்மேந்திரிய விடயங்களையும் ஒருங்கு கூட்டி, `தன்மாத்திரை` எனச் சுருங்கக் கூறினார். வாயுக்களில் பிராணனும், உதானனும் சொல்லொலியாயும் தோன்றுதல் பற்றி ஏனை வாயுக் களையும் `மந்திரமாகும்` என்றார். `பந்தம்` என்றது கேவல நிலையை. `சக்கரப்பாலது` என்பது, யாதும் அறியாதவர் தாம் அறிந்தவாறே திரித்துக்கொண்ட பாடமாகும். பால் - பகுதி அது, பகுதிப் பொருள் விகுதி. `ஆன்மாவும்` என்பதன் ஈற்றில், `ஆகிய முப்பத்தைந்தும்` என்னும் தொகைச் சொல் விரித்து, `முப்பத்தைந்தாலும் சாக்கிரப் பால் ஆகும்` எனமுடிக்க` `சாக்கிரமாவது இங்கு எடுத்துக்கொண்ட கீழாலவத்தைச் சாக்கிரம்` என்பது விளங்குதற்பொருட்டு, `பந்த அச்சாக்கிரம், என்றார்.
இதனால், முதற்கண், `மத்திமை யானது சாக்கிரம்` எனக் கூறி யதன்கண் செயற்படும் கருவிகளாவன இவை - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாரது பொன்மைப் பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை யுடையது
வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.

பொழிப்புரை :

(அவத்தைக்குக் காரணமான கருவிகளுள் மிக எளிதில் விளங்குவனவாகிய ஐம்பெரும் பூதங்களில்) நிலம் பசும் பொன்னிறத்தையும், நீர் வெண்மை நிறத்தையும், நெருப்புச் சிவப்பு நிறத்தையும், காற்றுக் கருப்பு நிறத்தையும், வானம் புகை நிறத்தையும் உடையன. இவற்றின் அதிதேவர்கள் இவைபோலப் புலனாகாது மறைந்து நிற்பார்கள்.

குறிப்புரை :

`அதிதேவர்கள்` என்பது ஆற்றலால்கொள்ளக் கிடந்தது. தத்துவங்களினின்றும் விடுபடுதற்கு அவற்றை வழிபடுதலும் ஒரு முறையாகும். அதன்பொருட்டு அவற்றிற்கு வடிவம் நிறம் முதலியன ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. அவ்வழிபாட்டிற்குப் பயன் தருபவர்கள் அவற்றின் அதிதேவர்களேயாதல்பற்றி அவர்களை இங்கு உடன் கூட்டி, `மறைந்து நின்றார்களே` என்றார். அதனானே, `இது வழிபாட்டு முறை` என்பது பெறப்படும். சித்தாந்த சாத்திரங்களில் நிறங்களோடு வடிவம் முதலியன கூறப்படுதல் காண்க. பசுமைப் பொன்மை` என மொழி மாற்றியுரைக்க. மூன்றாம் அடியில் தளை மயங்கி வந்தது. காரது மாருதம் - மேகங்களோடு சேர்ந்து வீசும் காற்று. ஈற்றடி உயிரெதுகை பெற்றது.
இதனால் கருவிகளுள் சிலவற்றிற்குக் கூறற்பாலன சிலகூறப்பட்டுள்ளன.

பண் :

பாடல் எண் : 5

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும்
ஏதம் படச்செய் திருந்த புறநிலை
ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு)
ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

பொழிப்புரை :

தத்துவம் முப்பத்தாறனுள் பூதம் ஐந்து, ஞானேந் திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப்பதினைந்தும் புறக்குற்றங் களில் மூழ்கச் செய்கின்ற புறக்கருவிகளாம். ஆறு ஆதாரங்களும், ஒரு வகை மாயையாகச் சொல்லப்படுகின்ற பிரகிருதிகுணங்களும் அவத் தைக்கு ஏதுவாகும். அந்நிலையில் ஐந்தவத்தைகளுள் முதலாவதாகிய சாக்கிராவத்தையில் தொண்ணூற்றாறு கருவிகளும் தொழிற்படுவன வாம்.

குறிப்புரை :

எனவே, இது மத்தியசாக்கிராவத்தையாம் ஆறா தாரங்கள், முக்குணங்கள் இவையும் சில இடங்களில் தாத்துவிகமாகச் சொல்லப்படுகின்றன. `மலம்` என்றது மாயா மலத்தை, `கருவி தொண்ணூற்றாறு என்றது, எல்லாக் கருவிகளும் `குறைவின்றிச் செயற்படும்` என்றபடி.
இதனால், மத்தியாலவத்தையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை
படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை :

மேற்கூறிய மத்தியலாவத்தையின் இயல்பைக் கூறுமிடத்து உயிரினது செயற்பாடு, அனைத்துச் சுற்றங்களும் சூழ அரசன் உலாவருதல் போன்றதாகும். யானை இருபத்தைந்து, (இவை ஆன்மதத்துவங்கள்) குதிரை ஐந்து, (இவை காமம், வெகுளி, உலோபம், யோகம், மதம், என்னும் உணர்ச்சிகள்) அமைச்சர் நால்வர். (இவை நால்வகை வாக்குக்கள்) புறஞ் சூழ்ந்து வரும் சேனைகள் காலாட்படைகள் (இவை வித்தியா தத்துவங்களும், சிவ தத்துவங்களும்) சென்று சென்று நிற்கும் வாயில்கள் ஒன்பது. (இவை நவத் துவாரங்கள்) இங்ஙனமாக அறிக.

குறிப்புரை :

சொல்லாது விடுத்த தாத்துவிகங்களையும் உபலக் கணத்தால் ஏவலர் முதலியவராகக் கொள்ளல் வேண்டும். ஞானா மிர்தத்திலும்l கருவிகள் அரசச் சுற்றங்களாக உருவகித் திருத்தல் அறியத்தக்கது. இடம், அதன்கண் செயற்படும் கருவியைக் குறித்த ஆகுபெயர். படுதல் - பொருந்துதல். பரசேனை - வேறு நின்று சூழும் சேனை. `மத்திமை` என்பதின்பின் `ஆக` என்பது வருவித்து அதனை எண்களுடன் முடிக்க.
இதனால், மேற்கூறிய மத்தியாலவத்தையின் இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு உருவகமாக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

பொழிப்புரை :

அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம்மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்` எனமயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள் தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையாது` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியன வாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது அவர் அறியாமை இருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `தழுவி` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருளில் வந்தது. இரண்டாம் அடியில் `அவ்வுடம்பிடை` எனச்சுட்டு வருவிக்க. `சாக்கிரம் முதலிய அவத்தைகளின் இயல்பை அறிவார்க்கு, உயிர் உடம்பின் வேறாதல் தெற்றென விளங்கும்` எனற்கு இம்மந்திரத்தை இங்கு அருளிச்செய்தார். `கனவில் தூல உடம்பு செயலற்றுக் கிடை யாய்க் கிடக்கவும் உயிர் சூக்கும உடம்போடு கூடிச் செயற்படுதல் அனு பவம் ஆதலின், அவ்வாறே உயிர் ஏனை உடம்புகளின் வேறானது என்பது ஏனையவத்தைகளையும் உணரின் விளங்கும்` - என்பதாம். சிவஞான போதம் மூன்றாம் சூத்திரத்திலும் அவத்தைகளின் இயல்பு பற்றியே உயிர் உடம்பின் வேறாய் உண்மை நாட்டப் பட்டது. `நின்ற உயிர்` என்றாரேனும் `உயிர் நின்றமை` என்றலே கருத்து.
``குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு``
என்னும் குறளில் 8 `நட்பு` என்றது நட்பு இன்மையைக் குறித்து நின்ற குறிப்பு மொழி என்பது அதன்கண் கூறப்பட்ட உவமையால் விளங்கும். அஃதே இங்கும் கூறப்பட்டது. மடத்திற்கும், நாய்க்கும் இயைபில்லையாயினும், ஏதோவொருவழியால் நாய் மடத்தினுள் புகுந்து விட்டதாயினும் அஃது அங்கு நிலையாது நீங்குதல்போல, சடமாகிய உடம்புகட்கும், சித்தாகிய உயிருக்கும் இயைபில்லை யாயினும், வினைகாரணமாக உயிர் உடம்போடு இயைந்து நின்றது ஆகலின், அவ்வியைபு நிலையாது நீங்குதல் இயல்பென்றவாறு. இங்ஙனம் உவமையை விரித்துரைத்துக்கொள்க.
இதனால், `மேற்கூறிய உடலின் பஞ்ச பேதத்திற்கு அனுபவம் அவத்தை பேதங்கள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்
துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர்கள், `உலகத்தில் நாம் எவ் வாற்றால் உயிர் வாழ்கின்றோம்` என்பதைச் சிறிதும் உணர மாட்டார்கள். (உள்வாங்கியும், வெளிப்போக்கியும் பிராண வாயுவை ஓய்வின்றி இயக்குதலால்தான் அவர்கள் வாழ்கின்றனர். ஆகையால் அதனையறிந்து) பிறவியை அறுக்கின்ற அசபா மந்திரத்தால் பிராண வாயுவை மேற்சொல்லியவாறு இயக்கிப் பயின்று தூயராய்ப் பின் அவ்வாயுவை உள்ளே நிறுத்தி` அம்மந்திரத்தை, `சிவன் நான்` எனப் பொருள்படும் வகையில் மாற்றி நினைந்து அவ்வாற்றால், காமனை அழித்தோனாகிய சிவன் தம்மிடத்தில் பதிந்து பின் நீங்காது விளங்கும் படி செய்தலாகிய இம்முறையை உணர்ந்து, அதனால் அவன் அருளே தமது உடம்பாகச் செய்து கொள்வார்க்கு, அங்ஙனம் அமைந்த உடம்பு அழிந்தொழியாது; நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

`சிவன் நான்` எனப்பொருள்படும் மந்திரம், `சிவோகம்` என்பது. அம்ச மந்திரத்தை, `சோகம்` என மாற்றிய வழியும் அதன் உண்மைப் பொருள் `சிவோகம்` என்பதேயாதல் பற்றி, `அசபையை மாற்றி` என்றார். முகத்தல் - பிராணவாயுவைக் கும்பித்தல். இங்குக் கூறியவற்றையெல்லாம் கல்வி கேள்விகளால் அறிந்திருந்தும் அவ்வாறு செய்யாதாரை நோக்கியே, `ஏழைகள்` என்றும், `அறிகிலர்` என்றும் கூறினார். `அறிவினான் ஆகுவ துண்டோ`l எனத் திருவள்ளுவர் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
இதனால் யாக்கை நிலையாதாயினும் அதனை நீட்டிக்கும் வழியை அறிந்தோர் அது செய்யாதிருத்தலின் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள்
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

பொழிப்புரை :

அறிவுப் பொருளேயாயினும் ஆணவ மறைப் பால் அவ்வறிவை இழந்து நின்ற உயிரை இறைவன் கருவிக் கூட்டத்துள் மறைந்து நிற்கும்படி செய்தான். (பின்பு அவ்வுயிர் பக்குவம் எய்திய காலத்தில்) குருவாகி வந்து எனக்கு உபதேசித்த நூல்கள் வழியாக என் உடம்பினுள்ளே மறைந்திருந்த பிராசாத கலைகள் பதினாறையும் விளக்கினான்.

குறிப்புரை :

`அதனால் நான் கருவிக் கூட்டத்தினின்றும் வெளி யேறினேன்` என்பது குறிப்பெச்சம்.
`ஆரியன் ஒடுங்கிய சித்தினை அறுபத்துள் ஒளித்திட்டு வைத்தான். (பின்பு அவனே) வந்து அளிக்கும் கலைகளினால் என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறை அளித்தனன்` என இயைத்துக்கொள்க.
`ஆரியன்` என்பது இரட்டுற மொழிதலாய் முன்பு `பெரி யோன்` எனவும், பின்பு, `ஆசிரியன்` எனவும் இருபொருள் தந்தது. இரண்டாவது பொருட்கு `ஆகி என ஆக்கச் சொல் விரித்துரைக்க.
`ஒரு பதினாலை` - என்பது பாடம் அன்று. ஒரு பதினாறு - பிராசாத கலைகள் பதினாறு. அவற்றை உபதேசமுறையான் அன்றி அறிதல் கூடாமையின், `என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறு` என்றும், அவற்றை அறிந்து அவ்யோகத்தை (பிராசாத யோகத்தை)ச் செய்யவே உடற்கூறுகள் அனைத்தும் இனிது விளங்கி, உயிரினது நிலையும் புலப்படுதல் பற்றி, `ஆரியன் வந்து அளித்தனன்` - என அப்பேற்றினது சிறப்பையும் கூறினார்.
இதனால், யோகிகட்கு அவத்தை பேதங்கள் யாவும் இனிது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்த தொருபூ தசயமே.

பொழிப்புரை :

மண்ணிலிருந்து தோன்றிய பல மலர்களை உடைத் தாய் விளங்குகின்ற நீர், பொன்னிறத்தை உடைத்தாகிய தீயினின்றும் அதற்குப்பின் தோன்றியதாம். இனி அத்தீக் காற்றி லிருந்தும், காற்று ஆகாயத்திலிருந்தும் தோன்றினவாம். புத்தியினின்றும் தோன்றிய தாகிய அகங்காரத்திலிருந்து தோன்றியது மனம். இவ்வாறு தூல சூக்கும தேகங்களின் உற்பத்தியைப் பகுத்துப் பகுத்து உணர்ந்தால், அவற்றை ஒடுக்கி, ஆன்மாத் தூய்மை அடைகின்ற நிலை கைகூடும்.

குறிப்புரை :

`நீரில் உள்ள மலர்கள் மண்ணில் தோன்றியன` என்றதனால், `நீர் மண்ணில் தோன்றவில்லை; மண்ணே நீரில் தோன்றியது` என்பது குறிக்கப்பட்டது. யாப்புக்கு ஏற்பச் சொற் சுருங்கி வருதற்பொருட்டுத் தனித் தனியாகக் கூறாமல், தொடர்ப் படுத்திக் கூறினார். பொன், உவம ஆகுபெயராய்த் தீயைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப்பகுதியைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப் பகுதியைக் குறித்தது. `வளியின், ஆகா யத்தின்` - என அவ்விடங்களில் தொகுக்கப்பட்ட நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபை விரித்து, `வளி` - என்பதை இரண்டாம் முறையும் ஓதுக. `புத்தி ஆங்காரம், என்பது, `புத்தியினின்றும் தோன்றிய ஆங்காரம்` என ஐந்தாவதன் உருபும் பயனும் உடன் தொக்கதொகை. அதன்பின் இன்னுருபு விரித்து, `மன்னும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `புத்தி ஆங்காரத்தின் மனம் மன்னும்` என்க. அனைத்தும் நான்கடிகளுள் அடங்கு மாறெல்லாம் கருதி இவ்வாறு அடக்கி ஓதினார்.
பூத சயம் - பூத காரியமாகிய உடம்பை வென்று மீளும் வெற்றி. `பூத சயம் கூடும்` என்பதில் `கூடும்` என்பது அவாய் நிலையாய் நின்றது. அகங்காரத்தினின்றும் மனத்திற்குப்பின் தோன்றிய ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் உளவாயினும் அவை ஓராற்றால் பூதங்களின் அடங்குதல் பற்றி ஓதாது விடுத்தார். `ஒருபூ சயமே` என்பதை `ஒருபூத தசயமே` - என வகையுளியாக்குக.

பண் :

பாடல் எண் : 11

முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

பொழிப்புரை :

ஐவர் சத்திகளில் முன்னவளாகிய மனோன் மணிக்கு மகன் ஒருவன்தான். அவளிடத்தினின்றும் தோன்றிய மகேசுரனுக்கு மக்கள் இருவர். நெருப்புப்போலும் உருவத்தையுடைய உருத்திரனுக்கு மக்கள் மூவர். மணமகள் போல அழகு மிக உடைய திருமகளுக்கு மக்கள் நால்வர். கணவனது இயல்பு நோக்கிக் கன்னி யாகச் சொல்லத்தக்க வாணிக்கு மக்கள் ஐவர். இவையெல்லாம் அநாதியில் யில்லை. ஆயினும் அநாதியாகிய சிவன் அவ்வாறாகிய தனது சத்தியை அநாதியே தாய்மை அடையுமாறு கருதினான்.

குறிப்புரை :

`அதனால் இவைகள் எல்லாம் உளவாயின` என்பது குறிப்பெச்சம் `உலகம் சிவம் சத்திகளின் விளையாட்டே` என்பது பற்றிச் சிலவற்றைச் சத்தியின் மேலும், சிலவற்றைச் சிவத்தின்மேலும் வைத்துக் கூறினார். மகேசுவரன் அருவனும், அருவுருவனும் ஆகாது உருவன் ஆதலின், `மூர்த்தி` - என்றார். ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்திற்கும் சதாசிவன் முதலிய ஐவர் அதிதேவர் ஆதல் பற்றி, அவற்றில் உள்ள குணங்கள் அவர் ஈன்ற மக்களாக உவமித்து ஓதினார். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் - என்பன ஆகாயம் முதலியவற்றில் ஒன்று தொடங்கி, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என இத்துணையவாகப் பொருந்தியிருத்தலை அறிந்துகொள்க. ஐம்பூதங்களை வழிபடுதற்கண் அவை அவற்றின் அதிதேவராலே செயற்படுதலை அறிந்து வழிபட்ட வழியே பயன் விளையும் ஆகலின், அவற்றை அவ்வாறறிதற் பொருட்டு இம்மந்திரத்தை ஓதினார். பஞ்ச பூதங்களின் முறைமையே பஞ்ச கலைகட்கும் ஆதலை உணர்க. வது - மணத்திற்கு உரிய பெண். விட்டுணு போகத்தையே தருதல் பற்றி, அவனது சத்தியைக் `கன்னி` என்றுங் கூறினார். பின்னர் வந்த கன்னி, சத்தி உலகத்தை நோக்குதல் இன்றித் தன்னிலையில் நின்ற நிலைமையைக் குறிப்பால் உணர்த்திற்று. கன்னியின்கண்ணே காதலித்தான்` - என ஏழாவது விரிக்க காதலித்தல், இங்கு உலகத்தைத் தோற்றுவிக்க விரும்பி நின்றது. காதலித்தற்கு வினைமுதல் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், மேற்கூறப்பட்ட பூத சயத்திற்கு அறியற்பாலன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சுழுத்திக்குப் பின் கண்ட கனவிலே செயற்பட்ட ஓசை முதலிய புலன்கள் ஐந்தும், பின்னர்ச் சென்று கலந்த பொறிகள் ஐந்தோடும் கூடியிருக்கும் நிலையில் அப்பொறிகளின் வழியாகப் புறப்பொருள்களை அந்தக்கரணங்கள் நான்கும் உணர்வுறும் நிலைமையை ஒருங்கே அடைந்தபின் புருடன் முன்னை நிலையை அடைந்து, விரிந்த பரந்த சிறந்த சாக்கிராவத்தையையுடையனாய், உலகமே தானாயது போன்ற வியாபக நிலையைப் பெற்று, வினைகளை நுகர்தலும் ஈட்டலும் செய்திருப்பான்.

குறிப்புரை :

ஐந்து, ஐந்து, நான்கு என்னும் எண்கள் அவ்வவ்விடம் பற்றி அவ்வக் கருவிகளை உணர்த்தின. சிறப்புப் பற்றி ஞானேந்திரிய விடயங்களையே கூறினாராயினும் இனம் பற்றிக் கன்மேந்திரிய விடயங்களும் அவற்றிற்குரிய கன்மேந்திரியங்களும், அவற்றிற்கு, வலிமை தருகின்ற வாயுக்கள் பத்தும் கொள்ளப்படும். படவே, `எடுத்துக் கூறிய பதினைந்துடன் இவ்விருபதுங்கூட, அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் முப்பத்தைந்து` என்பதும், `அவற்றால் நிகழ்வது கேவல சாக்கிரம்` என்பதும் விளங்கும். `அமர்ந்து நின்றான்` - என்னும் பயனிலைக்குத் தோன்றா எழுவாயாய் நின்றது `புருடன்` என்பதே யாகலின், அதுவும் எடுத்துக் கூறப்பட்டதாயிற்று. மந்தமாய் நிகழினும் ஐம்புலனையும் உணர்தலிற் குறையாமைபற்றி. `அண்டமும் தானாய் அமர்ந்து நின்றான்` என்றார்.
இதனால் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து)
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

பொழிப்புரை :

ஞானேந்திரியமும், கன்மேந்திரியமும், அந்தக் கரணங்களும் ஆகிய பதினான்கு கருவிகளோடு கூடிச் சாக்கிரா வத்தையில் நின்ற புருடன், அவ்வாறு நிற்கும் நிலையிற்றானே இரு வகை இந்திரியங்களாகிய பத்துக் கருவிகளை நீக்கிவிட்டு, எஞ்சிய நான்காகிய அந்தக்கரணங்களோடு மட்டும் அழுத்தமான கண்டத் தானத்தில் சென்று, முன்பு சாக்கிரத்தில் புருவ நடுவில் நின்று நுகர்ந்த உலக நுகர்ச்சிகளின் வாசனையைக் கனவாகக் காண்பான்.

குறிப்புரை :

அவத்தைக்கு ஏதுவாவனவாக மேற்கூறிய கருவிகள் முப்பத்தைந்தனுள் ஞானேந்திரிய விடயம் ஐந்தும், கன்மேந்திரிய விடயம் ஐந்தும், பிராணாதி வாயுக்கள் பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்களாதல் பற்றி அவற்றை விடுத்து, தத்துவங்களாகிய பதினைந்து மட்டுமே இங்குக் கூறினார். கண்டத்தில் கனா நிகழும் பொழுது, `அந்தக்கரணம், புருடன்` என்னும் ஐந்தோடு தாத்துவிகங் களாகிய இருபதும் கூட, இருபத்தைந்து கருவிகள் செயற்படும் என்பது அறிக. இதுவே சொப்பனமாம்.
`மன்று` - என்றது புருவ நடுவை. கன்றுதல் - இறுகப் பற்றுதல். விழிப்பினின்றும் நீங்கிய உயிரை அமைதியாக உறங்க ஒட்டாது கனாவில் பிணித்து வைத்தல் பற்றிக் கண்டத்தானத்தை, `கன்றிய கண்டம்` - என்றார். `வாதனையைக் கனவாகக் கண்டான்` என்க. அது, பகுதிப்பொருள் விகுதி. பல நாளும் நிகழ்வதை எதிர்காலத்தாற் கூறாது, ஒரு காலத்தின்மேல் வைத்து, இறந்த காலத்தாற் கூறினார். `பதினாலிற் பத்து நீத்து` என்றதனானே, கேவல சாக்கிரம் முப்பத் தைந்து கருவிகளால் நிகழ்தல் பெறப்பட்டது.
இதனால், கேவல சாக்கிரம், கேவல சொப்பனம் ஆகிய அவத்தைகளின் இயல்பு கூறப்பட்டது. கேவல ஐந்தவத்தையே கீழாலவத்தையாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 14

தானம் இழந்து தனிபுக் கிதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி
ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்திய தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய கண்டமாகிய தானத்தை (இடத்தை) விட்டுப்புருடன் கீழ் இறங்கி, அங்ஙனம் இறங்கும் நிலையில், முன்பு இருந்த அந்தக்கரணங்களுள் மானமாகிய அகங்காரத்தையும், மதியாகிய புத்தியையும் விடுத்து, யாதொன்றையும், பற்றிநினைக்க மாட்டாத நிலையையடைந்து, இருதயத்தில் தனியேசென்று, புலன் உணர்வையிழந்து இழப்பு நிலையில் உயிரினது சொரூபமே காணப் படாது கிடக்கும் நிலையே சுழுத்தியவத்தையாம்.

குறிப்புரை :

அகங்காரத்தையும், புத்தியையுமே இழந்ததாகக் கூறினமையால், சித்தம் விடப்படாதாயிற்று. நினைத்தல் மனத்தால் ஆகலின், `நினைக்க மாட்டாது` என்றமையால் மனம் நீங்கினமையும் பெறப்பட்டது ஆகவே, பெரும்பான்மை பற்றி, `தனி புக்கு` - என்றா ராயினும், `சித்தத்துடன் புக்கு` என்பதே பொருளாயிற்று. புறப் பொருளைப் பற்றுவது மனமேயாகலின், அஃதில்லையாகவே, `அதனால் பற்றப்படும் ஞானேந்திரிய விடயங்களும், கன்மேந்திரிய விடயங்களும் இலவாம்` என்பது தானே விளங்கிற்று. தாத்துவிகம் ஆதல்பற்றி, வாயுக்களை நாயனார் கூறாதே விடுத்தலால், பிராணாதி வாயுக்களில் பிராணன் தவிர ஏனை ஒன்பது வாயுக்களும் சொப்பனத் தானத்தோடே நின்று விடுதல் உரையிற் கொள்க. இதனால், சொப்பனத் தானத்தில் செயற்படுவனவாகக் கூறப்பட்ட இருபத்தைந்து கருவிகளில் சத்தாதி விடயங்கள் ஐந்து, வசனாதி விடயங்கள் ஐந்து, வாயுக்கள் ஒன்பது, மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்கள் மூன்று ஆக இருபத்திரண்டு கருவிகள் சொப்பனத் தானத்திலே நின்று விட, `சித்தம், பிராணன், புருடன்` என்னும் மூன்று கருவிகளினாலே இருதயத்தில் சுழுத்தி நிகழும் என்க. சித்தம் செயற் படுதலால் `சுழுத்தியில் ஆன்மாவிற்கு ஆழ்ந்த சிந்தனை உண்டு` என் பதும், ஆயினும் `புத்தி` இல்லாமையால் விழித்தபின் `முன்பு என்ன சிந்தித்தோம்` என்பதை ஆன்மா உணர்வதில்லை - என்பதும் உணர்க.
பிராண வாயுவை இயக்குவது அகங்கார தத்துவமே ஆகையால், `பிராணன் உண்டு` எனவே, `அதனை இயக்கும் அகங்கார தத்துவம் உண்டு` என்பது பெறப்பட்டதாயினும், அஃது பிராணனை இயக்குவதைத்தவிர, `நான்` என முனைப்புற்று எழுச்சி யாகிய தனது காரியத்தைச் செய்யமாட்டாமையால், நீங்கிய கருவி யாகவே எண்ணப்படும்.
இதனால், கேவல சுழுத்தியின் இயல்பு கூறப்பட்டது.
சுழுத்தியில் ஆன்மா அறியும் கருவிகள் இல்லாமையால் அறியாமையிற்பட்டு, முடமாய்க்கிடப்பதையே ஏகான்மவாதிகள், ஆன்மாச் சுழுத்தியின் பிரம்மானந்தத்தில் அழுந்தியிருப்பதாகக் கூறுவர். `நிர்க்குணமாகிய சுத்தப்பிரமமே அவிச்சை வசத்தால் சகுணமாகிய பந்தத்தை எய்தும் எனக் கூறுகின்ற அவர்கட்கு, `பிரம்மா னந்தத்தை அடைந்த சீவன் மீட்டும் அதைவிட்டு விடயானந்தத்திற்கு வந்துவிடும்; இந்நிலை அன்றாட நிகழ்ச்சியாகச் சீவனுக்கு மாறி மாறி நிகழும் எனக் கூறுதல் பொருந்தும். `சிவனை அடைந்து, அவனது இன்பத்தை நுகர்ந்த உயிர், மீட்டும் ஐம்புல இன்பத்தை நோக்கி வருதல் இல்லை. அதனால், சிவன் தன் அடியார்களுக்கு மீண்டு வாரா வழியையே அருள்புரிவான்` எனக் கூறுகின்ற சித்தாந்திகட்கு அது பொருந்தாது - என்பதை விளக்கச் சுழுத்தி நிலையை, `விரிவு - அறியா அவ்வியத்தம்` என்றார். விரிவு - அறியப்படுவனவாய் விரிந்து கிடக்கும் பொருள்கள். அவ்வியத்தம் - விளங்காமை. `அவ்வியத்தம்` என்பது காரண இடுகுறியாய் மூலப் பிரகிருதியைக் குறிப்பதாயினும் இங்குக் காரணக்குறியால் ஒன்றும் விளங்காதநிலையைக் குறித்தது. உலக அனுபவத்தை இழந்துவிடுவதே சிவாநுபவத்தை, அல்லது பிரம்மாநுபவத்தைப் பெற்றுவிடுதல் ஆகிவிடாது. `ஆகும்` எனின், கட் குடியில் மயங்குவோர், விடம் தலைக்கேறுதல் முதலிய காரணங் களால் மூர்ச்சையுற்றோர் முதலிய பலரும் யாதொரு ஞான ஒழுக்கமும் இல்லாமலே சிவாநுபூதியைப் பெற்றவர் ஆகி விடுவர். ஆகவே, `சுத்தத்தில் அரிதில் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன வேறு; கேவலத்தில் எளிதில் அன்றாட நிகழ்ச்சியாய் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன வேறு எனவும் தெரிந்துணர்ந்துகொள்க. மேனி - சொரூபம். ஆன்மாவின் சொரூபம் அறிவு.
இவ்விடத்தில் கூறப்பட்டுவருவன `கீழாலவத்தை` எனப்படும் கேவல ஐந்தவத்தைகளேயாம்.

பண் :

பாடல் எண் : 15

சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.

பொழிப்புரை :

சுழுத்தியில் உள்ள மூன்று கருவிகளுள் புருடனுக்கு அறிவைத் தருவதாகிய சித்தம் நீங்கிப்போக, உந்திக் கமலத்தின்கண் பிராணவாயு ஒன்று மட்டுமே அவனுக்கு அறிவைத் தருவதாய் அமைய அங்கு இருந்துகொண்டு, ஆன்ம தத்துவங்கள் யாவும் தன்கண்வந்து ஒடுங்கநிற்பதாகிய மூலப்பிரகிருதியைத் தான் சிறிது அறிதலை அவன் செய்துகொண்டிருப்பான்.

குறிப்புரை :

அதுவே கேவல துரியமாம். சுழுத்தியை, `சுழுனை` என்றார். காட்சிக்குக் கருவியாவனவற்றை, `காட்சி` என்றது ஆகு பெயர். `பிராணன் தன்காட்சியாக` என ஆக்கம் விரித்து, அத்தொடரை ஈற்றடியில் முதலில் கூட்டுக. ஒழுகுதல் - ஒழுகிப்போதல்; நீங்குதல். `சித்தம் ஒழுக` - என இயைக்க. `கமலம்` என்பது இடத்திற்கு ஏற்ப உந்திக் கமலத்தைக் குறித்தது விழுதல் - வந்து ஒடுங்குதல்.
இதனால், புருடன், பிராணன்` என்னும் இரு கருவிகளே செயற்பட, ஆன்மா உந்தியில் நிற்றல் கேவல துரியம், அல்லது கீழாலவத்தைத் துரியம் - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தானத் தெழுந்து தருந்துரி யத்தினின்
வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத் தெழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.

பொழிப்புரை :

உயர் தனக்குச் சிறப்பிடமாகிய இருதயத்தினின் றும் புறப்பட்டவழி அதற்குத் தரப்படும் துரியத்தானத்தில் நின்று பின்பு அதனையும் விட்டு அப்பாற் சென்று, உலகத்தைப் பின் தள்ளிவிட்டு, நாதத்தால் உணர்வு விளங்குமாறு நிற்கின்ற குண்டலினி சத்தியின் தலைபொருந்தியுள்ள மூலாதாரத்தை அடைந்து, அவ்விடத்தில் பொருள்களை மயங்கியறிதலாகிய அந்த அறிவும் இன்றி அறிவே யில்லாதது போலக் கிடக்கும்.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களும் உயிர்க்கு இடமாயினும் அவற்றுள் இருதயமே சிறந்ததாதல் பற்றியே `உயிருக்குத் தானம்` என்றார். `தானத் தினின்றும்` என ஐந்தாவது விரிக்க. `எழுந்தவழி` என்பது `எழுந்து` எனத்திரிந்து நின்றது. வாயுவுக்குமேல் உள்ளது வானம் ஆதலின், `வானத்தெழுந்து`` என்றது, பிராண வாயு நீங்கிய நிலையைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றது. பிராணவாயுவின் இயக்கமும் இல்லாது போதலின் உயிர் உலக அனுபவத்தைச் சிறிதும் உடைத் தாகாமையை, ``வையம் பிறகிட்டு`` என்றார், கானம் - நாதம், கருத்து - உணர்வு. அஃது அதனைத் தரும் குண்டலி சத்தியை உணர்த் திற்று. `வித்தை` என்பதும் உணர்வே, `அது மயக்க உணர்வு` என்றற்கு `ஊனத்த வித்தை` என்றார். ஊனம் - குறை. `ஊனமாய் நின்றான்` என ஆக்கம் விரித்து, ஆக்கம் உவமை குறித்து நின்றதாக உரைக்க. ஊமனுக்கு உணர் விருப்பினும் அதனை வெளிப்படுத்த மாட்டுவான் அல்லன் ஆதலின், அவன் உணர் வுடையனாயினும் அது செயற்படாத நிலையை உடைய உயிருக்கு உவமையாயினான். காரியமாகிய உலகத்தை நுகராமையின் காரண மாகிய மூலப்பிரகிருதியே அவ்விடத்தில் உயிருக்கு நுகர்ச்சியாவதாம்.
இதனால், `பிராணவாயுவின் இயக்கமும் இன்றிப் புருடன் மூலாதாரத்தில் மூலப்பிரகிருதியைப் பற்றிக்கொண்டு, வெறும் மூடமாய்க் கிடப்பதே கேவல துரியாதீதம்` என அதனது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.

பொழிப்புரை :

[நால்வகை வாக்குக்களில் மிகவும் தூலமாகிய வைகரிவாக்குச் சகல ஐந்தவத்தையிலும் தூலமாகிய மத்திமை வாக்கு கேவல ஐந்தவத்தையிலும், சூக்குமமாகிய பைசந்தி வாக்கு யோகா லவத்தையிலும், மிகவும் சூக்குமமாகிய சூக்குமை வாக்கு சுத்த ஐந்த வத்தையிலும் செயற்படும். அதுபற்றித்தான் வாக்குக்கள் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகளாக எண்ணப்படவில்லை.]
மேற்கூறிய நால்வகை ஐந்தவத்தைகளில் மேற்கூறியவாறு நால்வகை வாக்குக்கள் செயற்படுங்கால், சாக்கிரம் முதலிய ஐந்திலும் முறையே, தூலதமம், தூலதரம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம்` என்னும் நிலையில் செயற்படும் அதிசூக்குமமே ``ஊமையெழுத்து`` என்றும் ஏனையவை ``பேசும் எழுத்து`` என்றும் மறைபொருட் கூற்றாகக் கூறப்பட்டன. அதிகாரம் கீழாலவத்தையாதலின் இங்குக் கூறப்பட்ட, `பேசும் எழுத்து, ஊமையெழுத்து` - என்பன கீழாலவத் தையில் செயற்படுவ தாகிய மத்திமை வாக்கின் `அதிசூக்குமம், சூக்குமம்` என்பவற்றை யாம். தூலதமம், தூலதரத்திலும், தூலதரம் தூலத்திலும், தூலம் சூக்குமத்திலும் ஒடுங்கிவிடப்பின்பு சூக்குமமும் அதிசூக்குமத்தில் ஒடுங்கிவிட்டால் பெத்தநிலையில் உள்ள உயிர் புறப்பொருள்களில் யாதொன்றையும் அறியமாட்டாது உணர்வை முற்றிலுமாக இழந்து, பிரகிருதிமயமாகியே கிடக்கும். இதுவே கீழாலவத்தையில் துரியா தீதத்தின் நிலைமை. இதனையே,
``ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்``
என்றார். `ஆமை` என்றது உயிரை. இஃது உருவகம். அஞ்சு - ஐம் புலன்கள்மேல் சென்று அவற்றைக் கவர்கின்ற உணர்வு. அவ்வுணர்வு சிறிதும் வெளிச்செல்லாது உயிரோடு உயிராய் ஒட்டிக் கிடத்தல், ஆமையின் ஐந்து உறுப்புக்கள் அதனது ஓட்டிற்குள்ளே அடங்கி வெளித் தோன்றாதிருத்தலோடு ஒத்திருத்தல் பற்றி, உயிர் ஆமையாக உருவகம் செய்யப்பட்டது. சுழுத்தி துரியங்களிலும் அஞ்சும் அடங்கி யிருப்பினும் சித்தமும், பிராணனும் செயற்படுதலால் `அவற்றின் வாசனை சிறிதாயினும் இருக்கும்` என எண்ண இடம் உண்டு. உயிர்ப்பு அடங்கி விட்டமையால் அதீதத்தில் அவ்வாறு எண்ணச் சிறிதும் இடம் இல்லாமை பற்றி, இவ்விடத்திற்றானே ``அஞ்சும் அடங்கிடும்`` எனக் கூறினார். `தமோமாய்` (இருள்மயமாய்) நிற்கும் அதீத நிலையை சிவத்தில் அழுந்தி ஒளிமயமாய் நிற்கும் நிலையாகக் கூறுபவர் யாதும் அறியாதவர்` என்பதை உணர்த்துதற்குப் பின்னிரண்டடிகளைக் கூறினார். அவற்றுள் `ஓம்` என்றது அதன் உண்மைப் பொருளாய் நிற்கும் சிவத்தை.
`சுத்த துரியாதீதத்தில் சிவத்தை அடைந்த சிவமயமான உயிர், இருள் முழுவதும் நீங்கி ஒளிமயமானதாகும். அதனால் அது `நாம்` என்னும் சீவபோதமும் இல்லாததாகும். அந்த நிலையை நாம் அறிந்திலோம் என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

குறிப்புரை :

கீழாலவத்தையைக் கூறிவருகின்றார் ஆகலின், அது பற்றித் தம்மை அந்த அவத்தையின் நின்று பேசுபவராக வைத்து, ``நாம் அறியோம்`` என்றார். ஆகவே `கீழாலவத்தையில் நிற்போர் சுத்த வத்தையின் அனுபவத்தை அறியார்` என்பது அதன் உண்மைப் பொருளாயிற்று.
இதனால், `கீழாலவத்தைத் துரியாதீதம் இருள் மயமானது, என்பது உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள
நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

பொழிப்புரை :

சுழுத்தியைக் கடந்து உள்ள `துரியம், துரியாதீதம்` - என்னும் இரண்டனுள் துரியம், `எவ்வாறு இருந்தது` என வினாவு பவர்க்கு, `இவ்வாறு இருந்தது` என விடையிறுக்கக் கூடியதாகும். துரியா தீதமோ எனில், அவ்வாறு வினாவுவார்க்கு இவ்வாறு இருந்தது` எனச் சொல்லவாராத நிலையாகும். ஏனெனில், சாக்கிராவத்தையில் அடக்கினும் அடங்காது, யாதானும் ஓர் ஆற்றால்தப்பிப் புறத்தே ஓடுதலால், `நரிகள்` என்று சொல்லத்தக்கனவாகிய ஞானேந்திரியம், கன்மேந் திரியம், அந்தக்கரணம் என்னும் பதினான்கு பொறிகளும் (கரணங்களும்) பிரகிருதியின் தமோ குணமாகிய விடத்தை உண்டமையால் இறந்து போய்விட்டன. அப்பொறிகளின் வழிச் செல்லும் உணர்விற்கு ஊர்தியாகிய `பிராணன்` என்னும் குதிரையும் தனது ஓட்டம் அடங்கி ஒழிந்தது.

குறிப்புரை :

எனவே, நரிகள் பதினான்கு இல்லையென்றாலும் பரி (குதிரை)யின் ஓட்டம் இருந்ததால் துரியநிலை `இவ்வாறு இருந்தது` எனச் சொல்லத் தக்கதாயிற்று - என்பதாம். `நான் சுகமாகத் துயின்றேன்` - எனப் பின்பு விழிப்பு நிலையில் கூறுவது, துரிய நிலையில் எய்திய அனுபவத்தையேயாம். அந்த அனுபவமும் அறியப்படாத நிலையே கீழாலவத்தைத் துரியாதீத நிலை என்க. `இறந்த` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், கீழாலவத்தைத் துரியாதீத நிலை உயிர் தன்னையும் மறந்திருக்கும் நிலை` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு)
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து)
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

பொழிப்புரை :

முத்தி பெறுங்காறும் விட்டு நீங்காதிருக்கின்ற ஐந்து மலங்களால் நிலைபெறுவதாகிய சகலாவத்தையில் தனியொரு சிறப்பினையுடைய மாயேயமாகிய தனு, கரணம் முதலியவற்றிற்கு இந்தச் சகல நிலையில் முடிவேயில்லாமையால், எல்லாவகையான உயிர்களும் ஒரு பிறப்பின் பிறந்து, பின் அதனை விட்டு நீங்கி, வேறொரு பிறப்பை அடைந்து அலமரும். அதற்குக் காரணம் தனது ஆற்றல் குன்றப்பெறாத வினையே.

குறிப்புரை :

எனவே, `அவத்தை பேதங்கள் பெரும்பான்மை யாகச் சகலாவத்தையிலே நிகழ்வன` என்பதும், `அவற்றிற்குக் காரணம் வினையே` என்பதும் கூறியவாறாம். ஆகவே, `கேவல ஐந்தவத்தை என்பன` - சகலத்திற் கேவல அவத்தைகள் என்றும் சகல ஜந்தவத் தைகள் - என்பன, - `சகலத்திற் சகல ஐந்தவத்தைகள்` என்றும், `சுத்த ஐந்தவத்தைகள் - என்பன, - சகலத்தில் சுத்த ஐந்தவத்தைகள்` என்றும் உணரற்பாலன - என்றதாயிற்று. சகலத்திற் சகலம் `மகாசகலம்` - எனப்படும் இவற்றைக் கூட்டிக்கணக்கிடின் மூவைந்து பதினைந்தாதல் அறிக. இனி, `யோகாலவத்தைகள் - என்பனவும் சகலத்தில் நிகழ் வனவேயாதலின் அவற்றைக்கூட்ட, சகலத்தில் நிகழும் அவத்தைகள் இருபதாம், அவை நிற்க. தனியே கேவலத்தில் ஐந்தும், தனியே சுத்தத்தில் ஐந்தும் கூட்ட அவத்தைகள் முப்பதாம். `இவற்றுள் சகலத்தில் நிகழும் அவத்தைகளே பெரும்பாலன` - என்றது உணர்த் துதற்கே` `மாறா மலம் ஐந்தின் மன்னும் அவத்தையின்` என்றார். கேவலத்தில் மன்னும் மலம் ஆணவம் ஒன்றே சுத்தத்தில் யாதொரு மலமும் இல்லை. ஆகவே, `மலம் ஐந்தால் மன்னும் அவத்தை` என்றது சகலாவத்தையாயிற்று. `கேவலம், சகலம், சுத்தம்` எனக் காரண அவத்தைகள் மூன்று. அவை ஒவ்வொன்றிலும் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தும்காரிய அவத்தைகள். ஈறாகாது` என்னும் எதிர்மறை வினையெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது.
இதனால், இயைபுபற்றி, `அவத்தை` என்பன பலவும் குறிப்பால் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து)
எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.

பொழிப்புரை :

இன்ப துன்பங்களை வினைக்கு ஏற்றவாறு விளைவித்து நிற்கின்ற மாயேயமாகிய உலகம், அந்த இன்பத் துன்பங்கள் தன்கண் வாதியாதபடி புளியம் பழத்தின் ஓடுபோல ஒட்டற்றுக் கழிய, இறைவனது திருவருளில் தோய்ந்து நிற்றலே முத்தியாகும். (என்றது, சீவன் முத்தி நிலையை, அதுவே சகலத்தில் சுத்தம் - என்க. இந்நிலைமுற்றாகக் கைகூடுதற்கு முன் பிராரத்த மாயினும் நீங்கிவிடுமாயின் அந்த உயிர் மற்றொரு பிறப்பை அடையும்) அத்தகைய உயிர் மற்றொரு பிறப்பை அடையுமாயினும் முன்னை ஞானத்தோடே பிறந்து, அது வழியாக அப்பிறப்பில் அது சீவன் முத்திநிலை முற்றாகக் கைகூடப் பெற்றுப்பின் முடிநிலையாகிய பரமுத்தியை அடையும்.

குறிப்புரை :

``ஊட்டிடும் மாயை`` என்றதனால் அவை மாயேய மாயின. எனவே, `மாயேயத்தின் ஒட்டற்று நிற்கும் நிலையும், அதுவும் இன்றி நீங்கி வைந்தவத்தோடு நிற்கும் நிலையுமே சுத்தாவத்தை` என்பதும் கூறியவாகும்.
ஏர்முத்தி - எழுச்சியையுடைய முத்தி முடிநிலை முத்தி. `ஊட்டிடும் மாயையும் உண்ணும் தன் ஊடாடாது அண்ணல் அருள் பெறல் ழுத்தியதாவது; அவனை நண்ணல் இலா உயிர்` என உரைக்க. ஞானத்தினால் - ஞானத்தினோடு.

பண் :

பாடல் எண் : 21

அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
இதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாக ஐயவத் தைப்படு வானே.

பொழிப்புரை :

அறிவு சிறிதேனும் தொழிற்படாத, `ஒரு பேருறக்கம்` எனச்சொல்லத்தக்கது, ஆன்மா ஆணவத்தோடு மட்டும் இருக்கின்ற நிலை (அஃது `அநாதி கேவலம்` எனப்படும்). பின்பு அந்த ஆணவ மலத்தின் சத்தி மாயையினால் சிறிதே கெட, அந்த மாயை விளக்கும் அளவிற்கு அறிவு விளங்கப் பெற்ற உயிர், நீக்குதற்கரிய வினைக்கு ஈடான உணர்வையே உடையதாம் நிலையில் இன்பம் போல நிகழ்கின்ற அறியாமையில் செல்வதே சகலத்தில் கேவலம். இந்தக் கேவலத்தில்தான் ஆன்மாக் கீழாலவத்தை ஐந்தினையும் அடையும்.

குறிப்புரை :

ஆணவத்தின் சத்தி கெடுவது மாயையால் ஆதலின் அஃது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கன்மத்தால் முன்னி` என உருபு விரிக்க. `கேவலம்` - என்பது `அறியாமை` என்னும் பொருட்டாய் நின்றது. `கேவலத்து` என்னும் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. பரம் - மேன்மை `பரம் ஆக` - என்றது `வேறு (கீழ்) ஆகின்ற` என்னும் பொருளைத் தந்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
இதனால், கீழால் அவத்தை` - எனப்படுவன சகலத்தில் நிகழும் கேவல ஐந்தவத்தைகளாம் - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடா ணவத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

பொழிப்புரை :

அநாதியே பற்றி, இறுதியற்றிருக்கும் ஆணவ மலத்தால் அறிவிழந்து கிடக்கும் உயிர்களைக் கருணையே உருவாய் உள்ள இறைவன் எவ்வாறு அறிவை மறைத்தல் இன்றி, அதனை விளங்கச் செய்வதாகிய மாயையாகிய பணிப்பெண்ணை விட்டு ஆணவ உறக்கத்தினின்று தட்டி எழுப்பும்படி செய்வான். இது நல்லாசிரியன் ஒருவன் முன்னைநிலையில் சோம்பலால் உறங்கி விடுகின்ற சில மாணவர்களை அவ்வாசிரியன் மாணவர்களது அறிவை வளர்க்கத் தனது கையில் கொண்டுள்ள பிரம்பால் தட்டியெழுப்புதல் போல்வது.

குறிப்புரை :

`ஆசான்எழுப்பும்` என இயைக்க. `தன்முன்னே துயில் மாணவகரை` என்க. உவமையில் சொல்லளவில் திணை மயங்கின எனினும், பொருளில் மயக்கம் இன்று. நேசம்` என்பது கடைக் குறைந்து நின்றது `ஆணவத்தரை மாயையால் எழுப்பும்` என்றதனால், `ஆணவம் சோம்பல்போல உறக்கத்தை விளைவிக்கும்` என்பதும், `மாயை ஆசான் கைப்பிரம்புபோல உறக்கத்தினின்றும் விழிப்பிக்கும்` என்பதும் பெறப்பட்டன. இன்னும், மாயையை ஆசானது கையில் உள்ள பிரம்போடு உவமித்தமையால், `அது சிவனுக்கும் பரிக்கிரக சத்தியேயன்றித் தாதான்மிய சத்தியன்று` என்பதும் விளங்கிற்று. இம்மந்திரப் பொருள் உமாபதி தேவரது சதரத்த சங்கிரகத்துள். l
``குருர் யதாக்ரதா; சஷ்யாந் ஸுப்தாந் தண்டேந போதயேத் I சவோபி மோஹநீத்ரயாம் ஸுப்தாந் சத்தியா போதயேத் II
எனக்கூறப்பட்டது. அதனைத் துறைமங்கலம் சிவப்பிரகாசர் தமது சதமணி மாலையில்,
``குரவன் முன்துயில் கொள்ளும்மா ணாக்கனை
உரிய கோல்கொண் டுணர்த்துவன்; ஈசனும்
துரிய போகத் துயில்கொளு வான்றனை
அரிய சத்தியி னால்அறி விக்குமே`` 8#
என மொழிபெயர்த்தார்.
சதரத்ந சங்கிரகத்தின் மூலத்திலும், அதன் மொழிபெயர்ப்பிலும் `சத்தி` எனப் பொதுவாகக் கூறப்பட்டதனை இம்மந்திரத்தில் `மாயாள்` எனச் சிறப்பாக விளக்கினமை அறியத்தக்கது.
இதனால், `கேவலாவத்தைக்கு காரணம் ஆணவ மலம்` என் பதும், `சகலாவத்தைக்குக் காரணம் மாயை` என்பதும் கூறப்பட்டன.
`ஏசாத மாயை` என்றது, `அறிவை மறைத்தலைச் செய்யாது, விளக்கத்தைச் செய்வது` என்னும் குறிப்புடையதேயாகும். அதுபற்றி, `சுத்தமாயை` எனப் பொருள் கூறுதல், `பிரளயாகலர், சகலர்` என்னும் இவர்கட்குப் பொருந்தமாட்டாது.

பண் :

பாடல் எண் : 23

மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என
விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.

பொழிப்புரை :

`காலம், இடம், கருவி, கரணம் ஆகிய இவற்றுள் எந்த ஒன்றினாலும் உட்படுத்தப்பட்டு, ஏகதேசப்படுதலை ஒரு ஞான்றும் எய்தாத பேரறிவாகிய அந்தப் பரப்பிரமந்தான் இந்த உயிர்` என ஏகான்மவாதி கூறும் அக்கூற்று, `ஒரு குடத்துள் அடங்கியுள்ள நீரைச்சுட்டி, - மேகம் - என்பதும் இதுதான்; - தான் கங்கா நதி - என்பதும் இதுதான் எனக் கூறுகின்ற மிக்க அறிவில்லாதவன் மிக்க அறிவுடையான் போன்று கூறுகின்ற கூற்றோடு ஒப்பதாய்ப் போக, இந்த உடம்பிற்குத் தலைவனாகிய உயிர் இதைவிட்டு நீங்கும் நாள் வருகின்ற வரையில் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகளை இந்த உடம்பின்கண் எய்தி, ஏகதேசப்பட்டுத் துன்பன் உறும்.

குறிப்புரை :

`எஞ்சலில் ஒன்றெனும் ஆறு` என்பதை முதலில் வைத்து உரைக்க. எஞ்சல் இல் ஒன்று, பரப்பிரமம். ஆறு - முறைமை. `இவ்வுடற்கண்` என ஏழாவது விரிக்க. குடம், அதன்கண் உள்ள நீரைக்குறித்த ஆகுபெயர். `மஞ்சு, மத்தாகினி` - என்பனவும் அன்ன.
அவத்தை இயல்பே கூறுகின்றாராயினும், `இவ்வியல்பானே ஏகான்ம வாதம் பொருந்தாமையும் விளங்கும்` என அதனையும் இனிது விளங்குதற்பொருட்டு இடம் வாய்த்தமையின் கறினார்.

பண் :

பாடல் எண் : 24

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

பொழிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணியாய் நின்று பொருளைத் தருகின்றது. படி - நாடு; என்றது புற உலகத்தை. அதனை இறைவன் ஆணையால் தனதாகக் கொண்டு இன்பத்துன்பங்களை எய்திவரும் உயிரையே, `உடை மன்னவன்` என்றார். வடிவு - பல உள்ளமைப் புக்கள். மாநகர் - கோநகர்; என்றது உடம்பை. வருதல் - உலாவருதல். என்றது, எல்லா இடங்களிலும் வியாபித்து, எல்லாப் புலன்களையும் உணர்ந்தும் அவற்றிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் செய்தும் வரும் சாக்கிராவத்தையை. அடியுடை ஐவர் - அணுக்கமாய் நிற்கும் அமைச்சர்கள். என்றது, ஞானேந்திரியங்கள் ஐந்தையும், அவற்றால் உணரப்படும் பொருள்கள் அந்தக்கரணங்களாலே தெளிவுபடும் ஆதலின், அந்த அந்தக்கரணங்களும் `ஐவர்` என்றதிலே அடங்கின. அங்கு உறைவோர் - அமைச்சர்களுக்குக் கீழாய் அரசனது உலாவில் பலவகைப் பணிகளையும் செய்துநிற்கும் பல பணியாளர்கள் என்றது பிறகருவிகளை. இம்முறையை, `கால்கொடுத்து இருகை மூட்டி` என்னும் ஞானாமிர்த அகவலிலும் காண்க. (அகவல் - 9) இச்சாக்கிர நிலை, ``படைகொடு பவனிபோதும் பார் மன்னன்`` எனச் சித்தியாரிலும் கூறப்பட்டது. (சுபக். சூ. 4)

குறிப்புரை :

`மன்னன் உலா வரும்போது அங்கு உறைவோர் துயின்றனர்` என்றதனால், `துயின்றது, அவன் அந்தப்புரத்தில் சென்றபொழுது` என்பது போந்தது. அந்தப்புரமாவது மூலாதாரம். அந்தப்புரத்தில் அரசன் தன் மனையாளைத் தழுவிக் கிடத்தல், உயிர் மூலப்பிர கிருதியைப் பற்றி அதனை யொழித்துப் பிறிதொன்றையும் அறியாது கிடத்தல். இது சகலத்தில் கேவல துரியாதீத நிலையாகும். `சகலத்தில் சகல சாக்கிரம் ஆன்மாவின் அறிவு முற்றாகவும், தீவிரமாகவும் செயற் படும் நிலை எனவும் சகலத்தின் கேவல துரியாதீதம் ஆன்மாவின் அறிவு சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலை எனவும் உணர்க. முற்றாகவும் தீவிரமாகவும் செயற்படும் நிலைக்கு அரசன் குதிரைமீது ஏறி நகர்வலம் வருவதையும், சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலைக்கு அரசன் அந்தப்புரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து கிடத்தலையும் நூல்களில் உவமையாகக் கூறுதல் மரபாக உள்ளது. இல்லம் - அவரவருக்கு உரிய இடம். `அவற்றை அடைதற்கு அவர்கள் துடிப்பர்` என்க. `அரசன் உலாவரும்பொழுது அமைச்சர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகச் செயற்படுதல்போலச் சகலத்தில் சகல சாக்கிரத்தில் அனைத்துக் கருவிகளும் நன்கு செயற்படும்` எனவும், `அரசன் அந்தப்புரத்தில் சென்று உறங்கிவிட்டபொழுது தனி யொரு காவலாளியுங்கூட உறங்கிவிடுதல்போல, உயிருக்குக் காவ லாகிய பிராண வாயுவுங் கூட இயங்காது` எனவும் கொள்க. சாக்கிர நிலைக்கு, அரசன் கொலுமண்டபத்தில் அமர்ந்து அரசியலை ஆழ்ந்து நோக்குதலும் உவமையாகச் சொல்லப்படும். `சாக்கிரத்திற்கு இடம் புருவ நடு` என்பது முன்பே சொல்லப்பட்டது. அதனால் அவ்விடம் அரசனது கொலுமண்டப மாகவும் கூறப்படும்.
இதனால், சகலத்தில் விளக்க நிலைகளில் உச்சகட்டமானதும், மூடநிலைகளிலும் உச்சகட்டமானதும் சொல்லப்பட்டன. இவற்றாலே இடையில் உள்ளவற்றின் இயல்புகள் தாமே விளங்கும் என்பது பற்றி.

பண் :

பாடல் எண் : 25

நேரா மலத்தினை நீடைந் தவத்தையின்
நேரான வாறுன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.

பொழிப்புரை :

சகலத்திற் கேவலமாகவும், சகலத்திற் சகலமாகவும் இயல்பாக நிகழ்ந்து வருகின்ற அஞ்சவத்தைகளிலே பாகம் (பக்குவம்) எய்தாத ஆணவமலத்தைச் சகலத்தில் சுத்தமாய் நிகழும் சாக்கிரா வத்தையில் பாகம் எய்தியதாக அறிந்து, அதனானே பஞ்ச மலங்களும் பாகமெய்தியவற்றையும் நன்கு கண்டு, எஞ்ஞான்றும் தனது செம்மை யினின்றும் திரிதல் இல்லாத மேலான பொருளோடுகூடி நிற்பதே உண்மைச் சுத்தாவத்தையாகும்.

குறிப்புரை :

நீடு ஐந்தவத்தை - நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்ற ஐந்தவத்தை என்றதனால் அவை பந்த நிலையில் நிகழும் சகல ஐந்தவத்தைகளாயின. இதனை முன்னர்க் கூட்டியுரைக்க. `நீடு நனவு` என்னும் காலங்கந்த பெயரெச்சத் தொடர், `நீடுதற்கு ஏதுவாகிய நனவு` எனப்பொருள் தந்து, சுத்தசாக்கிரத்தைக் குறித்தது. `ஞானச்செய்தி` - எனப்படும் தச காரியத்துள் முதல் ஆறும் சுத்த சாக்கரமும், ஏனைய நான்கும் சுத்த சொப்பனம் முதலிய நான்குமாம். இவையே சகலத்தில் சுத்தமாம் ஐந்தவத்தைகள். இந்நிலையில் உயிர்தான் தன்னையும், தலைவனையும் அறிதலின் இதுகாறும் அங்ஙனம் அறியாதிருந்தது ஆணவ மலத்தாலே என்பதையும், இப்பொழுது அது நீங்கியதால்தான் இந்த அறிவு நிலை எய்தியதையும் வழியளவையானே தெளிவாக உணரும் ஆதலின் அதனையே, `நேரா மலத்தை நடு நனவினில் நேரானவாறு உன்னி` என்றார். `மூலமலத்தின் இயல்பு விளங்கவே, ஏனைய மலங்களின் இயல்புகள் தாமே விளங்க, எல்லா மலங்களின் இயல்பும் விளங்கினவாம்` என்றற்கு `முன்பு நேராதிருந்த மலம் ஐந்தையும் இப்பொழுது நேரே தரிசித்து` என்றார்.
இந்நிலை துகளறு போதத்தில் `பத்தாம் அவதாரமாகிய கேவலாதீதம்` - எனக் கூறப்பட்டது.
சகலத்தில் சுத்தம் நிலையில்லாது மாறி மாறி நிகழ்வதாக, உண்மைச் சுத்தமே நீங்காது நிற்பதாகலின் அதனை `நித்தம்` என்றார்.
இதனால், `சகலத்தில் நிகழும் ஐந்தவத்தைகளில் சுத்த ஐந்தவத்தைகளும் உள` என்பதும், `ஆயினும் அவை நிலை யற்றனவாக, நிலையானவையாய்ச் சகலத்தோடு தொடர்பு சிறிதும் இல்லாத உண்மைச் சுத்தாவத்தைகளும் உள` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்
சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம்
சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையாகிய சாக்கிர சாக்கிரத்தில் மட்டுமே திரோதானமலம் செயற்படும். (எனவே இந்நிலையில்தான் அனைத்துக் கருவிகளும் செயற்பட, ஆன்மா உலகினை நன்கு உணர்வதாகும்). சாக்கிர சொப்பனத் தளவிலேதான் - அஃதாவது, சாக்கிர சாக்கிரம், சொப்பனம் என்னும் இரண்டில் மட்டுமே ஆன்ம தத்துவம் செயற்படும். (அவற்றுள் சாக்கிரத்தில் மட்டுமே புறக் கருவிகள் செயற்படச் சொப்பனத்தில் அந்தக்கரண நிகழ்ச்சியாகிய சிந்தனை மட்டுமே உளதாகும்) சாக்கிர சுழுத்தியளவில்தான் - அஃதாவது சாக்கிர சாக்கிரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி என்னும் மூன்றளவிலேதான் கன்மங்கள் நிகழும். (எனவே, அந்த மூன்றளவிலேதான் ஆன்மாவிற்குச் சுக துக்கங்கள் விளங்கித் தோன்றும்). சாக்கிர துரியத்தளவில்தான் வித்தியா தத்துவங்கள் செயற்படும். (எனவே, அந்த நான்களவில்தான் ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு உளதாகும்).

குறிப்புரை :

எனவே, சாக்கிர துரியாதீதத்தில் யாதொரு செயற் பாடும் இன்றி, மூச்சும் நின்றுவிட ஆன்மாத்தான் சாக்கிர சாக்கிரத்தில் அறிந்த சுகம், அல்லது துக்கத்திலே தன்னையும் மறந்து, `அதுவேயாய் அழுந்தியிருக்கும்` என்பதுதானே விளங்கிற்று.
ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு வித்தியா தத்துவத்தாலும், `இஃது இன்னது` என்றும் இஃது எனது, பிறருடையது என்றும் நிகழ்வதாகிய பிறபொருள் உணர்வு ஆன்ம தத்துவத்தாலும் நிகழும். `யான், எனது, பிறருடையது` - என்னும் உணர்வுகள் முழு அனுபவங்கள் ஆகா, அவை பொருள்களை உணரும் உணர்வுகளே யாம், அங்ஙனம் பொருள் உணர்வு நிகழ்ந்தபின், ஆன்மா அந்த உணர்வுகள் அனைத்தையும் இழந்து, உணர்ந்த பொருளில் அதுவாய் அழுந்துவதே முழு அனுபவமாகும். உலகப் பொருளிள் ஆன்மா அவ்வாறு அழுந்தி நிற்பதே உலகத்தைப் பற்றிய முழு அனுபவமாகும். அதுவே சாக்கிர துரியாதீதம். அதிற் சிறிது குறைந்தன எல்லாம் சாக்கிர துரியம் முதலிய நான்குமாம். இதுவே இம்மந்திரத்தால் கூறப்பட்டது.
வித்தியா தத்துவங்களைச் சிவ தத்துவங்கள் செயற்படுத்த, வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களைச் செயற்படுத்தும். ஆகவே, `வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களில் சில பல வற்றைச் செயற்படுத்தாது நிற்கும் நிலைகளே கீழாலவத்தை` எனவும், `சிவதத்துவங்கள் வித்தியா தத்துவங்களில் சில பலவற்றைச் செயற்படுத் தாது நிற்கும் நிலைகளே மத்தியா லவத்தை` எனவும் உணர்ந்து கொள்க.
சித்தாந்த சாத்திரங்களில் கூட, `மாயேயம்` என இருக்க வேண்டிய பாடங்கள் `மாமாயை` என்றே மாற்றப்பட்டிருத்தலைக் காணலாம். அவ்வாறே இம்மந்திரத்திலும் சில பிரதிகளில் பாடம் மாற்றப்பட்டுள்ளது.
`மாயேயம்` என்பது இங்கு பிரகிருதியின் காரியங்களையே குறித்தது. மூல கன்மமே `கன்மம்` எனப்பட, அதினின்றும் தோன்றும் நல்வினை தீவினைகளாகிய காரிய கன்மம், `கான்மியம்` எனப்பட்டுப் பின் `காமியம்` என மருவி வழங்குகின்றது. ஈற்றடியில் `மாயை` என்றது அசுத்த மாயையை. அஃது ஆகுபெயராய், அதன் காரிய மாகிய வித்தியா தத்துவங்களை உணர்த்திற்று.
நான்கடிகளிலும் `செயற்படும்` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன.
இதனால், மத்தியாலவத்தை ஐந்தன் இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மாயை எழுப்பும் கலாதியை மற்றதின்
ஏய இராகாதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத் துளானே.

பொழிப்புரை :

சிவதத்துவம் அனைத்தும் செயற் படாமையால், வித்தியா தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய அதீத நிலையில் சிவதத்துவங்கள் தொழிற்படத் தொடங்கிய பொழுது வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் எழுந்து, கலை, காலம், நியதி என்னும் மூன்று தத்துவங்களை எழுப்பும். பின்பு கலையினால் வித்தையும், வித்தையால் அராகமும் எழுந்து தொழிற்படும். இவ்வாற்றால் மத்தியா லவத்தைகளில் துரியாதீதம் முதலிய ஐந்தும் நிகழும், அவை ஐந்தும் `மகாசகலம்` எனப் பொதுப் பெயரைப்பெறும்.

குறிப்புரை :

`வித்தியா தத்துவங்களில் மாயை தவிர யாதொரு தத்துவமும் செயற்படாதநிலை சாக்கிரத்துரியாதீதமும் மாயையோடு காலம் மட்டும் தொழிற்படும் நிலை சாக்கிரத் துரியமும், அவற்றோடு கலை நியதி இவை தொழிற்படும் நிலை சாக்கிரச் சுழுத்தியும், அவ்றோடு வித்தை செயற்படும் நிலை சாக்கிர சொப்பனமும், அவற்றோடு அராகமுங் கூட, சிவதத்துவம், வித்தியா தத்துவம் அனைத்தும் செயற்படும் நிலை சாக்கிர சாக்கிரமும் ஆம்` - எனக் கூறியவாறு. சிவதத்துவங்களும் இவற்றிற்கு ஏற்பச் செயற்படும் என்க.
`மாயை எழுப்பும்` - என்றதனால், `அது பிறிதொன்றையும் எழுப்பாது, தன்னளவில் செயற்பட்டிருந்த நிலை உண்டு என்பது பெறப்பட்டது.
முன்னை மந்திரத்தில், `சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி` - என்றதனாலும், `சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்` என்றதனாலும், `அந்நிலைகளில் வித்தியா தத்துவங்கள்மேற்கூறிய முறையில் செயற்படும்` என்பது கொள்ளப்படும்.
வித்தியாதத்துவங்களைக் காலம் முதலாக வைத்து எண்ணுதல் முறையாயினும், கலை முதலாக வைத்து எண்ணுதலும் உண்டு` என்பதைச் சிவப்பிரகாசம் முதலியவற்றால் அறிக.
பின்னர் `இராகாதி` என வருதலால், `கலாதி` என்றதில் `ஆதி` என்றது, நியதியை மட்டுமே தழுவி நின்றது.
வித்தை, அராகம் இவை யொழிந்த ஏனையவற்றை முன்னே வேறு பிரித்து ஓதினமையால், `ஏய்` என்பதில் ஏயப்பட்டன, அவையேயாயின,
வித்தியா தத்துவங்கள் பெரும்பாலும் ஒடுங்கினமையால், சாக்கிரத்தில் அதீதத்தை எய்திய ஆன்மாப் பின்பு அதினின்றும் மீளுதல் வித்தியா தத்துவங்கள் செயற்படுதலாலே, என்பார் முன்னிரண்டடிகளில் சிலவற்றை வகுத்துக்கூறிப் பின்னிரண்டடி சிலவற்றைச் சுட்டியொழிந்தார். மாசகலத்தையே இங்கு, `சகலம்` என்றார். `இராகாதி ஏய்` என மாற்றி ``கனா, நனா`` என்பதற்கு முன்னும் `ஆயினன்` என்பதை இறுதியிலும் கூட்டுக. `ஆன்மா ஆயினன்` எனத் தோன்றா எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், மத்தியாலவத்தைகளில் சிலவற்றினியல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேவிய அந்தன் விழிகட் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.

பொழிப்புரை :

பிறவிக் குருடன் கண்ணை விழித்து விழித்துப் பார்ப்பினும் யாதொன்றையும் காணமாட்டுவானல்லன். (இது போன்றது சாக்கிர துரியாதீதநிலை அஃதாவது, உணர்வு சிறிதும் இன்றிக் கிடக்கும் நிலையாம்).
ஒன்றும் காணப்படாத நிலையில் அக்குருடன் தன் காலில் கீழ்க் கிடப்பதைத் தடவித் தடவிப்பார்ப்பான். (இதுபோன்றது சாக்கிர துரிய நிலை. அஃதாவது, உணரத் தக்கனவற்றைச் சிறப்பாக அன்றிப் பொதுவாக உணரும் நிலையாம்).
தடவிப் பார்த்த குருடனுக்குக் கோல் ஒன்று கிடைத்ததாயின் அதனைத் துணையாகப் பற்றிச் சில இடங்களுக்குச் செல்வான். (இது போன்றது சாக்கிரச் சுழுத்தி நிலை; உணரப்படும் பொருள்களைச் சிந்தனையால் உணரும் நிலையாம்).
இதன் பிறகு அக்குருடன்தனக்குக் கண் தெரிவதற்கு வேண்டியவற்றைச் செய்வாரை அணுகி அவர்கட்கு உபசார வார்த் தைகளைச் சொல்வான். (இதுபோன்றது சாக்கிரச் சொப்பனநிலை. உணரவேண்டுவனவற்றை உணர்தற்கு முனையும் நிலையாகும்).
(இறுதியில் குருடன் கண்பெறுதலும் உண்டு. அதுபோன்றதே சாக்கிர சாக்கிரம்) சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்று நிலைகளில்தான் ஆன்மா செயற்பாடுடையதாம். ஏனை இரண்டும் செயலற்ற நிலைகளாம்).

குறிப்புரை :

மேவிய-பிறப்பிலே பொருந்திய. விழி கண், நிகழ் கால வினைத்தொகை. `குருடன்` என்றது, `பார்க்க இயலாதவன்` என்ற தாம். `காணும்` என்றது, தடவிப் பார்த்தலை, `தடிகொண்டு மேவும்` எனவும் `விழிபெற ஆவன கொல்லும்` எனவும் மாற்றியுரைக்க.
இங்குக் கூறிய இவ்வியல்புகள் பெரிதும் அதிர்ச்சியைத் தரத் தக்க செய்தியை அறிந்தவுடன் ஆன்மா மூர்ச்சித்துப் பின் தெளிவடை தலில் நன்கு விளங்கம். அது பற்றி அவற்றையே சிலர் உதாரணமாகக் காட்டினாலும் அவை மட்டுமே உதாரணங்கள் அல்ல. மிகச் சிறு சிறு செய்திகளிலும் விழிப்பில் இவைகள் இடையறாது நிகழ்வனவேயாம்.
இதன் முதல் மூன்று அடிகள் ஒட்டணியாய் அமைந்தன. ஆதலின், இதனால், மேற்கூறியவை உவமைகாட்டித் தெளிவிக்கப் பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 4

மத்திமம் ஒத்த சிலந்தி வலையத்துள்
ஒத்தங் கிருந்தங் குயிருண்ணு மாறுபோல்
அத்தனு ஐம்பொறி ஆடகத் துள்நின்று
சத்தம் முதல்ஐந்தும் தான்உண்ணு மாறே.

பொழிப்புரை :

ஐம்பொறிகளைக் கருவியாக உடைய அந்த உடம் பாகிய ஆடரங்கத்துள் நின்று சத்தம் முதலிய புலன்களை உயிர் நுகரும் முறை, சிலந்தியானது வலைக்குள் ஏற்புடைய இடத்தில் இருந்து கொண்டு, அங்குவந்த உயிர்களை உண்ணும் முறைபோல்வது. ஆதலின், அதற்கு ஏற்புடையன மத்தியாலவத்தைகளே.

குறிப்புரை :

`தான்` என்றது உயிரை. `தான் சத்தம் முதல் ஐந்தும் உண்ணுமாறு, சிலந்தி உயிர் உண்ணும் மாறுபோலும்; ஆதலின் மத்திமம் ஒத்த` - எனக் கூட்டி முடிவு செய்க.
`ஐம்பொறி அத்தனுவாகிய ஆடு அகம்` என்க. உயிரின் செயற்பாட்டை ஆட்டமாக உருவகித்தார். `அத்தனும்` - என்பதைப் பாடமாகக் கொண்டமையால், பலரும் இடர்ப்பட்டனர். `வலையது` என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. `சிலந்தி உயிர் உண்ணுதல் வலையின் மத்தியில் இருந்து` என்பது, பொருளில், `மத்திமம் ஒத்த` என்றதனானே பெறப்பட்டது` `மயில் போல ஆடினாள்` என்றால், மயில் ஆடுதல் தானே பெறப்படுதல் போல. `ஒத்த` என்பது அன் பெறாத அஃறிணைப் பன்மை வினைமுற்று. ஒத்து - வலைக்கு ஏற்ப இயைந்து பின் வந்த `அங்கு` என்பதன்பின், `வந்து` என ஒரு சொல் வருவிக்க. `போல்` என்னும் பகுதியே நின்று, `போல்வது` என முற்றுப் பொருள் தந்தது. அதன்பின், ஆதலின் என்பது சொல் லெச்சமாய் நின்றது.
இதனால், மத்தியாலவத்தையே உயிர் உலகத்தை நன்கு அனுபவிக்கும் நிலையாதல் கூறப்பட்டது. அதுபற்றி இது, `பிரேரகாவத்தை` - எனப்படும்.

பண் :

பாடல் எண் : 5

வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு)
உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.

பொழிப்புரை :

உயிர்களுக்கு உதவியாக அவைகளின் வசமாக வைக்கப்பட்ட கருவிகள் இருபத்தஞ்சு. எனினும், (அவைகளை வைத்துமட்டும் போதாமையால்) எல்லாவற்றையும் நடத்தும் தலைமைப்பாட்டோடு உடனாய், நீங்காது ஒருவன் இருக்கின்றான். அவனை எல்லா நூல்களும் ஒருமுகமாக, `பித்தன்` என்றும் `பெரியோன்` என்றும் `பிறப்பிலி` என்றும் கூறுதலையறிந்து. அவனையே விரும்பி நான் உய்ந்தவாறு குறிக்கொளத்தக்கதாகும்.

குறிப்புரை :

இருபத்தஞ்சு கருவிகளாவன, ஆன்மதத்துவம் இருபத்து நான்கும், புருட தத்துவம் ஒன்றுமாம். வித்தியா தத்துவங்கள் அனைத்தும் `புருடன்` என ஒன்றாக அடக்கப்பட்டன. ஆன்மாக் களுடன் இறைவன் கருவிகளைக் கூட்டினால் மட்டும் போதாது. செயல்தோறும் அவனும் உடன் இயங்கினால்தான் உயிர்கள் அக் கருவிகளால் அடையத் தக்க பயனை அடையும். அதுபற்றி இறைவன் அவ்வாறு உடன் நிற்றலையே இம்மந்திரத்தால் குறித்தார்.
இறைவன் இவ்வாறு உடனாய் நிற்கும் நிலைபெத்த காலத்தில் மத்தியாலவத்தையிலே சிறப்பாக நிகழ்தலால், அவ்வவத்தை `உணர்த்து முறைமை` - எனப்படுகின்றது. ஆகவே அதனை இங்குக் குறித்தல் முறைமையாகின்றது. ஈற்றில் உரைக்கப்பட்டது சொல்லெச்சம்.
இறைவன் இங்ஙனம் உடனாய் நிற்கும் நிலை சிவஞான போதம் பதினொன்றாம் சூத்திரத்தில் `காணும் உபகாரம்` என இனிது விளக்கப்பட்டது.
`இங்ஙனம் உடனாய் நிற்பவனைப் பிற தேவராக உணராது, சிவபெருமானாகவே உணர்தல் வேண்டும்` என்பதையே பின்னிரண் டடிகளால் கூறினார். `பிச்சன், பிறப்பிலி, பேர் நந்தி` என அப்பரும் அருளிச் செய்தார்.l `அவனருள் நச்சி` என மாற்றி யுரைக்க.
`இருபத்தஞ்சு` - என்றதை மாகேசுர மூர்த்தமாகக் கொள் ளுதற்கு, இங்கு யாதோர் இயைபும் இல்லாமை யறிக.
இதனால், மத்தியாலவத்தை பற்றி அறியத்தக்கதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நாலா றுடன்புருடன் நற்றத் துவம்உடன்
வேறான ஐயைந்து மெய்ப்புரு டன்பரம்
கூறா வியோமம் பரம்-எனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்தி தத்வமே.

பொழிப்புரை :

`சாங்கியர் கூறும் நிலம் முதல் மூலப் பகுதி ஈறான இருபத்து நான்கு தத்துவங்களுடன் அவர் இருபத்தைந்தாவதாகக் கூறு கின்ற புருடனையும் ஒரு தத்துவமாகக் கூட்ட, சாங்கியர் கொள்கை யினின்றும் வேறான இருபத்தைந்து தத்துவங்கள் உளவாகின்றன. அவற்றிற்கு மேல் உண்மையில் `புருடன்` எனச்சொல்லத்தக்க ஈசுரனும் அவனுக்கும் மேலான, சொல்லுக்கு எட்டாத பராகாயமும், அதற்கு மேல் பரப்பிரமமும் ஆகத்தத்துவம் இருபத்தெட்டு` எனத் `தத்துவ எண்ணிக் -கையை இவ்வாறு கொள்வதே சிறப்பு` என வேதாந்திகள் கூறுகின்றனர்.

குறிப்புரை :

`வேதாந்திகளது கொள்கையை உணர்ந்தாலன்றிச் சித்தாந்திகளது கொள்கையின் சிறப்பு விளங்கமாட்டாது` என்பது பற்றி அதனைக் கூறினார். சாங்கியர் முதலியோர் நிரீச்சுரவாதிகள் ஆயினமை பற்றி அவரது கொள்கைகளை நாயனார் கூறிற்றிலர். `உடன்` இரண்டில் பின்னது `தொகை` என்னும் பொருளது.
சாங்கியர் `புருடன்` எனக் கூறுவதே சிவன் - என்பது வோதந்திகள் கருத்து. அதனினின்றும் பிரித்தற்கு ஈசுரனை `மெய்ப் புருடன்` - என்றார். இதனையடுத்து, `பரம்` - என்றது. `மேல்` என்ற படி. `வியோமம், ஆகாயம்` - என்பன ஒரு பொருட் சொற்களாயினும் பூதாகாயம் அல்லாது, எல்லாவற்றிற்கும் மேலே உள்ள பராகாயமே சிறப்பாக, `வியோமம்` எனப்படும்.
சித்தாந்தத்தில் சிவனது சத்தியே பராகாயமாம். ஞானம யமாய் இருத்தல்பற்றி `சிதாகாசம்` - எனப்படும். `சிற்பர வியோமம்`* என்றார் சேக்கிழார்.
`எல்லாப் பொருள்கட்கும் இடங்கொடுத்து நிற்கும் பூதா காயம் போல, பிரகிருதி முதலாகிய அனைத்திற்கும் மேலாய் உள்ளது பரா காயம் `என்பது வேதாந்திகள் கொள்கை. அதனை, அனிர்வ சனீயம்` - என அவர் கூறுதல் பற்றி அதனை, `கூறா வியோமம்` என்றார். இதன் பின், பரம் என்றது, `பரம்பொருள்` - என்றபடி. இறுதியில் `வேறான` - என்றது, `சிறப்பான` என்றதாம் `வேறான தத்துவம் நாலேழு என வேதாநதி கொண்டனன்` - என்க. இம்மந்திரம் இருவிகற்பமாய் வந்தது.
மத்தியாலவத்தையில் வைத்துத் தத்துவங்களைக் கூறுவார். வேதாந்திகள் கூறும் தத்துவ முறைமையை இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டானடி காணலு மாமே.

பொழிப்புரை :

உயிர் (ஏலாத நிலைகளின் நீங்கி) ஏற்புடையதாகிய அழகிய நிலையைத் தலைப்பட்டபொழுது, இடைகலை, பிங்கலை நாடிகள் வழியாக இயங்குகின்ற காற்றோடு பொருந்தி அவற்றின் வடிவாகி, அப்பொழுதே இராசத சத்துவ தாமத குணங்களிலும் பொருந்திக் (கீழ்நோக்கிச் சென்று) மூலாதாரத்தை யடைந்து, அங்கே உள்ள குண்டலி சத்தியின் கீழ் நோக்கு நிலையை மாற்றி மேல்நோக்கி எழச் செய்து, பின்பு பிருதிவிமண்டலம், அப்புமண்டலம், தேயு மண் டலம் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மேற்கூறிய முக்குண வடிவாய் உள்ளமும் மூர்த்திகளிடமாக இறைவனைத் தரிசித்தல் கூடும்.

குறிப்புரை :

ஏற்புடை நிலையே அழகிது ஆதலின் அதனை `ஏல் அம்` என்றார். அம் - அழகு. அஃது ஆகுபெயராய், அழகிதாகிய நிலையைக் குறித்தது. அழகிய நிலையாவது யோகாவத்தை. அட்டாங்கத்தில் இயமம்முதலிய நான்கும் `யோக சாக்கிரம்` என ஒன்றாய் அடங்கும். ஏனைய பிரத்தியாகாரம் முதலிய நான்கும் யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம் என்பனவாய் அமையும். இவை ஐந்துமே சிறப்பாக, `மேலாலவத்தை` எனப்படும்.
யோகநூலார் இவற்றையே `மலம் நீங்கிய நின்மலாவத்தை` எனக் கூறுவராயினும்` ஒளியாலன்றி இருள் நீங்காதவாறு போல, ஞானத்தாலன்றி மலம் நீங்காது ஆதலின், ஞானவத்தைகளே நின்மலாவத்தையாம். இதனை,
``யோகில் தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்துபின் சன்னம் சாரும்``
எனச் சிவஞான சித்தி இனிது விளக்கிற்று.3 தாழ்தலாவது, கீழ் நிலையை அடைதல். இவை இங்ஙனமாயினும் நின்மலாவத்தையில் சேர்க்கும் ஆற்றலுடையன ஆகலின் `ஏற்புடையஅழகிய நிலை` எனப்பட்டன. கீழாலவத்தையும், இத்தன்மை இலவாதல்அறிக.
உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின் `இடையொடு பிங்கலை கோலங் கொண்டு` என்றார். இடையும், பிங்கலையும் அவை வழியாக இயங்குகின்ற காற்றைக் குறித்தலால் ஆகுபெயர்கள். உடல் உள்ள அளவும் முக்குணங்கள் நீங்கா ஆதலின் ஆன்மா அவற்றினுட் புகவேண்டியதாயிறறு. முறுக்குதல் - திசை மாற்ற வைத்தல். `கோண்` என்றது, `மண்டலம்` என்றபடி. பிராசாத நிலையில் நிராதாரத்தை உட்கொண்டு முதலில் உள்ளது அக்கினி மண்டலமாகச் சொல்லப்படினும் ஆதார யோகத்தில் பிரமனை நோக்கி முதலில் உள்ளனப் பிருதிவி மண்டலமாகக் கூறினார். ஆதாரங்களின் காணப் படுபவர்கள் குணமூர்த்திகளேயாயினும் அவர்களை நிர்க்குண மூர்த்தி யாகிய சிவனது விபூதிகளாகவே உணர்தல் வேண்டும், என்றற்கு,
``காலம் கொண்டான் அடி காணலும் ஆமே``
என்றார். உம்மை சிறப்பு. அதனானே யோகாவத்தையில் சிறப்பு விளங்கும். காலம் கொண்டான் - காலத்திற்கு உட்படாமல் அதனைத் தன் செயலுக்குக் கருவியாகக் கொண்டவன் சிவன்.
``காலமும் கடவுள் ஏவலால் துணைக் காரணங்காண்``
என்றது சிவஞான சித்தி.l
`அவத்தை` எனப்படுவன மேற்கூறிய `கீழாலவத்தை, மத்தியா லவத்தை` - என்பனவேயன்றி, மேலாலவத்தையாகிய யோகா வத்தையும் உண்டு - என்பதை இதனாற் கூறினார்.

பண் :

பாடல் எண் : 8

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குறிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

பொழிப்புரை :

நாடிகள் பத்தும், நன்மை விளங்குகின்ற வாயுக்கள் பத்தும் நாடிகளில் சிறப்புடைய, `இடை, பிங்கலை, என்னும் இரு நாடிகள் வழியாக இயங்குகின்ற `பிராணன்` என்னும் வாயுவிற்குக் கீழ்ப்பட்டு, அவற்றின்வழி நிற்கும். ஆணும், பெண்ணும் கூடியதனால் விளைகின்ற இன்பத்தில் உயிர் மூழ்குதற்குக் காரணமான சுக்கில சோணிதங்களும், அவ்வின்பத்தை விரும்புவதாய் அன்பைச் செய்கின்ற மனமும் உடல் முழுவதுமாய் இருக்கும்.

குறிப்புரை :

நாடிகள் பத்தும் தூல உடம்பிற்கு உறுப்பாய் அமைவன. அவை, `அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தானி, குகுதை, சங்கிலி, சிகுவை, புருடன்` - என்பன.
`பத்தும்` - என்பது, `வாயு` என்றதனோடும் சென்று இயைந்தது. வாயுக்கள் பத்தாவன, `பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` - என்பன. `நாடிகளாலும், வாயுக்களாலும் உடல் உருப்பெற்று நிலைபெறுகின்றன` எனவும், `உடலை மனம் பற்றி உலாவுதலால் இன்பம் விளைகின்றது` எனவும் கூறியதனால், தூலமும், சூக்குமமும், பரமும் ஆகிய உடம்பாய் உள்ள கருவிகளின் கூடுதல் குறைதல்களாலே அவத்தைகள் பலவாய் நிகழ்கின்றன` என்பது உணர்த்தியவாறு.
இதனால், அவத்தை பேதங்கட்குக் காரணம் குறிப்பால் உணர்த்தப்பட்டது. ஒடுங்கியிருந்திடும்` என்பதை இறுதியிலும் கொண்டு கூட்டுக.
(இரண்டாம் தந்திரத்து, `பாத்திரம்` - என்னும் தலைப்பில் வந்துள்ள `ஆவன ஆவ` என்னும் மந்திரம் (496) பதிப்புக்களில் இதனையடுத்தும காணப்படுகின்றது).

பண் :

பாடல் எண் : 9

பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.

பொழிப்புரை :

(`வேதாந்திகள் கொள்வன` - என மேற்கூறப்பட்ட) தத்துவங்கள் இருபத்தெட்டு என்னும் தொகை, தூலபூதம் ஐந்து, சூக்கும பூதம் (தன்மாத்திரை) ஐந்து, ஆகிய பூதங்கள் பத்தும், ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகிய இந்திரியங்கள் பத்தும், `மனம், அகங்காரம், புத்தி` - என்னும் அந்தக் கரணங்கள் மூன்றும், மூலப்பகுதி ஒன்றும் ஆகிய சடங்கள் இருபத்து நான்கும், அவற்றிற்கு மேல் அபர துரியமாகிய புருடன், அல்லது சீவன் ஒன்றும், அதற்குமேல் காலத்தின் வாயிலாக எல்லாவற்றையும் இயக்குகின்ற ஈசுரன் ஒருவனும், அவனுக்கு மேலேயுள்ள மாயையாகிய பராகாசமும், அவனுக்கு மேல் பரதுரியமாகிய பரம்பொருள் ஒன்றும் எனக் கருதத் தக்கதாகும்.

குறிப்புரை :

சித்தம் மூலப்பகுதியுள் அடங்கிற்று. `பராகாயம்` என்பதற்கு `மேய்த்த வியோமம் என்றார். ஈசுரனை மாயைக்கு உட்பட்டவனாகவே வேதாந்திகள் கொள்வர்.
இதனால் மேல் எண்ணளவாகக் கூறிய வேதாந்தி தத்துவங்கள் இவை என்பது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விளங்கிடும் முந்நூறு முப்ப தொருபான்
தளங்கொள் இரட்டிய(து) ஆறு நடந்தால்
வழங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழித் தத்துவம் நின்றே.

பொழிப்புரை :

முந்நூறு, அதனுடன் முப்பதொருபான்; அஃதா வது முந்நூறு, இரண்டும் கூட அறுநூறு. தளம் - படி. இரட்டிய தாகிய ஆறு. ஆறாறு = முப்பத்தாறு, அறுநூற்றை முப்பத்தாறு படியாக உறழ வருவது இருபத்தோராயிரத்து அறுநூறு. இஃது ஒரு நாளைக்கு வெளிச்சென்றும், உட்புகுந்தும் நடக்கின்ற மூச்சின் எண்ணிக்கை யாகும். இவ்வாறு வாயு - பிராணன். எழுந்து நடந்தால், உயிரைப் பற்றி யுள்ள பஞ்சமலங்களும் தன் தன் வேலையைச் செய்யும். அப்பொழுது தான் மாயா காரியமாகிய தத்துவங்களின் செயல்களும் விளங்குவனவாம்.

குறிப்புரை :

`உடம்பில் உயிர் நிலை பெறுதற்குப் பிராண வாயு வினது இயக்கமே இன்றியமையாக் காரணமாய் இருத்தலின், அவ் வியக்கம் உள்ளதனால்தான் தத்துவங்கள் காரணமாக அவத்தைகள் நிகழ்கின்றன` என்றவாறு. துரியாதீத நிலையில் உயிர்ப்பு அடங்கு தலால் மேற்கூறிய எண்ணிக்கையில் சில குறையலாம். உயிர்ப்பு அடங்கிய நிலையில் உயிர் கேவலத்திலே கிடக்கும். மூன்றாம் இடி இன எதுகை பெற்று வந்தது.
இதனால், `அவத்தை பேதங்கட்கு உயிர்ப்பு ஓர் இன்றியமை -யாக்கருவி` என்பதும், அவ்வுயிர்ப்பின் நிலைகளும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 11

நாலொரு கோடியே நாற்பத் தெண்ணாயிரம்
மேலும்ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும்
பால்அவை தொண்ணூற்றோ டாறுட்படும் அவை
கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.

பொழிப்புரை :

`நாலுகோடியே நாற்பத்தொண்ணாயிரத்து ஐந்நூறு` என்பது முற்கூறிய எண்ணிக்கையில் உயிர்ப்பு இயங்கும் இயக்கத் தொகை. அத்தொகையளவு, சிறிதே ஏற்றம் உள்ள ஐந்தாண் டுகளாம். (எனவே, அந்த அளவு மூச்சு, உடல் வளர்வதற்குத்தவிர, உயிர்க்கு யாதும் பயன்தருவன அல்லவாம்). இனி, `மூச்சு இயங்கும் காலத்தில் விளங்கிடும்` எனப்பட்ட தத்துவங்கள் தொண்ணூற்றா றாகும். எனினும், அவற்றை இருபத்தைந்தில் அடக்குவார் உளர்.

குறிப்புரை :

தத்துவங்களைப்பற்றிக் கூறிவரும் தொடர்ச்சிக்கு இடையில் அவற்றோடு இயைபுடைய உயிர்ப்பியல்கள் சிறிது இடம் பெற்றன. `ஐயைந்துள் ஆகும்` என்றது பிறன் கோட் கூறல். கோலிய - வரையறுத்த. `பால் அவை` என்றதில் `அவை` என்றது மேற்கூறிய தத்துவங்களை.

பண் :

பாடல் எண் : 12

ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

மாயா வாதியை வேறு கூறினமையால், `வேதாந்தி` என்றது பிரம பரிணாம வாதியையாயிற்று. இதனானே மேல் `வேதாந்தி` என்றதும் இவனையேயாதல் தெளிவாம். `ஐயைந்து` என் பதில் அந்தக்கரணம் நான்காக, அவற்றிற்குமேல் பிரகிருதி உளதாம்.
இதனால், மதவாதிகளின் தத்துவக்கொள்கைகள் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
தத்துவ மாவ(து) அகார எழுத்தே.

பொழிப்புரை :

`மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.

குறிப்புரை :

மெய்ம்மையை அறியும்பொழுதே பொய்மை பொய்மை யாதல் விளங்கும் ஆதலின், `தத்துவமானவை தன்வழி நின்றிடில் பொய்த்தவமாம் அவை போயிடும்` என்றார் பயனில்லாத செயல்களை, `தவம் என்றது இழித்தற் குறிப்பு. சொல்லும் பொருளு மாகிய இருவகைப் பொருள்களில் சொல்லைத் தனது அறிவினின்றும் வேறு பிரித்துக் காணுதல் அரிதாதல் பற்றி `தத்துவமானது அதுவே` என்றார். தன்னைக்கண்டால் போக்கொடு வர இறப்பும் விகாரமும் புருடன் இன்றாம்` என்பது சிவஞானசித்தி.l நாதத்தை அகாரமாகக் கூறுதல் மரபு.
இதனால், தத்துவ ஞானமே பந்தம் நீங்குதற்கு வழியாதல் கூறப்பட்டது. `ஐந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு` என்றார் திருவள்ளுவரும்.*

பண் :

பாடல் எண் : 14

அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி:
அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

`நான் எது` என்று தொடங்கி, முப்பத்தாறு தத் துவங்களையும் நிலம் முதல் நாதம் ஈறாக, ஒவ்வொன்றாக ஆராய்ந்து வந்தபொழுது, அவை அனைத்துமே சடமாய் இருத்தலால், `யான்` என்றும், `எனது` என்றும் உணரும் உணர்வுகளையுடைய நான் அவை களில் ஒன்றேனும் அல்லாமை புலப்பட்டது. ஆயினும் `அவ்வுணர் வினையுடைய நான் எது` என உணர இயலாமலே திகைத்திருந்தேன். அப்பொழுது நந்தி பெருமான், `முப்பத்தாறு தத்துவங்களும் சடம்` என்றும், `நான் அவைகளில் ஒன்றேனும் அல்லேன்` என்றும் உணர்ந்தது எது? அதுதான் நீ என்று உணர்த்தினார். அதன் பின் நான் அவ்வாறே உணர்ந்து மெய்யுணர்வு உடையனாயினேன்.

குறிப்புரை :

ஆன்மாத் தன்னைப் பிற பொருள்களை உணர்தல் போலத் தன்னினும், பிறவற்றினும் வேறாகப் பிரித்து எதிர்ப்படுத்தி வைத்து உணர்தல் இயலாது` என்பதும், பிற பொருள்களின் இயல்பை உணரும் முகத்தானே, `அவ்வுணர்வையுடைய பொருளே நான்` என அனுமித்தே உணர்தல் வேண்டும் - என்பதும் கூறியவாறு. இஃது அறியாமையைப் பின்னர்த் தோன்றிய அறிவைக் கொண்டே அனுமித் துணர்தல் போல்வது. உலகில் ஒருவன் பிறரையும், பிற பொருளையும் எதிர்ப்படுத்திப் பார்த்தல் கூடும் ஆயினும், தன் முகத்தைக்தான் அவ்வாறு பார்க்க இயலாது, கண்ணாடி வழியாகவே பார்க்க இயலும். `அது போல்வது இது` என்றும் கூறலாம்.
`என்முகம் எப்படியிருக்கிறது, எப்படியிருக்கிறது` என எண்ணி அலமருகின்ற ஒருவனும் அறிவுடையான் ஒருவன் கண்ணாடியைக் கொடுத்துக் காட்டிச் செய்வது போல, `நான் எது` எனத் தேடி அலைகின்ற பக்குவான்மாவிற்குச் சிவன் குருவாகிவந்து, `பிற பொருள்களை அறிந்து வருபவன் யாரோ, அவன்தான் நீ` என உணர்த்தி அருளுவான் - என்பதையே பின்னிரண்டடிகளால் கூறினார்.
`ஆன்மா - அருவுருவாய்த்
தோன்றிஉடன் நில்லாது; தோன்றாது நில்லாது;
தோன்றல்மலர்மணம்போல் தொக்கு`l
என மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.
இதனால், `பொருளியல்புகளை உணர்ந்துவரும் ஆன்மா தன்னை உணருமாறு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும்
ஆக்கு மாலவத்தை ஐந்தும் நனவாதி
போக்கிச் சிவத்தொடும் பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்றோன் தானாகி நிற்குமே.

பொழிப்புரை :

சகலத்தில் சகலமாகிய சகலசாக்கிரத்திற்றானே நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தையும், ஆணவத்தாலே ஆக்கப் படுகின்ற கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் அவை நிகழாதபடி, முதலாவதாகச் சொல்லப்படுகின்ற சகல சாக்கிரத்தில் உறைத்து நிற்கு மாற்றானே போக்கிச் சிவத்தோடும் திருவருள் வழியில் நிற்பவன், சடம் ஆதலின் நிலையின்றித் தோன்றியழிவனவாகிய முப்பத்தாறு தத்துவங்களுட்பட்டு, தத்துவான்மாவாய் நில்லாது, அவற்றின் நீங்கிச் சுத்தான்மா ஆவான்.

குறிப்புரை :

`மாசு நீங்கிய வழி, ஞாயிற்றின் முன்னிலையில் நிற்கும் படிகத்தில் ஞாயிற்றின் ஒளி பிரதிபலிக்கப் படிகம் அந்த ஞாயிறாகியே நிற்றல்போல, தத்துவங்களின் நீங்கியவழி, என்றும் சிவத்தோடே கூடி நிற்கின்ற ஆன்மாவில் சிவத்துவம் பிரகாசிக்க, அந்த ஆன்மாச் சிவமே யாய் நிற்கும்` - என்பது கருத்து.
ஆன்மாத் தத்துவங்களின் நீங்கிச் சிவத்தைத் திருவருளால் உணர்ந்து நிற்கும் நிலையே சகலத்தில் சுத்தாவத்தையாகும். `அவையே தச காரியங்களாக வகுக்கப்பட்டன` என்பது மேலே கூறப் பட்டது. அந்தச் சுத்தாவத்தையும் சாக்கிரம் முதல் ஐந்தாக நிகழ்தல் பற்றி, `நெறிநின்றோன்` என்றார். நெறிநிற்றல் - படி முறையாக ஏறி நிற்றல். `நனவாதி` என்பதற்கு, `நனவாகியமுதல் அவத்தையில் என உரைக்க. போக்கப்படுவன, முன்னர்க் கூறிய இருவகை ஐந்தவத்தை களாம். `சிவத்தோடும் நெறிநின்றான்` என இயைக்க. `இவற்றோடும்` - என்பது பாடம் அன்று.
`கீழாவத்தை மத்தியாலவத்தைகளில்வேறாய், யோகாவத்தை களும் உள` என மேற்கூறியதன் பின்8 `யோகாவத்தைகளின் மேலாக ஞானாவத்தைகளும் உள` - என்பது இதனால் கூறப்பட்டது.
தத்துவ ஞானத்தின் பயன் பந்தம் நீங்குதல் என மேற்கூறிய வாறுபோல,* பந்தம் நீங்கிய உயிர் சிவமாம் தன்மையை அடைதலே ஞானாவத்தைகளாகிய சகலத்தில் சுத்தாவத்தை என்பதும் இதனால் பெறப்பட்டதாம். `இவைகளே நின்மலாவத்தையான அல்லது யோகாவத்தைகள் நின்மலாவத்தையாகா` என்பது யோகாலத்தை கூறியவிடத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு)
ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு
ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே.

பொழிப்புரை :

(பஞ்ச மலங்களும், `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்னும் முறையில் வைத்துச் சொல்லப்படும். இவற்றுள் மறைத்தல் தொழிலைச் செய்வதில் தலைமை பெற்று நிற்பது திரோதாயியே. அதனால்), பிரமன் சிவனைச் சிறிதும் உணராதவன் ஆகலின் அவனைப் பஞ்ச மலங்களையும் உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், சீகண்ட ருத்திரன் பிரளயாகலன் ஆகலின் அவனைத் திரோதாயி, மாயேயம் - இவை யொழிந்த மூன்று மலங்களே உடையவனாகவும், வித்தியேசுரர் மந்திர மகேசுரர் முதலியோர் விஞ்ஞானகலர் ஆயினும் அதிகார மலம் நீங்கா மையால் ஆணவத்தோடு, கன்மமும்கூட, இரண்டு மலங்களை யுடையவர்களாகவும், அணு சதாசிவர்கள் அதிகார மலம் நீங்கினும் போக மலம் நீங்காமையால் ஆணவம் நீங்கப் பெறாது அஃது ஒன்றனையே உடையவர்களாகவும் கூறலாம்.

குறிப்புரை :

`இதனுள் குறிக்கப்பட்ட கடவுளர் யாவரும் அணு பக்கத்தவர்களே` என்பது சொல்லாமே விளங்கும். `இவர்களை இவ்வாறு பகுத்துக் கூறியதும் பொதுவகையில் இவரிடையே உள்ள தார தம்மியம் இனிது விளங்குதற் பொருட்டே` என்க. இவர்களை இங்ஙனம் பகுத்துக் காட்டியதனால், இவர்கட்கு உட்பட்டனவாகச் சொல்லப்படும் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுட்பட்ட ஆன்மாக் களின் பந்த வேறுபாடுகளும், அவற்றிற்கு ஏற்ப அவற்றிற்கு நிகழும் அவ்தை பேதங்கலும் ஒருவாறு உணர்ந்து கொள்ளப்படும். `அஃதே இந்த மந்திரத்திற்குப் பயன்` என்க. இரண்டாம் அடியீற்றில் குற்றிய லுகரம் கது நின்றது.
இதனால், `பந்தம் முழுவதும் நீங்காது சிறிதாயினும் உடைய இயிர்கட்கு எந்த வகையிலாவது அவத்தை பேதங்கள் நிகழவே செய்யும்` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தத்துவம் ஆறாறு தன்மனு ஆறைந்து
மெய்த்தகு வன்னம்ஐம் மானொன்று மேதினி
ஒத்திரு நூற்றிரு பான்நான்(கு) எண்பானொன்று
வைத்த பதம்கலை ஓரைந்தும் வந்தவே.

பொழிப்புரை :

ஆறத்துவாக்களில், `தத்துவம் முப்பத்தாறு` என்பது முன்பே குறித்து, விளக்கம் தரப்பட்டது. (எனவே, அஃது இங்கு நினை வூட்டும் அளவே கூறப்பட்டதாம்.)

குறிப்புரை :

சொல்லுலகத்தில் முதலாவதாகிய மந்திரம் பதினொன்று, அவை `ஈாசனம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தி யோசாதம் என்னும் பிரம மந்திரம் ஐந்தும், `இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அத்திரம்` - என்னும் அங்க மந்திரம் ஆறுமாம். தன் என்றது உயிரை.
இவற்றை ஏற்க விரும்பாதவர்கள், `ஏழ்கோடி` எனப் பாடத்தைத் திருத்தினர். கோடி` என்பது ஏனையவைபோல எண்ணுப் பெயர் ஆகாமையை நோக்குக.
செய்யுள் நோக்கி - `எண்பான் ஒன்று வைத்த பதம்` என்பது பின் கூறப்பட்டது.
பதங்கள் எண்பத்தொன்று. `அவை யிவை` என்பதைச் சிவநெறிப் பிரகாசச் செய்யுள் - 179,80,81 - இன் உரையிற் காண்க. இங்கு எடுத்துக் கூறின் விரியும்.
வன்னம் ஐம்பத்தொன்று. வன்னம் - எழுத்து. அவைகளை வடமொழி பற்றி யறிக. இவற்றுள் ஒன்று நீக்கி, ஐம்பது என்றலும் வழக்கு என்பதனை, ``ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்`` என்னும் மந்திரத்தான் அறிக.
மேதினி - புவனம். புவனம் இருநூற்றிருபத்து நான்கு. தத்துவங்கள் தோறும் புவனங்கள் உள்ளன. அவற்றின் எண் ணிக்கையைச் சிவஞான மாபாடியம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தில் காண்க.
கலை ஐந்து. `அவை நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` - என்பன. வந்த - ஆன்மாவிற்கு வழியாகக் கிடைத்தன.
இந்த அத்துவாக்கள் ஆறிலும் உயிர் வியாபித்திருத்தலால், அது செய்த வினைகள் சஞ்சிதமாய், இவ்வத்துவாக்களைப் பற்றிக் கிடக்கும். அவை உள்ள வரையில் உயிருக்கு உண்மை ஞானம் விளங்கமாட்டாது. அதனால் பக்குவம் எய்திய உயிர்கட்குச் சிவன் குருவாகி வந்து, `அத்துவ சுத்தி` அல்லது `கலா சோதனை` - எனப்படும் நிருவாணதீக்கையில் ஞானவதியாகவாவது, கிரியாவதி யாகவாவது செய்யும் ஆகுதிகளால் சஞ்சிதத்தைத் துடைத்து, உபதேசத்தைச் செய்தருளுவான். அங்ஙனம் அவன் செய்த உபதேச மொழியை உயிர் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து பின் நிட்டை எய்தும்.
ஞானவதியாவது குண்டம், மண்டலம், வேதிகை முதலிய எல்லாவற்றையும் குரு தமது அகத்திலே கற்பித்துக் கொண்டு செய்வது. கிரியாவதியாவது, அவைகளை வெளியில் யாவரும் காண அமைத்துச் செய்வது.
இதனால், அத்துவாக்களின் தொகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து)
ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும்
கூடினர் கூடிக் குறிவழி யேசென்று
தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.

பொழிப்புரை :

(அத்துவாக்களைத் தரிசிக்க, அஃதாவது உள்ளபடி நேரிலே காண விரும்பியவர்கள் பிராசாத நெறியில் நின்று) உடம்பிலே கீழிருந்து பாவிக்கப்படுகின்ற நெருப்பு மண்டலம், நீர் மண்டலம், நிலா மண்டலம் - என்னும் மூன்று மண்டலங்களை உள்ளே உணர்ந்து இடை கலை, பிங்கலை வழியாக ஓடுகின்ற அந்தத் துணைவரோடு தாமும் ஓடித் தூல சூக்கும தத்துவங்களாகிய இருபத்தைந்து தத்துவங்களைக் கண்டார்கள். அதன் பின்பு அந்தத் துணைவரால் ஆகாமையின், குரு காட்டிய அந்தக் குறியான வழியிலே சென்று பர தத்துவங்களைத் தேடினர். அவ்வாறு தேடியும் அவை தரிசனப்படாமையால், ஒன்றும் தோன்றாது திகைத்து நின்றுவிட்டார்கள்.

குறிப்புரை :

`ஓடும் அவர்` - என்றது உருவகம். ஆன்ம தத்துவம் இருபத்து நான்கு, புருட தத்துவம் ஒன்று இவை இருபத்தைந்து தத்துவம். வித்தியா தத்துவங்கள் `புருடன்` என ஒன்றாய் அடக்கப் பட்டன. ஆன்ம தத்துவம் தூலமும், வித்தியா தத்துவம் சூக்குமமும் ஆகும். சிவ தத்துவம் பரம். அஃதாவது அதிசூக்குமம். தூல சூக்கும தத்துவங்கள் சகலர் பிரளயாகலர் கட்குச் சரீரமாய் அமைதலால், அவை யோகக் காட்சியில் காணப் படுவவாயின. `உள் இருபத்தைந்து` - என்றதும் இதுபற்றி, சிவ தத்துவம் அவ்வான்ம வருக்கத்தினருக்கு வேறாய் நிற்றலின், அவை அங்ஙனம் காணப்படாவாயின.
சிவ தத்துவங்களையும் அனுபவமாக உணர்ந்த பின்பே ஆன்மாச் சிவத்தை அடைய இயலும். தத்துவம் முப்பத்தாறும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் அடங்கியுள்ளன. ஏனை நான்கு அத்துவாக்களும் தத்துவத்தில் அடங்கிவிடும். ஆகவே, தத்துவங் களைக் கண்டுவிட்டால், கலைகளைக் காண்டலும் எளிதில் கூட, அத்துவாக்கள் அனைத்தும் காணப்பட்டனவாய்விடும்.
இதனால், அத்துவாக்களில் சில பகுதிகளைக் காணுமாறும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கி
ஆக்கிய தூலமள வாக்கிஅ தீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.

பொழிப்புரை :

`நமசிவாய` என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை (ஏனைக் கிரியா மந்திர யோக மந்திரங்களைப் போல எண்ணாமல், உண்மையை அனுபவமாக உணர்விக்கும் ஞான மந்திரமாகக் கொண்டு) சகலசாக்கிரத்தில் (சகலஐந்தவத்தைகள் நிகழாதவாறு தடுத்து,) ஞானவத்தைகளாகிய சுத்த சாக்கிரம் முதலியனவே நிகழுமாறு, அந்தச் சாக்கிரம் முதலிய ஐந்திலும் ஐந்து வகையாகச் சுத்த மானதம் ஆகிய அறிவினாலே கணித்து, ஆதாரங்கள் ஆறும், அவற்றிற்கு மேல் ஏழாவதாகிய நிராதாரமும் உடம்பளவினவாய் நீங்க, உடம்பைக் கடந்த துவாதசாந்தமாகிய மீதானத்தில் சென்று பொருந்திய அன்பே வடிவாய் நிகழும் திருக்கூத்தை உயிர் சென்று அடைவதே, எல்லையில் இன்பத்தைச் சிவம் பெருக்கி, அதற்கு வழங்குகின்ற சிவமாம் நிலையாகும்.

குறிப்புரை :

`நமசிவாய` என்பதை ஒரு பெயராக்குதற் பொருட்டு அதன் ஈற்றில் மகரமெய் புணர்க்கப்படுதலை, `நமச்சிவாயம்சொல்ல வல்லோம்`3 என்னும், அப்பர் திருமொழியால் உணர்க. `நமச் சிவாயம்` என்பதை `சிவாயம்` என்றது முதற்குறை `நமசிவாயம் ஐந்தும்` எனமாற்றி முதலிற் கூட்டி, `ஐந்தினையும் சாக்கிர சாக்கிரம் ஆதியில் தலை முதலாக ஆக்கி` - என உரைக்க. தலை - முதல். முதலாவது. நமசிவாய இரண்டாவது, சிவாயநம. மூன்றா வது,சிவாய, நான்காவது,சிவ. ஐந்தாவது, சி. இவையே சுத்த சாக்கிரம் முதலிய ஐந்திலும் கணிக்கும் முறை. `தூலம்` - என்றது உடம்பை `அதீதம்`, `கடந்தது` என்னும் பொருளது. இவ்வியல்பினை,
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற``
என்னும் திருவுந்தியாரால் உணர்க. `ஆதார நிராதாரயோகங்கள் பாவனை மாத்திரமே` என்பதை அந்நூல்.
``ஆக்கில் அங் கேஉண்டாய், அல்லதங் கில்லையாய்ப்
பார்க்கில் பரமதன் றுந்தீபற;
பாவனைக் கெய்தாதென் றுந்தீபற``
எனக் கூறிற்று.l இந்தப் பாவனாயோகங்கள் ஆன்மாத் தன் முனைப்பு அறுதற்குரிய சாதகங்களாம். அச்சாதகங்களால் அம்முனைப்பு அற்றால், ஆன்மா `யான்` என்றும், `எனது` என்றும் எழுந்து உலகத்தில் சென்றும் பற்றும் நிலை ஒழியும். அஃதொழிந்த பொழுது, மீதானத்தில் இறைவனது திருக்கூத்தின், சிலம்பொலி கேட்கும்` அது கேட்டவுடன் ஆன்மா இல்லார்க்குக் கிழியீடு நேர் பட்டாற் போலப் பேரார்வத்துடன் ஓடி அவனையே அடைந்து அவன் மீதே அன்பு செலுத்தி அவனது இன்பத்தில் அழுந்தியிருக்கும். அதனைத் திருக்களிற்றுப்படியார்,
``ஓசையெலாம் அற்றால் ஒலிக்கும் திருச்சிலம்பின்
ஓசை வழியேசென் றொத்தொடுங்கி - ஓசையின்
அந்தத்தா னத்தான் அரிவையுடன் அம்பலத்தில்
வந்தொத்தான் அத்தான் மகிழ்ந்து``.3
என விளக்கிற்று.
இவ்வெண்பாவில் கூறப்பட்ட அந்த நிலையே இங்கு அதீதம் எனப்பட்டது.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``.
(தொல், பொருள் - பொருளியல்.) எனத் தொல்காப்பியரும், அவ்வாறே,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையே அது,`` * *திருவருட்பயன் - 80.
என உமாபதி தேவரும் கூறியவாறு. அன்பே இன்பத்திற்குக் காரணம் ஆதலின், ஆனந்த தாண்டவத்தை உயிரினது அன்பான தாண்டவம் என்றும், அந்நிலையில் அந்த ஆனந்தத்தை வழங்குகிற சிவத்தை. (இன்ப வெள்ளத்தைத்) தேக்கும் சிவம் என்றும் கூறினார். அன்பே சிவம். (முதல் தந்திரம் - அன்புடமை) என்றதும் இங்குக் கூறிய அன்பையே என்பதையும் இதனானே உணர்க.
அன்பு நிலையே ஆனந்த நிலையாம் அன்றி வெறும், அறிவு நிலை ஆனந்த நிலை ஆகாமையை இங்கு உணர்ந்துகொள்க.
இதனால், `அத்துவாக்களைக் கடக்குமாறும்` கடந்தவழி உளதாகும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

நனவாதி தூலமே சூக்கப் பகுதி
அனவான ஐயைந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவாம் நனவில் கலந்ததிவ் வாறே.

பொழிப்புரை :

கீழாலவத்தையாய் யாவராலும் நன்கு உணர நிகழும் கேவல சாக்கிரம் முதலிய ஐந்தையும் போல்வனவே, நுண்ணறி வுடையோரால் மட்டும் ஊன்றியுணரப் படுகின்ற மத்தியாலவத்தை யாகிய சகல சாக்கிரம் முதலிய ஐந்தும். அந்த ஈரைந்து அவத்தை களிலும் உள்ள இருபத்தைந்து தத்துவங்களும் சுத்த மாயையிலும் உள்ளன. (யோகாவத்தையில் அவை செயற்படும்) அவைகளி னின்றும் உயிர் தனது உணர்வு விடுபட்டுச் சென்று, திருவருளில் முன் பெல்லாம் தான் கண்டு வந்த கனவு போல உணரப்படுகின்ற காட்சியில் தோய்கின்ற நிலையே சுத்த சாக்கிரம் முதலிய சுத்தாவத்தைகளாம்.

குறிப்புரை :

`கேவல ஐந்தவத்தைகளை உவமையாகப் பற்றிச் சகல ஐந்தவத்தைகளின் உண்மையை உணர்தல் போல, அவ்விரண்டையும் உவமையாகப் பறஅறிச் சுத்த ஐத்தவத்தைகளின் உண்மையை உணர்ந்து கொள்ளல் வேண்டும்` - எனவும்,
பிரகிருதி மாயை, அசுத்த மாயை இவற்றின் தொடர்பு கீழாலவத்தை மத்தியாலவத்தைகளோடு ஒழிய, யோகாவத்தையில் சுத்த மாயையின் தொடர்பு மட்டுமே உளதாம்` - எனவும்,
`அந்தச் சுத்தமாயைத் தொடர்பும் நீங்கித் திருவருள் பற்றாக நிகழ்வனவே சுத்தாவத்தைகள்` - எனவும் கூறியவாறு. யோகாவத்தை களின் உண்மை யோக நூல்களால் விளங்கும்.
`இங்கு, `சுத்தம்` எனப்படுவது உடம்போடு கூடி நிற்கும் பொழுதே திருவருள் வயப்பட்டு நிற்பது ஆகலின், இது சகலத்திற் சுத்தமே, `தனியான சுத்தம் வேறு உண்டு` என்பது மேலேயும் குறிக்கப்பட்டது. `அசுத்த மாயையில் உள்ள தத்துவங்களைப் போல சுத்த மாயையும் அவ்வகைத் தத்துவங்கள் உள்ளன என்பது சிவாகமங் களின் துணிபு` என்பதைச் சிவஞானமாபாடியம் முதலியவற்றால் உணர்க.
`அன்ன` - என்பது இடைக்குறைந்து நின்றது. `அன்னவற்றில் ஆன` என உருபுவிரித்து, `விந்து சத்தியில் உள்ளன` என முடிக்க. `இன்` வேண்டாவழிச் சாரியை, `உயிர்` என்றது அதன் உணர்வை, `கலந்ததும் இவ்வாறே` - என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. `இவ்வாறு` எனச் சுட்டியது, முன்னர், `தூலம், சூக்கம்` என்றவற்றை.
இதனால், மேல், `சாக்கிர சாக்கிர மாதிதனில் ஐந்தும் என்னும் மந்திரத்தில் பொதுவாகச் சுட்டிப்போந்த சுத்தாவத்தைகளின் உண்மை தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடல் நற்செய்தி யானதே.

பொழிப்புரை :

`சாக்கிரத்தில், `அதீதம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்பட்ட பொருளையும் தம்மையும் வேறு வேறாக அறிதல் இன்றி அப்பொருளேயாய் அழுந்தித் தற்போதத்தை இழந்திருப்பர். அதனால் அவர், இடம் பெயரமாட்டாது கிடந்த கிடப்பில் கிடக்கும் பசுங்குழவி போல்பவாவர்.
சாக்கிரத்தில் `துரியம்` - என்னும் நிலை தோன்றப் பெற்றவர், தம்மால் உணரப்படும் பொருளையும், தம்மையும் வேறு வேறாக அறிந்து, அந்த அளவில் அனுபவிக்கும் உணர்வு உடையவராவர், அதனால், அவர் இடம் பெயர்ந்து தவழ்ந்து செல்லும் குழவி போல்வர்.
சாக்கிரத்தில், `சுழுத்தி` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் உணரப்படும் பொருளையும், உணரும் தம்மையும் வேறுவேறாகப் பகுத்து நன்குணர்வர். அதனால் அவர் வளர்ச்சியடைந்து நன்கு நடக்கும் சிறுபிள்ளைகள் போல்வர்.
சாக்கிரத்தில், `சொப்பனம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர், பொருளில் மேலும் மேலும் நாடும் நாட்டம் மிகுந்து இருப்பர். அதனால் அவர் நன்கு ஓடி ஆடும் பருவச் சிறுபிள்ளை களோடு ஒப்பர். (மகளிரில், `பெதும்பைப் பருவத்தாரோடு ஒப்பர்` எனலாம்.)
சாக்கிரத்தில், `சாக்கிரம்` என்னும் நிலை தோன்றப் பெற்றவர் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவர். அதனால் அவரக்ள கட்டிளமையுடையவரோடு ஒப்பர். (எனினும், ஆடவர்களில் பிரமசாரிகளையும், பெண்டிரில் கன்னிகைகளையும் இங்கு உவமையாகக் கொள்க.)

குறிப்புரை :

இம் மந்திரம். `சாக்கிரத்தில் சகல மாகிய மத்தியா லவத்தையின் இயல்பும், சாக்கிரத்தில் சுத்தமாகிய நின்மலா வத்தையின் இயல்பும், ஒரு தன்மையனவே` என உணருமாறு அவற்றின் இயல்புகளைப் பொதுமையில் வைத்து உடலினைச் சிலேடையாக உணர்த்திற்று. மத்தியாலவத்தையில், உணரப்படும் பொருள் உலகமும், நின்மலாவத்தையில், உணரப்படும் பொருள் சிவமும் ஆகின்ற இவ்வளவே வேறுபாடு என்க. இதனை,
``ஆணவத்தோடு அத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோடு அத்துவிதம் சாருநாள் எந்நாளோ``
என்னும் தாயுமானவர் வாக்கும் ஓராற்றான் விளக்கும்.
முன்னர் நின்ற, `பிறந்தார்` முதலிய மூன்றும் `பிறக்கப் பெற்றார்` என வினையாலணையும் பெயராய எழுவாய்கள். பின்னர் நின்ற, `கிடந்தார்` முதலிய மூன்றும் பயனிலைகள். கிடந்தார் முதலியவரோடு ஒப்பவரை, `கிடந்தார்` முதலியோராகவே உபசரித்தார். ``கிடந்தார்`` என்றது முதலியன அப் பருவத்தினரையே. அதிகாரப் பெயருள் `பருவம்` என்றதன் பொருள் இதனான் நன்கு விளங்குகின்றது.
ஈற்றடியில், `நனவிற் கனவு ` என்பதன் பின் `தோன்றப் பெற்றார்` என்பதும், `ஓடல்` என்பதன் பின்` உடையார்` என்பதும் தொகுக்கப்பட்டன.
`நற்செய்தி` என்றது அதனை உடைய பருவத்தைக் குறித்தது. அப்பயனிலைக்கு, முன்னர்ப் போந்தவற்றுக்கு இயைய, `நனவில் சாக்கிரம் தோன்றப் பெற்றார்` என்னும் எழுவாய் வருவித்ததுக் கொள்க.
இதனால் சாக்கிரத்தில் நிகழும் இருவகை ஐந்தவத்தைகளின் இயல்பு உண்மையில் வைத்து இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதற் றிருமேனி குணம்பல ஆகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே.

பொழிப்புரை :

சிவநெறி மார்க்கம் நான்கனுள் சற்புத்திர மார்க்க மாகிய கிரியையில் நிற்பின் சிவ தத்துவங்கள் ஐந்தும் காட்சிப்படுவன வாம். சிவத்தோடு தன்னை ஒன்றவைத்து உன்னும் சகமார்க்க மாகிய யோகத்தால் சிவனது திருவருளை நிரம்பப் பெறுதல் கூடும். சிவனது ஞானத்தை உணர்தலாகிய சன்மார்க்கத்தால் ஆன்மாவினது ஞானமும் சிவஞானமேயாய், அதுவே தற்சொரூபமாய் நிற்கும். அந் நிலையில் சிவனது எல்லாக் குணங்களும் ஆன்மாவுக்கு உளவாகும். அப்பொழுது ஆன்மாவும் சிவனைப் போலவே எங்கும் நிறைந்து விளங்கும்.

குறிப்புரை :

கல்வி - வித்தை; ஞானம், என்றது சிவ ஞானத்தை. குறி - குறித்தல்; உணர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `தன்` - என்றது ஆன்மாவை. சிவமாம் தன்மையை எய்தினமை தோன்ற, `திரு மேனி` என்றார். `பலவும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அந்த அறிவில்` எனச் சுட்டு வருவிக்க. `அளவு` என்பது `சராசரம்` என்றதனோடும் இயையும். சரியை, கிரியையிற் செலுத்துமுகத்தானே பயன்படுதலின், அஃதொழிந்தவற்றையே கூறினார். கிரியை, யோகம், கல்வி ஆகிய காரணங்கள் காரியங்கலாகவே உபசரிக்கப்பட்டன. மூன்றாம் அடி தளை மயங்கி வந்தது.
இதனால், ஆன்மா நின்மலாவத்தையை அடையும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆதி பரம்சிவம் சத்தி சதாசிவம்
ஏதமில் ஈசன்நல் வித்தையாம் தத்துவம்
போதம் கலைகா லமேநியதி மாயையும்
நீதி அராகம் நிறுத்தினன் என்னே.

பொழிப்புரை :

`சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை` என்னும் சிவ தத்துவங்களையும், அவற்றின் கீழ் உள்ள `கலை, காலம், நியதி, வித்தை, அராகம், மாயை` என்னும் வித்தியா தத்துவங் களையும் அநாதி நிலையினின்றும் இறங்கி ஆதியாய் நிற்கின்ற சிவன் படைத்தருளினான் என்று உணர்க.

குறிப்புரை :

`ஆம் தத்துவம்` என்றது `அராகம்` என்பதனோடும் சென்று இயையும். `போதம்` என்றது `வித்தை` என்னும் பொருட்டாய்ப் பொதுவாக `வித்தியா தத்துவம்` எனவும், சிறப்பாக அவற்றுள் ஒன்றாகிய `வித்தை` என்றும் இருபொருள் தந்து நின்றது. கலை முதலிய ஐந்தும் கூடிய நிலையிலே ஆன்மா `புருடன்` எனப்படுவ தன்றி, புருட தத்துவம் தனித் தத்துவம் அன்றாதலின், அதனை இங்குக் கூறிற்றிலர்.
இதனால், அத்துவாக்களில், `ஆறாறு` எனப்பட்ட தத்துவங் களில் சிவதத்துவம் ஆவனவும், வித்தியா தத்துவம் ஆவனவும் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம்
ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே.

பொழிப்புரை :

(மேற்கூறிய இருவகைத் தத்துவங்களையும் கூட்டித் தொகை காணின்) `சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை, கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை` - எனப் பன்னிரண்டாம். இவற்றுள் `புருடன்` என்பது ஏனையபோல ஒரு தத்துவம் அன்று. கலை முதலிய ஐந்தனோடும் கூடி நிற்கும் ஆன்மாவே.

குறிப்புரை :

இங்ஙனம் தொகையை வேறு மந்திரத்தில் வைத்துக் கூறியதற்குப் பயன், `புருடன்` என ஒரு தத்துவத்தைக் கூட்டியதும், அது பற்றிய விளக்கத்தைத் தந்ததும் ஆகும். ஆதி - முதல். என்றது, `தத்துவம்` என்றபடி. செய்யுள் நோக்கி வித்தியாதத்துவங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. சைவத்தின் சிறப்புத் தத்துவங்களை மட்டுமே கூறினார், ஆன்ம தத்துவங்கள் பிறராலும் கொள்ளப்பட்டு, விளங்கிக் கிடத்தல் பற்றி.
இதனால், மேற்கூறப்பட்ட தத்துவங்கட்குத் தொகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்
காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்
தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்
பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

பொழிப்புரை :

`ஆணவம், மாயை, கன்மம்` - என மலங்கள் மூன்றாம். அவற்றை எதிர்நிரல் நிறையாக வைத்து, அரிசிக்கு முளை, தவிடு, உமி - இவைபோல்வனவாக உணர்க. ஆன்மாவும் சிவனைப் போலச் சித்துப் பொருளேயாயினும், அரிசி போன்ற ஒரு தன்மையை அஃது உடைமையால் அரிசிக்கு உமி முதலிய குற்றங்கள் அநாதியாக இருத்தல் போல, ஆணவம் முதலிய குற்றங்கள் அநாதியே உளவாக, அது சிவனைப் போலப் பதியாகாது, பசுவேயாய் நின்றது. உனது தன்மையை இங்ஙனம் நீ உள்ளவாறு உணர்ந்து, பாசங்களில் பற்றுக் கொள்ளாது விடுத்துப் பதியாகிய சிவனைப் பற்றி இன்புறுவாயாக.

குறிப்புரை :

`முளை அத்தவிடுமி போலக் காணும்` என மாற்றி உரைக்க. `ஆன்மாவும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். தண்டுலம் - அரிசி. ஆக்கம், உவமை குறித்தது நின்றது, ஆணவத்தைப் பிற சமயிகள் கொள்ளாமையால், `மலம் மூன்று` என்பதை எடுத்தோதி வலியுறுத்தினார்.
இதனால், அத்துவாக்கள் யாவும் மாயையேயாக, அவை பற்றி வேறும் இருமலங்கள் ஆன்மாவிற்கு உளவாதல் கூறப்பட்டது.
``மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல்
மம்மர்செய் தணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்``
என்னும் சிவஞான சித்தியாரையும், அதற்கு மாதவச் சிவஞான யோகிகல் உரைத்த உரையையும் காண்க.

பண் :

பாடல் எண் : 7

பசுக்கள் பலவண்ணம் பால்ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடின்
பசுக்கள் தலைவனைப் பற்றி யிடாவே.

பொழிப்புரை :

உலகில் பாலைத் தரும் பசுக்கள்யாவும் ஒரே நிறம் உடையன அல்ல; பல நிறம் உடையன. (அது போல, சீவர்களாகிய பசுக்களும், `பசுத்துவம்` எனப்படும் பந்தத்தைத் ஒரே வகையாக உடையன அல்ல; ஒரே வகையை உடையனவாயின், பந்தத்தினின்றும் விடுபடுதலும் எல்லாப் பசுக்களுக்கும் ஒரு காலத்திலே நிகழ்தல் வேண்டும். அவ்வாறில்லாமையால், பந்த வேறுபாடு பலதிறப் பட்ட தாம்.) ஆயினும், பசுக்கள் தரும் பயனாகிய பால் ஒரு நிறமேயாம். (அது போல அவை அடையும் வீடுபேறு ஒருதன்மையுடையதே.) இனிப் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவன். (ஆகவே, அவன் ஒரு தன்மையனேயன்றிப் பல தன்மை உடையவன் அல்லன். (அதுபோலச் சீவர்களை, `பெத்தம், முத்தி` என்னும் இரு நிலைகளிலும் உடன்நின்று நடாத்தும் பதி ஒருவனே, ஆகையால் அவன் பதித்தன்மை ஒன்றே உடையனன்றிப் பசுக்கள் போலச் சார்த்ததன் வண்ணமாய்த் தன்மை வேறுபடுபவனல்லன்.)
ஆயன் பசுக்களை மேய்க்காமல் அவற்றின் இச்சைப்படி விட்டு விடுவானேயானால் இவை ஆயனைச் சென்று சேராமல், காட்டில் திரிந்து அல்லற்பட்டே ஒழியும். (அதுபோல, சிவன் சீவர்களைக் கண் ணெடுத்துப் பார்க்காமல் விட்டுவிடுவானேயானால், அவை அவனை அறிந்து இன்புற மாட்டா, பந்தத்தால் விளையும் துன்பத்தில் கிடக்கும்.
``மேய்ப்பாரும் உண்டாய், வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே``
எனப் பின்னரும் பசுக்களுக்கு மேய்ப்பான் இருத்தல் இன்றியமையாது எனக் கூறுவார்.)

குறிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணி பெற்று நின்றது. `பசுக்கள் தலை வனைப் பற்றி விடாவே` எனப் பாடம் ஓதுபவர்கள்; `சிவனது அருள் இன்றியே சீவர்கள் சிவனை அடைய இயலும் எனக் கூறுவோராவர்.
`பசுக்கள் கொட்டிலை அடைந்த பின்பும் ஆயன் அவைகளைப் புறக்கணித்துவிட்டு விட்டொழிவான் அல்லன்` என்பதையும் நோக்குக. இதனால், `மேய்க்கும் கோல்` என்பது திரோதான சத்திமட்டும் அன்று; அருட்சத்தியுந்தான் - என்க.
பால் பிறர்க்கு மட்டுமே பயன் படுவன அல்ல. கன்றுகளின் நலத்தில் கருத்துடைமையால், அக்கன்றுகளை வளர்த்தல் பசுக்கள் அடைகின்ற பயனேயாம். மேலும் வறட்சுப் பசுக்கள் போற்றப் படாமல், மிக்க பாலைத் தரும் பசுக்களே போற்றப்படும். அதனால் பால் அதனைத் தரும்பசுக்கள் அடையும் பயனுமாகும். ஆகவே அது சீவன்கள் அடையும் வீடுபேற்றிற்கு உவமையாதற்கு இழுக்கில்லை.
இதனால், `மேற்கூறப்பட்ட மலங்கள் உயிர்தோறும் வேறு வேறு வகையாய் உள்ளன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உடல் இந் தியம்மனம் ஒண்புத்தி சித்தம்
அடல்ஒன் றகந்தை அறியாமை மன்னிக்
கெடும்அவ் வுயிர்மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான்ஏழ் நரகத்து ளாயே.

பொழிப்புரை :

தாத்துவிகங்களாகிய உடம்பு, அதில் கரணங் களாய்ப் பொருந்தியுள்ள ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், அந்தக் கரணங்கள் ஆகிய இவற்றின் இயல்பினை அறியாமையால் அவை களையே `தான்` என மயங்கிக் கெடுகின்ற அந்த உயிர், (அந்த அறியா மையை நீக்கிக் கொள்ள முயலாமல்) மேலும் மேலும் அந்த அறியா மையையே வளர்த்துக் கொண்டிருக்குமானால், அது அடைவது ஏழு நரகங்களிலும் சென்று வீழ்ந்து அங்குள்ள துன்பத்தைத்தான்.

குறிப்புரை :

`வீடு பெறுதல் இயலாது` - என்றபடி. `உடல்` என்பது பெரும்பான்மையும் தூல உடம்பையே. இந்தியம், `இந்திரியம்` என்பதன்மரூஉ. நல்வினைசெய்வார் அரியர் ஆகலின், அதன் பய னாகிய சுவர்க்கத்தை அடைதலைக் குறியாதொழிந்தார்` இந்நிலை யிலே நிற்கும் உயிர்கட்குச் சுத்த நனவாதிகள் நிகழா என்பது கருத்து. எனவே, தத்துவங்களின் இயல்பை உணருமுகத்தால் தம்மை அவற்றின் வேறாக உணர்ந்த உயிர்கட்கே திருவருள் கிடைக்கச் சுத்த நனவாதிகள் உளவாம். சிவஞானபோதத்திலும்,
``இவ்வான்மாத் தன்னை அவ்விந்திரியத்தின் வேறாவான் காணவே
தமது முதல் சீபாதத்தை அணையும் ``*
என்றது காண்க. இங்குக் கூறப்பட்ட தத்துவ தாத்துவிகங்கள் வைதிக சமயத்தார் பலர் கூறுவனவேயாதலின், அவற்றை எடுத்தோத்த தாகக்கூறாது, அனுவாதமாகக் கூறினார். சிவாகமங்கள் நரகங்களைப் பலவாகக் கூறினும் `ஏழ் நரகம்` - என்பது ஒரு பொது வழக்கு.
இதனால், தத்துவஞானத்தவரே சுத்தநனவாதி பருவங்களைத் தலைப்படுவாராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தற்றெரி யாத அதீதம்தன் ஆணவம்
சொற்றெரி கின்ற துரியம்சொற் காமியம்
பெற்ற சுழுத்தி பின்பேசுறும் காதலாம்
மற்றது உண்டி கனாநன வாதலே

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` - என்னும், காரண அவத்தை மூன்றனுள் கேவலத்தில் துரியாதீதம், உயிர், `நான்` என் -கின்ற தன்னுணர்வும் இன்றி, ஆணவத்தில் அழுந்தி அதுவேயாய்க் கிடந்த நிலை `யான்` என்னும் உணர்வு முகிழ்க்கின்ற கேவலத்தில் துரியம், மேற் குறித்த நிலையில் இறைவன் அவ்வுயிருக்கு மூலகன் மத்தைக் கூட்டு வித்த நிலை. கேவலத்தில் சுழுத்தி, மூலகன்மத்தோடு காரண சரீரமாகிய மாயா தத்துவத்தைக் கூட்டிய நிலை. இவைகளில் ஆன்மாவிற்கு வினையை ஈட்டுதல் நுகர்தல்கள் இல்லை, கேவலத்தில் சொப்பனம் கால நியதிகளைக் காட்டுவித்த நிலை. சாக்கிரம் கலை வித்தை அகாரகங் களைக் கூட்டிய நிலை. இந்தச் சொப்பன சாக்கிரங்களில் தான் உயிர் வினைகளை ஈட்டுதலும் நுகர்தலும் நிகழும்.

குறிப்புரை :

இவற்றுள் முதல் மூன்றினையும் முறையே `அநாதி கேவலம், விஞ்ஞான கேவலம், பிரளயகேவலம்` - என்பர். `காதல்` என்றது மயக்கத்தை. அஃது ஆகுபெயராய் மாயையைக் குறித்தது.
இதனால், மும்மலங்களைக் கூறிய இயைபு பற்றி, அவற் -றோடு தொடரும் கேவல ஐந்தவத்தையின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

நனவிற் கனவில்லை ஐந்தும் நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனில்நுண் பகுதியே தற்கூட்டு மாயை
நனவில் துரியம் அதீதம் தலைவந்தே.

பொழிப்புரை :

நனவில் கனவு இல்லாமைபோலக் கனவிலும் நனவு இல்லையாதலின், சுழுத்தியில், சுழுத்தி முதலிய மூன்று நுட்ப அவத் -தைகள் மட்டுமே உள்ளனவாம். (அவைகளை `சுழுத்தியிற் சுழுத்தி, சுழுத்தியில் துரியம், சுழுத்தியில் துரியா தீதம்` எனக் கூறிக் காண்க.)
இங்ஙனம் கூறியதனானே, சொப்பனத்தில் சாக்கிரம் ஒழிந்த நான்கும் உளவாதல் பெறப்பட்டது.
நனவில் சொல்லப்படும் துரியமும், துரியாதீதமும் தாமே தனித்து நிகழும் நிலையில் துரியத்தில் இரண்டும், துரியாதீதத்தில் அஃது ஒன்றுமாகவே நிகழும். (அவை, `துரியத்தில் துரியம்` துரியத்தில் துரியாதீதம்` எனவும், `துரியாதீதத்தில் துரியாதீதம், எனவும் சொல்லப்படும்.)
``ஐந்துசாக்கிரத்தில்; நான்கு கனவினில்`` என்னும் சிவஞான சித்திச் செய்யுளுக்கு இதுவும் பொருளாமாறு அறிந்து கொள்க.

குறிப்புரை :

`இதனுட் கூறியன யாவும் கீழாலவத்தை` என்க.
பகுதி - மூலப்பகுதி. தற்கூட்டு மாயை - கீழாலவத்தையில் ஆன்மாவிற்குக் கூட்டப்படும் மாயை. `அது மூலப்பகுதியே` என்ற படி. `வந்தவழி` என்பது `வந்து` எனத்திரிந்தது. வந்தவழித் தாமே உளவாம் என்க. மூன்றாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. முதற் கண் ``நனவிற் கனவில்லை`` என்றது `கனவில் நனவு இல்லை` என்பதனைத் தெளிவிக்கக் கூறிய உவமை.
இதனால், கீழாலவத்தை பற்றிய சில நுட்பங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

ஆறாறில் ஐயைந் தகலல் நனாநனா
ஆறாம் அவைவிட வாகும் நனாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இனிமாயை தானே.

பொழிப்புரை :

தத்துவம் முப்பத்தாறில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியா தத்துவத்தில் புருடன் ஒன்றும் ஆக இருபத்தைந்து தத்துவங்களை ஆன்மாத் தன்னின் வேறாகக் கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சாக்கிரமாகும்.
பின்னர், வித்தியா தத்துவத்தில் எஞ்சியுள்ள ஆறு தத்துவங் களையும் அவ்வாறு கண்டு நீங்குதலே சகலத்தில் சுத்த சொப்பனமாகும்.
பின்னர், சிவ தத்துவம் ஐந்தனையும், `இவை பிரளயாகலர் சகலர்கட்கு பிரேரக மாத்திரையாயும், விஞ்ஞானகலருக்குத் தனு கரண புவன போகங்களாயும் பயன்பட்டுத் தோற்றமும் அழிவும் உடைய அநித்தியப் பொருள்களேயன்றி, இவை தாமே சிவனது இலய போக அதிகாரத் திருமேனிகளாகிய நித்தியப் பொருள்கள் அல்ல; அத் திரு மேனிகள் இவற்றின் வேறாய்ச் சத்தி வடிவாவனவே` எனத் தெளிந்து, அவை பற்றியிருந்த மயக்கத்தின் நீங்குதலே சகலத்தில் சுத்த சுழுத்தி யாகும். இவற்றிற்குப் பின் எஞ்சி நிற்பது காரண நிலையில் உள்ள சுத்த மாயையே,

குறிப்புரை :

`சிவ தத்துவங்கள் பிரேரக காண்டம்` - என்பதை நோக்காதார், `அவை யின்றியும் வித்தியா தத்துவங்கள் நீங்கிய வழியும் சிவதத்துவங்கள் தொழிற்படும்` எனவும் இம்மந்திரத்திற்குப் பொருள் உரைப்பர்.
மலாவத்தைகட்கே தத்துவங்களின் தொழிற்பாடும், அவை யின்மையும் காரணமாவதன்றி, நின்மலாவத்தைக்கு அவை காரணம் ஆகாமையையும், `நின்மலாவத்தை திருவருளானே நிகழ்வன` என்பதையும் அவர் நோக்கிலர்.
சகலத்தில் சுத்த சாக்கிரம் முதலியனவும் சகலத்தில் சகல சாக்கிரம் முதலியனபோல இலாடத் தானத்தே நிகழ்தல் பற்றி இவற்றையும் `சாக்கிர சாக்கிரம் முதலியனவாகக் கூறுவர். எனினும் இடம் நோக்கி `அவை இவை` எனக் கொள்ளப்படும்.
இம் மந்திரத்துட் கூறப்பட்டன நின்மலாவத்தைகளே.
இதனால், `நின்மலாவத்தைகளாவன இவை` - என்பதை வகுத்துக் கூறத் தொடங்கி, முதல் மூன்றின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறைவிட் டதுவும்தான் அன்றாகிச்
சேய்கே வலம் விந்து வும் செலச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன்இல்லை யாமே.

பொழிப்புரை :

(முன்னை மந்திரத்திற் கூறியவாறு) உயிர் மாயா காரியங்களையெல்லாம் கடந்து எஞ்சி நின்ற காரண நிலையில் உள்ள சுத்த மாயை தாரகமாகச் சிவத்தை உணர்ந்து நிற்றலே சகல சாக்கிரத்தில் சுத்த துரியமாகும்.
பின்னர் ஆன்மா அந்த நிலையிலும் நில்லாமல் விட்டு நீங்கி, அந்தக் காரணமாயையும் தொடர்பின்றி நிற்கச் சிவமே தாரகமாக அதனை உணர்ந்து நிற்றல் சகல சாக்கிரத்தில் சுத்த துரியாதீதமாகும். இந்நிலையில் உடம்பு இருந்தும் இல்லாததேயாம்.

குறிப்புரை :

`உடம்பு வழியாக மலவாசனைகள் உயிரைத் தாக்கா` என்பதாம். `மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை` என்றாரேனும், `புருடன் மாயையில் வந்ததே துரியத்தில் ஆயமுறை` என்றலே கருத்தென்க. சேய்மை, `சேய்` எனமுதனிலை மாத்திரமாய் நின்றது. `சேய்மை` என்றது `அதீதம்` என்றவாறு. கேவலம் - தனிமை; கட்டற்ற நிலை. `விந்துவும் தன்னைவிட்டுச் செல்ல, உயிர் தான் சிவத்தில் சென்றக்கால், சேய்மைத்தாகிய கேவலமாம்` என்க.
இதனால், முன்னை மந்திரத்திற் கூறியவைபோக, எஞ்சி நின்ற இரண்டன் இயல்புகள் கூறப்பட்டன. இவை ஐந்தும் தச காரியத்துள் முதல் மூன்றினை ஒன்று கூட்டிப் பகுத்தன என்க.

பண் :

பாடல் எண் : 13

அதீதத் துரியத் ததீனாம் ஆன்மா
அதீதத் துரியத் ததனால் புரிந்தால்
அதீதத் தெழுந்தறி வாகிய மானன்
முதிய அனலின் துரியத்து முற்றுமே.

பொழிப்புரை :

நின்மல துரியாதீத நிலையில் சிவனையன்றிப் பிறி தொன்றையும் தாரகமாகக் கொள்ளாமையால், சடத்தன்மை சிறிதும் இன்றித் தூய அறிவேயாய் நிற்கின்ற ஆன்மா, அந்நிலையில், பழஞ் சுடராகிய சிவனது அவ்வருள் வழியே, தொடர்ந்து அவனையே உணர்ந்துநிற்குமாயின், அவ் வருளால் தனது தூய்மை கெடாது, என்றும் அந்நிலையிலே நிற்கும் நிலை கைகூடுவதாகும்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்யாவிடில், மீளக் கீழ்நிலையை அடையும்` என்பதாம். `துரியாதீதம்` என்பது, `அதீத துரியம்` எனப் பின் முன்னாகி நின்றது. `முதிய அனல்` என்பதைச் சுட்டும் `அது` என்னும் சுட்டுப் பெயர், செய்யுள் பற்றி முன் வந்தது. `அனல்` என்றது, சுடர் என்னும் பொருளது ஆதலின் ``அதனால்`` என்றது `அருளால்` என்றதேயாம். முதலடியை மூன்றாம் அடியாகவும் அனு வத்தித்துக் கூறியது. `இங்குக் கூறுமாறு நில்லாவிடின் ஆன்மாத்தான் அரிதில் அடைந்த நிலையை இழந்துவிடும்` என்பது உணர்த்தற்கு. இயமானன், `யஜமானன்` - என்பதன் திரிபு. `வேள்வித் தலைவன்` என்பது இதன் பொருள். யஜமானன்` என்பது உலகவழக்கில் பொதுவாகவழக்கினும், செய்யுள் வழக்கில் உயிரையே குறித்தல் அன்றிப் பிறவகையில் பொருள் தாராது. முதுமை, பழமையைக் குறித்தது. `அநாதி` என்பதை, `பழமை என்றல் தமிழ் வழக்கு. இறுதியில் உள்ள `துரியம்`, `கடப்பு` என்னும் பொருளதாய்ப் பாசங்களைக் கடந்ததை உணர்த்திற்று`.
இதனால், அரிதிற் பெற்றதொன்றைப் பேணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனாஎன்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுனையில்
மெய்கண் டவன்உந்தி மேவில் துரியமே.

பொழிப்புரை :

பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளில் முப்பத் தைந்து கருவிகள் மட்டுமே கூடிச் செயற்படுவது கேவல சாக்கிரம். (இதுவும் சகல சாக்கிரம்போலப் புருவநடுவில் நிகழும்` என்பது மேற் பல இடங்களில் கூறப்பட்டது.)
சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும் ஆகப் பன்னிரண்டு தத்துவங்களும் ஆன்மாவை எப்பொழுதும் விட்டுக் நீங்குவன அல்ல, அதனால், `புருடன்` என ஒன்றுபோலக் கூறுமிடம் எல்லாம் அவத்தை பேதத்தில் இப்பன்னிரண்டு தத்துவங்களும் கொள்ளப்படும். `அவற்றுள் முப்பத்தைந்து கருவிகள் மட்டுமே கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்` என்றமையாலும், அவற்றுள் `புருடன்` என்பது, மற்றும் பதினொரு கருவிகள் கூடியது ஆகையாலும், நாற்பத்தாறு கருவிகள் கேவல சாக்கிரத்தில் தொழிற்படும்.
கேவலசாக்கிரத்தில் செயற்படும் நாற்பத்தாறு கருவிகளாவன; ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரிய விடய மாகிய சத்தாதி ஐந்து, கன்மேந்திரிய விடயமாகிய வசனாதி ஐந்து, அந்தக் கரணம் நான்கு, புருடன் ஒன்று, பிரணாதி வாயுக்கள் பத்து என்பன, ``புருடன்` என்பது பன்னிரண்டு கருவிகளை அடக்கியது - என்பது மேலே கூறப்பட்டது.
ஆன்மா புருவ மத்தியிலே நிற்பினும் தொண்ணூற்றாறு கருவிகளும் செயற்படின் சகல சாக்கிரமும், அவற்றுள் ஐம்பது கருவிகள் நீங்க, கேவல சாக்கிரமும் நிகழும் என்க.
சகல சாக்கிரத்தில் ஆன்மா புலன்களை அறிவதில் தீவிரமாய், நன்குணர்ந்து நிற்கும். கேவல சாக்கிரத்தில் ஆன்மாப் புலன்களை அறிந்தும் அறியாதது போன்ற மந்த உணர்வு உடையதாய் இருக்கும். இவை அவ்விரு சாக்கிரத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு.
முப்பத்தைந்து கருவிகளில் ஞானேந்திரியம் ஐந்தும், கன் மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்துக் கருவிகள் நீங்க, ஏனை இருபத் -தைந்து கருவிகள் மட்டும் செயற்படுவது கேவல சொப்பனம். இந்நிலையில் ஆன்மாக் கண்டத் தானத்தில் நிற்கும். கைகண்ட - சாக்கிரத்தில் நன்கு துய்க்கப்பட்ட.
அவ்விருபத்தைந்தில் சித்தம், பிராணன், புருடன் - ஆகிய மூன்று கருவிகள் மட்டுமே செயற்படுவது கேவல சுழுத்தி. (பொய் என்றது ஐம்புலன்களை. `சுழுனையில் பொய்கண்ட மூவர் உளர்` என இயைத்துக் கொள்க. `இவருள் புருடனும் ஒருவன்` என்பதாம்.) `சுழுத்தி நிகழும் இடம் இருதயம்` என்க.
பொருள்களை உணரும் ஆற்றல் உடைய புருடன் இரு -தயத்தை விட்டு உந்தியை அடைந்தால் அந்நிலை கேவல துரியமாம். அப்பொழுது பிராணன் மட்டுமே உளதாக இருவரே இருப்பர். (இரு கருவிகள் மட்டுமே அவ்விடத்தில் செயற்படும்` என்றபடி.) இங்குப் புருட தத்துவத்தையே உயிராக உபசரித்தார். `உந்தி மேவில்` என்றதனால் முன்பு இருதயத்தில் நின்றமை பெறப்பட்டது.

குறிப்புரை :

உந்திக்குகீழ் உள்ளது மூலாதாரமே. ஆதலால், `புருடனோடு உடன் இருந்த ஒரு கருவியாகிய பிராணனும் நீங்க, புருடன் ஒருவனும் மூலாதாரத்தை அடைந்தால் கேவல துரியா தீதம் நிகழும் - என்பது குறிப்பால் விளங்கிற்று.
கீழாலவத்தைகளில் செயற்படும் கருவிகளை, `தொகைக் குறிப்பு` - என்னும் குறிப்பு வகையால் மரபு பற்றி உணர்த்தினார். என்க.
இதனால், `கீழாலவத்தைகட்கு உரிய கருவிகள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கால் துரியமே.

பொழிப்புரை :

(`புரியட்டக சரீரம்` - என்பது பெரும்பான்மையும் சூக்குமசரீரத்தையும், சிறுபான்மை பரசரீரத்தையும் குறிக்கும். இது சிவஞான போத இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண சிவஞான மாபாடியத்தாலும் விளங்கும்.)
தன்மாத்திரை ஐந்தும், அந்தக் கரணம் மூன்றும் ஆக எட்டும் கூடியது சூக்கும சரீரம். இவ்விடத்தில் சித்தம் பிரகிருதியில் அடங்கும்.
மூலப் பிரகிருதி ஒன்றும், வித்தியா தத்துவம் ஏழும் ஆக எட்டும் கூடியது பர சரீரம்.
எனவே, `புரியட்டகம்` என்பது இவ்விரு சரீரங்கட்கும் பெயராதல் விளங்கும். (இவை இரண்டுமே இம் மந்திரத்திற் குறிக்கப்படுகின்றன.)
இரு புரியட்டக சரீரங்களும் தூல சரீரத்தோடு பொருந்தி நிற்கும் நிலையே இருவகைச் சாக்கிராவத்தையாகும். (இருவகை சகலமும், கேவலமும், இவ்வாறு சுருங்கக் கூறினாராயினும் கேவல சாக்கிரத்திலும் கனவிற் போலவே புரியட்டக சரீரம் நிற்கும் என்க.) சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், பிராணாதி பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்கள். ஆகையால் அவற்றை எண்ணாமல் விடுக்கச் சூக்கும சரீரத்தில் மூன்று அந்தக்கரணங்கள் மட்டுமே செயற்படும் நிலை கேவல சொப்பனமாம். கேவல சாக்கிரத்தல் இருவகை இந்திரியங்கள் செயற்படும். கேவல சொப்பனத்தில் அவை செயற்படா. (இங்குப் பரசரீரம் கருத்தில் கொள்ளப்படவில்லை.) பரசரீரத்தில் `பிரகிருதி, புருடன்` என்னும் இரண்டு மட்டுமே தொழிற்படும் நிலை கேவல சுழுத்தியாம். (இங்கும் பிராணன் எண்ணப்படவில்லை.) பரசரீரத்தில் புருடன் ஒன்று மட்டுமே செயற்படும் நிலை கேவல துரியமாம். (இங்கும் பிராணன் எண்ணப்பட வில்லை. ஒரு கருவியும் இன்றி ஆணவ மாத்திரம் இருத்தலே கேவல துரியாதீதம்` என்பது கருத்து.)

குறிப்புரை :

கேவல துரியாதீதத்தில் பிரகிருதி சிறிதும் அறிவைப் பிறப்பியாது, இருளாயே இருக்கும் என்க.
இதனால், கீழாலவத்தைக் கருவிகள், வேறு வேறு சரீரங்களாதல் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்திஉள் நாடல் இலாமை
நனவில் துரியம்அதீதத்தூண் நந்தியே.

பொழிப்புரை :

சாக்கிரத்தில் சாக்கிரமாவது உயிர் பொறிகளின் வழியாகப் புறத்தே உலாவிப் புலன்களைப் புதிது புதிதாக உணரும் நிலை.
சாக்கிரத்தில் சொப்பனமாவது, புறத்துச் சென்று புதிய காட்சி -களைக் காணாது முன்பு கண்டவற்றைப் பற்றியே நினைந்திருத்தல்.
சாக்கிரத்தில் சுழுத்தியாவது, முன்பு கண்ட காட்சிகளை நினைதலையும் விடுத்துப் பொதுமையின் நிற்றல்.
சாக்கிரத்தில் துரியமாவது, புறப்பொருள்களால் விளைந்தது துன்பமாயின் அதனைப் போக்கவும், இன்பமாயின் அதனைக் காக்கவும் ஆன வழிகளைப் பலவாக எண்ணுதல்.
சாக்கிரத்தில் துரியாதீதமாவது, அவ்வாறு எண்ணுதல் இன்றி, துன்பம், அல்லது இன்பத்திலே மூழ்கித் தன்னை மறத்தல்.

குறிப்புரை :

இவையே `சகலத்திற் சகலம்` - என்றும், `மகாசகலம்` என்றும் சொல்லப்படுவன என்க. இவை இனிது விளங்குதற் பொருட்டு, அரிய பொருளை மறந்து கைவிட்டவன் நினைவு வந்த பொழுது அதுபற்றி மூர்ச்சித்தல், தெளிந்து புலம்பல், விட்ட இடத்தை நினைத்துப் பார்த்தல் முதலியவற்றை அதீதம் முதலியனவாகக் கூறிக் காட்டுவர்.
`அதீதத்து ஊண் ( அநுபவித்தலை) நந்தி (விடுத்து) உள்நாடல் இலாமையாம் என்க.
இதனால், சகலத்தில் சகல சாக்கிரம் முதலியவற்றின் இயல்புகள் அனுபவத்தில் வைத்து உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டமறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாத காணல்
அனுமாதி தேய்தலில் ஆன துரியமே.

பொழிப்புரை :

(மேல், `நனவிற் கனவில்லை` என வந்த மந்திரத்தில் சித்தாந்தம் கூறிய நாயனார். இது முதல் மூன்று மந்திரங்களால் சில பூர்வ பக்கம் கூறுகின்றார்.)
கனவு நனவுபோல மிகத் தெளிவாக நிகழ்தல் சொப்பனத்தில் சாக்கிரம். (இதுவே, `சொப்பனத்தில் சொப்பனம்` என்பது சித்தாந்தம்.)
கனவு தெளிவாக அன்றி, மந்தமாக நிகழ்தல் சொப்பனத்தில் சொப்பனம். (இது வேறன்று என்பது சித்தாந்தம்.)
கனவில் காட்சியாகக் காணாது, கருத்தாக மட்டும் சிலவற்றை உணர்தல் சொப்பனத்தில் சுழுத்தி. அந்த உணர்வும் இன்றி இருத்தல் சொப்பனத்தில் துரியம் (இதனானே, `உணர்வு கனவில் உண்டாகும் இன்பத்துன்பங்களிலே அது அதுவாக அழுந்துதலே சொப்பனத்தில் துரியாதீதம்` - என்பது பெறப்படும்.)

குறிப்புரை :

`கனவில் நனவில்லை` என்பதே சித்தாந்தம். `கண்ட, காணாத` என்பன அஃறிணை பன்மை வினைப் பெயர்.

பண் :

பாடல் எண் : 18

சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்திக் கனவுதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவறி வாலே அழிகை
சுழுத்தித் துரியமாம் சொல்லறும் பாழே.

பொழிப்புரை :

சுழுத்தியில் ஒருகால், `இது நல்ல உறக்கம்` என அதனை உணர்தல் சுழுத்தியில் சாக்கிரம். சுழுத்தியில் `நாம் நன்கு உறங்குகின்றோம்` எனத் தன்னை உணர்தல் சுழுத்தியில் சொப்பனம். (இவை இரண்டும் நிகழில் சுழுத்தி யில்லையாம் என்பது சித்தாந்தம்.)

குறிப்புரை :

சுழுத்தியை உணர எழுகின்ற அறிவைச் சுழுத்தியில் தோய் கின்ற அறிவு அழிக்க, யாதும் தோன்றாதநிலை சுழுத்தியில் சுழுத்தி, அவ் எழுச்சியும், அழிப்பும், தோன்றாது அடங்கும் நிலை சுழுத்தியில் துரியம். (இதனானே, `அவ்வடக்கத்தால் எழுகின்ற உறக்க இன்பத்தில் ஆழ்ந்துவிடுதல் சுழுத்தியில் துரியாதீத நிலை` என்பது பெறப்படும்).

பண் :

பாடல் எண் : 19

துரிய நனவாம் இதம்உணர் போதம்
துரியக் கனவாம் அகம்உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியத்
துரியம் பரம் - எனத் தோன்றிடுந் தானே.

பொழிப்புரை :

துரியத்தில் பேருறக்கத்தில் விளைகின்ற மிக்க இன்பத்தினைக் காலத்தொடு ஒட்டி நெடிதுணர்தல் துரியத்தில் சாக்கிரம். அவ்வின்பத்தை உணராது தன்நிலையை உணர்தல் துரியத் தில் சொப்பனம். துரியத்தில் திருவருள் உணர்வு தோன்றல் துரியத்தில் சுழுத்தி. துரியத்தில் திருவருட்கு முதலாகிய சிவத்தை உணர்தல் துரியத் தில் துரியம். (இதனால், சிவத்தில் ஒடுங்கல் துரியத்தில் துரியாதீத மாதல் கொள்ளப்படும்.)
(இவற்றுள், `முதற்கண் கூறிய நிலையே துரியத்தில் துரியம்` என்பதும், அவ்வின்பத்தில் தோய்ந்து, அதுவேயாய்க் கிடத்தலே துரியத்தில் துரியாதீதம்` என்பதும், `பிறவெல்லாம் கீழாலவத்தைக் கண் நிகழா` என்பதுமே சித்தாந்தம்.)
ஏகான்ம வாதிகள், `கீழாலவத்தையில் நிகழும் சுழுத்தியில் சீவன் பிரமமாய்விடும்` எனவும், `அதனால் அங்கு நிகழ்வது பிரமானந்தமே` எனவும் கூறுவர். இம்மந்திரத்திற் கூறிய பூர்வ பக்கமும் அவர்களது கொள்கையோடு ஓராற்றான் ஒத்துள்ளன்.
இனி `இங்குக் கூறப்பட்ட துரியம் பரதுரியமே` எனக் கொள்வாரும் உளர்.
துரியாதீத நிலை இங்குக் கூறப்படாமையால், அதில், `சித் தாந்தத்திற்கு வேறாய்ச் சொல்லப்படுவன இல்லை` என்பதாகின்றது.

குறிப்புரை :

வியோமம் - பரவியோமமம். பூர்வ பக்கங்களையும் உணர்ந்து கழித்தாலன்றிச் சித்தாந்தத்தில் தெளிவு பிறவாது ஆகலான், அதுபற்றி இம்மூன்று மந்திரங்களாலும் கீழாலவத்தை பற்றிய பூர்வ பக்கங்கள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

அறிவறி கின்ற அறிவு நனவாம்
அறிவறி யாமை அடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாயின தான துரியமே.

பொழிப்புரை :

ஆன்மாத் தத்துவங்களின் இயல்பை அறியுமுகத் தானே தன்னியல்பை அனுமித்தறியும் நிலை சகலத்தில் சுத்த சாக்கிரம். (இதனை, `ஆன்மரூபம்` என்க.) தத்துவங்களின் இயல்பை உணரும் முகத்தால் அவற்றால் தனக்கு உண்டாகும் பாச அறிவை நீக்கி நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சொப்பனம். (இதனை, `தத்துவ சுத்தி` என்க.) பாச அறிவை நீக்கிய ஆன்மாப் பதியறிவை நாடி அது தோன்றாது நிற்கும் நிலை சகலத்தில் சுத்த சுழுத்தி. (இதனை, `ஆன்ம தரிசனம்` என்க. `சிவரூபம்` இங்கு உடன் நிகழும்.) பதியறிவை நாடி அதனை அறிந்த ஆன்மா, அந்த அறிவில் தனது அறிவு ஒடுங்கத் தான் தோன்றாது அது வேயாய் நிற்கும் நிலை சகலத்தில் சுத்த துரியமாம். (இதுவே, ஆன்ம சுத்தியும், சிவதரிசனமும், சிவயோக மும் என்க.) இதற்கு மேல் ஆன்மாத் தன்னால் பற்றப்பட்ட சிவம் விளைக்கின்ற ஆனந்தத்தில் மூழ்கிப் பிறிதொன்றையும் அறியாது நிற்றலே சகலத்தில் சுத்த துரியாதீதம் என்பது குறிப்பால் கொள்ளக்கிடந்தது. அதுவே `ஆன்ம லாபம்` என்க.

குறிப்புரை :

ஆன்ம சுத்தி, சிவ தரிசனம், சிவயோகம் இவை உடன் நிகழ்ச்சியாய் நிகழ்தல் பற்றி அம்மூன்றையும் ஒன்று கூட்டிச் சுழுத்தி துரியங்களாகப் பகுத்துக் காட்டினார். இவற்றிற்கு முன் இரண்டை, `சொப்பனம்` என ஒன்றாகக் காட்டினார்.
மேல், `ஆறாறில் ஐயைந்து` எனவும், `மாயையில் வந்த புருடன்` எனவும் போந்த மந்திரங்களை இங்கு உடன்வைத்துக் காண்க. மூன்றாம் அடியில் வகரமெய் விரித்தல் `அறிவையறிதலால் வரும் அறியாமை சுழுத்தி` என்க.
இதனால், நின்மலாவத்தையில் சில உட்கூறுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

தான்எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு
ஞானம் தனதுரு வாகி நயந்து பின்
தான்எங்கு மாய்நெறி நின்(று) அது தான்விட்டு
மேல்நந்தச் சூக்கம் அவைவன்ன மேலீடே.

பொழிப்புரை :

வியாபகப் பொருளாகிய ஆன்மா, அந்த வியா பகத்தைத் தடுத்து அணுத்தன்மைப் படுத்திய ஆணவாதி பாசம் ஐந்தி னின்றும் நீங்கித் தனது வியாபகத்தைத் தலைப்பட்ட நிலை உண்மைச் சுத்த சாக்கிரம். (இதுவே சீவன் முத்தியாம்.)
சீவன் முத்தியில் மாயையாகிய உடம்பு இருத்தலால், அது வழியாக ஏனைப் பாசங்களின் வாசனைகளும் உளவாம். அவ் வாசனைகள் பெரும்பான்மையும் நீங்கி, அதிகார மலவாசனை நின்ற விடத்து, அனந்தேசுராதி பதங்களில் விருப்பம் உண்டாகும். அவ் வாற்றால் அப்பதங்களில் இருத்தல் உண்மைச் சுத்த சொப்பனம் (இஃது அதிகார முத்தியாம்.)
பின்பு அதிகாரமலம் நீங்கிப்போக மல வாசனை நின்ற விடத்து நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளையும் உள்ளடக்கிப் பெரு வியாபகமாய் நிற்கின்ற சாந்தி யதீத கலையில் சத்தி தத்துவத்தில் உள்ள புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த சுழுத்தி. (இது போக முத்தியாம்.)
போக மல வாசனை நீங்கி, இலய மல வாசனை நின்றவிடத்து, அச்சாந்தியதீத கலையில் உள்ள சிவதத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்வதில் விருப்பம் உண்டாகும். அவ்வாற்றால் அவற்றை அடைந்திருத்தல் உண்மைச் சுத்த துரியம். (இஃது இலய முத்தியாகும்)
(சாந்தி கலையில் சாதாக்கிய தத்துவ புவனத்தை அடைந் தவர்களும், சாந்தியதீத கலையில் உள்ள புவனங்களை அடைந் தவர்களும், `அணு சதாசிவர்கள்` எனப்படுவர். சுத்த வித்தை, ஈசுரம் ஆகிய தத்துவ புவனங்களை அடைந்தவர்கள் `வித்தையேசுரர்கள்` என்றும், `மந்திர மகேசுரர்கள்` என்றும் இருவகையினராய் இருப்பர்.)
(இலய முத்தி `உண்மைச் சுத்த துரியம்` என்றதனானே, ஆன்மா அனைத்து மல வாசனைகளும் சிறிதும் இன்றி நீங்கப் பரம சிவனோடு இரண்டறக் கலக்கும் சாயுசச்ச நிலை உண்மைச் சுத்த துரியாதீதம் ஆதல் விளங்கும்.)
இவையெல்லாம் பராவத்தைகளாம்.)

குறிப்புரை :

இவ்வாற்றால், சீவன் முத்தி, அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி, பரமுத்தி - என்பன உண்மைச் சுத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன சுழுத்தி துரிய துரியாதீதங்களாதல் போந்தவாறு அறிக.
`விட்டு, நயந்து, நின்று` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்து, `சூக்கம்` என்பதன் பின் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடு முடிந்து, உண்மைச் சுத்த சாக்கிரம் முதலிய மூன்றனையும் முறையே குறிப்பால் உணர்த்தின. `சூக்கம்` என்றது துரியத்தை.
பின்வந்த `விட்டு` என்பது, `விட்டவழி` என்பதன் திரிபு. அது `நந்த` என்பதனோடு முடிந்தது. `ஞானம்` என்பது `வித்தை` என்னும் பெயர்க்குப் பரியாயமாய், `வித்தைகள், வித்தையீசர்``* என்போரைக் குறித்தது. `வன்னம்` என்றது அவத்தையை, `மேலீடு` என்றது, `பராவத்தை` என்றபடி. நந்துதல் - வளர்தல்.
இதனால், உண்மைச் சுத்தமாகிய பராவத்தைகளின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 22

ஐயைந்தும் ஆறும்ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்திஆம்
எய்தும்பின் சூக்குமம் எய்பகுதி மாயை
ஐயமுந் தானவன் அத்துரி யத்தனே.

பொழிப்புரை :

சகலசாக்கிரத்தில் முப்பத்தாறு கருவிகளும் குறைவின்றிச் செயற்படும். அந்தச் சாக்கிரத்திற்குப் பின்னர் அதிலே, `சொப்பனம், சுழுத்தி` என்பவையும் நிகழும். அவைகளில் இளைத்து மடங்கும் கருவிகள் அசுத்த மாயையின் காரியங்களாம். அவை காலம், நியதி முதலியன. அவை செயற்படுதல் சிவதத்துவங்கள் செலுத்துதலினாலேயாகலின், `அவை செயற்படா. எனவே, சிவ தத்துவங்களும்செயற்படாமை பெறப்பட்டது. சிவதத்துவங்கள் ஐந்தில் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி என்பவை முறையே ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே போவதால், சகலத்தில் சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவை நிகழும் என்க.
`உளனோ, இலனோ` - என்னும் ஐயம் நிகழுமாறு உயிர்ப்பின்றிக் கிடப்பது, அதற்குமுன் துரியநிலையில் இருந்த அந்த ஆன்மாவேயாம். (எனவே, விழிப்பு நிலையிலே உயிர்ப்பின்றி மூர்ச்சித்துக் கிடத்தலே சகலத்தில் துரியாதீத மாயிற்று.)

குறிப்புரை :

இவையெல்லாம் மத்தியாலவத்தைகள், எய் பகுதி - வினைத்தொகை. எய்த்தல் - இளைத்தல். பகுதி - தொகுதியுள் சில கூறுகள். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். `முந்த ஆனவன்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. `உந்த ஆனவன்` என்றலும் ஆம். இங்கும் துரியம் `சூக்கம்` எனப்பட்டது.
இம்மந்திரத்திற்குச் சித்தாந்ததத்துள் ஓரிடத்தும் பெறப்படாது அவரவர் கருதியவாறே உரைத்த உரைகள் உள.
இதனால், வித்தியா தத்துவ சிவ தத்துவங்களின் கூடுதல் குறைதல்களாலே மத்தியாலவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

ஈதென் றறிந்திலேன் இத்தனைக் காலமும்
ஈதென் றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென் றறியும் அறிவை யறிந்தபின்
ஈதென் றறியும் இயல்புடை யோனே.

பொழிப்புரை :

(சுருதியும், குரு மொழியும் ``ஒன்று அவன்தானே`` என்றபடி,* `தன்னோடு ஒப்பவைத்து எண்ணுதற்கு மற்றொரு பொருள் இன்றித் தான்ஒன்றேயாய தனிமுதற் பொருள் ஒன்று உண்டு` என வலியுறுத்திக் கூறுகின்ற அப்பொருளை) மத்தியாலவத்தை கீழா லவத்தைகளில் மட்டுமே அகப்பட்டு உழன்ற இவ்வளவு காலமும், `இது` என்று நான் உணரவில்லை (யோகாவத்தையை அடைந்த பொழுது அதனைச் சிறிதே உணர்ந்தேன்.) நின்மலாவத்தையை அடைந்தபின் அதனைத் தெளிவாக உணர்ந்தேன். அதனை அவ் வாறுணர்ந்த பின் பிறிதொன்றையும் அரிய முயல்கின்றிலேன். (`அதனையே அறிந்து நின்றேன்` என்பதாம்.) அவ்வாறு அதனை உணரும் உணர்வை எய்திய பின்புதான் நான் மெய்யுணர் வுடையேனாயினேன்.

குறிப்புரை :

அவத்தைகளே அதிகாரப்பட்டு வருதலால் `இத்தனைக் காலமும்`-என்றது பயன்படாத அவத்தையிற் கிடந்த காலத்தையே குறித்தது. ஆகவே, அறிந்த காலம் பயன்படும் அவத்தை நிகழ்ந்த காலம் ஆயிற்று. `அறிந்தபின்` - என்ற அனுவாதத்தால், அறிந்தமை தானே பெறப்பட்டது. அறியற்பாலதாய பொருளை அறிவதே அறிவாதலின், அங்ஙனம் அறியும் பொழுதே அறிவராந் தன்மையை மக்கள் பெறுதல் பற்றி, ``அறியும் இயல்புடையேன்`` என்றார். `உடையேன்` என்னும் ஆக்கவினைக்குறிப்பில் ஆக்கச் சொல் தொக்கு நின்றது. அடைதலே அறிவிற்குப் பயன் ஆதலின், `அறிந்தபின்` என்றது, `பெற்றபின்` என்றதேயாம்.
ஞாயிற்றின் ஒளியால் இருள்நீங்கிப் பொருள்களைக் காண் கின்ற கண் அவ்வொளியால் ஞாயிற்றையே நோக்கியவழி அதற்கு அந்த ஞாயிறன்றிப் பிறிதொரு பொருள் தோன்றாதவாறு போல, முதல்வனது அருளால் மலம் நீங்கிப் பொருளியல்புகளை உள்ளவாறு உணர்ந்துவரும் உணர்வு, அம்முதல்வனையே உணர்ந்தவழி அவ்வுணர்விற்குப் பிறிதொருபொருள் புலனாகாது` என்பதே, ``ஈதென்றறிந்தபின் ஏதும் அறிந்திலேன்`` என்பதனால் கூறப்பட்டது.
இதனால், அவத்தைகளின் பயன்கள் அனுபவ முறையால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

உயிர்க்குயி ராகிஉருவாய் அருவாய்
அயர்புணர் வாகி அறிவாய்ச் செறிவாய்
நயப்புறு சத்தியும் நாதனுல காதி
இயற்பின்றேல் எல்லாம் இருள் மூடம் ஆமே.

பொழிப்புரை :

உலகிற்கு முதல்வனாகிய இறைவன் அறிவுடைப் பொருளாகிய உயிர்களில் அவற்றுக்கு உயிராகியும், அறிவில்லாத உருவமும், அருவமும் ஆகிய பொருள்களில் அவையேயாகியும் இவ்வாறு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் அவை யனைத்தினும் தான் வேறாவதோர் திறம் உடையனாயும், உயிர்களின் அறிவு ஒன்றை அறியுமிடத்துத் தானும் அவ்வாறு அப்பொருளை அறிகின்ற அறிவாய் உடனாயும் `சத்தியும், சிவமும்` என்னும் இரு திறத்தால் இயக்காவிடின் உயிர்கள் முழு மூடங்களாயும், உயிரல் பொருள்கள் சூனியமாயும் ஒழிவனவாம்.

குறிப்புரை :

எனவே, `அவன் அவ்வாறு இயக்குதலானே மேற் கூறிய அவத்தைகள் பலவும் நிகழ்கின்றன.` என்றபடி. இதனானே, இறைவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு அவ்வந் நிலைக்கேற்ற அறிவையும், அனுபவத்தையும் தந்துதவுதல் விளங்கும்.
`உலகிற்கு ஆதி` என உருபு விரித்து அதனை முதற்கண் கூட்டி, `நாதனும் ஆய்` என உம்மையும், ஆக்கச் சொல்லும் வருவித்து உரைக்க. இயற்பு - `நடத்துதல்` எனப் பிறவினை இது, `நடத்தல்` எனத் தன்வினையாயின், `இயல்பு` என நிற்கும். `இருள்` என்றது, `சூனியம்` என்றபடி. சூனியம், இங்கு, இருந்தும் இல்லாமை. `இருள், மூடம்` - என்பவற்றை எதிர் நிரல் நிறையாகக் கொள்க.
இதனால், `ஆன்மாவும், கருவிகளும் கூடிய துணையானே அவத்தைகள் நிகழமாட்டா; இறைவனது திருவருள் உடனாய் நின்று நிகழ்விக்கவே நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சத்தி யிராகத்தில் தான்நல் உயிராகி
ஒத்துறு பாச மலம்ஐந்தோ(டு) ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம்அறு மாறே.

பொழிப்புரை :

சிவன், `இச்சை, ஞானம், கிரியை` என்னும் தனது மூன்று சத்திகளில், `உயிர்களை உய்விக்க வேண்டும்` என விரும்பும் இச்சா சத்தியினால் உயிர்களில் எல்லாம் தான் நல் உயிராய்க் கலந்து, அநாதியே உயிர்களில் தன்னைப் போலவே பொருந்தியுள்ள பாசம், `அஃது ஒன்றே` யாகாது `ஐந்து` என்னும் படி முதல் மலத்தொடு நான்கு மலங்களைக் கூட்டியதனானே அம்முதல் மலம் முற்றிலும் அற் றொழிதற் பொருட்டுத் தத்துவ வகை முப்பத்தாறினையும் உண்டாக்கி, அம்முப்பத்தாறின் கூறுகளாக மற்றும் அறுபத்தாறு கருவிகளையும் தோற்றுவிக்து வைத்தான்.

குறிப்புரை :

`இவ்வாற்றால் உயிர்கள் முதல் மலம் முற்றிலும் நீங்கச் சிவனையடைந்து பேரின்பத்தை யடையும்` என்பதாம். `ஈசன் இராக சத்தியின் தான் நல் உயிராகி, ஐந்தோடு, மலம் அறுமாறு பேதம், சமைத்து, கருவியும் வைத்தனன்` என இயைத்துக் கொள்க. இராகம் - இச்சை. `பாசத்தோடு` என உருபு விரிக்க.
நன்மை, இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையால் அறிவேயாயும், இன்பமேயாயும் இருத்தல். `மலம் ஐந்து ஆக்கிய -தோடு` என்க. இவ் ஓடு, எண் ஓடு முதல் மலம் ஆணவம்; பின்னர்க் கூட்டிய நான்கு மலங்களாவன மாயை, கன்மம், மாயேயம், திரோ தாயி, மாயேயம், தத்துவ தாத்துவிகங்கள். எனவே, `தத்துவ பேதம், கருவி` என்றது மாயேயங்களை விளக்கியதாம். `கருவியும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
அவத்தை பேதங்கள் பெத்தமும், முத்தியுமாய் நிற்றலால், அவையிரண்டும் சிவன் செயலே யாதலை விளக்கியவாறு.
இம்மந்திரம் சைவ சித்தாந்தச் சுருக்கமாய் நிற்குமாற்றையும் உணர்ந்து கொள்க.
முன்னை மந்திரத்தில் தொகுத்துக கூறிய சிவனது செயல் இதனால், வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன்னுண்மை
சாக்கிரா தீதத் துரியத்தில் தான்உறல்
சாக்கிரா தீதத்தில் ஆணவந் தான்விடச்
சாக்கிரா தீதம் பரன்உண்மை தங்குமே.

பொழிப்புரை :

சகல சாக்கிரத்தில் சாக்கிரம் முதலியன நிகழுங் கால் இறுதியில் நிகழும் துரியாதீதத்தில் ஆன்மாத் தன்னையும், பிறிதை -யும் உணர்தல் இன்றி, ஆணவத்தால் விளையும் பேரிடரிலே மூழ்கி யிருக்கும். இது `தன்னுண்மை` எனப்படும். (இந்நிலை அநாதி கேவலத்தொடு ஒத்ததாகும்.)
நின்மல சாக்கிரத்தில் நிகழும் துரியாதீதத்தில் ஆணவம் இன்மையான், அதில் ஆன்மாச் சிவனால் தரப்படும் பேரின்பத்தில் மூழ்கித் தன்னையும் அறியா நிலையில் இருக்கும். (இஃது ஆன்மா இறுதியில் அடையும் சாயுச்ச நிலையோடு ஒத்ததாகும். இதுவே முன்பு ஆணவத்தோடு அத்துவிதமாய் நின்றதுபோலப் பின்பு மெய்ஞ்ஞானத் தாணுவினோடு அத்துவிதமாய் நிற்கும் நிலை.)
இங்குக் கூறிய இருவகைச் சாக்கிரத்திலும் துரியாதீதத்திற்கு முன்னாதல், பின்னாதல் நிகழும் துரியத்தில் ஆன்மாத் தனக்கு உளவாகும் இன்பத் துன்பங்களை அறிவதாய் இருக்கும்.

குறிப்புரை :

`முதல் அடியில் கூறிய சாக்கிரம் சகல சாக்கிரம்` என்பதும் `இறுதியிரண்டடிகளில் கூறிய சாக்கிரம் நின்மலசாக்கிரம்` என்பதும், இரண்டாம் அடியில் கூறியசாக்கிரம் இரண்டனையும் குறித்த பொது சாக்கிரம் என்பதும் அவ்வவற்றில் காட்டப்பட்ட அனுபவம் பற்றி உணர்ந்து கொள்ளப்படும்.
இரண்டாம் அடியை இறுதியிற் கூட்டி, `சாக்கிராதீதத்தின் பக்கத்ததாகிய துரியத்தில்` எனவும், `தான் அனுபவத்தை உறல்` எனவும் உரைத்துக் கொள்க.
முதற்கண் உள்ள `ஆணவம்` தன்காரியம் உணர்த்தி நின்றது. ஈற்றில், `பரன் உண்மையில் தங்கும்` என உருபு விரித்துரைக்க.
இதனால், `சகல சாக்கிரம், நின்மல சாக்கிரம்` என்பவற்றின் இயல்புகள் அவற்றை ஒப்பிட்டுக் காட்டி உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 27

மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப் பற்றால் மதிஒளி யாமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`மலம்` என அடைகொடாது கூறுமிடத்துப் பெரும் பான்மையும் `ஆணவம்` என்றே பொருள்படும். இங்கும் அவ்வாறே கொள்க. கலப்பு செம்பிற் களிம்பின் கலப்புப் போல அநாதியே உள்ளது. அதனால் அந்த ஆணவத்தின் விளைவாக இங்குக் கூறியன யாவும் அநாதியே உள்ளனவாம். தாணு - சிவன். மதி - ஞானம். இஃது ஆன்மாவின் ஞானம். `மலக் கலப்பால் இருளாய் இருந்த ஞானம், சிவக் கலப்பால் ஒளியாம்` என்றபடி. `மலம் நீங்குமாறு இது` என்பது, ஒன்று இடையிட்டு மேல் உள்ள மந்திரத்தில் கூறப்பட்டது.
சத்தி, இங்கு அருட்சத்தி. `ஞானம் அழிந்தது` எனக் கூறாமல், `மறைந்தது` என்றே கூறினமையால், மலக் கலப்பு அற்றால் மதி ஒளியாதற்குத் தடையின்மையறிக.
இதனால், மலாவத்தைகட்குக் காரணம் ஆணவமும், நின்மலாவத்தைகட்குக் காரணம் அருட்சத்தியும ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
அகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன் றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால்இரண் டாமே.

பொழிப்புரை :

கீழாலவத்தைச் சுழுத்தியில் காட்சி எதனையும் காணுதல் இன்றித் தெளிவில்லாதிருக்கின்ற ஆன்ம அறிவில், சிங்கங்கள் போன்ற கொடிய குணங்கள் மூன்று விளங்கி நிற்கும். (அவை, `காமம், வெகுளி, மயக்கம்` - என்பன. `இவற்றின் விரியே பஞ்சக்கிலேசம்` என்பர். பஞ்சக்கிலேசமாவன, `அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம்` - என்பன. இவை, கொடுமை மிகுதி பற்றிச் சிங்கங்களோடு உவமிக்கப்பட்டன.)
அச் சுழுத்தியினின்றும் மேல் ஏறிச் சொப்பனத்தை அடைந்த ஆன்ம அறிவில் நான்கு நரிக்குட்டிகள் போன்ற சூழ்ச்சி வல்ல நான்கு கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்பன, இவை சூழ்ச்சிக் கருவிகள் ஆதலின், நரிக் குட்டிகளோடு உவமிக்கப்பட்டன. `நரிகள் சூழ்ச்சி வல்ல பிராணிகள்` என்பர்.
அச்சொப்பனத்தினின்றும் மேல் ஏறிச்சாக்கிரத்தை அடைந்த ஆன்ம அறிவினுள் பின்பு மதங்கொள்ளும் ஐந்து ஆனைக்கன்றுகள் போன்ற ஐந்து கருவிகள் விளங்கி நிற்கும். (அவை, செவி முதலிய ஞானேந்திரியங்கள். மத்தியாலவத்தைச் சாக்கிரத்தில் இவை வளர்ந்து மதம் மிக்க யானைகள் போல் ஆய்விடும்.)
(கீழாலவத்தையை விட்டு, மத்தியாலவத்தையை அடைந்த ஆன்ம அறிவு, மேற்கூறிய யானைக் கன்றுகள் வளர்ந்து, மதம் மிக்கு, ஒன்றோடொன்று மாறுபட்டு நிற்றற்கு இடமாய், இரு நிலைகளை யுடையதாம்; ஒன்று, அவ் யானைகளால் ஈர்ப்புண்டல். மற்றொன்று, அவற்றை அடக்கி ஒடுக்குதல்.)

குறிப்புரை :

`சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்* கூறும் முறைமையால், ஆன்ம அறிவே, இங்கு, `சிந்தை என்றும், `நெஞ்சு` என்றும் கூறப்பட்டது. அங்ஙனம் கொள்ளாது நேர்ப் பொருள் கொள்ளின் பொருந்தாமை அறிக. திகைத்தல் மூடம் ஆகாது, அறிவு அலமரும் நிலையாதலின், அந்நிலை துரியாதீதமும், துரியமும் ஆகாது, சுழுத்தியே யாதல் அறிக. பிறவும் இங்குக் கூறியன ஆதலை ஓர்ந்துணர்க. ``பகைக்கின்ற நெஞ்சு`` என்றது இடப்பெயரோடு முடிந்த பெயரெச்சத் தொடர். ஏனைய மூன்றும் வினைமுதற் பெயரோடு முடிந்த அத்தொடர்கள். நகைத்தல் - ஒளிவிடுதல். அகைத்தல் - பிளவுபடுதல்.
இதனால், கீழாலவத்தை சிலவற்றில் நிகழும் அனுபவங்கள் கூறப்பட்டன. மத்திய சாக்கிரத்தைக் கூறியது, ஐயம் அறுத்தற் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 29

கதறிப் பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி யெழுகின்ற சிந்தையை நீரும்
விதறு படாமூனம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே.

பொழிப்புரை :

துன்பத்தால் அலறிக் கொண்டு, ஒரு வழிபடாது பதினெட்டு வழிகளில் போவதற்குப் பலமுகமாய் எழுகின்ற மனத்தை, நீவிர், நும் வாழ்நாள் முடிவதற்கு முன்னே மெய்ந்நெறியில் நிறுத்தினால், முன் மந்திரத்தில் கூறிய அந்த ஆனைகள் ஐந்தும் நடுங்கும்படி ஒப்பற்ற ஒரு பெரிய யானை உங்கள் அருகில் வந்து உங்களை எடுத்துச் செல்லும்.

குறிப்புரை :

அந்த யானையாவது சிவன். `ஆனையும்` என்னும் உம்மை சிறப்பு யானை, தன் பாகனைத் தானே எடுத்துச் சுமத்தல் போல, அடியார்களைத் தானே வந்து ஆட்கொண்டு அவர்களைத் தாங்கி நிற்றல் பற்றிச் சிவனை, `ஆனை` என்பர் அருளாளர். திருக்கடவூர்த் திருக்குறுந்தொகை ஒரு திருப்பதிகம் முழுவதிலும் சிவபிரானை, `ஆனை, ஆனை` எனப் பலகாலும் கூறினமை காண்க. `எடுத்துச் சுமப்பான்`l என்றார் உமாபதிதேவர். இனி `ஆனை` என்பதை `ஆன் + ஐ` என இருமொழித் தொடராக்கி, `பசுக்கட்குத் தலைவன்` எனப் பொருள் உரைப்பாரும் உளர்.
பதினெட்டு வழிகளாவன. புரியட்டக சரீரத்தில் உள்ள எட்டுக் கருவிகளும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் ஆம். தூல பூதங்கள் தன்மாத்திரைகளில் அடங்கின. அடங்கவே அவற்றின் கூறாகிய தாத்துவிகம் அறுபதும் அவற்றோடு உடன் அடங்கின. எனவே, `சூக்கும தூல சரீரங்களின் வழியே ஆன்மாப் புறத்துச் சென்று அலமரும்` எனக் கூறியவாறாம். கண் - புழை. `கண்களிலும்` என ஏழாவது விரிக்க. அவ்வாறு அலமராது நிற்றற்கு உபாயம் சரியையாதி தவங்களே. அவைகளே இங்கு, `மெய்வழி` எனப்பட்டன. `நின்றால்` என்பது, பிவ்விகுதி தொகுக்கப்பட்ட பிறவினை. சிந்தையை மெய்வழி நிற்பித்தலே நின்மலாவத்தையாம்.
இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் நில்லாது` நின்மலாவத்தையில் செல்லல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

நனவகத் தேஒரு நாலைந்தும் வீடா
கனவகத் தேஉட் கரணங்க ளோடும்
உனவகத் தேநின் றுதறிஉட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்திநின் றானே.

பொழிப்புரை :

(கனவிலும் பிராணாதி வாயுக்கள் பத்தும் செயற் படுதலால், அந்தக் கரணங்களும் செயற்படவே செய்யும் - அதனால்,) நனவிற்போலக் கனவிலும், மேல் `ஆனைகள் ஐந்து` எனப்பட்ட ஞானேந்திரியப் புலனகள் ஐந்தோடு, கன்மேந்திரியப் புலன்கள் ஐந்தும், இன்னும் பிராணாதி வாயுக்கள் பத்தும் கூடி ஆன்மா அமைதி யுற்றிராதபடி தொல்லையுறவே செய்யும். இந்நிலையில் நிற்கும் ஆன்மா, ஒருமுகப்பட்ட சிந்தனையை விரும்புதலால், புலன்களை யெல்லாம் உதறித்தள்ளி, இருதயத்துட்புகுந்து சுழுத்தியில் நிற்கும்,

குறிப்புரை :

`கனவகத்தே, நனவகத்தே (நிற்கும்) உட்கரணங் களோடு, நால் ஐந்தும் வீடா` எனவும், `அகத்தே நின்று உள்ள, உதறி, நினைவகத்தே உள்புக்கு, இன்று இச் சுழுத்தி நின்றான்` எனவும் இயைத்துப் பொருள் கொள்க. இப்பொருள் காணமாட்டாதார் சித்தாந்தத்தில் இல்லாத பொருளை இயைபறவும் உரைப்பர்.
நினைவகம் - இருதயம். இது சுழுத்தித்தானம். இன்று - இப் பொழுது. அதாவது இருதயத்துட்புக்க பொழுது. `இச் சுழுத்தி என்றது, `நனவும், கனவும் போலப் புலன்களில் தொல்லையில்லாது, அமைதியாய் இருக்கும் சுழுத்தி` என்றபடி.
இதனால், `பெத்த காலத்தில் புலன்களின் நீங்கி நிற்கும் நிலை சுழுத்தி நிலை` என்பதும் கூறப்பட்டது. படவே, துரிய துரியா தீதங்களில் அவை யில்லாமை கூறவேண்டாவாயிற்று.

பண் :

பாடல் எண் : 31

நின்றவன் ஆசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி உலகின் நியமா திகள்உற்றுச்
சென்று துரியாதீ தத்துச் சிலகாலம்
நின்று பரனாகி நின்மலன் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சுழுத்தியில் அமைதியை உற்றுணர்ந் தவன், அஃது அறியாமையாகிய இருளால் விளையும் அமைதியே யாதலைத் தெரிந்து, அவ்விருள் நீங்கி, ஒளியில் விளையும் அமைதியை அடையவிரும்பி, ஆசானிடத்துச் சென்று அவன் உணர்த் தியவாறே, உலகியலிற்றானே இயம நியமாதிகளை மேற்கொள்ளும் யோகத்தில் பொருந்தி நின்று, அவ்யோகத்தில் துரியமாகிய தியானத் -தில் முதிர்ந்தவனாய், அதற்கு மேற்சென்று, அதன்கண் துரியாதீத மாகிய சமாதியில் சில காலம் நின்று, அதன் பின் பராவத்தையாகிய ஞானாவத்தைகளை அடைந்து, அதனால் பாசங்கள் முற்றிலும் நீங்கப் பெற்று முத்தனாவான்.

குறிப்புரை :

`நின்று, ஆகி` என்னும் செய்தென் எச்சங்கள் எண்ணுப் பொருளில் வந்தன. `ஆசான்` என்பதன் பின், `கீழ்` என்னும் பொருளில் வரும் கண்ணுருபு விரிக்க. `உலகின் நியமாதிகளுற்று` என்பதனை மேலே `நிகழ்` என்பதன்பின் கூட்டுக. `ஒன்றி` என்றது, `யோகத்தில் பயின்று` என்றபடி. நின்மலம், இங்குப் பரமுத்தி,
இதனால், `கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் அன்றாடம் இயல்பாகவே பயின்று வருவோர், ஆசான் அருள்வழியில் முயன்று, முன்னர் மேலாலவத்தையில் பயின்றால், பின்னர் நின்மலாவத் -தையால் வீடு பெறலாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

ஆனஅவ் வீச னதீதத்தில் வித்தையாம்
தான்உல குண்டு சதாசிவ மாய்சத்தி
மேனிகள் ஐந்தும்போய் விட்டுச் சிவமாகி
மோன மடைந்தொலி மூலத்த னாமே.

பொழிப்புரை :

பராவத்தை உண்மைச் சுத்தாவத்தையே யாயினும் துரியாதீதம், துரியம் ஒழிந்த மற்றை மூன்றாகிய சிவன் முத்தி, அதிகார முத்தி, போகமுத்திகளில் ஆன்மாஉலகபோகத்தை நுகரும். ஏனெனில், சுழுத்தி சொப்பனங்களில், தோற்ற முறையில் சாதாக்கியம் முதல் ஐந்து தத்துவ உடம்புகள் இருத்தலாலும் சாக்கிரத்தில் மாயா உடம்பு இருத்தலாலும் அவ்வாறு அதுகாறும் போகத்தை நுகர்ந்த ஆன்மா, இலயமுத்தியல் சத்திதத்துவத்தைக் கடந்து, சிவதத்துவத்தில் தடத்த சிவமாய்ப் புறப் பொருளுணர்ச்சி யின்றிச் சிவ உணர்வே மிக்கிருக்கும். அந்நிலையில் சூக்கும வாக்கை அது பற்றி நிற்கும். ஆகவே, பர துரியாதீதத்தை அடைந்த பொழுதுதான் ஆன்மாச் சிவஞானம் ஒன்றையன்றிப் பிறிதொரு பற்றும் இல்லாமல், சிவத்தை முழுமையாக அனுபவிக்கும்.

குறிப்புரை :

ஈசன் அதீதம் - பராவத்தையில் நிகழும் அதீதம்` இம் முதலடியை இறுதியிற் கூட்டியுரைக்க. ஆன்மா `தான் உலகு உண்டு` என்பதை, `போய்` என்பதன் பின்னர்க் கூட்டுக. தான் `சாதாசிவமாதி` என்பதில் `ஆதி` என்பது தொகுக்கப்ட்டது. மாய் சத்தி - தோற்றமும் ஒடுக்கமும் உடைத்தாய் நிலையில்லாத சத்தி. இங்குச் சுத்த மாயா சத்தி. `மாசத்தி` என்பதே பாடம் எனினும் `மாமாயையின் சத்தி` என்றே கொள்ளப்படும். மேனிகள் ஐந்து அணு சதாசிவர், மந்திர மகேசுரர், வித்தியேசுர், சுத்த வித்தையில் நிற்கும் மால், அயன். `ஐந்திலும் போய்` என உருபு விரிக்க. போதல் - புகுல். `அடைந்து` என்பதன் பின் `அவ்விடத்து` என்பது வருவிக்க. ஒலிமூலம் - மூலஒலி; நாதம். அதுவே சூக்குமைவாக்காம்.
இதனால், பராவத்தைகளில் அதீதம், அஃதொழிந்த பிற இவற்றின் உயர்வு, தாழ்வுகள் தெரித்துக் காட்டப்பட்டன.

பண் :

பாடல் எண் : 33

மண்டல மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகண் டுள்ளே கருதிக் கழிகின்ற
விண்டலர் தாமரை மேலொன்றுங் கீழாகத்
தண்டமுந் தாமா யகத்தினுள் ளாமே.

பொழிப்புரை :

அண்டத்தில் `தீ, ஞாயிறு, திங்கள்` என்னும் மூன்று மண்டலங்களில் விளங்கும் முதல்வனைப் பிண்டத்திலே அம்மூன்று மண்டலங்களில் வைத்துக் கண்டு மேல் எழுதற்கு ஏதுவாய், உடம்பிற்குள்ளே மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக நாளத்தையும் உடையவாய், நன்கு மலர்ந்த தாமரை மலர்கள் உள்ளன.

குறிப்புரை :

`அவைகளில் அவனை அவ்வாறு கண்டு, மேற் போவதே யோகாவத்தை` என்பதாம். மாயம் - நிலையாமை; அஃது அதனையுடைய மாயா காரியத்தைக் குறித்தது. `நாடன்` என்றதனால், அக்காரியம் அண்டமாதல் விளங்கிற்று. `கழிகின்ற` என்னும் பெய ரெச்சத்தை, ஏதுப் பொருட்டாகிய `தாமரை` என்பதனோடு இயைக்க. `ஒன்றும்` என்பது, `கீழ்` என்பதனோடும் சென்று இயையும். `மேல்` என்றது உச்சித் தலையை. `கீழ்` என்றது மூலாதாரத்தை. `மேல், கீழ்` என்றதனானே, இடையில் உள்ளனவும் பெறப்படும். யோக முறையில் மூலாதார முதல் மூன்று ஆதாரங்கள் அக்கினி மண்டல மாகவும், மற்றை மூன்று ஆதாரங்கள் ஞாயிற்று மண்டலமாகவும், ஏழாந்தானம் திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். `மூன்றினுள் உள்ள நாடன்` என்க.
இதனால், `யோகாவத்தைகள் அண்டத்தில் காணும் சிவக் காட்சியைப் பிண்டத்தில் காண்பனவாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

போதறி யாது புலம்பின புள்ளினம்
மாதறி யாவகை நின்று மயங்கின
வேதறி யாவணம் நின்றனன் எம்மிறை
சூதறி வார்உச்சி சூடிநின் றானே.

பொழிப்புரை :

விடியல் வாராத பொழுதும் வந்ததாகக் கருதி நள்ளிரவிலே ஆரவாரித்த சில பறவைகளைப் போன்ற உயிர்கள், திருவருள் தம்மை நோக்குதல் இல்லாத நிலையிலே நின்று, பொய்யை `மெய்` எனக் கொண்டு மயங்குகின்றன. ஆதனால், எங்கள் இறைவனாகிய சிவனும் செம்பைப் பொன்னாக்கும் வித்தையை அறிந்தும் அறியாதவன் போல இருக்கின்றான். இச் சூழ்ச்சியை அறிந்த பெரியோர்கள், நீராதார யோகத்தாலும், சுத்த துரியத்தாலும் அவனது அருளில் தோய்ந்திருப்பர்.

குறிப்புரை :

நள்ளிரவில் ஆரவாரிக்கின்ற பறவை போல்வதாவது, சிவனையுணரும் பக்குவம் வாராத முன்பே வரப் பெற்ற வரைப்போல ஞான அனுபவங்களைக் கூறுதல். மாது, அருட்சத்தி, அது நோக்கா மையாவது ஆன்மாவிற் பதிய எண்ணாமை. எண்ணாத வகையில் நிற்றலாவது, பாசப் பற்றிலே கிடத்தல். வேது - வேதித்தல்; இரசவாதம் செய்தல், இங்குச் சீவனைச் சிவமாக்குதலாம். `வண்ணம் - வண்ணத் -தனாய்` என்க.
இதனால், `மலபரிபாகமும், சத்தி நிபாதமும் இல்லாதார் நூலறிவு பேசினாலும், யோகாவத்தையிற்றானும் செல்லாது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளிலே கிடத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
வருத்தறிந்தேன் மனம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :

(சுருதி உத்தி அனுபவங்களால்) அறிய வேண்டு -வதை அறிந்து, அதனால், `உலக முதல்வன் யாவன்` என ஆராய்ந்து, `அம்முதல்வன் சிவபிரானே` என நான் நன்குணர்ந்தேன். பின்பு அவனை என்பால் வருவிக்கும் வழியறிந்து வருவித்தேன். அவன் அவ்வாறே வந்து என் மனத்தில் நிலையாக நின்றுவிட்டான்.

குறிப்புரை :

கருத்து - அறியத் தக்க பொருள். `பாரத வருடம் ஒன்பது கண்டமாய் உள்ளது` என்பது ஆகமங்களில் சொல்லப் படுவது. `பிண்டத்தில் நவகண்டமாவன, ஆறு ஆதாரங்களும் மூன்று மண்டலங் -களுமாம்` எனின் அவ்விருவகையினவும் ஒன்றை விட்டு மற்றொன்று இல்லாமையறிக. `கண்டத்தையும்` என இரண்டாவது விரிக்க.
பொருத்து, பொருத்துதல்; மூவினையுட் படுத்தல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். இஃது ஆகுபெயராய்த் தனக்குக் காரணமாகிய முதனிலைமேல் நின்று, வினைமுதலை உணர்த்திற்று. எனவே, `உலகிற்கு முதல்வன் ஒருவன் உண்டு` என்பதை அறிந்ததாயிற்று. நிலத்தை `நிலமகள்` எனப் பெண்பாலாகக் கூறும் வழக்குப் பற்றிப் புவனத்தை, `புவனா` என்றார். திருத்து - திருத்தம்; `திருந்து` என்பதன் திரிபு. `திருத்தமாக` (செம்மையாக) என ஆக்கம் வருவிக்க. `மிகு தேவர் பிரான்` என்றது, `சிவபிரான் என்றபடி, `மிகு தேவர் பிரானைத் திருத்து அறிந்தே` என மாற்றியுரைக்க. `வா` என்னும் பகுதி `வரு` எனத் திரிந்து, `து` என்னும் பிறவினை விகுதியோடு புணர்ந்து, `வருத்து` என வருதல் உலக வழக்கில் உள்ளது. இதுவும் ஆகுபெயராய், இதற்குரிய உபாயத்தின் மேல் நின்றது. அது சரியை யாதி தவங்களுள் மேலானதாகிய யோகத்தையே உணர்த்திற்று. சிவன் மனத்தில் மன்னி நிற்றல் நின்மலாவத்தையிலாகும்.
இதனால், மல பரிபாகம் சத்தி நிபாதம் வரப் பெற்றோர் மேலாலவத்தை வழியாக நின்மலாவத்தை அடைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

ஆன விளக்கொளி தூண்டு மவனென்னத்
தான விளக்கொளி யாம்மூல சாதனத்(து)
ஆன விதிமூலத் தான்அத்தில் அவ்விளக்(கு)
ஏனை மதிமண் டலங்கொண் டெரியுமே.

பொழிப்புரை :

ஓரிடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு மற்றை யிடங்களிலும் வியாபித்து நிற்றல் போல, மூலாதாரமாகிய இடத்தில் உள்ள அந்த விளக்கினை அதனை ஏற்ற வேண்டிய முறையை யறிந்து அவ்விடத்திற்றானே மேலே நிலாமண்டலங்காறும் உள்ள இடங் -களில் வியாபிக்கும்படி, இடையே அணைந்துவிடாதபடி எரியுங்கள்.

குறிப்புரை :

`எரித்தால், சிவபிரான் உங்கள் மனத்திலே வந்து மன்னியிருக்கப் பெறுவீர்கள்` என்பது குறிப்பெச்சம். ஆன விளக்கு - உலகில் ஓரிடத்தில் உள்ள விளக்கு. `விளக்கினைத் தூண்டுபவன் போல மூலசாதனத்து அவ்விளக்கினை எரியும்` என முடிக்க தன் வினை, பிறவினை இரண்டிற்கும் பொதுவான `எரி` என்னும்பகுதி, இங்குப் பிறவினையாய் நின்றது. `எரியும்` உம் ஈற்று ஏவல் வினை முற்று. தானம் என்றது மூலாதாரம் ஒழிந்த மற்றை ஆதாரங்களை, சாதனம் - தொழில் முதல் நிலைகள் இங்கு அஃது இடத்தைக் குறித்தது. `மூல சாதனத்து அவ்விளக்கு` என இயைக்க. `அவ்விளக்கு` எனப் பண்டறி சுட்டாகச் சுட்டியது, `அவ்விடத்து எழாது மடிந்து கிடக்கின்ற குண்டலிசத்தி` என்பது விளங்குதற் பொருட்டு. ஆன விதி - பொருந்திய விதிமுறை. அவை யோகநூல்களுட் கூறப்படுவன. மூலத்தான் - வழியால். `அதனில்` என்பது `அத்தில்` என மருவி வந்தது. `ஏனை` என்பது இடையில் உள்ள ஆதாரங்களைத் தழுவிற்று. கொண்டு - அகப்படுத்து.
இதனால். `முன் மந்திரத்தில் வருத்துதற்கு அறிந்த உபாயம் இது` என்பது சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

உண்ணாடும் ஐவர் குமண்டை ஒதுங்கிய
விண்ஆட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த் (து)ஐவர் கூடிய சந்தியின்
கண்நாடி காணும் கருத்ததென் றானே.

பொழிப்புரை :

(கண் முதலியனபோல வெளியிலே கண்டறியப் படாமல்) `உள்ளே கருதியறியப்படுகின்ற ஐம்புல ஆசைகளின் களியாட்டம் ஒழிதற் பொருட்டு யோகாவத்தையை நிகழ்த்துதற்குரிய இடங்கள் யாவை என ஆராயின், இருதயத்தினின்றும கீழே நோக்காமல், மேலே நோக்கினால், அந்த ஐம்புல ஆசைகளும் ஒருங்கு கூடி வந்து ஒடுங்கும் இடம் ஒன்று உண்டு. அந்த இடத்திலே நின்று, மேலும் ஆராய்க. அதுவே சிவனைப் புலப்படக் காணும் வழி` என்று எம் ஆசிரியர் நந்திபெருமான் எங்கட்கு அறிவுறுத்தார்.

குறிப்புரை :

`நாடும்` என்றது, `நாடி உணரப்படும்` என்றபடி. குமண்டை - களியாட்டம். ஒதுங்கிய - ஒதுங்குதற்பொருட்டு. விண் - மேலிடம். மேலிடத்தில் ஆடுதலாவது, மேலாலவத்தையில். அஃதாவது யோகா வத்தையில் நிற்றல். `வெளி` என்றது, `இடம்` என்றபடி, ஐவர் கூடும் சந்தி, ஆஞ்ஞை, (புருவ நடு) `நாடி` என்பது இகர ஈற்று ஏவல் வினைமுற்று. இது `நாடுதி` எனத் தகரம் ஊர்ந்து வருதல் பெரும்பான்மை. சிறுபான்மை தகரம் ஊராதும் வரும். காணுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய உபாயத்தைப் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன்னறி வாகான்
அறியாத வற்றை அறிவானைக் கூட்டி
அறியா தறிவானை யாரறி வாரே.

பொழிப்புரை :

அறிவில்லாத சடங்களாகிய பாசங்களை அப்பாச அறிவினால் அறிகின்ற ஆன்மா அந்தப் பாச அறிவைக் கொண்டு அறியவாராத பதி, அப்பாசங்களின் நீங்கியவழியும் பசு அறிவாலும் அறியவாரான். ஆகவே, அறிவில்லாத சடங்களாகிய பாசங்களையும், அறிவுடைய சித்தாகிய ஆன்மாவையும் ஒன்று கூட்டி அவற்றின் செயற்பாடுகளை அறியாதறிபவனாகிய பதியை அறியவல்லார் யாவர்? (ஒருவரும் இல்லை.)

குறிப்புரை :

`பாச ஞான பசு ஞானங்களின் நீங்கிப் பதி ஞானங் கண்ணாகக் காண்பவர்களே பதியை அறிவார்கள்; அத்தகையோர் உலகில் மிக அரியர்` என்பது கருத்து. `தன்` என்றது `பசுவை, `தன்னறி விற்கும் ஆகான்` என உருபும் உம்மையும், அறியாதவற்றையும் அறிவானையும் கூட்டி என உம்மையும் விரிக்க. `அறியாதறிதலாவது, சுட்டியறியாது, பொதுவாக அறிதல். `கீழாலவத்தை மத்தியா லவத்தை களில் பாச அறிவும், மேலாலவத்தையில் பசு அறிவும் செயற்படுதலால் அவைகளில் பதி வெளிநில்லாது, நின்மலாவத்தையில் மட்டுமே வெளிநிற்பான்` என்பதையே இம் மந்திரத்தாற் கூறினார்.
இதனால், அவத்தைகளில் பதி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம். அந்நன வாதி
பெரியன கால பரம்பிற் றுரியம்
அரிய அதீதம் அதீதத்த தாமே.

பொழிப்புரை :

`பரவெளி` எனப்படுகின்ற திருவருள் வழி நிகழ் கின்ற நின்மலாவத்தைகளில், `பேருறக்கம்` என்னும் நிலையை அடைதலையே சிறந்ததாகக் கூறினோம். அதற்குக் கீழ் உள்ள நனவு, கனவு, உறக்கம், என்பவைகளும் எல்லார்க்கும் எளியன அல்ல. எனினும் நின்மலாவத்தையும் காலத்தொடு பட்டு நிகழ்வனவாகலின் அவை கழித்தற்குரியனவே. காலத்தைக் கடந்து எல்லையற்று நிகழ்வன பராவத்தைகள். அவைகளில் ஈற்றில் உள்ளது துரியம். அரிதாகிய, துரியத்தையும் கடந்த நிலை துரியா தீத நிலையாகும்.

குறிப்புரை :

`வியோமத்தின்கண்` என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. எனவே, அது முதலில் வைத்து உரைக்கப் படும். `அந்நனவாதியும் அரியன; ஆயினும் தூடணம்` என்க. பரம் - மேல். அஃது ஆகுபெயராய், மேலனவாகிய நிலைகளைக் குறித்தன. `பின்` என்றது, `பின்னது` என்னும் பொருட்டு. `அதீதம்` இரண்டில் முன்னது, `கடந்தது` என்னும் பொருளது.
இதனால், `பதி பசுவை உண்மையில் அடையும் நிலை பராவத்தையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

மாயையிற் சேதனம் மன்னும் பகுதியான்
மாயையின் மற்றது நீவுதல் மாயையாம்
கேவல மாகும் சகலமாய் யோனியுள்
தோயும் அநித்தம் துரியத்துள் சீவனே.

பொழிப்புரை :

அசுத்த மாயையால், ஆணவ மலம் காரணமாக முன்பு சடம் போலக் கிடந்த உயிர் சித்துத் தன்மையை உடையதாம். (அஃதாவது, `செயற்படாதே கிடந்த, அறிவு இச்சை செயல்கள் செயற்படத் தொடங்கும்` - என்பதாம். இந்நிலை வித்தியா தத்துவங்களின் சேர்க்கையால் நிகழ்வது.)
பின்னர் மூலப் பிரகிருதியால், அந்தச் சித்துத் தன்மை நிலை பெற்று விளங்கும். (அஃதாவது, `அறிவு இச்சை செயல்கள் நன்கு செயற்பட்டு விளங்கும்` என்பதாம். இந்நிலை ஆன்ம தத்துங்களால் நிகழ்வது.)
`மாயை` என்கின்ற மலத்தினாலே மற்றொரு மலமாகிய ஆணவத்தை இறைவன் கழுவியொழிக்கின்றான் என்பது வியப்பான செய்திதான். `பொருளியல்புகள் அவ்வாறு அமைந்துள்ளன. `மலம் மலத்தான் - கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை, என ஐயம் எழுப்பி, `செழுநவ அறுவை சாணி உவர் செறிவித்து அழுக்கை - முழுவதுங் கழிப்பன்`-என விளக்கம் தந்தார் அருணந்தி தேவரும்.*
மாயை சேராத பொழுது ஆன்மாத் தனிமையுடையதாகும்` மாயை சேர்ந்த பொழுது கலையோடு கூடியதாகும். அதுவே நிலையில்லாத பல்வேறு பிறப்புக்களில் புகும் பிறவிநிலை. இனி, `மாயை, ஆணவம்` என்னும் இரண்டையும் கடந்து நிற்கும் நிலையும் உயிருக்கு உண்டு. (அதுவே சுத்தம்.)

குறிப்புரை :

`சீவன்` என்பதை முதலில் கூட்டுக. `சேதனமாம்` என்னும் ஆக்கச் சொல் தொக்கது, `பகுதியால் மன்னும்` - என மொழி மாற்றி, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. `மற்றையது` என்பது `மற்றது` என மருவிற்று. ஈற்றில் உள்ள மாயை, `வியப்பு` என்னும் பொருளது. கேவலம் - தனிமை. ஆணவம் சகசமாதலின் உயிர்க்கு ஆணவம் மாத்திரமே உள்ள நிலை `கேவலம் எனப்படும். `தன்னுண்மை` என்றும் சொல்லப் படும். கேவலாத்து விதிகள் முத்தி நிலையை, `கேவலம்` என்பர். `கலை` என்பது மாயையின் கூற்றையே குறித்தலால் மாயையின் காரியங்களாகிய தத்துவங்களோடு ஆன்மாக் கூடி நிற்கும் நிலை. `சகலம்` எனப்படுகின்றது. `சகலமாய், யோனியுள் அநித்தத்தில் தோயும்` என இயைக்க. கேவலத்தாகும், சகலத்தாய், எனக் கூறற்பாலன `கேவலமாகும், சகலமாய்` எனக் கூறப்பட்டன. `துரியத்துள்ளும்` எனச் சிறப்பும்மை விரித்து, `தோயும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `துரியத்துள்ளும் தோயும்` எனஉரைக்க. துரியம் - கடப்பு. இஃது இடுகுறியாகாது, காரணத்தளவில் நின்றது.
இதனால், மேற்கூறிவந்த அவத்தைகளையெல்லாம் ஓராற்றால் தொகுத்துக் காட்டும் முகத்தால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தன்னை யறிசுத்தன் தற்கே வலன்றானும்
பின்ன முறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்தசத் துச்சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிலள வாகவே.

பொழிப்புரை :

தத்துவங்களையும், அவற்றின் நீங்கியவழித் தன்னையும் அறிதலை விடுத்துச் சிவத்தை அறிகின்ற சுத்த நிலையை அடைந்தவனும், அவ்வாறின்றி, `தத்துவம், சிவம்` என்ற இரண்டையும் அறியாது, ஆணவம் ஒன்றிலே மட்டும் அழுந்தி யிருக்கின்ற, தனது அநாதியியல்பை உடையவனும், இவ்விருவரின் வேறாய்த் தத்துவங் -களை அறிந்து நிற்பவனும் தம்தம் ஆற்றலுக்கு ஏற்ப முறையே, சத்து, அசத்து, சதசத்து ஆகிய பொருள்களில் பொருந்தியிருப்பர்.

குறிப்புரை :

இங்ஙனம் அநுவாத முகத்தால் கூறியதனானே, `கேவலம், சகலம், சுத்தம்` என்பன காரண அவத்தைகள்` என்பதும், அவற்றின் இயல்புகளும் பெறப்பட்டன.
அவற்றின் இயல்புகளாவன, ஆன்மா அநாதியில் ஆணவ மலத்தோடு மட்டும் பொருந்தி, இருளில் மூழ்கியிருந்த நிலை கேவலம். எனவே, பிற்காலங்களிலும் கருவி கரணங்களின் நீங்கி, ஆணவ மலத்தோடு மட்டும் இருத்தலும் கேவல நிலையேயாதல் விளங்கும். கீழாலவத்தை மத்தியாலவத்தைகளிலும் இந்நிலை இடையிடையே வருவதாம்.
ஆன்மா மாயா காரியங்களாகிய தத்துவங்களோடு கூடியச் சிறிதே அறிவு பெற்று உலகத்தை அறிந்து நிற்கும் நிலை சகலம். யோகா வத்தையும் கருவிகரணங்களின் வழி நிகழ்வனவேயாகலின் சகலமேயாம்.
ஆன்மா மும்மலங்களினும் நீங்கிச் சிவத்தையே அறிந்து நிற்கும் நிலை சுத்தம் என்க. சகலத்திலும் இது நிகழ்வதாயினும் அது நிறைவுடையதன்று.
`தன்` என்பது முன்னர்ச் சிவத்தையும், பின்னர் ஆன்மாவையும் குறித்தன. `சுத்தன்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. `சத்தாவது நிலைத்ததும், அசத்தாவது நிலையாததுமாம்` என்றற்கு, ``மன்னிய சத்து` என்றார். ஆணவம் முத்தியில் சத்தி கெட்டு நிற்றலால், `அசத்து` என்றார். தத்துவங்களில் இங்குத் தனு கரணங்களையே `சதசத்து` என்றார். சதசத்தாவது உயிரே ஆயினும், சகல நிலையில் தத்துவங்களையே உயிராக உணரும் நிலை உளதாதல் பற்றி அவ்வாறு கூறினார். `தொழில்` என்றது, அதற்கு ஏதுவாய ஆற்றலை. `தத்தம் தொழிலளவாகவே துன்னுவர்` என்க.
இதனால், `இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காரண அவத்தைகள் இவை` என்பதும், அவற்றின், இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை.)

குறிப்புரை :

`உயிர்களினது பக்குவ வகைகளே அவகைளின் அவத்தை வேறுபாடுகட்குக் காரணம்` என்பது இம்மந்திரத்தின் குறிப்புப் பொருள்.
``நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும், - நிலையினும்
மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்``*
என்னும் நாலடிச் செய்யுளும் ஒருவனது அறிவு அறியாமைகளால் உளவாய செயற்கை நிலைகளையே அவனது இயற்கை நிலைகளாக உபசரித்துக் கூறினமை இங்கு ஒப்பு நோக்கிக் கொளத் தக்கது. `மறுமை, இம்மை` என்பன கால ஆகுபெயர்களாய், அக்காலங்களில் விளையும் பயன்களை உணர்த்தின.
இதனால், `காரண அவத்தைகட்குக் காரணம் உயிர்களின் பக்குவாபக்குவங்கள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆம்உயிர் கேவல மாம்மாயை யின்னிடைந்(து)
ஆம்உயிர் மாயை எறிப்ப அறிவுற்றுக்
காமிய மாயேய மும்கல வாநிற்பத்
தாமுறு பாசம் சகலத்த தாமே.

பொழிப்புரை :

உயிர் மாயை கன்மங்களோடு கூடாது ஆணவத்தோடு மட்டும் இருந்த நிலை கேவலாவத்தை. (இதுவே உயிர்களின் அநாதி நிலை). பின்பு இறைவன் மாயா காரியங்களைக் கூட்டுவிக்க, அவற்றால்சிறிது அறிவைப்பெற்று வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும் நிலை சகலாவத்தை.

குறிப்புரை :

எனவே, `உயிர் மாயை கன்மங்களோடு கூடுதற் கியலாத தன்மை கேவலத்திற்கும், அவற்றோடு கூடுதற்கியன்ற நிலை சகலத்திற்கும் காரணம்` என்றதாயிற்று.
`உயிர் மாயையின் இடைந்து கேவலம் ஆம்` எனக் கூட்டுக. `இடைதல்` என்பது இயற்கையிலே விலகி நிற்றலைக் குறித்தது. `இடைந்தவழி` என்பது `இடைந்து` எனத் திரிந்து நின்றது. எறித்தல் - ஒளிவிடுதல். எனவே, மாயை விளக்காதல் பெறப்பட்டது. இஃது ``எறிப்ப`` என்ற குறிப்பாற் பெறப்பட்டமையால், குறிப்புருவகம். `மாயா தனுவிளக்கா`l என்றார் மெய்கண்டதேவரும். `கான்மியம்` `காமியம்` என மருவிற்று. `மூல கன்மம் காரணமாக உயிர்களால் செய்யப்பட்டது` என்பது இதன் பொருள். மாயேயம் - மாயையின் காரியங்கள். அவை தனு கரண புவன போகங்கள். இறைவனால் உறுவிக்கப்படுவனவற்றைத் தாமாக உறுவன போல வைத்து, `தாம் உறு பாசம்` என்றார். அங்ஙனம் கூறினமையால், அவை ஆகந்துக மாகிய மாயை கன்மங்களைக் குறித்தன. `அப்பாசம்` எனச் சுட்டு வருவித்து, `அப்பாசங்களால்` என உருபு விரிக்க.
இதனால், முன்னை மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட காரண அவத்தை மூன்றனுள் முதல் இரண்டு அவத்தைகளின் இயல்புகள் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்
நிகரில் மலரோன் மால் நீடுபஃ றேவர்கள்
இகழும் நரர்கீடம் அந்தமு மாமே.

பொழிப்புரை :

ஆன்மதத்துவங்கள் கூடுதல் குறைதல்களால் நிகழும் அவத்தைகளே சகலாவத்தைகள் ஆதலின், அவைகளை அடைந்தோர் யாவரும் சகல வருக்கத்தினரே. ஏனெனில், அவர்களே முக்குண வடிவாகிய பிரகிருதியுட்பட்டு, மும்மலங்களை உடையவர் -களாய் இருத்தலின். எழுவகைப் பிறவியும் எய்தும் உயிர்கள் யாவும் சகல வருக்கத்தினவாதல் தெளிவு. இனி அவ் உயிர்களின் மேம்பட்டவர்களாக எண்ணப்படுகின்ற `அயன் மால்` என்பவர்களும் பிரகிருதி புவனத்துள் பிறந்து இறந்தமை புராண இதிகாசங்களில் கேட்கப்படுதலால், அவர்களும் சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

`நீல உருத்திரர்` என்பவர் ஆகமங்களில் அருகிச் சுட்டப்படுதலால், அவர் சகல வருக்கத்தினராதலை நாயனர் இங்குக் குறிக்கவில்லை. `சகலரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. சகல வருக்கத்தினரே சிவனை அறியாது மயங்குபவர். அது ``தோன்றலர்தொத் துள்ளார் துணை``3 என்னும் திருவருட்பயனாலும் விளங்கும். அயன், மால் என்பவரும் ஒரோவழி அங்ஙனம் மயங்குபவராதலை நினைக்க. இரண்டாம் அடியின் இறுதியில், `அவரேயாதலின்` என்னும் காரணச் சொல்தொக்கு நின்றது.
மாலோனைப் பிறவாதவனாகக் கூறின், நிலவுலகில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தமக்கள் சிலரைப் புராண இதிகாசங்கள் `மாயோன் அவதாரம்` எனக் கூறுதலை `உண்மை` என்னாது, உயர்த் -தற்பொருட்டுக் கூறிய உபசாரமொழிகளாகக் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கொள்ளின், மாயோன் சம்பு பக்கத்தவனே யாவன்.
நரர் - மக்கள். கீடம் - புழு. `நரராதி கீடம் அந்தமாம்` என்க. உம்மை, `அனைத்தும்` எனப் பொருள் தரும் முற்றும்மை.
இதனால், `காரண அவத்தைகளை மூன்றாக எண்ணுதல் சகலரை நோக்கியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தாவிய மாயையில் தங்கும் பிரளயர்
மேவிய மற்ற துடம்பாய்மிக் குள்ளனர்
ஓவலில் கன்மத்தர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :

மாயை ஒழிந்த ஏனை இரு மலங்களையுடைய `பிரளயாகலர்` என்போர் பிரகிருதியைக் கடந்த மாயாதத்துவத்தில் இருப்பர். அதனால் இவர்களது தனு கரணாதிகள் பிராகிருதம் ஆகாது. மாயேயமேயாம். (எனவே, `மாயையின் நீங்கினார்` என்பது, `பிரகிருதியின் நீங்கினார்` என்பதேயாம். ஆகவே, இவர்கள் சகலரினும் மேம்பட்டவர்கள், சிவனை ஒரு போதும் அறியாது மயங்குவாரல்லர்.) மாயையின் நீங்கினாராயினும் கன்மம் நீங்கப் பெறாதவர்கள். (இவர்களுக்கு உள்ள கன்மம் சூக்கும கன்மமே.) அனந்த தேவர் வழிநின்று குணமூர்த்திகளை ஏவிப் பிரகிருதி மாயையில் காரியங்களைச் செய்விக்கும் சீகண்ட ருத்திரர், மற்றும் பிரகிருதி தத்துவத்தில் உள்ள நூற்றெட்டுப் புவன ருத்திரர்கள் ஆகியோர் இப்பிரளயாகலர் வருக்கத்தைச் சேர்ந்தவர்களே.

குறிப்புரை :

இவ்வுருத்திரர்களைப்பற்றிச் சிவஞானபோதம் சூத்திரம் இரண்டு, அதிகரணம் மூன்றின் மாபாடியத்தால் அறிக. தானிய கடந்த, `பிரளயர் மிக்குள்ளனர்` என இயைக்க. மேவிய மேவப்பட்ட. `மாயையில் தங்கும் பிரளயர்` என்ற அனுவாதத்தானே. `அவர் மாயையில் தங்குவர்` என்பது பெறப்பட்டது. மற்று, அசை. அது - முன்னர்க்கூறிய மாயை. ``உடம்பு`` எனத்தனுவையே கூறினா ராயினும், இனம்பற்றிக் கரணம் முதலியனவும் கொள்ளப்படும். `ஒன்றிய - கீழ் உள்ளாரோடு பொருந்திய` என உரைக்க. `சீகண்ட உருத்திரரே சகலர்கட்குப் பரம்பொருளாய் எல்லாவற்றையும் அருளுபவர்` என்பது சிவாகாமங்களில் சொல்லப்படுவது. `கைலாச பதியாய் உள்ளவர் இவரே` என்பதும் அத்தகையது. அதனால், இவர் பிரளயாகலருள் பக்குவராய்ச் சிவனருளைப் பெற்றவர் என்க. `ஆவயின் உள்ளார்` என ஒரு சொல்வருவித்து, அத் தொடரை, `கன்மத்தர்` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``தாவிய மாயையில் தங்கும் பிரளயர்`` என்றதனால், அவருக்குச் சகலாவத்தை உண்டாகாமை பெறப்பட்டது. கேவலாவத்தை சுத்தாவத்தைகள் எல்லார்க்கும் உள்ளது.
இதனால், சகலாவத்தை இல்லாதவருள் ஒருசாராரது இயல்பும், `அன்னார் இவர்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.

பொழிப்புரை :

எல்லார்க்கும் உரித்தாகின்ற கேவலாவத்தையைத் தாங்களும் உடையவர்களாய், ஆயினும் கன்மமும், மாயையும் இன்றி, ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்களில் பக்குவம் பெற்றோர் அனந்தர் முதலிய அட்ட வித்தியேசுரர்களும், சத்த கோடி மகாமந்திரேசுரர்களும் ஆவர். அபக்குவரோஅநேகர்.

குறிப்புரை :

அபக்குவர்களையும் `மந்திரேசுர்` என்பர். இவர்களைச் சிவஞான சித்தி.8 ``வித்தைகள்`` எனக்கூறிற்று. `மந்திர மகேசுரர்` என்பதனை, ``ஈசர்`` எனக் கூறினார். `அநேகர்` என்ற குறிப்பானே, அபக்குவர் என்பது போந்தது. ஒரு மலம் உடையோர் `விஞ்ஞான கலர்` எனப்படுவர்.
இதனால், `சகலாவத்தை யில்லாதவருள் மற்றொரு சாரார் இவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆம்அவ ரில்சிவன் ஆரருள் பெற்றுளோர்
போம்மலந் தன்னால் புகல்விந்து நாதம்விட்(டு)
ஓம்மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலர்
தோம்அரு சுத்த அவத்தை தொழிலே.

பொழிப்புரை :

மேல், `ஒருமலம் உடையார்` எனக் கூறப்பட்ட -வர்களில், பெறுதற்கரிய சிவனது திருவருளை நிரம்பப் பெற்ற சிலர் அதிகார மல வாசனை, போக மல வாசனை ஆகியவைகள் நீங்கப் பெற்று, இலய மல வாசனை மட்டுமே உடையவர் ஆவர். ஆகவே, அவர்கள் மலம் முற்றும் நீங்கிய முத்தர்களாகவே கருதப்படுவர். (அதனால் அவர்கட்குக் கேவல நிலை உள்ளதாகவும் கருதுதல் கூடாது. அவர்கள் வாழ்வது அபர விந்து அபர நாதங்களைக் கடந்த பரவிந்து பர நாதங்களிலாம். ஆகவே, அவர்கள் சூக்குமை வாக்கு ஒன்றை மட்டுமே உடையவர் ஆவர். அவ்வாற்றால் அவர்கள், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவராகக் கருதப்படுவர்.

குறிப்புரை :

`போம்மலந் தன்னால்` என்றது, `மலம் போயதனால்` என்றபடி, மலம் இங்கு மல வாசனை. போயவை அதிகார மல வாசனை, போக மல வாசனைகளே. அஃது, ``ஓம் மயமாகி`` என்றத னாலும், ``ஒடுங்கலின்` என்றதனாலும் விளங்கும். ஒடுங்கல். இலய நிலையில் நிற்றல். அதனுள்ளும் இங்கு கூறப்பட்டது சூக்கும இலய நிலையே. அதனால், `விந்து, நாதம்` என்பன அபர `விந்து, அபர நாதங்களே ஆயின. இங்ஙனமாகவே, `அபர முத்தர்கள்` என்னும் பெயர் இந்நிலையில் நின்றோர்கட்கு பெரிதும் பொருந் துவதாம். `அணு சதாசிவர்கள்` என்னும் பெயரும் போக மலம் உடையவர்கட்கே பொருந்துவது. அவர்கள் சாதாக்கிய தத்துவத்தில் போகங்களை நுகர்ந்து கொண்டிருப்பர். தோம் - குற்றம்; மலம். `இவர் தொழில்` என ஒரு சொல் வருவித்து `தோம் அறு சுத்தாவத்தையே` என ஏகாரத்தை மாறிக் கூட்டி முடிக்க. ஏகாரம் - பிரிநிலை.
இதனால், சுத்தாவத்தை ஒன்றை மட்டுமே அடைபவரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஓரிருள் மூவகை நால்வகை யும்முள
தேரில் இவை கே வலம் மாயை சேர் இச்சை
சார்இயல் ஆயவை தாமே தணப்(பு) அவை
வாரிவைத்(து) ஈசன் மலம்அறுத் தானே.

பொழிப்புரை :

ஆன்மாத் தன் அறிவை யிழந்து நிற்பதாகிய கேவல நிலையுள் மூன்றுவகை உண்டு. அவை நாலாகவும் வகுத்துக் கூறப்படும். `அவை யாவை` - என ஆராயின், ஆணவகேவலம், ஆணவத்தை நீக்குதற்குச் சிவன் விரும்பும் விருப்பக் கேவலம், தத்துவ சுத்திக்குப்பின் ஆன்ம தரிசனத் தொடக்கத்தில் உளதாகும் திகைப்புக் கேவலம்` என்பன. (இவை முறையே ஆன்மா அநாதியில் ஆணவத்தில் மூழ்கியிருந்த நிலையும், பின்பு இறைவன் ஆன்மாவை அந்நிலையினின்றும் விடுவிக்க மாயையைக் கூட்ட முனையும் நிலையும், பின்பு மாயா காரியங்களாகிய கருவி கரணங்களினின்றும் நீங்கிய நிலையுமாகும். இவை முறையே மருட்கேவலம், சகல கேவலம், அருட் கேவலம் - எனப் பெயர் பெறும். இறைவன் மாயையைக் கூட்டமுனைவது சூக்கும ஐந்தொழிலாகும். இந்நிலை சருவ சங்காரத்திற்குப் பின் மீளப் படைத்தற்கு முன்னேயும் உளதாகும். இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்து அதிகரணத்தின் சிற்றுரையால் உணர்க. அருட் கேவலம் துகளறு போதத்திலும் சொல்லப்பட்டது.
இனிச் சகல கேவலத்தை, விஞ்ஞான கேவலம், பிரளய கேவலம் - என இரண்டாக்கி, `கேவலம் நால் வகைத்து` என்றலும் உண்டு (இதனை நாயனார் உய்த்துணர வைத்தார். சகல கேவலத் -தையும் வேறாக எண்ணி, `கேவலம் ஐவகைத்து` என்றலும் உண்டு. அதனை நாயனார் குறித்திலர். மாயை, கன்மம் - இரண்டனோடும் கூடாது, அவை கூட்டப்படுதற்கு ஆவன செய்யப்படும் நிலை விஞ்ஞான கேவலம் - எனவும், கன்மம் கூட்டப்பட்டு, மாயை கூட்டப் படாத நிலை பிரளய கேவலம் - எனவும் உணர்க.)
இவ்வாறான பல வகை அவத்தைகளை வைத்துச் சிவன் ஆன்மாக்களின் பாசங்களைப் போக்குகின்றான்.

குறிப்புரை :

`ஆகவே அஃது அருட் செயலேயன்றி, வன்கண்மைச் செயலன்று` என்பது குறிப்பெச்சம். `சேர் இச்ை\\\\u2970?` `சேர்க்கும் இச்ை\\\\u2970?` எனப் பிறவினை வினைத்தொகை. சார் இயல் - சார்பு தன்மை. இயல் உடையவற்றை `இயல்` என்றார். அவை மாயா காரியங்கள். `தாம், ஏ` அசைகள். தணப்பு - நீக்கம். இஃது ஆகுபெயராய், அது நிகழும் நிலையைக் குறித்தது. வாரி வைத்தல் - அள்ளி வைத்தல்; `மிகுதியாக வைத்து` என்றவாறு.
இதனால், காரண அவத்தைகள் மூன்றனுள் ஒன்றன் உட்பகுதிகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

பொய்யான போதாந்தம் ஆறாறும்விட்டகன்(று)
எய்யாமை நீங்கவே எய்யவன் தானாகி
மெய்யாஞ் சராசர மாய்வெளி தன்னுட்புக்(கு)
எய்தாமல் எய்தும் சுத் தாவத்தை என்பதே.

பொழிப்புரை :

உண்மையான சுத்தாவத்தையாவது, விபரீத ஞானத்தையே தருகின்றவைகளாகிய கருவிகள் முப்பத்தாறினின்றும் விடுபட்டு அப்பாற்போய், அங்ஙனம் போயதனால் அறியா -மையையே தருவதாகிய ஆணவமலம் வந்து பற்றுதலாகிய அந் நிலையும் தோன்றாதொழிய, யாதொன்றனையும் உண்மையாகவே அறியும் அறிவை யுடையவனாய், அந்த அறிவால் சரம், அசரம் ஆகிய அனைத்தையும் ஒருகாலத்திலே ஒருங்கே உணரும் நிலையை உடையனாய், அத்தன்மைத்தாய் விளங்கும் பராகாயமாகிய அருள் வெளியுட் பகுந்து, அவ்வெளிக்குள் உள்ள சிவனை, அடையாமல் அடைந்திருப்பதாகும்.

குறிப்புரை :

போதம் - அறிவு. `பொய்` என்றது விபரீதத்தை. போதம் தருவனவற்றை, `போதம்` என்றார். எய்யாமை - அறியாமை. `எய் யாமையே அறியா மையே` என்பது தொல்காப்பியம்.l எய்யாமைக்கு எதிராக `எய்தல்` என்றோ, `எய்த்தல்` என்றோ ஒரு சொல் அக்காலத்தில் இல்லையாயினும் இங்கு நாயனார் `அறிகின்ற அத்தன்மையுடையவன்` என்னும் பொருளில், `எய்யவன்` என்றார். மெய் - பொருள். `மெய்யாம் வெளி` என இயைத்தலும் ஆம். சராசரங்களும் தானாதல், அவற்றை ஒரு காலத்தே ஒருங்கே உணர்ந்து நிற்றல். எய்தாமல் எய்தல், புதுவதாய்ச் சென்று அடையாமல் அநாதியே பெற்றிருந்த பொருளை அஃது அன்ன தாதலை உணர்ந்து, வியத்தல். இதனானே, `சுத்தாவத்தையே இயற்கை` என்பதும், `கேவலமும், சகலமும் மலங்களாகிய உபாதியான் ஆக செயற்கைகள்` என்பதும் விளங்கும். இக்கருத்தே பற்றித் திரு வள்ளுவரும், வீட்டு நிலையை, `பேரா இயற்கை`3 என்றார். எய்துதற்குச் செயப்படு பொருள், `வெளி` என்ற குறிப்பால் பெறப்பட்டது. `எய்தும்` எனக் காலம் வினை முதல் போலக் கூறப்பட்டது.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு உண்மையாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அனாதி பசுவியாத் தியாகும் இவனை
அனாதிஇல் வந்த மலம்ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலன் அச்சக லத்திட்(டு)
அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே.

பொழிப்புரை :

அனாதியே பாசத்துட்பட்டுப் பசுத்தன்மை எய்தி நின்ற இந்த உயிரை, அனாதியாயும், ஆதியாயும் வந்த ஐந்து மலங்களால் ஆட்டிப் படைப்பவன் சிவன். அவன் அனாதியில் கேவல நிலையிலிருந்த உயிரை சகல நிலையில் கொணர்ந்துவைத்துப் பின்பு அனாதியாய பிறப்பு ஒழியும்படி சுத்தாவத்தையில் சேர்ப்பான்.

குறிப்புரை :

முதல் அடியில் `அனாதியில்` என ஏழாவது விரிக்க. `பசுவாய்` என்னும் ஆக்கச் சொல்தொக்கது. `வியாத்தியாய்ப் பசுவாகும் இவனை` என மொழிமாற்றி உரைக்க. ஒன்றைத் தன்னுள் அடக்கியிருப்பது வியாபகப் பொருள்; ஒன்றில் தான் அடங்கி யிருப்பது வியாப்பியப் பொருள். அடங்குதலும், அடக்குதலும் இன்றிச் சமமாய் இருப்பது வியாத்தி (வியாப்தி) பொருள். `அனாதி யாய், இல்லாய் வந்த` என இரண்டிலும் ஆக்கம் வருவித்து உரைக்க. அனாதியில்லாய் வருதலாவது, ஆதியாய் வருதல். அனாதியாய் வந்தது ஆணவம். ஆதியாய் வந்தவை மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி. `ஆட்டி` என்பது பெயர். ஆட்டுமாறு பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. `ஆட்டி - இட்டு, ஆக்கும்` என முடிக்க. `ஆகும்` என்பது பாடம் அன்று. `கேவலனை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப் பட்டது. `வித்தினின்று` மரம், மரத்தி -னின்றும் வித்து என்பது போல, `வினையால் பிறப்பு, பிறப்பால் வினை` என இவ்வாறு முதல் அறியப்பாடது தொடர்ந்து வருதலின் பிறப்பை `அனாதி` என்றார்.
இதனால், `கேவலம் ஆணவத்தின் செயல்` என்பதும், `சலகமும், சுத்தமும் சிவன் செயல்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.

பொழிப்புரை :

எல்லாவற்றினும் மேலாய், நிறைவாய் உள்ள உண்மைச் சுத்த துரியாதீதமே, `சுத்தாவத்தை` என்றற்குப் பெரிதும் ஏற்புடையது. அஃது `அருட்கேவலம்` எனப்படும் தத்துவ சுத்திக்குப் பின் வாய்ப்பதாகும். அதனை அவ்வாற்றால் சிவனால் தரப்பட்டவர் தனித்த ஒரு சுத்தமாகிய அந்த அதீத நிலையில் யாதொரு பற்றும் இல்லாத சிவமேயாய் இருப்பர். (இதில், `யான், எனது` என்னும் உணர்வு இல்லையாம்.) இனி அதற்குக் கீழ்நிலையில் உள்ள துரிய நிலையில் ஆன்ம அறிவு சிறிதே நிகழ்தலால், ஆன்மாச் சிவனை அறியும் முகத்தால் தன்னை அறிபவனாக உணரும் நிலை உள்ளதாம்.

குறிப்புரை :

`அந்தரம்` என்பது, `ஆகாயம்` என்னும் பொருட்டாய், மிக மேலான நிலையைக் குறித்தது. அஃது உண்மைச் சுத்த துரியா தீதமாம். `அதற்கு வழி` என்றதனால், `கேவலம்` என்றது, அருட் கேவலம் ஆயிற்று. தந்தோர் - தரப்பட்டோர். `அதனைத் தந்தோர்` என்க. `சுத்த கேவலம்` என்றதில், `கேவலம் கலப்பற்றது` எனப் பொருள் தந்தது. ``தற்பரத்தின்பால்`` என்பதன் பின் `உளர்` என்பது எஞ்சி நின்றது. `இடை` - ஏழனுருபு. `அறிவுற` என்னும் செயவெ னெச்சம் காரணப் பொருளில் வந்தது. தான், அசை. ஏகாரம், தேற்றம். இதன்பின்னும் `உள்ளது` என்பது எஞ்சி நின்றது. `தத்துவம் ஆமே` - எனப்பாடம் ஓதலும் ஆம்.
இதனால், சுத்தத்தில் சுத்தமாய் உள்ளவை சுத்த துரியமும் துரியாதீதமும் ஆதல் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஐயைந் தொடுங்குமவ் வான்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு சுத்தஅவ் வித்தையில் வீடாகும்
துய்யஅவ் வித்தை முதல் மூன்றுந் தொல்சத்தி
ஐயை சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

பொழிப்புரை :

நிலம் முதல் பிரகிருதி ஈறான இருபத்தைந்து தத்துவங்களும் சகல வருக்கத்து ஆன்மாக்கட்குப் பரமாய் உள்ள சீகண்ட உருத்திரரிடத்தில் ஒடுங்கும் (இது பற்றியே இவை, `ஆன்ம தத்துவம்` எனப் பெயர் பெற்றன. ஒடுக்கம் கூறுதலால் காரணமாய் உள்ள பிரகிருதியையும் கூட்டி `இருபத்தைந்து` என்றார்.)
அந்தச் சீகண்ட உருத்திரரும், `தமக்கு` தனு கரணம் முதலியன வாய் வருவன அசுத்த மாயையே` என்னும் உண்மையை உணர்ந்து அவற்றின் நீங்கிச் சுத்த வித்தையில் வீடு பெறுவார். (எனவே, `அசுத்த மாயா காரியங்களாகிய வித்தியா தத்துவங்கள் அந்தச் சுத்த வித்தைக்குத் தலைவராகிய அனந்த தேவரிடத்தில் ஒடுங்கும்` என்பது தானே பெறப்பட்டது.)
இனி, அந்தச் சுத்த வித்தை முதலாக ஒடுக்க முறையில் நிற்கும் முதல் மூன்று தத்துவங்களும், `சத்தி` எனப்பெயர் பெற்று நிற்கும் இலய சிவனிடத்தில் ஒடுங்கும். சிவ தத்துவம் ஐந்தில் எஞ்சிநின்ற `சத்தி, சிவம்` என்னும் இருதத்துவங்களும் முடிநிலைப் பேறாய் உள்ள சுத்த சிவனிடத்தில் ஒடுங்கும். இவை யெல்லாம் மீளத் தோன்றுங்கால் இம்முறையானே தோன்றும்.

குறிப்புரை :

`ஆன்மா` என்பது, ஏற்புழிக் கோடலால், `சகல வருக்கத்து ஆன்மா` எனப் பொருள் தந்தது. அவைகட்குப் பரமா யுள்ள கடவுளை அவ்வான்மாக்களாக உபசரித்துக் கூறினார். `ஆன்மாவும்` - என்னும் உம்மை சிறப்பும்மை. சுத்த சிவன், `இலயம், போகம், அதிகாரம்` - என்னும் நிலைகளில் நிற்குங்கால் முறையே, சத்தன், `உத்தியுத்தன், பிரவிருத்தன்`-எனப் பெயர் பெறுதலை நினைக. சத்தன் - சத்தியை உடையவன். எனவே, சத்தியை உடை யவனை, `சத்தி` - என ஆகுபெயரால் கூறியதாயிற்று. `ஐயை - சத்தி. `சித்தி` என்றது, `முடிநிலைப் பேறு` என்னும் பொருட்டாய் நின்றது. இப்பொருளை, `தத்துவம் எண்மூன்றும் சென்று ஆன்மா தத்துவத் தொடுங்கும்` என்னும் சிவஞான சித்திச் செய்யுட்கு8 மாதவச் சிவஞான யோகிகள் உரைத்த உரை பற்றித் தெளிக.
சீகண்ட உருத்திரருக்கு ஒடுக்கங் கூறிய அதனானே, சகல வருக்கத்தினரான `அயன், மால்` என்பவரில், `அயன் மாலிடத்திலும், மால் சீகண்ட உருத்த்திரரிடத்திலும் ஒடுங்குவர்` - என்பதும், `வித் -தியேசுரர் மகேசுரனிடத்திலும் மகேசுரன் சதா சிவனிடத்திலும், சதா சிவன் `சத்தி` என நிற்கும் இலயசிவனிடத்திலும், `சத்தி` என்னும் சிவன், `சிவன்` என்றே பெயர்பெற்று நிற்கும் சிவனிடத்திலும் அந்தச் சிவன் சுத்த சிவனிடத்திலும் ஒடுங்குவர் என்பதும் பெறப்படும். இவற்றால், `சகலத்தில் நிகழும் சுத்த சாக்கிரம்` எனப்படும் தத்துவ சுத்தி ஒன்றே, `நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளின் அடங்கிய தத்துவங் -களினின்றும் முறையே நீங்குதலே, சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத் தில் சொப்பனம் முதலான பஞ்சாவத்தைகளாய் நிகழும்` என்பதும் உய்த்துணரவைத்தமை அறிந்துகொள்க.
இதனால், `அவத்தைக்கு ஏதுவாவன தத்துவங்களே` என்பது பற்றி அவற்றின் ஒடுக்கத் தோற்றமுறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோ டடங்கிடும்
மெய்கண்ட மேல்மூன்றும் மேவும்மெய் யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபரத் தேகாண
எய்யும் படிஅடங் கும்நாலேழ் எய்தியே.

பொழிப்புரை :

(மேல், `நாலாறுடன் புருடன்` - என்னும் மந்திரத்தில் `வேதாந்தி தத்துவம்`-எனக் கூறப்பட்ட இருபத்தெட்டுத் தத்துவங்களில்) ஒடுக்க முறையில் முதல் இருபத்தைந்து தத்துவங்கள் சீவனில் அடங்கும். இருபத்தாறாம் தத்துவமாகிய ஈசுரன் உட்பட மற்றைய மூன்று தத்துவங்களும் மெயப்பொருளாகிய பரப்பிரமத்தில் சீவன் ஒன்றாகும் பொழுது அதில் அடங்கிவிடும். சுருக்கமாகச் சொல்வதென்றால், `விவகாரத்திற்குக் காரண சத்தியாகிய மாயை, அதற்கு அதிட்டானமாம் பாரமார்த்திகப் பொருளாகிய பரப்பிரமம் என்னும் அவ்விரண்டிலே எல்லாம் தோன்றுதலால், எல்லாம் ஒடுங்குதலும் அவற்றிலேதான்` எனலாம்.

குறிப்புரை :

`இது வேதாந்தி கொள்கை` என்பதாம். `ஐயைந்தும் ஆன்மாவில்` என்று, `ஐயைந்தாவன ஆன்மா உட்பட` என்றபடி, ``அடங்கிடும்`` என்பது `ஆன்மாவில்` என்பதனோடும் சென்றியைந் -தது. `மெய்யாகக் கண்ட` என ஆக்கம் வருவிக்க. `மேவும் மெய் யோகத்தில்` என்றாரேனும் `மெய் யோகம் மேவுகையில்` என்றலே கருத்து. மேவுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. காண - காணுதல். காணுதல் - தோன்றுதல். எய்யும்படி - அறியும்படி. `எய்யும் படி காணுதலால் நாலேழ் அவற்றில் எய்தி அடங்கும்` எனக் கூட்டி முடிக்க. `நாலேழும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அவற்றில் அடங்கும் எனச் கூட்டியுரைக்க.
இதனால், தத்துவங்களின் தோற்ற ஒடுக்க முறைகளை வேதாந்திகள் சித்தாந்தத்தின் வேறுபடக் கூறுமாறு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஆணவத் தார்ஒன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலர்க்காகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலம் முப் பாசமும் புக்கோர்க்கே.

பொழிப்புரை :

ஆணவ மலம் ஒன்றையே உடையவராகிய விஞ்ஞானகலர் கேவலாவத்தையை அடையுமிடத்துக் காரிய தத்துவங்களுள் ஒன்றையும் அனுபவியாது, நாதமாத்திரையா யிருப்பர். இரு மலம் உடையவராகிய பிரளயாகலர் கேவலா வத்தையை அடையும் பொழுது வித்தியாதத்துவத்தின் முடிவாகிய மாயாதத்துவம் அவர்கட்கு அனுபவப்பொருளாகும். போக்கிய காண்டமாய்த் தூலமாய் உள்ள பிரகிருதிக் காரியங்களை உடைய சகலர் கேவலாவத்தையை அடையும் பொழுது காரணமாகிய பிர கிருதியையே பற்றிக்கொண்டு, அதன் காரியப் பொருள்களில் ஒன்றையும் அனுபவித்தல் இன்றியிருப்பர், இனிச்சகலாவத்தை சகலர்கட்கே உளதாகும்.

குறிப்புரை :

`ஒன்றும்` - என்னும் இழிவு சிறப்பும்மை தொகுக்கப் பட்டது. இரண்டாம் அடியோடு இயைய, முதல் அடியின் ஈற்றிலும், `ஆவர்` என்னும் ஆக்கம் வருவிக்க. விஞ்ஞானகலர்க்கும் சுத்த மாயை உளதாயினும் அதனால் செலுத்தப்படும் அசுத்த தத்துவங்கள் அவர் கட்கு இல்லாமையால், `கேவலத்தில் அனுபவம் இல்லை` என்றும், ஏனையோர்க்குப் பிரேரக காண்டம், போசயித்திரு காண்டம்` -என்பவை இருத்தலால் அவர்கட்கு `கேவலத்தில் அனுபவம் உண்டு` என்றும், `சகலர்` என்பதில், `கலை` எனப்படுவது பிரகிருதியே யாகையால், `சகலர்க்கு மட்டுமே சகலாவத்தை உண்டு` என்றும் கூறினார். `கேவலம்` என்பது பின்னும் சென்றியைந்தது. காணும் உருவம் - காணப்படுகின்ற தூலப்பொருள். `காணாமை` என்பதில், காணுதல் - அனுபவித்தல். காணாமை, காணும் உருவத்தைக் காணாமை. பூணும் - பற்றாகும்.
இதனால், காரண அவத்தைகள் பொதுவாகச் சொல்லப் படினும் அவை அவ்வவ்வுயிர்களின் பந்த வேறுபாட்டிற்கு ஏற்ப வேறுபட்டு நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆணவமா கும்விஞ் ஞானகலருக்குப்
பேணிய கன்மம் பிரளயா கலருக்கே
ஆணவம் கன்மமும் மாயையும் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டும் மலங்களே.

பொழிப்புரை :

(இம் மந்திரத்தில் பதிப்புக்களில் காணப்படும் பாடம் திரிவு செய்யப்பட்ட பாடம்.)
விஞ்ஞானகலர் - என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் ஆணவமலம் ஒன்றுமே. `பிரளயாகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாசபந்தம் அந்த ஆணவத்துடன் கன்மமும் கூடிய இரண்டு மலங்கள். `சகலர்` என்னும் இனத்தவர்க்கு உள்ள பாச பந்தமே. `ஆணவம், கன்மம், மாயை` - என்னும் மும்மலங்களும்.
`பிரளயாகலர்` என்பதில், `பி` என்னும் இகரம், வடசொல் பற்றிவந்த குற்றியலிகரமாய் அலகு பெறாதாயிற்று. பின்னும் இவ்வாறு ஆம் இடங்கள் உள.

குறிப்புரை :

மூன்றாம் அடியில் உள்ள `ஆணவம்` என்பதன் பின் எண்ணும்மை விரிக்க.
இதனால், மூவகை உயிர் இனங்களில் இலக்கணங்களும் கூறப் பட்டன. இதனால், `மாயை` எனப்பட்டது பிரகிருதியே - என்பதை மேலெல்லாம் கூறியவாற்றால் உணர்க.

பண் :

பாடல் எண் : 16

கேவலந் தன்னில் கிளந்தவிஞ் ஞாகலர்
கேவலந் தன்னில் கிளர்விந்து சத்தியால்
ஆவயின் கேவலத் தச்சக லத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

பொழிப்புரை :

(ஒன்று இடையிட்டு முன்னை மந்திரத்தில் கூறிய கேவல வகைகளில்) தமக்குரிய கேவலநிலை அடைபவராகக் கூறப்பட்ட விஞ்ஞானகலர், அக்கேவல நிலையினின்றும் எழுச்சி பெறுதல் `விந்து` எனப்படும் சத்தி தத்துவத்தினாலாம். (எனவே, கேவல நிலையில் அவர்கள்` நாதம்` எனப்படும் சிவதத்துவத்தைப் பற்றியிருந் -தமை பெறப்படும். ) அந்த விந்து சத்தியோடு பிற சுத்த மாயா தத்துவங் -களைப் பற்றிச் செயற்படுதலே அவர்களது சகல நிலை யாகும். (ஆகவே சகலருக்குப் போலப் பிரகிருதி தத்துவங்களைப் பற்றும் சகல நிலை அவர்கட்கு இல்லையாம்.) அந்தச் சகல நிலையில் அவர்களுடைய தனு கரணங்கள், மந்திர வடிவாகிய சுத்த மாயையால் ஆயினவேயாம்.

குறிப்புரை :

`கிளர்ந்த` என்பது பாடமாயின், `எழுச்சியுற்ற` என்பது பொருளதாகும். அப்பொழுது, பின்பு வந்த `கிளர்` என்பது `கிளர்ந்தமை` எனப்பொருள்தரும். `விஞ்ஞான` என்பது `கிளர்ந்தமை` எனப் பொருள் தரும். `விஞ்ஞான` என்பது கடைக் குறைந்து நின்றது. கிளர், முதனிலைத் தொழிற்பெயர். `இவரது சகல நிலை, சகலரது சகல நிலை போன்றதன்று` என்றற்கு, `அச்சகலம்` எனச்சுட்டிக் கூறினார். எனவே, இங்கு, `சகலம்` என்பது ஒப்பின் ஆய பெயராயிற்று. `சகலத்தை` என்னும் இரண்டன் உருபை ஏழன் உருபாகத் திரித்துக் கொள்க. இரண்டன் உருபை ஏழன் இருபாகத் திரித்துக் கொள்க. உம்மை சிறப்பு. `மெய்ம்மை, மந்திர மாமாயை மேவிய` - என மாறிக் கூட்டியுரைக்க. மெய் - உடம்பு. தனு வொன்றையே கூறினாராயினும் கரணமும் உடன் கொள்ளப்படும். மை, பண்புணர்த்தாது, பகுதிப் பொருள் விகுதியாய் நின்றது. `மாமாயையாய்` - என ஆக்கம் வருவிக்க. `மேவிய`-என்பது, `மேவின` என முற்று.
இதனால், விஞ்ஞானகலர் தமது கேவலத்தில் நீங்கித் தமக்குரிய சகலத்தில் நிற்குமாறு கூறப்பட்டது. (இந்தச் சகலம் சகலரது சகலம் போலாமையால் இதுவும் `கேவலம்` என்றே வழங்கப் படுகின்றது. எனினும், விஞ்ஞானகலரது கேவலம் இரு தன்மைப்பட்டு நிற்குமாற்றை இம்மந்திரம் கூறிற்று என்க.)

பண் :

பாடல் எண் : 17

மாயையின் மன்னும் பிரளயா கலர்வந்து
மாயையும் தோன்றா வகைநிற்க ஆணவம்
மாயச் சகலத்துக் காமியம் மாமாயை
ஏயமன் னூற்றெட் டுருத்திரர் என்பவே.

பொழிப்புரை :

வித்தியா தத்துவங்களில் மாயா தத்துவம் மட்டுமே செயற்பட்டு நிற்கும் நிலையில் பிரளயாகலர்பால் அந்த மாயா தத்துவ மும் மெத்தெனவே செயற்படுதலால் ஆணவம் மேற்பட்டு நிற்கும். (அஃதே அவர்க்குக் கேவல நிலையாகும்.) இனி, அவர்கட் குரிய சகலா வத்தைக்கண் சுத்த தத்துவங்கள் செயற்படுதலானே கன்ம மலங் காரியப் படுவதாகும். இந்நிலையில் நிற்பவர்கள், மேல், ``தாவிய மாயை``- என்னும் மந்திரத்தில் (2199) குறிப்பிடப்பட்ட நூற்றெட்டுருத்திரராவர்.

குறிப்புரை :

`பிரளயாகலர்பால்` - என ஏழாவது விரிக்க. `ஆணவம்` என்பதின்பின் `மிகும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. மாயம் - நிலையாமை. பிரளயாகலர்க்குரிய சகல நிலையாவது, வித்தியாதத்துவங்கள் செயற்பட அவற்றால் அறிவு விளங்கப்பெறும் நிலை. காமியம் - கான்மியம். அஃதாவது காரிய கன்மம். மாமாயை என்றது, அதன் காரியமாகிய சுத்த தத்துவங்களைக் குறித்த ஆகு பெயர். `மாமாயையால் காமியம்` என உருபு விரித்து, மாறிக்கூட்டுக. `சுத்த தத்துவங்கள் செயற்பட்டுநிற்கும்` என்றதனால், அவற்றால் வித்தியா தத்துவங்கள் செயற்படுதல் தானே பெறப்பட்டது.
`காமியம்` என்பதன்பின்னும், `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. மன்னுதல் - நிற்றல். இது `மன்` என முதனிலையளவாய் நின்று, மன்னுவாரைக் குறித்தது.
இதனால், இருமலம் உடையார்க்குக் கேவல சகலங்கள் நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

மும்மலம் ஐம்மலம் கூடி மயங்குவோர்
அம்மெய்ச் சகலத்தர் தேவர் அசுரர் நரர்
மெய்ம்மையில் வேதா விரிமால் கீ டாந்தத்தின்
அம்முறை யோனிபுக் கார்க்கும் சகலரே.

பொழிப்புரை :

`மும்மலம்` என்றும், ஐம்மலம்` என்றும் சொல்லப் படுகின்ற அனைத்து மலங்களையும் உடையவர்களாய், `தமக்குமேல் ஒரு முதற் பொருள் உண்டு` என அறியாது மயங்குகின்றவர்களே உண்மையான சகலாவத்தையை அடைபவர்கள். தேவர்கள், அசுரர்கள், மக்கள், அடி முடி தேடிய காலத்தில் `முடியைக் கண்டேன்` எனப் பொய் கூறிய பிரமன், வியாபகன்` என்னும் கருத்தால், `விட்டுணு` என்று அழைக்கப்படுகின்ற மாயோன் இவர்கள் யாவரும் தமக்குக் கீழ் புழுவரையில் உள்ள அனைத்து யோனிகளிலும் புகுந்து ஆரவாரிக்கின்ற சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

`ஆகவே, இவர்கள் அனைவரும் மூன்றவத்தை -களையும் அடைவர்` என்பது குறிப்பெச்சம். மேல், விஞ்ஞான கலர் பிரளயாகலர்கட்கும் சிலவகையான சகலாவத்தைகள் உள என்பதுபோலக் கூறியமையால், `மும்மலத்தவரே உண்மையில் சகலாவத்தையை அடைவர்` என்றற்கு, `அம்மெய்ச்சகலத்தர்` என்றார். ஆர்த்தல் - ஆரவாரித்தல். இஃது உலக மயக்கத்தில் மயங்கிச் செருக்குதல். மேல், ``சகல அவத்தையில் சார்ந்தோர்`` - என்னும் மந்திரத்திலும் (2198) இம்மந்திரப் பொருள் கூறப்பட்டதாயினும் அங்கு, `சகல வருக்கத்தினராவார் இவர், என்பதை உணர்த்துதலும், இங்கு, `உண்மைச் சகலாவத்தையை எய்துபவர்கள் இவர்` என்பதை உணர்த்துதலும் ஆகக்கருத்துக்கள் வேறுவேறு என்க. பின்னர்க் குறிக்கப்பட்ட கருத்தே இம்மந்திரத்தாற் கொள்ளப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனைத்தலைப் பாசமாம்
மத்த இருள்சிவ னானகதி ராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சுத்தவத்தையில் மூழ்கினவர்களே, `ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும்மலங்களும் செயல் ஒழிந்து, உண்மை மாத்திரையாய் நிற்றலாலும், அம்மலங்களைச் செயற்படுத்தித் தனியாகி அவறறிற்குத் தலைமை பூண்டு நின்ற திரோதான சத்தியாகிய மலமும் சிவசூரியனது கிரணமாம் அருட் சத்தியால் சற்று விட்டு நீங்குதலாலும் உண்மையில், `சுத்தர்` எனத் தக்கவர் ஆவர்.

குறிப்புரை :

சகலத்தில் சுத்தத்தை எய்தினோரை நீக்கி உண்மைச் சுத்தத்தை எய்தினோரைச் சுட்டுதற்கு, `தோய்ந்தவர்` என்றார். சத்து - செயற்படுதல் இன்றி உண்மை மாத்திரையாய் நிற்றல். `சத்து ஆதலாலும்`-என ஆக்கமும், உம்மையும் விரிக்க. செயற்படத்தக்க பொருள்கள் செயற்படாது, உண்மை மாத்திரையாய் நிற்றல், `அவற்றின் காரண நிலை`-என்றும், செயற்பாடு, `அவற்றின் காரிய நிலை` என்றும் சொல்லப்படும். மலங்கள் காரண நிலையில் நிற்கு மிடத்து உயிரைப் பந்திக்க மாட்டா; காரிய நிலையை அடையும் பொழுதுதான் உயிரைப் பந்திக்கும். மலங்கள் உயிர்களிடத்தில் காரியப்படுதலும், படாமையும் அவற்றின் அபக்குவ பக்குவங்கட்கு ஏற்ப நிகழும். `மும்மலங்கட்கும் காரியங்கள் உள` என்பதைச் சிவஞான போதம் இரண்டாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரண மாபாடியத்தாலும், இருபா இருபஃதாலும் அறிக. காரணங்கள் நிலையுடையவாதல் பற்றி அவற்றை, `சத்து` என்றும், காரியங்கள் நிலையாமை பற்றி அவற்றை `அசத்து` என்றும் கூறினார்.
மத்தம் - மயக்கம். `மத்தமாகிய இருள்` என்க. எனவே, `விபரீத ஞானம்` என்றதாம். விபரீத ஞானத்தைச் செய்வதை, விபரீத ஞான மாகவே உபசரித்துக் கூறினார். அருட் சத்தியை, `கதிர்` என்றதனால், சிவன் கதிரவனாதல் பெறப்பட்டது. இது குறிப்புருவகம். சத்து ஆதலாலும், ஓடலாலும், விட்டிடலாலும் சுத்தராவார்கள்` என முடிக்க.
இதனால், உண்மைச் சுத்தாவத்தை நிகழும் முறைமையும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவதாம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பாற் புரிவது தற்சுத்த மாமே.

பொழிப்புரை :

உயிர் சிவத்தோடு மட்டுமே பொருந்தி நிற்கின்ற அந்தத் தனிநிலையே பரமுத்தி நிலையாகும். அதுவே உண்மையில் தூய்மை யாகும். (இதனைச் `சிவகேவலம்` என்றும். `பர கேவலம்` என்றும் கூறலாம்.) இதற்குக் கீழ்ப்பட்டன எல்லாம் சகலங்களே. (அஃதாவது, மாசொடுபட்டனவே.) அந்நிலையில், சகல வருக்கத்து ஆன்மாக்கள் கலை முதல் மண் ஈறாய் உள்ள தத்துவங்களின் நீங்கி நிற்றல். அவற்றிற்கு மெய்ந்நூல்களில்சொல்லப்படுகின்ற சுத்த கேவல மாகும். (இஃது, `அருட் கேவலம்` என்பதாகத் துகளறு போதத்தில் சொல்லப்பட்டது. வெண்பா-25) புருவ நடுவிலே நிகழ்வதாகிய சாக்கிராவத்தையிலே புறப்பொருளில் தோய்தல் இன்றி, அறிவுக் கறிவாய் உள்ள சிவத்திலே தோய்ந்திருத்தல் சகலத்தில் சுத்தமாம். (இதுவே, `சாக்கிரத்தில் அதீதம்` - என்க.)

குறிப்புரை :

முதற் பொருளை, `தத்` எனக் குறிப்பிடுதல் உபநிடத வழக்கு. `தான்` என்றது, முன்னர்க் கூறிய தற்கேவலத்தை. `சகலம்` என்பது `கலப்பு` என்னும் பொருட்டாய் நின்றது. இரண்டாம் அடியின் ஈற்றில் உள்ள `ஆம்` என்பதை மூன்றாம் அடியில் உள்ள `கேவலம்` என்பதன் பின்னர்க் கூட்டுக. `சாக்கிரத்தில்` என ஏழாவது விரிக்க. ஈற்றடியிலும் `சிவம்` தத்` என்றே சொல்லப்பட்டது. இரண்டிடத்திலும் `தன்` என்றே பிரித்து, `சிவத்தை இவ்வாறு கூறுதல் தமிழ் வழக்கு` என் -றலுமாம். `தற் சுத்தம்` என்பதில் `தன்` என்றது, மேற்கூறிய சகலத்தை.
இதனால், `கேவலம்` என்னும் காரண அவத்தை பல வகையில் நிகழ்தலும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன. மேல், `ஓரிருள் மூவகை` என்னும் மந்திரத்தில்8 கேவலம் மூன்றும், நான்குமாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

அறிவின் றமூர்த்தன் அராகாதி சேரான்
குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல்இலான் தினக்கற்றல் இல்லோன்
கிறியன் மலவியாபி கேவலத் தானே.

பொழிப்புரை :

சிவஞான சித்தியாரில்,
``அறிவிலன்; அமூர்த்தன்; நித்தன்;
அராகாதி குணங்க ளோடும்
செறிவிலன்; கலாதி யோடும்
சேர்விலன்; செயல்க ளில்லான்;
குறியிலன்; கருத்தா அல்லன்;
போகத்திற் கொள்கை யில்லான்;
பிறிவிலன் மலத்தி னோடும்
வியாபி - கேவலத்தில் ஆன்மா``l
எனப் போந்த செய்யுளின் உரையை நோக்கி இம்மந்திரத்தின் பொருளை உணர்ந்து கொள்க.

குறிப்புரை :

இம்மந்திரத்து இறுதியில் உள்ள `கேவலத்தான்` என்னும் எழுவாயை முதற்கண் வைத்து, `அறிவின்று` என்பதன்பின் `ஆக` என்பது வருவித்துப் பின் அனைத்துப் பயனிலைகளோடும் கூட்டி முடிக்க. அமூர்த்தன் - உடம்பில்லாதவன். அராகம் முதலியவை புத்தி குண பாவகங்கள். குறி - இச்சை. நித்தம் - பிறப்பு இறப்பு இன்மை. கலாதி - கலை முதலிய தத்துவங்கள். `கலாதியைக் கூடான்` என்க. `தின` என்பது, `தின்ன` என்பதன் இடைக்குறை. `போகம் புசிக்க` என்பது பொருள். கிறியன் - பொய்யன்; இருந்தும் இல்லாதவன். மல வியாபி - ஆணவ மலத்தையே முழுமையாகப் பற்றியிருப்பவன்.
இதனால், காரண அவத்தை மூன்றனுள் `கேவலம்` என்னும் அவத்தையின் இயல்பு அதனை அடைந்த ஆன்மாவின்மேல் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்ததம் ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகலர்சுத் தரான்மாக்கள் வையத்தே.

பொழிப்புரை :

பிரளயாகலர், சகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூவகை யினராய் விளங்கும் ஆன்மாக்கட்கும் முறையே அசுத்த மாயை, பிரகிருதி மாயை, சுத்த மாயை என்பவற்றால் அவ்வப் புவனங்களில் தனு கரண போகங்கள் உளவாகும். எல்லா உயிர்கட்கும் சுத்த மாயை -யின் காரியமாகிய வாக்குக்களால்தான் சவிகற்ப உணர்வு உண்டாகும்.

குறிப்புரை :

`விந்து` இரண்டில் முன்னது பைசந்தி வாக்கைக் குறித்து, அதற்குக் பற்றுக்கோடாகிய அசுத்தமாயையை உணர்த்திற்று. அதனால், `மாயை` என்பது பிரகிருதி மாயையைக் குறித்தது. பரையாவது சூக்குமை வாக்காகலின் அஃது அதன் வடிவாய் நின்ற சுத்த மாயையைக் குறித்தது. இம்மூன்றும் பின் வந்த பிரளயாகலர், சகலர், சுத்தர் என்பவரோடு முறையே இயைந்தன. இங்கு, `சுத்தர்` என்றது ஏனை இரு திறத்தாரை நோக்கச் சுத்தராகிய விஞ்ஞான கலரைக் குறித்தது. இம்மூத்திறத்தாரையும் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார்.
`பிரளயர், சகலர், சுத்தர் ஆன்மாக்கட்கு வையத்தே தனுவும், சத்தியும், கிரியையும் விந்துவினாலும், மாயையினாலும், ஞான பரையினாலும் சந்ததம் (எப்போதும்) மேவும்; மெய்ஞ்ஞானம் விந்துவின் மேவும்` - என இயைத்துப் பொருள் கொள்க. சத்தி - ஆற்றல்; என்றது கரணத்தையும், `மெய்ஞ்ஞானம்` என்றது சவிகற்ப ஞானத்தையும் ஆகும். `மூவகை ஆன்மாக்களுக்கும் சவிகற்ப உணர்வு வாக்குக்களாலேதான் உண்டாகும்` என்பதை,
``மூவகை அணுக்க ளுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில் விளங்கிய ஞானம் இன்றாம்``*
என்னும் சிவஞான சித்தியாலும் அறியலாம். விளங்கிய ஞானம் - சவிகற்ப உணர்வு.
`கேவலத்தில் நின்ற ஆன்மாக்கள் தங்கள் தங்களுக்கு ஏற்ற தனு கரண புவன போகங்களால் சகல நிலையை அடையும்` என்பது கருத்து.
இதனால், மூவகை ஆன்மாக்களுக்கும் சகலாவத்தை நிகழுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கேவல மாதியில் பேதம் கிளக் குறின்
கேவலம் மூன்றும் கிளறும் சகலத்துள்
ஆவயின் மூன்றும் அதிசுத்தம் மூன்றுமா
ஓவலில்லாஒன்பான் உற்றுணர்வோர்கட்கே.

பொழிப்புரை :

காரண அவத்தைகள் `கேவலம்` முதல் மூன்றாகச் சொல்லப்பட்டாலும் அவற்றுள் ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை எடுத்துச் சொல்லுமிடத்து `கேவலத்திற் கேவலம், கேவலத்திற் சகலம், கேவலத்திற் சுத்தம்` என்று மூன்றும், `சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தம்` என மூன்றும், `சுத்தத்திற் கேவலம், சுத்தத்திற் சகலம், சுத்தத்திற் சுத்தம்` என மூன்றும் ஆக ஒன்பதாம். இவ்வேறுபாடுகள் நுண்ணுணர்வுடையார்க்கே விளங்கும்.

குறிப்புரை :

இதனால், காரண அவத்கைள் மூன்றிலும் உள்ள வேற்றுமை வகைகள் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 24

கேவலத் திற்கே வலம்அதீ தாதீதம்
கேவலத் திற்சக லங்கள் வயந்தவம்
கேவலத் திற்சுத்தங் கேடில்விஞ் ஞாகலர்
ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.

பொழிப்புரை :

உயிர்கட்கு ஆணவ மல மறைப்பைச் சிறிதே நீக்கிச் சிறிதே அறிவைத் தருவன மாயா கருவிகள். அதனால், அவை ஒடுங்கிய விடத்து ஆணவம் மேற்படுவதே கேவல நிலை. கீழா லவத்தை மத்தியாலவத்தைகளில் எல்லாக் கருவிகளும் நீங்காது, தலை யாய கருவிகள் நீங்கியதே `அதீதம்` எனப்படுகின்றது. கீழா லவத்தையில் நிகழும் அதீதம் முக்குண வடிவான பிரகிருதி மேம் பட்ட நிலை. மத்தியாலவத்தையில் நிகழும் அதீதத்திலும் சிவ தத்துவமும், கால தத்துவமும் ஒடுங்காதே நிற்க, உயிருக்குப் புலன்கள் மிக்கு நிகழும். இதுவும் அதீதமேயாகும். இவ்விரண்டும் சகலாதீதமாகும்.
சருவ சங்கார காலத்தில் இறைவன் எல்லாக்கருவிகளையும் அழித்துவிட்டு, உயிர்களுக்கு முழு ஒய்வைத் தருதலால், அது பொழுது உயிர், உணர்வு சிறிதுமின்றி, முழுமூடமாய், ஆணவ இருளில் மூழ்கிக் கிடக்கும். இது கேவலாதீதமாகும். இதனையே `விஞ்ஞான கேவலம்` என்பர். இந்நிலையில், ஒடுக்கிய உயிர்களை இறைவன் மீளத் தோற்றுவிக்க முயலும் நிலையும் கேவலந்தான். அதனையும் `சகல கேவலம்` - என்றே கூறுவர். அதற்குக் காரணம் அந் நிலையில் இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்வான் என்பதே. இவை முதலான அவத்தைகள் பலவற்றுள் ஒன்றும் இல்லாது ஆன்மா ஆணவ இருளில் மூழ்கிக் கிடந்த நிலை அனாதி கேவலமாகும். இதனை, `மருட் கேவலம்` - என்பர். இவற்றுள் இரு சகலாதீதத்திற்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான கேவலத்தையே, `அதீதாதீதமாகிய கேவலத்தில் கேவலம்` என்றார். அதீதாதீதம் - அப்பாலைக்கு அப்பால்.
மேற்கூறியவாறு இறைவன் சூக்கும ஐந்தொழில் செய்யும் நிலையாகிய சகல கேவலமே கேவலத்தில் சகலமாம். சூக்கும ஐந் தொழிலாவது சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும் தோற்று விக்கும் முகத்தால் உயிர்கட்கு உணர்வைப் பொதுவாக நிகழ்வித்தல். சிவதத்துவங்கள், வித்தியா தத்துவங்களைச் செலுத்தியவழியே உயிர் கட்கு அறிவு இச்சை செயல்கள் சிறப்பாக விளங்கும். அஃது இந்நிலை -யில் இல்லாமையாலும், நால்வகை வாக்குக்களும் சுத்த மாயையில் காரியமேயாதலாலும், `கேவலத்தில் சகலங்கள் வயிந் தவம்` என்றார். வயிந்தவம் (வைந்தவம்) - விந்துவின் காரியம். விந்து- சுத்த மாயை. வாக்குக்கள் பலவாதலால் அவற்றால் தோன்றும் உணர்வுகளும் பலவாதல் பற்றிச் `சகலங்கள்` எனப் பன்மையாகக் கூறினார்.
சகலரும், பிரளயாகலரும், `விஞ்ஞானகலர்` என்னும் நிலையை அடைதலே, கேவலத்தில் சுத்தமாகும். அஃதாவது` சகலர் மண் ணாதி கலையந்தம் முப்பத்தொரு தத்துவங்களைக் கடந்து சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலும், பிரளயாகலர் வித்தியா தத்துவங் -களைக் கடந்து, சுத்த தத்துவ பந்தத்தை மட்டும் உடையர் ஆதலுமாம்.
இந்நிலையை அடைந்த பிரளயாகலர் சகலர்கட்கும் இறைவன் இயற்கை விஞ்ஞானகலர்க்குப் பக்குவ காலத்தில் உள்நின்றே ஞானத்தை உணர்த்தி, வீடு தந்தருள்வது போலவே அருள்தருவான்.

குறிப்புரை :

`விஞ்ஞான` என்பது கடைக் குறைந்து நின்றது. `விஞ் ஞானகலர் ஆதல்` எனவும், `அருள் மூர்த்தி யாதல்` எனவும், `தானேயாய்` எனவும் எஞ்சி நின்ற சொல்லெச்சங்கள் வருவித்துக் கொள்க. தானேயாதலாவது, செயற்கையால் முன்னிலையினும், படர்க்கையினும் தோன்றாமல், இயற்கையில் தன்மையிலே நிற்றல். `அருள் மூர்த்தியாதலும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மையும், `தானேயாயே` என்னும் தேற்றேகாரமும் அவ்விடங்களில் உடன் வருவிக்க.
இதனால், முன் மந்திரத்தில் ஒன்பதாகத் தொகுத்துக் கூறிய அவத்தைகளில் `கேவலத்தில் மூன்று` என்ற அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சகலத்திற் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிரா தீதம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையில் நிகழும் அதீதமே சகலத்திற் கேவலமாகும். மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரமே சகலத்திற் சகலமாகும். சகலத்தில் சுத்தாவத்தையே சகலத்தில் சுத்தமாகும்.

குறிப்புரை :

மத்தியாலவத்தை, சகலத்தில் சுத்தாவத்தை இவை -களின் இயல்புகள் மேலே உணர்த்தப்பட்டன. முதற்கண் ஒன்பதாக வகுத்துக்காட்டி, இங்கு, `சகலத்தில் இம்மூன்று தன்மையும் ஆம்` என்றது, `கீழாலவத்தை, மத்தியாலவத்தை, மேலாலவத்தை இவையும் சகலத்திற் கேவலமும், சகலத்தில், சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆம்`-என்பது உணர்த்துதற்கு.
இதனால், முன் மந்திரத்தில் கூறியவற்றைத் தொடர்ந்து `சகலத்தில் மூன்று` - எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சுத்தத்திற் சுத்தமே தொல்சிவம் ஆகுதல்
சுத்தத்திற் கேவலம் தொல் உப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே.

பொழிப்புரை :

பரமசிவனோடு இரண்டறக் கலந்த நிலையே சுத்தத்தில் சுத்தம். சீவன் முத்தி நிலையில் பிராரத்தத்தால் விளையும் இன்பத் துன்பங்களில் விருப்பு வெறுப்பற்றிருக்கும் நிலையே சுத்தத்தில் கேவலம். சீவன் முத்தி நிலையில் உலகர்பால் இரக்கம் மிக்கு அவர்கட்கு உய்தியை வலிந்து சென்றும் உணர்வித்தலும், அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி இவைகளை அடைந்து அவ்வந் நிலையில் விளையும் சுத்த போகங்களை நுகர்தலும் சுத்தத்தில் சகலம்.

குறிப்புரை :

உபசாந்தம் - அமைதி; நடுவு நிலைமை. விலாசம் - விளையாட்டு; தமக்கு உவப்பான செயல்களில் ஈடுபடுதல். இங்கும், `சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலும் ஆமே` என்றது, `சீவன் முத்தி ஒன்றிலேதானே இம்மூன்றும் சொல்லுதற்கும் உரியன என்பது உணர்த்துதற்கு.
இதனால், `சுத்தத்தில் மூன்று` எனப்பட்ட அவத்தைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

சாக்கிர சாக்கிரந் தன்னிற் கனவொடு
சாக்கிரந் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிர தீதந் தனில்சகா னந்தமே
ஆக்கும் மறையாதி ஐம்மல பாசமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்திலும் சொல்லுலகம் முதலாகச் சொல்லப்படுகின்ற ஐந்து மலங்க ளாகிய பாசங்களே உயிருக்கு உலக அனுபவங்களையே தந்து நிற்கும்.

குறிப்புரை :

எனவே, `இவைகள் மலாவத்தைகளேயன்றிப் பரா வத்தைகள் அல்ல` என்பதாம். முதற்கண் நின்ற, `சாக்கிரம்` என்பது மத்தியாலவத்தையைக் குறித்தது. இரண்டு, மூன்றாம் அடிகளில் வந்த `சாக்கிரம்` என்பவனவும் சொற்பொருட் பின்வரு நிலையாய், அதனையே குறித்து நின்றது. ஒடு, எண் ஒடு. மறையாதி - வேதம் முதலியன. அவை சொல்லுலகம் ஆதலை நினைக. `சாக்கிர சாக்கிரந் தன்னில் ... சாக்கிராதீதந்தனில், மறையாதி ஐம்மல பாசமே சகா னந்தமே ஆக்கும்` எனக் கூட்டி முடிக்க. ஏகாரம் இரண்டும் பிரிநிலை. அவற்றுள் முன்னதனால் பிரிக்கப் பட்டது சிவானந்தமும், பின்னதனால் பிரிக்கப் பட்டது திருவருளும் ஆகும். எனவே, `பராவத்தையில் உயிருக்குத் திருவருள் சிவானந்தத்தை ஆக்கும்` -என்பது போந்தது.
இதனால், `சகலம், சுத்தம்` - என்னும் இரண்டிற்குக் காரணமும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 28

சாக்கிரா தீதத்தில் தான்அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கும் பரோபாதி ஆம்உப சாந்தத்தை
நோக்கு மலம்குணம் நோக்குத லாமே.

பொழிப்புரை :

(`சாக்கிராதீதம்`-என்ற பெயர் சொல்லப்படுவன இரண்டு. ஒன்று ஆணவம் நீங்கிய சாக்கிராதீதம்; மற்றொன்று, ஆணவம் நீங்காத சாக்கிராதீதம்.) அவற்றுள் ஆணவம் நீங்கிய சாக்கிராதீதமும் பராவத்தையில் உயிர் சென்று தங்காதபடி பரோ பாதியை உண்டாக்கும் ஆகையால், பராவத்தையாகிய உபாதியற்ற நிலையை நோக்கியே செல். ஏனெனில், `உபாதியாயினும் பரோபாதி தானே` என நினைப்பனவெல்லாம் பாசத்தோடு கூடியிருக்க நினைப்பனவேயாகும்.

குறிப்புரை :

`ஆணவம் அறும் சாக்கிராதீதம்` என எடுத்துக் கொண்டு உரைக்க. தான், அசை, பாடத்தை இவ்வாறே ஓதலும் ஆம். ஆணவம் அறாத சாக்கிராதீதம், மத்தியாலவத்தையில் நிகழும் அதீதம். ஆணவம் அற்ற சாக்கிராதீதம், நின்மலாவத்தையில் நிகழும் அதீதம். இவை யிரண்டும் சகலத்தில் சகலமும், சகலத்தில் சுத்தமும் ஆகும். இவற்றுள் நின்மலாவத்தைகள் தமக்குக் கீழ் உள்ளவற்றை நோக்கச் சுத்தமே யாயினும், உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் செல்லு தற்குத் தடை யாதலும் உடையன. அவை அன்னவாதல் பரோபாதியை உடைமை யினாலாம். அது பற்றியே, `பராவத்தை தங்காது பரோ பாதியை ஆக்கும்` என்றார். உபாதி - தடை. பரோபாதி - மேல் நிலைத் தடை. அஃது உலகம் எங்கும் சிவம் நிறைந்து நிற்றலை நினைந்து எப்பொருளிலும் சிவத்தையே கண்டிருத்தல். இது சிறப்புடையதே யாயினும், சிவத்தையே நேராகக் கண்டிருத்தலை நோக்கச் சிறப்பில தாதலை உணர்க.
உபசாந்தம் - உபாதியற்றநிலை. அது பராவத்தையேயாதல் அறிக. `உபசனுந்தத்தையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. `குணம் நோக்குதல் மலம் நோக்குதலாகும்` - என மொழி மாற்றி, `அதன் குணம்` என உரைக்க. எல்லாப் பொருளிலும் சிவத் தையே காணிணும் அஃது உலகத்தை இடையிட்டுக் காண்பதேயாத -லின் அக்காட்சியின் சிறப்பை மட்டும் நோக்குதல், `மலம் நோக்குதல் ஆகும்` என்றார். சிவத்தை `உபாதி` என உரைத்தாரும்` உளர்.
இதனால், மேற்கூறிய அவத்தை பேதங்களில் `சுத்தத்திற் சுத்தத்தையே குறிக்கொண்டு முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான்உண்ணும்
`அத்தன் அருள்` என்(று) அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.

பொழிப்புரை :

`பெத்தம், முத்தி` - என்பவற்றையும், `சாக்கிர சொப்பன சுழுத்திகளுக்கு அப்பாலும், குறைந்த கருவிகளே செயற் படுகின்ற துரியம், ஒரு கருவியும் செயற்படாத துரியாதீதம் ஆகிய அவத்தைகள் உள` என்பதையும் அறியாமலே உயிர், அவத்தைகளை அனுபவித்து வருகின்றது. ஆயினும், `அவையெல்லாம் சிவனது திருவருளால் இன்ன இன்னவாறு நிகழ்கின்றன` என்பதை அவனது அருளாலே அறிந்த பின், உயிருக்குத் தற்போதம் இல்லை. அஃது இல்லையாகவே, அதற்குத் தனக்கென யாதொரு செயலும் இல்லை.

குறிப்புரை :

``சுத்தம்`` என்றது கருவிகள் அனைத்தும் ஒடுங்கிய ஒடுக்கத்தைக் குறித்தது. துரியமும், அதீதமும் அறிதற்கு அரியனவாம். ``தோன்றாமல்`` என்பது வழக்கு முறையால், ``தோன்றப் பெறாமல்`` எனப் பொருள் தந்தது. ``தான்`` என்றது உயிரை. உண்டல் - அனுபவித்தல். ``அறிந்த பின்`` எனக் கூறிப் பின் நிகழ்ச்சியை உணர்த் -தினமையால், `அதற்குமுன் கூறப்பட்டவை அறிதற்கு முற்பட்ட நிகழ்ச்சி` என்பது விளங்கிக் கிடந்தது. ஆகவே, ``அனுபவிக்கும்`` எனக் கூறப்பட்ட அவத்தைகள் பெத்த அவத்தைகள் - என்பதும், `அறிந்த பின் நிகழ்வன மத்தியவத்தைகள்` என்பதும் போந்தன. `தான்` என்றது திரோதான சத்தியை - எனக் கொள்கின்றவர்கள், `சுத்த துரியாதீதத்தையும் அது மறைக்கும், என உரைத்தல் வியப்பிற்குரியது.
இதனால், பலவாகக் கூறப்பட்ட அவத்தைகள் எல்லாம் பெத்த அவத்தை, முத்தி அவத்தை என இரண்டாய் அடங்குதலும் அவற்றுள் பெத்த அவத்தைகள் மலங்களாலும் அவத்தைகள் திருவருளாலும் நிகழ்தலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

எய்திய பெத்தமும் முத்தியும் என்பன
எய்தும் அரன்அரு ளே விளையாட்டோ(டு)
`எய்தி டுயிர்சுத்தத் திடும்நெறி` என்னவே
எய்தும் உயிர்இறை பால் அறி வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் அனாதியே அடைந்துள்ள பெத்த நிலையும், பின்பு முடிவில் அடையும் முத்தி நிலையும் சிவன் தனக்கு ஒரு விளையாட்டைப் போல மிக எளிதிற் செய்யும் அருட்செயலே யாகும். `அச்செயல்களில் அகப்பட்டு வருகின்ற உயிர்கள், இறுதியில் மாசு நீங்கிய நிலையில் இடப்படும்` என்று சொல்லப்படுவதால், அந்நிலையில் அவை சிவனையே அடைந்திருக்கும். அப்பொழுது அவை அறிவே முடிவாய் இருக்கும்.

குறிப்புரை :

`விளையாட்டு` என்றது, விளையாட்டுப் போல் வதனைக் குறித்தது. ஒடுருபை ஆல் உருபாகத் திரித்து, `எய்தும் அருள்` என முன்னே கூட்டி முடிக்க. அருளால் நிகழவனவற்றை அருளாகவே உபசரித்துக் கூறினார். `எய்திடு உயிர் நெறியானே சுத்தத்து இடும் என்னவே` எனக் கூட்டுக. இடும் - இடப்படும். என்ன - என்று சொல்லப்படுதலால். `அறிவாம்` என்றதனால், முன்பு அறியாமையாய் இருந்தமை பெறப்படும்.
இதனால், `எல்லாம் சிவனது அருளேயாதலின் அவ்வருள், முடிவில் சிவனையே அடைவிக்கும்` என்பதும், `அந்நிலை அறிவு நிலை` என்பதும் கூறப்பட்டன. `அறிவு நிலை` என்றதனால் `ஆனந்த நிலை` என்பது சொல்லாமலே அமைந்தது.

பண் :

பாடல் எண் : 31

ஐம்மலத் தாரும் அதித்த சகலத்தர்
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தர்
ஐம்மலத் தார்சுவர்க் கம்நர காள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கறி வோரே

பொழிப்புரை :

ஐந்து மலங்களையுடையவர்களாகச் சொல்லப் படுவோர் யாவரும் அதிகமான மாயைத் தொடக்கு உடையவர்கள். அவர்கள் அசுத்த வினையிலும் நீக்குதற்கரிய தூல வினைத் தொடக்குடையவர்கள். அத்தன்மைத்தான வினைத்தொடக்கால் சுவர்க்க நரகங்களை அடைந்து உழல்பவர்கள். ஆகையால், அவர்கள் சிவனை எளிதில் அறியும் அறிவுடையராவாரோ! `ஆகார்`.

குறிப்புரை :

`அதனால், அவர்கட்குச் சிவன் தன்மையிலும், முன்னிலையிலும் தானே நேர்நின்று ஞானத்தை உணர்த்தாமல், படர்க்கையில் ஆசான் மூர்த்தியை அதிட்டித்து நின்று, பலநாள் உடன் கொண்டு, கேட்பித்தும், சிந்திப்பித்தும், தெளிவித்தும் ஞானத்தை உணர்த்துவன்` என்பது குறிப்பெச்சம். `ஆகவே, இவர்கள் சுத்தாவத்தையை அரிதில் எய்துவர்` என்பதாம்.
முன் இரண்டடிகளில், `ஐம்மலத்து ஆரும்` எனப் பிரித்து இரண்டாம் வேற்றுமைப் பெயர்த் தொகையாகக் கொள்க. `அதிகரித்த` என்பது, `அதித்த` எனக் குறைந்து நின்றது. `சகலர்` என்பது, `மாயையோடு கூடினவர்` எனப் பொருள் தரும் ஆதலின், `அதிகரித்த சகலர்` என்பது, பெரிதும் மயக்கத்தைத் தருகின்ற, முக்குண வடிவாகிய பிரகிருதி பந்தத்தை உடையவர் ஆதலைக் குறித்தது. `அரனார்க்கு` என்றது, `அரனாரை அறிவதற்கு` என்றபடி. ஏகார வினா, எதிர்மறைப் பொருளில் வந்தது.
இதனால், சுத்தாவத்தை பற்றியதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையாம்
உரிய சுழுத்தி முதல்எட்டும் சூக்கத்(து)
அரிய கனா தூலம் அந்நன வாமே.

பொழிப்புரை :

(உயிர்கள் யாதானும் ஓர்யோனியிற்புக்குப் பிறந்த பின்பு தான் சாக்கிரம் முதலிய அவத்தைகளை அடையும்` எனக் கருத வேண்டா. அவ்வவ் யோனியிற் புக்கிருக்கும் நிலையிலு ஐந்தவத்தை -களை அடையும். அவை கருவளர் அவத்தைகளாம்.)
வித்தில் நின்ற உயிரை முளையாகிய உடம்போடு முதற்கண் கலக்கச் செய்வதாகிய `காரண சரீரம்`, அல்லது, `ஆனந்தமயகோசம்` எனப்படுகின்ற மாயா தத்துவத்தோடு உயிர்தொடர்பு கொள்வதே கருவினில் துரியாதீதம். பின்பு `கஞ்சுக சரீரம்` அல்லது, `விஞ்ஞானமய கோசம்` - எனப்படுகின்ற, அராகம் முதலிய ஐந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் துரியம். பின்பு, `குணசரீரம்`, அல்லது, `மனோமய கோசம்` எனப்படுகின்ற மூலப் பிரகிருதியோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சுழுத்தி. பின்பு, `சூக்கும சரீரம்`, அல்லது `பிராணமய கோசம்` எனப்படுகின்ற சித்தம் ஒழிந்த அந்தக்கரணம் மூன்று, தன்மாத்திரை ஐந்து ஆக எட்டுத் தத்துவங் களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சொப்பனம். (சித்தம் பிரகிருதியில் அடங்கும்.) பின்பு, `தூல சரீரம்`, அல்லது அன்னமய கோசம்` எனப்படுகின்ற ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, மாபூதம் ஐந்து ஆகப் பதினைந்து தத்துவங்களோடு உயிர் தொடர்பு கொள்வதே கருவினில் சாக்கிரம்.

குறிப்புரை :

இந்த ஐவகைச் சரீரங்கள் பற்றியே இத் தந்திரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டது. உயிர்கள் கேவல நிலையிலிருந்து சகல நிலைக்கு வரும்பொழுது அதீத நிலையிலிருந்தே முறையாக வருதல் பற்றி, `கருவளர்ச்சியும் அதீதத்திலிருந்தே முறையாக நிகழும்` என அறியுமாறு அவத்தைகளை அதீதத்திலிருந்து முறையாகக் கூறினார். ஆசை - அராகம். தோற்ற முறையில் இறுதிக்கண் உள்ள அராகத்தைக் கூறவே, அதற்கு முன்னுள்ள தத்துவங்களும் அடங்கின. முதல் - மூலம்; அது மூலப் பிரகிருதி. எட்டுதல் - தீண்டுதல். `சுழுத்தி, முதலை எட்டும்` என்க. சுழுத்தியில் நிற்கும் உயிரினது செயலைச் சுழுத்தியின் செயலாகக் கூறினார். `சூக்கத்து` என்றாற்போலத் `தூலம்` என்பதிலும் அத்துச் சாரியை விரித்து, `ஆம்` என்பதைக் `கனா` என்பதனோடும் கூட்டுக.
இதனால், கருவிலும் அஞ்சவத்தைகள் நிகழ்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

ஆணவம் ஆகும் அதீதம் மேல் மாயையாம்
பூணும் துரியம் சுழுத்திபொய்க் காமியம்
பேணுங் கனவுமா யேயம் திரோதாயி
காணும் நனவில் மலக்கலப் பாகுமே.

பொழிப்புரை :

துரியாதீத நிலையில் உயிருக்கு ஆணவ மலம் மட்டுமே இருக்கும். அதற்குமேலே உள்ள தான துரிய நிலையில் அதனோடு வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் முதலிலே உள்ள மாயா தத்துவம் வந்து பற்றும். அடுத்து நிகழும் சுழுத்திய வத்தையில் நல்லனவும் தீயனவும் ஆகரிய காரிய கன்மங்கள் வந்து பற்றும். (இதனால், கால தத்துவமும், நியதி தத்துவமும் பற்றுதல் பெறப்படும்) அடுத்து நிகழும் சொப்பனத்தில் மேற்கூறிய கன்மங் களுக்கு ஏற்பமாயா காரியங்களான கலை முதல் நிலம் ஈறான ஏனை எல்லாத் தத்துவங்களும் வந்து பற்றும். (ஆகவே, சுத்த தத்துவங்கள் வந்து பற்றுதலும் தானே அமைந்தது.) இறுதியாக நிகழும் சாக்கிரத்தில், முன்பு நான்கு மலங்களும் பற்றிக்கொண்டதனால் அவை அனைத் -தையும் செலுத்துகின்ற திரோதான மலம் வந்து பற்றும். (என்றது, `அனைத்தையும் முழுமையாக நடத்தும்` என்றபடி.) ஐந்தவத்தை -களிலும் ஐந்து மலங்கள் இம்முறையில் உயிரை வந்து பற்றுவனவாம்.

குறிப்புரை :

`அதீதம் ஆணவம் ஆகும்; மேல் பூணும் துரியம் மாயை ஆம்; சுழுத்தி பொய்க் காவியம் ஆம்; பேணுங்களவு மாயேயம் ஆம்; நனவில் திரோதாயி காணும்; மலக் கலப்பு இவ்வாறு ஆகும்` என இம்மந்திரத்தின் சொல்முறைமை கொள்க.
காரணம் நிலையுடைமையால் அது, `மெய்` என்றும், காரியம் நிலையால் அது, `பொய்` என்றும் சொல்லப்படும். கான்மியம், `காமியம்` என மருவி வழங்கும். `மாயேயம்` எனவரும் இடங்களில் எல்லாம் `மாமாயை` எனப் பாடம் திரிக்கப்பட்டது என்பதை மேலேயும் கூறுவோம்.
இதனால், அவத்தைகளில் பாசங்கள் பற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

அரன்முத லாக அறிவோர் அதீதத்தர்
அரன்முத லாமாயை தங்கிச் சுழுத்திக்
கருமம் உணர்ந்து மாயேயங்கைக் கொண்டோர்
அருளும் மறைவார் சகலத்துற் றாரே.

பொழிப்புரை :

`ஆணவம் அதீதத்தில் பற்றும்` என முன் மந்திரத்தில் கூறினமையால், அந்நிலையை மட்டும் உடையராய் அதிலே நிற்பவர்கள், `சிவபெருமான் முதல்வன்` என உணரும் உணர்வை இழவார். (இவர்கள் விஞ்ஞான கலரே.)
`மாயா தத்துவம் துரியத்தில் வந்து பற்றும்` என்றும், `வித்தியா தத்துவங்களில் காலமும், நியதியும் வந்து பற்றும்` என்றும் முன் மந்திரத்தில் கூறினமையால், அந்த இரண்டில் நிற்பவர்களும் மேற் கூறப்பட்டவர்போல, `சிவபெருமானே முதல்வன்` என்னும் உணர்வை இழத்தல் இல்லை. (இவர்கள் இருதிறத்தினரும் தம்முட் சிறிது வேறுபாடுடைய பிரளயாகலரே. இவர்களில் பின்னவர் புருட தத்துவத்திற்குச் சிறப்பு ஏதுவாய் நிற்கும் கலை, வித்தை, அராகங்களைப் பொதுமையாக அன்றிச் சிறப்பாக உடையராகார் என்பது நாயனார் கருத்து - என்க. `கருவில் அதீதம்` என்னும் மந்திரத்திற் கூறியவற்றிற்கும், அடுத்து முன் மந்திரத்திற் கூறிய வற்றிற்கும் சிறிது வேறுபாடு உண்டென்க.)
`கலை முதலிய ஏனை எல்லாத் தத்துவங்களும் சொப்பனத்தில் வந்து பற்றும்` - என்று முன் மந்திரத்தில் கூறப் பட்டமையால், அவர்கள், `தமக்கொரு தலைவன் உளன்` என்பதையே அறியார். இவர்கள் சகல வருக்கத்தினரே.

குறிப்புரை :

சொப்பன நிலைதானே இத்தன்மையதாகலின், சாக்கிரநிலை இத்தன்மையதாதல் சொல்லவேண்டாவாயிற்று.
இறுதியில் `சகலத்துற்றார்` எனக் கூறியதனால், மேற் சொல்லப்பட்டவர்கள் விஞ்ஞானகலரும், பிரளயாகலருமாதல் விளங்கிற்று. அவத்தைகளைக் கூறியது பற்றி, அவற்றில் வந்து பற்றும் மலங்களையும், மலங்களைக் கூறியது பற்றி அவை வந்து பற்றும் அவத்தைகளையும் முன் மந்திரம் பற்றி உயத்துணர வைத்தார். `அருளும்` என்ற உம்மை, முதல்வனைப் பொதுப்பட உணரும் உணர்வும் இலராதலைக் குறித்தது.
இம் மந்திரத்தில் பாடம் பலவிடத்துத் திரிவுபட்டுள்ளது.
இதனால், மூவகை உயிர்கள் அடையும் அவத்தைகளின் கூடுதல் குறைவுகள் கூறும் முகத்தால் அவற்றின் பாச நிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

உருவுற்றுப் போகமே போக்கியத் துற்று
மருவுற்றுப் பூத மனாதியால் மன்னி
வரும்அச் செயல்பற்றி சத்தாதி வைகிக்
கருவுற் றிடுஞ்சீவன் காணும் சகலத்தே.

பொழிப்புரை :

`கருவில் அதீதம்`l என்னும் மந்திரத்திற் கூறியபடி கருவிலேயே பல அவத்தைகளை அடைந்த உயிர், பின்பு பலருங்காணப் பிறந்து, சகலாவத்தையில் பூதம் முதலிய புறக் கருவிகளாலும், மனம் முதலிய அகக் கருவிகளாலும் செய்தற் குரிய செயல்களை மேற்கொண்டு, பல போக்கியப் பொருள்களில் பொருந்தி, ஓசை முதலிய புலன்களில் மூழ்கிப் பலவகை அனுபவங்களை அனுபவிப்பதாய்க் காணப்படும்.

குறிப்புரை :

`கருவுற்றிடும் சீவன் உரு உற்றுச்சகலத்தே பூத மனாதியால் மன்னிவரும் செயல் பற்றிப் போகத்து உற்றும், சத்தாதி மன்னிப்போகம் மருவுற்றும் காணும்` எனக் கூட்டி முடிக்க. ஞானேந் திரியங்களின் புலன்களையே கூறியவாராயினும், இனம் பற்றிக் கன்மேந்திரியங்களின் புலன்களாகிய மொழிதல் முதலியனவும் கொள்ளப்படும். சூக்கும தூல பூதங்களே ஞானேந்திரிய கன்மேந் திரியங்கட்கு நிலைக்களன் ஆதல் பற்றி அவற்றை, ``பூதம்`` எனப் பொதுப்படக் கூறினார். பூத மனாதி, `பூதங்களும் மனாதிகளும்` என உம்மைத் தொகை.
இதனால், சகல வருக்கத்து உயிர்கள் சகல நிலையில் நிற்குமாறு இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

இருவினை ஒத்திட இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதரம் மன்னிக்
குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

பொழிப்புரை :

உயிர்கள் தமக்கு இருவினையொப்பு வாய்க்கப் பெற்ற பொழுது சிவனது சத்தி முன்பு பிறவித் துன்பத்தைத் தரும் திரோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, வீட்டின்பத்தைத் தரும் அருட்சத்தியாகித் தங்கள் அறிவில் பதியப் பெற்று, அதனானே மெய்யுணர்வு வேட்கை நிலைத்து நிற்க அவ்வேட்கை மிகுதியால் ஞான குருவை அடைந்து அவர் உபதேசித்த முறைப்படி தம்மைச் சிவனது அருட்சத்தியின் வழிப்படுத்திக் கொண்டு, அதனாலே எல்லா மலங்களும் நீங்கப் பெற்று, மீட்டும் பிறவா நிலையில் நிற்பதே சுத்தாவத்தையாம்.

குறிப்புரை :

கேவல நிலையில் இருந்த உயிர்கள் சகல நிலையை அடைந்த பின்பு அதன்கண் பல்வேறு பிறப்புக்களை எய்தி, வினைகளை ஈட்டியும், நுகர்ந்தும் வரும். அப்பொழுது நல்வினைப் பயன்களில் விருப்பமும், தீவினைப் பயன்களில் வெறுப்பும் கொண்டு, நல்வினைப் பயன்களை விரைவில் எய்தவும், எய்திய வழி நீங்காது நிறுத்திக் கொள்ளவும், தீவினைப் பயன்களை எய்தாது தடுக்கவும், எய்தியவழி விரைவில் அகற்றவும் முயலும், அம்முயற்சியே அவற்றிற்குப் பின்னைப் பிறவி கட்குக் காரணமாய் அமையும். ஆகவே, `நல்வினையும் தீவினை போலப் பிறப்பைத் தருவதே` என உணர்ந்து, `விலங்கு பொன்னால் இயன்றதாயினும், இரும்பால் இயன்றதாயினும் விலங்கயேன்றி வேறன்று` என்பதுபோல, இருவகை வினைகளையும் தளைகளாகவே உணர்ந்து, விருப்பு வெறுப்பின்றி இரண்டையும் சமமாக நோக்கும் பக்குவ நிலையே இருவினை யொப்பாகும். அத்தகைய நோக்கு உண்டாயின், மேலும் மேலும் வினை ஏறுதல் நீங்கும். அந்நிலையில் என்றுமே உயிரினது அறிவில் ஒன்றி நிற்கின்ற சிவனது சத்தி, முன்பு திதோதான சத்தியாய் இருந்த நிலைமை மாறி, அருட்சத்தியாகிப் பதியும். அதுவே சத்தி நிபாதம். சத்தி நிபாதத்தால் `வினைகளே பிறப்பிற்குக் காரணம்` - என்பதை உணர்ந்து, உயிர் வினைக்கு அஞ்சும். அவ்வஞ்சுதல், பிறவிக்கு அஞ்சுதலேயாகும். இங்ஙனம் பிறவிக்கு அஞ்சும் உயிர், பிறவி நீங்கும் வழியை உணர்த்துவாரையே நாடி ஓடும். அவ்வாறு ஓடுதலே ஞான வேட்கையாகும். இந்த ஞானவேட்கையே சத்தி நிபாதத்தின் பயன். அவ்வேட்கை நீங்காது நிலைக்கப் பெற்ற உயிர்களின் முன் சிவன், ஞானியராகிய ஆசான் மூர்த்திகளை அதிட்டித்து நின்று, ஞானத்தை உணர்த்துவன். அவ்வாறு உணர்த்த உணர்ந்த உயிர், அஞ்ஞானம் நீங்கப் பெற்றுச் சிவனை அடைந்து, அவனைப் போலவே பிறவாமை யுடையதாய் அவனது இன்பத்தில் திளைத்திருக்கும். அவ்வாறு திளைத்திருத்தலே சுத்தாவத்தை. இவையே இம்மந்திரத்தில் முறையாகக் கூறப்பட்டன.
அருட்சத்தியை, `இன்னருட்சத்தி` என்றதனால், திரோதான சத்தி இன்னாமைச் சத்தியாதல் விளங்கிற்று. ஆதரம் - விருப்பம். சத்தி நிபாதம் வாயாத முன்பும் இடையிடையேயும் ஓரொரு கால் ஞானவேட்கை நிகழுமாயினும் அது, துயில் எழாதவன் துயிலின் இடையிலே சிறிது சிறிது விழிப்பை அடைதல்போல, நிலைத்தல் இன்றி விரைய நீங்குவதாக, சத்தி நிபாதத்தின் பின் உண்டாகும் ஞான வேட்கையே நிலையுடைய உண்மை ஞான வேட்கையாம்` என்பது உணர்த்துதற்கு, `ஞான ஆதரம் மன்னி` என்றார். சக்தி நிபாதம் வாய்க்கப் பெறாதவரது ஞான வேட்கையையே திருவள்ளுவர், `தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்` என்றார்.3 `கூட்டி என்றது, தானே தன்னை அருட்சத்தி வழியில் சேர்த்தி` என்றபடி.
இதனால், சுத்தாவத்தையின் இயல்பு முறைப்பட இனிது விளக்கப்பட்டது. இந்நிலை சிவஞான சித்தியிலும் இவ்வாறே,
``இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்தி தோயக்
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத்
திரிமலம் அறுத்துப் பண்டை சிற்றறி வொழிந்து ஞானம்
பெறுகிநா யகன்றன் பாதம் பெறுவது சுத்த மாமே``*
எனக் கூறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 37

ஆறாறும் ஆ(று) அதின் ஐயைந் தவத்தையோ
டீறாம் அதீதத் துரியத்(து) இவன்எய்தப்
பேறாகும் ஐவரும் போம்பிர காசத்தின்
ஈறார் பரசிவம் ஆதேய மாமே.

பொழிப்புரை :

முப்பத்தாறாகச் சொல்லப்படுகின்ற கருவிகளே அவத்தை வேறுபாடுகட்குக் காரணம். அந்தக் காரணத்தின்வழிக் காரியமாய் நிகழும் அவத்தைகள் இருபத்தைந்து. (கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் சுத்தம், நின்மலம் ஆகிய ஐந்தில் ஒவ்வொன்றிலும் சாக்கிரம் முதலிய ஐந்து.) அந்த இருபத்தைந்தில் முடிவாய் உள்ளது சுத்த துரியாதீதம். அதனை உயிர் அடைந்த பொழுது, ஐந்தொழில் தலைவர்களாகிய ஐவரும் அதனைத் தடை செய்யாது இருக்க, அவ்விடத்து மிக்கு விளங்கும் அருள் ஞான ஒளியினால், அனைத்துயிர்கட்கும் முடிவான புகலிடமாய் உள்ள பரசிவனது பேரின்பம் அதன் அறிவினுள்ளே பொங்கித் ததும்பும்.

குறிப்புரை :

முப்பத்தாறினையும் தொகுத்து `ஆறு` என ஒன்றாகக் கூறினமையின் `அதின்` என ஒருமையாற் கூறினார். ஆறு - வழி. `ஓட` என்னும் செயவெனெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ஓடுதல், தொடர்ச்சியாக நிகழ்தல். `போம்` என்னும் பெயரெச்சம், `போய தனால் உண்டாகும்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. ஈறார் பரசிவம் - முடிநிலையில் பொருந்தி நிற்கும் பரசிவம். ஆதேயம் - இடத்து நிகழ்பொருள். ``ஆதேயம் ஆம்`` என்றதனால, ``பரசிவம்` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் இன்பத்தைக் குறித்தது. எந்நிலையிலும் சிவம் உயிருக்கு ஆதாரமேயன்றி, ஆதேயம் ஆகாது. எனினும் அதனால் தரப்படும் இன்பம் உயிரினது அறிவினுள்ளே ஊற் றெழவே உயிர் அதனை நுகர்வதாகும். அதுபற்றி அஃது `ஆதேயம்` எனப்பட்டது. ``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது``l என முன்னருங் கூறினார். ``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம்போல் - பற்ற வாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``1(*) எனவும் ``ஊற்றிருந்துள்ளம் களிப்போன் போற்றி``(*)2 எனவும் ஆளுடை அடிகள் அருளிச் செய்தார். இவை யெல்லாம் பற்றியே,
``ஓங்குணர்வி னுள்ளடங்கி, உள்ளத்துள் இன்பொடுங்கத்
தூங்குவர்``(*)3
என்றார் உமாபதிதேவர். ``ஐயைந்தாவன, சாக்கிரம் முதலிய ஐந்திலும் தனித்தனி நிழும் சாக்கிரம் முதலியன`` என்பார்க்குக் காரண அவத்தைகள் யாதேனும் ஒன்றேபெறப்படுதல் அன்றி, அனைத்தும் பெறப்படாமை அறிக.
இதனால், மேல் பெயரளவாகக் சுட்டப்பட்ட சுத்தாவத்தை -யின் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

தன்னை அறியா துடலைமுன் `தான்` என்றான்
தன்னைமுன் கண்டான் துரியந் தனைக்கண்டான்
உண்ணும் துரியமுன் ஈசனோ டொன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.

பொழிப்புரை :

சகலாவத்தையில் தன்னை உடம்பின் வேறாக உணராமல், உடம்பையே ``தான்`` என உணர்ந்து நின்றவன், சுத்தா வத்தையை ஓரளவேனும் அடைந்த பின்பே தன்னை உடம்பின் வேறு பட்ட பொருளாக உணர்ந்தான். பின்பு சுத்தத்தில் துரிய நிலையை அடைந்து, சிவனது அருளை உணர்ந்தான். ஆயினும் அதனையும் கடந்த சுத்த துரியாதீதத்தை அடைந்து சிவனை உணர்ந்து அவனோடு இரண்டறக் கலவாது, துரியத்திலேயே அவன் இருந்துவிடுவானாயின், உடம்பு நீங்கிய பின், மீளவேறோர் உடம்பை எடுத்தலும் கூடும்.

குறிப்புரை :

``தனைக்கண்டான்`` என்பதில் `தன்` என்றது சிவனை யாகலின், அங்கு, `துரியம்` என்றது சுத்த துரியமேயாயிற்று. அஃது அங்ஙனமாகவே, `முதல்` என்னும் பொருள்பட வந்த `முன்` என்பது, சுத்தாவத்தையின் தொடக்கமாயிற்று. `அதன்கண் தன்னைக் கண்டான்` என்றதனால், தன்னைக் காணாதிருந்தது சகலத்தில் ஆயிற்று. `துரியத்தில்` என ஏழாவது விரிக்க. துரிய நிலை அருள் நிலையும், துரியாதீத நிலையே சிவ நிலையும் ஆதலால், சிவனது அருளே சீவனாக உபசரித்து, `தனைக் கண்டான்` என்றமைதெளிவாம். `துரியமுன்`` என்பதில் `முன்` இடமுன். அவ்விடத்து நிகழ்வது துரியா தீதம். `பின்னையும்` என்ற உம்மை, உயர்வு சிறப்பும்மை. ``பிறந்திடும்`` என்றது, `பிறத்தல் கூடும்` என்றதேயன்றி, அஃது ஒருதலையன்று என்பதைச் சாத்திரங்களைக் கொண்டு தெளிக.
துரிய நிலையில் பிராரத்தவாசனை தாக்காதவாறு திருவருளில் உறைத்து நிற்றல், `நள் அனல் வேவாத நற்றவரது செயலைப் போலவும்`, `பண் அமர மாச் செலுத்தும் பாகரது செயல் போலவும்`l பெரிதும் அரிதாகலின், அதனிற் சிறிதே சோர்வு உண்டாயின், அவ் அற்றம் பார்த்து, பிராரத்த வாசனை தாக்க, அதனால், ஆகாமியம் தோன்றி முதிர்ந்து, அடுத்த பிறப்பு வருதலும் கூடும். அது பற்றியே, `ஈசனோ டொன்றாக்கால் - பின்னையும் வந்து பிறந்திடும்` என்றார். `தான்` என்பதை ஈற்றடியில் முதலிற் கூட்டுக.
இதனால், `சுத்த துரியாதீதமே பிறவா நிலை` என்பது உணர்த்தும் முகத்தால், அதனது இன்றியமையாச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்
ஆக்கிய வந்த வயிந்தவ மால்நந்த
நோக்கும் பிறப்பறும் நோன்முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல்செய் யாவே.

பொழிப்புரை :

புருவ நடுவிற்றானே திருவருளால் சிவத்தைத் தலைப்படும் சாக்கிரம் முதலிய அவத்தைகளில் முடிவான அதீத நிலை கைகூடுமாயின், பாச ஞானத்தை உண்டாக்க வந்த வாக்காகிய மயக்கும் பொருள் கெடும். அது கெடவே, `இனியும் வருங்கொல்` என எதிர்நோக்கி அஞ்சப் படுவதாகிய பிறப்பு, வாராதே ஒழியும். அதனால் பரமுத்தி நிலை கிடைக்கும். எவ்வாறெனில் அவ்விடத்தில் பாச ஞான பசு ஞானங்கள் தோன்ற மாட்டா ஆகையால்,

குறிப்புரை :

`ஆக்கிய` என்பது, `செய்யிய` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். வயிந்தவம் - விந்துவின் காரியம். அஐவ இங்கு வாக்குக்களே. மால் - மயக்கம். நந்த - கெட. `நந்த` என்றமையால், நந்துதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. மயக்கம் தருவனவற்றை, `மயக்கம்` என்றார். பெத்தர்களுக்கு வாக்குக்கள் தெளிவைத் தருவன வாயினும், முத்தர் கட்கு அவை சிவஞானம் நிகழ்தற்குத் தடையாய் உலகுணர்வைப் பயக்கும் ஆதலின் அவற்றை, `மால்` என்றார். நோன்மை - வலிமை. ஏனை முத்திகளினும் வலியுடைத்தாய் நிலைத்து நிற்பது பரமுத்தி என்க. `வாக்கு` என்பது பாச ஞானத்தையும், `மனம்` என்பது பசுஞானத்தை உணர்த்துதலைச் சிவஞானபோதம் ஆறாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்தால் உணர்க.
இதனால், `சாக்கிரத்தில் சுத்தாவத்தையைத் தலைப்பட்டோர் அவற்றுள் துரியத்திலே நின்று விடாமல், துரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என மேற்கூறியது, அதன் பயன் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

அப்பும் அனலும் அகலத்து ளேவரும்
அப்பும் அனலும் அகலத்து ளேவாரா
அப்பும் அனலும் அகலத்துள் ஏதென்னில்
அப்பும் அனலும் கலந்த(து) அவ் ஆறே.

பொழிப்புரை :

`இன்பம், துன்பம்` என்னும் இரண்டும் உலக உணர்வே நிகழும் சகலாவத்தையில் நிலையின்றி, மாறி மாறித் தோன்றும். அகலாவத்தையாகிய சுத்தாவத்தையில் அவை தோன்றவேமாட்டா. `சகலாவத்தையில் அவை தோன்றுதல் ஏன்` எனில், இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததுதான் சகலாவத்தை.

குறிப்புரை :

`பிரபஞ்சம்` என்னும் வடசொல்லுக்கு, `விரிவுடையது` என்பது பொருளாகலின் அதனை `அகலம்` எனத் தமிழாக்கி, முதலிலும், கடைசியிலும் சொற்பின்வரு நிலையணி தோன்றக் கூறினார். அஃது ஆகுபெயராய்ப் பிரபஞ்சத்தை உணர்ந்து நிற்கும் சகலாவத்தையைக் குறித்தது. இடையில் உள்ள `அகலம்`, `சகலம்` என்னும் வடசொற்கு எதிராய வடசொல். `சுத்தம்` என்னாது `அகலம்` என்றது அவ்வணி தோன்றுதற் பொருட்டேயாம். `அப்பும் அனலும்` என்றவை மறைபொருட் சொற்கள். அவையும் சொற்சுவை தோன்ற வந்தனவேயாம். அப்பு - நீர். அனல் - தீ. இவை அவற்றின் வெளிப் படைப் பொருள். அச்சொற்கள் நான்கடியிலும் வந்தது, சொற்பொருட் பின்வருநிலையணி. அவ் ஆறு - அந்த வழி. நிலையை `வழி` என்றார்.
இதனால், சகலாவத்தை பந்தமும், சுத்தாவத்தை வீடும் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

அறுநான் கசுத்தம் அதின் சுத்தா சுத்தம்
உறும்ஏழும் மாயை உடன்ஐந்தே சுத்தம்
பெறுமா றிவைமூன்று காண்டத்தால் பேதித்(து)
உறுமால்மாமாயையின் ஆன்மாவினோடே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களில் கீழ் உள் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அசுத்த தத்துவங்களாகும். அவை அவ் வியத்தமாகிய மூலப்பிரகிருதியினின்றும் நோறி ஒடுங்கும். இடையில் உள்ள வித்தியா தத்துவம் ஏழும் மிச்சிர தத்துதவமாகும். அவை அசுத்த மாயையினின்றும் தோன்றி ஓடுங்கும். மேலே உள்ள சிவ தத்துவம் ஐந்தும் சுத்த தத்துவங்களாகும். அவை சுத்த மாயை யினின்றும் தோன்றி ஒடுங்கும். இம் மூவகைத் தத்துவங்களும் மூன்று காண்டங்களாய்ப் பிரிந்து ஆன்மாவோடு கூடி, அதற்கு அறிவிச்சை செயல்கள் நிகழக் கருவிகளாய் நிற்கும்.

குறிப்புரை :

மூன்று காண்டங்களாவன; `போக்கிய காண்டம், போசயித்திரு காண்டம், பிரேரககாண்டம்` என்பன. இவற்றை ஆன்ம தத்துவம் முதலாக வைத்துப் பொருத்திக் கொள்க. போக்கியம் - புசிக்கப் படுவது. போசயித்திரு - புசிப்பவன். பிரேரகம் - செலுத்துதல். இவற்றை இவ்வாறே,
``ஐந்து சுத்தத்தின் கீழ், ஏழ் சுத்தாசுத்தம்; அசுத்தம்
தந்திடும் புமான்கீழ் எண்மூன் றாய தத்துவம்; சீவற்கு
வந்திடும்; பிரேரகாண்டம், மருவு போசயித்திரத்தோடு
அந்தமில் அணுக்களுக்குப் போக்கிய காண்ட மாமே``3
என சிவஞானசித்தியில் கூறப்பட்டமை காண்க.
`மாயேயம்` என்று உள்ள இடங்களில் எல்லாம் `மாமாயை` என்றே பாடம் திரிக்கப்பட்டது போலவே, `போசயித்திரு காண்டம்` என்று உள்ள இடங்களில் எல்லாம், `போகசயித்திரு காண்டம்` என்றே பாடம் திரிக்கப்பட்டுள்ளது.
அவ்வியத்தமாகிய மூலப்பிரகிருதி பல சமயத்தாராலும் நன்கறியப்பட்டது ஆதலின் அதனை `அதின்` எனப் பண்டறிசுட்டாற் கூறினார். `உறும்` என்பதை `அதின்` என்பதனோடும் கூட்டுக. உறுதல் - சூக்குமமாய்ப் பொருந்தியிருத்தல். எனவே அது, தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் உளதாம் நிலையாதல் அறிக. `ஏழ் சத்தா சுத்தம்; மாயையின் உறும்` என இயைக்க. `உறுமால் மாமாயையின்` என்பதனையும் `சுத்தம்` என்பதன் பின்னர்க் கூட்டி, `உறும் ஆன்மாவினோடே` என்பதை மீட்டும் மூன்றாம் அடியின் இறுதியில் கூட்டி யுரைக்க. காண்டம் - பகுதி.
இதனால், தத்துவம் முப்பத்தாறும் பற்றிய சில சிறப்பியல்புகள் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

மாயைகைத் தாயாக மாமாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏரும் உயிர்கே வலசகலத் தெய்திப்பின்
ஆய்தரு சுத்தமும் தான்வந் தடையுமே.

பொழிப்புரை :

சிவனே எல்லாம் செய்பவன் ஆகையால், உலக மாகிய மகவிற்கு அவனை, `தந்தை` எனலாம். உலகிற்கு முதற் காரணமான `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளுள் சுத்த மாயையையே சிவன் தான் நேரே பற்றிச் செயற்படுத்துதலால் அதனைச் சிவனோடு புணர்ந்து உலகமாகிய மகவை ஈன்ற, `நற்றாய்` எனலாம்; அசுத்த மாயையைச் சிவன் தான் நேரே பற்றிச் செயற் படுத்தாமல், அனந்த தேவரைக் கொண்டும், அவர்வழியாகச் சீகண்ட உருத்திரரைக் கொண்டும் செயற்படுத்துதலால் அதனை, உலகமாகிய மகவை வளர்க்கும் `செவிலித் தாய்` எனலாம். எனவே, சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு முதற் காரணங்களாலும், சிவனாகிய கருத்தாவினாலும் உலகம் தோன்றி நிலை பெற, உயிர்கள் அவ் வுலகத்தைப் பற்றி நின்று, `சகலம், கேவலம்` என்னும் இருநிலைகளில் மாறி மாறி உழன்று, முடிவில் சிவனது அருளாலே ஞானத்தைப் பெற்று, அவற்றினினின்றும் விடுதலை அடைந்து சுத்த நிலையை அடையும்.

குறிப்புரை :

செவிலி முதலியோரைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். உலகமாகிய மகவை எடுத்துக் கூறாமையால் அது. `தந்தை, நற்றாய், செவிலி` என்பவற்றால் பெறப்பட்ட குறிப்புருவகமாகும். உயிரை, `தான்` என்றது சாதி யொருமை. இங்ஙனம் மகவாக உருவகிக்கப்பட்டவை, `சேதனம், அசேதனம்` என்னும் இருவகைப் பிரபஞ்சமுமாகும். சேதனப் பிரபஞ்சங்கள் அறிவைப் பெறுதலும், அசேதனப் பிரபஞ்சம் பல்வேறு வகையான தன்மைகளைப் பெறுதலும் இங்குக் குறிக்கப்பட்ட மூவராலுமாம் என்க. சுத்த மாயை சகலர் பிரளயாகலர்கட்குப் பிரேரகமாத்திரையாயும், நால்வகை வாக்குக்களாயும் பயன்படும். அஃது அவர்கட்குத் தனு கரண புவன போகங்களாய் வருதல் இல்லை. விஞ்ஞானகலர்க்கு மட்டுமே சுத்தமாயை தனு கரண புவன போகங்களாய் வந்து பயன்படும்.
சுத்தமாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் `வைந்தவம்` எனறும், அசுத்த மாயையே, `மாயை` எனப்படுதலால், அதன் காரியங்கள், `மாயேயம்` என்றும், பிரகிருதியின் காரியங்கள் `பிராகிருதம்` என்றும் சொல்லப்படும். எனினும், பிரகிருதியும் அசுத்த மாயையின் காரியம் ஆதல் பற்றி பிராகிருதங்களையும், `மாயேயம்` என அடக்கிச் சொல்லுதல் உண்டு.
``வித்தைகள், வித்தை யீசர், சதாசிவர் என் றிவர்க்கு
வைத்துறும் பதங்கள், வன்னம், புவனங்கள், மந்திரங்கள்
தத்துவம், சரீரம், போகம், கரணங்கள் தாம் எலாமும்
உய்த்திடும் வைந்தவந்தான் உபாதான மாகி நின்றே``*
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக. இதனுள் `விந்து` என்பதே பகுதிப் பொருட்டாகிய விகுதியைப் பெற்று, `வைந்தவம்` என வந்தது. பகுதிப் பொருள் விகுதியை வட நூலார் `சுவார்த்த பாவ தத்திதப் பிரத்தியயம்` என்பர்.
இதனால், உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள் ஆமாற்றை விளக்கி, அதனாலே காரண அவத்தைகள் மூன்றும் நிகழ்தலைத் தெரிவித்து, அதிகாரம் முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

பொழிப்புரை :

உருவம் இரண்டு, (வித்தை, ஈசுரன்) உருவாருவம் ஒன்று, (சதாசிவன்) அருவம் இரண்டு (சத்தி, சிவன்) ஆகமுத்திறத்து ஐந்துநிலைகளையும் கடந்து, தன்னியல்பில் நிற்கும் பரசிவனே சுத்த சிவன். (மேற்கூறிய ஐந்தும் அபர சிவங்களாம்.) பரசிவன் - மனத்தையும் கடந்தவன். இயல்பாகவே மலங்கள் இல்லாதவன். எனவே, மாயா சரீரங்களை எடாதவன். ஆகவே, அவன் (தனது திருவருள் காரணமாக) மலங்களுட் பட்டனவாயினும் உண்மையில் அவற்றினும் மேற்பட்ட உயிர்களை முன்னர் மாயாகாரியமாகிய உடலோடு ஒன்று படுத்திப் பின்பு அதனினின்றும் வேறுபடுத்தி உய்வித்தற் பொருட்டு அவ்வுயிர்கள் தன்னை அறியாதபடி அவற்றின் அறிவினுள்ளே கள்வன் போல ஒளித்திருந்தான். எனினும், அவனது கள்ளத்தை நான் அவன் அருளாலே அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

`அதனால் பராவத்தையில் உள்ளேன்` என்பது குறிப் பெச்சம். `நீவிரும் இதனை எய்தலாம்` என்பது கருத்து. `அஞ்சு` என்றது ஐம்மலங்களை எனின், `நின்மலன்` என்பது வெற்றெனத் தொடுத்தல் ஆதலும், `தடத்த சிவத்தின் மேற்பட்ட சொரூப சிவமே பரசிவம்` என்பது பெறப்படாமையும் அறிக. `அனாதி` என்றது, செயற்கையோடு கூடாத இயற்கையைத் குறித்தது. `தெய்வம்` என்பது `திவ்வியம்` என்னும் பொருட்டாய்த் தூய்மையை உணர்த்திற்று. `நெஞ்சமும்` என்னும் உம்மை, `நாவையேயன்றி` என, இறந்தது தழுவி நின்றது. `மனம், வாக்கு` - என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந்தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்தின்* உரையிற்காண்க. தாய - கடந்த, `விஞ்சும் உயிர்` எனக் கொண்டு கூட்டுக. `உயிருடல்` என்றே பாடம் ஓதுதலும் ஆம். வேறு படுத்துதல் கூறினமையால், முன்பு ஒன்றுபடுத்தினமை பெறப்பட்டது. `திருவருளால்` என்பதும் `அவன் அருளால்` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.
இதனால், `பராவத்தைக்கு நிலைக்களம் பரம்பொருள்` என்பதும், அதன் சிறப்பியல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சத்தி பராற்பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்தி அம் மாயை தனுட்சக்தி ஐந்துடன்
சத்தி பெறும்உயிர்தான் அங்குற் றாறுமே.

பொழிப்புரை :

(குண குணிகட்குத் தம்முன் வேற்றுமை யின்மையால்,) `சத்தியே சிவம்` என்று கூறலாம். எனினும், சத்தியை ஆள்வது பொருளேயாதலின், சிவத்தினின்றே சத்தி தோன்றுகின்றது. (அஃதாவது செயற்படுகின்றது.) அதனால் உயிர்கட்கு, அமைதியைத் தருவதும், மேலான ஆனந்தமாய் விளைவதும் பராசத்தியே. இனி அந்தச் சத்தியினால் தான் சுத்தமாயையாகிய சத்தி காரியப்படுகின்றது. அது காரியப்படும் நிலையில் சிவசத்தி, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என ஐந்தாய் இருக்கும். அந்த ஐந்துடனும் கூடுவதனாலே தான் உயிர் ஆற்றலைப் பெறுகின்றது. ஆகவே, உயிர் அமைதியை அடைந்து, ஆனந்தத்தைப் பெறுவது பரையாகிய சத்தியிடத்தில்தான்.

குறிப்புரை :

`சத்தியேபராற்பரம்` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பராற் பரம் - மேலானவற்றிற்கெல்லாம் மேலானது; `தனில் ஆன சத்தி சாந்தி; பரானந்தம்` எனவும், `தன்னில் விந்து சத்தி சுடர்` எனவும் கொண்டு கூட்டுக. விந்துவின் (சுத்த மாயையின்) சத்தி, மோகினியின் (அசுத்த மாயையின்) சத்திபோல மயக்குதலைச் செய்யாது, தெளிவைச் செய்தலின் அதன் சத்திகாரியப் படுதலை `சுடர்தல்` என்றார். சுடர், முதனிலைத் தொழிற்பெயர். `சுடர்தல் நிகழும்` எனப் பயனிலையும் `உடன்` என்பதன்பின், `கூடி` என்னும் சொல்லெச்சமும் `உயிர்` என்பதன்பின் `ஆகலின்` என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. ஆறும் - சாந்தி யடையும். ஆகவே, ஆனந்தத்தை அடைதல் சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `பராவத்தையாவது உயிர்பராசத்தியைப் பொருந்தி நிற்றல்` என்பதும், `அவ்விடத்து அதற்கு அமைதியும், அதன் வழியாக ஆனந்தத்தையும் பராசத்திதரும் என்பதும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களும் சடமேயாதலின் சித்தாகிய பரம்பொருள் அத்தத்துவங்கள் அனைத்திற்கும் அப்பாற் பட்டதாம். (அந்தப் பரம் பொருளை யடைதலே பராவத்தை) இந்தச் சடசித்துக்களைப் பகுத்து, சித்தின் இயல்பை அறிபவரும் அரியர். அந்தச் சித்துப் பொருளின் குணமே அருள் ஆதலின், அப்பொருளை அறிந்து அருளைப் பெறுபவரும் அரியர். உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது. ஆகலின், அறிவே வடிவான பரம் பொருளைச் சார்ந்து அறிவே வடிவாய்விட்ட அவர்கட்குத்தான் சிவன் அளவிலா இன்பப் பொருளாய் இன்புறுத்துவான்.

குறிப்புரை :

இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது. இனிச் சொற்பின்வருநிலையணி பெற்றதாகக் கொண்டு. `ஆறு` என்பவற்றிற்கு வேறு வேறு பொருள் உரைப்பாரும் உளர். `இனிது` என்றது, `இன்பப் பொருள்` என்றதாம். இனி இதனை வினையெச்சக் குறிப்பாகக் கொண்டு, `நன்கு விளங்குவான்` என உரைப்பினும் ஆம்.
இதனால், `பராவத்தை அறிவு, அருள், ஆனந்த மயமானது` என்பதும், `அதனால், அதனை மடமை, வன்கண்மை, துக்கமயமாகி நிற்பவர் அடைதல் அரிது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சொடு நான்கும் கடந்(து) அகமேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடின் நயஞ்செய்யு மாறே.

பொழிப்புரை :

வித்தியா தத்துவங்கட்கு முதற் காரணமாய் உள்ள அசுத்த மாயையைக் கடந்து சிவத்துவத்தை அடைந்தமையால் `வித்தியாதரர்கட்குத் தலைவன்` எனச் சொல்லுதற்குரியசாதகன், பிராசாதகலைகளில் ஒன்பதைக் கடத்தலால், சுத்த மாயாகாரியங் களையும் கடந்த ஒருநிலையைப் பெற்றுப் பத்தாம் கலையாகிய வியாபினி கலையில் நின்று, அருட் சத்தியை வஞ்சம் அற்ற நெஞ்சுடன் நாடுவானாயின் அஃது, ஒன்பது அடுக்குக்களுக்கு மேல் உள்ள பத்தாவது மாடியில், காலில் செம்பஞ்சு ஊட்டுதல் முதலிய ஒப்பனை களுடன் கட்டிலில் உறங்குகின்ற தலைவியைத் தலைவன் அடைந்து, அவளோடு இனிய சொற்களைக் கூறுவது போன்றதாகும்.

குறிப்புரை :

இங்கு, மெல்லியலாளுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது அருட்சத்தியேயாகலின், `அஞ்சொடு நான்கும்` என்றது, பொதுப்பட `ஒன்பது` என்னும் பொருட்டாய்ப் பிராசாத கலைகளில் கீழுள்ள ஒன்பதைக் குறித்தது. ஆகவே, `அகம்` என்று பத்தாவதாகிய வியாபினிகலையாயிற்று.
`விஞ்சையர் வேந்தனும் அஞ்சொடு நான்கும் கடந்து, அகமே புக்கு, நஞ்சு அற நாடின்(அது) நயம் செய்யும் ஆறு` எனக் கூட்டிப் பொருள் கொள்க. `அது` என்பது தோன்றா எழுவாய். `பஞ்சு அணிகால் அத்தோடு துயில்கின்ற` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. அது, பகுதிப் பொருள் விகுதி. அத் தோடு, `அதனோடு` என்பதன் மரூஉ. காலில் செம்பஞ்சுக் குழம்பூட்டுதல், ஏனை ஒப்பனைகளுக்கு உபலக்கணம். `செல்வர் இல்லத்து இளமகள் நலத்தை வேண்டினோன், பல மாடிகளைக் கடந்து மேல்மாடியில் சென்றவழியே அவனைத் தலைப்பெய்தல் கூடுவது போலச் சுத்த சிவனது அருட்சத்தியை அடைய வேண்டினோன் பிராசாத யோகத்தில் பல படிகளைக் கடந்து மேலே சென்றபொழுதே அந்தச் சத்தியை அடைதல் கூடும்` என்றபடி.
``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனே நில்``l
என்றார் திருவுந்தியார் ஆசிரியர். `அவள் கிடக்கும் இடம் பத்தாம் தானம்` என்பதை இம்மந்திரத்தால் அறிகின்றோம். பத்தாம் தானத்தைக் கடந்து நான்கு தானங்கள் அந்தரமாய் நிற்க. அப்பால் உள்ள இரண்டு தானங்கள் சிவன் இருக்கும் ஆத்தானம் ஆகும். இன்ப வழியாதல் பற்றி, `கிழவி` என்றும்` `மெல்லியலாள்` என்றும் சொல்லப் படினும், `தாயுடன் சென்றே பின் தாதையைக் கூடவேண்டும்`3 என்பது பற்றி, `சத்தியை முதற்கண் சார்தல் வேண்டும்` எனக் கூறினார்.
`சத்தி ஐந்துடன் - சத்தி பெறும் உயிர் தான் அங்குற்று ஆறுமே` என முன் மந்திரத்திற் கூறினார். அதனை ஞான நெறியாற் கூட இயலாபொழுது, பிராசாத யோக நெறியால் கூடுதல் கூடும்` என்பது இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உரிய நனாத்துரி யத்தின் இவன்ஆம்
அரிய துரிய நனாவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரன்ஆம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.

பொழிப்புரை :

எளிதில் இயல்பாக நிகழும் சகல சாக்கிர துரியம் போலவே, அரிதில் சாதித்து அடைவதாகிய நின்மல துரியத்திலும் ஆன்மா, ஆன்மாவாய்த்தான் இருக்கும். ஆயினும், வியாபகமாகிய பர துரியத்தில் அது மேல்நிலையை அடையும். அந்தத் துரியம் வேறுபட நிகழ்கின்ற பரதுரியாதீதத்தில் தான் ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில் `விஞ்சையர் வேந்தன்` என ஒப்புமைப் பெயரால் குறிக்கப்பட்ட ஆன்மாவை இங்கு எழுவாயாக வருவிக்க. பின்னர் `அரிய` என வருதலால், முன்னர், `உரிய` என்றது எளிதில் இயல்பாக நிகழ்வதாயிற்று. நனாத் துரியம் - சகல சாக்கிரமாகிய மத்தியா லவத்தையில் நிகழும் துரியம். `துரியத்தின்` என்பதில் உள்ள `இன்` உருபு. ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை உருபு. ``மூன்றில்`` என்னும் ஏழாவதனை முடிப்பதாகிய `இவன் ஆம்` என்பது அவ்வேற்றுமைக்குப் பின்னர் வாராது, முன்னர் வந்தது. பருமை - வியாபகத்தைக் குறித்தது. எனவே, பராவத்தையில் தான் ஆன்மா உண்மையாக அணுத்தன்மை நீங்கி, விபுத்தன்மையை அடைதல் பெறப்பட்டது. `பரன்` என்பது, பொதுப்பட, `மேல் நிலையன்` எனப் பொருள் தந்தது. அது வியாபக நிலையன் ஆயினமையைக் குறித்ததேயாகும். திரிதல் - வேறுபடுதல். `திரிய வரும் துரியம்` என்றது, துரியம் வேறுபட, அதன்பின் நிகழும் அதீதத்தைக் குறித்தது. `ஆம்` என்றதை இறுதியிலும் கூட்டுக.
இதனால், பராவத்தை நின்மலாவத்தையினும் உயர்ந்ததாதல் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப்
பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

பொழிப்புரை :

`பராவத்தையிலும் அதன் முடிநிலையாகிய அதீதத்தை அடைதல் வேண்டும்` எனக் கூறுதல், சிறிதே எஞ்சி நிற்கும் மலவாசனை நீங்குதற் பொருட்டாம். (வாசனை, `இலய மலவாசனை` என்க.) இனி அந்த அதீதத்தைத் தலைப்பட்ட பின்பும் விடாது தொடர்ந்து அதிற்றானே பழகிப் பழகியிருந்தால்தான், ஆன்மாச் சிவமாம் தன்மையைப் பெறும். ஆகவே, அதில் அவ்வாறு தொடர்ந்து பழகா தவர்கள் எத்துணைச் சாதகங்களைச் செய்தவராயினும் அவர் சிவமாம் தன்மையை அடையார். அத்தன்மையை அடையாமையால், சிறிதளவு எஞ்சி நின்ற பாசமும் நீங்காமல் இருந்துக் கொண்டேயிருக்கும்.

குறிப்புரை :

`அவ் இருப்பு எல்லையில் இன்பத்திற்குத் தடையாகும்` என்பது கருத்து. ``பற்றறப் பற்ற`` - என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரை கூறப்பட்டது.
``பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு``l
எனத் திருவள்ளுவரும்,
``பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றில், அப்
பற்றை அறுபர்என் றுந்தீபற``3
எனத் திருவுந்தியார் ஆசிரியரும் அருளிச் செய்தமை காண்க.
இன்னும் திருவுந்தியார் ஆசிரியர்,
``பழக்கந் தவிரப் பழகுவ தன்றி,
உழப்புவ தென்பெண்ணே, உந்திபற;
ஒருபொரு ளாலேயென் றுந்திபற``*
என்றமையும் அறியற்பாற்று. பாசம் - பாச வாசனை. ஒன்று - சிறிது, அஃது அவ்வளவிற்றாகிய பாச வாசனையைக் குறித்தது. `ஒன்றும்` என உம்மை விரிப்பின், அது நின்மலாவத்தையைப் பயனிலதாகச் செய்தல் உணர்க. ``பற்று`` என்றதை, `குறிகளும் அடையாளமும் கோயிலும்`3 ஆக உரைததாரும் உளர்.
இதனால். பராவத்தையிலும் அதீதம் இன்றியமையாதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

பொழிப்புரை :

பல சமயத்தாராலும், `எத்தன்மைத்து` என ஆராயப் படுவதாய், அருவமாய் நிற்கும்மாயை, சிவத்திற்கு வேறும் ஆகாமல், ஒன்றும் ஆகாமல் இடைப்பட்டதாய் இருக்கும். அதனால், வாக்கு மனங்கள் நீங்கிய பின்பும் வாசனை யளவாய் நிற்கின்ற அந்த மாயை அறவே நீங்கினால், அறிவு முழுத் தூய்மை அடைந்து, அதனால் சிவானந்த மயமாகிப் பின்பு அந்தச் சிவானந்தத்தால் விழுங்கப்பட்ட பொருளாகிவிடும்.

குறிப்புரை :

`பொய்` என்றது கண்ணுக்குப் புலனாகாமையே. அகம் புறமாய் நிற்றல், சிவத்தில் வியாப்பியமாய உயிரில் வியாத்தியாய் நிற்றல், `வாக்கு, மனம்` என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்து8 உரையிற் காண்க. வேய்தல் - மூடுதல்; அகப் படுத்தல். `விளைவது` என எதிர்காலத்தில் கூறற்பாலது, துணிவு பற்றி, ``விளைந்தது`` என இறந்த காலமாகக் கூறப்பட்டது.
இதனால், பராவத்தையில் அதீதத்தில் செல்லவேண்டுதற்குக் காரணம் கூரப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்(கு)
உரிய வினைகள்நின்(று) ஓலமிட் டன்றே.

பொழிப்புரை :

பர துரியமாகிய குதிரைமேல் ஏறிய ஆன்மா, அதனை விடுத்து, அதற்குமேல் உள்ள அதீதமாகிய புலிக்குள் தன்னைப் புகவிடுமாயின், புலியால் கௌவிக் கொள்ளப்பட்ட ஆட்டினை நரிகள் பற்ற மாட்டாது அஞ்சி ஒடிவிடுதல் போல, அந்த ஆன்மாவை மாயாகாரியங்களாகிய தத்துவங்கள் அணுகமாட்டாது நீங்கிவிடும். (அஃதாவது, `செயல் இழந்துவிடும்` என்பதாம்) மாயா கருவிகள் நீங்கினமையால் பிராரத்த கன்மம் வந்து பற்றமாட்டாது ஒழியும்.

குறிப்புரை :

`விசாக்கிரம், வியாக்கிரம்` என்னும் சொல் ஒற்றுமைப் பற்றி பராவத்தையில் முடிவான அதீதத்தைப் புலியாக உருவகிக் கின்றவர், அதற்கேற்பத் தத்துவங்களை நரிகளாக உருவகித்தார். அத னானே ஆன்மா ஆடாக உருவகிக்கப்பட்டதும் விளங்கும். `ஆட்டை உண்பன நரியும், புலியும் ஆயினும், புலிபற்றிக் கொண்ட ஆட்டினை நரி அணுகமாட்டாது. அதுபோல ஆன்மாவை உட் கொள்வன மாயா கருவிகளும், சிவமும். ஆயினும் சிவத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட ஆன்மாவை மாயா கருவிகள் அணுக மாட்டா` என்பது நயம்.
நாதர் - தலைவர். இங்கு, ஞானத்தலைவர். உரியவினை, முகந்து கொண்ட பிராரத்த வினை. ஓலமிடுதல் - அஞ்சி, தீங்கு செய்யாதிருக்கும்படி முறையிடுதல். `ஓலமிட்டன்று` என்றது, `ஈயென இரத்தல் இழிந்தன்று`* என்பது போல, `ஓலமிட்டது` என்பதாம். இது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், பர துரியாதீதத்தை அடைந்த ஆன்மாவை மாயை கன்மங்கள் தொடராமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில்
மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

பொழிப்புரை :

இங்குச் சொல்லிவாராநின்ற இந்தச் சாக்கிரமுதலிய அவத்தைகளில் துரியத்தை அடைந்த போதிலும் சிவன் அனைத்தும் கடந்த வெற்ற வெளியான அதீத நிலையில் இருப்பவன் ஆதலால், அவ்விடத்திலே உயிரைக் கூட இருப்பான். (துரியத்தில் வந்துகூட மாட்டான்.) அவன் உயிரைக் கூடினால்தான் உயிர்க்கு உலக உணர்வு மறையும். அப்பொழுது அது சிவ உணர்வு ஒன்றேயுடையதாய்ச் சிவமாகும். (எனவே `உயிர் அதீத நிலையை அடைதல் வேண்டும்` என்பதாம்.)

குறிப்புரை :

அதிகாரம் `பராவத்தை` ஆதலின், பராவத்தையை `நின்ற இச் சாக்கிரம்` என்றார். சாக்கிர நீள் துரியம் - சாக்கிரத்தினின்று நீண்டுசெல்ல உளதாகின்றதுரியம். மன்றல் - அம்பலவன். அம்பலம் - வெற்ற வெளி. அது அனைத்தும் கடந்த அதீத நிலையைக் குறித்தது. `மாயை` என்பது காரிய ஆகுபெயராய் உலகத்தை உணர்த்தி, இருமடி யாகுபெயராய் உலக உணர்வை உணர்த்திற்று. கூடுதல், புணர்தல் முதலிய சொற்களாற் கூறாமல், `மணம்` என்னும் சொல்லாற் கூறினமையால், அது, தலைவன் தலைவியை ஈருடல் ஓருடலாக முயங்குதல் போல இரண்டறக் கலத்தலைக் குறித்தது. எனவே, `துரியம் முதலிய பிற நிலைகளில் சிவன் உயிரோடு, கேளிர், கிளைஞர் முதலியவரோடு தலைப்பெய்தல் போலத் தலைப்பெய்திருப் பானாயினும் இரண்டறக் கலத்தல் அதீதநிலையில்தான் என்றதாயிற்று.
``அவன் இவன் ஆனது அவன் அருளால் அன்றி,
இவன் அவன் ஆகான் என் றுந்தீபற``3
என்பர் ஆதலால், `உயிரை வந்து மணப்பவன் சிவனே` எனக் கூறினார். அன்றே - அப்பொழுதே.
இதனால், `சிவன் தன்னிலையில் நிற்பது சுத்த துரியாதீத நிலை` என்பது கூறும் முகத்தால், `அதனை ஆன்மா அடைதலே அது பேறு பெறும் நிலையாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை யீடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதல லாதே.

பொழிப்புரை :

சிவத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையே நிற்பதாகிய மாயை தனது நிலையினின்று விருத்திப் படுமாயின் ஆணவ இருளில் உள்ள உயிர்கட்கு விளக்குப் போல உதவும். அதனாலேயே மத்தியாலவத்தை நிகழும் துரியத்தில் ஆன்மாப் பாசத்தினின்றும் நீங்காது அழுந்திநிற்கும். (ஆதலின் அஃது ஆன்மா அடைதற்குரிய துரியம் அன்று.) அஃது அடைதற்குரிய துரியம் பரதுரியமே. அதனை அடைந்தால் அது பாசங்கள் நீங்கித் தூயதாம்.

குறிப்புரை :

`இடையீடான மாயை இருந்த இடத்து விரிந்திடின் விளக்காய்ச் சாக்கிரம் மேவும்` என மாற்றி இதன் பின் ஈற்றடியைக் கூட்டுக. `ஆய்` என்பதை ஆக` எனத் திரிக்க. `தெரிந்த துரியம்` என்பது, `எல்லார்க்கும் அனுபவமாய் அறியப்பட்டதுரியம்` என மத்தியாலவத்தைத் துரியத்தைக் குறித்தது. `தீது அகலாது` என்றதனால் அது பொருந்தி தாத் துரியம் ஆயினமையின், `பொருந்துந் துரியம்` என்றது பரதுரியம் ஆயிற்று. தான் ஆதல், ஆன்மாப் பாசமாய் இருந்த நிலையின் நீங்கித் தானேயாய் இருத்தல்.
இதனால், `துரியம்` என்பது உயர்வுடையது போலக் கூறப்பட்டாலும், உண்மையில் உயர்ந்த துரியம் பர துரியமே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே.

பொழிப்புரை :

மாணவனே, நீ கீழாலவத்தை மத்தியாலவத்தை -களில் நின்ற பொழுது உன்னையே நீ, `யார்` என்று அறிந்து கொள்ளாது, உடம்பையே, `நான்` என்று சொல்லிக் கொண்டிருந்தாய். பின்பு, நின்மலாவத்தையை அடைந்தபொழுது உன்னை நீ, `சடமாகிய உடம்பின் வேறாகிய சித்துப் பொருள்` என அறிந்து, அதன்கண் துரிய நிலையிலே சிவன் உன்னையே தானாகக் கொண்டு நிற்கும்படி அவனது அருள் வழியில் நின்றாய், எனினும் ஆன்மாத் தன்னையும், தலைவனையும் அறிந்து அவனது அருள் வழியில் நின்ற அளவிலே அதற்குப் பிறவி நீங்கி விடாது. `சிவன் எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்து நின்றானாயினும், அவனது உண்மை நிலை பிறிதொன் றோடும் கூடாது அனைத்தினும் வேறாய் நிற்கு தூய்மையே` என்பதை அறிந்து, அவனை அந்நிலையிலே சென்று தலைப்படமுயல்.

குறிப்புரை :

`அம்முயற்சியாவது, நின்மலாவத்தையையும் கடந்து பராவத்தையை அடைய முயலுதல்` - என்பது குறிப்பு, ஈற்றில் தந்துரைத்தது இசையெச்சம். `முள்` என்றது, `ஞானவத்தைக்கு முன்` என்றது. ஆகையால் அது, கீழாலவத்தை மத்தியாலவத்தைகளையும், அறிதல் ஞானத்தினால் ஆதலின், `அறிந்து` என்றது, ஞானாவத்தை யாகிய நின்மலாவத்தையையும் குறித்தன. உறுதற்கு வினை முதல் வரு வித்துக் கொள்க. `அமலன்` என்றது, `சகலாவத்தைக்கு அப்பால் நிற்பவன்` என்பதைக் குறிப்பினால் உணர்த்தியது. எனவே, சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையும் கடந்து, பராவத்தையில் செல்லுதல் வேணடும்` என்பது போந்தது. அன்ன வியாத்தன் - அத்தன்மை யாதான ஒரு நிறைவினையுடையவன்.
இதனால், நின்மலாவத்தையும் சகலத்தில் சுத்தமேயாக, பராவத்தையே உண்மைச் சுத்தம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கருவரம பாகிய காயத் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

பொழிப்புரை :

கருவிற்கு உட்படுதலையுடைய உடம்பில் நிகழ் வதாகிய துரியத்தில் நீயும், சிவனும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டீர்கள். (அது போதாது; ஏனெனில்,) பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழல்கின்றவர்கள். ஞான குருவின் அருளைப் பெற்றுச் சிவனும், தாமும் வேறறக் கலந்த பின்பே தாம் சிவனின் வேறாய சீவராய் நில்லாது. சிவமாகி நிற்பர்.

குறிப்புரை :

`அங்ஙனம் நின்றவரே பிறப்பிறப்பு அற்றவராவர்` என்பது குறிப்பெச்சம். `துரியத்தில்` - ஏழாவது விரிக்க. `துரியத்து` எனப் பாடம் ஓதுதலும் ஆம். கூடுதலுக்குச் செயப்படுபொருளாகிய `சிவனை` என்பது வருவிக்க. `கண்டீர்` என்றதனால், அது சிவ தரிசனமும், `கூடிய` என்றதனால் அது சிவயோகமும் ஆயின. சிவ தரிசனமும் குருவருளால் பெறற்பாலதே யாயினும் பிறப்பறுதியைத் தரும் சிறப்புப் பற்றிச் சிவயோகமே குருவருளால் பெறப்படுவது போலக் கூறப்பட்டது. சிவதரிசனத்தளவில் நின்றவர் பிறப்பெய்து தலை நோக்கிச் சிவயோகத்தில் நின்றவர் பிறப்பெய்துதல் சிறு பான்மையாதலின், அவர்களைப் பிறப்பறப்பு அற்றவராகக் கூறினார். அங்ஙனம் கொள்ளாக்கால் மேல், ``தன்னையறிந்தும் பிறவி தணவாது`` என்றதனோடு முரணும் என்க. சிவயோகமே துரியமாக, சிவதரிசனம் சுழுத்தியே யாயினும் அது துரியத்தின் தோற்றுவாயாதல் பற்றி அதனையும் `துரியம்` என்றார். `நின்றார்` என்பது, துணிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாக வந்த கால வழுவமைதி.
இதனால், `தம்மை உணர்ந்து தலைவனை உணர்தலாகிய நின்மலாவத்தைய அடைதற்குக் குருவருள் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றால் நின்மலாவத்தையை அடைந்து பராவத்தையை எய்துதல் கூடும்` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 13

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை விற்பரா தீதம். சுழுத்தி
பணியில் பாதுரி யம்பரம் ஆமே.

பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

பொழிப்புரை :

(`மேலாலவத்தை` என்றும், சகலத்தில் `சுத்தா வத்தை` என்றும் கீழ் உள்ளவைகளை நோக்கிச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற யோகாவத்தைகள் அது காரணம் பற்றியே `துரியம்` எனப்படும். (துரியம் - மேற்பட்டது) ஆயினும், அதில் சீவத் தன்மை நீங்காமையால் அவை சீவதுரியமேயாம். அவையே இங்கு `அணுவின் துரியம்` என்றும் `அணுவசைவு` என்றும் சொல்லப்படுகின்றன.
சீவ துரியமாகிய யோகாவத்தையில் உள்ள, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன தாழ்வுடையனவே - என அறியப்பட்டால், அதன் பின்பே பராவத்தை உளதாகும். அந்தப் பராவத்தையே அவத்தைகளில் எல்லாம் மேலான அவத்தை.

குறிப்புரை :

`ஆகவே - மேலாலவத்தை - எனக் கூறப்படுதலே பற்றி அவற்றையே `பராவத்தை` - என மயங்கற்க` என்பதாம்.
`யோகில் - தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்து பின் சனனம் சாரும்`
-சுபக்கம் சூ.5.34.
என்னும் சிவஞான சித்தி மொழி மேலேயும் எடுத்துக்காட்டப் பட்டது. செய்யுள் நோக்கிச் சுழுத்தி இறுதியில் வைக்கப்பட்டது. பராதீதம் - பரமும் அதீதமும்; உம்மைத் தொகை. இதன் பின்னும், `சுழுத்தி` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. `பரம்` என்றது துரியத்தை. பணிதல் - தாழ்தல். அஃது இங்கு அறிபவனது அறிவில் அத்தன்மை யதாய் விளங்குதலைக் குறித்தது.
இதனால், பராவத்தை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `பரதுரியத்து நனவும்` என்னும் பாடல் மிகையாகத் தெரிகின்றது)

பண் :

பாடல் எண் : 14

பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவு சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே
தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.

பொழிப்புரை :

பராவத்தையில் சாக்கிரம் சீவன் முத்தி அதில் உலக அனுபவம் சிவானுபவமாய் நிகழும், (அதுவே,
`பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`l
எனக் கூறப்பட்டது.) அந்த அனுபவம் அதிகார முத்தியில் பழக்க வாசனையாய் நிகழும். அதுவே பர சொப்பனம். போக முத்தியில் அந்த வாசனையும் தாக்கமாட்டாது நீங்கும். அதுவே பர சுழுத்தி. (இதில் சுத்த தத்துவ போகத்தில் இச்சையுண்டாம்) அந்த இச்சையும், அதனால் வரும் அந்தப் போகமும் அடங்கி நிற்றலே `உபசாந்தம்` எனப்படும். அது பர துரியம். அதை அடைந்தவன் மேல்நிலையை அடைந்தவனாவன். `சிவ துரியம்` எனப்படுகின்ற நின்மலத் துரியத்தை அடைந்தவனும் இந்நிலையை அடைந்தே உயர்வு பெறுதற்குரியன்.

குறிப்புரை :

காயம் இருந்து நீங்கின பாத்திரத்தில் அதன் வாசனை பதித்திருத்தல் போன்ற பதிவை, `திரம்` என்றார். திரம் - நிலைப்பு. `கனவில் வாசனை உண்டாம்` என்றதனால், நனவில் அனுபவந் உண்மை பெறப்பட்டது. வாசனை தாக்காத உறுதி. `உறும்` எனப் பட்டது. `உரம் சிறந்த சுழுத்தியாம்` என்க. முற்றல் - முதிர்தல். துறவு - கீழ் நிலைகளின் நீங்குதல்; அது துரியம். `சிவ துரியத்தனும் ஆம்` என்பது `ஒரு தலையாக ஆவன்` என்றதாம். உபசாந்தம் துரியம் ஆகவே, இன்பம் துரியாதீதம் ஆயிற்று. ஆகவே, `முடிநிலை உயர்வு பராவத்தையே` என்பது பெறப்பட்டது.
இதனால், பராவத்தைகளின் இயல்பும், `அவைகளே முடிநிலை உயர்வு` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

சீவன் துரியம் முதலாகச் சீராக
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து)
ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

பொழிப்புரை :

`சிவதுரியம்` எனப்படுவது, யோகாவத்தையில் இமயம் முதலிய எட்டில் ஏழாவதாகிய `தியானம்` என்பது. `சிவ துரியம்` எனப்படுவது, தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம். இவ்வொன்பதில் ஆன்ம சுத்தி சிவ தரிசன சிவயோகங்களில் அடங்கிவிடுதலால், எஞ்சிய எட்டோடு, யோகாவத்தையில் `தியானம் சமாதி` - என்னும் இரண்டைக் கூட்ட, சீவதுரியம் முதலாகச் சிவ துரியம் ஈறாக உள்ள அவத்தைகள் பத்தாம். ஆகவே, இந்தப் பத்த வத்தைகளையும் கடந்து, சிவானந்தந் தருவதாகிய உண்மைச் சுத்தா வத்தை அடைந்தவனே, தான் முன்பு கட்டுண்டிருந்த அனைத்துத் தத்துவங்களினின்றும் நீங்கினவனாவன்.

குறிப்புரை :

`மேலாலவத்தை` எனப்படுதலால் யோகாவத்தையில் நிகழும் துரியம் சகலத்திற் சுத்தமே யாகையால், அது சீவ துரியமாம். எவ்வாறெனில், சகலத்தில் நிற்கும் உயிரே சிவன் ஆகலின். இனி- ஞானாவத்தையும் சகலத்தில் சுத்தமாயினும் அது ஞான குருவின் அருளால் ஞானத்தைப் பெற்றபின் அதனை முற்றுவிக்கும் நிலை யாதலின் அதன்கண் நிகழும் துரியம் சிவதுரியமாம். தசகாரியத் துள்ளும் `சிவயோகம்` என்றே சொல்லப்படுதல் நினைக்கத் தக்கது. என்னும், உண்மைச் சுத்தாவத்தையாகிய முத்தி வகைகளே பரா வத்தை யாதலின், அதன்கண் நிகழும் துரியம் பர துரியமாம். அதன் பின் நிகழும் அதீதமே சாயுச்சிய முத்தியாகலின், அந்நிலையில் விளையும் ஆனந்தமே முடிநிலைப் பேரானந்தம் ஆதலின் அது பரானந்தமாகும். பரானந்தத்தை அடைந்தவன் பரானந்தி. உண்மைச் சுத்தத்தை, உண்மை` என்றும், `அனைத்துத் தத்துவங்களும்` எனக் கூற வந்தவர் அதனை வேதாந்திகளும் உணரும் வகையில், `மேவிய நாலேழ்விடுத்து நின்றான்` என்றும் கூறினார். `அந்தம்` என்பதன் பின்னும் ஆக்கம் வருவித்து, `சீவன் துரியம் முதலாகச் சிவன் துரியம் அந்தமாகச் சீராக ஆவ அவத்தை பத்து` என முடிக்க.
இதனால், யோகாவத்தை, தசகாரியம் இவற்றை வைத்து நோக்கின், சுத்தாவத்தைகள் பலவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.

பொழிப்புரை :

`பரம்` என்பது `மேல்` என்னும் பொருளது ஆதலின், `எங்கும் பரன் என்று சொல்லப்படுகின்ற சிவன், மேலானவன்` - என்பது போதரும். இனி, `பரமம்` என்பது பரத்தினும் உயர்ந்த மேன்மையைக் குறிக்கும். ஆகவே, `பரம்பரன்` என்று சொல்லப்படுகின்ற சிவனே மேலான சிவன். அவனைத் தலைப்படும சீவன் முத்திநிலையே பரசாக்கிரம். (அதில் பிராரத்தம் உயிரைத் தாக்காவிடினும் உடலூழாய் வந்து போகும்.) `பர சொப்பனம்` எனப் படுகின்ற அதிகார முத்தியில் பிராரத்துவத் தொடர்பு உண்டாகாது. பர சுழுத்தியாகிய போக முத்தியிலும், பர துரியமாகிய இலய முத்தியிலும் ஞானம் முற்றி நிற்கும். பரதுரியாதீதமாகிய பரமுத்தியில் சிவானந்தப் பெருக்கு உளதாம். இவையே உண்மைச் சுத்தாவத்தைகளாம்.

குறிப்புரை :

`பரமம் பரத்தின் மேலாம்` என இயைக்க. `பரன்` என்பதை `சொரூப சிவன்` என்றும், `சிவன்` என்பதை தடத்த சிவன் என்றும் நாயனார் கொள்கின்றார். `பர நனவாக` என்பதோடும் `இடர்` என்பதைக் கூட்டி. `பரநனவில் (இடர்) ஆக விரிந்த கனா இடர் வீட்டும்` என முடிக்க. விரிந்த கனா பர சொப்பனம். எனவே, `சுழுனை` என்றதும் பர சுழுத்தியே ஆயிற்று உயிர் ஆனந்தியாதல் பரா தீதத்தில் ஆதலின், அதற்கு முன்னேயுள்ள துரியமும், `உரந்தகும்` என்றதிலே அடங்கிற்று. அனைத்தையும் `உண்மை` என ஒன்றாய் அடக்கினமையின், `தானே` என ஒருமை அசையே கூறினார்.
இதனால், பராவத்தைகளே உண்மைச் சுத்தாவத்தைகள் ஆமாறு காரண வகையாலும், பயன் வகையாலும் வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 17

சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅமர் ஆபதித்
தேவாம் உருத்திரன் ஈசன்ஆம் காணிலே.

பொழிப்புரை :

தத்துவங்களை ஆராயுமிடத்து, எல்லா உயிர் களும் முடிவில் அடையும் இடமாய் உள்ள பரமசிவனும், பரா சத்தியும் முதற்கண் முறையே பர நாத மூர்த்தியும் பரவிந்து சத்தியுமாய் நிற்க பின்பு பரவிந்து சத்தியினின்று அபர நாத மூர்த்தியும், அவனிடத் தினின்று அபரவிந்து சத்தியும் தோன்ற, அதன்பின் அபரவிந்து சத்தியினின்று சதாசிவன், மகேசுரன், உரூத்திரன், மால், அயன், என்போர் முறையே ஒருவரினின்று மற்றொருவர் தோன்றுவர்.

குறிப்புரை :

`இங்ஙனம் பரமசிவனும், பராசத்தியும் ஆகிய அவர்களே தடத்த நிலையில் பர நாத மூர்த்தி, பர விந்துசத்தி முதலாகிய ஒன்பது பேதங்களாய் நிற்பர்` என்றபடி இதனை,
``சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்தி ரன்றான், மால், அயன் - ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; அருவம் நால்; இங்கு உருவம் நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்``3
என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. இச் செய்யுளில் பரநாத மூர்த்தியே `சிவம்` என்றும், பர விந்து சத்தியே `சத்தி` என்றும் சொல்லப் பட்டனர். எனவே, `நாதம், விந்து` எனப் பட்டவை அபர நாதமு, அபர விந்துவும் ஆயின. இம் மந்திரத்துள் `பரநாதம்` என்றதனானே அபர நாதமும், `பரவிந்து` என்றதனானே அபர விந்துவும் பெறவைக்கப் பட்டன. `காணில்` என்பதை முதலில் வைத்து, `ஓங்கி` என்பதை `ஓங்க` எனத்திரித்து, `ஈசன் அவன்பால் ஆய், அரி, பிரமன், அமர் ஆபதித் தேவாம் உருத்திரன் ஆம்` என இயைத்து முடிக்க. செய்யுள் பற்றி இங்ஙனம் முறை பிறழவும், சொற் சுருங்கவும் ஓதினார். ஈசன் - மகேசுரன். `ஆய்` என்பதனையும் `ஆக` எனத் திரிக்க. `மகேசுரன், சதா சிவன்பால் ஆவன்` என்றகுறிப்பானே, `உருத்திரன் மகேசுரன்பால் ஆம்` என்பது பெறப்பட்டது `அரி, பிரமன்` என்பது செவ்வெண். அதன்பின் தொக்கு நின்ற `இவ்விருவரும்` என்னும் எழுவாய் `ஆபதி` என்பதில் ஆதலாகிய பயனிலையோடு முடிந்தன. `அமர்` என்னும் முதனிலையே `அமர்ந்து` என எச்சப்பொருள். அமர்ந்து ஆதலாவது. ஒடுங்கியிருந்து தோன்றுதல். `ஆ பதி` ஏதுப் பொருட்டாய வினைத்தொகை. பதி - தலைவன். பதித் தேவாம் உருத்திரன்` என்பது, `பதியாகிய தேவனாகிய உருத்திரன்` எனப் பல்பெயர் ஒட்டுப் பண்புத் தொகை. இந்திரனுக்கு இங்கு இடம் இன்மையால் `அமராபதி` என்பதை இந்திரனது நகரமாகக் கொள்ளுதற்கு யாதும் இயைபில்லை. `அமர்ந்தாபதி` என்றே பாடம் ஓதுல் சிறக்கும்.
சிவனது இந்த ஒன்பது நிலைகளும் தடத்த நிலைகளேயாகும். இவை `நவந்தரு பேதம்` - எனப்படுகின்றன. இவைகளை நாயனார் இங்குக் கூறியதற்குக் காரணம், `முத்தி வகையாகிய பராவத்தையை அடைந்தோர் படிமுறையானே கீழ் இருந்து மேல் உள்ள இந்நிலைகளை யெல்லாம் அடைவர்` என்பதும், `அந்நிலையில் அவர்களும் இங்குக் கூறிய பெயர்களையெல்லாம் பெறுவர்` என்பது உணர்த்தற் பொருட்டாம். சிவனது நிலைகள் `சம்பு பட்சம்` என்றும், பராவத்தையை எய்தினோரது நிலைகள் `அணுபட்சம்` என்றும் சொல்லப்படும்.
மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் கூறியபடி கீழ் உள்ளவை நான்கும் உருவம். மேல் உள்ளவை நான்கும் அருவம். இடையில் உள்ள ஒன்றும் அருவுருவம். அருவம் இலயம், அரு வுருவம் போகம். உருவம் அதிகாரம். இந்த மூன்றும் இறை யவத்தைகளாகும். மேல் எல்லாம் கூறியன உயிர் அவத்தைகள். அருவம், `நிட்களம்` என்றும், உருவம், `சகளம்` என்றும், அருவுருவம் `நிட்களசகளம்` அல்லது `சகள நிட்களம்` என்றும் சொல்லப்படும். இறையவத்தை மூன்று பற்றிய முத்திகளே, `அதிகார முத்தி, போக முத்தி, இலயமுத்தி` எனக் கூறப்படுகின்றன. இம்மூன்றும் `அபரமூத்தி` என்றும் சொல்லப்படும். இவையெல்லாம் இம்மந்திரத்தின் வழிப் பெறப்படும். இதனானே இது, மேல், `சிவமாம் பரத்தினில் சத்தி`* என்றதற்குப்பின் `கூறியது கூறல்` ஆகாமை உணர்க.
இதனால், `பராவத்தை சாக்கிரம் முதலியவற்றால் ஐந்தாதலே யன்றிப் பிறவாற்றால் பலவாதலும் உண்டு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கலப்பறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்பறி யார்உடலோடுயிர் தன்னை
அறப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல கடலது வாமே.

பொழிப்புரை :

சிவன் தமது அறிவினுள் அறிவாய்க் கலந்திருத் தலையும், `பூவுலகம் முழுதும் ஒரு காலத்தில் முற்று அழிந்தொழியும்` என்பதையும் அறியாதமடவோர், உடலோடு கலப்பினால் ஒன்றாய் இருக்கின்ற உயிர் பொருளால் வேறாதலை உணர்ந்து உடம்பையே தாமாகப் பற்றி நின்று, அதனால் இவ்வுலகத்திற்றானே அருளரசு ஆள மாட்டுவாரல்லர். அவர் அத்தகைய நிலையை அடைய வேண்டின், அவர்கள் குறிக்கொளத் தக்கது சிவனது தடத்தத் திருமேனிகளை எழுதி வைக்கும் உள்ளமாகிய கிழியேயாம்.

குறிப்புரை :

``உயிரா வணம் இருந்து உற்றுநோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி,
உயிரா வனஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி``*
என அப்பரும் அருளிச் செய்தார். அவ்வருள்மொழியால், அஃது யோகப் பயிற்சியானே கூடும்` என்பது விளங்கும்.
`கடல் சூழ் உலகு ஏழு` ஆவன, நாவலம் பொழில் முதலிய ஏழு பொழில்கள். தாம் உள்ள இடத்து உள்ளவர்களை உள்ளத்துட் கொண்டே ஓதுகின்றார் ஆதலின், பூவுலகத்தின் நிலையாமையையே எடுத்துக் கூறினார். பூவுலகமும் ஏழ்கடலும் ஏழ்பொழிலுமாய் விரிந்து கிடத்தலின், `இவை முழுதும் எஞ்சாது அழிந்தொழிதலும் உளதாகுமோ` என மயங்குவர் என்றற்கு ``கடல் சூழ் உலகேழும் உலப் பறியாது`` என்றார். பறிதல் - நீங்குதல். `அலப்பறிந்து` என்பது பாடம் அன்று. `அறப்பிரிந்து` என ஓதலும் ஆம். இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், `பராவத்தை நிலையை அடைதற்கு அந்நிலையில் நிற்கும் சிவனைச் சகலாவத்தையிற்றானே பாவனை முறையால் வழிபடுதல் வழியாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியின் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற ஞானமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

பொழிப்புரை :

சிறு தவங்களையெல்லாம் செய்து அலுத்துவிட்ட பின்பு நல்லறிவு பிறந்து செய்கின்ற பெருந்தவந்தின் வழியாக உயிர்களைப் பராவத்தையில் சேர்க்கின்ற தனது இயல்பை ஒருவன் அறிந்து தன்னை அடைய விரும்பினால் எங்கள் இறைவனாகிய சிவன் உடனே அவன் முன் தோன்றுவான். ஏனெனில் அவன் பெருங் கருணையாளன். அம்முறையில் யான் எனது பழைய சிற்றறிவு முடியும் காலத்தையும் அறிந்தேன் அதனால் சிவனது பேரறிவாலே என்னையும் அறிந்தேன். யான் இது பொழுது இன்புற்றிருக்குமாறு இவ்வாறாம்.

குறிப்புரை :

பெருந்தவம், சரியை கிரியா யோகங்கள், இவற்றை பின்னையறிவனவாகக் கூறினமையால், முன்பு சிறு தவங்களைச் செய்தமை விளங்கிற்று. அவை உலகப் பயன்களை விரும்பிச் செய்தன வாகும். அப்பயன்கள் யாவும் சில காலமே யிருந்து அழிந்தொழிதலை உணர்ந்தமையால், அவற்றைத்தரும் தவங்களைச் செய்வதில் அலுப்பு உண்டாயிற்று. முன்மந்திரத்தில் சொல்லியபடி இப்பெருந்தவத்தால் சிவன் உயிர்களைப் பராவத்தையில் சேர்த்தல் பெறப்பட்டது. மோனை நயம் கெடுதலையும் நோக்காது, `உண்மை செய்து அன்னை அறியின்` எனப் பிரித்து, `சத்தி நிபோதம் வாய்க்கின்` எனப் பொருள் உரைப் பார்க்கு சத்தி நிபாதத்தின் பின்னர் நிகழ்வதாகிய பெருந்தவம் சத்தி நிபாதத்திற்கு முன் நிகழ்வதாய் முடிதலை நோக்குக. சிற்றறிவு - ஏக தேச ஞானம்; அஃதாவது சில பொருள்களையே அறிதல். அது முடியுங் காலம், அவ்வாறு அறிந்து வருதலில் உவர்ப்புத் தோன்றும் காலம். `தன்னாலே தந்தால் தன்னையும் தானே காணும்` என்பவாகலின், `என்னையறியலுற்று` என்றது சிவ ஞானத்தினால் ஆயிற்று. இவ்வாற்றால் பராவத்தையைத் தலைப் பட்டமையால் இன்புற்றிருக்க இயன்றது.
இதனால், முன் மந்திரத்தில், ``குறிப்பது கோல மடலது வாமே`` எனக் கூறிய அந்நெறியிலே நின்றவழி, முறையாக விளையும் பயன்களின் முடிநிலைப் பயனாகப் பராவத்தையும் அதன்கண் பரானந்தமும் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.

பொழிப்புரை :

பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணி கலன்கள் தம்மிடத்துப் பொன் உள்ளதாயினும் அதனை உரைச் செய்யாது மறைத்துத் தமது அழகினையே உணரப் பண்ணி மக்களை மயக்குகின்றது. ஆயினும் அந்த அணிகலன்களின் செயற்கை நலன்களை அழித்துவிட்டால், அணிகலனாய் இருந்த பொருள்கள் அழியாதிருப்பினும் அவை பொன்னாகி விட்ட அதனுள்ளே மறைந்து விடும். அவைபோல, சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற ஆன்மாவைப் பெத்தகாலத்தில் அதனுடைய தனு கரணங்கள் தம் வயப்படுத்தித் தம்மயம் ஆகச் செய்து, ஆன்மாத் தன்னைத் தான் அறியாதபடி மறைத்து அதனைத் தாமென்றே மயங்கிச் செய்துவிடுகின்றன. ஆயினும், ஆன்மாக் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுதலால், ஆன்மாவில் வியாப்பியமாய்த் தமக்கெனச் சுதந்திரமின்றி ஆன்மாவின் வழியே செயற்படுகின்ற தனு கரணங்கள் தாம் அழிந் தொழியாது ஆவ்வான்மாவின் வயப்பட்டு முன்போல மருள் வழியில் இயங்காமல், ஆன்மாவைப் போலவே அருள் வழியில் இயங்கும்.

குறிப்புரை :

இவையிரண்டிற்கும் காரணம், ஆன்மாவின் அபக்குவமும், பக்குவமுமேயாகும். `ஆன்மா அபக்குவ காலத்தில் மாயை கன்மங்களின் வழிபட்டுச் சகலாவத்தையையும், பக்குவ காலத் -தில் அதனின் நீங்கி நின்மலாவத்தையையும், வீடுபெறும் காலத்தில் பராவத்தையையும் அடையும்` என்பது இதனால் ஆன்மாவின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இஃது எடுத்துக் காட்டுவமை.

பண் :

பாடல் எண் : 21

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.

பொழிப்புரை :

மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மாவின் பெத்த காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுவதால், உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும் பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும்.

குறிப்புரை :

இவற்றிற்கும் காரணமும், மேற்கூறிய அபக்குவ பக்குவங்களே என்பது வெளிப்படை.
இதனால், மேற்கூறிய அந்தப் பொருளே பரம் பொருளின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இதுவும் அவ்வுவமை.

பண் :

பாடல் எண் : 22

ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

பொழிப்புரை :

பெத்தம், முத்தி இரண்டும் சிவன் செயலே யாகலின் அது பற்றி அவையிரண்டும் முறையே, `ஊனநடனம், ஞான நடனம்` எனப்படும். ஊன நடனத்தில் சிவனது சத்திதிரோதான சத்தியாயும், ஞானநடனத்தில் சிவனது சத்தி அருட்சத்தியாயும் செயற்படும். சிவசத்தி பொருளால் ஒன்றேயாயினும், செயல் பற்றி இவ்வாறு இரண்டாக வகுத்து விளக்கப்படுகின்றது. திரோதான சத்தி மறைத்தலையும், அருட் சத்தி அருளலையும் செய்யும்.
உமாபதி தேவர், திருவைந்தெழுத்தை `நமசிவாய` எனத் தூலமாகக் கொண்டாலும், `சிவாயநம` எனச் சூக்குமமாகக் கொண்டாலும்,
``ஊன நடனம் ஒருபால்; ஒருபால்ஆம்
ஞானநடம்; தான்நடுவே நாடு``l
என அருளிச் செய்தார். தான் - சீவன்; அல்லது ஆன்மா. `அது நடுவே உள்ளது` எனக் கூறப்பட்டமையால், யகாரம் பசு வெழுத்தாயிற்று.
`உண்மை விளக்க` - நூல் திருவைந்தெழுத்தை, `சிவாயநம` எனச் சூக்குமமாக எடுத்துக் கொண்டு,
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன் எழுத்து ஐந்தின் அடைவாம்``*
எனக் கூறிற்று. ஆகவே, `சிகாரம் சிவன்; வகாரம் அருட்சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதான சத்தி, மகாரம் ஆணவ மலம்` என்ற தாயிற்று. மாயை கன்மங்கள் ஆணவ மலம் போல உயிருக்கு இயற்கை யாகாது, திரோதான சத்தியாலே செயற்யைாகக் கூட்டப்பட்டு, ஆணவ மலத்தின் பரிபாகத்திற்குத் தக்கவாறு அந்தத் திரோதான சத்தியாலே செயற்படுத்தப்படுவதால், அவை வேறு நில்லாது, திரோதான சத்தியுள் அடங்குகின்றன. `மாதவச் சிவஞான யோகி கட்கும் இதுவே கருத்து` என்பது அவரது உரைகளால் விளங்கும். இஃது அறியாதார், `மகாரம் மாயையைக் குறிக்கும்` என்பர். `அவ்வாறாயின் மூல மலமாகிய ஆணவத்தைக் குறிப்பது எது` என அவர் நோக்காமை யறிக.
உமாபதி தேவரும் ஆன்மாவை நடுவாக வைத்து,
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத், திரோதம், மாசு, அருள், சிவம்``l என முதலில் முன் உள்ள எழுத்து பாச எழுத்து இரண்டையும், பின்பு பின் உள்ள பதியெழுத்து எழுத்து இரண்டையும் குறித்தார். `முன், பின்` என்பவற்றைக் காலம் பற்றிக் கொள்ளாது. இடம் பற்றிக் கொள்க. இவற்றால், `ந, ம` என்பன பாச எழுத்துக் களும், `சி, வ` என்பன பதி எழுத்துக்களும் ஆயின. எனவே, முப்பொருள்களும் அஞ்செழுத்தில் அடங்குதலாலும், ``பலகலை ஆகமம், வேதம் யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தலே`` யாகலானும்,
``அஞ்செழுத்தே ஆகமமும், அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும்``8
என உண்மை விளக்கத்திலும்,
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``3
எனத் திருவருட் பயனிலும் கூறப்பட்டன.
இவற்றால், `நகார மகாரங்கள் ஊன நடனம்` என்பதும், `சிகாரவகாரங்கள் ஞான நடனம்` என்பதும் விளங்கும்.
கீழாலவத்தை மத்தியாலவத்தை, மேலால் அவத்தைகளில் நிற்போர் தத்துவங்களின் நீங்காமையால் அவர்களில் பற்றுக்களை விட விரும்பாதவர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்தும், பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்தும் கணித்தற்கு உரியர். அவற்றின் பயனாக ஞான குருவின் உப தேசத்தைப் பெற்றுப் பற்றுக்களை விட்டொழிக்க முயல்கின்றவர்கள் தத்துவங்களாகிய பாசங்கள் நீங்குதற்பொருட்டு அஞ்செழுத்துக்களில் பாச எழுத்துக்கள் இரண்டையும் நீக்கி, மற்றை மூன்றெழுத்தை மட்டுமே கணித்தற்கு உரியர். இதனை, `அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பர். இந்நிலையில் பிரணவத்தைச் சேர்த்தல் கூடாது. பிரணவம் இன்றிச் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களைத் திரும்பத் திரும்பக் கணிக்குங்கால், யகாரம்வகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைப்பட்ட தாகிவிடும். ஆகவே, ஆன்மாவை எவ்வகையிலும் பாசங்கள் பற்றுதற்கு வழியில்லை, யகாரத்தைத் தொடர்ந்து சிகார வகாரங்கள் வர,பின்பு வகரத்தைத் தொடர்ந்து யகாரம் வருதலால், ``அடியேன் நடுவுண் இருவீரும் இருப்பதனால் ``* என்னும் திருவாசகத் தொடர் இதனையே குறிப்பதாகக் கூறுவர்.
சிவஞான போதஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர்.
``உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி``
எனக் கூறி, அதனையடுத்து ``எண்ணும் அஞ்செழுத்தே`` எனக் கூறியவர், அதனை வாளா கூறாது, `விதி எண்ணும் அஞ்செழுத்தே, எனக் கூறியருளினார். வார்த்திகத்திலும்.
``இவ்விடத்துச் சீபஞ்சாக்கரத்தை
விதிப்படி யுச்சரிக்க``
என்றார். `பாசம்ஒருவ` என முன்னே கூறினமையால், `விதிப்படி` என்றது, `பாச எழுத்துக்களை நீக்கிப் பிரணவமும் இல்லாமல் உச்சரித்தல் வேண்டும்` என்றதேயாகின்றது. வெளிப்படையாகவே அந்த மூன்றெழுத்து மந்திரத்தை அவர் எடுத்துக் கூறாமைக்குக் காரணம், `அவ்வாறு கூறுதல் மரபன்று` என்பதும், இன்னோரன்னவை யெல்லாம் குருமுகமாகவே அறிதற்குரியன` என்பதுமேயாம். ஆயினும் காலப்போக்கில் அவரது பொருளை உணர்ந்து பயன் பெறு பவர்கள் அருகி மாறுபட்ட கருத்துக்கள் மலிந்து வருதலால், இவ் விடத்து எடுத்துக் காட்ட வேண்டி வருகின்றது. இதுபற்றியே மாதவச் சிவஞான யோகிகள்.
``இங்ஙனம் ஆசிரியர் மாட்டெறிந்ததூஉம்
உணராதார் ... ... ... ... சித்தாந்த வழக்கொடு
முரணிக் கூறுவர்``8
எனக் கூறினார்.
பஞ்சாக்கரத்தைத் தூலமாகக் கணித்தலை விடுத்துச் சூக்குமமாகக் கொண்டு கணிப்பினும் யகாரம் வகாரத்திற்கும், நகாரத்திற்கும் இடைப்பட்டே நிற்றலால் பாசம் நீங்காதது பற்றி,
``ஆசில் நவா நாப்பன் அடையாது, அருளினால்
வாசி யிடை நிற்கை வழக்கு`` * *திருவருட்பயன் 89.
என்றார் உமாபதி தேவர். அஞ்செழுத்தில் பாச எழுத்துக்களை நீக்கி உச்சரிக்கின், யகாரம் வகாரதிற்கும் சிகாரத்திற்கும் இடைப்பட்டு நிற்றலை மேற்கூறியவாற்றால் அறிக. இதனையறியாதார், `சிவாய சிவ` என்பதை ஓர் உருவாக வைத்துப் பல உருக்கள் கணிக்க வேண்டும் என்பர். அவ்வாறு கணிப்பின். சில உருக்களில் `சிவா` என்பது `வசி` என இயைந்து அவ்வுருக்கள் வாசியிடை நிற்றலாகிய சாதகத்தப் பயவாமை உணர்க.
சிவஞானபோத ஒன்பதாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட சகலத்தில் சுத்த சுழுத்தியில் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையே உச்சரித்தல் வேண்டும் எனக் கூறினமையால், `பத்தாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட `அவனே தானே ஆகிய. அந்நெறி - ஏகனாகி` ஆன்மாத் தன்னை யிழந்து நிற்பதாகிய சகலத்தில் சுத்த சுழுத்தியில் யகாரத்தையும் நீக்கி, `சிவ` என இரண்டெழுத்தாக உச்சரித்தல் வேண்டும்` என்பது போந்தது. `இது காரண பஞ்சாக்கரம்` எனப்படும். இதனை நாயனார் அடுத்து வரும் தந்திரத்தில் ``சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்``, ``சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்`` என்பன முதலாக அருளிச் செய்வார்.
இங்ஙனமாகவே, சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்தில் அரன் கழலின்கீழ் ஆன்மா ஆனந்தத்தில் மூழ்குதலாகிய சகலத்தில் சுத்த துரியாதீதத்தில் அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்க. சிகாரம் ஒன்றுமே அசபா நலமாய் நிற்கும் என்பதும் பெறப்படும். இந்த ஓரெழுத்து மந்திரத்தை நாயனார் `நாயோட்டு மந்திரம்` என மறைபொருட்கூற்றாக ஓதினார். அந்தமந்திரத்தை மிகையானதாகப் பிற்காலத்தார் கருதிவிட்டனர். நாயின் தன்மை குரைப்பது. நாயின் தன் மையையே, `நாய்` என்றார். `குரைத்தலை ஓட்டுவது` என்றது, `பேச்சை ஒழித்து மௌனத்தை உண்டாக்குவது` என்றதாம். தருமை ஆதீன ஆதி பரமாசாரியராகிய குருஞான சம்பந்தரும்,
``கற்க இடர்ப்பட்டுமிகக் கற்றஎலாம் கற்றவர்பால்
தற்கமிட்டு நாய்போலச் சள்ளெனவோ``1
என, ஞான நெறியில் நில்லாது பேசும் பேச்சுக்களுக்கு நாயின் குரைப்பை உவமை கூறினார். `பேசா அனுபூதி`2 `மோனம் என்பது ஞானவரம்பு3 என்பன போன்றவற்றை நோக்குக. இந்த ஓரெழுத்து மந்திரம், `மாககாரண பஞ்சாக்கரம்` - எனப்படும். மந்திர நூல் வழக்கில், ஓர் எழுத்தான் ஆயதே சிறப்பாக `மந்திரம்` எனப்படும். அந்த மந்திரத்தை நாயனார் தமது மந்திர மாலையில் கூறாது போவாரோ.
ஐந்தெழுத்தாய் இருந்த மந்திரம் பின்பு மூன்றெழுத்தாய்ப் பின்பு இரண்டெழுத்தாய், இறுதியில் ஓரெழுத்தே ஆகிவிடுகின்றது. இது,
``சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே``4
என அருளிச் செய்த அனுபவத்திற்கு ஒத்துள்ளது. இதனை உமாபதி தேவர்,
``பதிபசு பாச முதிர்அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனமில் ஞாதுரு ஞானம் ஞேயம் என்று
இசைய மூன்றாய்ப் பசு பதி என்றவற்று
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயனெனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிவற் றியற்கை இயம்புதல் தகுமே``*
எனக் கூறினார். இங்ஙனம் கூறிய இதனையே சிவஞான யோகிகள் பரம சித்தாந்தத்தை ஓதியதாக உரைத்தார்.* இங்ஙனம் ஓதப்பட்டதன் பொருளை உணரமாட்டாதவர், பூர்வ பட்சம் எது? என அறிந்து கொள்ளாமல் இதற்கு உரை செய்துள்ளனர்.
இம்மந்திரத்தின் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இத்துணையும் கூற வேண்டியதாயிற்று.
(உரை): தச காரியங்களில் முதல் மூன்றின் முடிவில் உள்ள தத்துவ சுத்தி எய்திய பொழுது அது நிலை பெறுதற் பொருட்டுத் திரு வைந்தெழுத்தில் பாச எழுத்தாகிய நமக்கனை நீக்கி - மூன்றெழுத்தாகக் கணித்து, அதனாலே முன்பு தத்துவங்களாகிய சடத்தோடு கூடிச் சடமாய் இருந்த நிலை நீங்கிச் சித்தாகிய ஆன்மாத் தானேயாகி யகாரத்தோடே நின்று, (அஃதாவது நமக்களோடு சேராது நின்று - ஆன்ம ரூபம். ஆன்ம தரிசனம் இரண்டும் இவ்விடத்தே நிகழ்ந்துவிடும் இவையெல்லாம் சகலத்தில் சுத்த சாக்கிரம் சுத்த சொப்பன சுத்த சுழுத்திகளாய்விடும்) பாசங்களினின்று மிக மேன்மை யுற்றுப் பின் இறுதியில் உள்ள அருட் சத்தி வழியாக, (இது சகலத்தில் சுத்த துரியம்.) இயல்பாகவே பாசம் அற்று இருக்கின்ற சிவனைப் பெறும் பேற்றை அடை (இது சகத்தில் சுத்த துரியாதீதம்) அப்பொழுது முன்பு இருந்த யகாரம் வகாரத்திலே அடங்கும். பின்பு வகாரமும் சிகாரத்திலே அடங்கிவிடும் அதன் பிறகு உனக்குக் கிடைப்பது பரானந்தந்தான். (இதற்குமேல்) அடையத்தக்கது எதுவும் இல்லை என்பதாம்.

குறிப்புரை :

இதனைக் கீழ்க் காணும் பிற்காலத்து அடிகளது பாட்டு ஒன்று மிக நயம்படத் தெரிவிக்கின்றது.
``மாயநட் டோரையும், மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட் டோட்டிவெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே. ``
நட்டோர் - நண்பர். திரோதான சத்தியும். அதனால் கூட்டிச் செயற் படுத்தப்படுகின்ற மாயை கன்மங்களும். இவை நகாரத்தால் குறிக்கப் படுகின்றன.
மாயா - என்றுமே அழியாது நிற்கின்ற, மலம் - ஆணவம். ஆணவத்தை ஒரு பெண்ணாகக் கூறும் வழக்கு உண்மையை,
``பலரைப் புணர்ந்தும்இருட் பாவைக்குன் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``3
என்னும் திருவருட் பயனாலும் அறிக. இம்மலம் மகாரத்தால் குறிக்கப்படுகின்றது.
வீயவிட்டு ஒட்டுதல், நகார மகாரங்களை நீக்குதல். மெய்யருளாம்தாய் வகாரம். அதனோடு கூடுதலாவது, முன்புபோல நகார மகாரங்களோடு கூடாது, வகாரத்தோடே இணைந்து நிற்றல்.
தாயுடன் செல்லுதல் யகாரத்தையும் நீக்கி, இரண்டெழுத்தாகக் கணித்தல்.
தாதையைக் கூடிப் பின் தாயை மறந்துவிடுதல், வகாரத்தையும் நீக்கிச் சிகாரத்தோடு மட்டும் இருந்துவிடுதல்.
`தானே` என்பது, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி. ஈறு ஆர் பரை - இறுதியில் உள்ள அருட் சத்தி, பரையின் - பரையினால், தற்பரன் பேறு - தற்பரனைப் பெறும் பேறு. நிலை மொழியின் ஈறுதிரியாமை சிறுபான்மை பொதுவிதியானே கொள்ளப் படும். பேறு ஆர், `பேற்றினைப் பொருந்து` என முன்னிலை ஏவல். `சிவாய அடங்கும்` `சிய்யில் வவ்வும் யவ்வும் அடங்கும்` எனக் கொள்க. `முத்தி` என்றது ஆனந்த நிலையை. ஏகாரம் தோற்றம்.
இவையெல்லாம் நின்மலாவத்தைக்கண் நிகழ்வனவே யாயினும், `பராவத்தையிலும் அதீதம் ஒழிந்த ஏனை நான்கிலும் சூக்குமமாய் நிகழும்` என்பது உணர்த்துதற்கு இங்கு இதனைக் கூறினார்.
இதனால், `அஞ்செழுத்தின்புணை` எல்லா அவத்தைகளிலும் ஏற்றபெற்றியில் பிறவிக் கடலைக் கடத்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

துரியத்துல் ஓரைந்தும் சொல்அகா ராதி
விரியப் பரையின் மிகுநாதம் மந்தம்
புரியப் பரையின் பராவத்தா போதம்
திரியப் பரமாமாம் துரியம் தெரியவே.

பொழிப்புரை :

சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தை ஐந்திலும் வாக்குக்கண் அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாய், (அ, உ, ம, விந்து, நாதம் - என்பனவாய்)த் தூலமாய் நிகழும். (எனவே, அவ்விடத்து உலக வாசனை இருக்கவே செய்யும் என்பதாம்.) நின்மலா வத்தைக்கு மேலான உண்மைச் சுத்தாவத்தையில் அவ்வாக்குக்கள் சூக்குமமாய் நிகழும். (அதனால், உலக வாசனை தோன்றாவிடினும், `யான்` எனது என்னும் உணர்வினால் ஞாதுரு ஞான ஞேய வேற்றுமை நிகழவே செய்யும்.) அந்த வேற்றுமையும் அறுவது பர துரியத்திலாம். (அவ்விடத்தில் ஆன்மா அருள்மயமாய் நிற்கும்.) அதன் பின்பு மேலானதாய அதீதம் தோன்றும். (அதில் ஆன்மா ஆனந்தமயமாய் இருக்கும்.)

குறிப்புரை :

`துரியம்` என்பது, `மலாவத்தைகளைக் கடந்தது` என்னும் பொருட்டாய், நின்மலாவத்தையைக் குறித்தது. `ஐந்திலும்` என உருபும், `ஆதியாய், மந்தமாய்` என ஆக்கங்களும் விரிக்க. `சொல், நாதம்` என்பன வாக்கைக் குறித்தன. `விரிய, புரிய, தெரிய` என்ற அனுவாதத்தானே விரிதலும், புரிதலும், தெரிதலும் பெறப்பட்டன. விரிதல் - தூலமாய் நிகழ்தல். புரிதல் - இடையறாது நிகழ்தல். தெரிதல் - விளங்குதல். `மந்தம்` என்றது சூக்குமத்தைக் குறித்தது. `பரை` இரண்டில் முன்னது ஆகுபெயராய்ப் பராசத்தியால் நிகழும் பராவத்தையைக் குறித்தது. மூன்றாம் அடியில் அவை நேராகவே கூறப்பட்டன. பராவத்தா போதம் - பராவத்தையில் நிகழும் திரிபுடி ஞானம். இது வடமொழிச் சந்தி. திரிய - வேறுபட; நீங்க. `திரிய` என்னும் எச்சம் `தெரிய` என்னும் எச்சத்தோடும், அவ்வெச்சம் `பரமம்` என்பதில் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடும் முடிந்தன. `பராவத்தா போதம் திரியத் துரியம் தெரியப் பரமம்` என வினைமுடிக்க. பரம் - மேலான அதீதம்.
இதனால், `பந்தம் சூக்குமமாய் நிற்கும் அவத்தைகளும் பின் அது முற்றும் அறும் அவத்தையும் இவை` என்பது சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.

பொழிப்புரை :

சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளையும் சகலத்தில் மாயா கருவிகளால் அடையாது, திருவருளால் அடைந்து, (எனவே, `மேலா லவத்தையையும் கடந்து நின்மலாவத்தையை அடைந்து` என்றதாம்.) சகலத்திற் சுத்தமாகிய அந்த அவத்தைகளில் மேலே பாய்ந்தும், கீழே வீழ்ந்தும் பந்துபோல அலைகின்ற அலைவினால் அவ்வலைவு நீங்கப் பெறுகின்ற உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் நாட்டம் உண்டாகுமானால், அந்த நாட்டத்தின் முன் ஐந்து மலங்களும் அந்திக் காலத்தில் விளக்கின்முன் இருள் நில்லாது நீங்குதல் போல நில்லாது நீங்கும்.

குறிப்புரை :

`சகலத்து` எனவும, `அருளால்` எனவும் கூறிய வற்றால், புரியப்படுவன நின்மலாவத்தைகளாயின. தானே நிகழ்வன வற்றை ஆன்மாநிகழ்வித்துக் கொள்வது போலவைத்து, `புரிவுற்று` என்றார். பந்து இடும் - பந்தினை வீசுவது போல நிகழும் நந்தி - சிவன்.
இதனால், `ஆன்மாநின்மலாவத்தையையும் கடந்து, பரா வத்தையை எய்திய பொழுதே உண்மையில் தூயதாம்`என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.

பொழிப்புரை :

`இருபத்தைந்து` எனத் தொகை பெற்று நிற்கின்ற தத்துவங்களாய் உள்ள மூலப் பிரகிருதியில் இயல்பையும், `மாயேயம்` எனப்படுகின்ற வித்தியா தத்துவங்களாய் உள்ள அசுத்தமாயையின் இயல்பையும் சாதகன் உள்ளவாறு உணர்ந்து தத்துவ ஞானியாய், எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாகியும், பொருள் தன்மையால் வேறாகியும் நிற்கின்ற சிவமாகிப் பிறவியினின்றும் நீங்கி நிற்கும் பராவத்தையை அடைதலே உண்மைச் சுத்தாவத்தையாகும்.

குறிப்புரை :

`பொய்கண்ட` என்பது தாப்பிசையாய் `ஐயைந்து` என்றதனோடும் சென்றியைந்தது. பொய்கண்ட - நிலையாமை நன்கு உணரப்பட்ட. இங்கும் `மாயேயம்` என்பது, `மாமாயை` எனப்பாடம் திரிக்கப்பட்டுள்ளது. `மாயையாம் மாயேயம்` என்றாராயினும், `மாயேயமாம் மாயை` என மாறிக் கூட்டுக. தான், அசை, எய்தல் - அறிதல், படி - வகை. இஃது ஆகுபெயராய், `படியன்` எனப் பொருள் தந்தது. `சிவமாந் தன்மையைப் பெற்ற ஆன்மாவும் சிவம்போலவே வியாபகமாய் நிற்கும்` என்பார். ``எவற்றுமாய் அன்றாகி`` என்றார். ``எவற்றுமாய்`` என்றது, `எவற்றிலும் அவையேயாய்` என்றபடி.
இதனால், பராவத்தையை எய்துமாறும், `பராவத்தையே பிறவாநிலை` என்பதும், `அஃதே உண்மைச் சுத்தாவத்தை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

பொழிப்புரை :

பரம்பொருளை அறிய அவாவிநிற்கின்ற சுத்தான் மாவும், அதற்கு அதனை அறிதற்குத் துணைபுரிந்து அதன் அறிவுக்கு அறிவாய் நிற்கின்ற திருவருளும், அவ்வருளின் துணையால் அந்த ஆன்மாவால் அறியப்படுகின்ற பரம் பொருளும் ஆகிய மூன்று உயர் பொருள்களும், ஆன்மாவினிடத்து மூவகை உடம்புகளாய் நிற்கின்ற தத்துவங்களும், அவற்றைச் செலுத்துகின்ற திரோதான சத்தியும் நீங்கினவிடத்து ஒன்றாய்ப் பொருந்திவிடும். அஃதன்றியும், சிவன் பின்னர் அந்த ஆன்மாவைவிட்டுப் பிரியாத நிலைமையும் உண்டாகும்.

குறிப்புரை :

`நின்றான்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க `முன்னேயமும்` என்பது பாடம் அன்று. நேயம் - அன்பு; விருப்பம், விருப்பத்திற்குரிய பொருளை `விருப்பம்` என்றார். முந்நேயம் - திரிபுடி. அவை `ஞாதுரி, ஞானம், ஞேயம்` என்பன. இவைமூன்றும் வேறு வேறாய்த் தோன்றுங்காறும் `அனுபவம்` என்பது இல்லையாம். சிவத்தை உணர்தல் சிவஞானத்தாலன்றிக் கூடாமையால், பிற மதத்தினர் என்ன கூறினாலும் சித்தாந்தம் `ஞானம்` என்பது சிவ ஞானத்தையே. அது திருவருளேயாதல் அறிக. உபாதிகளைச் செலுத்துதல் பற்றித் திரோதான சத்தியும், `உபாதி` என உபசரித்துக் கூறப்படும். `சென்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. சென்ற ஆன் - நீங்கிய அவ்விடத்து. எங்கு - வேறிடம். `சொல்லாமையும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். இதன் பின்னும் `மருவும்` என்பதனைக் கூட்டுக. `உருவும், உபாதியும் சென்ற ஆன், நின்றானும் ... ... ... ஒன்றாய் மருவும்; நன்றான ஞானத்தின் நாதப் பிரான் (ஞானத்தின் நாதன் - திருவருளுக்குத் தலைவன்) எனை விடுத்து ஊங்கிற் செல்லாமையும் மருவும்` எனக் கூட்டி முடிக்க `ஊங்கிற் செல்லாமை` என்பதை, `எங்கெழுந்தருளுவது இனியேl என்பது போலக் கொள்க.
இதனால், பராவத்தை எய்துமாறும், அதன்கண் நிகழும் அனுபவமும் கூறும் முகத்தால் அதனது மேன்மை எடுத்தோதி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சாத்திகம் எய்தும் நனவென்ப சாற்றுங்கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவென்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம்
மாய்த்திடும் நிற்குணம் மாசில் துரியமே.

பொழிப்புரை :

சாக்கிரம் பொருள்களை நன்குணரும் நிலையாகலின் அது, `சாத்துவிக குணத்தின் காரியம்` என்றும், சொப்பனம் பொருள்களைச் சாக்கிரத்தில் அனுபவித்த வாசனையளவாய் நிற்கும் நிலையாதலின் அது மெய்ம்மைக்கு எதிரான போலி அனுபவம் ஆதல் பற்றிச் சாத்துவிகத்திற்கு எதிரான, `இராசதகுணத்தின்காரியம்` என்றும், சுழுத்தி, யாதும் உணராத நிலையாதலின் அஃது, இருள் மயமான `தாமத குணத்தின் காரியம்` என்றும் சொல்லப்படும். துரியம் இம்மூன்றையும் கடந்ததாகலின் அது `நிர்க்குணமாய் நிகழ்வது` என்றும் சொல்லப்படும்.

குறிப்புரை :

`துரியம் நிர்க்குணம்` எனவே, அதனைக் கடந்த துரியாதீதம், நிர்க்குணம்` எனச்சொல்ல வேண்டாவாயிற்று. துரிய துரியாதீதங்களை `நிர்க்குணம்` எனக்கூறியதனானே `நிர்க்குணம்` என்னும் வழக்கு. மாயாகுணங்கள் இல்லாமையையே குறிக்குமன்றி, யாதொரு குணமும் இன்மையைக் குறியாது - என்பது பெறப்படும். இறைவனை `நிர்க்குணன்` எனவும், `குணாதீதன்` எனவும் கூறுதலும் இந்தக் கருத்திலே தானே யன்றி, `யாதொரு குணமும் இல்லாதவன்` என்னும் கருத்தினாலன்று. இயல்பாகவே மாயையின் நீங்கி நிற்கும் இறைவன், குணங்கள் பலவற்றையுடையனாதலை நினைக.
முத்தொழில்களில், `படைத்தல் இராசதத்தொழில்` என்றும், `காத்தல் சாத்துவிகத் தொழில்` என்றும், `அழித்தல் தாமதத் தொழில்` என்றும் சொல்லப்படும். அதனால் அவ்வத்தொழிலைச் செய்யும் மூர்த்திகளை அவ்வக்குணம் உடையவராகக் கூறுவர். ஆகவே மும் மூர்த்திகளும் `குண மூர்த்திகள்` என்றும், மூவருக்கும் அப்பாற்பட்ட பரமசிவனை, `நிர்க்குணன்` என்றும் `குணாதீதன், என்றும் கூறுவர்.
மற்றும் மேற்கூறிய சாக்கிரம் முதலிய அவத்தைகள் முக்குணங்களின் காரியங்களாகச் சொல்லப்படுதல் பற்றித் திருமாலை, `சாக்கிரமூர்த்தி` என்றும், பிரமனை, `சொப்பனமூர்த்தி` என்றும், முக்குணங்களையும் கடந்து, நிர்க்குணனாய் உள்ள பரமசிவன் துரியமூர்த்தியாகின்றான். துரியம் நான்காவதாகலின், பரமசிவனை, `மூவருக்கும் அப்பால் உள்ள நான்காமவன்` என்பர்.
இனி மும்மூர்த்திகளை முக்குணங்களில் ஓரோர் குணத்தை உடையவராகக் கூறுதலும் அவர் கொண்டுள்ள தொழில் பற்றியே யன்றி, அவரவருக்கு உள்ள குணம் பற்றியன்று. `குணம் பற்றி` எனின், சொப்பன மூர்த்தியும், சுழுத்தி மூர்த்தியும் விழித்துக்கொண்டை யிருக்க, சாக்கிர மூர்த்தி துயில்கொள்பவனாய் இருத்தல் அமையாது. சாக்கிரம் முதலிய மூன்று பற்றியே கூறினாராயினும், சகலத்தில் கேவலம் தாமதத்தாலும், சகலத்தில் சகலம் இராசதத்தாலும் சகலத்தில் சுத்தத்தில் யோகம் சாத்து விகித்தாலும் நிகழும் என்க. ஆகவே, சுத்தம் நிர்க்குணமாம். முக்குணம் கூறுதல்பற்றி, நிர்க்குணமும் கூறவேண்டிய தாயிற்று. `சாத்துவிகம்` என்பது `சாத்திரம்` என மருவிற்று.
இதனால், சகலாவத்தையில் முக்குணங்கள் தொடருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

பொழிப்புரை :

அண்டங்களை ஆசனமாகக் கொண்டு, அவற்றிற்கு மேலே விளங்குகின்ற சிவபெருமான், உயிர்களால் பற்றப்பட்டுப் புறமும், அகமுமாய்ப் பல்வேறு வகையில் அமைந்துள்ள அண்டங்கள் எண்ணிலவாய் நிற்க, அவை அனைத்திலும், கட்பொறிக்குப் புலனாகின்ற மாற்றொளியையுடைய, பொன்னால் ஆகிய அணிகலன்போல அவற்றினுள் நிறைந்திருக்கின்றான்.

குறிப்புரை :

பெறுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``எறிகடல் ஏழின் மணலளவாக`` என்றது, `எண்ணிலவாக` என்றபடி, ``ஒளி`` என்றதனால், பொறி, கட்பொறியும், ``பொன்`` என்றதனஆல், ஒளி, பொன்னினது மாற்றொளியும் ஆயின. `பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் உள்ளனவாயினும் அவற்றது ஒளியையே மக்கள் நோக்குதல் போல, அண்டங்களிலே சிவபெருமான் நிறைந்திருப் பினும், அண்டங்களை மட்டுமே உயிர்களை உணர்கின்றன` என உவமையை, உணர்ப்படுதல் படாமை பற்றிய ஒரு புடை உவமையாகக் கொள்க.
``அண்டம் ஆரிரு ளூடுகலந் தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவார் எலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``l
எனவும்,
``அண்டங் கடந்தபொருள்; அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்``8
எனவும் ஓதினாற்போல இவரும், ``அண்டாசனத் தேவர்பிரான்`` என ஓதினார். `விளங்கி` என்பதை `விளங்க` எனத்திரித்து, `அண்டங்கள் விளங்கத்தான் அவற்றினுள் விளங்காது நிறைந்திருப்பான்` என்க.
இதனால், `தத்துவங்களின் காரியமாகிய அண்டங்கள் எண்ணிலவாம்` என்பது கூறப்பட்டது. `தேவர்பிரான் செறியும்` என்றது, அவை அவனால் நிலைபெறுதலை உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தானந்த மில்லாத தத்துவ மானவை
ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே.

பொழிப்புரை :

அண்டங்களாகிய ஆசனத்தின்மேல் ஆனந்தமாய் உள்ள மெய்ப்பொருள்தான் (வடிவமற்றதாயினும்) அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்துவடிவங்களைக் கொண்டு விளங்குதலால், அதனால் வியாபிக்கப்பட்ட முப்பத்தாறு முதனிலைப் பொருள்கள் தோன்றி, அழிவின்றி நிற்பனவே `தத்து வங்கள்` எனப்படுகின்றன. அவையே குறைவில்லாத அண்டங் களாய்க் காரியப்பட்டு, அளவிறந்து நிற்கின்றன.

குறிப்புரை :

ஐந்துவடிவங்கள் மேல், \\\"சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்`` 3 என்னும் மந்திரத்தின் உரையில் சொல்லப்பட்ட `சிவம், சத்தி, சதாசிவன், மகேசுரன்` என்பவற்றோடு `வித்தை` என்பதுமாகும். ஆகி நின்று செயலாற்றுதலால். முப்பத்தாறு தத்துவங்களில்மேல் உள்ள ஐந்தையும் மெய்ப்பொருள்தானே நேரே செயற்படுத்துகின்றது. கீழ் உள்ள முப்பத்தொன்றினைப் பிறரைக்கொண்டு செயற்படுத்து கின்றது. `தத்துவம்` எனப்படுவன முதற் காரணப் பொருளாய் ஊழி முடிவுகாறும் அழியாது நிற்பன ஆதல் பற்றி, \\\"தான் அந்தம் இல்லாத தத்துமானவை`` என்றார். \\\"தான்`` என்றது பன்மையொருமை மயக்கம். `தத்துவமானவை அண்டமாய், எண்மடங்கு ஆம்` என்க. ``எண் மடங்கு`` என்பது மிகுதியைக் குறிப்பதொரு வழக்கச்சொல். அண்டத்து - அண்டமாம் நிலையில். `அண்டங்கள் குறைந்த எண்ணிக்கையையும், தத்துவங்கள் அவற்றினும் மிக்க எண்ணிக்கை யையும் உடையன` என உரைப்பார்க்கு, `அவ்வாறான மேற்கோள் எங்குளது` எனத் தெரியவில்லை.

பண் :

பாடல் எண் : 1

அஞ்சில் அமுதம் ஓர் ஏழின்கண் ஆனந்தம்
முஞ்சில் ஓங்காரம்ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சக மேநின்று வைத்திடில் காயம் ஆம்
சிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.

பொழிப்புரை :

கெடுதல் இல்லாத ஓங்காரத்தின் கலைகள் பனி -ரண்டில் `அ, உ, ம, விந்து` என்னும் நான்கிற்கு அப்பால் ஐந்தாவதாய் உள்ள அர்த்த சந்திர கலையை அடைந்தால் ஓர் அமுததாரை ஒழுகும் (அஃது உடல் எங்கும் உள்ள நாடிகளில் பாய்ந்து உடலை உறுதிப் படுத்தும். இந்த இடம் புருவநடுவிற்குச் சற்றுமேல், `நெற்றி நடு` என்னலாம்) பின்பு நிரோதினியைத் தாண்டி ஏழாவதாய் உள்ள நாத கலையை அடைந்தால் அவ்விடத்து ஓர் ஆனந்தம் தோன்றும் (அந்த ஆனந்தம் சிறையில் உள்ளவனுக்கு, `விடுதலை தோன்றி விட்டது` என்பது தெரிந்தவுடன் உண்டாகின்ற ஆனந்தம் போல்வதேயாகும். இந்த இடம் பிரமரந்திரத்திற்குப் பின்) அதனைக் கடந்து நாதாந் தத்தைத்தாண்டி, ஒன்பதாவதாய் உள்ள சத்திகலையிலும் அதனைக் கடந்து வியாபினி கலையைத் தாண்டிப் பதினொன்றாவதாய் உள்ள சமனா கலையிலும் சென்று உள்ளத்தை அசையாதிருக்கச் செய்தால், அத்தகையோர் இவ்வுலகத்திலே இருப்பினும் உமைகேள்வனாகிய சிவன், `ஊனே, ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே`` 3 என அருளிச்செய்தபடி அவர்கள் உடம்பிற்குள்ளே இனிது வெளிப்பட்டு நின்று, ``வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால்தோறும் - தேக்கிடச் செய்து``8 (அஃதாவது பேரானந்தத்தை விளைத்து) நிற்பான்.

குறிப்புரை :

``மூஞ்சில் ஓங்காரம்`` என்பதை முதலிற் கொள்க.
`ஓர் ஒன்பானில், பதினொன்றில் வைத்திடில், வஞ்ச அகமே நின்றும் கிளிமொழி கேள்காயம் ஆம்` எனக் கூட்டி முடிக்க.
வைத்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
பிரபஞ்சம், `வஞ்சம்` என வந்து, புணர்ச்சியில் வகரம் கெட்டபின் அகரம் தொகுத்தலாயிற்று. `நின்றும்` என்னும் உம்மையும் தொகுக்கப் பட்டது. கேள் - கேள்வன். ஈற்றடியை மகடூ முன்னிலை யாக்கினாரும் உளர். நாயனார் இந்நூலில் யாண்டும் மகடூ முன்னிலை வைக்கக் காண்கிலம்.
இதனால், பிராசாத யோகமும் கரணத்தோடு கூடிய மலாவத்தையேயன்றி, நின்மலாவத்தை ஆகாமை அதன் பயன்கள் சிலவற்றை உணர்த்து முகத்தால் கூறப்பட்டது.
மேல் மந்திரம் - 696 இன் உரையைக்கொண்டு இப் பொருளைத் தெளிக. மற்றும் பிராசாத நூல்களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 2

புருட னுடனே பொருந்திய சித்தம்
அருவமொ டாறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்குள்ள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம்அவ் வவத்தையே.

பொழிப்புரை :

[சகலத்தில் சுத்தமாகிய யோக வகைகளில் பிராசாத யோகத்தில் ஒருவகையான பராவத்தை நின்மலாவத்தைகள் சொல்லப் படுகின்றன. அவை மேற்கூறிய சுத்தத்தில் சுத்தாவத்தைகளாகிய பரா வத்தையும், இனிக்கூறப்படும் நின்மலாவத்தைகளும் அல்ல.* அந்த அவத்தைகளில் தத்துவங்களின் நீக்கமும் சொல்லப்படுகின்றது. அவற்றுள் அமைந்த நின்மலாவத்தையை இம்மந்திரம் குறிப் பிடுகின்றது.]
புருடதத்துவமும், அதற்குக்கீழேபொருந்தியுள்ள சித்தமும் சூக்குமமாகிய நாதவிந்து கலைகளிலே ஒடுங்கும். அவ்வொடுக் கங்கள் முறையே யோகத்தில் நின்மலாதீதமும், யோகத்தில் நின்மல துரியமும் ஆகும். சித்தத்திற்குக் கீழ் உள்ள புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்று அந்தக்கரணங்களும், தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் யோகத்தில் நின்மல சுழுத்தி முதலியவற்றில் விரிந்துநிற்கும். இங்ஙனமாகவே ஞானவத்தைகளை நோக்க, மேற்கூறிய பதினொன்றாந் தானமாகிய சமனா கலையும் யோகாவத்தைத் தானமேயாம். (`ஏனெனில், அவ்விடத்தும் சுத்த மாயைத் தொடர்பு இருத்தலின்` என்பது கருத்து).

குறிப்புரை :

ஆறும் - தணியும்; ஒடுங்கும் ``உடனே`` என்பது எண்ணொடுவின் பொருட்டாய் நின்றது. ``அருவம்`` என்றது, சூக்குமம் என்றபடி. அகார உகார மகாரங்களை நோக்க, விந்து நாதங்கள் சூக்குமம் ஆதலை உணர்க. ``அருவமொடு`` என்றது, `அருவத்தளவில்` என்றபடி. அதீதத்துரியம், உம்மைத் தொகை. `துரியத்தில்` என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `மிக்குள்ள எட்டும் சுழுத்தியினின்றும் கீழ்க்கீழ் விரியும்`` என்க. புத்திமட்டும் தோன்றுவது சுழுத்தியும் அதனுடன் அகங்காரமும் தோன்றுவது சொப்பனமும் அவற்றுடன் மனமும் தன்மாத்திரையும் தோன்றுவது சாக்கிரமும் ஆகும். இம்முறையில் நாதாந்தம் முடிய, `துரியாதீதம்` எனச் சொல்லப் பட்டாலும் அதற்குமேலும் பரவிந்து பாநாதங்கள் இருத்தலால் பதி -னொன்றாந்தானமும் சகலத்தில் சுத்தாவத்தைத் தானமே - என்றபடி. இதனை, சிவமூல மந்திரங்களை நோக்கிப்பிரணவ கலைகள் பொதுவாக, `சூக்கும பஞ்சாச்சரம்` எனச் சொல்லப்பட்டாலும் அகார உகார மகாரங்கள் விந்து நாதங்களை நோக்கி, `தூலம்` எனச் சொல்லப் படுதலைப்போலக் கொள்க. ``பதினொன்றும்`` என்னும் உம்மை சிறப்பு. பிராசாத யோகத்தின் அவத்தைகளை எடுத்துக்காட்டியது. அவற்றிடையேயுள்ள தாரதம்மியங்கள் போன்றனவே சுத்தத்திற் சுத்தாவத்தைகட்கும், சகலத்திற் சுத்தாவத்தைகட்கும் இடையேயுள்ள தாரதம்மியங்கள்` என்பது உணர்த்துவதற்கு அவத்தைத் தானத்தை `அவத்தை` என உபசரித்தார்.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் காரணங்காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

காட்டும் பதினொன்றும் கைகலந் தால்உடல்
நாட்டி அழுத்திட நந்தியல் லால்இல்லை
ஆட்டம்செய் யாத அதுவிதி யேநினை
ஈட்டும் அதுதிடம் எண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபடி சிவாகமங்கள் கூறுகின்ற அந்தத்தானங்கள் பதினொன்றிலும் சென்று நின்றால் உடம்பு விரைவில் அழியாது நெடுங்காலத்திற்கு நிலைபெறும் வகையில் உறுதியடையும். அந்நிலையில் அவ்வுடலில் உள்ள உயிருக்குச் சிவனைத் தவிரத் துணையாவார் வேறு ஒருவரும் இலராவர். (அஃதாவது, `அவ்வுண்மை அவ்வுயிருக்கு நன்கு விளங்கி நிற்கும்` என்பதாம்) அதனால் உனது மனம்போனபடி நீ போய் அலைந்துகொண்டிருந்த அலைவுகளையெல்லாம் விடுத்து அமைதியுற்றிருந்த அந்த அமைதியே வழியாகச் சிவன் தன் அடியார்களோடு கூட்டுதல் உறுதி. இந்த உறுதியும் உனக்கு அந்நிலையில் விளங்குவதாகும்.

குறிப்புரை :

கைகலத்தல், `கலத்தல்` என்னும் பொருட்டாய ஒருசொல். நாட்டி அழுத்திட - நிலைப்படுத்தி உறுதிசெய்ய `உறுதி செய்ய` என்ற அனுவாதத்தானே உறுசெய்தலும் பெறப்பட்டது. விதி - முறைமை.
இதனால், சகலத்திற் சுத்தம் மலாவத்தையேயாயினும் அது பயனுடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கேவலந் தன்னில் கலவு சகலத்தின்
மேவும் செலவு விடாவிருள் நீக்கத்துப்
பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்ற
தீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.

பொழிப்புரை :

கேவலாவத்தைக்குப் பின்பு ஆன்மாச் சகலத்தை அடைதலே கலவு நிலையாகும். (கலத்தல்மலத்தோடேயாகையால், இக்கலப்பு அசுத்தமேயாம். எனவே, கேவலத்திலிருந்த அசுத்தம் போய்விடவில்லையாம். முன்னை அசுத்தமே பின்னை அசுத்தத் திற்குக் காரணம் ஆகையால்) விடாது பற்றியுள்ள முதல் அசுத்தமாகிய இருள் நீங்கும் சமையத்தில் ஆன்மாச் சகல நிலையினின்றும் சிறிது சிறிதாக விலகி அப்பாற் செல்லுதலே செலவு நிலையாகும். (இது மலங்களினின்றும் நீங்கும் நிலையாகலின், `நின்மலாவத்தை` எனப்படும்) இந்நிலையில் ஆன்மாத் தன்னைக் காணுதல், பின் திரு வருளைக் காணுதல், பின் திருவருளைக் காணுதல், பின் பராசத்தியைக் காணுதல் இவை மூன்றும் முறையே நிகழ்ந்து நீங்கினால் சாக்கிராதீதம் வாய்க்கும். அதன் பின்பே நின்மலாவத்தை முடிவுபெறும்.

குறிப்புரை :

தன்னைக் காணுதல் முதலிய மூன்றும் முறையே, `சைதன்னிய தரிசனம், ஞான தரிசனம், பரை தரிசனம்` எனத் துகளறு போதத்தில்* கூறப்படுதல் காண்க. சாக்கிராதீதம், `பரையில் அதீதம்` என்பதனோடு கூட்டி இரண்டாகவும், பரையில் அதீதத்தை யடுத்துச் சுத்தாவத்தையும் அந்நூலில்l கூறப்படுதலையும் காண்க. அந்நூலில் `சுத்தாவத்தை` எனப்பட்டதும், இம்மந்திரத்தில் `சுத்தம்` எனப் பட்டதும் நின்மலாவத்தையேயாம். ``மேவும், பாவும்`` என்றாராயினும், `கேவலந் தன்னில் சகலத்து மேவுதல் கலவு` எனவும், `விடா இருள் நீக்கத்துப் பாவுதல் செலவு` எனவும் உரைத்தலே கருத்தென்க. பாவுதல் - பரவுதல்; முற்றும் பொருந்துதல்.
இதனால், சகலாவத்தை சுத்தாவத்தைகளின் இயல்பு ஒப்பிட்டு உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

வெல்லும் அளவு விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.

பொழிப்புரை :

எந்தப் பொருள் மேலும் எழுகின்ற விருப்பத்தை வெல்லுங்கள்; வெறுப்பை ஒழியுங்கள்; உள்ளம் தூய்மையாகும். ஆனபின் அதனை இயன்ற அளவு திருவருளைப் பற்றியே இயங்கச் செய்யுங்கள். பின்பு அஃது அல்லும், பகலும் திருவருளையே சார்ந்து அமைதியுற்றிருக்கும். அப்பொழுது மலைக் குகையுள் அடைக்கப் பட்டவனுக்கு அந்தக் குகை வெடித்துப் பெரிய விடுதலை கிடைத்தது போன்ற ஒருநிலை உண்டாகும்.

குறிப்புரை :

`மலாவத்தைகள் நீங்கிப் பராவத்தை நிகழும்` என்றபடி. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதும் ஆயிற்று. இஃது ஒட்டணி.
அளவு - அளாவுதல்; கலத்தல். அது விரும்புதலைக் குறித்தது. வெகுளி, `வெறுப்பு` என்னும் அளவாய் நின்றது. `விருப்பம் நீக்குதற்கு அரியது` என்பதுபற்றி அதனை, `வெல்லுமின்` என்றார். `தூங்கினால்` என்றதனால், தூங்குதல் பெறப்பட்டது. `வெல்லுதல், விடுதல், செலுத்துதல் எல்லாம் யோகத்தால் உளவாகும்` என்பதும், `அவை உளவாகவே நின்மலாவத்தை பராவத்தைகளில் செல்லுதல் கூடும்` என்பதும் கருத்து.
இதனால், கலவு செலவுகளில் நிகழும் சுத்தாவத்தையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஊமைக் கிணற்றகத் துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமைமென் மேலும்ஓர் ஆயிரத் தாண்டே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் ஒட்டணி பெற்றது.]
ஊமைக் கிணறு - வாய் இல்லாத கிணறு. அஃதாவது, தோண்டப்படாமல் நிலத்தினுள்ளே கிடக்கின்ற நீர்நிலை. என்றது கேவல நிலையை. ஆமை, கேவலத்தில் கிடக்கும் ஆன்மா. அழுவை - அழுவம்; பள்ளம். பள்ளங்கள் ஐந்தாவன, கேவலம், சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்தில் யோகம், சகலத்தில்ஞானம்` என்னும் காரண அவத்தைகள், அவற்றுள், `வாய்மை` என்னும் பள்ளம் சகலத்தில் ஞானம். இதுவே நின்மலாவத்தை. இதனை அடைந்த ஆன்மா நித்தியமாம் தன்மையைப் பெறும்.

குறிப்புரை :

ஆன்மா எப்பொழுதும் நித்தியமேயாயினும் உடம்போடு கூடிப் பிறந்தும், இறந்தும் வருதலால் அநித்தியமாக எண்ணப்படுகின்றது. ஆகவே, `மென்மேலும் ஓர் ஆயிரத்தாண்டு` என்றது. `என்றும் இறவாமையை உடையதாம்` எனப்பொருள் தந்து, நித்தியம் ஆதலை உணர்த்திற்று.
இதனால், `நின்மலாவத்தை பராவத்தைக்கு வாயிலாய் நிற்கும்` என அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கால் அங்கி நீர் பூக் கலந்தஆ காயமே
மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவவல் லார்கட்குக்
காலனும் இல்லை கருத்தில்லை தானே.

பொழிப்புரை :

`நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் ஐம்பூதங் களும் முறையே பிரமன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவர்களாலேதான் தொழிற்படுகின்றன. ஆகவே அந்த ஐவரையும் ஆதார யோகத்தால் `சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்னும் ஆதாரங்களில் முறையாகக் கண்டு, பின்நிராதாரத்தை அடைய வல்லவர்கட்கு இறப்பும் இல்லை. வாழ்வில் உணர்வும் இல்லையாம்.

குறிப்புரை :

`எனவே, மேல் - வெல்லும் அளவு என்பது,* என்பது முதலாகக் கூறிய சாதனங்கள் ஆதாரயோகத்தாலே எளிதில் கைவரும்` - என்பதாம். `நிலம் முதலிய ஐம்பூதங்கட்கும் பிரமன் முதலிய ஐவரும் அதிதேவர்கள்` என்பதை உண்மை விளக்கம், சிவஞான சித்திச் சுபக்கம் ஆகியவற்றால் அறிக. செய்யுள் நோக்கிப் பூதங்களையும், அதிதேவர்களையும் முறை பிறழவைத்தார். அங்கிக்கு அதிதேவ னாகிய உருத்திரனை `அங்கி` என்றே கூறினார். மேல் அஞ்சு - மூலா தாரத்திற்கு மேலே உள்ள ஐந்து ஆதாரங்கள் ஓடி - முறையாக ஏறி விரவுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `ஆதார யோகம் ஆயுளை வளர்த்து, உலகியல் உணர்வை நீக்கும் முகத்தால் நின்மலாவத்தைக்கு வாயிலாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆன்மாவே தன்மைந்த னாயினன் என்பது
தான்மா மறைஅறை தன்மை அறிகிலர்
ஆன்மாவே மைந்தன் அரனுக்(கு) இலனென்றால்
ஆன்மாவும் இல்லையால் ஐயைந்தும் இல்லையே.

பொழிப்புரை :

`உயிர்கள் அனைத்திற்கும் சிவன் தந்தை` என்பதும், `சித்தி தாய்` என்பதும் வேதாகமங்களில் எங்கும் முழங்கும் முழக்க மாதலை அறியாது சிலர் ஆன்மாவை, `தாயும் இலி; தந்தையிலி` என்கின்றார்கள். அஃது உண்மையாயின், சடப்பொருள்களாகிய தத்துவங்களும், அவற்றைக்கொண்டு ஆன்மாக்கள் உலகில் பிறந்து வினைகளை நுகர்ந்தும் ஈட்டியும், பின்பு இறந்தும் செல்லும்நிலை இல்லையாகவேண்டும்.

குறிப்புரை :

உயிர்களுக்குச் சிவனும், சத்தியும் தந்தையும், தாயும் ஆதலை, ``ஆலவாயில் அப்பனே`` எனவும் ``பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை``l எனவும், மற்றும் பல இடங்களிலும் இவ்வாறு வருவனவற்றால் அறிக. சிவனுக்கும், சத்திக்கும் வேறு பாடின்மை பற்றிச் சிவனையே. ``தொடர்ந்து நின்றேன் - தாயானை``3 ``அம்மையே, அப்பா``8 என்றாற்போலவும் பல இடங்களில் அருளிச் செய்வர். எவ்வாறாயினும், `பரம்பொருட்கு ஆன்மா மகன்` என்பதில் ஐயமில்லை. ``அறிகிலர்`` என்பது, அறியாமையால் அதனை மறுத்துக் கூறுதலாகிய காரியத்தை உணர்த்திற்று. ஆன்மா அறிவுடை உலகமாயும், தத்துவ தாத்துவிகங்கள் அறிவிலா உலகமும் ஆதலின், `ஆன்மாத் தோற்றம் உடையது ஆகாவிடின் உலகமே இல்லை` என்பார். ``ஆன்மாவும் இல்லையால்; ஐயைந்தும் இல்லையே`` என்றார். வித்தியாதத்துவங்களைப் புருடதத்துவத்தில் அடக்கி ``ஐயைந்து`` என்றார்.
இதனால், `ஆன்மா யோக ஞானங்களால் உலகினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின்
கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி
பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து)
அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே.

பொழிப்புரை :

அறிவு உதயசூரியன் போலத் தோன்றி விளங் குதலும், அவ்வாறின்றி மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல மழுங்கி நிற்றலும், அத்தமித்த சூரியன்போல ஒடுங்கி யிருத்தலும் ஆகிய இவையே பெத்தத்தில் நிகழும் சாக்கிர சொப்பன துரியங்களாகும். ஆகவே, `அவற்றின்பின் நிகழும் துரியமும் அறிவுசெயற்படாது அடங்கிக் கிடக்கும் நிலை` என்பது சொல்ல வேண்டா. இந்தப் பெத்தநிலை அவத்தைகளை விடுத்துச் சுத்தநிலை அவத்தையை ஒருவன் எய்துவானாயின்` அவன் மிக நன்மையை அடைந்தவனாய், எல்லையில்லாத ஆனந்தத்தையுடையவனாவான்.

குறிப்புரை :

``உதயம்`` எனக் கூறிய சொற்குறிப்பால் இவ்வாறு பொருள் கொள்ளக்கிடந்தது. ``மூன்றின்`` என்பதில் `இன்` வேண்டா வழிச் சாரியை கதி - நிலை. பதிதல் - அழுந்துதல். `பற்றுக்களில் பதிதரும்` என்பது, பின்பு ``பற்றாத் துரியம்`` என்றதனால் விளங்கும். பற்றாத் துரியமும் யோக துரியமும், ஞான துரியமுமாம். `யோகா வத்தையை அடைந்தவன் ஞானாவத்தையையும், பின்பு பரா வத்தையையும் அடைதல் உறுதி` என்பது பற்றி ``அதிசுபனாய் அனந்தானந்தியாகும்`` என்றார். சுபன் - நன்மையை அடைந்தவன். அனந்தம் - முடிவில்லாதது. அனந்த + ஆனந்தி = அனந்தானந்தி. இது வடமொழிப்புணர்ச்சி.
இதனால், மலாவத்தைகள் துன்பநிலையும், நின்மலாவத்தை இன்ப நிலையும் ஆதலைக் கூறும் முகத்தால், நின்மலாவத்தின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எல்லாம்தன் னுட்புக யாவுளும் தானாகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல்லுயிர்
பொல்லாத ஆறாறுட் போகாது போதமாய்ச்
செல்லாச் சிவகதி சென்றெய்து மன்றே.

பொழிப்புரை :

சட உலகங்கள் யாவும் தனக்குள் அடங்கியிருக்க, சிவஞானத்தால் எல்லாப் பொருளையும் ஒருங்கேயறியும் தன்மை யுடையவன் ஆகின்ற அத்தகைய நல்ல துரியத்திலே தங்கும் நிலையை ஓருயிர் அடைந்துவிட்டால் அது நல்ல உயிராகும், பின்பு அது பிறவி யாகிய தீமையை விளைவிக்கின்ற முப்பத்தாறு தத்துவங்களில் செல்லாது. முன்பெல்லாம் சடங்களாகிய அவற்றிற்சென்று அவையே யாய் இருந்ததுபோல் இல்லாமல் அவற்றின் நீங்கி அறிவுப் பொருளாய், செல்லாது செல்வதாகிய சிவகதியை அடையும்.

குறிப்புரை :

பெத்த காலத்தில் ஆன்மாப் பாசங்களின் வியாப்பி யமாய் இருந்து, முத்திகாலத்தில் அவைகளைக் கீழ்ப்படுத்தி நிற்றல் பற்றி, ``எல்லாம் தன்னுட் புக`` என்றும், பெத்த காலத்தில் ஆன்மாத் தத்துவங் -களைப் பற்றி ஏகதேசமாய் இருந்து, முத்தி காலத்தில் சிவ ஞானத்தைப் பற்றி வியாபகமாய் நிற்றல் பற்றி, ``யாவுளும் தானாய்`` என்றும் கூறினார். `நன்று` என்பது இறுதிநிலை கெட்டு, ``நல்`` என முதனிலை யளவாய் நின்றது. ``நல்லாந் துரியம், நல்லுயிர்`` என்பவை, `சுத்த துரியம், சுத்தான்மா` என்பதாம். ``புரிந்தக்கால்`` என்பது, புரிதலின் அருமை தோற்றி நின்றது. ``ஆகிப்புரிந்தக்கால்`` என்றாரேனும், `புரிந்து ஆகியக்கால்` என்பது கருத்தென்க. செல்லாது செல்லுதலாவது, `முன்பு வேறாய் இருந்து, பின்பு சென்று அடைதல்` என்பதின்றி, முன்பே உள்ளதனை உணர்தல் ``அன்றே`` என்றது தேற்றம்.
இதனால், நின்மலாவத்தையின் இயல்பும், பயனும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 6

காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்தும்
தோய்ந்த கருமத் துரிசக லாதே.

பொழிப்புரை :

நெருப்பில் காய்ந்து நெருப்பாகவே இருந்த இரும்பு நெருப்பை விட்டு நீங்கினால் நெருப்பாய் இராமல் இரும்பாகவே யிருக்கும். இருப்பின் நெருப்பின் சூடு விரைவில் ஆறிவிடாது; இருக்கவே செய்யும். அதுபோல நின்மல சாக்கிர சொப்பன சுழுத்தி -களோடு தத்துவங்களின்றும் ஆன்மா நீங்கியபோதிலும் துரியத்திலும் அவற்றில் முன்பு மூழ்கியிருந்த வாசனை இருக்கவே செய்யும்.

குறிப்புரை :

`அதனால் நின்மலதுரியாதீதத்தை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். கருமம் - தொழில். துரிசு - குற்றம். என்றது அதன் வாசனையை. தசகாரியங்களுள் தத்துவ ரூபம். தத்துவதரிசனம் இவ்விரண்டும் நின்மலசாக்கிரம். ஆன்ம ரூபம் தத்துவ தரிசனத்தில் உடன் நிகழும். ஆன்ம தரிசனம் நின்மல சொப்பனம். இதில் தத்துவ சுத்தி அடங்கும். சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி நின்மல சுழுத்தி, இதில் தரிசனம் நிகழ, ஆன்ம சுத்தி ஓரளவே நிகழும். சிவயோகம் நின்மல துரியம். இதில் ஆன்மசுத்தி முற்றுப்பெறும். எனினும் பண்டை வாசனை சிறிது இருக்கும். சிவபோகமே நின்மல துரியாதீதம். இதுவே ஆன்ம லாபம். இங்கு ஆன்மாப் பண்டை வாசனையும் இன்றிச் சிவமேயாய் நிற்கும். ஆகவே இதனை அடைதல் இன்றியமையாததாயிற்று. வாதனை - வாசனை.
இதனால், நின்மல துரிய துரியாதீதங்களின் இயல்புகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

ஆன மறையாதி யாம்உரு நந்திவந்து
தேனை யருள்செய் தெரிசனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைந் தாய்விட
ஆன மலாதீதம் அப்பரந் தானே.

பொழிப்புரை :

வேதம் முதலாகிய சொல்லுலகங்களையும், மற்றும் பொருள் உலகங்களையும் தனது வடிவமாகக் கொண்டுள்ள சிவன் புலப்பட்டு நின்று, தனது திருவருளாகிய தேனை வழங்குகின்ற நின்மலாவத்தையில் கடக்க வேண்டிய சாக்கிரம் முதல் நான்கையும் கடந்து முடிந்தபின் துரியாதீதமே பாரவத்தையாய் விளங்கும்.

குறிப்புரை :

என்றது, `விரைவில் பராவத்தை கைகூடும்` என்றதாம். தெரிசனாவத்தை, பொருள்களின் இயல்பை உள்ளவாறுணரும் நிலை. அது ஞானாவத்தையாதல் அறிக. `விடு` என்பது `வீடு` எனத்திரியாது செய்யுள் நோக்கி, `விடு` என்றே, நின்று, விடுதலாகிய தொழிலையே குறித்தது. உம்மை, சிறப்பும்மை. `விடுத்திட வேண்டிய வகை` என்றதனால் அவைமுதல் நான்கு நிலைகளேயாயின. `விட்டது` என்பதே துணிவுப் பொருளை உணர்த்துமாயினும், `ஆய்விட்டது` என்றல் உலக வழக்கு. `முடிந்துவிட்டது` என்பது அதன் பொருளாகும். அது பற்றி, `அடைந்துவிட` என்பதை, `அடைந்தாய்விட` என்றார். `நின்மலம்` என்பதை ``மலம்`` என்றது முதற்குறை. `நிருவிகற்பம்` என்பது `விகற்பம்` என்றதும், `சன்மார்க்கம்` என்பது `மார்க்கம்` எனவும் வந்த செய்யுட்களைக் காண்க.l
இதனால், `நின்மல துரியாதீதமேபராவத்தைக்கு நேர்வாயில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில்
அத்தன் அருள்நீங்கா(து) ஆங்கணில்தான் ஆகச்
சித்த சுகாவத்தை தீண்டாச் சமாதிசெய்
அத்தனொ டொன்றற் கருள்முத லாகுமே.

பொழிப்புரை :

மத்தியாலவத்தையிற்றானே நின்மல துரியாதீத நிலை (இதுவே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படுவது) தோன்ற, ஆன்மா அதிலே நிலைத்திருக்குமாயின், சிவனது திருவருள் அதனை விட்டு நீங்காது. அந்நிலையில் நீ பராவத்தையை அடைவதற்குச் சித்த சலனத்தால் பற்றக்கூடிய உலகியல் நிலை வந்து சிறிதும் தீண்டாதபடி சமாதி நிலையில் நில். அப்பொழுது முன் சொன்ன திருவருள் உன்னைச் சிவனோடு ஒன்றுபடுத்தும்.

குறிப்புரை :

`ஆங்கண்` என்பது பெயரால் நின்று உருபேற்றது. `தான்` என்றது சிவனை. `ஒன்ற முதலாகும்` என்றாராயினும், `முதலாய் நின்று ஒன்றுவிக்கும்` என்பதே கருத்து.
இதனால், நின்மல துரியாதீதத்தில் சிவன் அருளுருவாய் நின்று, பராவத்தையில் ஆனந்த உருவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வேறுசெய் தான்இரு பாதியின் மெய்த்தொகை
வேறுசெய் தான்என்னை எங்கணும் விட்டுய்த்தான்
வேறுசெய் யாஅருட் கேவலத் தேவிட்டு
வேறுசெய் யாஅத்தன் மேவிநின் றானே.

பொழிப்புரை :

எவ்வுயுரினின்றும் தன்னை வேறுபடுத்திக் கொள்ளாது, அதனோடு ஒன்றாகியே, அதற்கு அப்பனாகியும் இருக்கின்ற சிவன். எவ்வுலகிலும் உள்ள உடற்கூட்டத்தை `ஆண், பெண்` என இருசமபாதிகளாகப் பிரித்து வைத்துள்ளான். என்னையும் தன்னினின்றும் வேறுபடுத்தி, அத்தகையனவாகிய உடம்புகள் உள்ள அனைத்திடங்களிலும் செல்லவிடுத்து, அந்த உடம்புகளுக்குள்ளே புகுத்தினான். பின்பு தன்னினின்றும் என்னை வேறுபடுத்தாது ஒன்றாக்கிக் கொள்கின்ற அருட்கேவலத்திலே செலுத்தி, என்னோடு பொருந்தி நிற்கின்றான்.

குறிப்புரை :

``வேறுசெய்யா அத்தன்`` என்பதை முதலிற் கொள்க. இரண்டாம் அடியில் ``வேறு செய்தான்`` என்பது முற்றெச்சம். `என்னையும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்த லாயிற்று. அருட்கேவலமாவது, ஆன்ம தரிசனத்தில் தத்துவ சுத்தி நிகழ்ந்த பின்னர் ஆன்ம சுத்திக்கு இடைப்பட்ட நிலை. இதுவே துகளறு போதத்தில் * ஆம் அவதரமான கேவலம்` எனச் சொல்லப்பட்டது. இதைச் சிறப்பாகக் குறிப்பிடும் முகத்தால் நின்மலாவத்தை முழுதும் குறிக்கப்பட்டது. ``வேறுசெய்யா அருட்கேவலம்`` என்றதனால், `நின்மலாவத்தையே பதியைப் பசு பற்றும் நிலை` என்பது விளங்கும். இது சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தை. இதனால், ``வேறுசெய்தான் என்னை எங்கணும் விட்டுய்த்தான்`` என்றது, சகலத்தில் கேவலம். சகலத்தில் சகலம், சகலத்தில் சுத்தமாகிய யோகம் - என்னும் இவைகளைக் குறித்ததாயிற்று.
`உடம்புகளை ஆண், பெண்` - என இருவகையாய்ப் பிரித்து வைத்ததைக் கூறியது, `அவத்தைகள் யாவும் இருபாற்கும் பொதுவே` என்பது உணர்த்துதற்கு, `மெய்த்தொகை வேறுசெய்தான்` என்றே கூறினமையால், உயிரில் - ஆண், பெண் - என்னும் வேறுபாடில்லை என்பதும், `உயிராகிய பறவைக்குக் கூடாய் உள்ளனவே உடம்புகள்` என்பதும், `அதனால், வினைக்கீடாக ஆண் உடம்பில் புகுந்திருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய்ப் பெண் உடம்பில் புகுதலும், பெண் உடம்பில் இருந்த உயிர் அதனை விட்டுப் பறந்துபோய் ஆண் உடம்பில் புகுதலும் கூடும்` என்பது விளங்கும். விளங்கவே, இதனை உணராத மதங்கள், ஆணுக்கன்றிப் பெண்ணுக்கு வீடுபேறில்லை என்றும், `ஆணைவிடப் பெண்ணுக்கு இறைதொடர்பு எளிதும் மிக்கதுமாம்` என்றும் கூறுவன எல்லாம் போலியாதல் பெறப்படும். இம்மந்திரம் சொற்பொருட்வருநிலையணி பெற்றது.
இதனால், `பதியை அடைதற்குப் பசு - ஆண், பெண் - என்னும் வேறுபாடின்றி நின்மலாவத்தையை அடையமுயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கறங்கோலை கொள்ளியின் வட்டம் கடலில்
நிறஞ்சேர் திரைதயிர் மத்தின் மலத்தே
அறம்காண் சுவர்க்கம் நரகம் புவிசேர்ந்(து)
இறங்கா உயிர்அரு ளால்இவை நீங்குமே.

பொழிப்புரை :

உயிர்கள் காற்றாடியில் உள்ள ஓலைகளைப் போலவும் கொள்ளியைச் சுழற்றுங்காலத்தில் தோன்றுகின்ற வட்ட வடிவுபோலவும், கடலில் அலைகள் போலவும், தயிரைக்கடையும் மத்தைப் போலவும் `மேல், கீழ், நடு` என்னும் மூன்றுலகங்களிலும் விரையச் சென்று மீண்டு மீண்டு, ஆழ்குழிப்பட்டுத்துன்புற்று, சிவன் அருள்புரிந்தபொழுது அவ்வருளால் ஆழ்குழிகளாகிய இவற்றி னின்றும் மீண்டு கரையேறி, அவனை அடைந்து இன்புறும்.

குறிப்புரை :

உவமைகள் ஒரு நிலையில் நில்லாது பல நிலையில் மாறி மாறி விரையச் சுழலுதலை விளக்க வந்தன. இச்சுழற்சிக்குக் காரணம் பாசங்களே.
``மலம் மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி மன்னிச்
சலமாரும் பிறப்பி றப்பில் தங்கி, இத் தரை, கீழ், மேலும்
நிலையாத கொள்ளி வட்டம், கறங்கென நிமிடத் தின்கன்
அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே``8
என்னும் சிவஞான சித்தியினைக் காண்க.
``மலங்கள் ஐந்தால் சுழல்வதன் தயிரில் பொருமத்துறவே``l
என்பது திருவாசகம்.
``ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி``3
என்றார் பிறரும், அறம் காண் - அறம் காரணமாகச் சென்று காண்கின்ற - கவர்க்கத்தை இத்தகையதாகக் கூறவே, நரகம் மறம் காரணாகச் சென்று காண்பதாயிற்று. புவி, அறம், மறம் இரண்டாலும் சென்று காண்பது. இறங்கா - வீழ்ந்து `இறங்கா நீங்கும் என இயையும், எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. இறங்குதல் சொல்லப்பட்டமையானே சுவர்க்க நரக புவிகள் ஆழ்குழியாயின. `அக்குழிகளில் வீழ்வன எல்லாம் மலா வத்தைகள்` என்பது மேற்காட்டிய மேற்கோள்களாலே விளங்கும். ஆகவே, நின்மலாவத்தையே உயிரின் கரையேற்றம் ஆகின்றது.
இதனால், சகலமாகிய மலாவத்தை பிறவி நிலையாய்ப் பெருந்துன்பம் விளைக்கும் இழிவைக் கூறுமுகத்தால், நின்மாலவத்தையினது உயர்வு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தானே சிவமான தன்மை தலைப்பட
ஆன மலமும்அப் பாசபே தங்களும்
ஆன குணமும்ப ரான்மா உபாதியும்
பானுவின் முன்மதி போல்பட ராவே.

பொழிப்புரை :

`ஆன்மாவே சிவம்` என்று சொல்லத்தக்க நிலையை ஆன்மா அடைந்தபின், அநாதியே பொருந்திய சகசமலமாகிய ஆணவமும், அதனை முன்னிட்டு வந்த, `மாயை` கன்மம், மாயேயம், திரோதாயி, என்னும் பாசவேறுபாடுகளும் அவற்றிற்கு உரியவாய் ஆன்மாவினிடத்து விளங்கிய இழிகுணங் களும், இவை நீங்கினாலும் நீங்கப் பெற்ற சுத்தான்மா விடத்திலும் பின்னும் நிற்கின்ற இவற்றின் வாசனைகளும் சூரியன்முன் சந்திரன் போல அடங்கி ஒடுங்கிவிடும். (வாதிக்கமாட்டா` என்றபடி).

குறிப்புரை :

மலங்களின் இழிகுணங்களை இருபாஇருபஃது நான்காம் செய்யுளால் அறிக. ஆன்மாச் சிவமாம் தன்மையை அடைதல் நின்மலாவத்தையில் ஆதலின், `அதனை அடைக` என்பார், இவ்வாறு அதன் பயனை விரித்தார். இதனானே `நின்மலாவத்தை` என்னும் பெயர்க்காரணமும் விளங்கிற்று.
இதனால், நின்மலாவத்தை அதன்பெயருக்கேற்ற பயனை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

நெருப்புண்டு நீருண்டு வாயுவும் உண்டங்(கு)
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத்தக்க மாலும் திசைமுகன் றானும்
உருத்திர சோதியும் உள்ளத் துளாரே.

பொழிப்புரை :

[இதன்பொருள் வெளிப்படை]

குறிப்புரை :

`உள்ளம்`, ஏற்புழிக்கோடலால், `யோகியர் உள்ளம்` என்க. ஏனையோர்க்கு அப்பாவனையில்லாமையறிக. `நினைப்பவர் மனம் கோயிலாக்கொண்டவன்* என்றாற்போல்வனவும் இக்கருத்தே பற்றி வரும் என்க. செய்யுளாகலின் உள்ளத்தைச் சுட்டும் `அங்கு` என்பது முன்னே வந்தது.
`தத்துவ தாத்துவிகங்களும், அவற்றைச் செலுத்தும் கடவுளரும் யோகபாவனையால் கடக்கத்தக்கவர்கள்` என்பதை உணர்த்தும் முகத்தால் யோகத்தை விதித்தவாறு.
இதனால், நின்மலாவத்தைக்கு உரிய வாயிலின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும்
ஞானந் திரியில் கொளுவி அதனுட்புக்(கு)
ஊனை இருளற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழிஎளி தாகுமே.

பொழிப்புரை :

(இதன் பொருளும் வெளிப்படை)

குறிப்புரை :

அறிவு என்னும் ஞானம் - அறிவுகளில் எல்லாம் மேலானமை பற்றி, `அறிவு` என்றே சொல்லப்படுகின்ற மெய்யறிவு. நாயனாரது நோக்கில் அது சிவஞானமே. ``திரி`` என்றது உயிர் அறிவை. ``உயிர் எனும் திரி மயக்கி`` என்பதிலும் ``உயிர்`` என்பது அப்பொருட்டு. ஞானத்தை - தீ - என்னாதது ஏகதேச உருவகம். உயிரை, `திரி` என்றே கூறியது சிறப்புருவகம். ``அதனுட்புக்கு ஊனை நோக்கும்`` என்றதை, `ஊனுட்புக்கு அதனை நோக்கும்` எனக் கொள்க. இருளற நோக்கியவழி முன் புலப்படாதிருந்தவை புலப் படுதல் போல, ஊனை இருளற நீக்கினால் முன் மந்திரத்திற் கூறியன எல்லாம் விளங்கும் ஆகலின், ``வானகம் ஏற வழி எளிதாமே`` என்றார். ``வானகம்`` என்றது, யோகத்திற்கு அப்பாற்பட்ட நின்மலா வத்தையை,
``உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக,
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி, இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில், கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே``
-திருமுறை - 4.75.4.
என்று அருளினமையை நோக்குக. மடம்படும் உணர் - பசு போதம்.
இதனால், `மேல் குறிப்பால் உணர்த்திய யோகம் சிவயோகம் ஆதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

ஆடிய காலின் அசைக்கின்ற வாயுவும்
தாடித் தெழுந்த தமருக ஓசையும்
பாடி யெழுகின்ற வேதா கமங்களும்
நாடியி னுள்ளாக நான்கண்ட வாறே.

பொழிப்புரை :

நான் எனது விருப்பப்படியேவிட்டும், வாங்கியும் இயக்குகின்ற பிராணவாயுவையும், மிகுத்தெழுக்கின்றதமருக ஓசையையும், வல்லுநர்கள் பாடுதலால் எழுகின்ற வேதாகம ஒலிகளையும், நான் கண்ட முறை, சுழுமுனா நாடியினுள்ளாக, நடனத்தில் தூக்கிய காலின் கீழாம்.

குறிப்புரை :

`யோகத்திலே ஞானத்திற்குரிய எல்லாவற்றையும் சிவனது நடனத்தின் வழியே பெறலாம்` என்றபடி. `தடித்து` என்பது செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், `சிவயோகமே ஞானத்திற்கு வாயில்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

முன்னை யறிவினில் செய்த முதுதவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவ(து) அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேயறி வாகுமே.

பொழிப்புரை :

முதலில் நிகழும் அறிவு பெரிய தவ அறிவாயும், பின்னர் நிகழும் அறிவு அந்தத்தவத்தால் வரும் மெய்யறிவாயும் நிகழ்தல் வேண்டும். பின்னை அறிவு மெய்யறிவாய் நிகழ்ந்தவழியே முன்னை அறிவு தவ அறிவாய் நிகழ்ந்தமை அறியப்படும், இல்லையேல், அது வெற்றறிவாக அறியப்படும். முதல் அறிவால் நிகழ்ந்த தவத்தால் பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளேயாம்.

குறிப்புரை :

முதுதவம் - பெருந்தவம். ``அறிவினில்`` என்ற `இன்` ஏதுப் பொருளில்வந்த ஐந்தாம் உருபு. பின்னைப் பெற்றால்` என இயையும். ``அறிவினைப் பெற்றால்`` என்பதில் `அறிவு` எனப் பட்டது. பின் இரண்டடிகளால் உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் `இன்னது` என விளக்கப்பட்டது.
ஆன்மாத் தன்னை உள்ளவாறு அறிதலாவது, உலக வாழ்க்கையானே தனக்குச் சுதந்திரம் இன்மையை உணரும் முகத்தால், தனக்கு ஒரு தலைவன் உளன் ஆதலை அனுமானத்தால் உணர்தலும், பின்னர்த் தனது தவத்திற்கு ஏற்ப நிகழும் நிகழ்ச்சிகளால் அனுபவமாக உணர்தலுமாம். அனுமானத்தால் உணருமாற்றை ஔவையார்,
``ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்;
அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;
எனை ஆளும் ஈசன் செயல்`` 3
என விளக்கினார். `பின்னை` என்பது `மற்று` என்னும் பொருளைத் தந்தது. பேயினது அறிவு நெறிப்படா அறிவு அஃது உவம ஆகு பெயராய் அதுபோன்ற அறிவைக் குறித்தது.
`பல பிறப்புக்களில் செய்த தவமுதிர்ச்சியால் பின்னர்ச் சில பிறப்புக்களில் ஞானம் நிகழும்` என்பதும், `அந்த ஞானமாவது இது` என்பதும் உணர்த்தும் முகத்தால், `ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை` என்பது இதனாற் கூறப்பட்டது. ``இவ்வான்மாக்களுக்கு முற்செய்தவத் தான் ஞானம் நிகழும்``8 எனவும், ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார் எம்மையுடைமை`` எனவும் மெய்கண்ட தேவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 16

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாகுமே.

பொழிப்புரை :

நின்மல துரியத்தை அடைந்தவர்கட்கே, அதன் பின்னர் ஆனந்த நிலையாகிய அதீத நிலை வாய்க்கும். அதனால் அவர் அந்த அதீத நிலையை அடையமுயலுதலன்றி, முன் சொன்ன சிவ யோகத்தைப் புரிய எண்ணமாட்டார்கள். அவ்யோகத்தைப் புரியாமை -யால், அவர்கள் உலகப்பற்றில் வீழ்ந்துவிடமாட்டார்கள். ஆகவே, சிவானுபவமாகிய செயல் ஞான துரியாதீதத்தை அடைந்தவர்கட் கல்லது. ஏனைச் சிவயோகிகட்கு உண்டாகமாட்டாது.

குறிப்புரை :

ஆன்மா, ``தான்பணியைநீத்தல்``l நின்மல துரியத்திலேயாதலை அறிக. ஆன்மாச் செயலற்றிருத்தலாகிய இதனையே நாயனார் முதல் தந்திரத்து `உபதேசப்` பகுதி 15.16,17 ஆம் மந்திரங்களில் நயம்பட விளக்கியிருத்தல் காண்க.
இதனால், ஒன்று இடையிட்டு மேற்கூறிய சிவயோகம் நின்மலா வத்தைக்குச் சாதனமேயன்றிச் சாத்தியம் ஆகாமை உணர்த்தப் பட்டது.
ஆன்மா தன் செயல் அற்று, `எல்லாம் சிவன் செயல்` என்று இருக்கும் நின்மல துரிய நிலையே
``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்`` (திருவுந்தியார் - 30)
எனவும்
``செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோ! நாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு``l
எனவும் சாத்திரங்கள் கூறுகின்றன.

பண் :

பாடல் எண் : 17

தான்அவ னாகும் சமாதிகை கூடினால்
ஆன மலம்அறும் அப்பசுத் தன்மைபோம்
ஈனமில் காயம் இருக்கும் இருநிலத்(து)
ஊனங்கள் எட்டும் ஒழித்தொன்று வோர்கட்கே.

பொழிப்புரை :

[கீழாலவத்தை மத்தியாலவத்தைகளை நோக்க, மேலாலவத்தையாகிய யோகாவத்தை நிறைவுடையதேயாம். எனினும், ஞானாவத்தையை நோக்கின் அது குறைவுடையதேயாகும். ஆகையால்] இயமம், நியமம் முதலாக உள்ள அந்த எட்டுறுப்புக் களையும் (சமாதி உட்படக்) கடந்து, நின்மல துரிய நிலையில் ``அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி நிற்றலாகிய``8 அந்தச் சமாதி கைவந்தால்தான் அநாதி தொட்டே பற்றியுள்ள ஆணவமலம் வாசனையும் இன்றி நீங்கும். (அப்பொழுது பின் வந்த மாயை கன்மங் களாகிய பாசங்களும் அவ்வாறாம். ஆகவே, அப்பொழுதுதான்) ஆன்ம, `பசு` என்கின்ற நிலைமை நீங்கப்பெற்று, `சிவம்` எனப்படும் நிலையை எய்தும்.

குறிப்புரை :

ஒளி வந்தவழியல்லது இருள்போகாதது போல, ஞானம் வந்த வழியல்லது அஞ்ஞானத்தைச் செய்வதாகிய ஆணவ மலம் அறுமாறில்லை. ``அஞ்ஞானத்தால் உறுவதுதான் பந்தம்; உயர் மெய்ஞ்ஞானந்தான் - ஆனத்தால் அதுபோவது; அலர்கதிர்முன் இருள் போல்``3 என்பது சிவஞானசித்தி. இதனால் இங்கு ``சமாதி`` என்றது ஞான சமாதியேயன்றி, யோக சமாதியன்று. ``தான் அவனாகும் சமாதி`` என எடுத்தோதியதும் அது விளங்குதற் பொருட்டு. இந்த ஞான சமாதியையே திருக்களிற்றுப்படியார்,
``சார்பு கெடஒழுகின் நல்ல சமாதியும்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று``8
எனக்கூறிற்று. இங்குக்கூறிய சமாதியை `யோக சமாதியே` எனக் கொள்கின்றவர்கள் `எட்டு` என்னும் எண்ணிக்கைக்குத் தங்கள் தங்கட்குத் தோன்றிய பொருளைக் கூறுவர்.
ஈற்றடியை முதலிற் கூட்டி, `ஈன்மில் காயம் இருநிலத் திருக்கும்` என முடிக்க. காயம் இருத்தலைக் கூறியது, `ஞான சமாதியை அடைந்தோர் காயத்தை இருந்த வேண்டினும் இருக்கும்` என்பது உணர்த்துதற்கு, ஞானிகளது உயிரேயன்றி, உடம்பும் நின்மலமேயாதலைக் குறித்தற்கு, ``ஈனம் இல் காயம்`` என்றார்.
இதனால், `யோக துரியாதீதத்தைக் கடந்து நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

தொலையா அரனடி தோன்றும்ஐஞ் சத்தி
தொலையா இருள்ஒளி தோற்ற அணுவும்
தாலையாத் தொழில்ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்தமுத் திக்கிடை தோயுமே.

பொழிப்புரை :

(இருவினையொப்பு மலபரி பாகம்வந்த பொழுது ஆன்ம அறிவில் பதிகின்ற அருட்சத்தியை மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என அதன் தன்மை பற்றி வழங்கப்படுமாயினும் அவை `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் சக்தி களின் வகையாகவே சொல்லப்படுகின்றது.l அந்த ஐந்து சக்திகளும் சிவனது திருவடியேயாம். (அருளை `அடி` எனக் கூறுதல் மரபு. அதனால், சத்தி நிபாதத்தில் உண்டாகின்ற ஞானமும் `திருவடி ஞானம்` என்றே கூறப்படும்). அந்த ஞான ஒளி தோன்றியவுடன், அநாதி தொட்டு விடாது பற்றி நிற்கின்ற ஆணவ இருள் நீங்கும். அது நீங்கவே, ஆன்மாவிற்கு இயல்பாய் உள்ள இச்சாஞானக்கிரியா சத்திகள் (ஆணவத்தால் தடுக்கப்பட்டிருந்தனவேயன்றி, அழிக்கப் படாமையால்) விளக்கம் பெற்று ஆன்மாத் தனது இயற்கை நிலையை அடையும். அடைந்த பொழுது முதற்கண் முற்றும் நீங்காத பெத்தமும் அது முற்றும் நீங்கிய முத்தியும் என்னும் இரண்டற்கும் இடைநிலையில் ஆன்மா இருக்கும்.

குறிப்புரை :

அந்த நிலையே நின்மலாவத்தை என அறிக. `தோன்றும் ஐஞ்சத்தி தொலையா அரனடி` எனவும், `ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா` எனவும் கூட்டுக.
`ஒளிதோற்ற தொலையா இருள் தொலையா`` எனப்பொதுப் பட ஓதினாராயினும் சொல்லுவாரது குறிப்புத்திருவடி ஞானத்தின் மேலதும், ஆணவ இருளின் மேலதும் ஆதலை அறிக. மூன்றாம் அடியில் நின்ற ``தொலையா`` என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெய -ரெச்சம். மூன்றாம் அடியில் உள்ள ``தொலையா`` என்பது `செய்யா` என்னும் வாய்பாட்டு வினையெச்சம். அதனை, `தொலைய` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக்கொள்க. இங்ஙனமாகவே இம்மந்திரம் சொற்பின்வருநிலையணிபெற்றதாம்.
இதனால், ஞானாவத்தையே நின்மலாவத்தையாதலன்றி, யோகாவத்தை அன்னதாகாமை தெரித்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ்சத்தி
மான்றும் தெருண்டும் உயிர்பெறும் மற்றவை
தான்றரும் ஞானந்தன் சத்திக்குச் சத்தன்றான்
ஊன்றல்இல் லாஉள் ளொளிக்கொளி யாகுமே.

பொழிப்புரை :

உயிர்கள் அவற்றைச் செலுத்துகின்ற சிவசத்தியின் தன்மைக்கு ஏற்ப மயக்க உணர்வைப் பெற்றுப் பெத்தத்தையும், மெய் உணர்வைப் பெற்று முத்தியையும் ஏனெனில், அந்த `மயக்கம், மெய்` என்னும் இரண்டையும் உயிர்கட்குத் தருகின்ற ஞானமாகிய தன் சத்திக்குச் சத்தனாய் உள்ள சிவன், ஒரு பெற்றியில் நில்லாது இருவேறாய் நிற்கின்ற அந்தச் சத்திக்கு உயிராய் நின்று அதனைச் செலுத்துவன் ஆதலின்.

குறிப்புரை :

`உயிர், சத்தியால் மான்று பெத்தத்தையும், தெருண்டு முத்தியையும் பெறும்` என்க. இது முறை நிரல்நிறை. உயிர் பக்குவம் எய்தாத பொழுது மலங்கள் அதன் ஆற்றலை அடக்கித்தாமே மேற்பட்டு நிற்றலால் அப்பொழுது சிவனது அப்பாசங்களைச் செலுத்தி அவை வழியாக உயிருக்கு மயக்க உணர்வையும், உயிர் பக்குவம் எய்திய காலத்தில் அதன் ஆற்றலை மலங்கள் அடக்க மாட்டாது, அதற்குக் கீழ்ப்பட்டுப் போதலால், அப்பொழுது சிவனது சத்தி தான் நேர்நின்று உயிர்கட்கு மெய்யுணர்வையும் தரும். அதனால், ``மான்றும், தெருண்டும் பெறும்`` என்றார். மான்று - மயங்கி. தெருண்டு - தெளிந்து. ஒன்றாகிய சத்தியே, பாசத்தின் வழிநின்று அறிவை மயக்கும் பொழுது `திரோதான சத்தி` என்றும், மயக்காது விளக்கும் பொழுது `அருட்சத்தி` என்றும் பெயர் பெறும். `ஞானத்தன்` என்பது இன்னோசை நோக்கி மெலித்தல் பெற்றது. ஒன்றேயாயினும் இரண்டாய்ச் செயலாற்றுதல்பற்றிச் சத்தியை ``ஊன்றல் இல்லா ஒளி`` என்றார். மற்று, தான் அசைகள். ``ஒளிக்கு ஒளி`` என்றது, `சிவன் செயற்படுத்திய வழியிலே சத்தி செயற்படும்` என்பது உணர்த்துதற்கு முன்பு, ``சத்திக்குச் சத்தன்`` என்றதை இனிது விளக்கியவாறு.
இதனால், மேற்கூறிய பெத்தமும் முத்தியும் சிவனாலே ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அறிகின் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்றாய் நீஎன் றருள்செய்தான் நந்தி
அறிகின்றேன் நான்என் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :

தத்துவங்கள் முப்பத்தாறினையும், அவை தாமே அறிந்தும், செய்தும் வருவனவாக மயங்கி, உண்மையில், `அவற்றைக் கருவிகளாகக்கொண்டு அறிபவனும்` செய்பவனும் நான்தான்` என்பதையான் பெத்த காலத்தில் அறிந்து கொள்ளாமலே மயங்கி யிருந்தேன். பின்பு நந்திபெருமான், மேற்குறித்த உண்மையை எனக்கு அறிவுறுத்தருளினார். அந்த உண்மையை அங்ஙனமே அறிந்து கொண்டமையால், முத்தனாயினேன்.

குறிப்புரை :

`பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன. `இவ்விரண்டிற்கும் காரணம் பக்குவம் எய்தாமையும், எய்தினமையும்` என்பது மேலே கூறப்பட்டது.
இதனால், `மெய்யுணர்வு திரோதானசத்தி அருட்சத்தியாய் மாறின அளவில் பெறப்படாது. குருவினாலே பெறப்படும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

தான்அவன் ஆகியன் ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மாமணிச் சோதியை
ஈனமில் ஞானத்(து) இன்னருட் சத்தியை
ஊனம் இலாள்தன்னை ஊனிடைக் கண்டதே.

பொழிப்புரை :

தான் `சீவன்` என்கின்ற நிலைமை நீங்கி, `சிவன்` என்கின்ற நிலைமையை அடைந்த பெரியோன் சிவன் சத்தி இருவனாயும் நேரே கண்டது தன்னுடையே உடம்பிற்குள்ளேயாகும்.

குறிப்புரை :

`சகலத்தில் சுத்தத்து ஞானாவத்தையாகிய நின்மலா வத்தையிலாம்` என்றபடி `அந்நிலையை அடைந்தவன் பின் பரா வத்தை அடைதல் உறுதி` என்பது கருத்து. முன் இரண்டு அடிகளில் சிவனும், பின் இரண்டு அடிகளில் சத்தியும் குறிக்கப்பட்டனர். அவ் வடிகளின் பொருள் வெளிப்படை ``கண்டது`` என்னும் ஒருமை அத் தொழிலைக் குறித்தது. `கண்டது ஊனிடை` என மாற்றியுரைக்க.
இதனால், `சகலத்திலேயே நின்மலாவத்தையில் சிவ சத்திகளை அவர்களது ஞானமாகிய கண்ணால் காணுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளிய தெனலாகும் ஆன்மாவை யன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிபவ ருள்ளே சிவானந்த மாமே.

பொழிப்புரை :

ஆணவ இருளைச் சிறிதே நீக்குவனவாகிய மாயா காரியக் கருவிகளும் அவற்றால் சிறிதே நீக்கப்படுகின்ற ஆணவ இருளும், அதனை நீக்க உதவுகின்ற சிவசத்தியும் அச்சத்தியால் காப்பாற்றப்படும் ஆன்மாவும் ஆகிய இவைகளை முறையாக முன்னர் உணர்தல் வேண்டும். (அவ்வாறு உணர்தலே அரிது. ஆயினும்) அதன்பின் அவற்றோடு நில்லாது ஆன்மாவின் எளிய நிலையையும், அந்நிலையை உணர்ந்து சிவன் அதன்மேல் கொள்ளும் இரக்கத்தையும், அவ்விரக்கத்தால் ஆன்மாவிற்கு உண்டாகின்ற அனைத்துப் பொருள்களையும் பற்றிய உண்மையான உணர்வின் சிறப்பையும் உணர்ந்து, பின் பல பொருள் உணர்வை விடுத்துச் சிவன் ஒருவனையே உணர்கின்ற உணர்வு உண்டாகுமானால், அதன் பின்பே சிவனது பேரின்பம் ஆன்மாவிற்கு உளதாகும்.

குறிப்புரை :

பின்னர், ``பரை`` எனத் திருவருள் குறிக்கப்படுதலால், முதற்கண் ``ஒளி`` என்றது மாயையாகிய ஒளியையே குறித்தது. அளியது - அளிக்கத்தக்கது. அஃதாவது, இரங்கத்தக்கது.
துகளறுபோதத்தில், ஒளியை உணர்தல், முதல் ஏழு அவதாரங் களாகவும், இருளையுணர்தல், அடுத்துமூன்று அவதரங்களாகவும், ஆன்மாவை உணர்தல், அடுத்த `தன்னுண்மை சைதன்னிய தரிசனம்` எனவும், இரக்கத்தை (திருவருளை) உணர்தல் `ஞானதரிசனம்` எனவும் தெருளைஉணர்தல் அடுத்த எட்டு அவதரங்களாகவும் கூறப் பட்டன. இவற்றின் பின்னர்க் கூறப்பட்டன எல்லாம் சிவன் ஒருவனையே உணர்ந்து நிற்கும் நிலைகளாம். அந்நிலைகளே சிவானந்த விளைவுகளுமாம். ``பரை`` என்பது பொதுவாக `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது.
இதனால், நின்மலாவத்தையின் உட்கூறுகள் ஒருவாறு விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 23

ஆனந்த மாகும் அரன்அருட் சத்தியில்
தான்அந்த மாம்உயிர் தானே சமாதிசெய்(து)
ஊன்அந்த மாய்உணர் வாய்உள்ளுணர்வுறின்
கோன்அந்தம் வாய்க்கும் மகாவாகியம் ஆமே.

பொழிப்புரை :

`சிவானந்தம்` என்பதும் சிவனது அருட் குணங்களில் ஒன்றேயாம். (வரம்பில் இன்பம்) ஆகவே, அச்சத்தி வழியாக ஞான நிலைகளில் முடிநிலையை அடைந்த உயிர் பின் சிவத்திலே அழுந்தி, ஐவகை உடம்புகளினின்றும் நீங்கி, அறிவே வடிவாய், அந்த அறிவுக்கு அறிவாய் உள்ள சிவத்திலேயே பிரிதல் இன்றி நிற்குமாயின் சிவனை முற்றும் பெறுதலாகிய மிகப்பெரிய பேறு உளதாகும்.

குறிப்புரை :

``தானே`` என்பது, `அந்த உயிரே` எனத் தேற்றப் பொருள் தந்தது. சமாதி - தான் அதுவாதல், கோபம் - கோவம், பாபம் - பாவம்` என வருதல்போல, `மகாபாக்கியம், என்பது, ``மகா வாக்கியம்`` என வந்தது. பாக்கியம் - பேறு இவ்வாறன்றி `மகா வாக்கியம்` என்றே கொள்ளுதற்கு இங்கு ஏதும் இயைபில்லாமை அறிக.
இதனால், முன்மந்திரத்தில் குறிக்கப்பட்ட சிவானந்தம் வாய்க் குமாறும் `அதுவே பெரும்பேறாகிய ஆன்மலாம்` என்பதும் கூறப் பட்டன. இப்பேறு கிடைத்தற்குக் கூறப்பட்டவழி நின்மலாவத்தையே யாதலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 24

அறிவிக்க வேண்டா அறிவற் றவர்க்கும்
அறிவிக்க வேண்டா அறிவுற் றவர்க்கும்
அறிவுற்ற றறியாமை எய்திநிற் போர்க்கே
அறிவிக்க தம்அறி(வு) ஆர்அறி வாரே.

பொழிப்புரை :

அறிவித்தாலும் அறியும் தன்மையில்லாத அபக்குவர்க்கும் குருவின் உபதேசம் ஏற்புடையதன்று; (பயன் இன்மையால்) முற்பிறவியிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தும் நிட்டை கூடாது விட்டமையால் கருவிலே திருஉடையவராய்ப் பிறந்து, ஞானத்தின் திருவுருவாயே நிட்டையை வேண்டி நிற்பவர்க்கும் குருஉபதேசம் வேண்டுவதன்று. எனவே அறிவித்தால் அறியும் பக்குவம் உடையவராய் அறிவிப்பாரை நாடிநிற்கும் அவர்கட்கே ஞான குரவர் உபதேசத்தைச் செய்வராக. பக்குவம் வாய்ப்பினும் தம்மையும், தலைவனையும் குருஉபதேசத்தாலன்றித் தாமாகவே அறிபவர் உலகில் யார் இருக்கின்றார்கள்? (ஒருவரும் இல்லை).

குறிப்புரை :

அறிவித்தால் அறியும் ஆற்றலும், `அறியவேண்டும்` என்னும் அவாவும் இல்லாதவர் `பிராகிருதர்` என்றும் முற்பிறப்பிலே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர். `சாமுசித்தர்` என்றும், பரிபக்குவம் வாய்ந்து, ஞானகுருவைத் தேடுகின்றவர் `வைநயிகர்` என்றும் சொல்லப்படுவர். இதனை, `பண்டை நல்தவத்தால் தோன்றி`l என்னும் சிவஞானசித்திச் செய்யுளின் உரையால் உணர்க. இவர்களையே இங்கு நாயனார் `அறிவற்றவர் அறிவுற்றவர், அறிவுற்று அறியாமை எய்தி நிற்பார்` என்றார். இம்மூன்று பெயர்களில் நடுவில் உள்ள ஒன்றில் உள்ள `அறிவு` என்பது மட்டும், `ஞானம்` என்றும், மற்றையிரண்டும் `அறியும் ஆற்றல்` என்றும் பொருள் தந்தன. ``அறியாமை`` என்பதில், `மை`. வினையெச்ச விகுதி. எனவே, `அறியாமல்` என்பது அதன்பொருள். அறியும் ஆற்றல் இருந்தும் அறியாமல் நின்றதற்குக் காரணம், அறிவிப்பார் இன்மை. இறுதியில், ``தம் அறிவு ஆர் அறிவார்`` என்றதும், `அறியும் ஆற்றலைப் பெற்றவர்க்கும் அறிவிப்பார் இன்றி அறிதல் இயலாது` என்பதை விளக்குதற்கேயாம். உம்மை இரண்டும் எதிரதுதழுவியும், இறந்தது தழுவியும் நின்றன. முன்னிரண்டடிகளில் பாடம் திரிவுபட்டுள்ளது. ``அறிவிக்க`` என்பது வியங்கோள் அதற்கு எழுவாய், ஆற்றலால் வந்து இயைந்தது.
இதனால், ஞான குரவராயினார்க்கு ஒரு கட்டளைபோல வைத்து பரிபக்குவம் இல்லார்க்கு ஞானாவத்தை நிகழாமையும், பரிபக்குவம் உடையார்க்கும் ஞானகுரு இன்றி அது நிகழாமையும் கூறப்பட்டன. ஞானம் ஞான குரு இன்றி நிகழாமை மேலே சில இடங்களில் கூறியிருக்கவும், இங்கும் அதனைக் கூறியது, `பெற்றதன் பெயர்த்துரை நியமப்பொருட்டு` என்பவாகலின் நின்மலாவத்தை கூறும் இவ்விடத்திலும் அதனை வலியுறுத்தற்பொருட்டாம்.

பண் :

பாடல் எண் : 25

சத்தும் அசத்தும் சதசத்தும் தாம்கூடிச்
சித்தும் அசித்தும் சிதசித்து மாய்நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடக்காத் துரியத்துச்
சுத்தராய் மூன்றுடன் சொல்லற் றவர்கட்கே.

பொழிப்புரை :

சகலத்தில் சுத்தமாகிய மேலாலவத்தையும், (யோகாவத்தையும்) சகலத்திற் சகலமாகிய மத்தியாலவத்தையும், சகலத்தில் கேவலமாகிய கீழாலவத்தையும் ஆகிய இவைகளின் தொடர்புகள் சிறிதும் இல்லாது நீங்கிய நின்மல துரியத்தில் நிற்றலால் சுத்தான்மாக்களாய், சொல் நிகழ்ச்சி அத்துரியத்திற்கு முற்பட்ட, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி` என்னும் மூன்றோடே நீங்கப் பெற்றவர்கட்கு, சத்தாய் உள்ள சிவமும், அசத்தாய் உள்ள பாசங்களும், சதசத்தாய் உள்ள ஆன்மாவும் முறையே சித்தும், அசித்தும், சிதசித்தும் ஆதல் முற்ற அனுபவமாய் விளங்கும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. அசுத்தம் போலத் தொடர்பற்றதாகக் கூறினமையால், ``சுத்தம்`` என்றது சகலத்திற் சுத்தமேயாயிற்று. முப்பொருள்களின் இயல்பு சத்து, அசத்து, சதசத்து ஆதல் மட்டும் விளங்கல் நிரம்பாமையால், `அவை முறையே சித்தும், அசித்தும், சிதசித்துமாதல் விளங்கும்` என்றார். சிவஞான போதத்துள்ளும் `இருதிறன் அல்லது சத்தாம்` என்று ஒழியாது. ``சிவசித்தாம்`` என அருளியதையும் 8 அதன் உரையையும் நோக்குக.
`சத்து` என்பது, `உள்ளது` என்றும், `அசத்து` என்பது இல்லது` என்றும், `சதசத்து` என்பது, `சத்தோடு கூடிச் சத்தாயும், அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்கும்` என்றும் பொருள் தரும். இன்றும் `உள்ளது` என்பது, `என்றும் ஒரு படித்தாய் உள்ளது` என்றே பொருள்தரும். அதனால் `அசத்து` என்பது `சிலகாலம் உள்ளதாய் இருந்து பின் இல்லதாகிவிடும்` என்றே பொருள் தரும். இம்முறையில் சத்தாய் உள்ளது சித்தாயும் இருக்கும்; அஃதாவது அறிவாய், ஒருஞான்றாமை அறியாமை உடையதாகாமல் இருக்கும். அசத்தாய் உள்ளது அசித்தாயும் இருக்கும். அஃதாவது எஞ்ஞான்றும் எவ்வாற்றானும் அறிவுடையதாகாது அறியாமையை உடையதாயே இருக்கும் `சடம்` என்பது இதுவே சதசத்தாய் உள்ளது சிதசித்தாயும் இருக்கும். அஃதாவது சித்தோடு கூடிச் சத்தாயும் அஃதாவது அறிவுடையதாயும் அசித்தோடு கூடி அசத்தாயும் அஃதாவது அறியாமையுடையதாயும் இருக்கும். `இவையெல்லாம் நூலறிவால் அறியப்பெறினும், அனுபவமாக விளங்குவது நின்மல துரியத்தில்` என்பது இம்மந்தரத்தில் கூறப்பட்டது ``கூடிநிற்கும்`` என்றது அனைத்தும் விளங்கும்` என்றபடி ஏகாரம் பிரிநிலை.
இதனால், `நின்மலாவத்தையில்தான் அனுபவ ஞானம் உண்டாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தானே அறியான் அறிவிலோன் றானல்லன்
தானே அறிவான் அறிவு சதசத்தென்
றானால் இரண்டும் அரனரு ளாய்நிற்கத்
தானே யறிந்து சிவத்துடன் தங்குமே.

பொழிப்புரை :

புருடன், (ஆன்மா) பிறிதொரு பொருள் அறிவியாமல் தானாகவே ஒன்றையும் அறியும் தன்மையுடைய னல்லன்; அதனால், அவன் அறிவில்லாத சடப்பொருளும் அல்லன். (`அறிவித்தால் அறிவான்` என்றபடி). இத்தன்மை உடைய இவன், பிறர் அறிவிக்க வேண்டாது, தானே எல்லாவற்றையும் அறிபவனாகிய சிவனது அறிவைக்கொண்டு தன்னை முன்மந்திரத்திற் கூறியவாறு, `சதசத்து` என அறிவானாயின்` அப்பொழுது இவனும், இவனால் சாரப்பட்ட கருவித்தொகுதியும் சிவனது அருளாகியே நிற்கும். (`இவனும் சிவமாகி, இவனது கரணங்களும் சிவகரணமாய்விடும்` என்றபடி). அங்ஙனம் நிற்கவே, முன்பு அசித்தோடு கூடி அசித்தாய் இருந்த, அல்லது ஏகதேசமாய் அறியும் சிற்றறிவை உடையவனாய் இருந்த இவனே, எல்லாவற்றையும் அறியும் அறிவுடையவனாகிச் சிவத்தோடே கூடி இரண்டற்றிருப்பான்.

குறிப்புரை :

``தானே`` மூன்றில் இறுதியில் உள்ளதில் ஏகாரம் தேற்றம். ஏனைய பிரிநிலை. ஆன்மா நின்மலாவத்தையை அடைதல் பற்றியே கூறி வருதலாலும், முன் மந்திரத்திலும் ``சுத்தராய்ச் சொல்லற்றவர்கட்கே`` எனச் சீவர்களே குறிக்கப்பட்டமையாலும் அத்தொடர்ச்சி பற்றி இம்மந்திரத்திற்கு `ஆன்மா` என்பது எழுவாயாய் வந்து இயைந்தது. ``தானே அறிவான் அறிவு`` என்பதன் ஈற்றில் `ஆன்` உருபு விரிக்க. ``ஆனால்`` என்பதில் ஆக்கம் அறியாததனை அறிதலை உணர்த்திற்று. ``நிற்க`` என்ற அனுவாதத்தால், `நிற்கும்` என்பது தானே பெறப்பட்து. ``சதசத்து`` என்றதில் அசத்தும் பெறப்பட்டமைாயல், ``இரண்டும்`` என்றதில் அசத்துத் தொகுதியும் ஒன்றாயிற்று. ``தங்கும்`` என்னும் `செய்யும்` என்முற்று இங்கு ஆண்பாலில் வந்தது. ஆன்மா, வடமொழி வழக்குப் பற்றி ஆண்பாலாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன்மந்திரத்தில், `ஆன்மாச் சிதசித்து` எனக்கூறிய வகையில், `சித்தாதல் இவ்வாற்றால்` என்பது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ ஞானம் தலைப்பட் டவர்கட்கே
தத்துவ ஞானம் தலைப்பட லாய்நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான்அவன் ஆகவே
தத்துவ ஞானானந் தம்தான் தொடங்குமே.

பொழிப்புரை :

மாயாகாரியங்களாகிய கருவிகளின் உண்மையை உணர்ந்தவர்கட்கே மெய்ப்பொருளாகிய சிவத்தை உணரும் உணர்வு கிடைக்கும். அந்த உணர்வானே ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும். அதனை அடையவே, அந்தச் சிவஞானமே சிவபத்தி -யாய்ப் பரிணமிக்க, அந்தப் பத்தியால் சிவானந்தம் விளைவதாகும்.

குறிப்புரை :

``தத்துவம்`` நான்கில் முதலது உபசார வழக்கால் `தத்துவம்` எனப் பெயர்பெற்றது நிற்கும் மாயா கருவிகளைக் குறித்தது. ஏனையவை உண்மை வழக்கால் மெய்ப்பொருளைக் குறித்தன. ``தலைப்படல்`` இரண்டனுள் முதலது ஆன்மாவின் செயலாயும், இரண்டாவது ஞானத்தின் செயலாயும் நின்றன. தான் - ஆன்மா. அவன் - சீவன். ``ஆகவே`` என்ற அனுவாதத்தால், ஆதல் தானே பெறப்பட்டது. ஈற்றில் உள்ள தான், அசை.
இதனால், முன் மந்திரத்தில் `ஆன்மாத் தன்னை யுணர்தல் சிவஞானத்தால்` என்றமை பற்றி, அந்தச் சிவஞானம் கிடைக்குமாறும், அது கிடைப்பின் விளையும் பெரும் பயன்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 28

தன்னை யறிந்து சிவனுடன் தான்ஆக
மன்னும் மலக்குணம் மாளும் பிறப்பறும்
பின்அது நன்முத்தி சன்மார்க்கப் பேரொளி
நன்னர்த்து ஞானத்தின் முத்திரை நண்ணுமே.

பொழிப்புரை :

ஆன்மாத் தனது இயல்பை உள்ளவாறறிந்தால் தான் பாசத்துடன் நில்லாது சிவத்துடனே நிற்கும். அவ்வாறு நிற்கும் பொழுதுதான் மலங்களின் சேட்டை ஒழியும். பாசங்களின் சேட்டை ஒழிவே பிறப்பின் ஒழிவாகும். எவ்வாற்றானும் மீண்டும் பிறவி எய்தாத நிலையே முடிநிலைப் பரமுத்தியாகும். மற்றும் அதுவே நன்னெறியாகிய ஞானத்தால் அடையப்படும் பேரறிவுப் பொருளும் ஆகும். அது சின்முத்திரை வழியாகக் கிடைக்கும்.

குறிப்புரை :

சேட்டையை, `குணம்` என்றார். ``பின்`` என்பது, `மற்று` என்னும் பொருளில் வந்தது. `பின்னும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மையும், `அதுவே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயின. `பின்னும் அதுவே` என்பதை, ``சன்முத்தி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `நன்றது` என்பது எதுகை நோக்கி, `நன்னது` என வந்தது. `முத்திரையால் என உருபு விரிக்க. சின்முத்திரையைப் பெறுமாறு, வருகின்ற மந்திரத்தில் காண்க.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய தத்துவ ஞானத்தால் ஆன்ம சுத்தி உண்டாக, அதன்பின் நிகழும் ஆன்ம லாபமும் அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 29

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்(டு) ஐங்கரு மத்துவித் தாதலால்
மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே.

பொழிப்புரை :

(சிவனுக்கு வடிவமாய் அமைவது. அவனது சத்தியே. அதனை, ``காயமோமாயை அன்று; காண்பது சத்தி தன்னால்l என்னும் சிவஞான சித்தியால் அறியலாம். `அரிதரு கண்ணியாணை ஒருபாகமாக அருள் காரணத்தில் வருவார்``3 என அருளிச் செய்ததும் இதனையே. அவ்வாறு ஆகுமிடத்து.)
ஞானசத்தியே உடல். கிரியாசத்தியே உடலில் உள்ள பல உறுப்புக்கள். இச்சாசத்தியே `உயிர்களை உய்விக்கவேண்டும்` என்னும் கருணையாய் உள்ளிருந்து உந்துவதாய் மேற்கூறியவைகளை இயக்கும் உயிராகும். இவைகளையெல்லாம் கொண்டு அவன் செய்யும் தொழில்கள் ஐந்து. (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்). இங்ஙனம் ஆகலின் அவ்வைந்தொழிலில் இறுதிக்கண்ணதாகிய அருளலை தற்போதம் அற்றிருந்தவர்கள் மட்டுமே பெற்றார்கள் (`பிறரெல்லாம் ஏனை நான்கையே பெறுகின்றனர்` என்பதாம்).

குறிப்புரை :

இறைவனுக்கு `அருவம், அருவுருவம், உருவம்` என மூவகை வடிவங்கள் உள. அவற்றுள் அருவம் தவிர, ஏனைய இரண்டும் பற்றி இங்குக் கூறப்பட்டன. `உருவ வடிவத்தில் உடலும் உறுப்பும் நம்மனோரது உடலும், உறுப்பும்போலவே இருப்பினும் அவை அன்ன அல்ல; இங்குக் கூறிய சத்திகளே` என அறிவுறுத்தபடி அருவுருவ வடிவம் மந்திர வடிவம். அதனுள் சத்தியோசாத மந்திரம் உடலும், ஈசான மந்திரம் சென்னியும், தற்புருட மந்திரம் முகமும், அகோரமந்திரம் இருதயமும், வாமதேவமந்திரம் மறைவுறுப்பும் ஆக இவ்வாறு அமைகின்றன.
இறைவன் சனகாதி நால்வர்க்குத் தென்முகக் கடவுளாய்க் கல்லால மர நீழலில் இருந்து சின்முத்திரையாலே ஞானத்தை உணர்த்தியதைக் கருத்தில்கொண்டே,
``மோனிகள் ஞானத்து முத்திரைபெற் றார்களே``
என்றார். (`ஆகவே, அவரைப் போன்றாரும் அவ்வாறு ஞானத்தைப் பெறுதல் கூடும்` என்பது குறிப்பெச்சம்.)
அருவம் வடிவம், `இலயம்` என்றும், அருவுருவ வடிவம் `போகம்` என்றும், உருவம் வடிவம் `அதிகாரம்` என்றும் சொல்லப் படும் நிலைகளையுடையனவாம். இனி ஞானகுரவருடைய திருமேனியும் சிவோகம்பாவனை காரணமாகச் சத்தி வடிவம். அல்லது அருட்டிருமேனியாம் ஆகலின், அவரால் சின்முத்திரை வழியாகப் பலரும் பெறுதல் கூடும் என்க. சின்முத்திரையின் இயல்பை முத்திராலட்சணங்களில் காண்க.
இதனால், முன்மந்திரத்தில் கூறிய ஞான முத்திரையின் உண்மையும், அதனைப் பெறுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 30

உயிர்க்கறி வுண்மை உயிர்இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயர்மாயை சூக்கம்
உயிர்க்கிவை யூட்டுவோன் ஊட்டு மவனே
உயிர்ச்செய லன்றிஅவ் வுள்ளத் துளானே.

பொழிப்புரை :

[முன்மந்திரத்தில் சிவனுக்கு உள்ளனவாகக் கூறிய ஞான சத்தி இச்சா சத்தி கிரியா சத்திகள் உயிர்கட்கும் உள்ளன, அஃது எவ்வாறு பெறப்படுகின்றது எனின்,], `சடப்பொருள்கட்கு வேறாய் உயிர் உண்டு` என உணரவைப்பதே உயிரினது ஞான சத்திதான், (அஃதாவது, எங்கே அறிவு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் `உயிர் உள்ளது` என உணரப்படுகின்றது என்பதாம்). இனி, அந்த அறிவு `யான்` எனத் தன்னைப் பற்றியும், `எனதும்` எனப் பிற பொருளைப் பற்றியும் கொள்கின்ற பற்றும் இச்சாசத்தியின் செயலேயாகும், அந்தப் பற்றுக் காரணமாக உயிர் பலவான மாயா காரியப் பொருள்களைச் செயற்படுத்தி, அவற்றால் பயன் உறுவது கிரியா சத்தியின் செயற் பாடே. இவ்வாறு இவை நுட்பமாக ஓர்ந்துணரத்தக்கன. (அங்ஙனம் உணராமல், `உயிர்கட்கு இந்தச் சத்திகள் இல்லை` என்று கருதிவிடுதல் கூடாது). எனினும், உயிர்கட்கு அவற்றின் வினைப்பயன்களை ஊட்டுவிக்கின்ற சிவன் செயற்படுத்தவே இச்சத்திகள் செயற்படும். ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் அவைகளே தனி நின்று செய்யும் செயல்கள் ஆகாது, அவற்றுள் உயிர்க்கு உயிராய் நிறைந்து நிற்கும் சிவன் செயல்களே ஆகின்றன.

குறிப்புரை :

இவ்வாற்றால், `ஒன்றேனும் நம் செயல் அன்று; எல்லாம் சிவன் செயலே` என்று உணரப்பெறுவதே தம்மையுணர்ந்து, பின் தலைவனை உணர்தலாகும்.
``சீவனும் இச்சா ஞானக்
கிரியையால் சிவனை ஒப்பன்
ஆவன்என் றிடின் அனாதி
மலம்இவற் றினை மறைக்கும்;
காவலன் இவன்செய் கன்மத்
தளவினில் கொடுப்பக் காண்பன்;
பாவியாம் புத்தி முத்திப்
பயன்கொளும் பண்பிற் றாமே``
-சுபக்கம் - சூ. 1 . 64.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளைக் காண்க. ``உயிர்க்கு அறிவு`` என்பதை, `உயிருக்கு உள்ள அறிவு` என விரிக்க. ``உயிர்க்குக் கிரியை`` என்பதும் அத்தகைத்து. உண்மையை உணர்த்துவதை ``உண்மை`` என உபசரித்தார்.
அபிமானம், `மானம்` எனப்பட்டது. `பற்று` என்பதே பொருள். உயர்தல், எண்மிகுதல். மாயை, அதன் காரியத்தைக் குறித்த ஆகுபெயர். பின்னும் அஃது இருமடியாகுபெயராய், அவற்றைக் கொண்டு செய்யப்படும் செயல்களை உணர்த்திற்று. `ஊட்டுதல்` இரண்டில் முன்னது, `வலுப்படுத்துதல்` என்னும் பொருளது. பின்ன -தற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ``உள்ளத்துளான்`` என்பதன்பின், `செயல்` என்பதுசொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், மேல், ``தன்னை யறிந்து சிவனுடன் தானாக`` என்றது பற்றி, அங்ஙனம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

தொழில்இச்சை ஞானங்கள் தொல்சிவன்சீவர்
கழிவற்ற மாமாயை மாயையின் ஆகும்
பழியற்ற காரணம் காரியம் பாழ்விட்(டு)
அழிவற்ற சாந்தாதீ தன்சிவன் ஆமே.

பொழிப்புரை :

`கிரியை, இச்சை, ஞானம்` என்பன சிவனுக்கு என்றும் இயல்பாகவே விளங்கி நிற்கின்றன. `உயிர்கட்கோ` எனின், அவை அனாதியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுப் பின்பு சிவனால் கூட்டப் பெறுகின்ற சுத்தமாயை அசுத்த மாயைகளின் காரியங்களில் அவை சிறிதே விளங்குகின்றன. சிவன் இந்த மாயைகள், அவற்றின் காரியங்கள், ஆணவம் ஆகிய அனைத்தையும் கடந்து, நிலைத்து நிற்பதாகிய துரியாதீத நிலையில் இருக்கின்றான்.

குறிப்புரை :

`தொன்மை` என்பது விகுதி கெட்டுப் பகுதி மாத்திரமாய் நின்றது. தொன்மையானவற்றைத், ``தொன்மை`` என்றார். `சீவர்க்கு` என்னும் நான்கன் உருபுதொகுத்தலாயிற்று. கழிவற்ற - அழிவில்லாத; என்றும் உள்ளகாரணம், மாயைகள் காரியம் அவற்றினின்றும் தோன்றிய கருவிகள் சுத்த மாயை விஞ்ஞான கலருக்கே கருவியாய்ப் பயன்படும் என்க. இருள் போலுதலின் ஆணவத்தைப், `பாழ்` என்றார். சாந்த + அதீதம் = சாந்தாதீதம். சாந்தம் - அமைதி; என்றது துரிய நிலையை` பராவத்தையில் அதீதத்தை அடைந்தோர்க்கு மீட்சியில்லை ஆகையால் அதனை, `அழிவற்றது` என்றார்.
இதனால், சிவ சீவர்களது இச்சா ஞானக் கிரியைகளின் வேறுபாடு உணர்த்தப்பட்டது. இதனானே அவற்றை உடையவர்களது வேறுபாடும் தானே பெறப்படும். முன்மந்திர உரையிற் காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் அஃது இனிது விளக்கப்பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 32

இல்லதும் உள்ளதும் யாவையும் தானாகி
இல்லதும் உள்ளது மாய்அன்றாம் அண்ணலைச்
சொல்லது சொல்லிடின் தூராதி தூரம்என்(று)
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே.

பொழிப்புரை :

உணருமாற்றால் உணராதவர்களால், `இல்லை` என மறுத்துக் கூறப்படும் பொருளாய் உள்ளவனும், உணருமாற்றால் உணர்ந்தவர்களால், `உண்டு` என நிறுவப்படும் பொருளாய் உள்ளவனும், உலகின்கண், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகைப் பட்ட எல்லாப் பொருள்களிலும் ``அவையே தானாய்``க்* கலந்து நிற்பினும், அவற்றின் தன்மையைத் தான் எய்தாமையால் அவற்றின் வேறாய் உள்ளவனும் ஆகிய முதல்வனாம் சிவனை வாக்குக் குறிப்பிட முயலுமாயின் அதற்கு எட்டாத நெடுந்தொலைவில் உளன். இவ்வுண்மையை உயிர் எவ்வளவு விரைவாக அவ்வளவு விரைவில் அதன் உள்ளுயிராய் விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

``இல்லதும் உள்ளதுமாய்`` - என்பதை முதலிற் கொள்க. முதல் அடியில் சொல்லப்பட்ட இன்மை உண்மைகள் புலனாகாமை புலனாதல்களைக் குறித்து நின்றன. ``உண்மையுமாய், இன்மையுமாய்``8 என்று அருளிச்செய்ததும் இவ்விரு பொருளும் பற்றி என்க. `இல்லதும் உள்ளதும் ஆகிய யாவையும்` - என்க. ``ஆகியும்`` என்னும் உம்மை தொகுக்கப்பட்டது சொல்லால் சொல்லுதலை, `சொல் சொல்லிடில்` எனக்கருவியே வினை முதல் போலக் கூறப்பட்டது. சொல், வாக்கு, அது நால்வகைத்தாதலை அறிக. வாக்குக்கள் சுத்த மாயாகாரியம் ஆதலின் அதற்கும் அப்பாற்பட்ட நிலையை `தூர அதிதூரம்`` என்றார். ``பாதாளம் ஏழினும் கீழ் சொள் கழிவு பாதமலர்``l ``சோதி மணிமுடி சொல்லின் சொல் இறந்து நின்ற தொன்மை``3 ``சொற்பதச் சொற்பதமும் கடந்துநின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை`` * என்னும் திருமொழிகளை உணர்க. அது, பகுதிப்பொருள் விகுதி. `உணர்தல், அவன் அருளால்` என்பது அறிக.
இதனால், முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் துரியா தீதனாயினும் எங்கும் நிறைந்து நிற்பவன் ஆதலின், அவனை உணரு மாற்றால் உணரின் உணரப்பட்டு நிற்பான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிர்இச்சை ஊட்டி ஒழித்தருள் சத்தி
உயிர்இச்சை வீட்டிமெய் உண்மையை நாட
உயிர்இச்சை கூட்டி உடன்உற லாலே
உயிர்இச்சை வாட்டி உயர்பதம் சேருமே.

பொழிப்புரை :

சிவனது சத்தி (உயிர்கள் பக்குவம் எய்தாத பொழுது) அவற்றுக்கு உலகின்மேல் ஆசையை உண்டாக்குதலும், (பக்குவம் எய்திய பொழுது) அவற்றுக்கு அவ்வாசையைப் போக்குதலும் ஆகிய இரு செயல்களைச் செய்யும். (முன்னை நிலையில் திரோதான சத்தியாயும், பின்னை நிலையில் அருட் சத்தியாயும் அது நிற்கும். திரோதானசத்தி, `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும்) உயிருக்கும் உலக ஆசை நீங்கிய பொழுது அருட் சத்தி உயிரை அசத்தை விடுத்து சத்தினை நாடுதலில் விருப்பம் உண்டாக்கி, இவ்வாறு அதனுடன் என்றும் உடனாய் நிற்றலால்தான் உயிர் உலகப் பற்றினை ஒழித்து, மேலான வீட்டினைச் சேர்வதாகின்றது.

குறிப்புரை :

இம்மந்திரத்தில் பாடவேறுபாடு மிகுதியாய் உள்ளது. ``அருள்சத்தி``, வினைத்தொகை. மூன்றாம் அடியில் உள்ள ``உயிர்`` என்பதன்பின் நான்காம் உருபு விரிக்க.
இதனால், `பெத்த நிலையாகிய சகலாவத்தைகளும், முத்தி நிலையாகிய சுத்தாவத்தைகளும் சிவசத்தியாலே நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

சேருஞ் சிவம்ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓரொன் றிலார்ஐம் மலஇருள் உற்றவர்
பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்
ஆரும்கண்(டு) ஓரார் அவைஅருள் அன்றே.

பொழிப்புரை :

`மலம்` எனப்படும் ஐந்தும் நீங்கப் பெற்றவர்களே சிவமாந்தன்மையைப் பெற்றார்கள். அவற்றுள் ஒன்று ஒன்று நீங்கப் பெற்றவர்களும், ஒருமலமேனும் நீங்கப் பெறாதவர்களும் நிலத்திற் பிறந்து, பின் சுவர்க்கத்திலும், நரகத்திலும், புகும் பகுதியினரேயாவர். ஆயினும், `இவ்விருவகை நிலைகளும் சிவனது கருணை காரணமாக அவனது சத்தியாலே நிகழ்வன` என்பதை அறிபவர் உலகத்தில் அரியர்.

குறிப்புரை :

ஒன்றிரண்டு மலங்கள் நீங்கப்பெறுதலாவது ஆணவம் தவிர ஏனைய மாயை கன்மங்கள் நீங்கப் பெறுதலாம். `அவர்கள் இயற்கையாயுள்ள பிரளயாகலர், விஞ்ஞானகலரா தன்மையர் ஆதலல்லது, சிவமாம் தன்மையைப் பெறாமையால், ஆணவ வலியால் மீண்டும் சகலர் நிலையை அடைதல் கூடும்` என்பதாம். ஆயினும் `இவ்இருவகையும் பக்குவ அபக்குவங்களை நோக்கிச் சிவனது அருட் சத்தியும், திரோதான சத்தியும் செய்யும் செயலேயாம்` என்பதும் `திரோதான சத்தியின் செயலும் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல்போலக் கருணை காரணமாக நிகழ்வதே` என்பதும் அறியத் தக்கன என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் என்றபடி. சேரும் சிவம் - தம்மால் சேரப்பட்ட சிவம். சேர்தல் சிவத்தினது ஞானத்தாலே என்பது தோன்ற அடைபுணர்க்கப்பட்டது. ஆகவே, `ஐம்மலம் தீர்ந்தவர் அந்த ஞானத்தைப் பெற்றுச் சிவம் ஆவர்` என்பதும், `ஐம்மலத் தீராதவர் அந்த ஞானத்தைப் பெறார் ஆகலின் சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆக மாட்டாது பிறப்பை எய்துவர்` என்பதும் போந்தவாறு அறிக. `பாரின்கண் பிறந்து` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `மலாவத்தை நீங்கப் பெறாதவர்க்குப் பிறப்பு அறாது` என்பதும், `மலாவத்தை நீங்கி நின்மலாவத்தையை எய்தினோரே பிறப்பற்றவர் ஆவர்` என்பதும் ஒருங்கு வைத்து உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 35

எய்தின செய்யும் இருமாயா சத்தியின்
எய்தின செய்யும் இருஞான சத்தியின்
எய்தின செய்யும் இருஞால சத்தியின்
எய்தின செய்யும் இறையருள் தானே.

பொழிப்புரை :

ஏற்புடைய செயல்களை ஏற்குமாற்றால் செய்யும் இறைவனுடைய கருணை பரிக்கிரக சத்தியாகிய `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இரு மாயைகளின் ஆற்றலைக் கொண்டும், `மந்தம, தீவிரம்` என்னும் இருவகை அருட் சத்தியைக் கொண்டும், கன்மத்தின் வழியாக, `இன்பம், துன்பம்` என்னும் இரண்டை ஊட்டுகின்ற திரோ தான சத்தியைக் கொண்டும் அவ்வப்பொழுது ஏற்புடையவற்றைச் செய்யும்.

குறிப்புரை :

`எய்தினர்` என்பது பாடம் ஆகாமை அது பற்றி யெழுந்த உரைகளானேவிளங்கும். எய்தின - ஏற்புடையன. `எய்தின செய்யும்` என்பது, சொற்பொருட் பின்வருநிலை அணியாய்ப் பலமுறை வந்தது. ``செய்யும்`` நான்கில் ஈற்றில் உள்ளது எச்சம். ஏனையவை முற்று. இதனையும் முற்றாகக் கொள்ளின் இறையருள் எவ்வாற்றானும் ஏற்புடையனவே செய்யும்` என முடிக்க. இப் பொருட்டு ``இறையருள்`` என்பது மட்டுமே முதலிற் கூட்டத்தக்கது. அருள்காரணமாக இறைவன் செய்வனவற்றை அருளே செய்வன போலக் கூறினார். `பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து` என்றாற்போல. ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க. தான், அசைகள். ஞால சத்தி - ஞாலத்தை நடத்தும் சத்தி. ஞானசத்தி, ஞாலசத்தி இரண்டும் தாதான்மியமாய் உள்ள ஒரு சத்தியின் வகையேயாம். மந்ததரம் மந்தத்திலும், தீவிரதரம் தீவிதத்திலும் அடக்கி இரண்டாகக் கூறப்பட்டன.
இதனால், முன் மந்திரத்தில், ``ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே`` எனக் கூறியது இவ்வாற்றால் என விளக்கு முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

திருந்தினர் விட்டார் திருவில் நரகம்
திருந்தினர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தினர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தினர் விட்டார் சிவமாய் அவமே.

பொழிப்புரை :

ஆணவ மலத்தால் வளைக்கப்பட்ட கோணல் நீங்கி நேரான நிலையை அடைந்தோர் சிவமே ஆயினமையால், சுவர்க்கத்தை விரும்புதல், நரகத்திற்புகுதல், மாயை கன்மங்களின் குழாத்துள் இருத்தல், அவற்றால் பிறந்து இறந்தும், இறந்துபின் பிறந்து உழல்வதாகிய பயனில் செயல்களை உடையராதல் ஆகிய இவை அனைத்தையும் விட்டு நலம் பெற்றார்கள்.

குறிப்புரை :

`திருந்தனர்` என்பது எங்ஙனம் பாடம் ஆயிற்று என்பது தெரியவில்லை. ``திரு`` என்றது இன்பத்தை - இன்பம் இன்மை, துன்பம் உண்மையைக் குறித்தது. ``திருந்தினர்`` என்பவற்றோடெல்லாம், ``சிவமாய்`` என்பதனைக் கூட்டி, `விட்டார்` என முடிக்க. சொற்பொருட் பின்வரு நிலைஅணி. `திருந்தியது முன் மந்திரத்திற் கூறிய ஞான சத்தியால்` என்க.
இதனால், மேற்கூறிய இறையருட் செயலால் உயிர்கள் அடையும் முடிநிலைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன்அரு ளாமே.

பொழிப்புரை :

அவம் - பயன் இன்மை. பயனாவது நன்மையே, எனவே, ``அவம்`` என்றது, `நன்மை இன்மை` என்றபடி. அது தீமை உடையதாகவும் இருக்கலாம். சிவம் - நன்மை.
பகுத்தறிவில்லாதவர், `இஃது அவம், இது சிவம்` எனப்பகுத் துணர மாட்டார். (ஆகவே, `அவர் அவத்தைச் சிவமாக எண்ணி, அதனைப் பற்றிக்கொண்டு உழல்வர்` என்பதாம்). பகுத்தறி வுடையவர் அவற்றை நன்கு பகுத்துணர்வார். (ஆகவே `அவர் அவத்தை விடுத்துச் சிவத்தைப் பற்றி நன்மையடைவர்` என்பதாம்). பகுத்தறிவு திருவருளால் வாய்ப்பது. அங்ஙனம் வாய்க்கப்பெற்று, அவத்தினையும், சிவத்தினையும் உள்ளவாறு உணர்ந்தால், பகுத்தறிவு இல்லாத பொழுது, `உயிர் அவத்தில் உழன்றதும் சிவனது அருளால்தான் பின்பு அதனைவிடுத்துச் சிவத்தைப் பற்றியதும் சிவனது அருளால்தான் என்பது அனுபவமாய் விளங்கிவிடும்.

குறிப்புரை :

`அறிவு, அறிதல்` என்பன பகுத்தறிவையும் பகுத்தறிதலையுமே குறத்தமை, `அவமும், சிவமும்` என்றதனால் விளங்கும். `பகுத்தறிதற்கு அங்ஙனம் அறியும் அறிவு வாய்ப்பது திருவருளால்` என்றற்கு, ``அருளால்`` என்றே கூறிப் போயினா ராயினும், `அருளால் பெற்ற அறிவால்` என்பதே கருத்து. அவமும், சிவமும் அவன் அருளாதல் விளங்கும்பொழுது, `முன்னையது பக்குவம் இன்மையின் அது வருதற்பொருட்டு இயற்றப்பட்டது` என்பதும் விலங்கும் என்பது கருத்து. அவம், மலாவத்தைகளும், சிவம், நின்மலாவத்தைகளும் ஆகும்.
இதனால், `நின்மலாவத்தையே பயனுடையதாம்` என்பதும், `அது திருவருளால் நிகழும்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 38

அருளான சத்தி அனல்வெம்மை போலப்
பொருள்அவ னாகத்தான் போதம் புணரும்
இருள்ஒளி யாய்ஈண்டும் மும்மலம் ஆகும்
தருவரு ளாநந்தி செம்பொருள் ஆகுமே.

பொழிப்புரை :

[`சிவன் அருள்` என்றும், `சிவனது சத்தி` என்றும் சொல்லப்படுவது ஒருபொருளேயாகும். அதனால்,] அருளாகிய சத்தி, தீ பொருளாய் இருக்க, சூடு அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றியிருத்தல்போல, சிவம் பொருளாய் இருக்க, தான் அதன் பண்பாய் அதன்கண் வேற்றுமையின்றி யிருக்கும். அங்ஙனம் இருக்கும்பொழுது அறிவாகியேயிருக்கும். (இது சத்தியின் `உண்மை` எனப்படும் சொரூபம்) அதுவே, `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும் மலங்களாயும் நின்று (உயிர்கள் சிவனை அறியாதபடி மறைக்கும். இந்நிலையில் அது, `திரோதனகரி, திரோதாயி` - என்னும் பெயர்களைப் பெறும். இஃது அதன், `பொது` எனப்படும் தடத்தம்) பின்பு அதுவே தனது உண்மையான அருளாகும்பொழுது, சிவன் உயிர்களுக்கு முன்போல மறைந்து நில்லாமல், இனிது விளங்கும் பொருளாய்த் திகழ்வான்.

குறிப்புரை :

``அருளது சத்தி யாகும் அரன்றனக்கு; அருளை யின்றித்
தெருள்சிவம் இல்லை; அந்தச் சிவம்இன்றிச் சத்தியில்லை``l
``ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினைச் செய்ய ஏவும்
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும்
ஆய்வர்``8
என்னும் சிவஞான சித்தியையும்,
``முயங்கி நின்று - (மலம்) பாகம் உற உதவு
திரோதாயி ஒன்று``
``நேராதல் மருவுங்கால், முன்
சினமருவு திரோதாயி கருணையாகித்
திருந்திய சத்தி நிபாதம் திகழும் அன்றே``3
என்னும் சிவப்பிரகாசத்தினையும் காண்க.
`போதமாய்` என ஆக்கம் விரிக்க. ``இருள் ஒளியாய் ஈண்டும் மும்மலம்` என்றது, `இருளுக்கு ஒளிவந்து பொருந்துதலால், அதற்கு மேலும் கூடுகின்ற மும்மலங்களாய் நிற்கும்` என்றவாறு இருள் - ஆணவம். நான்காவது தொகுத்தலாயிற்று. `இருளுக்கு ஒளி` என்பதைப் ``பிணிக்கு மருந்து``3 என்றது போலக் கொள்க. `ஒளியாவது மாயை` என்பது வெளிப்படை. ஆய் - ஆதலால். ஆதல் - பின்பு வந்து சேர்தல். ஈண்டுதல் - திரளுதல். எனவே, அவை கன்மம் ஆயின. மலங்களை ஏவுதலால், சத்தியமே மலமாக எண்ணப்பட்டது. `திருவருள் ஆக` என்பது கடைக்குறைந்து நின்றது. `திருவருளால்` என்பது பாடமாயின், `அது திருவருள் ஆக, அதனால்` என உரைக்க. நந்தி - சிவன்.
`சத்தி புணரும்; முன் மந்திரத்தில் சுட்டப்பட்ட அருளின் நிலைமையெல்லாம் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 39

ஆதித்தன் தோன்ற அரும்பது மாதிகள்
பேதித்த தம்வினை யால்செயல் பேதிப்ப
ஆதித்தன் தன்கதி ரால்அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வா(று)அருட் பேதமே.

பொழிப்புரை :

`படைக்கும் சத்தி, காக்கும் சத்தி, அழிக்கும் சத்தி` என இவ்வாறு சத்திகள் வேறு வேறாகச் சொல்லப்படினும், உண்மையில், அவை அனைத்தும ஒரு சத்தியின் பேதங்களே. அஃது எவ்வாறெனி ல் பூக்கள் அனைத்தும் ஒரு நிலையையே அடையாமல் பல நிலைகளை அடைகின்றன. (சில அரும்பாகவும், சில போதுக ளாகவும், சில மலர்களாகவும்,சில வாட்லகளாகவும் ஆகின்றன) அந்த வேறுபட்ட நிலைகள் அனைத்திற்கும் ஏற்பச் சூரியனது கதிர்கள்` என்னும் வகையில் ஒன்றேயாவது போல்வதாம்.

குறிப்புரை :

சிவசத்தியின் வேறுபாடு `பிறவற்றை நோக்கிய வேறுபாடேயன்றித் தன்னிலே வேறுபட்ட வேறுபாடு அன்று` என்பதாம். ``அருட் பேதம்`` என்பதை முதலில் வைத்து, ``பேதித்துப் பேதியாவாறு`` என முடிக்க. ``தம்`` என்பதனை, ``செயல்`` என்பதனோடும் கூட்டுக. ``வினை`` என்பது, அது நிகழ்தற்கு ஏதுவாகிய பக்குவத்தைக் குறித்த ஆகுபெயர். ``பேதிப்ப`` என்பதில் உள்ள `பேதித்தல்` என்னும் செயலின் வினை, செயலையுடைய பதுமாதிகள் மேல் ஏற்றப்பட்டது. சேட்டித்தல் - செயற்படுத்தல். ``ஆதித்தன்`` இரண்டில் பின்னது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பேதித்துப் பேதியவாறு`` என்னும் பயனிலைக்கு. `அக்கதிர்கள்` என்னும் எழுவாய் வருவிக்க.
`அருட் பேதம், ஆதித்தன் தோன்றப் பது மாதிகள் செயல் பேதித்து நிகழும்படி அவனது கதிர்கள் செயற்படுத்துமிடத்து அக்கதிர்கள் பேதித்தும் பேதியாவாறு` என வினை முடிவு செய்க.
இதனால், முன் மந்திரத்தில் சத்தி பலவாதல்போலக் கூறப் பட்டமை பற்றி, `சத்திகள் பலவோ` என எழும் ஐயம். `சத்தி செயல் பற்றிப் பலவாகச் சொல்லப்படுகின்றதேயன்றி, உண்மையில் பலவன்று. `ஒன்றே` எனஅபதை உவமையால் கூறித் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

பேதம் அபேதம் பிறழ்பேதா பேதமும்
போதம் அபோதம் புணர்போதா போதமும்
நாதம் அநாத முடன்நாதா நாதமும்
ஆதல் அருளின் அருளிச்சை யாமே.

பொழிப்புரை :

`சிவனது அருள்` எனப்படும் சத்தி, உலகுயிர் களோடு பொருள் தன்மையால் வேறாய் நின்று அவற்றை அறிவித்தும், இயக்கியும் நிற்றல், அவ்வாறு நிற்பினும் தான் அவற்றின் வேறாய்த் தோன்றாது ஒன்றேயாய் நிற்றல் என்னும் இவ்வகைகளால் ஒரு வகையில் பேதமாயும், பிறிதொரு வகையில் அபேதமாயும் இருத்தலும், மலங்களை நீக்குதலால் உயிர்களின் அறிவை விளக்கு தலால் அறிவாயும், மலங்களைச் செலுத்துதலால் அவற்றின் அறிவை மறைத்து அறியாமையாயும் இவ்வகைகளால் ஒருவகையில் அறிவாயும், பிறிதொரு வகையில் அறியாமையாயும், நாதத்தை எழுப்புதலால் நாத மாயும், அதனை ஒடுக்குதலால் நாதம் இல்லதாயும் இவ் வகை களால் ஒரு வகையில் நாதமாயும், பிறிதொரு வகையில் நாதம் இல்ல தாயும் இவ்வாறெல்லாம் பேதப்பட்டு நிற்றல் அதன் இச்சையாலேயாம்.

குறிப்புரை :

இம்மந்திரத்துள் இரண்டாம் அடியில் பாடம் பெரிதும் திரிபு பட்டுள்ளது. மற்றும் திரிபுகள் உள. ``பேதா பேதம், போதா போதம், நாதாநாதம்`` என்பன அன்மொழித் தொகையாய், `இரண்டும் அல்லாத வேறொன்று` எனப்பொருளஅ தாராமல், உம்மைத் தொகையாய் இரண்டையும் குறித்துநின்றன. நாதம் - மொழி. ``அருள்`` இரண்டில் பின்னதை முதலிற்கூட்டி, ``அருளின்`` என்பதற்கு, `அதன்` எனப் பொருள் உரைக்க. அருளையுடைய சிவனது இச்சையை ஒற்றுமை பற்றி அருளது இச்சையேயாகவும், இச்சைப்படி நிகழ்வனவற்றை இச்சையாகவும் உபசரித்துக் கூறினார்.
இதனால், `சத்தியினது பேதங்கள் அது தானாகவே ஆக்கிக் கொள்வன அன்றிப் பிறிதொன்றால் ஆக்கப்படுவன அல்ல` என்பது கூறப்பட்டது. `சத்திதான் பலவோ என்னில், தான் ஒன்றே. அனேகமாக வைத்திடும், காரியத்தால்` என்பது சிவஞான சித்தி.l

பண் :

பாடல் எண் : 41

மேவிய பொய்க்கிரி ஆட்டும் வினையெனப்
பாவிய பூதங்கொண் டாட்டிப் படைப்பாதிப்
பூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்
ஆவியை ஆட்டும் அரன்அரு ளாமே.

பொழிப்புரை :

மனிதன் ஒருவன், யானைபோலப் பொய்யாகச் செய்யப்பட்ட பொறியினுட் புகுந்து மறைந்து கொண்டு, அதனை உயிருடையது போலப் பலவகையில் இயங்கச் செய்யும் செயல்போல, அருள் மாயையின் காரியமாய்ப் பரந்து விரிந்த உலகினுள் மறைந்து நின்று அதனைப் பலவகையாக இயங்கச்செய்து, அதனானே உயிரினது அறிவைப் படைத்தல் முதலிய தொழில்களால் பலவாறாக விளங்குவித்து, அவ் இயக்கத்துட்பட்டு அலமரச் செய்யும். `அருள்` எனப்படுவது சிவனது அருளே.

குறிப்புரை :

கரி - யானை. அதனை ஆட்டுதல் வினைக்கு வினை முதல் ஆற்றலால் பெறப்பட்டது. `பொய்யானையின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே எண்ணிச்சிறுபிள்ளைகள் பலவகை உணர்ச்சிகளை அடைதல்போல, உலகத்தின் இயக்கத்தை அதனது இயக்கமாகவே கருதி, அறிவில்லாதவர் பலவகை உணர்ச்சிகளை எய்துகின்றனர்` என்பது உவமையால் போந்த பொருள். அத்தகைய உணர்ச்சிகளைத் தோற்றுவித்தலையே, ``போதம், புரிந்து`` என்றார். ``அருள்`` என்பதை முதலிற்கூட்டுக. ``பூதம்`` என்பது உபலக் கணத்தால் `பூதம் முதலியவை` எனவும், `பூ` என்பது, மண் முதலியவை` எனவும் பொருள் தந்தன. `படைப்பாதியால்` என உருபு விரிக்க. ``இயல் கூட்டத்தால்`` என்றாரேனும், `கூடிய இயலால்` என்பது கருத்து. இயல் - இயலல்; இயங்குதல். முதனிலைத் தொழிற்பெயர். `அஃது அரன் அருளாமே` என, எழுவாய் வருவித்துரைக்க. இதனை எடுத்துக் கூறியது, `பிறகடவுளரது அருள்கள் அல்ல` என்பது உணர்த்தி, `அவர்களது செயல்களும் அரன் அருளே` என வலியுறுத்தற் பொருட்டு.
இதனால், `எல்லாம் திருவருட்செயலே` என்பது விளங்காமை அறியாமையால் என்பகு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

ஆறா றகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுற்றுத் தீண்டாச் சிவம்ஆமே.

பொழிப்புரை :

`தத்துவம் முப்பத்தாறினுள் ஒன்றேனும் தான் அல்லன்` எனத் தெளிந்து, அவைகளை, `தான்` என மயங்கும் மயக்கத்தினுள் நீங்கினவன் எவனோ அவனே, அவற்றிற்கு வேறாகி, மேலே உள்ள பரவெளியை அடைந்து வீடு பெற்றவனாவன் அந் நிலையில் முன்பு இருந்த மயக்கம் நீங்கித் தெளிவு பெற்று, எளிதில் அணுக இயலாத சிவத்தை அடைந்து அதுவேயாவன், அதுவே அவன் அடையவேண்டிய இறுதி நிலையாகும். அந்நிலையில் சிவனைப்போல இவனும் வியாபகமாய், ஏனை எல்லாப் பொருள்களும் தன்னில் வியாப்பியமாய் நிற்க விளங்குவான்.

குறிப்புரை :

``ஆகி எய்த`` என்றது, `ஆகி எய்துதற் பொருட்டு` என்றது ஆகலின், அஃது இறுதியில் வைத்து உரை கூறப்பட்டது ``வீடு`` என்றது, வீட்டின்பத்தை. தேறா - தேறி. மருள்தேறுதலாவது, மருளின்றும் நீங்கித் தெளிவையடைதல். பின்னும், ``தெளிவுற்று`` என்றது, `அத்தெளிவு நிலைபெறப் பெற்று` என்றபடி. தீண்டாச் சிவம் - பற்றுதற்கரிய சிவம்.
இதனால் மேல், `திருவருள் செய்வனவாகச் சொல்லப்பட்ட செயல்களில் இறுதியாக உயிர் பயனடைதல், இவ்வாறான நின்மலாவத்தையில்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

தீண்டற் கரிய திருவடி நேயத்தை
மீண்டுற் றருளால் விதிவழி யேசென்று
தூண்டிச் சிவஞான மாவினைத் தான்ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொழிப்புரை :

அடைதற்கரிய சிவபத்தியைப் பொதுவாகத்தான் அறிந்த முறையில் அடைந்து ஒழுகிய ஒருவன் பின்பு கிரியா குருவின் அருளால் சிறப்பாக அதனை அடைந்து, அவர் அறிவுறுத்த முறை யிலே சிவதன்மத்தில் ஒழுகிச் சிவயோகத்திலும் பயின்று, அதன் பயனாகப் பின்பு சிவஞானமாகிய யானையின்மீது ஏறிச் செலுத்தி, மும்மாயை களையும் தாண்டிச் சென்று, அப்பால் உள்ள சிவனோடு கூடுதலும் கூடும்.

குறிப்புரை :

``மீண்டு உற்று`` என்றதனால், முன்பு ஒரு முறை உற்றிருந்தமை பெறப்பட்டது. நூல்வழியாகவும், காட்சி வழியாகவும் அவரவர் தாம் தாம அறிந்தவாற்றால் சிவ பத்திகொண்டு சிவதன்மங் களில் ஒழுகுதலால் வரும் சிவபுண்ணியம், பொதுச் சிவபுண்ணியமும், குரு அருளால் அறிந்து அவற்றில் முறைப்படி ஒழுகுதலால் வரும் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியமும் ஆகும். பொதுச் சிவ புண்ணியம் உண்மைச் சிவ புண்ணியத்தைத் தர உண்மைச் சிவ புண்ணியமே உண்மைச் சிவ ஞானத்தைத் தரும். உண்மைச் சிவ ஞானமே சிவமாம் தன்மையைப் பயக்கும். இம்முறையையே இம்மந்திரம் கூறுமாறு அறிக.
சரியை, கிரியை இரண்டும் `சிவ தன்மம்` என ஒன்றாகவும் சொல்லப்படும் என்பதை,
``நல்லசிவ தன்மத்தால், நல்லசிவ யோகத்தால்,
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய - வல்லதனால்``*
என்னும் திருக்களிற்றுப்படியாரால் விளங்கும்.
`நேயத்தை அருளால் மீண்டு உற்றுச் சென்று ஏறித்தூண்டித் தாண்டிச் சாரலும் ஆம்` என வினைமுடிக்க. `மா` என்பது காட்டு விலங்குகள் அனைத்திற்கும் பொதுவான பெயர். `பாய்மா, பரிமா` என்பன குதிரையைக் குறிக்கும் சிறப்புப்பெயர். `அரிமா` என்பன சிங்கத்தைக் குறிக்கும் சிறப்புப் பெயர். `கைம்மா` என்பது யானையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். எனவே, இங்கு, `மா` என்னும் பொதுப்பெயர், இடம் நோக்கிக் கைம்மாவைக் குறித்தது. அது, ஞானம், எவ்விடத்திலும் யானையாக உருவகப்படுத்துதலே மரபாதலால் விளங்கும். உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால், `தவம், ஞானம்` என்னும் இரண்டுமே குரு வருளால் எய்தற்பானவாய், ஞான நிகழ்ச்சியே நின்மலாவத்தை யாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``சிவனுடன் சாரலும் ஆமே`` எனக்கூறிய சார்ச்சி, `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என நால்வகைப் படுதலால், அவ்வம்முறையால் சிவனைச் சார்ந்தவர் முறையே. `சாரணர், சித்தர், சமாதியர், சாத்தியர்` என நிற்பர். எனினும் இறுதியில் சொல்லப்பட்ட சமாதியரே சிவானந்தத்தை அடைந்தவர். அவரே நிலையான அருள் தன்மையைப் பெற்றவரும் ஆவர்.

குறிப்புரை :

சாரணர் முதலிய மூவரும் சிவலோகத்தில் இருக்கும் நிலைபற்றி அப்பெயர்களால் கூறப்பட்டன. சாரணர் - எங்கும் சென்று உலாவி வருபவர். `ஒருவர் இல்லத்தில் பணி புரியும் பணியாளர் அவ் இல்லத்தில் எங்கும் செல்லும் உரிமையுடையர் ஆதல்போலச் சிவ லோகத்தில் எங்கும் செல்வபர்` என்றபடி. இதுவே `சாலோக பதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் சரியைத் தொண்டு, `தாச மார்க்கம்` அல்லது, `தொண்டர் நெறி` எனப் பட்டது. சித்தர் - சிறப்புப் பயன் கிடைக்கப் பெற்றவர். `சிவ லோகத்தில் சிவனுக்கு அணுக்கராய் இருக்கும் சிறப்புரிமை பெற்றவர்` என்றவாறு. இதுவே `சாமீபபதவி` எனப்படுகின்றது. இப்பதவி இத்தகைத்தாதல் பற்றியே இதனைத் தரும் கிரியைத் தொண்டு, `சற்புத் திரமாரக்கம்` அல்லது `மகன்மை நெறி` எனப்பட்டது. சமாதியர் - சிவனுக்குச் சமமானவர். `சிவலோகத்தில் சிவனது உருவத்தைப் போன்ற உருவத்தையே பெற்றிருப்பவர்` என்றபடி. இதுவே `சாரூப பதவி` எனப் படுகின்றது. இப்பதிவி இத்தகையதாதல் பற்றியே இதனைத் தரும் யோகப் பயிற்சி, `சகமார்க்கம்` அல்லது `தோழமை நெறி` எனப்பட்டது. இவை மூன்றுமே பத முத்திகளாம். சாத்தியர் - சாத்தியத்தை, அஃதாவது தமது கிறிக்கோளை அடைந்துவிட்டவர். இவரை ``மெய்ஞ்ஞான தத்துவர்`` என எடுத்துக்கூறியதனால், `முன் சொல்லப்பட்ட மூவரும் மெய்ஞ்ஞானத்திற்குரிய படிகளில் நின்றவர்` என்பது பெறப்பட்டது. குறிக்கோள், சிவனோடு இரண்டறக் கலந்து, மீண்டுவாரா நிலைமையில் இருத்தல். அந்நிலையே ஆனந்த நிலையுமாம் ஆதலின், ஆனந்தத்தைப் பெறுதலும் குறிக்கோளாயிற்று. ``சத்த அருள்`` என்பது, `வெண்மைய ஆடை` என்பதுபோல வினைக் குறிப்பு பெயரெச்சத்தொடர் `தத்துவம்` என்பதபல பொருட்கட்கு உரியதாகச் சொல்லப்படுதலால், இங்குச் சொல்லப்படும் தத்துவம், `மெய்ஞ் ஞான தத்துவம்` என்றார். `மெய்ஞ் ஞானமாகிய தத்துவம்` என்றபடி. `முன் மந்திரத்திற் சொல்லிய சார்ச்சி வகையை உடையவர் நால்வகையினர்` என்றற்குச் ``சார்ந்தவர்`` என்பதை எழுவாயாக வைத்துக் கூறினார். சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. இங்குக் கூறிய சமாதி, `அநாதிக்குச் சமமாக எண்ணப்படும் ஆதி` என்க.
இதனால், `சிவனைச் சாருமுறையும், அம்முறைகளால் அடையும் பயன்களும் நால்வகையினவாம்` என்பது உணர்த்தும் முகத்தால் `இறுதியிற் கூறிய பயன்நின்மலாவத்தையாலே உளதாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

தான்என் றவன்என் றிரண்டென்பர் தத்துவம்
தான்என் றவன்என் றிரண்டற்ற தன்மையால்
தான்என் றிரண்டுன்னார் கேவலத் தானவர்
தான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.

பொழிப்புரை :

(உண்மையுணர்ந்தோர்) `அறிபவனும், அறியப் படுபவனும் - என உள்பொருள் இரண்டு` எனக்கூறுவர் ஆயினும் அவ்விரண்டு பொருளும் எஞ்ஞான்றும் வேறுநில்லாது உடலும், உயிரும் போல ஒன்றாகியேயிருத்தலால், பாசமாகிய அசுத்தத்தின் நீங்கினோர், அறியப்படுபவனை யறிதலோடு அறிபவனையும் அறிதலாகிய இரண்டறிவையுடையராகாது, அறியப்படுபவனை மட்டுமே அறிதலாகிய அந்த ஓர் அறிவை மட்டுமே உடையவராய் இருப்பர் அவ்வாறிருத்லே நிறைவான சுத்த நிலையாகும்.

குறிப்புரை :

உடலும், உயிரும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விரண்டனுள் ஒன்றே உள்ளது; மற்றொன்று இல்லை` எனக் கூறுதல் அறியாமையுடையாரது கூற்றாதல்போல, அறிவானும், அறியப்படுபவனும் வேறு நில்லாமையே பற்றி, `அவ்விருவருள் ஒருவனே உளன்; மற்றொருவன் இல்லை` என்றல் அறியாமை யுடையவரது கூற்றாய்விடும் - என்பது உணர்த்துதற்கு. ``தான் என்று, அவன் என்று தத்துவம் இரண்டு என்பர்`` எனவும், `ஆயினும், அறிபவனது அறிவை அறியப் படுபவனிடத்தே நிலைத்து நில்லாத -வாறு அகற்றி, `தான்` என்றும், இவ்வாறெல்லாம், `யான், எனது - பிறர், பிறரது` என மயங்கி உழலச் செய்வது மல சத்தியேயாகலின் அச்சத்தி முழுவதுமாக நீங்கப் பெற்றவர் அங்ஙனம் பலதலைப்படும் அறிவுடையராகாது, `அவனே` என அறியும் அந்த ஒருதலைப்பட்ட அறிவையே உடையராய் இருப்பர்` - என்பது உணர்த்துதற்கு ``கேவலத்து ஆனவர்தான் என்று இரண்டு உன்னார்`` எனவும், அவ்வாற்றால், அறிபவன் அறியப்படுபவனேயாய் நிற்றலே மலம் முழுவதுமாக நீங்கிய நிறைவான சுத்த நிலை - என்பது உணர்த்துதற்கு, ``தான் இன்றித் தான் ஆகத்தத்துவ சுத்தமே`` எனவும் கூறினார்.
ஈற்றடியில் உள்ள ``தான்`` இரண்டில் முன்னது அறி -பவனையும், பின்னது அறியப்படுபவனையும் குறித்தன. தன்மையை என்பது பாடம் அன்று ``கேவலம்`` என்றது. கலப்பின் நீங்கி நிற்றலைக் குறித்தது. ``தத்துவம்`` இரண்டில் முன்னது, `உள்ளது, என்றும், பின்னது `உண்மை` என்றும் பொருள் பயந்தன. ``சுத்தம்`` என்பதன் பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. ஏகாரம் தேற்றம். உண்மைச் சுத்தத்தை அதைற்குச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலா வத்தையை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. அதனுள்ளும் சிவயோக நிலையே இங்கு வலியுறுத்தப்பட்டது. மெய்கண்ட தேவரும் இவ்வாறே,
``நான் அவன்என்(று) எண்ணினர்க்கும் நாடும் உளம் [உண்டாதல்,
தான்எனஒன்(று) இன்றியே, தான் அதுவாய் - நான்என ஒன்(று) இல்என்று தானே எனும்அவரைத் தன்அடிவைத்(து)
இல்என்று தான்ஆம் இறை`` l
என அருளினமை காண்க.
இதனால், நின்மலாவத்தையின்றிப் பராவத்தையை எய்துதல் கூடாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 46

தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியின் தலைப்படும்
தன்னினில் தன்னை அறிகில னாயிடில்
தன்னினில் தன்னையும் சார்தற் கரியனே.

பொழிப்புரை :

(`என்னை உடையானாகிய தலைவன் எங்குளன்` எனப்புறத்தே பலவிடத்துத் ``தேடியும் தேடொணாத் தேவனாய்`` உள்ள சிவனை, `இனி என்னுள்ளேதான் நான்தேட வேண்டும்` என உணர்ந்து, அவ்வாறே) அவனைத் தன்னுள்ளே அறிய முயல்கின்ற பெருமகன் அம்முயற்சியில் உறைத்து நிற்பனாயின், அவனைத்தான் அடைந்துவிடுவான். அம்முறையில் அவன் தன்னுள்ளே தேட முயலாது, புறத்திற்றானே தேடிக் கொண்டிருப்பானாயின், அவன் சிவனைத் தன்னுள்ளேயும் அடைதற்கு அறியவனாகியேயிருப்பான்.

குறிப்புரை :

`சிவனைப் புறத்தே தேடாது தன்னுள்ளே தேடி அடைவதுதான் நின்மலாவத்தை` என்பது குறிப்பு.
``தேடிக் கண்டுகொண்டேன்;திர மாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்``* என நாவரசர் அருளிச்செய்தமையை இங்கு உன்னி உணர்க. மற்றும் அவர் இத்திருமந்திரத்தை ``முன்னோர் மொழி பொருளேயன்றி, அவர்மொழியும் - பொன்னேபோல்போற்றும்`` வகையில் (நன்னூற் பாயிர உரைமேற்கோள்) தமது `சித்தத் தொகை`த் திருக்குறுந்தொகையில் எடுத்தருளிச் செய்தமையும் உணரற்பாற்று. இதனானே, உண்மைப் பாடங்களும் சில விளங்கும். யாப்புக்கேற்பன கொள்ளப்படும். எனவே முன்பு, ``தேடிக் கண்டுகொண்டேன்`` என்னும் திருப்பாடலும் இதனையே இனிது விளக்கியதாயிற்று. ``தன்னினில்`` என்பவற்றில் இன்னுருவோடு ஒத்த இல்லுருபு இன் சாரியை பெறுதல் சிறுபான்மை இலேசினால் கொள்ளப்படும்.l உம்மையை மாற்றிவைத்துரைக்க.
இதனால், நின்மலாவத்தையே சிவனை அடையும் வழியாதல் வயியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 47

அறியகி லேன்என் றரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்று நேர்பட்ட பின்னை
இருசுட ராகிய இயற்றவல் லானும்
ஒருசுட ராய்வந்தென் உள்ளத்துள் ளானே.

பொழிப்புரை :

மாணவகனே, குருவருள் பெறாத மற்றவர் -களைப்போல நீயும் இராக் கதிரிபோலச் சிறிதறிவைத் தருபவனாயும், பகற் கதிர்போலப் பேரறிவைத் தருபவனாயும் இருந்து எல்லா வற்றையும் செய்கின்ற சிவனைப் புறத்தெல்லாம் தேடி, `ஐயோ!` சிவனைக் காணமுடியவில்லையே` என்று கதறி அழாதே. ஏன் எனில், அவனை அகத்தே அறிதலாகிய அந்த நெறியைப் பற்றி, அதிலே சென்ற பொழுது அவன் எனக்குக் கிடைத்தான். அதன்பின் அவன் முன்போல இருசுடராய் இல்லாமல் பகற் கதிராகிய ஒரு சுடரேபோலத் தோன்றி, அந்நிலையினின்றும் மாற்றம் சிறிதும் இன்றி, என் உள்ளத்துள் நீங்காதிருக்கின்றான்.

குறிப்புரை :

`நீயும் அந்நெறியிலே சென்றால் தவறாமல் அவனை அடைவாய்` என்பது குறிப்பெச்சம். `அகத்தே அறியும் நெறியே நின்மலாவத்தை` என்பது மேலே குறிக்கப்பட்டது. ``வழியே`` என்றது, `பிறழாது பற்றி` என்றபடி. ``நேர்பட்ட பின்னை`` என்ற அனுவாதத்தால், நேர்பட்டமை தானே பெறப்பட்டது. உம்மை சிறப்பு. சிறிதறிவைத் தருதல் திரோதான சத்தியால், பேரறிவைத் தருதல் அருட்சத்தியால். இவையே பெத்த முத்தி நிலைகளாம். ரகாரவகையால் எதுகை ஒன்றிற்று.
இதனால், நின்மலாவத்தையை எய்தாது வருந்தும் மாணாக்கன் மேல் இரக்கங்கொண்டு, அதனை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

மண்ணொன்று தான்பல நற்கலன் ஆயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ண மாகிநின் றானே.

பொழிப்புரை :

குடம், சால், சாடி முகலாகக்கலங்கள் பல வகையால் இருப்பினும் அவை அனைத்திலும் ஒருமண்ணே பொருந்தியிருத்தல் போலப் பிறப்பு வகையால் உயிர்களின் அறிவு பல்வேறு வகைப்பட்டிருப்பினும் ஒரு பேரறிவாகிய சிவன் அவை அனைத்தின் அறிவினுள்ளும் இருக்கின்றான், அங்ஙனமாயினும், கண் எல்லாப் பொருளையும் பார்க்க. பார்க்கப்பட்ட பொருள்கள் கண்ணைப் பாராததுபோல, அறிவுக்கறிவாய் உள்ள சிவன் அனைத்துயிர்களையும அறியினும் அவ்வுயிர்களுள் ஒன்றேனும் அவனை அறிதல் இல்லை.

குறிப்புரை :

இதனுள் முதலிற்போந்த உவமை, ஒருவனே பலவற்றில் இருக்கும் அளவிற்குக் கூறிய ஒருபுடை எடுத்துக்காட்டு உவமை. மற்றுக் காரிய காரணங்களைப் பற்றியதன்று. `பலவற்றை` என உருபு விரிக்க. `குடம் முதலியனை கண்ணைக் காணாமை மட்டும் அன்று; தம்மையும் மட்டும் அன்று; தம்மையும் தாம் அறிவதில்லை` என்பதனையும் பின்னர்க் கூறிய உவமையால் உடன்கொள்க.
``காட்டிய கண்ணே தனைக்காணா, கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான்; உள்ளத்திற் காண்``l
``காணொணா கர ணங்களுக்குயிர்
கண்டி டாமையின் இன்றெனின்,
காணுமோ கடம் கண்ட கண்ணினைக்
கண்டு நிற்பதும் கண்ணதே``8
எனவும் போந்த சாத்தர மொழிகளைக் காண்க.
``ஒருவனே`` என்பதன் பின் `அறிவாய் உளன்` என்பது வருவிக்க. உள்நின்ற - உலகத்துள் நின்ற யோனிகள். ஆகுபெயர். வண்ணம் - நிலைமை. நிலைமையனை `நிலைமை` என்றதும் ஆகுபெயர். ``அண்ணலும்`` என்னும் உம்மை, உவமையைத் தழுவிநின்ற எச்ச உம்மை.
இதனால், `மேற்கூறியவாறு ஒருவனே எல்லா உயிர்களின் அகத்திலும் நிற்றல் எங்ஙனம்` என்னும் ஐயம் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

ஓம்புகின் றான்உல கேழையும் உள்நின்று
கூம்புகின் றார்குணத் தின்னொடுங் கூடுவர்
தேம்புகின் றார்சிவம் சிந்தைசெய் யாதவர்
கூம்புகின் றார்வந்து கொள்ளலும் ஆமே.

பொழிப்புரை :

ஏழுலகத்தில் உள்ள உயிர்களையும் சிவன் ஒப்ப நோக்கித்தான் அவற்றின் உள்நின்று காத்து வருகின்றான். (என்றாலும், சிலரே அதனை யுணர்ந்து, ஏனையவற்றைப் பற்றாது விடுத்து அவனிடத்திலே சென்று அடங்குகின்றனர். அங்ஙனம் அடங்கினவர்கள் சிவனது எண்குணங்களையும் தாங்களும் உடையவராவர். பலர் அவ்வாறு உணர்ந்து சிவனை அடைதல் இல்லை. அங்ஙனம் அடையாதவர்கள் உலகியலில் சிக்கித் துன்புறுகின்றனர். சிவனை அடைந்து அடங்காதவர்கள் சிவனது குணத்தைப் பெறுதலும் கூடுமோ! (கூடாது).

குறிப்புரை :

`சிவம்` எனப்பின்னர் வருதலால் `ஓம்புபவன் சிவன்` என்பதும் குணம் அவனுடையன என்பதும் போந்தன; ஓம்புதலை எடுத்துக் கூறினமையால், ஒப்ப நோக்குதல் பெறப்பட்டது. `ஓம்புபவன் ஒப்ப நோக்கினும் ஓம்பப்படும் உயிர்கள் பக்குவ பேதத்தால் பயன் பெறுதலில் வேறுபடுகின்றன, என்பதாம். ஆகவே, `அனைவரும் ஒருகாலத்திற்றானே நின்மலாவத்தை எய்தார்` என்பதாம் `சென்று` எனற்பாலதனை, `வந்து` என்றது இடவழுவமைதி `அக்குணம் கொள்ளலும் ஆமே` என்க. உம்மை சிறப்பு. ஏகார வினா, எதிர்மறை உணர்த்தி நின்றது. சிவனது எண்குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை* இவைமுறையே சுதந்திரத்துவம், விசுத்ததேகம், நிராமயானமா` சருவஞ்ஞத்துவம்,அநாதி முத்தத்தன்மை, அலுத்த சத்தி. அநந்த சத்தி, பூர்த்தி` என வடமொழியில் சொல்லப்படும்* அலுத்த சத்தி, `குறைவில்லாற்றல் உடைமை` என்றும் சொல்லப்படும். பூர்த்தி, `திருத்தி` என்றும் சொல்லப்படும். அநாதி முத்தத்தன்மை `அநாதி போதம்` என்றும் சொல்லப்படும். சிவனைச் சேர்ந்தார். ``என் குணத்துளோமே``l எனக்கூறுமாறு காண்க.
இதனால், அனைவரும் பக்குவபேதத்தால் ஒருங்கே நின்மலாவத்தையை எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

குறியறி யார்கள் குறிகாண மாட்டார்
குறியறி யார்கடம் கூடல் பெரிது
குறியறி ஆவகை கூடுமின் கூடில்
அறிவறி வாய்இருந்(து) அன்னமும் ஆமே.

பொழிப்புரை :

`குறிக்கொளத் தக்கது இது` என அறியாதவர்கள் அதனை அடைதல் எங்ஙனம் கூடும்? (கூடாது) அவர் உடம்பிற் கட்டுண்டு நிற்குங் காலம் பெரிதாகும். ஆகையால், நீவிர், `குறிக்கொள்ளத் தக்க பொருள் இது` என்பதை அறிந்து, பின்பு அதுவே யாகும்படி பொருந்தி நில்லுங்கள். நின்றால், உங்களுடைய அறிவு அறிவாய் இருக்கும். வீட்டின்பமும் சித்திக்கும்.

குறிப்புரை :

குறி - குறிக்கப்படும் பொருள். முதனிலைத் தொழிற் பெயர் ஆகபெயராய்ச் செயப்படுபொருளை உணர்த்திற்று. காணுதல், இங்கு, `அடைதல்` எனத்தன்காரியம் தோற்றி நின்றது. கூடல், அதற்குரிய காலத்தைக் குறித்த ஆகுபெயர். என் வினையெச்சப் பொருள் தந்தது. `வரிப்புனை பந்து`, என்பதிற்போல. ``ஆவகை``, வினைத்தொகை. அன்னம் - சோறு. அது, ``பாதகமே சோறு பற்றினவா`` என்பதிற்போல நின்றது உம்மை, சிறப்பு.
இதனால், `உயிர் குறிக்கொளத் தக்க பொருள் சிவமே யாதலின், அதனை நின்மலாவத்தையால் அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

ஊனோ உயிரோ உறுகின்ற தேதின்பம்?
வானோர் தலைவி மயக்கத் துறநிற்க
யானோ பெரிதறி வேன்என்னும் மானுடன்
தானோ பிறப்போ டிறப்பறி யானே.

பொழிப்புரை :

உயிர் உடம்பொடு கூடி நிற்கும் நிலையில் வருகின்ற இன்பத் துன்பங்களை நுகர்வது உடம்பா? உயிரா? இதனை எண்ணிப் பார்த்து உண்மையை உணரமாட்டாமல் திரோதான சத்தியால் வரும் மயக்கத்திலே இருந்து கொண்டு, `யான் உண்மையைநன்கறிவேன்` என்றுசொல்கின்ற மனிதன்தான் பிறந்ததாகிய `பிறப்பு` என்பதும், பின்பு இறக்கப்போவதாகிய `இறப்பு` என்பதையுமே `இன்ன` என அறியமாட்டான்.

குறிப்புரை :

`மற்ற உண்மைகளை எங்ஙனம் அறிவான்` என்பது இசையெச்சம். `இன்பம் உறுகின்றது ஏது? என மொழி மாற்றியுரைக்க. ``ஏது`` என்பது, `யாது` என்பதன் மரூஉ, சிறப்புப்பற்றி இன்பமே கூறப்பட்டதாயினும் துன்பமும் உடன்கொள்ளப்படும். `யான் சுகிக்கின்றேன்; துதிக்கின்றேன்` என உணரும்பொழுது யான்` எனப்படுவது உடம்பின் வேறாகிய உயிரே; அவ்வுயிரே தான் என உணரமாட்டாது, திரோதான சத்தியால் வரும் மயக்கத்தால் உடம்பையே தானாக மதிக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் `பிறப்பு, இறப்பு` என்பவற்றின் உண்மையையே `இவை` என அறியமாட்டான் ஆதலின், அவன் தனது அறிவை `அறிவு` எனக் கூறுவன எல்லாம் போலியே என்பதாம். `பிறப்பு` என்பது உடம்பு தோன்றுதலும், `இறப்பு` என்பது உடம்பு அழிதலுமே. ஆவன அல்லது, உயிர் தோன்றுதலும், அழிதலும் அல்ல. ஆயினும் மயக்கத்தால் மக்கள் உயிர் தோன்றுவதும், அழிவதுமாகக் கருதுகின்றனர் என்பது குறிப்பு. மயக்குதற்கு உரியவளாகக் கூறியதனால் ``வானோர் தலைவி`` திரோதான சத்தியாயினார் `திரோதான சத்தி உள்ள வரையில் மக்கள் மெய்யறிவைப் பெறமாட்டார்` என்பதனால், `அருட்சத்தி தோன்றினால் மெய்யறிவைப் பெறுவார்` என்பது பெறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் பெறப்படுகின்றது. `அருட்சத்தி` தோன்றியபொழுதே மெய்யறிவு தோன்ற, நின்மலாவத்தை நிகழும் என்றலின், இம்மந்திரம் இவ்வதிகாரத்திற்கு உரியதாயிற்று. இம்மந்திரத்துள் பன்மையொருமை முதலியன அறியாரால் பாடம் திரிக்கப்பட்டது. இது, வருகின்ற மந்திரத்தானும் விளங்கும்.
இதனால், `நின்மலாவத்தைக்குக் காரணம் மெய்யறிவு` என்பது உணர்த்தி முடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது

பண் :

பாடல் எண் : 1

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.

பொழிப்புரை :

ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது; தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.

குறிப்புரை :

இங்கு, அறிபவனையே ``தான்`` என்றார், `ஆன்மா` என்னும் வழக்குப் பற்றி `அகம்` என்னும் தமிழ்ச் சொல்லாலும் குறிப்பது உண்டு. முதற்கண் தன்னை அறிதல் அனுமானத்தானும், பின்னர் அனுபவத்தானும் என்க. `தானே` என்றது, `பிறர் கெடுக்க வேண்டாது` என்றபடி. அறிவை அறிதல் - அறிவைப் பெறுதல். வழிபடுதல் சிவமாய தன்மை பற்றியாதலின், `சிவமாகி இருப்பன்` என்றபடி.
இதனால், `மெய்யறிவில் தன்னை அறிதல் முதற்படி` என்பது கூறப்பட்டது. ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார்`` எனவும், ``தம்மை உணரார் உணரார்`` எனவும் மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.l

பண் :

பாடல் எண் : 2

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.

பொழிப்புரை :

`எந்த உயிருக்கு மல பரிபாகம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே சிவபெருமான், வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்தலால், அருட்சத்தியாகிய தேவியும் அங்கே மகிழ்ச்சியோடு விரைவில் சென்று அப்பெருமானை வணங்குவாள்.

குறிப்புரை :

என்றது, `அவனது குறிப்பின்வழியே செயற்பட முற் படுவாள்` என்றபடி. சத்தி சத்திமான் வழிபட்டவள் ஆதலை இவ்வாறு விளக்கினார். சிவன் அங்கே என்றும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றிப் புதியனாகச்சென்று இருந்தது போலக் கூறினார். ``அங்கே`` எனப் பொதுப்படக் கூறியது. மெய்ந்நூல் வழக்கு. சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள் என்பது தோன்றுதற்கு, சலேல், ஒலிக் குறிப்பு. இஃது, ஓடி வருதலைக் குறிப்பால் உணர்த்திற்று. `சலேல் எனப் புகுந்து` என ஒருசொல் வருவிக்க. கூந்தலுக்குப் பொங்குதல் கற்றையாய் அடர்தல். `பொங்குதல் நிறைந்த குழலை உடையவள்` என்க. சத்தியை வேறெடுத்துக் கூறியது, `சத்தி நிபாதம் உளதாகும்` என்பது உணர்த்தற் பொருட்டு. ஆகவே, `மலம் பரிபாகம் உற` அதனால் சத்தி நிபாதம் உண்டாகி, அறிவு உதயம் உளதாம்` என்றதாயிற்று.
இதனால், அறிவுதயம் வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.

பொழிப்புரை :

மேற்3 கூறியவாறு, ``வானோர் தலைவி`` தந்த மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை அறியாது. `உடம்பே` என்று மயங்கியிருந்த என்னை, நந்திபெருமான் தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பன்று; அறிவு` என அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அன்று` என உணர்ந்து அதனின் நீங்கியிருக்கின்றேன்.

குறிப்புரை :

`நந்தி பெருமான் எனக்குச் சொல்லியதைத் தான் நான் உனக்குச் சொல்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். முன்மந்திரத்தில், ``சிங்காதனத்தே சிவன் இருந்தான்`` என்றும்; ``பொங்கார் குழலியும் போற்றியென்றாள்`` என்றும் கூறிப் பின், ``அருள் செய்தான் நந்தி`` என்றும், பின் ``அருளால் அறிந்தேன்`` என்றும் கூறியதனால், மலபரிபாகத்தால் சத்தி நிபாதமும், சத்தி நிபாதத்தால் குருவருளும், குருவருளால் அறிவுதயமும் உளவாதலைக் குறிப்பான் உணர்த் தினமை காண்க. அறிவுதயம், `ஞானோதயம்` என்றும் சொல்லப்படும். அருள்காரணமாக அருளிச் செய்த அறிவுரை ``அருளால்`` என்று உபசரிக்கப்பட்டது.
இதனால், அறிவுதயம் குருவருளாலே உளதாதல் கூறப்பட்டது.
[ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
மாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவே சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.]

பண் :

பாடல் எண் : 4

அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை
அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை
அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு)
அறைகின் றனமரை ஈறுகள் தாமே.

பொழிப்புரை :

தோற்றமும், கேடும் சடத்துக்கன்றிச் சித்துக்கில்லை. சித்துக்குப் பற்றுக்கோடு சித்தேயன்றிச் சடம் அன்று. அவ்வாறே சித்தை யறிவதும் சித்தன்றிச் சடம் அன்று. இவ்வாறு, `வேத முடிபுகள்` எனப்படுகின்ற உபநிடதங்கள் யாவும் கூறுகின்றன.

குறிப்புரை :

இந்த முறைமையால், `பிறப்பதும், இறப்பதும் உயிரன்று; உடம்பே உயிருக்கு உடம்பு பற்றுக்கோடன்று, சிவமே பற்றுக்கோடு - இனிச் சிவத்தை அறிவதும் உயிரேயன்றி, உடம்பன்று` என்பவற்றை உணர்த்தி, `உதயமான அறிவைக் கொண்டு இவற்றை யெல்லாம் இவ்வாறு அறிதல் வேண்டு` என்பது உணர்த்தியவாறு. `இட்டு`, அசை நிலை.
இதனால், `மெய்யறிவாவது இது` என்பது கூறப்பட்டது. (இம் மந்திரத்தின் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``ஆயு மலரின்`` என்னும் மந்திரம் முன் தந்திரத்து முதல் அதிகாரத்து இறுதியில் சொல்லப்பட்டது.)

பண் :

பாடல் எண் : 5

மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து
முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்
பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்
பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.

பொழிப்புரை :

`உலகத்தில் பலராய்க் குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய வேண்டும்` என்கின்ற சூழ்ச்சியைத் திருவுளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற சிவனை யான் `சிவன்` என்று அறிந்துகொண்டு போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து, `அப்பா` நீ மிகப் பெரியை` என்று கூறினான்.

குறிப்புரை :

மன்னுதல், இங்குப் பலராதல் எனவே, அவர் உலக மக்கள் ஆயினர். மாயம், `சூழ்ச்சி` என்னும் பொருட்டு, `மாயத்தின் கண்` என உருபு விரித்து. `சில முன்னி நின்றானை` என ஒருசொல் வருவித்து முடிக்க. `அருள் மாயம்` வினைத்தொகை. போற்றுதல், ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருள்``* வந்தான் என்றும், ``பிறவா முதல்வன் பிறந்து``* வந்தான் என்றும் இன்னோரன்னவாகச் சொல்லித் துதித்தல். ``பொன்`` என்று, `நிதி போல வந்து` என்றது. `இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாற்போல வந்து` என்றதாம். ``வந்து`` என்பதை `வா` எனத் திரித்துக்கொள்க. ஆனோர் - நாட்டோர்; உண்மையறிந்து வந்து மாணாக்கர் ஆயினோர். நட்டோரை `ஆனவர்` எனவும், பகைவரை `ஆகாதவர்` எனவும் கூறுதல் உலக வழக்கு. ``அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராகக் கொளல்``8 எனக் கூறிய செயற்கரிய செயலைச் செயதமை பற்றி, `நீ ஏனையோரினும் வேறாய பெரியை` எனப் பாராட்டினார் என்பதாம். `குரு ஏனை மக்கள் போலவேயிருப்பினும் அவரை, மக்களுள் ஒருவராக அறியாது, தம்மை ஆட்கொள்ள வந்த சிவனாகவே அறிதல், பக்குவிகட்கன்றி, அபக்குவி -கட்கு இயலாது` என்பதை உமாபதி தேவர்.
``அருளா வகையால் அருள்புரிய வந்த
பொருள் ஆர் அறிவார் புவி``
என்றும்,
``பார்வையென மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம்
போர்வையெனக் காணா புவி`` l
என்றும் கூறினார். இதனால், `நாயனார் தம் குருவாகிய நந்தி பெருமானை நந்தி கணத் தலைவராக மட்டும் காணாது, சிவ பெருமானாகவே `கண்டிருந்தார்` என்பதும், `அது பற்றி இவரது சிறப்பை உணர்ந்து, அவரும் இவரைச் சிறப்பாகப்பாராட்டினார்` என்பதும் விளங்கும்.
இதனால், `அறிவை உதிப்பித்த குரு சிவமேயாவர்` என்பது உணர்த்தும் முகத்தால், `உண்மையறிவு சிவனால் அல்லது, பிறர் ஒருவராலும் தரப்படாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அறிவறி வாக அறிந்தன்பு செய்மின்
அறிவறி வாக அறியும்அவ் வண்ணம்
அறிவறி வாக அணிமாதி சித்தி
அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.

பொழிப்புரை :

மெய்யறிவு வேண்டுவீர், உமது வேட்கை நிரம்ப வேண்டுமாயின் நீவிர் சிவனையே பொருளாக உணர்ந்து அவனிடம் அன்புசெய்யுங்கள் (பிறரைப் பொருளாக அறியும் அறிவுகள் எல்லாம் போலியறிவே.) யான் சிவனை உணர்ந்து பயன் பெற்றேன். (``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``) இவ்வாற்றால் உமது அறிவு உண்மை மெய்யறிவாயின், அதனைச் சிவனும் அறிந்து, பயன் தருவான். அதனால் அத்தகைய அறிவால் நிலையான வீடுபேறே யன்றி, இடையில் அணிமாதி சித்திகளும் தாமே வந்து வாய்க்கும்.

குறிப்புரை :

``அறிவு அறிவாக`` என வந்த நான்கிற்கும், `அறிவு மெய்யான அறிவாக` என்பதே பொருள். சொற்பொருட் பின்வரு நிலையணி. நந்தி சிவன். அது, ``அறிந்து`` என்பதனோடும் இயையும். ``நந்தியை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. ஈற்றடியை முதலடியின் பின்னர்க் கூட்டுக. ``அறியும்`` என்பதற்கும் வினைமுதல் ``நந்தி`` என்பதே அவ்விடத்து அறிதல், பயன் தருதலாகிய தன் காரியம் உணர்த்தி நின்றது. இரண்டாம் அடியில் `ஆக` என்பது `ஆனபின்` என்னும் பொருளதாயும், மூன்றாம் அடியில், ``ஆக`` என்பது, ``ஆதலால்`` எனக் காரணப் பொருட்டாயும் நின்றன. ``அணிமாதி சித்திக்கு`` `ஆம்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
இதனால், `மெய்ப்பொருளை அறியும் அறிவே மெய்யறிவு. எனப் பொதுவாகச் சொல்லப்படினும், சிவனை மெய்ப்பொருளாக அறியும் அறிவே உண்மை மெய்யறிவாம்` என்பது கூறப்பட்டது. ``பொருள் அல்லவற்றை பொருள் என்று உணர்தலை, மருள்`` 3 3திருக்குறள் - 351. என்றார் திருவள்ளுவர்.

பண் :

பாடல் எண் : 7

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை அழகிய வாறே.

பொழிப்புரை :

உலகினர், `எமக்கு அறிவு வேண்டும், அறிவு வேண்டும்` என்று கூப்பாடு போடுகின்றனர். `ஆயினும், அங்ஙனம் கூப்பாடு போட்டுப் பெற்ற அறிவு அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார், அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாதிருக்கின்ற அந்த அறியாமை நீங்கி, அறிவு அறிவாகுமானால், முன்பு `அறிவு` என்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுகு வெளிப்பட நகைப்பு உண்டாகும்.

குறிப்புரை :

`தன்னை உடையார் ஒருவருக்கும் தான் காணப் படாது, அறிவுபோலவே தோன்றுதலும், தான் நீங்கிய பின் விளங்கி நிற்கும் அறிவைக் கொண்டே தான் அனுமித்துணரப்படுதலுமே அறியாமையின் இயல்பு` என்பது உணர்த்தியவாறு. ``அறிதோறறி யாமை கண்டற்றால்`` என்னும் திருக்குறளை8 நோக்குக.
``சுடரால் இருள்தேடச் சொல்லார்கள் எந்தாய்!
சுடரால் இருள்தேடச் சொன்னாய்`` *
என்றதும் இஃதே பற்றி. ``அறிவுபோல் அடரந்தெழும் அறியாமையின் வலியால்``* எனச் சிவஞான யோகிகளும் கூறினார். இத் தன்மையதான அறியாமையைச் செய்வது ஆணவ மலமே. அது பற்றி உமாபதிதேவர்.
``ஒருபொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``
எனவும்,
``பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்குண் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``*
எனவும் கூறினார்.
அழகிதல்லாததை, `அழகிது` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``அழகியவாறே`` என்பதன்பின் `தோன்றும்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், முன்மந்திரத்தில் கூறியபடி, `அறிவு அறிவாக அறிந்து அன்பு செய்ய அறிவு உதயம் ஆவதற்குத் தடையாய் உள்ளது, பெரும்பான்மையோரால் நம்ப இயலாத ஆணவ மலம்` என்பது உணர்த்தும் முகத்தால், `அது பரிபாகம் ஆதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அறிவறி யாமையை நீவி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது
அறிவாய வற்றினுள் தானாய் அறிவின்
செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.

பொழிப்புரை :

அறிவு அறியாமையாய் இருந்த நிலையினின்றும் நீங்கி, அறிவேயாய் நிற்கப் பெற்றவனே, புற இந்திரியம் முதலிய கருவிகளில் அவையேதானாய் ஒன்றி, அவற்றின் அளவாய் நின்ற ஏகதேச நிலை நீங்கி, எங்கும் தானாம் வியாபக நிலையைப் பெறுவான். அந்நிலையைப் பெற்றபொழுதுதான். சடமேயாயினும் சித்துப் போலத்தோன்றிய கரணங்களில் அறிவாய் உள்ளவனும், அவற்றால் சீவனாய் இருந்தவனும் தானே ஆதல் அவனுக்கு விளங்கும்.

குறிப்புரை :

நீவுதல் - துடைத்தல். அறிவின் வினையை அதனை உடையான்மேல் ஏற்றி, `நீவியவன்` என்றார். ``பொறி`` என்றது உபலக்கணம். ``எங்கும் தானானபோது`` என்ற அனுவாதத்தால், எங்கும் தானானமை தானே பெறப்பட்டது. `அறிவாய` என்னும் அஃறிணைப் பன்மைப்பெயர், சாரியையும் உருபும் பெற்று, `அறிவாயவற்றினுள்` என வந்தது. `அறிவாய` என்றது, `அறிவுடையனபோலத் தோன்றியன` என்னும் பொருட்டு. செறிவு - மிகுதி. உம்மையை ``நின்றவன்`` என்பத -னோடும் கூட்டுக. ``ஆம்`` என்றது, `ஆதல் விளங்கும்` என்றவாறு.
இதனால், அறியாமை நீக்கத்தின் இன்றியமையாமை அதன் பயன் கூறும் முகத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து)
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து)
அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.

பொழிப்புரை :

மெய்யறிவை அடைந்தோரது உள்ளங்கள் அனைத்துலகங்களையும் உட்கொள்ளவல்லன; செய்தற்கரிய சரியை கிரியா யோகங்களில் பழகிப் பழுத்தன. அதனால், முதற்கடவுளாகிய சிவபிரானும் அவரது உள்ளங்களையே தானாகச் செய்து, அவற்றின் கண் நீங்காமலும் நிற்கின்றான்.

குறிப்புரை :

``ஆவது`` இரண்டும் துவ்வீறுபெற்ற தொழிற் பெயர்கள். அவை ஆகுபெயராய், அவற்றையுடைய உள்ளங்களைக் குறித்தன. `நெஞ்சொடு` என்பதன்பின் `ஒன்றாகி` என்பது வருவிக்க. ``நெஞ்சு`` என்பது பொதுப்பட அந்தக் கரணங்களைக் குறித்தன. அதனானே இனம் பற்றிப் புறக் கரணங்களும் கொள்ளப்படும். ஈற்றில் `அறிவுடையார் நெஞ்சம்` என்றது, `அது` (அதன்கண்) என்றும் சுட்டுப் பெயரளவாய் நின்றது.
இதனால், மெய்யறிவு பெற்றோரது கரணங்கள் நம்மனோரது கரணம்போலப் பசுகரணமாகாது, பதிகரணமாதல் கூறப்பட்டது.
``பாலை நெய்தல் பாடியதும், பாம்பொழியப் பாடியதும் காலனைஅன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்``
-திருக்களிற்றுப்படியார் - 2.
என்னும் சாத்திர மொழியை இங்கு ஒப்பு நோக்கி யுணர்க.

பண் :

பாடல் எண் : 10

மாயனு மாகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுத லானவன்
சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும்
பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.

பொழிப்புரை :

உடம்பும், உலகமும் ஆகிய இவற்றின் அடிநிலைப் பொருளாகிய மாயைக்குத் தலைவனாய் உள்ள சிவன், உயிர்களின் பெத்த காலத்தில், `அயன், மால், அரன்` என மூவராய் நின்று அவைகளை முத்தொழிலில் அகப்படுத்தி, அவைகளால் அணுகுதற்கு அரியனாய்ச் சேய்மையில் நின்றவன், முத்தி காலத்தில் அம்மூவர்க்கும் மேலாய மூர்த்தியாய் வெளிப்பட்டு அருகில் விளங்கி கரும்பு போலவும், அமுதம் போலவும் இனிப்பவன் ஆகின்றான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. உலகத்தை ``நன்னாடு`` என்றார். ``காய நன்னாடு`` உம்மைத் தொகை. கரு - முதற் காரணம். முதல் - முதல்வன் தலைவன். சேயவன் - சேயவனாய் நின்றவன்` என இறந்த காலத்து வந்தது. ``ஆய்`` என்பது ``அணியன்`` என்பதனோடும் இயையும். ``கரும்பாய்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `பெத்தம், முத்தி` என்பன ஆற்றலால் கொள்ளக்கிடந்தன.
இதனால், முன் மந்திரத்தில், ``அறிவுடையார் நெஞ்சத்து ஆகி நின்றான்`` எனக் கூறியதன் மேல், `அவன் அங்ஙனம் ஆகி நின்று செய்வது இது` என்பது கூறப்பட்டது. இஃது இனிது விளங்குதற் பொருட்டு இதன் மறுதலை நிலையையும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 11

என்னை யறிகிலேன் இத்தனை காலமும்
என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து)
என்னையிட் டென்னை உசாவுகின் றேனே.

பொழிப்புரை :

இவ்வளவு காலமும் யான் என்னையறியாமல், என்னின் வேறாகிய பொருள்களையே யானாக எண்ணியிருந்தேன். (அதனால் அவற்றில் அழுந்தி, அவையேயாய் இருந்தேன்.) நந்தி பெருமானது அருளால் என்னை யான் அவற்றின் வேறான பொருளாக அறிந்தபின் அந்தநிலை சிறிதும் இல்லை. மேலும் யான் யானாகிய நிலையை நழுவ விடாமல் உறுதியாகப்பற்றி, என்னையே ஏதுவாகப் பற்றி, எனது இயல்பை யான் நன்கு ஆராய்ந்து வருகின்றேன்.

குறிப்புரை :

மாணாக்கன் நிலைமை இதுவாய் இருத்தல் பற்றி நாயனார் தமது நிலையையும் அதுவாகக் கூறினார். அவன் அந்நிலையினின்று தாழாமல் நிலைத்து, மேல் ஏறுதற்பொருட்டு. `நந்திபெருமான் அருளால்` என்பது, மேலெல்லாம் நாயனார் கூறிவந்தவாற்றால் கொள்ளக் கிடந்தது.
இதனால், `குருவருளால் அறிவு உதயமானபின் அதனை வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனற்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின் றேனே.

பொழிப்புரை :

நம் கையில் உள்ளது உடம்பாகிய ஒரு விளக்கு, அது நிலையற்றது; சிறிதுபோதுநின்று மறைந்து விடும் என்பது நம் போன்றவர்களை விட்டு அது மறைந்தமையால் அறிந்தேன். மேலும் இது முடைநாற்றம் வீசுவதாயும், பசி, நோய் முதலியவற்றால் வருத்துவதாயும் உள்ளது. இனித் திருவருளாகிய மற்றொரு விளக்கு மிகச் சேய்மையில் உள்ளதாகப் பெரியோர்கள் சொல்வதால் அறிகின்றேன். அந்த விளக்கு எப்பொழுதுமே நம்மை விட்டு நீங்காமல் ஒளிவீசிக் கொண்டே யிருக்குமாம். மேலும் அது தூய்மையானதாயும், தனி ஓர் இன்பத்தைத் தருவதாயும் இருக்குமாம். அதனை அடையத்தான் நான் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

குறிப்புரை :

இதுவும் முன் மந்திரம்போலவே மாணாக்கனது நிலை நோக்கிக் கூறியதாம். `நீயும் இந்த விளக்கைவிட்டு, அந்த விளக்கைத் தேடி அடை` என்பது குறிப்பெச்சம். ``காய விளக்கது`` என்பதை முதலில் கூட்டுக. இதில் உள்ள `அது`, பகுதிப்பொருள் விகுதி. மாயம் - நிலையாமை. உடம்பு மாயையின் காரியம் ஆதலாலும், ஆணவம் இருள்போல்வதாக, மாயை விளக்குப் போல்வது ஆதலாலும் ``காய விளக்கு`` என்றும், திருவருள் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்து வருதலின் அதனையும் ``விளக்கு`` என்றும் கூறினார். தூய்மையையும், கனற்றுதலையும் கூறவே அவற்றின் மறுதலைகள் பெறப்பட்டன. கனற்றுதல் - வெதுப்புதல்; துன்பந் தருதல்.
இதனால், `உதயமான அறிவால் ஆன்மரூபத்தின் வழி தத்துவ தரிசனத்தைச் செய்து, திருவருளை நாடவேண்டும், என்பது கூறப்பட்டது. `திருவருளே ஞானக்கண்` - என்க.

பண் :

பாடல் எண் : 13

தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி
பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

பொழிப்புரை :

`நன்றேயுடையனாயும், தீதேயில்லாதவனாயும் உள்ள சிவனது அருளே எல்லாவற்றினும் மேலான துணையாம்` என்று துணிந்து அதனையே பெற விரும்புகின்றேன். விரும்பி அதனை எல்லாத் திசைகளிலும் சென்று தேடுகின்றேன். அதனைத் துதிக்கின்றேன். இவ் வகையில் யான் அதனை நினைவளவில் பெற்றுவிட்டேன்.

குறிப்புரை :

`இனி அதனை அனுபவமாகப் பெறுவேன்` என்பதாம். ஆகவே, நீயும் நாடியும், தேடியும், பாடியும் நின்றால், அதனை அனுபவமாகப் பெறுவாய்` என்பது குறிப்பு. இறந்த காலத்தில் நிகழ்ந்த -வற்றை மாணவன் பொருட்டு நிகழ்காலத்தில் நிகழ்வதாகக் கூறினார்.

`நலமே உடையான் அடியே பரம் துணையாம் என நாடுகின்றேன்; திசை எட்டோ டிரண்டிலும் தேடுகின்றேன்; பாடுகின்றேன்; குறையா மனத்தாலே கூடுகின்றேன்` எனக் கூட்டி முடிக்க. சிவனது அருளை, `அவன் அடி` என்றல் மரபு. இதனால், `அறிவு உதயமாகி, ஆன்மரூபத்தாலும், ஆன்ம தரிசனத்தாலும் தத்துவ தரிசனம் தத்துவ சுத்திகளைச் செய்தபின் சிவதரிசனத்தைப் பெற முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறவியே.

பொழிப்புரை :

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய்8 உள்ள முதல்வனாகிய சிவபெருமானது விளை -யாடலால் முதற்கண் இயல்பாய் உள்ள ஒரு மலமாகிய ஆணவமும், அது பற்றிப் பின் வந்து பெருகிய மலங்களாகிய மாயை கன்மங்களும் அவை வந்தவழியே ஒருவன் போகச் செய்து, அநாதியே அடியவ னாகிய தன்னையும், தனக்கு அநாதியே தலைவனாய் உள்ள அப்பெருமானையும் உணர்ந்து, பாசங்களை விட்டு அவனது திருவடியை அடைந்து அவனே ஆயினால், பின்பு அவனுக்குப் பிறவிகள் வாரா.

குறிப்புரை :

`ஆடல்`, `ஆட்டம்` என வருதல் போல, `விளையாடல்` என்பது `விளையாட்டம்` என வந்து, அத்துச் சாரியை பெற்றது. `விளையாட்டத்தில்` என ஏழாவது விரிக்க. ஐந்தொழில் இறைவனுக்கு விளையாட்டுப் போல்வதாதல் பற்றி அவற்றை அவனது விளையாட்டம்` என்றார். `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``மலம்`` என்பது ``ஓர்`` என்பதனோடும் சென்று இயைந்தது. `பெருகு` என்பது கடைக்குறைந்து நின்றது. மாயையும், கன்மமும் முறையே விரிதலும், தொடர்தலும் உடைமைபற்றி, ``பெருகு மலம்`` எனப்பட்டன. மலங்கள் வந்தவாறு, உயிர்களின் அபக்குவம். `அது நீங்கினால், அது வழியாக வந்த மலங்களும் நீங்கும்` என்பார், ``வந்தவா பேர்த்திட்டு`` என்றார். `ஆறு` என்பது கடைக் குறைந்து நின்றது ``பண்டை`` என்பது, ``தன்னை`` என்பதனோடும் இயையும் `தலைவனாவான் சிவனே`` என்றற்கு, ``சிவமாக`` என்றாரேனும், `அவனாக` என்றலே கருத்து.
இதனால், அறிவு உதயத்தின் பயன்கள் முறையானே தொகுத்துணர்த்தப்பட்டன

பண் :

பாடல் எண் : 1

வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும்
நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும்
ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :

அந்தங்கள், அவையாவன சமயநூல்களின் முடிவுகள் ஆறு. அவை, `வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்` - என்பன.

குறிப்புரை :

`இவை இன்ன` என்பதனை நாயனார் பின்னர் அருளிச் செய்வார்.
இதனால் ஞானம் பற்றிச் சமய நூல்கள் கொண்டுள்ள முடிவுகள் ஆறு வகையில் அடங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு)
அந்தமொ டாதி அறியஒண் ணாதே.

பொழிப்புரை :

(ஒரு பொருளை உடன்பாட்டினும், எதிர் மறையினும் ஆய்ந்து உணர்பவரே உண்மை உணர்பவர் ஆதலால்), மேற்கூறிய ஆறு அந்தங்களையும் அறிந்தவரே அறிவர் ஆவர். அவற்றை அறியாதவர் அறிவர் ஆகார்.

குறிப்புரை :

அதி சுத்தர் - மிகத் தூயர்; மலம் முழுதும் நீங்கப் பெற்றவர். அந்தம் ஆதிகள், ஞானத்தின் முடிவும், முதலும். செய்யுள் பற்றி அந்தம் முன் வந்தது. ``அறிய`` என்னும் செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது.
இதனால், ஆறந்தங்களை உணர்தலின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம்
ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு
தேனார் பராபரம் சேரச் சிவோகமாய்
ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.

பொழிப்புரை :

பிறிதொரு நூலால் அன்றித் தன்னாலேதான் பிரமாண மாகின்ற வேதத்தின் முடிவுதான் எக்காலத்தும் சிவாகமங் களின் முடிவு. அவ்விரண்டிலும் கூறப்படுவது, நின்மலாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளுள் சிவனின் நீங்கி நில்லாத துரியாவத்தையில் ஆன்மா, தன்னை முதற்கண் உள்ளவாறுணர்ந்து, தேன்போல இனிக் -கின்ற பரம்பொருளை அடைதற்கு வழியாகிய சிவோகம் பாவனையில் நின்று, அதனானே அனாதிதொட்டு நீங்காது பற்றி வருகின்ற மலம் முற்றும் நீங்கப்பெற்று, பெறுதற்கரிய பேற்றைப் பெறுதலேயாம்.

குறிப்புரை :

``தான்`` இரண்டில் முதற்கண்ணதில், `தானே` என்னும் ஏகாரம் தொகுக்கப்பட்டது. ஓடு, எண்ணிடைச் சொல். பின்னது தேற்றப் பொருளில் வந்த இடைச்சொல். `முடிந்த முடிபு` எனப் பொருள் தருவ தாகிய `சித்தாந்தம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவாகமாந்தத்திற்கே காரண இடுகுறிப் பெயராய் வழங்குகின்றது. எனவே, மேல் இவ்வதிகாரத் தொடக்கத்தில் கூறிய `சித்தாந்தம்` என்பதும் இதுவே யாதல் அறிக.
இனி, `வேதாந்தம்` என்பதும் காரணப் பெயராய் உப நிடதங்களையும், காரண இடுகுறிப் பெயராய்ப் பிரமசூத்திரத்தையும் குறிக்கும். எனினும் சித்தாந்த சைவத்தில் எங்கும் `வேதாந்தம்` என்பது உபநிடதங்களையன்றிப் பிரமசூத்திரத்தையன்று. `பிரமசூத்திரம் ஏகான்ம வாதநூல்` - என்பதே சித்தாந்த சைவத்தின் முடிவு என்பதைச் சர்வான்ம சம்பு சிவாசாரியார் செய்த சித்தாந்தப் பிரகாசிகையாலும் சிவஞான மாபாடியத்தில் சிறப்புப் பாயிரத்து, `சைவாகமப் பிராமணியம்` கூறும் பகுதியாலும், அவையடக்கத்தில் `ஏகான்ம வாதம்` கூறும் பகுதியாலும் அறிக.
`வேதாந்தமே சித்தாந்தம்` - என்பதைப் பின்னரும் நாயனார் விளக்குதல் காண்க. ``அச்சிவோகம்`` என்ற அகரச்சுட்டு. வேதாகமங் களில் சொல்லப்படுதலைச் சுட்டிற்று. இறுதியில், `இவற்றின் முடிவு` என்பது இசையெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `வேதாந்தமும், சித்தாந்தமும் முடிவால் வேறல்ல` என்பது கூறப்பட்டது. `அங்ஙனமாயின் இரண்டாகக் கூறுவானேன்` என்னும் வினாவிற்கு விடை, பின்வரும் ``வேதமோடாகமம்`` என்னும் மந்திரத்திற் காணலாம்.

பண் :

பாடல் எண் : 4

நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம்
சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச்
சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து)
அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.

பொழிப்புரை :

`பரனே யன்றிச் சீவனும் அவன் போலவே என்றும் உள்ள அனாதி நித்தப்பொருள்` என்னும் கொள்கையை முதலிற் கொண்டு, (சீவன் அனாதியே பந்தப்பட்டு நிற்றலாம்), அது சுத்த மாயை, அசுத்தமாயை இரண்டும் பின்னர் வந்து பற்றாதவாறு விலகுதற்குரிய வழியை அறிந்து, அவ்வழியால் பந்தத்தினின்றும் நீங்கி, தந்தையாகிய சிவனை அடைதலே `சித்தாந்தம்` என்னும் தத்துவமாகும்.

குறிப்புரை :

`வேதாந்தம்` என்னும் தத்துவமும் அதுதான் என்பது. முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அமைந்தது. `பரனோடு உயிர் நித்தம் ஆதலை உற்று` என்க. ``சத்த முதல் ஐந்து`` என்பது ஆகுபெயராய் அவற்றை அறியும் செவி முதலிய ஐந்து பொறிகளை குறித்தது. இதனானே உபலக்கணத்தால் அனைத்துக் கருவிகளும் கொள்ளப் படும். ``தத்துவம்`` என்றது, `கருவி` என்றவாறு. `மாயை தொடரா வகை` என்றது. `பிறவி தொடரா வகை` என்றதாம்.
இதனால், `சக சீவ பரங்களில் முதல் இரண்டும் நித்தப் பொருள்களே` என்பதே சித்தாந்தம் எனக்கூறி, இக்கொள்கையே வேதாந்தம்` என்றமையால், `பரம் ஒன்றே நித்தம்` என்பது வேதாந்தம் ஆகாமையும் கூறப்பட்டது. எனவே ஆறந்தங்களுள் இங்கு சித்தாந்தம் கூறப்பட்டதாம், வேதாந்தம் இதன்கண் அடங்கிற்று.
சகம் - பிரபஞ்சம். காரியப் பிரபஞ்சம் அநித்தம் ஆதலின், முதலிரண்டு மட்டுமே இங்கு `நித்தம்` எனக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மேவும் பிரமனே விண்டு உருத்திரன்
மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால்
மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று)
ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.

பொழிப்புரை :

பஞ்ச கலைகட்கு அதிதேவராகப் பொருந்துபவருள் பிரமனது அதிகாரத்திற்கு உட்பட்டது. நிவிர்த்தி கலை. இது `பிருதிவி` என்னும் தத்துவத்தைத் தன்னுட் கொண்டது. இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது பிரதிட்டா கலை. இஃது அப்பு முதல் பிரகிருதி முடிவாக உள்ள இருபத்து மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இதற்கு அதிதேவன் மாயோன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது வித்தியா கலை. இது வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னுட்கொண்டது. இதற்கு அதிதேவன் உருத்திரன். இதற்கு மேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப்பது சாந்தி கலை. இது சிவதத்துவங்களில் கீழ் உள்ள சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் மகேசுரன். இதற்குமேல் இதனை உள்ளடக்கிப் பரந்திருப் -பது சாந்தி யதீத கலை. இது சிவதத்துவங்களுள் எஞ்சி நின்ற, `சத்தி, சிவம்` என்னும் இரண்டு தத்துவங்களைத் தன்னுட் கொண்டது. இதற்கு அதிதேவன் சதாசிவன். இங்குக் கூறிவந்த தத்துவங்களில் இறுதியாக எல்லாவற்றிற்கும் மேலே உள்ளனவாகச் சொல்லப்பட்ட `சத்தி, சிவம்` - என்னும் தத்துவங்களே `விந்து, நாதம்` என்றும் சொல்லப்படும். ஆகவே, இவைகளையும் கடந்தால்தான் முப்பத்தாறு தத்துவங் -களையும் கடந்தததாகும். அவ்வாறு கடந்தபொழுதுதான் கருவி கரணங்களின் வேறாய், `ஆன்மா` என ஒன்று உளதாதல் விளங்கும்.

குறிப்புரை :

பஞ்ச கலைகளைப் பற்றி அறிய வேண்டுவன பல உள. அவையெல்லாம் சிவஞானமாபாடியம், பிராசாத யோக நூல்கள் முதலியவற்றில் சொல்லப்பட்டுள்ளன. அவையனைத்தையும் இங்குக் கூறுதல் கூடாமையின் அவைகளுள் தலையாய அதிதேவர்களை மட்டுமே கூறி, அவர்வழியாக அக்கலைகளையும், அவைகளில் அடங்கி நிற்பனவற்றையும் உணர வைத்தார். ஆகவே, பிரமன் முதலிய ஐந்தும் ஆகுபெயர்களாய், அவரால் செயற்படுத்தப்படும் கலை, தத்துவம் முதலியவற்றைக் குறித்தன. `விந்துவும், நாதமும் மிக்கு அப்பால் மேவும் எனக்கூட்டுக. இதனை எடுத்துக் கூறியது `இவை கடத்தற்கு அரியன` என்பதும், ``கடந்த இடமே நாதாந்தம்` என்பதும் விளங்குதற்பொருட்டு. `பிரமன்` முதலியன செவ்வெண். இறுதியில், `இவர்களில்` என்பது வருவிக்க.
இதனால், ஆறந்தங்களுள் நாதாந்தம் கூறப்பட்டதாம். தத்துவங்களைக் கொள்ளாதொழியினும் நாதத்தைப் பொதுப்பட உணர்ந்து `அதன் அந்தத்தை அடைதலே முடிநிலை` என்பவர் பாசுபதர் முதலிய சில புறச்சமயிகள்.

பண் :

பாடல் எண் : 6

உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத்
தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல்
உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல்
எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியவாறு, தத்துவம் முப்பத் தாறனையும் கடந்த நிலையில் `தான்` என ஒரு பொருள் அவற்றின் வேறாய் உளதாதலை உணர்ந்த ஆன்மா, தனக்கு உபாதியாய் (குற்றமாய்)ச் சேர்ந்த அவற்றினது சடத்தன்மையையும், தனது சித்துத் தன்மையையும் தெள்ளியவாக ஆராய்ந்து, அதனானே, அவற்றி -னின்றும் அறவே நீங்கி, அவ்விடத்தில் உள்ள தன்னை மறைக்கின்ற ஆணவ இருளும் சிவனது அருளால் நீங்க, அவனது உணர்வாகிய சிவஞானத்தோடு கூடி, அதுவாகி நிற்குமாயின், அவ்விடத்தில், `போதம்` எனப்படுகின்ற ஞானம் உண்டாகும்.

குறிப்புரை :

ஆறாறு - ஆறாறன் தொகுதி. ``நாதாந்தம்`` இரண்டனுள் முன்னது அவ்விடத்து விளங்கும் ஆன்ம அறிவைக் குறித்தது. ``மேல் உள்ள`` என்றது, `மாயைக்கு மேல் உள்ள` என்றபடி. இருள் அருளாலன்றி நீங்காமை வெளிப்படை. ஓர் உணர்வு - தன்னோடு ஒப்பது வேறொன்றிலாத உணர்வு; சிவனது உணர்வு. உயிர் நாதாந்தத்தை அடைந்தமை முன்பே கூறப்பட்டமையால், ஈற்றில், ``நாதாந்தத்து`` என்றது, `அவ்விடத்து` என்னும் சுட்டளவாய் நின்றது. இங்கு, ``போதம் எய்திடும்`` என்றதனால், `போதம்` எனப்படுவது சிவபோதமே என்பது விளங்கும். விளங்கவே, போதாந்தமாவது, ஆன்மா, தான் சிவஞானத்தில் முற்றி நிற்கும் நிலையே போதாந்தம் என்பது போந்தது.
தத்துவம் முப்பத்தாறனையும் கடந்தவழி இருமாயை களையும் கடந்ததாம். மாயைகள் ஆணவத்தைப் போக்கவே இறைவனால் கூட்டப்பட்டன. ஆதலின், `அவை நீங்கியவிடத்து ஆணவம் நிற்றல் இயல்பு` என்பது பற்றி, ``நாதாந்தத்தைச் சென்று மேல் உள்ள இருள்`` என்றும்,
``ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்;
ஒன்று மேலிடின் ஒன்று
ஒளிக்கும்; எனினும் இருள் அடராது``*
என ஓதியபடி, நாதாந்தத்ததில் ஆணவமே யன்றிச் சிவமும் உளதாக, பக்குவம் இல்லாத பொழுது மேலிடுகின்ற ஆணவம், பக்குவம் வந்த பொழுது மேலிடமாட்டாதிருக்கச் சிவமே மேலிடும் ஆதலின் ``இருள் நீங்க`` என்றும், சிவம் மேலிட்ட வழி ஆன்மா அதனைப் பற்றுதற்குத் தடை இன்மையால், ``ஓர் உணர்வு ஆகுமேல்`` என்றும் கூறினார்.
இதனால், `போதமாவது இது` எனவும், அதனை அடையு -மாறும் கூறும் முகத்தால், ஆறந்தங்களுள் போதாந்தம் கூறப்பட்டது. `போதாந்தமே முடிநிலை` என்பவர் பாடாண வாத சைவர் முதலிய அகச் சமயிகள். இவர்களை, `பூர்வ சைவர்` - என்பர் சிவாக்கிர யோகிகள்.

பண் :

பாடல் எண் : 7

தேடும் இயம நியமாதி சென்றகன்(று)
ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன்
பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக்
கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.

பொழிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களையும் மேற்கொள்ளப் புகுந்து, அவ்வாறே படிமுறையால் மேல் ஏறி, முடிவான `சமாதி` என்னும் நிலையை எய்திச் சிவனுக்கு அணுக்கமாகி நிற்கச் சீவன் சிவனாய்விடும். அந்நிலையில் உலகத்தாக்கம் ஒழிய ஓர் அமைதி நிலை தோன்றும். அதுவே உயிர் பெறத்தக்க பேறு - என்னும் இதுவே யோக நூலின் முடிவான கொள்கை.

குறிப்புரை :

இயமம், நியமம் முதலிய எட்டுறுப்புக்களின் இயல்பை மூன்றாம் தந்திரத்தில் காண்க. `இயமத்தில் தொடங்கி முறையே வளர்ந்து ஏழாவது உறுப்பாகிய தியானத்தை அடைதலே ஞானத்தின் முடிநிலை` என்பதும், `அதன்பின் சமாதியை அடைதலே ஞானத்தின் பயன்` என்பதும், `அதனை அடைந்தோர் உடம்பு நீங்கிய பின் பரம் பொருளோடு ஒன்றாகி விடுவர்` என்பதும் யோகநூற்கொள்கை என்றபடி. `உடம்பு நீங்குதலின்ற, என்றும் நிலைத்திருக்கப் பெறுதலே முத்தி` என்னும் கொள்கையும் உண்டு.
ஊடுதல் - உட்புகுதல். `ஊடுறும்` என்பது குறைந்து நின்றது என்றலும் ஆம். `சிவனுக்கு அணியராதல் சமாதியின் தொடக்கநிலை` என்க. `உபசாந்தம் கூடும்` எனமாற்றியுரைக்க.
இதனால், ஆறந்தங்களுள் யோகாந்தம் கூறப்பட்டது. இக்கொள்கையுடையோர் யோகமதத்தினர். இவர் முதல் ஆசிரியர் பெயர்பற்றி, `பாதஞ்சலர்` எனவும் கூறப்படுவர்.

பண் :

பாடல் எண் : 8

கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில்
விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு)
உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும்
தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.

பொழிப்புரை :

`ஆறந்தம்` எனப்படுகின்ற கொள்கைகளில் ஒன்றான, `கலாந்தமாவது யாது` என அறிந்து கொள்ளப்புகின், உயிர் பாசங்களினின்றும் நீங்குதற்கண் துணையாய் உள்ள நிவிர்த்தி முதலிய சத்திகட்கு இடமாய் நிவிர்த்தி முதலிய கலைகளும், மற்றும் பிராசாத மந்திரத்தின் மேதா முதலிய கலைகளும் சுத்த மாயையிலே தோன்றிச் சுத்த மாயையிலே ஒடுங்குமாற்றை ஆராய்ந்து தெளிதலே கலாந்தமாம்.

குறிப்புரை :

நிவிர்த்தி முதலிய சத்திகளாவன, `நிவிர்த்தி, பிர திட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் ஐந்துமாம். இச்சத்தி களுக்கு இடமாகின்ற சுத்த மாய விருத்திப் பகுதிகளும் இச்சத்திகளின் பெயர்களையே உடையன. `உலகம் ஆறு அத்துவா மயமானது` எனக்கூறுமிடத்து, ஏனை ஐந்து அத்துவாக்களும் கலாத்துவாவிலே அடங்கும். அதனால் அத்துவ சுத்தி, `கலாசுத்தி` என்றும், `கலா சோதனை` என்றும் சொல்லப்படும். இந்தச் சுத்தி, அல்லது சோதனையே நிருவாண தீக்கையாதலின் `தீக்கையே முத்தியாம்` எனக் கூறும் ஒருசார் சைவர்கள் `கலாந்தத்தில் பஞ்ச கலாந்தம்` என்பர்.
இனிப் பிராசாத கலைகள் மூன்றாம் தந்திரத்து. `கலை நிலை` என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டன. `அவைகளை முன்னர் ஆராய்ச்சியால் உணர்ந்து பின்னர் அனுபவத்திற்காணுதலே முடி நிலை` என்பவர் `கலாந்தத்தில் பிராசாத கலாந்தர்` என்க. இவரை யோக சைவர்` அஃதாவது, `பிராசாத யோகமே முத்தியைப் பயக்கும் - எனக் கூறும் சைவர் என்பதாம். இவரும் ஐக்கிய வாத சைவர் போல ஆணவ மலத்தை உணராதவர் ஆதலின், அவரோடு ஒப்பர் என்க.
ஈசானம் முதலிய பஞ்சப் பிரம மந்திர சத்திகளாகிய ஈசானி முதலிய ஐந்தும், அவைகளில் முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும், எட்டும் - ஆக முப்பத்தெட்டாய் நிற்கும் சத்திகளும் `கலை` எனப்படுதலால், அவற்றைத் தெளிதலும் கலாந்தமாம் என்பாரும் உளர். அவை மந்திர கலைகளாய் நாதாந்தத்தில் அடங்குத -லாலும், நாயனார் அவ்வாறு ஓதாமையாலும் அவைகளை இங்குக் கொள்ளல் வேண்டா என்க. ``ஆதிக்கு`` என்பது கண்ணுருபின் பொருளில் வந்து உருபு மயக்கம். `ஆம்` என்பதனை, `ஒடுங்கலும்` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, தோன்றுதலைத் தழுவிய எச்சவும்மை.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் கூறப்பட்டது. அஃது இருவகைத் தாதலும் உடன் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று)
ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு)
அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம்
தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் கூறப்பட்ட கலாந்தம் ஒழுக்கம் பற்றியது. இனி), நூல் அறிவு பற்றி நோக்குங்கால் உள்ள கலாந்தம் வேறு ஐந்தாகும். அவை, `மந்திர கலாந்தம், தந்திர கலாந்தம், தெளிவுக் கலாந்தம், ஞான கலாந்தம். உபதேச கலாந்தம்` என்பன. அவையும் ஞானப் பகுதிகளேயாம். அவை ஆராய்ச்சியில் வேட்கை உடையவர்கட்கு ஆவனவாம்.

குறிப்புரை :

`அவை இன்ன` என்பது வருகின்ற மந்திரத்தால் பெறப்படும். அவன் அளியன் ஆகிய - சிவன் அருள் மிக்கவனால் அளித்தருளிய (கலைகள்).

பண் :

பாடல் எண் : 10

ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

பொழிப்புரை :

அநாதியே உள்ளவனால் செய்யப்பட்டமையின், `அநாதி நூல்` எனப்படுகின்ற ஆகமங்களையும், வேதங்களையும் ஓதி, ஐயம் திரிபு அற உணர்தல் மந்திரகலாந்தம். ஏனைப் பாசுபதம் முதலிய தந்திரங்களை அவ்வாறு உணர்தல் தந்திர கலாந்தம். அவ்வாறு உணரப் பட்ட அந்நூல்களில் கண்டவாறு ஒழுகும் ஒழுக்கத்தில் மேம்படுதல் தெளிவுக் கலாந்தம். திருவைந்தெழுத்தைத் தத்தமக்கு உரியமுறையில் மனம் முதலிய அந்தக் கரணங்களால் அன்றி, அறிவால் சுத்தமான -தாகப் பெரிய அளவில் கணித்தல் ஞான கலாந்தம். குரு உபதேசத்தை நன்கு சிந்தித்துத் தெரிந்தபின் நிட்டையில் நிற்றல் உபதேச கலாந்தமாம்.

குறிப்புரை :

உபதேசகலை மட்டிலே, `குரு உபதேசம்` எனக் கூறினமை பற்றி, `ஏனைய கலைகள் குரு இன்றியும் உணரப்படும்` எனக்கொள்ளலாகாது. ஏனெனில், `உபதேசம்` என்றது ஞானோப -தேசத்தையேயாகலின், அவ்விடத்து, `குரு` எனப்பட்டோரும் ஞான குருவே. ஞான குருவைக் கூறியது ஏனைக் குருமாரை விலக்கிய -தாகாது. பிறரெல்லாம் வித்தியா குரவரும், கிரியா குரவரும் ஆவர் என்க.
`அனாதி ஆகும் கலை` என மாறிக் கூட்டுக. ஆகும் அத்தந்திரம் - வேதாகமங்கட்குப் பின்னிலையினவாகிய அந்தத் தந்திரங்கள் ஆகும். மனாதி - மந்திரங்களைக் கணித்தற்குக் கருவி யாகும் மனம் முதலியன. உடல் - கருவி. ஈற்றில் உள்ள `ஆகும்` என்பதை வேதம் முதலிய எல்லாவற்றோடும் கூட்டுக.
இவ்விரண்டு மந்திரங்களாலும் கலாந்தம் வேறுவகையால் அமைதல் கூறப்பட்டது. மந்திர கலாந்தம் கொண்டவர் தருக்க மதத்தவர். தந்திர கலாந்தம் கொண்டவர் அகப்புறச் சமயிகள். தெளிவுக் கலாந்தம் கொண்டவர் பௌராணிகர். ஞான கலாந்தம் கொண்டவர் அகச்சமயிகளில் ஒருசாரார். உபதேச கலாந்தம் கொண்டவரே சித்தாந்த சைவர்.

பண் :

பாடல் எண் : 11

தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை
ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப்
பேசா உரையுணர் வற்ற பெருந்தகை
வாசா மகோசர மாநந்தி தானே.

பொழிப்புரை :

ஞான கலாந்தத்தில் சிவம் வெளிப்படும். (என்றாலும் அதன்கண் அன்பு செய்து அழுந்துதல் உபதேச கலாந் தத்தில் உண்டாகும்). தெளிவுக் கலாந்தம் இறைநெறி ஒழுக்கத்தையும், இறையன்பையும் வலுப்படுத்தும். (என்றாலும் அவற்றை அஃது அறிவியல் முறையில் உணர்த்தாது. அவ்வாறு உணர்த்துவது உபதேச கலாந்தமே). வாய் வாளாமைபெற்று, பிறபொருள் உணர்வும், தன்னுணர்வும் அற்ற பெருந்தகையோன் வாக்கு மனங்களைக் கடந்த பரம சிவன் ஆவான்.

குறிப்புரை :

தன் ஞானம் - சிவ ஞானம். `அதனை உணர்த்தும் கலை` என்க. அக்கலைகள் பலவும் திருவைந்தெழுத்தில் அடங்கும், ``கலை, கலாந்தத்து`` என்பவற்றில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆசார நேயம்`, உம்மைத் தொகை. அறைதல் - வலியுறுத்தல். அறையும் - அறையப்படும். `பேசாது` என்பது ஈறு குறைந்துநின்றது. உரை, சொல்லப்படுவது. உணர்வு - சொல்லவாராது உணர்வு மாத்திரையாய் நிற்பது, பெருந்தகை, ஆகுபெயர். இவ்வொருமை சாதி யொருமை. நந்தி - சிவன், மாநந்தி - பரமசிவன். ``மாநந்திதானே`` எனத் தேற்றேகாரத்தால் `வேற்றுமையில்லை` என வலியுறுத்தியது. அத்தன்மை குறைவின்றி நிரம்புதல் பற்றி இங்ஙனம் வலியுறுத் -ததனானே, `அவன் பொருளால் வேறே` என்பது பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய ஐந்து கலாந்தங்களுள் உபதேச கலாந்தத்தின் சிறப்புக் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

தானது வாகும் சமாதி தலைப்படில்
ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும்
ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும்
ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.

பொழிப்புரை :

(வேதாந்தம் சித்தாந்தத்துள் அடங்க ஆறந்தங்கள் ஐந்தந்தங்களாகும்). `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்னும் மூன்று பொருள்கள் உள்ளன எனக் கூறுவதில் எந்த அந்தமும் வேறுபட வில்லை. (`ஞானம் ஒன்றே உள்ளது; ஏனையவை இல்லை` - எனக் கூறும் ஏகான்மவாதம் வேதாந்தம் அன்று - என்பது மேலேகூறப் பட்டது), இவற்றுள் ஞாதுருவாகிய ஆன்மாவும், அதன் ஞானமும் சமாதிநிலையில் ஞேயத்திலன்றிப் பிறவற்றிற் செல்லாமையால், ஞாதுருவாகிய ஆன்மாவும் சிவமேயாய்நிற்கும்.

குறிப்புரை :

`அந்நிலை உபதேச கலாந்தமாகிய சித்தாந்தத்திலல்லது இல்லை` என்பது கருத்து. ஞானம் - அறிவு ஞேயம் - அறியப்படும் பொருள். ஞாதுரு - அறிபவன். இவை முறையே `காட்சி, காணப்படு பொருள், காண்பான்` எனவும் கூறப்படும். இவை `திரிபுடி` எனப்படும். `மூன்று பொருள் இல்லை; ஞானம் ஒன்றே உள்ளது` என ஏகான்மவாதம் கூறும். `மூன்று பொருள்கள் உள்ளன. ஆயினும் உணர்பவனது உணர்வில் அம்மூன்றும் மாறி மாறித் தோன்றும் நிலை சிவானுபவ நிலையாகாது. அவனது உணர்வில் ஞேயமாகிய சிவம் ஒன்றுமே தோன்றும் நிலையே சிவானுபவ நிலை. அதுவே பரமுத்தி` என்பது சித்தாந்தம். இவற்றுள் ஏகான்ம வாதக் கொள்கையை மறுத்துச் சித்தாந்தக் கொள்கையை வினா வெண்பா, பின்வருமாறு நயம்பட வலியுறுத்துகின்றது.
``காண்பானும், காட்டுவதும், காண்பதுவும் நீத்துண்மை
காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``l
இம்மந்திரத்தில் ``சமாதி`` என்றது பாவனையளவாக நிகழும் யோகசமாதியன்று. ஞானசமாதி. இதுவே திருக்களிற்றுப்படியாரில் கூறப்பட்டது.
(இதனாலும் மேற்கூறிய கருத்தே வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.3

பண் :

பாடல் எண் : 13

ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே
ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
கூறிய ஞானக் குறிஉடன் வீடவே
தேறிய மோனம் சிவானந்த உண்மையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களிலும், `ஞாதுரு ஞானத்துடன் சென்று, ஞேயத்தில் அடங்குதலைத்தான் முடிநிலையாகக் கூறுகின்றன. ஆகவே, ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தில் சென்று அடங்குதல்தான் ஆறந்தங்களின் குறிக்கோளும். ஆயினும், `ஞேயத்தில் அடங்குதல் மட்டுமன்றி, அவ்விடத்தில் எல்லையில்லாததோர் இன்பநுகர்ச்சியில் ஞாதுரு மூழ்கியிருத்தலே உண்மைப்பேறு` எனக் கூறுகின்ற சித்தாந் -தமே ஏனை அந்தங்களினும் வடித்தெடுத்த மோன நிலையாகும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் வைத்து, `ஆறந்தமும், ஞாதுரு, ஞானக்குறி உடன்வீட, ஞேயம் அடங்கிடும்; (ஆகலான்) ஆறந்தமும் சென்று அஞ்ஞேயத்தே அடங்கிடும்; (ஆயினும்) சிவானந்த உண்மையே தேறிய மோனம்` எனக் கூட்டி முடிக்க.
அடங்கிடுதலைக் கூறும் அந்தங்களை, அவையே அடங்குவனவாக உபசரித்துக் கூறினார். ``அஞ்ஞேயம்`` என்னும் சுட்டு, பின்னர்க் கூறப்படும் அடங்குதல் தொழிலையை உட் கொண்டது. ``ஆறந்தம்`` இரண்டில் பின்னதிலும் உம்மை விரித்து, `ஞேயத்தின்கண்` என உருபுவிரிக்க. `ஞாதுருவும், ஞானமும் ஞேயத்தின்கண் அடங்கிவிடும் அளவே முத்தியாவது என, அவ் விடத்து, பெறுவானையும், பேற்றினையும் அழித்துச் சில அந்தங்கள் கூறும் ஆகலின், அதனை மறுத்துச் சித்தாந்தத்தை வலியுறுத்துதற்கு, ``தேறிய மோனம் சிவானந்த உண்மையே`` என்றார்.
``முத்தியிலும் மூன்று முதலும் மொழியக்கேள்;
சுத்தஅனு போகத்தைத் துய்த்தலனு; - மெத்தவே
இன்பம் கொடுத்தலிறை; இத்தைவிளை வித்தல்மலம்;
அன்புடனே கண்டுகொளப் பா``8
என்பதே சித்தாந்தம் ஆதலை யறிக.
இதனாலும், சித்தாந்தத்தின் தலைமையே ஏதுக் காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும்
உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம்
உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து)
உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.

பொழிப்புரை :

உண்மையை உணர்த்தும் கலைகள் பலவாகச் சொல்லப்படினும் அவை அனைத்தும் பன்னிரு கலைக்குள் அடங்குவனவாம். இனி, அனைத்துக் கலைகளையும் விடாது கடக்க வேண்டின், பதினாறைத்தாண்டி அப்பால் செல்லுதல் வேண்டும், `நாதந்தம்` என்பது, இவ்வாறு கூறப்படுவனவற்றின் இடையே நிற்கின்ற ஒன்று. ஆகையால், அதையே `உண்மை` என்று சொல்லின், அஃது ஏகதேசத்தையே `முற்று` எனக் கருதுவதாகவே முடியும்.

குறிப்புரை :

`ஆறு, ஒன்று, ஐந்து` என்பன அவ்வெண்களையே குறித்தன. அதனால், ஏழன் உருபு பெறாது, மூன்றன் உருபு பெற்றது. பிராசாத கலைகள் பலவாவன பஞ்ச கலை, அட்ட கலை, தச கலை, சதுர்த்த கலை முதலியன. அவைகளையெல்லாம் பிராசாத நூல்களில் காண்க. அவை அங்ஙனமாயினும் துவாதச கலையும், சோடச கலையுமே சிறப்புடையனவாகப் பயிலப்படற்குரியன என்றற்கு, ``பன்னிரண்டில் அடங்கும்`` என்றும், `பதினேழாகிய அந்தம்` என்றும் கூறினார். கலைகட்கு அடக்கம் கூறினமையால் பன்னிரண்டு என்றும் மேற்போதல் கூறினமையால், `பதினாறைக் கடந்த பதினேழ்` என்றும் கூறினார். இப்பிராசாதங்களைப் பற்றி இத்தந்திரத்திலும், மூன்றாம் தந்திரத்திலும் சிறிது விளங்கக் கூறினோம்.
``ஓர் அந்தம்`` என்றது, `ஏகதேச அந்தம்` என்றபடி.
இதனால், ஆறந்தங்களில் ஒன்றாகிய நாதாந்தத்தின் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின்
தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து
வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக்
கூவி அருளிய கோனைக் கருதுமே.

பொழிப்புரை :

தேவரையெல்லாம் தம் ஆளுகைக்கு உட்படுத்தி ஆட்சி புரிகின்ற, எங்களுடைய புகழ்மிக்க நந்திபெருமானே, நாங்கள் (`வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு வேறு` எனக் கூறிப்பிணங்குவார் பின் சென்று) கெடாதபடி எங்களை அறைகூவி அழைத்துத் திருவடி தீக்கை செய்து, `அவ்விரண்டிலும் சொல்லப்படுகின்ற உண்மை ஒன்றே என்பதையும், அவ்வுண்மையின் உயர்வையும் இனிது விளங்க உபதேசித்தருளிய ஞான குருவாவார். பசுக்களாகிய அனைத்துயிர் களையும் அடிமையாக உடைய சத்தி ஆதி சத்தியாய் நின்று ஆட்டிப் புடைக்கும் நிலையில், சிவனும் ஆதிசிவனாகவே அவளுடன் இருந்தவன், அந்நிலையை மாற்றித் தனது இயற்கை நிலையாகிய அநாதி சிவனாம் பரமசிவனாகி வந்து, அவளைத் தழுவிக்கொண்ட பின்பு, ஏனையோர்க்கும் எங்கட்கு அருளியவாறே அருளுமாறு அவன் அந்நந்தி பெருமானைத் திருவுள்ளத்தில் எண்ணுவான்.

குறிப்புரை :

`அப்பொழுது அவ்வுண்மை ஏனையோர்க்கும் இனிது விளக்கப்படும்` என்பது குறிப்பெச்சம். `பசு` என்னும் வடசொற்கு நேரிய தமிழ்ச்சொல் `ஆ` என்பதாதல் பற்றி அதனையே கூறினா ராயினும் அது `பசு`, அஃதாவது, `பாசத்தில் கட்டுண்டது` என்னும் பொருளையே தருதலின், `உடையாள்` என்றது ஆதிசத்தியை, அஃதாவது திரோதான சத்தியையேயாயிற்று. ``அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்`` என்ற இடத்திலும் `உலக வாழ்க்கையைத் தரும் அவள்` என்றது, திரோதான சத்தியையே யாதலை நினைக. `அரன்` - என்பது, `பாசங்களை அரிப்பன்` என்னும் பொருளது ஆதலின் அஃது, `அநுக்கிரகத்தைச் செய்பவன்` என்னும் பொருட்டாய்ப் பரமசிவனைக் குறித்தது. உயிர்கட்கு இருவினை யொப்பு மலபரிபாகம் வரும் பொழுதே திரோதான சத்தி அருட் சத்தியாய் மாறி ஆன்மாவிற்பற்றி, அரன் அப்பொழுதுதான்வந்து மணப்பவன் போலக் கூறினார். இது, `சத்தி நிபாதம் வந்த பின்பு` எனக் கூறியவாறேயாம். ``கோனை`` என்பது, `கோன் ஆவன்; அவனை` என இருசொல் தன்மைப்பட்டு நின்றது. ``கருதும்`` என்னும் `செய்யும்` என்முற்று, இங்கு ஆண்பால் படர்க்கையில் வந்தது. `அரன் வந்து கொண்டபின் கோனைக் கருதும்` என முடிக்க. தமக்கு அருள்புரிந்த வகையைக் குறித்து `நந்திபெருமானையே கருதுவன்` என்றா ராயினும், `அவரவருக்கு ஏற்புடையாரைக் கருதுவன்` என்றலே கருத்தாம். முதல் அடியை, ``கோனை`` என்பதன் பின்னர்க்கூட்டுக.
இதனால், `ஆறந்தங்களில் வேதாந்த சித்தாந்தங்களே மேலானவை` என்பது குருவருள் பெற்றபின் விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப
அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில்
வரும்சம யம்புறம் மாயைமா மாயை
உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.

பொழிப்புரை :

கொள்வார் கொள்ளும் வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிவன் உலகில் பலவகைச் சமய நூல்களை ஆக்கி வைத்திருக் -கின்றான். (அவை ஒன்றோடொன்று முரணுதல் போலத் தோன்றுதல், அவற்றைக் கொள்வாரது பக்குவத்திற்கு ஏற்ப அவை அமைந்ததனாலேதான். அதனால் அவற்றைக் கொள்வோர் தமக்கு விருப்பமானவற்றைக் கொண்டு அமைதல் வேண்டுமன்றிப் பிறருக்கு விருப்பமானவற்றைப் பழித்தல் கூடாது. ஏனெனில் எல்லா நூல்களும் இறைவன் அருளால் தோன்றியவையேயாகலின்) அந்நூல்களின் வழி அமைந்த சமயங்களில் சில, `புறம்` எனப்படும். மாயை, மகாமாயை இவற்றைக் கொண்டுள்ள சமயங்கள் அகச்சமயங்களாம். அவற்றையும் கடந்து நிற்பன வேதாந்த சித்தாந்தத் தத்துவங்கள்.

குறிப்புரை :

`ஆகமங்களில் சிவாகமங்களே சித்தாந்தம், என்றல், அவை முற்றறிவுடைய சிவனால் செய்யப்பட்டமையாலேயாம். எந்தச் செயலும் சிவன் தான் நேரே செய்யவும், பிறரைக் கொண்டு செய்விக்கவும் நிகழ்வதேயன்றி, அவை தாமாக நிகழ்வன அல்ல ஆகலின், சமய நூல்கள் பலவும் காரணக் குறிபற்றிச் சிவாகமமேயாம்.
``துணை நன்மலர் தூய்த்தொழும் தொண்டர்காள், சொல்லீர்;
பணைமென்முலைப் பார்ப்பதி யோடுட னாகி
இணையில் இரும் பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில்சமண் சாக்கியம் ஆக்கிய வாறே``*
என்று அருளிச்செய்ததும் இப்பொருட்டே. இன்னும்,
``விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்``
என்றதும் கொள்பவரது பக்குவ வேறுபாடுகளை நோக்கியதேயாம்.
`உயிர்கள் பக்குவம் எய்தியபொழுதே இறைவன் குருவாகி வருவான்` என்பதை, ``அரும்பருவம் அடைதலுமே ஆசானாகித் தோன்றி``l என முன்னர்க்கூறிய சிவஞானசித்தி, பின்னர், `அவ்வரும் பருவம் எப்பொழுது வரும் என வினாவுவார்க்கு,
``புறச்சமய நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்
புகல்மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள் அவையடைந்தும், அருந்தவங்கள்புரிந்தும்
அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணநூல் படித்தும்,
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால், சைவத்
திறத்தடைவர்``8
எனப் பின்னர்க் கூறிற்று. இதனால் அனைத்துச் சமயநூல்களையும் அவற்றைக் கொள்வாரது பக்குவத்தை நோக்கின் வேண்டத்தக்கனவே யாதல் அறிக.
`சாருவாகம் முதல் எல்லாச்சமயமும் பரமசிவனால் செய்யப் பட்டமையின் பிரமாணமேயாயினும் ... ... சோபான முறையான் உபதேசித்தருளியது - என மாறுபாடின்மை உணர்ந்து கொள்ளப் படும்`` (கிறப்புப்பாயிரம் - `சைவாகமப்பிராமணியம்` எனச்சிவஞான மாபாடியத்தில் உரைக்கப்பட்டமையும் காண்க.
பக்குவம் நோக்கிச் செய்யப்பட்டமையால், `உலகம் மாயை மகாமாயைகளினின்று பரமசிவனால் தோற்றி ஒடுக்கப்படும்` என்பதை உணரமாட்டாதார்க்கு அது சொல்லப்படவில்லை அதனால், சாருவாகர், (உலகாயதர்) `பூதம் நான்கே; அவை கூடுதலும் பிரிதலும் இயற்கை. கூடுவதால், உலகமும், உடம்புகளும் தோன்றும்; பிரிவதால் அழியும். நான்கு பூதங்களும் கூடியபொழுது அறிவும் தோன்றும்; பிரியும்பொழுது அறிவும் அழியும்; ஆயினும், உடம்பு உள்ளவரையில் உலகில் நீதி கடைப்பிடிக்கப்படவேண்டும்; இல்லையேல் வாழ்வு நல்வாழ்வாக அமையாது` என்பர். ஆயினும் நீதியைக் கடைபிடிக்காத பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
சமணரும், பௌத்தரும், `உலகம் தானே தோன்றியழியும்` என்பர். அவருள் சமணர், `அறம் - என்பது ஒன்று உண்டு, அதன் வழியிலேதான் உலகம் நடைபெற்று வருகின்றது` - என்பர். ஆகவே, அறத்தைக் கடைப்பிபிடிக்காது வழுவி விடும் பொழுது அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்;
பௌத்தர், `மனிதர் பரதுக்க துக்கராய் வாழவேண்டும்; அஃதாவது, பிறர்க்காயினும், பிறஉயிருக்காயினும் துன்பம்வரின், அத்துன்பத்தைத் தமக்கு வந்த துன்பமாகக் கருதி அத்துன்பத்தைக் களையவும், துன்பம் வராமல் காக்கவும் வேண்டும்; இதுவே தவம். இத்தவத்தால் ஞானம் பிறக்கும்; ஞானத்தால் வீடு உளதாம்` என்பர். எனவே, இத்தவத்தினின்றும் வழுவும்பொழுது அவர்கள்தங்கள் மதத்தை அவர்கள் கைவிட்டவராகின்றனர்.
இவரெல்லாம் வேதசிவாகமங்களை இகழ்தலால் புறத்திலும் புறப்புறச்சமயிகள் ஆகின்றனர். வைதிகருள் மீமாஞ்சகரும், சாங்கியரும் நிரீச்சுரவாதிகள். அவருள் மீமாஞ்சகர், ஈசுரன் இல்லாவிடினும் இருப்பதாக வைத்து வேதத்தில் சொல்லப்படுகின்ற வேள்வி முதலிய கருமங்களைச் செய்தல் வேண்டும்; செய்தால் அந்தக் கருமங்களே பயனைக்கொடுக்கும். கருமங்களை விட்டவன் வழியை விட்டுக் குழியில் வீழ்ந்தவன் ஆவான்; அவனுக்கு உய்தியில்லை என்பர். எனவே, அவர் கருமங்களின் வழுவும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆவர்.
சாங்கியர், `உலகமே மயக்கத்தைத் தருவது, சாங்கிய நூலின் வழியே தத்துவ ஆராய்ச்சியில் முதிர்ந்து நிற்றல் வேண்டும். அவ்வாறு நின்றால் மயக்கம் நீங்கும்` என்பர். ஆகவே, அவர் தத்துவ ஆராய்ச்சி செய்யாது, வாழ்க்கை நடத்தப் புகும்பொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர்.
நியாய வைசேடிகர்களும், `ஈசுரன் ஒருவன் உண்டு` எனக் கூறினாராயினும், உய்யும் வழி கூறுவதில் சாங்கியரை ஒத்திருக் கின்றனர்.
யோக மதத்தினர், `யோகத்தின் எட்டுறுப்புக்களாகிய இயமம், நியமம் முதலியவற்றை முற்றாகக் கடைப்பிடிக்க வேண்டும்` என்பர். முற்றாகக் கடைப்பிடித்தோர் எவரும் இலர்.
ஏகான்மவாதிகள், `உலகம் கனவு போன்றதே; என்றாலும், அதைக்கனவாகக் கண்டு கழித்து, பரமார்த்தத்தின் விழிக்கின்ற வரையில் உலகில் உள்ள எல்லா நீதி அநீதிகளையும் உணர்ந்து, தீவழி நீக்கி, நல்வழியில் ஒழுகவேண்டும்` என்பர். எனவே, அவர் அவ்வாறு ஒழுகாதபொழுது தங்கள் மதத்தைக் கைவிட்டவர் ஆகின்றனர்.
`பாஞ்சராத்திரம்` எனப்படுகின்ற வைணவ மதத்தினர், பெரும்பான்மையும் சைவரோடு ஒத்திருப்பினும் சைவத்தின் உயிர்க் கொள்கையாகிய, `பிறப்பு இறப்பு உடையன எல்லாம் உயிர்களே; எக்காரணத்தாலும் அவையில்லாதவனே கடவுள்` என்பதை மறுத்து, `உயிர்களின் பொருட்டுக் கடவுள் பிறந்தும் வருகின்றான்` என்பர். பிறப்பாவது அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சார்யுசம் என்னும் நால்வகை யோனிகளுள் எந்த ஒன்றிலேனும் கருவாய் இருந்து தோன்றி, வளர்ந்து, சிலகாலம் வாழ்ந்து மறைதலாம். இதனை `அவதாரம்` என்றல் உபசாரமே. உண்மையில் அவதார மாவது, கடவுள் எவையேனும் சில காரியங்களை முன்னிட்டு யாதானும் ஓர் உருவில் தோன்றிச் சில நொடிகளில் அக்காரியத்தை முடித்து மறைவதேயாகும். பிறப்பு எய்திய வர்களையே இவர்கள் கடவுளாகக் கூறினாலும், `அவர்களையும், கடவுளையும் வழிபட்டு உய்யவேண்டும்` என்பர். மேலும், `அற நெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும், அறநெறிக்கு எதிரான மறநெறியில் ஒழுகுதல் கடவுளுக்கு விருப்பத்தையும் தரும் ஆதலின் அற நெறியிலே ஒழுகவேண்டும்` என்றும் கூறுவர். இக் கொள்கை சைவத்திலும் உள்ளதே. `உலகிற்கு அறநெறியை அருளியவன் கடவுளே` எனக் கொள்வதால் அறநெறியில் ஒழுகுவதும் கடவுள் வழி பாட்டின் ஒரு பகுதியேயாகின்றது. எனவே, வைணவரும், சைவரும் அறநெறியையும், இறைவழிபாட்டினையும் விடுவாராயின் தங்கள் மதத்தைக் கைவிட்டவராவர். மீமாஞ்சகர் முதல் பாஞ்சாரத்திரம் முடிய உள்ள மதத்தினர் வேதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் வேத சாரமாகிய சைவாகமங்களை ஏற்றுக்கொள்ளாமல் இகழ்தலால் இவர்களுடைய சமயங்கள் `புறச்சமயங்கள்` எனப்படுகின்றன.
இனிப் பாசுபதம் முதலிய தாந்திரிகர்கள், இறையுண்மை கொண்டபோதிலும் வேதத்திற்கு மாறான ஒழுக்கங்களை `நல்லொழுக்கம்` எனக்கொள்ளுதலாலும், `ஆன்றோர் யாவரும் வேத ஒழுக்கமே நல்லொழுக்கம்; அவற்றிற்கு மாறானவை தீயொழுக்கம்` எனக்கொண்டமையாலும் இவர்களது சமயங்கள் `அகப்புறச் சமயங்கள்` எனக்கூறப்படுகின்றன. சிவாகமங்களை இவர்கள் முழுமையாகக் கொள்ளாவிடினும் ஓரளவு தழுவுவர். அதனால் இவர்களது சமயம் அறவே, `புறச்சமயம்` எனப்படவில்லை.
புறப்புறச் சமயிகள் `மாயை` என்றை ஒன்றைக் கொள்வதே யில்லை. அதிலிருந்து அவர்களுடைய தத்துவங்கள் எவ்வளவு முரண் பட்டவை என்பது விளங்கும். புறச்சமயிகள் வைதிகர்களாயினும் மாயையை மட்டும் கொண்டு, மகாமாயையைக் கொள்வதில்லை. அதனால் அவர்களுடைய தத்துவங்களும் நிறைவுடையன ஆகாமை விளங்கும்.
இவைகளையெல்லாம் நோக்கும்பொழுது சமயவாதிகளது பக்குவநிலை விளங்கும். விளங்கவே இறைவன் எல்லாரிடத்தும் ஒப்பவே கருணையுடையவன் ஆகையால், சமயநூலை ஒன்றாகச் செய்யாது பலவாகச் செய்தும், செய்வித்தும் உள்ளான் என்பதை இம்மந்திரம் விளக்குகின்றது.
`ஆகமம்` எனத் தொகையால் ஒன்றாகிப் பின் வகை விரிகளால் பலவாதல் பற்றில் ``தன்னில்`` என ஒருமையால் கூறப்பட்டது. ``புறம்`` என்பதில் முக்கூற்றுப் புறங்களும் அடங்கின. `வரும் சமயமே புறமும்` என ஏகாரமும், உம்மையும் விரிக்க. `அதனால் அவை இகழற்பால அல்ல` என்பதாம். உருவிய உண்மை `வேதாந்த சித்தாந்த உண்மை` என்க. ``உருவிய`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பன்மை வினைப்பெயர்.
இதனால், `ஆறந்தங்களில் மேற்பட்டவை வேதாந்தமும், சித்தாந்தமும்` என்பது பரந்த நோக்கத்தில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை
போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம்
நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும்
மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.

பொழிப்புரை :

ஆறந்தங்களில் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் ஒன்றே எனத்தெளிவான அடையாளங்களைப் பெற்றுள்ளன. `போதந்தம்` என்பது உயிர் அஞ்ஞானம் நீங்கி, ஞானத்தைப் பெறும் நிலையாகும். `யோகாந்தம்` என்பது, பொதுப்பட ஒரு பொருளைக் குறியாகக்கொண்டு அதனையே நோக்கிநிற்பது. நாதாந்தம் திரு வருளைத் தலைப்பட்டு, அதனாலே சிவானந்தம் தோன்றப் பெறுவது. இவற்றிற்கு மேலாக முதலிற்கூறிய வேதாந்த சித்தாந்தங்களே முடிந்த அடையாளமாகிய பேசாநிலையைப் பெற்றுச் சிவானந்தத்தில் திளைத்திருக்கலாகும்.

குறிப்புரை :

`சீராக உதயம் ஆதல் ஆகும்` என்க.
இதனால், ஆறந்தங்களுள் கலாந்தம் ஒழிந்த ஏனை ஐந்து அந்தங்களின் பயன் கூறப்பட்டன. கலாந்தத்தின் பயன் மேற்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல்
நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம்
மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம்
போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.

பொழிப்புரை :

வேதாந்தத்தில் சொல்லப்படுவது, `பிரகிருதியும் அதன் காரியமுமாகிய ஏழுவகைக் குற்றங்களினின்றும் நீங்க வேண்டும்` என்பதே. அவை 1. பூதங்கள், 2. ஞானேந்திரியங்கள், 3. அவற்றின் விடயங்கள், 4. கன்மேந்திரியங்கள், 5. அவற்றின் விடயங்கள், 6. அந்தக் கரணங்கள் என்பனவும், எல்லாவற்றிற்கும் மூலமாகிய 7. பிரகிருதியும் ஆகியவையாம்.
வேதாந்தத்திற்கு மேலேயுள்ள கலாந்தமாகச் சொல்லப் படுவது பிரோக காண்டம் ஆதல் பற்றிக்காரண தத்துவங்களாகச் சொல்லப்படுகின்ற சுத்த தத்துவங்களால் செலுத்தப்படுகின்ற வித்தியா தத்துவங்கள் ஏழும் நீங்குதலாம். இத்தத்துவங்கள் தடத்த சிவனால் செலுத்தப்படுதல் பற்றி, `பரோபாதி` என்றும் சொல்லப்படும்.
நாதாந்தமாகச் சொல்லப்படுவது, உயிர் உபாதிகள் அனைத்தும் நீங்கி நிற்கின்ற நிலையாம். `தத்துவமசி` மகா வாக்கியத் -தில் ஆன்மாவைக் குறிப்பதாகிய `துவம்` பதம் இந்நிலையில் நின்ற ஆன்மாவையே குறிப்பதாம்.
போதாந்தமாகச் சொல்லப்படுவது, உபாதிகளின் நீங்கிய ஆன்மா மல வாசனையால் `யான், எனது` எனநிற்கின்ற நிலையை விடுத்துச் சிவமாகும் நிலையாம் `தத்துவமசி` மகாவாக்கியத்தில் `ஆசி` பதம் ஆன்மா இவ்வாறாகும் நிலையையே குறிப்பதாம். `தத்` பதம் சிவத்தைக் குறிக்கும்.

குறிப்புரை :

``மேல்`` என்றது பிரகிருதியைக் குறித்தது. இரண்டாவதாகக் கூறப்படவேண்டிய மீதாந்தம், வேறுபொருள் படாமைப் பொருட்டு மூன்றாவதாகக் கூறப்பட்டது. ``விடு`` என்பது முதனிலைத் தொழிற்பெயர். இதனை காரணோபாதியோடும் கூட்டுக. காரணோபாதி காரணங்களால் வரும் உபாதி. `தற்பதத்துப் போம் அசி` என்க.``தற்பதம்`` என்பதில் `தத்` என்பது அதன் பொருளைக் குறித்து நின்றது. போதல் புகுதல். `போதலையே அசி` என்றமையால், ``போம் அசி`` என்பதில் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம்.
இதனால் ஆறந்தங்களுடன் மேற்கூறப்பட்ட ஐந்தில் உள்ள பாச நீக்க முறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி
பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே
கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.

பொழிப்புரை :

`உலகங்கள் அனைத்தையும் கடந்தாலும் அவற்றிற்கு அப்பாலும் ஒருபேரொளி உள்ளது` என வேதாகமங்கள் கூறுகின்றன. அந்தப் பேரொளிக்குள்ளே உள்ள ஓர் ஒளிதான் எங்கள் சிவபெருமான். அவன் அந்தப்பேரொளியைத் தனக்கு இயல்பாய் உள்ள மேலான ஆற்றலாக உடையவன். எனினும் அந்த ஆற்றலை ஆட்சி செய்கின்ற ஒருவனாகவும் அவன் அதற்குள் இருக்கின்றான்.

குறிப்புரை :

அண்டம், இங்கு `உலகம்` என்னும் பொருட்டாய் நின்றது. `உலகங்கள் ஏழு` என்னும் மரபு பற்றி, `ஏழு` எனப்பட்டது. ``கடந்தகன்று`` என்பது ஒருபொருட்பன்மொழி. ``அப்பாலும்`` என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம் இதனால் அண்டங்களுக் -குள்ளேயும் அந்த ஒளி இருத்தல் பெறப்பட்டது. ``என்ற`` என்னும் அனுவாதத்தால், என்றலும் பெறப்பட்டது. ``உள ஒளி`` என்பது குறிப்பு வினைப்பெயரெச்சத் தொடர். ``பண்டு`` என்றது `அனாதி` என்றபடி. `ஆற்றல் யாவும் பொருளைப்பற்றியே நிற்கும் ஆதலால், இந்த ஆற்றலுக்குப்பற்றுக்கோடாய் உள்ளவனே எங்கள் பெருமான்` என்றார். `அன்றி நின்றான்` என்றது, `அந்த ஆற்றலாகிய குணத்திற்கு வேறாய், அதனையுடைய குணியாய் நிற்கின்றான்` என்றதாம்.
`பரம்பொருள் அறிவு மட்டுமான குணமேயன்றி, அறிவையுடைய குணியன்று` என்பர் ஏகான்மவாதிகள். `அது சித்தாந்தம் அன்று` என்பதை இம்மந்திரத்தால் கூறினார்.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``8
என்றார் உமாபதி தேவர். சிவன் வெறும் சத்தியன்று; `சத்தியையுடைய சத்திமான்` என்க. எந்த ஒரு சத்தியும் தன்னையுடைய பொருள் இன்றித் தனியேயிராது.
``... ... ... ... ... சத்திதான் சத்தனுக்கோர்
சத்தியாம்; சத்தன்வேண்டிற் றெல்லாமாம் சத்தி தானே``l
என்ற சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், ஆறந்தங்களுள் மேலானதாய சித்தாந்தத்தின் சிறப்புப்பொருள் ஒன்று எடுத்துக்கூறப்பட்டது.
``அண்டம் ஆரிருள் ஊடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``3
என்னும் அப்பர் திருமொழியை இங்கு நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 20

கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத்
தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே
பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப
ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.

பொழிப்புரை :

சிவன் தனது சத்தியாலே உயிர்கட்கு அறிவிக்கும் முறையை உணர்ந்து, அந்த வழியிலே குரு உபதேசித்த பணிகளைச் செய் வதாலும், மற்றும் மந்திரங்களைச் சமர்ப்பித்து வழிபாடு செய்வதாலும் பாசங்கள் யாவும் நீங்கும். பின்பு என்றுமே உயிர்க் -குயிராய் நீங்கா -திருக்கின்ற சிவன் ஒருவனே உயிரினிடத்து உள்ள பொருளாவான்.

குறிப்புரை :

கோ - யாவர்க்கும் தலைவன்; சிவன். அவன் முன்னர்த் திரோதான சத்தியால் உலகத்தையே உணர்த்துவான். பின்பு அருட் சத்தியால் உலகத்தை மறைத்துத் தன்னை - உணர்த்துவான். அதுவே சத்திநிபாதமாம். அதுதான் மந்ததரம் - மந்தம் முதலாகப் பல வகைப் படுதலின் அதற்கேற்ப குரு முன்னர் `சரியை, கிரியை, யோகம்` என்ப வற்றை உணர்த்தி, முடிவிலே ஞானத்தை உணர்த்துவார். அவற்றுள், ``கருமச் செய்தி`` என்பது சரியையும், ``அற்சனை`` என்பது கிரியா யோகங்களையும் குறித்தன. யோகமும் அருவத் திருமேனி அருச் சனையே. ``செய்ய, பார்ப்ப`` என்பன வினையிடத்து வந்த செவ்வெண். தே - சிவனேயான குரு. பா - பாட்டாயினும் மந்திரமே. ``அற்சனை பாட்டேயாகும்``* என்றது காண்க. படைத்தல் - சமர்ப்பித்தல். பாரித்தல் - மிகுதியாகச் செய்தல். ``ஓ`` என்னும் முதனிலையே. `ஓவும்` என முற்றுப்பொருள் தந்தது. `அனைத்தும்` என்னும் முற்றும்மை தொகுத்த -லாயிற்று. `ஒழியாத ஒருவனே உண்டு` என மாற்றியுரைக்க.
இதனால், `ஞானத்திற்கு வழி சரியை கிரியா யோகங்கள்` என்பது சித்தாந்தம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

ஒருவனை உன்னார் உயிரினை உன்னார்
இருவினை உன்னார் இருமாயை உன்னார்
ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி
அருவனு மாகிய ஆதரத் தானே

பொழிப்புரை :

சித்தாந்தம், ``மற்றாருந்தன்னொப்பாரில்லாத`` l தலைவன் ஒருவன் இருக்கின்றான். எனக் கூறுவதையோ, `அத் தலைவனுக்கு அடிமையாய் உள்ள உயிர்கள் பல உள்ளன` எனக் கூறுவதையோ, `அவ்வுயிர்கட்கு நல்வினை; தீவினை யென்னும் இருவகை வினைகளும், சுத்த மாயை என்னும் மாயைகளும் ஆகிய கட்டுக்கள் உள்ளன` எனக் கூறுவதையோ சக்திநிபாதம் வாயாதவர் உணர வல்லவராகார். ஆகையால், எக்காலத்திலும் உயிர்களின் அறிவுக் கறிவாய் நின்று அவைகளுக்கு அறிவித்து, வினைப்பயனை நுகர்வித்து, அவற்றிற்கு அவை அறியாமலே ஆதாரமாயும் நிற்கின்ற அந்தத் தலைவனே இருவினை யொப்பு மல பரிபாகங்களின்போது அறி -வித்தால்தான் எவரும் இந்தச் சித்தாந்த உண்மைகளை உணர இயலும்.

குறிப்புரை :

வருவித்துரைத்தன குறிப்பெச்சங்கள். `சக்திநிபாதம் வாயாதோர், வாய்த்தோர்` என்பன, முன் மந்திரத்தில், ``கோவுணர்த்தும் சத்தியாலே`` என்றதனால் கொள்ளக் கிடந்தன. அருவம் - புலனாகாமை. `ஆதாரம்` என்பது குறுகி நின்றது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட பொருள் எதிர்மறை முகத்தான் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து
வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு)
உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும்
திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.

பொழிப்புரை :

சிவன்பால் அன்புள்ளவர்களை இடமாகக் கொண்டு வெளியாகின்ற ஆற்றல்கள் எல்லாம் அவர்களுடைய ஆற்றல்கள் அல்ல; மற்று, சிவனிடத்தினின்றும் வெளியாகின்ற ஆற்றல்களே அந்த ஆற்றல்களின் முன்னிலையில் எல்லாப் பொருள் களையும் சிவன் நிற்க வைத்துச் செயற்படச் செய்தலால், உயிர் நிலையாகச் சிவானந்தத்தில் மூழ்கி, அவ்வானந்தமே மயமாம் நிலையை அடையும்.

குறிப்புரை :

`ஆகிவரும் அவை, சிவத்தினின்றும் வரும் சத்திகள்` எனவும் `அவற்றின்முன் வகுத்திட்டு எனவும், மொழி மாற்றியும், வேண்டும் சொற்களை வருவித்தும் உரைக்க சிவனது சத்தி, செயலாற்றுகையில் `அதிகாரசத்தி` எனப்பெயர் பெறும். அது சிவத்தினிடம் இருந்தே செயலாற்றாது, அவனுடைய அன்பர்களிட மிருந்தும் செயலாற்றும். அந்த அதிகாரத்து பதியப் பெறுதற்குப் புண்ணியம் வேண்டும் ``புரைத்ததி காரசத்தி புண்ணியம் நண்ணலாலே``l என்றது காண்க. செயல்கள் தாம் பலவாகலின், அவற்றிற்கு ஏற்ப அதிகார சத்திகளும் பலவாம். `இவை செயல் நோக்கியல்லது பொருள் நோக்கியல்ல` என்பதை,
``சத்திதான் பலவோ என்னில், தான்ஒன்றே; அனேகமாக வைத்திடும் காரியத்தான்; மந்திரி யாதிக் கெல்லாம்
உய்த்திடும் ஒருவன் சத்திபோல்;அர னுடையதாகிப்
புத்திமுத் திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்தவாறாம்``l
என்பதனான் உணர்க.
அதிகார சக்திகள் பலவும் அவரவரது புண்ணியத்திற்குத் தக அவ்வவரிடம் பதிந்து ஏற்புடைய செயல்களைச் செய்யும் என்க. உரன் உறுதல், எல்லாவற்றையும் செய்தும் தான் நிலை திரியாது இருத்தல். ``முன்`` என்றதும், ``சந்நிதி`` என்றதும் வெறும் எதிர்முக மாத்திரை யன்று; `இஃது இவ்வாறு ஆகுக` எனச் சங்கற்பித்தலையேயாம். இத்தகைய சங்கற்ப மாத்திரையானே சிவன் எல்லாவற்றையும் செய்கின்றான் என்பதை உணர்க. சேட்டித்தல் - செயற்படுதல். ``சேட்டிப்ப`` என்னும் செயவெனெச்சம் காரணப்பொருளில் வந்தது. ``சிவாநந்தி`` என்றது சாதியொருமை. இதற்கு, `உயிர்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. `சிவத்தினின்றும் வரும் சத்திகள்` என்றதனால், `அவற்றின் முன்னாக வகுத்தவன் சிவனே` என்பது பெறப்பட்டது. ``வகுத்திட்டு`` என்னும் செய்தென் எச்சம். `ஆசிரியன் சொல்லி, மாணாக்கன் அறிந்தான்` என்பதுபோலக் காரணப் பொருட்டாய் நின்றது. `வகுத்திட்டுச் சேட்டிப்ப` என இயையும்.
இதனால், முன்மந்திரத்தில், ``ஒருவனே தலைவன்`` என்றது பற்றி, `தலைவர் பலராதலைக் கண்டும், கேட்டும் அறிகின்றோமே; அஃதென்` என்று எழும் ஐயம் தீர்க்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப
நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி
போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம்
சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.

பொழிப்புரை :

வேதாந்தப் பொருள் முழுவதையும் மிகச் சுருக்கமாகத் தொகுத்துணர்த்தும், `ஒருமொழி அல்லது `பெரும்பெயர்` எனப்படுகின்ற மகாவாக்கியங்கள் சிலவற்றுள், `தத்துமசி` என்பதே சிறந் தெடுத்துச் சொல்லப்படுவது. (இது சாமவேதவாக்கியம்) இதனுள் `தத்` என்பது பதியாகிய சிவத்தையும், `துவம்` என்பது பசுவாகிய உயிரையும், `அசி` என்பது, உயிரைச் சிவமாக்குகின்ற அருட் சத்தியையும் குறிக்கும். எனினும், `இவற்றுள் பசுவாகிய உயிர் பஞ்ச பேதங்களை யுடைய (இத்தந்திரத்து முதல் அதிகாரம்) உடலளவில் ஏகதேசமாய உள்ளதன்று; வியாபகமானதே` என்பதை வலியுறுத்தி விளக்குவதே வேதாந்தமாகும். மண்முதல் நாதம் ஈறாகச் சொல்லப் படுகின்ற உபாதி களுள் ஒன்றும் இன்றி, நின்மலமாய் நிற்பது எதுவோ அதுவே பதிப் பொருள்` என வலியுறுத்தி விளக்குவது நாதந்தமாகும் (`உயிர் இவ்வு பாதிகளை உடைமையாலே - பசு - எனப்பட்டது` என்பதும் இதனானே விளங்கும்).
இனி, துவம் பதப்பொருளாகிய உயிர் தத் பதப் பொருளாகிய சிவத்தில் சென்று `பாலோ டளாயநீர பாலாகு மலலது நீராய் நிறந்தெரிந்து தோன்றாதவாறுபோல``3 சிவமேயாய் வேறு தோன்றாது ஒன்றிவிடுதலை வலியுறுத்தி விளக்குவதே போதாந்தமாகும். (போதம் - சீவபோதம். அந்தம் - அதன் ஒடுக்கம். அஃதாவது கதிரொளியில் விளக்கொளிபோலச் சிவபோதத்தில சீவ போதம் அடங்கியிருத்தல்).
[`போதாந்தம் கூறும் நிலையை எய்தி, அவ்விடத்தில உயிர் பேரா இன்பப் பெருவெள்ளத்தில் அழுந்துதலை வலியுறுத்தி விளக்குவதே சித்தாந்தமாகும்` என்பது குறிப்பு.]
`சிவமும், சீவனும் பொருள் இரண்டாமாயின், அவை ஒன்றாதல் எங்ஙனம் கூடும்` எனின், அவ்விரண்டற்கும் இடையே உள்ள பொதுத்தன்மைதான் அவை அங்ஙனம் ஒன்றாதற்குக் காரணம் [அத்தன்மையாவது, இரண்டும் சித்தாய் இருத்தலாம். எனவே, சடத்திற்குச் சிவத்தோடு ஒன்றுதல் கூடாமை விளங்கும்].

குறிப்புரை :

பசு - பசுவின் இயல்பு; ஆகுபெயர். பசு இயல்பைக் கூறுவதை `பசு` என்றே உபசரித்தார. இவை `பதி` என்றதற்கும் ஒக்கும். `தற்பத்துப் போய்` என்க. `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலா யிற்று. `ஐக்கியம்` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சி நின்றது. ஆதலைக் கூறுவதை `ஆதல்` என்றதும், சாயுச்சம் ஆதற்குக் காரணமாவதை, `சாயுச்சியம்` என்றதும் உபசாரம். சாதாரணம் - பொதுத்தன்மை.
இதனால், மேல், ``ஒருவனையுன்னார்; உயிரினை உன்னார்`` என்பன முதலாக எதிர்மறை முகத்தாற் கூறியவற்றை நீக்கி, உடன்பாட்டு முகத்தால் உன்னுமாறு ஆறந்தங்களுள் பெறப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும்
அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும்
சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால்
நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள், `வேதாந்தம், சித்தாந்தம்` என்னும் இரண்டும், சீவன் சிவம் ஆதலைக் கூறுவதில் வேறுபட வில்லை. ஏனை, `போதாந்தம், கலாந்தம், நாதாந்தம், யோகாந்தம்` என்னும் நான்கும் ஒன்றின் ஒன்று கீழ்ப்பட்ட நிலைகளையே விளக்கி நிற்கும். வேதமும், சித்தாந்தத்தைக்கூறும் சிவாகமும், உண்மையில் `சிவம் எனப்படுகின்ற அந்தப்பொருளே, தடத்தத்தில் `சதாசிவன்` என்னும் பெயரையும், அதற்குரிய வடிவத்தையும் கொண்டு செய்த முதல்நூல் ஆகுமானால், அவற்றுக்கிடையே வேறுபாடிருத்தல் எங்ஙனம் கூடும். கூடாது. ஆகவே, வேதாந்த ஞானம், சித்தாந்த ஞானமேயாம்.

குறிப்புரை :

ஆதலைக் கூறுவனவற்றை ``ஆதல்`` என்றது உபசாரம். அவமம் - கீழ் (பரமம் ளு அவமம்). ``செய்தது`` எனவும், ``ஒன்று`` எனவும் கூறியது. `வடிவால் வேறாயினும், பொருளால் ஒன்றே` என வலியுறுத்தற்கு `வேதம் ஒருவரால் செய்யப்பட்டதன்று; தானே உள்ளது` எனக் கூறுபவர்க்கே (மீமாஞ்சகர்) வேதம் ஆகமத்தின் வேறாகும். `வேதமும் சிவனால் செய்யப்பட்டதே` என்பார்க்கு வேதமும் ஆகமந்தான் இது பற்றியே நீலகண்ட சிவாசாரியர், `வேதமும் ஆகமமே` (``வேதோபி ஆகம்`` சிவாத்துவித பாடியம் - பதியதிகரணம்) என்றார். வேதாகமங்கள் தோன்றிய வரலாற்றை முதல் தந்திர உரையிற் காண்க.
நவம் - புதுமை; முதலிலே உணரப்படுவது` என்பது கருத்து.
இதனால், மேற்கூறியவற்றுள் வேதாந்த சித்தாந்தங்களது உயர்வு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால்
சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர்
சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால்
சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.

பொழிப்புரை :

ஆறந்தங்களுள் சித்தாந்தத்தில் நிற்கும் நிலையில் தான் சீவன் முத்தி (அஃதாவது, உடம்பு உள்ளபொழுதே அதில் தொடக்கற்று, வீட்டின்பத்தில் இருக்கும்நிலை) கிடைக்கும். ஆகையால், சித்தாந்த நிலையில் நிற்பவர் உலகர்போலவே காணப் படினும், அவர் உலகருள் ஒருவராகாது, வீடுபேற்றில் இருப்பவரே ஆவார். வேதாந்தத்தின் உட்கிடையும் சித்தாந்தமேயாதலால், அவ்வுட்கிடையை உணரவல்லவர்கட்கு வேதாந்தம், சித்தாந்தம் இரண்டும் சிவனையே பரமாகக் காட்டி நிற்றல் விளங்கும்.

குறிப்புரை :

``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம்ஒன்றி லேசீவன் முத்த ராக்கி
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர்; இது என்ன பிராந்தி!`` -பக்கம் - சூ. 8 - 16.
என்னும் சிவஞான சித்தி மொழியினை இங்கு ஒப்புநோக்கியுணர்க.
இதனால், ஆறந்தங்களுள் சித்தாந்தத்தின் தலைமை அதன் பயன்கூறும் முகத்தால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும்
அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால்
நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம்
தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.

பொழிப்புரை :

சிவனை ஈசுரனிடத்திலும், சீவனிடத்திலும் வைத்துக் காட்டுவது வேதாந்தம். அதில் இருவகை உண்டு. ஒன்று பரிணாம வாதம்; மற்றொன்று ஆபாசவாதம். ஆபாசம் - போலி. விவர்த்தனம் ஆபாசத்துள் அடங்கும். விவர்த்தனம் - கயிறு பாம் பாதல் போலும் பொய்த்தோற்றம். `நிர்க்குணமாகிய பரப்பிரமமே தன் இச்சையால், சத்துவகுணனாகிய ஈசுரனாகவும், இராசத குண னாகிய சீவனும், தாமத குணத்தவாகிய அந்தக் கரணம் முதலிய கருவி களுமாய்ப் பரிணமிக்கும்` என்பது பரிணாம வாதம். `நிர்க் குணமாகிய பரப்பிரமத்திலே - இன்னது எனச்சொல்ல இயலாத - மாயை என்பது உண்டு. அது முக்குணங்களை யுடையது. மூன்றுநிறம் உடைய கண்ணாடியைப் போன்றது. அம்மூன்றுகூற்றிலும் கண்ணாடி -யில் நிழல் போலப் பரப்பிரமம் பிரதிபலிக்கும். அவற்றுள் சத்துவக் கூற்றின் பிரதி பலனம் ஈசுரனாயும், இராரசதக் கூற்றின் பிரதிபலனம் சீவனாயும், தாமதக் கூற்றின் பிரதி பலனம் அந்தக் கரணம் முதலிய கருவிகளாயும் நின்று செயற்படும்` என்பது ஆபாசவாதம். இந்த ஆபாசத்திற்கு அடிப்படை மாயையே யாகையால், ஆபாசவாதமே `மாயாவாதம்` எனப்படுகின்றது எவ்வகை யிலேனும் இந்தவேதாந்தம் `சகம், சிவன், பரம்` என்னும் முப் பொருளை உணர்த்துதலால், இதனை உணர்ந்த பின் ஆகமாந்தத்தை உணருங்கால், வேதாந்தக் கூற்று தூலாருந்ததி முறைமைத்தாதல் விளங்கும். தூலாருந்ததி முறைமை யாவது, `அருந்ததி மீன் மிக நுண்ணி தாதலின், அதனைக் காட்டுதல் அரிது` என்று கருதி முதற்கண், அதற்கு அருகில் உள்ள ஒரு பெரு மீனைச் சுட்டி, `அதுவே அருந்ததி` எனக் காட்டுதல் போன்ற முறை. முதலில் அப்பெருமீனைக் கண்டுணர்ந் தவனுக்குப் பின்பு, `அஃதன்று அருந்ததி மீன்; அதனைச் சார்ந்து மிக நுண்ணியதாய் விளங்குகின்றதனைப் பார்; அதுவே அருந்ததி மீன்` எனக்காட்டினால், அவன் அருந்ததியைக் கண்டுகொள்வான். இம் முறையில் அருந்ததி யல்லாத மீனை அணுக்கம் பற்றி `அருந்ததி` என்றல் போல்வது இங்குக் கூறிய வேதாந்தப் பொருள். அருந்ததி மீனையே சுட்டி, `அருந்ததி மீன்` எனக் காட்டுதல் போல்வது ஆகமாந்தப்பொருள். ஆகவே, தூலாருந்ததி முறைமை பற்றி நோக்கினால் இங்குக் கூறிய வேதாந்தமும் பயனில்லது ஆகா தாகலின், இந்த வேதாந்தமும் சித்தாந்தமேயாம். இவ்வாறு ஆகும் நிலைமையில் ஒருவனது ஞானம் அமையுமாயின், அந்த ஞானம் தசகாரியத்துள் ஒன்பதாம் நிலையாகிய `சிவயோகம்` எனப்படுகின்ற சீவன் சிவனாய் நிற்கும் நிலைமையைத் தரும். `சரியை, கிரியை, யோகம்` என்றும் தவங்களின் மிகுதியனாலே இத்தகைய ஞானத்தை எய்தினோரே, `தத்துவ ஞானிகள்` எனப்படுகின்றார்கள்.

குறிப்புரை :

`பரப்பிரமத்தை` என்னாது, ``சிவனை`` என்றது, `சித்தாந்தத்தில் சொல்லப்படும் சிவனே, வேதாந்தத்தில் சொல்லப் படும் பரப்பிரமம்` என்றற்கு. இச்சிவன், சொரூப சிவன் என்க. இஃதே பற்றித் தடத்த சிவனை, `வேதாந்திகள் கூறும் ஈசுரன்` என்றோ, `சகுணப் பிரமம்` என்றோ மயங்கற்க. சித்தாந்தம் கூறும் தடத்த சிவனும் நிர்க்குணனே. பரமன் - வேதாந்திகள் கூறும் பரமன்; ஈசுரன். ``நவம்`` என்றது, ஒன்பதாம் எண்ணுமுறைமையை. `உற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மிக்கு - மிகுந்ததனால். உணர்தற்கு, `இதனை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க.
இதனால், `சித்தாந்தமே வேதாந்தம்` என்னும் உண்மையை உணராதவர் வேதாந்த வாக்கியங்கட்குத் தாம் தாம் அறிந்தவாற்றால் கூறும் பொருள்களும் சித்தாந்தத்தை உணர்ந்தவர்கட்கு நேர் மாறானவை யாகாது, தூலாருந்ததி முறைமையவாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

தத்துவ மாகும் சகள அகளங்கள்
தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம்
தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம்
தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.

பொழிப்புரை :

சித்தாந்தத்தில் சொல்லப்படுகின்ற உருவம், அருவம் உருவாருவம் ஆகிய சிவவடிவங்களும், அவற்றிற்கு இடமாகின்ற விந்து, நாதம், சாதாக்கியம் ஆகிய நிலைக்களங்களும், சீவனும், அதனின் மேம்பட்ட சிவன், சத்தி, சதாசிவன் ஆகிய கருத்தாக் -களும் உண்மைகளேயன்றி, மேற்கூறிய வேதாந்தத்தில் சொல்லப் படுபவன போல, பரிணாமமோ, ஆபாசமோ அல்ல. ஆகவே, சீவன் சிவனோடு, கதிரவன் ஒளியில் விளக்கொளிபோல இரண்டறக் கலக்கும் சித்தாந்த முத்தியே உண்மை முத்தியாம்.

குறிப்புரை :

தத்துவம் - உண்மை. `தத்துவமாகும்` என்னும் பயனிலை நான்கடிகளிலும் முதற்கண்ணே நின்றது. சகளம் - உருவம். அகளம் - அருவம். இவ்விரண்டைக் கூறியதனால் சகள நிட்களமாகிய உருவாருவமும் பெறப்பட்டது. தன்பரம் - தனக்கு மேலே உள்ளவர். அவர் சதாசிவர் முதலிய கடவுளர். இவரையும், சீவர்களையும், மற்றும் இவர்களது தனு கரண புவன போகங்களையும், `கனவிற் காணப்படும் மயக்கக் காட்சிபோல வியாவகாரிக சத்தைகள்; பாரமார்த்திகத்தில் இவையெல்லாம் பொய்யாய் ஒழியும்` எனக் கூறுவர் மாயாவாதிகள். `அது பொருளன்று` என வலியுறுத்தற்கு அடிதோறும் ``தத்துவம் ஆகும்`` எனக்கூறினார்.
இதனால், மேற்கூறிய வேதாந்தப்பொருள் தூலாருந்ததி முறைமைத்தாதல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன
நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம்
பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.

பொழிப்புரை :

இதன்பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொது, உண்மையை முற்ற உணர்த்தாது, ஓரளவாக உணர்த்துவது. சிறப்பு, உண்மையை முற்ற உணர்த்துவது, உலகர் உண்மையை ஓரளவே உணர்வார்; சத்தி நிபாதரே முற்ற உணர்வார். மேலும் உண்மையை முதற்கண் ஓரளவாக உணர்ந்தே பின்பு முற்ற உணர இயலும். அது பற்றியே உலகர்க்காவும், சத்திநிபாதர்க்காகவும் முறையே வேதமும், ஆகமமும் சிவனால் செய்யப்பட்டன. எனவே இவ்வுண்மையை உணராதவர், `வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறு` என்பர். இவ்வுண்மையை உணர்ந்தவர் ஓர் உண்மைதானே பொதுவும், சிறப்புமாம் வகையில் `வேதாந்தம்` எனவும், `சித்தாந்தம்` எனவும் நிற்கின்றது என்பர் என்றபடி.
``வேதநூல், சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறும்உள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது;சைவம் அருஞ்சிறப்பு நூலாம்; நீதியினால் உலகர்க்கும் சத்தநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
-சுபக்கம் சூத். 8 - 15.
என்றது சிவஞானசித்தி.

இதனால், ஆறந்தங்களுள் வேதாந்த சித்தாந்தங்களது தலைமை அவற்றின் இயல்பு கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம்
பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம்
விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம்
பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.

பொழிப்புரை :

வேதாந்தத் தெளிவாம் சித்தாந்த நெறியில் அடையப்படும் ஆனந்தம் சிவானந்தம். அதனை முற்றப்பெற்ற உயிரே மேலான ஆனந்தத்தைப் பெற்ற உயிராகும். இனி அந்த ஆனந்தம் முப் பாழுக்கு மேலே விளைவதாகும். அதனை இவ்வுலகிலே இறைவன் செய்யும் திருக்கூத்திலும் பெறலாம். திருக்கூத்தில் பெறும் `முத்திரானந்தம், எனப்படும். அதனை எல்லாரும் பெறுதல் கூடும். சிவானந்தத்தை எந்த வகையிலேனும் பெறும் உயிரே இன்பத்தால் நிறைக்கப்பட்ட உயிராகும்.

குறிப்புரை :

பர + ஆனந்தம் = பரானந்தம். `பரா + ஆனந்தம்` என்றலும் ஆம். ஆனந்தத்தை உடையது ஆனந்தி. ``பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம்`` என்றாரேனும், `சிவானந்தம் எல்லாம் மன்னியது பரானந்தி` என்றலே கருத்து. எல்லாம் - முழுதும். `முழுதிலும்` என்க. மன்னுதல் - நிலைத்திருத்தல். இரண்டாம் அடியில், `அந்தப் பரானந்தம்` எனச்சுட்டியுரைக்க. ``மேல்மூன்றும் பாழ்உறு ஆனந்தம்`` என்பதை, `மூன்று பாழுக்கும் மேல் உறு ஆனந்தம்` என மாறிக்கூட்டுக. `முப்பாழ்இவை` என்பதைப் பின்னர்க்காண்க. விரா ஆனந்தம், வினைத்தொகை. ``விரா`` என்றது உடம்பொடு புணர்த்தது. எனவே, `முத்திரானந்தம் (யாவராலும்) விராவப்படும்` என்பது கருத்தாயிற்று. கூத்தப்பெருமானது கூத்து, ``ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தலையே``l குறிப்பதாகலின், அந்த நடனத்தில் காணப்படும் முத்திரை (வீசியகரமும், எடுத்த திருவடியும்) `ஆனந்த முத்திரை` யாகும். அதனால் அதை, ``முத்திரானந்தம்`` என்றார். முத்திரானந்தம் - முத்திரையில் விளையும் ஆனந்தம்.
`இறைவன் இல்லை` எனப் பிணங்கிய தாருகாவன முனிவர்க்கு `அவன் உளன்` என விளக்கினமையால், பிட்சாடனர் கையில் காணப்படுவது `சன்முத்திரை` சன் + முத்திரை (சத் + முத்திரை) என்றும், சனகாதி நால்வர்க்கு ஞானத்தைத் தெளிவித் தமையால், தென்முகக் கடவுள் கையில்காணப்படுவது `சின்முத்திரை` (சித் + முத்திரை) என்றம் சொல்லப்படும். எனவே இம்மூர்த்திகளின் முத்திரையும் கூடி, சச்சிதானந்த முத்திரையாதல் விளங்கும்.
`பொரு` என்னும் பகுதி நேரே, `போர் செய்தல்` எனப்பொருள் தருமாயினும், உகரம் பெற்று, `பொருவுதல்` என நின்று `ஒத்தல்` என்றும் பொருளைத் தரும் ஆதலின் இங்கு, ``பொராநின்ற`` என்பது, `ஒத்திரா நின்ற` எனப்பொருள்தத்தது. ஒத்திருத்தல் - தகுதி பெற்றிருத்தல். உள்ளம் - ஆன்மா. பூரித்தல் - நிறைத்தல். பூரிப்பி - நிறைக்கப் பட்டது.
இதனால், சித்தாந்தத்தில் பெறப்படும் பயன் ஒப்புயர் வற்றதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின்
ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே

பொழிப்புரை :

ஆறந்தங்களில், `கலாந்தம், நாதாந்தம்` என இரண்டு கூறப்படினும், நாதாந்தம் கலாந்தத்துள் அடங்கும் ஆதலின், நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளின் முடிவே முடிவாகும் ஆகவே, `அந்தப் பஞ்சகலைகளையும் சுத்த மாயையுள் ஒடுக்கியும், மீள விரித்தும் நிற்பவன் சிவன்` எனக் கேட்கப்படுதலன்றிப் பிறர் ஒருவரும் அத்தன்மையராதல் கேட்கப்படாமையால், அவனே ஆறந்தங்கட்கும் மூலமாகிய வேதாகமங்களைச் செய்தருளினான்.

குறிப்புரை :

அன்றே, தேற்றம், `பஞ்ச கலைகளையும் ஒடுக்கி, விரிப்பவனே முழுமுதல் தலைவன்` என்பதும், `கீழ்க் கீழ் உள்ள சிலகலைகளை மட்டும் ஒடுக்கி, விரிப்பவர் முழுமுதல் தலைவராகாது, முழுமுதற்றலைவன் கீழ் ஒருபுடை நிற்கும் தலைவர் என்பதும் சித்தாந்தம். ஆதலின், உலகிற்கு இருவகை முதல் நூல்களைச செய்தளித்தவனும் அவனே என்றபடி. `இரண்டந்தம்` என்பதை, `நாதாந்தம்` என்பதன் பின்னர்க்கூட்டுக. என்ன - என்று சொல்லும்படி. பஞ்சாந்தகன் - ஐந்தையும் இறுதி செய்பவன். இறுதி செய்தலைக் கூறவே, தோற்றுவித்தலும் தானே பெறப்பட்டது.
இதனால், மேல் ``நாதன் உரை அவை`` எனப்பொது வகையால் சுட்டப்பட்ட தலைவன் இவன் என்பது சிறப்பு வகையால் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை
ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு
நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால்
மன்றாடி பாதம் மருவலும் ஆமே.

பொழிப்புரை :

வேதாந்தத்தைத் தவிர மற்றை ஐந்து அந்தங்களை, `உண்மையல்ல; போலி என்று இகழாதே தலையாய வேதாந்தத்தைச் சித்தாந்தத்தின் வழியாக உள்ளவாறுணர்ந்து நின்றால், யோகாந்தம் செயல்முறையில் வாய்க்கும். அது வாய்த்தால், மன்றாடியாகிய சிவனது திருவடிப்பேறும் கூடும்.

குறிப்புரை :

அன்று, பன்மையொருமை மயக்கம். ``என்னாதை`` என்பது, எதிர்மறை ஒருமை ஏவல். இஃது, `என்னாதே` என மருவி வழங்கும். ``அன்றாகும் என்னாதை` என்பதை முதல் அடியின் இறுதியிற் கூட்டுக. உணர்வு முறையில் சித்தாந்தம் முடிவானதாயினும், செயல் முறையில் அதற்கு முதற்படி யோகாந்தம் என்றபடி. அனைத்து அந்தங்களும் படிமுறையில் வேண்டுவன ஆதலின் அவற்றை, ``அன்றாகும் என்னாதை`` என்றார்.
இதனால் ஆறந்தங்களும் படி வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம்
அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த்
தனாதி மலங்கெடத் தத்துவா தீதம்
வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.

பொழிப்புரை :

பதியைப்போலவே பசுவாகிய சீவனும் அனாதி. அதற்கு அனாதியே ஒரு குற்றம் உண்டு. அந்தக்குற்றம் மேல் எழாமல் கீழாம்படி அடக்கினால் சீவன் தனது உண்மையைத் தான் உணரும். தன்னை உணர்ந்தால், பின் தலைவனை உணர்ந்து, அவனைச் சார்ந்து அவனாகி நிற்கும். அங்ஙனம் நிலையை அடைதற்பொருட்டுச் சீவன் அனாதிக்குப் பின் ஆதியாய் வந்த மலங்களும் நீங்கும்படி அவற்றைக் கடக்கும் முறையை ஞான குருவை அடைந்து வினாவும். பின் அவர் உபதேசித்தபடி நின்று, ஐந்து மலங்களும் நீங்கப் பெற்றுத் தூயதாய் உலகத்தைக் கடந்து நிற்கும். அந்நிலையில் அது சிவத்தைச் சேர்ந்து சிவம் ஆதல், நீர் பாலோடு சேர்ந்து பாலாதல் போல்வதாம். வேதாந்தத்தின் உண்மைப்பொருள் இதுதான்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில், `வேதாந்தப் பொருளைச் சித்தாந் -தத்தின் வழியாக உணர்தல்வேண்டும்` என்றமையால், `அதனை அவ்வாறு உணருங்கால் வேதாந்தப் பொருள் இவ்வாறாம்` என்றபடி.
ஐம்மலம் - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி. இவற்றுள் ஆணவம் அனாதி; அன்றே உள்ளது. ஏனைய ஆதி; பின் வந்தவை. இரண்டாம் அடியில் ``அனாதி`` என்றது. அனாதியாய மலத்தை. அனாதிக்கு அந்தம் இல்லை ஆதலின், `அழித்து` என்னாது ``அடக்கி`` என்றார். ஆணவம் தவிர ஏனை நான்கும் ``ஆதி மலம்`` எனப் பட்டன. சம்பந்தம் ஆயினமை பற்றி, ``தத்துவாதீதம்`` என மாயே யத்தையே கூறினாராயினும் இனம் பற்றி அனுபந்தமும், சார்பு பந்தமு -மாய் உள்ள ஏனைய மலங்கட்கு அதீதம் ஆதலும் கொள்ளப்பட்டது. வினாவுதற்கு, வினாவப்படுவார் வருவிக்கப்பட்டார்.
சீவனை, `ஆதி` என்பாரை மறுத்தற்கு, ``அனாதி சீவன்`` என்றும், `மலம் இரண்டே` என்பாரை மறுத்தற்கு, ``ஐம்மலம் அற்று`` என்றும், ஆணவத்தைப் பலபட மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு ``அனாதி மலம்`` என்றும். `சீவன் சிவனாதல் நீரும், நீரும் சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், `குடம் உடைந்த வழிக் குடாகாயம் மகா காயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போல்வது` எனவும், மற்றும் இன்ன பிற போல்வனவாகவும் கூறுவாரை யெல்லாம் மறுத்தற்கு, ``நீர் பாலாதல்`` என்றும் கூறினார்.
``ஐம்மலம் அற்று அப்பால் ஆம்`` என்பதை ``வினாவும்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `அது நீர் பால் ஆதல் போல்வது` எனவும், `இதுவே வேதாந்த உண்மை` என்று எழுவாய்கள் வருவித்து, தேற்றேகாரத்தை மாற்றிவைத்துரைக்க. அதீதம் ஆதற்குரிய முறையை ``அதீதம்`` என்றார்.
இதனால், மேல் ``நாடில் இரண்டந்தம் பேதமதென்னில் பெரியோர்க் கபேதமே`` என்றது தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை
அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால்
செயலற் றறிவாகி யும்சென் றடங்கி
அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.

பொழிப்புரை :

`உயிர், பரன், திருவருள்` என்னும் முப்பொருளை யும், `அவற்றுள் ஒன்றையும் விடாது முறையே உணர்த்துகின்ற, `துவம், தத், அசி` என்னும் மூன்று பதங்களால் ஆகிய வேதாந்த மகா வாக்கியத்தை அனுபவமாக உணர்வதால், நீ சடமாகிய பாசங்கள் ஆகாது, சித்தாகி விடுவாய். ஆயினும், அதன்பின் `யான் எதனையும் யானே அறியமாட்டாமையால், தூலசித்தாகின்ற எனக்கு எஞ் ஞான்றும் அறிவித்து வருகின்ற சூக்கும சித்து ஒன்று உண்டு என உணர்ந்து, எதனையும், `யான் அறிகின்றேன், யான் செய்கின்றேன்` எனச் செருக்குதலை விடுத்து, அந்தச் சூக்கும சித்தின்கீழ்ப் போய் அடங்கியிரு. அப்பொழுதே வேதாந்தம் சித்தாந்தம் ஆகிவிடும்.

குறிப்புரை :

சிவன், அவனது அருளைக் குறித்த ஆகுபெயர். வாக்கியம், `தத்துவமசி` என்று இருப்பினும் உண்மையில் அதன் சொற்கிடக்கை முறை, `துவம் தத் அசி` என்பதே ஆதலை விளக்குவார். `தொம் தத் அசி` என்றார். `அசி` என்பது, `ஆகின்றாய்` எனப் பயனிலை ஆதலாலும் அது முன்னிலையிடத்தது ஆதலாலும் `துவம்` (நீ) என்னும் முன்னிலை எழுவாய் முதற்கண் நிற்றலே முறையாதல் அறிக. எனவே, `தத்துவமசி` என்ற மகாவாக்கியத்தின் பொருள், `நீ அது ஆகின்றாய்` என்பதே ஆகின்றது.
ஒரு பொருள் மற்றொரு பொருளேயாதற்குக் காரணம் அவற்றிடையே யுள்ள இயைபு. அவ்வியைபுதான் பல. `குடம் மண் ஆகின்றது` என்பதில் ஆதற்குக் காரணம் காரிய காரண இயைபு. அது போன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் பிரம பரிணாமவாதிகள்.
`வெண்மை தாமரை யாகின்றது`, `இலை பூ காய்கள் மரமாகின்றன` என்பவற்றில் ஆதற்குக் காரணம் குண குணி, இயைபும், அவயவ அவயவி இயைபும் ஆகும். இவைபோன்றதே `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் என்பர் விசிட்டாத்து விதிகள்.
`பாம்பு பழுதையாகின்றது`, `அரசன் ஆண்டியாகின்றான்` `குடாகாயம் மகாகாயம் ஆகின்றது` என்பவற்றில் ஆதற்குக் காரணம் காட்சிவகையும், நிலைமை வகையும், பொருள் ஒருமை வகையும் ஆகும். இவைபோன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணமும் என்பர் கேவலாத்து விதிகள்.
இவரெல்லாம், `வேதாந்தமும், சித்தாந்தமும் வேறு, வேறு` எனப் பேதம் கூறுபவரும், சித்தாந்தத்தை ஏனையோர் கூறும் வேதாந்தம் ஆக்குபவரும் ஆவர். அவர்களையெல்லாம் மறுத்து, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம், ``நான் இவள்ஆம் பகுதிப் பொற்பு``* என்று அருளிச்செய்தபடி, `தலைவன் தலைவி ஆகின்றான்` என்பதில் ஆதற்குக் காரணம், தலைவனது உணர்வு தன்னை உணரும் உணர்வாகாது, தலைவி தன் நலத்தையே உணரும் உணர்வாதலாம் அது போன்றதே, `நீ அது ஆகின்றாய்` என்பதில் ஆதற்குரிய காரணம் எனச் சித்தாந்தம் கூறுவார், ``அறிவாகியும் சென்று அடங்கி`` என்றார். ``தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னை``* என்பதில், ``என் -றன்னை`` என்றதும், ``என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``l என்பதில் ``என்னை`` என்றதும் உயிருணர்வையே -யாம். இவற்றில், ``கொண்டது`` எனவும், ``விழுங்கி`` எனவும் கூறப் பட்டதே இங்கு, ``அடங்கி`` எனக்கூறப்பட்டது. `அடங்குதி` என்னும் இகர ஈற்று ஏவல் வினை தகரம்பெறாது நின்றது, ``நன்றுமன் இது நீ நாடாய் கூறி``8 என்பதிற்போல.
``அறி`` என்பது, `தொந்தத்தசி` என ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றதனோடு வினைத்தொகைபடத் தொக்கது. அயர்வு - அறியாமையால் கொள்ளாதொழிதல்.
இதனால், முன் மந்திரத்தில் கொள்வகையால் விளக்கிய உண்மை, சொற்பொருள் வகையால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம்
சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன
அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்
துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே.

பொழிப்புரை :

பொது மறையாகிய வேதத்தை மட்டுமே நூலாகக் கொண்டு, சிவாகமங்களை நூலாகக்கொள்ளாதவர்கட்குத் தலையான மகாவாக்கியமாய் உள்ளது, ``ஸோஹம் அஸ்மி`` என்பது [இதன் பொருள், `அது நான் ஆகின்றேன்` அல்லது, `அவன் நான் ஆகின்றேன்` என்பது `தத்துவமசி` மகாவாக்கியத்தில் முன்னிலையில் வைத்துச் சொல்லப்பட்ட பொருளே இதில், தன்மையில் வைத்துச் சொல்லப்பட்டது. ஆகையால் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளது வடிவு வேற்றுமையே யன்றிப் பொருள் வேற்றுமையில்லை. `தத்துவமசி` மகாவாக்கியம், மாணவனுக்கு உபதேசிக்கும் ஆசிரியர் கூற்று. `ஸோஹம் அஸ்மி` மகாவாக்கியம், ஆசிரியர் உபதேசித்த பொருளை அனுபவமாகக் காணும் மாணவன் கூற்று. இவற்றால் இவை முன்னிலையிடத்தும், தன்மையிடத்தும் ஆயின].
இனிப் பொதுமறையாகிய வேதத்தோடு, சிறப்பு மறையாகிய சிவாகமங்களையும் நூலாகக் கொள்வோர், வேதாந்தத்தில் `ஸோக மஸ்மி` எனப் பொதுவாகக் கூறப்பட்டது, உண்மையில், `சிவோஹ மஸ்மி` எனக்கொள்வர். (இதன் பொருள், `சிவன் நான் ஆகின்றேன்` என்பது). அக்கொள்கையே சிறப்பு மறையாகிய சிவாகமங்கள் ஆராய்ந்து காட்டும் முடிநிலை முடிபாகும். அந்த முடிபைப் பல்லாற்றா -னும் வலியுறுத்த எழுந்த நூல்களே `சிவாகமம்` எனப்பெயர் பெற்று விளங்குகின்றன.

குறிப்புரை :

`இருவகை நூல்களின் முடிவும் பொதுவும், சிறப்பும் ஆகின்ற அத்துணையேயல்லது, அவற்றிடையே பிறிது வேற்றுமை யில்லை` என்பது குறிப்பு.
`மாமறையாளர்தம் சென்னியது சோகம் ஆம்` எனவும், `ஈது, ஆன சிவோகமாம் என்ன, அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள்` எனவும் இயைத்துக் கொள்க. ``தோன்றும்`` என்னும் பயனிலைக்கு, `அது` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``பண்டை மறைகளும் `அது நான் ஆனேன்` என்று
பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைத் தானே``*
என்னும் சிவஞானசித்தியில், ``இப்பாவகம்`` என்றது, `சிவன் நான் ஆனேன்` என்னும் சிறப்புப் பாவனையையேயாம்.
ஒருவனை, `அவன்` எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும், ஒருபொருளை, `அது எனப்பொதுவாகச் சுட்டிக் கூறுவத னாலும் அக்கூற்றைக் கேட்டவனுக்கு என்ன பயன் உண்டாகும்? பொதுவாகச் சுட்டியவற்றைப் பின்பு சிறப்பாகச் சுட்டியவழியே, கேட்பவனுக்குப் பயன் உண்டாகும். எனவே, பொதுக்கூற்றுச் சிறப்பிற்கு முன்னோடியேயன்றி, அதுவே முடிநிலை முடிபு ஆகாமை உணர்க.
``அதுபழச் சுவையென, அமுதென, அறிதற்(கு)
அரிதென, எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருஉரு; இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு``*
என்னும் அருள்மொழியால், `பொதுவாக விளக்கமின்றியிருக்கும் மகாவாக்கியப்பொருளைச் சிறப்பாகத் தெளிய உணர்த்துவதே ஆசிரியர் வழங்கும் அருள் உபதேசமொழி` என்பது விளங்கும்.
`தத்துவமசி` என்னும் பொது வாக்கியமே, `சிவத்துவமசி` எனச்சித்தாந்த ஆசிரியரால் சிறப்பாக உபதேசிக்கப்படுகின்றது. `ஸோஹமஸ்மி` என்னும் பொது வாக்கியமே. `சிவேஹமஸ்மி` எனச்சித்தாந்த மாணவனால் சிறப்பாகப் பாவிக்கப்படுகின்றது.
`சிவாய` எனநிருவாண தீக்கையில் உபதேசிக்கப்படுகின்ற முத்தி பஞ்சாக்கரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதனால், `ய, சி, வா` என அமையும் எழுத்துக்கள் முறையே `துவம், தத், அசி` என்னும் பதங்களாய் அமைதல் விளங்கும். அதனால் உபதேசிக்கப்பட்ட அந்த மூன்றெழுத்துக்களை விந்துத்தானமாகிய புருவ நடுவில் வைத்துத் தியானிப்பதனால், சிவோஹம் பாவனை, அஃதாவது `நான் சிவன் ஆகின்றேன்` என்னும் பாவனை அமைந்து விடுகின்றது.
`தத்துவமசி` என்பதேமகாவாக்கியம் ஆயினும், `துவம்ததசி` என்பதே பொருளாதல் போல, `சிவத்துவமசி` என்பதே மகா வாக்கியம் ஆயினும், `துவம்சிவாசி` என்பதே பொருளாதலின், அப் பொருள் மேற்கூறிய மூன்றெழுத்துக்கணிப்பால் அமைதலை உணர்க.
இதனால், வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றாம் முறைமையும். அவற்றுள் சித்தாந்தமே சித்தாந்தம் ஆதலும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.

பொழிப்புரை :

உலகத்தாரால், `அறிவு, அறிவு` என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியே உள்ளன. அவற்றின் அறிவுக்கு அறிவாய் உள்ள இறைவனும் அனாதியே உளன். அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள அறிவற்றனவாகிய பாசங்களும் அனாதியே உள்ளன. ஆயினும் அனாதியாகிய சிவனது ஞான சத்தி உயிரி -னிடத்துப் பதியுமாயின், உயிர் பிறவித்தொடர்ச்சி அறப்பெறும்.

குறிப்புரை :

``அனாதி`` எனவே, ஆதியும், அந்தமும் இலவாயின. ஞானசத்தியே அருட்சத்தி என்க. அது பதிதலே சத்தி நிபாதம். `சத்தி நிபாதம் வந்தால் பிறப்பு அறும்` என்றாரேனும், `ஞானம் நிகழப் பிறப்பறும்` என்றலே கருத்தென்க.
இம்மந்திரத்தில் கூறப்பட்டன, மேல், ``பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்``8 என்னும் மந்திரத்துக் கூறப்பட்டனவே யாதலின், அவை நெடுஞ்சேயவாயினமைபற்றி, இங்கு இயைபு படுதற் பொருட்டு மறிதுணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

பசுப்பல கோடி பிரமன் முதலாப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``அனாதி`` எனப்பட்ட பசுக்கள் பிரமதேவன் முதலாகக் கோடிக் கணக்கில் உள்ளன. ஆயினும், அவற்றைக் கட்டியுள்ள பாசங்கள் மூன்றே. (ஆணவம், மாயை, கன்மம்). பதி பசுக்களைக் கட்டியுள்ள பாசங்களை அறுத்துவிட்டால், பசுக்கள் பசுத்தன்மை நீங்கிப் பதியைப் பற்றிக்கொள்ளும். பின்பு அவை பதியை விட்டு நீங்கமாட்டா.

குறிப்புரை :

`பிரமன்` முதலிய பெயர்கள் பிறப்புப் பற்றி வருவனவாம். `பிரமன் முதலா` என்றது, காரணக் கடவுளர்களைக் கீழ்த் தொடங்கிக் கூறியது. `அறுப்பது பதி` என்பது பாரிசேடத்தால் அமைந்தது. `பந்தம் அனாதியாய் இருக்கும் அதினின்றும் நீங்குதல் உளதாதல் போலப் பதியைப் பற்றிய பின்னும் அதினின்றும் நீங்குதல் உளதாகும்போலும்` என நிகழும் ஐயத்தை நீக்குதற்கு ``பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே`` என்றார். பாசங்களின் சத்தி காலப் போக்கில் மெலிவடைவன அதனால் உயிர் அவற்றினின்றும் நீங்குதல் உளதாகின்றது; சிவசத்தி அத்தன்மைத்தன்றாய் என்றும் ஒருபெற்றித் தாம் ஆதலின் சிவத்தை அடைந்த உயிர்க்குப் பின் அதனினின்றும் நீங்கும் நீக்கம் இல்லை என்க.
``துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்``l
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``3
என்னும் திருமொழிகளையும் நோக்குக. `அறுத்தால் நீங்கிப் பற்றிவிடா` என்றதனால், `பசுக்கள்தாமே பாசங்களை அறுத்துக் கொள்ள வல்லுன அல்ல` என்பது பெறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கி னல்லது
எட்டுணை யாயினும் யான்அவிழ்க் கறியேன்``*
என்றது காண்க. ``தலைவனைப் பற்றி விடா`` என ஒருமையும், பன்மையுமாகக் கூறியவற்றால், `பதிப்பொருள் ஒன்றேயன்றி, இரண்டாவதில்லை` என்பது பெறப்பட்டது.
இதனால், `முப்பொருளில் பதி ஒன்றே; பசுக்கள் எண்ணில; பாசம் மூன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்
நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்
தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் அனாதியே கிடந்த பாசநிலையிலே கிடந்தாலும் அப்பொழது அவைகட்கு உண்டாகின்ற பயன் மூன்று. அவை, `அறம், பொருள், இன்பம்` என்பனவாம். நான்காவதாகிய வீடு அந்நிலையிலே கிட்டாது. அது கிடைக்க வேண்டுமாயின், அந்த மூன்றும் நீங்குதற்கு ஏதுவாகிய ஞானம் ஒன்றையே விரும்பிப் பதியை உலகப் பற்றுச்சிறிதும் இன்றி, நாள்தோறும் வழிபடுங்கள். வழிபட்டால் அந்தப் பதி, குடத்தில் இட்ட விளக்குப் போல மறைந்திருந்த நிலையினின்றும் நீங்கிக் குன்றில் இட்ட விளக்குப் போல வெளிப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

`அது வெளிப்பட்டு விளங்கவே, முன் மந்திரத்திற் கூறியபடி பாசம் அறுக்கப்படப் பதியைப் பற்றிக் கொள்ளும் நிலை உளதாம்` என்பது குறிப்பெச்சம். `கிடக்கின்ற ஆற்றிலே` என உருபு விரித்துக்கொள்க. பயன், உயிர்கள் அடையத்தக்க பயன் `அவை அறம் முதலிய நான்கு` என்பது வெளிப்படை. நடத்தல், இங்கு நீங்குதல். ``இம்மூன்றும் - விட்டதே பேரின்ப வீடு`` என்னும் ஔவையார் வாக்கையும் நினைக. நடக்கின்ற ஞானம் - நடத்தற்கு ஏது வாகிய ஞானம். அறம் முதலிய மூன்றும் உலகியலாதலின் அவை பாச நிலையிற்றானே நிகழ்வவாயின. விளக்கால் அல்லது இருள் நீங்காதவாறுபோல, ஞானத்தால் அல்லது உலகியல் நீங்காமை பற்றி, ``மூன்றும் நடக்கின்ற ஞானம்`` என்றும், பதியைத் தொழுதலே தவம் ஆதலாலும், அத்தவத்தை உலகப் பற்றுடன் செய்யின் உபாயத் தவமும், பற்றற்றுச் செய்யின் உண்மைத் தவமுமாம். ஆதலால், உண்மைத் தவத்தாற்றானே ஞானம் உண்டாம் ஆதலாலும், ``தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின்`` என்றும், `தொழுதல் நியமமாதல் வேண்டும்` என்பார். ``நாடோறும் தொழுமின்`` என்றும் கூறினார். பதியைத் தொழுதலாகிய தவம், `சரியை, கிரியை, யோகம்` என மூன்று என்பதும், `அத்தவத்தானே பதிஞானம் உளதாம்` என்பதும் மேல் பல இடங்களில் கூறப்பட்டன. குடத்திட்ட விளக்கு, குன்றில் இட்ட விளக்கு` இருதொடராக்கி உரைக்க. ``அது`` என்றது, உபநிடத வழக்கு. `பதி` என்றவாறு. `குடத்தில் இட்ட விளக்காயுள்ள அது, குன்றில் இட்ட விளக்காம்` என்க. சாதன சாத்தியங்கள் தம்முள் இயைபிலாவாதல் கூடாமையின், தொழுவதும் பதியையேயாயிற்று.
இதனால், `பதியால் பாசம் அறுக்கப்படுதல் இவ்வாற்றால்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும்
கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முற் பாசத்தை நீக்குதற்குப் பிற்பாசங்களைக் கூட்டிப் பிறப்பு இறப்புக்களில் சூழலவைத்து இவனை, `அஃதும் கருணையே` என அறிந்து அவன் மாட்டு அன்பு செய்து அவனை நினைப்பவர். அவ்வாறு நினைத்தபின், அவன் பிறப்பு இறப்புக்களில் வைத்துள்ளமை பற்றி நாணம் உறுதலும், அந்நாணத்தால் அதனை வன் கண்மையாகக் கருதுதலும் எங்ஙனம் உளவாகும்? உளவாகா.

குறிப்புரை :

முற்பாசம், ஆணவம், பிற்பாசம், மாயை கன்மங்கள். பாசத்தால் பாசத்தை நீக்குதல் ஆடையின் அழுக்கினை உவர்மண் முதலிய அழுக்கினால் நீக்குதல் போல்வதாகும். இவ்வுண்மையை உணர்வார் பிற்பாசங்களைச் சேர்த்தமையை வன்கண்மையாகக் கருதார் என்பதாம். பிற்பாசங்களைச் சேர்த்தமையே மேற்காட்டியபடி ``கட்டிய நீ`` எனப்பட்டது.l `வைக்கின்றவாற்றை உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்` என்க.
இதனால், கட்டியவனே பதிதான்` என அவனை வெறாது அன்பு செய்து, முன்மந்திரத்திற் கூறியவாறு, `நாள்தோறும் தொழுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.

பொழிப்புரை :

ஒருவனுடைய உடலில் பற்றிய விடம், மணி மந்திர ஔடதங்களால் நீங்கிப் போனபின்பு மீண்டும் அஃது அவன் உடலில் ஏற இயைபில்லாததுபோல, மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவன், அவ்வுணர்வினால் அவனோடு ஒன்றியிருந்த பாசங்கள் வேறாகி நீங்கிவிட்ட பின்பு, அவன் அப்பாசங்களோடு பொருந்துதற்கு இயைபில்லை. அதனால், அவன் தன்னைத் தடை செய்திருந்த கேவல சகல நிலைகளைப் போக்கி சாக்கிரத்தில் அதீதமாகிய நின்மல துரியாதீதத்தில் அழுந்திச் சீவன் முத்தனாகியே நிற்பான்.

குறிப்புரை :

கட்டிய கேவலம் - ஒன்றையும் அறியாத கேவலம். காணும் சகலம் - சிறிது அறிவு பெற்றுச் சிலவற்றை அறிகின்ற சகலம். சுடுதல் - போக்குதல். `தோன்றும்` என்பது பாடம் அன்று. `மெய்கண்டான்` என்பது நாயனாராலே கூறப்பட்டிருத்தலும் சிவஞான போதத்தில் அச்சொல் ஆளப்பட்டிருத்தலும் குறிக்கொளத் தக்கன.
இதனால், `பசுக்கள் தலைவனைப் பற்றிய பின் விடா` என மேற்கூறியது, உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்த நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

பொழிப்புரை :

சத்தி நிபாதம் வரப்பெற்றமையால், `நாம் உய்யும் வழியாவது யாது` என ஏக்கற்று ஆராயும் பக்குவிகள் அவ்வழியை உணர்தற் பொருட்டுச் சிவாகமங்கள் வழியாகச் சிவபெருமான் அருளிச் செய்தவை, பதியேயன்றிப் பசு பாசங்களின் அனாதி நித்தத் தன்மையும், அவற்றுள் பசுக்கள் பாசத்தினின்றும் நீங்கிப் பதியை அடையும் முறைமையும் ஆகும். ஆயினும் அவைகளை அறியும் பக்குவிகள் உலகத்து அரியர்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் கொண்டு, அதன்பின் மூன்றாம் அடியையும், அதன்பின் முதல் இரண்டு அடிகளையும் கூட்டியுரைக்க. முதல் இரண்டடிகளில் சித்தாந்தத்தின் அடி நிலைப் பொருள் சுருங்கக் கூறப்பட்டது.
இதனால், முப்பொருளியல்பை உள்ளவாறு உணரமாட்டா தாரது நிலைமையது இரங்கத்தக்க தன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :

சிவாலயங்களின் அமைப்பை உற்று நோக்கி உணரவல்லார்க்குக் கருவறையில் முதலிடத்தில் உள்ள இலிங்கமே பதியாயும், அவ்விலிங்கத்தின் திருமுன்பில் உள்ள இடபமே பசுவாயும், (உயிராயும்) இடபத்திற்குப் பின் உள்ள பலிபீடமே அடக்கிஒடுக்கப்பட்ட பாசமாயும் காட்சியளிக்கும்.

குறிப்புரை :

இடபம் இலிங்கத்தை நோக்கின் பலிபீடம் அதன் பின்னதாயும், இலிங்கத்தை நோக்காது வெளியை நோக்கின் இடபத்தின் முன்னதாயும் இருக்கும், இவை சிவத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் பிற்படுதலையும், சிவத்தை நோக்காது, உலகத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் முற்படுதலையும் உணர்த்தும்.
சிவத்தை நோக்கும் உயிரைப் பாசங்கள் அடரமாட்டாது, இருந்தும் இல்லதாயக் கிடத்தலின், பலியிடப்படும் பீடமே பாசமாகின்றது. பாசத்தை, ``ஆகும் நற்பாசம்`` என்றும் இது பற்றி, `சன்மார்க்கமாகிய தத்துவப் பொருள்களே சிவாகமங்களில் சமய சங்கேதப் பொருள்களாகச் சொல்லப்பட்டுள்ளன` என்பது - இதனை
``சன்மார்க்க
சமய சங்கே தப்பொருளும் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை``
என வியந்து கூறினார் தாயுமான அடிகள்.
இதனால், `முப்பொருள்களின் இயல்பை ஆகமங்களைப் பற்றி உணரமாட்டாதார், சிவாலயங்களின் அமைப்பை நோக்கி யேனும் உணரற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பதிபசு பாசம் பயில்வியா நிற்கப்
பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில்நில் லாவே.

பொழிப்புரை :

முப்பொருள் இயல்பை மாணாக்கர்க்கு முன்னர்க் கேட்பித்துப் பின்னர் மீள மீள அவற்றைச் சிந்திப்பித்தற்பொருட்டு அவற்றை உபதேசிக்கின்ற ஆசிரியன் மார்கட்கு உபதேச மொழியை ஆக்கி, அதுவழியாகச் சிவன் பசுக்களின் பாசங்களை அறிவே நீக்குவான். அம்முறையில் முப்பொருள் இயல்பைச் சிந்தித்துத் தெளியின் பாசங்கள் தம்மியல்பில் நிற்கமாட்டா `நிலைகெட்டு ஒடுங்கும்` என்பதாம்.

குறிப்புரை :

`பயில்வியாநித்தம்` என்பது பாடம் அன்று. ஆறு - வழி என்றது உபதேச மொழியை அம்மொழியாவது திருவைந்தெழுத்து மந்திரமேயாதல்.
``நானேயோ தவம்செய்தேன்! சிவாயநம எனப்பெற்றேன்``l
என்னும் அனுபவ மொழியால் விளங்கும். ஐந்தெழுத்தின் உட்பொருள் முப்பொருளே என்பது.
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்,
அவன் எழுத் தஞ்சின் அடைவாம்``8
என்பது முதலியவற்றில் விளக்கப்பட்டது. ``நில்லா`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், `முப்பொருள் இயல்பைச் சிவாலயங்களை நோக்கி ஒருவாறுணர்ந்தார், பின்பு ஆசிரியரை அடைந்து அவர் உபதேசிக்கும் உபதேச மொழியைப் பெற்றுத் தெளிய உணர்ந்து உய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பொழிப்புரை :

சித்தாந்தத் தத்துவங்களைச் சிவாகம ஞான பாதத்தில் அருளிச்செய்த சிவபெருமான், அப்பொருளைப் பயக்கும் தோத்திரங்களையும் கிரியா பாதத்தில் சொல்லிவைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

`அத்தோத்திரங்களையும் அன்போடு பொருள் உணர்ந்து பாடித் தோத்திரித்து உய்தி பெறுக` என்பதாம். ``தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே``8 என அப்பாரும் அருளிச் செய்தமை காண்க. ``காணும்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. சுத்த சைவம் பூர்வபக்க ஞானங்களைப் போக்கிச சித்தாந்த ஞானத்தைத் தருகின்ற சிவாகமம்.
இதனால், `சைவ சாத்திரங்களின் பொருளைச் சைவ தோத்திரங்களை நியமமாக ஓதும் முறையால் பயிலுக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.

பொழிப்புரை :

மூவகை ஆன்மாக்களும் தாம் தாம் பெற்ற தனு கரணத்தளவாக அறிவு விளங்கப் பெறுதலின், அவை யாவும் `அணு` எனப்படுகின்றன ஆயினும் அவற்றின் உண்மை நிலை பதியைப் போல வியாபகமே. பாசத் தடை நீங்கியபின் உயிர் தனது உண்மை நிலை யாகிய வியாபக நிலையை அடையும். ஆயினும், பதியினது வியாபகத்தில் அது வியாப்பியமேயாம். உயிர்களின் ஏகதேச நிலை, வியாபக நிலை ஆகிய இருநிலைகளும் என்றும் ஒரு பெற்றியனாய் உள்ள பதியே அவைகட்கு ஆவனவற்றைச் செய்துநிற்பான்.

குறிப்புரை :

பின் இரண்டடிகளிற்போல `அறிந்த` என வர வேண்டிய பெயரெச்சம் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்று நின்றது. யாங்களும் ஆதல் வியாபகம் ஆதல். இரண்டாம் அடி அனுவாதம், அனாதி - அனாதியாய சிவன். `அனாதியில்` என உருபுவிரிக்க. உம்மை, சிறப்பு. ``அனாதியில் வியாத்தனும் ஆவன்`` என்றதனால், `முப்பொருள்களும் அதிசூக்கும சூக்கும தூலமாம் முறையால் வியாபக வியாப்பிய வியாத்தியாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்தப்பட்டது. இதுவே ``பதிபசு பாசம் வேறின்மை`` என்க. ``அவற்றையே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, `பதியே` எனக் கூட்டுக. `முப்பொருள்களும் வியாபக வியாப்பிய முறையால் சமமாய் நிற்பினும் பதியே சுதந்திரமுடையதாய் ஏனையவற்றை இயக்கி நிற்கும்`` என்றற்கு. `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` என்றார். அங்கு அவ்விருநிலைகளிலும். ``படைப்பான்`` என்றது, `எல்லாவற்றையும் செய்வான்` என்னும் குறிப்பு மொழி.
இதனால், பதி பசு பாசம் வேரின்மையும், அவற்றுள் பதியே தலைமையது ஆதலும் கூறப்பட்டன.
முன்மந்திரத்தில், `சுத்த சைவத்திலே நந்திமதி தந்து வைத்தனன்` எனக் கூறப்பட்டவற்றில் இவ்வதிகாரத்தில் எடுத்துக் கொண்ட சிறப்புப் பொருளை இதனுள் இவ்வாறு கூறிய நாயனார், இதன் தொடர்பாக மற்றும் சிலவற்றை இங்கும் கூறிகின்றார். அவை மேலே கூறப்பட்டன வாயினும், `பெற்றதன் பெயர்த்துறை நியமப் பொருட்டு` என்னும் முறையால் இவ்வதிகாரத்தில் எடுத்துக்கொண்ட பொருளோடு அவற்றையும் உடன்கூறித் தெளிவிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 11

படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி
இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.

பொழிப்புரை :

படைப்பு முதலிய செயல்கள் நிகழ்தல் `பரசிவம், பராசத்தி` என்னும் இருவராலேயாம். படைப்பு முதலிய ஐந்தொழில் களாவன, தனுகரண புவன போகங்கைள உயிர்களுக்குச் சேர்ப்பித் தலும், நீக்குதலுமேயாம். இவ்வைந்தொழில், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகையில் நிகழும். சூக்கும ஐந்தொழிலைச் சிவன் சுத்தமாயையில் தான் நேரே செய்வான். தூல ஐந்தொழிலை அவன் அசுத்த மாயை பிர கிருதி மாயைகளில் அனந்ததேவர், சீகண்டர் வழியாகச் செய்விப்பான்.

குறிப்புரை :

`முதற் பொருள் பொருளால் ஒன்றாயினும் ஞாயிறு ஒன்றே `கதிரவனும், கதிரும்` என இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல்போல, `சிவம், சத்தி` என இருதிறப்பட்டுத் தாதான் மியமாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``படைப்பாதி ஆவ, பரசிவம் சத்தி`` என்றார். `சத்தியால்` என உருபு விரிக்க. இடைப் பால் - `கேவலம், சுத்தம்` என்னும் இரண்டற்கு இடையேயுள்ள சகலத்தில், படைத்து ஒடுக்கப்படுவன தனுகரணாதிகளேயாதலின், வாளாதே, ``இவை`` எனச் சுட்டிப் போயினார். `சூக்கப் படைப் பாதியை`` எனவும், `தூலப்படைப்பாதி` எனவும் பின் முன்னாக மாற்றிக் கொள்க. ``சூக்கத்தைத் தற்பரம் செய்ய`` என்றதனால், தூலம் பிறரால் செய்யப்படுதல் விளங்கிற்று. அவற்றிற்கு ஏற்ப முதற்காரண வேறுபாடும் காட்டப்பட்டது. ``பாசம்`` என்றது, இங்கு தூலம் அதிதூலமாகிய அசுத்தமாயை பிரகிருதி மாயைகளை.
இதனால், முன் மந்திரத்தில், `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` எனக் கூறப்பட்டபொருள் அஃது ஆமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.

பொழிப்புரை :

அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம், பராசத்தி என்னும் மேலான ஐந்து நிலைகளில் நின்று சூக்கும ஐந்தொழில் செய்பவன். அருவத்தையும் கடந்த பரம சிவன். தூல ஐந்தொழிலைச் செய்பவன் மகேசுரன்.

குறிப்புரை :

சத்தி ஞானம், கிரியை முதலிய பாகுபாடின்றி நிலையில் பராசத்தியாம். ஞானம், கிரியை முதலியனவாகப் பாகுபட்டுப் பொதுவகை ஞானமாய் நிற்கும் நிலையில் பரநாதமாம். பொதுவைக்கிரியையாய் நிற்கும் நிலையில் பரவிந்துவாம். சிறப்புவகை ஞானமாய் நிற்கும் நிலையில் அபரநாதமாம். சிறப்பு வகைக் கிரியையாய் நிற்கும் நிலையில் அபரவிந்துவாம். இங்ஙனம் இவ்வைந்தையும் காண்க. விந்துவை முதலிற்கூறியது கீழிருந்து எண்ணும்முறை பற்றியாம். ``பரம்`` எனப் பின்னர்க் கூறினைமையின், `சத்தி, சிவம்` என்று பரவிந்து பரநாதங்களையாயிற்று. `அவ்விந்து நாதமும்` என்று எடுத்துக் கொண்டு, சூக்கத்து ஐங்கருமம் செய்வோன் சூக்கத்து ஐ` என மேலே கூட்டி முடிக்க. சூக்கத்து ஐ - அருவத்தையும் கடந்தலைவன். இங்கு, ``ஈசானன்`` என்று மகேசுரனை. என்னை? தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்பவன் அவனே யாகலின். அவன் தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்குமாறு வருகின்ற மந்திரத்தால் கூறப்படும்.
இதனால், முன் மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட சூக்கும தூல ஐந்தொழில் நிகழ்ச்சிகளில் சூக்கும ஐந்தொழில் நிகழுமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அரன் மே.

பொழிப்புரை :

(இம்மந்திரத்தில் கூறப்படும் பொருள் எழாம் தந்திரத்தில், ``சிவமொடு சத்தி நிகழ்நாதம் விந்து``, ``தலையான நான்கும் தனதருவாகும்`` என்னும் மந்திரங்களில் கூறப்பட்டதேயாம். ஆகையால், அவற்றில் கண்டு கொள்க.)

குறிப்புரை :

பரசிவம் - பரநாதம். மேற் சத்தி - பரவிந்து `உம்பரின் மேவும் விந்து` என்க. உம்பர் - சதாசிவத்திற்குமேல். ஐம்முகன் - சதாசிவன். ஈசன் - மகேசுரன். மேதினி ஆகும்படி - உலகம் தோன்றும்படி. படைப்போன் அரனே ஆம் இந்த அனைவரையும் உண்டாக்குபவன் ஒரு சிவனே. எனவே, `உலகம் இந்நவந்தரு பேதங்களால் நடைபெறுகின்றது` என்பதாம். ஈற்றடி உயிரெதுகை.
இதனால், சூக்குமம், தூலம் ஆகிய இருவகை ஐந்தொழில் களும் நடைபெறும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்(து)
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சகலத்தில் படைத்தல், காத்தல், உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு அழித்தல், சிற்றின்பத்தை அதன் இழிவு அறிந்து வெறாது விரும்பி நுகருமாறு மறைத்தல் ஆகிய முன்னர் நிகழும் அருட் செயல்களையும், சடமாகிய பாசங்களை விடுவித்துத் தன்னைக் காட்டி யருளும் அருளலாகிய பின்னர் நிகழும் அருட்செயலையும் உயிர்கள் பொருந்த வைத்த அனாதியாகிய பரமசிவனை, இத்தொழில்களை நோக்கி, `ஐவர்` என்று கூறலாம்.

குறிப்புரை :

`மறைத்தலும் அதன்வழி நிகழும் படைப்பு முதலியனவும் அருளே` என்றற்கு அவற்றை ``முற்றோன்றும் அருளும்`` என வும், `அழித்தல்கூட அருளோ` என்றும் ஐயத்தை நீக்குதற்கு அதனை ``இளைப்பாற்றும் துடைப்பும்`` எனவும் கூறினார். தன்னிலையில் நிற்கும் சொரூப சிவன் `அனாதிசிவன்` என்றும் உயிர் களின் பொருட்டாய் ஐந்தொழில் செய்யும் தடத்தசிவன் `ஆதிசிவன்` என்றும் சொல்லப் படுவான். `ஒருவனாகிய அனாதிசிவனே, ஐந்தொழில் பற்றி ஐவர் தடத்த சிவராய் நிற்பர்` என்பது உணர்த்துற்கு, ``அனாதியை ஐந் தெனலாமே`` என்றார். ஐவர் - சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன். அவர் சம்பு பட்சத்தினர். சம்பு பட்ச அணுபட்ச விளக்கங்களை மேலே காண்க. நிலைநோக்கி, ``ஐந்து`` என அஃறிணையாகக் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் ஒன்பதாகச் சொல்லப்பட்ட பேதங்களில் தூல ஐந்தொழிற்கு உரியனவாய், யாவராலும் அறியப்படுவன ஐந்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு)
ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு
வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.

பொழிப்புரை :

பதி, முப்பத்தாறு தத்துவங்களைச் சுத்த மாயையில் வியாப்பியமாகச் செய்து, அம்முப்பத்தாறு தத்துவங்கட்குக் காரணமாய் வேறுநிற்கும் மாயையை, சுத்த, சுத்தாசுத்தம், அசுத்தம்` என மூன்றாக வகுத்து, அந்த மாயை மாயேயங்களின் பின்னவாகிய `தாத்துவிகம்` என்னும் காரிய பூதங்களையும் இந்தமாயை மாயேயங்களால் ஆக்கி, அனைத்துப் பொருள்கட்கும் வேறாய் நிற்கும். (எனவே, `பசு, மாயை, மாயேயம், தாத்துவிகம் ஆகியவற்றில் கட்டுண்டு நிற்கும் என்பது பெறப்பட்டது. எனினும்) பாசங்கள் நீங்கியவழிப் பசு, பதியாகும்.

குறிப்புரை :

குண்டலி - சுத்த மாயை. ``தன்னின்`` என்பதில் இன், சாரியை மேற்சாரியை, `அவற்றினின்` முதலியன போல `மாயையில் மிகுத்திட்டு` என இயையும். `மூன்று` என்னாது, ``முப்பால்`` என்றமையால், ஒருமாயைதானே மூன்றாகி நிற்றல் பெறப்படும். `வீட` என்பது ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `பதி ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. `பசு, பதி ஆதல் எவ்வாறு` என்பது. மேல் ``உயிரைப் பரனை, உயர்சிவன் தன்னை`` [மந்திரம் - 2368.] என்னும் மந்திரத்து உரையில் காட்டப்பட்டது.
இதனால், `அனைத்தையும் செய்தும் பதி அவற்றால் எய்துவ தொன்றின்றி நிற்க, பசுவே அவற்றால் பல நிலைகளை எய்தும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத்
தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு
நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.

பொழிப்புரை :

பதி, பசுவை இயல்பாகவே உள்ள ஒரு பாசத்தின்மேல் மற்றொரு பாசம் பற்றும்படி அதனுள்ளே புகுத்தும். (இப்பாசம் மாயை, இயல்பாக உள்ளது ஆணவம்) அதன்பின், இருவினைகளாகிய குழியிலே ஆழச் செய்யும். அதன்பின், அந்த இருவினைகளுக்கு ஈடான துன்பத்தையும், இன்பத்தையும் பசு நுகர்தற்பொருட்டு அதனை நரகத்திலும். சுவர்க்கத்திலும் சேர்த்து, அங்கே சிலநாள் தங்க வைக்கும், இவையெல்லாம் இப்படித் தொடர்ச்சியாக நிகழ்தல் திரோதான சத்தியாலாம். அச்சத்தி இவ்வாறு செய்வித்தல், பசுக்கள் தம் பசுத்துவத்தின் நீங்கிப் பதியை அடையும் நாளைக் கிட்டுதற் பொருட்டாம்.

குறிப்புரை :

`வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்` என்பன திரிந்து நின்றன. தாழ்த்தல் - தங்கச் செய்தல். ``மீதுற`` என்றதனால், முன்பே ஒரு பாசம் உள்ளமை விளங்கும். ``ஆழ்க்கும்`` என்றது, குறிப்புருவகம். ``இருவினைக்கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆங்கவை` என்பது ஒருசொல். ``அவற்றால்`` என்பதன் பின், `வரும் பயனை` என்பது, `நாட்கு` என்பதன்பின், `அணிமைக் கண்` என்பதும் வருவிக்க. முன்னர் ``வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்`` என்றமையால், ``நாள்`` என்றது, அவை நீங்கும் நாளாயிற்று. நாலுதல், நீளுதல், பாசங்களைச் செலுத்துதல் பற்றி இறைவனது சத்தியும், `பாசம்` என உபசரித்துக் கூறப்படும். ஆயினும் அது நலங்கருதியே செலுத்துதலின், ``நற்பாசம்`` என்றார். `நற்பாசத்தால்` என உருபு விரித்து, `இவையெலாம் நாட்கு உற, நற்பாசத்தால் நான்று அங்கு நண்ணும்` என முடிக்க.
இதனால், `பதி, பசுக்கள் பாசத்தின் நீங்கித் தன்னை அடைதற் பொருட்டுத் திரோதான சத்தியால் அவைகட்கு மாயை கன்மங்கைளச் சேர்த்து, அவை வழியாக ஐந்தொழில் புரியும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.

பொழிப்புரை :

உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களில், `நான்` என்னும் முனைப்பை உண்டாக்குவது ஆணவமே. (இம் முனைப்பே, `தற்போதம்`) என்றும், `சீவ போதம்` என்றும் சொல்லப்படும். மாயையைக் கருவியாகப் பற்றி உயிர்கள் செயற்படும்பொழுது, இந்த `நான்` என்னும் முனைப்போடு செயற்படுவதால்தான் அவைகட்கு வினைகள் உண்டாகின்றன. `நான் செய்கின்றேன்` என்னும் உணர் -வோடு செய்தலால், அச் செயல்களின் பயனைச் செய்த உயிரையே நுகரச் செய்ய இறைவன் திருவுளங் கொள்கிறான். அதற்குக் காரணமும் அவன் அவ்வுயிர்கள் மாட்டு வைத்த கருணையே யன்றிப் பிறிதில்லை. அதனால், வினைப் பயனை ஊட்டுவித்தலும் அவை அவனது திருவடியை அடைதற்கு உபாயமேயாகும்.

குறிப்புரை :

`மாயையில் பண்ணிய ஊட்டல்` என்க. பண்ணிய, அன்பெறா அகஈற்று அஃறிணைப் பன்மை வினைப் பெயர். பண்ணி - பண்ணப்பட்டவற்றை. `ஊட்டற்குப் பரிந்தனன்` என்க. `அதுவும் போருளே` என எழுவாய் வருவிக்க. ``போருள்`` என்பதன்பின், `ஆதலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.
இதனால், இறைவன் உயிர்கள் செய்த வினைகளைத் தான் ஏற்றுக்கொண்டு, அவற்றின் பயனை அவைகளை நுகரச் செய்தற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல்
ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்கு ஆணவ பாசத்தின்மேல் மாயை கன்ம பாசங்களைச் சேர்த்தது பல உபாயங்களுள் ஓர் உபாயம் அன்று. உயிர்கள் ஆணவ மலத்தினின்றும் நீங்கித் தூய்மை பெறுதற்கு அவற்றைச் சேர்ப்பது தவிர வேறு வழியேயில்லை. அஃது எதுபோலும் எனின், புதிதாகத் தோன்றிய ஆடையில் இயல்பாய் உள்ள அழுக்கினை மேலும் பிற அழுக்கை ஏற்றித் துவைத்தும் போக்குதல் போல்வதாம். அதனால், இயற்கையாக அன்றி இறைவனால் சேர்க்கப்பட்ட பாசங்கள் யாவும் அருளால் சேர்க்கப்பட்ட பாசங்களே.

குறிப்புரை :

``மூலமே`` என்னும் ஏகாரம். தேற்றம். `அறுவையை எற்றல்போல்` என்க. எற்றல் - அடித்தல்; துவைத்தல். ``போல்`` என்றும் முதனிலை, `போலும்` என முற்றுப் பொருள் தந்தது. அருட்பாசம் - அருளால் சேர்க்கப்பட்ட பாசம்.
இதனால், ``அண்ணலடிசேர் உபாயமதாகும்`` எனப்பட்டது. உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பாசம் பயில்உயிர் தானே பரம்முதல்
பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப
பாசம் பயிலப் பதிபரம் ஆதலால்
பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.

பொழிப்புரை :

பசு தன்னைக் கட்டியுள்ள பாசங்கள் குறும்பு செய்தலால், `நானே பரம்` என்கின்றது. ஆயினும், அங்ஙனம் நினைப்பதும், சொல்வதும் என்றும் நிலைத்து நில்லாமல் பின் நீங்கிப் போவதால், உயிர்க்கு அந்நிலை செயற்கை நிலையாதல் விளங்கு தலின், `உயிர் அனாதியே செயற்கையோடு கூடிப் பசுவேயாய் நிற்கின்று? என, அறிந்தோர் கூறுவர். ஆயினும், `பதிதான் முதலிலே பாசத்தோடு கூடிப் பசுவாய் இருந்து பின் பாசத்தினின்றும் நீங்கிப் பதி யாகின்றது` எனச் சிலர் கூற முற்படுவாராயின், அங்ஙனம் கூறு வார்க்குப் பதியின் வேறாய்ப் பசு இல்லையாம் ஆகலானும், பாசங்கள் சடம் ஆகலின் தாமே செயற்படமாட்டா ஆகலானும் பதியே தன்னின் மிக இழிந்த பாசங்களை மேலிட்டுக்கொண்டு பசுவாதல் கூடுமோ?

குறிப்புரை :

`கூடாது ஆதலின், அங்ஙனம் கூறுதல் அடாததே` என்பது குறிப்பெச்சம். ``பயில்`` இரண்டும் முதனிலைத் தொழிற் பெயர். இரண்டிடத்தும் `பயிலுதலால்` என உருபு விரிக்க. முதல் அடியின் ஈற்றில் `என்னும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது, இரண்டாம் அடியில், ``தான்`` அசை நிலை. `உயிர் பசுவே என்ப` எனத் தேற்றேகாரத்தை மாற்றி வைத்து உரைக்க. ``பயில`` இரண்டில் முன்னது, `பயிலும் படி` எனவும், பின்னது `பயிலுதலால்` எனவும் பொருள் தந்தன. பயிலுதல் - செயற்படுதல். பரம் - தலைமைப் பொருள். ஈற்றில் உள்ள ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், `பசுவே ஐந்தொழில் செய்யும்` என்பாரையும், `பதியே தனது விளையாட்டால் பசுவாகி ஐந்தொழிற்படும்` என்பாரையும் மறுத்துச் சித்தாந்தம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே.

பொழிப்புரை :

வேதாகமங்களின் அர்த்தத்திலே தெளிவு பிறவாமல் ஐயுற்று வினாவிய முனிவர்களை, அந்த வேதாமகப் பொருள்களில் முடிந்த பொருளாய் உள் அருட்டிரு மேனியானது தனது கையினாலே அணைத்துத் தழுவிக் கொள்ளுதலும், அவர்கள் அத்திருமேனியில் அமைந்த கைக்குறிப்பினாலே தம்மை உள்ளவாறு உணர்ந்துகொண்டார்கள்.

குறிப்புரை :

`அருந்தவரை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. ``உத்தரம்`` இரண்டில் முன்னது விடை; பின்னது முடிநிலை. மேனி - தக்கிணா மூர்த்தி அணையப் பிடித்தல் - அவர்களது தலைமேற் கை வைத்துத் தானாகச் செய்தல். அத்திரு மேனியின் கைக் குறிப்பு, சின்முத்திரை, இம்முத்திரை.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்பதையும்,
``பதியினைச் சென்றணு காபசு பாசம்``*
என்பதையும்,
``பதியணு கில்பசு பாசம்நில் லாவே``
என்பதையும் உணர்த்தும் அதனால் அருந்தவர் ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தனர்``* என்க. ``தம்மை அடைந்து நின்றார்`` என்றமையால், பின் தலைவனை அடைந்து நின்றமை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `இவ்வதிகாரப் பொருளே முதல் ஆசிரியனாகிய தென்முகக் கடவுளால் முனிவர்க்கு உணர்த்தப்பட்டது` என்பது கூறிமுடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

பொழிப்புரை :

முற்செய் தவம் இன்மையால் இப்பிறப்பில் நல்லறி வின்றிப் புல்லறிவேயுடையார், தம்மை எல்லாம் அறிந்தவராக மதித்துக்கொண்டு, ஏவவும் செய்கலாது, தாமும் தேராதுl பயனில வற்றைப் `பயனிடைய` எனவும், பயனுடையவற்றை `பயனில` எனவும் கொண்டு தாம் வேண்டியவாறே செல்பவர்களை, `தலை கால் தெரியாது திரிபவர்` என்றல் வழக்கு. அதன் பொதுப் பொருள் வெளிப் படையாயினும், சிறப்புப் பொருள் குறிப்பாகவே உள்ளது. அஃது யாதெனின், `கால்` என்பது சிவனது சத்தி. அஃதே திருவருள். அஃதே எல்லாவற்றிற்கும் வினை முதல் `தலை` என்பது உயிர். `உயிர்க்கு அறிவு உண்டாதல் தலையிலே` என்பது யாவரும் அறிந்தது. எனவே, ஞானம் உதயமாவது `தலை` எனப்படுகின்ற உயிரினிடத்திலேதான். அந்த ஞானம் தானே உதயமாகாது. `கால்` எனப்படுகின்ற சிவசத்தி உதிப்பிக்கவே உதயமாகும். (ஞானகுரு மாணாக்கனது தலையில் தமது காலை வைத்துத் தீக்கைசெய்தல் இந்த உண்மையை நன் குணர்த்தும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் காலில் தங்கள் தலைபடும் படிவணங்கும் மரபும் இது பற்றியது. ``பொல்லார் இணை மலர் நல்லார் புனைவரே``8 என மெய்கண்டதேவர் அருளிச்செய்த குறிப்பும் உணரத்தக்கது.
``கோள் இல் பொறியிற் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை``*
என்றதும் இக்குறிப்பினதே.) காலாகிய சிவசத்தி உதிப்பிக்கின்ற ஞானத்தின் பயன் அந்த உயிர் வீடு பெறுதலாம்.

குறிப்புரை :

`கால்` என்பது, `தாள்` எனவும்படும் தாள் - முயற்சி -யுமாம். முயற்சியே கிரியை. ``எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி``* என்றபடி, இச்சையும் கிரியையும் ஞானத்தின் வேறு பாடேயாம். இச்சை எப்பொழுதும் ஒரு நிலையிலேயிருக்கும். ஏனை ஞானமும், கிரியையுமே செயற்படும் அதனால், இயங்கு கருவி யாகிய கால், (இறைவனது இருதிருவடிகளும் இறைவனது) ஞானமும், கிரியையுமேயாம். உயிர்கட்கு அறிவு தலையில் இருத்தலால், அவற்றின் இச்சை செயல்களும் தலையில் உள்ளனவாம். எனவே, `காலின்கீழ் உள்ளது தலை` என்பது பொருள். இறைவனது ஞானேச்சாக் கிரியைகள் வியாபகமாய் நிற்க. அவற்றில் உயிர்களின் ஞானேச்சாக் கிரியைகள் வியாப்பியமாய் நிற்றலைக் குறிப்பதாம். சிவமும், சீவனும் ஒன்றும் ஆகாமல் இரண்டும் ஆகாமல் நிற்பதே சித்தாந்தபரமுத்தியாகலின், அதனை விளக்குதற்கு எத்தனையோ தொகைச் சொற்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் விடுத்து, ``தாடலைபோல்`` எனக் கூறுவதும் இது பற்றி.
``தாடலைபோற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக்
கூடலைநீ ஏகம்எனக் கொள்``*
என்பது காண்க. `காறலைபோல்` எனக் கூறலும் உண்டு. ``என்பர்`` என்பதை, ``காரணம்`` என்பதன் பின்னர் கூட்டுக. `கால்` என்பதைக் குறையெண்ணுப் பெயராகக் கூறுவோர், `தலை` என்பதை அங்ஙனங் கூறமாட்டாமை அறிக.
இதனால், `அடிதலை தெரிதல்` என்னும் வழக்கின் உண்மைப் பொருள் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
தலைஅடி உச்சி உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில், ``காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே`` என்ற சிவஞானமாகிய பதி ஞானமாம்) உடம்பில் `தலை, கால்` என்பன. வெளியுறுப்பாய் இருத்தல் யாவரும் அறிந்தது. ஆயினும் உடம்பிற்கு உள்ளே தலை கால்கள் உள்ளன; அவற்றைப் பலர் அறியார். அந்த `தலை, கால்` என்பன முறையே தலை உச்சியும், மூலாதாரமும் ஆகும். (தலை உச்சி `ஏழாம்தானம் எனப்படும்) அந்தத் தலையில் எல்லாருக்கும் இயல்பாக உண்டாகின்ற அறிவு உலகியல் அறிவாகும். அந்த அறிவு, மூலாதாரத்தில் உள்ள குண்டலி கீழ் மேலாகச் சுழன்று செய்யும் செயலால் யோகக்காட்சி அறிவாய் மாறி நிகழப்பெற்றவர், அந்த அறிவையே உடையராய் இருத்தலன்றி, உலகியல் அறிவை உடையவர் ஆகார்.

குறிப்புரை :

`தலையும், அடியும் முறையே உச்சியில் உள்ளது. மூலத்தில் உள்ளது` என நிரல்நிறையாக வைத்து உரைக்க. ``உள்ளது`` என்பது, ``மூலம்`` என்பதன் பின்னரும் சென்று இயையும். தலை அடியான அறிவு - தலை அறிவு அடி அறிவாக மாறிய அறிவு. `தலை அடியாகவே இருந்தார்` என்க.
இதனால், `அடி தலை யறிதல்` என்னும் வழக்குச் சிவஞான நிகழ்ச்சியைக் குறித்தலேயன்றி யோக ஞான நிகழ்ச்சியையும் குறிக்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.

பொழிப்புரை :

`அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.

குறிப்புரை :

`அஃது அவனே இரங்கி வந்து எனக்கு அருளியது` என்பது குறிப்பு. இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `நின்றான்` என்பதை முதலடியின் இறுதியில் வைத்து உரைக்க. `முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``அண்டமும்`` என்பதன்பின் எஞ்சி நின்ற `கீழ்` என்பதை வருவித்து நிரல்நிறையாக்குக. `பின்` என்பது தெளிவுப் பொருட்கண் வந்தது, `நீயிர் பொய் கூறியபின், மெய் கூறுவார் யாவர்` என்பதிற் போல. ``தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரம் விரித்து, `உலகம் படைத்தவன் தானே` என்க. ``படைத்தவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், `அடிதலை அறிதலை இறைவனிடம் வைத்து நோக்குங்கால் - அவை நம்மால் அறிய இயலாதன - என அறிதல் வேண்டும்` என்பதும், `அறிந்து அவனது அடியை அடைய முயல வேண்டும்` என்பதும் கூறப்பட்டன.
``நிலமுதற்கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ``3
என்றதும், `அவன் அவ்வாறு நின்றிராவிடில் உலகம் அழிந்திருக்கும்` என்பதையே குறித்தது.
``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே`` 8
``கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் ;
சோதி மணிமுடிசொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை``*

பண் :

பாடல் எண் : 4

சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லா னாயின்
எந்தையை யானும் அறியகி லேனே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் சொல்லியவாறு சிவனது திருவடி -யினை எனது தலைமேல் மட்டும் உள்ளதன்று எனது சித்தத்தி னுள்ளேயும் உள்ளது. இனி எனது சித்தத்தை உள்ளடக்கி, வெளியி -லேயும் உள்ளது. (இந்நிலை, அவன்தானே இரங்கி எனக்குச் செய்த அருட்செயலாகும். ஏனெனில்,) முதற் கண் அவன் என்னை நினையாதிருப்பின், நான் அவனை நினைப்பதற்கே வழியில்லை.

குறிப்புரை :

அந்தக்கரணம் நான்கனுள் சித்தம் ஒன்றை மீள மீள இடைவிடாது நினைந்து நினைந்து நிற்றலால்தான் ஆன்மா அப்பொருளில் அழுந்தி நின்று அதனை அனுபவிக்கின்றது. அது பற்றியே, ``திருவடி சிந்தையினுள்ளே`` என்றார்.
``சிந்திப் பரியன;சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன ... ... ஐயாறன் அடித்தலமே``3
``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக``*
என அருளிச் செய்தன காண்க.
``என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்;
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன்அடி யான்என் றறிதலும்,
தன்னை நானும் பிரான்என்றறிந்தேனே``l
எனவும்,
``எந்த மாதவம் செய்தானை நெஞ்சமே,
பந்தம் வீடவை யாய பராபரன்,
அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளும், சிரத்துளும் தங்கவே``8
எனவும் போந்த அப்பர்திருமொழிகளை இங்கு உடன்வைத்துக் காண்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட திருவடிப் பேற்றின் நிலை மேலும் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம்
உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

பொழிப்புரை :

சொற்களால் சொல்லவராராத ஒரு நிலம்; அவ்வாறான ஓர் ஓளி; இவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்ற அதற்கு அப்புறத்தாகிய இடமே என்னுடையதலைவர் இருக்கும் இடம். அவர் அவ்வாறிருக்கவும் மனக் கண்ணிற்கும் காணப்படாத ஓர் ஒளியாயும், வாக்கிற்கு வாராத ஒரு மந்திரமாயும் உள்ள அதனது இயல்பையும், அதனை அடையும் வழியையும் ஒருவன் எனக்குச் சொன்னான். அந்த வழியிலே நின்றமையால், முன் தந்திரத்திற் கூறியவாறு என் தலைவனது திருவடியை யான் அடைந்தேன்.

குறிப்புரை :

``பன்னாத`` என்பதை ஒளிக்கும் கொள்க. `ஒரு நிலம்` என்றும், `ஓர் ஒளி` என்றும் சொல்லப்பட்டது. `பரவெளி` என்றும், `சிதாகாசம்` என்றும் சொல்லப்படுகின்ற பராசத்தி அது தன் குணமாக, அக்குணத்தையுடைய குணியாதல் பற்றிப் பரமசிவனை, அதற்கும் அப்புறத்துள்ளவனாகக் கூறினார். ``அப்பால்`` என்றது, `அந்த இடம்` என்றபடி. `அப்புறத்துள்ள அந்தப் பால்` என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளத்துள் ஒரு பொருளை நினைப்பது என்றாலும் யாதானும் ஒருவடிவில்தானே நினைத்தல் வேண்டும். அஃது இயலாமையால், ``உன்னா ஒளி`` என்றார். உரை செயா மந்திரமாவது உரைசெய்யப்படும் மந்திரங்களையெல்லாம் வாயிலாகக் கொண்டு இயக்கி, அம்மந்திரங்கைளக் கணிப்பவர்க்கு அவற்றின் பயனைத் தந்து நிற்கும் அந்தப் பொருள். இங்ஙனம் இருவகையாகக் கூறிய இதுவும் திருவருளைக் குறித்ததேயாம். ``உரைசெயா மந்திரம்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. ஒருவன் - குருமூர்த்தி. அவ்வெழுவாய் வருவிக்கப்பட்டது. குருமூர்த்தி அருளைச் சொன்னதாவது, `உண் அறிவிற்கு அருளையே தாரகமாகக் கொண்டு, அறிந்தும், செய்தும்நில்` எனக் கூறியது. `அவ்வழியில் நிற்கவே, தலைவனது திருவடிப்பேறு கிட்டிற்று` என்பதாம்.
இதனால், `அடி, தலை` என்பவற்றுள் இறைவனது, திருவடிபின் சிறப்பும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

பதியாகிய சிவன் உங்கட்குக் காட்டாவிடினும் அன்பர்கட்குக் காட்டிய திருவடிகளை பதி வரலாறு உணர்ந்து அவைகளைப் பாவனையால் உங்கள் தலை மேல் வையுங்கள் மற்றும் மலர்போன்று அவைகளை உங்கள் உள்ளத்திலே வைத்துத் தியானிப்ப -துடன், வாயால் புகழ்ந்து பாடுங்கள். இவைகளையெல்லாம் இடை யறாது செய்யாவிடினும் இவற்றிற்குரிய காலங்களைத் தெரிந்து அக்காலங்களில் செய்யுங்கள்.

குறிப்புரை :

`செய்தா அவன் தனது திருவடிகளை உங்கட்கும்காட்டி உய்யக்கொள்வான்` என்பது குறிப்பெச்சம் ``தோற்றும்`` என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம் பின்னர் ``மதி`` என்றும் ``ஓதும்`` என்றும் கூறுதலால், முன்னர்வைத்த தலைமேலாயிற்று.
``வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சுழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே``l
என்ற அப்பர் திருமொழியும் காண்க.
`இறைவனைத் தியானித்தற்குரிய சிறப்புக் காலங்கள் மூன்று` என்ப. அவை `காலை நண்பகல் மாலை` என்பன
``தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங்கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே``8
என ஓதியருளினமை காண்க. இவைகளை, `சந்தியாகாலம்` என்பர். சம் தியா காலம் - நன்றாகத் தியானித்தற்குரிய காலம்.
இனி வழிபாட்டிற்குரிய காலங்களை `முன் மூன்று, பின் மூன்று` என வைத்த ஆறு காலங்களும் சொல்லப்படும் `வைகறை, காலை, நண்பகல்` - என்பன முன் மூன்று காலங்கள், `எற்பாடு, மாலை, யாமம்` - என்பன பின்மூன்று காலங்கள். ``கதிசெயும்` என்பதில், செய்தல் - உண்டாக்குதல்.
இதனாலும் இறைவனது திருவடியை அடையும் முறையே வகுத்துச் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில்
தரித்துநின் றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

பொழிப்புரை :

எல்லாப்பொருள் கட்கும் ஆதாரமாய் அவை -களைத் தாங்கிநிற்பவனாகிய சிவன் தன்னை எண்ணாதவர்களது உள்ளத்தை வெறுத்தும், அடைதற்கரிய அப்பரிபாகத்தை அடைந் தமை காரணமாக பரிபாகிகளது உள்ளத்தை விரும்பியும் நிற்கின்றான். ஆகவே, அவனது திருவடியைத் தனது உள்ளத்தில் தாங்கி நிற்பவன் இவ்வுலகத்திருப்பினும் சிவலோகத்தில் இருப்பவனேயாவான்.

குறிப்புரை :

`தரித்து நின்றான், கருதாதவர் சிந்தை கரித்து நின்றான்; அப்பரிபாகத்தானே பரித்துநின்றான்; அவன் அடி தன்னுடை நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதிநாதன்` என இயைத்துப் பொருள்கொள்க; ``பரித்து`` என்பதை, `பரிப்ப` எனத்திரிக்க. ``சிந்தை`` என்பது பரித்த லோடும் இயையும். அகரச்சுட்டு அடைதற்கு அருமை தோன்றி நின்றது. `அவன் அடி` எனச் சுட்டியுரைக்க. கரித்தல் - வெறுத்தல். `கருதாமைக்குக் காரணம் பரிபாகம் இன்மை` என்பது தோன்றுதல் அறிக. `அமரர்` என்பது தேவரையும், `அமராபதி` என்பது தேவ ருலகத்தையும் குறித்தல் பொது வழக்காயினும், சிவநெறி வழக்கில் அவை சிவ சாலோக சாமீப சாரூப நிலைகளை அடைந்தவர்களையும், சிவலோகத்தையும் குறிக்கும்.
இதனால், சிவனது திருவடிப்பேற்றின் அருமையும், அப்பேறு பெற்றவர்களது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
கன்றாத தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு)
இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

மக்கள் உடம்பிற்குள் தாமரைக் கொடி ஒன்றே உள்ளது: அதில் மலர்கள் மூன்று உள்ளன. அந்த மூன்று மலர்களிலும் என்றும் அவற்றால் வருந்துதல் இல்லாத சிவனது திருவடியிணையும் உள்ளது. ஆயினும் அத்திருவடியிணையைக் காண்பதற்கு அந்த மூன்று மலர்களும் மலராக மலர்தல்வேண்டும். அவ்வாறு மலர்தற்கு அவை பக்குவப்படவேண்டும். அதற்கு உடம்பிற்றானே உள்ள நெருப்பை எழுப்பி வெதுப்பினால், அம்மலர்கள் பக்குவப்பட்டு மலரும் மலர்ந்தால், அங்ஙனம் மலர்விக்க வல்லவர்கட்குச் சிவனை அடைதல் இப்பொழுதே எளிதாகிவிடும்.

குறிப்புரை :

தாமரைக்கொடி, சுழுமுனைநாடி, மூன்று மலர்கள், அனாகதம், (இருதயம்) விசுத்தி, (அடித்தொண்டை) ஆஞ்ஞை (புருவநடு) ஆகிய ஆதாரங்கள். அனாகதத்திற்குக் கீழ் உள்ள ஆதாரங்கள் தாமரைக்கொடியின் அடிப்பாகமாகக் கருதப்படுகின்றன. வழிபாடு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றுறுப்புக்களால் நிகழ்வது. அவை மூன்றும் முறையே மொழி, மெய் மனம் என்ப வற்றால் நிகழுங்கால், விசுத்தி, அனாகதம், ஆஞ்ஞை என்பவற்றில் நிகழ்தல்பற்றி அம்மூன்றையே கூறினார். இன்றே - இப்பிறப்பிலேயே.
இதனால், `சிவனது திருவடியை அடைதற்கு மேற்கூறிய நினைத்தல் வாழ்த்தல் வணங்கலேயன்றிச் சிவயோகமும் சிறந்த சாதனமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான் பக்குவம் எய்திய என்னைத் தனது திருவடியாகிய மலர்கள் எனது தலையிலே எனது பாசக்கட்டு நீங்குமாறு மலரும்படி செய்யும் முகத்தால், மயக்கம் கொண்ட எனது மனத்தால் திகைத்து நிற்கின்ற திகைப்பை நீக்கி ஆட்கொள்ள நினைத்தான். அதனால் நான் கோணங்கள் எல்லாம் நீங்கி, நேர்மையை அடைந்தேன் அந்த நேர்மை இது` எனச் சொல்லவாராது.

குறிப்புரை :

`கால்கொண்டு` என்பது, இறுதியில் நின்ற ``கட்டற`` என்பதனோடு இயைந்தது. அந்த `கட்டற` என்றது, `முறுக்கவிழ்ந்து மலர` என்றதாம். ``கால்கொண்டு கட்டற`` என்றாரேனும், `கால் கட்டறலைக் கொண்டு` என்றலே கருத்து. `பரன், பால் கொண்ட என்னைக் கால் கட்டறல்கொண்டு துயக்கறக் கொள்ள நாடினான்` என இயைக்க. பால் - பான்மை` பக்குவம் மேல் - அதன்பின் மேல் கொண்ட` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. கோணங்கள் ஆணவ மலத்தால் எழும் செருக்கும், கன்ம மலத்தால் வரும் இன்பத் துன்பங்களும், மாயா மலத்தால் வரும் ஐம்புலத் தாக்குதலும் பிறவுமாம். நேர்மை, மெய்யுணர்வு, முதல்வனது இயல்பு பற்றி எழும் அன்பு, அதனால் விளையும் ஆனந்தம் முதலியனவாம்.
`பக்குவம் வந்தால் நீவிரும் இவையெல்லாம் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `திருவடிப் பேறே கோட்டம் நீக்கிச் செம்மை செய்வது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர்
பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச்
செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.

பொழிப்புரை :

தாம் பெற்ற புதல்வரிடத்தில் உள்ள தீ நாற்றத்தையும், அதற்குக் காரணமான அசுத்தப் பொருள்களையும் அனுபவித்த போதிலும் அப்புதல்வரிடத்தில், வெறுப்புக் கொள்ளாமலே பெற் றோர்கள் அவை நீங்குதற் பொருட்டுப் புதல்வர்க்கு வெறுப்பான செயல்கைளச் செய்வார். (அவை நெய்யிட்டு, நலங்கிட்டு முழுக் காட்டுதல், மருந்தூட்டுதல் முதலியனவாம்) அது போலவே, சிவனும் உயிர்கள் பக்குவம் எய்தற் பொருட்டு உலகப் பற்றை அவைகட்கு உண்டாக்குதலால், அப்பற்றின் வழியவான செயல் -களைச் செய்வான் ஆகவே, அது கருணை காரணமானது அன்றி, வன்கண்மை காரணமானது அன்றாம்.

குறிப்புரை :

குற்றம் - இங்கு, அசுத்தம். இதனைக் கூறவே ``நாற்றம்`` என்றது தீ நாற்றமாயிற்று. ``குணம் குறை`` என்றது `குணம் இல்லன்` என்றபடி. `குணம் இல்லன` என்று புதல்வரது கருத்து நோக்கி `பான்மை பக்குவம்` என்பதை முன் மந்திர உரையிலும் கூறினோம். பான்மைக்கு - பக்குவம் வருதற்கு, செற்றம் - பகை; வன்கண்மை `இலாது` என்பது ஈறு குறைந்து நின்றது. செய்கைக்கு - செய்கையால்; உருபு மயக்கம். ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றம் இலாது ஓர் பற்றைச் செய்கையால், அதற்கு எய்தின செய்யும்` என்க. உலகப் பற்றிற்கு எய்தன பிறப்பு இறப்புக்களும், இன்பத்துன்ப நுகர்ச்சிகளுமாம்.
இதனால், `பக்குவம் வாயாத உயிர்கட்கு இறைவன் செய்வதும் அருளேயன்றி, வன்கண்மையன்று` என்பது கூறும் முகத்தால், அவ்வுயிர்களும் திருவடிப்பேற்றை அடைவனவே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்களை எப்பொழுதும் வருத்துவனவாய் மூன்று குற்றங்கள் உள்ளன. அதனால் ஆணவத்தின் சத்தி முற்றும் மடங்காது செயற்பட, சில வேளைகளில் ஒன்றை மற்றொன்றாக உணர்ந்தும், சில வேளைகளில் எதனையும் அறியாதே கிடந்தும் உயிர்கள் துன்புறு கின்றன. ஆகவே அம்முக்குற்றம் நீங்கப்பெற்றவரே துன்பத்தை நீக்கினவர் ஆகின்றனர். நீங்கப் பெறாதவர் அக்குற்றங்களில் கிடந்து கெடும் முறைமையை உடையவர் ஆவர்.

குறிப்புரை :

`மூன்று குற்றங்கள் இவை` என்பது வருகின்ற மத்திரத்தால் கூறப்படும். ``மான்று`` என்பதும் `மயங்கி என்றதே யாயினும் அது திரிபுணர்வையும், மயங்கி என்பது யாதும் அறியாமை -யையும் குறித்தன. ``ஆறு`` என்பதன்பின், `உடையர்` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `உயிர்களின் துன்பத்திற்குக்காரணம் முக்குற்றம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக்கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

குறிப்புரை :

காமம் - விருப்பம். வெகுளி - சினம்; வெறுப்பு. மயக்கம் - அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் ஆக்கியும் குற்றத்தை `ஐந்து` என்றல் சாங்கிய நூல் முறைமை. அந்த ஐந்தையும் அந்நூலார் `பஞ்சக்கிலேசம்` என்பர். அந்த ஐந்தையே திருவள்ளுவர். ``காமம், வெகுளி, மயக்கம்``* என மூன்றாக்கிக் கூறியதாகப் பரிமேலழகர் உரைத்தார். எனினும், தமிழ் நூலார் மூன்றாகக் கூறுவதையே சாங்கியர் ஐந்தாக விரித்தனராவர். பிடித்திருத்தல் - குறிக்கொண்டிருத்தல். `எறிமணி போலும் ஓை\\\\u2970?` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர், மணியை அடிப்பது ஒரு கணமேயாயினும், அதினின்றும் எழும் ஓசை நெடிது போது தொடர்ந்து ஒலித்தல் போல, உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது` என்றற்கு `எறி மணி ஓசை போல்` என்றார். `இவ்வோசை யோகத்திற் கேட்கப்படும்` என்பது மூன்றாம் தந்திரத்தில் கூறப்பட்டது. `ஓம்` என்பது ஒரு
சொல்லாகலானும் சொல்லுக்குச் சார்பாய் உள்ளது பொருளாகலானும் பொருளை `சார்பு` என்றார். தாமம் - சார்பு. இதன்பின், `வெளிப்பட` என ஒருசொல் வருவிக்க. ``உள்ளே உறைவது`` என்றதனால் அஃது அறிதற்கரியது என்பது பெறப்பட்டது. `வியப்பு` என்பது சொல்லச்சம்.
இதனால், `முக்குற்றங்கள் இவை` என்பதும், `அவை யோக முயற்சியால் நீங்குதலும்` கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 1

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.

பொழிப்புரை :

`துவம்` என்பதே சித்தர் மரபில், `தொம்` என மரூஉ மொழியாகக் கூறப்படுகின்றது.] `துவம்` என்னும் பதம் முன்னே எழ, அதனை அடுத்து, `தத்` என்னும் பதம் வந்து பற்ற. அதன்பின் `அசி` என்னும் பதமும் வந்து சேர, இம் மூன்றும் கூடிய கூட்டமாய் அமைந்த வாக்கியத்தின் பொருளாக ஒருவன் ஆகிவிடுவானாயின், அவன் வியாபகப்பொருளாகிய பரம்பொருளேயாவன். பின் முன்பு தான் பொருந்தியிருந்த மும்மலங்களும் நீங்கச் சிவமாகியிருப்பான்.

குறிப்புரை :

வாக்கியம் `தத்துவமசி` என்று இருப்பினும் பொருள், `துவந்ததசி` என்பதேயாகலின் அவ்வாக்கியத்தை நாயனார் இவ்வாறே கூறுகின்றார். இதுபற்றி மேலே குறினோம்* எய்துதல் - பொருள் அனுபவமாகப் பெறுதல். வேதம், முதற் பொருளைப் பொதுவாக, `பரம்` எனக் கூறும். ஆகவே, `நீ அது ஆகின்றாய்` என்னும் வேதவாக்கியத்தால் பொது அனுபவம் உண்டாதலை ``பராபரம் ஆகும்` என்ற கூறிப் பின், சித்தாந்தம் `துவம்சிவமசி` எனக் கூறுகின்ற சிறப்புப்பொருளை எய்திச் சிவமாய் இருக்கும் எனக் கூறினார். மற்றும் இது பற்றிய சில விளக்கங்கள் மேலே* கூறப்பட்ட வற்றைக் காண்க.
இதனால், `முப்பதம் ஆவன இவை` என்பதும், அவற்றால் பெறப்படும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

பொழிப்புரை :

`அறிவாவது சடத்தின் குணமாகாது, வேறேயாம்` என்பதை உணர்ந்து பூதம் முதலிய தத்துவ வகைகளையும், அவற்றின் கூறுகளாகிய தாத்துவிக வகைகளையும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் நாதமுடிவாக அவற்றின் இயல்புகளை ஆராயும் முகத்தால், `தான்` என மயங்காது விட்டொழித்து உண்மையாகவே, `தத்துவமசி` என்னும் வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள `தொம்` பதப்பொருளாகி நிற்றலே ஆன்மாவின் உண்மை இயல்பாகும்.

குறிப்புரை :

`உண்மையாக அன்றி வெறும் வாய்மொழியாக அவ்வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை` என்பதாம். இதுவே. தசகாரியத்துள் `தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி ஆன்மரூபம்` என நான்காக வகுத்துக் கூறப்படுகின்றது. சிவஞானபோதத்தில், `இவ்வான்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே``* எனப் பட்டதும் இதுவே. தொண்ணூற்றாறு கருவிகள் மேலே கூறப்பட்டன.
இதனால், முப்பாதங்களுள் ஆன்ம பதமாகிய தொம்பதப் பொருளை உண்மையாக உணருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

முப்பதங்களுள், `அசி` என்னும் பதமே தத் பதம் என்றும் `துவம் பதம்` என்றும் சொல்லத்தக்கதாய் உள்ளது. (அஃதாவது, இரண்டையும் ஒன்றாகச் செய்கின்றது.) அந்தப்பதத்தில் தான் அருட்சத்தி இருக்கின்றாள். அதனால், வாக்குக்களால் எட்ட முடியாத சிவனும் அந்தப்பதத்திலேதான் கற்பனையாக அன்றி, உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

தத் - அது. துவம் - நீ. அசி - ஆகிறாய். எனவே, `அது நீ ஆகியாய்` என்கின்ற பொழுது இரண்டையும் ஒன்று படுத்துவது `அசி` ஆதல் உணர்க. பெத்தகாலத்தில் சிவன் சீவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும், முத்தி காலத்தில் சீவன் சிவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும் சத்தியினாலேயாகலின், `அசி` என்னும் பதத்திலே நேரிழையாள் உளள் - என்றார். திருவைந் தெழுத்தில் அசிபதமாய் நிற்பது வகாரமும், நகாரமும் ஆம்.
``அவன்இவ னானது அவன் அருளால் அல்லது,
இவன் அவன் ஆகான் என்று உந்தீபற``*
எனத் திருவுந்தியார் சீவன் ஒன்றும் மாட்டாமையை வலியுறுத்துகிறது. `உளன்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. `அப்பதத்து` எனச் சுட்டு வருவித்து, `சிவன் கலந்து நின்றான்` எனமுடிக்க.
இதனால், முப்பதத்துள் `அசி` பதத்து உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து
கணுவொன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால் தேன் அமுதென இன்பத்
துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.

பொழிப்புரை :

`துவம்` பதப்பொருளாகிய ஆன்மாவும் `தத்` பதப் பொருளாகிய பரமும் `அசி` பதத்தால் ஒன்றான பின்பு, அதில் சிவமும் கலந்துவிடுமாயின், அக்கலவை, பாலும் தேனும் கலந்த கலவையில் அமுதமும் கலந்தாற்போல இனிமையோடு, உறுதியையும் தந்து நிற்கும். அக்கலவையின் சிறப்புச் சொல்லற்ற நிலையாய்த் தோன்றும்.

குறிப்புரை :

பரம், சிவம் இரண்டும் ஒன்றாயினும் பொதுவும், சிறப்புமாகிய உணர்வு வேறுபாடு பற்றி வேறுவேறாகக் கூறினார். பரமாதல் வேதாந்த ஞானத்தாலும், சிவமாதல் சித்தாந்த ஞானத்தாலும் என்க. `அசிபதத்தால்` என மூன்றாவது விரிக்க. ``ஏய்ந்து`` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. கணு - வேற்றுமை. ஒன்று - சிறிது. `ஒன்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இணை - ஒப்பு. பால், ஓரளவு இனிப்புடையது. தேன், மிக இனிப்புடையது. ஆகவே அவை முறையே ஆன்மாவிற்கும், பரத்திற்கும் உவமையாம். அமுது உறுதி பயப்பது. ஆகவே, அது சிவத்திற்கு உவமையாம். இன்பத் துணை - இனிய பொருள்களின் கலப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் அனுபவச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :

அழகிய சொற்களால் ஆகிய, பழமையான, மெய்ம்மை கூறும் மகாவாக்கியம் `தொம், (துவம்) தத், அசி` என்னும் மூன்று சொற்களை யுடையது. அச்சொற்கள் முறையே புத்தி முத்திகளை விரும்புகின்ற சீவன், பரம்பொருள், அதன் சத்தி ஆகியவற்றைக் குறித்து நிற்கும். அவ்வாக்கியத்தைப் பன்முறையும் உணர்தலால் அடையப்படும் செவ்விய பொருள், குருவாகி வந்து ஆட்கொள்கின்ற சிவனே.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதற்கண் கூட்டியுரைக்க.
`பத வாக்கியம்` என இயையும். வாக்கியம் சாதனம் ஆகலின், செம்பொருள், அதனால் அடையப்படும் பொருளாயிற்று. செம்மை, எஞ்ஞான்றும் திரிபின்றி ஒருதன்மைத்தாய் நிற்பது. இதுவே, வடமொழியில் `சத்து` என்பதற்குப் பொருள் என்பது சித்தாந்தம்.
இதனால், `முப்பத வாக்கியம் மெய்ப்பொருளை அடையும் வழி` என்பதும், அதனால், அடையப்படும் மெய்ப்பொருள் சிவனே என்பதும் கூறப்பட்டன. இரண்டாம் அடி அனுவாதமாய், மேலெல்லாம் கூறியதை வலியுறுத்திற்று.

பண் :

பாடல் எண் : 6

ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்

உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

பொழிப்புரை :

எழுத்தறி கல்வியில் அறியவேண்டிய எழுத்துக்கள் ஐம்பது. அவற்றுள் ஒன்றையேனும் அறியாதவரும் உளர். அவரும் மக்களுட் சிலராகவே இருக்கின்றனர்: (அவர்கள் நற்கதி அடையு மாறில்லை. ஆகவே,) கல்வி கற்றவர் அக்கல்வியின் முடிநிலையாக முப்பதங்களைக் கொள்ளுதல் வேண்டும். கொண்டு, செம்மையான, உயர்ந்த வாசியோகத்தைச் செய்தல் வேண்டும். அவ்யோகம் `ஹம்ஸ:` என்னும் மந்திரமாக அமைதலின், அதுவே தொம்பதமும், தத்பதமுமாய் நிற்கும். நிற்கவே, அது, `யோஹம்` என்று ஆகி, சீவன் சிவனாகின்ற பயனைத் தகும்.

குறிப்புரை :

``கல்லா நெஞ்சில் - நில்லான் ஈசன்`` ஆதலின், எழுத்தறியாதவரை இகழ்ந்தார்* ``அறியாதவரும்`` என்பதன்பின், `உளர்` என்பது வருவிக்க. `அவரும்` என்னும் உண்மை தொகுத்த லாயிற்று. சிவனை நினையாது செய்யும் யோகம் வெறு ஹடயோக மாய் ஆன்மிகப் பயனைத்தாராது ஆதலின், `உம்பனை நாடி முப்பதத் திடை வாசி செலுத்திட` என்றார். `உம்பரன்` என்பது குறைந்து நின்றது. `நாடிச் செலுத்திட` என இயையும். உரைபதம், வினைத் தொகை. செம்பரம் - செவ்விதும், மேலானதும் ஆகிய பொருள். அப் பொருளாம் தன்மையைக் குறிக்கின்ற பதத்தையே அதுவாக உப சரித்தார் `ஹம்ஸ` மந்திரம் இயல்பாக இயங்கும் சுவாசத்தாலே அமைதலின் அதனை, `அசபா மந்திரம்` என்பர். செபிக்கப்படாத மந்திரம்` என்பது இதன் பொருள். `பேசாத மந்திரம்` என்றும் கூறுவர். `தம் யோகம், பரயோகம்` எனத் தனித்தனி முடிக்க. தம் யோகம் - தம்மால் செய்யப்படும் யோகம் பரயோகம் - மேலான யோகம். ``ஆகும்`` என்றது `ஆதலாகிய பயனைத் தரும்` என்றபடி.
இதனால், `முப்பத அனுபவத்தை வாசியோகத்தால் பெறலாம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.

பொழிப்புரை :

ஆன்மாவிற்குச் சிவனை அறிகின்ற அறிவும் நழுவுவதே `அதீதம்` எனப்படும் முடிவுநிலைவாய்க்கும். அஃதாவது, ஆன்மாச் சிவனை அறியும் பொழுது, `யான் சிவனை யறிகின்றேன்` என அறிகின்ற அறிவும் அதைவிட்டு நழுவினால் அதன் பின்பே துரியாதீதநிலை வாய்க்கும்` என்பதாம். (ஆகவே அவ்வறிவு நழுவிய நிலை துரியமாதல் பெறப்பட்டது.) இனி அவ்வாறின்றி, ஞானேந்திரியம், கன்மேந்திரியம் அவற்றின் விடயங்களாகிய சத்தாதி, வசனாதி முதலிய தத்துவ தாத்துவிகங்கள் நீங்கியபோதிலும், `யான்` என்னும் உணர்வு நீங்காது. ஆகவே, அது நீங்குதல் நின்மல சாக்கிரம் முதலியவற்றிலாம். அவையும் நீங்கினால் பரசாக்கிரம், பரசொப்பனம் முதலியனவே இயற்கை நிலையாகிய முத்தியைக் கூட்டுவிக்கும்.

குறிப்புரை :

நந்தி யறிவு - நந்தியை அறிவும் அறிவு. விட - நீங்க. `யான்` என்பது நீங்குவதாகிய நின்மலாவத்தையை. `நின்மலாவத்தை` என ஒரு சொல்லாற் கூறிப்போகாது அனைத்தையும் முறையானே எடுத்தோதினார். அவற்றை அதீததம் முதலாகக் கீழ்நோக்கிக் கூறும் பொழுது `யான்` என்னும் உணர்வு ஒன்றைவிட மற்றொன்றில் மிக்கிருக்கும் - என்பது உணர்த்துதற்கு துரியத்தில் பாசநீக்கமே உளதாகும். சிவப்பேறு அதீதத்திலே உண்டாகும். ``நல ஐந்தும்`` என்றதனால் அவை நின்மலாவத்தையாயின. `அவையும் நந்தில்` என்றதனால் `நனவாதி` எனப்பட்டவை பராவத்தையாயின. நின்மலா வத்தை பராவத்தைகளின் இயல்பு மேற்போந்த அதிகாரங்களில் கூறப் பட்டன. அனாதி - இயற்கை. `அனாதியை முட்டும்` என இயைக்க.
இதனால், முப்பத அனுபவம் நின்மலாவத்தை பராவத்தைகளில் நிகழும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

பொழிப்புரை :

பரதுரியத்தில் உலகத்தை அனுபவித்தலாகிய கேவல சகல அஞ்சவத்தைகள் எஞ்ஞான்றும் நிகழாது அறவே நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரோவொருகால் நிகழினும் நிகழும். ஆகவே, நின்மல துரிய `அசி` பத அனுபவமாய் நிற்பதே. `அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை` என்பதாம்.)

குறிப்புரை :

`பரதுரியத்து ஓவும்` என இயையும் ஓவும் - நீங்கும். ஓவுவன நனவும், கனவும், சுழுனையும்` இவை கேவல சகல அவத்தைகள்` என்பது. ``படி உண்ட`` என்றதனால் விளங்கிற்று. படி - உலகம். ``படி உண்ட`` என்பதை, ``நனவு`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. விரிவு இல் கனவு - நனவுபோல விரிந்த அறிவு இல்லாத கனவு. சுழுத்தியில் அறிவு பெரிதும் ஒடுங்குதலால் அதனை, `கனவும் ஒடுங்கிய உபசாந்தம்` என்றார். ``சிவன்பால்`` என்பதன்பின், `நிகழும்` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், `நின்மலாவத்தை மகாவாக்கிய அனுபவமாக, பராவத்தை அதனையும் கடந்த அனுபவமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி
நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.

பொழிப்புரை :

எனது உடம்பினுள்ளே உற்பத்தியாகி, கீழ்மேலாய் உள்ளது. யோக முயற்சியால் மேல் கீழாய்ச் சுழல்வதற்கு இடமாகின்ற மூன்று மண்டலங்கள் உள. (அவை `தீ, ஞாயிறு, திங்கள்` என்பன) அம்மண்டலங்கட்கு மேலேயுள்ள முதல்வனைப் பற்றியுள்ள ஓர் இளமையான கொடி, அவனைப் பற்றித் தொங்கிக்கொண்டு, உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் தருதல் அறியத் தக்கது.

குறிப்புரை :

எனதாகிய உடம்பை `யான்` என்றே கூறினார். உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் என்னும் அளவில் உள்ள பகுதி தீ மண்டலமாகவும், அனாகதம், விசுத்தி உள்ள பகுதி ஞாயிற்று மண்டலமாகவும், ஆஞ்ஞை, அதற்குமேல் உள்ள ஏழாந்தானம் உள்ள பகுதி திங்கள் மண்டலமாகவும் கொள்ளப்படும். இம் மூன்று மண்டலங் களையும் கடந்து துவாதசாந்தத்தில் விளங்குகின்ற சிவனே மண்டல பரம். பரம் ஆகின்றவனை, ``முதல்வன்`` என்றார். அவனைப் பற்றிக் கொண்டு மூலாதாரம் வரையில் தொங்கி, மூலா தாரத்தில், தலையை வைத்துத் தூங்குகின்ற பாம்பு வடிவாய் உள்ளது. குண்டலி சத்தி. அதனையே, ``ஏன்றெய்தி இன்புற்றிருந்த இளங்கொடி`` என்றார். இன் புறுதல், சுகமாகத் துயிலுதல். ``நான்று`` என்பதை, ``எய்தி`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நலம் செய் ஆறு, நலம் தரும் ஆறு` எனத் தனித்தனிக் கூட்டுக. இருகாற் கூறியது உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் உணர்த்தற் பொருட்டு. யோக முயற்சியால் ஞானமே யன்றி, அதற்குமுன் உடல் நலமும் கூடுவது என்க. சுழல்கின்றது ஓர் மூன்று படி மண்டலம் - சுழலுகின்ற இடமாகிய ஒரு மூன்றடுக்கு மண்டலம். கீழ் மேலாகச் சுழல்வது, மேற்குறித்த குண்டலிசத்தி, யோக முயற்சியால் எழும் மூலாக் கினியால் விழித்தெழுந்து சுழலுதல், `அஃது` இங்ஙனம் எழுந்து சுழன்றே நலந்தரும்` என்க. `அறியத் தக்கது` சொல்லெச்சம்.
இதனால், முப்பரங்களுள் மண்டல பரம் பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே.

பொழிப்புரை :

மண்டல பரம் துவாதசாந்தத்தில் நிற்றலால் ஏனைய கடவுளர்க்கெல்லாம் மேலான கடவுளாயும், அங்கே திருநடனம் புரிவதால் மன்றில் நிறைந்ததாயும், தனது சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குவதாயும், இன்னும் நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாயும் உள்ளது. அந்தப்பரம் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்த பின்னர், குடத்துள் இருந்த விளக்குப்போல இருந்த அது, குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.

குறிப்புரை :

``மாபரம் ஆயது`` என்பதை முதலிற் கொள்க. ஏனைய கடவுளாவார் மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் விளங்குபவர்கள். `நிராதாரம்` எனப்படுகின்ற ஏழாம் தானத்தில் விளங்கும் கீழாய் அடங் குவதே ``நந்தி`` என்றது `குரு` என்றவாறு ``நந்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. இதன் பின் `ஆம்` என்பது எஞ்சிநின்றது. `வருதல், ஆதல்` என்ப வற்றிற்கு `அது` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. நன்மையை, `குணம்` என்றல் வழக்கு. நன்மை, இங்கு இனிது விளங்கி நிற்றல்.
``கன்றை நினைந்தெழு தாய்என வந்த கணக்கது ஆகாதே``l
என்னும் திருவாசகத்தையும் காண்க.
இதனால், மண்டல பரத்தின் பெருமையும், அஃது உயிர்கட்கு அருள் புரியுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

பொழிப்புரை :

பரம்பொருள், `முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது` என உணரப்படும் பொழது `தத்துவ பரம்` எனப்படும். பொருளால் வேறாகாமை பற்றி முன்மந்திரத்தில், `மண்டல பரமே குருவாய் வந்து உணர்த்துவது` எனக் கூறப்பட்டதாயினும் அவ்வாறு வந்து உணர்த்துவது தத்துவ பரமே. பரம் பொருள் குருவாகி வந்து உணர்த்தியது சைவ வரலாற்றில் அன்றிப் பிற சமய வரலாற்றில் காணப்படாமையால், குருவாகி வந்து உணர்த்தும் தத்துவ பரம் சிவபரமே என்பது தெளிவு. அது செய்த உபதேசமும் சொல்லமாற் சொன்ன உபதேசமே. அஃதாவது, சின் முத்திரையால் உணர்த்திய உபதேசமே. அந்த உபதேச பரத்திற்கு வேறாய்வெளிப்பட்ட, வேதாகமங்களை அருளிச்செய்த சதாசிவ நாயனார் வெளிப்பட்டது. முற்கூறிய கூறா உபதேசம் இனிது தெளியப்பட்டு பயன் தருதற் பொருட்டாம். அவ்விரு மூர்த்திகளது செயலாலும் பயன்கொள்பவரால் அச்செயல்கள் மேலும் மேலும் இன்பம் பெருகும்படி நன்கு பேணப்படும்.

குறிப்புரை :

``ஆறாறு தத்துவம்`` என முன்னர்க் கூறினமையால், ``அப்பரம்`` என்று, தத்துவபரம் ஆயிற்று. ``கூறில்`` என்னும் எச்சம், `கூறிற்றாயின்` எனத் தெளிவின்கண் வந்தது. `அது சிவபரமே` எனச் சுட்டு வருவித்து முடிக்க. `தத்துவ பரம் குருவாகிவந்து உணர்த்து மாயின், சதாசிவநாயனார் வேதாகமங்களை அருளிச் செய்தல் எதற்கு` என்னும் ஐயத்தை நீக்குதற்கு, ``பேறாக`` என்றார். பேறு பயன். ஆக - உண்டாதற் பொருட்டு. தென்முகக் கடவுள்பால் சென்று கேட்ட சனகாதி நால்வர் வேதாகமங்களை ஓதியுணர்ந்தபின், அவற்றின் பொருளைத் தெளிதற் பொருட்டுக் கேட்டாராயினும், பொதுவாக குரு உபதேசத்தைக் கேட்ட பின்பு அதனைத் தெளிதற்குப் பயன் படுவனவே வேதாகமங்கள் என்பது பற்றி, ``பேறாக`` என்றார். எனவே, தென்முகக் கடவுள் வரலாற்றை எடுத்துக்காட்டியது, முன் மந்திரத்தில், ``நேர்தரு நந்தியும் ஆம்`` என்றதற்கு அனுபவம் காட்டியதேயாம். வேதாகமங்களின் வழி மேலும் மேலும் சிந்தித்த பொழுதே குருவுபதேசம் நிலைபெற்றுப் பயன் தருவதாம். அதனையே, ``பேணும்`` எனக் கூறினார். பேணும் - பேணப்படும்.
இதனால், முப்பரங்களில், `தத்துவபரமாவது இது` என்பதும், அஃது உயிர்கட்கு அருள்புரியுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம்
பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.

பொழிப்புரை :

பரம்பொருள் உயிர்களைப் பாதுகாக்கும் பதியாகி நிற்றல், அவ்வுயிர்கள் வேறு பற்று எதுவும் இன்றி, அனைத்துப் பற்றுக்களையும் விடுத்து, அந்தப் பரம் பொருள் ஒன்றையே பற்றி நிற்கும் பொழுதுதான், (இப்பாதுகாவல், பிறவிக் கடலினின்றும் எடுத்துக் காக்கும் காவல்) பிற பற்றுக்களை யெல்லாம் விடுத்துப் பரம் பொருளையே பற்றுதல், குரு உபதேசத்தைச் சிந்தித்துத் தெளிதலால் உண்டாகும். அதனையே,
``ஓர்த்துள்ளம் உள்ள துணரின், ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு``
-திருக்குறள் - 357.
எனத் திருவள்ளுவர் கூறினார்.
அங்ஙனம் வேறு பற்று அறப் பரம்பொருளையே பற்றும் பொழுது அந்தப் பரம்பொருளின் ஞானமே உயிரினது ஞானமாகிப் பின்பு, அதுவே பரம் பொருளும் ஆகிவிடும். பரம்பொருளாகிய பற்றப்படும் பொருளை இவ்வாறு பற்ற வல்லவர்கட்கு அப்பற்றுதலின் கண் பரம் பொருள் பரம்பொருளாகவே வெளிப்படும்.

குறிப்புரை :

``பரம்பதியாவது`` என்பதை முதலிற்கூட்டுக. மூன்றாம் அடியில் ``பற்று`` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், ஆகுபெயரால், பற்றப்படும் பொருளைக் குறித்தது. ஈற்றடியிலும் ``பற்று`` என்பது முதனிலைத் தொழிற்பெயராய், ஏழாம் வேற்றுமை ஏற்றது. பரம் பரம் ஆதல் - உண்மையாக வெளிப்பட்டு விளங்குதல்.
இதனால், `தத்துவ பரத்தை அதன் உபதேசத்தின் வழியே சென்று அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பரம்பர மான பதி பாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரம் சிவம் மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.

பொழிப்புரை :

பாசங்களோடு சிறிதும் தொடர்பின்றி, மேலானதற்கும் மேலானதாய் நிற்கின் அதுவே மிகமேலான பரம்; பதி. (என்றது `பசு பரம்` என்றபடி பாசங்களின் மேலானது பசு; அது பரம். அதற்கு மேலானது பதி; அது பரம்பரம் `தற்பரம்` என்றும் சொல்லப் படும். தற்பரம் தனக்கு மேலானது. `தன்` என்பது ஆன்மா தற்பரம், பரமான்மா `தத்துவ பரம்` என்பது தத்துவங்களைக் கடந்த நிலையை மட்டும் குறிப்பது. `பசு - பரம்` என்பது, கன்மம் திரோதாயி இவற்றிற்கு மேல் பசு இவற்றையும் கடந்தது பசுபரம்) இவ்வாறான `பரம்` என்றும் `சிவம்` என்றும் சொல்லப்படுகின்ற அந்தப் பொருளை உயிர், மாயா காரியப் பொருள்களில் எந்த ஒன்றினின்றும் அடையப்படாத பேரானந்தத்தையுடையதாகும். அந்த ஆனந்தத்தைப் பொருளாகக் கொண்டு முயன்று அடையும் அறிவே, `அறிவு` என்று சொல்லப்படும்.

குறிப்புரை :

பாசம் பற்றாப் பரம்பரம், பரம்பரமான பதியாகும் என இயைக்க. ``பரசிவானந்தம்`` என்பதன் பின்னர், `ஆகும்` என்பது எஞ்சி நின்றது. இதன்பின், `இதனை` என்பது வருவிக்க.
இதனால், முப்பரங்களில் `பசுபரம்` என்பது இது - என்பதும் `அது பாசத்தோடு தொடர்பின்றி ஆனந்த மயமாய் உள்ளது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று
தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி
நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந்
தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.

பொழிப்புரை :

சகலத்தில் புருவ நடுவிலே நிகழும் `கேவல சாக்கிரம், சகல சாக்கிரம்` என்னும் இருவகைச் சாக்கிரத்துள், வித்தியா தத்துவங்களில் கலை முதலிய ஐந்து தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய நிலையில் ஆன்மா உயிர்ப்பும் இன்றித் தனித்துக் கிடக்கும் ஒருநிலையை அடையும் அந்நிலையும் ஒருவகைக் கேவலமே. அந் நிலையில் கருவிகள் இல்லாவிடினும், ஆணவம் உள்ளது. கருவிகள் ஒடுங்கிய நிலையில் இந்தக் கேவல நிலை உண்டாகாமல் நீங்கித் திருவருள் அறிவிக்க அறிதலாகிய அறிவினைப் பெற்று அறிகின்ற சாக்கிரம் முதலியவைகளை அடைந்து, முடிவாக அதீதத்தை எய்தி, அதன்கண் விளங்குகின்ற ஞேயத்தில் அழுந்தும் பொழுதே ஆன்மா, மேற்கூறிய பசு பரமாகிய தற்பரமாய் நிற்கும்.

குறிப்புரை :

நாலொன்று - ஐந்து. இரண்டாம் அடி, `சகலத்தில் சகலம்` என்றும், `மகா சகலம்` என்றும் சொல்லப்படுகின்ற மத்தியாவத்தையில் நிகழும் அதீதத்தின் இயல்பைக் கூறியது. ``நினைவுற்று அகன்று`` என்பதை `அகன்று நினைவுற்ற` என மாற்றிக் கொள்க. அகலுதல், மேற்கூறிய அதீதத்தை. நினைவுறுதல் - அறிவு பெறுதல். இவ்விடத்தில் அது திருவருளால் நிகழ்வதாகும். `இதுவே நின்மலாவத்தை` என்பதை மேலெல்லாம் கூறியவாற்றான் அறிக. `தான்` என்றது ஆன்மாவை. `தற்பரமே பசுபரம்` என்பது முன்மந்திர உரையில் கூறப்பட்டது.
இதனால், `முன்மந்திரதிற் கூறப்பட்ட நிலையை ஆன்மா அடைதற்கு வழி நின்மலாவத்தை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
தற்பர கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடக ராதியே.

பொழிப்புரை :

ஆன்மா தன்னைத்தான் வேறு `தத்துவங்கள் வேறு` என உணர்தல் ஆன்ம தரிசனமாம். அதன்பின், கருவிகள் நீங்கிய பின்பும் தனக்கு அறிவு நிகழக் காணுதலால் `எஞ்ஞான்றும் தனக்கு அறிவைத் தருவது சிவமே` என உணர்ந்து சிவனது அறிவையே தனது அறிவிற்குப் பற்றுக் கோடாக உணர்ந்து, அவன் அறிவினாலே அவனை நோக்குதல் சிவதரிசனமாகும். இவ்விடத்தில் ஆன்மசுத்தியும் ஓரளவு உடன் நிகழும். பின்பு அங்ஙனம் உணரப்பட்ட சிவனிடத்தில் தான் அடங்கி அவனேயாய் நிற்றல் சிவயோகமாகும். இந்நிலையில் ஆன்ம சுத்தி நிறைவுறும். அதனால், பின்பு பிரபஞ்சம் காட்சிப்படினும் ஆன்மா அதனைப் பற்றாது ஒதுக்கிவிடும். இம்மூன்று நிலைகளையும் தாண்டிய பொழுது, காலத்தைக் கடந்து நிற்றலால், `கால பரம்` என்னும், ஆன்மாவைக் கடந்து நிற்றலால், `தற்பரம்` என்றும் சொல்லப் படுகின்ற பசுபரம் தோன்றும். பின் அதனோடு ஒற்றுமைப் படுதல் நின்மல துரியாதீதமாகும். இஃது இம்மையில் அம்மையாம் ஆன்ம லாபமாகும். இவற்றிற்குப்பின் தேகம் நீங்கப் பரசிவத்தில் கலத்தல் பரதுரியாதீத மாகும். இவற்றை யெல்லாம் தெரிந்துணர்தல், அகரத்தை முதலாக உடைய எழுத்துக்களால் ஆகிய நூல்களினாலேயாம்.

குறிப்புரை :

தூயம் - தூய்மை. நன்மை, வன்மை, முதலிய சில பண்புப் பெயர்கள் மையீறு பெறாது, `நலம், வலம்` என்றாற் போல அம்மீறு பெற்று வருதல் பற்றி. `தூய்மை` என்பதை, `தூயம்` என்றார். இது நாயனாருடைய தனித்ததோர் ஆட்சி. ``கண்டதூய்மை`` என்பது `கண்டதனால் வரும் தூய்மை` எனப்பொருள் தந்து நின்றது. ஆன்ம தரிசனத்தையே, ``தற்கண்ட``என்றும், ஆன்ம சுத்தியின் முதல் நிலையையே ``தூய்மை`` என்றும், அதன் முடிநிலையை ``தன்னில் விலாசம்`` என்றும், சுத்தி பெற்ற ஆன்மாப் பின்னர் பிரபஞ்சத்தால் தாக்குண்ணாமையே ``தூடணம்`` என்றும் கூறினார். விலாசம் - விளக்கம். தன்னில் விலாசம் - சிவத்தில் வியாப்பியமாய் மாசுபற்றா திருக்கை பிறழ்தல் - மாறுதல். அஃது இங்கு நீங்குதல் மேற்று. `ஆன்ம சுத்தியையும் கடந்தது? என்றமையால், பின்னிரண்டடிகளில் ஆன்ம லாபம் கூறப்பட்டதாம். ``பரம்`` என்று அதன் தோற்றத்தை. ``கலந்து`` என்றது, `கலந்தபின்` என்றபடி. `கலந்துபின்` என்றதனால், கலத்தலும் பெறப்பட்டது. `கலந்த பின் உளதாம் பராதீதம்` என்க. இதனை ``அற்ற அதீதம்`` என்றது, `தேகம் நீங்கிய பின் நிகழும் அதீதம்` எனறபடி. நின் மலாவத்தையும், பராவத்தையும் அனுபவத்தில் சொல்லிறந்து நிற்பனவாயினும், அவற்றை முதற்கண் நூல்களால் உணர்ந்த வழியே முயற்சி கூடும் என்றற்கு ``நாடு அகராதி`` என்றார். நாடு, முதனிலைத் தொழிற்பெயர். அகராதி, அடையடுத்த ஆகுபெயர். `அகராதியால்` என உருபு விரிக்க.
இதனால், `முப்புரங்களில் தற்பரமாகிய பசுபரத்தை நூல்கள் வழியாக நுண்ணிதின் உணர்ந்து அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா
மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

பொழிப்புரை :

சிவன் நின்மல துரியாதீதத்தில் ஞேயமாய் வெளிப் பட்டுப் பின்பு அதனையும் நீங்கி நிற்பான். (அஃதாவது, `போக்கியப் பொருளாகாது நிற்பான்` என்றபடி. அவன் போக்கியப் பொருளாதல் பராவத்தைகளிலாம்) அந்நிலையில் உயிர் தற்போதத்தை இழந்து நிற்கும். ஞானத்தைப் பெற்று, அஞ்ஞானத்தினின்றும் நீங்கிய உயிரே, ஒன்றாகிய பதிப்பொருளில் அழுந்தி அதுவாகும். அங்ஙனம் ஆய பொழுது அந்த உயிரே `பரமான்மா` என்னும் பெயரைப் பெறும்.

குறிப்புரை :

``ஆகி அகன்றவன்`` என்றமையால் அவ்வதீதம் நின்மலாதீதமாயிற்று. இரண்டாம் அடியில் `அவ்வதீதத்துள்` என எடுத்துக்கொண்டுரைக்க. ``இருள்`` என்றது வாதனை அளவாய் நிற்கும் ஆணவ மலத்தை அதுவும் நீங்குதல், தேகம் நீங்கிய பின்பாம். ஆகவே, `இருள்விட்ட மன்னுயிர்`` என்றது பராதீதத்தை அடைந்த வுயிரையாம். பரான்மாவை அடைந்த பொழுது சீவான்மாவும் `பரமான்மா` எனப் பெயர்பெறும் - என்பது சர்வஞ்ஞானோத் தரத்திலும் கூறப்பட்டது. ``பர உயிர் தானே`` என்பதை, `தான் பர உயிரே` என மாற்றியுரைக்க.
இதனால், `சகல கேவலங்களில் பாலில் நெய்போல் விளங்காமலும், சுத்தத்தில் நின்மலாவத்தையில் பாசி படுகுட்ட நீர் போல ஒருகால் விளங்கியும், மற்றொருகால் விளங்காதும், பரா வத்தையில் தயிரில் நெய்போல விளங்கியும் நிற்பது பரம் என்பது கூறப்பட்டது. அந்நிலைகளில் ஆன்மா எய்தும் பயனும் விளங்குதற் பொருட்டு உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. வியாபகமான பேரொளியாயும், அப்பொழுதே உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் மி நுண்ணிய விளக்காயும் உள்ளது. அஃது ஏனைப் பொருள்கள்போல எல்லார்க்கும் இனிது விளங்கித் தோன்றாது, ஒரு சிலர்க்கே விளங்கித் தோன்றுவதாய் நின்றே, கோட்டம் இன்றி, நடுவு நிலையதாயே உள்ளது. காலத்தைக் கடந்ததாகிய அந்தப் பரம் பொருளின் இயல்புகளை உணர்ந்தவர் தவம் செய்தவராவர்.

குறிப்புரை :

`ஆதியும் அந்தமும் இல்லாதது` என வேறு கூறற் பாலதனை ஒன்றாக உடம்பொடு புணர்த்துக் கூறினார். ``அரும்பதி`` என்பதனை முதலிற் கொள்க. ``பரஞ்சுடர்`` என்பதில் பரம் - மிகு நுண்மை. பரபோதம் - பரத்தை உணரும் போதம். புண்ணியம், சிவபுண்ணியம். இதுவே தவம் ஆதல் அறிக.
இதனால், பரலக்கணம் மற்றும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

துரியங் கடந்து துரியாதீ தத்தே
அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே
தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

பொழிப்புரை :

யோகாவத்தையில், அனாகதம், விசுத்தி ஆஞ்ஞை, பிரமரந்திரம், துவாதசாந்தம் என்பன முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகட்குரிய தானங்க -ளாகும். அவற்றுள் துரியத்தானமாகிய பிரமரந்திரத்தையும் கடந்து, அதீதத் தானமாகிய துவாத சாந்தத்தில், அரிதாகிய அம்பலத்தில் பொருந்தி ஆடுபவன் பெரிய பெருமான்; மகாதேவன் அந் நடனத்தைக் காணுதல் பிரணவ கலைகளின் வழியாகவே கூடும் ஆகையால், அவ்வழியால் அக்கூத்தில் அவனைக் காணவல்லவர்க்கு மலக்குற்றங்கள் இல்லையாகும்.

குறிப்புரை :

துரியம், துரியாதீதம் என்பன அவற்றிற்குரிய இடங்களைக் குறித்தன. ``அம்பலத்து`` என்பதை, ``அரிய`` என்பதன் பின்னர்க் கூட்டுக. அரிய அம்பலம் - சிதாகாசம்; ``இயோகம்`` என்பதில் இகரம் விரித்தல். யோகம் - கூடுதல். சேர்தல். பிரணவக் கூத்து - பிரணவத்தின் வழியாக அடையப்படும் கூத்து. `கூபத்தே` என்பது பாடம் அன்று. ஏகாரம் பிரிநிலை அதனால் பிற வழிகளால் அடைதல் பிரிக்கப்பட்டது. ``கூத்தே`` என்பதில் ஏழாவது விரிக்க.
இதனால், `பரபோதத்தால் உண்மையாக அடையத்தக்க பரம்பொருள், பிரணவ யோகத்தால் பொதுவாக - ஒருவாறாக அடையப்படும்` என்பது கூறப்பட்டது. அடைந்தவர் பெறும் பயனும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

பொழிப்புரை :

மாணிக்க மணியின் செந்நிறம் முன் வந்து நின்ற போது, பளிங்கின் வெண்ணிறம் அந்தச் செந்நிறமாகவே திரிந்து காணப்படுதல் போல, வெளிப்பட்டு நின்ற அந்த நிலையான பரம் பொருள் முன்வந்து நின்றபொழுது ஆன்மாத் தன்வண்ணம் அப்பரம்பொருள் வண்ணமேயாக, அதனுள் அடங்கி நிற்கும் அப்பொழுது அதுகாறும் நிலையற்ற பிரபஞ்சத்தை நுகர்ந்து வந்த ஆன்ம ஞானம் பாச ஞானமாய் இருந்த நிலை அற்றொழியும். அவ்வொழிவில் சிவம் மேருமலையாய் நிற்க. ஆன்மா அந்த மேருமலையை அடுத்த காக்கையாய் இருக்கும்.

குறிப்புரை :

`சிவமேயாய் நிற்கும்` என்றபடி. ``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே``8 என்பதனால் இவ்வுவமப் பொருளை உணர்ந்து கொள்க. ``செம்மை, சுவேதம்`` என வாளா கூறினாராயினும், `மாணிக்கத்தினது செம்மை`` என்பதும், `பளிங்கினது வெண்மை` என்பதும் குறிப்பால் கொள்ளக் கிடந்தன. `மெய், பொய்` என்பன நிலை நிலையாமைகளைக் குறித்தன. `போதப் பாழ்` என இயையும். செம்மை - திரிபின்மை. சிவ மேரு, உருவகம். கொடி - காக்கை. ``ஆகும்`` என்றும் உருவகத்தையே தோற்றி நின்றது.
இதனால், `பரம்பொருள் உயிர்களைத் தன்வண்ணம் ஆக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வைச்ச கலாதி வருதத் துவம்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து)
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை :

எனக்குக் குருவாகிய நந்திபெருமான் சிவபெருமானால் எனக்கென என்னோடு கூட்டி வைத்த கலை முதல் நிலம் ஈறாக வருகின்ற தத்துவங்கள் எல்லாம் தம்தன்மை கெட்டுச் சிவ கரணங்களாகும் படியும், பின்பு அத்தத்துவங்கட்கு முதலாகிய அசுத்தமாயை. அதன் காரியங்களைச் செலுத்தி நிற்கின்ற கருவிகட்கு முதலாகிய சுத்தமாயை ஆகிய துன்பத்தைத் தரும் இருமாயைகளும் என்னைப் பொறுத்த மட்டில் காரண மாதற்றன்மை அடியோடு கெடும்படியும் செய்து, அதனால், யான் தடத்தசிவத்திற்கு மேலேயுள்ள சொரூபசிவத்தைத் தலைப்படும்படி. `இனியும் பிறவி வருமோ` என்னும் அச்சம் நிகழாதவாறு என்னை ஆட்கொண்டருளினார்.

குறிப்புரை :

ஏகாரம் தேற்றம். அதனால், `சிவன் இவ்வாறு சுத்தான்ம சைதன்னியத்தில் அதுதானேயாகும்படி ஆவேசித்து நின்று. அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தந்து, அது வழியாக வீடுபேற்றைத் தரும்` என்பது தோற்றுவிக்கப்பட்டது சிவஞான போதத்திலும் இவ்வாறே.
``இவ்வான்மாக்க ளுக்குத் தமது
முதல்தானே குருவுமாய் உணர்த்தும்
என்றது,
அவன் அன்னிய மின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்`*
எனக் கூறப்பட்டது வெச்ச - வெச்சென்ற; `கொடிய` என்றபடி உச்சம் - மிக மேலேயுள்ள இடம்.
இதனால், பரம்பொருள் உயிர்கட்கு முடிநிலைப் பயனை அருளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

என்னை யறிய இசைவித்த என்நந்தி
என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியில் சொருபம் புறப்படத்
தன்னை யளித்தனன் தற்பர மாகவே.

பொழிப்புரை :

எனக்குக் குருவாகிய நந்திபெருமான், முதலில் என்னை யான் அறியுமாறு அறிவித்தருளினார். (கருவிக் கூட்டத்தி -னின்றும் என்னை வேறாக யான் உணரும்படி செய்தார்.) அதனால், என்னை யான் அறிந்தபின்பு, என்னையான் அறியாது நிற்கின்ற ஓர் இடத்திலே என்னைச் செலுத்தினார். (சிவபோத மிகுதியால் சீவ போதம் தோன்றாது நிற்கின்ற திருவருள் நிலையிலே செலுத்தினார்.) பின்னர் அங்ஙனம் நின்ற அந்த ஒளியினாலே அவ்வொளிக்கு முதலாகிய பொருள் புலப்பட்டது. புலப்பட்டபின் யான் அந்த மேலான பொருளே ஆகும்படி அதனை என் கைக்குள் வருமாறு அளித்தார்.

குறிப்புரை :

`என்னை அறிய இசைவித்தது`, ஆன்ம தரிசனம்` என்றும், `என்னை அறியாதவிடத்து உய்த்தது`, `ஆன்ம சுத்தி` என்றும், `சொரூபம் புறப்படத் தன்னை அளித்தது`, `ஆன்ம லாபம்` என்றும் உணர்க. முன் மந்திரத்தில் கூறியன தத்துவ ரூபம் முதல் ஆன்ம ரூபம் முடிவாக உள்ளன ஆகையால், அவற்றிற்குமேலே எஞ்சியுள்ள பயன்களைப் பரம்பொருள் ஆசான் மூர்த்தியாய் வந்து அருளுதல் இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள்
அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

சிவன்,
``நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலாப், பகலோன்,
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்``3
எனவும்,
``இருநிலனாய்த், தீயாகி, நீரு மாகி,
இயமான னாய், எறியும் காற்றா மாகி,
அருநிலைய திங்களாய், ஞாயி றாகி,
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி
... ... ... எம்மடிகள் நின்ற வாறே``l
எனவும் அருளிச் செய்தவாறு, ஐம்பெரும்பூதங்களும், `ஞாயிறு` திங்கள், என்னும் இரு சுடர்களும், ஆன்மாவும் ஆகிய எட்டினையும் தனக்குத் திருமேனியாகும்படி அவைகளில் வேறின்றிக் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவனைப் போற்றி உய்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பரந்தும் சுருங்கியும் நின்றான்` என இயையும். பரத்தல், பெரியதிற் பெரியனாய் அளவின்றி விரிந்து நிற்றல். சுருங்கல், சிறியதிற் சிறியனாய் நுணுகி எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்றல்.
``அணோரணீயாந் ஹதோ மஹீயாந்``
என உபநிடதம் கூறும்.l செய்யுள் நோக்கி, எட்டுப்பொருள்களையும் முறை பிறழ வைத்தார். நிரந்த - எங்கும் நிறைந்த அரத்தம் - சிவப்பு. அது பண்பாகு பெயராய், அந்நிறத்தையுடைய தீயைக் குறித்தது. `அரத்தம், தரத்த` என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. தரம் - ஏனை ஏழிற்கும் மேலான வியாபகம். அங்ஙனமான தன்மையுடைமை பற்றி ஆன்மாவை உவமையாகுபெயரால் ``விசும்பு`` என்றார். ``அரன்`` என்பதை முதலிற் கொள்க. நெறியாய் - முறையாக. தாங்கி நிற்றல். அவற்றினுள் நிறைந்து அவற்றை நிலைத்திருக்கச் செய்தல், அரன், பார் முதலியவற்றுள் முறையாய் அவையாகி, விசும்பு ஒன்றைத் தாங்கி நின்றான்` எனவினை முடிக்க. சிவனுக்கு ஆன்மாவோடே நேர்த்தொடர்பு. பின்பு அதுவழியாகவே ஏனையவற்றோடு தொடர்பு. அது பற்றியே, விசும்பு ஒன்றையே சிவன் தாங்கி நிற்பதாகக் கூறினார்.
இதனால், பரம்பொருள் அட்ட மூர்த்தமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல்
உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.

பொழிப்புரை :

`தத்` பதப் பொருளாகிய சிவன், தனது உண்மை நிலையில் உள்ள பொழுது அவனின் வேறாகாது அவனோடு ஒன்றாகியே நிற்கும் சத்தியும், `பரை` என நிற்கும். அஃதாவது யாதொன்றனையும் பற்றாது, தான் தனியே மேலானதாய் நிற்கும் என்பதாம். ``சத்தியும்`` என்னும் உம்மையால், சத்தியையுடைய சத்திமானாகிய சிவனும் அப்பொழுது `பரன்` என நிற்றல் பெறப்பட்டது. `பரசிவனாய் நிற்பன்` என்க. அந்தச் சத்தியே சிவனுக்கு வடிவம். என்றது, `சிவம் சத்தியே மயமானது` என்றபடி. இனி அந்தச் சத்தி, அருள் காரணமாக உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலாகிய நாடகத்தை மேற்கொண்டு செய்யும் பொழுது, தன்னிச்சையாகவே இச்சை, ஞானம், கிரியை முதலிய வகைகளாய்ப் பலவாகி, அவ்வைந் தொழிலை இடையறாது நடத்தும்.

குறிப்புரை :

``தத்`` என்பதை முதலிற் கொள்க. `சத்து, உண்மை` என்பன ஒரு பொருட்சொற்கள். இதுவே, `சொரூபம்` எனப்படும். `பரம்பொருள் எவ்வாற்றானும் இருமையையுடையதன்று; முற்றிலும் ஒருமையையே உடையது` என்பர் மாயாவாதிகள். `அவ்வாறன்றிப் பரம்பொருள் பொருளால் ஒன்றாயினும், குண குணித் தன்மையால் `சிவம், சத்தி` எனத்தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்கும்` என்பது சித்தாந்தம். இது, ஞாயிறு பொருளால் ஒன்றாயினும் குணகுணித் தன்மையால், `கதிரவனும், கதிரும்` எனத் தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல் போல்வதாகும்.
சிவன் உயிர்களையும், மாயையையும் ஒரு கருத்துப் பற்றிச் சிறப்பாக நோக்காது, பொதுவாக அறிந்து மட்டும் நிற்றலே அவனது `தன்னியல்பு`, அல்லது `சொரூப லக்கணம்` எனப்படும். அந்நிலையில் அவன் `பர சிவன்` அல்லது `பரம சிவன்` எனப்படுவான். `சுத்த சிவன்` என்றும் சொல்வதுண்டு. அப்பொழுது அவனது சத்தியும் `பராசத்தி` எனப்படும். பரா - மேலானவள் அந்நிலையில் சத்தி செயலாற்றுதல் இல்லை. இதனையே, சத்தின் நிலையினில் தானான சத்தியும் - பரையாய் நிற்கும் என்றார். `இன்` வேண்டாவழிச் சாரியை. ``தானான`` என்றது `தாதான்மியமான` என்றபடி. `பரா` என நின்ற சத்தி உயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்ய விரும்பிமாயையைக் காரியப்படுத்த நினைக்கும் பொழுது அதில் ஒரு சிறிய கூறு, (`ஆயிரத்தில் ஒரு கூறு` என்பர்.) `ஆதி சத்தி` எனப் பிரிந்து நிற்கும். இஃது உயிர்களை கன்மம் மாயைகளினுட் செலுத்தலால், `திரோதான சத்தி` எனப்படும். திரோதானகரி, `திரோதாயி` என்னும் பெயர்களாலும் குறிக்கப்படும். மலங்களின் வழி நிற்றல் பற்றி, இதனையும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறுவர். இவ்வாறு `ஆதி` என நின்ற அது பின், `ஞானம், இச்சை, கிரியை` என மூன்றாகிப் பின் பலவாகும். அதனையே, ``ஞானாதி பேதமாய்`` என்றார். இவ்வாறு அது பலவாவது, தன்னிச்சை யாலன்றிப் பிறரால் அன்று. அதனையே, ``உய்த்தகும் இச்சையில்`` என்றார். `உய்த்தல்தகும்` என்பது, ``உய்த்தகும்`` என நின்றது. `இங்ஙனமாகி ஐந்தொழிலை அது நடத்துதற்கு முடிவில்லை` என்றற்கு, ``நித்தம் நடத்தும்`` என்றும், `இதனால் அது தன்னியல்பினின்று வேறுபடுதல் இல்லை` என்றற்கு, `நடிக்கும்` என்றும், `இவ்வாறு நடித்தற்குக் காரணம் உயிர்கள் மாட்டு வைத்த பெரிய கருணையே யன்றிப் பிறிதில்லை` என்றற்கு ``மா நேயத்தே`` என்றும் கூறினார். `நேயத்தானே` என உருபு விரிக்க. சத்தி `ஆதி சத்தி` முதலிய பெயர்களைப் பெற்றுச் செயலாற்றும் பொழுது, சிவனும் அந்நிலைகளில் எல்லாம் அவற்றிற்கு ஏற்ப ``ஆதி சிவன்`` முதலாகப் பல பெயர்களைப் பெற்று நிற்பன். பரமசிவன், `சொரூப சிவன்` எனவும், ஏனைய ஆதி சிவன் முதலியோர் `தடத்த சிவர்` எனவும் அறிக. இவ்வனைத்துச் சிவமும், சத்தியும் பெயர், உருவம், தொழில் என்னும் இவற்றால் வேறு வேறாகச் சொல்லப் படுகின்றனவேயன்றிப் பொருளால் வேறுபாடு சிறிதும் இன்றி, ஒன்றேயாம்.
``சத்திதான் பலவோ என்னில்,
தான்ஒன்றே; அனேக மாக
வைத்திடும், காரியத்தால்``*
``சத்தன் வேண்டிற்று எல்லாமாம் சத்தி தானே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், பரம்பொருளின் இயல்பு பற்றி மாயாவாதி முதலியோர் கூறும் கூற்றுக்களை மறுத்துச் சித்தாந்தம் உணர்த்தப்பட்டது.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``l
எனத்திருவருட் பயனிலும் இவ்வியல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள்
பாலிய விந்து பரஉட் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச்
சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய சத்தி மேல், கீழ், புடை என்னும் இடங்களையும், மெய், வாய், கண், நா, மூக்கு என்னும் ஐம் பொறிகளையும், விந்து, நாதம், பர நாதம் என்னும் வாக்குகளையும், அவைகட்குப் பற்றுக் கோடாய் நின்று அவற்றின் பெயர்களையே தாமும் பெற்று நிற்கின்ற சுத்த தத்துவங்களையும் இங்ஙனம் பாகுபட்ட பல பொருள்களை உண்டாக்கி அவற்றால் எல்லாம் சரியை முதலிய நான்கினாலும் ஞானத்தை வருவித்து, இவ்வாறெல்லாம் அஞ் ஞானத்திற் கிடக்கின்ற உயிர்களை ஈடேற்றுதலாகிய செயல்களை உடையதாய் நிற்கும்.

குறிப்புரை :

`ஆக்கப்படும் பொருள்கள் அளவில்லன` என்பது தோன்றுதற் பொருட்டுச் சிலவற்றை எடுத்து எண்ணிக் காட்டினாலே யன்றி, அனைத்தையும் எடுத்துக் கூறிற்றிலர். ஆகவே, அவற்றை உபலக்கணமாகக்கொண்டு, ஏனையவற்றையும் அறிதல் வேண்டும். பாலிய - பாகுபட்ட. கோலிய - வரம்பு செய்யப்பட்ட. ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. `நான்கவற்றால்` என உருபு விரிக்க. சீலம் - தூய்மை. `தூய்மை இலா` எனவே , மாசுடைமை பெறப்பட்டது. அணு - உயிர். அணுச்செய்தி - அணுவைப் பற்றிய செயல்.
இதனால், முன் மந்திரத்தில், `நித்தம் நடத்தும்`` எனத் தொகுத்துக் கூறப்பட்ட செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா
ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், `அணு` எனக் கூறப்பட்ட உயிரின் தன்மை தனியானது. ஆகவே, காணப்படாது நிற்கின்ற அந்த உயிருக்குக் காணப்படுகின்ற இந்த உடம்பில் உள்ள ஆறு அத்துவாக் -களும் உபாதிகளேயாம். அஃதாவது, அதனை மாசுபடுத்துகின்ற வேற்றுப் பொருள்களேயாம். அதனால், முப்பத்தாறு தத்துவங்களும் உயிர் தான் பெறுதற்குரிய மேலான ஒளியை அடைதற்குத் தூண்டு கின்ற சிறிய ஒளியாய் உதவுவதால், மாயையாலே உயிர் உறுதல், உயிர்த்தல், உண்டல் முதலியவைகளைச் செய்து, பின் அதிலிருந்து நீங்கியும் நிற்கும்.

குறிப்புரை :

`அதன் தன்மை வேறாம்` எனவும், `ஆறு உபாதியாம்` எனவும் மாறிக் கூட்டுக. `ஆறும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று. மேலும் - வேறாதல் மேலும், `ஆறும் உபாதியாம்` என முடிக்க. ஆறத்துவாக்களில் தத்துவங்கள் சிறந்தமை பற்றி அவற்றையே வேறெடுத்துக் கூறினார். `பரவொளிக்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. அதனை, `பர வொளியை அடைதற்கு` என விரிக்க. `பிரகாசமாக` என்பதன் ஈறு குறைந்தது. `உறா` என்பது நீட்டல் பெற்றது. `உற்று, உயிர்த்து, உண்டு` என்றதனால், `கண்டு, கேட்டு` என்பனவும் கொள்ளப்படும். `மாயை -யாலே` என உருபு விரித்து `உறா, உயிர்த்து, உண்டு உறங்கும்` என முடிக்க. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் மாயா காரியங்களால் வருதலால், `மாயையால் உயிர் இவைகளை நுகரும்` என்றார். உறங்குதல் - சுழுத்தி நிலையை அடைதல். `உறா` முதலியவற்றிற்கும், உறங்குதலுக்கும், `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. `மாயையும் உயிர்க்கு உபாதியேயாயினும், நோய்க்கு மருந்துபோல, அஃது உயிர்க்கு நலம் பயக்கும்` என்பது ``அனைத்தாகும் தத்துவம்`` என்பது முதலாகக் கூறப்பட்ட பொருள்.
இதனால், முன் மந்திரத்தில் ``அணுச் செய்தி`` எனக் கூறப்பட்ட பொருள் அன்னது ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி
சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும்
தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு)
அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.

பொழிப்புரை :

`தத்` பதப் பொருளாகிய பதி, தன்னிலையில், நிலையான ஒப்பற்ற, முதன்மை வாய்ந்த பேரறிவே எனினும், அதுவே உயிர்களை நோக்கி இயங்கும் பொதுநிலையில் உயிர்களை உலகத்தை நுகரும்படி செய்கின்ற பாச அறிவாய் நிற்கும். (`திரோதான சத்தியாய் நிற்கும்` என்றாம். ) அந்தப் பாச அறிவால் உயிர் உலகத்தை நுகர்ந்து வருங்காலத்தில் அந்தப் பாச அறிவும், அதன் அறிவாகிய பசு அறிவும் நீங்கப் பெற்ற பொழுது, முன்சொன்ன பேரொளியிற்கலந்து, அதற்கு அப்பாலும்போய், முன்னை நிலையெல்லாம் நீங்கப்பெற்று நிற்கும். அப்பொழுது அதற்கு ஒத்ததும், உயர்ந்ததும் இல்லாத ஓர் உயர்வை அஃது அடையும்.

குறிப்புரை :

`அச் சிற்பரம்` எனச் சுட்டு வருவிக்க. ``போதம்`` என்பதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. `தொல் பதம்` என்பது, எதுகை நோக்கி, ``தொற்பதம்`` எனத் திரிந்து நின்று. பதம் - நிலைமை. தீர் பாழ் - தீர்ந்ததாகிய பாழ். இது பின்னர், `போதப் பாழ்` எனக் குறிக்கப்படும். `அப்புறமாய்` என ஆக்கமும், ``இங்கு`` என்பதன்பின், `அதற்கு` என்பதும் வருவிக்க.
இதனால், சிவசத்தி திரோதான சத்தியாய் நின்று செயற்படுதலால் வரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக்
கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.

பொழிப்புரை :

முதல் நூல்களாகிய வேதாகமங்கள், சில இடங்களில் சுத்த மாயையை, `சிவனுக்குத் திருமேனி` எனக் கூறும். அஃது உபசாரமே.
[``சுத்ததத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவ மாகும்;
நித்தம்என் றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே``*
என்னும் சிவஞான சித்தியையும், அதன் உரையையும் காண்க.] ஏனெனில், சிவன் துரியத்தையும் கடந்து அதீதமூர்த்தி. (நின்மல துரியம் வரையிலே சுத்தமாயை உள்ளது) தத்துவசுத்தி, ஆன்மரூபம் ஆகியவற்றைக் கடந்து ஆன்ம தரிசனத்தைப் பெற்ற ஆன்மாவும் சிவ தரிசன சிவயோகங்களால் ஆன்ம சுத்தியை எய்தாது, காரணோபாதி யாகிய சுத்தமாயையில் இருப்பானாயின் அவனது நிலையை நன்கு ஆராயுமிடத்து அவன் தூய்மை எய்தியவன் ஆகான்.

குறிப்புரை :

``காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால்8 என எதிர்மறை முகத்தானும், உடம்பாட்டு முகத்தானும் தெளிவுபடக் கூறுதலின் சிவனுக்குச் சத்தியே - அருளே திருமேனியாவதல்லது, மாயை திருமேனியாகாது.
``அரிதரு கண்ணி யானை ஒருபாக மாக
அருள்கா ரணத்தில் வருவார்``
என்பதே திருமுறை மொழி. இதனை,
``உருஅருள்; குணங்களோடும்,
உணர்வருள் உருவில் தோன்றும்
கருமமும் அருள் அரன்றன்
கரசர ணாதி சாங்கம்
தரும்அருள்; உபாங்க மெல்லாந்
தானருள்; தனக்கொன் றின்றி,
அருளுரு உயிருக் கென்றே
ஆக்கினன்; அசிந்த னன்றே``*
எனச் சாத்திரமும் பலபடியால் வலியுறுத்தி ஓதுதல் காண்க. இங்ஙனமாகவே, சிவன் அசுத்த மாயையைப் போலச் சுத்த மாயையை விலக்காமல் அதிட்டித்து (இடமாகக் கொண்டு) நிற்றல் பற்றிச் சில இடங்களில் அதனைச் சிவனுக்குத் திருமேனியாக உபசரித்துக் கூறும். ஆகவே, சிவனுக்கு உண்மையில் திருமேனியாய் அமைவது அவனது சத்தியே என்பதாம்.
``ஆகாச சரீரம் பிரஹ்ம``
என்னும் உபநிடத மொழியில் ``ஆகாசம்`` என்பதும் சிதாகாசமாகிய சத்தி என்பதே சித்தாந்தம். ``பர வான்`` என்றது இங்குச் சுத்த மாயையை. காரணோபாதியாவதும் அதுவே. ``பரன்`` என்றது, தத்துவங்கடந்து தன்னைத்தான் கண்டமையால் பாசங்களின் நீங்கினவனாகிய ஆன்மாவை. ``பரனும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், முன் மந்திரத்தில், ``சுந்தரச் சோதிபுக்கு அப்புறமாய் அறுதல்` எனக் கூறியது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து)
அளியா கியதற் பரங்காண் அவன்றான்
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

பொழிப்புரை :

`மாயா காரியமாகிய உலகப்பொருள் அனைத்திலுமே பரமசிவன் அருள் காரணமாக நிறைந்திருக்கின்றான்` என வேதாகமங்கள் கூறும். அவ்வாறு கூறுவதற்கும், `அவனது சத்தியே அவ்வாறு நிறைந்துள்ளது` என்பதே கருத்து. பூதாகாயம் ஏனைப் பூதங்களில் எல்லாம் நிறைந்திருத்தல் போல அனைத்துலகங் களிலும் நிறைந்திருத்தல் பற்றி அச்சத்தி, `பரவெளி - பராகாயம்` எனக் கூறப்படுகின்றது. அந்தச்சத்தியே, உண்மையில் பரமனுக்கு திருமேனியாகும்.

குறிப்புரை :

அனைவரும் ஆறந்த ஐம்பூதங்களைக் கூறும் முகத்தால் உலகப்பொருள் அனைத்தையும் கொள்ளவைத்தற்கு அவற்றைத் தோற்ற முறையில் வைத்து எண்ணிக் காட்டினார். `நின்றது பரம்` என இயையும். ``அளியாகியபரம்`` என்றது உடம்பொடு புணர்ந்தது. காண், முன்னிலையசை ``அவன்றான் சத்தி`` என்றது, `சத்தி அவனின் வேறானதன்று`` என்றதாம். `பரம் பொருள் தன்னிலையில் தான் நிற்கும் பொழுது சிவம் என்றும், உலகத்தோடு ஒன்றாய், வேறாய், உடனாய்த் தொடர்பு பட்டு நிற்கும் பொழுது சத்தி என்றும், ஐந்தொழில் செய்யும் பொழுது பதி என்றும் பெயர்பெறும்` என்னும் ஆகமப்பொருளை யுணர்த்துவார். `வெளி, கால் ... ... ... நின்ற வெளியாய சத்தி` என்றார்.
இதனால், முன் மந்திரத்தில், `பரவான் உடல் - என்றல் உபசாரமாயின், உண்மை யாது` என்றெழுந்த அவாய்நிலை நிரப்பப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

மேருவி னோடே விரிகதிர் மண்டிலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டா பிறிதில்லை தானே.

பொழிப்புரை :

இடைகலை பிங்கலைகளை, `சந்திர சூரியர் வழி` எனக் கூறுதலால், அவ்வழியாக இயங்கும் பிராண வாயும் வலம் வரும் சுழுமுனை நாடியை, `மகாமேரு` என்றலும், அந்தச் சுழுமுனை நாடியின் நடுப் பாகமாகிய அநாகத விசுத்தி ஆதாரங்களை, `சூரிய மண்டலம்` என்றலும் யோக நூல் வழக்கு. அனாகதமாகிய இருதயம் பூசைத் தானமாகக் கொள்ளப்படும். அதனால், சுழுமுனை வழியாகச் சென்று இருதயத்தில் சிவபெருமானை நன்றாக நினைந்து வழிபடு பவனை, `மேருவினோடே சென்று விரிகதிர் மண்டிலத்தில் (சிவனை) ஆரநினையும் அருந்தவயோகி` (`சென்று`) என ஒரு சொல் வருவித்து, `விரிகதிர் மண்டிலத்தில்` என உருபு விரித்து கொள்க.) ``செய்யின்`` என்பது `செய்வதனால்` எனப் பொருள்தந்து நின்றது. ஆகவே, `அந்த அருந்தவ யோகிக்குச் சிவனருள் தானாகவே கிடைக்கும்` என்றும், `அவன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் வேறொன்றும் இல்லை யாகையால் அந்நெறியைவிட்டு அவன் விலகுதல் வேண்டா` என்றும் கூறினார்.

குறிப்புரை :

இதனால், `இங்குக் கூறப்பட்ட இலக்கணங்களையுடைய பரம்பொருளை அடைதற்கு யோகம் சிறந்த சாதனம்` எனக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம்
இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.

பொழிப்புரை :

[ஆன்மா, `சீவன்` எனப்படுவது பாசநிலையில் ஆகலின், முதற்கண் சொல்லப்பட்ட நனவு, சகலத்தில் கேவலமாய் நிகழும். கீழாலவத்தையிலும், சகலத்தில் சகலமாய் நிகழும் மத்தியாலவத்தையிலும் நிகழும் நனவுகளாம்.] கீழாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியம் ஆணவ அனுபவம் மிகுவது ஆதலாலும், மத்தியாலத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய வற்றில் நிகழும். துரியம் ஐம்புல அனுபவம் மிகுவது ஆதலாலும் அவையிரண்டும் சீவ துரியமாம். (இவை தொடக்கத்தில் நிகழ்வன. மேலாலவத்தையாகிய யோக துரியமும் சீவதுரியமே) இறுதியில் நிகழும் பராவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் உயிர் பாசப்பற்று இன்றிப் பரம்பொருள் அனுபவமே மிகப் பெற்றிருத்தலால் அது பர துரியமாம். (`இஃது இலய முத்திநிலை` என்பது மேலே குறிப்பிடப்பட்டது.) இடையில் மத்தியாலவத்தைக்கு மேல் நிகழும் மேலாலவத்தையாகிய யோகாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும், நின்மல சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும் உலகியல் உணர்வு முற்ற நீங்காத நிலையில் சிவானுபவம் மிகப் பெறுவன ஆதலின் அவை பரதுரியம் ஆகாது சிவதுரியமாம். இவற்றுள் சிவதுரியமும், பர துரியமுமே `தத்துவமசி` மகா வாக்கிய அனுபவங்களாம்.

குறிப்புரை :

தனது - பரம் பொருளினது. இன - இன்ன `இவை` என்றபடி `இவை` என்பது அண்மைச் சுட்டாகலின், அது பின்னிரண்டு துரியங்களையே குறித்தது. பதத்து ஈடு - பத அனுபவத்தில் இடுவன.
இதனால், `முத்துரியங்களாவன இவை` எனச் சுட்டியும், விளக்கியும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம்
தானாம் துரிய நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா
வானான மூன்று துரியத் தணுகுமே.

பொழிப்புரை :

சீவன் சீவனாகவே இருக்கின்ற மத்தியாலவத்தைச் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் ஆன்மா, `துவம்` பதப் பொருளாய் இருக்கும். ஆன்மாச் சிவமாந்தன்மையைப் பெறுகின்ற நின்மல சாக்கிரம், பராசாக்கிரம் முதலியவற்றில் நிகழ்கின்ற துரியங்களில் ஆன்மா சிவமாகி, `தத்` பொருளாய் இருக்கும். ஆகவே, இவ்விரு துரியங்களிலும் ஆன்மாப் பாசம் அற்றதாம். சகலத்தில் கேவலத்திற்கு மேலாக நிகழும் மூன்று துரியங்களிலும் ஆன்மா இவ்வாறான நிலைகளை அடையும்.

குறிப்புரை :

``தான்`` மூன்றில் முன்னது சீவனையும் ஏனையவை பரத்தையும் உணர்த்தின. ``தான்மூன்றில்`` என்பதை `மூன்றில் தான்` என மாற்றியுரைக்க. ``அரு நனா`` என்றது, எளிதில் இயல்பாக நிகழாது அரிய திருவருளால் நிகழ்வது என நின்மல சாக்கிர பரசக்கிரங்களைக் குறித்தன. ``அருநனாவான்`` என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத்திரித்துக் கொள்க. ``காலத்தினாற் செய்த நன்றி``l என்பதிற் போல,
இதனால், `முத்துரியங்களுள் சீவ துரியம் பெத்த துரியமும் ஏனைய துரியங்கள் முத்திதுரியமும் ஆம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அணுவின் துரியத்து நான்கும்அ தாகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சார் முத் துரியக்
கணுவிரு நான்கும் கலந்தஈ ரைந்தே.

பொழிப்புரை :

பெத்த துரியம் அனைத்தையும் `சீவ துரியம்` என ஒன்றாகவும் முத்தி துரியம் இரண்டையும் ஒன்றாகவும் ஆக்க. அவ்விரண்டிலும் துரியம் முதலாகக் கீழ் நோக்க உளவாம் அவத்தைகள் இருநான்கு; எட்டு. இனி இவ்விரண்டிலும் உள்ள துரியா தீதங்களைக் கூட்ட அவத்தைகள் பத்தாகும். இவைகளில் பெத்தா வத்தை ஐந்தில் ஆன்மாக்கீழ் நிலையதாயும், முத்தியவத்தை ஐந்தில் மேல்நிலையை எய்தியும் இருக்கும்.

குறிப்புரை :

`அது வாகி` என்பதில் முற்றியலுகரம் கெட்டு ``அதாகி`` என நின்றது. பணிதல் - கீழ்போதல். தணிவு - தாழ்தல். பரமாதல் - மேற் போதல். சார், முதனிலைத் தொழிற் பெயர். ``பரமாகி`` என்னும் எச்சம் இதனோடே முடிந்தது. கணு - சேர்க்கை. சேர்க்கையால் வருவதை, `சேர்க்கை` என்றார். `கணுவில்` என உருபு விரிக்க. `சீவ துரிய பரதுரிய அவத்தைகளின் தொகை பத்து` எனச் சுருங்கக் கூறிப் போகாமல் இங்ஙனம் விரிவாகக் கூறியது, `ஓர் ஐந்து தாழ்வுடையன; மற்றோர் ஐந்து உயர்வுடையன` என்பது உணர்த்துதற்கும்; அதீதத்தைக் கூட்டாமல் துரியத்தோடே முடித்து. அவத்தைகளை `நான்கு` எனவும், `எட்டு` எனவும் தொகை கூறுதலும் உண்டு என்பது உணர்த் துதற்குமாம் என்க.
இதனால், முத்துரியங்களது தராதரங்கள் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
நேரந்த மாக நெறிவழி யேசென்று
பாரந்த மான பராபரத் தைக்கியத்(து)
ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.

பொழிப்புரை :

கீழாலவத்தை ஐந்து, மத்தியாலவத்தை ஐந்து, மேலாலவத்தை ஐந்து இம் மூவைந்து பதினைந்தவத்தைகளை `சீவாவத்தை` என ஓரைந்தாகவும், நின்மலாவத்தை ஐந்து, பராவத்தை ஐந்து இவ்வீரைந்தையும் `பராவத்தை ஐந்து` என ஓரைந்தாகவும் தொகுக்க அவத்தைகள் ஈரைந்தாகி, `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரியங்களும் அவற்றுள்ளே அடங்கும். அவ் அவத்தைகளை மேலாலவத்தைச் சாக்கிரம் முதலாகத் தொடங்கிப் படி முறையாக மேலே மேலே ஏறிச்சென்று, முடிவில் எல்லாமாய் உள்ள பரம்பொருளில் ஒன்று பட்டு, முடிந்த பயனைப் பெற்று, அதற்கு முன்னே நிகழ்ந்த யோக துரியம், நின்மல துரியம் ஆகிய இரண்டு உபாதிகளையும் பயனுடைய அவத்தைகளாகும் படி ஆக்கிக்கொள்க.

குறிப்புரை :

பார் - உலகம். பார் அந்தமான அனைத்துலகங்கட்கும் அப்பாற்பட்ட. பராபரம் - மேல், கீழ் அனைத்துமாய் நிற்பது. நின்மலா வத்தையை நோக்க யோகாவத்தையும், பராவத்தையை நோக்க நின்மலா வத்தையும் இடர்தருவன வாதல் பற்றி அவற்றை ``உபாதி`` என்றார்.
இதனால், `முத்துரியங்களையும் முறையால் எய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.

பொழிப்புரை :

இறைவனை அறியுமாற்றால் அறியின், பல், நா, உதடுகள் இவைகளில் அகப்படாத ஒரு மெய்ப்பொருள் யாராலும் அணுக முடியாதாயினும் அணுக முடியும். ஆகையால், மெய்ப் பொருளை அடைய முயல்கின்றவர்களே, நீவிர் அதனை அடைதற் பொருட்டு துரிய நிலத்திலிருந்து கீழ் இறங்கிவிடாமல் இருங்கள்.

குறிப்புரை :

`துரியத்திற்குக் கீழ் உள்ள அவத்தைகள் தாம் மெய்ப் பொருளோடு தொடர்பில்லாத நிலை` என்பதும், `பல், நா, உதடுகளின் செயல்கள் துரியத்திற்குக் கீழ் உள்ள நிலைகளில்தான் நிகழும்` என்பதும் கருத்து. இங்குக் கூறிய துரியம் சிவ துரியம், ஏனெனில், சீவதுரியத்தில் மெய்ப்பொருள் தொடர்புறாது நிற்கும் ஆகலானும், பரதுரியத்திற்கு சென்றோர் மீளார் ஆகலானும் என்க. `இறைவனை ... ... ... தத்துவந்தான எட்டாதெனினும்நின் ரெட்டும். (ஆதலால்) துரிய நிலத்தினைத் தொட்டே இருமின்` எனக் கூட்டி முடிக்க.
``துரியம் கடந்தஇத் தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றதென் றுந்தீபற;
துறந்தார் அவர்களென் றுந்தீபற``*
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியுடும் அன்பர்க் கவன்``*
என்பவற்றிலும், `சிவதுரியத்திற்றான் சிவன் தொடர்புற்று நிற்பான்` எனக் கூறப்பட்டது. துரியத்திலே நிலையாக நின்றால், பிரபஞ்சம் தாக்கா தொழிதலுடன், மேல் அதீதத்திற்குச் செல்லும் ஆற்றலும் உளதாகும் என்க.
இறைவனை அறியுமாற்றால் அறிதலாவது, அவன் அருளாலே அறிதல். பல், நா, உதடுகளில் தட்டாமையாவது, சொல்லவாராமை. `எட்டப்படாது, எட்டப்படும்` என்பன, `எட்டாது` எனவும், ``எட்டும்`` எனவும் வந்தன.
இதனால், `முத்துரியத்துள் சிவ துரியமே முத்திக்கு வழி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே
பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொழிப்புரை :

சடங்களாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கும் முகத்தால், அடர்ந்துள்ள மாயையைப் போக்கிச்சித்தாய் நின்றுபின்னர் வெளிப்படுகின்ற திருவருளாலே அதுவேயாய் நிற்கின்ற தன்மையால் உயர் நெறியை அடைந்த அன்பர்களே சிவனது இயல்பை உண்மையாக உணர்ந்தோராவர்.

குறிப்புரை :

``அறிவாய்`` என்பதை, `சிதைத்து` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அசத்து`` எனவே, அசித்தாதலும் சடம் என்பதும் பெறப் பட்டது. `அருளாலே அருளாய்`` என்றதனால், `அருள் தானே வெளிப் பட, அதனாலே ஆன்மா அந்த அருளேயாய் நிற்கும்` என்பதும், `ஆறா றகன்று அறிவாய் அருளாயிடும்` என்றனால், `அருள் வெளிப்படல் ஆன்மா அறிவான பின்னர் ` என்பதும், `ஆன்மா அறிவாதல் ஆறாறகன்றபின்னும்` என்பதும் பெறப்பட்டன. ``ஆறாறகன்று`` என்பது தத்துவசுத்தி ஆன்ம ரூபங்களையும், ``அறிவாய்`` என்றது ஆன்ம தரிசன சிவரூபங்களையும், ``அருளாலே அருளாயிடும்`` என்றதனால், ஆன்ம சுத்தி, சிவதரிசன சிவயோகங் களையும் குறித்தமை காண்க. இவற்றுள் சிவயோகமே சிவதுரியமாம். `பெற்றியால்` என உருபு விரிக்க.
இதனால், `சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட சிவதுரியமே சிவத்தோடு உண்மையில் தொடர்பு கொள்ளும் நிலை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நனவில் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யம்தற் பதமே.

பொழிப்புரை :

பிராரத்த வினை நீங்காமையால், கருவி கரணங்களோடு கூடிய உடம்பிற்றானே புருவ நடுவின் கண் நிகழும் சுத்த சாக்கிரம் தலிய சிவ ஐந்தவத்தைகளில் நாலாவதாகிய சிவ துரியத்தில் சீவன் ஆன்ம சுத்தியைப் பெற்று `துவம்` பதப் பொருளாய் நிற்றல்போல, பிராரத்தவினை நீங்கினமையால், கருவி கரணங்களைக் கடந்து நிற்கின்ற நிலையில் நிகழும் பர சாக்கிரம், பர சொப்பனம் முதலாக நிகழும் பர அவத்தை ஐந்தில் நாலாவதாகிய பரதுரியத்தில் ஆன்மா, `தத்` பதப் பொருளாய் நிற்கும். அஃதாவது, `சிவமேயாய் நிற்கும்` என்பதாம்.

குறிப்புரை :

`பராவத்தைகளில் சீவன் முத்தி தவிர ஏனைய நான்கும் உண்மையில் உடம்பு நீங்கிய பின்னர் நிகழ்வனவாயினும் சீவன் முத்தி நிலையிலும் அவை பொதுவாக நிகழும்` என்பதும், `இம்மையில் (உடம்பு உள்ளபொழுது) பராவத்தையில் முடிவான அதீத நிலையில் நின்றவர்களே அம்மையில் (உடம்பு நீங்கியபின்) பரமுத்தியை அடைவர்` என்பதும், `ஏனையோர் தாம் தாம் இங்கு நின்ற நிலைக்கு ஏற்ப அங்குள்ள நிலைகளை அடைவர்` என்பதும் இம்மந்திரத்தால் அறிக. கேவலாத்துவிதிகளும் சீவன் முத்தரை, வரிட்டன், வரியான், முதலாக வகைப்படுத்துவர்.
முதலடியின் ஈற்றில் `கண்` உருபு விரிக்க. ``தனதுயிர்`` என்பதில் ஆறன் உருபு, `இராகுவினது தலை` என்பதுபோல `ஒற்றுமைக் கிழமைக்கண்` வந்தது. பின்னர் ``வினை அறு சீவன்`` என்றதனால், முன்னது `வினை உருசீவனது நிலை` என்பது பெறப்பட்டது. வினை, இங்குப் பிராரத்தம். ``ஆமாறுபோல`` என்ற அனுவாதத்தால், ஆமாறும்தானே பெறப்பட்டது. `தன` என்பது இடை ஐகாரச் சாரியை பெற்றது.
இதனால், சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட பர துரியத்தின் சிறப்பு அதனது பயன் உணர்த்தும் முகத்தால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :

`துவம்` பதம், `தத்` பதம் முதலிய சொற்களின் வழியாக நிகழும் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரிய அனுபவ நிகழ்ச்சிகளில், பெரிதும் விரும்பப்பட்ட மூன்றாவதாகிய பரதுரியத்தில் முதற்கண் சொல் நிகழ்ச்சி சிறிது உளதாயினும், முடிவில் சொல்லற்றதாகிய பேரொளியாம் பரசிவம் அனுபவப்பட்ட அந்நிலை, உலக வாசனை முழுதும் அற்றுச் சூக்குமத்திலும் சூக்குமமாய் விளங்க, `அவ்விடத்தில் அனைத்துப் பொருட்கும் அப்பாற்பட்ட அந்தப் பரசிவமே தனது பேரருள் காரணமாகக் குறுமூர்த்தியாய் வந்து தனக்கு அருள் செய்தது` என்னும் உண்மையும் விளங்கும்.

குறிப்புரை :

``தற்பதம்`` என்பதன்பின் `முதலிய` என்பது வருவித்து, `சொல்லால் நிகழும்` என உருபும், பயனும் விரிக்க. `முத்துரியத்துள்` என `உள்` என்பது விரிக்க. போல் அசை, ``பரம்`` என்பதன் பின் `வெளிப்பட`, என்பதும், `அதிசூக்கம்` என்பதன்பின் `ஆக` என்பதும், ஈற்றில் `ஆம்` என்பதும் வருவிக்க.
இதனால், முத்துரியத்துள் முடிநிலைத் துரியத்தின் உயர்வுகூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

பொழிப்புரை :

மும்முத்திகளுள் முதலாவதாகிய சீவன் மும்முத்தி யாவது, உலகத்தில் இருப்பினும் உலகத்தைக் கடந்து நிற்கும் நிலையாம். எனவே, `இஃது உடம்புள்ள பொழுதே நிகழ்வது` என்பது அறியப்படும். நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலியனவாம். மூன்றாவதாகிய பரமுத்தியாவது, உயிர் முன்பு இருந்த பாச நிலைகள் முற்றும் அற்று நிலையான அமைதியைப் பெறும் நிலையாகும். (ஆகவே, இஃது உடம்பு நீங்கிய பின்னர்ப் பெறப்படுவதால் விளங்கும். பிறர், `விதேக முத்தி` என்பர். இந்நிலையில், `சிவானந்தத்தை நாம் அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வும் இன்றி, அந்த ஆனந்தத்துள் மூழ்கியிருக்கும் நிலையாதல் பற்றி இதனை, `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். ஆனந்தாதீதம் ஆனந்தத்தில் ஆதீதம். இவ்வாறன்றி, உலக இன்பத்தில் தோயாது, சிவானந்தத்திலே தோய்தல் சிவமுத்தியாம். (எனவே நின்மலாவத்தையில் துரியாதீத நிலையாம்.) இவ்வாறு மூன்று நிலைகளில், உயிர் மூன்று தன்மைகளை உடையதாக, முத்தி மூன்று வகையாய் இருக்கும். இவற்றுள் சொல்லிறந்த முத்தியாகிய பரமுத்தியே நாதாந்த முத்தியாகக் கருதப்படும்.

குறிப்புரை :

``அதீதம்`` என்பது, `கடந்தது` என்னும் பொருளது. ஆனந்த அனுபவத்தை, ``ஆனந்தம்`` என்றார். `தாரகத்தில்` என்பது இடைக்குறைந்து நின்றது. தாரகம் - பிரணவம். இது அனைத்துச் சொற்களும் ஆதல் அறிக. ஓவுறு தாரகம் - தாரகம் ஓவிய (நீங்கிய) நிலை. உள்ளும் - உள்ளப்படும். என மாறிக் கூட்டியுரைக்க.
இதனால், `மும்முத்திகளாவன இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும்
ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும்
ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று)
ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.

பொழிப்புரை :

[``அறிவுடையார் ஆவ தறிவார்;`` அறிவிலார் - அஃதறிகல்லாதவர்``* என்றபடி, பின் வளைவதை முன் கூட்டிக் காரிய காரண இயைபு பற்றி உய்த்துணர்பவரே `அறிவுடையார்` எனப் படுவார். அங்ஙனம் அறியமாட்டாதவர் அறிவிலார் ஆவர். அறிவால் இன்பம் வருதலும், அறியாமையால் துன்பம் வருதலும் நியதி. ஆகவே] பின் விளைவதை முன்கூட்டி அறிந்து வருமுன்னர்க் காத்துக் கொள்ளாத உயிர்கள் பிறப்பாகிய துன்பத்திலே வீழ்ந்திடும். பின் விளைவதை முன்கூட்டியே அறிந்து, `வருமுன்னர்க் காத்துக் கொண்ட உயிர்கள் சிவனது திருவருளிலே சென்று பொருந்தும். `சிவனாலன்றி உடம்பாலும், உலகத்தாலும் உயிர்கட்கு வருவதொன்றில்லை` என்பதை உணர்ந்து, அவனது அருளைப் பெற்று, அந்த அருளாலே அவனுடன் ஒன்றுபடுதலே முத்தியாகும்.

குறிப்புரை :

`எனவே, சிவனது அருளைப் பெற்றோர் முத்தியாகிய இன்பத்தை அடைவர்` என்பதாம். `பிற` என்னும் முதனிலையே, `பிறப்பு` எனத் தொழிற் பெயர்ப் பொருளைத் தந்தமையின் முதனிலைத் தொழிற்பெயர்.
``ஞானத்தால் வீடு ... ... ... அஞ்ஞானத்தால்
உறுவதுதான் பந்தம்``*
என்பார், ``ஆவதறியா உயிர் பிறப்பால் உறும் - ஆவதறியும் உயிர் அருட்பால் உறும்`` என்றார். அகன்று அகமாகிய உடம்பையும், புறமாகிய உலகத்தையும் அடிநிலைக்காரணமாக உணர்தலினின்றும் நீங்கி, ஓவு சிவன் - எல்லாவற்றையும் கடந்தவனாகிய சிவன்.
இதனால், முத்திகளின் பொது இலக்கணம் கூறப்பட்டது. இதனானே, `சித்தாந்த முத்தி இது` என்பதும், `ஏனைச் சமயவாதிகள் பிற பிறவாகக் கூறும் முத்திகள் எல்லாம் பூர்வ பக்க முத்திகளே` என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அவர் கூறும் முத்தி வகைகளைச் சிவஞானசித்தி* சிவப்பிராகச* நூல்களிற் காண்க. முத்தியை இலக்கண வகையால் தெரிந்துணர்த்துபவர் `அதனை அடைதல் ஞானம் ஒன்றானேயாம்` என்பதும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

சிவமாகி மும்மலம் முக்குணஞ் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத் தைக்கியத்
துவமா கியநெறி சோகம்என் பார்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

பொழிப்புரை :

சித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களையும், ஏனைச் சமயத்தார் முடிவாகக் கூறுகின்ற முக்குணங்களையும் (சாத்துவிக ராசத தாமதங்கள்) போக்கிச் சிவமாம் தன்மையை எய்திச் சரியை முதலிய தங்களால் உண்டாகும் அந்த ஞானத்தின் பயனாகப் பெறுகின்ற மும்முத்திகளையே, `தத்துவமசி` `ஸோஹமஸ்மி` என்னும் மகா வாக்கியங்கள் கூறும் முத்தி நிலையாக உணர்ந்து, அந்த மகாவாக்கியப் பொருள்களை அனுபவமாக உணர வல்லவர்கட்கு நன்மையே நிறைந்து, தீமை சிறிதும் இல்லாதவனாகிய சிவன், பிற பொருள்களை யெல்லாம் விலக்கித் தான் ஒருவனே விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

சிவன் அவ்வாறு விளங்கி நிற்றல், ஞாயிறு பிற பொருள்களைக் காண்பவர்கட்கு அவற்றைக் காட்டித் தன்னைக் காட்டாது நின்று, தன்னைக் காண்பவர்கட்குப் பிற பொருளைக் காட்டாது, தன்னையே காட்டி நிற்றல் போல்வது. `சிவன் இவ்வாறு தன்னையே காட்டி நிற்பதே முத்தி நிலை` எனவும், `தன்னைக் காட்டாது பிறபொருள்களைக் காட்டி நிற்பதே பெத்தநிலை` எனவும் உணர்க. ``சிவம் ஆகி`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டுக. ``தவம்`` என்பது முன்னர் அதன் பயனாகிய ஞானத்தையும், பின்னர் ஞானத்தால் அடையும் பயனையும் குறித்த இருமடி யாகுபெயர். ``ஐக்கியம்`` என்றது, `அசி` என்றபடி. மூன்றாம் அடியில் உள்ள ``துவம்`` தன்மை. ``துவமாகிய நெறி`` என்பதை, ``சேகம்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தத்துவ மஸி, ஸோகமஸ்மி இவற்றின் தன்மையாய நெறி` என உரைக்க. மகாவாக்கியங்கள் இங்குத் தம்மை யுணர்த்தி யொழியாது, தம் பொருளை உணர்த்தி நிற்றலின் `தன்மை` என்றது அவை பற்றிய அனுபவங்களையாம். நெறி - ஞான நெறி. இதுவும் ஆகுபெயரால் அதன்பயனையே குறித்தது. ``சிவமாம் அமலன்`` என்று, `நன்றுடையானைத் தீயதில்லானை``8 எனஅறாற்போல்வது. இங்ஙனம் மறுதலைப் பொருளையும் உடன் கூறியது முத்திநிலையில் சிவன் உயிருக்குப் பிற பொருளைக் காட்டாமையை உணர்த்தற்கு. ``பொய்காட்டா மெய்யா``l என்றதும் காண்க.
இதனால், `வேதாந்தமுத்தி சித்தாந்த முத்தியே` என உணர வல்லவர்களே வேதாந்த ஞானிகளாய், மும்முத்திப் பயன் பெறுவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

பொழிப்புரை :

பக்குவான்மாக்கட்குப் பாசத்தை அறுத்துத் தன்னையே அளிப்பதாகிய சித்தாந்த முத்தியைத் தருகின்ற, பெரிய பெருமானாகிய (மகாதேவனாகிய) சிவனே ஏனையோர்கட்கு அவரவர்களது தகுதிக்கு ஏற்ப, பொது யோகிகள் விழைகின்ற அணிமாதி அட்ட மாசித்தியாகிய பயனையும், ஏனைச் சமயத்தார் தாம் தாம் `முத்தி` எனக் கொண்டு விழைகின்ற பல்வேறு பயன்களையும், அகப்புற, அகச்சமயிகள் விழையும் பொதுநிலைச் சிவபதமாகிய பயனையும், இப்பயனுக்கு எதிராய் உள்ள `தாபத் திரயம்` எனப்படும் மூவகைத் துன்பங்களைப் போக்கிக் கொள்கின்ற ஆற்றலையும், சிவயோகிகள் விரும்புகின்ற அந்தமேலான சமாதியாகிய சீவன் முத்தியையும் தருபவனாவான்.

குறிப்புரை :

`சிவன் முத்தி தரும் பெருமான்` என்பதே பற்றி, அவன் தன்னையளிப்பதாகிய அந்தப் பரமுத்தி ஒன்றைத் தான் தருவான் போலும்` என மயங்கி யுரைக்கும் பல்வேறான வழக்குரைகளால் மாணாக்கர் மயங்காமைப் பொருட்டு, `அனைத்துப் பயன்களையும் தருபவன் சிவன் ஒருவனேயன்றிப் பிறர் ஒருவரும் இல்லை` என்பதை விளக்கினார். `முத்தியைத் தரும் பெருமான், அதற்குக் கீழ்ப்பட்ட ஒன்றையும் தர வல்லனல்லன்` என்றல், தன்னைச் சார்ந்தவர்க்குக் காணியும், மனையும், மாடமும், மாளிகையும், ஊரும், நாடும் வழங்கவல்ல அரசனுக்குப் பரிசிலர் வேண்டும் பொன்னும், பூடணமும், யானையும், குதிரையும், தேரும் போல்வனவற்றைத் தருதல் இயலாது` எனக்கூறுவாரது கூற்றோடு ஒக்கும் என்பதாம். `சிவன்அ முத்தியைத் தருபவன்` என்பதற்கு, `ஏனைப் பயன்களை ஏனைத் தேவரிடத்தும் சென்று பெறுதல் கூடும்; பிறவியற்ற பெருநிலையாகிய முத்திப் பயனைச் சிவன் ஒருவனிடத்தில் பெற முடியும்` என்பதே கருத்தாகலின், அஃதறியாது, சிவன் முத்தியைத் தவிர வேறு ஒன்றையும் தர மாட்டுவானல்லன் என்பார்க்கு நாம் என் கடவோம் என்பது கருத்து. `சிவனலால் முத்தியில் சேர்த்துவார் இலை``* என்னும் காஞ்சிப்புராணத்தையும் காண்க.
`பிற சமயிகள் விழையும் முத்தி` என்றதனால் உலகாயதர் விழையும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அடங்கின. `பிற பயன்களையும் தேவர் பிறர் அளித்தல் சிவனது ஆணையைப் பெற்றே` என்பது மேலேல்லாம் விளக்கப்பட்டது ஆதலின், பிறர்தேவர் தரும் பயன்களும் அவர்தாமே சுதந்திரராய் நின்ரு தருவன அல்ல என்பது விளங்கும்.
மூவகைத் துன்பங்களாவன `ஆதியான்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம் என்பன. இவை முறையே, தன்னாலே தனக்கு வருவது (`தான்` என்பது தன் உடம்பையும் சேர்த்தே), ஐம் பெரும் பூதங்களால் வருவது, பிற காரணங்களைக் கருதாது, ஊழே காரணமாகக் கருத வருவது என்பனவாம். இவ்வாறு ஞானா மிர்தத்தில்l சொல்லப்பட்டது. பரிமேலழகர், `ஆதி பௌதிகம்` என்பதைப் பிற உயிர்களால் வருவனவாகக் கூறினார்.8 ``சுத்தி`` என்றது `குற்றம் அற்றதாகிய முத்தி` என்றபடி. தரும் பெருமானைத் தரப்படும் பயனாகவே உபசரித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 1

ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.

பொழிப்புரை :

பெத்தம் தடத்தமாக, முத்தியே சொரூபம் ஆதலின், முன் அதிகாரத்தில் கூறிய மும்முத்திகளையே இவ்வதிகாரத்தில் `முச்சொரூபம்` என ஏழு மந்திரங்களால் வேறொரு வகையாக விளக்குகின்றார். `பெத்தம் தடத்தமே, முத்தியே சொரூபம்` என உணர்தலே இவ்வதிகாரத்தின் பயன். (தடத்தம் - செயற்கை, சொரூபம் - இயற்கை.)
`ஆணவம், திரோதாயி, மாயை, மாயேயம், கன்மம்` என இவ்வாறு ஐந்து மலங்களும் ஆன்மாவை வந்து பற்றி, ஒன்று, இரண்டு, மூன்று`, என இவ்வாறு தொகை மிகுந்த முறையிலே அவற்றினின்றும் ஒவ்வொன்றாக நீங்கி, முழுதும் விடுபட்ட ஆன்ம ஞானம், பின் `சிவோகமஸ்மி` என்னும் அனுபவத்தைப் பெற்று, அதற்குப் பின்னும் மேலே மேலே சென்று முச்சொரூபமாகிய மும்முத்திகளைப் பெற்று, முடிவில் அநாதியான சொரூப சிவனை அடைந்து நலம் பெறும்.

குறிப்புரை :

மலம் ஐந்தும் ஏறிய முறையே நீங்குதலாவது, பிராரத்த கன்மம் நீங்க, அதனால் வந்த மாயேயம் நீங்குதலும், காரியமாகிய மாயேயம் நீங்கவே காரணமாகிய மாயையும் நீங்குதலும், கன்மம், மாயேயம், மாயை இவைகளைச் செலுத்தி நிற்பதே திரோதாயி ஆதலின் இம்மூன்றும் நீங்க, திரோதாயியாய் அவற்றைச் செலுத்தி நின்ற சத்தியும் அந்நிலை மாறி அருட் சத்தியாய் ஆன்ம அறிவிற் பதிதலும், அஃது அவ்வாறு பதியவே, ஆணவம் நீங்குதலுமாம்.
`எறிய மலம் ஐந்திடை அடைந்தவாறே ஆறிய ஞானம்` என்க. ஆறுதல் - தணிதல்; நீங்குதல். ஞானம், இங்கு ஆன்ம ஞானம். முன் அதிகாரத்தில் கூறப்பட்ட, `சீவன் முத்தி, சிவமுத்தி, பர முத்தி` என்பனவே இவ்வதிகாரத்தில் ஆன்ம சொரூபம், சிவ சொரூபம், பர சொரூபம், என மூச்சொரூபங்களாக வைத்து உணர்த்தப்படுகின்றன. அவற்றுள் ஆன்ம சொரூபம், ``ஆறிய ஞானம்`` என்பதனாலும், சிவ சொரூபம் ``சிவோகம் அடைந்திட்டு`` என்பதனாலும், பர சொரூபம், பண்டைப்பரன் உண்மை எய்தும், என்பதனாலும் இங்கு உணர்த்த ப்பட்டன. தச, காரியத்துள் தத்துவரூபம் முதல் ஆன்ம தரிசனம் ஈறாக உள்ளவை ஆன்ம சொரூபமாகவும், சிவயோக சிவ போகங்கள் சிவ சொரூபமாகவும், பரமுத்தி நிலை பர சொரூபமாகவும் வைத்து உணர்த்தப்படுதல் அறிக. சிவ ரூபம் ஆன்ம தரிசனத்துள்ளும், ஆன்ம சுத்தியும், சிவ தரிசனமும் சிவபோகத்துள்ளும் அடங்கும்.
பின்வரும், `பரன் உண்மை எய்துதலையும் உடன் வைத்து, ``முச் சொரூபத்து வீடுற்று`` என்றார். பண்டு - அனாதி.
இதனால், `முச்சொரூபமாவன இவை` என்பதும், அவற்றின் இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பொழிப்புரை :

`சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்` என்னும் மூவகை உயிர்களுக்கும் மூன்றுவகையான மாளிகை போன்ற, `பிராகிருத சரீரம், மாயேய சரீரம், வைந்தவ சரீரம்` என்னும் மூன்று வகையான உடம்புகள் இருப்பிடமாய் உள்ளன. அந்த மூன்று வகை உடம்புகட்குள்ளேதான் தத்துவங்களும் உள்ளன. அவ்வுடம்புகளில் ஒவ்வொன்றிலுமே `ஆன்மா,சிவம், பரம்` என்னும் மூன்று ஒளிப்பொருள்களும் வெளிப்படுகின்றன. அவ்வொளிகளை நேரே உணரும் வாய்ப்பு உளதாயின், அதன்பின் மேற்கூறிய உடம்புகளுக் குள்ளே உயிர் இருக்க வேண்டிய விதி இல்லையாய்விடும்.

குறிப்புரை :

``மாளிகை மூவர்`` என்பன உருவகங்கள். `மூவர் இருப்பிடமாக மாளிகை மூன்று உளர்`` என இயைக்க. முதிர்பு - வலுவடைதல். அஃதாவது உடம்பு அழிந்தாலும் தாம் அழியா திருத்தல். அத்தன்மை யுடையனவே தத்துவங்களாம் ``மூன்றினின் என்பதில் இன், வேண்டாவழிச் சாரியை, சோதி - ஒளி; என்றது அறிவை. காண்டல் ஆன்ம, சிவ, பர தரிசனம் செய்தலாம். தடத்த சிவத்தையே `சிவம்` என்றும், சொரூப சிவத்தைப், `பரம்` என்றும் நாயனார் இவ்விடங்களில் குறித்தருளுகின்றார். ``மூன்றுஎன்பதைச் சோதிக்கும் கூட்டி, `மூன்று சோதியை`` என உரைக்க. பரம் உடம்பினுள்ளே முளைத்தெழுதலாவது, `ஞான நிலையாகிய நின்மல நிலைக்குமேல் பர நிலையில் அடையப்படும் ஞேயப்பொருள் உண்டு என்னும் உணர்வு தோன்றுதல். கணக்கு - கட்டளை, விதி. காயக் கணக்கு அறுதல் பிறப்பு அறுதலாம். பயனை, ``ஆறு`` என்றார், ``அறத்து ஆறு இது என வேண்டா``l என்பதிற்போல. ``ஆறு`` என்பதன் பின், `உண்டாம்` என்னும் பொருட்டாகிய, `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், முச்சொரூபங்களையும் மூவகை உயிர்களும் தம் தம் உடம்பிற்றானே உணர்ந்து அடைதற்குரியன என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன
நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய
பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.

பொழிப்புரை :

உலகங்கள் எல்லாம் ஒடுக்க நிலையை எய்தி விட்டன. அதனால், உலகம் உள்ளளவும் இருந்த அந்த ஊழியும் போய், அடுத்த ஊழி வரும் நிலைமை தோன்றி விட்டது, உலகம் உள்ள பொழுது விளங்கிக்கொண்டிருந்த, `ஞாயிறு, திங்கள் தீ` என்னும் முச்சுடர்களும் காரண நிலையில் ஒன்றாகி விட்டன. இவை போல எல்லாப் பொருள்களும் தம் தம் காரண நிலைகளை எய்தி விட்டன. ஆயினும் பரமசிவன் முன் இருந்தவாறே இருக்கின்றான் என்றால், அவனது நீளத்தின் எல்லையையும், அகலத்தின் எல்லையையும் யார் அறிய வல்லார்!

குறிப்புரை :

``பெயர்ந்து`` என்னும் எச்சம் எண்ணுப் பொருளில் வந்தது. `போயினது` என்பது, ``போன`` எனக் குறைந்து நின்றது. ஆய - ஆயின. பரிசு - தன்மை. காரியத்தில் தூலமாய்க் காணப்படும் இயல்புகள் காரணத்தில் சூக்குமமாய்க் காணப்படாது நிற்கும் ஆதலின் அங்ஙனம் நிற்பவனவற்றை, `தன்மை` என்றார். பான்மை - பகுதி; என்றது காரணப் பகுதிகளை, ``பான்மையுள்`` என்பதன்பின், `ஆயின` என என்னும் சொல்லெச்சம் வருவித்துக்கொள்க. நீள அகலங்கள் காலம் பற்றியும், இடம் பற்றியும் கொள்ளப்படும். பரம் பொருள், `நித்தியம்` ஆதலின் கால அளவைக் கடந்ததும், எல்லாப் பொருளும் தன்னில் வியாப்பியமாய் நிற்க, தான் எல்லாவற்றிற்கும் வியாபகமாய் நிற்றலின் இடத்தைக் கடந்ததும் ஆயிற்று, அவற்றையே, ``அளவும், பெருமையும் ஆர் அறிவார்`` என்றார். ``ஆர் அறிவார் அவ் அகலமும் நீளமும்``* என முன்னருங் கூறினார். ``நீள அகலம் உடையாய் போற்றி``* என்றதும், ஏனையெல்லாப் பொருட்கும் வியாபகமாய் நிற்றலையே குறித்தது. இதிலும் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால் முச்சொரூபங்களுள் பர சொரூபத்தின் பெருமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து)
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.

பொழிப்புரை :

மகா மாயையை முதலாக வைத்து எண்ணுகின்ற காரணங்களையும், அவற்றின் காரியங்களையும் வேறு வேறு வகைபடத் தோற்றுவித்து, அவற்றை அங்ஙனம் செய்தற்கு ஏற்ற `அருவம், உருவம், அருவுருவம்` என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொண்டு, மூவகை நிலையில் நின்று, முடிவில் குருவாகியும் வந்து ஆட்கொள்கின்ற அருளாளனாகிய சிவன், அளவில்லாத உயிர்களிலும் அவ்வவற் -றோடும் சேர்ந்து உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும், கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான்.

குறிப்புரை :

``வாய்`` என்பது `வாயில்` என்னும் பொருட்டாய், `காரணம்` எனப் பொருள் தந்தது. உலகத்திற்கு உரிய முதற் காரணங்களில், `மகா மாயை` எனப்படும் சுத்த மாயையே பெரிதாகலின் அதனைப் ``பெருவாய்`` என்றார். `முதலாக` என ஆக்கம் வருவித்துக் கொள்க. அதனை முதலாக வைத்து எண்ணுமாறு `மகா மாயை, மாயை, பிரகிருதி` என இம்முறையால் எண்ணுதலாம். பேதம் வகை. காரணங்கள் இயல்பிலே வேறுபட்டிருப்பினும், அவ் வேற்றுமையை உயிர்களின் தகுதி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பொருத்துதலின், அங்ஙனம் பொருத்துதலையே காரணங்களையும் சிவனே பேதித்ததாகக் கூறினார். காரண வேறு பாட்டிற்கு ஏற்பக் காரியங்களை வேறு வேறாகச் செய்பவன் சிவனே யாதல் தெளிவு. செய்யுள் நோக்கி, அருவுருவம் இறுதியில் வைக்கப்பட்டது. அருவம் முதலிய மூவகைத் திருமேனிகளின் நிலை, `இலயம், போகம், அதிகாரம்` என்பனவாம் என்பது மேலெல்லாம் சொல்லப்பட்டது. `உடனாய், ஒன்றாய்,வேறாய் இருத்தலே அத்துவிதமாய் இருத்தலாம்` என்பது சித்தாந்தம் ஆதல் வெளிப்படை.
``உலகெலா மாகி வேறாய்
உடனுமாய்``3
என்பது சிவஞானசித்தி.
``ஈறாய், முதல் ஒன்றாய், இரு பெண் ஆண், குணம் மூன்றாய்,
மாறாமரை நான்காய், வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார்சுவை, ஏழோசையொடு, எட்டுத்திசை தானாய்,
வேறாய், உடன் ஆனான் இடம் வீழிம்மிழ லையே``l
என்னும் திருமுறைத் திமொழியும்,
``ஈறாகி அங்கே, முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய்,
மாறாத எண்வகையாய், மற்றிவற்றின் - வேறாய்
உடனாய் இருக்கும் உருவுடைமை யென்றும்
கடனாய் இருக்கின்றான் காண்``8
என அதனை எடுத்துக்காட்டி நிறுவிய சாத்திர யாப்பும் கண்டுணரற் பாலன. சத்தி கோன் சத்திக்குத் தலைவன். ஞானேச்சாக் கிரியா சத்திகளைக் கொண்டு செயலாற்றும் முதல்வன் `பதி` எனப்படுபவன் இவனே. இந்நிலை தடத்தமேயாகலின் இவனை இங்கு, `சிவன்` எனக் கொள்க. `பன்மையில்` என உருபு விரிக்க. ஈற்றில் ``உருவாய்`` என்றது, உயிர்தோறும் தனித்தனிப் `பொருந்தும் பொருளாய்` என்றபடி.
இதனால், முச்சொரூபத்துள் சிவ சொரூபத்தின் இயல்புகள் வகுத்துரைக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
அணியென லாய்நின்ற ஆறது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

பொழிப்புரை :

இரத்தினங்கள் நிறம், ஒளி, வடிவம் என்பவற்றைப் பெற்றுப் பல அணிகலங்களாய் நிற்கும் முறைமை போலத் தான் `பரம், சிவம், ஆன்மா` என்னும் முச்சொரூபத்தை யுடையதாகி அந் நிலைகளில் தனது சத்தியால் சீவனும் அடங்கித் தோன்றும்படி செய்த, `நந்தி` என்னும் பெயரையுடைய அந்த முதல்வனது திருவடிகளையே பற்றாகப் பற்றி உய்வாயாக.

குறிப்புரை :

பரம் - சொரூப சிவம். அதன் வடிவம் அகண்டமாய் இருத்தல் பின்னர்க் கண்டமாய் உள்ள வடிவத்தைக் கூறுதலின் அதனோடு ஒப்ப அகண்டத்தையும் `வடிவம்` என்றார். `இலக்கணம்` என்றது வடிவத்தை. சிவம் - சதாசிவன், மகேசுரன் ஆகிய தடத்த சிவங்கள். இனிச் சிவமே ஆன்ம சொரூபமாய் நிற்றலாவது சீவனில் அதுவேயாய்க் கலந்து நிற்றல். `பர சொரூபம் சிவ சொரூபமாயும் ஆன்ம சொரூபமாயும் நிற்றல் ஆதி சத்தியால் என்றபடி ``ஆதி சத்தியால்`` என்பதன் பின், `அவற்றில்` என்பது வருவிக்க.
இதனால், `ஒரு பெரும் பொருளே தனது சத்தியால் முச்சொரூபமாய் நின்று உயிர்களை உய்விக்கின்றது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.

பொழிப்புரை :

பிற மணிகளில் ``ஒளி`` என்றும், `நிறம்` என்றும் `சோபை` என்றும் இங்ஙனம் பல பெயர்களால் சொல்லப்பட்டு விளங்குகின்ற கதிர்கள் ஒரு படிக மணியிலே பொருந்த, அப்படிக மணிவேறு பல மணிகளாய்க் காட்சியளிப்பது போன்றதே `தத்துமசி` மகாவாக்கியத்தால் உபதேசிக்கப்படும் பொருள். அஃதாவது, `உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின், பாசத்தைச் சார்ந்து பாசமாய் இருந்த நீ, அந்நிலை நீங்கிச் சிவத்தைச் சார்ந்து சிவம் ஆகிறாய்` என்பதாம். (சீவன் பாசமாய் இருந்த நிலை சொல்லால் சொல்லப்படும். அஃது அந்நிலையினின்றும் நீங்கிச் சிவமாகிய நிலை) சொல்லால் சொல்ல வாராது, முத்தி பஞ்சக்கரமும் மொழியாய் இராது அனுபவமான ஒளி நிலையாகும். இது முப்பாழும் கடந்த நிலையும், குரு பஞ்சாக்கரத்தை உபதேசித்து, சின்முத்திரையால் அஞ் ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞானத்தை உணர்த்திய முடிந்த நிலையும் ஆகும்.

குறிப்புரை :

``நல்ல மணி`` என்றது சார்ந்ததன் வண்ணமாம் இயல்பால் சாரப்பட்ட பல மணிகளாய் விளங்கும் மணி: என்றது படிக மணியை. ஆகவே, ``கல்`` என்றது பிற மணிகளையாயிற்று. கதிரின் இயல்பை இனிது விளக்குவார் அதனைப் பல பெயர்களால் குறித்தார். ``தட்ட`` என்பதை ``ஒன்றின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக, முப்பதம் - முப்பதப் பொருள். இது சொல்லாகுபெயர். இதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. அல் - இருள். அல் அறுத்ததைக் கூறவே, ஒளியை வழங்கியதும் தானே பெறப்பட்டது. அறு முத்திரை, `அறுத்த முத்திரை` எனப் பிறவினை வினைத்தொகை. `உரைத்த அறுத்த` என்பதற்கு. `குரு` என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க.
இதனுள், `முச்சொரூபத்துள் முடிவான பர சொரூபத்தை குரு உபதேசத்தின் வழி அடைதலே முடிநிலைப் பயன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்த
இடந்தரு வாசலை மேல்திற வீரே.

பொழிப்புரை :

வரிசையாய் அமைந்துள்ள செந்தாமரை மலர்களின் பல்வேறு வகையாய்க் காட்சியளிக்கின்ற இறைவனை மூலாதாரத்தி னின்றும் எழுந்து மேல்நோக்கி நடக்கின்ற அனல் நாதாந்தத்திலே நிறுத்திக்காட்ட, அதனால், அவ்விடத்தை அடைந்த பால் ஒழுகும் தனங்களையுடைய பெருமாட்டி அடைத்து வைத்திருக்கின்ற விசாலமான மேல் வாசலைத் திறக்கும் உபாயம் அறிந்து திறவுங்கள்.

குறிப்புரை :

`அப்பொழுது அவ்வத் தாமரை அளவில் அடங்கித் தோன்றிய இறைவன், எல்லையில் பேரொளியாய்க் காட்சி யளிப்பான்` என்பது குறிப்பெச்சம். `அக்காட்சி சிவ சொரூபக் காட்சி யாகும்` என்பதும், அதனைக் கண்டால் பர சொரூபத்தைக் காணுதல் கூடும் என்பதும் இதன் உட்கருத்துக்களாகும்.
ஒன்றையொன்று சார்ந்திருப்பதை, உடந்தையாய் இருப்பது, என்றல் வழக்கு. `உடந்தை` என்பது உடந்த` என நின்றது. ஒற்று மிகாமையும் இத்திரிபு நோக்கியேயாம் பின் வந்த `செந்தாமரை` என்பது அது போலும் தீயைக் குறித்தது உடந்த செந்தாமரை ஆறு ஆதாரங்கள். தீ, மூலாக்கினி. `நாதத்தில் தகைந்தால்` என்க. தகைதல் - தடுத்தல். `தகைந்ததால்` என்பது குறைந்து நின்றது. `சோதியைத் தகைந்ததால்` என இயைக்க. பயோதரி, குண்டலி, சத்தி, அட்டி அடைத்தல் இறுக மூடிவைத்தல் மேல் வாசல் துவாதாசாந்தத்திற் செல்லும் வழி. அஃது உச்சித் துளையாம். அதனைத் திறத்தலாவது, உணர்வு அதனைக் கடந்து செல்லும் இயல்பினை அடைதல் `மேல் வாசலை` என மொழி மாற்றி யுரைக்க.
இதனால், சிவசொரூப பர சொரூபங்களை அடைதற்கு உபாயம் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுறை பேதமும் ஒன்றென லாமே.

பொழிப்புரை :

உயிர் சகலாவத்தையில் தத்துவங்களோடு கூடி `சீவான்மா` எனப் பெயர் பெற்று நிற்பினும் அது தத்துவங்களின் வேறாதல்போல்வதும், நின்மலாவத்தையில் தத்துவங்களின் நீங்கி வாக்குகளின் வடிவாய் நிற்குமிடத்து `அந்தரான்மா` எனப்பெயர் பெற்று நிற்பினும் அது வாக்குகளின் வேறாதல் போல்வதும் பரா வத்தையில் பரத்தோடு கூடிப் பரான்மா எனப் பெயர் பெற்று நிற்பினும் அது பரத்தின் வேறாதல் போல்வதுந்தாம். பரம் பொருள் சீவான் மாவில் நிறைந்து `சிவம்` என நிற்பினும் அது சிவனின் வேறாதலும், பரான்மாவில் நிறைந்து `பரம்` என நிற்பினும் அது பரான்மாவின் வேறாதலும்.

குறிப்புரை :

எனவே, `பராமான்மாவும், சீவான்மாவும் எவ்வாற் றானும் ஒன்றாதல் இல்லை` என்பதே இதனால் சொல்லப்பட்டதாம். அவத்தைகளே இங்கு `இடம்` எனப்பட்டன. ``ஒருவன்`` என்பது `புருடன்` என்னும் பொருட்டாய், உயிரைக் குறித்தது. ``உரு`` என்றது, தனக்கு வேறாய பொருள்` என்றவாறு அவற்றை உயிர், `தன்னின் வேறு` எனக் காணுதல் ஞானத்தினாலாம். ஆகவே, அந்த ஞானத்தினாற்றானே உயிர் பரத்தையும் `தன்னின் வேறு` என உணர்தல் வேண்டும் என்பதாம். அவ்வாறு உணரும் உணர்வே பதிஞானத்தைத் தரும். அவ்வாறின்றி, உயிர் தன்னையே பரமாகக் காணுதல் மல வாசனை பற்றி நிகழும் பசுஞானமாம். ``ஒன்று எனலாம்`` என்றது, `வேறாக உணரப் படுதலால் ஒரு தன்மையவாம்` என்றபடி. `திடமது போலப் பேதமும் ஒன்றெனலாம்` என இயைக்க. அது பகுதிப் பொருள் விகுதி.
இதில் உணர்த்தப்பட்ட பொருள் முன்பே சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒளியை ஒளிசெய்து ஓம்என் றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல்எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதந் தானே.

பொழிப்புரை :

பொருள்களை மாறாக உணரும் மயக்கத்தை நீக்கி உள்ளவாறுணரும் தெளிவைத் தருதலால் குண்டலி சத்தி ஒளியெனத் தக்கது. அதனை உலகர் இருளாக்கி வைத்துள்ளனர். அவ்வாறில்லாது அதனை ஒளியாகவே விளங்கும்படிச் செய்தல் வேண்டும். அது பிராணாயாமத்தால் மூலாக்கினியை எழுப்புதலால் உண்டாகும். அஃது உண்டாகும் பொழுதுதான் `வெறுங் காற்று` எனப்படுகின்ற மூச்சு சூரிய சந்திர கலைகளாம் சிறப்பு வளியாகும். அதனை அவ்வாறு செய்து, பயன் கிட்டும்படி கும்பகத்தால் சேமித்து, அதனானே சுழு முனை வழி வழியாயில்லாமல் அடைத்தும், உச்சியில் அருள் ஞானம் விளங்குகின்ற இடம் இடமாய் இல்லாமல் பாழ்படுத்தியும் வைத்திருக்கின்ற நிலையை மாற்றி வழியாகவும், இடமாகவும் செய்து குண்டலியை `ஓம்` என்று எழுப்பி மேற்போய் உலாவச் செய்து தெளி வுணர்வைப் பெற்றால், சிவ சீவர்களது உண்மை நிலை விளங்கும்.

குறிப்புரை :

`ஓம்` என்று எழுப்பி - என்றதனால், இவ்யோகம் பிரணவயோகமாதல் விளங்கும்.
இதனால், மேற்சொல்லப்பட்ட சிவ பர சீவர் பேதம் விளங்குதற்கு வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

முக்கா ரணங்களின் மூர்ச்சை தீர்த்(து) ஆவதக்
கைக்கா ரணமென்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மனி வேறே தனித்தேக
ஒக்கும்அ துன்மனி ஓதுட் சமாதியே.

பொழிப்புரை :

ஆறாதாரங்களில் மணிபூரகம், அனாகதம் ஆஞ்ஞை என்னும் மூன்று ஆதாரங்கள் சிறப்புடையன. சுவாதிட்டத் தினின்றும் எழுகின்ற பிராணன் `உதானன்` எனப் பெயர் பெற்று மேலோங்கி இவ்விடங்களில் சென்று ஆஞ்ஞையில் முடியும். அவ்வாறு முடியும்படி அதனை முடித்த பின்பு அவ்வாறு முடித்ததனால் உண்டாகும் பயனைக் கைம்மேற் பலனாக எமக்கு எம் ஆசிரியர் நந்தி பெருமான் அளித்தருளினார். அப்பயன் தான் யாதெனில், ஆஞ்ஞையில் விளங்கிய மனோன்மணி சத்தி அதற்கு மேலே வியாபினி சமனை உன்மனைகளாய்ச் செல்ல, உன்மனாந்தத்தில் சிவத்தோடு ஒன்றும் சமாதி நிலையாம்.

குறிப்புரை :

``காரணம்`` இரண்டில் முன்னது இடத்தையும், பின்னது காரணத்தினால் விளைவதாகிய பயனையும் குறித்தன. தீர்த்தல் - முடித்தல். `தீர்த்து, அதனால் ஆவதாகிய அப்பயனைத் தந்தனன் நந்தி` என்க. காண், முன்னிலையசை. ஏக ஒக்கும் அது - செல்லும் நிலையில் முடியும் நிலையாகின்ற அது, `உன் மனியாம்` என்க. ``உள்`` என்றது நுட்பத்தை. இது, பொது யோக சமாதியாகாது, பிராசாத யோக சமாதி யாகலின், ``உட்சமாதி`` என்றார்.
இதனால், முன் மந்திரத்தில், ``ஓம்`` - என்று எழுப்பி மேல் எழ வைத்ததலால் பயன் விளைதல் இவ்வாறு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

பொழிப்புரை :

துவம் தத், அசி, என்னும் மூன்று சொற்கள் தொன்மை -யான வேதத்தில் சொல்லப்பட்டனவாகும். இவை உலகியலில் தோன்றுதல் போலாது யோக துரியம். நின்மலதுரியம், பரதுரியம் ஆகிய முத்துரியங்களில் உணர்வின்கண் தோன்றும் பொழுது அவை முறையே சீவ அறுதியும், பர அறுதியும், சிவ அறுதியுமாய் நிற்கும்.

குறிப்புரை :

`சிவம்` என்பது அருளையும் `பரம்` என்பது ஆனந்தத் -தையும் குறிக்கும் நிற்பது, தொழிற்பெயர். ஈற்றில் உள்ள பதம் நிலை, முடிநிலை. ``உயிர், பரம்`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. ஈற்றில் உள்ள ``தொந்தத்தசி`` என்பதை, ``மூன்றின்`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆம்` அம்மூன்றின், எனச் சுட்டு வருவித்துரைக்க. சிறப்பு நோக்கி, `அசி` என்பதை மட்டும் `முன்னர், தான் ஆம் அசி` என்றார்.
இதனால், `முச்சூனியம் ஆவன இவை` என்பதும், அவை தோன்றும் இடங்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற
இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய மூன்று அறுதிகளுள் தொம்பத அறுதியில் (சீவ அறுதியில்) மாயா - மலமும், தற்பத அறுதியில் பர அறுதியில்) ஆணவ மலமும், அசிபத அறுதியில் (சிவ அறுதியில்) கன்ம மலமும் நீங்கும். அவ்வாறே அம்மூன்று அறுதிகளிலும் முறையே இராசதம், சாத்துவீகம் தாமதம் என்னும் குறைகள் நீங்கும். இவ்வாறு மூவறுதியில் மும்மலங்களும், முக்குணங் களும் நீங்குதல் நிலாவின் முன் இருள் நீங்குதலை ஒக்கும்.

குறிப்புரை :

``மூன்றில்`` என்பன இரண்டும், `மூன்று அறுதிகளில்` என்றபடி. ``காமியம் ஆதி`` என்பதை, `காமியம், ஆணவம், மாயை என்றவாறாகக் கொண்டு, அவற்றை எதிர் நிரல்நிறையாகப் பொருத்துக தாமதமாதி முக்குணங்களை ஏற்ற பெற்றியால் பொருத்திக் கொள்க. ``சிவம் தோன்ற`` என்பதை ``மலம் குணம் மாளல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. ``ஆதி`` என்பதன் பின், `நீங்கும்` என்பது வருவிக்க.
இதனால், முச்சூனியங்களில் நிகழ்வன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

தொந்தத் தசிய வாசியில் தோற்றியே
அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு
அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து)
உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.

பொழிப்புரை :

`தொம், தத், அசி` என்னும் மூன்று பதங்களையும் முத்தி பஞ்சாக்கர மூன்றெழுத்துக்களில் முறையே யகார சிகார வகாரங் -களில் வைத்து அந்த முறையிற்றானே தூல பஞ்சாக்கரம் ஐந்தும், சூக்கும பஞ்சாக்கரம் ஐந்தும் அடங்கியிருப்பதாகக் கொண்டு அதனையே அழிவில்லாத யோகாவத்தை நின்மலாவத்தை பராவத்தைகளில் `தொந்ததசி` வாக்கியமாகச் சிகார வகாரங்களை முன் வைத்து உச்சரி.

குறிப்புரை :

`அவத்தையில்` எனவும், `அவ்வாக்கியத்தை` எனவும் அவ்வவ்வுருபினை விரிக்க. `ஓதினால் முச்சூனியமும் விளையும்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், திருவைந்தெழுத்து மந்திரமே தத்துவமசி மகா வாக்கியமாய் முச்சூனியங்களைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு முத்தி பஞ்சாக்கரத்தை சிவ முன்னாக வைத்து உணர்வைப் பர சொரூபமாகிய ஆனந்த நிலையிற் செலுத்தி அதனோடே பிரணவமாகிய அந்த உபதேச மந்திரத் -தையும் அவ்வாறே உள்ளத்தில் சேர்ப்பி, சேர்ப்பித்தால், அப்பொழுதே நீ மெய்யுணர்வைப் பெற்றுச் சிவனுக்கு அடிமையாகி விடுவை.

குறிப்புரை :

முன்மந்திரத்தை அடுத்து அந்தாதியாக ``வைத்து`` என்றனால், `முன் வைத்து` என்றதாயிற்று. பிரணவத்தையும் அவ்வாறாகி வைக்கும் முறை பின்னர்க் கூறப்படும். தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாயிற்று.
இதனால், பிரணவமும், தத்துவமசி, முத்திபஞ்சாக்கரம் இவை போல முச்சூனியத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது. `சிவத்தை முன் வைத்து` என்றது அனுவாதம்.

பண் :

பாடல் எண் : 5

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய
உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.

பொழிப்புரை :

`தத்துவமசி` மகாவாக்கியத்தில் `துவம்` பதப்பொரு ளாகிய சீவன் உயிர் தத்துவங்களையே `தான்` என மயங்கும் மயக்கம் மாயையால் தோன்றுவதாகும். தற்பதப் பொருளாகிய பதி ஐந்தொழில் செய்தற் பொருட்டுப் பரா சத்தியினின்றும் சிவமாகித் தோன்றும் சீவன் சிவமாதலைத் தெரிவிப்பதாகிய `அசி` பதப்பொருள் உயிர் அனைத்துப் பாசங்களினின்றும் நீங்கித் தூயதாய நிலையில் தோன்றும். இனி, `தத்துவமசி` மகா வாக்கியத்தில் உள்ள `அசி, தத், துவம்` என்னும் முப்பதங்களும் முத்தி பஞ்சாக்கரத்தில் முறையே `வா,சி,ய` மூன்றெழுத்துக்களில் அடங்கும்.

குறிப்புரை :

எனவே, தத்துவமசி மகாவாக்கியப் பயிற்சியின் பயனாகிய முச்சூனியங்களை முத்தி பஞ்சாக்கரப் பயிற்சியே தரும்` என்பது குறிப்பெச்சம். ``பதம்`` மூன்றும் அவற்றின் பொருளைக் குறித்த சொல்லாகு பெயர்களாம். நம்புதல், விரும்புதல் தூய்மையை, ``சாந்தி`` என்றார். உம்பர் உரை, தொன்மை மொழி ஈற்றில் யகர உயிர்மெய் செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரம், `தத்துவமசி` இவற்றின் பொருள் தோன்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து
ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி
வாகிய சீவன் பரசிவ னாமே.

பொழிப்புரை :

`சோயம் தேவதத்தன்` என்பது `தேவதத்தனாகிய அவனே இவன்` என்பது இதன் பொருள். ஒரு வடமொழி உதாரணம். இதன் விளக்கம் இல்லற நிலையில் அதற்குரிய கோலமும், உடையும், பெயருமுடையவனாய் இருந்த ஒருவன் அவற்றையெல்லாம் விடுத்துத் துறவியாகி, அதற்குரிய கோலம், தண்டு கமண்டலம், வேறு பெயர் ஆகியவற்றைக் கொண்டால், `அவன்` எனப்பட்ட நிலையில் அவனிடம் இருந்த சேர்க்கைப் பொருள்களையெல்லாம் விடுத்து, அவற்றை உடையவனாய் இருந்த அவனை மட்டுமே கொண்டு, `இவன்` எனச் சுட்டுதல் போல்வதே `சீவன் சிவமாகிறது` என்றலும் - என்பது அஃதாவது பசுத்துவத்தால் `சீவன்` எனப்படுகின்ற உயிர் அப்பசுதுவத்தின் நீங்கித் தூயதாகிய நடுநிலையிலேதான் சிவனைச் சார்ந்து சிவமாகின்றது என்பதாம்.

குறிப்புரை :

ஆகிய - இயற்சொல்லாகாது, ஆக்கச் சொல்லாய் அமைந்த அகரச்சுட்டு `சோயம் தேவத்தன்` என்னும் தொடர் முழு வதையும் சுட்டிற்று. ``இடத்து`` என்பது ஏழாம் வேற்றுமை பொருட்டாய் நின்றது. ஆகியவை - சேர்க்கைப் பொருளாகச் சேர்ந்துள்ளவை. `விட்டாற்போல` என உவம உருபு விரிக்க. `காயம் முதலிய` என ஒரு சொல் வருவிக்க. ஏகிய - நீங்கிய. ``ஏகிய` `தொம்` என்பதையே - தத் அசி - என்ப`` என முடிக்க. இங்ஙனம் கூறிய வற்றின் விளக்கமாகேவே, ``மெய்யறிவாகிய சீவன் பரசிவன் ஆமே`` என்பது கூறப்பட்டது. சீவனே என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. ``மெய்யறிவாகிய சீவன்`` என்றதனால், அது பொய்யறி வாகிய உடம்பு முதலியவற்றின் நீங்கினமை பெறப்பட்டது. இவ்வாறு பொருள் கொள்ளுதல் விட்டு விடாத `லக்கணை` எனப்படும். இலக்கணை பின்பு விளக்கப்படும்.
``சோயம் தேவதத்தன்`` என்னும் இவ்வுதாரணத்திற்கு ஏகான்ம வாதிகள் தரும் விளக்கம், `இல்லறத்தானாய் இருந்தவன் எவனோ அவனேதான் துறவியானவனும்; வேறொருவனல்லன்; அதுபோலத் -தான் சீவனும், பிரமமும் வேறாகாததும்` என்பது. துறவிக்கும் இல்லறத்தானுக்குப் போலக் கோலமும், உடைமையும் ஒழுக்கமும் உள்ளன ஆகலின், அவற்றைப் பெற்றவனே துறவியாதல் நினைக்கத் தக்கது.
இதனால், முச்சூனிய நிலை உவமையில் வைத்து விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தாமத காமிய மாதி தகுகுணம்
ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு
ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில்
தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே.

பொழிப்புரை :

முக்குணங்களும், மும்மலங்களும் `அ, உ, ம` என்னும் பிரணவ கலைகள் செயற்படில் செயற்படும்; ஒடுங்கில் ஒடுங்கும். அச்செயற்பாடு ஒடுக்கங்களும் மூவகை உடம்பின் கண் நிகழும் `தொம், தத், அசி` என்னும் முப்பதங்களின் சூனியங்களும் அவ்வாறேயாம். அஃதாவது `முச்சூனியங்கள் நின்மல துரியத்தில் நிகழும்` என்பதாம்.

குறிப்புரை :

`தாமத மாதி குணம், காமியமாதி மலம்` எனக் கூட்டுக. ``மூன்றில்`` என்பதன் பின் `நிகழும்` என்பது வருவிக்க. உடல் மூன்று, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்டன. தாம் ஆம் துரியம் - ஆன்மாச் சுத்தி பெற்ற நின்மல துரியம் `தொம் தத், அசி` என்பன அவற்றின் சூனியங்களைக் குறித்தன.
இதனால், முச்சூனியங்களின் இயல்புகள் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டன. இவற்றால் இவை பிராசாத யோகத்தில் சொல்லப்படும் சூனியங்கள் ஆகாமை விளங்கும்.

பண் :

பாடல் எண் : 1

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.

பொழிப்புரை :

காரிய தத்துவங்களாகிய தூல உடம்பு, தூல பூதம், சூக்கும பூதம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகிய ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு அவற்றின் நீங்கிய நிலை `மாயப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து காரண தத்துவங்களாகிய வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு நீங்கிய நிலை `போதப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து முன் நீங்கியவற்றின் வாசனை உளதாகிய சுத்த தத்துவங்களையும் வேறாகக் கண்டு கடந்த நிலை `உபசாந்தம்` எனப்படும் இதனையும் கடந்த நிலையே பந்தம் முழுதும் நீங்கிய வீட்டு நிலையாம்.

குறிப்புரை :

போதப்பாழ், `சீவப்பாழ்` என்றும், உபசாந்தம், வியோமப் பாழ்` என்றும் சொல்லப்படுதலை வருகின்ற மந்திரத்தில் காண்க. ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவத்தின் காரியம் ஆதல் பற்றி அவற்றைக் ``காரியம் ஏழ்`` எனவும், அவை போல வித்தியா தத்துவம் வேறு தத்துவத்தின் காரியம் ஆகாது ஆன்ம தத்துவத்திற்குக் காரண மாகியே நிற்றல் பற்றி அவற்றை, ``காரணம் ஏழ்`` என்றும், அதற்கு மேல் நீங்க வேண்டுவன இன்மையின் அந்நிலையை, ``உபசாந்தம்`` என்றும் கூறினார். தீர்தற்கு, `பந்தம்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `முப்பாழாவன இவை` என்பதும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

பொழிப்புரை :

மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட மற்றும் அவையே, `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில் `போதப் பாழ்` எனக் கூறியதைச் ``சீவப் பாழ்`` என்றும் ``உபசாந்தம்`` எனக் கூறியதை ``வியோமப் பாழ்`` என்றும் இம்மந்திரத்திற் கூறியவாறு காண்க.
இதனால், `முப்பாழ்` என்பவற்றின் பெயர் வேறுபாடுகளும், உண்மை இயல்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

எதிர்அற நாளும் எருதுவந் தேறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனும் பாழைக் கடந்துகற் பனையை
உதறிஅப் பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :

`என்றும் தன்னோடு ஒப்பார் இன்றி ஆனேற்றையே ஊர்தியாக உவந்து ஏறி உலாவுகின்ற சிவன் ஒருவனே பதி; ஏனையோர் யாவரும் பசுக்களே எனத் துணிந்து அவனது திருவடியை அடைய வேண்டி, முன்னர், `இதுவே கதி`, எனக் கருதிய மூன்று பாழ்களையும் கடந்து முன் கருதிய கருது கோள்களையெல்லாம் உதறித்தள்ளி, அவற்றையெல்லாம் கடந்த வேறொரு தனிப் பாழில் இப்பொழுது நான் அடங்கியிருக்கின்றேன்.

குறிப்புரை :

இதனால், `பாழ்` என்பது, `மாசாவன அனைத்தும் நீங்கிய தூய்மையே` என்பது விளங்கும். ஆகவே, மாயப் பாழாவது மான்` எனப்படும் பிரகிருதி நீக்கமும், `போதப் பாழ்` என்பது, `மோகினி` எனப்படும் அசுத்த மாயை நீக்கமும், `வியோமப் பாழ்` என்பது, `விந்து` எனப்படும் சுத்தமாயை நீக்கமும் ஆதல் பெறப் பட்டது. முப்பாழ்களுள் ஒன்றிரண்டையே முழுத் தூய்மையாகக் கருதுவார் கருத்துக்கள் திரிபுணர்வேயாதல் பற்றி அவற்றைக் ``கற்பனை`` என்றார். முப்பாழையும் கடந்த அப்பாழே முன் மந்திரத்தில் ``தூய சொரூபம்`` எனப்பட்டது. ``ஏறும் பதியெனும் நந்தி`` என்பதை, `ஏறும் நந்தியெனும் பதி` என மாற்றியுரைக்க. இந்தப் பதியினது பதமது கூட` என்றதனால் `இம் முப்பாழ்த் தரிசனமும், அவற்றது சுத்தியும் சிவபெருமானைப் பொதுநீக்கித் தனக்குவமை யில்லாத தனிப்பெரும் பொருளாக உணரும் உணர்வைப் பெற்றவர் களுக்கே கூடும்` என்றதாயிற்று. ``எதிர் அற`` என்றதும், இதனை வலியுறுத்தற்கேயாம்.
இதனால், `முப்பாழுங் கடந்தவழியே முதற்பாழாகிய சொரூப நிலையை அடைதல் கூடும்` என்பதும், `அது சிவஞானம் வழியாகவே கூடும்` என்பது கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

துரியம் அடங்கிய சொல்லுறும் பாழை
அரிய பரம்பரம்` என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் அன்றே உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறி வாரே.

பொழிப்புரை :

முப்பாழையும் கடந்த, சொல்லற்ற நிலையாம் சொரூபமாகிய உண்மையை, அறியாதார் சிலர், `அஃது உயிர்களால் என்றும் அடையப்படாத மிக மேலேயுள்ள நிலை` எனக் கூறுவர். (உயிர்களால் என்றுமே அடையப்படாது எனின், `அத்தன்மையதாகிய ஒருபொருள் உண்டு` என்பதே பெறப்படாது முயற்கோடு, ஆகாயத் தாமரை முதலியனபோல அதுவும் வெறும் கற்பனைப் பொருளாய் விடும். மிக மேலானதேயானும் ஆதலின்) அஃது என்றுமே உயிர்களால் அடையப்படாதது அன்று; செயற்கரிய சாதனைகளைச் செய்தவழிக் கிடைக்கின்ற ஓர் அரிய இடமேயாம். இவ்வுண்மையை அறிந்து, அவ்வாற்றால் அதனை அடைய முயல்பவர் எத்துணைப் பேர்? ஒரு சிலரேயாவர்.

குறிப்புரை :

``துரியம்`` என்றது பாழை. அடங்குதல் - கீழ்ப்படுதல்; எனவே சொல்லறும் பாழ் அதீத நிலையாயிற்று. ``அரிய`` என்பன, கிடைக்கப்படாத` என்னும் பொருளன. பரம், பரம் - மேலதற்கும் மேலானது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, ``நிலம்`` என்பதனுடன் கூட்டுக. உதித்தல் - எதிர்ப்படுதல். ``அறிவார்`` என்பதில் அறிதல். அதனுடன் காரியமாகிய முயலுதலையும் குறித்தது. `முயலுதல் இல்லையேல், அறிந்ததனால் பயன் என்னை` என்க.
இதனால், `முப்பாழும் கடந்த முதற்பாழ் உயிர்களால் முயன்று அடையற்பாலதோ, அன்றோ` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. முன் மந்திரத்திரத்திலும், ``அப்பாழில் ஒடுங்குகின்றேன்`` என அனுபவம் காட்டினார். ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``8 என்பது நாயனாரது திருவுளம் ஆதலின், அதுபற்றி எழும் ஐயத்தை இதனால் அறுத்தருள்வாராயினார்.

பண் :

பாடல் எண் : 5

ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு
வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ
தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.

பொழிப்புரை :

`மெய்ப் பொருளை அருளாசிரியர் பக்குவம் வாய்ந்தவர்கட்கு உபதேசிக்கும் உபதேச மொழி, `சிவாய நம` என்னும் மந்திரமே என்பதைச் சைவப் பெருமக்களன்றிப் பிறர் தெளிய மாட்டாராயினும் சைவப் பெருமக்கள் அதனைத் தெளிந்து அதன் உண்மையை ஆராயுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களும் தம்மின் வேறாகி நீங்கிய பொழுது அந்த ஐந்தெழுத்தில் பாசத்திற்கு வழியாகிய `நம` என்பதை நீக்கி, முன்பு நகரத்தின் பொருளாய்த் திரோதானமாய் இருந்த சத்தி வேறுபட்டு அருட்சத்தியாய் வகாரத்தின் பொருளாகி, யகாரத்தின் பொருளாகிய ஆன்மாவை, யகாரம் நீங்கிய இரண் டெழுத்தில் ஈற்றெழுத்தாகிய வகாரம், முதலெழுத்தாகிய சிகாரத்தின் பொருளாகிய உண்மைச் சிவத்தில் பின் என்றும் நீங்காதவாறு சேர்ப்ப தாகவே யன்றோ உணரப்படும்! `பிறிதாக ஒன்றும் உணரப்படாது` என்பதாம்.

குறிப்புரை :

`பக்குவிகளுக்கு ஆசிரியர் உபதேசிக்கும் உபதேச மொழி திருவைந்தெழுத்தே` என்பது,
``மன்ன என்னை ஓரு வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்``3
என்ற ஆசிரியர்,
``நானேயோ தவம் செய்தேன்; சிவாயநம எனப்பெற்றேன்``l என்று அருளிச் செய்தமையால் விளங்கும். அவர் எடுத்த எடுப்பிலே, ``நமச் சிவாய வாஅழ்க``* என எடுத்தருளிச் செய்தமையும் நினைக்கத் தக்கது.
``நன்னெறி யாவது நமச்சி வாயவே``*
``நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே``*
என்னும் திருமொழிகளும் ஓர்ந்துணரற்பாலன. நன்னெறி சன் மார்க்கம். ஞானநெறி. வாய் - வழி: பாசத்திற்கு வழி. ஈற்றடியை முதலில் வைத்து, `நமவாகிய வாய் அகன்றிட்டு, வேறாகிய பரை, யவ்வை மெய்ப் பரன்பால் கூட்டும்; அஃதாவது வா சிய்யில் கூட்டும்` என இயைக்க. செய்யுள் பற்றி எழுத்தும், பொருளும் விரவி வரக் கூறினார். தேறாமை, `சிவாயநம` என்பதன் பெருமையைத் தெளியாமை. எனவே, தேறுதலும் அதன் பெருமையேயாற்று. தேறுதல், அதன் காரியமாகிய ஆராய்தலையும் உடன் உணர்த்திற்று.
இதனால், `முப்பாழையும் முறையே கடத்தற்கும் பின் முப்பாழையும் கடந்து அப்பாழை அடைதற்கும் நற்றுணையாவது திருவைந்தெழுத்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும்
உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

பொழிப்புரை :

`உயிர் உடம்பே; உடம்பே உயிர்` என இவ்வாறு உயிரின் இயல்பை மயங்கி உணர்ந்து, அந்நெறியிலே தங்கள் ஆராய்ச்சியைச் செலுத்தபவர்கட்கு உயிர் இல்பொருளேயாம். உயிர் இல்பொருளாயினமையின், உடம்பின் தன்மையை அவர் உணர்ந்ததும் உணராமையேயாம். ஆகவே, அவர்கட்கு இங்குக் கூறி வந்த இருட்குழியாகிய தத்துவச் சிக்கலும் இல்லை; அக்குழியினின்றும் ஏறும் கரையாகிய முப்பாழும் இல்லை. அவற்றைக் கடந்த வேறு வெளியாகிய பரநிலையும் இல்லை.

குறிப்புரை :

`இவையெல்லாம் உயிர் உடம்பின் வேறு என்பதை உணர்ந்து, நிலையற்ற உடல் நலத்தைப் பெரிதாக நினைந்து, அதனை அடைய முயல்பவர்கட்கே உள்ளனவாம்` என்றபடி. ``இல்லை`` என்றது, இருத்தலைப் பற்றிக் கவலை உண்டாதல் இல்லை` என்றதாம். இத்தன்மையை நோக்கியன்றோ தெய்வப் புலவர்,
``நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்;
நெஞ்சத் தவல மிலர்``l
என்று அருளிச் செய்தார். ஈற்றடியை அதன் அயலடிக்கு முன்னர்க் கூட்டுக. உள்ளம் - உயிர். உரு - உடம்பு.
இதனால், முடிநிலைப் பேறாகிய இவற்றைக் கூறுமிடத்து `இன்னோரன்ன மெய்ந்நூற் பொருள்கள் எல்லாம் தக்கார்க்கே உரியன` எனத் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை
உற்றிடும் காரணம் காரியத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

பொழிப்புரை :

முன்அதிகாரத் தொடக்கத்தில்l `காரிய தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, சீவஉபாதி` என்றும், `காரண தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, `பரோபாதி` என்றும் கூறப்பட்டன. இங்கு, `பரம்` என்பது, பரம் பொருளைக் குறியாமல், `சீவ உபாதிக்கு மேலே உள்ளவை` எனப் பொருள் தந்தது. `இவ்விருவகை உபாதிகளும் நீங்கினால் காரியம் காரணத்தோடு அற்றுவிட்டதாகும். அங்ஙனம் அவை அற்று விட்டதால், `அணு` எனப்பட்ட உயிர் அவ்வணுத்தன்மை நீங்கி, வியாபகப் பொருளாகிய சிவத்தை அடைந்து தனது வியாபக நிலையைப் பெற்று இன்புறும்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

குறிப்புரை :

அற அறுதல் - முற்றும் நீங்குதல். இரண்டாம் அடியிலும் ``ஏழும்`` என்பதன் பின்னும் `அற` என்பது வருவிக்க. ``காரியம், காரணம்`` என்பன நிரல் நிறையாய் மேற்கூறிய `சீவ உபாதி, பரோ பாதி, என்பவற்றோடு இயைந்தன. பின்னர் ``அணு வருதலால், அச் சிவம்`` என்னும் சுட்டு `வியாபகச் சிவம்` என அதன் வியாபகத்தைச் சுட்டிற்றாம். `அணு வியாபகம் ஆகும்` என்றதனால், `அணுத்தன்மை உயிர்க்குச் செயற்கையால் வந்தது என்பதும், `வியாபகமே அவனது இயற்கை` என்பதும் பெறப்பட்டன. செயற்கை, ஆணவ மலம்.
இதனால், உயிர் செயற்கையின் நீங்கி இயற்கையை எய்துதற்குத் தடையாய் உள்ளவை உபாதிகள்` என்பதும், அவை, `காரிய உபாதி, காரண உபாதி` என இருவகையினவாம் என்பதும் கூறப்பட்டன.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அகராம் உயிரே; உகாரம் பரமே`` என்னும் மந்திரம் மேல் நான்காம் தந்திரத்தில், `திருவம் பலச் சக்கரம்` அதிகாரத்தில்* சிறிது வேறுபாட்டுடன் வந்ததேயாகும் இவ்வதிகாரத்தில் அதற்கு இயைபில்லை.]

பண் :

பாடல் எண் : 2

ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நினைவு மிகுத்த நனா கனா
ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

பொழிப்புரை :

தத்துவங்களுக்குள்ளே சில காரியமும், சில காரணமும் ஆதல் பற்றி அவற்றை, `காரியம், காரணம்` எனப் பிரித்துக் கூறினாலும் தத்துவங்கள் அனைத்திற்கும் மாயையே காரணமாகத் தத்துவங்கள் அவற்றின் காரியம் ஆதல் பற்றி அவை அனைத்தையும் இங்கு ``காரியோபாதி`` என்றார். ``நனவு`` என்றது சகல சாக்கிரத்தை. அதன்கண் நிகழும் `நனவு, கனவு, உறக்கம்` என்பவற்றில், இவற்றிற்கு முன் நிலைகளில் எல்லாம் கிடைக்கப்பெறாத பேறு கிடைக்கப் பெறுகின்ற துரிய நிலையை அடைந்த பொழுதுதான் உயிர் உண்மையில் `துவம்` பதப் பொருளாகும்.

குறிப்புரை :

`நினைவு வேறாய்` என மாற்றியுரைக்க. நினைவு - உணர்வு. ``மிகுத்த`` என்றதனால், நின்மலமாதல் குறிக்கப்பட்டது. எனவே, இங்குக் கூறப்பட்ட நனவு முதலியன நின்மல சாக்கிரம் முதலியவாயின ஆகவே, `இங்குக் கூறப்பட்ட உபாதிகள் நின்மலாவத்தையில் நீங்கும்` என்றதாயிற்று. நிலம், துரியம், ஆதல் - கிடைத்தல். `ஆம் நிலம்` என்க. உபாதி நீங்கிய நிலையே உயிர்க்குத் தூய்மையாதலின் `அது தொம்பதப் பொருளாம்` என்றார். ``பதம்`` என்பது சொல்லாகு பெயராய் அதன் பொருளைக் குறித்தது.
இதனால் உபாதிகள் நீங்கும் இடம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உயிர்க்குயி ராகி ஒழிவற் றழிவற்(று)
அயிர்ப்பறு காரணோ பாதிவெதி ரேசத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமித்தா லன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாதே.

பொழிப்புரை :

எல்லா உயிர்களிலும் அவற்றிற்கு உயிராய், ஒரு ஞான்றும் விட்டு நீங்காது, அழிவின்றியிருப்பினும் உயிர்கள் முன் மந்திரத்தில் கூறிய உபாதிகள் அனைத்தினின்றும் நீங்கிய பின்பே முன்பு பாலில் நெய்போல விளங்காதிருந்த நிலையினின்றும் நீங்கித் தயிரில் நெய்போல வெளிப்பட்டு விளங்குகின்ற சிவன் அவ்வாறு வெளிப்பட்டாலன்றி யாதோர் உயிர்க்கும் துன்பத்தைத் தருகின்ற ஆணவ மலம் நீங்குதல் உண்டாகாது.

குறிப்புரை :

`உயிர்கட்கு உள்ள உபாதிகளில் மூல உபாதி ஆணவ மலமே யாதலின், முன் மந்திரத்தில் மாயேயங்களாகிய ஆறாறும் நீங்கியபின் உயிர்தொம்பதமாம் - என்றது என்னை` என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். ஆணவத்தை நீக்க வேண்டியே மாயேயங்கள் சேர்க்கப்பட்டமையால். `அவை நீங்க` என்றமையால், `அவற்றிற்குக் காரணமான ஆணவம் நீங்கினமை தானே பெறப்படும் என்றபடி. அயிர்ப்பு - ஐயம். வெதிரேகம் - எதிர்மறை; அது முன்னை நிலைக்கு மாறாய் அமையும் நிலையைக் குறித்தது. உயிர்த்தல், இங்கு விளங்குதல் உபமித்தல் - உடனாதல். இதுவும் அந்நிலை விளங்குதலையே குறித்தது. `ஒளியாலல்லது இருள் நீங்காதவாறு போல், சிவம் பிரகாசித்தா லல்லது ஆணவ மலம் நீங்காது என்பதாம். `மாயேயங்களாகிய உபாதிகள் நீங்கினவிடத்தே பிரகாசிப்பவன் சிவன்` என்றதனால், மாயேயங்கள் நீங்கினவிடத்துச் சிவம் பிரகாசித்தலால் ஆணவ மலம் நீங்கிற்றாம்` எனக் கூறற் பாலதனை வலியுறுத்தற் பொருட்டு `உபமித்தாலன்றி ஆணவம் வீடல் செய்யாது` என எதிர்மறை முகத்தாற் கூறினார்.
இதனால், `ஆதியாய உபாதி நீங்குங்கால், அநாதியாய உபாதி நீங்கியேவிடும்` என ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கரக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறு பாழில் பராற்பரந் தானே.

பொழிப்புரை :

`காரிய உபாதி` எனமேற் கூறப்பட்ட உபாதிகள் உள்ள பொழுது, உயிர் தன்னையே அறியாது மயங்கும். காரிய உபாதிகள் நீங்கக் காரண உபாதிகள் நீங்காதிருக்குமாயின் உயிர் தன்னை ஒருவாறு அறியினும் தலைவனை அறியாது மயங்கும். இக்காரிய காரண உபாதிகள் உயிர்கட்கு ஆக்கி வைக்கப்பட்டவை. இன்னும் இவ்வுபாதிகள் பலவாகச் சொல்லப்படுகின்ற பதங்களாகிய உலகங்களைச் சார்ந்து நிற்பனவாம். இவையெல்லாம் அற்ற நிலையே `வெறும் பாழ்` எனப்படுகின்றது. அவ்விடத்தில் தான் மேலானவற்றிற்கெல்லாம் மேலான பரம் பொருள் உள்ளது.

குறிப்புரை :

`உயிர் அந்த வெறும்பாழை அடைந்து தான் பரம் பொரூளை அடைதல் வேண்டும்` என்பது கருத்து. `கலக்கும்` என்பன பாடம் அல்ல. கடும்பசு - மலத்தால் மிக மூடப்பட்ட பசு; என்றது, சகலவருக்கத்து உயிரை - காரிய காரணம், உம்மைத் தொகை. ``கற்பனை`` என்றது, ஆக்கப்பாட்டினை. பதம் - பதவி. பார் - உலகம். ஏகாரம், பிரிநிலை. அதனைப் பிரித்து, ``பாழ்`` என்பதனோடு மாறிக்கூட்டி, `பாழிலேதான் பராற்பரம்` என்க. தான் கட்டுரைச் சுவைபட வந்தது. `உள்ளது` என்பது சொல்லெச்சம்.
இதனால், `உபாதிகள் எல்லாம் நீங்கின இடமே உயிர் அடையத் தக்க இடம்` என்பது கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

பொழிப்புரை :

``பற்றுக பற்றற்றான்; பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு``*
என்றபடி, உலகப் பற்றை நீக்குதற்கு வழி சிவப்பற்றைக் கொள்ளுத -லாகும். அப்பற்று உண்டாதற்கு வழி, சிவனைக் குருலிங்க சங்கமங் -களை வழிபட்டு உறுதுணையாகப் பற்றுதலாகும். மனம் புலன்களின் வழி ஓடாது தன் வயப்படுதற்கு வழி யோகசமாதி. முத்திக்கு வழி சிவ ஞானம். அந்த ஞானம் வருதற்கு வழி உயிர் உபசாந்தத்தை அடைதலாம்.

குறிப்புரை :

`இங்கு எடுத்துக்கொண்ட பொருள் முத்தியே` என்பது தோன்றுதற் பொருட்டு, `சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்` என்னும் முறைப்படி ``முத்திக்கு வித்து`` என்பதையே முன்னர்க் கூறினா -ராயினும் ஈற்றடிக்கு முன்னே கூட்டியுரைத்தல் கருத்தென்க. ``சத்தி`` என்றது ஞானத்தையே. `முத்திக்கு வித்து, சக்திக்கு வித்து` என்பவற்றைக் கூறுதலே கருத்தாயினும் அவை வலியுறுதற் பொருட்டு வேறு இரண்டை உடன் கூறினார். இஃது ஒப்புமைக் கூட்ட அணி பணிந்துற்றப் பற்றுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மனத்தை அது சென்றவிடத்தால் செலவிடாது* அடக்கித் தன் வயப்படுத்துதலே பெறற் கரிய பேறாகலின் அதனையே ``சித்தி`` என்றார். சிவபரம் - சிவமாகிய பரம் பொருள். தானாதல் - சமாதி. ``சிவம் பரம்`` என்றதனால், சிவ யோகமே குறிக்கப்பட்டதாம். உபசாந்தமாவது மாயேயங்கள் எல்லாம் நீங்கிய நிலை` என்பது முன்பே கூறப்பட்டது.
இதனால், `உபசாந்தம் ஞானத்தைப் பயக்க, ஞானம் வீடு பேற்றைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.

பொழிப்புரை :

`காரிய தத்துவம்` எனப்பட்ட ஆன்ம தத்துவங்கள் பிரகிருதியில் ஒடுங்கினும், பிரகிருதி ஒடுங்காத பொழுது அவை மீளத் தோன்றும் நிலை உளதாகும். ஆகவே, பிரகிருதி ஒடுக்கமே காரிய தத்துவ ஒடுக்கம் ஆதலின், அஃது அசுத்த மாயையில் ஒடுங்குவதாம். இனி, `காரண தத்துவம்` எனப்பட்ட வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையில் ஒடுங்க, அசுத்த மாயை கலக்குண்ணாது சுத்த மாயையில் வியாப்பியமாகி நிற்றலே காரணதத்துவ ஒடுக்கம் ஆதலின், அசுத்த மாயை சுத்த மாயையில் ஒடுங்குவதாகும். (இங்கு ஒடுக்கமாவது காரியப் படுதல் இன்றி வியாப்பிய மாத்திரம் ஆதல்) இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றபொழுது ஆன்மா பர துரிய நிலையை அடையும். (`அப்பால் அதீத நிலை தானே வரும்` என்பது கருத்து) `உபசாந்தம்` என்பதன் தன்மை ஆன்மா இவ்வாறு காரிய காரண உபாதிகளின் வாசனையும் அற்றுத் துரிய நிலையை அடைதலேயாகும்.

குறிப்புரை :

பார் - நிலம். என்றது, முன் அதிதகாரத்தில், ``எய்தாப் பேரும் நிலம்``3 எனப்பட்ட நிலம். அணவுதல் - அடைதல் இதற்கு, `உயிர்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனால், `உபசாந்தமாவது இது` என்பதும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி
மன்னு பரம்காட்சி யாவ(து) உடன்உற்றுத்
தன்னின் வியாத்தி தனி உப சாந்தமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``பார்`` எனப்பட்ட அந்தப் பர துரியமே முற்றான ஆன்ம சுத்தி நிலையாகும். (எனினும், அதற்கு முன்னே `சிவதுரியம்` எனச் சொல்லப்பட்ட நின்மல துரியமே ஆன்ம சுத்தியாகச் சொல்லப்படுகின்றதன்றோ எனின்` பராவத்தையில் இனிது வெளிப்படுகின்ற பர சிவம், நின்மலாவத்தையில் ஓரளவாக வெளிப்படுதல் பற்றி அங்ஙனம் கூறப்படுகின்றது. ஆயினும் ஆன்மா பர சிவத்தோடு இரண்டறக் கலந்து உடனாய், வியாபகமாய் நிற்றல் ஒப்பற்ற உபசாந்தமாகிய பராவத்தையிலே யாகலின், பர துரியமே முற்றான ஆன்ம சுத்தியாம் என்க.

குறிப்புரை :

இதனை மெய்கண்ட நூல்கள் `ஆன்ம லாபம்` எனக் கூறும், ``சுத்தியும்`` என்னும் உம்மை சிறப்பு. முன்னியே - முன்பே கருதப்பட்ட சாக்கிராதீதம், நின்மல துரியாதீதம். `புரிவு` என்பது விகுதி குன்றி, முதனிலை மாத்திரமாய் நின்றது. புரிவு - செயல்; மேற்குறித்த ஆன்ம சுத்தி பரம் - பர சிவம் `காட்சியாவதனால்` எனவும், `உபசாந்தத்தில்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. தன்னில் - பரசிவத்தில், `வியாத்தி` என்றது வியாப்பியத்தை.
இதனால் உபசாந்தமே முடிநிலைப் பேறாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறா றமைந்தா றவத்தையுள் நீங்குதல்
பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறாம் வியாத்தம் பிறங்குப சாந்தமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களும் தன்னின் மேம்பட்டுத் தன்னை மயக்காதபடி அவைகளைக் கீழ்ப்படுத்தி, அவைகளால் வரும் மயக்கத்தினின்றும் நீங்குதலே தன்னைத் தான் பெறுதலாகிய ஆன்ம தரிசனமாகும். (சிவரூபம் இதில் உடன் நிகழும். ``தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாம் தொழும்`9 என்றார் திருவள்ளுவரும்) ஆன்ம தரிசனத்திற்குப்பின் நிகழ்வதாகிய ஆன்ம சுத்தியாவது, சொல் நிகழ்ச்சியில்லாத, மௌன நிலையாகிய நின்மல துரியாதீதமாகும். (இதில் சிவதரிசனமும், சிவயோகமும் உடன் நிகழும்) ஆன்ம சுத்திக்குப் பின் அடையற்பலாதாகிய ஆன்ம லாபமாகிய சிவப்பேறாவது, பர துரியா தீதமே.

குறிப்புரை :

ஆறுதல் - அடங்குதல்; கீழ்ப்படுதல். தீர்தல் - மும்மலங்களும் நீங்குதல். குருவாகிவந்து அருள்செய்யும் அருட் பெருக்குப் பற்றிச் சிவனை, ``குருபரன்`` என்றார். குருபரம் - குருமார்களுக்கெல்லாம் மேலான குரு; ஞானகுரு. வியாத்தம் - வியாத்தி; சம நிறைவு. சமமாதல், சிவ வியாபகத்தோடாம். ஆன்மாச் சிவத்தில் வியாப்பிய மாயினும் பெத்தத்தில் ஏகதேசமாய் நின்ற நிலையினின்றும் நீங்கி வியாபகமாயினமை பற்றி ``வியாத்தி`` என்றார்.
இதனால், உபசாந்தத்தை அதற்கு இனமாய் முன்னிகழ்வன வற்றோடு ஒப்பித்துக்காட்டி அதன் இயல்பு இனிது விளக்கப்பட்டது. இதனானே அவற்றது இயல்புகளும் தெளிவிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

வாய்ந்த உபசாந்தம் வாதனை உள்ளம் போய்
ஏய்ந்த சிவம்ஆதல் இன்சிவா னந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுகானு பவத்தொடே
ஆய்ந்து அதில் தீர்கை ஆனதீ ரைந்துமே.

பொழிப்புரை :

உபசாந்தம் பத்து நிலைகளையுடையதாகச் சொல்லப்படும்.
1. கருவி கரணங்கள் உலகியல் வகையில் செயற்படாது, மெய்யுணர்வு நெறியில் செயற்படுதல். (இஃது யோகாவத்தை, இது முன்பு `சீவ துரியம்` எனப்பட்டது. இது கருவிகளின் மாற்றுச் செயல் ஆதலின், இதனை, வாதனை`` என்றார்).
2. ஆன்மாத் தன்னைக் கருவிகளின் வேறாக உணர்தல் (இஃது ஆன்ம தரிசனமாம். உள்ளம் - ஆன்மா; `ஆன்மா` என்றது, `ஆன்மாத் தான் ஆதல்` என்றபடி.)
3. ஆன்மாத் தன்னையிழத்தல். (அஃதாவது தற்போதம் நீங்குதலாம்.) ``போய்`` என்றது, `தான் போய்` என்றபடி.
4. தற்போதத்தை இழந்த ஆன்மாச் சிவனையே உணர்ந்து அவனேயாதல். (இதுவே தசகாரியத்துள் சொல்லப்படும் சிவயோகம். ஆன்ம தரிசனத்தில் சிவரூபம் உடன் நிகழும். ஆன்ம சுத்தி சிவதரிசனத்தில் தொடங்கி சிவயோகத்தில் முற்றுப்பெறும்.)
5. சிவானந்தம் உதயமாதல். (இது சிவயோகத்தில் முடிநிலையில் நிகழும்.)
6. உயிர் சிவானந்தத்தை அனுபவித்தல். (இஃது `ஆனந்தானுபவம்` எனப்படும். இதில் உயிருக்கு, `நாம் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வு நிகழும்.)
7. உயிர் ஆனந்தத்தில் அழுந்துதல். (இதில் அந்த உணர்வும் இல்லாதொழியும்.) இஃது `ஆனந்தாதீதம்` எனப்படும். (இரண்டு முதல் 5 முடிய உள்ள நான்கும் நின்மலாவத்தையில் சாக்கிர, சொப்பன, சுழுத்தி, துரிய அவத்தைகளாம். 6,7 நின்மல துரியாதீதமாம்.)
8. சகலரினின்று பிரளயாகலர்களாகப் பெற்ற உயிர்களும், பிரளயாகலரில் பக்குவம் பெற்ற உயிர்களும் பின் விஞ்ஞானகலராய் இறைவனால் திருவருள் செய்யப்பெற்றுச் சுத்த புவன போக்கியப் பொருள்களால் இன்புற்றிருத்தல்.
9. அதற்கு மேலும் சுத்த புவன அதிபதிகளாய் ஆட்சி புரிதல். (இவை `அபர முத்தி` எனப்படும்).
10. இங்குக் கூறிய இவைகளில் ஒன்றும் இன்றிச் சிவனோடு இரண்டறக் கலந்து அவனது வியாபகத்தில் அடங்கி விடுதல் என்பன. (இறுதி மூன்றும் பராவத்தைகளாம். அவற்றுள் பத்தாவதே பரமுத்தியாம்.)

குறிப்புரை :

`இங்குக் கூறியன எல்லாம் உபசாந்தம்; எனப்படு மாயினும் பராவத்தையே உண்மை உபசாந்தம். என்பதும், அவற்றுள் பர முத்தியே முடிநிலை`- என்பதும் கருத்துக்கள் ``சிவானந்தத்து`` என்றதனால் சிவானந்தம் உதயமாதல் பெறப்பட்டது. ``தோய்ந்து`` என்றதனால், தோய்தலும் வேறொன்ற ாயிற்று. ``மோனம்`` என்றது அமைதியை; அது துன்பம் இன்மையைக் குறித்தது. ``அனுபவத் தொடே`` என்னும் ஒடு, எண் ஒடு. ஆய்தல் - இங்கு முற்றுணர்வுபெற்று எல்லாவற்றையும் அறிதல் ஆகவே, அஃது ஆட்சி செய்தலாயிற்று. `உபசாந்தம் ஈரைந்துமே` என முடிக்க. ஏகாரம் தேற்றம்.
இதனால், ஞானச் செய்தியாவன பலவும் உபசாந்தத்தின் படிநிலைகளாகத் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பரையின் பரஅப ரத்துடன் ஏகமாய்த்
திரையின்இன் றாகிய தெண்புனல் போலவுற்(று)
உரையுணர்ந்(து) ஆரமு தொக்க உணர்ந்துளோன்
கரைகண் டவன் உரை யற்ற கணக்கிலே.

பொழிப்புரை :

பர சிவத்தின் சத்தியாகிய பராசத்தியின் தடத்த நிலை அதன் அபரமும், சொரூபநிலை அதன் பரமும் ஆகும். பெத்தத்தின் நீங்கிய உயிர் முதற்கண் நின்மலாவத்தையிலும், பராவத்தையில் அதீதத்திற்குக் கீழ்ப்பட்ட நான்கு நிலைகளிலும் பராசத்தியின் அபர நிலையைப் பொருந்தியும் அதீதத்தில் அதன் பர நிலையைப் பொருந்தியும் அலையற்றுள்ள கடல்நீர் போல யாதோர் அலைவுமின்றியிருக்கும். எனினும், அபர நிலையில் தேவாமுதத்தைப் பெற்று உண்பவன், அதனைத் தான் பெற்ற அருமை, அதன் சுவை மிகுதி, அதன் பயன் முதலியவற்றை உணர்ந்து நிற்பவன் போலவும், பர நிலையில் அவ்வாறு உணர்தல் இன்றி அந்த அமுதத்தின் சுவையிலே மூழ்கித் தன்னை மறந்து நிற்பவன் போலவும் இருப்பான். இவ்விருவரில் தன்னை மறந்து, உரையுணர்விறந்தவன் நிலையே முடிந்த நிலையாம்.

குறிப்புரை :

``உரையுணர் விறந்து நின்று உணர்வதோர் உணர்வே``9 என்றும் அருளிச் செய்தமையும் காண்க. சத்தியின் நிலையே சிவத்தின் நிலையாயினும் உயிர் சத்தி வழியாகவே சிவத்தையடைதல் பற்றி அங்ஙனம் அடையப்படும் நிலைகளைச் சத்திநிலைகளில் வைத்துக் கூறினார். ``உரை உணர்ந்து`` என்றது, `உரையையும், உணர்வையும் வேறாக நன்குணரும் நிலையில் நின்று` என்றபடி. ஒக்க உணர்தல் - முற்ற உணர்தல்; என்றது நன்குணர்தலை `உணர்ந்துளோன் உரையற்ற கணக்கில் கரை கண்டவன் ஆவான்` என முடிக்க. கணக்கு நிலை - கணக்கில் நிலையை அடைந்த பொழுது.
இதனால், ஞானச் செய்திகளின் முடிநிலை அனுபவங்கள் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பிறையுட் கிடந்த முயலை எறிவான்
அறைமணி வாட்கொண் டவர்தமைப் போலக்
கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்
`நிறையறி வோம்` என்பர் நெஞ்சிலர் தாமே.

பொழிப்புரை :

`சந்திரனிடத்து உள்ள முயலையாம் வெட்டுவோம்` என்று சொல்லி, ஒலிக்கின்ற மணிகட்டியுள்ள வாளையெடுத்து உயர உயர வீசுபவர் போல, அறிவில்லாதவர் நீல மணிபோலும் கறுத்த கண்டத்தையுடைய சிவனை அடையும் நெறியை உணர மாட்டாமலே தாமே மெய்ப்பொருளை முற்ற அறிந்த நிரம்பிய ஞானிகள் போலத் தாம் அறிந்தன சிலவற்றைக் கூறி உண்மை ஞானியரை இகழ்வர்.

குறிப்புரை :

`முயல்` எனப்படுவது, உண்மையில் முயலாகாமை போல, ஞானியர்பால் பிறர் குறையாகக் காண்பனவும் உண்மையில் ஆகாமையும் இவ்வுவமையால் கொள்ளத் தக்கது. `ஞானமில்லாரது இகழ்ச்சிகள் ஞானியைச் சார மாட்டாமையே யன்றிச் சார்தற்கு யாதும் இயைபும் இல்லை` என்பது இவ்வுவமையால் கூறப்பட்டதாம்.
``எறிவான்`` வான் ஈற்று வினையெச்சம். ``நெஞ்சு`` என்றது அறிவை. `அது குருவுபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியும் அறிவு` என்க.
இதனால், `உண்மையுணராதாரது இகழ்ச்சியால் உண்மை யுணர்ந்தார்க்கு வருவதோர் இழுக்கில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக்
கருந்தாழ் கயத்தில் கரும்பாம்பு நீங்கப்
பெருந்தன்மை பேசுதி ஒழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாறே.

பொழிப்புரை :

மனமே, `பெரிய முயற்சியையுடைய கருடன் தன்போக்கிலே தான் ஆகாயத்தில் பறக்கவும், கரிய நாகம் அஞ்சி ஓடி, மிக ஆழ்ந்த புற்றுள் ஒளிந்து கொள்ளுதல் போலவதே, மெய்யுணர் வுடையார் முன் மெய்யுணர்வில்லாதாரது நிலை என்பதைச் சில சான்று களால் நீ உணர்ந்திருந்தும் மெய்யுணர்வில்லாதாரது கூற்றுக்களைப் பெரிது படுத்திப் பேசுகின்றாய். இனி அவ்வாறு பேசுதலை விடு. ஏனெனில் உண்மை மெய்ந்நெறியாகிய பெருநெறியில் ஏனைச் சிறுநெறிகள் எல்லாம் பெரிய ஒரு கடலிலே சிறிய பல ஆறுகள் சென்று உருத்தெரியாது அடங்குதல் போல்வதே.

குறிப்புரை :

``கருமை`` இரண்டும் பெருமை; ஏனையது நிறம் ``நீங்க`` என்பது `மறைய` என்றபடி, அது, `மறைதல் போல்வதாக` பொருள் தந்தது. `பெருந்தன்மை பட` என ஒருசொல் வருவிக்க. பெரிது படுத்திப் பேசுதலாவது, `அவைகளும் ஏன் உண்மைகளாய் இருக்கக் கூடாது` என எண்ணி மயங்குதல். `சென்ற` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ``சென்ற`` என்றது சென்று அடங்குதலைக் குறித்தது. ``ஆறு`` இரண்டில் முன்னது நதி. பின்னது உவம உருபு. `ஆறாதலையுடையவே` என ஈற்றில் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. பிறர் நெஞ்சின் இயல்பினைத் தம் நெஞ்சின்மேல் ஏற்றியுரைத்தார்.
இதனால், `புறங் கூற்று மொழிகள் மயக்கும் தன்மையுடைய வாயினும் குரு உபதேசத்தில் உறைத்து நின்று மயங்கலாகாது` என்பது கூறப்பட்டது. `பிற நெறிகள் குற்றம் உடையன ஆகாது, குறை மட்டுமே உடையன` என்பது பின்னர்க் கூறிய உவமையால் பெறப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 3

கருதலர் மாளக் கருவாயில் நின்றே
பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை
மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்
தருவலர் வேட்ட தனிஉம்பர் ஆமே.

பொழிப்புரை :

பகைவரைப் போர்க்களத்தில் எதிர்த்துப் போர் செய்யாது, அவர்தம் நகரத்தை முற்றுகையிட்டே காலத்தைப் போக்குதல் புல்லறிவாண்மையாகும். சிவநெறியைச் சாராதவர் செய்யும் பெரிய தவங்கள் எல்லாம் அப்புல்லறிவாண்மையை ஒக்குமேயானால், அவற்றால் தரப்படும் பயன்கள் எல்லாம் சுவர்க்க போக வாசிகளாய்ச் சில காலம் வாழ்ந்திருத்தலேயாகும்.

குறிப்புரை :

`முத்திப் பயனை அவை தரமாட்டா` என்பதாம். ``கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்``* என மேலே கூறினமையால், ``மருவலர்`` என்றது சிவனை மருதாவர்களை யாயிற்று. ``ஒத்தால்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின் கண் வந்தது, ``நீரின்றமையா துலகெனின்``* என்பதிற் போல ``ஆமே`` என்பது, `ஆகும் அதுவே` எனப் பொருள்தந்தது.
``பசித்துண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``
என்னும் சிவஞான போதத்தை* நோக்குக. `பிறவிக்குக் காரணமான வினைகளை வெல்வதற்குப் பசு புண்ணியங்களைச் செய்தல்` என்பது இங்குக் கூறிய உவமையால் குறிக்கப்பட்ட பொருள்.
இதனால், பதி புண்ணியங்களை உணராது பசு புண்ணியங் களையே புகழ்வாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பிணங்கவும் வேண்டா பெருநிலம் முற்றும்
இணங்கிஎம் ஈசனே ஈசன்என் றுன்னிக்
கணம்பதி னெட்டும் கழலடி காண
வணங்கெழும் நாடிஅங்(கு) அன்புறல் ஆமே.

பொழிப்புரை :

பெரிய நிலவுலகத்தவர் யாவரும், வானுலகத்துப் பதினெண் கணங்களும், எங்கள் இறைவனாகிய சிவனையே `பரம் பொருள்` என உடன்பட்டு மனத்தால் நினைத்தும் பின்னர் அவன் திரு வடியைக் கண்டு வாக்கால் வாழ்த்தியும் தலையால் வணங்கியும் பயன் பெற முயல்கின்றனர். அதனை நன்கு சிந்தித்து அவனிடத்தில் அன்பு செய்தலே தக்கது. அதை விடுத்து பிற சமயிகளது சொற்களைக் கேட்டு மாறுபடாதீர்கள்.

குறிப்புரை :

``தட்டை யிடுக்கித் தலையைப் பறித்துச்
சமணே நின்றுண்ணும்
பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா;
பேணித் தொழுமின்கள்``9
என்றாற் போல ஞானம்பந்தரும் அருளிச் செய்வார். ``நிலம்`` என்றும் ``கணம்`` என்றும் கூறினமையால், ``எழும்`` என்று அஃறிணை முடிபு தந்தார். ``பெருநிலம் முற்றும், கணம் பதினெட்டும் - எம் ஈசனே ஈசன் என்று இணங்கி, உன்னி, காண வணங்கி எழும்` என இயைந்து, ``காண வணங்கி`` என்பவற்றில் விகுதி பிரித்துக்கூட்டி, `கண்டு வணங்க எழும்` என முடிக்க. `வணங்கி` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. ``பிறைநுதல் வண்ணமாகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே``8 என்றதும் காண்க.
பதினெண் கணங்கள் இவை என்பதை,
``விரவுசா ரணரே, சித்தர்,
விஞ்சையர், பசாசர், பூதர்
கருடர், கின்னரர், இயக்கர்,
காந்தர்வர், சுரர், தைத்தியர்,
உரகர், ஆகாச வாசர்,
உத்தர குருவோர், யோகர்,
நிருதர், கிம் புருடர், விண்மீன்
நிறைகணம் ``மூவா றாமே``3
என்னும் நிகண்டினால் அறிக. விஞ்சையர் - வித்தியாதரர். இயக்கர் - யட்சர். காந்தர்வர் - கந்தருவர். சுரர் - தேவர். தைத்தியர் - அசுரர். உரகர் - நாகர் உத்த குருவோர் - போக பூமியர். யோகர் - முனிவர். நிருதர் - அரக்கர். விண்மீன் - நட்சத்திர மண்டலர்.
இதனால், `உயர்ந்தோர் நெறி சிவநெறியே` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

என்னிலும் என்உயி ராய இறைவனை
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை
உன்னில் உம் உன்னும் உறும்வகை யாலே.

பொழிப்புரை :

என்னைத்தான் நான், `என் உய ர்` என்று ஓற்றுமைக் கிழமை பற்றி எண்ணுவேன். ஆயினும், என் உயிரினுள் உயிராய் நின்று எனக்கு உறுதிசெதய்து வருபவன் எங்கள் இறைவனாகிய சிவன். ஆகவே, `என் உயிர்` என்று யான் வலியுறுத்திக் கூறுதற்கு உண்மையில் உரியவன் அவனே. அவன் உண்மையில் பொன்னினும், மணியினும் சிறப்பாகக் கொண்டு போற்றத்தக்கவன். தூய்மையே வடிவானவன் உலகில் காணப்படும் பொருள்களில் எல்லாம் மேலான ஒளிப்பொருளாகிய. பகலவன் ``வெங்கதிர்`` என்று சொல்லப்படுதல் போல, உயிரினுள் உயிராய் இருந்து அங்குள்ள இருளை முற்றக் கடிதலால் அவனை `வெவ்வுயிர்` என்றலும் பொருந்தும் (`வெம்மை` என்பதற்கு, `விருப்பம்` என்பதும் பொருளாகலின், ``வெவ்வுயிர்`` என்பது, `விரும்பத் தக்க உயிர்` என்றும் பொருள் தரும்) அவன் உயிர்களின் குணங்கட்கு வேறான குணங்களையுடையவன். அவனை நீவிர் நினைப்பீராயின், உம்மையும் அவன் நினைப்பான். (அவனை நீவிர் அடைதல் கூடும்)

குறிப்புரை :

``என்னில் ஆரும் எனக்கினி யார் இலை
என்னி லும் இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளே உயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே``3
என்னும் அப்பர் திருமொழியையும் காண்க.
``என்னிலும் என் உயிராய இறைவன்`` என்றது, `என் உயிர்` என்று யான் சிறப்பித்துக் கூறுதற்கு என்னிலும் மிக உரிமையுடைய இறைவன், என்றபடி, ``மணியிலும்`` எனப் பின்னரும் உருபு விரிக்க. ஆய - உயர்ந்த, மின்னிய - ஒளி விடுகின்ற. விகிர்தன் - வேறு பட்டவன். `உம்மை உன்னும்` என்பதில் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. உறும் வகையாலே உன்னும்` என முன்னர்க் கூட்டி முடிக்க.
இதனால் முன் மந்திரத்தில், ``எம் ஈசனே ஈசன்`` என்று உயர்ந்தோர் பலரும் உன்னி வந்து வணங்குவர் என்றதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து)
ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.

பொழிப்புரை :

நூல்களில் சொல்லப்பட்ட பொருள்களைப் பிறர் அறிய நன்கு உரைப்பவராயினும், தாங்கள் ஐம்புலன்களை வென்று, `இவன் பரமோ, அவன் பரமோ, எல்லாருமே பரமோ` என இங்ஙனம் பலவாறாக எண்ணி அலமரும் ஐயங்களை விரைவில் விடுத்து, `இவன் ஒருவனே பரம்` என்று ஒருதலையாக உணரத்தக்கவன் ஒரு முதல்வனே. அத்தகைய முதல்வன் எங்கள் பரமாகிய சிவன் ஒருவனே ஆதலின், அவனையே நீவிர் நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் மனத்தால் ஒன்றியிருங்கள்; பயன் அடைவீர்கள்.

குறிப்புரை :

`பொருள்கள் உரைப்பவராயினும்` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றில், `ஆதலின்` என்பது வருவித்து. `எம் நிமலனை நின்றும் ஒன்றும் என முடிக்க. மேல் ``எம் ஈசனை`` என்றும், ``என் உயிர்`` என்றும் கூறினாற்போல, இங்கும் `எம் நிமலனை` என்பதில் `எம்` என்பது தொகுத்தலாயிற்று.
``ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்``*
எனவும்,
``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினும் இல்லை:
அவனோடொப்பார் இங்கு யாவரும் இல்லை``*
எனவும் மேற்கூறியவற்றையே இங்கு வலியுறுத்து ஓதினார்.
இதனால், ஐயக் கொள்கை ஆகாமை கூறப்பட்டது.
``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து``*
எனத் திருவள்ளுவரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

நுண்ணறி வாய் உல காய் உல கேழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப்
பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.

பொழிப்புரை :

உயிர்கள் தூல சித்தாதல் போல இல்லாமல் சூக்கும சித்தாய், சடவுலகத்தை இயக்கியும், அறிவுலகமாகிய உயிர்களின் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தும் நிற்கின்ற, எங்கள் தந்தையாகிய சிவபெருமான், உயிர்களின் தனித் தன்மையை உணர்ந்து அவற்றைப் பக்குவப்படுத்தும் முறைகளில் பக்குவப்படுத்துவோனாவான். அவனை உணர்ந்த பெருமக்களையே உயர்ந்த அறிவினையுடையோர் சேரவிரும்புகின்றார்கள்.

குறிப்புரை :

பின் ``என் அறிவாய்`` என்றமையால் முன்பு ``உலகு`` என்றது சட உலகத்தையாயிற்று. பண்ணுதல் தகுதி யாக்கல். ``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை``* என்பதனால், சிவன் பண்ணறிவாளன் ஆதலையறிக. ``விண்`` என்பது உயர்வைக் குறித்தது. அறிவின் மிக்கோராதல் பற்றித் தேவர்கள், `புலவர்` என்றும், `விபுதர்` என்றும் சொல்லப்படுவார்கள். ஆதலின் அவர்களையே ``விண்ணறிவாளர்`` எனக் கூறினார் எனவும், இனி `விண்ணாவது சிவபோகம்; அறிவாளர் அங்குள்ள சிவஞானிகள் எனவும் கொள்ளலும் ஆகும். விண்ணறிவாளர் விரும்புதற்குக் காரணமானவற்றையே முதலில் உடம்பொடு புணர்த்தலாகக் கூறினார். ``விண்ணறிவாளர் விரும்புகின்றார்`` என்றதனால், `நீவிரும் அவ்வாறு விரும்புதலே தக்கது` என்பது குறிப்பாயிற்று.
இதனால், `அறிவு வடிவான மெய்ப்பொருள் சிவனே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே.

பொழிப்புரை :

தேவர்களாலும், (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனைச் சிறுதும் இடையீடின்றி உள்ளத்தால் பற்றுங்கள்; பற்றினால் பற்றிய அப்பொழுதே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எஞ்ஞான்றும் நீவிர் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டால், உமது தன்மை சிவத்தன்மையாய்விடும்.

குறிப்புரை :

கண் - காலம் பற்றிய இடைவெளி. காலை - காலம் `அக்காலையே` எனச் சுட்டு வருவித்து உரைக்க. இயற்றுதல், பண்ணுதல் என இருகாற் கூறியது அகம், புறம் நோக்கியாம். `உம் தன்மை` என எடுத்துரைக்க. ``பராபரன்`` என்பது, அவனது தன்மையைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், சிவன் சாராதார்க்கு அரியனாயினும் சார்ந்தார்க்கு எளியன் ஆதலை உணர்த்தி, `அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்
பின்றான் அருள்செய்த பேரரு ளாளவன்
கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானே.

பொழிப்புரை :

சிவன், தான் பொருளால் ஒன்றாயினும், எண்ணில்லாத பல பொருள்களிலும் நிறைந்திருப்பவன் (என்றது, `அவ்வாறு வியாபிக்கும் சத்தியை உடையவன்` என்றபடி) ஆயினும் தன்னைச் சார்ந்தவர்க்குச் சார்ந்தபின்பே அருளும் பேரருளை யுடையவன். அன்பு செய்யும் மனத்தினர் தாம் அறிந்தவாறு செய்யும் செயல்களுக்கெல்லாம் இணங்குபவன். அன்பர்கள் பலவாய் நிறைந்த மலர்களைத் தூவிப் புகழும் கெடாத புகழினையுடையவன்.

குறிப்புரை :

`அவனை அணுக வேண்டினார்க்கு அணுகுதல் எளிதேயாம்` என்பது கருத்து. `உலகு ஏழும் உடன் பரந்தவன்` என மாற்றியுரைக்க, எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது. உடன் - ஒருசேர. `ஆளவன்`` என்பதில் முதலில் நின்ற அகரம் விரித்தல். கன்றாமை - வெறாமை அது வெறுத்தலின் மறுதலையாகிய விரும் -புதலைக் குறித்தது, ``கல்வி`` என்றது, கற்றுச் செய்யும் செயல்களை, `அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளுபவன்` ஆதலை `கன்றா மனத்தார்தம் கல்வியுள்நல்லவன்`` என்றார். ``பொன்றாத`` என்பதைப் புகழுக்கு அடையாக்குக.
இதனால், `சிவனது இயல்பை உணரவல்லார்க்கு அவனை அடைதல் எளிது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே யென்றும் எறிமணி தான்அகம்
காற்றின் விளக்கது காயம் மயக்குறல்
மாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

பொழிப்புரை :

எம் தந்தையாகிய சிவபெருமானது பொன் போலும் சிவந்த திருவடிகளில், அகத்தில் எனது மனத்தையும், புறத்தில் பூக்களையும் ஏற்றி, `போற்றி போற்றி` என்று பலநாளும் துதித்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியின் ஓசை போன்ற ஓர் ஓசை உள்ளத்திலே கேட்டது. உடனே, காற்றின் முன்னே உள்ள விளக்குப் போல்வதாகிய உடம்பு எந்த நேரத்திலும் நீங்குவதாயினும், அஃது என்றும் நீங்காமலே இருப்பது போலக் காட்டி மயக்குகின்ற மயக்கத்தை நீக்கும் உபாயமும் கேட்டது. பின்பு எல்லாவற்றையும் அடக்கி, மேலே வியாபித்துள்ள பரவெளியும் என் கண்முன் காணப்பட்டது.

குறிப்புரை :

``போற்றி என்றேன்`` என்பதை, ``என்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``கேட்டது`` என்பதை, முன்னரும், கூட்டி, `அகம் எறிமணி கேட்டது, மாற்றலும் கேட்டது` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர். இவ்வோசை யோகத்திற் புலனாகும். ஓசை `விள
க் -காகிய காயம்` என்க. அது பகுதிப் பொருள் விகுதி. ``மாற்றல்`` என்பது ஆகுபெயராய் அதற்குரிய உபாயத்தைக் குறித்தது. உபாயம் கேட்டமை யாவது. அகத்தில் யோகத்தால் புலனாயினமையாம். ``கேட்டது`` எனச் செயப்படுபொருள் வினை முதல் போலக் கூறப் பட்டது. பரவெளி யாவது, திருவருள் அது காணப்பட்டமையாவது தெளிவாக விளங் -கினமை அதனைக் கண்டமை கூறவே அதன்கண் உள்ள சிவத்தைக் கண்டமை கூறவேண்டாவாயிற்று. `நீவிரும் ஏற்றிப் போற்றினால், கேட்டும், கண்டும் பயன் பெறலாம்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `சரியை கிரியா யோகங்களால் சிவனை அடைந்து, அஞ்ஞானம் நீங்கி, மெய்ஞ்ஞானிகள் ஆவீராக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை
ஊடுபுக் காரும் உணர்ந்தறி வார் இல்லை
கூடுபுக் கேறலுற் றேன் அவன் கோலம் கண்
மூடிக்கண்டேன் உல கேழும்கண் டேனே

பொழிப்புரை :

என்னைத் தானே தேடிக்கொண்டு வந்து என்னுள்ளேயிருக்க ஒருப்பட்டுவிட்ட சிவனை என்னுள்ளே புகுந்து அறிகின்றவர் ஒருவரும் இல்லை. (ஆகவே, வேறிடத்தில் அவனை அறிதலும் இயலாமை வெளிப்படை) யான் வெளியே சென்ற அலையாமல் என் உடம்பினுள்ளே கீழ் இருந்து மேல் ஏறிச் சென்று பொழுது அவனது அழகைக் கண்டேன்; காணுங்கால் கண்ணைத் திறந்து பார்த்துக் காணாமல் கண்ணை மூடிக்கொண்டே கண்டேன். அப்பொழுது அவனை மட்டுமா கண்டேன்? ஏழுலகங்களையும் கண்டேன்.

குறிப்புரை :

``தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்``*
எனவும், ``தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்` எனவும் அருளிச் செய்தவாறு, பக்குவம் எய்திய ஆன்மாக்களை அவை பக்குவம் எய்தியது உணர்ந்து தானே சென்று அடைந்து அருளுபவன் சிவன் ஆதல் பற்றி, நேடிக்கொண்டென்னுள்ளே நேர்தரு நந்தியை`` என்றார். ``கூடு புக்கு ஏறலுற்றேன்`` என்றது மூலாதாரத்தினின்று ஆறு ஆதாரங்களையும் நிராதாரத்தில் யோக நெறியால் சென்றமையை, ``கண் மூடி`` என்றது அந்நெறியைக் குறித்தற்கு. யோகக் காட்சியில் அவனைக் கண்டவர்கட்கு அவனது அருளால் எவ்விடத்திலும் எக்காலத்துப் பொருளும் இனிது விளங்குதலைக் குறிக்க, ``கோலம் கண்டேன் உலகேழும் கண்டேன்`` என்றார். ``ஆரும் உணர்ந்தறிவார் இல்லை`` என்றதற்கு, இறைவன் யோகியர் உள்ளத்தில் விளங்குதல் போலப் புற இடங்களில் விளங்குதல் இல்லை` என்பதே கருத்து. இக்கருத்தே பற்றி அம்மை திருவந்தாதியிலும்,
``ஆர்வல்லார் காண அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து``l
என்று அருளிச் செய்யப்பட்டது. இதில் அன்பர் உள்ளம் குறிக்கப்பட்டது.
``காலையும், மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம், ஆரூர் அரனெறி யார்க்கே``3
என்ற அப்பர் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
இதனால், யோக முயற்சியும், அன்பும் சிவனை அடைதற்கு வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆன புகழும் அமைந்ததோர் ஞானமும்
தேனும் உடைய சிறுவரை ஒன்றுகண்(டு)
ஊனம்ஒன் றின்றி உணர்தல்செய் வார்கட்கு
வானகம் செய்யும் மறவனும் ஆமே

பொழிப்புரை :

யோகக் காட்சி பற்றி, `முக்காலமும் உணர்ந்தவர்` எனப் பலரும் கூறப்பட்டுக் குவியும் புகழாகிய உயர்வையும், அவ்யோகத்தாலே பிறர் ஒருவரால் அசைக்க ஒண்ணா அருள் உணர்வாகிய துளங்கா நிலையையும், அமுதமாகிய தேனையும் உடைய ஒரு சிறு குன்று மக்கள் எல்லாரது உடம்பிலும் உள்ளது. அதனை உணர்ந்து, ஏறும் வழியறிந்து ஏறி, அதனை உணர்வினால் அடைந்த தவத்தோரை, அவர் உடம்பு நீங்கிய பின்னர்த் தனது பேருலகில் ஏற்றுகின்ற ஆண்மையுடையவனாகவும் எங்கள் சிவன் இருக்கின்றான்.

குறிப்புரை :

யோக நெறியில் பருவ நடு `மேரு` எனப்படுதல் பற்றி, அதனை ``வரை`` என்கின்றவர், அஃது எண் சாண் உடம்பினுள் ஓரிடத்ததாதல் பற்றி ``சிறுவரை`` என்றார். `நுண்ணியதாகக் காணத்தக்கது` என்றலும் கருத்து. `உடம்பினுள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. அவ்விடத்துப் பருகி இன்புறுதற்கு ஏதுவாய் உள்ள அமுதத்தை, ``தேன்`` எனச் சிறப்புருவகமாகக் கூறி, ஏனைய, `புகழ், ஞானம்` என்பவற்றை உருவகம் செய்யாது வாளா கூறினமையின், இஃது ஏகதேச உருவகம். ``கண்டு`` என்றது, காணுதற்கு அருமை குறித்தது. செய்தல் -தருதல். `ஏனையோர் அது மாட்டார்` என்பது உணர்த்துதற்கு மாட்டுவானை, ``மறவன்`` என்றார். மறவன் - வீரன் உம்மை சிறப்பு. இங்கும் எழுவாய் அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், சிவநெறி நின்று சிவயோகம் செய்யின், புகழும், ஞானமும், இன்பமும், வீடும் பெறலாம்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாமதி ஆம்மதியாய் நின்ற மாதவர்
தூமதி யாகும் சுடர்பர மானந்தம்
தாமதி யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு)
ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.

பொழிப்புரை :

`மதி` என்பதற்கு, `அறிவு` என்பதும் பொருள் ஆதலால் `மதி` என்னும் பெயருக்கு வானத்துச் சந்திரனை விட மிக உரிமையுடைய உச்சிச் சந்திரனை அடைந்து, அதனால் உண்டாகும் அறிவையே அறிவாகப் பெற்ற யோகிகளுடைய தூய அறிவாய் விளங்கும் ஒளி, பேரின்பமே வடிவாக உடைய பரம்பொருளாம். அதனால், பிறரெல்லாம் தங்களுடைய நிலையற்ற அறிவையே அறிவாகப் பற்றி உலகத்தை நுகர்ந்துகொண்டிருக்க இவ்யோகிகள் `உபசாந்தம்` என்னும் நிலையை அடைந்து, அநாதியே பற்றிய மலங்கள் நீங்கப்பெற்று, அமைதி நிலையை அடைகின்றனர்.

குறிப்புரை :

`மாதவரது தூய்மதி` என்க. பரமானந்த வடிவானதை, ``பரமானந்தம்`` என்றார். தாமதி - தாவுகின்ற மதி. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றும் நிலையில்லாத அறிவு. அற்றார். முற்றெச்சம். தெளிவு பற்றி நிகழ்காலம், இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட யோகத்தின் சிறப்புடைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு)
இதமுற்ற பாச இருளைத் துரந்து
மதம்அற்(று) `எனதியான்` மாற்றிவிட் டாங்கே
திதம்உற் றவர்கள் சிவசித்தர் தாமே

பொழிப்புரை :

`சாலோகம், சாமீபம், சாரூபம்` மூன்றும் பத முத்திகளாம். சிலர் இவற்றையே வேறு வகையாகக் கூறி `பரமுத்தி` எனச் சாதிப்பர். அவற்றில் எல்லாம் இருள்மலம் ஆகிய ஆணவம் பற்றறக் கழியாமையால் அதன் காரியமாகிய துன்பம் அவ்விடங்களில் சிறிது சிறிது உள்ளதேயாம். ஆகையால், `அவை குறையுடையன` என்று அறிந்து, அவற்றோடு நிற்றலை விடுத்து. ஆணவம் பற்றற நீங்கினமையால், அதன் காரியமாகிய மயக்கமும், `யான், எனது` செருக்கும் பற்றறக் கழிய, அப்பற்றுக்களை இயல்பிலே இல்லாதவ னாகிய பரம சிவனிடத்தில் அடங்கி நிலைத்திருப்பவர்களே உண்மை -யில் சிவனைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`அயன், அரி, அரன்` என்னும் மூவர் பதவிகளைச் சிவநூல்கள் ஓரிடத்தும் `முத்தி` என்றல் இல்லையாகலின் அவைகளை மூனறு `பத முத்திகள்` என்றல் கூடாமையறிக. இதம் உற்ற பாசம் - பெத்த நிலையில் இன்பம்போலத் தோன்றிய பாசம். ``ஆங்கு`` என்றது பண்டறி சுட்டு திதம் - நிலைபேறு `இந்நிலையை அடைந்தவர்களே நிலை பெற்றவர்` என்றதனால், பதமுத்தியடைந்தவர்கட்கும் பின்னர்ப் பிறப்புவருதல் உண்டு என்பது,
``தவம் செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து
பவம் செய்து பற்றறுப்பா ராகத் - தவம் செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றாசூழ் சொல்லுமாம் கண்டு``
என்பது சிவஞான போதம்.* `பரமுத்தி யொழிந்த ஏனைய முத்திகள் இன்பநிலை ஆகா` என்பதைச் சிவஞான சித்தி கீழ்க்காணுமாறு விளக்கும்.
``பினாதி அருள் பெற்றவர்கள் நித்தஉரு வத்தைப்
பெற்றிருக்கை முத்தியெனில், பெறும்பதமே இதுவும்;
இனாதுநிலை இதுதானும்; காயம் உண்டேல்,
இருங்கன்மம், மாயைமலம் எல்லாம் உண்டாம்.`` 9
சித்தி - பேறு. சித்தர் - பேறு பெற்றவர்.
இம்மந்திரம் அகச் சமயத்தார்க்கு அறிவுறுத்தியது.

பண் :

பாடல் எண் : 15

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துதுடன் தோய்ந்தும்தோ யாதவர்
முத்தர முத்திக்கும் மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.

பொழிப்புரை :

சிவஞானத்தால் சிவதரிசனத்தைப் பெற்றோர் யாவரும் சிவனைப் பெற்றவராகவே எண்ணப்படுவர். (அவர் பின்பு பதமுத்திக்கு மேலான அபர முத்தி பரமுத்திகளை அடைவர் ஆதலின்,)
``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்.`` l
என்றபடி அவர்கள் `சுத்தம், அசுத்தம்` என்னும் இருவகைப் பிரபஞ்சத்துள் எதில் இருப்பினும் அதில் பற்றற்றேயிருப்பர். அவர், `பதமுத்தி, அபரமுத்தி, பரமுத்தி` என்னும் மும்முத்திகளையும் தம்மை அடைந்த மாணாக்கர்க்கு அளிக்க வல்ல ஆசிரியர்களும் ஆவர். இனி மூலாதாரத்தில் ஒடுங்கியிருக்கும் குண்டலி சத்தியை எழுப்பி அதன் பயனைப் பெற்ற யோகியரும் சதாசிவ மூர்த்திபோல அபர ஞானமாகிய கலைஞானங்களை வழங்கத் தக்கவராவர்.

குறிப்புரை :

`சீருடன் தோயாதவர்` என இயைக்க. சீர் - சிறப்பு திருவருள். `அதனுடனேயிருந்துகொண்டு, தோய்வின்றி இருப்பர்` என்க சத்தியைப் பெற்றவர் சத்தர். சதாசிவமூர்த்தி பரஞானத்தையும் தருவபர் ஆயினும், அவர் வேதாகமங்களை அருளிச்செய்து, பிறர்க்கு அறிவுறுத்தினமையே இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனால், சிவஞானிகளும், சிவயோகிகளுமே ஆசிரியராவர் என்பது உணர்த்தும் முகத்தால், பிறரை ஆசிரியராகக் கொண்டு மயங்குதல் கூடாமை கூறி முடிக்கப்பட்டது.
முதல் தந்திரம் முதலாகச் சில இடங்களில் கூறியவற்றையே இங்குக் கூறினார். ஆயினும் அவை சுபக்கத்தாரை நோக்கி உண்மை யுணர்த்தலாகக் கூறப்பட்டன; இவை பரபக்கத்தாரை நோக்கி, அறிவுரையாகக் கூறப்பட்டன. இவ்வேற்றுமை உண்மையால், இவை கூறியது கூறல் ஆகாமை உணர்க. இங்ஙனமாகவே, இவ்வாறு உரையாதார்க்கு இவை கூறியது கூறல் ஆதலையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 1

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.

பொழிப்புரை :

``அண்ட பிண்டம் அவை சமம்``* *கோயிற் புராணம் - பதஞ்சலி சருக்கம் - 70. என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது ஆதலின், இதய கமலம் எட்டிதழ்களை உடையதாகக் கொள்ளப்படுதல் போலவே நில வுலகமும் எட்டிதழ்களையுடைய தாமரை மலர்களும், அவ்விதழ்களில் திசைக் காவலர்கள் இருப்பதாகவும் பாவித்து அவர்களை வழிபடல் வேண்டும் - என்பது வைதிகக் கொள்கை. அவரளவிற்கு அது வேண்டுவதே என்பதை முதற்கண் கூறுகின்றார். இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

உதிக்கின்ற சூரியனுடன் தோன்றுகின்ற இருளில் தோன்றாமை எல்லார்க்கும் உரியது ஆதலின். இதனை ஏனையோர்க்கும் கொள்க. இந்திரன் முதலிய எண்மரையும் கிழக்கு முதலாகத் தொடங்கி எட்டுத்திசையையும் வலமாக எண்ணிப் பொருத்திக் கொள்க. ஈசன் - ஈசானன். நிதித்தல் - நிதிமிகுதல்.
இதனால் `திசை காக்கும் கடவுளர் எண்மராவார் இவர்` என்பது கூறப்பட்டது. கிழக்கிலும், வடக்கிலும் இந்திரனையும், குபேரனையும் நீக்கி, முறையே `ஞாயிறு, திங்கள்` என்பவரைக் கூறுதலும் உண்டு. அவ்விடத்தில் திங்களை, `சோமன்` என்ப,
``ஞாயிறாய், நமனு மாகி,
வருணனாய்ச், சோம னாகித்
தீ, யறாநிருதி, வாயு,
திப்பிய சாந்த னாகி`` - திருமுறை - 4,32.6.
என்னும் திருப்பாடலைக் காண்க. இனி, `சோமன்` என்பதும் குபேரன் பெயரே என்பாரும் உளர்,

பண் :

பாடல் எண் : 2

ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கியல் மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

பொழிப்புரை :

உயிர்களோடு ஒன்றி இயங்குகின்ற மாயா நகரத்தில் ஒன்றை ஒன்று ஒத்துள்ள தாமரைமலர்கள் எட்டிதழ்களையுடையன வாகும். அவை உள்ளே நுணுகிய புழையை உடைய தண்டின்மேல் உள்ளன. அவற்றுள் ஒரு தண்டு `சுழுமுனை` எனப்படுகின்றது. அதனோடு உள்ள புழையால் மலர்கின்ற தாமரையில் விளங்குகின்ற ஒளியையே யோகிகள் காண்கின்றனர் ஆதலின் மற்றொரு தாமரையிலும் அந்த ஒளியையே பாவித்து உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

இம்மந்திரம் இரட்டுற மொழிந்தது. பூ - 1 மலர்; இதய கமலம் 2 பூமி. மாயாபுரி - 1 அண்டம். 2 பிண்டம், உடம்பு இதய கமலத்தை உடைய தண்டு சுழுமுனை நாடி. பூமியைத் தாங்குகின்ற தண்டு அனந்தன் - (ஆதிசேடன்) இதய கமலத்தில் விளங்குகின்ற ஒளி சிவன். அவனையே அண்டத்திலும் (பூமியிலும்) நடுநாயகனாக வைத்து, ஏனையோரைச் சுற்றுக் கடவுளராகக் கொண்டு வழிபட்டு உய்க என்பதமாம். இவ்வாறு செய்யும் வழிபாடு சிவாலயங்கள் அனைத்திலும் என்றும் நிகழ்ந்து வருதல் வெளிப்படை எனவே, `முன் மந்திரத்துக் கூறப்பட்ட திசைக் காவலர்களைச் சிவனது ஆணையை நடத்தும் அதிகாரிகளாகக் கொண்டே வழிபடுதல் வேண்டும்` என்பது போந்தது. `இதுவே சிவ நெறி` என்க.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க எழுதல் - மேம்படுதல்.
இதனால், `வைதிக கருமங்களைச் செய்யினும் சைவ முறையிலே செய்தலே ஆன்றோர் ஆசாரம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ்
எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில்
பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே

பொழிப்புரை :

அரும்பாய் இருந்து அலர்த்த அலர்கின்ற தாமரை மலர்கள் உடலினுள்ளே ஒன்றல்ல; மூன்று உள்ளன. அந்த மூன்றிலுமே ஒளி வடிவான இறைவன் விளங்குகின்றான். எனினும், மேற்கூறிய எட்டிதழ்த் தாமரையிலே நின்றுவிடாமல் ஏறிச் சென்று இரண்டிதழ்த் தாமரையை அடைந்து அவனைத் தரிசித்தால், பிறந்து வளர்கின்ற உடம்பு கனவுக் காட்சியாய்விடும்.

குறிப்புரை :

``மொட்டு அலர்கின்ற`` என்ற விதப்பால், அலர்த்த அலர்தல் பெறப்பட்டது. அலர்த்துதல் பிராணாயாமத்தால். மூன்று தாமரைகளாவன, மேல் ஆதாரங்களாகிய, `அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை` என்பன எட்டிதழ்த் தாமரை அனாகதமே. கீழ் ஆதாரங்களில் வேறு கடவுளர் இருத்தலின் அவற்றைக் கூறாது, இம்மூன்று ஆதாரங்களை மட்டுமே கூறினார். இவற்றில் சிவன் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என இருப்பன். அதனால், `உருத்திரனிடத்திலே நின்று விடாமல், சதாசிவனை அடைக` என்றார். ஆதார யோகத்தின் பயன் விளைவது அவ்விடமேயாகும் அனாகதம் பூசைத்தானமாக ஆஞ்ஞையே தியானத் தானமாம். ஏற்பு - எழுந்து பண்டம் - உடம்பு. இது பின்னர் வருதலின், முன்னர் ``மூன்றுள`` என்றது இதனுள்ளேயாயிற்று. கனவுக் காட்சியாதலாவது, `கனவு போல நிலையாது` என்னும் உணர்வு மிகுதல்.
இதனால், `ஆதார யோகம் யாவும் ஒரு பெற்றிப்பட்டன அல்ல; மேலையாதார யோகமே சிவ யோகமாய்ப் பயன் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

பொழிப்புரை :

உடம்பினுள், முன் அதிகாரத்தில் கூறியவாறு உள்ள சிறுமலையினின்றும் தோன்றுவது ஆறு அன்று; அருவியே அந்த அருவியின் நீரை ஏற்கின்ற குளம் (ஏரி) ஒன்று உண்டு. அதில் விளையும் விளைவுவகைகளோ பல. ஆயினும் அவ்வினைவினது இயல்பு அறிதற்கரிதாய மிக நுட்பமாய் உள்ளது. அதனை வெளிப் படக்கூறினால், மாதொரு கூறனாகிய பரம்பொருளேயாம்.

குறிப்புரை :

`அருவியே ஆறு` என ஏகாரத்தை மாற்றி யுரைக்க. ``அகம்`` என்பதை முதலிற் கூட்டுக. ``அருவி`` என்றதனால், அது தோன்றும் இடமாகிய மலையுண்மை தானே பெறப்பட்டது. `மலையில் ஆறு உற்பத்தியாதல் இயல்பு; ஆயினும் இங்கு அஃதில்லை` என்றபடி. `அஃது ஆஞ்ஞை` என்பது மேலே சொல்லப்பட்டது. அருவி - ஆஞ்ஞை யினின்றும் பெருகும் அமுத தாரை. குளம் - இருதயம். விளைவு பல வகையினதாதல் இறைவனது எண் குணங்கள் பற்றியாம். முதல் இரண்டடிகளிற் பொதுப்படக் கூறியவற்றை ஏனையோர் அறிவா ராயினும், அதனைச் சிறப்புவகையான் அறியாமை பற்றி, `அதனை அவ்வாறு அறிதல் வேண்டும்` என்பதைப் பின்னிரண்டடிகளால் கூறினார். `அங்ஙனம் உணராத பொழுது அவர் முயற்சி பெரும்பயன் தாராது` என்பதாம். வேறேயிருத்தல், தலைமையிடத் திருத்தல்.
இதனால், மேலையாதார யோகங்களையும் சிவ யோகமாகச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

தியானப் பொருள் பிராசாத கலைகள் பன்னிரண்டிலும் நிறைந்து, எட்டிதழ்த் தாமரையாகிய இதய கமலத்திலும் பொருந்தி வெளிப்படச் செய்கின்ற முறை, திசையெட்டும், அவற்றைக் காக்கின்ற தேவர் எண்மரும், அவர்தம் ஊர்தி முதலியனவும், ஐம்பெரும்பூதம், இருசுடர், உயிர் ஆகிய எட்டுப் பொருள்களும் ஆகிய அனைத்துமாய் உள்ள முதல்வனாகிய சிவபிரானை வெளிப்படச் செய்யும் முறையேயாம்.

குறிப்புரை :

`தியானப் பொருள் சிவனே` என்றபடி ``தேர் எட்டும்`` என்பதை, ``தேவதை எட்டும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``தேர்`` என்றது, படைக்கலம் முதலிய பிறவற்றையும் தழுவிய உபலக்கணம். `திசைக் காவலர் அவ்வாறெல்லாம் வழிபடப்படுவர்` என்க. அகை - பிரிவு. மற்று, அசை. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `உதிப்பிக்கின்ற ஆறு, ஆதிப்பிரானை` என முடிக்க. `ஆதிப் பிரானை உதிப்பிக்கின்ற ஆறாம்` என்றபடி. ஆறு - முறைமை. `உதிப்பிக்கின்ற` என்பதில் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது.
இதனால், `யோகத்தின் எட்டுறுப்புக்களில் `தியானம்` ஏதேனும் ஒன்றைத்தியானிப்பது அன்று; சிவனைத் தியானிப்பதே` என்பது கூறப்பட்டது. `ஏதேனும் ஒன்றைத் தியானிக்கலாம்` என்பது யோக மதம்.

பண் :

பாடல் எண் : 6

ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில்
வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில்
ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில்
தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.

பொழிப்புரை :

வைதிக முறையில் வழிபடினும், இதய கமலத்தின் எட்டிதழ்களில் கிழக்கு முதலாகத் தொடங்கி வலமாக ஏழ் எண்ணி ஏழாவதாகிய வட இதழ் ஈறாக உள்ள இதழ்களில் உள்ளவர்களாக மேற்சொல்லப்பட்ட திசைக் காவலர்களைச் சகலவருக்கத்து ஆன்ம வர்க்கத்தவராகவும், அடுத்த வடகீழ் இதழில் உள்ள ஈசானனை அவரின் மேம்பட்ட பிரளயாகல உருத்திரனாவும், எட்டையும் கடந்து மேலாக ஓங்கி நிற்கும் உயர்புற இதழில் சீகண்ட உருத்திரரை வைத்துச் சிவனாகவும், கீழ்நோக்கித் தூங்கும் கீழ்ப்புற இதழில் ஆதார சத்தியை வைத்து அச்சத்தியாகவும் பாவித்து வழி படின் சிறப்புடைய சைவ வழிபாடாக அமையும்.

குறிப்புரை :

``ஏழ்`` என்று ஏழ் இதழ்களின் உள்ள தேவதைகளைக் குறித்தது. `சகலமாக இயம்பும்` என ஆக்கம் வருவிக்க. `இயம்பும்` - இயம்பப்படும். `வாழும் ஒன்று பரம்` என மாற்றிக்கொள்க. ``பரம்`` என்பது, `மேலானது` என்னும் அளவாய் நின்றது. ஊழி பராபரம் அயன், மால் இவர்களது ஊழிலும் அழியாது நிற்கும் சீகண்ட உருத்திரர். தாழ்வு - கீழ் உள்ளது; ஆதார சத்தி. மேல், ``சுருங்கிய தண்டின் சுழுனையினூடே`` என்றமையால் இம்முறைக்கு மூலா தாரத்தில் உள்ள குண்டலிசத்தியே தாமரையின் கிழங்காகும், இதய கமல வழிபாடு சைவாகமங்களில் சொல்லப்பட்ட சைவமுறை வேறாதலையறிக. தனித்தன்மை - சிறப்புத் தன்மை; அது சிவ வழிபாட்டுத் தன்மையாம்.
இதனால், வைதிகத்தில் சைவமாம் வகை சொல்லப்பட்டது. அனைத்துத்தேவர்களையும் ஒரு நிகராகப் பரமாகக் கருதுவது தனி வைதிகம் என உணர்க.

பண் :

பாடல் எண் : 7

பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.

பொழிப்புரை :

முதற்கடவுளாவான் உலகிற்குப் பலவகையான ஊழிகளைப் பகுத்து வைத்துத்தான் அவற்றில் அகப்படாது நிற்பவன். அங்ஙனம் பகுக்கப்பட்ட ஊழிகள் பெரும்பான்மையாக ஐந்தாகும். அவை நிவிர்த்திகலை யூழி முதலாக, சாந்தியதீதைகலை ஊழி ஈறானவையாம். அவற்றில் ஒன்றிலும் உள்ளாய் நிகழும் ஊழிகள் பல. ஒவ்வோர் ஊழியையும் கடந்து அனைத்து ஊழிகளும் முடிந்த பின்பும் அவற்றில் மாயையில் அனைத்து உலகங்களும் ஒடுங்கவும் தான் ஒடுங்காது மேல் நிற்பவன் எவனோ, அவனே முழுமுதற்கடவுள்.

குறிப்புரை :

`அத்தகையோன் பரம சிவனே` என்பது கருத்து. அதனால், `ஏனையோர் பலரும் அவனால் தோற்றி ஒடுக்கப்படும் உயிர் வருக்கத்தினரே` என்பதும் அருத்தாபத்தியால் பெறப்பட்டது. பகல் - பகுதல்; பகுத்தல். பகலோன் - பகுத்தலை உடையவன். நின்ற - நின்றன. இரண்டாம் அடியீற்றில் `பல` என்பது வருவிக்க. `செல்லூழிதோறும் அண்டத்துச்சென்றவன்` என்க. `அண்டம்` என்பது, `அப்பால்` என்னும் பொருட்டு. ``உச்சியுள்`` என்பதும் அது ஊழியுள் அவ்வூழி - எல்லா ஊழிகளிலும் முடிவான ஊழி. ஒன்றின் - பொருந்தியிருப்பின். `அவன் பகவனாம்` என முடிக்க. ஈற்றடி இன எதுகை.
இதனால், இதய கலம வழிபாடு சைவ வழிபாடாக நிகழ்தலே சிறப்புடையதாதல், அதற்குக் காரணம் கூறும் முகத்தால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வளியும்
பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.

பொழிப்புரை :

முதற் கடவுளால் ஆக்கி அளிக்கப்படும் உலகத்தின் திசைகள் எட்டாகப் பாகுபட்டு உள்ளன. `அத்திசைகளில் எட்டு யானைகள் நின்று உலகத்தைத் தாங்குகின்றன` என்பதும், `அந்த யானைகளைத்தங்கள் ஊர்திகளாகக் கொண்டு உலாவும் தலைவர்கள் உளர்` என்பதும் இருக்கட்டும். நெருப்பும், நீரும், ஓயாது இயங்கும் காற்றும் ஆகாசமாகிய வெளியைப் பற்றாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அதுபோல, அனைத்திற்கும் பற்றுக்கோடாய் உள்ளவன் அனைத்து ஊழிகளையும் கடந்து நிற்கின்ற அவனே.

குறிப்புரை :

`அதிசைக் காவலர்களே உலகிற்குப் பற்றுக் கோடல்லர்` என்பது கருத்து. அக்கருத்து உவமை காட்டித் தெளிவிக்கப்பட்டது. பூண்ட - பூண்டன; சுமக்கின்றன. எண்மரையும் சேர்த்து, `குழாம்` என்றார். அவர்களை உலகிற்குப் போதியவராகக் கருதுபவரை உட்கொண்டு, ஏனைத் தேவரைச் சேர்த்திலர். `குழாமும் திரியும்` என்க. உம்மை, இறந்தது தழுவிற்று. பரிதல் - இயங்குதல். ஆகாசத்தில் பரியும் எனவும், `அதுவே பற்று` எனவும் மாற்றியுரைக்க. தான், அசை. `அதுபோல அனைத்திற்கும் பற்று அவனே` என்பது குறிப்பெச்சம்.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட பொருள் வலியுறுத்தி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.

பொழிப்புரை :

சுரந்து பாய்கின்ற அருவியை உடைய, உயர்ந்த மலை உச்சிக்குமேலே, தனக்கு வருவாயாகும் நதி எதுவும் இல்லாமல் தானே நிறைந்து, தனது நீரைக் கீழ் நிலங்கட்குப் பாய விடுகின்ற ஓர் அதிசயக் குளம் உண்டு. அக்குளத்தில் சேறும், கிழங்கும், இல்லாமலே செழிப்பான ஒரு கொடியிற் பூத்த அதிசயத் தாமரையும் ஒன்று உண்டு. அந்தத் தாமரைப் பூவைத் தவிர வேறு பூக்களைச் சிவன் விரும்பிச் சூடுதல் இல்லை.

குறிப்புரை :

ஊறும் அருவி, விந்துத் தானத்தில் உண்டாகின்ற அமிர்ததாரை. அதனை உடைய உயர் வரை, ஆஞ்ஞை; புருவ நடு. அதற்கு மேலேயுள்ள அருங்குளம் உச்சி. அது `சந்திர மண்டலம்` எனப்பட்டு, சந்திரன் தருகின்ற அமிர்தத்தைப்போல அமிர்தத்தைத் தருதலால், `ஆறின்றிப் பாயும் அருங்குளம்` எனப்பட்டது. ``உண்டு`` என்பதன்பின், `அதன்கண்` என்பது வருவிக்க. செழுங்கொடி, ஆஞ்ஞையினின்றும் மிடற்றினின்றும் உச்சிக்குச் சென்று பரவும் நாடிகள்; நரம்புகள் பூத்த தாமரை, உச்சியில் மலர்கின்ற ஆயிர இதழ்த் தாமரை. அதனையே சிவன் விரும்பிச் சூடுதல், அத்தாமரையினின்றும் தோன்றும் யோகக் காட்சிகளையே ஆஞ்ஞையில் தன்னைத் தியானிக்கும் யோகிகட்குத் தான் வழங்கும் பிரசாதமாகக் கொண்டிருத்தல் இம்மந்திரமும் மேற் போந்த சில மந்திரங்களை போலப் பிசிச்செய்யுள். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
இதனால், அட்ட தள கமல வழிபாட்டிற்குமேல் யோக வழிபாடும் செய்யத் தக்க சைவ வழிபாடாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

பொழிப்புரை :

மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போகும் காலத்தில், அவனது திருவருளைப்பெற்று நிற்கும் பெரியோர்கள் உலகத்தார் ஆங்காங்கே நின்று கொண்டும், இருந்து கொண்டும், தங்கள் வாய்க்கு வந்த எவற்றைப் பேசினாலும் அவற்றைப்பொருட்படுத்தாது, ஐம்புலன்களை வெல்லுதலும் செய்து, நடந்தாலும், இருந்தாலும் சிவனை உணர்ந்தேயிருப்பர்.

குறிப்புரை :

`அவருடைய உணர்வே உண்மை அட்டதள கமல வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். இறைவனுடைய திருவுள்ளம், `உயிர் தன்னை உணர்தற்கு எந்தத் தடையும் இருத்தல் கூடாது` என்பது. ஆணவமலம் மறைத்தலைச் செய்யாது வாளா இருத்தலும், மாயை கன்மங்கள் உயிர்கள் திருவருள் நெறியில் ஒழுகுதற்குத் துணை செய்தலுமே மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போதலாம். `அந்நிலை மலம் பரிபாகமான காலத்தில் உண்டாகும்` என்பது கருத்து. ``மால் இவன் என்ன மன நினைவில் - ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் - தத்தம் மனத்தன பேச``3 என்னும் ``நிலையே, நிலம், நின்றும், இருந்தும் பல பேசினும் விகிர்தனை நாடுவர்`` என்றார். ``வென்றும்`` என்னும் உம்மை சிறப்பும்மை.
இதனால், சைவ வழிபாடு மலபரிபாகத்தில் உலகியலின் நீங்கினாரிடத்தில திரிபின்றி நிற்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தொற்பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன்
நற்பத விராட்டன் பொன் கற்பன் அவ் வியாகிருதன்
பிற்பதச் சொல்இத யன் பிர சாபதியன்
பொற் புவிச் சாந்தன் பொருந்தபி மானியே.

பொழிப்புரை :

வியாத்தன், தைசதன், பிராஞ்ஞன், விராட்டன், இரணிய கருப்பன், அவ்வியாகிருதன் இதயன், பிரசாபதி, சாந்தன் இம்முத்திறத்து ஒன்பது பெயர்களும் சீவ சாக்கிரம் முதலிய முத்திறத்து ஒன்பது அவத்தைகளிலும் சிவன் தான் காட்சிப்படும் முறையால் எய்தும் பெயர்களாம். ஆகவே, அவனை அத்தன்மையனாகக் காணும் காட்சியில் சீவனும் சார்ந்ததன் வண்ணமாம் தன் றன்மையால் அப்பெயர்களைப்பெற்று நிற்கும்.

குறிப்புரை :

விசுவன் - உலகுயில் வடிவினன். தைசதன் - (தேசசு) ஒளி வடிவினன். பிராஞ்ஞன் - பெருஞான வடிவினன். இம்மூன்று பெயர்களும் முறையே பிராணாயாம பிரத்தியாகாரங்களாகிய சீவ சாக்கிரத்திலும் ஆன்ம தரிசன சிவரூபங்களாகிய சிவ சாக்கிரத்திலும், சீவன் முத்தி அதிகார முத்திகளாகிய பரசாக்கிரத்திலும் எய்துவனவாம்.
விராட்டன் - விராட் புருடன்; சகல புவன வடிவினன். இரணிய கருப்பன் - பொன்வண்ணத்தன்; கவர்ச்சி தருபவன். அவ்வியாகிருதன் - பிரிவுபடாதவன்; அருவுருவன். இம்மூன்று பெயர்களும் முறையே தாரணையாகிய சீவ சொப்பனத்திலும், ஆன்ம சுத்தி சிவ தரிசனங்களாகிய சிவ சொப்பனத்திலும், இலய முத்தியாகிய பர சொப்பனத்திலும் எய்துவனவாம்.
இதயன் - இருதயத்தில் ஒளிர்கின்றவன்; பிரசாபதி - உயிர்களைப் பாதுகாப்பவன். இங்கு ஆகாமியம் நிகழாவாறு தடுத்துப் பிறப்பில் வீழாதபடி காத்தல் என்க. சீவனும் இவ்வாற்றால் தன்னைத் தற்காப்பதாகும். சாந்தன் - அமைதியுடையவன். பிறபொருள் அனைத்திலும் பற்றின்றியிருத்தலோடு ஒன்றன் வாசனையேனும் இல்லாது இன்ப வடிவாய் இருப்பவன். இம்மூன்று பெயர்களும் முறையே தியான சமாதிகளாகிய சீவ சுழுத்தியிலும், சிவயோக சிவபோகங்களாகிய சிவ சுழுத்தியிலும், இலய முத்தி பர முத்திகளாகிய பர சுழுத்தியிலும் எய்துவனவாம். `பர சுழுத்தியில் காட்சிப்படுபவன் சொரூப சிவனாகிய பரம சிவனே` என்பது `சாந்தன்` என்னும் பெயரால் அறியப்படுவது. மாண்டூக்கியோப நிடதத்து ஏழாவது மந்திரம், ``சிவம், சாந்தம், அத்வைதம், சதுர்த்தம்`` எனக் கூறி மற்றும் பலவாறாக வருணித்தது சொரூப சிவத்தையேயாம்.
சதுர்த்தம் - நான்காவது பொருள். அஃதாவது, `துரிய மூர்த்தி` என்பதாம். இங்குத் துரிய துரியாதீதங்களும், `சுழுத்தி` என அடக்கப்பட்டமையால் மூன்றாவது மூர்த்தியாகச் சொல்லப்பட்டது. `சிவன் நான்காமவன்` என்பதனால், அவன் மூம்மூர்த்திகளுள் ஒருவன் ஆகாமை விளங்கும்.
மற்றும் அவ்வுபநிடதத்து நான்காம் மந்திரம் `தைசசன்` என்பது சொப்பனாவத்தையில் எய்தும் பெயராகக் கூறிய சொப்பனத்தைச் சீவ சாக்கிரத்தை நோக்கச் சிவ சாக்கிரம் சொப்பனம் போலத் தோன்றுதல் பற்றிக் கூறியதாகக் கொள்ளல் வேண்டும்.
விசுவ ரூபியை முண்டகோபநிடதம் `அந்தரான்மாவிற்கு அக்கினி தலை, சந்திர சூரியர் கண்கள், திக்குகள் காது, வேதங்கள் வாக்கு, வாயு மூச்சு, புவனங்கள் இருதயம்` என வருணித்து, `அவனது பாதங்களிலிருந்தே அனைத்துலகங்களும் `உண்டாயின` என்றது.3
``நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகமும் முகிழ்த்தன முறையே``
என்பது ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து.
`தொல் பதம்` என்பது எதுகை நோக்கி, `தொற் பதம்` எனத் திரிந்தது. இஃது உயிர்கட்கு அநாதியாய் உள்ள பசுத்துவத்தை ஒட்டி நிகழும் அவத்தையைக் குறித்தது. பதம் - அவத்தை. ``நற்பதம்`` என்பது நின்மலாவத்தையையும், ``பிற்பதம்`` என்பது அவற்றின்பின் நிகழும் பராவத்தையும் குறித்தன.
``அபிமானி`` என்பதைச் சாதியொருமைப் பெயராகக் கொண்டு சிவன், சீவன் இருவரையுங் கொள்க.
இவ்வதிகாரத்து இம்முதல்மந்திரத்தால் நவாவத்தை அபிமானிகள் எய்தும் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

நவமாம் அவத்தை நனவாதி பற்றின்
பவமாம் மலம் குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவில்
துவம் ஆர் துரியம் சொரூபம் தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய முக்கூற்று ஒன்பான் அவத்தைகளில் முதற்கூறாகிய `சீவ அவத்தை` எனப்படும் யோகாவத்தையில் நிற்பினும் பிறப்பு உண்டாகவே செய்யும். அதனால் குரு உபதேசத்தின் வழியாகச் சிவ அவத்தை ஆகிய நின்மலாவத்தையை அடைந்து, `யான், எனது` என்னும் பற்றுக்களை விடுத்து, அப்பற்றுக்கள் சிறிதும் இல்லாத சிவயோகமாகிய உண்மை ஞான வெளியில் நீ அதுவாகி அடங்கி நில். அந்நிலையே சிவ துரியமாகும். அதன்பின் துரியாதீத நிலை எளிதில் கைவர, பரம சிவனை அடையும் உண்மை நிலை உண்டாகும்.

குறிப்புரை :

விதந்தோதாது பொதுப்பட ஓதியதனால் ``நனவாதி`` என்றது முதற்கண் நிகழும் சீவ அவத்தையைக் குறித்தது. `பற்றினும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. மலம் - ஆணவம். அதன் காரியமே யான்` என்னும் செருக்கு. குணம் - மாயை. அதன் காரியங்களே `எனது` என்னும் செருக்கிற்கு நிமித்தம். `இவற்றால் வரும் பற்று` என்க. `அந்தப்பற்றுக்கள் வந்து பற்றாத தவம்` என்றதனால் அது சிவ யோகமாயிற்று. அந்நிலை அருள்நிலையே யாகலின் அது, ``சத்திய ஞானப் பொது`` எனப்பட்டது. துவம் - தன்மை. ஆர் - பொருந்து. ``ஆம்`` என்பதை முன்னரும் கூட்டி, `அதுவே துரியம் ஆம்; பின்பு சொரூபம் ஆம்` என முடிக்க.
இதனால், மேற்கூறிய அபிமானப்பெயர்கள் ஒன்பதில் இதயனிலும் மேலான, `பிரசாபதி, சாந்தன்` என்னும் பெயர்களைப் பெற முயல்வதே சிறப்பு என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவமான சிந்தையில் சீவன் சிதையப்
பவமான மும்மலம் பாறிப் பறிய
நவமான அந்தத்தின் நற்சிவ போதம்
தவமாம் அவையாகித் தானல்ல வாகுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சிவ துரியத்தில் சீவன் ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏகனாகி`` நிற்றலால் `தான்` என்பதொரு முதல் இல்லையாய்விட, ``மல மாயை தன்னொடு வல்வினையின்றே ``* என்றபடி. பிறப்பிற்குக் காரணமாய் நின்ற மும்மலங்களும் அடியோடு கெட்டொழியும். ஒழியவே சீவபோதம் பராவத்தையின் இறுதியில் நிகழும் சாந்த சிவ போதமேயாம். அதனால் அந்நிலையில் அந்த சாகிய சீவன் செய்யும் செயல்களும் பிறப்பிற்கு ஏதுவாம் ஆகாமிய வினையாகாது சிவ போதத்தை நினைப்பிக்கின்ற தவங்களேயாய், மற்றும் தான் செய்தன ஆகாது சிவன் செய்தனவேயாகி விடும்.

குறிப்புரை :

``ஆகும்`` என்பதனைப் ``போதம்` என்பதனோடும் கூட்டி, `அந்தத்தின் நிகழும் நற்சிவ போதம் ஆகும்` என்க. `தவமாம் அவையாகி` என்றதனால், `அவர் செய்யும் செயல்கள்` என்பது பெறப்பட்டது. தான் செய்யும் செயல்களைத் ``தான்`` என்றார். `தான் செய்வன அல்ல ஆகும், என்றதனால், `சிவன் செய்வன ஆகும்` என்பது தானே பெறபட்டது``. சித்தம் சிவமாக்கிச் செய்தன வேதவமாக்கும் அத்தன்`` 8 என்று அருளிச் செய்தது காண்க.
இதனால், மேற்கூறிய அபிமானப் பெயர்களுள் `பிரசாபதி` என்னும் பெயரினனாதலும் சிறப்புடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முன்சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம்
தன்சொல்லின் எண்ணத் தகாஒன்பான் வேறுள
பின்சொல்ல லாகும்இவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்
தன் செய்த ஆண்டவன் தான்சிறந் தானே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதற்கண் சொல்லப்பட்ட ஒன்பது அவத்தைகளைப் போல அவற்றுக்கு முன்னே சீவன் தன் சொல்லால் சொல்லி எண்ணக் கூடாத ஒன்பது நிலைகள் உள்ளன. ஆகவே, அனைத்தையும் தொகுத்து நோக்கும்பொழுது பதினெட்டாகின்ற இவைகளினின்றும் சீவர்களைப் பிரித்துத் தானாகச் செய்துவரும் தலைவனாகிய சிவன் முத்தி நிலையில் தான் ஒருவனேயாகி விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

இங்கு, ``தத்துவம்`` என்றதைச் சித்தாந்த முறையில் சிறப்பாகவும், பிற மதங்கள் கூறும் முறையில் பொதுவாகவும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, மாயாகாரியங்களோடு `சிவன்` சிவன், பரன், என்பனவும் தத்துவங்களாம். ஆனபின், ``தத்துவம்`` என்றது ஆகுபெயராய் அவை பற்றி நிகழும் அவத்தைகளைக் குறிக்கும். ஆகவே, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்ட சீவன் முதலிய மூன்று பற்றிய ஒன்பது அவத்தைகளுடன், மாயா காரியங்களில் உணர்வுக் கருவிகளாகிய ஞானேந்திரியம் ஐந்து, அந்தக் கரணம் நான்கு ஆகிய ஒன்பது கருவிகளால் நிகழும் உணர்வு நிலைகளாகிய ஒன்பது அவத்தைகள் உளவாக, அனைத்தும் ``ஈரொன்பான்`` ஆகும். `இந்நிலைகள் அனைத்தையும் நீக்கிச் சீவனைத் தன்னைப் போலவே என்றும் ஒரு நிலையில் நிற்கச் செய்து சிவன் தான் மட்டுமே விளங்கி நிற்கின்றான். இதுவே உண்மை நிலையாகிய சொரூபநிலை` என்றபடி. `பர துரியத்தையும் பேர்கின்றான்` என்றது, அபர முத்தியினின்றும் நீக்குதலை நோக்கி. ``ஒன்பானின்`` என்பதில் இன் உவம உருபு. `மாயா காரியங்கள்` என்பது விளங்குதற் பொருட்டு. ``எண்ணத்தகா`` என்றார். ``பின்`` என்று. `முடிவில்` என்றபடி. `தன்போலச் செய்த` என உவம உருபு விரிக்க. `தற்செய்த` எனற்பாலது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ``செய்த`` என இறந்த காலத்தாற் கூறினமையின் பண்டு தொட்டுச் செய்து வருதல் விளங்கிற்று. `தானே சிறந்தான்` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், அவத்தைகள் பலவற்றாலும் உயிரைச் சிவன் உய்வித்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம்
பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி
அகைந்தெம்பி ரான்என்பன் அல்லும் பகலும்
இகந்தன வல்வினை ஈடறுத் தானே.

பொழிப்புரை :

`உயிர்களின் பொருட்டு அவற்றிற்கு ஏற்புடைய வித்தை பதினான்கையும் செய்தருளிய முதல்வன்` என்று உயர்ந்தோர் யாவராலும் சொல்லப்படுகின்ற அத்தன்மையை உணர்ந்து நான் சிவனை ஏனைத் தேவரினின்றும் வேறு பிரித்து, `அவனே எங்கள் கடவுள்` என்று இரவும், பகலும் ஓயாது சொல்லிக் கொண்டிருப்பேன். அதனால், வரும் பிறப்புக்களில் என்னை வந்து பற்ற நின்ற வலிய வினைகள் இல்லாதொழிந்தன. மற்றும் இப்பொழுது தோன்றும் வினைகளையும் அவன் அழித்துவிட்டான்.

குறிப்புரை :

`அதனால் இனி எனக்குப் பிறவி இல்லை`, இசையெச்சம். ``உலகம்`` என்பதை முதலிற் கொள்க. வித்தை பதினெட்டாயினும் அவற்றுள் உபவேதம் நான்கை நீக்கி, `பதினான்கு` என்றலும் வழக்கு வித்தை பதினெட்டாவன, வேதம் நான்கு, உபவேதம் நான்கு, அங்கம் ஆறு, உபாங்கம் நான்கு.
``அட்டாதச வித்தைக்கும் சூலபாணியே
கர்த்தா என்று சுருதி கூறுகின்றது``
என்பது வாயு சங்கிதையில் சொல்லப்படுவது*
``ஈசாநஸ் ஸர்வ வித்யாநாம்``
என்பது மகாநாராயணோப நிடதம்.
அகைத்தல் - பிரித்தல். `அகைத்து` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. ஈடு - முன் இடுதல். அது முன்பு, ``வல்வினை`` என்றதனால், முன் இடப்படுவதாகிய வினையையே குறித்தது.
இதனால், `அபிமானப் பெயர்கள் ஒன்பதனாலும் குறிக்கப்படுமாறு ஒன்பது அவத்தைகளிலும் விளங்குபவன் சிவனே` என உணர்ந்தவழியே பிறப்பு நீங்குதல் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நலம்பல காலம் தொகுத்தன நீளம்
குலம்பல வண்ணம் குறிப்பொடு கூடும்
பலம்பல பன்னிரு காலம் நினையும்
நிலம்பல ஆறில்நன் னீர்மையன் தானே.

பொழிப்புரை :

சிவன் உயிர்களுக்கான நல்லவழிகள் பலவற்றைச் சொல்லியருளிய காலம் எல்லையறியப்படாத பழமையுடையது. (`படைப்புக் காலம்` என்றபடி) உயிர்த் தொகுதிகள் அவ்வழிகள் பலவற்றில் தம் கருத்திற்கு ஏற்புடையவற்றைப் பற்றி அவற்றிற்கு ஏற்ற பயன்களை அடைந்து வருகின்றன. பெரும் பொழுது ஆறும், சிறு பொழுது ஆறுமாகிய பன்னிரண்டு காலங்களிலும் சிவபெருமானை நினைவதால் விளையும் பயன்களும் பல அங்ஙனம் நினைத்தற்குரிய இடங்களும் பல என்றாலும் ஆறு இடங்களில் (ஆறு ஆதாரங்களில்) சிவன் இனிது விளங்குபவனாய் இருக்கின்றான்.

குறிப்புரை :

`அந்த ஆறு இடங்களில் அவனை நினைக்கப் பழகுங்கள்` என்பது குறிப்பெச்சம்.
`தான் நலம் பல தொகுத்தன காலம் நீளம்` எனவும், பன்னிரு காலம் நினையும் பலம் பல` எனவும் மாறிக் கூட்டுக. நினைத்தற்குச் செயப்படுபொருளும், ``தான்`` எனப்பட்ட சிவனே என்பது எளிதின் விளங்கும். சிறுபொழுது ஆறும் பெரும்பொழுது ஆறின் வேறாவன அல்ல எனினும் `எஞ்ஞான்றும் ஒழியாது நினைக` என்றற்கு அவற்றை வேறுபோல வைத்து ``பன்னிரு காலம்`` என்பதை வினைத்தொகை யாக்கி, `சொல்லப்படும் காலை, மாலை இருகாலமும்` எனவும் உரைப்பர்.
இதனால், `வீடு பெற விரும்புவோர், ஒன்பான் அவத்தைகளில் சீவ அவத்தைகளாகிய யோகாவத்தையை முதற்கண் பற்றுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆதி பராபரம் ஆகும் பராபரை
சோதி பரம் உயிர் சொல்லும்நல் தத்துவம்
ஓதும் கலை மாயை ஓரிரண்(டு) ஓர்முத்தி
நீதியாம் பேதம்ஒன் பானுடன் ஆதியே.

பொழிப்புரை :

எல்லாவற்றிற்கும் மேலான முதற்பொருள் தன்னியல்பில் `சிவம்` என்றும், `சத்தி` என்றும் இரு கூற்றை யுடையதாய் இருக்கும். அவற்றுள் சத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி` என்னும் பெயருடையதாய் நின்று, `அறிவு அருள், உயிர், தத்துவங்கள் வேதம் முதலிய நூல்கள், பஞ்சகலைகள், சுத்தமாயை, அசுத்த மாயை, பல சமயத்தாரும், ஆராய்ந்து கூறும் முத்திநிலைகள்` என்னும் ஒன்பது வகையாய் நிற்கும்.

குறிப்புரை :

இவற்றுள் அறிவே ஞானம். அருளே இச்சை, இவை இரண்டும் தன்னால் தான் அடையும் பேதங்கள். ஏனைய ஆறும் தான் அவையேயாய்க் கலந்து நிற்கும் கலப்பினால் அடையும் பேதங்கள். அங்ஙனம் கலந்து நின்று அவற்றை இயக்குதலே கிரியை ஆதலின் அதனை வேறு கூற வேண்டாவாயிற்று.
``ஆதி`` இரண்டனுள் முதலது `முதற்பொருள்` என்னும் பொருட்டு. ஈற்றது ஆதி சத்தி. இதுவே `திரோதான சத்தி` எனப்படும். `பராற் பரம், பராற் பரை` என்பன `பராபரம், பராபரை` என மருவி வழங்கும். `மேலானவற்றிற்கும் மேலானது, மேலானவற்றிற்கும் மேலானவன்` என்பன இவற்றின் பொருள், `பராபரம்` என அஃறிணையாற் கூறியது. `சிவம்` எனக் கூறியவவாறு. தன்னிலையில் சிவம் `பரமசிவம்` என்றும், அதனது சத்தி `பராசத்தி` என்றும் சொல்லப்படும். அது வாளா இருப்பதன்றி, யாதொன்றையும் செய்வதன்று. செய்ய நினைக்குங்கால், ஒரு சிறு கூற்றானே `ஆதி சத்தி` என வேறு நின்றே செய்யும். அதனால், பேதங்கள் எல்லாவற்றிலும் ஆதி சத்தி உடனாய் நிற்கும் என்க.
ஆதி சத்தி `ஞானம்` என்னும் வகையில் அனைத்துயிர்களின் அறிவிலும் அறிவிற்கு அறிவாய் நின்று அவ்வறிவுப் பொருள்களை அறியச்செய்யும் `கிரியை` என்னும் வகையில் உயிர்களையும், உயிரல் பொருள்களையும் இயக்கி நிற்கும் இவற்றிற்கெல்லாம் காரணம் தான் அருள்வடிவாய் இருத்தலே.
``கலை`` என்பதனை இரட்டுற மொழிந்து கொள்க. ``தத்துவவம்`` என்றது பொருட் பிரபஞ்சத்தையாகலின். சொற் பிரபஞ்சம் எஞ்சாமைப் பொருட்டு அதனை வேறு கூறினார். பஞ்ச கலைகளும் இரு மாயைகளுள் சுத்த மாயா காரியமேனும் அவை தத்துவங்களின் வேறாய் அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்றல்பற்றி வேறு கூறப்பட்டன. காரியங்களை முன்னர்க் கூறிக் காரணங்களை முடிவிற் கூறினார். ஓர் முத்தி, வினைத்தொகை. சித்தாந்த முத்தி அருட்சத்தியால் ஆவது ஆகலின், பிற சமயத்தார் கூறும் முத்திகளே திரோதான சத்தியால் ஆவன என்க.
`ஒன்பானுடனும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `ஒன்பானுடனும் ஆதி ஆம்` என முடிக்க.
ஒன்பது பேதங்களையும் ``நீதியாம் பேதம்`` என்றது, `உயிர்கள் பக்குவத்தை யடைதற்கு, இவை இன்றியமையாத முறைகளாம்` என்றற்கு.
இதனால், `ஒருவனாகிய சிவன் தனது ஆதி சத்தியால் பல பேதங்களை அடைந்து நிற்றலால், நவாவத்தை அபிமானியும் ஆகின்றான்` என்பது குறிப்பால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து
வேறாம் நரகம் சுவர்க்கமும் மேதினி
ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்
வேறாத் தெளியார் வினை உயிர் பெற்றதே.

பொழிப்புரை :

அநாதியே பற்றிய மலத்தால் அறியாமையை யுடையதாய் நிற்கின்ற உயிர்களின் அறிவு அவ்வறியாமை நீங்கித் தெளிவடைதற் பொருட்டுத் தெளிவிற்கு வித்தாக, தம்முள் மாறுபட்ட நரகலோக சுவர்க்க லோகங்களிலும் பூலோகத்திலும் வினைக்கீடாகச் சென்று பிறக்கும் பிறப்புக்களையும் சிவன் உயிர்கட்கு அமைத்திருக் -கின்றான். அங்ஙனம் அமைத்தது அருள் காரணமாகவேயாம். அதனை வன்கண்மையாக நினைக்கும் தங்கள் நினைப்பை விட்டு, அருளாகத் தெளியமாட்டாதார் தெளிதற்கு வாயிலான மானுடப் பிறப்பைப் பெற்றதும் வினையின் விளைவேயாம்.

குறிப்புரை :

``சிந்தையைச் சீவன் என்றும், சீவனைச் சிந்தை என்றும்``9 கூறும் முறையில் இங்கு உயிரிகளின் அறிவு ``சிந்தை`` எனப்பட்டது. ``தெளிவித்து`` என்றது வினைத்தொகை. `வித்தாகி` என ஆக்கம் வருவிக்க. ``பிறப்பும்`` என்னும் உம்மை, `வீடேயன்றி` என எதிரது தழுவிய எச்சம். ``உயிர் பெற்றது`` என்றது, `பிறப்பை எடுத்தது` என்றபடி. `உயிர் பெற்றது வினை` என மாறிக் கூட்டுக, வினையின் விளைவை ``வினை`` என்றார். என்றது, `முன்னைப் பிறவிகளின்றும் இப்பிறப்பிற்கு வேறு சிறப்பில்லை` என்றபடி. அஃதாவது, `இப்பிறப்பிலும் முன்புபோல வினையை ஈட்டிக் கொள்ளுதலை மட்டுமே செய்வவர்; உய்யும் நெறியைத் தலைப்படார்` என்பதாம்.
இதனால், `மானுடப் பிறப்பை எய்தினோர் சிவன் நவாவத்தை அபிமானியாதலை உணர்ந்து படிமுறையானே அவனை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி
நன்பாற் பயிலும் நவதத்துவம் ஆதி
ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்
செம்பாற் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.

பொழிப்புரை :

இங்குக் கூறிவரும் ஒன்பான் அவத்தைகளிலும் சிவன் அபிமானியாய் நிற்கும் நிலைகள், அவ் அவத்தைகளில் செயற்படும் தத்துவங்கள், மற்றும் சில இவற்றை உணர்ந்து அவ்வொன்பான் அவத்தைகளிலும் `துரியம்` எனப்படும் நிலையிலே நிற்றற்கண் பர துரியத்தில் சீவன் செம்மைச் சிவனாகிவிடுவதே சித்தாந்த நெறியின் முடிநிலைப் பயனாகும்.

குறிப்புரை :

எனவே, `பிற பிற சமயத்தார் கூறும் சித்திகள் எல்லாம் முடிநிலைச் சித்திகள் அல்ல` என்பதாம். நவாவத்தைகளில் செயற் படும் நவதத்துவங்களான, சீவ அவத்தையில் பிராணனை இயக்கும் அகங்காரம், தியானிக்கப்படும் பொருளை ஒருதலையாக உணரும் புத்தி, அதனையே சிந்திக்கும் சித்தம் என்பனவும், சிவ அவத்தையுள் குருமொழியைச் சிந்திக்கும் ஞானம், அடையப்படும் பொருளைத் தெளியும் ஞானம், தெளியப்பட்ட பொருளையே விரும்பி அதன்கண் அழுந்தும் ஞானம், என்பனவும், பராவத்தையில் சிவனது நேர் அதிகார சத்தி, போக சத்தி, இலயசத்தி என்பனவுமாம். இங்குப் பராசத்தியும் வேற்றுமை மிக இன்மையால் இலய சத்தியாகக் கொள்ளப்பட்டது. செம்பால் - செம்மைப்பகுதி. என்றது சொரூப நிலையை. எனவே, `சொரூப சிவம்` என்பதை நாயனார், `செம்பாற் சிவம்` எனக் குறித்திருத்தல் குறிக்கொளத் தக்கது. செம்மை - உண்மை நிலையில் வேறுபடாது இருந்தவாறே இருத்தல். சித்தி - பேறு. என்றது, சிறப்புப் பற்றி முடிநிலைப் பேற்றையே குறித்தது.
இதனால் நவாவத்தைகளின் முடிநிலைப்பயனும் அதனை அடையுமாறும் கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி யிருக்கும் குணம் அது வாமே.

பொழிப்புரை :

மூன்றாம் தந்திரத்தில், நாசிக்கதோமுகம் பன்னிரண்டங்குலம்``8 என்னும் மந்திரத்திற் கூறியபடி, `மூக்கின் நுனிக்குக் கீழே பன்னிரண்டங்குலத்தில் உள்ள இருதயம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடம்` என்பதை உங்களுள் ஒருவரும் அறியார். (அதனால் அவர்கள் புறத்தே உள்ள இடங்களில் சிவனைக் காணும் அளவிலே அமைந்து, அதனையே சிவக்காட்சியாகக் கொண்டு இருந்துவிடுகின்றனர்.) ஆயினும் பெரிய மறைநூல்கள் மேற்கூறிய ஈசன் இருப்பிடத்தைச் சொல்லியிருக்கின்றன. எனினும் அந்த மறை நூல் அந்த இடத்தை அணுக இயலாதவர்கட்கு அதனைக் கூற நாணம் உற்று, வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகவே கூறியமைந்தன. அது மறைநூல்கட்கு இயல்பு.

குறிப்புரை :

`அதனால், அப்பொருளை நல்லாசிரியரை வழிபட்டுக் கேட்டுணர்ந்து அணுகல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். இங்கு, ``பெருமறை`` என்றது, யோகம், தகர வித்தை முதலியவற்றைக் கூறும் உபநிடதங்களையும், சிவாகமங்களில் யோக பாதங்களையும். அவ்விடங்களில் குறிப்பு மொழிகள் உளவாதலை அறிக. நாயனாரும் `சூனிய சம்பாடணை` முதலியவற்றால் குறிப்பு மொழிகள் பல வற்றைக் கூறினமை வெளிப்படை.
இதனால், `புறத்தூய்மையோடு அமைந்துவிடாது அகத் தூய்மையை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது புறத்தூய்மையையே சிறப்பாக வலியுறுத்துவன பிரம்மாணங்களும், மிருதிகளும்.

பண் :

பாடல் எண் : 2

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.

பொழிப்புரை :

உயிர்களால் செய்யப்படும் செயல்கள் யாதேனும் ஒரு பயனைக் கருதிச் செய்யும் செயல்களாகுமிடத்து `அச்செயல்களைச் செய்தோன் அவனே` என்னும் உரிமை தோன்றுதலையும், செய்த செயல்களும், `இனி வரும்` எனக் கருதப்படுகின்ற பிறவிக்கு வித்தாம் ஆகாமியம் ஆதலையும் உணர்ந்து, அச்செயல்களில் பற்று வையாது `எச்செயலையும் செய்யும் வாய்ப்பினை நமக்கு அளித்தவன் சிவன்` என்பதை யுணர்ந்து, அவனிடத்து அன்பு செய்து, எச்செயலையும் அவன் பணியாகச் செய்யின் அம்முறையில் அறிந்தோ, அறியாமலோ நிகழும் செயல்கள் யாவும் வினை நீக்கத்திற்கு வாயிலான தவமாகி, அவற்றைச் செய்தவனை வினை நீக்கத்தில் சேர்ப்பிக்கும்.

குறிப்புரை :

ஒன்று ஒரு பயன் `கன்மமும் கருவினை ஆவதும்` என இயையும். `ஆவது` என்பது தொழிற்பெயர். ``கன்மமும்`` என்னும் உம்மை சிறப்பும்மை. உன்னும் - கருதப்படுகின்ற. கரு - முதல். கரு வினை. `இச்செயலை யானே செய்கின்றேன்; இச்செயல்களும், இவற்றால் வரும் பயன்களும் என்னுடையனவே` என்னும் கருத்தே `பற்று` எனப்படுகின்றது. இப்பற்றோடு செய்யும் கருமமே `காமிய கருமம்` எனப்படுகின்றது.
இனி, யாதொரு பயனையும் கருதாதவழிச் செயல் செய்வார் ஒருவரும் இலராவர். ஆகவே, `செயல்களைச் செய்தற்கு வேண்டுவன பலவற்றையும் அளித்தவன் இறைவன் ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் யாவும் `ஈசன் இடும்பணி`* என உணர்ந்து, அவற்றில் - யான், எனது என்னும் பற்றின்றி, ``என்கடன் (அவன்) பணிசெய்து கிடப்பதே``* என்று அவனிடத்து அன்போடும் செய்வதே பயன் கருதாது செய்தலாம். அதனையே இங்கு நாயனார், ``அகன்று அன்பின் புரிவன`` என்றார். இதுவே `நிட்காமிய கருமம்` எனப்படுகின்றது. இந்நிலைமை கடவுட் கொள்கையில்லார்க்கு வாயாது. `க்ஷயம்` என்னும் வடமொழி, தமிழில் `கயம்` என வரும். ஆகவே, கருமக் கயம் - வினை நீக்கமாம். `காமிய கன்ம நிட்காமிய கன்மங்களாவன இவை` என்பதும், அவற்றின் பயன் முறையே பிறப்பும் வீடுமாம்` என்பதும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
``காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்கு உள்ளத் துணர்மினோ``*
எனப் அப்பரும் அருளிச்செய்தார்.
இதனால், வினை மாசே உண்மை மாசும், அதன் நீக்கமே உண்மைத் தூய்மையும் ஆதல் கூறப்பட்டது.
``புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்``9
என அருளிச்செய்த திருவள்ளுவர்க்கும் புறத்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்தது என்பது கருத்தாதல் தெளிவு, அவர்.
``மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்``9
என அருளிச்செய்ததும் இங்கு நினைவுகூரற்பாலது.

பண் :

பாடல் எண் : 3

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.

பொழிப்புரை :

வேதங்களால் முடிநிலைப் பொருளாகக் கொள்ளப் பட்ட முதற்பொருள் உயிர்கட்கு வேறாய் இன்றி அவைகளிடத் திற்றானே இருக்கின்றது. ஆயினும், மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்கள் உயிரினது அறிவைத் தம் வயப்படுத்தியே வைத்திருத்தலால் உயிர்கள் அம்முதற்பொருளை அறியாதிருக்கின்றன. அதனால் முதற்பொருள் மறைந்து நிற்கும் பொருளாக அறியப்படுகின்றது. மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்களின் வயப்படாது விடுபட்டவர்க்கு அக்கருவிக் கூட்டங்கள் மறைந்துவிட, முதற்பொருள் வெளிப்பட்டுத் தோன்றும். அதன் பின்பும் அக்கருவிக் கூட்டங்கள் தம்மை மயக்காதபடி அம்முதற் பொருளுக்குள்ளே அடங்கி நிற்க வல்லவர்கட்கு உடம்பு இருந்தும் இல்லையாம். அதனால் அவை பற்றி யெழுகின்ற, `யான், எனது` என்னும் செருக்கும் இல்லையாம்.

குறிப்புரை :

ஆகவே, அவர்கள் உடம்பு நீங்கியபின் ``வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுதல்``* தெள்ளிது என்பதமாம்.
``முந்திவட் டத்திடைப் பட்டதெல்லாம்
முடிவேந்தர் தங்கள்
பந்திவட் டத்திடைப் பட்டலைப்
புண்பதற் கஞ்சிக் கொல்லோ!
நந்திவட் டம்நறு மாமலர்க்
கொன்றையும் நக்கசென்னி
அந்திவட் டத்தொளி யான்அடிச்
சேர்ந்ததென் ஆருயிரே``
என்பனபோல ஆரூயிர்த் திருவிருத்தம்8 முழுவதும் அருளிச் செய்தமை காண்க. `அப்பொருளின்கண்` என, `உள்` எனப்பொருள் படும் ஏழாவது விரிக்க.
உலகியலில் வினை மாசே பெருமாசு ஆகலின் அது நீங்கு மாற்றை முன் மந்திரத்திற் கூறியபின், மாயை மாசு நீங்குமாறு இதனால் கூறப்பட்டது. `இம்மாசு நீக்கமே உண்மைத் தூய்மையாம்` என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 4

மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக்
கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.

பொழிப்புரை :

ர் புறம் போய் வீணாவதற்கு உரிய, வயல்களின் சிறு புழை போல, விந்து வெளிச்சென்று வீணாகின்ற வழியாகிய குறியைச் செயற்படாமல் தடுத்து, பிராணனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி அதனோடே மேல்நிலமாகிய ஆஞ்ஞையில் உணர்வினால் சென்று புகுந்து, அங்கு நிற்கின்ற நிலை சலித்தலை நீக்க முயலு மிடத்துச் சிவ நினைவால் அதனை அடியோடு நீக்கி, உடம்பையும் விரைவில் வீழ்ந் தொழியாதபடி யோகக் கனலால் கற்பஞ்செய்து தன்னைச் சிவத்திற்குள்ளே அடைத்து வைத்தலே ஒருவனுக்கு உண்மையான தன்வலிமையாகும்.

குறிப்புரை :

முழை. மலை முழை. சுழுமுனை நாடியை `மேரு` என்பதால், அதன் உள்வெளியை `மலைமுழை` என்றார். காயத்தைக் கற்பம் செய்தல் இப்பிறப்பிற்றானே சிவஞான முற்றுதற் பொருட்டேயாம்; என்னை? முற்றுப் பெறாதவழி மேலும் பிறப்பு வரும் ஆதலின் ``கோழை`` என்பது இங்குக் கோழைமையாகிய தளர்ச்சியைக் குறித்தது. தாழ்தல் - தங்குதல் ``வினைவலியும், தன் வலியும், மாற்றான் வலியும் - துணை வலியும் தூக்கிச் செயல்``3 என்ற விடத்துக் கூறப்பட்ட வலிமைகளிலும் ``தன் வலி`` என்றதே இன்றி யமையாதல் பற்றி `இச்செயலே உயிருக்குத் தன்வலியாம்` என்றார்.
இதனால், மேற்கூறப்பட்ட இருவகை மாசுகளையும் கழுவுதற்கு ஒருவகைச் சாதனம் கூறப்பட்டது.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும், ``காயக் குழப்பனை`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 5

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர்கள் தங்கள் உடம்பு அசுத்தத்தைத் தீண்டிவிட்டதனால் `தீட்டு உண்டாகிவிட்டது தீட்டு உண்டாகி விட்டது` என்று சொல்வார்கள். அவர்களில் ஒருவருமே, உண்மையில் தீட்டு எங்கு உண்டாகின்றது` என ஆராய்ந்தறியமாட்டார். யாராயினும் அதனை ஆராய்ந்து அறிவார்களோயானால் `உயிர் மக்கள் வடிவாய் உள்ள உடம்பைத் தீண்டியதே தீட்டு` என்பது அவர்கட்கு நன்கு புலப்பட்டுவிடும்.

குறிப்புரை :

`அசுத்தத்தைத் தீண்டுவதனால் தீட்டு உண்டாதல் உண்மையே. அந்தத் தீட்டு உடம்பிற்கு உண்டாவதைத் தங்களுக்கு உண்டானதாகவும், அதனைப் போக்கித் தூய்மை செய்வதால் தாங்கள் தூய்மை அடைந்துவிட்டதாகவும் கருதுதல் அறியாமை` என்பதாம். உண்மையை உணர்ந்தால், நாம் மானுட உடம்பைப் பற்றிக் கொண்டிருப் -பதே தீட்டு, என்பதும், `அதனைப் போக்கி இறைவனை அடைதலே நமக்குத் தூய்மை` என்பதும், விளங்கும். அவற்றை விளங்கிக் கொண்டவர்களே அறிவுடையோர் என்பது கருத்து. மாணாக்கர் செயற் பாலது மானுட உடம்பை நீக்குதலேயாதல் பற்றி, ``மானுடம் ஆசூசம்`` எனறாரேனும், `உடம்பாவன பலவும் ஆசுசமே` என்றலே கருத்து.
மானுட உடம்பை,
``பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்
பொழுகிய பொய்க்கூரை``3
என்றார்போலப் பலபடக் கூறுமாறு அறிக. `மக்கள் தங்கள் உடல் தீட்டைப்போக்கி உடலைத் தூய்மையாக்கிக் கொள்வதனாலே தாங்கள் தூயோராய்விட்டதாகக் கருதிக்கொள்ளுதல் அறியாமை` என்றபடி. இதனானே, `புறத்தூய்மை ஒன்றே உயிரை நற்கதி யடைவிக்கும்` எனக் கூறும் கூற்றுக்கள் போலியாதல் விளங்கும்.
இதனால், `புறத்தூய்மையையே பெரிதாக வலியுறுத்தியமை யாது, அகத்தூய்மையையே பெரிதும் வலியுறுத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு)
ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு)
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு)
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.

பொழிப்புரை :

சிவனது முதன்மையை உணர்ந்து அவனைச் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நால்நெறியில் எவ்வகையில் நின்று வழிபடுவார்க்கும் புறத்தூய்மை வாயாவிடினும் அகம் திருவருளில் படிந்திருத்தலால் அவர்கட்கு எந்த வகையான அசுசியும் இல்லையாம்.

குறிப்புரை :

இஃது அறியாது அவர் புறத் தூய்மை குறைந் திருத்தல் பற்றி அவரை, `ஆசௌசம் உடையவர்` என இகழலாகாது என்பதாம். புறத் தூய்மை இல்லாமைக்குக் காரணம் அவர் அதனை இகழ்ந்து ஒதுக்குதல் அன்று; வாய்ப்புக் கூடாமையேயாம். கண்ணப்பர் முதலியோரது அருள் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
அரு நியமம் - கடைப்பிடித்தற்கரிய கடப்பாடான தொண்டு அருச்சனை அகத்தும், புறத்தும் செய்யும் வழிபாடு. யோகிகள் பிராணா யாமத்தால் மூலாக்கினியை வளர்ப்பர் ஆதலால், புறத்தே அழல் ஓம்பி வழிபடுவாரும் யோகிகளாகச் சொல்லப்படுவர். இவருள் சிவவேள்வி செய்வாரையே இங்குக் கொள்க. ஞானசம்பந்தர்,
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி``*
என அருளிச்செய்தற்குச் சேக்கிழார்,
``ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பின்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்``*
எனப் பொருள் விரித்தமை இங்கு நோக்கத் தக்கது.
அருமறை ஞானிகளாவார் வேதத்தின் `பிரமகாண்டம்` எனப்படும் ஞானகாண்டப் பொருளை அதன் தெளிவாகிய சிவாகமங்களின் ஞானபாதத்தின் வழிச் சிந்திப்பவர்களும், சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடியிருப்பவர்களும் ஆவர். இவற்றிற்கெல்லாம் முற்பட்டது. ``குருவார்த்தை கேட்டல்``* ``அருமறை`` என்பதனை இரட்டுற மொழிந்து, `அரிய உபதேசம்` என்றும், `அரிய பிரகாண்டம்` என்றும் இருபொருள் கொள்க.
இதனால், `சிவநெறி நிற்றலே சிறப்புடைத் தூய்மை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை :

முன்னர்ப் புறத்தொண்டுகளைச் செய்து, பின்பு அகத்தும், புறத்தும் சிவனை வழிபடுவார்க்குச் சுழித்தோடுகின்ற நீரில் மூழ்கினார்போலும் ஓர் உண்மைத் தூய்மை தொடங்குவதாகும். (பின்னர் அகத்தும், புறத்தும் அங்கி வளர்த்தலால் அத்தூய்மை முதிரும்.) இவைகளைச் செய்யாது புறத்தூய்மையை மட்டுமே வலியுறுத்திக் கூறு கின்ற நூல்களாகிய குழிகளில் வீழ்ந்தவர்கள் தூய்மையைப் பொருந்தார். இனி முற்கூறிய தூய்மையைப் பொருந்தியவர்களில்கூட, உருவம், அருவுருவம், அருவம் என்னும் குறிகளைக் கடந்து குறியிறந்து உணரும் உணர்வுடையார்க்கன்றிச் சிவனை நேர்படக் காணுதல் இயலாது.

குறிப்புரை :

`சிவனை நேர்படக்காணுதலே முழுத் தூய்மையாம்` என்றபடி கூடுதலுக்குச் செயப்படுபொருள் முன்னர்க் கூறிய தூய்மையேயாயிற்று. தொடங்குதல் கூறினமையால் முதிர்தலும் கொள்ளப்பட்டது.
இதனால், அகத்தூய்மை தொடங்கி, முதிர்ந்து, முற்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.

பொழிப்புரை :

உலகத்தில், மாசு நீங்கக் கழவுவப்பட்ட இரத்தினமும், தூய பொருள்களாலே வளர்க்கப்பட்ட தீயும் தூய ஒளியையே தரும். `அதுபோல உடம்பினுள் தூய ஒளிகளைத் தரும் தூய இரத்தினமும், தூய தீயும் எவை` என்பதை அறிபவர் உலகருள் எவரும் இல்லை அவற்றை அறிய வல்லவர்கட்கு அவை தாம் தூயவாய் இருத்தலேயன்றி உடம்பிற்குத் தூய்மையைத் தருவனவாய் அமையும்.

குறிப்புரை :

கழுவப்படுவதனால் தூய்மை அடைகின்ற மணி உயிர். இயல்பாகவே தூய்மையுற்றிருக்கின்ற தீ சிவம். `சாதனங்களைச் செய்தவழி உயிர் தூய்மையுற்றும், சிவம் பிராகசித்தும் புலால் உடம்பை ஒளியுடம்பாகச் செய்யும்` என்பது கருத்து.
இதனால், `ஆன்ம சுத்தியே உண்மைத் தூய்மையாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தூயது வாளாக வைத்தது தூநெறி
தூயது வாளாக நாதன் திருநாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியாம்
தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.

பொழிப்புரை :

`முதல்வனாகிய முக்கண்ணன் முன்னெறியாகிய* தனது நெறியை உலகிற்கு வைத்தது உயிர் தூயதாதற் பொருட்டேயாம். அந்நெறியிற் செல்வார்க்கு உறுதுணையாக அவன் வைத்தது அவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரம். அந்த மந்திரத்தைப் பல்காலும் ஓதி உயிர் தூய்மையுற்றால் அட்டமா சித்திகள் தாமே வந்து அதனை அடையும். ஆதலின் உயிர் தூய்மை அடைவதற்கு முன்பு அங்ஙனம் தூயராயினார் சென்ற அடிச்சுவட்டில் செல்.

குறிப்புரை :

`நான்கு அடிகளிலும், வாள் தூயதாக` என மாற்றிக் கொள்க. வாள் - ஒளி; அஃது இங்கு அறிவுப் பொருளாகிய உயிரைக் குறித்தது. ``ஆக`` நான்கில் மூன்றாவது காரணப் பொருளிலும், ஏனைய காரியப் பொருளிலும் வந்தன. ``வைத்தது`` என்பதை இரண்டாம் அடியிலும் கூட்டுக. தூயவரது அடிச்சுவடும் தூயதே ஆம் என்க.
இதனால், உண்மைத் தூய்மையை வேண்டுவோர் சிவ நெறியைப் பற்றிச் சிவமூல மந்திரத்தை எப்பொழுதும் ஓதுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.

பொழிப்புரை :

மெய்ப் பொருளாய், என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பவன் சிவபெருமானே. அவனே எங்கட்குத் தந்தை. அவனது திருவருளைப் போற்றுகின்ற அடியவர்களே சுருண்டு சுருண்டு வருகின்ற கடலின் அலைபோல முடிவின்றி வருகின்ற பிறப்பாகிய துன்பச்சூழலினின்றும் நீங்குவர். அவனது திருவருளைப் போற்றாது ஒழிகின்றவர் எல்லாம் அச்சூழலில் அகப்பட்டுத் திகைக்கின்றார் ஆதலின் அவர் அருளுடையாராகாது மருளுடையவரேயாவர்.

குறிப்புரை :

எனவே, `திருவருட் செல்வராகிய சிவனடியாரே தூயவர் ; அச்செல்வத்தைப் பெறாதோரெல்லாம் மாசுடையவரே; அதனால் அச்செல்வத்தைப்பெற முயலுங்கள்` என்பது குறிப்பெச்சம்.
``புண்ணியன்`` என்பது, `சிவன்` என்னும் பொருட்டாய் நின்றது. `அது` மூன்றும் பகுதிப்பொருள் விகுதி. ``சுருளதுவாய்`` என்பதில் ஆக்கம் உருவகம் குறித்து நின்றது. ``மருளவர்`` என்பதை இறுதியிற் கூட்டுக.
இதனால், உண்மைத் தூய்மையை உணராதவரது நிலைமை இரங்கத் தக்கதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வினையால் அசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.

பொழிப்புரை :

`நிலையில்லனவாகிய பல வகை உடம்புகள் ஒன்றழிந்தபின் மற்றொன்று தோன்ற, அஃதழிந்தபின் வேறொன்று தோன்ற, இவ்வாறு முடிவின்றி வந்து உயிரை அலைக் கழிப்பது வினையே` என்பதையும், `அந்த வினை பொருள்களை உற்றவா றுணரும் மெய்யுணர்வால் கெடும்` என்பதையும் ஆசான் அருள் பெறாதார் அறியமாட்டார். இனி, `வினை நீக்கமே வீடுபேறாம்` எனக் கூறுகின்ற வேதத்தையும் அவர்கள் ஓதுவதில்லை ஆகவே, அவர்கள் வினையை ஆண்டு, அதிற்றானே மகிழ்கின்றவராவர். அவர் பின்னும் பின்னும் எல்லையின்றி வரும் துன்பவினை அறிய மாட்டார்.

குறிப்புரை :

அசத்து - நிலையில்லாதது. சத்து - நிலையுடையது இங்கு ``வினை`` என்றது பிராரத்த வினை, ஆகாமிய வினைகளை. `அவை ஆசிரியன் உணர்த்தியவாற்றானே நின்மலாவத்தையை அடைந்து அதன்கண் நிற்பவரை வாதியா` என்பதை,
``எத்தனுவில் நின்றும் இறைபணியார்க் கில்லைவினை;
முற்செய்வினை யும்தருவான் முன்``
என்றும் சிவான போதத்தால்3
``எப்பொழுது இவனுடைய இருதயத்தில்
நிறைந்துள்ள ஆசைகள் எல்லாம் ஒழிகின்றனவோ
அப்பொழுது, சாகும் தன்மையுடைய மனிதன்
சாகாதவனாகி விடுகின்றான்``
என்று கடோப நிடத ஆறாவது வல்லிப் பதினாறாவது மந்திரம் கூறுகின்றது. ஆசையால் விளைவனவே வினையாதலின் ``வினைவீட வீடு`` என வேதம் கூறுதல் அறிக.
``அவாஎன்ப எல்லா உயிர்க்கும், எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து``8
``இன்பம் இடையறாது ஈண்டும், அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்``8
எனத் திருவள்ளுவர் வலியுறுத்தியதும் இதையே.
இதனால், `வினைமாசு நீங்கலே உண்மைத்தூய்மை, அது நீங்காமையே உண்மை மாசு` என்பன கூறி முடிக்கப்பட்டது. (யாவரும் அறிந்தது இதுவேயாதல் பற்றி இவ்வாறு கூறினார், `பின்பு ஆழ்ந்து உணர்வார்க்குக் காரணமாசாக ஆணவத்துண்மை புலனாகும்` என்பது கருதி.)

பண் :

பாடல் எண் : 1

பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.

பொழிப்புரை :

`பிறப்பிறப்பினின்றும் நீங்கிப் பரம்பொருளை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை உண்டு` என்று உண்மை நூல்களெல்லாம் கூறாநிற்கவும், `அஃது இல்லை` எனப்பிணங்கி, மனஞ் சென்றவாறே செல்பவர்கள் நரகலோகத்தை அடைதல் உலகத்தில் உயர்ந்தோர் பலரும் நன்கறிந்தது நரகத்தின் நீங்கிப்பின்னும் அவர் மக்களாய்ப் பிறப்பின் கடைதொறும் சென்று இரக்கும் செயலையே உடையராவர். அங்ஙனம் இரக்குங்கால் வயிறு நிரம்பாமல் உணவு வேளை முடிவதற்குள் பலரிடம் சென்று இரக்க வேண்டி ஓடவும் தொடங்குவர்.

குறிப்புரை :

`நரக, துரக` என்பன கடைக் குறைந்து நின்றன. ``இர கதி`` என்பது வினைத்தொகை. இதன்கண் `கதி` என்பது நடை; தொழில். `கடை தோறும் இரகதி செய்திடுவார்; நிரம்ப உண்ணத் துரக கதி தொடங்குவர் என்க. தாம், ஏ - அசை. ``ஞாலம்`` என்றது ஆகமப் பிரமாணத்தையுடைய உயர்ந்தோரை.
`பரகதி உண்டு` என்பவரே நோற்றலை மேற்கொள்வர். `அஃது இல்லை` என்பார் நோற்றலைச் செய்யார். நோலாதவர் வறியராய்ப் பிறப்பர்` என்பது உண்மை நூல்களின் முடிவாதல்,
``இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்; பலர் நோலா தவர்``.9
``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``3 என்பன முதலியவற்றால் விளங்கும். வறுமையால் இரத்தல் உண்டாகும். இரந்த வழியும் மிக்க தீவினையால், உணவு கிடைத்தல் அரிதாகும்.
சித்தாந்த முத்தியை மறுத்து வேறு கூறி, அக் கூற்றிற்கு ஏற்ப ஒழுகுவார்க்கு இவ்வாறான தீங்குகள் உளவாகா ஆயினும், `அவர்க்குப் பிறவி நீங்காது` என்க.
``உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்``9
என்னும் குறட்பாவும் இம்மந்திரத்திற் கூறிய பொருள் நோக்கம் உடைத்தென்க.
இதனால், `முத்தி` என்பதொன்று இல்லை என்பார், தம்மாலே தாம் கெடுதல் கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும். ``கூடகில்லார் குரு வைத்த நெறிகண்டு`` என்னும் மந்திரம் முன்தந்திரத்தில் கேடுகண்டிரங்கல்` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 2

பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி
அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன்
இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.

பொழிப்புரை :

பிராண வாயு வெளியே செல்லுங்கால் தானும் வெளிச்சென்றும், அஃது உள்ளே வருங்கால் தானும் உள்ளே வந்ததும் இவ்வாறு உழல்கின்ற எனது மனத்தின் அலைவுக்கிடையே அந்தப் பிராணனை அடக்கியதனால் நிலைபெற்ற சித்தத்தையே பரம் பொருளின் இருப்பிடமாகக் கருதி, அவ்விடத்தில் நின்றே, `புண்ணியங்களின் பயனாய் எதிர்ப்படுகின்ற தேவதேவனே என்று அழைத்தேன் அங்ஙனம் ஒருமுறை யழைத்ததோடன்றித் தொடர்ந்து பன்முறை அழைத்து அவனை உள்ளத்தால் இறுகப் பற்றினேன் அதன்பின்பு அவன் தோன்றி, `நீ இங்கு என்ன செய்கின்றார்` என்று வினாவுகின்றான்.

குறிப்புரை :

ஆகவே, உடம்பு நீங்கியபின் நான் அடையத் தக்க கதி அவனே` என உணர்ந்தேன் என்பது கருத்து `அதனால், பரகதி இல்லை என்பாரது கூற்று எனக்கு நகை விளைக்கின்றது` என்பதாம் போவதும், புகுவதுமாய் உள்ள நெஞ்சு நிற்றலைக் குறித்தமையால், அவ் விரண்டிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. நெஞ்சு, விடாத ஆகுபெயர். மனம் அலையின் சித்தம் ஒன்றையும் சிந்தியாதாக, அது நிலைத்தவழியே சித்தம் ஒன்றை ஆழ்ந்து சிந்தித்தலின் `திறப்பட்ட சிந்தை`` என்றதற்கு ஏற்ப மனம் நிலைபெற்றமை பெறப்பட்டது. திறப்படுதல். வலியுடைத்தாதல். ``அடியார் சிந்தையுள் தேனூறி நின்று``* ``கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும் - தேனவன்காண்``* என்றாற்போலும் சுருதிகளின் வழிநின்று, திறப்பட்ட சிந்தையைத் `தெய்வம்` என்று எண்ணினார் என்க. அறப் பட்ட - அறத்தால். வெளிப்பட்ட. `பட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``பட்ட`` என்பது, ``பதி`` என்பதனோடு முடிந்தது. சிந்தையில் இருப்பவனை அழைத்தல் சிந்தையாலேயாம். எனவே அவ்வாறு, பன்முறை பாவித்தலாயிற்று. `ஒரு நாள் அழைத்துவிட்டு விடாமல், பல நாள் அழைத்தல் வேண்டும்` என்பது,
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்,
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான்
என்று எதிர்ப்படுமே``3
``அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்! - இரங்குமேல்
என்னாக வையான்! தான் எவ்வுலகம் ஈந்தளியான்!
பன்னாள் இரந்தாற் பணிந்து.``9
என்றாற்போலும் திருமொழிகளால் விளங்கும். அதனால், ``இறப்பற்றி`` என்றால் ``இங்கு இது என் என்கின்றான்`` என்றது, `என்னோடு கலந்து உறவாடுகின்றான்` என்றபடி.
இதனால், `பரகதி உண்டு` என்பது இவ்விடத்திற்றானே அனுபவமாய் விளங்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.

பொழிப்புரை :

மேட்டு நிலத்தில் பொழியப்பட்ட மழைநீர் அங்கு நிலைத்து நில்லாது நீங்குவதுபோல, வினையால் உடம்பினிடத்துச் சேர்க்கப்பட்ட உயிர் அதன்கண் நிலைத்து நில்லாது நீங்குவதாகும். ஆயினும், தழல் வண்ணனாகிய சிவனும் அவ்வுயிரோடு கூட அவ்வுடம்பின்கண் நிற்கின்றான். ஏனெனில், கடலிடத்தே நில்லாது கரையையே சேர்வதாகிய மரக்கலம் கடலிடை நின்றாருடன் தானும் நிற்பதுபோல, உயிரைப் பந்தத்தினின்றும் விடுவித்து வீட்டை அடைவித்தற் பொருட்டாம்.

குறிப்புரை :

கருத்து நோக்கிச் சொற்கிடக்கை முறையானன்றி இவ்வாறு உரை கூறப்பட்டது. உவமம் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையால் அதனால் விளக்கப்படும் பொருள் இறுதியில் விரித்துரைக்கப்பட்டது. இடையில் நின்ற காட்டுதல் (அறிவித்தல்) வினை பொருட்கே உரியது ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவர்``3 என்றது காண்க.
`கடலிடைப்பட்டவர் மரக்கலம், அல்லது புணையைப்பற்றி யின்றித்தாமே கரைசேர மாட்டாமைபோலப் பிறவியுட்பட்ட உயிர்கள் இறைவனைப் பற்றியன்றித் தாமே கரை சேரமாட்டா` என்பதும், `அதனால் இறைவன் தனது கருணை காரணமாகப் பிறப்புடைய உயிர்களோடு உடனாய் நின்று அவற்றை வீடடைவிக்கின்றான்` என்பதும் இங்குக் கூறப்பட்ட பொருள்கள்.
``பிறவிப் பெரு கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவ னடிசேரா தார்``9
என்றார் திருவள்ளுவரும் `மறு பிறப்பு இல்லை` என்பாரைத் தவிர, ஏனையோர் பலர்க்கும் `உயிர்கள் பிறவியுட் பட்டன` என்பது உடன்பாடு. அதனால், அவர்கள் அனைவரும் இம்மந்திரத்திற்கூறிய உவமையை உடன்படுவர் மேற்காட்டிய திருக்குறளும் `மறுபிறப்பு உண்டு` என்பார்க்குக் கூறுவதாய் எழுந்ததன்றி `மறு பிறப்பு இல்லை` என்பார்க்குக் கூற எழவில்லை. ஆகவே, `பக்தி` என்பது உண்டு என்பது உவமையாலும் விளக்கப்பட்டதாம்.
இதனால், பரகதி உண்மை உவமையில் வைத்து விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும்
போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர்
காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள்
தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.

பொழிப்புரை :

தாமரைத் தண்டின் நூல்போல் அறிவுடையார் முன் எளிதில் அற்றுப்போகின்ற நூல்களால், உண்மை நூல்களின் வழிச் செல்வாரைத் தடுக்கின்றவர்கள் தாங்கள் மேல்நிலையை அடைய விரும்பி, அதற்கு மாறான வழிகளில் சென்று அலைவார்கள் அவர்களது செயல்கள், தெரிய வேண்டிய வழியைத் தெரிந்தவர் காட்டினாலும் அதனைக் கண் கொண்டு பாராத குருடர்கள் தாங்கள் அறிந்ததே வழியாகக் கொண்டு துன்பம் தரும் வழிகளில் திரியும் செயல் போன்றனவேயாம்.

குறிப்புரை :

`நூல்` என்னும் பெயர் ஒற்றுமை பற்றித் தாமரை நூலை எடுத்துக்காட்டினார்.
``உன்நூலும் ஒருநூலா உரைப்ப தென்னே!
உலட்டு நூல், பருத்தி நூல், சிலம்பி நூல்கள்``*
என அருணந்தி தேவரும் கூறுதல் காண்க. `போல்வவற்றால் தடுப்பார்`` என உருபு விரிக்க. வினையொடு தொகுங்கால் மூன்றாவதன் தொகை விகற்பப் புணர்ச்சியைப் பெறும். ``வாள்போழ்ந் தட்ட நீள்கழல் மறவர்`` என்றது காண்க. `பரத்தொடும் - போம்வழி தேடிப் புறத்தே திரிதர்வர்`` என்பதை, ``கனக வகை குறித்துக் போய்க் கடற்கே வீழ்வார்``* என்றது போலக் கொள்க. ``திரிகின்றவாறு`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், முத்தியைப் பல்வேறாகக் கூறும் சமய நூல்களின் பொருந்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடல்தொறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.

பொழிப்புரை :

பாசக் கூட்டம் மறைக்கின்ற மறைப்பு நீங்கி உடல் வீடும் மனிதர்கள் உடலில் இருக்கும்பொழுது, ``மாயோன் மேய காடுறை யுலகம்``3 என்பது முதலாக முறைப்படுத்துச் சொல்லப்பட்ட நால்வகை நிலங்கள் தோறும் உள்ளிடத்துச் சிவபெருமான் கொண்டிருக்கும் திருவுருவங்களைக் குறித்துச் சென்று வணங்கியிருந்து, உடல் நீங்கிய பொழுது பேரின்ப வடிவினனாகிய சிவபெருமானை அடைந்து அவனோடு இரண்டறக் கலப்பர். ஆயினும், பாசக் கூட்டத்தின் மறைப்பு நீங்கப்பெறாத மனிதர்கள் அத்திருவுருவங்கள் எங்கும் இருப்பினும் அவைகளைப் பற்றி யாதும் நினைக்க மாட்டார்கள்,

குறிப்புரை :

`மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் காடும் ... ... ... ... உருவினைக் குறித்து நந்தியவனை (அடைந்து) உடன் கூடுவர்; (பிறர்) உன்னகிலார்` என இயைக்க. ``அவன்`` பகுதிப் பொருள் விகுதி. ``குறிகளும் அடையாளமும் கோயிலும் - நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்``9 நிலமெங்கும் உள்ளனவாகவும் பாசத்தால் மூடப்பட்டுக் கிடக்கும் மனிதர்கள் அவற்றைச் சிறிதும் நோக்குதல் இல்லை. அதனால், அவர்கள் உடல்விட்ட பின்பு` அடையும் நிலை யாது எனக்கூறி இரங்கியவாறு, ``மூடுதல் இன்றி`` என முன்னர்க் கூறப்பட்டமையால், பின்னர் அதன் மறுதலை வருவிக்கப்பட்டது. அவர்கட்கு மேற்கூறியl ``நரகம், சுவர்க்கம், மேதினி`` என்னும் மூன்று உலகங்களுள் யாதானும் ஒன்றிற்சென்று பிறத்தலே கதி என்பது குறிப்பெச்சம். `பிறப்பதற்கே தொழிலாகி, இறக்கின்றாரே`` 8 என்று அருளிச்செய்ததையும் நோக்குக.
இதனால், `சிவநெறியை உணராதவர் மறுமையில் அடையும் நிலை இரக்கத்திற்கு உரியது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவ
நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.

பொழிப்புரை :

(தலையில் வலக் கன்னத்தை, `தெற்கு` என்றும், இடக் கன்னத்தை `வடக்கு` என்றும், நெற்றியை, `கிழக்கு` என்றும், பிடரிக்கு மேல் உள்ள பகுதியை `மேற்கு` என்று குழூஉக் குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்முறையில்.)
தெற்கும், வடக்கும் உயர்வுடையன. அத்திசையிகளில் தேவர்கள் உலாவுவார்கள். (சூரிய கலை சந்திர கலைகளாகிய பிராணங்கள் வியாபிக்கும்.) மேற்கும், கிழக்கும் யோகி தன் தியானப் பொருளைக் குறித்துச் செல்லும் வழிகளாம். அங்ஙனம் செல்லும் பொழுது நாவால் உச்சரிக்கப் படுவன மந்திரங்கள். இவற்றை யெல்லாம் இவ்வாறு உணர்ந்து, மூலாக்கினியை எழுப்பி
நடுநாடி வழியாக ஓங்கச் செய்து, அதனால் அறிவு விளங்கப் பெறுவீர்களாக.

குறிப்புரை :

`அங்ஙனம் அறிவு விளங்கப்பெற்றால், சுவர்க்க நரகங்களும், அவற்றைக் கடந்துள்ள சுத்த புவனங்களும் விளங்கச் சித்தாந்த முத்தி நிலையும் விளங்கும்` என்பது குறிப்பெச்சம். ஆவது - உயர்ந்து நிற்பது, இதனை, தெற்கு, வடக்கு இரண்டனோடும் தனித்தனிக் கூட்டுக. மந்திரமாவன பிரணவமும், அம்சமும், திருவைந்தெழுத்துமாம். `உணர்ந்து` என்பது சொல்லெச்சம்.
இதனால், `உண்மை முத்தி நிலையை யோகக் காட்சியால் இவ்வுலகிலே உணர்தல் கூடும்` என்பது கூறப்பட்டது. அதனால், அதனை `இல்லை` என்றல் குற்றமாதல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவனை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.

பொழிப்புரை :

சமயப் பூசலை மேற்கொண்டு, பிற சமயத்தவர் சினங்கொள்ளுமாறு கடுஞ்சொற்களைப் பேசின பாவத்தை யடைந்தவர் தாம் `நெறியல்லா நெறி தன்னை நெறியாக மயங்கும் மயக்கம்* தம்மிடத்தில் பொருந்துதலால் நெறிகளைத் திரிய நோக்கினாராயினும், `நாம் பெரிய தவத்தைச் செய்கின்றோம்` என்பது தான் அவர்கள் கருத்து அவர்கள் தங்களுக்கு உண்மை மனோலயம் வரும்படி சொல்லிய முறையைக் கைக்கொள்ளாமையால் அக் கருத்துப் போலியேயாய் உண்மையில் அவர்கள் தம்மை வந்து சார வேண்டிய வினைகள் வந்து சார்தலினாலே அவற்றைச் சுமந்து நிற்பவரேயாவர்.

குறிப்புரை :

`தவத்தினால் வினையை நீக்கிக்கொள்பவர் அல்லர்` என்பாம். ``மாதவம் செய்வார்`` என்றது அவர்களது கருத்தை நோக்கி. தரணை - எண் வகையோக உறுப்புக்களில் மனம் ஒடுங்கி நிற்கும் நிலை. அஃது அதற்குரிய முறையைக் குறித்தது. `சினக்க` என்னும் வினையெச்சம், குகரச் சாரியையும், `உரு` என்னும் துணை வினையும் பெற்று, `சினக்குற` என வந்தது. ``பேசின`` என்னும் காரணப் பொருளில் வந்த பெயரெச்சத்தை, ``தீவினை`` என்பதனோடே முடிக்க. ``அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்``* என்பவாகலின் உறுதி கூறுமிடத்தும் இன்சொல்லால் கூறுதலே நன்றாகலின் `சமயத்துறையில் தாம் பிறர்க்கு உறுதி கூறுவதாகக் கருதிக்கொண்டு, அவர்பால் கடுஞ்சொற்களை வழங்குதல் தீவினையாம்` என்றபடி. இத்தீவினையை நன்னெறி யாளர் ஒரோ ஒருகாற் செய்யினும் அவர் பிறர்க்கு உறுதி கூறிய நன்மையையேனும் பெறுவர். நெறியாளர் நெறியாளர் இதனைச் செய்யின் அவர்க்கு மிஞ்சுவத் கடுஞ்சொல் வழங்கினமையால் வரும் அத் தீவினைமட்டுமே என்பது கருத்து. இம்மந்திரம் மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
இதனால், சித்தாந்த முத்தியைப் பழிப்பார்க்குத் தீவினையும் உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

விட்ட இலக்கணை தான்போம் வியோமத்து
தொட்டு விடாத(து) உபசாந்தத் தேதொகும்
விட்டும் விடாதது மேவும்சத் தாதியில்
சுட்டும் இலக்கணா தீதம் சொரூபமே.

பொழிப்புரை :

ஆன்மாவின் சொரூப (இயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களெல்லாம் இலக்கணைச்சொல்லாகாது இலக்கணச் சொல்லேயாம். அஃதாவது நேர்ப்பொருளைத் தருவனவேயாம். அவை `ஆன்மா நித்தியம், வியாபகம், சித்து` என்றல் போல்வன. ஆன்மாவின் சொரூப நிலையைக் கூறாது, தடத்த (செயற்கை) நிலையைக் குறித்து வரும் சொற்களே இலக்கணைச் சொல்லாய் நிற்கும். அஃதாவது நேரே பொருளை யுணர்த்தாமல், ஒன்றை இடையிட்டுப் பொருளுணர்த்தும். அது மூன்று வகைப்படும். (அவ்வகைகள் மேலே காட்டப்பட்டன.)
`ஆன்மா, மேல், கீழ், நடு உலகங்களில் பிறந்தும், இறந்தும் உழலும்` என்றால், ஆன்மா உண்மையில் வியாபகப் பொருள் ஆகையால், அதற்குப் போக்கு வரவு இல்லையாதலின், ஆன்மாவை விட்டு, `அதன் சூக்கும, பரசரீரங்களே அவ்வாறு உழல்வன` எனக் கொள்கின்றோம். ஆகவே இது விட்ட இலக்கணை.
இனி, `ஆன்மாச் சகலத்திற் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அவத்தைகளை அடைகின்றது` என்றால், அவ்வவத்தைகளில் உணர்வு வேறுபடுவது ஆன்மாவே ஆகையாலும், அதன் கருவிகளின் கூடுதல் பிரிதல்கள் என்பவற்றாலும், சீவ கரணங்கள் சிவ கரணங்களாய் வேறுபடுதலாலுமே அவத்தைகள் நிகழ்தலாலும் ஆன்மாவை விடாமலே அதன் கருவிகளின் கூடுதல் குறைதல் -களையே கொள்கின்றோம். அதனால் இது விடாத இலக்கணையாம்.
இனி, `ஆன்மா புறத்தே உள்ள ஓசையைக் கேட்கின்றது, உருவத்தைக் காண்கின்றது` என்றால், கேட்டல் காண்டல்களைத் தான் நேரே செய்யாது, செவியும், கண்ணுமாகிய பொறிகளே அவற்றைச் செய்கின்றன என்றும், ஆயினும் அப்பொறிகள் அச்செயல்களைச் செய்யுமாறு ஆன்மா அவற்றை அதிட்டித்து (வாயிலாகப் பற்றி ஏவி) நிற்கின்றது என்றும் கொள்கின்றோம். இதனால், இது விட்டும் விடாத இலக்கணையாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. `சொரூபம் இலக்கணாதீதம்` (இலக்கணைக்கு அப்பாற்பட்டது) எனக் கூறியதனால், `இலக்கணைச் சொற்களாய் வருவன தடத்தத்தைப் பற்றி வருவனவே` என்பது பெறப்பட்டது.
`ஆன்மாவின் தடத்த இயல்புகளைக் கூறுமிடத்து ஆன்மா விற்குச் செயற்கையாயுள்ள மலங்கலின் இயல்பை வேறாகவும், ஆன்மாவின் தற்சொரூபம் வேறாகவும் உணர்தல் வேண்டும்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. ஆகவே, ஆன்மாவைப் போலச் சிவன் தனது தடத்த நிலையில் முன்னை நிலையை மறத்தலாகிய உணர்வு வேறு பாட்டை அடைதல் இல்லாமையால், `அவனது தடத்த நிலைகளைக் குறிக்கவே இலக்கணைச் சொற்கள் பயன்படுகின்றன` எனக்கூறும் மாயாவாதிகள் கூற்றுப் பொருந்தாது என்பதும் இதனாலே குறிக்கப்பட்டதாம். இது வருகின்ற மந்திரத்தில் வெளியாகும்.
வியோமம் - ஆகாயம் ; வானுலகம். அஃது உபலக்கணம். ``உபசாந்தம்`` என்றது கருவிகளின் சேட்டை அடங்கிய நிலையை. சத்தாதி - ஓசை முதலிய புலன்கள். சுட்டும் - நேரே சுட்டுகின்ற.
இதனால், உபநிடதப் பொருள்களைச் செம்மையாக உணர்தற்கு உரிய ஒரு கருவியின் இயல்பு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வில்லின் விசைநாணில் கோத்திலக் கெய்தபின்
சொல்லுங் களிறைந்தும் கொலொடே சாய்ந்தன
இல்லில் இருந்தெறி கூறும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிர்எதி ராகுமே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.]
வில்லினிடத்து விசையைத் தருகின்ற நாணை ஏற்றி, அதன்கண் அம்பைப்பூட்டி தொலைவில் உள்ள இலக்கை எய்ய வல்லார் அங்ஙனம் எய்வாராயின் அந்த இலக்கிற்குக் குறுக்கே நிற்கின்ற கொலையானைகள் ஐந்தும் அந்த அம்பாலே வீழ்ந்துவிடும். (அம்பு இலக்கைச் சென்று அடையும்.) இனி அவ்வாறு எய்யும் ஒருவன் தனக்கு வாய்ப்பான இடத்தில் இருந்து கொண்டு எய்யும் பொழுது அச்சாதனையால் இனியதோர் ஒளி மாணிக்கக்கலன் போல் வெளிப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

இவ்வதிகாரத்தில் உபநிடத வாக்கியங்களுக்குப் பொருள் கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றார். ஆதலின் `முண்டகம்` என்னும் ஓர் உபநிடதத்தில் கூறப்பட்டவாறே இம்மந்திரத்தில் கூறினார். அதிற் கூறப்பட்டது வருமாறு.
1. ``சித்தம் அழகியோய், உபநிடத்தில் உள்ள பெரிய அத்திரத்தை (வில்லை) எடுத்து அதில், முன்பே உபாசனையால் கூர்மை பெற்றுள்ள அம்பைத் தொடுத்து, பிரம்ம பாவனையால் அதை இழுத்து, அட்சரப் பிரம்மமாகிய இலக்கில் பாயும்படி செலுத்து``3
2. ``பிரணவமே வில். ஆன்மாவே அம்பு. பிரம்மமே அதன் இலக்கு அது சிறிதும் மறதியற்ற நினைவுடன் எய்யப்படல் வேண்டும். (எய்யப்பட்டால்) ஒன்று பட்ட நிலை ஏற்படும்``.3
இவற்றால் இம்மந்திரத்தில் மறைத்துக் கூறப்பட்டபொருள் இனிது விளங்கும். உபாசனை, இங்கு மந்திரோபாசனை யாதலின், ``விசை நாண்`` என்றது திருவைந்தெழுத்தாகக் கொள்ளப்படுகின்றது. இதனை மேற்காட்டிய உபநிடதம் வெளிப்படையாகக் கூறவில்லை. `பிரணவ கலைகளே அஞ்செழுத்து` என்பது உபநிடதங்களின் கருத்து ஆதலால் அது `வில்` என்பதில் அடக்கப்பட்டது என்பது இனிது விளங்க நாயனார், ``விசை நாணின்`` என வெளிப்பட ஓதினார்.
உபாசனையால் கூர்மை பெற்ற அம்பு, சமய விசேட நிருவாண தீக்கைகளால் பல முறைகளில் திருவைந்தெழுத்தை ஓதிப் பயின்று, திருவருள் உணர்வு மிகப்பெற்ற ஆன்ம உணர்வு, ஆன்மா எத்துணை முயற்சிகளைச் செய்தாலும் தனது இலட்சியத்தை அடைதற்கு, இடையே குறுக்கிடுவன ஐம்புலன்கள் ஆதலின், அவையும் இலட்சியத்தை நோக்கி உறுதியாகச் செல்லும் ஆன்மாவின் முன் வலியற்று வீழ்ந்துவிடும்` என்பதையும் நாயனாரே கூறினார்.
கோல் - அம்பு, ஒடு உருபை ஆன் உருபாகத் திரிக்க. ஏகாரம், `அந்த அம்பைத்தவிர வேறொரு படைக்கலம் வேண்டா` என்பதைக் குறித்தது. தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
உபநிடதத்தில் `மறவா நினைவு` எனப்பட்டது யோகா வத்தையில் சமாதி நிலையும், நின்மலாவத்தையில் நின்மல துரியமும் ஆகும் இவற்றையே நாயனார் ``இல்`` (இல்லம்) என்றார். எறி - எய்யப்படும் இலக்கு . கூரும் - அதனைக் கூர்த்து நோக்குகின்ற. கல் - மாணிக்கம். `கற்கலன்` என்பது எதுகை நோக்கி, `கல்கலன்` என இயல்பாய் நின்றது. கதிர் - கதிரவன்; ஆகுபெயர். சொரூப சிவம்.
இங்குக் கூறிய இவ்வுருவக முறையில் பரமான்மாவை, `இலக்கு` என்றதனால், அஃது இருந்தபடியே என்றும் இருக்கின்றது என்பதும், `கூர்மை பெற்ற அம்பு` என்றதனால், சீவான்மாவே பிரணவோபசனையாகிய சாதனத்தால் அவ்விலக்கினை அடைதல் வேண்டும்` என்பதும் உபநிடதத்தின் கருத்து என்பது போந்தது. எய்பவனும், எய்யப்படும் பொருளும் ஒன்றாதல் ஒருபோதும் இல்லையாகலானும், `உண்டு` எனின், `தன்னைப் பற்றுதல்` (ஆன்மாச் சிரய தோடம் என்னும் குற்றம் படும் ஆகலானும், ஏகான்ம வாதம் கொண்டு இலக்கணைகளைப் பிரமப் பொருளின் தடத்த நிலைகளுக்கு ஆக்குதல் பொருந்தாமை தெள்ளிது என்றபடி. இங்ஙனம் இதனைத் தெளிவுபடுத்தவே நாயனார் இம்மந்திரத்தைக் கூறினார். அதனால் இம்மந்திரம் இவ்வதிகாரத்தில் இடம்பெற்றது.
``புள்ளுவர் ஐவர் கள்வர்
புனத்திடைப் புகுந்து நின்று,
துள்ளுவர்; சூறை கொள்வர்;
தூநெறி விளைய ஒட்டார்;
முள்ளுடை யவர்கள் தம்மை
முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்துநின்(று) அங்(கு)
உணர்வினால் எய்ய லாமே``9
என்னும் அப்பர் திருமொழியை இங்கு ஒப்பிட்டுக் காண்க.
இதனால், இலக்கணை பயன்படும் முறை உபநிடதக் கூற்றால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

சீவ துரியத்துத் தொம்பதம் சீவனார்
பாவு பரதுரி யத்தினில் தற்பதம்
மேவு சிவதுரி யத்(து)அசி மெய்ப்பதம்
ஓவி விடும்தத் துவமசி உண்மையே.

பொழிப்புரை :

(`வேதாந்த மகாவாக்கியங்கள் சில உள` என்பதும், அவற்றின் இயல்பும் மேற்குறித்த அதிகாரங்களில் சொல்லப்பட்டன. அவ்வாக்கியங்களில் `தத்துவமசி` என்னும் வாக்கியமே சிறப்பாகக் கூறப்படுதலால் அது பற்றியே இங்குக் கூறுகின்றார். வடமொழியில் `தத்+த்வம்+அஸி` என்னும் மூன்று பதங்களின் சேர்க்கையே `தத்துவமஸி` என்று ஆகின்றது. தத் - அது. த்வம் - நீ, அஸி - ஆகின்றாய். தத்துவமஸி - அது நீயாகின்றாய். இங்ஙனமாயினும் `ஆகின்றாய்` என்பதனால், `நீ அது ஆகின்றாய், என்பதே கருத்து, த்வம், `துவம்` என வருகின்றது. `தொம்` என மரூஉவாகவும் வரும். இங்குக் குறித்த கருத்துப் பற்றி நாயனார், `தொந்தத்தசி என்றே கூறுவார்)
`தத்துவமசி` என்பதை, `தொம், தத், அசி என வைத்து நோக்கினால் முதற்கண் உள்ள `தொம்` என்பது, மேல் `முத்துரியம்` என்பவற்றில் சீவ துரியமாகிய யோகாவத்தையாகிய சகலத்திற் சுத்தா வத்தை நிலையில் தியான சமாதிகளில் உள்ள சீவான்மாவைக் குறிக்கும். `தத்` என்பது பர துரியமாகிய பர முத்தியில் அடையப்படும் சொரூப சிவத்தைக் குறிக்கும். `அசி` என்பது, நின்மல துரியமாகிய சிவ யோகத்தில் சீவான்மா பரமான்மாவாகிய சிவனேயாய் அவனோடு ஏகமாகி விடுதலைக் குறிக்கும். இதுவே `தத்துவமசி` மகாவாக்கியத்தின் உண்மைப் பொருள். இப்பொருளைச் சில மதங்கள் தள்ளிவிடுகின்றன.

குறிப்புரை :

`அதனைக் கொண்டு மயங்க வேண்டா` என்பது குறிப்பெச்சம். `தத்துவ மசி உண்மை இது` என முடித்து ஓவிவிடும் என்பதை இறுதியில் கூட்டி, அதற்கு எழுவாய் வருவித்து முடிக்க. தள்ளிவிடுகின்ற மதங்கள் சிலவகை ஏகான்ம வாத மதங்கள். அவை `சீவான்மா, பரமான்மா என இரண்டு ஆன்மாக்கள் இல்லை. பரமான்மா ஒன்றே பல சீவான்மாக்கள் ஆகின்றது` என்பதில் தம்முள் மாறுபடுதல் இல்லை.
ஒருவகை ஏகான்ம வாதம், `பொன்னே பூடணம் ஆவது போல` பரப்பிரம்மே சீவர்களாகவும், உலகமாகவும் பரிணமிக்கின்றது என்று கூறும் அக்கூற்று. `பரிணாம வாதம்` எனப்படுகின்றது.
`பரிணாம வாதம் பொருந்தாது` என விடுத்து, மற்றொருவகை ஏகான்ம வாதம். விவர்த்தனவாத ஆபாச வாதங்களைக் கூறும். விவர்த்தனம் - மாறுபட்ட தோற்றம். ஆபாசம் - உண்மை போலவே தோன்றும் போலி. கயிறு பாம்பாகவும், இப்பி வெள்ளியாகவும், கானல் நீராகவும் தோன்றுதல் போலும் தோற்றமே விவர்த்தனம் இத்தோற்றத்திற்குக் காரணம் மயக்கமே. போலியும் மயக்கம் காரணமாக, `உண்மை` என எண்ணப்படுகின்றது. `அவை போலவே மயக்கத்தால் பர பிரம்மம் ஈசுரனாகவும், சீவர்களாகவும், உலகமாகவும் (சக சீவ பரங்களாகத்) தோன்றுகின்றது என்பது விவர்த்தனவாத ஆபாச வாதங்கள், `மயக்கத்திற்குக் காரணம் மாயை எனப்படுகின்றது.
மாயை கண்ணாடிபோல்வது; அது `சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்று கூறுபாட்டினையுடையது. அக்கூறுகள் `குணம்` எனப்படும். அம்மூன்றிலும், சுத்தமாய் ஒன்றாய் உள்ள பரப்பிரமம் கண்ணாடியில் நிழல்போலப் பலவாய்ப் பிரதிபலிக்கும் அவற்றுள் சத்துவ குணப்பிரதிபலனமே ஈசுரன். இராசத குணப்பிரதிபலனம் சீவர்கள். தாமத குணப் பிரதிபலனம் பலவகை உடம்புகளும், உலகங்களும் கண்ணாடியில் நிழற் போல` என்பதனால், இஃது ஆபாச வாதமாம். ஆகாயத்தில் உள்ள சந்திரனும், சூரியனும் பூமியில் உள்ள பல நீர்நிலைகளிலும், பாண்டங்களிலும் உள்ள நீரில் பிரதிபலித்தலையும் உவமையாகக் கூறுவர்.
விவர்த்தன வாதம், ஆபாச வாதம் இரண்டுமே மாயையை அடிப்படையாகக் கொள்வதால் அவை இரண்டுமே `மாயா வாதம்` எனப்படுகின்றன.
இவ் வாதங்கள், `தங்கள் வாதங்களுக்கு மாயையே அடிப்படை` என்று சொல்லிவிட்டு, `அத்தகைய மாயை உள்பொருளா, இல்பொருளா` என்னும் ஆராய்ச்சியில், `இரண்டும் அல்ல; அதனால் உள்ளது என்றோ, இல்லது என்றோ ஒருபடித்தாக வரையறுத்துச் சொல்லொணாதது. (அநிர்வசனீயம்) என்கின்றன. அங்ஙனம் இவை கூறுதற்குக் காரணம். `பொருள்` என உள்ளது ஒன்றேயன்றி, இரண்டாவது இல்லை எனக் கொண்டதேயாகும். மாயையை `உள்பொருள்` என்று ஒப்புக்கொண்டால், `பொருள்கள் இரண்டு உள்ளன` என்று ஆகிவிடும்` என இவை அஞ்சுகின்றன.
`உள்ளது` என்றால், என்றும் உள்ளதாதல் வேண்டும். `இல்லது` என்றால் முயற்கொம்பு, ஆகாயத் தாமரை முதலியன போல அதனால் விளைவு ஒன்றும் உண்டாகாது. மாயை மயக்கத்தைத் தருவதால் இல்லதாகாது `உள்ளது` என்றால் என்றும் உள்ளதாதல் வேண்டும். அவ்வாறின்றி ஞானம் வந்தால் இல்லையாகி விடுகின்றது. அதனால் மாயையை, உள்ளது என்றோ, `இல்லது` என்றோ சொல்லமுடியாது என்பது இவ்வாதங்களின் நெறிமுறை. இவ்வாறு அடிப்படையைப் பற்றிக் குழப்பிவிட்டு. அதன்மேல் உயர உயரக் கட்டடங்கள் இவ்வாதத்தில் கட்டப்படுகின்றன.
ஏகான்ம வாதங்களில் மாயாவாதமே வலுப்பட்டு நிற்கின்றது.
சத்தப் பிரம வாதம், கிரீடாப் பிரம வாதம் என வேறு ஏகான்ம வாதங்களும் உள்ளன.
உபநிடதங்களுள் சிறந்த ஒன்றாகிய சாந்தோக்கியம் ஓர் உபதேசத்தில் ``சத்தே முதற்கண் ஒன்றேயாய். அத்விதீயமாய் இருந்தது`` எனக் கூறியுள்ளது.l இதில் `அத்வீதியம்` எனப்பட்ட `அத்துவிதம்` என்னும் சொல்லே பெரிதும் விவாதத்திற்குள்ளாகி விட்டது. பிரம சூத்திரத்திற்குப் பாடியம் செய்தோர், `அத்துவிதம்` என்பதற்கு `இரண்டில்லாதது` என்றே பொருள் கொண்டு, `இரண்டில் -லாதது ஒன்றே` என்றனர். அதனால் அவர்கள், `எவ்வகையிலும் உளளது ஒரு பொருளே; இரண்டாவதாக எந்தப் பொருளும் இல்லை` எனக் கொள்வாராயினர். ஆயினும் சத்தினை `ஒன்று` எனக் கூறும் உபநிடதம் வாளா `ஒன்று` என்று மட்டும் கூறாமல், `ஒன்றே` எனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறியதிலேயே `இரண்டாவது இல்லை` என்பது விளங்கி விடுகின்றது. ஆகவே, அதன்பின், ``இரண்டாவது இல்லை`` எனக் கூறுதல் மிகையாகின்றது. ஆயினும், `வலியுறுத்தற்கு அதுவும் வேண்டும்` என்கின்றனர் பாடியகாரர்கள். `ஒருபொருளே உண்டு எனக் கொள்வதால் அவர்கள் ஒருமைக் கொள்கையினராதல் தெளிவு.
ஒருமை, `முற்றொருமை, தொகை யொருமை, இறை யொருமை` என மூன்றாகச் சொல்லப்படுகின்றது. முற்றொருமை கேவ லாத்துவிதம். (கேவலம் - தனிமை) தொகையொருமை - விசிட்டாத்து விதம். (விசிட்டம் - அடையும், அடைகொளியும் ஒன்றாய்த் தொக்க தொகை. அடை - விசேடணம். அடைகொளி - விசேடியம். விசிட்டம் - இவையிரண்டும் கூடியது.) இறை யொருமை - சிவாத்துவிதம்.
மூன்று ஒருமையாளர்களுள் முற்றொருமையாளர் `முதற் பொருள் (பரபிரம்மம்) எந்த வகையிலும் இருமை சிறிதும் இல்லாது, முற்றும் ஒன்றேயாய் உள்ளது` என்பர்.
இருமை, `பேதம்` என்றும், ஒருமை, அபேதம் என்றும் சொல்லப்படும். பேதம் - வேற்றுமை. அபேதம் - வேற்றுமை இன்மை.
ஒரு பொருட்கு மூன்று வகை வேற்றுமைகள் உள்ளன. அவை, `தன்னின வேற்றுமை, (சசாதிய பேதம்) வேற்றின வேற்றுமை (விசாதீய பேதம்) தன்னுள்ளே வேற்றுமை` (சுகத பேதம்) என்பன.
`மா மரம், புளியமரம்` என்றாற் போல்வனவற்றில் தன்னின வேற்றுமை உள்ளது. ஏனெனில், `மா, புளி` என்பன `மரம்` என்னும் ஒர் இனத்தில் உள்ள வேற்றுமையே, பரப்பிரமம் ஒன்றேயாதலின் அதற்குத் தன்னின வேற்றுமையில்லை.
மரம், விலங்கு, புள் முதலியவற்றில் அவ்வப்பெயர்களே வேற்றின வேற்றுமையை உணர்த்துகின்றன. ஏனெனில் அப்பெயர்கள் அவ்வவ்வினத்திற்கு மற்றையினங்களோடுள்ள வேற்றுமையை உணர்த்தியே நிற்கின்றன. பரப்பிரம்மத்திற்கு வேறாய் எந்தப் பொருளும் இல்லையாகையால், அதற்கு வேற்றின வேற்றுமையும் இல்லை என்பர் முற்றொருமையாளர்.
`செந்தாமரை, வெண்டாமரை - முக்கண்ணன, செங் கண்ணன்` என்றாற் போல்வனவற்றில் தன்னுள்ளே வேற்றுமை உள்ளது. ஏனெனில், தாமரை வேற்றுமையின்றி நில்லாது `செம்மை, வெண்மை` என்னும் வேறுபாடுகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. `செஞ்ஞாயிறு வெண்ணிலவு` என்பவற்றிலும் செம்மையும், வெண்மையும் ஞாயிற்றிற்கும், நிலவிற்கும் வேறு வேறாகவே உணரப் படுகின்றன. கண்களும், அவற்றை உடையவர்களும் வேறு வேறாகவே உணரப்படுதலால், `முக்கண்ணன் செங்கண்ணன்` என்ப வற்றிலும் தன்னுள்ளே வேற்றுமையுள்ளது. எனவே, ``குணம், குணி. (பண்பு, பண்பி) அவயவம், அவயவி (சினை, முதல்) என்னும் முறையில் உள்ள வேற்றுமைகள் தன்னுள்ளே வேற்றுமை` என்பது விளங்கும். `இத்தகைய வேற்றுமையும் பரப்பிரம்மத்திற்கு இல்லை` என்பர் முற்றொருமையாளர். `பரப்பிரம்மம் கேவலம் சின் மாத்திரமாய் உள்ளது`. அறிவு, அறிவை உடையது என்று அஃது இரண்டாய் இல்லை. அறிவு என்கின்ற ஒன்றேயாய் உள்ளது என்பது அவரது கொள்கை. `கேவலம் ஒன்று` என்பதனால், அவர் கூறும் அத்துவிதம், `கேவலாத்து விதம்` எனப்படுகின்றது.
`பரப்பிரம்மத்திற்குச் சசாதிய பேதம் இல்லை` என்பது மட்டுமே எல்லோர்க்கும் உடன்பாடு. `மற்றைய பேதங்கள் இல்லை என்பது எல்லோர்க்கும் உடன்பாடில்லை.
`மேற்காட்டிய உபநிடதம், சத்தினை, (பரப்பிரம்மத்தை) `ஒன்று` எனக் கூறியது. சசாதீய பேதத்தை நீக்குதற்கும், `ஒன்றே` எனத்தேற்றேகாரம் புணர்த்தது, சுகத பேதத்தை நீக்குதற்கும், (அத்விதீயம்) என்றது விசாதீய பேதம் நீக்குதற்கும் ஆகலின், அவற்றுள் மிகை எதுவும் இல்லை` என முற்றொருமையாளர் திறம் படச் சாதிப்பர். ஆயினும், `பரப்பிரம்மத்திற்கு விசாதீய பேதமும், சுகத பேதமும் இல்லை` என்றால், மேற்காட்டிய உபநிடத்திலும் மற்றும் உப நிடதங்களிலும் பரப்பிரம்மத்தை வருணிக்கும் பலவகை வருணணை களோடு பெரிதும் முரணும் ஆதலின், ``ஏகமேவாத் விதீயம்`` என்னும் இந்த ஒரு வாக்கியத்தை வைத்து முற்றொருமை சாதித்தல் கூடாது என மற்றையோர் மறுப்பர். சீவர்கள், பிரபஞ்சம் இவைகளை உப நிடதங்கள் வேறு வேறாகவும் கூறுகின்றன. எனினும், முற்றொருமை வாதிகள், உபநிடதங்களில் வரும் பிரம்ம வருணனைகளில் அன்மைச் சொற்கட்கு மட்டுமின்றி, ஆக்கச் சொற்களுக்கும் பிரம்மத்தைப் பிற பொருள்களினின்றும் வேறுபடுத்துதலே பயன்` என்று கூறிப்போவர்.
`பரப்பிரம்மம்` சசாதீய பேதம் இன்றி, ஒன்றேயாயினும், பசு பாசங்களின் வேறாய் நிற்கும் விசாதிய பேதம். `ஆனந்தம்` முதலிய குணங்களையுடைய குணியாய் நிற்கும் சுகதபேதம் இவைகளை யுடையதே` என்பர். மற்றையோராகிய அவர் அங்ஙனம் கூறுமிடத்து. (அரசனுக்குப் பரிவாரங்கள் அரசச் சுற்றம்) போல சீவர்களும், அவனது ஆற்றல் போல மாயையும் இருத்தலால் பசு பாசங்கள் பரப் பிரம்மத்தின் வேறாவன அல்ல` என்பதே அத்துவிதம் என்பதனால் பெறப்படுவது` என்பர் தொகை யொருமையாளர் (விசிட்டாத்து விதிகள்.) ஆற்றலும், பரிவாரமும் அரசனுக்கு அடைகள் (விசே டணங்கள்) அரசன் அடைகொளி. (விசேடியம்.) `ஆற்றலும், பரி வாரமும் இல்லாவிடில் அரசனே இல்லை, அதுபோலப் பசுபாசங் களாகிய அடைகள் இல்லையேல், பதியாகிய பரப்பிரம்மமும் இல்லை` என்பது அவர் கொள்கை. மேலும், `பரம்` என்பதற்கு `மேலானது` என்பது பொருள், `இரண்டாவது பொருள் இல்லை` என்றால், `மேல், கீழ்` என்னும் வழக்கிற்கே வழியில்லை.
இனி முற்றொருமையாளர், `பொய், மெய்` என்பவற்றிற்கு வேறாய்` `மித்தை` (வெறுந்தோற்றம்) என ஒன்றைக்கூறி, `மாயை, அஞ்ஞானம் அவித்தை` எனக் கூறப்படுவனவெல்லாம் `மித்தை`; அஃதாவது, பொய்யும் அல்ல; மெய்யும் அல்ல. ஆகவே, மித்தையையும் மெய்யையும் வைத்தே கீழ்,மேல் சொல்லப்படுகின்றன என்பர்.
`மேற்காட்டிய கயிற்றில் அரவு முதலியனவும், கனாவும் மித்தை (வெறும் தோற்றம்) அஃதாவது, உள்ளனவும் அல்ல; இல்லனவும் அல்ல` என்பர். இக்கொள்கை பௌத்த மதக் கொள்கை யாகிய `சூனியம்` என்பதைச் சிறிதே வேறுபடுத்திக்கூறுவதாகும். `மெய்` என்பதை `உள்ளது` என்றும், `பொய்` என்பதை இல்லது` என்றும் கொண்டால், இவ்விரண்டிற்கும் வேறாய், அல்லது இரண்டுமாய் நிற்பதொரு பொருள் இருத்தல் இயலாது. ஆகவே, அஃது இயல்வது போல வைத்து, சூனியம், அநிர்வசனீயம் `மித்தை சமுச்சயம்` முதலிய சொற்களைச் சொல்வன எல்லாம் வெறும் சொற்சாலங்களாய்ப் பொருளில் மொழிதலேயாம்.
கயிற்றில் அரவு இல்லையென்றாலும் அரவு வேறிடத்தில் உள்ளது. இப்பியில் வெள்ளி இல்லையென்றாலும் வெள்ளி வேறிடத்தில் உள்ளது. கானலில் நீர் இல்லையென்றாலும் நீர் வேறிடத்தில் உள்ளது. ஆகவே, ``இல்லதற்குத் தோற்றம் இன்மையின்``3 என்றபடி, எங்கும், எப்பொழுதும் இல்லதேயான பொருள் ஓரிடத்தும், ஒருகாலத்தும், ஒருவாற்றானும் தோன்று மாறில்லை. ஆகையால் கயிற்றில் அரவு முதலியவற்றை உவமை கூறினால், `பரப்பிரம்மத்தில் சக சீவ பரங்கள் இல்லையென்றாலும் அவை வேறிடத்து உள்ளன` என்று ஆகும்.
இனிக்கனவை, `மெய்யன்றி` என்றலும் பொருந்ததாது. கனவிற்கும், நனவிற்கும் உள்ள வேற்றுமை, ஒரு பிறப்பிற்கும். அடுத்தப் பிறப்பிற்கும் உள்ள வேற்றுமை போன்றதாகவே சொல்லப் படுகின்றது. ஒரு பிறப்பில் உள்ள உறவினர், பகைவர் அடுத்த பிறப்பில் அவ்வாறாய் வாராமை பற்றி முற்பிறப்பைப் `பொய்` என்பார் ஆத்திகருள் ஒருவரும் இலர். அதுபோல, கனவிற்கண்டது நனவிற் பயன்படாமை பற்றி அதனைப் `பொய்` என்றல் சாலாது. ஒரு சிலருக்கு முற்பிறப்பு நிகழ்ச்சிகள் நினைவிற்கு வந்து, விருப்பு வெறுப்புக்கள் நிகழ்வது போல, கனவு நிகழச்சிகளில் ஓரிரு நிகழ்ச்சிகள் நனவிலும் தாக்குகின்றன `நனவு தூலதேகத்தை மட்டுமை பற்றியது, கனவு சூக்கும தேகத்தை மட்டுமே பற்றியது` என்பது அனைவர்க்கும் உடன்பாடு. கனவில் நிகழும் மகளிர் இன்பம், பேரெச்சம், பெருந்துக்கம் முதலியன, சிலவேளைகளில் தூல உடம்பைத் தாக்குதலும் கண் கூடு. அவை பொய்யாயின் பொய்யானது பிறிதொன்றைத் தாக்குமாறில்லை. ஒழுங்கின்மை, நிலையாமை என்னும் அளவே கனவினிடத்து உள்ள குறைகளாகும். ஆகவே கனவு இல்லதன்று.
இன்னும் அவர், `குளக்கரையில் நிற்பவனுக்குக் குளத்து நீரில் தான் தலைகீழாய்த் தோன்றுவது போல, சத்துச் சித்து ஆனந்தமாய் உள்ள பரப்பிரம்மம் மாயையால், நேர்மாறான அசத்துச் சட துக்க உலகமாய்த் தோன்றுகின்றது` என்பர்.
குளக்கரையில் நிற்பவன் நீரில் நிழலையே தானாக மயங்குதல் ஓரிடத்தும், ஒரு காலத்தும் நிகழாதது. ஒருவன் கண்ணாடியில் தோன்றும் நிழலையே தானாக மயங்குதலும் அத்தகையதே. அதனால் அவற்றை உபமானமாகக் கூறி, `பரப்பிரமத்தின் பிரதி பிம்பங்களே சகசீவ பரங்கள்` என்றல் பொருந்துமாறில்லை.
அஃதன்றியும் கயிறு தானே தன்னைப் `பாம்பு` என மயங்கிப் பின்பு `இது பாம்பன்று, கயிறு` எனத் தெளியாது. அவ்வாறு முன்பு மயங்கப் பின்பு தெளிபவன் கயிற்றுக்கு வேறாய் உள்ளவனே. அதுபோலப் பரப்பிரமமே தன்னைத்தான் முன்பு சகசீவ பரங்களாக மயங்கிப்பின், இவையெல்லாம் அன்ன அல்ல, பரப்பிரம்மமே` எனத் தெளியாது. அங்ஙனம் முன்பு மயங்கிப் பின்பு தெளிபவன் பரப்பிரம்மத்தின் வேறாய் உள்ளவனே யாவன். ஆகவே, இத்தகைய உவமைகள் முற்றொருமையைச் சாதிப்பவனாய் இல்லை.
இனிக்கயிறு பாம்பாகத் தோன்றுமேயல்லது. தேளாய் ஒருவருக்கும் தோன்றாது. காரணம் என்னை? பாம்பினுடைய தன்மை கயிற்றினிடத்தும் உள்ளது. தேளினுடைய தன்மை கயிற்றினிடத்தில் இல்லை கயிறு, பாம்பு இரண்டிலும் உள்ள தன்மை `பொதுத் தன்மை` எனப்படும். எனவே, ஒரு பொருளைக் காண்கின்றவன் அதன் பொதுத் தன்மையைக் கண்டு. சிறப்புத் தன்மையைக் காணாமல், அப்பொதுத் தன்மையை உடைய மற்றொரு பொருளின் சிறப்புத் தன்மையையும் விரைவில் தனது நினவினால் எதிரில் காணப்படும் பொருளோடு சேர்த்து அதனை அதனோடு ஒப்புமையுடைய வேறொரு பொருளாகக் கருதி விடுகின்றான். அவ்வளவே பிழை `கியாதி வாதம்` கூறுவார். கூற்றின் முறையில் வைத்து நோக்கினால் இதனைச் `சாதிரு சயக்கியாதி` எனலாம். சாதிருசயம் - பொதுத்தன்மை.
`கயிற்றரவு` முதலிய உவமைகளைக் காட்டிலும் `கண்ணாடியில் நிழல்` உவமை பெரிதும் பொருத்த மற்றதாகின்றது. ஏனெனில், கயிற்றிற்கும், அரவிற்கும் உள்ள ஒற்றுமை சிறிதளவே பிம்பத்திற்கும், கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பத்திற்கும் உள்ள ஒற்றுமை மிகப் பெரிது இரண்டும் ஏறக்குறைய ஒரு தன்மையனவேயாம். அதனால் உலகம் பரப்பிரம்மத்தின் பிரதிபிம்பம் என்றால், உலகத்தைப் பார்ப்பதே பரப்பிரம்மத்தைப் பார்ப்பதாக ஆகிவிடும் மேலும், பிரதிபிம்பத்தில் காணப்படும் மாறுதல்கள் பிம்பத்தில் இல்லாமல் உண்டாகமாட்டா அதனால் உலகத்தின் மாறுதல்களைக் காணும்பொழுது அவற்றைப் பரப்பிரம்மத்திலும் உள்ளன` எனக் கொள்ளல் வேண்டும்.
இனி, `கண்ணாடியில் உள்ள அழுக்கினால் அதில் தோன்றும் பிரதிபிம்பம் பிம்பத்திற்கு மாறாக இருக்கலாம்` என்றால், அழுக்கினால் பிரதிபிம்பம் உண்டாகாது போனாலும் போகலாமே யன்றிப் பிரதிபிம்பம் உண்டாகும்பொழுது அது பிம்பத்திற்கு முற்றிலும் மாறானதாக உண்டாகமாட்டாது. இக்குற்றம் நீங்குதற் பொருட்டுப் பூமியில் உள்ள நீரில் தோன்றும் சந்திர சூரியர் நிழலை உவமையாகக் கூறி, `நீரில் தோன்றும் சந்திர சூரியர் பலராய், நீரின் அலைவால் தாமும் அலைவை அடையினும் அவ்வேறுபாடுகள் எல்லாம் வானில் உள்ள சந்திர சூரியர்க்கு இல்லாமைபோல, மாயையில் தோன்றிய பரப்பிரமச் சாயைக்கு மாயையால் உள வாகின்ற வேறுபாடுகள் பரப்பிரமத்திற்கு உளவாதல் இல்லை` எனக் கூறினால், வானில் உள்ள சந்திர சூரியர் இருளுக்குப் பகைவராய் இருளை நீக்குதல் போலவே, நீரில் தோன்றும் சந்திர சூரியரும் இருளுக்குப் பகைவராய் இருளைப் போக்குதல்போல, மாயையில் பிரதிபலிக்கும் சீவேசுரர்களும் மாயைக்கும் அவித்தைக்கும் பகைவராய் அவற்றை அவர் நீக்கிவிடுதல் வேண்டும். அஃது இன்மையால் இவ்வுவமையும் முற்றொருமையை நிறுவமாட்டாது.
கயிற்றைப் `பாம்பு` என மருண்டு, பின், `பாம்பு அன்று, கயிறு` எனத் தெளிவது கயிறன்று; அதற்கு வேறான ஒருவனே, அதனால் இவ்வுபமானத்திலேயே பரப்பிரம்மத்திற்கு வேறாய் ஆன்மா ஒன்று உண்டு என்பது பெறப்படும் என்பதையே மெய்கண்ட தேவர்.
``அத்துவிதம் - என்ற சொல்லானே - ஏகம்
என்னில், - ஏகம் என்று சுட்டுவது உண்மையின்``9
எனக் கூறினார்.
மாயையைச் `சடம்` என ஒப்புக்கொண்டு, `அஃது அரசனது ஆற்றல் போலப் பரப்பிரம்மத்தின் குணமாய், அல்லது கூறாய் உள்ளது` எனத் தொகையொருமை விசிட்டாத்துவிதம்) கூறுவதும் பொருந்த வில்லை ஏனெனில் சித்தின் குணம் அல்லது கூறுசித்தாய் இருத்தல் வேண்டுமன்றி, அதற்கு நேர்மாறான சடமாய் இருத்தல் சாலாது. `அரச சுற்றத்தார் அரசனில் வேறானவர்` என்பது வெளிப்படை.
இறையொருமைக் கொள்கையாளரும் (சிவாத்துவிதிகளும்) விசிட்டம் கூறுபவர்களே. `மரம்` என்பது ஒன்றுதான். ஆயினும் அதில் அடிமரம், கிளை, வளார், இலை முதலிய அக வேறுபாடுகள் இருத்தல் போலப் பரப்பிரம்மம் ஒன்றுதான். ஆயினும் அதில் பசு பாசங்களாகிய அகவேற்றுமைகள் உள்ளன` என்பர் அவர். அங்ஙனமாயின் ஆபாச வாதிகட்கு உளவாகும் குற்றங்கள் ஓரளவில் இவர்க்கும் உளவாகும். எங்ஙனம் எனில்,
ஒவ்வொரு சாதி மதத்திலும் வேறு வேறு சாதியான இலைகள், பூக்கள், காய்கள் தோன்றுவதால், மரத்தின் சாதித்தன்மை அதில் உள்ள இலைகள், பூக்கள், காய்களிலும் இருத்தல் தெளிவு, ஆகவே, பரப்பிரம்மம் மரம்போலவும், பசு பாசங்கள் இலை, பூ, காய் போலவும் இருப்பின், பதியினது சாதித் தன்மையே பசு பாசங்கட்கும் இருத்தல் வேண்டும். அவ்வாறிருப்பின் பாசங்களைத் `துக்கம்` என்றும், `ஒழிக்கத் தக்கன` என்றும் கூறுவன் எல்லாம் பொருளற்றனவாய், பந்தமே முத்தியாய்விடும்.
இங்ஙனமாகவே, உபநிடதம் சத்தினை, ``ஒன்று`` என்றதனோடு ஒழியாமல் `ஒன்றே` எனத் தேற்றேகாரம் புணர்த்துக் கூறியபின் `இரண்டில்லாதது` என்றல் வேண்டா கூறலேயாம். அதனால் `அத்துவிதம்` என்பதற்கு, `இரண்டில்லாதது` எனப்பொருள் கொள்ளாமல், `இரண்டல்லாதது` என்றே பொருள் கொள்ளல் வேண்டும் என்கின்றார் மெய்கண்ட தேவர். `இரண்டல்லாதது` என்றால், தனக்கு வேறான பொருள்கள் இருப்பினும் அவற்றை விட்டுத் தான் தனியே இராது அவற்றோடு ஒன்றாய் எஞ்ஞான்றும் பிரிப்பில்லாமல் இருப்பதாம். இதுவே `அத்துவிதம்` என்பதற்குப் பொருள் என்பதை உமாபதி தேவர், `பிறிவரும் அத்துவிதம்`* என்றும், மெய்கண்ட தேவர் ``அந்நிய நாத்தி``* (வேறாதல் இன்மை) என்றும் கூறினார். இதனால், `அத்து விதம்` என்னும் சொல் பொருள்களின் எண்ணிக்கையை வரையறுப்பதன்று பொருள்களின் இடையே உள்ள தொடர்பைக் குறிப்பதேயாம் என்பது விளங்கும்.
ஆகவே, உபநிடதம் `சத்து ஒன்றே` என எண் வரையறுத்தபின், அதற்கும் ஏனைய பொருள்கட்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கவே, `அத்துவிதம்` என்பதைக் கூறிற்று என்பதே நந்தி மரபின் சித்தாந்தம் அதனால் இந்நாயனாரும் அச்சித்தாந்தத்தையே வலியுறுத்துகின்றார்.
`சத்து, மெய், உள்ளது` என்பன ஒரு பொருட் சொற்களாயின், `சத்து ஒன்றே` என்று ஆகிவிட்டபின்பு வேறு பொருள்கள் இருத்தல் எப்படிக் கூடும் எனின், `சத்து` என்பதை `உள்ளது` என்னும் அளவில் கொள்ளுதல் சித்தாந்தம் அன்று. ஏனெனில், `இல்லது பொருளன்று ஆகையால், `அசத்து` என்பதை `இல்லாதது` என்றால், பொருள்களைச் `சத்து, அசத்து` எனப் பிரித்தலே இயலாது. ஆகவே, `சத்தாவது, என்றும் ஒருபடித்தாய் உள்ளது` என்பதும், அசத்தாவது நிலை மாறுதலை உடையது` என்பதுமே சித்தாந்தம். அசத்திற்கு நீரில் எழுத்தை* உவமையாகக் கூறுவர் மெய்கண்ட தேவர்.
``உண்டுபோல் இன்றாம் பண்பின்
உலகினை அசத்தும் என்பர்``l
என்பது அருணந்தி தேவர் கூறுவது. எனவே, `சத்து` என்பதற்கு `நிலை யுடைய பொருள்` என்பதும், `அசத்து` என்பதற்கு `நிலையில்லாப் பொருள்` என்பதுமே உண்மைப் பொருளாகும். ஆகவே உபநிடதம் `சத்து ஒன்றே` எனக் கூறியது,
`நிலைப்பொருள் ஒன்றே`
எனக் கூறியதன்றி, `பொருளே ஒன்றுதான்` எனக் கூறியதன்று,
``ஒன்று என்றது ஒன்றேகாண் ஒன்றே பதி``l
என்பதும் மெய்கண்ட தேவர் தரும் விளக்கம்.
``ஒன்றவன் றானே`` என்பது இந்நாயனார் இத்திருமுறையுள் முதற்கண் கூறிய திருமொழி.
`ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்``9
எனப் பின்னரும் கூறினார்.
திருவள்ளுவரும்,
``நில்லாத வற்றை நிலையின் என்றுணரும்
புல்லறி வாண்மை கடை``3
என்றாரேயன்றி ``இல்லாத வற்றை உள்ளன என்றுணரும் புல்லறி வாண்மை கடை`` எனக் கூறவில்லை.
முதல் வேதமாகிய இருக்கு வேத பாகமாகிய ஐதரேய உபநிடதத்தில் சொல்லப்பட்டது, ``பிரஜ்ஞானம் பிரஹ்மம்`` என்னும் மகாவாக்கியம். ``அறிவு பிரமம்` என்து இதன் பொருள்.
இரண்டாம் வேதமாகிய எசுர்வேத பாகமாகிய பிருதாரணிய உபநிடதத்தில் சொல்லப்பட்டது, ``அஹம்பிரஹ்மாஸ்மி`` என்னும் மகா வாக்கியம். `நான் பிரம்மமாய் இருக்கின்றேன்`` என்பது இதன் பொருள்.
மூன்றாவது வேதமாகிய சாமவேத பாகமாகிய சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்பட்டதே, `தத்துவஸி` என்னும், மகா வாக்கியம். அது நீயாகின்றாய்` என்பது இதன்பொருள்
இறுதி வேதமாகிய அதர்வண வேத பாகமாகிய மாண்டூக்கிய உபநிடதத்தில் சொல்லப்பட்டது. `அயமாத்மா பிரஹ்மம்`` என்னும் மகாவாக்கியம். `இந்த ஆன்மா பிரம்மம்` என்பது இதன் பொருள். இது ``சோயமஸ்தி`` என்பதாகவும் சொல்லப்படுகின்றது `அது இதுவாய் இருக்கின்றது` என்பது இதன் பொருள்.
இருக்கு வேத மகாவாக்கியம் (பிரஜ்ஞானம் பிரஹ்மம்) உண்மையைக் கூறுவதாய் உள்ளது. மற்றை மூன்று வேதங்களின் மகா வாக்கியங்களே சீவன் சிவனாவதற்குத் துணையாகின்றன. அஹம் பிரஹ் ாஸ்மி` யில் `அஹம், நான்` என்பதும் `தத்துவமசி` யில் `துவம், நீ என்பதும், அயமாத்மா பிரஹ்மத்` தில் `அயம் ஆத்மா இந்த ஆன்மா` என்பதும் ஒரு பொருளையே தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடங்களில் வைத்துக் கூறுகின்றன அவ்வாறே, `தத் அது` என்பதும் மற்றைய வாக்கியங்களில் கூறிய `பிரம்மம்` என்னும் அந்தப் பொருளையே குறிக்கின்றது. அங்ஙனமே `அஸி ஆகின்றாய்`, அஸ்மி ஆகின்றேன்,` `அஸ்தி இருக்கின்றது` என்பனவும் முன்னிலையும், தன்மையும் படர்க்கையும் ஆகிய இடவேறுபாடன்றி, பொருள் வேறு பாடு உடையன அல்ல. எனவே மூன்று வாக்கியங்களும் ஒரு கருத் -ததையே குறிப்பவை யாகின்றன. `ஆயின் மூன்று எதற்கு` என்றால், சீவனைச் சிவமாக்குதற் பொருட்டு ஆசிரியர் மாணவனது ஆன்மாவை, ``இந்த ஆன்மாப் பிரம்மம் (சிவம்)`` எனத் தம்முள்ளே சிவபாவனை செய்து சிவமாக்கிப் பின்பு மாணவனை நோக்கி, `நீ பிரம்மம்(சிவம்) ஆகின்றாய்` என உபதேசித்து, பின்பு அவனை, `நான் பிரம்மமாய் (சிவமாய்), இருக்கின்றேன் என்று இடையறாது பாவித்து வரச் செய்கின்றார். எனவே, அயமாத்மா பிரம்மம்` என்பது ஞானாசிரியர் ஞானதீக்கையில் செய்யும் பாவனா தீக்கை வாக்கியமும், `தத்துவமசி` என்பது அவர் வாசக தீக்கையில் செய்யும் உபதேச வாக்கியமும், அஹம் பிரம் மாஸ்மி` என்பது உபதேசம் பெற்ற மாணவன் நாள் தோறும் இடை யறாது பாவித்துப் பயிலும் பயிற்சி வாக்கியமும் ஆகின்றன. `பிரஜ் ஞானம் பிரம்மம்` என்பது, `சீவனுக்குச் சிவமாம் தன்மை உண்டு` என்பதை அறிவிக்கின்றது. அத்தன்மை யாவது, சார்ந்ததன் வண்ணமாம் தன்மையேயாம். இது பற்றியே தாயுமானவர்,
``யாதொன்றும் பாவிக்க நான் அது ஆதலால்
உன்னை `நான் என்று பாவிக்கின்
அத்துவித மார்க்கம் உறலாம்``8
என்றார். சீவன் முத்தியில் பாவனையாய் உள்ள இது, பரமுத்தியில் உண்மையாய் இருக்கும்.
மகாவாக்கியங்களின்படி, `சீவன் சிவமாகின்றது` என்றால் `ஒருபொருள் மற்றொரு பொருளாதல் எங்ஙனம்` என்னும் ஐயம் எழு கின்றது. அவ் ஐயத்தை நீக்கவே, `அத்துவிதம்` என உபநிடதம் கூறிற்று என்பதும், `எனவே, பலவகைச் சம்பந்தங்களில் `அத்துவிதம்` என்பது ஒரு வகைச் சம்பந்தம் என்பதுமே சித்தாந்தம். அத்துவித சம்பந்தமாவது, இரண்டு பொருள்கள் என்றும் பிரிப்பின்று ஒன்றாய்க் கலந்து நிற்கும் சம்பந்தம். இது தமிழில் ``இருமையில் ஒருமை`` எனப்படுகின்றது.
இனி, ஒருமையில் இருமையும் உண்டு. அது `தாதான் மிய சம்பந்தம்` எனப்படும். அஃதாவது, பொருள் ஒன்றேயாயினும் இரண்டாகக் கருதப்படும் தன்மை. அது, குணியும் குணமும், (பண்பியும், பண்பும்) அவயவியும் அவயமும், (முதலும், சினையும்) சத்திமானும் சத்தியும் (பொருளும் அதன் ஆற்றலும்) போல்வன வற்றில் உள்ளது. சிவம், சத்தி என்பவைகட்கு இடையே உள்ள சம்பந்தம் இத்தாதான்மிய சம்பந்தமே.
இனி, ``பிரம்மத்திற்கு வேறாக வேறு பொருள் உளதாகக் கூறினால், பிரம்மத்திற்குப் பூரணத்துவம் பெறப்படாது. `பிரம்மம் பூரணம்` என உபநிடதங்கள் கூறுதலால், பிரம்மத்தைத் தவிர வேறு பொருள் எதுவும் இல்லை என்பதுதான் வேத முடிவு`` என்பதும் ஒருமை வாதிகள் கூறும் கூற்று. `பூரணமாவது, வியாபகம் - நிறைவு. அது, கால எல்லை, இட எல்லை. பொருள் எல்லை ஆகிய எல்லை களில் எந்த எல்லையையும் உடைத்தாகாமையேயாம். அவற்றுள் பிரம்மத்திற்கு வேறாய் மற்றும் பொருள் இருப்பின், அப்பொருள் உள்ள இடத்தில் பிரம்மம் இருக்க இயலாது ஆகையால், பிரம்மம் அப்பொருளால் எல்லைப்படுத்தப்பட்டு விடும்; பூரணத்துவம் சிதையும்` என்பதும் அவர் கூறும் வழக்குரை. `கால எல்லை, இட எல்லை` `பொருள் எல்லை` என்பன வடமொழியில், `கால பரிச்சேதம், தேச பரிச்சேதம், வத்து பரிச்சேதம்` எனப்படும்.
அவர் கூறும் வகையில் நோக்கினால், `ஒரு பொருளுக்கு அதனின் வேறாய், மற்றொரு பொருள் இல்லாமை` என்பதுதான், `பூரணம் - வியாபகம்` என்பதன் பொருளாகின்றது. அவ்வாறிருப்பின் `பூரணம்` என்னும் சொல் எழவே காரணம் இல்லை. ஏனெனில் ஏக தேசத்தை நோக்கியே `பூரணம் - வியாபகம்` எனப்படுகின்றது. அவ்வாறு, `ஏகதேசமாய் உள்ள பொருள் இல்லை` என்றால், `பூரணம்` என வருணிக்க வேண்டியது ஏன்?
மேலும் பூரணமாவது, `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் இருத்தல் என்றே கூறப்படுகின்றது. அப்பொழுது `இருப்பது` எனப்படும் பொருளுக்கு வேறாய், `அங்கு, இங்கு, எங்கும்` என்னும் சொற்களால் அறியப்படுகின்ற பொருள்களும் உளவாதல் தானே பெறப்படுகின்றது. ஆகவே, `பூரணம்`, அல்லது `வியாபகம்` என்பது, தன்னை நோக்க ஏகதேசமாய் உள்ள எல்லாப் பொருள்களிலும் தான் பொருந்து நின்று அவற்றின்கண் சில விளைவுகளை உண்டாக்குவதே யாம். அவ்வாறன்றி `ஒரு பொருட்டு அதனின் வேறாய் ஒன்று, அல்லது பல இல்லாமையே வியாபகம்` என்றல் போலியேயாம்.
இவற்றால் மகாவாக்கியங்கள், பிறப்பிற்கு அஞ்சி வீடு பேற்றை விரும்பிச் சைவாசாரியரை அடைந்து முன்னர்ச் சமய தீக்கை பெற்றுச் சரியையில் நின்று, பின்பு விசேட தீக்கை பெற்றுக் கிரியையில் நின்று, பின் யோகத்தை அடைந்து அதில் சமாதி நிலையை உற்ற மாணாக்கன் பின்னும் பேரின்பம் விளையாமையால் ஞானாசாரியை அடைந்து அவர்பால் `அடைக்கலம்` எனப் புகுந்தமையால் அவர் அவனது பக்குவநிலையை நோக்கி, `நீ தியான சமாதிகளால் பாவிக்கும் பாவனைகள் எல்லாம் உனது கருவி கரணங்களின் துணை கொண்டேயாகும். அவற்றுக்குள் கருவி கரணங்களைக் கடந்த சிவம் எங்ஙனம் அகப்படும்?` எனச் சொல்லி நிருவாண தீக்கை அத்துவ சுத்தியால் அவனது சஞ்சித கன்மங்களைப் போக்கி, இனி நீ ஞானச் செய்திகளில் தலைப்பட்டுத் திருவருளைத் துணையாகக் கொண்டு, நின்மல சாக்கிரம் முதலிய மூன்று நிலைகளில் நின்று ஒவ்வொன் றையும் கடந்து நான்கு ஐந்தாம் நிலைகளாகிய துரியம், துரியா தீதங்களை அடைந்தால் உனது சீவத்தன்மை நீங்க, நீ சீவமாவாய்` என உபதேசிப்பார். (ஞானச் செய்திகள் - தச காரியம்). அவ் உப தேசத்தைக் கேட்டு, அதில் உறைந்து நின்று `சிவோகம் பாவனையால் அவன் சிவமேயாவன்` என்பது இம்மந்திரத்தால் கூறப்பட்டதாம். ஆகவே தெளிவுரையில் கூறியபடி மகாவாக்கியங்களில் `இது, நீ, நான்` என்னும் சொற்குப்பொருள் யோக சமாதியில் நிற்கும் மாணவ னாகிய சீவான்மாவும், `பிரம்மம், அது` என்னும் சொற்கட்குப் பொருள் சொரூப சுவமாகிய பரமான்மாவும், `ஆதல்` என்பதற்குப் பொருள். சீவன் நின்மலாவத்தையில் பாசத்தினின்றும் நீங்கிச் சிவத்தைத் தலைப்பட்டமையால் சார்ந்ததன் வண்ணமாம் தன்மையால் சிவமாகியே நிற்றலும் ஆகின்றன.
எனினும் முற்றொருமையாளர், ``மாயையின் முக்கூற்றினுள் சாத்துவிகக் கூற்றில் முற்றறிவு. முடிவில் ஆற்றல், முதலிய குணங்கள் உள்ளன. நிர்க்குணப்பிரம்மம் அந்த சாத்துவிகக் கூற்றில் பிரதிபலித்து அதில் உள்ள அந்தக் குணங்களை உடைய `ஈசுரன்` ஆகின்றது. மகா வாக்கியங்களில் `பிரம்மம், அது` என்னும் சொற்களுக்கு அந்த ஈசுரனே நேர்ப் பொருள். ஈசுரனாவான் மாயை, அதில் உண்டாகும் பிரதிபலனம். பிரதிபலனத்துக்கு மூலமாகிய பிரம்மம் ஆகிய மூன்றின் சேர்க்கையே``
``அவ்வாறே மாயையின் இராசதக் கூற்றில் பிரதிபலித்த பரப் பிரம்மத்தின் பிரதிபலனம் `சீவன்` ஆகி அதில் உள்ள சிற்றறிவு, சிறு தொழில் ஆற்றல் முதலிய குணங்களை உடையதாகின்றது. மகா வாக்கியங்களில் உள்ள `இது, நீ, நான்` என்பவற்றிற்கு அந்தச் சீவனே நேர்ப் பொருள். ஈசுரனைப் போலவே சீவனும் அவித்தை, அதில் உண்டாகும் பிரதிபலனம் அதற்கு மூலமாகிய பிரம்மம் இம்மூன்றினது சேர்க்கையே. ஆகவே, `ஆகின்றது, ஆகின்றாய், ஆகின்றேன்` என இரண்டையும் ஒன்றாகிக் கூறும் சொற்கள் சீவன், ஈசுரன் என்னும் இவர்கட்குப் பொருந்து மாறில்லை. ஏனெனில் மேற்காட்டிய இருவகைச் சேர்க்கைகளும் முற்றிலும் மாறானவை. ஆகையால் அவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகாது. எனினும் தூயதாய், ஒன்றாய் உள்ள பிரம்மத்தை அசுத்தமாய், இரண்டாய்த் தோன்றும்படி செய்தவை மாயையும் அவித்தையும் ஆகிய உபாதிகளேயாகையால் உபாதிகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால், இருவரும் நிர்க்குணப் பிரம்மங்களே.
ஆகவே, சீவனைக் குறிப்பனவாகவும், ஈசுரனைக் குறிப்பன வாகவும் சொல்லப்பட்ட மகாவாக்கிய பதங்களை மேற்கூறிய இலக்கணைகளில் பாகத்தியாக இலக்கணை` (விட்டும் விடாத இலக்கணை) முறையால் `சோயம் தேவதத்தன்` என்பதிற்போல, ஈசுரன், சீவன் இருவரிடத்தும் உள்ள உபாதிகளை மட்டும் நீக்கி, அறிவை மட்டும் கொண்டால், அறிவாவது பிரம்மம் ஒன்றே ஆகையால் `இது அது ஆகின்றது, நீ அது ஆகின்றாய், நான் அது ஆகின்றேன்` என்னும் மகாவாக்கியங்கள் உண்மையாகும்`` என்பர். ஆகுபெயரும் இலக்கணையாதல் முன்பு கூறப்பட்டது.
இனித் தொகை யொருமையாளர், ``மகாவாக்கியங்களில் பிரம்மத்தை உணர்த்தும் சொற்களை இலக்கணையாகக் கொள்ளல் வேண்டா; ஏனெனில், `நிர்க்குணப் பிரம்மம்` என்ற ஒன்று இல்லை பிரம்மம் சகுணமே. ஆயினும் சீவன், சிவன்` எனப்படுதல் அது தன்னை பிரம்மத்தின் விசேடணம்` (அடை என்று அறியாது பிரம்மத்தின் வேறாக எண்ணுதலினாலேயாம் அவ் எண்ணம் உள்ள வரையில் அது பிரம்மம் ஆமாறு இல்லை. மகாவாக்கியங்களில் சீவான்மாவைக் குறிக்கும் பெயர்கள் அறியாமையால் சீவனாய் நிற்கும் ஆன்மாவையே குறித்தலால் அறியாமையை மட்டும் இலக்கணை முறையால் நீக்கிச் சீவனை மட்டும் கொண்டால் சீவன் பிரம்மமே ஆகும். ஆகையால், அவ்வாறு கொண்டால், `அஸி` முதலிய ஆக்கப் பதங்கள் பொருந்துவன வாகும் என்பர். இது பற்றியே மாதவச் சிவஞான யோகிகள்,
``பண்டை மறைகளும் - அது நான் ஆனேன் - என்று
பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைக் காணே``9
என்னும் சிவஞான சித்தி உரையில்,
``சுத்தாத்துவித உண்மை
உணராதார், ஒரு பொருள் மற்றொரு பொருளாதல்
யாண்டுமின்மையின், ஒருவார்த்தை (மகா
வாக்கியம்) பொருள்படுமாறு யாங்ஙன
மென் றாசங்கித்தார்க்கு, - ஒன்று கெட்டு
ஒன்றாம் - எனப் பரிணாமங் கூறுவாரும்,
அது, நான் - என்னும் இருபெயரும்
விட்டும் விடாத ஆகுபெயர் எனக்
கொண்டு கேவலாத்துவிதங் கூறுவாரும்,
அவற்றுல் ஒன்றனை மாத்திரம்
ஆகுபெயர் எனக் கொண்டு விசிட்டாத்
துவிதங் கூறுவாருமாய் இடர்ப்படுவர்``
என உரைத்தார். சைவ சித்தாந்தம் முப்பொருட் கொள்கையதாய், பதிக்கும், பசுவிற்கும் என்றும் பிரிவின்மையாகிய சுத்தாத்து விதம் கூறுவது ஆதலின், அதற்கு இத்தகைய இடர்ப்பாடு இன்றி, மகாவாக்கியங்கட்கு எளிதில் நேரே பொருள் கொள்ள இயல்கின்றது அப்பொருளைச் சிவஞான சித்தியார் கீழ்க்காணுமாறு மிகத் தெளிவாக விளக்குகின்றது.
``கண்டஇவை நான் அல்லேன் என்றகன்று, காணாக்
கழிபரமும் நான்அல்லேன் எனக்கருதிக் கசிந்த
தொண்டினோடும் உளத்து அவன்றான் நின்ற கலப்பாலே
`சோகம்` எனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி;
விண்டகலும் மலங்கள் எலாம் கருடதியா னத்தால்
விடம்அகலும் அதுபோல்; விமலதையும் அடையும்;
பண்டை மறைகளும் - அது நான் ஆனேன் - என்று
பாவிக்கச் சொல்லுவதுஇப் பாவத்தைக் காணே``
இதில் உளத்து அவன்றான் நின்ற கலப்பாலே - சோகம் எனப் பாவிக்க`` என்றது, `சிவன் உயிரினிடத்து அத்துவிதமாய்க் கலந்து நிற்றலால் சிவோகம்பாவனை வெறும் பாவனை யாகாது, உண்மையைத் தலைப்படுதலே யாகின்றது` என்பதை உணர்த்தியவாறு.
சைவசித்தாந்தத்தின்படி, சீவன் சிவமாதலாவது, சார்ந்ததன் வண்ணமாம். இயல்புடைய படிக மணி நீல மணியைச் சார்ந்து நீல மணியாய் இருந்த நிலையினின்றும் நீங்க, மாணிக்க மணியைச் சார்ந்து மாணிக்க மணியாவது போல, சார்ந்ததன் வண்ணமாம், இயல்புடைய ஆன்மாப் பாசத்தோடு சேர்ந்து பாசமாய், அதனால், `பசு` எனப்பட்டிருந்த நிலையினின்று நீங்கி, சிவத்தை அடைந்து சிவமாகி நிற்றலேயாம் ஒரு பொருள் மற்றொரு பொருள் ஆதல் அன்று.
சைவ சித்தாந்தச் சுத்தாத்துவத்தின்படி எந்நிலையிலும் சீவன், கலப்பினால் சிவமாகியே யிருத்தலால், மகாவாக்கியங்கட்கு இடர்ப் பாட்டின்றி நேரே பொருள் கொள்ள இயல்கின்றது. எனவே, `தத்துவ மசி` என்னும் உபதேச வாக்கியத்தில் ஆசிரியர் மாணாக்கனுக்கு அவன் அறியாதிருக்கின்ற உண்மையை அறிவிப்பதும், `அஹம்பிரம் மாஸ்மி` என்னும் பயிற்சி வாக்கியம் ஆசிரியர் அறிவுறுத்தியபடியே மாணாக்கன் அவ்வுண்மையை அறிவதும் ஆகின்றன. அவ்வளவே யன்றிப் பொருளில் வேறுபாடில்லை.
இதனால், மகாவாக்கியங்களின் பரபக்கப் பொருள்களை மறுத்துச் சுபக்கமாகிய சித்தாந்தப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே.

பொழிப்புரை :

(சகலாவத்தையில் தொம்பதப்பொருளாய் நின்ற தத்துவ வன்ன ரூபியான ஆன்மாச்) சுத்தாவத்தையில் தத்துவம் அனைத் தினின்றும் நீங்கித் தூயதாய்த் தொம்பதப் பொருளாய் நிற்கும். தத்பதப் பொருளாகிய, எல்லாப் பொருட்கும் முடிவாய் உள்ள சொரூப சிவம் எப் பொழுதுமே பரதுரியத்தில் உள்ளது. அதனை அத்துரியத்தில் அடைந்த ஆன்மா அவ்வாறு குருவருளால் அசுத்தத்தின் நீங்கிச் சுத்தத்தை எய்தி, சிவமாய் நிற்கும் பேற்றினையளிக்கின்ற, `தொம் தத்தசி` என்னும் பதத்தின் பொருளே `தத்துவமசி` மகாவாக்கியத்தின் பொருளாகும்.

குறிப்புரை :

`சகலாவத்தையில் தத்துவ வன்னரூபியாயும், சுத்தா வத்தையில் தூயதாயும் நிற்கும் ஆன்மாச் சிவத்தின் வேறானதே யாதலால், அது சிவமாவது, `சோயம் தேவதத்தன்` என்பதிற் போல, உபாதியுடன் நின்ற சிவம் அவ்வுபாதியின் நீங்கி அதுவாதல் அன்று; நீல மணியைச் சார்ந்து நீல மணியாய் நின்ற படிகமணி, மாணிக்க மணியைச் சார்ந்து மாணிக்க மணியாய் நின்றது போல்வதேயாம்` என்றபடி.
`தத்துமசி` என்பது, `சோயம் தேவதத்தன்` என்பதுபோல என்பவர், உபாதியுட்படுவதும் அதனின்றும் நீங்குவதும் ஆகிய அதனையே `பிரம்மம்` என்கின்றமையால், `அவர் பசுவையே பதியாகக் கருதுகின்றனர்` என்பது பெறப்படும் ஆகவே, அவரது பிரம்ம ஞானம் பசு ஞானமேயாகின்றது, இதனைச் சிவஞான சித்தியார்,
``நணுகி ஆன்மா இவை கீழ் நாடலாலே,
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசு ஞானம்``9
எனக் கூறிற்று.
பதங்களின் பொருள்களைப் பதங்களாகவே உபசரித்துக் கூறினார். `சுத்தத்து` என்னும் அத்துச்சாரியை தொகுத்தலாயிற்று. ``தற்பதம்`` என்றதும் அதன் பொருளையே தற்பதம் பேறாகிய` என இயையும் பேறாதலாவது, பெறப்படும் பொருளாதல், ``ஆகிய`` என்னும் பெயரெச்சம், `அரசன் ஆகொடுத்த பார்ப்பான்` என்பது போல, ``சீவன்`` என்னும் கோடற் பொருட்பெயர் கொண்டது. `பிர சாதத்து நீங்கி` என மாறுக பிரசாதம், குருப் பிரசாதம் `பிரசாதத்தால்` என உருபு விரிக்க. நீங்குதல், பாசத்தினின்று. வீறு - மேன்மை. ``ஆன`` என்னும் பெயரெச்சம் ``தொந்தத்தசி`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது.
இதனால், `தத்துவமசி` மகாவாக்கியம் பாருள் படுமாறெல்லாம் இனிது விளக்கப்பட்டன.
[இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``ஆகிய அச்சோயம் தேவதத்தன்`` என்னும் மந்திரம், மேல்`` ``முச்சூனிய தொந்தத்தசி`` அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 3

துவம்தத்தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா அந்நு வயத்(து) ஏகம்ஆன
தவவுறு தத்வ மசிவேதாந் தத்துச்
சிவமாம் அதுவும்சித் தாந்தவே தாந்தமே.

பொழிப்புரை :

`துவம் தத் அஸி` என்பதே தொந்தத்தசி என்பது மேலே சொல்லப்பட்டது. அவை இரண்டுமே நீக்கப்படாது நிலை பெற்று நின்று, பொருள்கோள் முறையில் ஒன்றாய் இயைகின்ற இயை பினால் ஒன்றேயாகின்றன. இனி, வேதாந்தத்தில் பெரிதும் பயின்று வருகின்ற `தத்துவமசி` என்னும் மகாவாக்கியம் வேதாந்தம் சீவன் சிவமாதலையே குறிப்பது. ஆகிவே, அதனை, சித்தாந்த மகா வாக்கியம்` என்றும் சொல்லலாம், `இல்லை, வேதாந்த மகாவாக்கியந் தான்` என்றும் சொல்லலாம்.

குறிப்புரை :

`எப்படிச் சொல்லினும் பொருள் ஒன்றே` என்து கருத்து முதல் அடி அனுவாதம். மன்னா - மன்னி, அந்நுவயம் - பொருள் கோள் முறை. தவ உறுதல் - பயின்று வருதல் ``அதுவும்`` என்னும் உம்மை சிறப்பு. சித்தாந்த வேதாந்தம் உம்மைத்தொகை. சித்தாந்த மகாவாக்கியம், `சிவத்துவமசி` என்பது, திருவைந்தெழுத்தேயும் இப்பொருளைப் பயக்கும்.
இதனால், `மகாவாக்கியங்களில் சொல்வேற்றுமை பற்றி மலைதல் வேண்டா; அவையெல்லாம் பொருளால் ஒன்றே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்என்பர் ஆகார்இ தன்றென்னார்
உரிய பரம்பர மாம் ஒன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

பொழிப்புரை :

துரியத்தைக் கீழ்ப்படுத்தி நிற்கும். துரியாதீத நிலை, சுட்டுணர்வினால், உணரவும், சொல்லாற் சொல்லவும் வாராமையால் அந்நிலையை எய்தாதவர்க்கு அது வெறும் பாழ்போல்வதாகும். அதனால் அவர் அதில் விளங்கும் பொருளை, ஒருவராலும் அடைய இயலாத ஒரு தனிப் பொருள் என்று கூறுவர். அதனை வேறு சிலர், `அஃது இன்னது ஆம் - என்றும், இன்னது அன்று` என்றும் அநிர்வச னீயமாகக் கூறுவர் ஆயினும், `அந்தத் துரியாதீத நிலை அனுபவிக்கத் தக்க, மிக மேலான, ஒன்றேயான ஒப்பற்ற ஒரு பெரும் பொருள் விளங்குகின்ற நிலை` என்பதை அறிபவர் யார்!

குறிப்புரை :

அந்நிலையையடைந்து, அப்பொருளைத் தலைப்பட் டுணரும் ஒரு சிலரே அறிவார் என்பது கருத்து. பாழ்போல்வதாதலை, ``பாழ்`` என்றார். `ஆகார் அரிய பரம் என்பர்` என மாற்றிக் கூட்டுக. `அவர் கூறுவது உண்மையாயின் அப்பொருளால் யாருக்கு, என்ன பயன்! ஒன்றுமில்லையாகையால் அவர் கூற்றுப் பிழையானது என்பது `அங்கு விளங்கும் பொருள் அனுபவப்படுவதே` என்பதும் கருத்துக்கள். ``என்னார்`` என்பதை முன்னும் கூட்டி, `இது என்னார்; அன்று என்னார்` என்க. பரம் பரம் - மேலானதற்கும் மேலானது, உதித்தல் - விளங்குதல்.
இதனால், ``வேதாந்த மகாவாக்கியங்களின் அனுபவம், `அறிவான், அறிவு, அறியப்படும் பொருள்` என்பன இல்லாது, வெறும் அறிவு மாத்திரையானதே`` என்றல் பொருந்தாது. பெறுவான், பெறப்படும் பொருள் என்பன உள்ளதாய்ப் பேரின்பமாவதே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொம்பம் தத்பதம் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்தும்மேல் நாட ஏ
யும்பத மும்பத மாகும் `உயுர்பரம்
செம்பொறா ளான சிவம்`என லாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய, சீவ துரியம், சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்று துரியத்திலுமே தொம்பதப் பொருளாகிய ஆன்மா, தத்பதப் பொருளாகிய சிவத்தை, அசிபதத்தின் வழியாக, மேல் நோக்கு உணர்வினால் உணருமாயின், பரதுரியத்திற்போலவே ஏனை, இரு துரியங்களிலும் அது சிவமாகியே நிற்கும் (சீவனாகி நில்லாது` என்பதாம்.)

குறிப்புரை :

அங்ஙனம் நோக்கி நிற்றலே `சாக்கிரத்தில் அதீதம்` எனப்படும். இதனையே,
``... ... ... ... எல்லாம் ஈச
னிடத்திலும், ஈசன்எல்லா இடத்தினிலும் நின்ற
அந்நிலைமை அறிந்(து) அந்தக் கரணங்கள் அடக்கி
அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து,
மன்னுசிவன் றனையடைந்து நின்(று) அவன்ற னாலே
மருவு பசு கரணங்கள் சிவகரண மாகத்
துன்னியசாக் கிரமதனில் துரிய தீதம்
தோன்றமுயல்; சிவானுபவம் சுவானுபூ திகமாம்``
எனவும்,
``சாக்கிரந்தே அதீதத்தைப் புரிந்தவர்கள், உலகில்
சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள்; இவர்கள்
பாக்கியத்தைப் பகர்வதுஎன்! இம்மையிலே உயிரின்
பற்றறுத்துப் பரத்தைஅடை பராவுசிவர் அன்றோ!
``ஆக்கும்முடி கவித்(து) அரசாண்(டு) அவர்கள் அரிவையரோ(டு)
அனுபவித்தங்கு இருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர்``8
எனவும், சிவஞான சித்தி கூறிற்று.
``மும்மை தரும்வினைகள் மூளாவாம்; மூதுலகில்
அம்மையும் இம்மையே ஆம்``9
என்றதும் இந்நிலை நின்றாரை நோக்கியேயாம்
தொம்பதம் நாட` என இயையும் `தத்பத்தை அதிபதத்தால்` என உருபுகள் விரிக்க. `ஏயும் பதமும் பதமாகும்`` என்றது, `எந்நிலையில் நின்றாலும் அது பரதுரியநிலையேயாம்` என்றபடி, `பரமும், செம்பொருளும் ஆன சிவன்` என்க.
இதனால், `மகாவாக்கியங்களில் ஊன்றி நிற்கின் எந்நிலை யிலும் சிவ நிலை கூடும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வைத்த துரிய மதில்சொரூ பானந்தத்(து)
உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயந்து விட்டிடும் மெய்யுணர்
வைத்த படியே அடைந்துநின் றானே.

பொழிப்புரை :

`தத்துவமசி` என்னும் உபதேசத்தையேயன்றிப் பிரணவ உபதேசத்தை ஒருவன் தனது நிலையான உள்ளத்தில் அழுத்தி வைப்பினும் அதனால் விளையும் மெய்யுணர்வினால் அவன் தன்னை ஆசிரியர் ஆக்கி வைத்த சிவநிலையை இழக்காது அடைந்து நிற்பவனாவான்.

குறிப்புரை :

`பிரணவம் மகாவாக்கியப் பயனைத் தரும்` என்றபடி. அது, மேல், ``வில்லின் விசை நாணில்``9என்னும் மந்திரத்தில் கூறப்பட்டது. பிரணவ கலைகளாகிய `அ, உ, ம்` என்பன முறையே தத், த்வம், அசி பதங்களாய் நிற்கும் என்க. பிரணவம் இவ்வாறு நின்று உயிரைச் சிவமாகச் செய்தலால், ``எல்லாப் பிராணிகளையும் பரமான்மாவினிடம் வணங்கச் செய்வது பிரணவம்``8 என, `பிரணவம்` என்னும் சொற்கு உறுப்புப் பொருள் கூறுவர்.
துரியம், முத்துரியம். `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதி பன்மை யொருமை மயக்கமாய் வந்தது. சொரூபானந்தம் - சிவானந்தம். உய்த்த பிரணவம் - முத்துரியத்திலும் முன்பு பலரைச் சொரூபானந்தத்தில் செலுத்திய பிரணவம். ``இதயம்`` என்றது ஆன்ம உணர்வை. `தெளிந்த உணர்வு` என்றற்கு, ``மெய்த்த இதயம்`` என்றார். விட்டிடல், மேல் ஏழாது அழுத்தி வைத்தல். ``விட்டிடும்`` என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டாய், ``மெய்யுணர்வு`` என்னும் காரியப் பெயர் கொண்டது. வைத்தலுக்கு எழுவாய் வருவிக்க. தெளிவு பற்றி எதிர்காலம் ``நின்றான்`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன்னையதிகாரத்தில் சொல்லப்பட்ட பிரணவத் -தின் இயல்பு இவ்வதிகாரத்தால் இகந்துபடாமைக் காக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நனவாதி ஐந்தையும் நாதாதி வைத்துப்
பினமாம் மலத்தினைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவாச கங்கெட்ட மன்னனை நாடே.

பொழிப்புரை :

`அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்` என்னும் பிரணவ கலைகள் ஐந்தையும் முறையே யோகாவத்தையில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகளாகிய `பிரணாயமம், பிரத்தியாகாரம், தாரணை: தியானம், சமாதி` என்னும் ஐந்திலும் பொருந்த வைத்துப் பயின்றால், உன்னின் வேறாகாது உடனாய் ஒன்றி நின்ற ஆணவ மல சத்தி உன்னின் வோறாய்ப் பிரியும். அங்ஙனம் அது பிரியுமிடத்து நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்திலும் மேற்சொல்லியவாறே அகாரம் முதலிய கலைகளை வைத்துப் பாவிக்க, ஆணவ சத்தி உன்னை மறைக்க மாட்டாது. கீழ்ப் பட்டு அடங்கும். அஃது அடங்கவே, ஆன்ம சுத்தி உண்டாகி, அதன் பின் ஆன்ம லாபமும் கிடைக்கும். இவ்வாறு சத்தாதி ஐம்புலன் களையும் உணரும் ஐம்பொறிகளையும், அவற்றின் வழி ஓடுகின்ற மனத்தையும், அதற்குமேல் வாக்கையும் கடந்த தலைவனாகிய சிவனை நீ உணர்வாயாக.

குறிப்புரை :

``நாதாதி`` என்றது, எதிர் நிரல் நிறையாகக் கூறியது. ``வைத்து`` என்பதன்பின், `பாவிக்க` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `பின்னமாம்`` என்பது இடைக்குறைந்து நின்றது. பின்ன மாதல், வேறாதல். `பின்னமாம் மலத்தை` என்ற அனுவாதத்தால் பின்னமாதல் பெறப்பட்டது. ``பின்`` என்றது முற்படாது அடங்கு -தலை. `பின்னாக வைத்து` என்க. `பின் சுத்தத்து ஆம்` என்றதனால், பின் சுத்தநிலை வாய்த்தல் பெறப்பட்டது. `சிவகதி தனது ஆம்` என மாறுக. சத்தாதி` ஆகுபெயர். சாந்தி - அடங்குதல். ``கெட்ட`` என்றது, `கடந்த` என்றபடி. `சாந்தியை உடைய, கெட்ட மன்னன்` என்க.
இதனால், பிரணவம் மேற்கூறியவாறு சொரூபானந்தத்தில் உய்க்குமாறு இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பூரணி யாவது புறம்பொன் றிலாமையால்
பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால்
ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் ``மன்னன்`` என ஆண்பாலாகச் சொல்லப்பட்ட சிவம்) தனக்குப் புறம்பாகயாதொரு பொருளும் இல்லாதபடி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றல் பற்றி, `பூரணத்துவம் உடையது` என்று சொல்ல படுகின்றது. (அஃதன்றி, `அது தவிர வேறு பொருள் இல்லை` என்னும் கருத்தில் `அது பூரணத்துவம் உடையது` என்று சொல்லப்படவில்லை.)
``அகிலாண்ட கோடி யெல்லாம்
தன் அருள் வெளிக்குளே தங்கும்படிக்கு இச்சை வைத்து``
என்னும் தாயுமானவர் பாடல் இங்கு நோக்கத் தக்கது.
வாக்கைக் கடந்து நிற்றலால் அஃது எந்த ஒரு பெயராலும் திட்டமாகச் சொல்ல ஒண்ணாதது. குணங்குறி ஒன்றும் இன்மையால் உயிர்களால் அனுமித்து உணரப்படாதது. ஆயினும் பிற காரணங்களால் காட்டப்படாது, தன்னாலே தான் காட்டப் படுவதாம்.

குறிப்புரை :

``ஊரிலான் குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும்
பேரிலான், ஒரு முன்னிலான், பின்னிலான், பிறிதோர்
சாரிலான், வரல், போக்கிலான், மேலிலான் தனக்கு
நேரிலான் உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்``9
என்னும் கந்த புராணச் செய்யுளையும்,
``ஒன்றும் குறியே குறிஆத லால், அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால் - ஒனறோடு
உவமிக்க லாவதுவும் தானில்லை``8
``காண்பாரார் கண்ணுதலாய், காட்டாக் காலே``3
என்னும் சாத்திர தோத்திரங்களையும் காண்க. ஓர் - ஓர்தல்; முதனிலைத் தொழிற்பெயர். தன்னாலே தான் காட்டப்படுதலாவது, ஞாயிற்றைக் காணலுறுவார்க்கு அது பிறிதோர் ஒளியால் காட்டப்படாது, அது தனது ஒளியாலே தான் காட்டப்படுதல்போல, அதனது அருளாலே அது காட்டப்படுதலாம். பூரணி - பூரணத்துவம் உடையது. உபநிடதம் முதற் பொருளைப் `பூர்ணம், பூர்ணம்` எனப் பலமுறை கூறும்.
இதனால், `சீவன் சிவனாவது அவனது அருளாலே யன்றித் தன்னாலன்று` என்பது கூறப்பட்டது. இது பற்றியே `அஸி` பதப் பொருள் திருவருள் ஆகின்றது.
``அவன் இவன் ஆனது அவன் அருளா லல்லது
இவன் அவன் ஆகான் என் றுந்தீபற;
என்றும் இவனே என் றுந்தீபற``l
என்பதனால், சீவன் சிவன் ஆம் முறைமையைத் தேர்ந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 9

`நீஅது ஆனாய்` எனநின்ற பேரூரை
ஆய்`அது ஆனேன்` என்னச் சமைந்(து) அறச்
சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரரு
ளாய்அது வாய்அனந் தானந்தி யாமே.

பொழிப்புரை :

`நீ அது ஆகிறாய்` என்னும் பொருளதாய் ஆசிரியர் மாணவனுக்கு உபதேசிக்கின்ற `தொம்தத்தசி` (தத்துவமசி) என்னும் அந்த மகாவாக்கியமே, மாணாக்கன் பயில்கையில், `நான் அது ஆனேன்` என்னும் பொருளதாகிய `அஹம்பிஹ்மாஸ்மி` என்னும் மகாவாக்கிய -மாய் நின்று, சிவனை அதன் பாசங்கள் முற்றும் அற்றொழியப் பண்ணி, வாக்கு மனங்கட்கு அப்பாற்பட்ட சிவமாகச் செய்யும். அங்ஙனம் பயில்கின்ற சீவன் முதலில் சிவனது அருளே தானாய்ப் பின்பு சிவனேயாய், அவனது முடிவில்லாத ஆனந்தத்தை அனுபவிப்பதாகும்.

குறிப்புரை :

பேருரை - மகாவாக்கியம். ஆய் அது - ஆசிரியரது உபதேசப் பொருளை வேதாகமங்களின் வழியால் சிந்தித்துத் தெளியப்படுகின்ற சிவம். ``அனந்தானந்தி`` என்பது வடமொழித் தீர்க்க சந்தி முத்தியில் ஆன்மாச் சிவத்தோடு சேர்ந்து சிவமாய் விடுமேயல்லது, அதன்பின் அது சிவனது ஆனந்தத்தை அனுபவிக்கும் பொருளாய் இராது`` எனச் சுத்த சைவர் கூறுவர், அதனை மறுத்ததற்கு `ஆனந்தமாம்` என்னாது, ஆனந்தியாமே`` என்றார்.
இதனால், `மகாவாக்கியங்கள் `படர்க்கை, முன்னிலை, தன்மை` என்னும் இட வேறுபாட்டால் வேறு வேறு போலத் தோன்றுகின்றனவே யன்றிப் பொருளால் வேறல்ல` என்பது உணர்த்தி, அதனால், உப தேசத்தால் பெற்ற வாக்கியப் பொருளைப் பயிற்சியில் வைத்துப் பயிலும் சீவன் சிவன் ஆம் முறைமையும் அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

உயிர்பரம் ஆக உயர்பர சீவன்
அரிய பரம்ஆக அச்சிவம் வேதத்
திரயிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓம்மயம் ஆமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறிய முறையால் சீவன் சிவமான பொழுது, அது `சீவான்மா` எனப்படாது, பரமான்மா` என்றே சொல்லப்படும். (இவ்வாறு சருவஞ்ஞானோத் தரத்தில் சொல்லப் பட்டது. என்பதைச் சிவஞான போத ஆறாம் சூத்திர மாபாடியத்தில் காண்க.) அங்ஙனம் சொல்லப்படுமாறு சீவன் சிவமேயாய் விட்ட பொழுது, அவ்வாறான அந்த ஆக்கச் சிவம், மூனறு வேதங்களிலும் பராபரம்` எனப் புகழ்தற்கு உரியது. சொல் இறந்ததும், பிரணவமே வடிவானதும் ஆன அந்தச் சிவமேயன்றி, வேறன்றாம்.

குறிப்புரை :

பர சீவன் - பரமான்மா. `பர சீவனாய்` என ஆக்கம் வருவிக்க. `அரிய சிவம் ஆக ஆம்` என இயைத்து முடிக்க. `ஆக` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டு. ஆக்கச்சிவத்தைக் குறிக்க, `அச்சிவம்` எனச் சுட்டினார். பின்னர்க் கூறியன எல்லாம் இயற்கைச் சிவத்தைக் குறித்து, `திரயத்திலும்` இடைக்குறைந்து நின்றது. திரயம் - மூன்று `இறுதி, வேதமாகிய அதர்வணம் ஏனை மூன்று வேதங் களுள் அடங்கும்` என்னும் கருத்தால், ``வேதம் த்ரயீ`` எனக் கூறும் வழக்கு உண்டு ஆதலின், ``வேதத்திரயத்தில்`` என்றார். ``என்ன`` என்பது, ``உரிய`` என்பதனோடு முடிந்தது. ``உரிய, உரையற்ற`` என்பன ``ஓம் மயம்`` என்பதனோடு முடிந்தன, ``மயம்`` என்றது, மயமான பொருளை. `சிவம் ஓங்காரமே` என்றல் வேத வழக்கு. ``ஓம்மயம் ஆமே`` எனறது உடம்போடு புணர்ந்தது. ஆகவே `ஓம்மயம் ஆனதும் ஆகும்` என முன்னர்க் கூறியவற்றோடு கூட்டி யுரைத்தல் கருத்தாயிற்று. `ஓம்மயமே ஆம்` எனப் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி உரைக்க. இவ்வாறு வலியுறுத்திக் கூறியது, `முத்தியில் சீவான்மாவிற்கும், பரமான் -மாவிற்கும் இடையே தூலமூம், சூக்குமமும் ஆகிய வேறு பாடன்றிப் பிறிது வேற்றுமை யில்லை` என்பது உணர்த்துதற்கு, `சிவம், சூக்குமம்` என்பது உணர்த்துதற்கு அது, `பரம்` எனப் பட்டது. இம்மந்திரம் இரு விகற்ப எதுகையதாய் நின்றது.
இதனால், மகாவாக்கியங்களில் அனுபவ வாக்கியத்தால் உளதாகும் பயனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்``
தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள்
சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.

பொழிப்புரை :

மேல் வாயின்கண் உள்ள, நாசிக்குச் செல்லும் வழியிடம், (என்பது நாக்கின் அடிக்கு மேல் உள்ள இடம். இஃது `அண்ணம்` எனப்படும்.) புருவ நடு, நடு நெற்றி, உச்சித் தலை என்னும் நான்கும் சுழுமுனை வழியாகச் செல்லும் பிராணன் செல்லும் வழிகளில் சிறப்பானவையாகும். அவற்றிலும் புருவ நடுவும், உச்சியும் சிறப்பிற் சிறப்பானவை. சுழுமுனை நாடிக்கும் முலதாய் உள்ள மூலா தாரத்தில் உறங்கிக் கிடக்கின்ற, நால்வகை வாக்கிற்கும் முதலாகிய குண்டலி சத்தி எழுந்தோங்கிப் பிராணனுடன் மேற்சொல்லிய இரண் -டிடங்களை அடைந்து, அவற்றிற்கு அப்பால் உள்ள பொருளைக் காணும் ஒளியாக அமையுமாயின் அப்பொழுது, `கலை, காலம், நியதி, வித்தை, அராகம்` என்னும் ஐந்து தத்துவங்களும் சிவகதியை அடை வதற்குத் துணையாகிவிடும்.

குறிப்புரை :

என்றது, `பசு கரணங்கள் பதி கரணங்களாகப் புருடன் சிவமாவான்` என்றடி. `நாசி இரண்டனுள் முன்னது நாசிக்குச் செல்லும் வழியையும், பின்னது நாசியின் அடிப்பாகத்தையும் உணர்த்தின. பிராசாத யோகத்தில், அகார உகார மகார விந்து நாத கலைகள் முறையே, `மூலாதாரம் முதல் இருதயம் வரையிலும், அப்பால் கண்டம் வரையிலும், அப்பால் அடி அண்ணம் வரையிலும், அப்பால் புருவ நடு வரையிலும், அப்பால் எவ்விடத்திலும் பரவி நிற்கும்` எனப் பிராசாத நூல்கள் கூறும். ஆகவே, `அகார உகார மகார கலைகளைக் கடந்த விந்து நாதங்களும் ஒருவனுக்கு இனிது விளங்குமாயின், அவன் துவாதசாந்தத்தில் விளங்கும் சிவனைத் தரிசித்துச் சிவம் ஆவான்` என்றற்கு இவ்வாறு கூறினார்.
தாய்நாடி - நடு நாடி; சுழுமுனை, `அதன் ஆதி` எனவும் `வாக்குகளின் ஆதி` எனவும் கொண்டு பொருள் உரைக்க. சேய் நாடு ஒளி - தொலைவில் காணத் தக்க ஒளி. தொலைவு, துவாதசாந்தம். `ஆக` என்பது கடைக் குறைந்து நின்று, ``சிவகதி`` என்பதன் பின் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடு முடிந்தது. `ஒளியென` என்பதே பாடமாயினும் `ஒளி என்று ஆக` என்பதே பொருளாம். ``கலாதிகள்`` என்பதை ஈற் றடியில் கூட்டி, `கலாதிகள் ஐந்தும் சிவகதி ஆம்` என இயைத்து முடிக்க.
இதனால், `முன் மந்திரத்தில் கூறியவாறு சீவன் சிவன் ஆவதற்குப் பிராசாத யோகம் உறுதுணை யாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அறிவறி யாமை இரண்டும் அகற்றிச்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாத பிரான்` என்று பேணார்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

பொழிப்புரை :

கருவி கரணங்களால் வரும் அறிவைக் கொண்டு புறப் பொருள்களை அறிந்து வருகின்ற சிற்றறிவையும், கருவிகள் முடங்கியவழி ஆணவ மலத்தால் உண்டாகின்ற அறியாமையும் ஆகிய இரண்டையும், எங்கும் நிறைந்துள்ள சிவனது பேரறிவால் நீங்கும்படி நீக்கி, அந்த அறிவினாலே சிவனை, `அவனே உயிர்களில் என்றும் நீக்க மின்றி நிறைந்திருக்கின்ற முதல்வன்` என உணர்ந்து அவனையே பற்றி நிற்கும் முறையை அறியாதவர்கள் (தாம் மெய்ப்பொருளை அறிந்து பற்றிவிட்டதாகக் கருதிக்கொள்ளினும்) அது மாட்டாதவரே ஆவர்.

குறிப்புரை :

மேற்சொல்லப்பட்ட சீவ துரியம் பிராசாத யோகம், சிவ துரியம் ஆகியனவே மெய்ப்பொருளை அடையும் நெறியாகலானும், அவை சைவ சித்தாந்தத்தில் மட்டும் சொல்லப்படுதலாலும் ஏனைச் சமயத்தார் அவற்றை அறிந்து அவற்றின் வழி மெய்ப்பொருளை அடையமாட்டார்` என்றபடி. சிவஞான சித்தியும் இவ்வாறு,
``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்(து) ஆனந்தம் பொழிந்து, வரும் பிறப்பை அறுத்து, முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும், உலகரெல்லாம் மூர்க்கராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி``
-சுபக்கம் - சூ. 8. 16.
என இரங்கிக் கூறுமாறு காண்க.
``செறி அறிவாய் எங்கும் நின்ற சிவன்`` என்றது உடம்பொடு புணர்த்தது ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப் பட்டது. குறி - குறிக்கோள்; என்றது கொள்ளத்தக்க பொருளை. `கொள்ள` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `கொள்ளவும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. ஏகாரம், தேற்றம்.
இதனால், பிற சமயத்தார்தம் நிலைநோக்கி இரங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே.

பொழிப்புரை :

பொருள்களைத் தாமாக அறிபவர் யாவரும் அறியும் பொருள்கள் காட்சிப் பொருள்களே. அவையேயன்றிக் கருத்துப் பொருள்களும் உள ஆதலால், அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிகின்றிலம்.

குறிப்புரை :

`மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனையின்றி உண்டாகாது` என்றபடி. ``அறிவார்`` என்றது, தாமாகவே அறிபவ -ராகத் தம்மைக் கொள்பவரை, அவரது மதம் பற்றிக் கூறியது. இவர் `ஆசிரியன் வேண்டா` என இகழ்பவர். இரண்டாம் அடியில் `அப் பூவும்` என்பது, `அப்பும் எனத் திரிபெய்திநின்றது. அன்றேல், கூறியது கூறிற்றாம். ``வானிற் கலப்பு வைத்தோன்``3 என்றாற் போலும் திரு மொழிகளை அவர் கொள்ளமை பற்றி, எங்கும் சென்று கலப்பதாகிய காற்றையே இங்குக் ``கலப்பு`` என்றார். எனவே, `காணாதான் - கண்டானாம் தான் கண்டவாறு``9 என்னும் பொதுமறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளார் உடன்படுவனவாகிய நான்கு பூதங்களையே இங்குச் செய்யுட்கு ஏற்பச் சொற்சுருங்கி வர, ஏற்ற பெற்றியால் கூறினார் என்க. ``காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` என்பவரை, `உலகாயதர்` என்றும், `சாருவாகர்` என்றும் `பூத வாதிகள்` என்றும் கூறுவர். ``அறிவான்`` இரண்டில் முன்னது, `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் பயந்தன. தொடர் வேறாகலின் பின்னதில் பன்மை யொருமை மயக்கம் இன்மை அறிக. இனிப் பின்னரும், `அறிவார்` என்றே பாடம் ஓதலும் ஆம். ``அறிவான்`` என்பதை ஆன் உருபு ஏற்ற பெயராக உரைத்தல் பொருந்தாமையறிக.
இனிக் காட்சிப் பொருள்களையும் முதற்கண் முதியோர் அறிவிக்கவே அறிதல் அனுபவம் ஆதலின், `மெய்ப் பொருளை யாமே அறிவோம்` என்றல் பொருந்தாமை உணரப்படும். `சித்தாந்த நெறி ஆசிரியன் அருளை வேண்டு நிற்பதே` என்பதை நாயனார், மேலெல்லாம் பலவிடத்தும்* கூறினார், மேலும் கூறுவார்.
``எமக்கென் எவனுக்கு எவைதெரியும், அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்``
``ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும், நற்கல்அனல்
பானு ஒழியப் படின்``9
என்றாற்போலச் சாத்திரங்களும் குருவருளை வலியுறுத்தி ஓதுதல் காண்க.
இதனால், மேற்கூறிய ஞான நெறி, ஆசிரியன் அருளையின்றி அமையாது` என்பது, `அது வேண்டா` என்பாரை நோக்கி வலியுறுத்தப்பட்டது.
(இதன்பின், ``அதீதத்துள் ளாகி அமர்ந்தவன் நந்தி`` என்னும் மந்திரம் மேல், `பரலட்சணம் என்னும் அதிகாரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 14

அடிதொழ முன்னின் றமரர்கள் அத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த எல்லாம்
கடிதெழக் காண்என்னும் கண்ணுத லானே.

பொழிப்புரை :

சிவபெருமானைத் தேவர்கள் அவன் திருமுன் நின்று அவனது திருவடிகளைத் தலை வணங்கிப் பணிய, அவனும் அவர்கட்கு முன்னின்று அவர்கள் வேண்டுவனவற்றை அளித் தருளுவன். இனி, உலகமெல்லாம் `ஞானி` என்று வணங்கும்படி நிற்கின்ற உனக்கு அவன், நீ முன்பு யோக பாவனையில் பாவனை யாகப் பாவித்தவைகளையெல்லாம் இப்பொழுது விரைவில் உண்மை -யாய் விளங்கக் கண்டு இன்புறுவாயாக` என்று அருள்புரிவான்.

குறிப்புரை :

`போகம், மோட்சம்` என்பவற்றில் வேண்டுவார் வேண்டுவதைத் தருபவன் சிவன், அவன்பால் நீ மோட்சத்தையே வேண்டுவாயாக என மாணாக்கனுக்கு அறிவுறுத்தவாறு. `அத்தனை` என்னும் இரண்டன் உருபு தொகுக்கப்பட்டது. `முடிதொழ` என்றது, முன்பு ``அடிதொழ`` எனப் பொதுவாகக் கூறியதைச் சிறப்பாக விளக்கிக் கூறியவாறு. ``ஈசன் கண்ணுதலான்`` என்பன சுட்டுப் பெயரளவாய் நின்றன. `படிதொழப் பாவித்த` என இயையும். `கடி தொழ` என்து பாடமன்று.
இதனால், `சிவன் மோட்சம் தருபவனல்லன்` எனவும் `மோட்சமே தருவான்; போகம் தாரான்` எனவும் கூறிப் பிணங்கு வோரையெல்லாம் மறுத்து `அனைத்தும் தருவான்` என்பதும், `ஆயினும் உயர்ந்தோர் அவன்பால் மோட்சத்தையே வேண்டி மேற் கூறிய நெறியில் நிற்பார்`` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.

பொழிப்புரை :

வேதங்களில், `பொன்னிறம் விளங்க நிற்பவன்` (இரணிய கருப்பன்) எனப் புகழப்படுகின்ற சிவன், இயல்பாகவே மலம் இல்லாத தூயோன் ஆதலின் பிறப்பில்லாதவனாய் அருளே திருமேனியாகக் கொண்டு, `இவன் என்னுடைய அடியவன்` என்று கருணைகூர்ந்து, என் உள்ளம் மகிழும்படி என் எதிர்வந்து இவனும் என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக` எனக் கருதுதல் செய்து, அவ்வாறே நீங்குதற்கரிய எனது மலத்தை நீக்கவல்லவனாயினான்.

குறிப்புரை :

`இதற்கு யான் அவனுக்கு அடிமை பூண்டிருந்ததே காரணம்` என்பது இசையெச்சமும், `எனவே, பிறரும் அவனுக்கு அடிமை பூண்பாராயின், அவன் அவ்வாறு வந்து அருள்புரிவன்` என்பது குறிப்பெச்சமும் ஆம். நின்மலன் ஆகுக எனக் கருதினான்` என்றது, ``அயமத்மா பிரஹ்மம்``, அல்லது ``சோய மஸ்தி`` என்னும் மகாவாக்கியத்தைப் பயன்படுத்தியதைக் குறித்ததாம். ஆகவே, ``வந்து`` என்றது குருவாகி எதிர் வந்தததைக் குறித்தாயிற்று. அதனால், ``என் உளம்`` என்பதன் பின் `மகிழ` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றதாம். மூன்றாம் அடியை முதலிற் கூட்டுக. அன்றி, `அஃதே பாடம்`` என்றலுமாம். மேனி, மேனியனைக் குறித்த ஆகுபெயர். நின்மல மேனியன் ஆதற்குக் காரணம் பிறப்பின்மையும், பிறப்பின்மைக்குக் காரணம் மலம் இன்மையுமாம். ``மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோரர் வடிவமாகும்``8 என்பது சிவஞான சித்தி. `பொன்வளர் மேனி என` என்று, `என` என்து வருவிக்க. `ஆக` என்னும் வியங்கோளின் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``வல்லான`` என்பது இறந்த கால வினைக் குறிப்புப் பெயர்.
இதனால், மகாவாக்கியம் பற்றித் தமது அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

துறந்துபுக் குள்ளொளி சோதியைக் கண்டு
பறந்தஎன் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாஎன்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.

பொழிப்புரை :

நான் இவ்வுலகில் `யான், எனது` என எனக்கு இருந்த பற்றை எனது புண்ணிய வசத்தால் துறந்து, வித்தியா குரு, கிரியா குரு இவர்களால் என் உள்ளே ஒளிந்து நிற்கும் ஒளியாகிய சிவனை ஓராற்றால் கண்டு, முன்பு அலையாய் அலைந்து கொண்டிருந்த எனது மனம் ஒருங்கி அவனிடத்தே அடங்கிக் கிடக்க, அதனால் அவனை மறவாதவனாகிய என்னை அவனும், இறத்தலும், பின்பு பிறத்தலும் ஆகிய இவைகளை அடையாதபடி செய்து, பின்னும் இவ்வுலகிலே இருக்க வைத்தான்.

குறிப்புரை :

`அதற்குக் காரணம் எனது பிராரத்தம்` என்பது குறிப் பெச்சம். இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். கிடந்து - கிடந்தாமையால், இறத்தல், தூல உடம்பு நீங்குதல், வீடு பெறுவார்க்குத் தூல உடம்போடே சூக்கும அதி சூக்கும உடம்புகளும் உடன் நீங்கும். அஃதன்றியும் தூல உடம்பும் வருத்தமின்றி நீங்குதலன்றி, நோயால் வருந்தி நீங்குவதன்றாம். `அந்நிலையே தமக்கு வாய்க்கும்படி செய்தருளினான்` என்பதையே `இறவாமல்` எனவும், சூக்கும அதிசூக்கும உடம்பு நீங்காதோர் மீண்டும் பிறிதொரு தூல உடம்பை எடுப்பர் ஆதலின், `அந்நிலை தமக்கு எய்தாதபடி செய்தருளினான்` என்பதையே ``பிறவாமல்`` எனவும் கூறினார். ``பிறவாமல்` என்பதன் பின், `செய்து` என ஒரு சொல் வருவிக்க. இஃது அறியாதார் உடம்பு நீங்குவனவற்றையெல்லாம் `இறப்பு` என ஒன்றாகவே கருதுவர். `சாவா வரம்` என்பதும் தூல உடம்பு மட்டும் தனித்து நீங்காத நிலையைப் பெறுதலேயாம். `ஞானிகள் பிராரத்தம் காரணமாக இவ்வுலகில் நின்றாராயினும் அவர்களது வாழ்வு உலகிற்கு உபகாரமாய் அமையும் என்பது தோன்ற ``ஈங்கு வைத்தான்`` என்றார்.
இதனால், மகாவாக்கிய அனுபூதிமான்கள் சீவன் முத்தராய் உலகிற்கு நலம் புரிபவராதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து)
ஐவாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே.

பொழிப்புரை :

`மெய், வாய், கண், மூக்கு, செவி` எனப் படுகின்ற ஐந்து புற அறிவுக் கருவிகளும், `மனம், புத்தி, சித்தம், அகங்காரம்` எனப்படுகின்ற நான்கு அக அறிவுக் கருவிகளும், பிறவும் கூடிய உடம்புகளும், அறிவின்றி விரிந்து பரந்துள்ள பல உலகங்களும், அவற்றைச் சார்ந்து எவ்விடத்தும் அறிவையும் இன்பத்துன்ப நுகர்ச்சிகளையும் பெற்று வருகினற அளவற்ற உயிர்களும் ஆகிய அனைத்தும் சிவன் ஆட்டவே ஆடுகின்றன. இதனை, ``ஆட்டு வித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே``* என்னும் திருமுறையும், ``அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது`` என்னும் முதுமொழியும் விளக்கி நிற்கின்றன. அதனால் சிவனது கை, வாய் முதலிய உறுப்புகளுள் யாதொன்றும் இல்லாத பெருநிறைவு எங்கும் உள்ளதாகிய அத்துவித உண்மை அருளாளரால் நன்குணரப்பட்டது.

குறிப்புரை :

சத்தினை உபநிடதம் `அத்துவிதம்` எனக் கூறியது, `அஃது அனைத்துப் பொருளிலும் உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன்போலப் பொருள் தன்மையால் வேறாயும், உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும் இயைந்து நிற்கும் இயைபினைக் குறித்தது` என்பதை சித்தாந்தம் ஆகலின், `அவ்வுண்மையை உணர்ந்தோரே மகாவாக்கியப் பொருளை அனுபவமாக உணர்வர்` என்றற்கு இங்ஙனம் வகுத்தோதி முடிக்கப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறும் அறிக. மெய்த் தோற்றம் - புறத்துக் காணப்படுதல். `ஐ வாயவும், அந்தக் கரணமும்` என அவற்றிலும் உம்மை விரிக்க. ``நிறை`` என்பதற்கு, `அவனது நிறை` என வருவித்துரைக்க. `எங்கு ஆம் மெய்` என்க. கண்டது - காணப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

பொழிப்புரை :

விரையத் தோன்றி மறைகின்ற சாயா புருடனைப் போலவும், சிறிது நின்று கெடுகின்ற நீர்க்குமிழி போலவும், சிறிது நீட்டித்துக்கெடுகின்ற, தீயிடைப்பட்ட கருப்பூரத்தைப்போலவும், அசுத்தத்தைப்பொழிகின்ற தூலவுடம்பும் ஒரு காலத்தில் சிவத்தில் ஒடுங்குவதேயாம்.

குறிப்புரை :

தத்துவ முறைப்படி தத்துவங்களில் தோன்றும் உடம்புகள் தோன்றிய தத்துவங்களிலே மீள ஒடுங்கத் தத்துவங்கள் மாயையில் ஒடுங்கும் ஆகலின், அவை மாயைக்கு வியாபகமான சிவத்தில் ஒடுங்குவதேயாம்` என்றபடி.
``இவ்வுடம்பு`` எனத் தூல உடம்பையே சுட்டினாராயினும், உபலக்கணத்தால் சூக்கும அதிசூக்கும உடம்புகளும் கொள்ளப்படும்.
சாயா புருடன், நின்மலமாகிய வானத்தை உற்று நோக்குங்கால் அதன்கண் உள்ள ஒளி மண்டலத்தின் ஒரு கூறு மனிதனைப் போலத் தோன்றும் வடிவம். இது மிக விரைவில் மறைதலால் விரையக் கெடும் உடம்பிற்கு உவமையாயிற்று.
சாயா - சாயை; நிழல். ஒளி மண்டலத்தின் ஒரு கூறே புருடன் வடிவற்றாய்த் தோனஅறுதலின், அஃது இல்லதன்று; உள்ளதே. அஃது ஒடுங்குதல் ஒளிமண்டலத்திலேயாம். காணின் - காணுதலைப் போல. `இன்` உவம உருபு. நீர்க்குமிழி நீரில் தோன்றி நீரில் ஒடுங்குதல் வெளிப் -படை. கருப்பூரம் - பச்சைக்கருப்பூரம். அது கூட்டுப் பொருளாகலின், அதன் கூறுகள் ஆற்றலாய் மாறி அவ்வப் பொருள் ஆற்றலில் ஒடுங்கும்.
இங்ஙனமாகவே, `உடம்புகளை இறைவன் ஓடுக்குதல் இல்லை` எனல் வேண்டா என்பது குறிப்பெச்சம். முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உம்மைகள் விரிக்க.
இதனால், உடம்புகள் ஒடுங்குமாறு உவம அளவையால் நிறுவப்பட்டது. `தோற்றம், ஒடுக்கம்` என்பவற்றில் இங்கு வேண்டுவது ஒடுக்கமேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின்
படரும் சிவசத்தி தானே பரமாம்
உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

பொழிப்புரை :

உடம்பும், உயிரும் நீக்கமற ஒன்றியிருக்கும் பொழுது, உலகத்தை நோக்கிச் செல்லும் சிவ சக்தியே உயிருக்குத் தலைமையாய் நின்று நடத்தும். உடலை அறவே விட்டொழித்தவழி, உயிர் சிவனைப் போலப் போலவே எங்கும் இருப்பதாய், முடிவும், முதலுமாகிய எல்லைகளில் எதுவும் இன்றி வியாபகமாய்ச் சிவனது வியாபகத்தில் அடங்கிவிடும்.

குறிப்புரை :

ஆகவே, `சிவன் உயிரை உண்கின்றான்` என்றல் பொருந்துமாறு அறிக என்பதாம். திருவாசகத்தில் `உயிருண்ணிப் பத்து` என ஒரு பகுதியிருப்பதும், ``யானாகிய என்னை விழுங்கி வெறுந் - தானாய் நிலை நின்றது தற்பரமே``9 என்றதும் இங்கு நினைவு கூரத்தக்கன. `விட்டவழி` என்பது, ``விட்டு`` எனத் திரிந்து நின்றது.
`பெத்த காலத்தில் திரோதான சத்தி வழிப்பட்டு ஏதேசியாய்ப் போக்கு வரவு புரிகின்ற உயிர் முத்தி காலத்தில் ஏகதேசத் தன்மை நீங்கி வியாபகமாய்ச் சிவத்தில் அடங்கும்` என்பது இம்மந்திரத்தின் கருத்து. ``உடல்`` என்ற பொதுமையால் மூவகை உடம்பும் கொள்க.
இதனால், `உயிர் ஒடுங்குதல் இல்லை எனல் வேண்டா` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.

பொழிப்புரை :

செவி முதலிய ஐந்து ஞானேந்திரியங்கள், மனம் முதலிய நான்கு அந்தக் கரணங்கள், பிரகிருதி ஆகப் பத்தினையும் பற்றி நின்று செலுத்துகின்ற உயிர்கள் அவற்றைப் பலதலைப் பட்டு விரிந்து செல்லவிடாது சிவம் ஒன்றையே நோக்கிக் குவிந்து செல்லுமாறு செலுத்துதல் வேண்டும். அங்ஙனம் செலுத்தாமையால் அவை பல வழியாக விரிந்து செல்லத் தாமும் அவ்வாறே முதற்கண் உலகில் விரிந்து செல்கின்றன. ஆயினும் அவை முன் சொல்லிய வற்றுள் குவிந்த பொழுது, சராசரங்களாகிய அனைத்து உடம்புகளும் உயிர்களும் சிவத்தில் ஒடுங்கிச் சிறிதும் நீங்காதனவாய் இருக்கும்.

குறிப்புரை :

அவி இன்றிய - அடங்குதல் இல்லாத. ``ஐந்தும்`` என்ற குறிப்பால் பிரகிருதி தழுவப்பட்டது. `முன்பு விரிந்து, பின்பு குவிந்த வழி` என்க. `சாராசதரந்தாமே தவிர்வொன்றிலாதவாம்` என்க. சரம் - இயங்கு திணை. அசரம் - நிலைத்திணை. `தாம், ஏ` அசைகள்.
இதனால் உலகத்தின் விருவும், ஒடுக்கமும் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும்
உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும்
வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

பொழிப்புரை :

சிவன் வியாபகன்; மாற்றம் இல்லாதவன் எவ்விடத்திலும், எப்பொருளிலும் நிறைந்து அதனால், தனது ஆற்றலால் சுத்தமும், அசுத்தமும் ஆய இரு மாயா காரியங்களிலும் தனது ஆற்றலால் தங்கி அவற்றைத் தன்னுள் ஒடுக்கவும் செய்வான். பின்பு விரிக்கவும் செய்வான். நான் மேல்நிலை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந் திருத்தற்குக் காரணம் இந்த உண்மையை இவ்வாறு உணர்ந்ததே.

குறிப்புரை :

`அதனால் நீவிரும், இதனை, இவ்வாறே உணர்மின்; மேல்நிலையை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந்திருப்பீர்` என்பது குறிப்பெச்சம்.
``எங்கும் ஆரப் பரந்து உற்று நிற்கும்`` என்றது, `வியாபகன்` என்றபடி. பின்னர் வந்த ``எங்கும்`` என்பது, `எப்பொருளிலும்` என்றதாம். உரன் - ஆற்றல். `உரனால்` என உருபு விரிக்க. வரன் வரம்; மேன்மை. `யான் வரனில் வாழ்ந்துற்றவாறு இங்ஙன் கண்டு` என முடிக்க. `உமிழும்` என்பது இடைக்கண் வேண்டாவழிக் குகரச் சாரியையும்` சந்தியும் பெற்று, `உமிழ்க்கும்` என வந்தது.
இதனால், `மெய்யுணர்வோர், உலகத்தை இறைவன் ஒடுக்கியும், தோற்றுவித்தும் நிற்கின்றான் என உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அளந்த துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக்
கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.

பொழிப்புரை :

உயிரினது அறிவின் நிலைமையை அளந்து, அஃது நின்மல துரியத்தை அடைந்தவாற்றினைத் தெரிந்து, அதன்கண் உயிரினது அறிவினை வாங்கித் தன் அறிவினுள் அடக்கிக் கொண்ட நின்மல சிவம். அந்நிலையில் உயிரினது உடம்பும், உலகமும் இருப் பினும் அவையில்லாதது போலத் தனது அருளினுள் அடக்குமாற்றால், உயிரினது, `யான், எனது` என்னும் பற்றை அறுத்துத் துரியத்திற்கு மேற் பட்ட பரசிவமாய்ப் பொருந்தக் கிடைத்தால், ஆன்மா அந்தப் பரசிவ -மாகிய பராகாயத்தில் அடங்கிவிடும் பேற்றினையும் பெற்றுவிடும்.

குறிப்புரை :

``உளம்`` என்று அறிவினை. ``அஃது`` என்றதும் அதன்மேல் உள்ள பற்றினையே. வெளியன் ஆதற்கு வருவிக்கப் பட்டது. உம்மை சிறப்பும்மை.
இதனால், சிவன், உணர்வொடுக்கம் செய்யுமாற்றால் உயிர் ஒடுக்கம் செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.

பொழிப்புரை :

உலையிற்பட்ட இரும்பு தன்மேல் வீழ்ந்த நீரை மீள வெளிப்படாதபடி தன்னுள் ஒடுக்கிக் கொள்வது போல, மேலானதற்கும் மேலான பொருளாகிய சிவன், யான் அஞ்ஞானத்தை விட்டு மெய்ஞ்ஞானத்தைப் பெற்றமையால் முப்பாழிலும் முறையானே எனது சீவ போதத்தைத் தான் விழுங்கித் தான் மட்டுமே எனக்கு மேலேயிருந்தான்; என் அறிவினுள்ளும் இருந்தான்.

குறிப்புரை :

ஈற்றில் நின்ற ``பரம்`` வாளா பெயராய் நின்றது. அது பகுதிப்பொருள் விகுதி. உரம் - மெய்ஞ்ஞானம். பெற்றது மெய்ஞ் ஞானமாகவே, விட்டது அஞ்ஞானமாயிற்று. முப்பாழ், மேலே கூறப் பட்டன. அப்பாழ்தோறும் உயிரினது அறிவு வேறுபடுதலை யறிக. ஒளி - அறிவு. ``விழுங்கி யிருந்தனன்`` என்றதனால் அவன் மட்டுமே தனித்திருந்தமை பெறப்பட்டது. ``அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல்`` 9 சீவன் சிவத்துள் சென்று அடங்கச் சிவமே ஒளி வீசி நின்றது என்றபடி. பின்னர், ``இதயத்துளான்`` என்றதனால், முன்னர் `மேலே உளான்` என்றதாயிற்று.
``இரும்பிடை நீர் என`` என்றமையால் இது நிறைவொடுக் கமாகிய முடிநிலை முத்தியைக் கூறியதாயிற்று. ``மற்றீண்டு வாரா நெறி``. பேரா இயற்கை* மீண்டு வாரா வழிஅருள் புரிபவன்``* என்றாற் போலும் திருமொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 7

கரிஉண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.

பொழிப்புரை :

`சீவ அவத்தை, சிவ அவத்தை, பர அவத்தை` என மேற்கூறிய மூன்று அவத்தைகளிலும் அரியனவாம் துரிய நிலையில் சிவபெருமான் அனைத்துலகங்களையும், அவற்றில் வாழும் உயிர் -களையும் அவற்றது முன்னை இழிநிலை மாறி, உயர்நிலையாகும்படி விழுங்கிவிடுவான்.

குறிப்புரை :

`யானை` என்பது விளம்பழத்திற்கு உண்டாகின்ற ஒரு நோய். அஃது அப்பழத்தின் ஓடு இருந்தபடியே இருக்க, உள்ளே உள்ளதை மட்டும் அழித்துவிடும். அதனால், வெளிப்பார்வைக்கு மட்டும் நன்றாய் இருப்பதுபோலக் காணப்பட்டு, உட்பகுதியில் ஒன்றும் இல்லையாய் விடுகின்ற பொருள்கட்கு, `வேழம் உண்ட விளங்கனிபோல` என்னும் உவமை கூறப்படுகின்றது. அஃது இங்குத் தம் தன்மை திரிந்த மாயா காரியங்கட்கும், அவற்றைப் பற்றி நிற்கும் உயிர்கட்கும் உவமையாகக் கூறப்பட்டது. உயிர் - சீவன். `சீவன், சிவம், பரம்` என்பன அவ்வவ் அவத்தைகளைக் குறித்து நின்றன. செய்யுள் நோக்கி, இறுதிக்கண் நிற்றற்பாலதாய பரம் இடைக்கண் வைக்கப் பட்டது. முன் ஓதும் - மேலே சொல்லப்பட்ட. `உயிரும், சிவமும், பரமும் ஆன துரியத்து` என்க. ``அகிலம்`` என்றது மாயா காரியங்களையும், எல்லாம்`` என்றது உயிர்களையும், அங்ஙனம் கொள்ளாக்கால், ``எல்லாம்`` என்றது கூறியது கூறலாம். திரிய - தம் நிலை மாறும்படி. விழுங்குதல், இங்குத் தன் தன்மைய ஆக்குதல். உயிர் பெத்தத்தில் நிற்கும்பொழுது அதற்குச் சார்பாய், உள்ள மாயா காரியங்கள் பசுகரணங்களாயும், முத்தியைப் பெற்ற பொழுது அவை பதி கரணங்களாயும் நிற்கும். இவ்வாறு ஆதலையே ``திரிய`` என்றார்.
``மாயைமா யேயம், மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆய ஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்;
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``.l
என்னும் சிவப்பிரகாசச் செய்யுளைக் காண்க. முத்தி, இங்குப் பரமுத்தி தவிர ஏனைய. ``கரியுண் விளவின் கனி`` என்ற உவமையால் இது விளங்கும். முன்னர் ``இரும்புண்ட நீர்`` என வேறு உவமை கூறப்பட்டவாறு அறிக.
இதனால், சிவன் உலகத்தையும், உயிர்களையும் அவற்றின் தன்மைகளைத் திரித்துத் தன்வண்ணம் ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அந்தமும் ஆதியும ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே.

பொழிப்புரை :

சிவபெருமான், அனைத்துப் பொருள்கட்கும் அந்தமும், ஆதியுமாய் உள்ள பெரும் பொருளாய் நின்று, பல உயிர்களும் அடையும் பலவேறு அவத்தைகளில் தடத்த சிவனாய் எல்லாம் அவற்றிற்குத் தலைவனாய்ப் படிமுறையால் அவைகளை உயர்த்தி, முடிவில் சொரூப சிவனாய் அவனது ஞானமே கண்ணாக உணரும் ஞானத்திற்கு ஞேயமாய் இருக்கின்றான். அவனது செயல்களை நாம் அறுதியிட்டு அறியமாட்டோம்.

குறிப்புரை :

``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. `இயற்கையில் அந்தமும், ஆதியும் ஆகும் பராபரனும், உயிர்களின் அவத்தை வேறுபாடுகளில் தத்தமக்குப் பராபரனும், முடிவில் தன்னில் தான் ஆன பரமும் ஆகி நம்மை உண்டு, அந்தத்து ஞானத்திற்கு ஞேயமாய் இருந்தனன். அவற்றை யெல்லாந் நாம் அறியோம்` என இயைத்து முடிக்க உண்ணுதல் மேற்கூறிய வேழம் உண்ட விளங்கனிபோல ஆகும்படி உண்ணுதல். `ஆதலுடன் கூடி` என முன்னும் பின்னும் ஓரோர் சொல் வருவிக்க. ஆதல் - ஆதற்றன்மை.
இதனால், சிவன் உலகை உண்ணும் முறைகளையெல்லாம் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

பொழிப்புரை :

உயிர்கள் அடையத் தகும் முடிவான பயனை கூறுமிடத்து, அது வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் ஒருமித்த பொருளேயாகும். அதுமேலே சொல்லப்பட்டது. அந்தப்பயன், இறைவன், உயிர்கள் பாச பந்தங்களினின்றும் முற்றாக நீங்கத் திருவுளம் பற்றி, தான் அந்தப் பந்தங்களை நீக்கும் செயல்களைக் குறைவின்றிச் செய்தால் தீயில் இட்டு மாசுக்களை நீக்க நீங்கிய பொன்போல உயிர்கள் தன்னைச் சூழ்ந்துள்ள இருளை ஓட்டி ஒளிவிடுகின்ற விளக்குப்போல ஆகி, பந்தங்கள் அனைத்தையும் துரத்தி விளங்கும்.

குறிப்புரை :

அற்றது - முடிந்த பயன். இதன்பின், `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ``கனலிடை`` என்பதை அவ்வடியின் முதலிற் கூட்டி, அவ்வடியை ஈற்றுக்கு அயலிற் கூட்டுக`. ``இறை`` என்பதையும் அவ்வடியின் முதலிற் கூட்டுக. ``அற்று அற`` என்னும் ஒரு பொருட் பன்மொழி, `முற்றாக` எனப்பொருள் தந்தது ``அற`` , என்றதும், `முற்ற` என்றபடி. `திருவுளம் வைத்து` என்க. மாற்று - மாற்றுச் செயல்; பரிகாரம் ``ஆகும்`` என்பதற்கும், `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்க. ஆக்கம், உவமை குறித்து நின்றது.
இதனால், ஒருமொழி மகாவாக்கியங்களே உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுகின்ற புணையாகும்` என்பதும், (அம்மகா வாக்கியங்களில் தலையாயது திருவைந்தெழுத்து` என்பதே சித்தாந்தம். ``அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை`` (திரு வாசகம் - திருச்சதகம் - 27) எனவும், ``இருவினைப்பாசம் மும்மலக் கல் ஆர்த்திட - வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட - அருளும்மெய் அஞ்செழுத்து`` (பெரிய புராணம் - அப்பர் - 129.) எனவும் போந்த திருமொழிகளைக் காண்க). `அதுவும் இறைவனது அருளால் உரிய காலத்தில் பெறத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே
எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை
எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.

பொழிப்புரை :

உயிர்கள் இறைவனைத் தவிர மற்றை எல்லாப் பொருள்களையும் அறிதல் அவற்றிற்குப்பந்தமாகும், அதனைக் குருவருளால் நீங்கிச் சிவனைப்போல முற்றறிவைப் பெற்றபின்னும் இறைவனைத் தவிர வேறுபொருள்களை அறிவதில் பேறு ஒன்றும் இல்லை. (மாறாக, இன்ப இழப்பே உளதாகும், ஏனெனில், பிற எல்லாம் துன்பப் பொருள்களேயாதலின). ஆகவே `சிவன் நான்` என்னும் அந்த ஒற்றுமை உணர்விலே நிலைத்து நிற்பின், உயிர் இறை நிலையினின்றும் பிறழாதிருக்கும்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகள் முறையே பாச நீக்கத்தையும், சிவப்பேற்றையும் குறித்தன. `சிவப்பேறு பெற்றும் பயனில்லை` என்றதனால், அதற்குரிய காரணம், ``எல்லாம்`` என்றதனால் குறிப்பால் பெறப்பட்டது. `இறையே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. `திருவருளைப் பெற்றபின்னும் அது கண்ணாக இறைவனையே உணர்ந்து அவனிடத்து அடங்கி நில்லாது, தற்போதத்தால் பிறவற்றை யுணர்தல் மீட்டும் பந்தமாம்` என்பதனை,
``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்?
அக்கொழு நீ அறிந் துந்தீபற;
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` *
என்னும் திருவுந்தியாரால் அறிக. ``அறிந்து, அறியா வண்ணம்`` திருவருளாலே யறிந்து, தற்போதம் தலை யெடாதபடி நில்.
``எல்லாம் அறியும் அறிவுறினும், ஈங்கிவர் ஒன்(று)
அல்லா தறியார் அற`` *
என்றார் உமாபதிதேவர்.
இதனால், `உபதேச நிலையினின்றும் பிறழாது உறைத்து நின்ற வழியே பயன் உளதாம்; இல்லையேல் அஃது இழக்கப்படும்` என்பது கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``தலைநின்ற தாழ்வரை மீது தவம் செய்து`` என்னும் மந்திரம் அடுத்த தந்திரத்து, `சொரூப உதயம்` என்னும் அதிகாரத்தில் வருவது].

பண் :

பாடல் எண் : 3

தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.

குறிப்புரை :

இங்கு, ``தான்`` என்பன வடமொழி வழக்குப் பற்றிப் பொதுமையில் வாராது, தமிழ்வழக்கே பற்றி மேலெல்லாம் சிறப்பாக எடுத்து வலியுறுத்திப் போந்த சிவபெருமானை உணரச்சிறப்பாகவே வந்தது. `அல்லாக்கால், இம்மந்திரம் நின்று வற்றும்` என்க. `மாமறை வழி ஒழுக வானே மழை பொழியக் கூர்ந்திடும்` என ஒருசொல் வருவித்து இயைத்து முடிக்க. ``பொழி`` என்னும் முதனிலையே, `பொழிய` என வினையெச்சப் பொருள் தந்தது. ``வானே`` என்னும் பிரிநிலை ஏகாரம், ``வானின்றமையா தொழுக்கு``3 என்பதை விளக்கி நின்றது. `ஊனே` என்னும் தேற்றேகாரம், `உருகமாட்டாதது ஊன், அதுவும் உருகுதற்கு ஏதுவாய் நின்ற உள்ளம்` என்னும் பொருளைத்தோற்றுவித்தது. ``உருகிய`` என்னும் பெயரெச்சம், ``உள்ளம்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. அப்பெயர்விடாத ஆகுபெயராய் அதனையுடைய ஆன்மாவைக் குறித்தது. இனால், முன் மந்திரங்களில், ``இறை`` என்றும் ``எல்லாம் அறிந்த அறிவன்`` என்றும் கூறப்பட்ட முதல்வன் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

பொழிப்புரை :

`திருவருளைப் பெற்றவர் அதனைப் பெற்றது எதன்பொருட்டு` என்று அறிய விரும்பினால், அவர் அத்திருவருளால் மலம் நீங்கப்பெற்ற தமது அறிவுகள் அத்திருவருளே கண்ணாக அத்திருவருட்கு முதலாகிய சிவத்தை ஆராய்ந்து அவ்வாராய்ச்சியால் முன்பு நீங்கிப்போன மலத்தின் வாசனை தங்கியுள்ள தங்களது அறிவை அவ்வாசனையும் அற்ற தூய அறிவாய் நிற்கும்படி செய்து, இங்ஙனம் அரிதிலே பெறப்பட்ட பொருளாய் உள்ள இவனது திருவடியையே விடாது பற்றி, அவற்றின்கீழ் அடங்கியிருப்பர்.

குறிப்புரை :

`அவர் திருவருள் பெற்றது இந்நிலையை அடைதற் பொருட்டே; வேறொன்றின் பொருட்டன்று` என்பதாம்
``யாஅம் இரப்பவை,
பொருளும், பொன்னும், போகமும் அல்ல, நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும்
உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே``9
என்னும் சான்றோர் மொழியினை எண்ணுக. இம்மந்திரத்தின் பொருளைச் சிவஞான போத ஒன்பதாம் சூத்திரத்தாலும், அதன் உரையாலும் உணர்க. `எனகொல் என அறிய` என ஒருசொல் வருவிக்க. அமர்தல் - விரும்புதல். சிந்தை, அறிவைக் குறித்த ஆகு பெயர். முன்னர், `சிந்தையின் கண்` என ஏழாவது விரிக்க. `அருமைப் பொருளாய்` என ஆக்கம் விரிக்க. தாம், அசை, ஏகாரம், தேற்றம்.
இதனால், மேல், ``எல்லாம் அறியும் அறிவுதனை விட்டே`` என்னும் மந்திரத்திற் கூறியது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.

பொழிப்புரை :

எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.

குறிப்புரை :

``மெய், பொய்`` என்ற பொதுமைகள், உலகியல் அருளியல் இரண்டிலும் உள்ள வாய்மை பொய்மைகளை உணர்த்திநின்றன. அதனால் உலகியலிலும் பொய்யைப் பற்று கின்றவர்களைச் சிவன் வெறுத்தல் விளங்கிற்று. ``கரவாடும் வன் னெஞ்சர்க்கு அரியானை``, 3 `கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` l ``வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார் - நஞ்சநெஞ்சர்க் கருளும் நள்ளாறரே`` 9(நஞ்ச - நைந்த; உருகிய) என அப்பர் கடிந்தோதியருளிய திருமொழிகளைக் காண்க. கரத்தல் - உள்ளதை `இல்லை` என மறைத்துக் கூறுதல். அது பொய்ம்மையே யாதல் அறிக.
``நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும்கண்டு,
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே``*
என அவர் அருளியல் பற்றிச் சிறப்பாக ஓதியருளினமையும்,
``யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என்
அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே. 8
என ஆளுடைய அடிகளும் அவ்வாறே அருளிச் செய்தமையும் உணரற்பாலன. மெய்கலந்தான் - நேரே விளங்கிக் கலந்தான். ஏனையோர்பால் விளங்காதே கலந்திருப்பான் என்க. இரண்டன் உருபுகள் ``உய்கலந்து`` என்பதில் கலத்தலோடு முடிந்தன.
உய்கலந்து - உய்யக்கலத்தலால். கலப்பவர் மெய்யர். கலத்தல், உணர்வால் ஒன்றுதல். `மெய்யர்க்கே`` என்பதை இதன்பின் கூட்டுக. `மெய் கலந்த` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மெய் - நிலைபேறு.

பண் :

பாடல் எண் : 6

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற்கூறிய அத்தகைமையனாகிய சிவனை, ஆவி உடலைவிட்டு நீங்கும் காலத்தில் நினைத்தல், அதற்கு முன்னெல்லாம் இடைவிடாது நினைந்தவர்கட்கே கூடும்.

குறிப்புரை :

`ஆதலின் அவ்வாறு இப்பொழுதே நினையுங்கள்` என்பது குறிப்பெச்சம். `உயிர்போங் காலத்து நினைத்தல் அரிது` என்பதை,
`` ... ... ... ... ... கடல்நாகைக்
காரோண, நின்
நாமம் பரவி, நமச்சிவா யவ்வெனும்
அஞ்செழுத்தைச்
சாம்அன் றுரைக்கத் தருதிகண்டாய்,
எங்கள் சங்கரனே`` 9
என்பதனாலும், `அவ்வாறு நினைந்தவழியே அவனை யடைதல் கூடும்` என்பதை,
``உன்னை நினைந்தே கழியும் என் ஆவி`` 3 என்பதனாலும் உணர்க. இறக்குங் காலத்தில் வினையின்வழி எந்த நினைவு உயிருக்கு உண்டாகின்றதோ, `அந்த நினைவின்படியே அஃது அடுத்த பிறப்பை அடையும்` என்பதை
``மரிக்கும்போ(து) உன்னும் வடிவமதை ஆவி
பரிக்கும் நினைவு பரித்து``
என்பதனாலும்,
``ஆதலினால் சுற்றத் தவரைநினை யா(து) அமலன்
பாதம் நினைக பரிந்து`` *
என்பதனாலும் அறிக.
மூன்றாம் அடியில், `கைகலந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆவி கலந்திருத்தலும், எழுந்து போதலும் உடலிடத்து` என்பது வெளிப்படை. ``கருத்துறல்`` என்பதை ``எழும்போது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. பின்வந்த, `கைகலத்தல்` என்பது, எப்பொழுதும் இடைவிடாது கலத்தலைக் குறித்தது.
இதனால், உய்திவேண்டுவோர் தப்பாது செயற்பாலது இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில்
ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.

பொழிப்புரை :

ஒருவன் எய்தற்கரிய மானுடப் பிறவி தனக்கு எய்தி யிருப்பதையும், அதன் நிலையாமையையும் உணர்ந்து காலை, மாலை இருபொழுதும் சிவன் வகுத்த உலகியல் அருளியல் இரண்டிலும் வாய்மையையே கடைப்பிடித்து ஒழுகுவானாயின்` அதுவே வருங்காலத்தில் அவன் பயனடைதற்கு ஏற்ற நெறி முறையாகும். சிவபெருமானும் அவ்வழியில்தான் புலப்பட்டு நிற்பான்.

குறிப்புரை :

`ஆகவே, எவ்வகையிலும் பொய்மையைப் பற்றாதொழிக` என்பதாம்.
``பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று`` *
எனவும்,
``பொய்கடிந்(து) அறத்தின் வாவ்வார்;
புனற்சடை முடியார்க்கு அன்பின்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்`` 8
எனவும் அருளிச்செய்தமை காண்க. செய்தல், சொல்லாலும், செயலாலும் நிலைநிறுத்துதல். `சிறிதளவு காலத்தையும் பொய்மையில் செலவழித்தல் கூடாது` என்பது, ``எய்திய காலத்து இருபொழுதும் சிவன் - மெய்செயின்`` எனப்பட்டது.
இதனால், `உய்தி வேண்டுவார்க்குப் பொய்மை கூடாது` என்பது வலியுறுத்தப்பட்டது. ஐம்புல விருப்பமே பொய்க்குக் காரணமாகும்` என்பதைக் குறிக்க அதுவும் உடன் விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

பொழிப்புரை :

யாதானும் ஒன்று கிடைப்பது அல்லது கிடையாது ஒழிவது ஆகிய இந்நிலையை திருவருளால் அமைவது. இதனை உத்தம குருவாகிய எங்கள் புகழ்மிக்க நந்திபெருமான் நாங்கள் உய் வடைதற் பொருட்டு எங்கட்கு அருளிச்செய்தார். ஆகவே, ஒன்றைப் பெற வேண்டியோ, அல்லது போக்க வேண்டியோ பொய்யை மேற் கொள்ளத் தேவையில்லை. ஆயினும் யோகியரே இந்நிலைமையைத் தெளிபவர்கள். அந்த யோகம் வாய்க்கவேண்டினால், பொய்ப் பொருளிலே பூசையை உண்டாக்குகின்ற நவத்துவாரங்களையும் அடைத்தலாகிய இமய நியமங்களைக் கைக்கொளல் வேண்டும். கைக்கொண்டால் உண்மையான வாசியோகம் எளிதாக அமையும்.

குறிப்புரை :

ஐம்பொறிகளில் மெய் தவிர ஏனைய நான்கும் ஏழு துளைகளாய் உள்ளன. கன்மேந்திரியங்களில் எருவாய், கருவாய் இரண்டைக் கூட்ட ஒன்பது துவாரங்களாம் `எருவாய்` வழியாக அபானனைத்தடுக்க வேண்டும்` என்பதும் யோக நூல் முறைமை, `உலகத்தார் ஊர்வன பொய்க்குதிரை` என்றற்கு வாசி யோகத்தை ``மெய்யென் புரவி`` என்றார்.
இதனால், `வாய்மையை நன்கு கடைப்பிடித்தற்கு வழி யோகம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.

பொழிப்புரை :

(இவ்வதிகாரத்துள் முன்பே இரு மந்திரங்களில் கூறியபடி) வாய்மையாளரையே விரும்புதலும்` பொய்ம்மையாளரை வெறுத்தலும் உடையவனும், எல்லா உயிர் உள்ளங்களிலும் உள்ளவனும், வேத முதல்வனும் ஆகிய சிவபெருமானைப் பொய்யை யொழித்து, மெய்யாகப் பற்றினவர்க்கே அவன் புகலிடமாவான். (``மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து * செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே`` என அருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும்).

குறிப்புரை :

இரண்டன் உருபுகளை, `ஒழிந்து பற்றினார்க்கே` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், பொய்யாமையானே முன் மந்திரத்திற் சொல்லிய திருவருள் கிடைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு)
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

பொழிப்புரை :

உயிர்களின் உள்ளங்களாகிய கோயிலுக்கு உள்ளே சிவபெருமான் தனது நிலையான திருவடிகளை விரும்பி வைத்து விளங்குகின்றான் அக்கோயில் பூட்டப்பட்டுள்ளது. ஆயினும் அப்பூட்டைத் திறத்தற்குரிய திறவுகோல்கள் மக்கள் எல்லாரிடத்திலும் உள்ளது. இருந்து அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி அந்தப் பூட்டைத்திறந்து சிவனைத் தரிசிப்பவர் யாரும் இல்லை. அதற்குக் காரணம், அருவருக்கத் தக்க பொருள்களைப் பொதித்து வைத்து மூடியுள்ள பைகளை அவர்கள் `பொய்` என்கின்ற கயிற்றால் இறுகக் கட்டி, அவற்றைக் காவல் புரிந்து கொண்டிருப்பதாகும். மாணவகனே, நீயும் அவர்களைப்போல இருந்தும் விடாமல் அந்தப்பைக் காவலை உண்மையாகவே விட்டு, உன் கையில் உள்ள அந்தத் திறவுகோலால் அந்தக் கோயிலைத் திறப்பாயாயின், கிடைத்தற்கரிய பேறு உனக்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

``தாள்மேவிய`` எனச்சினைவினை முதல்மேல் நின்றது. கைத் தாழ் - இயல்பாகவே கையில் இருக்கின்ற திறவுகோல். என்றது, பிராணனை. பொய்த்தாழ் - பொய்ம்மையாகிய திறவுகோல். தாழ் இடுதல் - பூட்டுதல், பின்னர், `பை` என வருதலால், இவை பையைக் கட்டுகின்ற கயிற்றையும், கட்டுதலையும் குறித்தன. பையாவது உடம்பு.
``இடும்பைக்(கு) இடும்பை இயல்உடம்பி தென்றே
இடுபொய்யை மெய்யென் றிராதே`` 9
என ஔவையாரும் கூறினார். `பைம்மறியாப் பார்க்கப்படும் 8என்பது நாலடி பின் இரு தாள்கள் `தாழ்` என்பதன்மரூஉ. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், `வாசியோகத்தால் சிவனைத்தரிசித்தல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

பொய்ம்மையைச் சிறிதும் இல்லாது உறுதியாக அப்பாற்போக்கி, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் வாய்மை விளங்க நிற்பாரது நடுவிலே சிவனும் விரும்பி எழுந்தருளி யிருக்கின்றான். ஆகையால், உய்தியின் பொருட்டு, அந்த நிலைமையை உணர்ந்து சிவனைத் துதியுங்கள் அப்பால், மெய்ம்மையின்கண் உள்ளவனாகிய சிவனை அடையும் வழிதானே கிடைப்பதாகும்.

குறிப்புரை :

``திண்ணென`` என்பது தொடங்கி உரைக்க. ஒன்றும் - சிறிதும். புறத்திலும் வாய்மை பொலிதலாவது, கொள்ளும் கோலங்கள் அகத்தில் கொள்ளும் எண்ணங்களுக்கு ஏற்றவையாய் யிருத்தலும், நெஞ்சில் கரவு இன்மையால் முகம் மகிழ்ச்சியாற்பொலிதலும் போல்வன. நடு அங்கே - நடுவாகிய இடத்திலே. அமர்ந்து - விரும்பி. ``அடியார் நடுவுள் இருவீரும் இருப்பதானால்``l என ஆளுடைய அடிகளும் அருளிச்செய்தார்.
இதனால், `அகத்தும், புறத்தும் வாய்மையால் விளையும் தூய்மையே சிவநெறியும் ஆகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து)
அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே

பொழிப்புரை :

நறுமணம் மிக்க மலர்களினின்றும் காய்த்துப் பழுத்த நல்ல பழம் ஒன்று தோட்டத்தில் உள்ளது. அதனை தோட்டத்தில் விளைவித்தவன் உண்ணாதபடி ஒரு கொடிய பறவை வந்து கொத்தித் தின்கின்றது. அஃது அவ்வாறு செய்யாதபடி வில்லில் அம்பைத் தொடுத்து எய்து பறந்தோடும்படி ஓட்டினால் சிவந்த பொன்போலும் கிடைத்தற்கரிய சிவகதியைச் சென்று அடையலாம்.

குறிப்புரை :

முன் மூன்று அடிகள் ஒட்டணியாய் நின்றன. மலர்கள், ஆறு ஆதாரங்கள். மணம் - தெய்வமணம். பல மலர்கள் பூத்துப் பொலிய, அவற்றின் பயனாக ஒருகாயே காய்த்துப் பழுத்த அரிய பழம் சிவம் `வம்பு மலரிற் பழுத்த பழம்` என மாற்றியுரைக்க தோட்டம் - உடம்பு. தோட்டத்தை உடையவனாய், அதில் பயிர் செய்பவன் யோகி. பறவை - பொய்ம்மை. சிவத்தை மறைத்து விடுவதால், அதனை அப்பழத்தை உண்ணும் பறவையாகக் கூறினார். எய்தற்குரிய `வில், நாண், அம்பு` இவை என்பது மேலே கூறப்பட்டது. 3
இதனால், பொய்மை அகலப்போக்குதற்குப் பிரணவயோகம் சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.

பொழிப்புரை :

தன் அடியார்களுடைய ஐம்புல ஆசையாகிய பாசங்களைப் போக்கி, அவர்கள் கலக்கத்தை நீக்கித் தெளிவைத் தருகின்றவன் சிவன் ஆதலின், அவனை அறிவினாலே பற்றுங்கள்; பற்றினால், அவன் சற்றும் தாழாது, உங்களை `உய்யப் போக` எனத் திருவுளம்பற்றி, உங்களுடைய மனங்களை ஒருவழிப்படுத்துவான்.

குறிப்புரை :

துயக்கறுத்தமை தம்மை உள்ளிட்ட பலரது அனுபவம் பற்றிக் கூறினார். அறிவால் தொடர்தல், சரியை, கிரியை யோகங்களில் இயன்றவாற்றால் பற்றுதல். என்னை? தொடர்ந்து நிகழ்வன அவையேயாதலின். `மனம் பல வழியிற் சென்று அலைதலானே அது பொய்ம்மையையும் ஏற்கின்றது; ஆகவே, மனம் ஒருவழிப்படின் பொய்ம்மையும் இல்லாதொழியும்` என்பதாம். `போக` என்னும் வியங்கோளின் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. தெளிவுபற்றி எதிர்காலம் `ஒன்று வித்தான்` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், `யோகம் இயலாதவர் சரியை கிரியைகளாலாயினும் பொய்ம்மையைப் போக்கற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

மனமது தானே நினையவல் லாருக்(கு)
இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

பொழிப்புரை :

ஒருங்கிய மனம் தானாகவே சிவனை நினைக்கும் நிலையுடையதாகும். அந்நிலைக்கு மனத்தைக் கொணர வல்லவர் கட்கு, அனைத்துயிர்க்கும் துணையாகின்ற முறையில் அவர்கட்கு அமைந் துள்ள தூல உடம்பும் அவர் ஏவியவற்றையே செய்யும் ஏவலாளியாய்க் கீழ்ப்படிந்து நிற்கும். அக்கீழ்ப்படிதலைக் கொண்டு சிவன்பால் ஏற்புடைய செயல்களைச் செய்தால், இப்பிறப்பிலேயே அவர் செய்யும் செயல்கள் எல்லாம் மிகவும் சிவன் செயலேயாய்விடும்.

குறிப்புரை :

`அவர்கட்குப் பந்தம் ஆகா` என்பதாம். ``நினைய`` என்பதன்பின், `செய்ய` என ஒரு சொல் வருவிக்க. ஏவல் தணிவு - ஏவலிற்படும் பணிவு. தக்கன சரியை கிரியா யோகங்கள். `புவிக்கே போதப் புனிதன் செயல் ஆகும்` என இயைக்க. புவி - நில உலகம். இதனால், `இப்பிறப்பு` என்பது குறிக்கப்பட்டது. ``புவிக்கு`` என்பது உருபு மயக்கம். போத - மிகவும்.
இதனால், முன் மந்திரத்திற் கூறியவாறு மனம் ஒருமிக்கச் செய்தலின் பயன் கூறப்பட்டது. அதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்று வாயும் ஆயிற்று.
``மெய்ம்மையாம் உழவைச் செய்து,
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்பராகில்
சிவகதி விளையு மன்றே`` *
என்னும் அப்பர் திருமொழியை இவ்வதிகாரத்துடன் கூட்டியுணர்க.

பண் :

பாடல் எண் : 1

முன்னை வினைவரின் முன்உண்டு நீங்குவர்
பின்னை வினைக்(கு)அணார் பேர்ந்(து)அறப் பார்ப்பர்கள்
தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

பொழிப்புரை :

தம்மை நன்குணர்ந்தபின் தலைவனையும் உள்ளவாறு அறிந்தவரே (சிவஞானபோதம் - அவையடக்கம்) உண்மைத் தத்துவஞானிகள். அவர்கள் பிராரத்த வினைதோன்றினால், `இது நாம் முகந்துகொண்டு வந்தது, இதனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்` என்று உணர்ந்து அதன் பயனாகிய இன்பத்தில் விருப்பமும், துன்பத்தில் வெறுப்பும் இல்லாமல் கடன்கழிப்பார்போலப் பற்றற்றே ஐம்புலன்களை நுகருமாற்றால் அவ்வினையினின்றும் நீங்குவர். (பற்றுச்செய்யா மையால் அவ்வினை அவர்தம் உணர்வைத் தாக்காமல். உடலையே தாக்கி ஒழியும்) விருப்பு வெறுப்பு இன்மையால் இன்பத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், துன்பத்தை விரைவில் ஒழிக்கவும் அவர்கள் எண்ணமையால், அவர்கள் ஆகாமிய வினையில் வீழ்தல் இல்லை. அதன் தோற்றத்தை நிகழாதபடி தடுத்து விடுவார்கள்.

குறிப்புரை :

`அதனால், உடம்பு நீங்கியபின் அவர்கள் அடைவது வீடு பேறேயன்றிப் பிறவியன்று` என்பதாம். ``தன்`` என்பதை, `தலைவன்` என்னாவிடில், ``ஞானிகள்`` என்னும் பன்மையோடு இயையாமை அறிக. ஈற்றடியை, ``முன்னை வினைவரின்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``வினைக்கு`` என்பது உருபு மயக்கம். அண்ணார் - சேரார்.
இதனால், ஞானிகள் பிறப்பை அறுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறிய அந்த ஞானிகள், அம் மந்திரத்தில் கூறியபடி தாங்கள் வினையினின்று நீங்குதலோ டல்லாமல், தங்களைச் சிவமாகக் கருதி வந்து அடைந்தவர்களது வினைகளையும் சிவனது திருவருள் வியாபகத்தில் நின்று நீங்கியருள்வார்கள்.

குறிப்புரை :

இதனை மெய்கண்டதேவர், ``தம்மையுணர்ந்து தமையுடைய தன் உணர்வார் - எம்மை யுடைமை` (சிவஞான போதம் - அவையடக்கம்) எனவும்,
``சிவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்துவான்`` என்றல் இத்தகைய ஞானிகளைச் சிவன் அவர் தானேயாக ஆவேசித்து வந்து அருள்புரிதலையே என்பதை, அவர்,9
``இவ்வான்மாக்களுக்குத் தமது
முதல்தானே குருவுமாய்
உணர்த்தும் என்றது,
அவன் அன்னியமின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்``l
எனவும் அருளிச் செயதைமையால் உணர்க.
முன் மந்திரத்தில் ``வரின்`` என்றதனால், ``முன்னைவினை`` என்றது பிராரத்துவமும், இம்மந்திரத்தில், ``முடிச்சு`` என்றதனால் ``முன்னை வினை`` என்றது சஞ்சிதமும் ஆயின. வருவதற்கும், முடிச்சாய்க் கிடத்தற்கும் உரியன அவையேயாகலின், ``அவிழ்ப்பர்`` என்றது, வினைகள் பின் நின்று விளையாது உருண்டோட வீழ்த்துவர் என்றதாம். முடிச்சு - மூடை. பின்னை வினை, ஆகாமியமே. அதனைப் பிடித்துப் பிசைதலாவது, அது தோன்றும் பொழுதே மாணாக்கரது உள்ளத்தில் தம்மையும், தமது உபதேச மொழியையும் நினைவு கூர்விக்கு மாற்றால் அவற்றின் கொடுமையையும் நினைந்து அஞ்சச்செய்து முற்றாதபடி போக்குதல். ``சென்னியில் வைத்த`` என்றது, அது மேலாய் நிற்கத் தாம் அதன் கீழாய் அடங்கி நிற்றல். அதனால் அவரது செயல் சிவன் செயலேயாதல் உணர்த்தப்பட்டது, ``திருவருளாலே`` என்றதனால் சிவசமவாதம் கூடாதியிற்று.
ஞானிகளாவார் குருவருள் பெற்றவர்களே. அவர்களது `சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம்` - என்னும் மூவகை வினைகளுள் சஞ்சிதம் ஞான தீக்கையால் எரிசேர்ந்த வித்துப் போலக்கெட் டொழியும். பிராரத்தம் அனுபவத்தால் தீரும். எனினும் அஃது அவர்களது உணர்வைத் தாக்காது உடலளவாய் ஒழிதலால், ஆகாமியத்தை உண்டாக்காது. சோர்வு காரணமாக ஒரோவழி ஆகாமியம் தலை யெடுக்குமாயினும் அது உடனே அவர்களது குருலிங்க சஙகமங்களைப் பற்றிய மனமொழி மெய் வழிபாடுகளால் முறுகுதலின்றிக் கெடும். இவ்வாற்றால் ஞானிகள் தாம் வினையினின்று நீங்குதலேயன்றித் தம்மை யடைந்த பக்குவிகளுக்கு ஆசிரியராய், அவர்களது வினையையும் நீக்குவர். இஃதே இம்மந்திரத்தால் கூறப்பட்டது. இங்ஙனம் கொள்ளாக்கால், கூறியது கூறலாய், இதனாற் போந்த பொருள் ஒன்றும் இல்லையாம். ``சென்னியில் வைத்த திருவருளாலே`` எல்லாம் செய்தல் மேற்பல விடத்தும் கூறப்பட்டமையால், அதனையே கூறுதற்கு இங்கொரு மந்திரம் வேண்டா.
மூன்று வகையான வினைகளும் நீங்கும் முறை மேற்கூறிய வாறே யாதலை,
``எல்லையில் பிறவி நல்கும்
இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்; ஏன்ற
உடல் பழ வினைய தூட்டும்;
தொல்லையின் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத்(து)
அழல் உற அழிந்து போமே``l
என்னும் சிவப்பிரகாசத்தாலும்,
``ஏன்ற வினை உடலோடு எகும் இடை ஏறும்வினை
தோன்றில் அருளே சுடும்`` -திருக்குறள் - 98.
என்னும் திருவருட்பயனாலும் அறிக. மற்றும்,
``உணக்கி லாததோர் வித்து மேல் விளையாமல்
என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம்
நீ வந்து காட்டினாய்``
-திருவாசகம் - திருக்கழுக்குன்றப் பதிகம் - 1.
சிவமேயான ஞானிகள் பக்குவிகளுக்குச் சிவமாகவே தோன்றுவர். அதனால் அவர்களைக் கண்டவுடன் பக்குவிகள் தம்மையிழந்து அவர்பால் அடைக்கலம் புகுவர். ஞானிகளும் அவர்களது பக்குவத்தை உணர்ந்து அவர்களைத் தங்கட்கு ஆளாகக் கொண்டு, அருளுதலைச் செய்வர். இவற்றையெல்லாம் ஆசிரியர் அருணநந்தி தேவர், உமாபதி தேவர் வரலாறுகளின் வைத்து அறிக.
இதனால், ஞானிகள் தாங்கள் நலம் பெறுதலேயன்றிப் பிறரையும் நலப்படுத்துதல் கூறப்பட்டது. இந்நாயனார்,
``நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்``
எனத் தொடக்கத்திற்றானே அருளிச்செய்தது நினைக்கற்பாலது.

பண் :

பாடல் எண் : 3

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவன் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத் தகும்ஞானி தானே.

பொழிப்புரை :

உயிர்களின் மனமும், வாக்கும், காயமும் நேர்முறையில் செயற்படாது, கோடும் முறையில் செயற்பட்டால் உயிர்கட்கு, நீக்குதற்கரிய வலிய வினைகள் உளவாகும். அவை அவ்வாறின்றி, நேர்முறையில் செயற்பட்டால் அவ்வாறான நிலைமை ஏற்படாது. (எனினும் அஞ்ஞானமுடையவர்களது மனோவாக்குக் காயங்கள் நேர்முறையிற் செயற்படமாட்டா). இனி ஒருவன் அஞ்ஞானத்தின் நீங்கிமெய்ஞ்ஞானத்தைப்பெற்று, மனோ வாக்குக் காயங்களின் பிடியில் அகப்படாது விடுபட்டானாயினும், பழைய வாசனை காரணமாக ஒரோவழி அவை தம்மியல்பில் வந்து அவனைத் தாக்குதல் கூடும். அப்பொழுது அவன் தற்போதத்தை நீக்கிச் சிவபோதத்தை உடையவனாய் அவற்றைச் செயற்படுத்தினால், அவன், `ஞானி` என்னும் நிலையினின்று நீங்கான்.

குறிப்புரை :

ஞானிகள் அவ்வாறுதான் அவைகளைச் செயற்படுத்தி நிற்பார்கள்` என்பது குறிப்பெச்சம். மனோ வாக்குக் காயங்கள் நேர் முறையில் செயற்படுதலாவது, `நாம் செயற்படுவது திருவருளால்` என்பதை மறவாமல் நினைந்து, தமது செயலை இறைவனது பணியாகக் கருதிச் செயற்படுதல். உடையானது நேர்மை, நேர்மை இன்மைகள் உடைமைகளின் மேல் ஏற்றிச்சொல்லப்பட்டன. ``தன்`` என்றது தற்போதத்தை, தற்போதத்தால் நுகராது சிவபோதத்தால் நுகரின் சிற்றின்பமும் பேரின்பமேயாகும். இதனை,
``பெற்றிசிற் றின்பமே பேரின்ப மாம்அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற,
முளையாது மாயையென் றுந்தீபற`` -திருவுந்தியார் - 33.
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத்(து) ஆக்கில் - தொடங்கி
முளைப்பதுமொன் றில்லை, முடிவதுமொன் றில்லை; இளைப்பதுமொன் றில்லை இவர்``
-திருக்களிற்றுப்படியார் - 76.
எனவும் போந்த சாத்திரங்களாலும், மற்றும்,
``காணும் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியான்`` -திருவாசகம் - பண்டாய நான்மறை - 6.
என்னும் திருமொழியாலும் உணர்க. வாதனை - வாசனை. தன், சாரியை. வாதனையால் விளைவன ``வாதனை`` எனப்பட்டன. ``வாதனைதன்னால்`` என்னும் மூன்றாம் உருபை, `வாதனைதன்கண் என ஏழாம் உருபாகத் திரிக்க.
இதனால் ஞானிகள் பிராரத்தம் காரணமாகப் பழைய வாசனை தோன்றும்பொழுது அதனால் திரிபெய்தாது நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.

பொழிப்புரை :

வாசி யோகத்தின் பெருமையையும், அதிற் பயிலும் யோகியின் பெருமையையும் நூல்களால் உணர்ந்து அவற்றை வகை வகையாக விரித்துரைப்பவனைப் போல, ஞானிகளும் விரித் துரைத்துக் கொண்டு காலம் போக்குவதில் பயனில்லை. ஆகையால் நீவிர் உயிரல் பொருள்கள் மேல் செல்லும் ஆசையையும் உயிர்ப் பொருள்கள்மேல் செல்லும் அன்பினையும் அடியோடு நீக்குங்கள். நீக்கினால் நீவிர் இறை நிலையை அடைதல் எளிதாகும்.

குறிப்புரை :

`இல்லையேல், அரிதாகும்` என்பதாம். மூசுதல் - மூடுதல். மூசி - மூடியிருப்பவன். மூடப்படுவன கண்கள். பேசி - பேசுபவன். வீண் காலம் போக்குதலை, `பிதற்றுதல் என்றார். அன்பு இல்லறத்தார்க்கே உயிரனவாய் நீங்க, ஞானிகட்கு அருளே உரித்தாதல் பற்றி, அன்பும் அறுக்கப்படவேண்டியதாயிற்று. ``இடம்`` என்றது நிலையை, இதனால், `சொல்லளவாய் நிற்கும் அவா அறுத்தல் ஞானி கட்கும் பயன் தருவதாகாது` என்பது கூறப்பட்டது. ``எனபோல் உடம்பெலாம் வாயாய்ப் பிதற்றுவர் ஆர்`` எனத் தாயுமான அடிகளும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

பொழிப்புரை :

சிவன், ஆசையால் மூடப்பட்டுள்ள அந்த மனங் களிலே வெளிப்படாது மறைந்து நின்று, ஆசையற்றவர்களது மனங் களிலே வெளிப்பட்டு விளங்கி, அவர்கட்கு முத்தியைத் தருகின்றான். ஆகையால் அவன், அவனை வைத்து வழிபடுகின்ற மாடம், மண்டபம், கூடம், கோயில், திருவேடம் ஆகிய இவ்விடங்களில் இல்லை.

குறிப்புரை :

மாடம் - இல்லங்களில் சுவர்களில் அமைக்கப்படும் சிறு நிலைகள். அடியார் வேடமும் சிவன் உரையும் இடமாகக் கொள்ளப்படுதல் தெளிவு. `இவ்விடங்களில் சிவன் இல்லை` என்றது, ஆசையுற்ற மனங்களுடன் அவ்விடங்களில் அவனை வழிபடு வார்க்கு. `மூடு அத்துளே நின்று` எனப்பிரித்து, அதனை, வேட்கை விட்டார் நெஞ்சில் முத்தி தந்தான்` என்பதற்கு முன்னே கூட்டி முதற் கண் வைத்து உரைக்க. `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. நின்று - மறைந்து நின்று. `மூடு அத்துளே மறைந்து நின்று` என்றதனால், மூடுதல் இன்றி விளங்கிய நெஞ்சில் வெளிப்பட்டு நிற்றல் பெறப் பட்டது. முன் மந்திரத்து நின்ற `ஈசன்` என்பதே இம்மந்திரத்திற்கு எழு வாயாய் வந்து இயைந்தது.இதனால், `உள்ளத்தில் ஆசை அறா தவர்கள் வெளியில் தனியிடங்களில் சிவனை வைத்து வழிபடுதலால் பயனில்லை, என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய உலக ஆசைகள் அனைத்தையும் நீவிர் கட்டாயமாக அறவே விட்டொழியுங்கள்; அவைகளை விட்டு நீவிர் சிவனை அடைந்தபின்பும் பழைய பழக்கத்தால் அந்த ஆசைகள் மீண்டும் உங்கள்பால் தோன்றுதல் கூடும். அப்பொழுதும் அதனை முளையிலேயே அறுத்தெறியுங்கள்; ஏனெனில் ஆசை மிகுந்து மிகுந்து வருவதால்தான் எந்நிலையிலும் துன்பங்கள் மிகுந்து மிகுந்து வருகின்றன. ஆசையை நீக்க நீக்க, இன்பங்களே மிகுந்து மிகுந்து வரும்.

குறிப்புரை :

அடுக்கு, வயியுறுத்தற்பொருட்டு, `ஈசனிடத்தாயினும்` என ஏழனுருபுபுணர்ப்பினும் அமையுமாயினும் அவ்வாறு புணர்த்தோதாது, ``ஈசனோடாயினும்`` என மூன்றுனுருபு புணர்த் தோதியதனையும் நோக்காது, `ஈசனை விரும்புதலையும் விடுமின்` என உரைப்பாரும் உளர். அந்த விருப்பத்தையும் அறுத்தவர் அடைவது யாது? மீமாஞ்சகரும், தருக்க மதத்தவரும், பாடணவாத சைவரும் கூறும், யாதோர் உணர்வுமின்றிக் கல்லுப்போலக் கிடக்கும் நிலையேபோலும்! ஈசனிடத்திருந்தபொழுதும் உலக ஆசை துன்பந்தருதற்கு நம்பியாரூரர் வரலாறு நற்சான்று பகரும். பின்னிரண்டடிகளில் வந்த ஆக்கம் மிகுதி மேலன.
இதனால், அவா துன்பத்திற்கும், அவா இன்மை இன்பத்திற்கும் காரணம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

பொழிப்புரை :

கொல்வது போலும் துன்பத்தை ஒருங்குகூடிச் செய்வனவே ஐம்பூதங்கள், அவற்றின்மேல் வைக்கின்ற பற்று மீண்டும் மீண்டும் சிக்குதற்கு வழி செய்வதே. அதனால், அந்தப் பற்றினைப் போக்கி, மீண்டும் அவற்றின்மேல் செல்ல எழுகின்ற ஆசையை எழாமல் தடுப்பதே நிலைத்து நிற்கின்ற ஞானமாகும். அந்தப் பூதங்களை மனத்தால் சிறிது தீண்டுதலும் அவை தொடர்தலுக்கு வழியேயாகும்.

குறிப்புரை :

அடுதல் - கொல்லுதல். இங்கு அதனோடொத்த துன்பத்தைக் குறித்தது, ``கொல்லப் பயன்படும் கீழ்``* என்பதிற்போல் ஐந்து பூதங்களும் துன்பம் செய்தலாவது, அவை உடம்பாகி நின்று, நோய், பசி முதலியவற்றைச் செய்தல், எனவே, ``பற்று`` என்றதும் உடம்பிற் பற்றேயாயிற்று. உடம்பிற் பற்றே வேட்கை பலவற்றிற்கும் காரணம் ஆதலை அறிக. உடன் - ஒன்றுகூடி. உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், `ஆசைகட்குக் காரணம் உடம்பின்மேல் பற்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து)
உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.

பொழிப்புரை :

நிறை மதி நாளன்று பொங்குகின்ற கடலைப்போல ஊழிவெள்ளம் தோன்றி உலகை விழுங்கிவிட்டு மறைந்தது. என்றும் கெடாத இன்பக்கடலை இறைவன் தாங்கிக் கொண்டிருக்கின்றான். ஆயினும், வானோரும், மண்ணோரும் ஆசைக்கடலில் மூழ்கியிருந் தமையால் இறைவனது இன்பக்கடலை அடைய மாட்டாது, அந்த ஊழி வெள்ளத்தில் மூழ்கி அழிந்தனரேயன்றி பயன் ஏதும் பெற்றாரில்லை.

குறிப்புரை :

ஈற்றடியை முதலடியின் பின்னர்க்கூட்டி, வானோர், மண்ணோர் அவாக் கடலும் பட்டு அழுந்தினராய், உவாக் கடலுட் பட்டு துஞ்சினர்` என முடிக்க. பின் வந்த ``உவாக்கடல்``, `மேற்கூறிய அந்தக் கடல்` என்னும் பொருட்டாய் நின்றது. ஏனைப் பிறப்புக்கள் பலவற்றினும் சிறந்த பிறப்பினராகிய தேவரும், மக்களும்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே தேவரும், மக்களுங்கூட ஆசையால் ஏனைப் பிறப்பினரே ஆயினர்` என்றபடி. ``அழுந்தினர்`` என்பது முற்றெச்சமாய் நின்றது. அவாக்கடலைத் துன்பக் கடலாக வருணித்தமையால், ``தவாக்கடல்`` என்றது இன்பக் கடலாயிற்று.
இதனால், மக்கள், தேவர் பிறப்பினையும் ஆசை பயனில்லன ஆக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.

பொழிப்புரை :

ஞானிகளாயினார் செய்யும் வீட்டு நெறிச் செயலாவன, (தீக்கையால் எரிக்கப்பட்டு ஒழிந்த சஞ்சித வினைபோக, முகந்து கொண்டு) எஞ்சி நின்ற பிராரத்த வினைத் தாக்கத்தையும், கருவி கரணங்களால் நிற்கும் மாயையின் தாக்கத்தையும் வாசனை யளவாய் நிற்கும் ஆணவத்தின் தாக்கத்தையும் முன்போல நீடியாது (சிவஞானபோதப் பன்னிரண்டாம் சூத்திரத்திற் கூறிய முறையால்) உடனே தடுத்துப் போக்கித் தூய்மையோடிருத்தலும், ஐந்தொழில் முதல்வர் செய்யும் ஐந்தொழிலின்றும் நீங்கிச் சிவனது திருவருளைப் பெற்று அவற்றால் அவனை நேரே கூடி அவனது இன்பத்தில் மூழ்குதலுமேயாகும்.

குறிப்புரை :

`பின்னும் பின்னும் ஆசையில் வீழ்ந்து அழிவதன்று` என்பதாம்.
``தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்``*
என்றருளினார் திருவள்ளுவர். பிணி - கட்டு; நோயுமாம். வினையை முன்னர்ப் பிரித்தமையால் பிணி ஏனையவாயின. `பின்றை` என்பதன் ஈற்று ஐகாரமும் அதன்பின் உம்மையும் தொகுத்தலாயின. ``பின்றை`` என்பது, `மற்று` என்னும் பொருளதாயிற்று. பேர்த்தல் - நீக்குதல் அருள்பெற்று, நேர்த்துன்றி` என இயைக்க. அழுந்துதலுக்கு இடம் ஆற்றலால் பெறப்பட்டது. தூய்மை - வீடு. இஃது அதற்குரிய செயல்களைக் குறித்தது.
இதனால், `ஆசை அற்றொழிதற் பொருட்டு ஞானிகள் செய்யும் செயல்கள் இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம்
பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.

பொழிப்புரை :

பொருளியல்புகளை உள்ளவாறு உணருமாற்றால் பொய்ப் பொருள்களில் ஆசையை அறத்தொலைத்து, மெய்ப் பொருளை உணர்ந்து நிற்றலால் அடையப்படும் வீடு பேறே ஒருவனுக்குச் சிறந்த பேறாகும். அவ்வாறன்றிப் பெண்ணாசையை மட்டும் தொலைத்துப் புகழ், பொருள் முதலியவற்றை அவாவி யோகத்தில் நிற்றலால் பெறும் பேறு அட்டமாசித்திகளாம். (அவை பிறப்பை நீக்காமையால் `பேறு` எனப்படா) மற்று, மேற்கூறியவாறு மெய்யுணர்தலால், ``உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காக்கும்``3 திறம் பெற்ற ஞானி தனுவோடு (உடம்போடு) இருப்பினும் அவனது தனு சிவதனுவேயாகும், பிராரத்தம் முடிந்தபின் அத்தனு நீங்கினால், அவன் சிவனை மிக அணியனாய் அணைதற்குரிய அருளைப் பெற்று அணைவான். அணைந்தபொழுது சிவனிடத்தே அன்பு மீதூர்ந்து அவன் சிவனது இன்பத்திலே அமைதியுடன் திளைத்திருப்பான்.

குறிப்புரை :

சிவ தனுவின் பெருமை திருவுருத்திரத்துள் பின்வருமாறு கூறப்பட்டது.
``மகாருத்திரரே, உலகியலாகிய பிணிக்கு
மருந்தாய் உள்ளதும், உம் அருளைப்பெற்றுள்ள
உருத்திரருடனும் இரண்டறக் கலந்து உயிர்க
ளுக்குத் துன்பத்தை நீக்கி, இன்பத்தைத் தருகின்ற
மருந்தாய் உள்ளது மான உமது, சத்திமய
மான நன்மை மிக்க எந்தத் தனு
(உடம்பு) உண்டோஅந்தத் தனுவினால்
எங்களை நல்வாழ்வு வாழ அருளும்``*
இன்னும் அதனுள் அதுபற்றி,
``உருத்திரரே, (கயிலை) மலையில் வீற்றிருந்து
உலகிற்கு இன்பம் ஊட்டுபவரே,
சாந்தமானதும், நன்மை மிக்கதும்,
வினையற்ற நிலையை (வீட்டினை)
விளக்கி நிற்பதுமாய் எந்தத் தனு
உள்ளதோ அந்த உம்முடைய தனுவால்
எங்களுக்கு உண்மை விளங்கும்படி
அருள்வீராக`` 3
என்றும் கூறப்பட்டது. `சிவ ஞானிதன் தனுவும் இத்தகையதாகிய சிவ தனுவே` என்றற்கு, ``சிவ காயம்`` என்றார். ``உற`` என்பதன் `வரும்` என ஒரு சொல் வருவித்து `வரும் முத்தியே ஒண் சித்தியாம்` என முடிக்க. பெண் மயல் கெடுதல் `நியமம்` என்பதை உணர்த்திப் பின்யோகத்தையும் உணர்த்திற்று. `கெட்டறல்`, ஒருபொருட் பன்மொழி. பேறு - பெறப்படுவது. திண்மையின் ஞானி - திண்மையை (மன உறுதியை) உடைய ஞானி. `அண்மையாய்` என ஆக்கம் வருவிக்க. அடைந்தபின் அன்பு மேன்மேற் பெருக, அதனானே இன்பம் மேன்மேல் எல்லையின்றி விளையும் என்க. ``அன்பே இன்பமாம்`` என்பதை,
``இன்பில் இனிதென்றல் இன்றுண்டேல், இன்றுண்டாம்; அன்பு நிலையே அது``l
என்னும் திருவருட் பயனால் அறிக. அறிந்தாலன்றி அன்பு உண்டாகாது, ஆகவே, ஞானத்தின் பயனே பத்தியாம். இதனைச் சேக்கிழார்
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்``
என்று அருளியது காண்க. சில சமயிகள், `ஞானமே முடிநிலையானது` எனக் கூறிப்பத்தியைப் படிநிலையாகக்கொள்வர். அவர்களை,
``வித்தினைத் தேடி முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவதங் கென்பெணே உந்தீபற``3
எனவும், அவர்களது சமயங்களையும் சமய நூல்களையும்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவி யறாதேஎன் றுந்தீபற;
அவ்வுறை கேளாதே உந்தீபற``l
எனவும் திருவுந்தியார் கூறிற்று, இது பற்றி,
``வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்
வித்தும அதன் அங்குரமும் மெய்யுணரில் - வித்ததனில்
காணாமை யால் அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால் அற்றார் பேறு``9
எனக்கூறிய திருக்களிற்றுப்படியாரையும் நோக்காது`` முளையைக் கைவிட்டவர்`` என்பதற்குப் பிறிதுரை உரைத்தாரும் உளர். சாவி போதலாவது, விளைத்த பயிர் கதிர்விட்டு முற்றியும் நிரம்ப முற்றிப் பயன்படும் அளவிலே அங்ஙனமாகாது காய்ந்து பதராகி விடுதல். ஞானத்தைத் தந்தும், அதன் பயனாகிய அன்பைத் தராதுபோதற்கு இஃது உவமையாயிற்று. இனித் திருக்களிற்றுப்படியாருள், ``காணாமையால் அதனைக் கைவிடுவர்`` என்றது பிற சமயத்தாரைக் கருதியும், `கண்டவர்கள் - பேணாமையால் அற்றார் பேறு`` என்றது சித்தாந்த சைவருள்ளும் நூலறிவு பெற்றும் நுழைவின்றிப் பத்தி செய்யாதாரைக் கருதியும் என்க.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``*
என்னும் திருக்குறள் இங்கு நெஞ்சிற்பதிக்கற்பாலது.
``நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக``* என அம்மையார் அருளிச்செய்தார். இவ்வாறான அருமை தோன்றுதற்பொருட்டே ``இறுதியில் அன்பின் ஆறும்`` என்று அருளிச்செய்தார். ஆறும் - அமைதியுறும்.
இதனால், ஞானத்தால் இருவகைப் பற்றும் அற்ற மெய் யுணர்வால் அறுக்கப்படும் அவா அறுதியே சிறந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

`அவன் இவன் ஈசன்` என்(று) அன்புற நாடிச்
`சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார்
பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப்
புவன் இவன் போவது பொய்கண்ட போதே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனையே முதற் கடவுளாக உணர்தலே, முன் மந்திரத்திற் கூறியவாறு உண்மையை உணர்தலாகும். அவ்வாறின்றி, பிற கடவுளரை, `அவனே கடவுள், இவனே கடவுள்` என உணர்ந்து அன்பு செய்வன எல்லாம் இறையன்புகள் ஆகா; உயிர் அன்புகளே. தான் உண்மையை உணர்ந்துவிட்டதாகக் கருதிய ஒருவன் அதன் பின்னும் வலிய பலவகைப் பிறவிகளாகிய தேரினை ஊர்ந்து, பலவகைப் புவனங்களாகிய வீதிகள்தோறும் பவனி வருதல் அவன் பொய்யை மெய்யாகத் திரிய உணர்ந்த பொழுதேயாம்.

குறிப்புரை :

``அன்புற நாடி`` என்பதை, நாடி அன்புற்று`` என மாற்றிக் கொள்க. `வன் பல்வகையாம் இப்பிறவியில் புவனியில் இவன் பவனி போவது பொய்கண்டபோதே என இயைத்துக்கொள்க. `வன்பிறவி, பல்வகையாம் பிறவி` எனத்தனித்தனி முடிக்க. பிறவியில் உழலுதலைப் பவனியாக உருவகித்து, ஏனையவற்றை உருவகம் செய்யாமை ஏகதேச உருவகம். தொடர் வேறாதலின், ஈற்றடியில் ``இவன்`` என்றது பன்மையொருமை மயக்கம் ஆகாமை யறிக. ``இவன்`` இரண்டில் முன்னது, `சிவனாகிய இவன்` என இருபெயரொட்டாய் அண்மைச் சுட்டுப் பெயர். பின்னது, மேற்கூறிய உணராருள் ஒருவன். `புவனி` என்பதன் ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், சிவபத்தியாலன்றிப் பிற தேவர் பத்தியால் பதவி ஆசைகள் நீங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே.

பொழிப்புரை :

துன்பத்தைக் காய்தலும், இன்பத்தை உவத்தலும் ஆகிய இத்தன்மைகளையே உள்ளத்தில் உறுதியாகக் கொள்ளும் முறைமையையுடையதே இவ்வுலகம் முழுதும், ஆயினும், அந்தத் துன்ப இன்பங்கள் அவற்றிற்குக் காரணமான புலன்களைக் கொணர்ந்து பொருத்துகின்றவர் ஐம்பொறிகளாகிய துட்டரேயாகலின், அவரை உலகம் வெறுத்தொதுக்கி, அழியும் தன்மையுடைய இவ்வுடம்பில் இருந்துகொண்டே சிவநூல்களின் வழி நிற்றலே தக்கது.

குறிப்புரை :

`நிற்பின் அவா முற்றும் அறும்` என்பது குறிப்பெச்சம். பதிக்கின்றவாற்றை உடையதனை, ``பதிக்கின்றவாறு`` என்றார். ``பாரகம்`` என்றதும், `உலகம்` என்றதும் உயிர்களை விதித்தல், இங்கு தப்பாது பொருதுதல். `நொடிகின்ற` என்பது, எதுகை நோக்கி திரிந்து வலிமிகுந்தும் நின்றது. நொடிதல் - அழிதல், அது ``நொடித்தான் மலை``9 என்றமையானே விளங்கும். ``நூல்`` என்றது, இங்கு அதிகாரத்தால் சிவநூலையே குறித்துக் கருவியாகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் நெறியைக்குறித்தது. அந்நெறியில் சொல்லப்படுவனவற்றுள் பத்தியே தலையானவாதாகையால், ``ஒன்றல்`` என்றது அதனை ஒன்றுதலாகவே கொள்க. சிவ பத்தி மிகின், உலக ஆசை தோன்றாமை அறிக.
இதனால், ஆசையை அறுத்தற்கு உண்மை வழி சிவ பத்தியாதல் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதற்குப்பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற, ``உய்ந்தனம் என்பீர்; உறுபொருள் காண்கிலீர்`` என்னும் மந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் `யோகம்` என்னும் அதிகாரத்தில் வந்தது]

பண் :

பாடல் எண் : 1

முத்திசெய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரானைச்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தன் பரசும் பசுபதி தான் என்றே.

பொழிப்புரை :

வீடுபேற்றைத் தருகின்ற ஞான நூலைக் கற்கின்ற கல்வியின் பயனாயும், அவற்றைப் பற்றிக் கேட்கின்ற கேள்வியின் பயனாயும் உள்ளவனும், உலகிற்குத் தந்தையும் தேவர்கட்குத் தேவனும், தான் இயல்பாகவே தூயனாய், உயிர்கள் தூய்மை அடைதற்குரிய வழியாய் நிற்பவனும், அறிவே வடிவாய் உள்ளவனும் ஆகிய சிவனையே, `உயிர்கட்குத் தலைவன்` என்று உணர்ந்து இறையன் புடையோன் போற்றுவான்.

குறிப்புரை :

``பத்தன்`` என்பது சாதி யொருமை. பாசப்படுதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலாகக் கூறப்பட்டது. ``ஞானமும் கேள்வியும்`` என்றது ஆகுபெயராய், அவற்றின் பயனைக் குறித்தது.
இதனால், `இறையன்பாவது இது` என உணர்ந்தார் பத்திசெய்யும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அடியார் அடியார் அடியார் அடிமைக்(கு)
அடியனாய் நல்கிட்(டு) அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட்ட
`அடியான் இவன்` என்று அடிமைக்கொண்டானே.

பொழிப்புரை :

சிவனுக்கு அடியராயினார்க்கு அடியர் ஆயினார் சிலர் அவர்கட்கு அடியராயினார் சிலர். அவர்கட்கு அடியராயினார் மற்றும் சிலர் அவர்கட்கே நான் அடியவன் ஆக என்னைக் கொடுத்து அடியவனாகி, அடிமைகட்குரிய பணிகளைச் செய்வதையே எனது கடமையாகவும் மேற்கொண்டேன். அதனால் என்னை ஆளாக ஏற்றுக் கொண்ட அடியார்கள் என்மேல் கருணை வைத்து அந்தப் பெரு மானுடைய திருவடிகளில் என்னைச் சேர்ப்பிக்க, அப்பெருமானும் என்னைத் `தனக்கே அடியவன்` என்று சொல்லி, நேராகவே என்னை அடிமை கொண்டான்.

குறிப்புரை :

அடியார்க்கு அடியாரைப் பலராகக் கூறியது, `அன்று தொட்டு இன்று காறும் அடியவர் பரம்பரை தொடர்ந்து வருகின்றது` என்பதை உணர்த்தற்கு. `அந்தப் பரம்பரையில் வந்த எந்த அடியவர்க்கு அடிமை பூண்டாலும், அவர்களைச் சிவன் நேரே தன் அடியவராக ஏற்றுக்கொள்வான்` என்பதே இங்கு உணர்த்தப்பட்டது.
``திருப்பா திரிப் புலியூர்
உடையான் அடியார் அடிஅடி யோங்கட்கு
அரியதுண்டே`` -திருமுறை - 4.94-3.
``தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே``3 எனப்போந்த திரு மொழிகளுடன் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தையும்l உற்று நோக்குக. ``சீரணி குருசந்தானம்``* என்றதும் இக்கருத்தே பற்றி. முதலடியின் ஈற்றில், ``அடிமை`` என்றதும் `அடிமை` செய்யும் அடியரையே. `நல்கியிட்டு` என்பது குறைந்து நின்றது. `நல்கிட்டு அடியனாய்` என மாற்றுக.
இதனால், அடியார் அடியார், அடியடியார் பத்திகளே சிவபத்தி யாதல் கூறப்பட்டது.
``எனக்கன்பு நின்பொருட்டு எய்தாத தென்கொல்!
வெள் ளேறுடையான்
றனக்கன்பு செய்திருத் தாண்டக வேந்த, இத்
தாரணியில்
நினக்கன்பு செய்கின்ற அப்பூதியைச், சிவ
நேசம்உறும்
இனர்க்கன்பு செய் நம்பி யாரூரன் ஏத்தும்
இயல்பறிந்தே``
-நால்வர் நான்மணி மாலை - 6.
என்னும் சிவப்பிரகாச அடிகள் திருமொழியும் இங்கு உணரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆர்இக் கடன்நந்தி ஆமா றறிபவர்
பாரில் பயன்ஆரைப் பார்க்கிலும் நேரியன்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் குளிர்ச்சியால் இருக்க வேண்டிய சமையத்தில் நீரைவிடக் குளிர்ச்சியாய் இருப்பான். சுடவேண்டிய சமையத்தில் நெருப்பை விடச் சூடாகச் சுடுவான். (இரண்டும் கருணையே). அவனது முறை இவ்வாறாதலை அறிய வல்லார் ஆர்! நிலவுலகில் உள்ளார்க்குப் புலனாகாமலே சூக்குமமாய் இருந்து, அவர்கட்குப் பயன் தருகின்ற தேவர் பலரையும்விடச் சிவன் அதிசூக்குமன் ஆயினும், அவன் உயிர்களின் பொருட்டு ஊர்கள் தோறும் உமாதேவிக்குக் கணவனாய், அவளோடும் எழுந்தருளிக் காட்சியளிக்கின்றான்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவ்விடங்களில் சென்று பத்தி செய்க` என்பது குறிப்பெச்சம். ``நந்தி`` என்பதை முதலிற்கொள்க. இடையில் வருவித்துரைத்தன இசையெச்சங்கள். ``பயன்`` என்பதன்பின் `தரும்` என ஒருசொல் வருவிக்க. நேர்மை - சூக்குமம். இது பருமைக்கு எதிரானது. உமாபதியாகி நிற்றல், `உலகனைத்திற்கும் அம்மையும், அப்பனும் தானே` என்பது தோன்றுதற்கு, `அதனை யுணரின் பத்தி தானே பெருகும்` என்பது கருத்து.
இதனால், சிவன் உருப்பத்தி சிவ பத்தியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒத்துல கேழும் அறியா ஒருவன்என்
றத்த னிருந்திடம் ஆர்அறி வார்செல்லப்
பத்தர்தம் பத்தியின் பாற்படி னல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே.

பொழிப்புரை :

அன்பரது அன்பில் சென்றாலல்லது, `அனைத் துலகங்களாலும் அறிய இயலாத ஒருவன்` எனச்சொல்லப்படுகின்ற சிவன் இருக்கின்ற இடத்தை அறிந்து சென்றடைய வல்லார் யாவர்? அவ்வாறே, அன்பர்கள் தம் அன்பிற்கண்டு சொன்னாலல்லது, கிடைத்தற்கரிய முத்துப்போன்ற அவனைக் கண்டு சொல்ல முற்படுவார் யாவர்? ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

சிவனை அவன் அன்பர்களல்லது பிறர் காணவும், சொல்லவும் வல்லாரல்லர்` என்றபடி.
``சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க``3
என்றருளிச் செய்தமை யறிக. `ஒருவன்` என்பது சிவனைக் குறிக்கும் ஒருபெயர்.
``ஒருவன் என்னும் ஒருவன் காண்க``9
``ஒருவன் என்று உலகம் ஏத்தும்
நளிர்மதிச் சடையன்``8
எனத் திருவாய்மொழியுள்ளும் வந்தது. `என்ற, இருந்த` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின. `ஆரறிவார் சொல்ல` என்பது பாட மன்று; அது பின்னர் வருதல் காண்க. ``பததர்தம் பத்தியின் பாற்படி னல்லது`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்தது. அங்ஙனம் இயையுங்கால் ``தம்`` என்பது முன்னர்ச் சாரியையாயும், பின்னர்ப் பெயராயும் நின்றது.
இதனால், `பத்தி யுடையாரே சிவனைக் காணவும், சொல்லவும் வல்லார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல
நான்கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றான் நாடிவந் துள்புகுந் தானே.

பொழிப்புரை :

தாயைப் பிரிந்த பசுக்கன்று தன் தாயை நாடி அழைப்பதுபோல, சிவன் ஆவாய் இருக்க, நான் அவனைப் பிரிந்து வாடும் கன்றாய் இருந்து, என் தலைவனாகிய அவனையே நாடி, `அப்பாவோ! ஐயாவோ!` எனப் பன்முறை அழைத்தேன்; அவன் வானுலகத்திலுள்ள பசுக்கன்றுகள் போலும் தேவர்கட்கெல்லாம் அப்பால் நிற்கும் வேதப்பொருளாயினும் எனது கூக்குரலைச் செவிமடுத்து, உருவம் யாதும் கொள்ளாமலே என்னைத் தேடி வந்து, என் உள்ளத்துள்ளே புகுந்தான்.

குறிப்புரை :

`நான் மகிழ்ந்தேன்` என்பது இசையெச்சம். `ஆனை` என இரண்டன் உருபு விரிக்க. ``கன்றாய்`` என்னும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. தேவர்கள் பசுவர்க்கத்தினராகலின் `பசு` என்றும், அவர்கள், `தாம் கன்றுகள்` என்பதையும், `சிவன் தாய்ப்பசு` என்பதையும் நினைந்து அவனை அழைத்தல் இன்றிச் சுக போகங்களில் ஆழ்ந்து கிடத்தலால் `அவர்கட்கு அப்பாலாய்` என்றும், `எனினும், மெய்யுணர்வார் அவனை அழைத்தே நிற்பர்` என்றற்கு, ``மறைப் பொருள்`` என்றும் கூறினார். `மறைப்பொருள் ஆமவன்` என்க. ஊன் - உடம்பு கன்றுதல் - விடாது பற்றுதல், `ஊன் கன்றானாய் வந்து புகுந்தான்` என்க. இங்ஙனம் கூறியது, `அவன் புறம் நின்று போதராமல், அகம் நின்ற நிலையையே விளக்கியருளினான்` என்றபடி.
இதனால், `பத்தியுடையார் சிவனை யின்றியமையாது அலமருவர்` என்பதுவும், `அவர்கட்குச் சிவன் நேர்வந்து அருளுவன்` என்பதும் கூறப்பட்டன.
``உடையான் கழற்கு அன்பிலை;
... ... துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றிலை; தெருவுதோ றலறிலை;
செய்வதொன் றறியேனே``*
எனவும்,
`` ... ... வியந்து ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ்விடத்தான்?
எவர் கண்டனர்? என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள்ளுருகேன்;
நின்று உழைத்தனனே``9
எனவும், பிறவாறும் போந்த பத்தித் திருமொழிகளைக் காண்க.
`ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே`*
எனத்தொடக்கத்தேயும் இவர் கூறினார்.

பண் :

பாடல் எண் : 6

பெத்தத்தும் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்தும் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலால்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.

பொழிப்புரை :

உயிர்களின் நிலை `பெத்தம், முத்தி` என இரண்டு. பெத்தம், பாசங்களிற் கட்டுண்ட நிலை. முத்தி, அவற்றினின்றும் விடு பட்ட நிலை. இவ்விரண்டு நிலைகளிலும், `உயிர்களின் செயல்` என்று ஒன்று இல்லை ஏனெனில், பெத்தத்தில் உயிர்கள் பல பிறவிகளில் சென்று உழல்கின்றன. அப்பிறப்புக்களைத் தருபவனும், வாழுங் காலத்து இன்பத் துன்ப நுகர்ச்சிகளை அவற்றிற்குரிய பொருள்களைத் தந்து ஊட்டுவிப்பவனும், பின்பு அந்தப் பிறவியை நீக்கிவிடுபவனும் எல்லாம் சிவனே. அதனால், பெத்தத்திலும் அவற்றிற்கென்று ஒரு செயல் இல்லை. இனி, முத்தியாவது சிவன் குருவாய் வந்து ஞான தீக்கை செய்து வினைக்கட்டினை அறுத்து அதினின்று விடுவிப்பது. அந்நிலையிலும் உயிர் அவன் காட்டிய வழியில் நடத்தற்குரியதே யன்றித் தானாக எவ்வழியிலும் செல்லாது. மேலும் ஞான தீக்கையில் உயிர் தனது, உடல், பொருள், ஆவி அனைத்தையும் சிவன் கையில் முழுமையாக ஒப்புவித்துவிடுகின்றது. இவ்வாற்றால், பெத்தம், முத்தி யிரண்டிலும் உண்மையில் உயிருக்கென்று ஒரு செயல் இல்லை. ஆயினும் மயக்கத்தால் உயிர்கள் பெத்தத்தில் நிகழும் செயல்களைத் தம் செயல்களாகவும், முத்தர்கள் செயலையும் அவரது செயல்க ளாகவும் கருதி மயங்குகின்றன. ஞானம் கைவரப்பெற்று பத்தி மிகுந் தவர்க்கு அத்தகைய மயக்கம் இன்றி, உண்மையே விளங்கி நிற்றலால், தமக்கும் பணியாதும் இல்லையாகும் நிலை அவர்கட்கே உள்ளது.

குறிப்புரை :

``தன்`` என்றது சாதியொருமை. ``பிறத்தலால்`` என்றது, `தம் வயம் இன்றிப் பிறத்தலால் என்றபடி. பிறத்தல் கூறவே, வாழ்தலும், இறத்தலும் பெறப்பட்டன `முத்தி` என்பது எதுகை நோக்கி, `முத்தம்` என இகரம் தொகுத்து அம் விரிக்கப்பட்டது. முறைமை - குரு கற்பித்த முறைமை. இரண்டு, பெத்த நிலை, முத்தி நிலை, அருளால் அருளின்படி. அளித்தது, அருளைத் தந்தவனுக்கு. ``தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னை`` (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 10.) என அருளினமை காண்க.
இனி ஒருபோது அளித்தமையை எப்போதும் மறவாமைப் பொருட்டு அவர் எல்லாச் செயல்களையும் `சிவனுக்கு ஆகுக, சிவனுக்காக` என அருள் வழி நின்று சொல்லி முடிப்பர். `இவ்வாற்றால் பணிச் சுமை யாதும் இல்லாதார்க்குப், பத்தி மேலும் மேலும் பெருகி முதிரும்` என்பது கருத்து.
இதனால், பத்தி யுடையார்க்கு அப்பத்தி மேலும் மேலும் பெருகி முதிருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பறவையிற் கர்ப்பமும் பாம்பும்மெய் யாகக்
குறவம் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவன்என் றென்மனம் ஏத்தகி லாதே.

பொழிப்புரை :

உபநிடதம் கூறுமாறு ஐந்து பறவைகள் போன்றுள்ள ஐந்து உடம்புகளுள்ளும் உள்ளீடாய் நிற்கின்ற ஆன்மாவும், அன்ன மயம், பிராணமயம் என்னும் உடம்பினுள் பாம்பு வடிவாய் உள்ள குண்ட லினியும் பொதுமை நீங்கி, உண்மை நிலையை அடைந்திருக்க, அவ் வுடம்புகளுள்ளே மலையில் வாழும் குறவர்கள் இசைக்கும் இசைபோல எழுகின்ற நாதங்கள் ஒலிக்க, அமிர்தத்தால் குளிர்ந்திருக்கின்ற, விந்துத் தானமாகிய, `மேரு` எனப்படும் ஆஞ்ஞையை அடைந்து அங்குக் கொல் -லாமை முதலிய எட்டையும் எட்டு மலர்களாகக் கொண்டு வழிபட்டுத் `தியானம்` செய்யும்பொழுது, எங்கள் சிவபெருமானையன்றி, எனது மனம் வேறொருவனை `இறைவன்` என்று கொண்டு தியானியாது.

குறிப்புரை :

தைத்திரீய உபநிடதம் ஆனந்த வல்லியில், ஐங்கோசங் -களையும் தனித்தனிப் பறவையாகவும் அவற்றின் உறுப்புக்களைத் தனித்தனி ஐந்தாக வைத்து, முகம் முதலிய உறுப்புக்களாகவும் உருவகம் செய்து கூறிற்று. அதனை, மாதவச் சிவஞான யோகிகள்,
``ஆன்மா இத் தரை கீழ் மேலும்
கொள்ளி வட்டம் கறங்கென
நிமிடத்தின்கண் அலமரும் படி
கொண்டு திரிதல் பற்றி இவ்
வைங்கோசங்களை ஐந்து
பறவையாகவும், அவற்றுள் ஒரோ
ஒன்றை ஐவகைப் படுத்து முகம்
முதலிய உறுப்புக்களாகவும்
வேதத்துள் உருவகஞ் செய்
துணர்த்தியவாறு``
முண்டகோபநிடதம், மூன்றாம் முண்டகத்தில், ஆன்மாவையே பறவையாக உருவகம் செய்து, `அஃது உலகமாகிய மரத்தில் அமர்ந்து, அதில் உள்ள போகமாகிய பழத்தைப் புசிகின்றது` என்றும், `ஆயினும், அதனைவிட்டுப் பிரியாது இணைந்து உடன் இருக்கின்ற மற்றொரு பறவை அந்தப் பழத்தை உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றது` என்றும் கூறிற்று. உண்ணாமல் பார்த்துக்கொண்டிருக்கின்ற பறவை சிவன்.
பறவை உடம்பை எடுத்த உயிரும் `பறவை` என்றே சொல்லப் படுதல் பற்றி முண்டகோபநிடதம் ஆன்மாவையே (பறவை) என்றது. ஆயினும் உண்மையில் பறவையாவது, பறவை உடம்பே ஆகையால், தைத்திரியோபநிடதம் ஐவகை உடம்புகளையே ஐந்து பறவைகளாகக் கூறிற்று. இங்கு நாயனார், ``பறவை`` என்றது உடம்பையே. கர்ப்பம் - சூல்; உள்ளீடு உடம்பின் உள்ளீடாவது ஆன்மா. குறவர் பாடும் இசையை, ``குறவம்`` என்றார். ஆஞ்ஞையை `மேரு` என்பதால், அதன் கீழ் ஒலிக்கின்ற நாதத்தை, ``குறவம்`` என்றார். சிலம்புதல் - ஒலித்தல். இதனை, மேல், ``மணி கடல் யானை``l என்னும் மந்திரத்தும் குறித்தவாறு காண்க. கொல்லாமை முதலிய எட்டாவன, `கொல்லாமை, ஐம்பொறியடக்கல் பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` என்பன. 9 இவை எண்வகை யோக உறுப்புக்களில் இயம நியமங்களாய் வருதல் காண்க. ஏத்துதல், இங்குப் பொதுமையில் `வழிபடுதல்` என்னும் பொருட்டாய்த் தியானத்தைக் குறித்தது, குளிர் வரை ஏறியபின் செயற்பாலது அதுவேயாகலின்.
இதனால், சிவ பத்தியே இறை பத்தியாவதன்றிப் பிற பத்திகள் இறை பத்தியாகாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறுதுணை செய்து சிவனடி சிந்தித்(து)
உறுதுணை யாய் அங்கி யாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், தன்னையே நெருங்கி நிற்கும் துணைவனாக உணர்ந்து, தனது திருவடிகளைச் சிந்தித்தவழிக் கிடைக்கும் துணைவனாயும், ஒளி விளக்காயும் உள்ளான். அவனையன்றிப் பெருந்துணைவரும், பெறத்தக்க துணைவரும் வேறிலர். (ஏனெனில், பேரருளால் உயிர்களின் பிறப்பை அறுப்பவன் அவனேயாகலின்) ஆகையால், உணர்வுடையீர், அதனை உணர்ந்து அவனையே துணையாகப் பற்றிப் பிறப்பையறுத்துப் பிழையுங்கள்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, அதனுள்ளும் ``சிவன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. செய்தல், இங்குக் கருதுதலைக் குறித்தது. ``உறுதுணை`` இரண்டில் முன்னது உரிச் சொற்றொடர்; பின்னது வினைத்தொகை. அங்கி- தீ. அஃது இங்கு விளக்கைக் குறித்து, அறிவை விளக்குதலைச் சுட்டிற்று. `அறிவுத் துணையே துணையாவதன்றி, உடற்றுணை துணையாகாது என்றபடி.
இதனால், `சிவன் ஒருவனே அறிவுத் துணையாகலானும், உற்றாரை உறுபவன் ஆகலானும் அவனையே துணையாகப் பற்றிப்பத்தி செய்து பயன்பெறல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரம் சென்ற தலைவனை
கானவன் என்றும் கருவரை யான்என்றும்
ஊனத னுள்நினைந் தொன்று படாரே.

பொழிப்புரை :

தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களது மூன்று கோட்டைகளைத் தன் சிரிப்பினாலே ஒரு நொடியில் சாம்பலாக்கி அழித்த தலைவன் சிவன். அவனைச் சிலர், `காட்டிலே ஆடுபவன்` என்றும், `கரிய மலையில் வாழ்பவன்` என்றும் தங்கள் ஊன் உடம்பின் உள்ளுக்குள்ளாகவே இகழ்ந்து, அவனைக்கூடார் ஆயினார்.

குறிப்புரை :

`அஃதவர் வினையிருந்தவாறே என்பது குறிப்பெச்சம்.
`ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண்கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல்``3
என்பனபோலும் சான்றோர் மொழியினை உணராதார் பிணங்குவர் என்பது முதல் இரண்டடிகளில் குறிக்கப்பட்டது. `ஒன்றுபட்டார்` என்பது பாடமாயின், `அவனது பெருமையை உணர்வினால் உணர்ந்து, அகமாகிய உள்ளத்துள் தியானித்துச் சமாதி நிலை கூடினர்` என உரைக்க. சிவன் இருப்பது வெள்ளிமலையாயினும், முகில்கள் தவழ்தலும், பசுமை படர்ந்திருத்தலும் பற்றி, `கருவரையான்` என்றார். `ஒன்றுபட்டார்` என்பதையே பாடமாகக்கொள்வார், `கரு - பிறப்பை. வரையான் - ஏற்காதவன்` என உரைப்பர்.
இதனால், உண்மை உணராதார் பத்திசெய்து பயன் பெறும் இடம் அறியாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நிலைபெற கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் ஊழ்த்துநின் றானே.

பொழிப்புரை :

உலகனைத்தையும், `இவை சிலகாலம் நிலைபெற்றிருந்து, பின் `ஒடுங்குக` என்று சங்கற்பித்துப் படைத்த தலைவன் எங்கேயிருக்கின்றான்`` என்று அவனைக் காணத்தேடி என் உள்ளம் திகைத்தது. பின்பு அவன் தேட வேண்டாது எங்கும் நிறைந்து, உயிர்களின் புறத்தும், அவனைத்தேடித் திகைக்கும் உள்ளத்தும் `புறம், அகம்` என்னும் வேறுபாடின்றி விளங்குதலைக்கண்டு வியந்தேன்.

குறிப்புரை :

`கெட` என்னும் வியங்கோள்முற்று ஈறுதொக்கு, முதல் நீண்டு `கேட்` என நின்றது. அது, `கேடு` என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயரன்று. ``தயங்கும்`` என்றது. இறந்த காலத்தில் நிகழ்கால முற்று. `எவ்விடத்தும்` என்றற்கு மலையையும், வானத்தையும் உபலக்கணமாகக் கூறினார். உலைதல் - வருந்துதல். ``உள்ளும் உள்ளத்தும்`` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் நிற்க, `உலை` என்பது அதனோடு தொக்கு வினைத்தொகையாயிற்று. ஊழ்த்து நிற்றல், காண்டற்குரிய செவ்வியோடேயிருத்தல். `நின்றான்` என்றது, அதன் பயனாகிய வியப்பைக் குறித்து நின்றது.
இதனால், பத்தி செய்வார்க்குச் சிவன்தேட வேண்டாது, இருந்த இடத்தில் இருந்தே காணப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியில் உற்றோர் பரானந்தர் போதரே.

பொழிப்புரை :

முத்தி நிலையை அடைந்தவர் சிவனது திருவருளை முழுமையாகப் பெறுவர். (எனவே, `ஏனையோர் சிறிது சிறிது பெறுவர்` என்றதாம்). அதனால், அவரே கருவி கரணங்களின் கட்டற்றவராவர் (கருவி கரணங்களோடு கூடியிருப்பினும் அவற்றால் உலகியலில் செல்லார்` என்பதாம்). ஆகவே, அவர் தன் முனைப்புக் கொண்டு `யான், எனது என்னும் வகையில்) உலகை நோக்கி ஒன்றைச் செய்தலும், அவ் வாறன்றிச் சிவனையே நோக்கி ஒன்றைச் செய்தலும் ஆகிய செயல்கள் எல்லாவற்றையும் விடுத்து, சொரூப சிவனிடத்து உண்மையான பத்தியில் மட்டுமே நிற்பர். அதனால், அவர் அடையும் ஆனந்தமே உண்மைப் பேரானந்தமாகும். உண்மை ஞானியரும் அவரே.

குறிப்புரை :

`தன்பணி` என்பது, பொதுவாகச் சீவபோதச் செயலை உணர்த்தும் ஒருசொல். `தன்பணியையும், மெய்த்தவத்தையும் செய்கை யாகிய வினையை விட்ட பத்தி` என்க. மெய்த்தவம், சிவனை நோக்கிச் செய்யும் செயல்கள். உலகியற் செய்கையை நோக்க மெய்த்தவம் சிறந்ததாயினும் அதுவும் நான்` என்னும் போகத்தோடு செய்வதேயாகலின், அப்போதத்தை விட்டவர்க்கு அதுவும் வினையேயாம் என்றற்கு, ``மெய்த்தவம் செய்கை வினை`` என்றார். இஃதே பற்றித் தாயுமானார், ``நான் பூசை செய்யல் முறையோ``3 என்றார் மெய், மெய்ப்பொருள், சொரூப சிவன் `மெய்யின்கண் செய்யும் உண்மைப்பத்தி` என்க. உண்மைப்பத்தி, பிறிது பயன் விரும்பாது, அவனையே விரும்பிச் செய்யும் பத்தி இங்கும் பத்தியையே முடிநிலையாகக் கூறினமை உணரற்பாலது.
இதனால், முத்தி நிலையின் இயல்புகள் எல்லாம் சுருக்கிக் கூறப்பட்டன. இவையும், அடுத்து வரும் மந்திரத்தில் வருவனவும் ஆகிய இயல்பினை உடையோரே சீவன் முத்தராவர்.

பண் :

பாடல் எண் : 2

வளங்கனி தேடிய வன்தாட் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே.

பொழிப்புரை :

(மேல், ``பறவையில் கர்ப்பமும்``9 என்னும் மந்திரத்தில் சொல்லியபடி) உலகமாகிய மரத்தில் தனக்கு இனிமையான பழத்தைத் தேடி அலைந்த சீவனாகிய பறவை, பின்பு அந்தப்பழம் தன்னுள்ளே யிருப்பதை அறிந்து அதனைத் தேடி அங்கு அலைந்துகொண்டிருக்கும் பொழுது, அதற்குக் கண்ணும், சிறகும்போல உதவுகின்ற அந்தக் கரணங்களாகிய நால்வரும் முன்புபோலத் தீயராய் இல்லாது நல்லவராய் விட்டமையால், அங்கே (உள்ளத்துள்ளே) மிக்கு விளங்குகின்ற பேரொளியிலிருந்து சிறு கைவிளக்கை ஏற்றிப் பிடித்து, அப் பறவைக்கு உதவி புரிகின்றனர்.

குறிப்புரை :

`பெத்த நிலையில் உலகியலில் ஈர்த்துச் சென்ற அந்தக் கரணங்கள், முத்தி நிலையில் சிவத்தை உணர்தற்குத் துணை புரிகின்றன` என்பதாம். `விளக் கனி, உளக் கனி` என்பன எதுகை நோக்கி, ஒத்த வல்லெழுத்து மிகாது, இனமெல்லெழுத்து மிக்கு முடிந்தன. தாள் - முயற்சி. களம் - இடம். `அக் களத்துக் கனிந்த அங்கி` என்க. கனிதல், இங்கே, மிகுதல், அங்கி - அக்கினி பேரொளி; பேரறிவு. `மலம் நீங்கிய உயிரின் அந்தக் கரணங்கள் பதிஞானத்தை உடையனவாகும்` என்பது உணர்க.
இதனால், சீவன் முத்தரது அந்தக் கரணங்கள் பாசத்தளை யாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்(து)
அம்மான் அடிதந்(து) அருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத்(து) எம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடம் சோதனை ஆகுமே.

பொழிப்புரை :

எல்லோரினும் பெரியவனும், பெருந்தலைவனும் சொல்ல வாராத பெரிய இன்பத்தைத் தன்னை அடைந்தவர்க்கு வழங்கி யருளும் அன்னதொரு பெருந்தகையை உடையவனும் ஆகிய சிவன் உம்முன் வந்து தனது திருவடிகளை எங்கள் தலைமேற் சூட்டினமையால் நாங்கள் அவனது திருவருளாகிய கடலில் மூழ்கினோம் அதனால், (நீருள் இருக்கும் மீனைச் சிச்சிலி கொத்தமாட்டாது ஓடி விடுதல்போல) பொய்யாகிய பாசங்கள் எல்லாம் எம்மைப் பற்றமாட்டாது நீங்கிவிட, நாங்கள் எங்களை அவனிடத்தில் ஒளித்து வைத்துச் சும்மா இருக்கின்றோம். இந்த நிலையில் எங்கட்குச் சோதனைகள் வருகின்றன.

குறிப்புரை :

அஃதாவது, `பாசங்கள் எங்களுடைய சோர்வை, மீன் நீரை விட்டு மேலே வரும் வரவைப் பார்க்கின்ற சிச்சிலி போலப் பார்க்கின்றன` என்பதாம். ஆகவே, `அப்பார்வை யினின்றும் நாங்கள் தப்புகின்றோம்` என்பது கருத்து. `பெம்மான் அம்மான்` என்னும் பொதுச் சொற்கள் சிவனையே குறித்தற்கு ``நந்தி`` என்னும் சிறப்புப் பெயரை இடையே பெய்தார். ``தந்து, விடுத்து`` என்பவற்றிற்கு `தந்தமையால், விடுத்தமையால்` என உரைக்க. `சும்மாதிருத்தல், வாளாதிருத்தல்` என்பனவே இலக்கணச் சொற்கள். அவை, `சும்மா, வாளா` என மருவி வழங்குகின்றன. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆகும் - தோன்றும்.
இதனால், முத்தி நிலையை அடைந்தவற்றை யெல்லாம் வகுத்துக் கூறி, இவற்றிற்குப் பின் சோதனை உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடும் கூடுவன் நானே.

பொழிப்புரை :

அறியாமையோடு கூடுதல் சிறிதும் இன்மையால், `அறிவுடையான்` எனப்படுதற்கு உரிமையுடையவனும், அரிய பெரிய வேதங்களில் எங்கும் பரவலாகப் போற்றப்படுபவனும், பெரிய தேவர்கட்கும் தேவனும், கண், செவி முதலிய பொறிகளையுடைய னாயினும் அவற்றால் அறியப்படுகின்ற ஐந்து புலன்களில் ஒருபோதும் தோய்வின்றித் தன்னிலையில் திரியாதிருப்பவனும், ஆகிய சிவனோடே யான் என்றும் கூடியிருப்பதன்றிப் பிரிதல் இல்லை.

குறிப்புரை :

இறைவனை, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``* என்றல் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்கும் தன்மை யுடைமை பற்றியேயன்றி, ஒரு காலத்தில் பாசத்தையுடையனாயிருந்து பின் நீங்கினவனல்லன் என்பது தோன்ற, ``அறிவுடையான்`` முதலிய மூன்றற்கும் பின்னர் இறுதியில் இதனைக் கூறினார். `இயல்பாகவே பாசங்களின் நீங்கினவன் எவனும் இல்லை` என்பவர், இதனை `ஒரு காலத்தில் புலனைக் கடந்தவனைக் குறிக்கின்றது` என்பர். இஃதே தொல்காப்பியத்துள் ``வினையின் நீங்கி விளங்கிய அறிவின் - முனைவன்``9 எனப்பட்டது. கூடுதல் பிரிவின்மையைக் குறிக்க வந்தது. `இயல்பாகவே பாசங்களால் பற்றப்படாது இருப்பவனைச் சார்ந்திருத்தலால், எம்மைப் பாசங்கள் வந்து அணுகுமாறில்லை` என்பது கருத்து. மிகுதேவர், காரணக்கடவுளர் மூவர். உம்மைகள், சிறப்பு. ``பொறியுடையான்`` என்பதன்பின், `ஆயினும், என்னும் சொல்லெச்சம் வருவிக்க. குறி - தன்னியல்பு. இதனால் மேல்,
``பதியணுகின்பசு பாசம்நில் லாவே``3
என்று அருளிச்செய்தபடி, பதியைச் சார்ந்து நிற்கும் உயிரைப் பாசம் பற்ற மாட்டாமைக்குக் காரணம் கூறப்பட்டது.
``சதசத்தாம் மெய்கண்டான், சத்து அருளிற் காணின்
இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதம்மிக்(கு)
எரிகதிரின் முன்இருள்போல் ஏலா அசத்தின்
அருகணையார்; சத்தணைவார் ஆங்கு``8
என்றதனை நோக்குக.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அறிவறிவென்றங் காற்று முகம்`` என்னும் மந்திரம், மேல், ``அறிவுதயம்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.3)

பண் :

பாடல் எண் : 3

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து)
அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம்என லாமே.

பொழிப்புரை :

குறியாக் குறி - தற்போதத்தால் தானே கொள்ளாது, குரு கொள்வித்தபடி கொண்ட இலட்சியம் கூடாத கூட்டம் - தற் போதத்தின் வழிச்சென்று புணராது, திருவருள் வழிச்சென்று புணர்ந்த புணர்ச்சி. அறியா அறிவு - தற்போதமாய் நின்று அறியாது, சிவ போதமாய் நின்று அறியும் அறிவு அவிழ்தல் பாசக்கட்டு நீங்குதல் எனவே, `குறியா ... ... அவிழ்ந்து` என்றது ``தானே கொள்ளாது குருவுணர்த்திய இலட்சியமாகிய சிவத்தில், தற்போதத்தால் முயலாது, திருவருள் வழியாக முயன்று ஒன்றுபட்டுபின்னும் அந்தத் திருவருளாலே அஃதொன்றையே அறிந்து நிற்குமாற்றால் பாசங்கள் நீங்கப்பெற்று` என்றதாயிற்று. பாசக்கட்டு நீங்கினமையால், பலவாகிய பொய்ப்பொருட்பற்றுத் தொலைய, ஒன்றாகிய மெய்ப்பொருளிடத்தே அன்பு மீதூர நிற்றலால், நன்னெறியாகிய அருட்சத்தியின் முதலாகிய அச்சிவத்தில் அவ்வருளால் அழுந்துதலாகிய இயற்கை இயைபே உண்மைச் சிவ சம்பந்தமாம்.

குறிப்புரை :

செறியாச் செறிவு - புதுவதாய்ச் சென்று இயையாது, முன்பே இயல்பாய் இயைந்துள்ள இயைபு, `சிவத்திற்கும், ஆன்மா விற்கும் இடையேயுள்ள அத்துவித சம்பந்தம், முன்பு இல்லாது பின்பு இடையே ஒரு காலத்தில் உண்டாகும் சம்பந்தம் அன்று: அஃது அனாதியேயுள்ள சம்பந்தம்` என்றபடி. எனவே, `சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்`* என்றது, முன்பு உணராதிருந்த அச்சம்பந்தத்தை உணர்தல் என்றதேயாம். `எல்லா உயிர்களிடத்தும் சிவனது அத்துவித சம்பந்தம் இயல்பாக உள்ளமை தோன்றவே, ``நின்றனவும், சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை அவர்க்கருள்செய்து`` எனக் குறித்தருளினார் சேக்கிழார்.*
``சென்றிவன்றான் ஒன்றில், சிவபூ ரணம்சிதையும்;
அன்றவன்றான் ஒன்றுமெனில் அன்னியமாம் -இன்றிரண்டும்
அற்றநிலை ஏதென்னில், ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றமற நின்றதுபோற் கொள்``*
என்னும் உண்மை விளக்கமும், இதனையே விளக்கிற்று.
பராநந்தி - பரைக்கு முதல்வனாகிய சிவன். `நந்தியின்கண்` எனவும், `நீடு அருளால்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. ``சிவம்`` என்றது, அதனோடு சம்பந்தம் ஆதலைக் குறித்தது. ``செறிவே`` எனவும் எனலாமே எனவும் போந்த பிரிநிலையும், தேற்றமும் ஆகிய ஏகாரங்கள், எத்தகைய சோதனையிலும் இந்நிலையினின்றும் சிறிதும் வழுவலாகாமையை உணர்த்தி நின்றன.
இதனால், `சோதனைகளால் சலியாது நிற்றற்குரிய நிலை இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போல் உளன் எம்மிறை
காவலன் எங்கும் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களிலும் தங்கியிருத்தல் பற்றி, `இறை` என்றும், எல்லா உயிர்களையும் பாதுகாத்தல் பற்றி, `பதி` என்றும் சொல்லப்படுபவனாகிய எங்கள் சிவபெருமான், காற்றில் பரிசமும், கரும்பில் வெல்லமும், பாலில் நெய்யும், பழத்தில் சுவையும், மலரில் மணமும் போல, உயிர்களின் உள்ளங்களில் எல்லாம் இரண்டறக் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அக்கலப்பினை அறிந்து, `சிவோஹமஸ்மி` எனப் பாவிக்கும் பாவனையில் உறைத்து நின்றால், சோதனைகளால் வரும் ஊறு யாதும் இல்லையாம்` என்பது கருத்து.
``கசிந்த - தொண்டினொடும், உளத்து அவன்றான் நின்ற [கலப்பாலே
`சோகம்` எனப்பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. எனவே, `அஹம்பிரஹ் மாஸ்மி` `சோஹமஸ்மி` என்பன. இக்கலப்புப் பற்றிக் கூறப்படுத லல்லது, `சோயம் தேவதத்தன்` என்பதுபோல, விட்டும் விடாத இலக்கணை வகையாற் கூறப்படுவன அல்ல` என்றவாறாம். உளம், உளன் - மகர னகர உறழ்ச்சி. `உளன் எங்கும் கலந்து நின்றான்` என்க.
இதனால், சோதனைகளில் சலியாது நிற்றற்குரிய வழிவகை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விருப்பொடு கூடி விகிர்தரை நாடில்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்து நிறைந்தே.

பொழிப்புரை :

எங்கள் சிவனார், தம்மை அன்பினால் நோக்கின், தம்முடைய சத்திபோல வந்து, அங்ஙனம் நோக்கி நிற்பவரது உள்ளத்தில், பேரறிவாய், உயிர்க்குயிராய் நிறைந்து, நீங்காதிருப்பார்.

குறிப்புரை :

பொருப்பகம் சேர்தரு பொற்கொடி, உமை; `சத்தி` எனற்பாலதை இவ்வாறு கூறினார். `முன்னர்ச் சத்திநிபாதம்போல வந்து, பின்னர்த் தாம் விளங்கி நிற்பார்` என்றபடி, `போல` என்பதன்பின், `வந்து` என ஒருசொல் வருவிக்க. ``நெருப்பு`` என்பது, `ஒளி` என்னும் பொருட்டாய், அறிவைக் குறித்து நின்றது. ``எங்கள் பிரானார்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``விகிர்தர்`` என்றது சுட்டளவாய் நின்றது. `மனத்திடை, நெருப்புருவாகி நிகழ்ந்து நிறைந்து இருப்பர்` என இயைத்துக்கொள்க.
இதனால், `சோதனைக் காலத்திலும் அன்பு குறைதலாகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள
`எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொழிப்புரை :

`பர வியோமம்` எனப்படுகின்ற அருள்வெளியில் உள்ள சிவபெருமான், அங்கு நின்றும் போந்து என் உள்ளத்துள்ளே புகுந்து அதனையே தனது இடமாகக் கொண்டான். கொண்டது எவ்வா றெனில், அவன் எனது உள்ளத்தை நோக்கி வரும்பொழுது, ``வாராத என் தந்தை வருகின்றான்`` என்று நான் பதைத்தெழுந்து எதிர்கொண்டேன். அதனால்தான் அவன் என் உள்ளத்தையே தனது இடமாகக் கொண்டுவிட்டான்.

குறிப்புரை :

`வியோமத்து நடுவுள் நின்றும் வந்து` என்க. வியோமம், பரவியோமம். கொள்ள - கொள்ளுமாறு. எழுதல், அதன் காரியத்தைக் குறித்து நின்றது. இருந்தான் - நீங்காது, இருந்தே விட்டான். `தன்னை வரவேற்கும் உள்ளப்பான்மை உள்ளவர்களை நோக்கியே அவன் வருவான்` எனவும், `அங்ஙனம் வந்த பின், அவன் மீண்டு நீங்கிப்போதல் இல்லை` எனவும் கூறியவாறு. ``வருதல் கோயில் கொள்ளல்`` என்பவற்றின் உண்மைப்பொருள், மேல், ``செறியாச் செறிவு``8. என்பதுபற்றிக் கூறியதனால் விளங்கும். `உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவ தினியே`3 என்பதனானும் இம் மந்திரப் பொருளை உணர்க. ``சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன்பள்ளி யாரே``l என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், `சிவனது அருமை பெருமைகளை எந்நிலையிலும் அயராது உணர்ந்திருத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே

பொழிப்புரை :

உயிர்களுக்கு ஆகும் நன்மைகளை யெல்லாம் செய்ய வல்லவனும், அனைத்துயிர்களையும் ஒப்ப நோக்கும் நடுவு நிலையாளனும் இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் புன்மை உண்டாகும்படி பொய்த்தல் இன்றி, உண்மையாக விரும்புங்கள்; விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, `இவ்வுயிர் யாது` எனச் சிறப்பாக நோக்கி, நும் செயற்கையை நீக்கி, இயற்கையாகச் செய்து அத்தொன்னிலையில் பின்னும் தொடர்ந்தே நிற்பான்.

குறிப்புரை :

`வேறுபடான்` என்பதாம். `புன்மையாக` என ஆக்கம் வருவிக்க. பொய்யாது நாடுதலாவது, வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை, பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை, பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை இஃதே தொன்னிலை; அனாதி நிலை; உண்மையியல்பு. அதில் தொடர்ந்து நிற்றலாவது, அதினின்றும் மாறுபடாதிருத்தல்.
இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.
[தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைசெய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.]
அடுத்து வரும் மந்திரம், ``தொடர்ந்து நின்றான்`` எனத் தொடங்குதலால், இப்பாடமே கொள்ளப்பட்டது.
இதனால், `மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தொடர்ந்துநின் றான்என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றான்நல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின்(று) ஆதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் சற்குருவாய் வந்து எனது ஆறு அத்துவாக்களையும் அவற்றில் உள்ள சஞ்சித கன்மங்களை நீக்கித் தூய்மை செய்யும் பொழுது, அந்தச் செயலிலே தொடர்ந்து நின்றான். பின்பு தூய்மையாகிவிட்ட அந்த அத்துவாக்களிலே அவனே தொடர்ந்து நின்றான். அதன் பின்பு எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றா -கியும், பொருள்தன்மையால் வேறாகியும் நிற்கின்ற அந்த நிலைகளை எனக்கு அறிவித்துக் கொண்டே யிருக்கின்றான்.

குறிப்புரை :

`அவன் அவ்வாறிருக்கும் நிலையை மறவாதிருத்தலே நான் செய்யத்தக்கது` என்பது இசையெச்சம். `அதனைச் செய்தால் சோதனை எதுவும் என்னை ஒன்றும் செய்யாது` என்பது கருத்து. சோதித்தலுக்குச் செயப்படு பொருள் அத்துவாக்களேயாதலின் அவை வருவிக்கப்பட்டன. ஆகவே, பின் தொடர்ந்து நிற்றற்கு அவையே இட மாயின ஆதலின், `அங்கே` எனச் சுட்டினார். அதில் உள்ள ஏகாரம் பிற இடங்களினின்றும் பிரித்த பிரிநிலை. நல்லநாதன் - சற்குரு. `சற்குரு வாவான் சிவனே` என்பதைப் பின்னர், `ஆதிப் பராபரன் எந்தை` என் பதனால் சுட்டினார். படர்தல் - எங்கும் நிறைதல். `படர்ந்து நின்றும், கடந்து நின்றும் அவ்வழி காட்டுகின்றான்` என்க. ஏகாரம், ஈற்றசை.
இதனால், `இறைவன் உயிர்க்குயிராய் நின்று அறிவித்தலை மறவாமையே சோதனைகளினின்றும் நீங்கும் வழியாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளிரே ஒக்கும்
செவ்வழி சேர்சிவ லோகத் திருத்திடும்
இவ்வழி நந்தி யியல்பது தானே.

பொழிப்புரை :

விண்ணுலகத்தில் விண்ணவர்கட்கும் அவர்கள் அவ்வுலகத்தில் பற்றற்றுச் செல்ல வேண்டிய அந்த வழியைக் காட்டும் அரிய பொருளாய் இருப்பான். மண்ணுலகத்தில் மக்களுக்குத் தந்தை போலவும், தாய்போலவும், உறவினர் போலவும் இம்மைக்கு வேண்டுவன பலவும் செய்து, அம்மைக்கு ஆகும் நல்வழியையும் கற்பித்துத் தனது உலகத்தில் இருக்கச் செய்வான். இஃது எங்கள் சிவபெருமானது இயல்பு.

குறிப்புரை :

``அமரர்க்கு`` என்பதை முதலிற் கொள்க. இவ்வழி - இவ்விடம்; மண்ணுலகம். தேவர்கள் இம்மை நலம் பெற்றுச் சிவனை ஓரளவு அணுகியவர் ஆகலின், அவர்க்கு வேண்டுவது அம்மை வழியேயாயிற்று. ஈற்றில், ``வழி`` என்பது, `இயல்பு` என்னும் பொருட்டு. `தன்னடியார்களைச் சிவன் தன் உலகத்து இருத்துவோன் ஆதலின் சோதனைகளில் அவர்களை நழுவ விடான்` என்பது கருத்து.
``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்ஆதல்,
சார்ந்தாரைக் காத்தும் சலம்இலனாய்``3
எனவும்,
`` ... ... ... ... என்றுந்தான்,
தீதுறுவ னானால், சிவபதிதான் கைவிடுமோ!
மாதொருகூ றல்லனோ மற்று``9
எனவும் போந்த சாத்திர மொழிகளைக் காண்க.
இதனால், சிவன் தன் அடியார்களைச் சோதனைகளில் காத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

எறிவது ஞானத்(து) உறைவாள் உருவி
அறிவத னோடே அவ் ஆண்டகை யானைச்
செறிவது தேவர்க்கும் தேவர் பிரானைப்
பறிவது பல்கணம் பற்றுவிட் டாரே.

பொழிப்புரை :

உலகப் பற்றை விடுத்துச் சிவப்பற்றைப் பற்றினோர், அந்நிலைக்கண் தமக்கு யாதேனும் இடையூறுவரின் அவர்கள் அவற்றைப் போழ்வது, ஞானமாகிய வாளைத் திரு வருளாகிய உறையினின்றும் உருவியாம். அங்ஙனம் இடையூற்றைப் போக்கி முன்போல அவர்கள் அறிந்து நிற்பது, தம் இயல்பையும், தலைவன் இயல்பையுமாம். (ஆகவே அடிமை நிலையினின்றும் பிறழார் என்பதாம்) அங்ஙனம் அறிந்து அடிமை செய்து நிற்றலால் அவர்கள் இரண்டறக் கலப்பது சிவபெருமானையே. அவர்கள் அறவே விட்டு விலகுவது, வேற்றியல்புடைய பல குழுக்களையாம்.

குறிப்புரை :

``ஞான வாள் ஏந்தும்; ... வான ஊர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே``* என்று அருளிச்செய்தது காண்க. ``ஞானத்து`` என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. ஞானிகட்கு இடை யூறுகளாவன, ஐம்புலக் குறும்புகள். அறிவ, அன் பெறாத அகர ஈற்று அஃறிணைப் பன்மை வினைப்பெயர். அஃது அறிதலாகிய அத்தொழில்மேல் நின்றது. `தன்னோடு` என்பது இடைக்குறைந்து, பன்மை யொருமை மயக்கமாய் வந்தது. தேவர்க்கும் தேவர், மூவர். `எறிவது, செறிவது, பறிவது` என்பனவும் தொழில்மேல் நின்றனவே. `பற்றுவிடார்` என்பது பாடம் அன்று.
இதனால், சோதனைக் காலத்திலும் ஞானிகள் செய்யும் செயல்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக் கொண்டபின்
வேதித்திங் கென்னை விலக்கவல் லார்இல்லை
சோதிப்பன் அங்கே சுவடும் படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை :

யான் தொடக்கத்தில் தேவனாய் இருந்து, இப்பொழுது சிவனே ஆகிவிட்டேன். அஃது முழுமுதற் கடவுளாகிய சிவன் தனது ஞானமாகிய வாளை எனக்கு ஈந்தருள, இதனை யான் விடாது பற்றிக்கொண்டமையால். என்னை இனி அவனை அடைய ஒட்டாமல் வேறுபடுத்தி விலக்க வல்லவர் எங்கும், எவரும் இல்லை. அவ்வா றன்றி எங்கேனும், யாரேனும் என்னை வேறுபடுத்தி விலக்க வருவார்களேயாயின் அவர்கள் வந்து சென்ற சுவடும் தோன்றாதபடி அவர்களது வலிமையைச் சோதித்து ஓட்டிவிடுவேன்.

குறிப்புரை :

``நாம் ஆர்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்``, `தென்றிசைக்கோன்றானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய் கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`* ``யாம் ஆர்க்கும் குடியல்லோம்; யாதும் அஞ்சோம்`` எனப் போந்த திட்பத் திரு மொழிகளைக் காண்க. வேதித்தல் - பேதித்தல். ``வேதித்து`` என்னும் குற்றியலுகரம் கெடாது நின்றது. அங்கே - அப்பொழுதே. தெய்வம் ஆதல், மக்களினும் மேம்படுதல். அது ஞானத்தைக் கேள்வியளவில் உணர்ந்த நிலை. சிவமாதல் நிட்டை கூடியபின். வீரன் ஒருவன் தன்னையே சுட்டி, `இவன்முன்யாரும், எதுவும் செய்ய இயலாது` என்றவிடத்து, வீரம் காரணமாகப் படர்க்கைச் சொல் தன்மைப் பொருள் தருதல் போலவே, இங்கு `இவன்` என்பது தன்மைப் பொருள் தந்தது. இவன் ஆதிக்கண் தெய்வம், இப்போது `அவனே` என மாற்றி, முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், சோதனைகளில் ஞானிகளது துணிவு நிலை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அந்தக் கருவை அருவை வினைசெய்தற்
பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.

பொழிப்புரை :

எல்லா அனத்தங்கட்கும் மூலமாய் உள்ள ஆணவம், சத்தி சமூகம் ஆதலின் அருவமாய் உள்ள மாயை, அதனைக் கொண்டு சில செயல்களைச் செய்வதாகிய கன்மம் ஆகிய இப் பந்தங்களால் உளவாகின்ற, நடுங்கத் தக்க அச்சத்தைத் தரும், எண்ணிறந்தனவாகிய பிறப்புக்கள் அனைத்தையும் போக்கி, ஞானாசிரியர் ஆன்ம அறிவைத் தூயதாக்க, அதனால் சிவத்தைச் சேர்ந்து சிவமாயினோர், அதன்பின்பும் வரும் சோதனைகளை உறுதியோடு சந்தித்து வென்றால், அங்ஙனம் வென்ற திறமையாளர்க்கு அந்தச் சிவப்பேறு நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

`இல்லையேல் நழுவிடும்` என்றபடி. சேர்தற்குச் செயப்படுப்பொருள் வருவிக்கப்பட்டது. `அந்தக் கரு, அச்சோதனை` என்பன பண்டறி சுட்டு சந்தித்தல், புறங்கொடாமையைக் குறித்தது. ``தற்பரம்`` என்றது, பெறப்பட்ட பொருளைக் குறித்தபடி. ஆதல், என்றும் உளதாதல்.
இதனால், ஞானத்தை முறையாக எய்தினோர், அதன் பின்வரும் சோதனைகளால் கலங்காது நின்று சாதித்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உரையற்ற தொன்றை உரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் பறுத்துத்
திரையற்ற என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகும்தற் பரனே.

பொழிப்புரை :

முதுமை காரணமாக வருகின்ற திரையில்லா (இளமையாகவே யிருக்கின்ற) என்னுடைய உடம்பை அவ்வாறே என்றும் அழியாதிருக்கும்படி வைத்து, `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் குற்றங்கள் அற்ற என்னுடைய உள்ளத்தில் புகுந்த சிவன், எனக்கு, அளவின்றிக் கிடக்கின்ற நூல்களின்மேல் செல்கின்ற அவாவை அறுத்து, சொல்லுக்கு எட்டாத ஓர் அரும்பொருளை எனக்கு உபதேசித்தான்.

குறிப்புரை :

`அதனையே யான் இத்தந்திரத்தில் கூறினேன்` என்றபடி. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. உரையற்றது ஒன்று - சிவானுபவம். ``நூலறிவை மட்டுமே கொண்டு நான் இத்தந்திரத்தைக் கூறவில்லை` என்பதாம். ``அரன் அடி சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே``1 எனப் பாயிரத்துட் கூறினாராகலின், இது கூற வேண்டியதாயிற்று. `சரியை முதலிய நான்கனுள் முதல் மூன்றும் நூலறிவானே கூறினும் கூடும்; ஞானம் அத்தகையது அன்று` என்பதாம். `உடலை நீங்கா திருக்கச் செய்தான்` என்றது நெடுநாள் இருக்கச் செய்தான் என்றபடி.
இதனால், `இத்தந்திரத்துள் ஞானம் இவ்வாற்றால் கூறி முடிக்கப்பட்டது` என முடிவுரை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக