திருமந்திரம் - முதல்தந்திரம் - திருமூலர்


பண் :

பாடல் எண் : 1

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.

பொழிப்புரை :

மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பி னால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.

குறிப்புரை :

`இழிந்து, கொண்டு நின்றதாள்` என்க. ``விண்`` என்றது மேல்நிலையை. அது, `பரநிலை` எனப்படுதலின், அந்நிலைக் கண் நிற்கும் அவனது சத்தி `பராசத்தி` எனப் பெயர்பெற்று நிற்கும். அந் நிலையினின்றும் இறங்குதலாவது, உலகை நோக்குதல். அது முன்னை நிலையிற் கீழ்ப்பட்டதாகலின், ``தண் நின்ற`` என்றார். தண்மை - தாழ்வு, ``தண்பதத்தாற் றானே கெடும்`` (குறள். 548) என்பதிற்போல `மெய்யை வினைக்கீடாய்க் கொண்டு` என்க. மெய் - உண்மை நிலை. அஃது அறக்கருணையாய் நின்று விளக்குதலைச் செய்தல். அதனை மாற்றிக் கொள்ளுதலாவது, மறக் கருணையாய் நின்று மறைத்தலைச் செய்தல். சத்தியை, `தாள் - திருவடி` என்றல் மரபு.
உலகை நோக்காது இயற்கையில் நிற்கும் பராசத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி சத்தி` என நின்று உலகைத் தொழிற்படுத்தும். அந் நிலையில் அஃது உயிர்கட்குச் சிவத்தைக் காட்டாது உலகத்தையே காட்டி நிற்குமாதலின், `திரோதாயி அல்லது திரோதான சத்தி` என்று சொல்லப் படும். `மறைக்கும் ஆற்றல்` என்பது இதன் பொருள். இறைவனது சத்தி இவ்வாறு செய்தல், உயிர்களை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தியை மெலிவித்தற் பொருட்டாம். அது மெலிவுறுதலே `மல பரிபாகம்` எனப்படும். மல பரிபாகம் வந்தவுடன் அத்திரோதான சத்தி தானே அருட்சத்தியாய் மாறிப் பதிந்து, உயிரின் அறிவில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கும். இவ் வுணர்ச்சி, உயிருக்கு ஓர் அதிர்ச்சியாய்த் தோன்றும். அதுபற்றி அருட்சத்தி பதிதலை, `சத்தி நிபாதம்` என்பர். நிபாதம் - வீழ்ச்சி.
மலபரிபாகத்திற்கு முந்தின நிலை பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் நிலையாகலின் அது, `பெத்தம், பெந்தம், பந்தம், கட்டு` என் றெல்லாம் சொல்லப்படும். மல பரிபாகத்திற்குப் பிந்தின நிலை பாசத் தினின்றும் விடுபட்ட நிலையாகலின் அது, `முத்தி, மோட்சம், வீடு` என்றெல்லாம் சொல்லப்படும். பெத்த நிலையையே `முன்` என்றும், முத்தி நிலையையே `இன்று` என்றும் அருளிச்செய்தார். பெத்தநிலை திரோதான சத்திவழிப்பட்டே நிற்றலின் அதனை, ``தலைக்காவல்`` என்றார். ``முன்`` என்றதனை முதலில் வைத்து, ``வைத்து`` என்றதன் பின், ``நடாத்தி`` என்பது வருவித்து, `இன்று, காட்டி உருக்கி அறுத் தான்` என முடிக்க. அதிகாரம் வேறாயவழியும் முன்னைத் திருமந்திரத் தோடு தொடர்பு தோன்ற எழுவாயை அதனினின்றும் தோன்ற வைத்தார். களிம்பு உவமையாகுபெயர். இதனால், `ஆணவ மலம் செம்பிற் களிம்புபோல அனாதியே உயிரில் கலந்துள்ளது` என்பதும், அங்ஙனம் கலந்த கலப்பால், `உயிர் அனாதிபெத்த சித்துரு` என்பதும், `அதனை அறுத்தான்` என்றதனால், `சிவன் இயல்பாகவே மலம் இல்லாத அனாதிமுத்த சித்துரு` என்பதும், அவனது அருள் செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாக்குகின்ற இரசகுளிகை போல்வது என்பதும் பெறப்பட்டன. ஆனந்தக் கண் - ஆனந்தத்தைப் பயக்கும் கண்; அஃது அருட்கண். அதனை உணரச் செய்தலே வழங்கு தலாகலின், ``காட்டி`` என்றார். `முன், வைத்து நடாத்தி, இன்று, காட்டி, உருக்கி அறுத்தான்` என்றதனால், இது நாயனாரது அநுபவமேயாதல் பெறப்பட்டது.
``எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்``
என்றார் திருவாசகத்தும் (தி.8 சிவபுராணம். 31. 32). ``ஆய்`` என்றது, `ஆக` என்பதன் திரிபு.
இதனால், `உலகை நோக்காது நிற்கும் நிலையே இறைவற்கு உண்மை நிலை` என்பதும், உலகை நோக்கி நின்று செயல் புரியும் நிலை பொதுநிலை என்பதும், `பொதுநிலையில் நிற்பனவெல்லாம் மறைப்பு நிலையே` என்பதும், `அந்நிலை பலவற்றையும் அவனது சத்தி திரோதான சத்தியாய் நின்றே செய்யும்` என்பதும், `அச்செயல் களெல்லாம் செம்பில் உள்ள களிம்பைத் தேய்ப்பது போல உயிர் களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைத் தேய்க்கும் செயல்களேயாகும்` என்பதும், `அம்மலம் தேய்வுற்றபொழுது அத்திரோதான சத்திதானே அருட்சத்தியாய் மாறி உயிரைப் பொதுநிலையினின்று நீக்கி, உண்மை நிலையை அடையச்செய்யும்` என்பதும், `இவையே இறைவன் என்றும் உயிர்கள்பொருட்டு இடையறாது செய்துவரும் செயல்` என்பதும் கூறப்பட்டன. படவே, `இறை, உயிர், தளை` என்னும் முப் பொருள்களின் இயல்பு பற்றிய ஆகமப்பொருள் பலவும் இவ்வொரு திருமந்திரத்தானே தொகுத்துக் கூறப்பட்டவாறு அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 2

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.

பொழிப்புரை :

என் மலத்தைப் பற்றற நீக்கியவனாகிய எங்கள் சிவபெருமான் நந்தி தேவரே. அவர் மேற்கூறியவாறு அருட்கண்ணை எனக்குத் திறப்பித்து ஆணவ மலமாகிய களிம்பை அறுத்து, அக் களிம்பு அணுக ஒண்ணாத சிவமாகிய மாற்றொளி மிக்க பொன்னை உணர்வித்து, பளிங்கினிடத்துப் பவளத்தைப் பதித்தாற் போல்வதொரு செயலைச் செய்தார். அவர் பதிப்பொருளேயன்றி வேறல்லர்.

குறிப்புரை :

பளிங்கு ஆன்மாவிற்கும், பவளம் சிவத்திற்கும் உள்ளுறை உவமமாய் நின்றன. எனவே, ``பளிங்கிற் பவளம் பதித் தான்`` என்றது, `ஆன்மாவாகிய என்னிடத்துச் சிவத்தை விளங்குவித் தான்` என்றதாயிற்று. பளிங்கு நீலமணியோடு சேர்ந்தவழி நீல மாயும், செம்மணியோடு சேர்ந்தவழிச் செம்மையாயும் சார்ந்ததன் வண்ண மாம் தன்மையுடையதாகலின், அவ்வுவமையால், `ஆன்மாவும் பாசத்தொடு சேர்ந்தவழிப் பாசமாயும் சிவத்தொடு சேர்ந்தவழிச் சிவமாயும் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது` என்பதும், `அத் தன்மைத்தாய ஆன்மா அனாதியே பாசத்தோடு சேர்ந்து நின்று பாச மாய்ப் பசுத்தன்மை எய்தி, அப்பாசம் நீங்கியவழிச் சிவத்தொடு சேர்ந்து பசுத்துவம் நீங்கிச் சிவமாம் தன்மையைப் பெற்று நிற்கும்` என்பதும், ``நந்தி பதித்தான்`` என்றதனால், `ஆன்மாவிற்குப் பாசத்தைப் பற்றறச் செய்து சிவமாந் தன்மையை எய்துவிப்பவன் ஆசான் மூர்த்தியே` என்பதும் உணர்த்தப்பட்டனவாம். இதனானே, `எம் போலியர்க்கு (சகல வருக்கத்தினருக்குச்) சிவபெருமான் ஆசான் மூர்த்தி வாயிலாகவே ஞானத்தை உணர்த்துவன்` என்பதும் கூறிய வாறு காண்க.
சிவம் செம்பொருளாகலின் பவளம் அதற்கு உவமை யாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே.

பொழிப்புரை :

(பதி ஒன்றேயன்றோ என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது விட்டு நீங்கும். (என்று அருளிச்செய்தார்)

குறிப்புரை :

``அணுகின்`` என்றதனால், `அணுகுந் தன்மை உடையது` என்பதும், `அதனை உடையதாயினும், பாசப் பிணிப்பால் அணுகமாட்டாதாயிற்று` என்பதும், `அப்பிணிப்பு, கால எல்லையில் நெகிழுமாகலான் அங்ஙனம் நெகிழ்ந்தபொழுது பசு, பதியை அணுகும்` என்பதும் பெறப்பட்டன. பதி - கடவுள். பசு - உயிர். பாசம் - அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பொருள்கள். இவை மூன்றும் முறையே, `இறை, உயிர், தளை` எனத் தமிழிற் சொல்லப்படும்.
இத் திருமந்திரம் ஒர் ஐயம் அறுத்தது.

பண் :

பாடல் எண் : 4

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே.

பொழிப்புரை :

கால வழிப்பட்டு, `குழவி, இளமை, முதுமை` என்னும் மாற்றங்களை உடையதாய் நிலையற்றதான இவ்வுடம்பு என்கின்ற கோயிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்ற தலை வனாகிய சிவன், மூங்கிலில் மறைந்து நின்ற தீ, தான் வெளிப்படுங் காலத்து வெளிப்பட்டு விளங்குதல்போல, ஆன்மாவின் பக்குவ காலத்தில் மும்மல இருளை நீக்கி எழுகின்ற சூரியனாய் வெளிப்பட்டு விளங்குவான். அப்பொழுது அவன் தாயன்பினும் மிக்க பேரருளாகிய வெள்ளமாயும் நின்று பேரின்பத்தைத் தருவான்.

குறிப்புரை :

``எழும்`` என்றதை இரட்டுற மொழிந்து, முற்றாயும், எச்சமாயும் கொண்டு முறையே முன்னும், பின்னும் இயைக்க. இதனால், `ஆனந்தக் கண்காட்டிக் களிம்பறுத்தலையும், பளிங்கிற் பவளம் பதித்தலையும் சிவன் முன்னே செய்யாமைக்குக் காரணம் பக்குவம் இன்மை` என்பது கூறப்பட்டது. ``வேயின் எழுங்கனல் போலே`` என்றமையால், `பளிங்கிற் பவளம் பதித்தான்` என்ற உவமை பற்றிச் சிவம் புதிதாக வந்து ஆன்மாவின்கண் புகுவது போலும் என மயங்குதல் கூடாது; முன்பு விளங்காது யாண்டும் உடனாய் நின்ற அதுவே பின்பு விளங்கும் என்பதை உவமை காட்டி விளக்கிற்று இத்திருமந்திரம். உயிர் உடலின்கண் அதுவே தானாய் நிற்றல்பற்றியும், இதயத்தானத்திலும், புருவ நடுவிலும் வைத்துத் தியானித்தலை உடன்பட்டுக் கொள்ளுதல் பற்றியும், உயிரின்கண் நிற்கின்ற சிவனை, உடம்பினுள் நிற்பவனாகக் கூறினார்.
``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே``(தி.6 ப.95 பா.4) என அப்பரும்,
``எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே``
-தி.8 திருவாசகம். கோயில்திரு. 10
என்று மாணிக்கவாசகரும் அருளிச்செய்தமையும் காண்க. ``இம்மெய்`` என்றது, `நிலையற்றதான உடம்பு` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 5

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.

பொழிப்புரை :

`பதியினைப்போல் அனாதியே` என மேல் விளக்கப்பட்ட பசுக்களும், பாசங்களும் முறையே சூரியகாந்தக் கற் களும், அவற்றை மூடியுள்ள பஞ்சும் போல்வனவாம். அவற்றுள், சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சு களைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரிய னாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.

குறிப்புரை :

``அவ்`` என்பது வகர ஈற்றுச் சுட்டுப் பெயர். `அவை` என்பது இதன் பொருள். இது, மேல், ``பசு, பாசம்`` என்பவற்றைச் சுட்டி, அவற்றை நிரல்நிறை வகையால் சூரிய காந்தத்திற்கும், சூழ் பஞ்சிற்கும் உவமிக்கப்படும் பொருளாக்கி நின்றது. `போலவே` என்பது பாடம் ஆகாமை அறிக. சூரியன் சந்நிதியில் சுடுதற்கு உப மேயம் கூறிய அதனால், தனியே நின்று சுடாமைக்கு உபமேயம் கொள்ளப்பட்டது. ஆரியன் - ஆசிரியன். ``சுட்டிடா`` எனவும், ``சுடும்`` எனவும் பொது உணர்வே பற்றிக் கூறினாராயினும், உண்மை உணர்வு பற்றி, `சுடுந்தன்மையைப் பெறா` எனவும், `பெறும்` எனவும் கூறுதலே கருத் தாதலின், உவமைக்கேற்ப, `அகற்றும் மலங்களே` என்னாது ``அற்ற மலங்களே`` என்றார். இதனால், `ஆன்ம அறிவு தன்னியல்பில் நின்று பாசத்தை நீக்குவதன்று; சிவனது அறிவைப் பெற்று அவ்வறிவாய் நின்றே நீக்கும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``வேயின் எழுங்கனல் போலே`` என மேற்கூறியவாற்றால், `விறகில் உள்ள தீ வெளிப்படுதற்கு அதனைக் கடைவோன் நிமித்தமாம் அளவே யல்லது, அதனிடத்து தீயைப் புகுத்துவோனாகாமைபோல, மாணாக் கனது அறிவின்கண் உள்ள சிவஞானம் வெளிப்பட்டுத் தோன்றுதற்கு ஞானாசிரியன் நிமித்தமாதலல்லது, அதனை அவனறிவின்கண் புகுத்துவானல்லன்` என்றற்கு, `சூரியன் சந்நிதியில்` என உவமைக் கண்ணும், ``ஆரியன் தோற்ற`` எனப் பொருட் கண்ணும் கூறினார்.
``சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்``
-சிவஞானசித்தி. சூ. 8. 28
என இதனை அருணந்தி சிவாசாரியர் இனிது விளக்கினமை காண்க. ``அற்ற`` என்றது முற்று. ``சுட்டிடா`` என்ற பன்மையால் உயிர்கள் பலவாதல் குறிக்கப்பட்டது.
இதனால் சிவஞானம் உண்டாதல் ஞானாசிரியனது வருகை இன்றி யமையாமை சிறந்ததோர் உவமத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தான்நற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.

பொழிப்புரை :

யாவரும் புகழும் அம்பலத்துள் ஆடுவோனாகிய சிவபெருமான், எனது பக்குவத்தை அறிந்து எனக்கு ஐந்து மலங்களையும் போக்கித் தன்னைத் தந்து, சுத்த தத்துவங்கள் ஐந்தினாலும் தான் ஐந்தொழில்புரிவோனாய் நிற்கும் கருத்தை என்னளவில் தவிர்த்தான். தவிர்த்து, நன்மையைத் தரும் திருவைந் தெழுத்தால் என் உள்ளத்தில் நீங்காது விரும்பி நின்றான்.

குறிப்புரை :

`மலங்கள் ஐந்தாம், தலங்கள் ஐந்தான், புலம் களைந் தான், நலங்கள் ஐந்தான்` எனப் பிரித்துப் பொருள் கொள்க. `ஐந்த னானும்` என்பவற்றில் சாரியையும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. `மலங்கள் ஐந்தாம் என` என்றதற்கு, `மேல், அற்ற எனப்பட்ட மலங்கள் ஐந்து என்று சொல்லும்படி` என உரைத்து, `ஐந்து மலங்களும் அற் றொழியுமாறு` என்பது அதனாற் போந்த பொருளாக உரைக்க. ``அருளி`` என்றது, `தந்து` என்னும் பொருளது. அதற்கும், ``அறிந்து`` என்பதற்கும் செயப்படுபொருள் வருவித்து உரைக்கப்பட்டன. சுத்த தத்துவங்கள் சுத்த மாயையின் விருத்தியே (விரிவே) ஆகலின், அவற்றைத் ``தலங்கள்`` என்றார். ``சதாசிவம் ஆன`` என்றது, `சதா சிவன் முதலாக நின்ற` என்றவாறு. `அறிவு` என்னும் பொருளதாகிய `புலம்` என்பது இங்குக் கருத்தின்மேல் நின்றது. திரோதான சத்தி யோடு இயைந்து நின்று ஐந்தொழில் செய்வது பெத்தான்மாக்கள் பொருட்டேயாதலின், முத்தராகிய தம்மளவில் இறைவன் அக் கருத்தைத் தவிர்த்தான் என்றார். நலம் தருவனவற்றை, `நலம்` என்றார். நலம் - வீடுபேறு. `அதனைத் தரும் ஐந்து` எனவே, முத்தி பஞ் சாக்கரம் என்பது போந்தது. இஃது அற்ற மலங்களின் வாதனை வந்து மீண்டும் தாக்காதவாறு செய்யுமாகலின், உள்ளத்தில் சிவன் நீங்காது நிற்கும் நிலை அதனால் நிகழ்வதாகக் குறித்தார். `மலங்கள் ஐந்து, தலங்கள் ஐந்து, நலங்கள் ஐந்து` என்பன இவை என்பதனைப் பின்னர் விளக்குவார். ``அப் பொது`` என்றதில் அகரம் பண்டறி சுட்டு.
இதனால் சிவன் குருவாய் வந்து செய்த அருட்செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

அறிவைம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபரனாமே.

பொழிப்புரை :

(பாசத்தில் அகப்பட்ட உயிரினது அறிவு தானே அதனின்றும் விடுபடமாட்டாதோ எனின், மாட்டாது. ஏன் எனின்,) ஆணவமாகிய இயற்கைப் பாசத்தின் வழிவந்து பற்றியுள்ள மாயையின் காரியமாகிய பொறி, புலன் முதலிய செயற்கைப் பாசத்தில் உயிரினது அறிவு கட்டுண்டு, நீரின் ஆழத்தில் அமிழ்ந்து கரை ஏற அறியாத நிலைமைபோல, அவற்றினின்றும் விடுபடும் நெறியை அறியாது இடர்ப்படும். ஆகவே, அதற்கு அந்நெறியை அறிவிப்போன் நீராழத்தினின்றும் எடுத்துக் கரையேற்ற வல்லவன் போல்பவனாய், ஆசிரியர்க்குள் மேலானவனாகிய ஞானாசிரியனே.

குறிப்புரை :

நான்றது - கட்டுப்பட்டது. ``உற்ற நீராழம் போல`` என்றாராயினும், `நீராழத்தில் உற்றதுபோல` என்றல் கருத்தென்க. `உற்ற நீராழம்போல நெறியறியாது` எனமாற்றுக. ``அறியாது`` என்றது முற்று. இஃது எதிர்மறைத் தொழில் உவமம். `நெறியாவது இது` என்பது அறிவித்தற்கு, `அறிவு அறிவுள்ளே அழிந்ததுபோல` என்றார். `உயிரினது அறிவு சிவத்தினது அறிவினுள்ளே பொருந்தித் தான் என்ப தொரு முதல் இல்லாது அழிந்தொழிந்தது போலும்படி` என்பது அதன் பொருள். இதுவே, `சிவமாந்தன்மை` எனப்படுவது. இந் நிலையைப் பன்னாள் பாவனையால் உணர்ந்து நிற்பின், பின்பு உண்மையிலேயே அஃது உண்டாவதாகும். இதனையே உப நிடதங்கள் `சோகம் பாவனை` என்றும், சிவாகமங்கள் `சிவோகம் பாவனை` என்றும் கூறும். சோகம் - அவன் நான் (ஆனேன்). சிவோகம் - சிவன் நான் (ஆனேன்). ``சோகம் எனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றிப் - பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று பாவிக்கச் சொல் லுவதிப் பாவகத்தைக் காணே`` என்று சிவஞானசித்தி (சூ. 9.7) நூல் இதனை எடுத்தோதுதல் காண்க. `அகம்பிரம்மாஸ்மி, தத்துவமசி` முதலிய வேதாந்த மகாவாக்கிய உபதேசங்கள் சோகம் பாவனையையும், `சிவத்துவமசி` என்னும் சித்தாந்த மகாவாக்கிய உபதேசமும், பஞ்சாக்கர உபதேசமும் சிவோகம் பாவனையையும் அடைவிப்பனவாம். இவை யெல்லாம் ஞானாசிரியனாலன்றி அடையலாகாமை அறிக.
இதனால், ஞானாசிரியனாலன்றி ஞானத்தை உணர்தல் கூடாமை, உவமையால் உணர்த்தப்பட்டது.
ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின்.
என்றார் திருவருட்பயன் (பா.50).

பண் :

பாடல் எண் : 8

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

பொழிப்புரை :

தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் எரி சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.

குறிப்புரை :

``ஆமேவு பால்நீர்`` என்றதனை, `ஆவின் பால்மேவு நீர்` எனப் பொருட்கேற்ப மாற்றிக்கொள்க. `தாம் மேவு, தீமை` என் பன, கடைக்குறைந்து நின்றன. தாம் மேவு நித்தம் - சத்திநிபாதர் சென்று காண்கின்ற நடனம். நித்தம் - நிருத்தம். குருவடிவமும் சிவ பெருமான் கொள்கின்ற சகளத்திருமேனிகளுள் ஒன்றாதல் பற்றி அதற்கு ஈடாக ஆடும் கோலத்தைக் குறித்தார். சத்திநிபாதர்க்கு அக் கோலமும் அப்பயனைத்தருதல் நோக்கி. ஆடும் கோலமும் சத்தி நிபாதர்க்குப் பாசத்தை அறுத்துப் பேரின்பத்தைத் தருதலை,
மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம். 36
என்பதனால் அறியலாம்.
``உற்றன`` என்றது வினையாலணையும் பெயராய் வினை களைக் குறித்து நின்றது. அதன்பின் `பிரிக்கும்; அதனால்` என்னும் சொல்லெச்சங்கள் வருவித்து, `அன்னம்போல் நித்தம் கரணங்களுள் உற்றன பிரிக்கும், அதனால், பிறப்பு எரிசேர்ந்த வித்தாம்` என முடிக்க. `பிரிக்கும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. தாம் ஏழ் பிறப்பு - தாமாகிய எழு பிறப்பு. இங்கு, ``தாம்`` என்றது ``உற்றன`` என முன்னர்க் கூறிய வினைகளை. `அவையே பிறவிக்கு வித்து` என்பார், ``தாம் ஏழ் பிறப்பு`` என்றார். பிறப்பிற்குக் காரணத்தை, `பிறப்பு` என்றது பான்மை வழக்கு.
`நுகர்வினை, கிடைவினை, வருவினை` என வினை மூன்றாகி நிற்கும். நுகர்வினை, இப்பிறப்பில் இன்பமாகவும், துன்பமாகவும் அனுப விக்கப்படுவன. இவற்றை, `பிராரத்தம்` என்பர். கிடைவினை, இனி வரக்கடவனவாகிய எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய்த் திரண்டு கிடப் பவை; இவற்றை, `சஞ்சிதம்` என்பர். வருவினை, நுகர்வினையை அநுபவிக்கும்பொழுதே செய்யப்பட்டு வருவன. இவற்றை, `ஆகா மியம்` என்பர். இவற்றுள் கிடைவினையே எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய் நிற்றலால், குருவருள் அதனையே எரி சேர்ந்த வித்துப்போல அழிக்கும். அதனால் பிறவி அறும்; பிறவியற்ற நிலையே வீடு. எனவே, குருவருளால், பாசநீக்கமும், வீடுபேறும் உளவாதல் அறிக.
இதனால், குருபரன் அருள்செய்யுமாறும், அவ்வருளால் எய்தும் பயன்களும் கூறப்பட்டன. குருவருளால் கிடைவினை எரிசேர்ந்த வித்தாய்விடுதலை, ``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின் ஒல்லையின் அகலும்`` எனச் சிவப்பிரகாச (பா.89) நூலும் கூறுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 9

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.

பொழிப்புரை :

குருவருளால் சிவயோகம் கைவரப் பெற் றவர்கள், பிறவிக்கு வித்தாகிய கிடைவினையை (சஞ்சித கருமத்தை) முற் கூறியபடி அழித்து, குரு அருளிச்செய்த உபதேச மொழியிலே உறைத்து நின்று, சுத்த துரிய நிலை மிகவும் தோன்றப் பெற்று, ஐம் புலன்களை நுகர்கின்ற உணர்வு அவற்றால் கட்டுண்ணாமலே அவற் றோடு பொருந்தி நிற்கச் சிவத்தோடு ஒன்றாய் உடம்பு உள்ளபொழுதே செத்தார்போல உலகத்தை நோக்காது புருவ நடுவிலே நிற்பார்கள்.

குறிப்புரை :

வியாக்கிரம் - முடிவிடம்; ஆறாவது ஆதாரம். உணர்வை, ``உயிர்`` என்றார். `சிவத்தோடு` என்பது ஆற்றலால் வந்தது. மேற்குறித்த சிவோகம் பாவனையின் முதிர்ச்சியே `சிவ யோகம்` எனப்படுவது. இது ஞானத்தில் யோகம். இது கைவரப்பெற்ற நிலையே சுத்த துரியம். இயமம் முதலிய எட்டுறுப்புக்களை உடைய யோகம் தவயோகம் என்க. சிவயோகத்தில் நிற்பவர்கள் காண்ப வற்றையெல்லாம் சிவமாகக் காண்பதன்றிப் பிறவாகக் கண்டு விருப்பு வெறுப்புக்கள் கொள்ளுதலும், இன்பும், துன்பும் உறுதலும் ஆகிய வேறுபாடுகளுள் யாதொன்றும் இல்லாதிருத்தலை, ``செத்திட் டிருப்பர்`` என்றார். இதனால், குருவருளைப் பெற்றாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாரா தவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே.

பொழிப்புரை :

மேற்குறிக்கப்பட்ட சிவயோகமாவது, `சித்தாகிய (அறிவுடைப் பொருளாகிய) ஆன்மாவும், தானே அறியும் தன்மை இன்மையால் தானே அறிந்தும், அறிவித்தும் நிற்கின்ற சிவத்தை நோக்க அசித்தாம் (அறிவில்லாத பொருளேயாம்) என்றுணர்ந்து, ஏகமாந் தன்மையுள் மிகச்சென்று, சிவனது அருளொளியே தானாகப் பெற்று, பிற பொருள்களைச் சார்தலாகிய பயனில்லாத சேர்க்கையிற் செல்லாதபடி, மிகுகின்ற அன்பினால் விளைகின்ற சிவபோகத் தினைத் தருகின்ற புதியதோர் யோகம். அதனையே எங்களுக்கு நந்திதேவர் அளித்தருளினார்.

குறிப்புரை :

சிவனை நோக்க உயிர் அசித்தாதலை, ``அவனுக்கு இவனும் அசித்தாமே``(சிவஞானசித்தி. சூ. 11- 11 1) என்பதனான் அறிக. `தவப்புக்கு` என இயையும். தவ, உரிச்சொல். `யோகம்` நான்கில் முன்னது ஒழிய ஏனை மூன்றும் `ஒன்றாதல்` என்னும் காரணக் குறியேயாய் நின்றது. உலகப் பொருள்களைச் சார்தலை, `அவயோகம்` என்றார், அது முன்னே பல காலும் பல துன்பங்கட்கு இடையே நுகர்ந்து நுகர்ந்து அலுத்து விட்ட சிற்றின்பத்தையே மீளத் தருதலின். ``சிவயோக மேயோகம்; அல்லாத யோகம் - அவயோகம் என்றே அறி`` என்றது திருக்களிற்றுப்படி (பா.74) யும். அச்சிற்றின்பம் போல் துன்பத்தொடு விரவுதலும், வரையறைப்பட்டுக் கழிதலும் இன்றி எல்லையில்லாது புதிதுபுதிதாய்த் தோன்றி என்றும் இன்புறுத்துகின்ற சிவபோகம் முன்பு ஒருகாலும் கண்டறியாத தாகலின், அப்பயனை விளைவிக்கின்ற சிவயோகத்தை, `நவயோகம்` என்றார். ``சாராத அன்பு`` என்றதற்குச், `சாராமைக்கு ஏதுவாகிய அன்பு` என உரைக்க. அதிபோகம் - ஒப்புயர்வற்ற பேரின்ப நிலை. இதனால், `மேற்குறித்த சிவயோகமாவது இது` என்பதும், `அஃது இன்ன பயனைத் தரும்` என்பதும் கூறப்பட்டன. சிவயோகம் துரிய நிலை யாதலின், அதனால் விளையும் சிவபோகம் துரியாதீத நிலை என்க.

பண் :

பாடல் எண் : 11

அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே.

பொழிப்புரை :

மேற்கூறிய நவயோகத்தை எங்கட்கு அளித் தருளிய நந்தி தேவராகிய சிவபெருமான், அப்பொழுதே உலக முழுதும் தான் ஒழிவற நிறைந்து நிற்கும் மெய்ம்மையையும், மாயோன் முதலிய புத்தேளிராலும் அறியப்படாத தனது சிவலோக நிலை யையும், திருமன்றுள் பேரின்ப நடனம் செய்தருளும் தனது எடுத்த திருவடியாகிய பற்றுக்கோட்டினையும், அப்பற்றுக் கோட்டினால் கிடைக்கின்ற அருளாகிய பேரின்ப வெளியையும் அளித்தருளினான்.

குறிப்புரை :

என்றது, `அச்சிவயோகத்தானே பராயோக அநுபவம், பதமுத்தி அநுபவம், சீவன்முத்தி அநுபவம், பரமுத்தி அநுபவம் ஆகிய அனைத்து அநுபவமும் உளவாயின` என்றவாறு. பராயோக அநுபவமாவது, அறிவு இச்சை செயல்கள் புறத்துப் பரவுங் கால் காண் பன பலவும் சிவமேயாய்த் தோன்றுதல். பத முத்தி அநுபவமாவது, அவ்விடத்து உளவாகும் சிற்றின்ப நுகர்ச்சிகளும் சிவபோமாகவே விளைவது. சீவன் முத்தி அநுபவமாவது, சிந்தனைக்கு எட்டாத சிவனைச் சிந்தனைக்கு எட்டுபவனாகக் கண்டு வழிபட்டு இன்புறும் அநுபவம். பரமுத்தி அநுபவமாவது, அறிவு இச்சை செயல் கட்குப் பிறிதொன்றும் புலனாகாது சிவமே புலனாக, அதன்கண் அழுந்தித் தன்னை இழந்து நிற்பது. இவையெல்லாம் இவ்வுடம்பு உள்ள பொழுதே பெறப்படுவனவே என்க. இவற்றைப் பெற்றோரே, `அணைந்தோர்` எனப்படுவர். அணைந்தோர் - சிவனது திருவடி நிழலை அணைந்தவர். இவர், `சீவன் முத்தர்` என வடமொழியிற் சொல்லப்படுவார்.
``பெற்றசிற் றின்பமே பேரின்பமாய் அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற`` -திருவுந்தியார் - 332
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் தாக்கில்`` -திருக்களிற்றுப்படியார். 76
எனவும்,
``காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனக்
காணும் அடியார்`` -தி.8 திருவாசகம். பண்டாய. 6
எனவும் வருவனவற்றால் இவையெல்லாம் இவ்வுடம்புள்ளபொழுது தானே பெறத்தக்கனவாதல் அறிக.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
என்ற திருக்குறள் -359 இச்சிவயோக, சிவபோக நிலைகளையே கூறுவது என்பதை,
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் என்றமையால்
சார்புணர்தல்தானே தியானமுமாம்; - சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.
என்று கூறும் திருக்களிற்றுப்படி நூல். இதனால், மேல் தொகுத்துக் கூறப்பட்ட பயனை வகுத்துக் கூறியவாறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 12

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

பொழிப்புரை :

குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறி வாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`அடயோகம் முதலியவற்றால் அணிமாதி ஆற் றல்கள் சித்திக்கப் பெற்றோர் `சித்தர்` எனப்படினும், அவர் சிவஞானம் பெற்று பிறவியை அறுத்துக்கொள்ளாமையின் அவசித்தரே` என்றற்கு, குருவருளால் சிவஞானம் பெற்றுச் சிவப்பேறு சித்திக்கப் பெற்றோரை, ``சிவசித்தர்`` என்றார். நாயனாரும் அத்தகைய சிவசித்தரேயாதல் அறிந்துகொள்க. இதனால், சிவபோக அநுபவத்தில் ஆன்மா வானது தன்னை இழந்து சிவமாய் நிற்கும் அநுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.

பொழிப்புரை :

சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவ லோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற் றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கின வர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத் தாறினின்றுமாம்.

குறிப்புரை :

கருவிகள் முப்பத்தாறாவன சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம்.
அவற்றுள் சிவ தத்துவம் ஐந்தாவன, `சிவம், சத்தி, சாதாக் கியம், ஈசுரம், சுத்த வித்தை` என்பன. வித்தியா தத்துவம் ஏழாவன, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என்பன. ஆன்ம தத்துவம் இருபத்து நான்காவன, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்னும் அந்தக் கரணங்கள் நான்கும், `செவி, தோல், கண், நாக்கு, மூக்கு` என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும், `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், `சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்` என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும், `ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி` என்னும் மாபூதங்கள் ஐந்துமாம். இவை இங்கு இவ்வாறு தோற்ற முறை பற்றிக் கூறப்பட்டன. இவற்றை எல்லாம் நாயனார் பின்னர் விளக்குவார்.
கருவிகள் முப்பத்தாறனுள்ளும் ஆன்மா கட்டுண்டு தன்னியல்பை அறியாது அவையே தானாக மயங்கி நிற்கும். அந்நிலை முழுவதும் கழிதலே முத்தி அல்லது விடுதலையாகலின், ``தம் முத்தி முப்பத்தாறே`` என்றார். முப்பத்தாறே என்றதன்பின் நீக்கப் பொருளில் வந்த ஐந்தாம் உருபும், முற்றும்மையும் தொகுத்தலாயின. மேற்காட்டிய முப்பத்தாறனுள் சிவ தத்துவம் ஐந்தும் சுத்த மாயையின் காரியம் எனவும், வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையின் காரியம் எனவும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் பிரகிருதி மாயையின் காரியம் எனவும் உணர்க. இதனால் தத்துவங்களே மாயாமலமாதல் அறியப்படும்.
தத்துவங்கள் முப்பத்தாறின் கூறாகிய தாத்துவிகங்கள் அறுபதனுள் நால்வகை வாக்குகள் உயிர்க்குப் பரம பந்தம் (பெருங் கட்டு) ஆதலின், அவற்றினின்றும் நீங்குதலை முன்னர்க் கூறினார்.
இதனால், குருவருளால் பெறும், `பாசநீக்கம், (சிவப்பேறு)` என்னும் பயன்கள் இரண்டனுள் பாச நீக்கத்தினது இயல்பு வகுத் துரைக்கப்பட்டது.
சிவனைப் பெற்றவர் நித்தர், நிமலர், நிராமயர், நீள் பரமுத்தர் ஆதலை, ``நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளும், - துன்பமில்லை`` (தி.6 ப.98 பா.1) என்பன முதலிய அருட்டிரு மொழிகளான் அறிக.

பண் :

பாடல் எண் : 14

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

எனவே, `தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து அவற்றினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பதும், `தத்துவக் கூட்டமே தனக்கு நிலைக்களமாக நின்ற ஆன்மாவிற்கு அவற்றினின்றும் நீங்கிய பின்னர்ச் சிவனது அருளே நிலைக்களமாம்` என்பதும், `அந் நிலைக்களத்து நீங்காது நிற்பின் அவ் வருட்கு முதலாகிய சிவம் வெளிப்படும்` என்பதும், `அது வெளிப்பட்டவழி அதனிடத்து அசைவற நிற்கவே அதனால் பெருகி விளைகின்ற இன்பத்தில் மதுவுண்ட வண்டுபோல் ஆன்மா அழுந்தித் தன்னையும் மறந்து நிற்கும்` என்பதும் கூறியவாறாயிற்று. ஆகவே, இதனால், பாசத்தின் நீங்குமாறும், பின்னர்ச் சிவத்தைப் பெறுமாறும், பெற்றவழி இன்புற்றிருக்குமாறும் கூறப்பட்டனவாம். இதனுள் ``சிவம் கண்டு`` என்றது சிவதரிசனம் செய்தலையும், ``தான் தெளிந்து`` என்றது அதில் அதீதப்படுதலையும் கூறியனவாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்னும் திருக்குற(பா.341)ளும் தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து நீங்குதலின் மேல் நோக்குடைத்தாதல் அறிந்துகொள்க. கே்கிழாரும், கண்ணப்பர் திருக்காளத்தி மலையின் உச்சியில் இருக்கும் இறை வனைக்காண வேண்டி அம்மலையின் படிகளைக் கடந்தமைக்கு,
``பேணுதத் துவங்கள் என்னும் பெருகுசோ பானம்ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல``
-தி.12 கண்ணப்பர் புராணம் - 103
என இத் தத்துவ முத்தரது செயலையே உவமையாகக் கூறுமாற்றால் இதனை இனிது விளக்கினமை காண்க.

பண் :

பாடல் எண் : 15

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.

பொழிப்புரை :

சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச் செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.

குறிப்புரை :

``நோக்கி, குறித்து`` என்றவற்றிற்கு இவ்வா றுரையாவிடில், ``இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே`` என்பதற்கு ஒவ்வாமை அறிக. தம்மை இழந்து செயலற்றவரது நிலை தாமத குண மிகுதியால் விளையும் சோம்பலில் நிற்பவர் நிலையோடு ஒத்தல்பற்றி ``இருந்தார் ... எய்திய சோம்பே`` என்றார். இது, பழிப்பதுபோலப் புகழ்ந்தது. பின் வருவதும் அது. சோம்பு, முதனிலைத் தொழிற்பெயர்; இதன்கண் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. இதனால், `சிவத்தைப் பெற்றவர் எல்லா அறிவாற்றலும் உடையராயினும், சிவத்தை அறிந்து அழுந்துதலல்லது பிறிதொன்றும் செய்யார்` என்பது கூறப்பட்டது.
``எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர்ஒன்
றல்லா தறியார் அற``
எனத் திருவருட் பயனிலும் ஓதியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 16

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.

பொழிப்புரை :

செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.

குறிப்புரை :

உலகத்தார் அறியும் பொருள்களில் `வெளி` எனப்படும் வானமே எல்லை இல்லாததாக அறியப்படுவது. அதனால், உண்மையில் எல்லை இல்லாத சிவ பரம்பொருளை, `வெளி` என்று உருவகித்து நூல்கள் கூறும். அவ்வாறாயினும், `உலக வெளியின் வேறாய் மேம்பட்டது` என்பது உணர்த்துதற் பொருட்டு, வாளா, `வெளி` என்னாது, `பரவெளி` என்று கூறும். இன்னும் அப் பரம் பொருள், ஞானமே வடிவாய் நிற்றலின், `சிதாகாசம், சிற்பர வியோமம்` என்றெல்லாம் சொல்லப்படும். சிவ பரம்பொருளை, `சிவம், சத்தி` என வேற்றுமை கருதாதவிடத்து சிவமே பரவெளியாம். அவ்வாறு வேற்றுமை கருதுமிடத்து, சத்தி பரவெளியாக, சிவம் அதனைத் திருமேனியாகவாயினும், இடமாகவாயினும் பெற்று நிற்கும் பொருளாகச் சொல்லப்படும்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி`` (தி.6 ப.57 பா.3) என்றாற் போல்வன வேற்றுமை கருதிக் கூறிய திருமொழிகளாம். இங்கு வேற்றுமை கருதாது கூறியது என்க.
``இருப்பது`` என்றது தம்மை இழவாது நின்ற துரிய நிலை யையும், ``கிடப்பது`` என்றது, தம்மை இழந்து நின்ற அதீத நிலை யையுமாம். இவ்விடம், நாதமாகிய சொல்லைக் கடந்து நின்ற தாகலின், ``சுருதி முடிந்திடம்`` என்றார். `முடிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. ``முடிந்த`` என்றது, `இளைத்து நின்ற` என்னும் பொருளது.
`` ... ... ... நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய்; இதுஉன் தன்மை`` -தி.9 ப.5 பா.4
எனத் திருமுறையுள்ளும்,
``சொல்லும் இடமன்று; சொல்லப் புகும்இடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
என்றால்நாம் என்செய்கோம் உந்தீபற``
-திருவுந்தியார் 29
எனச் சாத்திரத்துள்ளும் கூறப்பட்டமை காண்க.
இத்தகையோர்க்குச் சொல்வடிவாய வேதம் முதலிய நூல்களான் ஆகக்கடவது இன்மையின், `சுருதிக்கண் தூக்கமே கண்டார்` என்றார். தூக்கம் - மறதி; என்றது விரும்பாமையை.
``கற்றாரை யான்வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்``
(தி.8 திருவாசகம், திருப்புலம்பல் -3) என்றதூஉம் இந்நிலையில் நின்றமையாலாம். இதனால், அதீத நிலையினது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

பொழிப்புரை :

சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங் களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக்கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற் கரிதாம்.

குறிப்புரை :

`தூங்குதல்` என்றது, தம் முனைப்பால் சிவமல்லாத பிற பொருளாகிய தம்மையும், தம்மைச் சார்ந்துள்ள உடம்பு, உலகம் என்ப வற்றையும் அறிதலை ஒழிந்து நிற்றலையாம். இதனையே `அறி துயில்` எனவும், `யோக நித்திரை` எனவும், `தூங்காமல் தூங்குதல்` எனவும் கூறுவர். தம்மையும், தம்மைச் சார்ந்த பாசங்களையும் மறந்திருத்தலால் தூங்குதலும், சிவத்தை உணர்ந்து நிற்றலால் விழித்திருத்தலும் ஆகின்ற இரு நிலைமையும் ஒருங்கு நிகழ்தலை இவ்வாறு உணர்த்துவர் என்க.

இதனால், அதீதத்தில் நின்றாரது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.

பொழிப்புரை :

அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.

குறிப்புரை :

ஆன்மாக்களினது அறிவு, மேல், ``களிம்பு`` (தி.10 பா.112) எனக் குறிக்கப்பட்ட ஆணவ மல சத்தியினது வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிறிதாயும், பெரிதாயும் நிற்கும். அதனால் அவ்வறிவு கொண்டு அவற்றால் விரும்பப்படுகின்ற பொருள்களும் இழிந்தனவும், உயர்ந் தனவுமாய் இருக்கும். வேண்டுவனவற்றை யன்றி வேண்டாதனவற்றைத் தரின் பயன்படாது ஒழியுமாதலின், வேண்டுவார் வேண்டுவனவற்றையே அவன் தருகின்றான் என்க.
``வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்`` -தி.6 ப.23 பா.1
என்று அருளிச் செய்ததும் இதனையேயாம். பின் இரண் டடிகளில் வெளிப்படைப் பொருள் இனிது விளங்கிக் கிடத்தலின், உள்ளுறைப் பொருளே உரைக்கப்பட்டது. `பொதுச்செயல்` என்றது, `தன்பொருட்டன்றி ஆன்மாக்கள் பொருட்டுச் செய்யும் செயல்` என்றபடி. `அச்செயல்களை வேண்டு வார் வேண்டுமாறே செய்தலின், அஃது அவனுக்குக் கோட்டம் ஆகாது` என்றற்கு நடுவு நிலைமையைக் குறித்தார். அதனால், `பெத்தான் மாக்களுக்கு உலகியலையும், முத்தான்மாக்களுக்கு வீட்டினையும் தருகின்றான்` என்பது போந்தது. படைப்புப் பல படியாய்க் காணப் படுதற்கும் இதுவே காரணம் என்பது உணர்க. ``செவ்வானில் செய்ய செழுஞ்சுடர்`` எனவந்த செம்மை இரண்டனுள் முன்னது நடுவு நிலைமையையும், பின்னது திரிபின்மையையும் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றன. திரிபின்மை மெய்யறிவின் இயல்பாகலின், அதுவே அதற்குப் பொருளாய் உள்ளது. செழுஞ்சுடர் சூரியன், மாணிக்கம், ஒப்புயர்வற்ற தன்மையைக் குறிக்க வந்த உவமை. இறுதிக்கண் `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், `சொல்லொணாப் பெருமையை உடைய அதீத வாழ்வினைச் சிவன் பலர்க்கும் அளியாது, ஒரு சிலர்க்கே அளித்தல் என்னை` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. இதனுள் உள்ளுறை உவமமாய் நின்ற பின்னிரண்டடிகளால் திருக்கோயிலுள் இருக்கும் திருமேனியது சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது என்க.

பண் :

பாடல் எண் : 19

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே

பொழிப்புரை :

மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!

குறிப்புரை :

மேல், ``அரன்`` எனவும், ``உமை`` எனவும் குறிக்கப் பட்ட அப்பன், அம்மை இவரது நிறம் முறையே செம்மையும், பசுமையும் ஆகலானும், அம்மையது வடிவம் அப்பனது வடிவிற் பொருந்தி நிற்றலானும் ``மாணிக்கத்துள்ளே ... ... ... மாடமாய்`` என்றார். ஆணிப் பொன் பிற பொன், எல்லாவற்றின் மாற்றினையும் அளத்தற்கு உரையாணியாய் நிற்கும் பொன். `மன்றினில் நின்று` என ஒரு சொல் வருவிக்க. ``என்ன`` என்ற வினா, `எத்துணையாவன` என்னும் பொருட்டாய், அளவின்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 20

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

பொழிப்புரை :

மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.

குறிப்புரை :

`ஆதலின் அவர்க்கு மீளப் பிறவிக்கு வித்தாகிய வினை உண்டாதல் இல்லை` என்பதாம். `பேசுதல்` என்பது, `அளவ ளாவுதல் - தொடர்புறுதல்` என்றவாறு. `அஃது இல்லை` எனவே, உலகத்தில் நின்றே அதனின் நீங்கிநிற்றல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

பொழிப்புரை :

பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.

குறிப்புரை :

``பெருமை, சிறுமை`` என்பவை உலகியல் பற்றிக் கூறியவை. உலகியலில் பெரியராய்த் தன்னை நினையாதவர்க்கு இறைவன் அரியனாயும், உலகியலில் சிறியராயினும் தன்னை நினைவார்க்கு எளியனாயும் நிற்றலை,
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல். 143. 44
என்னும் திருவாசகத்தான் அறிக. `அவனது இத்தன்மையை அறிந்து, அன்பர்கள் முனைப்பின்றி அவன்பால் அடங்கி நிற்பர்` என்றற்கு இவற்றை எடுத்தோதினார். `கண்டறிவார், உண்டறிவார்` என்பன போல `அறிந்தறிவார்` என்பது ஒருசொல்லாய் நின்றது.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. -குறள் 126
எனத் திருவள்ளுவர் புலனடக்கத்திற்கு இவ்வுவமையைக் கூறினார்.
புலனடக்கித் தம்முதற்கண் புக்குறுவர் போதார்
தலன்நடக்கும் ஆமை தக.
எனத் திருவருட்பயனிலும் (பா.94) கூறப்பட்டமை காண்க. `கேட்டிருந்தார்` என்பது பாடம் அன்று.
இம் மூன்று திருமந்திரத்தானும், `அதீத நிலையில் நிற் போர்க்கு அறிவு இச்சை செயல்கள் உலகிடைச் செல்லுமாயின், அவை திருக்கோயில் வழிபாடு முதலிய அன்பு நெறியிற் செல்லுதலல்லது பிறிதாற்றிற் செல்லா`` என்பது கூறப்பட்டது. இந்நிலை ஞானசம்பந்தர் முதலிய நால்வரது செயல்களால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 22

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற பாலில் உள்ள நெய் அப் பாலினுள் வேற்றுமையின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமை அற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப் பொருளில் அழுந்திநிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மாத் தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று, என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்.

குறிப்புரை :

`குற்றம்` என்றது வேற்றுப் பொருளாகிய பிரையை. பாலில் பிரை சேருமாயின், அஃது அதனைத் திரித்து அதன்கண் உள்ள நெய்யை வேறாகச் செய்யுமாதலின் அதனைப் ``புரை`` என்றார். உரை அறுதலாவது, சொல்லாய் வேறு நில்லாது பொருளாய் உணர்வோடு ஒன்றுதல்; என்றது அநுபூதி நிலையை. எனவே, `ஆசிரியனது அருண்மொழியை, கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் அளவிற் கொண்டொழியாது, நிட்டை நிலையில் அநுபவமாகக் கைவரப் பெற்றவர், உடம்பு நீங்கியபின் சிவனோடு இரண்டறக் கலத்தலாகிய சாயுச்ச பரமுத்தியை எய்துவர்` என்றவாறாம். `கரையற்ற சோதியாய்` என்றார், பின்வரும் பொருட்குத் தோற்றுவாயாதற்கு. ஆக்கச்சொல் தொகுத்தல். சத்து - மெய்ப்பொருள்; சிவம். இக்கலப்பு முன்பே உள்ளதன்றிப் புதுவதன்றாகலின், `அஃது இயற்கையாய் விடும்` என்றற்கு, ``கலந்த சத்தாமே`` என்றார். ``அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் சூ.8) என்றார் மெய்கண்டதேவரும்.
இதனால், இவ்வுலகில் அதீதத்தைப் பெற்றோர் பின்னர் எய்தும் பயன் கூறப்பட்டது.
``காயம்ஒழிந் தால்சுத்த னாகி ... ...
... ... ... ... ... ...
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீழ் இருப்பன்
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே`` 2
எனச் சிவஞான சித்தியினும் (சூ. 11.1) இவ்வாறே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.

பொழிப்புரை :

சடமாகிய சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும், சடமாகிய தத்தம் காரணத்துள்ளே சென்று சேர்ந்துவிடுமாயின் அதன்பின் சித்தாகிய ஆன்மாவிற்குச் சித்தாகிய சிவத்தையன்றிச் சாருமிடம் வேறுண்டோ? இல்லை. அதனால் அந்நிலையில் அப் பயனைத் தரக் கருதியே குருவாய் வந்து ஆண்டுகொண்ட திருவருளாகிய வெள்ளத்தின் செயலால், தூய பரவெளியில் விளங்கும் சிவமென்னும் ஞாயிறாகிய பேரொளியிடத்து ஆன்மா என்னும் விண்மீனாகிய சிற்றொளி சென்று சேர்ந்து ஒன்றாய்விடும்.

குறிப்புரை :

பின்னர் `சித்திற்குச் சித்து இடம்` என்பது வருதலால், முன்னர், `சடத்திற்குச் சடம் இடம்` என்பது பெறப்பட்டது. `ஒரு பொருள் தன்னினப் பொருளொடு சேர்தலன்றி, வேற்றினப் பொருளொடு சேராதாயினும், சித்தாகிய ஆன்மா, சடமாகிய தத்துவங் களோடு சேர்ந்திருந்தமை, மதுவுண்டவனுக்கு அம்மயக்கத்தால் உள தாகும் தலைதடுமாற்றம் போல, ஆணவ மலமாகிய குற்றச் சார்பினால் உளதாயது` என்பதும், `அக்குற்றம் நீங்கவே, ஆன்மா அம் மயக்கம் நீங்கப் பெற்றுச் சிவத்தை அடையும்` என்பதும் உணர்த்துதற் பொருட்டுச் சடத்திற்குச் சடமும், சித்திற்குச் சித்துமே இடமாதலைக் குறித்தார். இன்னும், ``சுடரில் சுடர்சேரும்`` என்றதும் அதுபற்றி. இதனால், உயிருக்கு உலகை நோக்கிச் செல்லுதல் செயற்கையும், சிவத்தை நோக்கிச் செல்லுதல் இயற்கையும் ஆதல் பெறப்பட்டது. இச் செயற்கை இயற்கைகளை,
சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறைசெய் புலன்உணர்வின் தீர்ந்து - சிறைவிட்
டலைகடலிற் சென்றடங்கும் ஆறுபோல் மீளா
துலைவில்அரன் பாதத்தை உற்று.
என (சிவஞானபோதம் சூ.8) விளக்கினார் மெய்கண்ட தேவர்.
தூநிழல் ஆர் தற்காருஞ் சொல்லார் தொகும்இதுபோல்
தானதுவாய் நிற்கும் தரம். -திருவருட்பயன் 61
என்னும் திருவருட்பயனும் ஆன்மாவிற்குச் சிவத்தைச் சார்தலே இயற்கை என்பதை விளக்கிற்று.
`இருபொருள் ஒன்றாதல் எவ்வாறு` என்பார்க்கு விளக்கமாக, ``சுடரில் சுடர் சேரும்`` என்றார். சுடரில் சுடர் சேர்தல், நீரில் நீர் சேர்தல் போல, ஒருபொருள்தானே பிற பொருளது இடையீட்டால் இரண்டாய் நின்று, அவ்விடையீடு நீங்கியபின் முன்போல ஒன்றாதலாகிய ஐக்கியம் அல்லாமை உணர்க. சுடரில் சுடர் சேர்ந்தவழியும் சேர்ந்தது பொருளால் வேறேயாய் நிற்குமாற்றை,
``வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல`` -சிவஞானபோதம் சூ.8
என விளக்கினார் மெய்கண்டதேவர். இவ்வுண்மை அறியாதார், `உடம்பு நீங்கியவழி ஆன்மா சிவத்தொடு சேர்ந்து ஒன்றாதல், குடம் உடைந்தவழி, அக்குடத்தினுள் நின்ற ஆகாயம், புறத்து நின்ற ஆகாயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போலும்` எனத் தமக்குத் தோன்றியவாறே உரைப்பர். தத்துவங்களுள் ஒடுக்க முறையில் முன் நிற்பன மாபூதங்களே யாயினும், தன்மாத்திரைகளையே முதலாகக் கூறினார். அவை அவற்றிற்கு முதலாய் அவை ஒடுங்கும் இடமாதல் பற்றியும், நிலம் நீர் முதலிய பூதங்கள் ஒன்றின் ஒன்று ஒடுங்கும் என்றல் சிவாகம நெறியாகாமை பற்றியும் என்க. உருவகமாய் வந்த அப்பு, ஆகு பெயராய் நின்றது. அருளையுடையோன் செயலை அருளின் செயலாகவே கூறினார். ``அப்பில்`` என்பதில் இல், ஏதுப் பொருட் டாகிய ஐந்தாம் உருபு.
இதனால், `மேற்கூறியவாறு கரையற்ற சோதி கலந்த சத்தாமாறு இது` எனச் சிவசாயுச்ச பரமுத்தியில் ஆன்மா நிற்கும் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொழிப்புரை :

கடல்நீரில் ஒன்றாய் நிற்கும் உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் அந்நீரின் வேறாய் உருவெய்தி `உப்பு` எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடைய தாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.

குறிப்புரை :

செய்யுட்கு ஏற்ப, ``உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த`` என்றாராயினும், `உருச்செய்து உப்பெனப் பேர் பெற்ற` என ஓதுதல் கருத்தென்க. ``அவ்வுரு`` என்றதில் ``உரு`` என்றது பொருளை. ``கூடியது`` என்பதில் `ஆயின்` என்பது வருவித்து, ``கூடியதாயின்`` என உரைக்க. ``செப்பினில்`` என்பதில், இன், எதுகைநோக்கித் தவிர்வழி வந்த சாரியையாய் நின்றது. `செப்பிடில்` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.
இஃது, `ஆன்மாச் சிவத்தோடு ஒன்றாதலே இயற்கை; வேறு நிற்றலே செயற்கை` என்பதனைத் தக்கதோர் உவமங்காட்டி வலியுறுத்தவாறு. உப்பு, நீரின் குணமாகாது வேறு பொருளேயாதல் அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 25

அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே.

பொழிப்புரை :

எல்லாப்பொருளும் அடங்கி நிற்கும் இடமாகிய `அண்டம்` என்னும் பேருருண்டையுள் அணு என்னும் சிறியதோர் உருண்டை அடங்கி நிற்பதல்லது, அதற்குப் புறம்பாய் வேறோ ரிடத்தில் நிற்றல் இல்லை. அதுபோலப் பலவகை உடம்புகளை எடுத்து அவற்றின் அளவாய் நிற்கின்ற சிற்றுயிர்களுக்குப் பிறவிக் கடலி னின்றும் நீங்கி அலமராது நிலைத்து நிற்கும் கரையை அடைவதாயின் அக்கரை, என்றும் அலமரல் இல்லாது ஒருபெற்றியே நிற்பவனாகிய சிவபெருமானது திருவடியே. இதுவன்றி வேறு கரை உண்டோ?

குறிப்புரை :

அண்டம் - உருண்டை; ``அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்``(தி.8 திருவண்டப்பகுதி.1) என்றார் மணிவாசகரும். `இடங்கொண்ட தன்றி வேறில்லை` எனச் சில சொல் வருவித்து உரைக்க. ``இதுவன்றி உண்டோ`` என்பதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. கடம் - குடம். அஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது.
இதனால், சிவம் பெரிய பொருளாதலும், உயிர் அதனிற் சிறிய பொருளாதலும் உணர்த்தி, மேற்கூறியவாறு சீவன் சிவத்துள் அடங்குமாறு கூறப்பட்டது. `திடம்பெற நின்றானே` என்று ஒழியாது `அவன் திருவடிதானே` என்றதும், சிவனது பெருமைக்கண் சீவன் சிறியதோர் அளவில் அடங்கும் என்றற்காம். இதனானே, உயிர்கட்குப் பயன் தருபவன் இறைவன் என்னாது, அவனது அடியே என நூல்கள் கூறுவதன் உண்மையும் விளங்கும். இன்னும் சித்தாந்த முத்தி, `அடிசேர் முத்தி அல்லது அருள்சேர் முத்தி` எனப்படுமாறும் இதனானே விளக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 26

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

பொழிப்புரை :

உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லு மிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம் பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத்தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.

குறிப்புரை :

என்றது, `மிகப்பெரியோனாகிய சிவபெருமானது பேராற்றலுள் ஒரு சிறு கூறுதானே எண்ணில்லாத உயிர்கட்கும் எல்லா மாய் நின்று பயன்தரும்` என்றவாறு. இதனானே, சத்தியைத் திருவடி யாகக்கொண்டு, `அத்திருவடி தானே எல்லாம் செய்ய வல்லது` என வும், `உயிர்கட்கு வீடுபேறாய் நிற்பது அத்திருவடி நிழலே` எனவும் கூறுதல் மரபாயிற்று என்பதும் உணர்ந்து கொள்ளப்படும். சத்தியே திரு வடி எனவே, `ஞானசத்தி, கிரியாசத்தி` என்பனவே இரண்டு திருவடி களாதல் உணரப்படும். இச்சை இவ்விரண்டினும் விரவிநிற்பதாம்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள் 2
என்பது முதலாகத் திருவள்ளுவ நாயனாரும் திருவடியையே பலவிடத்தும் கூறினார். திருநாவுக்கரசர், `திருவடித் திருவிருத்தங்கள், திருவடித்திருத்தாண்டகங்கள்` என்பவற்றால் திருவடிகளின் பெருமையைப் பலபட விரித்தருளிச் செய்தார். மாணிக்கவாசகர் தி.8 திருவெம்பாவையின் இறுதித் திருப்பாட்டில் திருவடியே எல்லாமாய் நின்று ஐந்தொழில் செய்வனவாக அருளிச்செய்தார். இன்னும் திருமுறைகளில் யாண்டும் திருவடிப் பெருமையே பேசப்படுதல் வெளிப்படை. இவ்வாற்றால், `யாவரும், யாவர்க்கும் சிவபெரு மானது திருவடியே பற்றாதல் உணர்ந்து அதனைப் பற்றி வாழ்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது.
இதனால் திருவடியது சிறப்புக் கூறும் முகத்தால் சிவனது சிறப்பு வகுத்துணர்த்தப்பட்டது. இதனானே சிவநெறிக்குப் பொருளாவது யாண்டும் சிவனது திருவடியே என்பதும் முடித்துக் கூறப் பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 27

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

பொழிப்புரை :

`பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத் திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக்கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.
ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெய ராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.

குறிப்புரை :

ஐய உணர்வும், திரிபுணர்வும் ஞானம் ஆகாமையின், மெய்யுணர்வை, ``தெளிவு`` என்றார். தெளிவு தருவனவற்றைத் தெளி வாகப் பாற்படுத்து ஓதினார். ஞானாசிரியரைச் சிவமாக உணராது நம்மனோருள் ஒருவனாக எண்ணுதல் ஆணவ மலச் சார்பினால் நிகழ்வதாகலின், அச்சார்புடையார்க்கு உண்மை ஞானம் விளங்க மாட்டாது என்பதனை ஈற்றில் நின்ற தேற்றேகாரத்தால் பெற வைத்தார். அதனால் மலம் நீங்கப் பெற்றார்க்கு இவை இயல்பால் நிகழும் என்பது பெற்றாம்.
`உலகிற்கு ஆசிரியரும், அடைந்தவர்க்கு ஆசிரியரும், இருமை ஆசிரியரும்` என ஆசிரியர் முத்திறப்படுவர். அறம் முதலிய உறுதிப் பொருள் நான்கனுள் ஒன்றையாயினும், பலவற்றையாயினும் பற்றி முதலும், வழியும் ஆன நூல்களையாயினும், உரைகளையாயினும் செய்தோர் உலகிற்கு ஆசிரியர். இவர் திருவள்ளுவரும், ஞான சம்பந்தர் முதலிய சமயாசாரியர் நால்வரும் போல்பவர். இனி உறுதிப் பொருள்களை வரலாற்று முறையாற் கேட்டுணர்ந்து தம்மை அடைந்தவர்கட்கு அவற்றைக் கேட்பித்தல் சிந்திப்பித்தல்களைச் செய்விப்போர் அடைந்தவர்க்கு ஆசிரியர். இவர்களை, `தாதாரகுரு` என்பர். இவர் சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் போல்பவர். மேற்கூறிய இருதன்மையும் உடையோர் இருமை ஆசிரியர். இவர் மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர் போல்பவர். இம்மூவருள்ளும் சில குடியினர்க்குமட்டும் ஆசிரியராய்க் குலகுருவாய் நிற்பாரும் உளர்.
இவருள் உலகாசிரியர் தவிர ஏனையோருள் எழுத்தும், சொல்லும் அவற்றின் வடிவளவில் கற்பிப்பவர் `கணக்காயர்` எனப் படுவார். `உபாத்தியாயர், ஓதுவிப்பவர்` என்றெல்லாம் கூறுதல் இவரையே. பலவகைச் செய்யுட்களையும், நூல்களையும் பொருள் உணர்வு பெறக் கற்பிப்பவர் `கற்பிக்கும் ஆசிரியர்` எனப்படுவார். `வித்தியா குரு` என்றல் இவரையே. மணவினை, பிற்கடன் (உத்தர கிரியை, அந்தியேட்டி) முதலியவற்றை முன்னின்று செய்விப்பார், `பார்ப் பார்` எனவும், `ஐயர்` எனவும் சொல்லப்படுவர். இவருள்ளும் சிலகுடி யினர்க்கு மட்டும் உறுதி உணர்த்திக் குல குருமாராய் நிற்ப வரும் உளர் என்க. `புரோகிதர்` என்றல் இவரையேயாம். இவர், தெய்வங்கட்குச் சீற்றந்தணிவிக்கும் கடன் முறைகளையும் செய்வர் என அறிக.
சமய விசேட தீக்கைகளால் சிவவழிபாட்டினைப் பிறர்க்கு அளிப்பவர்களும், திருக்கோயில்களில் சிவனது திருமேனிகளை உலக நலத்தின் பொருட்டு வழிபடுகின்றவர்களும் `வழிபாட்டாசிரியர்` எனப்படுவர். `கிரியாகுரு` எனப்படுவார். இவரே. இனிச் சமய விசேட தீக்கைகளைப் பெற்றுச் சிவதன்மதத்திலும், சிவயோகத்திலும் பயின்ற தன் பயனாக மலபரிபாகம் வரப்பெற்றவர்க்கு அப் பரிபக்குவத்தை அறிந்து நோக்கம், பரிசம் முதலியவற்றால் பாசத்தை அறுத்தலாகிய நிருவாண தீக்கையின்வழிச் சிவனது திருவடி ஞானத்தை உணர்த் துவோர் `அருளாசிரியர்` எனப்படுவார். `ஞானகுரு` என்றும், `ஞானா சிரியர்` என்றும் சொல்லப்படுவார் இவரே. இங்குக் கூறப்பட்டு வந்த ஆசிரியன்மார்கள் அம்முறையானே ஒருவரில் ஒருவர் உயர்ந்தோர். அனைவரிலும் உயர்ந்தோர் அருளாசிரியாராகிய ஞானகுருவே. சிவன் ஆசானாய் நிற்றல் இந்த ஞானகுருவிடத்தேயாம். அதனால், `குருவேசிவன்` (தி.10 6ஆம் தந்திரம்) என்றற்கு முழுதுரிமை உடையவர் ஞானாசிரியரே.
``எழுத்தறிவித்தவன் இறைவனாகும்`` -நறுந்தொகை
``தெய்வத்தைப் போல மதிக்கிற்பான்``
-தொல். பாயிரம் உரை நச்சினார்க்கினயம்
என்றாற் போல ஏனை ஆசிரியன்மாரையும் இறைவனாகக் கூறுதல் முகமனுரையேயாம். அதனால், இத்திருமந்திரத்துள் ``குரு`` என்றது அனைவரிலும் மேலாய ஞானகுருவையே என்பது இனிது விளங்குதல் காண்க. இவரது சிறப்பினை இவ்வாறே,
ஞானயோ கக்கிரியா சரியை நான்கும்
நாதன்றன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி
யானஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேஉரியன். ஆதலினால், யார்க்கும்
ஈனமிலா ஞானகுரு வேகுருவும். இவனே
ஈசனிவன் றானென்றும் இறைஞ்சி ஏத்தே.
எனச் சிவஞான சித்தி (சூ. 12,5) வகுத்துணர்த்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 28

தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.

பொழிப்புரை :

ஒருவன், `நான்` என்னும் முனைப்பு இன்றி ஞானாசாரியரை அடுத்து நிற்பானாயின், அவனது ஐம்புல ஆசை தன் னியல்பில் உலகப் பொருள்கள் மேல் செல்லாது அவன்வழிப்பட்டுச் சிவனிடத்திற் செல்வதாய்ப் பள்ள மடையில் வீழ்ந்து பயனின்றிக் கழிந்துகொண்டிருந்த நீர் அம்மடை அடைக்கப்பட்ட வழித் தேங்கி நின்று மேட்டுமேடையிற் போய்ப் பாய்ந்து பயன்தருதல் போலத்தன் அறிவினிடத்தே மாறுவதாகும்.

குறிப்புரை :

`ஆதலின் ஞானத்தைப் பெற்றவனும், பயிற்சி வயத் தால் மீள அஞ்ஞான வயப்படாதிருத்தற்கு ஞானாசாரியரை விட்டு அகலாது நின்று வழிபடுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். ``புலன்`` அவற்றின்மேல் செல்கின்ற ஆசை. அஃது ஒன்றேயாதல் பற்றி, ``தானே`` என ஒருமையாற் கூறினார். ``தன் வசம்`` இரண்டனுள் முன்னது, மாணவன்வசமும், பின்னது ஆசையின் வசமுமாம். தன் வசம் போயிடும் - சுதந்திரம் நீங்கப்பெறும். ``தன்னில்`` என்றதும், மாணவன் அறிவையே தன்முனைப்பு இழந்து செல்லுதலைத் ``தனித்து`` என்றார். `தனித்துத் தானேயாய்` என மாற்றி ஆக்கம் வருவித்து உணர்க. எம் பிரானை - எங்கள் சிவபெருமானை. ஞானத்தை உணர்த்துபவன் அவனேயாகலின், குருவை இவ்வாறு கூறினார். சந்தித்து - தலைப்பட்டு என்றது `பிரியா நின்று` என்றவாறு. `சந்தித்தலால்` என்பது ``சந்தித்து`` எனத் திரிந்து நின்றது. `சந்தித்தலால் ஆயிடும், போயிடும், மாறும்` என மேலே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 29

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

பொழிப்புரை :

நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிருவுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.

குறிப்புரை :

`ஆதலின் பிறரும் தம் ஆசிரியரிடத்து நிற்க` என்பது குறிப்பெச்சம். செம்மை - திரிபின்மை; அதனை உடையது அருள் என்க. `தாளிணை, மேனி, நாமம்` என்பவற்றில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. திருவை நாமத்திற்கும் கூட்டுக. `வந்தித்தல்` என்பது இங்கு வழுத்துதலாகிய வழிபாட்டின்மேல் நின்றது.

பண் :

பாடல் எண் : 30

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

பொழிப்புரை :

உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெரு மானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந் தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.

குறிப்புரை :

``புண்ணியராயினார்`` என்புழித் தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தால் ஏனையோரது நிலை குறிக்கப்பட்டது. இதனால், `இப்பயனைப் பெறவேண்டின், பிறரும் அருளுருவான தம் ஆசிரியரை நினைக` என்பது குறிப்பெச்சமாய் நிற்றல் அறிக.

பண் :

பாடல் எண் : 1

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தி னின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப் படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.

குறிப்புரை :

`குறிக்கோள்` என்றது மக்கட் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை. அதனை, எடுத்த பிறப்பிலே அடையக் கருதுவார் அதன்பொருட்டு யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்வாராகலின், அத்தகையோரது உடம்பைத் தீயினாற் சுடப்பட்ட பாண்டத்தோடும், அக்கருத்தில்லாதாரது உடம்பைத் தீயினாற் சுடப்படாத பாண்டத்தோடும் உவமித்தார். இதனானே, பின்னர்க் கூறப்படும் காய சித்தி உபாயத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.
``எழிலை ஆழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந் துருகி
அழலைஆழ் புருவம் புனலொடும் கிடந்தாங்கு`` -தி.9. ப.17 பா.7
என இவ்வுவமையைப் பிற்றை ஆசிரியர், திருவருள் கைவரப் பெற்றார் பெறாதாரது உணர்வுகட்குக் கூறினார். இனி இங்கும் அவ்வாறே கொண்டு, ``மண்`` என்றது உடம்பையும், `பாத்திரம்`` என்பது அதனை ஏற்று ஒட்டி நிற்கின்ற உயிரது உணர்வையும் குறிப் பனவாக வைத்து உரைத்தலும் ஒன்று. இவ்வுரைக்கு மீண்டும் மண் ணாதல் மீளப் பிறவியில் வீழ்தலும், இறத்தல் பயனின்றி ஒழிதலு மாகும். ஆகவே, `அவ்வாறாகாது, மட்பாண்டத்தை மழைவரும் முன்னே சுட்டுக்கொள்ளுதல் போல, மக்கட் பிறப்பில் அமைந்த உணர்வை அப்பிறப்பிற்கு இறுதிக் காலம் வருதற்கு முன்னே அரு ளுணர்வுடையதாக்கிக் கொள்க. என்பது இதனாற் கூறப்பட்ட பொருளாகும். இரண்டுரைக்கும் விண்ணின்று விழும் வீர் உடம்பை வீழ்த்துகின்ற இறுதிக் காலமேயாம்.
இதனால்,மக்கட் பிறப்பின் பயனை அடையமுயலுதலைப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
``அன்றறிவாம் என்னா தறம்செய்க`` -குறள். 36
எனவும்,
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும். -குறள். 335
எனவும் திருவள்ளுவ நாயனாரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.

பொழிப்புரை :

பல பண்டங்களை நிரப்பிவைத்துள்ள இல்லம் போல்வதாகிய உடம்பு, உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தொழியுமாயின், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம் பினுள் நின்ற உயிராகிய இல்லத் தலைவரைப் பின் தொடர்ந்து செல்லும் வலியிலராவர். இனிச் சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் அல்லது பிறிதொன்றும் அவரோடு உடன் செல்லாது.

குறிப்புரை :

`அதனால், பெண்டிர், மக்கள் முதலியோர்க்கு உழைத்தலை விடுத்து, அவ்விரண்டையுமே பெற முயல்க` என்பதாம். `பெண்டிர் மக்களேயன்றிப் பிறவும் செல்லா` என்றற்கு, ``நடவாதே`` எனப் பின்னருங் கூறினார்.
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செயல் ஆவதென் ஏழைகாள்!
நல்லத் தான் நமை ஆளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே. -தி.5 ப.43 பா.1
என்றார் அப்பரும்.

பண் :

பாடல் எண் : 3

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

பொழிப்புரை :

உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.

குறிப்புரை :

`ஆதலால், ஊரவரையும் உறுதி என்று நினையாது, மேற்குறித்தவற்றைப் பெற முயல்க` என்பதாம். ஊர், ஆகுபெயர்.
ஊர், `பிணம்` என்று பேரிட்டு எடுத்தலை,
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதே
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. -திருவெண்பா. 8
என ஐயடிகளும் கூறினார்.
இன்னும் அவர்.
இல்லும் பொருளும் இருந்த மனையளவே;
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியேல் நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. -திருவெண்பா. 14
என அருளிச் செய்தமை அறிக. இல் - மனைவி. துடிப்பு - அடக்கம் செய்ய விரைதல்.

பண் :

பாடல் எண் : 4

காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.

பொழிப்புரை :

உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப் பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீள வந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.

குறிப்புரை :

`கால் இரண்டும் முகட்டு அலக்கு ஒன்றும் உள` எனவும், `மேற்கூரையும் உள` எனவும், `உயிர் பிரியும்; பிரிந்தால் முன்போல் மீளப் புக அறியாது` எனவும் கொள்க. `நில்லாது பிரிதலும், பிரிந்தால் மீளப் புகாமையும் உடைமை யாலும், வேறாகச் சென்று புகப்படுவது இத்தன்மைத்தாய மக்களுடம் பேயாய் இருக்கும் என்றல் கூடாமையாலும் அங்ஙனம் பிரியுங்காலம் வருதற்கு முன்பே மேற்குறித்தவற்றைத் தேடிக்கொள்க` என்பதாம்.
என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தல்ஆர் குரம்பையின்
மூழ்கி டாதே
அன்பன்ஆ ரூர்தொழு துய்யலாம் மையல்கொண்
டஞ்சல் நெஞ்சே.
என(தி.2 ப.79 பா.8)ச் சம்பந்தரும்,
கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீரால் சுவரெடுத் திரண்டுவாசல்
ஏல்வுடைத் தா அமைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.
(தி.4 ப.83 பா.4) எனவும்,
``இருகாற் குரம்பை இதுநான் உடைய திது பிரிந்தால்
தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே``
(தி.4 ப.113 பா.2) எனவும், அப்பரும் உடம்பை இல்லமாக உருவகித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 5

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே.

பொழிப்புரை :

`சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற் படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.

குறிப்புரை :

மேற்காட்டிய ஐயடிகள் வெண்பாவில் ``தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாமல்`` என வந்ததனை நோக்குக. `காக்கைக்குப் பலியிடுதல் ஒரு சடங்கு`` என்பர். ``காக்கைக்கே இரை யாகிக் கழிவரே``(தி.5 ப.90 பா.5) என்னும் அப்பர் திருமொழியால் உடல் மண்ணில் இடப்பட்டுப் பின் காக்கைக்கு இரையாதலும் கொள்ளப்படும். ``முது காட்டில் காக்கை உகக்கும் பிணம்`` (மூதுரை) என்ற ஔவையார் திருமொழியும் காணத்தக்கது. இனி, `இன்னோரன்னவை முறைப்படி அடக்கம் செய்யப்படாத உடம்பின் நிலைமையைக் குறித்தன` என்று ஒழிதலுமாம்.

பண் :

பாடல் எண் : 6

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

பொழிப்புரை :

உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சில வற்றை உசாவுதல் செய்தார்; அச்செயலுக்கிடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார்; படுத்தவர் படுத்துவிட்டவரே யாயினார்; மீள எழுந்திருக்கவில்லை.

குறிப்புரை :

`இவ்வாறாகின்றது சிலரது வாழ்க்கை` என்றவாறு. `நிலையாமை வரும் காலத்தை அறிந்தார் இல்லை; அதனால், செய்யவேண்டுவதை விரைந்து செய்தலே அறிவுடைமை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 7

மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

பொழிப்புரை :

நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலை வனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.

குறிப்புரை :

`எத்துணைப் பெருஞ் செல்வத்தாராயினும் `இறந்தார்` என்னும் இகழ்ச்சியைப் பெறாதொழிந்தவர் இல்லை. என்றவாறு.
மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். -நாலடியார் 21
என்று அறநூல் கூறுதலும் காண்க. ``சிவிகை`` என்றது. புகழ்வது போலப் பழித்தல். ``முக்கோடி`` என்றது சிலேடை.

பண் :

பாடல் எண் : 8

வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

பொழிப்புரை :

குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.

குறிப்புரை :

`இறவாதிருந்தால் தான் பெறுவது என்னை?` என்றற்கு முன்னிரண்டு அடிகளைக் கூறினார். வாசந்தி - குருக்கத்தி, இது களவிற்குரிய இடமாக இலக்கியங்களில் குறிக்கப்படும். `முதற் கண் மிக்க காதலுடையராய் இருந்தார்` என்பது உணர்த்தற்கு இக்களவு முறையை எடுத்தோதினார். `மணம் புணர்ந்தப் பதி` என்பது பாடம் அன்று. ஆசந்தி- பாடை. ``பாசம்`` என்றது, ``பாசம் பரஞ் சோதிக்கு`` (தி.8 திருவெம்பாவை -2) என்பதிற்போல், `அன்பு` எனப் பொருள் தந்து. `அன்பு`, `நார்` எனப் படுதலும் உணர்க. `பாசமும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அன்பை அறவே விட்டொழிதலை. அச் சுடுதலோடு ஒன்றாக ஒதினார்.

பண் :

பாடல் எண் : 9

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே.

பொழிப்புரை :

உடல் நிலையை நாடியால் ஆய்ந்துணர்வோர் அவ்வாறு ஆய்ந்து கைவிட்டுவிட, அதன்பின் அறிவு அழிந்து, உட லாகிய தேர்க்கு அச்சாய் இருந்த உயிர் நீங்கிவிட, சோற்றை நெய்கலந்து சுவைபட உண்டு வாழ்பவனவாகிய ஐம்பூதக் கூறுகளும் அழிவன வாயின, அப்பொழுது, முன்பு, உடம்பால் தழுவப்பட்டிருந்த மனை வியும், செல்வமும் முன்போலவே இருக்கவும், அவ்வுடம்பு அவர்களை விட்டு வேறிடத்திற்குப் போக விடைபெறுவதுதான் கண்டது.

குறிப்புரை :

`கண்டது` என்பது சொல்லெச்சம். ``கை விட்டு`` என்பதை `கைவிட` எனத் திரிக்க. உடம்பைத் தாங்கி நடத்துதலின், உயிரை ``அச்சு`` என்றார். இஃது ஏகதேச உருவகம்.
``நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்`` -திருவெண்பா. 1
என்று அருளினார் ஐயடிகளும், `நெய்யட்டி உண்டும், மையிட்ட கண்ணாளோடு இன்புற்றும், செல்வத்தால் சிறப்பெய்தியும் நிற்பனவெல்லாம் உடம்பு உள்ள துணையுமே; ஆனால், அவ்வுடம்பு நிலைத்தல் இல்லையே` என்றபடி

பண் :

பாடல் எண் : 10

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே.

பொழிப்புரை :

தீய ஊழ் விரைய வந்தமையால், தங்க நிழல் தரும் பந்தல்போல்வதாகிய உடம்பு நிலைகெட்டு விட்டது. அதனால் அதற்குள் கருவூலம் போல இருந்த உயிர், காவலற்றுக் கொள்ளை போகும் நிலையை (யமதூதுவர் கொண்டு செல்லும் நிலையை) அடைந்து விட்டது. பந்தலில் ஒன்பது வாயில்கள் அமைக்கப் படிருந் தன; அவை அனைத்தும் அடைபட்டு விட்டன. அன்புடைய சுற்றத் தார் என் செயவல்லார்! தொடர்ந்து அழுததோடு போய்விட்டனர்.

குறிப்புரை :

இத்திருமந்திரம் பிசிச்செய்யுள். இவ்வாறு வருவன இந்நூலிற் பல உள. பின்வந்த `சித்தர்` என்போர் இம்முறையைப் பெரிதும் கைக்கொண்டனர். துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு. நிலையாக நிற்கும் இடம் அன்மையால், உடம்பை, `வழியிலே தங்கும் பந்தல்` என்றார். திருவள்ளுவரும், `துச்சில்` (திருக்குறள். 340) என்றார். `மனைவி முதலாயினார் உண்மையில் அன்புடையர்களாயினும், அவர்களால் நிலையாமை விலக்க ஒண்ணாது` என்றபடி. `அதனால், இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 11

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.

குறிப்புரை :

`காட்டுச் சிவிகை` என்பது அடைவேறுபடுத்துப் பொருள்புலப்படுத்தல். இதனை, `வெளிப்படை` (வெளிப்படுத்தல்) என்பர். இங்ஙனங் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு. `நிகழ்வது` என்பது சொல்லெச்சம். ``நாட்டுக்கு நம்பி`` என்றது, சுட்டளவாய் நின்றது. `நம்பியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `அரசராயினும் நிலையாமையைக் கடக்கமாட்டார்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 12

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

பொழிப்புரை :

வினையாகிய மதிலால் சூழப்பட்ட உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்வன் தொண்ணூற்றாறு தத்துவதாத்து விகங்கள். அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர விைரய நீங்கும்.

குறிப்புரை :

செப்ப மதில் - செம்மையான மதில். மதில் இன்றிக் கோட்டை இன்மையால், மதில் சிதைதலை, `கோட்டை சிதைதல்` என்றார். `தத்துவதாத்துவிகங்களின் காரியமே உடம்பு` என்பதும், காரியம் தோற்றமும், முடிவுமாகிய எல்லைகளை உடையன ஆதலின், உடம்பாகிய காரியம் வினையின் எல்லையையே எல்லையாக உடையது என்பதும், `அதனால், அவ்வினை நீங்கவே, உடம்பு நீங்கும்; அதனால் நாடும், ஊரும் துணையாகா` என்பதும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 13

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே.

பொழிப்புரை :

எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.

குறிப்புரை :

`அதற்குமேல் அவர்களால் என்ன செய்ய இயலும்! ஆகவே, நாட்டுக்கு நாயகனாகியும், ஊருக்குத்தலைமகனாகியும் இருக்க முயல்வதனால் பயன் என்னை` என்பதாம். மது, தேன் போன்ற அன்பு.

பண் :

பாடல் எண் : 14

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.

குறிப்புரை :

`ஆதலின் அவனையே நாடுக` என்பது குறிப் பெச்சம். `பிச்சு, எய்ச்சு` என்பன, `பித்து, எய்த்து` என்பவற்றின் சிதைவு.

பண் :

பாடல் எண் : 15

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே.

பொழிப்புரை :

கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழி வார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.

குறிப்புரை :

`காலத்தாலும், இடத்தாலும் கட்டுண்டு கிடக்கும் அவர்களைப் பற்றுவதால் பயனில்லை` என்பதாம். ``கால்`` என்றது எல்லை. அயன்மையை `நீதியின்மை` என்றார்.

பண் :

பாடல் எண் : 16

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.

பொழிப்புரை :

உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.

குறிப்புரை :

ஒருப்படாமைக்குக் காரணம், சிதைந்த, உடம்பு பெரிதும் தீ நாற்றம் வீசி, மக்களுக்கு இன்னல் விளைத்துத் தானும் அழுகியொழிவதாய் இருத்தலே. ``அதனால், பின்னர் அத்துணை நெருப்புக்கு முதலாகும் உடலை முன்னரே வெறுத்து உயிர்க்கு உறுதி தேடக் கருதுதலே அறிவுடைமையாம்`` என்றவாறு. ``ஓர் குயவன்`` இனம் பற்றிய ஒருமை, உயிர் நீங்கியபின், உடல் பலராலும் வெறுக்கப்படும் பொருளாம் என்பதனை,
``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே`` -தி.5 ப.90 பா.4
என்று அப்பரும் அருளிச்செய்தார், ``வைப்பர்`` என்றும், ``வையார்`` என்றும் உறழ்ந்து காட்டிய அதனால், பண்ணப்படும் முறையில் இரண்டும் ஒத்தல் பெறப்பட்டது. படவே, `உடல்களும் உலகெங்கும் தந்தையது உடம்பினின்றும் ஒரு கூற்றை எடுத்துத் தாயின் வயிற்றில் வைத்து உருப்பெருமாறு படைப்புக் கடவுளால் ஆக்கப்படும்` என்பது கொள்க. இத் திருமந்திரம் வேற்றுமையணி. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 17

ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே.

பொழிப்புரை :

தலைக்கூடைபோல உலகங்களைத் தாங்கி நடத்தும் சிவதத்துவங்கள் ஐந்து; அக்கூடையில் உள்ள பொருள்போல வித்தியா தத்துவம் ஏழும் பிரகிருதி ஒன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகிய பதினெட்டு: ஒரு வீட்டினுள் அமைந்த பல கட்டுக்கள் போல உடலில் ஆறு ஆதாரங்கள்; அக்கட்டுக்களில் அமைந்த அகன்ற முற்றம்போல வாயுக்கள் பத்தும்; நாடிகள் பத்தும், `காமம் குரோதம் முதலிய குற்றங்கள் ஆறும், நால்வகை வாக்கும் ஆகிய முப்பது; அம்முற்றத்தை மூடிய பந்தல் போல யோனி பேதத்தால் ஒன்பதாகிய மக்கள் உடம்பு, அப்பந்தலில் அமர்ந்து உண்ணும் பந்திபோலச் சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், குணம் மூன்றும், இன்ப துன்பங்களாகிய பயன் இரண்டும் ஆகிய பதினைந்து உளவாகி இயங்கின. ஆயினும், உடம்பு வெந்து கிடப்பதையே பார்க்கின்றோம். மற்றவை என்னாயின என்பதை அறியோம்.

குறிப்புரை :

பறி - கூடை. கடை - வாயில்; கட்டு. `ஆறு சடை` என்பது பாடம் அன்று. சந்து - வெளி. வாயுக்கள் முதலியவற்றின் இயக்கமே உயிரின் உணர்வு நிகழ்ச்சிக்கு ஏதுவாகலின் அவற்றை நன்கு உலாவும் முற்றம் என்றார். சார்வு - சார்ந்த பொருள். ``சார்வு பதினெட்டு` என்பதனை ``தலைப் பறி`` என்றதன்பின்னர்க் கூட்டுக. உண்ணப்படும் (நுகரப்படும்) பொருள்களாகிய சத்தம் முதலியவற்றை உண்பன போலக் கூறினார். இதனால், உடலின் ஆக்கப்பாடும், செயற்பாடும் கூறி, அவை அனைத்தும் நிலையாமை உடையவாதல் உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 18

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே.

பொழிப்புரை :

அட்டில் தொழில் செய்வார் வறிய குடும்பத் தலைவன் ஒருவனுக்கு அத்திப் பழத்தையும், அறைக் கீரை விதையையுமே திருத்தி உலையில் இட்டு உணவும், கறியுமாக ஆக்கிவைத்தார்கள். அந்த உணவை அக்கறியோடு உண்பதற்கு, வேண்டப்படாத கூரிய கத்தியை எடுத்து அவாவுடன் புகுந்த அத்தலைவன், அதற்குள்ளே சுடுகாட்டை அடைந்தான்.

குறிப்புரை :

`இவ்வாறு விரைய வருகின்றது நிலையாமை` என்பதாம். அத்தி, எலும்பு ஆகலின், அதனிற் பழுத்த பழம் போல்வது பருவுடம்பு (தூல தேகம்). அறைக்கீரை, அறுக்க அறுக்கத் தளிர்த்து வளர்வதாகலின், அதனோடொப்பது, ஒரு பருவுடம்பு நீங்க, வேறு பருவுடம்பைத் தொடர்ந்து தரும் நுண்ணுடம்பு (சூக்கும தேகம்). இதனை, ``காலம் உற்று - நீக்கிட மரம் பின் வேர் ஓர் நீள்மரம் நிகழ்த்துமாபோல்`` (சிவஞானசித்தி. சூ. 2. 48) என்றார் அருள் நந்தி சிவாசாரியரும். `கூழ்` என்னும் பொதுச் சொல்லால் உணவும், கறியும் கொள்ளப்பட்டன. அவ்விருவகை உடம்புகளாலும் உண்டாகும் பயனை அவையேயாகச் சார்த்திக் கூறினார். பருவுடம்பே புறப்பொருளை நுகர்வதாகலின் அதனை உணவாகவும், அதற்குத் துணைசெய்து நிற்பதே நுண்ணுடம் பாகலின் அதனைக் கறியாகவும் உருவகித்தார். கொத்தி உலைப் பெய்து அடுதல் உயிரின் பக்குவத்திற்கேற்ப அமைத்தல். ``உண்ணக் கத்தி எடுத்தவர்`` என்றது மாம்பழம், பலாப்பழம் முதலியவை ஆயின் அவற்றை உண்ணக் கத்தி வேணடும்; அத்திப் பழம்; அது தானும் வேவித்த பழம்; அதை உண்ணக் கத்தி எதற்கு என்னும் குறிப்பினது. ``கத்தி எடுத்தவர்`` என்றது, `இறைவன் திருவருளை நாடியவர்` என்ற தாம். இறைவன் திருவருளைப் பிறவிக் கடலைக் கடத்தற் பொருட்டு நாடுதலே முறை, அதனை விடுத்து, உலகப் பயனைப் பெறுதற்கு நாடுதல் ஏன் என்பது பின்னிரண்டடிகளின் உள்ளுறைப் பொருள்.
``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீஅறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 38
எனவும்,
``முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்தென் றுந்தீபற
அப்பழம் உண்ணாதே உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 41
எனவும் வரும் திருவுந்தியாரையும்
முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னும் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏகக் கொடிஎழுங்காண் இன்று. -மெய். திருக்களிற்றுப்படியார் 38
என வரும் திருக்களிற்றுப்படியாரையும் காண்க.
இறைவனை உலகப்பயன் கருதி வழிபடுதல் `காமிய வழி பாடு` என்றும், பயன் கருதாது வழிபடுதல் `நிட்காமிய வழிபாடு` என்றும் சொல்லப்படும். அவற்றுள் காமிய வழிபாடு செய்யத் தொடங்கினோர் அது முற்றுப் பெறுதற்குள்ளே வந்து நிலையாமை பற்ற, கருதிய பயனையும் இழந்து மீளப் பிறவிக் கடலுள் மூழ்கலால் அந்நிலையாமையை உணர்ந்து காமிய வழிபாட்டை விடுதல் வேண்டும் என்றபடி ``காமியம் செய்து காலங்கழியாதே`` (தி.5 ப.22 பா.8) என்று அருளிச் செய்தார் அப்பரும். காமிய வழிபாட்டு முயற்சியின் தன்மையை,
பரப்பமைந்து கேண்மின்இது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடுங் கடன். -திருவருட்பயன், 39
என விளக்குவர் உமாபதி சிவனார். ``வித்துண்ண``என்றதன் இடை யில் அடுக்கிவந்த இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 19

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே.

பொழிப்புரை :

ஓலையால் வேய்ந்த வீட்டை, உடையவர் தாமே செய்யாமல், கூலியாளைக் கொண்டு செய்வித்தமையால் அவனால் செப்பமின்றி வேயப்பட்ட பொத்தற் குடில்போலும் உடம்பிற்கு மேலேயும் கவிப்பில்லை; கீழேயும் அடிநிலை இல்லை. ஒப்பிற்கு வைக்கப்பட்ட இரண்டு கால்களும், ஒரு நடு விட்டமுமே உண்டு.

குறிப்புரை :

`அஃது எவ்வாறு நீடித்து நிற்கும்? விரைவில் வீழ்ந் தொழிந்தது` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளை முன்னர் வைத்து உரைக்க. பின்னர், ``வேலையான்`` என்றலால் முன்னர் ``மேய்ந்தவர்`` என்றது உடையவரையாயிற்று. ``மேய்ந்தவர்`` என்றது, `வேய முயன்றவர்` என்றபடி, ஊடு - அத் தொழிலினுள்; இதன் பின், `புக்கு` என்பது எஞ்சி நின்றது. `வரியாமையால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. வரிதல் - கட்டுதல். வேலையான் - கூலிக்கு வேலை செய்பவன். காலத்தைக் குறிக்கும் `வேலை` என்பது, அதனை முதலாகக் கொண்டு நிகழும் தொழிலைக் குறித்தலின், கருவியாகு பெயர். ``கூலி கொடுத்து என்வேலை கொள்வாருண்டோ`` (திருவிளையாடல் பு. . மண்சுமந்தது . 18) என்பது முதலிய இடங்களிலும் இவ்வாறு வருதல் காணப்படும். `வேலையாள் மேய்ந்த` என்று பாடம் ஓதுதலும் ஆம். ``வெள்ளி`` என்றதில் ளகர வொற்று, விரித்தல். பொத்தலை `வெளி` என்றார். தளி - இல்லம். `வேலையாள் நன்கு வேயாமையால் எடுத்தபொழுதே பொத்தற் கூரையாய்க் கிடந்தது; மற்றும் பல குறைபாடுகளும் உள` என்றதாம். தலையிலும் பிரமந்திரம் (பெருந்துளை) முதலிய புழைகள் இருத்தலின், `மேலும் முகடில்லை` என்றார். கீழே அடிகள் நிலத்தினுள் ஊன்றாமை வெளிப்படை. ``காலும்`` என்ற இழிவு சிறப்பும்மையால், `அது பெயருக்குக் `கால்` அன்றி, உண்மைக் கால் அன்று` என்பது போந்தது. இல்லத்திற்குக் `கால்கள்` எனப்படுவன, நிலத்தினுள் ஊன்றி நிலைத்து நிற்பன வல்லது சகடக் கால் போல உழலுவன ஆகா. ``முகட்டு அலக்கு`` என்றது முதுகெலும்பை. அதுவும் நேர் நிற்றல் அல்லது; மேலே குறுக்கிட்டு நின்றிலது. இதனால் அவை ஒப்பிற்கு வைக்கப்பட்டனவல்லது, உண்மையில் வைக்கப் படவில்லை என்றார். ``உடையவர்`` என்றது சிவபெருமானையும், `வேலையாள்` என்றது பிரமனையும், `உடை யவர் இவ்வில்லத்தை ஓலையால் வேய நினைத்தார்` என்றது `நிலையாக எடாமல், சிறிது காலத்திற்கு நிற்கவே எடுத்தார்` என்பது குறித்தவாறு. முன்பு `பந்தல்` என்றதும் இக்குறிப்புத் தோன்றவேயாம். `சிறிது காலத்திற்கு நிற்க எடுத்ததையும் தாமே செய்யாமல், பிறன் ஒருவனைக் கொண்டு செய்வித்தமையால். குறையுற்றுக் கிடந்தது` என்றவாறு.
இதனால், யாக்கையது இயல்பை உணர வல்லார்க்கு அதனது நிலையாமை எளிதின் விளங்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

பொழிப்புரை :

கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்.

குறிப்புரை :

இதன் உள்ளுறைப் பொருள் வெளிப்படை. காரணத்திற் குரிய தேடப்பட்ட தன்மையைக் காரியத்தின்மேல் ஏற்றிக் கூறினார். இனி, ``தீ`` என்றது காரிய ஆகுபெயராய், விறகினை உணர்த்திற்று எனினும் ஆம். `பண்ணில்பாடுகின்றாராயும், அழுதிட்டும்` என்க.
இதனால், `யாக்கையது நிலையாமை, ஒரு கண்மாயம் போல வந்து நிற்பது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.

பொழிப்புரை :

அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டை யாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது. பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும் உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக் கொண்டது யாதும் இல்லை.

குறிப்புரை :

சேமித்தலை ``இட்டது`` என்றார். மணவினையைப் பெண்டிர்க்குப் பன்னிரண்டாண்டு அகவையினும், ஆடவர்க்குப் பதினாறாண்டு அகவையினும் நிகழ்த்துதல் பெரும் பான்மை வழக்க மாதலின், எல்லாம் அடங்க, ``பன்னிரண்டாண்டினில் மணம் பட்டது` என்றார்.
எனவே, ``மணம்` என்றதனை இரட்டுற மொழிந்து பெண்டிர்க்கு `மண வினை` என்றும், ஆடவர்க்கு `மணம் என்ற பேச்சு` என்றும் பொருள் உரைத்துக் கொள்க.
சுற்றத்தார் ஆடவர்க்குப் பன்னிரண்டாண்டிற்றானே. `இவற்கு இன்னாளை வாழ்க்கைத் துணைவி ஆக்கல் வேண்டும்` என வரையறை செய்ய முயலுதல் இயல்பு என்க.
இதனால், உடம்பு, `காலம்` என்னும் வாளின்வாய்ப்பட்டு இடையறாது அறுக்கப்பட்டு வருகின்றது என்பது கூறப்பட்டது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். -குறள். 334
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்;
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்;
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
என்ற நாலடியார்ச் செய்யுளும் நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 22

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள் களை விளக்குகின்ற சுடரை அணைத்து விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும் உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக் கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``விளக்கெரி`` வினைத்தொகை. அணைத்தலை, `கொள்ளுதல்` என்றார். `கொண்டான்` என்பது பாடம் அன்று. ``முடிஞ்சது, விடிஞ்சு, படிஞ்சு`` என்பவற்றில் நகர தகரங்கட்கு ஞகர சகரங்கள் போலியாய்வந்தன. முடிதலுக்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `விடிஞ்சிருளாவது போல`` என உவம உருபு விரிக்க. `குருடர்க்கு` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `உடம்பின் நிலையாமையை அறிதற்குக் காட்சியே அமைவதாகலின், நூல் வேண்டுவதில்லை` என்பதனை நாவுக்கரசர்,
``நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்,
சுடலை சேர்வது சொற்பிர மாணமே`` (தி.5 ப.90 பா.4)
என்று அருளிச் செய்தார்.
இதனால், `யாக்கை நிலையாமை காட்சியானே விளங்குவது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

பொழிப்புரை :

விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.

குறிப்புரை :

மாயன் - கள்வன். தோன்றாது மறைந்து நிற்றலின் இவ்வாறு கூறினார். படைத்தலை உயிர்க்கு ஏற்றுங்கால், புணர்த்தலாக உரைக்க. `இடரொடு` என உருபு விரிக்க. `நரகம் ஏழு` என்பதற்கு, முதல் நரகம் ஒன்றே ஏழு நரகங்களை உடையதாயிருக்கும் என்னும் கருத்தினாலாம் என்பதே ஆகம நெறியாகலின், `ஏழ் நரகம்` என்னாது, ``ஏழாம் நரகு`` என்றார். மேற்கூறியவாற்றால் நோக்க நரகம் எட்டாகும். அவை, `இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மகாபதுமம், காலசூத்திரம்` என்பன. இவற்றுள் இரௌரவமே முதல் நரகம்; ஏனைய ஏழும் கிளை நரகங்கள். இன்னும், `இவை நரகம்` என்று வைத்து, மற்றும் `மகா நரகம், இராச நரகம், இராச ராச நரகம் என்று மூவெட்டு நரகங்கள் உள்ளன என அவற்றின் பெயர் முதலியவற்றைச் சிவாகமங்கள் விரித்துக்கூறும். எல்லாவற்றிலும் முதலிற் சொல்லப்படுவன ஒழித்து ஏனைய கிளை நரகங்களாம். ``நரகம் ஏழ்புக நாடின ராயினும்`` (தி.3 ப.49 பா.7) என்ற ஞானசம்பந்தர் திருமொழியில் எழுந்த ``நரகம் ஏழ்`` என்பதற்கும் சிவாகமங்களின் வழி இவ்வாறே பொருள் உரைக்கப்படும். `மக்கள் உடம்பை உயிர்கட்குச் சிவபெருமான் படைத்துக் கொடுத்தது, தன்னை வணங்குதற் பொருட்டே` என்பதை,
``மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன்பணிக்காக அன்றோ``
(சிவஞான சித்தி. சூ. 2.92)என்பதனானும் அறிக. `கொடுத்தவனது குறிப்பிற்கு மாறாகக் கொடுக்கப்பட்ட பொருளைப் பயன்படுத்துதல் உய்தியில் குற்றமாம்` என்றபடி. இதனால், `யாக்கை நிலையாமையை உணர்ந்தோர் அஃது உள்ளபொழுதே அதனாலாகும் பயனைப் பெற முயலுதல் வேண்டும்; இல்லாவிடில் இடர் விளையும்` என்பது கூறப்பட்டது,

பண் :

பாடல் எண் : 24

குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதரார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

பொழிப்புரை :

வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.

குறிப்புரை :

எனவே, `இம்மை வாழ்வைப் பெரிதாக நினையாது மறுமை நோக்கி முயல்க` என்பது கூறப்பட்டதாம். ``இடையும்`` என்றது `இடையதாகின்ற` என்றவாறு, இனி, உம்மையை அசை நிலை யாக்கினும் ஆம், ``புடையும்`` என்பதில் உள்ள உம்மை, `அயலும்` என இறந்தது தழுவிற்று. `ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல், `இடையும் அக்காலம்` புடையும் மனிதர் ஆர, நடுவே குடையும், குதிரையும், வாளும் கொண்டு இருந்து போகும் அப்போது ஆருயிர் அடையும் இடமே வலம் ஆம்` எனக் கூட்டுக. `மனிதனார்` என்பது பாடம் அன்று, ``அப்போதே`` என்ற ஏகாரம் பிரித்துக் கூட்டப் பட்டது. வலம் - வலிமை.

பண் :

பாடல் எண் : 25

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

பொழிப்புரை :

தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படு வதுதான் யாது!

குறிப்புரை :

`பெருமை சிறுமைகளும், பேறிழவுகளும் எஞ் ஞான்றும் உயிர்க்கே யன்றி உடம்பிற்கு இல்லை` என்றவாறு, இவ் வுண்மை உணர்த்தற் பொருட்டே இவ்வாறு கூறினமையால், பின்னர்,
அந்தமில் ஞானிதன் னாகம்வெந் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெம்பும்வெந் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்குறி னுண்செரு
வந்துநாய் நரிக்குண வாம்வை யகமே. -தி.10 ஏழாம் தந்திரம்
என்பதனோடு இது முரணாமை அறிக. அதனானே, உலகியலில் நின்றாரது உடம்பை நல்லடக்கம் செய்தலும் அவரது மறுமை நலன் நோக்கி என்பதும் பெறப்படுவதாம், உடம்பு உயிராகாமை உணர்த் துவார் அதனைக் கூத்தன் புனைந்து கொள்ளும் கோலத்தோடு உவமித் தற்கு, உயிரை, ``கூத்தன்`` என்றார். அதனானே, உடம்பும், அது வாயிலாகச் செய்யப்படும் செயல்களும் உயிர்க்கு என்றும் உள்ளன வாகாது, சிறிது காலம் வந்து நின்று நீங்குவனவாதலும் பெறப்பட்டது. ``புறப்பட்டுப் போன`` என்றதன் பின், `பின்` என்பது வருவிக்க. அவ்வாறு வருவியாதவழி, `இக்கூட்டை` என்றது, உயிர் நீங்கிக் கிடந்த ஓர் உடம்மைச் சுட்டிக் கூறிற்றாக உரைக்க. `இச்சட்டையை` என்�%A

பண் :

பாடல் எண் : 1

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே.

பொழிப்புரை :

குடிகளிடத்து இரக்கங்கொள்ளும் நல்ல அரச னாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இல னாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலமருவன், அவன் செய்த அறம் தன் வாழ்நாள் முழுதும் அரசனேயாய் வாழ்தற்கு ஏற்ற பேரறம் என்பது ஒரு தலையன்றாகலின்.

குறிப்புரை :

``அருளும்`` என்றது, பெயரெச்சம். ``அரசனும்`` என்ற உம்மை உயர்வு சிறப்பு. ``ஆனையும், தேரும்`` என்றது உபலக்கணம். ``பிறர்`` என்றது பகைவரை. ``தெருளும், மருளும்`` என்னும் செய்யுமென் முற்றுக்கள் ஆண்பாலில் வந்தன. தெருளலும், மருளலும் அலமரல் இன்மையையும், அதனை உடைமையையும் குறித்து நின்றன. `சேரின் தெருளும்` எனவும், `பினை மருளும்` எனவும் மாற்றிப் பொருள் கொள்க. ``பின்னை`` என்றது வினைமாற்றின்கண் வந்த `மற்று` என்னும் பொருட்டாய் நின்றது. `ஆதலின்` என்பது சொல்லெச்சம். `அவன் மாதவமன்றே` என்பது பாடம் ஆகாமை அறிக. இதனுள், `சிற்றம் பலமேய செல்வன் கழல் ஏத்தும் செல்வமே நிலையுடைய செல்வம்; (தி.1 ப.80 பா.5) பிற செல்வங்கள் அன்ன வல்ல` என்றற்கு நாயனார் சிவபெருமானை இங்கு, ``செல்வன்`` எனக் குறித்தமை அறியத்தக்கது.
யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
என்றார் நாலடி நானூற்றினும்.

பண் :

பாடல் எண் : 2

இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

பொழிப்புரை :

வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் இருட்பிழம்பு போல்வதாகிவிடுகின்ற துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டு வதில்லை. (நேற்று அரசனாய் இருந்தவன் இன்று அடியனாயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே.) ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, துறக்கச் செல்வத்தினரான தேவர் கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள்; அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவனாகின்றான்.

குறிப்புரை :

இயக்கு - இயங்குதல்; முதனிலை திரிந்த தொழிற் பெயர். பொதுப்பட, ``இயக்கு`` என்றமையால், முற்பக்கமாகிய நற்காலம் காரணமாகத் திங்கள் வளர்ச்சியுறுதலும், பிற்பக்கமாகிய தீக் காலம் காரணமாக அது தேய்வுற்று இருட்பிழம்பு போலாவதும் ஆகிய இருதன்மையும் கொள்ளப்படும். படவே, பொருட்கண்ணும், செல்வம் நல்லூழ் காரணமாக வளர்தலும், தீயூழ் காரணமாகக் குறைந்து மறைதலும் ஆகிய இருதன்மைகளும் விளங்குவனவாம்.
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்;
போக்கும் அதுவிளிந் தற்று. -குறள். 232
எனத் திருவள்ளுவர், செல்வத்தின் ஆக்கக் கேடுகட்கு உண்மைக் காரணமான காலத்தை, அதன்வழி நிகழும் பொதுக் காரணத்தின்வழி உய்த்துணரக் கூறினமை உணர்க. மேல், ``செல்வன்`` எனக் குறிப்பாற் கூறியதனை இதனுட் கிளந்து கூறியவாறு காண்க. செல்வத்தைத் தருபவனை, ``செல்வம்`` என்றார்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `செல்வம் நில்லாது நீங்கும் இயல்பினது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தன்னது சாயை தனக்குத வாதுகண்
டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவிலார், தமது செல்வம் தம் துன்பத்தைப் போக்கிக்கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்திருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப்பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டொழிகின்றது. (அங்ஙனமாக வேறாய் இடையே வந்த செல்வமோ நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்!)
பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள்கண்ணில் உள்ளது. அதனைக்கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டுகொள்ளுங்கள்.

குறிப்புரை :

``தன்னது, என்னது`` என்றவற்றில் னகர ஒற்று விரித்தல். ``தனது, தனக்கு`` என்றவை, பன்மையொருமை மயக் கங்கள். மாடு - செல்வம். ``எனது மாடு`` என்றதன்பின், `எமக்கு உதவும்` என்பது எஞ்சிநின்றது. உன் உயிர், வினைத்தொகை. உயிரை, ``உன் உயிர்`` என்றதனால், `உடல், காணப்படுவது` என்பது பெறப் பட்டது. இவ்வாறு அவ்விரண்டன் தன்மைகளையும் எடுத்தோதியது `இயைபில், லன ஒரு நிமித்தத்தால் தம்முள் இயைந்தன; அந்நிமித்தம் நீங்கியவழி அவ்வியைபும் நீங்கும்` என்பது உணர்த்தற்கு. நிமித்த மாயது வினை. ``உடலோடு`` என உருபு விரிக்கப்பட்டது. ``போம்`` என்றதனைப் ``பிறந்தது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `ஒக்கப் பிறந்தது போம்` என்றது, `அவ்வாறு பிறவாதது போதல் சொல்ல வேண்டா` என்றற்கு. ``கண்ணது காணொளி`` என மிகுத்துக் கூறியது, `பிறர் அறிவிக்க வேண்டாது நீங்களே எளிதின் அறிதல் கூடும்` என்றற்கு. தனது நிழல் தனக்கு உதவாமையை எடுத்துக் காட்டியது, தமக்கு உரியது தமக்குப் பயன்படாதொழிதலைத் தெளிவித்தற்காம்.
``வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்
கையிற்பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே``
-கந்தரலங்காரம்
என்ற அருணகிரி நாதர் திருமொழியும் காண்க.
இதனால், `செல்வம் நில்லாது; நின்றபொழுதும் உதவுதல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.

பொழிப்புரை :

ஈக்கள் தேனைச் சேர்த்தற்குப் பூக்களின் மணங் களை அறிந்து அதன் வழியே பூக்களை அணுகித் தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, அவையாதும் செய்யமாட்டாது அத் தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.

குறிப்புரை :

அஃதாவது, வலியுடையார் புகுந்து தம்மைத் துன்புறுத்தி விலக்கிவிட்டுக் கைக்கொள்ளத் தாம் யாதும் செய்ய மாட்டாது விலகியொழிவர் என்பதாம்.
ஈர்ங்கை விதிரார் கயவர், கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு. -குறள். 1077
என்னும் திருக்குறளால், கீழ்மக்களது செல்வம் அவர்க்கும், சுற்றத்தார் முதலியோர்க்கும் பயன்படாது; வலிமையால் துன்பம் செய்வார்க்கே பயன்படும் என்பது விளங்கும்.
உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னாரிழப்பர்; வான்றோய் மலைநாட,
உய்த்தீட்டுந் தேனீக் கரி. -நாலடியார் 10
என்ற நாலடி வெண்பாக் காணத்தக்கது. ``ஈட்டிய``, வினையெச்சம்.
இதனால், `செல்வம் கொடுத்தும், துய்த்தும் இன்புறாது இறுகப் பிடித்தவிடத்தும் நில்லாதொழியும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.

பொழிப்புரை :

அறிவுடையீர், செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.

குறிப்புரை :

``தெற்ற`` என்பது நீட்டலாயிற்று. தெற்றத் தெளிதல், நன்கு தெளிதல். `கலக்கி மலக்கல்` என்பதொரு வழக்கு என்பது, ``கலக்கி மலக்கிட்டுக்கவர்ந்துதின்ன`` (தி.4 ப.1 பா.8) என்பதனால் அறிக. பெரிதும் கடிந்துரைத்தல் தோன்றச் ``செல்வத்தை`` என்றாராயினும், `செல்வப் பற்றினை` என்றலே, கருத்து என்க. ``ஆமே`` என்ற ஏகாரம் எதிர்மறை உணர்த்திற்று. அதனை ஈற்றசையாக்கிக், `களைந்தால் குதித்தல் கூடும்` என உரைப்பாரும் உளர். இதனால், `செல்வம் பயன் தருவதாயினும், பெரும்பயன் தருதல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே.

பொழிப்புரை :

மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந் தொழிதலைப்போல விழுந்தொழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினை யால் கூட்டுவிக்கப்பட்டிருத்தலை உலகர் அறிந்திலர்.

குறிப்புரை :

`அதனால் அவற்றையே வீடுபேறாகக் கருதி அதன் கண் மயங்கி நின்று அழிகின்றனர்` என்றபடி. மாடு - காசு. செல்வம் - ஏனைய வளங்கள். `கவிழ்கின்ற கலம்` என இயையும். சிமிழ் - கட்டு. செல்வம் கட்டாதல், ஈட்டல் காத்தல்கள் காரணமாகச் செய்யப்படும் முயற்சிகளாலும், பற்றினாலும் உயிர்க்கு உறுதி நாடுதற்குக் காலம் பெறாதவாறு செய்தல். இம் மந்திரத்துள் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், செல்வம் தான் நிற்கும் சிறிதுகாலத்திலும் பந்தமாயே நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
கூவுந் துணையொன்று கூடலு மாமே.

பொழிப்புரை :

ஒத்து வாழ்கின்ற, `மனைவி, மக்கள், உடன் பிறந்தார்` என்போரும் தம் தலைவரால் தங்கட்குக் கிடைக்கும் பொருள் எவ்வளவிற்று என்றே நோக்கி நிற்பர். அவரால் விரும்பப் படுகின்ற அப்பொருளை மிக ஈட்டுதல் ஒன்றையே செய்து வாழ்நாள் போக்கு வார்க்கு இறுதிக்கண், `அந்தோ! எம்மைக் காக்க எம்முடன் வருக` என்று அழைத்துச் செல்லும் துணை ஒன்றைப் பெறுதலும் கூடுமோ!

குறிப்புரை :

`மனைவி முதலாயினார் உடன்வரும் துணையாக மாட்டாமை அறிந்து, அவர் பொருட்டாகப் பொருள் ஈட்ட முயலு தலை விடுத்துச் சிவபெருமானை வழிபட்டு வாழின், அவன் துணை யாவான் ஆதலின் அவனையே வழிபடுக` என்பது கருத்து. `வாழ்வும்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. செல்வத்தை ``ஒண் பொருள்`` என்றது, மனைவி முதலானோர் கருத்துப்பற்றி, `எமக்கு ஒண்பொருள் அளவு ஏது என்பர்` என மாற்றி உரைக்க. ``கூடலும் ஆமே`` என்றதற்கு, மேல், ``குதிக்கலும் ஆமே`` என்றதற்கு உரைத்த வாறே உரைக்க. ஈண்டும் ஏகாரத்தை ஈற்றசையாக்கி, `ஒண்பொருள்`; என்றதனைச் சிவபெருமானாகக் கொண்டு, `ஒண்பொருளாகிய அதனைச் செய்வார்கட்கு` எனக் கூட்டி உரைப்பாரும் உளர். இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `உயிர்ச்சார்பாகிய சுற்றத்தாரையும், அவர் தந்நலத்தராதல் நோக்கிப் பொருட் சார்பாகிய செல்வத்தோடு ஒப்ப வைத்துத் துறக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொழிப்புரை :

உயிராகிய பசுவைக் கட்டி வைத்துள்ள தறி ஒன்றே. அது கட்டவிழ்த்துக் கொள்ளுமாயின், ஓடிப்போவதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. அப்பொழுது செல்வத்தைத் தேடி அதனால் புறந்தரப் பட்ட தாயரும், பிற சுற்றத்தாரும் உடலைச் சூழ்ந்து நின்று, சென்ற உயிரைத் தெய்வமாக வணங்கிப் பின் தம்மைப் புறந்தந்தவர் பால் ஆசை மிக்குளதே ஆயினும், அவர் உடம்பைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வோரிடம் காட்டிக் கொடுத்துக் கைவிட்ட நிலை உளதாவதன்றி, அவ்வுடம்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கின்றவர் இவ்வுலகில் ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

``வேட்கை மிகுத்தது`` என்பதை மூன்றாம் அடியின் இறுதியிலும்,`` மெய்கொள்வார் இங்கிலை`` என்பதை இறுதிக் கண்ணும் கூட்டி உரைக்க. ``மிகுத்தது`` என்பதன் பின் `ஆயினும்` என்பதும், ``கைவிட்டவாறே`` என்பதன்பின் `உளதாம்` என்பதும் எஞ்சிநின்றன. ``தறி`` என்றது உடம்பையும், ``வழி ஒன்பது`` என்றது அதில் உள்ள ஒன்பது பெரும்புழைகளையுமாம். பூட்டுதலுக்குச் செயப் படு பொருள் வருவிக்கப்பட்டது.
இதனால், `தந்நலம் கருதாத சுற்றத்தாராயினும் துணையாக மாட்டுவரல்லர்` என்பதுணர்த்தி, மேலது வலி யுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.

பொழிப்புரை :

உடம்பொடு கூடிநின்ற உயிர், அவற்றிடையே நின்ற தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யம தூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.

குறிப்புரை :

`அடுக்கும்` என்பது இடைக் குறைந்து நின்றது. ``பரிசு`` மூன்றும் ஆகுபெயராய் அவற்றை உடைய பொருள்களைக் குறித்தன. `அதனையும்` என்பது, `அத்தையும்` என மருவிற்று. அதன்பின், `கொள்ள` என்பது எஞ்சிநின்றது. `அத்தையும் நமன் தூதர் சூழகிலாரே` எனக் கூட்டுக.
இதனால், செல்வமும், சுற்றமும் துணையாகாமையைத் தொகுத்துக் கூறி, `சிவபெருமானை அடைக` என முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.

பொழிப்புரை :

நாள்தோறும், கிழக்கில் அழகிதாய்த் தோன்றிப் பின் வானில் செல்லுகின்ற பேரொளியும் வெப்பமும் உடையதாய ஞாயிறு, பின்பு மேற்கில் வெப்பமும், ஒளியும் குறைந்து சாய்தலைக் கண் ணொளியில்லாத மக்கள் ஒளியில்லாத அக்கண்ணால் கண்டும் காணாதவராகின்றனர். அதுபோல, அகன்ற உலகில் அறிவில்லா திருக்கும் மக்கள், குழவியாய்ப் பிறந்த பசுக்கன்று அப்பொழுது துள்ளி ஆடிப் பின்பு சில நாளில் வளர்ந்து எருதாகி நன்கு உழுது, பின்னும் சில நாள்களுக்குப் பிறகு கிழமாய் எழமாட்டாது விழுதலைக் கண்ணாற் கண்டும், பிறந்த உடம்புகள் யாவும் இவ்வாறே இளமை நீங்கி முதுமை யுற்று விழும் என்பதை அறியாதவராகின்றனர்.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை. பிறந்த கன்று வளர்ந்து காளையாய்ப் பின் கிழமாதற்கு ஞாயிற்றின் தோற்றம் செலவு சாய்வு என்னும் இவை ஒருவாற்றான் உவமையாதல் அறிக. தமது இளமை நீங்குதல் அப்பொழுது காட்சிக்கு எய்தாதாயினும், காட்சிக்கு எய்துவதாயகன்றின் இளமை நீக்கமாகிய உவமை யளவையின் வைத்தாயினும் உணர்தலே அறிவுடைமையாம் எனவும், அவ்வாறு உணர்வார் உளராயினும், உணர்ந்த தற்கேற்ப ஒழுகாமையின், அவரும் உணராதவரே எனவும் கூறுவார் இவ்வாறு கூறினார். இனி, இங்ஙனம் எடுத்துக்காட்டுவமையாக்காது, ஞாயிற்றையும், கன்றோடு உடன்வைத்து இரண்டு உவமை அளவை கூறிற்றாக உரைப்பாரும் உளர். ``எருதாய்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``கன்று`` என்று போயினார். வருவித்துரைத்தன பலவும் இசையெச்சங்கள். இதனால், இளமை நிலையாமை காட்சியானே உணரப்படுதலின், அதனையறிந்து தக்கது செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 2

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.

பொழிப்புரை :

மக்கள் பிறந்தபின் சில ஆண்டன்றிப் பல ஆண்டுகள் கழியினும், சிவபெருமானை அறிதலைக் கடனாகக் கொண்டு முயன்று அறிகின்றவர் யாரும் இல்லை. அவ்வாற்றால் இதுகாறும் நீடுசென்ற காலங்கள் இனியும் நீடுசெல்லுமாயினும், அவர் அவனை அறியமுயல்வாரல்லர்.

குறிப்புரை :

`ஆகவே, அவர் இளமை நிலையாமையை அறிவா ரல்லர்` என்பதாம். ``கழிந்தன`` என்றதன்பின், `எனினும்` என்பது வருவிக்க. பூண்டுகொள்ளுதல், கடனாக மேற்கொள்ளுதல். ``நீண்டன`` என்றது வினைப்பெயர். காலம் ஒன்றாயினும், நாள், திங்கள், யாண்டு முதலிய பாகுபாட்டால் பலதிறப்படுதலின், ``காலங்கள்`` எனப் பன்மையாற் கூறினார். ``கொடுக்கினும்`` என்ற உம்மை, எதிர்மறை. `பேரொளி உடையவன்` என்பார், சிவபெரு மானை, `தூண்டப்பட்ட விளக்கின் ஒளி` என்றார். ``தூண்டு சுடரனைய சோதி கண்டாய்`` (தி.6. ப.23. பா.1) என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.
இதனால், உலகரது அறியாமை கூறுதல்போல, ஆண்டு தோறும் இளமை கழிந்து செல்லுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்
பாய்ந்தற்ற கங்கைப் படர்சடை நந்தியை
ஓர்ந்துற்றுக் கொள்ளும் உயிருள்ள போதே.

பொழிப்புரை :

சிறிது சிறிதாகத் தேய்ந்து முடிகின்ற இளமைப் பருவம், கடைசியில் மிக நுணுகி முடிந்துவிட்டபின்பு செயல்கள் யாவும் செய்தற்கரியனவாய் ஒழியும். (யாதொன்றும் செய்ய இயலாது என் பதாம்.) ஆதலால், நன்கு இயங்கத்தக்க இளமை உள்ளபொழுதே சிவ பெருமானது பெருமையை ஆய்ந்துணர்ந்து உள்ளத்திற் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

துணிவு பற்றி, ``ஒழிந்த`` என இறந்த காலத்தாற் கூறினார். அற்ற கங்கை - அடங்கிய கங்கையை உடைய. முதுமைக் காலத்தில் உயிர் செயலற்றுப்போதலின், அது செயலாற்றுதற்குரிய இளமைப் பருவத்தையே, ``உயிருள்ள போது`` என்றார். இதனால், முதுமைக் காலம் யாதொரு பயனையும் தாராத தாகலின், இளமை நிலையாமையை மறக்கலாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விரும்புவர் முன்னென்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயும்ஒத் தேனே.

பொழிப்புரை :

முன்னெல்லாம் என்னை இளமங்கையர் கரும்பைப் பிழிந்து பயனாகக் கொண்ட அதன் சாறுபோலப் பெரிதும் விரும்புவர். இப்பொழுதோ அவர்கட்குக் கரும்புபோல் நின்ற யானே காஞ்சிரங்காய்போல (எட்டிக்காய்போல) நிற்கின்ற நிலையையும் காண்கின்றேன்.

குறிப்புரை :

இது, முதுமை எய்தி, அதனால் நாணமும், துயருங் கொண்டு வருந்துவான் ஒருவனது கூற்றாகச் சொல்லப் பட்டது. இதன் பயன், `இளையராயினார் பலரும் இளமைக்காலத்தே உயிர்க் குறுதியைத் தேடிக்கொள்ளாராயின், பின்னர் இவ்வாறு வருந்துதல் அன்றிப் பிறிதொன்றும் காணார்` என்பது உணர்த்துதல். திருநாவுக்கரசர்,
``தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்பமெய்த
இளையது மல்லேன் எந்தாய், என்செய்வான்தோன்றினேனே ``
-தி.4 ப.78 பா.9
என்று அருளிச்செய்ததும் மேற்காட்டியவாறு, இளமையிலே பயன் பெறாது முதுமையில் துன்புறுதல்கருதி இரங்கியதேயன்றிப் பிறி தில்லை என்பது வெளிப்படை. அங்ஙனமாகவும், `அவரும் மகளிரின் பத்தை இழந்தமையை எண்ணிக் கழிவிரக்கங்கொண்டார்` எனத் தமக்கு வேண்டியவாறே உரைத்து, எரிவாய் நிரயத்தைத் தேடிக்கொள் வாரும் உளர். ``முன்விரும்புவர்`` என்றது இயற்கைக்கண் வந்த கால வழுவமைதி. ``முன்`` என்றதனால், `இது பொழுது` என்பது போந்தது. முடிவில் உளதாதல் பற்றிப் பயனை, ``கடை`` என்றார். `கடையாக` என ஆக்கம் வருவிக்க. `நீர்போல் விரும்புவர்` என மேலே கூட்டி முடிக்க. மூன்றாம் அடி, `அவர்க்கு` என்னும் அளவாய் நின்றது. ``கரும் பொத்து`` என்றது வழிமொழிதல் (அனுவாதம்). அதனால், `அந் நிலையை உடையனாய் இருந்தயானே, இந்நிலையை எய்தினேன்` என்பது பெறப்பட்டது.
இதனால், இன்பச் செருக்கும் இளமையோடே ஒழிதல் கூறப்பட்டது.
காலி னோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்
ஏல வார்கு ழலினா ரிகழ்ந்து ரைப்ப தன்முனம்
மாலி னோடு நான்முகன் மதித்த வர்கள் காண்கிலா
நீல மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே.-தி.2 ப.97 பா.9
எனத் திருஞானசம்பந்தரும், இன்பச் செருக்கு இவ்வாறொழியும் என்று அருளிச்செய்தார். இன்னும் அவர்,
நிலைவெ றுத்தநெஞ்ச மோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெ றுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்
தலைப றித்த கையர் தேரர் தாம்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான் திருந்து காழி சேர்மினே.
-தி.2 ப.97 பா.8
என முதுமைக் காலத்தில் புதல்வர், பெயரர் என்பவராலும் வெறுக்கப் படுதலை அருளுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 5

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலங் கடந்தண்டம் ஊடறுத் தானடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.

பொழிப்புரை :

ஒன்றாய் நின்ற வாழ்க்கைக் காலம், `குழவி, இளமை, முதுமை` என்னும் பருவ வேறுபாட்டால் முத்திறப்பட்டு ஒவ் வொன்றாய் பலவும் கடந்தொழிதலைக் காட்சியிற் கண்டு வைத்தும், உலகர் அவற்றை நினைகின்றிலர். (எனக்கோ அக்காலக் கழிவினால் பேரச்சம் உண்டாகின்றது.) அதனால், நான் இந்நில வுலகையே அன்றி இதற்குமேல் உள்ள அண்டங்கள் பலவற்றையும் ஊடறுத்துக் கடந்து அப்பால் நிற்கின்ற சிவபெருமானது திருவடி என்னைத் தன்கீழ் வைத்திருந்தும், பிறிதொன்றை விரும்பாமல் அதனையே விரும்புவேன்.

குறிப்புரை :

``பாலன்`` முதலிய மூன்றும், அப்பருவத்தையே குறித்து நின்றமை அறிக. தம் செய்தியைக் கூறியது நிலையாமையால் தமக்கு உளதாய அச்சத்தினை உணர்த்து முகத்தான் அறிகிலாதவரது அச்ச மின்மை குறித்தற் பொருட்டாதலின், அது வருவித்துரைக்கப் பட்டது.
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர். -குறள். 1072
எனத் திருவள்ளுவரும் அறிவிலாதாரது யாதும் அறியாநிலையை எடுத்து உள்ளுறையாக இகழ்ந்தோதினார். `அடி, மேல்கிடந்தும்` என உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. `பிறிதொன்றைச் சிறிது விரும்பினும் அது பிறப்பிற்கு ஏதுவாம்` என்பது கருத்து. அதனை, ஆலாலசுந்தரரது வரலாறு நன்கு உணர்த்துதல் காண்க. இதனால், `இளமை நிலையாமை நோக்கிக் கவலாமை அறிவிலாதாரது இயல்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.

பொழிப்புரை :

நாள்தோறும் காலையில் துயில்விட்டு எழுந்த மக்கள், மீண்டும் நாள்தோறும் மாலையில் துயிலுதலும், இவ்வாறே அவர் தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் கழிந்து முடிதலும் போதும். (இனியும் இவை நிகழ வேண்டுவது என்னோ!) சிவபெருமான் இவ்வாறு அவர்களை இவ்விரண்டனுட் படுத்துத் துன்புறுத்துகின்ற முனிவினனாயினும், தன்னை மிக நினைத்த பலர்க்கு இன்பத்தைத் தந்துள்ளான்.

குறிப்புரை :

``நித்தலும்`` இரண்டனுள் முன்னதனை முதலிற் கூட்டுக. ``சாலும்`` என்றது, `அதனால் பயனில்லை` என்றவாறு. `இச் சலவியன்` எனச் சுட்டு வருவித்துரைக்க. சலம் - சினம்; அது மறைத்தற் சத்தியாம். ``முற்சினமருவுதிரோதாயி`` என்றார் சிவப்பிரகாசத்தினும் (48). மிக நினைத்தலாவது, இளமைதொட்டே நெடுங்காலமாக நினைத்தல்.
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்
இவன் என்னைப் பன்னாள் அழைப்பொழியான் என்று
எதிர்ப்படுமே`` -தி.4 ப.112 பா.9
என அப்பரும்,
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. -தி.11அற்புதத் திருவந்தாதி 78
எனக் காரைக்கால் அம்மையாரும் சிவபெருமானைப் பன்னாள் வழிபடுதலை வலியுறுத்து ஓதுதல் காண்க. இதனால், `இளமை நீங்குதற்கு முற்றொட்டே சிவபெருமானை நினைக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பருவூசி ஐந்துமோர் பையினுள் வாழும்
பருவூசி ஐந்தும் பறக்கும் விருகம்
பருவூசி ஐந்தும் பனித்தலைப் பட்டால்
பருவூசிப் பையும் பறக்கின்ற வாறே.

பொழிப்புரை :

நூலால் தைக்கும் நுண்ணூசிபோலாது, சணற்புரியால் தைக்கின்ற பருவூசிகள் ஐந்தும் ஒரு சணற்பைக்குள் இருக்கின்றன. அவை பருவூசியாயினும் பறக்கும் தன்மை வாய்ந்த யானைகளாம். அத்தன்மையவான அவை மெலிவடையுமாயின், அவை தங்கியுள்ள பையும் பறக்கின்ற தன்மையை உடையதாகிவிடும்.

குறிப்புரை :

பொருள்களை அறியும் அறிவுடைப்பொருள் உயிரே யாகலின் அதனை, `நுண்ணூசி` என்று வைத்து, அதற்கு வாயி லாய் நிற்றலின் தாமே அறிவுடையனபோலத் தோன்றுகின்ற ஐம்பொறி களைப் ``பருவூசி`` என்றார். ``பை`` என்றது உடம்பை. அறியு மாற்றால், `ஊசி` எனத்தக்க ஐம்பொறிகள் தாமே அடங்காது புலன்கள் மேற் செல்லுமாற்றால் `யானை` எனப்படுமாகலானும், `அவ்வாற்றால் அவை யானை எனப்படினும், புலன்களைச் சென்று பற்றும் விரைவு பற்றிப் பறவையாகவும் கூறுதற்கு உரிய` என்பார், `பறக்கும் விருகம்` என்றார். விருகம் - `மிருகம்` என்பதன் சிதைவு. ``பல்விருகமாகி`` (தி.8 சிவபுராணம்) எனத் திருவாசகத்தினும் வந்தது. `மிருகம்` என்றது ஏற்புழிக் கோடலால் யானையாயிற்று. ``ஆக மதத்தன ஐந்து களிறுள`` (தி.10 -5 ஆம் தந்திரம்). என்பது போல ஐம்பொறிகளை யானையாக உருவகித்தல் பெரும்பான்மை யாதல் அறிக. பனித் தல் - நடுங்கல்; தளர்ச்சி. பொறிகள் புலன்களைக் கவரும் ஆற்றலை இழப்பின் உடல் இறந்ததோடு ஒக்குமாதலின் `பரு வூசி ஐந்தும் பனித் தலைப் பொருந்தினால் பையும் பறந்தது போல்வதே` என்றார். எனவே, `அவைமெலிதலாகிய முதுமை வருதற்கு முன்னே ஈசனை நினைக` என்பதாம்.
இதனால் `இளமையது நீக்கம் உடல் நீக்கத்தோடு ஒக்கும்` என அதனது இன்னாதநிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.

பொழிப்புரை :

திருமாலும், பகலவனும் உலகத்தை அதன் உள்ளி ருந்தே அளக்கின்றதை உலகர் சிறிதும் நினைக்கின்றிலர். நினைப் பாராயின், அவ்விருவரும் வீடுபேற்றிற்கு உரியவரையும், பிறப்பிற்கு உரியவரையும் முறையே முப்பதுயாண்டு அகவையிலும், அறுபது யாண்டு அகவையிலும் இவ்வுலகத்தினின்றும் பிரிக்கின்றவராவார்.

குறிப்புரை :

`திருமால் உலகத்தை அதன் உள்ளிருந்து ஈரடியாலே அளந்தான் என்பதனை என்றோ ஒரு காலத்து நிகழ்தொழிந்த நிகழ்ச் சியாக எண்ணுதல் கூடாது; என்றும் நிகழ்வதாகவே எண்ணல் வேண்டும்; ஏனெனில், அக்கதையின் உட்பொருள், அவன் காத்தற் கடவுளாதலின், உயிர்கள் பிறக்கும் இடங்களிலெல்லாம் சென்று காத்தற்பொருட்டு அவ்விடங்களைத் தன்னுள் ஓர்ந்துணர்கின்றான் என்பதே ஆதலின்` என்பது நாயனார் கருத்து. அதனால், உலகத்தைத் திருமால் இடவகையாலும், பகலவன் கால வகையாலும் அளக்கின்ற வராதல் அறிக. இப்பொருள் உணரமாட்டாதார் ``கண்ணனும்`` என்னும் பாடத்தை, `கண்ணதும்` என ஓதுப.
``எண்ணுறும் முப்பது`` என்றதற்கு, `முதல் முப்பது. இரண்டா வது முப்பது` மூன்றாவது முப்பது என்று இவ்வாறு எண்ணப் படும் முப்பது` என உரைக்க. இவற்றுள் முதல் முப்பதாண்டிற்குள்ளே கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிரம்பி, நிலையாமை உணர்வுபெற்று நின்றாரை; `இனி இவர் உலகருள் ஒருவராகவைத்து எண்ணற் பால ரல்லர்` எனவும், அங்ஙனம் அவ்வுணர்வு பெறாதாரை அறுபதாண்டு வரையும் கண்காணித்து நின்று, அத்துணை ஆண்டுகள் கழிந்த பின்ன ரும் நிலையாமை உணர்வு வரப்பெறாதவரை, `இனி இவர் இவ்வுலகத் தில் வாழ்ந்தும் வாழ்நாள் முடிந்தவரேயாவர்` எனவும் காத்தற் கடவுள் துணிந்தொழிதலின், அவ்விருதிறத்தாரும் அவ்வவ் ஆண்டளவில் அக்கடவுளால் உலகத்தினின்றும் பிரிக்கப்படுவோராதல் அறிக. காய்கதிரோன் காத்தற் கடவுளது துணிவிற்குக் கருவியாய் நிற்றல் பற்றி, அவனையும் அக்கடவுளோடு ஒப்பவைத்து எண்ணினார்.
பதினாறாண்டில் மணவினை முடிக்கப்பெற்று முப்பதாண்டின் காறும் உலகியலில் ஈடுபட்டிருப்பினும், கட்டிளமைக் காலம் முப்ப தாண்டோடு முடிவுறுதலின், அதற்குள்ளே நிலையாமை உணர்வு பெறாதொழியின் அதன் பின்னர் அதனைப் பெறுதல் ஐயமேயா தலின், `இவர் வீடு பெறுதற்கு உரியார்` எனக் காத்தற்கடவுள் துணிதற்கு அவ் யாண்டே எல்லையாயிற்று.
இனி, முப்பதாண்டிற்கு மேலாய் அறுபதாண்டின்காறும் செல்லும் காலம், `இவர் இத்தன்மையாராவர்` என்னுந் துணிவினைப் பயவாது ஐயத்தையே தந்து நின்று, அதன்பின் நிலையாமை உணர்வு வருதல் பெரும்பான்மையும் இல்லையாதலின், `இனி இவர்க்கு நிலையாமை உணர்வு வாராது` என்று துணிதற்கு அவ்யாண்டே எல்லையாயிற்று. அறுபதாண்டின் காறும் பற்று விடப்பெறாதவர் பின் விடப்பெறுதல் பெரும் பான்மை இல்லை என்பதே ஆன்றோரது துணிபு. திருநாவுக்கரசு நாயனார்போல அறுபது யாண்டின் பின்னரும் மெய்யுணர்வு பெறுதல் இறைவன் திருவருள் தானே முன்நிற்க நிகழும் அருஞ்செயல் என்க. அது பற்றியன்றே, அந்நாயனார் இறைவன் தம்மை ஆட்கொண்ட நிலையைப் பெரிதும் சிறப்பித்துப் புகழ்கின்றார். இக்காலத்து உள நூலாரும், `அறுபதுயாண்டின் பின்னர் ஒருவர்க்கு மனமாற்றம் உண்டாகாது` என்பர்.
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு. -நல்வழி என ஔவையாரும், `மூவாசை நீங்கி மெய்ப்பொருளைப் பெறுதல் முப்பதாண்டிற்குள் உண்டாகவில்லையெனின், பின்னர் உண்டாதல் அரிது` என்றது காண்க.
இங்கு, `முப்பது` என்றது கதிரளவை (சௌரமான) யாண் டேயாம். மதியளவை (சாந்திரமான) யாண்டு கதிரளவை யாண்டிற்குச் சிறிது ஏறக்குறைய நாற்பது நாள்கள் குறைவுடையது. இனிப்பிற கோள் அளவைகள் மிகக் குறைந்தும், கூடியும் நிற்கும். அதனால் கதிர ளவையின் பத்துத் திங்களைப் பல்கோள்களின் பொதுயாண்டாக வைத்து, அவற்றின் பேராட்சி, உள்ளாட்சிகளை (திசா புத்திகளை)க் கணக்கிடுவர். அவ்வாற்றால் பலகோள் யாண்டின் ஒரு வட்டம், `நூற் றிருபதுயாண்டு` எனப்படுகின்றது. எனினும், அது கதிரளவையின் நூற்றியாண்டேயாம். ஆகவே, மக்களின் நிறைவாழ்நாள் `நூற்றியாண்டுக் காலம்` என்றல் இழுக்காதல் இல்லை. இஃது அறியாது இக்காலத்தார் கோள்களின், பேராட்சி உள்ளாட்சியாண்டுகளைக் கதிரளவையாண்டின் வைத்துக் கணக்கிட்டு, நடைமுறைக்குப் பொருந்தாவகை செய்கின்றனர். அது நிற்க.
சிலர், `இங்குக் கூறிய முப்பதிற்றுயாண்டு பல்கோள் யாண்டே; அதனால் அவை கதிரளவையில் இருபத்தைந்துயாண்டே யாகலின், ஒருவனது வாழ்நாள் எல்லையாகிய நூற்றியாண்டினை நாற் கூறிட்டு ஒவ்வொரு கூற்றினும் முறையே மாணி (பிரமசாரி), இல்வாழ் வான் (கிருகத்தன்), நோன்பி (வானப்பிரத்தர்) துறவி (சந்நியாசி) என்னும் நிலைகளை உடையனாதல் வேண்டும். இந்நிலை களில் நான் காம் நிலையிலே பற்றறுதி உளதாகும். இவ்வாறன்றி முதல் நிலைக் கண்ணே பற்றறுதி உடையனாய் நிலைமாணி (நைட்டிக பிரமசாரி) யாகி வீடுபேறு ஒன்றையே விரும்பி நிற்பவனே தலையாய மகனாகலின், அவனது நிலைபற்றியே முப்பது யாண்டு மெய்யுணர்வு பெறுதற்கு எல்லை எனப்பட்டது `எனவும், `அவ்வாறின்றி மேற்கூறிய வாற்றால் இல்வாழ்க்கை முதலிய நிலைகளை மேற்கொண்டு செல்வார்க்கு யாக்கை நிலைநிற்றலும், பற்றறுதலும் ஒருதலையன் மையின், அவற்றை வீடுபேற்றிற்குரிய காலமாக ஆன்றோர் கொண்டிலர்` எனவும் கூறுவர். அவையெல்லாம் ஒக்குமாயினும், முதல் நிலைக்கண்ணே பற்றற்று நிலைமாணிகளாய் நிற்போர் உலகத்து அரியராகலானும், இல்வாழ்க்கைக்குப் பின்னர் நோன்பியாய் இருத்தல் வேண்டும் என்பதும், முப்பதுயாண்டு இல்வாழ்க்கையில் நிற்றல்வேண்டும் என்பதும் பொதுவாகக் கொள்ளப்படுவனவன்றிக் கட்டளையல்ல ஆகலின், பற்றறுதி உண்டாய வழி அறுபதிற்றி யாண்டிலாயினும், அதற்கு முன்னராயினும் முற்றத் துறத்தல் குற்றமன்று ஆகலானும். அறுபதிற்று யாண்டின் பின்னரே நோன்பின ராதல் வழக்கின்கட் காணப்படுதலாலும், `முப்பதுயாண்டு` என் பதனைக் கதிரளவை யாண்டாகக் கொள்ளுதலே பொருந்துவது என்க.
அஃது அவ்வாறாக, சிலர் நூற்றியாண்டின் மேலும் வாழக் காண்கின்றோம் ஆதலின், `மக்கள் வாழ்நாள் எல்லை நூற்றியாண்டு` என்றல் எவ்வாறு பொருந்தும் எனின், அவையெல்லாம் கையிலும், காலிலும் சிலர் ஆறுவிரல், ஏழுவிரல் பெற்றுப் பிறத்தல்போல அரிதிற் காணப்படுவனவாகலின், பொதுமுறைமை ஆகா என்க. இவ் வாற்றால் இத்திருமந்திரம் முப்பதிற்றுயாண்டளவையாகிய இளமையின் சிறப்பை உணர்த்தி, அதற்குள்ளே சிவனது திருவடி உணர்வைப் பெறல்வேண்டும் என வலியுறுத்து முகத்தால், இளமை நிலையாமையைக் கூறியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 9

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பொழிப்புரை :

பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற நிறைமதி, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந் தும், `இளமை நிலையாது` என்பதைக் கீழ்மக்கள் நினைக்கின்றார்கள் இல்லை. (அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால்) அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற கூற்றுவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

குறிப்புரை :

``ஈரெண்கலை`` என்றதனால், `அதனை ஒருங்கு பெற்று நின்றது திங்கள்` என்பது விளங்கிற்று, ``நின்றது`` என்றது அதன் நிலைமையைக் குறித்த ஆகுபெயர். ``கருங்குழி`` என்றது `இருட்குழி` என்றவாறு. `கருக்குழி` எனப் பாடம் ஓதுதல் இவ் இடத்திற்கு ஏலாமை அறிக.
இதனால், இளமை சிறிது சிறிதாகக் கழியும் முறைமை உவமையில் வைத்துக் காட்டப்பட்டது.
``தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கட் புத்தேள் திரிதருள் உலகத்து``
என்னும் புறநானூற்று (27) அடிகள் இதனோடு ஒருவாற்றான்வைத்து ஒப்புநோக்கத் தக்கன.

பண் :

பாடல் எண் : 10

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.

பொழிப்புரை :

மக்களுக்கென்று பொருந்திய நூற்றியாண்டின் எல்லைக்கு இடையே கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையை நான் எனது வாழ்நாளில் பன்முறை கண்டிருக் கின்றேன்; ஆதலால், வாழ்தல் பொருந்திய நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.

குறிப்புரை :

`பலரும் முதுமைவந்த பிறகுதான் இறப்பர்` என்ற கட்டளை இன்மையால், இளமையிலே சிவனைப் பெறுதல் வேண்டும்` என்றபடி.
``அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க``
என்று திருக்குறளிலும் (36),
மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது
கைத்துண்டாம் போழதே கரவா தறம்செய்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
என்று நாலடி நானூற்றிலும் (பா.19) கூறப்பட்டமை காண்க.
இதனால், இளமை நிலையாமையை உணர்ந்து இளமைக் கண்ணே சிவனைப்பெற முயலல் வேண்டும் என்பது முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

பொழிப்புரை :

தண்ணிய பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாக அதனால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே அவரது சொற்கடவாது அதனையடைதற்கு முயலாது, `பின்பு முயல்வோம்` என்று புறக்கணித் திருப்பர்.

குறிப்புரை :

`அவ்வாறிருப்பின், அவ்வுணர்வு முறுகி எழாது மெலிந்து, முன்போல உலகியலில் ஆழ்ந்து கெடும்` என உணர்வினது நிலையாமை கூறியவாறு காண்க. ஒன்றே செய்க; நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க` என, `நல்லன செய்தல் வேண்டும் என்ற உணர்வு உண்டாய வழி அப்பொழுதே செய்தல் வேண்டும்` எனக் கூறுதலும், உணர்வு நிலையாமையை நோக்கியேயாம். இன்னும், `புராண வைராக்கியம், மசான வைராக்கியம்` முதலியவற்றாலும் உணர்வு நிலையாமையைக் கூறுப. ``மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு`` (குறள் - 425) என்றாற் போல்வனவற்றாலும் திருவள்ளுவர் உணர்வு நிலையாமையை உணர்த்தினார்.
``நின்னைஎப் போதும் நினையலொட் டாய்; நீ நினையப்புகின்,
பின்னை அப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி``
-தி.4 ப.112 பா.4.
என்றதனாலும் இவ்வுணர்வு நிலையாமை நன்கறியப்படும். உயிர் உளதாகவும் உணர்வு இவ்வாறு நிலையாது போதலின், அதற்குக் கொம்பு கேடின்றி நிற்கவும் அதன்கண் உளவாகின்ற தளிர் முதலியன உருமாறிக் கெடுதல் உவம அளவையாயிற்று. தளிர் முதலியன தோன்றுதல் இயல்பாயினும், அதற்குக் கொம்பு முதலாத லின் அதனால் ஆக்கப்படுவனவாகக் கூறினார். இழைத்தலுக்குக் காலத்தை முதலாக வைத்து உரைப்பினும் அமையும். பிழைப்பு - பிழைத்தல்; பிழை செய்தல். அஃதாவது அழைத்தவாறே உடன்பட்டுச் செல்லாதொழிதல்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். -குறள். 833
என்பவற்றில் இது, ``பேணாமை`` என்னும் குற்றமாம்.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே``
-தி.8 போற்றித் திருவகவல் -75-77
என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தார். எம்பெருமானடியை ஏத்த அழைப்பவர் ஞானாசிரியரேயாதல் அறிக. வேறு தொடராக்காது. `அறியாரவர்தாம், அழைக்கின்றபோது பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்` எனக் கூட்டி உரைக்க.
இதனால், உணர்வு நிலையாமை உவம அளவையின்வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே.

பொழிப்புரை :

உடையான் ஒருவனால் ஐவர் உழவர்க்கு ஒரு நிலம் விளைவு செய்ய விடப்பட்டது. அவ் ஐவரும் அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத் தது. ஆயினும், உடையான் அந்நிலத்தை மாற்றக் கருதி அவர்களை விலகுமாறு ஓலை விடுத்தமையால், அவ் ஐவரும் அந்நிலத்தைக் கைவிட்டனர்.

குறிப்புரை :

`அந்நிலையில் அந்நிலம் விளைவைத் தருதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ஐவர், ஐம்பொறிகள், செய், உயிர், விளைதல், உணர்வு நிகழப்பெறுதல். நாயகன், சிவன். ஓலை, ஆணை; நியதி தத்துவத்தின் செயல். ``காவல் விட்டார்`` என்ற அளவே கூறினமையின், `பொறிகள் ஆற்றல் அடங்கின` என்ற அளவே கொள்க. உயிர் உளதாகவும் பொறிகள் அடங்கின் உணர்வு ஒழிதல் காட்சியானே உணரப்படுதலின், ஒரு பொறியன்றி ஐம்பொறியின் வயப்பட்டு நிற்கும் உணர்வு ஒரு நிலையதாதல் எவ்வாறு` என்பது கருத்து. ஓர் உணர்வு ஐம்பொறியின் வயப்பட்டுப் பலவாறாகச் சிதறுண்டலால் வரும் துன்பத்தினை மாணிக்கவாசகர்,
``ஆனைவெம் போரில் குறுந்தூறெனப் புலனால் ஆலைப் புண்டேன்``
எனவும்,
``எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால் அரிப்புண்டலந்த
வெறுந்தமியேன்`` தி.8 நீத்தல் விண்ணப்பம் - 21,25.
எனவும் விளங்க ஓதினார். இன்னும்,
``அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆதனேன்``
-தி.4 ப.26 பா.5
என அப்பரும்,
``ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியுளீரே``
-தி.7 ப.5 பா.1
என ஆரூரரும் அருளிச்செய்தலும் காண்க.
பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு
அறிவென்ற பேர்நன் றற. -திருவருட்பயன் - 15.
என்றதும் உயிர் உணர்வு தன்வயமுடைத்தாய் நிலை நில்லாமை பற்றியேயாம்.
``ஒருபுலன் நுகரும் போதங் கொன்றிலை; ஒன்றன் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும்; எல்லாம் மாறும்
ஒருபொழுது``
என்னும் சிவஞான சித்தி (சூ. 2.94)ச் செய்யுள் இவ்வுணர்வு நிலையாமையை இனிது விளக்குதல் காண்க.
இதனால், உணர்வு நிலையாமை, இறுதிக்கால நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.

பொழிப்புரை :

பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.

குறிப்புரை :

`மத்தளம் ஒன்றோடு கூடிய தாளம் இரண்டு உள்ளன என்பதொரு நயம்தோன்றுதற் பொருட்டு, `மகத் தளி, தளம்` என்ப வற்றை, இடைக் குறைத்தும், முதல் நீட்டியும் கூறினார். மத்தளத்தை `மத்தளி` என்றலும் பொருந்துவதே; இகரம் பகுதிப்பொருள் விகுதி. மத்தளம் ஒன்றாய் நின்றே ஓசைதர, தாளம் இரண்டாய் நின்றே ஓசை தருவது என்பதும் குறித்தவாறு. இவ்வாறு சொல்லளவால் பிறிது பொருள் தோற்றுதலையும் ஒட்டணியின்பாற் படுத்துவர். மகத்தளி - பெரியகோயில்; அரண்மனை; உடம்பு மேல்கீழ்த்தளம் புருவ நடுவும், மூலாதாரமும். அமைச்சர் ஐவர், ஐம்பொறிகள். `அரசரும்` என்பது பாடம் அன்று. அரசன், உயிர். அது மூலாதாரத்துச் சென்று ஒடுங்கும் நிலையில் எல்லாக் கருவிகளும் செயலற்றுப் போக, உயிர்ப்பும் இல் லையாய், உடல் மண்மேல் சாய்ந்து கிடக்கும். இந்நிலையை `மூர்ச்ை\\\\\\\\u2970?` என்பர். `கேவல துரியா தீதம்` என்பதும் இதுவே. இஃது இறப்பு அன் றாகலின், `அரசனும் அமைச்சரும் உள்ளிருக்கும் பொழுதே அரண் மனை சாய்ந்தது வியப்பு` என்றார். சாக்கிரம் முதலாக இவ் வதீதங்காறும் உள்ள அவத்தைகள் ஐந்தும் வினைவழி உயிர்க்கு உளவாவனவாம். ``மண் ஆய்`` என்பதில் `மண்ணின்கண் ஆகி` என உருபு விரித்து, ``ஆய்`` என்றதை, `ஆக` எனத் திரிக்க. ஆதல், இங்கு, பொருந்துதல். மயங்குதலுக்கு வினைமுதல் அமைச்சரும் அரசனும். `வியப்பு` என்பது சொல்லெச்சம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதீதநிலை நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது. மேற்காட்டிய, ``ஒருபுலன் நுகரும்போது`` என்ற சிவஞானசித்தி (பா.187. உரை)ச் செய்யுளில், ``எல்லாம் மாறும் ஒருபொழுது`` என்றதில், ``ஒருபொழுது`` எனப்பட்டது இவ்வதீத நிலையேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொழிப்புரை :

இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.

குறிப்புரை :

வேம் கட நாதன் - வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள். இனி, `வேங்கடமலைமேல் உள்ள நாதன்` என வேறொரு பொருளும் தோன்றக் கூறினமை காண்க. ``வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் - வேங்கடத்து நோயால் வியந்து`` (தி.11. கபிலர் அந்தாதி 15) என வருதலின், வேங்கடம் சிவதலமாதல் பெறப்படும். வேம் கடத்துள்ளே - வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்ளே. இறைவன் நமது புலாலுடம்பினுள்ளும் உளனாதல் மேலே (தி.10 பா.115 - 116) காட்டப்பட்டது. வேம் கடம் என்று - வெந்தொழியும் உடம்பு என்று அறிந்து. விரகு - உபாயம்; உபாயத்தால், என உருபு விரிக்க. `தாங்க வல்லதாகிய ஆருயிர்` என்க. `உயிரை அதற்கு உயிராய் நின்று யாண்டும் காத்தலின்` இறைவனை, ``தாங்க வல்ல ஆருயிர்`` என்றார். ``தன் கடன் அடியேனையும் தாங்குதல்`` (தி. 5. ப.19. பா.9) எனவும், ``எடுத்துச் சுமப்பான்`` (திருவருட்பயன் 55) என்றும் வருவனவும், இறைவன் உயிரைத் தாங்குவோனாதலை விளக்க எழுந்தனவாம். தாங்கவல்ல ஆருயிரை அறியாமையாவது, `அவ்வுயிரே, தாங்கப்படுகின்ற உயிர்க்கு உணர்வைத் தருவது` என அறியாமை. `அறிந்தால், தமது உணர்வு நிலையாமை உடையது என்பது விளங்கும்` என்பது கருத்து. `சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது` என்பதனை,
அக்கரங்கட் கெல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்குயிராய் மேவினோம் - எக்கண்ணும்
நில்லா விடத்துயிர்க்கு நில்லா தறிவென்று
நல்லாகமம் ஓதும் நாடு.
-உண்மை விளக்கம் 30
என்பதனான் அறிக.
``நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்`` -தி.6 ப.62 பா.2
என அருளிச்செய்ததும் இதனை.
இதனால், உணர்வு உளதாகுமாறு கூறு முகத்தான், அதனது நிலையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

பொழிப்புரை :

பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.

குறிப்புரை :

ஒளி காரணமாகப் பகலவனை இறைவனோடு உவ மித்தல் வழக்காதல் நோக்கி இறைவன் அவனினும் மிக்கவனாதலை விளக்கினார். இங்ஙனம் அவனது முற்றுணர்வின் பெருமையை எடுத்துக்கூறியது, அவ்வறிவாற்றலால் அவன் அனைத்துயிர்களையும் தன் இச்சைவழி நடாத்துகின்றான் எனக் கூறுதலை நிறுவுதற் பொருட்டாம். ``அன்று`` என்பதன்பின் `முதல்` என வருவிக்க. அளக் கின்றதற்கு வினைமுதலாகிய ``நந்தி`` என்பது மேலைத் திருமந்திரத் தினின்றும் வந்து இயைந்தது. ``அறிகின்றிலர், உணரார்`` என இரு தொடராக வைத்து அருளியது, `அவ்விரண்டும் தனித்தனி ஆய்ந் துணரத் தக்க சிறப்புடையன` எனறற்கு. ``இந்நிலத்தின்`` எனச் சுட்டிக் கூறினமையால், ஏனையிடத்தில் அனைத்துலகமும் கொள்ளப் பட்டன. மூன்றாம் அடியை இறுதியின் வைத்து உரைக்க. பொன்றுதல், இங்கு, நிலையாமை. ``உணர்வார்`` என்பது, `உணர்வு` என்பதன் அடியாகப்பிறந்த பெயர். அனைத்துயிர்களையும் உயர்திணையாக வைத்துக் கூறினார் என்க. மாயம் - அழிவு. சிவன் பெத்தத்தில் கருவிகள் வாயிலாக நிலையாத உணர்வையே உயிர்கட்கு உண்டாக் குகின்றான் என்பதை உணர்வார்க்கு உணர்வினது நிலையாமையும் விளங்கும் என்பது கருத்து.
இதனால், உணர்வு நிலையாமைக்குக் காரணங் கூறுமுகத்தால், அந்நிலையாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.

பொழிப்புரை :

பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை: என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர்யாண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொரு வர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், `தம் அறிவும் ஆற்றலும் இன்றுள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக் கின்றனர். இன்னதோர் அறியாமை இருந்தவாறு இரங்கத் தக்கது!

குறிப்புரை :

மாறு, முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகு பெயராய், அதனை உடையவற்றைக் குறித்தது. \\\\\\\"கூறும்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி, அவ்வடி முழுவதையும் இறுதியின் வைத்து உரைக்க. `ஈற்றினாலும்` பிறப்பினாலும்` என்னும் உம்மைகள் தொகுத்தலாயின. `ஓர்யாண்டின் இறுதிநாளை அடுத்த மற்றோர் யாண்டின் முதல்நாள் தொடங்கிவிடுகின்றது` என அவற்றின் இடையறாமையை உணர்த்தற்கு ஈற்றினை முன்னர்க்கூறினார். `அதனைப் பெரிதறிவாரில்லை` என்னும் அத்தொடரினைப் பின்னும், \\\\\\\"கூறும்`` என்பதனுடன் கூட்டுக. இளமைக் காலத்துள்ள உணர் வாற்றல் முதுமைக் காலத்துத் தளர்ச்சியுறும் என்றவாறு.
இதனால், உணர்வு நிலையாமை மூப்பினது இழிவுணர்த்து முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

பொழிப்புரை :

ஓர் அகப்பையே இடப்பட்ட ஐந்து பானைகள் அடுக்காய் உள்ளன. அவை அனைத்திலும் இட்டு அடப்படுகின்ற அரிசி ஒன்றே உள்ளது. அப்பானைகளை ஏற்றிவைக்கின்ற அடுப்புகள் மூன்று உள. அம்மூன்று அடுப்பிலும் மாட்டி எரிக்கின்ற விறகுகள் ஐந்து உள்ளன. இதனால் அவ்வரிசி நன்முறையில் அடப்படுமோ! படாது. அதனால், அவைகளில் வைத்து அவ்வரிசியை அட நினையாமல், நல்ல அட்டில் தொழிலாளனிடம் கொடுங்கள்; கொடுத்தால் நன்கு அட்டு உண்ணலாம். முன்சொன்ன வகையில் அரிசியை அடலாம் என்று நினைத்துக் கழித்த நாள்களும் பலவாய் முன்னே போய்விட்டன. இனியேனும் அவனிடம் அவ்வரிசியை விரையக் கொடுங்கள்.

குறிப்புரை :

`உயிர் உணர்வு சிவனைச் சார்ந்தால் நிலை பெற்று இன்பந் தருமேயல்லது, மாயாகாரியங்களைச் சார்ந்தால் நிலை பெறாது துன்பத்தையே தரும்` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார். துடுப்பு, உயிர்; அரிசி, அதன் உணர்வு; ஐந்து பானை, ஐந்து உடம்பு; மூன்று அடுப்பு, `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என்னும் மூன்று காலங்கள்; ஐந்து விறகு, ஐம்பொறிகள். இவை இங்ஙனம் உருவகிக்கப் பட்டமைக்குரிய இயைபுகளை ஓர்ந்துணர்ந்துகொள்க. இங்குச் சொல்லப்பட்ட பானை முதலியவற்றால் அடுதல் தொழில் நிகழ லாகாமை அறிக. ``எரியாமல்`` என்பது, பிறவினை வினையெச்சம். `விடுத்தனவாகிய நாள்களும்` என்க. `துடுப்பிடு பானைக்கும்` என்பது பாடம் அன்று. நல்ல அட்டில் தொழிலாளன், சிவன். ஐந்துடம் பாவன, `சோற்றுடம்பு, காற்றுடம்பு, உளத்துடம்பு, உணர்வுடம்பு, களிப் புடம்பு` என்பன. இவை முறையே, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` எனப்படும். இவற்றின் இயல்பு அப்பால் விளங்கும்.
இதனால், மாயா காரியங்களின் வேறுபாட்டால் உணர்வு நிலையாமை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே.

பொழிப்புரை :

தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாததுபோல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.

குறிப்புரை :

இங்ஙனமாகவே அகக்கண்ணில் நின்ற உயிர் உணர் விற்கு விளங்குவானாயிற்று. இனமலர் - கூட்டமாய மலர். இஃது ஒரு மைக்குப் பன்மை உவமை. வாசம் - வசித்தல்; `வாசத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. \\\\\\\"போல்`` என்னும் முதனிலை முற்றுப் பொருளது. பொருட்கண். ``இன்புற நாடி நினைக்கிலும் - கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே`` எனப் பின்னுங்கூறி விரித்தமையால், உவமைக்கண்ணும் அவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. நினைக்கினும் என்பது பாடம் அன்று. `கட்புறம்` என்பது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. இது, `புறக்கண்` என்பதன் நிலைமாற்றம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதன் மறுதலை முகத்தால் கூறப்பட்டது. கண், ஞானமுமாம்.

பண் :

பாடல் எண் : 9

ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே.

பொழிப்புரை :

மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசுபுண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுத லாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.

குறிப்புரை :

`மானிடர் ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கு ஆம் விதி வேண்டும்; அது என் சொலின்` என எடுத்துக்கொண்டு உரைக்க. ஈரிடத்தும் `நாடி` எனவும் பாடம் ஓதுப. `நாம் விதி வேண்டும்` என ஓதுதல் பாடம் ஆகாது, பின்னர் ``அந்நிலம்`` என்றதனால், முன்னர் `இந்நிலம்` என்பது பெறப்பட்டது. ``வல்லார்க்கு வேண்டும்`` என்றது வேறு முடிபாகலின், \\\\\\\"செய்மின், போற்றுமின்`` என்பன இடவழு ஆகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 10

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.

பொழிப்புரை :

வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

குறிப்புரை :

`இந்நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பெச்சம். அவ்வியம் - பெறாமை. அது, \\\\\\\"பேசி`` என்றதனால், அதனால் வரும் புறங்கூற்றைக் குறித்தது. \\\\\\\"வெவ்வியர், செவ்வியர்`` என்பன இடவழுவமைதி. `வெவ்வியன், செவ்வியன்` என்பன பாடமாயின், பன்மை ஒருமை மயக்கமாகவும் கொள்க. தவ்வி - சிறிது. \\\\\\\"யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி`` எனப் பின்னரும் அருளுவார். `செவ்வி தலைப்பட்ட போது` என ஒரு சொல் வருவித்து முதலிற் கூட்டுக. `தவ்விக் கொடுண்மின்` என்பது பாடமன்று.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `உணர்வு நிலை யாமையை உணர்ந்து நிலைபெறுதற்குரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

பொழிப்புரை :

மெய்யுணர்வு நிலைபெறுதற்குத் துணையாய குருவழிபாட்டிற்கும் பல மலர்களால் தொடுக்கப்பட்டமாலை முதலியவை இன்றியமையாதனவே. ஆயினும், சிறப்புடைய மாலை பிற உயிர்களைக் கொல்லாமைகள் பலவும் இயைந்த பண்பே. இன்னும் சிறப்புடைய அசையா விளக்கு ஒருதலைப் பட்ட மனமும், இலிங்கம் இருதயத்தில் பொருந்தி நிற்கும் உயிராகிய ஒளியின் முனையுமாம்.

குறிப்புரை :

``குருபூசைக்கும்`` என்ற உம்மை, `சிவ பூசைக் கேயன்றி` என, இறந்தது தழுவிற்று. ``பன்மலர்`` என்பதன்பின், `வேண்டும், ஆயினும்` என்பவற்றை வருவித்து, `ஒண்மலர் நல் தார் கொல்லாமை` எனவும், `தீபம் சித்தமும் அமர்ந்திடம் ஆவி உச்சியும்` எனக்கூட்டுக. ``சித்தம் `` என்றதை அடுத்து நின்ற குறிப்பால, `உற்று ஆர்தல் இருதயத்தில்` என்பது தோன்றிற்று. ``தீபமும்`` என்ற உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. ``ஓர்`` என்றது `ஒருவகை` என்னும் பொருட்டு, ``தார்`` என்றதனால் ``கொல்லாமை`` என்றது, `கொல் லாமைகள்` எனப்பன்மையாய் நின்றமை பெறப்பட்டது. உயிர்ப் பன்மையால் கொல்லாமைகளும பலவாயின. ஒருசார் உயிர்களைக் கொல்லாதார் மற்றொருசார் உயிர்களைக் கொல்வாராதலின், `எல்லா உயிர்களிடத்தும் கொள்கின்ற கொல்லாமை நோன்பே வேண்டும்` என்பார், `கொலலாமை மலர்` என்னாது, ``கொல்லாமை மலர்த் தார்`` என்றார். ஞான நெறியார் செய்கின்ற அகப்பூசைக்குக் கொள்ளப்படும் எட்டு மலர்களுள்ளும் கொல்லாமையே தலையாயதாகச் சொல்லப் படும். அவ்வெட்டு மலர்களாவன. `கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு` எனபன. இவ்வாறு சிவஞான மாபாடியத்து (9 அதி.3)க் கூறப்பட்டது. `அமர்ந்த` என்னும் பெயரெச்சத்து கரம் தொகுத்தலாயிற்று. இறைவன் எழுந்தருளியிருந்து அன்பரது வழிபாட்டினை ஏற்றுக்கொள்ளும் இடம் இலிங்கமாதல் உணர்க. இருதயமாகிய ஆசனத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி ஆன்மாவும், மூர்த்திமான் சிவனுமாதல் பற்றித் திருநாவுக்கரசர், ``காயமே கோயிலாக`` (தி.4 ப.76 பா.4) என்னும் திருப்பாடலுள், ``மனம் மணி இலிங்கமாக`` என ஓதியருளினமை காண்க. ``மனம்`` எனப்படுவது ஆன்மாவே என்பது உணர்த்தற்கு, நினைகருவியாகிய மனத்தை, ``கடிமனம்`` என முன்னே அடைகொடுத்துப் பிரித்தருளினார். உபநிடதங்களுள் தகரவித்தை கூறுமிடத்து, ``இருதயமாகிய தாமரை மலரின் மேல் விளங்குகின்ற சுடரின் முனையில் பரமான்மா நிற்கின்றது`` எனக் கூறப்படுவதில், `சுடர் என்றது, சீவான்மாவை` என்பது பின்னர், `பரமான்மா` என வருதலான் அறியப்படும் (மகாநாராயணோப நிடதம்). ``எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே`` என உண்மை விளக்க (32) நூலும் ஆன்மாவை` இலிங்கம்` என்றது காண்க. ஆன்மா வேயன்றித் திருவைந்தெழுத்தும் சிவபெருமானுக்கு இலிங்கமாம். தனது சத்தியும் இலிங்கமாம். இவ்வாறு பல தலைப்படக் கூறுதல் என்னை என ஐயுறும் மாணாக்கர்க்கு, `சிவபெருமானுக்குத் திருவைந் தெழுத்துத் தூல சரீரமும், ஆன்மா சூக்கும சரீரமும், சத்தி அதிசூக்கும சரீரமும் ஆதலின், அதுபற்றி ஐயமில்லை` என்பதை மாபாடியம் உடையார் தமது சிவஞான சித்தி (சூ. 9. 9) உரையுள் இனிது விளக்கினார். `கொல்லாமை என்னும் அறம் ஞான பூசையிலும் முதல் மலராகக் கொள்ளப்படும் சிறப்புடைத்து` என்பது கூறுவார், அப்பூசையின் உறுப்புக்கள் பிறவும் உடன் கூறினார் என்க.
இதனால், கொல்லாமையது சிறப்பு உணர்த்தப்பட்டவாறறிக.

பண் :

பாடல் எண் : 2

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

: ``கொல்லிடு, சொல்லிடு`` என்பவற்றில் இடு, துணைவினை, ``நில்லிடும்`` என்றதில் இடு, இசைநிறை, வல்லடிக் காரர், வலிய தண்டலாளர்; யம தூதர். வலிக் கயிறு - வலிமையுடைய கயிறு; யம பாசம். இஃது அவர் நினைத்த அளவில் நினைக்கப் பட்டோரை இறுகிக் கட்டும் கடவுள் தன்மை பெற்றது. ``நில்லென்று`` என்றது, தம் தலைவன் முன் கொண்டுபோய் நிறுத்திக் கூறுவது.
இதனால், கொலைப் பாவத்தினது கொடுமை கூறும் முகத்தால் கொல்லாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றியத் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொல்லாங்கு, கொலையால் வருவதாயும், கொலை செய்யத் தூண்டுவதாயும் இருத்தல். இது பற்றி அதனை உண்பாரை, `புலையர்` என்றார். புலையர் - கீழ்மக்கள்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை`` -குறள் 315
என்றவாறு, அருளில்லார், `அறிவுடையார்` எனப்படாமை யானும்,
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 252
என்பதனால் புலால் உண்பவர் அருளுடையாராதல் கூடாமை யானும் அவர் `உயர்ந்தோர்` எனப்படாது `இழிந்தோர்` எனவே படுவர் என்பது உணர்க. செல்லாக - சிதல்போல; சிதல் அரித்துத் தின்னும் இயல்புடையது. மறித்து - மீள ஒட்டாது மடக்கி.
உண்ணாமை உள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. -குறள் 255
எனத் திருவள்ளுவரும், `புலால் உண்பவர் நிரயம் புகுந்து மீளார்` என்றார். இரண்டிடத்தும், `மீளாமை` என்பதற்கு, `நெடுங்காலம் கிடத்தல்` என்பதே கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 1

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே.

பொழிப்புரை :

அறமுதலிய நான்கற்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்பு கின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.

குறிப்புரை :

ஆத்தம் - துணையாக நம்புதற்கு உரிய தகுதி. இஃது, `ஆப்தம்` என்னும் வடசொல்லின் திரிபு. இனி இதனை, `யாத்த` என் பதன் மரூஉவாகக் கொண்டு, `கட்டிய மனைவி` என்று உரைப்பாரும் உளர். பிறன்மனை நயத்தல், காமத்தோடு, `களவு` என்னும் குற்றமு மாம் என்றற்கு, ``காத்த மனையாள்`` என்றார். இவற்றால் மக்கட்குரிய நெறிமுறை இலராதல் பற்றிப் பிறன்மனை நயக்கும் பேதையரை `எருது போல்பவர்` என இழித்துக் கூறினார். காய்ச்ச, `காய்த்த` என்பதன் போலி `இயற்கையாய்ப் பழுத்த பழம்` என்றற்கு, `கனிந்த` என்னாது ``காய்த்த`` என்றார். இயற்கையானன்றி இடையே பறித்துச் செயற்கையாற் பழுக்க வைக்கும் பழம் சுவையுடைத்தாகாமை அறிக. `உண்ணமாட்டாமை, மடமையான் ஆயது` என்க. `பேதைமை யாவது, ஏதம் கொண்டு ஊதியம் போக விடலே` (குறள் 831) யாதல் உணர்க.
தனது தோட்டத்தில் உள்ள பலாப்பழம் அச்சமும், இளி வரவும் இன்றி நாவாரவும், வயிறாரவும் உண்ணப்படுமாகலின் அதனை, அத்தன்மையளாய தனது மனையாட்கும், பிறனது புழைக் கடையில் உள்ள ஈச்சம் பழம் முள்ளுடைதாய அம்மரத்தியல்பானும், பிறனுடையதாகலானும் அச்சமும், இளிவரவும் தருவதாய் உண்ணப் போதாத சிற்றுணவாம் ஆதலின், அதனை, அத்தன்மையளாய பிறன் மனையாட்கும் உவமை கூறினார். அதனானே, பிறன்மனை நயப்பார் அறத்தையேயன்றித் தாம் கருதிய இன்பமும் பெறாமை பெறப்பட்டது. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும்,
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில். -குறள் 142
என்றார். இன்னும் அவர்,
பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். -குறள் 146
என்றலும் காண்க.
இதனால், பிறன்மனை நயத்தல் மடவோரது செயலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென் றெண்ணி அறையிற் புதைத்துப்
பொருத்தமி லாத புளிமாங் கொம்பேறிக்
கருத்தறி யாதவர் காலற்ற வாறே.

பொழிப்புரை :

தமக்கு உறுதியை அறியாதவர் ஆத்தமனையாள் அகத்தில் இருக்கவே, பிறன் காத்த மனையாளைக் காமுறுதல், காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்திற்கு இடருற்ற வாறன்றியும், தாம் செழிப்புறப் பேணி வளர்த்த தேமாமரத்தில் பழுத்த பழத்தைக் குறையுடையதென்று வீட்டில் புதைத்துவிட்டு, அயலான் வளர்த்த புளிமாமரத்தின் நுனிக்கிளையில் ஏறிக் கீழே விழுந்து கால் ஒடிந்ததையும் ஒக்கும்.

குறிப்புரை :

தேமாமரத்தைத் திருத்தி வளர்த்தமை, மனைவி உள்ளத்தில் ஒத்த அன்பும், மனைமாட்சியும் வளர அவளோடு அள வளாவி வாழ்ந்தமையைக் குறித்தது. அறத்தொடும், புகழொடும் இயைந்த இன்பத்தையும், உண்டி முதலிய உபசரிப்பையும் தந்து எஞ் ஞான்றும் விரும்பப்படுதல் பற்றித் தன் மனைவியைத் தேமாங் கனியா கவும், அவற்றிற்கெல்லாம் மறுதலையாதல் பற்றி அயலான் மனைவியைப் புளிமாமரமாகவும் கூறினார். அருத்தம் - பாதி; குறை. மாம்பழத்தை அறையில் புதைத்தல் பிறர் கொள்ளாமைப் பொருட்டு. பொருத்தம் இன்மை - இயைபின்மை; அயல். காலறுதல் கூறின மையால், கொம்பு, நுனிக் கொம்பாயிற்று. காலறுதல், அவளைக் கொண்டவனால் அவ்வழி வந்த கால் வெட்டப்படுதல். நாலடியுள், ``காணிற் குடிப்பழியாம்; கையுறிற் கால்குறையும்`` (நாலடியார், 84) என்றது காண்க.
`நுனிக் கொம்பர் ஏறினார்`(குறள் 476) வீழ்ந்து காலொடிதலும் இயல்பு. நுனிக் கொம்பர் செல்லலாகாத இடத்துச் சேறலைக் குறித்தது. ``காலற்ற வாறு`` என்றதில், இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், வேறும் ஓர் உவமையால் மேலது வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.

பொழிப்புரை :

செல்வச் செருக்கில் ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.

குறிப்புரை :

`கண்டகன்` என்பது இடைக் குறைந்து நின்றது. செல்வச் செருக்கினாலும், புல்லறிவினாலும் தூர்த்தராய்த் திரிவோ ராயினும், அவர்தம் உள்ளமும், இம்மையில் `மழையைப் பெய் யெனப் பெய்விக்கும்` (குறள் 55) ஆற்றலையும், மறுமையில் புத்தேளிர் வாழும் உலகத்துப் பெருஞ் சிறப்பினையும் தருவது (குறள் 58) கற்பு என்று அதனது சிறப்பினைத் தெளிந்து அதன் கண்ணே நிற்கும் பெருந்தகைப் பெண்டிர்மாட்டுப்புகாது, அத்தெளிவின்மையால் அங்ஙனம் நிற்க மாட்டாது இழுக்கிச் செல்கின்ற பெண்டிர்மாட்டே புகுவராகலின், ``மருள்கொண்ட மாதர் மயல் உறு வார்கள்`` என்றார். இதனானே, அவ் இழுக்குடை மாதரும் கேடெய் துதலை உடம்பொடு புணர்த்துக் கூறினாராயிற்று. திருவள்ளுவரும்,
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். -குறள் 56
என்பதில் ``தகைசான்ற சொற்காத்து`` என்பதனால், அதனைக் `காவாதவள் பெண்ணல்லள்` என்பதும்,
சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. -குறள் 57
என்பதனால், `சிறைக்காவல் நிறைக்காவலுக்குத் துணையாவதே யாகலின், அந்நிறைக்காவல் இல்வழிச் சிறைக்காவலாற் பயனின்றாம்` என்பதும்,
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோற் பீடு நடை. -குறள் 59
என்பதனால், ``கற்பென்னும் திண்மையால்`` (குறள் 54) கொண்டார்க்குப் பெருமையைத் தந்து, அவர்க்குத் தம் பகைவர்முன்னே ஏறுபோல இறுமாந்து நடக்கும் பீடு நடையை உண்டாக்கும் பெண்டிரே யன்றி, தம்மைக் கொண்டார்க்குத் தம் பகைவர்முன்னே தலை கவிழ்ந்து நிற்கும் இளிவரவினை உண்டாக்கும் பெண்டிரும் உளர் என்பது குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கூறினமை காண்க. மேல், ``காத்த மனையாள்`` (தி.10 பா.199) என்பதனால் சிறைக்காவல் குறிக்கப்பட்டது. இவ்விழுக்குடையாளை, ``இல்லிருந்து எல்லை கடப்பாள்`` எனப் பிறருங் கூறி, அவளை, `வல்லே அருக்குங் கோள்` (திரிகடுகம்) என்பதனால், `உலகிற்கு ஆகாதவள்` என்றார்.

பண் :

பாடல் எண் : 1

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

பொழிப்புரை :

இலை, தளிர் முதலியவற்றால் கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவரு மாயினும், குலைமாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்குபயப்பதாம். அதுபோல உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந் நகை காட்டி அதனால் மேலும் கருத்தைக் கவர்வாராயினும், நகைப்புமாத்திரத்தால் அன்புடையராய்த் தோன்று கின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன் னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.

குறிப்புரை :

எடுத்துக்காட்டுவமைக்கு ஏற்ற பொருள்கள் இசையெச்சமாய் நின்றமையின், அவை விரித்துரைக்கப்பட்டன. `வெய்தாக` என ஆக்கம் வருவித்து உரைக்க. இதனால் வரைவின் மகளிரை அவரது வடிவழகு பற்றியும், பொய்ச்செயல் பற்றியும் விரும்புவார், பின் தீங்குறுவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.

பொழிப்புரை :

இல்லறநெறியில் நிற்கக் கருதுவார்க்குத் தம் மனைவியது இன்பத்தை நினைக்கும்பொழுது சுனையில் உள்ள நீர், மூழ்குவார்க்குத் தண்ணிதாய்த் தன்னினின்று மீளாதவாறு தன்னுள் ஆழ்த்திக்கொள்வதுபோல இருவர்க்கும் அரும்பெறல் இன்பமாய் அவரைப் பிரியாவகைச் செய்யும். அந்நெறியில் நிற்கக் கருதாத பிறர்க்குப் பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம்போல அவர் தம் உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்தொழியும். அதனால், பொது மகளிரது இன்பத்தை உண்மை என்று நினைத்தலும் கூடாது.

குறிப்புரை :

மனை, மனைவி ஆகுபெயர்கள். முன்னர், ``மனை புகுவார்கள்`` என்றும், ``மனைவியை நாடில்`` என்றும் கூறினமை யால், பின்னர், `பிறர்` என்பதும் பொதுமகளிரை நாடில் என்பதும் பெறப்பட்டன. உண்மையை, ``நனவு`` என்றார் உண்மையாகாமை யின், `போல` என்றார். உம்மை, மாற்றி உரைக்கப்பட்டது. அற நெறி யில் நிற்கும் ஆடவர் தம் மனைவியரைப் பிரிய மாட்டாமையை அகத் திணையுள், செலவழுங்கல், இடைச்சுரத் தழுங்கல் முதலிய துறை களில் வைத்து இனிது விளங்கப்பாடுவர் நல்லிசைப் புலவர்.
இதனால், பொது மகளிரது உள்ளத்து அன்பின்மை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

பொழிப்புரை :

ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம்கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில் லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.

குறிப்புரை :

`இவ்விரண்டனுள் முன்னது பொருள் இருந்த காலத்து நிலைமை; பின்னது பொருள் அற்ற காலத்தில் உண்டாம் நிலைமை` என்பது கருத்து. இளம்பிடி, நடைக்கு உவமை, அன்னதொரு நடையாலும் ஆடவரை மயல்கொள்ளச்செய்தல் குறித்தவாறு. `மயலால்` என உருபு விரிக்க. அயல் - அயன்மை. அஃது உறுமாறு பேசி அகன்றமையைக் கோவலன் வரலாற்றாலும் உணர்க. அயலுறப் பேசுதல், அவர் பொருளுடையார் பக்கம் போதலைக் காணும் பொழுதாம். ஆகவே, `பொருட் பெண்டிராகிய அவரது பொய்ம் முகத்தால் மயங்கலாகாது` (குறள் - 913) என்பதாம்.
இதனால், பொதுமகளிரது நிறைஇன்மை கூறி, மயக்கத்தால் அவ்விழிபினை மறந்து அவரை விழைதல் கூடாது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.

பொழிப்புரை :

நிலவுலகத்தில் வாழும்பொழுது மகளிரோடும் கூடிப்பெறுவது யாதும் இல்லை. ஆயினும், உடம்பொடு கூடி நிற்பாரது உள்ளத்தில் ஊழ் கூட்டிய ஒரு மயக்கமே அக்கூட்டத்தின்கண் உளதாய விருப்பம். இன்னும் அவ்விருப்பம், கையிலே கிடைத்த கருப்பஞ்சாறு போன்ற சிவானந்தத்தை உடைய மக்களுடம்பில் ஒருபக்கம் வைக்கப் பட்ட வேம்பு போல்வதுமாகும்.

குறிப்புரை :

``கூடி என்`` என்றது, அவ்வின்பம் கணத்தில் அழியும் சிற்றின்பமாதலேயன்றிப் பின்னரும் பல இடர்விளைத்தல் பற்றியாம். விதியின் பயனாகிய காரியத்தை, ``விதி`` எனக் காரணமாக்கிக் கூறினார். ``சாறுகொள்`` என்றது ஒட்டணி. ``வைத்த விதி`` எனவும், ``வேம்பதுவாம்`` எனவும் கூறியவாற்றால், அவ் வின்பத்தை அறம் பொருள்கட்குத் துணையாக அமைந்த மனைவியிடத்து நுகர்தலோடு ஒழியாது, அறத்தோடும், பொருளோடும் சிறிதும் இயைபில்லாத பொதுமகளிடத்தும் நுகர விரும்புதல் பெரும் பேதைமைத்து என்றவாறாம்.
இதனால், `பொதுமகளிரது இன்பம் வேண்டத்தகாத தொன்று` என்பது கூறப்பட்டது. இத்திருமந்திரம், காமவின்பத்தினை முற்ற விலக்கும் நோக்குடைத்தாதலும் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.

பொழிப்புரை :

வீரம் இல்லாத ஒழுக்கத்தால் பொது மகளிர் மயக்கத்தில் ஆழநினைத்து அதன்பொருட்டுத் தம் பொருளை அளக் கின்ற பேதையரை அறிவுடையோர் இடித்து வரை நிறுத்தி விலக்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவரது நிலைமை படுகுழியில் வீழ்ந்தவர் மீளமாட்டாது அழுந்தியொழிதல் போல்வதேயாம்.

குறிப்புரை :

எனவே, `படுகுழியில் வீழ்வாரை விலக்காதொழிந்த பாவம் அறிவுடையோர்க்கு உண்டாகும்` என்பது கருத்தாயிற்று. கோழை - உரன் (திட்பம்) இன்மை. அஃதாவது மனத்தை அடக்கும் வலி இன்மை. `ஒழுக்கத்தால்` என உருபு விரிக்க. `குளம் மூடு பாசியில்` என்றாராயினும், `பாசி மூடு குளத்தில்` என்றலே கருத்து என்க. இஃது உருவகம், `நாடுவார்` என்பது குறுகிநின்றது. நாடுவார், முற்றெச்சம். குளம், இயல்பால் விரும்பி ஆடத்தக்கதெனினும், பாசியால் மூடப்பட்டவாற்றால் இகழ்ந்தொதுக்கப்படுதல் போல, மகளிர் இயல்பால் விரும்பிக் கூடத்தக்கவர் எனினும், வரைவில் ஒழுக்கத்தால் இகழ்ந்தொதுக்கப்படுவர் என்றற்குப் பொதுமகளிரை, பாசி மூடிய குளமாக உருவகித்தார். இக்குளத்தில் மூழ்கினார் மாசு தீராமையேயன்றி மாசு மிகப்பெறுதலும் உடையாராவர் எனினும், ஒருகால் மீண்டு வருதல் உண்டு; பொதுமகளிர்தம் இன்பத்தில் ஆழ்ந்தவர் பழி பாவங்களை எய்தன்மேலும், மீள அறம் பொருள்கட்கு உரியராகாது வெறுவியராவர் என்றற்கு, ``பூழை நுழைந்தவர் போகின்றவாறே` என வேறும் ஓர் உவமை கூறினார். இவற்றையும் கோவலன் வரலாறு முதலியவற்றான் அறிந்துகொள்க.
இதனால், பொதுமகளிரது கூட்டம் உய்தியில் குற்றமாய் முடியும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

பொழிப்புரை :

`பிற உயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.

குறிப்புரை :

மலைவு, அறத்திற்கு நேர்மாறாதல், எனவே, `பெருந் தீவினை` என்றவாறாம். இவற்றை, `பஞ்ச மாபாதகம்` என்பர். `அவை நீக்கி` என்பது பாடம் அன்று. தலையாயதனை, `தலை` என்றார். ஆம் - உண்டாகும். ``அவை நீக்கத் தலை ஆம்`` என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``இலையாம்`` என்றதில் ஆம், அசைநிலை. இறுதிக்கண், `உளதாம்` என்பது சொல்லெச்சம். ``இன்பம் சார்ந்தோர்க்கு`` என்றது, கொலை முதலியன தோன்றாமைக்கு ஏது உணர்த்தற்பொருட்டும், ``ஞானானந்தத்திருத்தல்`` என்றது, அவையே யன்றிப் பிற தீங்கு நலங்களுள் யாதொன்றும் இல்லை என்பது உணர்த்தற்குமாம். எனவே, `சிவனடியைச் சாராதவழி இவற்றை முற்றக்கடிதல் இயலாமையின், அவற்றை அடைதலே தக்கது` என்பதும், `அவற்றை அடைந்தவழித் தீமை நீங்குதலேயன்றி, நன்மை பெருகுதலும் உளவாம்` எனவும் கூறியவாறாயிற்று.
இதனால், `பெரிதும் குறிக்கொண்டு கடியத்தக்க பெருங் குற்றங்கள் இவை` என மேற்போந்தவைகளைத் தொகுத்துக் கூறி, அவற்றை முற்றக் கடிதற்கு வழியும் கூறப்பட்டது. களவையும், பொய் கூறலையும் வழிமொழிதல் வகையாற் கூறினார் எனவும் கள் உண்டலை எதிரது போற்றிக் கூறினார் எனவும் கொள்க. பின்னர் வரும் வாய்மை பொய் கூறாமையாகாது வேறாதல் அறிக. இதனானே, இத்திருமந்திரம் இவ்விடத்ததாதலும், `புலால் மறுத்தலின்` கண்ணது ஆகாமையும் அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 1

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.

பொழிப்புரை :

ஒருவர்க்கு அவர் உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். நாட்டில் நடைப் பிணமான அவர்க்கு எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; அதனால் அவர் இல்லத்தில் யாதொரு விழாவும் இல்லை; பிற உலக நடையும் இல்லை; ஆகையால்.

குறிப்புரை :

`கிழிந்ததேல்` என்னு வினையெச்சம் ``கிழிந்தது`` என முற்றாய்த் திரிந்தது. ``புடவை கிழிந்தது`` என்பது, `வறுமை வந்தது` என்பதனை உணர்த்திய குறிப்புச்சொல். அடைதல், இங்கு அதன் காரணமாகிய தெளிதலை உணர்த்திற்று. தெளியப்பட்டார், பெண்டி ரும், பிள்ளைகளும், பிற சுற்றத்தாருமாவர்.
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். -குறள் 1047
என்றார் திருவள்ளுவரும். ``இல்லானை இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்`` என ஔவையாரும் நல்வழியில் கூறுதல் காண்க. வறுமை எய்தினார்க்குப் பிறர்பால் பொருள்கொடுக்கும் நிலை இல்லை என்றல் கூறவேண்டாமையின், இங்கு, ``கொடை, கொள்ளல்`` என்றவை, உறவு பற்றி நிகழும் மகட்கொடை, மகட்கோடலேயாம். அவை இன்மையால் கொண்டாட்டமும் இல்லையாயிற்று. பிற உலக நடையாவன, கண்டவழி இன்முகம் காட்டலும், முகமன் கூறலும் போல்வன. ``இயங்குகின்றார்கட்கு`` என்றது, `பிறிது செயலில்லை` என்றவாறு. ``நாட்டில் இயங்குகின்றார்கட்கு`` என்பதனை, மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து உரைக்க.
இதனால், நல்குரவினது கொடுமை கூறும் முகத்தால், அதனால் உள்ளந் திரியாமை நிற்றலின் அருமை குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்
றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர்
எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின்
அக்குழி தூரும் அழுக்கற்ற போதே.

பொழிப்புரை :

`பொழுது விடிந்து விட்டதே; காலை உணவுக்கு என் செய்வது` என்று நிலையில்லாத வயிற்றை நிரப்புதற்கு வருந்தி, அதற்குரிய அரிய பொருள்களைத் தேடி அலைகின்றவர்களே! நீவிர் உங்கள் வயிற்றை நிரப்பினாலும், உங்கள் சுற்றத்தார் வயிற்றை நிரப்பினாலும், வேறு யார் வயிற்றை நிரப்பினாலும், குற்றமில்லை. அவைகளை நிரப்பும் முயற்சியால் சிவனை மறவாதீர்கள்; மறவாது நின்று துதியுங்கள். அப்பொழுதுதான் வினை நீங்கும்; வினை நீங்கினால் வறுமை நீங்கும்.

குறிப்புரை :

வயிற்றினது இழிபு உணர்த்த வேண்டி அதனை, `பொய்க்குழி` என்னும் பெயரால் கூறினார். கூறவே, பின் வருவன வற்றையும் அதனோடு இயைய, ``குழி`` என்றார். எனவே, அதற் கேற்ப, `தூர்த்தல்` என்றார். ``தூர்த்து`` என்னும் செய்தெனெச்சம்,
``செய்தெ னெச்சத் திறந்த காலம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்`` -தொல். சொல். வினை
என்பதனால், இங்கு எதிர்காலத்தில் வந்தது. அழுக்கு, வினை மாசு. ``புகலூர்ப் பாடுமின் புலவீர்காள் - இம்மையே தரும் சோறும் கூறையும்`` ( தி.7 ப.3 பா.41) என அருளிச் செய்ததனாலும் சிவபெருமானை ஏத்துவார்க்கு வறுமை நீங்குதல் அறியப்படும்.
இதனால், `சிவபெருமானை ஏத்தாமையே வறுமைக்குக் காரணம்` என்பது கூறும் முகத்தால், அவ்வறுமை வந்த காலத்து அது காரணமாக அவனை மறத்தல் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கையா வர்க்கும் அரியதே
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

பொழிப்புரை :

மக்கள் அன்னமே (சோறே) யன்றிச் சொன்னமும் (பொன்னும்) தேடுதல், இயல்பாகவே தூர்ந்து போவதாகிய மட்குழிபோலாது, தூர்க்கினும் தூராத கற்குழி போன்ற வயிற்றை நிரப்புதற்கேயாம். ஆயினும், அப்பொன்னை நிரம்பக் குவித்து வைத்தவர்க்கும் வயிற்றை நிரப்புதல் இயலாததே எனினும், அதனை நிரப்புதற்கு வழி ஒன்று உண்டு; அவ்வழியை அறிந்தால் உள்ளம் தூய்மைப்பட்டு வயிறும் நிரம்பும்.

குறிப்புரை :

ஒருவேளை நிரம்பியபின் அஃது அற்றொழிய, மறுவேளை வெறுவிதாய்விடுதல் பற்றி, ``அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது`` என்றார். அங்ஙனம் தூராத குழியைத் தூர்க்கும் வழி பிறப்பை நீக்கிக் கொள்ளுதலேயாகலானும், பிறப்பு நீங்குதல் வினை நீங்கியவழியேயாகலானும், `அது நீங்கும் வழியை அறிந்தால் வினை நீங்க அக்குழி தூரும்` என்றார். `அழுக்கற்றவாற்றானே அக்குழி தூரும்` என உருபு விரித்து மாறிக் கூட்டுக. `அவ்வழியாவது இறைவனை ஏத்துதலே` என்பது குறிப்பாதல், மேலைத் திருமந்திரம் பற்றி அறியப்படும்.
இதனால், `வயிற்றை நிரப்பும் துன்பம் செல்வம் உடையவர்க் கும் நீங்காமையை அறிந்து வறுமையால் உள்ளம் வருந்தாது நிறைவெய்தியிருத்தல் வேண்டும்` என்பது கருத்து.
``தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பது இரண்டே`` -புறநானூறு 189
என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது.

பண் :

பாடல் எண் : 4

தொடர்ந்தெழு சுற்றம் வினையினுந் தீய
கடந்ததோர் ஆவி கழிவதன் முன்னே
உடந்தொரு காலத் துணர்விளக் கேற்றித்
தொடர்ந்துநின் றவ்வழி தூர்க்கலு மாமே.

பொழிப்புரை :

புதிய வினைகள் பலவற்றைச் செய்யத் தூண்டுதலால், `ஒருவரைப் பற்றி மற்றொருவர், அவரைப் பற்றி வேறொருவர்` என்று இவ்வாறு தொடர்ந்துவரும் சுற்றத்தார் பழ வினையினும் பார்க்கக் கொடியோரே. அதனால், அவரைப் புறந் தருதலில் தனது நாள் பல வற்றைக் கடந்துவிட்ட ஓர் உயிர், அந்நாளை முற்றக் கடந்தொழிவ தற்கு முன்னே என்றாயினும் ஒருநாளில் அச்சுற்றத்தை வெறுத்து மெய்யுணர்வாகிய விளக்கை ஏற்றினால், அவ்விளக்கொளியைப் பற்றிச் சென்று, பின்னும் அவர்களோடு கூடி வாழும் நாள் வரும் வழியை அடைத்தலும் கூடுவதாம்.

குறிப்புரை :

`உடன்று` என்பது, எதுகை நோக்கி, `உடந்து` எனத் திரிந்தது. உணர், முதனிலைத் தொழிற்பெயர்.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். -குறள் 38
என்பவாகலின், `அவ்வழி தூர்த்தல்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக.
``அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே`` -புறநானூறு 193
எனச் சான்றோரொருவர் சுற்றத் தளைக்கட் பட்டு வருந்தினமை இங்கு அறியத்தக்கது. `ஒருவர் உயிர்` என்னாது `ஓர் உயிர்` என்றது, இழிவு பற்றி.
இதனால், `சுற்றம் ஓம்புதலைப் பற்றுக்கொண்டு செய்யாது அறம்நோக்கிச் செய்யின் வறுமைத் துன்பம் உண்டாகாது` என, அத்துன்பம் நீங்குதற்கு வழி கூறப்பட்டது.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். -குறள் 341
எனப் பின்னர்க் கூறலின், முன்னர்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. -குறள் 341
என்ற திருவள்ளுவனார்க்கும் இதுவே கருத்தாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 5

அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.

பொழிப்புரை :

ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக்கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல; பல. (இவற்றை யெல்லாம் நோக்கி) நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.

குறிப்புரை :

`ஆனினம் ஆறினும்` என மாற்றுக. `ஆறினும், ஐவரும்` (குறள் 43)என்றவை தொகைக் குறிப்பு. நல்லன, தீயனவற்றைப் பகுத்துணரும் அறிவும் ஐவரால் அடர்க்கப்படுதலின் அனைத் துயிரையும் வேடரால் கவரப்படுகின்ற பசுக்கூட்டமாகக் கூறினார். `ஆனினம்` என்னாது, `மானினம்` என ஓதுதலும் ஆம். `அறுத்தல்` `வேண்டி நின்றானே` என்பன பாடம் அல்ல. `ஈசனையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால், தேவர் வாழ்க்கையும் முற்கூறிய பசுவினங்களின் வாழ்க்கையோடு ஒத்ததாதல் குறிக்கப் பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 1

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே.

பொழிப்புரை :

சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``விழுப் பொருள்`` என்பது, வான் முதலிய நான்கு எழுவாய்கட்கும் உரிய பயனிலை. வெற்றியாவது தத்தமக்குரிய பெருமையைத் தப்பாது பெறுதல். அதனைப் பெறுதற்குரிய வழியைக் கூறுவது வேதம். அது நிலைபெறுதலாவது, மறக்கப்பட்டொழியாது, ஓதப்பட்டு நிற்றல். `ஒழுக்கம் ஒழிந்தபின், அதனைக் கூறும் நூலால் பயனின்றிப் போம்` என்பது கருத்து. இதனானே,
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப் பொழுக்கம் குன்றக் கெடும். -குறள் 134
எனக் கூறினார் திருவள்ளுவர்.
மழை விழுப் பொருளாதலாவது, காலத்தில் பொய்யாது பொழிதல். நிலம் விழுப்பொருளாதலாவது, விளைவு குன்றாது மிகுதல். நாடுகள் விழுப்பொருளாதலாவது, அவ்வந்நாட்டுப் பண்டங் கள் குன்றாது பெருகல். தேவர் விழுப்பொருளாதலாவது, உவகை மேலீட்டால் மேலனவற்றை யெல்லாம் பயன்தரச் செய்தல். `அந்தணர் வேத விதியை ஆறங்கங்களாலும் உணர்ந்து, உணர்ந்தவாறே வேள்வியைத் தப்பாது செய்தலாலே நாடு, பசியும் பிணியும் நீங்கி, வசி யும், வளனும் சுரப்பதாகின்றது` என்பதனைத் திருஞானசம்பந்தரும்,
``கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லை`` (தி.1 ப.80 பா.1)
என்பதனால் குறித்தருளினார். உலக நலம் கருதி இதனைச் செய்தலானே இவர் `அந்தணர்` என்னும் காரணப்பெயர் எய்தினர். எனினும், `புலால் மறுத்தும், கொல்லாதும், அனைத்துயிர்மேலும் அருளுடையார்க்கே அது முற்றப் பொருந்தும்` என்றதற்கு, ``அந்தணர் என்போர் அறவோர்`` (குறள் - 30) என்றார் திருவள்ளுவர். சோர்வின்மை, நெறிமுறைகளில் உறைத்து நிற்றல்.
இதனால், முத்தீ வேள்வியது இன்றியமையாமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓது கின்ற அந்தணர், மறுமை நலம் வேண்டி, பிறர்க்கும், பிறவுயிர்க்கும் இட்டுண்பர். இனி, அவர் அவ்வேத விதியானே அடைய விரும்பும் வீட்டு நெறி, அவரவர் அறிவின் எல்லைக்கேற்ப அடைதலாகவே முடியும்.

குறிப்புரை :

`முத்தீ வேள்வி செய்கின்ற` என்றதனால், தேவ யாகம் பிதிர் யாகங்களும், `வேதத்தை ஓதுகின்ற` என்றதனால் பிரம யாகமும், `பிறர்க்கும் பிற உயிருக்கும் கொடுத்து உண்பர்` என்றதனால், மானுட யாகம், பூத யாகங்களும் ஆகிய ஐவகை வேள்விகளும் குறிக்கப்பட்டன. எனவே, `சிறப்புப்பற்றி, அக்கினி காரியமே, `வேள்வி` எனப்படுமாயினும், இவையும் வேள்வியேயாக, வேள்வி ஐவகைத்து` என்பதும், `ஐவகை வேள்வியையும் எஞ்சாமற் செய்பவரே சிறப்புடை அந்தணர்` என்பதும் கூறியவாறாயிற்று,
இனைத்துணைத் தென்பதொன் றில்லை, விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -குறள் 87
எனவும்,
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார், விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். -குறள் 88
எனவும் விருந்தோம்பலைத் திருவள்ளுவரும் `வேள்வி` எனக் குறித்தார். `போங்கதி` என்பது தொகுத்தலாயிற்று. `போகதி` வினைத் தொகை என்றலுமாம். ``புறம்`` என்றது ``அயல்`` என்னும் பொருட் டாய், பிற மக்களையும், உயிரையுங் குறித்து நின்றது. `அறங் கறக்கும்` என்றல்போல, ``புறங் கொடுக்கும்`` என்றது நான்காவதன் தொகை.
`அந்தணர்க்கு வீட்டு நெறி அவரவர் அறிவிற்கேற்ப அமையும்` எனவே, `கன்மமே வீடு பயக்கும்` என்று உணர்வார்க்கு, அக்கன்மத்தின் பயனாகிய துறக்கமே வீடாகும். `பிரமம் ஒன்றே மெய்; பிறவெல்லாம் பொய் என்று உணர்வதாய பிரம ஞானமே வீடு பயக்கும்` என உணர்வார்க்கு, அவர் பிறவெனக் கழிப்பன பிரகிருதி யளவேயாதலால், பிரகிருதிக்கு மேலேயுள்ள புருட தத்துவமே அவர்க்கு வீடாகும். தத்துவங்களும், அவற்றிற்கு வேறாய் உள்ள சீவான்மாவும், பரமான்மாவைப் போல வேறு முதல்களே; ஆயினும், தத்துவங்கள் சடமாயும், சீவான்மா தூல சித்தாயும் நிற்றலின், சூக்கும சித்தாகிய பரமான்மாவிற்கு அவை முறையே உடைமையும், அடிமையுமாய்ச் சுதந்திரமின்றி நிற்பனவாம் என்பதை உணர்ந்து யான், எனது என்னும் செருக்கு நீங்கிப் பரமான்மாவினது நிறைவில் அடங்கிநிற்றலே உண்மைப் பேறு என உணரும் பதி ஞானமே வீடு பயக்கும் என உணர்பவர்க்குப் பரமான்மாவே வீடாகும் என்பது பெறப்பட்டது.
இங்ஙனம் கூறிவந்த பலவற்றுள் ஒன்றையும் வேதம் ஒரு தலைப்பட உணர்த்தாது, எவ்வாறும் உணர நிற்றலின், வேதம் ஒன்றையே ஓதி வீடுபெற எண்ணுவார் மெய்ந்நெறியைப் பலபட உணர்ந்து தம்முள் இகலி நிற்பர் ஆகலின், ``தாமறிவாலே தலைப் பட்டவாறே`` என்றார்.
வேதத்துட் கூறப்பட்ட பல திறப்பொருளையும் இஃது இன்ன அளவினது எனவும் `எல்லாவற்றினும் மேலாக முடிந்து நிற்கும் பொருள் இது` எனவும் வரையறுத்து ஒருதலைப்பட உணர்த்துவன சிவாகமங்களே யாதலின், அவற்றை உணரும் சைவர் பிறரோடு இகலுதலின்றி மெய்ந்நெறியை உண்மையாகத் தலைப்படுவர் என்க.
வேதத்தை உடம்பட்டோர் அனைவர்க்கும் `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றுள், `வீடே சிறந்த பேறு` என்பது ஒப்ப முடிந்ததாக லின், `அதனை இத்தன்மைத்து என உணரும் உணர்விற்கு ஏற்பவே, அவரது வேள்வி முறைகளும் அமையும்` என்றற்கு இது கூறினார். கூறவே, `ஐவகை வேள்விகளும் அவற்றைச் செய்வாரது கருத்திற்கேற்ப `இம்மை, மறுமை, வீடு` என்பவற்றைத் தரும் என்பது பெறப்பட்டது.
`அக்கினி காரியமேயன்றிப் பிறவும் வேள்விகளே` எனக் கூறியவாற்றால், `சைவாகமங்கள், `சிவபெருமானை அகத்தாலும், புறத்தாலும், அறிவாலும் வழிபடும் வேள்வியே சிறப்புடை வேள்வி` எனவும், அக்கினி காரிய வேள்வியுள்ளும் சிவபெருமானைப் பொது நீக்கித் தனிப்பெரு முதல்வனாக வைத்துச் செய்யும் வேள்வியே செய்யத்தக்கது` எனவும் கூறும்.
இன்னும், ``தாமறி வாலே தலைப்பட்ட வாறே`` என்றதனால், வேதத்தின் பொதுமை காரணமாக முத்தீ வேள்வியும் அவ்வாறு அமையும் என்பது கொள்க. அஃதாவது, பரிமேதம், பசுமேதம் முதலாகச் சொல்வனவற்றை உயிர்ப்பலி வேள்வியாகச் செய்தல் வேண்டும் எனக் கொண்டு ஊனை அவிசாக இட்டுச்செய்தலும், அவற்றிற்கெல்லாம் வேறு பொருள்கொண்டு பசுவிடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், நெற்பொரி, அரிசிமா, தேங்காய், வாழைப்பழம் முதலியவற்றையும் அவிசாகச் சொரிந்து செய்தலும் போல்வன. வேதத்துள் `அஜத்தைக் கொண்டு வேட்க` என்பதற்குப் பிறரெல்லாரும் `அஜம்` என்பதற்கு `யாடு` என்பது பொருள் என்று கூறினர் எனவும், அகத்திய முனிவர், `மூன்றியாண்டு கழிந்த நெல்` எனப் பொருள் கூறினர் எனவும் பாரதத்துட் கூறப்பட்டன. இங்ஙனம் வேறுபடுவாரது நிலையைத் திருஞானசம்பந்தர்,
``ஊனொ டுண்டல் நன்றென ஊனொ டுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்``
-தி.3 ப.53 பா.9
எனக் குறித்தருளினார்.
அறவினை யாதெனிற் கொல்லாமை; கோறல்
பிறவினை யெல்லாம் தரும். -குறள் 321-
என்றவாறு, கொலைப் பாவம் ஏனை எல்லாவற்றினும் பெரிதாகலின், அதனோடு தொடர்புடைய யாதொன்றும் அறமாவதில்லை எனினும், செய்வாரது கருத்துவகையால் அதுவும் அறம் என வைக்கப்பட்ட தாயினும், அன்னதொரு வேள்வி கடைப்பட்ட வேள்வி எனக் கழித்து, உயிர்க்கொலை இல்லாத தூயவேள்வியே, வேள்வி என உயர்ந்தோர் கொள்வர் என்பது பற்றியே,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
எனப் பொதுப்படக் கூறுமிடத்து ஊனாகிய அவியையே பெரும் பான்மையும் குறிப்பாற் கீழ்ப்படுத்துக் கூறி,
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. -குறள் 328
எனச் சிறப்பாகக் கூறுமிடத்து ஊன் வேள்வியை வெளிப்படை யாகவே மறுத்துக் கூறினார் திருவள்ளுவர். சைவ வேள்விகள் பலவும் சைவாகமத்துள்ளும், வழக்கத்துள்ளும் பசு விடத்துண்டாகும் நெய், பால் முதலியவற்றையும், தாவரங்களினின்று பெறப்படும் நெல் முதலியவற்றான் ஆய பொருள்களையுமே அவிசாக இட்டுச் செய்யப் படும் தூய வேள்விகளாகவே காணப்படுதல் அறிக.
இதனால்,
``பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லை`` -தி.1 ப.80 பா.2
என்றதனுள், ``பசு`` என்றது; `பசுவிடத்து உண்டாகும் நெய் பால்கள்` எனப் பொருள்படுதலன்றிப் பிறிது பொருள்படாமை அறிந்து கொள்க. `பிறிது பொருள்படும்` என்பார் உளராயின், அவர் சிவாகமங் களையே யன்றித் தில்லைக்கணுள்ள வழக்கத்தினையும் அறியாதவரே யாவர்.
``அவன்உகந் திட்டஇறைச்சி எனக்குநன்
மாதவர் இட்ட நெய்பால் அவியே`` -தி.11 நக். திருமறம்
எனப் பதினொன்றாம் திருமுறையிலும், `மாதவர், நெய்பால் அவியே இட்டுச் சைவ வேள்வியே வேட்பர்` என்பது சொல்லப்பட்டது. இவ்வாற்றானே, சிவபாத இருதயர் செய்யக் கருதியதாகச் சேக்கிழார்,
``ஆதி மாமறை விதியினால் ஆறுசூழ் வேணி
நாத னாரைமுன் னாகவே புரியும்நல் வேள்வி``
-தி.12 திருஞான. பு. 429
எனக் குறித்த நல்வேள்வியும், ஞானசம்பந்தர்தாமே,
``வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்`
-தி.12 திருஞான. பு. 821
எனக்குறித்த வேள்வி. `உலகம் இன்புறச் சங்கரர்க்கு முன்வந்த அற்சனை வழிபாடுகளுள் ஒன்று`` என அவர் (சேக்கிழார்) விளக்கிய சந்த வேள்வியும் எல்லாம் சிவநெறி வேள்வியாகிய தூய வேள்வி களே என்பது விளங்கும். இவற்றானே, தம் உணவினும் சைவராய் உள்ளவரே ஊன் வேள்வியை மறுத்தற்குரியரன்றி, உணவில் சைவராய் இல்லாதோர் ஊன் வேள்வியை மறுத்தற்கு உரியரல்லர் என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
புத்தர் புலால் உண்டலை விலக்காது, கொல்லுதலை மட்டுமே விலக்குவர்; சமணர் இரண்டனையும் விலக்குவர். அவ்வாற்றால் அவ் விருவரும் ஊன்வேள்வியை இகழ்தல் அவர்தம் மதத்திற்கு ஏற்புடைய தாயினும், வேள்வி செய்வார்க்கு வரும் பயனை உணராமையானும், ஊன் இடப்படாத தூய வேள்வியை அவர் கைக் கொள்ளாமையானும் அவர் செயல் சிவநெறியாளரால் இகழப் படுவதாயிற்று என்க. இத்திருமந்திரத்துள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், வேள்விகளின் வகைகள் பலவும் வகுத்துக் கூறி, `அவற்றுட் சிறந்தது சைவ வேள்வியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான
இணைதுணை யாமத் தியங்கும் பொழுது
துணையணை யாயதோர் தூய்நெறி யாமே.

பொழிப்புரை :

உயிர்கட்குப் பொருந்திய துணை அந்தணர் வளர்க் கின்ற தீயினுள் தீயாய் இருக்கும் இறைவனே. ஆகவே, தீ வேட்டு அதன் உள்ளீடான இறைவனாகிய அருந்துணையுடன் உலகியலில் ஒழுகும் பொழுதே உயிர் தான் செல்கதிக்குத் துணையாய மெய்ப் பொருளை அடைந்து நிற்றலாகிய நன்னெறியைத் தலைப்படுதல் உண்டாவதாகும்.

குறிப்புரை :

``அணைதுணை`` இரண்டில் பின்னது ஆகு பெயராய், அணைதுணை உள்ள இடத்தைக் குறித்தது. `இணை துணையோடு` என உருபு விரிக்க. யாமம் - இரவு; உலகியல் பிறவித் துன்பத்ததாக லின், அதனை `இரவு` என்றார். ``துணைஅணை`` என்றதில் அணை, முதனிலைத் தொழிற்பெயர்.
`வைதிக வேள்வி வேட்பார்தீயையே தெய்வமாகக்கொண்டு வேட்பர். அது பிறவியை நீக்கும் தூநெறியாகாது; சிவநெறி வேள்வி வேட்பார், தீயைத் தெய்வமாகக் கருதாதது, அத்தீக்கு உள்ளீடாய் நிற்கும் சிவபெருமானையே முதல்வனாகக்கொண்டு வழிபடுவர்; அதுவே பிறப்பை நீக்கும் தூநெறியாகும்` என இதனால் சிவநெறி வேள்வியின் சிறப்புக் கூறப்பட்டது. சிவநெறி வேள்வியில் அக்கினியைச் சிவாக்கினியாகப் பிறப்பித்து வளர்க்கும் முறையைச் சிவாகமங்களில் கண்டுணர்க.

பண் :

பாடல் எண் : 4

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு
மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்
தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்
வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. போது - பொழுது. ``இரண்டு ஓதி`` என்றதில் இரண்டு, வேத சிவாகமங்கள். ``ஓதி`` என்பதில் பிறவினை விகுதி தொகுத்தலாயிற்று. மாது - சத்தி. அவள் இரண்டாதலாவது, திரோதான சத்தியும், அருட் சத்தியுமாய் அவ்வவ்வுயிருக்கேற்ப நிற்றல். திரோதானமும் ஒரு வகைக் கருணையே ஆதலின், `அருள் செய்திட்டு` என்றார். ``தாதிரண் டாகிய`` என்பதில், ஆதல், மேற் சொல்லுதல். ``இரண்டின் கண் ஆகிய`` என உருபு விரிக்க. தாது இரண்டு - இருவகை மகரந்தம்; அவை, குவளை, ஆம்பல் முதலிய சிறு மலரின்கண் உள்ளனவும், தாமரையாகிய பெரு மலரின்கண் உள்ளனவுமாம். ``தண்ணம் பறவை`` என்பதில் தண்மை, சிறுமை மேல் நின்றது. அம், சாரியை. வண்டினை `பறவை` என்றல் இலக்கிய மரபு. ``பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறுபறவை `` (தி.2 ப.76 பா.6) என்றார் திருஞானசம்பந்தரும். வேது - வேற்றுமை. இனத்தால் ஒன்றாயினும் விரும்பப்படும் தாது வேற்றுமையால் இரண்டாய் நிற்கின்ற வண்டு போல, உயிர்கள் அனைத்தும் இனத்தால் ஒன்றாயினும், விரும்பப்படும் பயனால் இரண்டு ஆதலாவது, உலகின்பமும், வீட்டின்பமும் ஆகியவற்றை விரும்பு தலால் `உலகர்` எனவும், `சத்தி நிபாதர்` எனவும் இருதிற னாய் நிற்றல். எனவே, சிவசத்தி உலகர்க்குத் திரோதாயியாய் நின்று வேதத்தை ஓது வித்து, அதன் பயனாக வைதிக வேள்வியை வேட்பித்து உலகின் பத்தை அடைவிப்பவளாயும், சத்தி நிபாதர்க்கு அருட்சத்தியாய் நின்று சிவாகமங்களை ஓதுவித்து, அதன் பயனாகச் சிவநெறி வேள்வியை வேட்பித்துச் சிவானந்தத்தை அடைவிப்பவளாயும் நிற்பாள் எனக் கூறுமாற்றால் வேள்விகளது வகை கூறியவாறு. வெறித்தல் - மதர்த்தல். `வெறிக்கின்றவாற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இதனால், `உலகவேள்வி, சிவவேள்வி` என்னும் வேள்வி களது வகையும், பயனும் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே.

பொழிப்புரை :

நெய் பொருந்துதலால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறி கின்ற அந்தணர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.

குறிப்புரை :

மை - இருள்; புற இருளைப் போக்குகின்ற தீயினை ஓம்புமாற்றானே, அக இருளையும் போக்கிக்கொள்ளுதல் கூடும் என்பது பற்றி ``நெய்நின்றெரியும் ... வகை அறிவார்கட்கு`` என்றார். அவ் வகையாவது, சிவபெருமானை முதல்வனாக உணர்ந்து பயன் கருதாது அன்பு மாத்திரத்தால் வேட்டல், அங்ஙனம் வேட்டோர் சிறப்புலி நாயனார், சோமாசிமாற நாயனார் முதலியோராதல் அறிக. ``அவிழ்தரும்`` என்னும் பெயரெச்சம் `மந்திரம்` என்னும் கருவிப் பெயர் கொண்டது. செய்தல் - தேடுதல். ``செய் நின்ற`` என்பது `செய்ய நின்ற` என்னும் பொருட்டு.
இதனால், `அந்தணர் வேள்வி அவர்க்கு முத்தி சாதனமும்` ஆம் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பாழி அகலுள் எரியும் திரிபோலிட்
டூழி அகலும் உறுவினை நோய்பல
வாழிசெய் தங்கி உதிக்க அவைவிழும்
வீழிசெய் தங்கி வினைசுடு மாமே.

பொழிப்புரை :

ஆழ்ந்த அகலில் நின்று எரிகின்ற திரிபோலச் சேர்க்கப்பட்டுப் பல்லூழி காலம் தொடர்ந்து நின்று வருத்துகின்ற மிக்க பாவப்பயனாகிய துன்பங்களோ பல. அவை அனைத்தும் ஓமாக்கினி அணையாது நின்று ஓங்க ஒழிவனவாம். அன்றியும், அவ்வக்கினியே வினைக்கட்டு முழுவதையும் அழித்தலையும் செய்யும்.

குறிப்புரை :

பாழி - பள்ளம். `வாழி, வீழி` என்பன, `வாழ்தல், வீழ்தல்` எனத் தொழிற்பெயராய் நின்றன. ``வினைநோய்`` என்றது, `வினையால் வரும் நோய்` என வேற்றுமைத் தொகை. நோய் - துன்பம். `துன்பத்தைத் தரும் வினை` எனவே, `பாவம்` என்பது போந்தது. பின்னர் நின்ற வினை, பொதுப்பட நிற்றலின், இரு வினையையுங் குறித்தது. `பாவத்தை ஒழிக்குமாற்றால் நரகத்தின் நீக்கிச் சுவர்க்கத்தில் சேர்ப்பதும்` இருவினைகளையும் நீக்குமாற்றால் ஞானத்தைத் தோற்றுவித்து வீடு அடைவிப்பதும் வேள்வியாம்` என்றபடி. இவற்றுள் முன்னது வைதிக வேள்வி என்பதும், பின்னது சிவநெறி வேள்வி என்பதும் உணர்ந்துகொள்க.
இதனால், இருவகை வேள்விகளின் பயனும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
தருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணி
அருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றீரே.

பொழிப்புரை :

மறுமைக்கண் வருகின்ற சுவர்க்கச் செல்வத்தால் உளதாகின்ற இன்பம் வருமாற்றை மிக நினைந்து நும் அருஞ் செல்வ மாகிய வேள்வியை வேட்க விரும்புகின்ற அந்தணர்களே, பெரிய `செல்வம், வறுமை` என்னும் இரண்டன் காரணங்களையும் முதற் காலந்தொட்டே விளக்கி நிற்பதாகிய, அனைத்து நலங்களையும் தரும் வேதம் என்னும் அறிவுச் செல்வத்தை நுமக்குத் தந்த முதல்வனாகிய சிவபெருமானை நினையுங்கள்; பயன் எய்துவீர்.

குறிப்புரை :

``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின்பின், ``இரண்டும்`` என்னும் தொகை தொகுத்தலாயிற்று. படைத்தல் - சொல்லால் வெளிப்படுத்தல். `நின்றாரே` என்பது பாடமாயின், ஏகா ரத்தை ஈற்றசையாக்காது, விளியுருபாக்குக. மீமாஞ்சகர் வேதத்தைச் செய்த முதல்வனை அறியாது `வேதம் அனாதி` என மயங்குதலாலும், பிறர் சிவபெருமானையே தலைவனாக உணராமை யாலும் அவர்க்கு வேள்வி முத்தி சாதனமாதல் கூடாமையால், அவர்க்கு அஃது அன்னதாதற் பொருட்டு அவரை நோக்கி இது கூறினார்.
இதனால், வேள்விகளுள் சிவநெறி வேள்வியது இன்றியமை யாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒண்சுட ரானை உலப்பிலி நாதனை
ஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்
தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.

பொழிப்புரை :

எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப் பவனும், இறப்பில்லாத முதல்வனும் ஆகிய அவனை நினைத்தால், ஒளி பெற்றுத் திகழ்கின்ற எனது உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, முச்சுடர் களையே மூன்றுகண்களாக உடைய அப்பெருமானே உலகங் கடந்த தண்ணிய ஒளிப்பொருளாகிய முதற்பொருளும், வேள்விக்குத் தலைவனும் ஆவன்.

குறிப்புரை :

இங்குக் கூறியவாறே திருநாவுக்கரசரும்,
அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறி வார்! அறி வாரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என ஓதியருளுதல் காண்க. சிவபெருமான் வேள்வித் தலைவன் ஆதலை விளக்குதற் பொருட்டு அவனது முதன்மையை எடுத்துக் கூறினார். ``நினைத்தால்`` என்னும் சொல்லெச்சம் முன்னை மந்திரத் தினின்றும் வந்தது.
இதனால், வேள்வியைச் சிவநெறி வேள்வியாக வேட்டற்கு வழி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே.

பொழிப்புரை :

வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.

குறிப்புரை :

`ஆகவே, அவ்வினைக்கடல் கடத்தற்கரியது` என்ற படி. `ஈமத்துள் அங்கி உளன்` என இயையும். இரதம் - சாரம்; என்றது உடலினின்றும் நீங்கிய உயிரை. கொள்ளுதல் - தாங்கிக் கொள்ளுதல். `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. கோ மத்து - பெரிய மத்து. `மத்து` என்பது கடைக்குறைந்து நின்றது. `மத்தால்` என உருபு விரிக்கப்பட்டது. \\\"வினைக்கடல் குரைகடல் தானே`` என்றது, \\\"மாதர் வதன மதியம் - உதய மதியமே ஒக்கும்` (தண்டியலங்காரம்) என்பதிற் போல உருவக உவமை.
இதனால், `சிவபெருமானை வணங்கா தொழியினும் இகழ்தல் கூடாது; இகழின் உய்தியில் குற்றமாம்` என, வேள்வி செய் வார்க்கு இன்றியமையாததோர் அறம் கூறப்பட்டது. இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த சான்றாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 10

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.

பொழிப்புரை :

வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.

குறிப்புரை :

`முத்தீ வழியாக அன்றிப் பிறவாற்றால் சிவ பெருமானை அடைதல் கூடுமாயினும், முத்தீ வேள்வி வேட்கப்படா விடின், வேதவழக்கு மறைந்தொழியும்; அது மறைந்தொழியின், கடவுட் கொள்கையும், சிவபத்தியும் போல்வன பலவும் அவ்வாற்றானே மறைந்தொழியும்; ஆகவே அவ்வாறெலாம் நிகழாமைப் பொருட்டு முத்தீ வேட்டல் பேணற்பாற்று` என்பதாம். எனவே, `சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய தமிழ் நூல்களிலும், சிவாகமம், திருமுறை முதலிய சைவ நூல்களிலும் முத்தீ வேள்வி சிறப்பிக்கப் படுதலும் இது பற்றி` என்பது இனிது விளங்குவதாம்.
இதனால், அக்கினி காரியம் மரபு நிலையாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

பொழிப்புரை :

ஒத்த பிறப்பினராய மக்களுள், `அந்தணர்` என வேறு நிற்பவர்கள், `ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்` என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் (சந்தியா காலங்களிலும்) கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அப்பெயருக்கு (அந்தணர் என்பதற்கு) உரியவராவர்.

குறிப்புரை :

தழல் ஓம்பல் முதலியவற்றைப் பின்னரும் எடுத்துக் கூறியவதனால், `அவற்றை வழுவின்றி ஆர்வத்தொடு செய்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது. ``தழல் ஓம்பி`` என்றதனால், வேட்டலையும், ``சந்தியும் ஓதி`` என்றதனால் ஓதலையும் வலியுறுத் தமை வெளிப்படை. ஆகவே, நற்கருமம் என்றது பிறர்க்கு உதவுத லாகிய ``ஓதுவித்தல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல்`` என்னும் நான்கனை யும் வலியுறுத்துவதாயிற்று. ஈதல் ஒழிந்த பிறவும் பொருளாசையின்றிச் செய்யின் அவர்க்கு அறமாதல் பற்றி அவற்றை, ``அம் தவம்`` என்றார். ஏற்றலாவது, குற்றக் கழுவாயாகவும் குறித்த பயனைத்தரும் அறமாக வும் கருதி உயர்ந்தோர்க்குக் கொடுக்கும் கொடையாகப் பிறர் தருவனவற்றை, அவர் நலங் கருதி ஏற்றல். அங்ஙனம் ஏற்ற பொருளை அவ்வந்தணர், தென்புலத்தார் தெய்வம் முதலிய அறவழியிலே செலவிடுதலன்றி, இவறுதல் செய்து ஈட்டிவையார் என்க. முப்போதும் நியமம் செய்தல் வேட்டலின் பகுதியாகவும், சடங்கறுத்தல் ஈதலின் பகுதியாகவும் வைத்து வற்புறுத்தப்பட்டன என்க. ``சடங்கறுப்போர் களே`` என்ற ஏகாரம் பிரிநிலை. இங்ஙனம் பிரித்துக் கூறிய அதனால், `இவ்வொழுக்கம் இல்லா தவர் பிறப்பால் அந்தணராயினும், அந்தணர் எனப்படார்` என்பது பெறப்பட்டது. படவே, அந்தணர், அரசர் முதலிய வருணவகை ஒழுக்கம் பற்றி உயர்ந்தோரால் வகுக்கப்பட்டன வல்லது, `உடம்பிலே தானே அமைந்தது` என்னும் மிருதிநூற் கொள்கை அடாது என்ற தாயிற்று. இங்கு, `பிறப்பு` எனப்படுவது, தம் குடியின் முன்னோர், தம் ஒழுக்கத்தால் பெற்ற வருணவகை.
``பிறப்பே குடிமை ஆண்மை`` -தொல். பொருள் - 269
``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்`` -குறள் - 972
``பார்ப்பான் - பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` -குறள் - 134
என்பவற்றிலும், ``பிறப்பு`` எனப்படுவது இதுவே என்க. `சாதிகள் நெறியின் தப்பா`` (தி.12 திருநாட்டுச் சிறப்பு 34) என்பதில் சேக்கிழார் ``சாதி`` என்றதும் ஒழுக்கம் பற்றியதே என்பது, திருஞானசம்பந்தர் திருநீலகண்டப் பாணரையும், தில்லைவாழந்தணர் திருநாளைப் போவாரையும் ``ஐயரே`` என உயர்த்து அழைத்தாராக அவர் கூறிய குறிப்பால் விளங்குவதாகும். இன்னும் ஞானசம்பந்தர் நாவுக்கரசரை ``அப்பர்`` என்றே குறித்துப் போந்தமையும் நோக்கற்பாற்று.
இதனால் அந்தணர்க்குரிய ஒழுக்கங்கள் பலவும் தொகுத்துக் கூறப்பட்டன.


பண் :

பாடல் எண் : 2

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே.

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருளை உணர்தற்கண் விருப்பம் உடையவராய், மூன்று கூறுகளை உடையதாய் நூல்களின் முடிவாகிய பிரணவ மந்திரத்தின் பொருள் நிலையில் நின்று, நாத முடிவான பொருட் பிரபஞ்சத்திற்கும், வேத முடிவான சொற்பிரபஞ்சத்திற்கும், உயிர்களது அறிவின் எல்லைக்கும் அப்பால் நிற்கும் முதல்வனாகிய சிவபெருமானை உணர்ந்து, இன்பத்தின் எல்லை காணாராய் அதில் திளைத்திருப்பவரே அந்தணர் எனப்படுவோர்.

குறிப்புரை :

பிரணவம், ஓங்காரம். இதன் முக்கூறுகளாவன அகரம், உகரம், மகரம், அவற்றின் பொருள் நிலை பகுப்பும் (வியட்டியும்) தொகுப்பும் (சமட்டியும்) என இருவகைத்து. அகரம் தோற்றத்தையும், உகரம் நிலைபேற்றையும், மகரம் ஒடுக்கத்தையும் குறித்தல் பகுப்புப் பொருளாம். அவை அப்பொருளைக் குறித்தல் அவற்றின் பிறப்பியல் பால் அமைந்தது என்க. முத்தொழிலையும் உடைய மண்முதல் நாதம் ஈறாகச் சொல்வடிவாயும், பொருள் வடிவாயும் நிற்கும் உலகம் முழுவதையும் ஒருங்கு சுட்டி நிற்றல் அதன் தொகுப்புப்பொருளாம். அப்பொருள் நிலையில் நிற்றலாவது, `முத்தொழிலை உடைய பொருள் செயற்கையாவதலல்லது இயற்கையாகாமையானும், செயற்கைப்பொருள் யாவும் அறிவிலவாதலல்லது அறிவுடையன வாகாமையானும் அவை, தாமே அங்ஙனம் தோன்றல், நிற்றல், ஒடுங்கல் என்பவற்றை எய்துதுல் கூடாமையின், அவற்றை அங்ஙனம் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் பேரறிவும் பேராற்றலும் உடைய முதல்வன் ஒருவன் உளன்` என்பதை ஆசிரியர் அருளுரையும், நூற்கொள்கையும் சார்பாக நின்று ஓர்ந்து தெளிதல். அதன்பின் நாதனைக் காணுதலாவது, அங்ஙனம் உணரப்பட்ட அம்முதல்வனது அருட்குணங்கள் பல வற்றையும் அறிந்து அன்புசெய்து அவனிடத்தே அழுந்திநிற்றல். அங்ஙனம் அழுந்தி நிற்கும் நிலையை மாற்றுதற்கு வேறு பொருள் இன்மையின், அந்நிலையில் விளையும் அவனது இன்பத்திற்கும் எல்லை இல்லையாம். ஆகவே, அந்தணர் எனப்படுவோர் இப் பேற்றினைப் பெற்று நிற்போரேயாவர் என்க.
`பிரமத்தை அறிந்தவனே பிராமணன்` என மிருதி நூலாரும் சொற்பொருள் கூறுவர். ஆயினும் அவர், `பிரமத்தை அறியும் தன்மை பிராமணன் என்னும் பிறப்பிலே அமைவது; ஆதலின், அத்தன்மை இல்லாத பிற வருணத்தார்க்கு அவ்வறிவு கூடாது` என்பர். அவர் கூற்று வேதத்திற்கு ஒவ்வாததேயாம்.
``ஈதாந்தம்`` என்பதில், `அந்தம்` என்பது முதல்நீண்டு நின்றது. `அந்தம் ஈது என்னார்` என மாற்றி, `முடிவு இதுவென்று உணர்தல் இன்றி` என உரைக்க. இவ்வாறு உரைக்கவே, `எல்லையற்ற இன்ப நுகர்ச்சியைப் பெற்று` என்பது அதனாற் போந்த பொருளாகும். என்னார், முற்றெச்சம். `எனாது` என்பது பாடம் அன்று. ``கண்டு`` என்பதனை, ``நாதனை`` என்றதன்பின்னர்க் கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங் குன்னி
நேயத்தே ரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.

பொழிப்புரை :

அன்பாகிய ஊர்தியின்மேல் சென்று முதற் பொருளை அடைந்து அதுவேயாய் அழுந்திநின்று உலகத்தில் பற்றற்று நிற்பவரே, அந்தணர்க்கும் உண்மை காயத்திரி, சாவித்திரி முதலாகச் சொல்லப்படுகின்ற ஞான சத்திகளின் வேறுபாட்டியல் புகளை எல்லாம் அவற்றிற்குரிய மந்திரங்களை நெஞ்சிற் பதித்து ஓர்தற்கு விரும்புவர்.

குறிப்புரை :

எனவே, `பிறரெல்லாம் அவ்விருப்பமின்றி, வாளா அம்மந்திரங்களைச் சிறிதுபொழுது ஓதுதலோடு ஒழிவர்` என்றது ஆயிற்று. ஆகவே, `இந்நிலையுடையோரே சிறப்புடை அந்தணர்` என்பது பெறப்பட்டது. அநுபவத்திற்கு அறிவன்றி அன்பே நேர் வாயிலாகலின், ``நேயத் தேர் ஏறி`` என்றார். ``நேயத்தாய்`` என்றதில், நேயம், `ஞேயம்` என்னும் வடசொல்லின் திரிபு. ஞேயம் - அறியப் படும் பொருள்.

பண் :

பாடல் எண் : 4

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.

பொழிப்புரை :

பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான் காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.

குறிப்புரை :

மந்திரங்கள் அனைத்திற்கும் முதலாவது ஓங்கார மாதலின், அதனை அனைத்து நெறிகட்கும் இடம் என்றார். ``உரை`` என்றது விடாத ஆகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் முடிந்த பொருளைக் குறித்தது. `வேதத்திற்குப் புறம்பான நெறிகளின் முத்தி உண்மை முத்தியாகாது போலியாய்ப்போம்` என்றற்குத் `திருநெறி` என வாளா கூறியொழியாது, ``வேதத் திருநெறி`` என விதந் தோதினார். பின் வந்த திரு, செல்வம்; அது `சென்றடையாத` (தி.1 ப.98 பா.1) (தி.6 ப.87 பா.1) இறைவன் செல்வமாகிய திருவருளையே குறித்தது. திருவருளின் வசமாய் நிற்றலை, `அதன் கையில் இருத்தி` என்றார்.

பண் :

பாடல் எண் : 5

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்உடன் உண்மை யுணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலு மாகும் பிரமமே.

பொழிப்புரை :

`பிரமஞானம்` என்பது, பக்குவம் எய்திய உயிர்கள், பொய்கூறாமையும், புலால் உண்ணாமை, கொல்லாமை, இன்னா செய்யாமை ஆகிய நோன்புகளும், தம் வழி நிறுத்தத் தக்க தாகிய மனத்தை அவ்வாறே பொறிவழிப் போகாது தடுத்து நிறுத்தலும், யோக சமாதியும் என்னும் இவை கைவரப்பெற்றுப் பின்னர் மெய் உணர்வெய்திப் பாசத்தை முற்ற அறுத்தலாகும்.

குறிப்புரை :

`பிரமஞானம் எய்தினோரே பிராமணர் என்னும் சொல் பொருளுடையதாக வேண்டின், இவ்வொழுக்கம் கைவரப் பெறல் வேண்டும்` என்றற்கு, பிரமஞானமாவது இது என்பதை வகுத்துக் கூறினார். இவற்றுள் ``உணர்வுற்று`` என்பது ஒன்றுமே பிரமஞானமாக, ஏனையவை அவற்றிற்குப் படிகளாயினும், பரம்பரையால் பிரமஞானத்தைப் பயத்தல் பற்றி, அவற்றையும் `பிரமஞானம்` என்றார். பிரமத்தை உணரும் உணர்வை ஒற்றுமை பற்றி, ``பிரமம்`` என்றார். ``பிரமம், ஒத்த உயிர்கள்`` என்பவற்றை இம்முறையானே முதற்கண் கூட்டி உரைக்க. தான் அவனாதலாகிய சமாதிநிலை உணர்வுறுதற்கு முன்னிற்கற்பாலதாயினும், செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். ``தவம்`` என்புழியும் எண்ணும்மை விரிக்க.
இவை நான்கு திருமந்திரங்களானும் அந்தணர் ஒழுக்கமும், அவற்றது சிறப்பும் உடன்பாட்டு முகத்தால் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.

பொழிப்புரை :

வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையே யாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.

குறிப்புரை :

`அங்ஙனம் ஆசையறாது நின்று ஒதல் முதலிய அறு தொழில்களைப் பொருளாசை முதலியவற்றாற் செய்வோர் அந்தண ராகார்` என்பதாம். பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. `ஒழிந்த` என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று. நிலையை, ``இடம்`` என்றார்.

பண் :

பாடல் எண் : 7

நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.

பொழிப்புரை :

முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்புரை :

இங்ஙனமாகவே, `முப்புரி நூலாகிய பஞ்சு நூல், அறிவு நூலாகிய வேதாந்தத்தைக் குறிக்கும் அடையாளமும், சிகை, அதன் முடிந்த பொருளைக் குறிக்கும் அடையாளமுமேயாய் அந்தணக் கோலத்திற்கு உரியவாயின. அப்பொருளைப் பெறாதவர் அவற்றைக் குறிக்கும் அடையாளமாகிய வேடமாத்திரங்கொள்வதால் அந்தண ராகி விடமாட்டார்` என்றதாயிற்று.
இங்கும் பிரமஞானத்தையே ஒற்றுமை பற்றிப் பிரமமாகக் கூறினார். இங்குக் கூறிய பிரமஞானம் இல்லாதோர் வேட மாத்திரத்தால் பிராமணராகார் என்றவாறு. திருநாவுக்கரசரும்,
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.
-தி.5 ப.39. பா.8
என்பதனால், `முப்புரிநூல் முதலிய வேடம் புனைந்தும் அபர ஞான பரஞானங்களில்லாதார் அந்தணராதல் இல்லை` எனவும், `அந்த ஞானங்களை உடையவர், முப்புரிநூல் முதலிய வேடங்கள் இன்றியும் அந்தணராவர்` எனவும் அருளிச்செய்தார். எனினும், நூலும், சிகையும் போல்பவை கலியூழிக் காலத்தில் பிறப்படை யாளமேயாயின. கார்ப் பாசம் - பஞ்சு. கேசம் - தலைமயிர். சிறப்புடைய இவை இரண்டன் உண்மையைக் கூறவே, கோவண உடை முதலிய பிற அடையாளங் களின் உண்மையும் உணர்ந்து கொள்ளப்படும் என்க. இங்குக் கூறப் பட்ட பொருள் இன்றிப் பிறப்பு ஒன்றே காரணமாக வேடமாத்திரம் புனையும் பிராமணர் பிராமணராகாது, பிராமணப் போலிகள் ஆவர் என்பதனை இந்நாயனார், ``பேர்கொண்ட பார்ப்பான்`` (தி.10 2ஆம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 8

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.

பொழிப்புரை :

மேல் (தி.10 பா.225) சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்த்தலில் விருப்பம் மிக்க அறிவிலிகள் ஒருபோதும் பிராமணராதல் இல்லை.

குறிப்புரை :

என்றது, உடல் ஓம்புதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டமை காரணமாக, `பிராமணர் முதலிய வருண வேறுபாடு ஒழுக்கத்தாலன்றிப் பிறப்பிலே அமைந்தன` எனப் பிதற்றுவாரை வன்மையாக மறுத்தவாறு. விடயம் - ஐம்புலன். ஓர்தல், மெய்ப் பொருளை; அது, கற்றும் கேட்டும் ஓர்ந்துணரப்படுவதாம். ``உணர்வு`` என்று அந்த அபர ஞானத்தை. பரன் உண்மை - முதற்பொருளின் சொரூபம். இவ்விடத்து, `உணர்தல்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. பித்து, பேராசை. அதன்கண் பின்னும் உறைத்து நிற்றலின், `ஏறும்` என்றும், கிடைத்தற்கரிய பிறவியைப் பிழைபடும் நெறியிற் போக்கலால் ``மூடர்`` என்றும் கூறினார்.
இவை மூன்று திருமந்திரங்களாலும் அந்தணர் ஒழுக்கத்தது சிறப்பு எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.

பொழிப்புரை :

``சத்தியமும் தவம்`` (தி.10 பா.227) என்னும் திருமந்திரத்துட் கூறப்பட்ட முறைமையில் நிற்கும் உண்மை அந்தணர்கட்கே சித்தாகிய தம்மையும், அசித்தாகிய பாசங்களையும் பொருளென உணரும் தன்மை நீங்கி, ``வேதத் திருநெறி`` (தி.10 பா.226) என மேற்கூறிய உபதேச பரம்பரை முறையிலே ஞானகுருவைத் தலைப்பட்டு, நாட்கடன் நோன்பு முதலியவை `உறங்கினோன்கை வெறும்பாக்கென்னத் தானே தவிர` (சங்கற்ப நிராகரணம் - 4. 234) ஞேயம் ஒன்றையே கண்டிருக்கின்ற துரியாதீத நிலை கை கூடுவதாகும்.

குறிப்புரை :

``சித்த சித்தின்றி`` என்பதை முதலிற் கூட்டி, ``தூய்மறையோர்க்கே ஆம்` என மாற்றி உரைக்க. ``இன்றி`` என்பது `நீங்கி` என்றவாறு. காண்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. சமாதி, `அதீதம்` என்னும் பொருளது.

பண் :

பாடல் எண் : 10

மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே.

பொழிப்புரை :

அந்தணர் என்று சொல்லப்படுவோர் அந்தணரேயாதல் உண்மையாயின், `அந்தணர்க்குரிய வேத முடிவின் மெய்ப்பொருளால் அடையும் தூய்மையாவது, உயிர்களின் குறை பாட்டினை உணர்தலே` என்றும், ``நூலும் சிகையும் முதலிய பிற வெல்லாம் வெளிப்பகட்டாகிய ஆரவாரங்களே` என்றும் அறிவார். அவ்வாறு அறிந்தவரே வேதம் உணர்ந்த அந்தணராவர்.

குறிப்புரை :

`தெரிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவரே அந்தணராம்` என வேறு தொடராக்கி உரைக்க.

பண் :

பாடல் எண் : 11

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.

பொழிப்புரை :

உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப்பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.

குறிப்புரை :

`அந்தணர்` என்னும் சொற்பொருள் `அம் தணர்` எனவும், `அந்த அணர்` எனவும் பிரித்து இருவகையாகக் கூறப் படுதலை முறையே பரிமேலழகர் உரையிலும் (திருக்குறள் 30) நச்சினார்க் கினியர் உரையிலும் காண்க (திருமுருகாற்றுப்படை - 96. மதுரைக் காஞ்சி - 474, கலி கடவுள் வாழ்த்து). இவ்விருபொருளும் இங்குக் கூறப்பட்டவாறு அறிக. `நரபதி` என்பது வடசொல்லாதலின்; அஃறிணை முடிபு ஏற்றது. அந்தியும் சந்தியேயாயினும் சந்தியாதற்குச் சிறப்புப் பற்றி வேறெடுத்து ஓதினார். ``பண்ணும்`` என்பது `பண்ணப்படும்` என்னும் பொருட் டாய் நின்றது; ``எண்ணும் அஞ்செழுத்தே`` (சிவஞானபோதம் சூ. 9) என்பதிற்போல. ``நாடாயினும், காடாயினும், அவலாயினும், மிசையாயினும் எவ்வழி மக்கள் நல்லரோ அவ்வழியே நிலனும் நல்லதாம்`` (புறம் - 187) ஆகலின், நல்ல அந்தணர் வாழும் நாடு நலமிகப் படைத்தலை அறிந்து கொள்க. திருவள்ளுவரும் இக்கருத்தே பற்றி, `தள்ளாவிளையுள் முதலிய வற்றோடு, தக்காரை உடையதே நல்ல நாடு` (குறள் -731) என்றார்.

பண் :

பாடல் எண் : 12

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.

பொழிப்புரை :

நாதமுடிவான தத்துவங்களின் ஞானத்தைப் பெற்றவர்க்கே அஃது ஆன்ம போதத்தைக் கடந்த இறைவனை அடையும் நெறியாக அமைவது, ஆதலின் அதுவே வேதாந்த ஞானமாம். அதனால் அந்த ஞானத்தை உணரும் ஊழ் இல்லாமையால் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்களையே உணர்வார்க்கு மேற்கூறிய இறைவனை அடையும் பரமுத்தியாதல், அதற்குக் கீழாய்ச் சுத்த தத்துவ புவனங்களை அடையும் பதமுத்தியாதல் கிடைக்குமோ! கிடையா.

குறிப்புரை :

முதலடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி, தொகுக்கப்பட்ட உருவை `விதியிலோர்க்கு` என விரித்துக் கொள்க. புக்கது - கிடைத்த ஞானம். ``நண்ணுமே`` என்பதில் ஏகாரம் எதிர்மறைக்கண் வந்தது. பிரகிருதிக்குமேல் உள்ள வித்தியா தத்துவ சிவதத்துவங்களை உணர்தல் சிவாகமங்களை உணர்ந்தார்க்கன்றிக் கூடாமையால், சிவாகமங்களைக் கொள்ளாது, வேதத்தை மட்டுமே கொள்ளும் அந்தணர், அந்தணத் தன்மை நிரம்பப் பெற்றவர் ஆகார் என்றற்கு இவ்வாறு கூறினார்.
வேதமும், சிவாகமும் முறையே நூலும், உரையும்போல நின்று பொருள்களைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணர்த்தி நிற்றலின், நூலுள் தொக்கு நிற்கும் பொருள்களை விரித் துரைக்கும் உரையின்றி நூலது பொருளை முற்ற உணர்தல் கூடாமை போல, சிவாகமங்கள் இன்றி வேதத்தின் பொருளை விளங்க உணர்தல் கூடாது. அதனால், சிவாகமங்களை இகழ்ந்து வேதத்தமைட்டுமே ஓதுவோர் வேதத்தின் பொருளை முற்ற உணரமாட்டாது ஒருபுடையே உணர்வர். வேதத்தின் பொருளை முற்ற உணராத பொழுது, வேதத் திருநெறியின் முடிந்த பயனைப் பெறுதல் இயலாது என்க.
வேதம், சிவாகமம் இரண்டையும் ஒப்ப உணரும் அந்தணருள், வழிபாட்டுச் செயல்கள் பலவற்றையும் வேதமந்திரங்களால் செய்வோர், `வைதிக அந்தணர்` எனவும், ஆகமமந்திரங்களால் செய்வோர், `சைவ அந்தணர்` எனவும் சொல்லப்படுவர். `வைதிக அந்தணர்` எனினும், `மகாசைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர்` எனினும், `ஆதி சைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர், `சிவவேதியர், சிவ மறையோர்` என்றாற்போலச் சிறப்பித்துக் கூறிய வழியே `அந்தணர்` முதலிய சொற்கள் ஆதிசைவரைக் குறிக்கும். வாளா கூறியவழி அவை வைதிக அந்தணரையே குறிக்கும். எனவே, நாயனார் இங்குக் கூறுவனவெல்லாம் வைதிக அந்தணரையே குறிப்பனவாதல் அறிந்து கொள்ளப்படும். படவே, இவர் சிவாகமங்களையும் இகழாது வேதத்தோடு ஒப்ப மேற்கொள்ளுதல் வேண்டும் என நாயனார் கூறலின், `சிவாகமவழித் தீக்கை பெற்று - மகாசைவராய் விளங்கும் மறையவர்களே அந்தணர் எனப்படுதற்கு உரியர்` என்பது நாயனாரது திருவுள்ளமாயிற்று. ஆகவே, மகா சைவரல்லாத வைதிகப் பிராமணரைப் புரோகிதராகவும், பரிசாரகராகவும் கொள்ளுதல் சைவர்க்கும், பரார்த்த பூசை முதலியவற்றிற்கும் குற்றமாதல் விளங்கும்.
இதனானே, நாயனார் தமிழையும், வடமொழியையும் ஒரு நிகராகவே கூறினமையின், `வேத சிவாகமங்களோடு ஒத்து நிகழும் தமிழ் நூல்களையும் அந்தணராவார் இகழாது போற்றுதல் வேண்டும்` என்பதும், இங்ஙனம் வேதம், சிவாகமம், திருநெறித் தமிழ்நூல் என்ப வற்றை ஒப்ப ஓதி உணர்வோருள் வழிபாட்டுச் செயல்களைத் தமிழ் மந்திரத்தால் செய்வோர் `திருவந்தணர்` என்றும், `திருவாசிரியர்` என்றும் கொள்ளத்தகுவர் என்பதும் நாயனார்க்கு ஏற்புடையதாதல் விளங்கும்.
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த - மறைமொழி தானே மந்திரம் என்ப`` (தொல். செய்யுளியல்) என்ற தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தால், தமிழ் மொழியில் மந்திரம் உளதாதல் தெற்றெனப் புலப்படும்.
இத்தன்மை உடைய மகாசைவருள் தில்லைவாழந்தணர் தில்லைக் கூத்தப் பெருமானுக்குத் தொண்டு பூண்டு அவனைக் காலந் தோறும் தவறாது வழிபடும் நியமம் உடையராதல்பற்றித் திருத் தொண்டருள் அவரே முதன்மை வாய்ந்தவர் என்னும் திருக்குறிப்பால் திருவாரூர்த் தியாகேசப் பெருமான், `தம்மைத் திருத்தொண்டருக்கு அடியராக்கும் நாள் எந்நாளோ` என இறைஞ்சி நின்ற நம்பி யாரூரர்க்கு, `தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` என அடியெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டத் தொகையில் முதற்கண் தில்லைவாழந்தணரை இடம்பெறச் செய்தருளினான் என்க. இவ்வுண்மை திருத்தொண்டத் தொகை தோன்றுதற்கு முன்பே குறிப்பாற் புலப்படுமாறு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தில்லை வாழந்தணரைச் சிவாகம நெறியாகிய, `தீக்கை` என்னும் சிறப்புப் (மெய்ந்நெறிச் செய்கை) பெற்றமை பற்றி, ``சிறப்பர்`` (தி.1 ப.80 பா.2) என்றும், இச்சிறப்பால் இவர் சிவோகம் பாவனையைத் தலைப்பட்டுச் சிவனுரு எய்தி நின்றமையை,
``நீலத்தார் கரியமிடற் றார், நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப்பொடி நீறணி வார்சடையார்``
-தி.3 ப.1 பா.3
என்றும் அருளிச்செய்தார். இச்சிறப்புப் பற்றி இவர் `தீக்கிதர்` எனப் பெயர் பெற்று நிற்றல் அறியற்பாற்று. இதனானே `தீக்கிதர்` என்னும் பெயருடைய பிற அந்தணரும் மகாசைவராதல் விளங்கும்.
தில்லைவாழந்தணர் சிவாகமங்களையும் வேதத்தோடு ஒப்ப மேற்கொண்டு ஒழுகுதலைச் சேக்கிழார்,
``வருமுறை எரிமூன்றோம்பி ... ..
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்றுவல்லார்``
``அறுதொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கியுள்ளார்``
``ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்துமிக்கார்``
-தி.12 தில்லைவாழந்தணர் பு. 5,6,7
என விளக்கினார்.
`இவர்கள் கூத்தப் பெருமானை வேதமந்திரங்களாலே வழிபடுவர்` என்பதனையும் அவர்,
``மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து .... ....
.... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... ....
அங்கணர் கோயி லுள்ளா அகம்படித் தொண்டு செய்வார்``
எனக் குறித்தருளினார்.
தில்லைவாழந்தணரைச் சேக்கிழார், ``அகிலமெல்லாம்புகழ் திருமறையோர்`` எனச் சிறப்பித்தார். அதனானே அவரால் ``திரு மறையோர்`` எனக் குறிக்கப்பட்ட அப்பூதியடிகள் முதலாயினாரும் மகாசைவராதல் அறியப்படும். ஞானசம்பந்தரது தந்தைவழி, தாய்வழி இரண்டும் மகாசைவ மரபே என்பதனைச் சேக்கிழார்,
``மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய்`` -தி.12
எனக் குறித்தருளினார். இவ்வாற்றானே, `குங்குலியக் கலயர், முருகர், சண்டேசர், சோமாசிமாறர், நமிநந்தியடிகள், நீலநக்கர்` என்னும் நாயன்மார்களும் மகாசைவரேயாதல் பெறப்பட்டது. சேக்கிழார் தில்லைவாழந்தணர் முதலியோரைக் குறித்தவாறே உமாபதிதேவரும் பெரியபுராணத்துட் போந்த வைதிக அந்தணர் அனைவரையும் ``திருமறையோர்`` (சேக்கிழார் நாயனார் புராணம் - 36) எனக் குறிப்பிடுதல் காண்க.
சண்டேசுர நாயனாரது பதியாகிய திருச்சேய்ஞலூரைச் சேக்கிழார், ``திருமறையோர் மூதூர்`` என்றமையால், அதன்கண் வாழ்ந்த அந்தணரும் மகாசைவரே என்பது பெறுதும். எச்சதத்தன் சிவாபராதம் செய்து ஒறுக்கப்பட்டோனாதல் பற்றி அவனது சைவச் சிறப்பையும், அவனொடு வாழ்ந்த பிற அந்தணரது சைவச் சிறப்பையும் சேக்கிழார் விரித்திலர் எனினும், ``வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப்பதி`` என்பதனால் அங்குத் திகழ்ந்த சைவச் சிறப்பைக் குறித்தருளினார். இத்தகு சைவச்சிறப்பு அங்கு இல்லையேல், அவர் கூறியவாறு அவ்வூர் தில்லை வாழந்தணர்கள் சோழமன்னர்கட்கு முடிசூட்டும் தலங்கள் ஐந்தனுள் ஒன்றாயிருத்தல் கூடுமோ!
சைவ அந்தணர்க்கு நூல், சிகை என்பவற்றோடு காதில் சுந்தர வேடம் சிறப்படையாளமாம்.
சிவாகமத்தை இகழ்ந்தொதுக்குமாற்றால் அந்தணருட் சிலர் வேதத்தின் பொருளை முன்னொடு பின் முரணாதவாறு ஒருபடித்தாக உணரமாட்டாது, `பூர்வ பாகமாகிய கன்மகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `ஞானகாண்டம் புனைந் துரை` எனப் பொதுவகையால் தழுவி, `தெய்வம் இல்லை` எனக்கூறி நாத்திகராய் ஒழிவாரும், (மீமாஞ்சகர்) `உத்தர பாகமாகிய ஞானகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `கன்ம காண்டம் மந்த பரிபாகிகட்கே உரியது; அதனால் அதனுள் வலியது இப்பகுதி, மெலியது இப்பகுதி என ஆராய்தல் பயனில் உழப்பாம்` என்று பொதுவகையால் தழுவிக் கிரியா மார்க்கத்தில் அனேகசுர வாதிகளாயும், ஞான மார்க்கத்தில் `சீவான்மாவே பரமான்மா` என்னும் அகம்பிரமக்காரர்களாயும் நிற்பாரும் (மாயாவாதிகள்) `கன்ம காண்டம், ஞானகாண்டம்` என்னும் இரண்டையும் ஒப்பக்கொள்ளினும், உலகத்தின் `தோற்றம், நிலை, இறுதி` என்னும் முத்தொழிலையும் செய்பவனே முதல்வன் என உணரமாட்டாது, `அவற்றுள் நிலையாகிய சாத்துவிகத் தொழிலைச் செய்பவனே முதல்வன்; ஏனை இராசதத் தொழிலாகிய தோற்றத்தைச் செய்பவனும், தாமதத் தொழிலாகிய இறுதியைச் செய்பவனும் முதல்வர் ஆகார்` என்று இகழ்ந்து, `அவருள்ளும் தாமதத்தொழிலைச் செய்பவன், தோற்றத்தைச் செய்பவனிலும், கீழ்ப்பட்டவன்` எனக்கூறிச் சிவநிந்தகராவாரும் (பாஞ்சராத்திரிகள்) ஆவர். இவரை எல்லாம் சைவாகமங்கள் புறச்சமயிகள் என்றே ஒதுக்கும். இவருள் சிவநிந்தை செய்தொழுகுவாரை `அகத்தியர், கௌதமர்` முதலிய முனிவர்களது சாப வயப்பட்ட துர்ப் பிராமணர்கள் என்று காந்தம், கூர்மம் முதலிய உயரிய புராணங்கள் இகழ்ந்தொதுக் குதலை அறிந்துகொள்க. இன்னோரன்ன, குழறு படிகள் பலவும் சிவாகமங்களைப் பொருட்படுத்தி உணராமையான் உளவாவன என அறிக.
இதனால், `வேத சிவாகமஞானமும் வைதிக சைவ ஒழுக்க மும் உடைய அந்தணரே அந்தணத் தன்மை நிரம்பியவர்` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தானே விடும்பற் றிரண்டுந் தரித்திட
நானே விடப்படு மேதொன்றை நாடாது
* * * * * *

பொழிப்புரை :

இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 14

பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேவும் ஓரா குதிஅவி உண்ணவே
* * * * * *

பொழிப்புரை :

இந்த திருமந்திரங்களில் ஏனையடிகள் கிடைத்தில. அதனால் இவற்றை ஒரு திருமந்திரத்தின் நான்கடிகளாகப் பலரும் மயங்கிக்கொண்டனர். இவை முற்றக் கிடையாமையால், பொருள் காண்டல் அரிது.

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 1

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

பொழிப்புரை :

நீதி நூலைக் கல்லாத அரசனும், கூற்றுவனும் யாவரிடத்தும் கொலையே புரிதலால் தம்முள் ஒருபடியாக ஒப்பர். ஆயினும், கல்லா அரசனினும் கூற்றுவனே மிக நல்லவன். என்னை? கல்லா அரசன் தனது அறியாமை காரணமாக ஒரு குற்றமும் செய்யாதார்க்கும் ஆராயாமல் கொலைத் தண்டம் விதிப்பான்; கூற்றுவன் அறமுடையவர்பால் தண்டம் செய்தற்கு அடையான்.

குறிப்புரை :

`அதனால் அரசர்க்கு நீதிநூற் கல்வி இன்றியமை யாதது` என்பது குறிப்பெச்சம். கற்றற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. `ஆயினும், என்னை` என்பன சொல்லெச்சம். ``அறம்`` என் றது நீதியை. ``ஓரான்`` என்பது முற்றெச்சம். நணுக நில்லான் என்புழி, `தண்டம் செய்தற்கு` என்பது இசையெச்சம். `நலியகில்லானே` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கல்லா அரசன் அறம் ஓராது கொல்லென் றலை, ``பெண்கொலை செய்த நன்னன்`` (குறுந்தொகை - 292) முதலியோரிடத்துக் காண்க.
இதனால், `நீதிநூலை ஓதி உணர்தல் அரசர்க்கு முதற்கண் வேண்டப்படுவது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.

பொழிப்புரை :

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை யறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.

குறிப்புரை :

``நாட்டில்`` என்புழி `நிகழும்` என்பது வருவிக்க. `அவன் நெறி` என்பது பாடம் அன்று. வைதிக நெறி பொதுமையான கடவுள் நெறியாதலின், அதனை, `தவநெறி` என்றார். வைதிக நெறி சைவநெறிகளே நீதி நூலின் நோக்காதலை, மேற்கூறிய உண்மை அந்தணர் அந்நூலை ஓதுவிக்கும்வழி, அவர் அரசனுக்கு உணர்த்து வாராதலின், அரசன் அவ்வழியில் வழுவாது நிற்றல் வேண்டும் என்பதாம். `நரபதி கெடும், குன்றும்` என உடைமையது தொழில்கள், உடையான்மேல் ஏற்றப்பட்டன. ``மூடம்`` என்றது அதன் காரியந் தோன்ற நின்றது. இத்தவநெறி சிவநெறிகளைப் புரத்தலில் வழுவாது நிற்பித்தற்பொருட்டே, `அரசன் பெரியாரைத் துணைக் கொள்ளல் வேண்டும்` (திருக்குறள், 45ஆம் அதிகாரம்) என்றார் திருவள்ளுவர். ஞானசம்பந்தர் ``வேந்தனும் ஓங்குக`` (தி.3 ப.54 பா.1) என அரசனை வாழ்த்தியதும் இது பற்றியே என்பதனைச் சேக்கிழார்,
``ஆளும் மன்னனை வாழ்த்திய தற்சனை
மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்``
-தி.12 திருஞான.பு. 4-822
என விளக்கினார். இவ்வரச ஒழுக்கத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத் திருத்தொண்டர் புராணத்துட் போந்த நாயன்மார் சிலரது அரசாட்சியைக் கண்டுகொள்க.
இதனால், அரசன், தன்கீழ் வாழும் மக்கட்கு, நிலை பேறில்லாத உடல் நலத்தை மட்டும் காப்பவனாகாது, நிலையுடைய உயிர் நலத்தையும் காப்பவனாதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே.

பொழிப்புரை :

யாதோர் உயர்ந்த தொழிற்கும் அதற்குரிய கோலம் இன்றியமையாதாயினும், அத்தொழிற்கண் செவ்வே நில்லாதார் அதற்குரிய கோலத்தை மட்டும் புனைதலால் யாது பயன் விளையும்! செயலில் நிற்பாரது கோலமே அதனைக் குறிக்கும் உண்மைக் கோலமாய்ப் பயன்தரும். அதனால், ஒருவகை வேடத்தை மட்டும் புனைந்து, அதற்குரிய செயலில் நில்லாதவரை, வெற்றியுடைய அரசன், அச்செயலில் நிற்பித்தற்கு ஆவன செய்வானாயின், அதுவே அவனுக்கு உய்யும் நெறியும் ஆய்விடும்.

குறிப்புரை :

பலவகைக் கடவுள் நெறிக் கோலத்தை உடை யாரையும் அவற்றிற்குரிய செயலில் நிற்பித்தல் அரசனுக்குக் கடமையாதலை உணர்த்துவார் இங்ஙனம் பொதுப்படக் கூறினார். `வேடமே மெய்வேடம்` என, ஏகாரத்தை மாற்றி உரைக்க. ஒழுக்கம் இல்லாதார் வேடம் மாத்திரம் புனையின், உண்மையில் நிற்பாரையும் உலகம், `போலிகள்` என மயங்குமாகலானும், அங்ஙனம் மயங்கின் நாட்டில் தவநெறியும், சிவநெறியும் வளராது தேய்ந்தொழியும் ஆகலானும் அன்ன போலிகள் தோன்றாதவாறு செய்தல் அரசற்குக் பேரறமாம் என்பார், `அதுவே வீடாகும்` எனவும், இது செய்ய அரசற்குக் கூடும் ஆதலின் அதனை விட்டொழிதல் கூடாது என்பார், வேந்தனை, ``விறல் வேந்தன்`` எனவும் கூறினார். `உண்மை வேடத்தாலன்றிப் பொய் வேடத்தாற் பயன் இன்று` என்பதை,
வானுயர் தோற்றம் எவன்செய்யும், தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின். -குறள், 272
எனவும், பொய்வேடத்தால் பயன் விளையாமையேயன்றித் தீமையும் பெருகுதலை,
தவம்மறைந் தல்லவை செய்தல், புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. -குறள், 273
வலியில் நிலைமையான் வல்லுருவம், பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று -குறள், 274
எனவும், வேடம் புனையாராயினும், உண்மையில் நிற்பார் உயர்ந் தோரே ஆவர் என்பதனை,
மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்த தொழித்து விடின். -குறள், 280
எனவும் திருவள்ளுவரும் வகுத்துக் கூறியருளினார்.
இதனால், கடவுள் நெறியில் போலிகள் தோன்றாதவாறு குறிக் கொண்டு காத்தல் அரசற்குக் கடமை என்பது பொதுவாகக் கூறப் பட்டது.
எவரேனுந் தாமாக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்ட போதே

உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. -தி.6 ப.51 பா.3
என்றாற்போலும், திருமொழிகள் உலகியலைக் கடந்து அருள் நெறியில் நிற்கும் அன்புநெறி (பக்திமார்க்கம்) பற்றியனவும், இங்குக் கூறிய பலவும் உலகியலைக் கடவாத நூல்நெறி (விதிமார்க்கம்) பற்றியனவுமாம் ஆதலின் இவை தம்முள் முரணாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்
தாடம் பரநூற் சிகையறுத் தால்நன்றே.

பொழிப்புரை :

`பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன்` என்று வாய்ப்பறை சாற்றிவிட்டு, அப்பொழுதே அம்முயற்சி சிறிதும் இன்றி மூடத்தில் அழுந்திக்கிடப்போர் குலப்பெருமை கூறிக்கொள்ளுதற் பொருட்டுப் பிராமணர்க்குரிய சிகையையும், பூணூலையும் முதன் மையாக மேற்கொள்வாராயின், அத்தன்மையோர் உள்ள நாடும், நன்னெறி நிகழாமையால் வளம் குன்றும்; அந் நாட்டிற்குத் தலை வனாகிய அரசனும் பெருவாழ்வுடையனாயினும், தன் கடமையைச் செய்யாமையால், பெருமை சிறிதும் இலனாவன். ஆதலால், அத்தன்மையாளரது உண்மை நிலையை அரசன் பல்லாற்றானும் ஆராய்ந்தறிந்து, வெளியாரை மருட்டும் அவரது பொய்வேடத்தைக் களைந்தெறியச் செய்தால், பலர்க்கும் நன்மை உண்டாகும்.

குறிப்புரை :

வேடமாத்திரத்தானே தம்மைப் பிராமணர் என மதித்துக்கொள்வோர் தம் மூடத்தை நீக்கிக்கொள்ள முயலாராகலான் அவர்க்கும், அவரது வேடத்தால் அவரை உயர்ந்தோர் எனக் கருதி அவர்க்குப் பிறர் செய்யும் தானங்கள், அவரது தீயொழுக்கத்தால் உலகிற் பல தீச்செயல்கள் நிகழ்தற்கே காரணமாதலின் உலகிற்கும் உளவாகின்ற தீமைகள் அனைத்தும் அப்பொய் வேடத்தைக் களையவே நீங்க, மெய் வேடத்தாரால் நன்மை விளையும் என்பது பற்றி, ``அறுத்தால் நன்றே`` என்றார்.
இதனால், `அரசன் கடவுள் நெறியுள் வைதிக நெறியைக் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

பொழிப்புரை :

சிவஞானம் இல்லாத வெறுவியர் சிவஞானம் பெற்றுச் சிவனே ஆயினார் போலச் சிவனுக்குரிய சடை, சிகை, பூணூல் என்பவற்றைப் புனைந்துகொண்டு சிவஞானிகள் போல நடிப்பார் களாயின், அவரை அரசன் சிவஞானிகள் வாயிலாகவே பரிசோதனை செய்து உண்மைச் சிவஞானிகளாகச் செய்தல் நாட்டிற்கு நன்மை பயப்பதாகும்.

குறிப்புரை :

எனவே, `அது செய்யாவழி நாட்டிற்குத் தீமை உண்டாகும்` என்றதாயிற்று. ஞானம் உண்மையை அறிதல் அரசற்குக் கூடாமையின், `ஞானிகளாலே சோதிக்க` எனவும், `சிவசின்னத்தைக் களைக` எனக் கூறுதலும் குற்றமாதலின், `அவர்க்குச் சிவஞானத்தை உண்டாக்குக` எனவும் கூறினார். `சடை` என்னும் கோலத்தைக் கூறவே, ஞானம், சிவ ஞானமாயிற்று.
இதனால், `அரசன் கடவுள் நெறியில் சிவநெறியைப் பழுது படாமல் காத்தல் வேண்டும்` என்பது சிறப்பாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே.

பொழிப்புரை :

ஆக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரை யும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியன் அரசன். அவன் அதனைச் செய்யாதொழி வனாயின் மறுமையில் மீளா நரகம் புகுவன்.

குறிப்புரை :

`பாவையரையும்` என்பது குறைந்து நின்றது. `காப்பவன் காவலன்` என மாறிக் கூட்டுக. வைதிக வேள்வி சைவ வேள்விகட்கு அவியையும், சிவவழிபாட்டிற்குப் பால் முதலிய ஐந்தையும் தருவன ஆக்களும் (பசுக்களும்) `அறவோர்க்களித்தல், அந்தணர் ஓம்பல், துறவோர்க்கெதிர்தல், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடல்` (சிலப்பதிகாரம் - கொலைக்களக் காதை) முதலியவற்றையும், சிவவழிபாடு செய்யும் ஆடவர்க்கு அதற்கு வேண்டுவனவற்றை அமைத்து உடன் இருந்து உதவுதலையும் செய்வோர் பெண்டிரும், அறமுதற் பொருள்களை உலகர்க்கு உணர்த்துவார் துறவறத்தவரும், சிவஞான சிவபத்திகளைப் பரிபக்கு வர்க்குத் தருவார் சிவனடியாரும் ஆகலானும், இவரை நலியும் இயல்பு உடையார் முறையே புலையரும், தூர்த்தரும், நாத்திகரும், புறச்சமயி களும் ஆகலானும் அவரால் இவர்க்கு நலிவு வாராமைக் காத்தல் அரசற்குக் கடன் என்பதும்,
`அக்கடனை அவன் ஆற்றாதொழியின், ஆற்றுவார் பிறர் இன்மையின் உளவாகும் தீங்குகட்கு அவனே காரணன் ஆதலின், அவன் நிரயத் துன்பத்தை நெடுங்காலம் எய்துவன்` என்பதும் கூறியவாறு. மறுமைக்கு - மறுமைக்கண்.
இதனால், `உலகியல், மெய்ந்நெறி` என்னும் இருவகை நன்னெறிகட்கும் ஊறுண்டாகாதவாறு காத்தல் அரசற்குக் கடன் என்பதும், அக்கடமையைச் செய்யாவழி அவற்கு உளதாகும் குற்ற மும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே.

பொழிப்புரை :

பல சமய நூலாரும் தாம் தாம் அறிந்தவாறு கூறும் யாதொரு முத்தியைப் பெறவேண்டினும், இம்மை மறுமைச் செல்வங் களை எய்த வேண்டினும் அரசன் மறந்தும் தனது அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது. அதனால், அவன், தன்கீழ் வாழும் குடிகளிடத்து விரும்பற்பாலது அவர்தம் தொழில் வருவாயுள் ஆறில் ஒன்றேயாம்.

குறிப்புரை :

ஆகவே, `அதனின்மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாம்` என்றபடி. இல்லறத்தார் `தென்புலத்தார் முதலிய ஐந்திடத்து அறமும்` (குறள், 43) செய்ய வேண்டுதலின், ஆறில் ஒன்றிற்கு மேற்பட விரும்புதல் அரசற்குக் குற்றமாயிற்று.
அரசரது ஒழுக்கம் கூறும்வழி அவர்க்குப் பொருள் வருவாயும் கூறவேண்டுதலின், அதனை அறத்தாற்றின் வழுவாது பெறல் வேண்டும் என்பது இதனால் கூறப்பட்டது. `உறுபொருளும், உல்கு பொருளும், தன்ஒன்னார்த் தெறுபொருளும்` (குறள், 756) பெறுதற்கண் அறத்தின் வழுவுதல் உண்டாகாமையின், அவை இங்குக் கூற வேண்டாவாயின.

பண் :

பாடல் எண் : 8

வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யாநிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தான்கொள்ளின்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.

பொழிப்புரை :

அரசன் உலகத்தை மேற்கூறியவாற்றாலெல்லாம் காப்பது பலர்க்கும் நன்மையை மிகத் தருவதாகும். எவ்வாறெனில், அத்தகைய ஆட்சியில் பொருந்திய மக்கள் மேற்கூறிய நெறிகளிலே வழுவாது நிற்பராகலின். அரசன் அங்ஙனம் காத்தலினின்றும் பிறழ்ந்து தனது நாட்டைப் பகை மன்னர் வந்து கைப்பற்றுமாறு தான் தனது குடிமக்களைத் தமக்கும், அறத்திற்கும் உரியவராகக் கருதாது, தனது நலம் ஒன்றற்கே உரியதாகக் கருதிவிடுவானாயின், அவன் தனது பசியின்பொருட்டுப் பிற விலங்குகளைப் பாய்ந்து கொல்லும் புலியோடொத்த தன்மையனே ஆவன்.

குறிப்புரை :

`அறநெறி பிறழ்ந்த அரசற்குக் கெடுவது மறுமை யேயன்றி இம்மையுமாம்` என்பார், ``இவ்வுலகைப் பிறர் கொள்ள`` என்றார். கொடுங்கோல் அரசனோடு குடிகளும், பிறரும் மேவுதல் (குறள் - 740 உரை) இன்மையால், அவன் தற்காத்தலையும் செய்து கொள்ளமாட்டாது பகைவர்க்கு எளியனாவான் என்க. `தாம்` என்பது பாடம் அன்று. ``தான்கொள்ளின்`` என்புழியும் `கொள்ள` என்பதே பாடமாயின் பொருள் இதுவேயாம் என்க. பாவகம் - தன்மை.
இதனால், `தன் கடமையினின்றும் வழுவுதல் அரசற்குப் பெருங்கேடு பயக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கால்கொண்டு கட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே.

பொழிப்புரை :

`கால் கட்டி மேல் ஏற்றிப் பால் கொண்டு சோம பானம் செய்க` என்பது யோகியரிடை வழங்குவதொரு குறிப்புச் சொல். அதன் பொருள் `காற்றை (பிராண வாயுவை) இடைகலை பிங்கலை வழிச் செல்லாதவாறு தடுத்து, சுழுமுனைவழிமேல் ஏறச் செய்து, அதனால் வளர்கின்ற மூலக்கனலால் நெற்றியில் உள்ள சந்திரமண்டலத்தினின்றும் வழிகின்ற அமுதத்தை உண்டு சமாதியில் அழுந்திப் பரவசம் எய்தியிருக்க` என்பதேயல்லது, `ஒருவனை இருகால்களையும் கட்டிக்கொண்டு பனை மரத்தின்மேல் ஏறச்செய்து, அவன் அதன் பாளையினின்றும் இறக்கிக் கொணர்கின்ற கள்ளை உண்டு அறிவிழந்திருக்க` என்பது பொருளன்று. அதனால், அவ்வுட் பொருளை உணரும் அறிவிலாதோர் தமக்குத் தோன்றிய வெளிப் பொருளே பொருளாக மயங்கித் தாமும் கள்ளுண்டு களித்துப் பிறரை யும் அவ்வாறு களிக்கச் செய்வர். அப் பேதை மாக்களை ஒறுத்தலை அரசன் தனது முதற்கடனாகக் கொண்டு ஒறுத்தல் வேண்டும்.

குறிப்புரை :

வேள்விக்கண் கொள்ளப்படும் சோமபானத்தைப் புகழ்ந்து கூறலும் இன்னதொரு மயக்க உரையே என்பது தோன்றுதற் பொருட்டுத் திங்களை அப்பெயராற் கூறாது, `சோமன்` என்னும் பெயராற் கூறினார். அதனால் அன்னதொரு வேள்வியை உயிர் நலம் கருதாது உடல் நலத்தின்பொருட்டு அப்பானம் செய்தல் வேண்டி வேட் பார்க்கும் அரசன் அறிவு புகட்டல் வேண்டும் என்பது பெறப்பட்டது. இத்திருமந்திரத்துள், `கால், மேலேற்றல், பால், சோமன்` என்னும் சொற்கள் இவ்விரு பொருள் பயந்து நிற்றல் அறிக. `முகத்தின்கண் சோமனைப் பற்றிப் பால்கொண்டு உண்ணாதார்` எனக் கூட்டுக. செய், `செய்கை` என்னும் பொருட்டாய முதனிலைத் தொழிற் பெயர்.
``காயத்தின் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே
மாயக்கள் ளுண்டாரென் றுந்தீபற;
வறட்டுப் பசுக்களென் றுந்தீபற`` -திருவுந்தியார் 43
என்றார் திருவுந்தியாரிலும்.
இதனால், அரசன், `கடவுள் நெறியில் பேதை மாக்களது கட்டுரைகள் நிகழ்ந்து குழறுபடை செய்யாதவாறு காத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.

பொழிப்புரை :

சமயிகள் பலரும் தம் தம் சமய அடை யாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லா தொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.

குறிப்புரை :

`மறுமைத் தண்டம், அதன்பின் வரும் பிறப்பில் அப்பாவம் தொடராது கழிதற்பொருட்டாதலானும், அதனைச் செய்தல் பிறர்க்கு இயலாதாகலானும் அதனைச் சிவபிரான் தானே செய் வானாய், இம்மையிற் செய்யும் தண்டம் அப்பாவம் மறுமையில் தொடராது கழிதற்பொருட்டாதலின், அதனை அவன் அரசனுக்குக் கடமையாக்கினான். ஆகவே, அரசன் அக்கடமையினின்றும் வழுவுதல் கூடாது` என்பதாம். சமயங்கள் பலவும் உயிர்களின் அறிவு வளர்ச்சிப்படிகளேயாதலின், `அவற்றை மேற்கொண்டுள்ளோம்` என்பவர் அவ்வொழுக்க நெறி நில்லாராயின் பொய்ம்மையாளராய்ப் பிறரை வஞ்சித்துக் கேடெய்துவராகலின், அவ்வாறு ஆகாமைப் பொருட்டு அவரை ஒறுத்தல் அரசற்குக் கடமையாயிற்று.
இதனால், `அவரவர் மேற்கொண்ட சமயங்கள் பலவற்றையும் பழுதுபடாமற் காத்தல் அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே.

பொழிப்புரை :

வற்றாத அமுத ஊற்றுப்போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.

குறிப்புரை :

முதற்கண், ``அமுதூறும்`` என்பதன் இடையில் `போல` என்னும் உவம உருபு விரிக்க. `நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுமாறுபோலவே, இயற்கை விளைவுகளைக் கூறியதேயன்றி, உழவரால் உளவாகும் செயற்கை விளைவுகளையும் கூறினார், சிறப்புடைய மக்களுலகம் அவற்றால் வாழ்தல் கருதி. ``ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் - வாரி வளங்குன்றிக் கால்`` (குறள் - 14 1) என்றார் திருவள்ளுவரும். இதனானே உழ வாகிய முதற்றொழிலும், ஓரிடத்து விளையும் பொருளைப் பிற விடத்துக்கொண்டு கொடுக்கும் வாணிகம் முதலிய துணைத்தொழிலும் ஆகியவற்றால் பல்வேறு திறத்து மக்களது வாழ்விற்கும் மழை முதலாதல் போந்தது. போதரவே, மேல் கூறாதொழிந்த வணிகர், வேளாளர் என்பாரொடு ஏனைமக்களது ஒழுக்கங்களும் ஓராற்றால் கூறப்பட்டனவாயின. இங்கும் அமுதூறும் மரங்களுடன், நஞ்சூறும் மரங்களும் மழையினால் உளவாதல் கூறினார், ``பார்மிை\\\\u2970?`` எனக் கூறிய இந்நிலவுலகம் நல்வினை தீவினை இரண்டற்கும் இடமாகிய இருவினை உலகமாவதல்லது, சுவர்க்கமும், நரகமும் போல ஒரு வினை உலகமன்று என்பது அறிவித்தற்கு. எனவே, `கன்ம பூமியாகிய இந்நிலவுலகம் நடத்தற்கு மழையே முதல்` என்பது கூறப்பட்டதாம். புல், பூடு முதலிய பலவும் இங்கு, `மரம்` என அடக்கப்பட்டன. ``மரப் பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை`` (தொல்-எழுத்து, 415) என்றாற்போல. ``காஞ்சிரை யும்`` என்ற உம்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 2

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

பொழிப்புரை :

எம்தந்தையாகிய சிவபெருமான் பொழிகின்ற திருவருளாகிய வெள்ளம் அன்பரது நெஞ்சகத்தினின்றும் ஊறுகின்ற சூக்குமமாகிய தெளிநீராம் ஆதலின், அதற்கு உலகில் மழையால் மலையினின்றும் பாய்கின்ற வெள்ளிய அருவி நீர்க்கு உள்ளதுபோல இடமும், காலமும் சுட்டும் சொல்லில்லை; நுரை இல்லை; மேலே மூடுகின்ற பாசியில்லை; கரையில்லை.

குறிப்புரை :

``நுரையில்லை மாசில்லை`` என்பதனை இறுதியடியின் முதலிற் கூட்டுக. ``நுரை இல்லை`` என்றது, `பயன்படா தொழியும் கூறில்லை` எனவும், ``மாசில்லை`` என்றது, `பாசத் தொடர்பு இல்லை` எனவும் கூறியவாறாம். எனவே, `அமுத ஊற்று` என மேல் சிறப்பிக்கப்பெற்ற நீர்மழையினும் இறைவனது கருணைமழை மிகச் சிறந்தது என்பது கூறும் முகத்தால், `இறைவனது கருணையானே மழை உளதாகும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே - என்னப் பொழியாய் மழை`` என மாணிக்கவாசகர், மழையை இறைவன் கருணையோடு உவமித்ததும் இதுபற்றி. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும் வான்சிறப்பைக் கடவுள் வாழ்த்தினை அடுத்து வைத்தார். இதனானே மக்களது ஒழுக்க மும், ஒழுக்கம் இன்மையும் மழைக்கும், மழை இன்மைக்கும் நேரே காரணமாகாது, இறைவனது திருவுள்ளத்திற்கு உவகையும் வெகுளி யும் உளவாக்கும் முகத்தால் காரணமாம் என்பது பெறப்பட்டது. சிறந்த ஒளியாதல் பற்றித் திருவருளை, ``கழுமணி`` என்றார்.
இதனால், மழை இறைவனது திருவருள் வடிவாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

பொழிப்புரை :

அறம் செய்தலில் விருப்பம் உடையவர்களே, அறம் வேண்டுமாயின், இரப்பாரை `அவர் நல்லர் இவர் தீயர்` என அவரது தகுதி வேறுபாடுகளை ஆராயாது யாவர்க்கும் இடுங்கள். உண்ணும் காலத்தில் விரையச் சென்று உண்ணாது, விருந்தினர் வருகையை எதிர் நோக்கியிருந்து பின்பு உண்ணுங்கள்.
காக்கைகள் தமக்குக் கிடைத்த உணவை உண்ணும்பொழுது, தம் இனத்தையும் அழைத்துக்கொண்டு உண்ணுதலைக் காணுங்கள்; கண்டீராயின், முன்னோர் தேடிவைத்தனவும், நீவிரே முன்னே தேடிவைத்தனவும் ஆகிய பொருளைப் பொன்காக்கும் பூதம்போல வறிதே காத்திராது சுற்றத்தார் பலர்க்கும் உதவுங்கள்.

குறிப்புரை :

`ஆர்க்கும் இடுமின், பார்த்திருந்துண்மின், பழம் பொருள் போற்றன்மின்` என்பவற்றால் முறையே `தாழ்ந்தோர், உயர்ந் தோர், ஒத்தோர்` என்னும் முத்திறத்தார்க்கும் உதவுதல் கூறப்பட்டமை காண்க.
தாழ்ந்தோர்க்கு உதவுதலே ஈகை அல்லது தருமம். அஃது `அற்றார் அழிபசி தீர்த்தலே` (குறள், 226) ஆகலின், அதற்கு ஏற்பாரது தகுதியை ஆராயவேண்டுவதில்லை என்றார்.
``பார்த்திருந்து உண்மின்`` என்றதனால், `தக்கார் வரின், மகிழ்ந்து வரவேற்று அவரோடு உண்டலும் வாராதவழி வாராமைக்கு வருந்தித் தாமே உண்டலும் செய்க` என்றதாயிற்று. இதுவே `விருந்தோம்பல்` என்றும், `தானம்` என்றும் சொல்லப்படும். இவர்க்குப் பொருளும் கொடுக்கப்படும் ஆதலின், தகுதி வேண்டப்படுவதாயிற்று. திருவள்ளுவரும் `தக்க விருந்தினரையே ஓம்புக` எனக் கூறுதல் அறிக. (குறள், அதி. 9)

``பழம்பொருள் போற்றன் மின்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. சுற்றம், அடுக்கிய சுற்றமாய் வருதலின், (குறள், 525) பழம் பொருளைப் போற்றாது வழங்குதலை அதற்கே கூறினார். எனினும் பொதுப்படவே ஓதினமையால், பிறவற்றிற்கும் கொள்ளப்படும். காக்கை கரைந்துண்ணுதலைத் திருவள்ளுவர் சுற்றந்தழாலுக்கே உவமையாகக் கூறுதலும், (குறள், 527)
காக்கை தனது இனம் ஒன்றையே கரைந்து உண்ணுதலும் அறிக. ``காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே`` என்றாராயினும், `உண்ணுங் காலம் காக்கை கரைதல் அறிமின்` என்றலே கருத்து என்க.
இதனால், `தேடிய பொருளைப் பிறர்க்குப் பயன்படச் செய்தல் வேண்டும்` என்பதும், அங்ஙனம் செய்யுமாறும் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 1

தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

பொழிப்புரை :

`சிவபெருமானது திருவடியை வணங்குதல், பிறர்க்கும் பிற உயிர்க்கும் உதவுதலை மேற்கொண்டு செய்தல், தத்துவ உணர்வு பெறுதல்` என்னும் இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ உடையவரே அறிவுடையோராவர். அவர்க்கே சிவபெருமான் உறுதுணையாவான்.

குறிப்புரை :

``தாள்பணிவார்`` முதலிய மூன்றனையும் எழு வாயாக்கியும், ``தாமறிவார்`` மூன்றனையும் அவற்றிற்குத் தனித்தனிப் பயனிலையாக்கியும் முடிக்க. இவற்றால் இவை மூன்றும் அறத்தின் வகையாதல் இறுதியடியில் பெறப்பட்டது. தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தை விரித்து, `தாமறிவார்க்கே பரன் தமனாம்` எனக் கூட்டி உரைக்க. `தமர்` எனப் பன்மையாக ஓதுதல் பாடம் அன்று. `அறம் செய்வோரே அறிவுடையோர்` என்பது உணர்த்துவார், ஏனைய வற்றையும் உடன் கூறினார். ``விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு``(குறள், 89) எனத் திருவள்ளுவரும் அறம் செய்யாமையை, `மடமை` எனவும், அதனை உடையாரை, `மடவோர்` எனவும் கூறுதல் காண்க.
இதனால், `அறத்தை விரும்பிச் செய்தல் அறிவுடையோர்க்கே கூடுவது` என்பதும், அறத்தின் வகையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

பொழிப்புரை :

உண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.

குறிப்புரை :

`அதனால், யாம் பொருள் இலம் என்று அறஞ் செய்யாமைக்குக் காரணங் கூறியொழிதல் பொருந்துவதன்று` என்பது குறிப்பெச்சம். ஆம் - கூடும். ``பச்சிலை`` முதலிய நான்கன் பின்னும் முறையே, `சூட்டல், கொடுத்தல், இடுதல், சொல்லல்` என்பன சொல் லெச்சமாய் நின்றன.
இதனால், மக்கள் யாவரும் `அறத்தினைத் தத்தமக்கு ஒல்லும் வகையான் ஓவாதே செல்லும்வாயெல்லாம் செயல் வேண்டும்` (குறள் - 33) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே.

பொழிப்புரை :

`பொருள் இல்லாத வறியவர், பொருள் உடை யவர் கொடுக்க உண்ணும் அதுவே பொருள் உடையவர்க்கு அறமாகி நிலை பெறும்` என்பதை நூல்களால் அறிந்த அறிவு செயலில் மணக்கப் பெறுபவரே மக்களாக மதிக்கப் பெறுவர். ஆயினும் அவ்வறிவைப் பெற்றும், சிலர், நீர்வேட்கையுடையார் பலரும், (பெரிய நீர் நிலையாகிய கடலை நோக்கிச் செல்லாது) ஊருணியாகிய சிறிய கிணறு குளங்களைத் தேடிச் சென்று உண்ணும் செயலின் தன்மையை அறிதல் இல்லை.

குறிப்புரை :

`அறிந்தாராயின், செல்வத்துப்பயன் ஈதலே` (புறம், 189) என்று உணர்ந்து வறியார்க்கு ஈவர் என்பது கருத்து. ``வறியார்க்கொன் றீவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து`` (குறள் - 221) ஆதலின், ``அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன்`` என்றார். ``கூவல் குளத்தினில்`` என்பது, `கூவலிலாதல் குளத்திலாதல்` என்னும் பொருளது. `கடல்நீர் பெரிதாயினும் நீர்வேட்கையுடையார் அதனிடத்துச் செல்லாமை போலப் பெருஞ்செல்வராயினும் ஈயாதார் மாட்டு இரவலர் செல்லார்; அதனால், அப்பெருஞ்செல்வர் அச்செல்வத்தால் சிறிதும் பயன் பெறார் என்பதும், கூவலும், குளமும் சிறியவேயாயினும் நீர்வேட்கை யுடையார் அவற்றிடத்தே சென்று நீருண்டல்போலச் சிறிது செல்வம் உடையாராயினும் ஈபவரிடத்தே இரவலர் சென்று தாம் வேண்டிய பெறுவர்; அதனால் அச்சிறு செல்வரே புகழும், அறமும் ஆகிய செல்வத்துப் பயனைப் பெறுவர் என உணர்ந்து ஈகையுடையராதல் வேண்டும்` என்பது பின்னிரண்டடிகளாலும் உணர்த்தப்பட்டது.
``தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்``
என்னும் புறப்பாட்டினைக் காண்க (புறம், 204).
இதனால், `அறிவுடை மக்களாயின், செல்வத்தின் பயன் அறம் செய்தலேயாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.

பொழிப்புரை :

அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?

குறிப்புரை :

`தருக்கிய` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `திரியாது ஓதுதலே பாடம்` எனினுமாம். `கூற்றுவன்` என்பது வருகின்ற திருமந்திரத்தினின்றும் கொள்ள வைத்தார்.

பண் :

பாடல் எண் : 5

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொழிப்புரை :

கூற்றுவன், தன்னைப் பிறர் காணாதபடியும், தன்னால் பற்றப்படுவர் நற்பண்பினை உடையர் என்றோ, தம்மை யன்றித் தம் சுற்றத்தார்க்குக் களைகணாவாரை இலர் என்றோ முதியர் என்றோ, இளையர் என்றோ எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவன். அவ்வாறு வருமுன்னே நீவிர் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`முதியர் என்று ஓராது` என்பது இசையெச்சம். தன்மம் செய்தல் கூறுவார், தவம் செய்தலையும் உடன் கூறினார், அதுவும் அறத்தின் வகையாதல் பற்றி. `தவமும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இவை இரண்டு திருமந்திரங்களானும், `யாக்கை முதலியவை நிலைத்துள்ளபொழுதே அறத்தைச் செய்துகொள்க` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே.

பொழிப்புரை :

மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.

குறிப்புரை :

வருவித்து உரைத்தன பலவும் இசையெச்சங்கள். ``வந்திலன்`` எனத் துணிவு பற்றி இறந்தகாலமாயிற்று. வழிமுதல் - பிற் காலம். ``அறியும்`` என்றது `அறிந்து நில்லுங்கள்` என்றபடி. அளவு - உண்மை. இதனால், மக்கள் அறிவுடையராயின், இருவகை அறங் களுள் யாதானும் தமக்கு இயன்றதொன்றனைச் செய்தல் வேண்டு மன்றிச் செய்யாதொழிதல் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது. ``அறத்தினூஉங் காக்கமும் இல்லை; அதனை - மறத்தலினூஉங் கில்லை கேடு`` (குறள், 32) என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 7

தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே.

பொழிப்புரை :

மக்கட்பிறப்பைப் பெற்றுடையீர், அறிவுடை மகனால் செய்யத்தக்கது தவம் ஒன்றே. தவநெறி சிவபிரானையே பரம் பொருளாக உணர்ந்து ஒழுகுதலாய் இருக்கும். பலர் இந்நெறி நில்லாது உடம்பையே தெய்வம்போலப் பேணி மூச்சு விடுகின்ற பிணங்களாய் நிற்கின்ற உலகாயத நெறியில் உள்ளனர். அவர்க்கு இறுதியில் யமன், `தெய்வம் இல்லை என்ற உங்கட்குக் காட்சியளிக்கின்ற தெய்வம் நான்தான்` என்று சொல்லுவான்போலக் கண்முன் வந்து நிற்பான்.

குறிப்புரை :

`தான் செய்வது தவமாம்` என மாறுக. `தவமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தவத்து அவ்வழி - தவத்திற்குரிய அவ்வழி. மான் - பெரியோன். சிவபெருமானை வட மொழி `மகாதேவன்` என்றும், தமிழ்மொழி `பெரியோன்` என்றும் கூறுதலை அறிந்துகொள்க. மதிக்கும் - மதிக்கும் இயல்புடையதாகும். `சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு` (கொன்றை வேந்தன்) என ஔவையாரும் கூறினார். ``மனிதர்கள்`` என்பது விளி. `மனிதர்காள்` என்பதே பாடம் எனலு மாம். ``உயிர்க்கின்ற`` என்பது முற்று. இழிவு தோன்ற அஃறிணை யாகக் கூறினார். இதனால், இருவகை அறங்களுள் துறவறமே உயர்ந்தது என்பது கூறப்பட்டது. `கூற்றங் குதித்தலும் அதனாலே கை கூடுவ தாகும்` (குறள் - 269) என்பதும் குறிப்பால் புலப்படுத்தப்பட்டது. ``தவம் செய்வார் தங்கருமம் செய்வார்மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு`` (குறள் - 266) என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 8

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

பொழிப்புரை :

அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.

குறிப்புரை :

``திளைக்கும் ... ... ... ... இளைக்கும்`` என்பதனை ``அறம்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தோணியாய்` என ஆக்கம் விரிக்க. `ஒருவன் செய்யும் நல்வினை தீவினைகள் அவன் கிளைஞர்க்கும் ஆகும்` என்பது வேத சிவாகமங்களின் துணிவு.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். -குறள், 115
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். -குறள், 166
என்றாற்போலும் திருக்குறள்களையும் காண்க. இதனால், இருவகை அறத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 9

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொழிப்புரை :

சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.

குறிப்புரை :

``பற்று`` இரண்டனுள் பின்னது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``அற்றம்`` என்புழி, `என்று` என்பதும், `ஒன்றும்` என்புழி, `ஆயின்` என்பதும், எஞ்சி நின்றன. அறநெறி வேட்கையரை ``அறநெறி`` என்றார். `அறநெறிக்கல்லது உரையான்` என முன்னே கூட்டி முடிக்க. ``அண்ணல்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``உரையான்`` என்றார். `ஒன்றாயினும், உங்களால் உற்று ஈந்ததுவே துணை` என மாறிக் கூட்டுக. `மற்றும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `கொள்ளுமாறு` என்பதன்பின் எச்ச உம்மையும் `அது` என்னும் பயனிலையும் எஞ்சி நின்றன. இதனால், `அறம் ஒன்றே உயிர் உய்யும் நெறி` என்பது வரையறுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

பொழிப்புரை :

எட்டிமரத்தில் பழுத்த பெரிய பழங்கள் ஒருவர்க்கும் பயன்படாது வீழ்ந்து அழிந்தாலொப்பனவாகிய, பொருந்திய நல்லறஞ் செய்யாத உலோபிகளது பொருள், வட்டி மிகப் பெறுதலாலே குவிந்து, மண்ணில் குழிபறித்துப் புதைக்கப் பட்டொழிவதேயாகும், பட்டிகளாகிய தீவினையாளர் அறத்தின் பயனை அறியார் ஆகலான்.

குறிப்புரை :

``பழுத்த`` என்றது, முதல்மேல் நின்ற சினைவினை. `வீழ்ந்தன` என்பதே பாடம் எனினும், பொருள் இதுவே என்க.
`மண் ணின் இடும்` என இயையும். முகத்தல், மண்ணைப் பறித்தல். `இடும்` என்பது செயப்பாட்டு வினையாய் நின்றமுற்று.
பட்டி - பட்டிமை; அஃதாவது வேண்டியவாறே ஒழுகுந்தன்மை. பொருள் முட்டுவந்துழி அது நீங்குதற்பொருட்டுத் கடன் கொள்பவர்பால் அம் முட்டுப்பாடே காரணமாக அவர் பொருளை `வட்டி` என்னும் பெயரால் தாம் வேண்டும் அளவு பறிப்பார், தம் பொருளைப் பிறர்க்கு ஈயாதவரினும் கொடியராதல்பற்றி அவரை, `பட்டிப் பதகர்` என்றார்.
``பாதகர்`` என்பது குறுகி நின்றது. கடன் கொடுப்பார் வட்டி பெறுதல் இயல்பாய் இருக்க அதனை மிகைபடக் கூறலாக எடுத்தோதிய அதனால், ``வட்டி`` என்று அளவிற்கு மேற்பட்டதனைக் குறித்தது. `ஆகலான்` என்பது சொல்லெச்சம்.
இதனால், அறஞ் செய்யாதவரது பொருள் போமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

பொழிப்புரை :

உலகில் பல்லுயிர்கட்கும் அவை வாழுங் காலம் நிலைபெறாது ஒழிதலையும், உலகம் நிலைபெறும் காலமாகிய ஊழிகளும் நில்லாது பல நீங்குதலையும், தாம் எண்ணிய எண்ணங் களும் கைகூடாது கனவுபோலக் கழிதலையும், பசி பிணி பகை முதலியவற்றால் பெருந்துன்பத்தை எய்துகின்ற தங்கள் உடம்பும் இறுதி நாள் நெருங்க, சாறுபிழியப்பட்ட கரும்பின் கோதுபோலாகி வலியழி தலையும் கண்டுவைத்தும் மக்களிற் பலர் அறத்தை நினைக்கின்றிலர்.

குறிப்புரை :

`இஃது அறியாமையின் வலி` என்பது குறிப்பெச்சம். ``ஒழிந்தன`` முதலிய அத்தொழில்மேல் நின்ற வினைப்பெயர். முற்றாக வைத்து, `அவற்றை` என்பது வருவித்து, அச்சுட்டு அத் தொழிலைக் குறித்ததாகவும் உரைப்பர்.
ஊழி பல நீங்குதல் உரை யளவையால் அறியப்பட்டது. ஏனைய காட்சியால் அறியப்பட்டன. வேண்டுமிடங்களில் எச்ச உம்மை விரிக்க.
இதனால், அறஞ் செய்யாதவரது அறியாமை மிகுதி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

பொழிப்புரை :

அறத்தை நினையாதவர் சிவபெருமானது திரு வடியை நினைக்கும் முறையையும் அறியாதவரேயாவர். அதனால் அவர் சிவலோகத்தின் அருகிலும் நெருங்குதல் இயலாது. (நரகமே புகுவர் என்பதாம்) தம்மோடொத்த அறிவிலிகள் பலர் கூறும் மயக்க உரைகளைக் கேட்டு, அவற்றின்வழி நின்று பாவங்களைச் செய்பவர் கட்கு அப்பாவமும் பொருளைக் கொடுத்தல் மீட்டல்களால் பலரிடத்து உண்டாகும் பகைகளுமே எஞ்சுவனவாம்.

குறிப்புரை :

அறம் என்பது, சிவபெருமான் தனது திருவுளத்தின் விருப்பத்தைக் கூறியதேயாகலான், அதனைச் செய்யாதே நிகழ்த்தும் பிற செயல்கள் அவனது வழிபாடாம் எனக் கருதுதல் அறியாமை யாதல்பற்றி, ``அறம் அறியார், அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார்`` என்றார். மறம் செய்வார் யாவராயினும் அவரைச் சிவபிரானது மறக்கருணை நரகிற் செலுத்தும் என்பதனை,
``இரப்பவர்க் கீய வைத்தார்; ஈபவர்க் கருளும் வைத்தார்;
கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்;
.... .... .... .... .... .... ஐயன் ஐயாறனாரே`` -தி.4 ப.38 பா.10
எனத் திருநாவுக்கரசரும் வலியுறுத்தோதினார். திருமூலரும், திரு நாவுக்கரசரும் முதலிய சிவநெறிப் பேரருளாசிரியர்கள் அறத்தினை இத்துணை வலியுறுத்தி அருளிச்செய்திருக்கவும், `புறநெறியின்கண் உள்ளது போலச் சிவநெறியில் அறம் அத்துணை வலியுறுத்தப் படவில்லை` என்பார் உளராயின், அவரதுநிலை இரங்கத்தக்கதாம் மறம் (பாவம்) மன்னுதல் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டது.
இதனால், `அறநெறி சிவநெறிக்கு இன்றியமையா உறுப்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே.

பொழிப்புரை :

பலவகை நோய்களும், இடைஇறப்பும் (அவ மிருத்தும்) போல்வனவாகிய இம்மைத் துன்பங்கள் பலவும் அறம் செய்யாதவரிடத்தே செல்வன; அறஞ்செய்வார் இருக்கும் திசையை யும் அவை நோக்கா.

குறிப்புரை :

இரண்டாம் அடியை ஈற்றடியின் முன்னே வைத்து உரைக்க. உரும் இடி - பேரிடி. நாகம் - பாம்பு. உரோணி - ரோகிணி; நோயுடையாள்; அஃது ஆகுபெயராய் அவளால் வரும் நோயைக் குறித்தது. இனி, `உரோணியால் வரும்கழலை` என்றலுமாம். கழலை - கட்டி. பக்கல் - திசை. இருமல் முதலியன இன்னவாதல் சிவ பெருமானது சீற்றத்தாலும், அருளாலுமாம்.
இதனால், அறம் செய்யாதவர்க்கும், செய்பவர்க்கும் இம்மை யில் உளவாகும் நலந் தீங்குகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.

பொழிப்புரை :

வாழ்நாள் வாளா குறையப்பெற்ற மக்களே, நீவிர் யாவராலும் போற்றப்படுகின்ற சிவபெருமானைத் துதிக்கவும் இல்லை; இரப்பார்க்கு ஈதலும் இல்லை; குடத்தால் நீர்முகந்து ஊற்றிச் சோலைகளை வளர்க்கவும் இல்லை; ஆகவே, இறந்தபின் நரகத்தில் நீங்காதிருக்கப் போகின்றீர்களோ?

குறிப்புரை :

இவற்றுள் ஒன்றே செய்யினும் அறமாம் என்னும் கருத்தால் இவ்வாறு கூறினார். ``ஈதலும் ஈயார்`` என்பது, ``உண்ணலும் உண்ணேன்`` (கலி - பாலை 22) என்பதுபோல நின்றது. `தானே மரங்களை வைத்தா யினும், முன்பு உள்ள மரங்கட்கு நீருற்றியாயினும் வளர்த்தலே அறம்` என்றற்கு, `கரகத்தால் நீரட்டி` என்றார்.
இக்காலத்தார் இவற்றைச் செய்யாதொழியினும் வளர்ந்துள்ள மரங்களை வெட்டா மலேனும் இருப்பார்களா என்பது தெரியவில்லை.
``நரகத்தில் நிற்றிரோ`` என்றது ``கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` என்னும் (தி.4) அப்பர் திருமொழியை நன்கு வலியுறுத்துவதாகும். `ஏத்தார்` என்பனபோலப் படர்க்கையாக ஓதுவன பாடம் அல்ல.
இதனால், அறம் செய்யாதார் நரகினை எய்துதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.

பொழிப்புரை :

உலகில் நல்வழியில் நடத்தல் இன்றி மேலுலகம் கிடையாதொழியும் தீய வழியிலே நடக்கின்றவரே பலர். அவரொழிய, ஞானம் நிகழம் செயல்கள், மிகப் பெற்ற சிலரே, கேடு நிகழ்தற்கு ஏதுவான பாவத்தை நீக்கி நரகத்தையும் கடந்தவராவர்.

குறிப்புரை :

இத்திருமந்திரத்துள் பாடங்கள் பல்வேறு வகை யாய்க் காணப்படுகின்றன. அவை, `கடந்தார் - நடந்தார், கரும் பாரும் - கருப்பாரும், மழி - வழி, மாசற ஓட்டிட்டு ஒழி நடப்பார் வினை ஓங்கி நின்றாரே - மாசற ஓட்டிட வழிநடக்கும் மளவீழ்ந்தொழிந்தாரே` என்பன.
கழி` என்பது, `கழிய` எனப் பொருள் தந்தது. கரும்பார் - இருளுலகம். மழி - மழித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஒளி` என்பது, எதுகை நோக்கி `ஒழி` எனத் திரிந்து நின்றது. ஒளி - ஞானம்.
இதனால், ஞான நெறியில் நிற்பார்க்கு அறம் தானே உளதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் நலம்பெறுதலும், தீங்குறுதலும் இறைவன் செய்யும் நடுவு நிலைமையே (நீதியே) அதனால், அவை அறம் அல்லாதவற்றைச் செய்து அவற்றானே இன்பம் அடைய விரும் புதலை அவன் ஒருபோதும் உடன்படான்.
ஆகையால், மாந்தரீர், இன்பம் கெடுதற்கு ஏதுவாகிய பாவத்தைச் செய்தல் விலங்கின் செயலேயாகி விடும்; அதனை அறிந்து நீவிர் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலையும், தாழ்ந்தோர்க்கு ஈதலையும் செய்ய நினையுங்கள்.

குறிப்புரை :

கெடுவதும் ஆவதும் என்னும் எழுவாய்கள் `நடு` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டன.
`நடு` என்னும் இடப்பெயர் முன்னர் அதன்கண் நிற்றலைக் குறித்துப் பின்நின்று செய்தலைக் குறித்தது. ``செய்து`` என்றது, ``நாட`` என்பதனோடு முடிந்தது. ``நாடவும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``அது பசுவாம்`` என மாற்றுக.
பசு, ஆகுபெயர்.
இதனால், அறம் செய்பவரையே இறைவன் விரும்புதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்கு, `இன்பம், துன்பம்` என்ற இரண்டை வகுத்து வைத்தது, அவை முற்பிறப்பில் செய்தவினை அறமும், மறமும் என இரண்டாய் இருத்தல் பற்றியேயாம். அதனால் முற்பிறப்பில் அறம் செய்தவர்கள் இப்பிறப்பில் இன்பம் நுகர்தலைக் கண்டுவைத்தும் இரப்பவர்க்கு ஈதலைச் செய்யாத அறிவிலிகள், உள்ளத்தில் அன்பு என்னும் பண்பு இல்லாதவரே யாவர். அவர் அறம் என்பதையும் அறியார்.

குறிப்புரை :

இதனால், இப்பிறப்பில் விளையும் நலந் தீங்குகட்குக் காரணம் அற மறங்கள் என்பதும், அறத்திற்குக் காரணம் அன்பு என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

பொழிப்புரை :

அறிவுடையீர், சிலவிடத்துச் சிலராகவும் சில விடத்துப் பலராகவும் வாழ்வாரது பெருவாழ்வாகிய செல்வத்தைக் கண்டு, அதனானே அவர் ஈவர் என்று கருதி அற்பராயிருப்பாரைப் புகழ்ந்து, பயன் கிடையாமையால் பின் மெலிவடைதலைச் செய்யாமல், நுமக்குப் புக்கிலாம் வீடு கருதி இறைவனைத் துதியுங்கள். அதுவே வில் வல்லோன் எய்த அம்புக் குறிபோலத் தப்பாது பயன் தருவதாகும்.

குறிப்புரை :

`செல்வங் கருதி` என்பதனை, ``வாழ்வெனும்`` என்பதற்குப் பின்னர்க் கூட்டியுரைக்க. `செல்வத்துப் பயன் ஈதலே` என்பதை அறியாது, ஈட்டலும், நுகர்தலுமே எனக் கருதுவாரை, ``புல்லறிவாளர்`` என்றார். `சிலரும் பலரும் ஆகியோரது வாழ்வு` என்க. `உயிர்க்கு உடம்பு துச்சில்` எனவும், `வீடுபேறே புக்கில்` எனவும் திருவள்ளுவர் (குறள், 340) கூறுமாறு காண்க. இலக்கு - இலக்காய பொருள். ``விற்குறி`` என்பதில், வில் ஆகுபெயர்.
இரத்தலும் ஈதலே போலும், கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. -குறள், 1054
என்பராகலின், கரப்பார் மாட்டுச் சென்று இரத்தலே வறியார்க்கு இரப்பு என்னும் இழிதொழிலாதல் பெறப்பட்டது.
இதனானே,
இரப்பன் இரப்பாரை யெல்லாம், இரப்பிற்
கரப்பார் இரவன்மி னென்று. -குறள், 1067
எனவும் கூறுப.
அதனால், `கரப்பார்பால் சென்று இரவாமையே வறியார்க்கு ஓர் அறம்` என்பார் ``புல்லறிவாளரைப் போற்றிப் புலராமல்`` என்றும், `பொருளிலார்க்கு ஈதலாகிய அறம் கூடா தாயினும், இறைவனை ஏத்துதலைவிட வேண்டாவன்றோ` என்பார், ``இறைவனை ஏத்துமின்`` என்றும் கூறினார்.
இதனால், வறியார்க்கு ஆகும் அறம் கூறப்பட்டது. ``தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்`` (தி.7 ப.34 பா.1) என்னும் சுந்தரர் திருப் பதிகம் இத்திருமந்திரத்தொடு வைத்து நோக்கற்பாற்று.

பண் :

பாடல் எண் : 10

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

பொழிப்புரை :

பொருள் உடையவரேயாயினும், இலரே யாயினும் அன்பால் இளகுகின்ற மனம் உடையவரே சிவபெருமானது திருவடிகளை அடையும் நெறியைப் பெறுவர். அங்ஙனம் அந் நெறியைப் பெற்று அவனது திருவடிகளே எல்லா உயிர்கட்கும் பற்றுக் கோடு என ஒருதலையாக உணர்பவரே அவன் உலகத்தை அடைந்து வாழ்வர்.
அவன் திருவடியல்லாத பிற பொருள்களில் ஆசை நிறைந் தவர், தாம் இறக்குங்காறும் தமக்கு உய்யப்போவதொரு நெறியும் இன்றி, அறிவின்மை காரணமாக, தம்பால் வந்து இரப்பவரிடத்தும், `இரப்பவர்க்கு இல்லை என்னாது ஈக` என்று அறிவுறுப்பாரிடத்தும் கொள்கின்ற சினமாகிய தீயில் விழுந்து அழிவர்.

குறிப்புரை :

காண்டல் - பொதுவகையான் உணர்தல். துணை - அளவு. உம்மை முற்றும்மை. ஒன்று - ஒருநெறி. மெலிந்த சினம் - அறிவு குறைந்தமையால் விளைந்த சினம். `வீழ்ந்தார்` என்பது குறிப்பு உருவகம்.
இதனால் அறத்திற்கு முதலாவது அன்பு என்பதும், அவ்வன்பு தானே இறைவனை அடைதற்கும் வழி` என்பதும் கூறப்பட்டன. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப் பட்டது.
இவ்வதிகாரத்தின் இறுதி நான்கு திருமந்திரங்கள் சில பதிப்பு களில் முறைமாறிக் கிடக்கின்றன.

பண் :

பாடல் எண் : 1

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``இரண்டு`` என்றதற்கு முன், `இரண்டும்` என்னும், செவ்வெண் தொகை தொகுத்தலாயிற்று. `அன்பும் சிவமும்` என்பதும் பாடம். இரண்டு - இருவேறு பொருள்கள். ``சிவம்`` என்றது இங்கு, விடாத ஆகுபெயராய் அவனது பேரின்பத்தின்மேல் நின்றது. அறிவு - பொருட்பெற்றியை ஓர்ந்துணரும் அறிவு. ``ஆரும்`` இரண்டனுள் முன்னது உயர்ந்தோரையும், பின்னது தாழ்ந்தோரையும் குறித்துநின்ற அறிதலின் அருமையையும், அமர்தலின் எளிமை யையும் குறித்து நின்றன. `அறிந்தபின் ஆரும் அமர்ந்திருந்தார்` என மாற்றுக. ``அறிந்தபின்`` என்றது, `அறியின்` என்றவாறு. அமர்ந் திருத்தல் - அலமரல் இன்றி நிலைபெற்றிருத்தல். துணிவினால் எதிர் காலம் இறந்தகாலம் ஆயிற்று. உயிர்களிடத்துக் கொள்ளும் அன்பு பின் இறைவனிடத்து அன்பு செய்யும் தன்மையையும், இறைவனிடத்துச் செய்யும் அன்பு அவனிடத்தே அழுந்தி இன்புற்றிருக்கும் நிலையை யும் தரும் என்றற்கு, பொதுப்பட, ``அன்பு`` என்று அருளிச் செய்தார். இவ்விருவகை அன்பும் நிரம்பிய காலத்து அவை தம் பயனை இடை யீடின்றி விரையத்தருதலால், அவற்றையே இறைவனாக வலியுறுத்து ஓதினார். மாணிக்கவாசகரும் ``அன்பினில் விளைந்த ஆரமுதே`` (தி.8 பிடித்த பத்து, 3) என அன்பையும், சிவனையும் ஓரிடத்து வேற்றுமைப்பட ஓதினாராயினும், `இன்பமே என்னுடை அன்பே`` (தி.8 கோயில் பதிகம், 1) எனப் பிறிதோரிடத்தில் ஒன்றாகவே ஓதினமை காண்க. ``இன்பில் இனி தென்றல் இன்றுண்டேல் இன்றுண் டாம் - அன்பு நிலையே அது`` 3 என்றார் திருவருட்பயனிலும் (பா.80).
இதனால் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே.

பொழிப்புரை :

ஏனை அன்பினும் சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பின் பெருமையை நான் அறிந்தவாற்றால், என் உள்ளத்தில் சிறந்திருப்பது அந்த அன்பே.

குறிப்புரை :

கடந்து - வென்று. ``துன்னிக்கிடந்த`` என்பதில் `தலையில்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. தான் அசைநிலை. ஏகாரம் பிரிநிலை. அதனை, ``பொடியாடிக்கு`` என்றதனோடு இயைக்க. தோலாடையால் அவனது பற்றற்றதன்மையையும், பிறைச் சூட்டால் அவனது அருளையும், பொடியாடுதலால் அவனது முதன்மையையும் உடம்பொடு புணர்த்தலாகக் கூறி, `அவனே அன்பு செய்யப்படுதற்கு உரியவன்` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 3

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்பொன் மணியினை எய்தவொண் ணாதே.

பொழிப்புரை :

மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றல், வேனிலில் ஐந்தீ நாப்பண் நிற்றல் முதலிய துணைச்செயல்களைச் செய்து உடம்பை ஒறுத்தாராயினும், முதற்செயலாகிய அன்பு செய்தல் இல்லாதார் என் தலைவனாகிய சிவபெருமானை அடைதல் இயலாது.

குறிப்புரை :

``பொன்மணி`` என்னும் உம்மைத்தொகை உவமை யாகுபெயராயிற்று. `என்போல்` எனப் பாடம் ஓதி அதனை ``எய்த`` என்பதனோடு இயைப்பாரும், முன்னே மூன்றாம் அடியோடு இயைப் பாரும் உளர். அவர் உரையிலெல்லாம், ``மணி`` என்பது ஒன்றே சிவபெருமானை வரைந்து சுட்டாமை அறிக.
இதனால், அன்பொடு கூடாத தவம் பயன்படாது என்பது கூறப்பட்டது. படவே, கடவுட் கொள்கை இல்லாத சமயிகள் கூறும் தவம் தவமாகாமையும் பெறப்படும்.

பண் :

பாடல் எண் : 4

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

பொழிப்புரை :

சிவபெருமானிடத்துப் பேரன்பு உள்ளவரே அவனை முற்றப் பெறுவர். சிறிது அன்பு உடையவர் அவனது அருளைப் பெறுவர். அன்பே இல்லாது குடும்ப பாரத்தை உடைய வராய் இருப்பவர் பிறவிக் கடலையே காண்பவராய், கொடுமை நிறைந்த வழியிற்சென்று, கொங்குநாட்டை அடைந்தவர்போல் ஆவர்.

குறிப்புரை :

கொங்குநாட்டை இடர்மிகுந்த நாடு என்பர். ``கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பார்இலை`` (தி.7 ப.92 பா.3) என்ற நம்பியாரூரர் வாக்கைக் காண்க.
இதனால் அன்புடையார் பெறும் பயனும், அன்பிலாதார் எய்தும் துன்பமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

என்னன் புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன் புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன் புருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்னன் பெனக்கே தலைநின்ற வாறே.

பொழிப்புரை :

உலகீர், நீவிரும் எனது அன்பு போன்ற அன்பைப் பெருக்கிச் சிவபெருமானைத் துதியுங்கள். நீவிர் முன்னே அதனைச் செய்யுங்கள்; அவன் பின்னே உங்கட்கு அவ்வன்பு பெருகுமாறு வெளிப்பட்டுத் தனது அருள் எனக்குக் கைவந்தது போல உங்கட்கும் கைவரச் செய்வான்.

குறிப்புரை :

`என் அன்புபோல உருக்கி` என்க. ``தன் அன்பு`` என்புழி ``அன்பு`` என்றது அருளை. `தலை நின்றவாறு` என்பதன்பின், `செய்வன்` என்பது சொல்லெச்சமாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 6

தானொரு காலம் சயம்புவென் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
யானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

பொழிப்புரை :

வாய்ப்புடைய வழியில் தேன் ஒழுகுகின்ற கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் யான் என்றும் ஒரு பெற்றியனாகும்படி எனது அன்பில் நிலை பெற்றுள்ளான். அவன் பிறர் தன்னை ஒருமுறை ஒருபெயரால் துதிப்பினும் அத்துதி பழுதுபடாத வாறு என்றேனும் ஒருநாள் வான்வழித் துணையாய் நின்றருளுவான்.

குறிப்புரை :

சயம்பு - சுயம்பு; தானே தோன்றியவன். வான் வழி - உயர்நெறி. சிவலோக நெறியுமாம். சடையிற் புனைதலால் தேன் ஏற்கும் வழியால் ஒழுகுதல் வேண்டிற்று. `தேன், உமாதேவி` என்பாரும் உளர். `ஒருவண்ணம் ஆக` என ஆக்கம் வருவிக்க. `தானொருவண்ணம்` என்னும் பாடமே பதிப்புக்களில் காணப் படுகின்றது.
இவ்விரண்டு திருமந்திரங்களானும் சிவனிடத்துச் செய்யும் அன்பின் சிறப்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

முன்படைத் தின்பம் படைத்த முதலிடை
அன்படைத் தெம்பெரு மானை அறிகிலார்
வன்படைத் திந்த அகலிடம் வாழ்வினில்
அன்படைத் தான்தன் அகலிடத் தானே.

பொழிப்புரை :

தனது உலகத்திலேயே விளங்கி நிற்பவனாகிய சிவபெருமான், துன்பத்தையே மிக உடையதாகிய இவ்வுலக வாழ்க்கையில், அத்துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் அடைதற் பொருட்டு `அன்பு` என்னும் பண்பினையும் படைத்து வைத்துள்ளான். அவ்வாறு அன்பை முன்னதாகவும், இன்பத்தை அதன் பின்னதாகவும் வைத்துள்ள அம்முதல்வனது அருளை அறிந்து, அவனிடத்தில் உலகர் அன்புசெய்கின்றாரில்லை.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `அம்முதலிடை` எனச் சுட்டு வருவிக்க. ``எம்பெருமானை`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. வன்பு - துன்பம், `வன்பு அடைத்த` (தி.7 ப.92 பா. 3) என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. அடைத்தல் - நிறைதல்; நிறைத்தல் உலகத்தைத் திருஞானசம்பந்தரும், ``துயரிலங்கும் உலகம்`` என்றார். (தி.1 ப.1 பா.8)

பண் :

பாடல் எண் : 8

கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவஎன் றேத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

பொழிப்புரை :

கருத்தில் ஒளிரும் பொன்னொளியாகிய சிவ பெருமானை உளத்திற்கொண்டும், புறத்தில் வைத்து வணங்கியும், `இறைவனே` என்று துதித்தும், அன்பினால் அவனை அவனது அரிய அருளைத் தருமாறு வேண்டினால், தேவர் தலைவனாகிய அவன் அங்ஙனம் வேண்டுவார்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பான்.

குறிப்புரை :

`கருத்துறு சோதி` என இயையும். அருத்தி - அன்பு. `அருத்தியுள் நின்று` என ஒரு சொல் வருவிக்க. விருத்தி - வாழ்வு. ``விண்ணவர் கோன்`` என்றது, விண்ணவர் பலரும் தாம் வேண்டிய வாழ்வை அவன்பால் பெற்று நின்றமையைக் குறித்த குறிப்பு என்க.
இவை இரண்டு திருமந்திரங்களாலும் சிவபெருமானிடத்து அன்பு செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நித்தலுந் துஞ்சும் பிறப்பையுஞ் செய்தவன்
வைத்த பரிசறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரான்என்று
நச்சியே அண்ணலை நாடகி லாரே.

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் உறக்கமும், விழிப்பும் நாள் தோறும் நிகழுமாறு செய்தவன் அங்ஙனம் செய்த குறிப்பை அறியாதார் நிற்க, அறிந்தவர்தாமும் உலக ஆசையையே உள்ளத்தில் கொள்கின்றனர். அத்தலைவனை விரும்பி, அவனையே தமக்குப் பெருமானாக நினைக்கின்றிலர்.

குறிப்புரை :

`அவர்தம் அறிவு என்னோ` என்பது குறிப்பெச்சம். துஞ்சு, முதனிலைத் தொழிற்பெயர். `உறக்கமும் விழிப்பும் நாள் தோறும் நிகழ வைத்தது, இறப்பும், பிறப்பும் மாறி மாறி விரையவரும் என்பதனை உணர்தற்பொருட்டு` என்பது கருத்து. அதுபற்றியே `உறக்கம், விழிப்பு` என்பவற்றை அவையேயாகக் கூறினார். திருவள்ளுவரும்,
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என அறிவுறுத்தல் காண்க. இங்ஙனம் கூறியவாற்றால், `சிவபெரு மானிடத்து அன்பு செய்யாதார் அடைவது பிறப்பும், இறப்புமாகிய துன்பமே` என்பது கருத்தாதல் அறிக.
இதனால், சிவபெருமானிடத்து அன்பு செய்யாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அன்பினுள் ளான்புறத் தானுட லாயுளான்
முன்பின்உள் ளான்முனி வர்க்கும் பிரானவன்
அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள்
அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே.

பொழிப்புரை :

உலகத்தோற்றத்திற்கு முன்னும், உள்ளவனாயும் ஞானிகட்கும் முதற் குருவாயும் உள்ள இறைவன் உயிர்களின் அகத்தே அன்புருவாயும், புறத்தே பல குறிகளாயும் இருக்கின்றான். முடிவாக அவன் அன்பினுள்ளே விளங்கிப் பிறவாற்றால் அறியப் படாதவன் ஆவன். ஆதலால், அன்பில் நிற்பவர்க்கே அவன் உறு துணையாவான்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``புறத்தான்`` என்பதில் ஆன், உருபு மயக்கமாக வந்த மூன்றன் உருபு. ``புறத்தான்`` எனவே, `அகத்தான்` என்பது கொள்ளப்பட்டது. ``உடல்`` என்றது, `மூர்த்தி` என்றவாறு.
இதனால், `சிவபெருமானை அடைதற்கு எவ்வாற்றானும் அன்பே வாயில்` என்பது முடித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே.

பொழிப்புரை :

மக்கள் அன்பைப் போற்றாது இகழ்ந்து நடத் தலையும், இகழாது போற்றிப் பெற்று ஒழுகுதலையும் சிவபெருமான் நன்கறிவன் ஆதலின், முதற்படியாகிய அன்பை முதலிற் பெற்றுப் பின்பு அதன் முடிநிலையாகிய அருளை மிகச் செய்ய வல்லவர்க்கே அவன் விரும்பி அருள்புரிவன்; அதற்குக் காரணம், அன்பை உவந்து அதன்மேல் அவன் கொண்டுள்ள பித்தேயாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. `இகழ்தலும், பெறுதலும் அன்பை` என்பது பின்வரும் குறிப்பால் விளங்கிற்று. கொழுந்து - இளையநிலை. ``அருள் என்னும் அன்பீன் குழவி` என்ற திருக்குறளிலும், `அன்பின் முதிர்ந்த நிலையே அருள்` என்பது கூறப்பட்டது. `அன்பு காரணம்பற்றிப் பிறப்பது` எனவும், `அருள், காரணம் பற்றாது பிறப்பது` எனவும் உணர்க. `வல் லார்க்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `அன்பு செய்யும்` என்பதை, `அன்பின்மேற் செய்யும்` என ஏழாவதாக விரிக்க. பெருவிருப்பை, `பித்து` என்றார். ``அது`` என்பது ஆகுபெயராய், `அதன் காரணம்` எனப் பொருள் தந்தது. `அது மகிழ்ந்தன்பு ... ... ஆம்` எனக் கூட்டுக.
இதனால் இறைவன் அன்பு செய்வார்க்கே அருள் செய்தலும், செய்யாதார்க்கு அருள் செய்யாமையுமாகிய இரண்டும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

இன்பம் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.

பொழிப்புரை :

முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.

குறிப்புரை :

`பிறவிக்குச் செய்தவன்` என இயையும். `செய்த` என்பதன். ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆதிப் பிரான் முன்பு வைத்த இப்பிறவி முடிவு அதுதானே` எனக் கூட்டுக. துன்பப் பிறவித் தொழில் பலவாவன ``அறமும், மறமும்` என வகையால் இரண்டாய், விரியால் எண்ணிறந்தனவாய் உள்ள வினைகளை அறிந்து அவற்றை ஏற்ற காலத்தில் ஏற்குமாற்றால் கூட்டுதல். எனவே, `பிறப்பிற்குக் காரணங்கள் பலவாயினும், வீட்டிற்குக் காரணம் அன்பு ஒன்றே` என்றதாயிற்று.
இதனால், `சிவபெருமான் அன்புடையாரிடத்தே கலந்து நின்று பிறவித் துன்பத்தை நீக்குவன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.

பொழிப்புரை :

அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடையவளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.

குறிப்புரை :

``ஒளி`` என்றது உருவகம். அஞ்ஞான இருளைப் போக்குதல் பற்றி இவ்வாறு உருவகித்தார். அவ்வொளி ஒன்றே யாயினும், நிலை வேறுபாட்டால் பலவாகக் கூறப்பட்டது. அந் நிலைகளை,
நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்
ஆரேனும் காணா அரன். -திருக்களிற்றுப்படியார் - 15
என்பதனானும், பிறவாற்றானும் அறிக. அருட்சத்தியே சிவத்தை அடைவித்தலின், திரோதானசத்தி, தானே தொழில் செய்வதாகக் கூறினார். அருட்சத்தி அன்பின் வழியே சிவத்தை அடைவிக்கும் என்பதை ``அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். அதனானே, `வீடுபெற வேண்டில்; உள்ளம் அன்புடையது ஆமாற்றை நாடுங்கள்` என்றார். ``நண்பு`` என்றது, அன்பை. ``நண்புறு சிந்தையை`` என்றாராயினும், `சிந்தை நண்புறுமாற்றை` என்பது கருத்து என்க. ``நீர்`` என்றது சிவனைப் பெற விரும்புவாரை `ஐந்தோடு` என உருபு விரிக்க.
இதனால், பெத்தர்களுக்கு விளங்காது நிற்கின்ற சிவபெரு மான், முத்தர்கட்கு `அன்பினில் விளையும் ஆரமுதாய்` (தி.8 பிடித்த பத்து, 3) விளங்கி நின்றருளுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்
குணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பமதுஇது வாமே.

பொழிப்புரை :

பெண்டிரோடு கூடும் கூட்டத்தில் ஆடவர் அப் பெண்டிர்மேல் வைக்கின்ற அன்பிலே அறிவழிந்து நிற்றல்போல, சிவபெருமானிடத்துச் செய்கின்ற அன்பிலே தம் அறிவழிந்து அந்நிலையில் நிற்க வல்லார்க்கு அதனால் விளைகின்ற பேரின்பம் அவரைப் பின்னும் அந்நிலையினின்றும் பெயராத வகையிற் பெருகிவிளங்கி, விழுங்கி இவ்வன்பே தானாகி நிற்கும்.

குறிப்புரை :

``ஆயிழை`` என்றது இனங்குறித்து நின்றது. பொருளிற் கூறப்பட்ட ஒடுங்குதலை உவமைக்குங் கூட்டுக. ஆயிழை மேல் அன்பை ஒடுங்குதல் மாத்திரைக்கே உவமைபோலக் கூறினா ராயினும், ஏனையவற்றிற்கும் ஆதலை அறிந்து கொள்க. இல்லாது - இல் லாதபடி. பெருகுதலை, `உலாவுதல்` என்றார். குலாவுதல் - விளங் குதல். ``இன்பமது`` என்றதில் அது, பகுதிப்பொருள் விகுதி. இஃது அதீதமாகிய முடிந்த அனுபவ நிலையைக் கூறியது. இவ்வாறே இந்நிலையை,
``சொற்பால் அமுதிவள் யான்சுவை என்னத்
துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று
நான் இவளாம் பகுதிப்
பொற்பார் அறிவார்`` (தி.8 திருக்கோவையார், 8)
``உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்
பலத்தொருத்தன்`` (தி.8 திருக்கோவையார், 9)
எனவும், மாணிக்கவாசகரும் குறித்தருளுதல் காண்க. `இவ்வதீத நிலையும் அன்பானன்றி ஆகாது` என்றபடி. மெய்கண்ட தேவரும் இதனை, ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் - சூ. 11) என ஓதியருளினார். ``அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே`` (தி.10 பா.268) என்றது இதனையே என்க.
இதனால், `அன்புடையார்க்கே சிவபெருமான் தன்னை முழுவதும் கொடுப்பன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.

பொழிப்புரை :

அடியவர்கள் தங்களுக்கு உளதாகிய அன்பினாலே சிவபெருமானை நிலத்தில் வீழ்ந்து பணிந்தும், கை கூப்பிக் கும்பிட்டும் பல்லாற்றானும் வழிபட அப்பெருமான் அவர்க்கு முத்தியைக் கொடுத்து, அவரது செயல் யாதொன்றிற்கும் தானே முன்னிற்பான். இவ்வாறு தன்னையே சார்ந்து நிற்கும் அவரோடே தானும் அவரையே சார்ந்து நிற்கின்ற சிவபெருமானது தன்மையைச் சித்தர்கள் ஆராய்ந்தறிகின்றார்களில்லை.

குறிப்புரை :

`அறிந்தாராயின், அவர் அவன்பால் அன்பையே வேண்டுதலல்லது, அணிமாதி சித்துக்களை வேண்டார்` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. பயன் வேண்டுவாருட் சிறந்தவர் சித்தராகலின், அவரையே எடுத்து ஓதினார். ஓதவே, பிறரும் அத்தன்மையராதல், தானே பெறப்பட்டது. அடியவரது செயல்யாதாயினும் அதற்குச் சிவன்தானே முன்னிற்றலை,
``சிவனும்இவன் செய்தியெல்லாம் என்செய்தி என்றும்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவமகல உடனாகி நின்று கொள்வன்;
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே``
-சிவஞானசித்தி - சூ. 10.1
என்பதனான் அறிக. சிவபெருமான் தன்னையே சார்ந்து நின்றாரையே தானும் சார்ந்து நிற்றலை, `அற்றவர்க்கு அற்ற சிவன்` (தி.3 ப.120 பா.2) என்று அருளியவாற்றான் அறிக.
``சித்தர்கள் என்றும் தெரிந்தறிவார் இல்லை`` என்றதனால், பத்திமையாலே தொழாதார்க்குச் சிவபெருமான் முத்தி கொடுத்தலும், முன்னிற்றலும் செய்யாது, பிறப்பைக் கொடுத்து அவர் வினைக்கு அவரையே முதல்வராகச் செய்தல் பெறப்பட்டது.
இதனால், இருதிறத்தாரையும் சிவன் அறிந்து அவரவர்க்கு ஏற்றன செய்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.

பொழிப்புரை :

கொன்றை மாலையாகிய திருவடையாள மாலை யால் பிரணவம் முதலிய மந்திரப்பொருள் தானேயாகியும், யானையை உரித்தமையால் ஆணவமலத்தைப் போக்குபவன் தானேயாகியும் நிற்றலால், அன்பால் நினைவாரது நெஞ்சத் தாமரையின்கண் விளங்கு பவனும் தானேயாகிய சிவபெருமானது திருவடிகளை நானே கண்டேன்; ஏனெனில், அவை எனது அன்பிடத்தே உள்ளனவாதலால்.

குறிப்புரை :

கொன்றை மாலையும், கரியுரியும் சில குறிப்படை யாளங்களாய் உள்ளன. அவற்றையும், மலர் உறைதலையும் வைத்த வைப்புமுறை அறிந்துகொள்க.
கழலது என்ற ஒருமை, இனம்பற்றி வந்தது. ``அன்பினுள்`` என்றதன்பின், `ஆதலால்` என்பது சொல்லெச் சமாய் நின்றது.
இதனால், `மந்திரங்களின் உண்மையறிந்து ஓதி வழிபாடு செய்து அதனால் மலம் நீங்கப்பெற்று, அதன்பயனாக அன்பு நிகழப் பெற்றாரிடத்தே சிவன் உறைவன்` என்பது குறிப்பாற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்
றும்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின் றிரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே.

பொழிப்புரை :

அனைத்துயிர்களாலும் விரும்பத்தக்கவனும், மேலிடத்துத் தேவர் பலராலும் `எல்லாமாய் நிற்கும் கடவுள்` என்று சொல்லிப் போற்றப்படுபவனும், இன்ப அநுபவப் பொருளாய் உள்ளவனும், அப்பொருளில் நின்று எழுகின்ற இன்பமானவனும், அன்பிலே விளங்குபவனும் ஆகிய சிவபெருமானை அன்புடையவ ரல்லது பிறர் அறியமாட்டார்.

குறிப்புரை :

``நம்பனை`` என்பது முதலியவற்றால், `அன்பு செய்யப்படுபவன் சிவபெருமானே யாதலைத் தெரித்துணர்த்தி, அவ் வாறாகவும் அதனைப் பலர் செய்கின்றிலர்` என்று இரங்கியவாறு.
``இன்பம்`` இரண்டும் ஆகுபெயர்கள். ``இரதிக்கும்`` என்றது `ரதிக்கும்` என்னும் ஆரியச்சொல்லின் திரிபு. ``அன்பன்`` என்றதனால், அறியமாட்டாதவர் அன்பில்லாதவர் என்பது போந்தது.
இதனால், அன்பில்லாதவர்க்குச் சிவன் அறியப்படானாதல் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலார்நந்தி
யன்பில் அவனை அறியகி லாரே.

பொழிப்புரை :

இனி எதிர்ப்படுதற்குரிய பிறப்பு இறப்புக்கள் இல்லாதவரே, `சிவபெருமானிடத்து அன்பு செய்து அவனை அடைவோம்` என்னும் துணிவினராவர். (அவர் இப்பொழுது எடுத்துள்ள பிறப்பும், அது நீங்குதலாகிய இறப்பும் அவருக்கு இன்பத்திற்கு ஏதுவாவனவேயாம்.) அத்தகைய பிறப்பு இறப்புக்களை இல்லாமையால் மேலும் பிறந்து இறந்து உழலும் வினையுடையோர் அவனிடத்து அன்பு செய்து அவனை அறியும் கருத்திலராவர்.

குறிப்புரை :

முன்பு, இடமுன் ``அறியாதார்`` என்றது, `இல்லாதவர்` என்றபடி. ``நந்தி அன்பு`` என்றது `நந்தி மேல் செலுத்தும் அன்பு` என்றதாம்.
இதனால், அன்பினால் சிவனை அடைதல் பக்குவர்க்கே கூடுவதும், ஏனையோர்க்கு அது கூடாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திட
ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே.

பொழிப்புரை :

இரவும், பகலும் இடைவிடாது தன்னையே தம் அன்பிற்கு உரியவனாகக் கொண்டு, அன்பு செய்கின்ற அன்பர்களைச் சிவபெருமான் நன்கறிவன். ஆதலால், ஞானத்தைப் பெற்று அன்பினால் வசமிழந்து நின்றமையால், அவன் எங்களிடையே வந்து எங்களைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

குறிப்புரை :

`இருந்திடில்` என்பது பாடம் அன்று. ``எம்`` என்றது, தம்மோடு ஒத்தாரை. ஈட்டுதல், `ஈண்டுதல்` என்னும் தன்வினைச் சொல் திரிந்த பிறவினைச்சொல்; ஈண்டுதல் - சேர்தல்; ஈட்டுதல் - சேர்த்தல்.
இதனால், அன்பும், அதன் பயனும் கைவரப்பெற்ற தம் அநுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே.

பொழிப்புரை :

மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெரு மானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெரு மானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.

குறிப்புரை :

`அதனால் அவன் என்னைக் கைவிடாமை திண்ணம்` என்பது குறிப்பெச்சம். ``ஆருயிரால்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `மட்டுப்போல` என உவம உருபு விரித்து, `அறிந்து` என்பது வருவிக்க. அன்பே பெருமானுக்கு மஞ்சனமாதலை,
`நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய ஆட்டி` (தி.4)
என்பதனால் அறிக. அன்பு சிவபெருமானுக்குப் பிறவுமாதலை,
``அறவாணர்க்கன்பென்னும் அமுதமைத்தற் சனைசெய்வார்``
-தி.12 பெ.பு.வாயிலார், 8
என்பதனால் அறிக.

பண் :

பாடல் எண் : 1

குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.

பொழிப்புரை :

மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, நீவிரும் இப்பயன் வேண்டின் மாசில்லாத உயர்ந்த கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்` என்பது குறிப்பெச்சம். ஈற்றடியை முதலிற் கொள்க. `உடலுயிரது` என்பது பாடம் அன்று. ``கூடி`` என்றது, `கூடியதன் பயனைப் பெற்று` என்றவாறு. `கூடிக் குறிப்பறிந்தேன்` எனவும், `தேவர் பிரானைச் செறிப்பறிந்தேன்` எனவும் முன்னே கூட்டுக. மறிப்பு - மீட்சி. கறிப்பு - உணவினின்று உமிழப்படுவது; மாசு. `கற்பவையே கற்றல் வேண்டும்` (குறள், 391) என்றற்கு, ``கறிப்பறியா மிகுங்கல்வி`` என்றார்.
இதனால், `சிறப்புடைக் கல்வியே கல்வி` என்பதும், அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்திலோர் கண்ணுண்டு
கற்றறி வாளர் கருதி உரைசெய்யுங்
கற்றறி காட்டக் கயலுள வாக்குமே.

பொழிப்புரை :

கல்வியைக் கற்ற அறிவினையுடையோர் அவ் வறிவால் கருதியுணருங் காலத்து, கல்வியைக் கற்ற அறிவினை உடையோர் பலரது உள்ளத்திலும் சிறப்பாக ஒரு கண் இருத்தல் புலனாகும். இனி அக்கற்ற அறிவினையுடையோர் ஆராய்ந்து சொல்லு கின்ற கல்வியறிவுரை, பாலை நிலத்திலே கயல்மீனைப் பிறழச் செய்தாற் போலும் நன்மையைப் பயக்கும்.

குறிப்புரை :

``பாம்பறியும் பாம்பினகால்`` (பழமொழி நானூறு) என்றபடி, கற்றாரது நிலைமையைக் கற்றவரே உணர்வரல்லது மற்றவர் உணர மாட்டார் ஆதலின், ``கற்றறிவாளர் கருதிய காலத்து ... ... ... கண்ணுண்டு`` என்றார். `கற்றாரைக் கற்றாரே காமுறுவர்` (மூதுரை) என ஔவையாரும் கூறினார். ``ஓர் கண்`` என்றது, பலர்க்கும் முகத்தின்கண் உள்ள ஊனக் கண்ணல்லாத வேறொருவகைக்கண் என்றவாறு. அது ஞானக்கண். ஞானக்கண்ணே சிறப்புடைத்தாதலை,
கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். -குறள், 393
எனத் திருவள்ளுவரும் குறித்தருளினார். நான்கிடத்தும், `கற்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயின. கற்ற அறிவு - கற்றதனால் உண்டாகிய அறிவு; ``கற்றறி`` என்பதில் அறி, அறிவு; முதனிலைத் தொழிற்பெயர். காடு, இங்குப் பாலை நிலம், ``அக்கயல்`` என்பதில், சுட்டுப்பண்டறி சுட்டாய், `நீரினுள் வசிக்கும் அத்தன்மை உடைய` என அதன் இயல்பை விதந்தவாறாய், நீர் நிறைந்து நிற்றலைச் சுட்டுங் குறிப்பாயிற்று. `காட்டில்` என ஓதுதலும் ஆம். `பாலையை மருதம் ஆக்கினாற்போல, அறியாமையாற் பாழ்பட்டுக் கிடக்கும் உள்ளத்தை அறிவுடையதாய் நலனுறச் செய்யும்` என்பதாம். `கற்ற அறிவு கயலை உளவாக்கும்` என்க. எனவே, `அவர் சொல் கேட்கத்தக்கது` என்பதும் குறிக்கப்பட்டதாம்.
இதனால், கல்வியின் சிறப்பும், அது, தன்னை உடையார்க்கே யன்றிப் பிறர்க்கும் பயன் தருதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

நிற்கின்ற போதே நிலையுடை யான்கழல்
கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றொன் றிலாத மணிவிளக் காமே.

பொழிப்புரை :

இளமை உள்ள பொழுதே என்றும் ஒரு பெற்றி யனாய் நிற்கின்ற சிவபெருமானது திருவடிச்சிறப்பைத் தெளிவிக் கின்ற நூல்களைக் கற்கின்ற செயல்களைத் தப்பாது செய்யுங்கள்; அவ்வாறு கற்றலானே பாவங்கள் பற்றறக்கழியும்; பின்பு அக்கல்விகள் வெறுங்கல்வியாய் ஒழியாதவாறு அத்திருவடிகளை வணங்குங்கள்; வணங்கினால் அவை, தன்னை ஆக்குதற்கும், தூண்டுதற்கும் பிறிதொன்றனை வேண்டாது இயல்பாகவே என்றும் ஒளிவீசி நிற்கும் மணிவிளக்குப் போல நின்று உங்கட்கு உதவுவனவாம்.

குறிப்புரை :

கற்றற்கு வேண்டுவது இளமைக் காலமே யாதலின், அஃது இங்கு ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. இளமை முதலிய நிலை யாமையுடையார்க்கு நிலைபேறாவது இறைவன் திருவடியே என்றற்கு, `நிலையுடையான் கழல்` என்றும், `அதனை விளக்கும் கல்வியே கல்வி` என்றற்கு, ``கழல் கற்கின்ற செய்மின்`` என்றும், `அக்கல்வியால் வினைமாசு, நீங்கும்` என்பதுபற்றி ``கழிந்தறும் பாவங்கள்`` என்றும்,
கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
நிற்க அதற்குத் தக. குறள்,391
என்றவாறு, கற்றவண்ணம் நில்லாதபொழுது கற்றலாற் பயனில்லை யாகலானும்,
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள்,2
என்பவாகலின், கல்வியின் உண்மைப் பயன் இறைவன் திருவடியைத் தொழுதலேயாகலானும், ``சொற்குன்றல் இன்றித் தொழுமின்`` என்றும், திருவடிக் கல்வியால் வினை நீங்கப்பெற்றார் அத்திருவடியைத் தொழுவாராயின் அதனைப் பெற்று - இன்புறுவ ராகலின், ``தொழுதபின் மணி விளக்காம்`` என்றும் கூறினார். `திருவடிக் கல்வியே கல்வி` என்பதனை,
`சிவமுயன் றடையும் தெய்வக் கலைபல திருந்த ஓதி`
-தி.12 பெ. பு. மனுநீதி, 18
எனவும்,
``உள்ளம்நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப்பயின்றவற்றால்
தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறிவு``
-தி.12 பெ. பு. சிறுத்தொண்டர், 4
எனவும் சேக்கிழார் குறிப்பிடுதல் காண்க. ``கற்றதனாலாய பயன் என்கொல்`` என மேற்காட்டிய திருக்குறளைக் கூறிய திருவள்ளு வனார்க்கும் இதுவே கருத்தாதல் உணர்க. வினைமாசினை அறுக்கும் திருவடிக்கல்வியை,
``சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
(ஆகிய)
உவமையிலாக் கலைஞானம்`` -தி.12 பெ. பு. திருஞான. 70
எனவும், இறைவன் திருவடியைப் பலவாற்றானும் தொழுது அடைத லாகிய அனுபவத்தை, அதே பாட்டில்,
``பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
(ஆகிய)
உணர்வரிய மெய்ஞ்ஞானம்`` தி.12 ஞான. 70
எனவும் சேக்கிழார் விரித்தமை காண்க.
சொல் - சொல்வடிவாகிய கல்வி. இதனை, `வாசக ஞானம்` என்றல் அறிக. குன்றல் - பயனின்றிக் கெடுதல்.
இதனால், `உண்மைக் கல்வியாவது இது` என்பது, அதன்
பயன்களும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே.

பொழிப்புரை :

கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழி கின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவ தாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

`கல்வியுடையாரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. பல்லி - பலிதம்; பயன். `பாம்பரிந் துண்கின்றார்` என்பது பாடம் அன்று என்பதற்கு, யாப்புச் சிதைதலே சான்று.
இதனால், கல்வியின்வழி நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.

பொழிப்புரை :

உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.

குறிப்புரை :

`ஆதலின் அதனைக் கற்க` என்பது குறிப்பெச்சம். `கந்தம்போல்` என உவம உருபு விரிக்க. ஒடுவின் பொருளில் வந்த ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
இதனால், உண்மைக் கல்வி ஆசிரியர் உறுதி மொழியைத் தெளிவிக்கும் முகத்தால் இறைவனை அடைவித்தல் கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 6

நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினாற் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினாற் கூடா பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே.

பொழிப்புரை :

வருந்தியாயினும் நூல் ஏணியைப்பற்றி ஏறுவோர் மதிலின் உச்சியை அடைந்து கோட்டையைப் பிடிப்பர். அது செய்ய மாட்டாதார் பக்கத்தில் உள்ள சில வழிகளைப்பற்றி ஏறின் இடையே நின்று பயன்பெறார். அதுபோல நுண்ணிதாயினும் மெய்ந்நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் ஆன்ம லாபமாகிய முடிந்த பயனைப் பெற்று இன்புறுவர். அது மாட்டாது அயலாகிய மயக்க நூல்களுள் ஒன்றைப் பற்றி ஒழுகுவோர் பிற சில சிறுபயன்களைப் பெறுதலோடு ஒழிவர்; ஆன்ம லாபத்தைப் பெறார். இன்னும் ஓர் உணவுப் பொருளைக் காப்பவர் கையில் கோல் ஒன்றை உடையாராய் இருப் பின் அப்பொருளைக் கவர எண்ணும் பறவைகள் அணுக மாட்டா. அதுபோல மெய்யறிவு உடை யாராய் இருப்பாரது மனத்தை ஐம்புலன் கள் அலைக்க அணுகா. இவற்றையெல்லாம் அறியாது மக்கள் அறியாமையுள் நின்று மயங்கு கின்றார்களே, இஃது இரங்கத்தக்கது!

குறிப்புரை :

இத்திருமந்திரம் ஒட்டணி. ``மயங்குகின்றார்களே`` என்ற தேற்றேகாரம், இரக்கங் குறித்து நின்றது.
இதனால் மயக்க நூற்கல்வியது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்த மனமல்கு நூல்ஏணி யாமே

பொழிப்புரை :

பகலவனது கதிர்கள் எங்கும் பரவி நிற்பினும் தூயதாகிய சூரியகாந்தக் கல்லே அதனால் நெருப்பை உமிழ்வதாகும். அதுபோல, இறைவன் திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் கற்றவரே அத்திருவருளால் இறைவனைக் காண்பவராவார். ஆகவே, இளம்பிறையை அணிந்த சிவபெருமானை அடையும் ஆற்றலுடை யார்க்குப் பொருந்திய மனம் நிறைந்த மெய்ந்நூல்களே ஏணிபோல உதுவுவனவாம்.

குறிப்புரை :

எடுத்துக்காட்டுவமையாய் நின்ற இரண்டாம் அடியை முதலில் கொள்க. ``வெளிப்படும்`` என்றாராயினும், உவமைக்கேற்ப `வெளிப்படக் காண்பர்` என்றல் கருத்து என்க. தோய்ந்த நெருப்பு - சூரிய கிரணத்தில் தோய்ந்ததனால் உண்டாகிய நெருப்பு. ``இளமதி`` என்பது, ``கனங்குழை`` (குறள், 1081) என்றாற்போல அதனை யுடையான் மேல் நின்றது.
இதனால், மெய்நூற் கல்வியது இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

பொழிப்புரை :

வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)

குறிப்புரை :

வழித்துணையாதலும், `யாண்டு பலவாயினும் நரையிலவாக்கி` அமுதமாதலும் கற்றார்க்கன்றிக் கூடாமையின், `கல்வியால்` என்பது ஆற்றலால் விளங்கிற்று. இதனாலும் கல்வியது சிறப்புக் குறிக்கப்பட்டது. `கழிதுணை, ஒழிதுணை` என்பன எதுகை நோக்கி விரித்தல் பெற்றன. கழி, உரிச்சொல். ``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` (தி.1 ப.1 பா.2) ``கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) என்பன திருஞானசம்பந்தர் வாக்காதல் அறிக.
இதனால், `திருவருள் பெறுதல் கல்வியானே ஆவது` என்பது கூறப்பட்டது. கண்ணப்பர் முதலாயினார் கல்வி இன்றியும் திருவருள் பெற்றாரால் எனின், அவரெல்லாம் முற்பிறப்பிற் கற்று இப்பிறப்பில் அதன் பயனை எய்தினார் என்பதனை,
``கலிமலிந்த சீர்நம்பி கண்ணப்பன்`` -தி.7 ப.39 பா.2
என்பது முதலிய அருட்டிருமொழிகளான் அறிந்துகொள்க. இது பற்றியன்றே திருவள்ளுவர்,
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து. -குறள், 298
எனவும்,
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. -குறள், 297
எனவும் ஓதுவாராயினர் என்க.

பண் :

பாடல் எண் : 9

பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

பொழிப்புரை :

யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்.

குறிப்புரை :

`ஆதலின் அவனை அறிவிக்கும் கல்வியை ஒழியாது கற்றுக்கொண்மின்` என்பது குறிப்பெச்சம். முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. முற்று அது, வினைத்தொகை. `ஆவதாம்` என்பதும், `ஆயினும்` என்பதும், சொல்லெச்சம். `கற்றவரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
இதனால், எத்தகையோர்க்கும் மெய்ப்பொருட் கல்வி இன்றி வீடு எய்தலாகாமை கூறப்பட்டது. முனிவரும், தேவரும், கணங்களும் போல்வாரும் சிவபெருமானிடம் வேதாகமங் களைக் கேட்டுணர்ந்தன ராகக் கூறும் புராண வரலாறுகளை நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 10

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் கொண்டு, அதன்பின், பல ``ஊழிதொறூழி`` என்றதனைக் கூட்டி உரைக்க. உருவத்தை ``உடல்`` என்றார். `பூதம்` என்றே ஒழியின், கட்புலனாகாகது, அருவமாயுள்ள தத்துவ மாத்திரையே குறிக்குமாகலின், கட்புலனாம் உருவை உணர்த்த வேண்டி இது கூறினார். இடம், ``இடனில் பருவம்`` என்புழிப் போல ஏற்புடைத்தாய நிலை. `அது கல்வியானாயது` என்பது அதிகாரத்தால் விளங்கிற்று.
இதனால், சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பவனாயினும் கற்றாரது நெஞ்சத்திலே இனிது விளங்குதல் கூறுமாற்றால், `அவனைக் கண்டு பெறுதற்கு அவனது அருள்நூற் கல்வி இன்றியமையாதது` என்பது அறுதியிட்டுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொழிப்புரை :

முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.

குறிப்புரை :

`அதனால் அவைகளை இகழாது கேட்க` என்பது குறிப்பெச்சம். மறம் - வீரம். அஃது அரசர்க்குரிய பண்பாய் நின்று `பொருள்` என்னும் உறுதிப் பொருளை உணர்த்திற்று. புறம் - பிறிது; அஃது இன்பம். அந்தணர் இடைவிடாது பற்றி ஓதுதல் கன்ம காண்டத்தையேயாதலின், அதனை, ``அந்தணர் வாய்மொழி`` என்றார். வானவர் மந்திரம் - கடவுளரை வழிபடும் மந்திரங்கள். பொன்னுரை ஈசன் - பொன்னை உரைத்தாற்போலும் மேனியை உடைய சிவபெருமான். `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்புகளுள் தலைமைபற்றிப் பதி இயல்பு ஒன்றையே கூறினா ராகலின், ஏனையவும் அதன் கண் அடங்கும். கன்ம காண்டம் முதலிய மூன்றன் பொருளும் சிவாகமங்களுள் `தந்திர கலை, மந்திரகலை, உபதேசகலை` (சிவஞானசித்தி, அளவை, 4) எனப்படுமாகலானும், வேதத்திற்கும் சிவாகமத் திற்கும் பேதம் இன்மையானும் (தி.10 எட்டாம் தந்திரம்) அவ்வாகமப் பொருளும் ஈண்டுக் கூறியவாறேயாதல் அறிக. செய்யுள் பற்றி உலகியற் பொருளையும், மெய்ந்நெறிப் பொருளையும் முறைப்படுத்தோதாது, விரவ ஓதினார். `பெற்றது` என்பது ஈறுதொகுத்தல்.
இதனால், கேட்கப்படும் பொருள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.

பொழிப்புரை :

`சிவபிரானை உள்ளவாறு உணர்ந்தோர் யாவர்` என்பதனை முன்னே அறிந்து, பின்னர் அவர்பால் கற்றலையும், கேட்டலையும் செய்யுங்கள். கற்றும் கேட்டும் அறிந்த பின், சிந்தித்துத் தெளியுங்கள். ஏனெனில், கற்றுக் கேட்ட பின்னர்ச் சிந்தித்துத் தெளிந்தவரே சிவனைப் பெற்று உயர்ந்து நின்றனர்.

குறிப்புரை :

`என்பதை` என்பதும், `அவர்பால்` என்பதும் சொல்லெச்சங்கள். இதனால், யாதொரு பொருளாயினும் அதனை வல்லா ரிடத்தே கற்றலும், கேட்டலும் செயற்பாலதல்லது பிறரிடத்து ஆகாது என்பதும், கல்வி கேள்விகட்குப் பின்னர்ச் செயற்பாலன இவை என்பதும் கூறப்பட்டன, திருவள்ளுவரும் `ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்லே கேட்கற்பாற்று`` (குறள், 415) என்றார். ``கற்றபின் நிற்க அதற்குத் தக`` (குறள், 391) என்றது கல்வியின் பகுதியானாற் போலக் கேள்வியோடு இயைபுடையனவும் இங்குக் கேள்வியின் பகுதியாயின. இதனுள் இரண்டடி எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 3

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலிய தேவரை வழிபடும் முறைகளும் கேட்கத்தக்கனவாதல், சிவபெருமானது ஆணைவழியே யாம். அதனால், முதல்வனாகிய அப்பெருமானை வழிபடும் முறையைக் கேட்டு, அவனை வழிபடுதலே சிறந்தது. ஆகவே, மக்கட் பிறப்பின் பயனும், உயிர்க்கு உறுதுணையாவதும் சிவபெருமானை வழிபடும் முறையைக் கேட்டலேயாம்.

குறிப்புரை :

`மாயன்` என்பது முதல் குறுகி நின்றது. `அத்தேவர்` எனவும், `அப்பணி கேட்பது` எனவும் சுட்டு வருவிக்க. `பற்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. திருமால் முதலிய தேவர், தாம் செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவபெருமானால் தத்தமக்குப் பொருந்திய எல்லையளவும் தலைவராக அருள் புரியப் பட்டமையின், அவரை வழிபடுதலும் சிவபெருமான் ஆணையே ஆயிற்று. ஆயினும், மேன்மேல் உள்ளாரை வழிபடுபவர் கீழ்க்கீழ் உள்ளாரை வழிபடு வோர் எய்தும் பயனோடு அதனின் மேம்பட்ட பயனையும் பெறுவாராகலின், எல்லார்க்கும் மேலோனாகிய சிவபெருமானை வழிபடுதலே சிறந்ததாதல் தெளிவு. ``காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்`` (சிவஞானசித்தி. சூ. 2.27) என்றது காண்க. இப்பயனை அவர் வழங்கமாட்டாமையைச் சுட்டும் முகத்தால், சிவனது வழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்பட்டது. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மெய்ந்நெறிக் கேள்வியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

உலகியலை விட்டு மெய்ந்நெறி நோக்கி வருகின்ற தவத்தோர்க்கு அதனை அருளுபவன் அரிய தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய எங்கள் சிவபெருமானே. அதனால், `இவனே யாவர்க்கும் தலைவன்` என்று உணர்ந்து அவனது புகழைத் தம்மிடையே பேசிக் களிக்கும் திருவுடை மக்களே பின்னர் எப் பயனையும் எளிதிற் பெறுவர்.

குறிப்புரை :

`அதனால் அவன் புகழையே கேட்க` என்பது குறிப் பெச்சம்.
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப.9 பா.3
என்று அருளிச் செய்தார் திருநாவுக்கரசரும். பேசுதல், கருத்துக்களைக் கொண்டும், கொடுத்தும் அளவளாவுதல். ``உன் திருவார்த்தை - விரிப்பார் கேட்பார் மெச்சுவார்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம் - 9) என்ற திருவாசகத்தைக் காண்க. திரு - நற்பேறு. ``பேசி இருக்கும் திருமானுடர்`` என உடம்பொடு புணர்த்து ஓதியதனால், `அவ்வாறு பேசி இருத்தலே திருவாம்` என்பது பெறப்பட்டது. ``மாதவர்`` என்றதனால், `அவர் மெய்ந்நெறி விருப் பினர்` என்பதும், ``அருமாதவன்`` என்றதனால், `அவர்க்கு அருள் புரிய வல்லான் அவனே` என்பதும் பெறப்பட்டன.
இதனால், மெய்ந்நெறியுள் சிவநெறிக் கேள்வியது சிறப்புத் தனித்தெடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருவருளின் பெருமையையும், இறப்புப் பிறப்புக்களது சிறுமையையும் ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து, அவனது திருவருளையே காதலித்துப் பிதற்றி மகிழ்ந்தால், அப்பெருமான்மேல் அன்பு, முறுகி வளரும். வளர்ந்தால், அப் பெருமான் அவ்வன்பில் விளங்குகின்ற பேரொளியாய் எதிர்ப்பட்டு நின்று, பின்னர் மலரில் நின்று கமழும் மணம்போல உள்ளே நிலைபெற்று, இன்பம் தருவான்.

குறிப்புரை :

`அருளையும்` என்னும் இரண்டனுருபு தொகுத்தல். இறப்புப் பிறப்பு, உம்மைத் தொகை. அருள் முதலிய மூன்றும் ஆகுபெயரால் அவற்றின் தன்மையை உணர்த்தின. ``எய்தி ஆகு`` எனப் பாடம் ஓதி, `ஆகு` என்பதனை ஏவல்வினையாக்கி உரைப் பாரும் உளர். `வாசமலர்` என்பது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.
``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது`` -தி.10 5ஆம் தந்திரம்
எனவும்,
``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``
-தி.8 அதிசயப் பத்து, 9
எனவும் ஓதுதல் காண்க.
இதனால், சிவநெறிக் கேள்வி பயன்தரும் முறைமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.

பொழிப்புரை :

`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.

குறிப்புரை :

`கல்வி விழுச்செல்வம்` (குறள், 400) ஆதலின், அதனை, ``விழுப்பம்`` என்றார். மெய்நின்ற - மெய் நிலைபெற்ற; இது `விழுப்பம், கல்வி` என்றவற்றோடும் இயைந்தது. வழுக்கி விழுத லாவது, பொய்யை மெய்யெனத் துணிதல். காலம் எல்லாப் பொரு ளினும் நுண்ணிதாய் அவற்றை நடத்துவதாயினும் வரையறை உடைத்தாகலின், அதனைக் கடந்த நிலையை, ``எண்ணிலி காலம்`` என்றார். மேற்கூறிய சிறப்புப்பற்றிக் காலத்தையே கூறினாராயினும், அதனொ டொத்த `முதற்பொருளாகிய` (தொல். பொருள்) இடமும் கொள்ளப்படும். படவே, `மெய்ம்மையான கல்வி கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப் படாத இறை நிறைவை எய்துவர்` என்றதாயிற்று. கேள்வியே கூறப்புகுந்தாரா யினும் அத்தன்மையவாதல் பற்றி ஏனையவற்றையும் உடன் கூறினார். `வழுக்கி விடாவிடில்` என்பது பாடம்.
இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும் ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே.

பொழிப்புரை :

சிறுமகார் தம் விளையாட்டு விருப்பம் காரணமாகத் தாம் சோறாகக் கருதிக்கொண்ட மணலாலே வயிறு நிரம்பினார் போலத் தேக்கெறிந்து கொள்ளுதல்போல, உலகப் பற்றுக் காரணமாகச் சுற்றத் தொடக்குண்டு வாழும் வாழ்க்கையாலே இன்பம் கிடைத்துவிடும் என்பவர் உளராயின் அவர், தம்மையும், தலை வனையும் அறியாத மடவோரேயாவர்.

குறிப்புரை :

`அதனால் அங்ஙனம் கொள்ளற்க` என்பது குறிப் பெச்சம். செறிவு - கூடியிருத்தல். இதற்கு, `செறியப் படுவார் இவர்` என்பது வருவிக்கப்பட்டது. ``அநுபோகம்`` என்பது சிறப்பினால் இன்ப நுகர்ச்சியையே குறித்தது. `அவர் குறியாதாரும், இருந்தாரும் ஆவர்` என்க. குறியாதது ஒன்று - சுட்டிறந்த முதற்பொருள். சிறப்புப் பற்றி இதனை முன்னர்க் கூறினார். `தம்மை யுணர்ந்து, அதனானே தலைவனையும் உணர்பவரே ஞானத் தலைவர்` என மெய்கண்ட தேவரும் கூறினார் (சிவஞானபோதம் அவையடக்கம்).
இதனால், உலகாயதம் பேதைமைத்தாதல் கூறுமாற்றால், `ஆகா` என விலக்கிய கல்வி கேள்வி ஒழுக்கங்களுள் பெரிதும் கூடாதன இவை என்பது கூறப்பட்டது.
``நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்`` -தி.5 ப.31 பா.6
என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 8

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

உயிரும் உடம்பும் ஒன்றற்கு ஒன்று உறுதுணை யாவன. அவை அவ்வாறு நிற்றற்கு உறுதுணையாய் நிற்பதே உலகியல் பற்றிய கேள்வி; (என்றது, யாண்டும் உயிர் உடம்பொடு நிற்றலாகிய பிறப்பு நிலையை நீக்க மாட்டாது; அதன்கண் சில நன்மையைத் தருவதே என்றபடி) இனி உயிரோடு ஒட்டி நிற்கும் துணையாவன சிவபெருமானது திருவடிச் சிந்தனையைத் தூண்டும் சிவநெறிக் கேள்விகளே; பெறுதற்குரிய துணையாகிய அக்கேள்விகளைக் கேட்டபின், பிறப்பு இறப்புக்கள் இல்லாத வீடு கூடுவதாம்.

குறிப்புரை :

``ஆவது`` என்ற ஒருமையால், `உயிர் உடம்பிற்குத் துணையாவது, உடம்பு உயிர்க்குத் துணையாவது` எனத் தனித்தனி உரைத்தல் கருத்தாயிற்று. இத்தொடரின்பின், `அதற்கு` என்பது எஞ்சி நின்றது. சிந்தை, ஆகுபெயர்.
இதனால், `சிவநெறிக் கேள்வியே விழுமியது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், ஒருப்பட்டு நிற்கும் அன்பர்க்கும், ஒருப்படாது முரணி, இகழ முற்பட்டு நிற்கும் வன்பர்க்கும் மூதாதையே. எனினும், தம்மொடு மேவாத மைந்த ரிடத்து அன்பு செய்யாத தந்தையர்போல, தன்னை இகழ்ந்து, தனது பெருமையை மகிழ்ச்சியுண்டாகக் கற்றும் கேட்டும் உணராது நீங்கி நிற்பார்க்குத் துன்பத்திற்கு ஏதுவாக, பால் கறவாத கற்பசுப்போல அருள்செய்யாது நிற்பன்.

குறிப்புரை :

`புகழ நின்றார்க்கும், இகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்` எனவும், `கழிய நின்றார்க்கு இடும்பைக் கிடமாக் கற்பசுவாம்` எனவும் கூட்டுக. இனி, `இடும்பைக் கிடமாக் கழிய நின்றார்க்கு` என இயைத்தலுமாம். ``கற்பசுவாம்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `கேட்டு` என்பது அதிகாரத்தால் வந்தது. `உணராது` என்பது ஈறு குறைந்து நின்றது. ஒன்று - சிறுமை; பயன்படாமை. ``கழிய நின்றார்க்குக் கற்பசுவாம்`` எனவே, கழியாது பற்றிநின்றார்க்குப் பாற்பசுவாதல் பெறப்பட்டது. இதன்கண் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், சிவநெறிக் கேள்வியுடையோர் பேரின்பம் எய்த லும், அஃது இல்லாதார் அதனை எய்தாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே.

பொழிப்புரை :

சிவபெருமானை மனம் ஒருங்கி உணர்ந்தவனே அப்பெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.

குறிப்புரை :

``ஆதியை, மனம்`` என்பன முதலிலும் சென்று இயையும். ``வைத்துணர்ந்தான் .. ... ஒத்துணர்ந்தான்`` என்றதனால், வாளா நினைத்தலும், வாழ்த்தலும் செய்வார் அதனை உண்மையாற் செய்தவர் ஆகாமை பெறப்பட்டது. `கல்வி கேள்விகளானன்றி அறியாமை நீங்காமையின், அவை இல்லாது செய்வது அறிவின் வழிப்பட்டதாகாது, ஏரல் எழுத்துப் போல்வதொரு விழுக்காடாம்` என்பது கருத்து. இஃதே பற்றி,
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். -குறள் 404
எனவும்,
``தெருளாதான் மெய்ப்பொருல் கண்டற்றால்`` -குறள் 249
எனவும் கூறினார் திருவள்ளுவர். இங்ஙனம் கூறவே, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் ஆயிற்று.
ஞானத்தால் தொழுவார் சிலஞானிகள்;
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்;
ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு,
ஞானத்தாய்உனை நானும் தொழுவனே. -தி.5 ப.91பா.3
என்றருளியதும் இப்பொருட்டு.
சிவபெருமானது திருக்குறிப்பு, உயிர்கள் தன்னை அறிவால் அடைதல் வேண்டும் என்பதேயாதலின், வைத்துணர்ந்தான் ஒத்துணர்ந்தானாவன். இவ்வொருமைச் சொற்கள் இனத்தின் மேல் நின்றன. இதனை `ஒருபால் வழக்கு` (தொல். பொருள், 218) என்பர் தொல்காப்பியர். உரு - உடம்பு; என்றது அதன் கூறுகளை. அவை வாத பித்த ஐ முதலியவை. ``ஒவ்வாது`` என்றதின்பின் `ஆக` என்பது வருவிக்க. `உழன்று` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. `நச்சி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ஏகாரம் இரண்டனுள் முன்னது தேற்றம்; பின்னது ஈற்றசை. `உணர்ந்தார்க்கு` என்பது பாடம் அன்று. அறிவால் தன்னை அடைந்தாற்கு,
``புலன் ஐந்தும், பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐ மேல் உந்தி, உயிர் அலமரும் நிலை` வந்ததாயினும், அவரைச் சிவபெருமான், `அஞ்சேல்` என்று அருள்செய்வான் (தி.1 ப.130 பா.1) ஆகலின், ``நச்சி உணர்ந்தாற்கே நணுகலும் ஆம்`` என்றார்.
இதனால், சிவபெருமானைக் கல்வி கேள்விகளின் வழி அடைதலே சிறந்தது என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே.

பொழிப்புரை :

`கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.

குறிப்புரை :

``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்
கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுர மேவிய
பெம்மான்`` -தி.1ப.1பா.2
`கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) ``கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி`` (தி.6 ப.32 பா.1) கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி`` ``கற்றார் இடும்பை களைவாய் போற்றி`` (தி.6 ப.5 பா.1) ``கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை`` (தி.9 ப.5 பா.2) ``உளர்என்னும் மாத்திரைய ரல்லால், பயவாக் களரனையர் கல்லாதவர்`` (குறள், 406) என்றாற்போல வரும் மெய்யுரைகள் பலவற்றிற்கும் மாறாமாகலின், அங்ஙனங் கூறுதல், `கையிலான் காட்டக் கண்ணிலான் கண்டான்` என்பதுபோல நகை விளைப்பதொன்றாய்ப் பொருந்தாது` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம், `புலால் மறுத்தல் இன்றியும் அருளாடல் கூடும்` என முரணிக் கூறுவாரை, ``பொருளாட்சி போற்றாதார்க் கில்லை; அருளாட்சி - ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு`` (குறள், 252) என ஓர் உவம அளவையான் மறுத்து, `புலால் மறுத்தல் இன்றி அருளாடல் உண்டாகாது` என புலால் மறுத்தலை வலியுறுத்திய திருக்குறள் போல, `கல்வி இன்றியும் மெய்ப்பொருளை உணர்தல் கூடும்` என முரணிக் கூறுவாரை உரையளவைகள் பலவற்றான் மறுத்து, `கல்வி இன்றி மெய்ப்பொருட் காட்சி உளதாகாது` எனக் கல்வியை வலியுறுத்தியது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. -குறள், 356
எனத் திருவள்ளுவரும் மெய்ப்பொருட் காட்சிக்குக் கல்வி கேள்விகள் இன்றியமையாதச் சிறப்பினவாகக் கூறுதல் காண்க. `கண்ணப்பர் முதலாயினார் முற்பிறப்பிற் கற்ற கல்வி உடையார்` என்பது மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.296 உரை) ``கல்வியாவது இது` என்பதனை நாயனார் `கல்வி` அதிகாரத்துட் கூறினமையை நினைவு கூர்க.
கருத்து - அறிவு. இதன்கண் `உள்` என்னும் பொருள் பட வந்த ஏழாவது விரிக்க. ``கருத்தறி காட்சி`` எனவே மெய்ப்பொருட் காட்சி யாயிற்று. ``அருள்`` என்றது, ஞானம் என்னும் பொருட்டு; இது கலை ஞானம். மதித்துளோர் - பொருள்களின் இயல்பை ஆய்ந்துணர்ந்தவர், `மதித்துளோர் நிற்பவராவர்` எனவும், `கற்றோரும் காணகிலாராவர்` எனவும் இயைத்துரைக்க. ``கற்றோரும்`` என மறித்தும் கூறினார், வலியுறுத்தற்பொருட்டு. `மதித்துளோரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``கல்லாதார் உண்மை`` ``கல்லாதார் இன்பம்`` என்பன காரகப் பொருண்மைக்கண் வந்த ஆறாவதன் தொகை. `பற்றாது` என்பதன் ஈறு குறைந்தது.
இதனால், கல்லாமை எவ்வாற்றானும் கடியப்படும் குற்றமாவ தன்றி, ஒருவாற்றானும் கொள்ளப்படும் குணமாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே.

பொழிப்புரை :

கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.

குறிப்புரை :

`வழி, அறிவு` என வேறு வேறு நின்ற இருசொற் களையும் ஏனையிடத்தும் கூட்டி, ஈரிடத்தும் `அறிவு வழி` என உரைக்க. ``பல என்பார், வாழ்கின்றார்`` என்பவற்றால், ஒன்றெனலும், தாழ்தலும் பெறப்பட்டன. ``இறை`` என்பதன் பின் `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. ஐய உணர்வு உள்வழியும் மெய்ப்பொருட் காட்சி நிகழாதாகலின், `அவர் கலப்பறியார்` உள்வழி என்றார். ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கே வானம் நணித்து`(குறள், 453) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
இதனால், கல்வி, கேள்வி இல்லாதார்க்கு ஐயம் நீங்கு மாறின்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே.

பொழிப்புரை :

நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.

குறிப்புரை :

`கற்றவர் நெஞ்சில் மட்டுமே காண இயலும்` என்ப தாம். நிலை - இயல்பு; அஃது அதனை உடைய பொருளைக் குறித்தது. ``நெஞ்சத்து`` என்றதன்பின், `நினைத்தலால்` என்பது எஞ்சி நின்றது.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. -குறள், 331
என்ப ஆகலான், நில்லாக் குரம்பை நிலையென்றுணர்தல் புல்லறி வாண்மை யாதலும், ``கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை`` (தி.8 கண்டபத்து, 4) என்றமையால், கல்லாதார்க்கு உள்ளது அப் புல்லறிவே என்பதும் பெறப்பட்டன. மேலைத் திருமந்திரத் துள்,``எங்கள்தம் இறை`` என்றது இதனுள்ளும் வந்து இயைந்தது. ``ஒண்ணாதே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதனால், கல்வி கேள்வியில்லாதார்க்கு உளதாவது புல்லறிவே (திரிபுணர்வே) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.

பொழிப்புரை :

நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.

குறிப்புரை :

நாயனார் எவ்விடத்தும் தம்மை இழித்துக் கூறாது, தாம் பெற்ற பேற்றின் சிறப்பையே கூறுதலின், இம்மந்திரத்திற்கு அவர் தம்மை இழித்துக் கூறினாராக வைத்து உரைத்தல் பொருந்தாது என்க. இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. தகைமை - தன்மை; தன்மை உடையாரை, `தன்மை` என அஃறிணையாகக் கூறினார்; இழிபு பற்றி. `அறியாத் தன்மையர்முன் கல்லேனாகின்றேன்` என் றதனால், `அறிந்த தன்மையர் முன் கற்றேனாய் விளங்குகின்றேன்` என்பது போந்தது. இதனால், கற்றாரைக் கல்லாதார் `அறிவிலர்` என்று இகழ்தல் பெறப்பட்டது. அதனை,
உருவமும், உணர்வும், செய்தி ஒத்திரா; கன்மம் என்னின்
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண்டாகி
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன்? மதியி லாதாய்,
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.
-சிவஞானசித்தி பரபக்கம். உலகாயதன் மதம் - 9.
என்பார் போல்பவரிடத்துக் காண்க.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. -குறள் 976
என்றார் திருவள்ளுவரும். `வினை கில்லேன், தகைமையின் கல்லேன், பொருளே வல்லேன்` என முன்னே கூட்டி முடிக்க. ``தகைமையின்`` என்பதில் சாரியை நிற்க, `முன்` என்னும் பொருட்டாய கண்ணுருபு தொக்கது. ``வழங்கும் பொருளே வல்லேன்`` என்றாராயினும், `பொருள் வழங்கவே வல்லேன்` என்றல் கருத்து என்க. `உட்கலேன்` என்பது விரித்தல் பெற்றது.
இதனால், கல்லாதார் வினை செய்தல், துயர்ப்படல், இவறன்மை, சாக்காடு முதலியவற்றிற்கு அஞ்சுதல் என்னும் குற்றங் களை உடையராதல், எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.

பொழிப்புரை :

கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.

குறிப்புரை :

சீவன் - உடம்பொடு நிற்கும் உயிர்; என்றது அதன் நிலையை. ``அறம்`` என்றது துறந்தார் முதலியோர்க்குத் துணை செய்தலை `ஆதலின்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. போகம் செய்தல் - அனுபவித்தல்.
இதனால் கல்லாதார், தம் உயிர்க்கு உறுதி தேடிக்கொள்ளாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.

பொழிப்புரை :

நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.

குறிப்புரை :

`இந்நிலை கண் இல்லாமையான் ஆயதன்றோ` என்பது குறிப்பெச்சம். `முப்பத்தாறு தத்துவங்களையும், ஆன்ம போதத்தையும் கடந்து அப்பால் உள்ளது எல்லையில்லாத சிவானந்தமாகிய பேரின்பம்; அதனைக் கல்வி உடையவர் அறிந்து தவ ஞானங்களால் அடைந்து திளைக்கின்றனர்; கல்வி இல்லாதவர், பேரின்பம் ஐம்புலப் பொருள்களில் உள்ளதாக நினைத்து அவற்றைத் தத்தமக்கு இயலுந் திறத்தால் பல தொழில்வழி முயன்று ஈட்டித் தொகைபண்ணி, அத்தொகையை மறவாமைப் பொருட்டு ஏட்டிலும் எழுதிக் காத்து, அவற்றை நுகருமிடத்துப் பேரின்பம் பயவாது பெருந்துன்பத்தையும், சிறிது இன்பத்தையும் பயந்து நிற்றலை அறிந்து தளர்ச்சி எய்துகின் றார்கள்; இந்நிலை கல்லாமையான் ஆயதன்றோ! என்பது இதனாற் பெறுவிக்கப்பட்ட பொருள். இம் மந்திரம் பிசிச் செய்யுள்.
ஐம்புலப் பொருள்களைத் தேடி இளைத்தலால் பயனில்லை; இறைவன் திருவடியை அடைதலே பயன் தருவது என்பதைத் திருநாவுக்கரசர்,
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி எய்த்தும் பயனிலை; ஊமர்காள்,
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்அடி யேஅடைந் துய்ம் மினே.
-தி. 5 ப.77 பா.4 எனக் கல்லாதாரை நோக்கி இரங்கி அருளிச்செய்தமை காண்க.
``விண்ணினின்`` முதலிய மூன்றிலும் ஓர் இன், விரித்தல் பெற்றது. கண்ணினுள்ளே கலந்திருத்தல், கண்ணால் நன்கு காணப் படுதல். ``மண்ணினுள்ளே`` என்பதன்பின், `உளதாக` என்பது வருவிக்க. அடுக்கு, பலர் மதித்தலைக் குறித்தது. ``எழுதி`` என்பது, உவமைக்கண், ``இம்மை உன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை`` (தி.4 ப.96 பா.6) என்பதிற்போலப் பதித்தலைக் குறித்தது. விளம்பழம், பழமாக உண்ணப்படுதலேயன்றித் தனியாகவும், கூட்டாகவும் அட்டுண்ணப் படுதல் முதலிய பயன் மிகுதி பற்றி அதனையே கூறினார்.
இதனால், கல்லாதார் பேரின்பம் பெறாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொழிப்புரை :

நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப் பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியா தவர்க்கு அவை கூடாவாம்.

குறிப்புரை :

பின் இரண்டு அடிகளை முதலிற் கூட்டி, ``கல்வி கற்றறிந்தாரே`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. கணக்கு - நூல். அதனை, கீழ்க்கணக்கு, மேற்கணக்கு, கணக்காயர் முதலிய வழக்குக்களான் அறிக. ``உண்மை, அண்டம்`` என்பன `உண்மையைக் காண ஒண்ணாது, அண்டம் காட்சி கைகூடா` என முன்னரும் சென்று இயைந்தன. உண்மை - மெய்ப்பொருள். அஃது அதன் இயல்பைக் குறித்தது. அண்டம் - பரவெளி. ``கைகூடா`` என்ற பன்மை, பெறுவாரது பன்மை பற்றிவந்தது.
இதனால், கல்லாதார் மெய்ந்நெறியை அறிதலும், அதன் பயனைப் பெறுதலும் இல்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.

பொழிப்புரை :

கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. அதன் இறுதி யில் `ஆதலால்` என்பது எஞ்சி நின்றது. ``காணவும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. இழிவு, காட்சியளவில் பெறுவதும் தீமையேயாதல்.
இதனால், கல்லாதாரால் உலகிற்குத் தீங்கு உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.

பொழிப்புரை :

சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.

குறிப்புரை :

`ஞானம், அன்பு` என்பன அவற்றின்வழி நிகழும் ஒழுக்கத்தின்மேல் நின்றன. கல்லாது ஒழுக்கம் இல்லாதார், தம் தீயொழுக்கத்தை, `நல்லது` என மருட்ட வகையறியார்; கற்று ஒழுக்கம் இல்லாதார் அவ்வகையை நன்கறிவராகலின் அவரை, `மூடர்` என்று மட்டும் கூறியொழியாது, ``கலதிகள்`` என்றும் இகழ்ந்தார். `மேலைத் திருமந்திரத்துள் கூறப்பட்ட கல்லாதாரால் உலகிற்கு உளவாகும் தீங்கினும், இக் கற்றாரால் உலகிற்கு உளவாகும் தீங்கு பெரிது` என்பது கருத்து. `விடார்` என்பது நீண்டு நின்றது. `வீடார்` என்றே கொண்டு, உடைமையது தொழில். உடையார்மேல் ஏற்றப்பட்டது எனலுமாம். துரிசு - மனமாசு. திசை, ஆகுபெயர். ``மூடர்கள், மதியிலோர்`` என இருகாற் கூறியது, தாமே உணர்தலும், பிறரைக் கண்டு உணர்தலும் ஆகிய இரண்டும் இலர் என்றற்கு.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குத் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். -குறள் 834
என்றார் திருவள்ளுவரும். `நிற்போரே கணக்கறிந்தார்கள்` என ஏகாரத்தைப் பிரித்துக்கூட்டி உரைக்க.
இதனால், நூலைக் கற்றும் ஒழுக்கத்தைக் கல்லாதவர் கல்லாதவரே; கற்றவராகார் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.

குறிப்புரை :

`அது நிரம்பாது` என்பது குறிப்பெச்சம். `உள்நின்ற சோதி` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `ஆதிப்பிரான்` முதலிய நான்கும் முதல்வனது இயல்பை வகுத்தோதியவாறு. ஆதிப்பிரான் முதற்கடவுள்; வேறு பலரைத் தொழிற் கடவுளாக நிறுத்தி உலகை நடத்துபவன். அமரர்க்கும் பரஞ்சுடர் - தேவர்க்கும் நெறிகாட்டும் மேலான விளக்கு. சோதி - எல்லையில் பேரொளி. அடியார் தொடரும் பெருந்தெய்வம் - தன்னை அடைந்தவர் விடாது தொடர்தற்குக் காரணமான இன்பப் பெருக்கினை உடையவன். இதன்பின், `அவனை` என்பது எஞ்சி நின்றது.
இதனால், கல்வியின் நிறைவாகிய அனுபவம் இல்லாதாரும் ஓராற்றாற் கல்லாதவரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 1

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

பொழிப்புரை :

நடுவுநிலைமையிற் பிறழாதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவர் வழியிலே நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஞானம் பெறுதல் இறுதியிற் கூறற்பாலதாயினும், சிறப்புப்பற்றி முன்னர்க் கூறினார். அதனை எதிர்மறை முகத்தாற் கூறியது, `துறவறத்திற்கு முதலாகிய அருளுடைமைக்கு நடுவு நிலைமை இன்றியமையாச் சிறப்பிற்று` என்பது உணர்த்தற்கு. அது,
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 251
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான், என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். -குறள் 318
என்றாற்போல்வனவற்றால் அறியப்படும். உம்மைகள் எச்ச உம்மைகள்.

பண் :

பாடல் எண் : 2

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.


நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

பொழிப்புரை :

நடுவுநிலைமை பிறழாதவர் மால் அயனாம் நிலைகளைப் பெறுதலேயன்றிச் சிவஞானிகளாய்ச் சிவமாந் தன்மையையும் பெறுவர்.

குறிப்புரை :

``ஓதி`` என்பது பெயர். ``கார் வண்ணன், மறை யோதி`` என்னும் ஈரிடத்தும் `ஆவன்` என்பது எஞ்சி நின்று. அவற்றோடு இயைய, ``நடுவு நின்றான்`` என ஒருமையாற் கூறினாராயினும், ஏனையபோலப் பன்மையாற் கூறுதலே கருத்து என்க. இனி `கார் வண்ணன், மறையோதி` என்பவற்றை எழுவாயாக்கி, அவற்றை `நின்றான்` என்பவற்றோடு முடிப்பாரும் உளர். `நடுவுநின்றார்` என்று ஒழியாது, ``சிலர்`` என்றது, `நடுவுநிற்றல் அரிது` என்பது உணர்த்துதற்கு. `சிவமாதல் ஞானம் இன்றி அமையாது` என்றற்கு அதனை இடையே விதந்தோதினார்.
இவ்விரண்டு திருமந்திரங்களானும் நடுவுநிற்றலின் பயனே கூறப்பட்டது.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் பாடல் இடைச் செருகல்.

பண் :

பாடல் எண் : 3

தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

பொழிப்புரை :

தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்கு பவன் சிவபெருமானே. அதனால் `அயன், அரி, அரன்` என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே, `மற்றுப் பற்றின்றிப்` (தி.7 ப.48 பா.1) பற்றி நிற்பவரே உண்மையாக நடுவு நிற்பவராவர்.

குறிப்புரை :

சிவபெருமானே முதற்கடவுள் என்பது உரை யளவையான் அன்றிப் பொருந்துமாற்றானும் துணியப்படும் என்றற்கு, ``தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன்`` என்றார். `எல்லா வற்றையும் ஒடுக்கியபின், எஞ்சிநிற்பவன் அவற்றை ஒடுக்கியவனே ஆதலாலும், அவனை ஒடுக்குவார் பிறர் இன்மையாலும், `ஒடுக்கக் காலத்தில் வேறு சிலரும் ஒடுங்காது நிற்பர்` எனின், அதனை, `முற்ற ழிப்புக் காலம்` (சருவ சங்கார காலம்) என்றல் கூடாமையானும் ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிப்பவன் ஒடுக்குபவனேயாதல் தெற்றென விளங்கும்; விளங்கவே, ஒடுக்கத்தைச் செய்பவனே உலகத்தைத் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் முதற்கடவுள் என்றற்கு ஓர் ஐயமில்லையாம்` என்பது கருத்து.
``வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாய் இலர்`` -தி.3 ப.54 பா.3
என்ற திருப்பாசுரத்திற்கும் இதுவே கருத்து என்றார் சேக்கிழார். (தி.12 பெ. பு. திருஞான - 828; 829) எனவே, ``ஈமம்இடு சுடுகாட்டகத்தே - ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்பன்`` (அம்மை மூத்த திருப்பதிகம் 1, 3) என்றாற்போலும் திருமொழிகளில் சிவபெரு மானைச் சுடுகாட்டில் ஆடுவானாகக் கூறுதலின் உண்மையும், முற்றழிப்புக் காலத்தில் அவன் ஒருவனே நின்று, ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிக்கு மாற்றை எண்ணுதலே யாதல் விளங்கும். இவ்வுண்மை உணரமாட்டாதார், ``கோயில் சுடுகாடு`` (தி.8 திருச்சாழல், 3) என்பதற்கு, `திருக்கோயில்கள் பலவும் பெரியாரை அடக்கம் செய்த சமாதிகள்` என்பதே பொருள் எனக் குழறிவழிவாரும், `உருத்திரன் கோயில் மசானபூமி யாதலின், அதனுட் புகலாகாது` எனக் கூறி எரிவாய் நிரயத்திற்கு ஆளாவாரும் ஆவர் என்க. இங்ஙனம் பலவாற்றானும் உண்மை விளங்கி நிற்றல் பற்றியே, மெய்கண்டதேவர்,
``அந்தம் ஆதி என்மனார் புலவர்``
-சிவஞானபோதம், சூ - 1.
என்றும்,
``சங்காரமே முதல்`` -சிவஞானபோதம் அதிகரணம் - 3.
என்றும் அறுதியிட்டுரைத்தார்.
செய்யுளாதலின், ``அவன்`` எனச் சுட்டுப் பெயர் முன் வந்தது. ``அன்றி`` என்பது, `மற்று` என்னும் பொருட்டு. மூன்று நின்றார் - மூன்று என்னும் எண்பெற நின்றார். இதனை முன்னருங் கூட்டுக. `தோன்றிய எல்லாம் துடைப்பன் ஈசன்; அன்றி மூன்று நின்றார், என்றும் அவன் இணையடி ஏன்று நின்றார்; அதனால், அம்மூன்று நின்றார்க்கும் முதல்வன் திருநாமத்தை நான்று நின்றாரே நடுவாகி நின்றார்` என இயைத்துரைக்க.
`பலரது வழக்குகளைக் காய்தல், உவத்தல் இன்றி நடுவு நின்று ஆராய்ந்து உண்மை கண்டு கூறுவார், இச்சமய வழக்கினையும் அவ்வாறு ஆராய்ந்து கண்டு கூறாதொழியின், அவர்க்கு நடுவு நிலைமை நிரம்பாது` என்பதாம்.
இதனால், உண்மை நடுவு நிலைமை இது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 1

கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே.

பொழிப்புரை :

பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக் கழு நீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மைய வாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.

குறிப்புரை :

`ஆதலின், அதுவே மக்கள் பருகற்பாலது` என்பது குறிப்பெச்சம். `ஞானிகள் கள்ளுண்டு களிப்பர்` என்னும் வழக்கிற்குப் பொருள் இதுவேயன்றிப் பிறிதன்று என்பது மேலே விளக்கப் பட்டது. கழுநீர், வினைத்தொகை. முழுமை - நிறைவு. ``முழுநீர், செழுநீர்`` என்பவற்றில் நீர், நீர்த்தன்மையுடைய பொருளைக் குறித்தது. முதல் அடியின் உண்மைப் பாடம் வேறாதல் வேண்டும். ``கழுநீர் பெறிற்பின் கயந்தேரா தேரா`` என்பதாதல் கூடும்.
இதனால், கள்ளுண்போர் மாக்களாதல் கூறப்பட்டது. மாக்களே, உண்ணப்படும் பொருளால் பின் விளைவதை அறியாது, கேடு பயக்கும் பொருளையும் உண்ணும் என்க.

பண் :

பாடல் எண் : 2

சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே.

பொழிப்புரை :

சித்த விருத்தியைக் கெடுத்துச் சிவமாய் நிற்கின்ற, அதீத நிலையில் விளைகின்ற சிவானந்தமாகிய தேனே தூய மதுவாம். அதனை உண்டால், இயற்கை இன்பம் நீங்காது நிற்கும். அஃதல்லாத பிற மதுக்களை நாள்தோறும் உண்டு மகிழ்தலும், செயலற்றுக் கிடத்தலும் பிறபொருட் கலப்பாலாகிய செயற்கை விளைவேயாம்.

குறிப்புரை :

``சிவானந்தத்து`` என்பதில் அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை. ``செயற்கை விளைவு மயக்கமே யன்றி, உண்மை யன்று`` என்பது கருத்து. `கீழ்க்காலன` என்பவற்றை, ``கீழ்க்கால்`` என்றார். கீழ்க்காலன - கீழிடத்தன; இழிந்தன. எனவே, அவற்றை உண்டல் நன்மக்கட்கு ஆகா என்றதாயிற்று. செயற்கையை, `இழிந்தன` எனவே, `இயற்கை உயர்ந்தது` என்பது பெறப்பட்டது.
இதனால், கள்ளுண்டல் நன்மக்கட்கு ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும்
மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
போமதி யாகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

பொழிப்புரை :

காமக் களிப்பும், கள்ளுக் களிப்பும் கீழ் மக்கட்கே உரியனவாம். அதனால், அவற்றைச் சிறப்பித்துச் சொல்கின்ற, அறியா மையும் மயக்க உணர்வும் பொருந்திய சமயத்தில் நிற்பவர்க்கு அறிவு அழிவதேயாகும். தூயோனாகிய சிவபெருமானது திருவடியி னின்றும் உண்டாகின்ற, மாசற்ற, நிறைந்த இன்பத் தேனில், அறிவு நிலைபெற்று நிற்கும்.

குறிப்புரை :

என்றது, ``காமம், கள் என்பவற்றிலும் சுத்த அதீத நிலையிலும் அறிவு நிகழாமை ஒன்றே யாயினும், காமத்திலும், கள்ளிலும் உண்டாகும் இன்பம் அறிவு அழிதலால் யாதும் அறியாது கிடக்கும் துன்பநிலையையே இன்பநிலையென மயங்கும் மயக்கமே. அதீத நிலையில் உண்டாகும் இன்பம் ஞேயப் பொருளையொழிந்த பிறவற்றை அறியாது அதனையே அறிந்து நிற்றலாகிய உண்மை இன்பமாம்` என்றவாறு.
மா மலம் - ஆணவம். `மயலும்` என உம்மை விரித்து, `மயலும் உறும் சமயத்துள் மதி போவதாகும்` என மாற்றிக் கொள்க. `இணையடி ஆனந்தத் தேறல்` என இயையும். ஓ - ஓவுதல்; நீங்குதல். மயம் - நிறைவு. `தேறலின்கண்` என உருபு விரிக்க. கள்ளினை விலக்குவார், ஒப்புமை பற்றிக் காமத்தையும் விலக்கினார்.

பண் :

பாடல் எண் : 4

வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

பொழிப்புரை :

`சத்தியை வழிபடுகின்றோம்` என்று சொல்லிக் கொள்ளும் அவைதிகராகிய வாம மதத்தினரும், அக் கொள்கை இல்லாதே கள்ளுண்ணும் மடவோர் போலக் கள்ளுண்டு அறிவு அழிபவரேயன்றிச் சிறப்பு ஒன்றும் இலர். இனிக் காமத்தை மட்டும் விரும்புபவர் அறிவு அழியப்பெறாராயினும், மயக்கம் உடையவரே. (ஆகவே, கள், காமம் இரண்டையும் போற்றிக் கூறும் சமயங்களால் உய்தி கூடாது) அவ்விரண்டையும் வெறுத்தொதுக்கும் வைதிக சமயிகளே வழிமுறைக் காலத்தில் அறிவினுள் அறிவாய் நிற்கின்ற முதற்பொருளினுள் ஒடுங்கி அதன் இன்பத்தை நுகர்வர். சிவநாமத்தை உய்யும் வழியாகப் பற்றும் சித்தாந்த சைவர் அவ்வின்பத்தை இடையீடின்றி அப்பொழுதே பெறுவர்.

குறிப்புரை :

தந்திர மார்க்கத்தார் காமம் முதலிய தீயொழுக்கங் களைப் போற்றிக் கொள்ளுதலை,
வாழவே வல்லை,வாமி; வலக்கைதா; என் உயிர்க்குத்
தோழன்நீ; உன்னை ஒப்பார் சொல்லிடின் இல்லை கண்டாய்;
கோழைமா னுடர்தீ தென்னும் கொலைகள வாதி கொண்டே
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றினாயே.
-சிவஞானசித்தி - பரபக்கம் - உலகாயதன் மதம் - 15
என்னும் உலகாயதன் கூற்றாலும், அவர் ஒழுகுமாற்றாலும் அறிக. வாமம் முதலிய மதங்கள் தங்கள் நூல்களையும் `ஆகமம்` என்று சொல்லிக்கொள்வதால், ஆகமங்கள், `சுரௌதம், அசுரௌதம்` என இருவகைப்படும் எனப் பிரித்து, `வேதநெறியோடு முரணாத ஆகமங்கள் சுரௌதம்` என்றும், அதற்கு முரணான ஆகமங்கள் `அசுரௌதம்` என்றும் சொல்லப்பட்டு, அசுரௌதமாகிய ஆக மங்களே `தந்திரம்` எனவும், அவற்றை உடைய சமயங்கள் `தந்திர மார்க்கங்கள்` எனவும் விலக்கப்பட்டன. சிலவிடத்து, `தந்திரம்` என்றும், சிலவிடத்து `ஆகமம்` என்றும் கூறி அவற்றை இகழும் பகுதிகள் அசுரௌதமாகிய தந்திரங்களை இகழ்வனவேயாம். இவ் வேற்றுமை அறியாதார், சுரௌதமாகிய `திவ்வியாகமங்கள்` எனப்படும் சைவாகமங்களும் அத்தகையன போலும் என மயங்கிக் கூறியொழிவர். தந்திர மார்க்கங்களும் சைவாகமத்தை ஒருவாற்றால் தழுவுதல் பற்றி ஒரோவிடத்து, `சைவம்` எனக் கூறப்படுதலால், வேத சிவாகமங்களையன்றிப் பிறவற்றை முதல் நூலாகக் கொள்ளாத சிவநெறியை, `வைதிக சைவம்` என அடைகொடுத்து வழங்குதலும் உண்டு. எனவே உண்மை வைதிகத்திற்கும், சைவத்திற்கும் கள் ளுண்டலோடு சிறிதும் இயைபில்லாமை அறிக. இதனால், `சத்திக்கு உவப்பைத் தருவன கள்ளும் ஊனும்` என்று அவற்றை அவட்குப் படைத்துத் தாமும் உண்டு மகிழ்தல் வைதிகரும், சைவரும் ஆய உயர்ந்தோரல்லாத தாழ்ந்தோர்க்கேயாதல் உணர்க.
வாமத்தோர் - வாம மதத்தவர். இவர்கள் சத்தியே உலக முதல்வி என்று அவளை வணங்குவோர். இதனால், இவர்மதம், `சாத்தேயம்` எனப்படும். `அறிவழிதலின் இறந்தாரொடு ஒப்பர்` என்றற்கு, ``மாள்பவர்`` என்றார். ``நஞ்சுண்பார் கள்ளுண்பவர்`` (குறள், 926) என்பது திருவள்ளுவர் வாக்கு. ``ஓமத்தோர்`` என்றது, `வைதிகர்` என்றவாறு. பின்னர், `அன்றே` என்றமையால், முன்னர், `வழிமுறைக் காலத்தில்` என்பது பெறப்பட்டது. உணர்தல் நணுதல்கட்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.

பொழிப்புரை :

கள்ளினை உண்டு களிக்கும் அவைதிகராகிய வாம மார்க்கத்தவர் வேதாகமங்களின் கருத்துக்களை உணரமாட்டா மையின், `சுரௌதம்` எனப்படும் திவ்வியாகமங்களாகிய சிவாகமங் களில் சொல்லப்பட்ட `பதி, பசு, பாசம்` என்னும் மூன்று பொருள்கள் உண்மையை உணர்தலும், அவ்வுணர்வால் அவற்றுள் மேலான வனாகிய பதியின் அருளைப் பெற விழைதலும், அவ்விழைவால் சரியை கிரியா யோகங்களாகிய இறப்பில் தவத்தில் நின்று அதன் பயனாகத் தெளிந்த உண்மை ஞானமாகிய சிவஞானத்தைப் பெறு தலும், அச்சிவஞானத் தெளிவினால் சிவனோடு ஏகமாகிய இறைபணி நின்று இன்புறுதலும் இலராவர்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு, `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. சைவாகம ஞானபாதப் பொருள் அடைவைக் கூறி, அப் படிமுறையானே சைவ சமயிகள் பெரும்பயன் பெறு தலையும், தாந்திரிகர்க்கு (தந்திரமார்க்கத்தவர்க்கு) அது கூடாமையும் விளக்கு முகத்தால் அவர் விரும்பும் கள்ளுண்டலை விலக்கினார் என்க. உள்ளாயவற்றை `உள்` என்றார்.

பண் :

பாடல் எண் : 6

மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

பொழிப்புரை :

மயக்கத்தைத் தருகின்ற மயக்க நோய், மயக்கம் இல்லாதாரையும் மயங்கச் செய்யும் மருந்தால் நீங்கும் எனக் கூறுவார் கூற்றைத் தெளிந்து அம்மருந்தை உண்ணின் உண்டாவது பெரு மயக்கமேயன்றி வேறுண்டோ! இல்லை. அதுபோல, `உலகப் பற்றாகிய மயக்கம், அறிவை மயக்குவதாகிய கள்ளினால் நீங்கும் எனக் கூறி மயக்குகின்ற அறியாமையையுடைய சமயத்தில் உறைத்து நிற்கும் அறிவிலிகள், அவ்வறியாமையால் அறிவை அழிக்கும் கள்ளை உண்டு மேலும் பேரறியாமையில் அழுந்துவர்; அவரைத் தெளிவித்தல் இயலாது.

குறிப்புரை :

பின்னிரண்டு அடிகளை முதலிற் கொண்டு உரைக்க. `மலச் சமயம்` என்பது பின்முன்னாக நின்றது, ``தேறார்`` என்பது வேறு முடிபு. ``மாமாயை`` என்பதும், ``மாயை`` என்பதும் மாயைபோல மயக்கும் நோயையும், மருந்தையும் குறித்தன. இன், ஏதுப்பொருளில் வந்த ஐந்தாம் உருபு. ``வீடும்`` என்பதன் பின், `என்னும்` என்பது வருவிக்க. மயக்கு - மயக்க உரை. தெளியின் - தெளிவு கொண்டால். அன்றே, தேற்றம். `மாயை மாயையால் நீங்கும்` என்றல், `நோய் நோயால் நீங்கும்` என்றல்போலும் என்பது கருத்து.
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. -குறள், 929
என்றவாறு, கள்ளுண்பார்க்கே உண்மை தெளிவித்தல் கூடாதபொழுது `அது சமய ஒழுக்கம்` என்பாரைத் தெளிவித்தல் எவ்வாறு கூடும் என்பார், ``தேறார்`` என்று அறுதியிட்டுக் கூறினார்.
இவை நான்கு திருமந்திரங்களானும், `கள்ளுண்டல் சமய ஒழுக்கமே` என்பாரது கூற்று அடாது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

பொழிப்புரை :

தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய கள், வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!

குறிப்புரை :

வாய்மை, உபலக்கணம்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று. -குறள், 913
என்பதனால், `பொருள் காரணமாகப் பொய்யாக முயங்கும் பொது மகளிரது இன்பம், பொருள் இல்வழி இழக்கப்படுதலே யன்றி உள்ள பொழுதும் உண்மையாவதன்று` என்றற்கு, ``இடையறா ஆனந்தம் எய்துமே`` என்றார். `வெண்ணெயைப் பெற்றும் நெய்க்கு அழுவான் போல, கற்புடை இல்லாளைப் பெற்றும் அவளால் இன்பத்தைப் பெறாது பொருட்பெண்டிரை நாடித் திரியும் பேதை மகன், கிடைத் தற்கரிய சிவானந்தத்தைப் பெயர்தானும் கேட்டறிவனோ` என்பதும், ``இடையறா ஆனந்தம்`` என்ற சொல்லாற்றலால் பெறுதும். ஏகாரம், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், கள்ளுண்டல் கழிகாமத்தையும், பொய் களவு முதலிய பலகுற்றங்களையும் தருதல் கூறப்பட்டது.
இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.

பண் :

பாடல் எண் : 8

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே.

பொழிப்புரை :

சத்தியின் அருளைப் பெறவேண்டிச் சத்தி மதத்தார் (வாம மதத்தவர்கள்) கள்ளுண்பார்கள். அதன் பயனாக அவர்கள் பெறுவது இயல்பாகத் தமக்கு அமைந்த சத்தியையும் (வலிமை யையும்) இழத்தலேயாம். (ஆகவே, அவர்தம் கொள்கை அறியாமை வழிப்பட்டது என்பது தெளிவு. அஃது எவ்வாறு எனில், கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து வீழ்ந்து செயலற்றுக் கிடத்தலால்) உண்மையில் `சத்தி` என்பது சிவபெருமானது அறிவு வடிவாகிய ஆற்றலே; அச் சத்தியால் பெறும் பயன், அதன்வழி நின்று, நிலைபேறும், தெளிவும் உடைய சிவானந்தத்தைப் பெறுதலே.

குறிப்புரை :

``சத்தி`` நான்கில் முதலது ஆகுபெயர். `அச் சமயத்தார்` எனச் சுட்டு வருவிக்க. தன்னில் - அந்த ஞானத்தில். `சார்தலே பயன்` என ஒருசொல் வருவிக்க.
இதனால், `சாத்தேயம்` எனப்படும் மதம் போலியாதல் கூறும் முகத்தால், அவர்தம் ஒழுக்கமாகிய கள்ளுண்டல் கடியப்படுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்
சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்
சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.

பொழிப்புரை :

சத்திமானும், (சத்தியை உடையவனும்) சத்தியும் தன்மையால் இரண்டாதலல்லது, பொருளால் இரண்டாதல் யாண்டும் இல்லை. (இதனைத் தெரிவிக்கவே, `சிவன்` என்னாது சத்தன் என்றார்) ஆகவே, சிவமும், சத்தியும் தம்முள் வேறல்லர் என்பது வெளிப்படை. அதனால், முதற்பொருளை அடைய வேண்டுவார், `சத்தி, சிவம்` ஆகிய இரண்டனையும் ஒப்பக்கொள்ளல் வேண்டு மன்றி, அவற்றுள் ஒன்றனையே புகழ்ந்து கொள்ளுதலும், ஏனையதை இகழ்ந்து நீக்கலும் கூடாவாம். மேற்கூறியவாறு அவ்விரண்டனையும் ஒப்பக்கொண்ட வழியே எப்பயனும் கிடைத்தல் உறுதி.

குறிப்புரை :

இரண்டிடத்தும் ``தரின்`` என்பவற்றில் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `சிவன், சத்தி என்னும் இருவருள் ஒருவர் அருள் இன்றி ஏனையோரது அருள் உண்டாக மாட்டாது` என்பது முதல் இரண்டடிகளில் கூறப்பட்டது. ``சத்தி சிவம்`` செவ் வெண். ``தன்`` என்றது, வழிபடுவோனை. சத்தியம் - உண்மை; இது தனிமுடிபு; இதற்கு, `இது` என்னும் தோன்றா எழுவாய் வருவித்து, இறுதியில் வைத்து உரைக்க. ``எண்சித்தித் தன்மையும்`` என்ற உம்மையால், `பிறவும்` என உரைக்க. எண்சித்தி, அணிமா முதலியன.
இதனால், வாமமதம் போலியாதல் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச்
சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே.

பொழிப்புரை :

மேல் பலவிடத்தும் சொல்லிவந்த சிவானந்த மாகிய தேன், உயிர், நிலமுதல் நாதம் ஈறாகிய தத்துவங்களே தானாய்த் தன்னை அறியாது நிற்கும் நிலையே முதற்கண் நீக்கி, அதன்பின்னர், தன்னைச் சடமாகிய தத்துவங்களின் வேறாகக் கண்ட உயிர் `யான் சித்தாகிய பிரமமே` என மயங்கும் மயக்கத்தையும் போக்கிச் சிவமாகச் செய்து, காமியத்தவங்களைக் கைவிடப்பண்ணி, இன்பத்தைத் துய்ப் பதாகிய அவ்வுயிர் இன்பத்தைக் கொடுப்பதாகிய சிவத்தின்பால் சென்று அடங்கி இன்புற வைத்து உடம்பு உள்ள துணையும் நிற்பதாகிய இவ்வுலகத்தின் இன்ப துன்ப நுகர்ச்சியை உடல் ஊழாக நுகர்ந்து கழித்து, உடம்பு நீங்கிய பின்னர்ப் பேரா இன்பப் பெருவாழ்வாகிய பரமுத்தியைத் தலைப்படச் செய்யும்.

குறிப்புரை :

`ஆதலின், ஏனைநெறிகளை விடுத்து அத்தேனைத் தரும் நெறியாகிய சிவநெறியைப் பற்றிப் பயனடைதல் சமயிகள் பலரும் செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம். வாம மதத்தின் இழிபுணர்த்துவார், ஏனை மதங்களின் சிறப்பின்மையும் உடன் கூறினார். போகம் தருவதனை, `போகம்` என்றார். மெய்த்த - மெய்யின் கண்ணதான.
இதனால், சிவநெறியது சிறப்புக் கூறும் முகத்தால் பிறநெறிகளது தாழ்வு கூறிக் கள்ளுண்ணும் வாமம் முதலிய மதங்கள் கடியப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.

பொழிப்புரை :

உண்மை யோகிகள் ஆவார், பிராண வாயுவைத் தடுத்து அதனால் எழும் மூலக் கனலால் புருவ நடுவில் உள்ள சந்திர மண்டலத்தில் ஊறும், அறிவை வளர்க்கின்ற, இனிய அமுதத்தை உண்பவரே. (அவ்வமுதம் சிவானந்தத் தேறலில் இச்சையுண்டாக்கும்) அந்நிலையைப் பெறாத சிலர் அணிமா முதலிய சித்திகளில் இச்சையுடையராய்க் கள்ளை உண்டு மயக்கம் உற்று, அம்மயக்கத்தால் எழும் உன்மத்தம் உடையராய் அறிவழிகின்றனர்.

குறிப்புரை :

எனவே, `வாம மதத்தவரேயன்றி, யோகம் முற்றப் பெறாது இடைநிற்கும் சிலரும் வாம மதத்தவரோடு ஒத்து ஒழுகினும், அவர் ஒழுக்கம் கொள்ளத்தக்கது அன்று` என்றதாயிற்று.
இதனால், `கள்ளுண்பார் சிலர் சித்தியுடையராயும் இருத் தலைக் காண்கின்றோம் ஆகையால், அவர் ஒழுக்கம் இகழற்பாலது அன்று` என்பாரை நோக்கி, அவரது நிலையும் உயர்வுடையது ஆகாமை காட்டி, `எவ்வாற்றானும் கள்ளுண்டல் ஒழுக்கம் ஆகாது` என்பது வலியுறுத்தப்பட்டது.
பதிப்புக்களில் இதன்பின் உள்ள பாட்டுப் பின்னர் வருவது.
முதல் தந்திரம் மூலமும் உரையும் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக